கிறிஸ்மஸ் வாழ்த்துக்களில் இவ்வருடம் நான் மலர்ந்து பார்த்தது, அருட் தந்தை ஃபிரான்ஸிஸ் ஜெயபதி அவர்கள் எனக்கு அனுப்பிய “ஆண்டவன் ஆண்டியானான்” எனும் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட குடில். ஆகவே இதை நான் அறிந்த அனைவருக்கும் அனுப்பினேன். பெரும்பாலும் ஒரு சிறு அதிர்ச்சிக்குப் பின் சிலர் இதை சிலாகித்து எனக்கு பதில் அளித்தனர். வேறு சிலருக்கு கந்தை கோலம் எடுத்தார், ஏழை பாலனானர், என வழமையாக பொருள் கொள்ளப்பட்டாலும் “ஆண்டி” எனும் வார்த்தை பெரும் துணுக்குறலை கொடுத்திருக்கிறது.
ஆண்டி எனும் வார்த்தை பண்டாரம் எனும் பூசை செய்யும் எளியவரோடு தொடர்புடையது ஆனபடியால் ஒருவித ஒவ்வாமை எழுந்ததை உணர முடிந்தது. இருப்பினும் ஆண்டி எனும் வார்த்தைக்கு பூசை செய்யும் அடியவர் என்றும், வேறு தேசத்திலிருந்து வந்தவர் என்றும், ஏழை எனவும் பொருள் கொள்ளலாம். அனைத்துமே பாலனாக பிறந்த இயேசுவை சுட்டி காண்பிக்கும் பொருளடக்கம் உள்ளதாக நான் உணர்ந்தேன்.
ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி, என்பது பழமொழி. அதற்காக இயேசு எப்போது பிள்ளையார் கோவில் பூஜாரியாக இருந்தார் என கேள்வி எழும்பாது என நம்புகிறேன். எளிமை உருவெடுத்தவரை ஆண்டி என பொருள் கொள்ளுகிறோம். இந்த பொருள் இதுகாறும் வழக்கில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப் படாததாகையால், அதன் பொருள் சார்ந்து ஒரு ஆழ்ந்த கவனிப்பை கோரிற்று. இயேசுவின் எளிமையின் தன்மையை மேலும் ஒரு துணுக்குறலோடு அனுபவிக்க கோரிய ஒரு கூற்றாகவே அமைந்தது.
கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் மீது காணப்படும் ஏழ்மையின் தன்மை மீது ஒரு வித விலக்கம் ஏற்படுவதைக் சமீப காலங்களில் காண முடிகிறது. இயேசுவின் தந்தை அரண்மனைகளையும் மாட மாளிகைகளையும் அமைக்கும் ஒரு கட்டிட பொறியாளர் என கூறும் ஆய்வுகள் இன்று முன்னெடுக்கப்படுகிறது. தச்சன் எனும் சொல் அவரை கீழ் மட்டமாக எண்ண வழிவகுக்கிறது என்பதும், அவரை ஒரு கலைஞரின் மகன் என விளிப்பதோ, கட்டிட கலை நிபுணரின் மகன் என அழைப்பதோ அவரை ஒரு உயர் மத்திய வர்க்க மனிதராக உயர்வடையச் செய்யும். ஆகையால் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள கிறிஸ்தவர்கள் மூலவார்த்தையை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுவதை, எப்படி இயேசு “ராஜா” என நிறுவனமாக்கப்பட்ட கிறிஸ்தவம் அவர் தலை மேல் தங்க கிரீடம் வைத்ததோ அப்படி தான் இதையும் நான் பார்க்கிறேன்.
அப்படியான ஒரு வலுவான பின்னணி உடையவராயிருந்தால் அவருக்கென ஒரு மாளிகை இருந்திருக்கும். அவர் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார் “அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். (லூக்கா 9: 57 – 58 திருவிவிலியம்). அவரது வாழ்வில் பெரும்பாலும் அவர் ஒரு இரவல் வாழ்வையே வாழ்ந்தார் என்பதும் உறுதி. ஆகவே தான் “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர்,கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப்பியர் 2: 5 – 8 திருவிவிலியம்)
அடிமை எனும் வார்த்தை ஆண்டியை விடவும் ஒப்பீட்டளவில் தாழ்ந்தது. கடவுள் தம்மைத் தாழ்த்தும் பாங்கில் அவர் எவ்வளவு உயர்வானவரோ அதற்கு நேர் எதிர் திசையில் தம்மை தாழ்த்திய ஒரு பெரும் தியாகத்தை நாம் காண்கிறோம். அதில் நாம் சமரசம் செய்ய முற்படுவோமென்றால் நாம் அவரின் தாழமையை ஏற்கவில்லை என்பதே பொருள். அவரின் தியாகத்திற்கு வேறு எந்த இழிவும் நாம் மேலதிகமாக செய்துவிட முடியாது.
இவைகள் ஒரு புறம் இருக்க அந்தப் படத்தின் முற்பகுதியில், தேவனாகிரியில் பொறிக்கப்பட்ட, வெண்கலத்தாலான “ஓம்” வைக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் என்ன என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், குடிலின் பிற்பகுதியில் ஒரு நட்சத்திரம் காணப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு வார்த்தை தன்னில் பாதியை நட்சத்திரத்தின் பின் மறைத்துக்கொண்டிருந்தது. “உருவி” பிற்பாடு சுமார் நான்கு எழுத்துக்கள் மறைக்கப்பட்டு “ருவானவர்” என எழுதப்பட்டிருந்தது. உருவின்றி உருவானவர்? உருவின்றி கருவானவர்? எனது வாசிப்பில் தான் பிழையா? ஆனால் எனக்கு முன்பகுதியில் வைக்கப்பட்ட “ஒம்” எனும் வார்த்தைக்கு பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் தொடர்பு இருக்கும் என்றே எண்ணத் தோன்றியது.
ஓம் எனும் வார்த்தை மிக முக்கியமாக இந்திய மதங்களில் கையாளப்படுகிறது. ஆகவே அது இந்து மதம் சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மதமும் தனக்கான விளக்கங்களை “ஓம்” எனும் வார்த்தைக்கு கொண்டுள்ளது. கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் ஓம் எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லையென்றாலும் அது குறித்த சிந்தனைகள் கிறிஸ்தவ ஆன்மீகத்தில் விரவிக்கிடந்தன என்பதை அறியமுடிகிறது. குறிப்பாக நமது கீர்த்தனைகளில் “ஓம்” எனும் வார்த்தை, இன்று கிறிஸ்தவத்தில் வழக்கொழிந்த வார்த்தைகளை நாம் மீட்டெடுக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக காணப்படுகிறது.
இன்று பாடல் பாடும் கிறிஸ்தவர்கள் ராகத்தை தொடர்வதில் கவனமளித்து வார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்க மறந்துவிடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகின்றது. பல வகையான குத்துப்பாடல்கள் இன்று ஆராதனையை நிரப்பி, கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்பட்ட சமய ஒன்றிணைப்பின் கூறுகளை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் இந்தியாவில் ஒரு நெகிழ்வை கொண்டிருந்த காலம் இன்று போய்விட்டதோ எனும் அச்சமே மேற்கொள்ளுகிறது.
வேதநாயகம் சாஸ்திரியார் சரபோஜி மன்னரின் பள்ளித் தோழர். இருவருமாக சுவார்ட்ஸ் அய்யரின் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள். தனது நண்பனாம் சரபோஜி மன்னரின் அவையில் கவிராயராக இருந்தவர். கிறிஸ்து மீது தனக்கிருந்த பக்தியை பிற மதத்தினர் முன் துணிந்து ஆனால் அவர்கள் மனம் புண்படாமல் சொன்னவர். ஆழ்ந்த புலமை பெற்றவர். சாஸ்திரியார் தனது பாடலில் “ஒம்” என்ற வார்த்தையைக் பயன்படுத்துகிறார்.
பல்லவி
ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா
ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தரே, உன்னதமே –
சரண்ங்கள்
வெற்றிகொண் டார்ப்பரித்து- கொடும் வே
தாளத்தை சங்கரித்து, முறித்து ;
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத் தரித்து , முடித்தார் .
சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,
ஜீவனே விடிந்து ,- தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-
வேதம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,
மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்.
கிறிஸ்தவ புத்தக இலக்கிய சேவை தொகுத்தளித்த கிறிஸ்தவ கீர்த்தனைகள் தொகுதியில் “ஓம்” என்பதற்கு “திருவார்த்தை” என பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாஸ்திரியாரின் புலமைக்கும் அவரது பல்சமய நல்லிணக்கத்திற்கான உரையாடலுக்கும் ஒரு சிறந்த மாதிரியாக நம்முன் காணப்படுகிறது. மேலும் அவர் இதை தவறுதலாக உபயோகித்தார் எனக் கூறி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இதையே விளக்கும் வண்ணமாக கிறிஸ்து பிறப்பைக் குறித்து அவர் பாடிய பாடலில்
ஆதி திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார்
ஆதன் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரை ஈடேற்றிட
இந்த மூன்று வரியில் மட்டுமே அவர் கண்டிருக்கும் களம் பிரம்மாண்டமானது. இன்னும் எவரும் அவரை தாண்டிச் செல்ல இயலாதபடி அவர் பன்முகத்தன்மையுடன் இவைகளை கவியாக்கியிருக்கிறார். இந்திய சிந்தனை மரபு, கவி மரபு, கிறிஸ்தவ இறையியல் மரபு, போன்றவற்றை விடாமல் அவைகளுள் சமயங்களை உள்ளடக்கிய ஒரு விரிந்த பார்வையை கொடுக்க இறையருள் வேண்டும். எள்ளி நகையாடுவோருக்கு ஏதும் தேவையில்லை.
“ஓம்”, “திருவார்த்தை” என்பனவைகள் எவ்வாறு இவ்விடத்தில் வந்து அமைகின்றன?
“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1: 1- 5)
தனது பண்பாட்டு வெளியிலிருந்து இந்த வார்தைகளை அவர் கவர்ந்து கவி படைக்கிறார். கவியை மாத்திரம் அல்ல அதன் மூலம் சமயங்களுக்கிடையில் ஒரு மிகப்பெரிய பாலத்தையும் அவர் அமைக்கிறார். இன்று அவைகள் பொருளற்றவைகளாக காணப்படுவதற்கு காரணம், ஆண்டியை விரும்பாமல் அரசனை காணும் வேட்கையினால் அல்லவா?
இந்தியாவில் ஒரு நெடிய பாரம்பரியம் உள்ளது. அவைகளைக் களைந்து எங்கோ ஒரு புது ஆன்மீகம் படைக்க நம்மை கடவுள் அழைக்கவில்லை. இருக்கும் இடத்தில் நாம் முதலில் சான்று பகர அவர் அழைக்கிறார். வெள்ளை அங்கி தரிக்காதபடி காவி அணிந்த சாது சுந்தர்சிங் இன்றும் மேற்குலகிற்கு சவால்விடும் ஒரு அருள் தொண்டர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரத்தம் சிந்தும் கால்களையுடைய ஒரே அப்போஸ்தலர் அவரே. தான் ஒரு கிறிஸ்தவர் ஆனதற்கு தூய ஆவியர் பொறுப்பென்றால், தன் ஒரு துறவியானது தனது தாயால் என அவர் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த அனைத்து பெண்களிலும், ஏன் கிறிஸ்தவ பெண்மணிகள் உட்பட, தனது தாயே பக்தியில் ஒழுகும் ஒரு சிறந்த முன்மாதிரி பெண்மணி என அவர் தயக்கமின்றி கூறுகிறார். இவ்விதமாக ஒரு கலாச்சார பின்னணியத்தை அவர் ஏற்று கிறிஸ்தவ ஆன்மீகத்தை முன்னெடுக்கிறார்.
இன்னும் சமீபத்தில் நம்முடன் வாழ்ந்த பேராயர் அய்யாதுரை ஜேசுதாசன் அப்பாசாமி, பாளையங்கோட்டையில் பிறந்தவர் (3.9.1891). இந்திய சமயங்களுடன் கிறிஸ்தவம் எப்படியெல்லாம் முயங்கி தெளிவடையமுடியும் என்பதை முயற்சித்துப் பார்த்தவர். 1975ஆம் ஆண்டுவரை பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு கிறிஸ்தவ உலகிற்கு தொண்டாற்றியவர். சாது சுந்தர்சிங் குறித்த புத்தகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். இன்று அவரை திருநெல்வேலி நினைவில் கொண்டிருக்கிறதா? இல்லை என்பதே நிதர்சனம்.
இருபதாம் நூற்றாண்டின் அப்போஸ்தலன் எனப் பெயர் பெற்ற ஸ்டான்லி ஜோண்ஸ், மெதடிஸ்ட் திருச்சபையின் சார்பாக இந்தியாவில் பணி செய்தவர். இருமுறை நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மகாத்மா காந்தியோடு நெருங்கி பழகிய அவர், எழுதிய புத்தகம் “The Christ on the Indian Road” அன்றைய விற்பனை உலகை அசைத்தது. முதன் முதலில் கிறிஸ்தவ ஆஸ்ரமத்தை துவங்கிய முன்னோடி அவர். எனது 10 ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபை அனுபவத்தில் அவர் பெயர் பொதுவிடங்களில் நினைவுகூறப்பட்டதே இல்லை. இன்றும் இவர்களின் தொடர்ச்சி அறுபடாமல் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் திருச்சபையினின்று மறைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஆற்றிய ஆன்மீக தொண்டை நாம் எவ்வகையில் குறை கூற இயலும்? நெடிய பயணத்தில் தங்களின் பங்களிப்பாக இவர்கள் விட்டுச்சென்ற ஆன்மீக தேடல்களின் ஒரு பகுதியைக் கூட நம்மால் கண்டடையவோ, அவற்றின் வீரியத்தை உணரவோ முடியாதபடி இருந்தால் அது தான் தெளிந்த ஆன்மீகமா? ஏன் இவர்கள் நம்மைப்போலல்லாது மாறுபட்ட கோணங்களில் கிறிஸ்துவத்தை புரிந்துகொள்ள தலைப்பட்டார்கள்? அவர்களின் பங்களிப்பை எவ்வளவு தூரம் நாம் நெருங்கி அறிய முயற்சிக்கிறோமோ அத்துனை தூரம் நம்மால் அவர்களின் ஆன்மீக எழுச்சியினைக் கண்டடைய இயலும் இல்லையா?. அவைகள் கொண்டுள்ள தொன்மையின் வேர்முடிச்சுகளில் ஒரு கூட்டான இறை தரிசனம் இருக்கத்தான் செய்கிறது.
கிறிஸ்தவம் இந்திய சமயங்களில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றவேண்டுமென்றால் அது சமயங்களுக்குள் தயக்கமின்றி கடந்துசெல்லவேண்டும். நட்சத்திரம் எப்படி இஸ்ரவேலைத் தாண்டி கிழக்கிலுள்ள ஞானிகளை ஈர்த்ததோ, அப்படியே எளிமையைக் கண்டு சேவிக்க காத்திருக்கும் ஞானிகளை, பிரம்மாண்டத்தை காட்டி விலக்கிவிடாதிருப்போம்.
ஜாஸ்மின் செல்லும் பள்ளிக்கூடத்தில் மராட்டி மொழி பேசுகிறவர்கள் அனேகம் உண்டு. அவள் கற்று வரும் மராட்டிய வார்த்தைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுவாள். நேற்று நாங்கள் சென்ற வாகனத்தில் எங்களோடு வந்த பெண்மணி ஓட்டுனரோடு பேசிக்கொண்டு வந்தாள். ஒரே “ஓம்” மயம். ஜாஸ்மின் என்னிடம் காதில் சொன்னாள். “ஓம்” என்றால் மராட்டியில் ஆம் என்று அர்த்தம்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
ரசாயனி – மும்பை.
malargodson@gmail.com
8888032486
You must be logged in to post a comment.