முதல் திருமண நாள்

By pastorgodson

இனிமையான ஒரு வருடம் எப்படி கடந்தது என்று தெரியவில்லை. நாட்கள் இனிதாய் இருக்கும்போது நேரம் கடந்து செல்வது தெரியாதுதான் போலும். இந்த நாளின் முக்கிய நாயகி என்னோடு மும்பையில் இல்லாத காரணத்தால் என் இனிய வாசகர்களோடு எங்கள் வாழ்வின் சுவையை பாகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குடும்பத்தினருடன் தேவிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு

என்னுடைய வாழ்வில் 4 முறை திருமணத்தின் அருகில் சென்று மறுபடியுமாக பேச்சிலராகவே இருந்துவிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், திருமணம் எனக்கு புரியாத உலகமாகிவிட்டது. இப்படியே இருந்துவிடுவோம் என்னும் அளவிற்கு நான் என்னை தயார் செய்துகொண்ட நேரம். கடைசியாக ஒருமுறை இந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்றார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சம்மதித்தேன்.எந்த நம்பிக்கையும் அற்று, வீட்டிலே நான் போட்டுக்கொண்டிருந்த டி ஷர்ட்டுடன் கிளம்பினேன். என்னை துணிமாற்றச் சொல்லி வற்புறுத்தினால் நான் மொத்த நிகழ்வையும் ரத்து செய்துவிடுவேனோ என்று எண்ணி மின்னல் போல் எல்லரும் கிளம்பிவிட்டர்கள்.

ஜாஸ்மின், எங்களுக்கு தேனீர் கொடுத்தள். மெலிதாக உயரமாக இருந்தாள். என்னைப்போலவே சற்று கரிய நிறம். ஜெயமோகனின் காடு நாவல் வாசித்துக்கொண்டிருந்ததனால் கருப்பின் மீது அப்படி ஒரு கள்வெறிக்காதல் கொண்ட சமயமது. இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு பிஷப் சாமுவேல் அமிர்தம் என்னிடம் உனக்கு என்ன மாதிரி பெண் வேண்டும் என என்னிடம் கேட்ட போது, “அங்கிள், உங்க காண்டாக்ட யூஸ் பண்ணி ஒரு ஆப்ரிக்கன் கெர்லை பார்த்துத் தாங்க” என்று கேட்டேன். சிரித்துவிட்டார்.

ஜாஸ்மினுக்கு என்னை பிடித்திருந்தது. ஒரு போதகரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது அவளது உறுதிப்பாடு. என்னைப்போல் அல்லமல் அவளைப் பார்க்கச்சென்ற முதல் மாப்பிள்ளை வீட்டர் நாங்கள் தான். நான் சற்று நேரம் எடுத்தேன் பதில் சொல்வதற்கு. பதில் சொல்லி 20 நாட்களுக்குள்ளாக திருமணம் ஒழுங்கானது.

பல பயத்தில் மிக முக்கியமானது “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தான்”. எல்லமே மாயை தானா?. அன்பு அதிக காலம் நீடிக்காதா? என்கிற பயமே முதன்மையாக இருந்தது. கடவுளின் வாழ்த்துதலால் இன்று வரை ஒருவருக்கொருவர் மிக்க அன்புடனே இருக்கிறோம். பழமொழிகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டமிது.

இதுவரை நான் அவளுக்கு விசேஷமாக எதையும் வாங்கிக்கொடுத்ததில்லை, ஆனால் அவளுக்கு தேவையான பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவளுக்கு நான் பூ வாங்கிய நாட்கள் மொத்தம் 10ற்கு உள்ளாகவே இருக்கும். ஆனால் ஒரு நாளும் எங்கள் குடும்ப்பத்தில் புன்னகைக்கோ, சிரிப்பிற்கோ, பூரிப்பிற்கோ பங்கம் வந்தது கிடையாது.

அவளது பேச்சு அவள் நிறத்தைப்போன்றே மிக்க அழகுடையது. குயில் நாணும் குரல்வளமுடையவள். சிறந்த பாடகி. திருச்சபையில் எங்கள் டுயட் எல்லா விசேஷித்த நாட்களிலும் உண்டு. அவளது வாயால் கதைகேட்பது எனக்கு மிகவும் பிரியமான பொழுது போக்கு. எதையவது சொல்லி அவள் வாயை கிளரி விடுவேன். தெவிகோடு டயலெக்ட்டில் அவள் பேசுவது கேட்ட்க நான் எதையும் தியாகம் செய்வேன். “ஒவா… பின்னல்லாதெ!” (“அது அன்றி வேறென்ன” என்பதை அவள் சொல்லும் பாங்கு)

கோபமே படவேண்டாம், பார்த்தால் போதும் அவள் கண்கள் கலங்கிவிடும். பொதுவாக எனது “எடக்குமடக்கான” பேச்சுதான் அவளை காயப்படுத்தும். சமாதானம் கூறிவிட்டுதான் மறுவேலை செய்வேன்.

ஜாஸ்மினின் பெற்றோருக்கு என் மேல் அளவு கடந்த பாசம் உண்டு. எனது  திருமணத்தை நடத்தி வைத்தவர் எனது அன்பு நண்பர் அருட் திரு பெனோ ஈனோஸ். திருமண ஆராதனையில் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டர். ” ஜாஸ்மின், காட்சனை நீ கைக்குள்ளாக போடவேண்டுமென்றால் அவனுக்கு மீன் வாங்கிக்குடுக்கத் தவறாதே”. இன்றும் அவர்கள் வீட்டிற்குப் போனால் மீன் விதம் விதமாக இருக்கும். கருங்கல் சந்தையை விலைபேசி முடித்துவிட்டு வந்ததுபோல் ஒரு பிரமிப்பு தோன்றும்.

ஜாஸ்மின் கருவுற்றபோது பயம் ஏற்பட்டது. நான் எப்படி தனியாக அவளை கவனித்துக்கோள்ளுவேன் என்று.  திருச்சபை மக்களின் உதவி எங்களுக்கு அதிகமாக இருந்தது, கர்த்தருடைய பெரிதான கிருபை. அவ்விதமாகவே டாக்டர் அம்ருதா அவர்களும் அவ்ளை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஆறாம் மாதமே நான் அவளை எங்கள் வீட்டிற்கு அனுப்பினேன். கிறிஸ்மஸ் எனக்கு மிக முக்கிய சீசன் ஆனதால், தலை கிறிஸ்மசை ஜனவரியில் கொண்டாட சேர்ந்து வந்தோம். வரும் வழியில் மூணாருக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினோம். ராஜமலைக்கு சென்றபோது நான் என் மகனிடம், “மகன்! அப்பா இப்படி உன்னை கஷ்டப்படுத்திறேன் என நினைக்காதே, நீ வந்திருப்பது ஒரு முக்கியமான இடம்! நன்றாக அனுபவித்துக்கொள்” என்று கூறினேன். எந்த கடின  பயணத்தையும் அவன் தாங்க வேண்டுமல்லவா?

குழந்தை பிறப்பதற்கு ஒரிரு மாதங்கள் இருக்கும்போது ஜாஸ்மின் என்னிடம் நமக்கு ஆண் குழந்தை தான் என்று கூறிவிட்டாள். நான் எப்படி சொல்லுகிறாய் என்று கேட்டேன். “அது எங்க வீட்டுகிட்டெண்டு என்ன பாக்க வந்த கெளவிய் செல்லிச்சினும்”. எப்படி? “ஒவா… வயறு சாடி கிடக்கியதப்பாத்தா எங்களுக்கு அறியிலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டு குழந்தைகள் எல்லாமே குளச்சல் ஜேம்ஸ் மருத்துவமனையில் தான் பிறந்துள்ளன. ஏனென்றால் டாக்டர் செனிகா பிரேம்குமார் எனது பெரியம்மவின் மகள். கடைசி ஒரு மாதம் அவளை தன் மருத்துவமனையில் வைத்து நனறாக கவனித்துக் கொண்டார்கள். அவளுக்கு ஷுகர் அளவு கூடியிருந்ததினால் கூடுதல் கவனம் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் நாள் கர்த்தர் எனக்கும் ஜாஸ்மினுக்கும் ஒரு ஆண் மகனைத் தந்தார். ஆரன் (ஆரோன் என்பதன் ஆங்கில வடிவம்) என்று நான் தேர்ந்தெடுத்த பெயரை, பாட்டி தாத்தா முதல் குட்டி மருமக்கள் வரை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டனர். ஆரன் என்பதற்கு “விரும்பத்தக்க குணாதிசயமுடையவன்” என்று பொருள்.

ஜாஸ்மின் ஸ்வீட் பால் சேர்த்துக்கொள்ளுவதில்லை. நானும் அப்படியே பழகிவிட்டேன். பல காரியங்களில் என்னைவிட அவள் சிறந்தவள். என்னை விட படித்தவள், அறிவாளி, வேத அறிவில் நானே சற்று ஒதுங்கி தான் நிற்க வேண்டும். எனினும் நாங்கள் ஒரு சிறந்த ஜோடி தான்.

 ”மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்!”

 ஏனென்றால்

“இந்த காரியம் கர்த்தரால் வந்தது!”
அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone:  09870765181

குறிச்சொற்கள்: ,

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்