Archive for ஓகஸ்ட், 2016

பனைமரச்சாலை (64)

ஓகஸ்ட் 31, 2016

சிறுவர்களும் முதிர்கன்னிகளும்

 

மதியம் மூன்று மணிக்கு நாங்கள் மன்னார்குடியில் உள்ள ஒரு மெஸ்ஸில் சாம்பார் சாதம் சாப்பிட்டோம். காலையிலேயே இலக்குவன், அன்றைய தினமணியில் வெளியான எங்கள் பயணத்தைக் குறித்த கட்டுரையை கத்தரித்து புகைப்படமாக அமிர்தராஜ் அவர்களுக்கு வாட்சாப்பில் அனுப்பியிருந்தார்கள். பனைமரச்சாலையின் முதல் பத்திரிகைச் செய்தி அது எனும்போது இலக்குவனுக்கும் ஜெபக்குமாருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்றே எண்ணத் தோன்றியது. ஆசைதீர அதைப் பார்த்து, முகநூலில் பகிர்ந்து, பதிலளிக்க வெண்டியவர்களுக்கு பதிலளித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

உற்சாக குழந்தைகளுடன், திருப்பனந்தாள் அருகில்

உற்சாக குழந்தைகளுடன், திருப்பனந்தாள் அருகில்

எங்களது இலக்கு திருப்பனந்தாள் செல்லுவது. நாங்கள் சென்ற வழிகளில் மிக இனிமையன ஒரு பாதை இதுவென்று எண்ணுமளவிற்கு அழகிய கிராம சாலைகள். வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பனை மரங்களின் கூட்டமும் என மன ரம்மியமான ஒரு இடம் அது. மாலை சுமார் 4 மணிக்கு திருப்பனத்தாளுக்கு மிக அருகில் வந்துவிட்டோம். இன்னும் நான்கு கிலோ மீட்டர் தான் இடைவெளி இருக்கும், சாலையின் இரு புரமும் பனைகள் தெரிந்தன. அமிர்தராஜ் எனக்குப்பின்னால் வந்துகொண்டிருந்தார். அதே வேளையில் சாலையின் இடதுபுறம் ஒரு சிறு குட்டையில்  நீர் கலங்கும்படியாக சிறுவர்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான் அதைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, அமிர்தராஜ் அவர்களுக்கு சிறுவர்கள் குளிக்கிறார்கள் என்பதை சைகை காட்டியபடி முன்னால் சென்றேன். அமிர்தராஜ் அந்த அழகிய காட்சியால் கவரப்பட்டு அங்கேயே நின்றுவிட்டார்.

அவர் வாகனத்தை நிறுத்தியது தெரியாமல் நான் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இருபுறமும் பனைமரங்கள் இருந்ததால் நின்று எவ்வளவு அழகான மாலைகாட்சி என சொல்லாம் என்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. திரும்பி பார்த்தால், அவர் பைக்கை நிறுத்திவிட்டு தனது உபகரணங்களை எடுத்துக்கொண்டு நின்றார். நான் திரும்பி அவரிடத்தில் போனேன். அவர் சாலையின் வலது புரத்தில் வண்டியை நிறுத்தியிருந்தார். நான் இடது புறம் சிறுவர்கள் விளையாடுகின்ற குட்டையின் அருகில் போய் நிறுத்தினேன். குதித்து குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் உடனேயே, அங்கிருந்து கரையேறி வரிசையாக எங்களைப் பார்த்தபடியே நின்றார்கள். அவர்கள் பார்வையில் ஒருவித மருட்சி தென்பட்டது. நான் அவர்கள் குதிப்பதை பார்க்க, வண்டியிலிருந்து இறங்கினேன். அப்போது நானும் அமிர்தராஜும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.

சிறுவர்கள் திசைக்கொன்றாய் விழுந்தடித்து ஓடினார்கள். எனக்கும் அமிர்தரஜுக்கும் எதுவும் புரியவில்லை. சிலருடைய ஆடை அவிழ்ந்தது குறித்து கூட எந்த நினைவுமின்றி ஒருவகையில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு வேகம். அவர்களில் சற்று வயதில் மூத்தவர்கள் கரையோரம் நின்று எங்களையே வெறித்துப் பார்த்தனர். ஓடிய சிறுவர்கள் ஒரு நூறு மீட்டர் தள்ளி நின்று நாங்கள் என்ன செய்கிறோம் என பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  மான் கூட்டம் அரவம் கேட்டு தலைதூக்கி மருண்டு பார்ப்பதுபோல் இருந்தது. நான் இறங்குவதைப்பார்த்துதான் அவர்கள் ஓடுகிறார்கள் என எனக்குப் புரிய சற்று நேரம் பிடித்தது. புரிந்துகொண்டேன். முகமூடி அணிந்திருக்கிறேன். சாக்கு வைத்திருக்கிறேன். பிள்ளைகளை பிடிக்க வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டார்கள் போலும். அமிர்தராஜுக்கு சிரிப்பு தாளவில்லை. எனக்கோ மிகவும் அவமானமாக இருந்தது. அமிர்தராஜ் கேமராவை எடுக்க, அது தனது மாயத்தை காண்பிக்கத் துவங்கியது. ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். நான் எனது முகமூடி, கண்ணாடி மற்றும் ஹெல்மட்டைக் கழற்றி அங்கே வைத்துவிட்டு இலகுவானேன்.

அனைத்து சிறுவர்களும் ஒவ்வொருவராக வந்துவிட்டார்கள். பயமின்றி குளிக்கத்துவங்கினார்கள். குதித்தும் மிதந்தும் ஒருவர் மேல் ஒருவர் புரண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அற்புத கணத்திற்குள் மீண்டும் வந்துவிட்டனர். அமிர்தராஜ் அந்த ஈர தருணங்களை தனது கமிராவால் படங்களாக ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தார்.  சற்று நேரத்தில் சில சிறுவர்களுக்கு எனது வண்டி மேல் பிரியம் ஏற்பட்டு என்னை சுற்றி வளைத்துக்கொண்டனர். ஒரு சில நிமிடங்களில் என்னவெல்லாம் ஏற்பட்டுவிட்டது என எண்ணினேன்.

ஆம் பயணத்தின் முதலிலேயே, நில்ஷியில் சிறுவர் கடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று முகமூடி அணிந்து எவரும் வருவதில்லை. அத்துணை பயமும் இல்லை. மிகவும் தெளிவாக திட்டமிட்டு  சற்றும் பயமின்றி கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அந்த வலை அத்துணை பெரியது. கிராம சிறுவர்கள் கவனத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்களிடம் எனது பயணத்தைக்குறித்து விளக்கினேன். என்னிடமிருந்த பொருட்களை காட்டினேன். ஆனால் அதன் பின்புதான் அது எனக்கு தோன்றியது. அவர்களிடம் கேட்டேன், எப்படி பனை ஓலையை விளையாட்டு நேரங்களில் நீங்கள் பயன்படுத்துவீர்கள் என. அவர்கள் என்னிடம் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்கள். நான் சற்றும் எதிர்பாரா வண்ணம்  ஒரு சிறுவன் ஒரு ஓலையைக் கிழித்து எனக்கு காத்தாடி செய்வது எப்படி என காண்பித்தான். எனது பயணத்தின் பொற்கணம் அது. மிகவும் எளிமையான முறையில் செய்யும் காத்தாடி.  செய்துவிட்டு அவர்கள் ஓடினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது.  இன்றைய தலைமுறைக் குழந்தைகள் இருந்த இடத்தில் இருக்க அவர்கள் முன்பாக டி.வி, மொபைல், என அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது அவர்கள் ஆரோக்கியம் உட்பட.

பனங்காடு, திருப்பனந்தாள் அருகில்

பனங்காடு, திருப்பனந்தாள் அருகில்

அங்கிருந்து சில நூறு தொலைவு சென்றதும் இடதுபுறம் ஒரு சாலை சென்றது. அங்கே ஒரு பனங்காடு இருந்தது. நான் 12 வருடங்களுக்கு முன்பும் இங்கே ஆய்வுக்காக வந்திருக்கிறேன் என்பது எனக்கு மங்கலாக நினைவுக்கு வந்தது. எப்படி வந்தேன் என்று இன்றும் கூட பிரமிப்பாக இருக்கிறது. உள்ளே சென்றோம், 1500க்கும் மேற்பட்ட பனைமரங்கள் அங்கே இருந்தன. ஆனால் பனை ஏறுவதற்கு ஒருவரும் இல்லை. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இருவர் எங்களை நோக்கி வந்தனர். அவர்களிடம் கேட்டபொழுது பல வருடங்களாக பனை ஏறுகின்றவர்கள் இங்கு வருவதில்லை என்றனர். அப்பனைகள்  தனித்து விடப்பட்ட  முதிர்கன்னிகள் போல் ஒடுங்கி நின்றிருந்தன. பனையை அணைக்கும் கரங்கள் இல்லாததால் அனைத்தும் ஒரு ஒற்றைக்கால் தவத்தில் இருப்பதுபோல் காணப்பட்டது. நாங்கள் அந்த இடத்தில் சற்று நேரம் நின்றோம். இருவருக்குள்ளும் ஒரே உணர்வு இந்த விதமான ஒரு அதிர்ச்சியை எப்படி எதிர்கொள்ளுவது? இவைகளுக்கான தீர்வுகளை எப்படி அணுகலாம். சற்று வித்தியாசமாக அணுகவேண்டிய பிரச்சனை என்பதை அறிந்திருந்தோம்.

பனங்காடு போகும் வழியில், திருப்பனந்தாள் அருகில்

பனங்காடு போகும் வழியில், திருப்பனந்தாள் அருகில்

பனை ஏற இன்று ஆட்கள் இல்லை எனபதை ஒத்துக்கொள்ளவேண்டும். அதை மறைத்து பனையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பனையும் வாழ்வும் வேறுவேறல்ல என்பது அடிப்படை புரிதலாக இருக்கவேண்டும்.  பனை மரங்களோடு அதைச் சார்ந்து வாழும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது, மனிதராகட்டும், பறவைகளாகட்டும், விலங்கினாங்களாகட்டும், ஊர்வனவோ அல்லது சிறு பூச்சிகளோ அவை தமிழகத்தை சுற்றி இருக்கும் ஒரு பிரம்மாண்ட பாதுகாப்பு வளையம். இங்கிருப்பவர்கள் வேலைதேடி பிற இடங்களுக்குச் செல்லுவது இடப்பெயர்ச்சி ஆகிவிடுகிறது. வேலை இல்லா திண்டாட்டம் நிரம்பிய கால கட்டத்தில் அரசு பனை குறித்து கவனம் கொள்ளவில்லை என்று சொன்னால் இவைகளால் பெரும் சுமையையே. பறவைகளும் விலங்கினங்களும் அப்படி உடனடியாக தங்கள் அமைவிடங்களை மாற்றிக்கொள்ள முடியாது. பூச்சிகள் குறிப்பிட்ட தாவரத்தில் மட்டும் வாழ்ந்து பங்களிப்பாற்றுபவை. ஆகவே இந்த பனையை முறித்து கரியாக்கும் விளையாட்டு அவைகளை பராமரிக்காமால் அனாதைகளைப்போல விட்டுவிடுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

பனை நேரடி மற்றும் மாறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது  என்பதையும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குகிறது எனவும் ஆகவே அன்னிய செலாவணியை ஈட்டுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த பனை வளர்ப்பு என்பதுவே சிறந்த முறையாக இருக்கும், அதற்கு நாம் இன்னும் நம்மை தயார் படுத்தவேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் கடந்த இருபது ஆன்டுகளில் பனை மர தொழிலாளர்கள் எதேனும் போராட்டம் செய்து நாம் பார்த்திருக்க முடியாது. அது நுட்பமான செய்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது. பனைத்தொழிலாளர்கள் தமிழக அளவில் ஒன்றுகூட இயலவில்லை, ஒன்றுகூட்டும் அமைப்புகள் இல்லை. மார்த்தாண்டம் பனைத்தொழிலளர் வளர்ச்சி இயக்கம் குமரி மக்களை ஒன்றுகூட்டியது 1980களில் அனேக முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். ஆனா அவைகள் எவர் காதையும் எட்டுவதில்லை. தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ மற்றும்  உலக அளவிலோ ஒன்றுபட்ட முயற்சிகள் ஏதும் நடைபெறவில்லை. திருச்சபையின் வாயிலாக ஆசிய அளவில் பனைத்தொழிலாளர்கள் மீது கவனத்தை குவிக்க முயற்சிக்கிறேன்.  நான் இன்னும் தொடர்ந்து கடுமையாக போராடினால் மட்டுமே எனக்கு சற்றேனும் வாசல் திறந்து கொடுக்கப்படும். அதுவும் உறுதி இல்லை.

முதிர்கன்னிகள், திருப்பனந்தாள் அருகில்

முதிர்கன்னிகள், திருப்பனந்தாள் அருகில்

பனை ஏறுபவர்களுக்கான 1978 ஆம் ஆண்டு ஒரு கருவியை டாக்டர் டி ஏ டேவிஸ் அவர்கள் வடிவமைத்தார்கள். அவர் அதை அணிந்து பனையில் ஏறும் புகைப்படத்தை நான் டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் வீட்டில்  பார்த்திருக்கிறேன். இதற்கிடையில் தென்னை ஏறும் கருவிகள் மற்றும் பனை ஏறும் கருவிகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பனைத்தொழிலாளர்கள் பயன்படுத்தத்தக்க ஒரு கருவியை கோவை வேளான்மை கல்லூரி  “கண்டுபிடித்திருப்பதாக”வும் அதைக் கொண்டு அனைவருக்கும் பயிற்சியளிக்கப்போவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி சங்கத்திலிருந்து அரசுக்கும் பின்னர் கோவை வேளாண்மை கல்லூரிக்கும் கடித தொடர்பை ஏற்படுத்தி, மேற்கொண்டு என்ன செய்யலாம் நாங்கள் பனை தொழிலாளர்களை இணைக்கிறோம் அவர்களுக்கான கருவிகளை நாங்கள் பரவலாக்குகிறோம் என்றபோது இரு இடங்களிலிருந்தும் மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

விலையில்லா சைக்கிள் வழங்குகின்ற அரசால் கண்டிப்பாக பனை மரத்தில் ஏறும் கருவியையும் வழங்கமுடியும். குறந்த பட்சம் மானிய விலையிலாவது வழங்க முடியும். தற்போது விற்பனை செய்யபடும் பனையேறும் எளிய கருவி சுமார் எழாயிரம் விலை விற்கிறது. ஒரு பனை தொழிலாளி அதை வாங்குவது அவசியம் என எண்ணமாட்டார். ஏனெனில் அவரிடம் ஏற்கனவே திறமை இருக்கிறது. மேலும் புதியவைகளைக் கற்றுக்கொள்ள புதியவர்களாலேயே இயலும். பழகியவர்களை புது பழக்கத்திற்கு மாற்றுவது சுலபமல்ல. இலவச பயிற்சிகள் ஒருங்கினைக்கப்படவேண்டும், அவர்கள் ஒரு குடைக்குள் கூட்டுவதனால் மாத்திரமே அப்படி ஒன்றை பரவலாக்க முடியும். அவர்களை அவ்விதம் கூட்டும் கவற்சிகரமான திட்டங்களும் இருக்கவேண்டும்.

பயன் படுத்தப்படாத பனை மரங்களை பிற மானிலத்திலிருந்து பனைத் தொழிலாளிகளை அழைத்து தேவையை உறுதி செய்யலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், இன்று மக்கள் தங்கள் விரும்பியபடி தங்கள் வேலைகளுக்காக புலம் பெயர்வது இயல்பான ஒன்றாகி விட்டது. மும்பையில் கள்ளிறக்குபவர்களில் பெரும்பாலோனோர் பிற மாநிலத்திலிருந்து  வந்தவர்களே. குறிப்பாக பீகாரிலிருந்து மிக ஆர்வமாக அனேகர் வருகிறார்கள்.

இதையும்  தாண்டி நம்மால் யோசிக்க முடியுமா என்பது மிக முக்கிய கேள்வி. குறிப்பாக பனைத்தொழிலாளர்களை அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இணைக்கலாம். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அரசு பனை தொழிலாளர் சேவை மையங்களை திறக்கலாம். எல்லாவற்றிற்கும்  கண்டிப்பாக பனை மற்றும் பனைத் தொழிலாளர்கள் குறித்த ஒரு அடிப்படை ஆய்வறிக்கை தேவை. குறைந்த பட்சம் ஒரு ஆய்வறிக்கை இல்லாமல் நாம் மேற்கொண்டு பேசுபவைகள் அனைத்தும்  பொருளற்றவைகளாகவே இருக்கும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (63)

ஓகஸ்ட் 30, 2016

மர வழிபாடு

குடப்பனை அருகிலிருந்து நாங்கள் மனக்கிளர்ச்சியுடனே புறப்பட்டோம். அது எங்களுக்காக காத்து நின்ற பனையல்லவா? அடுத்ததாக நாங்கள் செல்லவேண்டியது மேலப்பெரும்பள்ளம். நாங்கள் வழியில் இரண்டு முறை கேட்டிருந்தோம் நானும் பல வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். ஆனால் கூகுள் மேப் பார்த்து அமிர்த்தராஜ் அழைத்துச்செல்ல, நான் வழி தவறுகிறோம் என்பதை உணர்ந்து அவரை நிற்கச்சொன்னேன். இல்லை இன்னும் போகவேண்டும் என்றார். நல்லவேளை அந்த இடத்தில் ஒரு கல்லூரி சென்று மீண்டு வருகிற மாணவியைப்பார்த்துக் கேட்டோம். அவள் நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து இடதுபுறமாக திரும்பிச்சென்றால் போதும் என்றாள்.

பனைமர நிழலில், திருவலம்புரம்

பனைமர நிழலில், திருவலம்புரம்

நான் 12 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். ஊர் பெரிதாக மாறினதுபோல இல்லை. நாங்கள் சென்ற ஆலயம் அப்போது நடை திறந்திருந்தது. ஒரு காரில் குடும்பத்தினர் ஒருவர் வந்திருந்தனர். அந்த ஆலயத்திற்கு திருவலம்புரம் என்று பெயர்.

இந்த ஆலயத்திற்கு நாங்கள் வருவதற்கு காரணம் அங்குள்ள தல மரம் பனை. அதைப்பார்த்து செல்லுவது மற்றுமோர் சித்திரத்தை அளிக்க வல்லது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்டுள்ள ஆலயங்கள் அனேகம் உண்டு. நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயிலும்போது நான்கு சைவ திருத்தலங்களில் சென்று அவைகளை கண்டு எனது ஆய்வு கட்டுரையை எழுதினேன். அனைத்து ஆலயங்களும் பல நூற்றாண்டுகள் கடந்தவை. தேவாரம் பாடிய சுந்தரர், திருநாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தர் அகியோரின் காலம் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு. அப்பொழுதே இத்தலங்களில் அவர்கள் வந்து பாடியிருக்கின்றனர் என்பது ஆலயங்களின் தொன்மையைக் குறிக்கும். பெரும்பாலான கோயில்களின் கட்டுமனாத்தில் வேறுபாடுகள் உள்நுழைந்திருந்தாலும், ஒரு ஆலய்த்திற்கு மூன்று முக்கிய அடிப்படையான காரியங்கள் வெண்டும் எனக் கூறுகிறார்கள். அவைகள் மூர்த்தி தீர்த்தம் மற்றும் விருக்ஷம். மூர்க்த்டி என்பது ஆலயத்தின் மையமான இறை வழிபாட்டு தெய்வம் சிலையாக நிறுவப்பட்டது. பக்தர்கள் வரும்போது தூய்மையுடன் இருக்க அருகில் காணப்படும் குளம் அல்லது கிணறு தீர்த்தம் எனப்படும். இறுதியாக பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு நிழல் தர, பிரசாதம் அளிக்க பூ அல்லது கனிகள் தர, அப்பகுதியில் தொன்மையான ஒரு மரம் அல்லது தாவரம் நிற்கும், அதை விருக்ஷம் என்பார்கள்.

பூம்புகாரிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் இருக்கும் இவ்விடத்தில் பனைமரங்கள் நிற்கிறது என நாம் காணும்போது நாம் மீண்டும் கடற்கரையைச் சுற்றி நிற்கின்ற பனை மரங்களைக் குறித்து அறிந்துகொள்ளுகிறோம். பனை மரத்தின் தேவைகள் மிக அதிகமாக கருதப்பட்ட ஒரு காலத்தில் பனை மரம் தல விருட்சமாக இவ்வாலயத்தில் இடம்பிடிக்கிறது. மெலப்பெரும்பள்ளம் எனும் வார்த்தைக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டாலும் எனக்கு அவைகள் பனை சார்ந்த விளக்கங்களாய் இருந்தால் இன்னும் சிறப்புடையதாயிருக்கும் என்று தோன்றுகின்றது.

மேலபெரும்பள்ளம் எனும் பெயர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் வலப்புறமாக சுற்றி ஓடிய அகழி இருந்த பகுதி மேலப்பெரும்பள்ளம் என வழங்கலாயிற்று. அதுபோலவே, காவிரிக்கு மேற்கில் இருந்த பகுதி ஆனபடியல் மேலப்பெரும்பள்ளம் என பெயர் பெற்றது என்றும் கூறுவர்கள். அங்கிருக்கும் சிவலிங்கத்தில் ஒரு கை நுழையுமளவு இரு பள்ளங்கள் இருப்பதால்  லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. இங்கிருக்கும் தலமரம்  நூறாண்டு கண்டதாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன். அதன் அருகில் வேறொரு சிறிய பனையும் வளர்ந்து வருவதைக்கண்டேன்.

சிவலிங்கத்தின் மேல் காணப்படும் இரு பள்ளங்கள், தோண்டிய நுங்கை நினைவுபடுத்துகின்றன, ஒருவேளை பனையிலிருந்து பெறும் ஊற்றைக் குறிப்பிட மேலப்பெரும்பள்ளம் என்றார்களா?

மரங்கள் மனிதனுக்கு ஆதி காலத்திலிருந்து ஆச்சரியம் அளிப்பவைகளாக இருந்திருக்கின்றன. மிகச்சிரிய பிராணிகளுக்கும் பயப்படவெண்டிய கட்டாயத்தில் இருந்த மனித குலத்திற்கு, நிழாலாக உறைவிடமாக ஆசியளித்தவை மரங்களே. இம்மரங்களை இன்னும் கூர்ந்து அவதானித்தபோது அவைகள் செழிப்புக்கும்  வளர்ச்சிக்கும் ஏற்ற குறியிடுகளாக காணப்பட்டது. ஒரு குரங்கு தனக்கு வேண்டிய பழங்களை அளிக்கும் மரத்தினை சுற்றி வருவது போல மனித மனங்கள் மரத்தையே சிற்றி வந்தன. மேலும் மரம் மரணத்திற்கும் மறு பிறப்பிற்கும் அடையாளமாகியது. சில மரங்களின் விதைகள் கீழ்விழுந்து மரணித்து மீண்டும் முளைத்தெழுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மறு வாழ்வு குறித்த எண்ணங்கள் ஆதி மனதிற்குள் வேரூன்றியிருக்கலாம். அகவேதான் பல மரங்களில் ஆவிகள் உறைவது குறித்த கதைகளை நாம் கேள்விப்படுகின்றோம். பல தலைமுறை கண்ட மரமல்லவா?

ஆப்பிரிக்க பாப் மரம் (உதவி - இணையம்)

ஆப்பிரிக்க பாப் மரம் (உதவி – இணையம்)

ஆப்பிரிக்கவைப் பொறுத்தவரையில் பாப் என்கிற மரம் மிகவும் வணங்கப்படத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வாழ்வோடு அது பின்னி பிணைந்திருப்பதனால் தான். சட்டென பார்த்தால் வேர்களை பிடுங்கி தலைகீழாக நட்டிருக்கிரார்களோ எனத் தோன்றும் தாவரம். ஆனால் ஆப்பிரிக்க மக்களின் வாழ்வில் இன்றியமையாத சமய முக்கியத்துவம் பெற்றது இது. உணவு, தண்ணீர், மருத்துவம் தங்குமிடம், உடை என அதன் பரந்துபட்ட பயன்கள் அதற்கு அதிக முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

நாங்கள் குலசேகரம் பகுதியில் இருக்கும்போது எனது உடன் பள்ளித்தோழன் கோகுல் என்னை அவனுடன் அழைத்துக்கொண்டு சென்றான். நான் சென்ற இடத்தில் ஒரு சில நாக சிலைகள் மட்டுமே ஒரு மரத்தினடியில் இருந்தது. அங்கு இருந்த சூழல் என்னை மிகவும் அச்சுறுத்துவதாகவே இருந்தது. நாக சிலை எனக்கு பாம்புகளை நினைவுபடுத்தின, நாங்கள் சென்றது ஒரு உக்கிரமான காட்டிற்குள். மிகப்பெரிய ஒரு மரத்தின் அடியில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். பிர்ற்பாடுதான் நாங்கள் சென்றது “காவு” என அறிந்து கொண்டேன். குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் காவுகள் அனேகம் உண்டு. வழிபடுகின்ற இடம் என்பதால் அவ்விடத்தை இயற்கையாக வைப்பது மிக முக்கிய கடமையாக செய்யப்பட்டுவந்தது. நான் டாக்டர் சோபனராஜ் அவர்களிடம் இதைக்குறித்து பகிர்ந்து கொண்டபோது காவு குறித்த சூழியல் நன்மைகளை அவர் கூரினார். அதாவது காவில நிற்கும் மரங்களை ஒருவரும் வெட்டமாட்டார்கள். அந்த நம்பிக்கையால் பல்வேறு வகையான அபூர்வ மரங்கள் காக்கப்பட்டு வந்திருக்கிறது என கூறினார்கள்.

அந்தவகையில் பல்வேறு மரங்கள் மிக முக்கியமாக வழிபடப்படுகிறது. மரங்களில்  ஏதேனும் கட்டி வைத்து தங்கள் வேண்டுதலைக் வெளிப்படுத்துவது உலகில் பல்வேறு இடங்களில் உள்ள மரபு. மரங்களை ஒருசிலர் வணங்குவதால் வேறுசிலர் அதை வெறுக்கின்ற மனநிலைக்கு போய்விட்டனர். கிறிஸ்தவமும் இஸ்லாமும்  மரங்களிலிருந்து தங்களை வெகுவாக பிரித்துக்கொண்டாலும், திருமறையும் திருகுரானும் தாவரங்களைக் குறித்து தாராளமாகவே பதிவு செய்திருக்கிறது.

நான்  போதகராக பணியாற்ற துவங்கியிருந்த நேரம். சிறு குழந்தைகளுடன் மிகவும் அதிக நேரங்கள் செலவிடுவேன். எப்போது சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தினாலும், நான் அவர்களுக்கு புத்தகங்களையே வழங்க முயற்சித்தோம். ஆனால் மிகச்சிறந்த புத்தகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வந்தவைகளே. இந்தியாவின் வரை கலையோ கதை கூறும் முறைகளோ பதிப்பக வளர்ச்சியோ கிறிஸ்தவ குழந்தைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவில்லை.  ஆகவே நாம் ஒரு மாதாந்திர பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என எண்ண தோன்றியது. ஆகவே அவற்றிற்கான வடிவம் எப்படியிருக்கும் ஆன ஒரு மாதிரியை தயாரித்தேன். அந்த பத்திரிகையில் திருமறையில் காணப்படும் தாவரங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுத டாக்டர் சோபனராஜ் அவர்களை கேட்டேன். இந்தியாவில் காணப்படுகின்ற  தாவரங்களுக்கும் அவைகளுக்கும் நெருங்கிய உறவு இருக்குமென்றல் அதையும் நீங்கள் இணைத்து கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

சிறுவர் பத்திரிகைக்கான முன் அட்டைப்படம்.

சிறுவர் பத்திரிகைக்கான முன் அட்டைப்படம்.

பிற்பாடு பல்வேறு சோதனைகளால், என்னால் அந்த பத்திரிகையை வெளிக்கொணர இயலவில்லை. ஆனால் டாக்டர் சோபனராஜ் அவர்கள் எனக்காக ஒரு பகுதி ஆயத்க்டம் செய்து தந்தார்கள். அதில்,  அவர்கள் அத்திமரத்திற்கும் ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் உள்ள தொடர்பை குறித்து எழுதியிருந்தார்கள். அது என்னை வெகுவாக தூண்டியது. ஆபிரகாமிய மதங்களில் அத்தி மிக முக்கிய இடம் வகிக்கிறது, இந்துக்களுக்கு ஆலமரம் அவ்விதமாக காட்சியளிக்கிறது, புத்த மதத்தைச் சார்ந்தவ்ர்களுக்கோ அரசமரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எப்படி ஒரே பேரின தாவரங்களை பல்வேறு மதத்தினர், நாட்டினர் தங்களின் மரபோடு இணைத்துக்கொண்டனர்? இதற்கு இணையாக பனைமரங்களைக் நாம் குறிப்பிடலாம். பலஸ்தீனாவில் பேரீச்சைகளும் ஆசியாவில் பனை மரங்களும் இடம்பிடித்துள்ளதை காணமுடியும். இஸ்லமியரும் கிறிஸ்தவரும் கூட பனையை தங்களுக்கு எப்பொழுதும் நெருக்கமாக வைத்திருப்பதை இன்றும் காணமுடியும்.

திருமறையில் மனிதர்களை கடவுள் படைத்து அவர்களை தங்கச்செய்வது ஏதேன் எனும் தோட்டம். இல்லமே கோயில். அங்கே தானே கடவுள் அவர்களோடு உலாவுகிறார். அவர்களிடம் விலக்கப்பட்ட கனி மரம் ஒன்றின் அருகில் செல்லவேண்டாம் என மட்டும் அறிவுறுத்தபடுகிறது. ஆனால் அவர்கள் அந்த கட்டளையை மீறியதால் அவர்களுக்கும் அந்த இறைவன் வாழும் தோட்டத்திற்கும் இருந்த உறவு முறிக்கப்படுகிறது. மீண்டும் இயேசுவால் சிலுவை எனும் வெட்டி இணைக்கப்பட்ட மரத்தினால் மீண்டும் இரைவன் தங்கியிருக்கும் ஒர் தோட்டதில் வாழும் வாழ்வை அனைவரும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் கூறியீடாகத்தான் அனைவரும் அவரின் இறுதி எருசலேம் பயணத்தில் இலைகளையும், குருத்தோலைகளையும் பிடித்துச் செல்லுகின்றனர். எனேனில், இறையரசு குறித்த காட்சியை திவ்ய வாசகனாகிய யோவான் காணும்பொழுது, அங்கு நிற்கிறவர்கள் அனைவர் கரங்களிலும் குருத்தோலை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் எனும் காட்சி பதிவாகிறது. இப்படியாக திருமறையின் துவக்கம் முதல் முடிவு வரை, நாம் மரங்களின் ஊடாகவே பயணிக்கிறோம்.

இளம் கன்று, திருவலம்புரம்

இளம் கன்று, திருவலம்புரம்

நாங்கள் உள்ளே செல்லும்போது அங்கே வந்திருந்த கார் டிரைவரும் எங்களோடு இணைந்துகொண்டார். வெளியில் பிரகாரத்திலேயெ நின்று கொண்டோம். தமிழகத்தில் பனை பெருமதங்களிலும் இடம் பிடித்திருக்கிறது மற்றும் சிறு தெய்வ வழிபாட்டிலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. குமரி மாவட்டதில் மட்டும் 4 இடங்களில் பனை மரங்களை வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன். இவைகளை எல்லாம் தொகுத்துப்பார்க்கும்போது பனை மரங்கள் தமிழர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த தாவரம். அதன் மகிமையை தொல் மூதாதை கண்டு நமக்கு கையளித்திருக்கிறார். அதை வணக்கத்துடன் ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (62)

ஓகஸ்ட் 29, 2016

பனை நண்பர்கள்

பனை தேடுதல், பனை சார்ந்த தெடுதல் உடையவர்களின் பால் என்னை அழைத்துச்சென்றது. அப்படித்தான் பேராசிரியர். அறிவர். ஷோபனராஜ் அவர்களை நான் கண்டடைந்தேன். அவர்கள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர். அவர் எனக்கு கொடுத்த ஊக்கம் அளவில்லாதது. மணிக்காணக்காக பனை மரங்களைக் குறித்து பேசுவோம். எனக்கு  பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடையளித்தவர் அவரே. பனை சார்ந்து நான் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் ஊக்கமளிப்பவரும் அவரே. அவரின் ஆசி நான் எனது பனை பயணத்தில் பெற்றவைகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அவரே எனக்கு சர்வதேச பனை சங்கம் குறித்த அறிவை புகட்டியவர். பனை சார்ந்த விருப்பம் கொண்டவர்களின் சங்கம் அது என கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், பனைகளை விற்கும் மிகப்பெரும் வணிக நிறுவனங்கள், ஆய்வங்கள், தனிநபர்கள் போன்றோர் அதில் பங்கு பெறலாம்.

பேராசிரியர் சோபனராஜ் அவர்களுடன் நான்

பேராசிரியர் சோபனராஜ் அவர்களுடன் நான்

பேராசிரியர் தன்னுடைய பல பனை சார்ந்த புகைப்படங்களை எனக்கு கொடுத்து உதவியிருக்கிறார். அனைத்தும் மிக முக்கியமானவைகள். ஒரு கல்வியாளருக்கு மிக அதிக அளவில் உதவும் நோக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அனைத்தும் பனைமரத்திற்காக தன்னை அற்பணித்துக்கொண்ட தன்னிகரற்ற தலைவரான டாக்டர். டி ஏ டேவிஸ் அவர்கள் கைபட எடுத்த புகைப்படங்கள். அந்த புகைப்பட தொகுப்பை வைத்தே ஒருவர் ஒரு ஆய்வு கட்டுரையை எழுதினார் என்றால், தமிழகத்தின் பல்வேறு ஆய்வுகளுக்கு சவால் விடும் அளவிற்கு அவை தரம் உயர்ந்ததாக இருக்கும்.

டாக்டர் டி அந்தோணி டேவிஸ் அவர்கள் அடிப்படையில் கணிதம் கற்றவர்கள் என்றும், சமச்சீர் விகிதங்களில் நிபுணர் என்றும் கெள்விப்பட்டிருக்கிறேன். பனை மரத்தின் இலை அடுக்குகளின் பால் ஈடுபாடு ஏற்பட்டு பனைக்காதலராக சுற்றிதிரிந்திருக்கிறார். பனை மரங்களின் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியமாகவே அவர் இருந்திருக்கிறார். சர்வதேச பனை சங்கத்தின் மிக முக்கிய பொறுப்பு வகித்த ஒரே இந்தியர் என்றும் அவரைச் சொல்லலாம். பல்வேறு ஆய்வுநிறுவனங்கள் வெளியிட்ட   தரம் வாய்ந்த ஆய்வு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த ஒரு தன்னிகரற்ற பனை ஆய்வாளர். தென்னை மர ஓலைகள் வலதுபுறமாக விரிந்திருந்தால் அது மிக அதிக பயன்களை கொடுக்கும் என்னும் அளவிற்கு துல்லியமாக  ஆய்வு செய்தவர்.  ரெயின்டீர் என்று சொல்லப்படுகின்ற பனிப்பிரதேசங்களில் வாழுகின்ற மான்களின் கொம்புகள் வடதுருவம் நோக்கி செல்கையில் ஒருபுறமும் தென் திசை நோக்கி செல்கையில் மற்றொருபுறமும் வளருவதையும் ஆய்வில் நிரூபித்தவர். மிக வித்தியாசமான பல குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை செய்தவர்.

பனை மரங்களை ஆலமரம் எப்படி நெருக்கி அதைப் பற்றி வளருகிறது என்கிற அவரது ஆய்வை நான் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.  பொதுவாக ஆல மரங்களின் விதைகள் தரையில் விழுந்து முளைக்காது என்று சொல்லுவார்கள். பறவைகளின் எச்சம் போன்றவை வழியாக பனைமரங்களில் அவை விழும்பொது அவைகள் முளைத்தெழுகின்றன. பனையை ஆலமரம் நெரித்தாலும் பனை அதனைக்குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. இந்த இரு மரங்களும் சேரும் இடத்தை மக்கள் வழிபடுவதை நாம் அறிந்துகொள்ளலாம். தொல் பழங்கால இந்திய மக்களில் காணப்பட்ட ஒரு இணைவின் அம்சமாக நான் இதைக் கருதுகிறேன்.

பேரசிரியர் ஷோபனராஜ் அவர்கள் எனக்கு பல பனைகளை அறிமுகம் செய்தார்கள் அவைகளுள் பென்டிங்கியா கொண்டப்பனா என்று தவரவியல் பெயரில் அழைகப்படும் வரை கமுகு மிகவும் முக்கியமானது. வரை என்றல் மலை என்று பொருள். மலை கமுகு என குமரி மாவட்டத்தில் இதை அழைக்காமல் கொண்டப்பனை என்றே அப்பகுதி காணி மக்கள் அழைப்பார்கள். உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே அது காணப்படுகிறது என்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் 1000 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அவைகள் வளருகின்றன என்று சொன்னார். என் வாழ்நாளில் நான் பார்க்கவேண்டும் என நினைத்தும் கைகூடாத ஒரு காரியம் இது. குறிப்பாக குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் இவைகள் கூட்டமாக நிற்கும் புகைப்படத்தை அவர் எனக்கு காண்பித்தார். அவரோடு பேசுவது ஒரு இனிமையான அனுபவம். சிறு சிறு தகவல்களாக சொல்லி புரியவைப்பார். அது மிகவும் முக்கிய தகவல்களாகவும் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.

வரை கமுகு (கொண்டப்பனை)

வரை கமுகு (கொண்டப்பனை)

பென்டிங்கியா எனும் பெயர் லார்ட் பென்டிங் என்பவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பிரபுவை கருதி இடப்பட்டது. ஆகையால் பத்தொன்பதாம் நூறாண்டின்  பிற்பகுதியிலேயே இவைகளுக்கு தாவரவியல் பெயரிட்டிருக்கிறார்கள் என அறியலாம். கொண்டப்பனா என பெயர் வருவதற்கு காரணம் தாவரங்களின் தலைப்பகுதியை கொண்டை என்று அழைப்பது குமரி வழக்கம். பனா என்பது பனையினை மலையாளத்தில் சொல்லுவது. எல்லா பனைகளுக்கும் கொண்டை இருக்கும்போது இந்த  பனைக்கு மட்டும் ஏன் கொண்டப்பனா என பெயர் வந்தது? அதற்கு மேற்கு    தொடர்ச்சி மலையில் வாழும் தமிழ் மலையாளம் கலந்து பேசும் காணி மக்களின் உதவி தேவை. அவர்களே இதற்கு கொண்டப்பனா என பெயரிட்டிருக்கிறார்கள். எப்படியென்றால், கொண்டப்பனையின் தலைப்பகுதியிலுள்ள குருத்து சாப்பிட உகந்தது. வேறு உணவுகள் கிடைக்காதபோது மலைவாழ் மக்கள் மிக விரும்பி உண்ணும் உணவு இது. ஆகவே கொண்டப்பனா என பெயர் பெற்றது. ஆங்கிலேயர்கள் தொகுத்ததால் தவரவியல் பெயர் ஆங்கிலேய பிரபுவை இணைத்துக்கொண்டது. காலனி ஆதிக்கத்தின் எச்சம் காட்டில் வாழும் வரை கமுகையும் விடவில்லை.

அபூர்வமான இந்த பனை விதையை அனேகர் கடத்திச் செல்ல முயன்றதுண்டு என்பது மேலதிக  தகவல். ஆகவே குமரி வனப்பகுதி அனைத்துமே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு காக்கப்படுகின்றன. பென்டிங்கியா குடும்பத்தைச் சார்ந்த வேறொரு தாவரம் அந்தமானில் உள்ளது. அதனை பென்டிங்கியா நிக்கோபாரிகா என அழைப்பார்கள்.

பிரம்பு (சூரல்)

பிரம்பு (சூரல்)

‘பிரம்பைக் கையடாதவன் தன் மகனைப் பகைக்கிறன்” என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் மிக அதிகமாக புழங்கும்ஒரு  திருமறை வசனம். சிறு பிள்ளைகளை அடித்து நொறுக்கி திருத்த வைப்பதற்காக இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவார்கள். பேராசிரியர் எனக்கு கொடுத்த ஒரு சிறு தகவல் என்னை மாற்று கோணத்தில் சிந்திக்க வைத்தது. ஆம் சூரல் என குமரியில் வழங்கப்படுகின்ற, பிரம்பு ஒரு பனை வகைத் தாவரம். நான் அயர்ந்தே போனேன். பனை கொடி போல் சுழன்று ஏறும் என எனக்கு அப்போது தான் தெரியும். குமரி காட்டில் சுமார் 12 வகை பிரம்புகள் உண்டு. அவைகளின் மேல் தோல் மூள்ளால் நிறைந்திருக்கும் மிக கவனமாக மட்டுமே அதை அணுகவேண்டும். ஒரு காலத்தில் மலை வாழ்  மக்களுக்கு மிக அதிக வருமானத்தை தந்த இப்பனை வகை இப்போது பாதுகக்கப்பட்ட இனமாக அரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், பிரம்பை வணிகமாக மாற்றும்பொழுது காட்டின் அமைப்பு முற்றிலும் மாறிவிடுவதாலும் இதனை நம்பி வாழுகின்ற யானை போன்ற மிருகங்களின் உணவானபடியாலும் தடை விதித்திருக்கிறார்கள்.

ஆளத்தெங்கு

ஆளத்தெங்கு

செல்வகுமார் காணி என்னை ஒரு முரை மலைக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது நாங்கள் அங்கே ஒரு மிக நீளமான ஓலைகள் விடுகின்ற பனை மரத்தை பார்த்தோம். நான் அவரிடம் இது என்ன மரம் எனக் கேட்டேன். அதற்கு அவர் ஆளத்தெங்கு எனக் குறிப்பிட்டார். தாவரவியல் பெயர் அரிங்கா விக்டி. இங்கும் விக்டி என்பது அங்கிலெயர் பெயராக இருக்கலாம் என நாம் யூகிப்பதற்கு இடமுண்டு. ஆளத்தெங்கின் பயன் என்ன என்று கேட்டேன். அவர் பதி கூறுகையில், மிக அதிக சிரமம் எடுத்தே இந்த மரத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அவ்விதம் சுத்தம் செய்தால் கண்டிப்பாக 10 லிட்டருக்கும் அதிகமான கள் இதிலிருந்து கிடைக்கும் என்றார். உண்மையிலேயே அது நெருஙமுடியாதது போலதான் இருந்தது. மீண்டும்  இந்த மரம் குமரி மாவட்ட மெற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் வகையாகும்.

நிலப்பனங்கிழங்கு

நிலப்பனங்கிழங்கு

பனை என பெயர் கொண்ட அனைத்தும் பனையாகுமா? தெரியாது ஆனால் பனை என ஒரு தாவரத்திற்கு பெயர் இட்ட பிறகு அதனைக்குறித்து பதிவிடாமல் இருப்பது சரியல்லவென்றே எண்ணுகிறேன். குமரி மாவட்டத்தில் வைத்தியர்கள் பயன்படுத்க்டும் ஒரு மருந்திற்குப் பெயர் நிலப்பனக்கிழங்கு. சிறிய செடியாக முளைக்கும் தென்னம் பிள்ளையின் இலைகளைப்போல பிரியமால் இருக்கும் இலை கொண்டது. விரல் நீளத்திற்கும் குறைவான அளவில் ஒற்றைக் கிழங்கு காணப்படும். சிரிய மஞ்சள் நிர  பூ பூத்திருக்கும். புல்வெளிகளில் மிக சதாரணமாக காணக்கிடைக்கும்.

நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு அறிமுகமான தோழி பேரசிரியர் விட்னி ஹோவர்த் என்னை பனை சார்ந்து சிந்திக்க பழக்கியவர்கள். எனது தேடுதல் மற்றும் சிந்தனைக்கு எப்படி வடிவம் கொடுக்கலாம் என இரவுபகலாக என்னோடு அலைந்தவர்கள். மிக முக்கிய பணியாக ஒரு வலைத்தளத்தை பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியிட முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றவர்கள். பல்வேறு நூல்கள், முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். அவர்களின் தொடர் முனைப்பு இல்லாதிருந்திருந்தால் ஒருவேளை நான் இப்பயணத்தை இத்துணை சிறப்பாக முன்னெடுத்திருக்க முடியாது. பனை ஓலையில் நான் செய்யும் கைவினைப் பொருட்களை செய்ய ஏற்ற கத்திகளை எனக்கு வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து கொடுத்தவர்கள். எனது உறவினர்களைத் தாண்டி இப்பயணத்தில் எனக்காக அதிகம் மெனெக்கெட்டவர்கள் அவர்களே.

நான் பேராசிரியர் விட்னி மற்றும் ரூபா பாட்டியுடன்

நான் பேராசிரியர் விட்னி மற்றும் ரூபா பாட்டியுடன்

பேரசிரியர் விட்னி ஹோவர்த் அவர்களின் தோழியும் விவசாயத்துறை கல்வி பயின்றவர்களுமான ரூபா பாட்டி என்னும் மங்களூர் தோழியும் எங்களோடு இணைந்துகொண்டார். காலம் பல்வேறு வகைகளில் எங்களை இடம் மாற்றி விட்டுவிட்டது.

எனது மாமா மகன் ஜானி எனது அனைத்து பயணங்களிலும் உடன் வருபவர். காடு, மலை கிராமங்கள் என,  பனை மரங்கள் தேடி நாங்கள் அலையாத இடமில்லை. இத்துணை நண்பர்களின் உதவிகள் என்னை ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்கு கடந்து வர மிக உதவியாக இருந்தனர்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (61)

ஓகஸ்ட் 28, 2016

பனை சுவையின் ஆழம்

மார்த்தாண்டத்தில் நாங்கள் இருக்கும்போது பிரம்மாண்டமான அந்த வாளாகத்திற்குள் ஆள் நடமாட்டமே இருக்காது. ஆனால் மிகவும் பாதுகாப்பான இடம். கோவில் பிள்ளை, வாச்மேன், திருச்சபை பெரியவர்கள் என அனேக பாதுகாப்பு அரண்கள் இருந்ததால் வெகு சுதந்திரமாக சுற்றித்திரியலாம். ஆனால் தனியாக மட்டுமே அதைச் செய்ய முடியும். துணைக்கு ஆளிருக்காது. அப்படியான ஒரு தருணத்தில் தான் சிங்கிளேயர் அமைத்த தூணுக்கு எதிர்புரம் ஒரு அழகான பனைமரம் நிற்பதை கவனித்தேன். பார்பதற்கு பனையைப்போலவே காணப்பட்டாலும், பனையைவிட உயரத்திலும் பருமனிலும் மிகவும் சிறியதே. அதன் தண்டு பனைமரத்தைப் போலல்லாது இள சாம்பல் வண்ணத்திலும், புடைப்புகள் இன்றியும் இருக்கும்.

மார்த்தாண்டம் சி எஸ் ஐ ஆலய வளாகத்தின் முன்பு நிற்கும் அழகு பனைமரம்.

மார்த்தாண்டம் சி எஸ் ஐ ஆலய வளாகத்தின் முன்பு நிற்கும் அழகு பனைமரம்.

அந்த மரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மரத்தின் அடியில் மென் மணல் இருக்கும். மிகவும் சுத்தமாக பேணப்பட்ட மரம். சில நேரங்களில் உருண்டை வடிவான கருத்த காய்கள் அதிலிருந்து பழுத்து விழும். நான் அதை எடுத்து வீட்டிற்கு தெரியாமல் சாப்பிட்டிருக்கிறேன். மாவு போன்ற அதன் மென்மையான வெளிப்புறம் சுவையாகவே இருந்தது. உட்புற விதை மேலடுக்கோடு அதிகம் தொடர்பில்லாதது போல பிரிந்துவிட்டது. சிறிய கோலி குண்டுபோல உட்புற கெட்டியான பழுப்பு நிற விதையும் கருமை நிற பழங்களின் வெளிப்புறம் பெரிய திராட்சையை ஒத்தும் இருந்தன.

மிகவும் நளினமாக நின்ற அந்த பனைமரம் பிற்பாடு எனது முக்கிய மையமாகிப்போனது. நான் எனது நேரத்தை அந்த மரத்தின் அடியிலேயே செலவிட்டேன். அந்த மரத்தின் அடியில் நின்று அதன் காய்களை கல்லெறிந்து பறிக்கவும் செய்திருக்கிறேன். எனது குறி தவறாது என்பது என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். கருஞ்சிவப்பு நிறத்தில் காய்கள் இருந்தால் கூட அவைகளை சாப்பிட முடியாது என அறிந்தேன். இப்போது நினைத்துப்பார்க்கையில் அந்த இடத்தில் பனை மரத்தை ஊன்றியவர் சாதாரணமான ஒருவராக இருக்கமுடியாது. ஆலயத்திற்கு எது அழகு சேர்க்கும் என அறிந்தே நட்டிருக்கிறார். மேலும் அதன் விதைகள் குறித்தும் அறிந்திருக்கிறார், குறிப்பாக விஷமில்லாதது என்று.

பல மிஷனெறிகள் மிகவும் ஆர்வத்தோடு மரங்களை நட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மரங்களின் அருமை தெரிந்ததினால் அதற்காக நேரம் செலவளித்து மரங்களை தெரிந்து நட்டிருக்கிறார்கள். மார்த்தண்டம் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்குத் தெரியும் தற்போதைய ஆலயம் செழிப்பில்லாத வறண்ட பகுதியில் இருப்பது. அங்கே வைக்கப்படும் மரங்கள் குறைந்த தண்ணீரில் வளரவேண்டும் அது போல அழகு சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என கூர்ந்து கவனித்தே வைத்திருக்கின்றனர்.

தேவாலயத்தின் முன்னால் நின்ற அந்த அழகிய பனைமரம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என இப்போது நான் உணருகிறேன். அது நான் பனை குடும்பங்களை குறித்த வேறுபாட்டை கவனிக்கவும் பின்னர் அவைகளில் எனக்கான பனையை தெரிந்துகொள்ளவும் ஏற்பட்ட முதற்புள்ளி எனவே கொள்ளுகிறேன்.

நாங்கள் மார்த்தாண்டத்திலிருந்து கோடியூர் சென்றபோதுதான் நான் சளையோலை குறித்து அறிந்துகொண்டேன். சளை மரத்தின் ஓலைகள் தென்னை ஓலையின் மிகச்சிரிய வடிவம் போல் இருக்கும். அது பல்வேறு ஓலைகளாக ஒரே நேரத்தில் சுருண்டு முளைத்தெழும். பின்னர்  4 – 6 அடி நீளம் வரைக்கும் வளரும். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு திருச்சபை விழாக்களுக்கோ அல்லது திருமண வீடுகளுக்கோ அலங்காரத்திற்காக சளை ஓலைகளை காடுகளுக்குள் சென்று எடுத்து வருவார்கள். எவருக்கும் பணம் கொடுக்கவேண்டாம். கொண்டு செல்லுகின்ற வாகனங்களில் 5 முதல் 10 வாலிபர்கள் ஏறிக்கொள்ளுவார்கள். சிறுவர்கள் அவர்களுடன் செல்ல முடியாது. இன்று சளை ஓலையின் பயன் அருகிவிட்டது. சளை ஓலை மரங்களும் மிகவும் அரிதாகிவிட்டது. குமரி மாவட்டத்தில் தற்போது சளை மரம் அழிவின் விளிம்பில் இருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

நல்ல சமாரியன் சிலையின் பின்னால் சளை மரம், பெங்களூரு (உதவி இணையம்)

நல்ல சமாரியன் சிலையின் பின்னால் சளை மரம், பெங்களூரு (உதவி இணையம்)

நான் படித்த பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியிலும் சளை மரம் கிளை பரப்பி வரவேற்கும் வண்ணமாக நிற்கும். அதன் முன்பு அறிவர். ஞானா ராபின்சன் அவர்கள் முதல்வராக இருக்கும்போது, கல்லூரியின் 90ஆம் ஆண்டு நிரைவு விழாவை ஒட்டி, இயேசு கூறிய நல்ல சமாரியன் உவமையை மயிலாடி கல்லில் அழகாக செதுக்கி பதிப்பித்தார்கள்.

மேலும் இரண்டு  முறை நான் சளை மரங்களை கண்டது இன்றும் என் நினைவில் நிற்கின்றது. ஓருமுறை சிறக்கரை அருகே ஒரு இரவில் நான் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது என்னை மயக்கும் ஒரு வாசனை எங்கிருந்தோ வந்தது. வாசனைக்கு மனதை மயக்கும் தன்மை உண்டென்று அன்று தான் கண்டுகொண்டேன். அந்த இடத்தை நான் நெருங்கிய போது அங்கே ஒரு சளை மரத்தைக் கண்டேன். ஆனால் அந்த வாசனை சளை மரத்திலிருந்து வரவில்லை மாறாக அந்த மரத்தில் படர்ந்திருந்த வாண்டா எனும் ஆர்கிட் வகை கொடியில் பூத்துக்குலுங்கிய மலர்களிலிருந்து எழுந்து வந்தது. ஆர்கிட் மீது எனக்கு பெரும்  விருப்பம் ஏற்பட சளை மரம் காரணமாகியது.

பிறிதொருமுறை நானும் எனது மாமா மகன் ஜானியும் ஒருமுறை நல்ல வருக்கை இன பலாபழம் தேடி பேச்சிபாறை அணையை தாண்டியிருக்கிற கொடுதுறை என்ற கிரமத்திற்குச் சென்றோம். அங்கே எங்களுக்கு பலாப்பழம் கிடைக்கவில்லை ஆனால் செல்வகுமார் என்கிற காணி நண்பர் ஒருவர் கிடைத்தார். அவருடைய வீட்டிற்குச் செல்லும் வழியில் ஓரிரு சளை மரங்களைப் பார்த்தபோது, அதில் காய்கள் காய்த்திருந்தன. சற்றேறக்குறைய புன்னைக்காய் போன்றவை.  அவரிடம் நான் இந்த காய்களை பயன்படுத்துவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், ஆம் அதை அப்படியே உண்ணமுடியாது, முதலில் நன்றாக காயபோடவேண்டும் பிற்பாடு 7 நாள் ஓடுகிற தண்ணீரில் ஊறபோடவேண்டும், அதன் பின்பு 7 நாட்கள் தினமும் தண்ணீர் மாற்றி ஊறபோடவேண்டும். பிற்பாடு காயவைத்து இடித்து பொடித்தால், புட்டு தேசை போன்றவைகள் செய்யலாம், மிகவும் சுவையாக இருக்கும் என்றார். எனக்கு இன்னும் சுவைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டிலுள்ளவர்கள் மிக அதிகமாக இவைகளை பயன்படுத்தி நான் கேள்விப்பட்டதில்லை.

உலத்திக் குலை, உலத்தி ஓலை, செந்தெங்கு மற்றும் சளை ஓலை ஆகியன திருமண வரவேற்பில்

உலத்திக் குலை, உலத்தி ஓலை, செந்தெங்கு மற்றும் சளை ஓலை ஆகியன திருமண வரவேற்பில்

சளை ஓலை எடுக்கப்போகும் கலாச்சரத்தில் உலத்திக் குலையை எடுக்கும் வழக்கம் சற்று பிற்பாடு வந்தது என நினைக்கிறேன். திருமண வீடுகளில் வரவேற்கும்படி வாசலில் வாழை மரங்களை நட்டு அதற்குமேல் உலத்திக் குலைகளைக் கட்டி பிற்பாடு செந்தெங்கு அல்லது நுங்கை கட்டி வைப்பது வழக்கம். அனைத்தும் மங்கலகரமான பொருட்கள். இத்துணை பனை சார்ந்த பொருட்கள்  ஒருசேர இணைவது குமரி மாவட்டத்தில் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன். உலத்தி வகை பனை மரங்கள் கேரள எல்லையில் மட்டுமே கிடைக்கும். ஆனல் கேரளாவில் உலத்தி என கூறமாட்டார்கள் உலட்டி என்றே குறிப்பிடுவார்கள். உலத்தி என்பது மலயாளத்தில் கெட்டவார்த்தை.

ஆங்கிலத்தில் உலத்தி பனையை ஃபிஷ் டெயில் பாம் ( Fish tail Palm) என்று குறிப்பிடுவார்கள். அதன் இலைகள் மீனின் வாலைப்போன்று இருப்பதனால் அப்பெயர் வந்திருக்கிறது. ஆகவே அதை கண்டுபிடிப்பது எளிது. இம்மரத்தின் குலைகள் மேலிருந்து கீழ் வரை சுமார் 8 முதல் 10 அடிவரை நீண்டு சடை போல தொங்கிக்கொண்டிருக்கும். நான் பார்த்த இனங்களில் தேங்காயை ஒத்த மிகச்சிறிய காய்கள் அவைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இச்சடைக் குலைகள் உலக்ட்தி பனைமரம் இருபது அடி இருக்கும்போது குலைதள்ளும், நாட்கள் செல்லச் செல்ல இக்குலைகளின் அளவு சிறிதாகி அதன் மரணத்தை உணர்த்தும். உலத்தி கள் மிகவும் போதை அளிப்பது எனவும் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் கள்ளெடுப்பதற்கு குடங்களை காணி மக்கள் கட்டி வைப்பார்களாம்.

திருமணத்திற்கு இவைகள் முக்கியம் என்றால் தாம்பூலத்திற்கு பாக்கு முக்கியம். பாக்கு வெட்டுவதை தான் முதன் முதலில் பார்த்தேன். பெட்டிகடைகளில் சிறிய தேங்காய் போல் இருப்பதை வெட்டி கேட்பவர்களுக்கு கடைகாரர்கள் குடுப்பதை பார்த்திருக்கிரேன் ஆனால் பாக்கு மரம் (Arecanut) எப்படி இருக்கும் என்று தெரியாது. கடையில் மீன் வாங்க வருபவர்கள் அந்த நாட்களில் பாக்கு மட்டையில் செய்த ஒரு தண்ணீர் பிடிக்கும்  வாளியை வாங்கி அதில் மீனையும் காய்கரிகளையும் எடுத்துச்செல்லுவர்கள். மிக நேர்த்தியன ஒரு இயற்கை பொருள். பாளையை கோட்டி தண்ணீர் பிடிக்க ஏதுவாக செய்திருக்கும் அந்த வாளிக்கு ஆயுசு குறைவுதான்.  என்றாலும் மிக எளிமையானது மற்றும் விலை குறைவானது. எனக்கு பாக்கு மட்டையை சீர்படுத்தி அதில் படம் வரையவேண்டும்  என்பது நெடுநாளைய  ஆசை. அதை நான் முயற்சித்தும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ என்னால் அவைகளை தொடர முடியவில்லை.

பாக்கு மரம்

பாக்கு மரம்

குலசேகரம் பகுதியில் நாங்கள் இருக்கும்போது பாக்கு மரங்களை நான் முதன் முதலாக பார்க்கும் வாய்ப்புகிடைத்தது. அது சற்று வித்தியாசமான அனுபவம். 1993 ஆம் ஆண்டு நான் 12 ஆம் வாகுப்பு ஏற்றக்கோடில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒருமுறை கனமழை காரணமாக எங்களுக்கு விடுமுறை விட்டார்கள். நாங்கள் ஏற்றக்கோடிலிருந்து நடந்து திருவாட்டர் வழியாக குலசேகரம் சென்றோம். திருவட்டார் புதிய பாலத்திற்கும் மேலாக தண்ணீர் சென்றுகொண்டிருந்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் உட்பட அனேகர் பாதிக்கப்பட்டனர் என கேள்விப்பட்டு, மறுநாள் எங்கள் வகுப்பு ஆசிரியருடன் ஒரு சில மாணவர்களாக எங்கள் உடன் பயிலும் சஜீவ் நாயர் வீட்டிற்குச் சென்றோம். அவர்களுக்கும் பாதிப்புதான். ஆனால் அவனில் காணும் உற்சாகம் சற்றும் வடிந்திருக்கவில்லை. வீட்டின் பொருட்களை அந்த அடாத மழையிலும் எடுத்து ஒதுக்கி காப்பாற்றியவன், மழையில் நனைந்து விரைத்துக்கொண்டிருந்தான். ஆனாலும் உற்சாகத்தோடு தண்ணீரிலிருந்து தான் எடுத்த பாக்கு மரத்தினை சுட்டிக்காட்டி சொன்னான் ” ஈ கமுகினே ஞான் எடுத்து”. அப்பொழுது தான் நான் அந்த கமுகு மரத்தைப் பார்த்தேன். சாம்பல் நிறத்தில் காணப்பட்ட அந்த மரம் மூங்கிலை விட சற்றே பருமனுடையதாயிருந்தது. கிட்டத்தட்ட முங்கிலைப்போலவே பயன்படுத்தப்படுவதும் கூட.

பாக்கு ஊறப்போடும் பானைகள் ஏறக்குறைய முதுமக்கள் தாழியை ஒத்திருக்கின்றதை பார்த்திருக்கின்றேன். பாக்கு வெட்டியில் காணப்படும் கலை நுணுக்கங்கள் அவற்றை சேகரிப்பவர்கள். பித்தளை வெற்றிலை செல்லம் இவைகளையும் விதம் விதமாக பார்த்திருக்கிறேன். வெற்றிலை துப்புவதற்கு என்றே பித்தளையில் செய்யப்பட்ட கோளம்பி எனது தனிப்பட்ட சேகரிப்பில் இருக்கிறது. பாக்கு மரத்தை தொடர்ந்து வந்ததன் விளைவுகள் இவை.

நவி மும்பை பாம் பீச் ரோடு

நவி மும்பை பாம் பீச் ரோடு

எனது பெரியம்மா மகன் ஹெரால்ட் எனக்கு ஒரு பனை வகையை அறிமுகம் செய்து வைத்தார். ஆங்கிலத்தில்  பாட்டில் பாம் என்று கூறப்படும் அவைகளையே இன்று பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கிறார்கள். மும்பை பாம் பீச் ரோட் முழுவதும் பாட்டில் பாம் கொண்டே அலங்கரித்திருக்கிறர்கள். ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் படிக்கும்போது இறுதி ஆண்டு ஆராதனை நடத்தவேண்டும் என நான் எங்கள் நூலகத்தின் அருகிலுள்ள பாட்டில் பாம்மையே  தெரிவு செய்திருந்தேன். பொதுவாக சிற்றாலயத்தின் வெளியில் வைத்து அதை நடத்த அனுமதிப்பார்கள். நான் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோதோ அவர் மறுத்துவிட்டார். பிற்பாடு நான் அழுது கதறி ஓலமிட்டு அந்த இடத்தை முதல்வரிடமிருந்து வாங்கினேன். பேராசிரியை இவாஞ்சலின் ஆண்டர்சன் ராஜ்குமார் அவர்கள் எனது கதறுதலை பொறுக்க மாட்டாமல் எனக்கு அதற்கான அனுமதியை வாங்கிக்கொடுத்தார்கள். பிற்பாடு பேராசிரியர் ஜோசப் முத்துராஜ் அவர்களை நான் சந்தித்த பொழுது அவர் “உழைப்பவரோடு தொடர்புடைய பனையை கூற தலைப்படும் நீ ஏன் அந்த அழகு பனையின் கீழ் அதை மலினப்படுத்த நினைக்கிறாய்” எனக் கேட்டார்கள். அந்த வார்த்தையால் நான் மீண்டு விட்டேன். பிற்பாடு நான் துணிந்து எனது இறுதி வருட மாதிரி ஆராதனையை சிற்றாலயத்தில் வைத்தே நடத்தினேன். இப்படியாக ஓரு பனைத்தொழிலாளி நடத்திய ஆராதனை சீகன்பால்கு சிற்றலாயத்தில் ஒரு புது வரலாற்றை நிகழ்த்தியது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (60)

ஓகஸ்ட் 27, 2016

 

பனைசுவையின் வேர்

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளேயே அமிர்த்தராஜ் என்னை வேகமாக முந்தி கையால் செய்கை காட்டினார். ஒரு மிகப்பெரிய பனை மரம் இருக்கிறது அதைப் பாருங்கள் என்றார். நான் திரும்பிப் பார்த்தபோது மிக பிரம்மான்டமான ஒரு பனைமரம் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தது. அதன் தடிமனும் ஓலைகளும் மிகப்பெரியவை. பனை மரத்தை அத்தோடு ஒப்பிடுகையில் பனைமரம் அதன் குழந்தையாகவே எண்ணுமளவிற்கு மிகவும் சிறியது.

குடப்பனை, பூம்புகார் அருகில்

குடப்பனை, பூம்புகார் அருகில்

நான் முதலில் பனை மரம் என்றுதான் எண்ணினேன், பிற்பாடு புரிந்தது அது பனை அல்ல ஆனால் பனை வகையைச் சார்ந்த குடப்பனை (குடை பனை) என்று. கன்னையாகுமரி மாவட்டத்தில் குடப்பனைமூடு என்று ஒரு ஊர் உண்டு. குடப்பனையை எடுத்து தலைக்குடை செய்வார்கள். தலைக்குடை எனப்படுவது குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட பெரிய குடை. ஆனால் அதற்கு பிடிமான  கம்பு இருக்காது. தலையில் வைப்பதற்கு ஏற்ற ஒரு வளையம் சேர்த்து செய்யப்பட்டிருக்கும். தலையை அதற்குள் வைத்துவிட்டால் அதன் பின்பு கரங்களின் உதவி தேவைபடாது. மேலும் ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குடப்பனையில் எழுதப்பட்டவைகளே. அவைகளின் வாழ்நாள் பனையோலைகளைக் காட்டிலும் இன்னும் அதிகமானது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட சுவடி

குடப்பனை ஓலையில் செய்யப்பட்ட சுவடி

அப்பா குலசேகரம் பகுதியிலிருந்து கேரள எல்லையிலுள்ள மஞ்சாலுமூட்டை அடுத்த சிறக்கரை எனும் ஊரில் உள்ள சி ஏஸ் ஐ ஆலயத்திற்கு  மாற்றலானார்கள்.  எனக்கு பனைமரங்கள் குறித்த ஆர்வம் துவங்கிய நேரம் அது. பனைகளில் பல்வேறு வகைமைகள் இருப்பதை அறிந்திருந்தேன். ஆனால் குடப்பனை குறித்து எதுவும் அப்போது எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் திருச்சபையின் செயலரோடு என்னை அப்பா அவரது வீட்டிற்கு அனுப்பினார்கள். நாங்கள் அவர் வீட்டை நெருங்கும்போது நான் முதன்முறையாக குடப்பனையைக் கண்டேன். பிரம்மாண்டமான  அந்த பனை பூத்திருந்தது. அப்படி பனை பூக்காது என எனக்குக் தெரியும். அப்போது அந்த பெரியவர் சொன்னார். இந்த மரம் பூத்து விட்டால் அதன் மரணம் நெருங்கிவிட்டது என அர்த்தம். உலகத்தின் மிகப்பெரிய உயிருள்ள பொக்கே இதுவென்றே குறிப்பிடுகிறார்கள். ஒரு கொத்தில் ஒருலெட்சம் பூக்களுக்கும் அதிகமாக பூக்கும் என்கிறார்கள்.   அவர் மேலும் சொன்ன ஒரு தகவல் தான் வயல் வேலை செய்கிறவர்கள் இதில் தொப்பி செய்து அணிந்துகொண்டு வேலை செய்வார்கள்.

குடப்பனை பூத்திருக்கும்போது

குடப்பனை பூத்திருக்கும்போது

எனக்கும் அப்படி ஒரு தலைக்குடை தேவைப்பட்டது. குடையை பிடித்துக்கொண்டு போவதைவிட வசதியானது அல்லவா?  ஆகவே அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தேன். அந்த வேளையில் ஒருவரும் அவைகளை பயன்படுத்தவில்லை. வழக்கொழிந்துவிட்டது. காணிக்குடியிருப்பில் தலைக்குடை செய்பவர்கள் இருக்கலாம் என்று சொன்னர்கள். ஒருமுறை எனது நண்பனை அழைத்துக்கொண்டு பஸ்ஸில் ஆறுகாணி சென்று இருவருமாக பஸ்ஸில் குடப்பனை ஓலையை எடுத்துக்கொண்டு வந்தோம். ஆனால் எங்களால் தலைக்குடை செய்யும் காணியை இறுதிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பனைமரம் சார்ந்த எனது விருப்பம் சிறுவயது தொடங்கியே இருந்திருக்கிறது. ஆனால் அது பல்வேறு பனை வகை தாவரங்களைக் நான் கண்டு அவைகளில் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வாயிலாக வந்து சேர்ந்த இடமாகவே கருதுகிறேன். மார்த்தாண்டத்தில் நாங்கள் இருக்கும்போது அந்த சிறு வயதிலேயே மூன்றுவிதமான பனை மரங்களை நான் கண்டிருக்கிறேன். அவைகளோடு எனக்கு நேரடி உறவு உண்டு. அக்கானி தருகின்ற பனைமரம். தேங்காய் தருகின்ற தென்னைமரம் இரண்டும் வீட்டின் முன்னாலேயே இருந்தன. பனைமரச்சலையில்  பனை குடும்பத்தை சார்ந்த வேறு பல இனங்களை நான் நினைவில் கொள்ளுவது சரியானது என்றே நினைக்கிறேன்.

தென்னை மரங்களின் அருகில், மாலத்தீவு

தென்னை மரங்களின் அருகில், மாலத்தீவு

தென்னை மரம் மிகவும் விசேஷித்தது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கிறவர் வருவார். எங்கள் வீட்டிலுள்ள 4 வயது முதல் 14 வயது வரையுள்ள 7 பேரையும் அதிகாலமே அப்பா அழைத்துக்கொண்டு செல்லுவார். காலை எட்டுமணிக்குள் அனைத்து தேங்காய்களையும் ஓலைகளையும் சர்ச் காம்பவுண்டிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவோம். அதன் பின்னர் தேங்கா வெட்டுகிற தாத்தாவிடம் ஓடிப்போய் “எளநீ தாங்க” என கேட்போம். வியர்த்து வழியும் உடம்புடன் இருக்கும் அவர் எங்களிடம் பேரிய தேங்காயாக பார்த்து எடுத்து வரச்சொல்லுவார். அது அவர் எங்களுக்காக வெட்டி போட்டிருக்கின்ற ‘கருக்கு”. வெகமாக தனது பளபளப்பான அறிவாளால் தேங்காய்களை சீவி தருவார். உடலில் வழியும் படி அந்த புது எளநீ குடிக்கையில் நாக்கில்  சுர்ரென்று ஒரு ஒரு பரபரப்பு ஓடும். அந்த அனுபவம்  பிற்பாடு எனது திருமணத்திற்குப் பின்பே வாய்த்தது. எனது மாமனார், நான் எப்போது சென்றாலும் இளநீர் பறித்துவிடுவார். எனது வயிற்றில் இளநீர் தவிர காற்று கூட இருக்க இடமில்லாதபடி இரண்டு மூன்று இளநீர்களை ஒன்றாக எனக்கு கொடுத்தபின்பே அவ்விடம் விட்டு நகருவார்.

அந்த நாட்களில் காளைச்சந்தை எனும் இடத்தில் மிகப்பிரம்மாண்டமான கன்வென்ஷன் நடக்கும். பிரபல கிறிஸ்தவ பேச்சாளர்கள் வந்து இறைச் செய்தி வழங்குவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் அமருவதற்காக தென்னை ஓலைகளை முடைந்து வழங்குவதை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக மிகச் சிறு வயதில் ஈர்க்கில் கொண்டும், வளர வளர தென்னை மட்டை கொண்டும் அடிவாங்கி வளர்ந்திருக்கிறேன். ஆறாம் வகுப்புக்குமேல் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது எங்களுக்கு தென்னை மட்டையே உதவியது. தென்னையிலிருந்து இள நிறத்தில் காணப்படும் கருப்பட்டி கிடைக்கும் எனும் தகவலும், கள்ளிறக்குவார்கள் எனும் தகவலும் வாழ்வின் மிக பிற்பகுதியில் நான் கேள்விப்பட்ட ஒன்று.

ஒரு முறை நாங்கள் வீட்டிலுள்ள பிள்ளைகளாக விரிகோடு எனும் பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது மழை பெய்ததால், ஒரு கடையில் ஒதுங்கி நின்றோம். அங்கே ஒரு தாத்தா தொண்டு சவரியை பிரித்து கயறு செய்துகொண்டிருந்தார். சிகரெட் பீடி பிடிக்க வருபவர்களுக்கு கயிற்றில் உள்ள கங்கே போதும். ஒட்டி உறிஞ்சி தீ பற்ற வைத்துவிடுவார்கள். பிற்பாடு சுனாமி ஏற்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்ட கயறு தொழில் செய்பவர்களுக்காக பனைத்தொழிலாளர் இயக்கம் ஈடுபட்ட மறுவாழ்வு பணியை நான் முன்னின்று செய்ய வாய்ப்பு கிடைத்தது. தென்னை மரத்தை சார்ந்திருக்கும் மக்கள் திரள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அவர்களின் நோய்கள் மற்றும் பிரச்சனைகள் என ஒவ்வொன்றும் மிக பூதாகரமாக என் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. பிற்பாடு கொச்சியில் இருக்கும் கயறு தொழிற்சாலைகளை கண்டபோது அயர்ந்துபோய் விட்டேன். ஒரு நகரமே கயறை மூலதனமாக வைத்துப் பிழைக்கிறதோ எனும் எண்ணம் வந்தது.

மாலத்தீவில் தென்னை ஓலைகளை எடுத்து கடலில் போட்டுவிடுவார்கள். நம்மைப்போல் அலை அடிக்கத கடல். பவழப்பாறைகளுக்குள் இருக்கும் ஒருவித சோழி  அதில் ஏறிவிடும். அதையே முற்காலத்தில் அவர்கள் நாணயமக பயன்படுத்தியிருக்கிறார்கள். வடகிழக்கில் உள்ள எனது நண்பர்கள் அந்த சோழிக்கு ஈடாக பெரும்பணத்தை செலவிட தயாராக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்தோனேஷியா சென்றபோதும் கம்போடியா சென்றபோதும் தென்னை மரங்களை அதிகமாக காண முடிந்தது. எனது வாழ்வில் நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய தேங்காய் கம்போடியாவில் தான். யாழ்பாண தேங்காய் அதற்கு ஈடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் தான் சிறந்தது என்று கூறுவார்கள்.

குமரி மாவட்டத்தில் செந்நிற தேங்காய் காய்க்கும் ஒரு தென்னை மரம் உண்டு. அதை பொதுவாக செந்தெங்கு எனக் கூறினாலும், கவுளி யாத்திரை என கிராமத்தினர் அழைப்பதும் உண்டு. அதைக் குறித்து ஒருவர் எனக்கு விளக்கும்போது அது உண்மையில் “கவுரி காத்ரம்” என்றே வழங்கப்பட்டு வந்து, மருவி கவுளி யாத்திரையாக மாறிவிட்டது என்று சொன்னார். கவுரியின் மார்பை ஒத்த சிவப்பு நிறமுடையது என்று அதற்கு பொருள். காணாதவைகளை கற்பனை செய்யும் சுதந்திரம் தராளமாகவே இருந்திருக்கிறது. திருமண வீடுகளில் செந்தெங்கு குலைகள் அழகுக்காக வாசலில் கட்டிவிடப்பட்டிருக்கும். மருத்துவ குணமுடையதாக குறிப்பிடுவார்கள்.

திருமண நேரங்களில் காய்கறி வெட்டும்நேரத்தில் ஊரிலுள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள். வரும்போது அனைவரும் கத்தி மற்றும் தேங்காய் திருவலையையும் கொண்டுவருவார்கள். தேங்காய் திருவி கொடுப்பதற்கு திறமையான ஆண்கள் முன்வருவார்கள். மர பெஞ்சு அல்லது நாற்காலியில் இருந்துகொண்டு திருவினால் கீழே கிடக்கும் பனை ஓலையில் அல்லது வாழை இலையில் பனி மூடிய மலைபோல் குவிந்துவிடும். திருமணத்திற்கு காய்கறி வெட்டி கொடுத்து உதவி செய்ய வரும் வாலிபர்களுக்கு இரவு நேர காளைப்பாற்றும் பானம் இளநீர்தான். “கருக்கு களவாண” போவது அன்றைய வாலிபர் சடங்கு. மறுநாளில் உதவி செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவாக “அறுப்பு” கிடைக்கும். அதனால் பிணக்குகள் உருவகும். அது மனத்தாங்கலில் முடியும். என்றாலும் இதுவே வழக்கம்.

திருச்சபைகளில் வரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதி தேங்காய் காணிக்கை வரவே. குருத்தோலை ஞாயிறு அன்று நாங்கள் பிடித்துச் செல்லுவதும் தென்னையின் குருத்துக்களே. இந்து கோவில் திருவிழக்களின்போதும் தென்னை ஓலைகளிலேயே தோரணம் செய்வர்கள். மிக அழகாக இருக்கும். ஓலையில் பந்து செய்து விளையாடிய நாட்களை மறக்க முடியாது. எவ்வளவு தூரம் தென்னை மரத்தோடு பயணித்திருக்கிறோம் என எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.

தென்னை ஓலை அலங்காரம்

தென்னை ஓலை அலங்காரம்

தென்னை இன்று கேரளாவின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் தாவரம். அவர்களுடைய சுற்றுலாத்துறையை ஆசீர்வதித்த பெருமை தென்னை மரங்களையேச் சாரும். தென்னையின் மேல் மனதை பறிகொடுத்தவர்கள் அதற்காக உழைத்து இன்று அதை ஒரு முக்கிய துறையாக முன்னெடுத்திருக்கிறார்கள். விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் தென்னைமரங்கள் பேணப்பட்டு இன்றுவரையில் தென்னை சார்ந்த எந்த புள்ளிவிவரங்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் உயிர்ப்புடன் இருப்பதை பார்க்கையில் பொறாமையாக இருக்கிறது.

ஆம் பனை வாரியம் விவசாயத்துறையின் கீழ் வரவில்லை. காதி கதர் கிராமத் தொழில்களின் கீழ் வருகிறது. பனைத்தொழில் சிறப்பு பெற வேண்டி இவ்விதம் செய்தார்களா அல்லது திட்டமிட்ட சதியா என தெரியவில்லை. எதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் தேசிய அளவில் பனை மரம் சார்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளே பனை மரத்தினை மாநில அளவில் காப்பாற்ற இயலும். அதற்கு சர்வதேச அளவில் பனை மரத்திற்கான குரல்கள் ஒலிக்கவேண்டும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (59)

ஓகஸ்ட் 26, 2016

பனைமரச்சாலை (59)

கற்பின் ஊற்று

மறுநாள் காலை தெளிவுடன்  எழுந்தோம். எங்கு செல்லவேண்டும் எப்படி செல்லவேண்டும் என்பதை இரவிலேயே தீர்மானித்துவிட்டோம். மிக அருகில்தானே தரங்கம்பாடி இருந்தது, அதை முடித்துவிட்டு, பூம்புகார், திருவலம்புரம் சென்றுவிட்டு திருப்பனந்தாள் செல்லலாம் என முடிவு செய்தோம். கண்டிப்பாக பட்டுக்கோட்டை செல்ல வழியில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டோம். காலை 8 மணிக்குமுன் புறப்பட்டு எதிரிலுள்ள கடையிலேயே காலை உணவை முடித்துக்கொண்டு தரங்கம்பாடி நோக்கிச் சென்றோம்.

நான் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயிலும்போது தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறேன். சுமார் 15 ஆண்டுகள். தரங்கம்பாடியின் நுழைவுவாயில் சிதிலமடைந்திருந்தாலும் அது அன்று என்னை வசீகரிக்கும்  பிரம்மண்ட கோட்டை வாயிலாக இருந்தது. ஆனால் இப்போதோ நாங்கள் நுழையும் தருணத்தில் அது சீர்செய்யப்பட்டு இருந்தாலும் அதன் பழைமையின் கம்பீரம் இழந்ததாகவே எனக்குத் தோன்றியது. உள்ளே, நேரடியாக நாங்கள் கோட்டை நோக்கிச் சென்றோம். அந்த கோட்டைக்கு மறுபுறம் ஒரு பனை மரம் நின்றதை பார்த்தவுடன் நான் அங்கே செல்லலாம் எனக் கூறினேன். அந்த பனை மரத்தை கோட்டையோடு இணைத்து புகைப்படம் எடுக்க முடியுமா என்று கேட்டேன் அமிர்தராஜ் முடியாது என்றார். அவரது புகைபட இலக்கணத்துக்குள் அந்த கோணம் வராது எனக் குறிப்பிட்டார். அப்போது நாங்கள் கோட்டைக்குப் பின்புறம் இருந்தோம்.

அங்கு நின்ற ஒற்றைப்பனை எனக்கு மாகாபலிபுரத்தையே நினைவுறுத்தியது. இங்கும் ஒரு துறைமுகம் மிக சமீபத்தில் இயங்கியிருக்கிறது. பனை மரங்கள் இங்கும் திரளாய் இருந்திருகின்றன என்பதன் எச்சமாக இந்த ஒற்றைப்பனைமரம் இருக்கிறது என நினைத்துக்கொண்டேன். அந்த பனைமரம் மரணிக்கும் தருவாயிலிருந்ததை அதன் ஓலைகள் சாய்ந்திருந்ததைக் வைத்துப் புரிந்துகொண்டேன். அந்த பழம்பெரும் மரத்திற்கு இறுதி அஞ்சலி செய்ய அதனை நோக்கிப் போனேன். அந்த பனை மரத்தின் கீழே ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டிருந்தது. நாட்டார் வழிபாட்டு தலம். அங்கே  மரணிக்கும் பனைமரத்தின் அடியில் வேறொரு பனைமரம் வளர்ந்து வருவதைக் கண்டபோது ஏற்பட்ட பரவசம் சொல்லில் வடிக்க முடியாதது.

பனை ஓலையில் பதிக்கப்பட்ட டச்சு முத்திரை, தரங்கம்பாடி அருங்காட்சியகம்

பனை ஓலையில் பதிக்கப்பட்ட டச்சு முத்திரை, தரங்கம்பாடி அருங்காட்சியகம்

நாங்கள் அங்கிருந்து கோட்டை வாயிலுக்குச் சென்று எங்கள் பொருட்களை ஒப்படைத்தோம். பின்பு அங்கு சென்று அங்கிருந்த அருங்காட்சியகத்திர்குள் நுழைந்தோம். அனேகர் அங்கே வந்திருந்தனர். நாங்கள் உள் நுழைந்தவுடன் எங்கள் கண்ணில் பட்டது அங்குள்ள தங்க ஓலை தான். ஒரு ஒப்பந்தத்தைக் குறிக்க ஓலைகளில் எழுதி அனுப்பப்படும் செய்தி மிக முக்கியமான ஆவணமானபடியால் தங்கத்திலேயே  ஓலை போல செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியே அங்கிருந்த வேறு ஓலைகளையும் பார்த்தோம். சுமார் 400 வருடங்களான ஓலைகள் இன்னும் நல்ல நிலையில் இருப்பதை கண்டுகொண்டோம். குறிப்பாக டச்சு முத்திரைக்கொண்ட ஒரு ஓலை மிகவும் நேர்த்தியாக சிதைவுறாமல் இருந்ததைக் கண்டபொழுது, பனைஓலைகளின் நீடித்த தன்மை குறித்த புரிதல் நம்மவர்களுக்கு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

தங்க ஓலை ஒப்பந்தம், தரங்கம்பாடி அருங்காட்சியகம்

தங்க ஓலை ஒப்பந்தம், தரங்கம்பாடி அருங்காட்சியகம்

திரும்பி வரும் வழியில் ஒரு குடும்பத்தினர் தங்களை புகைப்படம் எடுத்துத்தருமாறு வேண்டினர். அமிர்தராஜ் அவர்களுக்கு உதவினார். அங்கிருந்து புறப்பட்டு சீகன் பால்கு அவர்கள் தோற்றுவித்த திருச்சபையைக் காண வந்தோம். என்னைப்பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான இடம். ஆசியாவிலே முதல் அச்சுபொறியை நிற்மாணித்த சீகன்பால்கு அவர்கள் தமிழ் கற்றது ஓலைச்சுவடிகளைக் கொண்டுதான். எண்ணிறந்த சுவடிகள் இங்குள்ள கல்வி பின் புலத்தைத் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை  சீகன்பால்க் புரிந்துகொண்டிருப்பார். அவரை அனுப்பியவர்களுக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட சுவடிகள் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டென்மார்க் தேசத்திற்கு அவர் அனுப்பிய ஓலைச்சுவடிகள் இன்னும் பத்திரமாக காக்கப்படுகின்றன. அதன் பழமை மாறாமல் புத்தம்புதிதாக அவைகள் காட்சியளிப்பது மனநிறைவளிக்கும் ஒன்று.

ஆலயத்தின் உள் நான் பார்த்த ஒரு விஷயம் என் சிந்தையை கவர்ந்தது. காணிக்கை போடுவதற்காக ஆலயத்தின் உள்ளே இரண்டு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டுமே பித்தளையில் செய்யப்பட்ட குடங்கள். சற்று இஸ்லாமிய சாயலில் இருந்தன. அவைகளுக்கு மூடி இட்டு அவைகள் பூட்டப்பட்டிருந்தன. கண்டிப்பாக 200 வருடங்களுக்கு முந்தைய பானையாக தான் இருக்கும். சமீபத்தில் அதுபோன்ற பானைகள் புழக்கத்தில் இல்லை. சிறப்பு என்னவென்றால், காணிக்கை செலுத்துவதில் தற்போது உள்ள முறைகளுக்கும் பழைய முறைகளுக்கும் உள்ள வேறுபாடு அதில் தெரிந்தது. காணிக்கை பெட்டியில் பணத்தை இடுவது மன விருப்பத்தை சார்ந்தது என்றும் காணிக்கை பைகளை நீட்டுவது ஒரு வித கட்டாயத்தை ஏற்படுத்துவதுமாக இருப்பதை காண்கிறேன். ஆம் இன்று ஒரு கட்டயத்துக்குள் நம் அனைவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். வாராந்திர காணிக்கை சேகரிக்கும் பழக்கத்திற்கு நூறாண்டுகளே இருக்கும் என்பது அனேக திருச்சபையினருக்குத் தெரியாது.

புதிய எருசலேம் சபை, தரங்கம்பாடி

புதிய எருசலேம் சபை, தரங்கம்பாடி

சுமார் 300 வருடங்கள் நிறைவடையும் சீகன்பால்கு கட்டிய ஆலயத்தினுள் மீண்டும் சென்றேன். சீகன்பால்கு அவர்கள் ஆலயத்தின் உள்ளேயே புதைக்கப்பட்டிருந்தார்கள். ஆலயம் கட்டிமுடித்த மறுவருடம் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். 12 வருடங்களுக்குள் அவர் ஆற்றிய பணிகள் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன.

அங்கிருந்து பூம்புகாருக்குச் சென்றோம். பூம்புகார் மீண்டும் ஒரு துறைமுகப்பட்டினம். தரங்கம்பாடியும் பூம்புகாரும்  குளச்சல் இனையம் போன்ற இடங்கள். ஒரே கடலின் வேறு கரைகள், பாதைகள், காலங்கள், தேவைகள். தரங்கம்படிக்கு வந்த சுற்றுலா குழுவினருக்கும் பூம்புகாருக்கு வந்த குழுவினருக்கும் இடையில் பெருத்த வித்தியாசம் காணப்பட்டது. ஏழைகளின் சுற்றுலாத்தலமாக பூம்புகார் காணப்பட்டது. ஆனால் மகிழ்ச்சி கரைபுரண்டோடும் ஒரு இடமாக இருந்தது. நான் ஏற்கனவே சிலப்பதிகாரம் அருங்காட்சியகத்துக்குச் சென்றதால், மீண்டும் அங்கே செல்லாமல் கடற்கரையை ஒட்டி வாகனத்தை நிறுத்தினோம். அங்கே பனை மரங்கள் சிறு கூட்டமாக நின்றன.

சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். எங்களைப்பார்த்தவுடன் ஓடோடி வந்து எதற்காக வந்திருக்கிறோம் என ஆச்சரியத்துடன் பார்க்கவும் பேசவும் செய்தனர். நான் என்னிடமிருந்த ஓலைகளை எடுத்து அவர்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பித்தேன். குறிப்பாக என்னிடமிருந்த கைபட்டைகளை சிறுவர்களுக்கு அணிவித்தேன். ஓலைகளை பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் குறைந்து வருவது நேரிடையாக காணமுடிந்தது. ஆனால் சிறுவர்கள் அதை பெற்றவுடன் பெரு மகிழ்ச்சியில் ஆடினார்கள். கிடைக்காதவர்கள் அதைக்குறித்து எந்த கவலையுமின்றி தண்ணிரில் குதித்து விளையாட துவங்கினார்கள்.

சிறுவர்களுடன், பூம்புகார்

சிறுவர்களுடன், பூம்புகார்

சிறுவர்கள் என்னை சூழ வரும்போது ஒரு இனம்புரியாத உணர்வு என்னைக் கடந்துபோவதை நான் உணருகிறேன். இயேசு ஒருமுறை கூறுவார், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிவேன். சிறுவர்கள் அவ்விதமாக என்னிலிருந்து எதையோ எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு வேளை அது நம்பிக்கையாக இருக்கலாம், கனவாக இருக்கலாம், பனை சார்ந்த வேட்கையாகவும் இருக்கலாம். அவர்கள் மனதிற்குள் செல்லும் இக்காட்சி ஆழப்பதிந்து பிறகெப்போதாவது வேகத்துடன் மேலெழும் என்றே நம்புகிறேன்.

ஆச்சரியத்துடன் சிறுவர்கள், பூம்புகார்

ஆச்சரியத்துடன் சிறுவர்கள், பூம்புகார்

பூம்புகர் வந்து கண்ணகி சிலையை பார்த்த பின்பு கற்பை பற்றி பேசாமல் அங்கிருந்து புறப்படுவது தகாது. கற்பு குறித்த ஜெயமோகன் அண்ணனுடைய பதில் என் நினைவுக்கு வந்தது.

“கற்பு என்ற சொல் பழங்கால நூல்களில் ‘பாலியல் ஒழுக்கம்’ என்ற பொருளிலோ ‘பெண்ணுக்கான குலக் கட்டுப்பாடு’ என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

கற்பு என்ற சொல் கல்வி என்பதுடன் சம்பந்தப்பட்டது. பலநூல்களில் கற்பு என்பது கல்வி என்றே சொல்லப்பட்டுள்ளது. ‘எழுதாக் கற்பு’ கொண்டது வேதம் என்று சங்கப்பாடல் சொல்லும்போது அங்கே குறிப்பிடப்படுவது கல்வியையே. ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுளமே’ என சம்பந்தர் பாடுவது சமணர்களின் நூல்கல்வியை வெல்வதுபற்றித்தான்

நூல்வழியும் சமூக மரபுப்படியும் கற்கப்பட்டது’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது.”

கண்ணகியின் சிலம்பை விட அவள் கரங்கள் வழி கடந்து சென்ற நூல்களே அவளுக்கு மிகப்பெரிய காப்பு என நான் நினைக்கிறேன். எளிய ஓலையில் எழுதப்பட்ட அறங்களே அவளை அரசன் முன் நிற்கச் செய்தது. சிலம்பு என்பது வணிக அடையாளத்திலிருந்து நூல்களை பயின்று எஞ்சும் கல்வி அளிக்கும் அறவுணர்வின் அடையாளமாக மாறிநிற்பதையே இளங்கோவடிகள் பதிவுசெய்வதாக நான் எண்ணுகிறேன். நம்முடைய நவீன மனத்திற்கு சிலம்பும் அதில் நிறைக்கப்பட்டிருக்கும் மாணிக்க பரல்களும் ஒரு பொருளதார கிளர்ச்சியைக் கொடுப்பதனால் கண்ணகி இன்றும் சிலம்போடு அலைந்து திரிகிறாள்.  எங்கேனும் கண்ணகி கற்பில் சிறந்தவள் எனும் கருத்தை வலியுறுத்தி அவள் கரங்களில் ஏடுகள் அளிக்கப்பட்டால் தான் நிறைந்து ஊறுகின்ற கற்பு அவள் மார்பிலிருந்து கல்வியாக புறப்பட்டு பெரு நெருப்பை தமிழகத்தில் ஏற்றும்.

ஆண்கள் கரங்களில் ஏடும் பெண்கள் கரங்களில் அணிகலனும் அளித்து (ஒளவையார் தவிர்த்து) புது யுகங்களை சிற்பிகள் படைத்துள்ளனர். இணையத்தில் தேடியபோது கர்னாடகாவின்  பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பெண் சுவடியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் சிலையை காண நேர்ந்தது.

கல்வியில் ஈடுபட்டிருக்கும் பெண், 10ஆம் நூற்றாண்டு

கல்வியில் ஈடுபட்டிருக்கும் பெண், 10ஆம் நூற்றாண்டு

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனுந்

திண்மையுண் டாகப் பெறின்”

எனும் வள்ளுவரின் வாக்கையே யூதர்களின் ஞான நூற்களில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளை காண்பது மிக மிக அரிது;

அவள் பவழத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். (நீதி 31: 10)

அங்கிருந்து புறப்படும் வழியில் மீன் பொரித்து விற்றுக்கொண்டிருந்தார்கள். என் வாழ்நாளில் அத்தனை ஈக்களை ஒரே இடத்தில் நான் பார்த்தது கிடையாது. ஈக்களாலான பெஞ்சுகள் மற்றும் தரைபரப்பு. மக்களைக் கண்டு சிறிதும் பயப்படாத ஈக்கள். ஆனால் அங்கே அனேகர் அமர்ந்து மீன்வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கணவாய் வீன் வாங்கினோம். ஈ மொய்க்கும் பண்டங்களை வாங்குவது தவறு என்பது நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட ஒன்று. அனால் பெங்களூரில் நான் இரையியல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது அங்குள்ள சேரிபகுதிகளில் வசிப்பவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தோம். வருடத்தில் ஒருமுறை எங்களோடு ஒருநாள் அவர்கள் உணவருந்த வருவதும், மற்றொருநாள் அவர்களோடு நாங்கள் உணவருந்த செல்லுவதும் வழக்கம். அங்கே செல்லும்பொது அந்த இடமே ஈ மொய்த்தபடி தான் இருக்கும். ஆனால் அவர்களின் அன்புக்கு முன்னால் அவைகள் நமக்கு பெரும் கேடு விளைவிப்பவைகள் அல்ல என்பதே என் அனுபவம். இங்கே அமர்கையில் அதுவே நினைவுக்கு வந்தது.

இரண்டு துறைமுகங்களை இன்று ஒருசேர கண்டது மிகவும் சிலிர்ப்பான அனுபவம். இரு இடங்களிலும் பனைமரங்கள் நிற்பது காலத்தின் எச்சமாக கொள்ளலாம். தரங்கம்பாடியை விட பூம்புகார் இன்னும் செழிப்பான இடமாக காணப்படுகிறது. காவேரி கலக்கும் இடமாகையால் அப்படி இருக்கலாம். முக்கிய துறைமுகங்களில் கற்றவரின் சேவைகள் தேவைப்பட்டிருக்கும் ஏனெனில் ஆவணங்கள் புழங்குமிடம். முத்திரைகள் கையாளுபவர்கள் இருக்குமிடம். ஆகையினால் இரு இடங்களுமே ஓலையால் ஆளப்பட்டவைகள் தாம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

பனைமரச்சாலை (58)

ஓகஸ்ட் 25, 2016

மிதக்கும் பனை

அமிர்தராஜ் இதற்கிடையில் போகும் வழியை தெரிவுசெய்திருந்தார். தில்லை வழியாக பிச்சாவரம் போகவேண்டுமென. ஒரு முக்கிய நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்தபோகிறேன் என்றார். பிச்சாவரம் நான் கேள்விப்பட்டிருந்தாலும் அங்கே செல்லுவது இதுவே முதன் முறை. பிச்சாவரம் செல்லும் பகுதிகளில் அனேக பனைமரங்கள் இருந்தாலும் பிச்சாவரம் அலையாத்தி காடுகளால் நிறைந்திருந்தது. நாங்கள்  வாகனம் நிறுத்துமிடத்தில் சென்றபோது நீதிமணி அவர் நிற்கும் பகுதிக்கு நாங்கள் செல்லும்படி தொலைபெசியில் அழைப்பு விடுத்தார் 100 மீட்டர் தொலைவு தான் அது.

நான் அலையாத்திக் காடுகளை பார்த்தபடி சென்றேன். அலையாத்திக்காடுகளை நான் மணக்குடியில் தான் முதன்முதலாக பார்த்தது. பிற்பாடு, நான் மும்பை செல்லும்போதும் அவைகளை வாஷி மான்குர்ட் பகுதிகளுக்கிடையிலும், வசாய்  நாலசபோரா பகுகிகளிலும் இரயிலில் கடந்து செல்லும்போது பர்த்திருக்கிறேன். இறால் மற்றும் மீன்கள் குஞ்சுபொரிக்க ஏற்ற இடம் என சொல்லப்படுவதுண்டு. பனை மரங்களை கூட இப்படியும் வளர்க்கலாமே என்னும் எண்ணம் என்னுள் கடந்து சென்றது. நான் சிறுவனாக இருக்கும்போது எனது அப்பா ஜேம்ஸ் டவுண் என்கிற ஊரில் போதகராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் அருகே மேட்டுக்குடியிருப்பு என ஒரு ஊர். அங்கே ஒரு குளம் இருந்தது. குமரி மாவட்ட மேற்குப் பகுதியில் உள்ள குளங்கள் யாவும் வெட்டி குழி எடுத்ததுபோல இருக்கும், ஆனால் இங்கோ குளம் என்பது ஒரு அணை போல. குளத்தைச் சுற்றி மூன்று பகுதிகள் சற்று மேடாகவும் ஒரு பகுதி நீர் வரத்துக்கான ஆதாரமாகவும் இருக்கும். தண்ணீர் ஒரு கரையில் குறைவாகவும் மற்றொரு பகுதியில் ஆழமாகவும் இருக்கும்.

ஆழம் குறைவான பகுதியில் பனைமரங்கள் நிற்பதை பார்த்திருக்கிறேன். மழை வரும் நேரங்களில் தான் அந்த பனைமரங்களின் அடிப்பகுதி தண்ணீரில் முங்கும். பிற்பாடு ஒருமுறை நாங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பயணிக்கும்போது குளத்தின் நடுவில் பனை மரங்கள் நிற்பதை கண்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் தான் குமரி மாவட்டத்தில் உள்ள மாம்பழத்தாறு குறித்து கேள்விப்பட்டு அங்கே பனை மரங்கள் இருப்பதைக் கணச்சென்றேன். எனது மாமா மகன் ஜானி எனக்கு சில புகைப்படங்களை அனுப்பியிருந்தார். பனைமரங்கள் கணுக்கால் முதல் இடுப்புவரை என சில பகுதிகளிலும் சில பகுதிகளில் தோள் கழுத்து ஏன் மூக்கு வரைக்கும் தண்ணீருக்குள் அமிழ்ந்திருந்தது. எனது வாழ்வில் நான் முதன் முதலில் கண்ட அதிசயம் அது. தண்ணிருக்குள் தவமிருக்கும் முனியாக பனைமரம் காட்சியளித்தது.

நீருக்குள் தவமிருக்கும் பனைமரங்கள், மாம்பழத்தாறு அணை, குமரி மாவட்டம் - புகைப்படம் ஜானி

நீருக்குள் தவமிருக்கும் பனைமரங்கள், மாம்பழத்தாறு அணை, குமரி மாவட்டம் – புகைப்படம் ஜானி

பனை மரங்கள் நின்ற பகுதிகளிலேயே மாம்பழத்தாறு அணையை கட்டியிருக்கிறார்கள். ஆகவே நீர் நிறைந்த போதும் வேர்கள் நீரால் பாதிக்கபடாத வகையில் உயிர்ப்புடன் நிற்பது ஆச்சரியம். எவ்வகை நிலமானாலும் நீருக்குள்ளும் பனை மரங்கள் வளருவது பெருத்த ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகவே இருந்தது. அப்படியானால் இன்றும் நீர்நிலைகளில் நம்மால் பனை மரங்களை நட்டு காப்பாற்ற இயலுமா? அவ்விதமாக யாரேனும் ஆய்வோ முயற்சிகளோ முன்னெடுத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் ஒரு முக்கிய வாய்ப்பாக அது நமக்கு முன்பாக நிற்கிறது. பாங்காக்கில் உள்ள மிதக்கும் சந்தை போல மிதக்கும் பனை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக விளங்கவும் வாய்ப்புள்ளது. பிச்சாவரத்தில் அப்படி பனை மரங்களை நாம் நட்டு பேணுவதற்குரிய வாய்ப்புள்ள இடமாகவே கருதுகிறேன். தொல் பழங்கால நீரும் நிலமும் ஒன்றுபடும் இடத்தில்தானே பனை மரங்கள் இருந்திருக்கின்றன. பனையும் படகும்  இணையும் ஒரு கற்பனை மிக உவப்பானதாகவே இருக்கின்றது.

நீதி மணி அவர்களை பார்த்தபோது மிக மென்மையான ஒரு மனிதராக தெரிந்தார். சினேகமான  புன்னகையுடன் எங்களை அங்கிருந்த ஒரு உனவகத்திற்கு அழைத்துச் சென்றார். சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய அந்த உணவகத்தில் ஒருவரும் இல்லை. நாங்கள் மட்டும் அமர்ந்து சர்பத் ஆர்டர் செய்தோம். நீதிமணி தன்னை குறித்து பேசுகையில் மேக்னட் என்ற சுற்றுசூழல் பாதுகாப்பு பேராயத்தினை பதிவு செய்து அதன் தலைவராக இருக்கிறேன் என்றார்.

அவரது பனைத் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் குறித்த செய்திகளை ஆர்வமுடன் கேட்டேன். இடையறாது தொடர்ந்த் பல்வேறு பணிகளின் மத்தியிலும் பனை மரம் காக்கப்படவேண்டும் என சிரத்தை எடுத்துக்கொள்ளுபவர். சுதேசி அமைப்புகளுடன் சேந்து பெண்களுகு பனை வெல்லம் காய்ச்சும் பயிற்சியும் அளித்திருக்கிறார். அவரது பணிகளில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாக பனை மரத்தைக் காப்பதை குறித்து பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்களை வெட்டுகிறவர்களை தடுப்பது, செங்கள் சூளைகளுக்கு பனை மரத்திற்கு மாற்றாக சீமை கருவேலம் போன்றவற்றை அளிப்பது பனை மரத்திக் காக்கவேன்டும் என பிரச்சாரம் மாத்திரம் அல்ல பனக்கொட்டைகளை குள்க்கரைகளில் ஊன்றியும் பாதுகாத்து வருகிறவர் என தனது முயற்சிகளை உற்சாகமாக கூறிக்கொன்டு வந்தார்.  இயற்கை பாதுகாப்பு சார்ந்த அனைத்து விழிப்புணர்வு நிகழ்சிகளிலும் பனைமரங்கள் பாதுகாப்பு குறித்து பேசுபவர் எப்போதும் பனை மரங்களை யானைபோன்றது எனக் குறிப்பிடுவாரம். நானும் அதே புரிதல் கொண்டிருப்பது எங்களை இன்னும் ஒன்றுபட தூண்டியது.

நீதிமணி மற்றும் அமிர்த்தராஜுடன், பிச்சாவரம்

நீதிமணி மற்றும் அமிர்த்தராஜுடன், பிச்சாவரம்

நீதி மணி போன்று களத்தில் இருப்பவர்களை காண்பதும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுவதும் பனை மரம் சார்ந்த போராட்டத்திற்கு மிகவும் உதவும். என்னைப்பொருத்தவரையில் அனைவரும் இணைந்து போராடாதவரைக்கும் பனைமரத்திற்கு விமோசனம் இல்லை. பனைமரங்கள் ஒரு சங்கிலிபோல் தமிழகத்தை சுற்றி வளைத்து இருக்கிறது. அது நமது பாதுகாப்பு வளையம். அதை அறிந்து கொண்டால் நமது மண் வளம்பெறும்.

பிச்சாவரத்திலிருந்து 15 நிமிடங்களுக்குள் கிளம்பினோம். நேராக சிதம்பரம் சென்றோம் . வினோலியாவின் தந்தையின் வீட்டில் அன்று தங்குவதாக உத்தேசம். ஆனால் நாங்கள் வழியை சரியாக புரிந்துகொள்ளவில்லை. சிதம்பரம் பைபாசின் அருகில் நின்றுகொண்டு ஒரு சில பனை மரங்களை வேடிக்கை பார்த்தோம். இருட்டும் வெளையில் நான் முதலில் வண்டியை எடுத்தேன் ஒரு 200 மீட்டருக்குள் சாலை இரண்டாக பிரிவதைப் பார்த்து நின்றுவிட்டேன். அமிர்தராஜ் வரட்டும் என்று காத்திருந்தேன். பத்து நிமிடங்க+ள் பதினைந்து நிமிடங்கள் என நேரம் கடந்க்டுகொண்டே சென்றது. வேகமாக இருட்டியும்விட்டது. சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின்பு அவரைத்தேடி நாங்கள் நின்ற இடத்திற்குப் போனபோது அவரைக் காணவில்லை. அவரை அலைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என சத்தம் வந்தது. வண்டியை ஒதுக்கி நிருத்க்டிவிட்டு மொபைலின் திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுமர் 15 நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பு வந்தது.

பாஸ்டர் எங்கே இருக்கிறீங்க என்றார். நான் இருக்கும் இடத்தை சொன்னவுடன், நேராக கொள்ளிடம் பாலத்துக்கு வாங்க என்றார். வழியையும் தெளிவாக குறிப்பிட்டார். நான் முத்தி சென்றுவிட்டேன் என கருதி அவர் வேகமாக என்னை தொடர்ந்து பிடிக்கச் சென்றிருக்கிறார். ஆனால் என்னைக் காணவில்லை என்றவுடன் நின்று அழைத்திருக்கிறார். ஒரு சில விநாடிகளில் நாங்கள் ஒருவரை ஒருவர் தவற விட்டிருக்கிறோம். நான் வேகமாக சென்று அவர் கூரிய பாலத்தின் அருகில் இருந்த செக்போஸ்டின் அருகில் எனக்கக காத்திருந்தார். நான் செல்வதை தூரத்திலிருந்து பார்த்தவர், பாஸ்டர் என என்னை அழைத்து வன்டியை நிறுத்தினார். இருவருக்கும் பெரும் மகிழ்வின் கணமாக அது இருந்தது. நேடுநாள் கழித்து ஒருவரை ஒருவர் பார்ப்பது போல மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்.

அங்கிருந்து நாங்கள் திருக்கடையூர் எனும் வழிபாட்டு ஸ்தலம் இருக்கும் ஊருக்குப் போனோம். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு தண்ணீர் வங்கி குடித்தோம். எதோ தேவைக்காக நான் பணத்தை எடுக்க முற்படுகையில் தான் கவனித்தேன். பர்ஸ் எங்கோ விழுந்துவிட்டது. இனி தேடுவது பலன் தராது எனும் உண்மை ஒருபுறம் இருக்க, இருவருமே மிகவும் சோர்வடைந்திருந்தோம். அந்த வேளையில் வினோலியா எங்களை அழைத்தார்கள். எப்போது பட்டுக்கோட்டை சென்றடைவீர்கள் என. அமிர்த்தராஜ் நெஞை பிடித்க்டுக்கொண்டர். பாற் இப்படியெல்லம் நென்சுக்கு குறிவைக்காதீங்க என்ரார். இன்னும் 200 கி மீ மேல் இருக்கிறது பட்டுக்கோட்டைச் செல்ல என்றார். இந்த பிரச்சனிக்கு முழுமுதல் காரணம் நானே தான். காட்டுமாவடி செல்லும் வழியில் வினோலியா வீடு இருப்பதாக அமிர்தராஜிடம் கூறியிருந்தேன். அமிர்தராஜ் காட்டுமாவடி நோக்கி என்னை அழைத்துச் சென்றார். ஆனால் பட்டுக்கோட்டையின் அருகில் தான் அவர்கள் இருக்கிறார்கள் எனும் தகவல் அமிழ்ந்துவிட்டது. ஆகவே அமிர்த்தராஜ் அழைத்து சென்ற இடம் காட்டுமாவடி தான். நான் குறிப்பிட்ட இடம் கட்டுமாவடி. ஆங்கிலத்தில் கூகிள் மேப் பார்த்து நான் இட்ட தகவல், அவைகளை சரி பார்க்காமல் குருட்டு நம்பிக்கையோடு எங்கள் பயணத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட தவறு. முதலில் வினோலியாவை அழைத்து இன்று நாங்கள் அவர்கள் தகப்பனாரை சந்திக்க இயலாது என கூறி மன்னிக்க வேண்டினேன். அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எங்களை ஊக்கப்படுத்தினார்கள். அதுவே ஆறுதலாக இருந்தது.

இப்பொழுது எங்காவது நாங்கள் தங்கவேண்டும். என்னிடத்தில் பணமில்லை, யாரிடத்தில் கேட்டாலும் மறுநாள் மட்டுமே பணம் கிடைக்கும். என்ன செய்வது என எண்ணுகையில், அமிர்தராஜ், கவலைப்படதீர்கள் பாத்துக்கலாம் என்றார். அது வழிபாட்டு மைய்யமானபடியால் அங்கே அனேக விடுதிகள் இருந்தன. சிறப்பான ஒன்றை அவர் தேர்ந்தெடுத்தார். சிறந்த விடுதிகளை தெரிந்தெடுப்பதில் அவர் நிபுணர். அதற்கான அனேக குறிப்புகளை அவர் வைத்திருந்தார். உணவு  மற்றும் விடுதி சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய நுண் தகவல்கள் அவரிடம் அனேகம் உண்டு.

அன்று இரவு நாங்கள் தங்கிய இடம் மிகவும் ஒரு சிறந்த விடுதி. அருகிலேயே இருந்த சரவணபவனில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். நான் பெங்களூரில் இருக்கும் எனது பள்ளிக்கூட நண்பன் சஜீவ் நாயரை அழைத்து எனக்கு பணம் வெண்டும் எனக் கூறினேன். அவன் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டு உடனே அனுப்புகிறேன் என்றான். அனைத்து கவலைகளையும் மறந்து தூங்க ஆரம்பித்தோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (57)

ஓகஸ்ட் 24, 2016

 

நாங்கள் பறங்கிப்பேட்டையிலிருந்து புறப்படும்பொழுது அங்கே ஒரு வாலிபன் வந்து எனது பைக்கின் பழமையைக் குறித்து விசாரித்தான். எனது பைக், எனது கரத்தில் வந்து சேர்ந்தது ஒரு பெரிய கதை. எம் எஸ் எல் எனும் பதிவு 1964ஐ  சார்ந்தது  என்கிறார்கள். 8537 என்பது எண். என்னிடத்தில் திருமணம் ஆகும் வரை இரு சக்கர வாகனம் கிடையாது. நான் கல்லூரி படிக்கும் போது நடந்தோ அல்லது சைக்கிளிலோ தான் செல்லுவேன். எனக்கு பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தது எனது நெருங்கிய தோழன் வின்ஸ்டன். அவனுடைய யமஹா ஆர் எக்ஸ் 100ஐ என்னிடம் சில காலங்கள் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு அவன் நியூசிலாந்டு சென்றுவிட்டான்.

திருமணத்திற்குப் பிறகு நாங்கள் புதிய வண்டியை வாங்கவேண்டும் என நினைத்தோம். அப்பொழுது எனக்கு வெறும் எழு ஆயிரம் மட்டுமே சம்பளம். நான் அந்த பணத்தை வைத்துக்கொண்டு அன்றாடம் நிகழ்வை ஓட்டுவதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த வேளையில் ஜாஸ்மின் எனது கருவை சுமக்கத் துவங்கியிருந்தாள். ஆகவே குழந்தையோடு அவள் வருகையில் ஒரு வாகனம் வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் பழைய ஒரு புல்லெட்டை தேட ஆரம்பித்தேன். 1966க்கு முன்பு வெளிவந்த மாடலை தேடினோம். அனைத்தும் ரூ90,000/- விலையில் இருந்தன. 1958ஆம் ஆண்டு வண்டி சுமார் ரூ1,50,000 வரை விலை கூறப்பட்டது. 1955ஆம்ம அண்டு வண்டி ஒன்று ரூ4,50,000/- எனக் கேட்டபோது வண்டி வாங்கும் எனது எண்ணம் முடிவுக்கு வந்துவிட்டதோ என எண்ணினேன்.

எனது மாமா மகன் பாலு அவர்களின் மூத்த மகன் மெல்வின் வண்டிகளை தெரிந்தெடுப்பதில் நிபுணன். அவனிடம் கேட்டபோது, என்னை ஒரு இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான். ரூ35,000/- இந்த வண்டியை முடித்து தந்தான். முதலில் ரூ 20 ஆயிரம் கொடுத்து வண்டியை எடுத்துச் சென்றேன். பிற்பாடு இரண்டு மாதங்களுக்குப் பின்பு எனது மோதிரங்களை அடகு வைத்து மீதி பணத்தை கொடுத்தேன்.  நான்கு வருடங்களுக்குப் பின்பு அந்த மோதிரங்களை மீட்டேன். இதற்கிடையில் எனது வாகனத்திற்காக நான் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவளித்திருந்தேன்.

எனது புல்லட், சற்றேறக்குறைய கடும் பச்சை வர்ணம் கொண்டது.   பார்ப்பதற்கு ஒரு இராணுவ புல்லட் போலவே இருக்கும். எனக்கு அதன் சொரசொரப்பான வர்ணம் பிடித்திருந்தது. ஆனால் அந்த வண்டியை நான் கொண்டுபோன வேளை எனது மாமனாருக்கு அது பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் பணம் போட்டு ஒரு புது வண்டி வாங்கியிருக்கலாமே. எப்போது உடைந்து விழும் என்று இருக்கும் ஒரு துருப்பிடித்த வண்டிக்கு இவ்வளவு செலவு செய்தீர்களா எனக் கேட்டார்கள். ஜாஸ்மினுக்கு கொஞ்சம் நாட்களாகவே இது ஒரு மனக்குறையாக இருந்தது. இந்த வண்டியில் நான் ஏறமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாள். ‘எனக்க தம்பியளுக்க வண்டியப்பாருங்க” என்றாள். அந்த வண்டி புத்தம்புதிதாக அழகாக தான் இருந்தது. ஆனால் எனக்கு நான் வாங்கிய வண்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினேன். ஆகவே அவள் கூறியவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் நான் நினைத்தபடி வண்டியை விற்று வண்டியை வாங்குமளவு பொருளோ, நேரமோ உடையவன் கிடையாது.

ஒரு சில மாதங்களுக்குப் பின்பே நான் எனது வாகனத்தை மும்பைக்கு கொண்டு வந்தேன். நான் அப்பொழுது மீராரோடு எனும் பகுதியில் இருந்தேன். எனது புல்லட் அப்பொழுது லாரியில் ஏற்றி விடப்பட்டிருந்தது. நான் போய் அதை பன்வேலிலிருந்து எடுத்தேன். எனது மூத்த அண்ணன் என்னோடு அன்று இருந்தார்கள், பன்வேலிலிருந்து நான் அந்த வண்டியை எடுத்து முதல் வளைவில் திருப்பும்போது எதிரே நான்கு சக்கர வாகனம் ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. நான் வேகமாக பிரேக் பிடிக்க வண்டி மிக அபாயகரமாக அலம்பியது. அன்று அதன் கட்டுப்பாட்டு சூட்சுமத்தை அறிந்தேன். ஒருபோதும் நான் நிதானம் இழக்கும்படி இந்த வண்டியை ஓட்டியதில்லை. இந்த வண்டியிலிருந்து நான் விழுந்ததும் இல்லை.

வேறு வழியில்லாமல் ஜாஸ்மின் என்னோடு வாகனத்தில் வரத்துவங்கினாள். பல நேரங்களில் வழியில் நின்றுவிடும். பெட்ரோல் லீக் ஆகிவிடும். பல பிரச்சனைகள் அடிக்கடி வந்துகொண்டிருந்தன. வீட்டில் பிரச்சனை என ஒன்று வந்தால் அது புல்லட்டிற்காக என எண்ணுமளவு அவளுக்கு அந்த வண்டிமேல் ஒரு வெறுப்பு இருந்தது. சில நேரங்களில் அவளது கோபம் எல்லை மீறி போய்விடும். அப்போது எல்லாம் கோபத்தை எனது ஹெல்மெட் மீது தான் காட்டுவாள். “இந்த பாறைய அடிச்சு ஒடச்சிருவேன், வேறே எங்கியாவது கொண்டு வைங்க”. வெளியே எங்கு சென்றாலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருவர் எனது வண்டியை உற்று பார்ப்பது வழக்கம். ஜாஸ்மின் கெஞ்ச ஆரம்பித்தாள், இந்த வண்டியில் போவதற்கு மிகவும் அவமானமாக இருக்கிறது என்று. எப்படியோ சமாளித்தேன். அப்படியே ஒற்றை இருக்கையை மாற்றி இரட்டை இருக்கையாக மாற்றினேன். வண்டிக்கு இன்னும் ஒரு பழைமையான தோற்றம் கிடைத்தது.

குடும்ப வாகனம், புகைப்படம் ஜாஸ்மின்

குடும்ப வாகனம், புகைப்படம் ஜாஸ்மின்

முதலில் எனது பைக்கை ஏற்றுக்கொண்டவர்கள் திருச்சபையில் உள்ள சிறுவர்கள் தாம். என்னை புல்லட் பாஸ்டர் என செல்லமாக அழைக்க ஆரம்பித்தார்கள். திருச்சபையின் எந்த குறு நாடகங்களிலும் சிறுவர்களில் எவர் பாஸ்டர் வேடம் இட்டாலும், அவரின் வருகை புல்லட்டிலேயே இருக்கும். அதைக் கொண்டே திருச்சபையினர் பாஸ்டர் வருகிறார் என அறிந்துகொள்ளுவார்கள். அந்த அளவுக்கு என்னையும் புல்லட்டையும் சிறுவர்கள் ஒன்றாக இணைத்தே பார்த்தனர். சில வேளைகளில் பைக் நின்றுவிடுவதையும் பைக்கோடு நான் மாரடிப்பதையும் கூட நடித்துக்காட்டுவார்கள். மிக சமீபத்தில் கூட  முகநூலில் வாலிபனான ஒரு அன்றைய சிறுவன் எனது பைக் அருகில் அவன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தான். அவர்களால் மறக்கமுடியாத பாஸ்டர் நான்

பலர் என்னிடம் வந்து இந்த வண்டியை விற்கிறீற்களா எனக் கேட்கும்போது, இதில் அப்படி எனா இருக்கிறது? “குடுத்து தொலைக்கப்பிடாதா” என அவர் கேட்பாள். ஆனால் நான் காத்திருந்தேன். அவள் இந்த வண்டியை தனதாக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் என நம்பிக்கையோடிருந்தேன். ஜாஸ்மினை மனம் மாறச்செய்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் உண்டு. ஒன்று நாங்கள் மீரா ரோடில் இருக்கும்போது ஒருநாள் அங்குள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு ஒரு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யும்படி நாங்கள் சென்றோம். நாங்கள் சென்று வாகனத்தை நிறுத்திய இடத்தில் இன்னும் 5 புத்தம் புதிய ராயல் என்ஃபீல்ட் வண்டிகள் நின்றுகொண்டிருந்தன. 20 வயதின் துவக்கம் அல்லது இன்னும் வயது குறைந்த வாலிபர்கள் தங்கள் தோழிகளோடு அமர்ந்திருந்தனர். எனது வண்டியை நான் நிறுத்தியதும் ஒவ்வொருவராக தங்கள் இடத்திலிருந்து எழுந்தனர். தங்களுக்குள் ஏதோ சொல்லியபடி என்னை சுற்றி வளைத்தனர். ஜாஸ்மின் பயந்துவிட்டாள். நான் ஸ்டான்ட் போடுகின்ற நேரம் ஒருவன் வந்து, அங்கிள் இது எந்த மாடல்? எனக் கேட்டான். பொதுவாக பேச்சு அப்படித்தான் ஆரம்பிக்கும்.

பனை மக்கள்

பனை மக்கள்

ஜாஸ்மின் கண்கள் விரிய நின்றிருந்தாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்விகள். எங்கே வாங்கினீர்கள், எவ்வளவு குடுத்தீர்கள், உங்கள் மெக்கானிக் யார், எவ்வளவு மைலேஜ் போன்ற வழக்கமான கேள்விகள். ஒருவன் கேட்டான். விற்கிறீர்களா என்று. சிரித்துக்கொண்டே இல்லை என்றேன். ஒருவன் தனது புத்தம் புதிய வாகனத்தை காட்டி, இதை எடுத்துக்கொள்ளுங்கள் நான் உங்கள் வாகனத்தை எடுத்துக்கொள்ளுகிறேன் என்றான். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வாகனத்தை காட்ட நான் சிரித்துக்கொண்டே நழுவினேன். ஜாஸ்மின் அயர்ந்துபோனாள், இது எப்படி “ஆளாளுக்கு அழகான வண்டியை வெச்சிண்டு இந்த சொரி பிடிச்ச வண்டிக்கு இவனுவ ஏன் இப்படி பறக்கினும்? அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக சொறிபிடித்த எனது வண்டி மேல் அவளுக்கு கொஞ்சம் அன்பு வந்தது.

குழந்தைகளோடு - புகைப்படம் ஜாஸ்மின்

குழந்தைகளோடு – புகைப்படம் ஜாஸ்மின்

மீராரோடில் இருக்கும்போது ஆலிம் எனும் ஒரு மெக்கானிக் கிடைத்தார். வண்டி நின்றுவிட்டது என்றால் எனக்கு எதுவும் செய்யத்தெரியாது. அவரையே அழைப்பேன். வந்து பார்த்துவிட்டு வெறுமனே ஸ்டார்ட் செய்வார். வண்டி எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிடும். அஹமதாபாத் சென்ற போது அங்கேயும் வண்டி பல சிறு சிறு பிரச்சனைகளை சந்தித்தது. அங்கும் ஒரு சிறந்த மெக்கானிக் கிடைத்தார். அவர் பெயர் சயீத் பாய். வீட்டிற்கும் வந்து எனக்கு வண்டியை சரி செய்து கொடுத்திருக்கிறார். எனது திருச்சபையைச் சார்ந்த ஒருவரின் வண்டி பல வருடங்களாக அவருடைய காரேஜில் சும்மாவே கிடந்தது.

சபர்மதி ஆற்றைக் கடக்கும் பாலத்தின் துவக்கத்தில் நாங்கள் அவர்களை முந்தியிருப்போம் என நினைக்கிறேன். அல்லது அவர்கள் தங்கள் வண்டியை எங்கேனும் ஓரம் கட்டினார்களா என தெரியவில்லை. திடீரென எங்களை இரண்டு வண்டிகளும் சூழ்ந்து கொண்டன. எனக்கு வலதுபுறத்தில் வந்த பெண் ஹ்லோ சார், எம் ஏஸ் எல் எந்த ஊர் பதிவு எனக் சத்தமாக கேட்டாள். நானும் சத்தமாக மெட்றாஸ் என்றேன். எந்த வருடம் பதிவுசெய்யப்பட்டது என்றாள். நான் 1964 என்றேன். என்னைத்தாண்டி இடதுபுரம் வந்துகொண்டிருந்த அவளின் தோழியிடம் எதோ கூறினாள். அவர்கள் வாகனம் எங்களுக்குப் பின் சென்றுவிட்டது. மீண்டும்  எங்களை அவள் நெருங்கிவந்து சார் கொஞ்சம் வண்டியை ஒதுக்கி நிறுத்துவீர்களா என்றாள். ஜாஸ்மின் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, நான் வண்டியை நிறுத்தினேன். மணி கிட்டத்தட்ட 10 இருக்கும்.

 

அவள் பெயர் அஞ்சலி, கேரளாவைச் சார்ந்தவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்தி தனது ஸ்னேகிதிகளையும் அறிமுகப்படுத்தினாள். பெண்களாக சேர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டும் ‘ரைடர்னி” எனு குழுவிற்கு தலைவியாக இருப்பதாக கூறிவிட்டு, புல்லட் மேல் தனக்கிருக்கும் அளவுகடந்த பிரியத்தையும், தன்னுடைய உயரம் அதற்கு தடையாக இருப்பதால் தான் அதை அவள் புல்லெட் வாங்கவில்லை என்றும் குறிப்பிட்டாள். எங்கள் வாகனத்தின் அருகில் நிறு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என அவள் கேட்டபொழுது ஜாஸ்மினுக்கு தான் காண்பது கனவா இல்லை நனவா என்று புரியவில்லை. எனக்கும்தான்.

பிற்பாடு அவள் சொன்னாள், இயந்திரங்கள் கூட மனிதர்களை இணைக்கமுடியும் என்பதற்கு இதுவே சான்று என. பிரியும் போது எங்கள் வீட்டிற்கு மிக அருகில் தான் அவர்கள் வசிப்பதாகவும் வந்துவிட்டு செல்லுங்கள் என்றாள். எனது நீண்ட பயணத்திற்கு அவளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது.

ஜாஸ்மினின் தம்பி அவனது முந்தைய இருசக்கர வாகனம் உருக்குலைந்து அடிமாட்டு விலைக்கு அதை விற்றுவிட்டான். அதன் பிறகு ஒரு புத்தம் புது கார் வாங்கினான். அதுவும் பழையதாகிவிட்டது. எனது வண்டி அன்றிலிருந்து இன்றுவரை சொறிமுத்துவாக ஜல்லிக்கட்டில் புகுந்துவிளையாடிக்கொண்டிருக்கிறது.

எனது பனைமர வேட்கைப் பயணம் முடிந்த பிற்பாடு நான் அந்த வண்டியை என்னோடு எடுத்து வரவில்லை. சற்று நாட்கள் வண்டியில்லாமல் தான் இருந்து பார்போமே எனும் எண்ணம். ஆனால் அவள் என்னிடம் நூறுமுறைக்கு மேல் சொல்லியிருப்பாள் “அந்த வண்டிய கொண்டு வந்திருக்கப்பிடாதா”. வாழ்வில் நான் உள்ளூர மகிழும் தருணங்கள் அது. காது குளிர கேட்கவேண்டும் போலிருக்கிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (56)

ஓகஸ்ட் 23, 2016

பனை – ஆயிரம் பயன்

நாங்கள் அங்கிருந்து வேகமாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தோம். அங்கே ஊடக நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. இலக்குவன் எங்களை அறிமுகப்படுத்த பேட்டி ஆரம்பமானது. நான் நினைத்தது போன்று மைக்கை எனக்கு முன்பு நீட்டியபடி அல்ல, மாறாக நண்பர் கூழாமுடன் பேசும் சிறு பேச்சுபோல அது காணப்பட்டது. நாங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இலக்குவன் எங்களை அவர்களுடன் இணைத்து ஒரு புகைப்படம் எடுத்தார். அங்கிருந்து நாங்கள் புறப்படும் நேரம் ஊடக நண்பரும் எங்களை ஒரு புகைப்படம் எடுத்தார்.

நாங்கள் புறப்படுகையில் மூன்றுமணி தாண்டிவிட்டிருந்தது. எங்களுக்கோ கடும் பசி. இலக்குவன் சாப்பிட அழைத்தார், ஆனால் அமிர்தராஜ் நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக்கொள்ளுகிறோம் என்றார். ஆகவே பிரியும் முன்பதாக இலக்குவன் எங்களுக்கு நன்னாரி சர்பத் வாங்கிக் கொடுக்க, அங்கிருந்து விடை பெற்றோம். செல்லும் வழியில் பெரிய குப்பம் எனும் ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். கடற்கரைப் பகுதி வழியாக அந்த இடத்தை நாங்கள் எட்டினோம். மணல் மேடுகள் அவைகளில் காணப்பட்ட சிறு தாவரங்கள் மற்றும் பனை மரங்கள். கிராமங்கள் என அதிகம் எதுவும் இல்லை ஆனால் மிகப்பெரிய ஒரு பன்னாட்டு நிறுவனம் அந்த இடத்தில் தோன்றியிருந்தது. சுனாமி அவர்களை செயலிழக்கச்  செய்ததாக அமிர்தராஜ் குறிப்பிட்டார்கள்.

அந்த நிறுவனத்திற்கு நேர் எதிரே சுமார் 300 முதல் 400 அடி தூரத்தில் சாலைக்கு மறுபகுதியில் கடல் இருந்தது. அந்த கடல் மார்க்கமாக நிறுவனத்திற்கு/ தொழிற்சாலைக்கு வேண்டிய உபகரணங்களை எடுத்து வருவதற்காக ஒரு தற்காலிக சிறிய துறைமுகம் ஏற்படுத்தியிருக்கிக்கிறார்கள் நான் காட்டுகிறேன் என அமிர்தராஜ் கூறி என்னை அழைத்துச் சென்றார். அது ஒரு வித்தியாசமான அனுபவம். கடலிலிருந்து இன்னும் 50 மீட்டர் நிலத்திற்குள் ஒரு நீர்வழிப்பாதையை அமைத்திருக்கிறார்கள். அந்த பாதையில் வரும்போது படகு சேதமடையாமல் இருக்க இருபுறமும் பனை மரங்களை நெடுக புதைத்திருக்கிறார்கள். சுமார் 20 அடி ஆழமாவது பனை மரம் மண்ணுக்குள் அழுந்தியிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் படகு செல்லும் வழித்தடத்தை சுனாமி வந்து மூடிவிட்டது என்று அமிர்த்தராஜ் சொன்னதை நான் நம்பவேண்டியிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களை சுனாமிதான் மண்ணைப்போட்டு மூடவேண்டும் போல.

ஊடக நண்பர்களுடன், கடலூர்

ஊடக நண்பர்களுடன், கடலூர்

இந்த பனை மரங்களை தரையில் ஆணி அடிப்பது போல அடித்து இறக்கியதை தாம் பார்த்ததாக அமிர்த்தராஜ் கூரினார். அந்த சிறிய படகணையும் துறைமுகம் என்னுள் வேறு ஒரு காட்சியை வரையதுவங்கியது. மகாபலிபுரம் போன்ற பண்டைய இந்திய கடற்கரை துறைமுகங்கள், இப்படித்தான் இருந்திருக்குமோ? கடலில் சில பருவங்களில் உள்வாங்குவதும் பிற்பாடு தனது பழைய இருப்பிடத்திற்கு வருவதும் இயல்பு. அப்போது  பொழிமுகத்தில் பனைமரங்களை இப்படி அழுத்தி இவ்விதம் ஊன்றியிருப்பார்களோ? அலை மிகுந்த கடற்கரையில் மரங்களாலான தடுப்புகள் கப்பல்களுக்கு மிகவும் பாதுகாப்பானவைகளாக இருக்கும். உப்புகாற்று பனந்தடிகளை இறுகச்செய்யும் என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக தான் இவைகளா? சுனாமி ஏற்பட்டு சுமார் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் இந்த மரங்கள் உறுதியுடன் இருக்கின்றன என்றால் அவைகளின் நீடித்து உழைக்கும் தன்மையை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் பனந்தடிகளை துரந்து உள்ளே சிமென்ட் போடப்படிருந்ததைப் பார்த்தேன்.

கடற்கரை ஓரம் காணப்படுகின்ற இந்த பனை மரங்களை மனிதர்கள் பலவிதங்களில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உண்டு. கட்டுமரம் பயன்பாட்டிற்கு வருமுன்பு ஆதி காலத்தில் தாட்டி தோணி போன்றவைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம். எனது சிறு பிராயத்தில் பனையோலை பெட்டியில் தான் மீன்கார அம்மா மீன் கொண்டு வருவார்கள். இன்றும் பனையோலைப் பாய்கள் மற்றும் பெட்டிகள் குமரி கடற்கரையோரத்தில், மீனவர்கள் தொழில் செய்யும் ஒருசில இடங்களில் புழக்கத்தில் இருப்பதை காணலாம். பனை அனைத்து விதமான பயன்களும் அளித்து பின்பு ஒரு தேக்கநிலையை அடைந்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஓலைகளில் செய்யும் கைவினைப்பொருட்கள் மிக சமீபத்திய கண்டுபிடிப்புகளே. வாழ்வோடு இணைந்த பல பயன்பாடுகள் இன்று அரிதாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டு பனை மரத்தின் சகாப்தத்தில்  வீழ்ச்சியின் காலம் என்றே குறிப்பிடவேண்டும்..

சிறுவயதில் தண்ணீர் சுமக்க காக்கட்டை செய்வதையே நான் நேரில் பார்த்திருக்கிறேன். தென்னையோலையில் இருந்து பெறப்படும் ஒரு மெல்லிய நூல் போன்ற ஒன்றையெடுத்து, பிற்பாடு ஊசி கொண்டு நனைத்த ஓலைகளை நீர் புகாதவண்ணம் மடித்து தைத்து பின்னர் நீர் கொள்ளும் ஒரு கலனாக வடிவமைப்பது வழக்கம். இப்படிப்பட்ட சுமார் 20 முதல் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கலன்களை பனை மட்டையால் இணைத்து தோளில் தொங்க விட்டபடி தண்ணீர் மொள்ளுவார்கள்.

எண்ணிமுடியாத பயன்பாடுகள் இருந்தாலும் அவைகள் காலப்போக்கில் மங்கிவருவதை நாம் இன்று நமது கண்ணெதிரே காண்கிறோம். வரலாற்றின் பக்கங்களில் நாம் வேட்கையோடு தேடினால் பனைமரங்களோடு நாம் எப்படி பின்னிப்பிணைத்திருந்தோம் எப்படி ஒட்டி உறவாடியிருக்கிறோம் என்பது கண்டிப்பாக மறைவிலிருந்து  மேலெழும். அவை நம்மை மீண்டும் ஒரு புதிய பனையுகத்திற்குள் அழைத்துச் செல்லும்.

அமிர்தராஜ் ஊடகங்களுக்கு நான் எப்படி பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். நான் பேசிவற்றின் சில நுண்தகவல்களை ஊடகத்தினரால் எப்படி திரித்து பொருள் கொள்ள முடியும் என்றார். அவரது கருத்து அவர் ஊடக பின்னணியில் வளர்ந்ததால் ஏற்பட்டது என நான் கூறினேன். குறிப்பாக நான் பனைமர வேட்கைப் பயணத்தை ஒரு அவதானிப்பு என்ற கோணத்திலேயே பதிவு செய்தேன். ஆனால் அமிர்த்தராஜ் என்னை பனைமரம் பாதுகாக்கும் பாதுகாவலன் என பிம்பம் ஏற்படுத்தும்படி புரிதல் கொண்டிருந்தார் போலும். நான் எளியவன் என்பதை அவர் நம்பத் தயாராக இல்லை. ஆகவே எங்களுள் கருத்து மோதல் ஏற்பட்டது. என்னை இலகுவில் இந்த பெரும் சுமையிலிருந்து  தப்பித்துவிடகூடாது என அவர் திட்டம் தீட்டுகிறாரோ என எண்ணம் கொண்டேன். ஆனால் என்னை அவர் பனை பணிக்குள் தீவிரமாக செயல்பட அழைப்புவிடுக்கிறார் என புரிந்து கொண்டேன். அவரது தீவிர மனநிலை என்னை அசைத்தது உண்மை. முந்தையநாள் திருமறை வாக்குகளும் அதையே உறுதி செய்தன.

இந்த இரண்டு நாட்களில் அமிர்த்தராஜுடைய ஒரு முக்கிய சொற்றொடரை அறிந்துகொண்டேன். “சிறுவண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது” எவ்வளவு தூரம் சண்டைபோட்டோமோ அந்த அளவிற்கு நெருங்கிவிட்டோம். முக்கியமான காரியங்களை என்னைவிட அதி முக்கியத்துவம் கொடுப்பதும், முக்கியமற்றவைகளை என்னிலும் எளிதாய் எடுத்துக்கொள்ளுவதும் அவருக்கு வழக்கமாயிருந்தது. அது அமிர்தராஜுக்கு ஒரு சிறப்பு தன்மையாக காணப்பட்டது. இத்துணை எண்ண வேற்றுமைகள் கொண்டவர்கள் அன்புடன் இணைவது அரிதினும் அரிது. பனைமரமே எங்களை இணைக்கும் பாலமானது என்றால் அது மிகையாகாது.

கொலைப்பசி எங்களுக்கு, அங்கிருந்து புறப்பட்டு சாப்பிட செல்லும் வழியில் மீண்டும் பனை மரங்களை பார்த்தோம்.சாலையின் இருமருங்கிலும் பனை மரங்கள் அழகாக நின்றன. வாகனத்தை  அங்கே தான் நிறுத்திவிட்டு புகைப்படங்களை எடுக்கத்துவங்கினோம். ஒருபுறம் கடற்கரை மற்றொருபுரம் மணற்பாங்கான பகுதியில் காணப்படும் பனைமரக்காடு. வரிசையாக எல்கைகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியிருந்தனர்,  மற்றும் பிற பகுதிகளிலும் அதிகமாக நட்டு பேணி வளர்க்கப்பட்டிருந்தன.

அங்கிருந்து நாங்கள் சற்று தொலைவு சென்றபோது மீண்டும் ஒரு இடத்தில் மிகவும் சாய்வாக நிற ஒரு பனை மரத்தைப் பார்த்து நான் வண்டியை நிறுத்தினேன். பனை மரத்தில் ஏறவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் வளைந்து தனது தும்பிக்கையை நீட்டும் யானை போல் நின்ற அந்த மரத்தில் ஏறுவது எனக்கு உவப்பான ஒன்றாக இருந்தது. பனைக்கும் யானைக்கும் அதிக ஒப்புமை உண்டு. இரண்டுமே கரியநிறம். தந்தம் போன்ற குருத்தோலைகள் பனைமரத்திலும் உண்டு. யானை காட்டில் உயர்ந்து நிற்கும், பனை நாட்டில் உயர்ந்து நிற்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். பனை மரம் இருந்தாலும் ஆயிரம் பயன், இறந்தாலும் ஆயிரம் பயன். பனை ஓலைகளும் யனையின் காதும் ஒன்று போல் விரிந்து அசைபவை. நீண்ட ஆயுள் கொண்டவை. மனிதர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டவை. மனிதர்கள் இல்லாவிடினும் தமது பங்களிப்பை இப்பூவுலகிற்கு ஆற்றுபவை. மனிதனின் கரிய தோழர்கள் இருவரும். பனைமரங்களும் யானைகளும் பெரும்பாலும் ஒரே பகுதிகளில் வாழ்வதை நாம் காணலாம். உலகத்தின் எப்பகுதியினரும் பனைக்கும் யானைக்கும் உரிய கனத்தை கொடுப்பது கண்கூடு. வாழும் தெய்வங்கள் அருளும் கொடையாளர்கள். செல்வம் நிறைந்த யானையை வாடவிடுவதும் செல்வம் கொடுக்கும் பனைமரத்தை அழித்தொழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

யானை என்னை துதிக்கையில் சுமப்பது போன்ற ஒரு எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பற்றுமிடம் இல்லாததால் நான் விழாமல் என்னை சமன் செய்வது துதிக்கையில் பயணிப்பது போலவே இருந்தது. அப்படியனால் உயர ஏறும் பனைத் தொழிலாளி தன்னை எப்படி கற்பனை செய்வான்? அனைத்திற்கும் மேலே எழுவது கொடுக்கும் மன எழுச்சி அவனை தன்னிகரில்லாதவனாக்குகிறது. தனித்தன்மை கொண்டவனாக உயர தன்னை நிலைப்படுத்திக்கொள்ளுகிறான். அம்மரத்திற்கு பணி செய்வதை தன் வாழ்நாள் கடமையாக கொள்ளுகிறான். எப்படி பாகன் தன் யானையை விட்டு நீங்குவதில்லையோ அப்படியே, விடுமுறை இன்றி பனைக்காக தன் வாழ்நாளை அற்பணிக்கின்றான்.

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் எனது முகத்தை மறைக்கும் துண்டு விழுந்துவிட்டதை உணர்ந்து தேடிப்போனோம். கிடைத்தது. அங்கிருந்து போர்டோனோவா எனும் பரங்கிப்பேட்டை வந்து சேர்ந்தோம். மணி நான்கை நெருங்கிவிட்டிருந்தது. புரோட்டாவிற்கு பெயர்போன ஒரு சிறிய கடையில் அமிர்தராஜ் வண்டியை நிறுத்தினார். சும்மா சொல்லக்கூடாது, அமிர்தராஜ் சுவைகளை அறிந்தவர். மிகவும் சுவையான புரோட்டா சால்னா அங்கே சாப்பிட்டோம். நான் பல மாதங்களுக்குப் பின்பு முதன் முறையாக புரோட்டா சாப்பிடுகிறேன். எனக்கு அது அமிர்தமாக இருந்தது. அவர் என்னை பாஸ்டர் என்றும் கூப்பிடுவார் அதை சுருக்கி பாஸ் என்றும் கூப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும், பாஸ் கொஞ்சம் இருங்க வந்திர்ரேன் என்றுவிட்டு போனார். நான் வினோலியாவிற்கு போன் செய்தேன். இன்று பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் அவர்கள் தந்தையின் வீட்டிற்கு செல்லுவேன் என்று கூறினேன். ஆனால் எனக்குத் தெரியாது அவர்கள் வீட்டிற்கு அன்றையதினம் எங்களால் சென்று சேர முடியாது என்று. அமிர்தராஜ் தனது கரத்தில் எதையோ வாங்கிக்கொண்டு வெற்றிவீரன் போல சிரித்துக்கொண்டு வந்தார். அது பரங்கிப்பேட்டை பாத்திமுத்து கடை அல்வா. சற்று நேரம் அங்கிருந்து சுவைத்துவிட்டு, பிற்பாடு எங்கள் பயணத்தை துவக்கினோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (55)

ஓகஸ்ட் 22, 2016

இழந்த சொர்க்கம்

நாங்கள் கடலூர் செல்லும் வழியில் நான் அனேக பலா பழங்கள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அமிர்தராஜ் பலாப்பழங்கள் என்றால் உயிரை விட்டுவிடுவார். எனக்கு பலாப்பழம் பிடிக்கும் ஆனால் நான் பலாபழங்கள் சாப்பிடுவது குறைவு. பலாப்பழங்கள் எல்லாரின்
வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்கள் பலாப்பழம் சப்பிட்ட பின்பு அதன் விதையை கடித்து அதில் ஊறும் பாலினை உட்கொள்ளுவது நல்லது. பொதுவாக பலாப்பழம் சாப்பிட்ட பின் எங்களுரில் கை கழுவும் வழக்கம் கிடையாது. எண்னை மட்டும் தடவிக்கொள்ளுவார்கள். குறிப்பாக தண்ணீர்  குடிக்கக்கூடாது. என்னைப்பொறுத்த வரையில், தண்ணீர் குடிக்காமல் எந்த உணவையும் நிறைவு செய்யக்கூடாது. ஆனால் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. வயிற்றை கலக்கிவிடும்.

 

பலாப்பழங்கள் மிகவும் நல்லதுதான். ஒருவகையில் பூச்சிகொல்லி போன்ற எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் விளைந்தது. ஆகவே அது ஒரு சிறந்த பழமாக கருதி சாப்பிட உகந்தது. முக்கனிகளில் ஒன்றாக தமிழர்களால் சுட்டப்பட்டது. ஆகவே அதற்குறிய தனித்தன்மைகள் இருக்கவே செய்யும். இப்பழங்கள் யாவும் பண்ருட்டியில் இருந்து கொண்டு வரப்பட்டவைகள் என்பதை பிற்படுதான் அறிந்துகொண்டேன். பண்ருட்டி பலாப்பழங்கள் அவற்றின் சுவைக்காக பெயர் போனவை.

 

இலக்குவனுக்காக நாங்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் காத்திருந்தோம். சற்று நேரத்தில் அவர் வருவதாக தகவல் அனுப்பியிருந்தார். இலக்குவன் இயற்கை சார்ந்து களப்பணி  ஆற்றுபவர்,  அரசியல் தலைவர்களோடு நெருக்கமானவர், குறிப்பாக வைகோ அவர்களின் நெருங்கிய வட்டத்தைச் சார்ந்தவர். அனேக ஊடக நண்பர்களை தனது தொடர்பில் வைத்திருப்பவர். ஜெபக்குமாருக்கு மிகவும் அணுக்கமானவர். ஜெபக்குமார் எனது பயணம் சிறந்த முரையில் ஆவணப்படுத்தப்படவேண்டும் என நினைத்தே சர்வதேச புகைப்படக் கலைஞரான அமிர்த்தராஜை என்னோடு அனுப்பியிருந்தார். மேலும் அவருக்கு எனது பயணங்கள் யாவும் ஊடகங்களின் கவனத்தில் விழவேண்டும் என்பதும் எண்ணமாக இருந்தது. எனக்கு ஊடகங்கள் குறித்த எண்ணம் ஏதும் அவர் அளவு தெளிவாக இருக்கவில்லை.

இலக்குவன் சற்று நெரத்தில் வந்துவிட்டார் மணி கித்தத்தட்ட 12 ஆகிவிட்டிருந்தது. ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு சில நூறு மீட்டர்களிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் காணப்பட்டது. நாங்கள் உள்ளே செல்லும்போதே ஒரு பழைமையான தகர பலகையில் எழுத்துக்கள் பகுதி அழிந்து புராதான சின்னம் போல் கானப்பட்டது. எனக்கு அதைப் பார்த்தவுடனே தெரிந்துவிட்டது உள்ளே எப்படி இருக்குமென. நாங்கள் உள்ளே செல்லும்போது பாதையின் இரு மருங்கிலும் பனை மரங்கள் உயந்து நின்றன. ஆனால் அவைகள் பயன்படுத்தப்படாதவைகள் என்பதை தொங்கிக்கொண்டிருக்கும் காய்ந்த ஓலைகள் அறிவுறுத்தின. அமிர்த்தராஜ் சொன்னார், வரும்போது இங்கே நாம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும்.

கல்வெட்டு 1

நங்கள் உள்ளே சென்று வாகனத்தை நிறுத்தியபோது அந்த இடம் ஆளரவமற்ற ஒரு பகுதியோ என எண்ணும்படி  அமைதி கொண்டிருந்தது. என்னால் அந்த இடத்தின் மவுனத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. பாழடைந்த ஒரு பிரம்மாண்ட கட்டிடம் அது. ஒரு நடுநிலைப்பள்ளியை ஒத்திருந்தது அந்த கட்டிடம். குறைந்த பட்சம் 10 ஏக்கர் நிலபரப்பு கொண்ட இடமாக அதன் வளாகம் இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு பேய் பங்களாவிற்குள் நுழையும் கவனத்துடனேயே உள்ளே சென்றோம். முகப்பில் இரண்டு கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

05 – 03 – 1971 ல் திரு.ப.சோமசுந்தரம் (இயக்குனர், தமிழ்நாடு கதர்கிராம தொழிலகம்)அவர்களால் முதலில் திறக்கப்பட்டு, பின்னர் சிறிது சிறிதாக முன்னேற்றப்பாதையில் பயிற்சிக்கூடம், ஆராய்ச்சி கூடம் என தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.  10 – 02- 1977 ல் திரு.எல்.இளையபெருமாள் அவர்களால் மண்டலக் பனை ஆராய்ச்சி மற்றும் பனை பயிற்சி நிலையமாக தெவையான கட்டிடஙள் கட்டப்பட்டு  திறக்கப்பட்டது . இந்த மண்டல பனை ஆராய்ச்சி மற்றும் பனை பயிற்சி நிலையம்  கர்நாடக, கேரளா, ஒருங்கிணைந்த ஆந்திரா, பாண்டிசேரி, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலத்தின் மாணவர், மாணவியருக்கு பயிற்சி கூடமாக, மண்டல மையமாக இருந்த ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டிருக்கிறது. கல்வெட்டின் கீழே கூ. சம்பந்தம் அவர்களின் பெயரை படித்ததும் நான் நிர்கும் இடம் எத்துணை அற்பணிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது எனும் ஒரு பெருமூச்சு என்னிலிருந்து புறப்பட்டது.

எந்தவொரு காவலாளியும் இல்லை. கேட்பார் இல்லை, சமூக விரோதிகளின் வாழ்விடமாக மாறிவிட்டதோ என்று அஞ்சுமளவிற்கு அந்த வளாகம் அன்னியப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரே ஒரு கதவு எங்கள் எதிரில் திறந்திருப்பதைப் பார்த்தோம். அதேவேலையில் எங்களுக்கு வலதுபுறமாக இருந்து ஒரு மெலிந்த மனிதர் தோன்றினார். அவரை நோக்கி போகும்போது அங்கே ஒரு அறை திறந்திருந்தது. உள்ளே ஒரு பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்தார்கள். பதனீர் கிடைக்குமா எனக் கேட்டோம்.  இருக்கிறது என்றார்கள். முகவும் சுவையான மற்றும் தரமான பதனீர். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

கல்வெட்டு

கல்வெட்டு

நாங்கள் நுழைந்த அறையில் மிக பிரம்மாண்டமான பாய்லர் வைத்திருந்தார்கள். அங்கே பல ஆய்வுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் இருந்தன. ஆனால் ஆய்வுக் கருவிகள், பயிற்சிக் கருவிகள் எல்லாம் பயன்படுத்தப்படாமல் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. லெட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள தளவாடங்கள் அங்கே பயனற்று இருப்பது மனதை பிசைந்தது. மெல்ல பேச்சு கொடுத்தோம்.

 

ஆனால் அங்கிருந்தவர்கள் எங்களோடு பேச மறுத்துவிட்டனர். எங்களோடு பேச தகுதியான ஒருவர் இருக்கிறார் எனக் கூறி ஒருவரை அழைத்து வந்தனர். பார்ப்பதற்கு  இன்னும் மெலிந்த உடல், எளிமையான மனிதர். அவர் தான் அங்கே அனைத்து பயிற்சிகளும் கொடுப்பவர். பனைமரம் சார்ந்து எந்தவிதமான பயிற்சி என்றாலும் அதனை கொடுக்க அவர் ஒருவரே தகுந்த  பயிற்சியாளர். ஓலைகள், பனந்தும்புகள், கறுப்புகட்டி காய்ச்சுதல், கற்கண்டு அறுவடை செய்தல் என அனைத்தையும் அறிந்த்து வைத்திருகிறார். இன்றைய தினத்தில் பனை சார்ந்து இவ்விதமாக அனைத்து பயிற்சிகளும் கற்று தேர்ந்த ஒருவர் இவராக மட்டுமே இருக்க முடியும் என எண்ணினேன். அந்த எண்ணம் என்னில் ஒழுகிச்செல்லும்போது அவர் ஒரு மாபரும் மனிதராக உயர்ந்து நின்றார். ஆம் பனை சார்ந்த பயிற்சியளிக்கும் ஒரே ஆசிரியர் இவர். தமிழக மாநில மரத்தினை மத்திபுடன் பிறர் நோக்கச்செய்யும் சொத்து. நம்மிடம் எஞ்சியிருக்கும் அரிதினும் அரிதான முத்து. கண்ணகியின் முன்பு இருக்கும் காற்சிலம்பு போல் என எண்ணம் தோன்றியது. எவர் முன் அவரை விசிறியடிப்பது என்பது தான் குழப்பமாக இருந்தது. அனைத்தையும் இழந்த பிற்பாடு என்ன செய்வது? தழல் எரிக என சாபமிடவே  தோன்றியது.

 

ஆனால் எனக்குத் தெரியும் அவை மிகுந்த நகைச்சுவையுணர்வுடன் பார்க்கப்படும், ரசிக்கப்படும், விவாதிக்கப்படும் இறுதியில் எளிதில் மறக்கப்பட்டுவிடும். எனக்குப் புரிந்தது, வேறு விதங்களில் தான் இவைகளைக் கையாளவேண்டும். மக்கள் திரள் தங்களின் பாரம்பரிய உணவை தெரிவு செய்யவும், தங்கள் மரபு சார்ந்த பொருட்களின் மேல் மாளாத காதலும் கொண்டால் மட்டுமே அது நடைமுறைக்கு  வரும். மொத்த தமிழகமும் பனை மரத்தை தனது விழாக்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டும், தனது உணவில் பனை பொருட்களை அங்கமாக்கிகொள்ளவேண்டும், தனது  பயன்பாட்டில் பனை மர பொருட்கள்  இன்றியமையாத ஒன்றாக மாற்றிக்கொள்ளவெண்டும். கருத்து ரீதியாக பனைமரம் தமிழர்களின் ஆதி சின்னமாக, ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாக எழுந்து அவர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்த ஒன்றாக மாறவேண்டும். அதற்கு அற்பணிப்புடன் காலத்தை செலவுசெய்யவெண்டும்.

 

அந்த மனிதர், எங்களுக்கு ஒரு உயரதிகாரி இருக்கிறார் அவரை நீங்கள் பர்ப்பது நல்லது என்றார். நாங்கள் மூவரும் அவரது அறைக்குச் சென்றோம். சுமார் 500 பேர் அளவுக்கு வந்துபோகும் அளவுக்கு பிரம்மாண்டமான இடத்தில் எங்கள் மூவரையும் சேர்த்து மொத்தம் 7 பேர் மட்டுமே இருப்பது  மன சோர்வை அளித்தது. அங்கிருக்கிறவர்களுக்கு எவ்விதமான மனநிலை இருக்கும் என்பது அவர்களை பேச அனுமதித்தபோதுதான் புரிந்தது.

 

முதலில் பேச தங்கியவர்கள் பிற்பாடு தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். பனைத்தொழிலாளர்களுக்கு என மத்திய அரசிலிருந்து வந்த பணத்தை, கட்டிடங்கள், வாகனங்கள் என கணக்குகாட்டியதை அடுத்து ஆய்வுக்கு வந்த ஒரு மாவட்ட ஆய்வாளர் பணம் விரயமாக்கப்படுகிறது என தனது புகார் அறிக்கையை சமர்பித்திருக்கிறார். அதன் பின்பு 2001 முதல் மத்திய அரசின் உதவிகளோ மாநில அரசின் உதவிகளோ எதுவும் இவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இவர்களின் சம்பளம் உட்பட. என்றேனும் ஒரு மாறுதல் நிகழும் என காத்திருக்கின்றனர்.

 

மனம் கனத்திருந்தது, ஒருவித பாரம் நெஞ்சை அழுத்தியது. பன்னாட்டு நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்படுகிற சூழலில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக  விளங்கும் பனை சார்ந்த பயிற்சிகளுக்கு அரசு எவ்வித முனைப்பும் எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கவில்லை. சுமார் 16 வருடங்களாக பனை ஆய்வு உறைநிலையில் இருப்பது குறித்து யாருக்குத் தெரியும்?. இலக்குவன் 30 வயது நிரம்பியவர். அவருக்கு இப்பகுதியில் பனை ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிலையம் இருப்பது தெரியாது என்பதை கூறும்போது 5 மானிலங்களைச் சார்ந்த எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கனவு எவ்விதம் நம் கண்முன்னே உளுத்துப்போய் நிற்கிறது எனக் கண்டோம்.

 

நான் எனது அனுபவத்தின் வாயிலாக குறைந்த ஓலைகளைக்கொண்டு அழகிய பொருட்கள் செய்வது எப்படி? என சில செய்முறை பயிற்சிகளைக் காண்பித்தேன். எவ்விதமாக நாம் உள்ளூரிலேயே சந்தையைப் பெற்று நிறைவடையமுடியும் என ஒரு சில ஆலோசனைகளைக் கூறினேன். பயிர்சிYஆலர் நெகிழ்ந்துபோனார். சார்! ஒரு பத்தாண்டுகளுகு முன்பாவது நீங்கள் இங்கே வந்திருக்கக்கூடாதா, எங்களை ஊக்கப்படுத்த ஒருவரும் இல்லையே என நாங்கள் நாங்கள் துவண்டுபோயிருந்த சமயம் அது. இப்போதோ நாங்கள் மீள இயலா பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றோம். எங்கள் நிலைகளை அரசுக்கு வெண்டுமானால் எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் எங்கள் பெயர்களை வெளியிடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

 

நாங்கள் வெளியே வந்தோம். அந்த வளாகம் ஒரு பனங்காடு என்று சொல்லலாம். பனையே புல், பனையே  புதர், பனையே மரம், பனையே சருகு என பனையே எல்லாமாகி காணப்பட்டது. அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

அமிர்தராஜும் நானும்

அமிர்தராஜும் நானும்

 

நானும் அமிர்த்தராஜ் அவர்களும் சேர்ந்து நிற்கும் ஒரு புகைப்படத்தை எடுக்க இலக்குவனை கேட்டுக்கொண்டோம். பயிற்சியாளர், எங்களுக்கு ஒரு தொடர்பு எண்ணைக் கொடுத்து, பனை ஓலைகளைச் செய்து விற்கும் ஒரு பெண்மணி இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் பார்ப்பது நல்லது என்றார்.  அங்கிருந்து மேற்கோண்டு எங்கு செல்லலாம் என எண்ணம்கொண்டு யோசனையில் ஆழ்ந்தோம். இலக்குவன் சொன்னார், ஏன், பத்திரிகையாளர்களை சந்திக்கலாமே? ஆம் அதுவும் சரியென்றே பட்டது. மணி இரண்டைத் தாண்டியிருந்தது இன்னும் உணவுண்ணவில்லை.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com


%d bloggers like this: