Archive for ஒக்ரோபர், 2018

கிறிஸ்மஸ் பனை-மரம்

ஒக்ரோபர் 31, 2018

 

கிறிஸ்மஸ் பண்டிகை வணிகமயமாகிப்போனது துயரமானது என்றால், அந்த கொண்டாட்டம் நெகிழி சார்ந்த ஒன்றாக மாறிப்போனது அவலத்தின் உச்சம். கிறிஸ்துவின் எளிமையைக் கொண்டாடும் ஒன்றாக இருந்த கிறிஸ்மஸ் வெகுவாக மாறி ஆடம்பரத்தை மையப்படுத்தும் விழாவாக வலுப்பெற்றிருக்கிறது. எளியவர்களை புறக்கணித்துவிட்டு பரிசுகள் அளிக்கும் பிரபுக்களின் மன நிலையோடு மகிழ்வுறும் கிறிஸ்தவர்களே இன்று அதிகம். இவ்விதமான நிலவுடைமை சிந்தனைகளிலிருந்து மாறி, ஒரு மாற்று சிந்தனை நோக்கி நமது பயணத்தை அமைக்க இந்த கிறிஸ்மஸ் நாளில் திருச்சபையாக நாம் அழைக்கப்படுகிறோம்.

Christmas tree

மத்தேயு இயேசுவின் பிறப்பைக் குறித்து எழுதும்போது அவரின் மூதாதையர்களின் பெயர்களை குறிப்பிட்டுவிட்டு, இயேசுவின் பிறப்பை முன்வைக்கிறார். அப்பொழுது அவர் ஏசாயாவின் கூற்றினை, எடுத்தாள்கிறார். “ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்” என்று பெயரிடுவார். தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.” (ஏசாயா 7: 14 – 15 திருவிவிலியம்)

கிறிஸ்மஸ் காலங்களில் கிறிஸ்மஸ் மரத்தினை முன்னிறுத்துவது ஒரு முக்கிய மரபாக இருக்கிறது.  இயற்கையின் அங்கமான மரங்கள் இன்று செயற்கை வடிவில் வணிக பொருளாக நமது வீடுகளையும் திருச்சபையையும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. இவ்விதமான அலங்கரிப்புகளை கடவுள் விரும்புவாரா? ஏசாயா தீர்க்கரின் கூற்றின்படி அவர் இவைகளை விரும்புகிறவர் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ” உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்துபோனேன்” (ஏசாயா 1: 14, திருவிவிலியம்) கிறிஸ்மஸ் காலங்களில் இம்மரபினை ஏற்றிருக்கும் நாம், இன்று திருச்சபையாக,  உண்மையான மரங்களை நடுவோமாகில், எத்துணை அர்த்தம் பொதிந்த கிறிஸ்மஸ் விழாவாக, கொண்டாட்டமாக அவை அமையும்?

கிறிஸ்மஸ் காலங்களில் நாம் முன்வைக்கும் பிளாஸ்டிக் மரங்களுக்கு மாற்றாக நமக்கு முன்னால் கடவுள் படைத்தளித்த பனை மரம் கெம்பீரமாக எழுந்து நிற்கின்றது. அது நமது வாழ்விற்கு தேவையான அனைத்து பரிசுகளுடனும் நமக்காக காத்திருக்கிறது. அவைகளுக்கு எதிராக நாம் வீசும் கோடாரிகளை கண்டும் கரம் விரித்தபடி அமைதியாக நம்மை பார்த்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் அடிநாதமாக இருந்தவைகள் அப்புறபடுத்துவது நமக்கு வாடிக்கையாகிப் போனது. பெற்றோரை, முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் இழிசெயலுக்கு ஒப்பானது அல்லவா இது? வருகை புரிந்த இயேசு பாலகன், காணவேண்டிய மரங்களை  இல்லாமல் ஆக்கிவிட்டு நாம் செய்யும் பிளாஸ்டிக் அலங்காரங்கள் அவரை முகம் கோணவே செய்யும்.

கடவுள் நமக்கு ஈவாக தந்த மரம் பனைமரம். வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், நம்மோடு உடன் நின்று நமக்கு தோள் கொடுத்த மரம் அது. கடவுளின் கொடை என்றால் என்ன என்பதனை முழுமையாக வெளிப்படுத்தும் மரம் பனை மரம். கனிகளைத் தேடிவரும் ஆண்டவருக்கு பூக்கவோ காய்க்கவோ செய்யாத உயிரற்ற பிளாஸ்டிக் கிறிஸ்மஸ் மரம் எவ்விதமான உணர்வைத் தரும்? இயற்கையோடு இணைந்து வாழும்படியாக தானே ஏதேன் தோட்டத்தில் அழகிய மரங்கள் நடுவே மனுக்குலத்தை இறைவன் படைத்தார். படைத்த ஆண்டவர், தனது வருகை பிளாஸ்டிக் மரங்களின் நடுவே இருந்தால் கவலை கொள்ள மாட்டாரா? இழந்து போனதை தேடவும் மீட்கவும் வந்த ஆண்டவர் பனை மரங்கள் இழந்து நிற்கும் சூழலில் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

கிறிஸ்மஸ் காலங்களில் பனை மரத்தினை எண்ணுவது வெகு பொருத்தமானது.  வானத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் அப்பத்தை நினைப்பூட்டும் சிறந்த குறியீடு பனை மரம் தான். தன்னையே உணவாக அளித்த ஆண்டவர் தனது வருகையினை முழுமையான அற்பணிப்பு கொண்ட பனைமரத்துடன் இணைத்துக்கொள்ளுவதையே விரும்புவார்.  சர்வதேச பொருளியல் சுரண்டல்களிலிருந்து நம்மை மீட்கும் மரம் இதுதான். நமது ஆன்மீக வாழ்வில் ஏழையோடு ஏழையாய் தன்னை அடையாளப்படுத்திய இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு நல்கும் மரம் இது. நெகிழி இல்லா கொண்டாட்டத்தை முன்னெடுக்கையில் வரமாக வந்து நிற்கும் மரம், பனை மரம் தான். நாம் இறைஞ்சி கேட்பவை அனைத்தும் பெற்றுக்கொள்ளும் அருட்கொடை நிறைந்த மரம் கற்பக மரம் தான். அன்னையாக அமுதூட்டும் இம்மரத்தினை அன்றி பாலகனாய் பிறந்த இயேசுவுக்கு பிடித்தமான மரம் வேறு என்ன இருக்க முடியும்?

எண்ணிப்பார்க்கையில், கடந்த 25 வருடங்களில் குமரி மாவட்டத்தில் மட்டும் 25 இலட்சம் பனை மரங்களை நாம் பல்வேறு காரணங்களை காண்பித்து வெட்டித்தள்ளியிருக்கிறோம். எஞ்சியிருக்கும் பனைமரங்களையும் பராமரிக்கும் திறமைகள் அற்று இருக்கிறோம். கடவுள் தந்த ஈவுகளை எளிதாக எடுத்துக்கொள்ளுவது நமக்கோ நமது சந்ததிகளுக்கோ நல்லது அல்ல. உயிருள்ள மரங்களை கொலைசெய்துவிட்டு உயிரற்ற மரங்களை காட்சிபடுத்துவதில் உள்ள இறையியல் தான் என்ன?  கடவுள் நமக்கு தந்த தாலந்துகள் குறித்து அவர் நம்மிடம் கணக்கு கேட்பார். நாம் இழந்த பனை ஏறும் தாலத்துகள் குறித்து எவ்விதம் கணக்கு ஒப்புவிக்க போகிறோம்?  எளியவராகவும் வறியவராகவும் வந்த இயேசு, பனையேறிகள் அப்புறப்படுத்தப்பட்ட சமூகத்தில் எப்படி நிலை கொள்வார்? குருத்தோலைகள் கொண்டு நாம் செய்த அலங்காரங்கள் யாவும் மறைந்து வணிக பொருட்களுக்கே முக்கியத்துவம் தரும் மனநிலைக் குறித்து ஆண்டவரிடம் நாம் சொல்லப்போகும் சமாதானம் என்ன? ஓக்கி புயலில் நாம் சந்தித்த இழப்புகளை பனைமரம் பெருமளவில் குறைத்திருக்கும் என்பதை உணர்ந்தும் நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மை நாடிவரும் கடவுள் ஏமாற்றம் அடைவார்.

வறட்சி, புயல், பஞ்சம், வறுமை போன்ற அத்துணை இடர்களிலும் நமது வாழ்வில் உற்ற துணையாக, தாயாக, பிரியா நட்புறவோடு இருந்த மரம் பனை. இம்மரம் குறித்த நமது பொருளியல் புரிதலோ, சமூகவியல் புரிதலோ, ஆன்மீக புரிதலோ, வரலாற்று புரிதலோ, சூழியல் புரிதலோ இன்னும் தவழும் பருவத்தையே தாண்டவில்லை. ஒருவகையில் நாம் இறைவன் நம்மோடிருக்கிறார் எனும் பதத்தையே சரிவர புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயப்பாடு எழுவதை தவிர்க்க இயலவில்லை.

இவ்வாண்டில் நாம் ஒரு தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும். செயற்கை கிறிஸ்மஸ் மரங்களை நம்மைவிட்டு விலக்கி புறக்கணிப்போம். பனை மரங்களை தமிழ் நாட்டின் கிறிஸ்மஸ் மரமாக பறைசாற்றுவோம். உலகிலுள்ள பிற சமூகத்தினருக்கும் பனை மரத்தின் முக்கியத்துவத்தை ஆண்டவரின் வருகையை ஒட்டி அறிவிப்போம். உயிருள்ள பனை மரங்களில் நமது அழகிய அலங்காரங்களைச் செய்து ஆண்டவர் புகழ் பாடுவோம். அவ்விதம் நமது வளாகங்களில் பனை மரங்கள் இல்லையென்று சொன்னால், புதிய பனை விதைகளை விதைத்து, உயிரோட்டமுள்ள ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையினை அறிவிப்போம். பனை சார்ந்த இயற்கை  பொருட்களால் நமது கிறிஸ்மஸ் அலங்காரங்களைச் செய்வோம். பனை சார்ந்த உணவு பொருட்களை பயன்படுத்துவது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். பனை ஓலைக் கலைஞர்களிடம் நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக எளியவர்களின் வாழ்வில் நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நிறைவு கொள்ளும். இவ்விதமான புரிதல் கொண்ட மாசற்ற ஒரு கிறிஸ்மஸ் பண்டிகையினை இவ்வருடம் முயன்று முன்னெடுப்போம்.

நம்மோடு இருக்கும்படியாக வந்த கடவுள் நமது எளிய கலாச்சாரத்தை புறக்கணிக்கிறவராக இருப்பாரா? ஆனால் நமது இன்றைய பண்டிகை வாழ்வில் கடவுளை அன்னியராகவே நாம் நினைத்துவிட்டிருக்கிறோம். நம்மில் ஒருவராக அவர் நின்று,  நமது வாழ்வில் நிலைபெறுவதை இழந்துவிட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் நமக்குள் ஏற்பட்ட வணிக ஊடுருவலை அறுத்து, ஏழ்மை கோலம் எடுத்தவரை நமது சூழலில் நின்று கொண்டாடுவது தேவையாக இருக்கிறது. அவ்வகையில், பனை மரம் நமது கிறிஸ்மஸ் மரமாக இவ்வாண்டு நிலைபெறுவதன் மூலமாக, கடவுள் நம்மோடிருக்கிறார் என்கிற பிரகடனத்தை முன்னெடுக்கிறவர்களாக, ஏழ்மையின் சின்னமாக பிறந்தவரை கொண்டாடும் குறியீடாக, வணிக ஊடுருவலை எதிர்க்கும் ஆற்றலாக, இறை கொடையின் அடையாளமாக பனை மரத்தை முன்னிறுத்த அழைக்கப்படுகிறோம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு
01.11.2018

9080250653

malargodson@gmail.com

தேவாங்கு – சொல்ல மறந்தவைகள்

ஒக்ரோபர் 27, 2018

 

பனை மரம் சார்ந்த உயிரினங்கள் எவைகள் என்ற கேள்வி எனக்கு இரு வருடங்களுக்கு முன்னால் தோன்றியது. அந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க ஒரு வாழ்நாள் எனக்குப் போதாது. பனையேறிகளை கேட்டிருக்கிறேன், பறவையியலாளர்களை கேட்டிருக்கிறேன், பூச்சியியலாளர்களைக் கேட்டிருக்கிறேன், இயற்கை ஆர்வலர்களைக் கேட்டிருக்கிறேன், கானுயிர் புகைப்படக் கலைஞர்களைக் கேட்டிருக்கிறேன், நானே நேரில் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஒவ்வொரு உயிரினமும் ஒரு வகையில் பனையோடு கொண்டுள்ள பிணைப்பு தனித்துவமானது. அவைகள் தனித்து ஆராயப்படவேண்டியவைகள். ஆனால் பொதுவாக பனையோடு தொடர்புடைய விலங்குகள் பறவைகள் என்ற கோணத்தில் பெருமளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றே நினைக்கின்றேன். பொன்னிக் குருவி போன்ற குருவிகளை ஆய்வு செய்யும் பொறுமைசாலிகள் நம்மிடம் இருப்பார்களா எனத் தெரியாது. இரவில் நடமாடும் மரநாய் குறித்து யாரும் கவலை கொள்வார்களா எனவும் தெரியாது.

Slow Loris a

வெகு சமீபத்தில் தான் நானும் பாரதிதாசனும் இணைந்துகொண்டோம். பல வருடங்களாக எங்களுக்குள் இருந்த தொடர்பு சற்று விட்டுப்போய், எங்களுக்கான பொதுவான நண்பரான டாக்டர். கிறிஸ்டோபர் அவர்களால் சமீபத்தில் மீண்டும் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. பாரதிதாசன் அவர்கள் அருளகம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு என்னைவிட விசைகொண்டு பனைக்காக உழைத்தவர்கள். அவர்களது நிறுவனத்தின் இலச்சினையில் தமிழ் “அ” என்ற எழுத்தும் அதில் ஒரு கிளை எழும்பி பாண்டா கரடி போல் ஒன்றும் இருந்ததைக் பார்த்தேன். என்னை கவர்ந்த ஒரு இலச்சினை இது.

பாரதிதாசன் என்னை அவரது நண்பர் முத்துசாமி என்பவருக்கு அறிமுகம் செய்தார். முத்துசாமி அவர்கள் விதைகள் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். விதைகளை இட்டு, செடிகளாக்கி அவற்றை காட்டுப்பகுதிகளிலும் விவசாயிகளின் நிலங்களிலும் நட்டுவிடுவார்கள். திண்டுக்கல்லைல் உள்ள முத்துசாமி அவர்களின் அலுவலகம் சென்றபோதுதான் நான் முதன்முதலாக தேவாங்கு என்ற ஜந்துவின் முகத்தை புகைப்படம் வழியாக பார்க்கிறேன். என்னை நோக்கியபடி அதன் விழிகள். அபயம் வேண்டி நிற்கும் விழிகள். இழந்தவைகளை மீட்க எவர் வருவார் என ஏங்கும் விழிகள். ஒடுக்கப்பட்டுவிட்டதனால் தானோ என்னவோ ஒடுங்கிப்போன உடல். மெலிந்த கைகள் மற்றும் கால்கள். குழந்தையின் பிஞ்சு விரல்கள். கிளையினை இறுக பற்றியிருக்கும் அந்த தேவாங்கு எனக்கு ஒரு புதிய  பார்வையை கொடுத்தது.

உயர் விலங்குகள் என்ற வகைப்பாட்டில் வருவது தேவாங்கு. மனிதனும் ஒரு உயர் விலங்கு தான். சிறு வயதில் கண்களை விரித்தபடி பார்த்துக்கொண்டிருப்பவர்களை ஏன் “தேவாங்கு போல முழிக்கிற” என்பதும்

மிக மெலிந்து காணப்படும் குழந்தைகளை “இது என்ன தேவாங்கு போல இருக்குது” என்பதும் வழக்கம். மனிதர்களின் மூதாதை என்று கருதப்படும் இவ்விலங்கு யாரையும் தொந்தரவு செய்யாது. ஜோடியாக இருக்கும். இரவு நேர பார்வை கொண்டது. இரவில் சற்றே வேகத்துடன் இருக்கும் இவ்விலங்கு, பகல் வேளைகளில் மறைந்துகொள்ளும். பகல் நேரங்களில் காகங்கள் கூட இவைகளை தொந்தரவு செய்யும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே பதுங்கியிருக்கும் இடங்களை விட்டு இவைகள் வெளியே வருவது இல்லை.

திண்டுக்கல்லை அடுத்த அய்யலூர் பகுதிகளில் தேவாங்குகள் பெருமளவில் இருக்கின்றன, என்றாலும் இவைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவருவதாக கானுலக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். எல்லா விலங்குகளும் எதிர்கொள்ளுவது போல இவைகளையும் வேட்டையாடியபடி தான் மனித இனம் இருந்திருக்கிறது. தேவாங்கு சார்ந்த பல மூடநம்பிக்கைகளும் இவைகளின் அழிவுக்கு காரணமாயிருக்கின்றன.

பனை இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் எனு கொள்கையுடைய எனக்கு, தேவாங்கு பனையில் இருக்குமா? என்கிற கேள்வி ஏற்பட்டது. ஆகவே இந்த கேள்வியை பாரதிதாசனிடமே கேட்டேன். அவர் பனை மரங்களில் கண்டிப்பாக தேவாங்கு இருக்கும் என்று கூறினார். அப்படி அவர் கூறுகிறார் என்றால் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதை உறுதி செய்வதற்கு வேறு தரவுகள் வேண்டுமே? நேரடியாக பார்த்தால் தான் நம்புவேன் என்று இல்லாமல் முதலில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டுப்பார்ப்பது நல்லது என எண்ணிக்கொண்டேன்.

இவ்விதம் இருக்கையில் முத்துசாமி  அவர்கள் என்னிடம் பனை விதைகள் ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார்கள். அய்யலூர் பகுதிகளில் அவைகளை விதைக்க இருப்பதாகவும் தேவாங்குகள் பாதுகாப்பாய் இருக்க அவைகள் பேருதவியுமாக இருக்கும் என்றார்கள். ஆகவே பனை விதைகளை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தேன். தேவாங்கு பாதுகாப்பில் பனைமரங்களின் பங்களிப்பு என்பது எனக்கு மிக பெரிய திறப்பு. இந்த நிகழ்வை பதிவு செய்ய வேண்டும் என விரும்பி, இதற்கென ஒரு திட்டமிட்ட அறிவிப்பை வெளியிட்டேன். 10000 பனை விதைகள் அய்யலூர் பகுதிகளில் விதைப்பதை மையபடுத்தி அழகிய அழைப்பிதழை வடிவமைப்பு செய்தேன்.

இந்த அறிவிப்பை பார்த்தவுடன் எனது அமெரிக்க தோழி “எனது தோழி ஒருவரும் தேவாங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார் என பதிவிட்டார்” நான் மேலும் அவரிடம் தகவல்களைப் பெற விரும்புகையில் அவர் தனது தோழியை தொடர்புகொண்டிருப்பார் போலும். “பனைக்கும் தேவாங்கிற்கும் என்ன தொடர்பு என்பது அவளுக்குத் தெரியவில்லை, நீ செய்வது என்ன என தெரிந்து தான் செய்கிறாயா” எனக் கேட்டாள். துறையில் இருப்பவர்களைக் கேட்டிருக்கிறேன் உங்கள் தோழி எங்கிருக்கிறாள் எனக் கேட்டேன். “பெங்களூர்” என்றாள். சரிதான் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை என்றேன்.

இந்த உரையாடலுக்குப் பின்பு என்னால் இருப்பு கொள்ள இயலவில்லை. தெரியாமல் இறங்கிவிட்டோமோ? ஏன் பனைக்கும் தேவாங்கிற்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவுமே தெரியாமல் ஒருவர் தேவாங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்? அல்லது நான் தான் பனை சார்ந்து அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளுகிறேனா? உண்மையிலேயே என்ன காரணத்தால் என் உள்ளுணர்வு பனைக்கும் தேவாங்கிற்கும் தொடர்பு உள்ளது என அடம்பிடிக்கிறது? என் மனம் காட்டும் வழி சரியாகவே இருந்திருக்கிறது. குறிப்பாக பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகள் யாவும் என்னை சரியான பாதைகளுக்கே அழைத்துச் சென்றுள்ளன. ஆகவே இதையும் நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

Slow Loris

என்றாலும் ஒரு சில முக்கிய தடயங்கள் எனக்கு வேண்டும். அய்யலூர் பகுதிகளில் பனை உண்டு, ஆனால் பனைகள் அய்யலூர் பகுதிகளில் திரட்சியாக இருக்காது. அப்படியென்றால் தேவாங்கின் உணவு பழக்கவழக்கத்தில் பனை ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்தாலே அவைகள் பனையை நம்பி இருக்க வாய்ப்புகள் அதிகம். அவ்வகையில் நாம் பார்க்கையில் தேவாங்கு பூச்சிகள் மற்றும் தவளை, எலி போன்ற  சிறிய விலங்குகளை உண்பவை. பனை மரங்களில் இவைகள் தாராளம் இருக்குமே என்று மகிழ்வடைந்தேன் ஆனால் மேலதிக உறுதியான தகவல் இருந்தால் நல்லது என எண்ணினேன்.

பனை விதைகளை சேகரிக்க அழகாபுரி என்ற பகுதியிலுள்ள ஒரு பனையேறியுடன் நான் ஓர் இரவு தங்கினேன். அழகாபுரி என்பது பேருக்கேற்றபடி அழகான இடம். ஒரு அணைக்கட்டின் ஓரம். அந்த பகுதி முழுக்கவே பனை மரங்கள் செறிந்து காணப்படும். வேறு சில மரங்கள் ஒன்றிரண்டு காணப்பட்டாலும், பனைமரங்கள் மட்டுமே இருக்கும் பகுதி என அழகாபுரியைச் சொல்லலாம். பனைமரங்கள் இருக்கும் பகுதிகள் அழகானவை தானே.

அன்று மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் வேளையில் ஒரு கீச்சிடும் அழைப்பைக் கேட்டேன். நான் கேட்டிராத குரல். ஆகவே அது என்ன சத்தம் எனக் கேட்டேன். தேவாங்கு எனக் கூறினார். எனக்கு புல்லரித்து விட்டது. இத்தனை விரைவில் தேவாங்குடன் எனக்கு ஒரு எதிர்கொள்ளல் நிகழும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அந்த அழைப்பு எனக்கே எனக்கான அழைப்பே தான். அந்த குடிசையிலிருந்து இருவரும் ஆளுக்கு ஒரு டார்ச் லைட் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். ஒருபகுதி முட்காடு மறு பகுதியில் சில மரங்கள் எல்லைகளாக நின்றிருந்தன. அவைகளுக்கப்பால் உழுதுபோடப்பட்டுள்ள ஒரு நிலமும், அதற்க்கப்பால் பனைகள் மற்றும் பனைகள் மட்டும் தான்.

விஷப்பாம்புகள் இருக்கும் என்று எச்சரித்தபடி அவர் முன்னால் சென்றார். சத்தம் கேட்ட இடம் நோக்கி நகர்ந்தோம். மூன்று நான்கு மரங்களில் ஒளி வீசி பார்த்தோம் எதுவும் தட்டுப்படவில்லை. இறுதியாக நின்ற ஒரு மரத்தில் இருந்து இரண்டு கனல் கண்கள் மின்னின. கொள்ளிவாய் பிசாசு என்பார்களே அதுதான். ஆனால் தங்க நிறத்தில் அவைகள் மின்னின. மிகச்சரியாக இரண்டு தங்க நாணயங்கள் போல் அவை இருளில் ஓலிவீசிக்கொண்டிருந்தன. நாங்கள் அந்த மரத்தின் மிக அருகில் போனபோது எங்களுக்கு அந்த தேவாங்கு காணக்கிடைத்தது. மிகவும் மெலிந்த தேகம். நீண்ட ஆனால் பூனையை விட சிறிய உடல். மொத்தமே 275 கிராம் மட்டுமே எடையுள்ள சிறிய பிராணி. பயத்துடன் எங்களை விட்டு நீங்கி வேறு இடம் நோக்கி செல்ல முயற்சித்தது. நாங்கள் மெல்ல பின் வாங்கினோம். பனை மரத்தில் தேவாங்கு இருப்பது போன்ற காட்சி எனக்கு காணக்கிடைக்கவில்லையே என்ற ஒரு கவலை மனதின் ஒரு ஓரத்தில் இருந்தாலும், வாழ்வில் முதன் முதலாக பனங்காட்டினுள் தேவாங்கை சந்தித்துவிட்டோம் என்ற உவகை நிரம்பியே இருந்தது.

திரும்பி வீட்டிற்கு வரும்போது அவரிட்ம் பேச்சுக்கொடுத்தபோது எப்போதும் தேவாங்கு இரண்டிரண்டாக இருக்கும் என்றார். தேவாங்கு மற்றும் பனைக்குமான தொடர்பை பனையோடு தொடர்புடைய நீங்கள் அல்லாது வேறு எவரும் சொல்லுவது சரியாக இருக்காது. ஆகவே நீங்கள் அறிந்தவற்றைக் கூறுங்கள் என்றேன். அவர் கூறியவைகள் பின்வருமாறு…

பகல் வேளைகளில் தேவாங்கிற்கு எதிரிகள் அதிகம் ஆகவே அவைகள் ஒளிந்துகொள்ளுவதற்கு பனை மட்டைகள் மிகவும் ஏதுவான இடங்கள். குறிப்பாக மட்டைகள் அகற்றப்படாமல் இருக்கும் மரங்கள் தேவாங்கிற்கு மிகவும் பிடித்தமான இடங்கள். அவைகளில் தான் பல்வேறு பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகள் வந்து தங்கியிருக்கும். அவைகளுக்கு உணவும் கிடைத்தது போலாயிற்று பாதுகாப்பும் உறுதியாகிவிட்டது. இதையே அருளகம் பாரதிதாசனும் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தேன்.

மேற்கொண்டு அவர் ஒரு சம்பவத்தைக் கூறினார். பதைபதைக்கும் அந்த நிகழ்வு தேவாங்கிற்கும் பனைக்கும் உள்ள தொடர்பை ஒரு சோக காவியமாக முன்வைத்தது. சமீபத்தில் ஒரு பனை மரம் ஓலைகள் வெட்டப்படாமல் இருந்திருக்கிறது. அவைகள் காய்ந்து போய் இருந்ததால் அவைகளை நீக்கும்படி யாரோ நெருப்பு வைத்திருக்கிறார்கள். மரம் எரிந்துபோன பிற்பாடு அதிலிருந்து ஆறு தேவாங்குகள் எரிந்து இறந்து விழுந்திருப்பதை பார்த்திருக்கிறார். மிகவும் சோகமான காட்சிதான். ஆனால் பனையில் இவ்வளவு பெரிய குடும்பம் இருப்பது தேவாங்குகளின் பாதுகாப்பிற்கு பனை மரம் இருக்கவேண்டும் என்கிற உண்மையை உரத்துக் கூறுகிறது. பனை மரத்திற்கும் தேவாங்கிற்கும் உள்ள ஒற்றுமையை நிலைநாட்டியபடி உயிர் நீத்த தியாகிகள் என்றே அவைகளைக் குறிப்பிடவேண்டும்.’

பனை சார்ந்து தேவாங்கு என்கிற உயிரினம் வாழ்கிறது என்கிற எண்ணம் ஏன் தேவாங்கு காக்கும் பிற சூழியலாளர்களிடம் இல்லை? என்பது ஒரு முக்கிய கேள்வியாக இருக்க முடியும். அதற்கு காரணம் சூழியல் சார்ந்த எந்த விதமான புரிதலும் அற்றே பலர் சூழியல் பங்களிப்பு ஆற்றிவருகின்றனர்.  பனை சார்ந்த புரிதலற்றவர்களால் ஒரு முழுமையான சூழியல் பங்களிப்பை தமிழகத்தில் செய்ய இயலும் என நான் கருதவிலை. ஆனால் நமது சூழியல் செயல்பாட்டாளர்கள் ஒருவகையில் வசதியை தேடுபவர்கள். ஒரு சில தரவுகளை தேடி அனைத்தையும் ஜோடிப்பவர்கள். கடுமையான களப்பணியை ஆற்ற தயங்குபவர்கள். எளிதாக எது செய்ய இயலுமோ அவைகளை மட்டுமே செய்பவர்கள். ஒருங்கிணைந்த சூழியல் செயல்பாடு என்றால் என்ன என்பதை சற்றும் அறியாதவர்கள். குறிப்பாக பனை மரம் குறித்து அடிப்படை அறிவு அற்றவர்கள். அவைகளை பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் திமிர் படைத்தவர்கள். பனை ஒரு ஜீவ நாடி என்பதை சூழியலாளர்கள் முன்னெடுக்கும்போதுதான் நமது நாட்டில் சூழியல் பங்களிப்பு முழுமைப்பெறும்.

களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஸ்னேக் ராம் என்ற நண்பனை எனது சமீபத்திய பாண்டிச்சேரி பயணத்தின்போது சந்தித்தேன். ஒரே இரவில் நாங்கள் பல்வேறு பறவைகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள் மற்றும் நத்தைகள் பனை சார்ந்து வாழ்வதை நேரடியாக கண்டு படமெடுத்திருந்தோம். இது குறித்த அவனது பார்வை என்ன என அறிய விரும்பினேன். அவன் இவ்விதமாக பதி சொன்னான். ” நீங்க அவங்கள கூட்டிட்டு வாங்கண்ணே, ஒரே ராத்திரில 40 தேவாங்க அவங்களுக்கு பனை மரத்துல இருக்கிற மாதிரி காட்டிக்குடுப்போம்ணே. தேவாங்கு பனையில இருக்காம வேற  எங்கண்ணே இருக்கும்” என்றான். எனக்கு வேறு சாட்சிகள் வேண்டாம் என்றே தோன்றுகிறது . பின்னொரு காலம் நேரம் கிடைப்பின் நேரடியாக தேவாங்கினை கண்டு பதிவு செய்யவேண்டும். பனை மரத்திலிருந்து இறங்காத அந்த மூதாதையர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். பனை என்றும் அவர்களோடிருக்கும் – அவர்களின் அரணாக.

அருட்பணி காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு, குமரிமாவட்டம்

e-mail: malargodson@gmail.com

Mobile: 9080250653

 

குக்கூ – அன்புடையார்

ஒக்ரோபர் 5, 2018

வெட்கம் என்று சொல்வதைத் தவிற வேரொன்றுமில்லை. சிவ ராஜ் அவர்களைக் குக்கூ காட்டுப்பள்ளியில் தான் சந்திக்கிறேன். பீட்டர் அவர்களைக் குறித்து குக்கூ காட்டுப்பள்ளியில் தான் அறிந்துகொள்கிறேன். குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தை மனம் படைத்தவர்களுக்கும் அது ஓர் இறையில்லமாக இருக்கிறது என்பதே அங்கே சென்ற பின்பு தான் அறிந்துகொள்கிறேன். ஆனால் இங்கே வரவேண்டும் என்றே பல நாட்களாக ஏங்கியிருக்கிறேன்.

வாழ்க்கையில் ஒருபோதும் நாம் தனித்து விடப்படுவதில்லை. நமது இலட்சியங்களும் கனவுகளும் இலக்குகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. நாம் இணையும் தோறும் அவைகள் கூர் கொள்ளுகின்றன. பிரபஞ்சம் எங்கும் அவை வியாபிக்கின்றன. கும்மிருட்டில் மின்னலென அவை ஒளிவீசுகின்றன. பாதைகளற்ற இடங்களில் தடம் பதிக்கின்றன. வீழ்ந்தவர் எழ கரம் நீட்டுகின்றன. ஆவியில் எளிமையிள்ளோர் பாக்கியவான்கள் என்ற ஆட்டிடையன் சொல்லை மெய்ப்பிக்கின்றன.
விரிந்து என்னை ஏற்றுக்கொண்ட அந்த விசாலமான பனை கதவுகளுக்கு நான் நன்றியுடையவன். பனையின்றி நான் இருக்கவியலாது என்பதை அறிந்தே என்னை அழைத்துச் சென்று அமரவைத்த இடம் பனைதூண் தாங்கிய சிறு குடிசை. அங்கே நாங்கள் விரிந்த மனமுடையவர்கள் என்பதனை பறை சாற்றும் ஓலை விசிறி. என்னை தேடிவந்து சிட்டுக்குருவிபோல் பேசியபடி தான் குழந்தைகளுக்கு செய்யும் விதவிதமான ஓலை பறவைகளுடன் வாணி. அனைவரிடமும் நான் பேசும்படி அமர்ந்திருந்த இடம் அருகில் ஓர் எளிய ஓலைசிலுவை என்னை குறுகச் செய்தபடி இருந்தது.

சிவராஜ் என்னை தனது மெலிந்த உடலால் அணைத்தபோது அந்த அன்பு என்னை திக்குமுக்காடவைத்துவிட்டது. அன்பு சுரந்து வருகிறதா இல்லை பாய்ந்துவருகிறதா இல்லை அலையென என்னை சுருட்டிசெல்லுகிறதா இல்லை சுறாவளியென என்னை சிதறடிக்கிறதா என்று இனம்புரியாத ஒரு அன்பு அங்கே எழுந்தது. உலகில் தனக்கு வேறு வேலை இல்லை என்பதுபோல எனது இளைய மகனை தன் மடியில் வைத்துக்கொண்டு, ஒழுகும் நீரோசையிடும் மூங்கில் கழியை சுழற்றிக்காட்டியபடி இருக்கும் அந்த மகான் நான் மெய்சிலிர்த்த ஆளுமை. உடைப்பெடுத்து பேரிரைச்சல் என ஆர்பரித்து எழும் சிரிப்பு, பாரம் நிறைந்த உலகினை தனது வார்த்தைகளால் நனைத்து நமது ஈர இதயத்தை கனக்கச் செய்யும் ஆற்றல். தோளில் கைகளிட்டு தோழமையுடன் இளைய சமூகத்தினை வழிநடத்தும் நண்பன். அன்னமிட்ட கையினை மட்டுமல்ல மொத்தமாகவே கட்டியணைத்து அன்பை வழியவிடும் பேராற்றல். சிவ ரஜ் நீங்கள் இயேசு கூறிய உப்புதான். சுவை பரவிக்கொண்டே இருக்கிறது.

DSC04415
எளிமையைத் தேடிவரும் நவீன இளைஞர்களின் அக்கூட்டத்தில் நான் பேசவிருப்பது என்ன என்பதே இறுதிகணம் வரைக்கும் தெரியாது. சொற்பகிர்தலுக்கான சூழலில் “போக்காடாகவே” நான் மாறிவிட்டேன். பனையேறிகளின் துயர் சுமந்த ஒரு ஆடு நான். அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து பாரங்களையும் ஏற்றுக்கொண்ட பலியாடு. ஆனால் என்னையும் ஒரு ஆட்டிடையன் தேடி வந்தார். அவர் எனது கரடுமுரடான பாதைகளில் என்னைத் தூக்கிகொண்டார். இந்த நம்பிக்கை, இந்த எளிய உண்மை, இந்த சாட்சி அங்கிருந்தவர்களிடம் அன்று வெளிப்பட்டது.

ஏற்கும் உள்ளம் போல் விரிந்ததோ, விசாலமானதொ, அன்பானதோ, அறிவானதோ, நெகிழ்ச்சியானதோ, நிலையானதோ வேறில்லை. நீண்ட உறையினூடே என்னை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வாழ்வில் சிறு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன். என்னிலும் சிறந்தவர் ஒருவர் வருகிறார் என்ற திருமுழுக்கு யோவானின் அறைகூவலுக்கு பாத்திரமான பிள்ளைகள் இவர்கள். ஆம் சிறந்ததை தேடி சேகரிகின்ற இவர்கள் அனைவரும் நவீன வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தான்.
உணவு என்பது கூட்டுவாழ்வின் மிகச்சிறந்த அடையாளம், அங்கம் என்பேன். உடைக்கப்பட்ட உடலின் முழுமை, மீந்திராமல் சிந்திய குறுதியின் பகிர்வே, இறைமகனிடம் எங்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. எளிமையை தேடுவோர் அனைவரும் அற்பணிப்புடன் செயலாற்ற ஊக்கம்பெறும் களம் ஒன்று சென்று மீண்ட இனிய நினைவுகள் மாறவிலை.
ஒன்றுகூட சொல்லவேண்டும் சிவ ராஜ். எனது இளைய மகன் மித்ரன் கூறியது இது.
“அந்த அண்ணனோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு”
“அந்த அண்ணன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”
“அந்த அண்ணன் ரொம்ப அழகாக பேசுகிறார்கள்”
குழந்தைகளே நமக்கிருக்கும் சாட்சிகள்.

(குக்கூ காட்டுப்பள்ளி சென்று மீளமுடியாமல் நினைவுகளால் அங்கேயே வாழ்ந்துகொண்டிருக்கும் நான் மற்றும் குடும்பத்தினர். எங்களை அழைத்துச்சென்ற அன்பு இதயம் ஸ்டாலின் அவருக்கு மனம் நிறைந்த நன்றிகள்)

பணியாளர். காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
05.10.2019

9080250653

malargodson@gmail.com


%d bloggers like this: