Archive for செப்ரெம்பர், 2010

பத்தில் ஒரு பங்கு – பாகம் 4

செப்ரெம்பர் 23, 2010

 

[தயைகூர்ந்து  இணைச்சட்டம் 26 ஐ படியுங்கள் ]

எனது தந்தை தனது செய்தியில் மல்கியா 3.10 ஐ குறிப்பிட்டிருப்பதை என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த ஒரு பகுதி அது. கடவுளுக்குரியதை நாம் கொடுத்துவிட்டால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்ற ஒரு எளிய புரிதலே  என் தந்தையின் மூலமாக எனக்கு கிடைத்தது. தற்பொழுது நானே ஒரு போதகராக இருக்கும் சமயத்தில், தசமபாகம் நிகழ்த்தும் அற்புதத்தை என்னால் நன்கு உணர முடிகிறது.

‘தசமபாகம்’ எனும் சொல் மக்களை  ஒரு மந்திரச்சொல் போல கட்டுப்படுத்துகிறது. எவருமே எதிர் கேள்வி எழுப்புவதில்லை, தர இயலாவிட்டாலும்,  மனமற்றாலும் கூட. உண்மையில் ‘தசமபாகம்’ என்பது ஒரு எளிய கணக்கு. இத்தனைக் குடும்பத்திலிருந்து தசமபாகம் வந்தால் இவ்வளவு பணம் சேரும். ஆகவே அனைவருமே வரவை உறுதி செய்யும் ஊற்றை தடை செய்யும் எண்ணத்துடன் இருப்பதில்லை.

மலாக்கி 3. 10

‘என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப்  பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள், அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்குகிறேனா இல்லையா எனப் பாருங்கள்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.

எனது எளிய புரிதலின்படி கடவுள் தங்கும் இடம் என்பதையே இல்லம் என இவ்வாக்கியம் குறிப்பிடுகிறது. கடவுளின் இல்லத்தில் ஏன் உணவு நிரம்ப வேண்டும் என்ற கேள்வியிலிருந்து துவங்கி இவ்வாக்கியத்தை நாம் தொடர்வோமென்று சொன்னால் நம்மால் ஒரு உண்மையை கண்டடைய இயலும்.

   
 
 
 
     

தங்களது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு மீண்டுமாக எருசலேம் நகரில் வந்த மக்கள் ஆண்டவர் அளித்த இல்லத்தில் அவரது விருப்பத்திற்கு மாறாக நடப்பதையே இப்பகுதி விளக்குகிறது. ஒரு வகையில் இது குருக்களுக்கு இடப்பட்ட கட்டளையாயிருந்தாலும் [மலாக்கி 2. 1], மக்கள் தவறிளைத்திருந்தாலும் இதன் பின்னணியில் தொக்கி நிற்கும் கேள்விகள் ஏராளம் உண்டு. அவ்விதமாகவே பதில்களும்.

1. தசமபாகம் 3 வருடத்திற்கு ஒரு முறை என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

‘பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர்’

 கூடவே அது மூன்றாம் ஆண்டின் விளைச்சல் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இதை நாம் சுருக்கி மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்றோ, ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்றோ புரிந்து கொள்ளுவது தவறாகிவிடும்.

2. பத்திலொரு பங்கையும் குருவிடம் கொடுப்பதே மரபாக இருந்திருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். எனில் இவை யாவற்றையும் தூய்மையான பலி பீடத்தில் வைத்து பிற்பாடு கருவூலத்தில் சேர்ப்பதே குரு மரபினரின் பணியாக அமைந்திருக்கிறது.

3.  கருவூலத்தில் சேர்க்கப்பட்டவைகள் யாவும் எளியவரைச் சென்றடைய வேண்டும் என்பதே இறைவனின் கட்டளையாக காணப்படுகிறது. ஏன் இவ்விதமாக என நாம் கேள்வி எழுப்ப தலைப்படும்பொழுது,

‘7 அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.8 தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.10 எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.11 பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அன்னியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.’

எனும்போது விளைச்சல் சார்ந்த ஒரு கொண்டாட்டமாகவே பத்திலொரு பங்கு தேவை நிறைந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதும், கடவுள் தங்கள் வாழ்விலே நன்மை செய்தபடியால் தாங்களும் அவரைப்போல் நன்மைசெய்பவராக காணப்படவேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்பதும் புலனாகின்றது.

மலாக்கி எனும் பெயரே தூதன் அல்லது அனுப்பப்பட்டவன் என அர்த்தம் பெறுகிறது. வேத விற்பன்னர்கள் மலாக்கி குரு மரபைச் சார்ந்த ஒருவராக இருக்கலாம் என கருதுகின்றனர். தனக்காடுத்தவர்கள் தவறிளைப்பதை அருகிலிருந்து அவதானித்த ஒருவர், தனது கரத்தில் கிடைக்கப்பெற்ற இணைச் சட்டத்திற்கு புறம்பாய் குருமரபினர் வழி தவறி செல்வதை கண்டுணர்ந்து மனம் பதைத்து எழுதியன போலவே உள்ளன.

இப்படி இருக்கும் பட்சத்தில், இன்று நமது திருச்சபைகளில் வாங்கப்படும் பத்திலொரு பங்கு போதகருக்கும் [திருப்பணிவிடை செய்பவருக்கும் – கோயில் பிள்ளை அல்லது கோயில் குட்டி எனப்படுபவருக்கும்] அன்னியருக்கும் [இந்துக்கள், இசுலாமியர் ஆலயத்திற்கு வராதவர்கள்] அனாதைகளுக்கும் [அகதிகள் மற்றும் கைதிகள்] விதவைகள் [ ஒருவேளை பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருபவருக்கும் கூட] சரிவிகிதமாக பங்கிடப்படவேண்டியிருக்கும்.

’13 அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.

14 எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை: தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை: இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.

15 நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக’

அழிந்து போகும் எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நிறைந்த இந்த உலகத்தில் அருகிலிருக்கும் இந்த எளிய உயிர்களை கவனிக்க ‘தசமபாகம்’ செலுத்தும் மக்களுக்கும் நேரமில்லை அதை அறிவுறுத்தும் போதகர்களுக்கும் அக்கரையில்லை.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள

09702567603

இறைவேண்டல் கோப்பை

செப்ரெம்பர் 14, 2010

மீரா ரோடு திருச்சபையின் பதினோராவது ஆண்டை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு இந்த வருடம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். திருச்சபை கட்டுமான பணியினை முன்னிட்டு இறை வேண்டல் கோப்பையை அறிமுகப்படுத்துகிறோம்.

இறை வேண்டல் கோப்பையானது மாயம் மந்திரம் அற்றது என முதலிலேயே சொல்லிக்கொள்ளுகிறேன். திரித்துவ கடவுளை முன்னிறுத்தும் ஒரு அழகிய இறை வேண்டலை தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறித்திருக்கிறோம். என்நேரமும் வாசித்து இறையாசி பெறும்படியான அந்த மன்றாட்டு இதோ.

 அன்புள்ள ஆண்டவரே

 உமது கட்டளைகளைக் கைகொள்ளும்

 தாகத்தை எனக்குப் புகட்டும்.

உமது வாழ்வு தரும் தண்ணீரால்

என் தாகம் தணியச் செய்யும்.

பேரன்பு, இரக்கம் மற்றும் அகமகிழ்வு

என்னில் நிரம்பி வழியட்டும்.

அறிவுக்கு எட்டாத உமது அமைதி

பிறரை நிரப்பும்படியாய்

தூய ஆவியை எனக்கு அருளும்

ஆமென்.

இறை வேண்டல் கிறிஸ்தவத்தின் மிக முக்கிய கடமை ஆனபடியால் ஒவ்வொருவரும் வாங்கி பயன்பெற அழைக்கிறோம். ஜெபிக்க – இறைவேண்டல் செய்யப் பழகும் சிறுவருக்கும், மறந்துவிடும் வாலிபருக்கும் இது மிகவும் உபயோகமானது. திருமணம் போன்ற விசேஷித்த நேரங்களுக்கும் நண்பர்களுக்கு பரிசளிக்க எற்றது.

அழகிய இந்த மன்றாட்டு கோப்பைகள் 6 எண்ணிக்கை நிறைத்து ஒரு காகிதப் பையில் இட்டு விரும்புபவர்களுக்கு கொடுக்கிறோம். ரூ600 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறீர்கள்.

உங்களது கொடைகள் யாவும் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, மீரா ரோடு – என்ற வங்கிக் கணக்கிற்கு காசோலையாக அனுப்பவும். அல்லது பணமாக எனது முகவரிக்கு பணவிடையாக அனுப்பவும்.

இந்த எளிய கட்டுமான பணியில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்
அருட்திரு காட்சன் சாமுவேல்

காகத்தின் துணிச்சல்

செப்ரெம்பர் 11, 2010

அன்பு பிள்ளைகளே காக்கா செய்த ஒரு மிகப்பெரிய காரியத்தை இண்ணைக்கு நாம பார்க்க இருக்கிரோம்.

ஒரு ஊர்ல ஒரு தாத்தா இருந்தாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. ஆனா பூமில இருந்த ஆட்கள் எல்லாம் தப்பு பண்ணுனத ஆண்டவர் பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க. சரி, தப்பு பண்ணவங்கள திருத்த  ஆண்டவர் ஒரு திட்டம் செய்தாங்க.

ஆமா அங்கிள், இது நோவா தாத்தா கதை தானே… இது எங்களுக்கு தெரியுமே… அம்மா சொல்லிதந்திருக்காங்க, பாட்டி சொல்லி தந்திருக்காங்கண்ணு சொல்லுரீங்களா/ வெயிட்… கதையில ஒரு மாறுதல் இருக்கு…

பேழை அரராத் மலையில தங்கியிருந்தது. நோவா தாத்தா பேழை ஜன்னல திறந்து பார்த்தாங்க. தூரத்துல ஒரு மலையோட சிகரம் தெரிஞ்சுது, ஆனா எல்லாரும் எறங்க முடியுமாண்ணு அவருக்கு தெரியல. தண்ணி இருந்துதுண்ணா என்ன பண்றது/

சரி ஒவ்வொருத்தரா கேட்டு பார்ப்போம்னு…

வாத்துகிட்ட போனாங்க… நீ தண்ணீலயும் தரையிலேயும் போகமுடியுமில்லயா எனக்காக வெளியே போய் பார்த்து வருவியா/

ஒரு வேள தண்ணீ வத்தாம இருந்தா என்ன பண்றது என்று வாத்து கவலையோட கேட்டுது.

அதுவும் சரிதான், சரி நல்லா உயரமா பறக்குற பருந்துகிட்ட கேட்போம்ணு தாத்தா போனாங்க.

எனக்கு நீங்க உயர்ந்த இடத்துல கூடு கட்ட அனுமதிக்கல்ல… எல்லாரையும்போல என்ன இங்க வச்சுருக்கீங்க. என்னால் உங்க பேச்செல்லாம் கேட்க முடியாதுண்ணு சொல்லிடுச்சி.

குயிலே நீ போய பாத்து வந்துடேன். உன் சத்தத்தால எல்லரும் சந்தோஷப்படுவாங்களே/

நானே சோகமா இருக்கிரேன் எனக்கிட்ட வந்து சொல்ரீங்களே தாத்தா/

கிளியே… உன்னால பேச முடியும். என்ன நடந்திருக்குண்ணு பார்த்து வந்து சொல்லேன்.

அது தான் வெளியெ பேச்சுத் துணைக்கு ஆள் இல்லியே. நான் எனக்க ஃபிறண்ஸோட இங்கத்தான் இருப்பேன்.

மயில் சொல்லிச்சி, நம்மால எல்லாம்  மழை வருதுண்ணு சொல்லத்தான் முடியும். அதுக்கு அப்புறம் உள்ளதெல்லாம் என்னோட வேல இல்ல.

தாத்தா நொந்து போயிட்டாரு.

சரி புறாவை கேட்போமுண்ணு …..    கேட்டா…

யாரையாவது முதல்ல அனுப்புங்க அப்புறமா நான் போறேன்.

இப்போ தைரியமான ஒரு ஆள் தனக்கு தேவை அப்டீண்ணு தாத்தா புரிஞ்சிக்கிட்டாரு.

தாத்தா நல்லா யோசிச்சாங்க.

கண்ண மூடி அவர் ஜெபிக்க ஆரம்பிச்சாரு. ஆண்டவர் அவர்கிட்ட நீ ஏன் காகத்துகிட்ட உதவி கேட்கக்கூடாது/ என்று சொன்னார்.

அந்த நேரம் தாத்தா கிட்ட காக்கா தத்தி தத்தி வந்துது.

ஏன் தாத்தா சோகமா இருக்கீங்க/ ஏதாவது உதவி வேணுமா/

கருப்பா இருந்த  காகத்தப் பாத்து தாத்தா யோசிச்சாரு. இது அசுத்தமான பறவையில்லையா/ இவ்வளவு பெரிய பேழையில தங்கியிருக்கிறவங்க இந்த காகத்தாலையா விடுதலை/ ஆண்டவர் சொன்னா சரிதான்…..

தாத்தா விஷயத்த சொன்னாரு

இவ்வளவுதானா… இதோ நான் போரேண்ணு சொல்லி காக்கா கிளம்பிடிச்சி.

வெளியே வந்து பார்த்தா…. தண்ணியா இருக்கு. தண்ணி மேலே என்னவெல்லாமோ மிதக்குது.

 உலகமே இப்போ சுத்தப்படுத்தபட்வேண்டிய நேரம் என்பது காக்காவுக்கு தெரிஞ்சுது. ஒரு நொடி தாமதிக்காம அது தனக்க கடமய செய்ய ஆரம்பிச்சிடுச்சி.

தண்ணி சரியா வத்துறது வரைக்கும் தாத்தா காக்காவ கவனிச்சுட்டே இருந்தார். தாத்தாவுக்கு புரிஞ்சிடிச்சி. கடவுள் ஏன் காக்காவ தெரிந்து கொண்டிருக்கிறாறுண்ணு.

காகத்துக்கு நல்ல தைரியம் உண்டு. அது புத்திசாலி கூட. எந்த பிரச்சனைவந்தாலும் சாமர்த்தியமா தப்பிச்சிடும். குப்பைகள மாற்றி சுத்தப்படுத்தும் குணம் கூட அதற்கு உண்டே ….

இவ்வளவு சுறு சுறுப்பான ஒரு பறவய நான் பாத்ததே இல்லண்ணு சொல்லி அதை பலுகி பெருக ஆசீர்வதித்தார். அதுனாலதான் இண்ணைக்கு உலகம் முழுவதும் எந்த நாட்டுக்குப்போனாலும் நம்மல அங்க காக்காவ பாக்க முடியுது, அதுவும் கூட்டம் கூட்டமாக.

சரி அங்கிள், இந்த கதைக்கு நீதியெல்லாம் கிடையாதா/ அப்டீண்ணு ஒரு தங்கச்சி கேட்கிறது புரியுது. வெயிட்… இதோ உங்களுக்காக….

1. முதன்மையாவதற்கு நிறம் ஒரு தடையில்லை

2. நாம் முதன்மையானவனா/முதன்மையானவளா என்பதை ஆண்டவரே தெரிவு செய்வார், மனிதர் அல்ல

3. பெரிய யானையின் விடுதலை எளிய சிறகில் கூட இருக்கலாம்

4. தைரியமிருந்தால் மட்டுமே நாம் பயனுள்ளவர்களாக முடியும்

அன்புடன்

பாஸ்டர் அங்கிள்

palmyra_project@yahoo.com malargodson@rediffmail.com

09702567603


%d bloggers like this: