நிர்வாணம்

By pastorgodson

சமூக வாழ்க்கையில் நாம் பொருள்தேடும் விஷயங்களுள் நிர்வாணம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் மர்மமான ஒன்று! நிர்வாணத்தை நானாக இருந்த, இருக்கும் மற்றும் அடையும் நிலைகளை குறிப்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும் நிர்வாணம் நிரந்தரமானது, விரும்பத்தக்க ஒன்று, தன்னலமற்ற தன்மையுடையது, பிறர் நலன் பேணிக்காப்பது, உலக சுழற்ச்சியின் ஆதாரம் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் உலகத்தை நிர்வாணமாக படைத்து, ரசித்து, வாழ்த்தி நிர்வாணமே நீடிய வாழ்விற்கு ஏற்றதென உணர்த்தியது நம் கண்களுக்கு மறைவாக போயிற்று. நிர்வாணத்தைக் குறித்த எண்ணம் நம்மை நேராக பாலியல் சிந்தனைக்குத் தூண்டுவதாக அமைவதன் காரணம் என்ன? என்ற கேள்வி எழும் போது, நாம் அவ்வாறாக புரிந்து கொள்ள பழக்கப்பட்டுள்ளோம் என்பதே சிறந்த பதிலாக அமையமுடியும். நிர்வாணத்தைக் குறித்த இத்தகைய மேலோட்டமான சிந்தனையை மாற்றிவிட்டு சற்று ஆழமான உண்மைகளை தேட முற்படுவது நிர்வாணமாக நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியதையாகும்.இறைவனின் படைப்பே நிர்வாணத்தின் மேன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தமது சாயலில் மனுக்குலத்தைப் படைக்கும் போது கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்! குறிப்பாக தன்னை மூடிமறைக்காத, வெளிப்படையான ஒருவரே நம் எல்லோருடைய கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கடவுளின் நிர்வாணம் உடல் சம்பந்தப்பட்டதாகவோ சிந்தனை சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம், இரண்டுமாகவும் இருக்கலாம் அல்லது வேறெந்த நிலையிலாவது இருக்கலாம். எப்படியிருந்தாலும் இறைவன் நிர்வாணியாக இருப்பது உறுதி.

ஆடை என்பது தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஏன் அணிகிறோம் என்ற கேள்விக்கு ‘எல்லோரும் அணிகிறார்கள்’ என்ற ஒரே வாதத்தைத் தவிர நம்மிடம் எந்த தடயமும் இல்லை. சொல்லப்போனால் உடை நம்மில் ஒரு பாதியாகிவிட்டதாகக் கருதுகிறோம். உண்மை அதுவல்ல “நாம் சுயம் சார்ந்தவர்களாக இருக்கிறோம்”என்பதே அதன் பொருள். நம்மைச் சுற்றி எல்லோரும் நான் எனக்கு என பிறர் நலன் நோக்காது எடுத்துக்கொள்ளும் போது, நாமும் நமக்கானவற்றைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும் என களமிறங்குகிறோம். எடுத்தவற்றையும் நம்மையும் மறைக்க நம்மாலான பிரயத்தனங்கள் எடுக்கிறோம். ஆனால் நிர்வாணியான இறைவனை தரிசிக்க முடியாமல் தவிக்கிறோம். எதிர் பாலினம் இறைவனை சந்திக்கத் தடையாயிருக்குமென தனித்து நின்று பிரார்த்தனை செய்கின்றோம். முடிந்தவரை அவர்களை தலை முதல் கால்வரை மூடி நடமாடும் பொருட்களாக ஆக்கிவிட்டோம். இந்த ஆடை சிறைக்குள் இருப்பவர்கள் எழுதும் நியாயங்கள் இறைவனின் சட்டபுத்தகத்தில் செல்லாது என்பதை புரிந்துக்கொள்ளுவதில்லை.

அழகியலை விரும்புபவர்கள் அனைவரும் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். நிர்வாணம் வளைவுகளையும், உயரங்களையும் ஆழ அகலங்களையும் உடையது. ஆனாலும் அவைகளில் துளியேனும் பாகுபாடு காணப்படுவதில்லை ‘தலை சிறந்தது’ என்றும் ‘கால் தூசி’ என்றும் சொல்லுவது நம் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே! ஏனென்றால் நிர்வாணம் என்பது மனிதக்குலத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரித்தானது. வானம், பூமி, கடல், செடி, கொடி, மரம், பறவை, மிருகம், ஊர்வன என எல்லாம் நிர்வாணமாக இருக்கின்றன. இதற்கு ஈடான அழகை நாம் எதையும் அணிந்து மெருகூட்டிட இயலாது என்று தெரிந்தும் நாம் அதை தொடருகிறோம். இந்த அழகிய நிர்வாணத்தை நாம் அனுபவிக்க பழகியிருக்கிறோமா அல்லது அழிப்பதற்கு துவங்கியிருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது. உலகின் மிகப்பெரிய சந்தோஷமாக நான் கருதுவது நிர்வாணமாக இருப்பது தான்! நிர்வாணமே உறவுகளை பெலப்படுத்துகிறது. ஜாதி, மதம், நிறம், மொழி எல்லவற்றையும் தாண்டிய ஒரு மகோன்னத நிலையை அது பெற்றிருக்கிறது. இருபாலினரும் நிர்வாணம் தரிக்கும் போது தானே ஒன்றாகின்றனர்? தாய் தான் பெற்றெடுத்த குழந்தையின் நிர்வாணத்தை ரசிப்பதற்கு, என்னாலும் படைக்க முடியும் என்ற இறைவனை அடுத்த நிலையை அடைந்த மகிழ்விற்கு  ஈடான சந்தோஷம் உலகில் உண்டா? இல்லறத்தில் மட்டுமல்லாது துறவறத்திலும் நிர்வாணம் உன்னதமான நிலையைக் குறிப்பதாக அமைகிறது. இல்லறத்தில் நானும் நீயும் ஒன்று என்ற கோட்பாடே துறவறத்தில் நானும் இறைவனும் ஒன்று என்பதாக இருக்க முடியும்? வாழ்க்கை என்பது நிர்வாணத்தில் துவங்கி அவ்வறே முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில் நாம் நிர்வாணத்தைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

 நிர்வாணம் ஏற்றத்தாழ்வுகளை துடைத்தெறிய இறைவன் தந்த வரம். மனிதன் இந்த வரத்தைக் கூறுபோட்ட விதம் மிகவும் கொடூரமானது. இறைவன் கொடுத்த நிர்வாண வரத்தை கெடுத்தது, நாம் மேற்கொள்ளும் தவறான காரியங்கள் தாம்.  தவறான செயல்களை மட்டுமே நாம் மூடி மறைக்க எத்தனிக்கின்றோம். இறைப்படைப்பில் தவறான காரியங்கள் இருக்கக்கூடுமோ? அல்லவே? நிர்வாணம் என்பது எப்போது தவறான ஒன்று என்ற எண்ணம் வந்ததோ அப்போதே நாம் அதை மூடி மறைக்க எத்தனங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு? இன்று நாம் நம் உடலை மட்டும் மறைக்காமல் இறைவன் நமக்கு அருளிய விசாலமான மனதையும் மறைக்கத் துவங்கிவிட்டோம்.

மனுக்குலத்தின் வீழ்ச்சி  எப்போதும் தன்னை மறைத்துக்கொள்ளுவதினாலே ஏற்படுகின்றது என்பது என்  கணிப்பு. மறைத்துக்கொள்ளுதல் பகைமையை வெளிப்படுத்துகின்றது, தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறது, பயத்தைக் காட்சிப்படுத்துகின்றது, ஒப்புறவை புறந்தள்ளுகிறது. மறைத்துக்கொள்ளுதல் தனிமைப்படுத்திக்கொள்ளும் அவலம். அது கலாச்சார அபாயம். சாதி, சமயம், நிறம், நாடு, கல்வி, கலாச்சாரம், தொழில், மொழி, கட்சி முதலானவற்றைக் கொண்டு நம்மை மறைக்க முயலுகின்றோம். இத்தகைய மறைவு வாழ்க்கை நம்மை எத்துணை இடர்களுக்குள் இட்டுச்சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கை ரம்மியாமானதாக மாறிவிடும்.

நிர்வாணம் கற்போடு இருக்கின்றது. நாம் தான் அதைக் கட்டுப்பாடுகளால் கற்பழிக்கின்றோம். நீயும் நானும் நிர்வாணமாயிருபோம் என்பது உயரிய சமதர்மவாதம். உலகம் முழுமைக்கும் இறைவன் கொடுத்தருளிய இந்த சித்தாந்தத்திற்கு எதிராய் நாம் மாறிவிட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். நான் மறைத்துக்கொள்ளுவேன், நீ நிர்வாணமாய் இருக்கவேண்டும் என்பது நிர்வாணத்தை அவமானப்படுத்தும் செயலாக அல்லாமல் வேறென்னச் சொல்ல? இன்று நிர்வாணப்படுத்துவதே நம் வேலையாகிப்போனது. பிறரின் நிர்வாணம் பாலியல் கிளர்ச்சியையும், கிளுகிளுப்பையும் அள்ளித்தரும் விஷயமாகிப்போனது. பிறரது நிர்வாணம், கண்டுகொள்ளப்படாததும், பரிகசிப்புக்குரியதாகவும் அமைந்து விட்டது. நம்மை மறத்துக்கொண்டு பிறரை நிர்வாணப்படுத்துவது இன்றைய நாகரீகத்தின் உச்சவளர்ச்சியாக இருக்கின்றது. ஓவியம், புத்தகம், நிழற்படம், திரைப்படம், தொலைக்காட்ச்சி, இணையதளம், ஏன் செல்பேசி கூட உபயோகித்து காலமாற்றத்திற்கு ஏற்ப நிர்வாணத்தை வியாபாரப்படுத்தும் நாம் – உடையெனும் சமூகப்போர்வைக்குள் நம்மை ஒளித்துக்கோண்டு இவைகளைச்செய்வது குற்றத்தின் உச்சமல்லவா? நிர்வாணத்தை உணரவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ தெரியாதவர்கள் பிறரை நிர்வாணப்படுத்துவது பெருங்குற்றமல்லவா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத நம்மைச்சார்ந்த பல விஷயங்கள் இருக்க, பிறரை நிர்வாணப்படுத்தி  புரிந்துகொள்ள முற்படுவது பிற்போக்கான எண்ணமல்லவா? நிர்வாணம் ஆவோம் என்பது ஒருமித்தக்குரலாக ஒலிக்கச்செய்வதை விட்டுவிட்டு, நிர்வாணப்படுத்த முற்படுவதால் என்ன லாபம்? நம்மேல் உள்ள பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவைபடலாமே அன்றி இன்னொருவர் தலையில் ஏற்றுவது தவறல்லவா? நிர்வாணாம் பிறரை ஏற்றுக்கொள்ளும் விசாலமன ஒன்றாய் இருந்தும், நாம் குப்பை இடும் பகுதியாக அதை மாற்றுவது நிர்வாணத்தின் தலையில் பாரத்தை ஏற்றுவதாகாதா? நிர்வாணம் பிறரை ஏற்றுக்கொள்ள இடம் தர வேண்டுமே அன்றி திணிக்கப்படக்கூடாதல்லவா? 

நிர்வாணம் ஏற்படுவதர்க்கான காரணங்கள் என நான் கருதுவது – போர், வறுமை, வன்முறை என பட்டியலிடலாம். சமயம் கூட தன் பங்கிற்கு பல பெண்களை நிர்வாணப்படுத்தியிருப்பது மிகவும் வேதனையான விஷயம். கூடவே, இன்று நாம் நமது பங்களிப்பாக நமக்கடுத்தவர்களை நிர்வாணிகளாக வைத்திருக்கிறோம். நிர்வாணியாக நம் அயலார் மரிக்கையில், துணிகளைக்குவித்து வைத்திருக்கும் நாம் யார்? போர்முனையில் கையில் அகப்பட்ட எளியவர்களை நிர்வாணப்படுத்துவதுதான் நமது வெற்றிக்களிப்பா? வெறும் களிப்பை அள்ளித்தரும் சாதனமாக நிர்வாணம் காணப்படுவதும், பேணப்படாது சுரண்டப்படுவதும் எவருடையத் தவறு? நிர்வாணமே கலச்சாரமாக வாழும் பழங்குடியினரை காட்டுமிராண்டிகள் என்பதும் முதிர்ச்சியின்மை அல்லவா? கடவுளின் திருப்பெயரைச்சொல்லியே பணம் சம்பாதிக்கும் இக்காலத்திலே, இறைச்சாயலான மனித குல நிர்வாணத்தைக் காட்டி தொழில் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். நமது பணம் மற்றும் பலம் கொண்டு நாம் நிர்வாணத்தை அணுகும்போது அது தன் தெய்வீக நிலையை இழக்கின்றது. 

‘அவரது வஸ்திரத்தின் மேல் சீட்டுப்போட்டு அதை பங்கிட்டுக் கொண்டார்கள்’ எனும் வசனமே இயேசுவை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தார்கள் என்பதற்குச் சான்று.  மேலும், நிர்வாணமே சிலுவையில் தொங்குபவர்களுக்கு உடை அமைப்பாக இருந்ததை யாரும் மறுக்கவியலாது. இயேசுவின் நிர்வாணம் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லையா? அவரின் நிர்வாணம் நம்மை எந்தவித சிந்தனைக்கு நேராக வழிநடத்துகிறது? 

இயேசு சிலுவையில் தொங்கும்போது அவரது தாய், சீடர்கள், வழிப்போக்கர்கள், அரசுக் காவலர்கள், மதத்தலைவர்கள் என ஒரு கலவையான மக்கள் திரள் அந்தக் காட்சியப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது நிர்வாணத்தைக் குறித்த சிந்தனை அனைவருக்கும் ஒர்ன்றுபோல் இராது என்பது தெளிவு. சிறுமைப்படுத்துவோர் அனேகராயும், சிறுமையுற்றோர் வெகு சிலராயும், வேதனையுற்றோர் சொற்பமாயும் இருந்திருப்பர். இவ்விரண்டு மனநிலையிலும் மக்கள் சார்ந்திருப்பதனால் இறைவனின் நிர்வாணத்தை நாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. “இறைச்சாயலில் உள்ளவர்கள் நிர்வாணம் ஆகும்போதும் ஆக்கப்படும்போதும் நாம் யாரைக் காண முற்படுகிறோம்! மானுடத்தையா? இறைவனையா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

குறிச்சொற்கள்:

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்