பத்தில் ஒரு பங்கு – பாகம் 1

By pastorgodson

“பத்தில் ஒரு பங்கு” குறித்த கருத்துக்கள் மீண்டும் மீண்டுமாக திருச்சபையில் வலியுறுத்தப்படுகின்றன. போதகர்களின் “பத்தில் ஒரு பங்கு” குறித்த செய்திகள் ஆழ்ந்த வேத அறிவு இல்லமையா அல்லது ஒருவித அசட்டு தைரியமா என என்னல் விளங்கிக் கொள்ள இயலவில்லை. வளையங்களை வெகு லாவகமாக தூக்கிபோட்டு விளையாடும் ஒரு தேர்ந்த சர்க்கஸ் கலைஞனைப் போன்று நமது இறைச் செய்தியாளர்கள் மாறிவிட்டனர்.

“ நீ தசமபாகம் கொடுத்தாயா?” என்பது இன்றைக்கு நடுத்தர வற்கத்து கிறிஸ்தவர்களிடையே பிரபலமான வார்த்தை. தாங்கள் இருக்கும் திருச்சபைகளுக்கும், தாங்கள் விரும்பும் நட்சத்திர அல்லது நடுத்தர ஊழியர்களுக்கும் “பத்தில் ஒரு பங்கை” அனுப்புவது இன்று ஒரு நாகரீக கலாச்சரமாகவே ஆகிவிட்டிருக்கிறது. இவ்வளவு தீவிரமாக “பத்தில் ஒரு பங்கு” விளம்பரப்படுத்தும் காரணம் என்ன? பலவிதங்களில் மக்கள் இதைப் புரிந்து கொண்டாலும், கீழ்வருவனவற்றையே பல நற்செய்தியளர்கள் அறிவுருத்துகின்றனர்……

1. விசுவாசிகளின் தந்தையாம் ஆபிரகாமை பின்பற்றுங்கள்: ஆபிரகாம் விசுவாசிகளின் தந்தை, அவர் செய்த இந்தக்காரியத்தை அவரின் பிள்ளைகளாகிய நாமும் செய்யவேண்டும். அவ்விதமாக நாம் செய்யும்போது அவர் ஆபிரகாமுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கட்டளையிட்டாரோ அவற்றையெல்லம் அவர்தம் பிள்ளைகளுக்கும் கொடுப்பார். வேறு என்ன, அன்றைய நாட்களில் ஆபிரகாமைப் போல ஒரு பெரும் செல்வந்தர் கிடையாது. “…..அப்பழுது ஆபிரகாம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு பத்திலொரு பங்கை கொடுத்தார்”(ஆதியாகமம் 14 : 20)

2. “பத்தில் ஒரு பங்கு” கொடுப்பது நமது கடமை:  திருச்சபைக்கு வருகிற அனைவரும் பவுல் அறிவுறுத்துவது போல காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டும். மேலும் கடவுள் நமக்கு கொடுத்திருப்பதிலிருந்து அவர் தனக்குரிய பங்கை மாத்திரமே விரும்புகிறார். “அதிகமில்லை ஜென்டில்மேன் பத்தில் ஒன்று மட்டுமே” ! “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 13 : 2)

3. பத்தில் ஒரு பங்கு கொடுப்பதனால் ஆசீர்வாதம் பெருகும்:  இன்றைய ஊழியர்களின் மிகப் பிரபலமான ஒரு டயலாக் இது தான்.. மல்கியா 3 : 10 ஐ குறிப்பிடத போதகர்களே இல்லை. “…. விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள்;” (மத்தேயு 6 : 20) “குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்” (2 கொரிந்தியர் 9 : 6)

 4. பத்தில் ஒரு பங்கு கொடுக்காவிட்டால் அது சாபம்: ஒருவகையில் கிறிஸ்தவ போதகர்கள் தாங்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பதற்கு, மிரட்டலையே கையில் எடுக்கின்றனர். சாபம் ஒரு எளிய தந்திரம்!“ மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.! எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்? என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்தில் ஒரு பங்கிலும் காணிக்கையிலும் தான் (மலாக்கி 3 : 8) “ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். ஓருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் ( கலாத்தியர் 6 : 7)

மேற் குறிப்பிட்ட வசனங்கள் யாவும் நானாக அந்தந்த இடங்களில் அமைத்தது இல்லை மாறாக ”பத்தில் ஒரு பங்கு” முன்னிறுத்தும் ஒவ்வொருவரும் திருவிவிலியத்தினை வெறும் வர்த்தைகளின் கூவியலாகவே முன்னிறுத்துகின்றனர். அவற்றின் பின்னணியம் பேசப்படுவது அவர்களுக்கு உவப்பானதாய் தோன்றுவதில்லை. “மிகப்பெரிய் ஊழியர்கள்” என்று அவர்கள் கருதுபவர்கள் எல்லாம் இப்படித்தானே செய்கிறார்கள்? திருச்சபையில் அல்லது ஊழியத்திற்கான காணிக்கைகள் வேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியுமாக ஒரு பிரச்சரம் போலவெ பதிவு செய்கின்றனர். தங்களுக்கும் வருமானம் வந்துவிடாத எனும் எண்ணத்தால் ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் கருத்துக்களை “மேம்படுத்துகின்றனர்”. மந்தைகளுக்கு “அமர்ந்த தண்ணீரோ புல்லுள்ள மேய்ச்சலோ கிடைப்பதில்லை”!

 ஓரு கதையை “பத்தில் ஒரு பங்கை” முன்னிறுத்துவதற்காக இவர்கள் யாவரும் குறிப்பிடுவர்கள். ஓரு காலத்தில் வில்லியம் கோல்கேட் எனும் பதினாறு வயது சிறுவன் தன்னைக் காப்பற்றிக்கொள்ள ஒரு வேலைத்தேடி நியூ யார்க் பட்டணத்துக்கு புறப்பட்டான். அவ்விதமாக அவன் பட்டணத்தில் வந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வெலையைத்தேடிக்கொண்டபோது அவனது தயார் அவனுக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தான். “நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்திலும் பத்திலொன்றை கடவுளுக்கு கொடுக்கவேண்டும்”

நேர்மையாக அவன் சேர்த்த எளிய சேமிப்பிலிருந்து அவன் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்குக் கொடுத்தான். அவவிதமாக அவன் கொடுத்ததினால் அவன் வாழ்விலெ உயருவதற்கு கடவுள் அருள் புரிந்தார். வெகு சீக்கிரமாகவே அவன் தன் முதலாளியுடனே கூட்டு சேர்ந்து தொழிலை நடத்தினான். இன்னும் சிறிது காலத்தில் அவனது தொழில் கூட்டாளியான மாஜி முதலாளி மரிக்கவே, அவன் மொத்த கம்பெனிக்கும் முதலாளி ஆகிவிட்டான்.

பத்தில் ஒரு பங்கை கொடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுவன், இப்பொழுது ஒரு கனவானாக மாறிவிட்டார். எனினும் தன் வாழ்வில் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதிலிருந்து பின் வாங்கவில்லை. தனது வருமானம் பெருகப் பெருக அவர் தன் பத்தில் ஒரு பங்கின் விகிதாச்சாரத்தை உயர்த்தத்துவங்கினார். பத்தில் ஒரு பங்கு, பத்தில் ஐந்து பங்கு ஆனது. அதாவது தனது வருமானத்தில் பாதி.

கேட்கவே புல்லரிக்கும் இந்த கதை யாரைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டிருப்போம். ஆம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் கோல்கேட் பற்பசையின் முதலாளி தான் அவர். அவரா இப்படி? என பற்பசை வயோடே நாம் சிந்திக்கும் போது, நமது சிந்தனை எப்படி துலங்கும்?

இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்பதை நம்புவதற்கு ஏதுவாய் சமீபத்தில் நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். “உங்களது கோல்கேட் எப்பொழுதுமே ஹலால் செய்யப்பட்டது”. இது வெறும் விளம்பர தந்திரம் தான் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு “பத்தில் ஒரு பங்கும்” இசுலாமியர்களுக்கு “ஹலாலும்”.

ஒரு வேளை வில்லியம் கோல்கேட் உண்மையாகவே தனது வாழ்வில் கர்த்தருக்கென்று கொடுத்திருந்தாலும், அதை தொக்கிய கேள்விகள் எழுவதை நம்மால் தடுக்க இயலவில்லை. ஒன்றுமில்லாமல் வேலைக்கு சேர்ந்த நமக்கு, இறைபற்று இருப்பதற்காகவே நமது முதலாளி சாக வேண்டுமென்றால் எத்துணை தவறான காரியம் அது?  தனது உயிரக் கொடுத்து நம்மை வாழவைத்த இயேசுவைப் பின்பற்றுகிறோமா அல்லது பிறர் உயிர் போனாலும் பரவாயில்லை நான் சுபிட்சமாக இருக்கவேண்டும் எனும் “பத்திலொரு பங்கு” போதனையை முன்னிறுத்துகிறோமா?

வெள்ளை அங்கியைத் தரித்திருந்தாலும் , வெளிநாட்டு உடையணிந்திருந்தாலும் , காவி வஸ்திரத்தில் கிறிஸ்துவை காண்பிக்க வந்தாலும் , திருச்சபை மக்கள் எப்போது “பரவசமான” செய்திகளை கேட்க விழைகிறார்களோ அப்பொழுதே சாத்தான் அங்கே கிரியை செய்ய ஆரம்பித்துவிடுகிறான்.

பத்திலொரு பங்கை கடவுள் நியமிக்க காரணம் தான் என்ன? திரு விவிலியம் என்ன சொல்லுகிறது? இவ்வளவு நாள் காத்திருந்தோமல்லவா? இன்னும் சற்று நேரம் பொறுமை காக்க விரும்புகிறேன்.

தொடரும்…..

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone : 09870765181

குறிச்சொற்கள்: ,

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்