Archive for செப்ரெம்பர், 2013

தவறவிடும் பாதைகளும் – தேடிக்கண்டடையும் தரிசனங்களும்

செப்ரெம்பர் 15, 2013

திருமறைப்பகுதி: எரேமியா 4:11 – 12 , 22 – 28, 1 திமோத்தேயு 1 :12 – 17, லூக்கா 15:1 – 10

காற்றை நாம் பல வழிகளில் புரிந்துகொண்டாலும் அவற்றின் இயல்பு என்பது நமது அறிதலைத் தாண்டியது என்பதே இயேசுவின் வார்த்தை வெளிப்படுத்துகிறது. “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” (யோவான் 3:8) மெல்லிய புல்லாங்குழலாகட்டும், ஒரு படையையே ஆயத்தப்படுத்தும் எக்காளமாகட்டும் காற்றைக்கொண்டே அவை செயல்படுகின்றன. எரியும் திரியாகட்டும் பற்றியெறிகின்ற காடாகட்டும் காற்றின் மையமே அதைக் கட்டுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் செல்வதை நாம் கண்டுகொள்ளுகிறோம். நீர்குமிழி போன்ற வாழ்விலே நாம் கண்டுணரத்தக்க  காற்றின் இயல்பு நமது வாழ்வில் இழுத்துவிடும் மூச்சைப்போன்று பின்னிப்பிணைந்தே இருக்கின்றது.

 

புயல் குறித்து நமது அனுபவங்கள் யாவும் பத்திரிகைகளிலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட படியினால் நமது நேரடி அனுபவங்கள் மிகவும் குறுகியது. எனினும் தானே புயலினால் புதுவையின் மொத்த கட்டமைப்புகள் சீரழிந்தன, இயல்பு நிலை திரும்புவதற்கு பல வருடங்கள் அகும், நூற்றுக்கணக்கனோர் பலியாயினர், போன்ற தலைப்புகளின் மூலம் காற்றின் வலிமையை நாம் நடுக்கத்துடனே அறிந்து கொள்ளுகிறோம்.

 

இன்னுமொரு நிகழ்வை இதற்கு ஒப்பாக கூறப்படுகிறதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களின் அனைத்து கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளன, இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் வெறிச்சோடின, இலங்கையில் இரத்த ஆறு ஓடுகிறது.

 

இயற்கையால் ஏற்படும் அழிவைவிட செயற்கையாக மனிதன் ஏற்படுத்தும் நிகழ்வுகளால், ஏற்படுத்தும் அநீதியினால் நடைபெறும் அழிவுகள் மிகவும் அதிகமானவைகள். எரேமியா இதையே தீர்க்க தரிசனமாக கூறுகிறார். தேசம் அழிவை நோக்கி இருக்கிறது என்று தனது  அனைத்து ஆற்றலையும் செலவழித்து கூறுகிறார். நாங்கள் யார்? 120 வருடமாக சொன்ன நோவா பேச்சையே கேட்காதவர்கள் அல்லவா? எரேமியா சொன்னவுடன் கேட்கவேண்டுமா என்ன என நினைத்திருக்கலாம்.

 

அழிவு எனும் எச்சரிக்கையை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பதை ஒரு சில வாழ்க்கை அனுபவங்களோடு உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். சுனாமி ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றியவர்களில் நானும் ஒருவன். அப்போது அறிஞர் ஒருவரால் கூறப்பட்ட வாசகம் இது “கடல் பொங்கி வரும் யாரும் கடலுக்கருகில் செல்லவேண்டாம் என்று கூறியிருந்தால் இன்னும் அதிகமானோர் மரணமடைத்திருப்பர்” இந்திய பொது மனம் எச்சரிக்கைகளை எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அது ஒரு வேடிக்கை மனநிலைக் கொண்டது. எதையும் மிக எளிமையாக்கி தனக்கு வசதியாக புரிந்துகொள்ளும் தன்மையுள்ளது.

 

இதெல்லாம் ஏற்ற உதாரணங்கள் என மனக்கணக்கு போடுபவர்கள் ஒரு உண்மைக்கணக்கே போடுவதற்கு வாய்ப்புத் தருகிறேன். டாஸ்மாக் மது விற்பனை 2003 ஆண்டு சுமார் 3500 கோடியிலிருந்து 2013 அம் ஆண்டில் 25000 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த செங்குத்தான ஏற்றம் எப்படி சாத்தியமாகிறது. எச்சரிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெருவாரியான மதிப்பில்லை என்பதே தெளிவான பதில். ஜூலை 3, 2013 டைம்ஸ் ஆஃப் இந்தியவில் காணப்பட்ட ஒரு தலைப்பு  “குஜராத்தில் மது வேண்டும் அனுமதி பெற இணயதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்” (“Now apply for liquor permits online in Gujarat”). எல்லா மது பாட்டில்களிலும் எழுதியிருக்கும் வாசகம் “குடி குடியைக் கெடுக்கும்”.

 

பலவகையான மனநிலைகள் இதனுள் பொதிந்திருக்கின்றன குற்றாலத்தில் வளையத்தைத் தாண்டி குளிக்கக்கூடாது எனும் அபாய எச்சரிக்கையை துச்சமாக நினைக்கும் அசட்டுத் தைரியம் கொண்ட இளைஞனின் மனநிலையிலிருந்து ஆறிலும் சாவு நூறிலும் சாவு என வாழ்வைக் குறித்து யோசிக்காதபடி சாவிற்கான பெட்டி முதற்கொண்டு அனைத்தையும் தயாரிக்கும் பணியை தத்துவார்த்தமாக பேசித்திரியும் கூட்டம். தங்களைச் சுற்றி ஏற்படும் மாய வலையிலிருந்து தப்பிக்க இயலா வண்ணம் கண்கள் மூடப்பட்டு சிறிது சிறிதாக அழிவின் முடிவிற்குப் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள். என பல் வகைகளில் இவர்களை நாம் வேறு படுத்தலாம்.

 

பல வேளைகளில் வாழ்வளிக்கும் இறை வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியாமல் போய்விடுவதே நமக்கு வாடிக்கையாகிப்போனது. நாம் அனைவரும் ஒருவித மாய வலையால் கட்டப்பட்டிருக்கிறோம். முதலில் வலை எவ்விதமானது என அறியாவிட்டால் நம்மால் அதிலிருந்து விடுபட இயலாது. இயேசுவே அனைத்தையும் சொல்லிவிட்டு “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்” என்றே மக்களை மிகவும் தெளிவாக புரிந்து தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவ்விதமாக குரல் எழுப்புவோர் அனைவரும் பெருந்திரளாக கூச்சலிடும் கும்பலுக்குள் ஒடுங்கிப்போய்விடுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. எதற்காக பெரும்பாலோர் கேளாத ஒன்றைக் கூறவேண்டும்? அதனால் விளையும் பயன் தான் என்ன?

 

திமோத்தேயு நிரூபம் பல ஆய்வாளர்களால் பகுக்கப்பட்டு தூய பவுல் அடிகளாரின் உடன் பணியாற்றிய ஒரு ஊழியரின் படைப்பு என்பதே இன்றைய புரிதல். அதன் மொழியும் அதன் உட்கூறுகளும் அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க துணை நிற்கின்றன. எனினும் பவுலோடு பணியாற்றிய திமோத்தேயுவுக்கு அவர் வழங்கும் அரிவுரைகள் யாவும் இன்றைய தினத்தில் அருட்பணியாளர்களுக்கும் பொருந்திடும் என்பதில் ஐயமில்லை. பக்திமிக்க யூத கிறிஸ்தவ தாய்க்கும் கிரேக்க தகப்பனுக்கும் ஏற்பட்ட கலப்பு மணத்தால் அவர் பிறந்தவர் என்பதை நமக்கு அப்போஸ்தலர் 16: 1 தெளிவுபடுத்துகிறது. திருச்சபையில் ஏற்பட்டுள்ள தவறான போதனைகளைக் களையுமாறு பவுல் வேண்டுவதுபோல இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளது அன்றைய கலகட்டத்தில் ஏற்புடைய ஒன்றே. எனினும் இதன் உள்ளடக்கம் சவால் மிக்கதாய் நம்முன் விரிகின்றன.

 

தூய பவுல் அடிகளாரின் வாழ்வை ஒரு மாதிரியாகக் கொண்டு அளவிடவேண்டிய விசுவாசத்தின் அழைப்பு இங்கே கோரப்படுகிறது. அவ்விதமான அழைப்பு ஒரு உறுதியான விசுவாச வாழ்வில் நம்மை வழி நடத்தும் எனும் கருத்தே மேலோங்கி எழுவதை நாம் கண்டுகொள்ளுகிறோம். தனது வாழ்வின் துவக்கத்தில் அவர் தான் பிறந்த சமயமாகிய யூத சமயத்தை கற்றுத் தேர்ந்து பிற்பாடு அவற்றின் மேல் பக்தி வைரக்கியம் கொண்டு கலகக்காரர்கள் என எண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை ஒடுக்கினார். தனது சமயமும் தனது சமய நூலும் அதற்குத் துணைபோனதாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒருநாள் ஆண்டவர் அவர் வாழ்விலே இடைபட்டார். வல்லமை நிறைந்த கடவுள் பவுலோடு பேசும் வார்த்தைகள் அழுத்தம் நிறைந்தவை எனினும் நமக்கு அன்நிகழ்ச்சியின் நாடகத்தன்மையே விஸ்வரூபம் எடுத்து ஆண்டவரின் சொற்கள் புரியும்படியாக விளங்கிகொள்ள இயலாதபடி செய்துவிடுகின்றன.

 

“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்பது பவுலை மிகவும் அசைத்தது. கடவுள் துன்புறுவாரா? அது எப்படி ஆகும் என அவர் எண்ணுகிறார். கடவுளின் பிள்ளைகளுக்கு விரோதமாக செய்யப்படும் தீங்குகளே கடவுளுக்கு நாம் செய்யும் தீங்கு எனும் புரிதல் பெற்றவராக மனம் மாறுகிறார். எனினும் அறியாமல் தான் பாவம் செய்திருந்ததால் இரக்கம் பெற்றேன் என 13ஆம் வசனத்தில் அவர் கூறுவதைப் பார்க்கும்போது கமாலியேலின் பாதப்படியில் படித்த மாபெரும் கல்விமானுக்குள் இவ்வடக்கம் இயேசுவால் அன்றி எங்ஙனம் உருப்பெற்றிருக்க இயலும்?

 

இவ்விதமான ஒரு புரிதல் நமக்குள் எழுகிறதா? கடவுளின் வார்த்தைகள் எழுதப்பட்டவை என எண்ணி தன்னால் ஆண்டவரின் அன்பை அறிய முடியாத பவுல் அதன் பின் நியாயப்பிரமாணங்கள் யாவும் பாவிகளுக்குரியது என இவ்வதிகாரத்தின் முதற்பகுதியில் கூறி நிற்பது எதைக் காட்டுகிறது? பலவீனமானவர்களை நமது பலத்தால் நாம் துன்புறுத்தும்போது கடவுள்  துன்பம் கொள்கிறார். அவர் தனது இரக்கத்துடனும் காயங்களுடனும் மட்டுமே நம்முடன் இடைபடுகிராறன்றி தனது பலத்தினால் அல்ல. எனவே இக்கடிதம் தனது பெற்றோரின் கலப்பு மணத்தால் தன் வாழ்வு அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஊழியக்காரராகிய திமோத்தேயுவுக்கு மட்டுமல்ல ஆண்டவரின் இரக்கத்தை வேண்டும் அனைவருக்கும் உரியதாகிறது.

 

99 ஆடுகள் என்பது 1 ஆட்டிற்கு முன் மிகப்பெருந்தொகை. எனினும் ஆண்டவரின் உவமை அவ்வெண்ணிக்கையை பெரிதாக எண்ணாமல் தொலைந்துபோன ஒன்றைத்தேடுவது எனும் உயர் தள நோக்கத்தைச் சொல்லுகிறது. சிறுபான்மையினரை முக்கியத்துவப்படுத்தவேண்டும் என்கிற ஒரு பேருண்மையை சுட்டி நிற்கும் ஆவணமாக இந்த உவமை எழுச்சியுற்று நிற்கிறது. எனினும் ஒரு சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆடு எப்படி காணாமல் போனது? வழி தவறியிருக்க வாய்ப்பில்லை என்பதை மெய்ப்பர்கள் அனைவரும் அறிவர். “மாடு தன் எஜமானையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்றார்” (ஏசாயா 1: 3) ஆட்டைத் திருடுபவர்களால் ஆடு காணாமல் போயிருக்கலாம், ஒருவேளை வழியில் கண்ட பசுமையினால் மெய் மறந்து ஆடு பின் தங்கியிருக்கலாம் – காபி பிறந்த கதையை நாம் அறிவோமே. ஆடு கண்டுபிடித்தளித்த பரிசல்லவா அது. முரட்டு ஆடுகளின் வலிமையால் இந்த ஆடு படுகுழிக்குள்ளோ முட்புதருக்குள்ளோ தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் முயற்சி என்பது கருணை மிக்க ஒன்றாக உருவெடுப்பதைக் காண முடிகிறது.

 

 

99 ஆடுகள் வனந்திரத்திலே நிற்க, ஒரே ஒரு ஆட்டைத் தேடுகின்ற சாகசம், அன்பு, கடமையுணர்ச்சி, தீராத வேட்கையுடன் தேடுதல் போன்றவைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவைகள். ஒன்றைப் பிரிந்து தனித்து நிற்கும் 99 ஆடுகள் எவ்வகையிலும் மேன்மையானவைகள் அல்ல என்றே இயேசு கற்பிக்கின்றார். தொலைந்து போனதைத் தேடுவதே நல் ஆயனின் கடமையே அன்றி தொலைவிலோ அருகிலோ இருப்பதை திருடி வருவது அல்ல என்பதும் இதனுள் உறைந்து நிற்கும் புரிதலே.

 

 

 

வெள்ளிகாசு என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. அதை இழப்பது தாங்கிகொள்ள முடியாத ஒரு சுமையாக அதை சேகரித்த பெண்மணி கண்டுகொள்ளுகிறாள். வியர்வை சிந்தி சம்பாதித்தப் பணம். அதை இழந்தாலும் 9 வெள்ளிகாசுகள் இருக்கின்றனவே என எண்ணாமல் தான் பொறுப்புடன் சேகரித்து வைத்திருந்த அந்த நாணயத்தை தேட ஆரம்பிக்கிறாள். வீட்டில் ஒளியேற்றப்படுகிறது, அதுவரை முக்கியத்துவப்படுத்தாத ஓரங்கள் மற்றும் இண்டு இடுக்குகள் யாவும் சுத்தம் செய்யப்பெறுகின்றன. நாணயம் தான் தொலைந்து போனதற்காக வருத்தப்பட இயலாது ஆனால் அதை இழந்தவர் அதன் மதிப்பை உணர்ந்தவராவார். அம்மதிப்பிற்காக தனது வாழ்வில் ஏற்படும் இன்னல்களையோ சிரமங்களையோ தனது உடல்மேல் ஏறும் புழுதியோ ஒரு பொருட்டல்லவென்று தனது தேடலை கைவிடாது தொடருகிறாள். இறுதியில் அதைப் பெற்ற உடன் மகிழ்வோடு இச்செய்தியை அயலகத்தாருக்கு சொல்லுகிறாள். அனைவரும் மகிழ்வடைகின்றனர்.

 

இயேசு பாவிகளோடு உணவருந்துவதைக் கண்ட பரிசேயரும் வேதபாரகரும் அவர் செயலைக்கண்டு முறுமுறுத்தபோது அவர் மேற்கூறிய உவமைகளைக் கூறினார் எனக் கண்டுகொள்ளுகிறோம். பாவியிலும் பிரதான பாவியாக பவுல் தன்னைத்  தாழ்த்துகிறதையும் அதைவிட அதிகமாய் இயேசு துன்பபடுகிறவராக காட்சியளிப்பதையும் கண்டுகொண்டோம். எரேமியாவின் வாக்கைப் புறக்கணித்த மக்களால் ஆண்டவர் அடைந்த துன்பத்தை எவ்விதம் நாம் அளவிட முடியும்? ஒருவரை ஒருவர் ஒடுக்குகின்ற சூழல் மலிந்திருந்தது கண்டு வியாகுலப்படுவதையும் இறைவாக்கினர் மூலம் எடுத்துரைப்பதையும் புரிந்து கொள்ளுவது எங்ஙனம்? எச்சரிப்புகள் இருந்து தொலைந்துபோய்விடுகின்ற சூழலில் தேடி வரும் இறைவனைக் காண்கையில் நம்மால் ஏற்பட்ட வடுக்களை அவரில் காண்போமென்றால் அது எவ்விதம் நமது விசுவாசத்தை பெலப்படுத்தும்?

 

இன்றைய தினத்தில் கூடங்குளம் தமிழகத்தின் விடிவெள்ளியாக இந்தியாவின் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். அதற்கு அருகிலே இடிந்தகரை  எனும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த  கத்தோலிக்க தேவாலயத்தில் குருவானவரும் மக்களும் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். எங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் நிலவுகின்றது. தெளிவுகளைத் தாருங்கள் எனக் கேட்போரை அரசு சிறையில் அடைக்கிறது. அமைதியாய் போராடும் அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்கிறது. எனினும் அவர்கள் காணாமல் போன ஆடுகளாக மற்ற 99 ஆடுகளையும் விட்டுப் பிரிந்து நிற்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள். ஆம் மிகவும் முக்கியமான ஆடு அது. ஆண்டவருக்காய் தனித்து நிற்கும் ஆடு. அவரது அன்புக்குரிய ஆடு. மற்ற ஆடுகளால் தனித்த ஆட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு காரணம் ஒன்று உண்டு. இந்திய அரசின் புலனாய்வுத்துறை கிறிஸ்தவ திருச்சபைகளின் மற்றும் ஸ்தாபனங்களின் கணக்குகளையும் வழக்குகளையும் குடைய ஆரம்பித்தது. ஆனைவரும் லஞ்சத்தை மஞ்சமாக கோண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள். சுகமான இவ்வுறக்கத்தை அவர்கள் விரும்பினார்கள். ஒவ்வொருவராய் நீதியின் போராட்டத்திற்கு நல்கிய ஆதரவை விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

 

நாம் பாரம்பரியத்தை மட்டுமே கைகொள்ளுகிறவர்கள் என எண்ணுகின்ற கத்தோலிக்கத் திருச்சபை இன்று பல படிகளில் நமது ஆன்மீகத்தை விஞ்சி சென்றுகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இளைஞர்களுடன் போப் ஃபிரான்சிஸ் (உலக இளைஞர் நாள் 2013) பேசிய வார்த்தை வாத்திகனிலிருந்து எழத ஒரு வீரிய வார்த்தை.  “நமக்கு இன்று புனிதர்கள் வேண்டும் – அங்கி இடாத, முக்காடிடாத, ஜீன்ஸ் மற்றும் டென்னிஸ் காலணிகள் அணிந்தபடி. இருபத்தோராம் நூற்றாண்டின் புதுமைகளுக்கு ஈடுகொடுக்கும் புதிய பார்வை கொண்ட புனிதர்கள் வேண்டும்”

 

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.” 1 தீமோத்தேயு 1: 12 & 13 இவ்வசனங்கள் நாம் மனம் மாறுதலடைய வேண்டியவைகளாய் இறை அடியவரின் வாழ்வின் அனுபவத்தை ஒட்டியே நிற்கின்றன.

 

நாம் வாசிக்கும் திருமறைக்கும் அதன் ஆக்கியோனாய் செயலாற்றுகின்ற தூய ஆவியருக்கும் நாம் உண்மையுள்ளவர்களாக காணப்படுகிறோமா? நமது வார்த்தைகளால் காயமடைவோர், பெலனடையவும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றதா? இவையே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகவும் கண்டடையும் தரிசனமாகவும் காணப்படுகிறது.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

+91 8238 503 714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

15.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

அழியா வடிவம் பெறுவோம்

செப்ரெம்பர் 9, 2013

திருமறைப்பகுதி:  எரேமியா 18: 1 – 11, பிலேமோன் 1 – 21 , லுக்கா 14 : 25 – 33,

 

குயவன் எனும் ஒரு உருவகத்தை எரேமியா கையாள்வது நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. “குயவனே குயவனே படைப்பின் காரணனே” எனும் பாடல் நாம் உருகி பாடுகின்ற ஒன்று. குயவர்கள் இன்று நம்மை விட்டு வெகுதூரத்தில் சென்றுவிட்டதைப் போல், படைப்பின் காரணரும் சென்றுவிட்டதை தான் இன்றைய திருமறைப் பகுதி நமக்கு உணர்த்துகிறாதா அல்லது எரேமியா தனது காட்சியை இஸ்ரவேலரை ஆண்டவர் வனைகின்ற வண்ணம் தனது மக்களை வனைகின்றவர்  எனக் கொள்ளலாமா?

 

மெதடிஸ்ட் திருச்சபை இந்நாளிலே ஒரு குயவனை நாம் ஆலயத்திற்கு அழைத்து, அவன் எவ்விதம் பணி செய்கிறான் என்பதை கண்டுணர அழைப்பு விடுக்கின்றது. ஒரு வகையிலே நாம் அவ்விதமான ஒரு சூழலிலே நமது தொழுகையை அமைத்துக்கொள்ளாதபடியினால் சொற்களினூடக என் அனுபவத்தை காட்சிபடுத்த இருக்கிறேன். எரேமியா கண்டது ஒரு குயவனின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அவர் அதை சுருக்கி நமக்கு கொடுத்திருக்கிறார் அதை விரிவு படுத்தும் தோறும் அது நமக்கு பயனுள்ளதாய் அமையும் என நான் நம்புகிறேன்.

 

நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் சுங்கான்கடை என்ற இடத்தில் ஒரு பானைத்தொழிற்சாலை இருப்பது எப்போதும் என்னை பார்க்கத்தூண்டும். ஒருநாள் அந்த இடத்தை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். ஃபாதர் தொம்பர் எனும் ஏசு சபை (ஜெசுயிட்) பாதிரியார் இதை ஆரம்பித்ததாக ஜெயமோகன் மூலம் பின்பு அறிந்துகொண்டேன். ஒரு தொழிற்சாலைக்குரிய வேகம் அங்கே காணப்பட்டது எனினும் குடும்பமாக சிறு பிள்ளைகள் உட்பட அனைவருமாக உழைத்துக்கொண்டிருந்தனர். காய்ந்த களி மண் ஒருபுறம் குவிக்கப்பட்டிருந்தது. மண்ணைக் குழைப்பதற்காக ஒருசிலர் மிதித்துக்கொண்டிருந்தனர். குழைத்தமண் சக்கரத்தில் இடப்பட்டு குயவனால் பானையாக உருப்பெற்றது. அதன் வடிவம் மற்றும் நேர்த்தியை மெருகூட்டும்படியாக குயவர் பெண்கள் பானைகளை மடியில் வைத்து செம்மண் நீரினால் நிறமேற்றி, தங்கள் குழந்தைகளுக்கு  எண்ணை தடவி விடுவதுபோல் நெளிவுகளை தட்டி சரிசெய்துகொண்டிருந்தனர். குழந்தைகள் பானைகளை எடுத்து நிழலில் காயவைத்துக்கொண்டிருந்தனர்.

 

எரேமியா ஏன் குயவன் செய்யும் பானையை முக்கியப்படுத்துகிறார்? குயவனுக்கும் களிமண்ணிற்கும் உள்ள தொடர்பை எப்படி அவர் ஆன்மீகமாக காண்கிறார் என்பது மிகவும் முக்கியமான கேள்வி.

 

வாழ்வில் கடவுள் அனுதினமும் நம்மோடு எளிய விதத்தில் உரையாடிக்கொண்டே இருக்கிறார். அவைகளைப் புரிந்துகொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதே கடவுளை வருத்தும் விஷயமாகிப்போனது. எளிமையில் இறைவன் பேசுவதை அறியாதவர்களே ஜெபம் எனக் கூறிக்கொண்டு செயலாற்றுதல் ஏதும் இன்றி ஆண்டவர் பேசுவதை அறிய எத்தனிக்கிறார்கள். அதுவும் தாங்களே பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆண்டவரை பேச இயலாதபடி செய்துவிடுகிறார்கள். எரேமியா கடவுளின் செயலை குயவனின் வீட்டில் மண்பாண்டம் செய்யும் தருணத்தில் கண்டுகொள்ளுகிறார். இவ்வித தருணங்கள் நம் வாழ்வில் பலமுறை வந்துசென்றும் கடவுளின் வார்த்தையை தவறவிட்ட துரதிருஷ்டசாலிகள் நாம்.

 

இறைவாக்கினர், கர்த்தருடைய வார்த்தையை இனம்கண்டுகொள்ளுவது எளிதான ஒன்றல்ல என்பதே எரேமியா வாயிலாக நாம் கண்டுகொள்ளுகிறோம். பல வேளைகளில் எரேமியாவின் கூற்று மக்கள் விரோதமாக எழும்புவதைப்போல் தோன்றினாலும், கடவுளின் கருணையின் பார்வை அதனுள் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். கடவுள்  நீதியாய் நியாயந்தீர்க்கும் கடவுள் ஆகவே அநீதியான நம்மை அவர் அழித்திடுவார் எனும் எண்ணமே நம்முள் ஓங்கியிருப்பதால் நம்மால் அவரை முழுதும் புரிந்துகொள்ள முடியமல் போய்விடுகிறது.

 

இவ்விடத்திலேயே நமது கற்பனையையும் நமது ஊன்றிக் கவனிக்கும் திறனையும் நாம் பயன்படுத்தவேண்டும். களிமண் சுடப்படும் வரையில், மறுபடியும் மறுபடியும் பலவித கலவைகளினாலே உருப்பெறும் சாத்தியமுள்ள ஒன்று. உருவாக்கும் குயவன் எப்போதும் களிமண்ணை வீசியெறிவதில்லை மாறாக அவர் அதன் வடிவம் முழுமை பெறும்பொருட்டு அதை இன்னும் மென்மையாக்குகிறார். மென்மையாக்கும்படியாக அதை இன்னும் பிசைகிறார், துவைக்கிறார், அடிக்கிறார், மிதிக்கிறார். இறுதியில் களிமண் ஒரு அழகையும் பயனையும் நிறைக்கும் ஒன்றாக உருவெடுக்கின்றது. இத்துடன் அதை பின் தொடர்ந்துவரும் சோதனை நின்றபாடில்லை. அதை தீச்சூளையிலே வைக்கிறார்கள். தீயினால் சூழப்பட்டு அது இன்னும் வெம்மையிலே அது வெந்துகொண்டிருக்கிறது. தனது கரிய நிறம் மாறி அது சென்னிறமாக மாறுகிறது. உச்சகட்ட ஒரு மாறுதல். அம்மாறுதலுக்குப் பின்பு அதன் அழிவு அத்துணை எளிதானதில்லை. ஆம் இன்றுமட்டும் அகழ்வாய்வுகளில் நம் பெற்ற உடைந்த பானை ஓடுகளே நமது வரலாற்றை வீரியத்துடன் முன்வைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர் ஒரு சிறந்த உதாரணம்.

 

குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதை திருத்தமாய்ச் செய்யும்படிக்கு , தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாய் வனைந்தான் (எரேமியா 18: 4) இக்காட்சி நமக்கு ஒருசில காரியங்களை அறிவுறுத்துகிறது. கடவுளின் விருப்பத்திற்கு மாறாக நாம் உருப்பெற முயலும் தோறும் அவர் நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். மனுக்குலம் அவர் விரும்பும் வடிவம் பெறும் மட்டும் அவர் தனது திரிகை முன்னின்று எழும்புவதில்லை எனும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறார். அதற்காக நமது நெகிழும் குழையும் வளையும் உருப்பெறும் தன்மையை வேண்டி நிற்கிறார்.

 

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” (மத் 7:1), என்பது நாம் ஒருவரையும் தீர்ப்பிடக்கூடாது என்பதாக நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். பல  நேரங்களில் இவ்வார்த்தைகளின் பின் நாமும் ஒளிந்துகொள்ளத்தக்க வசதி இருப்பதினால் தானே. ஆனால் தொடர்ந்து அருள் நாதரின் வார்த்தைகளைக் கவனிப்போமானால் அவர் சொல்ல வருவது தெளிவு பெறும். “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (7.2) என இயேசுவின் மலைப் பொழிவு “தீர்ப்பின்” சமநிலையை எடுத்துக்கூறுகிறது. நமக்கு வேண்டும்போது நியாயத்தை வளைப்பதும் எதிராளிக்கு விரோதமாக சட்டம் பாய்வதும் ஏற்புடையது அல்ல என்பதே இயேசுவின் நடுநிலைப் பார்வையாக நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எச்சூழலிலும் நேர்மையே நமது மதிப்பீட்டின் அளவுகோலாக இருக்கவேண்டுமே ஒழிய நமது எளிய ஆதாயங்களுக்காக, எளிய புரிதலுக்காக நாம் மாபெரும் உண்மைகளை பலியாக்கிவிடக்கூடது என்பதையே இயேசு உரத்துக் கூறுகிறார்.

 

தீர்ப்பிடுதல் ஒரு நீதிபதிக்கு உரிய வார்த்தை. அவ்வார்த்தை சார்பு அற்றது. எது சரி எது தவறு என குறிப்பிடும் ஒன்றையே தீர்ப்பிடுதல் எனும் வார்த்தை சுட்டி நிற்கின்றது. எப்பக்கம் நாம் சார்பெடுக்கவேண்டும் எனும் ஒரு தெளிவையே தீர்ப்பு நமக்கு வழங்குகிறது. தீர்ப்பை கவனிக்காதபடி நாமே முடிவு செய்வதோ, நமக்கு வேண்டிய வித்தத்தில் தீர்ப்பு அமையவேண்டும் என்பதோ கடவுளுக்கு எதிரான செயலே. “கட்டுவேன் நாட்டுவேன் என்றும்…”(9) கூறும்போது வசனம் நம்மை மேம்படுத்தவும் ஆசி வழங்கவும் முன்நிற்பது போல, “…இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி….” எனும் வசனம் திரும்ப இயலா கோணலான வழிகளைத் தெரிந்துகொண்டு நடப்போரை அழித்தே சீர் செய்யவேண்டும் எனும் நெருக்கடிக்குள் படைத்தவரை உந்துகிற கட்டமாக காண்கிறோம். எனினும் வசனங்கள் 8, 10 கடவுளது தீர்ப்பிடுதல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் இறைவாக்கினர் பதிவு செய்ய மறக்கவில்லை.

 

ஒருபோதும் குயவன் தான் வனைகின்ற மண்ணோடு கோபம் கொண்டுவிட இயலாது எனும் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குயவன் அறிவான், தான் உருவாக்கும் பானை அதன் வடிவத்தை எட்டவில்லையென்று சொன்னால் அதனால் எவ்வித பயனும் விளையாது. ஆகவே பயனற்ற ஒன்றை உருவாக்குவதைவிட பயனுள்ள வடிவை களிமண் அடையும்படி அம்மண்ணை மீண்டும் பானையாக உருவாக்கும் சுழற்0சியில் ஈடுபடுத்துகிறார். இது எவ்வகையிலும் அம்மண்ணை அழித்துவிடுவதற்கான செயல் அன்று மாறாக அம்மண் பயனுறும் வகையில் உருபெறவேண்டும் என்ற கரிசனையால் மட்டுமே.

 

மெதடிஸ்ட் திருச்சபை தனது ஆரம்ப காலங்களில் இவ்விதமான ஒழுங்கைப் பேணி வந்தது. கூடுகையில் வருவோரது வாழ்வில் காணப்படும் தவறுகளை மாற்றும்படியான வாய்ப்பை அளித்தது. தவறு செய்வோர் திருந்தும் வாய்பை அளித்தே அவர்கள் கிருபையில் வளரும்படியாக அது ஊக்குவித்தது. சுயபரிசோதனைக்கான ஒரு அம்சமாக அது அனேகருக்கு தோன்றியதால் திருச்சபை மெய்யறிவில் வளர்ந்தது. “தீர்க்க தரிசனம் இல்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்” என்பதை புரிந்தோராய் அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி வளர்ந்த திருச்சபை இது.

 

கடவுள் தீர்ப்பிடுகிறார். நாமும் அவரோடு சேர்ந்து முழுமை நோக்கை அடையும்படியாக தீர்ப்பிடுவது சிறந்தது. எனினும் மனிதர்களாகிய நாம் குறையுள்ளவர்களானபடியாலும் தவறிளைக்கக்கூடியவர்களானபடியாலும் நமது தீர்ப்பை நாம் தாழ்மையோடு முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் கடவுளின் தீர்ப்பு அவ்விதமாக அமையாது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் திறந்தமனதுடன் இருக்கிறார் என்பதே நாம் மகிழும்படியான நற்செய்தி.

 

பிலேமோனுடைய அடிமையாக இருந்த ஒநேசிமு அவரிடம் திருடியதால் சிறையில் இருக்கிறார். தனது முதிர்வயதில் பவுலும் தனது ஊழியத்தின் நிமித்தமாக சிறைசெல்லுகின்ற தருணத்தில் ஒநேசிமுவிடம் கேட்டறிந்து அவன் தனது வாழ்வில் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்குமா என ஏங்குவதை அறிந்துகொள்ளுகிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்த பவுல், அதற்காகவே இக்கடிதத்தை சிறையிலிருந்து எழுதுகிறார். பயனற்ற களிமண்ணை பயனுள்ள பாத்திரமாக அமைக்கும் இறைவாக்கினரின் உண்மைச் சொற்களில் இருந்து இதை உணர்ந்தவராக பவுல் பிலேமோனுக்கு எழுதுகின்ற கடிதத்தில் ஒருசில காரியங்களை முன்வைக்கிறார்.

 

ஒநேசிமு என்பதற்கு பயனுள்ள என்பதே அர்த்தம். தனது கிரேக்க ஞானத்தால் அதையே அவர் வார்த்தை விளையாட்டாக பயன்படுத்தி “முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்”. எனக்கூறி அவனது வாழ்வில் ஒரு புது வடிவம் அவன் எடுப்பதற்காக முயலுகிறார். அடிமையானவனை அடிமையாக மறுபடியும் பிலேமோனிடம் அனுப்பாதபடி அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி தனது கடிதத்தில் மன்றாடுகிறார். மேலும் பவுல் பிலேமோனிடம் வைத்திருந்த நம்பிக்கை அவரது வாழ்வின் நற்சான்று ஆகியவை ஒநேசுமுவின் வாழ்வு மறு வடிவம் பெற காரணமாயிருத்ததைக் கண்டுகொள்ளுகிறோம்.

 

இப்பின்னணியங்களைக் கொண்டே நாம் இயேசுவின் கூற்றை விளங்கிக்கொள்ள இருக்கிறோம். பயனற்றோர் பயன்பெற வேண்டுமாயின்  அவர்கள் மறு ஆக்கம் செய்யப்படவேண்டும். தங்கள் வாழ்வின் மேன்மை என கருதுவனவற்றை அவர்கள் ஒதுக்கிவைத்து விலை செலுத்தவேண்டும் என இயேசு குறிப்பிடுகிறதைக் காண்கிறோம். மூன்று முக்கிய காரியங்களை தனது சீடராக விரும்புவோர் விலையாக செலுத்தவேண்டும் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். மிகவும் தாழ்மையுடனும் மன்றட்டுடனும் இப்பகுதிகளை நாம் நெருங்குவோமென்றால் கடவுளின் வார்த்தை நம்மை இன்று அவரது சீடர்களாக்கும்.

 

லூக்கா இயேசுவை பின்தொடரும் ஒரு பெருங் கூட்டத்தை காட்சிப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து இயேசு இக்கூட்டத்தைக் கண்டு பிரமிக்காமல் தனக்கான ஒரு சிறு கூட்டமே ஏற்புடையது எனும் கருத்தை முன்மொழிவதை பதிவு செய்கிறார். மனத்திண்மையும் தனது பணியில் எவ்விதமும் சமரசமும் செய்துகொள்ளாத இயேசுவின் வாழ்வே இங்கே முன்மாதிரியாக இருக்கிறது. தனது தாயை விட்டு, தனது சகோதரர்களை விட்டு, தான் பிறந்த வளர்ந்த ஊர்களை விட்டு, அவர் தாம் தேவனுடைய குமாரன் என்னப்படுவதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாம் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானர்,  என அவர் பலவற்றை விட்டு விட்டே  தனது பணியைத் தொடருகிறார். இதையே தன்னைப் பின்பற்றி வரவிருக்கும் தமது சீடர்களுக்கு அறிவுரையாக வைக்கிறார். இது கடினமானபடியால் சீடர்களால் அவரின் சிலுவை மட்டும் கூட நிலைநிற்க முடியாது போனது.

 

இன்று எங்கெங்கு காணினும் சீடத்துவ முகாம்கள் நடைபெறுகிறதைக் கண்டு நாம் பெருமையும் பிரமிப்பும் அடைவோம் எனினும் இயேசுவை பின்தொடர்வதற்கும் அவரின் சீடராவதற்கும் உள்ள வேற்றுமைகள் அளவிட முடியாதவைகள். எவரும் அவரை பின் தொடரலாம், தன்னையே வெறுக்காதவன் அவரின் சீடனாக இயலாது எனும் உண்மையை பெருங்கூட்டமாக நின்று அவரை பின்தொடர எத்தனிக்கும் நம்மைப் பார்த்து அவர் எச்சரிக்கையாக கூறுகிறார்.

 

யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் தன் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(26) எவ்விதமான கூற்று இது? நல்ல ஒரு குடும்ப வாழ்வை அவர் நமக்கு ஆசீர்வதித்துக் கொடுத்துவிட்டு இவ்விதமாக கூறுவது எவ்விதத்தில் நியாயம் என எண்ணுகிறோமா? உனக்கடுத்தவனை சினேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சினேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத் 5: 43, 44)

 

தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(27) ரோமரின் ஆட்சிக்கு கீழாக வாழுகின்ற இஸ்ரவேலருக்கு சிலுவை என்றால் என்னவென்பது தெரியும். அது தண்டனை பெறும் ஒரு கருவி மட்டுமல்ல அவமானமும் நிந்தையும் ஒருங்கிணைந்து பெறும் தண்டனை. அதனை எடுக்கவேண்டும் என இயேசு சொல்லும்போது தாமே, அவர் தனது வாழ்வின் முடிவை ஒத்தே தனது சீடர்களின் வாழ்வும் அமையும் என்பதாக சொல்லிச் செல்லுகிறார். ஒருவகையில் அனைவரும் புரிந்துகொள்ள இயலாத கூற்று. அனைவரும் செல்ல இயலாத கடினப்பாடுகள் நிறைந்த ஒரு பயணம் என்பதாக அவர் கூறுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான் (33) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை சினேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது. (மத்தேயு 6:24)

 

களிமண் தன்னிலே பயன் அற்றதாய் இருப்பதும் அதை வடிவமைப்பவனது செயல், கவனம், திறமை, அனுபவம், கரிசனை, தூரக்காட்சி யாவும் களிமண்ணை பயனுறும் ஒன்றாய் மாற்றுகின்றது என்பதே சாரம். அதற்காக மிதிபடுவதும் சூளையிலே வெந்து தணிவதும் மண்ணின் நெகிழ்வு தன்மையால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவ்வித அர்ப்பணிப்பு இன்றி பின்தொடருவோருக்கு நோய்கள் குணமாகலாம், பசி தீரலாம் எனினும் சீடர் எனும் பதவி எட்டாத் தூரமே.

 

இயேசுவை பின்தொடருகின்ற அனைவரிடமும் அவர் கூறுவது இரண்டு உவமைகளுடன் எடுத்தாளப்பட்டுள்ளது. வீட்டைக்கட்டுகிறவன் தன்னிடம் அதற்குரிய பணம் இருக்கிறதா என எண்ணிக்கொள்ளுவது போல, போர் செல்லுமுன் மன்னன் தனது வீரர்களால் எதிரிகளை மேற்கொள்ள இயலுமா என சிந்தித்து பார்ப்பதுபோல என கூறுவது ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். திரும்ப இயலா ஒரு உலகுக்குள் நுழையும் முன்பு அதற்கான அர்ப்பணத்தை வினவும் ஒரு முக்கிய கேள்வி. நீங்களும் நானும் இக்கேள்வியை ஒதுக்கிவிடலாம். ஆனால் இக்கேள்வி என்றேனும் நம்முன் வந்து நம்மை நோக்கி நிற்கும். அதற்கு பதில் சொல்ல இயலாவிட்டால் நாமும் பின்செல்லும் திரளாவோமே அன்றி அவரது சீடர் எனும் உன்னத நிலையை அடையவில்லை என்பதே அப்பொருள்.

 

ஏனோ இயேசுவின் மிக பிரபலமான இறுதி கட்டளை என் மனதில் வந்து போகிறது. “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18 – 20)

 

அப்படியாயின் இன்றைய நமது மிஷனெறி தாகம் நம்மை சீடர்களாக்க அர்ப்பணிக்குமா அல்லது சகல ஜாதிகளையும் சீஷர்களாக்க துரிதப்படுத்துமா? சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை சீஷர்களாக மறுக்கும் நமக்கு பொருந்துமா? நம்மை வனைவோரிடமே மன்றாடுவோம்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்

+91 8238 503 712

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com
08.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

 

ஒன்றிணைக்கும் நற்கருணை – ஒன்றிணைக்கிறதா?

செப்ரெம்பர் 1, 2013

(திருமறைப் பகுதிகள்: சங்கீதம் 81: 1, 10 – 16, எரேமியா 2: 4 – 13, எபிரேயர் 13: 1 – 8, 15 & 16, லூக்கா 14: 1, 7 – 14)

 

கர்த்தரின் பந்தியில் கலந்துகொள்ள வந்திருக்கும் அருமை திருச்சபையோரே! தன்னையே பகிர்ந்த இயேசுவின் திருப்பெயரால் உங்களை நான் வாழ்த்துகிறேன்.

 

பெற்றோர் வணக்கம் நமது மரபு. பெரியோருக்கு உகந்த மரியாதை வழங்குவது சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தான் வயோதிபர்களைக் கண்டால் பேருந்தில் எழுந்து நின்று இடம் கொடுக்கிறோம். சிறப்பு வரிசைகளை அமைத்திருக்கிறோம். பலவித சலுகைகளுக்கு ஏற்புடையவர்களாக அவர்கள் நம் முன் காட்சியளிக்கிறார்கள். “உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்கிற கட்டளை நம்மில் ஒலித்துக்கொண்டிருப்பதால் இவைகளை நாம் கருத்தாய் செய்கிறோம். நல்லதுதான். எனினும் முறைமுறையாக வாசித்த சங்கீதமும், வாசிக்க கேட்ட எரேமியாவின் உரையும் நம்மை ஒரு புதிய பாதையைத் தெரிந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றது. இப்பாதையை நாம் தொடர்கையில் அவை நாம் வாசித்து அறிந்த எபிரேயரோடும் லூக்காவோடும் இயைந்து செல்லுவது நமக்கு ஒரு பொதுவான புரிதலையும் வழங்க இருக்கிறது. திறந்த இருதயத்தோடு இருந்து இறைசெய்தியால் ஒன்றிணைந்தால் ஆண்டவரின் ஆசி நம்மோடு தங்கியிருக்கும்.

 

சங்கீதம் 81 ஐ எழுதிய ஆசாப் இதை கித்தீத் எனும் வாத்தியத்தோடு வாசிக்கவேண்டும் என்கிற குறிப்பை இராகத்தலைவனுக்கு இணைத்திருக்கிறார். எனினும் சங்கீதத்தை நாம் கூர்ந்து வாசிக்கும்போது தம்புரு வீணை சுரமண்டலம் மற்றும் எக்காளத்தையும் பயன்படுத்தி கடவுளுக்கு துதி பலியைச் செலுத்துவது எனும் கருத்தை அவர் உள்பொதிந்து வைத்திருக்கிறார். வெறும் சொல் அலங்காரமாக அல்ல “இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது” (4) என அறுவடைப் பண்டிகை எனப்படும் கூடாரப் பண்டிகை கொண்டாடும் ஆராதனையில் பாடும்படியாக எழுதுகிறார்.

 

ஒருமித்து பாடும் இப்பாடலின் பிற்பகுதி ஒரு சுய பரிசோதனை போல், பாவ அறிக்கை போல் அமைந்துள்ளது இதன் சிறப்பு. இப்பாடல் முடியும் தருவாயில் ஆண்டவரின் கருணையுள்ளம் தனது பிள்ளைகளை அரவணைக்கும் தன்மையது எனும் உறுதிப்பாட்டுடன் முடிகிறது. இப்பாடலில் தொக்கி நிற்கும் சோகம் என்னவென்றால், தம் மக்கள் தமக்கு பணியாதபடி வேற்று தெய்வங்களுக்கு பணிந்து நடந்து கடவுளை புறக்கணித்த சோகத்தை ஏந்தியபடி இக்கவி செல்லுகிறது. ஒரு சிறந்த நாளின்போது இவ்விதமான பாடல்களின் முக்கியத்துவம் என்ன? மகிழ்வின் நேரத்தில் ஏன் பழைய வாழ்வைக் கிளறி பார்க்கவேண்டும் போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகிறதல்லவா?

 

எளிய ஒற்றை வரியில் இவைகளுக்கு பதில் கூறிவிட இயலாது எனினும் நாம் இவ்விதமாக புரிந்துகொள்ளலாம். கடவுளுக்கு முன் நமது வாழ்வு திறந்தே இருக்கிறது. அவர் முக்காலமும் அறிந்தவர். அவர் திருமுன் வருகையில் நமது வாழ்வில் ஏற்பட்ட சருக்கல்களை நினைவு கூர்வதும் அவர் உதவியால் நாம் தொடர்ந்து நமது பயணத்தை உறுதியுடன் தொடரும் விரும்புகிறோம் எனும் அற்பணமுமே. இவ்வித சூழலில் இன்றைய செய்தியின் பின்புலம் அமைந்துள்ளதால் நாமும் கருத்தாய் இவைகளைக் கேட்டு நமது வாழ்வை சீர் செய்வது அவசியம். எங்கே தவறினோம் என்பதை அறியவில்லையென்று சொன்னால் நாம் பாதையை தெரிந்தெடுப்பதும் இயலாத காரியம் இல்லையா?

 

எரேமியா தீர்க்கதரிசி தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் வெளியிடுகின்ற அறைகூவல் மிகவும் கவனிக்கதக்கது. மிகவும் இக்கட்டான சூழலில் ஆண்டவர் வழிநடத்திய அவர்தம் மக்கள் அவரைத் தேடாமல் போனதன் விசித்திரத்தை அவர் கேள்விக்குட்படுத்துகிறார். அதற்காக அவர் கூர்மைப்படுத்திச் சொல்லும் வார்த்தைகள் (5-7) தனியாக தியானிக்க வெண்டிய அளவு செறிவுள்ளவைகள். பொருள் கொள்ள துவங்கினோமென்றால், எகிப்திலே நீ அடிமையாயிருந்தாய், அங்கிருந்து உன்னை நான் ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் விடுவித்தேன். நீ கடந்து வந்த வழியை திரும்பிப் பார்த்தால் அது மனிதர் வாழ தகுதியற்ற இடம். வழி நடப்பதற்கும் ஏற்ற இடம் அன்று. மரணத்துக்கேதுவான அனைத்து இடர்களும் நிறைந்து காணப்பட்ட இடத்தை நீ கடப்பதற்கு எடுத்துக்கொண்ட 40 வருடங்களும் நான் உன்னோடிருந்து உனக்கு உணவும், பாதுகாப்பும் அளித்தேன். வாக்களித்த பாலும் தேனும் ஓடுகின்ற கானானை நீ அடைந்தபோதோ என்னை மறந்து நான் கொடுத்த அவ்விடத்தை உங்கள் தீய வழிகளால் அருவருப்பாக்கினீர்கள் என ஆண்டவர் தனது வேதனையை தீர்க்கரின் மூலம் வெளிப்படுத்துகிறதைக் காண்கிறோம். புனிதத்தை முறைதவறி பேணுகின்றபோதே நாம் அதன் புனித்தத்தன்மையை இழந்துவிடுகிறோம் எனும் கூற்றை எரேமியா எதிரொலிக்கிறார்.

 

மக்களின் இத்துணை அநியாயங்களும் அவர்களால் மாத்திரம் நிகழவில்லை என்பதையும் அவர் பதிவுசெய்வது நமக்கு புதிய வாசல்களை திறக்கின்றது. ஆம் மக்கள் வழி தவறி செல்வதற்கு காரணமான குற்றவாளிகளை அவர் நம்முன் நிறுத்துகிறார். மக்களால் அவர்களை பிறித்தறிய இயலவில்லை என்று சொன்னால் அதனால் நஷ்டம் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை தன் சொந்த மக்களாக பாவித்து வழிநடத்திய கடவுளுக்கும் அல்லவா? இவ்விதமான ஏக்கத்தோடு எரேமியா “கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்கு துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக் கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்” என சொல்லுவதைக் காண்கிறோம். இதன் பொருள் என்ன? ஆசாரியர்களும் வேதத்தைப் போதிக்கிறவர்களும் இஸ்ரவேலின் ஆன்மீகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர், அவ்வாறே நீதி மற்றும் நேர்மை வழியில் மக்களை வழிநடத்தவேண்டிய மேய்ப்பர்களான தலைவர்கள், பாதை மாறி விட்டனர். மேலும், மக்களின் அற வாழ்விற்கு அழியா நெருப்பை வழங்கும் கடமை கொண்ட தீர்க்கதரிசனஞ் சொல்லுவோர், கடமை தவறியதையும் சுட்டிக்கட்டுகிறார்.

 

ஆகவே கடவுள் தமது வழக்கை தொடரத் துணிகிறார். அந்த வழக்கு நம்மோடு மட்டும் முடிவதில்லை அது நமது பிள்ளைகளையும் அவர்கள் சந்ததியினரையும் கேள்விக்குட்படுத்தும் வழக்கு. பிதாக்களின் குற்றங்களை பிள்ளைகள் சுமப்பது ஏற்றதல்ல. நமது ஆசிகளை நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லலாம், நமது சாபங்களை நாம் ஒருபோதும் அங்ஙனம் விட்டுச் செல்லலாகாது. அது முறையாகாது. எனில் நாம் ஒன்றை புரிந்துகொள்ளுகிறோம். நமது பெற்றோர் ஆசிகளையும் சாபங்களையும் நமக்கு அறிந்தோ அறியாமலோ விட்டுச் செல்லுகிறார்கள். ஆசிகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் அது நமது உரிமை. ஆனால் செய்யாத குற்றத்திற்கு எப்படி தண்டனை பெறுவது? எவ்விதம் விடுதலை பெறுவது? பிராயசித்தமாக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா? எவ்வாறு அதற்காக நாம் துணிவது சாத்தியம்?

 

ஜீவ தண்ணீராகிய கடவுளை கொள்ளுகின்ற உறுதியான உள்ளம் நம்மிடம் உண்டா?  அல்லது இஸ்ரவேலைப்போன்றே நாமும் உடைப்பெடுத்த தொட்டிகளையே வைத்திருக்கிறோமா? எவ்விதம் இக்கேள்விகளுக்கான பதிலை உறுதி செய்வது?

 

எபிரேயர் நிரூபத்தின் ஆசிரியர் தனது செய்தியை கோர்த்து முடிக்கின்ற வார்த்தைகளைக் காணும்போது புதிய இஸ்ரவேலராகிய ஆதி திருச்சபையினர் தவறிவிடக்கூடாத காரியங்களைப் பட்டியலிடுகிறதை காண்கிறோம். எளிதனவைகளும் கடினமானவைகளும் இவைகளில் உண்டு. எனில் எதற்காக ஆக்கியோன் இவைகளை தன் கடிதத்தில் வரைகிறார்? நேர்மையோடு பதில் கூறவேண்டுமென்று சொன்னால் ஆதி திருச்சபையிலும் நமது முன்னோர்கள் “கடவுளுக்கு உகந்த வாழ்வு” வாழாதபடிக்கு நெறி தவறியாதினாலே தானே? எனில் இத்தீங்குகள் நம்மையும் சுற்றிப்பிடிக்க நமது கலைக் கவ்வியபடி இருக்கும் மலைப்பாம்பை ஒத்தவை. எவ்வாறு இவைகளினின்று நாம் வெளியேற இயலும்? படிப்படியான விடுதைலை எனக்கொள்வோமென்றால் அந்தப் படிகளை எங்கிருந்து கட்ட ஆரம்பிப்போம். திருச்சபையிலிருந்தா? அல்லது சமூகத்திலிருந்தா? எனது தனிப்பட்ட வாழ்விலிருந்து எனும் நேர்மையான பதில் வருமென்றால், அதை எங்கோ கடைபிடிப்பதை விட்டு திருச்சபையில் கடைபிடிக்க முன்வருவோமா? நமது முன்னோர் செய்தவைகள் தவறென்றுணர்ந்து அவைகளினின்று விடுபட முன்வருவோமா?

 

இயேசு ஒரு ஓய்வுநாளில் உணவு உண்ணுவதற்காக  பரிசேயருடைய தலைவர் வீட்டிற்குச் செல்லுகிறார். உணவருந்த வந்தவர்கள் அனைவரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என லூக்கா அக்காட்சியை விவரிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு விருந்தை ஒத்த காட்சியாக இதை அவை காட்சிப்படுத்துகிறார். இயேசுவோடு இன்னும் அனேகர் அதில் கலந்துகொண்டிருக்கின்றனர். பரிசேயருடைய தலைவர் ஆனபடியால் அனேக பரிசேயர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதை நாம் யூகிக்கலாம். இவர்களோடு பொதுமக்களும், நியாய சாஸ்திரிகளும் இருப்பதை கண்டுகொள்ளுகிறோம். இவ்விருந்தின் மத்தியில் நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷனும் இருக்கிறான். இயேசு தன்னைச் சுற்றியிருந்த பரிசேயரிடமும், நியாய சாஸ்திரிகளிடமும் ஒரு கேள்வியை வைக்கிறார். “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா”?

 

கடந்த வாரத்திலும் நாம் ஒரு ஓய்வுநாள் சொஸ்தமாக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தோம். கூனியான ஒரு பெண்மணியை அவர் நிமிர்த்துவதற்குள் அவளைச் சூழ்ந்திருந்தோர் அனைவருமே அத்தகைய நிலையில் இருந்தனர் என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டும் ஒரு நிகழ்ச்சி. இயேசு ஜெப ஆலய தலைவன் ஆற்றிய எதிர்வினையை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இக்கேள்வியைப் படைப்பதுபோல் தோன்றுகின்றது. நலம்பெறுவதற்கான ஆற்றல் ஓய்வுநாளில் செலவிடப்படுவதை அவர்களும் எதிர்க்கிறார்களா என இயேசு அறிய எத்தனிக்கிறார். ஆனால் அனைவரும் வாய்மூடி அமைதலாயிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் தலைவரும், அனைவரால் போற்றப்படுகின்றவரும்,  விருந்தை ஆயத்தம் பண்ணின பரிசேயருடைய தலைவனுக்கு மரியாதை செலுத்தும்படி வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் என எண்ணினார்களோ என்னவோ.

 

இயேசு வியாதியுற்ற மனிதரை தம் அருகில் அழைத்து அவரை நலம்பெறச் செய்கிறார். இயேசு எவ்விதமான ஆற்றலை செலவளித்தார் என்பதை நேரடியாக இங்கே வெளிப்படுத்தவில்லை, எனினும் மறைமுகமாக இயேசுவின் கூற்றின்னூடாக “நலம் பெறும் நிகழ்வு எப்படி நடந்திருக்கும் என நம்மை யூகிக்க வைக்கிறார். “உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ” (5) என்கிறார். அவர்களால் இதற்குப் பதில் கூற இயலாதபடி ஆயிற்று எனக் காண்கிறோம்.

 

இப்பின்னணியமே அவரது பின்வரும் உரையாடலுக்கான  அடித்தளமாக அமைந்திருக்கிறது. பெரியோரை போற்றும் தன்மையுடையவர்களாக தங்களால் மதிக்கப்பெறும் ஒருவர் முன்நிலையில் அவர்களது குணநலங்கள் எப்படி இருக்கின்றன என்று இயேசு கவனித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஆற்றலை செலவளித்து தாங்கள் யார் என்பதை நீரூபிப்பதற்காக அவர்கள் முனைவதை இயேசு கவலையுடன் கவனிக்கிறார். முதன்மையான இடத்திற்கான ஒரு கீழ்மையான முறைமைகளை அவர்கள் கையாளுவதை கவனித்த இயேசு பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் எனும் உண்மையை அவர்களுக்கும் கூற முற்படுகிறார்.

 

கலியாண வீட்டிற்குச் செல்லும்போது விருந்து பறிமாறும் இடத்தில் முதன்மையான இடத்தை தெரிந்துகொள்ளுவதைப் பார்க்கிலும் கடைசி இடத்தை தெரிந்து கொள்ளுவதே சிறந்தது எனவும், அவ்வாறு நாம் செய்யத் துணியும்போது அங்கே நம்மை அழைத்தவர் வந்து நம்மை முதன்மையான இடத்திற்கு அழைத்துச் செல்லுவதே சிறப்பாக இருக்கும் என்று அவர் சொல்லுவதை நாம் எப்படி பொருள் கொள்ளுவோம்?

 

நாமே உயர்ந்தவர் என காண்பிப்பது எவ்வகையிலும் இயேசுவின் பார்வையில் சரியானது அல்ல. நாமும் பல வேளைகளில் இதை உணர்ந்தவர்கள் போல் நம்மைத் தாழ்த்துகிறதுபோல் நடிக்கிறோம். எனினும் பல வேளைகளில் நமது உண்மை உரு வெளிப்படும்போது இவ்வளவு தூரம் நாம் புரிதலற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நாமும் நம்மை அறியாமலே முதன்மை இடத்தை தேடி அலைகிறவர்களாக இருக்கிறோமே என அறிகிற ஒரு சூழல் வந்தால் அச்சூழலில் இயேசுவின் வாக்கிற்கிணங்க பிறருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுவோமா? அல்லது இது காலம் காலமாக நடைபெற்றூவரும் பழக்கவழக்கம். இப்போதைக்கு மாற்ற முடியாது என முதன்மை இடத்தை இறுகப்பற்ற முயலுகிறோமா?

 

 

மணவாளன் இயேசு மணவாட்டியாகிய திருசபையின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தனது திருமணத்திற்கு அழைக்கிறார். அங்கே பகிரப்படுவதோ அவருடைய குருதியும் உடலும். தன்னையே கொடுத்தவரிடம் சேரும்போது நம்மிடம் பணிவும் தாழ்மையும் இருப்பதல்லவா அவரது விண்ணப்பம். அவரது உடல் “இழந்தவர்களை தேடவும் இரட்சிக்கவும்” அல்லவா உடைக்கப்பட்டது. நம்மை முதன்மையாக்கும்போது அவர் காணாமல் போன ஆட்டைத் தேடி அலைகிறார் எனும் உண்மை எப்படி நமக்கு உறைக்காமல் போனது? அவ்வுடைவிலே நாமும் ஐக்கியம் ஆகாதபடி நமது மேன்மை நமக்கு நமது பெற்றோர் விட்டுச்சென்ற பாரம்பரியம் இருக்குமென்றால், அவைகளை நாமும் இதுகாறும் கைக்கொள்ளுகிறோமென்றால் எத்துணை தீயது அது.

 

ஆம் எனக்கு அன்பான திருச்சபையினரே! திருச்சபை பலவேளைகளில் தனது முன்னோர்களின் பாரம்பரியங்களுடனே தனது மணவாளனைக் காணச் செல்லுகிறது. முன்னோர் மீது கொண்ட பக்தி நமது ஆன்மீகத்தை நசுக்குவதை சற்றும் உணராத ஒரு சந்திப்பு அது. இவ்வகை சந்திப்பு நமக்கு பிரியமாயிருந்தாலும் அருள் நாதர் இயேசுவை அது துக்கப்படுத்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

 

ஒரு எடுத்துக்காட்டாக இன்றைய நற்கருணை வழிபாட்டையே எடுத்துக்கொள்வோம். இங்கே இதுநாள் வரை ஆண்களே கர்த்தரின் பந்தியில் முதலாவதாக கலந்துகொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. இதைக் குறித்த குற்ற உணர்வு நம்மிடம் இருப்பதுமில்லை. இதிலென்ன தவறு என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். “பெண்கள் முதலில்” எனும் சொல்லாட்சி சமூக தளங்களில் முன்நிறுத்தப்படுகின்ற இன்நாட்களில் நாம் இன்னும் அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்த முடிவு செய்திருக்கிறோமா? பேருந்தில் இணைந்து பயணம் செய்கிறோம், ஆலயத்திற்கு இணைந்து வருகிறோம் கர்த்தருடைய பந்தியில் குடும்பமாக இணைந்து பகிராதபடி இருப்பதில் உள்ள சிக்கல் தான் என்ன?

 

ஒருவேளை நாம் நமது குடும்பத்தோடு இணைந்து வருவோமென்றால் தேவன் இணைத்ததை நான் பிரிக்காமல் இருக்க முயற்சி செய்தேன் என்கிற நிறைவு எனக்கு ஏற்படும். வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும், ஆலயத்திலும் நற்கருணையிலும் சேர்ந்திருக்கும் பாக்கியம் அனைவருக்கும் ஆசியாக கிடைக்கும்.

 

நாம் நம்மைவிட்டு கடந்துபோன முன்னோர்களுக்கு செய்யும் உதவி அவர்கள் விட்டுச்சென்ற இடிபாடுகள் மேல் அவர்களின் உன்னதமான நோக்கங்கள் நிறைவேற கட்டிஎழுப்புவதேயன்றி அவைகளையே வாழ்விடமாக கொள்ளுவது அன்று. எளியோருக்கு  செய்யும் விருந்தை அவர்களால் நமக்கு திருப்பிச் செய்ய இயலாது என்பதை அறிவுறுத்திய ஆண்டவர் முன்னால் நாம் நிற்கும்பொழுது நமக்கு திருப்பிச் செய்ய இயலாத இடத்தில் நமது முன்னோர்களும் இருக்கிறார்கள். பதில் செய்ய இயலாதோருக்கு நீ செய்யும் உதவியே மிகப்பெரிய உதவி என்பதாய் இயேசு கூறி முடிக்கிறார். அத்தோடு “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு பதில் செய்யப்படும்” என்றார்.

 

கர்த்தரின் பந்தியில் குடும்பமாக வாருங்கள். கர்த்தர் உங்களுக்கு அளித்த பிள்ளைகள் எனும் ஆசியோடு.

 

அருட்திரு. காட்சன் சாமுவேல்

 

(01.09.2013 ஞாயிறன்று,  மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்  நற்கருணை வழிபாட்டில் வழங்கிய செய்தியின் எழுத்துவடிவம்)


%d bloggers like this: