Archive for ஒக்ரோபர், 2012

போ அல்லது (பணம்) அனுப்பு – பாகம் 3

ஒக்ரோபர் 12, 2012

மத்தேயு ஒரு திட்டமிட்ட வரைவையே நம்முன் வைத்திருக்கிறார். ஊழியத்தைக் குறித்த பார்வையை அவர் படைத்திருக்கும் விதமும் அதையே சுட்டுகிறது. ஊழியம் செய்வோர் என தங்களை அறிவித்துக் கொள்வோர் அனைவரும் ஆண்டவரின்அன்புக்கு பாத்திரராகமாட்டார் என்பதை அன்றைய சூழலை வைத்து இயேசு குறிப்பிடுவதை மத்தேயு உரக்கவே  அடிக்கோடிடுகிறார். “வேதபாரகரும் பரிசேயரும் மோசேயுனுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்” (மத் 23: 2) என துவங்கும் அதிகாரம் வெளிவேடமிடுவோரை துகிலுரித்துக்காட்டும் திருமைறைப் பகுதி என்பதையும் அதை இன்றைய சூழலில் வைத்து பொருள் கொள்ள விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் மறந்துவிடலாகாது.

இக்கூற்றுகளினூடே அவர் வெளிப்படுத்தும் ஒரு பேருண்மையே நமக்கு எச்சரிக்கை மணியை உரத்துக் கூறுகிறது “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாகும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றி வருகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானான போது, அவனை உங்களிலும்  இரட்டிபாய் நகரத்தின் மகனாக்குகிறீர்கள்”. இதுவே இயேசு கண்ட உண்மையாகும். அதை அவர் வெளிப்படையாக கூறியது அவரை சிலுவையை சுமக்கச் செய்தது, இதையே நாம் சொல்ல மறுத்து நமக்கான சிலுவையை எடுக்கத் தவறிவிடுகிறோம்.

மத்தேயு 16ம் ஆதிகாரத்தில் அவர் இதை தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒருவன் என்னை பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். …. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? இவை யாவையும் அவர் தமது சீஷர்களை நேக்கி கூறியது  என்பதாய் மத்தேயு குறிப்பிடுவதே நம்மை உரசிப்பார்க்கும் உரை கல்லாக காணப்படுகிறது. முழுமையான அற்பணிப்பு அற்ற எந்த காணிக்கையும் பணமும் உலகத்தை ஆதாயப்படுத்த உதவினாலும் நமது ஆத்துமாவிற்கு அது பெரிய நஷ்டமே என இயேசு கூறுகிறார்.

தமது பாடுகளுக்கு முன்பதாக அதை தமது சீடர்களிடம் அவர் பகிர்ந்துகொள்ளும்போது பேதுரு அவரைக் தனியே அழைத்துச் சென்று கடிந்துகொள்ளுகிறான். இயேசுவோ அவனைப் பார்த்து பகிரங்கமாக “அப்பாலே போ சாத்தானே” என கூறுகிறார்.மேலும் அவர் “நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய்” என கூறுவதை காணும் போது, நமக்கு ஒரு எச்சரிப்பின் சத்தம் கேட்கவில்லையா. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து மன்றாடுவது சுகம் அனுபவிக்க அல்ல மாறாக சிலுவை சுமக்கும் மன திடத்தைப் பெறவே என்பது நமக்கு புரியாமல் போய்விட்டது.  சாத்தான் என்பது சோதனைக்காரன் தானே. மனிதன் கடவுளின் சித்தத்தை மாற்றும்போது அவன் சாத்தானாக மாறுவதை இயேசு சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டோமென்றால் இழப்பு யாருக்கு?

இறுதி கட்டளைப் போலவே இறுதி உவமையும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா. இயேசு குறிப்பிடும் தாலந்து உவமை யாருக்காக கூறப்பட்டது என்பதை வெளிப்படுத்தாததால் அதை அனைவருக்கும் பொதுவான ஒன்றாக அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிகமும் குறைவுமாக கொடுக்கப்பட்டவர்கள் யாவரும் அதை பெருக்கவே முயற்சி செய்வதையும் செய்யத்தவறிய ஒரு தாலந்து பெற்றவன் புறம்பான இருளிலே போடப்படுவான் என்பதும் எத்துணை ஆழ்ந்த அவதானிப்பைக் கோருகின்ற ஒன்று? நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பங்கு ஒரு தாலந்து தான் என வைத்துக்கொண்டாலும் ஆண்டவரது பார்வையில் 5 தாலந்து பெற்றவனும் “கொஞ்சத்தில்” தான் உண்மையாயிருந்தான் என்பதாக கூறப்பட்டுள்ளதே ஒழியே எவருக்கும் அவர் அதிகமாக கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறதல்லவா?

தாலந்துகளின் உவமை மூலம் மத்தேயு நம்மை ஊழியம் செய்வதில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறார். அதை புதைத்து வைக்காமல் அனைவரும் தத்தமது பங்களிப்பை கொடுப்பது இன்றியமையாதது என்பதை இயேசு அறிவுறுத்துவதை மத்தேயு எடுத்தாள்கிறார். உலகமெங்கும் போவதற்கு அழைப்பு பொதுவானது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எந்த ஒரு உபாயமும் தண்டனைக்குரியது என்பதே மத்தேயு இறுதியாக குறிப்பிடுகிறார்.

 

பேராசிரியர் மாமன் வர்கி அவர்களை நான் சந்தித்த பொழுது அவர் இதையே  “ ” உலகமெங்கு போய்” என்றவுடன் உலகத்தின் ஏதாவது ஒரு பகுதியை தெரிந்துகொள்ளுவதைவிட நாம் வாழுமிடமே உலகத்தின் ஒரு பகுதி தான் என்பதை உணர்ந்துகொண்டோமென்றால் அதுவே சிறந்த ஊழியத்தின் துவக்கமாயிருக்கும்.”

ஆம்! நாமெல்லாரும் பூமிக்கு உப்பாயிருக்கிறோம். உப்பு அளவோடிருப்பதே அதன் சிறப்பு. நாம் உப்பளமாக மாறத் துவங்கிவிட்டால் பூமி பயனற்றதாய் மாறிவிடும்.

தொடரும்

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

+918108752325

போ அல்லது (பணம்) அனுப்பு – பாகம் 2

ஒக்ரோபர் 10, 2012

இறுதி கட்டளை எவ்விதமாக காட்டமாக பரிசீலிக்கின்றோமோ அது போலவே கன்னி அழைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது. “போ” என்பது “வா” என்ற அன்பின் அழைப்பினைத் தொடர்ந்து வருகின்ற அறைகூவல் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறிவிடக்கூடாது.

இயேசுவின் “ஊழியம்” கலிலேயா கடலோரங்களில் ஆரம்பித்தது என்பதாக மத்தேயு 4 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதற்கான சூழல் யாதெனின் யோவான் காவலிலே வைக்கப்பட்டும் மனம்திரும்பி ஞானஸ்நானம் பெற்ற ஒரு விரியன் பாம்பின் குட்டிகளும் கிளர்ந்து எழவில்லை. யூதருக்குள்ளே யோவானால் மிகப்பெரிய பாதையை செவ்வை செய்ய தடை ஏற்பட்டதனால் சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்தவராக இயேசு யூதர்களை விட்டு விலகி பரலோக ராஜ்ஜியத்திற்கு அனைவரும் ஏற்புடையவர்கள் என்னும் உண்மையை எடுத்துக்கூறும்படியாக புறப்படுகிறார். அவர் கடலோரங்களில் அழைத்தவர்கள் அனைவரும் தங்களுக்கான சொத்துக்களை விட்டுவிட்டு (விற்றுவிட்டு நிதானமாக அல்ல) அவசரமாக   இயேசுவை பின்தொடர்ந்தார்கள்.

இதைத் தொடர்ந்தே இயேசுவின் மலை சொற்பொழிவு மத்தேயுவில் இடம்பெறுகிறது. தமது சீடர்களுடனும் தன்னைப் பின்பற்றிய திரளான ஜனங்களையும் கண்டு அவர் தனது வாயைத் திறந்து விளம்பினவைகள் அனைத்துமே கருணையின் வார்த்தைகள், ஆதரவின் சொற்கள், அரவணைப்பின் மாண்பு வெளிப்படும் தகவுகள்.  பின்பு இவ்விதமாக முத்தாய்ப்பு வைக்கிறார். “இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது” (மத் 5: 18). ஓளி கொடுப்பதை நமக்கு வசதியாக ஒலி எழுப்புவதாக எப்படி மாற்றிக்கொண்டோம்?

 அதைத் தொடர்ந்து அவர், கூறப்பட்ட சட்டங்களை மறு ஆய்வு செய்கிறார். தெளிவான உண்மைகளுடன் அவர் சத்துருக்களை சினேகிக்க கற்றுக்கொடுக்கிறார். மனுஷர் காணவேண்டும் என நாம் செய்வது அனைத்துமே ஆண்டவர் பார்வையில் அருவருப்பாய் இருக்கும் என்பதையும் தனது நீண்ட உரையில் அவர் தொகுத்தளிக்கிறார். மத்தேயு தொகுத்தளித்திருக்கும் இப்பகுதியானாது செறிவுள்ளதும் நம்மை மறு பரிசீலனை செய்ய அழைக்கிறதுமான சவால் மிக்க அழைப்பு. “வா” என அழைக்கும் இப்பகுதியில் நுழையாத எவரும் “போ” என அவரால் அனுப்பப்பட்டிருக்க இயலாது. எனில் யார் தான் ஆண்டவரது காரியமாக போவார்? எங்கே அவர்கள் தங்கள் உழியத்தைச் செய்வார்கள்.?

மத்தேயு 10 ஆம் அதிகாரத்தில் அவர் சீடர்களை அனுப்பும் விதத்தை நாம் கூர்ந்து அவதானிக்காமல் இருக்க முடியாது. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்தில் போங்கள் என்கிறார். அதனால் விளையும் ஆபத்துக்களை முன்கூட்டியே அவர்களுக்கு அறிவுறுத்துபவர் அவர்களை எவ்விதம் செல்லவேண்டும் என போதிக்கிறார். பொன்னையாவது வெள்ளியையாவது ஏன் செம்பைக்கூட உங்கள் கச்சைகளில் எடுத்துச்செல்லவேண்டாம் எனும்போது உண்மையை உணர்ந்து கொண்டவர்களாக கிரெடிட் கார்ட் கலாச்சாரத்தை உள்ளே நுழைக்க முயலுகிறோமா? 

காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார் யார்? அவர்களிடம் இன்று செய்யபடுகிற ஊழியங்கள் எவையாக இருக்கமுடியும் என்று  நாம் என்றேனும் எண்ணிப்பார்த்ததுண்டா? ஒரு பட்டணத்தில் நம்மை ஏற்றுக்கொள்ளாவிடில் மாறுவேடம் பூண்டு அங்கே செல்வதற்கு இயேசு ஒருபோதும் நமக்கு அனுமதியளிக்கவில்லை. மாறாக கால்களிலுள்ள தூசியை உதறிப்போடவே அறிவுறுத்துகிறார். நாமோ அங்கெயே நமக்கொரு கூடாரம் அமைத்து அந்த இடத்தையே மாசுபடுத்த துணிந்துவிடுகிறோம்.

பணம் என்பது இன்றைய திருச்சபைகளிலும் ஊழியங்களிலும் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்திருந்தாலும், நம்மை வழிதப்பவைக்கும் ஒரு சுழல் இதிலே உண்டு. சீடத்துவத்தில் உறுதியாக நின்று நமக்கடுத்தவர்களிடம் பகரும் நமது வாழ்வின் சாட்சியில் காணப்படும் ஆண்டவரின் எதிர்பார்ப்பும் பலனும் பொருளுதவி அனுப்பி நாம் தாங்குகிற ஊழியத்தில் எவ்விதத்திலும் இருக்காது என்பது உறுதி.

ஃபிரான்சிஸ் ஆஃப் அசிசி கூறுவதாக இப்படி ஒரு வாக்கியம் உண்டு. ” சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளை உபயோகியுங்கள்” இதோடு இன்றைய தேவையாக நான் ஒன்றைக் கூட்டுவேன். ” சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளையும்  பொருளையும்  உபயோகியுங்கள்”

தொடரும்

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

+918108752325

போ அல்லது (பணம்) அனுப்பு – பாகம் 1

ஒக்ரோபர் 8, 2012

கடவுள் பாதி சாத்தான் மீதி கலந்து செய்த கலவையாக இன்றைய மிஷனெறி ஸ்தாபனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு போதகராக மிகுந்த கவலையோடு இவைகளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திருச்சபைகள் யாவும் இன்றைக்கு ஒரு போலி மிஷனெறி பாரம் கொண்டு கூன் விழுந்த முதுகோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு திருச்சபை மிஷெனெறியை பணம் கொடுத்து தாங்கவில்லை என்று சொன்னால் அது ஒரு சிறந்த சபையல்ல என்ற எண்ணம் நச்சு விதையாக ஊன்றப்பட்டுள்ளது. போதகராக செய்ய இனி ஏதுமில்லை என்ற அளவிற்கு தடைகள் ஏற்பட்ட பிறகு சுதந்திர இந்தியாவில் எண்ணத்தை பகிர்ந்து கொள்ள கூடவா தடை வந்துவிடப்போகிறது எனும் அற்ப தைரியத்தில் இதை எழுதுகிறேன்.

மும்பை இந்தியாவின் வணிக தலைநகரம். இங்கு கிறிஸ்தவர்களின் சதவிகிதம் குறைவுதானென்றாலும் நெருக்கடி நிறைந்த நகரத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிகை அதிகமே. இறையியல் இயக்கங்களின் காலடி படாத கன்னி மண்ணான மும்பையில் இல்லாத திருச்சபைகள் இல்லை, முன்னேற்ற பணியாளர் இல்லாத மிஷனெறி ஸ்தாபனங்கள் இல்லை. வசூல் ராஜா என மார்தட்டி வசூலிக்கும் அளவிற்கு அனேக மும்பை கிறிஸ்தவர்கள் ஆன்மீக வாழ்வில் பலவீனமாக இருக்கிறார்கள். ஒருவேளை இது உங்கள் பகுதிக்கும் பொருந்தலாம்.

ஒருமுறை நான் அழைப்பின் பேரில் ஒரு மிஷனெறி ஸ்தாபனத்தின் விழாவிற்கு சென்றிருந்தேன். கூட்டம் சிறப்புற இனிதே ஜெபத்துடன்  முடிவடையும் தருணத்தில் (அப்போது தான் அனைவரும் வந்து சேர்ந்திருப்பார்கள்) ஜெபமே முக்கியம் என கருதும் அக்கூட்டாத்தார் கூடுகையின் முக்கியமல்லாத ஒரு பகுதியை பேசி முடிக்கும்படி தலைப்பட்டார்கள். நாங்கள் முதன் முதலாக மும்பை வந்தபோது எங்களுக்கு 1000 ரூபாய் தேவைப்பட்டது, ஜெபித்தோம் கர்த்தர் கொடுத்தார் ( பணம் கொடுத்தவர்கள் அனைவரும் அங்கே தான் இருக்கிறார்கள்) ஒரு கட்டத்தில் 100000 ரூபாய் தேவைப்பட்டது அப்போதும் கர்த்தரிடம் கேட்டோம், அவர் கொடுத்தார், இன்னும் ஒருகோடி தேவைப்பட்ட நேரத்தில் ஊக்கமாய் ஜெபித்தோம் , கர்த்தர் கொடுத்தார். இப்போதும் 32 கோடி தேவைப்படுகிறது கர்த்தர் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறவும் ஆட்டுமந்தைகள் அனைத்தும் சேர்ந்து கசாப்புகடைக்காரனுக்கு முன்பதாக ஒலியெழுப்புவத்போல ஆ…மே…ன் என்றது.

 

மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான நான் இதை சபையில் பகிந்துகொண்டபொழுது அது ஆஸ்திரேலிய பழங்குடியினரின் ஆயுதமாக என்னை நோக்கியே பாய்ந்து வந்து என்னை வீழ்த்தியது. பரவாயில்லை ஒரு பழங்குடி சமூகத்தில் நான் சேர்த்தி என்பதில் எப்பொதும் எனக்கு உவகை தான். ஆனாலும் அவர்களைப்போலவே வளர்ச்சியுற்றோர் செய்யும் அராஜகங்களை எதிர்க்க இயலாமல் கண்ணீருடன் நிற்க மட்டுமே என்னால் முடிகிறது.

மிஷனெறி ஸ்தாபனங்கள் அனைத்தும் “ஊழியம்” செய்பவை அல்லவா? நாங்கள் கொடுக்கும் 100 ரூபாய்க்காக மட்டும்தானே அவர்கள் எங்கள் விடுதேடி வந்து ஜெபித்து காடுகளிலும் மலைகளிலும் ஊழியம் செய்கிறார்கள். அற்பணிப்போடு ஊழியம் செய்யும் இவர்களை கேள்வி கேட்க உனக்கென்ன அருகதை இருக்கிறது என்பவர்கள் அனைவருக்கும் நான் கேட்கும் ஒரே கேள்வி, ஊழியம் செய்யவேண்டும் என்பது ஆண்டவர் நமக்கிட்ட கட்டளையா, அல்லது பணம் கொடுத்து ஊழியத்தை தாங்கவேண்டும் என்பது அவர் நமக்கிட்ட கட்டளையா?

போ அல்லது அனுப்பு என்பது ஒரு தந்திரமான யுக்தி என்றே நான் கருதுகிறேன். போ என்பது ஆண்டவர் இட்ட கட்டளை, “அல்லது அனுப்பு” என்பது யார் இட்ட கட்டளை என்பதை நான் அறியேன், குமாரனும் அறியார், கண்டிப்பாக என் பரம பிதா அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இது உண்மையா என எங்கனம் அறிந்து கொள்ளுவது?. வேறு வழியில்லை இப்போதைக்கு திருமறைக்குத் திரும்புவோம்.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28 : 19)

இது இயேசு பரமேறுவதற்கு முன்பு கொடுத்த கட்டளையானபடியினால் (கடைசி ஆசை) அதை நிறைவேற்ற அனைவரும் போட்டிபோடுவதை நாம் நமது கலாச்சாரத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும். வயோதிப காலத்தில் பெற்றொரைத் தவிக்கவிட்டுவிட்டு பிள்ளைகள் கொள்ளி வைக்க வருகின்ற காட்சியே தான். எனினும் இது அவரது இறுதி கட்டளையா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. மத்தேயுவின் கூற்றுபடியே இது கடைசி கட்டளை. ஆனால் ஆண்டவரது வாழ்வில் அவர் இதை தொடர்ந்து  கற்பித்திருக்கிறார் என்பதை நாம் மறந்து விடலாகாது.

மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் இதை இயேசுவின் கட்டளையாக எவ்விதம் முன்வைக்கின்றனர் என்பதை நாம் பொருட்படுத்தவே தயங்குகிறோம். மெலும் அவரது பணி காலத்தில் அவர் தமது சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பிய விதத்திலும் நமது எண்ணம் நிலைகொள்ளாதபடி மத்தேயு 28: 19 ஐ கொண்டு ஒரு சித்து விளையாட்டே நம் கண்முன் நடைபெறுகிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன், கண் உள்ளவன் வாசிக்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்ககடவன்.

தொடரும்

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

+918108752325

மணவிலக்கு பெற்றோரின் மணவாளன்

ஒக்ரோபர் 7, 2012

மணவிலக்கு குறித்து மாற்கு 10: 2 – 12 கூறுகின்றவை ஒரு தேர்ந்த அவதானிப்பு மட்டுமல்ல, நிகழ்வின்  அமைப்பு சிறிது கூட சிதையாமல் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு பகுதியாகவே நான் கருதுகிறேன். இதே நிகழ்வை மத்தேயு 19: 1 – 12 வரையிலும் நாம் காணலாம். ஒருவேளை லூக்கா மணவிலக்கைக் குறித்து பதிவு செய்யாவிடினும் அதோடு தொடர்புடைய பகுதியாகிய சிறு பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் பகுதியை (மத்தேயு 19: 13 – 15, மாற்கு 10: 13 – 16, லூக்கா 18: 15 – 17) குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இயேசு மணவிலக்கைக் குறித்து கூறிய இடத்தில் சிலர் சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள் என காண்கிறோம். சிலர் என்பது ஆண்களா பெண்களா என எண்ண தலைப்படும் பொழுது பெண்களாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆண்கள் சிறு பிள்ளைகளைக் கொண்டு வந்திருந்தால் சீஷர்கள் அவர்களை அதட்டியிருக்க முடியாது. சிறுவர்கள் எப்போதுமே தாயின் அரவணைப்பிலேயே இருப்பதால் பெண்களே இச்சிறு பிள்ளைகளை ஆண்டவரிடம் கொண்டு வந்திருக்க வாய்ப்புள்ளதை கண்டு கொள்கிறோம்.

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கோடேயே அவரிடம் மணவிலக்கை குறித்த கேள்வி எழுப்பப்படுவதை இப்பகுதி உறுதி செய்யும் அதே வேளையில் அதற்கான பதிலை அவர் மூன்று விதமாக அளிப்பதாக நான் புரிந்து கொள்ளுகிறேன்.

முதலாவதாக, திருமறையில் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் கால இட சூழலை முன்வைத்தே பார்க்கவேண்டும் என இயேசு உறுதிபட கூறுவதை இங்கே மீண்டும் காணலாம். கொடுக்கப்பட்ட கட்டளை கடவுளிடமிருந்து வந்ததல்ல என்பதை இரு தரப்பும் ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், மோசே கொடுக்கும் கட்டளை காலாவதியாகிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பில் தங்களை பரிசேயர் இணைத்துக் கொள்ளுவதை இயேசு அருவருப்போடு பார்க்கிறார்.

ஆகவே தான் காலத்தால் அவர்களை பின் தள்ளி “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே அப்படிச் எழுதி வைத்தார்” என சினத்துடன் கட்டளையின் காலகட்டத்திற்கு அவர்களை  தள்ளியதோடல்லாமல் கட்டளைகள் பிறப்பதற்கான கடின உள்ளங்கள் நிறைந்த வேதனையின் காலகட்டத்தை நினைப்பூட்டுகிறார். இன்னும் நீங்கள் அக்கொடிய காலகட்டத்தை விட்டு வெளியில் வர மனதில்லாமல் இருக்கிறீர்களே என அங்கலாய்க்கிறார். கட்டளை பிறந்த காலத்திற்கும் சூழலுக்கும் உள்ள தூரம் குறையாமல் இருப்பது ஆபத்தானது எனும் கருத்தை இங்கே நிறுவுகிறார்.

திருமணம் என்பது இருவர் ஒருடலாக மாறும் உன்னத தருணம் என்பதை விளக்க வேண்டி, திருமறையின் ஆழ்ந்த உண்மைகளை விவரிக்கிறார். “படைப்பின் தொடக்கத்திலேயே அவர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார் இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்,” எனும்போது வாழ்வியல் நெறியை முன்வைப்பவராக மட்டுமல்லாது ஒரு சமூகம் தனது மைய இழையை ஒருபோதும் தவற விட்டுவிடலாகாது என்பதையும் குறிப்புணர்த்துகிறார். மணவிலக்கால் விழையும் ஆபத்துக்களையும்  சமூக அவலங்களையும் அவர் கண்ணுற்றதால் வேதனையோடே இவற்றை அவர் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக தனது சமூக சூழலின்படி மண விலக்கு என்பது ஒரு பெண்ணை விபசாரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை தெளிவாக புரிந்திருந்த ஆண்டவர் அதனால் ஏற்படும் சமூக  சமநிலயின்மையை தனது சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். ஆகவே தான் அவர் தள்ளுதல் சீட்டைக் கொடுத்து தனது மனைவியைத் தள்ளி விட்டு புதிய மனைவியை சேர்த்துக்கொள்ளும் “நேர்மையாளர்களை” விபசாரம் செய்பவராயிருப்பார் என்று குற்றம் சாட்டுகிறார். தள்ளுதல் சீட்டை பெற்று தனது கணவனிடமிருந்து தப்பிக்கொள்ளுதல் என்ற இக்கால சூழல் அல்லாமல் “அவளது அருவருக்கத்தக்க செயலை கண்டு” என குறிப்பிடுவது பரத்தமையையே அவள் மேல் சுமத்துவதற்கு ஒப்பாகிவிடுகிறது.

இம்மூன்று பார்வைகளும் முறையே கால , ஆன்மீக மற்றும் சமூக நிலை சார்ந்து வெளிப்பட்ட பதில்களாக தெரிந்தாலும் கால விளக்கத்தை தர்க்க ரீதியாக ஒரு உண்மையை நிறுவும்படியும், ஆன்மீக விளக்கத்தை அனைவருக்கும்  பொதுவாகவும் சமூக விளக்கத்தை அவர் சீடர்களுக்கும் போதிப்பதை காணமுடிகிறது. ஒரு சமூக அளவுகோலை தனது சீடர்களுக்கு என்று அவர் மீண்டும் மீண்டும் கொடுத்து தனது ஆன்மீக உரைகளை அவர்கள் புரிந்து கொள்ள வழிவகை செய்வதை இதன் மூலம்  நாம் காண முடிகிறது. எப்படி?

ஒருவேளை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளோர் அவரிடம் வருவதை மெய்சிலிர்க்க பார்த்த சீடர்கள் அபலைகள் அவரிடம் வருவதை தவிர்க்கப்பார்த்தனர்.  கடைநிலையில் பெண்கள் இருந்தாலும்  இயேசுவிடம் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி கொண்டுவந்தவர்கள் அதனினும் கீழான சூழலில் வாழும் விதவைகளும் கைவிடப்பட்டவர்களும் என்பதே என் எண்ணம். வாழ்வில் அனைத்தையும் இழந்த பின்னர் தங்களை உணர்ந்து ஏற்கும் ஒரு ஆன்மாவை அவரது சொற்கள் மூலம் அவர்கள் கண்டுகொண்ட தருணம் அது. ஆனால் இயேசு அவர்களை முன்னரே அறிவார்.

ஆகவே தான் அவர் தள்ளுதல் சீட்டைவிட இணைந்து வாழ்தலே இவர்களுக்கு ஏற்றது என உறுதியாக முழங்கினார். வார்த்தைகளால் அல்ல தமது செயலால். ஆம் அவர்களை தம்மிடம் அழைத்து, அரவணைத்து தமது கரங்களை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்தார். ஒரு தகப்பனாக தன்னை அவர்களோடு இணைத்துக்கொண்டார்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300


%d bloggers like this: