Archive for ஜூன், 2016

பனைமரச் சாலை (19)

ஜூன் 30, 2016

வேட்கை துவங்குகிறது

ஹைதராபாத் எனக்கு நண்பர்கள் நிறைந்த இடம். என்னோடு இறையியல் கற்றவர்கள் அனேகர் அதை சுற்றி இருக்கின்றனர். மேலும் அது ஒரு இறையியல் மையம். ஆந்திரா கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அங்கே தான் இருக்கிறது. கிறிஸ்தவ இறையியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான சில்குரி வசந்த் ராவோ எனது நண்பர் மற்றும் முன்னாள் கல்லூரியின் முதல்வர். அவர் தான் என்னை தற்போதைய முதல்வருக்கு அறிமுகம் செய்திருந்தார். அனைவருமாக என்னிடம் கண்டிப்பாக கூறியிருந்தது என்னவென்றால், ஹதராபாத் வரும்போது எங்களுடன் தான் தங்கவேண்டும். எனது போதாத நேரம், மொத்த கல்லூரி ஆசிரியர்களும் நான் சென்ற நேரத்தில் ஜெர்மனி சென்றிருந்தார்கள். ஆனால் தற்பொதைய கல்லூரி முதல்வர் தாத்தாபுடி அவர்கள் என்னோடு வாட்சாப்பில் தொடர்பிலிருந்தார்கள். நான் யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்பது முதல் எங்கே தங்கவேண்டும் என்ற அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியிலிருந்து அவர்கள் எடுத்த முயற்சி அவர்களை நன்றியுடன் நினைவுகூறச் செய்கிறது.

நான் அங்கே சென்ற பொழுது மாலை 5 மணிக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தன. அங்குள்ள பொறுப்பு முதல்வரை நான் சந்திக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தேன். அவரது எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. நல்லவேளையாக அவர் அங்கே தனது அலுவலகத்தில் இருந்தார் ஆகவே அவரை கண்டுபிடிப்பது அத்துணை சிரமமாக இருக்கவில்லை. என்னை அன்போடு வரவேற்று எனக்கான ஒழுங்குகள் அமையுமட்டும் என்னோடு இருந்தார். அவரது காலில் ஒரு புண் இருந்ததால் அவரால் ஜெர்மனி செல்ல முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

டீ வந்தது. அப்போது தான் கவனித்தேன் நான் ஆந்திரா கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு வழங்கிய படங்கள் இரண்டும் முதல்வர் அலுவலகத்தில் முகவும் அழகாக ஃபிரேம் செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. என்னால் என் கண்களையே நம்ப நம்பமுடியவில்லை. மிக முக்கியமான ஓவியர்களின் படங்கள் அக்கல்லூரியின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்க, செயல்பாட்டிலிருக்கும் ஒரு இடத்தில் எனது படங்களை வைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்தேன். அங்கே நின்று தானே ஒரு புகைப்படமும் எடுத்க்டுக்கொண்டோம். பிலேமோன் எழுதிய கடிதத்தையும் இக்கல்லூரிக்கு நான் பனை ஓலையில் எழுதி வழங்கியிருக்கிறேன்.

Acting principal

எனக்கான அறைக்கு அவர்கள் அந்த பலவீனமான காலோடு நடந்து வந்தார்கள். அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என சரிபார்த்த பின்பே அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது வானம் தன்னை உடைத்து ஊற்றியது.  சுமார் 5.15 முதல் துவங்கிய மழை 7.15 வரை நின்று பெய்தது. நான் சற்றும் எதிர்பாராவண்ணம் மின்சாரம் போய்விட்டது. வெளியே போகமுடியாது, துணி துவைத்து காய போடலாம் என்று நினைத்தேன் அதுவும் நடக்காது என புரிந்துவிட்டது. என்ன செய்யலாம் என நினைத்தபோது நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தனர்.

வரமுடியாது என்றவர்கள், யாரை தொடர்புகொள்ள வேன்டும் என எண்களைக் கொடுத்தார்கள். இறையியல் பேராசிரியரும் எனது  நண்பருமான பிரபாகர், என்னோடு பேசினார். நான் நாளை காலைதான் வந்து சேருவேன், போய்விடாதீர்கள் என்றார். ஏற்கனவே நான் ஒருநாளை சேமித்திருந்தபடியால், சரியென்றேன். நண்பர் சாம்சன் ராஜு என்னை அழைத்து உதவிகள் வேண்டுமா?  எல்லூரு எப்போது வருவீர்கள் என விசாரித்தார்கள். பொதஃகர் விக்டர் அவர்களும் மறுநாள் நான் செல்லவேண்டிய பாதைகளை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்தினார்கள்.

அந்த நாள் நான் செல்லவேண்டிய இடங்களை எனது மனக்கண்ணில் நிறுத்தி சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைத்த நேரமாகவே எடுத்துக்கொண்டேன். ஆம் இதற்குப் பின்பு இப்படி ஒரு ஓய்வு எனக்குக் கிடைக்காது என எனது மனம் நன்கு அறிந்து வைத்திருந்தது போலும். தனித்த அந்த அறையிலே நண்பர்களோடு நான் பேச எனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக நினைத்து அந்த நாளை நான் செலவு செய்தேன்.

அப்போது எனது அக்கா மும்பையிலிருந்து என்னை அழைத்தார்கள். என்னை சந்திக்க காசாவை சார்ந்த பிரேம் என்பவர் வருவதாக கூறிய அவர்கள், அவரது எண்ணை எனக்கு அனுப்பினார்கள். பிரேம் அவர்களோடு நான் தொடர்பு கொண்டபோது காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார்கள். முகநூலைப் பார்த்தபோது கொட்டும் மழையில் ஹதராபாத் வந்தடைந்தது “பனைமர வேட்கைப் பயணம்’ என பதிவிட்டிருந்தார் சிறகுகள் ஆசிரியர் நண்பர் ஜெபக்குமார். என்னுடன் மேலும் ஒரு நண்பர் சென்னையிலிருந்து இணைந்து கொள்ளுவார் எனவும் அழைத்து பேசினார்.

இந்த நாள் எனது வாழ்வின் முக்கிய நாள் என நினைத்துக்கொண்டேன். தேங்கிப்போய்விடுவது பிறரால் நம்மோடு இணைத்துக்கொள்ள இயலாதபடி துண்டித்துக்கொள்ளும் செயல் என அறிந்துகொண்டேன். நாம் நம்மை அற்பணிக்கும் தோரும் ஒரு பெரும் நதியின் ஓட்டத்தில் நம்மை இணைத்துகொள்ளுகிறோம். அவ்விதமாக நமது சூழலை செழுமைப்படுத்துகிறோம் என எண்ணிக்கொண்டேன். எனக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி எனது பணியினை முக்கியமான என்ற ஒன்று என என்னையே நம்பவைத்த ஒவ்வொருவருக்காகவும் அன்று நான் ஒரு நீண்ட நன்றி மன்றாட்டை ஏறெடுத்தேன்.

ஹைதராபாத் என்பது எனது பனைமர வேட்கைபயணத்தின் ஒரு தங்குமிடமல்ல. அதுவே எனது பனைமர வேட்கை பயணத்தின் முக்கிய ஆரம்பம். கிழக்கு கடற்கரை சாலையையே நான் பனைமரச் சாலை என எனது மனதில் கொண்டிருந்தேன். அதற்கான ஆரம்பப் படியில் கால்வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன். நாளை நமதே, நாளை விடியும், நாளை ஒரு புதிய உதயம், நாளை முதல் எல்லாம் மாறும் என எண்ணுந்தோரும் மனம் களிப்புற்றது.

நிறைவான ஒருநாள் எனது வாழ்வில் அமைந்தது என எண்ணியபடி கண்ணயர்ந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (18)

ஜூன் 29, 2016

கள்ளும் கடவுள் நம்பிக்கையும்

கள் விற்பனை நிலையும், ஹைதராபாத்

கள் விற்பனை நிலையும், ஹைதராபாத்

நான் ஹைதராபாத்தை நெருங்குகின்ற தருணத்தில், அங்கே ரோட்டோரத்தில் கள் விற்பவர்களைப் பார்த்தேன். நெடுஞ்சாலை ஓரத்தில் கள்ளை விற்பதா? நடக்கிற காரியமா என எனது தமிழ்நாட்டு மனம் நினைத்தது. வண்டியை நிறுத்திவிட்டு அந்த கடையை நோக்கி சென்றேன். சந்தையைப்போலவே வாங்க சார் வாங்க சார் என்றே கூவி அழைத்தனர். இவ்வளவு அன்பாக அழைட்த பின்பு போகவில்லையென்று சொன்னால் தப்பாக நினைத்துவிடுவார்களே என்று எண்ணி வண்டியை நிறுத்தினேன். மண் குடுவைகள் சற்று நீண்டு இருந்தன. தென் தமிழகத்தில் காணப்படும் கலயங்கள் போலல்லாது ஒரு இஸ்லாமிய மருவிய வடிவம் தென்பட்டது.  அது  உண்மையில் கடையல்ல, சாலையோர விற்பனை நிலையம். கிட்டத்தட்ட எட்டு விற்பனை நிலையங்கள் அங்கே சாலையின் இருமருங்கிலும் இருந்தன.

சாலை அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை, அதற்கு முன்பு அழகிய மண் பானைகள் அடுக்கிய கற்களின்மேல் வரிசையாக் வைக்கப்படிருந்தன.  கீறு கொட்டகைக்குள் அமர்ந்து குடிக்க கற்பலகைகளும் பிளாஸ்டிக் கேன்களில் நிறைத்து வைக்கப்பட்ட கள். அதுபோலவே பெரிய பானைகளிலும் நுரைக்க நுரைக்க வைத்திருந்தார்கள். மொழி தெரியாவிட்டாலும் பனை சார்ந்த காரியங்களை எப்படியும் அறிந்து கொள்ளுகின்ற நுட்பம் என்னுள் நிறைந்திருக்கிறது போலும். காள்ளின் வாசனை வேறாக இருந்தபடியால் என்ன கள் எனக் கேட்டேன். சிந்தி என்றார். சிந்தி என சொல்லப்படுவது நாட்டு பேரீச்சை மரங்கள் (ஈச்சமரங்கள்). கள் இறக்குபவர்கள் வேறு விற்பவர்கள் வேறு என அறிந்துகொள்ள முடிந்தது. சுமார் ஒரு லிட்டர் கள் வெறும் 30 ரூபாய் என தெரிந்தபோது, கண்டிப்பாக பனையேறிகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், நல்ல கூலி கிடைக்கும் என எண்ணிக்கொண்டேன்.

கடும் வெயில் வெதும்புகின்ற பகுதிகளில் பனையிலிருந்தோ அல்லது ஈச்சமரங்களிலிருந்தோ கள் பெறப்படுவது முற்காலங்களில் வாடிக்கையான ஒன்றாக இருந்திருக்கலாம். கேடையின் வெம்மையை எதிற்கொள்ள இறைவனே அளித்த கொடையாக மக்கள் கள்ளை எண்ணியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.  பதநீரில் பயன்பாடு என்பது குறுகிய கால அளவை உடையது. மூன்று மணி நேரத்துக்குமேல் சுண்ணம்பு சேர்த்தாலும் பதனீர் சளித்துவிடும். ஆகவே இயற்கையாகவே புளிக்க வைத்து பயன்படுத்துவது எளிதான காரியமாக இருந்திருக்கலாம். மாத்திரம் அல்ல, இவைகளை விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய இடங்கள் தூரமாக இருக்கின்ற படியாலும், நாள் முழுவதும் பயணிகள் வந்து போவதாலும், இவ்வித நடை முறை அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

மேலும் கள்ளானது மிக குறைந்த அளவிலான போதை உள்ள பானமாகையால் அவைகள் மிக பரவலாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தன.  அவைகள் பல்வேறு மதத்தினராலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எவ்விதம் என உறுதியாக கூற முடியாவிட்டாலும் நாம் யூகிக்கத்தக்க  தரவுகள் நம்மிடம் உள்ளன. தமிழகம் கேரளா ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதியில் செய்யப்படும் ஆப்பத்தில் கள் ஊற்றுவது மிக சமீபத்திய வழக்கம். இந்த வழக்கம் தொன்று தொட்ட ஒரு பழக்கத்தின் மருவிய வடிவமாகவே நாம் அறிகிறோம். பல்வேறு மிஷன் காம்பவுண்ட்களில் கள் அவ்விதமாக இறக்கப்பட்டிருப்பதை அறியும் போது, கள்ளைக் குறித்த தற்போதைய தமிழக எண்ணங்கள் அல்லாத வேறு ஒரு சித்திரம் நமக்கு கிடைக்கிறது.

என்றாலும் எல். எம். எஸ் சரித்திரத்தை வசிக்கும் போது, குமரி மாவட்டத்திலுள்ள நெய்யூர் என்ற பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், கள்ளை தொடக்கூடாது என்றும், கள் இறக்குகிறவர்களை ஊர் விலக்கம் செய்ய வேண்டும் என 150 வருடங்களுக்குமுன்  நடை பெற்ற சம்பவத்தை குறித்த ஒரு பதிவு ஞாபகம் வருகிறது. அது போலவே கால்டுவெல் தனது புத்தகத்தில், பனை மரம் குறித்து விவரித்து எழுதும்போதும், தனது நீண்ட பயனத்தில் தான் ஒன்றிரண்டு பனை மரங்களையே கள் இறக்கும் லைசென்ஸ் கொண்டவைகளாக காணப்பட்டதை குறிப்பிடுகிறார்.

இஸ்லாமியர்களுக்கும் போதை வஸ்துக்களுக்கும் பெரும் விலக்கம் உண்டு என்பது நாம் அறிந்ததே. ஆயினும், நான் கண்ட அந்த குடுவைகள் இஸ்லாமிய பாணியில் அமைந்திருந்ததால், ஹைதராபாத் பகுதியில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. ஆனால் அவைகளை நான் இனிமேல் தான் ஆய்வு செய்ய வேண்டும். அவ்விதமான ஆய்வு பல்வேறு வகைகளில் நமது கண்களை திறக்கின்ற ஒன்றாக அமையும்.

தமிழகத்தை தவிர இந்திய அளவில் கள்ளை எவரும் தடை செய்யாததற்கு என்ன காரணம் என அறிவதற்கு அதிக ஆய்வுகள் தேவையில்லை. அவை மலிவான அரசியல் லாபத்திற்கானவை. ஆனால் தமிழகத்தில் மட்டுமே பனை ஏறுபவர்கள் ஒன்றாக திரளாமல் இருக்கின்றனர். அவர்களை ஒன்று திரட்டும் முயற்சியோ அவர்களை முன்னேற்றும் முயற்சியோ சரியானபடி முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டும் உறுதி. கள்ளை தீய ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி பேசியவர்கள் அனைவரும் மது ஆலைகள் ஆறாக பாய்கின்றதை கண்டும் காணாமல் இருப்பது நமக்கு அதிக தெளிவுகளைத் தருகின்றது.

ஆகவே கள்ளை ஆதரிக்க வேண்டும் என எவர் நினைத்தலும் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அது நடைமுறை சாத்தியமானது மாத்திரம் அல்ல, பனை சார்ந்து நாம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும்  அது பின்னடைவையே கொடுக்கும். ஆகவே கள்ளை முன்னிறுத்துகிற முயற்சிகளை கைவிட்டு வேறு விதங்களில் பனையை முன்னிறுத்துவது நல்லது என்றே நான் கருதுகிறேன்.

கள்ளை முன்னிறுத்துகிற அதற்காக காளமிறங்கி போராடுகிற கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் கள்ளு நல்லூசாமி மேல் எனக்கு பெரும் மதிப்பே உண்டு. ஆனால் நாம் பிரிட்டிஷ் அரசுடன் போராடிய காந்தி இல்லை. நல்ல போராட்டங்களுக்கு செவி சாய்க்கிற நிலை தமிழகத்தில் இல்லை. ஆகவே போராட்ட முறையை நாம் வேறு வகையில் முன்னெடுக்க வேண்டும். பனை இருந்தால் தனே கள்ளுக்காக போராடுவார்கள் எனும் இக்கட்டான நிலைக்கு நாம் ஒருபோது வழி வகுத்துவிட கூடாது.

அங்கிருந்து வருகிற வழியில் உணவுக்காக நின்றபோது, உணவக உறிமையாளரின் அருகில் ஒரு பனைஓலை குல்லா இருந்தது. அவரோ துணியால் செய்யப்பட்ட  ஒரு குல்லாவை அணிந்திருந்தார். நான் அவரிடம் பனை ஓலையில் செய்யப்பட்ட அந்த குள்ளவிக் கொடுத்து அணியச்சொன்ன போது அவர் மறுத்து நீங்கள் அணியுங்கள் என்றார். நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்பின் அடையாளமாக கருதி அதை அனிந்க்டு அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த குல்லா நான் நினைத்தது போல பனை ஓலையால் செய்யப்பட்டது அல்ல, அது ஈச்ச ஓலையால் செய்யப்பட்டது.

ஈச்ச ஓலையில் செய்யப்பட்ட தொழுகைக்கான தொப்பி

ஈச்ச ஓலையில் செய்யப்பட்ட தொழுகைக்கான தொப்பி

நான் குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் இருந்தபோது சி. டி எம் பகுதியிலிருந்து கிழக்கில் செல்லும் சாலையில் இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். அவர்கள் இருந்த பகுதியில் சுமார் 25 பனைமரங்கள் இருக்கும். சுற்றிலும் வேறு எங்கும் பனை மரங்கள் கிடையாது.  இஸ்லாமியர்களுக்கு பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாலும், பேரீச்சைகள் இங்கு வளர்வதில்லை என்பதாலும், பனை மரங்களை அவர்கள் பேரீச்சைக்கு மாற்றாக கொண்டிருக்கலாம்.

முகாஃபிஸ்கான் பள்ளிவாசல்

முகாஃபிஸ்கான் பள்ளிவாசல், அகமதாபாத், குஜராத் (நன்றி: இணையம்)

ஒருமுறை நான் பனைமரங்களைத் தேடி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன், அப்போது என்னருகில் ஒரு இஸ்லாமியர் அமர்ந்திருந்தார். பொதுவாக குமரி மாவட்டத்தின் இஸ்லாமியர்களை அவர்கள் சமய உடை இல்லாமல் பிரித்தறிய முடியாது. எளிய உடையில் இருந்த அவரிடம் நான் பேச்சு கொடுத்தபோது அவர், நாகர்கோவில் மணிமேடையில் உள்ள பள்ளி வாசல்களில் பனைஓலையில் செய்யப்பட்ட குல்லாய் வைத்திருப்பார்கள் என்றும், குல்லாய் அணியாமல் வருபவர்கள் அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்கள்.

பொதுவாகவே பனையோலை தடுக்குகளை இஸ்லாமியர் பயன்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். பனை ஓலைகளை நான் பயன்படுத்தும்போது மிக அதிக ஊக்கமும் ஆதரவும்  எனக்கு இஸ்லாமிய   நண்பர்களிடமிருந்தே கிடைத்தது என்பதையும் நான் இவ்விடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (17)

ஜூன் 28, 2016

சமய உரையாடல்

சமய உரையாடல்

சமய உரையாடல்

அன்று காலை நான் ஹைதராபாத் போகும் வழியில்தானே  எனது நண்பன் அனுப்பிய பணத்தை எடுக்கும்படியாக ஒரு வெஸ்டெர்ன் யூனியன் சென்றேன். அது ஒரு சிறிய மளிகை கடை. அங்கிருந்த மனிதர் என்னை வரவேற்று சற்று நேரம் ஆகும் என்று சொல்லி உட்கார வைத்தார். பின்னர் என்னிடம் பேச்சுக் கொடுத்த போது நான் போதகர் என்றும், பனை மரங்களின் திரட்சியை மற்றும் அவைகளில் பணிசெய்பவர்களின் வாழ்க்கைத்தரமும் எப்படி இருக்கின்றன என பார்க்க ஒரு முன்னோட்ட பயணமாக மும்பையிலிருந்து கன்னியாகுமரி செல்கிறேன் என்றேன்.

அவருக்கு நான் போதகர் என கூறிய வார்த்தை தான் பெரிதாக தென்பட்டது போலும். மதமாற்றம் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்றார். மிகவும் மையமான ஒரு பிரச்சனையை அவர் துவங்கியிருப்பதாலும் எனது பயணத்துக்கு அது சற்றும் சம்பந்தம் இல்லாததாலும் நான் அதை தவிர்க்க விரும்பினேன். எனக்கு விவாதங்களில் விருப்பமில்லை, அதுவும் முன் பின் தெரியாதவர்களோடு செய்யும் விவாதம் வீணான சச்சரவுகளுக்கு நம்மை கொண்டு செல்லும் என அறிந்திருந்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. சற்று நேரம் இருக்கிறது என கூறி மிகவும் அன்போடு என்னை விவாதத்திற்குள் இழுத்துப்போட்டார்.

ஆகவே நான், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அவரவர் சமயத்தை போதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பதாக பொதுவாக கூறினேன். அவருக்கு அது போதவில்லை, நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தை தருவித்து மனமாற்றம் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டினார். நான் சொன்னேன், எனது நண்பன் அனுப்பிய பணத்தை எடுக்க தான் நான் இங்கு வந்தேன், எனக்கும் மதமாற்றத்திற்கும் நேரடியாக எந்த சம்பத்தமுமில்லை. உங்களிடத்தில் கூட நான் எனது சமயத்தை குறித்து கூறவோ உங்களை மதமாற்றம் செய்யவோ நான் முற்படவில்லை.

எனது பயணம் வேறு திசையிலானது என கூறினேன். ஆனால் அவரும் மிக அதிகமாக மூளை சலவை செய்யப்பட்டிருப்பதனால் தான் அவர் ஒன்றையே பற்றி நிற்கிறார் எனவும், விரிந்த ஒரு பார்வையில் பிரச்சனைகளை அணுகவும் அவர் தயாராக இல்லை என்பதும் எனக்கு புரிந்தது.

ஆகவே அவர் பின்னணியத்தை நான் அறிந்துகொள்ள நான் விரும்பினேன். அவர் சொன்ன காரியங்கள் என்னை மிகவும் வேதனை படுத்திய ஒன்று. அது மதமாற்றம் குறித்த மாயையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அறிந்து உணர வேண்டிய பாடம்.

ஒரு முறை தனது கடைக்கு ஒரு போதகர் வெஸ்டெர்ன் யூனியனிலிருந்து பணம் எடுக்கும்படியாய் வந்திருக்கிறார், இவரும் அவரை வரவேற்று என்னோடு பேசுவதுபோல் பேச்சு கொடுத்திருக்கிரார். வந்தவர் மிகுந்த ஆன்ம பாரத்தோடு கிறிஸ்துவை பகிர்ந்திருக்கிறார். நண்பருக்கோ கேட்க கேட்க ஆனந்தம். ஆகவே இருவரும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சந்தித்திருக்கிறார்கள். தனது ஆன்மீக வாழ்வினை செறிவு படுத்த நண்பர் முயற்சிக்கையில், வந்தவருக்கோ ஒரு ஆன்மாவை மரண இருளிலிருந்து இரட்சிக்க வேண்டும் எனும் தாகம் மேலோங்கியதால், அந்த போதகர், நீங்கள் வணங்குவது சாத்தானை, அனைத்தையும் உடனே விட்டுவிடுங்கள் என கூறியிருகிறார்.

நண்பருக்கோ அதிர்ச்சி, காலம் காலமாக நாங்கள் வழிபட்டு வந்தது கடவுள் இல்லையா? உனது கடவுளை நீ கூரும்போது கேட்டேனே, எனது கடவுளைப் பற்றி நீ கேட்காவிட்டாலும் பரவாயில்லை அதை குறித்து தவறாக பேசுவது தான் உனது கடவுள் உனக்கு கற்று தந்திருக்கும் பாடமா? என்பது போன்ற கேள்விகள் அவரில் நிரம்ப, சென்று சேர வேண்டிய இடத்தில் சென்று சேர்ந்திருக்கிறார். பிற மதத்தினர் எல்லாரையும் கொல்ல வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியெற்ற வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறார். நாங்கள் எத்தைனை பேர் இருக்கிறோம், சிறுபான்மையினராக இருந்து கொண்டு எங்களையே குறை சொல்லும் அளவிற்கு வந்து விட்டீர்களா?

நான் அயர்ந்து போனேன், இத்துணை வன்மத்தை ஒருவர் பெறத்தக்கதாக நமது பணிகள் இருக்கின்றனவா என எண்ணினேன். ஆம், பெரும்பாலான நேரங்களில், கடவுளின் அன்பை சொல்லுகிறோம் என்று எண்ணிக்கொண்டு வம்பையே பகிர்ந்து கொள்ளுகிறோம்.

அப்போது அவர் எனக்கு தண்ணிர் குடிக்கக் கொடுத்தார். அந்த கூஜா இஸ்லாமிய பாணியில் நீண்ட காழுத்தை உடையாதாக அமைந்திருந்தது. நான் அவரிடம் கூறினேன் பல்சமயத்தவர் நம்மிடையே இருக்கும்போது நாம் சிலவற்றை கொடுத்து சிலவற்றை பெற்றுக்கொள்ளுகிறோம். அது நம்மை சீர்தூக்கிப் பார்க்கும் கண்ணாடியாகவும் இருக்கிறது. நல்லவற்றை பிறவற்றிலிருந்து எடுப்பதும் நமது தனித்தன்மைகளை பேணிக்கொள்வதும் நல்லதுதானே? இந்த கூஜாவையே எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு இஸ்லாமிய வடிவமைப்பில் இது இருக்கிறது, இதை நீங்கள் இஸ்லாமியரின் கொடையாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களா? இந்த வடிவம் பார்வைக்கு அழகாயும், பயன்பாட்டிற்கு ஏற்றதாயும் இருப்பதனால் தானே நமது மக்கள் இன்றளவும் இவ்வடிவமைப்பை பயன்படுத்துகின்றனர்? தவறுகளை மன்னித்து முன்செல்வது தானே மனித பண்பு என்றேன் .சுமார் 2 மணிநேரம் எனக்கு அங்கே செலவானது.

ஆனால் அவரது காயம் ஆழமானது. அவரால் எனது வார்த்தைகளை தொடர முடியவில்லை. எனக்கும் அங்கு செலவளிக்க அதிக நேரம் இல்லை. எனது தொடர்பு எண் உங்களிடம் இருக்கிறது. நாம் நண்பர்கள் என்பதையே நினைவில் கொள்ளுங்கள். என்னை நீங்கள் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்றேன்.

எனது அம்மா சிறுவயதில் சொன்ன ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது. ஒரு கறிக்கடைக்காரன் மனத்திரும்பி தனது தீய வழிகளை விட்டு நல்லவனானான். அவனுக்கு கடவுளை போதித்தவர்கள் அவனும் அதை பிறருக்கு சொல்ல கடமைப்பட்டவன் என கூறியிருந்தனர். அவனது தொழிலை அவனால் விட முடியாதாகையால் அவன் தன்னை தேடி வரும் மனிதர்களுக்கு கடவுளை பற்றி எடுத்து கூற தலைப்படலானான். ஒரு நாள் தனது கடைக்கு வந்த ஒரு சிறுமியிடம் அவன் கடவுளைப்பற்றி கூற அச்சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு கறியையும் வங்காமல் சென்றிருக்கிறாள். என்ன காரணம் என்றால் கடவுள் அன்பானவர் என்று உனக்குத் தெரியுமா என் அவர் கரத்தில் கறி வெட்டும் கத்தியை காட்டி கேட்கும்போது பாவம் சிறுபிள்ளை எதை புரிந்துகொள்ளும்?

 

கிறிஸ்துவின் கடைசி கட்டளை போல் அவரது கன்னி அழைப்பும் முக்கியமானது. அவைகளை நாம் முக்கியத்துவப்படுத்துவதில்லை. மேலும் இயேசு தமது சமூகத்தின் உள்ளிருந்த தீமைகளையே சாடினார், நாமோ நம்மை சுய பரிசோதனைக்குட்படுத்தாமல் பிறரிடம் உள்ள தவறுகளையே காண முற்படுகிறோம். வாழ்வில் சில நேரங்களில் நாம் முன்னிறுத்த வேண்டிய கருணை கடலாம் இயேசுவை பின் தள்ளிவிட்டு பரபாசாகா தப்பித்துகொள்ள முற்படுகிறோம்.

கனத்த இதயத்தோடு அங்கிருந்து புறப்பட்டேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (16)

ஜூன் 27, 2016

திருவடிவம்

கர்ஜத்தை தாண்டி நவண்டே எனும் இடத்தில் நான்  இறுதியாக பனை மரங்களைப் பார்த்தது. அதன் பின்பு சுமார் 500 கி மீ அப்பாலே நான் அவைகளைப்   பார்த்தேன். பனை மரங்கள் வளருவதற்கு நல்ல வெப்ப பிரதேசம் தேவைப்படும். பூனே டெகு ரோடு பகுதிகளில் நான் பனை மரங்களைக் கண்டதில்லை. தலேகாவுன் , லோனா வாலா இவ்விடங்களிலும் பனை மரங்கள் இல்லை.அவ்விதமாகவே குளிர் மற்றும் வெப்பம் மிகுதியாக காணப்படுகிற  பகுதிகளில் அரிதாகவும்  ஆங்காங்கே பனை மரங்கள் வளருவதையும் கண்டிருக்கிறேன்.

ஆனால் மிகுதியான மரங்கள் என அகமதாபாத்திலோ பரோடாவிலோ சூரத்திலோ நான் பார்த்தது இல்லை. அப்படியே பெங்களூரு பகுதியில் பனை மரங்கள் கிடையாது. ஓசூர் செல்லும் வழியில் குறுகி நிற்கும் மரங்கள் அதற்கு அப்பால் தங்களால் வளர முடியாது எனபது போல ஒடுங்கி நிற்கும். ஆகவே தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற இடங்களில் மட்டுமே அவைகள் திரளாக வளருகின்றன. தமிழகம் அவ்விதத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இடம். குறிப்பிட்ட இடங்களிலேயே நாம் பனைகளை பெரும் பொருட்செலவின்றி பாதுகாக்க முடியுமாகையால், நம்முடைய ஊரிலுள்ள மரங்கள் அழியாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகிறது.

முதன் முதலாக பலநூறு மைல்களுக்கு அப்பால் தூரத்தில் பனைமரத்தை கண்டபோது என்னுடைய மனம் குளிர்ந்தது. தாயைக் கண்ட சேயைப்போல. சொந்த மண்ணிற்கு மீண்டு வந்த ஒரு உணர்வு எனக்குள் வந்தது. நான் முதன் முதலாக பார்த்தது ஒரே ஒரு பனை மரம் தான். ஆனால் எனக்கு மிக நன்றாக தெரியும், இனிமேல் பனை மரங்கள் தொடர்ந்து கண்ணில் படும் என்று. என்றாலும் நான் வண்டியை நிறுத்தினேன். அந்த மரம் எனக்கு அளித்த உவகை சொல்லி மாளாது.

மிகவும் உயர்ந்த கெம்பீரமான மரம். சாலையிலிருந்து சுமார் 100 மீட்டருக்கும் அதிக தூரத்தில் அந்த மரம்  நின்றுகொண்டிருந்தது. சுற்றுமுற்றும் அதிக மரங்கள் இல்லாதபடி வெட்ட வெளியாக இருந்தது. எஞ்சிய மரமா என தெரிய வில்லை, ஆனால் என்னை மிகவும் குதூகலிக்க வைத்தது அந்த மரம்.

பொதுவாக ஒத்தை பனைமரம் ஆகாது என ஒரு எண்ணம் உண்டு. அதற்கு காரணம் என்னவென்று சரியாக தெரியாவிட்டாலும் நாம் ஊகிக்கத்தக்க ஒரு காரணம் உண்டு. பனையில் ஆண் பெண் என இரண்டு வகைகள் உள்ளன. மூன்றாம் பாலினர் போல் இரண்டும் அல்லாத வகைமையும் உண்டு. அதை உம்மங்காளி பனை என குறிப்பிடுவர். உம்மங்காளி பனையிலிருந்து பெறப்படும் கள் சிறப்பு வாய்ந்தது.

பனை மரத்தை பத்திரகாளி எனவும் கள்ளை பத்திரகாளியின் பால் எனவும் குறிப்பிடுவதை அறிந்திருக்கிறேன். பனம் பால் என கருதப்படும் கள் அருந்தினால் கண்கள் சிவந்து காளியின் கண்களைப்போல் ஆகுமானபடியால் தயைப் போல பிள்ளை என கருதி இவ்வழக்கசொல் வந்திருக்கலாம். சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை பின்பற்றுவோர் தங்களை பத்திரகாளியின் பிள்ளைகள் என குறிப்பிடுவது வழக்கம்.

பனையுடன் காளியை ஒப்பிடுவது ஒரு ருசிகரமான கற்பனையாகவே எனக்குப்படுகிறது. விரிந்த கைகளை நீட்டி நிற்பது போன்றே அதன் ஓலைகள் நிற்கின்றன. கரிய உடல் உள்ளே மென்மையையும் வெளியே முரட்டுத்தனத்தையும் கொண்டிருக்கின்றன. சுவை மிகுந்த பதனீர் வழங்குவதோடு வெறியேற்றும் கள்ளையும் வழங்குவதால் மென்மையும் உக்கிரமும் ஒருங்கே கொண்ட ஒன்றாக திரண்டு நிற்கின்றது.

 "கூந்தல்"

மண்டைஓடு போல் தோற்றமளிக்கும் நுங்கு எடுக்கப்பட்ட “கூந்தல்”(http://sunshineforpangaea.blogspot.in/2014/02/friendly-nuts.html)

தனது கரமே கூரிய அளிவளால் செய்தது போன்ற கருக்கு மட்டை. எவரும் எளிதில் வெற்றிகொள்ள முடியாத ஆனால் தன் பிள்ளைகளுக்கு இரங்கும் தாயுள்ளம், என விரிவுபடுத்தும் அளவிற்கு விரிந்தெழும் தன்மை கொண்டது. தனது கால்களின் அடியில் தான் அனைத்து மரங்களும் எனும் அளவிற்கு உயர்ந்து நிற்பது போன்றவைகள் அடிப்படையாக ஒருவர் பொருத்திப் பார்க்க இயல்வதே. பனை மரம் அவ்விதமாக காளியின் திருவடிவமாக அதோடு ஈடுபடும் மக்களின் மனதில் நிலைகொண்டிருக்கிறாள்.

வங்காளத்திலிருந்து பனைமரச் சாலை வழியாக தென்னகத்திற்கு காளி படையெடுத்திருப்பாளா? இல்லை கருங்காளி அம்மன் வங்காளத்திற்குச் சென்றபோது சிவந்துவிட்டாளா? பனை சார்ந்த ஒரு தொன்மம் இருக்கும்போது அதை விரிவுபடுத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு. ஏனென்றால் உண்மையான பனை மரச்சாலை என்பது கிழக்கு கடற்கரையோரம் என்பது தான். மேற்கு வங்காளம், ஓரிஸ்ஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என ஒரே வரிசையில் இடைவிடாது காணப்படும் பனைமரங்கள் இந்தியாவில் வேறெங்கும்  காண முடியாது. பனை சார்ந்த ஒரு  பண்பாட்டு பறிமாற்றம் இந்த பனை மரச் சாலையில் நடந்திருக்கும் அவைகளை மீட்டெடுத்து ஆவணப்படுத்தும் ஒரு தலைமுறை எழுந்து வரவேண்டும். அவை இந்திய ஒருமைப்பாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும்.

பனை மரங்கள் வளருகின்ற இடங்களை நாம் பார்த்தோமென்றால் அவைகள் வேலிகளிலும் ஆற்றோரங்களிலும் மற்றும் ஏரிக்கரையோரங்களிலும் வரிசையாக நிற்பதை காண முடியும். அவ்விதமாக நெறிப்படுத்தப்படாத இடங்களில் நாய் நரி போன்றவை பனம் பழத்தை உண்டுவிட்டு அவற்றை பரப்புவது வழக்கம். ஆகவே பனை மரங்கள் ஆங்காங்கே வளருவதை ஒருவர் கண்டுகொள்ளலாம்.

பனை மரத்தினைக் குறித்து குறிப்பிடத்தகுந்த ஆய்வு செய்த டி. ஏ. டேவிஸ் எனும் நாகர்கோவில்காரர் இவ்விதமாக கூறுகிறார். பனம் பழத்தில் ஒன்று இரண்டு மற்றும் முன்று கொட்டைகள் காணப்படும். ஒன்று என காணப்படும் விதை ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இரண்டு விதைகள் காணப்பட்டால் அவைகள் ஒன்று ஆணும் மற்றொன்று பெண்ணும் என உறுதி கொள்ளலாம். மூன்று விதைகள் இருக்குமாயின் ஏதேனும் ஒன்று ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். இவ்விதமாக மனிதனைப்போன்றே ஒரு சமநிலையை பனை பேணிவருவது இறைவனின் படைப்பின் மேன்மையே.

முக்கண் விளைவு (உதவி: இணையம்)

முக்கண் விளைவு (உதவி: இணையம்)

இதை அவர் விவரிக்கும்போது. ஒரே “மூட்டிலிருந்து” அல்லது ஒரே அடிபாகத்திலிருந்து இரண்டு பனைமரங்கள் விரிந்து சென்றால் அவை ஒரு பனம்பழத்தில் உள்ள இரண்டு விதைகளைக் கொண்டது. அவைகள் ஒன்று ஆணும் பிறிதொன்று பெண்ணுமாக இருப்பதை கண்டுகொள்ளலாம். அவ்விதமாகவே முன்று பனைமரங்கள் ஒரு மூட்டிலிருந்து கிளைத்தெழுமாயின் அவற்றில் பால் வேறுபாடு கண்டிப்பாக காணப்படும்.

ஏனிப்படி என ஆராய்ந்து பார்க்கும்போது மகரந்த சேர்க்கை இல்லாமல் பெண் பனை பூத்து காய்க்காது. ஆகவே ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருக்கவேண்டும் என இயற்கை வகுத்த விதியாக இருக்கிறது.  ஆகவே தான் தனித்த மரங்கள் இணைவை விரும்பும் மனித மனங்களுக்கு ஒவ்வாதவைகளாக கானப்படுகின்றன போலும். “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்”.(தொடக்க நூல் 2:24)  எனும் கடவுளின் வாக்கை உறுதிசெய்வதுபோல் பனை மர வாழ்வும் இருப்பது ஆச்சரியமானது.

இருகண் விளைவு (உதவி: இணையம்)

இருகண் விளைவு (உதவி: இணையம்)

என்றாலும் தனித்து நிற்கின்ற பனை மரங்கள் சாமியாக எண்ணப்பட்டு வணங்கப்படுவதையும் பல்வேறு இடங்களில் நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக மதுரை காளவாசல் பகுதியில் நிற்கும் ஒற்றைப் பனையைக் குறிப்பிடலாம். எப்படி இந்த எண்னம் தோன்றியிருக்கும்? ஊர் எல்லைகளில் ஒரு மரம் தனித்து எந்த உதவியுமின்றி உயர்ந்து நிற்பது கடவுளுக்கு நிகரான ஒன்றாக கருதப்பட்டிருக்கலாம். எல்லைச் சாமியாகவும், காக்கும் கடவுளாகவும் பனை மரங்கள் பல்வேறு நாட்டார் கதைகளில் உலாவி வருகிறது.

எப்படியானாலும் பனை மரத்தை காக்கும் ஒரு கதையை நமது முன்னோர்கள் சொல்லி வைத்து போயிருக்கிறார்கள். அவற்றின் பயனை முழுவதுமாக அவர்கள் அனுபவித்ததாலும், அவற்றின் பயன்பாடு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாலும் பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கும்படி அவர்கள் பல்வேறு வழிகளை கையாண்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகின்றது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (15)

ஜூன் 26, 2016

மண்ணின் மரம்

 

காலை ஒன்பதரை மணிக்குமேல் ஆகிவிட்டது. சிறப்பான ஒரு உரையாடல் அருமை ஃபாதர். பாபுவோடு நடைபெற்றதால் அந்த காலை சிறப்பாக மலர்ந்தது. அன்று ஹைதராபாத் செல்லவேண்டும் என்ற முடிவுடன் வண்டியைத் திருப்பினேன்.

செல்லும் வழியில் தேசிய நெடுச்சலைத் துறையினர்  பணி செய்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் தமது கரங்களில் பிரஷ்ஷை வைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பொறி தட்ட, நான் அவர்கள் உபயோகிக்கும் பிரஷ்ஷைக் காண வண்டியை நிறுத்தினேன். சற்று தூரம் அவர்களை நோக்கி நடந்து சென்று அவர்கள் செய்யும் வேலையை கூர்ந்து கவனித்தேன்.

சாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பனந்தும்பு பிரஷ்

சாலைப் பணியாளர்கள் பயன்படுத்தும் பனந்தும்பு பிரஷ்

சாலைகளில் படிந்திருக்கும் தூசுகளை தங்கள் கரங்களில் உள்ள பிரஷ்ஷால் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மிகவும் நேர்தியாய் சுத்தம் செய்யத்தக்கதாக வடிவமைக்கப்பட்ட பிரஷ் அது. அதை கரத்தில் வாங்கி பார்த்தேன், அந்த பிரஷ்ஷில் எனது விரல்களைக் கொண்டு தடவி அதன் உறுதியை சோதித்தேன். ஆம் நான் நினைத்தது சரி தான், பனந் தும்பைக் கொண்டு தான் இந்த பிரஷ்ஷை செய்திருக்கிறார்கள்.

பனந்தும்பு என்றால் என்ன? பனை ஓலைகள் மரத்தை கவ்வியிருக்கும் அடிப் பகுதி பார்ப்பதற்கு ஆங்கில எழுத்து “V” போல காணப்படும்; அவைகளை பத்தை என்பார்கள். பொதுவாக வடலி எனும் முதிரா பனை மரங்களிலிருந்து, இவ்விதமான பத்தைகளை சேகரித்து அவைகளை தண்ணீரில் ஊற வைத்து பிற்பாடு நன்றாக அடித்தால் அவைகளில் உள்ள தும்பு தனியாக பிரிந்துவிடும். இந்த தும்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு சிறந்த கச்சாப்பொருளாகும்.

பனைஓலையின் அடிப்பாகம்: பத்தை

பனைஓலையின் அடிப்பாகம்: பத்தை (உதவி: இணையம்)

குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் பனந்தும்புகளைச் செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பொதுவாக ஆண்களே இப்பணியில் ஈடுபட்டிருப்பார்கள். தும்பை அடித்து உலர்த்திய பின்பு, அதை இரும்பு ஆணிகள் பொருத்திய ஒரு சீப்பில் வைத்து சீவுவார்கள். இறுதியில், ஒத்தை ஒத்தையாக, சேமியா போன்று நீளமாக ஆனால் கரிய நிறத்தில், ஒரு அடிநீள  தும்புகள் கிடைக்கும். அவைகளை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனிலிருந்து கப்பல் வந்து ஏற்றிச்செல்லும். குளச்சலில் இன்னமும் தும்பை வெளிநாட்டிற்கு அனுப்பிய மெஸ்ஸர்ஸ் கம்பெனி சிதிலமடைந்து கிடப்பதை நாம் பார்க்கலாம்.

சீராக்கப்பட்ட தும்பு (உதவி: இணையம்)

சீராக்கப்பட்ட தும்பு (உதவி: இணையம்)

பனந் தும்பு தற்காலத்திற்கு ஏற்றதா? எனும் கேள்வி அனேகருக்கு உள்ளதை போன்று எனக்கும் ஏற்பட்டது. ஆம் என்பதே அதன் விடையாக முடியும். சாலைகளை பராமரிப்பது ஒரு தனி கலை. இன்று சாலைகளை சுத்தம் செய்ய மெஷின்கள் வந்துவிட்டாலும், அடிப்படையாக அவர்கள் ஒரு பிரஷ்ஷை அந்த வண்டியோடு இணைத்திருக்கிறார்கள். இவைகளில் கண்டறிந்த உண்மை என்னவென்றால், நெகிழியில் செய்யப்பட்ட பிரஷ்கள் நீடித்த உழைப்பை அளிக்கவில்லை, ஆகவே இரும்பு பிரஷ்ஷை முயற்சித்திருக்கிறார்கள். அவைகள் சாலைகளை பாதிக்கின்றன என்பதை கண்டுகொண்டார்கள். இவைகளுக்கு மாற்றாக பனந்தும்பை பயன்படுத்தினால் அவைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கிறதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கழிவறை பிரஷ் (உதவி: இணையம்)

கழிவறை பிரஷ் (உதவி: இணையம்)

தமிழ்நாடு பனை வாரியம் கடந்த 2002- 2003 ஆண்டுகளில் பனந்தும்பு மட்டும் ஏற்றுமதி செய்து 200 இலட்சம் ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டியிருக்கிறார்கள். எனினும் இவைகளைச் செய்யும் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்கின்றனவா என்றால் அது சந்தேகமே.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் மாலத்தீவு சென்றிருந்த போது, அங்கே உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்றிருந்தேன். உலகின் முக்கிய பணக்காரர்கள் மட்டுமே தங்கும் அந்த ரிசார்ட்டில் எனது நண்பன் பணிபுரிந்த காரணத்தால் என்னால் ஒரு பார்வையாளனாக அங்கு செல்ல முடிந்தது. அங்கு இருந்த நடைமுறைகள் சில ஆச்சரியமாக இருந்தன. முழுமையான இயற்கை பொருட்களால் அந்த தங்குமிடங்களை அவர்கள் நிர்மாணித்திருந்தனர்.

ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்களால் செய்யப்பட்ட வீடுகள் கடலுக்குள் இருந்தன. அவைகளுக்கு செல்லும் பாதையும் மரத்தால் செய்யப்பட்டது. சுமார் 2 கி மீ சுற்றளவுள்ள அந்த தீவில் எங்கு சென்றாலும் வெறுங்காலுடனே செல்லவேண்டும். இல்லையென்று சொன்னால் இரும்பு கம்பிக்குப் பதில் மூங்கிலால் செய்யப்பட்ட “பாம்பூ” சைக்கிள். முடியாதவர்களுக்கு பாட்டரி கார்.

இவ்விதமாக இவர்கள் நடக்கும்போது கால்களில் படிந்துள்ள மெல்லிய மணல் துகள்களை நீக்க ஒரு சிறப்பான கால் மிதியடியைக் தங்குமிடம் ஒவ்வொன்றின் முற்றத்திலும் வைத்திருக்கக் கண்டேன். அந்த மிதியடி பார்வைக்கு ஒரு முள்ளம்பன்றியை போல இருந்தது. கால்களில் உள்ள துகள்கள் மிக அழகாக சுத்தம் செய்யப்படுவதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். கண்ணைக்கவரும் வகையில் புதிய வடிவமைப்பில் செய்யப்பட்ட அந்த மிதியடி பனந்தும்பால் செய்யப்பட்டது என நான் கண்டுகொண்டேன். கிழக்காசிய நாடுகளிலிருந்து இவைகள் பெறப்படுகின்றன என்பதையும் நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.

 முள்ளம்பன்றி தோற்றமுடைய கால் மிதியடி. இடம் : மாலத்தீவு

லங்கன்ஃபுஷி எனும் ரிசார்டில் காணப்படும் முள்ளம்பன்றி தோற்றமுடைய கால் மிதியடி. இடம் : மாலத்தீவு

பனந்தும்புகளை செய்பவர்கள் இன்று குமரி மாவட்டத்தில் இல்லை என்றே நினைக்கின்றேன். குளச்சல் பகுதியில் அவர்கள் பணியாற்றிய இடங்கள் இன்று வெறுமையாக காட்சியளிக்கின்றன. ஆகினும், சாலை பராமரிப்பு என்பது இன்று ஒரு முக்கிய தொழில். அதை செய்ய தேவையான பிரஷ்ஷிற்கு தேவையான தும்பு ஒரு முக்கிய கச்சாப் பொருள். சாலை இல்லா தேசம் இல்லை.  சாலைகள் என்று மாத்திரம் இல்லை பல்வெறு வகைகளிலும் இன்று பிரஷ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக கழிப்பறைகளுக்கும் பிரஷ்கள் தேவைப்படுகின்றன. உறுதியான தும்புகள் கிடைக்குமென்றால் யார் தான் பயன்படுத்த மாட்டார்கள்?

நமது நாட்டில் நிற்கும் வடலிப்பனைகள் இன்று பெருவாரியாக ஜெ சி பி எந்திரத்தால் பிழுது  எடுக்கப்படுகின்றன. ஒரு முக்கிய கச்சாப்பொருள் கவனிப்பாரின்றி வீணாய் போகின்றது. எப்படி இவைகளை நாம் வரும் நாட்களில் பயன்படுத்த முடியும்? எப்படி இவற்றை பயன்படுத்துவோரை நாம் ஒன்றிணைக்க முடியும்?

நமது மாண்ணின் மரம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வளிக்கப்போகிறதா? அல்லது மாண்ணோடு மண்ணாகப் போகிறதா? விடை தெரியாத கேள்விகளுடன் பயணத்தை தொடர்ந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

பனைமரச் சாலை (14)

ஜூன் 24, 2016

Sparshaசிறுவர்கள் என்னிடம் வர தடை செய்யாதிருங்கள்

வாழ்வின் மிக அபாயகரமான தருணத்தைக் கடந்தால் ஒரு குதூகலம் வருமே அப்படி ஒரு மகிழ்ச்சி என்னுள் கடந்து சென்றது. செத்து பிழைத்திருக்கிறேன் என்றால் எனிமேல் தான் செய்ய வேண்டியவைகள் அனேகம் இருக்கின்றன என அர்த்தம். ஆகவே முன் வைத்த காலை அப்படியே வைத்துவிட்டு ஆக்சிலேட்டரை அழுத்தி தொடர்ந்து வேகமாகவே சென்றேன்.

செல்லும் வழியில் ஒரு பெரிய அலங்கார வளைவு தென்பட்டது. அதிலே கர்னாடகா உங்களை வரவேற்கிறது என எழுதப்பட்டிருந்தது. கர்நாடகா என்பது நான் கடந்து செல்லும் பாதை மட்டுமே. சுமார் 100கி மீ க்குள் அந்த இணைப்பு பாதை இருக்கலாம். ஆனாலும் மகாராஷ்டிரா, கர்னாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களையும் ஒரு யூனியன் பிரதேசத்தையும் ஒருசேரக் கடக்கிறேன் என்பதே ஊக்கமூட்டும் ஒன்றாக அமைந்தது.

ஒருவழியாக ஹும்னாபாத் வந்தடைந்தேன். கிட்டத்தட்ட மணி ஒன்பதரை ஆகியிருந்தது. ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டபோது அவர்கள் ஆலயம் இருக்கும் இடத்திற்கு போக வழி காட்டினார்கள். நான் சென்று சேர்ந்த இடம் ஒரு மெதடிஸ்ட் ஆலயம். ஆனால் அந்த ஆலயம் பூட்டியிருந்தது. அருகிலே ஒருவரையும் கேட்க வழியில்லை.

அப்போது இரண்டு குடிமகன்கள் தள்ளாடியபடி  மிக தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததைக் கண்டேன். குடிகாரர்கள் எதையும் “தெளிவாக” செய்பவர்கள் என தெரியுமாதலால் அவர்களிடம், ஃபாதர் எங்கே இருக்கிறார் என தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி முடித்துவிட்டு, ஒருவர் எனக்கு வழி காட்டுவதாக கூறினார்.

அவரை எனது வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் காட்டிய இடத்தை நோக்கிச் சென்றேன். என்னை ஒரு வாளாகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தின் அமைப்பு ஒரு கத்தோலிக்க திருச்சபையின் இடமாக இருக்கும் என நான் ஊகித்தேன். உடனே, கடவுளே இது கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமாக மட்டும் இருந்துவிடக்கூடாது என மன்றாடினேன்.

அப்படி இருந்துவிட்டால், அப்புறம் அங்கே தங்க இடம் கிடைக்காதே. மேலும்கூட வந்த நண்பரை உடனடியாக அனுப்பவேண்டும் ஆகையால், வேகமாக உள்ளே சென்றேன். இரண்டு வாலிபர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களிடம் ஃபாதர் எங்கே என நான் கேட்கவும், ஒரு இளம் ஃபாதர் உள்ளாலிருந்து வரவும் சரியாக இருந்தது.

நான் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துவிட்டு, இங்கே தங்குவதற்கு வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டேன்.  ஆம் ஒழுங்கு செய்கிறேன் என்றபடி ஃபாதர் என்னையும் அவரையும் மாறி மாறி பார்த்தார். கூட வந்திருக்கும் நபர் யார் என மூக்கைச் சுளித்தபடி கேட்டார். நான், இதோ அவரை விட்டுவிட்டு வருகிறேன் என்றேன்.

ஃபாதர் என்னிடம், ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது, பேராயரும் அடக்க ஆராதனைக்கு வருகிறார், ஆகவே நான் வெளியே போய்விட்டாலும் உங்களுக்கான ஒழுங்குகள் இங்கு செய்யப்பட்டிருக்கும் என்றார். எனது பைகளை வைத்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு வந்தவரை, மறுபடியும் விடுவதற்காக கிளம்பினேன். வாகனத்தை விட்டு இறங்கியவர் ஒரு குவாட்டருக்கு காசு தாங்க என்றார். எனக்கு அதைக்கேட்டவுடன் சுர்ரென்று கோபம் வந்தது. நீங்கள் அதிகமாக குடித்திருக்கிறீர்கள் ஆகவே வீட்டிற்குச் செல்லுங்கள் என்றேன். வீடு எங்கே இருக்கிறது என சொன்னால் நானே கொண்டு விடுகிறேன் என்றும் கூறினேன். அவர் அதற்கு மசிவதாக இல்லை. எனக்கு குடிகாரர்களை நன்கு தெரியும். குடி அடிமைகளான அனேகரை நான் சிறு வயதிலிருந்து அறிவேன். ஏதேனும் சொல்லி மேலும் மேலும் குடிப்பதற்கு பணம் பறிப்பதை குறியாக கொண்டிருப்பவர்கள்.

அவர் என்னை போகவிடாமல் வழி மறித்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். ஒரு வேளை அவர் காட்டித்தந்த அந்த இடத்திற்கு போகவேண்டும் என்று சொன்னால் ஆட்டோவிற்கு கூட 30 ரூபாய்க்கு அதிகமாக வாங்க மாட்டான். இவரோ ஒரேயடியாக நுறு ரூபாய்க்கு அடிபோடுவதை என்னால் எற்க முடியவில்லை. சரி என்னோடு சாப்பிட வாருங்கள் என்றேன். அவருடைய ஒரே குறிகோள் பணமாக இருந்தது.

அப்போது நான் சொன்னேன், அருகிலே எங்கே போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது என எனக்குத் தெரியும், வருகிற வழியில் பார்த்தேன். வண்டியில் ஏறுங்கள் உங்களை அங்கேயே விடுகிறேன், நீங்கள் பொது இடத்தில் பிரச்சனை செய்கிறீர்கள் என்றால் அவர்கள் உங்களை கவனித்துக்கொள்வார்கள், எறுங்கள் என்றேன். அவர் சற்று பம்மிவிட்டு, என்னை வசை பாட ஆரம்பித்தார். நமுட்டு சிரிப்புடன் கிளம்பினேன்.

அன்று இரவு நான் சாப்பிட்ட பிரியாணி 1/2 பிளேட் 40 ருபாய். மிகவும் சுவையான ஒரு உணவு அது.  அங்கிருந்து மீண்டும் தங்குமிடத்திற்குச் சென்றேன், அங்கே அந்த வாலிபர்கள் எனக்காக காத்திருந்தனர்.  அவர்கள் எனக்காக ஆயத்தம் செய்திருந்த அந்த அறை மிகவும் அழகானது. எனக்கான டவல் முதற்கொண்டு அனைத்தும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எளிமையான இருவர் தங்கும் அறை. குளித்துவிட்டு நன்றாக தூங்கினேன்.

காலையில் 6.30க்கு எழும்பினேன். கடவுள் எனக்கு செய்த அனைத்து உதவிகளையும் எண்ணி அவருக்கு நன்றி கூறினேன். எவ்வளவு ஆபத்து எவ்வளவு இக்கட்டுகள் இடர்கள் நான் இந்த காலையை பார்ப்பதே ஒரு அதிசயம் என்பதாக எண்ணினேன். இதற்குள் ஒரு வாலிபன் வந்து ஃபாதர் உணவிற்கு 7.30க்கு வரும்படி கூப்பிட்டார் என்றான். அனைத்து பொருட்களும் இறைந்து கிடந்ததல், அவற்றை ஒழுங்கு படுத்தி காலைக் கடன்களை முடித்துவிட்டு செல்ல மிகச்சரியாக இருந்தது. மிகவும் அமைதியாக அந்த காலை உணவை ஆசீர்வதித்து உண்டோம். உணவிற்கு நடுவில் பேசவில்லை.

உணவிற்குப் பின் ஃபாதருடைய அறைக்குப் போனோம். என்னுடைய பயணத்தைக் குறித்து விரிவாக கூறினேன். மேலும் ஓலையில் செய்யப்பட்ட போப் ஃபிரன்சிஸ் அவர்களின் படத்தையும், ஒரு சில புக் மார்க்குகளையும் ஒரு ரிஸ்ட் பாண்டையும் அவர்களுக்கு பரிசாக அளித்தேன்.  மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டார்கள். பிற்பாடு அவர்களது பணியைக்குறித்து விசாரித்தேன். அப்போது அவர்கள் என்னிடம் ஸ்பரிசியா  எனும் நிறுவனம் குறித்தும், கத்தோலிக்க திருச்சபை குறித்தும்  பின்வருமாறு கூறினார்கள்.

 

குல்பெர்கா கத்தோலிக்க  பேராயம் 2005ல் ஆரம்பிக்கப்பட்டது. வட கர்னாடகாவின் மாவட்டங்களான  குல்பெர்கா, பிஜாப்பூர் மற்றும் பீதர் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஒரு திருச்சபை. புதிதாக ஆரம்பிக்கப்பட்டதால் எழும் பல்வேறு சிக்கல்களை பேராயர் ராபர்ட் மிராண்டா திறமையாக கையாள்கிறார். குறிப்பாக வெறும் 7000 அங்கத்தினர்கள் மட்டுமே கொண்ட இந்த திருச்சபை சந்திக்கும் பொருளாதார சிக்கல்கள் அனேகம், அவைகளின் மத்தியிலும் எப்பாடுபட்டாவது நலதிட்ட பணிகள் மேற்கொள்ளுவதில் உறுதியாக இருக்கிறார்.

 

இப்பகுதியில் எச் ஐ வி பாதிக்கப்பட்ட அனேகம் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களைப் பேனும் ஒரு அமைப்பை துவங்கியிருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி  1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி பராமரிப்பது என்பதற்கான திட்ட வரைவு செய்துகொண்டிருக்கிறோம் என்றார். ஆச்சரியமாக இருந்தது. இந்திய கத்தோலிக்க திருச்சபை எப்போதுமே என்னை வியப்பில் ஆழ்த்துபவை. இன்றய நவீன குஷ்டரோகிகள் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சீர்திருத்த திருச்சபை இன்னும் எதையும் பொருட்படுத்தும்படி செய்ய் ஆரம்பிக்கவில்லை. எட்டி நின்றே பனியாற்றுகிறார்கள். இந்த அன்பின் தொடுகை உண்மையிலேயே என்னை அசைத்தது.

சரி எப்படி இவ்வளவு சிறுவர்கள் இப்பகுதியிலே இருக்கிறார்கள் என்று கேட்டேன்.

இந்தப் பகுதியில் நீங்கள் கடந்து வந்த பகுதிகளில் அனேக லாரிகளாக உங்களைக் கடந்து சென்றிருக்கும். லாரிகள் ஓட்டி வருபவர்கள் தங்குவதற்கு தாபா எனும் அமைப்பு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த இடங்களில் உணவோடு பெண்களையும் சப்ளை செய்யும் வசதி இங்கு உண்டு. பெரும்பாலும் சுற்றுப்புறத்தில் வாழும் ஏழை  பெண்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

மேலும் அவர், இவர்களுக்கான மருந்து மாத்திரைகள் கொடுத்து இவர்களை தேற்றி விடலாம். ஆனால் சமூகம் இவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்பதுவே பெரும் கொடுமை. ஒரு சில இடங்களில், பெற்ற தாயும் தந்தையுமே இவர்களை மனவேதனைக்குள்ளாக்கும்  நிகழ்ச்சிகள் மனதை பதற வைக்கின்றன என்றார். இத்தனைக்கும் இக்குழந்தைகளுக்கு இன்நோயை கொடுத்ததே பெற்றொர் தான்.

கண்டிப்பாக இங்கு நான் மீண்டும் வருவேன், உங்களுக்காக நான் எப்படியும் எனது தாலந்துகளை செலவிடுவேன் என வாக்கு கூறி கனத்த மனதுடன் விடை பெற்றேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

பனைமரச் சாலை (13)

ஜூன் 23, 2016

ஓமர்கா

ஓமர்கா இருசக்கர வாகன பழுதுபார்க்கும் இடம்

ஆபத்தில் அரணானவர்

 

அந்த தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்த நான், அங்கிருந்த ஒரு கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். தண்ணிர் கொடுத்தவரிடம்  தேவாலயங்கள் அருகில் உள்ளனவா என கேட்டேன், அதற்கு அவர் இல்லை, நீங்கள் ஹும்னாபாத் செல்லவேண்டும் என்றார்கள். எனது பயணம் இவ்விதம் நீழும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எத்தனை கி. மீ தூரம் எனக் கேட்டேன், 70 என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏற்கெனவே 350கி மீ க்கும் மேலாக பயணித்திருக்கிறேன், இனிமேலுமா? என்ற கேள்வியோடு வண்டியை திருப்பினேன்.

ஓமர்கா பகுதி முடிவடையும் தருணத்தில் இருசக்கர வாகனம் சரி செய்யும் ஒரு இடத்தை பார்த்தேன். அங்கே ஒரு புல்லட் நின்றது.  அனேகர் என்னிடம் எனது வாகனம் நம்பிக்கைகுறியது அல்ல என சொல்லியிருந்தார்கள். அகமதாபாத்திலிருந்து திருச்சபி அங்கத்க்டினரும் எனது நண்பருமான, “நீங்கள் செல்லும் பயணம் குறித்து எனக்கு எந்த தடையும் இல்லை பாஸ்டர்,  ஆனால் வேறு வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள், அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது” என்றிருந்தார்கள்.

அவர் சொல்லுவதற்கும் ஒரு காரணம் உண்டு. அகமதபாத் பகுதியில் எனது வாகனம் அனேக வேளைகளில் பழுதுபட்டதை அவர் அறிவார். அது போலவே மீராரோடு திருச்சபையின் அங்கத்தினரும் எனது நண்பருமான பாண்டியன் இந்த வண்டியில் மட்டும் செல்லாதீர்கள் என என்னை உருட்டியும் மிரட்டியும் கெஞ்சியும், நயமாக சொல்லியும் பார்த்தார். திருவள்ளுவர் எழுத மறந்த சொல்பேச்சுக் கேளாமை எனும் அதிகாரத்தை வாழ்வில் கடைபிடித்து வரும் நான் இவைகள் எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். அதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு.

எனது வாகனம் என்னோடு இருப்பதுவே சிறந்தது என கருதினேன். ஆகவே தான் எனது மெக்கானிக் அஜித் பாயிடம் மீண்டும் மீண்டும் கேட்டேன் வண்டியை நம்பி நான் எடுத்துச்செல்லலாமா?. அவர் ஒரு சில பொருட்களை வாங்கிக்கொள்ள சொல்லியிருந்தார். கிளட்ச் வயரும், பிரேக் வயரும் ஸ்பேர் வாங்கிக்கொண்டேன்.  இறுதியாக ஒரு நண்பர் கூறியதால் இன்னும் இரண்டு டியூப் வாங்கிக்கொள்ளலாமா?  என கேட்டேன்..அதற்கு அவர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை, 60கிமீ வேகத்துக்கு மேல் செல்லாதீர்கள். ஆயில் போதுமான அளவு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். நீங்கள் சொந்த ஊர் செல்வது வரை எதுவும் தவாறகிவிடாது என்றவர், 3000 கிமீ தூரத்து  ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ளக்கொள்ளுகிறீர்கள் என்பதுபோல் பார்த்தார்.

என்ன இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். செல்லும் வழியில் ஏதேனும் ஆகிவிட்டால்? அப்படி ஏதேனும் ஆகிவிட்டால் எனது வாகனத்தை சரி பார்க்க ஒரு முழு நாளை நான் அதிகப்படியாக வைத்திருந்தேன். ஹைதராபாத் வரை சென்றுவிட்டால் கண்டிப்பாக நல்ல மெக்கானிக் கிடைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆகவே அந்த இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தின் அருகில் வந்தபோது, நிறுத்தி அங்கிருந்த மெக்கானிக்கிடம் காட்டினேன். ஆயில் சரியாக இருக்கிறது என்றார்.

இதற்குள் என்னை சுற்றிலும் ஒரு வாலிபர் குழாம் சூழ்ந்துகொண்டது. எனது பயணம் பற்றி விசாரித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதை அறிந்துகொண்டேன். அவர்களிடம் எனது பயணத்தைக்குறித்து மிக சொற்பமாய் விளக்கிவிட்டு அனைவரது கரத்திலும் ஆளுக்கொரு கை பட்டைகளை அணிவித்தேன். ஹோசன்னா என்று, பாம் சண்டே என்றும் எழுதப்பட்டவைகள் அவர்களை உறுத்தவில்லை. மிக மகிழ்ச்சியாக என்னோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது தான் எனது சந்தேகத்தை அந்த மெக்கானிக்கிடம் கூறினேன். அவர் எனது வாகனத்தை சற்றுநேரம் ஓடவிட்டுவிட்டு இவ்விதமாக சொன்னார். “நீங்கள் கன்னியகுமரி சென்று மீண்டும் மும்பை வரலாம்” வண்டிக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. இந்த வார்த்தைகள் எனது காதில் பதனீர் போல இனித்தன, கருப்பட்டி போல் இனிக்க இனிக்க கரைந்தது, பனம்பழம் போல் சாறாய் வடிந்தது.  வேதனை வலிகள் தூரம் யாவும் மறந்து மீண்டும் வாகனத்தை எடுத்தேன். உற்சாகமாய் சென்று சேரவேண்டிய இடம் ஹும்னாபாத் என சொல்லிக்கொண்டேன்.

பயணங்கள் நமக்குத்தரும் நட்புகள் நமக்கு பெரிய திறப்பை அளிக்கிறார்கள். பயணிக்கிறவர்களை நமது தேசம் மிகவும் அன்பாக ஏற்றுக்கொள்ளுகிறது. அவர்களை அன்போடு ஆசீர்வதிக்கிறார்கள் என்பதை நான் ஒவ்வொரு மனிதரைக் கண்டபோதும் உணர்ந்துகொண்டேன். அனைவருக்குள்ளும் பயணம் விரும்பும் ஒரு பயணி உறைந்திருக்கிறான். பயணம் சென்றவன் அவைகள் தனது வாழ்வின் மிகச்சிறந்த தருணமாக அவைகளையே கருதுவான். பயணங்கள் பல்வேறுவிதமான மனிதர்களை நிலப்பரப்பை வாழ்கைமுறையை அறிமுகம் செய்கிறது. அவைகளை ஒருபோதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

சாலைகள் மிகவும் மோசமாகவே இருந்தது ஆனால் நான் செல்ல வேண்டிய இடம் வரும் மட்டும் நான் ஓய்வெடுக்க முடியாதாகையால் நான் வலிகளை பொருட்படுத்தாது ஓட்டிக்கொண்டு சென்றேன். சுமார் 40கிமீ தொலைவு சென்றபோது ஒரு ஆர் டி ஓ செக்போஸ்ட் கண்ணில் பட்டது. மிகவும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமகவும் கட்டப்பட்ட ஒரு செக்பொஸ்ட். அங்கே தங்கிவிடமுடியுமா என பார்த்தால் அங்கும் தங்க இடமில்லை. மிகவும் சோர்பாக இருந்தது. தண்ணீர் வாங்கி குடித்துக்கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.

அப்போது அங்கிருந்த ஒரு லாரி ஓட்டுனர் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அவர் சென்னை செல்வதாகவும், வேண்டுமானால் எனது வாகனத்தை அவரது வாகனத்தில் ஏற்றிக்கொள்ளலாமென்றும் கூறினார். இத்தனை தூரம் நீங்கள் தனியாக செல்வது ஆபத்து என கடிந்து கொண்டார். அவரது அன்பு புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் நான் அவருக்கு எனது பயனத்க்டின் நோக்கத்தை சொன்னபோது புரிந்துகொண்டார். சாலைகளைக் குறித்து நான் அலுத்துக்கொண்டபோது, கவலைப்படாதீர்கள் இனிமேல் நீங்கள் செல்லும் பாதை மிக நேர்த்தியாக இருக்கும் என்றார். ஆம் அவ்விதமாகவே அமைந்தது எனது நல்லூழ்.

வலி, களைப்பு, பசி இவற்றோடு தூக்கமும் என்னை தழுவ துடித்துக்கொண்டிருந்த நேரம், மீண்டும் 30 கி மீ தானே என எனக்கு நானே சமாதானம் கூறி அடுத்த பயணத்தை துவக்கினேன். சாலை புதிதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. சாலையில் அதிக வாகன நெரிசலும் இருக்கவில்லை. ஆனால் எனது வாழ்வின் மிகவும் படபடப்பான ஒரு மரண தருவாயிலிருந்து அன்று நான் தப்பினேன்.

 

சாலை நேர்த்தியாக இருந்ததாலும், இருவழி சாலை ஆனபடியாலும், சீக்கிரமாக ஏதேனும் ஒரு இடத்தைக் கண்டடைந்து அன்று தங்கவேண்டும் என நான் நினைத்ததாலும்,  வேகமாக எனது வண்டியை ஓட்டினேன். திடீரென எனக்கு முன்பதாக வேறொரு வாகனம் வேகமாக வருவதைக் கண்டேன். நான் செல்லும் பாதை ஒருவழிப்பாதை. வேறு வாகனங்கள் வரக்கூடாது, வருவதற்கும் வாய்ப்புகள் குறைவு. ஆகவே சற்று அசிரத்தையாகவே ஓட்டினேன். எனக்கு முன்னால் வரும் வாகனம் மாற்று தடத்தில் செல்லுகிறது என்றே முதலில் எண்ணினேன். இரண்டு வாகனங்களும் வேகமாக பயணித்ததால் ஒரு சில வினாடிகளிலேயே  அந்த வாகனம் என்னை நோக்கி வருவதை நெஞ்சம் அதிர உணர்ந்து கொண்டேன். சரி, மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருப்பர்களோ என எண்ணியபடி இடதுபுறமாக வண்டியை திருப்பினேன். என்னைப்போல அவரும் நினைத்திருப்பாரா என்ன என தெரியவில்லை அவரும் வண்டியைத் திருப்பினார்.

இப்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருவரும் அவரவர் கட்டுபாடுகளை இழக்கும் தருணம் என்பது நன்றாக தெரிந்தது. பனைமர வேட்கைப் பயணத்திற்கு மாநிலம் கடந்த ஒரு எதிர்ப்பு இருக்குமோ என்றுகூட சந்தேகப்பட்டேன்.

ஆனால் புரிந்துவிட்டது, அவர் தவறான பாதையில் தான் வருகிறார், வேறு வாகனங்கள் வராததால்  வேகமாக வந்திருக்கிறார். நான் இடப்பக்கமாக திரும்பிச்செல்லுவேன் என எதிர்பார்த்திருக்கிறார். அவ்விதம்  நான் இடப்பக்கம் செல்லாததால் அவர் தனது வண்டியை இடப்பக்கமாக திருப்பியிருக்கிறார். இவைகளை நான் புரிந்து எனது வண்டியை திருப்பவும் அவர் திருப்பவும் ஒன்றுபோல் இருந்திருக்கிறது. இனிமேல் இடிக்காமல் இருக்கவேண்டுமென்றால் நான் மீண்டும் வலப்புறம் வண்டியை திருப்பவேண்டும். மிகவும் பிரயத்தனப்பட்டு நான் வண்டியைத் திருப்பினாலும் மோதுவதை தவிற வேறு வழியில்லை. வண்டியில் லாறி மோதி நான் தூக்கியேறியப்படும் காட்சி என் கண்களுக்கு முன்னால் வந்து மறைந்தது.

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் (திருப்பாடல்கள் 121 : 7) என்பனவற்றில் ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லி மன்றாட நேரம் இல்லை. ஆனால் அந்த எண்ணங்கள் கடவுளின் காதுகளை எட்டியிருந்தது, அவர் தமது தூதர்களுக்கு என்னை காக்கும்படி கட்டளை இட்டிருந்தார். லாரி இன்னும் அபாயகரமாக இடப்பக்கத்தில் சாலையைத்தாண்டி செல்வதுபோல் என்னை விட்டு விலகி சென்றது, ஆகவே எனக்கு அந்த இரவில் மயிரிழையில் தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சேதம் ஏதும் இன்றி கடவுள் என்னை காப்பாற்றினார்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

ஓலையும் கலையும்

ஜூன் 22, 2016

நீர் சுமக்கும் ஆப்பிரிக்க பெண்

நீர் சுமக்கும் ஆப்பிரிக்க பெண்

“உலகம் முழுவதும் பெண்களே தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதியுறுகிறார்கள் அவர்களை நினைவில் கொண்டே இந்தப் படத்தை தெரிவு செய்தேன். தண்ணீர் அற்ற பகுதியில் வாழும் பனை மரம் அவர்களோடு தனது சார்பை வெளிப்படுத்துவதாகவே ஓலையில் செய்யப்பட்ட இந்த படம் குறிப்புணர்த்துகிறது”

பனை ஓலைகள் பனைமரத்திலிருந்து கிடைக்கும் பயனுள்ள ஒரு பொருளாகும். பழங்காலத்தில் வீடுகளின் கூரைகளை வேய்வதற்கும், வீட்டின் சுவர்களை மூடுவதற்கும் ஓலைகள் பயன்பட்டன. பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களும் ஓலையிலிருந்து வீட்டிலேயே தயாரிக்கப்பட்டன.

 

ஏடுகள் எனும் ஓலையில் இயற்றப்பட்ட புத்தகங்களே முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்புவரை குமரி மாவட்டத்டின் ஒரு சில பகுதிகளில் ஓலையிலேயே பிரமானங்கள் எழுதப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் எனது பெற்றோரின் காலத்தில் ஓலையில் எழுதப்பட்டதையே தங்கள் சிறுவயதில் கற்றிருக்கிரார்கல். தற்காலத்தில் ஓலைகளில் என்னென்ன செய்ய முடியும் என எனது நேரத்தி ஒதுக்கி நான் செய்த படங்களை பதிவிடுகிறேன்.

 

கன்னியாகுமரி மாவாட்ட திருமண வீடுகளில் பொங்கிய சோற்றை சேமித்து வைக்க ஓலை பாயை இன்றும் பயன்படுத்துகின்றனர். ஓலைகளின் அவசியம் அருகிவிட்டபோதிலும்  பாரம்பரியத்தை விரும்புகிறவர்கள் ஓலைகளின் பயன்பாட்டை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். ஆகவே ஓலைகள் தங்கள் முக்கியத்துவத்தை முழுமையாக இழக்கவில்லை என்றே படுகிறது. அப்படியென்றால், ஓலைகளின் பயன்பாடு மக்களின் ஆழ்மனதில் மென்மையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை மீட்டெடுக்கும் ஒரு பயணம் நமக்கு இன்று வேண்டும்.

 

பனை ஓலைகளில் நான் சிறுவயதில் எதையும் செய்து பழகியதில்லை. நண்பர்கள் காத்தாடி செய்வதுண்டு மேலும் தென்னை ஓலைகளில் நண்பர்களோடு சேர்ந்து கணப்பொழுதில் ஓலைப்பந்து செய்தும் விளையாடியிருக்கிறோம். ஆனால் எதையும் செய்து பழகியதில்லை. குருத்து ஞாயிறு அன்றும் சிறுவர்களும் பெரியவர்களும் விதம்விதமாக ஒலைகளை முடைந்து அழகுபார்க்கும்போது, என்னவென்றே புரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் ஓலைகளால் என்னன்னெ செய்ய முடியும் என முயற்சிக்கத் துவங்கிய பின்பு, இன்றுவரை ஓலைகளில் அனேக படங்களைச் செய்துகொண்டுவருகிறேன்.

 

கீழ்காணும் படம், இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை மாதிரியாகக் கொண்டது. ஆப்பிரிக்க மக்களின் கலை ஈடுபாட்டின் மேல் எனக்கு ஒரு பித்தே உண்டு. அதை நிறைவு செய்யும்படியாக அனேக படங்களை அங்கிருந்து கடன் வாங்குவது எனது வழக்கம். பிறருடைய படமாயிருந்தாலும் நான் பயன்படுத்துவது ஓலைகளை மட்டுமே. இந்த படத்தில் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசமான வண்ணங்களை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அனைத்தும் ஓலையின் இயற்கை வண்ணங்களே ஒழிய எந்த விதமான சாயங்களும் சேர்க்கப்படவில்லை. இவ்வோலைகள் சுமார் 400 வருடங்கள் கெடாமல் இருக்கும்.

 

பாதுகாக்க வேண்டிய முறைகள்:
கண்ணாடி சட்டம் போட்டு காற்றில் ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவேண்டும். ஒருவேளை அவ்வைதம் காற்றின் ஈரப்பதம் நுழைந்து படத்தில் ஒருவித பூஞ்சைகள் வந்துவிட்டால் படத்தை பிரித்து கண்ணடியை மட்டும் மாற்றிவிட்டு, கண்ணடியையும் ஓலையையும் துடைத்து காயவைத்து மீண்டும் சேர்த்து சுவரில் தொங்கவிட்டால் எந்த பாதிப்பும் இருக்காது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

பனைமரச் சாலை (12)

ஜூன் 22, 2016

மரண இருளின் பள்ளத்தாக்கு

நளதுர்க் கோட்டையும் போரி ஆறும்

நளதுர்க் கோட்டையும் போரி ஆறும்

சோலாபூர் கடந்ததும் சாலைகள் மொத்தமாகவே மாறிவிட்டன. அதற்கு காரணம் இன்னும் புதிய இருவழிச் சாலைகள் அமைத்து முடிக்கப்படாததே. இரண்டு கி மீ ஒருமுறை அல்லது மிஞ்சிப்போனால் சுமார் 5 கி மீ ஒருமுறை சாலையில் மாற்றுப்பாதையில் செல்லவும் எனும் அறிவிப்பு காணக்கிடைத்தது. பழைய சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. புதிய சாலையோ பழைய சலையோ கொலை வெறி வேகத்தோடு முந்திச்செல்ல விழைகின்ற வாகனங்கள் என அனைத்து காரணிகளும் சேர்ந்து எனது பயண வேகத்தை நிதானப்படுத்தின. எனக்கு என ஒரு இலக்கு இல்லையென்றாலும், சோலாபூரிலிருந்து 80 கி மீ தொலைவிலிருக்கிற ஓமர்கா எனும் ஊருக்குச் செல்லலாம் என நான் திட்டமிட்டிருந்தேன். இருட்டும் நேரம் ஏதேனும் ஒரு இடத்தில்  தங்கிக்கொள்ளலாம் என  நினைத்துக்கொண்டேன்.

எனது கவனம் முழுக்க சாலையில் குவித்தே ஓட்டினேன். ஆகவே சுற்றுமுறும் அதிகமாக நான் பார்க்கவில்லை. பாதுகாப்பு முக்கியம், சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம் போன்ற சுயகட்டுப்பாடுகளை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். வேகமாக வந்தால் நான் ஒதுங்கி வழிவிடுவது போன்ற அடிப்படையான காரியங்களை கூர்ந்து பார்த்து செய்துகொண்டிருந்தேன். ஒரு வகையில் இந்த பயணம் நல்லபடியாக முடியவேண்டும் என்கிற உந்துதலினால் பராக்கு பார்க்கும் எண்ணங்களை மூடிவைத்துவிட்டு கருமமே கண்ணாக வாகனத்தை ஓட்டினேன்.

இப்படி நான் சென்றுகொண்டிருக்கும்போது, எனது இடதுபுறத்தில் 200மீ தொலைவில் இருந்த  ஒரு கோட்டையின் முகப்பை நான் கண்டேன். அந்த இடத்தில் பாதை சற்று சரிவானபடியால் என்னால் வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாது. ஆகையால் நான் இன்னும் சற்று தொலைவு செல்லலாம் என முடிவெடுத்து சற்று முன்னால் போக, பாதை வளைந்து ஒரு 250 அடி நீளமான சிறிய பாலம் தென்பட்டது. அங்கே இருவர் அந்த் பாலத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நிற்கின்ற இடத்திலிருந்து  கோட்டையின் விலா பகுதியை முழுமையாக பார்க்க முடிந்ததால் அங்கே நிறுத்திவிட்டு அந்த கண்கொள்ளாக் காட்சியை இரசிக்க ஆரம்பித்தேன். எனது வாகனம் நிறுத்தப்பட்டதும், இன்னும் அனேகர் தங்கள் வாகனங்களை அங்கே நிறுத்த ஆரம்பித்தனர்.

மகாராஷ்டிரா பகுதியின் கடைசி எல்லையில் அமைந்திருக்கும் நளதுர்க் எனும் பகுதியில் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை  மன்னன் நாளனால் உருவாக்கப்பட்டது என நம்புகின்றனர். கோட்டையைச் சுற்றிலும் மூன்று பகுகிகளிலும் போரி எனும் ஆறு சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியாய் திட்டமிட்டு கட்டப்பட்ட ஒன்று எனவும், போர்களில் வெற்றி பெறும் அனைத்து சாத்தியக்கூறுகளும் கொண்ட தளம் இது. ஆகவே அந்த ஒன்றரை மைல் நீளத்திற்கு பரந்து விரிந்த அந்த கோட்டையை கண்ணிமைகாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அழகிய சிதிலம் அடையாத ஒரு கோட்டை. மத்திய காலகட்டத்து கட்டிடக்கலையை பின்பற்றியிருந்தனர். போரி ஆற்றில் தண்ணீர் இல்லை ஆகையால், அங்கே ஒரு வயதான மனிதர் தனது எருமைகளை மேய்த்துக்கொண்டிருந்தார். வேனிர்காலமானபடியால் அந்த ஆறு நீரின்றி புற்கள் செறிந்து காணப்பட்டது.

வாகனங்களை என்னருகே நிறுத்தியவர்கள் ஒருவரும் கோட்டையைப் பார்கவில்லை ஆனால் நான் நின்றுகொண்டிருந்த பாலத்தின் கீழே இருந்த நதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாகள் என்பதை அப்போது தான் கவனித்தேன். நான் வண்டியை நிறுத்தியிருந்த பகுதிக்கு சற்று முன்னால் பாலத்தின் கைப்பிடிச்ச் சுவர் உடைந்திருந்தது. எப்படி இந்க்ட புதிய பாலம் உடைந்திருக்கும் என நான் என்னுகையில், சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருப்பதை புரிந்துகொண்டேன். ஆகவே, என்ன என பார்க்கும்படியாய் ஆற்றிற்குள் எட்டிப்பார்த்தேன். தண்ணீர் இல்லாத ஆற்றில் என்ன இருந்துவிடப்போகிறது என்ற எண்ணத்தோடு.

ஆற்றிற்குள் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஒரு  லாரி ஆற்றிற்குள் விழுந்து அப்பளமாகியிருந்தது. பெரும்பாலும் நான் இவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றே நினைப்பேன், ஆனால் அன்று நான் கண்ட காட்சியை வேறெப்படியும் சொல்லமுடியாது. அந்த அளவிற்கு லாரி உடைந்துபோய்க்கிடந்தது. பின்னாலுள்ள இரண்டு சக்கரங்களும் தூக்கி வீசப்பட்டு தனியாக கிடந்தன. லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். அந்த பாலம் ஒரு ‘ப்’ வடிவத்தின் அடிப்பகுதிபோல இருந்தது. இருபுறத்திலும் மேட்டிலிருந்து சரிந்து வருகின்ற சாலிகள். வேகத்தை கட்டுப்படுத்தமல் வரும்போது விபத்து நிச்சயம் ஏற்பட சாத்தியமுள்ல பகுதி. அருகில் நின்றவர்களுடன், எப்போது சம்பவித்தது என கேட்டபோது “அபி” என்றார்கள். அப்படியென்றால் மிகவும் சமீபத்தில் தான் நடந்திருக்கவேண்டும்.

விபத்துக்கள் மனதில் சோர்வு ஏற்படுத்தக்கூடியவை. அந்த விபத்தை பார்த்ததிலிருந்து இன்னும் சற்று கவனமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். ஆனாலும் என்னால் அந்த விபத்தை என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. நான் இன்னும் 2500 கி மீ பயணம் செய்யவேண்டும். இந்த விபத்து என்னொடு வந்தால் நான் பயந்தே செத்துவிடுவேன் ஆகவே வேறு ஏதாவது வகையில் என்னை இதிலிருந்து வலுக்கட்டாய்மாக திசை திருப்பமுடியுமா என்று எண்ணியபடி வன்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாடலோடு இணைந்த டோலக் சத்தமும், சிறிய சிங்கியின் கிணுகிணுப்பும் கரகோஷமும் என மக்கள் பிரவாகத்தின் மகிழ்ச்சியின் சத்தம் கேட்டது. வண்டியை ஒதுக்கினேன்.

அது ஒரு புதிதாக கட்டப்பட்ட கோயில். தாமரையை உருவகித்து கட்டியிருக்கிறார்கள். அந்த கோயிலைச் சுற்றிலும் 5 அடி இடைவெளி விட்டு, ஒரு நீர் தங்கும் அமைப்பையும் செய்திருக்கிறார்கள். ஆலயத்தின் ஓரங்களில் மிகப்பெரிய தாமரை இதழ்களை சிமென்ட்டில் செய்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றல், பழைய ஆலயங்களைப்போன்றே சுற்றிலும் சுவர் எழுப்பப்படாமல் வெறும் தூண்களால் ஆனதாக இருந்தது.  இவ்வித அமைப்புகள் எனக்கு எப்போதுமே உவப்பானது. கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்துமே சுவர்கள் கட்டப்பட்டு காற்றையும் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்துகின்றது எனும் வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. இவ்விதம் காற்றையும் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்திய பின்னர், ஃபேன் வாங்கிப் போடுவது, ஏ.சி மாட்டுவது, லைட் போடுவது என அதற்கு தனித்த செலவுகள் வேறு. எல்லாவற்றிற்கும் மேல் இவைகளுக்கான கரண்ட் பில் கட்டும்போது ஏற்படக்கூடிய மனச் சோர்வுகளை சொல்லி மாளாது. கிறிஸ்தவ ஆலயங்கெளுக்கென இந்திய முறையில் வடிவமைப்புகள் செய்யும் பொறியியலாளர்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

அந்த ஆலயத்தில் கிராமத்தினர் சுமார் 100பேர் கூடியிருந்தனர். நீள் வட்டமாக சிலர் அமர்ந்திருக்க சிலர் நின்றுகொண்டும் இசைக் கருவிகளை மீட்டிகொண்டும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். குறிப்பகா அந்த கூட்டு வழிபாட்டின் அங்கமாக அவர்களில் இருவர் தங்கள் கரங்களை பற்றிக்கொண்டு அதனை மைய விசையாக கொண்டு சுற்ற ஆரம்பித்தனர். அவர்களின் வேகம் இசைக்குள்ளும் புகுந்து வெளிப்பட்டது. ஒரு பரவச தருணத்திற்குள் அனைவரும் வந்திருந்தனர். அதன் பின்பே அவர்கள் ஒரு எளிய பூஜை செய்யும்படியாக ஒன்றாக எழுந்து நின்றார்கள். அவர்களின் அந்த வழிபாட்டு முறைமை நன்றாகவே இருந்தது. வெளிச்சம் மங்கிக்கொண்டு வருவதால் நான் அந்த இடத்தைவிட்டு துரிதமாக புறப்பட்டேன். நான் ஒமர்கா என்னும் இடத்தைச் சேர இன்னும் கண்டிப்பாக 50 கிமீ தொலைவு இருக்கும்.

சாலைகளில் எந்த மாற்றமும் இல்லை, எனக்கு தங்குமிடங்களும் ஒன்றும் சரிவர அமையவில்லை. வாகனங்கள் ஒளியை பீச்சத் துவங்கின. ஓமர்கா பகுதியில் ஏதேனு தேவலயங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனமும் நானும் ஒன்றாய் மாறிவிட்டோம் செல்லும் சாலையும் மட்டுமே கவனம். வலிகளை மறந்து கவனம் குவித்து ஓட்டினேன். வழியில் ஒருசில இடங்களில் நின்று ஓமர்கா செல்லும் வழியை சரிபார்த்துக்கொண்டேன். ஓமர்கா மகாராஷ்டிராவிலிருந்து  கர்னாடகா செல்லும் வழியின் கடைசி எல்லை. அந்த இடம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது.

ஓமர்காவிலே திருச்சபைகளோ ஆலயங்கலோ இல்லை என்பதை ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.. தங்குவதற்கு எதேனும் இடம் உண்டா என கேட்டபோது ஒரு கட்டிடத்தைக் காட்டினார்கள். உள்ளே சென்றபொதே இங்கே தங்கமுடியாது என புரிந்துகொண்டேன். நாற்பது வருடத்திற்கு முன்பதாக உள்ள கட்டிடம். ஆறுக்கு எட்டு எனும் அளவிலே அறை. பெருக்கப்படாமலும் சுவர்களோ மூட்டைப் பூச்சியின் கொலைகளமுமாக காணப்பட்டது. பாய்ந்து வெளியெறினேன்.

பனைமரச் சாலை (11)

ஜூன் 21, 2016

நீண்டது பயணம்

காலை உணவு

காலை உணவு, தாபாவில்

காலை எட்டுமணிக்கு முன்பதாகவே ஹடாப்சர் வந்துவிட்டேன். அங்கிருந்து ஷோலாப்பூர் செல்லுகின்ற பாதை மிக மிக அழகாக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட இருவழி சாலை அது.  காலை பதினோரு மணி வரை ஓட்டலாம் என முடிவு செய்தேன். சுமார் 9 மணிக்கு மிகவும் பசிக்கவே ஒரு தாபாவைக்கண்டு வண்டியை நிறுத்தினேன். எனது பயணத்தின் முதல் தாபா இதுதான்.

 

முதல் முதலாக தாபா என ஒன்று இருப்பதே எனக்கு எனது கல்லூரி வாழ்க்கைக்குப் பின்புதான் தெரியும். எனது பெரியம்மா மகன் ஹெரால்ட் அலகாபாத் விவசாய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரமது. ஏதோ ஒரு வேகத்தில் அவர்களோடு ஒட்டிக்கொண்டேன். அங்கே சென்றபோது தான் மண்குவளையில் டீ அருந்துவது, இரவு நேரங்களில் தாபாவில் போய்ச் சாப்பிடுவது என புது அனுபவத்திற்குள் வந்தேன். சப்பாத்தியையும் கோழியையும் தீக்குள் போட்டு சுட்டு எடுக்கிறார்களா என வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் அவை.

 

கனல் சிவந்து ஒளிரும் கூனிப்பானைக்குள் அதன் வாய் வழியாக பரத்திய மைதாவை ஒரு வட்ட தலையணை போன்ற ஒன்றின் மேல் வைத்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பானையின் வாய் வழியே நுழைத்து அதன் ஓரத்தில் ஓட்டிவிடுவார்கள். பின்னர் நுனி கூர்மையான ஒரு வளைந்த கம்பியின் உதவியைக் கொண்டு அந்த ரொட்டியை எடுப்பார்கள். உணவை இப்படியெல்லாம் தயாரிக்க முடியுமா என ஆச்சரியத்துடன் பார்த்த நாட்கள் அவை.

 

பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் ரோட்டோரம் காணப்படும் பஞ்சாபிய உணவகங்கள் தாபா எனப்படும். நெடுந்தொலைவு பயணம் செய்யும் லாரி ஓட்டுனர்களுக்காக இந்த உணவகங்களை நடத்துகிறார்கள். ஓய்வே இல்லாமல் செயல்படும் உணவகங்கள் இவை.  ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் குறுக்காக வைக்கப்பட்ட பலகையில் ஒரு பெரிய தட்டில்  உணவுகளை பறிமாறுவது வழக்கம். அதன் பின்பு பலகையை மாற்றிக்கொண்டு நாம் உறங்கலாம். எவரும் நம்மை தொந்தரவு செய்வது இல்லை. பயணக்களைப்பில் வரும் கனரக வண்டி ஓட்டுனர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு சிறந்த அமைப்பு. தாபாவில் தங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டியது இல்லை.

தாபாவிற்குள் சென்று என்ன இருக்கிறது என கேட்டேன். அவர்கள் நாஷ்டா இல்லை மதிய உணவே ஆயத்தமாக இருக்கிறது என்றார்கள். மதிய உணவோ காலை உணவோ இருக்கும் உணவைத் தாருங்கள் எனக் கேட்டு ரொட்டியும் டால் ஃப்ரை என்ற தாளித்த பருப்பையும் வாங்கி உண்டேன். அத்தோடு வெட்டிய  எலுமிச்சை துண்டுகளும் பெரிய வெங்காயமும் கொடுப்பார்கள். மிக மிக சுவையான உணவை இங்கு அக் காலை வேளையில் உண்டேன். மிகக் குறைந்த விலைக்கு.

நான் காலை உணவு உண்ட தாபா அமைந்திருந்த இடம் பீகுவானுக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து புறப்படும்போது, சோலாப்பூருக்கு  இன்னும் 150 கி மீ தொலைவுதான், ஆகவே வெகு சீக்கிரமாக மதியத்திற்குள் சென்று சேர்ந்துவிடலாம் என எண்ணிக்கொண்டேன். ஆனால் பதினோரு மணி வாக்கில்  கழுத்து  இணையும் முதுகுப்பகுதியின் இடப்பகுதியில் ஒரு வலி தோன்றியது.

எனக்கு ஏற்கனவே உள்ள வலி தான். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு  ஒருமுறை தற்காலிகமாக வண்டியை நிறுத்தி சற்று ஒய்வெடுக்க வேண்டும் என்பது எனக்கு மருத்துவர் இட்ட கட்டளை. இன்னொருபுறம் வெயிலின் தாக்கத்தால் ஜாக்கெட்டினுள் வியர்வை முத்துக்கள் பிறந்து புழுக்களாய் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. வெயில் கிட்டத்தட்ட 44 டிகிரியை எட்டியது என   பின்னர் அறிந்துகொண்டேன். வெயிலின் கொடுமையும் வலியின் கோரமும் ஒன்றிணைத்துப் போராட வேறு வழியில்லாமல்  சோலாப்பூருக்கு சுமார் 20கி மீ தொலைவு இருக்கும்போது வாகனத்தை ஒரு தாபாவில் நிறுத்தினேன்.

காலையில் நான் சென்றதைவிடவும் இது மிகச்சிறிய தாபா. ஒரு குடும்பத்தினர் வேறு எந்த வேலைக்காரர்களின் உதவியுமின்றி இதை நடத்தினர். உள்ளே போய் கட்டிலின் அருகில் எனது பையை வைத்துவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படுத்துக்கொண்டேன். நல்ல காற்று வீசியது ஆனால் காற்று முழுவதும் அனலாக வீசியது. என்னால் எப்படி இங்கு படுப்பது என தெரியவில்லை.  மண் தரை ஆனபடியால் அங்கே தண்ணீரை ஊற்றி கயிற்றுக் கட்டிலில் படுத்துவிட்டேன்.

இந்த பயணத்தில் நான் இத்துணை தூரம் முன்னேரவும், உறுதியோடு முன்செல்லவும் கடந்த இரண்டு வருடமாக  அகமதாபாத் பகுதியில் வாழ்ந்த அனுபவம் பேருதவியாக இருந்தது. அகமதாபாத் பகுதியில் வாழ்ந்தவர்கள்   வெயில் காலத்தில் ஒரு செங்கல் சூளைக்குள் இருப்பதாகவே உணரமுடியும். வியர்வை வராது ஆனால் காயப்போட்ட கருவாட்டின் நீரை உறிஞ்சி எடுக்கும் அனலும் வெக்கையும் இருக்கும். கிளவுஸ் இன்றி பயணித்த இடங்களில் விரல் நுனிகள் வெக்கையால் பழுத்து கனிந்துவிடுமோ எனும் அளவிற்கு சூடு சாலையிலிருந்து எழும்பிக்கொண்டிருந்தது. கிளவுஸ் போட்டால் அது நச நசவென்று வியர்வையால் வேறுவிதமான அவஸ்தையைக் கொடுத்தது.

 

என்ன ஆச்சரியம் நான்றாக தூங்கிவிட்டேன். எழும்பும்போது மணி 2.15. உடலெங்கும் வியர்வை. குறிப்பாக கையைத் தலைக்கு கொடுத்தபடி படுத்திருந்ததால், கரங்களிலும் கன்னத்திலும் நீர் வடிந்துகொண்டிருந்தது.

 

உடனடியாக உணவுக்குச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். உணவின் தரம் நன்றாக இல்லை. ஆகவே பேருக்குச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சுமார் மூன்று மணிக்கு கிளம்பினேன். சோலாப்பூரில் தங்கக் கூடாது, வேறு ஒட்டலிலோ லாட்ஜிலோ தங்கக்கூடாது, ஏதாவது ஆலயத்தின் வளாகத்தில் தங்கிக்கொள்ளலாம் அல்லது ஏதேனும் கிராமத்தினரின் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தே மீண்டும் பயணத்தை துவங்கினேன்.

 

செல்லும் வழியெங்கும் ஒரு ஆலயமும் கண்ணுக்குப் படவில்லை. வழியில் ஒரு இடத்தில் அருகிலே சர்ச் இருக்கிறதா எனக்கேட்டேன். இல்லை என ஒரு சிலர் பதிலிறுத்தார்கள், பைக்கிலே என்னருகில் உதவிக்காக வந்து விசாரித்த இரண்டு இளைஞர்கள் சர்ச்செல்லாம் இங்கு இல்லை என என்னை முறைத்து விட்டு சென்றார்கள். புனே துவங்கி ஹும்னாபாத் வரை சுமார் 400 கிமீ தூரம் வரைக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் பெருமளவில் இல்லை என நினைக்கிறேன். ஒருவேளை சோலாப்பூரில் கிறிஸ்தவ ஆலயம் இருக்கலாம். ஆனால் மெதடிஸ்ட் திருச்சபைகள் இல்லை என்பது உறுதி.

கொலைவெறி வேகத்தோடு முந்தும் KSRTC பேருந்து

கொலைவெறி வேகத்தோடு முந்தும் KSRTC பேருந்து

சோலாப்பூரைக் கடக்கும்போது சற்று நின்று பழச்சாறு அருந்தினேன். அதன்பின்பு நான் எதிர் பார்த்தது போல சாலைகள் அத்துணை நேர்த்தியாக இல்லை. எனது வேகம் மட்டுப்பட்டது. சாலை அமைக்கும் பணிகளும்,  கொலைவெறியோடு முந்தி வருகின்ற வாகனங்களும் என்னை மெதுவாகவே பயணிக்க எச்சரித்தன. பொதுவாக இரண்டு மாநிலங்கள் இணையும் எல்லைகளில் கண்மண் தெரியாத வேகத்தில் பிறரை சாகடிக்கும் எண்ணத்தோடு வண்டிகள் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக கேரளா பஸ் குமரி மாவட்டத்தில் செல்லுகின்ற தறிகெட்ட வேகத்தைக் குறிப்பிடலாம்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com


%d bloggers like this: