Archive for மே, 2018

பனை விதை கொள்ளையர்கள்

மே 18, 2018

DSC05530.JPG

கிழங்குக்காக ஊன்றப்பட்டிருக்கும் பனை விதைகள்

சில விஷயங்களை பதிவு செய்வது என்பது தற்கொலைக்கு சமம். “எப்படி புரிந்துகொள்ள வேண்டும்” என்ற உறுதியுடன் வாசிப்பவர்கள் கைகளில் போய் சேர்ந்துவிட்டால் நமது முயற்சிகள் யாவும் வீணாகிவிடும். என்றாலும் எனது அறிதலில் வந்தவைகளை உடனுக்குடன் பதிவிடுவது வழக்கமானபடியால் இதை சொல்லிவிடுகிறேன்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பனை விதைகள் வேண்டி பியுஷ் மனுஷ் என்னை தொடர்பு கொண்டார். அப்பொழுது லாரிகளில் டன் கணக்கில் பனை விதைகள் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக எடுத்துச் செல்லப்படுவதை குறிப்பிட்டார். இப்படி ஒரு காரியத்தை நான் கேள்விப்படுவது இதுவே முதன் முறை. இவைகளை என் மனதில் இருத்திக்கொண்டேன்.

பனங்கொட்டைகளை விதைக்கையில் அவைகளுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அதன் எடையை உணர்ந்தே குறிப்பிடுவார்கள். உயிர் தன்மை இல்லாத பனை விதைகளை “காஞ்ச பனங்கொட்டை”, ஊமாங்கொட்டை அல்லது ஊமகொட்டை என்ற பெயர்களில் அழைப்பார்கள். இது ஒரு சிறந்த எரிபொருள். இரண்டு வகைகளில் இவைகளை சேகரிப்பார்கள், ஒன்று காய்ந்து போன பனை விதைகள் உயிரற்றுப்போனால் அவைகளை எரிப்பதற்கு பயன்படுத்துவார்கள், மற்றொரு முறை என்னவென்றால், பனங்கிழங்குகளை அறுவடை செய்தபின்பு எஞ்சியிருக்கின்ற கொட்டைகளை எடுத்து எரிப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஒரு கிராமம் இவ்வகையில் செயல்படும்போது அது தனக்கான எரிபொருளினை மரங்களை வெட்டாமல் எடுத்துக்கொள்ளுகிறது என புரிந்து கொள்ள இயலும். இது மிகச் சரியான ஒரு சமூக – இயற்கை அமைப்பு. கிராமத்தினர் தங்கள் தேவைக்கென  பழங்களையோ கிழங்குகளையோ அல்லது விறகுகளையோ தெரிந்துகொள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

இன்று காலை பனை விதைகளை சேகரிக்கும்படியாய் சென்ற எனது நண்பன் லாரிகளில் பனை விதைகளை ஏற்றிச் செல்லும் காரியங்களைக் குரித்து என்னிடம் விரிவாக பேசினார். சேலம் பகுதிகளில் விதைக்காக பனம்பழங்களை சேகரிக்க தடை இருப்பதாகவும், அதனை சேகரிக்க பனை சார்ந்த மக்களே ஈடுபடுத்தப்படுவதும், அவர்களுக்கு அதற்கென சிறிய தொகைகளே கொடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். ஆனால் நாம் விதைகளை வாங்கவேண்டும் என்று சொன்னால் ஒரு விதைக்கு ரூபாய் 2 – 5 வரை ஆகும் என்றும் கூறினார். இந்த விதைகள் யாவும் செங்கல் சூளைகளில் எரிக்க எடுத்துச் செல்லப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வித செய்திகள் உறுதிப்படுந் தோறும், நாம் இவற்றிற்கெதிராய் தீவிரமாக இயங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். இது பனை மீதான மற்றோரு அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. பனை மரங்களை அழித்தொழிக்கும் ஈனச் செயல் இது.

DSC05531.JPG

ஊமைகொட்டைகள்

ஒவ்வொன்றாக பனை விதைகளை சேகரிக்கும் ஆர்வலர்கள் தமிழகமெங்கும் உருவாகிவரும் காலம் இது. பனை விதை சேகரிப்பின்போது இதனால் பல தடைகள் இவர்களுக்கு வரலாம். இலவசமாக சேகரித்து கொடுக்கும் காலம் போய் இன்று விதைக்கு ரூ1/- என்ற கணக்கில் வந்து நிற்கிறது. அது தவிர்த்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் செலவும் அதிகம். இவ்விதம் பனை விதைப்பின் செலவுகளை நாம் அதிகரித்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.

பனை விதைகள் சேகரிப்பின் நோக்கம் என்பது இருமுனை கொண்டது. ஒன்று உணவு தேவைக்காக மற்றொன்று விதை பரப்புதல். குறிப்பாக பனம் பழங்கள் இன்று விற்பனைக்கான பொருளாக இல்லை. இவைகள் விற்பனைக்கு வரவேண்டு. அவைகளை  உண்டு வீசியெறியும் விதைகள் முளைத்து விதை பரம்பல் நிகழ வேண்டும். அல்லது சேகரிக்கப்பட்ட விதைகள் சீராக பாவப்பட்டு கிழங்குகளாக மாறி உணவளிக்கவேண்டு. அவ்விதம் பாவிவிடப்பட்டிருக்கும் இடங்களில் தப்பிவளரும் பனைகளும் நாம் பெறும் ஆசிகளே. இவைகளுக்கு மேல் எஞ்சி இருப்பவைகள் தான் பனை நடுகைக்கானவைகள். அவைகளை நாம் பொறுப்புணர்வுடன் கையாளவேண்டும். இவ்விதம் நேரடியாக செங்கல் சூளைக்குள் நுழைத்துவிடுவது சரியாயிராது. அது நமது எதிர்காலத்தையே இல்லாமல் ஆக்கிவிடும்.

இவைகளை எதிர்கொள்ள ஒரே வழி தான் நமக்கு உள்ளது பனம் பழங்களை உண்ணும்படி தமிழ் சமூகத்தை பயிற்றுவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பனம்பழங்கள் கிடைக்கின்ற நாட்களில் வாரத்திற்கு இரு முறையாவது பனம்பழங்களை உண்டு தங்கள் உடல் நலனை பேணிக்கொள்வது நல்லது. பனம் பழத்தில் இருக்கும் தங்க நிறம் நமது உடலில் ஒளிவீசும்படியாய் அதனை உட்கொள்வது நல்லது. பல்வேறு கனிமங்கள் நிறைந்த பனம் பழம் புற்று நோய் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றிருக்கிறது. சற்றும் புளிப்பு சுவையே இல்லாத பழம் இது. இவைகள் கடைகளில் விற்பனைக்கு வருமென்றால். கிலோ 10 ரூபாய்க்கு நல்ல பழங்கள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிராமத்தினருக்கு கிடைக்கும்.

ஒருபுறம் பனையை கரும்பு உற்பத்தியைக்கொண்டு அழிக்கிறார்கள், மற்றொருபுறம் வளர்ச்சி என்ற பெயரில் சாலைகள் மற்றும் கட்டுமானக்களுக்காக ஆழிக்கிறார்கள், பன்னாட்டு உணவு ஊடுருவலால் பனைமரங்கள் வழங்கு சுவையினை இழந்துவருகிறோம். உள்ளூரில் நுங்கு சிறந்தது எனச் சொல்லி அடுத்த தலைமுறை பனை தளிர்க்க முடியாமல் மாற்றிவிட்டோம். ஒருங்கிணைந்து போராடுவதற்கே இப்போது நாம் சேகரிக்கும் விதைகள் ஆயுதமாகவேண்டும்.

சேலம் அருகில் இருக்கிறவர்கள், பனங்கொட்டை விற்பனை செய்கிறவர்களை கண்காணியுங்கள். நமது பனை மரங்கள் அழிவதற்கு முக்கிய காரணமே செங்கல் சூளைகள் தான். இன்று அதன் தலைமுறைகளையும் அழிக்க அவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளை நாம் அனுமதிக்கமாட்டோம் என்பதை உரக்கச் சொல்லுங்கள். வீழ்ந்த விதைகள் அனைத்து முளைப்பதற்கே, சிசு கொலை செய்யும் இக்கயவர்களை நாம் நம் சமூகத்திற்கு அடையாளம் காட்டுவோம்.

 

பணியாளர் காட்சன் சாமுவேல்

தேவிகோடு

தொடர்பு கொள்ள: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

நுங்கு – முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

மே 13, 2018

African

ஆப்பிரிக்க பனம்பழம்

நுங்கு பனை மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு சுவையான உணவு. கோடைக் காலத்திற்கு ஏற்ற இயற்கை உணவு மாத்திரம் அல்ல மருந்தாகவும் பயன்படும் . நுங்கினை உண்பதற்கு கைவிரல் நகத்தினை நுழைத்து நுங்கெடுப்பதே குமரி மாவட்டத்தில் தொன்று தொட்டு உள்ள வழக்கம். ஒரு கட்டத்திற்கு மேல் நொங்கினை நகங்களால் நாம் எடுத்துக்கொண்டிருக்கக் முடியாது. நகம் வலிக்கும். ஆகவே அத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என இயற்கை நமக்கு விதித்திருக்கிறது. “(நகம்) நோகாமல் நொங்கெடுக்கிறவர்கள்” என்பது குமரியில் வழங்கப்பட்டுவரும் வசை சொல் கூட. இன்று குமரி மாவட்டத்தில் விற்கப்படும் நுங்கு அனைத்தும் “கரண்டிகளாலே” உண்ணப்படுகின்றன. நாம் உண்ணும் உணவு நமது கரத்தில் படவில்லையென்றால் நாம் அந்த உணவை விட்டு அன்னியமாகிவிட்டோம் என்பது உறுதி.
1. குமரி மாவட்டத்தில் பனைகள் அழிவதற்கு இங்குள்ள நுங்கு மாஃபியா முக்கிய காரணம். அனைத்து சாலைகளிலும் நுங்கினை விற்பனை செய்யும்படி கடைகள் அமைத்து, பனம் பழம் என்கின்ற பனை மரத்தின் மற்றொரு உணவினை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.
2. காஷ்மீரிலிருந்து நமக்கு ஆப்பிள் வருகிறது ஆனால் நமது பனம் பழம் நமது சந்தைகளில் கூட கிடைப்பது இல்லை. இந்நிலை மாறவேண்டும்.
3. குமரி மாவட்டம் கடந்த 30 வருடங்களில் மட்டும் சுமார் 25 லட்சம் பனை மரங்களை இழந்திருக்கிறது. இந்த் இழப்பினை பனம் பழங்களைக் கொடுத்து பனை மரமே இலகுவில் ஈடு செய்திருக்கும். ஆனால் நூங்கு மீது உள்ள தீராத மோகத்தால், இப்ப்பேரிழப்பு நேரிட்டிருக்கிறது.
4. நுங்கு எடுப்பதற்காக வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ மட்டுமே பனை ஏறப்படுகிறது. இது பனையேறிகளின் பனையோடுள்ள உறவை அழிக்கிறது. விளைவாக பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், பனங்கிழங்கு, தவண் போன்ற எண்ணிறந்த உணவுகள் நமக்கு கிடைக்காமல் போய்விடுகின்றது.
5. நுங்கு உண்ணவேண்டும் என்பவர்கள், பனையேறியினை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். வியாபாரிகளை ஒருபோதும் நாடாதீர்கள். பனையேறியினை நீங்கள் நேரடியாக தொடர்புகொள்ளும்போது, அவர் சரியான முதிர்ச்சியில் இருக்கும் நுங்குகளையே உங்களுக்கு எடுத்துக்கொடுப்பார். கடையில் வருவதுபோன்ற நாட்பட்ட நுங்குகள் வேண்டாமே. மேலும் பனையேறி தனது தொழிலினை தொடர்ந்து செய்ய உள்ளூர் மக்கள் ஊக்கமளித்தது போலும் இது இருக்கும்.
6. புதிதாக விழுந்த பனம்பழங்களை சேகரிப்பது இருவகையில் நமக்கு பயனளிக்கும்
அ. பனம் பழத்தினை சுட்டோ அவித்தோ உண்ணலாம்
ஆ. மீந்திருக்கும் பனங்கொட்டைகளை விதைத்து கிழங்காக்கி உண்ணலாம். இவ்வகையில் நமக்கு தவணும் உபரியாக கிடைக்கும். சில நேரங்களில் இவைகளில் சில தப்பிப்பிழைத்து நமக்கு மரமாக வளர்ந்துவிடும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.
7. பனம்பழத்திலிருந்து மென்பானம், காப்பி, பணியாரம், ஜாம், அல்வா, பணாட்டு போன்றவைகள் தயாரிப்பது என்பதனை கற்றுக்கொண்டால் நமது உடலுக்குத் தேவையான இனிப்பின் ஒரு பகுதியை பனம் பழங்கள் வழங்க வல்லன.
8. மிகுதியாக இருக்கும் பனம் பழங்களை தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிக்கலாம். சோப்பிற்கு மாற்றாக போர்சூழலில் இலங்கை மக்கள் இவைகளையே பயன்படுத்தினார்கள்.
9. “வகுத்தவன் வல்லவனானால் வறுத்த முத்தும் முழைக்கும் என்பது பழமொழி”. அதாவது பனம் பழங்களை நாம் சுட்டோ அவித்தோ உண்ட பின்னரும் கூட அதன் விதைகள் முளைக்கும் தன்மையுடன் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். பனை விதைகளின் ஓடுகள் அத்தனை உறுதியானவை. வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் தன்மை அதற்கு உண்டு.
10. நுங்கினைக் காரணம் காட்டி ஆண் பனை மரங்களும் அழிக்கப்படுகின்றது. இவைகள் ஆண் மற்றும் பெண் பனைமரங்களுக்கிடையில் நடைபெறும் மகரந்த சேர்கையினை தடுத்துவிடுகின்றது.

பணியாளர். காட்சன் சாமுவேல்

Mobile: 9080250653

E-mail: malargodson@gmail.com


%d bloggers like this: