Archive for திசெம்பர், 2009

வருகை

திசெம்பர் 10, 2009

கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பாலனாம் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினரை வாழ்த்துகிறேன்!

நாம் பண்டிகைக்காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் திருச்சபையின் கால அட்டவணையைக் குறித்த ஒரு அறிமுகம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுவதால் உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று ஆசிக்கின்றேன்.

மாதங்களைக் கணக்கிடும் நமக்கு டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதியில் வருவதாயிருந்தாலும் கிறிஸ்தவ காலண்டரின்படி இதுவே நமக்கு துவக்கமாகும். “வருகை”  என்று பொருள்படும் “அட்வெந்து” காலத்தை திருச்சபை சுமார் 4ஆம் நூற்றாண்டுமுதல் அனுசரித்து வருவதை பதிவுகளில் காணமுடிகிறது.

இயேசு பாலனாக அவதரித்துவிட்டார் என உறுதிபட நம்பும் நமக்கு அவரின் வருகை “இரண்டாம் வருகையாக” காணப்படுகிறது. இந்நாட்களில் அவரின் வருகைக்காக நம்மை ஆயத்தப் படுத்துவதும், வருகையை எதிர்பார்த்திருப்பதும் பிறரை இதற்கென ஆயத்தப்படுத்துவதும் நமது தலையாயக் கடமை.

வருகையை எதிர்நேக்கி பலர் “காத்திருக்கும்” இந்நாட்களில், காத்திருத்தல் எனும் வார்த்தை நம்மைச் சோர்வுறச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. காத்திருப்பதை விட எதிர்நோக்கி இருப்பது மிகவும் நன்மை பயப்பதல்லவா? வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினருக்கு இந்த நாள் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது எனும் நற்செய்தி அறிவிக்கும் நாள் என உங்களுக்கு நான் உறுதிபட கூறுகிறேன்.

பல வேளைகளில் கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது என நாட்களைக் குறித்து பல அடையாளங்களை காட்டி மக்களை திசை திருப்பும்போது இயேசுவின் வாய்மொழிக்கூற்றையே நான் சார்ந்திருக்க விளைகிறேன். “இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளனுக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். எனெனில் நீங்கள் நினையாத நெரத்தில் மானிட மகன் வருவார்” (மத்தேயு 24: 43 & 44)

ஒருமுறை நான் நீர்நிலைகளில் உள்ள  தாவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபொழுது மீன்கொத்தியை ஒத்த ஒரு பறவை கரும்புள்ளிகளுடன் குளத்தின் மேலே பறந்துகொண்டிருந்தது. அது காற்றில் தன் சிறகை அசைத்து நின்ற இடத்திலேயே தன்னை நிறுத்தியிருந்தது ஆச்சரியமாக எனக்குத் தோன்றியது. திடீரென ஒரு கர்ணம் அடித்து நேர்கோட்டில் மேலிருந்து கீழாக தனது அலகை அம்பாக்கி சீறியது. தனது இரையைக் கவ்வியபடி அருகிலிருத்த மரத்திற்கு சென்று அமர்ந்தது.

தனது நிழலை வைத்து மீன்களிடம் மாயம் ஏதும் செய்கிறதா இந்த பறவை? மீனை தண்ணீரில் சந்திப்பதற்கு ஆயத்தப்படும் பறவையைப் போல ஏமாறக் காத்திருக்கிறதா மீன்கள்? தண்ணீரில் வாழும் மீன்கள் காற்றிலிருந்து வெளிப்படும் பறவையிடம் ஏமாறும் கணம் ஏது?

கிறிஸ்துவின் அன்பில் வாழும் நாமும் ஒருவேளை அவரின் அன்பிற்கு அப்பாற்பட்ட ஆளுமைகளால் ஏமாற்றப்படுவோமா? பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் வருகையை குறிப்பிட்டு பலர் நம்மை ஏமாற்றியபடி இருப்பதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தூய பவுல் அடிகளார் “மாரனாத்தா” எனும் அரமேய பதத்தை 1 கொரிந்தியர் 16: 22ல் குறிப்பிடுகிறார். யூதனான பவுல் எபிரேய மொழியில் தனது பிரதியை எழுதாவிட்டாலும் தான் எழுதிய கிரேக்க மொழியில் கூட இந்த பதத்தை பதிவு செய்யாதது சற்று ஆச்சரியமாய் இருக்கிறது. கல்விமானாய் காணப்பட்ட பவுல் “மாரனாத்தா” எனும் வரிவடிவமற்ற அரமேய வார்த்தையை குறிப்புணர்த்தும்பொருட்டு இங்கே உபயோகிக்கிறார்.   “ஆண்டவரே வருக” எனும் வார்த்தைக்கு இணையாக “ஆண்டவர் நம்முடன் இருக்கிறார்” என்றும் இருபொருள் பெறும் இந்த வார்த்தை ஆழ்ந்த அர்த்தம் நிறைந்தது.

நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் நிறைக்கும் ஒரு வார்த்தை இந்த இடத்தில் நிரப்பப்பட்டது ஒரு ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகவே என நாம் கருத இடமுள்ளது. அந்த புரிதல் நோக்கி நாம் பயணம் செய்தால்…

திருவெளிப்பாடுகள் 22: 20ல் “ஆம், விரைவாக வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும். விரைவாக வரும் இயேசுவை எதிர்நோக்கியிருக்கும் ஒரு உறுதியை நாம் இப்பகுதியில் கண்டுகொள்ளலாம்.

யாக்கோபு எழுதிய திருமுகம் 5: 8ல் நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது. என நாம் வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து வரும் வசனம் இன்னுமாக அவரது வருகையை அருகில் காண்பிக்கின்றது. சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகதவாறு ஒருவார் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

பொறுமை, தளராமனம், மற்றவருக்கு எதிராய் முறையிடாத தன்மை போன்ற உயர்ந்த விழுமியங்களை இப்பகுதியில் நாம் இறைவனின் வருகையை ஒட்டியவாறு காண முடிகிறது.

வருகை என்பது தூரமான எதிர்காலத்திற்கான ஒன்றல்ல, மாறாக அது  நமது செயல்களின் தீர்ப்பை வழங்க நமது அருகிலேயே காத்திருக்கும் மனுக்குமாரனை தரிசிக்கும் உன்னதமான ஒரு தருணம் எனும் உண்மையை இப்பகுதி நமக்கு நன்கு விளக்குகிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இறைவாக்கினராம் ஏசாயா, இறைவனின் நீதியை நமக்கு தெளிவுறக் காண்பிக்கிறார். எதிர்நோக்கியிருக்கும் அந்த வருகையை “நேர்மை அவருக்கு அரைக்கச்சை, உண்மை அவருக்கு இடைக்கச்சை” என ஏசாயா கண்டுகொள்ளுகிறார். அவரது வருகை நீதி செய்வதாக இருக்கும் என்பதை அறியும் ஒவ்வொரு கணமும் நாம் அனைவரும் நீதிசெய்ய கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.

அடையாளங்களைத் தேடுவதை விட ஆயத்தப்படுதல் மிகவும் இன்றியமையாதது. வருகையோடு தொடர்புடைய திருவிவிலியம் காண்பிக்கும் இரண்டு நபர்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த விளைகின்றேன்.

யோவான்:  இயேசுவின் சமகாலத்தவன். வருகையை முன்னறிவிப்பவனாக காணப்படுகிறான், எனினும் வருகையின் காலத்தில் வாழ்ந்தவன்.  “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” எனும் இறை வாக்கினரின் கூற்றிற்குப் பாத்திரமாய் விளங்கியவர்.

மரியாள்:  இயேசுவின் தாயார். வருகையை எதிர்நோக்கியிருப்பவர். பொறுமையோடும் நம்பிக்கையோடும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியிருந்தவர். பெண்களுள் ஆசி பெற்றவராக காணப்பட்ட மரியாள் வருகையின் காரணியானது எத்துணை பாக்கியமானது?

மேற்கூரிய இருவரின் வாழ்வையும் நாம் ஆழ்ந்து படித்தால் ஆண்டவரின் வருகை நமக்கு மிகவும் அருகிலிருக்கும். அவ்வாறே நாம் அதற்கு எவ்விதம் ஆயத்தமாகவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

குழந்தையாய் அவதரித்த மனுக்குமாரன் நம்மை அரவணைத்து நீதியுடன் நம்மை தமது வருகையில் சேர்த்துக்கொள்ள பாத்திரவான்களாய் இருப்போம். கர்த்தரின் அன்பு என்றென்றும் நம்முடன் தங்கியிருப்பதாக.

(6.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மீரரோடு மெதடிஸ்ட் திருச்சபையில் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)

அருட்திரு காட்சன் சாமுவேல்.

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

Mobile 09702567603

தவம் செய்வோம்

திசெம்பர் 4, 2009

இன்று மதியம் பெற்ற ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு ஒரு மிகப்பெரிய தரிசனத்தை அளிக்க இருக்கிறது என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குருத்தோலை கொளுக்கட்டை என்ற பதிவை ஜெயமோகன் அண்ணனின் வலைத்தளத்தில் படித்துவிட்டு என்னை அழைத்தாக மீர கண்ணன் கூறினார்கள். பல நாள் பழகிய நண்பர்கள் போலவே பேசினார்கள். பல இடங்கள், பிரபலங்களை கடந்துவந்த ஒரு ஆளுமை. டாக்குமென்ட்ரி தயாரித்துகொண்டிருப்பதாக கூறினார்கள்.

சஞ்சய் காந்தி நேஷனல் பார்க் போகலாம் வருகிறீர்களா அங்கே ஒரு குகை இருக்கிறது என்றார்கள். எங்கே இருக்கிறீர்கள் என்றேன், காந்திவலி என்றார்கள். மீரா ரோட்டிற்கும் காந்திவலிக்கும் இடைப்பட்ட தூரம்தான், போரிவிலியில் வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பதாக நான் ஸ்னேக சாகர் மூலமாக தெருவோரக் குழந்தைகளுடன் பணிபுரிந்துகொண்டிருந்த போது இயற்கை சார்ந்த அறிமுகம் இந்தக் குழந்தைகள் பெறுவது அவசியம் என்று உணர்ந்து ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்தேன். பி என் எச் எஸ் குழந்தைகளுக்கு நடத்தும் இயற்கை ஒரு அறிமுகம் என்ற நிகழ்வில் நானும் ஒரு குழந்தையாகவே கலந்துகொண்டேன்.

இலை, மரம், சத்தம், வண்டு, வண்ணத்துப்பூச்சி, மரங்களில் காணப்பட்ட சிறுத்தையின் நகக் குறிகள் என பலவற்றை காண்பித்து பொறுமையாக விளக்கினார்கள். இரண்டு சிடி திரையிட்டார்கள். ஒன்று சிறு பூச்சிகள் மற்றும் பிராணிகளைப் பற்றியது மற்றொன்று மும்பை காணும் மாசுகளைப் பற்றியது. சிருவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டர்கள். குறிப்புகளை எடுத்தனர். கண்டிப்பாக இது ஒரு விதையாக அவர்கள் மனதில் முளைக்கவிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த நிகழ்விற்குப் பிறகு நான் சஞ்சய் காந்தி நேஷனல் பார்க்கிற்கு போகவில்லை. எனது பணி திருச்சபையில் துவங்கிவிட்டது. ஆகையினாலே இந்த அழைப்பை என்னால் உதாசீனம் பண்ண இயலவில்லை. எனக்கு 10 நிமிடத்திற்கு முன்பதாகவே வந்து காத்திருந்தார்கள். நான் எனது MSL 8537 புல்லட்டில் சென்றிருந்தேன். அங்கே காத்திருந்த பேருந்தில் ஏறினோம். சுமார் அரைமணி நேரத்தில் வண்டியில் 11 பேர் அமர வண்டி புறப்பட்டது.

‘கெனரி குகைகளை’ நாங்கள் எட்டியபோது, குகை குறித்த எனது அனுமானங்களை அப்படியே மாற்றிவிட்டது அந்த இடம். மிகவும் நேர்த்தியாக கொத்தப்பட்ட பாறைகள். குடைந்து செய்யப்பட்ட பிரம்மாண்டமான தங்குமிடங்கள். தவத்தின் வலிமையால் உருப்பெற்ற ஒரு இடம் என்பதே அதன் முக்கியத்துவமாக நான் கண்டுகொண்டேன். போர் எதும் இல்லை, மனதை அறிந்துகொள்ள இத்துணை வலிமையான கோட்டையை ஒத்த வாழ்விடங்கள். ஆயிரமாண்டுகளுக்குமேல் இந்த இடம் உருவாக்கிய ஆன்மீக வீச்சு சற்றும் குறையாமல் இருக்கிறது.

 அப்பு, மீராவின் மகன் அந்த இடத்தை மிகவும் நன்றாக அறிந்து வைத்திருந்தான். ஒரு குகையின் விதானத்தில் வரையப்பட்ட படத்தை அவன் காண்பித்திருக்காவிட்டால் தவற விட்டிருப்போம். 130 குகைகள் இருக்கின்றன என்று மீரா சொன்னார்கள். ஒரு சில தான் பார்த்திருப்போம், வழியில் ஒரு தியான மண்டப வாசலில் சிகரெட் துண்டு ஒன்றைக் கண்டு தலையிலடித்துக்கொண்டோம். அதை மீரா பொறிக்கிகொள்ள நான் பத்திரப்படுத்திக்கொண்டேன். குடிபோதையுடன் வருபவர்கள், சிகரட் பிடிப்பவர்கள் மற்றும் மாசுபடுத்துபவர்கள் என்று ஒருசிலர் வந்தபடியேதான் இருக்கிறார்கள்.

நல்ல அதிர்வுகள் நிறைந்த ஒரு குகையில் வந்தபோது மீராவை ஓம் சொல்லச் சொன்னேன். ஓரிருமுறை அவர்கள் சொன்னதைத் தொடர்ந்து அப்பு ஓம் சொல்லத்தொடங்கினான். இரண்டுமுறை விட்டு நானும் அதே சுதியில் ஹம் செய்யத்துடங்கினேன். அருமையான ஹார்மனி. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது. மீரா தியானம் செய்யவேண்டும் என்றார்கள் அமைதியாக இருந்தோம். தியான நிலையில் அவர்கள் அமர்ந்திருக்க நான் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

சவக்கடல் அருகிலுள்ள கும்ரன் குகைகள் என் கண்களுக்கு வந்து போயின. பொதுமக்களிலிருந்து தூரமாயிருந்தாலும் தாங்கள் இருக்குமிடாத்திலிருந்து சலிக்காமல் எழுதிகுவித்து மானுட வாழ்வின் மேன்மையை பறைசாற்றிய துறவிகள் கண்ணில் வந்து போனார்கள். நிர்வாணமாக தங்கள் அன்றாட கடமைகள் தொழுகைகள் செய்துகொண்டிருந்த பிக்குகள் கண்ணில் தென்பட்டார்கள். உடல் சிலிர்க்க கண் விழித்தேன். இதற்கு இணையான தியான அனுபவம் எனக்கு ஏற்பட்டது இல்லை.

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பரமஹம்ஸ நித்யானந்தரின் ‘ஜீவன் முக்தி’ என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்கள். திரும்பும் நேரம் என்பதை அப்பு நினைப்பூட்டினான். ஆத்மாவை வருடிச் செல்லும் காற்று. உடலை கழுவி விடும் தூய ஒளி. பசுமையான மரங்களின் மென்மையான மடி தரும் சுகம். துறவிகள் விட்டுச்சென்ற ஒரு வாழும் ஆய்வுக்கூடம். யாவற்றையும் விட்டு இறங்க மனம் ஒப்பவில்லை. மும்பைவிட்டு பிரியாமல் இருப்பதற்கு இப்போது எனக்குள்ள ஒரே காரணம் கெனரி குகைகளும் அதைச்சார்ந்த கடுகளும்தான்.

திரும்பி வரும் வழியில் கொய்யாப்பழம் வாங்கிக்கொண்டோம். குரங்குகள் சூழ்ந்துகொள்ள மீரா அவர்களுடையதை கொடுத்துவிட்டார்கள். எங்களோடு இன்னும் ஒரு நபரை சேர்த்துக்கொண்டு நடந்தே ஆறு கிலோமீட்டர் இறங்க முடிவு செய்தோம். வழியில் பறவைகளும் அதன் ஒலிகளும் கேட்டபடி வந்தோம். கூட வந்த நபர் புகைப்படம் எடுத்துகொண்டே வந்தார். ஒரு பாம்புச்சட்டை கண்டோம், ஹனுமன் லங்கூர் தாவியபடி கடந்து சென்றன.

நாங்கள் வந்துசென்றோம் என்பதன் அடையாளமாக பிலாஸ்டிக் உறைகளை வழிநெடுக பொறுக்கிக்கொண்டே வந்தோம். மொத்த காட்டிலும் தேடினால் கண்டிப்பாக லாரி லாரியாக அள்ளமுடியும். பனிபொழிய துவங்கியிருந்தது. இருட்டத்துவங்கிவிட்டது.

எட்டுமணிக்கு நான் உபவாச ஜெபத்திற்குச் செல்ல வேண்டும். மீண்டும் சந்திப்போம் கூறி பிரிந்தோம்.

கண்டிப்பாக ஆரனை இங்கு வாரத்திற்கு ஒருமுறையாவது கூட்டிவரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆம் ஜாஸ்மினும் உடன் இருப்பாள்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்

 தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

                                          malargodson@gmail.com

                                          Mobile: 09702567603

குருத்தோலை கொளுக்கட்டை

திசெம்பர் 2, 2009

ஜெயமோகன் அண்ணன் அவர்களின் தெரளி பதிவைப் பார்த்த்வுடனே இதைப் பதிவு செய்யவேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

நான் சிறுவனாக இருக்கும் போது பெருவிளையில் கார்த்திகை பஜனை நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன். பெருவிளை சி எஸ் ஐ தேவாலயத்தில் உள்ளவர்கள் கூடி ஒன்றாக சென்று ஊறைச் சுற்றி பாடி வருவார்கள். எனது அப்பா அருட்திரு சி சாமுவேல் அவர்கள் தனது வாலிப பிராயத்திலே ஆரம்பித்த ஒன்று இது என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். காலரா பரவியிருந்த சமயம் அது என்றும் குறிப்பிடுவதை நினைவு கூறுகிறேன்.

இந்த பஜனை நேரத்தில் நாங்கள் ஊர் முழுவதும் சுற்றியபடி வரும்போது இந்துக்களுடைய வீட்டில் எல்லாம் விளக்கு கொழுத்தி வைத்திருப்பார்கள். நம்மை வரவேற்கத்தான் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

மார்த்தாண்டத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஒருநாள் கூடப் படிக்கும் மாணவன் கொளுக்கட்டை கொண்டுவந்து கொடுத்தான். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் இது போன்ற ஒன்று செய்தது இல்லையே என்று எண்ணினேன். வீட்டில் விசாரித்த போது அது இந்துக்களுடைய பண்டம் என்றார்கள். செய்து தர மாட்டோம் என்பதை சொல்லும் வழி அது.

இந்த நேரத்தில் தான் தெரளி இலை கண்ணில் பட்டது. புதிதாக முளைத்த வியாபாரிகள் பலர் இளைக்களை கொத்து கொத்தாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கூட வந்த நண்பன் அத்துதான் தெரளி இலை எனக் குறிப்பிட்டான். பொதுவாக ஸ்கூல் ஆரம்பிக்கும் நாட்களில் இதுபோலவே சொடக்கு செடியையும் கொத்து கொத்தாக வைத்து வித்துக்கொண்டிருப்பார்கள்.

கொளுக்கட்டை எனது வாழ்வில் மறுபடியும் வந்தது நான் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தான். பனையும் அதன் பொருளாதாரமும் என்ற ஒரு சிறிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தபோது, பனை ஓலையில் பிசைந்த மாவை வைத்து அவித்து எடுக்கும் கொளுக்கட்டை மிகவும் சுவையுடனும் நறுமணத்துடனும் இருக்கும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இலக்காக அதன் ஈர்க்கில் பிரியாமல் எடுத்து அதனை V வடிவத்தில் பிரித்து மாவை நிரப்பி ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வேக வைப்பார்கள்.

குருத்தோலையில் இருந்து எழும்பும் மணம் மிகவும் மெல்லியது. யாவரையும் கவரும் தன்மையுடையது. நான் ஒருமுறை மும்பையில் பனையோலை சேகரித்து நான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் காயவிட்டேன். இரவான பொழுது அதை எடுத்து மாடிப்படியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். மறுநாள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த ஒரு பாட்டி, “நல்ல ஒரு நறு மணம் வீசுதே என்று இன்கே வந்து பார்த்தால் ஓலைகள் கிடக்கிறது, இது இவ்வளவு அருமையான வாசம் வீசும் என்று எனக்கு தெரியாது” என்றார்கள். ஓலையை எடுத்து வீசுவார்களோ என்ற பயம் நீங்கியதுதான் அப்போதைக்கு எனக்கு பெரிதாக இருந்தது.

நேற்று தாராவி சென்றிருந்த போது வழியெங்கும் பனையோலைகளை விற்றுக்கொண்டிருந்தனர். என்ன ஒரு ஓலை 20 ரூபாய் இருக்குமா என்று விசாரிக்கப்போனால் அரண்டுவிட்டேன். அதிகமில்லை வெறும் 160 ரூபாய் மட்டுமே. கொஞ்சம் பச்சையடித்தது 100 ரூபாய்.  பச்சை ஓலை 60 ரூபாய். தெரளி இலையையே காண முடியவில்லை. அப்பொழுது தான் ஒன்று உறைத்தது தாராவியில் பெரும்பாலும் திருனெல்வேலி மாவட்ட மக்கள் தான் வசிக்கிறார்கள். பனையோடு நெருங்கிய உறவு கொண்ட மக்கள். பனையோலையின் மணமும் ருசியும் அவர்களுக்குத்தான் தெரியும்.

மும்பையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பனை அதிகமாக இருக்கிறது. பனை ஏறுபவர்கள் திருநெல்வேலியிலிருந்து வந்து தங்கி கள்ளெடுக்கிறார்கள். மலாட் எனும் இடத்தின் அருகிலுள்ள மட் என்ற பகுதியில் பனை அதிகமாக காணப்படுகிறது.  இங்குள்ள ரிசார்ட்களில் பனைமரம் ஒரு முக்கிய மரமாக கருதப்பட்டு பேணப்பட்டு வருகிறது. யாரும் முறிப்பதில்லை.

இலைகளின் பயன்கள் அளப்பரியது. மருத்துவத்தை தவிர்த்தால் கூட குமரி மாவட்டத்தில் இலைகள் பயன்படும் விதம் குறித்த தனி பதிவே போடுமளவு அவை மாற்று பொருளாதார சக்தியாக அங்கே மறைந்து கிடக்கின்றது.

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

mobile: 09702567603


%d bloggers like this: