பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.
“தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்” (1 கொரிந்தியர் 16: 3)
இந்த கூற்று கொரிந்து பட்டணத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிரூபமாக எழுதியது. எந்த வசனத்தையும் நாம் நமக்கென்று வாசிப்ப்த்து பொருள் கொள்ளுவதற்கு முன்பதாக அது யாருக்கு எந்த நேரத்தில் எந்த தேவையை முன்னிட்டு எழுதப்பட்டது என புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது.
கொரிந்து பட்டணம் ஒரு துறைமுக நகரம். அங்கே அதிகமும் பணம் செழித்தபடியால் பவுல் அங்கே வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இதைக் கூறுகிறார். பவுலுடைய நோக்கம் வெறும் பணம் கொடுக்கச் சொல்லுவது அல்ல மாறாக அவர்கள் மத்தியில் இருந்த தவறான பழக்க வழக்கங்களை நீக்குவதும் அவர்களை மேன்மையுள்ளவர்கள் ஆகும்படி ஒரு கலாச்சார பகிர்தலை கொரிந்தியர்களுக்கும் (கிரேக்கர்களுக்கும்) எருசலேமில் வாழும் யூதர்களுக்கும் இடையில் நிகழ்த்துகிறார்.
முதலாம் வசனம் கூறும் “இறைமக்கள்” எனும் வார்த்தை பல இடங்களில் பவுல் உபயோகிப்பதை நாம் காணமுடியும். (உரோமையர் 1: 7, 2 கொரிந்தியர் 1: 1, பிலிப்பியர் 1: 1) இறைமக்கள் என்று பவுல் கூறும்பொழுது அவர் திருச்சபை அங்கத்தினர்களான மக்களையே குறிப்பிடுகின்றார்.
அப்படியானால் அவர் எருசலேமிலுள்ள யூதர்கள்(இறைமக்கள்) மேல் கரிசனை கொள்ள காரணம் என்ன? நமக்கு தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் முக்கியமான ஒரு தகவல் திருத்தூதர் பணிகள் 11: 27- 30 வரைக் காணக் கிடைக்கிறது.
இவ்விதமாக வறுமையில் உழலும் கிரிஸ்தவர்கள் மேல் பாரம் கொண்டு பவுல் கொரிந்து திருச்சபைக்கும் கலாத்திய திருச்சபைக்கும் பணம் வேண்டி நிரூபம் அனுப்புகிறார்.
வாரத்தின் முதல் நாள் என பவுல் கூறுவதே பவுல் ஓய்வுநாளை முக்கியத்துவப்படுத்தாமல் ஒரு புது நாளை ஆராதனைக்கென்று அறிமுகம் செய்வதைக் காண்கிறோம். கிரிஸ்தவர்களின் கூடுகையை யூதர்களின் மரபை பின்பற்றாதிருக்க பவுல் இவ்விதமாக ஒரு முயற்சியை மெற்கொள்ளுகிறார்.
பவுல் பலவிதங்களில் தனது எதிர்ப்பை யூதர்கள் மேலாக காண்பித்திருந்தாலும், முக்கியமாக அவர்களது பழக்கவழக்கங்களை கேள்வி எழுப்பியபடியே அவர் தனது தரப்பை முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். தவறிப்பொய் கூட அவர் “பத்திலொருபங்கை” முன்னிறுத்த விழயவில்லை. பகிர்ந்து வழ்வதை அவர் போற்றியிருக்கிறார் என்பதைய் மட்டுமே நாம் காண முடியும்.
தொடரும்
அருட்திரு காட்சன் சாமுவேல்
தொடர்பிற்கு
mobile: 09870765181
குறிச்சொற்கள்: ஆசீர்வாதம், தசமபாகம், திருவிவிலியம், பவுல் அப்போஸ்தலன்