Archive for ஓகஸ்ட், 2013

ஒருமித்து நிமிர்தல்

ஓகஸ்ட் 26, 2013

(திருமறைப் பகுதி எரேமியா 1:4-10, எபிரேயர்  12:18-29 & லூக்கா   13:10-17)

 

திருமணமான புதிதில் நானும் ஜாஸ்மினும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத்தக்கதாக எங்கள் குடும்பத்தாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய அன்னாள் பாட்டியைக் குறித்து பகிர்ந்துகொண்டார். ஜாஸ்மின் சிறு வயதாக இருக்கும்போது தனது சகோதரர்களுடன் ஆலயத்திற்குச் சென்று வரும்போது எல்லாம்  தனது பாட்டி எவ்விதமாக அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆயத்தம் செய்து வைத்திருப்பர்கள் எனக் கூறி, அந்தப் பாட்டியால் நிமிரமுடியாதபடி கூன் விழுந்திருந்ததையும் குறிப்பிட்டார்கள். சிறு பிள்ளைகளான ஜாஸ்மினும் அவர் சகோதரர்களும் சேர்ந்து தங்கள் பாட்டியை நிமிர்ந்து நிற்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதையும், அவ்விதம் அவர்கள் செய்த காரியத்தால் பாட்டிக்கு ஏற்பட்ட மூச்சுதிணறலையும் சொன்னார்கள். நாமும் பலவேளைகளில் குனித்து அமர்ந்து வேலைசெய்துவிட்டு எழும்ப எத்தனிக்கும்பொழுது இவ்விதமான நிலைய ஒருசில கணங்களேனும் சந்தித்திருப்போம். அப்படியாயின் வாழ்வின் பெரும்பகுதியில் கூன் விழுந்தோராய் வாழ்வைக் கழித்தவர்கள் நிமிர்வடைவது எளிதான காரியம் இல்லை.

 

எனது அப்பாவின் அம்மா திருமதி மேழ்சி பரமாயி செல்லையா ஒரு வேதாகம ஸ்திரீயாக (Bible Woman)  பணியாற்றியவர்கள். பாட்டியைத் தெரியாதவர்கள் ஊரில் கிடையாது. பாட்டியின் ஒரு கால் ஊனமாயிருக்கும். அதோடே அவர்கள் ஆலயத்திற்கு முதல் மணி அடிக்கும்போதே சென்றுசேர்வார்கள். ஒருநாளும் தாமதித்தது கிடையாது. அவர்கள் தங்கள் பலவீனத்தின் மத்தியிலும் தனது பணியின் நிமித்தமாக அனேகருக்கு எழுத கற்றுக்கொடுக்கவும், சிறு உதவிகளைச் செய்பவர்களுமாக வலம் வந்து தனது 98ஆம் வயதில் கர்தரிடம் நித்திரையடைந்தார்கள். அவர்களை ஊரில் பொதுவாக மேழ்சி பாட்டி என்று அழைத்தாலும் ‘நொண்டி வாத்திச்சி’ – அதாவது ஊனமுற்ற ஆசிரியர் என்றே அழைத்துவந்தனர். பாட்டியை யாரேனும் அப்படி அழைத்தார்களென்றால் அவர்கள் கண்டிப்பாக என்னைவிட வயதில் இருமடங்கு மூத்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் அப்படி கூறும்தோறும் எனது உள்ளத்தில் ஒரு கூர்மையான முள்ளால் தைத்தது போலிருக்கும். பாட்டியின் ஊனம் பிறவியிலே வந்தது என்பதே எனது அறிதல்.

 

இருவரது வாழ்விலும் மாற்றுத் திறனாளிகள் எனும் அடையாளம் ஒன்றிணைப்பது போல அவர்களது வாழ்வில் ஏற்பட்ட காயங்கள் நெடியதும் காலத்தால் மறைக்கவியலாத கொடிய வடுவை ஏற்படுத்தக்கூடியதுமே. தங்களது வாழ்வில் ஏளனங்களையும், அவமனங்களையும் சுமந்த போதிலும் தங்கள் வாழ்வின் முன் நின்ற சவால்களை அவர்கள் ஏற்ற விதம் பாராட்டிற்குறியது.

 

இது ஒருவகையில் உடல் ஊனமென்றால் நமது முன்னோர்களின் வாழ்வை நம் கூர்ந்து அவதானிக்கும்பொழுது பலவிதமான அடிமைத்தனங்களில் அவர்கள் சிக்கி வாழ்ந்ததைக் கண்டுகொள்ள முடியும். ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடமும், நம்மை நசுக்கிய ஜாதி சார்புடையவர்களிடமுமிருந்து விடுதலை பெற்ற நாம் இன்று எவ்விதமான அடிமைத்தளைகளில் சிக்கியிருக்கின்றோம் என எண்ணிப்பார்ப்பது தலையாய கடமையாகிறது. கூடவே பிறரை அடிமைப்படுத்தும் நமது செயல்கள் என்ன என்பதையும் கண்டுகொள்ள தவறிவிடக்கூடாது.

 

முன்னோர்களை விஞ்சி நிற்கும் ஒரு அழைப்பு நமக்கு கொடுக்கப்பட்டால் அவ்வழைப்பினை நாம் ஏற்றுக்கொள்வோமா? அவ்விதமான அழைப்பை நாம் புரிந்துகொள்ளும் சூழலில் இருக்கிறோமா? நமது வளர்ச்சி ஒருவேளை நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான நிமிர்வை நோக்கி உந்தி தள்ளுகிறாதா? போன்ற கேள்விகளை நாம் உள்ளிருத்தி இன்றைய திருமறைப் பகுதிக்குள் கடந்து செல்வோமாயின் ஆண்டவரின் அருள் வார்த்தைகள் நம்மிடம் செயலாற்றும். (எரேமியா 1)

 

நாம் வாசிக்க கேட்ட திருமறைப்பகுதியும் ஒரு மாற்று திறனாளியை முன்வைக்கிறது. தனது வாழ்வில் பதினெட்டு வருடங்களாக திறமைகளை ஒளித்துவைக்கும் நிலையும், நிமிர்த்து நிற்க வாய்ப்பு அற்றும் அவர் இருந்திருக்கும்போது இயேசுவின் பார்வை அவர்மேல் விழுந்ததே ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான விதை என நாம் கண்டுகொள்ளுகிறோம். இக்கனிவின் பார்வை இயேசுவுக்கு மட்டும் உரியதா? அல்லது அவரின் சீடர்களாகிய நமக்கும் உரியதா? அவரின் அழைப்பை பெற்று அவருக்காக நம்மை அற்பணித்தபின் நமது செயல்கள் எவ்விதம் இருக்கவேண்டும்? இக்கேள்விகள் நம்மை உந்துமாயின் நம்மால் இயேசுவின் அடியொற்றி செயலாற்ற முடியும் என்பதில் ஐயமில்லை.

 

இயேசுவின் பார்வை அவர்மேல் விழுந்தவுடன் ஏற்பட்ட மாற்றங்களை நாம் இதுகாறும் அறிந்திருந்தும் நாம் கவனிக்கத் தவறிய ஒருசில காரியங்களை உற்று நோக்கினால் நம்மால் சூழலின் தாக்கத்தை நன்குணர இயலும்.  இயேசு ஒரு ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் நின்று செய்தியளித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுத்துதான் அவர் கூன் விழுந்த ஒரு பெண்மணி நிமிரக்கூடாதபடி இருப்பதைக் கண்டுகொள்ளுகிறார். இத்தருணம் மிகவும் முக்கியமானது. இறைவார்த்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்போது மட்டுமே பிரச்சனைகளையும் அதன் புரையோடிய வேர்களையும் கண்டுகொள்ள இயலும் எனும் உண்மை இங்கே தொக்கி நிற்கிறது . இயேசு தனது செய்தியை முடித்து ஆற அமர அவளிடம் வந்தார் எனக் கொள்வதைவிட தனது செய்தியை நிறுத்தி அவளை தம்மிடம் அழைத்து குணமாக்கினார் என்பதே சாலப் பொருந்தும். அப்பெண்மணி நலம் பெறுதல் மிகவும் அவசரமானது என்பதை இயேசு உணர்ந்ததாலேயே அப்படிச் செய்தார்.

 

ஜெப ஆலயத்தலைவன் மிகவும் ஆத்திரம் கொள்ளுமளவு ஏதும் நிகழவில்லையே என நாம் எண்ணுவோமாயின், நாம் ஜெப ஆலாய்த்தலைவனின் நியாயத்தை உணராதவர்களாகிவிடுவோம். அவனது சொற்களிலிருந்து நாம் பெறும் வார்த்தைகள் அனைத்தும் ஆழ்ந்த கவனத்துக்குட்படுத்த வேண்டியவை. “வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்த நாட்களில் நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச்செய்யலாகாது” எனக் கூறும் வார்த்தை நமக்கு பின்னணியத்தை இன்னும் தெளிவுபடுத்துகிறது.

 

ஜெப ஆலயத்தலைவன் “ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” எனும் கட்டளையை உணர்ந்தவனாக செயலாற்றுகிறான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளும் நாம், இப்பெண்மணியின் வாழ்வில் அவளைப் பிடித்திருந்த ஆவி அவ்விதம் ஓய்வுநாளில் மட்டும் விடுப்பு எதுத்துச் செல்லும் தன்மையுடையதல்ல என்பதைக் கண்டுகொள்ளுகிறோம். பதினெட்டு வருடங்களாக அவளை நிமிரச் செய்யாதபடி அவளைக் கூனி குறுகச் செய்யும் ஆவி அது. நிமிரவே இயலாது என முடிவு செய்திட்ட தருணத்தில் இயேசுவால் அவள் பெற்ற நன்மையைக் கண்டு நாமும் அவளோடு சேர்ந்து ஆண்டவரை உயர்த்தும் ஒரு உன்னத தருணம் இது.

 

எனினும் ஜெப ஆலயத் தலைவன் கோபமூண்டவனாகவே காட்சியளிக்கிறான். அவனால் இந்நிகழ்வினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஜெப ஆலயத்தில் நலம் பெறும் நிகழ்வுகள் நடைபெற அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனினும் அது ஓய்வுநாளில் நடைபெறலாகாது என்பது புலனாகிறது. ஜெப ஆலயத்தலைவன் தனது இந்நிலைப்பாட்டை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்?

 

தனது மரபிலிருந்தா? தான் வாசிக்கும் ஐந்தாகமம் எனும் தோராவிலிருந்தா? இல்லை தனது வாசிப்பின் மேலெழும் புரிதலில் இருந்தா? இல்லை இவ்விதமாக வாசிக்க பழகிய மரபிலிருந்தா? இயேசு தனது வாழ்வில் எதிர்கொண்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மறுபடியாக கூறும் பதிலுக்கு திருமறையையே சார்ந்திருந்தாலும், இவ்விடத்தில் அவர் திருமறை வசனங்களை சற்று ஒதுக்கி வைத்து ஒரு மனிதாபிமான கேள்வி எழுப்புகிறார். அக்கேள்வி, மானுடம் அனைத்திற்கும் பொதுவான ஒன்றே என கொள்ளுமளவிற்கு அது ஒரு பெரும் வீச்சுடன் எழுந்து செயலாற்றுவதை நாம் காண்கிறோம். இக்கட்டில் இருப்போருக்கு செய்யும் அவசர உதவியா அல்லது கண்மூடி நாம் வாளவிருக்கும் போலி ஆன்மீக நெறிகளா? எது முக்கியமானது எனும் கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

 

நாமும் இன்றுமட்டும் அறியாமையினால் செய்த காரியங்கள் அனேகம் உண்டு. இன்றுவரை ஆலயத்தில் சக்கர நாற்காலி வருவதற்கான சாய்வுகளை அமைப்பதைக் குறித்து நாம் சிந்தித்ததில்லை. மாற்று திறன் பெற்றோருக்கான தனி ஆராதனைகளை ஒழுங்கு செய்ய நாம் எப்போதும் ஆயத்தமாயிருப்போம் ஆயினும் நமது வழிபாட்டின் மத்தியில் அவர்களும் நம்மைப்போலவே இயல்பாக கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான வாய்ப்பைக் குறித்து சிந்தித்த திருச்சபைகளைக் கண்பது அரிதே.

 

இம்மட்டும் சிந்திக்காத ஒன்றை இனிமேல் சிந்திப்பது சாத்தியமில்லை என்றெண்ணுகிறோமா? அல்லது இவ்வளவு காலம் நாம் சிந்தித்து வந்த வழிகளே நேர் என்று எண்ணுகிறோமா? ஜெப ஆலயத் தலைவன் தனது கருத்தை அவ்விதமாகவே முன்வைக்கிறான். தனது பணி ஜெப ஆலயத்தில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் செயல்படுத்தப்படும் ஒன்று என்ற முடிவிற்கு வந்தவனாக அவன் நம் முன் காட்சியளிக்கின்றான். அலய பணிவிடைகளே அவனுக்கு உகந்தது என்றும் ஜெப ஆலயத்திற்கு வருவோரின் நலனில் தான் அக்கறை காட்டத் தேவையில்லை என்ற முன்முடிவுடன் செயலாற்றுகிறான். இயேசு அவனது தவறான கொள்கையை தனது செயலால் குறிப்புணர்த்தும்பொழுது அவன் வெகுண்டெழுவது இவ்வாறே.

 

மேலும் இப்பெண்மணி தற்செயலாக வந்திருப்பதைப் போன்று தோன்றவில்லை. அனுதினமும் வந்து செல்லுகின்றவள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. சீலோவாம் குளத்திலே 38 வருடம் ஒருவன் காத்திருந்ததுபோல் தனது வாழ்வில் மாற்றம் வரும் எனும் நம்பிக்கையில் அவள் ஜெப ஆலயத்திற்கு வந்ததாகவே கருத இடமுள்ளது. எனினும் இத்துணை வருடங்கள் வந்தும் அவளை கவனிக்க தவறிய ஜெப ஆலய தலைவனும் இயேசுவும் இப்போது எதிர் எதிர் நிலையில் நிற்பதைக் காணும்போது நமக்கு சற்று தெளிவு பிறக்கிறது. இயேசு கண்ட ஒரு உண்மையை ஜெப ஆலய தலைவன் எப்போதோ கண்டிருக்கும் வாய்ப்புகளே அதிகம். இயேசு செய்த குணமாக்கும் பணியை ஜெப ஆலயத் தலைவன் வேலை செய்கிற மற்ற ஆறு நாளில் கூடச் செய்திருக்கலாம். இறுதியாக இயேசு செயலாற்றிய விதத்தைப் பார்க்கும்பொழுது அப்பெண்மணியின்மேல் கருணைக்கொண்டு அவள் மேல் கைகளை வைக்கும் நிலை இருந்ததோ என்னவோ அவள் குணமானதை நினைத்து மகிழும் நிலைகூட ஜெப ஆலயத்தலைவனுக்கு இல்லை என்பதைக் காணும்பொழுது நாம் சற்று அயர்ந்தே தான் போகிறோம்.

 

திருமறையை வார்த்தைக்கு வார்த்தை கடைபிடித்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் நாம், இயேசு தனது செய்தியை இடையில் நிறுத்தி இப்பெண்மணிக்கு உதவிபுரிந்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என கருத்துகிறோமா? இயேசு என்பதால் நாம் அவ்விதம் ஏதும் செய்யாமல் இருக்கிறோமா? அல்லது இயேசு செய்த பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக நாம் இந்த நலம் பெறும் பணியினை புரிந்துகொள்ளுகிறோமா? அவளது உடலில் ஏற்பட்ட குறைபாட்டை நாம் உற்றுநோக்கையில் அவளது நலம் பெறும் நிகழ்வை எப்படி புரிந்துகொள்ளுகிறோம்.

 

எனது உறவினர் ஒருவர் மருத்துவரக இருப்பதால் இப்பகுதியைக் குறிப்பிட்டு இப்பெண்மணியின் குணமாக்குதலை ஒரு மருத்துவராக நின்று இயேசு செய்திருந்தால் எப்படியிருக்கும் எனக் கேட்டேன். அதற்கு அவர், “ஜெப ஆலயமே ஒரு அவசர அறுவை சிகிட்சைப் பிரிவைப்போலிருக்குமென்று கூறினார்” இயேசுவுக்கு உதவி செய்வோர் போவதும் வருவதுமாக இருக்கும். முதுகு தண்டுவடம் பாதிப்படைந்திருப்பதால் கத்தியின்றி இரத்தமின்றி இச்சிகிட்சை நடைபெற்றிருக்க இயலாது. ஆகவே ஜெப ஆலயத்தின் ஒழுங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெப ஆலய தலைவன் கருத இடமுள்ளது. இங்கே நான் குறிப்பிடுவது ஒரு அலோபதி மருத்துவருடைய தண்டுவட சிகிட்சையையே.

 

இயேசு அவளை குணப்படுத்திய விதத்தை இன்றைய அலோபதி முறைமையின்படி நாம் உற்று நோக்கினால் அதன் சாராம்சத்தை புரிந்துகொள்ளுவது கடினம். எனில் எங்ஙனம் இப்பகுதியை உடைத்து இதனுள் தொக்கி நிற்கும் ஆழ்ந்த இறையியல் கருத்துக்களை வெளிக்கொணர்வது. ஒருவேளை எண்ணை தடவி சரி செய்கின்ற எங்களூர் வற்ம ஆசானாக இயேசுவை கற்பனைச் செய்தோமென்றல் அலோபதிபோல் சிக்கல் நிறைந்த ஒரு சிகிட்சையாக இருந்திருக்காது. எனினும் கவனம் சிதறுதல், செய்தி பாதியில் நின்றதுபோல் ஒரு சில தடங்கல்கள் ஜெப ஆலயத்தில்  ஏற்பட்டிருக்கும்.

 

கடவுளை வழிபடுவதற்கும் அவரை நிமிர்ந்து நின்று புகழுவதற்கும் அவளுக்கிருந்த தடையை அவள் உட்பட ஒருவரும் புரிந்துகொள்ளா சூழ்நிலையில், அவள் நிலையை புரிந்துகொண்ட ஆண்டவர், அவள் நலம் பெறும் இடம், அவள் அனுதினமும் வருகின்ற ஆலயமாக இருக்கவேண்டும் என விரும்பினார். ஜெப ஆலயத்தில் அதுவும் ஓய்வுநாளில்  அவள் நலம் பெறும் நிகழ்வை அவர் ஒரு கருத்தியலாக பேராற்றலுடன் முன்மொழிவதைக் காண்கிறோம்.   அவளை ஆண்டவர் விடுதலையாக்கிய தருணத்தில் தானே அவள் தன் ஆண்டவரை புகழுகின்ற காட்சியே இத்திருமறைப் பகுதியின் உச்சம் என நான் கொள்ளுகிறேன்.

 

இத்திருமறை வாசிப்பின் வழியாக நான் பின்வருவனவனவற்றையே உணர்வதுகொள்ளுகிறேன்.

18 வருடங்களாக சிறிது சிறிதாக அவள் தன்னை குறுகச் செய்கின்ற சூழலில் வாழ்ந்திருக்கிறாள்.

18 வருடங்களாக அவள் வாழ்வு நேர்செய்யப்படாமலே கழிந்திருக்கிறது.

18 வருடங்களாக அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

18 வருடங்களாக அவள் சென்ற ஜெப ஆலயம், தொழுகைக்கு வருவோர் அல்லது அதன் தலைவர்கள் அவள் நலம் பெறும் முயற்சியில் ஈடுபடவில்லை.

18 வருடங்களாக அவளது வாழ்வில் ஜெப ஆலயம் செயலற்று இருந்திருக்கிறது. அப்படியாயின் ஜெப ஆலயம் பணி என்ன? தொடர் சங்கிலிகளாக நடைபெறும் சடங்குகளா அல்லது அச்சங்கிலியை உடைத்தெறியும் மானிட மகனின் கருணைப்பார்வையா? ஆம்  ஆன்மீகத்தின் புதிய பரிணாமத்தை இயேசு இங்கே முன்மொழிவதைக் காண்கிறோம்.

 

ஆ…. இவ்விடமே நம்மை திகைக்க வைக்கின்றது! “கூனல்” ஒரு தனிப்பட்ட பெண்மணியிடம் மட்டுமல்ல ஒரு சமூகத்திடமும், அதன் சமயத்திடமும் அதன் சமயத்தலைவர்களிடமும் ஒருங்கே அமைத்திருப்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். உடல் ரீதியாக பெறுகின்ற நிமிர்வைப்போன்று சமூக நிமிர்வு எளிதானதில்லை என்பதையே தேவாலயத் தலைவனின் எதிர்ப்புணர்வு நமக்கு காண்பிக்கின்றது. எனினும் மக்கள் மகிழ்வுடன் இயேசுவின் இம்முயற்சியை வரவேற்கின்றதைப் பார்க்கும்போது இத்தகைய முயற்சியின் முக்கியத்துவம் நமக்கு புலனாகின்றது.

 

எபிரேயர் 12ஆம் அதிகாரம் இருவிதமான மலைகளை சுட்டி நிற்கிறது. சீனாய் மலையை அது மவுனமாக குறிப்பிடும்பொழுது அம்மலையின் அருகில் ஒருவரும் வரக்கூடாதபடி இருந்ததை சுட்டி, சீயோன் மலையின் அருகில் வரும்படியான வளமான வாய்ப்பை அது முன்னிறுத்துகிறது. “…ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபிரேயர் 12: 24) செவிகொடுக்காமல் போனால் என்ன நிகழும் என்பதை, தொடர்ந்து வரும் வசனங்கள் மூலம் நாம் கண்டுகொள்ளுகிறோம்.

 

நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கட்டளைகளின் ஊனத்தையும், அதன் அங்ககீனக்தையும் இயேசு ஒருவராலே கண்டுகொள்ள முடியும். எவ்வித கருவிகளாலும் கண்டுபிடிக்க இயலாத தாயின் கருவில் உருவாகுமுன்னே நம்மை அறியும் விண்ணக மருத்துவராகிய கடவுள் திருச்சபையும் தனது பாரம்பரிய பிணைகளில் நின்று விடுதலை பெற வேண்டும் என்றே ஆவலுடன் நம் முன் நிற்கிறார். நாம் சிறு பிள்ளையென்றோ பேச அறியோம் என்றோ ஒதுங்குவதை அவர் அறவே வெறுக்கிறார். நிலத்தில் எவற்கும் அஞ்சா வார்த்தைகள் நம்மிடமிருந்து புறப்பட, செயலாற்ற அவர் நமக்கு துணை நிற்கிறார். நாமும் எரேமியா போன்றே நாடுகளுக்கு நற்செய்தி வழங்கும் தீர்க்கராய் எழும்பும் ஆவலுடன் அவர் நம்மைப் பார்த்து நிற்கிறார்(எரேமியா 1).

 

குனிந்திருப்போர் எழுந்து நின்று ஆண்டவரை துதிக்கும் ஒரு அரிய தருணத்தின் மீட்புக்காக அவர் ஆணி பாய்ந்த, குற்றுயிரான கரங்களை நீட்டி நிற்கிறார். மருந்தினை இட்டு இச்சிரியரில் ஒருவருக்கு நாம் செய்பவற்றையே அவருக்கு செய்பவையாக கருதி நிற்கிறார். நாமும் நலம் பெற வேண்டி நமது வளைந்த முதுகுடன் அவர் பாதத்தை சரணடைகிறோமா அல்லது ஜெப ஆலய தலைவன் போல் நிமிர்ந்த முதுகுடன் அவருக்கு நேர் நின்று  நமது செயல்களால், அவரையே கேள்விக்குட்படுத்துகிறோமா?

 

“ஆதலால், அசைவில்லாத இராஜ்ஜியத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளுவோம்” (எபிரேயர் 12: 28) எனும் மீட்பின்  வாசகம் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

 

அருட்திரு. காட்சன் சாமுவேல்

 

(25.08.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்-ல் வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.)

எட்டிப்பிடிக்கத் தவறிய இரட்சிப்பின் செய்தி

ஓகஸ்ட் 22, 2013

ஒரு நரி பசியோடு உணவு தேடி அலைந்தது. இறுதியில் அது ஒரு திராட்சைக் கொடியைக் கண்டது. திராட்சை குலை உயரத்தில் இருந்ததால் அது இந்த திராட்சைக் பழத்தை எவ்வளவோ எம்பிக்குதித்தும் பறித்து பசியாற இயலவில்லை. அதன் பசி ஒருபுறம் அதன் இயலாமை ஒருபுறம். உணவைக்கண்டும் உண்ணமுடியாத சூழ்நிலையில் அது கூறியதாம் “சீச்…சீ இந்தப் பழம் புளிக்கும்”. சுவைக்காத ஒன்றின் சுவையை கூறும் மனநிலையை நாம் என்னவென்று கூறுவோம்? பசியைப் போக்காத உணவை நாம் எப்படி உணவென்று அழைப்பது?

 

ஒருவேளை தனது இயலாமையை நரி அங்கதத்தோடு வெளிப்படுத்திய விதமா இது?  உணவு அற்ற நரி தனது உயிரைக் காப்பாற்றிகொண்டதா எனும் பதைபதைப்பு யாருக்கேனும் எழுகிறதா? இக்கதை கூறும் முடிவு என்ன? ஒருவேளை இக்கதைக்கு முடிவில்லாததுபோல தோன்றுகிறதில்லையா? ஆம் ஆழ்ந்து யோசித்தால் அதன் பசி என்னாயிற்று என்பதற்கு விடை இல்லை. நரியின் பசி அதை எதை நோக்கி உந்தித்தள்ளியது என்பதை நாம் அறியமாட்டோம்! இன்னும் நாம் அச்சமுறவேண்டிய ஒரு உண்மை உண்டு. அதற்கு எங்கேனும் உணவு கிடைத்ததா? கிடைத்ததென்று கொண்டால் அது கசப்பையும் இனிப்பென கொண்டிருக்குமோ? கசந்ததைத் தின்று, அல்லது ஏதுவுமே கிடைக்காமல் உயிரை விட்டிருக்குமோ?

 

அன்பு உள்ளங்கொண்ட திருச்சபையினரே! முடிவிலா கேள்விகள் நம் முன் நிற்கின்றன. நாம் யார்? திராட்சையாக பிறர் பசியைப் போக்காத எட்டா உயரத்தில் இருக்கிறோமா? அல்லது பசிகொண்ட நரியாக சுற்றிவருகிறோமா? இல்லை இக்கதையை சொல்லும் கதை சொல்லியாக அனைத்தையும் அறிந்த கடவுளின் நிலையில் இருக்கிறோமா? இல்லை ஒருவேளை கதைக் கேட்போராக இருந்து நரியை ஏளனத்துடன் பார்த்து பரிகாசக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருக்கிறோமா?

 

கேள்விகள் இன்னும் நின்றபாடில்லை. திராட்சையும் நரியும் வாழும் இஸ்ரவேலில் கூறப்பட்ட கதையா இது? எனில் திராட்சை எதன் சாயலாக குறிப்பிடப்படுகிறது, நரி எதற்கு உவமானமாக நிற்கின்றது? “குலை குலையா முந்திரிக்கா” எனும் சிறு பிள்ளைகளின் விளையாட்டு நாம் விளையாடியிருப்பதால் இக்கதையின் ஊற்றும் நமது பிராந்தியத்திலேயே தோன்றியதாயிருக்குமா? உணவற்ற நரி ஏன் தான் உண்ணும் சிறு விலங்குகளை விட்டு திராட்சைக்காக அலைந்தது? ஊற்றைப்போல் ஊறிவரும் இக்கேள்விகள் அனைத்தும் நாம் சிறு வயதில் கேட்ட ஒரு நான்கு வரிக்கதையிலிருந்து எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லையல்லவா? கதை தான் முடிந்துவிட்டதே அதன் பின் ஏன் கேள்விகள் என எண்ணுகிறோமா?

ஏசாயவின் கவிதையொன்று இதைப்போன்றே ஒரு திராட்சைத் தோட்டத்தை முன்னிறுத்துகிறது. அது நேசருக்கேற்றப் பாட்டைப் பாடுகின்ற மணவாட்டியாக ஏசாயா தன்னை உவமித்துக்கொள்ளும் ஒரு தருணம். —–*அழகையும் அழுகையையும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும், உழைப்பையும் அது வீணய்ப்போவதையும் பதிவுசெய்யும் கவிதை

 

மிகவும் செழிப்பான மேட்டிலே நேசருக்கு ஒரு திரட்சைத்தோட்டம் இருக்கின்றது. தண்ணீர் தேங்கி அதன் வேர்கள் அழுகிவிடாதபடி அதன் மேடுகளிலிருந்து வாய்க்கால்கள் ஓடுகின்றன… அதன் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்காத தன்மையில் வெயில் படும் இடத்திலே அது அமைந்திருக்கிறது. அத்தோட்டத்தை நேசர் தன் உடல் உழைப்பாலும் தன்னிடமுள்ள பொருளையும் சேலவளித்து அதை பாதுகாக்கும் வண்ணம் வேலி அமைக்கிறார். அந்நிலத்தைப் பண்படுத்தி வளர்ச்சிக்குத் தடையாயிருந்த கற்களையெல்லாம் பொறுக்கி ஒரு நல்ல தோட்டமாக வேர்பற்றி வளர  ஆயத்தம் செய்தார்.

 

இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னும் அவர் கருத்துடன் நேரம் செலவு செய்து, இருப்பதிலேயே சிறந்த நாற்றுகளான “நற்குல” திராட்சைச் செடியை மிக விருப்புடனும், மதி நுட்பத்துடனும், கருத்துடனும் தெரிவுசெய்து அதை தனது நிலத்தில் நாட்டினார். அவைகள் கிளைத்தெளும்ப சரியான பிடிமானங்களை எழுப்பி, அதற்காக தண்ணீர்  பாய்ச்சி, ஏற்ற நேரத்தில் அதற்கான உரமிட்டு இரவு பகல் என்று கண்ணயராது காத்துநின்றார்.

 

மிகவும் எதிர்பார்ப்புடனும்  பெரும் பொருட்செலவும்  செய்து திராட்சை ரசம் பிழியும் ஒரு ஆலையையும்  உருவாக்கி,   கனிதரும் காலத்திற்காக காத்து நின்றார். பூ பூத்தது – நேசர் மகிழ்ந்தார், பிஞ்சு காய்கள் தோன்றின – நேசர் அகமகிழ்ந்தார். ஓரு தகப்பனைப் போன்று வாஞ்சையுடன் அவைகளை கவனித்தார். காலம் கனிந்தது திராட்சைகளும் கனிந்து நின்றன, நேசர் பேருவகை கொண்டார். திராட்சை அறுவடைக்காக அவர் கூலியாட்களை அமர்த்தினார். அடுத்திருப்பவர்களையும் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தார். அவர்கள் கூடை கூடையாக பழங்கள் பறித்து ஆலைக்கு எடுத்துச் சென்றனர்.

 

சிறுமி ஒருத்தி  ஆவல் மிகுதியால் ஒரு திராட்சைப் பழத்தை எடுத்து சுவைத்தாள். அவள் முகம் கோணலானது. வெறுப்பை உமிழும் சுவையும் பார்வையும் அவளில் நின்றன. அம்மா கசக்கிறது என் கத்திவிட்டாள். சுற்றி நின்ற வேலைக்காரர்கள் அதைப் பார்த்தனர். தாங்களும் சுவைத்துப்பார்த்து இக்கனியின் சுவை ஏற்றதாக இல்லையே என்று ஏங்கிப்போயினர். தனது ஆலைக்காக வாங்கியிருந்த புதிய தோல் துருத்திகளையும் ஜாடிகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த நேசரிடம் ஒருவன் ஓடிப்போய்,             “ அய்யா நாம் மோசம் போனோம். பழங்கள் யாவும் எட்டியப்போல் கசக்கின்றன. இவைகள் ஒன்றுக்கும் உதவாது. ஆலையிலே இவைகளை பிழிவதால் எந்த நன்மையும் விளையப்போவதிலை” என அங்கலாய்ப்புடன் வந்து கூறினான்.

 

நேசர் திகைத்து நிற்கிறார். வந்திருந்த உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அருகிலுள்ள தோட்டத்திலுள்ளவர்கள் சிலர் பரிதபம் கொள்கின்றனர். வேறு சிலர் இத்தோட்டத்தை விலைபேச இது தகுந்த நேரம் என மனகணக்குப் போடுகின்றனர். ஆனால் நேசருக்கு திகைப்பு இன்னும் அடங்கவில்லை. தான் தெரிந்துகொண்ட நற்குல திராட்சைக்கொடிகள் எப்படி கஷாயத்தைப் போன்ற கசந்த ரசத்தை உள்ளடக்கியது எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. இத்திகைப்பிற்கான விடை காணப்படாமலே இருக்கின்றது. எப்படி இந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பது? செய்யத்தக்க அனைத்தும் மிகச்சரியாக செய்தும் நற்குல திராட்சைச் செடிகளான யூதா இஸ்ரவேல் குடிகள் கசப்பான பழங்களையே தருகிறார்கள் எனும்போது இதைச் சரிசெய்வது எங்கனம்? தவறே நிகழாத இடத்தில் சரி செய்வதற்கான பிரச்சனை என்ன இருக்கிறது? யாராலும் சரி செய்ய இயலாதபடி பழுது ஏற்பட்டுவிட்டச் சூழலில் மறுபடியும் முதலிலிருந்து துவக்குவது எவ்வளவு கடினம்?

 

நேசரின் ஆற்றாமை அளவிடமுடியாதது. நேசர் வேதனையின் உச்சத்திலிருந்து, தான் மிகவும் நேசித்த, பாதுகாத்த, தன் அனைத்து ஆற்றலையும் செலவிட்டு அன்புகாட்டி வளர்த்த திரட்சைத்தோட்டத்தைப் பார்த்து இவ்விதமாக கூறுகிறார் “இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். (ஏசாயா 5: 5&6)

தீர்க்கன் ஏசாயா எதை முன்னிட்டு இக்கவிதையை புனைகிறார் என்று நாம் நோக்கினால்… யூதா இஸ்ரவேல் எனும் இரு குடிகள் கர்த்தருடைய அன்பை உணராதபடி அவரை துக்கப்படுத்தும் காரியங்களைச் செய்தனர் என்பதினால் தானே? “அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு”.(ஏசாயா 5: 7ஆ)

நியாயமும் நீதியுமற்றத்தன்மையை பாவம் என எளிதில் கூறிக் கடந்துவிடமல் இன்னும் ஒருபடிமேல் போய் “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5: 8) என கர்த்தர் சொன்னதாக ஏசாயா கூறுகிறார்.

இன்றைய தினத்தின் வெற்றிச் சின்னங்கள் நமது வீடுகள். நமது தோட்டங்கள், நமது சொத்துக்கள், நமது நகைகள், நமது உயர்குடி நண்பர்கள், நாம் வாங்கும் பொருட்கள், நாம் செல்லும் ஆலயம், நாம் சார்ந்திருக்கும் சமயம், நாம் வணங்கும் கடவுள். இச்சிறு காரியங்களா? ஒரு தேசம் அல்லது ஒரு திருச்சபை கர்த்தருக்கு விரோதமாக செய்தவைகள் என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

 

இன்று ஒரு போதகராக இந்த ஆலயத்தின் பளிங்கு தரையில் நின்று நான் பேசுகின்ற இவ்வேளையில், ஒரு சில பேராயர்கள் மண் தரையில் அமர்ந்து ஒரு மேஜை கூட இன்றி  போரினாலும், வறுமையினாலும், இனக்கலவரங்களுக்கும் மத்தியில் அமர்ந்து தங்கள் பணிகளைச் செய்கிறார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலுகின்றதா? எவ்வகையில் இவர்களுக்காக நாம் அனுப்பும் காணிக்கைகள் பொருத்தமுடையதாயிருக்கும்? எவ்வகையில் நாமும் இவர்களோடு ஐக்கியப்படுவோம்? கசப்பான பழங்களாக நாம் மாறியபின், யாருடைய வாழ்வில் நாம், சுவையேற்ற இயலும்?

 

இன்றைய தினத்தில் ஒரு போதகரின் செய்தி மிகக்கடுமையாகவும் கண்டிப்புடனும் திருமறைக்கு ஒத்ததாகவும் நமக்கு ஒத்துக்கொள்ள கடினமாகவும் இருந்தால் நாம் என்ன செய்வோம்? அவரை எதிர்க்கலாம், எள்ளி நகையாடலாம், குழி பறிக்கலாம், அவர்களுக்கு விரோதமாக எதையும் சொல்லலாம், நெருக்கடி கொடுக்கலாம். துணிந்தவர்கள் அங்கியைப்பிடித்து இழுக்கலாம், எச்சில் உமிழலாம், துரத்தலாம், வேலையை விட்டு நீக்கலாம், ஏன் கன்னத்தில் கூட அறையலம். அவ்வளவே

 

இன்றைய மானுடம் ஒருவகையில் பண்பட்டு ஆனால் சற்றும் நெகிழாத் தன்மையுடன் இறுகியிருப்பதை வேதனையுடன் காண்கிறோம். ஆனால் ஏசாயாவின் காலத்தில் அப்படியல்ல. தீர்க்கதரிசனம் சொல்லுவது தன்னையே மாய்த்துக்கொள்ளுவதற்குச் சமம்.

 

ஆம் பிரியமானவர்களே, எபிரேயர் கடிதம் இதை மிக அழகாக சித்தரிக்கின்றது. விசுவாசம் குறித்த விளக்கத்தை எபிரேயர் 11ன் முற்பகுதியிலும், விசுவாசத்தில் நடந்த பெரியோர்களது வாழ்வு, அரும்பண்புகள், அற்பணிப்பு, அருஞ்செயல்கள் யாவும் விசுவாசத்தால் நிகழ்ந்தன என அது பறைசாற்றுகின்றது. எனினும் அவர்கள் பெற்றுக்கொள்ள இயலாத நன்மையான  காரியத்தை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

 

உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். அனைத்து நன்மையின் மத்தியிலும் சிலர் “நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பண்ணப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டுண்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்.

 

தாங்கள் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை பகிர்ந்துகொள்ளத்தவறினால் அதனால் வரும் ஆக்கினைக்குப் பயந்து, கீழ்ப்படிந்து; வைராக்கியம் கொண்டு, மேய்ச்சல் நிறைந்த தேசத்திலே தங்களைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்கொள்ளுவதற்காக ஆட்டுத்தோலைப் போர்த்தியபடி, தாங்கள் சந்திக்கவிருந்த ஆபத்துகளிலிருந்து தப்பினார்கள். அவ்விதமாகவே  உறுதியுடன் நின்ற அனேகர் தேடப்பட்டு, வேட்டையாடப்பட்டு, கல்லெறியுண்டு வாளால் அறுப்புண்டு போயினர். ஏசாயா எனும் தீர்க்கதரிசியின் முடிவும் இவ்விதமாக இருந்தது என்றே நாம் கண்டுகொள்ளுகிறோம்.

 

எனினும் தேவ தாசர்கள் எனக் குறிப்படப்படும் விசுவாசிகள் கூட்டத்தில் இராகாப் எனும் பெண்ணும் சேர்ந்திருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்காமலில்லை. இவை எவைகளைச் சுட்டி நிற்கிறது? சேதமாகாமல் இருப்பதோ சேதமாவதோ அல்ல விசுவாசத்தின் அளவுகோல். எச்சூழலிலும் கடவுளின் சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் துணிச்சலையே நாம் கண்டுகொள்ளுகிறோம். ஆம் இவர்கள் அனைவருக்கும் முன்னால் ஒருவர் மேலாக உயர்ந்து நிற்கிறார். அன்பின் அடையாளமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து எனும் இயேசு  “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு. அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (12.2) என நாம் வாசிக்கும்பொழுது நமது உள்ளங்கள் கொளுந்துவிட்டு எரியவில்லையா? ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (12:1) என முத்தாய்ப்பு வைக்கிறார்.

 

இந்த பொறுமையான ஓட்டம் எத்தகையது எனும் நாம் கூர்ந்து அவதானித்தால் இயேசுவின் கூற்றில் உள்ள உண்மைகளை நாம் கண்டுகொள்ளுவது எளிதாகும். அது நமது வாழ்வில் நாம் கண்ட பாரதியின் கவிதையோடும் உறவு கொள்ளுவதைக் காணமுடியும்.

அக்கினி குஞ்சொன்றைக் கண்டேன்

அதில் ஆங்கோற் காட்டிடைப் பொந்தொன்றில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு.

“பூமியிலே அக்கினியைப் போடவந்தேன், அது இப்போதே பற்றியெறிய வேண்டும் என்று விரும்புகிறேன்”(லூக்கா 12:49) என இயேசு தாம் பூமியிலே வந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் இது போல் பலமுறைக் கூறியிருந்தும் பல விதங்களில் தன் வருகையின் இரகசியத்தைக் குறிப்பிட்டிருந்தும் அவரின் வருகையை, அதன் உட்கருத்தை எவரும் அறிந்திலர். ஆகவே தான் மீண்டும் மீண்டும் அவர் தனது வருகையின் நோக்கத்தை, புரிந்துகொள்ளாத் தன்மையை அடிக்கோடிடுகிறார்.

 

அப்படி புரிவதற்கு என்ன கடினம் அவர் வார்த்தைகளில் ஒளிந்திருந்தன? ஏன் அவர் உவமைகள் மூலமாகதானே பேசினார். எளிய மக்களோடெல்லாம் அவர் பேசினாரே. ஒரு கிணற்றடியில் நின்ற பெண்மணி கூட “மேசியாவைக் கண்டேன்” என சாட்சி கூற முடிந்ததே? மறைநூல் அறிஞர்களோ, பரிசேயரோ, பிலாத்துவோ, ஏரோதோ ஏன் அவரைக் கண்டுகொள்ள இயலவில்லை?

 

இயேசு கூறுவது நிறுவப்பட்ட நம்பிக்கைக்கு  எதிரான ஒரு போங்கே என நாம் காணும்போது நம் இதழ்களில் ஒரு மெல்லிய புன்முறுவல் எழலாம். “நீதிமான்களையல்ல பாவிகளையே மனம்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்” என கூறுவது இயேசு தனது பணியை பாவிகளுக்கானது என சொல்வதுபோல் தோன்றினாலும் நல்லோர் வேடமிட்டிருப்போரையும் அது சுட்டி நிற்பதால் அவ்வார்த்தையின் தீண்டலினாலே சீண்டப்பட்ட “மெத்தப் படித்தவர்கள்” அவருக்கு விரோதமாய் நின்றதைக் காணமுடியும். அவ்விதமாகவே யோவான் 7: 28 ஐ வாசிக்கையில் இயேசுவின் “சிலுவை” மட்டுமல்ல “வாழ்வே சிலுவையாக” இருந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு; “நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என் சுயமாய் வரவில்லை என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்” என்றார்.

 

எப்படியிருந்தாலும் தனது பணியின் ஒட்டுமொத்த அழைப்பையும் அவர் உதாசீனம் செய்யவில்லை என்பதே உண்மை. இவ்வுலகத்தை இரட்சிக்கவே அவர் வந்தார்  என்பதை அவர் மிக தெளிவாகவே உணர்ந்திருந்தார். அந்த அன்பின் சாட்சியாகவே அவர் ” ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்காமல் இரட்சிக்க வந்தேன்” என உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மைப்பார்த்துக் கூறுகிறார்.

 

நாம் எவ்விதத்தில் இந்த இரட்சிப்பை புரிந்துகொள்ளுகிறோம்?

அருட்திரு. காட்சன் சாமுவேல்

8238503702

(18.08.2013 ஞாயிறன்று வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம். இடம்: மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்)


%d bloggers like this: