http://www.sramakrishnan.com/?p=2510 நான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் எனது சகோதரி பாடிய இப்பாடல் என்னை வெகுவாக கவர்ந்தது! நான் அவளிடம் கேட்டு உடனேயே இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டேன்! ஆச்சரியம் என்னவென்றால் அதன் பிறகு சுமார் 25 வருடங்களாக இந்தப்பாடலை நான் எங்கும் கேட்டது இல்லை! எவரும் இதை முக்கியத்துவப்படுத்தியதும் இல்லை! எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இதை சாலமன் கிரண்டியோடு ஒப்புமைபடுத்தியிருப்பதைப் போல் அப்போதே எனது சகோதரி எனக்கு அப்பாடலையும் கற்றுத்தந்திருந்தார். நான் சால்மன் கிரண்டி என்பதை "சாலமோன் ராஜா" என்றே நினைத்திருந்தேன்! பல்வேறு மாவட்டங்களில் இவை விதம் விதமாக பாடப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது எனும் யூகமும் என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது! திங்கட் கிழமையில் துவங்கி சனிக்கிழமையில் முடியும் பாடலை குறிப்பிட்டதால், ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்திருக்கும் கேள்வியே முதன்மையாக அமைந்திருந்ததை காணும்போது, ஒரு நாளின் தொடர்ச்சி விடுபடும்போது மொத்த கதையும் அர்த்தமற்றதாய் மாறிவிடுகிறதோ? ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம் இந்த முதல் இரண்டு வரிகள் ஒரு திருடன், தான் திருடன் என அடயாளப்படுத்தப்படும் தகாத காரியமொன்றைச் செய்கின்றான் என்பதோடு, பின்வருவனவற்றை புரிந்துகொள்ளும் கண்ணியாக காணப்படுகிறது. திங்கட் கிழமை திருடன் கிடைத்தான் (வந்தான்) வந்த திருடனுக்கும் கிடைத்த திருடனுக்கும் வேறுபாடு உண்டு! ஞாயிற்றுக்கிழமை காணாமற்போன நகையைக் குறித்த புகாரை காவல் துறையில் நகையை இழந்துபோன குடும்பத்தார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் அவனை வலை வீசிப் பிடித்தனர் என்பதை "திருடன் கிடைத்தான் என இரண்டாவது நாள் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான். கிடைத்த திருடனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை காவலர் உறுதி செய்யும் பகுதி விளக்குகிறது. புதன்கிழமை புத்தி வந்தது. தவறுகளுக்கான தண்டனை, அவற்றை உணர்ந்து மனம் மாறவே எனும் கருத்தோடு திருடன் ஒத்துப்போவதை உணர்த்துகிறது. வியாழக்கிழமை விடுதலை ஆனான். தன் தவறை ஒருவன் உணர்ந்து திருந்தும்போது அவனது தண்டனையினின்று அவன் விடுதலை பெறும் காட்சி நம்பிக்கையுடன் முன்வைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான். விடுதலை அடைந்த திருடன் தன்னை அடையாளப்படுத்திய "திருடன்" எனும் அடைமொழியை உதற விரும்பியவனாக திருட செல்லாமல் தனது வீட்டிற்கே வருகிறான். சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான். தன்னை புதுப்பித்துக்கொள்ளவும், தனது புது உழைப்பிற்கான சக்தியை பெற்றுக்கொள்ளவும் விரும்பியவனாக ஒரு புதிய விடியலை காண அவன் கண்ணுறங்குகிறான்! ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம் திங்கட் கிழமை திருடன் கிடைத்தான் செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்குப் போனான். புதன்கிழமை புத்தி வந்தது. வியாழக்கிழமை விடுதலை ஆனான். வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தான். சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான். அனைத்தையும் விரித்து பார்க்கும்போது ஒரு கிறிஸ்தவ மத போதகர் இப்பாடலை எழுதியிருக்க வாய்புள்ளதாகவே தெரிகிறது! எனினும் அனைவருக்கும் பொதுவான நல்ல கருத்துக்களை முன்னோர் நமக்கு எவ்வளவு எளிமைப்படுத்தி சொல்லி சென்றிருக்கிறார்கள் என்ற வியப்பும் மேலோங்கியே நிற்கிறது! இந்த பதிவை எழுதத் தூண்டிய எஸ் ரா அவர்களுக்கு நன்றி! அருட்திரு. காட்சன் சாமுவேல் 09702567603 palmyra_project@yahoo.com malargodson@gmail.com
குறிச்சொற்கள்: பாடல்