Archive for செப்ரெம்பர், 2016

பனைமரச்சாலை (90)   

செப்ரெம்பர் 29, 2016

நிறைவாக

நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அனைவரும் ஒவ்வொன்றாக விடைபெற்று சென்றபோது தான் ராஜாதாஸ் சித்தப்பா குறித்த  நினைவு வந்தது. எனக்கு சால்வை இட்டவுடனேயே பொய்விட்டார்கள். நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்கள். எனது பனையோலை படங்களை தலிகீழாக நின்று உற்சாகப்படுத்தும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அவர் ஒருவர் தான். நான் கால தாமதமாக வந்ததால் இருக்கும். அமிர்தராஜும் மாயமாக மறைந்துவிட்டார்.  அவர் முதலிலேயே சொல்லிவிட்டார், உங்களை நாகர்கோவில் வரை கொண்டு சேர்ப்பது எனது பொறுப்பு. அதன் பின்பு நான் நிற்கமாட்டேன் என. ஆனாலும் இப்படி நழுவிவிடுவார் என நான் சிறிதும் எண்ணவில்லை. மற்றபடி அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசியே விடைபெற்றேன்.

எனது பைக்கின் முன்புறம் மித்ரனும்  பின்பகுதியில் ஆரோனும் ஜாஸ்மினும் ஏறிக்கொள்ள மீண்டும் கலெக்டர் ஆபீஸ் கடந்து சென்றோம். பனைமர வேட்கைப் பயணம் வந்துசென்ற எந்த சுவடும் தெரியவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப்  பின்பு சொந்த ஊரில் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளையும் சுமந்து எனது வண்டி சென்றது. அவர்கள் தான் எனக்காக மிகப்பெரும் தியாகம் செய்திருக்கிறார்கள், அவர்களை வேறு எப்படி அங்கீகரிப்பது. பார்வதிபுரம் நோக்கி எனது வண்டி உற்சாகத்துடன் சென்றது.

எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரையில் பைக்கில் செல்லும் கணங்கள் எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியைக் கொடுப்பது. ஆரோனும் மித்திரனும் எதையும் இழப்பார்கள் ஆனால் என்னோடு வண்டியில் பயணிப்பதை இழக்க விரும்பமாட்டார்கள். எனது வண்டியின் பெட்ரோல் டாங்க் மித்திரன் அமரும் இருக்கை எனவும் பின்பக்க ஃபூட் ரெஸ்ட் ஆரோன் நிற்கும்படியாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதை எண்ணி நான் வியக்காத நாள் இல்லை. அவர்கள் இல்லையென்று சொன்னால் பயணம் அதன் ருசிகர தன்மையை இழந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். வழி நெடுக இருவரும் பேசிக்கொண்டே வருவார்கள். மித்திரன் பேசுவது எனக்கு கேட்காது. ஆரோன் நின்றபடி எனது காதில் பேசுவான். மித்திரன் பேசுவதை கேட்கவேண்டும் என்று சொன்னால் எனது உடலை முன்வளைத்து காதை அவன் வாயருகே கொண்டு சென்று கேட்கவேண்டும். ஒரிரு சொற்களில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்துவிடும். இப்பயணத்தை அவர்கள் இருவருடனும் இணைந்து முடிப்பது நான் பெற்ற பெரும் பாக்கியம்.

பனங்காட்டில் சிறு நரிகளுடன், ரசாயனி

பனங்காட்டில் சிறு நரிகளுடன், ரசாயனி

நான்  பனைகளை பார்க்கச் சென்ற இடங்களெல்லாம் அவர்களை என்னோடு அழைத்துச் சென்றதல்லாமல் தனிமையாக எங்களுக்கு வேறு இனிய பயணம் என ஒன்றை நாங்கள் முதன்மைப்படுத்தவில்லை. எனது பிள்ளைகளுக்கு பனை மரத்தை என்னை விட சிறப்பாக அறிமுகம் செய்யும் ஆசிரியர் கிடைப்பது அரிது. அவர்களிடம் இருந்தே நான் எனது பரப்புரையை துவங்கினேன். அவர்களுக்கே எனது வாழ்வின் முக்கிய கணங்களை முதலில் அறிமுகம் செய்தேன். ஆகவே நான் உள்ளாக நம்பிய ஒன்றை எனது நண்பர்களுக்கும், நாம் பேசும் மொழியில் எனது கருத்துக்களை பரிசீலிப்பவர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். ஒருவகையில் பனை எனும் பிம்பம் அனைவரது நினைவுகளின் அடியாழத்திலிருந்து முளைத்து ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணும் ஒரு வாய்ப்பு கிடத்தது மகிழ்ச்சியே.

இவ்வெண்ணங்கள் நமது வாழ்வில் புது சிந்தனைகளை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு பனை புரட்சி ஏற்படுமென்றால். தமிழகம் இழந்த பனை வாழ்வின் ஒரு சில பகுதிகளையாவது மீட்டெடுக்கும் அரிய வாய்ப்பு அருகில் வந்திருக்கிறது என்றே பொருள். நமக்கு கிடைத்திருக்கும் இருபத்தி ஓராம் நூற்றாண்டின் அறிவியல், எந்திரவியல் சார்ந்த சாத்தியங்களும் மற்றும் பொருளியல் விடுதலைகளையும் இணைத்து இழந்தவற்றை வரலாற்றுணர்வுடன் மீட்டெடுப்பது நமது கடமையாக முன்னிற்கிறது.

பார்வதிபுரம் சானல் தாண்டி, பழைய சர்குலர் நிறுத்துமிடம் வழியாக பெருவிளை சாலையைப் பிடித்தோம். அஞ்சலகம் எதிரிலே ஒரு ஒற்றைபனைமரம் நின்றது கண்ணில் பட்டது. எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை ஆனால், பெருவிளை கிராமத்தில் பொதுவிடத்தில் நிற்கும் பனை மரம் இது ஒன்றுதான் என நினைக்கிறேன். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கூட ஊரில் தனியார் தோட்டங்களில் பனைமரங்கள் அதிகம் நிற்பதை பார்க்கலாம். நான் கூட தலைக்கு ஷாம்பூ போடுவதற்கு பதிலாக பனம்பழங்களை தேடி எடுத்து வருவேன். பெரிசுகள் என்னை ஸ்னேகமாக பார்த்து புன்னகைப்பார்கள். இன்று வீடுகள் அமைப்பதற்காக பெரும்பாலானவற்றை வெட்டி வீழ்த்திவிட்டார்கள். பெருவிளையின்  ஒற்றைப்பனைமரம் காப்பாற்றப்பட ஒரு இயக்கத்தை அமைப்பது நல்லது என்று கூட தோன்றியது. பெருவிளையில் இடத்தின் மதிப்பு அப்படி.

வீடு வந்து சேர்ந்தபோது அனைவரும் வந்திருந்தார்கள். அப்பாவின் முதல் நினைவு நாள் ஜுன் 6ஆம் தேதி. ஆகவே இன்னும் மூன்று நாள் மாத்திரம் இருக்கிறது. எங்கள் வீட்டில் என்னைத்தவிர மூன்று அக்கா முன்று அண்ணன்கள். என்னைத்தவிர அனைவரும் கிட்டார் வாசிப்பார்கள். அப்பா தான் அமெரிக்காவிலிருந்து முதலில் கிட்டார் வாங்கி வந்து ஆர்வத்தை ஏற்படுத்தியது. குடும்பமாக காலையும் இரவும் ஜெபிக்கும்போது அப்பா ஆர்மோனியம் வாசிப்பார்கள். எல்லாரும் கூடிவிட்டால் அது ஒரு பரலோக அனுபவம் தான். கிறிஸ்தவ பக்திப் பாடல் பாடிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. உள்ளே நுழைந்த போது அம்மா என்னை உச்சி முகர்ந்து வரவேற்றார்கள். பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறி அம்மா பிரார்த்தனை ஏறெடுத்தார்கள்.

மேல் மாடியிலிருக்கும் எனது அறைக்குச் சென்றேன். அது தான் எனது வாழ்வினை வரலாற்றினைச் சொல்லுமிடம். அந்த ஒரு அறை குறித்தே ஒரு வரலாற்று நாவல் எழுதிவிடும் அளவு அதனுள் பல்வேறு நினைவுகள் ஆவணங்கள், தொல்பொருள்கள், கடிதங்கள், புத்தகங்கள், மற்றும் ஓலைச்சுவடிகள் சேமிக்கப்பட்டிருக்கும் இடம். நான் அனிச்சையாக திருமறையை எடுத்தேன். எனக்கு மிகவும் பிரியமான திருமறை வசனத்தை தேடிக் கண்டடைந்து வாசித்தேன்.

“இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.” (திருவெளிப்பாடு 7: 9)

வாசித்து முடிக்கையில் எனது உடல் சிலிர்த்திருந்தது. மயிர் கூச்செரியும் உணர்வு. பரவசமான ஒரு தருணம் என்னை ஆட்கொண்டது. கனவில் ஆழ்ந்தது போலவும், மேகங்கள் என்னைச் சூழ்ந்தது போலவும் உணர்ந்தேன். கடவுளின் அன்பின் கரம் பரிவுடன் என்னை அணைத்துக்கொள்ளும் தாயின்  மென்மையும் வெம்மையும் உணர்ந்தேன். எனக்குப் பிரியமான நார் கட்டிலில் கண்களில் நீர் வழிய  அப்படியே படுத்துவிட்டேன்.

இந்த வசனத்தை நான் முதன் முதலில் பயன்படுத்தியது ஐக்கிய இறையியல் கல்லூரியில் எனது மாதிரி ஆராதனையின் ஆரம்ப அழைப்பு வாக்கியமாக தான். அன்று எனக்கு எதிர்வினையாற்றிய  ஆசிரியர் டாக்டர் மைகேல் டிரேபர், அர்த்தம் பொதிந்த வசனத்தை, அதன் பிரகாசமான சாத்தியங்களை நான் தொட்டெடுக்க தவறிவிட்டேன் என்றார்கள். அது எனது வாழ்வைப் புரட்டிப்போட்ட விமர்சனம். ஆம் அந்த வசனத்தை நான் பிரயோகிக்கையிலேயே அறிந்துகொண்டேன், மொத்த சிற்றாலயமும் அந்த வசனத்தால் கட்டுண்டிருந்தது. அந்த வசனத்தின் வீச்சு என்ன என நான் பிற்பாடு எண்ணாத நாட்கள் குறைவு.

யோவான் எனும் சீடன் பரலோக காட்சியொன்றைக் காணும் தருணத்தை மேற்கூறிய வசனம் காட்சிபடுத்துகின்றது. பரலோக வாழ்விற்காக இப்பூவுலகிலேயே வெள்ளை அங்கி தரித்து பரலோக பாடல்களையும் நடனங்களையும் பயிற்சி செய்வோர் கூட பொருட்படுத்தாத ஒரு வார்த்தையாக  குருத்தோலை இவ்வசனத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ பொது மனநிலையில் பரலோகம் போகவேண்டும் எனும் விருப்பத்தையே அடிநாதமாக கொண்டு பரப்புரைகள் செய்யப்படுவதுண்டு. தொலைவில் இருக்கும் கடவுளைச் சேரும் வழியாக இயேசுவை பார்க்கிறார்களே அன்றி அருகில் வந்த கடவுளாக அல்ல. இந்த வேறுபாட்டினால் அனேகருக்கு பரலோகம் செல்லும் நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்வது கடைசி கட்ட பணியாக துரிதமாக நடந்துகொண்டிருக்கிறது. அது நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு சொல்லாதவைகளாயும், உதாசீனம் செய்பவைகளாயும், எதிர்காலத்தை   சுட்டிக்காட்டி நிகழ் காலத்தை காவு வாங்கும் ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஒரு முறை ஒரு சகோதரி என்னிடம் கேட்டார்கள் பாஸ்டர் ஜீவ விருட்சம் என்று சொல்லுகிறார்களே அது பனைமரமா? அது ஒரு தொன்மையான நம்பிக்கையிலிருந்து கிளைத்திருக்கிறதை நாம் காண முடியும். பனை மரத்தையே பூலோக கற்பக தரு என அழைப்பதை நாம் பார்க்கிறோம். கர்பக தரு தேவர்களின் உலகில் இருக்கும் ஒரு மரம். கேட்பதைக் கொடுக்கும் மரம். கேட்பது எப்படி என்பதுதான் கேள்வியே. அதன் பதில் இவ்விதமாக இருக்கலாம், மனிதனும் இயற்கையும் ஒன்றிணையும் சமநிலைப் புள்ளியே தேவருலக வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் அனைத்தும் தத்தமது பங்களிப்பை அளிப்பனவாக, பகிர்ந்துகொள்ளுபவையாக, சார்ந்திருப்பனவாகவும்  இருக்கும்.

இத்திருமறைப் பகுதி கூறும் வெளிப்பாடு விண்ணக வாழ்வை சுட்டுவதாக பொருள் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகில் இறைவனின் திருவுள எண்ணம் நிறைவேறும் ஒரு காட்சியாகவும் நாம் உருவகிக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் விண்ணக வாழ்வு என்பது இழந்தவைகளை மீண்டும் பெற்றுகொள்ளும் வாய்ப்பு என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

“9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

10 அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

12 “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்”

என்று பாடினார்கள்.

13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.

17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

விடுதலைப்பயணத்தில் கண்ட பேரீச்சைகள் ஒரு மிகப்பெரும் தாக்கத்தை இஸ்ரவேலர் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது. அது கிறிஸ்தவ வாழ்விலும் பெரும் குறியீடுகளை அளித்தபடி இருக்கிறது. “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்”. பெரும்பாலும் இதைச் சிலுவையுடன் ஒப்பிட்டுச் சொல்லுகையில் பெத்தானியிலிருந்து புறப்பட்ட இயேசுவின் பயணம் சீர்துக்கிப் பார்க்கப்படுவதில்லை. அப்படி நாம் பார்கத் துவங்கினால் இயேசு ஏன் சிலுவை நோக்கிச் சென்றார் என்பது தெளிவாகும்.

யாருடைய கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், யார் பசியடையாமல் இருக்கவேண்டும்? யார் வெயிலின் உக்கிரத்தில் வாடாமல் இருக்கவேண்டும்? தங்கள் வாழ்வில் அவைகளை இழந்தவர்கள் அல்லவா? ஆகவே, பனை தொழிலாளர்களை தொடர்ந்து புறக்கணித்து  வரும் திருச்சபை, சமூகம் மற்றும் அரசு யாவையும் விசையுடன் திருப்பும் ஒரு அலை எழும்பவேண்டும். அவ்விசை ஒர் அங்கீகாரம் பெற்றுத்தரும் வரையில் உச்ச விசையுடன் ஆர்ப்பரித்து எழ வேண்டும்.

பரலோகம் செல்வோர் என கருதிக்கொள்ளும் அனைவருக்கும் நான் நகைச்சுவையாக சொல்லும் ஒன்று உண்டு. அங்கே இருக்கும் பனைமரத்தில் என்ன செய்ய போகிறீர்கள். ஓலைகளை கரத்தால் தீண்டவும் வெட்கப்படும் சூழலில் கடவுளின் முன்னால் நிற்பவர்கள் அனைவரும் வெறும் பனை தொழிலாளர்களாக மட்டுமே இருந்துவிடப்போகிறார்கள். ஒன்றில், அனைவரும் பனை ஏற கற்றுக்கொள்ளட்டும், இல்லையேல் குறைந்தபட்சம் பனை ஏறுபவர்கள் கரத்திலிருந்து தாழ்மையுடன் ஓலைகள் வாங்கட்டும். ஓலை இன்றேல் பரலோகம் இல்லை.

எனது அறையை விட்டு வெளியே வந்தேன். தெருவில் எனது பைக் குருத்தோலையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (89)

செப்ரெம்பர் 27, 2016

 

பயணத்தின் உச்சகணம்

கன்னியாகுமரி தோட்டகலை சார்பில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது இவைகளுள் மிக முக்கியமான ஒன்று. ஆம் டாக்டர் பிரேம் என்னிடம் கூறியதை நினைவு கூறுகிறேன். நீ எதற்காக பயணிக்கிறாயோ அதை சுருங்க எழுதி அனுப்பு, தெரிந்தவர்களுக்கு நான் அதை அனுப்புகிறேன் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளட்டும் என்றார்கள்.  மிக விரிவான ஒரு தளத்தை எனக்கு அவர்கள் அமைத்துக்கொடுத்ததை நான் மறுக்கவோ மறைக்கவோ கூடாது.

இருக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்ட ரோட்டரி சங்க ஹாலில் என்னை பேச அழைத்தார்கள். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேராததாலும், மீண்டும் மாணவர்களை அமரசெய்து அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததாலும் வெளியில் நின்றே பேசுகிறேன் என்றேன். ஒத்துக்கொண்டார்கள்.  பத்திரிகையாளர்கள் வருவதாக கூறியிருந்தார்கள் ஆனால் அன்று வைக்கோ நாகர்கோவில் வந்திருந்தமையால்  ஒருவரும் வரவில்லை.

முதலில் எனக்காக கால் கடுக்க நின்ற மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் பெரியவர்களிடமும் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரிவிட்டு, எதிர்கால சந்ததிகளை நோக்கி பேசத் துவங்கினேன்.

அன்பார்ந்த மாணவர்களே, குமரி நிலம் முக்கனிகளும் விளையும் சோலைவனம். நாம் இங்கு பிறந்தது நமது நல்லூழ். நமது ஊரில்தான் சோம பானம் சுரா பானம் எனும் பானங்களுக்கு நிகராக கருதப்படும் பதனீர் மற்றும் கள் ஊறிக்கொண்டிருந்த பனை மரங்கள் இருந்தன. இன்று 30 வருடங்களில் நிலை தலைகீழாக மாறிவிட்ட சூழ்நிலையில் உங்களை நான் சந்திக்கிறேன். உங்களில் ஒரு சிலர் கிசுகிசுப்பாக பனை மரம் எப்படி இருக்கும் என உங்கள் தோழிகளிடம் கேட்பீர்களானால் நான் ஆச்சரியப்படப் போவதில்லை. கல்வி என்பது பாடபுத்தகங்களைப் படிப்பது மட்டுமே என்ற கறாரான ஒரு வாழ்வுமுறைக்குள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பனை மரம் ஒருவித்திலைத் தாவர வகையச் சார்ந்தது. உலகெங்கும் 2000 வகைகளுக்குமேல் பனை மரங்கள் இருந்தாலும், பயனளிக்கும் தன்மையில் பனைமரம் தென்னை மற்றும் பேரீச்சையை விஞ்சி நிற்கிறது என்றே நான் கருதுகிறேன். முக்கியமாக நமது பாரம்பரியத்தில் உள்ள கல்வி, ஓலைகளில் எழுதி பகிரப்பட்டதால், அவை அனைவருக்கும் உரிய எளிய ஒன்றாக இருந்திருப்பதை நாம் காணமுடிகிறது. உலகம் வியக்கின்ற மாபெரும் காவியங்கள் கலைகள் அறிவியல் மருத்துவம் ஆன்மீகம் இன்னும் பற்பல துறை சார்ந்த பதிவுகள் ஓலைகளில் எளிதாக பதியப்பட்டன. ஆகவே ஏதேனும் ஒரு துறையில் கற்பதும் கற்பிப்பதும் மரபாக நமக்கு இருந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் தெருவுக்கு ஒரு பாரம்பரிய வைத்தியர் இருப்பது வழக்கம். அவர்கள் அனைவரும் ஓலை சுவடிகளையே தங்கள் மருத்துவ குறிப்புகளுக்கு ஆதாரமாக கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இலக்கியம் அச்சேரிக்கொண்டிருந்த தருணத்திலும் ஓலைகள் தங்கள் பங்களிப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தன என்பது ஆச்சரியமளிக்கும் உண்மை. இன்றும் கூட ஓலையில் மத்திரம் எழுதப்பட்ட தாயத்துக்கள் அணிவது, ஜாதகங்களை ஓலையில் பதிப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.

குமரி மாவட்டம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பனைமரக்காடாக இருந்திருக்க வேண்டும், கடற்கரை ஓரங்கள், வேளிமலை அடிவாரங்கள், சமவெளிகள் மற்றும் குன்றுகள் எங்கும் பனை மரங்கள் இன்று எஞ்சி நிற்பதைப் பார்க்கும்போது, நமது மாவட்டம் பனை மரங்களினால் உய்வடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அத்துணை முக்கியமான ஒரு மரம் நமது கண்களில் நின்று மறைவது நமது முக்கிய பண்பாட்டு கூறின் அழிவேயாகும்.

எனது சிறு வயதில் பனை சார்ந்த உணவுகள் எனது வீட்டின் முற்றத்திலேயே கிடைத்தன. பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் அன்று கிடையாது. இன்றோ பணம் கொடுத்தும்கூட நம்மால் பெற முடியாமல் நாம் பனையை விட்டு தூரம் போய்விட்டோம். ரப்பர் நமக்கு பணப்பயிர் ஆனால் இன்று பணம் கொடுத்தும் கூட நம்மால் நல்ல பதனீரோ அல்லது நல்ல கருப்பட்டியோ பேற முடியாத அவல நிலையில் இருக்கின்றோம்.

பனை ஓலைகளே என்னை அதன் பால் ஈர்த்தன. எப்போதும் நம்முடன் வைத்துக்கொள்ளகூடிய மிக எளிய பொருள். அது எனது வாழ்வை திசை திருப்பியது. ஓலை தன்னை திசைகாட்டியாக நிறுத்திக்கொண்டு என்னைப் பனை மரங்களைப் பார்க்கச் சொன்னது. அந்த பிரமாண்டமான உலகத்திற்குள் நான் காலடி எடுத்து வைத்து இருபது ஆண்டுகள் கடந்தும் என்னால் அதன் பிரமிப்பிலிருந்து நீங்க இயலவிலை. இந்தியாவில் எங்கெங்கு மக்கள் பனை சார்ந்து வாழ்கிறார்கள் அவர்களது சமூக சமய மற்றும் பொருளாதார பஙளிப்பு என்ன என்பது என் மனதில் கேள்வியாக இருந்தது.

3000 கி மீ தூரம் நான் பயணித்து வருகையில், பல்வேறு விதமான சமூக மக்கள் பனை மரத்தை நம்பி வாழ்வதை கண்டுகொண்டேன். பனை மரம் பல்வேறு சமூகத்தினருக்கு வாழ வாய்ப்பளித்திருக்கிறது. குமரி மாவட்டத்திலும் அதை நம்பி வாழ்ந்த ஒரு சமூகம் உண்டு. அதனால் அதை ஒரு சமூகத்திற்குரியதாக மட்டும் குறுக்கி நாம் பார்க்காமல், நமது வாழ்வைச் சார்ந்த ஒன்று எனவும், சிலர் அதனுடன் கூடிய தொடர்பால் நமக்கு மிகச்சிறந்த உணவுகளையும், பானங்களையும், இயற்கைச் சார்ந்த வீட்டு உபயோக பொருட்களையும் தந்திருக்கிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில் பனைசார்ந்து தமது வாழ்வை அற்பணித்து கொண்டவர்கள் நமது சமூகத்திற்கு ஆற்றிய பணி மிக முக்கியமானது.

குமரி மண்ணில வாழும் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மரத்தை சுட்டவேண்டுமென்றால் அது பனை மரம் மட்டுமே. சமய நல்லிணக்கத்துக்கான இந்த மரத்தை பேணிப்பாதுகாப்பது நமது சமுகத்தின் ஒற்றுமைக்கும் நல் அடையாளமாக இருக்கும். தொன்று தொட்டு நமது உறவுகள் இயற்கையுடன் பின்னிப்பிணைத்திருப்பது போல பனையும் சமூக உறவுகளை பேணி காக்கும் ஒரு முக்கிய அடையாளமாக முன்னெடுக்கப்படவேண்டும்.

நமது பாரம்பரிய விழாக்களின் ஒரு பகுதியாக, சொக்கப்பனை கொழுத்துதல், குருத்தோலை கொழுக்கட்டை செய்தல், பொங்கல் பாயாசங்களில்  சேர்க்கும் கருப்பட்டி, தோரணங்கள் போன்றவைகள் முக்கியமாக நமது நினைவில் வந்து போகின்றவை. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் சந்தைகளிலிருந்து பனங்கருப்பட்டி மாட்டு வண்டிகளில் நீண்ட வரிசையாக செல்லுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். எனது சிறு வயதில் மார்த்தாண்டதில் மிகப்பெரிய அசோக் லைலேண்ட் லாரிகளில் கருப்பட்டிகள் ஏற்றப்படுவதை பார்த்திருக்கிறேன். 30 வருடங்களுக்கு முன்பு கூட கருப்பட்டி பிஸினஸ் செய்யும் வேலையில்லா பட்டதாரி வாலிபர்களை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இன்று பசுமையும் செழுமையுமான நமது ஊர் தனது முக்கிய அணிகலனான பனையை இழந்து மூளியாகிப்போய்விட்டது. இந்த நிலையை மாற்ற இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின்   தங்கள்  பனை மரம் நோக்கி திருப்பினாலே எனது பயணம் முழுமை அடையும் என  நம்புகிறேன். உங்கள் வீட்டின் அருகில் பனை மரங்களை நடுங்கள், இடமில்லையென்று சொன்னால் குளக்கரைகளிலோ ஆற்றோரங்களிலோ பொதுவிடத்திலோ அல்லது கல்லூரியின் சுற்றுசுவரை ஒட்டி பனை மரங்களை நடுங்கள். இயற்கை சார்ந்த விழிப்புணர்வை உங்கள் கல்லூரிகளில் முன்னெடுக்கும்போது பனையும் அதன் அங்கமாக இருக்கட்டும்.  வாய்ப்பு கிடைக்கும்போது பனை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள், பனை சார்ந்த உணவுகள் மற்றும் பொருட்கள் நமது மக்களின் வாழ்வில் தொடர்ந்து கிடைக்க முயற்சியை நாம் இணைந்து எடுப்போம். அனைவருக்கும் நன்றி எனக் கூறி எனது உரையை முடித்தேன்.

சில இடங்களில் நிறுத்தி, அவர்களிடம் உரையாடுவது போலவே எனது பேச்சை அமைத்துக்கொண்டேன். மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டார்கள். மாணவிகள் ஒரு சிலர் கேள்விகள் கேட்டார்கள். ஓலையில் நான் செய்யும் பொருட்கள் பற்றியும், எனது பயணம் எப்படி இருந்தது என்பதையும் குறித்த கேள்விகளாக அவை இருந்தன.

பேராசிரியர் டேவிட்சன்

பேராசிரியர் டேவிட்சன்

நான் பேசி முடிக்கையில் கன்னியாகுமரி தோட்டக்கலை துறை சார்பாக பேராசிரியர். எஸ். எஸ். டெவிட்சன் அவர்கள் பேச வந்தார்கள். அவர்களை நான் முதன் முறையாக இப்பயணத்தில் தான் சந்திக்கிறேன். தமிழகத்தின் இயற்கை ஆர்வலர்களில் முக்கியமாக கருதப்படக்கூடியவர், குமரி மலைகளில் வாழும் காணி பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். காட்டு வளங்கள் கொள்ளை போகாமல் இருக்கவும், நாட்டு வளங்கள் கொள்ளைப்போகாமல் இருக்கவும் தொடர்ந்து பாடுபட்டு வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க முயற்சி செய்த முன்னோடி, கானியல் புகைப்படக் கலைஞர், ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர், பல்வேறு தளங்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர், அவைகளில் சிறந்த பங்களிப்பாக பெல்வேறு காளன்கள் குறித்த அவரது அவதானிப்பைக் கூறலாம்.   யுனஸ்கோ சார்பில்  மனிதனும் காட்டு விலங்குகளுக்கும் ஏற்படும் மோதலை நிலையாக தடுப்பது எப்படி எனும் உரையாடலில் ஈடுபட்டிருக்கிறார். பனை மரங்கள் உள்ளிட்ட பல மரங்களை தொடர்ந்து நட்டு பேணி வருபவர்.

அவர் தனது பேச்சை இப்படி துவங்கினார் “அழகான ஒரு பெண் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள், அவளின் அழகில் மயங்கிய ஒரு வாலிபன் அவனது நண்பனிடம் கேட்டானாம், “குட்டி அழகா இருக்காளே யாரு இது”, அதற்கு நண்பன் சொன்னானாம், “இவளா? இவா பனையாறிக்க மகளாக்குமே” என்றானாம். இப்படியாக பனை ஏறும் தொழிலாளர்கள் அனுபவித்த சமூக அங்கீகாரமற்ற நிலைமை அவர்களை இந்த பணியை விடச்சொன்னது. கல்வி கற்ற பிள்ளைகள், தங்களைப் பெற்ற தகப்பன் பனை மரத்தில் ஏறுவதை அவமானமாக கருதினார்கள். உடலுழைப்பைச் செலுத்தும் தொழிலுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை.  ஆகவே இனிமேல் பனை ஏறும் ஆட்கள் கிடைப்பது கடினம் என்றார்கள். குட்டை ரக பனைகளை வீட்டில் வளர்த்து பெண்களும் நின்றபடி பாளை சீவ முடியுமென்றால், பனை மரத்திற்கான எதிர்காலம் இருக்கிறது” என்றார்கள். புதிய ரகங்களை கண்டுபிடிக்க அரசு முயற்சி செய்யவெண்டும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் எப்படியாகிலும் அரசு கவனத்தை ஈர்க்கவேண்டும். மக்கள் அடிப்படையில் பனை மரம் காக்கப்படவேண்டும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் எங்கே துவங்குவது எப்படி முன்னெடுப்பது என்பது அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஆகவே ஒரு எளிய துவக்கமே தற்போதைய தேவையாக இருக்கிறது, மக்களை ஒன்றிணைத்து சிறிய ஆக்கபூர்வமான மாற்றங்களை ஒரிரு இடங்களில் வெற்றிபெறச் செய்தால் கண்டிப்பாக பனை மரம் முக்கியத்துவம் பெறும், பனைதொழிலாளிகளும் வாழ்வு பெறுவார்கள்.

வந்திருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். அங்கிருந்து நான் வீட்டிற்கு புறப்பட ஆயத்தமானபோது திமுதிமுவென இரு சக்கர வாகனங்கள் ரோட்டரி சங்க வளாகத்திற்குள் நுழைந்தன. ஒரு மிகபெரும் உடகவியலாளர் கூட்டம் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. எனது வாழ்வில் அத்தனை மைக்குகளை ஒருசேர பார்த்தது இல்லை. பேட்டிகள் பதினைந்து நிமிடம் வரைக்கும் தொடர்ந்தது. சராமாரியான கேள்விகளுக்கு என்னை அமிர்தராஜ் தயார்படுத்தியிருக்கிறாரோ என எண்ணிக்கொண்டேன். பத்திரிகையாளர்கள் வந்தவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அந்த நிகழ்ச்சியை பதிவு செய்துகொண்டனர்.

பனைமர வேட்கைப் பயணத்தின் நிறைவு நாளில் ஊடகங்கள்

பனைமர வேட்கைப் பயணத்தின் நிறைவு நாளில் ஊடகங்கள்

பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த போது, விஜயா மேடம் என்னை அழைத்தார்கள், உங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது  என்றார்கள். ஆம் அத்தான் தான் மறு முனையில், “பனை மனிதரே எப்படி இருக்கிறீர்கள்”, என அவருக்கே உரிய நகைச்சுவை ததும்பும் குரலில்  கேட்டர்கள். நலம், இவ்வளவு பெரிய ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தமைக்காக நன்றி கூறினேன். அவர்கள், “கண்டிப்பாக நீ எடுத்த முயற்சி முக்கியமானது என நான் எண்ணினேன், தமிழகம் எங்கும்  இச்செய்தி சென்று சேரவேண்டும் என விரும்பினேன், என்னால் தான் வரமுடியவில்லை” என்றார்கள்.

பனைமரச்சாலை, எனக்கு உதவியவர்களாலேயே சாத்தியமாகியது, முழுமையடைந்தது, நினைத்ததைவிட பெரும் விளைவுகளையும் சலனத்தையும் உண்டாக்கியது. அது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் தனிஒருவராக செய்யும் பணியை விட கூட்டு முயற்சி மிக சிறந்த விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதை இப்பயணம் எனக்கு உணர்த்தியது. திரண்டெழுவோம் பனையைக் காக்க என கூவவேண்டும் போல் இருந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (88)

செப்ரெம்பர் 26, 2016

பனை மனிதன் – நாகர்கோவில் வரவேற்றது

கதவை திறந்தபோது உயரமாக சாம் ஜெபசிங் நின்றுகொண்டிருந்தார். முகநூலில் எனக்கு அறிமுகமான இறையியல் மாணவர். பயணம் குறித்து பேசிக்கொண்டோம். வேறு இரண்டு நண்பர்கள் வருவதாக இருந்ததாகவும், அவர்கள் நாகர்கோவிலில் வந்து சேருவார்கள் என்றும் கூறினார்.  சாம் ஜெபசிங் கூட புல்லட்டில் தான் வந்திருந்தார். இவ்விதமான நண்பர்கள் அமைவது பெரிய வரம். முதலில் உணவை முடித்துக்கொள்ளுங்கள் எனக் கூறி அவரை அனுப்பினேன்.

அதை தொடர்ந்து அமிர்தராஜ் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். வருகையிலேயே, தினமலரிலிருந்து ஒரு பேட்டிக்காக நிருபர் ஒருவர் காத்திருக்கிறார் என தொலைபேசியைக் காதில் வைத்தார்கள். அந்த நிருபரிடம் பேசியபோது அவர் பொத்தையடியைச் சார்ந்தவர் என்றும்,  தனக்கு சற்று முன்னதாக தான் பனைமர வேட்கைப் பயணம் குறித்து தெரிந்தது எனவும், முன்னமே தெரிந்திருந்தால் மருந்துவாழ் மலை அடிவாரத்தில் எனக்கு உற்சாக  வரவேற்பு கொடுக்க ஒழுங்கு செய்ய தாம் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.. பத்திரிகையாளர்கள் எனது கருத்துடன் உடன்படுவதும், உணர்வுபூர்வமாய் பங்கெடுக்க விளைவதும் எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. மாலையில் மீண்டும் அழைக்கும் படி கூறிவிட்டு புறப்படுகையில் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியிலிருந்து வாகனம் வந்துவிட்டது.

நாங்கள் 8.30 மாணிக்குப் புறப்பட்டோம். நாகர்கோவிலுக்கு 20 நிமிடத்தில் கூட போய்விடலாம், மொத்தம் பதினெட்டு கி. மீ தான். 30 நிமிடங்கள் தாராளம் போதும் என்றே எண்ணினோம். ஒன்பது மணிக்கு நாங்கள் அனைவரும் நாகர்கோவில் சென்று சேரவேண்டும் என்பதே திட்டம். கணக்கு சரியாயிருந்தாலும் கூட்டி கழித்ததில் சற்று பிசகிவிட்டது? புறப்படும்போது அமிர்த்தராஜ் சொன்னார், அய்யன் வள்ளுவர் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவில்லையென்று சொன்னால் பனைமரச்சாலை முழுமை பெறாது. ஆகவே கன்னியாகுமரி செல்லுவோம் என்றார். கன்னியாகுமரியில் மிகச் சரியான இடங்கள் புகைப்படம் எடுக்க கிடைக்கவில்லை. ஆகவே சற்று சுற்றியலைந்துவிட்டு படகுத்துறைக்கு அருகில் வந்தோம். ஒரு இடம் அமைந்தது. மிகவும் சிறப்பான ஒரு புகைப்படத்தை அமிர்தராஜ் எடுத்தார்.

திருவள்ளுவர் சிலை வணிக நோக்கில் மிக முக்கியமானது. பனைமரச்சாலையில் நானும் அதையே,  பனை சார்ந்து எண்ணுகிறேன்.  திருவள்ளுவர் கரங்களில் இருக்கும் சுவடிகளைக் காட்டி ஓலைகளை விற்றுவிடலாம். தமிழர்களின் தொன்மையை சொன்னது போலவும் இருக்கும் உள்ளூர் பொருளை விற்று அனேகருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது போலவும் இருக்கும். உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் உள்ளூர் உற்பத்திகளையே பெரும்பாலும் முன்னிறுத்தி நினைவு பரிசுகளை சுற்றுலாத் தலங்களில் விற்பனை செய்வது வழக்கம். எகிப்து செல்வோர், அங்கே பாப்பிரஸ் எனும் நாணல் புல் காகிதங்களில் வரையப்பட்ட படங்களையே முக்கியத்துவப்படுத்தி விற்பதை கண்டுகொள்ளலாம். தொன்மையான வடிவங்களுக்கு ஒரு அசாத்திய ஈர்புத்தன்மை உண்டு.  கன்னியாகுமரியிலோ தமிழகத்திலோ  ஓலை அதற்கு இணையாக இருக்கும் சூழலை பாதிக்காத இயற்கை பொருள்.. நல்ல வடிவமைப்பு மற்றும் வணிக சாத்தியங்களை அறிந்தவர்கள் கண்டிப்பாக ஒரு வலம் வரலாம்.

பனைமரச்சாலை, கன்னியகுமரியில்

பனைமரச்சாலை, கன்னியகுமரியில்

மணி ஒன்பது ஆகிவிட்டது. ஆகவே தாமதித்துவிட்டோம் என்பது உறைத்தது. செல்லும் வழியில் நுங்கு சர்பத் குடிக்கவேண்டும் எனவும் திட்டமிட்டிருந்தோம். அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டோம். கன்னியாகுமரி சாலை நினைத்தது போல விசாலமாக இல்லை, வேகம் மட்டுப்பட்டது. சுசீந்தரம் பாலத்தில் இரண்டு நிடங்களுக்கு மேல் நின்றது, மொத்த நேரத்தையும் விழுங்கிவிட்ட உணர்வு கொடுத்தது.

சுசீந்திரம் தாண்டியவுடன், அமிர்தராஜ் என்னிடம் சுப. உதயகுமார் அவர்களை நிகழ்சிக்கு அழைப்போமா என்றார். இவ்வளவு தாமதமாக அவரை அழைப்பது சரியாயிராது என்று கூறினேன். ஆனால், அவர் தனது நெருக்கத்தை பயன்படுத்தி அவரை அழைத்தார். சுப. உதயகுமார் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு விட்டதால் தம்மால் வர இயலாது என கூறிவிட்டார். எளிமையான  அந்த மனிதரை விரைவில் சந்திக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். எனது பயணத்தில் ஒரு இரவு இடிந்தகரையில் செலவிடவேண்டும் என்பதை முதன்மையான திட்டமாக வைத்திருந்தேன், ஆனால் அது முடியாமற் போயிற்று. போராட்டம் உச்சத்தில் இருக்கையில் நான் அகமதாபாத்தில் இருந்தேன், அங்கிருந்தும் வருவது சாத்தியப்படவில்லை.

இடலாக்குடி துவங்கியதிலிருந்தே வாகன நெரிசல் துவங்கிவிட்டது. கோட்டார் ஒருவழி பாதை தான் என்றாலும் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது. பீச் ரோடு ஜங்ஷனில் தாமதித்து, இந்து கல்லூரி அருகில் நெரிசலினால் நின்றபோது மணி 9.30 ஆகிவிட்டிருந்தது. இது மிக தாமதமான வருகை. யாரிடம் மன்னிப்பு கேட்பது என தெரியவில்லை. செட்டிகுளம் ஜங்ஷன், வாகன பெருக்கங்களின் சுழல் என்றே சொல்லவேண்டும்.

செட்டிகுளத்திலிருந்து கலெக்டர் ஆபீஸ் செல்லுகையில், இன்னும் நெருக்கமே காணப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நகர்கோவில் இல்லை. சாலை  விரிவாகியிருக்கிறது ஆனால் வாகனங்களின் நெரிசல் இன்னும் அதிகமாகியிருப்பது தெரிந்தது. கலெக்டர் ஆபீஸ் ஜங்ஷனும் சிக்னல் இடப்பட்டு இருந்தது. மிகவும் பிந்திவிட்டோம் என்பது தெரிந்தது. இன்னும் 30 மீட்டர் தோலைவில் கலெக்டர் ஆபீஸ் வந்துவிடும், ஆனால் 3000 கிலோமீட்டர் பயணிக்கும்போது இருந்த பொறுமை  காணாமல் போய்விட்டது. ஒருவித நிலைகொள்ளாமையினால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். எனது நல்லவேளை சிக்னல் பச்சை ஒளியை உமிழ்ந்தது.

அப்போது தான் எனக்கு இடப்புறமாக பார்த்தேன், மும்பையிலிருந்து அஷிஷ் அத்தான் வந்திருந்தார்கள். நான் அவர்களை நில்ஷி ஒய் எம் சி யே வில் இறுதியாக பார்த்தது. அவர்கள் இங்கு வந்துவிட்டார்களா? ஆம் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருப்பார்கள். அப்படியானால் கண்டிப்பாக குடும்பத்தினர் எல்லாரும் வந்திருக்க வாய்ப்பு உள்ளது. எல்லாம் கண நேரம் தான் அதற்குள் அத்தானுக்கு கை காட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அங்கே ஒரு பெருங்கூட்டம் நின்றதைப்பார்த்து அசந்துபோனேன். நல்லவேளை வாழ்க கோஷம் ஏதும் எவரும் எழுப்பவில்லை. ஆனால் சீருடை அணிந்து நின்ற மாணவிகள் மத்தியில் என் கண்களுக்கு ஜாஸ்மின் மட்டுமே தெரிந்தாள். அவளையே பார்த்து சிரித்தபடி சென்றேன். பிள்ளைகள் ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.   வந்துவிட்டேன் பார் எனும் பெருமிதம் கண்களில் மின்ன அவள் அருகில் வண்டியை நிறுத்தியபோது, அவள் கண்கள் உடைப்பெடுத்த குளமாக நெஞ்சு விம்மியபடி என்னருகில் வந்தாள். அவளை நான் அணைத்தபோது, எனக்குள்ளும் அவளின் உணர்வுகள் ஊடுருவிவிட்டது.

ஆம் எத்துணை நாட்கள் பிரிந்திருக்கிறோம். பயணங்கள் மட்டுமே சுமார் 18 நாட்கள் ஆனால், அவர்களுக்கு விடுமுறை கிடைத்தவுடனேயே  அனுப்பிவிட்டேன். திருமணத்திற்குப் பின், பிரசவ நேரங்களில் பிரிந்திருந்தது போக, முதன் முறையாக கிட்டத்தட்ட 50 நாட்கள் பிரிந்திருக்கிறோம். நாகர்கோவில் கண்டிப்பாக பொது இடத்தில் கணவனும் மனைவியும் அணைத்துக்கொள்ளுவதை அறித்திருக்காது. அந்த ஒரு சில நொடிகள்  மெதுவாக கடந்தன. இதற்கிடையில் நாங்கள் இணைந்திருப்பதை பொறுக்காத பயல்கள் எங்களுக்குள் நுழைந்து நாங்களும் இருக்கிறோம் என எங்களை பிரித்து விட்டனர்.

பிரிகையில் ஜாஸ்மின் முகம் மலர்ந்திருந்தது. ஆனால் சுற்றிலும் கல்லூரி மாணவிகள் இருக்க இப்படி நடந்தது, சரியில்லையோ என்ன நினைப்பார்கள் என எண்ணிக்கொண்டேன். நாகர்கோவில் கணவனும் மனைவியும் பொது இடத்தில் 2 அடி தள்ளியே நிற்பார்கள். கை கோர்த்து நடக்கிறவர்களைப் பார்ப்பது அபூர்வம். மன்னித்துவிடுவார்கள் என நம்பினேன். அனேகர் முகத்தை திருப்பிக்கொண்டு எதையும் பார்க்காதது போலவும் எதுவும் நடவாததுபோலவும் பாவனை செய்துகொண்டிருந்தார்கள். மாலத்தீவிலுள்ளஅக்கா மகள் மேக்டலின், மும்பையிலுள்ள அக்கா, அவர்கள் பிள்ளைகள், அனு மற்றும் தம்பா, கிஃப்ட்சன் அண்னன் அவர்கள் மகள் யூனிஸ், கிரிம்சன் அண்ணனுடைய மகள்கள்  ஆஷிகா மற்றும் ஆஷிதா ஆகியோர் வந்திருந்தார்கள். ஜாஸ்மினின் தம்பி ஜஸ்டின் அவனது மனைவி மற்றும் தேவிகோட்டிலிருந்து அருண் ஆகியோர் குடும்பத்தின் சார்பில் வந்திருந்தார்கள்.வந்திருந்தார்கள்.

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு, நாகர்கோவில்

ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு, நாகர்கோவில்

அப்பொழுது ஒரு பெண்மணி என் அருகில் வந்து நான் தான் விஜயா என அறிமுகப்படுத்தினார்கள்.  அவர்கள் தான் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியின் சார்பில் என்னோடு பேசிய தொடர்புத்துறை அதிகாரி என அறிந்துகொண்டேன். அதன் பின்பு தான் அன்றைய உச்சகட்ட காட்சிகள் நடந்தேற ஆரம்பித்தன. ஆம் திரைக் கதை யாவும் டாக்டர் பிரேம் தான்.  மிக நன்றாக யோசித்து, ஒன்றும் சிதைவுறாமல் நேர்த்தியாக நடைபெறும்படி சென்னையிலிருந்து அனைத்தையும் அவர்கள் இயக்கியிருக்கிறார்கள் என்பது மலைக்க வைப்பது. அவர்கள் இந்த பயணத்தை மிக முக்கியமான ஒன்றாக கருதியிருக்கிறார்கள் ஆகவே தான் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதே அதன் பொருள்.

ரோட்டரி கிளப் அருகில், நாகர்கோவில்

ரோட்டரி கிளப் அருகில், நாகர்கோவில்

முதலாவதாக ஓருவர் வந்து சால்வை அணிவித்துவிட்டு சொன்னார், நான் மாவட்ட ஆட்சியாளருடைய தனி உதவியாளர் , மாவட்ட ஆட்சியாளர் உங்களுக்கு தனது வாழ்துதல்களை சொல்லச் சொன்னார்கள் என்றும் அவர் கூரினார். அவரின் முகத்தைக் கூட நான் சரிவர பார்க்க முடியவில்லை, என்னை ஒரு பெரிய கூட்டமே சுற்றி வளைத்ததுபோல ஆயிற்று.  என்றாலும் எனது உளமார்ந்த நன்றியை மாவட்ட ஆட்சியாளருக்குத் தெரியப்படுத்துங்கள் என்றேன். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தளாளராக இருந்த பேரசிரியர். ராஜாதாஸ் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்தார்கள், ஜேம்ஸ் பொறியியல்  கல்லூரியின் சார்பிலும், ஜேம்ஸ் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் சார்பிலும், ஜேம்ஸ் செவிலியர் பயிற்சிப் பள்ளி சார்பிலும் வரிசையாக சால்வை அணிவித்தனர். வேறு யார் அணிவித்தார்கள் என நினைவில் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, ஆகவே, ஒரு போலீஸ் அதிகாரி எங்களை பத்திரமாக அருகில் இருந்த ரோட்டரி கிளப்பிற்கு அழைத்துச் சென்றார்கள்.

ரோட்டரி கிளப், நாகர்கோவில்

ரோட்டரி கிளப், நாகர்கோவில்

ரோட்டரி கிளப்பிற்கு சென்றபோது எனது நண்பர் ஸ்டீபன் டேவிஸ் அவரின் சகோதரி மற்றும் இதற்கு முன் நான் பார்த்திராத நண்பர்கள் கூடி  ரோட்டரி கிளப் சார்பில் சால்வையுடன் நின்றார்கள். எஸ் எஸ் டேவிட்சன் அவர்களூம் எனக்கு சால்வை அணிவித்தார்கள். இத்துணை பெரிய வரவேற்பை நான் சற்றும் எண்ணியிருக்கவில்லை. ரோட்டரி கிளப்பில் எங்களுக்காக கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது.

ரோட்டரி கிளப் உறுப்பினர்களுடன், நாகர்கோவில்

ரோட்டரி கிளப் உறுப்பினர்களுடன், நாகர்கோவில்

பனையோலை பட்டைகளில் பதனீர் பனக்கற்கண்டு ஆகியவற்றையும் பனக்கிழங்கையும் வழங்கினார்கள். சுக்கு காப்பி மற்றும் வடையும் கொடுத்தார்கள். விஜயா மேடம், அவைகளை பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்திருந்தார்கள். எனது பயணத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஒரு பனை மரக்கன்று அங்கே நடப்பட்டது.

அப்பொழுது தான் கவனித்தேன், என்னை வரவேற்கும்படி எழுதப்பட்ட பேனரில் “வருக பனை மனிதன்” என எழுதப்பட்டிருந்தது. பனை என்னை அதற்குரிய மனிதனாக சுவீகரித்துக்கொண்டதன் அடையாளம் அது. நான் மறைந்து போய் பனை காதலன் எழுந்து வந்த தருணமாக அதை கண்டேன்.  அந்த பட்டத்தை நான் வெகுவாக ரசித்தேன். சிறுபிள்ளைக்கும் நாம் சென்று சேரும் ஒரு தலைப்பு. சிறு பிள்ளைகளும் தங்களை அந்த பட்டத்தைச் சூடிக்கொள்ள இயலும்.  சிலந்தி மனிதன் மற்றும் வவ்வால் மனிதன் எல்லாம் கற்பனை உலகில் வாழும்போது  நிஜ உலகில் ஒரு பனை மனிதன் இருக்கக்கூடாதா?  ஒருவகையில் பனைக்காக உழைப்பவர்கள் அனைவரும் பனை மனிதர்கள் தாம். பனையோடு இணைந்து வாழ்பவர்களும் கூட பனை மனிதர்களே. எத்துணை அருமையான சொல்லாட்சி.

பனை மனிதன்

பனை மனிதன்

டாக்டர் பிரேம் அவர்கள் இல்லாமலேயே இத்தனை காரியங்கள் ஒழுங்காகியிருக்கின்றன என்றால், அவர்கள் வந்திருந்தால் கண்டிப்பாக இன்னும் மிகச் சிறப்பாகவே இருந்திருக்கும்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (87)

செப்ரெம்பர் 25, 2016

பின்னணியில் இருந்தவர்கள்

காலை ஆறரை மணிக்கு எழுந்தபோது பரபரப்பாக இருந்தது. இந்தநாளையும் காணசெய்த ஆண்டவருக்கு நன்றி கூறி, இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காத்து வழிநடத்த வேண்டினேன். அனைத்தும் நேர்த்தியாக சித்தமாக இருக்கிறதை அறிந்து கடவுளுக்கு துதி பலிகளை ஏரெடுத்தேன். எனது தேவைகளை அறிந்து என்னை ஊக்குவித்த நண்பர்களை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் தங்களை வெளிப்படுத்த நினைக்கும் நண்பர்கள் அல்ல, ஆனால் அவர்களின்றி இப்போது நான் துணிந்து களத்தில் இறங்கியிருக்கமாட்டேன் என்பதால் சொல்லுகிறேன்.

பனைமரங்களைத் தேடி  பயணிப்பதைக் குறித்து பலமுறை நான் யோசித்திருக்கிறேன், சிறு பிரயாணங்கள் பலவும் பனை தேடுதலில் நான் செலவிட்டிருக்கிறேன் என்றாலும், 3000 கி மீட்டர் தொடர் பயணம் எனது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பொருட்செலவு என வருகையில், என்னால் தனித்து அதை எதிர்கொள்ள முடியாது என்பது தான் உண்மை.  மேலும், இப்பயணத்தில் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால், எனக்கு துணை நிற்கும் நண்பர்கள் வேண்டும். ஆகவே நண்பர்களின் உதவியை நாடினேன். அனேகர் உதவி செய்வார்கள் என்று தெரிந்தும் தேவைக்காக மூன்றுபேரை மட்டும் தெரிந்துகொண்டு எனது நிலையை எடுத்துச் சொல்லலாம் என  முடிவுசெய்தேன். குறைந்த செலவினத்துடன் நான் திட்டமிட்டிருக்கும் இந்த பயணத்திற்கு அனேகரை தொந்தரவு செய்வது ஏற்புடையதாக இராது. மேலும், எனது பணியை ஊன்றி கவனித்து அதனை தொடர்ந்து ஊக்குவித்தவர்களையே தெரிவு செய்தேன்.

பயணம் குறித்து நான் எண்ணியவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் மும்பையில் எனக்கு அறிமுகமான குமார் வால்டர்ஸ் அவர்கள் தான். நான் போதகர் ஆவதற்கு முன்பு மும்பையிலுள்ள பாண்டுப் எனும் பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளிகளுக்காக உழைக்கும் லுத்தரன் தொண்டு நிறுவனமான ‘ஸ்னேக சாகர்” எனும் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்தேன். சுமார் முன்று மாத காலம் தொடர் உழைப்பால் நிறைந்த நாட்கள், மனநிறைவை அளித்த நாட்கள். தெருவோரக் குழந்தைகளை பேணிக்காப்பது எனும் எண்ணத்துடன் துவங்கப்பட்ட நிறுவனம், பாலியல் தொழிலாளர்களும் ஒருவகையில் சமூகத்தால் தெருவில் வெளியேற்றப்பட்டப் பிள்ளைகளே என உணர்ந்து அவர்களுக்காக பணியாற்றினார்கள். பாலியல் தொழிலாளிகள் வாழும் சோனாப்பூர் பகுதியில் நான் சென்றபோது 15 நாட்கள் கடும் ஒவ்வாமையினால் அலைக்களிக்கப்பட்டேன். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் சூழ்நிலைக் கைதிகளாக அனேகம் பெண்கள் வாழும்போது அங்கிருந்து என்னால் எனது உடல்நிலையைக் காரணம் காட்டி விலக முடியவில்லை.

அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டி, ஒரு புது இடத்தை தேடி இறுதியாக பத்லாப்பூர் அருகில் ஒரு இடத்தை தெரிவு செய்தார்கள். மிக அதிக பொருட்செலவு செய்து ஒரு கட்டிடத்தை அங்கே நிற்மாணிப்பது எனவும், தெருவோரக் குழந்தைகளுக்கும், தங்கள் வாழ்வை மாற்ற எண்ணுகின்ற பாலியல் தொழிலாளர்களுக்கும், அது ஒரு பாதுகாக்கப்பட்ட இல்லமாக இருக்கும் எனவும் திட்டமிடப்பட்டது. முப்பத்து ஐந்து நாட்களுக்குள் அங்கு நான்கு கட்டிடங்கள் கட்டவேண்டும். எனது நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் அவர்கள், என்னிடம் அங்கிருந்து கவனித்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள்.  இரவுபகலாக நான் அங்கிருந்து வேலைகளை கவனித்துக்கொண்டேன். பெரும்பாலும் வேலை தடைபடாது இயங்க நான் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சிவில் மற்றும் எலக்ரிக்கல் பணிகளில் தடங்கல் வராது நான் செயல்பட்டதை கவனித்த குமார் வால்டர்ஸ்   எனக்கு நண்பரானார்.

மும்பையில்,  நான் நடத்திய முதல் ஓலை கண்காட்சியில் குமார் வால்டர்ஸ் (வருடம் 2011)

மும்பையில், நான் நடத்திய முதல் ஓலை கண்காட்சியில் குமார் வால்டர்ஸ் (வருடம் 2011)

குமார் அவர்கள் கர்நாடகாவைச்,  சேர்ந்தவர்கள்,  அங்கு எழுப்பட்ட கட்டிடங்களுக்கு இரும்பு கூரைகளை செய்ய வந்திருந்தார்கள். மிகப்பெரிய இரும்பு தூண்களை இணைத்து வெளிநாடுகளுக்கும், பெருநகரங்களுக்கும் அனுப்பும் பணியை செய்து கொண்டிருந்தார்கள்.  பனைஓலையில் செய்த எனது படங்களை பார்த்தவர்கள் இன்னும் என்னுடன் நெருங்கிப்பழகினார். என்ன தேவையென்றாலும்,  என்னைக் கேட்கவேண்டும் என அன்பு கட்டளை இட்டார். அதன் பின்பு, மும்பையில், எனக்கு எந்த பொருளாதார நெருக்கடி எழுந்தாலும், அது எனக்கு ஒரு பொருட்டல்ல என என் உடனிருந்து நிரூபித்தவர் அவர். ஒருவேளை அவர்கள் மட்டும் இல்லையென்று சொன்னால், இந்த பயணத்தை நான் யோசித்திருக்கவே மாட்டேன்.

ராஜேந்திர ராஜன்

ராஜேந்திர ராஜன்

ராஜேந்திர ராஜன் மும்பையில் நான் முதலில் பணியாற்றிய திருச்சபையின் அங்கத்தினர். திருச்சபையில்  காண்பதற்கு அரிதான ஒரு நேர்மை அவருக்குள் உண்டு. என் மீது தனித்த அன்பு வைத்திருப்பவர். பனை சார்ந்த எனது தேடுதலை புரிந்துகொண்ட, திருச்சபையின் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களில் ஒருவர். எனது தனித்துவமான பயணத்திற்கு அவர் துணை நிற்பதாகவும்,  என்ன தேவையோ அதை எனது கணக்கில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

ரமேஷ் எனது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த பெருவிளை கிராமத்தைச் சார்ந்தவன். ஒன்பதாம் வகுப்பு முதல் நாங்கள் உற்ற தோழர்கள். பள்ளிக்கூடம் செல்லும்போதும் ஆலயத்திற்குச் செல்லும்போதும், கிரிக்கெட் விளையாடுகையிலும், ஆற்றில் நீந்தி குளிக்கையிலும்  எங்கள் நட்பு நெருக்கமடைந்தது. பள்ளிகூட நாட்களுக்குப் பின்பு எங்களுக்குள் பெரும்பாலும் தொடர்பே இல்லை. ஆனாலும், எங்களுள் அதே சிறுவர்கள் பட்டாம் பூச்சியாக சிறகடித்துக்கொண்டிருக்கிறார்கள். ரமேஷ் ஜெர்மனி போவதற்கு காரணம் எனது மன்றாட்டு தான் என்பது எனக்கும் அவனுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் கண்கள் பேசியபின்பு தான் வார்த்தைகளே வெளிவரும் எனும் அளவிற்கு எங்கள் உள்ளம் ஒன்றிணைந்திருந்தது.

ரமேஷ்

ரமேஷ்

காணாமல் போன அவனை முகநூலில் தான் கண்டெடுத்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கையில் ரமேஷ் மிக அழகாக ஓவியம் வரைவான், தற்போதைய பணி சுமைகளினால் அவனால் ஓவியத்திற்கு நேரம் கொடுக்க முடியாததால், அவன் அந்த திறமையை முன்னெடுக்கவில்லை. ஆனால் நான் பனை ஓலைகளில் செய்யும் படங்களைக் கவனித்து எனக்கு கருத்து தெரிவிப்பான். நேரமின்மையால் பொதுவாக பேசிக்கொள்ளுவது இல்லை. ஒருநாள் முகநூலில் என்னோடு பேசிக்கொண்டிருக்கையில், நான் எனது திட்டத்தைக் கூறினேன். தலைகால் புரியாத கொண்டாட்ட மனநிலைக்குப் போய்விட்டான். நானே நினைத்தாலும் திட்டத்தை கைவிட முடியாது எனும் நிலைக்கு என்னை கொண்டு வந்து விட்டுவிட்டான்.

இவர்களுடன் ஜேம்ஸ் குழுமங்களின் தலைவரான டாக்டர். ஜேம்ஸ் பிரேம் அவர்களையும் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். எனது பெரியம்மா மகளான டாக்டர் செனிகா அவர்களை திருமணம் செய்தபோது பிரேம் அத்தான் எங்களுக்கு ஒரு கதாநாயகனாகவே தெரிந்தார். அவரைக் குறித்து கேள்விப்பட்ட ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியமூட்டுபவை. நான் அறிந்த வகையில் பியானோ, அக்கார்டின் மற்றும் கிட்டார் ஒருசேர வாசிக்கத் தெரிந்த மனிதர் அவர்தான். அவர் வருகின்ற இடங்களில் சிரிப்பைத் தூவிச்செல்லுவது அவரது வழக்கம். ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அவர், திருமணத்திற்குப் பின்பு மருத்துவ கல்லூரியில் பயின்று மருத்துவரானார். சுனாமி ஏற்பட்ட அன்று மாலையில் நான் குளச்சலில் இருந்தேன், ஜேம்ஸ் மருத்துவமனை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்ட விதத்தை நேரில் கண்டேன். ஒரு வகையான போர்கால நடவடிக்கை அது. மருத்துவமனை வளாகம் முழுக்க மக்கள் நெருக்கியடித்து கிடந்தனர். அவர்களுக்கான உணவும் அங்கே ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

அப்பாவின் இறுதி நாட்களில் ஜேம்ஸ் மருத்துவமனையிலேயே வைத்து கவனித்துகொண்டது, எங்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாத உதவி.ஓலையில் நான் செய்யும் படஙளை அவர் மிகவும் விரும்பியதால் அவர்கள் பிறந்த நாளுக்கு நான் ஒரு படத்தை பரிசளித்தேன். மேலும் அவர்கள் திருமணத்திர்கு முன் வைத்திருந்த பைக் புல்லட் தான். அவர்களுக்குக் பைக் ரேஸ் செல்லுவதில் மிகவும் விருப்பம் என்பதும் நான் அறிந்தேன். ஆகவே  எனது பயணம் துவங்கும் முன்பே அவர்களிடம் பேசினேன்.

என்ன என்ன உதவி வேண்டும் என கேட்டார்கள். நான் சொன்னேன், நான் அங்கே வரும்போது என்னை வரவேற்க நீங்கள் வரவேண்டும் என்று சொன்னேன். வேறு எந்துவும் வேண்டுமா என்று கேட்டார்கள், பேனர் மற்றும் மாலைகள் ஏதும் எனக்கு வேண்டாம் நீங்கள் மட்டும் வந்தால் போதும் என வேண்டுகோள் வைத்தேன். ஏன் அப்படி சொன்னேன் என தெரியவில்லை, ஆனால் எனது வாழ்வின் முக்கிய கணத்தில் அவர்கள் உடனிருக்கவேண்டும் என நான் நினைத்து அப்படிச் சொன்னேன்.

எனது பயணம் முழுக்க என்னை அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். நான் வரும் நாளை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்கள். நான் வேம்பார் வந்தபோது, தனது ஜேம்ஸ் கல்லூரியின்  தொடர்பு அதிகாரியின் எண்ணைக்கொடுத்து எனது தேவைகளுக்கேற்றவிதமாக நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தச் சொன்னார்கள். சொக்கன் குடியிருப்பில் இருக்கும்போது நாளைக் காலை எனக்கு முன்னால் செல்ல ஒரு கார் வேண்டும் என்றேன்., அது கடைசி நேர மாறுதல், ஆனாலும் சளைக்காமல் அதையும் ஏற்பாடு செய்தார்கள். ஒரு தொடர்பு எண்ணைக்கொடுத்து தொடர்புகொள்ளச் சொன்னார்கள். நான் தொடர்புகொள்ளும் முன்பே அந்த நபர் என்னை அழைத்து எனக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள். காலை எட்டுமணிக்கு என்னை அழைத்துச் செல்ல வரவேண்டும் எனக் கேட்டேன். சரி வருகிறேன் என்றார்கள்.

டாக்டர். ஜேம்ஸ் பிரேம், பனை ஓலையில் நான் செய்த படம்

டாக்டர். ஜேம்ஸ் பிரேம், பனை ஓலையில் நான் செய்த படம்

நான் கன்னியாகுமரி வந்தபிறகுதான்  அவர்கள் என்னிடம், தற்போது தவிர்க்க முடியாத வேலையாக  சென்னையில் இருப்பதால் தன்னால் வர இயலாது என்று கூறினார்கள். ஆனால் எனக்காக அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் நாளை தைரியமாக நீங்கள் போகலாம் என்றும் குறிப்பிட்டார்கள். எனக்கு அவர் சொன்னதை கிரகித்துக்கொள்ளும் மனநிலை இல்லை. அத்தான் வரவில்லை என்று சொன்னால், எப்படி? மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இப்படி ஆகும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், அவர்கள் எனது பயணத்தை மிக தீவிரமான ஒரு செயல்பாடாக கருதினார்கள். ஆகவே நாளை எனக்கு ஏதேனும் இன்ப அதிர்ச்சியை அவர் அளிக்கலாம். என்று எண்ணிக்கொண்டேன்.

இந்த வரிசை ஆச்சரியமளிக்கும் பன்மைத்தன்மை கொண்டது, சொந்த ஊர், உறவினர், திருச்சபை அங்கத்தினர் மற்றும் ஒரே தேசத்தவர் என பல்வேறு பின்னணியில் இவர்கள் என்னோடு கை கோர்த்தனர். அதுவே இந்த பயணத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். அமைப்புகள் நிறைந்த உலகில், தனிமனிதனாக நிற்கும் ஒருவனை ஊக்கப்படுத்த பல்வேறு பின்னணியங்களிலிருந்து முன்வருவது குறிப்பிடத்தகுந்த செயல்பாடு என்றே கருதுகிறேன்.

காலை வேளையில் அனைத்து கடமைகளையும் முடித்து, நான் சாம் ஜெபசிங், அமிர்தராஜ், மற்றும் ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி அனுப்பும் நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன். மணி 8 ஆகிவிட்டது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

பனைமரச்சாலை (86)

செப்ரெம்பர் 23, 2016

இறுதி இரவு

அந்த இரவு பயணம் மிகவும் தனித்தவனாக உணர்ந்தேன். இந்த நாளில் தான் எத்தனை எத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன? கடவுளின் அருளின்றி இத்தனை பன்முகப்பட்ட அறிதல்கள் ஒரே நாளில் சாத்தியமாகாது. காலை முதல் உடனிருந்த ஹாரீஸ், மைக்கேல் இருவரையும் நினைத்தேன், மகிழ்ச்சியை மட்டுமே எங்கள் பயணத்தில் வாறியிறைப்பதற்காகவே வந்தவர்கள் அல்லவா அவர்கள். ஜெபக்குமர், தனது முக்கிய பணிகளுக்கிடையில், எனது பயணத்தை உயர்த்திப்பிடிக்க எடுத்துக்கொண்ட அத்தனை சிரமங்களையும் நான் அறிவேன். உள்ளம் நிறைந்து ததும்பியது. அமிர்தராஜ் இன்றி நான் இல்லை எனும் அளவிற்கு இப்பயணத்தில் அவன் எனக்காக செய்தவைகள் அனைத்தும் கண்களின் முன்னல் வந்து சென்றன.  அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது, சிறுமையைக் கண்டு சினம் கொண்டு பொங்கும் அறச்சீற்றமும் காணப்பட்டது. அமிர்த்தராஜ் மட்டும் இல்லையென்று சொன்னால் எனது பய்ணமே மிக தனித்ததாக ஆகியிருக்கும், அதை விரிவாக்கவேண்டும் எனும் எண்ணம் என்னுள் நுழைந்திருக்காது. பனைமரச்சாலை ஒரு போராட்ட வடிவமாக மாறியதில் அமிர்தராஜின் பங்களிப்பு முக்கியமானது.

எவரும் இல்லாத அந்த சாலையில் இரவுப்பொழுதில் தனியாக பயணிப்பது சுகமாக தான் இருந்தது. பல்வேறு நினைவுகள் என்னை சூழ்ந்து மோதியது. எவைகளைப் பார்த்தேன், யாரோடு பேசினேன் என்ன கற்றுக்கொண்டேன், இனிமேல் என்ன செய்யப்போகிறேன் என ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்கான நினைவுகள் அலைபோல எழுந்த வண்ணம் இருந்தன. நான் கடந்துவந்த பாதைகளை எண்ணிப்பார்க்கும் போது, நான் திட்டமிட்டவைகளை விட மிக அதிகமக விளைவுகளை அது எனக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை அறிந்தேன். எண்ணிப்பார்த்திராத அளவிற்கு நண்பர்களை சேகரித்திருக்கிறேன். பனை மரத்தை முன்னெடுக்கும் பணியில், நான் கண்டிப்பாக முன்னகர்ந்திருக்கிறேன் என்பது மனநிறைவளிப்பதாக இருந்தது.

திடீரென பின்னால் இருந்து யாரோ ஒலியெழுப்பும் சத்தம் கேட்டு மீண்டும் நினைவுக்கு வந்தேன். கனவிலிருந்து விழித்தெழும் கணம் போலவே அது இருந்தது.  காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். என்ன என்று கேட்டேன், வண்டியை ஓரமாக நிப்பாட்டுங்கள் என்று சொன்னார். வண்டியை நிறுத்தினேன், எனது பை சற்று சரிந்திருப்பதாகவும், எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல காணப்பட்டதால், ஆகவே அதை நேராக வைத்துவிட்டு செல்லுங்கள் எனக்கூறி எனக்கு உதவி செய்தார்கள். மேலும் நான் எங்கிருந்து வருகிறேன் என கேட்டார்கள், எனது பயணத்தின் நோக்கத்தைச் சொன்னபோது, மிகவும் மகிழ்ந்துபோய், தனது தொலைபேசி எண்ணை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள், வழியில் ஏதேனும் உதவி தேவை என்று சொன்னால், கண்டிப்பாக அழையுங்கள் நான் இருக்கிறேன் என்றார்கள். காவல்துறை எனது நண்பன் என்ற வாசகம் என்னுள் மினிச் சென்றது. அவர், தனது ஊர் வந்தபோது விடைபெற்று சென்றுவிட்டார். முகம்  தெரியாதவர்களின் உதவி பனைமரச்சலையை பயமற்ற பயணமாக மாற்றியிருந்தது இறுதிவரைக்கும்.

நான் பயணித்து சென்று சேர்ந்த இடம் இருள் கவிந்து இருந்தது, இனிமேல் சாலைச் செல்லாது என்பதாக காணப்பட்டது. குழம்பிப்போய்விட்டேன். இந்த இரவு வேளையில் வழி கேட்பதற்கு யாரிடம் செல்ல முடியுமென யோசித்தேன். அமிர்த்தராஜிடம் வீராப்பக பேசி எனக்கு வழி தெரியும் என கூறிவிட்டு இரவு பத்துமணிக்கு மேல் வழி தவறி நிற்பது வெட்கமாக இருந்தாலும், வீடு போய்ச் சேரவேண்டுமே என்ற எண்ணமே முதன்மையாக இருந்தது. என்றாலும் பரவாயில்லை என மீண்டும் வந்தவழியில் திரும்பி யூகித்து ஒரு பாதையை  தேடி கண்டுபிடித்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். காட்டுவழியில் செல்லும்போது, இந்த இடத்கையல்லாம் நான் பர்த்ததில்லையே என நினைத்துக்கொண்டேன். இறுதியாக ஒரு இடத்தில், புரோட்டா கடை திறந்திருந்தது. கொலைப் பசியிருந்தாலும் எங்கும் நிற்க முடியாது, முதலில் அறைக்குச் செலவேண்டும், பிற்பாடு தான் நான் எதையும் யோசிக்க முடியும். கன்னியாகுமரியில் உள்ள சி ஏஸ் ஐ கெஸ்ட் காவுசில் எனக்கு அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே கன்னியாகுமரி செல்லும் வழி எப்படி என கேட்டேன், அந்த கடைகாரர் சொன்ன திசை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திசைகள் முழுமையாக மாறிவிட்டது. ஆனாலும் அவர் சொன்ன பாதையைத் தொடர்ந்தேன். சுற்றி வளைத்து எப்படியோ கன்னியா குமரி வந்துவிட்டேன்.

நான் அங்கே சென்றபோது, எனக்கு அறை ஒழுங்காகியிருக்கவில்லை, ஆனால், நல்லவேளையாக குமார் அண்ணன் இருந்தார்கள். எனக்கு சிறு வயது முதலே அவர்களைத் தெரியும். அப்பா வருடத்துக்கு ஒருமுறை எங்களை எல்லாம் குடும்பத்தோடு கன்னியாகுமரி அழைத்துச்செல்லுவார்கள், அங்கே நாங்கள் பாடி, ஜெபித்து, தங்கி மீண்டு வருவோம். அப்பா முழுமையாக எங்களோடு பேசி சிரித்து தன்னை இலகுவாக்கி செலவிடும் நாள் அது. அப்போதில் இருந்தே குமார் அண்ணன் அங்கே உதவியாளராக இருந்தார். அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். ஆகவே, அவரிடம் அறை வேண்டு என நான் கேட்டபோது, போதகரை தொடர்புகொள்ள சொன்னார்கள். என்னிடம் செல்பெசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. நீங்களே அழையுங்கள் என்றேன். மணி 10.30 ஆஇ தாண்டி விட்டிருந்தது. போதகர் எனக்கஎன ஒரு சிறப்பான அறையை ஒதுக்கிக் குடுத்தார்கள். இரவு உணவு கிடைக்குமா என்றேன், உடனே போனால் கிடைக்கும் என்றார் குமார் அண்ணன். அரைக்குச் சென்று உடனே மொபைலைச் சார்ஜில் இட்டேன். கிழே வந்து இரவு உணவை முடித்தபோது மணி பதினொன்றைத் தாண்டிவிட்டிருந்தது.

திரும்பி வந்து அறையில் படுத்தபோது தூக்கம் வரவில்லை. பல்வேறு அழைப்புகள் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் செய்துவிட்டே படுக்க முடியும். ஆகவே ஒன்றும் குறைவுபடாமல் பார்த்துப் பார்த்துச் செய்தேன். முடிவில் நடு நிசியில் ஜாஸ்மினுக்கு அழைத்து கன்னியாகுமரி வந்துவிட்டேன் எனக் கூறினேன். வீட்டிற்கு வந்திருக்கலாமே என்று சொன்னாள். இல்லை அது முறையாகாது, கன்னியாகுமரியிலிருந்து வருவதுதான் சரியாக இருக்கும், நாளை நீங்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் வரவேண்டும் எனக் கூறினேன். குழந்தைகளையும் கண்டிப்பாக அழைத்துக்கொண்டு வா என்று சொன்னேன். சரி என்று சொன்னாள். அவளிடம் எப்போது இறுதியாக பேசினேன் என நினைவு இல்லை. அவள் அழைக்கையில் நான் வண்டி ஓட்டாமல் இருந்தால் மட்டுமே அவளது அழைப்புகளை எடுத்து பேசியிருக்கிறேன். நான் பத்திரமாக கன்னியாகுமரி வந்து சேர்ந்ததற்காக அவள் இப்போது கடவுளுக்கு தனது பிரார்த்தனையில் நன்றி கூறிக்கொண்டிருப்பாள்.

முடிவுறா பயணம்

முடிவுறா பயணம்

எனது வண்டி எனக்கு ஞாபகம் வந்தது. எட்டு வருடங்கள் என்னோடு இருந்தது மட்டுமல்ல, எனது பனைமரச்சாலையின் முக்கிய துணைவனக என்னை சுமந்து வந்த அந்த வாகனம் உண்மையிலேயே முக்கியமானது. பழையவைகளை தூக்கி வீசும் காலத்தில், நான் அதனை நம்பி களமிறங்கியபோது என்னை கைவிடாமல் இம்மட்டும் என்னோடு இணைந்து பயணித்தது மட்டுமல்ல, எனது நம்பிக்கைக்கு உரியதாக காணப்பட்ட எம் எஸ் எல் 8537 மட்டும் என்னுடன் இல்லையென்று சொன்னால், அது சாத்தியமாகியிருக்குமா என தெரியவில்லை. குண்டுகள் குழிகள், வெம்மைகள் என மூவாயிரம் கிலோமீட்டர்கள் என்னோடு வந்த எனது ஆருயிர் தோழன், காட்சன் சாமுவேலின் மூத்த உறுப்பினர். ஐம்பது வருடங்களுக்குப் பின்னும், மிகவும் இளமையுடன் அது எனது பயணத்தை முன்னெடுத்தது பெரும் ஆச்சரியம். நாளை இன்னும் ஒரு நாள் என்னைக் கைவிடாது இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பையிலிருந்து பிதுங்கி  வெளித்தெரிந்த ஓலைகளைப் பர்த்தேன். ஆச்சரியமாக இருந்தது, பொருட்டென கருதப்படாமல், அனேகரால் புறந்தள்ளப்பட்ட இந்த ஓலைகள் என்னை என்ன மாயம் செய்து வசீகரித்திருக்கின்றன? ஓலைகள் இன்றி, ஒரு நாளும் என் வாழ்வில் செல்லாது என நான் நினைகுமளவு கடந்த ஐந்து வருடங்களாக ஓலைகளுடனேயே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஈர்ப்பு, என்னை இன்றும் விடாது பற்றியிருப்பது ஆச்சரியமானது.

சிறிய ஓலைச் சுவடி புத்தகத்தை எனது முதல் ஆட்டோகிராப் புத்தகமாக்கியது துவங்கி, ஓலையில் செய்த புக் மார்க், வாழ்த்து அட்டைகள், திருமண அழைப்பிதழ், எனது விலாச அட்டை, மிகப்பெரிய உருவப்படங்கள் ஓலையில் செய்யும் அளவிற்கு அதில் ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது. சமயம் சார்ந்து நான் உருவாக்கிய போதகர்களுக்கான கழுத்துப் பட்டை, பெண்கள் கூடுகைக்கான ஓலை பேட்ஜ் மற்றும் குருத்தோலை பவனிக்கான  கை பட்டைகள் என ஒவ்வொரு நாளும் ஓலை தனது பயன்களை எனக்கு புதிதாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது கல்லூரியின் ஆய்வறிக்கை கூட ஓலை பாயைக்கொண்டே நான் அட்டையிட்டு சமர்ப்பிக்குமளவு, ஓலை என்னுடன் நெருங்கியிருக்கிறது.

ஜெயமோகன் அவர்களுடைய ஓலைசிலுவையைப் படித்தபின்னால், நாமும் ஏன் ஓலையில் சிலுவை செய்யக்கூடாது என நினைத்து எனது பயணங்களில் ஓலைகளை எடுத்துச் செல்லுவது வழக்கம். உடன் வரும் பயணிகளுக்கு ஓலைச் சிலுவையைக் கொடுத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ந்து அதை வாங்கிக்கொள்ளுவதைப் பார்த்திருக்கிறேன். ஓலைக்கும் புனிதத்திற்கு, ஆன்மீகத்திற்கும் அத்தனை பொருத்தம்.

ஓலைகளே எனது சிறகுகள். கட்டற்று நான் பறக்கும் வானத்திற்கு எளிய ஓலைகளே சிறகுகளாக நின்று என்னை மேலெழுப்புகின்றன. எனது வாசிப்பிற்கான சுவடிகளும் ஓலைகளே, அவைகளே எனது ஆன்மீகம், வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இவைகளை எடுத்துக்கூறுகின்றன. ஓலைகளே எனது நண்பன். எனது தனிமையையும், துயரையும் அவைகளை விட்டால் நான் வேறு எவருக்கும் சொல்ல இயலாது. என்னோடு வாழ்வில் மிக அதிக நேரம் செலவிட்டது ஓலைகள் தாம்.

சீக்கிரம் உறங்கினால் தான் காலையில் எழும்பமுடியும், கண்களை தூக்கம் தழுவுமுன்பதாக கடவுளுக்கு நன்றி கூறுவது எனது கடமை. ஜாஸ்மினைப்போல, நானும் எனது பங்கிற்கு அந்த இடத்திலிருந்து மன்றாட்டை ஏறெடுக்க ஆரம்பித்தேன். எப்படி என்னால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடிந்தது, ஒன்றுமே இல்லாமல் எனது பயணத்தை துவக்கி இன்று அனேகருக்கு ஒரு உந்துசக்தியாய் உயர்ந்து நிற்க அருட்கொடையை அளித்த என் அண்டவருக்கு நன்றி கூறினேன். எனது பயணம் முழுக்க எனக்கானவைகளையும், உதவி செய்பவர்களையும் எனக்கு ஆயத்தம் செய்த்தது கடவுளின் கருணைக்காக நன்றி கூறினேன். இவ்வுலகத்தில், அனேகர் தங்கள் வாழ்வை அற்பணித்து பணியற்றிக்கொண்டிருக்கும் வேளையில், பனை பணிக்காக கடவுள் என்னை தெரிந்து கொண்டதற்கும், எனது பயணத்தை சிறப்பாக நிறைவுறச் செய்த்ததற்கும் நன்றி கூறினேன். என்னால் தனித்து செய்ய இயலாதவைகளை திறம்படச் செய்யும்படியாக எனக்கு கடவுள் அவ்வப்போது அளித்த நல்ல உறவுகளுக்காக அவருக்கு நன்றி கூறினேன்.

கண்களில் தூக்கம் ஏறி சொக்குகையில்,  சாலைகள் பின்னோக்கி நகர்ந்து கோண்டிருந்தன, மக்கள் புன்னகையுடன் என்னைக் கடந்து போனார்கள் பனைமரங்கள் எனக்கு எதிர்கோண்டு வந்துகொண்டிருந்தன, குருத்தோலை கற்றையை நான் இறுக பற்றிக்கொள்ள, கடவுள் என்னை அணைத்து ஆசியளித்தார். அவரது மார்பே எனக்கு அடைக்கலம் என கண்ணயர்ந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (85)

செப்ரெம்பர் 23, 2016

காவல்கிணறு

பனைமரச்சாலையில் நானும் அமிர்த்தராஜும்

பனைமரச்சாலையில் நானும் அமிர்த்தராஜும்

அமிர்தராஜும் நானும் இணைந்து அந்த இருண்ட சாலையில் பயணித்தோம். ஒரு இடத்தில் வந்தவுடன், பாஸ்டர் இனிமேல் ரோடு கொஞ்சம் மோசமாக இருக்கும் என்றார். காவல் கிணறு தான் அமிர்தராஜுடைய சொந்த ஊர். ஆகவே, அங்கே சென்றுவிட்டு நான் உங்களுக்கு வழிகாட்டுவேன், நீங்கள் அங்கிருந்து கன்னியாகுமரி செல்லலாம் அல்லது என்னுடனே தங்கிக்கொள்ளுங்கள் என்றார். நான் இல்லை இன்றிரவே நான் கன்னியாகுமரி செல்லவேண்டும் என்றேன்.  அப்படியானால் நான் நாளை காலை உங்களோடு சேர்ந்து கொள்ளுவேன் என்றார். திட்டம் உறுதியானது. உடைந்து நொறுங்கியிருந்த சாலைகளில் மெதுவாக பயணித்தோம். காவல் கிணறு வருவதற்கு இன்னும் இருபது கிலோ மீட்டரே இருக்குமிடத்தில் பெட்ரோலுக்காக நிறுத்தினோம். சற்று ஓய்வு தேவைப்பட்டதால் இளைப்பாறி செல்லலாம் என யோசித்தோம். நான் அழைக்கவேண்டியவர்களை எல்லாம் அழைத்து அருகில் வந்துவிட்டேன் எனக் கூறினேன். ஒழுங்கு செய்ய வேண்டியவைகள் அனைத்தும் ஒழுங்காய் இருக்கிறதா எனக் கேட்டு சரிபார்த்தேன்.

அப்போது அங்கே பெட்ரொல் நிரப்பும்படியாக வந்த இரண்டு இளைஞர்கள் எங்களைப்பார்த்து ஆச்சரியப்பட்டு பேச்சுக்கொடுத்தார்கள். பனைமரங்களின் நிலை அறிய மும்பையிலிருந்து பயணம் செய்கிறேன் அமிர்தராஜ் சென்னையிலிருந்து என்னுடண் இணைந்திருக்கிறார் என்றேன். எங்கள் ஊரிலும் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது, என்றார்கள். கிடைத்த தருணத்தை வீணாக்காமல் பனை மரத்தின் அருமை பெருமைகளைக் கூறி காப்பாற்ற முயற்சியை மேற்கொள்ளுங்கள் எனக் கூறினோம். திட்டமிடாமலேயே இப்படி ஒரு நிகழ்வினை நிறைவு செய்ய முடியுமென்றால் திட்டமிட்டு, மக்களைக் கூட்டி பனை காக்கும் முயற்சியை மேற்கொண்டால் அது பெருந்திரளான மக்களைச் சென்றடையும் இல்லையா என யோசித்தேன்.

அமிர்தராஜ் கிளம்புவோம் என்றார். அதில் ஒரு உறுதி தெரிந்தது, வரவேற்புக்கான திட்டங்களை அதற்குள் ஒழுங்குபடுத்திவிட்டாரோ?. மெல்ல பயணித்து காவல் கிணறுக்கு இன்னும் மூன்று கிலோமீட்டர்களே இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தி, ஏ டிஎ ம் மிலிருந்து எனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்தார். அப்புறம் தான் சொன்னார், காவல்கிணறில் உங்களுக்கான வரவேற்பு அளிக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் முன்னால் செல்லுங்கள் என்றார். இதுவும் பயண திட்டத்தில் இல்லாதது. எங்கள் பயணத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம் மாறிக்கொண்டே வந்தது, நாங்கள் எப்போது காவல்கிணறு வருவோம் என்பது எங்களுக்கே தெரியாத உண்மை. நான் திட்டமிடுகையில் கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை வழியாக பயணிக்கவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். மாலை ஆறரை அல்லது ஏழு மனிக்குத்தான், நாங்கள் காவல்கிணறு நோக்கி புறப்படுகிறோம் என்பதே உறுதியானது. அதற்குள் எப்படி, ஒரு வரவேற்புக்கான ஆயத்தம் செய்தார்கள்? புரியவில்லை. அமிர்தராஜுடைய ஏற்பாடு தான் என நினைத்துக்கொண்டேன்.

நான் காவல்கிணறு வந்தபோது மூன்று வாலிபர்கள் எனது வகனத்தை பேருந்து நிழற்குடை அருகில் ஓரங்கட்டினர். இருபதிற்கும்  அதிகமான ஆண்கள் கூடியிருந்தனர். நான் ஆச்சரியப்படும்படியாக கத்தோலிக்க திருச்சபையின் பங்கு தந்தையும் வந்திருந்தார்கள். பங்கு தந்தை எனக்கு சால்வையிட்டு ஆரத்தழுவி அணைத்துக்கொண்டார். இளைஞர் மன்றம் சார்பில், இன்னும் பல்வேறு நபர்களும் சால்வை அணிவித்தனர். அங்கு கூடியிருந்தது பெரும்பாலும் கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்த இளைஞர்கள். பங்குதந்தை குறிப்பிடும்போது, காவல் கிணறு இளைஞர் மன்றம் தான் இன்று என்னை இங்கு அழைத்து வந்தனர். குறிப்பாக தம்பி கிறிஸ்டோபர் அனைத்து பொறுப்புகளையும் முன்னெடுத்து இளைஞர்களை ஒருங்கிணைத்தார், ஆகவே இளைஞர்களுக்கான உரையை  ஆற்றுங்கள் என்றார். ஒரு பங்கு தந்தையின் ஆகச்சிறந்த முன்மாதிரியாக அவர் காணப்பட்டார். இளைஞர்களை ஒன்றிணைப்பது சுலபமல்ல. பொங்கி பிரவகிக்கும் அவர்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது சாத்தியமும் அல்ல, ஆனால் அற்பணிப்போடு இருக்கிறவர்களுக்கு அது கைகூடும் என்பது, எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நான் பேசியபோது, தமிழக மாநில மரமாகிய பனைமரம் சமய அளவுகோலின்படி கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமான ஒரு மரம். இஸ்ரவேலர் எகிப்தியர் கைக்கு தப்பியோடி பாலும் தேனும் ஓடுகின்ற கானானைத் தேடிச் செல்கையில் அவர்கள் இளைப்பறிய இடம் ஏலிம் என அழைக்கப்படுகிறது. அங்கே தான் 70 பேரீச்சை மரங்களை இஸ்ரவெலர் காண்கின்றனர். அங்கே 12 நீரூற்றுக்களும் இருந்தன. ஏழு அல்லது எழுபது எனும் வார்த்தைகள் திருமறையில் பயன்படுத்தப்படும்பொழுது முழுமையான எனம் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறதைக் காண்கிறோம். அப்படியானால் பேரீச்சை மரங்கள் ஒரு முழுமையான வாழ்விற்குச் சான்றாக ஏலீமில் நின்றிருக்கின்றன என்பதை காண்கிறோம். 12 நீரூற்றுகள் என்பது ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் தனித்துவமான இடங்களை பெறும்படி மோசேயால் செய்யப்பட்ட ஒரு ஒழுங்கு என்பதை நாம் அறியலாம்.

எப்படி  இஸ்ரவேலருக்கு பேரீச்சை மரங்களோ அது போலவே நமக்கும் பனை மரங்கள் முக்கியமனது. நமது உணவிற்கான வேட்கையில், கலாச்சாரத்திற்கான வேட்கையில், இயற்கையோடு ஒன்றித்த வாழ்விற்கான வேட்கையில், பனைமரம் முதன்மையாக நம்முன்னால் நிற்கிறது. ரோம அரசிலிருந்து  தமக்கு விடுதலை வேண்டும் என கொடும் வரிகளினால் துன்புற்றிருந்த யூத மக்களே, குருத்தோலைகளைப் பிடித்து இயேசுவுக்கு எதிர்கொண்டு போனார்கள். விடுதலை பெறவேண்டி  வந்தவர்கள் அனைவருமே இயற்கையோடு வாழ விழைந்தவர்கள் தாம், ரோம அரசோ அதை உணராமல், சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தது. சமய தலைவர்கள் தங்களுக்கான வருமானங்களைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.  ஆகையினால், இயேசு தனது பணி மக்களைச் சர்ந்தது மாத்திரம் அல்ல முழு படைப்பையும் உள்ளடக்கியது என உணர்ந்து எருசலேமைப் பார்த்து கண்ணீர் உகுக்கிறார். ஆனால் ஆன்மீக தலைமை பீடமான எருசலேமோ சுரண்டலினால் கொழுத்து, எப்போது யாரை பலிகொள்ளலாம் எனக் காத்திருக்கிறது.

நாம் இன்று கொண்டாடுகிற குருத்தோலை பவனிக்குப்பின்னால் இயேசுவை முன்னிறுத்தி நின்ற பேரீச்ச மர தொழிலாளிகள் நமம்து மனக்கண் முன் விரிகிறார்கள். திருச்சபை, இயேசுவோடு நின்றவர்களை விடுத்து, பரபாசோடு சேர்ந்துகொள்ளுகிற ஒரு காலகட்டத்தில் நாம் வாழுகிறோம். இன்றைய நமது குருத்தோலை பவனிகளை எண்ணிப்பாருங்கள். குருத்தோலைகளிலான அலங்காரம் நம்மை சுற்றியிருக்க, களிப்புடன் நாம் குருத்தோலை பண்டிகையைக் கொண்டாடுகிறோம், எப்போதாவது, பனைத் தொழிலாளிகளை நாம் குருத்தோலை ஞாயிருடன் தொடர்புபடுத்தி பார்த்திருக்கிறோமா? குருத்தோலை பண்டிகையை களிப்புடன் கொண்டாட நமக்கு ஓலை தரும் நபரை மறந்து விட்டு நாம் கொன்டாடும் குருத்தோலை ஞாயிறு எவ்வகையில் பொருளுள்ளதாக முடியும். சமூகத்தின் கடை மட்டத்தில் இருந்த பெரீச்சை மரம் சார்ந்து வழும் மக்களுடன் இயேசு இருந்திருக்கிறார் எனும்போது, பனைத்தொழிலாளிகளுடன் நாமும் கைகோர்ப்பது அவசியமில்லையா?

திருச்சபையில் பனை மரங்கள் இல்லாத போது, குருத்தோலை பவனி செல்லுவது, திருச்சபை மீண்டும் ஒருவித சுரண்டலை முன்னெடுக்கிறது என்பதற்கு அடையாளம். திருச்சபை வளாகங்களில் குருத்தோலை ஞாயிறு அன்று ஒரு பனைமரக் கன்றாவது நடுவோம். குளக்கரைகள் ஏரிக்கரையோரங்கள் மற்றும் தரிசு நிலங்களில் பனை மரத்தினை வளர்ப்போம். என்று கூறிவிட்டு நான் எடுத்துச் சென்றிருந்த ஓலைப்பொருட்களை காண்பித்தேன். ஓலைகளுக்கான பயிற்சியளித்து மக்கள் பொருளுள்ள ஒரு குருத்தோலை ஞாயிறை அனுசரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனக் கோரினேன்.

இன்று நம்முன்னால் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கு கேள்வி யார் பனை ஏறுவார் என்பது, அந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன், நம்மிடம் இருக்கும் ஓலைகளை பயன்படுத்த முயற்சிப்போம். குருட்தோலை ஞாயிறு பனையையும் மானுடத்தையும் இணைக்கும் ஒரு தன்னிகரில்லா நாளாக நாம் கோண்டாட முயற்சிப்போம். அதுவே சிறந்த வழியாக நம்முன்னால் இருக்கிறது. இன்று எஞ்சி இருக்கின்ற ஓலைகளையும் நாம் பயன்படுத்த தவறிவிட்டோமென்று சொன்னால், பிற்பாடு நாம்மால் ஒருபோதும் மீளமுடியாத இருளுக்குள் சென்று விடுவோம்.

ஏன் கிறிஸ்தவம் குறித்து மட்டும் பொது இடத்தில் நின்று பேசுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம், நான் அடிப்படையில் ஒரு போதகர், என்னை வரவேற்றதும் ஒரு கிறிஸ்தவ பாதிரியார், இருக்கும் இடத்தை தூய்மையாக்குவதே நாம் செய்யத்தக்க சிறந்த பணி. அதுவே நம்மை பண்படுத்தும் ஆயுதமக கொள்ளவேண்டும், நம்மை மறைத்து பிறறைக் குற்றப்படுத்துவது ஒருபோதும் நமக்கு உதவாது. பனை சார்ந்த தொழில் மீண்டுவர திருச்சபை தனது கரங்களை நீட்டட்டும், திருச்சபை ஒரு முன்மாதிரியாக திகழட்டும், குருத்தோலை ஞாஉரு அன்று ஓலைகளை நிரம்ப பயன் படுத்துங்கள்; அப்படியே, பெரிய வெள்ளியன்று பனையோலை பட்டையில் கஞ்சியை கொடுக்கும் பரம்பரியத்தையும் விடாதீர்கள். ணன் மும்பையில் இருக்கும் ரசாயனி என்ற பகுதியில் நானே ஓலைகளை சேகரித்து திருச்சபையினர் பனம்பட்டையில் கஞ்சி குடிக்க ஏற்ற வழிவகை செய்தேன். அது நம்மால் கூடுவது தான்.  என்னையும் எனது பயணத்தையும் பொருட்டாக கருதி கூடிவந்திருக்கிற ஒவ்வொரு இளைஞர்களுக்கும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன், குறிப்பாக தம்பி கிறிஸ்டோபருக்கும் பங்கு தந்தை  அவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

நான் பேசி முடிந்தபோது பங்கு தந்தை சொன்னார்கள், மிக முக்கியமான திருமறை சார்ந்த அவதானிப்புகளைக் கூறியிருக்கிறீர்கள், திருச்சபை ஏன் பனை மரத்தை காக்க களமிறங்கவேண்டும் என நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.  நாங்கள் இதுவரை பெரியவேள்ளி அன்று கஞ்சியை பட்டையில் ஊற்றி வழங்கும் பாரம்பரியத்தை நிறுத்தவில்லை, ஆனால் இனிமேல் பொருளுணர்ந்து அதை தொடருவோம், ஆயினும், குருத்தோலை பண்டிகை அன்று பனைத்தொழிலாளிகளை கவுரவிக்கும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என எண்ணுகிறேன், கண்டிப்பாக முயற்சிகள் எடுப்போம் என உறுதி கூறினார்கள். மேலும், கருப்படி சார்ந்த இனிப்புகளை குருத்து ஞாயிறு அன்று வழங்கவும் திட்டமிடலம் என்று நினைக்கிறேன் என்றார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை, இந்திய கலாச்சாரத்தை பேணுவதில் கிறிஸ்தவத்திற்குள் முதன்மை இடம் வகிக்கிறது. பெரும்பாலும் அவர்களின் திருவிழாக்கள் உள்ளூர் பழக்கவழக்கங்களின் நீட்சி தொடருவதைக் காணலாம். பிற கிறிஸ்தவர்கள் பாரம்பரியங்களைக் கைவிட வேண்டும் என்று சொல்லும்போது, மரபிலிருந்து  துண்டித்து புதிய சடங்குகளை மேற்கொள்ளுவதையே குறிப்பிடுகிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம். கத்தோலிக்க திருச்சபை, பனை மரத்தினைக் காக்கும் முயற்சியை முன்னெடுத்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை சீர்திருத்த திருச்சபைக்குள் ஏற்படுத்தும் என நான் உள்ளூர நம்புகிறேன்.

கிறிஸ்டோபர், தனது நண்பர்களை அழைத்து, குளத்தின் ஓரத்தில் பனை விதைகளை நடுவதைக் குறித்து பேசினார். இத்தனை அருமையான ஒரு மாற்றத்திற்கான களம் அங்கிருக்கும் என நான் சற்றும் நினைக்கவில்லை. ஓரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல, தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு சிறு கூட்டமாக காவல்கிணறு இளைஞர்கள் எனது கண்களில் ஒரு நம்பிக்கை கீற்றாக தென்பட்டார்கள்.

வெம்பாரிலும் இங்கும் எனக்கு இடப்பட்ட சால்வைகள் வைக்க என்னிடம் இடம் இல்லை, அமிர்தராஜிடம் அவைகளைக் கொடுத்துவிட்டேன். என்னைப்பொறுத்தவரையில், சால்வைகள் மற்றும் மாலை மரியாதைகள் மீது எனக்கு எந்த பெரிய கவர்ச்சியும் கிடையாது, அவைகளினின்று ஒதுங்கி ஓடவே நான் முயற்சிப்பேன், ஆனால், பனமரச் சாலையில், மாலைகளோ, அல்லது சால்வைகளோ முக்கிய கூறியீடாக விளங்குகிறது. அவைகள் தனிமனிதருக்கான சால்வைகள் அல்ல, பனைத்தொழிலாளர்களை  முன்னிறுத்தும், பனை மரங்களை காப்பாற்ற முயலும் ஒரு சமூகத்தின் உணர்வெழுச்சிகள். இதுவரை கொடுக்கத்தவறிய மரியதைகளுக்கான பரிகாரம். எங்களையும் இப்பணியில் இணைத்துக்கொள்ளுகிறோம் என மனமுவந்து முன்வரும் அற்பணிப்பு என்பதாகவே ஏடுத்துக்கொள்ளுகிறேன்.

நான் அங்கிருந்து  புறப்படும்போது ஒரு நாற்பத்தைந்து  வயது மதிக்கத்தக்க மனிதர் என்னிடம் வந்து, நீங்கள் மெதடிஸ்ட் போதக ராக மும்பையில் இருக்கிறீர்களா? அப்படியானால் போதகர் ரெத்தினமணி ஐயா அவர்களை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அவர் மெதடிஸ்ட் தமிழ் போதகர்களில் மூத்தவர் மற்றும் எனது மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கிறார் என்றேன். அப்போது அவர், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, எனது அம்மா, போதகர் ஹாரீஸ் அவர்களின் வீட்டில் உதவி செய்வதற்கக சென்றிருந்தார்கள், அப்போது நானும் உடனிருந்தேன் என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது. மெதடிஸ்ட் திருச்சபை ஏதாகிலும் ஒன்றை சந்திக்கவேண்டும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் மெதடிஸ்ட் திருச்சபையின் தொடர்புடைய அந்த மனிதரைக் கண்டபோது மனம் நெகிழ்ந்து விட்டது.

இரவு மணி ஒன்பதரையைக்  நெருங்கிக்கொண்டிருந்தது, அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடை பெற்றோம். அமிர்தராஜ்    என்னை காவல்கிணறு நாற்கர சாலையில் கொண்டு விட்டார். நேரே போனால் நீங்கள் கன்னியாகுமரி போகமுடியாது, அஞ்சு கிராமம் அருகே நீங்கள் திரும்பி கன்னியாகுமரி சாலையைப் பிடிக்கவேண்டும் என்றார். எனக்கு அஞ்சுகிராமம் மிக நன்றாக தெரியும், நீங்கள் கவலைப்படாதீர்கள். நாளைக் காலையில் மறக்காமல் வந்துவிடுங்கள், எனக் கூறி விடைபெற்றேன். வண்டி வழியில் ஏதும் பிரச்சனை செய்யுமா என தெரியாது, கடைசி கணத்தில் எதுவும் தவறாகிவிடக்கூடாது என வேண்டுதல் செய்தபடி  தனித்த எனது பயணம் தொடர்ந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (84)

செப்ரெம்பர் 23, 2016

சொக்கன்குடியிருப்பு

பனைமரச்சாலையில் பசி ஒரு பொருட்டல்ல என்பதை எங்களுக்கே எங்களுக்கான நியதியாக வகுத்துக்கொண்டோம். ஹாரீஸ் காலையிலிருந்தே பனைக்குளம் செல்லவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார். பனைக்குளம் பனைகளால் சூழப்பட்ட ஒரு இடம், விதம் விதமாக படம் எடுத்துக்கொள்ளலாம் என சொல்லிக்கொண்டார். பனையும் குளமும் இணைத்த பெயர், அந்த ஊரையே கற்பனை செய்து கொண்டேன். மிகவும் அழகாக இருக்கும் என்றே தோன்றியது. புகைப்பட கலைஞர்களின் கண்கள் கலைக்கண்கள் இல்லயா?. குளத்தை சுற்றி நிற்கும் பனைமரங்கள் அருகில் நின்று நாம் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது.

மணி நான்கைத் தாண்டிவிட்டிருந்தது.  இனிமேல் நாம் செல்ல வேண்டிய இடம் சொக்கன் குடியிருப்பு என்றார் அமிர்தராஜ். அமிர்தராஜின் நண்பரின் தோட்டம் அங்கே இருந்தது. நேற்று இரவு சந்தித்த நண்பருடைய அழைப்பின்பேரில் அங்கே செல்லுகிறோம் என்று அமிர்தராஜ் சொன்னார். மறுக்க முடியவில்லை. ஆகவே பனைக்குளத்தை தவிர்த்து சொக்கன் குடியிருப்பு போவதாக முடிவெடுத்தோம். ஆனால் சொக்கன்குடியிருப்பு பனைத் தோட்டம் ஒரு உற்சாக சுரங்கம் என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை.  எங்கள் இணைந்த பயணம் அத்துணைச் செறிவான ஒன்றாக அமையும் என்பது நாங்கள் கனவிலும் நினைத்திராத ஒன்று.

சொக்கன்குடியிருப்பு போகும் வழியில் ஒரு பெரிய கடையைப்பார்த்து நிறுத்தினோம், அங்கே டீ மற்றும் சர்பத் மட்டும்தான் இருத்தது, வடை ஏதும் இல்லை. பிஸ்கட் வைத்திருந்தார்கள், ஒரு சிலர் டீயும், பிறர் சர்பத்தும் குடித்தோம். சற்று தெம்பு வந்தது.  அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் இருந்த ஒரு பனைக்குடிலைப் பார்த்து நிறுத்தினோம். பனைத்தொழிலாளியின் வீடு தான், பதனீர் கிடைக்குமா என்றோம்? இல்லை என்றார். காலையில் மட்டுமே கிடைக்கும் என்றார்கள். ஜெபக்குமார் “கள்ளாவது வாங்கித்தரக்கூடாதா என்று வேடிக்கையாக” கேட்டார், அதற்கென்ன, அவருக்காக அதையும் கேட்டுப்பார்த்தேன், அதுவும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கள் கிடைக்குமிடங்கள் இன்றும் உண்டு, ஆனால் அவைகள் இரகசியமாக வைக்கப்படவேண்டிய உண்மைகள். பெரும்பாலும் ஒவ்வொரு பனைத்தொழிலாளியும் தனக்கான சக்தியை கள்ளிலிருந்தே பெறுவார். அது  ஒரு ஊக்க மருந்து போல, சர்க்கரை உடனேயே இரத்தத்தில் கலந்து அவர் செலவளிக்கின்ற உழைப்பை ஈடு செய்யும். ஆனால்,  இன்று மிக எளிதாக  அவர்களைக் கண்டுபிடித்து வழக்கு பதிவுசெய்துவிடுவார்கள்.  பனைத்தொழிலாளி கூட டாஸ்மாக்கில் தான் தனக்கான பங்கை தேடிக்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

நாங்கள் செல்லும் வழியில் மீண்டும் ஒரு இடத்தில் பனைமரங்கள் வெட்டுண்டு கிடந்தன. அனைவரின் முகமும் கலவர பூமியை கடந்து வந்ததுபோல ஆயிற்று. அமிர்தராஜ் அந்த இடத்தில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  ஓரு மெல்லிய  துக்கம் எங்களுள் இழையோடியது. உள்ளூரில் நிகழும் மரணம் போல, ஊரில் முக்கியமான ஒரு பெரியவர் காலம் சென்றதுபோல, மரணம் நிகழ்ந்த தெருவுக்குள் செல்லும் அமைதலோடு இறுதி அஞ்சலி செலுத்தியபடி அந்த இடத்தைக் கடந்துபோனோம். பனைமரங்களின் மரணம், தவிர்க்க முடியததாக பனைமரச்சாலையில் தொடர்ந்து வருவதை வேதனையுடன் கவனித்து வருகிறேன். இதே நிலை நீடித்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் நம்மால் நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாத இழப்பு நோக்கி அது நம்மை உந்தி தள்ளிவிடும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்.

பனை, உயர்ந்த வானம் மற்றும் ஆழக்கடலின் பின்னணியில் பனைமரச்சாலை குழுவினர்

பனை, உயர்ந்த வானம் மற்றும் ஆழக்கடலின் பின்னணியில் பனைமரச்சாலை குழுவினர்

இன்னும் சற்று தொலைவு சென்றபோது எங்களுக்கு முன் சென்ற ஜெபக்குமார், தனது காரை நிறுத்தினார், என்ன என்று விசரித்தால், பனை மரத்தின் பின்னணியில் தூரத்தில்  தெரியும் கடலும் அமைந்த மேடான பகுதி அது. சாலையின் நடுவில் நாங்கள் நிற்க ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். ஆம் மூன்று புல்லட்டுகள் சேர்ந்து சாலையில் நிற்கும் படத்தை எடுப்பது தேவை என்று சொல்லிக்கொண்டோம்.  நான் அமிர்தராஜ் மைக்கேல் மற்றும் ஹாரீஸ் இணைந்து நிற்கும் அழகிய புகைப்படம் அது. ஒன்றாய்த் துவங்கிய பயணம் இரண்டாய் மூன்றாய்ப் பெருகியது கடவுளின் ஆசி என நிறுவும் சாட்சி அது. இன்னும் பெருகி, பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களை பனை மர வேட்கைப் பயணத்தில்  ஒன்றிணைக்கும் என்பதன் சாட்சி அது.

ஒரு சிறு தடுமாற்றத்திற்கு பின்பு அமிர்தராஜ் சொக்கன்குடியிருப்பிலுள்ள தனது நண்பரின் தோட்டத்திற்கான வழியை கண்டுபிடித்தார். தோட்டத்தின் முன்பு நாங்கள் சென்றபோது, வாசலிலேயே எங்களை ஒரு வடலி பனை வரவேற்றது.  ஆ னால் அந்த பெரிய இரும்புக்கதவில் ஒரு பூட்டும் இருந்தது. பனை மரத்தின் அருகே நாங்கள் நிற்க, உள்ளிருந்து காவலர் ஒருவர்  மிகப்பெரிய  வெள்ளை மீசையுடன், வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டை அணிந்து வெளியே வந்தார். அமிர்தராஜ் செல்பேசியில் தனது நண்பனை அழைத்து தோட்டத்தின் முன்பு தான் இருக்கிறோம் எனக் கூறி,  காவலரிடம் கொடுத்தார், அந்த பெரிய கதவு எங்களுக்காக திறக்கப்பட்டது. பனைமரச்சாலையின் உச்சகணத்தின் வாசல் எங்களுக்காக திறக்கப்படுகிறது என்பது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. திரளான பனைமரங்களும், கொல்லா மாவுகளும் என  கண்களை மயக்கும் ஒரு கனவு தோட்டத்திற்குள் நுழைந்து போல இருந்தது. பனைமரங்கள் மட்டுமே பெருவாரியாக இருக்கின்ற ஒரு தோட்டத்தை அங்கு தான் கண்டேன். நான் நினைத்ததையே ஜெபக்குமாரும் சொன்னார். பனை சார்ந்த ஒரு அழகிய சுற்றுலா மையமாகும் அமைப்பு கொண்டிருந்த தோட்டம்.

பனைமரத்தோட்டம், சொக்கன்குடியிருப்பு

பனைமரத்தோட்டம், சொக்கன்குடியிருப்பு

எங்கள் வாகனங்களைப் பனைமரத்தின் அடியில் நிறுத்திவிட்டு அந்த பனை தோட்டத்தின் அழகில் மூழ்கினோம். பனைக்குளம் எங்கள் எண்ணங்களிலிருந்து பின்நோக்கிச் சென்றது.  நாங்கள் காத்திருக்கையில், தோட்ட காவ லாளி சொன்னார், முதலிலேயே சொல்லியிருந்தால் அனைத்து ஏற்படுகளும் செய்திருப்போமே. ஆனால் எங்கள் பயணத்தில் அது எளிதல்ல, எங்கே நேரம் அதிகமாகும் என்பது எங்களுக்குத் தெரி யாது. ஆகவே தான் அமிர்தராஜ்  அதைக்குறித்து தனது நண்பரிடம் கூட விரிவாக பேசவில்லை என்று நினைக்கிறேன். அனைத்தும் சித்தமானபோது, அந்த காவலாளி எங்களை  அந்த தோட்டத்தின் மிக உயர்ந்த பகுதிக்கு அழைத்துக்கொண்டு போனார்.

தோட்டம் அழகாகத்தான் இருக்கிறது, ஆனால் இங்கே வேறு சிறப்பாக வேறு என்ன இருந்துவிடப்போகிறது என நான் எண்ணியிருக்கக்கூடாதுதான். அந்த எண்ணத்தை புறந்தள்ளும் விதமாக நாங்கள் பார்த்த காட்சி அமைந்திருந்தது.   மாலை ஐந்து மணிக்கு படரும் கண் கூசாத ஒளியில் எங்களை ச் சூழ்ந்திருக்கும் ஒரு பனையுலகை கண்டுகொண்டோம்.  சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனைமரங்களே பிரா தானமாக நின்றன. தூரத்தில் பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் மிகப்பெரிய புத்தன் தருவைக்குளம் கடல் போல் விரிந்து கிடந்தது. சுற்றுவட்டாரத்திலேயே மிக மே டான ஒரு பகுதியில் நின்று இயற்கை வண்ணந்தீட்டிய வானத்தையும் பனைமரங்கள் உருவக்கிய கரும்பச்சை காட்டையும் பார்த்துக்கொண்டிருந்தோம். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும்  கிடைக்காத பேரனுபவம் அது. பனைமர உச்சியில் இருக்கும் ஒரு சிலிர்ப்பு எங்கள் அனைவருக்குள்ளும் கண நேரத்தில் பரவியது. வானமளவு உயர்ந்து நிற்பது போல நாங்கள் நின்ற இடம் உயர்ந்து இருந்தது. ஓரு புகைப்படம் எடுத்தால் முக்கால் பங்கிற்கு அதிகமாக வனமே தெரியும்படியான அழகிய நிலக்காட்சி. சொல்லிழந்து, பேச்சிழந்து, மெய்மறந்து அந்த மாபெரும் இயற்கை காட்சி முன்பு எளியவர்களாக நின்றிருந்தோம். வேகமாக வீசிய குளிர்ந்த காற்று எங்கள் சோர்பை எல்லம் பிடுங்கி வீசி ஏறிந்தபடி சென்றது, தறிகெட்ட ஒரு பேருவைகை எங்களை ஆட்கொண்டது.

சொக்கன்குடியிருப்பு தோட்டத்திலிருந்து

சொக்கன்குடியிருப்பு தோட்டத்திலிருந்து

அந்த காவலர் எங்களிடம் சொன்னார், இதற்கே நீங்கள் அசந்துபோனால் எப்படி, இன்னும் அழகிய காட்சிகள் இருக்கிறது வாருங்கள் என்று. சில நேரம் நாம் தான் சிலரை தவறாக எண்ணிவிடுகிறோம். அந்தக் காவலாளி  மிக உயர்ந்த ரசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை அந்த நாளில் நான் அறிந்து கொண்டேன். ஒரு தேர்ந்த சுற்றுலா தலத்தின் வழிகாட்டிபோல அவர் செயல்பட்டார். மிக முக்கிய பகுதிகளையே அன்று அவர் எங்களுக்கு காண்பித்தார் எனவும், அவரோடு பேசினால், இன்னும் அனேக பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தோன்றியது.  தோட்டத்தின் மறு வாசலுக்கு செல்லும் பாதை வேறு மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பள்ளம் என செம்மண் பாதை வளைந்து நெளிந்து செல்லுவது, மனது கூச்செறியும் அழகிய காட்சி. பனைமர பித்து கொண்டவன் ஒருவன் இங்கு வருவானென்று சொன்னால், இந்த மண்ணே எனக்கு போதும் என ஏங்கி இங்கேயே தங்கிவிடுவான். ஆனால் அங்கிருந்த ஒரு கணம் கூட அந்த இடத்திற்கான திட்ட வரைவுகள் ஏதும் என் மனதில் உதிக்கவில்லை, அந்த அளவிற்கு, அப்பகுதியின் அழகு என்னைக் கட்டிபோட்டது. சொக்கன் குடியிருப்பு என்பதற்கு சிவ பெருமான் குடியிருக்கும் இடம் என்பதே பொருள். சொக்கன்குடியிருப்பு, சொக்க வைக்கும் அழகுடனேயே இருந்தது.

அவர் எங்களைத் தோட்டத்தின் மேற்குப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது இதை விட பெரிதாக என்ன பார்க்கப்போகிறோம் என்றே எண்ணத்தோன்றியது. ஆனால் அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் கடல் தெரிந்தது. ஓரு புறம் அழகிய நன்னீர் ஏரி, மற்றொருபுறம் வங்காள விரிகூடா, விரிந்து பரந்து இருந்தது.  நாங்கள் காண்பது கனவா இல்லை நனவா என கிள்ளிப்பார்த்துக்கொண்டோம். ஜாஸ்மினுடைய தம்பி என்னை ஒரு முறை மிடாலம் கடலுக்கு அருகில் உள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்றான்.  பனை மரங்கள் அதிகம் இருக்கும் இடம் என்று அந்த இடத்தை குறித்துச் அவன் சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது ஒரு சேர பனை மரங்களையும் அரபிக்கடலையும் பார்த்தோம். அதற்கு இணையான தருணம் இது.  ஓருவரை ஒருவர் பார்த்து கண்கள் விரிய சிரித்தோம். பித்தேறும் மனநிலையில் தான் அனைவரும் இருந்தோம். ஹாரீஸ் கூட பனைக்குளத்தை மறந்திருப்பார் என உறுதி கொள்ளலாம்.

ஆனால் ஜெபக்குமார் மற்றும் அமிர்தராஜின் பத்திரிகையாளர் கண்ணுக்கு அப்பகுதியில் நடைபெறும் சுரண்டலும் தென்பட்டது. செம்மண் கொள்ளை நாங்கள் நின்ற இடத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.  வெறும் மூன்று அடி அளவு மண் மட்டுமே எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு 30 அடிக்கும் அதிகமாக மண்ணைச் சுரண்டியிருக்கிறார்கள். அது அங்கே நின்ற பல பனை மரங்களை காவு வாங்கியிருக்கிறது. ஆம், பெற்ற மண்ணைச் சுரண்டும் மனநிலை மனிதனுக்குள் எப்போதோ நுழைந்துவிட்டது. இந்த காட்சியால் நாங்கள் உற்சாகம் வடிந்து சமநிலைக்குத் திரும்பினோம். காவலர் விடுவதாக இல்லை. அய்யா இன்னும் ஒரு இடம் இருக்கிறது, வாருங்கள் வேகமாக செல்லலாம் என்றார்.

நாங்கள் திரும்பி,  தோட்டத்தின் வாசலுக்கு வந்தபோது மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. குலை குலையாக நுங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்தது, ஒருவர் அவைகளை சீவிக்கொண்டு இருந்தார், என்ன ஏது என்று புரிந்து கொள்வதற்குள் எடுத்து சாப்பிடுங்கள் உங்களுக்குதான் என்றார்கள். அனைவரின் பசிக்கணமும் விழித்தெழுந்தது. இதற்காகவே பட்டினி கிடக்கலாம் என்று தோன்றியது. ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தோம், பெருவிரல் நகக்கண்கள் வலிக்குமளவு நான் சாப்பிட்டேன், ஜெபக்குமார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று திரும்பியவர், நுங்கில் பாதி வாய்க்குள்ளும் மீதி அவரது சட்டைக்குள்ளும் சென்றது. நுங்கு சாப்பிடுவதும் ஒரு கலை தான். நுங்கின் மீது,  மாறாக் காதல் கொண்டு, இருகரங்களாலும்  முகத்திற்கு நேரே எடுத்து உதடுகள் விரித்து அழுத்தி கொடுக்கு பிரஞ்சு முத்தமே, சரியான வகையில் நம் அதை கையாளும் மந்திரம். இல்லையென்றால், கை மூட்டுவழி, கன்னத்தின் வழி அதன் நீர் ஓடி சொட்டி நம்மை நனைத்துவிடும். உதடு மற்றும் பெருவிரல் தவிர மற்ற  எதுவும் ஈரமாகக்கூடாது எனப்து தான் நுங்கு குடிக்கும் போது உள்ள சவால். பல்வேறு போட்டிகள் வைப்பது போல நுங்கு தின்னும் போட்டியும் ஒன்று வைக்கலாம். நனையாமல் நொங்கெடுக்கும் போட்டி.

பசியாறி களைப்புமாறி இருக்கையில், காவலர் எங்களை மீண்டும் அழைத்தார், வாருங்கள் அடுத்த இடத்திற்கு போகவேண்டும். இனிமேல் என்ன இருக்கப்போகி றது என நினைத்து அவரைத்தொடர்ந்தோம். ஓரு நூறு மீட்டர் தொலைவுக்கு நடந்துபோய், மீண்டும் ஒரு தனி யாருக்கான தோட்டத்திற்குள் அவர் நுழைந்தார். சிறிய தோட்டம், தோட்டத்தில் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அழகாக பேணப்பட்டுமிருந்தது.  சாலையிலிருந்து மேடேறி செல்லும் சரிவில் இருந்தது. மேட்டில் ஏறும் வரை என்ன பார்க்கப்போகிறோம் என எங்களுக்குத் தெரியாது ஆனால் மேடு முடிந்தபின்போ நாங்கள் கண்டது ஒரு காவிய தாடகம்.

மனதை மயக்கும் குளத்தின் அருகில், சொக்கன்குடியிருப்பு

மனதை மயக்கும் குளத்தின் அருகில், சொக்கன்குடியிருப்பு

ஆம் தோட்டத்தின் உச்சியிலிருந்து நாங்கள் பார்த்த அதே குளம் தான் ஆனால் குளத்தினுள் பனை மரங்கள் செழிப்பாக நின்றுகொண்டிருந்தன. தண்ணீர் சிறு அலையாக வந்து பனைமரங்களின் பாதங்களை வருடிச்சென்றது. பனைமரத்தின் கெண்டைக்கால்கள் வரை, முழங்கால் வரை கூட நீர் நிறைந்து இருந்தது. தண்னீருக்குள் பனை மரம் இருக்கும் அழகை யாராலும் பார்த்துத் தீர இயலவில்லை. இங்கேயே தங்கிவிடலம் என்று தான் அனைவருமே எண்ணினோம். ஆனால் அனைவருக்கும் கடமைகள் இருந்ததால் எங்களால் அங்கே அன்று தங்க முடியவில்லை. கண் குளிரும்படி நீர்நிலையைப் பார்த்தபடி அங்கிருந்தோம்.  சிறு பேச்சு பேசி சிரித்தோம், வாழ்வில் என்றும் மறக்க இயலா உச்சக்கட்ட தருணமாக  எங்களை நெகிழ்வாக்கிக் கொள்ள உதவும் கணமாக அது இருந்தது.

தோட்டத்தை விட்டு வெளியே வந்தபோது அங்கே எங்களின் அடுத்த திட்டம் என்ன என ஜெபக்குமார் கேட்டார்கள். அவருக்கு அடுத்த கட்ட நிகழ்ச்சிக்குப் போகவேண்டும். ஹாரீசும் மைக்கேலும் கூட வேறு திட்டம் வைத்திருந்தார்கள். பிரியும் நேரம் என்பதை உணர்ந்தோம், எங்கள் கனத்த உணர்ச்சிகள் வெளியே தெரியாதபடி சூரியன் தன்னை மறைத்துக்கொண்டான். இருள் கவ்வியது. நானும் அமிர்தராஜுமாக மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (83)

செப்ரெம்பர் 22, 2016

மணப்பாடு –  பனைமரச்சாலையின் கீற்று

கரத்தில் பணம் இல்லாதிருந்ததால் பெரிய அக்காவிடம் கேட்டிருந்தேன்.  எனது வாழ்வில் பணத்தேவைகளுக்கு எப்போதும் நம்பிச் செல்லலாம், எப்படியாவது ஒழுங்குசெய்து கொடுத்துவிடுவார்கள். ஒன்று எனது பணத்தேவைகள் பெரிய அளவில் இராது, இரண்டாவது அக்கா என்மீது வைத்திருக்கும் அன்பினால் நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள். அக்கா எனக்கு பணம் அனுப்பியிருந்ததாக அமிர்தராஜ் சொன்னார். அவரது வங்கி இலக்கத்தைதான் நான் அவர்களுக்கு கொடுத்திருந்தேன். பணம் வந்துவிட்டதும் பசியெடுக்க ஆரம்பித்தது. என்னோடு இதுவரை பொறுமையோடு வந்த அமிர்க்ட்தராஜ், சூழலை நன்கு உணர்ந்து அதற்கேற்றார்போல் தன்னை ஒடுக்கிக்கொண்டது பெரியவிஷயம். அந்த வேலையில் ஜெபக்குமார் தந்து சகலையோடு காரில் வந்தார்.

எங்கள் முன்பதாக இரண்டு காரியங்கள் முடிவெடுக்க இருந்தன.  ஒன்று, நாங்கள் உடனடியாக உணவு உண்ணச் செல்லவேண்டும். மணப்படு பகுதியி உணவு விடுதி தேடிப்போனால், ஜெபக்குமார் பர்சுக்கு வேலைவைக்கும்படியான உணவு விடுதி ஏதும் அருகில் இருக்காது, இரண்டாவது, பசியை யோசித்தால் நாங்கள் மிக முக்கியமாக கருதியிருக்கும் மணப்பாடு பெண்கள் கூட்டுறவு சங்கம் நடத்தும் ஓலைப் பொருட்களைப் எங்களால் பார்க்க இயலாது. என்ன செய்யலாம் என யோசித்த போது, உணவை தியாகம் செய்வதுதான் உசிதமாக பட்டது. சரி யாருக்கு வழி தெரியும் என்று கேட்டார்கள். நான் ஒருவரை ஒருவர் பார்த்தேன், எவருக்கும் வழி தெரியவில்லை என்பது புரிந்தது. அனைவருமே முதன் முதலாக வருபவர்கள். ஆகவே, நானே களத்தில் இறங்கி வழி காட்டுகிறேன் என முன்னால் சென்றேன்.

1997அம் வருடம் முதல் நான் இங்கு வந்துகொண்டிருக்கிறேன். பேருந்து வசதி இல்லாத இடம். முதன் முறை வந்த போது சுமார் முண்று மணி நேரம் காத்திருந்த பின்பே பேருந்து கிடைத்ததை நினைவு கூர்ந்தேன். வின்ஸ்டனுடன் அவனது தங்கையின் திருமணத்தின்போது இங்கு வந்து ஒருசில பொருட்களை வாங்கிச்சென்றிருக்கிறோம்.  நான் மும்பையிலிருந்ததால்,  ஒரு நபரை அழைத்து இந்த கூட்டுறவைக் கண்டு, உதவி பெறலாம் என முயற்சித்தபொது, அது செயல்பாட்டில் இல்லை என பதில் வந்தது. ஆகவே நானே நேரில் வரவேண்டும் என நினைத்து, கடைசியாக ஒரு வருடம் முன்பு ஜானியுடன் வந்தபோது கூட்டுறவு மூடியிருந்தது, பொங்கல் நேரமானபடியல் விடுமுறையாக இருந்திருக்கலாம். அன்று நாங்கள்  இரண்டு மணி நேரம் கத்திருந்தே நாகர்கோவில் பேருந்தை பிடித்தோம். சாலைகள் மிகக்கேவலமாக இருந்தன.

இத்துணை ஒதுக்குப்புரமான இடத்தில் இருந்தாலும் பனை ஓலைகளில் செய்யும் கலைப் பொருட்களுக்கு, உலக  அளவில் மணப்பாடு ஒரு முக்கிய மையமாக காணப்படுகிறது. பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு உட்பட அனேக முக்கிய ஆளுமைகள் வந்து சென்ற இடம்.  ஐரோப்பா உட்பட, அனேக நாடுகளுக்கு பனை ஓலைப் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. சிறந்த தரம் மற்றும் குறைந்த விலையே காரணம். அங்குள்ள பொருட்களின் தரத்திற்கு அவர்கள் சொல்லுகின்ற விலை மிகவும் குறைந்தது என நேரில் செல்பவர்கள் உணர்ந்துகொள்ளுவார்கள். ஆனல், இதே பொருட்கள் வெளியே வாங்கி விற்கும்போது, விலை பன்மடங்காக உயர்வதை நாம் கண்டுகொள்ள முடியும்.

பனையோலை பூ தோரணம்

பனையோலை பூச்செண்டு

உதாரணத்துக்கு எனது அனுபவத்திலிருந்து ஒன்றை மட்டும் நான் சொல்லுகிறேன். பனை ஓலையில் செய்யப்பட்ட தோரணம் ஒன்றை நான் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக வாங்கினேன், கோவையில் இருக்கும் எனது மூத்த சகோதரியின் மகன் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, எப்படியிருந்தாலும் இதன் விலை சுமர் 700 ரூபாய் வரை இருக்கும் என்றான். ஓலையின் வசீகரம் அப்படிப்பட்டது. எளிய பின்னல் தான், உட்கார்ந்த இடத்தில் இருந்தே கைகள் பழகி விட்டால், ஒரு மணி நேரத்திற்குள் ஒருவர் ஒன்றைச் செய்த்துவிடலம். ஆனால் அந்தத் தோரணம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

இருபது வருடத்திற்கு முன் நான் வந்தபோது, ஓலைகள் உள்ளூரிலெயே கிடைக்கும் வசதிகள் இருந்ததை காண முடிந்தது, இன்றோ, பனை மரங்கள் நின்ற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக சுற்றுலத்தலமாக மணப்பாடு வளர்ச்சியடைவதைக் காணமுடிந்தது.

நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பனையோலைப் பொருட்கள்

நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட பனையோலைப் பொருட்கள்

நாங்கள் சென்று சேர்ந்தபோது, நல்லவேளையாக கூட்டுறவு திறந்தே இருந்தது. முன்பு போல் ஆட்கள் வந்து ஓலைகளை திண்ணையிலிருந்து பின்னிக்கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை. எவ்விதமான மாற்றம் நிகழ்ந்தது என தெரியவில்லை, ஆனால் நிர்வாகம் நொடின்ட்து போயிருக்கிறது எனப்தில் சந்தேகம் இல்லை. மும்பையிலிருந்தும் கூட ஆட்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்லுகிறார்கள். ஆனால் கட்டிடங்கள் பாழடைந்தும், செயலூக்கம் இன்றிய்ம் கானப்பட்டது. நாங்கள் உள்ளே நுழைந்தபோது இரண்டே இரண்டு பெண்கள் அமர்ந்து அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளே சென்று பொருட்களைப் பார்வையிடலாமா என்று கேட்டோம். ஆம் என்று சொன்னர்கள். அதன் பின் நடந்தது ஆச்சரியமளிக்கும் உண்மை.

உள்ளே சென்றவர்கள் அனைவரும் அரண்டு போனார்கள். எதை பார்ப்பது எதை விடுவது என ஒருவருக்கும் தெரியவில்லை, ஓலையில் இத்தனை கைவண்ணங்களா என கண்கள் விரிய பார்த்தார்கள். ஓவ்வொருவரும் ஒரு பொருளை எடுத்து ஆச்சரியத்தில் கூவ மற்றவர்கள் அனைவரும் அந்த பொருளைப் பார்க்க ஓடினார்கள். தங்கப்புதையல் கிடைத்தது போல அவர்கள் முகங்கள் மின்னுவதை என்னால் காணமுடிந்தது. ஆம், ஓலையின் வாசீகரம் அப்படிப்பட்டது. நளினமான அதன் வடிவங்கள் எந்த முனியின் தவத்தையும் கலைத்துவிடும் அழகு கொண்டது. அமிர்தராஜும் ஹாரீசும் எதை புகைப்படம் எடுக்கவேண்டும் என திணறிக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்தில் தெரிந்த ஆனந்தமே என்னை திக்குமுக்காடவைத்தது. இதற்கிடையிலும் எனக்கு, நான் முன்பு பார்த்த பல பழய பொருட்கள் காணவில்லை என்பது உறைத்தது.

பல்வேறு வண்ணங்களில் ஓலைகள் பின்னப்பட்டு பெரிய நெகிழி பைகளில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காற்று புகாதபடி ஓலைகளை பாதுகாத்து வைத்தாலே அவைகள் கெடாமல் இருக்கும். ஓலைகளின் முதல் எதிரி காற்றிலுள்ள ஈரப்பதம் தான். குருத்தோலைகளில் ஈரப்பதம் உள்ள காற்று பட்டால் அவைகளில் ஒருவித பூஞ்சை பற்றிக்கொள்ளும். காற்று புகாமல் வைத்துக்கொள்ளுவதே சிறந்தது. அல்லது அடிக்கடி கரத்தில் எடுத்து பயன்படுத்தும் பொருளாக இருக்கவேண்டும். பூஞ்சை வந்துவிட்டால், அது அழகிய தந்த நிற ஓலையை மஞள் நிறமாக மாற்றிவிடும், அதுவும் பூஞ்சை அப்பிக்கொண்ட இடங்களில் மட்டும் நிறம் மாறி தெரியும். அது ஓலைப்பொருட்களின் அழகை சிதைத்துவிடும். ஆகவே பூஞ்சை தொற்றாமல் இருக்கும்படியாக ஒரு தனித்துவமான புகை போடும் முறையைக் கடைபிடிப்பார்கள்.

வண்ணக்கலவையில் உருவான சிறு ஓலைப் பெட்டிகள்

வண்ணக்கலவையில் உருவான சிறு ஓலைப் பெட்டிகள்

மார்த்தாண்டத்தில் உள்ள  பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு ஓலையில் தொப்பி செய்யும் ஒரு பிரிவு உண்டு. வேறு சில ஓலைப்பொருட்கள் செய்தாலும் முக்கியமாக ஓலைத்தொப்பிகளை மார்த்தாண்டத்தில் இவர்களே செய்தார்கள். தமிழகமெங்கும், ஓலையில் தொப்பி செய்யும் வேறு இடத்தை நான் இதுவரை அறிந்தது இல்லை.  ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புகை வெளியேறாத ஒரு அறைக்குள் வைப்பார்கள். மாலை வேளையில் சாம்பிராணி போடுவதுபோல், நெருப்பை மூட்டி அதற்குள் சல்பர் என்ற வேதிப்பொருளைப் போடுவார்கள். போட்டுவிட்டு கதவை அடைத்துவிடுவார்கள். இரவு முழுவதும் அந்த அறையில் புகை முலை முடுக்கெல்லம் பரவி, ஓலையில் ஈரப்பதம் ஏறாமல் தடுத்துவிடும். அதன் பின்பு அவ்வளவு எளிதில் பூஞ்சை ஓலைகளில் பிடிக்காது. எனது அனுபவைத்தைப் பொறுத்தவரையில் நன்றாக காயவைக்கப்பட்ட ஓலை தண்ணீர் கசிவு படவில்லையென்ரு சொன்னால் நீடித்து உழைக்கும். தண்ணீர் ஊற்றி பயன்படுத்தினால் கூட வெயிலில்  நன்கு காயவைப்பது பூஞ்சையை தவிர்க்கும்.
மிகச்சிறந்த கைவினை கலைஞர்கள் மணப்பாடில் இருந்தாலும்,  மணப்பாடு கூட்டுறவு சங்கம் இத்தனை தூரம் தாக்குப்பிடித்தது, அதன் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளின் ஊக்கத்தால் தான் என்பது எனது கணிப்பு. இன்னும் உள்நாட்டு சந்தையில் ஓலைகளால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவாரில்லை. உள்நாட்டில் இப்படிப்பட்ட பொருட்கள் வாங்கக் கிடைக்கிறது எனும் தகவல் கூட  அனேகருக்குத் தெரியாது. இவைகளை எப்படி பிரபலப்படுத்தலாம்?  எப்படி மக்களுக்கு இதன் சந்தை வாய்ப்புகளை எடுத்துக்கூறி, இன்னும் அனேகர், இத்தொழிலின் மூலம் பயன் பெற செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் இது. வீட்டில் இருந்தபடியே அவர்கள் இதை முன்னெடுக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படி இதைச் நாம் பரவலான மக்கள் கவனத்தைப் பெறும்படி செய்ய முடியும் என யோசித்தேன்.

ஓலையில் செய்யப்பட்ட பலதரப்பட்ட பொருட்கள்.

ஓலையில் செய்யப்பட்ட பலதரப்பட்ட பொருட்கள்.

என்னைப் பொறுத்தவரையில் திருவிழாக்கள் நடைபெரும்  நேரம், சீன பொருட்களை  புறக்கணித்து மாற்றாக ஓலைப்பொருட்களை முன்னிறுத்தலாம்.  மேலும் திருவிழா நேரத்தில் ஒழுங்கு செய்யும்  அலங்காரங்களுக்கு  பதில்  ஓலைகளில் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் ஏற்றது என்பது எனது உறுதியான எண்ணம்.  மணப்பாடு பகுதியில் ஆழ வேரூன்றியிருக்கும் கத்தோலிக்க திருச்சபை, இதற்கான ஒரு முயற்சியை எடுத்தால், அதன் மூலம், அனேகர் பயன் அடைவார்கள் என நினைக்கிறேன். திருவிழா காலத்தில், ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி அவைகளை ஆலய அலங்கரிப்புக்கு தொடர்ந்து  பயன்படுத்தினார்கள் என்று சொன்னால், ஒரு ஐந்து வருடத்தில் பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து நினைப்பதற்கும்  அதிகமான வணிக வாய்ப்புகள் குவியும். ஓலையில் பணி செய்வோரின் தேவைகள் தானாகவே அதிகரிக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், எப்படியாவது தங்கள் ஆலயத்திலும் இவ்விதமான அலங்காரங்களை முன்னெடுக்கவேண்டும் என பிரயாசப்படுவார்கள். மீண்டும், மணப்பாடு வரும்போது பங்கு தந்தையை சந்தித்து இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்க அவரிடம் கோரிக்கை வைக்கவேண்டும்  என நினைத்துக்கொண்டேன்.

ஓலைப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆசை தீர்ந்த பாடில்லை, அமிர்தராஜ் கணக்கில்லாமல் வாங்கிக்கொண்டே போனார். எப்படி கொண்டு போவீர்கள் எனக் கேட்டேன், “அதற்கு தான் ஜெபக்குமார் அண்ணன் கார் இருக்கிறதே” என்றார். ஜெபக்குமாரோ, “அதெல்லம் எனக்குத் தெரியாது, வீட்டில் யாரேனும் எடுத்தார்கள் என்று சொன்ணால் நான் பொறுப்பில்லை என கைவிரித்துவிட்டார்.” அமிர்தராஜ், தான் எதற்கும்  எதற்கும் சளைத்தவரல்ல என்பதையும், தான் எதை கண்டும் அஞ்சும் நெஞ்சத்தவரும் அல்ல எனபது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு,  “அக்காவிடம் நான் பேசிக்கொள்ளுகிறேன்” எனக் கூறியபடி மனம்போல வாங்கினார் . ஜெபக்குமார், அவரது சகலை, ஹாரீஸ் என அனைவரும் ஓலைப் பொருட்களை வாங்கி வாங்கி குவித்துக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த காட்சி மன நிறைவளிப்பதாக இருந்தது. ஓலை பொருட்களுக்கான விருப்பம் மக்கள் மனதில் இன்றும் இருப்பதற்கான சான்று அது.

ஓலைகளில் பொதியப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் வித்தை தெரிந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய பாய்ச்சலை  நிகழ்த்தலாம். இயற்கை சார்ந்த பல்வேறு அழகிய வடிவமைப்பை பெற்றுக்கொள்ள, ஓலையை விட  சிறந்த பொருள் ஏதும்  நம்மிடம் இல்லை. அதனை வடிவமைக்கும் கலைஞர்கள் நமக்குத்தேவை. தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும்,  ஓலைக் கைவினைஞர்களை முடிந்த அளவு பயன்படுத்தினாலே, பல்வேறு சாத்தியக்கூறுகளை நாம் எளிதில் கண்டடையலாம்.

குருத்தோலைகள் இன்று கிடைப்பது அரிதாகி வருகிறது. சாயம் நல்லபடி பிடிக்கவேண்டுமென்றால், குருத்தோலை தான் பயன்படுத்த வேண்டும். தற்போது குருதோலைகள் எவ்விதம் மணப்பாடிற்குள் வருகின்றன, எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்கள். பனையேற்றம் இல்லா சமயங்களில் ஓலைகளுக்கான தேவைகளை எப்படி சந்திக்கிறார்கள், இவைகளை ஒருங்கிணைப்பது யார்?  என பல்வேறு கேள்விகள் மனதிற்குள் இருந்தாலும் அப்போது ஒன்றும் வாயில் வரவில்லை. வண்ண கலைக்கூடத்திற்குள் நிற்கும் சிறு பிள்ளைகள் போலவே குதூகலத்துடன் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நின்றோம். அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நிறம், வடிவம், என காணப்பட்ட அனைத்தும்
தனித்தன்மை கொண்டது. ஆரங்கள், மாலைகள், பூக்கள், பூச்செண்டுகள், பூச்சாடிகள், சிறிய மற்றும் பெரிய பெட்டிகள், பென்சில் எடுத்துச் செல்லும் ஓலை பெட்டி, பல்வேறு பயன்பாட்டுக்கான ஓலை பொருட்கள், டிரே, மேஜையில் டீ வைப்பதற்கான ஓலையில் செய்யப்பட்ட சிறிய பாய்கள், குப்பை போடுவதற்கு என ஓலையில் செய்யப்பட்ட கண்ணைப்பறிக்கும் அழகு குப்பைத்தொட்டிகள். இன்னும் எண்ணிலடங்கா பொருட்கள் அங்கே இருந்தன.

ஓலை என்பது பனை மரத்தைப் படைத்தக் கடவுளின் ஆகச் சிறந்த ஒரு வடிவமைப்பு. அதன் வாசனை, அழகு, மென்மை, நேர்த்தி, நெகிழும் தன்மை மற்றும் நீடித்த உழைப்பு யாவும் மகளை அதன் பால் சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது. பனைமரம் குறித்த புராண கதை ஒன்றில், பிரம்மா மனிதனுக்கு உதவும் ஒரு மரத்தைப் படைத்தார் என வரும் பகுதியை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், திருவிவிலியத்திலும் மனிதனைப் படைத்தபோது ஏற்ற துணை வேண்டும் என அவர் பெண்ணைப் படைத்தார், இந்திய மனங்களுக்காக கடவுள் பனை மரத்தைப் படைத்திருக்கிறார். உலகின் சரிபாதி இன்னும் பெண்களை தங்களின் சரிபாதி என எண்ணத் தவறிவிடுகிற வேளையில், எஞ்சியிருப்போர் பனையை இலகுவில் புரிந்துகொள்வார்களா என்ன? என்றாலும் பனையின் மேன்மையைச் சொல்லுவதே நமது கடமை. சிறுக சிறுக நாம் முயன்று பார்த்தால், ஒருவேளை பனையோலைப் பொருட்களுக்கு, மிகப்பெரிய சந்தை வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. பனைமரச்சாலையில் நான் எண்ணியபடி இந்த இடத்திற்கு வந்தது மன நிறைவளிக்கும் அனுபவமாக இருந்தது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (82)

செப்ரெம்பர் 22, 2016

மங்கல கற்கண்டு

போகிற வழியில் அனேக விஷயங்களை பேசிக்கொண்டோம். கள்ளைப்பற்றி பேசுகையில் ஹாரீஸ் வாயடைத்துப்போனார். ஒரு பாஸ்டர் கள்ளைப்பற்றி பேசுவதை முதன் முதலில் பார்க்கிறேன் என்றார். திருநெல்வேலி போதகர்கள் பனை பற்றி பேசினாலேயே அவர்களுக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லவே,  மைக்கேல், “நாங்கெல்லாம் கள் குடிக்கமாட்டோம் பாஸ்டர், வெறும் ஆப்பம் மட்டுமே சாப்பிடுவோம் என்றார்”. ஹாரீஸ் வெடித்துச்  சிரித்தார்.

நாங்கள் அங்கிருந்து செல்லும் வழியில் ஒரு குடிசையில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது, ஹாரீஸ் மற்றும் மைக்கேல் வந்தபோது அடைக்கலாபுரம் பிரகாஷ் குடும்பத்தினர், கருப்பட்டி காய்த்து முடித்துவிட்டிருந்தனர். ஆகவே எங்கேயாவது கருப்பட்டி காய்க்கும் நேரத்தில் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு புகை ஒரு வழிகாட்டியாக இருந்தது. நாங்கள் அந்த குடிசைக்கு சென்றபோது ஏமாற்றமாக இருந்தது, அங்கு யாரும் இல்லை. ஆனால் அந்த பனந்தோப்பில் அனேக  காரியங்களை அன்று பார்த்தோம். பனைமரத்துக் கிளி, பாதிக்கு மேல் தண்டு உடைந்தும் திடமாய் நிற்கின்ற  பனைமரம், பனை மர வேர்களால் சூழப்பட்ட சிறு ஊற்று. அந்த ஊற்றில் நீர் எடுக்க வாகாக அமைக்கப்பட்ட பனந்தடியாலான ஒரு அமைப்பு, பனையோலை வேய்ந்த குடிசை, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கோ ஆயிரம் ஆண்டுகளுக்கோ வித்தியாசம் ஏதும் தெரியாத ஒரு அமைப்புக்குள் நின்றுகொண்டிருக்கிறோம் எனும் உணர்ச்சி எங்கள் அனைவருக்குள்ளும் ஊடுருவி சென்றதை உணர முடிந்தது.

பனை வேர்களால் சூழப்பட்ட நீரூற்று, அடைக்கலாபுரம்

பனை வேர்களால் சூழப்பட்ட நீரூற்று, அடைக்கலாபுரம்

மணி ஒன்றை நெருங்கிவிட்டது, திருச்செந்தூர் சென்று சாப்பிடலாமா என்று முதலில் நினைத்தோம், பிற்பாடு, பதனீர் வேறு இப்போது தான் குடித்திருக்கிறோம், அது சரிவராது ஜெபக்குமாருடன் இணைந்தே சாப்பிடுவோம் என்று சொல்லிக்கொண்டோம். வசதியான ஆட்களுக்கு தான் செலவு வைக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் விதி வலியது எனபதை பிற்பாடுதான் உணர்ந்து கொண்டோம்.

நாங்கள் வரும் வழியில் ஒரு பனந்தோப்பில் அனேக மரங்கள் ஓலைகள் நீக்கப்பட்டு வித்தியாசமாக காணப்பட்டது. பனந்தும்பு  எடுக்க வேண்டி, பனைமரத்தோடு இணைந்து இருக்கும் மட்டையின்  அடிப்பாகத்தை கத்தியால் கீறி எடுத்திருந்தார்கள். ஓரு நாள் முன்பு நடைபெற்றிருக்கலாம். புத்தம் புதிதாக வெள்ளை வேளேரென்று மேல் பாகம் வெளுத்திருந்தது. எப்படி என்று பார்க்கும்படியாக வண்டியை நிறுத்தினோம். அனைவருக்கும் அது ஒரு அரிய காட்சியாக தென்பட்டது என்பது அவர்கள் கண்களிலிருந்தே தெரிந்தது. மகிழ்ச்சியுடன் அதை கூர்ந்து பார்க்கத் துவங்கினோம். அமிர்தராஜும் ஹாரீசும் தங்கள் புகைப்படக் கருவிகளால் அந்த காட்சியை சுட்டு தள்ளிக்கொண்டிருந்தனர். ஆம் அரிய ஆவணம் அது.

குணசீலனுடன், உடன்குடி பேருந்து நிலையம்

குணசீலனுடன், உடன்குடி பேருந்து நிலையம்

உடன்குடி வந்தபோது எங்களுக்கு வரவேற்பு அளிக்க குணசீலன் வேலன் அவர்கள் காத்து நின்றார். அரசியலில் தீவிரமாக இயங்குபவர், சூழியல் போரளி, சமூக ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ஆளுமை. அமிர்தராஜுடைய நண்பர். கூடன்குளம் போராட்டத்தில் அமிர்தராஜுடன் கைகோர்த்தவர். மதிய உணவு சப்பிடுவோம் என அடம்பிடித்தார். அதற்கு ஜெபக்குமார் அண்ணனை தயார் செய்து வைத்திருக்கிறோம் என்று கூறினோம். குணசீலன் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்குபவர். வேறொரு நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆகவே அவரது நேரத்தை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சர்பத் வாங்கி தந்தார். அடுத்தமுறை இங்கு வருவீர்கள் என்றால் உங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய ஆயத்தமாக இருக்கிரேன் என்றார். தமிழகம் தழுவிய எனது பயணத்தை காலமே நிர்ணயிக்கிறது என கண்டுகொண்டேன். மீண்டும் ஒரு குடிகாரரின் சந்திப்பு அந்த நட்ட நடு நிசியில் நடைபெற்றது. வாழ்க பாரதம், வளர்க தமிழ்க் குடி.

கருப்பட்டி

கருப்பட்டி

தமிழகத்தின் மொத்த கருப்பட்டியிலும் உடன்குடி கருப்பட்டி தான் முதல் தரம் வாய்ந்தது என சொல்லுகிறார்கள். வறட்சியான பகுதியில் இருந்து பெறப்படும் பதனீரின் சுவை அதிகமாக இருக்கும். அதனால் இருக்கலாம். எப்படி இருந்தாலும் காய்க்கும் தன்மையிலோ சேர்மானங்களிலோ வித்தியாசம் இருக்காது என்றே நம்புகிறேன். மதியம் இரண்டு மணிக்கு வந்ததால் எங்களால் கருப்பட்டி தயாரிக்கும் இடங்களுக்கு போக முடியவில்லை.  மீண்டும் ஒருமுறை வந்து கருப்பட்டி தயாரிப்பதை ஆவணப்படுத்தவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பதம் வந்துவிட்டதா என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு வித முறைகளை கையாளுகிறார்கள். குமரி மாவட்டத்தில் தேங்காய் எண்ணை விடுவது வழக்கம்.

காந்தி கருப்பட்டி மேல் தீரா விருப்பு கொண்டிருந்தார்.  ஆலைகளுக்கு எதிராக கிராம பொருட்களை முன்னிறுத்துவதற்கு பனை ஒரு முக்கிய அடையாளமாக அவருக்கு இருந்தது. பனை சார்ந்து அவர் உதிர்த்த பொன்மொழிகளால் அவருக்கு பதனீர், கருப்பட்டி மற்றும்  பனைபொருட்கள் மீதான அசைக்க முடியா நம்பிக்கை தெரிகிறது. மார்த்தாண்டம் ஒய் எம் சி ஏ அவருக்கு கருப்பட்டியை அறிமுகம் செய்திருக்குமா?

“பதநீரைத் தேனுக்கு ஒப்பான இனிய வெல்லமாக மாற்ற முடியும். இவ்வெல்லம் கரும்பு வெல்லத்தை விடச் சிறந்தது. கரும்பு வெல்லம் இனிமையானது. ஆனால் பனைவெல்லமோ இனிப்பும், அதைவிட சுவையும் உடையது. இதில் பல உலோக உப்புகள் உள்ளன. மருத்துவர்கள் என்னிடம் வெல்லம் சாப்பிடச் சொன்னார்கள். அதனால் நான் எப்பொழுதும் பனை வெல்லமே சாப்பிடுகிறேன். ஆலைகளில் கூட உற்பத்தி செய்ய முடியாத முறையில் இயற்கை, இந்தப் பொருளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வெல்ல உற்பத்தி குடிசைகளிலே நடைபெறுகிறது. பனைகள் உள்ள இடங்களில் இதை எளிதில் உற்பத்தி செய்யலாம். ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பனைகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வெல்லம் தயார் செய்யப்படுகிறது. இந்த நாட்டிலிருந்து ஏழ்மையை விரட்ட இது ஒரு வழி. இது ஏழ்மைக்கு மாற்று மருந்தாகவும் அமையும். (மகாத்மா காந்தி )

மணப்பாடு நாங்கள் வந்தடைந்தபோது ஜெபக்குமார் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றார்கள். நான் என்னிடமிருந்த ஆந்திரா கருப்பட்டியை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துக்கொண்டிருந்தேன். ஒருவித காப்பி மணம் வருவதாக தீய்ந்து போன மணம் வருவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் சுவைக்கு பஞ்சமில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கும் கருப்பட்டிகளை ஒரு சேர எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். தனித்தன்மைகளை கண்டு பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினேன்.

ஹாரீஸ் “பாஸ்டர் கற்கண்டு எப்படி செய்வார்கள்” என்று கேட்டார். நானும் இதுவரை நேரில் பார்க்காத ஒன்று. ஆனால் கற்கண்டோடு எனக்கிருந்த உறவைச் சொல்ல ஆரம்பித்தேன்.  கிறிஸ்மஸ் நேரங்களில் பாடல் பாடி கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவது வழக்கம். அப்படிச் செல்லுகையில் ஒருவர் பனங்கற்கண்டு எங்களுக்கு கொடுத்தார். தேன் வண்ணத்தில் ஓலி ஊடுருவும் தன்மையுடன்  இருபது முதல் ஐம்பது கிராம் அளவு பெரிதாக அந்த கற்கண்டு இருந்தது. நான் அதுவரை அவ்வளவு பெரிய கற்கண்டை பார்த்தது இல்லை.அவர் ஒரு தொண்டு நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்து இரண்டு கிலோ கற்கண்டை வாங்கிக்கொண்டு நான் படித்துக்கொண்டிருந்த ஐக்கிய இறையியல் கல்லூரிக்குச் சென்றேன். ஜனவரியில் எனக்கு பிறந்த நாள் ஆகையால், கற்கண்டை இனிப்பாக அனைவருக்கும் கொடுக்கலாம் எனும் எண்ணத்தில் எடுத்துச் சென்றேன். இந்திய மரபுப்படி பிறந்தநாளைக்  கொண்டாடுகிறேன் எனச் சொல்லி எல்லாரும் என்னை கொண்டாடிவிட்டார்கள். கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் ஞானா ராபின்சன் அவர்களை அன்று எனது அறைக்கு அழைத்து வந்து இனிப்பைக் கொடுத்தேன். மகிழ்ந்து போன அவர்கள் ஜெபித்து என்னை வாழ்த்தினார்கள். அதன் பின்பு, எப்போதும் பிறந்தநாளுக்கு கற்கண்டு வழங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தேன்.

கற்கண்டு

கற்கண்டு

கற்கண்டு இன்று ஒரு மங்கல பொருள். மங்கல பொருட்கள் யாவும் காலத்தால் முந்தையவை மற்றும் அரிதானவை கூட. அவற்றிற்கான பொருள் தொல்பழங்காலத்தில் இருந்து வருகிறது. தினையும் தேனும் கொடுத்து விருந்தோம்பல் செய்தவர்கள், தேன் அரிதானபோது தேனுக்கு பதிலாக கருப்பட்டியோ கற்கண்டோ கொடுத்திருப்பார்கள். கற்கண்டு சிறந்த மருந்தும் கூட. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணத்தக்க இனிப்பு. சுவைக்க சுவைக்க நாவில் தேன் ஊறிக்கொண்டே  இருக்கும். அரைமணி நேரத்திற்கும் மேலாக கரையாமல் நாவில் சுவை தந்தபடி இருக்கும்.

மார்த்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, நான் தங்கியிருந்த கோட்டவிளை வளாகம் தனது விரிவான பணிகளை குறைத்திருந்தது. அங்கிருக்கும்போதுதான் மார்த்தாண்டத்தை அடுத்த கம்பிளார் எனும் பகுதியில் கற்கண்டிற்கான தனி பிரிவு செயல்பட்டுக்கொண்டிருந்ததை அறிந்தேன். கோட்டவிளையில் கற்கண்டு விளைவிக்கும் பாத்திரங்கள் இருப்பதைப் கண்டு, கற்கண்டு பிரிவுக்கு பொருப்பாளரக இருந்த நெல்சன் அவர்களை விசாரித்தேன். அவர் கற்கண்டு தயாரிப்பைக் குறித்து எனக்கு விளக்கமாக கூறினார்.

கற்கண்டு தயாரிக்கும் பதனீரில் சுண்ணாம்பு அதிகம் இருக்கக்கூடாது. ஆகவே தெளித்து வடிகட்டியே பதனீரை காய்க்கவேண்டும். பதனீர் சூடானதும் சூப்பர் பாஸ்பேட் எனும் வேதியல் கலவையை 100 லிட்டருக்கு நூறு கிராம் என்ற அளவில் சேர்க்கவேண்டும்.  முதல் கொதிநிலை வந்தவுடனே, ஒரு வெள்ளைத்துணியில் வைத்து வடிகட்டி மீண்டும் காய்ச்சவேண்டும். கொதி நிலை 108 டிகிரி வந்தவுடன் இறக்கி நூல் பின்னப்பட்ட பாத்திரங்கள் மண்ணில் புதைந்திருக்க அல்லது உமிக்குள் புதைந்திருக்க, காய்ச்சிய பதனீரை ஊற்றவேண்டும். எக்காரணம் கொண்டும் ஊற்றப்பட்ட பாத்திரம் அசையக்கூடாது. அப்படி நாற்பத்தி ஓரு நாள் அசையாமல் வைத்திருந்தால் முதல் தரமான கற்கண்டு கிடைக்கும். மீண்டும் இதில் எஞ்சிய  பதனீரை சேமித்து மீண்டும் காய்த்தால் இரண்டாம் தரமான கற்கண்டு கிடைக்கும். இவற்றிலும் எஞ்சும் பதனீரை எடுத்து, கொப்பரை தேங்காயிலிருந்து எண்ணை எடுக்கும் செக்குகளுக்கு கொடுத்துவிடுவார்கள். எண்ணையின் தரமும், பிண்ணாக்கின் தரமும் மேம்படும் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என அவர் சொன்னார்.

குமரி மாவட்டத்தில்  பழங்கால முறைப்படி கற்கண்டு தயாரிக்கும் சூட்சுமம் ஒன்று உண்டு. கருப்பட்டிக்கு எப்படி பதனீர் காய்ப்போமோ அது போலவே காய்த்துவிட்டு, பருவம் வந்ததும் மண் பானைக்குள் ஊற்றிவிடவேண்டும். பிற்பாடு உடைத்த புளியம்பழங்களை காம்போ விதைகளோ நீக்காமல் பானைக்குள் இட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்பு எடுத்துப்பார்த்தால் கற்கண்டு உருவாகியிருக்கும். கொஞ்சம் பதநீர் ஊறலும் இருக்கும். அதை கூப்பனி என்பார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் உள்ளே இடப்பட்ட புளியம் பழங்கள் யாவும் காய்த்த பதனீரில் ஊறியதால், அவற்றின் புளிப்பு சுவை மாறி, தித்திப்பாக மாறிவிடும். ஓருமுறை கோட்டவிளையில் நாங்கள் அதை முயற்சித்தோம். நாம் இன்று சாப்பிடுகின்ற பேரீச்சம் பழத்தின் சுவைக்கு ஒப்பாக அது இருக்கும். மழை நேரத்தில் சிறுவர்களுக்கு அதை உண்ணக்கொடுப்பார்கள். ஒருவேளை மழை நேரத்தில் சளி பிடிக்காமல் இருப்பதற்காக கொடுப்பார்களோ என்னவோ.

மற்றொரு முறையும் உண்டு, கொறடு என உள்ளூரில் அழைக்கப்படும் செடியை வெட்டி இலைகள் உதிர்ந்த பின்பு கூப்பனி (காய்த்த பதனீர்) இருக்கும் பானைக்குள் போட்டிவிடுவார்கள். இச்செடியின் நரம்புகளில் பற்றிப்பிடிக்கும் கற்கண்டே பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய கற்கண்டு ஆகும். கற்கண்டை வெயிலில் காயவைத்து சேமித்தால் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும். கற்கண்டு தயாரிக்க அதிக நாட்கள் பிடிக்கும் என்பதே ஒரே பிரச்சனை. ஆனால் உற்பத்தியைப் பொறுத்தவரையில் ஒரே அளவு பதனீரிலிருந்து கிடைக்கும் கருப்பட்டியைவிட கற்கண்டு அதிகமாகவும், விலை கருப்பட்டியைவிட மும்மடங்கும் இருக்கும்.

இவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, குறிப்பாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய தடை இருப்பதற்கு காரணம் இவற்றினுள் இருக்கும் நூல் அல்லது  கொறடுச் செடியின் காம்புகள். புளி இட்டு பெறும் கற்கண்டு அளவில் மிகச்சிறிதாக பரல் போல காணப்படும். ஆகவே எவ்வகையிலும் அவைகள் ஏற்றுமதிக்கான தன்மையை பெறவில்லை. சில நேரங்களில் பானையை உடைத்து கற்கண்டு எடுத்த கதைகளும் உண்டு.

பனங்கற்கண்டை உருவகிக்கவேண்டுமென்றால் மிக எளிது. தேனை படிகம் ஆக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். சுவையும் மணமும் நிறமும் ஓளி ஊடுருவும் தன்மை கூட அப்படியே, ஆனால் இறுகிப்போய் உறுதியாக இருக்கும். கடந்த 10 வருடங்களாக மும்பையில் இருப்பதால் எடுத்து வருவது இல்லை. இனிமேல் தொடர்ந்து எப்போதும் கைக்கெட்டும் தொலைவிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். தெளி தேன் துளி அது.  மங்கல வாழ்வின் அடையாளம் மற்றும் பனையுடன் உள்ள உறவின் சான்று அது.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைமரச்சாலை (81)

செப்ரெம்பர் 20, 2016

பனைகளின் அடைக்கலம்

எங்கள் பயணம் இன்னும் சற்று தொலைவு வந்த போது, முட்புதர் காடுகளுக்குள் ஒரு குடிசையைக் கண்டேன். அமிர்தராஜுக்கு கைகாட்டிவிட்டு சடாரென உள்ளே புகுந்தேன். அமிர்தராஜ் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதற்கு நான் உள்ளே செல்லுகிறேன் என அறியாமலே என்னை அவர் தொடர்ந்தார். எனது உள்ளுணர்வு மிகச்சரியாக அந்த பனைத்தொழிலாளியின் வீட்டிற்கு முன் என்னை அழைத்துக்கொண்டு வந்தது. பனையோலையால் செய்யப்பட்ட சிறிய குடிசை, பனை சார் பொருட்கள் வீட்டின் முன் இருந்தன. யார் இருக்கிறார்கள் எனப் பார்த்தோம்.

பனைத்தொழிலாளியின் குடிசையின் முன்பு

பனைத்தொழிலாளியின் குடிசையின் முன்பு

சுமார் 15 வருடங்களுக்கு முன்பும் நான் பனைமரங்களைத்தேடி திண்டுக்கல் சென்றிருக்கிறேன். தமிழ் நாடு கல்லுடைப்போர் சங்க தலைவராக இருக்கு திரு ஞானமணி அவர்கள், திண்டுக்கல் அருகிலிருக்கும் ஒரு இடத்தை கை காட்டினார்கள். நான் தனியாக அந்த இடத்திற்குச் சென்றேன். அங்கே சந்தித்த பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இங்கும் இருக்கின்றன. பனைத் தொழிலாளர் வாழ்வில் நான் கவனித்த ஒன்று உண்டு அது, அவர்கள் பணி நேரத்தில் நே ரம் தவறாமையைக் கடைபிடிப்பார்கள், தேனியாக பறந்தோடி வேலை செய்வார்கள் ஆனால் அவர்களை யாரேனும் தேடிச் சென்றால் மிகவும் மகிழ்ந்துவிடுவார்கள்.

கடந்த பல்லாயிரம் வருடங்களாக அறுபடாத ஒரு நெடுந்தொடர்பை பனைதொழிலாளர்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றனர். உடலுழைப்பச் செலுத்தினால் மற்ற தொழில்களைவிட இலாபம் நிறைந்த இத்தொழில் அனேகருக்கு பெரிய வரப்பிரசாதம். கால மாற்றத்தில், பனைத்தொழில் தனது சாதி அடையாளத்தை கடந்து செல்லும் என்றே நான் கணிக்கின்றேன். ஒன்று, அது கார்ப்பரேட்டுகள் கரங்களுக்கு செல்லலாம். அல்லது சிறிது சிறிதாக பல்வேறு மக்கள் இதை தங்கள் வாழ்வதாரமாக கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் எனது நாண்பன் ஒருவன் பங்களாதேஷ் சென்றபோது அங்கிருக்கும் வணிகவளாகத்தில் பனம்பழத்தை விற்பனைக்கு வைத்திருந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பியிருந்தான்.. ஆகவே, தரிசு நிலங்களிலும்  பயன்படுத்தா நிலங்களிலும் பனை மரங்கள் நட்டு வளர்ப்பது அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்கும், சூழியல் மேம்படும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், வேலை வாய்ப்புகளும் பெருமளவில் உயரும்.

சுண்ணா பெட்டி

சுண்ணா பெட்டி

ஒரு நடுத்தர வயது பெண்மணி அந்த குடிசையில் இருந்தார்கள். பனைமரங்களைத் தேடி வந்திருக்கிறோம் என்று கூறி விட்டு அவர்களுக்கு பனைத் தொழிலாளி என்ன முறை வேண்டும் எனக் கேட்டோம். தனது கணவனார் பனைத்தொழிலுக்கு செல்லுவதாக கூறினார்கள். நாங்கள் அங்கிருந்த அருவாபெட்டியின் மேல் ஈர்க்கப்பட்டு அங்கேயே நின்றோம். அருவா பெட்டியை, தென்னம் பாளையை கொண்டு செய்திருந்தார்கள். தனித்துவமான ஒரு வடிவமைப்பு இது. மழையில் நனைந்தாலோ அல்லது வெயிலில் காய்ந்தாலோ எவ்வகையிலும் பாதிப்படைவது இல்லை. அதற்கு உள்ளே, சுண்னாம்பு பெட்டி இருந்தது. அரிவாள் வைக்க சிறு தடுப்பால் தனித்த அறை பிரித்து வைக்கப்பட்டிருந்து.  பார்ப்பதற்கு இரண்டு தோணிகளை கவிழ்த்து வைத்து செய்தது போல இருந்தது அருவா பெட்டி.

அருவா பெட்டி

அருவா பெட்டி

உள்ளிருந்த சுண்ணாபெட்டி தான் முக்கிய கதாநாயகன். சுண்ணா பெட்டி வேண்டும் என்று அமிர்த்தராஜ் தேடிக்கொண்டிருந்தார். நாங்கள் ராமேஸ்வரத்தில் இருந்து வரும் வழியில் ஒரு இடத்தில்,  அமிர்தராஜ் ஒரு அழகான சுண்ணா பெட்டியை வாங்கினார். சுண்ணா பெட்டி என்பது சுண்ணாம்பு வைக்க பயன்படும் ஓலையில் செய்யப்பட்ட பெட்டி. நானே அப்போது தான் கவனித்தேன். டையின் அடிபாகம் போல சற்று கீழிறங்கி மேலேறும் ஒரு வடிவமைப்பு அதில் காணப்பட்டது. மேலும், உறுதியாக வேறு பின்னப்பட்டிருந்தது. ஒரே குறை என்னவென்று சொன்னால், அதின் ஓரங்கள் நாரினால்   பின்னப்படாமல் பிளாஸ்டிக்கால் பின்னப்பட்டிருந்தன. சுமார் முக்கால் அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்ட இந்த பொருளை எப்படி கருப்பட்டி அல்லது வேறு பொருட்களை பொதிய பயன்படுத்தலாம்  என்பதே அமிர்தராஜுடைய எண்ணமாக இருந்தது.

ஓலைகளைக் கொண்டு இயற்கை பொருள்களை பொதிவதோ அல்லது பனை பொருட்களை பொதிவதோ காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம். ஓலைகளின் நெகிழும் தன்மை மற்றும் உறுதியால், சுமார் ஆறு மாதங்கள் வரை பொருட்களை மிக நல்லமுறையில் பொதிந்து பாதுகாக்க முடியும். அனேகர் யோசித்துகொண்டிருக்கும் விஷயம் இது. ஒன்று போல பொருட்களை பொதிந்து கொடுக்கும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓலைப் பெட்டிகள் செய்தால் அனேகர் அவைகளை வாங்கி பயன்படுத்த ஆயத்தமாக இருக்கிறார்கள். தமிழக அரசு கூட, தனது நெகிழி எதிர்ப்பு அலையினூடே பனை ஓலைகளில் செய்யப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பது அனேகருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும்.

அங்கிருந்து புறப்பட்ட பின்பே அமிர்தராஜ் நாம் அடைக்கலாபுரம் வந்துவிட்டோம் என்றார்.  எனக்கும் அடைக்கலாபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் அடைக்கலாபுரத்தின் எப்பகுதியில் நிற்கிறோம் என என்னால் யூகிக்க முடியவில்லை. வழியில் பதனீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு இடத்தில் அவர் நிறுத்தினார். எனக்கு தெரிந்தவர்கள் இங்கு உண்டு, நாம் அங்கு சென்று பதனீர் குடிக்கலாம் என்று சொன்னேன். அமிர்தராஜ் என்னை சற்று வித்தியாசமாக பார்த்தார். மும்பையில் இருக்கும் பாஸ்டருக்கு, அதுவும் கன்னியாகுமரியைச் சார்ந்தவருக்கு எப்படி அடைக்கலாபுரம் தெரியும் என்பது அந்த பார்வைக்கு அர்த்தம்.

ஓலை பட்டையில் பதனீர் குடிக்கும்போது, அடைக்கலாபுரம்.

ஓலை பட்டையில் பதனீர் குடிக்கும்போது, அடைக்கலாபுரம்.

அமிர்தராஜை ஒத்துக்கொள்ள வைப்பது சுலபமல்ல. எனக்கும், பதனீர் குடித்தால் நன்றாக இருக்கும்போல இருந்தது. ஆகவே அங்கிருந்த ரோட்டோர கடையில் அமர்ந்தோம். வெயிலுக்கு சாய்வு ஏற்படுத்தியிருந்தார்கள். கடையில் கருப்பட்டி, கற்கண்டு பனங்கிழங்கு யாவும் வைத்திருந்தார்கள். அடைக்கலாபுரம் பனைப் பொருட்களுக்கான ஒரு முக்கிய மையம். பல்வேறு குடிசைகள் அமைத்து பனை சார்ந்த உண்ணும் பொருட்களை தயாரிக்கிறார்கள். சுத்தமான பொருட்கள் தயாரிக்கிறார்கள் என நம்பலாம்.

கடந்த ஜனவரி மாதத்தில், பனை ஓலையில் குருத்தோலை ஞாயிறுக்காக கைபட்டைகளை செய்யவேண்டும் என நான் ஆலோசித்தபோது, ஜானி தமிழ்நாடு வாங்க, இங்கேயே நாம் ஓலைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார். நாங்கள் நாகர்கோவிலிலிருந்து திரு நெல்வேலி சென்று, அங்கிருந்து  தூத்துக்குடி போனோம். போகும் வழியில் பனை மரங்கள் செறிந்திருந்த ஒரு கிராமத்தைக் கண்டு  அதற்குள் நுழைந்தோம்.  ஆனால் அங்கே நாங்கள் நினைத்தது போல ஓலைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் போயிருந்த நேரம், பொங்கல் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.  காய்ந்த ஓலை ஒரு மட்டைக்கு இருபத்தி ஐந்து என விற்றுக்கொண்டிருந்தார்கள். பொங்கல் பானைக்கு தீ வைப்பதற்காக அந்தநாளின் முக்கிய வியாபரமாக பனையோலை இருக்கிறது என நேரடியாக கண்டுகொண்டோம். பச்சைஓலைகளை எடுத்து மிதித்து, காயவைத்து அவைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி விற்பனைக்கு எடுத்துச் செல்லுவார்கள். பிற்பாடு, தூத்துக்குடி வந்து அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சென்றால் அனேக பனைமரங்கள் இருக்கும் என்று ஜானி கூறினான்.  அப்படித்தான் அடைக்கலாபுரத்தை கண்டுபிடித்தோம்.

பட்டையில் ஊற்றி பதனீர் குடித்த பின்பு  அங்கிருந்து சற்று தொலைவுதான் சென்றிருப்போம், நான் அறிந்த குடும்பத்தினர் நடத்தும் கருப்பட்டி தயாரிக்கும் தொழிற்கூடம் வந்தது. உடனேயே வண்டியை நிறுத்தினோம். முகமூடி அணித்திருந்ததால் பெரியவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சற்று நேரத்தில் அவர் மகன் வந்தான். பிரகாஷ் என அழைத்தேன். பிரகாஷ் யார் தன்னை அழைக்கிறார் என திடுக்கிட்டார். அமிர்தரஜும் திடுக்கிட்டு, எப்படி இவருக்கு இந்த ஊரில் உள்ளவரின் பெயரைத் தெரியும் என யோசித்தார். சற்று நேரம் கழித்து உள்ளே சென்றோம். ஒருபுறம் கருப்பட்டி காய்ந்து கொண்டிருந்தது மற்றொருபுறம் புதிய பதனீர் காய்ப்பதற்காக  காத்திருந்தது. பிரகாஷின் மனைவி இருந்தார். எப்படி சந்திரா இருக்கிறே என்று கேட்டேன். பிரகாஷின் அம்மா, ஃபாதர் வாங்க என்றார்கள்.

பதனீர் வேண்டுமா எனக் கேட்டார்கள். அமிர்தராஜ் ஆடிப்போய்விட்டார். பதனீர் வங்கி குடித்தோம். அப்போது எங்களைத்தேடி ஹாரீஸ் பிரேமின் புல்லெட்டில் அவரும்  மைகேலுமாக வந்தார்கள். புல்லட் புத்தம் புதிதாக இருந்தது. ஹாரீஸ் எங்களது புல்லட்டைப் பார்த்துவிட்டு, அழுக்கடைந்த எங்கள் வண்டிகளைக் காட்டி,  “இது தெரிஞ்சிருந்தா நானும் வண்டிய கழுவாமலே கொண்டு வந்திருப்பேம்லா” என்றார். அவர்களது அறிமுகமே அட்டகாசமாக இருந்தது. “உன்னைதான்யா இவ்வளவுநாளா தேடிக்கொண்டிருந்தோம்” என அழைத்து அரவணைத்துக்கொண்டோம். மைக்கேலும் ஹாரீசும் இப்படித்தான் எங்கள்  நட்பு வட்டத்திற்குள் அமைந்தார்கள்.

அனைவருக்கும் இலவச பதனீர் அன்று கிடைத்தது. அமிர்தராஜ், இது தெரிந்திருந்தால் விலைகொடுத்து பதனீர் வாங்கியிருக்கவேண்டாமே என்று கண்களால் பேசினார். நான் சொல்லுவதை எங்கே நீ கேட்கிறாய் என்று நான் பதிலுக்கு பார்த்தேன். ஆளுக்கு ஒவ்வொரு திசை நோக்கி திரும்பி சிரித்துக்கொண்டோம்.

ஹாரீஸ், மைக்கேல் மற்றும் நான்

ஹாரீஸ், மைக்கேல் மற்றும் நான்

ஹாரீஸ் ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் கிட்டாரிஸ்ட். நகைச்சுவை எழுத்தில் தனித்தன்மை வாய்ந்தவர். கிறிஸ்தவர்களுக்குள் எழுதுபவர்கள் பெரும்பாலும் பரவசத்தில் மூழ்கி எழுதிக்கொண்டிருக்கையில், இவரின் எழுத்தோ நம்மை சிரிப்பில் முழ்கி விடச் செய்யும் தனித்தன்மை வாய்ந்தது. என்ன பிரச்சனை என்றால் வட்டங்களுக்குள் மட்டும் எழுதுகிறார். மைகேல் திருவாய் மலர்ந்தால் அப்புறம் நமக்கு வயிற்று வலி உறுதி. சிரித்து சின்னாபின்னமாகிவிடுவோம். அட்டகாசமான ஒரு குழு அமைந்தது என எண்ணியபோது தான் எனக்கு தமிழகம் தழுவிய ஒரு பயாணம் அமைத்தால் என்ன என்று தோன்றியது.

தமிழக எல்லைகளை ஒரு கோடாக வரைந்தோம் என்று சொன்னால் அது கடற்கரையில் ஒதுங்கிய ஒரு மாலை போலிருக்கும். அப்படி பனை மரங்களை தன்னில் அணிகலனாக கொண்ட தமிழகத்தை ஒரு முறை சுற்றி வந்தால் என்ன என நினைத்தேன். தமிழகத்தை சுற்றி வர குறைந்தது 15 நாட்கள் பிடிக்கும். என்னோடு அனைவரும் ஒருசேர வர இயலாது என்பது நிதர்சனம். ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நண்பர்களை இணைத்து ஒரு பயணத்தை அமைக்கலாம் என என்ற திட்டம் உறுதியானது. பனைமரச் சோலை கண்டிப்பாக செயல் வடிவம் பெறும் என உறுதி பூண்டேன்.. உடனேயே, இன்னும் வீடு போய் சேரவில்லை அதற்குள்ளே அடுத்த திட்டமா? என மனது கடிந்து கொண்டது.

ஆனால் எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ள முடியவில்லை, ஹாரீசிடம் சொன்னேன், அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள் என. கண்டிப்பாக வருகிறோம்  என்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 100 மோட்டார் சைக்கிள்கள்களைத் திரட்டவேண்டும். மாவட்டங்களில் உள்ள பனை ஆர்வலர்கள்,  பனை சார்ந்து செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள், பனை சார்ந்து இயங்கும் தன்னார்வலர்கள் எல்லாம் சந்திக்கவேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் மக்களை சந்தித்து பனை மரத்தின் பயன்களை எடுத்துக்கூறவெண்டும் என்பதும் திட்டம். அப்படியே ஹாரீஸ், ஒரு பனை சார்ந்த புகைப்பட கண்காட்சியும் நாடத்துவோம் என்றேன். முடியுமா என்றார்கள். ஏன் முடியாது என்றேன். ஓலையில் நான் செய்த படங்கள் ஒரு புறமும் பனை மரங்களின் தனித்தன்மைகளை விளக்கும் ஒரு புகைப்பட கண்காட்சியும் நடத்தலாமே என்றேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார்.

பனங்கிழங்கு பயிர்

பனங்கிழங்கு பயிர்

பிரகாஷுடைய நிலத்தில் பனங்கிழங்கு பயிர் செய்யப்பட்டிருந்தது. ஹாரீசும் அமிர்தராஜும் விழுந்தடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ரசாயனியில் கிலோ 80ரூபாய் வரை பனக்கிழங்கு விற்கிறது. தமிழகத்தில் பனக்கிழங்கின் விலை அதில் பாதி தான் இருக்கும் என எண்ணுகிறேன். ரசாயனியில் அதில் சப்ஜி செய்து சாப்பிடுவதாக சொல்லுகிறார்கள். பனை சார்ந்த உணவுகள் செய்வது எப்படி என ஒரு சமையல் குறிப்பு புத்தகமும் வெளியிடலாம் என்றே தோன்றுகின்றது.

அங்கிருந்து புறப்பட்டு செல்லும் வழியில் அடைக்கலாபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு இருந்த பெட்டிகடையில் அழகிய பனை மர பெஞ்சு செய்து இட்டிருந்தார்கள். இரண்டு பனங்கம்புகளை ஒன்றாக நெருக்கி அமரத்தக்கதாக  அமைத்திருந்த விதம் அழகாயிருந்தது. எளிய தொழில்நுட்பம் மலிவான விலைக்கு கிடைத்த கிராம மக்களுக்கேற்ற அமரும் அமைப்பு அது.

பனைமர அமரும் இருக்கை, அடைக்கலாபுரம்

பனைமர அமரும் இருக்கை, அடைக்கலாபுரம்

அடைக்கலாபுரம் திருச்செந்தூரிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இன்றும் பனைத்தொழில் மிக உயிர்ப்புடன் இருக்கும் ஒரு கிராமம். மீண்டும் வரத்தூண்டும் அன்பு மற்றும் உபசரிக்கும் பாங்குள்ள மக்கள். மீண்டும் இங்கு வரவேண்டும் என எண்ணிக்கொண்டேன். பனைக்கும் அடக்கலம் அருளும் ஊர் வேறு யாருக்கு தான் அடைக்கலம் அளிக்காது?

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 


%d bloggers like this: