Archive for நவம்பர், 2018

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 9

நவம்பர் 30, 2018

தூய்மைப்படுத்துதல்

எங்களது இருசக்கர வாகன பயணம், சிறு கிராமங்கள் வழியாகவும் மண் வீதிகள் வழியாகவும் முன்னேறிக்கொண்டிருந்தது. கிராமங்கள் சுத்தமாக இருந்தாலும் தூசிபடிந்து புழுதிகளுக்குள் இருந்தன, கிராமத்தின் வெளியே பசுமை ஆக்கிரமித்திருந்தன. சில நாட்களுக்கு முன்பே மழைக்காலம் முடிந்திருந்ததால் எங்களால் சற்றேனும் பசுமையினை பார்க்கமுடிந்திருக்கிறது. நிலமை எப்போதும் இப்படியிருக்காது. வெயில் காலங்களில் கொழுத்தும் வெயிலில் நிலம் வறன்டுவிடும். கிராமம் “சுத்தமாக” இருக்கவேண்டும் என்பதற்காக பசும்புல்வெளிகளையும் வளர்ந்துவரும் செடிகளையும் அப்புறப்படுத்திவைத்திருப்பார்கள் போல. புழுதிக்கான காரணம் இதுதான்.

ஒரு வீட்டினைக் கடந்து செல்லுகையில், அன்ட்த வீட்டின் மதில் சுவரில் ஏதோ ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. என்னவென்று தெரியவில்லை. அனிச்சையாக எனது கரம் தருணுடைய தோளை அழுத்தியது. தருண் தனது பைக்கை நிறுத்தினார். நான் இறங்கி எனது கண்ணில் தென்பட்ட அந்த பொருளை நோக்கி நடந்தேன். ஒரு மதில்மேல் அது வைக்கப்பட்டிருந்தது. எடுத்து பார்த்தபோது அது ஒரு குட்டைவடிவிலான விளக்குமாறு என்பது தெரியவந்தது. மேலும் அது பனையோலையா என்கிற சந்தேகம் உடனடியாக எழுந்ததால், என்ன என கை விரல்களால் நீவிப்பார்த்தேன். இல்லை இது பனையோலை அல்ல, ஈச்சமர ஓலை என்பது எனக்கு புரிந்தது.

DSC06185

ஈச்சமர ஓலையில் செய்யப்பட்ட விளக்குமாறு

 

அந்த விளக்குமாறு ஒருவர் தரையில் அமர்ந்தபடியே கூட்ட உதவும் ஒரு அமைப்பு கொண்டது. ஊர்களில் அனைத்து இடங்களும் செடிகளற்று சுத்தமாக பேணப்படுவதற்கு இதுவே முதற் காரணம். அமர்ந்திருக்கையில் மண்ணுக்கும் மனிதர்களுக்குமான உறவு நெருங்குகிறது. இடையில் வேறு எதுவும் முளைத்துவிடக்கூடாது என மனித மனம் விழிப்புடன் இருக்கிறது போலும்.

பொதுவாக விளக்குமாறுகள் மூன்று வகையில் காணப்படுகின்றன. நான் பார்த்துக்கொண்டிருப்பது பழங்குடியினரின் வாழ்வில் காணப்பட்ட ஒன்று. மண்னோடு தொடர்புடையவர்கள் பலரும் இவைகளையே பயன்படுத்திவந்தனர். ஈச்சமரத்திலிருந்து இன்னும் சற்று பெரியதாக விளக்குமாறு செய்யலாம் என்றாலும், நான் பார்த்த விளக்குமாறு ஒரு தொன்மையின் அடையாளம் கொண்டிருக்கிறது.

இரண்டாவது வகை. குனிந்துகொண்டு பெருக்க உதவுவது. “ஆம் ஆத்மி” கட்சியின் சின்னமே தான். சிறு வயதில் எங்கள் வீட்டில் எங்கள் வீட்டு முற்றங்கள் தேங்காய் ஈர்க்கிலால் செய்யப்பட்ட விளக்குமாறு கொண்டே பெருக்கப்பட்டன. “சரு வாரப்போகிறவர்கள்” (சருகு கூட்ட) கூட இவைகளைத் தான் பயன்படுத்துவார்கள். இன்றும் கூட ஈர்க்கில் எடுத்து விற்பதற்க்கு அனேக மக்கள் குமரி மாவட்டத்தில் தயாராக இருக்கிறார்கள். சொற்ப வருமானம் என்றாலும், நிரந்தரமாக வருமானம் தரும் ஒரு பொருள். நான் அகமதாபாத் திருச்சபையில் போதகராக பணியாற்றும்போது திரு. பிரின்ஸ் என்ற லாரி டிரைவர் அந்த ஆலயத்திற்கு வருவார். எங்களுக்கு தேவையான பொருட்களையும் ஒரு சில நேரம் அவர் எடுத்து வந்திருக்கிறார். அவரது லாறி குமரி மாவட்டத்திலுள்ள பாலப்பள்ளம் பகுதியிலிருந்து வெறும் ஈர்க்கில்களை மட்டுமே ஏற்றி வரும். தூய்மைப்படுத்தும் செயல் விடாது நடைபெறவேண்டும் என்பதால் தானோ என்னவோ, அவைகளுக்கான மதிப்பு குறையவே இல்லை.

Coconut

தென்னை ஈர்க்கிலால் செய்யப்பட்ட விளக்குமாறு. குனிந்து பெருக்க பயன்படுவது (நன்றி: இணையதளம்)

ஆனால் சிறு வயதில் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யும் விளக்குமாறுகள் தான் நான் பார்த்ததிலேயே பெறியவைகள். தெருக்கூட்ட பயன்படும் அந்த விளக்குமாறுகள், ஒருவர் நின்றவண்ணமே குப்பைகளை கூட்டுவதற்கு ஏற்ற வடிவில் இருக்கும். அடிப்பகுதி சீராக தென்னை ஈர்க்கில்களால்  அல்லது மூங்கிலால் வரிசையாக கட்டப்பட்டு அகலமாக  இருக்கும். நின்றபடி கூட்டுவதற்கு ஏற்ற வண்ணம் அவைகளுக்கு ஒரு மூங்கில் கைப்பிடியும் இருக்கும். நான் வாய் பிளந்து இவைகளைப் பார்த்திருக்கிறேன். நின்றபடி கூட்டுவது என்பது ஒருவகையில் சுயமரியாதையளிக்கும் செயல் என்பதாக கருதப்பட்டிருக்கலாம். ஆகவே பொது இடங்களில் கூட்டுபவர்களுக்கு நகராட்சி இவ்வித்ம் பொருட்களை வழங்கியிருக்கக்கூடும். மேலும் சுகாதாரம் சார்ந்து பொதுவிடங்களைக் கூட்டுகையில், தரைக்கு அருகில் நெருங்கிச் செல்லுவது துப்புறவு பணியாளர்களுக்கு மேலும் கெடுதியையே வரவாழைக்கும் என்ற நோக்கிலும் இருந்திருக்கலாம். அதிகநேரம் குனிந்து பெருக்குவது சிரமம் ஆனபடியால், எளிதாக பெருக்குவதற்கான வடிவமைப்பாக இவைகள் இருந்திருக்கலாம்.

Bamboo

மூங்கில்களைக்கொண்டே நின்றபடி கூட்ட உதவும் விளாக்குமாறு

 

இவை மூன்றையும் நமது மனக்கண் முன்னால் கொண்டு வருகையில், விளக்குமாறு சார்ந்து ஒரு பரிணாமம் நடந்திருக்கிறது என்பது உறுதி. நாம் பார்த்த பேரீச்சையும், தென்னையும் பனை வகையைச் சார்ந்த மரங்கள் தான். அப்படியானால் தூய்மைப்படுத்துவதில் பனைக் குடும்பங்கள் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படியானால் தொல் பழங்காலத்திலேயே தூய்மை எனும் கருதுகோள் இருந்ததா. ஆம், எப்போது மனித இனம் தன்னை ஓரிடத்தில் வாழும்படியாக தங்கிவிட துவங்கியதோ அப்போதே விளக்குமாற்றின் தேவை உருவாகிவிட்டது. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுத்தம் குறித்த எண்ணங்களே நமது சமூகத்தில் பல்வேறு நோக்கில் இன்றுவரை விவாதபொருளாகிவந்திருக்கிறது. விளக்குமாறு இல்லாத ஒரு உலகம் உருவாக இயலாது. குப்பைகள் கூடும்தோறும், விளக்குமாற்றின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அதற்கான குறியீடுதானோ விளக்குமாறு.

பழங்காலத்தில் ஆண்மையும் பண்மையும் கலந்ததாக விளக்குமாற்றினை புரிந்துகொண்டிருக்கிறார்கள், சில சடங்குகளிலும் சுத்தம் என்பது முக்கிய கருத்தியலாக இருப்பதால் விளக்குமாறுகள் பல்வேறு நிலைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. பேய் பிடித்த்வர்களைக் கூட விளக்குமாற்றால் அடிப்பதும், சிறு வயதில் அம்மாவிடமிறுத்து கிடைக்கும் அடிகள் கூட பெரும்பாலும் விளக்குமாற்றைக் கொண்டுதான்.  தற்போதைய காலத்தில் “வெளக்குமாறு பிஞ்சிரும்” என்பது என்ன பொருளில் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

தொன்மை எப்படி புனிதமாகிறதோ அதுபோலவே தொன்மை என்பது இழிவானதாகவும், நவீனத்திற்கு ஒவ்வாதது எனவும், புறக்கணிக்கப்படவேண்டியது எனவும் நவீன காலத்தில் எண்ணப்படுகிறது. ஹாரி பாட்டர் நாவல்களில் வரும் “புரூம்ஸ்டிக்” குறித்த வரலாறு இவைகள் எவற்றுடனும் சம்பத்தப்படாதது. மேலும் அந்தரங்கமானது.

நான் கரத்தில் வைத்திருந்த அந்த அழகிய விளக்குமாறு தனித்துவமான ஒரு வடிவம் கொண்டிருந்தது. தூய்மைப்படுத்தும் இடம் அகலமாகவும் கைப்பிடி பக்கம் சூம்பியும் இருந்தது. ஆனால் வேறு எந்த அன்னிய பொருட்களும் அதில் பயன்படுத்தவில்லை. ஈச்ச ஓலைகளே விரிந்து பின்னர் சுருங்கி அவைகளே கயிறாக திரிக்கப்பட்டு பின்னர் முடிச்சிடப்பட்டிருந்தது. நாடி, நரம்பு, இரத்தம், சதை, மூளை, மற்றும் சிறுமூளை அனைத்தும் கலைவடிவைமைபு என ஊறிய ஒருவராலேயே இவைகளை கண்டுபிடித்திருக்க இயலும். ஒரு சாதாரண விளக்குமாறு இத்தனை நேர்த்தியாக செய்யப்படமுடியுமா என ஆச்சரியத்தில் மூழ்கிப்போனேன்.

DSC06205

பனை ஈர்க்கில்களால் பின்னப்பட்ட விளக்குமாறு. அங்குல், ஒரிசா

சும்மா இல்லை இயேசுவே ஒருமுறை விளக்குமாற்றை குறித்து கூறியிருக்கிறார். ஒரு பெண்மணி தனது வெள்ளிகாசு ஒன்றை தவறவிட்டால், அவள் விளக்கை பொருத்தி, தரை பெருக்கி அந்த காசு கிடைக்குமட்டும் அதனைத் தேடமாட்டாளா என்று ஒரு உவமையினைக் கூறியிருப்பார். கிடைத்தபின் அவள் பெறும் மகிழ்ச்சியானது தொலைந்த ஆத்துமா ஒன்று மீட்டெடுக்கப்பட்டால், விண்ணகத்தில் எவ்விதம் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்? அவ்விதமே இருக்கும் என குறிப்பிடுவார். அப்படியானால் கூட்டி பெருக்குவது கூட காணமல் போனவற்றை மீட்டெடுப்பதில் ஒரு அங்கமாக இருக்கிறது என்ற புரிதல் எழுகிறது. அப்படியானால் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விளக்குமாறும் பனையை மீட்டெடுக்கும் ஒரு அர்த்தமுள்ள கருவ்தானில்லையா?

 

எந்த இடத்தில் அந்த விளக்குமாற்றை எடுத்தோமோ அதே இடத்தில் அதனை வைத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். ஆனால் எனது நினைவுகள் யாவும் அந்த விளக்குமாற்றை சுற்றியே வந்துகொண்டிருந்தது. ஒருமுறை அம்மா என்னுடன் வந்து தங்கியிருக்கும்பொழுது, பனை ஈர்க்கில்களால் செய்யப்பட்ட விளக்குமாறு மிக உறுதியாக நாட்பட உழைக்கும் என்று சொன்னது நினைவில் வந்துசென்றது. அப்படியானால் ஏன் பனை ஈர்க்கில்களால் செய்யப்பட்ட விளக்குமாறுகள் நமக்கு கிடைப்பது இல்லை?

 

பனை ஈர்க்கில்களுக்கான பயன்பாடு விரிவானது. பல்வேறு வகைகளில் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓலை வேய்ந்து கட்டபடும் வீடுகளுக்கு, சுளவு மற்றும் சில ஓலைச் சார்ந்த பொருட்களை பின்னுபவர்கள் ஈர்க்கிலை பயன்படுத்துவார்கள். ஆகவே பனை ஓலை ஈர்க்கில் பயன்பாடு வேறு திசை நோக்கி சென்றுவிடுகிறது. ஆகவே பிற பயன்பாடுகளுக்கு பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படாத தென்னை ஈர்க்கில்கள் வெளக்குமாறுக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டது. தென்னை ஈர்க்கில் பனை ஈர்க்கிலுடன் ஒப்பிடுகையில் எளிதாக எடுத்துவிடமுடிவது நமக்கு புரியும். தென்னை ஈர்ர்கிலின் நீளம் அனைத்துமே சற்றேரக்குறைய இன்றுபோலவே இருக்கும்.

எனது உள்ளுணர்வு மட்டும் சொல்லிக்கொண்டிருந்தது, கண்டிப்பாக பனை ஈர்க்கலிலும் இவைகளைப் பார்க்கமுடியும் என்று. ஆனால் அவைகளை ஒரிசாவில் அன்று  தானே பார்ப்பேன் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எங்களது பயணம் சில தெருக்கள் வழியாக ஒரு சிற்றூரை அடைந்தது. அங்கே நாங்கள் அடுத்த ஊர் செல்ல தருண் வழி கேட்டுக்கொண்டிருந்தார். என்ன புரிந்துகொண்டாரோ, அங்கே தானே எங்கள் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த ஊர் எல்லையிலுள்ள வீட்டின் ஓரம் வழியாக ஒரு வயல் வெளி நோக்கிச் சென்றார். அங்கே ஒரு பெண்மணி உங்களுக்கு என்னவேண்டும் எனக் கேட்டார். எனது கன்னியாகுமரி முதல் ஒரிசா வரைக்கும் நீண்ட பயணத்தை அவர் கூறவும், அந்த அம்மா புவனேஷ்வரில் பேடி செய்கிறார்கள் “சொட்டாய்” செய்கிறார்கள் எனக் கூறத்துவங்கினார். நான் அவைகள் யாவற்றையும் நேரில் பார்த்துவருகிறேன், இங்கே பார்பதற்கு என்ன இருக்கிறது எனக் கேட்டேன்.

அவர்கள் ஏதோ ஒரிய மொழியில் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார்கள். அவர்கள் வரும்பொது கையில் ஒரு விளக்குமாறு இருந்தது. நான் அரண்டு போனேன். ஒரிசா வந்து வெளக்குமாற்றால் அடியா? நல்லவேளையாக நான் பயப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதைப்பாருங்கள் என்று காண்பித்தார்கள். நாங்கள் சற்றுமுன் பார்த்தவைகளைவிட  பெரிதாக இருத்தது எனது முதல் பார்வையிலேயே புரிந்தது. ஆனால் அதே வடிவமைப்பு. நான் அவர்களிடம் அதனைக் கொடுக்கும்படி கேட்டேன். தரவில்லை அதை தரையில் போட்டுவிட்டார்கள். விளாக்குமாறு பிறர் மேல் படக்கூடாது என்பது ஒரு நம்பிக்கை. அது பொன்ற ஏதொ ஒரு நம்பிக்கை ஒரிசாவிலும் இருக்கிறது போலும்.

கீழே அவர்கள் போட்ட அந்த விளக்குமாற்றை நான் எடுத்து சோதித்தேன். அப்படியே உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது. சந்தேகமில்லை இது பனை ஈர்க்கிலில் செய்யப்பட்டதுதான். நான் கூத்தாடாத குறை. எனது மகிழ்ச்சி அந்த பெண்மணியையும் தொற்றிக்கொண்டது. அப்படியே தருணையும்.

இது ஒரு சாதாரண விளக்குமாறாக இருந்திருந்தால் கூட நான் இத்துணை மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கமாட்டேன். இதன் வடிவமே ஒரு தேர்ந்த கலை வடிவம். பயன்பாட்டுப்பொருள், நீடித்து உழைக்கக்கூடியது. இந்த தொழில்நுட்பம் நாம் கொண்டாடவேண்டிய ஒன்று. மனித சமூகத்திற்கு பனையேறி வழங்கிய மற்றுமொரு கொடை விளக்குமாறுதான்.

ஆசையுடன் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். பலநாட்களாக பயன்பாட்டில் இருந்ததால் அதில் மினுமினுப்பு கூடியிருந்தது. ஒருவகையில் வார்னிஷ் தான் அடித்திருக்கிறார்களோ எனும் அளவிற்கு அது ஒரு கலைப்பொருள் போல காட்சியளித்தது. கண்டிப்பாக இதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும் என நினைத்தாலும், என்னால் சுமக்க இயலாத அளவிற்கு ஏற்கனவே என்னிடம் பொருட்கள் இருந்ததால் நான் அதனை எடுத்துகொள்ள இயலவில்லை. ஆனால் அதனை விட்டுவரவும் மனதில்லை.

 

எடுத்துச் செல்ல இயலாது என்பது உறுதியாகிப்போனது. ஆகவே புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். பல்வேறு வகைகளில் இவைகள் அனைத்தும் எனக்கு முக்கியமானவைகள். என்றேனும் ஒருநாள் பனை பொருட்கள் சார்ந்த ஒரு தனித்துவமான அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

உலகம் முழுவதிலுமிருந்து பனை சார்ந்த பொருட்களை காட்சிக்கு வைப்பது. பனை சார்ந்து பல்வேறு கைவினை கலைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு அமைப்பினை உருவாக்குவது, பனை சார்ந்த பல்வேறு தகவல்களை திரட்டி வைப்பது என பனை கலைகளஞ்சியம் குறித்து எனது எண்ணங்கள் சென்றது. அப்படியே பெருமூச்சு விட்டுக்கொண்டேன். என் வாழ்நாளில் அப்படி ஒன்று சாத்தியமாகிவிடப்போவதில்லை. ஒரு துவக்கம் வேன்டுமானால் நான் அமைத்துக்கொடுக்கவியலும். அல்லது வேறு யாரேனும் இவ்விதமான முயற்சிகளில் இருந்தால், அவர்களுக்கு உதவியாக இருக்க இயலும். அவ்வளவுதான். ஏனென்றால் எனது கனவு பிரம்மாண்டமானது.

 

ஏன் எவருமே பொருட்படுத்தாத விளக்குமாற்றைக் குறித்து பேசுகின்றோம்? இல்லாவிட்டால் ஏன் பனை சார்ந்த பொருட்களை தொன்மையின் அடையாளம் என கூற முற்படுகிறோம்? இவைகளிலிருந்து நாம் பெறும் பயன் தான் என்ன? உண்மையிலேயே எதை நோக்கிப் நான் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சையம், தொல்பொருள் ஆய்வுகளின் நீட்சியாக இவைகள் இருக்கும். உலக அளவில் பனை சார்ந்த பொருட்களைத் தேடி சேகரிக்கும்போது நாம் ஒரு புது உலக வரைபடத்தை உருவாக்க இயலும். மனித நாகரீகம் மற்றும் தோற்றம் குறித்து புது பார்வைகள் கிடைக்கும் என நான் எண்ணுகிறேன். தொல்லியல் சார்ந்து நமக்கு கிடைக்கும் ஆவணங்கள் பெரும்பாலும் நிறுவப்பட்ட சாம்ராஜ்ஜியங்களிலிருந்து கிடைப்பவை. அல்லது மட்காத பொருட்களைக்கொண்டு ஆய்வுகளை நிகழ்த்துபவை. அவ்விதமான ஆய்வுகளில் விடுபடல்கள் இருக்கும், அவைளை நமது மரபில் புழங்குபொருளாக இருப்பவைகளிலிருந்து நிரப்பிவிடய் இயலும் என நான் நம்புகிறேன்.  இவ்விதம் பனை சார்ந்த ஒரு மனித வரலாற்றை நாம் கண்டடைவோம். விடை தெரியாத பல விஷயங்களை நாம் கண்டு தெளிய வாய்ப்பாக இவைகள் இருக்கும். இந்த விளக்குமாறு வரலாற்றையே தூய்மை செய்யும் ஒன்றுதானோ?

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 8

நவம்பர் 29, 2018

பனை எழுச்சி

அங்குலை விட்டு ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்தை நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் ஒரு தெருவைக்கடக்கும் போது அந்த தெருவிற்குப் பெயரே “தால் புரி”  (பனை வாழுமிடம்) என்பதாக ஒரியமொழியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று தருண் கூறினார். பனை நகர் என ஒரு தெருவிற்கு பெயர் இருப்பதாக நான் பார்ப்பது இதுவே முதல் முறை. பனை சார்ந்த பெயர்கள் ஊர்களுக்கு வைப்பதும் தெருக்களுக்கு வைப்பது ஏண் வீடுகளுக்கு வைப்பதும் கூட வாடிக்கை தான். பேராயர் சாமுவேல் அமிர்தம் திருமறையில் காணப்படுகின்ற பெத்தானி என்ற ஊரின் பெயரையே, தனது வீட்டிற்கும் வைத்திருப்பார். பெத்தானியா என்றால், பேரீச்சையின் வீடு என்று பொருள்.

DSC06186

பெயர்கள் ஒரு ஊரின் தன்மையை புரிதலை வெளிப்படுத்தகூடிய இடம் என்பது உலகிலுள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை தொகுக்கையில் வெளிப்படும் உண்மை. அவ்வகையில் தால் புரி என்பது நிச்சயமாகவே பனை சூழப்பட்ட நகரத்தின் ஒரு பகுதிதான்.

புரி என்பது நகரம் என சமஸ்கிருதத்தில் மொழிபெயர்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் பூரி என்பது எதனைக் குறிக்கும். கடவுள் தங்குமிடம் என்பதாகவா? திருமறையிலும் பெக்ட்தேல் என்று ஒரு இடம் குறித்த குறிப்பு வருகிறது. கடவுள் தங்கும் இடம் என பொருள் கொள்ளத்தக வார்த்தை. நாம் இருக்கும் இடத்திலேயே கடவுளும் இருக்கவேண்டும்  என்பது தான் மனிதனின் எண்ணமாக இருக்கிறது. அவ்விதமாகவே இயற்கையோடு இருப்பதையே பேரின்பமாக கருத்தியிருக்கின்றனர். இன்று அவைகளின் பெறுமதியை மெல்ல உணருகிறோம்.

எங்களது தொடர்ந்த பயணப் பாதையில் ஒரு சிறிய பயன்பாட்டுக் குளத்தைத் தான்டிச் சென்றோம். குளத்தின் ஓரங்களில் ஓரிரு பனை மரங்கள் எந்து கெம்பீரமாக நின்றன. குளம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தூர் வாரப்பட்டிருந்ததுபோல் இருந்தது. அப்படியானால் இந்த குளத்தின் அருகில் அனேக பனை மரங்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். மூப்பினாலும், பயன்படுத்துவோரின்மையாலும் அவைகள் ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்.

DSC06187

வழியெங்கும் பனையோலைகள் ஏழைகளின் நண்பன் எனும் கூற்றினை நிரூபிக்கும் வண்ணமாக ஏழைகள் சார்ந்த இடங்களிலேயே கூறையாக மறைவாக இருந்தது. ஒரு மாட்டு தொழுவத்தைக் கூட பார்த்தோம். நான் தருணுடைய இரு சக்கர வாகனத்தில் எங்கு இறங்கி புகைப்படம் எடுத்தாலும் யாராவது சிரித்த முகத்துடனேயே வந்து என்ன ஏது என வினவினார்கள். ஒருபோதும் புகைப்படம் எடுக்ககூடாது என எங்களுக்குத் தடை கூறப்பட்டது இல்லை. அந்த மாட்டு கொட்டகையின் அருகில் ஒரு மாட்டு வண்டி கைவிடப்பட்டதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் மேலே மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய பெட்டி பின்னி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். நமது ஊர்களில் கூட வெகு சமீபம் வரை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருக்கும்போது சாணி எடுத்து செல்லுகிறவர்கள் பனை ஓலைகளை அடுக்கி சாணி அள்ளிச் செல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.

DSC06188

எனது சிறு வயதில் பெருவிளை கிராமத்தில் பாட்டி வீட்டில் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கையில் அய்யப்பன் அண்ணன் தனது மாடுகளையும்  காளை வண்டியையும் எங்கள் வீட்டின் முன்பு தான் நிறுத்திவைப்பார். தெரு விளைக்கின் அடியில் நிற்கும் அந்த காளை வண்டியில் அவர் மாடுகளை பிணைக்கும் காட்சி அலுக்கவே செய்யாத நளினம் கொண்டது. ஒருநாள் மாட்டுவண்டிக்கு பனையோலைப் பாயாலான கூண்டு அமைத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே என்ன என விசாரித்தேன். உவரிக்குப் போகிறோம் என்றார்கள். அன்றைய தினம் அந்த பயணம் மிக மிக உற்சாகம் அளிக்கு  ஒன்றாக அவர்களுக்கு இருந்ததை இப்போதும் என் மனக்கண்ணில் கொண்டுவர முடிகிறது.

னமது ஊரிலும் மூங்கிலால் பின்னப்பட்ட அழகிய மாட்டு வண்டிகள் உண்டு. ஆனால் அவைகள் வில் வண்டிகள். பயணத்திற்கெனவே அமைக்கப்பட்ட வண்டிகளாக இருக்கும். ஆனள் அய்யப்பன் அண்ணன் வைத்க்டிருந்தது சரக்கு ஏத்தி செல்லும் வண்டி. ஆகவே விழாவிற்காக மட்டுமே அது அலங்கரிக்கப்பட்டது. வைக்கோல் இட்டு மெத்தை செய்து. அதன் மே பாய் விரித்து வைத்க்டிருப்பார்கள். எல்லா வருடமௌம் அவர்கள் உவரிக்குச் செல்லுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், மாட்டுவண்டிகள் மிகக்குறைந்துவிட்டன. பிற வாகனங்கள் பெருகிவிட்டன. வெகு சமீபத்தில் கூட எனது நண்பன் ஒரு மாட்டு வண்டியை வைத்திருந்தான். ஒருமுறை நாங்கள் கிறிஸ்மஸ் பஜனைக்கு மாட்டுவண்டியை பயன்படுத்தலாம் என எண்ணியபோது அவனைத்தான் அழைத்தேன். பிற்பாடு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, உலக பெண்கள் தினத்திற்கான ஒரு பேரணி நடைபெற்றது. அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், மாட்டுவண்டியில் ஒரு காட்சியமைப்பு ஏற்படுத்தினால் என்ன என கேட்டேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. நானே அனைத்து ஒழுங்குகளுக்குப் பிறகு, வேறு ஒரு நிகழ்ச்சிக்கு நான் செல்ல வேண்டி இருந்ததால் என்னால் அந்த நாளில் என்னால் அவர்களோடு இணைந்துகொள்ள இயலவில்லை. பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் இணைந்த அந்த பேரணியினை பத்திரிகைகள் முக்கிய செய்தியாக்கி வெளியிட்டிருந்தன. குறிப்பாக மாட்டு வண்டி படம் ஒரு முக்கிய கவனத்தைப் பெற்றிருந்தன. ஏன் தலைப்புகளில் கூட ” பெண் விடுதலை – மாட்டு வண்டியின் வேகத்தில்” போன்ற வாசங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

என்னைப்பொறுத்தவரை தமிழகத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது நமக்கும் இயற்கைக்குமான இணைப்பின் ஒரு அடையாளம். பல நூறு ஆண்டுகளாக காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு சமூகத்தில் தொன்மையான ஒரு மரபை மீட்க வேண்டி மாணவர்கள் களமிறங்கியது உலகத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சுழியல் சார்ந்து தான் அந்த களம் பேசப்பட்டது. அது தான் மைய விசை. மாடு அதற்கான ஒரு அடையாளம் மட்டுமே. ஜல்லிகட்டு எனும் ஏறு தழுவுதல் மட்டும் இழக்கிறோம் என்ற பதை பதைப்பில் மாணவர்கள் இவைகளைச் செய்யவில்லை. ஒட்டுமொட்தமாக நாம் தழுவிக்கொண்டிருந்த இயற்கையின் பிடியிலிருந்து நாம் வழுவுகிறோம் என்பதனை உலகிற்கே எடுத்துக்கூறும் ஒரு அடையாள போராட்டம் அது. அப்போராட்டம் வெற்றரசியலாக பார்க்கப்பட்டதால், நமது அரசாங்கத்தால் ஜல்லிக்கட்டு நடத்தும் ஒரு அனுமதியோடு அது நிறைவுபெற்றது. உண்மையில் அரசு அப்போது தானே விழிப்படைந்திருக்க வேண்டும்.  சூழியல் சார்ந்த தனது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நமது திசைகள் இன்னும் பல்வேறு வகைகளில் சுழியல் சார்ந்த புது பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கும்.

பனைக்கான போராட்டம் என்பதும் ஒரு வகையில் தமிழகத்தில் உருபெற்று வருகிறது. ஆனால் இந்த போராட்டம் நாம் நினைப்பது போல ஓரிடத்தில் கூடி எங்கள் எண்ணங்களை உத்தரவாக்கிக் கொடுங்கள் என்னும் வகையில் இல்லாமல், நமது எண்ணங்களை செயல்முறைப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த போராட்டம் இருக்கிறது. இவ்விதமான போராட்டங்களே இன்றைய சூழலில் மிக முக்கிய தேவையாகவும், அரசிற்கு மறைமுகமாக ஒரு நிர்பந்தத்தை அளிப்பதாகவும் இருக்க இயலும். பனை அவ்வகையில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மரம். தன்னை மீட்கும் சக்தி பெற்ற மரம் அது.

இன்றைக்கு பனை தனியார் தோட்டங்களில் மட்டுமல்ல, பொதுவிடங்களிலும், பொதுப்பணிதுறை சார்ந்த இடங்களிலும் மீண்டும் உயிர் பெறுகிறது. கஜா கற்றுக்கொடுத்த பாடத்தினால் கடைற்கரை ஓரங்கள் பனை எனும் அரண் சூழும் காலம் வெகு தொலைவில் இல்லை. பனை தன்னை யார் என நிறுவுகிற ஒரு காலகட்டம் இது. பல்வேறு ஆய்வு மாணவர்கள் இன்னும் ஒரு சில காலங்களில் தங்கள் ஆய்வின் களமாக பனை மரம் இருக்கும். பசுமைப் புறட்சிக்கு மாற்றாக பனை புறட்சி மீண்டெழும். அப்போது சூழியல் குறித்த ஒரு மாற்று வடிவம் நமக்கு கிடைக்கும்.

பனை சார்ந்த இந்த மென்மையான பொறட்ட வடிவை நான் முன்மொழிவதற்கு காரணங்கள் உண்டு. 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாற்றூ உலகம் சாத்தியமே என்ற கோஷத்துடன் உலக சமூக மன்றம் ஒரு நிகழ்ச்சியினை ஒழுங்குசெய்திருந்தது. அங்கு எனது கரத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு துண்டு பிரசுரத்தில் எப்படி 100 வகையான போராட்டங்களை ஒரு ஜனநாயக நாட்டில் வன்முறையின்றி முன்னெடுக்கலாம் என்ற வழிமுறைகள் எழுதப்பட்டிருந்தது. அவைகளை நான் மறந்துபோனேன். ஆனால் போராட்டத்திற்கான வடிவங்கள் என்பதை நாம் புரிதலுடன் உருவாக்கவேண்டும் எனும் திறப்பு அங்கே கிடைத்தது. ஏனென்றால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், சாலை மறியல், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நின்று கோஷமிடுவது, கருப்புக்கொடி காட்டுவது, ஒன்றாக திரளுவது போன்றவைகளே மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்படுகின்றன. பனை சார்ந்தும் இவிதமான முயற்சிகள் முற்காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் எவர் செவியையும் எட்டாது. ஆகவே புதிய முயற்சிகளை மேற்கொள்ளுவது தான் ஒரே வழி.

ஆங்காங்கே பனை நடுவதினால் என்ன பயன்? அவைகள் எப்படி போராட்டமாகும்? என்ற கேள்வி ஒருவருக்குள் எழலாம். இன்றைய பனை நடுகையானது நான் ஏற்கனவே கூறியது போல ஒரு இயற்கை நீரோட்டத்தில் கலந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவ்விதம் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு குமரியில் தாக்கிய, ஓக்கி மற்றும் 2018 ஆண்டு நாகப்பட்டிணத்டை தாக்கிய கஜா போன்றவைகள் தங்கள் பங்கிற்கு பனையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகின்றன. இவ்விதம் ஒரு சமூகம் புரிதலுக்குள் நமது மக்கள் படிப்படியாக வரும்போது, பனை சார்ந்த வாழ்வியலின் உண்மை தன்மை நிரூபணமாகும்.

இன்று பனை விதை நட்டவர்கள், அடுத்த் வாரமும் நடுவார்கள். ஆனால் மூன்று மாதங்கள் அல்லது மிஞிப்போனால் ஆறு மாதங்கலே இவைகளை தொடர்ந்து செய்ய இயலும். அப்புறமாக இவர்களுக்குல் சில அடிப்படை வினாக்கள் எழும்பும். இவை எப்போது முழைக்கும் என்பதிலிருந்து துவங்கி, வெறுமனே நடுவது தான் நமது வேலையா பனையைனை எப்படி பயன்படுத்துவது? பனை சார்ந்து நாமே ஏன் ஒரு தொழில் தொடங்க கூடாது, பனை ஏறுவது என்ன அத்தனை சிரமமா? என்பது போன்ற வகையில் அது விரிவாகிக்கொண்டிருக்கும். இவைகளுக்கு விடை காணும் நோக்கில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் இப்போராட்டம் வீரியமிக்கது என அரசிற்கு உணர்த்தும். ஆகவே சட்டங்களில் ஏற்படவேண்டிய மாற்றங்கள், படிப்படியாக கட்டிகளில் தேர்தல் அறிக்கையில் வெளிப்படும். அவைகள் பட்டை தீட்டப்படும், சீர் செய்யப்படும், பனையின் எதிர்காலம் குறித்த ஒரு தெளிவான பார்வை கொள்கை அளவிலேனும் இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் வரையறை செய்யப்படும்.

பெரும்பாலும் இப்போராட்டங்கள் பள்ளிகள் கல்லூரிகளில் கட்டுரை வாசிப்பு, சித்திரம் வரையும் போட்டிகள், கைவினைப் பயிற்சிகள், நாட்டுப்புற ஃபேஷன் ஷோ, போன்று பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படவேண்டும். இவ்விதம் மரபுடன் தொடர்புடைய பனை மரத்தினை மாணவர்கள் உள்வாங்கும்போது அவர்களது ஆய்வேடுகளிலும் இவைகள் பெரும் தாக்கத்தை வெளிப்படுத்தும். ஒருவகையில் பனை நடுவது என்பது எளிய துவக்கமாயிருந்தாலும் மக்கள் தங்களை விரித்து பனைக்கென தமிழகமெங்கும் ஏன் உலகமெங்கும் செயலாற்றும் ஒரு வாய்ப்பாக அமையும். உடையைப் பார்க்கிலும் சரீரமும், செல்போனைப்பார்க்கிலும் பனையும் அதிக முக்கியத்துவம் நிறைந்தது அல்லவா?

ஆகவே தான்  நான் பனையின் எச்சங்களைத் தேடி செல்கிறேன். பனை என்பது பனையாக மட்டுமல்ல, நினைவாக, அரூபமாக, கதைகளாக, பழமொழிகளாக, பாடல்களாக, வணக்கத்திற்குரிய தெய்வமாக, பயன்பாட்டுப் பொருளாக, நமது கலாச்சாரமாக, மொழியாக, சமயங்களாக, பொருளியலாக சிதறிக்கிடக்கிறது. இவைகளை ஒன்றுதிரட்டும் மக்கள் தான் இனிமேல் போராளிகள். அவர்களே பனையினை மீண்டும் நம் மண்ணில் உயிர்பெறச் செய்யும் அருட்தொண்டர்கள்.

ஜெயமோகன் அவர்கள் சொல்லுவார்கள். பனை இந்த மண்ணிற்கான மரம். அது இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் அதனை பயன்படுத்தும் அறிவோ நுட்பமோ அற்ற மனிதர்களாக நாம் மாறிவிடுவோம். ஆம் அதுவே அஞ்சப்படவேண்டிய  சவால். ஆகவே பனை நடுகையிலிருந்து நமது போராட்டம் திசை மாறி பனை பயன்பாட்டு பொருட்களை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு அற்பணிப்பும் பனையோடு உணர்வுபூர்வமான ஒரு பிணைப்பும் வேண்டியிருக்கும். அவ்விதம் ஒரு சூழலை அமைப்பதே பனை சார்ந்த எழுச்சிக்கு வித்திடும்.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 7

நவம்பர் 28, 2018

 

பனைக் காலம்

நான் தூரத்தில் ஒரு பனை மரம் பழங்கள் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். அது நோக்கி நடக்கத்துவங்கினோம். அந்த பனை இருக்கும் இடத்திற்கு செல்ல முடியாதபடி ஒரு வேலி. அப்புறம் தான் கவனித்தேன், அந்த பனை வயக்காட்டினுள் நிற்கிறது. ஒருவரது கால் முட்டி வரை மண்ணில் புதைந்து சென்றாலே ஒருவர் அந்த மரத்தின் அருகே செல்ல முடியும். ஆகவே நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

அனைத்து மரங்களைப்போலவே பனை மரம் தனக்கான பருவ காலம் கொண்டுள்ளது என்பதற்கு ஒரிசா மற்றுமொரு சான்று. ஒரிசா வந்து இரண்டு நாட்களில் நான் பார்த்த ஒரே பழம் நிரம்பிய மரம் இது. அவ்வகையில் இது பருவகாலத்தை மீறிய மரம். அல்லது காலத்தில் தன் கனியைத் தராமல் பருவம் தப்பி பழுத்த மரம். இவ்வகை மரங்களை நாம் அவதானிக்க வேன்டியது இக்காலகட்டத்திற்கு இன்றியமையாதது. பருவம் தவறி கிடைக்கின்ற பழங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் ஆய்விற்கும் பேருதவியாக இருப்பவை. எவ்விதம் இவைகள் பருவம் தாண்டி பலனளிக்கின்றன என்பது இன்றுவரை ஆய்வு நோக்கில் பார்க்கப்படவே இல்லை.

எப்படியும் அந்த வயலுக்குள் இறங்கிப் போய் ஒரு பனம்பழத்தை எடுத்து வருவது இயலாதது என்று உணர்த்ததனால் மனதை தேற்றிக்கொண்டேன். நாங்கள் நடந்து வந்தது ஒரு தனியார் தோட்டத்திற்குள். அங்கே வரிசையாக வீடுகள் இருந்ததால் வீட்டிற்கு பின்புறம் உயரமாக எழும்பிய பனை மரத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. மேலே பனையைப் பார்த்தபடி நடந்து வந்ததால் கீழே என்ன இருக்கிறது என கவனிக்கவில்லை. பனையைச் சென்றடைய முடியாது என்பதை அறிந்து தலையைத் தாழ்த்துகையில் தான் பார்த்தேன், வேலியோரத்தில் பனை விதைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியிருந்தனர். எனது கணிப்பின்படி சுமார் 100 விதைகளாவது இருக்கும். எப்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல்லை அடுக்கி கட்டுமானங்கள் செய்வார்களோ அதுபோலவே அடுக்கப்பட்டிருந்தன.  இவ்விதமான ஒரு அமைப்பை நான் எனது வாழ்நாளில் பார்த்தது கிடையாது. இது பதிவு செய்யப்படவேண்டிய ஒன்றுதான் என “பனை” என்னிடம் சொன்னது.

Thavan

என்னுடன் வழிகாட்டியாக வந்த தருண் ஒரு பனங்கொட்டையை எடுத்து எனக்கு காண்பித்தான். இவற்றைச் சாப்பிடலாம் என்றான். அங்கே இருந்த வாலிபன் ஒருவனை அழைத்து இதனை வெட்டி தருவாயா என்றான். எனக்கு அது தேவை என்று படவில்லை. அந்த வாலிபன் உடனடியாக சரி என்றுவிட்டு வீட்டிற்குள் போனான் அவன் வரும்போது கையில் ஒரு கோடாரி. அந்த வாலிபன் பனக்கொட்டையைத் தரையில் வைத்துக்கொண்டு கோடாரி வைத்து அந்த பனங்கொட்டையினைப் பிளக்க முயற்சிக்கையில் அது தெறித்து பறந்தது. பொறுக்கி எடுத்துவந்து மீண்டும் மீண்டும் முயற்சித்தான். நான்கைந்து முறை அவன் இவைகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. பிற்பாடு தனது வீட்டிற்குள் சென்று, ஒரு வெட்டருவாளை எடுத்து வந்தான். அப்புறமாக ஒரு சில முயற்சியில் அவன் அதனை இரண்டாக பிளந்துவிட்டான்.

தருண் எனக்கு அந்த தவணை சுவைக்கக்கொடுத்தான். நான் ஒரு சிறிய துண்டினை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அவனிடம் கேட்டேன், பனங்கிழங்கு கிடைக்குமா? அந்த வாலிபனிடம் பேசி, அவன் எனக்கு பதில் சொன்னான், “கிழங்கு அடுத்த மாதம் தான் வரும்” என்று. இந்த சிறிய குறிப்பு எனக்கு மாபெரும் உண்மையினை விளங்கிக்கொள்ள தேவையாக இருந்தது.

பனங்கொட்டையிலிருந்து தவண் எடுப்பது ஒரு உழைப்பு கோரும் பணி. ஆனால் இவைகள் விற்பனை பொருளாக வருவது இல்லை. வெகு சமீபத்தில் நான் குற்றாலம் சென்றிருந்தபோது பனம்பழங்களும் தவணும் விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஒரு பனம் பழத்தை வழித்து வைத்திருந்து 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். 10 தவண் 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு முன் நான் பார்த்த இந்த காட்சி எனக்கு பெரிய நம்பிக்கை அளித்த காட்சி. மேலும் அவை எனக்கு ஒரு புதிய வாசலை திறந்தது.

பழைய குற்றாலம் செல்லும் தொரணவாயிலில் பதனீர், நுங்கு, பனம் பழம் மற்றும் தவண் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தபோது அது ஒருசேர ஆச்சரியத்தையும் புரிதலையும் கொடுத்தது. பனை மரத்திலிருந்து கிடைக்கின்ற உணவு பொருட்கள் யாவும் ஒவ்வொரு தன்மைக் கொண்டவைகள். ஒரே மரம் ஆனால் அவற்றிலிருந்து பெறப்படும் உணவுகளோ தனித்தன்மை வாய்ந்தவைகள். நான்கு விதமான சத்துக்கள் ஒரே மரத்திலிருந்து கிடைப்பது ஆச்சரியம். இது போக பனங்கிழங்கு இருக்கிறது, கள் இருக்கிறது மேலும் பனங்குருத்தும் இருக்கிறது. அனைத்தையும் ஒருசேர பார்க்க இயலாவிட்டாலும், எங்களை அழைத்துக்கொண்டு சென்ற நபர் அருகிலேயே ஒரு இடத்தில் பனங்குருத்து கிடைக்கும் என்றார். அப்படியானால், பனங்கிழங்கு மட்டுமே இங்கே விற்பனையாகாத பொருள். பதினீர் கிடைக்குமிடத்தில் கள் பெற்றுக்கொள்ள இயலாதது, அரசின் கொள்கையால் மட்டும்தான் தான். ஆக, இந்த மரம் பல்வேறு கால நிலைகளில் பல்வேறுவிதமான பனை பொருட்களைக் கொடுக்க வல்லது மாத்திரம் அல்ல, ஒரே நேரம் பல்வேறு உணவு சத்துக்களையும் ஒருங்கே கொடுக்கக்கூடிய சாத்தியமுள்ளது என்பதனைக் கண்டுகொண்டேன்.

அப்படியானால், இந்த மரம் சார்ந்த ஒரு உலக வரலாற்றை நம்மால் எழுத இயலும். மனிதனும் பனை மரமும் எவ்விதம் தொடர்புக்குள் வ்ந்தன என ஒரு கோட்டுச்சித்திரம் வரையமுடியும். அந்த சித்திரம் இப்படித்தான் இருக்கும். ஆதி மனிதன் பனை மரங்களை நெருங்குவதற்குக் காரணாம் பனம் பழங்கள் தான். சுமார் 3 மாதகாலம் தொடர்ந்து கிடைக்கும் இப்பனம் பழங்கள் மனிதனுடைய பசியைப் போக்குவதில் முன்னணியில் நின்றன. ஆகவே இந்த மரம் சார்ந்தே அவன் தன் வாழ்வை அமைத்துக்கொண்டான். பிற்பாடு பழங்கள் தீர்ந்தபின்பு வேறு இடங்கள் நோக்கி செல்ல இயலாதபடி மழைக்காலம் துவங்கிவிடும்.  இக்காலகட்டங்களில் தான் பனங்கொட்டைகளை ஏன் உண்ணமுடியவில்லை, ஏன் இதன் ஓடுகள் இப்படி கடினமாக இருக்கின்றன, இவைகளை உடைத்துப்பார்த்தால் என்ன என்கிற ஒரு உள்ளுணர்வு தோன்றியிருக்கும். கைகளால் உடைக்கமுடியாது, நகங்களால் கிறிவிட முடியாது எனும்போது பாறைகளைக் கொண்டு உடைத்துப்பார்த்திருப்பர். அவற்றின் முடிவில் தான் பாறைகளை எடுத்து வீசும் முயற்சி அதிக சக்தி செல்வளிக்கும் ஒன்றாக இருப்பதாலும், அதன் முடிவில் கிடைக்கும் பலன் என்பது சொற்பமே என்பதாலும் அவர்கள் “முதல்” ஆயுதத்தைக் கையாண்டிருப்பார்கள். அதுதான் சுத்தியல். ஒரு புறம் பெரிய கல்லும் அதனை இணைக்கும் கயறும் மட்டையும் எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!

மழைக்காலங்கள் முடிந்த பின்பு உணவு தேடி வெளியே வருகையில், கொட்டைகள் உண்ணத்தகாதவைகளாக நாற்றமெடுத்து கஞ்சியாக மாறியிருக்கும். ஆனால் இவ்வேளைகளில் முள்ளம் பன்றி, எலி, மற்றும் பன்றிகள் நிலத்தில் துவாரமிட்டு எதையோ மனநிறைவுடன் உண்டுகொண்டிருப்பதைப் பார்த்திருப்பர். அவைகள் தான் பனங்கிழங்கு. பனங்கிழங்கினை வெறும் கரங்களால் தோண்டுவது இயலாது, ஆகவே கூர்மையான ஆயுதங்கள் மரத்தாலும், மரத்துடன் இணைக்கப்பட்ட கற்களாலும் பயன்பாட்டிற்கு வந்திருக்கும். இந்த முயற்சியும் விவசாயத்திற்கான கருவிகள் கண்டுபிடிப்பிற்கு முன்னோடியாக இருந்திருக்கும்.

Thavan Axe

இவ்விதமாக பங்கிழங்கினையும் ஒரு உணவாக தங்கள் உணவு பட்டியலில் சேர்த்திருப்பார்கள். பனங்கிழங்கும் அவர்களுக்கு ஒரு மாபெரும் உணவு தன்னிறைவைக்கொடுத்திருக்கும். மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் வருகையில் வறட்சியான காலங்களில் பதனீர் ஊறும் என்பது ஆதி மனிதர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் உணவு வேண்டும் எனத் தேடியவர்கள் இந்த மரத்தினுள் என்ன இருக்கிறது என்ற ஆர்வக்கோளாரினாலோ அல்லது உள்ளுணர்வினாலோ தேடி குருத்துக்கள் உண்ண ஏற்றவைகள் என கவனித்திருப்பார்கள். ஆகவே குருத்தும் பசியைப் போக்கும் வண்ணமாக இவர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. ஆகவே பனை மரம் குறித்த ஆரம்ப புரிதலே அதன் உணவு தன்னிறைவு குறித்த ஒன்றாக ஆதி மனிதன் நினைவில் ஊறி இருந்திருக்கிறது. ஆகவேதான் பனை என்றவுடன் தாய்மையுடன் அதனை அத்தனை சமூகமும் இணைத்துக்கொள்ளுகிறது. தொன்மையானது என்பதால் ஒரு உக்கிரதன்மை இணைக்கப்பட்டு காளியின் வடிவாக பனை வணங்கப்படுகிறது.

இந்த மனித பரிணாமத்தின் வளர்ச்சியில் மனிதனோடு பனைக் கொண்டுள்ள உறவை விலக்கியே நமது ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டு வந்தது. பனையுடனான நெடு மரபு ஒன்று மனித நாகரீக வளர்ச்சியில் ஒரு மாற்றவியலா கண்ணியாக இருத்திருக்கிறது என்பது இனிமேல் தான் ஆய்வு நோக்கில் நிறுவப்படவேண்டும். ஆனால் உண்மை அதுதான். அப்படியானால் ஏன் நமது ஆய்வாளர்கள் இவைகளை நமக்கு முன்பே கூறவில்லை? முக்கிய காரணம், பனை ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களில் நிறைந்து காணப்படுவது. பனை சார்ந்த மனித வறலாற்றை முக்கியமென கருத  மேற்குலக ஆய்வாளர்களுக்கு சரியான பின்புலம் கிடையாது. ஆனால் அவ்விதம் ஒரு ஆய்வுநோக்கோடு வரும் நாட்களில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டால் மிகப்பெரிய திறப்புகள் கிடைக்க வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.

நான் பாண்டிச்சேரியிலுள்ள ஃபிரஞ்சு நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சென்றிருந்தபோது, தொல் மகரந்தங்களை ஆய்வு செய்யும் ஒரு தொல் தாவரவியல்  பேராசிரியை முனைவர் அனுபமா, என்னிடம் பழனி மலையடிவாரத்தில் பனை சார்ந்த சில படிமங்கள் கிடைத்திருப்பதாகவும் அவை பனைம்பூவின் மகரந்தத்தை ஒட்டியிருப்பதாகவும் கூற்னார். மேலும், இந்த படிமங்கள் யாவும் இரண்டாயிரம் வருட பழைமையான மயானத்திலிருந்து பெற்றிருக்கிறோம், ஆகவே இவைகள் எதோ ஒருவகையில் மரண சடங்குகளில் இடம் பெற்றிருக்கலாம் என யூகிக்கிறோம் என்றார். பிறப்பிலிருந்து இறப்பு வரை இணைத்திருக்கும் பனை மரம் மனித வரலாற்றின் ஆதி முதல் அந்தம் வரை வரும் ஒரு நெடும் பயணியே.

தவண் எடுப்பதற்கு ஒரு காலம் உண்டு என தமிழகத்தில் எவரும் சொல்லி கேட்டது இல்லை. அதாவது, கிழங்கு எடுப்பது தான் பருவம். தவண் அதன் உப பொருள். ஆனால் இங்கே ஒரிசாவிலோ தவண் ஒரு முக்கியமான உணவு பொருளாக கருதப்படுகிறது. ஆகவே தான், கிழங்குகளுக்கு என பாவப்படாமல் வெறுமனே அடுக்கிவைத்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக தமிழகம் எங்கும் உள்ள ஒரு கருத்துருவாக்கம் என்னவென்றால் பனைத்தொழில் வெறும் ஆறு மாதமே கைக்கொடுக்கும் பின்னர் பனை சார்ந்து செயலாற்றும் ஒரு தொளிலாளி வேலையின்றியே இருக்கவேண்டும். இவ்வித நோக்கு பனை மரத்தை கருப்பட்டி காய்ச்சும் மரமாக பார்த்ததால் வந்ததன் விளைவே. ஆனால் உண்மை அப்படியல்ல.

வெறும் கருப்பட்டி மாத்திரம் அல்ல பனை சார்ந்து,  இன்னும் அனேக பருவங்களும் இருக்கின்றன. பனை சார்ந்த பல்வேறு தொழில்கள், உணவு தன்னிறைவு போன்ற வேறு பல காரணிகளும் இருக்கின்றன. அதிலும் இன்றைய மக்களின் உணவு தேடும் மனநிலையில், மரபணு மாற்றப்படாத உணவுகளைத் தேடி போய் வாங்குகின்றவர்கள் அனைவரும், பனை சார்ந்த உணவுகளை தேடிப்போவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் இவைகளை அரிசியோடு இணைத்து தின்பண்டமாக சாப்பிடுவோம் என்றான் தருன். அந்த தின்பண்டம் வெளியே எந்த கடைக்களிலும் கிடைக்காது. வீட்டில் செய்தால்தான் உண்டு எனக் கூறினான். அது எனக்கு புத்தம் புது செய்தி. வீடுகளில் மட்டுமே கிடைக்கு மிக சத்தான உணவு ஒன்று ஒரிய மரபில் இருப்பது எத்துணை ஆச்சரியம். இவைகளும் தொன்மையான ஒரு மரபிலிருந்தே கைமாற்றி விடப்பட்டிருக்கவேண்டும். ஆக, மிகச்சரியான சரியான களத்தில் தான் இருக்கிறோம் என்ற உறுதிப்பாடு ஏற்பட்டது.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 6

நவம்பர் 27, 2018

காணாமற்போகும் ஓலைக்குடிசைகள்

என்னை அழைத்துக்கொண்டு சென்ற நண்பரின் பெயர் தருண். என்னைவிட 10 வயது இளையவர். மிகவும் உற்சாகமாக என்னை அழைத்துக்கொண்டு ஊர்சுற்றிக் காண்பிக்கச் சென்றார். எனக்கு அவர் காண்பித்தவைகள் அனைத்துமே தமிழக கிராமத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வையே எனக்கு தந்தது. மிக அழகிய இயற்கைக்காட்சிகள். வயல் ஓரங்களிலேயே பனை மரங்கள் நெடிந்துயர்ந்து வளர்ந்திருந்தன. வயல் வெளிகளில் பனை மரத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். கடற்கரைப்பகுதிகள் மட்டுமல்ல, வறண்ட நிலங்களில் மட்டுமல்ல, செழிப்பான இடங்களிலும் பனை மரங்கள் எவ்வித தடையுமின்றி வளரும் என்பதனை நான் கண்டிருக்கிறேன். செழிப்பான இடங்களில் கூட இவைகளை தேர்ந்து நட்டிருக்கிறார்கள் என்றால், அந்த சூழியலில் ஏதோ ஒரு வகையில் பனை மரம் தன்னை வெகுவாய்ப் பிணைத்துள்ளது என்பதை அறியலாம். ஆகவே அதனை எனது முதல் தடயமாக எடுத்துக்கொண்டேன்.

அவர் என்னை அழைத்துச் சென்ற முதல் தெருவிலேயே அழகிய பனை மரங்களும் புற்கூறையில் இடப்பட்ட வீடும் இருந்தது. மிக நேர்த்தியாக கட்டப்பட்ட ஒரு வீடு அது. குடிசைக்குள் இருக்கும் போது உணரும் வாசனை மற்றும் ஒரு ஆழ்ந்த அமைதி, சிமண்ட் கட்டடங்களில் ஏனோ ஏற்படுவதில்லை. அந்த குடிசைக்கு எதிர்புறத்தில் தானே பனை மரங்களும் இருந்தன. அப்படியானால் ஏன் பனை ஓலைகளில் வீடு கட்டாமல் புற்களைக் கொண்டு கட்டுகின்றனர்? என்கிற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டிருந்டது.

Hut

எனது கனவு பனை ஓலையில் வேயப்பட்ட வீடுதான். ஆனால் அவ்விதம் ஒரு வீடு கட்டுவது மிகவும் சவாலான காரியம். அரசு தானே முன்னின்று கூரை வீடுகளைக் காலிபண்ணிக்கொண்டிருக்கிறது. அரசு இன்று அனைவரும் மச்சு வீடுகளில் வாழவேண்டும் என்கிற கருத்துருவாக்கத்தை முன்னிறுத்துகிறது. ஓலை வீடுகளில் வாழ்ந்தோருக்கு மாற்றாக பாறைகளையும் பவழப்பாறைகளையும் கிளிஞ்சல்களையும் எடுத்து செய்யப்படும் சிமண்ட் போன்றவைகளையும், மிகப்பெரிய சுரங்கங்களைத்தோண்டி, இயற்கைக்கு ஊறுவிளைவிக்கும் இரும்பு பொருட்களைக் கொண்டே அனைவரும் வீடு கட்டவேண்டும் என மல்லுக்கட்டுகிறது. வேடிக்கை என்னவென்றால் அரசே, சிமண்ட் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என பெயரிட்டிருக்கிறது. ஆகவே கருப்பட்டி என ஓலையில் எழுதி நாக்கில் தேய்த்தால் போதும் நன்றாக இனிக்கும்.

அரசு இவ்விதம் இருந்தால் திருச்சபைகள் இன்னும் பல படிகள் மேலே நிற்கின்றன. இன்றும் குமரி மாவட்டத்தில் 150 ஆண்டுகள் ஆன திருச்சபைகளுக்குச் சென்றால், அனைவரும் தங்கள் சபை நாள் அன்று ஒரு வரியை தவறாது வாசிப்பார்கள். “இந்த சபை ஆரம்பிக்கப்பட்டபோது வெகு சிலராக கூடி பனைஓலைக் கூரை வேய்ந்த திருச்சபையில் ஆராதித்தார்கள்”. இந்த கூற்றின் பொருள் என்னவென்றால் நாங்கள் படிப்படியாக உயர்ந்து இன்று காங்கிரீட் ஆலயத்தில் ஆராதிக்கிறோம், மணிக்கூண்டு வைத்திருக்கிறோம், சேகர சபையாக மாறிவிட்டிருக்கிறோம், ஆண்டவர் எங்களை பன்மடங்காக ஆசீர்வதித்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் இயற்கை சார்ந்த ஒரு சூழலிலிருந்து வீழ்ந்திருக்கிறோம், ஏதேனிலிருந்து தள்ளப்ட்டிருக்கிறோம், ஆண்டவரோடு சஞ்சரிக்கும் ஒரு சூழலை இழந்துவிட்டிருக்கிறோம் என்பது பொருள் படாது. ஆனால் அதுதான் உண்மை.

பனை ஓலைகளைக் குறித்து பேசுகையில், அது ஒரு புதுப்பிக்கத்தக்க வளம் (Renewable Resource) என்று கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பனை குறைந்தபட்சம் 12 இலைகளை விடும். ஒரு வீடு மிகச்சரியாக ஓலைகள் வேய்த்து கவனமாக பராமரிக்கப்பட்டால், சுமார் 7 வருடங்கள் வரை அவை பயன்பாட்டிற்கு வரும். மிக அழகிய இந்த குடிசைகளுக்கு ஏழு வருடத்திற்கு ஒருமுறை புத்துயிர் அளிக்கும் இவ்வித கட்டுமானங்கள் பெருமளவில் ஊக்கப்படுத்தப்படாதது நமக்கு பேரிழப்பே. பனை ஓலையில் கட்டுமானங்களை செய்யத்தெரிந்தவர்கள் இன்று அருகிவிட்டார்கள். அனைவரும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என இயற்கைக்கு மாறாக திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பனை ஓலை வீடுகளுக்கு எதிராக சொல்லப்படும் முக்கிய காரணம் தீ விபத்துதான். ஆனால் நம்புங்கள், பேருந்து, இரயில், கப்பல், விமானம், அடுக்குமாடி குடியிருப்புகள், ஆலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எல்லாவற்றிலும் தீ விபத்திலிருந்து காக்கும் உபகரணங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. பனை ஓலை வீடுகளில் வாழும் ஏழைகளுக்கு அரசு இவைகளை கொடுக்கலாமே? இலவசமாகவோ, மானியமாகவோ அல்லது கடனாகவோ? அது அத்துணை எளிதல்ல. அரசு தனக்கு வரி கிடைக்கும் வாப்புகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. மக்கள் சார்ந்ததோ சூழியல் சார்ந்த தொழில்நுட்பங்களோ அரசிற்கு தேவையல்ல. எப்படி வணிக சக்கரத்தை சீராக்க இயலும் என்பதிலேயே அவை குறியாக இருக்கின்றன.

தீ விபத்தைக் குறித்துப் பேசுகையில், எனது நண்பரும் பனையேறியுமான கஞ்சனூர் பாண்டியன் எனக்கு ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். அவரது ஊரில் ஒரு பனையேறியின் ஓலைக்குடிசை பற்றியெரியத்துவங்கியதாம். அனைவரும் வந்து நீர் வார்த்தும் பலனில்லை. எரிந்து முடிந்த பிற்பாடு அவர் வீட்டிற்குள் சென்று மீந்த பொருட்களை எடுத்துவந்திருக்கிறார்.  அவைகளில் ஒரு ரேடியோ பெட்டியும் இருந்திருக்கிறது. அனைவரும் சென்றபின் தனது கட்டிலில் படுத்துக்கொண்டு நிம்மதியாக பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்த காட்சியை பாண்டியன் எனக்கு விவரித்தபோது அப்படியே அசந்துபோனேன். ஒரு மனிதன் தன் ஆகப்பெரிய சொத்து என்பதை இழந்தபின் அவன் என்னாவான்? மீண்டெழ முடியாத நிலைக்குப் போய்விடுவான். அதே வேளையில் ஆழ்ந்த அமைதியினை சந்திக்கும் மனிதன் கண்டிப்பாக மாமனிதர் தான். பாண்டியன் மேலும் கூறினார். “அப்புறம் அவரு ரண்டே நாளில பனமரத்தப் பொளந்து வீடு கட்டிட்டாரு”. இன்ரு அப்படி நம்மால் இழந்தவைகளை மீட்டெடுக்க இயலுமா?

இன்று வீடு கட்டுகிறவர்கள் அதனை காப்பீடு செய்யவேண்டும். காப்பீடு தொகையினை வசூலிக்கும் அனைவரும், பனையோலையில் செய்யப்பட்ட வீடுகளுக்கு காப்பீடு வழங்குவதில்லை. வீடு அனைத்துவகையிலும் “பாதுகாப்பானதாய்” இருந்தால் தான் காப்பீடு. நகைச்சுவையாக இல்லையா? பாதுகாப்பற்ற சூழலில் இருப்போருக்கு அல்லவா காப்பீடு வேண்டும்? இவ்விதமான ஒரு சுழற்சி நம்மை சூழ்ந்து இருக்கிறது. இவைகளை நாம் ஒன்றும் செய்ய இயலாது.

இந்நாட்களில் அனேகர் என்னிடம் வந்து எங்களுக்கு ஒரு பனை மர குடிசை ஒன்றினை அமைத்துத்தர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பனை சார்ந்த குடிசையில் வாழ்ந்து பழகி வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளினால் வேறு இடங்களுக்கு பெயர்ந்தவர்கள் இன்று தங்கள் தோட்டங்களிலும், ஊர்களிலும் ஒரு குடிசையாவது அமைத்துக்கொள்ள இயலுமா என ஏங்குகிறார்கள்.  அவ்விதம் பனை ஓலைகளில் வீடு கட்டும் பாரம்பரிய திறன் வாய்ந்தவர்களை நாம் ஒருங்கிணைத்து அவர்கள் திறமைகளை முன்னெடுக்க வேண்டும். அது கட்டிட கலை படித்தவர்கள் செய்யவேண்டிய பணி.

பனை ஓலை சார்ந்து பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. எந்த காலத்தில் ஓலைகளை பறிக்கவேண்டும், எப்படி அவைகளை மிதித்து ஒரு வடிவிற்கு கொண்டுவரவேண்டும், எத்தனை அடுக்குகள் வைத்துக் கட்ட வேண்டும், எவ்விதமான நார் தேவை. அது போலவே வீட்டின் அமைப்பு கூரையின் சரிவு போன்றவை யாவும் மிக மிக முக்கிய காரணிகள் தான். இந்த வருடம் சில முன்னெடுப்புகள் செய்யவேண்டும் என நினைத்து இயலவில்லை, அடுத்த வருடம், கண்டிப்பாக பனை சார்ந்த ஒரு அழகிய குடிசை ஒன்றினை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

தென் திருவிதாங்கூரில் பனை ஓலைகளில் அதிகமாக வீடுகளைப் பார்க்க இயலாது. இப்பகுதிகளில் பனை அதிகமாக நின்றும், தென்னை ஓலைகளையே மிக அதிகமாக பயன்படுத்தினர். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்ததாக பேராசிரியர் . அ. கா. பெருமாள் அவர்கள் குறிப்பிடுவார்கள். பத்மநாபபுரம் அரண்மனை கட்டப்பட்ட ஆரம்பக் கட்டத்தில்,  மேற்கூரைக்காக தென்னை ஓலைகளே வாங்கப்பட்டன, ஏனெனில், பனை ஓலைகள் அன்றைய சூழலில் எழுதுபொருளாக இருந்ததனால், அதனை எழுத்து தேவைக்கென சேமிக்க வேண்டி இவ்விதம் செய்தார்கள் என கூறினார்.

இச்சூழலை அப்படியே ஒரிசாவிலும் வைத்துப் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக பனை ஓலைகளாலான ஓலைச்சுவடிகளின் பிரதி ஒரிசாவில் தான் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால், பெருமளவில் இங்கும் ஓலைகள் பயன்பாட்டில் இருந்திருக்குமா அல்லது மாற்று சாத்தியங்கள் கண்டடையப்பட்டிருக்குமா? கண்டிப்பாக மாற்று சாத்தியங்கள் கண்டடையப்பட்டிருக்கின்றன என்பதனை அங்கே பார்க்க முடிந்தது.

ஒரிசாவின் பாரம்பரிய நெல் ரகம் என்பது நீண்ட வைக்கோலினை உடையது. அவைகளையே அங்கே வீட்டிற்கு கூரை வேய பயன்பாடுத்துவார்கள். இன்று அப்படியல்ல, பல்வேறு குட்டை ரகங்கள் பயிரிடப்பட்டுவருகின்றன. ஆகவே அங்கேயும் கூரை வேய வைக்கோல் தட்டுப்பாடுகள் இருக்கின்றன என சொல்லக்கேட்டேன். ஒருவகையில் தற்சார்பு வாழ்விற்கு நின்று திதானித்து ஆப்பு அடிக்கிறார்களோ என்று கூட தோன்றுகின்றது. திரும்பிச்செல்லவியாலா இடம் நோக்கி நம்மை நகர்த்துகிறார்கள்.  எத்துணை   வீரியமாக நாம் இழந்தவைகளை மீட்டெடுக்க வேண்டும்?

நான் பார்த்த குடிசை பரம்பரிய நெல்லின் வைக்கோல் கொண்டு வேயப்பட்ட வீடுதான் சந்தேகமில்லை. ஆனால் அடுத்து அங்கே தானே நான் வேறு சில பொருட்களையும் பார்த்தேன். வீட்டிற்குத் தேவையான பெட்டிகள் அனேக அந்த குடிசையச் சுற்றி இருந்தன. மேலும் மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இருப்பதையும் பார்த்தேன். சரிதான். பனைக்கு மாற்றாக இங்கே பல்வேறு பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அவைகளை பயன்படுத்தி பனையின் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. ஒருவேளை இன்னும் நான் எனது பயணத்தையே ஆரம்பிக்கவில்லை அதற்குள்ளாக முடிவுகளுக்குள் வருவது சரியாயிராது என்பதால் அவைகளை அவ்விதமே விட்டுவிட்டேன்.

இவைகளுக்கு மாற்றாகவும் அன்றே எனக்கு பல பதில்கள் கிடைத்துக்கொண்டே  இருந்தன. குறிப்பாக பனை ஓலைகளினால் செய்யப்பட்ட வீடு, வீட்டின் சாய்வுகளுக்காக பனை ஓலைகள் வேயப்பட்ட இடங்கள். சுவற்றிற்கு பதிலாக ஓலைகளை தொங்க விட்டிருப்பது, மாட்டு கொட்டகைகள், கடைகளுக்கான சாய்வுகள் என பல்வேறு வடிவில் அவைகளை நான் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே வந்தேன். அப்படியானால் ஒரிச்சாவில் ஒரு கலப்பு கலாச்சாரம் இருந்திருக்கிறது என்று நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது. பல்வேறு இயற்கைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தேவைகளும் நேரமும் திறமைகளுமே அவைகளை தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். இப்படியான இடங்களில் பல்வேறு புதையல்கள் இருக்கும் என என் ஆழ்மனம் உறுதியாக கூறியது. அப்புதையல்களை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 5

நவம்பர் 25, 2018

விதைகள் முளைக்கும்
சற்று நேரத்தில் சுவப்ன ஷிரி அவர்கள் வந்தார்கள். சூழியல் பங்களிப்பில் மிக முக்கியமான ஆளுமை அவர்கள். 25 வருடங்களுக்கும் மேலாக சூழியல் பங்களிப்பாற்றி வருகிறவர்கள். நாங்கள் முதன் முறையாக சந்திக்கிறோம் ஆகையால், நான் அவர்களுக்காக எடுத்து வைத்திருந்த பனையோலையில் செய்த புரூஸ்லீ படத்தினை பரிசளித்தேன்(என்னிடம் கொடுப்பதற்கு வேறு படங்கள் இல்லை). நான் ஒரிஸ்ஸா வந்ததன் நோக்கத்தைக் குறித்து டாக்டர். கிறிஸ்டோபர் மூலம் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, பனை எனக்கும் மனதிற்கு நெருக்கமான மரம் தான். கடந்த வருடம் இங்கே பனை மரங்களை நடுவதற்காக முயற்சி செய்தோம், ஆனால் இங்கே யாரும் பனை மரங்களை நடுவது இல்லை. ஏதோ ஒரு மூட நம்பிக்கை அவர்களைத் தடுக்கிறது என்றார்.
பனை சார்ந்த மூட நம்பிக்கைகள் உலகமெங்கும் இருக்கும் என்றே நான் நம்புகிறேன். அந்த மூடநம்பிக்கைகள் இந்த மரத்தின் தொன்மையை சுட்டி நிற்பனவாகவும், இம்மரத்தை பயன் படுத்தியவர்களைக் குறித்த பிற இனத்தினரின் குறுகிய பார்வையிலிருந்தும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பொதுவாக மரித்தவர்களை அடக்கம் செய்யும்போது விதைகளை அவ்விடங்களில் முழைக்கப்போடும் ஒரு வழக்கம் உண்டு. அவ்விதமானால் பனை மரத்தினை மரித்தவர்கள் உருவாக பார்ப்பதும், அவ்வித மரங்களை அருகில் சென்று தீண்டுவதும் விலக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஒற்றைப்பனைமரம் சார்ந்த மூடநம்பிக்கைகள் அனேகம் உண்டு.

அதற்கு நான் பதிலளிக்கும் விதமாக இப்படி கூறினேன். தமிழகமும் பனை சார்ந்த பல மூட நம்பிக்கைகள் கொண்ட பகுதிதான். கடந்த இரண்டு வருடங்களில் தமிழகம் முழுவதும் பல இலட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. பனையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதனை மக்கள் உணர்ந்துகொண்டால் அவர்களாகவே பனை விதைகளை நடுவார்கள் என்றேன். ஏற்றுக்கொண்டார்கள்.

DSC06166

ஒரிஸ்ஸாவைப் பொறுத்த அளவில் பனம் பழ சீசன் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிடும். ஆகவே அடுத்தவருடம் தான் பனை விதைகள் நடமுடியும் என்கிற தகவலையும் அவர்கள் சொன்னார்கள். அது ஒரு முக்கிய தகவல். ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய மாதங்களில் அங்கே மழைப்பொழிவு உள்ள மாதங்கள். அப்படியானால் மே மதத்தில் பனம்பழம் விழத்துவங்கும். பெப்ருவரியிலிருந்து நுங்கு கிடைக்குமாயிருக்கும். பொதுவாகவே மழைக்காலத்திற்கு சற்று முன்னமே நாம் பனம்பழ காலம் என குத்துமதிப்பாக யூகித்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

நீங்கள் எப்படி பனை  நடுகிறீர்கள் எனக் கேட்டார்கள். ஏன் பனை விதைகள் நடவேண்டும் சிறிய செடிகளாக்கி நடக்கூடாதா என்றார். விதைகளை நடுவதில் உள்ள எளிமையை விளக்கி கூறினேன். விதைகள் கிடைக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே நடுவது குறித்த முக்கியத்துவத்தைக் விளக்கிக் கூறினேன். புரிந்துகொண்டார்கள். அது அப்படித்தான். பலருக்கும் பனை விதைகள் பல்வேறு இடங்களில் முளைத்திருப்பதைப் பார்த்ததும் ஒரு ஆசை எழும். அப்படியே தோண்டி எடுத்து நட்டுவிடலாமே என்று. ஆனால் அது அத்துணை எளிதல்ல. பனை விதைகளை தோண்டி எடுக்கவேண்டுமென்றால் இரண்டரை அடிக்கும் மேல் நாம் மண்ணைத் தோண்டவேண்டும். இவ்வளவு பிரயத்தனம் எடுப்பதற்கு பதிலாக எளிதாக பனை விதைகளை நட்டுவிடலாம்.

அப்படியே சிறிய பைகளில் இதன் விதைகளை ஊன்ற இயலுமா என்பதும் பலரிடம் உள்ள கேள்விகள். இயலும் என்பதே பதில். ஆனால் அதற்கென ஆகும் செலவு மிக அதிகம். மேலும், அவைகளை வைப்பதற்காக வாங்கும் நெகிழிப் பை ஒரு தேவையற்ற செலவும், சூழியல் சீர்கேடுமாகும்.  அவைகளை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை வைத்து பராமரிப்பது, அவைகளை எடுத்துச் செல்வது, அவைகளை நடுவதற்காக பறிக்கும் குழிகள் போன்ற தேவையற்ற செலவுகள் என விலை கூடிக்கொண்டே போக வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக ஒரு வருடம் பொறுத்திருப்பதில் தவறில்லை.

உங்களுக்கு எப்படி இந்த மரத்தின் மேல் ஆசை வந்தது எனக் கேட்டார்கள். ஒரு இருபத்தி ஐந்து வருட பிணைப்பு என்று எனது வாழ்வோடு பனை எப்படி இணைத்திருக்கிறது என என் வாழ்கைக் குறிப்பினை விளக்கிக் கூறினேன். அயர்ந்து போனார்கள். 25 வருடங்களாக ஒரே மரத்தினை நேசிப்பதும், அதற்காக உழைப்பதும் சாதாரண காரியம் அல்ல என எனக்குத் தெரியும். நீங்கள் என்னை வெகுவாக பாதித்துவிட்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக நாளைக்கு எனது பணியாளர்கள் இங்கே வரும்போது அவர்களுக்கு நீங்கள் ஒரு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.

பிற்பாடு என்ன நினைத்தார்களோ தெரியாது. அடுத்த வருடம் நாங்கள் பனை விதைகளை இங்கு நடப்போகிறோம் என்றார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை. என்னோடு பேசியதன் விளைவாகவே அவர்கள் அந்த ஊக்கம் கொண்டிருந்தாலும், அத்தனை விரைவாக முடிவெடுப்பார்களா? மேலும், ஏதோ சிறிய அளவில் இவைகளை நடுவது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே, நான் அவர்களிடம், அப்படியானால் ஒரு லட்சம் பனை விதைகளை நடுங்கள் என்றேன். எனது மனதிற்குள் ஒரு படபடப்பு இருந்து கொண்டே தான் இருந்தது. எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாதே என. நான் அவர்களை எதிர்பார்புடன் பார்க்க, சுவப்ன ஷிரி வெகு சாதாரணமாக “ஏன் கூடாது” என்றார்கள். நான் மகிழ்ந்து போனேன். அவர்கள், எழுந்து தனது அலுவலக வெண் பலகையில் எழுதத்துவங்கினார்கள். “பனை விதை நடுகை 2018 – 19: 100000 இலக்கு, FES” நான் பேச்சிழந்தேன். இது எனக்கு கிடைத்த ஜாக்பாட். உடனடியாக முடிவெடுக்கவும் ஒரு தைரியம் வேண்டும்.

FES P

கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படித்தான் நான் தொல். திருமாவளாவன் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். பனை குறித்து நாங்கள் விரிவாக உரையாடினோம். 2018ஆம் ஆண்டு தனது பிறந்த நாளுக்கென அவர்கள் 100000 பனை விதைகளை நடுவதற்கு களமிறங்கி முயற்சிகளை எடுத்தார். அந்த முயற்சியில் 2.5 லட்சம் பனை விதைகளுக்கும் அதிகமான விதைகளை அவர்கள் விதைத்துள்ளனர் என அறிந்துகொண்டேன். திருமாவளவன் பனை விதைப்பில் இறங்கியது தமிழகத்தில் ஒரு திருப்புமுனை என்றே கொள்வேன்.

பனை விதை எப்படி தமிழகத்தின் சூழியல் செயல்பாட்டாளர்களின் பார்வையில் விழுந்தது? தமிழகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை நடுவதில் பல முக்கிய பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக கருத்தியல் ரீதியாகவும், களம் சார்ந்து செயலாற்றும் பல்வேறு தன்னார்வலர்களாலும் அவைகள் இன்று வேற்பெற்றிருக்கின்றன.
திரு. நம்மாள்வார், காலம் சென்ற. டாக்டர். அப்துல்கலாம், சத்குரு ஜக்கி வாசுதேவ், மற்றும் பல்வேறு குழுக்கள் தனிநபர்கள் என, தங்கள் தங்கள் பார்வைக்கோணங்களிலிருந்தும், தங்களை பின்பற்றுவோரைக் கொண்டும், மரங்களை நடுவதற்கு ஏற்ற கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்கள். இந்த நேரத்தில் தான், பியுஷ் மனுஷ் போன்ற களப்பணியாற்றிவரும் இயற்கை செயற்பாட்டாளர்கள், நட்ட மரங்கள் எங்கே என்ற கேள்வியை எழுப்பினார்கள.

இதுவரை வனத்துறையினர் நட்ட மரங்களின் கணக்குகளைப் பார்த்தால், அவை, சகார பாலைவனத்தையும், கடலையும் நிறைத்துவிடும் அளவிற்கு இருக்கும், ஆனால் ஏனோ காடுகளின் அளவு மட்டும்  சுருங்கிக்கொண்டே வருகிறது என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். மரம் நடுவதில் இருக்கும் ஊழல் ஒருபுறம், மற்றொருபுரம் அது ஒரு அரசியல் விளையாட்டாய் நடந்துகொண்டிருக்கிறது. மரம் நடுவதற்காகும் செலவு பனை விதைகளை நடுவதுடன் ஒப்பிட்டால் மிக அதிகம். நடுவதுடன் மரங்களுக்கான செலவுகள் நின்றுவிடுவதில்லை, அவைகளை பராமரிப்பதும் எளிதல்ல. வேலியமைப்பது முதற்கொண்டு தண்ணீர் பாய்ச்சுவது வரை அற்பணிப்பு இல்லாமல் இவைகளை யாரும் செய்ய இயலாது.

ஆகவே, மரக்கன்றுகளை வாங்கி கைகளைச் சுட்டுக்கொண்டவர்களும், சிறிய அளவிலேனும் ஒரு சூழியல் பங்களிப்பாற்றவேண்டும் என இருந்தவர்களுக்கு, பனை விதைகள் மிக முக்கிய ஆயுதமாகிப்போனது. அதற்கு ஏற்ற சூழமைவும் தமிழ்நாட்டில் இருந்தது.

பொதுவாக பனம்பழங்கள் தமிழகத்தில் ஏற்படும் பருவமழைக்காலங்களுக்கு முன்னர் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அவைகள் முழைத்து எழும்புவதற்கு சுமார் நான்கு மாதம் ஆகும். ஆகவே மழைக்கு முன்னால் இடப்படுகின்ற விதைகள் பருவகாலத்தில் முழைத்தெழும்பிவிட வாய்ப்பு தாராளமாக உள்ளது. மேலும், ஆடுகளோ மாடுகளோ மேய்ந்துவிடும் என்ற கவலையும் இல்லை. அவைகள் மேய்ந்தாலும், உள்ளிருந்து குருத்து முளைத்து வந்துகொண்டே இருக்கும்.

பனை விதைகளை முன்னிறுத்துவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், பனை விதைகள் தண்ணீரை கோரி நிற்பது அல்ல. வான் மழை ஒன்றே போதும். பிற மரங்களை நட்ட அனேகம் பேர், அவைகளுக்கான தண்ணீரை தேடி வழங்குவதில் உள்ள சிரமங்களை நன்கு அறிந்திருந்தனர். வேண்டுமென்றே தாங்கள் நட்ட மரங்களை தண்ணீர் இன்றி வாடிவிடுவதைப் பார்பதற்கு எவருக்கும் மனதிருப்பதில்லை தான். ஆனால் பருவமழை பொய்த்து, தண்ணீரே இல்லை என்றாகிப்போனபோது கண்ணெதிரே மரங்கள் வாடி, செய்வதறியாது திகைத்து நின்றவர்களுக்கு, பனை விதைகள் ஒரு சிறந்த மாற்றாக இருந்தன.

முக்கியமாக இன்னும் சில காரணங்கள் உண்டு. பனை மரம் தமிழர் மரம் என்ற ஒரு எண்ணம் தமிழகத்தில் வேரூன்றி இருப்பதே அதன் காரணம். திரு சீமான் போன்றவர்கள் அவ்விதம் ஒரு கருத்தை வலியுறுத்தினார்கள். அந்த கருத்தை அவர்கள் விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்றிருந்தார்கள். சூழியல் சார்ந்த புரிதலற்று மொழி மற்றும் பொருளியல் சார்ந்த புரிதலினால் பெற்ற இவ்வித கருத்துக்களை அவர்கள் பரப்பினாலும், அதற்காக களமிறங்கவில்லை. பூனைக்கு மணி கட்டுவது யார் என்றே காத்திருந்தனர்.

நான் இலங்கை சென்றிருக்கும்போதும், அவர்கள் பனை என்றாலே யாழ்பாணம் தான் என்றே சொல்லக்கேட்டிருக்கிறேன். அது பனையினை ஒவ்வொருவரும் தங்களுக்கானதாக உரிமை கொள்ளும் “பெருமை” மட்டுமே. ஆனால் என்னைப்பொறுத்தவரை பனை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பொதுவானது. இங்குள்ள அனைத்து மக்களினங்களும் பனையினை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மொழிவழியாக ஒரு மரத்தை பிரிப்பதோ, ஒரு சாதிக்கென, ஒரு நாட்டிற்கென பனை மரத்தைப் பிரிப்பதோ இயலாத காரியம். ஆனால் இவ்வித உணர்சிவசப்படுத்தல் மூலம், பனை மரங்கள் தமிழகமெங்கும் தாராளம் விதைக்கப்பட்டன.

என்னைப் பொறுத்த அளவில், பனை மரம் சூழியல் சார்ந்த ஒரு முக்கிய பங்களிப்பை ஆற்றக்கூடிய ஒரு மரம். மேலும் அது உணவு தன்னிறைவையும் பொருளியல் தற்சார்பையும் அளிக்கக்கூடிய ஒரு மரம். முக்கியமாக புயல் மற்றும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் பனை மரங்கள் அரணாக நின்று காக்கும் வல்லமை பெற்றவை. மேலும் நமது சூழியலில் காணப்படும் பெருவாரியான உயிரினங்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக பனையை நாடி வருகின்றன. இவைகள் யாவும் ஒருங்கே கணக்கில் கொள்ளப்படவேண்டும். இந்த நோக்குகள் யாவும் சற்றே மெதுவாகவே மக்களின் உள்ளத்திற்குள் நுழையும். அதுவரை தமிழ் என்ற ஒரு மொழியினைக் காட்டி பனை விதைகள் நடுவது ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் அவ்வளவு தூரம் நாம் இந்த மரத்தை இம்மண்ணிலிருந்து இழந்திருக்கிறோம்.

பனை விதைக்கும் ஒரு இயக்கம் தன்னிச்சையாக ஒரு மக்களியக்கமாக இன்று இம்மண்ணில் ஆரம்பித்திருக்கிறது. பல்வேறு மக்கள் இவைகளை இன்று முன்னின்று நடத்துகிறார்கள். நானே பனை நாடு எனும் இயக்கத்தில் இணைந்து களப்பணியாற்றிவருகிறேன். இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேல் பனை விதைகளை எனது நேரடி கண்காணிப்பில் நட்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் இவ்வண்டு மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடப்பட்டிருக்கும் என கணிக்கின்றேன். என்றாலும் இவைகள் போதாது என்பதே எனது எண்ணம். பனை விதைகள் நடுவது என்பது மரக்கன்றுகளுக்கு மாற்றான ஒன்றாக பார்க்கப்படுவதனால் ஏற்படும் புரிதல் இது. பனை விதைகள் பரவலாவதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால் அவ்விதமான ஒரு புரிதல் ஏற்பட்டு, விதைகள் பரவ இன்னும் அரை நூறாண்டாவது ஆகிவிடுமோ என்கிற அச்சத்தினாலேயே பனை விதைகள் நடுவோரை எங்கு கண்டாலும் நான் ஊக்குவிக்கிறேன்.

பனை விதைகள் மிக எளிதாக பரவவேண்டும் என்றால், பனம் பழங்களைச் சாப்பிடும் ஒரு சமூகமாக நாம் மாறவேண்டும். அனைத்து குடும்பத்திலும் பனம்பழம்  உணவின் ஒரு அங்கமாகின்றபோது பனை மரம் அதிக பிரயத்தனங்கள் இன்றி பலுகிப் பெருகும் என்பது எனது அவதானிப்பு. ஆனால் பனம்பழ சுவையினை மக்களிடம் எடுத்துச் செல்லுவது பெரும்பணி. பனை விதைப்பதை விட கடுமையான பணி அது. அந்தப் பணி முன்னெடுக்கப்படவேண்டும். அவைகளை வருமானம் அற்றோருக்கு ஒரு தொழிலாக முன்னெடுக்கும் வாய்ப்புகளை சில அமைப்புகள் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது நலம். அவ்விதம் தமிழ் நாட்டில் பனம்பழங்கள் உணவின் ஒரு அங்கமானால் பனை சார்ந்த உணவுகள் வீணடிக்கப்படாது. பனை மரங்களை பாதுகாக்கும் எண்ணம் என்பது பனைகளை விதைப்பது மட்டுமல்ல, பனைகளோடுள்ள உறவுகளே. அந்த எண்ணம் நம்மனைவருக்குள்ளும் வரவேண்டும். அவ்விதமான எண்ணம் இன்றி பனை விதைகளை நடுவது வீணே!

ஒரிஸ்ஸாவில் பனை விதைகளை நடவேண்டும் என்கிற எண்ணம் எழுமாயின் கண்டிப்பாக அவற்றையும் ஒரு முழுமையான நோக்குடனேயே செய்ய வேண்டும் என்பதே நான் அவர்களுக்கு சொல்லுவது . ஆனால் முதல் கட்டமாக அவர்கள் எடுக்கும் இவ்வித முயற்சி வெற்றிபெற வேண்டும் ஆகையால், மிகப்பெரிய வரைவுகளை அவர்களிடம் கொடுக்காமல், அவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அவர்களை ஊக்குவிப்பதே சரி என எண்ணுகிறேன்.

அதிக நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். அங்கிருந்து ஐந்தே கிலோமீட்டர் அருகிலிருக்கும் கிராமத்திற்கு போவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். மிக அதிக எதிர்பார்புகளுடனும் ஆர்வத்துடனும் எனது அங்கோல் பயணத்தை ஆரம்பித்தேன்.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 4

நவம்பர் 23, 2018

மலரும் ஓலைகள்
நான் ஓய்வெடுக்குமுன்பே அஷோக் என்பவர் என்னை அழைத்திருந்தார். நாளைக் காலை 10.30 மணியளவில் உங்களை அழைத்துச் செல்ல ஒரு நபர் வருவார் தயாராக இருங்கள் என்றார். மிகப்பெரிய ஒரு நிம்மதி என் மனதை நிறைத்க்டது. வேறுமே இங்கே வந்து செல்லுவது எந்த வகையிலும் எனக்கு பயன் தராது என்பதை உணர்ந்திருந்தேன். ஒரிஸ்ஸாவைச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப்பயணியல்ல நான். பனை சார்ந்த ஒரிய மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதையே தேடி வந்க்டிருக்கிறேன். ஆகவே, உள்ளூர் மக்களின் வழிநடத்துதல் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அன்று இரவு மிக நன்றாக தூங்கினேன். காலை எழுந்து தயராகி வெளியே ஒரு சுற்று நடை போய் வந்தேன்.

பின்னர் எனது விடுதியின் வரவேற்பறையில் சென்று அங்கே என்னை அழைத்துச் செல்பர் வருவதற்காக காத்திருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் ஒரு பூச்சாடியும் அதில் பல்வேறு உலர்ந்தப் பூக்களும் இருந்தன. என்னை முதலில் அவைகள் கவரவில்லை. தூசி படிந்து இருந்தன.
ஆனால் எனது உள்ளுணர்வு அதனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சாதாரண காகிதப்பூக்கள் போல இல்லை அவைகள். அப்படியானால் அவைகள் எதனைக் கொண்டு இப்பூக்களைச் செய்திருக்கிறார்கள் என கூர்ந்து பார்த்தேன்.

 

ஆம் பனை ஓலையில் வர்ணமிட்டு செய்யப்பட்ட மிக அழகிய பூக்கள். தூசி படிந்திருத்ததால் அவைகள் எடுப்பாக தெரியவில்லை. நான் அங்கிருந்த ஊழியரை அழைத்து, இது எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் அதுகுறித்து தனக்கு ஏதும் தெரியாது எனவும், வேண்டுமானால் தான் தனது முதலாளியிடம் கேட்டு சொல்வதாகவும் கூறினார். எனது விரல்களாலேயே அவற்றை துடைத்துப் பார்த்தபோது அவை அழகுடன் மிளிர்ந்தன. அந்த ஊழியரிடம் இவைகளை நன்றாக துடைத்து வையுங்கள் அப்போது தான் அழகாக இருக்கும் என்று கூறினேன். மேலும் ஈரத்துணையை பயன்படுத்துவது நல்லது என்றும் கூறினேன். சரி என்றார்.
பனையோலையில் செய்யப்பட்ட பூக்கள் இருந்ததைப்பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பனையோலையில் செய்யப்படும் இவ்வித அழகு பொருட்கள் பல வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டவைகள். பனை சார்ந்த பொருளாதாரம் என்பதனை முன்னிறுத்தியவர்கள், வீட்டின் அலங்காரப்பொருளாக இவ்வித ஓலையில் செய்யப்பட்ட அழகு பொருட்களை முன்வைப்பது வழக்கம். எனக்கு ஆரம்பத்தில் அவ்வித முயற்சிகளில் பெரிய நம்பிக்கை இல்லை. இது என்ன தேவையில்லாமல் ஒரு அன்னியமான பொருள் செய்கிறோம் என்று. ஆனால், வேறு பல பொருட்களைச் செய்கையில் இவ்வித பொருட்களும் உடனிருப்பது மிகச்சரியாயிருக்கும் என்றே பின்னர் நான் உணர்ந்துகொண்டேன்.

மார்த்தாண்டம் பனைத்தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றியபோது அங்கே பனை ஓலைகளில் நவீன பொருட்கள் செய்யக்கூடிய ஒரு அமைப்பு செயல்பட்டுவந்தது. அங்கே தரக்கட்டுப்பாடு மற்றும் பயிற்சியளிக்கும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஓலையின் ஒரு பகுதியினை சிறிய இதழ்களாக வெட்டி அவற்றினை ஈர்க்கிலில் கட்டி செய்த மலர்கொத்தினை நான் பார்த்திருக்கிறேன். அது தொடர்ந்து விற்பனை ஆகும் பொருளாயிருக்குமா என்ற சந்தேகம் நெடுநாட்கலாகவே எனக்கு இருந்துவந்தது. இந்த தொழில்நுட்பத்தினை கல்விக்கூடங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. பரவலாக்கப்படும் இவ்வித கலைகள் ஒருவகையில் இயற்கை சார்ந்த ஒரு புரிதலை மாணவர்களுக்கு கொடுக்கும். அவர்களால் இயற்கைச் சார்ந்த அழகிய பொருட்களையும் செய்ய இயலும்.

இலைங்கைக்கு நான் சென்றிருந்த போது தான் மிக அழகிய ஓலை பூங்கொத்துகளைப் பார்த்தேன். அவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை இணைத்து அந்த பூங்கொத்துகளைச் செய்கிறார்கள். அந்த திறன் எளிதாக போலி செய்துவிட இயலாதது. அவர்கள் மாதிரியாக எடுத்துக்கொண்ட பூக்கள் பெரும்பாலும் “ஓர்கிட்” வகைகளைச் சார்ந்தது. ஆகவே அவைகளில் காணப்படும் வண்ணங்கள் வடிவங்கள் மற்றும் நெகிழ்வுகள் யாவும் இருக்கும் “ஓர்கிடை” போலி செய்வது போலவே இருக்கும். அவைகளை மிக தத்ரூபமாக ஓலைகளில் கொண்டுவந்திருப்பார்கள் இலங்கைக் கலைஞர்கள்.

முதலில் ஒவ்வொரு இதழ்களையும் தனித்தனியாக வெட்டிக்கொள்ளுகிறார்கள். பிற்பாடு வண்ணமிடுதல். இருவேறு வண்ணங்கள் ஒரே ஓலையின் இதழ்களில் காணப்படும். அந்த இரண்டு விதமான வண்ணங்களைத் தெரிவு செய்வதும் அவைகளை ஒன்றுடன் ஒன்று அதிகப்படியாக கலந்துவிடாமல் இணைக்கும் சூட்சுமம் அவர்களுக்கே தெரிந்த கலை. இதழ்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களையும் சுருக்கங்களையும் உயிரோட்டத்துடன் கொண்டுவர, ஒரு இரும்பு குண்டு இணைக்கப்பட்ட நீண்ட கம்பியை வைத்திருக்கிறார்கள். ஓலைகளை தணீரில் நனைத்து ஈரமாக்கி ஒரு துணிபந்தின் மேல் வைக்கிறார்கள். இந்த உருண்டைக் கம்பியை, மெழுகுவர்த்தி தீபத்தில் காட்டி சூடுபடுத்தி, அந்த சூட்டோடு ஓலையின்மேல் வைத்து தேய்க்கிறார்கள். இந்த சூட்டு உராய்வினால் ஓலை சில நெளிவுகளையும் சுழிவுகளையும் பெறுகிறது. இவ்வோலைகளை மெல்லிய இரும்பு கம்பிகளைச்க் கொண்டு கட்டி சேர்த்து பின்னர் ஒன்றிணைக்கிறார்கள். அவ்விதமாக ஒரு சர்வதேச அழகு அதனுள் கூடிவிடுகிறது. அதன் விலையும் வங்கும் சக்தியுடைய சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலேயே இருக்கிறது.

நான் பார்த்துக்கொண்டிருந்த பனை ஓலை பூக்கள் மிகவும் எளிமையான முறையில் செய்யப்பட்டவைகள் தான். ஓலையின் நடுவிலிருந்த ஈர்க்கலை கூட அகற்றவில்லை. அவைகள் இணைத்திருக்கையிலேயே சாயமேற்றியிருக்கிறார்கள். அவ்விதம் சாயம் ஏற்றும் பொது ஈர்க்கில்கள் அருகில் அதிக சாயம் ஏறாமலும் ஓலைகளின் ஓரங்கள் அதிக சாயம் ஏறியும் ஒரு வண்ண ஜாலம் ஏற்படுகிறது. உண்மையான பூக்களின் இதள்கள் போலவே காணப்படுகின்றது. எப்படி இவைகளை ஒன்றிணைக்கிறார்கள் என்று பார்த்தபோது ஓலைகளின் ஈர்க்கில்களை ஒன்றாக கட்டிவிடுகிறார்கள் என்பதைக் காண முடிந்தது. இந்த முயற்சிகளை இன்நாட்களில் மெல்ல முன்னெடுக்கவேண்டும். அதற்கு வலுவான காரணங்கள் உண்டு.

இன்றைய நாட்களில் பெரும்பாலும் படித்த சமூகம் பாரம்பரிய பொருட்களைச் செய்வதற்கு தயங்குகின்றது. பாரம்பரிய பொருட்களைச் செய்வதினை கற்றுக்கொடுக்கும் பயிற்சி மையங்களும் இன்று இல்லை. மற்றொரு காரணம், பாரம்பரிய பொருட்களின் பயன்பாடு என்பது பாரம்பரிய வாழ்கை முறை சார்ந்தது. பொதுவாக முறம் என்பது பல்வேறு நிலைகளில் நமது ஊரில் பயன்பாட்டுப்பொருளாய் இருந்தது என்பதை அறியலாம். வீட்டில் புடைப்பதற்கு மட்டுமல்ல அறுவடையின் போதும். திருமணத்தின்போதும். இன்னும் பல்வேறு நிலைகளில் இவைகள் எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் இன்று அறுவடைக்கான எந்திரங்கள் வந்துவிட்டன. புடைப்பதற்கு தேவையில்லாதபடி கம்பியூட்டர் உதவியுடன் பிரிக்கப்பட்ட அரிசிகளும் தானியங்களும் பருப்புகளும் கிடைக்கின்றன. மேலும் திருமணங்களில் பல்வேறு வகையான நவீன பொருட்கள் சீதனமாக இணைக்கப்பட்டுவிட்டன. ஆகவே பாரம்பரிய பொருட்களாஇ இன்று செய்தாலும் அவைகள் வாங்கப்படுமா என்கிற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.

இப்படியான சூழலில் அலங்கார பூக்களின் பங்களிப்பு தான் என்ன? மரபு சார்ந்து அலங்கரிப்புகளை விரும்புகிறவர்கள், நெகிழிக்கும் செயற்கை பொருளுக்கும் மாற்றாக இயற்கை பொருட்களைத் தேடுகின்றவர்கள் இவைகளை விரும்புகின்ற ஒரு சந்தை இன்று உருவாகிக்கொண்டு வருகிறது. மேலும் கைவினை பொருட்களில் தங்கள் திறமைகளைக் காட்ட விரும்பும் அனேக பெண்களும் இதனைக் கையிலெடுக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், திருமண அலங்காரங்கள் செய்ய பல்வேறு பிரயத்தனங்கள் எடுக்கிறார்கள். எங்கும் அப்படித்தான். திருமண மேடை அலங்காரங்கள் மட்டுமல்ல பல்வேறு விழாக்கள் போன்ற நிகழ்வுகளிலும் பூங்கொத்து கொடுப்பது போன்ற சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன, அவ்வித சூழலில் மட்காத பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அலங்காரங்களை விட பனையோலை அலங்காரம் மிகச் சிறந்தது. வரவேற்கப்படவேண்டியது.

ஆனால் ஒன்று உண்டு, இது நீண்ட நாள் தீர்வாக இருக்க இயலாது, ஏனெனில், மலர் அலங்காரங்களே மரபாக நமக்கு இருந்து வந்திருக்கிறது. அலங்காரங்களிலும் திருவிழாக்களிலும் ஓலைகள் தனக்கான இடங்களை பெற்றிருந்தாலும், மணம் வீசும் மலர்களுக்கான இடம் கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். ஏனென்றால், அது சார்ந்தும் பல்வேறு விவசாயிகள், பூக்கட்டும் கலைஞர்கள் என பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தைப் பறித்துக்கொள்ளுவதாக அல்லாமல், பனையின் பயன்பாட்டினை முன்னிறுத்தும் ஒரு முனைப்பாக இவைகளை நாம் எடுத்துச் செல்லலாம்.
சற்று நேரத்தில்தானே என்னை அழைத்துக்கொண்டு செல்லும்படி ஒரு வாலிபன் வந்தான். நான் அவனுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி எனது தேவைகளுக்காக தானியங்கி பண இயந்திரம் தேடிச் சென்றோம். ஒரு இயந்திரத்தின் முன்னால் கூட்டம் இருந்தது, மற்ற்றொரு இடத்தில் பணமில்லை, மற்றோரு இடத்தில் அட்டையை சொருகியபோது உங்கள் அட்டை சரியாக நுழைக்கப்படவில்லை என்று வந்தது. அதிர்ந்து போனேன். அது ஒரூவகையில் தற்கொலைக்கு சமம். என்னிடம் 2000 ரூபாய்க்கும் குறைவாகவே பணம் இருந்தது. இனிமேல் எப்படி ஊருக்கு போவது? என்ன செய்வது எனத் தெரியாமல் ஆடிப்போய் நின்றேன். மீண்டும் ஒருமுறை தேய்த்துப்பார்போமே என எண்ணி முயற்சித்தபோது வெற்றி கிட்டியது. மொத்தமாக 10000 ரூபாயை அள்ளினேன்.

எப்போதும் என்னிடம் ஓலையிருக்கும் அதனை வெட்டி சீராக்கும் ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய கருவியிருக்கும். ஆனால் அந்த கத்தி இப்போது என்னிடம் இல்லை. ஆகவே சாதாரண கத்தி ஒன்றை வாங்கினேன். அதை வாங்குகையில் என்னோடு வந்த நபரின் நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் ஒரு கானுயிர் ஆர்வலர். குறிப்பாக பாம்புகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். நான் பனை மரத்தில் பாம்புகள் இருக்குமா எனக் கேட்டேன். இருக்குமே ஸ்பெக்டகிள் கோப்ரா படமெடுத்து ஆடியதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். பாம்பின் கூடும் முட்டைகளும் கூட மரத்தின் மீது இருப்பதைப் பார்த்திருக்கிறேன் என்றான்.

ஒரிஸ்ஸா குறித்தான எனது பயணம் அங்குள்ள கலைகளைத் தேடுவதாக மட்டுமே இருக்கும் என நினைத்தேன், ஆனால் பனை சார்ந்து வாழுகின்ற ஜீவன்களையும் இணைத்துக்கொள்ளுவேன் என கடுகளவும் நினைக்கவில்லை. முடியுமென்றால் இணைந்து ஒரு பயணம் செய்வோம் என்றேன். சரி என்றார். நாங்கள் அலுவலகம் நோக்கி திரும்பினோம்.

நாங்கள் அலுவலகம் வந்தபோது ஒருவரும் அங்கே இல்லை. அஷோக் களப்பணிக்குச் சென்றிருந்தார். மதியம் தான் வருவார். சுவப்ன ஷிரி வேறொரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால் வரத் தாமதமாகியது. ஃபவுண்டேஷன் ஃபார் ஈக்காலாஜிகல் செக்யூரிட்டி (FES) என்ற அமிப்பில் இருவரும் பணியாற்றூகிறார்கள். இந்த அமைப்பு இந்தியா முழுவதும் தன்னை விரிவுபடுத்தி பல்வேறு மக்களினங்களுடன் இணைந்து சூழியல் பங்களிப்பாற்றுகின்றது. அவர்கள் வரும் வரை நான் அங்கே காத்திருந்தேன்.

காட்சன் சாமுவேல்
மிடாலக்காடு
9080250653
malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 3

நவம்பர் 22, 2018

பனைவேர் ஆழமானது

இரயில் உள்ளே சென்று அமர்ந்த போது தான் உணர்ந்துகொண்டேன், இது முன்பதிவு செய்தவர்களுக்கான பெட்டி என்று. என்னைப் போன்றே இன்னும் ஒரு பெண்ணும் ஏறியதை கவனித்தேன். அவளும் என்னைப்போலவே அலைபாய்ந்துகொண்டிருந்தாள். நான் பயணச்சீட்டு பரிசோதகரை தேடி செல்லும்போது அவளும் உடன் வந்தாள்.  ஆகவே அங்கிருந்த சூழலை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இருக்கைகளை பெற்றுக்கொள்ள இயலாது என்பது தெரிந்ததும் சோர்வுடன் திரும்பி வந்து அமர்ந்தோம். அவள் என்னிடம் புவனேஷ்வர் சென்றபின் ஆட்கள் வந்துவிடுவார்கள் அதற்கு முன் நாம் இடம் மாறி அமர்ந்துகொள்ளவேண்டும் என்றாள்.

என்னருகே அமர்ந்துகொண்டிருந்தவர் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். குறிப்பாக நான் வைத்திருந்த ஓலைப் பொருட்களைக் காட்டியே பேசினார். அவரும் கடற்கரைப் பகுதியைச் சார்ந்தவர் தான் எனக் குறிப்பிட்டார். என்னால் அவருடன் சரிவர பேச இயலவில்லை. அடுத்து எங்கே இறங்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன். இரயில் அடுத்த சந்திப்பு வந்ததும் அந்த பெண் இறங்கினாள், நானும் அவசரமாக அவளுடன் இணைந்தே இறங்கினேன். ஒருவழியாக பொது பெட்டிக்குள் இடம்கிடைத்து அமர்ந்தேன்.

எனக்கு உதவி செய்த ஆட்டோ ஓட்டுனர் என் நினைவிற்கு வந்து சென்றார். ஒல்லியான தேகம். அறுபதை தொடும் வயது. எனக்காக அவர் இரயில் மேடை வரை வந்தது பெரிய காரியம். அவர் பேரைக் கூட நான் கேட்டிருக்கவில்லை. அவரது புகைப்படமும் என்னிடம் இல்லை. ஆனால் மீண்டும் பூரி செல்லுகையில் என் கண்கள் அவரையே தேடும். நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் பட்சத்தில் அவரை நான் மீண்டும் சந்திப்பேன் என எண்ணிக்கொண்டேன்.

அங்குல் என்ற இடம் செல்லவேண்டும் என்பது எனது ஆரம்ப திட்டத்தில் கிடையாது. ஓரிருநாட்கள் மட்டுமே புவனேஷ்வர் பகுதிகளில் இருந்துவிட்டு, அப்படியே பூரி சென்று  திரும்புவது தான் திட்டம். நவம்பர் 6 ஜாஸ்மினுக்கு பிறந்தநாள். அன்று அவளது பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடவேண்டும் என எண்ணி, எனது பனையேறித் தோழர், தம்பி சங்கர் கணேஷிடம் பதநீர் கேட்டுவைத்திருந்தேன். எனக்காக அவர் 5 லிட்டர் ஒதுக்கி வைத்திருந்தார். அதிகாலையில் நான் அதனை வங்கப்போகையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது நண்பரும் இயற்கை ஆர்வலருமான டாக்டர். கிறிஸ்டோபர் என்னை அழைத்தார். வீட்டிற்கு வருகிறாயா என கேட்டார். “ஓய், இஞ்ச வந்தா அக்கானி கிட்டும்”னு சொன்னேன். “இப்பளே வாரேண்டே” என்றார்.

ஒரிஸ்ஸா செல்லவேண்டும் என்றபோது அனேகரிடம் உதவி கேட்டிருந்தேன். ஆனால் யாரும் எனக்கு அங்கே எந்தவிதமான தொடர்பும் அளிக்க முன்வரவில்லை. தங்களுக்கு யாரையும் தெரியாது என்றே கூறினார்கள். ஆனால் டாக்டர். கிறிஸ்டோபர் ஒரு கானுயிர் வல்லுனர். அவர் கால்கள் படாத இந்திய வனங்கள் குறைவு. அவர் தான் என்னை பயணங்களுக்கு ஆயத்தம் செய்த முன்னோடி. அவர் எனக்கு சில தொடர்புகள் கொடுப்பதாக வாக்களித்தார். வீட்டிலிருந்தபடியே, ஒரு நண்பரை அழைத்தார். அழைத்து முடிந்தவுடன், சுவப்ன ஷிரி என்ற எனது தோழி அங்கே இருக்கிறார்கள், உனக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்வார்கள். என்று எண்ணையும் கொடுத்தார்கள். இப்படித்தான் எனது அங்குல் திட்டம் உருவானது.

சுவப்ன ஷிரியிடம் ஏற்கனவே தொடர்புகொண்டிருந்தேன். இரயிலில் ஏறியவுடன் அவர்களுக்கு அழைத்துச் சொன்னேன். மகிழ்ச்சியுடன், வாருங்கள் என்றார்கள்.

புவனேஷ்வரில் ஒரு கூட்டம் முண்டியடித்துக்கொண்டு ஏறியது. எங்களுக்கு முன்பாக இருந்த ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களையும் நெருக்கி ஒருபுறம் தள்ளிவிட்டு மேலும் இருவர் அங்கே அமர்ந்துகொண்டனர். எங்கள் இருக்கையில் மேலும் மூவர் அமர்ந்துகொண்டனர். எனது பொருட்களை வைத்திருந்த கூரைப்பகுதியில் இருவர் ஏறிக்கொண்டனர். மும்பை அளவு நெருக்கம் இல்லையென்றாலும்  இனிமேல் மூன்று மணி நேரப் பயணம் இந்த நெருக்கத்தினூடாகத்தான் என எண்ணிக்கொண்டேன். ஆகவே பயணம் இனிமையாக மாற வேண்டி அருகிலிருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன்.

எனக்கு அருகில் இருந்தவர் ஒரு இரயில் ஊழியர். பயணச்சீட்டு பரிசோதகர். இரயில்வேயில் பணிபுரியும் அவர் ஏன் பொதுமக்களைப்போல் பொது பெட்டியில் பயணிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   அதை அவரிடம் கேட்டும் விட்டேன். அதற்கு அவர் இன்று ஞாயிற்றூக்கிழமை, கூட்டம் அதிகமாக இருக்கும், என்னைப்போல் பணிபுரியும் ஒருவருக்கு. நான் அமர இடம் கேட்பது சிரமம் அளிப்பதாகவே இருக்கும் என்றார். அவரோடு பல  விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தேன். அங்குல் என்று சொல்லப்படும் ஊர் நான் இறங்க வேண்டிய  இடம்.  அது தால்சேர் என்ற நிறுத்தத்தை தாண்டி இருப்பதாக கூறினார்.

சுமார் ஏழு மணி இருக்கும். என்னால் அமர முடியவில்லை. ஆகவே எழுந்து வாசலின் அருகில் வந்து நின்றேன். பாழாய்ப்போன உள்ளுணர்வா? ஏதாச்சையாக நடைபெறுகிறதா? இல்லை எனது வாழ்வில் இப்படித்தான் அமையுமா என தெரியாது, இருளின் மத்தியில் என் கண்களில் தென்பட்டது என்ன? ஆ! பனை மரங்கள்! எனது இதழ்களின் ஓரம் மெல்லிய புன்னகை விரிந்தது. கூட்டம் கூட்டமாக பனை மரங்களை இரயில் நீந்திக் கடந்து சென்றது. தூரத்தில் பனை மரக் கூட்டங்கள் தனித்து தெரிந்தன. பனையால் சூழப்பட்ட ஒரு உலகிற்குள் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு தனி தெம்பைக் கொடுத்தது.

இவைகள் தற்செயலானது அல்ல. தமிழர்களாகிய நாம் பனை நமக்கானது என எண்ணிக்கொள்ளுகிறோம், உலகம் முழுவதும் பரந்து விரிந்து, இரண்டு கண்டங்களை நிறைக்கும் இம்மரத்தினைக்குறித்த விரிவான பார்வை நம்மிடம் கிடையாது. தமிழகத்திற்குள்ளேயே தென் மாவட்டங்களில் மட்டுமே பனை இருப்பதாக ஒரு பிம்பம் வேறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பனையோடுள்ள உறவின் வெளிப்பாடா அல்லது பனை குறித்த பிற சமூகங்களின் அவதானிப்பு குறித்த புரிதலின்மையா எனத் தெரியவில்லை. பனை சூழ் வாழ்வு வட இந்திய பகுதிகளில் எவ்விதம் இருக்கிறது என நமக்கு தெரிவதில்லை. நிதிஷ் குமார் தயவால் பீகாரில் பனையேறிகள் இருக்கிறார்கள் என்கிற செய்தி மட்டுமே நம்மை வந்தடைந்திருக்கிறது.

பனைகளை கூட்டமாகவோ தனியாகவோ தான் நான் பார்க்கவேண்டும் என்பது இல்லை; அதன் ஒரு சிறு பகுதி கூட ஒரு பொருள் வடிவமாகி காணக்கிடைப்பது. அல்லது பனை சார்ந்த ஒரு நுண்ணிய தகவல்  அளிக்கும் பேருவகை சொல்லிமுடியாதது. பனை சார்ந்து நாம் நோக்கும் அனைத்தும் அந்த மண் சார்ந்த கலைதான், படிமம் தான், சுவை தான். ஆகவே எவ்வைகியிலும் பனை என் முன்னால் வந்தால் அவற்றை ஊன்றி கவனிப்பதே எனக்கு பேரானந்தம். இப்போது நான் கடந்துவந்துகொண்டிருக்கும் பகுதி என்ன என நான் குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை வருங்காலத்தில் நான் இந்த பகுதிக்கு வர முடிந்தால் இப்பகுதியை விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பனை மரங்கள் ஒரு இடத்தில் கூட்டமாக நிற்கிறது என்றால் அங்கே மனிதர்கள் வாழுகிறார்கள் என்பது பொருள். மனித சஞ்சாரமற்ற இடங்களில் பனை மரங்கள் வளராது. மனிதனுக்கும் பனைக்குமான உறவு அப்படி. அனால் மனிதனிடமிருந்து பனை பெற்றுக்கொள்ளுவதை விட மிக அதிகமாகவே அது மனிதனுக்கு வாரி வழங்கும் வள்ளன்மைமிக்க ஒரு மரமாக காணப்படுகிறது. ஒருவகையில் மனிதர்களுக்கு தாயாக, தெய்வமாக பனை நின்று அவர்களை ஆசீர்வதிக்கிறது என பொருள் கொள்ளலாம். மனிதர்கள் ஒரு மண்ணில் வேரூன்ற பனை மரங்கள் மிகவும் அவசியமாகின்றன. வாசலில் நின்றபோது வீசிய பனைமரக் காற்றும், பனை மரக் காட்சியும் என் உள்ளத்தை குளிர்வித்தன. இவைகளைத் தேடியே வந்தேன். மிகச்சரியான இடத்திலேயே இருக்கிறேன் என என் உள்ளுணர்வு எனக்கு கூறியது.

பொதுவாக பனை மரங்கள் நெய்தல் நில மரம் என்பார்கள். கடற்கரைப் பகுதிகளில் இவைகள் மிக அதிகமாக திரண்டு காணப்படும், கடற்கரையை விட்டு தூரமாக போகும்தோறும் பனை மரங்கள் இருப்பதில்லை என்பார்கள். கடலிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டருக்குள் தான் பனை மரங்களை மிகுதியாக காண முடியும் என்று உறுதிபட சொல்லுபவர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி எளிதில் சொல்லிவிடமுடியாது என்பதே எனது அனுமானம்.  பூரியிலிருந்து அங்குல் செல்ல 191 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணிக்க வேண்டும். இப்பொழுது தால்சேர் வரப்போகிறது. அப்படியானால் சுமார் 150 கி. மீ அதிகமாக உள்ளே வந்திருக்கிறோம் ஆனாலும் பனைமரங்கள் திரண்டிருப்பது எப்படி?

ஆதி மனிதர்கள் எங்கு வாழச் சென்றார்களோ அங்கெல்லாம் பனை விதைகளை தவறாமல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பனை உணவு வழங்கும் ஒரு மரம். இரண்டாவதாக பனை ஓலை தான் அன்றைய எழுதுபொருள். இவைகள் இன்றி மனித கலாச்சாரம் உய்வுற்றிருக்காது என்பது ஒருபுறம், மற்றொருபுறம் பனை மரம் மனிதர்களுடன் உறவாட விரும்பும் மரம். அத்தகைய உணர்வுபூர்வமான ஒரு மரம் நாம் காண்பதரிது என்பேன். அதன் உணர்வுகள்  மற்றும் நமக்கு அதனுடன் உள்ள உறவுகள் இன்று நம்மை விட்டு அற்றுப்போய்கொண்டிருக்கிறது. அது துயரமானது. இவ்விதம் நம்மோடு தொல் பழங்காலம் தொட்டே தொடர்ந்து வந்த பயனுள்ள மரத்தை நாம் எளிதில் விட்டுவிடலாகாது.

 

மகிழ்ச்சியோடு நான் எனது அமர்விடம் சென்றேன். இவ்விதமான மகிழ்வளிக்கும் செய்திகளை என்னால் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க இயலாது. என்னோடு பேசிக்கொண்டிருந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் சென்று நிறைய பனை மரங்களை வெளியே பார்த்தேன் என்றேன். அவர் தனது மொபைலில் பார்த்துவிட்டு. தால்சேர் நெருங்குகிறோம் என்றார். அப்படியே மலர்ந்தவர். தால்சேர் என்றால் என்ன என தெரியுமா என்றார். நான் விழித்தேன். தால் என்றால் பனை என்றார். எனக்கு புல்லரித்துவிட்டது. தால், தாட், தாடி போன்ற வார்தைகள் வட இந்திய பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளவை என அறிவேன். ஏன் எனக்கு அது தோன்றவில்லை என தலையை குட்டிக்கொண்டேன்.  சேர் என்றால் வேர் என்றார். ஒருவேளை பனையின் வேர் என்ற பொருளில் தான் இந்த இடத்திற்கு பெயரிட்டிருப்பார்களோ என்று என்னிடமே கேள்வி கேட்டார். நான் வேறெப்படி இருக்க முடியும் என்று புன்னகைத்தேன்.  மண், மனிதன், மரம் மற்றும்  மொழி யாவும் ஒன்றாகின்ற தருணம் அலாதியானது.

தால்சேர் என்கிற ஊரின் பெயர் என் வாழ்நாளில் நான் மறக்க இயலாத ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. கடவுள் என்னை அழைத்து வந்தது பனையின் வேரில் நான் குடிகொள்ள என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.  அதை எண்ணும் தோறும் கடவுள்பால் நன்றிபெருக்கே ஏற்பட்டது.  இதே பகுதியில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, இந்த பனை மரம் எந்த பொருளும் அளிப்பதில்லை. வீணாக எழுந்து நிற்கும் களைச்செடி என எண்ணிக்கொண்டிருக்கலாம். ஒரு காலத்தில் இவைகளை பயன்படுத்தியவர்கள் கூட இது தற்காலத்திற்கு ஏற்றது அல்ல என எண்ணிக்கொள்ளலாம். இதனை பயன்படுத்துவோர் அருகிக்கொண்டு வரலாம். ஆனால் இந்த மரத்தினை மீள் கண்டுபிடிப்பு செய்வது எனது கடமை என நான் கருதினேன். வாய்ப்பு கிடைத்தால் ஒரிசாவில் காலூன்றவேண்டும். கலிங்கம் அங்கம் வங்கம் என பனை சார்ந்து தொடர்ந்து பல பங்களிப்புகள் ஆற்ற வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

ஊர்களின் பெயர் தொடங்கி வாழ்வின் பல சூழல்களிலும் பனை மரம் கூட வருவது ஒரு ஆசி தான். மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஆசி அது. அவைகளை நாம் இறுக பற்றிக்கொள்ளுவது நமக்கு நன்மை பயக்குமே அன்றி ஒரு குறைவும் அளிக்காது.

பனைவேர் என்பது ஒரு சிறந்த குறியீடு. ஆழமாக செல்லும் தன்மையுடையது. 100 அடிக்கும் அதிகமாக அதன் வேர்கள் செல்வதை கிணறு வெட்டுபவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வேர்களே தாவரங்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்கின்றன. பூமிக்குள் நாற்பது அடிக்கும் மேல் சென்று உணவு வழங்கும் மரங்கள் வெகு குறைவே. ஆகவே மண்ணிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து, அதனை நல் உணவாக மாற்றுகின்ற வல்லமை இதன் வேர்களுக்கு உண்டு. மேலும் பனையின் வேர், முதல் 10 அடிவரை, மிக அடர்த்தியாக செல்லும். முற்காலங்களில் வெட்டப்பட்ட பனை மரங்களின் கீழ் காணப்படும் வேர்களை எடுப்பதற்காக மண்ணை தோண்டி குழியெடுத்து விறகு சேகரிக்கும் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். கத்தை கத்தையாக வேர்களை அள்ளி வருவார்களாம்.

பனை பட்டுபோகாமல் இருப்பதற்கு அதன் வேர்களே மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்சார வயர்களைப்போல அதன் வெளிப்புறம் ஒரு கெட்டியான கறுப்பு ஓடு இருக்கும். உள்ளே பஞ்சு போன்ற வெண்மையான பகுதிகள் இருக்கும். இவைகள் நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். மெதுவாகவே இந்த நீரை மரத்தின் வளர்ச்சிக்கு அனுப்பும். ஆகவே கடும் கோடையிலும் வறட்சியிலும் இம்மரங்கள் தாக்குபிடித்து நிற்கும் வல்லமை பெற்றதாக இருக்கின்றன.

பனை வேர் குறித்து மற்றுமொரு முக்கிய கருத்து உண்டு. சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் டெல்டா மாவட்டத்தைச் சூறையாடியபோது, அனேகம் தென்னை மரங்களும் பிற மரங்களும் வீழ்ந்துவிட்டன. ஆனால் பனை மரங்கள் தொடர்ந்து காற்றை எதிர்த்து நிற்கின்றன. அதற்கு காரணம் இதன் வேர்களின் அமைப்புதான். உணவு மற்றும் விவசாய அமைப்பு
(FAO) 1981 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு புத்தகத்கை வெளியிட்டது. அந்த புத்தகத்தை எழுதிய கோவூர் என்பவர் இவ்விதம் கூறுகிறார். “65 கி மீட்டருக்கும் மேல் வேகமாக காற்றடித்தாலும், பனை மரங்கள் வேரோடு சாய்வதில்லை; ஆனால் காற்றின் வேகத்தால் அதன் தண்டுகள் அபூர்வமாக உடைந்துவிட வாய்ப்புண்டு.” இந்த அவதானிப்பு நமக்கு பனையின் வேர்களின் பிடிப்புத்தன்மை குறித்து ஒரு தெளிவை எடுத்துக்கூறுகிறது.

நான் இறங்கவேண்டிய இடம் அங்குல். நெருங்கிவிட்டேன் என சுவப்ன ஷ்ரி அவர்களை அழைத்து சொன்னேன். எனக்கென ஒரு அறை ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்கள். நேராக ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு சென்றால் போதும் எனக் கூறினார்கள். அங்குல் வந்து சேர்ந்த போது என்னை இறக்கி விடும்படியாக எனது பொருட்களையும் எடுத்துக்கொண்டு அந்த பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். அது பனை அவர் மனதில் ஏற்படுத்திய நெருக்கம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நான் எனது தங்குமிடம் சென்றபோது எனக்காக ஒரு உயர்தர அறையினை ஒழுங்குசெய்திருந்தார்கள் என கண்டுகொண்டேன். அத்துணை வசதியான அறை எனக்கு தேவையிருக்கவில்லை. ஆனால் இனிமேல் ஏதும் செய்ய இயலாது. வாடகை 1200 என்றார்கள். சரி, நீண்ட அலைச்சலுக்கு பின் இவ்விதம் ஓய்வெடுத்துக்கொள்வதில் தவறில்லை என என்னையே சமாதானம் செய்தேன்.

உணவு சாப்பிட வேண்டியும் அந்த பகுதியினை சற்றே அறிந்துகொள்ளவும் வேண்டி அங்கே நடந்தபோது மிக அருகிலேயே ஒரு இரட்சண்ய சேனை ஆலய வளாகத்தைப் பார்த்தேன். அதனுள் ஒரு பனை மரம் நெடிந்துயர்ந்து வளர்ந்திருந்தது. நான் வருவதற்காக காத்திருந்த மரம் தான் இது சந்தேகமில்லை.

 

காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 2

நவம்பர் 20, 2018

தடுக்கு விசிறி மற்றும் ஓலைபெட்டி

 

ரகுராஜ்பூரிலிருந்து திரும்பலாம் என நினைத்தபோது அங்கே ஒரு கடையில் பனையோலை விசிறி ஒன்று இருந்ததைப் பார்த்தேன். அந்த விசிறி, உள்ளூர் மக்களால் எளிமையான முறையில் பின்னப்பட்ட விசிறி தான் ஆனால் அதில் ஒரு செய்தி எனக்கு இருந்தது. விசிறியின் அடிப்பாகத்தில் ஒரு மூங்கில் குழாயினை சொருகியிருந்தார்கள். விசிறியை மென்மையாகச்ச் சுழற்றினால் போதும் ஒரு சுற்று காற்று அனைவருக்கும் வந்துவிடும். விசிறுகிறவரை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் மெல்லிய காற்று கிடைக்கும். எங்கோ எப்போதோ இதுபோல பார்த்திருக்கிறேன் என்ற எண்ணம் வந்தது. ஆனால் நிலைவிலிருந்து மீட்டெடுக்க இயலவில்லை.

DSC06101

அந்த கடைக்காரரிடம் எனக்கு இதுபோல் ஒன்று வேண்டும், செய்யத்தெரிந்தவர்கள் அருகிலிருந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் வெகு அருகில் ஒரு குடியிருப்பு இருக்கிறது ஐந்து கிலோ மீட்டர் தூரம் தான் நீங்கள் சென்று பாருங்கள் என்றார். அப்படியே ரிக்ஷா ஓட்டுனரிடமும் எப்படி செல்லவேண்டும் என வழியை தெளிவுபடுத்தினார். எனக்கு நான்கு மணிக்கு இரயில். மணி  இரண்டையைத் தாண்டியிருந்தது. போகலாம் என முடிவெடுத்து கிளம்பினோம் வழியில் ஒரு ஊரில் மதிய உணவு சாப்பிட்டேன். மிகவும் சுவையான சாதம், பருப்பு குழம்பு, உருளைக்கிழங்கு மற்றும் பாகற்காயை பொறித்துவைத்திருந்தார்கள். சிப்ஸ் என அதனைக் கூகிப்பிடுகிறார்கள். வேரொரு கூட்டும் கூட இருந்தது. வேணும் எனும் அளவிற்கு வைத்துக்கொண்டிருப்பார்கள் போலும். அளவில்லாத சாப்பாடு. என்னால் சுவைத்து சாப்பிடும் அளவிற்கு நேரம் இல்லை. கட்டணம் செலுத்துகையில் வெறும் நாற்பது ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டார்கள். ஆச்சரியமாக இருந்தது.

DSC06123

மிக அழகிய பழங்கால கிராமம் ஒன்றின் வழியாக சென்றோம். நேர்த்தியான சாலை மிக அழகிய பழங்கால வீடுகள். தரையிலிருந்து  ஐந்தடி உயரத்திற்கு வீட்டிற்கு செல்லும் படிகள் அவற்றில் சாய்வுகள் என வித்தியாசமாக இருந்தது. பனை மரங்களை விட தென்னை மரங்களே மிகுதியாக காணப்பட்டன. வீடுகள் பழைமையில் இருந்து புதுமைக்கு மாறிக்கொண்டிருந்தன. நாங்கள் செல்லவேண்டிய கிராமம் எதுவென அடையாளம் காண்பது சிரமமாக இருக்கவில்லை. பீர்நரசிங்பூர் என்ற அந்த கிராமத்தில் வீட்டின் கூரைகள்  பனையோலையால் செய்யப்பட்டிருந்தன. புதிய ஓலைகைகள் சீராக்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக் கிடந்தன. புதிய பனையோலைகளை வெட்டி காயப்போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரிச்சவில் கூறப்படும் வார்த்தைகளில் “வ” என்ற ஒலியை பொதுவாக உச்சரிப்பது இல்லை. பீர்நரசிங்பூர் என்பது வீர்நரசிங்பூர் தான். “ப”ன வரிசையில் உச்சரிக்கப்படும் எழுத்துக்களை “வ”னவாக்கி பார்த்தால் பல வார்த்தைகள் நமக்கு புரிவது போல் இருக்கும்.

DSC06128

ஓலைகள் சீராக வெட்டி கட்டி அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டைக் கண்டு வண்டியை நிறுத்தச் சொன்னேன். ஓட்டுனரும் இடம் வந்துவிட்டதென கூறினார். நான் சென்ற இடத்தில் நான்கு பெண்கள் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். முதன் முறையாக அப்படி ஒரு காட்சியைப் பார்க்கிறேன். நான் வந்ததன் நோக்கத்தை எனது ஆட்டோ ஓட்டுனர் அவர்களிடம் கூறினார். சற்றே குழம்பிய அவர்கள் பின்னர் என்னிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் பேசுகின்ற மொழியை என்னால் முழுவதுமாக  உள்வாங்க முடியவில்லை, ஆனால், அவர்களின் உணர்ச்சிகளைப் பார்க்கும்போது, ஒருவன் ஓலைகளைத் தேடி கன்னியாகுமரியில் இருந்து வருவானா? என்பது போன்றே இருந்தது.

DSC06133

ஆச்சரியத்துடனும் சற்றே குழப்பத்துடனும் ஒரு பாட்டி உள்ளே சென்று ஒரு கட்டு பெட்டிகளை எடுத்து வந்தார்கள். அவர்கள் பெயர் உத்தம் பெஹ்ரா. அந்த பெட்டியினை ஒரிய மொழியில் “பேடி” என்று அழைக்கிறார்கள். இதே பெட்டியை தான் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் உள்ள படையல்களுக்கு பக்தர்கள் எடுத்துச் செல்லுகிறார்கள் என்றார். நமது ஊரில் காணப்படும் மிட்டாய்ப் பெட்டியினைப் போன்றே காணப்படுகின்றது. ஆனால் பின்னல்கள் மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் என பின்னப்பட்டிருந்டது. மூடியை கவிழ்த்து வைக்குமிடம் வண்ணமிட்ட ஓலையால் பின்னப்பட்டிருந்தது. மிக எளிமையான தொழில் நுட்பம் தான். ஆனால் கீழிருந்து மடக்கி மேலே எழுப்பும்போது புதியவர்களுக்கு அது சற்று சிக்கலாகவே இருக்கும்.

DSC06129

மற்றுமொரு பாட்டி. தாரா பெஹ்ரா அவர்கள் பனை ஓலையில் செய்த சிறிய பாயினை எடுத்து காண்பித்தார்கள். அமருவதற்கு மட்டுமேயான அந்த வித பாய்கள் குமரி மாவட்டத்தில் கிடையாது. சற்றே சிறிய பொளிகளாக வார்ந்து, பின்னர் அவைகளை ஒரு குழந்தை படுக்கும் அளவிற்கு விரிவாக முடையும் ஒன்றையே குமரி மாவட்டத்தில் பார்க்க முடியும். அதனை தடுக்கு என்பார்கள். இதன் அமைப்போ வேறு மாதிரி இருந்தது. சதுரங்க காய்களை அமைக்கும் களம் போல இருந்தது. ஓரங்களைச் சுற்றி வண்ண ஓலைகள் ஒரு வலம் வந்தன. ஆகவே அவைகள் ஒன்று விட்டு ஒன்றாக அமிழ்ந்தும் உயர்ந்தும் சென்றன. இவ்வித தடுக்குகளை “சொட்டய்” என்கிறார்கள். இந்தியில் பாய் என்பதற்கு பதிலாக “சட்டாயி” என்பார்கள்.

DSC06136

நான் வந்ததே பனை ஓலையில் செய்யப்படும் விசிறி வாங்கவே என்றேன். எங்களிடம் ஏதும் இல்லை எனை கைகளை விரித்துவிட்டார்கள். எல்லாம் வியாபாரிக்கு கொடுத்துவிட்டோமே என்றனர். அது அப்படித்தான், வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்லுபவர்கள். நான் நின்றுகொண்டே இருந்தேன். சரியான இடத்திற்கு தான் அழைத்துக்கொண்டுவந்திருக்கிறாரா என ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்தேன். அப்போது அங்கிருந்த ஒரூ பெண்மணி எழுந்து தனது வீட்டிற்குள் சென்று ஒரு பழைய ஓலை விசிறியை எடுத்துக்கொண்டு வந்தார்கள். நான் எதிர்பார்த்த அதே விசிறி தான். பழைமையாய் இருந்தாலும் அதுவும் வேண்டும் எனக் கேட்டு வாங்கினேன்.

DSC06135

ஓலையுடன் மூங்கில் இணைவது என்பது தொன்மையான ஒரு வழக்கம் தான்.  மூங்கில்களை பயன்படுத்துகின்ற சமூகம்  ஓலை பொருட்கள் செய்வதும், ஓலைப் பொருட்கள் செய்பவர்கள் மூங்கில்களைப் பயன்படுத்துவதும், ஓலைகளில் பொருல் செய்பவர்கள் வேறு சில காட்டுக்கொடிகளை  இணைத்துக்கொள்ளுவதும் வழக்கம். இவ்விதமான ஒரு ஒத்திசைவு முற்காலதிலேயே இருந்திருக்கிறது. கலைகளில் காணப்படும் நெகிழ்வுதனமை, ஊடுருவல் மக்களை ஒன்றிணைப்பதாக அமைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

உடனே அந்த பெண்மணி மீண்டும் தனது வீட்டிற்குள் சென்று வேறொரு ஓலைத்தடுக்கினை எடுத்து வந்தார்கள். ஒரு வித கொண்டாட்ட மன நிலை அங்கே கூடிவிட்டது. கபிதா பெஹ்ரா என்கிற அந்த பெண்மணி இறுதியாக கொண்டு வந்த தடுக்கு நுண்ணிய ஓலைகளைக் கொண்டு பின்னப்பட்டது. வண்ணங்களும் குருத்துகளும் கொண்டு பின்னப்பட்ட அந்த ஓலைத்தடுக்கிற்கு நான்கு பக்க ஓரங்களிலும் பனை ஓலைகளே வைத்து தைத்திருந்தார்கள். மிக அழகாக இருந்தது. ஓலைகளின் அத்தனை சாத்தியக்கூறுகளும் கண்டடையப்பட்டிருப்பதைக் காணும்பொது பேருவகை எழுந்தது.

மூவருமே பெஹ்ரா என சொல்லிவைத்தார்ப்போல் கூறியதுமே அது ஒரு சாதி அடையாளம் என்பதைக் கண்டுகொண்டேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள். பெரும்பாலும் பனை, தென்னை, ஈந்தை போன்ற மரங்களைச் சார்ந்திருக்கும் மக்களை கஜூரியா, சியால் என அழைக்கிறார்கள். இது குறித்து மேலும் விரிவான தகவல்கள் சேகரிக்க வேண்டும். நான் பனை சார்ந்த பழங்குடியினரைக் காணலாம் என்றிருந்தேன்.

பனை சார்ந்து வாழுகின்ற சமூகங்கள் இந்தியா முழுக்கவே உண்டு. அவர்களை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் அடைக்க இயலாது. ஆதிவாசிகளாகவோ, நாடோடிகளாகவோ, தலித் சமுகத்தினராகவோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, மீனவர் சமுதாயமாகவோ, பிற்படுத்தப்பட்ட சமூகங்களாகவோ இருக்கலாம்.

டாடா ஸ்டீல் இந்தியா முழுவதிலிருந்தும் 1500 பழங்குடியினரை ஒன்றிணைக்கும் டாடா சம்வாத் என்கிற நிகழ்சியினை முன்னிட்டு சில கட்டுரைகளைக் கோரியிருந்தார்கள். அதற்காகவே நான் புபனேஷ்வர் சென்றிருந்தேன். அந்க்ட நிகழ்ச்சியின் துவக்கமாக பழங்குடியினர் சார்ந்த கட்டுரைகளை சுமார் 20 பேர் வாசித்தார்கள். நான் எனது கட்டுரையினை வாசித்து முடித்த பின்பு, ஒரு நபர் என்னிடம் வநது, என் பயர் மடக்கம், நான் ஆந்திராவைச் சார்ந்த கோயா ஆதிவாசி இனத்தைச் சார்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.   அவர்களது சமூகம், கள்ளினை பனை மரத்க்டிலிருந்து எடுத்க்டு  அதிலிருந்து சாராயம் காய்ச்சும் வழிமுறையினை பின்பற்றுகிறார்கள் என்று கூறினார். வரும் வழியில் அவர்களைக் காணவேண்டும் என நினைத்தும், என்னால் அந்த பயணத்தை ஒழுங்கு செய்ய இயலவில்லை. ஆனால் மீண்டும் ஆந்திரா போகவேண்டும் என உறுதி பூண்டுள்ளேன்.

வீர்சிங்பூரில்  நான் வாங்கிய பொருட்களின் மொத்த விலையே 60 ரூபாய் தான். தடுக்கு புதியது 10 ரூபாய். புதிய பெட்டி 10 ரூபாய். பழைய தக்கிற்கும் பழைய விசிறிக்கும் இருபது ரூபாய் வீதம் வாங்க்க்கொண்டார்கள்.

DSC06137

புதிய பெட்டியும் பாயும் கண்ணிமைக்கும்  நேரத்தில் செய்துமுடித்துவிட்டார்கள். அப்போது அங்கே ஒரு வாலிபன் வந்தான். அனைத்தையும் என்னிடம் விசாரித்த பின்னர், நான் புகைப்படங்கள் எடுக்க அனைத்து ஒழுங்குகளையும் செய்தான். வேற்றுமொழி புரிய சற்று கடினமாக இருந்தாலும், பனை ஓலை சார்ந்த தேடுதல் அனைத்தையும் புரிய வைக்கின்றது.

DSC06151

எனக்காக உத்தம் பேஹ்ரா அவர்கள் செய்த ஓலைப்பெட்டியில் எஞ்சி நிற்கும் ஓலைகள் வெட்டப்படவில்லை ஆகவே அந்த வாலிபன் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வெட்ட ஆரம்பித்தான். எஞ்சியிருக்கும் ஓலைகளை வெட்டுவது என்பது புதியவர்களுக்கு மிகவும் கடினமான செயல். ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டும். ஆனால் இந்த வாலிபன் கரத்தில் அந்த ஓலை பெட்டி சக்கரம் போல சுழன்றது. காய்கறி நறுக்குவதை விட வேகமாக அனைத்தையும் நறுக்கிவிட்டான். ஓலை சார்ந்து அனைத்து திறமை வாய்ந்தவர்கள் தான் இந்த ஊரில் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன்.

சரி இத்தனை ஓலைகளுக்கு எங்கே போவீர்கள் யார் உங்களுக்கு ஓலைகளை எடுத்து தருவார்கள் என்றபோது அந்த வாலிபனையே கை காட்டினார்கள். கள் அல்லது பதனீர் இறக்குவீர்களா என்றதற்கு இல்லை என்றான் அவன். பொதுவாக ஒரிஸ்ஸா முழுவதுமே ஈச்ச மரத்திலிருந்து தான் பதனீர் மற்றும் கள் இறக்குகிறார்கள் என்பதை பின்னர் தான் அறிந்துகொண்டேன்.

நேரம் மிகவும் குறுகியதாக இருப்பதால் புறப்பட ஆயத்தமானோம். அங்கோல் (அனுகுல் என்றும் சொல்லுகிறார்கள்) செல்வதற்கான இரயிலைப் பிடிப்பதற்கு நாற்பத்தைந்து நிமிடங்களே இருந்தது.  என்னை மகிழ்ச்சியோடு வழியனுப்பிவைத்தார்கள். ஆனால் அப்புறம் தான் எனது படபடப்பு கூடியது. ஏகப்பட்ட பொருட்கள். அனைத்தையும் சேர்த்துக்கொண்டு இரயிலில் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டும். இந்த இரயிலை விட்டால் மற்ற இரயில்கள் யாவும் 5 மணி நேரம் பிடிக்கும். சரியான நேரத்திற்கு இரயிலைப் பிடிப்போமா என்று ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டேன். ஆம் என்றார். ஆனால் அந்த ஆட்டோ ஒரு பழைய வண்டி. யாரோ பின்னாலிருந்து தள்ளினால் என்ன வேகத்தில் போகுமோ அந்த வேகத்தில் தான் போய்க்கொண்டிருந்தது. வழியிலேயே இறங்கி பேருந்தில் சென்றுவிடலாமா என எண்ணினேன். ஆனால் ஓட்டுனர், இரயிலைப்ப் பிடித்துவிடலாம் என்று கூறினார்.

இரயில் நிலையம் வந்து சேர்ந்த போது, மணி 3.58. இனி பயணச்சீட்டு எடுக்கவேண்டும், எடுத்துவிட்டு இரயிலைப் பிடிக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஓடிப்போய் ஆளுக்கொரு வரிசையில் நின்றோம். இவர் ஏன் என்னுடன் வந்து நிற்கிறார் என எண்ணிக்கொண்டேன். என்னை மிகச்சரியாக அந்த இரயிலில் ஏற்றிவிடவேண்டும் என்கிற துடிப்பு அந்த மனிதருக்குள் இருந்க்டிருக்க வேண்டும். மணி மிகச்சரியாக 4 ஆகிவிட்டது. நான் தேவையில்லாமல் பதற்றம் அடைந்தேன். ஆனால் அந்த ஓட்டுனர் வெகு சகஜமாக அங்கிருந்த வேறொரு வரிசைக்கு செல்ல எனக்கு கண் காட்டியபடி முன்னால் சென்றார். சிறிய வரிசை தான். தானியங்கி எந்திரத்திலிருந்து பயணச்சீட்டு எடுத்துக்கொடுக்குமிடம். விரைவாக வரிசை நகர்ந்து இரண்டே நிமிடத்தில் எடுத்துக்கொண்டேன். இனிமேல் இரயிலைப் பிடிக்கவேண்டும். அந்த ஓட்டுனர் என்னோடு கூடவே ஓடியபடி வந்தார். சில பொருட்களை எனது கரத்க்டிலிருந்து வாங்கி வைத்துக்கொண்டார். நான் நடைமேடையை தவறவிட்டபோது எனக்கு வழி காட்டி சரியான இரயிலைப் பிடிக்கச் செய்தார். நான் ஏறவும் இரயில் கூவியபடி நகரவும் சரியாக இருந்தது.பணியாளர்.

காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

malargodson@gmail.com

ஒரிசா – பனை கலை களஞ்சியம் 1

நவம்பர் 17, 2018

தால பத்ர சித்ரா

ஒரிஸ்ஸாவின் பனை -கலை அடையாளம்

ஒரிஸ்ஸா செல்ல வேண்டும் என்றவுடனேயே அங்குள்ள ரகுராஜ்பூர் என்ற ஓவிய கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். புபனேஷ்வர் சென்ற பின்பு, பூரி சென்று அங்கிருந்து ரகுராஜ்பூர் செல்லவேண்டும் என்றே எனக்கு கூறப்பட்டது. ஆனால் பூரிவரை செல்லவேண்டாம், நான் பயணிக்கும் இரயிலில் இருந்து சந்தன்பூர் என்ற இடத்தில் இறங்கினாலே அங்கே சென்றிருக்கலாம் என பின்னர் கண்டுகொண்டேன். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் அதிகப்படியான தூரமாக சென்றிருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைத்த ரிக்ஷாவாலா அங்கிருந்த நியாயமான வாடகை கேட்டார். செல்லும் வழியிலேயே பூரி ஜெகன்னாதர் ஆலய்ம இருப்பதாக அவர் கூறிய பொழுதும் என்னால் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் பனியோடு இணைத்து அவ்வாலயத்தை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வழியில் ஒரு கோவிலைக் கடந்க்டுசெல்லும்பொழுது பனையோலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் கோவில் பூஜைப்பொருட்கள் எடுத்துச்செல்ல ஏற்ற வகையில் ஓலைப்பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் கண்டேண். நகர்புறமாக மாறிவிட்ட பகுதியைக் கடந்க்டு செல்லும்போது பனைமரங்களின் மிடுக்கான உயரங்களை காண முடிந்தது.

DSC06089

ரகுராஜ்பூர் ஒரு குக்கிராமம், எந்தவித நவீன வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத இடம். ஆனால் அரசு இந்த இடம் செல்லுவதற்கு பல இடங்களில் வழிகாட்டிப் பலகைகளை நிர்மாணித்திருக்கிறது. நாங்கள் இறுதியாக சென்று சேர்ந்தது ஒரு தெரு. ஓவியங்கள் சிற்பங்கள் நிறைந்திருக்கும் ஒரு அழகிய தெரு. அந்த தெரு ஒரு சர்வதேச தரம் கொண்ட ஒரு இடம் என்றால் சந்தேகம் இல்லை. அந்த அளவிற்கு அமைதியும் அழகும் கூடியிருந்தது அந்த எளிமையான தெரு.

பலரும் வந்து என்னை அழைத்தார்கள். ஒருவகையில் கன்னியாகுமரியிலும் பிற இடங்களிலும் அவ்வித அழைப்பு உண்டு. கோழி அமுக்குவதுபோல் என்ற நோக்கத்திலான அழைப்பு அது. ஆனால் வந்து பார்த்தால் மட்டும் போது என கனிவான அழைப்பைக் கொடுத்தார்கள். அனைவரது கடைகளுக்கும் நான் சென்றேன். ஒருவரும் கண்டிப்பாக ஏதேனும் வாங்குங்கள் என நச்சரிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த பொருட்களின் விலையும் மிகக்குறைவுதான். ஆனால் அவர்களிடம் ஒரு வசீகரம் இருந்தது. அன்பால் நம்மை கட்டிப்போட்டுவிடுவார்கள். வாங்கவில்லையென்றால் நாமே புண்படுவோம் எனும் அளவிற்கு மிகவும் பொறுமையாகவும் ஒவ்வொன்றாகவும் காண்பிப்பார்கள். இது வியாபாரம் மட்டுமல்ல கலைகளை வாழ்வாக கொண்டவர்களின் உணர்வலைகள். அவர்களுக்கு விற்பனையை விட, தங்கள் கலை எவ்விதம் ரசிக்கப்படுகிறது என்பதில் தான் பெரும் வேட்கை இருப்பதாய் நான் உணர்ந்தேன்.

DSC06105

நான் அங்கே இருக்கையில் ஒரு வாகனம் வெளினாட்டு பயணிகளை அழைத்துச் சென்றது. புவிசார் குறியீடு பெற்ற ஒரு ஓவிய மரபு இது. சர்வதேச தரம் என்பது, நாம் நாமாக இருந்து உருவாக்கும் கலைகளால் உருவாவது. நமது தனித்தன்மைகள் நமக்கு பெற்றுத்தரும் அங்கீகாரம் அது. போலிகளை அல்ல உண்மைகளே அங்கே கடைவிரிக்கப்படுகின்றன. ஆகவே அவைகள் உலக அரங்கில் கொலுவீற்றிருக்கின்றன.

DSC06097

ஒரிஸ்ஸா குறித்து பல வருடங்களுக்கு முன்பே நான் அறிந்த இரு குறிப்புகள் உண்டு. ஒன்று “தால பத்ர சித்ரா” என்ற ஓவிய முறை. மற்றொன்று இவ்வகை ஓவியங்கள் செய்யும் இடம் ரகுராஜ்பூர் என்பது. பல முறை தால பத்ர சித்ரா என்ற ஓவியமுறைமையை வரையும் மக்களை, சென்னை, மும்பை, பெங்களூர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பார்த்திருக்கிறேன், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியம் தான் என்றாலும் எனக்கு அவற்றின் மேல் பெரு விருப்பம் முதலில் எழவில்லை. காரணம் அப்போது நான் பனை ஓலைகளில் செய்யும் ஒவியமுறைமகளுக்கு கருப்பு பின்னணியமும், குருத்து ஓலையையுமே பயன்படுத்திக்கொண்டிருந்தேன். தால பத்ர சித்ரா செய்பவர்கள்  பயன்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் சாதாரணமாக கிடைக்கும் பச்சைநிற சாரோலை தான்.

குருத்தோலை குறித்து ஏதும் அறியாதவர்கள் என்று  ஒரு மேட்டிமை மனநிலையுடன் தான் இவைகளை நான் அணுக ஆரம்பித்தேன். ஆனால் நுணுக்கி பார்க்கையில் எவ்வகையிலும் உலக தரம் வாய்ந்த கலைஞர்கள் தான் என்பதும் இவர்களது ஓவிய மரபிற்கு ஒரு தொன்மை இருக்கிறது என்பதும் எனக்கு புலனாகியது. வாழ்வில் மற்றொரு கரையில் நின்று பார்ப்பதில் உள்ள சிரமங்கள், தெளிவுகள் போன்றவை எனது ஒரிய பயணத்தில் வாய்த்தமை எனது நல்லூழ்.

DSC06086

பனை ஓலைகளை நேரடியாக மரத்திலிருந்து பறித்து போட்டு அவைகளை வெயிலில் காய வைக்கிறார்கள். காய்ந்த ஓலைகளை சீராக வெட்டி இணைத்துக்கொள்ளுகிறார்கள். வேறு எந்த விதமான பாதுகாக்கும் தொழில்நுட்பமும் இல்லை. ஆனால் சரியாக பராமரிக்கப்பட்டால் சில நூற்றாண்டுகள் கூட இவைகள் பாதுகாப்பாக இருக்கும். பச்சை ஓலைகளை இவர்கள் தெரிவு செய்வதற்கு அவைகளின் அடர்த்தி ஒரு முக்கிய காரணம். மற்றொன்று ஓலையின் முதிர்ச்சி கூர்மையான இரும்பு எழுதோல் கொண்டு கிழித்து எழுதுகையில்  மிகச்சரியான அளவில் உள்வாங்கி தாங்கி நிற்கும் தன்மையைத் தருவது ஆகும். ஒருவேளை இவ்வோவிய மரபிற்காக குருத்தோலைகள் பனை மரத்திலிருந்து வெட்டப்பட்டிருக்குமென்றால் இன்று நாம் காணும் மரங்கள் அங்கே இருக்காது ஏன் இந்த ஓவிய மரபே அழிந்துபோயிருக்கலாம். எவ்விதம் ஓலைகளை பயனுள்ள வகையில் எடுத்தாளவேண்டும் என்கிற ஒரிய ஓவியர்களின் புரிதல்  என்னை அசைத்தது. அனைத்தையும் சுருட்டி விழுங்கும் வணிக நோக்கு அறவே அற்ற ஒரு தியான நிலை இது.

தால – பனை

பத்ர – ஓலை

சித்ரா – ஓவியம்

இந்த மூன்று வார்த்தைகளும் இணைந்துதான் “பனை ஓலை ஓவியம்” என்ற “தால பத்ர சித்ரா”  ஒரிஸ்ஸாவில் பிறந்துள்ளது. இவற்றின் தொன்மையோ சரியான வரலாறுகளோ இன்று தெளிவுற கிடைக்கவில்லை. ஈராயிரம் வருடங்களுக்கு முன்பே இவைகள் இருந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்திய இலக்கியங்கள் பனையோலையில் எழுதி கையளிக்கப்பட்டிருப்பதால் தான். பெரும்பாலும் “தால பத்ர சித்ரா” பயன்படுத்துபவை ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களைத்தான். பல்வேறு கடவுள்களை வரைவதும் அவர்களின் உடை, நகை மற்றும் அங்க அடையாளங்கள் யாவற்றையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் உன்னத கலைஞர்கள் இவர்கள். இயற்கை சார்ந்து பறவைகள் விலங்குகள் மரங்கள் பூக்கள் போன்றவைகளும் இவர்களின் ஓவிய மரபில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. பனை மரங்களை இவர்கள் பெரும்பாலும் வரைந்து நான் பார்த்ததில்லை. நாட்டுப்புறக் கதைகளும் இவர்களின்  ஒவிய மரபு எடுத்து பயன்படுத்துகின்றது. காமசூத்திர படங்களும்  இவர்களின் கைவண்ணத்தில் மிளிர்வதைப் பார்க்கலாம்.

DSC06087

நான் அங்கே சென்றிருந்த போது ஓரிரு இளம்பெண்கள் இவ்விதமான ஓலைகளில் படம் வரைவதற்கான பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கடைகளை நிர்வாகிப்பது ஆண்கள் தான்.

ஒவியங்களை நுணுக்கமாக்கி வரைவதும் அவைகளை கொண்டாடுவதும் நமது மரபில் காணக்கிடைப்பது ஆச்சரியமானது. பிரம்மாண்ட கோவில்களைக் கட்டியெழுப்பும் மரபு இந்தியாவில் காணப்பட்டாலும், நுணுக்கி பார்க்கும் இந்தக்கலை எவ்விதம் உருவாகியிருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் என்னை குடைந்துகொண்டே இருந்தன. பனை ஓலை எழுத்து மற்றூம் ஓவிய மரபு பிரம்மாண்ட கற்கோவில்களைவிட காலத்தால் முந்தையது. ஆகவே வீட்டில் சேகரித்து வைத்து ஒப்பு நோக்க, ஒரு வகையில் படங்கள் வாயிலாக இந்திய மரபின் இலக்கியங்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல நமது முன்னோர்கள் கண்டுகொண்ட ஒரு வழியாக இருக்கலாம்.  தற்கால கார்டூன்களுக்கு நிகராக இவைகள் பயன்பட்டிருக்கலாம்.

எனது தேடல்களில் பனை ஓலை சார்ந்த ஓவியங்கள் பல்வேறு மரபுகளில் நான் கடந்துவந்திருக்கிறேன் என்றாலும் “தால பத்ர சித்ரா” கொண்டுள்ள தனித்தன்மை  அலாதியானது. அவைகள் ஒரு தொடர் மரபைக் கொண்டிருக்கையில் அவைகளுக்கான தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். இம்மரபு ஒரு சில குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு இன்று நமது கரங்களில் வந்து அடைந்திருக்கிறது. இவைகளுக்கான இலக்கண மரபும் இவர்களிடம் இருக்கிறது. ஆகவே இவைகளை ஒருங்கிணைத்து அரசே ஒரிஸ்ஸாவின் முக்கிய ஓவிய மரபாக இவர்களை முன்னிறுத்துகிறது.

DSC06113

தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் தொல் பழங்காலத்திலேயே தொடர்புகள் இருந்திருக்கவேண்டும்.  பெருமளவில் இரு பகுதிகளையும் இணைக்கும் வங்க கடற்கரை இருப்பதாலும், நிலவியலின்படி இவ்விரு நிலங்களும் இணைந்திருப்பதாலும் பெருவாரியான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இங்கே ஒன்று போல் இருப்பதாலும் தொல் பழங்காலத்திலிருந்தே இந்த இணைவு சாத்தியப்பட்டிருக்கும். ஆயிரம் யானையைக் கொன்ற வீரனை பாடும் பரணி ஏற்படும் முன்னரும் பின்னரும் யானைகள் இன்நிலப்பகுதிகளை  இணைத்தபடி இருந்திருக்கின்றன. நெடிந்துயர்ந்து நிற்கும் பனை மரங்கள் தகவல்களை உடனுக்குடன் பரப்பும் தந்திக்கம்பங்களாக செயலாற்றியிருக்கின்றன.

இன்றைய ஒரிஸ்ஸா என்பது தொன்மையான ஒரு நிலம். பழங்குடியினரும் மீனவர்களும் தலித் மக்களும் பிற்படுத்தப்பட்டோரும் மற்றும் பலரும் வாழும் நிலப்பகுதி. இவ்விடம் மையம் கொண்டு மிகப்பெரிய பேரரசான கலிங்கம் செயல்பட்டுவந்தது. கலிங்கப்போர் வரலாற்றில் இரத்தக் கறை படிந்து இருக்கும் ஒரு சோக நிகழ்வு. அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான இந்த போர் சமாதானம் வேண்டி ஒருவேளை பனையோலைகளை கையிலெடுத்திருக்குமா என்ற எண்ணமே வருகிறது. அவ்வளவு தூரம் இரும்பு ஆயுதங்கள் எழுதுகோல்களாக மாறும்படி கொல்ல பட்டறைக்குச் சென்றிருக்கின்றன. வெட்டியும் குத்தியும் இரத்த வண்ணங்களில் திளைத்த ஒரு சமூகத்தை ஓலைகளைக் கொண்டு அமைதி வழி திருப்பியிருக்கும் ஒரு வரலாற்று புள்ளி தான் “தால பத்ர சித்திரா”. கூர்மையான ஆயுதங்கள் யாவும், உணர்வுகளை மீட்டெடுக்கும் கருவியாகவும், பதிவு செய்யும் கருவியாகவும் மிளிர்ந்தது ஒரு வரலாற்று வரமே.

சிறு வயதில் ஒவியங்களை வரைய முற்படுகையில் பாட புத்தகங்கள் தான் கையில் இருக்கும் அவைகளில் வரைந்து வைக்கும்போது ஆசிரியரிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் கிடைக்கும் வசவு என்பது “ஏன் இப்படி வெட்டி குதறி வைத்திருக்கிறாய்” என்பதாகவே இருக்கும்.  ஒரிய மக்களின் ஓவிய மரபு “எளிமையை” தனது ஆதார சுருதியாக கொண்டது. அவர்கள் இன்றும் வெளிபடுத்தும் “பட்டசித்ரா” (தால பத்ர சித்ரா அல்ல) ஓவியத்தில் நான்கு வண்ணங்களே பிரதானமானவை. அவ்வாறிருக்கையில், பனையோலையில் அவர்கள் எழுதும் ஓவியம் என்பது கருமை வண்ணத்தை மட்டும் கோருவது. பிற வண்ணங்களை அவர்கள் பிற்காலத்தில் இணைத்திருந்தாலும், பெருவாரியாக கருமை வண்ணத்தையே அடிப்படையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

DSC06559

ரகுராஜ்பூர் ஓவியர்கள், இயற்கை வழங்கும் சாத்தியக்கூறுகளைக் கண்டடைவதும், அவைகளை மகிழ்வின் வடிவாக்கி திளைப்பதும், பிறரை மகிழ்விப்பதும் என ஒரு பயனுள்ள வாழ்வையே வாழ்கிறார்கள். பனை அவ்வகையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது. இன்றைய நாவீன உலகில், துல்லியமாக அசைவுகளையே கைப்பற்றும் அசையும் பட  உலகில்,  எளிய பனை ஓலையில் வரையப்பட்ட ஓவியங்கள் நிலைநிற்பது என்பது ஒரு சாதாரண தகவல் அல்ல. அது மானுடம் கடந்து வந்த பாதைகளின் ஒரு நகலடையாளம். உறைபனியான சித்திர காலம். நெடும் பனையின் வடு வரிகள்.

பனை ஓலைகளில் காணப்படும் கலைகளின் உச்சம் இதுதான் என நான் தயங்காமல் கூறுவேன். தமிழகம் கண்டிப்பாக பனை சார்ந்து தன்னை மறுகண்டுபிடிப்பு செய்யவேண்டி இருக்கிறது என்பதையே எனது பயணம் உணர்த்தியது. பனை மரங்கள் மிக அதிகமாக இருக்கிறதும் பனை சார்ந்து மிக அதிகமாக பொருட்களை தயாரிக்கிறதுமான தமிழகம், பனை சார்ந்து ஏதேனும் புவி சார் குறியீடு பெற்றிருக்கிறதா எனும் கேள்வி எஞ்சியிருக்கிறது. நிகர் கலைகள் நம்மிடம் உண்டு. நிகரற்ற கலைஞர்களும் உண்டு. அவர்களின் இடத்தினை நாம் உணரவில்லை. அவர்களுக்கான இடத்தை நாம் கோரிப்பெறவில்லை. நமது கலைஞர்கள் என்று அடையாளம் பெறுகிறார்களோ அன்றுதான் பனை பாதுகாப்பு எனும் முயற்சிகள் சற்றேனும் அர்த்தம் பொதிந்த வடிவம் பெறும்.

 

பணியாளர். காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

malargodson@gmail.com

Christmas Palm Tree

நவம்பர் 13, 2018

Translated by Rhoda Alex

It is sad that Christmas celebrations are commercialised these days but it is even more heart-breaking that the festivities are now ‘plastic’ dependent.  The festival that celebrates the humility of Jesus Christ has gone through enormous changes and the Christmas season has established itself as one that focuses on opulence and extravagant celebrations.  Ignoring the poor and donning the attitude of gift-exchanging elitism is the trend among a majority of Christians now. To change from this consumerist outlook and move towards a different thought is the calling for the church this Christmas.

Mathew, a disciple of Jesus, while writing about the birth of Jesus names the earthly ancestors first. Then, he quotes prophet Isaiah Therefore the Lord himself will give you a sign: The virgin will conceive and give birth to a son, and will call him Immanuel.” 

Placing a decorated tree has become a significant tradition during Christmas. Trees that are an important part of nature are now given an artificial form and they decorate our churches and home. Will God appreciate these decorations? As Isaiah the prophet mentions in Isaiah 1:14, we understand that God does not prefer these – “New moons, Sabbaths and convocations —  I cannot bear your worthless assemblies.  Your New Moon feasts and your appointed festivals I hate with all my being. They have become a burden to me;  I am weary of bearing them.”  If, we who have accepted this Christmas tradition, join together as a church and plant real trees instead – how much more meaningful our Christmas celebrations will be?

Unlike the artificial Christmas tree, the Palmyra Palm tree created by God stands tall in front of us. It is waiting for us with all the gifts that we need in our lives – but it is silenced and dejected by the sight of axes that we throw at them.  It is become a common practice to eliminate those things that have been the very foundations of our life.  Is this not similar to leaving elders and parents to be cared by Old Age Homes? We keep destroying real trees and instead we showcase synthetic and artificial decorations for Jesus at Christmas  – will this not disgust God?

xmas tree odi

The Palmyra Palm is a gift from God. At every stage of our lives, it stands with us and gives us support. It completely encapsulates the idea of a ‘boon’ from God. To a God who comes in search of fruits – what kind of a response will an artificial tree that does not bear flowers or fruits evoke? Is it not to live in unison with nature that God created mankind in the Garden of Eden and placed him in the midst of its beautiful trees. Would not God the creator be saddened if his nativity is in the middle of artificial trees? What does our God who came to seek and save the lost  expect from us who have lost the palm trees?

It is indeed fitting to think about the Palmyra palm tree during Christmas. It is the most suitable reminder of the symbol of Mannah – the sustaining food that came from the heavens. The God who gave himself up for us will certainly like to associate himself with the palm tree which also gives itself up for use completely – at the time of his coming. This is the tree that will save us from globalized market exploitation.  This is the tree that give us the opportunity to spiritually witness the God who identified himself with the poor and oppressed. This tree is a boon for all efforts to celebrate of Christmas without plastic! It is the characteristic ‘giving-tree’ that gives all that we request from it.  How can it not be the born saviours favourite tree – the palm tree is like a mother who nurtures and nourishes her young.

In retrospect, we have hacked away 25 lakh palmyra palm trees in Kanyakumari District alone, citing very many reasons. And yet we do not have the means to protect the trees that are remaining now.  It is not good for us or for our descendants to simply consume all the gifts that God has given us.  What then is the theology behind killing living trees and showcasing artificial trees? God will hold us accountable for the resources that he has given us.  What is the explanation we have for squandering the knowledge of palm-tree climbing. How will Jesus who came to us as a poor and lowly person be in this society that has dispensed of its palm-tree climbers. What peace can we offer to our God after forgetting the hand-made palm-leaf decorations and adopting the commercial decorations singularly. If –  even after understanding that it was only the palm trees that saved us from great destruction during Okhi Cyclone, we fail to protect them – the God who came to us at Christmas will surely be deceived.

During disastrous times such as droughts, cyclones, famines and poverty the Palmyra palm has remained steadfast in its relationship with us, as  an able partner, a mother and a true friend. Our understanding of this tree, be it economical, social, spiritual, historical and environmental are all still in the nascent stage. In this way, it’s impossible to suppress the doubt on whether we have really understood the terminology Immanuel and whether God is really with us.

We should take a resolution this year. Let us remove and boycott artificial Christmas trees from among us. Let us declare the Palmyra Palm as the Christmas tree of Tamilnadu. Let us declare to all other people of the world about the importance of the palm along with the coming of the Lord. Let us decorate the living palm trees and sing praises to God. If there are no palm trees at our homes or vicinity, let us sow new palm seeds and let’s make our Christmas celebrations come alive literally. Let us use Christmas decorations that have used palm leaves or palm based products.  It will also be a good start to begin using Palmyra palm based festival delicacies (jaggery etc). By purchasing goods from palm leaf artisans our Christmas celebrations will be inclusive of the lives of the poor and needy. Let us initiate a clean Christmas celebration with clear understanding this year.

Will the God who came to be with us ignore our culture?  Instead our festival celebrations nowadays keep God as a stranger among us. We lack the understanding that God is one among us and is present in our lives. At this juncture, it is important to slay this alien intrusion in our lives and reinstate and celebrate the God who took on meekness and lowliness to be with us. Similarly, by adopting the Palmyra Palm as our Christmas tree this year, let us proclaim the good news that God is with us.

Let this be our calling – to highlight the Palmyra palm
as a symbol of celebration of Gods meek birth;
as a potent force against commercial exploitative market economy: and
as a symbol of Gods benevolence.

Rev. Godson Samuel

Angol, Odisha 

e-mail: malargodson@gmail.com

Mobile: 9080250653

 


%d bloggers like this: