Archive for ஏப்ரல், 2010

சிறுவர் இலக்கியம்

ஏப்ரல் 14, 2010

கிறிஸ்தவர்களுக்கான  புஸ்தகங்களுக்கோ கிறிஸ்தவ மாதாந்திர பத்திரிகைகளுக்கோ குறைவு இல்லாமல் புற்றீசல்கள் போல பல பத்திரிகைகளும் புத்தகங்களும் வந்தவண்ணமிருக்கின்றன. எனினும் கிறிஸ்தவ சிறுவர் இலக்கியம் இன்னும் வளராத நிலையிலேயே உள்ளது. இதற்கு முழு முதற் காரணம் கிறிஸ்தவ பெற்றோரே. பைபிள் தவிர வேரொன்றும் வாசிக்கக் கூடாது எனும் வைராக்கிய தீர்மானத்தில் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பவர்கள், பிள்ளைகள் 10ஆவது படிப்பதிலிருந்தே எந்த கிறிஸ்தவ நிறுவனத்தில் எஞ்சினீரிங், மெடிசின் படிக்க வைக்கலாம் என முடிவு செய்து ஜெபித்து பிள்ளைகளை படிப்பிற்காக மட்டும் என அற்பணித்து விடுவார்கள்.

இந்த பிள்ளைகள் பாட புத்தகத்தை மாங்கு மாங்கு என படித்து, போதகர் முதல் ஊரில் வந்துபோகும் அத்தனை “வல்லமையான” பிரசங்கியார்களையும் கண்டு அல்லது கடித தொடர்பு கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றபின், நிறைய காணிக்கைகளை இட்டு மிஷனறிகளையும் போதகர்களையும் “தாங்கி” வருகிறார்கள். இவ்விதமாகவே கிறிஸ்தவ ஆன்மீகமானது இன்றைய தினத்திலே சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறது.

 இந்த சிறுவர்கள் தான் வளர்ந்த பின்பு, “ஹோலி ஸ்பிரிட் என்னோட பேசி, நீ தான் இந்த ப்ராஜெக்ட்ல செலட் ஆவேண்ணு” அது அப்படியே நடந்ததுல எங்கம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கர்த்தர் இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக என ” கர்த்தரின் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஹோலி ஸ்பிரிட் கவுண்சலிங் செய்துகொண்டிருப்பது போல வாய் கூசாமல் (பொய்) “சாட்சி” கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தினத்தில் சிறுவர்களுக்கான தரமான கிறிஸ்தவ  பத்திரிகைகள் வராததற்குக் காரணம் அற்புத, அதிசய, அநியாய அக்கிரம, ஊழியம் செய்யும் அனைவரும் சுதாரித்துவிட்டார்கள் என்று அர்த்தம்.  சிறுவர்களுக்கான பத்திரிகையின் அற்பணிப்பும், அதன் தேவையும் அதிகமிருந்தாலும், காசு பார்க்கும் பிற தளங்களில் தங்கள் “ஆவிக்குரிய”  திறமையை செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில் “அதிசயம்” ஒன்றும் இல்லை. எந்த தொலைக்காட்சி, சாத்தான் என கண்டடையப்பட்டதோ அவைகளோடேயே கைகோர்த்துக் கொண்டு நடக்கும் அவலம் இவர்கள் வாழ்வில் காணப்படுவது வேடிக்கை.

கிறிஸ்தவ கல்வி வளர்ச்சித் துறை என காணப்படும் அனைத்தும், வருடத்திற்கு ஒரு பரீட்சை வைப்பதற்கு ஏற்ற “பாடதிட்டங்களைக்” கொடுத்து பயமுறுத்தும் நிலையிலேயே உள்ளது. கூடவே “அச்சகத்தாரும்” பிழைக்கவேண்டுமல்லவா? நாம் சரியாக நமது கலாச்சார பங்களிப்பை சிறுவர்களுக்கு அளிக்காதவரை  இன்றய கிறிஸ்தவ சிறுவனுக்கு காவியுடையணிந்த சாது சுந்தர் சிங் ஒரு இந்து சாமியாராகவே தென்படுவார். அப்படியே தாடி வைத்து அங்கியிட்ட ஒசாமா கிறிஸ்துவாகவே காணப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது மறுக்க முடியாதது. 

தராமான பல நல்ல விஷயங்களை நாம் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க முயன்றாலும் அதை வண்ணமயமாக கொடுப்பது இன்றைய தேவை. அதற்கு அற்பணிப்புள்ள ஓவியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இந்திய முறையிலான ஓவியங்களின் பங்களிப்பு நம்மை சிறுவர் இலக்கியத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுவது மாத்திரமல்ல நமது கருத்துக்களை பதிவு செய்யும் ஆற்றலையும் அவை தரப்படுத்தும்.

நமது திறமைகளை ஒன்றிணைத்து வெளிப்படுத்தாவிட்டால், நமது சிறுவர்களுக்கு நாம் கண்டிப்பாக கூறவேண்டிய பலவற்றை மறைத்துவிடுவோம். அது அவர்களை பலவீனமான சமய சார்புடையவர்களாக மாற்றிவிடும் அபாயமுண்டு.

நல்ல தரமான கிறிஸ்தவ சிறுவர் புத்தகம் நியாயமான விலையில் கிடைக்கிறதா என கிறிஸ்தவ  புஸ்தகங்கள் விற்கும் கடைகளில் கேட்டுப்பாருங்கள். விலையுயர்ந்த கிறிஸ்தவ சிறுவர் புஸ்தகம் விதவிதமாக உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை இந்திய மண்ணில் உருவானவையாக இருக்காது. 10 பக்கம் உள்ள ஒரு புஸ்தகம், கொட்டை எழுத்துக்களுடன் வண்ண புகைப்படங்களுடன்  குறைந்தது 50 ரூபாய் விலையில் சகாயமாக தருவதாக கடைக்காரர் சொல்வார்.

ஒரு தொடர் நிகழ்வாக, சிறு பிராயம் முதல் இம்மட்டும் நாம் வாசிக்கும் கன்னித்தீவுபோல் நாம் குறிப்பிடத்தகுந்த கிறிஸ்தவ தொடர் வெளிவரும் எந்த பத்திரிகையும் இல்லை. நாம் தான் அச்சாபீஸ் கண்டுபிடிதோம், அச்சிட்டோம் என பெருமை வேறு நமக்கு.  ஒரு சிறுவர் பத்திரிகையை ஆரம்பிப்பது மிகவும் முக்கியம். அதுவும் தொடர்ச்சியாக வெளிவரவேண்டியதன் அவசியம் இன்றைய தேவையாக இருக்கிறது.

ஒருவேளை இவ்விதமான பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவைகளைத் தொடர்ந்து பல திறமையானவர்கள் எழுந்து வரக் கூடும் எனும் எண்ணம் என்னுள் எழுந்ததால், இதை வாசிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

 1. நல்ல பத்திரிகைகளை கதைகளை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். அவை கிறிஸ்தவம் சாராத வெறும் நீதிக் கதைகளாக இருந்தாலும் பரவாயில்லை.

2. உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் கதையும் பாடலும் சொல்லிக்கொடுங்கள். ஜெப நேரத்தில் இதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். சிறுவர்கள் ஆவலுடன் அந்நேரத்தை விரும்புவார்கள்.

3. மாதத்திற்கு ஒரு முறை புத்தகக் கடைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். குறைந்த விலையிலாவது ஒரு சிறுவர் புத்தகத்தை வாங்கிக்கொடுங்கள்.

4. சிறுவர்களுக்கான பரிசுகள் என்றாலே அதை புத்தகங்கள் என உருவகித்துக்கொள்ளுங்கள்.

5. தெரிந்த எழுத்தாளர்களை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

கர்த்தர் நம்மனைவரோடும் இருப்பாராக.

 Rev. Godson Samuel

contact: palmyra_project@yahoo.com malargodson@gmail.com

9702567603

மீண்டும் சுனாமி

ஏப்ரல் 8, 2010

ஜெயமோகன் அண்ணன் அவர்களின் பதிவு (மனிதாபிமான வணிகம்) மேலோட்டமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானதாக தென்பட்டாலும், அதன் ஆழமான கேள்விகளை ஒவ்வொரு கிறிஸ்தவனும் எதிற்கொள்ளவேண்டிய கடமை உண்டு. சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்தில் மிகவும் தாமதமாக,  (நான் அப்போது முக்கூடலில் இருந்தபடியால் எனக்கு தகவல் கிடைக்கவில்லை) நான் அங்கு சென்றபோது கண்ட காட்சிகள் அனைத்தும் மனிதாபிமானத்தின் உச்சமே. கிறிஸ்தவ மதம் சார்ந்த எந்த விளக்கங்களும் இன்று அதனுடன் கோர்க்கப்படும் சதியாகவே நான் காண்கிறேன்.

குளச்சலை அடுத்த  மண்டைக்காடு என்ற இடத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடந்ததுண்டு. கிறிஸ்தவர்களும் இந்துக்களும் மோதிக்கொண்ட, தமிழகமே ஆடிப்போய் பார்த்த சுமார் 30 வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வை சிறுவனாக நான் “கிறிஸ்தவ முறைப்படி” அறிந்து வைத்திருந்தேன். சுனாமி நேரத்தில் நான் குளச்சல் சென்றபோது கண்ட காட்சிகள் உடனடி சேவைகள், மனிதாபிமானம், அவசர உதவி போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

மண்டைக்காடு கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் நிறைந்த இடம். அதாவது கடற்கரையை ஒட்டி வாழும் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சுனாமி தாக்காத (அல்லது பெரும் பாதிப்பு எற்படுத்தாத பகுதியில் இந்துக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்). இவ்விதமாகவே குளச்சலிலும், கடற்கரையை ஒட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், சாலையைக் கடந்து இசுலாமியர்களும் வாழ்ந்துவருகிறார்கள்.

பெரும் பாதிப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கே. பிணங்களில் பெரும்பாலானவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களுடையதே. எனினும் மேற்குறிப்பிட்ட இடங்களில் காக்கி உடையுடன் ஆர். எஸ். எஸ் தொண்டர்களும், தாடி வைத்த இசுலாமிய இளைஞர்களும் களத்தில் பம்பரமாக சுழன்று பிணங்களைப் பொறுக்கி, மீட்க வேண்டியவர்களை மீட்டது உண்மை. கிரிஸ்தவ அமைப்புகள் இவர்களை சற்றேனும் அங்கீகரித்ததா என்பது ஒரு பெரிய கேள்வி.

கிறிஸ்தவ நிறுவனங்களால் வெகு சுலபமாக பணம் திரட்ட இயலும். அவை அதை மிகவும் நேர்த்தியாக செய்ய வேண்டிய அனைத்து அமைப்பு முறைகளும் கொண்டிருக்கின்றன. பணம் சென்று சேரவேண்டிய வழிகளும் அவ்விதமாகவே அமைப்பு ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் எனும் ஒற்றைப்படையான செய்திகள் எங்கும் எடுத்துச் செல்லப்பட்டன. விளைவாக சி எஸ் ஐ பெற்றுக்கொண்ட பணம், கத்தோலிக்கர்களுக்கு சென்று சேரவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து தங்களுக்குள்ளே பங்கு போட்டுக்கொண்டனர். முற்றிலும் சி எஸ் ஐ ன் பங்களிப்பு இல்லை என நான் கூற மாட்டேன்.

எந்தவிதமான இயற்கை பேரழிவுகளிலும் நிவாரணம் கொடுக்கப்படவேண்டிய முறைகள் உண்டு. நிவாரணம் கொடுப்பதில் தவறுகள் நேர்ந்தால் அவை பேரழிவுகள் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. நான் மதிக்கும் மீனவ மக்கள், எனது வாழ்நாளில் ஒருபோதும் கையேந்தியிராதவர்களின் தன்மானம் யாவற்றையும் அவர்களுக்கு உரிமையான நிவாரணம் கொடுக்கப்பட்ட விதம் மாற்றியமைத்தது. எனினும் அம்மக்கள் உறுதியுடன் அவைகளை எதிற்கொண்ட விதம் மிகப்பெரிய அற்புதமே.

நிவாரணம் கொடுப்பவர் எப்பொழுதும் நிவாரணம் பெருபவரை விட உயர்ந்தவர் அல்லர். நிவாரணம் கொடுப்பவர் அது தன் மேல் விழுந்த கடமை என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். எந்த வகையிலும் நிவாரணம் பெருபவரின் நம்பிக்கையையோ (நீ கத்தோலிக்கனாய் இருப்பதினால் தான் பிரச்சனை வந்தது நீ பெந்தேகோஸ்த்தேவாக மாறிவிடு, இரட்சிக்கப்படு என்று சொல்லுவதோ), வாழ்க்கை முறையையோ (நீங்க கடலுக்கு அருகாமையில இருந்ததாலதான் இந்த பிரச்சனை வந்தது இல்லாட்டி இது வந்திருக்காது என அதிமேதாவியாக கூறுவதோ) குறை கூறுவது மிகவும் தவறு.

அது போலவே நாங்கள் தான் உதவி செய்தோம் பிறர் ஒருவரும் உதவி செய்யவில்லை என்பது மிகப்பெரிய மோசடி. அது வெறும் ஒரு விளம்பர தந்திரம் என்பது வெளிப்படை. கிறிஸ்துவின் இரத்தம் விலைக்கு வாங்கி தெளிக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக தன்னையே கொடுத்தது மானுடத்தை மீட்டுக்கொண்ட ஒன்று அது. கிறிஸ்தவர்கள் அதையே பின்பற்றுவார்களாக.

Rev. Godson Samuel

Contact: palmyra_project@yahoo.com malargodson@gmail.com

09702567603

மனிதர்களைப் பிடித்தல்

ஏப்ரல் 7, 2010

பொதுவாக திறந்த கல்லறை, மகதலேனா மரியாள், கல்லறைக்குச் சென்ற சீஷர்கள் மற்றும் தேவதூதர்கள் போன்றவற்றையே மையமாகக் கொண்டு ஈஸ்டர் செய்தி அளிக்கப்படும். எனினும்  உயித்தெழுந்த ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது மூன்றாம் தரிசனத்தை மையப்படுத்தி எனது ஈஸ்டர் செய்தியை ஆயத்தப்படுத்தியபோது திருச்சபையின் சிறுவர்கள் ஈஸ்டருக்கு ஒரு ஸ்கிட் சொல்லித்தாங்க பாஸ்டர் என கேட்டார்கள். எனது திருச்சபை சிறுவர்கள் வாலிபர்களைவிட ஒருபடி மேல். சும்மா புகுந்து விளையாடுவார்கள். எனக்கும் அவர்கள் ஒரு குறு நாடகமிட்டால் எனது செய்திக்கு வசதியாக இருக்கும் என எண்ணி நெட்டில் பார்த்த ஒரு நாடகத்தை உள்வாங்கி எனக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தேன்.

இதை உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. சீஷர்களின் பெயர்கள்  பயிற்சிக்கு வேண்டி மட்டுமே. எந்த முன்னுரையும் அற்று நாம் இதைத் துவங்கும்போது க்ளைமாக்ஸ் பெருத்த வரவேற்பைப் பெறும்.

தண்டு வலித்தல்…

நாத்தான்வேல்: ஏலேலோ……

 இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நின்றபின் பேதுரு: சரி! வலையப் போடுவோமா?

தோமா: இரு! இரு! இரு! பேதுரு என்ன அவசரப்படுற? மொதல நாம வந்திருக்க இடத்ததப் பார்!

ஆழ்ந்த அமைதி,

ஆழமான கடல்

அசைந்தாடும் படகு

அழகிய நட்சத்திரம்….

பேதுரு: வாய வச்சிட்டு சும்மா இருப்பியா? மீனு பிடிக்க வந்தா மீன பிடி…. உனக்கெல்லாம் மீன் பிடிக்கிறதப்பத்தி என்ன தெரியும்? நான் பிறவியிலேயே ஒரு மீனவன். எங்க… எப்படி… எப்போ… யாரோட… அது ஒரு கலை…. சரி வாங்க!

வலையை எடுத்து வீசுதல்

பேதுரு: எப்படி இருக்கு?

 தோமா: (முதுகைப் பிடித்துக்கொண்டு) முடியல…

 வலையை இழுக்குதல்

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

யாக்கோபு: என்ன தண்ணிய தான் இவ்வளவு நேரம் இழுத்துட்டு இருந்தோமா?

யோவான்: சே! காத்து கூட வருது

சீஷன் 1: என்ன சொல்றீங்க? மீன் முள்ளு கூட கெடக்குது!

சீஷன் 2: அப்போ… இண்ணைக்கு சூப்பு மாத்திரம் தானா?

தோமா: சே ஒண்ணுமில்லயே…

பேதுரு: உன்னயெல்லாம் குட்டீட்டு வந்தேன் பாரு, என்னயெல்லாம் பிஞ்சுபோன செருப்பால அடிக்கணும்?

தோமா: (சீஷர்களுக்குளாக)பிஞ்சுபோன வல, இத்துப்போன போட்டு, இவனெல்லாம் மீன் பிடிக்கிறவன்?

பேதுரு: என்ன சொல்லுற?

தோமா: ஒண்ணுமில்ல…உங்க தெறமைய சொன்னேன்

சீஷன் 1: ஆமண்ணே! உங்கள புகழ்ந்து தள்ளுறாரு.

பேதுரு: அது கெடக்கட்டும்! இப்போ நாம வலைய போடணும்னா, எல்லாருமே ஒரேமாதிரி வீசணும். அப்போதான் மீன் கிடைக்கும்.

தோமா: ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்….

பேதுரு: நீந்தத்தெரியுமாண்ணா … தண்ணீல பிடிச்சி தள்ளீருவேன்…. எல்லாரும் வாங்க…

வலையை வீசுதல்

பேதுரு: ஹ ஹ ஹ ஹா. இப்படி போடணும்! இப்போ பார்

தோமா: என்னவோ மீன் முள்ளாவது கெடச்சா சரி

பேதுரு: நீ ஒரு சந்தேக புத்திக்காரன். உன்னையும் கூட்டீற்று வந்தேனே சரி இழு.

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

வலையை இழுத்துப் பார்த்து ஒன்றுமில்லை என அறிந்துகொள்ளுதல்.

நாத்தான்வேல்: ( உடனிருப்பவர்களிடம்) சரி வாங்க சாய குடிப்போம்…

தோமா: நான் சந்தேகப்பட்டது செரியாத்தான் இருக்கு….

பேதுரு: அமைதியாயிரு தோமா… கரையில ஏதோ சத்தம் கேட்குது.

தோமா: ஆமா இல்ல?

பேதுரு: ஆமாவா இல்லியா?

தோமா: இல்ல… கேட்குது யாரோ நம்மகிட்ட ஏதோ சொல்லுராங்க….

பேதுருவும் தோமாவும் : (சத்தமாக எதிரொலியைக் கருத்தில் கொண்டு) என்ன… சொல்றீங்கா….

 தோமா: மீனு… கெடச்சுதா….

பேதுரு : அது எப்படி உன்னைப்போலவே ஒருத்தர் சந்தேகத்தோட அங்க இருக்கிறார்?

பேதுருவும் தோமாவும்:  இல்ல…..

பேதுருவும் தோமாவும்: (சத்தமாக எதிரொலியைக் கருத்தில் கொண்டு) என்னா?…

 தோமா: வாலை …தூக்கி. பின்ன…. போடுங்க…என்ன சொல்றாரு இவரு? உனக்கு வால் இருக்கா என்ன?

பேதுரு: இரு கவனமா கேட்போம்….

பேதுருவும் தோமாவும்: (ஒருவரை ஒருவர் பார்த்து) ஒகே… வலது ….புறமாக.. போடுங்க…

தோமா: இப்ப சரி, வலது புறமா போடுங்கண்ணு சொல்றார்.

பேதுரு: எனக்கு ஒரு யோசனை….

தோமா: என்னது?

பேதுரு: நாம வலதுபுறமா வலைய போட்டா என்ன?

தோமா: இது உன்னுடைய யோசனை இல்லை. அவருடையது

பேதுரு:  எல்லாரும் வாங்க இப்படி… சரி வீசுங்க 

 வலையை வீசுதல்

அனைவருமாக விழுவது, கஷ்டப்பட்டு இழுப்பது…

நாத்தான்வேல்: ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள்: ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள் : ஐலசா….

நாத்தான்வேல்:ஏலேலோ……

இயேசுவின் சீஷர்கள் : ஐலசா….

மீன்களைப் பார்த்தவுடனே….

யாக்கோபு: ஓஓஓ மீனு மீனு

யோவான்: சுறுமா, பாம்பிலேட்டு, ஜிங்கா எல்லாம் இருக்கே!

சீஷன் 1: இண்ணைக்கு ஃபிஷ் தந்தூரியே அடிக்கலாம்

சீஷன் 2: மீன பிடிக்குமுன்னாலசெவுள சுடுகதுக்கு நிக்காத கேட்டியா?

பேதுரு: ஆமா… யாரு நமக்கு வலைய வலதுபுறமாப் போடச் சொன்னது:

தோமா: ஒரே புகையா இருக்கு… ஒருவேளை ஆவி கீவி வந்திருக்குமோ…

யோவான்: பொகை மாத்திரம் இல்ல… தீ எரியுது பாருங்க…

யாக்கோபு: ஆமா மீன சுடுற வாசன் வருதுல்லா….

சீஷன்1: யாரோ ஒருத்தர் மீன் சுடுறாங்கபோல இருக்கு

சீஷன் 2: ஆமா அங்கியோட ஒருத்தர் குத்தவச்சு இருக்கிறாரு

 பேதுரு: அது நம்ம ஆண்டவரா?

சீஷர்கள்: ஆமா! இயேசுவேதான்…. அவர் உயிர்த்தெழுந்தார்… அல்லேலூயா.

Contact: Rev. Godson Samuel (Mumbai)

palmyra_project@yahoo.com malargodson@rediffmail.com

09702567603

கால்களைப் பிடித்த இயேசுவின் கரங்கள்

ஏப்ரல் 1, 2010

கால்கள் எப்பொழுதுமே முதன்மை கவனம் பெறுவது இல்லை. அவைகளால் நாம் சிந்திக்க மறுப்பதினாலும், அவைகள் உழைப்போடு தொடர்புடையன என்பதாலும் ஓய்வை விரும்பும் மனம் கால்களை மறந்துவிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கால்களை அவதானிப்பதற்கு தகுந்த நேரம் வரவேண்டும் என்பதை “கலைமானும் வேடனும்” கதை மூலமாக நமக்கு சிறு பிராயத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், மிகப்பெரிய சத்தியங்களை மட்டுமே நீதிக்கதைகள் மூலமாக தேடுகின்ற நமது சிறு புத்தி கால்களை விட்டு விட்டு கதையின் நீதி நோக்கி அவசரமாக தாவுகிறது.

கால்களை மாத்திரம் மையப்படுத்தி, நமது சிந்தனைகளை நடை பயில அனுமதித்தோமென்றால் நாம் செல்லும் இடத்திற்கு அது நம்மை வழுவாதவாறு வழிநடத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையே! இந்த பயணமானது புனிதமானதும் கூட என்பதையே “பெரிய வியாழன்” என அழைக்கப்பெறும் “வியாகுல வியாழனின்” விரைந்த செய்தியாகும். சடங்குகளைக் கடந்து நாம் நடக்கும் தோறும் புதிய பல சிந்தனைகளில் உலாவி ஆழ்ந்த அர்த்தங்களைக் கண்டடையமுடியும்.

இரண்டு முக்கிய சடங்குகள் ஏற்பட்ட ஒரு புனிதமான நாளாக பெரிய வியாழன் காணப்படுகிறது. இரண்டுமே கால்களின் ஒத்திசைவைப் போல நமது ஆன்மீக வழித்துணைக்கு இன்றியமையாதவை. ஒன்று நம்மை நாம் தாழ்த்துவது மற்றொன்று நம்மை நாமே பகிர்ந்தளிப்பது.

கால்களைக் குறித்து பேசும் போது ஒருபோதும் கரங்களை நாம் மறந்துவிடலாகாது. கால்களுக்கு ஒத்தே அவை பணி செய்கின்றன. பல வேளைகளில் கால்கள் ஓய்வெடுக்கும்பொழுது கரங்கள் பணிவிடி செய்கின்றன. இங்கு சீடர்களின் கால்களுக்கு இயேசுவின் கரங்கள் பணிவிடைசெய்வதே அதி முக்கிய நிகழ்வாகும்.

கால்களின் முக்கியத்துவம், கரங்கள் அதன்மீது ஸ்பரிசிக்கும் நேரமே அன்றி பிரிதொன்றில்லை. கிறிஸ்துவின் கரங்கள் சீடர்களின் கால்களைப் பிடித்தது அவைகளைக் கழுவுவதற்கு தான் என்றாலும், அவர் கால்களைப் பிடித்தார் என்பதே நம்மை இன்றும் அவர்பால் இழுக்கும் விசையாகும். கால்களைக் கழுவுவது வெறும் சடங்கு என்றாகிவிட்ட சூழ்நிலையில் இயேசு கால்களைப் பிடிப்பது முக்கியமான ஒரு திருப்பமாக எனக்குப் படுகிறது.

நீண்ட பயணத்தில் கால்நடையாக வந்தவர்களுக்கு கண்டிப்பாக களைப்பு ஏற்படுவது உறுதி. கரங்களில் ஏதேனும் சுமந்து வரவில்லையெனில் பயணம் முழுவதும் கரங்கள் ஓய்வையே அனுபவித்திருக்கும். எனில் கரங்கள் கால்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய அவசியமும் அவசரமும் பயணம் முடித்தபின் ஏற்படுவதைக் கண்டுகொள்ள முடிகிறது.

யூதர்களின் வாழ்வில் கடும் பயணம் செய்து வரும் ஒருவரை கால்களைக் கழுவி வரவேற்பதே முறையானது. இளைப்படைந்த கால்களை மதித்து அன்புடன் கரங்கள் செய்யும் சேவை மிக்க கடமையுணர்வை காண்பிப்பது. விருந்தோம்பலின் ஆரம்ப படிநிலையாகக் காணப்படும் இவற்றிற்கு இயேசு இட்ட பாதை சீடர்களை மாத்திரமல்ல நம்மனைவரையும் எதிர்நோக்கியிருக்கும் வழிப்போக்கனைப் போல் தேடலுடன் பயணிக்கின்றன. எனினும் இன்று ஆளரவமற்ற ஒரு ஒற்றையடிப் பாதையாகவே இன்று கால்களைக் கரங்கள் பற்றுவது காட்சியளிக்கின்றது.

இயேசு கால்களைப் பிடித்தார் எனும் வார்த்தை திரு விவிலியத்தில் கூறப்படாததால் அவர் கால்களைப் பிடிக்கவில்லை என்றும் அவர் கரங்கள் சேவை செய்ய மறுத்தன என்றும் நாம் வாதிட முடியாது. அவர் கரங்களின் தழும்புகளைப் போன்றே நமது களைப்பை மாற்றும் திறன் அவர் கரங்களுக்கு உண்டு.

ஒருவேளை நாமும் கால்களைப் பிடிக்க ஆயத்தமானால் அது ஒருவரை ஒருவர் தாங்கும், வழித்துணையாயிருக்கும் என்பதையே இயேசு குறிப்பிடுகிறார். ஆம் இரண்டு சாக்கிரமந்துகளும் நமது ஆன்மீக பயணத்தில் இன்றியமையாதவை.

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள palmyra_project@yahoo.com

09702567603


%d bloggers like this: