திருச்சபையின் பனைமர வேட்கை – 26
(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)
கன்னியா வென்னீர் ஊற்று
காலை உணவிற்கு போதகர் இல்லத்தில் சென்றபோது, போதகர் நிஷாந்தா, தனக்கு மீண்டும் 10 மணிக்கு செயற்குழு இருப்பதாக கூறினார். மீண்டும் இரண்டுமணிக்கு தான் நமக்கு ஆலயத்தில் திருமறை ஆய்வு நிகழ்கிறது என்று கூறினார். அது வரை நான் சும்மாவே இருக்க வேண்டுமா?என எண்ணியபடி, ஏதேனும் இரு சக்கர வாகனத்தை ஒழுங்கு செய்ய இயலுமா? என்றேன். முயற்சிக்கிறேன் என்றார். சற்று நேரத்தில் ஒரு இளைஞர் வந்தார். அவரது கரத்தில் இரண்டு ஹெல்மெட் இருந்தது. இலங்கையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஓட்டுபவரும் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்தே ஆகவேண்டும். சாலை விதிகள் மிகவும் கவனத்துடன் பேணப்படுகின்றன என்பதை மீண்டும் உணர்த்தியது
அன்று நானும் என்னுடன் வந்த தம்பியும் மூதூர் செல்லும் பாதையிலேயே சென்றோம். பிற்பாடு அவர் திரும்பி சென்ற அந்த பாதை மிக விரிவாக இருந்தது. நான்கு வாகனங்கள் ஒரே நேரம் செல்லத்தக்க அளவு பெரிய பாதை. ஆனால் அது ஒரு மண் பாதை. நேராக நெடுஞ்சாலைப்போல் காணப்பட்டது. யானைகள் அடிக்கடி அந்தபாதையை கடக்குமாம். ஆளரவமற்ற பகுதி. தூரத்தில் ஒரு நன்னீர் குளம் அதனைச் சுற்றி பனைமரங்கள் காணப்பட்டன. ஒரு சிறு கிராமத்தையும் கடந்துபோனோம். ஒரு பெந்தேகோஸ்தே ஜெப வீடு கூட இருந்தது. மீண்டும் தார் சாலைக்கு நாங்கள் வந்தபோது எங்களுக்கு வலதுபுறம் கடலும் அதன் அருகில் ஆங்காங்கே பனைமரங்களும் காணப்பட்டன. பாறைகள் நிறைந்து மனதை மயக்கும் அழகிய இடமாக அது காட்சியளித்தது.
அந்த தம்பி என்னைக் கன்னியா வென்னீர் ஊற்று நோக்கி அழைத்துச் சென்றார். அங்கே கடைகள் இருந்த இடத்திலே அனேக பனைமரங்கள் இருந்தன. அனேகமாக பனைமரங்கள் மட்டுமே இருந்தன என்று எண்ணுகிறேன். பனை மரம் சார்ந்த பொருட்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. பெரும்பாலும் சிங்களவர்களே கடைகளை வைத்திருந்தனர் என அவர் கூறினார். ஒரு மனிதர் பனம்பழங்களை விற்றுக்கொண்டிருந்தார். பனங்கிழங்கு கருப்பட்டி போன்ற பனை பொருட்களும் தாராளமாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. பனை மரங்கள் அவ்விடத்தின் தொன்மையை பறைசற்றும்படி இருந்தது முக்கியமானது. வென்னீர் ஊற்றையும் பனைமரத்தின் பிஞ்சு வேர்கள் தொட்டு காலம் காலமாக நலம் விசாரித்தபடி தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.
கன்னியா ஊற்று இராவணனின் தாயின் மரணத்துடன் தொடர்புடையது என்ற செய்தியே கிடைத்தது. வென்னீர் ஊற்றுகள் செல்ல நாங்கள் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டோம். ஏனோ அந்த இடம் எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு பொது குளியலறை போன்றே அந்த இடம் காணப்பட்டது. இலங்கை தனது பழைமையைப் பேணும் விதத்தில் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்றே தோன்றியது.
வெளியே வந்தபோது ஒரு வயதான புத்த பிக்கு ஒரு பெரிய அரச மரத்தடியின் கீழ் நின்று சருகுகளைக் கூட்டி சுத்தம் செய்துகொண்டிருந்தார். நான் “ஏ பனை மரத்தைப் பற்றிப் பிடித்து வளர்ந்த அரச மரமே” என்று எண்ணியபடி அந்த பிரம்மாண்ட மரத்தை பார்த்தேன். அவரைச் சுற்றிலும் சில மக்கள் நின்றுகொண்டிருந்தனர். இலங்கையின் மக்கள் வித்தியாசம் இன்றி மத குருக்களை மதிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவை ஒரு புறம் இருந்தாலும் இலங்கையின் வரலாற்று பக்கங்களில் பல இடைவெளிகள் இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. இலங்கை பாராளுமன்றத்தில் கூட சீனித்தம்பி யோகேஸ்வரன் எம் பி இலங்கை ஒரு இந்து நாடு என கூற, அமைச்சர் மேர்வின் சில்வா மறுத்து இலங்கை ஒரு பவுத்த நாடு என்றும் குறிப்பிடுகிறார். அரசியல் சார்புடைய இன்நோக்கில் கிறிஸ்தவர் நடுநிலையுடன் வரலாற்றை அணுகுவது அவசியமாயிருக்கிறது.
என்னை அழைத்துச் சென்ற தம்பி அவரது நண்பர்கள் இன்னும் சற்று தொலைவில் இருப்பதாக கூறி என்னை அழைத்துச் சென்றார். இப்போது நாங்கள் திருகோணமலையிலிருந்து வெகுவாக தள்ளி வந்துவிட்டோம். பனைமரங்களை அதிகமாக சாலையின் இரு மருங்கிலும் பார்க்க முடிந்தது. ஆனால் பெரும்பாலான மரங்களில் ஆரசு, ஆல் மற்றும் பெயர் தெரியாத மரங்கள் தொற்றிப் படர்ந்திருந்தன. திருகோணமலைப் பகுதிகளில் பனையேற்றம் குறைவாகவே நடைபெறுகிறது என்பதர்கான சான்று இவை.
நாங்கள் ஒரு பாலத்தில் சென்றபொது ஒருபுறம் கடலும் மற்றொருபுறம் வாவியும் இருந்தது. நாங்கள் தேடி வந்த நண்பர்களைக் காணவில்லை. என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு மீனவர்கள் தங்கள் வலைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். எங்களைப்பார்த்தவுடன் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டனர். நான் இந்தியாவில் இருந்து வருவதாக கூறியபடி பாலத்தில் இருந்து கீழிறங்கி சென்றேன். மிகவும் நட்பாக பேசினார்கள். எனக்கு நட்சத்திர மீன் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். அதற்கு சற்றே உயிர் இருந்தது. அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் என்னை அழைத்துச் சென்ற தம்பிக்கு அழைப்பு வந்தது. அவர் இறால் கிடைக்குமென்றால் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றார். நாங்கள் அடுத்திருந்த ஒரு குப்பத்திற்குச் சென்றோம் ஒருவரும் அங்கே இல்லை.
ஆனால் அந்த குப்பத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இருந்தது. குமரி மாவட்டத்தில் அவைகளை குருசடி என்று சொல்லுவோம். நான்கே பேர் அமரக்கூடிய இடம். அப்போது என் கண்ணில் ஒரு உருளை தென்பட்டது. பழைய மட்கிய மரத்திப்போன்றிருந்த அதை நான் உற்று பார்த்தபோது அது பனை ஓலைகளினால் பொதியப்பட்டிருந்தது தெரிந்தது. ஒருவித அலங்காரத்திற்காக அது அமைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக கடந்த குருட்தோலை ஞாயிறு வழிபாட்டின் போது இந்த அலங்காரம் இங்கே வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது குருத்தோலை சார்ந்த பவனியின் போது ஒரு அலங்கார ஊர்தியில் இது எடுத்து செல்லப்படிருக்கலாம். எவரிடமும் கேட்க முடியவில்லை. ஓலைகள் சடங்குகளில் இடம்பெறுவது மக்களின் ஆன்மீக வாழ்வில் ஓலைகள் ஒரு முக்கிய குறியீடாக உணர்த்தி நிற்பதை உணர்ந்தேன். அவைகள் மக்களின் வாழ்வில் தொன்றுதொட்டு இடம்பெற்று வருவதை மறுப்பதற்கில்லை.
நாங்கள் அங்கிருந்து நண்பர்கள் மீன் பிடிக்கிற இடத்திற்குச் சென்றோம். அது பாலத்திற்கு அப்பால் வாவியின் கரையில் அமைந்துள்ள அலையாத்தி காடுகளுக்குள் இருந்தது. நேரடியாக சென்றால் 100 மீட்டர் தொலைவு தான் இருக்கும் ஆனால் செல்ல வழியில்லை. ஆகவே பைக்கில் முன்று கிலோ மீட்டர் சுற்றி அந்த இடத்தை சேர்ந்தோம். அங்கே இருவர் இருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மேற்கொண்டு பிடிக்க இறால் இல்லாததால் என்ன செய்வது என்று எண்ணியபடி இருந்தார்கள்.
நான் மீனைச் சுடுவோமா என்றேன். லைட்டரை பற்றவைத்தபோது தீ பிடிக்கவில்லை. அனைத்து விறகுகளும் நமுத்துப்போய் இருந்தன. அப்படியே விட முடியாது என்று சொல்லி இரண்டு கிலோமீட்டர் போய் தீப்பெட்டி வாங்கி வந்தனர். 20 குச்சிகளுக்கு மேல் செலவு செய்திருப்போம், நெருப்பை பற்ற வைக்கவே முடியவில்லை. எல்லாரும் என்னைப் பார்த்தனர். “போதகரைய்யா உங்களுக்கு யோகம் இல்லை என்றனர்”. அப்படியிருக்காது என்று கூறி நானும் களத்தில் இறங்கினேன். எனது பர்சிலிருந்து தேவையற்ற டிக்கட்டுகள் மற்றும் காகிதங்களை எடுத்துக் கொடுத்தேன். சற்றே உலர்ந்த குச்சிகளையும் சருகுகளையும் எடுத்துக்கொடுத்தேன். எப்படியே தீ பற்றிக்கொண்டது. உப்பு புளி மிளகாய் ஏதுமற்ற அழகிய ஊன் உணவு தயாராகியது. அதன் செதிள்கள் வெடித்தபோது வெந்துவிட்டதை அறிந்து எடுத்து சாப்பிட்டோம். மீன் முறுகிவிட்டாலும் நன்றாகவே இருந்தது.
நாங்கள் சாலைக்கு வந்தபோது மேலும் இருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர். நாங்கள் வரும் வழியில் ஒரு பப்பாளி தோப்பை பார்த்து அங்கே வண்டியை நிறுத்தி பப்பாளி சாப்பிட்டோம். பப்பாளி தோப்புகளின் அருகிலேயே வைத்து பழுத்த பப்பாளிகளை விற்றுக்கொண்டிருந்தனர். சாலையோரத்தில் அப்படி பல தோட்டங்கள் இருந்தன. மணி கிட்டத்தட்ட ஒன்றை நெருங்கியிருந்தது. சீக்கிரமாக திரும்பவேண்டும் என நினைத்து புறப்பட்டோம்.
வழியில் நிலாவெளி என்ற இடத்தை நான் கண்டிப்பாக பர்க்கவேண்டும் எனக் கூறி அழைத்து சென்றனர். அப்படி என்ன அங்கே இருக்கிறது எனக் கேட்டேன், அதற்கு அவர்கள், சென்னையின் மெரீனா போன்ற இலங்கை கடற்கரை என்றார்கள். மிக அழகிய கடற்கரை. அனேகர் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். பெரும் கூட்டமாக மக்கள் அந்த பகுதியில் அந்த விடுமுறை நாளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
வேகமாக திரும்பி வந்தோம், என்னிடமிருந்த நட்சத்திர மீனை நான் அவர்களுக்கே கொடுத்துவிட்டேன். இந்தியாவிற்கு அதனைக் கொண்டு வர இயலுமா என என்னால் கணிக்க இயலவில்லை. கடல் பொருட்கள் பலவும் தடை செய்யப்பட்டாலும், அவைகள் நமது சுற்றுலா தலங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
போதகர் வீட்டில் நான் வந்து சேர்ந்தபோது மணி இரண்டு. போதகர் நிஷாந்தா என்னை உணவருந்தச் சொன்னார். எப்படியும் மக்கள் வருவதற்கு சற்று தாமதிக்கும் என்றவர் எனக்கான உணவை ஒழுங்கு செய்தார். நான் சாப்பிட்டுவிட்டு அங்கே சென்றபோது கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. சத்தமாக உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். நான் சென்று அமர்ந்துகொண்டேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
malargodson@gmail.com
You must be logged in to post a comment.