பனை மரங்கள் திரளாய் இருந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் நாம், நமது முன்னோர்கள் பனை மரங்கள் எனும் கடவுளின் ஈவையே நம்பி இருந்தனர். அன்றாட உணவும், வாழ்வும், ஆன்மீகமும் பனையோடே தொடர்புடையாதாகவே நமக்கு இருந்தது. நமது வாழ்வில், பனையா பணமா என்ற ஒரு சூழலை நாம் சந்தித்தபோது பணமே வாழ்வு என பனையை கைகழுவினோம். பனையோடு சேர்த்து பனையேறி பாதாளத்துக்கு தள்ளப்பட்டார். இதற்கு நாம் அனைவருமே சாட்சிகள். அப்படியிருக்க பனையும் பனையேறியும் உயிர்த்தெழும் அதிசயத்தை தேவன் செயல்படுத்துகிறார் என்பதையும் கண்டு சாட்சியளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. படைப்பின் மீட்சியில் நாம் இணைந்து பங்காற்றுகிறவர்கள் என்பதை உணர்த்தும் நல்ல ஒரு விடியலின் சாட்சி இதுவே.
இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு விடுதலை பெற்று செல்லுகின்ற சூழலை பஸ்கா விழாவாக கொண்டாடிவருகிறார்கள். ஒரு வயது நிரம்பிய ஆட்டுகுட்டியை அடித்து குடும்பமாக புசித்த நிகழ்வு ஒரு சிறந்த குறியீடாக அவர்கள் வாழ்வில் அமைந்தது. அதாவது ஆடுகளை மேய்பவர்கள் எகிப்திலே அடிமைகளாக மாறிவிடும் சூழலில், கர்த்தர் மோசேயை அவர்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்துகிறார். மோசே ஆடு மேய்க்கும் அந்த மக்களிடம், கூறிய விஷயங்கள் என்னவாக இருக்கும் என நாம் யூகிக்க அனேக தரவுகள் திருமறையில் காணக்கிடைக்கின்றது. குறிப்பாக முற்பிதாக்கள் வாழ்வில் ஆடு என்பது உணவு, ஆனால் அடிமைத்தனத்தில் நம்மால் அந்த உணவினைக்கூட உண்ண இயலவில்லை. நாம் இந்த உணவினை உண்ண கர்த்தர் நமக்கு அருளியிருக்கிறார். ஆகவே நாம் வளர்க்கும் ஆடுகளை நாம் புசிக்கும் உரிமை நமக்கு உண்டு, அதை தைரியமாக செய்யுங்கள் மற்றவைகளை கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார். இதனை அவர் சில சடங்கு சார்ந்த வழிமுறைகளைக் கொண்டே விளக்கியிருக்கிறார். ஆகவே அவர்கள் விடுதலை பெற ஏற்ற ஒரு சூழல் அங்கே அமைகிறது. இஸ்ரவேலர் அடிமைத்தனத்தை விட்டு புறப்படுகிறார்கள்.
நேரடியாக இறைவனோடு இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு தொடர்பு இல்லாததால், மோசே கடவுளிடம் “கேட்டு” அவர்கள் செய்யவேண்டியவைகளை அறிவுறுத்துகிறார். கடவுளோடு நேரடி தொடர்பில்லாத இந்த மக்கள் கடவுளையோ அல்லது மோசேயையோ அரைகுறை மனதோடுதான் நம்புகிறார்கள் என்பதனையே “அவர்கள் மோசேயை நோக்கி, ″ ″ எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! எங்களை விட்டுவிடும்: நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம் என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்″ ″ என்றனர்”(விடுதலைப்பயணம் 14: 11,12) கடவுளோடு நமக்கு உறவு இல்லாதபோது நாம் கடவுளின் அருட்செயல்களையோ, நம்மை வழிநடத்தும் கடவுளின் அருட்தொண்டர்களையோ புரிந்துகொள்ள இயலாமல் போகின்றது. பனையினை நமக்கு உணவும் வாழ்வுமாக வழங்கிய கடவுள் மீது நம்பிக்கை இழப்பதே ஒரு மரணம் தான். உயித்தெழுதல் மேல் நம்பிக்கை கொள்ள கடவுளோடு நமக்கு உறவு அவசியம் என்பதனை செங்கடலைக் கடக்கும் சூழல் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
உயிர்த்தெழுதல் மேல் நம்பிக்கையற்றவர்கள் அனேகம் உண்டு. திருமறையில் கூட உயிர்த்தெழுதல் மேல் நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் குறித்து நாம் காண்கிறோம். “சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்”. (திருதூதர்பணிகள் 23: 8) உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,( லூக்கா 20: 27) இன்னும் பல பகுதிகளில் இவர்களை நாம் காணலாம். இன்றும் நம்மிடையே வாழுகின்ற சிலர் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள் உண்டு. இவ்வித நபிக்கை உள்ளோர்களுக்கு இயேசு பதில் அளித்திருக்கிறார். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, “ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள் யாக்கோபின் கடவுள்” என்று கூறியிருக்கிறார்.அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார். ( லூக்கா 20: 37, 38) ஆகவே உயிர்த்தெழுதல் குறித்த ஒரு புரிதலை இயேசு தாம் வாழும் காலத்திலேயே நமக்கு கொடுத்திருக்கிறார். அவரின் சீடர்களில் பலர் இதனை உணராதிருந்ததும் உண்டு. நாம் அப்படி இருக்கலாகாது.
கொரிந்து பட்டணம் ஒரு துறைமுகப்பகுதி, பணம் கொழிக்கும் இடம். கொரிந்தியரைப் போல் வாழ்வது என்பது பாவ வாழ்வை குறிப்பிடும் சொற்றொடர். பணமே இங்கு அனைத்தையும் முடிவு செய்யும் ஒன்றாயிருக்கிறது. பவுல் தனது ஊழிய பயணத்தில் புதிய திருச்சபையினை இங்கு நிறுவுகிறார். இத்திருச்சபையினருக்கு அவர் தன்னை வெளிப்படுத்தும் முகமாகவும், இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி கூறும் விதமாகவும் இப்பகுதியில் அவர் விளக்குகிறார். இஸ்ரவேலர்களுக்குள் பெண்களின் சாட்சி செல்லாதிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய இத்திருமறைப்பகுதியில், கேபா எனப்பட்ட பேதுருவுக்கு ஆண்டவர் தன்னை முதலில் வெளிப்படுத்தினார் எனவும், கடைசியாக தனக்கும் ஆண்டவர் காட்சியளித்தார் எனவும் கூறுகிறார். பவுலின் சாட்சி மிகவும் முக்கியத்துவமானது, ஏனென்றால் அதுவரை இயேசுவுடன் இருந்தவர்கள் மட்டுமே அவரின் உயிர்த்தெழுதலை கண்டிருந்தனர். முதன் முதலாக கிறிஸ்துவுக்கு விரோதமாக நின்றிருந்த ஒருவருக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தினார் என்பது உயிர்தெழுதலின் புரிதலை விரிவுபடுத்தும் ஒன்றாக அமைந்தது. அதுவரை நம்பிக்கை சார்ந்து மட்டுமே காணப்பட்ட உயிர்த்தெழுதல், அந்நம்பிக்கைக்கு எதிராக இருந்த ஒருவர் வாழ்வில் கூட நேரடியாக இடைபடமுடியும் என்பதை பவுல் தனக்கு நேர்ந்த அனுபவம் மூலமாக வெளிப்படுத்துகிறார்.
இந்த வரிசையில் தான் நாம் இயேசுவின் உயிர்தெழுதல் நிகழ்வினை அருகில் நின்று காணும் ஒரு வாய்ப்பினைப் பெற்ற மரியாளைக் காண்கிறோம். அந்த நிகழ்வு யோவான் நற்செய்தி நூலில் காணப்படுகிறது. “மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைப் பார்த்தேன்” என்று சொன்னாள். (யோவான் 20: 18) இத்துணை அருகில் நின்று ஒருவர் இயேசுவின் உயிர்தெழுதலை அவரின் சீடர்களுக்கும் முந்தி காண்பது எப்படி சாத்தியமானது? மரியாள் ஆண்டவரை மிகவும் நேசித்தாள், அவரின் ஊழியத்தில் உடன் நின்றாள். அவரின் மரணத்தில் உடன் நின்றாள். அவரின் கல்லறைக்கு முதலில் சென்றவளும் அவளே, அவரைக் காணாமல் அந்த இடத்திலிருந்து நகர மாட்டேன் என்ற உறுதியுடன் அவள் அங்கே நிற்பதைக் நாம் காண முடிகிறது. இந்த உறுதி நமக்கு இன்று தேவையாக இருக்கிறது. உலகம் செல்லும் திசையில் செல்லாமல், இயேசுவை நோக்கியே நகரும் மரியாளைத் தேடி உயிர்த்தெழுந்த இயேசு வருகிறார். ஆகவே தான் மரியாளுக்கு வேறு எவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பாகிய சீடருக்கு நற்செய்தி கூறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
நாம் வாழும் சூழலில் உயிர்த்தெழுதலை வைத்துப் பார்க்கும் கடமை நமக்கு உண்டு. ஆண்டவர் வாழ்வளிப்பவர். நமது வாழ்விற்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். நாம் அழியா வாழ்வு பெற அவர் திருவுளம் கொண்டிருக்கிறார். நமது பகுதிகளில் பனை மரங்களை வாழ்வுதரும் மரமாக அவர் கொடுத்து நம்மை பாதுகாத்தார். பனை ஏறுபவர்களே ஆண்டவரின் தூதுவர்களாக நமக்கு வானத்திலிருந்து இறங்கிய அப்பமாகிய மன்னாவை கொடுத்து வந்தனர். நாம் ஆண்டவர் அருளிய அந்த அருட்கொடையாம் பனை மரங்களையும் அதன் பணியாளர்களையும் கொலைசெய்தவர்களாக மாறிப்போனோம். நமது தெரிவு பல வேளைகளில் அழிந்து போகும் உலக பொருளுக்கானதாகவே இருக்கிறது. கடவுளின் ஆசிகளை உதறி மனிதர் வழங்கும் ஆசிகளுக்கு பின்னே போவதால் நம்மால் உயிர்த்த இயேசுவை தரிசிக்க இயலவில்லை. பல வேளைகளில் நமது நம்பிக்கை தடுமாறுகிறது. அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை நம்மை உயிர்ப்பிக்க வேண்டும். இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் வந்த கடவுளின் செயல் நம்மில் துளிர்விடவேண்டும். செத்த வாழ்வை தொடருவதை விடுத்து நம்பிக்கை அழிக்கும் இறை வாழ்வு நோக்கி நாம் பயணிக்க வேண்டும். புதிய உதயம் மலரும் ஈஸ்டர் நிகழ்வு நமது மண்ணிலிருந்து துளிர்விடட்டும். அதுவே நமது சாட்சியாக இருக்கவேண்டும். சீடர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்த இயேசுவையே முன்னிறுத்தினார்.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
தேவிகோடு, குமரி மாவட்டம்
E-mail: malargodson@gmail.com
Mobile: 9080250653
You must be logged in to post a comment.