Archive for ஒக்ரோபர், 2008

இன்றும்! இப்போதும்!

ஒக்ரோபர் 31, 2008

எங்கள் இனிய இயேசுவே!

இன்று
உமது கரங்களால் மீட்கப்பட்டேன்
உமது அன்பை அனுபவித்தேன்
உமது இருத்தலை உணர்ந்தேன்
உமது கற்பனைகளை பாவித்தேன்
உமது கருணையில் கட்டுண்டேன்
உமது ஆசியை பெற்றேன்

இப்போதே
எனது கரங்கள் வீழ்ந்தோரை மீட்க வழிகாட்டட்டும்
எனது அன்பு பிறர் உம்மை அனுபவிக்க அறைகூவட்டும்
எனது வாழ்வு வாழ்விழந்தோரை வாழ்விக்க பயன்படட்டும்
எனது தகவுகளால் எளியவர் உமது நீதியை உணரட்டும்
எனது கருணை பெலவீனரை திடப்படுத்தட்டும்
எனது ஆசி அனைவருக்கும் உரித்தாகும் வாழ்த்தாகட்டும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

ஜெயமோகனின் வாழ்த்து

ஒக்ரோபர் 31, 2008

ஜெயமோகன் அவர்கள் என்னை ஊக்குவித விதம், அவர்களது எளிய பழகும் விதத்தையே சிலாகிக்க வைக்கும். அவர்கள் மூலமாக நான் பெற்றடைந்த  ஞானம் எனது ஆன்மீக கடற்பயணத்தின் பாய்மரமாகவே
நான் காண்கிறேன். பிற பெரும் ஆளுமைகளின் வரிசையிலே என்னையும் அவர்கள் சேர்த்திருப்பது அவர்களின் பெருந்தன்மைக்கு சான்று என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள். இறைவன் பார்வையில் நேர்மையாளனாக இருக்கும் முயற்சியைப்போன்றே அண்ணனது வாழ்த்துக்கு ஏற்ற வகையில், இன்னும் சிறப்பாக எனது இணையதள பதிவுகளைச் செய்வது இப்போது கூடுதல் பணி. தொடர்ந்து படிக்க http://jeyamohan.in/?p=747 
காட்சன் சாமுவேல்

காகம்

ஒக்ரோபர் 30, 2008

மும்பை பட்டிணத்தின் மழை மிகுந்த நாளில் தவிர்க்க முடியாத பிரயாணம் ஒன்று ஏற்ப்பட்டது. ‘தானே’ இரயில் நிலையம் முன்பு ஷூ மூழ்குமளவு தண்ணீரில் பொதுமக்கள் எதுவுமே நடவாதது போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மும்பை வாழ்க்கை இன்னமும் அதிசயிக்கதக்கதாகவே இருக்கும் என் கிராமத்து மனது பரக்கு பார்த்தபடியே நிதானமாக நீரை துழாவியபடியே நடந்தது. எனக்கு மிகச் சமீபமாக ஒரு கீச்சுக்குரலை நான் கேட்டபொழுது அப்படியே நின்றுவிட்டேன். என் கால்களின் அருகிலேயே ஒரு எலிக்குஞ்சு (பெருச்சாளியின் இளவல்?) பரப்பரப்புடன் நீந்திக்கொண்டிருந்தது. எங்கே சென்று கரையேறுகிறது என நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு காகம் என்னை வட்டமிட்டபடி வந்து ஒரு சாய்ந்துபோன தூணில் அமர்ந்தது. சூழ்நிலையை புரிந்துகொண்ட நான், இன்னும் நிதானமாக கூர்ந்து கவனிக்க நேரமில்லாமல் என்ன செய்வது என நிதானிப்பதற்குள் காகம் மிக லாவகமாக தனது உணவை கொத்திச் சென்றது. கீச்சுக் குரல்களும் காகமும் மறைந்தன. காகம் தன்னுடைய உணவை எங்கே எடுத்துச் சென்றிருக்கும்? என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தேன்.

சமீபநாட்களாக நான் சிறுகுழந்தைகளை அழைத்து கதைகளைச் சொல்லவும், கேட்கவும் ஆரம்பித்திருந்தேன். அவர்கள் கூறிய கதைகளில் காகங்களும் இடம் பெற்றிருந்தன. குழந்தைகள் வாழ்வில் காகம் பெற்றிருக்கும் முக்கிய இடம் என்னை காகத்தின் பால் ஈர்த்தது. நகர வாழ்வில் நம்மைவிட்டு அநேக பறவைகள் அகன்றபோதிலும், தியாகம் மற்றும் நல்லுறவை வெளிப்படுத்தும் காகம் நம்மோடு தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காகங்கள் குறித்த உயர்வான எண்ணங்கள் ஏதும் தற்பொழுது நம்மிடம் இல்லை. நாம் விரும்பத்தகாத கரிய நிறம், குரல்வளமற்ற அதன் கரைச்சல், நடைப்பழகத் தெரியாமல் தத்துவது, சனி பிடித்துவிடுமோ என்ற அச்சம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசுத்தமாக கருதப்படும் பொருட்களோடுமுள்ள அதன்  தொடர்பு. எனினும் குழந்தைகள் தம் வாழ்வில் காகம் நீக்கமற நிறைந்திருப்பது, காகத்தை நாம் குறைத்து மதிப்பிடலாகாது எனச்சுட்டுகின்றது.

குழந்தைகளுக்கு சோறூட்டவேண்டி, காகங்களை நாம் காண்பிக்கும் பொழுது காகம் ஒன்றும் குழந்தைகளை பயமுறுத்துவது இல்லை. நாம் தான் சிறிது சிறிதாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறோம். காகம் தலைக்குமேல் பறப்பது நல்லதல்ல என துவங்கி சனி பகவானை அழைத்து வந்து பயமுறுத்தும் வரை நமது கதைகள் யாவும் குழந்தைகளை காகத்தை விட்டு தூரமாக்கும் சதிவலைகளாகவே காணப்படுகின்றது. பிஞ்சு இதயங்களை நஞ்சாக்கி காகத்தின் தியாகத்தை அறிந்துகொள்ள முடியாமற் செய்கிறோம். காகங்களை கைச்சாடையால் துரத்துவதோடே மெல்ல மெல்ல நாம் காகங்களை குழந்தைகளிடமிருந்து தூரமாக்கும் கதைகளை பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறோம். ‘பாட்டி வடை சுட்டக்கதை’ தான் நம் கைவசமிருக்கும் முதற்கதை. திருட்டு என்றால் என்ன?, பிறரை நயமாக வஞ்சிப்பது மற்றும் ஏமாற்றுவது எப்ப்படி போன்ற நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு புரியாத வயதிலேயே புரியும்படி விளக்குகின்றோம். தன் தள்ளாமையில் உழைக்கும் பாட்டிக்கு நிகழும் அவலம் தான் உழைப்போருக்கு அனுதினமும் நடைபெற்றுவரும் அவலம் என்பதையும், நம்மைசுற்றி சுரண்டி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதையும் எடுத்துக்கூறாமல் விட்டுவிடுகிறோம். உயிர் வாழ உணாவின் இன்றியமையாமை என்ன என்பதை மட்டுமே அறிந்திருக்கும் காகத்திற்கு திருட்டு பட்டம் அணிவித்து, ‘தவறு செய்தவன் ஏமாற்றப்படுவான்’ என்கிற நீதியோடு நரி செய்த ஏமாற்று வேலைச் சரி என்பதாகவே கதையை முடிக்கிறோம். காகம் புத்திசாலியானது என நிரூபிக்கும் வகையில், வடையை தன் கால்களில் கவ்விவிட்டு, பாடல் பாடி நரியை ஏமாற்றிய காகம் என இக்கதையின் நீட்சியும் உண்டு.

புத்திசாலி காகங்கள் குறித்த கதைகள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. நீர் தேடி அலையும் காகம் ஒன்று ஆர்கிமிடீஸின் இயற்பியல் தத்துவத்தை உணர்ந்து, நீர் குறைவுள்ள ஜாடியிலே கற்களை நிறப்பி, நீர் நிறைந்த பொழுது அதைக்குடித்து தாகம் தணிந்து சென்ற கதையை குழந்தைகள் ஆர்வத்தோடும் வியப்போடும் கேட்பதைக் காண கண் கோடி வேண்டுமல்லவா? தனது குஞ்சுகளைக் கொன்ற பாம்பிற்கு பாடம் புகட்ட, மகாராணியின் முத்துமாலையை சாதுர்யமாக எடுத்து வந்து, காவலர்கள் மூலமாக பாம்பை தண்டித்த காகத்தின் வீர தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘டிங்கிள்’ என்கிற குழந்தைகளுக்கான வரைபடங்களுடன் கூடிய இந்திய கதை புத்தகத்தில் வரும் ‘காளி காகம்’ குழந்தைகள் மனதில் அழியா சித்திரம் பெற்ற ஒரு அமர பாத்திரப்படைப்பு. நரியும் முதலையும் சேர்ந்து செய்யும் சதி வேலைகளை ஒரு தேர்ந்த துப்பறிவாளினி போல் கண்டுபிடித்து, சதித்திட்டங்களை நிர்மூலமாக்கி, எளிய காட்டு விலங்குகளை பாதுகாக்கும் தன்மை, சிறுவர்களின் நல்லுள்ளம் மற்றும் ஆளுமையை விருத்திசெய்ய ஏற்றது. வலையில் சிக்கிய மானை காப்பாற்ற வேண்டி காகம் கண்களை கொத்துவது போல் அபிநயிக்கும் கதை காகத்தின் இயல்புகளிலிருந்து பெறப்பட்ட கதையாகும்.

நோவா, மழை நின்ற பின்பு பேசாமல் வாத்துக்களையும் அன்னப்பறவைகளையும் வெளியே விட்டிருக்கலாம். அனேக நாட்களுக்கு பிறகு தண்ணீரில் சுதந்திரமாக விளையாடிய இன்பமாவது கிடைத்திருக்கும் அவைகளுக்கு. ஆனாலும், நோவா என்ன நினைத்தாரோ தெரியவில்லை காகத்தை முதலாவதாக அனுப்பினார். ஒருவேளை காகம் புத்திக்கூர்மையுடையது என்பதாலும், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றதாலும் எனக் கொள்ளலாமா? மேலும் பரிசுத்தமான புறாவைக் காவு கொடுப்பதைவிட, இரண்டு ஜோடி காகத்தில் ஒன்று போனால் நஷ்டமில்லை என நினைத்திருப்பாரோ? இந்தக் கதையில் புறாவே கதாநாயக அந்தஸ்து பெறுகின்றது. பரிசுத்தமான புறா போவதும் வருவதுமான காகத்தைப்போலல்லாமல், தன் கடமையை செவ்வனே செய்யும்பொருட்டு பறந்து சென்று, இடங்களை மேற்பார்வைஇட்டு, நீர் வடியவில்லை என உறுதி செய்தபின் நோவாவின் கைகளுக்கே திரும்பி வந்தது.  மறுபடியும் ஏழு நாட்களுக்குப் பின்னே, புறாவை அனுப்பியபோது, அது தன் அலகிலே ஒலிவ இலையை கொத்திக்கொண்டு வந்து வெள்ளம் வடிவதற்கான அறிகுறியை அறிவித்தது. இன்னும் ஒரு ஏழு நாட்கள் காத்திருந்த நோவா,  புறாவை அனுப்பிய போது, அது திரும்ப வரவில்லை. எங்கே சென்றிருக்கும்? நன்றியிழந்து காணப்பட்டாலும், புறாவை விட்டுக்கொடுக்க மனமின்றி, நோவாவும் நாமும், இது வெள்ளம் வற்றியதற்கான அறிகுறி என நம்மையே தேற்றிக்கொள்வோம். காகத்தையோ ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.

பறவைகளில் மிகவும் அழகானது எது? மிகவும் இனிய குரல்வளமுடைய பறவை ஏது? பேசும் பறவைத் தெரியுமா? கபடற்ற பறவையின் பெயர் என்ன? பெரிய மற்றும் சிறிய பறவைகளின் பெயர்களைக்கூறு போன்ற கேள்விகளே பெரும்பாலும் பறவைகளைப்பற்றிய நமது அகராதியிலிருந்து எழுகின்றன. பறவைகளை கடவுள் ஒரு காரணத்தோடே படைத்திருக்கிறார் என்பதும், அவைகள் தத்தமது பணிகளை செவ்வனே செய்கின்றன என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். ஆக இறைவன் படைத்த காகத்திற்கு சிறுவர் அளிக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுக்காமல் இருப்பது, இறைவன் அளித்த படைப்பின் ஒரு பங்கினை உதாசீனப்படுத்துவதல்லவா?

காகத்தை துப்புரவு பறவை என அழப்பதுண்டு. துப்புரவு செய்யும் நம் சக மனிதர்களை சற்றேனும் மதிக்காத நாம், பாவம் இந்த காகத்தை எவ்வகையில்தான் முக்கியத்துவப்படுத்துவோம். இந்தக் கட்டுரை வாயிலாக காகம் நம் மனதிலிருக்கும் கசடுகளை எடுத்துப்போடுமானால் அது நமக்கு நலமாயிருக்கும்.

இயேசு காகத்தை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். ‘காகங்களை கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்கு சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?’ ஆம், இயேசு தனது சிந்தனையை மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றார். பழமை கொண்ட சிந்தனையோடு இயைந்து, காகம் அசுத்தமானப் பறவை எனக் கொள்ளாமல், இறைவன் அவற்றுக்கும் உணவளிக்கிறார் என்பது என்னே ஒரு உயர்ந்த எண்ணம். இறைவனே அளிக்கும் உணவு அசுத்தமானதாக இருக்க வாய்ப்பு இல்லையே! சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், பறவைகள் இறைவனின் படைப்பை மாட்சியுறச் செய்வன என இயேசு உறுதிப்படுத்துகின்றார். இயேசுவின் இந்த நுண்ணிய அறிவுரையோடு நாம் எலியாவின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் காகத்தின் பங்களிப்பு நமக்கு தெரியவரும்.

எலியா எனும் தீர்க்கன், ஆகாபுக்கு பயந்து கேரீத் எனும் நீரூற்றண்டையிலே இறை வாக்கின்படி தங்கியிருக்கிறான். போதுமான நீர் இருக்கின்றது, உணவருந்துவதற்குத்தான் ஏற்ற வழியில்லை. என்ன செய்வது? எல்லாம் இறைவன் விட்ட வழி என எலியா தன்னையே அர்ப்பணித்து இருக்கும்போது, கடவுள் எலியாவை நோக்கி, பயப்படாதே, ‘உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்’ என் உறுதி கூறுகிறார். காகங்கள் நமக்குத்தெரிந்து உணவு தயாரிப்பதில்லை. அவ்விதமாகவே உணவை மனிதர்களுக்கு பறிமாறுவதும் பழக்கமில்லை. பாட்டி வடைசுட்ட கதையில் கூட, பாட்டி அதனைத் துரத்தியோ பாடச்சொல்லியோ வடையை வாங்கவில்லை. ஏனென்றால் காகத்தின் எச்சிலையா மனிதர்கள் தின்பது? சீய், சீய், இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கு வேண்டுமானால் எச்சில் வடை சுவைக்கத்தகுந்ததாய் இருக்கலாம். காகத்தைப் பொறுத்தமட்டில் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் அனத்துமே உயர்தர உணவக பண்டங்களே. ஒருவேளை செத்த எலிக்கறி அசைவ விருந்தாகவே அவை பாவிக்கும். எனில், எலியாவின் வாழ்வில் காகம் ஆற்றிய பணியினை கடவுள் எவ்வாறு முன்னிறுத்துகிறார்?

காகம் பகிர்ந்துண்ணும் பறவை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பகிர்தல் மற்றும் யாரோடு பகிர்தல் போன்ற அளவுகோல்களை இறைவன் இங்கு மறு ஆக்கம் செய்கிறார். ‘இவர் பாவிகளோடும், ஆயக்காரரோடும் உணவருந்துகிறார் என்பதும், போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமாயிருக்கிறான் என்பதும் எத்துணை பக்குவமற்ற வார்த்தைகள். இறைவன் எலியாவையும் காகத்தையும் ஒரேத்தட்டில் நிறுத்துகிறார். இறையடியவரான எலியா இந்த எளிய வாழ்வை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுகிறார். தனக்காக விதைக்காமலும் அறுக்காமலும், சேமிப்பறையும், களஞ்சியமும் அற்று, அசுத்தமான உணவாக கருதப்பட்ட (ஒருவேளை எலிக்கறி என்ற) உணவைக் காகத்தோடு பகிரத் துவங்கியது, காகங்களின் மேன்மையை பறைசாற்றாவிடிலும் பரவாயில்லை; நிறுவனங்கள், விமானங்கள், மாளிகைகள் மற்றும் உயர்தர உணவுகள் மட்டுமே தயாரிக்கின்ற சமையலறைகள் போன்ற களஞ்சிய சேமிப்பறைக் கொண்டுள்ள, கிறிஸ்து இயேசுவை வியாபாரப் பொருளாக மட்டுமேக் கொண்டு, பல்லாயிரம் மக்களைத் தவறானப் பாதையில் வழிநடத்தும் இன்றைய சில மத வியாபாரிகளின் மத்தியில், இறையடியார்களின் தியாக வாழ்வை பறைசாற்ற வல்லவை.

காட்சன் சாமுவேல்

இரயில் பயணத்தில்

ஒக்ரோபர் 28, 2008

காக்கும் கடவுளே!
எங்கள் அலுவலகத்துக்கு புறப்படுகின்றோம்.
நெரிசலான இரயில்தான்
தினமும் பழகிய ஒன்று தான்
என்றும் போல் இன்றும் உடன் வாரும்

மூவர் இருக்கையில் நால்வர் அமர்வது
பகிர்வின் பண்பல்லவா?
சுமைகளை வாங்கி தாங்கியில் வைப்பது
ஊதியமற்ற உதவியல்லவா?

வயோதிபர் மற்றும் பெண்களுக்காக இடமளிப்பது
அன்புகூறுதலின் செயலல்லவா?
வறியவர் விற்கும் பொருட்களை வாங்குதல்
பொருளுள்ள வாழ்வல்லவா?

இறங்குமிடம் அறியா புதிய பயணிகட்கு
திசைக்காட்டும் கருவியல்லவா?
உறவினர்கள் தவறி கதறியழும் பாலகர்க்கு
பாசம் காட்டும் தாயுள்ளமல்லவா?

மயங்கி விழுந்த எந்த அன்னியருக்கும்
நல்ல சமாரியர்களல்லவா?
நெருக்கத்திற்குள்ளும் பஜன் பாடிடுவது
துதிக்கும் உள்ளமல்லவா?

ஆம் கடவுளே!
குறைகள் பலவிருந்தாலும்
ஒற்றுமையின் சின்னமாம்  இரயில் பயணத்தில்
உமது காக்கும் கரம்
எங்களோடிருப்பதை முழுவதுமாக உணருகிறோம் – ஆமேன்

குப்பைத்தொட்டி

ஒக்ரோபர் 24, 2008

குப்பைத்தொட்டியை கடந்துபோகும்பொது ஏற்பட்ட சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் குப்பைத்தொட்டியை அலட்சியபடுத்தாமல் ஆராய்ந்து அறிய எத்தனித்தால் அதுவே ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து நல்ல பல கருத்துக்களை அள்ளித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குப்பைத்தொட்டியை வைத்திருப்பதன் காரணம் என்ன? குப்பைகளை இடுவதற்கா அல்லது குப்பைகளை உருவாக்குவதற்காகவா? சுத்தம் சோறு போடும் என்பார்கள் ஆனால் நாமோ சோற்றை குப்பைத்தொட்டியில் போடுகின்றோம். சுகாதாரம் என்பது சமத்துவம் எனும் உயர்ந்த கருத்தை வலியுறுத்தும்போது மற்றோர் இடத்தை குப்பைத்தொட்டியாக்கி சுத்தமானவர்கள் என்று பெருமிதம் கொள்ளுவது நியாயமா? குப்பை என்று நாம் நினைப்பதை இன்னோர் இடத்திற்கு மாற்றுவதால் நாம் அதை அகற்றுபவர்கள் ஆவதில்லை, மாறாக அதை இடமாற்றல் செய்து இடும் பொருட்களின் எண்ணிக்கையையும் அளவுகளையும் கூட்டிக்கொண்டே போகின்றோமல்லவா? என்னைப்பொறுத்தவரையில் மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக நான் கருதுவது குப்பைத்தொட்டிதான், ஏனென்றால், மனிதனின் மற்றெல்லா கண்டுபிடிப்புகளும் இதனுள்ளே சங்கமமாகிவிடும்.

குப்பைத்தொட்டிக்குள் செல்லும் எதுவும் மறுபடியும் பிறந்தது ஆகின்றது. குறிப்பாக தன் முந்தைய நிலையைத்தாண்டி ஒரு உன்னதமான நிலையை அது அடைகிறது என்பது என் கணிப்பு. மறுபடியும் பிறந்தது என்ற வார்த்தை பிறப்பை ஞாபகப்படுத்துகின்றதல்லவா? ஆம் வேறெங்கும் இல்லாத அதிசயம் இங்கு நம் தேசத்தில் நிகழ்கின்றது. குப்பைத்தொட்டி பெற்றெடுக்கின்றது மனிதக்குழந்தைகளை! இந்த விசேஷ குழந்தைகளைப்பற்றி நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? சமூகத்தோடு சேர்ந்து இக்குழந்தைகளை தாழ்வாக கருதும் நம்மைப்பார்த்து குப்பைத்தொட்டி – மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவரை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து விழா கொண்டாடுகிறீர்களே, ஏன் என்னிடம் பிறந்தவர்களுக்கு இந்த கவனிப்பு இல்லை என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்? யோசித்துப்பார்க்கும்பொழுது மேலும் பல சிந்தனைகள் நம் எண்ண அலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன அல்லவா? ஆம் என்னைப்பொறுத்தவரைக்கும் மனிதனுக்கும் குப்பைத்தொட்டிக்கும் உள்ள உறவு ஒரு புனிதமான பந்தமாகவே காணப்படுகிறது. மனிதனயும் குப்பைத்தொட்டியையும் பிரிக்கும் ஒரு சமுதாயம் எதிர்காலத்தில் எங்கும் இராது எனும் அளவிற்கு நம்மோடு நிழல்போல வருவது குப்பைத்தொட்டி மாத்திரமே. தன்னிடத்தில் வரும் எதையும், எவரையும் புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு விசாலமான சிந்தனைவாதியாக, யதார்த்தவாதியாக குப்பைத்தொட்டி காணப்படுவது விந்தையிலும் விந்தை.

குப்பைத்தொட்டிகளை சார்ந்து வாழும் சிறுவர்களை கேட்டால் சொல்லுவார்கள், அது தங்கள் கோயில் என்று. நாள் முழுவதும் இந்த புண்ணிய தலத்தில் தவம்புரியும் இந்த இளம் சன்னியாசிகள் கொண்டுவந்தது என்ன? கொண்டுபோவது என்ன? சற்றே உரக்க சிந்தித்துப்பார்த்தால், கடையெழு வள்ளல்களையும் தாண்டி, அள்ள அள்ள குறையா செல்வங்களை நாள்தோறும் அளிக்கும் குப்பைத்தொட்டி ஒரு எட்டாவது வள்ளலாக எழுச்சியோடு இந்த சிறுவர்முன் மட்டுமல்லாது நம்முன்னும் கம்பீரமாக நிற்கிறது. வானளாவ உயர்ந்து நின்ற தேவாலயத்தை பார்த்த இயேசு ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும் நாட்கள் வரும் என்று ஏன் குறிப்பிட்டார் என்பது புரிகிறதல்லவா?

நாம் இப்போது கூர்ந்து கவனிக்கப்போகிறோம், குப்பைத்தொட்டியில் என்ன இடப்படுகின்றது என்று. சமூகம் சொல்லலாம் மாசுகள் என்று! சிலர் கூறக்கூடும் குப்பைகள் என்று! அது நிஜம்தானா என்று நாம் சற்றே எண்ணிப்பார்க்கையில் இல்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. நாம் குப்பைத்தொட்டியில் போடுவதெல்லாம் நம் வறட்டு கவுரவத்தையும், நாம் வாழும் சமுதாயத்தின் வெளிப்பாடுகளையுமே அன்றி குப்பைகளை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மாசு நம் மனதில் இருக்கிறது, நம்மைச் சுற்றியும் இருக்கிறது. ஆனால் அது கண்டிப்பாக குப்பைத்தொட்டியில் இல்லை என உறுதியாக கூறிவிடமுடியும். எல்லாம் படைத்த இறைவன் ஏன் ஒரு குப்பைத்தொட்டியை படைக்கவில்லை என்றால் ‘குப்பை என்று எதுவும் கிடையாது” என்ற சீரிய நோக்கால் அல்லவா? நடந்தது என்ன? நாம் கண்டுபிடித்தோம் குப்பைகளையும் குப்பைத்தொட்டியையும். நம்மை சுற்றி கடவுள்(கள்) கோணிப்பையுடன் குப்பைத்தொட்டிகளைச் சுற்றி சுற்றி வரும்பொழுது, நாம் வேறு சில பைகளுடன் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நன்மை தீமை வேறுபடுத்தத் தெரியாத அளவு கடவுளை தூரமாக வைத்து வேடிக்கை பார்க்கும் மதபோதகர்களால் ஏற்பட்ட தீங்குகளின் விளைவா இது? குப்பைத்தொட்டியை இவ்வளவு தூக்கி பேசவேண்டிய அவசியமில்லை என்று யாரோ சொல்லுவது கேட்கின்றது! ஆனால் அதன் அவசியம் அவசரமானது.

ஒரு வினாடி உற்றுப்பாருங்கள், எங்கும் காணாத சமத்துவத்தை குப்பைத்தொட்டியின் அருகில். மானுடம், பறவை, மிருகம், ஊர்வன என என்னே ஒரு ஒற்றுமை. கூடியிருக்கும் காரணம் கூட உணவு என்கிற ஒன்று தானே? கூடி உண்ணும் இடத்தில் தானே இறை ப்ரசன்னம் இருக்கிறது? பகிர்தலைபற்றி கூறவந்த இறைவனே குப்பைத்த்தொட்டியில் உணவருந்த வந்த அழகை கவனிக்க தவறிவிட்டோம்! காலம் கடந்துவிட்டதா அல்லது கண் கெட்ட பிறகு திரைப்படமா? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இன்று குப்பைத்தொட்டியில் நாம் போடுவது நம் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வைக்கூடத்தான்! ஏன்? எப்படி இவ்வளவு குருரமாக மாறிவிட்டிருக்கிறோம்?

குப்பைத்தொட்டியில் இலைகள் மற்றும் மட்கிப்போகின்ற சாதனங்களைப் போடுவது பழங்கதையாகிப்போனது. மட்காப் பொருட்களகிய ப்ளாஸ்டிக் பைகள், ஆஸ்பத்தரிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், அன்னிய நாட்டுப்பொருட்களின் கழிவுகள் என மனித குலத்தின் எதிர்க்காலத்தை உரசிப்பார்த்து உயில் எழுதும் ஆயுதங்களின் தளவாடமாகவே மாறிவிட்டது. எங்கே நம்மை இட்டுச்செல்லும் இந்தப் பாதை?

நம் கேள்விகளையெல்லம் ஒன்று திரட்டி குப்பைத்தொட்டியைக் கேட்டால் குப்பைத்தொட்டியின் பதில் என்னவாக இருக்கும்? குப்பைத்தொட்டி கூறுகின்றது – ‘மனித மனமே ஒரு குப்பைத்தொட்டிதான்” எதை வைக்கவேண்டும் எதைக் களையவேண்டும் என இனம் பிரிக்கத் தெரியாத ஒரு குப்பைத்தொட்டி என்று. சிந்தித்துப் பார்த்தால் அது சரியென்றேப் படுகின்றது. மனித மனமே குப்பைத்தொட்டியை பெற்றெடுத்த இயந்திரமாக இருக்கின்றது. குப்பைத்தொட்டியை ஒரு சிறிய பொருளிலிருந்து ஊதி மிகபிரம்மாண்டமாக ஆக்கி சில மூன்றாம் உலக நாடுகளையே குப்பைத்தொட்டியாய் மாற்றிவிட்டது யாருடைய தவறு? விளைவு, இன்று நாம் குப்பைத்தொட்டியை வைத்திருக்கும் நிலையில் நம்மை சில மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்தின் சுயமரியாதையை இழக்கச்செய்யும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சிந்தனைகளை களைவது அத்தனை சுலபமில்லை, ஆனால் இதைக் களைவது மிகவும் அவசியம். இல்லவிட்டால் இந்த பூமி ஒரு குப்பைத்தொட்டியகவே இருந்துவிடும் இறுதிவரைக்கும்.

வாழ்க்கையில் பலவற்றை தேவையற்றவைகள் எனக் களைகிறோம். அது நமக்கு தேவையற்றதே அன்றி, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒரு பெருங்கூட்டதை பொருட்படுத்தத் தவறுகிறோம். களையும் இந்த பொருட்களுக்காக வீணான சுரண்டல்கள், அழிவுகள், அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறோம், முடிவில் நாமே அடங்குகிறோம். பகிர்ந்து வாழத் தெரியாமல், பிரித்துவாழ முற்படுகிறோம். முக்கியமற்றவைகள் என நாம் இன்று நினைப்பது நாளை அதி முக்கியமான ஒன்றாக மாறுவதை சிந்தித்துப் பார்த்ததுன்டா? இலவசமாக இறைவன் கொடுத்ததை மாசுபடுத்தி, மாசற்றது எனக்கருதி காசுகொடுத்து வாங்கிக் குவிப்பவைகளால் மேலும் மாசுபடுத்துகிறோம் அல்லவா?

குப்பைத்தொட்டியின் ஆதிகேள்விக்குப் பதில் கிடைத்ததுபோல் இருக்கின்றது! மாட்டுக்கொட்டிலில் பிறந்த பாலனுக்கு நிகர் குப்பைத்தொட்டி குழந்தைதான் சந்தேகமில்லை. இயேசு கருவாக இருந்தபோது அதன் தாய் அதைக்குறித்து வேதனைப்பட்டிருக்ககூடும், அதன் தகப்பன் அதைக்குறித்து வெட்கப்பட்டிருக்கக்கூடும். அது தேவையற்றது என முடிவுகட்டி ஒரு ராஜாவே அதை அழிக்க கங்கணம் கட்டினான். எல்லோரும் தேவையற்றது எனக் கருதி அந்த குழந்தையை குப்பைத்தொட்டிக்கு அனுப்ப எத்தனித்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில், இறைவனின் அநாதி திட்டப்படி அதன் தாயும் தகப்பனும் எடுத்த முயற்சியால் அந்த சிசு குப்பைத்தொட்டியில் இடப்படாமல் மாட்டுத்தொழுவத்தில் அவதரித்தது. அதன் பலனை அக்குழந்தையின் பெற்றோர் அனுபவித்தார்களோ இல்லையோ நாம் அனுபவிக்கிறோம் இல்லையா? ஆகவே மறு சுழற்சிக்கான முயற்சிகளை எடுப்பது நம் கடமை என்பதை தியானமாக கொள்ளுவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன்.

காட்சன் சாமுவேல்
(மார்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் வருடாந்திர கூடுகையில் வாசிப்பதற்காக 28.11.2003 அன்று இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது)

அதிகாலை

ஒக்ரோபர் 24, 2008

தூயராம் எங்கள் கடவுளே
துயில் எழுந்த நாங்கள்
துதிக்கிறோம் உமயே

கடந்த இரவிலே
கண்ணயராது
கருத்தாய் காத்தவரே – இந்த
அதிகாலை நேரத்தில் உம்மை
தியானித்திருப்போம்

இந்த நாளினை
இனிதாக்கியவரே
இன்றைய பணிகளிலே – உமது
சொற்படி வாழவும் வாழ்த்தவும்
இறையாசியருளும்

நாளைய பொழுதின்
நாய(கனே)கியே
நிதமும் நன்றியுடன் – நின்னையே
நினைத்துருகும் என் நெஞ்சிலே
மாறா நின் கருணைப்பொழியும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

ஆதி மன்றாட்டு

ஒக்ரோபர் 24, 2008

அன்பின் திருவுருவாம் கடவுளே
உமது அன்பின் ஒளியை
பிறரிடம் கண்டு கொள்ள
எங்கள் கண்களை திறவும்

கிருபை நிறை இயேசுவே
உமது கிருபைக் கடலை
தோழமையோடு பகர
எங்கள் இதயத்தை திறவும்

ஒருமை பகரும் தூய ஆவியே
உமது ஒப்பிலா ஒருமையை
பாரிலே பறைசாற்ற
பகரும் நெஞ்சைத் தாரும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

பிரார்த்தனாஞ்சலி- இறைவேண்டல்களின் தொகுப்பு

ஒக்ரோபர் 24, 2008

பிரார்த்தனாஞ்சலி எனும் இறைவேண்டல்களின் தொகுப்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் மற்றும் அவர் மனைவி லில்லி அமிர்தம் ஆகியோரின் நெடும் இறைபணியின் தொடர்ச்சி ஆகும். உலக திருச்சபை மாமன்றத்தின் ஒருங்கிணைப்பு கற்பிப்பாளராகவும் தென் கேரள சி எஸ் ஐ அத்தியட்சராகவும் தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் விரிவுரையாளரகவும் முதல்வரகவும் தன் கூர் திறமைகளை இறைவல்லுனர்களுக்கும் இறைபற்றாளர்களுக்கும் ஏன் பனைதொழிலாளர்களுக்கும் எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தவர் அறிவர் சாமுவேல் அமிர்தம்.  இயெசு தனது சீடர்களுக்கு கற்பித்த இறைவேண்டலயே மையமாகக் கொண்டு தனது இறைபணியில் சேகரித்த அரிய பல மன்றாட்டுக்களை தனது மனைவியோடு சேர்ந்து இந்த வேன்டுதல் மாலையைத் தொகுத்தளிக்கின்றார். பேராசிரியர் லில்லி அமிர்தம் சிறந்த ஓவியர் மற்றும் சமயற்கலை நிபுணர். பாரசாலையை அடுத்துள்ள கிராம மற்றும் வறிய பெண்களுக்காக சேவை புரிந்துவருகிறார். தனது பேரக்குழந்தைகளுக்காக அன்பும் இறைபற்றும் நிறைந்த தாத்தக் பாட்டி தேடி சேகரித்து கொடுத்த இறையியல் பொக்கிஷம் இது.

தனது முகவுரையில் இறைவேண்டல் குறித்த தன் தரப்பை அவர் தேர்ந்த இறையியல் வல்லுனராக மட்டுமல்லது பொறுப்புள்ள போதகராகவும் தெளிவுபடுத்துவது இப்புத்தகத்தின் ஆழ்ந்த இறைத்தேடலை உறுதிப்படுத்துகின்றது. ‘இறைவேண்டல் என்பது விண்ணப்பம்  ஆயினும் அது பிறருக்காக அதிகமாகவும் நமக்காக சொற்பமாகவும் இருப்பதுவே’ என்கிறார். அதுபோலவே ‘இறைவேண்டல் இறையோடுகூடிய உரையடல் எனினும் இறைவார்த்தயை அதிகமாக நிதானிக்கவும் சொற்பமாக பேசுவதுமே’ என உறுதிபடக்கூறுகின்றார். இன்று சில கிறிஸ்தவ மத போதகர்கள் தொலைபேசியில் கடவுளோடு பேசுவது போன்ற பிம்பத்தை ஆசிரியர் குறுநகையோடு மறுக்கிறார்.

பல புராதன இலக்கியங்களிலிருந்தும், இதிகாசன்களிலிருந்தும், பின்நவீன நூல்களிலும் இருந்து ஆசிரியர் பல வேண்டல்களை சரளமாக எடுத்தாழ்கிறார். கிறிஸ்தவ இறையியலாளர்கள், பற்றாளர்கள், புனிதர்களோடு கூடவே பிற மத சான்றோர்கள், சாமானியர்கள் மற்றும் புனிதர்களின் இறைவேண்டல்களை இழையோடவிட்டிருப்பது வேண்டல் செய்யுமிடம் ஒன்றே என அறுதியிட்டுக்கூறுகிறது. வேண்டல் செய்யும் காலம் சூழல் நபர்கள் என வகைவகையாக வேண்டல்கள் காணக்கிடைக்கின்றன. மனிதன் இறைவேண்டல் செய்வது நாமறிந்த்தே. இங்கோ எருது, சேவல், ஆமை, எறும்பு மட்டுமா கேரள யானை கூட நகைசுவை வேண்டல் உகுப்பது அருமை. கருத்தாழமிக்க சூழலியல் வேண்டல் துவங்கி, காதலாகி     கசிந்துருகும் வேண்டல் வரைக்கும் அவர் பயணிக்கும் ஆன்மீகம் விரிவானது. இறைவனை பற்றிக்கொள்ளும் சீடத்துவ வேண்டல்கள், நெஞ்சை ஊடுருவும் ஓரிருவரி அம்பு வேண்டல்கள், தேசத்திற்கான மன்றாட்டுக்கள் என சுமார் 377 வேண்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன. துயருற்றோருக்கான வேண்டல்கள் புடமிடப்பட்ட ஆறுதலின் வார்த்தைகள்.

இதன் நெறியாளர் மதுரையைச் சார்ந்த நந்தினி முரளி. இவர் ஆங்கில பத்திரிகைகளிலே தொடர்ந்து எழுதுகிறவர். தனது வாழ்வில் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். பெண்ணிய கருத்தியல் கொண்டவர். முன்னுரை அளித்துள்ள அறிவர் தயான்சந்த் கார், அமிர்தம் அவர்களின் தலைச்சிறந்த மாணவர். பிற்பாடு  தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காட்சன் சாமுவேல்

மொழி ஆங்கிலம்      விலை ரூ 150     பக்கங்கள் 288     முதற் பதிப்பு 2004

கிடைக்குமிடம்
தமிழ்நாடு இறையியற் கல்லூரி
அரசரடி, மதுரை- 625010
தொலை பேசி: 0452 260 2352


%d bloggers like this: