Archive for பிப்ரவரி, 2018

பனை ஆய்வுகள்

பிப்ரவரி 20, 2018

பனை சார்ந்த ஆய்வுகள் அதிகம் நடைபெறவில்லை என்ற குறை எனக்கு அதிகம் உண்டு. ஆனால் பிறர் என்னிடம் சமீபத்திய ஆய்வுகள் குறித்து கூறுங்கள் என்றால் என்னால் பதிலளிக்க இயல்வதில்லை. பனை சார்ந்த ஆய்வுகள் என்பதை பலரும் தவறாகவே புரிந்திருக்கின்றனர் என்றே நான் எண்ணுகிறேன். பல்வேறு தளங்களில் இன்று ஆய்வு செய்யத்தக்க வாய்புள்ள ஒரே துறை பனை மட்டும்தான் என்பதே எனது புரிதல். ஆனால் பனை சார்ந்து ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறவர்களது கேள்வி கீழ்கண்டவகையில் அமைந்திருக்கும்.

  1. குட்டை பனை கண்டு பிடித்திருக்கிறார்களா?

இந்த கேள்வி, பனை குட்டையாக இருந்திருந்தால் அனைவரும் வளர்பார்கள். ஏறுவது சுலபம். தென்னையைப்போல் சீக்கிரமாக பலன் தரும் போன்ற எண்ணத்தின் விளைவால் கேட்கப்படும் கேள்விகள்.

  1. பனை ஏறும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா?

பனை மரம் ஏறும் கருவிகள் இருந்தால் வேகமாக ஏறவும், ஒரே நேரத்தில் ஒரு தொழிலாளியால் அனேகம் பதனீரை சேகரித்து கொடுக்கமுடியும். மேலும் பெண்களையும் இத்துறைக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

முதலில் மேற்கூறிய இரண்டு கேள்விகளும் பனைஏறுபவர் சார்ந்து எழுப்பபட்ட கேள்விகள் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இக்கேள்விகள் பனை மரத்தினை நவீனப்படுத்த “பனை மேசியாக்கள்” எழுப்பும் முக்கிய கேள்விகள் என்பதனை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது. சந்தைப் பொருளியலை மையமாக வைத்துப் பார்க்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாகவே இக்கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

நுகர்வு சார்ந்த இவ்வினாக்கள் குறைபாடுள்ளது என்பதே எனது புரிதல். பனை நுகர்வு கலாச்சாரத்தை மிஞ்சி நிற்கும் ஒரு ஆற்றல் மிக்க மரம். அதன் ஆற்றலை குறைத்து மதிப்பிடுகிறோமோ அல்லது முன்முடிவுகளோடு அணுகுகிறோமோ என்பதே எனது ஐயப்பாடு. ஒருபோதும் நான் சந்தித்த  பனைத் தொழிலாளி தனக்கு பனை மரம் ஏற ஒரு கருவி வேண்டும் என்றோ, பனை மரம் குட்டையாக இருப்பது நல்லது என்றோ கூறியது இல்லை. ஆனால் நான் சந்திக்கும் பனை ஆர்வலர்களில் பெரும்பாலானோர் இவ்வினாக்களை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். ஏன், நானே கூட ஒரு காலத்தில் இவ்விதமான எண்ணத்துடனே சுற்றியலைந்திருக்கிறேன். ஆனால் எனது பயணம் அவர்களை சற்றே மதிப்புடன் நோக்க வைத்தது அவர்கள் வாழ்கை முறைதான். அதனை சற்றும் அறியாமல், அவர்களை பெருமிதத்துடன் அணுகாமல் அவர்களுக்காக நாம் செய்யும் பணிகள் வீண். இக்கருத்து அவர்களுக்காக நாம் பணி செய்யக்கூடாது என்பதல்ல, அவர்களை இன்னும் நெருங்கிச் செல்வதும் அந்த புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கான பணியினை முன்னெடுப்பதுமாகும்.

மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து பனை சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் இன்றும் பனைத்தொழிலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல், பாரம்பரியமாக எவைகள் முன்னிலைப்படுத்தப்பட்டனவோ அவைகளே இன்றும் முதன்மையான பனைத்தொழிலாக தொடரப்படுவது கண்கூடு. இந்த முயற்சிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை நாம் ஆய்ந்து மேம்படுத்தவேண்டுமே ஒழிய, புதியவைகளை கண்டுபிடிக்கிறோம் என்று நேரம் செலவளித்து, இன்று வாழும் பனைத்தொழிலாளிகளை கைவிட்டுவிடக்கூடாது. விடா முயற்சியுடன் பனையேற்றத்தை செயல்படுத்திவரும் பனைத்தொழிலாளிக்கு என்ன தேவை என்பதே முக்கிய ஆய்வு.

முதலாவதாக பனையின் உயரம் குறித்து நாம் கவலைப்படுவோமானால், ஒரு பனை ஏறுபவரை நாம் உள்வாங்கவில்லை என்பதே பொருள். ஒரு பனை மரத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு பாளைகள் உருவாகும். எந்த பனையேறியும் அத்தனையிலும் கலயம் கட்டி பதனீர் இறக்க முற்பட்டதில்லை என்பதே எனது அவதானிப்பு. ஏழு கலயங்கள் வரை கட்டியிருப்பதனை நான் ஒரே பனையில் பார்த்திருக்கிறேன்.  வாய்மொழிக் கூறாக இரண்டு டின் (சுமார் 36 லிட்டர்) பதனீர் ஒரே மரத்திலிருந்து இறக்கியதாக கூட கூறக்கேட்டிருக்கிறேன். என்றாலும் பனையேறுபவர் பல பாளைகளைக் கழிப்பார். முதிர்ந்தவைகள், மட்டுமல்ல அளவுக்கு அதிகமாக அவருக்கு தோன்றுபவைகளைக் கூட அவர் வெட்டி வீசிவிடுவார். நமக்கு சற்றே பயித்தியக்காரத்தனமாக தோன்றும் இச்செயல்கள் நமது ஆய்வு மனப்பான்மையினைத் தொட வேண்டும்.

ஏன் இவ்விதமான அசட்டுத்தனங்களை ஒரு பனைத் தொழிலாளி செய்கிறார் என்பதனை செய்கிறார் என்பதனை அறியும் அறிஞர்களே நமக்குத் தேவை. பனைக்கு சிரை எடுப்பது பனையேறிகள் செய்யும் முதல் பணி. ஒரு மனிதன் எப்படி தனது தலை முடியினை வெட்டி தன்னை அழகுற வெளிப்படுத்துகிறானோ அது போலவே பனையேறியும் தனது ஏற்றத்தின் துவக்கத்தில் இதனைச் செய்வது வழக்கம். சிறையெடுத்த பனை அவனுக்கு அளிக்கும் மனக் கிளர்ச்சி அலாதியானது. அது அவன் தன்னையே சீரமைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்ப்பதற்கு நிகரானது. பனையும் தானும் வேறு வேறல்ல என்பதனை உணர்ந்த புரிதலின் வெளிப்பாடு. இவ்விதம் சிரை எடுத்த பின்பே அவன் பனைதொழிலினை முன்னெடுப்பான்.

பனைகளில் ஏற்படும் பதனீர் ஊற்று, கிணற்றின் ஊற்றைப்போலவே குறைந்தும் அதிகரித்தும் இருக்கும். ஒரு பனை மரம் தனது ஏற்ற காலத்தில் குறைந்த பட்சம் 2 லிட்டர் பதனீர் முதல் 10 லிட்டர் பதனீர் வரை வெகு சாதாரணமாக கொடுக்கும். இப்பனையேறிகள் இவைகளில் ஒன்றையும் தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ கருதுவதில்லை. எல்லாம் பாலூறும் “அம்மை”தான். ஆனால் சில வேளைகளில் பனையேறிகள் என்னதான் முயன்றாலும் முயங்கினாலும் சில பனைகளிலிருந்து ஒரு சொட்டு பத்னீரையும் அவர்களால் பெற இயலாது. இவ்விதமன வேளையில் அவர்கள் அன்ட்த பனையினை “கள்ளப் பனை” என்று அழைப்பார்கள். அவர்கள் மிகவும் மதிக்கும் பனைன் எனும் இந்த “திருட்டு ராஸ்கலை” என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் கைவிடுவதும் உண்டு. சில நேரங்களில், அருகிலுள்ள பனைத்க்டொழிலாளிகளை அழைத்து அவர்கள் பணியினை தொடர அழைப்பதும் உண்டு. ஆச்சரியம் என்னவென்றால், இவ்விதமான பனைகளில் புது பனைத்தொழிலாளியின் கை பட்டவுடன் பதனீர் ஊற்று ஜாக்பாட் அடித்தது போல் மிக அதிகமாக ஊறிவிடும். சில நேரங்களில் பனை தன்னை அப்படியே இறுக்கிக்கொண்டு எதுவும் கொடாது அமைதியாகிவிடும்.

இந்த உறவு அலாதியானது. தாயும் பிள்ளையும் கொள்ளும் உறவுக்கு ஒப்பானது. ஒரு தாய்க்கு எவ்வளவு பால் ஊறுகிறது என்பது அறிவியல் என்றால் தாய் பால் சொரியும் ஒரு கருவியாக எண்ணப்படுகிறாள். ஆனால் தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு என்பது பால் ஊறாவிடினும் தன்னிச்சையாக ஏற்படும் பிணைப்பு. பனையுடன் பனையேறி இரண்டறக் கலந்த இவ்விதமான செயல்கள், பனையினை தன்னைப்போல் அவன் கருதுகிறான் எனவும், பனையுடன் அவன் ஒரு நேர்மையான உறவை மேற்கொள்ளுகிறான் எனவும் நமக்கு விளக்குகின்றது. பனை எனும் சூழியல் அமைப்பினை இவ்விதம் புரிந்து கொண்ட ஒருவனைவிட நாம் மேலானவர்கள் எனக் கருதி அவர்களுக்கு அறிவுறைச் சொல்ல முற்படுவதும் அவர்களுக்காக இயங்க முற்படுவதும் அசட்டுத்தனமே.

ஏறும் கருவிகள் குறித்த பார்வையும் மட்டுப்பட்டதே. ஒரு பனையேறியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, 94 மரங்கள் வரை  ஏறினேன் என்று ஒருவர் என்னிடம் கூறினாரே நீங்கள் எத்தனை மரங்கள் ஏறினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்த ஓய்வுபெற்ற பனையேறி, நான் சுமார் 60 மரங்கள் வரை தான் ஏறியிருப்பேன் என்றார். பின்பு அவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார். “கடைசீல எல்லாருக்கும் ஒரே அளவு தான் கிட்டும்”. திருமறையில் இதற்கு ஒப்ப ஒரு காட்சி உண்டு. இஸ்ரயேல் மக்களை கடவுள் பாலை நிலத்தின் வழியாய் மீட்டு வந்தபோது  அவர்கள் பசியாற வானத்திலிருந்து மன்னா என்ற பொருளை வழங்கினார். சிலர் பேராசை மிகுதியால் அதிகமாக சேர்த்தனர் சிலர் தேவையான அளவு சேர்த்தனர், வேறு சிலர் குறைவாகவே எடுத்துக்கொண்டனர்.

“…மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு;

குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.

ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது

மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை;

குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை…” (விடுதலைப் பயணம் 16: 17, 18)

இதனை அவர் திருமறை வழிநின்று கூறவில்லை ஆனால் பனை மரத்துடன் அவர் கொண்டுள்ள உறவாலே அவர் கூறினார் என புரிந்துகொண்டேன். மேலும் சிலருடன் பேசுகையில், வேகமாக ஏறுவது என்பது இளமையின் துடுக்குத்தனத்தைப் போன்றது. அவர்களால் ஒரு பனையின் தேவையை உணர்ந்து அதனுடன் ஈடுபட இயலாது, ஆனால் சில வயதானவர்கள் பனையினை உற்று நோக்கி புரிந்துணர்வுடன் குறைவான மரத்திலேறி நிறைவான பலனை எடுப்பார்கள். அளவோடு எடுக்க விரும்பினால் வருடம் முழுக்கக் கூட பனை மரம் ஊறும் தன்மை வாய்ந்தது என்பது பனைத்தொழிலாளிக்குத் தெரியும்.

இன்று கூட 4 பனை ஏறி 20 லிட்டர் பதனீர் எடுக்கும் பனையேறியும், 5 மரம் ஏறி 8 லிட்டர் பெறும் பனையேறியையும் குமரி மாவட்டத்தில் பார்த்திருக்கிறேன். ஓக்கி புயல் அடித்து தங்கள் கலயங்கள் உடைந்து போன பின்பும், பனையேற்றம் தவறி தங்கள் பணிகளை முதலில் நின்று மீண்டும் துவங்கும் பனையேறிகளைக் காண்கையில் வியப்புதான் மேலோங்குகின்றது. பனைத்தொழிலாளி எவருக்கும் ஓக்கி நிவாரண நிதி கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த உறவில் அவர்கள் திளைப்பது ஆச்சரியமானது அற்புதமானது. இதற்கு என்ன காரணம் என்கிற ஆய்வு முக்கியமானது.

பதனீர் விற்கும் பெண்மணி, ஆலம்பாறை

பதனீர் விற்கும் பெண்மணி, ஆலம்பாறை

உயரம் என்பதில் மற்றுமொரு அவதானிப்பை பனைத் தொழிலாளர்கள் கொண்டுள்ளார்கள் எனபது எனது புரிதல். மிக உயரமான மரங்கள், கருடன், தூக்கணாங் குருவிகள் மற்றும் வேறு பல உயிரினங்கள் தங்கும் வாழ்விடம். அந்த சூழியலை மாற்றி அமைக்காமல் பணி செய்வதே சிறந்தது என அவர்கள் கருத வாய்ப்புள்ளது. மேலும் இவைகளில் பெண் பனை இருக்குமாயின் அவைகளில் இருந்து நுங்கு பறிக்கப்படாததால் பனம்பழங்கள் கீழே விழ வாய்ப்பு இருக்கிறது என்பதும், பனம் பழத்தை எடுத்து முழைக்க வைத்தால் கிடைக்கும் கிழங்குகளும் அவர்கள் உணவின் ஒருபகுதி என்பதும் நாம் அறிந்ததே. மேலும், இருக்கும் பனைமரங்கள் அத்தனையிலும் அவர்கள் ஏறி பயன் எடுக்க முற்படுவதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

பனை சார்ந்த ஆய்வுகள் என்பது பனையேறியினை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் ஒன்றாக இருத்தல் அடிப்படை தேவை. அதிலும் குறிப்பாக அவர்களது அறிவினை பெற்றுக்கொள்ளும் ஆய்வுகளே முதன்மையான ஆய்வுகள் என நான் கருதுகிறேன். ஏனென்னில் பனையேறி என்பவர் அத்துறையினை மனமுவந்து ஏற்று நேசித்து முன்னெடுப்பவர். பனைமரத்தினை தனது வாழ்வின் ஆதாரமாக கொண்டவர். நுகர்வு கலாச்சாரம் ஒரு தலைமுறையாக பனை மரத்தினை கைவிட்டபோதும் அதனை தன் உயிர் மூச்சாக ஒரு இயக்கமாக முன்னெடுத்துக் கொண்டு செல்லும் களப்போராளி. பனை சார்ந்த சூழியலை அறிந்த சூழியலாளர், பனையினை தமது சமயத்தின் அங்கமாக வைத்திருப்பவர். பனைக் கலாச்சாரத்தின் ஆணி வேர் அவர் தான். பனை மரத்தின் தொல் பழங்கால எச்சத்தை நமக்கு நவீன காலத்தில் கொண்டு சேர்க்கும் தூதுவர் அவர். நமது காலத்தில் பேணப்படத்தக்க தொல் அறிவு சமுகத்தின் கடைசி துளி அவர்கள் தான். அவர்கள் தான் நம்மைச் சுற்றி அடிக்கும் காற்றை அவதானிக்கிறார்கள், வந்து செல்லும் பூச்சிகளை கவனிக்கிறார்கள், பறவைகள், ஊர்வன, மிருகங்கள் என அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருகிறவர்கள். நம்மைவிட எவ்வளவோ படிகள் உயர இருக்கும் அவர்களை நமது நுகர்வு கண்கொண்டு பார்க்கையில் அவர்கள் நமக்கு கீழானவர்கள் என்கிற எண்ணம் ஏற்படுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. காலத்தின் பிழை.

பனைமரத்தினையும் இயற்கையையும் விட்டு விலகும் சமூகம் மீண்டும் அதனுடன் ஒட்டி உறவாட தேவையான ஆய்வுகள் இன்றைய தேவை. அதற்கான முன்னெடுப்புகளே அவசியம். கிட்டத்தட்ட 95 சதவிகித பனை மரங்கள் இன்னும் இந்தியாவில் மனிதர்களால் உறவு கொள்ளப்படாமல் ஏங்கியபடி தனித்து நிற்கின்றன. இவ்வுறவுகளை எப்படி புதுப்பிப்பது என்னும் ஆய்வு இன்றைய அவசர தேவையாகும். சீக்கிரம் பலன் தரும் ஒட்டு செடிகளின் உறுதியற்ற தன்மையும், 40 நாளில் வளர்ச்சி பெறும் கோழிகளின் “ஆரோக்கியத்தை” அறிந்த பின்னும் யானையினையும் பேனாக்கிப் பார்க்க விழையும் சமூகத்தின் மேல் பரிதாபம் தான் எழுகின்றது. பனை மரங்களின் அரசன், சேவை செய்பவர்களையே அது ஏற்றுக்கொள்ளும், அதனை அடக்கி ஆள நினைக்கும் எஞ்சியவர்கள் ஏதும் பெறமல் வெறுங்கையுடன் போவது நிச்சயம். டிராக்டர்களால் நிலம் இறுகி பயனற்றதாய் போய்விட்டது போல பனையும் மலடாக விட்டுவிட கூடாது. பனை மரத்தினை  கட்டியணைத்து ஏறும் பனையேறியினை நாமும் தழுவி தட்டிக்கொடுப்போம். ஆய்வுகள் அனைத்தையும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கு மேலும் ஆய்வு வேண்டும் என்று சொல்பவர்கள் செய்ய வேண்டிய பணிகள் உண்டு. நமது பாடத்திட்டத்தில் மாநில மரம் எவ்விதம் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வது நலம். பனை மரம் குறித்த பாடல்களை நமது குழந்தைகள் கற்றுக்கொள்ளுகிறார்களா? பனை ஓலை சார்ந்த ஏதேனும் கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறதா? பனையேற்றம் என்கிற ஒரு திறன் மிகு விளையாட்டை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறோமா? எதுவுமே செய்யாமல், அடிப்படையை அடித்து நொறுக்கி, பனையேறுபவன் என்ற சமூகத்தையே துடைத்தெறிந்துவிட்டு புதிய சமூகத்தை கட்டி எழுப்புவது எவ்வகையில் சாத்தியம்? முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏதும் இல்லாமலா போய்விட்டது?

கடந்த 300 ஆண்டுகளாக இயந்திரம் உலகை ஆட்கொண்டும் பனை சார்ந்த கருவிகள் ஏதும் மாற்றம் அடையாததற்கான சில முக்கிய காரணங்கள் இருந்திருக்கும். பல்வேறு முயற்சிகள் நவீன காலத்தில் முன்னெடுக்கப்பட்டும் பனை ஏறுபவர்களால் அவை புறம் தள்ளப்பட்டிருக்கின்றன. பாரம்பரிய முறைகளில் உள்ள பிணைப்பு நவீன உபகரணங்களால் கொடுக்க இயலவில்லை  என்பதே இதன் பொருள். அல்லது பனை ஏறுபவரை கலந்து செய்யாத கண்டுபிடுப்புகள் இவை. நான் நினைக்கிறேன், எப்படி ஒரு நபர்  பாளையினை “கடிப்பு” கொண்டு பதப்படுத்துகிறாரோ, அது போலவே பனை மரத்தினை அணைத்து ஏறுவதும் முக்கியம் என்று. அதுவே, பனை பால் சுரக்க ஏற்ற வினை.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆசாரிபள்ளம், குமரி மாவட்டம்

malargodson@gmail.com

9080250653

பனை மனிதன்

பிப்ரவரி 18, 2018

பனையேறுதல்   குறித்த  தொன்மையான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. பனையேறுதல் எவ்விதம் எப்போது யாரால் எங்குஆரம்பிக்கப்பட்டது என உறுதியாக சொல்ல இயலாது. இவை சார்ந்த ஆய்வுகள் தனித்து மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு, தொல்லியலாளர்கள், மொழியியலாளர்கள், புவியியலாளர்கள், தாவரவியலாளர்கள், விலங்கியலாளர்கள், மானுடவியலாளர்கள் மற்றும் எண்ணிலடங்கா துறை வல்லுனர்களின்  ஒருங்கிணைந்த முனைப்பு தேவையாயிருக்கிறது. பனைத்தொழில் சார்ந்த ஒரு தேடுதல் மானுட சமூகத்தின் ஒரு பகுதியை நமக்கு விளக்க முற்படும் எனக்கருதியதால் இதை நான் முன்மொழிகிறேன்.

Palmyra Climber

பனை மனிதன் – மால்வினா காஃப்மேன்

பனைத்தொழிலாளர் குறித்து இன்றும் மானுடவியல் ஆய்வுகள் குறிப்பிடும்படியாக கிடையாது. பனைத் தொழிலாளியின் கருவிகளையோ, அல்லது அவர் ஏறும் முறைகள் குறித்த சமூக பார்வைகளோ நம்மிடம் சரிவரக் கிடையாது.   ஒருவர் ஏன் “நெஞ்சணைத்து” ஏறுகிறார்? இன்னொருவர் ஏன் “ஏணி வைத்து ஏறுகிறார்? மற்றொருவர் ஏன் கயிறு கட்டி ஏறுகிறார்? இன்னும் சிலர் ஏன் மூங்கில் களிகளையும், தென்னந் தொண்டுகளையும் பயன்படுத்தி ஏறுகின்றனர் எனவோ, மரங்களைச் செதுக்கி அவைகளில் கால் வைத்து ஏறுகின்றனர் எனவோ ஒரு பரந்துபட்ட பார்வையை ஒருவரும் நம்மிடம் இதுவரையில் முன்வைக்கவில்லை. இவைகள் அனைத்திற்கும் மண் சார்ந்த கலாச்சாரம் சார்ந்த  பின்னணியம் இருக்கும் என்றே கருதுகிறேன். அவைகளைத் தொடர்ந்து போகையில், மனித வாழ்வின் ஆதி முடிச்சுகளை அவிழ்க்கும் வாய்ப்புகள் உள்ளதென்றே கருதுகிறேன்.

இவ்விதம் ஒரு பரந்துபட்ட ஒரு ஆய்வு நடைபெறாததற்கு காரணம், பனைத்தொழில் உலகாளாவ விரிந்து கிடப்பதும், இதற்கான பொருளியல் தேவை மிக அதிகமாகவும், வாழ்நாள் முழுக்க ஒருவரது உழைப்பைக் கோருவதாகவும் இருப்பதால் பலர் இதனை ஒருங்கிணைந்து ஒப்பு நோக்க முன்வரவில்லை. சற்றே பயணப்பட்ட  கு. சம்பந்தம் அவர்கள், பனை ஏறும் முறைகளை தனது பனைத்தொழில் இரண்டாம் பாகம் என்ற நூலிலே ஆவணப்படுத்தியிருக்கிறார். எனினும் இவ்விதமான பரந்துபட்ட தேர்வுக்கு என்ன காரணம் என அவர் விளக்கவில்லை. அவ்விதமான காரணங்களைத் தேடுகையில் அவை நமது முன்னோர்களின் வாழ்வியல் பார்வையினை, அவர்கள் வாழ்ந்த மண்ணின் வளத்தினை, அங்குள்ள நாட்டார் வழக்காற்றியலை, வாழ்வின் அடிநாதத்தை புரிந்துகொள்ளவும், அதிலிருந்து ஒரு புது சித்திரம்பெற்றுக்கொள்ளவும் நமக்கு உதவும்.

குமரி மாவட்டத்திலும் இலங்கையிலும் “பனை தாவும்” ஒரு முறைமை உண்டு. இரண்டு பனைகள் ஒன்றுடன் ஒன்று உரசி நிற்கையில், இருபனைகளின் ஓலைகளையும் கட்டி வைத்துவிட்டு, ஒரு பனையில் இருந்து மற்றொரு பனைக்கு “தாவி” செல்லுவதை இப்படி கூறுவார்கள். ஏணிவைத்து ஏறுபவர்களோ, கயிறுகட்டி ஏறுபவர்களோ இவ்விதமான ஒரு முறைமையினை கையாள்வது அரிது. இவ்விதமான பனைத்தாவுதல் இப்பகுதியிலுள்ள மக்களின் அடிமுறைகளில் (களரி) என்ன தாக்கத்தை நிகழ்த்தியிருக்கிறது என்றோ, பின்னதிலிருந்து முன்னதை நோக்கிய முயற்சிகள் சாத்தியப்பட்டதா? போன்றவைகளை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

சிறப்பாக, குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்கள் தங்கள் பனையேற்று தருணத்தில் “நெஞ்சணைத்து” ஏறுபவர்கள். மிகவும் சிரமமான பனையேற்றுமுறை என கொள்ளப்படுவது இதுதான் என்று எண்ணுகின்றேன். தனது மென்மையான மார்பை மேடுபள்ளம் நிறைந்த கரடுமுரடான பனையில் அழுத்தி இணைத்து ஏறும் முறையினை எப்படி ஒரு பனைத்தொழிலாளி  முன்னெடுத்திருப்பார்? ஒன்று வாள் பிளக்கும் வகையில் போர்புரியும் திண்மை கொண்ட வீரனுக்கு பனையின் செதில்களால் ஏற்படும் சிராய்ப்புகள் பொருட்டல்ல. ஒருவேளை “விழுப்புண்” என்பதே அன்றைய “வீரசமூகத்தின்” அடையாளமாக இருந்திருக்கும். ஆனால் வீரத்தின் பால் மக்கள் கொண்டுள்ள ஒரு உணர்வால் பனை ஏறினார்கள் என்பது சற்று மட்டுப்பட்டதாக எனக்கு தெரிகிறது. வீரம் என்பது மிக பிந்திய விழுமியமாக பனையேறுபவர்கள் வாழ்வில் புகுந்திருக்கலாம்.

சுண்ணா பெட்டி

சுண்ணா பெட்டி

ஆழ்ந்து பார்க்கையில் பனையோடு உள்ள பிணைப்பு என்பது தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள பிணைப்பாகவே காணப்படுகின்றது.பால்குடிக்கும் பிள்ளையின் முயற்சியாகவே அது ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.  ஆகவே காளிக்கும் பனைத் தொழிலாளிக்கும் உள்ளதொடர்பு என்பது எளிய பிஞ்சு குழந்தைக்கும் பாலூட்டும் முதிர்ந்த அன்னைக்கும் ஒப்புமைப்படுத்தப்படுவதும் இயல்பாகின்றது. கோழி மிதித்து குஞ்சு சாகுமா என்பது போன்றே பனை சிராய்த்து பனையேறி சாவானா? என்பது பொன்ற ஒரு புரிதல் தொல் பழங்குடியினரிடம் உருவாகியிருக்கவேண்டும். பால்குடிக்கும் வேட்கையில் அத்தனை இடர்களையும் இன்னல்கலையும் தாண்டி முன்னேறும் குழந்தை, தாய்க்கு விருப்பமானவனாயிருக்கும் என்ற எளிய மழலைப் புரிதலில் எழுந்த “வீர” முயற்சி இது.

இவ்விதம் தொடர்ந்து நாம் அகழ்ந்து எடுக்கையில் பல்வேறு விதங்களில் பனை சார்ந்த சமூக உண்மைகள் நமக்கு தென்பட வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றன. குறிப்பாக  பனை ஏறுபவர் கையாளும் நான்கு முக்கிய பொருட்களை நான் வரலாற்றிலிருந்து எடுத்தாள விழைகிறேன். ஒரு பனைத்தொழிலாளியின்  உடை அமைப்பு, அவர் தாங்கி வரும் தொழிற் கருவிகள் மற்றும் அவர் பயன்படுத்தும் சேர்மானங்கள் அனைத்தும் தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்ப மாறியவை அல்ல. ஒரு பனைத்தொழிலாளியின் கருவிகளில் மிகவும் நவீனப்படுத்தப்பட்டது என ஒன்று உண்டென்றால் அது, நாகத்தகட்டில் செய்த குடுவையே ஆகும். அதுவும் 1960 களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகம்செய்யப்பட்டது. அதற்கு முந்தைய காலத்தில் அவை சுரைக் குடுவையாகவும், ஓலையில் பின்னப்பட்ட குடுவையாகவுமே இருந்திருக்கின்றன.

அப்படியானால் தொன்மையான முறைமைகளைக் கையாண்டு, எவ்வித மாற்றமும் இன்றி நீண்டகாலமாக தொடர்ந்து இயங்கிவரும் ஒருதொழிலின் தன்மை பனையேற்றத்திற்கு  உண்டு. இவ்விதமான தொன்மையை எங்கனம் கண்டு அடையாளம் கொள்வது? எவ்விதம் வரையறை செய்து கொள்ளுவது? பனையேறுபவர் பயன்படுத்தும் பொருட்களே இன்று நமக்கு கிடைக்கும் ஆக கடைசி தடயமாக எஞ்சி நிற்பதால் அவை சார்ந்து ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

முதலாவதாக பனையேறி பயன்படுத்தும் மண் கலயம். நெருப்பே மனிதனின் ஆதி கண்டுபிடிப்பு. அதுவே களிமண்ணைச் சுட்டு செங்கல்களைச் உருவாக்கவும் பானைகளைச் செய்யவும் காரணமாக அமைந்தது. மிக தொன்மையான பானை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மனிதன் கி மு 2500 ஆம் ஆண்டுகளுக்கு முன்னே பயன் படுத்தியிருந்தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது. சிந்துசமவெளி நாகரீகங்களும் இதனையே உறுதிப்படுத்துகின்றன. களிமண்னை சுட்டு எடுக்கும் பானைகள் பயன்பாடில் வந்துவிட்டபொழுது, இவைகளை பல்வேறு முறைமைகளில் மக்கள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

அப்படியென்றால் பனைத் தொழிலை மனிதர்கள் பானைகள் பயன்பாட்டினை கண்டுபிடித்த பின்பே துவங்கியிருப்பார்கள் என்பது புலனாகின்றது. என்றாலும், ஓலைகளினால் மிக எளிய தொன்னைகளைச் செய்வதும், பட்டைகள் செய்வதும், தோண்டிகள் சாத்தியமாக இருந்திருக்கையில் பானைகள் என்ற”நவீன” கண்டுபிடிப்பு பின்னிணைப்பாகவே உள்நுழைந்திருந்திருக்கும். தொழில் என்று வருகையில், பானையின் பயன்பாடு தனித்துவமானது பிந்தையதும் கூட. ஆனால் பனை ஏறுதல் என்பது கண்டிப்பாக பானை செய்யும் காலத்திற்கு முந்தையது, என்பதே எளிய புரிதல்.

இரண்டாவதாக பனை ஏறுபவர் பயன் படுத்தும்  கருவிகளில் மிக முக்கியமானது “பாளை அருவாள்” என சொல்லப்படும் “அரிவாள்” வடிவில் காணப்படும் கத்தியாகும். கி.மு 1200 முதல் 200 வரைக்குமான பகுதிகளை “இரும்புக்காலம்” என வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றார்கள். இரும்பு பெரும்பாலும் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருந்தாலும்  அவற்றின் பங்களிப்பு விவசாயத்தில் இருந்திருக்கிறது என்பதை நாம் இக்கால கட்டங்களில் உணருகிறோம். கி. மு 10000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் கூட புதிய கற்கால அரிவாள்கள் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. என்ன… அவைகள் இரும்பினால் செய்யப்படாமல் இருந்திருக்கலாம்.

வாட்கள் கத்திகள் போன்றவை இன்றும் பெரும்பாலும் தயாரிக்கப்படுகையில் அவைகள் ஒரு நேர்கோடாக  நீண்டு செல்லுவதை நாம் அவதானிக்கலாம். அவைகளின் பயன்பாடு கருதி அவைகள் விதவிதமாக தயாரிக்கப்படுவதும் கண்கூடு. ஆனால் ஒரு கத்தியில் வளைவு ஏற்படுத்துவது அறுவடைக்கு  ஏற்றது என்ற புரிதல் யாருக்குவரும்? ஆயுதத்தில் வளைவு என்பது மழுங்குதல் என்ற பொருளைத் தர வல்லது. கூர்த்த பகுதி தன்னை நோக்கி நிற்க, மழுங்கிய பகுதியை எதிராளிக்கு காட்டி நிற்கும் மனிதன் சமாதானத்திற்கு ஆயத்தமான முதல் போராளி தானே. என் கையில் ஆயுதம் உண்டு எனினும் அது உன்னை தாக்காது என்ற அறைகூவல் தானே வளைந்த அரிவாள்? பயிர்களோடு அல்லது பனம் – பாளைகளுடன் உறவாடியவர்களுக்கே அது சாத்தியம்.  ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் வியாபித்திருந்த மனிதர்களுக்கு இவ்விதமான ஒரு அறிதல் பனை அவர்கள் அருகில் இருந்ததால் கிடைத்திருக்க வாய்ப்புகள் வளமாய் இருந்திருக்கின்றது. ஏனென்றால், பனை மட்டையின் கருக்கே ஆதி மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய ஏற்ற இயற்கையில் கிடைத்த கூர்மையான அமைப்பு. அதன் பின்பே கல் ஆயுதங்கள் தயாரிக்க அவர்களுக்குத் தோன்றியிருக்கவேண்டும். கற்காலத்திற்கு முந்தைய “கருக்கு காலம்” என இதனைச் சொல்லலாம். எப்படியிருந்திருந்தாலும் பனை சார்ந்த ஒரு அறிதலை மக்கள் தங்கள் கரங்களில் கிடைத்த இரும்புஅரிவாளால் உரசிப்பார்த்திருப்பார்கள். இரும்புக்காலத்தில் அவர்கள் வசம் பனை இன்னும் நெருங்கி சென்றிருக்கும்.

பானையும் பாளை சீவும் அரிவாளும் மட்டுமே போதும், பனைத் தொழில் சார்ந்து பயன் எடுக்க. ஆகவே தான் சங்க இலக்கியங்கள் முழுக்க கள்ளை சிலாகித்து, கொண்டாடி, வாழ்த்தி பாடப்பட்டிருக்கின்றன. ஆனால் பானையில் கள்ளுடன் சுண்ணாம்பைச் சேர்ப்பது குறித்த புரிதல்கள் எப்போது எழுந்தன என்பதும் மிக முக்கியமான கேள்வியே.

ஆச்சரியமாக, சுண்ணாம்பும் வரலாற்றூக்கு முற்பட்ட ஒரு கட்டுமான பொருள் தான். சுண்ணாம்பை வெற்றிலையோடு சேர்த்து “உணவாக” ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆசியா கண்டத்தில் காணப்படும் மிக தொன்மையான ஒரு தனித்த பழக்கம்.  கடலில் இருந்து எடுக்கும் கிழிஞ்சல்களையோ, அல்லது எரிமலைக் குழம்பாக வடிந்தவைகளையோ, இல்லையேல் பூமிக்கடியில் காணப்படும் சுண்ணாம்பு பாறைகளையோ எடுத்து சுண்ணாம்பு காளவாயில் வைத்து சுட்டு, அதன் மேல் தண்ணீர் ஊற்றி கலவையாக்கி பூசும் வழக்கம் சமீப காலம் வரைக்கும் வழக்கத்தில் உண்டு.

சுண்ணாம்பை எப்படி கலயத்தில் சேர்க்க முற்பட்டிருப்பார்கள் என்பது ஒரு முக்கிய கேள்விதான். கம்போடியாவில் பல்வேறு எரிமலைகள் வெடித்து குழம்பாகி வடிந்து இன்று குகைகளாகவும் பாறைகளாகவும் இறுகிவிட்ட நிலப்பரப்புகள் உண்டு. சங்க இலக்கியம் பனை நெய்தல் நில மரம் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. எப்படி சுண்ணம் சேர்ந்தது என தெரியாவிட்டாலும், அவை சேர்மானமாவதற்கான  சூழல் வளமாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இறுதியாக, இவைகளோடு தோல் சம்பந்தமான பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். நெஞ்சுவார் என்ற மார்புக்கு பாதுகாப்பான ஆடை, இடைக் கயிறு, கைகளிலும் கால்களிலும் சிராய்ப்பு ஏற்படாமலிருக்கும் உறைகள் போன்றவை இவற்றில் அடங்கும். தோல் ஆடைகள் அணிகலன்கள் என்பவை வறலாற்றிற்கு மிக முந்தைய கால கட்டத்தைச் சார்ந்த ஒன்று என்பதனை யூகிக்க முடிகிறது. ஆகவே, இவைகள் அனைத்தும் தொன்மையான ஒரு பணியில் பனைத்தொழிலாளி ஈடுபட்டு வருகிறான் என்பதனை தெளிவுபட கூறுகின்றது.

சரி இது தொன்மையான ஒரு பணியாகவே இருந்துகொண்டு போகட்டும் அதற்கென்ன என்று விட்டுவிட இயலாது. இத்தொன்மையான திறனைக் கொண்டிருக்கிறவர்களின் ஆற்றல் மரம் ஏறுவது. அதுவும் கிளைகள் ஏதும் இல்லாத மரம் ஏறுவது. பரிணாமத்தின்படி பார்த்தோம் என்றால் நிமிர்ந்து எழுந்த குரங்கே மனிதன். முதுகு நிமிர்வதற்கு ஏற்ற ஒரு வடிவமைப்பே பனை. (காசா பணமா? சும்மா சொல்ல வேண்டியதுதான்) முதுகை வளைத்து பனை ஏற முடியாது இல்லையா?

பனை மரம் வானுயர்ந்து செல்லும் மரம். கடவுளை எட்டிப்பிடிக்க ஏற்ற ஏணி. வானத்தின் வாசல். நிகழ் காலத்திலிருந்து எதிர்காலம் செல்லும் நெடுஞ்சாலை, கடவுள் மனிதனை உயர்த்தும் பீடம். அருகில் அமர்வோர் சித்தம் தெளியவும், அணைத்து ஏறுபவர் அவர்தம் பாதம் அடையவும் கடவுள் அருள்பாலிக்கிறார். கடவுளே விண்ணளந்தவராக, பெண்ணாக, ஆணாக,  குமரி, குமரனாக, கிழவி, கிழவனாக, குழந்தையாக, அண்ணகராக பல்லுருபெற்று சித்தம் நிறைக்கும் ஆற்றலாக, உறவாக, உருவாக, நீக்கமற நிறைந்திருக்கிறது.

மிக எளிய வாதங்களுடன் இவைகளை நான் முன்வைத்தாலும், எனது எண்ணங்களில் நகைச்சுவை உணர்வு கூடியிருந்தாலும், உண்மை என்பது பனை ஏறுபவர் குறித்த முறையான ஆய்வுகள் இல்லை என்பதே. இதன் தொன்மையினை தேடி மனித குலத்தின் ஆரம்ப படிகளைக் கட்டி எழுப்பும் அறிஞர் கூட்டம் இல்லாத போது, இவ்விதமாக “கற்பனையில்” உழல்வதே எனக்கு பேரின்பம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

தேவிகோடு, குமரி மாவட்டம்

malargodson@gmail.com

9080250653

பனையோடு பிணைந்தவன்

பிப்ரவரி 16, 2018

ஒரு சமூகம் தன்னை வெளிப்படுத்தும் இடங்களில் கலை மிக முக்கியமானது. செறிவு செய்யப்பாட்ட கலைகளின் உச்சத்தில் அது தன்னை நேர்த்தியாய் வெளிபடுத்துகிறது. உன்னத கலைவடிவத்தில் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் சொல்லிவிடக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த  அமைப்பு கூடி இருக்கும். அது வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இக்கலைவடிவங்கள் பல வேளைகளில் இச்சமூகத்திற்குள் இருந்து எழும்பி வருவது வழமையென்றாலும், சில சூழலின் நிமித்தம் அவ்விதம் அமைவதில்லை. ஏன் என்ற கேள்விக்கான பதிலை நாம் வரலாற்றில் தேடியபடி இருக்கவேண்டியதுதான். எனினும், உன்னத கலைஞர்கள் பல வேளைகளில் கலாச்சாரத்தையும் கடந்து அவ்விதம் உயர் படைப்புகள் படைக்க இயலும் என்பதும்  நிரூபணமாகியபடியேதான் இருக்கின்றன.

நான் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு சிலை என்றால் மால்வினா கார்னெல் ஹாஃப்மான்(Malvina Cornell Hoffman) சமைத்த சிக்காகோவிலுள்ள, தேசிய வரலாற்று கள அருங்காட்சியகத்தில்  அமைந்திருக்கும் “கள்ளிறக்கும் தொழிலாளி”  சிலை தான் அது. மால்வினா 1885 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதி நியூ யார்க் நகரில் பிறந்தவர். அன்றைய நாட்களில் மிக அதிகமாக பேசப்பட்ட உன்னத கலைஞர். சற்றேரக்குறைய ஒரு கோடி ரூபாய் வரை தனது சிற்பங்களுக்காக அவர் பெற்றிருக்கிறார். ஒரு பெண் கலைஞர் உலகம் அதுவரை கண்டிராத முகங்களை ஒருசேர கொண்டுவத்தது ஒரு மாபெரும் சாதனை.  குரிப்பிடத்தகுந்த  104 சிலைகளை உலகின் பல்வேறு பகுதியில் உள்ள மனிதர்களின் வாழ்வியல் அடையாளத்துடன் அவர்   செய்து “மனித இனங்கள்” (“Races of Mankind”)என்ற தலைப்பில் காட்சியமைத்தார். 1933 ஆம் வருடம் காட்சிபடுத்தப்பட்ட இந்த சிலைகள் “நாகரீக உலகிற்கு” ஏற்புடையது அல்ல என எழுந்த விவாதங்களால் 1969ஆம் வருடம் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி வைக்கப்பட்டது. நமது நல்லூழ் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிற்பங்களில் கிட்டதட்ட சரி பாதியை “நம்மை நாமே நிதானித்தல் – மால்வினா ஹாஃப்மேனின் சிற்பங்கள் ஒரு மீட்டுருவாக்கம்” (“Looking at Ourselves: Rethinking the Sculptures of Malvina Hoffman,”)  என்ற தலைப்பில் மீண்டும் காட்சிபடுத்தியிருக்கின்றனர்.

இது எச்சூழலில் எந்த இடத்தில் உள்ள மாதிரியை பின்பற்றி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை இனிமேல் தான் தேடவேண்டும். மெல்வினா எழுதிய நேற்று தான் நாளை (Y) என்ற சுய வரலாற்று புத்தகம் ஒரு தீர்கதரிசன வார்த்தையாக காணப்படுகின்றது. சென்னை வரை அவர் பயணப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அந்த தேடுதல் ஒரு பெரும் கதையினை உள்ளடக்கி அமைதி காக்கின்றது. வாய்ப்பு கிடைத்தால் அந்த புத்தகத்தினை வாங்கி அவரை தொடர்வது ஒரு பெரனுபவமாக அமையும்.

“கள் இறக்குபவர்” (Toddy Tapper) வெண்கலச் சிலையின் புகைப்படம் மாத்திரம் பார்த்திருக்கும் நமக்கு அது கொடுக்கும் மன எழுச்சி அலாதியானது. ஒரு கலை ஞானி கண்டடைந்த அற்புத தருணமாக உருவெடுத்தது மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வாழ்வில் உழைப்பின் பால் பெரு மோகம் கொண்டுள்ள மக்களின் பிரதிநிதியாக இச்சிலை இன்று நமக்கு கிடைக்கின்றது. அந்த வகையில் மிகவும் அபூர்வமான சிலை தான் இது. இச்சிலை கீழை நாட்டவரின் வாழ்வியலை மேற்குக்கு படம்பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியாக, மேற்குலகின் எதார்த்தவாத – நவீன ஒரு பங்களிப்பாக இருக்கையில், பனை சார்ந்து செயல்படும் எனக்கு இது பல்வேறு நினைவுகளை தட்டி எழுப்புகின்றது.

பனைத்தொழிலாளி தனது காலை நேர பணியினைத் துவங்குகையில் இதனை அச்சிற்பி தனது மனதிற்குள் உள்வாங்கியிருக்கலாம். காலை 9 மணிக்கு அலுவலகம் அல்லது 8 மணிக்குஆலயம் என வாழ்வின் நேரத்தினை வகுத்தவர்களுக்கு, இந்திய மனதின் அதிகாலமே எழு, சூரியன் உதிக்குமுன்னே எழுந்து தனது கடமையினைச் செய்ய காத்திருக்கும் ஒருவன் எவ்விதமான மனக்கிறக்கத்தை அளித்திருப்பான்.?

ஒரே மரம் மீண்டும் மீண்டும் ஏறவேண்டும் ஆனால் ஒவ்வொரு மரமும் தனித்தன்மை வாய்ந்தது. ஏறுகின்ற பனைத்தொழிலாளிக்கும் அந்த பனைக்கும் உள்ள பிணைப்பினை, இந்திய மனதில் ஆழ வேரோடியிருக்கும் இயற்கையோடுள்ள பிணைப்பை மெல்வினா எந்த அளவு ரசித்திருப்பார்கள்? கட்டியணைத்து ஏறும் அந்த காதல் கரங்களை, பிணைத்திருக்கும் கயிற்றை நுட்பமாக சித்தரிக்கையில் அந்க்ட உள்ளம் எவ்வளவு உவகை கொண்டிருக்கும். இயற்கையினை கட்டியணைப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்ட ஒரு சமூகம் மெல்வினாவின் கலை பார்வையில் சிக்கியது எதார்த்தமாக அல்ல என்றே நினைக்கின்றேன். அவர் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவையே. அக்கண்களிலேயே உலகின் உன்னத வடிவங்கள் அமைந்து வரவேண்டும் என்றிருந்திருக்கிறது.

இதைச் சொல்லுகையில் இப்படத்தில் உள்ள பனையேறும் முறை தென் மாவட்டத்தைச் சார்ந்தது அல்ல என்பது தெளிவாகிறது. தென் மாவட்டத்தில் ஒரு புராதனமான முறையே பின்பற்றப்படுகிறது. கைகளால் கட்டியணைத்து ஏறும் முறை அது. நெஞ்சை பனையின் மார்போடு முட்டி முயங்கி ஏறும் முறை அது. ஆனால் பிற இடங்களில் ஒரு சுற்று கயிற்றின் பிணைப்பால் ஏறுவதை நான் பார்த்திருக்கிறேன். இச்சிலை அவ்விதமானது. இதில் காணப்படும் மரமும் தென்னை போன்றே எனக்குத் தென்படுகிறது. என்றாலும் அவர் வைத்திருக்கும் குடுவைகள் அப்படியல்ல. அவை பதனீர் சீவும் பனையேறியின் அருவா பெட்டியே வைத்திருக்கிறார், கள் சீபுவருக்கு இத்தகைய அருவா பெட்டியின் தேவை இருப்பதில்லை. பதனீர் இறக்குபவர்களே சுண்ணாம்பு பெட்டியை வைக்கும்படியாக தென்னம் பாளையில் செய்த அருவா பெட்டியினை வைத்திருக்கிறார். மெல்வினா இரண்டு மரங்களையும் குழப்பிக்கொண்டாரா என தெரியவில்லை. அப்படியிருந்தால், வெளிநாட்டவர் மனதில் பனை என்பது ஒரே காட்சியை பதிக்கும் விளைவின் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு உண்மை உள்ளது தென்னமரத்திலிருந்தும் பதனீர் எடுக்க வாய்ப்பு உண்டு. அனால் இவை அனித்தும் தென் மாவட்டதிற்குரிய முறைமைகள் அல்ல.

தோள் கயிறு கட்டி பனையில் ஏறுபவர்களை நான் ஆந்திராவில் பார்த்திருக்கிறேன். அது எனது மனதில் அப்போதே ஒரு சிறு பொறியினைத் தட்டி விட்டது. இஸ்லாமியர்களுக்கும் பேரீச்சைக்கும் உள்ள தொடர்பு ஆந்திராவில் இவ்வித பழக்கம் ஏற்பட காரணமாயிற்றா? பேரீச்சை மரமானது பனையைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் வாழக்கூடியது, வறண்ட நிலத்தின் மரம், அதன் தண்டு பகுதி பனையைவிடவும் சொரசொரப்பு மிகுந்தது. அதில் ஏறுகின்ற நபருக்கு இவ்விதமான கயிற்றின் அவசியம் தேவைதான். மேலும் ஒன்று உண்டு, ஒட்டகம் மேய்த்தவர்கள் உபயோகித்த நீண்ட கயிறுகள் இப்பனை மரங்களில் ஏற பயன்பட்டதா அல்லது குதிரைகளை கட்டுப்படுத்தும் சவுக்குகள் இவ்விதம் உறுமாறியதா என்ற கேள்வி எனக்குள் குறுகுறுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கரூர் பகுதிகளில் இவ்விதம் பனை மரம் ஏறுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். கெட்டியான எருமைத்தோலினைக்கொண்டு இவ்விதமான கயிற்றினை செய்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.

கரூர் பகுதிகளில் கால்களுக்கான தோல் மற்றும் இன்ன பிற அமைப்புகளையும் தோலால் செய்யப்பட்டிருந்ததைப் பார்க்கையில், உள்வாங்கப்பட்ட ஒரு தொழில் நுட்பமாகவே எனக்கு அது தெரிகிறது. ஏனெனில், பனை மரங்களில் ஏறுபவர்கள் அணியும் திளாப்பு தென் மாவட்டங்களில் பனை நாரினால் செய்யப்பட்டு வந்தது, வட்ட வடிவமான கயிறு போன்ற வடிவிலான திளாப்பில் இரு கால்களையும் நுளைத்து மரத்தை கால்களால் கவ்விப் பிடிக்கையில் பனை ஏறுபவர்களுக்கு அது ஒரு பிடிப்பாக செயல்படுகிறது. பனையோடு இருப்பவர், பெரும்பாலும் பயன்படுத்துவது பனை சார்ந்த பொருட்களாகத்தானே இருக்கவேண்டும்?

தென் மாவட்டத்தில் பனை ஏறுகிறவர்கள். ஒரு மட்டையின் மேல் மடங்கி கீழ்னோக்கிப் பார்க்ட்து பாளை சீவுவது வழக்கம். கருக்கு நிறைத்த பகுதிகளை அதற்காக அவர்கள் வெட்டி வீசிவிடுவார்கள். இதே பேரீச்சையில் முட்களின் அளவுகள் அதிகம். அதன் உள்ளே நுழைவதும் கடினம். ஆகவே இவ்வித கயிற்றினைக் கட்டி அதன் பலத்தில் கீழே நின்றுகொண்டே அவர்களால் பதனீர் அல்லது கள் சேகரிக்க வாய்ப்பு வளமாக உள்ளது. அப்படியானால் முகலாயர்கள் வழங்கிய கொடையாகவே இதனை நாம் காணமுடியும்.

தென் மாவட்டத்தில் பனை ஏறுகிறவர்கள். ஒரு மட்டையின் மேல் மடங்கி கீழ்நோக்கிப் பார்த்து பாளை சீவுவது வழக்கம். கருக்கு நிறைந்த பகுதிகளை அதற்காக அவர்கள் வெட்டி வீசிவிடுவார்கள். இதே வேளையில், பேரீச்சையில் முட்களின் அளவுகள் அதிகம். அதன் உள்ளே நுழைவதும் கடினம். ஆகவே இவ்வித கயிற்றினைக் கட்டி அதன் பலத்தில் கீழே நின்றுகொண்டே அவர்களால் பதனீர் அல்லது கள் சேகரிக்க வாய்ப்பு வளமாக உள்ளது. அப்படியானால் முகலாயர்கள் வழங்கிய கொடையாகவே இதனை நாம் காணமுடியும்.

பனையோடு “தாலி” கட்டிக்கொண்டு வாழும் இவர்கள் வாழ்வு, உணர்வு ரீதியானது. இவ்வுணர்வுகள் பெருமளவில் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமல் போவதும் வேதனையானது. இயற்கையோடு மனிதன் “இணைந்து” வாழ்ந்தான் என்பதற்கான குறியீட்டு வடிவம் இது. இவ்விதமான இணைந்து வாழும் பனைத்தொழிலாளியைச் சுட்டும் ஒரு குறியீட்டு அடையாளம் கூட தமிழகத்தில் இல்லை. இச்சுழலிலேயே நமது ஆலயங்களில் உள்ள சிலைகளின் முக்கியத்துவம்  தெரியவருகிறது. காலத்தில் நிலைநிற்கும் பலவற்றை நமது முன்னோர் நமக்கு கொடையாக அளித்துச் சென்றிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் ஒரு பனை தொழிலாளியின் சிலை நிறுவப்படுவது காலத்தின் கட்டாயம். உழைப்பாளர் சிலை என சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு சற்றும் குறைவுபடாத உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கும் பனைத்தொழிலாளர்களுக்கு முதல் சிலை யார் வைக்கப்போகிறார்கள் என்பது தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு நமது பங்களிப்பாக நாம் செய்யகூடுவது என்ன?

குமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி என்ற பகுதியில் இன்னும் சிறந்த முறையில் கல் தச்சு செய்யும் அனேகர் உண்டு. அவர்களின் உதவியோடு சிறந்த ஒரு கற்சிலை அமைக்கலாம். அல்லது கோட்டார் பகுதியில் வாழும் வெண்கல சிலை சமைப்பவர்களைக் கொண்டு நல்ல வெண்கல சிலை ஒன்றை அமைத்து முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலோ அல்லது நாகர்கோவிலுக்கு நுழைவாயிலான பகுதிகளிலோ நிறுவலாம். ஏன் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பனைத் தொழிலாளர்களின் பிரதி எடுத்து இவ்விதம் நிறுவுவது சிறப்பானது என்று தோன்றுகின்றது. பனையினையோ பனைத்தொழிலாளர்களையோ நாம் இதுவரை காப்பாற்றவில்லை, நினைவுகளையாவது காப்பாற்றி தொலைப்போம்.

 

 

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

கீழப்பெருவிளை, குமரி மாவட்டம்

malargodson@gmail.com

9080250653

பனையோடு பிணைந்தவர்

பிப்ரவரி 15, 2018

ஒரு சமூகம் தன்னை வெளிப்படுத்தும் இடங்களில் கலை மிக முக்கியமானது. செறிவு செய்யப்பாட்ட கலைகளின் உச்சத்தில் அது தன்னை நேர்த்தியாய் வெளிபடுத்துகிறது. உன்னத கலைவடிவத்தில் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் சொல்லிவிடக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த  அமைப்பு கூடி இருக்கும். அது வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இக்கலைவடிவங்கள் பல வேளைகளில் இச்சமூகத்திற்குள் இருந்து எழும்பி வருவது வழமையென்றாலும், சில சூழலின் நிமித்தம் அவ்விதம் அமைவதில்லை. ஏன் என்ற கேள்விக்கான பதிலை நாம் வரலாற்றில் தேடியபடி இருக்கவேண்டியதுதான். எனினும், உன்னத கலைஞர்கள் பல வேளைகளில் கலாச்சாரத்தையும் கடந்து அவ்விதம் உயர் படைப்புகள் படைக்க இயலும் என்பதும்  நிரூபணமாகியபடியேதான் இருக்கின்றன.

Melvina

நான் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு சிலை என்றால் மால்வினா கார்னெல் ஹாஃப்மான்(Malvina Cornell Hoffman) சமைத்த சிக்காகோவிலுள்ள, தேசிய வரலாற்று கள அருங்காட்சியகத்தில்  அமைந்திருக்கும் “கள்ளிறக்கும் தொழிலாளி”  சிலை தான் அது. மால்வினா 1885 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதி நியூ யார்க் நகரில் பிறந்தவர். அன்றைய நாட்களில் மிக அதிகமாக பேசப்பட்ட உன்னத கலைஞர். சற்றேரக்குறைய ஒரு கோடி ரூபாய் வரை தனது சிற்பங்களுக்காக அவர் பெற்றிருக்கிறார். ஒரு பெண் கலைஞர் உலகம் அதுவரை கண்டிராத முகங்களை ஒருசேர கொண்டுவத்தது ஒரு மாபெரும் சாதனை.  குரிப்பிடத்தகுந்த  104 சிலைகளை உலகின் பல்வேறு பகுதியில் உள்ள மனிதர்களின் வாழ்வியல் அடையாளத்துடன் அவர்   செய்து “மனித இனங்கள்” (“Races of Mankind”)என்ற தலைப்பில் காட்சியமைத்தார். 1933 ஆம் வருடம் காட்சிபடுத்தப்பட்ட இந்த சிலைகள் “நாகரீக உலகிற்கு” ஏற்புடையது அல்ல என எழுந்த விவாதங்களால் 1969ஆம் வருடம் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி வைக்கப்பட்டது. நமது நல்லூழ் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த சிற்பங்களில் கிட்டதட்ட சரி பாதியை “நம்மை நாமே நிதானித்தல் – மால்வினா ஹாஃப்மேனின் சிற்பங்கள் ஒரு மீட்டுருவாக்கம்” (“Looking at Ourselves: Rethinking the Sculptures of Malvina Hoffman,”)  என்ற தலைப்பில் மீண்டும் காட்சிபடுத்தியிருக்கின்றனர்.

இது எச்சூழலில் எந்த இடத்தில் உள்ள மாதிரியை பின்பற்றி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை இனிமேல் தான் தேடவேண்டும். மெல்வினா எழுதிய நேற்று தான் நாளை (Y) என்ற சுய வரலாற்று புத்தகம் ஒரு தீர்கதரிசன வார்த்தையாக காணப்படுகின்றது. சென்னை வரை அவர் பயணப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அந்த தேடுதல் ஒரு பெரும் கதையினை உள்ளடக்கி அமைதி காக்கின்றது. வாய்ப்பு கிடைத்தால் அந்த புத்தகத்தினை வாங்கி அவரை தொடர்வது ஒரு பெரனுபவமாக அமையும்.

“கள் இறக்குபவர்” (Toddy Tapper) வெண்கலச் சிலையின் புகைப்படம் மாத்திரம் பார்த்திருக்கும் நமக்கு அது கொடுக்கும் மன எழுச்சி அலாதியானது. ஒரு கலை ஞானி கண்டடைந்த அற்புத தருணமாக உருவெடுத்தது மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் வாழ்வில் உழைப்பின் பால் பெரு மோகம் கொண்டுள்ள மக்களின் பிரதிநிதியாக இச்சிலை இன்று நமக்கு கிடைக்கின்றது. அந்த வகையில் மிகவும் அபூர்வமான சிலை தான் இது. இச்சிலை கீழை நாட்டவரின் வாழ்வியலை மேற்குக்கு படம்பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியாக, மேற்குலகின் எதார்த்தவாத – நவீன ஒரு பங்களிப்பாக இருக்கையில், பனை சார்ந்து செயல்படும் எனக்கு இது பல்வேறு நினைவுகளை தட்டி எழுப்புகின்றது.

பனைத்தொழிலாளி தனது காலை நேர பணியினைத் துவங்குகையில் இதனை அச்சிற்பி தனது மனதிற்குள் உள்வாங்கியிருக்கலாம். காலை 9 மணிக்கு அலுவலகம் அல்லது 8 மணிக்குஆலயம் என வாழ்வின் நேரத்தினை வகுத்தவர்களுக்கு, இந்திய மனதின் அதிகாலமே எழு, சூரியன் உதிக்குமுன்னே எழுந்து தனது கடமையினைச் செய்ய காத்திருக்கும் ஒருவன் எவ்விதமான மனக்கிறக்கத்தை அளித்திருப்பான்.?

ஒரே மரம் மீண்டும் மீண்டும் ஏறவேண்டும் ஆனால் ஒவ்வொரு மரமும் தனித்தன்மை வாய்ந்தது. ஏறுகின்ற பனைத்தொழிலாளிக்கும் அந்த பனைக்கும் உள்ள பிணைப்பினை, இந்திய மனதில் ஆழ வேரோடியிருக்கும் இயற்கையோடுள்ள பிணைப்பை மெல்வினா எந்த அளவு ரசித்திருப்பார்கள்? கட்டியணைத்து ஏறும் அந்த காதல் கரங்களை, பிணைத்திருக்கும் கயிற்றை நுட்பமாக சித்தரிக்கையில் அந்க்ட உள்ளம் எவ்வளவு உவகை கொண்டிருக்கும். இயற்கையினை கட்டியணைப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்ட ஒரு சமூகம் மெல்வினாவின் கலை பார்வையில் சிக்கியது எதார்த்தமாக அல்ல என்றே நினைக்கின்றேன். அவர் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவையே. அக்கண்களிலேயே உலகின் உன்னத வடிவங்கள் அமைந்து வரவேண்டும் என்றிருந்திருக்கிறது.

 

இதைச் சொல்லுகையில் இப்படத்தில் உள்ள பனையேறும் முறை தென் மாவட்டத்தைச் சார்ந்தது அல்ல என்பது தெளிவாகிறது. தென் மாவட்டத்தில் ஒரு புராதனமான முறையே பின்பற்றப்படுகிறது. கைகளால் கட்டியணைத்து ஏறும் முறை அது. நெஞ்சை பனையின் மார்போடு முட்டி முயங்கி ஏறும் முறை அது. ஆனால் பிற இடங்களில் ஒரு சுற்று கயிற்றின் பிணைப்பால் ஏறுவதை நான் பார்த்திருக்கிறேன். இச்சிலை அவ்விதமானது. இதில் காணப்படும் மரமும் தென்னை போன்றே எனக்குத் தென்படுகிறது. என்றாலும் அவர் வைத்திருக்கும் குடுவைகள் அப்படியல்ல. அவை பதனீர் சீவும் பனையேறியின் அருவா பெட்டியே வைத்திருக்கிறார், கள் சீபுவருக்கு இத்தகைய அருவா பெட்டியின் தேவை இருப்பதில்லை. பதனீர் இறக்குபவர்களே சுண்ணாம்பு பெட்டியை வைக்கும்படியாக தென்னம் பாளையில் செய்த அருவா பெட்டியினை வைத்திருக்கிறார். மெல்வினா இரண்டு மரங்களையும் குழப்பிக்கொண்டாரா என தெரியவில்லை. அப்படியிருந்தால், வெளிநாட்டவர் மனதில் பனை என்பது ஒரே காட்சியை பதிக்கும் விளைவின் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு உண்மை உள்ளது தென்னமரத்திலிருந்தும் பதனீர் எடுக்க வாய்ப்பு உண்டு. அனால் இவை அனித்தும் தென் மாவட்டதிற்குரிய முறைமைகள் அல்ல.

தோள் கயிறு கட்டி பனையில் ஏறுபவர்களை நான் ஆந்திராவில் பார்த்திருக்கிறேன். அது எனது மனதில் அப்போதே ஒரு சிறு பொறியினைத் தட்டி விட்டது. இஸ்லாமியர்களுக்கும் பேரீச்சைக்கும் உள்ள தொடர்பு ஆந்திராவில் இவ்வித பழக்கம் ஏற்பட காரணமாயிற்றா? பேரீச்சை மரமானது பனையைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் வாழக்கூடியது, வறண்ட நிலத்தின் மரம், அதன் தண்டு பகுதி பனையைவிடவும் சொரசொரப்பு மிகுந்தது. அதில் ஏறுகின்ற நபருக்கு இவ்விதமான கயிற்றின் அவசியம் தேவைதான். மேலும் ஒன்று உண்டு, ஒட்டகம் மேய்த்தவர்கள் உபயோகித்த நீண்ட கயிறுகள் இப்பனை மரங்களில் ஏற பயன்பட்டதா அல்லது குதிரைகளை கட்டுப்படுத்தும் சவுக்குகள் இவ்விதம் உறுமாறியதா என்ற கேள்வி எனக்குள் குறுகுறுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கரூர் பகுதிகளில் இவ்விதம் பனை மரம் ஏறுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். கெட்டியான எருமைத்தோலினைக்கொண்டு இவ்விதமான கயிற்றினை செய்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.

கரூர் பகுதிகளில் கால்களுக்கான தோல் மற்றும் இன்ன பிற அமைப்புகளையும் தோலால் செய்யப்பட்டிருந்ததைப் பார்க்கையில், உள்வாங்கப்பட்ட ஒரு தொழில் நுட்பமாகவே எனக்கு அது தெரிகிறது. ஏனெனில், பனை மரங்களில் ஏறுபவர்கள் அணியும் திளாப்பு தென் மாவட்டங்களில் பனை நாரினால் செய்யப்பட்டு வந்தது, வட்ட வடிவமான கயிறு போன்ற வடிவிலான திளாப்பில் இரு கால்களையும் நுளைத்து மரத்தை கால்களால் கவ்விப் பிடிக்கையில் பனை ஏறுபவர்களுக்கு அது ஒரு பிடிப்பாக செயல்படுகிறது. பனையோடு இருப்பவர், பெரும்பாலும் பயன்படுத்துவது பனை சார்ந்த பொருட்களாகத்தானே இருக்கவேண்டும்?

தென் மாவட்டத்தில் பனை ஏறுகிறவர்கள். ஒரு மட்டையின் மேல் மடங்கி கீழ்னோக்கிப் பார்க்ட்து பாளை சீவுவது வழக்கம். கருக்கு நிறைத்த பகுதிகளை அதற்காக அவர்கள் வெட்டி வீசிவிடுவார்கள். இதே பேரீச்சையில் முட்களின் அளவுகள் அதிகம். அதன் உள்ளே நுழைவதும் கடினம். ஆகவே இவ்வித கயிற்றினைக் கட்டி அதன் பலத்தில் கீழே நின்றுகொண்டே அவர்களால் பதனீர் அல்லது கள் சேகரிக்க வாய்ப்பு வளமாக உள்ளது. அப்படியானால் முகலாயர்கள் வழங்கிய கொடையாகவே இதனை நாம் காணமுடியும்.

தென் மாவட்டத்தில் பனை ஏறுகிறவர்கள். ஒரு மட்டையின் மேல் மடங்கி கீழ்நோக்கிப் பார்த்து பாளை சீவுவது வழக்கம். கருக்கு நிறைந்த பகுதிகளை அதற்காக அவர்கள் வெட்டி வீசிவிடுவார்கள். இதே வேளையில், பேரீச்சையில் முட்களின் அளவுகள் அதிகம். அதன் உள்ளே நுழைவதும் கடினம். ஆகவே இவ்வித கயிற்றினைக் கட்டி அதன் பலத்தில் கீழே நின்றுகொண்டே அவர்களால் பதனீர் அல்லது கள் சேகரிக்க வாய்ப்பு வளமாக உள்ளது. அப்படியானால் முகலாயர்கள் வழங்கிய கொடையாகவே இதனை நாம் காணமுடியும்.

பனையோடு “தாலி” கட்டிக்கொண்டு வாழும் இவர்கள் வாழ்வு, உணர்வு ரீதியானது. இவ்வுணர்வுகள் பெருமளவில் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமல் போவதும் வேதனையானது. இயற்கையோடு மனிதன் “இணைந்து” வாழ்ந்தான் என்பதற்கான குறியீட்டு வடிவம் இது. இவ்விதமான இணைந்து வாழும் பனைத்தொழிலாளியைச் சுட்டும் ஒரு குறியீட்டு அடையாளம் கூட தமிழகத்தில் இல்லை. இச்சுழலிலேயே நமது ஆலயங்களில் உள்ள சிலைகளின் முக்கியத்துவம்  தெரியவருகிறது. காலத்தில் நிலைநிற்கும் பலவற்றை நமது முன்னோர் நமக்கு கொடையாக அளித்துச் சென்றிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் ஒரு பனை தொழிலாளியின் சிலை நிறுவப்படுவது காலத்தின் கட்டாயம். உழைப்பாளர் சிலை என சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் சிலைக்கு சற்றும் குறைவுபடாத உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கும் பனைத்தொழிலாளர்களுக்கு முதல் சிலை யார் வைக்கப்போகிறார்கள் என்பது தான் நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு நமது பங்களிப்பாக நாம் செய்யகூடுவது என்ன?

27545582_10215918247617205_4465545889857136594_n

குமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி என்ற பகுதியில் இன்னும் சிறந்த முறையில் கல் தச்சு செய்யும் அனேகர் உண்டு. அவர்களின் உதவியோடு சிறந்த ஒரு கற்சிலை அமைக்கலாம். அல்லது கோட்டார் பகுதியில் வாழும் வெண்கல சிலை சமைப்பவர்களைக் கொண்டு நல்ல வெண்கல சிலை ஒன்றை அமைத்து முக்கடலும் சங்கமிக்கும் குமரியிலோ அல்லது நாகர்கோவிலுக்கு நுழைவாயிலான பகுதிகளிலோ நிறுவலாம். ஏன் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பனைத் தொழிலாளர்களின் பிரதி எடுத்து இவ்விதம் நிறுவுவது சிறப்பானது என்று தோன்றுகின்றது. பனையினையோ பனைத்தொழிலாளர்களையோ நாம் இதுவரை காப்பாற்றவில்லை, அவர்கள் நல்வாழ்விற்காக எந்த ஒரு துரும்பையும் கிள்ளிபோடவில்லை… நினைவுகளையாவது காப்பாற்றி தொலைப்போம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

கீழப்பெருவிளை, குமரி மாவட்டம்

malargodson@gmail.com

9080250653


%d bloggers like this: