இரு பயணிகள்

By pastorgodson

ஆண்டித்தோப்பு சி எஸ் ஐ திருச்சபையின் விடுமுறை வேதாகமப் பள்ளி சோதனை நாளுக்காக எனது அம்மவை அழைத்திருந்தார்கள். எனது அம்மவும் என்னை அழைத்து நாளை நாம் இந்த காரியத்திற்காக செல்லுகிறோம், வேறு நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதே என்று கூறினார்கள். காலை 8 மணிக்கு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டோம்.எனது அம்மாவுடைய செல்போனை நான் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன்.
அப்போது மிகவும் பவ்வியமான குரலில் பின்னலிருந்து ஒருவர் என்னிடம்

பிரதர்! இந்த நம்பரை கொஞ்சம் அடித்துத்தருவீங்களா?

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கறுப்பு வெள்ளை கலந்த தாடியுடன் இருந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். என்னால் மறுக்க முடியவில்லை. ஒரு ஊழியக்காரரின் தோரணை வேறு இருந்தது. நான் அமைதியாக எனது செல்போனில் அவர் கொடுத்த நம்பரை அடித்து அவரது கையில் தந்துவிட்டு திரும்பிக்கொண்டேன். என்ன பேசப் போகிறார்? அவசர உதவி ஏதேனும் தேவைப்படுகிறதோ? ஒருவேளை காமெடி கீமெடி….

ஐயா…. ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்…
……………..
ஐயா நல்லா இருக்கீங்களா?…..
…………….
கர்த்தருடைய பெரிதானக் கிருபையினாலே நான் நல்லா இருக்கிறேனுங்க  ஐயா!..
………….
ஐயா! மனைவி பிள்ளைங்க எப்படியிருக்காங்க ஐயா?……..
………..
ரொம்ப சந்தோஷம் ஐயா! ரொம்ப சந்தொஷம்!…..
……
ஐயா! உங்க ஊழியம் எப்படி இருக்குதுங்க ஐயா?
……
அப்படீங்களா ஐயா? ரொம்ப சந்தோஷம்!
……
ஐயா நான் இப்போ நாகர்கோவிலிலே இருக்கிறேனுங்க ஐயா….
…….
உங்க ஊழியத்துல இணைஞ்சி செயல்படலாம்ணு இருக்கிறேனுங்க ஐயா
…….
இல்ல ஐயா… கொஞ்ச காலம் கர்த்தருக்காக உங்களோட பணி செய்ய ஒரு வாய்ப்பு தாங்கையா?
……….
அப்படீங்களா ஐயா?….
………
இல்ல ஐயா…உங்க கூட இருந்து ஜெபிச்சிட்டு ஊழியத்துக்கும் வரலாம்ணு தான்….
………
அப்படியெல்லம் இல்லீங்க ஐயா….
…….
ஐயா நான் வந்து ஒரு இரண்டு நாள் மட்டும் தங்கி உங்க குடும்பத்துக்காகவும் ஊழியத்துக்காகவும் ஜெபிச்சிட்டுப் போறேனே….
……
இல்லீங்கையா! தங்குகிறதற்குக்கூட இடமில்லைய்யா….
………
அங்க இப்போ ஊழியத்துக்கு வாய்ப்பு ஏதும் இல்லையா?….
……………………………………………..
இல்லீங்கையா நீங்க தான்….
…………………………………………….
இல்ல வேற வழியே ….
…………………………………………………..
எப்படியாவது…
……………………………………………..
ஒரு நாளைக்கு மட்டும்……
………………………………………..
தயவுசெஞ்சி…
………………………
ப்ச்…
போன் கட்டாகிவிட்டது. அந்தப் ஊழியர் என்னிடம் “நன்றி ஐயா” என்றபடி போனைக் கொடுத்தார். நான் உறைந்து போய்விடிருந்தேன். எனக்கு திரும்புவதற்கு விருப்பம் இல்லை. நான் கைகளை மட்டும் பின்னால் நீட்டி போனை வாங்கினேன்.

அப்போது ஒரு காவி உடையணிந்த பெரியவர் என்னருகில் வந்து அமர்ந்தார். வழுக்கைத்தலை, இறகு பிடுங்கின கோழியைப்போல் இருந்தது அவரது ஷேவ் செய்த முகம். ஒரு வகையில் அவர் போட்டிருந்த உடை ஒரு புத்த பிட்சுவைப்போல் காணப்பட்டது. பஸ் புறப்பட்டுவிட்டது. கவனத்தை மாற்றுவதற்காக பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.
நீங்க எங்க போறீங்க தாத்தா. 
புத்தேரி…
என்ன ஆஸ்பத்தரிக்கா?
இல்ல ஒரு பூஜைக்காக வேண்டி போய்கிட்டு இருக்கிறேன்
வீடு சுசீந்திரமா தாத்தா?
இல்லியே! நான் ஆளூர்ல இருந்து வாறேன்
இவ்வளவு தூரமா? கஷ்டமா இல்லியா?
அவா நமக்கு வேண்டப்பட்டவா…
சரி தாத்தா எங்க படிச்சீங்க?
நான் திருநெல்வேலியில பி ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர். அது கொஞ்ச காலமாகுது.
இல்ல தாத்தா, நீங்க பூஜையெல்லம் செய்ரீங்கல்ல அதுக்கு எங்க  போய் படிச்சீங்கன்னு கேட்டேன்
அதுவா! நாங்க சைவம்…நான்
நான் அவசரப்பட்டு, அப்படியா? நான் சைவ சித்தாந்தம் இப்போ படிச்சுட்டு இருக்கிறேன்! நான் சொன்ன இந்த காரியத்தால் தாத்தா என்னை ஒரு விதமாக பார்த்தார்.
“தாத்தா இந்த கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”. தாத்த இப்போது நான் ஒரு இந்து என்கிற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
அவாளுக்குள்ள ஒற்றுமை இருக்கு. கண்ட இடத்துல காலேஜ கட்டுறா, ஆஸ்பத்தரி கட்டுறா நம்மவாளோட ஜனம் தான் என்று கூறிவிட்டு தனது கைகள் இரண்டையும் வானத்துக்கு நேராக  உயர்த்தி, ஒற்றுமையில்லாம அழிஞ்சு போறா – தாத்தாவின் கண்கள் பனித்தன.

தாத்தா எழுந்துவிட்டார். அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.

ஒரு ஊழியக்காரர், ஜெபிக்க வருகிறேன் என்று சொன்ன மற்றொரு ஊழியக்காரரை உதாசீனம் செய்ததை எண்ணிப்பார்த்தேன். என்ன காரணமாக இருக்கும்? தங்குவதற்கு இடமில்லாமல் ஒருவர் அலைகிறார், அவருக்கு ஒருவேளை உணவாவது இட்டனுப்பலாமே? முகத்திலடித்தாற்போல் செல்போனை ஆப் செய்துவிட்டால் என்ன அர்த்தம்?

தாத்தாவுடைய புரிதலின்படி நமக்குள் ஒற்றுமை இருப்பதனால் தான் நாம் இவ்வளவு வீரியமாக வளர்ந்து நிற்கிறோம்! நாம் உண்மையிலேயே அப்படியா இருக்கிறோம்?

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                               revgodsonsamuel@gmail.com

Phone:  09870765181

குறிச்சொற்கள்:

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்