Archive for நவம்பர், 2016

பீல் பனைகுடியினர்

நவம்பர் 28, 2016

குஜராத் முழுவதும் உள்ள பனை மரங்களின் எண்ணிக்கை மொத்தம் 17 இலட்சம் என குறிப்புகள் கிடைக்கின்றன. இவைகளை பனை மரங்கள் மிகுதியான தமிழகத்தோடு  பொருத்திப்பார்த்தால், வெறும் மூன்று சதவீதமே பனைமரங்களே உள்ளன. குஜராத்தில் நான் தங்கியிருக்கும்போது பனை மரங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவைகள் பெரும்பான்மைகள் அல்ல. அவைகள் ஆங்காங்கே நிற்பவை. தனிப்பட்ட ஆர்வத்தினால் பேணப்படுபவை. முதன் முதலாக நான் ஓலைகளைப் பார்த்தது சி டி எம் அருகிலுள்ள இஸ்லாமியர் தங்கியிருக்கும் சேரியின் அருகில் சுமார் 50 மரங்களை பார்த்ததே. அவர்களும் அதனை பயன்படுத்துவதுபோல் தெரியவில்லை.

பீல் பழங்குடியினர் வாழும் பகுதியில் பனைமரங்கள்

பீல் பழங்குடியினர் வாழும் பகுதியில் பனைமரங்கள்

2014ஆம் வருடம் திருச்சபையாக குருத்தோலை ஞாயிறு நடத்த வேண்டும் என திட்டமிட்டு, ஓலைகள் எடுக்கவேண்டும் என முயற்சித்தால், ஓலைகள் எடுத்து தர பனை தொழிலாளிகள் இல்லை. அப்பொழுதுதான் சாந்திப்பூர் குறித்த எண்ணம் வந்தது. குஜராத் பகுதியில் கிறிஸ்தவம் பரவியபொழுது அங்கே மிஷனெறிகள் புதிய கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் வாழ பல ஊர்களை அமைத்தார்கள். முக்திப்பூர், சாந்திப்பூர் போன்ற பெயர்கள் இட்டு கிறிஸ்தவர்கள் அங்கே குடியேற வழிவகை செய்தார்கள். நாங்கள் அகமதாபாத்திலுள்ள  போதகர்களாக முதன் முறையாக சாந்திப்பூர் சென்றபோது அதன் அழகில் நான் மயங்கிவிட்டேன். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், நிலக்கிழார்களாக இருப்பதைக் காணமுடிந்தது.

அவர்களில் ஒருவரது வீட்டில் 10 பனைமரங்கள் வடலியும் பெரிதுமாக இருப்பதை அப்போதே பார்த்தேன். பனை மரங்கள் அபூர்வமானபடியால் எனக்கு அது மறக்கவியலா கிராமம். அந்த இடத்தை நினைவில் நிறுத்திக்கொண்டேன். நாங்கள் இருந்த சி டி எம் பகுதியிலிருந்து சுமார் 20 கி மீ தொலைவில் இருக்கும் அந்த கிராமத்திற்கு எனது புல்லெட்டில் 10 முறைக்கும் மேல் நான் சென்றிருப்பேன். குழந்தைகளையும் ஜாஸ்மினையும் அழைத்துச் செல்லுவது வழக்கம்.

முதன் முறையாக ஆலய அலங்கரிப்பிற்கு ஓலைகளை பயன்படுத்தவேண்டும் என நினைத்து அதற்கான அனைத்து ஒழுங்குகளும் முடித்தபோது, ஆலயத்திலுள்ள சுரேஷ் என்ற வாலிபனையும் அழைத்துக்கொண்டு, இருவருமாக அங்கே சென்றோம். அங்கே தான் நான் முதன் முறையாக வடலி பனையில் ஏறினேன். வடலியில் ஏறுவது பெரிய விஷயம் கிடையாது ஆனால் நாற்பதை நெருங்குகையில் உடல் வளையாமல் போய்விடுகிறது. ஆகவே உடலெங்கும் சிராய்ப்புகள். எப்படியென்றாலும் ஓலைகளை வெற்றிகரமாக பெற்று வந்தோம்.

குஜராத் பகுதியில் பனைமரங்களை பேணுவது சாத்தியமில்லாதது என்றே எண்ணினேன். குறிப்பாக நாங்கள் இருந்த பகுதியில் ஏழு டிகிரி வரை  குளிர் இருக்கும். குமரியில் 17 அல்லது 18 வரை இறங்கும் குளிரில் மட்டும் பனை மரங்கள் வளரும் என்று நினைத்த எனக்கு, குஜராத்தில் வளர்பவை மிகுந்த ஆச்சரியமளித்தன.

இதே வேளையில் எனது அப்பா பணியாற்றிய சூரத்தை அடுத்த வாலோட் தாலுகாவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு பனை மரங்களைக் கண்டேன். கமித் எனும் பழங்குடி இனத்தவர் தோட்டங்களில் வளருபவற்றில் இருந்து பொதுவாக நுங்கு மட்டுமே எடுப்பதை கவனித்தேன். குருத்தோலைகளை எடுக்க அவர்கள் ஒப்புவதே இல்லை.  இவைகள் அனைத்தும், பனை மரங்கள் குஜராத்தில் தப்பிபிழைத்து வளருபவை என்ற எண்ணத்தையே எனக்கு அருளியது.

நமது முடிவுகள் எப்போதும் சரியாயிராது என்பதை பயணங்கள் மட்டுமே உறுதி செய்யும் என்பதை உணரும் சூழல் வந்தது. பனை மரச்சாலை நிறைவு நாளின்போது சொற்பொழிவாற்றிய திரு டேவிட்சன் அவர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் என்னை அழைத்து, குஜராத்தில் பனை மரங்கள் அதிகம் இருப்பதாக   அங்கு பணிபுரியும் பேராயர் தேவதாஸ் அவர்கள் குறிப்பிட்டதாகவும், அங்குள்ள மக்களுக்கு கருப்பட்டி தயாரிக்கும் பயிற்சியை வழங்க இயலுமா என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

நான் அகமதாபாத்தில் இருந்ததாலும் சூரத் பகுதிகளில் பயணம் செய்திருப்பதாலும் பனை மரங்கள் மிக அதிகமாக குஜராத்தில் இல்லை என்பதை அறிவேன். ஆனாலும் மும்பையிலிருந்து பால்கர் வரை ரயில் பயணத்தில் நாம் பனை மரங்கள் திரட்சியாக நிற்பதை காண முடியும். ஆகவே பனை மரங்கள் நிற்கும் பகுதியை ஆய்வு செய்யும் நோக்குடன் ஒரு முறை போய் வரலாம் என்று ஒப்புக்கொண்டேன். மேலும் அவர்களுக்கு  நாம் எந்த வகையில் பயனுள்ள பங்களிப்பாற்ற முடியும் என்று எண்ணி, திட்டமிடத் துவங்கினோம்.

பனை மரங்கள் சார்ந்து ஒரு கணக்கெடுப்பு நடத்தவும், மேலும் அங்கே உள்ள மக்களுக்கு கருப்பட்டி காய்க்கும் நுட்பத்தை கற்றுக்கொடுக்க ஏதேனும் முயற்சிகளை  எடுக்கலாமா என்பது திட்டம். இதற்காக மும்பையிலிருந்தோ அல்லது தமிழகத்திலிருந்தோ ஒரு குழுவினரை அழைத்துச் செல்ல திட்டம் வகுக்க என்னைக் கேட்டுக்கொண்டார்கள். மும்பையிலிருந்து என்னால் இவைகளை ஒழுங்கு செய்ய இயலுமா என எனக்குத் தெரியவில்லை. கருப்பட்டி காய்க்கும் தொழிலாளர்களை தமிழகத்திலிருந்தே நான் அழைக்க இயலும். அப்படி ஒரு பெரும் பொருட்செலவில் இவைகளை செய்வதற்கு முன்னால், அந்த பகுதியை கள ஆய்வு செய்து தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனைத் தொடர்ந்து திட்டம் வகுக்கலாம் என்று கூறினேன்.

பனை மரம் மீதிருந்த உணர்வெழுச்சியால் மட்டுமே அங்கு செல்லலாம் என முடிவெடுத்தேன்.  அப்பொழுது, நான் சில நாட்களுக்கு முன்பு வாசித்த பனை மரமும் தேனீ வளர்ப்பும் என்ற கட்டுரை என் நினைவிற்கு வந்தது. அது வேளாண் பல்கலைக்கழகம், நவ்சாரியிலிருந்து வெளியிடப்பட்டதாகையால் அங்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். ஒரு உள்ளுணர்வின் வெளிபாடாக நான் கருதியது எனக்கு மிகப்பெரிய வாசலை திறந்தளிக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

நவ்சாரி ரயில் நிலையத்தில் நான் இறங்கியபோது மணி மாலை 4.30. நான் பல்கலைக்கழகம் சென்று சேருகையில் அனைவரும் அங்கிருந்து புறப்படும் வேகத்தில் இருப்பார்கள் என எண்ணினேன். ஆனால் நான் எவரை எல்லாம் காணவேண்டும் என நினைத்தேனோ அவர்களைக் காண முடிந்தது.

முதலாவதாக நான் பேராசிரியர் பாடக் என்பவரை காணச் சென்றேன். தேசிய அளவிலான பனை மரம் சார்ந்த ஒரு கருத்தரங்கை ஜனவரியில் தான் முடித்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியின் கட்டுரை தொகுப்பு அவரது மேஜையில் இருந்தது. பல்வேறு ஆய்வுக்கட்டுரை சார்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பங்கேற்புடன் செய்யப்பட்டிருந்தது அந்த தொகுப்பில், தமிழர்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளும் மேலோட்டமாக காணப்பட்டன. என்றாலும் என்னைப் பொருத்தவரையில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும்.

பேராசிரியர் பாடக் என்பவர் பனை தொளிலாளிகளோடு தொடர்புடையவர். நவ்சாரிக்கு அருகில் உள்ள டேட்வாசன் என்ற பகுதியில் சுமார் 10000 பனைமரங்கள் ஒன்று போல ஒரே இடத்தில் இருப்பதாக கூறினார்கள். முன்பு  பனை வெல்லம் தயாரிக்கின்ற இடமாக இருந்தது, தற்போது உள்ள சூழலினால்தற்போது வெறும் பதனீர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்றும், லிட்டருக்கு 40 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றும் கூறினார். தமிழகம் தாண்டி பனை வெல்லம் தயாரிக்கும் நுட்பம் அறிந்தவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது மீண்டும் இதன் மூலம் உறுதியானது. இங்கு பனை மரம் ஏறும் தொளிலாளர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என கேட்க, அனைவரும் பழங்குடியினர் என்று கூறினார்.

இங்கு பனை தொழிலாளர்களுக்கான ஒரு சங்கமும் 1974 முதல் இயங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான காரணங்கள், உறுதுணையாக நின்றவர்கள் என ஒவ்வொன்றாக கூறிக்கொண்டு வந்தார். வருகிற 2017 ஆம் ஆண்டும் ஒரு தேசிய அளவிலான ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

மேத்தா அவர்களை சந்தித்தபொது தேனீ வளர்ப்பு அவரது விருப்ப தேர்வு என்றும், தேனீக்களுக்கு மிக அதிக அளவில் தேனை வழங்குவதில் பனை மரங்கள் முன்னணியில் நிற்பதால் தனக்கு பனை மரத்தின் மீது கவனம் குவிந்தது என்றும், தனது கட்டுரை, பல கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வடிவமே என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். பருவ காலத்தில் கிடைக்கும் தேனில் 66 சதவிகிதம் பனைமர மகரந்தம் இருப்பதை கூறி, பனை மரத்திற்கும் தேனீக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் கூறினார். என்னை இரயில் நிலையத்தில் பேராசிரியர் அவர்களே கொண்டு விட்டார்கள்.

பச்சை பஞ்சுருட்டான் - தேனீக்களின் எமன்

பச்சை பஞ்சுருட்டான் – தேனீக்களின் எமன்

அன்று இரவு பரோடா சென்று சேருகையில் மணி 10. அங்கிருந்து தாகோத் செல்வதற்கு மீண்டும் மீன்று மணி நேர பயணம். இரவு இரண்டு மணிக்கு தாகோத் வந்து சேர்ந்தேன். என்னை அழைக்க கலைவாணன் என்ற நண்பர் வந்திருந்தார். அவர் பீல் பழங்குடியினரின் மொழியில் திருமறையை மொழிபெயர்த்து வருகிறார். இலக்கணம், வரிவடிவம் போன்றவைகளிலிருந்து ஒவ்வொன்றாக அவர் கட்டமைத்து, தற்போது மாற்கு நற்செய்தி நூல் வெளியிடும் அளவிற்கு ஆயத்தமாகியிருக்கிறார். என்னைப் பார்த்தவுடன், காலை ஆறுமணிக்கு ஆயத்தமாகவேண்டும் என்று கூறினார்.

மறுநாள் காலை ஆறுமணிக்கு பேராயர் தேவதாஸ் அவர்களை சந்தித்து பேசினேன். ஷாலோம் என்ற பெயரில் குஜராத் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அவர்கள் பணி செய்துவருவதாகவும், நூற்றிற்கு மேற்பட்ட கிராமங்களில் பனை தொழிலாளர்கள் இருப்பதாகவும் கூறினார். நான் எவ்வித முன் வரைவு திட்டத்தோடு வரவில்லை என்றும், அவர்களைக் கண்டு அவர்கள் சூழலிலிருந்து நாம் தேவையான திட்டங்களை வகுக்கலாம் என்று கூறினேன். பேரீச்சை மரங்களைக் குறித்த திருமறையின் குறிப்புகளை எனது பார்வையில் கூற பேராயர் மகிழ்ந்துபோனார். அங்கிருந்து மன்றாட்டுடன் கிளம்பினோம்.

பீல் பழங்குடி தாய் கரத்தில் ஓலையில் செய்யப்பட்ட உறியோடு

பீல் பழங்குடி தாய் கரத்தில் ஓலையில் செய்யப்பட்ட உறியோடு

மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே மக்களுடன் செலவளிக்க கிடைக்கும் ஆனால் 4 மணி நேரம் பயணிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் பயணித்தோம். காருக்கு வெளியே ஆறு டிகிரியாக இருந்தது. உடன் வந்தவர்கள், குளிர் நேரத்தில் ஒரு டிகிரி மட்டும் வரும் என்று கூறினார்கள். இங்கு பனை மரம் வளருமா என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. முதலில் மத்தியபிரதேசத்திலுள்ள அலிராஜ்பூர் என்ற இடத்திற்குச் சென்றோம்.

ஆனால் எனது எண்ணத்திற்கு மாறாக மிக செழிப்பான பனை மரங்கள் ஒவ்வொன்றாக தென்பட்டது. ஒவ்வொரு வீடுகளுக்கும் அருகில் பனைமரங்கள் காணப்பட்டன. அவர்களின் தோட்டத்திலும் எல்லைகளை வகுக்கும் வண்ணமாகவும் பனைமரங்கள் காணப்பட்டன. குமரி மாவட்டத்தில்  சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எப்படி பனை மரங்கள் இருந்தனவோ அப்படியே பனை மரங்கள் இருப்பதைக் காணமுடிந்தது.

புதிதாக செய்யபட்ட ஓலை உறியுடன்

புதிதாக செய்யபட்ட ஓலை உறியுடன்

பீல் பழங்குடியினர் தாம் இம்மரத்தில் ஏறுகின்றனர் என்றும், ஒவ்வொரு வீட்டிலுள்ள ஆண்மகனும் பனை மரம் ஏறும் கலை அறிந்தவர். பதனீர் எடுக்க தெரியாவிட்டாலும், முன்று மாதங்கள் தொடர்ச்சியாக கள் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் வெயில் காலம் கொளுத்தும். வெயில் தாக்கத்தால் அனேகர் மயங்கி விழுவதும் மரித்துப்போவதும் உண்டு. சுமார் 47 டிகிரி வரை செல்லும் வெம்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் கள் பருகுவார்கள் என்றே நினைக்கின்றேன். நான்கு பனை மரம் இல்லாத குடும்பத்திற்கு பெண் கொடுக்க மாட்டார்களாம்.

குஜராத் பகுதியிலுள்ள சோட்டா உதைப்பூர் மாவட்டத்திலும் பனை மரத்துடன்  பீல் பழங்குடியினருக்கான தொடர்பை கண்டேன். அங்கே, பனை ஏறும் முறை தென்னிந்தியாவிலிருந்து வெகுவாக வேறுபடுகிறது. மூங்கில் களிகளில் கணுக்கள் இருக்கும்படியாக தறித்து அவைகளை பனை மரத்தில் மூங்கில் நாரினால் கட்டி விடுகிறார்கள். பிற்பாடு அந்த கம்பை பற்றிக்கொண்டே ஏறுகிறார்கள். பனை ஏறுவதற்காகவே வீட்டின் அருகில் மூங்கில்களைப் பயிரிட்டு வளர்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பழைய கழிகளை அகற்றிவிட்டு புது கழிகளை இணைக்கிறார்கள்.

மூங்கில் கழிகளை பனைமரத்துடன் இணைக்க பயன்படும் மூங்கில் நார்

மூங்கில் கழிகளை பனைமரத்துடன் இணைக்க பயன்படும் மூங்கில் நார்

பனை ஓலையில் உறி செய்கிறார்கள். வேறு என்ன செய்கிறார்கள் என்றோ அது குறித்த வேறு தகவல்களை திரட்டவோ நேரம் போதுமானதாக இல்லை. ஆனால், அவர்கள் கண்டிப்பாக பனைக்குடியினர் என்பது உறுதியாக தெரிந்தது. பழங்குடியினரின் உணவாகிய கிழங்கும் இவர்களுக்கு பனை மரத்திலிருந்து கிடைக்கிறது. இன்றும் உலர்த்தி சேமிக்கும் உணவுகளையே இவர்கள் பெரும்பாலும் பயிரிடுகிறார்கள். மக்கா சோளம், கோதுமை, துவரம் பருப்பு, உழுந்து, சணல் ஆகியவற்றை இவர்கள் பயிர் செய்கிறார்கள். மா, கொய்யா, சீத்தா, நாவல்  பழ மரங்களும் உண்டு.

இந்த பயணம் நிறைவடைந்தபோது என்னை பரோடாவிலுள்ள மெதடிஸ்ட் சிறுவர் இல்லத்தில் விட்டார்கள். அங்கே இருந்த சிறுவர்களுக்கு ஓலையின் பயன்பாட்டினை எடுத்துக்கூறினேன். சில எளிய ஓலை பொருட்கள் செய்ய கற்றுக்கொடுத்தேன். விடுதி காப்பாளர் ஸ்மிதா முத்தையா, எனக்கு முன் அகமதாபாத்தில் போதகராக பணியாற்றிய அருட்பணி. ஏசா முத்தையா அவர்களின் மனைவி. போதகர் அகமதாபாத் சென்றிருந்ததால் அவர்களை சந்திக்க இயலவில்லை.

பேருந்தில் நான் திரும்புகையில், அந்த பழங்குடியினரின் வாழ்வில் பனை மரம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை குறித்தே எண்ணிக்கொண்டு வந்தேன். பனை மரம் குறித்த எந்த ஆய்வும், தமிழகத்திலிருந்து செய்யப்படுவதை விட, பழங்குடியினரிடமிருந்து செய்யப்படுவதே மிகச்சரியான துவக்கமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஆம் உணவிற்காக தேடி அலையும் தொல் பழங்காலத்தில் இருந்தே மனிதனுக்கு பனை மரம் பேருதவியாக இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

அவர்கள்  உணவு சார்ந்து சொன்ன ஒரு விஷயம் அதை நிரூபிக்கிறது. பனம்பழத்தினுள் ஒரு கம்பினை நுழைத்து அதில் வடியும் சாற்றினை அவர்கள் பருகுவார்களாம். ஆம் கோடையின் வெம்மை தாக்கும் நேரத்திற்கு மிகச்சரியான பானம் இது. இவ்வுணவை உண்ணும் முறையில் தொன்மையான முறைமை கையாளப்பட்டிருக்கிறதை காணமுடியும், சாறு பிழிந்து வீசியெறியப்பட்ட இதே விதைகள் மழை முடியும் தருணத்தில் கிழங்கு ஆவதையும் அவர்கள் கண்டு சேகரித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

பீல் பழங்குடியினர் பனையேற்றிற்கு பயன்படுத்தும் மண் பானைகள்

பீல் பழங்குடியினர் பனையேற்றிற்கு பயன்படுத்தும் மண் பானைகள்

அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டமும் எனது எண்ணத்தில் பெரிய அலையை ஏற்படுத்தியது. சிந்து சமவெளி நாகரீகத்தின் ஏதோ ஒரு தொடர்ச்சியா இங்கு வாழும் மக்கள்? பனை என்னை இத்தனை தூரம் அழைத்துவரும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அருகில் செல்ல செல்ல மிக உயர்ந்து செல்லுகிறது பனைமரம். மிக நீண்ட பயணம் செய்தாலே சற்றேனும் என்னால் பனைமரத்தை உணர முடியும் போலும். ஆனாலும்  உலகம் முழுவதும் உள்ள பனைக்குடியினர் அனைவரையும் தேடிச்செல்லும் பேராசைமட்டுமே என்னிடம் இருப்பதாக எனக்கே தோன்றுகின்றது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

பனைமர ஓலை – 3

நவம்பர் 3, 2016

ஏட்டோலை

ஓலை என்பது தகவல் பரிமாற்றத்திற்கான முறையாக இருந்தது பனை மரத்திற்கு மேலும் கூடுதல் சிறப்பை அளித்திருக்கிறது. எண்ணிப்பார்க்கையில், பனைமரம் இந்திய கல்வி மரபிற்கு முகிய அடித்தளமாக இருந்திருக்கிறது. ஓலைச் சுவடிகளில் உள்ளவைகளில் எத்தனை சதம் படிக்கப்பட்டிருக்கும் என்பதும் கெள்விக்குறியே. கல்வியோடு பனியோலையை தொடர்பு படுத்த இயலுமா? அப்படியானால் எப்படி மற்றும் எப்போதிருந்து? போன்ற கேள்விகள் நமக்கு முன்னால் நிற்கின்றன.

சமீபத்தில் பீகார் முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார்  தமிழக பனைத்தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டதாக பத்திரிகைச் செய்திகள் வெளியாயின. அதே நேரம், மும்பை ரசாயனி பகுதியில் பீகாரிலிருந்து பனைத் தொழிலாளிகள் வருடம் தோரும் வருவதை அறிந்துகொள்ள முடிந்தது. ஆகவே பீகாருக்கும் பனைக்கும் உள்ள தொடர்பை எண்ணிப்பார்க்கையில் வேறொரு கோணம்  திறந்து கொண்டது.

இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் ஓலைகளில் எழுதப்பட்ட புத்தகங்களை ஆய்ந்து ஆராய்ந்தவர் லக்னோவைச் சார்ந்த பத்மஷ்ரி டாக்டர் அகர்வால் அவர்கள். தொல்லியல் துறையின் மிக முகியமான ஆளுமையான அகர்வால் நமக்கு ஓலைகள் குறித்த அரிய கருத்துக்களைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் அவைகளை பேணவும் முயற்சி எடுத்தவர். ஓலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆசியாவின் வேறு பல பகுட்திகளிலும் கிடைத்ததை அவர் பதிவு செய்கிறார். ஓலைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் நடைபெறவில்லை என்பது அவரது எண்ணம்.

மூன்றுவகையான பனை வகைகளில் இருந்து ஓலைகள் பெறப்பட்டு முற்காலங்களில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. குடப்பனை ஓலை அளவில் பெரியதும் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதாகவும் அகர்வால் குறிப்பிடுகிறார். குடப்பனை போன்ற மற்றொரு பனை வகை இன்று பங்களதேஷில் ஒன்று மட்டுமே உள்ளது. இவைகளோடு நமது பனை ஓலைகள் சார்ந்த புத்தகங்களும் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன.

பனை ஓலையின் பயன்பாடு எப்போதிலிருந்து துவங்குகிறது என்பதை அறியமுடியவில்லை எனக் கூறும் அகர்வால் பல்வேறு காலகட்டங்களில் பனை ஓலைகள் கிடைப்பதைக் குறித்தும் ஆச்சரியமான பல தகவல்களைக் கூறுகின்றார். குறிப்பாக ஏழாம் நுற்றாண்டு முதல் பனை ஓலைகளில் ஏழுதுகின்ற சிலைகள் காணப்படுகின்றதை அவர் அதற்கு சான்றாக சுட்டிக்காட்டுகிறார்.

புவனேஷ்வரில் உள்ல பரசுராமெஸ்வர ஆலயத்தில் இவ்விதம் காணப்படும் சிலையை சுட்டிக்காட்டுகின்றதைப் பார்க்கும்போது, கண்டிப்பாக தமிழக ஆலயங்களிலும் பனை ஓலை சார்ந்த சிலைகள் இருக்கும் என்பது உறுதி. அவைகளைப் பட்டியலிடுவதற்கு தன்னார்வலர்களின் உதவி அவசியமாகிறது. இன்று இத்துணை நுணுக்கமாக நாம் ஆய்வுகளை முன்னெடுக்காவிட்டால், ஓலைகளின் முக்கியத்துவம் குறித்து நமது எதிற்கால சந்ததிகளிடம் கூற நம்மிடம் எதுவும் இருக்காது.

சுமார் இரண்டாம் நுற்றாண்டைச் சார்ந்த ஓலை துணுக்குகள் மத்திய ஆசியாவிலிருந்து பெறப்பட்டதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், தனி நபர் சேகரிப்பில் உள்ள நான்காம் நுற்றான்டு சுவடியும், ஜப்பானில் இன்றும் பாதுகாக்கப்படும் ஆறாம் நூற்றாண்டு சுவடிகளையும் ஓலைகளின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.

இறையியல் கல்வி படிக்கையில் எங்களது  கிரேக்க ஆசிரியர் டேவிட் ஜாய் சவக்கடல் தோல்சுருள்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.  அதை குரித்து நான் ஒரு சிறு கட்டுரையும் எழுதினேன்.  1946- 56 முடிய சவக்கடல் பகுதிகளில் கானப்பட்ட கும்ரான் குகைகளில் பல தோல் சுருள்கள் கிடைக்கப்பெற்றன. அவைகள் புதிய ஏற்பாட்டு வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை கொண்டு வந்து சேர்த்தது. அது போல நமக்கு ஏதாவது ஓலைகள் அதிசயமாக கிடைக்காதா என்று கூட எண்ணியிருக்கிறேன். எப்படியிருந்தாலும் ஓலைகள் குறித்து நாம் பேசுகையில் அனேக காரியங்கள் குறித்த புரிதல்கள் நமக்கு சரியாக இல்லை என்பதே உண்மை.

சாயமேற்றிய ஓலைகளுடன் சாயமேற்றா இயற்கை ஓலைத் துண்டுகளையும் கலந்து செய்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை.

சாயமேற்றிய ஓலைகளுடன் சாயமேற்றா இயற்கை ஓலைத் துண்டுகளையும் கலந்து செய்த கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை.

முதலாவதாக ஓலைகளில் எழுதப்பட்ட புத்தகங்களின் வாழ்நாள் சுமார் 400 வருடங்கள் இருக்கும் என ஓரளவு யூகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலையின் காலத்தை நிர்ணயிக்கும் முறை இன்றுவரை சரியாக வளர்தெடுக்கப்படவில்லை. இவ்விதமாக இந்திய பண்பாட்டை அல்லது ஆசிய பண்பாட்டின் தனித்துவமான ஆய்வுகளில் சவால் விடும் பல்வேறு தளங்களை பனை மரமும் ஓலையும் கொண்டுள்ளது.

ஓலைகள் குறித்து ஆய்வு செய்த ரிச்சர்ட் சாலமன் என்பவர் குறிப்பிடும் கருத்து இன்னும் முக்கியமானது. அசோகரின் காலத்திற்கு முன்பே பனை ஓலைகளின் பயன்பாடு இருந்திருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்றும்,  ஒருவேளை அது மிக பரவலான ஒன்றாக இல்லாமல் இருந்தாலும் அரசு சார்ந்த ஆவணங்களுக்கும், கணக்கு வழக்குகளை எழுதி வைப்பதர்கும் பயன்பட்டிருக்கும் என யூகிக்கிறார். நமது மண்ணின் தட்பவெட்ப சூழலில் அத்துணை நெடுங்காலம் பனை ஓலைகள் காப்பாற்றபட இயலாது என்பதை ஒத்துக்கொள்ளும் அவர். அவைகள் இன்று சான்றாக நமக்கு இல்லை என்பதால் அவைகள் இல்லாமலாகிவிடுவதில்லை என்பதையும் அவர் தவறாது குறிப்பிடுகிறார்.

இவைகளே நிதிஷ் குமார் தமிழக பனைத் தொழிலாளிகளை பீகாருக்கு அழைத்த போது எனது எண்ணத்தை கிளர்ந்தெழச் செய்தது. ஆம் பீகாரில் தானே நளந்தா பல்கலைக் கழகம் செயல்பட்டது. அப்படியென்றால் அப்பல்கலைக்கழகத்தில் பயில வந்த மாணவர்களுக்குத் தேவையான நூல்கள் என்பது பனை ஓலையால் செய்யப்படிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதை நாம் புரிந்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. இன்று பீகாரில் காணப்படும் பனை மரங்கள் அவைகளையே சாட்சியாக கூறி நிற்கின்றன.

இன்றும் ஓலைகளுடன் நாம் செல்லும்போது பொது மக்களிடம் ஓலை என்பது கல்விக்கு அடையாளமாகவும், சமய நூலுக்கு இணையாகவும், காலாச்சாரத்தின் எச்சமாகவும், அன்றாட வாழ்வின் ஒரு துளியாகவும் மிக மதிப்புடன் போற்றப்படுவதற்கு காரணம், ஓலைகள் பல நூறாண்டுகளாக நமது மண்ணை ஒரு ஆன்மீக தலமாக, ஆறிவு செயல்பாட்டின் மைய விசையாக இருந்து செயலாற்றியிருப்பதனால் தான்.

ஓலைச் சுவடிகள் என்று மாத்திரம் அல்ல ஓலை என்றாலே ஒரு புனித பொருள், மங்கல பொருள் எனும் எண்ணம் நம்மில் படிந்து கிடக்கிறது. அவற்றை தூசி தட்டி, புத்தொளி ஊட்டி ஒரு புது ஓலை சமூகத்தை கட்டமைக்க நம்மை காலம் அழைக்கிறது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

பனைமர ஓலை -2

நவம்பர் 2, 2016

போராட்ட ஓலை

பனை மரம் இன்றும் ஒரு அழியா இடத்தை மக்கள் உள்ளத்தில் பெற்றிருக்கிறதை நாம் காண முடியும். ஏனெனில், நமது அகத்தினுள் சென்று தங்கிவிட்ட ஒரு மரம் அது. காலம் காலமாக நாம் அதன் பயனை பல்வேறு வகைகளில் அனுபவித்து, இன்று நினவுகளின் அடியாளத்தில் உறங்கும் ஒரு வீரிய விதையாக இருக்கிறது. சற்றே ஏற்படும் சிந்தனை மாற்றம், பனை சார்ந்த எண்ண ஓட்டங்கள், அவ்விதையை முளைத்தெளச் செய்யும். தமிழகத்தின் எப்பகுதிக்குக் சென்றாலும், பனை மரத்தைக் குறித்து 10 சொற்றொடர்களையாவது கூறத்தெரியாத ஒரு முதியவரைக் காணமுடியாது. வேறு எந்த மரம் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தது என எண்ணிப்பார்த்தால், வேறு எந்த மரமும் இதற்கு இணையாக காணப்படாது என்பது உறுதி. இதுவே பனைமரம் நமது வரலாற்றில் விட்டுச் சென்றிருக்கும் ஒரு வாய்மொழி கூற்றின் மிக முக்கிய தடயம். இத்தடயத்தை தொடர்ந்து நாம் செல்வோமென்றால் கண்டிப்பாக நம்மால் இழந்தவைகளை சற்றேனும் மீட்டெடுக்க இயலும்.

ஏன் இப்படி என எண்ணிப்பார்த்தால், பல்வேறு வகைகளில்  பனைமரம் மக்களுடைய வாழ்வில் ஒன்றாக கலந்திருந்தது. சுவை கூட்டும் இனிப்பு, கருப்பட்டியிலிருந்தே பெறப்பட்டது. பல்வேறு கட்டிட பணிகளுக்கும் கருப்படியினை ஊறவைத்த தண்ணீரைச் சுண்ணாம்புடன் கலந்தே உறுதியான கட்டிடங்களை கட்டியிருக்கின்றனர். தூண்களாக, கழிகோல்களாக, உத்திரங்களாக எங்கும் கிடைக்கும் பனை மரமே உதவியிருக்கிறது. கள் இல்லாத விழாக்கள் இல்லை எனும் அளவிற்கு கள்ளும் கலாச்சாரத்துடன் ஊறியிருந்திருக்கிறது. இவ்வகையில் ஓலையும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறதை நாம் மறுப்பதற்கில்லை.

ஓலைகள் பொதுவாக கூரை வேய பயன்பட்டன. பல்வேறு அரண்மனைகள் கூட தொல்பழங்காலத்தில் ஓலைகளால்  வேயப்பட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். மாத்திரம் அல்ல, இன்று நாம் காணும் வேலிகள் யாவும் பனை மட்டையும் ஓலையும் கலந்து செய்வது போல நெடுங்காலமாக இவைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. எண்ணிப்பார்க்கையில் ஓலையில் செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்களின் அளவை சொல்லி முடியாது. குறிப்பாக பெரும்பாலான உணவு பொருட்களை சேமிக்க எடுத்துச் செல்ல ஓலையில் செய்யப்பட்ட பெட்டிகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். கிணற்றிலிருந்து  தண்ணீர் இறைப்பதற்கு “தோண்டி” போன்ற பட்டையில் செய்யப்பட்ட வாளியும், “காக்கட்டை” போல, கழுத்தில் குறுக்கே செல்லும் பனை மட்டையில் இருபுறமும் தொங்கும், பெரிய அலவிலான நீர் இறைக்கும் வாளியும், பயன்படுத்தப்பட்டன. ஆகவே, வீடு என்றாலும், உணவு என்றாலும், தண்ணீர் என்ராலும் ஓலைகள் மற்றும் பனை அவற்றுடன் இணைந்தே நினைவுகூறப்பட்டன.

மேலும் சிறுவர்களது வாழ்வில் நுங்கு வண்டி, ஓலை காத்தாடி, சாட்டை பிள்ளை என கூறப்படும் சிறிய அசையும் பொம்மை, ஓலை பந்து போன்றவைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே பெரியவர்கள் ஆனாலும் பனை சாந்த எண்ணங்கள்  மக்கள் மனதிலிருந்து அகலாமல் நிலைத்திருக்கிறது.

பனைத் தொழிலாளர்கள் செய்யும் குடுவை ஒரு சிறந்த ஆவணம் என்பதாக நான் கருதுகிறேன். சுரைக் குடுவைகள் போன்ற நீர் ஒழுகா பாத்திரங்கள் இயற்கையில் கிடைக்காத இடங்களில் மிகவும் கருத்தூன்றி செய்யப்பட்ட வடிவமைப்பு அது. இன்று காணும் பல்வேறு குடங்களுக்கும் அதுவே முன்னோடி என சொல்லும்படியாக கலை நயம் மற்றும் அறிவியல் நோக்கில் அத்தனை சாத்தியங்களையும்  கண்டடைந்த ஒரு சிறந்த வடிவமைப்பு.

வாழ்வில் ஓளியேற்றும் பண்டிகைக்கு அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ போதகர். பனை ஓலையில் வர்ணங்கள் இட்டு செய்த சுவர் ஓவியம். அளவு: A4

வாழ்வில் ஓளியேற்றும் பண்டிகைக்கு அழைப்பு விடுக்கும் கிறிஸ்தவ போதகர். பனை ஓலையில் வர்ணங்கள் இட்டு செய்த சுவர் ஓவியம். அளவு: A4

ஓலைகளில் செய்யப்படும் பொருட்கள் இவ்விதமாக தமிழக இல்லங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த ஒரு காலம் உண்டு. அக்காலத்தில் பனை மரங்களை பேணினார்கள். இன்றையதினத்தில் பனை மரம் பயன்பாடு அற்ற மரம் எனவும், அவைகளை பயன்படுத்துவோர்கள் இல்லை என்ற கருத்தும் இணையாக பரப்பாப்படுகிறது. அப்படி ஒரு நிலையை உறுதிபடுத்திவிட்டால், தண்ணீரை, மண்னை, கடலை எப்படி கார்பரேட்டுகள் தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டார்களோ அது போல பனை மரத்தையும் எடுத்துக்கொள்ளுவார்கள். அதற்கு முன்பே நாம் விழித்துக்கொள்ளுவது நல்லது.

பனை ஓலைகளை நான் ஒரு போராட்ட வடிவமாக காண்கிறேன். பனைமரத்தை காக்க ஓலைகளே இன்று நமக்கு இருக்கும் இறுதி துருப்புச் சீட்டு. இச்சீட்டினை எப்படி அனைவரும் ஒருங்கிணைந்து பயன்படுத்தலாம் எனும் எண்ணத்திலேயே எனது நாட்களையும் முயற்சிகளையும் செலவிடுகிறேன். அப்பணியில் இணைபவர்களை பனை மரம் காக்கும் மாபெரும் பணியில் இணைத்து முன்செல்ல விரும்புகிறேன்.

ஏன் பனை ஓலை ஒரு போராட்ட வடிவம்? வேறு வடிவங்களில் போராடலாமே என எண்ணுபவர்களுக்கு, காந்தியின் சக்கரா போல பனை ஓலைக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என நான் கருதுகிறேன். வாழ்வின் பல்வேறு தருணங்களில், நாம் ஓலைகளை பயன் பாட்டிற்கு மீட்டுக் கொண்டு வர முடியும். சற்றே செலவேறினாலும், அவைகளை நாம் இன்று பயன்படுத்தினாலே ஆரோக்கியமான உணவுகளுக்கு வருங்காலத்தில் நமது சந்ததிகள் பனை மரத்தைச் சார்ந்திருக்க இயலும். என்னைப் பொறுத்தவரையில் மென்மையானவைகள் வெல்லுவது, ஆயுதம் நிறைந்த இவ்வுலகில் அமைதி வழி எனவும் அகிம்சை வழி எனவும் பொருள்படுகிறது.

எவ்வித போராட்டம் என்றாலும், அதற்கென அற்பணித்து,  நம்மை தயாரித்து,  உட்செல்லுவது மிக முக்கியமான வழிமுறை. பனை ஓலைகளை நாம் கையாள்வது அதனைக் குறித்த அடிப்படைப் புரிதல் கொண்டிருப்பதும் ஓலைப் போராட்டத்திற்கு அவசியமாகிறது. இன்றைய தினத்தில் நாமிருக்கும் இடங்களிலிருந்தே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்க இயலும். மிக மெல்லிய அளவில் ஒரு சிறு அதிர்வை எழுப்ப இயலும். அவ்வதிர்வு நம்மை பனைமரம் செழித்து வளரும் ஒரு காலகட்டதை காணச்செய்யும் எனும் உறுதி எனக்குள் தோன்றுகின்றது.

ஒருவேளை இவைகள் இன்று நகைப்புக்குரியதாக காணப்பட்டாலும் திருவள்ளுவர்  என் அருகில் இருக்கிறார். அவர் தனது ஓலைக் கிறுக்கல்கள் மூலம் என்னை புன்னகைக்க வைக்கிறார்.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

 

பெரியோர் ஆசியுடன் பனைமர ஓலை போராட்ட களம் புகுவோம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

பனைமர ஓலை

நவம்பர் 1, 2016

முதல் ஓலை

பனை மரம் கற்பக தரு என தேவருலக மரத்திற்கு ஒப்புமைக் கூறப்படுகிறது. அப்படியாயின் தமிழகம் பனைமரங்கள் செழித்து வளரும் தேவருலகிற்கு ஒப்பான ஒரு இடமாக காணப்படுகிறது. ஆயினும் தமிழக மாநில மரமாகிய பனை மரம் இன்று அரசாலும் அதனை பராமரித்து வந்த சமூகத்தாலும் பெருமளவு கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் எனும் கூற்று ஓரளவிற்கு மரங்களின் முக்கியத்துவத்தைக் எடுத்துக்கூறினாலும் பனை மரங்கள் தொடர்ந்து அழிந்து வருவதை முரண் நகையாக எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். ஒரு மரத்தை பேணி பாதுகாக்க பலவித வழி முறைகளை எதிர்கால சந்ததி கையாள வேண்டி இருக்கிறது.

பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்

இக்குறளில் காணப்படும் பயன்மரம், பனை மரம் என்றே வாசிக்கையில் பொருள் தருவதாக அமைகிறது. பயன் தரும் மரங்கள் யாவும் ஊருக்கு வெளியே தம் இடம் தேடி செல்லும் காலத்தில், பனை மரத்தினை எவ்விதம் பயன்மரமாக உள்ளுரில் தக்கவைப்பது என்பது முக்கிய கேள்வியாக அனைவர் முன்பும் நிற்கிறது.

இன்றைய காலகட்டட்தில் பல்வேறு முயற்சிகள் பனை மரத்தினைக் காக்க செலவிடப்படுகிறது. பெரும்பாலும் பனைமரங்களை விதைப்பது ஒரு முக்கிய பணியாக பல்வேறு நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இம்முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்கும் அதே நேரம், இம்முயற்சிகள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று குறைந்த பட்சம் 60 விழுக்காடு பயன் அமையும் என்று கூட திருப்திகொள்ள இயலாது. இப்போது நடுகின்ற பனைவிதைகள் பல்வேறு காரணிகளால் இன்னும் 10 ஆண்டுகளில் வெறும் 10 சத்விகித பனை மரங்களே தப்பிக்கும் என்பது எனது கணிப்பு. அப்படியானால் ஏன் இந்த விரயமான முயற்சிகள்?

எந்த முயற்சியும் விரயம் என கொள்ளப்படவேண்டியதில்லை. குறிப்பாக பனை மரத்தைப் பொறுத்தவரையில் தப்பிபிழைக்கும் அத்தனை தகுதியும் கொண்ட மரம் என்றே நான் உள்ளூர நம்புகின்றேன். ஆகவே தொடர்ந்த நமது ஒருமித்த பயிர் செய்தலும் அனேகரை பனை மரம் குறித்த புரிதலுக்கு நேரே வழி நடத்துவதும் வரும் பத்தாண்டுகளுக்கு சீராக நடைபெற்றாலே அடுத்தகட்ட நகர்வுக்கு ஆயத்தமாக முடியும் என்பது அடிப்படை. ஆகவே தற்பொது நடைபெறுகின்ற விதைப்பு தொடர்ந்தாகவேண்டும். அவை முறைப்படுத்தப்படவேண்டும், பேணுதலில் உள்ள குறைகளைக் கண்டடைந்து அவைகள் சீர்பட தொடர் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

விதைகளை நட்டு தண்ணீர் ஊற்றி மரங்களை பாதுகாப்பது ஒரு முறை. பனை மரம் அவ்வகையில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட மரம். குறைந்த மழை பொழிந்தாலே தானாகவே முளைத்துவிடும் தன்மை கொண்டது, வறட்சியையும் தங்கி வளரும் உயிரிச்சை கொண்டது. ஆனால் கொலைக்கருவிகளுடன் நடமாடும் மனித வர்க்கங்களின் முன்னால் அவைகள் நிராயுதபாணியாக நிற்கின்றன. அவைகளை பேணுவதற்கு தடையாக நிற்கும் காரணிகளை நாம் வரும் அத்தியாயங்களில் காணலாம்.

இன்றைய சூழலில் நமது கண்களின் முன்னால் நடைபெறும் பல அழித்தொழிப்புகளையும் சுரண்டல்களையும் காணுகையில், பனைமரமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இன்று புது வியூகங்களுடன் நமக்கென அளிக்கப்பட்டிருக்கும் பனை மரத்தினை அழிக்க வேறெவரும் தேவையில்லை நமது அறியாமையே அதற்கான மூலதனம்.

சாலை அருகில் இருக்கும் குளத்தில் குளிப்பதைவிட விட்டினுள் வரும் குழாயில் குளிப்பது பலவகையில் நல்லது என கற்பிக்கப்பட்டது. பிற்பாடு நாம் குளிக்காத குளத்தில் அழுக்கு நீர் பாய்ந்தாலென்ன என ஒரு சிலர் நினைக்க அனைவரும் அவ்வழியே நம்வழி என எண்ண தலைப்பட்டனர். அவ்விதம் அழுக்கடைந்த குளத்தின் ஓரத்தில் குப்பைகளைக் கொட்டுவதில் தான் தவறு ஏதும் இல்லையென முடிவு செய்யப்பட்டபோது குளம் பாதி நிரம்பிவிட்டது. மீதி பாதியை நிரப்பினால் வணிகவளாகமோ அல்லது பேருந்து நிலையமோ அமைக்கலாம் என கண்டடையப்பட்டு அதிலும் ஊழல் நிரம்பி வழிந்தது. இன்று பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் வாங்குகையில் நாம் நிற்கும் இடத்தில் மண்ணள்ளி போட்டவர்கள் நாம் தான் என சற்றும் உறுத்தா மனதுடன் நிற்கும் உலகில் நாம் வாழ்கின்றோம்.

பனைமரம் சந்திக்கும் பிரச்சனைகளும் அப்படிப்பட்டதே. பனை மரம் ஏறுவார் இல்லையென்றால் பனை பயனில்லா மரம் என்றே இன்றைய சமூகத்தால் கருதப்படும். சாதிகளால் பிரிந்திருக்கும் சமூகத்தில் பனைத்தொழிலானது நாடார் சமூகத்துடன் இணைத்து பார்க்கப்பட்டதால் பனை மரத்தின் பொதுவான சமூக பங்களிப்பு மழுங்கடிக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்த அளவில் சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பனை மரங்களை பராமரித்து வந்த நாடார் சமூகம், இன்று தனது சமூக அந்தஸ்தினால் பனைத்தொழிலிலிருந்து வேகமாக விலகிச் சென்றுகொண்டிருக்கிறது.  ஆகவே, இதுநாள் வரை பனை மரத்தை பேணி பாதுகாத்தோர் தான் அவற்றின் முற்றும் முதல் பொறுப்பாளிகள் என்று நாம் விட்டுவிட முடியாது. அனைவருக்கும் பொதுவான ஒரு மரத்தை அனைவருமாக பேணி பாதுகாக்கும் ஒரு வரலாற்று தருணத்தில் வந்து நிற்கிறோம் எனும் உண்மையை நாம் உணர்ந்து கொள்ளுவது நல்லது.

தமிழக மக்கள் அனைவருக்கும் பனை மரத்திற்கும் உள்ள தொடர்பை இன்று பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தினாலே பனைமரம் பாதுகாக்க அனைத்து தரப்பிலிருந்தும் கரங்கள் நீழும். அதுவே நமது மாநில மரம் மிக முக்கிய சமூக பொருளாதார பங்களிப்பை ஆற்ற வழிகோலும். அப்படியே பனைமரம் சார்ந்த நீடித்த வளர்ச்சி  சாத்தியமாகும். நமது மண்ணிலிருந்து பனை எனும் ஒரு புது நம்பிக்கை முளைத்தெழும். ஆகவே சமயம் கடந்து ஜாதி கடந்து, மொழி கடந்து பனை வாழும் மண்ணிலெங்கும் நம்பிக்கையை நம்மால் விதைக்க இயலுமென்றால் ஒருவகையில் பனை நமது எதிர்காலத்திலும் நமது சந்ததிகளுடன் தொடர்ந்து வாழும் அவர்களையும் வாழ வைக்கும்.

பனை ஓலையில் தெரிந்துகொண்ட இயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்தி செயற்கை சாயங்கள் ஏதும் இல்லாமல் செய்த தீபாவளி வாழ்த்து அட்டை.

பனை ஓலையில் தெரிந்துகொண்ட இயற்கை நிறங்களை மட்டுமே பயன்படுத்தி செயற்கை சாயங்கள் ஏதும் இல்லாமல் செய்த தீபாவளி வாழ்த்து அட்டை.

பனை மரம் சார்ந்த உணவுகளான கருபட்டி, பனங்கிழங்கு, பனம்பழம், பதனீர் மற்றும் கள் ஆகியன இன்று அரிதினும் அரிதான பொருளாகிவிட்டன. ஒரு சமூகம் அதன் மண்ணின் விளைச்சலை வியர்வை சிந்தி சாப்பிடுகையில் அது ஆரோக்கியமாக இருக்கிறது.

நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். (தொடக்கநூல் 3: 19) இவ்வரிகள் ஆதாமிடம் கூறுகையில் சாபமாக கூறியதாக ஒரு மரபான புரிதல் இருந்தாலும், வியர்வையற்ற உணவை உண்பதே இன்றைய சாபம் என்பது நாம் அறிந்ததே.

பனை மரத்திலிருந்து பெறும் உணவுகள் அனைத்தும் பனை மரம் வாழும் மண்ணில் வாழ்பவரின் உடலுக்கு உரம் சேர்ப்பதாக கடவுள் படைத்துள்ளார். தொலைவில் இருக்கும் கனிகள் விலக்கப்பட்டவை என்பது அறியாமல் அவைகளுடன் தீவினைகளையும் வருவித்துக்கொள்ளுகிறோம். பனையை இழக்கும் தோறும் ஏதேனை விட்டு விலகிய ஒரு சாபச் சூழலில் தாம் வாழுவோம்.  இழந்த சொர்க்க மரத்தை மீட்டெடுக்கும் ஒரு நெடிய பயணம் நமக்கு முன்னால் அமைந்து காத்திருக்கிறது. சான்றோர் வாழ்த்த, வீழ்ந்தோர் எழ, விண்ணவரும் தொழ, முடிவிலாது செல்லும் பயணம் கனிகளையும் சுவை குன்றா பனஞ்சாற்றையும் வழங்குகையில், எப்படியும் இனிய பயணம் காத்திருக்கின்றது.

இப்பயணத்தில் பனைமர ஓலை நம்முடன் வர இருக்கிறது. ஓலை என்பது பல பொருட்களை உள்ளடக்கிய வார்த்தை. ஆவணம், அழைப்பு, கடிதம் மற்றும் ஒருவரின் சுய அடையாளம் கூட. தமிழகத்தின் தொல் மரபின் ஒரு சிறு துளியை ஓலையில் சுமந்தலய நான் கண்ட கனவு. எப்போது வேண்டுமானாலும்  மறைந்து விடும் தன்மை கொண்ட கனவு ஆகையால் வண்ணங்கள் சுழித்தோடும் கனவுப்பெருக்கு இது.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்
மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com
8888032486

 


%d bloggers like this: