Archive for ஜூன், 2009

இயேசு துப்புகிறார்

ஜூன் 24, 2009

மும்பை ஒரு எச்சில் நகரம். காலை முதல் பின்னிரவுவரை அது உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் உமிழ்நீர் பெருக்கெடுத்து நகர்வலம் வருகின்றன, வண்ண ஃப்ளெக்சி போர்டைவிட தீற்றல்கள் நிறைந்த பூமியிது. தொடர் வண்டி, அதன் நிலையங்கள், அதன் நடைபாதைகளின் ஓரங்கள், அரசு அலுவலகங்கள், அதன் சுவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளின் முக்குகள் என அவை வியாபித்திருக்கின்றன.

எச்சில் வரலாறு முக்கியமானதில்லை என நாம் புறந்தள்ளிவிட இயலாது. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை மென்று கொண்டிருப்பதே “டைம் பாஸ்” என எண்ணும் மக்கள் திரள், மாண்ணின் மைந்தர்கள், வந்தேரிகள் என அது ஒரு பெரும் ஜாதி. எனினும் ஒருவரும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது, நாம் நமது பங்கிற்கு ‘அவல்’ மெல்லுகிறோமில்லையா? அதுபோலத்தான் அவர்களுக்கு ‘அவல்’ மெல்லும் நேரத்தில் “வேறு ஏதாவது” மெல்லமுடியுமானால் அன்றைய நாள் இனிய நாளாக வழிந்துவிடும். மன்னிக்கவும் கழிந்துவிடும். உழைப்பின் பக்கவாத்தியம் தானே மெல்லுதல் என்னும் புரிதலோடே மெல்லுகிறார்கள்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தக்கலையிலுள்ள ஒரு பழைய பொருட்களை வாங்கும் கடையில் பழைய பித்தளை வெற்றிலைத்தட்டை விலைக்கு வாங்கினேன். அதற்கு மூன்று கால்கள் இருந்தன. மிகவும் ரசனையுடன் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணியபடியே அந்த கடைக்காரரிடம் “அண்ணே! நா இது போல இதுவரப் பாத்ததே இல்ல! சாப்பாட போட்டு சாப்பிடும்போது சப்போட் வேற அழகாக குடுத்திருக்காங்க” என்றேன். என்னோடு நன்கு பழகியவர் ஆனபடியால், ஸ்னேகமாக என்னைப் பார்த்துவிட்டு, “நீங்க, இதப் பாத்ததில்லியா? பத்திருபது வருஷத்துக்கு மின்னால எல்லா வீட்டுலயும் இத வைச்சிருப்பாங்க, வெத்தில தட்டுண்ணு செல்லியத கேட்டுட்டில்லியா?” என்றார்.

 
நான் அதை அபூர்வமான ஒரு பொருள் எனக்கருதி அதைப் பார்த்தபடி அதன் அழகில் மயங்கி வாங்கிக் கொண்டேன். வீட்டில் வந்து அம்மவிடம் அதைக் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே சொல்லிவிட்டார்கள் “வெத்தில தட்டு”. எப்படிமா உங்களுக்கு தெரியும்? தாத்தா பெரிய பிரசங்கியாரில்லையா? எப்படி இதை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் இதை வைக்க தாத்தா அனுமதித்திருக்க மாட்டார்களே, எங்கே பார்த்தீர்கள்? என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டேன். ” சாதாரணமா எல்லார் வீட்லயும் இருக்கும்” அம்மா எந்த வித அதிசய  முகபாவமும் காட்டாமல், இது கூட உனக்குத்தெரியாதா என்பதுபோல என்னைப் பர்த்தார்கள்.

நமது மூதாதையர்கள் வெற்றிலை குதப்பியிருக்கிறார்கள் என்பதும், அதையும் வரவேற்கும் விதமாக ஒரு சடங்காக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியத்தகவலே. வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடுவது விசேஷித்த தருணங்களில் தான் என்பதை எண்ணும்போது ஒரு முரண்பாடான கருத்து அதனுள் ஒட்டிகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.

முகத்தில் எச்சில் உமிழ்தல் கண்ணியமற்றது என்பதை நம் கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் திருவிவிலியத்திலும் நாம் காண இயலும்.
….”அவள் தந்தை அவள் முகத்தில்  காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்படவேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழு நாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார் (எண்ணிக்கை 12 : 14)
அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, ” தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்” என்று கூறுவாள். (இணைச் சட்டம் 25 : 9)
என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னை விட்டு விலகிப் போகின்றனர்; என் முன் காறித்துப்பவும் அவர்கள் தயங்கவில்லை (யோபு 30 : 10)
பின்பு அவருடைய முகத்திலே துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்….(மத்தேயு 26 : 67)
அவர்மெல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் (மத்தேயு 27 : 30)

எச்சில் என்பது நாம் வெறுக்கத்தக்க ஒன்று மட்டுமே என நினைபது தான் தவறு. எச்சில் அதற்கேற்ற இடங்களில் தனது நிலைகளை வெகுவாக மாற்றிக்கொண்டுள்ளதை உணர்ந்தப்போது நான் அப்படியே சந்தோஷத்தில் குதித்துவிட்டேன். ஆம்! “இயேசு துப்புகிறார்” என்பது ஒரு ஆழ்ந்த இறையியல் நோக்கி நம்மை அழைக்கும் ஒரு வெற்றிலைத்தட்டுடன் நிற்கிறது.

“அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்”  என்பதை உணர்ந்து “முறுக்கான முறுக்கப் போவோம்!”

எனது நண்பன் ஒருவன் பாலியல் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் எளிய அடையாளமாக அவர்கள் வெற்றிலை குதப்புவார்கள் என நான் கல்லூரியில் படிக்கும் போது சொல்லியிருந்தான். நான் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த போது, எய்ட்ஸ் நோயுற்றோருக்கான நல்வழ்வு திட்டங்களை செய்து கொண்டிருந்த ஒரு சக ஊழியரிடம் எனக்கு ஒரு பலியல் தொழிலாளியைப் பார்க்க வேண்டும் என்றேன். என்னை உடுருவிப் பார்த்த அனுபவமிக்க அவர் கூறியது என்னவென்றால், “நமது சகோதரிகளைப் போன்றும், தாயைபோன்றுமே அவர்கள் இருப்பர்”. துணுக்குற்ற எனக்கு அதன் அத்தத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.

காதலர்களுக்க்கிடையேயான எச்சில் பறிமாற்றம், தாய் குருவி தன் குஞ்சிற்கு அளிக்கும் எச்சில் இரை, மாற்று திறன் பெற்றவர்கள் கட்டுப்படுத்த இயலாத எச்சில் ஒழுக்கு, கர்த்தருடைய பந்தியில் நாம் ஒரே பாத்திரத்தில் பங்கு பெறுவது என அது ஐக்கியத்தின், அன்பின், வாழ்வின், நிதர்சனத்தின், நெருக்கத்தின் அடிப்படையான உணர்வுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மாற்கு ஏழு மற்றும் எட்டு அத்தியாயங்களில் காணப்படும் இயேசு துப்புகின்ற நிகழ்வுகள் எச்சிலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என அறிவுறுத்துகின்றன. இயேசு ஏன் அதைச் செய்தார் எனும் கேள்வி இவ்விடங்களில் எழுப்பப்படுவதை விட, எவ்வித கரிசனையுடன் அவர் செய்தார் என் கண்டு கொள்வதே அதன் இறையியல் அடிப்படை என்பது என் தாழ்மையான கருத்து.

இயேசு  துப்பி குணமாகிய இருவரில் ஒருவர்  பார்வை அற்றவர் மற்றொருவர் திக்கிப் பேசுபவர். இருவரையுமே இயெசு  தனியாக ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் துப்பி அவர்களைக் குணப்படுத்துகிறார். எச்சில் குறித்த மக்களின் மன பிம்பங்க்களை அவர் சரிவரப் புரிந்திருந்ததினால் தான் அவர் இவ்விதமாக பொது இடங்களில் அவர்களை குணப்படுத்தாமல் தனியாக அழைத்துச்சென்றிருக்க வேண்டும்.

குணப்படுதல் என்பது ஒரு தனி நபர் சார்ந்த அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் வாய் பயனற்று அசைந்துகொண்டிருக்கிறது. இயேசுவுக்கு தெரிந்திருக்கும்  “ஊர் வாயை மூட முடியுமா என்ன?”

( எச்சரிக்கை: “இயேசு துப்புகிறார்” என்ற பெயரை காப்புரிமை செய்துள்ளோம்! ஆகவே யாரும் “இயேசு துப்புகிறார்” எனும் பெயரிலே ஊழியம் செய்வதோ, தொலைக்காட்சி நிகழ்வுகளை நடத்துவதோ, இதழ்களை அச்சிடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும் பெருந்தொகை கொடுத்து இந்த அரியப் பெயரை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

பத்தில் ஒரு பங்கு – பாகம் 3

ஜூன் 23, 2009

 பத்தில் ஒரு பங்கைக் குறித்து விளம்புபவர்களுக்கெல்லாம் திருவிவிலியம் பல நிகழ்வுகளை தெளிவுறக் காட்டும், எனினும் சரியான புரிதல் இல்லாமையாலும் முன் கருத்தோடு விவிலியத்தை அணுக நேரிடுவதாலும் அவை திருச்சபையினரிடம் திரித்து கூறப்படுகின்றன. இவ்வாறாக நாம் காணத்தக்க  திரிபு விளக்கம் பெற்றவருள் ஒருவர் மூதாதையரில் இளையவரான  யாக்கோபு.

இந்திய மனது ஏற்கத்தக்க எந்த நற்குணங்களும் இல்லாதவன், ‘எத்தன்’ எனும் பேருக்கு ஏற்றவிதமாக, தனது தந்தையை, மாமனை மற்றும் தமையனை ஏமாற்றியவன். அவன் கடவுளையே ஏமாற்றத் துணிந்தவன்  எனும் நிகழ்வு ஒன்று தான் இந்திய கதை தெனாலிராமனோடு ஒத்துப்போகிறது. யாக்கோபா? கடவுளையா? ஏமாற்றினானா? இருக்காது! என மார் தட்டி பேசும் திருச்சபையினரே! அவன் அப்படித்தான்…..அப்படியே பலநேரங்களில் அவனை முன்னிறுத்தும் நாமும்……

வெகு அபூர்வமாகவே அவனில் இருந்து நாம் நற்குணங்களை எடுத்துக்க்கொள்ளும் நிகழ்வுகள் காணப்பெறுகின்றன. குறிப்பாக அவன் கடவுளுக்கென்று தூண்களை நாட்டி எண்ணை வார்த்த நேரங்கள், தனது சகோதரனுக்கு அவன் அனுப்பும் மந்தையில் ஒரு பங்கு, தீனாவிற்காக அவன் மகன்கள் பழிவங்கியபோது அவர்களை கடிந்து கொண்டது… எனினும் எல்லா இடங்களிலும் அவனது உயிர் பயம் மற்றும் சுய விருப்பங்களே மேலோங்கி இருக்கின்றன என்பதையும் நாம் காணுகிறோம்.

ஈசாக்குடைய வாழ்விலே பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றதை நாம் திருவிவிலியத்தில் காணயியலாது. மூதாதையரில் (முற்பிதாக்களில்) ஒருவர் செய்யத்தவறியதை ஏன் மற்ற இருவர் செய்யவேண்டும்? எனும் கேள்வி எழுவது இயல்பே! அதற்கு விடையாக ஆபிரகாமின் வாழ்விலே பத்தில் ஒரு பங்கு சூழ்நிலை சார்ந்தது மட்டுமே என்பதைக் கண்டுகொண்டோம், யாக்கோபோ தனது  சுய விருப்பம் நிறைவேறவேண்டி ஏறெடுக்கும் ஒரு வேண்டுதலின் பொருத்தனையாக பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றது.

தொடக்க நூல் 28ஆம் அத்தியாயம் யாக்கோபு பெற்ற ஒரு ஆச்சரிய கனவை விவரிக்கின்றது. தனது முதாதையருக்கு வாக்களித்த கடவுள், யாக்கோபுக்கும் கனவில் தோன்றி ஆசி பொழிகிறார். அந்த ஆசி பின்வருமாறு…

13…. “உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே.  நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உன் வழி மரபிற்கும் தந்தருள்வேன். 14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு திசைகளில் பரவிச் செல்வாய்.  ஊன்னிலும் உன் வழி மரபிலும்  மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. 15  நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும்  உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில் நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.

மேற்கூறிய வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது, நமது கடவுள் எவ்வித தாராளச் சிந்தை உள்ளவர், நம்மைத் தேடிவரும் அன்பு கொண்டவர், மூதாதையருக்கு அளித்த தமது வாக்கை உறுதிப்படுத்துகிறவர்,  என்று புரிந்துகொள்ள முடியும். எந்தவித கட்டுப்பாடுகளும் யாக்கோபுக்கு இல்லை ஆசிகள் மட்டுமே கடவுள் அவனிடம் கூறுகிறார். எதற்காக? தன்னை நம்பிய ஆபிராமின் வழிமரபினரான யாக்கோபும் தன் மேல் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதே அல்லாமல் கடவுள் அவனிடம் வேறெந்த கருமத்தை (பணியினை) எதிர்பார்த்திருக்க இயலும்? 

நேரடியாக (அல்லது கனவில்) வெளிப்பாடு பெற்றிருந்தாலும், இதைவிட முக்கிய இரண்டு நிகழ்வுகள் (ஆசிகள்) அவனுக்கு அருளப்பட்டுள்ளன. ஒன்று பரம்பரையாக அவனுக்கு  கிடைக்கப்பெற்றது அதாவது அவனது பாட்டனர் ஆபிரகாம் மூலமாக. நாம் ஒத்து பர்ப்பதற்கு நேராக இதோ அந்த விவிலியப் பகுதி

 தொடக்க நூல் 12 : 1 – 3
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடத்திலிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல். 2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச்செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

இது முதன் முதலாக ஆபிராமுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசி, மறுபடியுமாக இன்னுமொரு ஆசி  அவர் 13ஆம் அத்தியாயத்தில் பெறும் பொழுது அது ஆபிராமின் வழிமரபினருக்கு (அதாவது யாக்கோபிற்கும்) பொருந்துவதாக அமைகிறது!

14….” நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். 15 ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும்  கொடுக்கப்போகிறேன். 16 உன் வழி மரபினரை பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழி மரபினரையும் எண்ணலாம். 17 நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

“அதற்கு ஆபிராம் என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளுவேன்?”  என்று ஆபிராம் வினவியபோது கடவுள் அவனிடம் சில பொருட்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார். (தொடக்க நூல் 15: 8)

“மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள  செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டு வா” (தொடக்க நூல் 15: 9)

என்கிறார்… மிகப்பெரிய செல்வந்தனான ஆபிராமிடம் கடவுள் கேட்டது ஒரு எளிய காணிக்கை தான். அதுவும் அவன் ஒரு அடையாளத்தை எதிர்னோக்கியிருக்கும்போதே அல்லாமல் செய்து தர வேண்டி அவன் கடவுளிடம் எந்த ஒரு மன்றாட்டையும் வைக்கவில்லை. கடவுளோ ஆசி வழங்குபவராகவே இருக்கிறார்.

மறுபடியுமாக ஒரு ஆசியை யாக்கோபு பெறுவதை நாம் அனைவரும் நினைவு கூறலாம். தனது தமையனிடமிருந்து தலைமகனுரிமையை அபகரித்ததுமல்லாமல் தனது தாயின் சொற்படி கேட்டு அவன் தனது தந்தையாம் ஈசாக்கை ஏமாற்றி பெற்ற ஆசியே அது.

தொடக்க நூல் 27 : 27 “….. இதோ என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்! 28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திரட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 29 நாடுகள் உனக்கு பணி புரிந்திடுக! மக்கள் உனக்கு பணிந்திடுக! உன்றன் சகோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவோர் வழமுடன் வாழ்க!”

தாத்தாவின் சொத்து எப்படி பேரனுக்குரியதோ அது போலவே தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு பொருந்துமல்லவா? எனில் ஆசி பெற்ற பரம்பரையில் வந்தும், தனது தந்தையிடமே தனது  சொந்தத் தமையனுக்கான ஆசியை அபகரித்தும்  நிற்காத “ஆசி வெறி”   கடவுள் தனக்கு காட்சியளித்து நம்பிக்கை அளித்தபோதும் அவனுள் வெதும்பிக்கோன்டிருந்தது.

இந்த இடமே நாம் சிந்திக்க வேண்டிய இடமாக நான் கருதுகிறேன். யாக்கோபிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் “தசமபாக” சிந்தனை  எத்துணை சிறுமையானது? ஒரு பெரிய நாட்டையே உனக்கு நான் தருகிறேன், நீ என்னடாவென்றால், துணி தருவாயா, சாப்பாடு போடுவாயா, நான் செய்யும் எல்லா அக்கிரமங்களுக்கும் (ஹும்…வேறென்னச் சொல்ல?)  துணை நின்று  (தமையனை ஏமாற்றுவேன், தந்தையை ஏமற்றுவேன், மாமனாரை ஏமாற்றுவேன்…) என்னைக் காப்பாற்றினால், அப்போது தான் நீர் எனக்கு கடவுளே! அதுவரைக்கும் எனக்கும் உனக்கும் ஒட்டு உறவு கிடையாது. கூடவே கடவுளுக்கு போனசாக பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதாக வாக்களிக்கின்றான். (கல் தூண் நாட்டி எண்ணை வார்த்தது ஒரு ‘பெரிய அடவு’….)

எங்கும் நான் தேடிப்பார்த்தபோது தனது பொருத்தனையை யாக்கோபு நிறைவேற்றினதைக் காண இயலவில்லை. எத்தனில்லையா? கடைசி வரை அவன் அதைக் கொடுக்கவில்லை! ஏமாற்றிவிட்டன்! (கடவுள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்)  “ஆமாம் பார்ட்டி எஸ்கேப்….”

தொடரும்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 09870765181

பத்தில் ஒரு பங்கு – பாகம் 2

ஜூன் 19, 2009

தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வை ஒட்டி பெரும்பாலான போதகர்கள் தங்கள் செய்தியை அமைக்காமல் “பத்தில் ஒரு பங்கு” எனும் வார்த்தையை மட்டும் அதில் கண்டு அதை தங்களுக்கேற்றபடி வளைக்க முற்படுகின்றனர்.

“அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்” என்பதும், அவர் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர் ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகராயிருந்தார்’ என்பதுமே இந்தப்பகுதியின் கவற்சிக்கான காரணம். மற்றபடி இந்தப் பகுதி கூற வருவது பத்திலொரு பங்கின் முக்கியத்துவத்தைக் குறித்தோ அல்லது ஆபிராம் செய்ததை நாம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலோ அல்ல.

பத்தில் ஒரு பங்கு  எனும் வார்த்தை திருவிவிலியத்தில் முதன் முறையாகக்  காணப்படும் பகுதியானபடியினாலும், ஒத்துப்பார்பதற்கு எளிமையாக இருக்குமென்பதாலும் தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் முழுவதையும் இணைத்துள்ளேன். வாசகர்கள் கவனமாக வாசிக்க வேண்டுகிறேன் (வசனங்களைக் கடந்து போகும் தவறை இப்பொழுதும் செய்துவிடாதீர்கள், இது புரிதலுக்கான அடிப்படை)

1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்  கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது, 2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராக போர் தொடுத்தனர். 3 அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

 4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். 5 ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்த்ரோத்து கர்னமியிமிலிருந்த இராபாபியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும் 6 சேயிர் மலைப்பகுதியிலிருந்த ஓரியரையும்,  பாலை நிலத்தின் எல்லையிலிருந்த  ஏல்பாரான் வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

7 அவர்கள் திரும்பும் வழியில்  காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.  8 அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று, 9 ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும் – ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர் தொடுத்தனர்.

10 இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பி பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர். 11 வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவு பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர். 12 அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களியும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

13 தப்பி வந்த ஒருவான் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். ஆப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்துவந்தார். அவர்கள் அபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். 14 தம் உறவினர் கைதியாக கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்வியுற்றதும் , ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முன்னூற்றுப் பதினெட்டுப் பேரைத்  திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

 15 அவரும் அவர் ஆள்களும் அணி அணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத்த் தாக்கித்  தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத்துரத்திச் சென்றனர். 16 அவர் எல்லா செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.

17 ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்க சோதோம் அரசன் வந்தான். 18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். 19 அவர் ஆபிராமை வழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!”என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

21 சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக்கொள்ளும்” என்றான். 22 அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:  23  ‘நான் தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். 24 இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.
மேற்கூறிய வேத பகுதியை சற்று சுருக்கி அதன் சாராம்சத்தைப் பார்ப்போமானால். 

கப்பம் கட்டாததினாலும் தனக்கு விரோதமாக கிளர்ச்சி செய்வதனாலும் கெதர்லகோமர் தன்னோடிருந்த அரசர்களைச் சேர்த்து படையெடுத்து வருகிறான். லோத்து வாழும் சொதோமின் அரசனுடன் சேர்த்து 5 அரசர்கள் எதிர்த்து நின்ற போதும், போரில் தோல்வியத் தழுவுகின்றனர்.  தோல்வியுற்ற அரசைச் சார்ந்த எல்லாவற்றையும், ஆள்கள் உட்பட வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

இந்தச் செய்தி ஆபிராமுக்கு எட்டுகிறது.  தனது சகோதரனும் அவனோடு அவன் சொத்துக்களும் ஆட்களும் கொள்ளை போவதை அவன் கேள்வியுற்ற போது, தன்னோடு இன்னும் மூவரைச் சேர்த்துக்கொண்டு தனது வேலைக்கரரில் அடிமுறை படித்த, ஆயுதம் பழகிய 318 பேரைத் தெரிந்து கொண்டு தாண் எனும் இடம் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து போய் தனது சகோதரனின் மகனான லோத்தைக் காப்பாற்றுகிறார்.

இப்பொழுது இரண்டு அரசர்கள் வருகின்றனர், ஒருவர் சோதோமின் அரசர்.  சோதோமின் அரசர் தான் தொல்வியுற்றதை ஒப்புக்கொள்ளும் விதம் அருமையாக இருக்கிறது. எனது குடிமக்களை மட்டும் நீர் எனக்குத்தாரும், நீர் கைப்பற்றின பொருட்கள் உமக்கே உரியது எனக் கூறுகிறான். போர் சமயத்தில் காணக்கிடைக்கும் இந்த நிகழ்வு மிகச்சாதாரணமானது. “விழுந்துபோன எங்களைக் கைதூக்கிவிட வந்த ஆபிராமே உனக்கு எப்படி நன்றி கூறுவது எனத்தெரியவில்லை, இந்த வெற்றி உனக்கே உரியது. எனினும் குடிமக்கள் எனக்கு முக்கியமாகையால், நீ அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு என் மக்களை எனக்குத்தா!” என வினவுகிற ஒரு நிகழ்ச்சியாக நாம் இதைக் கண்டு கொள்ளுகிறோம்.

மற்றொருவர் சாலேமின் அரசர்.  இந்தப் போரில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவர்.  ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகர்’. ஆபிராம் கடவுளின் சொல்கேட்டு நடப்பவரானபடியால் அவர் மீது நன் மதிப்பை வைத்திருப்பவர். இந்தப் போரில் கடவுள் ஆபிராமோடு இருந்ததை கண்ணாரக் கண்டதினால், தான் அவருக்கு ஆசி அளிக்கும் பொருட்டு வந்தவர்.  வெறுங் கையோடு வராமல் போரிட்டவர்களின் களைப்பு நீங்க அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தவர்.

ஆபிராமின் சுய ஆளுமை வெளிப்படும் இடமாகையால் நாம் இந்தப் பகுதியைக் கூர்ந்து நோக்க அழைக்கப்படுகிறோம்.  தான் உதவி கோராமல் இருந்த போதிலும் தன்னோடு போரிட்ட வாலிபர்களின் களைப்பு நீங்க உணவு கொண்டுவந்தவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டிய தார்மீக கட்டாயத்தில் ஆபிராம் ‘எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’.

இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஆபிராம் ”எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’ என்பது எவற்றையெல்லாம் குறிப்பிடுவது என்பதாகும். 16ஆம் வசனம் அதை நமக்கு தெளிவுறக் காட்டுகிறது “அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்………. பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்” என்பதாக அங்கே குறிப்பிடப்படுகிறது. செல்வத்தில் மாத்திரமல்ல பெண்களையும் ஆள்களையும் பகிர்ந்து கொடுப்பது அக்கால வழக்கமே. அடிமை முறை மெலோங்கியிருந்தக் காலத்தில் ஆபிரகாம் அடிமைகளாகவே ‘பதில் ஒரு பங்கு’ பெண்களையும் ஆள்களையும் கொடுத்திருக்கவேண்டும். உன்னதமான கடவுளின் அர்ச்சகர் இதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்கிற விளக்கம் நமக்கு இல்லாதது ஆச்சரியமானது ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது ஒரு அன்பின் வெளிப்பாடு. தற்செயலானது. அவ்வளவு தான்! கடவுளின் கட்டளை என நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.

மூன்றவதாக ஒரு முக்கிய உண்மை இதனுள்ளே பொதிந்திருக்கிறது.  நாம் சொல்லும் பழமொழியைப்போல ஆபிராம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்திருக்கிறார்’.  ஆம்,  தனது வாலிபர்களை மாத்திரமே அவர் போருக்கு அழைத்துச் சென்றார், தனது பொருட்கள் ஒன்றையும் அவர் கொண்டு செல்லும் நிதானத்தில் இல்லை.  போர் முடிந்து அவர் தனது வீடு வரைக்கூட வரவில்லை ‘அரசர் பள்ளத்தாக்கிலேயே’ அவர் சோதோமின் அரசராலும், மெல்கிசெதேக்கினாலும் சந்திக்கப்படுகிறார்.

இப்பொழுது ஆபிராமிடம் கொள்ளை பொனவற்றை மீட்டதே அல்லாமல் வேறெந்த பொருட்களுமில்லை. பார்க்கப் போனால் லோத்தினுடைய பொருட்களையே அவர் எடுத்து ‘பத்தில் ஒரு பங்கைச்’ செலுத்தியிருக்க வேண்டும். எனில் பத்தில் ஒரு பங்கு என்பது நம்முடையதாக இருக்கக் கூடாது பிறருடையதையே எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பதாக அர்த்தம் பெறுகிறது.

இறைச் செய்தியாளர்கள் என்று தம்மை விளம்பிக் கொள்பவர்கள் இதை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பர் போலும், ஆகவே தான் ‘அனைவரிடத்திலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்துவிடச் சொல்லிவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்’.

தொடரும்……

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 9870765181

பத்தில் ஒரு பங்கு – பாகம் 1

ஜூன் 18, 2009

“பத்தில் ஒரு பங்கு” குறித்த கருத்துக்கள் மீண்டும் மீண்டுமாக திருச்சபையில் வலியுறுத்தப்படுகின்றன. போதகர்களின் “பத்தில் ஒரு பங்கு” குறித்த செய்திகள் ஆழ்ந்த வேத அறிவு இல்லமையா அல்லது ஒருவித அசட்டு தைரியமா என என்னல் விளங்கிக் கொள்ள இயலவில்லை. வளையங்களை வெகு லாவகமாக தூக்கிபோட்டு விளையாடும் ஒரு தேர்ந்த சர்க்கஸ் கலைஞனைப் போன்று நமது இறைச் செய்தியாளர்கள் மாறிவிட்டனர்.

“ நீ தசமபாகம் கொடுத்தாயா?” என்பது இன்றைக்கு நடுத்தர வற்கத்து கிறிஸ்தவர்களிடையே பிரபலமான வார்த்தை. தாங்கள் இருக்கும் திருச்சபைகளுக்கும், தாங்கள் விரும்பும் நட்சத்திர அல்லது நடுத்தர ஊழியர்களுக்கும் “பத்தில் ஒரு பங்கை” அனுப்புவது இன்று ஒரு நாகரீக கலாச்சரமாகவே ஆகிவிட்டிருக்கிறது. இவ்வளவு தீவிரமாக “பத்தில் ஒரு பங்கு” விளம்பரப்படுத்தும் காரணம் என்ன? பலவிதங்களில் மக்கள் இதைப் புரிந்து கொண்டாலும், கீழ்வருவனவற்றையே பல நற்செய்தியளர்கள் அறிவுருத்துகின்றனர்……

1. விசுவாசிகளின் தந்தையாம் ஆபிரகாமை பின்பற்றுங்கள்: ஆபிரகாம் விசுவாசிகளின் தந்தை, அவர் செய்த இந்தக்காரியத்தை அவரின் பிள்ளைகளாகிய நாமும் செய்யவேண்டும். அவ்விதமாக நாம் செய்யும்போது அவர் ஆபிரகாமுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கட்டளையிட்டாரோ அவற்றையெல்லம் அவர்தம் பிள்ளைகளுக்கும் கொடுப்பார். வேறு என்ன, அன்றைய நாட்களில் ஆபிரகாமைப் போல ஒரு பெரும் செல்வந்தர் கிடையாது. “…..அப்பழுது ஆபிரகாம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு பத்திலொரு பங்கை கொடுத்தார்”(ஆதியாகமம் 14 : 20)

2. “பத்தில் ஒரு பங்கு” கொடுப்பது நமது கடமை:  திருச்சபைக்கு வருகிற அனைவரும் பவுல் அறிவுறுத்துவது போல காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டும். மேலும் கடவுள் நமக்கு கொடுத்திருப்பதிலிருந்து அவர் தனக்குரிய பங்கை மாத்திரமே விரும்புகிறார். “அதிகமில்லை ஜென்டில்மேன் பத்தில் ஒன்று மட்டுமே” ! “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 13 : 2)

3. பத்தில் ஒரு பங்கு கொடுப்பதனால் ஆசீர்வாதம் பெருகும்:  இன்றைய ஊழியர்களின் மிகப் பிரபலமான ஒரு டயலாக் இது தான்.. மல்கியா 3 : 10 ஐ குறிப்பிடத போதகர்களே இல்லை. “…. விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள்;” (மத்தேயு 6 : 20) “குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்” (2 கொரிந்தியர் 9 : 6)

 4. பத்தில் ஒரு பங்கு கொடுக்காவிட்டால் அது சாபம்: ஒருவகையில் கிறிஸ்தவ போதகர்கள் தாங்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பதற்கு, மிரட்டலையே கையில் எடுக்கின்றனர். சாபம் ஒரு எளிய தந்திரம்!“ மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.! எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்? என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்தில் ஒரு பங்கிலும் காணிக்கையிலும் தான் (மலாக்கி 3 : 8) “ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். ஓருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் ( கலாத்தியர் 6 : 7)

மேற் குறிப்பிட்ட வசனங்கள் யாவும் நானாக அந்தந்த இடங்களில் அமைத்தது இல்லை மாறாக “பத்தில் ஒரு பங்கு” முன்னிறுத்தும் ஒவ்வொருவரும் திருவிவிலியத்தினை வெறும் வர்த்தைகளின் கூவியலாகவே முன்னிறுத்துகின்றனர். அவற்றின் பின்னணியம் பேசப்படுவது அவர்களுக்கு உவப்பானதாய் தோன்றுவதில்லை. “மிகப்பெரிய் ஊழியர்கள்” என்று அவர்கள் கருதுபவர்கள் எல்லாம் இப்படித்தானே செய்கிறார்கள்? திருச்சபையில் அல்லது ஊழியத்திற்கான காணிக்கைகள் வேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியுமாக ஒரு பிரச்சரம் போலவெ பதிவு செய்கின்றனர். தங்களுக்கும் வருமானம் வந்துவிடாத எனும் எண்ணத்தால் ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் கருத்துக்களை “மேம்படுத்துகின்றனர்”. மந்தைகளுக்கு “அமர்ந்த தண்ணீரோ புல்லுள்ள மேய்ச்சலோ கிடைப்பதில்லை”!

 ஓரு கதையை “பத்தில் ஒரு பங்கை” முன்னிறுத்துவதற்காக இவர்கள் யாவரும் குறிப்பிடுவர்கள். ஓரு காலத்தில் வில்லியம் கோல்கேட் எனும் பதினாறு வயது சிறுவன் தன்னைக் காப்பற்றிக்கொள்ள ஒரு வேலைத்தேடி நியூ யார்க் பட்டணத்துக்கு புறப்பட்டான். அவ்விதமாக அவன் பட்டணத்தில் வந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வெலையைத்தேடிக்கொண்டபோது அவனது தயார் அவனுக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தான். “நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்திலும் பத்திலொன்றை கடவுளுக்கு கொடுக்கவேண்டும்”

நேர்மையாக அவன் சேர்த்த எளிய சேமிப்பிலிருந்து அவன் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்குக் கொடுத்தான். அவவிதமாக அவன் கொடுத்ததினால் அவன் வாழ்விலெ உயருவதற்கு கடவுள் அருள் புரிந்தார். வெகு சீக்கிரமாகவே அவன் தன் முதலாளியுடனே கூட்டு சேர்ந்து தொழிலை நடத்தினான். இன்னும் சிறிது காலத்தில் அவனது தொழில் கூட்டாளியான மாஜி முதலாளி மரிக்கவே, அவன் மொத்த கம்பெனிக்கும் முதலாளி ஆகிவிட்டான்.

பத்தில் ஒரு பங்கை கொடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுவன், இப்பொழுது ஒரு கனவானாக மாறிவிட்டார். எனினும் தன் வாழ்வில் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதிலிருந்து பின் வாங்கவில்லை. தனது வருமானம் பெருகப் பெருக அவர் தன் பத்தில் ஒரு பங்கின் விகிதாச்சாரத்தை உயர்த்தத்துவங்கினார். பத்தில் ஒரு பங்கு, பத்தில் ஐந்து பங்கு ஆனது. அதாவது தனது வருமானத்தில் பாதி.

கேட்கவே புல்லரிக்கும் இந்த கதை யாரைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டிருப்போம். ஆம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் கோல்கேட் பற்பசையின் முதலாளி தான் அவர். அவரா இப்படி? என பற்பசை வயோடே நாம் சிந்திக்கும் போது, நமது சிந்தனை எப்படி துலங்கும்?

இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்பதை நம்புவதற்கு ஏதுவாய் சமீபத்தில் நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். “உங்களது கோல்கேட் எப்பொழுதுமே ஹலால் செய்யப்பட்டது”. இது வெறும் விளம்பர தந்திரம் தான் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு “பத்தில் ஒரு பங்கும்” இசுலாமியர்களுக்கு “ஹலாலும்”.

ஒரு வேளை வில்லியம் கோல்கேட் உண்மையாகவே தனது வாழ்வில் கர்த்தருக்கென்று கொடுத்திருந்தாலும், அதை தொக்கிய கேள்விகள் எழுவதை நம்மால் தடுக்க இயலவில்லை. ஒன்றுமில்லாமல் வேலைக்கு சேர்ந்த நமக்கு, இறைபற்று இருப்பதற்காகவே நமது முதலாளி சாக வேண்டுமென்றால் எத்துணை தவறான காரியம் அது?  தனது உயிரக் கொடுத்து நம்மை வாழவைத்த இயேசுவைப் பின்பற்றுகிறோமா அல்லது பிறர் உயிர் போனாலும் பரவாயில்லை நான் சுபிட்சமாக இருக்கவேண்டும் எனும் “பத்திலொரு பங்கு” போதனையை முன்னிறுத்துகிறோமா?

வெள்ளை அங்கியைத் தரித்திருந்தாலும் , வெளிநாட்டு உடையணிந்திருந்தாலும் , காவி வஸ்திரத்தில் கிறிஸ்துவை காண்பிக்க வந்தாலும் , திருச்சபை மக்கள் எப்போது “பரவசமான” செய்திகளை கேட்க விழைகிறார்களோ அப்பொழுதே சாத்தான் அங்கே கிரியை செய்ய ஆரம்பித்துவிடுகிறான்.

பத்திலொரு பங்கை கடவுள் நியமிக்க காரணம் தான் என்ன? திரு விவிலியம் என்ன சொல்லுகிறது? இவ்வளவு நாள் காத்திருந்தோமல்லவா? இன்னும் சற்று நேரம் பொறுமை காக்க விரும்புகிறேன்.

தொடரும்…..

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone : 09870765181

மீண்டும் சந்திப்போம்!

ஜூன் 17, 2009

நானும் எனது மாமவின் பையன் ஜானியும் (வெகு சீக்கிரத்திலேயே திருமணமாக உள்ளது) நல்ல தோழர்கள். அப்படியே தற்பொழுது நியூசிலாந்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் (மணப்பெண்கள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்) எனது நண்பன் வின்ஸ்டனும் உயிருக்குயிரானவர்கள். எங்கள் மூவருக்கும் பொதுவான விருப்பம் பயணம் செல்வது (ஊர் சுற்றுவது).

எங்கள் பயணத்திற்கு இலக்கு கிடையாது.  நினைத்த மாத்திரத்தில் நாங்கள் மூவரும் கிளம்பிவிடுவோம். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. வின்ஸ்டனின் யமாஹா, ஜானி கொண்டு வரும் ஏதாவது டூவீலர். கடற்கரை சாலை மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருப்பதால் “பெயிண்டே இருப்பம்”.

குமரி மாவட்டம் மிக அழகிய மற்றும் விதம் விதமான கடற்கரைகளைக் கொண்டது. ஓரு இடத்தில் பாறைகள் அதிகம் இருக்கும் (அப்படிச்சொல்வதைவிட பாரதிரஜாவிற்குப் பிடித்த இடமாகிய) முட்டம்,  வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய குளச்சல் துறைமுகம், புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள சொத்தவிளை (பேருக்கேற்றபடி அதை இப்போது சொத்தையாக்கிவிட்டனர்) முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பொழிமுகம் கொண்ட பட்டணம் கால்வாய் மற்றும் மணக்குடி, தென்னந்தோப்புகள் நிரம்பிய  ஆலன்கோட்டை, பறவைகள் சரணாலயம் என நான் கருதும் ராஜாக்கமங்கலம், மணலைக் குவித்து தள்ளும் மணவாளக்குறிச்சி, படகுகள் குழுமியிருக்கும் சின்னமுட்டம், வெட்டுக்கல் கிடைக்கும் அகஸ்தீஸ்வரம், ஆழி சூழ்ந்து மீண்ட கோதேஸ்வரம், பனங்காடுகள் நிறைந்த  சங்குமுகம்…

சொல்லப் போனால் அனைத்து கடற்கரை ஊர்களின் பெயர்களையும் குறிப்பிடும் படியாய் விதம் விதமாக அவை அமைந்திருக்கின்றன. ஓவ்வொரு இடத்திலும்  நின்று அனுபவிக்க வாழ்வே போதாது எனும் அளவிற்கு.  ஓரு மாவட்டத்திற்குள்ளே இவ்வளவு வித்தியாசமான கடற்கரைகளை வேறு எங்கும் நாம் எளிதில் கண்டுகொள்ள முடியாது என்பதே என் எண்ணம்.

எங்கள் பயணம் எந்த இடத்தில் நிற்கும் என்பது எங்களுக்கே தெரியாது. பல நேரங்களில் பெட்ரொலும், ஓருசில நேரங்களில் எங்கள் வாகனமும் எங்கள் பயணத்தை தீர்மானிக்கும். வின்ஸ்டனின் புராதன யமாஹா தனது ஒளி கொடுக்கும் தன்மையை இழந்து விட்டிருந்ததால், எங்கள் பொருளாதாரம் கருதி நாங்கள் இரவிற்கு முன்பதாகவே வீடு திரும்பிவிடுவது உண்டு. “பின்ன? மாமூல் உருவ விடுவோமாக்கும்?”

லைசன்ஸ், ஆர் சி புக், இன்சூரன்ஸ் பொன்ற தேவையற்ற சுமைகளை நாங்கள் எடுத்துச்செல்லுவதில்லை ஏனென்றால் அவைகள் எங்களிடத்தில் கிடையது.  கழன்றுபோன நம்பர் பிளேட்டை பத்திரமாகவே வீட்டில் வைத்திருந்தோம். சில நேரங்களில் அறுந்து போன பிரேக் ஒயரோடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்கிறோம். “அவன் பெரிய டிஸ்ப்லிக்ஸ்பிஸ்ஸாக்கும்” (இது எங்களுக்கு மட்டுமே உரிய பாஷை)

வின்ஸ்டனுடைய கண்களைப் பார்த்து அவனுக்கு “கிங் கோப்ரா” என அவன் படித்தக் கல்லூரியில் பெயர் வைத்திருந்தனர். இருட்டிலும் மிக அருமையாக ஹட் லைட் இல்லாமல் ஓட்டுவான், என்ன ஆங்காங்கே நிற்கும் போலீஸ் வாகனங்கள் தான் எங்களுக்கு ஒரு சின்ன உதறல். ஓரு வழியாக போலீஸ் இல்லாத சந்துகள், ஊர்கள் வழியாக செல்லுவது எப்படி என்ற ஒரு மகத்தான “என்சைக்ளோபீடியாவை” நாங்கள் எங்கள் இருவர் மனதிலும் உருவாக்கி விட்டிருந்தோம்.

ஜானியைப் பொருத்தவரையில் பரவாயில்லை, அரசு ஊழியன். கொஞ்சம் பிரச்சனை என்பது தெரிந்து விட்டால், தனது கார்டை எடுத்துவிடுவான், “சார் போயிட்டு வாங்க” என மரியாதையாக அனுப்பிவிடுவார்கள். ஜானியின் வேகம் சும்மா  கண்ணைக் கட்டிக்கொள்வது போல இருக்கும். பயமே கிடையாதா என்று தோன்றும்படியாக வளைவில் வண்டியை சாய்த்து திருப்புபவன். இன்றுவரை வீழ்ச்சியை அறியாதவன் (“வாயத் தெறந்திட்டியா? சரியாப்போச்சு!” எனக் கூறப்போகிறான்)

எங்களது பயணம் அர்த்தமற்றதாயும் இலக்குகளாற்றதாயும் இருந்திருந்தாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் மிகவும் அர்த்தம் பொதிந்தவைகளாக காணப்படுகின்றன. கடற்கரையில் நாங்கள்  செல்லும்போதெல்லாம் நாங்கள் கல்களை நனைக்க முற்பட்டது இல்லை. ஆனால் கண்டிப்பாக மணலில் அமர்ந்துவிடுவோம். நீண்ட நேரம்  எங்களுக்கான கதைகளை பெசிக்கொள்ளுவோம், ஓடுவோம், அமைதியாக இருப்போம். மொத்தத்தில் ஒன்றாக இருப்போம்.

கடற்கரையில் உள்ள காற்று தான் எங்களது சுவாசம். அதை அனுபவிக்க வந்தவர்களாகவே காற்றைக் குடித்துக்கோண்டே இருப்போம். காற்று கடல் அலையை, கேசத்தைப் போல் சுருட்டிவிட்டபடி  இருக்கும். காற்றும் அலையும் காதல் கொண்ட நாய்களைப் போல் குதித்தும் விலகியும் குலாவிக் கோண்டிருக்கும். சூரியனை காற்று ஊதித் தள்ளி  தூரத்தில் நிறுத்தியிருக்கும் அல்லது கீழ விழப்பண்ணியிருக்கும். காற்றும்  அலைகடலும் தூதுவிட்டு எங்களை தன்பக்கமாக வர அழைக்கும். காற்று எங்களைத் தூக்கிக் கோண்டு போக பிரயத்தனப்படும். கடலோ தன் மென்மையான அலைநுரைக் கைகளால் கம்பளம் விரித்து வரவேற்கும்.

சில நேரங்களில் போர்முழக்கத்தைப் போன்று எழும் சத்தம், காற்று கடலைப் புரட்டிப் போடும்போது எழுவது உண்டு. பொட்டித் தெரிக்கும் நீர்க் குமிழிகள் பலமிழந்து காற்றோடு கைதியாக கரைக்கு வந்துவிடுவதுமுண்டு. காற்றை நீர் குமிழ்களால் சிறைபிடிக்க முடியுமா என்ன?

கரையைச் சார்ந்தவர்கள் என்பதால்தானோ என்னவோ கடலை விட கடற்கரை மணல் தான் எங்களுக்குப் பிடித்தமான இடம். கால் புதைய நடப்பது, மணல் ஒட்டிக்கொள்ளும்படி இருப்பது, அப்படியே படுத்துக்கொள்ள என்று எங்களுக்கு மட்டுமான பிரேதசமாகவே கடற்கரை காணப்பட்டது. ஆளரவமற்ற கடற்கரைகளை அல்லது சந்தடியற்ற இடங்களையே நங்கள் பெரும்பாலும் தேர்வு செய்தோம்.

நாங்கள் தொட்ட மணல் துகள்கள் எல்லம் தலைமுறை கடந்து வந்த பூமியின் சாட்சிகளாய் குவிந்திருந்தன. காலக் கடிகாரத்தில் பயணித்து களைத்து இளைத்து இத்துப்போயிருந்தன அவை. கரங்களில் அள்ளி எடுத்தால் நைசாக நழுவிவிடுவதிலே குறியாக இருந்திருக்கின்றன. மீதியானவை உண்மை நண்பர்களைப்போல் ஒட்டிக்கொண்டன. உதறிவிட மனமற்று கைகளைப் பார்த்தால் ரேகைகள் அவைகளின் நடுவே சாலைகளாக புகுந்து பிரிந்து விட்டிருந்தன.

மணல் எங்களொடு ஒட்டிக் கொள்ளுவதை மிகவும் விரும்பினோம். வீடு வரும்போது அதுவும் ஒரு நண்பனைப்போல் எங்களுடனே வந்தது. சட்டை மற்றும் பாண்ட் பாக்கெட்டில் உரிமையுடன் அவை நுழைந்திருந்தன. அந்தரங்கத்துடன் உறவாடும் ஒரு நண்பனைப்போல் அவை மாறிவிட்டிருந்தன. பிரிவு எப்போது ஏற்படுகிறது என்பதே தெரியாத அளவிற்கு அவை எங்களின் அன்றாட அலுவல்களில் காணாமல் சிதறிப்போயின.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

அத்திமரத்தை சபித்தல் – ஒரு விவசாயியின் பார்வை

ஜூன் 16, 2009

மரங்கள் வெட்டப்படுவது ஒரு மிகப்பெரிய இயற்கை சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்ததை அறிந்து, இருபதாம் நூற்றண்டின் இறுதியில் தொண்டு நிறுவனங்களும் பல மக்கள் அமைப்புகளுமாக இணந்து நின்று பலவித முயற்சிகளைக் கையாண்டு மரங்களைப் பாதுகாத்தனர். “சிப்கோ(கட்டிபுடி) அந்தோலன்” எனும் ஒரு இயக்கம் எழுபதுகளில் தங்களை மரத்திற்கும் கோடாலிக்கும் நடுவே நிறுத்தி மரங்களை காப்பற்றிய பெண்களால் இந்தப் பெயரைப் பெற்றது.

மரரங்களை பாதுகாக்க வேண்டும் என அனைவரும் அறிந்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில் இயேசு அத்திமரத்தை சபித்தார் என்பது சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிறிஸ்தவ பின்னணியத்தில் நாம் மாற்கு 11: 12 – 14 வரை வாசிக்கும் போது, நமது எண்ணமெல்லம் “ஏன் அவர் ஒரு எளிய அத்திமரத்தை சபித்துவிட்டார்? என்பதே. நமக்குத் தெரியும், “ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல” என்பதால் எந்த ஒரு மரமும் தன் கனியைத் தர இயலாது.

சூழலியலாளர்களைப் பொறுத்தவரை, பழங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல, மரம் இருப்பதே முக்கியம். ஓரு மரம் தன்னை ஒரு சூழலோடு பிணைத்துள்ளது, அதைப் பிரிப்பது அந்த சூழலில் அதைச் சார்ந்து வாழுகின்றவற்றிற்கு இழைக்கும் தீங்காகும். இவ்விதமாக நாம் காணும் போது இயேசு இருபத்தியோராம் நூற்றாண்டிலே “விசாரணைக் கைதியாக” நிற்கிறார்.

மாற்கு நற்செய்தி நூல் இந்த நிகழ்வை குருத்தோலை ஞயிறுக்கு முன்பதாகவும் மத்தேயு அதன் பின்பதாகவும் குறிப்பிட்டிருப்பது பதிவின் முரண்பாட்டுத் தோற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருத்தியலை இன்றய அவசர பிரச்சனையோடு நேரடியாக தொடர்பு படுத்துவது நமக்குத் தெளிவைத் தராது.

தனது கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக கொடுத்த அன்பின் ஆண்டவர் எப்படி ஒருவேளை உணவுக்காக ஒரு மரத்தை சபித்திருப்பார்?அனேகரர், நூற்றாண்டுகளாக இந்த வேதபகுதியுடன் முட்டி மோதி விளங்கிக்கொள்ள பிரயத்தனப் பட்டது உண்டு. பலவித வியாக்கியானங்கள் வந்தபடியே உள்ளன. மேலும் வந்து கோண்டிருக்கும். இக்கட்டுரை ஒரூ விவசாயியின் பார்வையில் இந்த பகுதி எதை விளக்க முற்படுகிறது என்பதே!

இயேசு ஒரு விவசாயி

 இயேசுவுக்கு தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்தவைகளைப் பற்றிய அவதானிப்பும் கூர்ந்த பார்வையும் நாம் உணர்ந்துகொள்ளாதது. தனது தந்தையின் தச்சுப் பட்டரையில் மட்டுமல்லாது அவரது விரிந்த பார்வை விவசாயம், மீன்பிடித்தல் போன்றவற்றில் கூட இருந்திருப்பதை நாம் திருவிவிலியத்தில் காண முடிகிறது. தனது உவமைகளில் அவர் விவசாயம் சம்பத்தமான உவமைகளைக் குறிப்பிடுவது அவரை ஒரு முழு விவசாயியாகவே நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஓரு சிறந்த விவசாயிக்கு தனது தோட்டத்திலுள்ள மரம் செடி கொடி என்ன “பேசுகின்றன” என்பது புரியாதா என்ன?

மரம் செடி கொடிகளாலே “கேட்க” முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணமிருக்கின்றன. எங்களுரைப் பொறுத்தவரை “ ரோட்டு சைடுல முருங்கைய வெச்சா ஆளரவெம் கேட்டு நல்லா காய்க்கும்” என்று சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன் கண்டுமிருக்கிறேன். ஓரு விவசாயியாக இயேசு அத்திமரத்தை பார்வையிட்ட போது, அது இனி அதிக காலம் நீடிக்காது என அறிந்து அது பயன் தரும் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை உறுதி செய்தபின் “இனி உன் கனியை யாரும் உண்ணவேக் கூடாது” என்றர்.

எனது பசி அல்ல

இயேசுவின் திருப்பணிகளை முழுவதுமாக புரிந்து கொள்ளத்தவறினோமானால் நாம் இந்த வேத பகுதியின் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ள இயலாது. தான் பசியோடிருக்கும்போதே அவர் தனது பசியை இரண்டாம் பட்சமாக்கி கடவுளின் திருப்பணி செய்வதே எனது ஆகாரம் எனக் கூறி மகிழ்ந்தவர். ஏனெனில் அவருக்கு “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார்” என்பது தெரிந்திருந்தது.

 பல்லயிரக்கணக்கானவர்களின் பசியைப் போக்கியிருந்தாலும், தான் பசியினைக் கடந்து வந்தாலும், அவர் தனது பசியினை முன்னிறுத்தி எதையும் செய்ததில்லை என்பது கண்கூடு. ஒருமுறை அவர் சமாரியப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கென்று உணவு வாங்கச்சென்ற சீடர்கள் உணவோடு வருகின்றனர், எனினும் தான் உண்டு திருப்தியடைந்தத்தாகக் கூறி அவர் அதை மறுத்துவிடுவதைக் காண்கிறோம். உணவுக்கு அவ்ர் தனது ஊழியத்தில் முக்கியத்துவம் கொடுக்காததை வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதி ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது?

அழிப்பதற்கு அல்ல

இயேசு இந்த உலகத்திர்கு உயிரளிப்பவராக வந்தார். வாழ்வா சாவா எனும் கேள்வி எழும்போது நம்மால் பதில் கூற முடியாதவர்களாகிவிடுகிறோம். இயேசு இரண்டு விதமான கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று விதையானது நிலத்தில் விழுந்து மரிக்கவேண்டும். இங்கே மரணம் என்பது பெரு வாழ்வாக மாறுகிறது. இரண்டாவதாக ஒரு மரம் கனிகள் தருவதற்காக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அது தன் கடமையிலிருந்து தவறினால் அந்த மரம் பலரது வாழ்வையே கெள்விக்குள்ளாக்கிவிடுகிறது. ஆதாவது ஒன்றின் வாழ்வு பலதின் வாழ்வை நாசம் செய்கின்றது.

“நானே திராட்சை செடி; நீங்கள் அதன் கொடிகள். ஓருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” எனும் கூற்று நாம் அவரில் நிலைகொண்டாலே கனி தர இயலுமென்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. நாம் அவைகளை மீறும் போது அந்தக் கொடிகளை நெருப்பிலே சுட்டெரிக்கும் நிலை வரும். அது தண்டனையாக அல்ல மாறாக தேவை நிறைந்த கொடிகள் பற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் பொருட்டே.

மேலும் இந்தப் பகுதியை நாம் புரிந்து கொள்ள இரண்டு முக்கிய காரணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

1. இந்தப் பகுதி அத்தி மர உவமையின் ஒரு கலவை

2. இந்தப் பகுதி கனி தரா வழ்வையுடைய மறை நூல் அறிஞர்களைச் சுட்டுவது

மேற்கூறிய இரண்டு காரணிகளை வைத்துப் பார்க்கும் போது இயேசு ஒரு ஏழை விவசாயியாக தனது நியாயத்தை வெளிப்படுத்தியிருப்பதைக் காண இயலும்.

 மக்களின் மனங்களை உழுதும், நற்குல பயிர்களை இட்டும், உரமிட்டு வெலியடைத்து காவல் காத்தும் பயனேதும் இல்லை என்றால் ஏழை விவசாயி உடனடியாக சுதாரித்துக் கொள்ளவேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டுகின்றார். ஓரு ஏழை விவசாயியைப் பொறுத்தவரை இன்னுமொரு சாகுபடி என்பது அவனது வாழ்வா சாவா போராட்டமே. 

விவசாயிகளின் தற்கொலையின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்தப் பகுதியை சுழலியலாளர்களோடு ஒப்பிடாமல் ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டிய கட்டயம் உண்டு.  இன்று இயேசு நம் மத்தியில் வந்து நமது விவசாய சகோதர சகோதரிகளின் மரணத்தைக் கண்டிருப்பாரேயாகில், அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சபித்திருப்பர்.

பட்டுப்போன அத்திமரம் தரும் பாடமாக இயேசு குறிப்பிடுவது ஒப்புறவாதலே

“நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்பொழுது உங்கள் விண்ணகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்”

தன் இருப்பை அகம்பாவத்துடன் பிணைத்து, முற்சந்தியில் பகட்டுடன் நின்ற மறை நூல் அறிஞர்களையும் தலைமை குருக்களையும் இயேசு வேரோடு சாய்ப்பது, அவர்களின் பின்னால் செல்பவர்களுக்கு வேண்டுமானால் தவறாகத் தென்படலாம். அன்றன்றுள்ள அப்பத்தை பிட்கும் எளியவர்களுக்கு அது ஒரு மாபெரும் விடுதலையே!

மும்பையிலுள்ள  Church Auxilary for Social Action எனும் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களது வாராந்திர கூடுகையில் நான் கொடுத்த ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone 09870765181

கைம்பெண்ணின் காணிக்கை

ஜூன் 12, 2009

திருச்சபை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தும் ஒரு காரியம் “காணிக்கை”. காணிக்கையை கொண்டு கோயில் கட்டுவதும், பல நற்காரியங்களில் ஈடுபடுவதும் நெடுங்காலமாகவே நடைபெற்றுவரும் மரபு. திருவிவிலிய ஆதாரங்களை எல்லாம் கூட்டி கழித்து எப்படியெல்லம் கணிக்கை சேகரிக்கலாம் என திட்டமிடுவது இன்றைய சந்தை பொருளாதாரத்தின் விளைவாகவே என எண்ணத் தோன்றுகின்றது.

நான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள எனது தலைமுறைக் கோயிலில் 13 வகையான காணிக்கை கவர்கள் ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படும். பலவிதமான காணிக்கை உபதேசங்கள் வழங்கப்படும். காணிக்கை கொடுக்காதவர்களுக்கு ஐயோ! என “திருவிவிலிய ஆதாரங்களும்” முன்வைக்கப்படும்.

காணிக்கைகளை சேர்த்து சேர்த்து அதைக் கொண்டு என்ன செய்யவேண்டும் எனத்தெரியாமல், பழைய கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி விடுகிறார்கள். புதிய கோயில்களை கட்டிஎழுப்புவதிலேயே போதகர்களின் “திறமையும்” செயற்குழு அங்கத்தினர்களின் “வீரியமும்” வெளிப்படுத்தப்படுகின்றன.

போதகர்கள் காணிக்கைகளை சேகரிப்பதிலே மிகவும் திறமையானவர்கள். அரிசிக் காணிக்கை, பை காணிக்கை, நெல் காணிக்கை, முதற் பலன், கவர் காணிக்கை, பொன் காணிக்கை, ஸ்தொத்திர காணிக்கை, சங்க காணிக்கை, உண்டியல் காணிக்கை, சுய வெறுப்புக் காணிக்கை, பொருத்தனை காணிக்கை, போன்றவைகளுடன் விசேஷித்தக் காரியங்களுக்காக பிரிவும், வரியும் இட்டு திருச்சபையை “வளர்க்கின்றனர்”. மனோகரச் சந்தை, ஆசீர்வாதத் தட்டு, ஏலம், பாட்டம், விற்பனை நாள், அறுப்பின் பண்டிகை, பஜனை என வருமானம் பெருகிக்கொண்டே போகிறது.

கோவில் விரிவாக்கத்தைப் போலவே முக்கியமானது கொவில் “கோபுரமாக்கல்”. விரிவாக்கத்தின் பணியின் மூன்றில் ஒரு பங்கு பணம் கோபுரத்தை உயர்த்துவதிலேயே செலவழிக்கப்படுகின்றது. குடிசையில் வாழும் மக்கள் இன்னமும் வந்துபோய்க்கொண்டிருக்கும் கோவிலில், கோபுரத்தை உயர்திக் கட்டுவதனால் நாம் பகிர்ந்து கொள்ளும் இறைச் செய்தி என்ன?

சுமார் 20  முப்பது வருடங்களுக்கு முன்பு “கருப்பட்டி காணிக்கை” குமரி மாவட்டத்திலே மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. ஒருவேளை திருநெல்வேலியிலும் அவ்விதமாக இருந்திருக்கலாம்,  ஆனால் தற்போது அந்த காணிக்கை திருச்சபைக்கு  வராததைக் குறித்த கவலை திருச்சபைக்கு சற்றேனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் மாற்று வழிகளில் காணிக்கையின் வரவை உறுதிசெய்துவிட்டனர். மேலும், திருச்சபைக்கு சமூகத்தின் மேலுள்ள அக்கரை அப்படி. ஓரு சமூகம் தனது  தொழிலை இழந்து அடையாளம் மறைந்து போவதைக்குறித்த எந்த பிரக்ஞயும், அக்கறையும் அதற்கு கிடையது. பணம் வந்தால் போதும்.

திருச்சபையைத் தாண்டி நாம் நட்சத்திர ஊழியக்காரர்களைப் பார்த்தோமானால், அவர்களும், காசு மேல காசு வந்து கொட்டுவதற்கான ஜெபங்களையே ஏறெடுக்கின்றனர். பலவிதமான பிரார்த்தனை திட்டங்களை வகுத்து மக்களுக்கு சாத்தனிடமிருந்து வரும் தீமைகளுக்கு விலக்கிக் காக்கின்றனர். மக்கள் சுபிட்சமாக இருப்பதைக் காண மிகவும் திருப்தியாக உள்ளது! மாதம் மும்மாரி  அருள்மாரி பொழிகிறது! நோய் பிணி கவலையற்ற ஒரு உன்னதமான இடத்திற்கு இந்த உலகத்தையே அழைத்துச்சென்று விட்டவர்களுக்கு நாம் இன்னமும் நேபலுக்காக பரிந்துரைக்காதது தவறில்லையா?. கஷ்டப்படுகிறவர்கள் அனைவருமே பாவிகள், விசுவாசத்தில் குன்றிப்போனவர்கள். அவர்களைக்குறித்து கவலைப்படுவது நமக்கான காரியம் அல்ல.

இப்படித்தான் ஒரு ஏழை கைம்பெண், கோவிலிலில்  மீண்டும் மீண்டுமாக சொல்லப்பட்ட காணிக்கையின் மகத்துவத்தை எண்ணி, தனது கரத்திலிருந்த  இரண்டு காசுகளைப் போட்டள். இயேசு இவளைப் பார்க்காது இருந்திருந்தால், திருச்சபை இறுதி வரை செல்வந்தர்களிடமே யாசகம் பெற்றுக்கொண்டிருக்கும். ஏசு இவளைப் பர்த்ததினால் திருச்சபை அதையும் ஒரு மூலதனமாக கருதி, ஏழைகளும் அதிகமாகக் கொடுக்கலாம், நீங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டல் “இழப்பதற்கு ஏதுமில்லை” என உணார்ச்சிகளைத் தூண்டி விட்டது.

திருவிவிலியத்திலிருந்து மறுபடியுமாக நாம் இப்பகுதியை வாசித்தால் என்ன?

லூக்க 21: 1 – 4
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். 2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.  3 அவர், இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். 4 ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

இயேசு குனிந்திருந்தது ஒரு முக்கியமான குறியீடு. அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்திருக்க வேண்டும் அல்லது மிகவும் கவலையில் மூழ்கியிருக்கவேண்டும். என்னக் கவலை? என்ன ஆழ்ந்த யோசனை? ஆலயத்திற்குள்ளாக தவறுதலாக ஏதும் நடை பெறுகிறதா? அப்படியென்றால் சவுக்கை உண்டு பண்ணி அடிக்கலாமே? இந்தப்பகுதியில் அவர்  அவ்வாறு ஏதும் செய்யவில்லையே? என்ன நடக்கிறது?

லூக்கா 20: 45 – 47 வசனங்களில், “மறை நூல் அறிஞர்களுக்கு” அவர் எச்சரிக்கை விடுக்கிறார். அதைத் தொடர்ந்த பெருமூச்சின், வேதனையின், கசப்பின் விளைவாகவே அவர் தனது தலையைக் குனித்திருக்கவேண்டும். தனது பிதாவின் பெயரைச் சொல்லி கபட நாடகம் ஆடும் வேடதாரிகளை அவர் தோலுரிக்கும் சம்பவத்திற்கான நேரம் வந்தபோது இயேசு நிமிர்ந்து பார்க்கிறார்.

இயேசுவின் பேச்சை அவரது சீடர்கள் அனேகந்தரம் புரிந்து கொண்டது இல்லை. அப்படியே நமது போதகர்களும். அவர் தன்னைச் சுற்றி அடர்ந்திருக்கும்  சூழ்நிலையை மையப்படுத்தியே பேசியிருக்கிறார். இப்போதும் அவர் இந்தக் கைம்பெண்ணை முன்னிறுத்துவதற்கான காரணம், 47ம் வசனத்தில் அவர் மறை நூல் அறிஞர்களைச் சாடுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

“கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள், நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” என்றார் என்பதாகக் காண்கிறோம்.

இயேசுவின் ஒப்பீடு அவளை பாராடுவதற்காக சொல்லப்பட்டது அல்ல, மாறாக ஏழை கைம்பெண்களை  ஆலயத்திற்கு காணிக்கை கொடுக்கச்சொல்லி நிர்பந்தித்து அவர்கள் வாழ்வையே நாசம் செய்யும் காட்சியினை உருவகித்துப் புலம்பின பகுதியாக காணப்படுகிறது.  அவர் ஆவியிலே கலங்கி சொன்ன “இரத்தத் துளிகள்” இவை.

மேற்கொண்டு நாம் 21ம் அதிகாரம் 5ம் வசனத்திலிருந்து வாசித்தோமானால்
“கோவிலைப்பற்றி சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 6 இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லம் இடிக்கப்படும்” என்றார்.

திருச்சபை செய்யும் தவறுகளுக்கு அது கொடுக்கவேண்டிய விலை அதிகம். அறிந்து தவறு செய்வோர் அதிக ஆக்கினைக்கு ஆளாவர் அல்லவா? நமக்கு “நற்செய்தியை” கொண்டுவந்த மேற்கில் இன்று கோவில்களுக்கு ஏற்பட்ட நிலைகளைக் கண்டுமா நாம் இன்னும் மனம் வருந்தாமல் இருக்கிறோம்? கோவிலின் உயரம், அகலம், கவின் மிகு தோற்றம் எல்லாவற்றையும் விட “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா” (1 கொரிந்தியர் 3: 16) என்பது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை?

கைம்பெண்ணின் வாழ்வைப்பற்றி சிந்திக்காத திருச்சபை மிகப்பெரிய வரலாற்றுத் தவறை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இயேசு தனது சாட்டையை சுழற்றுமுன்பதாக நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
(இக்கட்டுரை அட்டிசன் ஜி ரைட் அவர்கள் 1982ல் வெளியிட்ட “கைம்பெண்ணின் காணிக்கை – புகழ்ச்சியா புலம்பலா?” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel.wordpress.com

phone 09870765181

முதல் திருமண நாள்

ஜூன் 11, 2009

இனிமையான ஒரு வருடம் எப்படி கடந்தது என்று தெரியவில்லை. நாட்கள் இனிதாய் இருக்கும்போது நேரம் கடந்து செல்வது தெரியாதுதான் போலும். இந்த நாளின் முக்கிய நாயகி என்னோடு மும்பையில் இல்லாத காரணத்தால் என் இனிய வாசகர்களோடு எங்கள் வாழ்வின் சுவையை பாகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குடும்பத்தினருடன் தேவிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு

என்னுடைய வாழ்வில் 4 முறை திருமணத்தின் அருகில் சென்று மறுபடியுமாக பேச்சிலராகவே இருந்துவிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், திருமணம் எனக்கு புரியாத உலகமாகிவிட்டது. இப்படியே இருந்துவிடுவோம் என்னும் அளவிற்கு நான் என்னை தயார் செய்துகொண்ட நேரம். கடைசியாக ஒருமுறை இந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்றார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சம்மதித்தேன்.எந்த நம்பிக்கையும் அற்று, வீட்டிலே நான் போட்டுக்கொண்டிருந்த டி ஷர்ட்டுடன் கிளம்பினேன். என்னை துணிமாற்றச் சொல்லி வற்புறுத்தினால் நான் மொத்த நிகழ்வையும் ரத்து செய்துவிடுவேனோ என்று எண்ணி மின்னல் போல் எல்லரும் கிளம்பிவிட்டர்கள்.

ஜாஸ்மின், எங்களுக்கு தேனீர் கொடுத்தள். மெலிதாக உயரமாக இருந்தாள். என்னைப்போலவே சற்று கரிய நிறம். ஜெயமோகனின் காடு நாவல் வாசித்துக்கொண்டிருந்ததனால் கருப்பின் மீது அப்படி ஒரு கள்வெறிக்காதல் கொண்ட சமயமது. இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு பிஷப் சாமுவேல் அமிர்தம் என்னிடம் உனக்கு என்ன மாதிரி பெண் வேண்டும் என என்னிடம் கேட்ட போது, “அங்கிள், உங்க காண்டாக்ட யூஸ் பண்ணி ஒரு ஆப்ரிக்கன் கெர்லை பார்த்துத் தாங்க” என்று கேட்டேன். சிரித்துவிட்டார்.

ஜாஸ்மினுக்கு என்னை பிடித்திருந்தது. ஒரு போதகரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது அவளது உறுதிப்பாடு. என்னைப்போல் அல்லமல் அவளைப் பார்க்கச்சென்ற முதல் மாப்பிள்ளை வீட்டர் நாங்கள் தான். நான் சற்று நேரம் எடுத்தேன் பதில் சொல்வதற்கு. பதில் சொல்லி 20 நாட்களுக்குள்ளாக திருமணம் ஒழுங்கானது.

பல பயத்தில் மிக முக்கியமானது “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தான்”. எல்லமே மாயை தானா?. அன்பு அதிக காலம் நீடிக்காதா? என்கிற பயமே முதன்மையாக இருந்தது. கடவுளின் வாழ்த்துதலால் இன்று வரை ஒருவருக்கொருவர் மிக்க அன்புடனே இருக்கிறோம். பழமொழிகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டமிது.

இதுவரை நான் அவளுக்கு விசேஷமாக எதையும் வாங்கிக்கொடுத்ததில்லை, ஆனால் அவளுக்கு தேவையான பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவளுக்கு நான் பூ வாங்கிய நாட்கள் மொத்தம் 10ற்கு உள்ளாகவே இருக்கும். ஆனால் ஒரு நாளும் எங்கள் குடும்ப்பத்தில் புன்னகைக்கோ, சிரிப்பிற்கோ, பூரிப்பிற்கோ பங்கம் வந்தது கிடையாது.

அவளது பேச்சு அவள் நிறத்தைப்போன்றே மிக்க அழகுடையது. குயில் நாணும் குரல்வளமுடையவள். சிறந்த பாடகி. திருச்சபையில் எங்கள் டுயட் எல்லா விசேஷித்த நாட்களிலும் உண்டு. அவளது வாயால் கதைகேட்பது எனக்கு மிகவும் பிரியமான பொழுது போக்கு. எதையவது சொல்லி அவள் வாயை கிளரி விடுவேன். தெவிகோடு டயலெக்ட்டில் அவள் பேசுவது கேட்ட்க நான் எதையும் தியாகம் செய்வேன். “ஒவா… பின்னல்லாதெ!” (“அது அன்றி வேறென்ன” என்பதை அவள் சொல்லும் பாங்கு)

கோபமே படவேண்டாம், பார்த்தால் போதும் அவள் கண்கள் கலங்கிவிடும். பொதுவாக எனது “எடக்குமடக்கான” பேச்சுதான் அவளை காயப்படுத்தும். சமாதானம் கூறிவிட்டுதான் மறுவேலை செய்வேன்.

ஜாஸ்மினின் பெற்றோருக்கு என் மேல் அளவு கடந்த பாசம் உண்டு. எனது  திருமணத்தை நடத்தி வைத்தவர் எனது அன்பு நண்பர் அருட் திரு பெனோ ஈனோஸ். திருமண ஆராதனையில் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டர். ” ஜாஸ்மின், காட்சனை நீ கைக்குள்ளாக போடவேண்டுமென்றால் அவனுக்கு மீன் வாங்கிக்குடுக்கத் தவறாதே”. இன்றும் அவர்கள் வீட்டிற்குப் போனால் மீன் விதம் விதமாக இருக்கும். கருங்கல் சந்தையை விலைபேசி முடித்துவிட்டு வந்ததுபோல் ஒரு பிரமிப்பு தோன்றும்.

ஜாஸ்மின் கருவுற்றபோது பயம் ஏற்பட்டது. நான் எப்படி தனியாக அவளை கவனித்துக்கோள்ளுவேன் என்று.  திருச்சபை மக்களின் உதவி எங்களுக்கு அதிகமாக இருந்தது, கர்த்தருடைய பெரிதான கிருபை. அவ்விதமாகவே டாக்டர் அம்ருதா அவர்களும் அவ்ளை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஆறாம் மாதமே நான் அவளை எங்கள் வீட்டிற்கு அனுப்பினேன். கிறிஸ்மஸ் எனக்கு மிக முக்கிய சீசன் ஆனதால், தலை கிறிஸ்மசை ஜனவரியில் கொண்டாட சேர்ந்து வந்தோம். வரும் வழியில் மூணாருக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினோம். ராஜமலைக்கு சென்றபோது நான் என் மகனிடம், “மகன்! அப்பா இப்படி உன்னை கஷ்டப்படுத்திறேன் என நினைக்காதே, நீ வந்திருப்பது ஒரு முக்கியமான இடம்! நன்றாக அனுபவித்துக்கொள்” என்று கூறினேன். எந்த கடின  பயணத்தையும் அவன் தாங்க வேண்டுமல்லவா?

குழந்தை பிறப்பதற்கு ஒரிரு மாதங்கள் இருக்கும்போது ஜாஸ்மின் என்னிடம் நமக்கு ஆண் குழந்தை தான் என்று கூறிவிட்டாள். நான் எப்படி சொல்லுகிறாய் என்று கேட்டேன். “அது எங்க வீட்டுகிட்டெண்டு என்ன பாக்க வந்த கெளவிய் செல்லிச்சினும்”. எப்படி? “ஒவா… வயறு சாடி கிடக்கியதப்பாத்தா எங்களுக்கு அறியிலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டு குழந்தைகள் எல்லாமே குளச்சல் ஜேம்ஸ் மருத்துவமனையில் தான் பிறந்துள்ளன. ஏனென்றால் டாக்டர் செனிகா பிரேம்குமார் எனது பெரியம்மவின் மகள். கடைசி ஒரு மாதம் அவளை தன் மருத்துவமனையில் வைத்து நனறாக கவனித்துக் கொண்டார்கள். அவளுக்கு ஷுகர் அளவு கூடியிருந்ததினால் கூடுதல் கவனம் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் நாள் கர்த்தர் எனக்கும் ஜாஸ்மினுக்கும் ஒரு ஆண் மகனைத் தந்தார். ஆரன் (ஆரோன் என்பதன் ஆங்கில வடிவம்) என்று நான் தேர்ந்தெடுத்த பெயரை, பாட்டி தாத்தா முதல் குட்டி மருமக்கள் வரை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டனர். ஆரன் என்பதற்கு “விரும்பத்தக்க குணாதிசயமுடையவன்” என்று பொருள்.

ஜாஸ்மின் ஸ்வீட் பால் சேர்த்துக்கொள்ளுவதில்லை. நானும் அப்படியே பழகிவிட்டேன். பல காரியங்களில் என்னைவிட அவள் சிறந்தவள். என்னை விட படித்தவள், அறிவாளி, வேத அறிவில் நானே சற்று ஒதுங்கி தான் நிற்க வேண்டும். எனினும் நாங்கள் ஒரு சிறந்த ஜோடி தான்.

 “மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்!”

 ஏனென்றால்

“இந்த காரியம் கர்த்தரால் வந்தது!”
அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone:  09870765181

இரு பயணிகள்

ஜூன் 10, 2009

ஆண்டித்தோப்பு சி எஸ் ஐ திருச்சபையின் விடுமுறை வேதாகமப் பள்ளி சோதனை நாளுக்காக எனது அம்மவை அழைத்திருந்தார்கள். எனது அம்மவும் என்னை அழைத்து நாளை நாம் இந்த காரியத்திற்காக செல்லுகிறோம், வேறு நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதே என்று கூறினார்கள். காலை 8 மணிக்கு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டோம்.எனது அம்மாவுடைய செல்போனை நான் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன்.
அப்போது மிகவும் பவ்வியமான குரலில் பின்னலிருந்து ஒருவர் என்னிடம்

பிரதர்! இந்த நம்பரை கொஞ்சம் அடித்துத்தருவீங்களா?

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கறுப்பு வெள்ளை கலந்த தாடியுடன் இருந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். என்னால் மறுக்க முடியவில்லை. ஒரு ஊழியக்காரரின் தோரணை வேறு இருந்தது. நான் அமைதியாக எனது செல்போனில் அவர் கொடுத்த நம்பரை அடித்து அவரது கையில் தந்துவிட்டு திரும்பிக்கொண்டேன். என்ன பேசப் போகிறார்? அவசர உதவி ஏதேனும் தேவைப்படுகிறதோ? ஒருவேளை காமெடி கீமெடி….

ஐயா…. ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்…
……………..
ஐயா நல்லா இருக்கீங்களா?…..
…………….
கர்த்தருடைய பெரிதானக் கிருபையினாலே நான் நல்லா இருக்கிறேனுங்க  ஐயா!..
………….
ஐயா! மனைவி பிள்ளைங்க எப்படியிருக்காங்க ஐயா?……..
………..
ரொம்ப சந்தோஷம் ஐயா! ரொம்ப சந்தொஷம்!…..
……
ஐயா! உங்க ஊழியம் எப்படி இருக்குதுங்க ஐயா?
……
அப்படீங்களா ஐயா? ரொம்ப சந்தோஷம்!
……
ஐயா நான் இப்போ நாகர்கோவிலிலே இருக்கிறேனுங்க ஐயா….
…….
உங்க ஊழியத்துல இணைஞ்சி செயல்படலாம்ணு இருக்கிறேனுங்க ஐயா
…….
இல்ல ஐயா… கொஞ்ச காலம் கர்த்தருக்காக உங்களோட பணி செய்ய ஒரு வாய்ப்பு தாங்கையா?
……….
அப்படீங்களா ஐயா?….
………
இல்ல ஐயா…உங்க கூட இருந்து ஜெபிச்சிட்டு ஊழியத்துக்கும் வரலாம்ணு தான்….
………
அப்படியெல்லம் இல்லீங்க ஐயா….
…….
ஐயா நான் வந்து ஒரு இரண்டு நாள் மட்டும் தங்கி உங்க குடும்பத்துக்காகவும் ஊழியத்துக்காகவும் ஜெபிச்சிட்டுப் போறேனே….
……
இல்லீங்கையா! தங்குகிறதற்குக்கூட இடமில்லைய்யா….
………
அங்க இப்போ ஊழியத்துக்கு வாய்ப்பு ஏதும் இல்லையா?….
……………………………………………..
இல்லீங்கையா நீங்க தான்….
…………………………………………….
இல்ல வேற வழியே ….
…………………………………………………..
எப்படியாவது…
……………………………………………..
ஒரு நாளைக்கு மட்டும்……
………………………………………..
தயவுசெஞ்சி…
………………………
ப்ச்…
போன் கட்டாகிவிட்டது. அந்தப் ஊழியர் என்னிடம் “நன்றி ஐயா” என்றபடி போனைக் கொடுத்தார். நான் உறைந்து போய்விடிருந்தேன். எனக்கு திரும்புவதற்கு விருப்பம் இல்லை. நான் கைகளை மட்டும் பின்னால் நீட்டி போனை வாங்கினேன்.

அப்போது ஒரு காவி உடையணிந்த பெரியவர் என்னருகில் வந்து அமர்ந்தார். வழுக்கைத்தலை, இறகு பிடுங்கின கோழியைப்போல் இருந்தது அவரது ஷேவ் செய்த முகம். ஒரு வகையில் அவர் போட்டிருந்த உடை ஒரு புத்த பிட்சுவைப்போல் காணப்பட்டது. பஸ் புறப்பட்டுவிட்டது. கவனத்தை மாற்றுவதற்காக பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.
நீங்க எங்க போறீங்க தாத்தா. 
புத்தேரி…
என்ன ஆஸ்பத்தரிக்கா?
இல்ல ஒரு பூஜைக்காக வேண்டி போய்கிட்டு இருக்கிறேன்
வீடு சுசீந்திரமா தாத்தா?
இல்லியே! நான் ஆளூர்ல இருந்து வாறேன்
இவ்வளவு தூரமா? கஷ்டமா இல்லியா?
அவா நமக்கு வேண்டப்பட்டவா…
சரி தாத்தா எங்க படிச்சீங்க?
நான் திருநெல்வேலியில பி ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர். அது கொஞ்ச காலமாகுது.
இல்ல தாத்தா, நீங்க பூஜையெல்லம் செய்ரீங்கல்ல அதுக்கு எங்க  போய் படிச்சீங்கன்னு கேட்டேன்
அதுவா! நாங்க சைவம்…நான்
நான் அவசரப்பட்டு, அப்படியா? நான் சைவ சித்தாந்தம் இப்போ படிச்சுட்டு இருக்கிறேன்! நான் சொன்ன இந்த காரியத்தால் தாத்தா என்னை ஒரு விதமாக பார்த்தார்.
“தாத்தா இந்த கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”. தாத்த இப்போது நான் ஒரு இந்து என்கிற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
அவாளுக்குள்ள ஒற்றுமை இருக்கு. கண்ட இடத்துல காலேஜ கட்டுறா, ஆஸ்பத்தரி கட்டுறா நம்மவாளோட ஜனம் தான் என்று கூறிவிட்டு தனது கைகள் இரண்டையும் வானத்துக்கு நேராக  உயர்த்தி, ஒற்றுமையில்லாம அழிஞ்சு போறா – தாத்தாவின் கண்கள் பனித்தன.

தாத்தா எழுந்துவிட்டார். அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.

ஒரு ஊழியக்காரர், ஜெபிக்க வருகிறேன் என்று சொன்ன மற்றொரு ஊழியக்காரரை உதாசீனம் செய்ததை எண்ணிப்பார்த்தேன். என்ன காரணமாக இருக்கும்? தங்குவதற்கு இடமில்லாமல் ஒருவர் அலைகிறார், அவருக்கு ஒருவேளை உணவாவது இட்டனுப்பலாமே? முகத்திலடித்தாற்போல் செல்போனை ஆப் செய்துவிட்டால் என்ன அர்த்தம்?

தாத்தாவுடைய புரிதலின்படி நமக்குள் ஒற்றுமை இருப்பதனால் தான் நாம் இவ்வளவு வீரியமாக வளர்ந்து நிற்கிறோம்! நாம் உண்மையிலேயே அப்படியா இருக்கிறோம்?

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                               revgodsonsamuel@gmail.com

Phone:  09870765181

சினிமா கிறிஸ்தவம்

ஜூன் 9, 2009

வேதகோட்டவிளை திரு மோகன்குமார் உன்னத சிறகுகளில் எழுதிய ‘வென்னீர் தவளைகள்’ உண்மையிலேயே என்னை சிந்திக்க வைத்தது. புதிய ஒரு கோணத்தை அவர் உள்வாங்கி தனது கருத்தை வெளியிட்டிருந்தாலும் அவை ஒரு சராசரி கிறிஸ்தவன் கொண்டுள்ள தி(தா)ரைக் கண்ணோட்டம் போன்றே வெளிப்படுகிறது. ஒரு வகையில் பண்பாட்டுக் காவலர்களின் குரலைப்போன்று ஒலிக்கிறதே அல்லாமல், ஆழமாக ஊடுருவி நோக்கத்தக்க, வேத அடிப்படையான காரணிகளைக் காண இயலவில்லை. ஒரு மாற்று கலாச்சாரமாக கிறிஸ்தவம் விளங்கவேண்டும் என்பது கட்டுரையாளர் கருத்தானால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

இதனை முன்னிட்டு கட்டுரையாளர் குறிப்பிட்ட(?) பிரபு சாலமோன் – அறிவர் அருள் திரு மோகன்குமார் கேள்வி பதிலை உன்னத சிறகுகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிறிஸ்தவம் சினிமா துறையில் இறங்கியிருப்பதாக சொல்லுகிறார்களோ என்னவோ தெரியவில்லை கிறிஸ்தவர்கள் விளம்பரத்துரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த இரண்டுக்கும் மத்தியில் சமன் செய்யும் கடமை என்போன்ற போதகர்களுக்கு உண்டாகையால் எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

டி வி பார்க்காதே என்று சொன்ன காலம் போய் இன்று கிறிஸ்தவ டி வி சானல்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. சினிமாவை விஞ்சும் பாடகர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளெல்லாம் ஏற்கனவே களமிறங்கிவிட்டார்கள். இப்போது டி வி யைப் பார் என்று கிறிஸ்தவ போதகர்களே அறைகூவல் (வெற்று கூச்சல் என்று சொன்னால் போதாதா?) விடுக்கிறார்கள். நாளையே ஒரு விளம்பரம் தோன்றலாம், உங்கள் அபிமான பால் தினகரன் தோன்றும், தினகரன் பிக்சர்ஸ் ஆசீர்வாதமுடன் வழங்கும், “இயேசு அழைக்கிறார்”. பின் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களும் வந்து ஆசீர்வாதத்தை சென்னை மோட்சம் தியேட்டரில் பெற்றுக்கொள்ளவும். ஞாயிறு 5 காட்சிகள் உண்டு. இளம் பங்காளர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இவ்விதமான ஒரு சிந்தனையுடன் கிறிஸ்தவ விசுவாசிகள் சினிமாவிற்குள் களாமிரங்கியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இயேசு “நான் உங்களை அறியேன்” என்று சொல்லுவாரே தவிர “இவர்களை மன்னியும்” என்று கூறும் சாத்தியக்கூறுகள் கூட இல்லை.

ஒரு விசுவாசி திரைப்படம் எடுக்கலாமா, திரைத்துரையில் பணிபுரியலாமா என்று என்னைக் கேட்டால் “கண்டிப்பாக” என்று கூறுவேன். தமிழக பண்பாட்டின் ஒரு முக்கிய குறியீடாக அது மாறிவிட்டிருக்கும் சமயமிது. நாம் எதையுமே வென்றுவிடலாம் என்கிற தன்னம்பிக்கை கிறிஸ்தவ விசுவாசிக்குத் தேவை. ஆனால் சற்று நிதானம் கூட தேவை. நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்று கூறுபவர்கள் பிறமதத்தினரை ஒழுக்கக் குறைவுள்ளவர்கள் என்று தீர்ப்பதுபோல் தென்படுகிறதே? நான் தேன்காய் உடைப்பதில்லை தசம்பாகம் மட்டும் தவறாமல் கொடுப்பேன் என்பதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? எனது படத்திற்கான பூஜையில் நான் ஜெபிப்பேன் அவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கட்டும் என்று சொல்லுவது யாராவது ஒரு கடவுள் எனது தொழிலைக் காப்பற்றினால் போதும் என்பது போல் அல்லவா தோன்றுகிறது?

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை நாம் இயக்குனருக்கு சொல்லவா வேண்டும்?. “அப்பா அம்மா இல்லாட்டி என்னப்பா! ஆண்டவர் இயேசு இருக்கிறார்” எனும் வசனம் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்கிற அளவில் பஞ்ச் டயலாக் ஒன்றும் இல்லை. எல்லாரும் தான் சொல்லுகிறார்கள், “அப்பனே முருகா காப்பாத்துப்பா”, “கூத்தாண்டவர் ஆசி உனக்கு என்றும் உண்டு”, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” இதைப் போன்ற வசனங்களால் என்ன கருத்தை நாம் நிறுவுகிறோம்? அவன் அதை அப்படிச் சொல்லுகிறான் அதனால் நான் அதை இப்படி சொல்லுகிறேன் என்பது எத்தனை அசட்டுத்தனம். பிஷப் சாமுவேல் அமிர்தம் தனது “ஆட்டோ இவாஞ்சலிஸம் மற்றும் எலெக்ட்ரானிக் இவாஞ்சலிஸம்”  போன்ற கட்டுரைகளில் “அதற்குப் பதிலாக இது” என நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களை சாடுகிறார்.

“நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருந்தும். அவன் சார்ந்தத் துறைகளில் அவன் பிறரது வாழ்வை சுவை படுத்த வேண்டும். அவரை நோக்கி “கர்த்தாவே கர்த்தாவே” என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவருக்கு பயந்து நடந்தால் போதும்.

“இன்டு த வைல்ட்” என்கிற திரைப்படத்தைப் பார்த்தபோது அது ஒரு சிறந்த கிறிஸ்தவப்படமாக என் கண்களுக்கு தெரிந்தது. சமூகம் கொண்டுள்ள முரண்பாடுகளைக் கண்டு வெறுத்த ஒரு மாணவன் தன் பெரும்பாலான சேமிப்பை தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு கானகம் செல்கிறான். போகும் வழியிலோ காட்டில் தங்கியிருக்கும்போதோ அவன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை (ஒழுக்கமானவர்களுக்கு அவன் ‘பியர்’ குடிப்பது தவறு என்றும் அவன் நரகத்துக்குதான் போவான் என்றும் காரணம் கண்டுபிடிக்க படத்தில் வசதிகள் உள்ளன). வழியில் சந்தித்த அனைவரும் அவனை நேசிக்கின்றனர் – பதிலுக்கு அவன் அவர்களுக்கு உண்மையுடன் உதவியாய் இருக்கிறான். அவ்வப்போது தனது சகோதரிக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறான். புத்தகமும் இயற்கையும் அவனை உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தன.  ஒரு நாள் காட்டினுள்ளாக ஒரு பஸ்ஸைக் கண்டு அதற்கு “மேஜிக் பஸ்” என பெயரிட்டு அதனுள் தங்கிக்கொள்ளுகிறான்.

4 வருடங்களுக்குப் பின்பு அவன் வாசிக்கும் புஸ்தகத்தில் குடும்பமாக வாழ்வதை பற்றிய பிம்பம் வரும்போது அவன் திரும்பி ஊர் வர கிளம்புகிறான். பெருக்கெடுத்து ஓடும் ஆறு அவனை தடுக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த பஸ்ஸிலேயே தங்குகிறான். குளிர் காலம் அவனை சோதிக்கிறது. அவன் வேட்டையாடின உணவை அவனால் பாதுகாக்க இயலாததால் தாவரங்களை உண்டு வாழ்வைக் கழிக்கும்போது தவறி விஷ தாவரத்தை உண்டுவிடுகிறான். மரணம் என்பது நிச்சயம் என அறிந்த பின்பும் தனது வாழ்வியல் தத்துவத்தை “பகிர்வது தான் உண்மையான மகிழ்ச்சி” என்று எழுதி வைக்கிறான்.

ஸீன் பென் என்கிற இயக்குனர் திரைக்கதை எழுதி வடித்த இந்தக் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை மையமாக்கி எடுத்தது. உண்மையான வாழ்வின் ஒரு துளியை அனுபவித்த ஒருவன் சொல்லுவது நமக்கு வேத புத்தகத்தில் எளிதாக, தெளிவாகக் கிடைக்கிறது. அவற்றை அப்படியே சொல்லுவதற்கு ஒரு காட்சி ஊடகம் தேவையா? அதுதான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் முழங்குகிறார்களே.

திரைத்துறையில் இருப்பவர்களை நான் மனமார வாழ்த்துகிறேன். கண்டிப்பாக நீங்கள் சாதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று. ஆனால் கிறிஸ்தவ அடையாளத்தோடு இருக்கவேண்டும் என நீங்கள் கருதினால்,  “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருங்கள் – ஒலிபெருக்கியாய் அல்ல” .

வேத புத்தகத்தை கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் அதை விளக்க முற்படுவது தன்னுடைய சொந்த பண்பாட்டு சூழலில் தான் என்பதை நாம் நன்கு அறிவோம். எனினும் கொஞ்சமேனும் அதன் உண்மையான வரலாற்று, சமூக கலாச்சார பின்னணியமும் அதற்கும் நமக்கும் உள்ள இடைவெளிகளியும் நிரப்ப முற்படுவோமானால் வேதம் நம்மோடு “பேச முற்படுவதை” நம்மால் “கேட்க” முடியும். உமது வேதம்  என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் என்று சொன்ன சங்கீதக்காரன் இருட்டிலே வேதபுத்தகத்தை எடுத்துக்கொண்டு முகம்குப்புற விழுந்திருக்கமாட்டான்.

மோசேயை நாம் உதரணமாக எடுத்துக்கோள்ளுவோம், அவன் எகிப்திலே உள்ள பார்வோனுடைய அரண்மனையில் தங்குகிறான். ஒன்று இரண்டு நாட்களல்ல இஸ்ரவேலர் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கண்ணீரோடு கிடக்கும்போது,  எந்தக் கவலையுமற்ற சுகமான வாழ்வு 40 வருடம் அவனுக்கு கிடைத்தது. ஒரு நல்ல ஆட்சி நடத்தும் திறமை சார்ந்த கல்வி அவனுக்குக் கிடைத்திருந்தாலும் அவன் புரிந்து கொண்டது/ உள்வாங்கிக் கொண்டதும் அடிமைப்படுத்தும் முறையாகிய அடிதடிதான். ஆகவே தான் கடவுள் மறுபடியுமாக அவனை 40 வருடம் தன்னுடைய மந்தையை மேய்க்கும் பணிக்காக அவனை மீதியான் தேசத்துக்கு அழைத்துக்கொண்டார். அதற்கு அடுத்த 40 வருடங்கள் அவன் பட்ட கஷ்டங்கள் போல வேதபுத்தகத்தில் எந்த முதியவரும் அடைந்ததாக நாம் காண இயலாது. ஆனால் அது தான் வாழ்க்கை என நாம் புரிந்துகொள்ளுகிறோம்.

மோசே வாழ்ந்த இரண்டு இடங்களுமே கர்த்தரை தொழுதுகொள்ள ஏற்ற இடமல்ல. வழிபாட்டு முறை நடத்தப்படவேண்டிய தேசத்துக்கு மோசேயால் செல்ல முடியவில்லை? ஆனால் கர்த்தரை முகமுகமாக தரிசித்த பாக்கியம் அவன் தவிர வேறு எவருக்கும் வாய்க்கவில்லை.  நாம் இருக்கும் இடம் அல்ல முக்கியம் – கர்த்தர் நம்மேல் வைத்த கிருபையே பெரிது என்பதை உணர்வதே முக்கியம்.

கடவுள் நீடிய பொறுமை உள்ளவர், அவர் நமது வாழ்விலே நம்மை பல இடங்களில் அமர்த்துகிறார், நாம் பக்குவம் அடைந்து அந்த இடங்களில் அமர்ந்து கொள்ளுகிறோமா? அல்லது அலைபாய்ந்து அவர் நாமத்தை வீணிலே வணங்குகிறோமா என்பது ஒரு பெரிய கேள்வி.

பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மன்றத்திலே, இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் பேச்சை கவனித்த போது, எங்களை அனேகர் கண்டுகொள்ளாமல் இருந்த போது மோகன் (எத்தனை மோகன் ஒரு கட்டுரைக்குள்ளாக) சி லாசரஸ் அவர்கள் தன் நிலையிலிருந்து கீழிறங்கி (கிட்டத்தட்ட பரலோகத்தில் இருந்து)வந்து சந்தித்தார். அப்படியிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? நானும் கீழிறங்கிவந்து (ஏனென்றால் நான் உங்களைப்போன்ற சதாரண விசுவாசி அல்ல சினிமா பெற்றெடுத்த ஸுப்பர் ஸ்டார் விசுவாசி) அவரோடு சேர்ந்து திரைக்கலைஞர்களுக்காக ஜெபிக்கிறொம். என்ன விதமான விசுவாசம் இது? எந்த ஆலயமும் இவர்களுக்கு தங்கள் கதவுகளை மூடியதாக தெரியவில்லையே? இவர்கள் தான் மன மேட்டிமையுடன் போகாமல் இருந்திருக்கிறார்கள்.

வியாபரிகளுக்கென்று “சிறப்பு ஜெபம்” செய்யும்போது சினிமா எனும் வியாபாரம் சகோதரர் மோகன் சி லாசரசுக்குத் தெரியாதா என்ன? முதலீடு செய்துவிட்டார். சினிமா உலகம் எப்பொதுமே விளம்பரத்தை விரும்பும் இடம் “போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர்கள் அல்லவா? ” மோகன் சி லாசரஸ் அவர்களின் தொடர்பு இருந்தால் அவரது “ரசிகர் மன்றமே” தனது படத்தை 100 நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்ற விளம்பர + வியாபாரக் கணக்கை போட்டுவிட்டர்.

நான் எல்லாவற்றையும் மிகைப்படுத்தியதாக உங்களுக்குத் தோன்றலாம். அது அப்படித்தானிருக்கும். கண்களை மூடி, பல ஸ்தொத்திரங்கள் சொல்லி, ஒரு பரவசமான பாடலைப் பாடி, தாங்க் யூ ஜீஸஸ் என பீட்டர் விட்டு, உருக்கமாக நடித்து, கண்ணீர்விட்டு, க்ளைமாக்ஸ் வரை கொண்டு செல்ல தெரிந்த ஒரு ஊழியக்காரன் எங்கே கடுமையாக சாடுகிற நான் எங்கே?

மிக்க மனத்தாழ்மையுடன் கூறுகிறேன்…தயவுசெய்து உங்கள் விசுவாசத்தை உங்களுக்கு இறைவன் கொடுத்தப் பணியிலே வைத்துக்கோள்ளுங்கள். மக்கள் திருமறையை வாசிக்க பழகி விட்டார்கள். சினிமாவில் இருந்து கொண்டு அதை வாசித்து காட்டுவது பெருமை என்று எண்ணாதீர்கள் அது அந்த பிரம்மாண்டமான ஊடகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய இழுக்கு. உங்களை அந்த இடத்திலே கொண்டு சேர்த்த கர்த்தர் துக்கப்படும் காரியம். உங்கள் தொழிலை அற்பணிப்புடன் செய்யுங்கள். குறைந்தது ஒரு 50 வருடம் கழித்து வரலாறு சொல்ல வேண்டும் “இயக்குனர் பிரபு சாலமன் தனது திரை(ப்படத்தால்)க்கதையால் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிக்காட்டினார்” 

வேதபுத்தகத்தை வெறுமனே வாசிக்காமல் மறு வாசிப்பிற்கு உட்படுத்துங்கள் – அதையே நீங்கள் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளிப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க பிரியமுடன்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Mobile: 9870765181


%d bloggers like this: