உயர்ந்த சகேயு
சகேயு கதை சிறு வயதில் நாம் கேட்டிருப்பதால் சிறுபிள்ளைத்தனமாகவே பல வேளைகளில் நம் அதை புரிந்தும்கொள்ளுகிறோம். என்றாலும் அதனை முன்னிறுத்தும் நோக்கம் பிற எந்த நற்செய்தியாளர்களுக்கும் இல்லாது போனதால் அபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் நமது ஆழ்ந்த கவனத்தை கோருகிறது. பெரியவர்களுக்கான செய்தி அப்படி என்னதான் இதனுள் இருக்கிறது என்பதை நாம் காண அழைக்கப்படுகிறோம்.
சகேயுவின் குள்ள தோற்றத்தை ஆசிரியர் லூக்கா குறிப்பிடும்போது அது மிகவும் முக்கியமான தகவலாக சொல்லப்படுகிறது. இத்தகவலே அநநிகழ்வின் ஒட்டத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறது. இயேசுவைக் காணவேண்டும் என விரும்பும் ஒருவன் கண்டிப்பாக அவர் யார் என அறிந்திருப்பான். அவரது அரும் செயல்கள் மத்திரமல்ல அவரது கருணையின் சொற்கள் அவனது காதுகளை எட்டியிருக்கும். அப்படி அவன் கேட்பதற்கு சாத்தியமுள்ள வசனங்கள் அல்லது, அவனது வாழ்வை மாற்ற அவனைத் தூண்டிய வசனங்கள் என நாம் ஒரு பெரிய பட்டியலையே தயாரிக்கலாம்.
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) என நாளைய தினத்தின் கவலையினாலே மனிதன் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்கும் அவலத்தை இயேசு கண்டித்திருப்பதை அவன் கேள்விப்பட்டிருக்கலாம்.
நித்திய ஜீவனை சுதந்தரிக்கவேண்டும் என விருப்பத்தோடு வந்த ஒரு வாலிபனிடம் இயேசு உன்னிடத்தில் இன்னும் ஒரு குறை உண்டு, உன்னிடத்தில் உள்ளவைகள் யாவற்றைய்ம் விற்று தரித்திரருக்குக் கொடு எனக் கூறவே அவன் அதிக ஐசுவரியம் உள்ளவனானபடியால் மிகவும் துக்கமடைந்தான். அப்பொழுது இயேசு “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.” (லூக்கா 18:25) ஒருவேளை இந்த வசனம் அவனைத் திடுக்கிட வைத்திருக்கலாம்
மதியற்ற ஐசுவரியவான் தனது களஞ்சியத்தை இடித்துக் கட்டுவதை குறித்து இயேசு கூறியபின்பு, கடவுளின் கருணையால் மட்டுமே நாம் வாழ்கிறோம் என்பதை அவர் தெளிவு படுத்திவிட்டு, செல்வத்தின் மீது நாம் கொள்ளும் விருப்பத்தால் எவ்விதம் கடவுள் மீது குவிக்கப்படவேண்டிய நமது இருதய சிந்தனைகள் இடம் மாறுகின்றன என்பதை “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” லூக்கா 12:34 என்ற உண்மையினை அவன் ஆழ்ந்து தியானித்திருக்கவேண்டும்.
அவர் எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பும்போது கூறியதையும் அவன் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு “பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; ….” லூக்கா 10:4
தனது வாழ்வு பொருள் தேடும் ஒன்றாக இருந்ததினால் இயேசுவின் பொருளாதாரம் சார்ந்த பார்வை அவனை ஆச்சரியப்பட வைத்திருக்கும். இப்பேற்பட்ட ஒரு நபர் இருக்கக்கூடுமோ என அவன் எண்ணி அவரை பார்க்க விரும்பியிருக்கலாம்.
அவனது எண்ணம் இப்படி இருக்கையிலே அவனைக் குறித்த எண்ணம் ஊருக்குள் வேறு விதமாக உலாவிக்கொண்டிருந்தது. அவன் ஒரு பாவியான மனிதன். உரோமர்களுக்காக பணி செய்பவன். அடியாட்களைக் கொண்டு மிரட்டி எந்த சூழலிலும் தயங்காமல் வரி வசூலிப்பவன். (திருமணத்திற்கு என்று சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஆட்டோவில் பயணம் செய்யும்போது எனது கரத்தில் இருந்த பிரேஸ்லெட், கழுத்தில் இருந்த செயின் இவைகளைப்பார்த்து ஆட்டோ டிரைவர் பயந்து என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் எனக் கெஞ்சியதை நினைவு கூர்கிறேன்.)
தனக்கு கட்டளையிட்டிருக்கிறவைகளுக்கு அதிகமாகவும் வரி வசூலிக்கும் (லூக்கா 3: 12,13) பணத்தாசைப் பிடித்தவன். ஊரைக் கொள்ளையிட்டு உலையிலே போடுகிறவன் என அவனைக்குறித்த செய்தி ஊருக்குள் பரவியிருந்தது. எச்சில் கையால் காகத்தை விரட்டாதவன் போன்ற பலவிதமான புரிதல்கள் அவனைக்குறித்து மக்கள் மத்திதியில் இருந்தன. இவைகளில் பெரும்பலான கூற்றுகள் உண்மையே. அவன் தனது ஊராரால் அன்னியப்படுத்தப்பட்டவனாக வாழ்த்து வந்தான்.
இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டாயிற்று, அவர் தனது ஊருக்கு வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது, தனது உயரம் ஒரு தடை மாத்திரமல்ல தனக்கும் தனது மக்களுக்குமான உறவு சரியாய் இல்லாதபடியினால், அவன் வேறு உபாயம் தேடியபோது அவனுக்கு முன்னிருந்த மிக சரியான தீர்வு காட்டத்தி மரத்தில் ஏறுவது. அம்மரத்தில் ஏறுவது எளிது. அதன் உயரம் கிளைகள் யாவும் ஒரு சாதாரண புதர் செடியைவிட சற்றே கூடுதல். அதிலிருந்து இயேசுவைப் பார்ப்பதே ஒரே வழி என எண்ணியபடி அதை தெரிவு செய்கிறான்.
இயேசு அவ்விடத்தில் வந்தவுடன் அவனைப்பார்ப்பதும் அவனது பெயரை சொல்லுவதும் அற்புதமாக நமக்கு விளக்கப்பட்டிருந்தாலும் இயேசு சகேயுவை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு அவன் மிக முக்கியமான அரசியல் செல்வாக்குடையவனாக இருந்தான். இயேசுவும் இப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் பிரயாணம் செய்தபடியால் சகேயுவைக் குறித்து அறிந்துகொள்ளுவதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆகவே “இயேசு அவனை அண்ணந்து பார்த்து….” என்றவுடன் நாம் எதோ அவன் பனைமர உயரத்தில் எங்கோ ஒளிந்துகொண்டிருந்தான் எனக் கருதுவதோ, இயேசு தனது ஞானதிருஷ்டியால் அவனது பெயரை அறிந்திருந்தார் எனக் கொள்ளுவதோ சரியல்ல. ஒருவரைக் குறித்து ஒருவர் அறிந்திருந்தனர் ஆனால் இது மட்டும் சந்திக்கவில்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆகவேதான் மக்கள் யாவரும், “இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்” என முறுமுறுக்க இயேசுவோ அவனோடு உணவருந்தும்படிச் செல்கிறார். மக்கள் அனைவரும் அறிந்த ஒரு உண்மை இயேசுவிற்கு ஞான திருஷ்டியால்தான் தெரியவேண்டுமா என்ன?
வரி வசூலிப்பவன் ஒருவன் தனது பணிகளை விட இயேசுவைக் காணவேண்டும் என அவன் எடுத்த முயற்சியைக் காணும்போது தானே இயேசு அவனது உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளுகிறார். இயேசுவோடு அவன் உரையாடும்படியாக முயற்சிப்பதை அவர் புரிந்துகொள்ளுகிறார். அவனது வீட்டில் தங்குவதால் அவனோடு பேசலாம், அனைத்தும் கொண்டுள்ள அவன் வாழ்வில் இன்னும் ஒரு குறை இருப்பதால் தனது பிரவேசத்தால் அதையும் களையலாம் என்ற எண்ணத்தால் அவன் வீட்டில் தங்குவதற்கு முயற்சியை தனது பங்கிற்கு முன்மொழிகிறார். சகேயு அந்த வாய்ப்பை நழுவ விடவில்லை. அவன் மகிழ்ச்சியோடு இயேசுவை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுகிறான்.
ஏனெனில் அதுவே அவனது எண்ணமாயிருந்தது. இயேசுவோடு உரையாடவேண்டும், அவரது சொற்களை தனதாக்கிகொள்ளவேண்டும், தன்னில் அவர் ஒரு மாறுதலை செய்ய தான் உடன்படவேண்டும் என்ற ஏக்கத்துடனேயே அவவரி வசூலிப்பவன் ஒருவன் தனது பணிகளை விட இயேசுவைக் காணவேண்டும் என அவன் எடுத்த முயற்சியைக் காணும்போது தானே இயேசு அவனது உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளுகிறார். இயேசுவோடு அவன் உரையாடும்படியாக முயற்சிப்பதை அவன் புரிந்துகொள்ளுகிறார். அவனது வீட்டில் தங்குவதால் அவனோடு பேசலாம், அனைத்தும் கொண்டுள்ள அவன் வாழ்வில் இன்னும் ஒரு குறை இருப்பதால் தனது பிரவேசத்தால் அதையும் களையலாம் என்ற எண்ணத்தால் அவன் வீட்டில் தங்குவதற்கு முயற்சியை தனது பங்கிற்கு முன்மொழிகிறார்.
சகேயு அந்த வாய்ப்பை நழுவ விடவில்லை. அவன் மகிழ்ச்சியோடு இயேசுவை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுகிறான். ஏனெனில் அதுவே அவனது எண்ணமாயிருந்தது. இயேசுவோடு உரையாடவேண்டும், அவரது சொற்களை தனதாக்கிகொள்ளவேண்டும், தன்னில் அவர் ஒரு மாறுதலை செய்ய தான் உடன்படவேண்டும் என்ற ஏக்கத்துடனேயே அவன் அவரை பார்க்க விரும்பினான் என்பதை தெளிவுற புரிந்துகொள்ளுகிறோம்.
சகேயு திடீரென இரண்டு காரியங்களை பிரகடனமாகச் செய்கிறான். இயேசு அவனிடம் எதையும் கேட்குமுன்னாலே அவன் இதைச் செய்வது மிகுந்த ஆச்சரியமளிப்பதாக உள்ளது. முதலாவதாக….என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்கிறான். இக்கூற்று எவ்வகையிலும் கட்டுப்பாடுகள் அற்றது. தனது ஆஸ்தியில் பாதியை எவ்வகையிலும் தனக்கு உறவு இல்லாதவர்களுக்கு கொடுக்க அவன் ஆயத்தமானது மிகப்பெரிய ஆச்சரியம். தனது சொத்தின் சரி பாதியை கொடுத்துவிட்டு அதற்காக எந்த எதிர்பார்ப்புமின்றி அவன் நிற்பது அவனது உயரத்தை உயர்த்திக் காட்டுகிறது.
நான் யாரிடமாவது அனியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாய் திருப்பிச் செலுத்துகிறேன் என்பது மீதமிருக்கும் அவனது சொத்தையும் அவன் இழந்துவிடுவதற்கு ஆயத்தமாக இருக்கிறான் என்பதை காட்டுகிறது. ஆம் தனது சொத்தையே அவன் பலரையும் ஏமாற்றி வஞ்சித்து தானே சேர்த்திருக்கிறான். ஊரே அவனை வெறுக்கிறதே. இச்சூழலில் அவன் தனது மக்களோடு முறிந்துபோன உறவுகள் பெலப்படுவதே பெரிது என்றும், தனது பெருமை தான் வஞ்சகமாக குவித்துள்ள சொத்தில் இல்லை மாறாக, அது தன்னை கடவுளிடம் நெருங்க விடாமல் செய்யும் அபாயம் இருப்பதை உணர்ந்து கொள்ளுகிறான்.
எத்துணை விளக்கியும் சீடர்கள் புரிந்துகொள்ளத் தவறிய உண்மையினை சகேயு கண்டுகொண்டது இயேசுவை பின்வரும் வாக்கியங்களை பேசத் தூண்டியது. இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.
இங்கே இரட்சிப்பு வேறு ஒரு வாசலை நமக்கு திறந்து காண்பிக்கின்றது. இயேசுவின் சொற்களால் தன்னை சுத்தீகரித்துக்கொண்ட ஒரு மனிதன், தான் இயேசுவுக்கு முன்பே தனது சிலுவையை எடுத்துக்கொள்ள ஆயத்தமாகிவிட்டான். அனைத்து மேன்மைகளையும் இழந்து மனுஷ சாயலானவரை அவன் கண்டுகொண்ட தருணம் அது. அவனது சொத்துக்கள் அதற்குப் பின்பு அவனுக்கு சுமைகளே, அவற்றை சுமந்து திரிவது அவனுக்கு அவனே செய்துகொள்ளும் தீங்கு என்பதை அவன் புரிந்துகொள்ளுகிறான். ஆகவே மகிழ்ச்சியோடு அவைகளை அவன் உதறுகிறான்.
இப்படி அவன் உதறும்போது இன்னொரு மாற்றம் எரிகோவில் நடைபெறுகிறது. எரிகோவில் வாழும் ஏழைகள் இவனது உதவியால் தங்களது ஏழ்மையிலிருந்து மாறுகின்றனர். யார் யாருக்கு இவன் அனியாயம் செய்தனோ அவர்களிடத்தில் அவன் மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறான். அந்த மன்னிப்பு கோருதலை அவன் ஒரு செயலாக வெளிப்படுத்தும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு அவன் தன்னையே விற்று ஆவன செய்கிறான்.
இன்றையதினம் இரட்சிக்கப்பட்டவர்களில் எத்தைனை பேர் தங்கள் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கின்றனர்? தங்கள் சொந்த சகோதர சகோதிரிகளிடமிருந்தே வஞ்சித்து பெற்ற சொத்துக்களால் பகட்டாக திரியும்போது கைவிடப்பட்டோராய் ஏழ்மையில் வாடும் தங்கள் சகோதரர்கள் குறித்த அக்கரையில்லாதவர்கள் எப்படி இரட்சிப்பு அடைந்தோம் என மார்தட்ட இயலும்?
இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே என்ற கூற்று, தனது மகனையே பலியிட்டாலும் கடவுள் தனது உடன்படிக்கையை நிறைவேற்றுவார் என்ற விசுவாசம் கொண்ட ஆபிரகாமின் தன்மை சகேயுவில் வெளிப்பட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இழந்துபோனது சகேயு மட்டும் அல்ல, சகேயு போன்றவர்களால் தங்கள் வாழ்வை இழந்தவர்களையும் அச்சொல் சுட்டி நிற்பதை விவரிக்கவும் வேண்டுமா? ஆம் மனம் திரும்புதல் நமது வாழ்வில் மட்டுமல்ல நம்மால் பாதிப்படைந்தோரின் வாழ்விலும் குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட நம்மைத் தூண்டவேண்டும். இல்லாவிடில் அது இரட்சிப்பு இல்லை.
அருள்பணி. காட்சன் சாமுவேல்
தொடர்புகொள்ள
+918238503714
03.11.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.