Archive for பிப்ரவரி, 2019

தீர்க்கதரிசனம்!

பிப்ரவரி 25, 2019

 

சமீபத்தில் ஒரு அசம்பிளீஸ் ஆஃப் காட் திருச்சபையின் போதகர் என்னை அழைத்து, இன்று உங்களைக் காணவேண்டும் என்று கடவுள் என்னிடம் சொன்னார் என்றார். கடவுள் சொன்னால் கண்டிப்பாக நாம் மறுக்கக்கூடாது இல்லையா, “வாருங்கள்” என்றேன். பேருந்து பிடித்து  வந்து சேர்ந்தவரை பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அழைத்து வந்தேன்.

தனக்கு வயது 35 ஆகிறது என்றும் நல்ல ஒரு பெண்ணைத் தான் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். நான் பொதுவாக திருமண பொருத்தம் பார்ப்பதில் தேர்த்தவன் அல்ல. ஆகவே உங்களுக்கு ஏற்ற வரன் வரும்போது சொல்லுகிறேன் என்றே சொல்லிவைத்தேன். அன்று இரவு எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அந்த சூழலில் சலிக்காமல் உணவை சமைத்து ஜாஸ்மின் அவர்களுக்கு கொடுத்தாள். இரவு உணவு உண்டபின் அவர் பேருந்தை தவற விட வாய்ப்பு உள்ளதால் பரபரப்பாகவே உணவளித்தோம்.  நேரமாகிறது என உணர்ந்த பின் புறப்படும்போது ஜெபிக்க ஆரம்பித்தார்.  நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29: 11 திருவிவிலியம்) என்ற வசனத்தை கர்த்தர் அவருக்கு காண்பித்து என்னிடம் சொல்ல சொன்னதாகவும் கூறினார்.

இந்த வசனம் பல்வேறு கிறிஸ்தவ வீடுகளில் அலங்காரமாக மாட்டப்பட்டிருக்கும், பலரால் சிறந்த மேற்கோளாக எடுத்து காட்டப்படும். உலகில் நடைபெறும் அனைத்துமே நமது நன்மைக்காக எனும் எண்ணம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கு, இந்த வசனம் கருப்பட்டியை முழுமையாக உடைத்து படைத்து வைத்தத்போல போல. எவர் இந்த வசனத்கைக் கேட்டாலும் உருகி மயங்கிவிடுவார். கடவுள் இப்போதே நம் வாழ்வில் ஏதோ மாய மந்திரங்களைச் செய்துவிடுவார் போலிருக்கும். சற்றே நிதானித்து இந்த வசனங்கள் எவைகளைக் கூற முற்படுகிறது என்பதை அறிவோம்

1 எருசலேமிருந்து பாபிலோனுக்கு

நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள்

எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள்,

இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும்

இறைவாக்கினர் எரேமியா

எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.

2 அரசன் எக்கோனியா, அரச அன்னை,

அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள்,

தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர்

எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், [1]

3 சாப்பானின் மகன் எலாசா,

இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப்

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம்

யூதாவின் அரசன் செதேக்கியா

அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.

4 அதன் சொற்களாவன:

“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான்

எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு

நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே:

5 வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்;

தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.

6 பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள்.

உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்;

உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்!

இவ்வாறு அவர்களும் தங்களுக்குப்

புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்.

அங்கே பல்கிப் பெருகுங்கள்;

எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.

7 உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ,

அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்;

அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;

ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான்

உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.

8 இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர்

கூறுவது இதுவே:

உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும்

குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு

பார்த்துக்கொள்ளுங்கள்.

9 அவர்கள் காணும் கனவுகளை

நீங்கள் பொருட்படுத்தாதீர்கள்.

ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப்

பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.

நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர்.

 

நாடு கடத்தப்பட்டிருந்த மக்கள் அரசர், தலைவர்கள், தச்சர்கள் என ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு என ஒரு கடிதத்தை எரேமியா இறைவாக்கினர் எழுதுகிறார். அது அரசனின் கரங்களில் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார். அந்த கடித்தத்தில் பின்வருவனவற்றை அவர் மிகவும் கருத்தூன்றிச் சொல்லுகிறார்.

வீடுகளை அமைத்துக்கொள்ளவும், தோட்டங்களை அமைத்துக்கொள்ளவும், திருமணங்கள் செய்துகொள்ளவும் நாடுகடத்தப்பட்ட மக்களை கடவுள் அறிவுறுத்துகிறார். நாடு கடத்தப்பட்ட இடத்தில் இருந்த மக்களைப் பார்த்து மேலதிகமாக அவர் சொல்லுவது நீங்கள் இருக்கும் நகரை வாழ்த்துங்கள் எனவும் அதற்காக மன்றாடுங்கள் என்பதாகவும் அந்த மடல் விரிகிறது. அதற்கு காரணம் அந்த நகர் நன்றாயிருந்தாலே நீங்களும் நன்றாயிருப்பீர்கள் என்பதாக அந்த வார்த்தைதைகள் தெளிவுபடுத்துகின்றன.

 

அப்படியே இஸ்ரவேலருக்குள் இருக்கும் இரைவாக்கினர் “கடவுளின் பெயரால்” என எதைக்கூறினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் எனவும் அவர் எச்சரிக்கிறார். இவைகள் எப்படி கடவுளின் பெயரால் பொய்மை உரைப்பவர்கள் அங்கே இருந்த்திருக்கின்றனர் என்பதை நமக்கு தெளிவுற காண்பிக்கின்றது. நாடு கடத்தப்பட்ட மக்களின் “மன உளைச்சலைக் கூட்டும்” வித்தை தெரிந்தவர்கள் போலும் இந்த போலி இறைவாக்கினர்.

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” என்கிற இந்த வசனத்தில் காணப்படும் முதல் பகுதியில் சொல்லப்படும் “நீங்கள்” என்னும் வார்த்தை “நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைக்” குறிப்பதாக வருகிறது. நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலருக்கு என்ன “எதிர்பார்த்திருக்கும் முடிவு” இருக்கும்? அது – எப்போது தாய் நாடு திரும்புவோம் என்பதாகத்தானே? இவைகளை கர்த்தர் அறிவார். அவைகள் தீமையானவைகள் அல்ல சமாதானத்துக்கானவைகள் என்றே அவர் உறுதி கூறுகிறார்.
நாடுகடத்தப்பட்ட மக்களது வாழ்வில் உடனே கடவுள் செயலாற்ற விரும்பினால் மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டியது தானே? எதற்காக இந்த கடிதங்கள் போக்குவரத்துகள், இன்ன பிற வியாக்கியானங்கள்? கடவுள் தம் மக்கள் விரும்பும் காரியம் சரியானதாக இருந்தாலும் கூட அவ்விருப்பங்களைச் செய்து முடிக்க சற்று காலத்தை வசூலித்துக்கொள்ளுகிறார். இதனை நாம் 10 ஆம் வசனத்தில் தெளிவுறக் காண்கிறோம்.

“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
‘பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின்
நான் உங்களைச் சந்திக்க வருவேன்;
உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி
உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன். (எரேமியா 29 திருவிவிலியம்)

மிகத் தெளிவாக கடவுளின் திட்டம் வெளிப்படும்படியாக இந்த கடிதம் அமைந்திருக்கிறது. இப்போது பொறுமைக் காருங்கள். எழுபது ஆண்டுகள் நீங்கள் பாபிலோனிலே இருக்கவேண்டும். ஆகவே சமாதானத்தைத் தேடுங்கள். உங்களுக்கு அல்ல (பெரும்பாலும்) உங்கள் சந்ததியினருக்கே விடுதலை அமையும் என்பதே உறுதிமொழி. ஒரு தேசத்திற்காக கூறப்பட்ட உறுதிமொழியினை தனி நபர்களுக்காக பிய்த்தெடுத்து தீர்க்கதரிசனம் உரைப்பதும் நலமுறைப்பதும் எப்படி சரியாயிருக்கும்?

ஆகவே அசம்பிளீஸ் ஆஃப் காட் சபை போதகரின் வாக்குத்தத்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் அமைதி காத்தேன்.

அப்புறம் திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே என்கிற பாடலைப் பாடினார். பின்பு என் மனைவியைத் திரும்பிப்பார்த்து சிஸ்டர் நீங்க வேலைக்குப் போகணும் என்றார். கடவுள் சொல்லுகிறார், நீங்கள் உங்கள் வழியைத் திருப்பணும் என்றார். பேருந்தை விட்டால் இந்த மனுஷன் என்ன செய்வார் என நான் பதைபதைத்துக்கொண்டிருந்தேன். ஆண்டவர் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார் என்றார். ஜாஸ்மின் குழம்பிப்போய் நின்றாள். நான் சரி… முடித்துவிடுவார் என நினைக்கையில்,  சிஸ்டர் நீங்க செய்வது சரியில்லை, வீட்டிலே தினந்தோரும் ஜெபிக்கணும்,  குழந்தைகளுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கணும்… ஆண்டவருக்க வளிகள்ள பிள்ளைகளை நடத்தணும் என்றார். எனக்கு எரிச்சலாயிருந்தாலும் நான் அடக்கிகொண்டேன். மீண்டும் மீண்டும் அவர் ஜாஸ்மின் ஒரு கொலை குற்றம் செய்ததுபோலே பேசிக்கொண்டிருந்தார்… நான் கண்களால் அவளை சமாதானப்படுத்தினேன்.

நான் எப்போதுமே எனது வாழ்வே ஜெபம் தான் என பிதற்றித் திரிகிறவன். எனக்கு முழங்கால் இட்டோ… ஒரு நேரம் ஒதுக்கியோ ஜெபம் செய்ய வேண்டும் என்கிற பழக்கம் எல்லாம் கிடையாது. எனக்கு எப்போதெல்லாம் உணவு வருகிறதோ அப்போது மனதிற்குள் நன்றிகளை முணுமுணுத்துக்கொள்வேன். வார்த்தைகளை சொல்லி நான் ஜெபிப்பது, பாரம்பரியமாக கிறிஸ்தவ முறைகளில் செய்யப்படும் ஜெபங்களை எனது வாழ்வில் நான் பெரும்பாலும் வைத்துக்கொள்ளவில்லை. சில நேரம் எனக்கு ஜெபத்தினை எழுத்தில் வடிக்கவேண்டும் என தோன்றுகையில் அவைகளை எழுத்தில் வடிப்பேன். சில பாடல்கள் மன்றாட்டின் அமைப்பில் இருக்கும் ஆகவே அவைகளை முழுதுணர்ந்து பாடுவேன்.  எனக்கும் கடவுளுக்குமான உறவு என்பது அவர் என்னை ஆசீர்வதிக்காமல் போனாலும் நான் அவர் பிள்ளை என்பதே. கடவுளிடம் எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாது இருப்பதே சிறந்தது என எண்ணுபவன் நான். அவர் எனது உள்ளத்தில் ஏந்திய சிறு நெருப்பை காட்டுத்தீயாக்கினால் போதும் என்றே எண்ணுவேன். ஒரு செயல் வடிவான ஜெபம் அது. யாரேனும் என்னிடம் மன்றாட்டுக் கூறச் சொன்னால் மன்றாட்டை ஏறெடுப்பேன்.

எனது பெரும்பாலான மன்றாட்டுக்கள், திருமறை வாசிப்பினூடாகவே நடைபெறும். ஏன் இப்படி புரிந்துகொள்ளப்படுகிறது? ஏன் இவைகள் நமக்குப் புரியவில்லை? எப்படி நமது வாழ்வில் இந்த வசனங்கள் அர்த்தம் பெறும் என்பதாகவே எனது மன்றாட்டுக்கள் இருக்கும். அது நானும் கடவுளும் பேசிக்கொள்ளும் தருணம். திருமறையை விரித்து வைக்காமல் என்னால் கடவுளுடன் உரையாட இயலாது. பெரும்பாலும் எனது தட்டச்சில் அந்த மன்றாட்டுக்கள் பதிவாகிக்கொண்டே இருக்கும். அவ்விதமான பொற்தருணமாகவே நான் எனது மன்றாட்டைக் கொள்ளுவேன். ஒரு போதகரிடம் மக்கள் என்ன எதிபார்க்கிறார்களோ அந்த இலக்கணங்களுக்குள் சிக்காதவன் நான். அதை பெருமையாக கூறவில்லை… எனது இயலாமையாக …. அல்லது எனது வழிமுறைகள் அப்படித்தான் என்பதை நேர்மையாக பதிவு செய்ய வேண்டியே சொல்லுகிறேன்.

ஆனால் ஜாஸ்மின் எனக்கு நேர் எதிர்… நேரம் ஒதுக்கி பாரம்பரிய முறைப்படி ஜெபிப்பாள், பாட்டு பாடுவாள், வசனம் வாசிப்பாள், சிறுவர்களுக்கு திருமறை சார்ந்து கதைகள் சொல்லிக்கொடுப்பது முதல் திருமறையை மிக அழகாக விளக்கிக்கொடுபவள் அவள் தான். அதாவது ஒரு கிறிஸ்தவ பெண்மணி எப்படி இருக்கவேண்டும் என கிறிஸ்தவ சமூகத்தால் எதிர்பார்க்கப்படுகிறதோ அந்த சர்வலட்சணமும் பொருந்திய அவளைப்பார்த்தா இப்படி என எண்ணிக்கொண்டேன். ஆகவே  உள்ளாக சற்றே எரிச்சலுற்றேன். ஆனால் எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பிற்பாடு என்னைத் திரும்பிப்பார்த்து. மீண்டும் எரேமியாவின் மேற்கோளை விளக்கினார். அதைத் தொடர்ந்து… நீங்க… கடவுள் உங்களுக்கு என்ன சொன்னாரோ அதைச் செய்யுங்க பாஸ்டர் என்றார்… உடனே… இப்போதே… பாம்பே போங்க. கடவுளுடைய ஊழியத்தைச் செய்ங்க. இங்கேயே இருக்காதீங்க. கர்த்தர் சொல்லுகிறார். இப்படியே சொல்பவரின் பேச்சு சற்றே மாறிக்கொண்டு வந்தது. பிள்ளைகள் மேல் சாபத்தை வருத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் உடனே போங்கள் என்று சொல்லிகோண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், இனி பஸ் கிடைக்காதே எப்படிப் போய்ச் சேருவார் என்பதையே நான் கவலையுடன் எண்ணிக்கொண்டிருந்தேன்.

கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல. (லூக்கா 9:62) என்கிற வசனத்தைச் சொல்லி, நீங்க தவறு செய்கிறீங்க, ஆண்டவருடைய அழைப்பு உங்களுக்கு இருக்கு உடனே போங்க என்றார். இது பொதுவாக போதகப் பணியில் இருக்கிறவர்கள் வேறு வேலையினை தேடிக்கொண்டால் அனைவரும் எடுத்தாளும் ஒரு வசனம். எப்படி இந்த வசனத்தை புரிந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. ஆமாம்! இங்கே “கலப்பையில்” கைவைத்திருக்கிற போதகர்கள் யாரேனும் உண்டா?   கலப்பையில் கைவைக்கக் கூடாது என உறுதிமொழியினை கிறிஸ்தவர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.  அப்படியானால், பனையில் கைவைத்துவிட்டு ஏறாமல் இருக்கும் சமூகம் எப்படி தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு உகந்ததாக இருக்கும்?.  யாவற்றையும் கோர்த்துப் பார்க்கையில் எனக்கு தலை சுற்றியது. இவர்களெல்லாம் எங்கிருந்து கிளம்பி வருகிறார்கள் என எண்ணிக்கொண்டேன்.

அவரது ஜெபம் “பொதுவான நம்பிக்கைகளின்படி” மிக வல்லமையான ஜெபம். என்னைக் கடிந்துகொண்டார், கடவுளை செயலாற்ற கட்டளையிட்டார், அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் என்பதை அந்த ஜெபத்தில் நான் கண்டேன். இறுதி பஸ் போகின்ற சத்தம் கேட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி அவர் என்னை மும்பை புறப்படச் சொன்னவுடனே நான் புறப்பட இயலாதோ அது போல ஒரு சூழ்நிலையில் அவர் இருக்கிறார். ஒருவழியாக அவர் ஜெபம் முடிந்தது. நான் கருங்கல் பேருந்து நிலையத்தில் அவரை விட்டால் போய்விடுவாரா என்கிற வேகத்தில் அவரை அழைத்துக்கொண்டு கீழிறங்கினேன். கருங்கல் போய் பார்த்தபிறகு இறுதி பேருந்தும் போய்விட்டிருந்தது.

கருங்கல்லிலிருந்து அவரது வீட்டிற்குப் போக சுமார் 12 கிலோ மீட்டராவது இருக்கும். நேரம் 10.45 ஆகிவிட்டது என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில், அவர் என்னிடம் மீண்டும் பேச முற்பட்டார். நான் சொன்னேன்… பைக்ல ஏறுங்க இல்லாட்டி வீட்டுக்கு போக முடியாது என்று கூறிவிட்டு அவரை ஏற்றிக்கொண்டு அவர் வீடு நோக்கிப் புறப்பட்டேன்.

எனது பயணத்தில் அவரோடு நான் பேச ஆரம்பித்தேன். உங்கள் திருச்சபையில் பனை ஏறுபவர்களுக்காக மன்றாட்டுக்கள் உண்டா எனக் கேட்டேன். இல்லை என்றார். கூடவே, பனை ஏறுபவர்கள் இன்று இலை என்றும் சொன்னார். இருக்கிற பனையேறிகளுக்காக ஜெபிக்கிற அல்லது பணி செய்கிற திருச்சபைகள் உண்டா என்றேன். இல்லை என்றார். ஏன் திருச்சபை தனது மன்றாட்டுகளில் பனை ஏறுபவர்களை தவிர்க்கிறது? என்றேன்.

பனை ஏறுபவர்களை பொருட்டாக மதிப்பது என்பது நமது வழக்கத்தில் இல்லை. அவன் கல்லாதவன், அவன் தனது “பாவ” வழிகளை விட்டு ஆண்டவரிடம் வந்தால் வியர்வை சிந்தாத வேலையில் அமரலாம். அப்படிப்பட்ட வேலைக்காக எவ்வளவு லஞ்சமும் கொடுக்கலாம்.  “எல்லாரையும்போல” அவனும் மாறவேண்டுமே ஒழிய. அவன் தனது  தனித்துவத்தைப் பேணும் ஒருவனாக இருக்கக்கூடாது என்பதே திருச்சபையில் உள்ளோரின் புரிதல்.

வருத்தப்பட்டு பாரம்சுமக்கிறவர்களை இயேசு தன்னிடம் அழைக்கிறார்… ஆனால் திருச்சபையோ அவர்களை புறம்பே தள்ளுகிறது. இப்படி இருக்கையில், எனது அழைப்பு என்ன என்கிற கேள்வி என்னுள் ஆழமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? நான் பணி செய்துகொண்டிருக்கும் திருச்சபைக்கு திரும்பிப்போகவேண்டுமா? அல்லது இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவும் வேண்டுமா? போதகராக நீடிக்க வேண்டுமா அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக செயலாற்ற வேண்டுமா?

திருச்சபையில் காணப்படும் வியாக்கியானங்கள், திருமறை சார்ந்த புரிதல்கள் இறையாசியினால் அம்மண்ணிலிருந்து கிளைத்தெழுந்தவை. அப்படியிருக்க, நமது மண் சார்ந்த புரிதல்கள் என்ன? நமது மரபிலிருந்து நாம் பெற்றெடுக்கும் இறையியல் புரிதல் என்ன? கலப்பையில் கை வைக்காமல் இருக்கும் புத்திசாலித்தனமா? இல்லை பனையேறாமலிருக்கும் பெருமிதமா?

வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் நம்முள் இருக்குமென்று சொன்னால், என்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதில் உள்ள துணைச்சல் நம்மிடம் இருக்கும். இலையென்று சொன்னால் இன்றும் நாம் நமது ஆசைகளுக்காக பலிகொடுக்கிற பாரம்பரிய இஸ்ரவேலர்களாக இருப்போம். எளிய வடிவில் காட்சி தரும் பனையேறும் மேசியாக்களை அனுதினமும் நமது இறையியல் கோட்பாடுகளால் பலிகொடுத்துக்கொண்டும் இருப்போம்.

ஆண்டவரின் அழைப்பின் பேரிலேயே அப்போதகர் வந்ததாக எடுத்துக்கொள்ளுகிறேன். ஆண்டவரே எனது வழிகாட்டி. எனது வாழ்வு எப்படியிருக்கவேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கும்படியாக என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இப்பணி இறைச் சித்தத்திற்கு ஏற்புடையாதாயிருந்தால் அவர் என்னை வழிநடத்துவார். இலையென்று சொன்னால், நான் எவற்றை விதைக்கிறேனோ அவற்றையே அறுவடை செய்வேன்.

இயேசுவின் மன்றாட்டு தான் என்னுடையதும்….

“இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது …”.  மத்தேயு 26: 39 (திருவிவிலியம்)

காட்சன் சாமுவேல்

மிடாலக்காடு

9080250653

பனை முகாம்!

பிப்ரவரி 21, 2019

C5

பனை முகாம் என்பது பனை மரம் சார்ந்து ஓரிரவை அமைத்துக்கொள்ளுவது என எளிமையாக சொல்லிவிடலாம். அதற்காக இரு பகல்களை துணைக்கழைத்துக்கொள்ளுவது.  இந்த நேரங்களை பனை சார்ந்த மக்களுடன் செலவிடுவது மற்றும் பனை மரச் சூழலுடன் அனுபவிப்பது , அவ்வளவுதான்.

ஒரு மரத்துடன் செலவளிக்க இவ்வளவு இருக்கிறதா என கேட்பவர்களுக்கு இன்னும் அதிகமாக விளக்கவேண்டி இருக்கிறது. பனை சார்ந்த வாழ்வு தமிழகத்தைப் பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் மிக உயிர்ப்புடன் இருந்த வாழ்வியல். இதனை இன்று தென் மாவட்டங்களே இழந்து வருகின்றன. அரசு கண்டும் காணாமலும் இருக்கும் இவ்வித தருணத்தில் பனை சார்ந்த ஒரு முகாம் அமைப்பது மிக தேவையான ஒன்றாக இருக்கிறது.

C3

பனை முகாம் அளிக்கும்  முதல் கிளர்ச்சி என்பது பனையறியா ஒருவரையோ அல்லது பனையோடு தொடர்பறுந்த ஒருவரையோ பனைக்கருகில் கொண்டுவருவது தான். எங்கோ தனிமையில் பனை மரங்கள் பயனற்று நிற்கிறது என பிலாக்கணம் செய்யாமல் இயங்குகின்ற ஒரு பனை எப்படி இருக்கும் என அருகில் வந்து தொட்டுணரும் ஒரு செயல்பாடு இது.

இந்த முயற்சியே இனிவரும் காலத்தில் பனையின் பெறுமதியினை வானளாவ கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், பனை பல்வேறு தரப்பு மக்களை சென்றடையும் ஒரு ஊடகமாகவே நான் பார்க்கிறேன். பனை ஏறுபவருக்கு – துணையாகவும், பதனீர் காய்ச்சுபவருக்கு – சுவையாகவும், ஓலைகளை பின்னுபவர்களுக்கு – முயங்குதலாகவும், நார் கட்டிலை பின்னுபவர்களுக்கு – வாழ்வோடு பிணைத்த ஒன்றாகவும், சிறுவர்களுக்கு – விளையாட்டாகவும், பசித்தவர்களுக்கு – உணவாகவும், கற்றோருக்கு – சுவடியாகவும், விற்போருக்கு – பொருள் முதலாகவும், ஆத்திகருக்கு – இறைவடிவாகவும், நாத்திகருக்கு – இயற்கைவடிவாகவும், பிறருக்கு -புறக்கணிக்கபடவேண்டியும் சிலருக்கு வளர்த்தெடுக்கப்படவேண்டிய தாவரம் எனவும் அது நெடிக்கொருமுறை தன்னை எண்ணங்களாக காட்சிபடுத்திக்கொண்டிருக்கிறது.

C1

பனையின் இயங்கு விசை குறைவின்றி இருந்தாலும் பனை சார்ந்த நமது இயக்கம் அனைத்தும் தொய்வுற்றிருக்கும் நிலையில், பனை சார்ந்த ஒரு பேரியக்கம் அவசியமாகின்றது. இவ்வித இயக்கம், பனை சார்ந்து தங்கள் முன்னெடுப்பகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இறுதி தலைமுறையினருக்கு ஆறுதலும், புதிய தலைமுறையினருக்கு நம்பிக்கையும், புரியாதவர்களுக்கு வியப்பையும் ஒருசேர கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

பனை ஏறுபவரின் ஒரு நாள் எப்படி அமைகிறது என்பது கண்டுணர வேண்டிய ஒரு அனுபவம். உலகின் எந்த கடின உழைப்பையும் விஞ்சும் ஒன்றாகவும், உலகின் மிகச் சிறந்த நேரக் கடைபிடிப்பாளரையும் விட துல்லியமாக நேரம் கடைபிடிப்பவரையும், சிக்கனத்தின் தூல வடிவத்தையும், இயற்கையை முழு முற்றாக நேசிப்பவரையும், சூழியல் மட்டுமல்ல பருவங்களையும் முழுதுணர்ந்த பேரரிஞரையும் ஒருசேர காணவேண்டுமென்றால் கண்டிப்பாக பனையேறியினை அருகணையவேண்டும். அவர் தான் பனை மரத்திற்கு வழிகாட்டி. அவரே பனையின் பாதுகாவலர், அவரே மிகசிறந்த உணவு உற்பத்தியாளர், அவரே நாம் களமிரங்கும் பனை முகாமின் கதாநாயகன்.

C6

பனை ஏறுபவரின் மனைவி என்பவர் நிகரற்றவர். எதனையும் செய்யும் வலிமையுடன் கூட துணிவும் பெற்றவர். சிறந்த உணவு தயரிக்க அறிந்தவர் மாத்திரம் அல்ல சிறந்த விற்பனை முகவரும் கூட. சிறந்த தாய் மட்டுமல்ல மிகச்சிறந்த தலைவரும் கூட. ஒட்டுமொத்த அறிவு களஞ்சியம்  கேட்பாரற்று கிடப்பதுபோல் பனைக் கலை களஞ்சியமாக இவர்கள் இருப்பது நாமறியாத மர்மங்களுள் ஒன்று. கதாநாயகிகளைத் தேடித்திரியும் காலத்தில் இவர்களை விட மிகப்பெரிய பாத்திரங்களை கையாளும் பெண்களை நீங்கள் எங்கும் சந்திக்க இயலாது.

C4

பனை உணவுகள் என்பது மிக விரிவான ஒரு தளம். இன்னும் எந்த நட்சத்திர விடுதிகளும் கொடுக்க இயலாத பாரம்பரியம், உணவாக மட்டுமல்ல உணவை ஏந்தும் கலமாக, விதம் விதமாக, வகை வகையாக பனை சுவைக் கூட்ட வல்லது. நீராகாரம் மட்டுமல்ல, நெகிழ்ந்து வழியும் பனம் பழச் சாறு புறங்கையை நக்கவைத்து மாம்பழத்தை புறமுதுகிட்டோடச் செய்யும். நார் உரித்து சாப்பிடும் பனங்கிழங்கு போர்புரியும் உடல் வலுவினைக் கொடுக்கும். பஞ்சினை விஞ்சும் தவண் பனையின் அகக்கண். அகழ்ந்தெடுத்தால், அகப்பையினை கொடுத்துவிட்டு இன்சுவையினை விட்டுச் செல்லும்.

படுக்கையில் புறண்டு ,கண்விழித்து இருக்கும் எவரும் ஓலையின் மடியில் கண்மூடி சுகமாக உறங்குவர். விசிறிகள் என்பது காற்றை தழுவிக்கொள்ள பனை அனுப்பிய தூதுவன். வெண் சாமரம் ஏதும் வேண்டாம் எனச் சொல்லும் காற்றின் பங்காளி. அலுப்பை விசிறியடிக்கும் மென் தீண்டல். பாய் என்பது ஓலை அனுப்பிய அம்மாவின் பழஞ்சீலை. நாம் மயங்கும் தாய் மடி. கண்ணுறங்க ஏற்ற, இரக்கமுள்ள பிணைப்பு. விடிலி என்பது பனை வழங்கிய அரண். புயலோ மழையோ வெயிலோ பனியோ உன்னை சேதப்படுத்தாது எனும் பனை வாக்கியம் அது. பனை இருக்குமட்டும் அது காவலிருக்கும், காத்திருக்கும், தன் விழிதாழ்த்தி நம்மை நோக்கியிருக்கும்.

C2

ஒவ்வொரு பனையும் ஒவ்வொரு வடிவம் கொண்டே தம்மை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால் அவைகளின் உள்ளிருக்கும் வெள்ளை உள்ளம் நாம் அறியாதது. இல்லாதோர் தங்கியிருக்க, இருப்பவர் பாதுகாப்புடனிருக்க, நம்பியோர் வாழ்வுபெற, பார்ப்போர் பரவசமடைய, கேட்போர் கனிரசம் பருக, அணைப்போர் ஆனந்தமடைய, அணையாதோர் கரங்களில் கூட எரிதழலென மின்னும் சூட்டோடு சூடாக தன்னை வெளிப்படுத்தும் பனையன்றி வினையேது?

பனை முகாம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நிற்று எட்டா கால திசையினை நோக்கி நாம் கூவிடும் ஒரு பரவச அனுபவம்.

 

மனித நாகரீகத்தின் ஒரு துவக்கத்தை மிக அருகில் சென்று பார்க்கும் ஒரு காலப் பயணம் இது. வாழ்வில் நாம் இழந்தவைகளை காலத்தினுள் மூழ்கி முத்தெடுக்கும் ஒரு அபூர்வ தருணம். இரண்டு நாட்களிலும் ஓரிரவிலும் பெறும் ஊட்டம் உங்களை வெகு நாட்கள் உயிர்ப்புடன் இயங்கச் செய்யும். பனை மரங்களே தங்கள் ஓலைகளால் உங்களுக்கு காற்று வீசும். மருத்துவகுணம் நிறைந்த அந்த காற்று எந்த அடர்காட்டிலும் கிடைக்காத பேரனுபவம் தான்.

பனங்காட்டு நரி கேள்விப்பட்டிருப்பீர்கள்…பனக்காட்டில் வாழும் பழவுண்ணி (மரநாய்) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பனை சார்ந்து இயங்கும் மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், வண்டுகள், தேனீக்கள், எறும்புகள், தேனீக்கள் ஏன் தவளைகள் உட்பட இன்னும் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அவைகளை கண்டு பட்டியல் இடுவதற்கு ஆயுள் போதாது.

பனை சார்ந்து இயங்கும் பல்வேறு மக்கள் இருக்கிறார்கள். ஓலைகளில் பாரம்பரிய பொருட்கள் செய்வோர், பனை நார்க் கட்டில் பின்னுவோர், பனை தும்பினை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்கள் என பலரும் இருக்கிறார்கள்.

பனை சார்ந்த ஒரு ஆன்மீக தேடல் நம் முன்னோரிடம் இருந்திருக்கிறது என்பதனை நாம் கண்டுகொள்ளலாம். சிறு தெய்வ வழிபாட்டிடங்களில் பனையே தெய்வமென உறைந்திருப்பதும், பனை பொருட்கள் மங்கல உணவுகளை வைக்கும் கலமாகவும் இருக்கும் அதிசயம் இங்கு மட்டுமே சாத்தியம்.

பனை மரத்தின் சாரத்தினை இரண்டே நாட்களில் முழுமையாக அனுபவித்துச் செல்லும் ஒரு வாய்ப்பு உங்கள் கதவினைத் தட்டி நிற்கின்றது. பனையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறவர்களோடு கிடைக்கும் அனுபவ பகிர்வுகள் உங்கள் முன்பு விரித்து வைக்கப்படுகிறது. தொன்மையினை நவீன காலத்தில் முத்தமிடும் வாய்ப்பு மிக அருகில் வந்திருக்கிறது.

C7

சரி இவ்விதம் செய்வதில் உள்ள பலன் தான் என்ன? என்பதே நமது கேள்வியாக இருக்கும். கிராமிய தொழில்களை இன்று சந்தைப்படுத்துவோரே பயனாளிகளாக இருக்கின்றனர். கிராமிய உற்பத்திப் பொருளுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. ஆகவே இவ்வித தொழில்கள் நசிவடைகின்றன. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் தொழிலாளர்கள் இந்த  வேலைகளை விட்டு நீங்கியிருக்கிறார்கள். வேலையிலிருந்து நீங்குகின்ற இந்த மக்கள் திரள் வேறு வேலை செய்கிறவர்களின் இடத்தை எடுத்துக்கொள்ளும் நிற்பந்தம் வருகின்றது. அந்த போட்டி பல்வேறு சமூக சிக்கல்களுக்கு அடிப்படை காரணமாகின்றது.

உடலுழைப்பைக் கோரும் எந்த தொழிலும் தன்னளவில் குறைந்தது இல்லை எனும் மதிப்பீட்டைக் கொண்ட பின் நவீனத்துவ காலத்தில் வாழ்கின்றோம், ஆனால் உணவு உற்பத்தி தொழிலான பனையேற்றத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவுபடுகிறது. இவ்விதமான முகாம், பனை வாழ்வியல் சார்ந்த அனுபவத்தினை முழுமையாக கொடுக்கும் அவ்விதமாகவே நமது எண்ணங்களிலும் பார்வைகளிலும் பெரும் வித்தியாசத்தைக் கொடுக்கும்.

சூழியல் என்பது அடர் கானகத்தில் மட்டும் அல்ல நமக்கருகிலேயே கூட உறைந்திருக்கிறது என்பது துவங்கி சூழியல் செயல்பாட்டாளர்கள் யார் என்பதை நமக்கு கற்றுத்தரும். சூழியல் செயல்பாட்டில் நாம் மண் சார்ந்து செயல்படும் தேவையினை முன்னிலைப்படுத்தும். எளிமையில் காணாத முழுமையினை நாம் எங்கும் எதற்கு ஈடாகவும் பெறவியலாது என்பதனை அறிவுறுத்தும்.

பனை நமக்கு சுவடிகளாக மட்டுமல்ல மொழியாகவும் உடன் வந்திருக்கிறது. நமது இலக்கியங்கள் ஒருபோதும் பனை மரத்தினை பதிவு செய்ய தவறியதில்லை. காலத்தின் ஓட்டத்தில் நாம் தான் அதனை மறந்துவிட்டோம். முறத்தினைக் கொண்டு புலியை விரட்டிய மறப்பெண் பனை மட்டையில் செய்த முறத்தினை ஆயுதமாக கையாண்டிருக்கிறாள் என்பது எப்பேர்பட்ட ஆவண பதிவு! ஈராயிரமாண்டுகளாக பனை பெண்களின் ஆயுதமாக உடனிருந்திருக்கிறது என சொல்லாமல் சொல்லிச் செல்லுகிறதல்லவா?

பனை சார்ந்த முகாம் ஒன்றை பதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனையடர்ந்த பண்டாரவிளை என்ற பகுதியில் முதன் முதலாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முதன் முறையாக என்பதால் வசதி குறைவுகளை (குறிப்பாக கழிப்பிட வசதி) கருத்தில் கொண்டு பெண்களை தவிர்த்தே இதனை முன்னெடுக்க முயற்சிக்கிறோம். இரண்டாவதாக புலால் உணவுகளையே பகிர்ந்து கொள்ள இருக்கிறோம், ஆகவே காய்கறி உணவை விரும்புகிறவர்களுக்கென்று தனித்த ஒரு திட்டத்தினை வரும் நாட்களில் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். உறைவிடம் என்பது பனை தொழிலாளிகள் அனுபவிக்கின்ற அத்தனை சுகங்களையும் கொண்ட விடிலி என்ற அமைப்பு.

நிலவோளி வீசும் ஓரிரவை பங்காடுகளுக்குள் வாழ்ந்து பாருங்கள். பால்நிலா ஊறும் நேரத்தில் பனையில் வாழும் எண்ணிறந்த உயிரினங்களோடு வாழ்வது இப்பிரபஞ்சத்தில் ஐக்கியமாகும் பொற்தருணம். மிகவும் ஆசிபொருந்திய நீங்கள் எங்களோடு கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். பனை வழங்கும் பரிசில்களை பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

காட்சன் சாமுவேல்

9080250653

malargodson@gmail.com


%d bloggers like this: