Archive for திசெம்பர், 2008

பனையேறியின் கதறல்

திசெம்பர் 27, 2008

இறையியல் கல்லூரி வாழ்வின் இறுதி வருடத்திலே மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக ஒரு ஆராதனை நடத்த வேண்டும். அந்த ஆராதனை புதுமையாகவும், ஆராதனையின் அடிப்படை விதிகளை மீறாமலும் அமைக்கப்பட வேண்டும். நூறு மதிப்பெண் உண்டு. நான்கு வருட படிப்பின் சாரத்தை வெளியிடும் அந்த நாள் பலருக்கு கலக்கத்தையும் (எக்கப்போ என்னெய்யப் போறேனோ) மற்றும் சிலருக்கு பழிவாங்கும் (ஆசிரியர்களைத்தான் – பேசியே கொன்னுருவோம்ல) நாளாகவும் அமைந்துவிடும்.

நான் கண்ணீரைக் கரத்தில் எடுத்தேன். மொத்த ஆராதனையையுமே ஒரு ஆழ்ந்த சோகம் கவ்வியிருக்கும்படி செய்தேன். அந்த நிகழ்விலே நான் உபயோகித்த ஒரு பாடல்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கிழக்கு செவக்கயிலே
நான் பனையில ஏறயிலே
அந்தப் பாளையச் சீவயிலே
மண் கலசம் நெரம்பயிலே
என் கண்ணும் நெரம்பிடுச்சே – அழாத பனையாரி அழாத

ஊரே ஒதுக்கயிலே
எனக்கு யாரிருக்கா
என் வேதன மறிடுமா
என் விதிய எழுதயிலே
அந்தச் சாமி உறங்கிடுச்சே – அழாத பனையாரி அழாத

பதனீர் காய்கயிலே
என் குடும்பம் வேகயிலே
கருப்புக் கட்டிய வீக்கயிலே
என் குடும்பம் ஏங்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே – அழாத பனையாரி அழாத

அய்யாக் கலங்காதே
பனைமரம் முறியாதே
அந்த தேவி இருக்கயிலே
ஊர் உலகும் மாறிடுமே
உன் கவலை தீர்ந்திடுமே.

கடைசி பத்தி  பாடுபவர் ஆறுதல் படுத்துபவராகவும், முதல் மூன்று பத்திகள் நான் பாடுவதாகவும் அமைத்திருந்தேன். வந்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு “அழாத பனையாரி அழாத”.

“சீவலப்பேரி பாண்டி” எனும் திரைப்படத்தின் இசையையே நான் இதற்கென்று உபயோகித்தேன், அதை எனது அச்சு நகலிலும் பதிவு செய்திருந்தேன். “மைக்கல் டிரேபர்” உலக தரம் வாய்ந்த “தொடர்புத்துறை பேராசிரியர்”, தனது எதிர்வினையின் போது சினிமா இசையை ஆராதனையில் உபயோகிப்பதில் தவறொன்றும் இல்லை என்றது குறிப்பிடத்தக்கது.

பிறப்பின் இரகசியம்

திசெம்பர் 26, 2008

கிறிஸ்மஸ் அன்று சிறுவர்களுக்காக ஒரு குறு நாடகம் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். மண்டையை குழப்பிக்கொள்ளாதபடி நெட்டிலிருந்து ‘சுட’த்தக்கதாக ஒன்று கிடைத்தது. மொழி “பெயர்ப்பு” செய்து சிறுவர்களிடம் கொடுத்தபோது அசத்திவிட்டார்கள்.
உங்களுக்காக இதொ….
போதகர்: மாற்கு
மாற்கு: உங்களுக்கு சமாதானம்
போதகர்: மத்தேயு
மத்தேயு: கிறிஸ்து ராஜாவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்
போதகர்: லூக்கா

லூக்கா: பாரம்பரியத்தின்படி வணக்கம்

போதகர்: யோவான்

யோவான்: பிதாவை ஏக புத்திரன் அறிந்திருக்கிறார்.பிதாவும் அவரை அறிவார்.

போதகர்: தங்களது வருகைக்கு நன்றி.இயேசுவின் பிறப்பை குறித்து உங்கள் கருத்துக்களை கேட்க அழைத்திருக்கிறோம். உங்களில் இருவர் இரண்டு விதமான பிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறீர்கள், மற்றும் இருவர் பதிவு செய்யாமலேயே விட்டு விட்டீர்கள். புரியும்படியாக கூற வேண்டுமென்றால், பல வருடங்களாக நாங்கள் கிறிஸ்து பிறந்த நிகழ்வை இவ்விதமாக கோர்த்து ஒரு சித்திரமாக வைத்திருக்கிறோம். அதாவது ஞானிகள், பெத்லகேம் நோக்கி நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டார்கள், நட்சத்திரம் நின்ற இடத்தின் கீழே பாலனை அவர்கள் முன்னணையிலே கிடக்கக் கண்டார்கள் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தையோடு வந்திருந்தனர், ஞானியர் பரிசுகளை கொடுத்தனர்.

மத்தேயு: ஒரு நிமிடம்! நான் உங்கள் கருத்தை சற்று நேர் செய்ய வேண்டும். இயேசு ராஜா முன்னணையிலே பிறந்தாரா?மேய்ப்பர்கள் அவரை சுற்றி நின்றனரா? விளையாடுகிறீர்களா?இல்லை இல்லவே இல்லை. இயேசு ஒரு இல்லத்திலே பிறந்தார், ஒருவேளை அது மாளிகையாக இல்லாமல் இருக்கலாம், அனால் கண்டிப்பாக ஒரு மாட்டு தொழுவத்திலல்ல. ஆமாம் மேய்ப்பர்கள் எங்கிருந்து வந்தார்கள்?…ஞானியரே விலையுயர்ந்த பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். அது தான் ஒரு ராஜா பெறவேண்டிய உயரிய பரிசு.

லூக்கா:  மத்தேயு,  உனக்கு தான் எல்லாம் தெரியும் என நினைக்க வேண்டாம். இயேசு ஒரு தீர்க்கதரிசி, அவர் எளியோருக்கு நற்செய்தி கொண்டுவந்தவர்.  ராஜாக்களை குறித்த கவலைகள் ஒன்றும் அவருக்கு இல்லை. எளிய மேய்ப்பர்களே அவரை கண்டு வணங்கினர். இது என்ன ஜோசியமா…. அந்த நட்சத்திரம் எங்கேயிருந்து வந்தது.  மேய்ப்பர்களுக்கு தோன்றிய தூதர்கள் அல்லவா இயேசுவை துதித்து பாடினார்கள்?

மத்தேயு: லூக்கா நீ ஒழுங்காய் போய் உன் வீட்டுப்பாடத்தை செய். ஒரு ராஜா பிறந்தாரென்றால், ஒரு நட்சத்திரம் கண்டிப்பாக உதிக்க வேண்டும் என்பது ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே!

லூக்கா: நான் அவரை அரசன் என்று கூறவில்லையே. அவர் ஒரு தீர்க்கன் என்றல்லவா கூறுகிறேன்.

மத்தேயு: அப்படியானால் அவருடைய பாரம்பரியம் என்ன? யோசேப்பு தாவீதின் வழித் தோன்றல் இல்லையா? சாலோமோன் மற்றும் யோசியா அரசர் வழி வந்தவரல்லவா? ராஜ பரம்பரை தானே.

லூக்கா:  நீ எதையோ குழப்புகிறாய். அவர் தாவீதோடு உறவுள்ளவர் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் சாலோமோனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தாவீதின் இன்னொரு மகனான நாத்தானின் வழித்தோன்றல்

போதகர்: ம்ம்ம்…எனக்கு ஒன்று தோன்றுகிறது….. ஒருவேளை யோசேப்பு இயேசுவுடைய தந்தை இல்லையோ?

மாற்கு: அவர் எங்கே எப்படி பிறந்தால் உங்களுக்கு என்ன? யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பதில் தான் என்ன பயன்? எது முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் சொன்ன கருத்து தான் முக்கியம்.

மத்தேயு: உண்மை தான், ஆனாலும் அவர் பிறந்திருக்க வேண்டுமல்லவா. இயேசுவின் வாழ்வின் முக்கிய பகுதியல்லவா அது?

லூக்க: நானும் ஒத்து கொள்ளுகிறேன். ஒருவனின் பிறப்பே அவன் எவ்வளவு பெரியவனாவான் என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வு, இல்லையா?

மாற்கு:   இருக்கலாம்! நமக்கு தெரிந்திருந்தால் நாம் அதை எழுதலாம். நமக்கு தான் தெரியாதே!

யோவான்: நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்…..

போதகர்: என்ன?… ஓ… யோவான் நீங்கள் ஏதேனும் கூற முற்படுகிறீர்களா

யோவான்: கிறிஸ்துவே வார்த்தை. ‘அந்த வார்த்தை’

போதகர்: “அந்த வார்த்தை”?

யோவான்: ஆம். அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று… ஒருவேளை நீங்கள் அனைவரும் இயேசுவின் பிறப்பை சுற்றி சுற்றி வந்தாலும் மையக் கருத்தை விட்டு விடுகிறீர்கள். கிறிஸ்து ஆதி அந்தம் இல்லாதவர். அவர் சுயம்பு. அவரது உலக தோற்றம் உங்களை போன்றோரின் குழப்பங்களை தீர்ப்பதற்க்காகவே

மாற்கு: நீ பிதற்றுகிறாய்…

யோவான்: இறுதி நாட்களில் நான் சொன்னவைகளின் உண்மை புரியும். அன்று நீங்கள் யாவரும் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள்.

ஆங்கிலத்தில் இன்னும் அருமையாக முன்னுரையோடு உள்ளது. சுவைத்து மகிழ http://www.transmissioning.org/2007/12/12/nativity-mystery-5-minute-skit-for-5-actors-by-jsnodgrass/

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

அவளுடைய நான்

திசெம்பர் 17, 2008

மும்பையில் எனது வேலையை முன்னிட்டு தனிக்குடித்தனம்.  பெண்ணை சார்ந்து வாழாத ஒரு “ஆண்மகனின்” மாய தோற்றத்தை நான் மறுபடியும் உறுதி செய்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட, ஜாஸ்மின் “போதகரம்மா”வே ஒழிய தனி ஒரு பெண்ணல்ல.

திருச்சபை ஆணாதிக்கம் நிறைந்தது. அது தன்னை அவ்விதம் கட்டமைத்துக்கொண்டுள்ளதன் காரணமே தன்னை தக்கவைத்துக்கொள்ளுவதற்கு தானோ என்றே எனக்கு படும். பல வேளைகளில் சக தர்மினியை கூட புரிந்து கொள்ள முடியாதபடிக்கு  கண்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. என்ன போதகரம்மா, இண்ணைக்கு என்ன குளம்பு வச்சீங்க? பாஸ்டர நல்லா கவனிச்சுகிடுங்க போன்ற அனுசரணையான வார்த்தைகள்.

இந்த நாட்களில்தான் ஜாஸ்மின் கர்ப்பமானாள். பாஸ்டருக்கு இனி கொஞ்சம் கஷ்டம் தான், என அன்பாக சலித்துக்கொள்ளுபவர்கள் ஒருபுறம், அவங்க அடுப்படிக்கு போக விரும்பமாட்டாங்க, மணம் பிடிக்காது என விளக்கமளிப்பவர்கள் இன்னொருபுறம். தடாலடியாக சில தொலைபேசி அழைப்புகள் “பாஸ்டர், எதுவும் செய்துடாதீங்க, கொடுத்து அனுப்புகிறோம்”. போட்டி போட்டுக்கொண்டு அனுப்பிய வித விதமான உணவுகள்.

ஜாஸ்மின், காலை தோறும் வாந்தி, பிறகு சுருண்டு படுத்துக்கொள்ளும் நிலைமை. பால் குடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டாள். மிகவும் கொஞ்சமாகவே சாப்பிடுவாள். இதற்குப்போய் ஏன் சமைக்கவேண்டும் என நானும் வகைவகையாக செய்வதை குறைத்துக்கொண்டேன். பழங்கள் மிகவும் முக்கியமானவைகள் என டாக்டர் கூறியிருந்தபடியால், விதம் விதமாக அவைகளையும்  வாங்கி குவித்தேன்.

வேலைப்பழு இன்னும் குறைந்தது. சமைக்க வேண்டியது இல்லை, பாத்திரம் கழுவவேண்டாம், அவள் உறங்குமட்டும் அவளோடு கூட இருந்தால் போதும். அவளாக உற்சாகமாக எழுந்து வரும் நேரங்களிலேயே துணி உலர இடுவது போன்ற சில்லறை பணிகள் நடைபெற்றன.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மிகவும் தர்மசங்கடமான விஷயம். பாஸ்டர், நீங்க ஏன் இதெல்லம் செய்யுறீங்க? ஒண்ணுமே தேவையில்லை என நாசூக்காக மறுப்பது அன்றாடம் நிகழ்வாயின.  ஒரு நாள் ஜாஸ்மினைப் பார்ப்பதற்கு வந்த பெண்கள் சங்க குழுவினர், மிகுந்த வெட்கத்தினூடேயே நான் தயாரித்த லெமென் ஜூஸை எடுத்துக்கொண்டனர்.

எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளும் யாவும் மறந்து விட்டன. நான் சமைப்பதே தவறு என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். பாஸ்டர் யாரு? கிங்குல்லா!

ஒரு நாள் தனக்கு தொண்டை வலிப்பதாக ஜாஸ்மின் கூறினாள். . சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை சரியாகிவிடும் என்று சொன்னேன். அழத் துவங்கி விட்டாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நாங்கள் சந்திக்கும் டாக்டர் அம்ருதா தாக்குர் இந்த நேரத்தில் பார்வைக்கு கிடைப்பது அரிது. நல்ல வேளையாக அவர்களது தொலைபேசி எண் என்னிடம் இருந்தது.

கூப்பிட்ட உடனே அவர்கள் எனது அழைப்பை இணைத்தார்கள்.

நான் குழரலோடு “டாக்டர் நான் ஜாஸ்மினுடைய கணவன் பேசுகிறேன்” என்றேன்.

பிற்பாடே எனக்கு உறைத்தது. ஆம் நான் யார்?

என்னை தனித்து அடையாளப்படுத்துமளவிற்கு நான் பெரியவனல்ல.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

நேர்முகத் தேர்வு

திசெம்பர் 16, 2008

எட்டு மணி நேர பிரயாணம்
நண்பன் வீட்டில் ஷேவிங்
அயர்ன் செய்த உடைகளுடன்
ஷூ மற்றும் டை

புதிய ஊர் என்றாலும்
விசாரித்து அறிந்து
பஸ் ஏறிச் செல்லுவதே
சிக்கனம்

பத்து நிமிடம் தாமதமாக
பதை பதைப்போடு வந்து சேர்ந்தால்
கசங்கிய கோலத்தில்
நேர்த்தியான ஆடைகள்

காலியிடங்கள் இருவருக்கானது
எழுனூற்று நற்பதெட்டு வருகை
தாலி விற்று வந்தவன்
எதை வாங்க வந்தான்?

பல போர்கண்ட வீரர்
விழுப்புண் பெறுவது இயல்பு
மீண்டும் எழுச்சியுடன் போரிட
வாழ்த்தும் தேர்வாளர்

தகுதியுள்ளோருக்கு வாய்ப்பு
“வழங்கினர்” தகுதி படைத்தோர்
பணம் மற்றும் இன்னபிற
யாவும் இனிதே முடிந்தது

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

அந்த ஏழு நாட்கள்

திசெம்பர் 15, 2008

நான் கண்களை திறந்தபொழுது எங்கே இருக்கிறேன் என்றே எனக்கு புரியவில்லை. என்னை சுற்றி இருப்பவைகளையும். அனேக நாட்களுக்கு பின்பே என்னால் அந்த இடத்தை புரிந்து கொள்ள முடிந்தது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

என்றாலும் உங்களுக்காகவே நான் இதை கூறியாகவேண்டும். ஒரு சம்பவத்தை பார்த்தவன் எனும் வகையிலும் அனுபவித்தவன் எனும் வ்கையிலும் நான் கூறுவது முற்றிலும் உண்மை. உண்மைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு பொன் மாலைப் பொழுது. நான் ஆற்றோரமாக கிடக்கிறேன். இதற்கு முன்பு நான் எங்கே இருந்து இங்கே வந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நிழலைவிட நெருக்கமாக என்னோடு மணற் துகள்கள் ஒட்டிக்கிடந்தன. அதை தட்டிவிடும்படியான எந்த எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை. நான் அதன் கலவையாகவே என்னை ஊணர்ந்தேன்.

ஆறு மந்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும் வேகமாக கதிரவனின் ஒளியை  பறிமாரிக்கொண்டிருந்தது.  அதன் பளபளப்பு என்னைத் தாண்டியபடியும் ஊடுருவியும் செல்லுவதாக இருந்தது. நான் அந்த ஒளியை நேசிக்கவும் அதன் மீது தூய காதல் கொள்ளவும் துவங்கினேன். அது எனக்கு இன்பமாகவும், என்னை நானே கண்டுகொள்ளும் ஒரு கருவியாகவும் இருந்தது.

மனம் லயித்துப்போனால் நேரம் போவதே தெரியாதல்லவா? ஆனால் எதில் லயிக்க? ஒளி தன்னை சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டு வந்தது. மாறுதலை நான் கணமும் கண்டுகொண்டிருக்கும் போதே நானும் அத்துடன் மாறிக்கொண்டிருக்கிறேன். எனது மாற்றம், என்னை சுற்றி உள்ளவைகளின் மாற்றத்தோடு மாறிக்கொண்டு வந்தபடியால் உடனடியாக என்னால் அந்த வித்தியாசத்தை உணர முடியவில்லை.

பிற்பாடு அந்த ஒளி என்னைவிட்டு மறையும் தோறும் நான் அத்தோடு என்னை நெருக்க முயற்சித்தேன். அது மாலையில் உதிரும் பூக்களைப் போல உதிர்ந்துகொண்டிருந்தது. ஒருவரும் நிறுத்தமுடியாதபடி சுற்றும் அதன் வேகமும் வீச்சும் என்னை நிலைகுலையச் செய்தன. நான் கண்மூடி நித்திரை செய்தேன்.

காலை கதிரவன் நட்பான புன்னகையுடன் எழுப்பியபோதும் நான் அந்த மணலிலேயேக் கிடந்தேன். எனது கோபத்திற்கு அளவே இல்லை. இங்கு நான் தனியாக இருக்கிறேன், நீ என்னை விட்டு மறைந்து போனாயே என்ற எனது காதல் பாட்டை அவன் ரசித்திருப்பான் போலும். என்னோடு அவன் நெருங்கிவர ஆரம்பித்தான்.

எனக்கு பசித்தது, தாகம் எடுத்தது. நேராக ஆற்றின் ஒரத்தில் சென்று நீர் குடிக்கும்படி விழுந்தேன். எனது  தேகம் யாவும் சேறு அப்பிக்கொண்டது. எனக்கு அது மிகவும் பொருத்தமாகவே தோன்றியது. ஆழம் அதிகமாக இருக்குமா? தெரியாது? எனக்கு நீந்தவும் தெரியாது. ஆனால் என்னால் நடக்க முடிந்தது. இரண்டு கால்களையும் ஊன்றி.

நான் செய்வதற்குரிய காரியங்கள் அனேகம் கிடையாது. பசியை போக்க வேண்டிய காரியங்களை முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டியது தான். எங்கேயும் நான் அலைந்து திரியும்படியான நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. தாராளம் பழங்கள் மரத்திலே இருந்தன. விதம் விதமாக.

சற்று நேரத்திற்கெல்லாம் சிங்கவால் குரங்குகள் சில தாவியபடியே வந்தன. வில்லிலிருந்து விடுபடும் அம்பைபோல அவைகள் திசைக்கொன்றாய் எம்பியப்படியே மரங்களை கடந்து வந்துகொண்டிருந்தன. என்னைப்பார்த்தவுடன் அவைகள் வெட்கமடைந்து, திசை மாறி சென்றுவிட்டன. அவைகள் சென்றுவிட்டாலும் நான் அவைகளோடு பேசுவேன். யாவும் எனது நண்பர்கள் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.
 
விழுந்து கிடக்கும் பழங்களை பொறுக்கி உண்ண சில பன்றிகள் வந்தன.  நான் மரத்தின் மேலேயே இருந்துவிட்டேன். சிறிது நேரம் பன்றிகளுக்கு  பழங்களை பறித்து இட்டேன். குனிந்த தலை நிமிராதபடி அவைகள் என்னை பார்த்தன. அந்தக் கண்கள் என்னோடு பேசுவது போலவே இருந்தது. இருக்கட்டும். பழம் கொடுத்தால் கடைக்கண் பார்வை கிடைக்கும் போல என்று நான் உத்தேசித்தேன். இப்போது கீழே இறங்கமுடியாது. அவை வயிறார உண்டு களித்தபின்பே மெல்ல நகரும்.

பன்றியோடும் பேசுவதர்கான காரணங்கள் உண்டு. நான் அவைகளை உங்களுக்கு சொல்லப்போவது இல்லை.

பறவைகள் தான் எத்தனை அதிசயமானவைகள். உயரமான இடத்திலிருந்து கூட தனது உணவை கவலையின்றி இலகுவாகப் பெற்றுக் கொள்ளுகின்றனவே. இந்த காகம் கூட தனது அலகால் கொத்தி உண்ணும் ஒரு நிலை எத்துணை அழகு. காகம் நின்று நிதானமாக பேசாது. ஏதோ ஒரு அவசரம்.

எனது நிலைமை இவ்விதமாகவே போய்கொண்டிருக்கின்றது. தினமும் யாராவது மாட்டுகிறார்கள். பேசுவதற்கும் விளையாடுவதற்கும். பேசுவது என்றால் என்ன? நான் மட்டுமே பேசிக்கொள்ளுவேன். யார் என்னை பொருட்டாக மதித்து பேசுவது? ஆனால் நான் பேசவேண்டும், அப்போதுதான் என்னால் என் இருப்பை உறுதி செய்ய முடியும்.

விளையாட்டு? அது சற்று ஆபத்தானது, நண்பர்கள் விரோதிகள் வித்தியாசம் இன்னும் சரிவரத் தெரியவில்லை. வினையேதும்  வேண்டாம் என்று சும்மா இருந்தாலும் பொழுது போவது இல்லை. நாளொரு ஆபத்தும் பொழுதொரு பிரச்சனையுமாக நேரம் நன்றாகவே சென்றது.

ஆறாவது நாள் அந்த சம்பவம் நடந்தது. நான் மரத்திலிருந்து பழங்களை வீசிக்கொண்டிருந்தபொழுது நான் பற்றியிருந்த கிளையிலிருந்து கை நழுவியது. எங்கே விழுகிறோம் என்ற நினைவு நன்றாகவே இருக்கிறது.

எழும்பியபொழுது எனது விலாப்பகுதியில் ஒரே வலி. நான் என்ன நடந்தது என யூகிக்குமுன், தூரத்திலே அவளைக் கண்டேன்.

என்னைப்போலவே நிர்வாணமாக!

அவளோடு பேசுவதற்கு முன் என் வாய் தவறி வந்த சொற்கள்.

“கடவுளே இவள் தான் ஏவாளா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

கச்சி வெளையாட்டு

திசெம்பர் 12, 2008

சிறு வயதில் நான் கற்றுத்தேர்ந்த விளையாட்டுகளில் முதன்மையானது “கச்சி” தான். “கோலி” எனும் சிறு கண்ணாடி குண்டுகளையே எங்கள் ஊரில் “களச்சி”  என்றும், “கச்சி” என்றும் அழைப்பர். காலம் கடந்து போய், நாடும் நகரமும் மறந்துவிடுவதற்குள் என் பணி “கச்சியை” உச்சி முகர்வதே என உணர்ந்து இதை எழுதுகிறேன்.

மார்த்தாண்டத்தில் எனது தந்தை போதகராக இருக்கும்பொழுது, எங்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உண்டு. போதகருடைய பிள்ளைகள் பிற பிள்ளைகளுடன் சேரக்கூடாது என்பதே அதில் தலையாய ஒன்று. கோயில், வீடு என்பதாக மட்டுமே எங்கள் வாழ்க்கை இருந்தது. நம்ப மாட்டீர்கள் எனது அண்ணன் ஆலயத்துக்கு வரும் தனது வயதைஒத்த பதின்வயதினருடன் கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்கியிருக்கிறார்கள். விலையுயர்ந்த  கிரிக்கெட் பாட், ஸ்டெம்ப் எல்லாம் அடுப்புக்குள் போவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நண்பர்களுடன் அண்ணன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அம்மா சிறு குச்சியுடன் கிரவுண்டுக்குள் வந்தால் போதும், அனைவரும் ஏழு திசைகளில் ஓடி மறைவார்கள்.

இந்த சூழ்நிலையில் நான் “கச்சி” விளையாட கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் அளவிற்கு எந்த முன் ஏற்பாடும் தேவையற்ற ஒரு விளையாட்டு ஆகையால், யாராலும் வெகு எளிதாக கற்றுக்கொள்ளவும் விளையாடவும் முடியும்.  சர்ச்சுக்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கும்போது,  முட்டுக்கு கீழே சுரீர் என ஒரு அடி விழும். திரும்பிப் பார்க்காமலேயே சொல்லி விடலாம் அது அம்மா தான் என்று. நொண்டி நொண்டி, ஓட ஓட கால்களைத் தடவியபடியே வீடு நோக்கி அம்மா வருவதற்குள் அடைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அப்பா வருவதுவரை வெளியே தான் நிற்கவேண்டும். ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறேன் என்பதற்கு அடையாளம்.

அப்பா வந்தவுடனே நான் பசியோடிருக்கிறேனா என்ன என்பதை பார்க்க மாட்டர்கள், வெளியே நிற்பதற்கான காரணத்தை புரிந்துகொன்டு என்னிடம் பேசாமல் வீட்டிற்குள்ளே சென்று விடுவார்கள். வெளியே அவர்கள் வரும்போது மரச்சீனி அல்லது கீறிப்போட்ட தென்னைமட்டை இருக்கும்.  அப்பா என்று கூப்பிட திராணி இல்லாதவரைக்கும் அடிவாங்கி, கால்கள் வீங்கி, கண்ணீருடன் நிற்கும்போது பாசத்துடன் அம்மா வந்து தடுத்து வீட்டிற்குள் கூட்டிச்செல்வார்கள்.

மூன்று அண்ணன்மார் இருந்ததால் அவர்களைப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக “கச்சி வெளையாட” கற்றுக்கொண்டேன்.  அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்துதான் விளையாடுவோம். மண்ணில் விளையாடக்கூடாது, அதற்கும் அடி உண்டு. எனக்கு கச்சிமீது அதீத காதல் பிறந்துவிட்டது. வீட்டு முற்றத்திலேயே விளையாடலாம், அம்மா அப்பா வருவதைப்பார்த்தால் நல்ல பிள்ளை போல் நேராக வீட்டிற்குள் போய் விடலாம்.

அப்போது ஐந்து பைசாவிற்கு ஒரு “கச்சி” கிடைக்கும், எப்படியாவது பத்து பைசா தேற்றினால் இரண்டு கச்சி வாங்கி விளையாட துவங்கலாம். மார்த்தாண்டம் மெயின் ரோட்டிலே உள்ள பழக்கடையிலே வித விதமாக கச்சி கிடைத்தாலும், அந்த சாலையைக் கடப்பது இல்லை. வடக்குத்தெருவிலே ஒரு தாத்தா பைபிள் கடை வைத்திருந்தார். அவரிடம் வண்ணங்கள் அதிகம் உள்ள கச்சி இருக்காது ஆனால் அதுதான் எனக்கு வசதியும் அடுத்ததும். ஒரு கச்சி வாங்கினால் போதும். ஒன்பது கச்சிகளை விளையாடி சம்பாதித்துக்கொள்ளலாம்.

விளையாட தயாராகும் முன்பு மூன்று குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழிக்குமிடையே சுமார் ஐந்து ஜாண் இடைவெளி இருப்பது நல்லது. கால்களை ஒன்றன்முன் ஒன்றாக  வைத்து அளப்பதுவே ஸ்டாண்டேர்ட் மெஷர்மென்றாக இருந்தது. மழைக்காலங்களாக  இருந்தால், கால் உப்புகுத்தியை தரையிலே அழுத்தினால் ஏற்படும் குழிகள் போதுமானது. வெயில் காலத்தில், கற்கால உபகரணங்களை உபயோகித்து “குழிபறிக்கலாம்”.

முதலாவது யார் விளையாட ஆரம்பிக்கிறார்கள் என்பதே பொதுவாக போட்டி முடிவை நிர்ணயம் செய்யும். ஆகையால் நடு குழியிலிருந்து கச்சியை முதற் குழி நோக்கி உருட்டிவிட வேண்டும். இரண்டு பேருடைய கச்சியும் குழிக்குள் விழாவிட்டால்  எவருடையது குழிக்கு அருகாமையில் இருக்கிறதோ அவரே விளையாட துவங்குவார். டாஸ் ஜெயிப்பதும் தோற்பதும் போலவே.

தோற்றவர் கச்சியை முதற் குழியினோரத்தில்  நடு குழியை நோக்கி வைக்க வேண்டும். விளையாடத்துவங்குபவர் நடு குழியினோரத்திலிருந்து தனது கச்சியைவைத்து எதிரிலிருப்பதை குறிபார்த்து அடிக்கவேண்டும். ரூல்ஸ் இதற்கும் உண்டு. பெருவிரல் தரையில் அழுத்தியிருக்கவேண்டும், கச்சி ரிலீஸ் ஆகும் வரை கை எம்பக்கூடாது. அப்படி எம்பி அடிப்பவர்கள் தொலைவை குறுக்கும் பொருட்டு கையை சற்று முன் நகர்த்துவார்கள். இவர்களை “ஈத்தடி மன்னன்” என்று குற்றம் சாட்டுவோம்.

தூக்கிநிற்கும் நான்கு விரல்களில் சுட்டுவிரல் அல்லது நடுவிரல் ஏதாவது ஒன்றில் கச்சியை ஒட்டவைத்து மற்றொரு கையால் அந்தக் குறிப்பிட்டவிரலை கச்சியோடு சேர்த்து வளைத்து விடுவிக்க வேண்டும். எதிராளியின் கச்சியில் நமது கச்சி உரசிவிட்டால், நமக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கும். எல்லா குழிகளையும் வெற்றிகரமாக விசிட் செய்துவிட்டு வந்தால் போதும். முதல் வருபவர் வெற்றி பெறுபவர் ஆகிறார்.

என்னைப்பொறுத்தவரை நான் வகை வகையாக அடிப்பேன். எனது தனித்துவமே “நெறுப்பால்” தான். எதிராளியின் கச்சி நின்ற இடத்திலேயே என்னுடைய கச்சியையும் நிற்கச்செய்வது. ஆனால் அடிபட்ட எதிராளியின் கச்சி மிகவும் தொலைவில் சென்றுவிடும்.

தேவைக்கேற்ப “கெறங்கி” அடிப்பதும் உண்டு. கெறங்கி அடிப்பது ஸ்பின் அல்லது பூமராங் போன்ற ஒரு வகை. நமது கச்சி எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ  அதை மனதிற் கொண்டு எதிராளியை துரத்தி, நாம் வேண்டிய இடத்திற்குச் செல்லுவது.

“கொட்டல்” என்பது முட்டமிட்டது போல் தொட்டு எதிராளியை இருக்கும் இடத்தை விட்டு அதிகமாக அசையவிடாமல் கடந்து செல்லும் ஒரு நுட்பம்.

“உருட்டல்’ இன்னும் தந்திரமானது, பக்கத்து குழிக்கு எதிராளியை உரசியபடியே கொண்டு சென்று, அந்த குழியில் இறங்கிவிட்டு, அருகில் கொண்டுவந்த எதிராளியின் கச்சியை கண்மூடித்தனமாக அடித்து துரத்துவதற்கு ஏற்றது.

குறைந்த பட்சம் இருவர் தேவையான விளையாட்டிற்கு எனக்கு “கூட்டு” கிடைக்காததால் நான் தனியாகவே விளையாட நேரிடும். ஸ்பிலிட் பெர்சனாலிட்டி போல நானே இருவராக மாறி விளையாடி பழகியதில் ஒருவழியாக நன்றாக தேறிவிட்டேன். லெப்ட் ஹாண்ட் பாட்ஸ்மான் போல நான் “பீக்கை” உபயோகித்தே விளையாடினேன்.

இனி அரங்கேற்றம் வேண்டும் என்ற நிலையில் நான் வீட்டிற்குத் தெரியாமல் விளையாட ஆரம்பித்தேன். ஸ்கூலுக்கு  சீக்கிரமாக போய், அழகான யூனிபார்மை அழுக்காக்கி ஆசிரியர்களிடமிருந்தும் அடிவாங்கத்துவங்கினேன்.

போட்டி என்று வந்தால் இரண்டே வகைகள் தான் உண்டு. ஒன்று முட்டு. தோற்றவர் தனது கை முஷ்டியை மடக்கி முதற் குழியில் கச்சிக்கு பதிலாக வைக்கவேண்டும். அல்லது முதலிலேயே பேசியபடி இருக்கும் கச்சிகளை கொடுத்துவிடவேண்டும்.

எனக்கு இரண்டுமே உவப்பானது தான். நான் தன்னிகரற்ற விளையட்டு வீரனானேன். கச்சிகள் இல்லாத போது எதிராளிகளின் முட்டுகளை பதம் பார்த்தேன். ஆகவே என்னை கவனித்தவர்கள் கச்சியையே பெட் கட்ட முன் வருவர். இது ஒரு புதிய பிரச்சனைக்கு வழி வகுத்தது. விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்போது கால்சட்டை பையிலே கச்சிகள் வெற்றிக்களிப்பின் ஒலியெழுப்பும்போது மாட்டிக்கொள்வேன். அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடுவார்கள். அடி தவறாமல் கிடைக்கும்.

எளிமையான இந்த விளையாட்டில், எனது குறி பார்க்கும் திறமைகள் நன்றாக வளர்ந்தது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கல்லில் எப்போதுமே ஒரு குலை மாங்காய் தான்.

ஆறாம் வகுப்புவரை இருந்த எனது கச்சி விருப்பம்,  பிற்பாடு தானாக  என்னைவிட்டு அகன்று போனது. மும்பையில்  நான் தெருவோரச் சிறுவர்களுக்கான பணியில் கடந்த வருடம் ஈடுபட்டிருந்த பொழுது, சிறுவர்களுக்கு என வெளிநாடுகளிலிருந்து வந்த விளையட்டு பொருட்களில் கச்சியும் இருப்பதை நான் பார்த்தேன். நான் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் உபயோகித்ததைவிட அழகான நிறங்கள், கவர்ச்சியாக உறுதியுடன் இருந்தன. சற்று நேரம் அவைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பல நினைவுகளுக்கிடையில் சம்பந்தமில்லாமல் ஒருசில கேள்விகள் வந்துபோனது. என் வாழ்நாளில் நான் பெண்களோடு இதை விளையாடியதில்லை. சிறுமிகள் இதை விளையாடி நான் பார்த்ததும் இல்லை. சிறுமிகளை இந்த விளையாட்டைவிட்டு தூரமாக்கியது யார்? அதன் காரணம் என்னவாக இருக்கும்? அந்த சிறு வயதில் எல்லா ஆண் சிறுவர்களும் இதை உபயோகிப்பதன் காரணம் என்ன? ஒருவேளை இதன் வடிவத்திற்கும் ஆண்பாலுக்கும் சம்பந்தம் உண்டா? தெரிந்து செய்வதுபோல் தெரியாவிட்டாலும், “ஆணாதிக்கம் நுட்பமாக சிறுமிகள் கையிலிருந்து கச்சியை பிடுங்கிவிட்டிருக்கின்றது”.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

கள்ளன் போலீஸ்

திசெம்பர் 11, 2008

போலீசாரோடு கூடிய அனுபவம் யாவும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. அனைத்து போலீஸ் நகைச்சுவை துணுக்குகளையும் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அவை என்னை ‘இக்கிலு’ காட்டும். பெரும் புண்ணியவான்கள், பெரிய (மீசைவைத்த) அய்யாமார், காவல் தெய்வங்கள், என்னை தயை கூர்ந்து, பொறுத்து, காத்து, மன்னித்து அருளவேண்டும். அடிவாண்டும் மின்னாலே சென்னா விட்டிருவினும், கேட்டியளா!

சத்தியமா மக்கா க்யாட்டுக்க, நான் வெட்டூர்ணிமடத்துல உள்ள எனக்க அக்காளுக்க வீட்டுக்காக்கும் போனது. அஞ்ச ராத்திரி நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு கதையளந்துட்டு இருந்தா ந்யாரம் போனதே தெரியல்ல. அக்காட்ட செல்லிண்டு வந்தா மெயின் ரோட்டுல ஆளு ஒருத்தரையும் காணல. கடயெல்லம் பூட்டியாச்சி. மருந்து வாண்டுதவிய மட்டும் ஒண்ணு ரெண்டு பேரு அஞ்சோட்டும் இஞ்சோட்டுமாட்டு பென்சாம் ஆஸுபத்திரிக்க கிட்ட நடக்கினும்.

என்னல செய்யது? மணி பதினொண்ணர ஆயிப்போச்சுல்லா? லெவன் எல் தக்கல வண்டியும் போயிருக்கும். ரோடு பாலீஸ் இட்டதுபோல கிடக்கு. பின்னால கொஞ்சம் ஆமணக்கு எண்ண தடவீட்டு இருந்து நரங்கினா ந்யேரா பார்வதிபுரம் வருகது மாரிதான் எறக்கமும். நடக்க முடியாதுடெ! வண்டி யாதெங்கிலும் கிட்டினா கொள்ளாம்னு நானும் நிக்கிதேன்.

ஆண்டவரே ஏசுவே என்ன கைவிடாதேயும் அப்பாண்ணு ஒரே ஜெபம். கடவுள் எனக்க விளியக்கேட்டது போல தூரத்துல ஒரு வெளிச்சம். வடசேரி சந்தயிலேண்டு டக்கர்ல சாதனம் கொண்டு வரினும். ஏசுவே இவனுவ நெறுத்தணுமே. “என் விசுவாசம் என்னை இரட்சித்தது”. வண்டி நின்னப்போ தான் பாக்கியேன்…… மக்கா லேய் போலீசுல.

சார் தெரியாம நெறுத்திட்டேன், நீங்க போங்க…

அது எப்படி முடியும்! சார் நெறுத்தினதுக்க பின்னாடி நாங்க நிக்காம போகலாமா?

 ஜீப்புக்க பின்னால குகையிலேண்டு வெளிவந்த மொத போலீஸு அன்பாதான் விளிச்சான். ஆகா போலீஸ் எனது நண்பன் எண்ணு செல்லியது செரிதான். போவுலாமா போப்பிடாதா என்ன செய்யுததுண்ணு தெரியேல கேட்டியா. கமுக்கூட்டுக்குள்ள வெச்சி சந்தக்கி எடுத்திட்டு போற கோளி போல நான் முளிக்குதேன்.

இல்ல அண்ணா நான் நடக்குதேன் ….

அய்யோ கொகைகுள்ளேண்டு இன்னொரு ஆத்மாவும் எறங்குதே? ஏசப்பா…

 எஞ்சல போற….

மக்கா லெய்! நமக்குள்ள எதுவும் விளிப்போம்! இன்னொருத்தன் நம்மள பிலேண்ணு விளிச்சதுண்டா? தேச்சியமா வருது ஆனா ஒண்ணும் செய்யப்பற்றாது. ஓடீரப்பிடாதுண்ணுதான் ரெண்டுபேரும் சுத்தி நிக்கினும். என்ன கேஸுல இட்டு பிளிவினுமோண்ணு எல்லாம் கலங்கிப்போச்சு.

பார்வதிபுரம்….

ஒரு ஸ்டாப்புலேயும் நெறுத்தாத்த கேரளா பஸ் ரைவர் கூட நெறுத்திய இடமாக்கும். இவிய என்னப்பபாத்து என்ன க்யாட்டினும் தெரியுமா? “அது எஞ்சல இருக்கு” ண்ணாக்கும்.

அடுத்த ஸ்டாப்புல….

எவா நிக்குதா? …

சத்தியமா மக்கா சொல்லுதேன், எனக்கு அப்பம் மனசிலாவேல. பின்ன, யப்பா என்னத்த க்யாக்குதான்ணு பயங்கரமாயீற்று.  லே, நம்ம எஞ்சயெல்லம் போயிறுப்போம், கன்னியாமாரி, கொளச்ச, பப்பனாவுரம், ப்யாச்சிப்பாற…. எண்ணெங்கிலும் டதி ஸ்கூலுக்கோ, பெண்ணுவ காலேஜுக்கோ போய் நின்னிருப்போமால… எளவுடுப்பான் என்னத்த க்யாக்குயதுண்ணு இல்லியா?

இல்ல வீட்டுக்கு…

அதான் எவளுக்க வீட்டுக்குல போற? நாங்க கொண்டு விடுதோம்…

இல்ல… எங்க வீட்டுக்கு….

ஏறுல வண்டீல….

மரியாத மானமெல்லாம் போச்சு. போலீசுக்க வண்டீல ஏறவேண்டியவனா நான்? சத்தியமா நான் யாரேல. என்ன தூக்கி உள்ள வச்சினும். கொகைக்குள்ள இன்னும் ரெண்டு போலீஸு கையில தடியோட. உள்ள இட்டே இடிப்பினும். எக்கப்போ… ஏசுவே…

எங்கல களவாணப்போன?

 நமக்க கள்ள முளியப்பாத்து களவாணிபயண்ணு நெனச்சிட்டினுமோ. வண்டி உருளத்தொடங்கியாச்சி, எனக்க தலயிம் கெறங்க தொடங்கியாச்சி.

சார், நான் ஸ்டூடண்டு…

என்னலே படிச்சுத? …பாத்தா அப்பிடி தெரியேலிய…

பி டி படிக்குதென் சார்….

என்னல பீடி குடிச்சிதியா? என்னபடிப்பாக்கும்பலே அது?

கடவுளே! இவன்மாருக்கு நான் என்னத்த செல்லுவேன்? பேச்சிலர் ஆப் டிவினிட்டிண்ணு சென்னா, பேச்சிலரா தெண்டி நடக்குதவண்ணுல்லா செல்லுவினும்? கடவுள் தான் காப்பத்தணும்னு நெனச்சி, அந்த நரகத்துக்க உள்ள நடுங்கிட்டே இருக்குதேன்.கடவுள் பெரியவரு தான் இல்லியா? ஒரு போலீசுக்கு பி டிண்ணா என்னாண்ணு தெரிஞ்சிருக்கு.

என்ன பாஸ்டருக்க படிப்பா?

ஆமா…..

பின்ன ஒருத்தரும் எனக்கிட்டே பேசேல. அவியளுக்குள்ள வியாக்கியானம் செய்திட்டிருந்தினும். பார்வதிபுரம் வந்தவுடனெ…. “செரி நாட்டேர எரக்கி விடுங்கா”ணு ஒரு சத்தம்.

ஒரே குளும. என்ன ஒரு சந்தோஸம். “உள்ள” போயிட்டு வந்த மாரி ஒரு பீலிங்.

கர்த்தர் உன் போக்கயும் வரத்தயும் இது முதலா எண்ணைக்கும் காப்பருண்ணாக்கும் சங்கீதம் சொல்லுது.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com


%d bloggers like this: