குப்பைத்தொட்டியை கடந்துபோகும்பொது ஏற்பட்ட சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் குப்பைத்தொட்டியை அலட்சியபடுத்தாமல் ஆராய்ந்து அறிய எத்தனித்தால் அதுவே ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து நல்ல பல கருத்துக்களை அள்ளித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குப்பைத்தொட்டியை வைத்திருப்பதன் காரணம் என்ன? குப்பைகளை இடுவதற்கா அல்லது குப்பைகளை உருவாக்குவதற்காகவா? சுத்தம் சோறு போடும் என்பார்கள் ஆனால் நாமோ சோற்றை குப்பைத்தொட்டியில் போடுகின்றோம். சுகாதாரம் என்பது சமத்துவம் எனும் உயர்ந்த கருத்தை வலியுறுத்தும்போது மற்றோர் இடத்தை குப்பைத்தொட்டியாக்கி சுத்தமானவர்கள் என்று பெருமிதம் கொள்ளுவது நியாயமா? குப்பை என்று நாம் நினைப்பதை இன்னோர் இடத்திற்கு மாற்றுவதால் நாம் அதை அகற்றுபவர்கள் ஆவதில்லை, மாறாக அதை இடமாற்றல் செய்து இடும் பொருட்களின் எண்ணிக்கையையும் அளவுகளையும் கூட்டிக்கொண்டே போகின்றோமல்லவா? என்னைப்பொறுத்தவரையில் மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக நான் கருதுவது குப்பைத்தொட்டிதான், ஏனென்றால், மனிதனின் மற்றெல்லா கண்டுபிடிப்புகளும் இதனுள்ளே சங்கமமாகிவிடும்.
குப்பைத்தொட்டிக்குள் செல்லும் எதுவும் மறுபடியும் பிறந்தது ஆகின்றது. குறிப்பாக தன் முந்தைய நிலையைத்தாண்டி ஒரு உன்னதமான நிலையை அது அடைகிறது என்பது என் கணிப்பு. மறுபடியும் பிறந்தது என்ற வார்த்தை பிறப்பை ஞாபகப்படுத்துகின்றதல்லவா? ஆம் வேறெங்கும் இல்லாத அதிசயம் இங்கு நம் தேசத்தில் நிகழ்கின்றது. குப்பைத்தொட்டி பெற்றெடுக்கின்றது மனிதக்குழந்தைகளை! இந்த விசேஷ குழந்தைகளைப்பற்றி நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? சமூகத்தோடு சேர்ந்து இக்குழந்தைகளை தாழ்வாக கருதும் நம்மைப்பார்த்து குப்பைத்தொட்டி – மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவரை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து விழா கொண்டாடுகிறீர்களே, ஏன் என்னிடம் பிறந்தவர்களுக்கு இந்த கவனிப்பு இல்லை என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்? யோசித்துப்பார்க்கும்பொழுது மேலும் பல சிந்தனைகள் நம் எண்ண அலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன அல்லவா? ஆம் என்னைப்பொறுத்தவரைக்கும் மனிதனுக்கும் குப்பைத்தொட்டிக்கும் உள்ள உறவு ஒரு புனிதமான பந்தமாகவே காணப்படுகிறது. மனிதனயும் குப்பைத்தொட்டியையும் பிரிக்கும் ஒரு சமுதாயம் எதிர்காலத்தில் எங்கும் இராது எனும் அளவிற்கு நம்மோடு நிழல்போல வருவது குப்பைத்தொட்டி மாத்திரமே. தன்னிடத்தில் வரும் எதையும், எவரையும் புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு விசாலமான சிந்தனைவாதியாக, யதார்த்தவாதியாக குப்பைத்தொட்டி காணப்படுவது விந்தையிலும் விந்தை.
குப்பைத்தொட்டிகளை சார்ந்து வாழும் சிறுவர்களை கேட்டால் சொல்லுவார்கள், அது தங்கள் கோயில் என்று. நாள் முழுவதும் இந்த புண்ணிய தலத்தில் தவம்புரியும் இந்த இளம் சன்னியாசிகள் கொண்டுவந்தது என்ன? கொண்டுபோவது என்ன? சற்றே உரக்க சிந்தித்துப்பார்த்தால், கடையெழு வள்ளல்களையும் தாண்டி, அள்ள அள்ள குறையா செல்வங்களை நாள்தோறும் அளிக்கும் குப்பைத்தொட்டி ஒரு எட்டாவது வள்ளலாக எழுச்சியோடு இந்த சிறுவர்முன் மட்டுமல்லாது நம்முன்னும் கம்பீரமாக நிற்கிறது. வானளாவ உயர்ந்து நின்ற தேவாலயத்தை பார்த்த இயேசு ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும் நாட்கள் வரும் என்று ஏன் குறிப்பிட்டார் என்பது புரிகிறதல்லவா?
நாம் இப்போது கூர்ந்து கவனிக்கப்போகிறோம், குப்பைத்தொட்டியில் என்ன இடப்படுகின்றது என்று. சமூகம் சொல்லலாம் மாசுகள் என்று! சிலர் கூறக்கூடும் குப்பைகள் என்று! அது நிஜம்தானா என்று நாம் சற்றே எண்ணிப்பார்க்கையில் இல்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. நாம் குப்பைத்தொட்டியில் போடுவதெல்லாம் நம் வறட்டு கவுரவத்தையும், நாம் வாழும் சமுதாயத்தின் வெளிப்பாடுகளையுமே அன்றி குப்பைகளை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மாசு நம் மனதில் இருக்கிறது, நம்மைச் சுற்றியும் இருக்கிறது. ஆனால் அது கண்டிப்பாக குப்பைத்தொட்டியில் இல்லை என உறுதியாக கூறிவிடமுடியும். எல்லாம் படைத்த இறைவன் ஏன் ஒரு குப்பைத்தொட்டியை படைக்கவில்லை என்றால் ‘குப்பை என்று எதுவும் கிடையாது” என்ற சீரிய நோக்கால் அல்லவா? நடந்தது என்ன? நாம் கண்டுபிடித்தோம் குப்பைகளையும் குப்பைத்தொட்டியையும். நம்மை சுற்றி கடவுள்(கள்) கோணிப்பையுடன் குப்பைத்தொட்டிகளைச் சுற்றி சுற்றி வரும்பொழுது, நாம் வேறு சில பைகளுடன் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நன்மை தீமை வேறுபடுத்தத் தெரியாத அளவு கடவுளை தூரமாக வைத்து வேடிக்கை பார்க்கும் மதபோதகர்களால் ஏற்பட்ட தீங்குகளின் விளைவா இது? குப்பைத்தொட்டியை இவ்வளவு தூக்கி பேசவேண்டிய அவசியமில்லை என்று யாரோ சொல்லுவது கேட்கின்றது! ஆனால் அதன் அவசியம் அவசரமானது.
ஒரு வினாடி உற்றுப்பாருங்கள், எங்கும் காணாத சமத்துவத்தை குப்பைத்தொட்டியின் அருகில். மானுடம், பறவை, மிருகம், ஊர்வன என என்னே ஒரு ஒற்றுமை. கூடியிருக்கும் காரணம் கூட உணவு என்கிற ஒன்று தானே? கூடி உண்ணும் இடத்தில் தானே இறை ப்ரசன்னம் இருக்கிறது? பகிர்தலைபற்றி கூறவந்த இறைவனே குப்பைத்த்தொட்டியில் உணவருந்த வந்த அழகை கவனிக்க தவறிவிட்டோம்! காலம் கடந்துவிட்டதா அல்லது கண் கெட்ட பிறகு திரைப்படமா? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இன்று குப்பைத்தொட்டியில் நாம் போடுவது நம் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வைக்கூடத்தான்! ஏன்? எப்படி இவ்வளவு குருரமாக மாறிவிட்டிருக்கிறோம்?
குப்பைத்தொட்டியில் இலைகள் மற்றும் மட்கிப்போகின்ற சாதனங்களைப் போடுவது பழங்கதையாகிப்போனது. மட்காப் பொருட்களகிய ப்ளாஸ்டிக் பைகள், ஆஸ்பத்தரிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், அன்னிய நாட்டுப்பொருட்களின் கழிவுகள் என மனித குலத்தின் எதிர்க்காலத்தை உரசிப்பார்த்து உயில் எழுதும் ஆயுதங்களின் தளவாடமாகவே மாறிவிட்டது. எங்கே நம்மை இட்டுச்செல்லும் இந்தப் பாதை?
நம் கேள்விகளையெல்லம் ஒன்று திரட்டி குப்பைத்தொட்டியைக் கேட்டால் குப்பைத்தொட்டியின் பதில் என்னவாக இருக்கும்? குப்பைத்தொட்டி கூறுகின்றது – ‘மனித மனமே ஒரு குப்பைத்தொட்டிதான்” எதை வைக்கவேண்டும் எதைக் களையவேண்டும் என இனம் பிரிக்கத் தெரியாத ஒரு குப்பைத்தொட்டி என்று. சிந்தித்துப் பார்த்தால் அது சரியென்றேப் படுகின்றது. மனித மனமே குப்பைத்தொட்டியை பெற்றெடுத்த இயந்திரமாக இருக்கின்றது. குப்பைத்தொட்டியை ஒரு சிறிய பொருளிலிருந்து ஊதி மிகபிரம்மாண்டமாக ஆக்கி சில மூன்றாம் உலக நாடுகளையே குப்பைத்தொட்டியாய் மாற்றிவிட்டது யாருடைய தவறு? விளைவு, இன்று நாம் குப்பைத்தொட்டியை வைத்திருக்கும் நிலையில் நம்மை சில மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்தின் சுயமரியாதையை இழக்கச்செய்யும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சிந்தனைகளை களைவது அத்தனை சுலபமில்லை, ஆனால் இதைக் களைவது மிகவும் அவசியம். இல்லவிட்டால் இந்த பூமி ஒரு குப்பைத்தொட்டியகவே இருந்துவிடும் இறுதிவரைக்கும்.
வாழ்க்கையில் பலவற்றை தேவையற்றவைகள் எனக் களைகிறோம். அது நமக்கு தேவையற்றதே அன்றி, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒரு பெருங்கூட்டதை பொருட்படுத்தத் தவறுகிறோம். களையும் இந்த பொருட்களுக்காக வீணான சுரண்டல்கள், அழிவுகள், அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறோம், முடிவில் நாமே அடங்குகிறோம். பகிர்ந்து வாழத் தெரியாமல், பிரித்துவாழ முற்படுகிறோம். முக்கியமற்றவைகள் என நாம் இன்று நினைப்பது நாளை அதி முக்கியமான ஒன்றாக மாறுவதை சிந்தித்துப் பார்த்ததுன்டா? இலவசமாக இறைவன் கொடுத்ததை மாசுபடுத்தி, மாசற்றது எனக்கருதி காசுகொடுத்து வாங்கிக் குவிப்பவைகளால் மேலும் மாசுபடுத்துகிறோம் அல்லவா?
குப்பைத்தொட்டியின் ஆதிகேள்விக்குப் பதில் கிடைத்ததுபோல் இருக்கின்றது! மாட்டுக்கொட்டிலில் பிறந்த பாலனுக்கு நிகர் குப்பைத்தொட்டி குழந்தைதான் சந்தேகமில்லை. இயேசு கருவாக இருந்தபோது அதன் தாய் அதைக்குறித்து வேதனைப்பட்டிருக்ககூடும், அதன் தகப்பன் அதைக்குறித்து வெட்கப்பட்டிருக்கக்கூடும். அது தேவையற்றது என முடிவுகட்டி ஒரு ராஜாவே அதை அழிக்க கங்கணம் கட்டினான். எல்லோரும் தேவையற்றது எனக் கருதி அந்த குழந்தையை குப்பைத்தொட்டிக்கு அனுப்ப எத்தனித்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில், இறைவனின் அநாதி திட்டப்படி அதன் தாயும் தகப்பனும் எடுத்த முயற்சியால் அந்த சிசு குப்பைத்தொட்டியில் இடப்படாமல் மாட்டுத்தொழுவத்தில் அவதரித்தது. அதன் பலனை அக்குழந்தையின் பெற்றோர் அனுபவித்தார்களோ இல்லையோ நாம் அனுபவிக்கிறோம் இல்லையா? ஆகவே மறு சுழற்சிக்கான முயற்சிகளை எடுப்பது நம் கடமை என்பதை தியானமாக கொள்ளுவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன்.
காட்சன் சாமுவேல்
(மார்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் வருடாந்திர கூடுகையில் வாசிப்பதற்காக 28.11.2003 அன்று இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது)
குறிச்சொற்கள்: கட்டுரை