ஜெயமோகன் அண்ணன் அவர்களின் பதிவு (மனிதாபிமான வணிகம்) மேலோட்டமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானதாக தென்பட்டாலும், அதன் ஆழமான கேள்விகளை ஒவ்வொரு கிறிஸ்தவனும் எதிற்கொள்ளவேண்டிய கடமை உண்டு. சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்தில் மிகவும் தாமதமாக, (நான் அப்போது முக்கூடலில் இருந்தபடியால் எனக்கு தகவல் கிடைக்கவில்லை) நான் அங்கு சென்றபோது கண்ட காட்சிகள் அனைத்தும் மனிதாபிமானத்தின் உச்சமே. கிறிஸ்தவ மதம் சார்ந்த எந்த விளக்கங்களும் இன்று அதனுடன் கோர்க்கப்படும் சதியாகவே நான் காண்கிறேன்.
குளச்சலை அடுத்த மண்டைக்காடு என்ற இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்ததுண்டு. கிறிஸ்தவர்களும் இந்துக்களும் மோதிக்கொண்ட, தமிழகமே ஆடிப்போய் பார்த்த சுமார் 30 வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வை சிறுவனாக நான் “கிறிஸ்தவ முறைப்படி” அறிந்து வைத்திருந்தேன். சுனாமி நேரத்தில் நான் குளச்சல் சென்றபோது கண்ட காட்சிகள் உடனடி சேவைகள், மனிதாபிமானம், அவசர உதவி போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
மண்டைக்காடு கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் நிறைந்த இடம். அதாவது கடற்கரையை ஒட்டி வாழும் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சுனாமி தாக்காத (அல்லது பெரும் பாதிப்பு எற்படுத்தாத பகுதியில் இந்துக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்). இவ்விதமாகவே குளச்சலிலும், கடற்கரையை ஒட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சாலையைக் கடந்து இசுலாமியர்களும் வாழ்ந்துவருகிறார்கள்.
பெரும் பாதிப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கே. பிணங்களில் பெரும்பாலானவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களுடையதே. எனினும் மேற்குறிப்பிட்ட இடங்களில் காக்கி உடையுடன் ஆர். எஸ். எஸ் தொண்டர்களும், தாடி வைத்த இசுலாமிய இளைஞர்களும் களத்தில் பம்பரமாக சுழன்று பிணங்களைப் பொறுக்கி, மீட்க வேண்டியவர்களை மீட்டது உண்மை. கிரிஸ்தவ அமைப்புகள் இவர்களை சற்றேனும் அங்கீகரித்ததா என்பது ஒரு பெரிய கேள்வி.
கிறிஸ்தவ நிறுவனங்களால் வெகு சுலபமாக பணம் திரட்ட இயலும். அவை அதை மிகவும் நேர்த்தியாக செய்ய வேண்டிய அனைத்து அமைப்பு முறைகளும் கொண்டிருக்கின்றன. பணம் சென்று சேரவேண்டிய வழிகளும் அவ்விதமாகவே அமைப்பு ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் எனும் ஒற்றைப்படையான செய்திகள் எங்கும் எடுத்துச் செல்லப்பட்டன. விளைவாக சி எஸ் ஐ பெற்றுக்கொண்ட பணம், கத்தோலிக்கர்களுக்கு சென்று சேரவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து தங்களுக்குள்ளே பங்கு போட்டுக்கொண்டனர். முற்றிலும் சி எஸ் ஐ ன் பங்களிப்பு இல்லை என நான் கூற மாட்டேன்.
எந்தவிதமான இயற்கை பேரழிவுகளிலும் நிவாரணம் கொடுக்கப்படவேண்டிய முறைகள் உண்டு. நிவாரணம் கொடுப்பதில் தவறுகள் நேர்ந்தால் அவை பேரழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. நான் மதிக்கும் மீனவ மக்கள், எனது வாழ்நாளில் ஒருபோதும் கையேந்தியிராதவர்களின் தன்மானம் யாவற்றையும் அவர்களுக்கு உரிமையான நிவாரணம் கொடுக்கப்பட்ட விதம் மாற்றியமைத்தது. எனினும் அம்மக்கள் உறுதியுடன் அவைகளை எதிற்கொண்ட விதம் மிகப்பெரிய அற்புதமே.
நிவாரணம் கொடுப்பவர் எப்பொழுதும் நிவாரணம் பெருபவரை விட உயர்ந்தவர் அல்லர். நிவாரணம் கொடுப்பவர் அது தன் மேல் விழுந்த கடமை என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். எந்த வகையிலும் நிவாரணம் பெருபவரின் நம்பிக்கையையோ (நீ கத்தோலிக்கனாய் இருப்பதினால் தான் பிரச்சனை வந்தது நீ பெந்தேகோஸ்த்தேவாக மாறிவிடு, இரட்சிக்கப்படு என்று சொல்லுவதோ), வாழ்க்கை முறையையோ (நீங்க கடலுக்கு அருகாமையில இருந்ததாலதான் இந்த பிரச்சனை வந்தது இல்லாட்டி இது வந்திருக்காது என அதிமேதாவியாக கூறுவதோ) குறை கூறுவது மிகவும் தவறு.
அது போலவே நாங்கள் தான் உதவி செய்தோம் பிறர் ஒருவரும் உதவி செய்யவில்லை என்பது மிகப்பெரிய மோசடி. அது வெறும் ஒரு விளம்பர தந்திரம் என்பது வெளிப்படை. கிறிஸ்துவின் இரத்தம் விலைக்கு வாங்கி தெளிக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக தன்னையே கொடுத்தது மானுடத்தை மீட்டுக்கொண்ட ஒன்று அது. கிறிஸ்தவர்கள் அதையே பின்பற்றுவார்களாக.
Rev. Godson Samuel
Contact: palmyra_project@yahoo.com malargodson@gmail.com
09702567603
குறிச்சொற்கள்: ஆர். எஸ். எஸ், இசுலாமிய இளைஞர், இரத்தம், உதவி, கிரிஸ்து, குளச்சல், சி எஸ் ஐ, சுனாமி, சேவை, ஜெயமோகன், நிவாரணம், பெந்தேகோஸ்த்தே, மண்டைக்காடு, மனிதாபிமானம், மீனவ மக்கள்