நெருங்கும் உறவுகள்
நுங்கு சூட்டினால் உண்டாகும் பால்வேறு நோய்களுக்கு அருமருந்து. எனது பயணத்தின் ஆரம்பநாள் அன்று எனது கண்கள் எரிச்சலடைந்து இருக்கும்போது கர்ஜத்திலிருந்து நுங்கு வாங்கி கண்களில் விட்டதாலேயே தப்பித்தேன். கண்களில் விழுந்த தூசிகள் போன்றவற்றை எடுக்கவும் நுங்குநீரை கண்கணில் சொட்டு சொட்டாக ஊற்றுவார்கள்.
பதனீரில் போட்டு நுங்கை சாப்பிடுவது ஒரு வழக்கம். எனக்கு அவ்வைதமான ஒரு அனுபவம் இதுவரை வாய்க்கவில்லை. திருநெல்வேலியில் மாம்பழத்தை பதநீரில் பிசைந்து சாப்பிடுகிற வழக்கமும் உண்டு என்று கேள்விபட்டிருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நுங்கில் சர்பத் ஊற்றி சாப்பிடுவது பிரபலாமானது. கொட்டாரம் முதல் வில்லுக்குறி வரை வழியெங்கும் நுங்கு விற்பவர்களை சாலையோரங்களில் பார்க்கலாம்.
சிறுவயது நுங்கு சாப்பிடும் அனுபவம் என்பது வேறானது. வீட்டிற்கு நுங்கு குலைகுலையாக வந்துவிடும். வெட்டி தந்த நுங்கில் பெருவிரலை நகத்தை மெதுவாக நுழைத்து நுங்கின் மேல்பகுதியை கவனத்துடன் உடைக்கவேண்டும். இல்லாவிட்டால் நுங்கில் இருக்கும் சுவையான துய நீர் சிந்திவிடும், மேல்பகுதியை மெல்ல நீக்கிவிட்டால் அதனுள் நீர் தழும்பிக்கொண்டிருக்கும். அதில் வாயை அப்படியே வைத்து உறிஞ்சுவது தான் சிறந்த வழி. இல்லாவிட்டால் முழுமையாக நுங்கு நீரை சுவைக்க முடியாது உடலெங்கும் சிந்திவிடும். நுங்கு சாப்பிட்டு முடிக்கும் தருணமும் நாங்கள் அறிந்ததே. உள் நுழைத்து எடுக்கும் பெருவிரல் நகக்கண்ணில் தோல் உரிந்து வேதனை எடுக்க ஆரம்பிக்கும் அப்போது நுங்கு சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். “நகம் நோவாம நெங்கெடுக்க வந்திருக்கியான்” என்று உழைக்காமல் பலன் எதிர்னோக்குபவர்களை சொல்லுவார்கள்.
நுங்கு சாப்பிட்டபின்பு அதை சுற்றியிருக்கும் கூந்தல் வீணாகிவிடாது. கால்நடை தீவனத்தில் கூந்தலின் பங்கு என்ன என எனக்குத் தெரியாது ஆனால் சிறிது சிறிதாக வெட்டி இட்டால் கண்டிப்பாக கூந்தல் ஒரு சிறப்பான உணவாக மாடுகளுக்கு இருக்கும். ஆனால் கூந்தலின் சிறப்பம்சம் என்பது சிறுவர்களுக்கு அது விளையாட்டுப் பொருள் ஆவதுதான். ஒரு நுங்கில் ஒற்றைக் கம்பைக் கொடுத்து அதிலிருந்து ஒற்றை சக்கர வண்டி செய்வார்கள், இரன்டு சக்கர வண்டி, மூன்று சக்கர வண்டி, என பல்வற்றை செய்வார்கள். இரண்டு சக்கர வண்டியே பிரபலமானது. ஒரு குச்சியில் இரண்டு பக்கமும் கூந்தலின் உட்புறங்களை நுழைத்து ஒரு கவட்டை கம்பியால் வண்டி ஓட்டி சிறுவர்கள் மகிழுவார்கள். இவ்விதமான வண்டிகள் இருசக்கர வாகனத்தின் வேகம் என்று சொன்னால், நான்கு சக்கரம் ஆறு சக்கரம் போன்றவை தம்பி தங்கைகளை இழுத்துச் செல்லும் கனரக வண்டிகளாக தயாரிப்பார்கள். கோடை விடுமுறை நுங்கின் காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.
வெட்டிப்போட்ட கூந்தல்களின் மேல் விரித்த சாக்கிலிருந்து நான் எழுந்தேன். அவர்களிடம் விடைபெற்றபோது மீண்டும் ஒருமுறை என்னிடம் உணவருந்தச் சொன்னார்கள். நான் நன்றி கூறினேன். நுங்கு என்னை முழுவதும் நிறைத்திருந்தது. அவர்கள் அந்த குறுகிய நேரத்திற்குள் மிகவும் நெருங்கியவர்கள் ஆகிவிட்டார்கள். மற்ற வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொலைவு இருந்ததை கண்கூடாக கண்டேன். பனை மரமே எங்களை இணைக்கும் பாலம் என எண்ணிக்கொண்டேன். அதன் பின்பு எனது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது.
நான் ஓங்கோலைத் தாண்டியபோது ஒரு காவலர் எனது வாகனத்தை நிறுத்தினார் அவர் டானும் என்னுடன் வருவதாக கூறினார். அவரை வண்டியில் ஏற்றிய பின்பு பெட்ரோல் நிரப்பும்படி சென்றேன். சுமார் எழுபது கிமீ அவரை அழைத்துச் சென்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். நான் தங்குவதற்கு ஏற்ற இடம் எது என பார்த்தபொழுது இன்னும் எழுபது கிமீ தூரத்தில் கவாலிக்கு அருகில் எனக்கு தாபா இருக்கிறது என்று சொன்னார்கள். எப்படியோ இரண்டு மணிக்கு தாபா வந்துவிட்டேன். எனக்கு உணவளிக்க வந்த வாலிபன் என்னோடு நன்றாக பழகிவிட்டான். எனது மொபைலை சார்ஜில் போடும்படியாக அவனிடத்தில் கொடுத்தேன். நான்கு மணிக்கு என்னை கட்டாயம் எழுப்பிவிடு என்றும் கூறினேன். அதன்பின்பு எனக்கு அவன் அமைத்துத்தந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டேன். அந்த கொடும் வெயிலின் பின்மதிய வெம்மையையும் பொருட்படுத்தாது அனைத்தையும் மறந்து தூங்கினேன்.
என்னை அவன் எழுப்பியபோது கரத்தில் எனது மொபைலை வைத்துக்கொண்டு என்னை படமெடுத்துக்கொண்டிருந்தான். என்னோடு ஒரு செல்ஃபியும் எடுத்தான். துயில் எழுகின்ற நேரம் அவன் செய்கைகள் என்னை மிகவும் எளிதாக்கியது.
வருகின்ற வழியில் மீண்டும் ஒரு இடத்தில் கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். சென்னை நெருங்குகையில் நான் பார்த்த கடைசி கள் விற்பனை நிலையம். இங்கும் ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அங்கே நான் மீண்டும் பனைமரத்தில் ஏறும் ஏணியை வைத்திருப்பதைப் பார்த்தேன். பனைத் தொழிலாளி அங்கே இல்லை தனது பணிக்காக வேறு எங்கோ சென்றுவிட்டிருந்தார். சுற்றிலும் பனை மரங்களாகவே தெரிந்தது.
சென்னை வர அறுபது கிமீ தொலைவு இருக்கும்போது சாலையுன் மத்தியில் பனைமரங்கள் வரிசையாக நடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த சாலை இருவழி பாதையாக மாறியபோது ஏதோ ஒரு பொறியாளர் சாலையின் மத்தியில் பனைமரங்கள் வரும்படி அமைத்திருக்கிறார். காவியத்தன்மை பெற்ற சாலையாக அது காணப்பட்டது. மும்பையில் பாம் பீச் ரோடு என்று ஒரு சாலை உண்டு. அந்த சாலையின் நடுவில் அழகுக்காக பயன் தரா பாட்டில் பாம் என்ற பனை வகையை நட்டிருப்பார்கள். பயன் தருவன பயனற்றவைகளாகவும் பயனற்றவை நடுநாயகமாகவும் இருக்கின்ற காலகட்டத்தை எண்ணி தலையிலடித்துக்கொண்டேன். இந்திய அளவில் ஒரு மாபெரும் முயற்சியை பனைக்காக எடுக்க வேண்டும். அதற்கான காலம் கனிவது வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும்.
ஏலூரு முதல் சென்னை வரும் வழியெங்கிலும் பனைமரம் இருந்ததை காணமுடிந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் பனைமரம் நமது கண்களை விட்டு அகன்று போனால் அது ஆச்சரியமே. மாலை ஆறுமணிக்கு நான் சென்னையை நெருங்கிவிட்டேன். இன்னும் சுமார் 50 கி மீ தொலைவை சென்னை என புரிந்து கொண்டபோது அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. வியர்வையில் குளித்தபடி ஒரு கடையில் சென்று தண்ணீர் வங்கிக்குடித்தேன். என்னைக்குறித்து விசாரித்தவர் எனது பயணத்தைக் குறித்து அறிந்ததும் என்னிடம் தண்ணீருக்கு பணம் வாங்கவில்லை. மிகவும் வற்புறுத்தியும் வேண்டியும் கெஞ்சியும் அவர் என்னிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். “மனசுல ஒரு வெறி இருந்ததா தான் சார் இதெல்லாம் செய்யமுடியும் பனை மரத்தயெல்லாம் இப்போ யார் சார் மதிக்கிறா” என்றார்.
சென்னைக்குள்ளும் ஒரு நபருக்கு எனது பைக்கில் இடம் கொடுத்தேன். சென்னையின் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி ஒருவழியாக சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு நான் சிறு வயதில் பார்த்த ஜானகி ஆன்டி வீட்டிற்கு சென்றேன்.
பல்வேறு உறவுகளை எனது பயணம் எனது இரு சக்கர வாகனத்திலேயே சந்தித்திருக்கிறது. 500 கி மீட்டருக்கும் மேல் பயணம் செய்வது என்பது தொடர்ந்து வாகனத்தில் செல்பவர்களுக்கே சாத்தியமானது. தங்கள் ஓய்வு நேரம் உட்பட அவர்கள் 12 மணி நேரமே ஓட்டுவார்கள். நான் கூடவே அனேகரை சந்திக்கவும் இந்த பயணம் பேருதவியாக இருந்தது. நம்ப இயலாத ஆச்சரியங்களையும் உறவுகளையும் அள்ளித்தந்திருக்கிறது. பனை உறவுகளைப் பேணும் ஒரு குறியீடு தான் சந்தேகமே இல்லை.
அந்த இரவு அவர்கள் வீட்டில் எனது நன்றியின் மன்றாட்டு இவ்விதம் அமைந்தது.
காக்கும் கடவுளே
இஸ்ரவேலரின் நெடும் பயணத்தில் அவர்களோடு கூட இருந்தது போல நீர் என்னை உமது கரத்தால் மூடி பாதுகாத்து இம்மண்ணுக்கு அழைத்து வந்ததற்கு நன்றி.
விடுவிக்கும் கிறிஸ்துவே
சிலுவையை சுமக்கின்ற பொறுப்பை உமது அடியவர்களுக்கு நீர் கொடுத்திருக்கிறீர். நான் சுமப்பதோ எளிய ஓலை சிலுவை, என்றாலும் உம்மையே தொடருகிறேன். எனக்கு வழிகாட்டியாய் இரும்.
தேற்றும் துய ஆவியே
வானளாவ உயர்ந்து நிற்கும் பனைபோல, பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உமது பிள்ளைகள் உயர்ந்து நிற்க அருள் கூறும்.
ஆமென்
(பனைமரச் சாலையை 18 நாள் பயணத்தில் எழுதி முடிக்கவே உத்தேசித்திருந்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. அதை நான் எழுத துவங்கியபோது விரிந்துகொண்டே சென்றது. இனிமேல் ஒரு 10 நாள் பயணத்தில் பெங்களூர், சென்னை, பண்ருட்டி, கோவை, பொள்ளாச்சி, வேம்பார், திருநெல்வேலி, அபிஷேகப்பட்டி சென்று நாகர்கோவிலில் பயணத்தை முடிப்பதாக திட்டம். அங்கே நண்பர்களை பார்த்துவிட்டு 3ஆம் தேதிக்குள் மும்பை வந்தடையவேண்டும். ஆகவே ஆகஸ்ட் 4 அன்று பனைமரச்சாலை தொடர்ச்சி வெளிவரும்)
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
You must be logged in to post a comment.