Archive for ஒக்ரோபர், 2016

பெண்கள் அருட்பொழிவு

ஒக்ரோபர் 25, 2016

மத்திய கேரள தென் இந்திய திருச்சபை பேராயர் தாமஸ் கெ. உம்மன் கடந்த 16.10.2016 அன்று தி இந்துவில் வழங்கிய பெண்களுக்கும் அருட்பொழிவு எனும் பேட்டிக்கு கிறிஸ்தவ உலகம் தனது அதிருப்தியை வெளியிட்டவண்ணம் உள்ளது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/csi-to-bring-in-more-women-priests/article9225877.ece

தென்னிந்திய  திருச்சபையின் பேராயர்களுள் ஒருவர் பெண்ணாக இருந்தும், 150க்கும் மேற்பட்ட அருட்பொழிவு பெற்ற பெண் ஆயர்கள் இருந்தும் மத்திய கேரள ஆயர் மண்டலம் பெண்கள் அருட்பொழிவு கொடுக்கப்பட கூடாது எனும் நிலை மாறாமல் நிற்பது ஆச்சரியமானது. தற்செயலாக முனைவர். சூசன் தாமஸ் அவர்களை கடந்த வாரம் ஒரு அமர்வில் சந்தித்தேன். அருட்பணியில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் மிக முக்கிய கருத்தை பதிவு செய்தார்கள்.

http://www.missiontheologyanglican.org/article/contextual-mission-in-india-from-womens-perspective/

தனது சொந்த மனைவிக்கே அருட்பொழிவு கொடுக்க இயலா நிலையில் பேராயர் இப்பேட்டியை அளிப்பதால் பேராயர்களின் வரம்பற்ற அதிகாரம் குறித்த கேள்வி என்னுள் எழுகிறது. ஒருவகையில் திருச்சபை தன்னை சுய பரிசோதனை செய்ய அழைக்கப்படும் ஒரு தருணத்தில் நாம் நிற்கிறோம் என்பதை உணர்ந்து சற்றும் பதறாமல் பெண்களின் அருட்பொழிவினை குறித்து திருமறை சார்ந்து எண்ணிப்பார்ப்பது நலம்.

பின்வரும் இரண்டு திருமறைப்பகுதிகளை மிக முக்கியத்துவப்படுத்தி பெண் ஊழியர்களுக்கான அருட்பொழிவை “திருமறை சார்ந்து” தடை செய்ய திருச்சபையைச் சார்ந்த பெண்கள் உட்பட, அனேகர் எண்ண துணிந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

  • ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். (1 தீமோத்தேயு 2:12)
  • சபைக் கூட்டங்களில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். தேவனுடைய மக்களுடைய எல்லா சபைகளிலும் அவ்வாறே இருக்கவேண்டும். பெண்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அடக்கமுடையோராக இருத்தல் வேண்டும். மோசேயின் சட்டமும் இதையே கூறுகிறது.(1 கொரிந்தியர் 14: 34)

ஆனால் திருமறையை ஆழ்ந்து நோக்காது தமது எண்ணங்களுக்கு ஏற்ப திருவசனங்களை “கண்டுபிடிப்பவர்களுக்கு” நாம் உதவுவது கடினம் தான்.

ஆண் பெண் சமத்துவம் எனும் நோக்கில் அருட்பொழிவினை நாம் பார்ப்பது சரியாயிராது. மாறாக கடவுளை மையப்படுத்தி அவரது வழிகாட்டுதலைக் கோரி பெண்கள் அருட்பொழிவை சீர்துக்கிப்பார்ப்பது சரியெனத்தோன்றுகின்றது. முதன்மையாக, பெண்கள் அருட்பொழிவினை குறித்து நமது எதிர்பினைக் கூறுகையில் பெண்களை மட்டுப்படுத்துவதாக நினைத்து கடவுளை தான் நாம் மட்டுப்படுத்துகிறோம். “ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை:” (இணைச்சட்டம் 10: 17) உலகின் சரிபாதியான ஒரினத்திற்கு வேறொரு நியாயம் கற்பிக்க நீதியான கடவுள் ஒப்புவாரா என எண்ணிப்பார்ப்பது நலம்.

திருத்தொண்டர் பவுல் அவர்களை கையாள்வது மிகவும் சிரமமான ஒரு காரியம். இன்று திருச்சபை இயேசுவுக்கும் மேல் அவரது வார்த்தைகளையே உயர்த்திப்பிடிக்கிறது என்பது உள்நோக்கத்தோடு என்பதை சொல்லித்தெரியவெண்டிய உண்மையில்லை. என்றாலும் தூய பவுல், தனது வாழ்வில் தான் கொண்டிருந்த கருத்துக்களில் மாறுபட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக கொள்வோமென்று சொன்னால் அவரது கூற்றுகளை சற்று நிதானத்துடன் நம்மால் அணுக இயலும்.

  • திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான் விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சே எழுந்தது. கிறிஸ்து இயேசுவோடு ஒன்றித்து நாம் வாழும் விடுதலை வாழ்வைப் பற்றி உளவுபார்க்க வந்தவர்கள் அவர்கள். நம்மை மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு வருவதே அவர்களது நோக்கம். உங்கள் பொருட்டு, நற்செய்தியின் உண்மை என்றும் நிலைத்திருக்குமாறு, நாங்கள் ஒரு நாழிகையேனும் அவர்களுக்கு அடிபணியவில்லை. (கலாத்தியர்  2: 4)

இங்கே பவுல் குறிப்பிடுகின்ற “திருட்டுத்தனமாய் நுழைந்த போலிச் சகோதரர்கள்” குறித்து பேசாமல் பெண்களை குறித்த பவுலின் பார்வையை மட்டும் உயர்த்திப்பிடிப்பது சரியென்றாகாது.  பவுல் ஆண்கள் அனேகருடன் முரண்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

 

  • சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள் (ரோமர் 16: 17 திருவிவிலியம்).

jeffertsschoriஇங்கே இரு பாலினருக்கும் ஒன்றாய் அவர் பேசுவதை அறிகிறோம். காரணம் என்ன? அவர் தனது எண்ணத்தை முழுமை செய்யும்பொருட்டு இவ்வித ஒரு மாற்றத்திற்குள் அவர் வந்திருக்கலாம் என நாம் எண்ண இடமுண்டு

  • செல்வாக்கு உள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் கூட நான் கற்பிப்பதற்கு அதிகமாய் எதுவும் சொல்லவில்லை. இவர்கள் முன்பு எப்படிப் பட்டவர்களாய் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப் பார்த்தா செயல்படுகிறார்! (கலாத்தியர் 2: 6 திருவிவிலியம்)
  • சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல் களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.(கலாத்தியருக்கு 3: 26 – 29)

ஆகவே கிறிஸ்துவை முன்னிறுத்தி தனது பழைய நிலைப்படுகளை பவுல் மாற்றிக்கொள்ளுகிறார் என நாம் திட்டமாக அறியலாம்.

  • நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். (கலாத்தியருக்கு 3: 16 -17)

கடவுளின் ஆவியர் குடியிருப்போரை, எந்த ஆவி தடை செய்ய முயலும் என நமக்கு நாமே கேள்வி எழுப்பி பதில் தேடிக்கொள்ளுவது சாலச் சிறந்தது.  மேற்கூறிய அதிகாரத்தை பவுல் எழுதுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே எழுதுகிறார்.

  • சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.” ((கலாத்தியருக்கு 3: 1)

தங்களிடம் குறையுள்ளவர்களிடம் அவர் பேசியிருக்கிறார், தனது வாழ்வில் முக்கியமாக அவர் கொண்டிருந்த கருத்துக்களையும் அவர் மறு பரிசீலனை செய்திருக்கிறார். இன்னும் எண்ணற்ற வசனங்களை நாம் சுட்டிக்காட்ட இயலும். ஆயினும் பவுலை அளவீடாக கொள்ளுகையில், கிறிஸ்துவின் எண்ணத்தை நாம் புறந்தள்ளிவிடுகிறவர்களாக மாறிவிடக்கூடாது. அது இயேசுவை விட, பவுலை முக்கியத்துவப்படுத்தும் அபாய நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

தீர்கதரிசிகளில் ஒருவரான மிரியாம், நீதிதலைவர்களில் ஒருவரான தெபோராள், கிறிஸ்துவை பெற்றெடுக்கும் முக்கிய பணியில் யோசேப்பு ஒதுங்கி நிற்க துணிந்தபோது, சற்றும் கலக்கமடையாமல் முன்னின்ற மரியாள், அனைத்து சீடர்களும் ஒளிந்து கொண்டபோதும் சிலுவை மட்டும் பின் தொடர்ந்த பெண்கள், கல்லறையில் அவரை சந்தித்த மகதலேனா மரியாள் இவர்கள் யாவரும் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இல்லையென்போமானால், நமது சிந்தனை ஒழுக்கில் ஏதோ ஓட்டை இருக்கிறது என்றே அர்த்தம்.

சமாரிய பெண் மேசியாவைக் கண்டேன் என அறிவிக்க ஓடியதைக் காண்கிறோம், நின்று நிதானித்து அருட்பொழிவு பெற்றுச் செல்வோரே சரியான தேர்வு என கொள்வோமா? அல்லது உடனடியாக நற்செய்தி அறிவிக்க தாமதியாமல் ஓடிய சமாரியப் பெண்ணின் அருட்பணியில் தான் தவறுகள் உள்ளதாக இயேசு சுட்டிக்காட்டினரா?

  • இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள். இதை அறிந்த இயேசு, “ஏன் இந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப் போவதில்லை. இவர் இந்த நறுமணத்தைலத்தை எனது உடல்மீது ஊற்றி எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”என்று கூறினார். (மத்தேயு 26: 6 – 13)

திருமறை முழுக்க ஆசாரியரோ அல்லது இறைப்பணியாளரோ செய்யும் ஒரு பொழிவை சீமோன் வீட்டில்வந்த பெண் செய்வதை இயேசு ஏற்றுக்கொள்ளுகிறார். அதனை தடுக்கும் எண்ணங்களை அவர் தடை செய்கிறார். அவ்விதமாக அனைவரையும் அருட்பணிக்கு அழைக்கும் ( நான் பருகும் கிண்ணத்தில் பருகவும் உங்களால் கூடுமோ?) தம்மையே அப்பெண்மணியின் முன்னால் எளிமையாக்கி தனது சிலுவை நோக்கி செல்லுகிறார். சிலுவை சுமக்க வலுவற்று தான் பெண்கள் அருட்பொழிவிற்கு எதிராக நிற்கிறோமா?

இன்றைய தினத்தில்  ஆண் போதகர்கள் என அருட்பொழிவு பெற்றோர் அனேகர் தவறிவிடுவதைக் காண்கின்றோம். பெண்களும் தவறலாம். ஆனால், ஆண்களால் செய்ய முடியாத காரியங்களை பெண்கள் இலகுவாக செய்ய இயலும் ஒரு சூழலில் வந்திருக்கிறோம். குறிப்பாக, பெண்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்படும் போதகர்கள் இன்று தேவையாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ குடும்பங்கள் இன்று சிதைவுறுவதை கண்கூடாக காண்கிறோம். இச்சூழலில் பெண்களிடம் நெருங்கிப்பழகும் உரிமைகொண்ட பெண்போதகர்கள் மிக முக்கிய பங்களிப்பை திருச்சபையில் ஆற்ற இயலும்.

நமது திருச்சபைகள் யார் தங்களுக்கு போதகராக வரவேண்டும், வரக்கூடாது என நிர்ணயிக்கும் காலகட்டம் இது, ஆகவேதான் திருச்சபை சாதி நோக்கில் தனது போதகரை தேர்வு செய்கிறது, பாலின அடிப்படையில் தனது கருத்துக்களை கூசாமல் முன்வைக்கிறது. இவ்வித எண்ணங்களிலிருந்து தான் நமது தலைமைத்துவங்களை நாம் ஏற்கிறோம். அவைகளுக்கு விலையாக கிறிஸ்துவின் சரீரமாகிய “மணவாட்டியை” அடைமானம் வைக்கிறோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

பனைதொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த இயேசு

ஒக்ரோபர் 25, 2016

“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;

லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (திருப்பாடல்கள் 92:12, திருவிவிலியம்)

 

திருமறையை வாசிக்கும்போது, மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை இயற்கையைச் சார்ந்து எழுதிவைப்பது ஒரு முறையாகவே இருந்துள்ளதை நாம் காணமுடியும். இயற்கையை கூர்ந்து அவதானிப்பதனாலும் இயற்கை கடவுளை வெளிப்படுத்தியமையினாலும் அவ்விதமான ஒரு எழுத்தை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். இவ்வெழுத்துக்கள் அவர்களின் வாழ்வை கடவுளுக்கு நேராக திருப்பியிருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (சங்கீதம் 92:12) இந்த வசனத்தை எங்கள் ஊரில் பயன்படுத்தும் போது, அவர்கள் பழைய மொழிபெயர்ப்பில் உள்ள வசனத்தின்  முற்பகுதிஐ மட்டும் எடுத்துக்கூறுவார்கள். நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான் எனக்கூறி, பிற்பகுதியில் காணப்படும் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் என்கிற பகுதியை விட்டுவிடுவார்கள். ஆகவே வசனமே அவ்வளவுதான் என நான் எண்ணிக்கொள்வேன். பிற்பாடு திருமறையை வாசிக்கதுவங்கியபோது பின்னிணைப்பாக கேதுரு மரம் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மலைத்துப்போனேன். ஏன், வசனத்தின் ஒரு உறுப்பாகிலும் ஒழிந்துபோவதில்லை என எண்ண தலைப்படும் நம் மக்கள், வெறும் பனை மரத்தை மட்டும் முன்னிறுத்திவிட்டு, கேதுருவை விட்டுவிட்டார்கள் எனும் கேள்வி என்னுள் அலைமோதியது.

இரண்டு காரியங்கள் உடனடியாக என் மனதில் வந்தது, எம்மக்கள் கேதுருவைக் கண்டதில்லை. இரண்டு, பனைமரம் அவர்களை வாழ வைத்த மரம். பனைமரம் வாயிலாக கேதுருவை அவர்கள் கற்பனை செய்துகொண்டிருந்திருப்பார்கள். மிக பிற்பாடு தான் நானே திருமறையில் கூறப்படும் பேரீச்சைக்கும், தமிழகத்தில் காணப்படும் பனைமரத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதைக் கண்டடைந்தேன். ஆனாலும் அவைகள் ஓரிலைத்தாவர்ம எனும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்பது எனக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஆகவே இவ்வரிகளை எழுதிய ஒரு யூத கவியின் மனதிற்குள்ளதாக என்னால் எளிதாக புக முடியும் என்றே நான் எண்ணுகிறேன். தமிழகத்தின் ஐவகை நிலங்கள் போல இஸ்ரவேலின் மக்கள் கண்ட நிலப்பரப்பும் மிகுதியான வேற்றுமைகள் கொண்டது. ஒன்றிற்கு ஒன்று எதிர் துருவத்தில் இருக்கும் நிலவெளி அது. ஆகவே தான் பனிமலையில் வாழும் கேதுருவும் பாலையில் காணும் பனைமரமும் ஒருசேர பொருள்படுகிறது.

கவி இங்கே இருவேறு சூழலில் வளரும் வேறுபட்ட மரங்களைக் குறிப்பிட்டு அவைகளை நேர்மையாளருக்கு (நீதிமானுக்கு) ஒப்புமையாக்குவதைக் காண்கிறோம். நேர்மையாளர்  எனும் உயர் விழுமிய மனிதனை இஸ்ரவேல் வார்த்தெடுத்தது. அதற்கு முழு முதல் காரணம் அவர்கள் வணங்கும் கடவுள் நேர்மையளர்  எனும் கருத்தாகத்தில் இருந்து எழுந்ததை நாம் அறிவோம். எனில் கடவுளின் சாயல் மனிதனில் பிரதிபலிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கவி வெளிப்படுத்துவதாக மேற்கூறிய வரி அமைகிறது. அது கடவுளைக் கண்டடைய கவி உள்வாங்கிய ஒரு இயற்கைப் படிமம் என நாம் கண்டுகொள்ளுகிறோம்.

மேலும் கடவுளின் தன்மை மண்ணினால் உருவாக்கிய மனிதனுக்குள் இருப்பதை நம்பும் நம் மனது, மண்ணில் முளைத்தெளும்பிய பனை மரத்தில் அதே உணர்வு இருப்பதை கண்டுணர்ந்த தருணமாக இக்கவிதை பொருள் பட்டு நிற்கிறது. கடவுள் மனிதன் மரம் இவைகள் ஒரே தன்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக இருக்குமா? இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டில் நாம் அமர்ந்திருக்கும்போது, இயற்கையின் ஒவ்வொரு கூறும் இறைவனை நோக்கி நம்மை முன்னெடுக்கும் ஒரு பரவசத்தில் நாம் ஆழ்கிறோம். அப்படியானால் பனை மரம் என்பதை எனது மண்ணின் இறையியலின் மையமாக வைத்து பார்ப்பதுவே எனது அருட்பணியாக இருக்கும். அதுவே நேர்மையாளராம் கடவுளின் உருவை நான் பெற்றேகும் பொற்தருணம்.

பனை மரம் பார்பதற்கு ஒரு தூணைப்போல நெடுநெடுவென்று இருக்கும். மனித தலையைப்போல உச்சியில் அதன் ஓலைகள் மயிர்களாய் சிலுபி நிறைந்திருக்கும். ஆண் மரம், பெண் மரம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், இரு தன்மைகளும் இணைந்த “உம்மங்காளி” பனைமரங்களை காணும்போது, கவியின் ஆழ்ந்த அவதானிப்பு தெரியவருகிறது. மேலும் மரங்களில் மிக குறைவான தண்ணீரை எடுத்துக்கொண்டு மிக அதிக பொருட்களை வழங்கும் ஒரே மரம் பனைமரமே. ஆகவே, தன்க்கு எஞ்சிய குறைவான வாய்ப்புகளிலும் கூட உன்னத விழுமியங்களை வழங்கும் வாழ்வு கொண்டோரை நேர்மையாலர் என கவி வருணிப்பது நமது பார்வைக்கு வைக்கப்படுகிறது. வறண்ட பகுதியில் தண்ணீர் இன்றி வாடும் மக்களுக்கு உச்சியில் ஊறும் பதனீர் எனும் தாகம் தணிக்கும் பானத்தை தாயைப்போல் பிரதிபலன் அற்று சுரந்து கொடுக்கிறது. பனைமரம் மண்னையும் விண்ணையும் இணைக்கும் ஒரு அற்புத மரம். கடவுளும் மனிதனும் இணையும் நேர்கோடு அல்லது மையம் அது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பனைமரம் மிகுதியாக காணப்படுகிறது, இம்மக்களின் வாழ்வில் இரண்டர கலந்த மரம் இது. இவர்களது வாழ்வில் உணவு உறைவிடம், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என பல வகைகளில் பனை வாழ்வளிக்கும் மரமாக காணப்படுகிறது. இப்பகுதியில் வாழும் எச்சமயத்தவரானாலும் அவர்களை ஒன்றிணைக்கும் ஒரே மரம் இதுவே. ஆகவே நமது அருட்பணியின் நோக்கில் மிக முக்கிய செயல்  இம்மரத்தை கூர்ந்து அவதானிப்பது, அதை பாதுகாப்பது, மற்றும் இம்மரத்தை கடவுளின் தன்மையை வெளிப்படுத்தும் முக்கிய குறியீட்டின் தன்மையாக உணர்ந்து வலர்த்தெடுப்பது ஆகும்.  இறைவன் வழங்கும் அருட்செய்தியினை உள்வாங்கி,  இதைச் சார்ந்து வாழும் மக்களினங்களின் வாழ்வில் எவ்விதம் நமது அருட்பணியை ஆற்ற இயலும் என்பது மிக முக்கியமான கேள்விகளாக எஞ்சி இருக்கின்றன.

பல்வேறு மக்களினங்களுக்காக தன்னை அற்பணித்த அருட்பணியாளர்கள் பனைதொழிலாளர்களுக்காக தன்னை அற்பணிக்காதது ஒரு குறையாகவே இருந்திருக்கிறது. பனை மரமும் பனைத்தொழிலாளிகளும் அத்துணை முக்கியத்துவம் பெறவேண்டிய காரணம் தான் என்ன? திருமறை சார்ந்து ஏதேனும் சான்றுகள் உள்ளனவா? என நாம் தேடினால் நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு திருமறைப்பகுதி வாசிக்க கிடைக்கிறது. “குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்”. (யோவான் 12: 13 திருவிவிலியம்)

இயேசுவின் எருசலேம் பயணம் பெத்தானியாவிலிருந்து துவங்குகிறது. பெத்தானியா என்பதற்கு பேரீச்சையின் வீடு என்பது பொருள். அவருக்கு எதிர்கொண்டு போக பனைமர கிளைகளை எடுத்துச் சென்றவர்கள் திரளான பனைமரங்கள் இருந்த இடத்திலிருந்தே குருத்தோலைகளை எடுத்திருக்கவேண்டும். அதுவும் பனை ஏறும் தொழிலாளிகளின் உதவி கொண்டு அல்லது பனை ஏறுகிறவர்களே அவைகளை எடுத்துச் சென்றிருக்கவேண்டும். பனை ஓலைகள் வெற்றியின் சின்னம், நீடித்த வாழ்வு, அமைதி போன்ற பல்வேறு எண்ணங்களை பிரதிபலிப்பதாக பொருள் பட்டாலும், சுழலை ஆழ்ந்து கவனிக்கும்போது வேறு சில எண்ணங்களும் அதன் உட்பொருளாய் ஒளிந்திருக்குமோ என எண்ண தோன்றுகின்றது.

இயேசுவை சிலுவையில் அறைய மிக முக்கிய காரணியாக இருந்தது சமய தலைவர்கள் என்பது உண்மை என்றாலும், அவர் மீது சுமத்தப்பட்ட இறுதி குற்றச்சாட்டு மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த குற்றச்சாட்டு யாவும் வரி செலுத்துவது குறித்ததே. ஆக வரி மக்கள் மேல் மிக அதிக பாரத்தை  சுமத்தியிருப்பதையும் இயேசு அவற்றை வரித்தண்டுவோருடன் அமர்ந்து விவாதிப்பதையும் காணுகையில், திராட்சை தோட்டம், அத்திமரம், மற்றும் பேரீச்சகளை பராமரிப்பவர்கள் ரோம அரசின் வரி கொள்கையால் பாதிப்படைதிருந்தனர் என்பது உறுதியாகிறது. இவர்களே குருத்தோலைகலை எடுத்தபடி இயேசுவுக்கு எதிர்கொண்டு போயினர் என்பது பொருத்தமானது. அப்படியானால் இயேசுவின் பணி பேரீச்சை மரம் ஏறுகிறவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

 

இன்று நமது ஆலயங்களிலிலோ ஆலய வளாகங்களிலோ பனை மரங்கள் காணப்படுவதில்லை. அவைகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பனை தொழுலாளர்கள் குருத்தோலை ஞாயிறு அன்று நினைவு கூறப்படுவதில்லை, அவர்களது வாழ்வை எண்ணாமலேயே 2000 வருட கிறிஸ்தவ அருட்பணி  கடந்து வந்திருக்கிறது. இத்துணை நெடிய ஆண்டுகளில் ஒருமுறை கூட நமது ஆலயங்களில் பனை ஏறி காய்த்து வெடித்த பனைத் தொழிலாளிகளின் கால்கள் கழுவப்பட்டதில்லை. சாம்பல் புதனன்று நாம் எரிப்பது வெறும் ஓலைகள் மாத்திரம் அல்ல பனைத்தொழிலாளிகள் எனும் ஒரு விரிந்த சமூகத்தைக் கூட.

இந்திய அளவில் வேலைவாய்ப்பை பெருக்கும் தன்மையில் பனை மரங்களின் பங்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திருச்சபையோ அரசோ பனை மரங்களுக்கோ பனை தொழிலாளர்களுக்கோ நல திட்டங்கள் எதுவும் செய்ய முன்வரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக பனை மரங்களின் எண்ணிக்கை குறித்த எந்த அறிக்கையும் அரசால் வெளியிடப்படவில்லை. பனை தொளிலாளர்களுக்கான எந்த நலதிட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்படவில்லை. உலகமயமாக்கலில் உலகத்தோடு திருச்சபையும் சேர்ந்துகொள்ளுகிறது. இறைவனும், இயற்கையை முன்னிறுத்தும் பனை மரமும், அதனோடு தொடர்புடைய மனிதனும் இன்றுவரை எந்த சூழியல் இறையியலாளராலும் கவனத்துக்குட்படுத்தவில்லை.

இச்சுழலில் கவி காணுகின்ற ஒன்றை நாமும் நமது வாழ்வில் கண்டடையவெண்டும். அது நமது அருட்பணியாக அமையவேண்டும், இறைவன் இயற்கை மனிதன் என ஒன்றிணைந்து செயல்படும் கவியின் கூற்றை மெய்பிக்கவேண்டும். கிறிஸ்து அதையே செய்தார்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

பனைமரச்சாலை  – பின்னிணைப்பு

ஒக்ரோபர் 1, 2016

எனது பணி நேரத்தில், அகமதாபாத்

எனது பணி நேரத்தில், அகமதாபாத்

பனைமரச்சாலை முடிந்தபின்னும் அதன் அதிர்வலைகள் பிரம்மாண்டமாக இருந்தது. ஒன்று வெளியிலிருந்து வந்த தொடர் ஊக்கம், மற்றோன்று எனக்குள் ஏற்பட்ட கொந்தளிப்பான மனநிலை. நான் மும்பை வந்த உடனேயே என் டி ற்றி வி, (NDTV) தந்தி தொலைக்காட்சி உட்பட அனேக  ஊடகங்கள் பனைமர வேட்கைப் பயணம் குறித்த  செய்திகளை வெலியிட்ட வண்ணம் இருந்தன. அனேக பத்திரிகை மற்றும் தொலைகாட்சியினர் என்னை அழைத்தபோது நான் மும்பை வந்துவிட்டிருந்ததால் மேற்கொண்டு என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால் நண்பர்கள், திருச்சபையின் பெரும்பான்மையானோர் உறவினர்கள் என அனேகர் வாழ்துதலை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

http://www.ndtv.com/video/news/news/motorcycle-diaries-a-priest-s-road-trip-for-palm-trees-419467

http://www.dtnext.in/News/City/2016/06/04001945/Pastor-on-a-mission-to-save-palm-trees.vpf

ஆனால் என் மனது முழுக்க இவைகளை நான் ஆவணப்படுத்தவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டு இருந்தது. முதலில் வெறும் 18 நாட்களில், இரவு வேளைகளில் அமர்ந்து நாட்குறிப்பு போல எழுதலாம் என்று தான் நினைத்தேன். எனது பயணத்தில் அப்படியான வாய்ப்பு நிகழவில்லை. ஒவ்வொரு நாழும் இரவுகள் நீண்டு சென்றன. எங்கே தாங்குவேன் எனும் உறுதி கடைசி கணம் வரை என்னிடம் இருக்கவில்லை.ஆகவே அது நடைபெறவில்லை.

ஆகவே உச்சி உடைத்து பெரும் விசையுடன் எழும் குருத்தோலை போல் எண்ணங்கள் வரிசையாக நின்றாலும் என்னால் அவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஊறி சுரந்து நிற்கும் பனம் பாளையை சீவி எடுக்கும் பக்குவத்துடன் 90 அத்தியாயங்களை எழுதினேன். இந்த நாட்கள் எனது வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் செலவிட்ட அற்புத தருணம்.

இம்முறை நான் பெற்ற வாசகர்கள் அனேகம். அதற்கு அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். அவர் தனது வலைத்தளத்தில் எனக்கு அளித்த ஊக்கமிகு வார்த்தைகள் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவரது வாசகர்களின் மின்னல் வேக வாசிப்பும், எதிர்வினையும் செயல்பாடு சார்ந்த ஊக்கமும் குறிப்பிடத்தகுந்தது. அகிலன் ஒரு சிறந்த விமர்சகராக என்னோடு பயணித்தார். பேராசிரியை லோகமாதேவி தொடர்ந்து தனது பதிவுகளை எழுதினார், திருச்சி டெய்சி அவர்கள் கிறிஸ்தவ பின்னணிய பார்வையை பதித்தது யாவும் என்னை சீர்தூக்கிப்பர்க்க உதவியது. குமரியைச் சார்ந்த சாகுல் ஹமீது அவரை எழுத்தின் வழியாக தான் அறிமுகம் செய்துகொண்டேன். சரவணன், இளங்கோ மற்றும் எனது தம்பியாக மாறிவிட்ட கதிர் முருகேசன் அனைவரும் ஜெயமோகன் அவர்களின் தொடர் வாசகர்கள். தொலைத் தொடர்பு கொண்டு ஊக்குவித்தவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்ளுகிறேன்.

பேராசிரியை லோகமாதேவி பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாக இருக்கிறார். அவர்களது மாணவர்களுக்கு பனை ஓலையில் சிறப்பு பயிற்சிகள் வழங்க அழைத்தார்கள். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் தனது வலைத்தளத்தில் பதிவிட்டு 10 நட்களுக்குள் இது நிகழ்ந்தது. அந்த மாணவர்கள் இன்று வரை தொடர்ந்து ஓலைகளில் கலை பயிற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.

சொல்வனம் நான் தொடர்ந்து வாசிக்கும் இணைய பத்திரிகை. ஆனால் அதிலே எனது பயணத்தைக் குறித்து டி.கே. அகிலன் எழுதிய கட்டுரை, இலக்கியத்தில் எனது பங்களிப்பு சிறு அளவில் நிகழ்ந்திருக்கிறது என உறுதிப்படுத்தியது.

http://solvanam.com/?p=46155

எனது இரயில் பயணங்களில் கூட ஓலைகள் என்னுடன் வந்தன. அனேகருக்கு ஓலை சிலுவைகளை செய்து கொடுத்தேன். மிக எளிமையாக நான் ஆரம்பித்த ஒன்று அனேகருடைய உதவியினால் இன்று பனையைப் போல் உயர்ந்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்பொழுது, எனது அடுத்த கட்ட பயணத்திற்கு  நான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். 18 நாட்களுக்குள் தமிழகத்தைச் சுற்றி வர  எண்ணுகிறேன். தமிழகம் பனை மரங்களால் சூழப்பட்ட ஒரு சோலைவனம். ஒரு மாலையாக வேலியாக அது தமிழகத்தை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே இனிமேல் நான் முனெடுக்கும் பயணம், தமிழகத்தின் எல்லைகளெங்கும் நிற்கும் பனை மரங்களை ஆவணப்படுத்துவதாக இருக்கும்.

தமிழகத்தில் பனை தொழிலாளருக்காக பணியாற்றுகின்ற தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், அரசியல்வாதிகள், களப்பணியாளர்கள், பனை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் அரசு சார்ந்த, அரசு சாரா இடங்கள், பனை சார் வாழ்வை முன்னெடுக்கும் மனிதர்கள், மற்றும் பெண்களின் பங்களிப்பு போன்றவற்றை ஆவணப்படுத்தும் விதமாக பயணம் அமைக்க திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 100 இரு சக்கர வாகங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு கவன ஈர்ப்பை செய்யலாம் என்று யோசிக்கிறேன்.

மிக ஆரம்பகட்ட நிலையில் இருக்கும் இப்பயண திட்டத்தில், பள்ளிகூட மாணவர்களை சந்திக்கவும், கல்லூரி மணவர்களை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன். பனை ஓலை சார்ந்த ஓவிய கண்காட்சி, பனை ஓலை பொருட்கள் கண்காட்சி, பனை மரம் சார்ந்த புகைப்பட கண்காட்சி போன்றவைகளையும் இப்பயணத்தின் அங்கமாக மாற்றிக்கொள்ள திட்டமிடுகிறேன். பனை ஓலைகள் வைக்கப்பட்டிருக்கும் மடங்கள், ஓலை குல்லாய்கள் வைக்கப்பட்டிருகும் மசூதிகள், என்னை அழைக்க சித்தமாயுள்ள தேவாலயங்கள் அனைத்தையும் சென்று தரிசிக்க சித்தமாயுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒத்துழைப்பு நல்கும் நண்பர்கள் கிடைக்க வேண்டிக்கோள்ளுங்கள்.

என்னோடு புகைப்படம் எடுக்கவும், ஆவண படம் எடுக்கவும் நண்பர்கள் இசைந்துள்ளர்கள். குறைந்த பட்சம் 10 இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து என்னுடன் வருவது, பனை சார் வாழ்வைக் குறித்த மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். நண்பர்கள் துவக்கம் முதல் கடைசி வரை வர இயலாது என்றால், அவரவர் மாவட்டங்களைக் கடக்கும்போது, எங்களுடன் ஒரு நாள் இணைந்து கொள்வது பெரும் பயன்களை விளைவிக்கும்.

இப்போது பனை மரச்சாலையை பதிப்பிக்க பதிப்பகங்களை தேடுகின்றேன். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com


%d bloggers like this: