Archive for ஜூலை, 2019

பனை நகரம் 5

ஜூலை 31, 2019

 

பனை தொல் குடிகள்

பனை நகரம் என்றவுடனேயே பலருக்கும் ஒரு ஒவ்வாமை எழுவதை கண்டுகொண்டேன். பண நகரத்தை எப்படி பனை நகரம் ஆக்குகிறான் இவன் என்பதே அது. என்னைப் பொறுத்த அளவில், பனை மரம் ஒரு நகரத்தில் நின்றாலே அது பனை நகரம் தான். அவ்வித நகரங்கள் பல்வேறு இன்றும் நம்மைச் சூழ உண்டு. அழிந்த பனை நகரங்கள் கூட இருந்திருக்கலாம். அந்த நகரங்களின் அடியாளத்தில் பனை சார்ந்து நாமறியாத ஏதோ ஒன்று ஆழ்துயிலில் இருக்கும். தேடி கண்டுபிடித்து தட்டி எழுப்பிவிட்டால் அது விஸ்வரூபம் எடுத்து பத்ரகாளியின் நடனம் ஆடும். ஓர் ஊழியினை எப்படி பனையும் பனை சார்ந்த மக்களும் கடந்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மை வெளிப்படும். பனை எவ்விதம் தன்னில் பல்வேறு உயிரினங்களை அடைகாத்து வந்திருக்கிறது போன்ற உண்மைகளைச் அது சொல்லும். நகரில் வாழும் தொல்குடியினரின் வாழ்கை முறையினை நமக்கு எடுத்து இயம்பும். சூழியலாளர்கள்,  தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், பூச்சியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், புதை படிமவியலாளர்கள், பறவையியலாளர்கள், என எண்ணிறந்த அறிஞர் கூட்டம் சேர்ந்து முன்னெடுக்கவேண்டிய ஒரு கூட்டு முயற்சி இது.

ஒரு நகரம் பனையால் சூழப்பட்டிருக்கும் என்றால் அது தன்னுடன் பல முக்கிய வரலாற்று தருணங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே உண்மை . எனது அனுபவத்தில் அவ்விதம் பல புராதன நகரங்களைக் குறித்து நான் சொல்ல முடியும். புராதான நகரங்களே பனையின் உயர மனிதன் ஏறியதால் கிடைத்த தூரக்காட்சியின் விளைவால் எழுந்ததுதான்.

ஒருமுறை நான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளைக்கு எனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலிலிருந்து சென்றேன். ஆம், நான் பனைமரச்சாலையில் பயன்படுத்திய அதே அதே எம் எஸ் எல் 8537 புல்லட் தான். செல்லும் வழியில் ஆதிச்சநல்லூரைக் கடக்கவேண்டும். ஓரிருமுறை நான் அப்பகுதியினைக் கடந்திருந்தாலும், எனது இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கிடைத்த அனுபவம் சற்று வித்தியாசமானது.

ஆதிச்சநல்லூர் என சுட்டப்படும், அகழ்வாராய்ச்சிக்கான இடங்கள் அனைத்துமே பிற பகுதிகளை விட மேடாகவும் கரடாகவும் காணப்பட்டது. வேலியமைத்துக் கொண்டிருந்தபடியால் முழுமையாக உள்ளே செல்லுவது தடை செய்யப்படவில்லை. உள்ளூர் தாத்தா ஒருவரின் வாழிகாட்டுதலோடு அப்பகுதியினை சுற்றிவந்தேன். உடைந்த பானையோடுகள் ஏராளமாக ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல்வேறு தடிமன்களில், கறுப்பு சிவப்பு மற்றும் பானையோடுகளின் நிறமும் வெளிர் நிறமுமாக பல்வேறு நிறங்களில் பானையோடுகள் காணப்பட்டன. அங்கே நான் எதைத் தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு முறட்டு விளிம்பு ஓடு எனது கரத்தில் சிக்கியது. அதனுள் ஒரு நெல்மணி தடம் பதிந்து இருந்தது. சுமார் 3000 வருட பழைமை கொண்ட ஒரு நிலம். நெல் பயிரிட்டிருக்கிறார்களா? அல்லது வெகு சமீபத்திய ஓடு தானா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. நான் அந்த மேட்டுப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கையில், வயல்வெளிகளும் பனங்காடுகளுமாக காணப்பட்டது. ஹரப்பாவிற்கு பிந்தைய சமூகம் ஒன்று இங்கே வாழ்ந்ததாக கூறும்போது பனைகளே அவர்கள் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்திருப்பதை எண்ணி விம்மினேன். எனது வாழ்வில் மிகப்பெரும் திறப்பு இது.

ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற ஜாடிகளை வைத்து அங்கு ஒரு மாபெரும் நகரம் இருந்திருக்கிறது என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள் தொல்லியளாளர்கள். மிகப்பெரும் மக்கள் தொகை இருந்தாலொழிய, இத்துணை பிரம்மாண்ட பானைகளுக்கான தேவைகள் இருந்திருக்காது எனக் கூறப்படுகிறது. சற்றே தொலைவில்தான் கொற்கை துறைமுகம் இருந்திருக்கிறது. ஆகவே மிகப்பெரிய அளவில் வணிகமும் நிகழ்ந்திருக்கிறது. பானைகள் கிளிஞ்சல்கள் யாவும் பனை சார்ந்த ஒரு வாழ்வியலோடு தொடர்புடையவைகள் தானே. இங்கு வணிகம் நிகழ என்ன காரணம் இருந்திருக்கும்? தங்கத்தால் செய்த பொருட்கள் வரை கிடைத்திருக்கும் இவ்விடம், பனையால் நிர்மாணிக்கப்பட்ட நகரன்றி வேறன்னவாயிருக்க இயலும்? இவர்களின் கணிதம் மற்றும் அத்தனை அறிதல்களும் ஏட்டிலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்விதமான அகழ்வாய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கீழடி, பாண்டிச்சேரியிலுள்ள அரிக்கமேடு போன்ற பகுதிகள் இவைகளில் மிக முக்கியமானவைகள். இப்பகுதிகளில் எங்கும் பனை சார்ந்த எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாதது ஏன் என்கிற கேள்விகள் நமக்குள் எழும்பலாம். அகழ்வாய்வில் மிக முக்கியமான தடயமாக கொள்ளுவது, செல்லரிக்காத பொருட்களை தான். பனை சார்ந்து பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் செல்லரித்துப் போகின்றவை தான். இரண்டே இரண்டு பொருட்களைத் தவிர. ஒன்று, இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள் அல்லது கத்தி , மற்றொன்று மண் கலயம்.

மண் கலயம் என தற்போது தமிழகத்தில் பனையேறிகள் பயன்படுத்தும்  கலயங்கள் சிறியவை. வாய் அகன்றவை. ஆனால் அப்படித்தான் என்றும் கூற இயலாது. எனது பனைமரச் சாலை பயணத்தில் சிறிய கழுத்துள்ள கலயங்களை கூட நான் ஆந்திராவில் பார்த்திருக்கிறேன்.

மண் பாண்டங்களின் வடிவம் கூறும் பயன்பாட்டு சித்திரங்கள் வெவ்வேறானவை. முதுமக்களை அடக்கம் செய்யும் தாழிகள். தானியங்களை வைக்கும் பானைகள். நீர் மொண்டுகொள்ளும் குடங்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், கிண்ணங்கள் மற்றும் விளக்கு எரியவைக்கும் சிறு தீபங்கள் என பல்வேறு வகையில் அவை வெளிப்படுகின்றன. என்னைக் கவர்ந்த ஒரு மண் கலம் என்றால் பழனி மலையடிவாரத்தில் உள்ள பொருந்தல் எனும் மயானத்தில் கிடைக்கபெற்ற மண்குடங்கள் தான்.

குடங்கள் பொதுவாக தண்ணீர் மொள்ளுவதற்கு பயன்படும் ஒரு பாத்திரம். தமிழகத்தில் பெண்கள் அதனை இடுப்பில் வைத்து எடுத்துச் செல்லுவதை நாம் பார்த்திருக்கிறோம். சில வேளைகளில் ஆண்களால் தோளிலும் பெண்களால் அவை தலையிலும் சுமந்து செல்லப்படுவதைக் காணலாம். நிறை குடம் தழும்பாது எனும் வழக்கச் சொல், குறுகிய கழுத்தையுடைய குடங்களுக்கு பொருந்துபவை. கழுத்து சிறிதாக இருக்கும்போது நீர் வெளியேறா வண்ணம் அமைந்திருக்கும் வடிவம் ஆழ்ந்து நோக்கி உருவாக்கிய ஒன்று என்றே கருதுகிறென். இவையாவும் நமது சமீபத்திய சமூக வாழ்வில் பார்க்கின்றவைகளைகொண்டு நாம் கூறுவது. ஒரு வேளை, பனை ஏறுகின்ற ஒரு சமூகம் கலயங்களாக குடத்தை பயன்படுத்தியிருக்குமா என்கிற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அப்படி இருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதி என்றே கருதுகிறேன்.

பனை மரத்தில் இருந்து உருவாகும் பாளைகள் மிக எளிதாக ஒரு குடத்தின் வாய்க்குள் நுழையும் அளவுள்ளவைகளே. இவ்விதம் பாளைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே குடங்கள் இருந்திருக்கலாம். ஏன் இன்றைய கலயங்கள் போல் விரிந்த வாயையுடைய மட்கலங்களை அன்று பயன்படுத்தவில்லை என்கிற கேள்விகள் எழலாம். இரண்டு வகையில் இவைகளுக்கு நாம் பதில் கூற இயலும். ஒன்று, தமிழகத்தில் வெகு சமீப காலம் வரைக்கும் கூட, ஏன் இப்போதும் கரூர் பகுதிகளில் பனை ஏறுபவர்கள் சுரைக்குடுவையினைத்தான் பயன்படுத்துகிறார்கள். மிக எளிதானது, குடத்தின் வாய் போல ஒடுங்கி இருப்பது. அப்படியானால், பனை மரத்தின் மேலே இவைகள் வைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் ஒருபுறம், மற்றொருபுறம், பனை மரத்திலிருந்து இறக்கிய பதனீரை ஒன்று சேர்க்கும் தேவைக்காக இக்குடங்கள்  பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஏன் ஒடுங்கிய வாய். பனையேறிகள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்தே இவ்வடிவினை கண்டுபிடித்திருப்பார்கள். குறிப்பாக, பதனீர்/ கள் வடியும் கலயத்தினைத் தேடி பல்வேறு பூச்சிகள் எறும்புகள் வரும். அவைகள் பதனீரை உண்டே தீர்த்துவிடும்.  பழவுண்ணி, வவ்வால், குரங்குகள் மற்றும் பல்வேறு பறவைகளும் பதனீரை விரும்பி குடிக்கும். இவைகளிலிருந்து காக்க ஒருவேளை ஒடுங்கிய வாயினையுடைய குடங்கள் உருவாக்கியிருக்கலாம். பொருந்தல் பகுதியில் இவ்வித குடங்கள் கிடைக்கப்பெற்றதால் தான் எனது சந்தேகம் இவ்விதம் எழுகிறது.

10_Porunthal

இரு வருடங்களுக்குக்குள் தான் இருக்கும், பாண்டிச்சேரியிலுள்ள ஒரு முக்கிய ஆய்வகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த புதைபடிமவியல் ஆய்வகத்தில் இருந்த அறிவர் அனுபமா அவர்களை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம்  எடுக்கையில் தொடர்புகொண்டேன். அவர்களிடம் எனது உரையாடலில், நான் பெற்றுக்கொண்டது மிகப்பெரும் திறப்புதான். பொருந்தல் அகழ்விடம் கி மு 2 ஆம் நூற்றான்டைச் சார்ந்தது என்றும். அது ஒரு மயானமாக இருந்திருக்கிறது எனவும் கூறியவர்கள், அங்கிருந்த புதைபடிமங்களில், பனை மகரந்தங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக் கூறினார்கள்.  ஆம் பனை மகரந்தங்கள் இருப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றும் பல்வேறு சடங்குகளில் சாரயங்கள் படைக்கப்படுவதும், சாமிக்கு கள் படைப்பதும் தமிழக வழக்கம் தானே. அப்படியானல், பனை சார்ந்த ஒரு வாழ்வு மிக ஊக்கமாய் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது.

பொருந்தல் பகுதியில் மற்றொரு முக்கிய குறிப்பு காணப்படுகிறது. திமில் கொண்ட காளை ஒன்று படுத்திருப்பதுபோன்ற நந்தியின் மண் வடிவம் இங்கே கிடைத்திருக்கிறது. நந்தியின் கழுத்தைச் சுற்றி போகும் கயிறு மிக அழகாக இந்த சிற்பத்தில் தெரிகிறது. இதில் என்ன முக்கியத்துவம் இருக்கவியலும்? சாதாரண கயறுதானே என்று விட்டுவிட இயலாது. வெகு சமீபத்தில் தான் மாட்டிற்கான மூக்கணாங்கயிறு பனை நார் கொண்டு செய்யப்படும் முறைமை குறித்து கேள்விப்பட்டேன். அந்த கதை மிகவும் சுவையானது.

2019 பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, பனை சார்ந்த  ஒரு கண்காட்சி அமைக்க திரு. சுந்தரமூர்த்த்தி ஐயா அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் நான் திருப்பூர் சென்றிருந்தேன். அங்கே காங்கேயத்திலிருந்து தீபா என்கிற தோழி வந்திருந்தார்கள். என்னோடு பனை கண்காட்சியில் நேரம் செலவிட்ட அவர்களிடம், பேச்சுவாக்கில், காங்கேயம் காளைக்கு மூக்கணாங்கயிறு பனை நார்கொண்டு செய்வார்களா என கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். எனது மனகில் ஏழுந்த ஒரு ஊகம்தான் இது. நான் நினைக்காத அளவிற்கு வேகமாக செயல்பட்ட அவர்கள், ஒரு 90 வயது முதியவரை கண்டுபிடித்து அந்த கயிற்றினையே செய்து எனக்கு மும்பைக்கு அனுப்பிவிட்டார்கள். இதே நிகழ்ச்சிக்கு வந்த வாகை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு பனை தொழிலாளியின் உதவியுடன் அழகிய கயிற்றினை செய்து புகைப்படத்தினை அனுப்பியிருந்தார்கள். இவைகள் அனைத்தும் 30 – 40 வருடங்களுக்கு முன்னே தமிழகத்திலிருந்து வழக்கொழிந்து போய்விட்டவை என்பது தான் மிகவும் முக்கியமானது.

27_Porunthal

பண்டய நகரங்களில், நெய் மிக முக்கிய வணிக பொருள் ஆகவே ஆயர் கூட்டம் என்று தனித்து இல்லாது, மாடுகளை தனித்தனியே வளர்க்கும் மக்களும் இருந்தனர். மாடு என்றாலே செல்வம் எனும்போது, மாட்டினை கட்டி இழுத்துச் செல்லும் கயிறுகள் தேவைப்பட்டிருக்கும். இவ்விதமான கால்நடையாக்கலில், பனையே மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிறது என்பதனை நாம் உணரலாம். ஆனால், பொருந்தல் அகழ்வாய்வுப்பணிகள் சார்ந்து நான் வாசித்த குறிப்புகளில், பனை என்கிற ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. அந்த க்யிற் குறித்தும் எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.

பொருந்தல் அமைந்திருக்கும் பழனி பகுதிக்கும், குஜராத் நில பகுதிகளுக்கும் ஒரு வியாபார தொடர்பு இருந்திருக்கிறதாக தொல்லியளாளர்கள் கூறுவார்கள். பழனி அடிவாரம், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, கரூர், கோவை, பாலக்காடு என இப்பகுதியினைச் சுற்றிலும் பனை நிறைந்திருக்கும் காட்சியினை நாம் மறந்துவிடக்கூடாது.

ஏனென்றால் பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் அகழ்வாய்வுகளில் இல்லாததால், (இல்லை பனையில் என்ன இருக்கப்போகிறது என்கிற இளக்காரத்தால்) தானியங்கள் சார்ந்தே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

என்னதான் நெல் போன்ற தானியங்கள் இவ்விடங்களில் கிடைத்தாலும், விவசாயத்திற்கு முந்தைய நிலையில் தான் பனை மரங்கள் மனித வாழ்வில் பெரும்பங்கு ஆற்றியிருந்திருக்க வேண்டும். சிறு அளவில் காணப்படும் தானியங்கள் குறித்த நுண்ணிய புரிதலுக்கு முன், மிக பிரம்மாண்டமான பனம் பழங்களில் இருந்தே விதைப்பின் நுட்பத்தை மனிதர்கள் கண்டடைந்திருப்பர். இப்படியான விதைப்பின் சமூகங்கள் அனைத்தும் பனங்காட்டினை ஒட்டியே தமது வாழ்வை கட்டமைத்திருக்கும் எனக் கொள்ளலாம்.

பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் நெல்மணிகள் இன்றும் கிடைக்கின்றபோது, ஏன் பானையிலிருந்து நமக்கு பனை ஓலைச் சுவடிகள் ஏதும் கிடைக்கவில்லை என்கிற கேள்விகள் நமக்குள் எழலாம். அரிதானவைகள் பேணப்பட்டன என்று எண்ண ஓர் இடமுண்டு. இன்னும் நமது மரபினை கூர்ந்து நோக்கினால், பழைய சுவடிகளை தண்ணீரில் இட்டு அழிப்பது, நெய் ஊற்றி தீ வைத்து ஆகுருதி செய்வதோ தான் வழக்கம். இந்த முறைமை தொன்மையானதாக இருந்திருக்கும் பட்சத்தில், எழுத்துக்கள் கொண்ட ஓலைகளோ சுவடிகளோ கையில் கிட்டாமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

எனக்கு எப்போதும் பனை சார்ந்த குடியிருப்பு என்பதனை திருமறையில் கூறப்பட்டுள்ள எரிகோ என்ற நகரத்தினை தவிர்த்து எண்ண இயலாது. எரிகோ கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்கிவரும் ஒரு நகரம். இத்துணை தொன்மையான, மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்கள் வேறு இல்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல்வேறு சூழல்களில் எரிகோ வீழ்ந்தாலும் மக்கள் தொடர்ந்து வாழும் நகரமாக எரிகோ காணப்படுகிறது. எரிகோவின் மற்றொரு பெயர், பனைகளின் நகரம் (Cஇட்ய் ஒf Pஅல்ம்ச்). எரிகோவில் நாம் ஊரில் காணப்படும் பனை மரங்கள் இருக்காது ஆனால் பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை இருக்கும். தனது வாழ்வில், பேரீச்சம் பழம் என்கிற ஒன்றை மட்டுமே வழங்கும் ஒரு மரத்தினை நம்பி, ஒரு ஆதி சமூகம் கூடியிருக்குமென்றால், பல்வேறு உணவு அளிக்கும் பனை மரங்களை நம்பி ஏன் மனித நாகரீகத்தின் துவக்கம் இருந்திருக்ககூடாது. இக்கேள்விகள் என்னை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

எகிப்திய பிரமீடுகளை தேடி கண்டடைவதே மிகப்பெரும் அகழ்வாய்வு பணிகள் என்றிருந்த கால கட்டத்தில், எளிமையின் வடிவாய் வாழ்ந்த நமது வாழ்விடங்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். பேரீச்சை உலகமெங்கும் சென்று சேர்ந்த அளவில் நூறில் ஒரு பாகம் கூட பனை மரங்கள் சென்று சேர்ந்திருக்காது என்பது உறுதி. இவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்களினால், பனை சார்ந்த தொல்லியல் தடயங்கள் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் பேரீச்சைகளினை மட்டுமே கவனத்துக்குட்படுத்தியிருக்கின்றனர் என்று கொள்ள இடமுண்டு.

கி மு 9000 ஆண்டுகளில்  எரிகோவினைச் சுற்றி வாழ்ந்த மக்களினைப்பற்றி கூறப்படும் காரியங்கள் விந்தையானவை. அதிலும் குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய அரிவாள் வடிவிலான கத்தி குறித்த தகவல்கள் பனைக்கும் (பேரீச்சைக்கும்) மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை காலத்தால் முன் கொண்டு செல்லுபவை. எரிகோவில் கிடக்கப்பெற்ற தடயங்களில் “பீர்” தயாரித்திருப்பதாக கூறும் இடங்களை வாசிகையில் அவர்கள் ஏன் கள் வடித்திருக்க இயலாது என்கிற கேள்வி ஒருசேர எழும்புகிறது. இவ்விதம், ஒவ்வொன்றாக நாம் தேட முற்பட்டால், ஆதி மனிதனிலிருந்து அவன் நிர்மாணித்த ஆதி நகரங்கள் பலவற்றிலும் பனை மிக முக்கிய பயிராக இருந்து வந்திருக்கிறது என்பதனை நாம் உணர்ந்துகொள்ள இயலும். மேலும், பனை  சார்ந்து வாழும் மக்களை அது கைவிடாது என்பதும், வரலாற்று பூர்வமாக உண்மையே. பனைமரத்தினை பஞ்சம் போக்கி எனக் கொள்வோமென்று சொன்னால், இவ்விதம் தான் அதன் நெடும்பயணம் மனிதர்களுடன் இருந்திருக்கிறது என நாம் கூற தலைப்படலாம்.

மும்பையிலும் தொன்மைசார்ந்த பல இடங்கள் இருக்கின்றன. தொன்மை மிகு குடிகள் இங்கே இன்றும் வாழ்கின்றனர். பனை காணப்படும் இந்த நகரம் எப்படி தன்னை வெளிப்படுத்தப்போகிறது என காண நானே பேராவலுடன் காத்திருக்கிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  4

ஜூலை 29, 2019

 

பனை பரிணாமம்

ஒரு பொருளோ உயிரினமோ குலமரபு சின்னமாக உருப்பெறுவதற்கு என்ன காரணங்கள் இருந்திருக்கும் என்பது போன்ற கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு விடையளிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வகையில், இதுகாறும் பனை மரம் சார்ந்து இவ்விதம் கேள்விகள் எவராலும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே எவ்வித விடைகாணலிலும் எவரும் இறங்கவில்லை. இவ்வித கேள்விகளை தொடரும் கண்ணிகளும் நமக்கு முன்பு இல்லை. ஒருவேளை பனை மரங்கள் குலமரபுச்சின்னமாக உருபெற என்ன காரணம் இருக்கும்?  என்ற கேள்விக்கு எந்த ஒரு வரைவினை நாம் முன்வைத்தாலும் அது இன்றையநிலையில் “குத்து” மதிப்பான ஒன்றாகவே இருக்கும்.

பனை சார்ந்த ஒரு குலமரபுச்சின்ன உருவாக்கம் எப்படி எழுந்திருக்கும் என்பதற்கான ஒரு வரைவை நான் உருவாக்க முயற்சித்தேன். அது சூல்கொண்டுள்ள ஆரம்பகட்ட சிந்தனையாகவே இருக்கிறது. என்றாலும், இதுவரை நான் எண்ணியிருந்தவைகளைத் தொகுத்து, அவைகளை சீர்தூக்கிப் பார்த்தால் என்ன என்ற கேள்விக்கு விடையாகவே கீழ்காணும் வரைவினை முன்வைக்கிறேன். இது முற்றும் முழுமையடைந்த ஒரு கருதுகோள் அல்ல, மாறாக இப்படியிருந்தால் எப்படியிருக்கும் என்கிற கற்பனையின் வெளிப்பாடு தான். இக்கற்பனையிலுள்ள சிறப்பு ஒன்றே ஒன்றுதான். பனை சார்ந்த ஒரு மானுட துவக்கம் இருந்திருக்கும் என எவரும் பதிவுசெய்ய முயற்சித்ததில்லை. ஒட்டுமொத்த மானுடத்திற்கும் உரிய ஒரு தோற்றம் என நாம் குறிப்பிட இயலாவிட்டாலும், ஆதிகால இனக்குழுக்களில் ஏதேனும் ஒருசிலர் இப்பாதைகளைக் கடந்திருப்பர் எனும் உறுதிப்பாட்டிலேயே இவைகளைச் சொல்லுகிறேன்.

ஆகவே

“………………………………..யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குறளினை முன்னிறுத்தி சற்றே நிமிர்வுடன் எனது தரப்பினைக் கூறுகிறேன்.

மனிதன் பல்வேறு செயல்பாடுகளில் குரங்குகளை ஒத்திருப்பவன். அவன் மரத்திலிருந்து இறங்கியதே மனித வாழ்வின் முதல் வளர்ச்சி எனக் கொள்ளுகிறேன். மரத்திலிருந்து கீழிறங்கியவனுக்கு, மண்ணை விட மரமே அணுக்கமானது. மரத்திலிருந்து பெறுகின்ற உணவுகளையே அவன் சார்ந்திருந்தான். “உயர் விலங்குகளின்” (Primates) வாழ்வில் மரங்கள் மற்றும் தாவரங்கள் நெருங்கிய தொடர்புடையவைகள் என்பது சொல்லித்தெரியவேண்டியது இல்லை.

Africa

மரத்திலிருந்து கீழிறங்கிய மனிதனுக்கு உணவு தேடுவதில் உள்ள சவால்களை பனை மரம் வெகுவாக குறைத்திருக்கும் என்பது தான் பனை மரத்தினூடான மனிதனின் ஆழ்ந்த பிடிப்பிற்கு காரணம். ஒரே மரம் எப்படி மனிதர்களுடைய உணவு தேவைகளை பூர்த்தி செய்திருக்கும் என்பது தான் முக்கிய கேள்வியாக பிரம்மாண்டமாக நம்முன் எழுந்து நிற்கிறது. அதற்கு விடை, பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பன்மைத்தன்மை உள்ளதாகவும், நெடுநாட்கள் கிடைக்கிறதாகவும் , அதன் உணவுகளின் தொடர் உற்பத்திக் காலமும், உணவு சாரா பிற பயன்பாட்டுப் பொருட்களும் முக்கிய பங்களிப்பாற்றியிருந்திருக்கின்றன என கூற இடமுண்டு.

Africa 2

பனை மரங்கள் இன்று எப்படித்தான் மனிதர்களோடு ஒன்றிணைந்திருந்தாலும், அதன் பரிணாம தன்மை என்பது மனிதர்களுடன் இடைபட்ட காலத்திலிருந்து பெருமளவில் மாற்றம் அடையாததாக இருக்கிறதாகவே உணருகிறேன். குறிப்பாக பனை விதைகளை எடுத்துக்கொள்ளுவோம். பிற விதைகள் மண்ணில் மூடப்பட்டு துளிர்க்கின்றவைகளாக இருக்க, பனை மரம் இன்றும் விதைக்கப்படாமலே தரையிலிருந்து தனது வேரைப்பரப்பி நிலைக்கொள்ளும் சாத்தியம் நிறைந்ததாக காணப்படுகிறது. இவ்விதம் பாவி, நாற்றெடுத்து பிற இடங்களில் நட இயலாத இதன் தன்மை இதன் தொன்மையை கூறுவதாக இருக்கிறது என எண்ணுகிறேன். ஒருவகையில், தென்னை கூட தானே முளைக்கும் தன்மைகொண்டதுதான். என்றாலும், பனை, அதன் வறட்சி தாங்கும் சக்தியினாலும், இன்னும்  தனது இறுகிய ஓட்டினாலும், காலத்தால் முந்தையதோ என்கிற எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

பனை மரத்திலிருந்து விழும் பனம் பழங்கள் 4 – 6 மாதம் வரை தொடர்ந்து கிடைக்கும். இது மெதுவாக ஆங்காங்கே ஒரு சில பழங்கள் உதிர்வதில் துவங்கி படிப்படியாக உயர்ந்து ஒரே நேரத்தில் அதிக பழங்களை உதிர்க்கின்றதும், பின்னர், காலம் கடந்து கிடைக்கும் பழங்களாலும் நிரம்பிய ஒரு நீண்ட பருவம். இவைகளை தொகுத்து வெறுமனே நான்கு மாதங்கள் பனம் பழங்கள் கிடைக்கும் என்றாலும், இன்சுவைகொண்ட வேறு பழங்கள் ஏதும் நான்கு மாதங்கள் தொடர்ந்து வேறு மரங்களிலிருந்து கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே தோன்றுகின்றது. பனம்பழத்தில் உள்ள நார் தன்மை, மற்ற பழ மரங்களில் காணப்படுவதை விட அதிகம். மேலும், இவைகள் இன்றும் தீயிலிட்டு உண்ணவோ அல்லது வேகவைத்து உண்ணவோ தான் இயல்வதாக இருக்கின்றது.  வேறெந்த பழத்திற்கும் இன்றைய நவீன காலத்தில் இவ்வித தேவை கிடையாது. பனம்பழங்கள் இவ்வகையிலும் காலத்தால் முந்தையதே. ஒருவகையில் நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்த தன்மையே இன்றும் நீடிக்கின்றது எனக் கொள்ளலாம்.

Africa 1

மற்ற மரங்கள் ஒன்றாக பூப்பது போல் பனை மரத்தில் பூந்துணர் கொத்துகள் வருவது இல்லை. ஒவ்வொரு அடுக்காக மெதுவாக தான் வரும். இவ்விதம் தனித்தனை அடுக்குகளாக உருவாகும் பனம் பழங்கள் தினம்தோறும் சீராக விழுந்துகொண்டிருக்கும். ஆகவே உணவு என்பது பனங்காட்டில் தடையின்றி கிடைத்துக்கொண்டிருக்கும். மேலும் பனம்பழங்களைச் சாப்பிடும் விலங்குகளின் எண்ணிக்கை அளவிடமுடையாதவை. யானை, காட்டெருது, மாடுகள், ஆடுகள், மான்கள், பழவுண்ணிகள், அணில்கள், ஏன் நரிகள் கூட பனம்பழங்களைச் சாப்பிடும். பனம் பழங்களை தின்றபின் விதைகள் வீசியேறியப்பட்டிருக்கும். இவ்விதம் வீசியெறியப்பட்ட விதைகளில் சில, தண்ணிரில் அடித்துச் செல்லப்பட்டு வேறு இடங்களில் பரவியிருக்கும். ஆப்பிரிக்க காடுகளில், யானை வழி தடங்களில் பனை மரங்கள் செழித்து வளர்ந்திருப்பதாக கூறுவார்கள். இவ்விதம் பகரப்பட்ட இந்த விதைகள், சுமார் நான்கு மாதத்திலேயே முளைத்து கிழங்குகளாக மாறும். இச்சூழலில் தான் எலிகள், முயல்கள் மற்றும் பன்றிகள் இவ்விடங்களில் வந்து மண்ணை அகழ்ந்து பனங் கிழங்குகளை உண்ணத்துவங்கியிருக்கும். பழங்கள் மட்டுமே உணவு என கருதியிருந்த ஆதி மனிதர்களுக்கு, மேலும் நான்கு மாத உணவு என்பது பெருங்கொடை என்றே ஆனது. மேலும், பனம்பழங்கள் கிடைக்கும் காலம் மாரிக்காலமாக இருந்தபடியாலும், மழை நேரத்திற்கு ஒதுங்க கிடைத்த இடத்தில் வேறு பல நன்மைகளும் கிடைப்பதை உணர்ந்துகொண்டனர். இவ்விதமாகவே பனை சார்ந்த ஒரு அமைவிடம் மெல்ல உருவாகியது.

ஒருவேளை பனம்பழங்களோ அல்லது பனங்கிழங்கோ கிடைக்கவில்லையென்றுசொன்னால் என்ன சாப்பிடுவார்கள்? விடை எளிது தான். பனங்காட்டில் பல்வேறு பூச்சியினங்கள் வாழுகின்றன. ஈசல், எறும்பு மற்றும் கரையான் போன்றவைகள் தாராலம் கிடைக்கும் பகுதி. ஊன் உண்ணிகளாக மாறுவதற்கான அடிப்படை தகவமைப்பும் பனங்காட்டிலேயே இருந்திருக்கின்றன. பல்வேறு பறவைகளின் முட்டைகள், தரையில் வாழும் கவுதாரி, முயல் எலி போன்றவை வேட்டைக்கு மிக எளிய இலக்காக இருந்திருக்கின்றன. பசியின் கொடுமையில் சில வடலிகளை கூட உடைத்து அதன் குருத்துக்களை உண்டு வாழ்ந்திருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

எண்ணிலடங்கா ஆதி கருவிகள் பனங்காட்டிலேயே முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது எனது தீர்க்கமான எண்ணம். உதிர்ந்து கிடக்கும் ஓலைகளை எடுத்து தலைக்கு மேல் வைத்துக்கொண்டால், மழையின் தாக்கம் இருக்காது என்பது துவங்கி, பனம்பழங்களை சாப்பிடுகையில், பற்களுக்கு இடையில் நுழைந்துவிட்ட பனம்பழ நாரை எடுக்க பனை ஈர்க்கிலும் உதவியிருக்கிறது. இவ்விதம் பயன்பட்ட ஈர்க்கிலே ஆரம்பகால ஊசியாக பாவிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணம் தவிர்க்க முடியாதது. வட தமிழகத்தில் காணப்படும் சம்பு என்ற பொருள், குமரி மாவட்டத்தில் காமணம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவைகளைச் செய்ய ஒவ்வொரு ஓலையாக கிழித்து அவைகளை சீராக அடுக்கி பிற்பாடு ஈர்க்கிலைக் கொண்டே  தொடுத்து ஒன்றிணைப்பார்கள். ஆக ஈர்க்கிலே ஊசியாகவும் நூலாகவும் பரிமளிக்கும் ஒரு வடிவம் நம்மிடம் எஞ்சியிருக்கின்றது.

இவ்விதமாக சில பல கருவிகளின் பயன்பாடு பனை சார்ந்து வாழ்பவர்களின் வாழ்வில் ஒன்றிணைய ஆரம்பித்திருக்கலாம். பனை மட்டையில் காணப்படுகின்ற கருக்கு தான் ஆதி காலத்து வெட்டும் பொருளான கத்தி. கற்காலத்திற்கும் முற்பட்ட ஓர் ஆயுதம் இது என தைரியமாக கூரலாம். இவ்விதமான பன்வயப்பட்ட பயன்மிக்க பொருளளிக்கும் வேறு தாவரங்கள் இம்மணில் இல்லை.

பனை மரங்கள் வீழ்ந்துபடும்போது, அவைகளின் அடிமரத்தில் காணப்படும் பொந்துகள் ஒரு மனிதன் படுத்துக்கொள்ள போதுமானவை. நரிகள் வாழும் இப்பொந்துகள் பனங்காட்டில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒரு தற்காலிக வீடாக இருந்திருக்கலாம். ஒருவகையில் குகைகள் போன்ற பெரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கு முன்னோ, அல்லது அவைகளுக்குப் பின்பு இவ்வித ஒரு அமைப்பு இருந்திருக்கலாம்.

பனை ஓலைகளின் பயன்பாடு வெகு தொன்மையான மக்களினங்களிடையே இன்றும் உயிர்ப்புடன் காணப்படுகின்றது. பனை ஓலைகள் பல்வேறு வடிவங்களில் தொல் சமூகங்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பனை ஓலைகளைக் கொண்டு கயறு செய்வது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அப்படியே சொட்டைகள் (முடிச்சுகள்) இடுவது என்பதும் ஒரு முக்கிய அறிதல் தான். முடிச்சுகளை இட அறிந்த சமூகத்திற்கு, தாங்கள் சேகரித்த பொருட்களை கட்டி எடுத்துவர ஓலைகள் பயன்பட்டிருக்கின்றன. அவ்விதமாகவே ஓலைகள் பட்டைகளாக மாற்றப்பட்டு, பொதிந்து எடுத்து வரவும் பயன்பட்டிருக்கின்றன. இன்றும் மீன்பிடி சமூகங்கள், ஈர்க்கிலில் மீன்களை கோர்த்து எடுத்துவருவதை நாம் காணலாம்.

பனை ஓலைகள் படுத்துறங்க ஏற்றவை, பின்னல்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஓலைகளிலேயே படுத்துக்கொள்ளுவது ஒரு சுகமான அனுபவமாக இருந்திருக்கும் போலும். வெகு சமீபத்தில், நாங்கள் பனை சார்ந்த இருநாள் பயணத்தினை ஒழுங்கு செய்திருந்தோம். “பனை நிலவு” என பெயர் சூட்டப்பட்ட அந்த கலாச்சார நிகழ்ச்சியில், ஓர் முழு நிலவு இரவு அன்று  பனங்காட்டில் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தோம். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள பண்ணைவிளை என்ற  கிராமத்திலுள்ள திரு. தானியேல் நாடார் என்பவர் தோட்டத்தை இதற்கென தெரிவு செய்திருந்தோம். எங்களுக்கு உதவி செய்த அவ்வூரைச் சார்ந்த அறிவர். மொர்தேகாய் அவர்கள் பனை ஓலையில் அப்படியே படுத்து உறங்கலாம் என்கிற தனது அனுபவத்தைக் கூறினார். அதனையே நாங்களும் பின்பற்றினால் என்ன என்கிற உந்துதலோடு, அன்று நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே பனை ஓலையிலேயே படுத்து உறங்கினோம். ஓலையில் இருக்கும் மடிப்புகள் ஒருவித மெத்தை தன்மையினை உருவாக்கிக்கொடுத்தது. மேலும், அதுவே  ஒருவகையில் உடலுக்கு தேவையான ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தது. பனை ஓலைகளில் இருந்து எழும் வாசனைகளை அனுபவித்தபடியே மிக இனிய ஒரு இரவு உறக்கத்தை அன்று அனைவரும் அனுபவித்தனர்.

பனை ஓலைகளின் அமைப்பு கூட மனித கரங்களை ஒத்திருப்பது தான் ஆச்சரியம். உள்ளங்கைகளை விரித்து பார்க்கும்பொழுது விரல்கள் நீட்டிக்கொட்டிருப்பது போன்றே தான் ஓலைகள் விரிந்திருக்கின்றன. இவ்வொப்புமை ஒரு மிகச்சிறந்த ஆதி கண்டுபிடிப்பு. கரங்களை இணைத்து தண்ணீர் மொண்டவர்களே முதன் முறையாக பனை ஓலையிலிருந்து கலம் செய்ய கற்றவர்கள். இன்றுவரை நம்மிடம் எஞ்சியிருக்கும் பனை ஓலைப் பட்டைகளே அவைகள். இந்த புரிதல் ஏற்படுகையில் தான் மனிதனின் தனது ஆதி சிந்தனைகள் கூர்பெறுகின்றன எனபதனை உணருகிறான். தனக்கான கருவிகளை தானிருக்கும் பனங்காட்டிலிருந்தே தயாரிக்கத்துவங்குகிறான்.

பனை ஓலைகளில் கீழ்காணும் நான்கு முறைமைகளில் ஓலைகள் வடிவம் பெற்றன.

இயல்பாக ஏற்பட்ட ஒரு புரிதலில் ஓலையினை முறுக்குவது . இப்புரிதலே ஓலைகளின் பயன்பாட்டில் மிக முக்கிய பயன்பாட்டு பங்கு வகித்தது. கயிற்றிற்கு இணையான ஒரு தொல் பயன்பாட்டுப் பொருளாக ஓலைகள் இருந்திருக்கின்றன. இன்றும் ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, கேரளா போன்ற இடங்களில் ஓலைகளைக் கொண்டு பெரிய விறகு கட்டுகளையோ அல்லது புற்கட்டுகளையோ கட்டிக்கொண்டு வரும் மக்களைப் பார்க்கலாம். பச்சை ஓலைகளும் வடலி ஓலைகளுமே இதற்கு ஏற்றது எனக் கூறுவார்கள். ஆப்பிரிக்காவில் இன்றும் ஓலையில் மிக சிறந்த கயிறு திரிக்கும் மக்கள் இருக்கின்றனர். எனது நண்பர் ஒருவர் அவ்வித ஆப்பிரிக்க கயிறுகளை எனக்கு அனுப்பியிருந்தார்.  வடலி ஓலைகள் என்றால் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவை தானே? ஆகவே தான் அவைகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.

ஓலைகளைச் சுருட்டுவது மற்றொருமுறை. நரம்பு நீக்கிய ஓலைகள் சுருட்டப்பட்டு அவைகளே தாயத்துகளாகவும், தாலியாகவும் இன்றளவும் பயன்பாட்டில் எஞ்சியிருக்கின்றன. கேரளாவில் காணப்படும் பணியர் என்ற பழங்குடியினர் வாழ்வில் இன்றும் ஓலைகள் சுருட்டி செய்யப்படும் காதணிகள் புழக்கத்தில் உள்ளன. சுருட்டுகின்ற ஓலைகளே பிற்பாடு இசைக்கருவிகளாக பரிணாமம் எடுத்தன. சிறுவர்கள் கிராமபுறங்களில் ஊதித்திரியும் பீப்பீ என்ற விளையாட்டு பொருள் உண்மையிலேயே ஒரு தொல் பழங்கால இசைக்கருவியின் பகுதி என்பதனை மும்பை வந்த பின்னர் தான் அறிந்துகொண்டேன். அந்த இசைக்கருவி குறித்து தனி ஒரு பதிவு இடுமளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஓலைகளை மடித்து எடுப்பது, பட்டையாக குவிப்பது போன்றவை ஓலைகளின் பயன்பாட்டினை அடுத்த கட்டத்திற்கு ஆதி மனிதர்கள் எடுத்துச் சென்றதை  கூறும். குறிப்பாக, இன்றும் தமிழகத்தில் ஓலைகளில் உணவு பொருட்களை, அதிலும் ஊன் உணவை கொடுப்பது வழக்கம். வேட்டை சமூகத்தின் உணவு பங்கிடுதலின் ஒரு எச்சமாகவே இது இருக்கிறது என்பது எனது அவதானிப்பு. மேலதிக தகவல்களை உலகளாவ திரட்ட வேண்டும் என்றாலும், எனது சிறு பிராயத்தில் பன்றியிறைச்சியினை இவ்விதமாக எடுத்துச்செல்லுவதை நான் பார்த்திருக்கிறேன். பன்றியிறைச்சி என்பது வேட்டை சமூகத்தின் ஒரு குறியீடு என்றே நான் கொள்ளுகிறேன். கடந்த ஒரு வருடத்திற்குள், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுரண்டைப் பகுதியிலும், ஓலைகள் ஆட்டிறைச்சியினை பொதிந்து கொடுக்கவும், கருவாட்டினை பொதிந்துகொடுக்கவும் பயன்பட்டதை நேரடியாக கண்டிருக்கிறேன்.

இறுதியாக பின்னல் என்கிற முறைமை. பின்னல்கள் காலத்தால் பிந்தியவைகளாக இருந்தாலும் பின்னல்களுக்கான முறைமைகள் ஆதி மனிதனின் பனை குறித்த புரிதலில் இருந்து எழுந்ததாகவே நான் உணருகிறேன். இரு கை விரல்களும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிச் செல்லும் நுட்பத்தினை அறிந்த தொல் மூதாதையே நமக்கு பின்னல்களை உருவாக்கிய அறிவுப்பெருந்தகை. பின்னல்களில் பெறும் உறுதியும் பிணைப்பும் சமூகம் இணைந்து வாழும் ஒரு கூறியீடாக முன்னிற்பதை யாரும் மறுக்க இயலாது.

ஒரு சிறந்த மானுடவியல் அறிஞரின் உதவி இருக்குமென்றால், தொல்லியல் அறிஞர்கள் கூடி தங்கள் பங்களிப்பை ஆற்றுவார்கள் என்று சொன்னால் பனை சார்ந்த ஒரு வாழ்வியல் எப்படி ஆதி மனிதனிடம் தோன்றியிருக்கும் என்கின்ற வரைவை நம்மால் முழுமையாக்கி ஒரு கருத்தியலாக முன்வைக்க இயலும். பனை சார்ந்த நிலவியல், சூழியல், பல்லுயிர் பெருக்கம் போன்ற வேறு பல காரணிகளும் ஆதி மனிதனின் முக்கிய இருப்பிடமாக பனங்காடுகளை சுட்டிக்காட்ட வல்லவை என்கிற ஒரு உறுதி எனக்கு உண்டு. இவ்விதமாகவே பனை திரண்டெழுந்து ஒரு குலமரபுச்சின்னமாக உருக்கொள்ளுகிறது. உலகின் எந்த பகுதியிலுள்ள மக்களுக்கும் பனை ஏதோ ஒரு வகையில் உள எழுச்சியினை அளிப்பதாகவே இன்றும் இருந்துகொண்டிருப்பது மனிதனின் ஆழ்மனதில் பனை விட்டுச்சென்றிருக்கும் தடமே சான்று. பனை மரங்கள் எதிர்காலத்திற்கான ஒரு தாவரம் என எண்ணுவதற்கு, பனை மரத்தின் தொன்மை வெகுவாக உதவிபுரியும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏன் பனை சார்ந்து இவ்விதம் ஒரு புது கருத்தியலை வலிந்து பொருள் கொள்ள வேண்டும் என்கிற கேள்விகள் பலருக்குள் எழலாம். வேகமாக வளர்ச்சிப்பாதையில் செல்லும் உலகில், நில அமைப்புகள் வேகமாக மாறியபடி வருகின்றன. சாலைகள், கட்டுமான பணிகள் என மாற்றங்கள் அதிரடியாக நிகழ்த்துகொண்டிருக்கின்றன. இவ்வித நிகழ்வுகளால் நமது நிலமும் பூமியும் தனது ஆதி அமைப்பினை இழந்து வருகிறது. இவைகளுக்கு வித்திட்டது, விவசாயம் சார்ந்த சமூகங்கள் தான் என்றே கூறுகின்றார் ஜேம்ஸ் ஜே. ஃபாக்ஸ் (James J. Fox)என்கிற அறிஞர். இந்தோனேஷியாவில் உள்ள, பனை சார்ந்த மக்களோடு தனது வாழ்வை முழுமையாக செலவிட்ட இவ்வறிஞரின் கூற்றினை உணர்ந்துகொள்ளுவது, நமது சூழியல் சார்ந்த ஒரு மாபெரும் புரிதலை வெளிக்கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் பனை மரங்கள்  ஆண் பென் என இருமை கொண்ட தாவரங்கள் ஆகும். இவைகளை உற்று கவனிக்கும் மனிதன் தன்னையே கவனிக்கிறான். வாழ்வின் பல்வேறு தத்துவ கேள்விகளும் விடைகளும் பனையிலிருந்து எழுந்து வந்திருக்கும் வாய்ப்புகளும் வளமாகவே இருந்திருக்கின்றன.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

 

பனை நகரம் 3

ஜூலை 27, 2019

 

பனை தடம்

மும்பையில் பனை மரங்கள் இருக்கின்றன என்பதே அனேகருக்கு ஒரு புதிய செய்திதான். கடந்த 2007 முதல் மும்பையில் நான் வாழ்ந்டு வந்தாலும், மும்பையில் நான் கால் பதித்து 20 வருடங்களுக்கு மேலாகின்றது.  நானே மும்பையில் பனை மரங்கள் இருக்கும் என கனவில் கூட நினைத்ததில்லை. இவ்வித பிரம்மாண்டமான ஒரு நகரத்தில் பனை மரங்கள் விட்டுவைக்கப்பட்டிருப்பதற்கான காரணம், அல்லது வளர்க்கப்படுவதற்கான காரணங்களை கண்டடையவே விரும்புகிறேன். இந்த தேடுதல் என்பது எனது உள்ளாளத்திலிருந்து ஏற்படும் ஒரு ஏக்கத்தின் விளைவுதான். எங்கும் எப்போதும் பனை மரங்களைத் தேடி திரியும் ஒரு பதிவு அல்ல, எனது மும்பை பயணத்தில் தற்செயலாக நான் கடந்துவந்த பனை சார்ந்த தகவல்களின் தொகுப்பே இது.தேடுதல் உள்ளுறைந்திருக்கையில் தெய்வம் தேடிவந்து அருள் செய்யும் போலும்.

கடந்த இரண்டு வருடங்களாக நான் குமரி மாவட்டத்திலேயே தங்கியிருந்தேன். தமிழகம் முழுக்க பயணம் செய்தேன். முதலில் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடூட் என்ற நிறுவனம் சார்பாக ஒரு ஆவண படம் எடுக்க தமிழகம் முழுக்க சுற்றியலைந்தேன். பல்வேறு நிலங்கள், பல்வேறு பனை ஏறும் நபர்கள், அறிஞர் குழாம், ஓலை மற்றும் நார் கொண்டு பொருட்கள் செய்பவர்கள், என தேடி தேடி இவர்களின் வாழ்வை தொகுத்தெடுத்தேன். இந்த அனுபவம் எனது வாழ்வில் சிறந்த ஒன்றாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பிறந்த கத்தோலிக்கத் திருச்சபை, குழித்துறை மறை மாவட்டத்தின் சார்பில் ஒரு கோடி பனை விதை நடும் முயற்சியில் இணைந்துகொண்டேன். இவ்விதம் மீண்டும் தமிழகத்தை பனை கொண்டு அளக்கும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஒரு சமூகத்தின் உள்ளே பனை எவ்விதம் அமைந்திருக்கும் என்கிற புரிதல் பிடிபட இவைகள் மிக முக்கிய காரணமாயின.

 

மீண்டும் நான் மும்பை வரவேண்டும் என்ற நிலை வந்தபோது எனது ஆழ்மனம் அதற்கு ஒப்பவே இல்லை. தமிழகத்தைப் பொறுத்த அளவில், நான் முதற்கட்டமாக செய்த பணிகள், முன்னுதாரணமாக செய்த பணிகள் என எராளம் இருந்ததால், மும்பை வருவதில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. இறைப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதால், நினைத்தப்படி விலகியும் இருக்க இயலாது. ஆகவே, கடவுள் விட்ட வழி என எண்ணிக்கொண்டு, மும்பை திரும்புவதற்கான முயற்சிகளை நான் ஒழுங்கமைத்தேன்.

Arey

எனது மனைவி ஜாஸ்மின் நான் எங்கு சென்றாலும் என்னைத் தொடருபவள். அவளைக்குறித்து பிரச்சனையில்லை. ஆனால் குழந்தைகள் அப்படியல்ல, அவர்கள் ஊரை மிகவும் விரும்பினார்கள். ஊரில் தங்கியிருப்பதன் இன்பத்தை முழுதுணர்ந்தவர்கள் அவர்கள். மேலும் கருங்கலை அடுத்த மிடாலக்காட்டில் நாங்கள் தங்கியிருக்கும்போது, எங்களைச் சுற்றியிருந்த வீடுகளில் ஏராளம் குழந்தைகள் உண்டு. பக்கத்து வீடு தமீஷ், எதிர் வீட்டு ரூஃபியோ மற்றும் பக்கத்து வீட்டிற்கு எதிரில் இருக்கும் டியோ மற்றும் அதல்யா ஆகியோர் இருந்தால் எனகு குழன்ட்தைகளுக்கு அவ்விடம் குட்டி பரலோகம் தான். அவைகளை விட்டு வருவதும், உறவினர்களின் அன்பை விட்டு நீங்குவதும் குழந்தைகளுக்கு சற்றே கடினமாக இருந்தன. குழந்தைகள் எங்களிடம் நாங்கள் இங்கேயே இருக்கிறோம் நீங்கள் போய்வாருங்கள் என்றே தைரியமாக கூறினார்கள். அனால் என்னால் அவர்களைப் பிரிந்து இருக்க இயலாது.

குழந்தைகளைப் பொறுத்த அளவில் நான் நினைப்பது இதுதான். 16 வயதுவரை, நானோ, ஜாஸ்மினோ இல்லாது ஒருநாளும் அவர்கள் இருக்கக்கூடாது. தவிர்ர்க இயலாத சூழ்நிலைகளில் மட்டுமே அவர்கள் வேறெங்காவது தங்கவைக்கப்படலாம். ஆரோன் 2 வயதாக இருக்கும்போது மும்பையிலிருந்து ஊருக்கு அவனை நான் தனியாகவே இரயிலில் அழைத்துக்கொண்டு வந்தேன். ஜாஸ்மின் பணிக்கு செல்லுகின்ற தருணங்களில் இவர்களை கவனித்துகொள்ளுவது முழுக்க முழுக்க எனது பொறுப்புதான். நான் வீட்டில் இல்லாதபோது ஜாஸ்மின் பார்வையிலாவது அவர்கள் இருக்கவேண்டும் என நினைப்பேன். அவர்கள் எங்கும் செல்ல உரிமை உண்டு, ஆனால், தினமும் எங்களில் ஒருவரின் பார்வை அவர்கள் மீது விழவேண்டும். நான் இதனை ஒருவாறு இதுவரை சமாளித்துவிட்டேன்.

மும்பையில் எனது பணியிடம் எதுவாக இருக்கும் என எனக்கு தெரியாது. ஆகவே சற்றே, மன குழப்பத்தில் தான் அனைவரும் இருந்தோம். இறை செயலில் நம்பிக்கை கொண்டுள்ள நான், கடவுள் அனைத்தையும் பொறுப்பேற்றுக்கொள்ளுவார் என நம்பி, எங்கள் வருடாந்திர மாநாட்டிற்கு வந்தேன்.

Areey

எங்களது மாநாடு அனைத்து திருச்சபையின் பிரதிநிதிகளும் போதகர்களும் ஒன்றுகூடும் ஓர் இடம்.  எந்த இடத்தில் மாறுதல் என்பது குறித்த போட்டிகள் பொறாமைகள் நிலவும் இடம். ஆனால் அது உள்ளமைந்து இருக்கும். எவரும் வெளிக்காட்டிக்கொள்ளுவதில்லை. எப்போதும் எனது எண்ணம், நமக்கு கிடைக்குமிடமே கடவுள் அருளும் இடம் எனபதாகவே இருந்துவன்ட்துள்ளது. ஆகவே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு ஆரே காலனியில் பணி என்ற அறிவிப்பு எழுந்தவுடனேயே, பல நக்கல் சிரிப்புகள், திருப்தி புன்னகைகள் என்னைக் கடந்துபோவதைக் கண்டேன். என்னைச் சிறுமைச் செய்ய வேண்டி மேட்டிமையான கண்களால் அவைகள் பரிமாறப்பட்டன. ஆனால் ஒருவரும் அறியாத ஒரு உண்மை உண்டு. மும்பையில் நான் எங்கிருந்தாலும், எனது அகக்கண்கள் பனையினை தேடியப்படியே இருக்கும் என்பது. அப்படியிருக்க ஆரே காலனியில் என்னை அமர்த்தியது வேறெவருக்கும் அளிக்கப்படாத ஆசியாயிற்று.

ஆரே காலனி என்பது மும்பை நகரினுள் உறைந்திருக்கும் ஒரு காடு. பெருமளவில் கைவைக்கப்படாத வனம் இது. 1951ல் அரசு ஆரே பால் குடியிருப்பினை இங்கே நிர்மாணித்தது. ஆயிரக்கணக்கில் மாடுகள் இங்கே வளர்க்கப்பட்டன. மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலும் பால் பொருட்களும் பல்வேறு நிலையில் பதப்படுத்தப்பட்டு வந்தன. மும்பையின் பல்வேறு பள்ளிக்கூடங்களிலிருந்தும் மாணவர்கள் ஆரே பால் பதனிடும் முறைகளைக் காண வரிசையில் காத்துக்கிடக்கும் காட்சிகள் இன்றும் நினைவுகூறப்படுகின்றன. நியூசிலாந்து ஹாஸ்டல் என்ற பெயருள்ல ஒரு கட்டிடம் இன்றும் இங்கு இருக்கின்றது.

எனது திருச்சபையில் இருக்கும் மக்கள் ஆரே பால் குடியிருப்பில் உள்ள மாடுகளுக்கு புற்களை வெட்டி போடவும், தோட்ட வேலை செய்யவும் வந்து குடியமர்ந்த தமிழக மக்கள். பெரும்பாலும் சேலம் பகுதியிலிருந்தும்  குமரி  மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஒரு சிலருமாக இங்கே வந்து அமைந்திருக்கிறார்கள்.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வாழ்பவர்களுக்கும் நகர வாசிகளுக்கும் பெருமளவில் எந்த தொடர்பும் கிடையாது. இங்கு வாழ்பவர்கள் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொள்ள இயலாது. மும்பை பகுதியில் “ஜோப்படா பட்டி” என்று அழைக்கப்படும் சேரி பகுதி போன்றதே இதுவும். ஆனால் இங்கிருந்தே ஒரு தலைமுறை எழுந்தது. வாழ்வின் உயர் பதவிகளை இங்கு பிறந்த குழந்தைகள் எட்டினர். என்றாலும், பிறந்து வளர்ந்த இப்பகுதியினை விட்டுச் செல்ல ஒருவரும் விரும்புவதில்லை.

இத்திருச்சபையிலுள்ள மக்களின் அன்பு ஆழமானது, பாசாங்கற்றது, கட்டற்றது கூட. வாழ்வின் அடித்தளத்தில் இருந்து எழுந்து அமைய கடவுளின் அருள் கூடியிருப்பதை விரும்புகின்றவர்கள். ஆகவே ஆலய பணிக்கென தங்களை அற்பணித்து செயல்படும் அன்பு உள்ளங்கள். மும்பை மெதடிஸ்ட் திருச்சபையிலேயே, முதன் முறையாக ஒரு திருச்சபையில் குளிரூட்டிகள் அமைக்கப்பட்டது  ஆரே திருச்சபை தான் என்கிற பெருமையினை இது தட்டிச் சென்றது. குறைந்த இடத்தில் மக்கள் கூடி வருகையில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவே இவைகள் அமைக்கப்பட்டாலும், தூய பவுல் ஆலயம், ஆரே பால் குடியிருப்பு திருச்சபையினைத் தொடர்ந்து பல்வேறு திருச்சபைகள் குளிரூட்டிகளைப் பொருத்தத் துவங்கின. மக்களின் விசால மனதினையும், அவர்களின் மனம் நிறைந்த கொடையினையும் எடுத்துக்காட்டும் சிறிய உதாரணம் இது.

எனது பனை சார்ந்த தேடுதல் இங்கிருந்து வேகம் கொள்ளும் என்று நான் நினைக்கவேயில்லை. அந்த அளவிற்கு பனை மரங்கள் சார்ந்து நான் பணியாற்ற ஆரே ஒரு மையமாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

பனை சார்ந்த தேடுதல் என்பது நமது அகத்தில் எழும் தீயென கனன்றுகொண்டிருக்கவேண்டும். அப்படியென்றாலே அவை சரியான இடத்தில் பற்றி பரவ இயலும். கீழ்கண்டவற்றை ஒருவர் கவனித்தால் பனை சார்ந்த தகவல்களை திரட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் என்பது நான் அனுபவத்தின் வாயிலாக பெற்றுக்கொண்ட உண்மை.

பனை சார்ந்த தகவல்களை திரட்டுகையில், எழுத்து வாயிலாக நாம் பெற்றுக்கொள்ளக்கூடியவை வெகு சிலதே. தமிழில் என்றும் எவரும் உற்று நோக்கவுள்ள ஒரு நூல் பனைத் தொழில் தான். கு. சம்பந்தம் அவர்கள் எழுதிய இந்த நூல் தான் 40 வருடங்களுக்கு முன்பு பனை மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய முதன்மையான நூல்.

அப்படியே சமீபத்தில் திரு பண்ருட்டி  பஞ்சவர்ணம் அவர்களின் பனைமரம் நூலும் தகவல் செறிந்த தற்கால ஒரு புத்தகம் தான். பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய பனைமரமே பனைமரமே என்ற நூல், பனை மரத்தினை சமூக தளத்தில் வைத்து ஆய்வு செய்ய முற்பfடும் ஒரு நூல். இச்சிறிய பட்டியலே தமிழகத்த்ல் பனை சார்ந்து கிடைக்கின்றன. இலங்கையிலிருந்து எழுதிய கனகசபே துவங்கி, இன்றுவரை பல்வேறு முக்கிய ஆய்வாளர்கள் பனை குறித்து அனேக காரியங்களை தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகின்றனர். அனைத்தும் தமிழ் நிலங்களுக்குள் உள்னின்று படைக்கப்பட்ட நூல்களே. பனை மரங்களை தமிழகத்திற்கு வெளியே இந்திய நிலத்தில் வைத்து பேசிய முதல் தமிழ் நூலாக பனைமரச்சாலை அமைத்திருந்தது. தமிழகத்திற்கு வெளியே பனை மரங்களைத் தேடுவது நம்மை நமக்கே புதிதாக எடுத்து காண்பிப்பவைகளாக இருக்கும். ஆகவே புத்தகங்களைத் தாண்டி இன்னும் ஆழமாக பனை சார்ந்த தேடுதல்களை நிகழ்த்துவது எப்படி என்ற முறைமைகளை நாம் அறின்ட்திருக்க வேண்டும்.

  1. எங்கு பயணித்தாலும் பனை மரங்கள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும். ஒற்றைப் பனை தென்பட்டால், வேறு பனை மரங்கள் அருகில் இருக்கக்கூடும். வேறு சில பனை மரங்கள் தென்பட்டால். சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பனங்காடுகள் கண்டிப்பாக இருக்கும். அல்லது பனை மரங்கள் பரவலாக இருக்கக்கூடும்.
  2. பனை மரங்கள் இருக்குமிடங்களில் பனையேறிகள் இருப்பார்கள். அல்லது, பிற இடங்களிலிலிருந்து வந்து பனையேறிச் செல்லுவார்கள். அப்படியில்லாதிருந்தால், கடந்த 10 – 20 வருடங்களுக்கு முன்பு பனை ஏறிக்கொண்டிருந்திருப்பார்கள். அதனால், பனை மரங்கள் திரண்டிருக்கும் பகுதிகளில் இறங்கி, பனை மரங்களைப் பார்ப்பதும், அது சார்ந்து பணியாற்றுபவர்களைத் தேடுவதும் அடிப்படை புரிதல்களைக் கொடுக்கும்.
  3. பனை சார்ந்த தேடல்களுக்கு ஊரை விட்டு விலகிச் செல்லவேண்டிய கட்டாயம் இருக்கும். அவ்விதம் செய்வது இயல்வதல்ல என எண்ணுபவர்கள், தமிழகம் சார்ந்த பகுதிகளில் இருக்கும் சந்தைகளை தேடிச் செல்லுவது பயனளிக்கும். பனை ஓலைகளிலோ, பனை நாரிலோ, பனத் தும்பிலோ செய்யப்பட்ட பொருட்கள் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் கருப்பட்டி கற்கண்டு போன்ற உணவு பொருட்களும் கிடைக்கும். இவர்கள் வழியாக பனை சார்ந்த சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள இயலும்.
  4. பனை சார்ந்த தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதன்மையாக சந்திக்க வேண்டியது பனை ஏறுகிறவர்களைத்தான். அப்படியே, பனை சார்ந்து பொருட்களைச் செய்யும் கைவினை கலைஞர்களும் தான். இவர்களே பனை சார்ந்த புரிதல்களை முழுதுணர்ந்தவர்கள். உலகின் தலை சிறந்த ஒரு சமையற் கலைஞன் கூட, பனை கருப்பட்டியினைச் செய்ய இயலவது எளிதல்ல. பதனீரைத் தவிர்த்து இடுபொருட்கள் ஏதும் இல்லையென்றாலும், நெருப்பு, பாத்திரம், எப்போது கலக்க வேண்டும், எப்போது துழாவ வேண்டும், எப்போது இறக்கவேண்டும் எப்படி ஊற்றி வைக்கவேண்டும் போன்ற தகவல்கள் நமது தாய்மார்கள் தொடர் அனுபவங்கள் வாயிலாக அறிந்த நுட்பம்.
  5. பனை சார்ந்த தகவல்களை கேட்டு அறிவது ஒரு வகை என்றால், பனை சார்ந்த வாழ்வை உணர்வது மற்றொரு வகை. பனை உணவுகளை சுவைப்பது, பனை பொருட்களை பயன்படுத்துவது, பனை கலைஞர்களுடன் சில நாட்களை செலவிடுவது, பனை சார்ந்த புரிதலை நமக்கு நன்குணர்த்தும்.
  6. பனை சார்ந்து நாம் எழுப்பும் கேள்விகளால் பெரும்பாலும் உடனே சரியான பதில்களைப் பெற்றுவிட இயலாது. பனை சார் வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுடன் நமது வாழ்வு எவ்விதம் கலந்து விடுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களிடமிருந்து ஆழ்ந்த சிந்தனைகளை நாம் பெற இயலும். இன்று பனை சார்ந்த கேள்விகள் பனையின் பிரம்மாண்டத்தை சிறுமை செய்வதாகவே அமைகிறது.
  7. பொருளியல் நோக்கில் பனையினை அணுகும் தன்மையினை கைவிட்டு, பனை ஒரு வாழ்வியல் அடையாளமாக முன்னிறுத்த இயலுமா என்றே பார்க்க வேண்டும். சந்தையில் பனைபொருள் மற்றொரு பொருளாக கிடைப்பது அல்ல வெற்றி, நமது வீடுகளில் மட்டுமல்ல நமது சமூக தளங்களிலும் சமய் வழிபாட்டிடங்களிலும் பனைபொருள் எவ்விதம் முக்கிய இடங்களை நிரப்புகிறது என்பதுதான் அதன் வெற்றியைச் சுட்டும் மந்திரம். ஆகவே, பனை சார்ந்த தேடுதல்களை முன்னெடுக்கையில், ஆலயங்கள் திருவிழாக்கள் போன்றவைகளில் பனை எவ்விதம் எழுத்து வருகிறது என்பதையும் கூர்ந்து நோக்க வேண்டும்.

மும்பையில் எனக்கான இடம் ஆரே என்று அமைத்தபொழுது இவைகளை நான் எனக்குள் மீண்டும் சொல்லிக்கொண்டேன். தேடுதல் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பவை. மும்பையானாலும் சரி எந்த ஊரானாலும் சரி பனையே நான் பயணிக்கும் தடம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 2

ஜூலை 25, 2019

 

பனை சூழ் உலகு

மரங்கள் மனிதனுடன் ஆதி காலம் தொட்டே இணைந்து வருவதை நாம் அறிந்திருக்கிறோம், மரங்கள் எவ்விதம் சமூக குழுக்களோடு இணைந்தன என்கிற கோட்பாட்டையும் அறிந்திருக்கிறோம். ஆதியில் மக்கள் தங்களை இயற்கையின் பிறவடிவமாகவே கருதியிருந்தனர். ஆகவே இயற்கையின் அங்கமாகவே தங்களை உருவகப்படுத்திக்கொள்ளுவதும், இயற்கையின் ஏதோ ஒரு அம்சத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுவதும் வழக்கம். இவைகளை குலமரபுச் சின்னம் (Totem) என்கின்றனர் மானுடவியலாளர்கள். இன்று குலமரபு சின்னங்கள் உயிர்கொள்ளவேண்டும் அவை நமது ஆன்மாவை ஒருமுகப்படுத்த ஏற்றது. சூழியலின் மாற்று வடிவாக அவைகள் எழுந்து நிற்கும். இனம் அறியா மூதாதையருடன் நம்மை இணைத்து வைப்பவை மரங்களே
.

மரங்களையோ மிருகங்களையோ பறவைகளையோ, ஏதேனும் ஒரு உயிரினத்தையோ அல்லது உயிரற்ற பாறைகளையோ கூட தங்களோடு அல்லது தங்கள் குலத்தோடு இணைத்து பார்க்கும் ஒரு முறைமை இது.  இவ்வித எண்ணம் ஆதி கால ஆன்மவாத (Animism) சமயங்களில் காணப்படும் ஒன்றாகும். தங்கள் குலமரபு சின்னமாக கொண்டுள்ள மரங்களில் தங்கள் மூதாதையர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர் என்றோ, அபூர்வ சக்தி நிறைந்த ஒன்று உள்ளுறைந்திருக்கிறது என்றோ எண்ணுகின்ற ஒரு நம்பிக்கை இந்த மக்களில் மேலோங்கியிருக்கும்.  இவ்வித எண்ணங்கள் உலகம் எங்கும் பரவியிருந்திருக்கிறதற்கான அத்தாட்சி இருக்கிறது.

பனை விதை நடுகை

பனை விதை நடுகை. 14, ஆரே பால் குடியிருப்பு, மும்பை

மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன் மனிதன் என்கிற பொருள் வரக்கூடிய அளவில் அதாமா என்கிற எபிரேய பதத்திலிருந்து ஆதாம் எனும் முதல் மனிதன் தோன்றினான் என்ற புராணீக இறையியலாக்கம் மிகச் சிறந்த உதாரணம். திருமறையில்  காணப்படும் “மனிதனே நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்” என்கிற பதம் இதனை உணர்த்தும். “இயேசு கூறும் நானே மெய்யான திராட்சை செடி” போன்ற வசனங்கள் இப்பின்னணியங்களை உள்ளடக்கியதே. இவ்விதமான ஆன்மவாத பின்னணியம் குறித்த தளம் விரிவானது. மானுடவியலாளர்கள் மற்றும் இறையியலாளர்கள் ஆழ்ந்து விரும்பி தேடி கற்கும் ஒரு துறை இது.

மரங்கள் குலமரபுச்சின்னங்களாக இருந்தமைக்கு சான்றுகள் தமிழகத்திலும் உண்டு. பல்வேறு தளங்களில் அவை வெளிப்படுவதை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே (நற்றிணை 172)

விளையாடுகையில் கைதவறி விழுந்து முழைத்த ஒரு புன்னை மரம் தங்கை என தாயாரால் அறிவுறுத்தப்பட்டதால், அதன் நிழலில் காதலனுடன் கூடுவதில் உள்ள தயக்கத்தை தலைவி கூறுவதாக வரும் இப்பாடல் மரத்தினை உயிர் கொண்டுள்ள சகோதரியாக வெளிப்படுத்துகிறது. ஒரு மரம் தங்கை என உருபெறும் காட்சி சமய நம்பிக்கைகளையும் தாண்டி உள்ளுறைந்திருக்கும் ஒரு மானுட அறமாக வெளிப்படுகிறது. குலமரபு சின்னங்களின் தோற்றுவாயாக இவ்வித சிந்தனைகள் இருந்திருக்கலாம்.

அரசனின் “காவல் மரங்கள்” அவ்வகையில் ஒரு முக்கியமான குலமரபுச் சின்னம் எனக் கொள்ளலாம். இவ்வித காவல் மரங்கள் அரசனையும் அவன் குடிகளையும் சுட்டி நிற்பது. எவ்வகையிலும் இம்மரங்களுக்கு இடர் வந்தாலோ, இம்மரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, அவமதிப்பிற்குள்ளானோலோ அது அரச குற்றமாகவும் தேசதுரோகமாகவும் எண்ணப்பட்டது. பெரும்பாலும் போர் புரியும் மன்னர்கள், எதிரி நாட்டின் காவல் மரங்களை வெட்டிவிடுவது என்பது முதன்மை தாக்குதலாக இருக்கும். அவ்வகையில் பார்க்கையில் பனம்பூ மாலை அணிந்த நமது முன்னோர்களும், நார்முடி அணிந்த சேரனும், பனை மரத்தை தங்கள் குலமரபுச் சின்னமாக வைத்திருந்ததை நம்மால் உணர முடிகிறது.

சால் பெரும் தானைச் சேர லாதன் –
மால்கடல் ஒட்டிக் கடம்பு அறுத்து
இயற்றிய பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன.” (அகம் 547: 3 – 5)

என்ற பாடல் காவல் மரங்களான கடம்ப மரங்களை வெட்டி முரசு செய்த சேர்லாதன் மன்னனைக் குறித்து புகழ் பாடுவதாக அமைந்துள்ளது.

திருமறையில் காணப்படும் பல்வேறு திருவெளிப்பாடுகள் மரங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவன. மரங்கள் கனிதருபவை என்கிற எண்ணத்தை முன்வைத்து அவைகள் காப்பற்றபடவேண்டும் என்கிற கருத்தை போருக்கு செல்லும் இஸ்ரவேலர்களுக்கு மோசே சொல்லும் அறிவுறையிலிருந்து காணலாம்.

“ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!” (இணைச்சட்டம் 20: 19)

“மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்; “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், “பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?” என்றார். தொழிலாளர் மறுமொழியாக, “ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்” என்று அவரிடம் கூறினார்.” (லூக்கா 13: 6 – 9)

இவ்விதம் கூறிய உவமையில், நற்கனிகள் நல்காத மனிதரை நல்வழிப்படுத்த இறைவன் முயல்வது தெரிகிறது. திருமறையில் அத்தி, திராட்சை போன்றவை இஸ்ரவேல் மக்களை குறிப்புணர்த்துவதாக பல இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது.

ஆதி மனிதர்களின் வாழ்வில் மரங்கள் இவ்விதம் தங்களின் பிறிதொரு வடிவமாக எழுந்து வருவது கவனிக்கத் தக்கது. இன்றைய சூழியலுக்கு வித்திடும் முறைமையில் தொல் பழங்கால நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன என எண்ணும்போது சிலிர்ப்படைகிறோம்.

இவ்விதம் தொல் பழங்காலத்தில் இருந்தே மரங்கள் மனிதனுடம் ஏதோ ஒருவகையில் தங்களை அர்த்தப்படுத்தி பயணித்திருக்கின்றன. இந்த பயணம் நெடியது. வைதீக மதங்கள் மேலெழுந்தபோது இவ்வித நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டன. உணவு மற்றும் உபரி திரண்டெழும்பும் சூழல் உருவானது ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உபரியை சேகரிக்கும் நிலையில், பழமரங்களின் தேவையினை விட தானியங்களின் தேவை முன்னிறுத்தப்பட்டது காரணமாக இருந்திருக்கலாம். இச்சூழலில் பல்வேறு ஆன்மவாத நம்பிக்கைகள் அமிழ்ந்துபோய்விட்டன. குறிப்பாக வீரம் காதல் மற்றும் அறம் என வாழ்ந்த மக்களிடத்தில் பேரரசுகள் எழுந்தோரும் இவ்வகை பன்முகப்பட்ட நம்பிக்கைகள் பொருளிழந்து பக்தி கலை மற்றும் ஆற்றல் என மடைமாற்றப்பட்டன. சங்க இலக்கியத்தில் காணப்படும் புன்னை மரத்தினை தனது தமக்கையாக கொள்ளும் மரபு பிற்பாடு அறுந்துவிழுவதைக் காணலாம்.

எனினும் இந்த நம்பிக்கையின் நீட்சியாகவே பக்தி மரபில் தல மரங்கள் என இவைகளே பின்னாளில் ஏற்கப்பட்டன. ஆகவே தான் தீர்த்தம் எனும் நீர்நிலை, மூர்த்தி எனும் கடவுள், விருக்ஷம் எனும் மரம் மூன்றும் இணைந்தே வைதீக மரபுகளின் ஆலயங்கள் அமைக்கப்பெற்றன. ஓரிடத்தில் காணப்படுகின்ற முக்கிய மரத்தினையே அப்பகுதியின் தலமரமாக கொள்ளுகின்ற மரபு இவ்விதமாக எழுந்திருக்கலாம்.

கிறிஸ்தவத்தில் கூட மரத்தின் கனியினால் ஏற்பட்ட பாவம் சிலுவை மரத்தினால் சீர் செய்யப்படும் கருத்து வலுவாக எழுந்து நிற்கிறது.

காலனீய காலத்தில், தாவரங்கள் பணம் என்கின்ற ஒற்றைப்படை நோக்கிலேயே பார்க்கப்பட்டன. உணவு என்பதை விட, காலனீய அதிகாரத்திற்கு என சில “உயர்குடி” தாவரங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. தேயிலை, காபி, கரும்பு, ரப்பர் மற்றும் வாசனை திரவிய பயிர்கள் போன்றவை அடிமைத்தனத்தினை ஆதரிக்கும் ஒன்றாக இன்றும் காணப்படுகிறது.  மும்பை இரயில் சேவைக்கு என குமரி காடுகளில் மிக பிரம்மாண்டமான மரங்கள் வெட்டப்பட்டு, இரயில் பாதைகளில் பதிக்கப்பட்டது வரலாறு. அவ்விதம் மொட்டையடிக்கப்பட்ட காடுகள் காபி தோட்டங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. இவ்விதம் மரங்களை மனிதர்கள் அணுகிய விதம் காலத்திற்கு காலம் மாறியபடியே வந்திருக்கிறது.

இன்று மரங்கள் சூழியல் அடையாளமாக இருக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளமாகவும் மரங்களே முன்னிறுத்தப்படுகின்றன. சுத்தமான காற்றிற்கும், தேவையான மழைக்கும், மனிதன் மரங்களைச் சார்ந்திருக்கிறான். ஆகவே மரங்களின் அழிவு என்பது தனக்குத் தானே கொள்ளிவைத்துக்கொள்ளுவது போல என்பதை உணர்ந்து மரங்களைப் பேண முயற்சிகள் எடுகிறான். மரங்கள் ஒரு நகரத்தின் நுறையீரலுக்குச் சமம் என்ற சொல்லாட்சிகள் இன்று பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஒரு நகரத்தின் சிறப்பு அது கொண்டிருக்கும் காடுகளால் தான் என்பதை சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் நகர காடுகள் உரத்துக் கூறுகின்றன.

நகரங்களில் கூட மரங்கள் இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு பெங்களூர் வந்த போதுதான் உறைத்தது. கடுமையான சட்டங்களை மீறி மரங்களை வெட்டும் அரசியல்வாதிகளும், அதனை எதிர்க்கும் சாமானியர்களின் ஒருமுகப்பட்ட கூட்டுமுயற்சியும் வேரொரு உலகத்தை எனக்கு காண்பித்தன. நகரங்களில் இருக்கும் ஒவ்வொரு மரமும் பலிகொள்ளப்படும் ஆடாக தான் நின்றுகொண்டிருக்கிறது. வளர்சித்திட்டங்கள் தான் திருவிழாக்கள், பூசாரி அரசியல்வாதியேதான்.

இவ்விதம் ஒரு நெருக்கடியான சூழல் நகரங்களைச் சுற்றி இருக்க மும்பை எனும் நகரத்தில் நிற்கும் பனை மரங்களை குறித்து எழுதுவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன். நகர வாழ்வில் எஞ்சியிருக்கும் மரங்கள் அந்த நகரத்தின் தோற்றுவாயை அறிந்தவை. அவற்றினூடாக நாம் காணும் நகரம் பசுமை கொண்டதாய் இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

நான் காலூன்றியிருக்கும் ஆரே பால் குடியிருப்பு, மும்பைக் காடுகளின் இறுதி எச்சம். இன்று பல்வேறு வகைகளலும் இக்காட்டினை அபகரித்துக்கொள்ள அனேகர் தொடர்ந்து முயற்சி செய்தபடியே உள்ளனர். ஏற்கனவே நான் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகள் 25 வருடங்களுக்குள் இங்கே நிர்மாணிக்கப்பட்டவைகள் தான். தனது பெரும்பகுதியினை “மும்பை திரைப்பட நகரம்” என ஒதுக்கியிருக்கிறது. நெருக்கடியான இச்சூழலில் ஆரே பாதுகாக்கப்படவேண்டி பல்வேறு தன்னார்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றனர். இன்று, ஆரே பகுதியில் ஒரு மிருககாட்சி சாலை மைக்க 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மும்பை மெட்ரோ இரயிலுக்காக 33 ஹெக்டர் நிலம் வெகு சமீபத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் அனுமதியளித்தும் விட்டது. ஆரே “காடு” தான் என சொல்லப்படுகின்ற எவ்வித ஆவணமும் இல்லையாம். உள்ளங்கை பனம்பழத்தை நோக்க தனி நுண்ணோக்கிகள் உருவாக்கத்தான் வேண்டும். பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் நிறுவனங்கள்வேறு இந்த இடத்தை பங்கிட்டுக்கொள்ள காத்துக்கிடக்கின்றன. இச்சூழலில் தான் ஒற்றையாக நிற்கும் பனை மரங்கள் எவ்வித பங்களிப்பாற்ற இயலும் என்கிற கேள்வியையும் உள்ளடக்கியே மும்பையினை கூர்ந்து நோக்குகின்றேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம்

ஜூலை 21, 2019

மும்பை

நகரங்கள் குறித்த வரலாறு என்பது அங்கு வாழ்ந்த குடிகளை குறித்தும்,  ஆண்ட மன்னர்களைப் பற்றியும், வென்ற மன்னர்களின் புகழ் பாடியும், வணிகர்களின் வாழ்வியலையும், அறிஞர் சிறப்புகளையும், கட்டிடங்களின் தொன்மை மற்றும் அழகியலையும், ஏன் அங்குள்ள சாலைகளின் பெருமிதத்தையும் கூட பெருமளவில் கூறிச்செல்பவை. ஆனால் ஒரு நகரின் முக்கிய அம்சமாக காணப்படுபவைகள் என நான் எண்ணுவது அங்கு காணப்படும் தாவரங்கள் தாம். நில அமைப்பு எப்படி முக்கியமோ அப்படியே தாவரங்களின் திரட்சியே மக்கள் வாழ ஏற்ற இடம் இது என அறுதியிட்டு கூற வல்லவை. அரசியல் காரணங்கள் தாண்டி ஒரு நிலத்தில் மக்கள் திரண்டு வாழ நிலவியல் சார்ந்த  காரணங்கள் இருக்கும் என்பதுவே எனது எண்ணம்.

பொதுவாக நாம் வாழும் நவீன நகரங்களை காங்கிரீட் காடுகள் என்பார்கள், ஆனால் அப்படி ஒரு நகரம் காங்கிரீட் காடாக மட்டும் இருந்துவிட முடியாது. மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் மரங்கள் தனக்கான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளுகின்றன.  மரங்கள் நகரவாழ்வில் தங்களுடன் இணைந்து இருப்பதையே மனித மனம் விரும்புகிறது.

டெஸ்மண்ட் மோரிஸ் எனும் மானுடவியலாளர் மனிதன் குரங்குகளின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறான் என்றும், அவனிடத்தில் குரங்குகளிடம் இருக்கும் ரோமங்கள் மட்டுமே இல்லை எனவும், மரங்களைச் சூழ வாழ்ந்த குரங்குகளுக்கு மரங்களின் தேவை இருந்துகொண்டுதானிருக்கிறது. ஆகவே தான் எந்த நகர் நிர்மாணத்திலும் சிறியவகையிலாவது  பூங்காக்களை அமைத்து பேண முற்படுகிறார்கள் என குறிப்பிடுகிறார்.

மரங்களை வெட்டுவது இன்று பெருமளவில் அதிகரித்திருக்கிறது. மறுப்பதற்கில்லை, ஆனால் டெஸ்மண்ட் மோரிஸ் அவர்களின் கூற்றின் வெளிப்பாடாகவே இன்றைய சூழியல் அமைப்புகளின் குரல்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தனது  வளர்ச்சிப் படிநிலையில் நின்று மனிதன் மரத்துடனான தனது  தொடர்பை வேகமாக இழந்து வரும் சூழலில், திருமறை சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் நகர் வாழ்வில் மரங்களின் பங்களிப்புகளை நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு நகரத்தில் காணப்படும் உயிரினங்கள் அந்த நகரத்தின் வரலாற்றையும் வாழ்வையும் நமக்கு பூடகமாக தெரிவிப்பவை. ஒரு வகையில் அந்த நகரத்தின் வெளியாக்கப்பாடாத ஒரு இரகசிய வரலாறு, வாழ்வு, மற்றும் கலை ஆகியவை உள்ளுறைந்திருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இவைகளை வெளிக்கொணர்வது நமக்கு பல ஆச்சரியங்களை வைத்திருக்கும். புதிய கோணத்தில் ஒரு நகரின் வரைபடத்தை நம்மால் இயற்ற இயலும். மரங்களின் திரட்சி அற்றுப்போகும் தோறும், நகர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆகவே தான் இன்று நகரங்களில் வெட்டப்படும் மரங்களுக்கு எதிராக சூழியல் ஆர்வலர்களின் போராட்டங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன.

ஒரு சூழியல் அமைவிடம் எப்படி நகர்புரமாகிறது. எஞ்சி நிற்கும் வலுவுள்ள தாவரங்கள் என்ன? அவற்றிற்கான காரணங்கள் போன்றவை நமது கவனத்தைக் கோருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிம்பம் என்னவென்றால் காடுகளை அழித்து நகரங்களை நிர்மாணிக்கையில் தங்களுக்கு பயன் தரும் மரங்களை அப்பகுதியில் வாழ விடுவதும் பிற மரங்களை அப்புறப்படுத்துவதும் தான். நகருக்கு ஏற்ற மரங்கள் என தனியாக ஏதும் இருப்பதில்லை. அந்த பகுதிகளில் வாழும் மரங்களே அங்கே பெருமளவில் நிற்கும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மரங்கள் தனித்து தெரியும். மக்களுடைய வாழ்வில் எள்ளளவும்  சம்பத்தப்படாத மரங்கள் பெருமளவில் பரவியிருக்காது. நகரங்களில் காணப்படும் மரங்களில் பெரும்பாலானவை, அழகு மற்றும் நிழல் தரும் மரங்கள் தான். அழகு நோக்கு  காலத்திற்கு காலம் மாற்றமடையும் தன்மை கொண்டது.

வனங்களில் எப்படி யானை மற்றும் மிருகங்களின் பங்களிப்பு முக்கியமானதோ அது போலவே நகர நிர்மாணத்திலும் மனிதர்களின் பங்கு பெருமளவில் இருக்கும். மனிதன் தனக்கான மரங்களை தேடி தேடி தன்னருகில் வைத்துக்கொள்ளுவான். அவைகளின் பங்களிப்புகள் அவனது சமூக பின்னணிகளை கூறுவதாக இருக்கும். நகரில் வாழ்பவர்களிடம் பொருளியல் ரீதியான ஒரு சுதந்திரம் இருக்கும் ஆனபடியால், அரிய தாவரங்கள் நகரத்தில் காணப்பட கூடும். இவ்வித அரிய தாவரங்கள் வந்து சேர்ந்த காலங்களை குறித்த கதைகளும் மண்ணோடு விதையாய் புதைது போயிருக்கும். அவைகள் விருட்சமாக வளரும்போது நகரே புது பொலிவுடன் தன்னை புனரமைத்துக்கொள்ளும் சாத்தியம் இருக்கின்றது. இவைகளை கருத்தில் கொண்டு நாம் சிந்திக்கையில், நகர் புற மரங்களின் பரம்பலில் மனிதர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்திருக்கும் என எளிதில் புரிந்துகொள்ளலாம்.

குறிப்பிட்ட மரங்களை ஒரு நிலப்பரப்பில் காணும்போது கற்பனையினூடாகவும் வரலாற்றினூடாகவும் அம்மரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுவது தவிர்க்க இயலாதது. அவ்விதம் பல்வேறு தாவரங்கள் வரலாற்றில் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. பாபிலோனின் தொங்கு தோட்டம் ஒரு சிறந்த உதாரணம். அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார் என்பதில் துவங்கி, அக்பரின் மாம்பழ விருப்பம் வரை மன்னர் காலத்து மரங்களின் பங்களிப்பு குறித்த கதைகள் ஏராளம் உண்டு. காலனீய ஆதிக்கத்தில் பணப்பயிர்கள் மிக முக்கிய இடங்களைப் பெறலாயின. நவீன காலத்தில், ஒட்டு ரகங்களும் பின் நவீனத்துவ காலத்தில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றதை நாம் காண்கிறோம். என்றாலும் பின்நவீனத்துவ சமூகம், தனது பழைமை, பண்பாடுகள் சார்ந்து இருக்கும் தாவரங்களைக் குறித்த தேடுதலில் இறங்கியிருப்பது மிகப்பெரிய மாற்றம் என்றே கூறவேண்டும்.

Palm Bay

ஒரு நகரம் என்றால் பல்வேறு மக்களினங்களின் கொந்தளிப்பு தான்.  நகரில் வாழும் மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்களின் வருகையின் போது தங்களுடன் அவர்கள் கொண்டு வந்த விதைகளும் இங்கே திரட்சியாக எழுந்து நிற்கின்றன. அவைகளை நாம் தொகுத்து ஒரு மரத்தினூடாக நோக்குகையில் அது ஒரு நுண்நோக்கியின் கூரிய துல்லியத்தைக் கொண்டிருக்கும். அவ்விதம் கூர் கொள்ளும் பார்வை பார்க்கத் தவறியவைகளை பூதாகரமாக நம்முன் எழுப்ப வல்லவை. அந்த நோக்கு இன்று நாம் காணத்தவறியவைகளை வெகு அருகில் கொண்டுவந்து சேர்ப்பவையாக இருக்கும்.

என்னைப் பொறுத்த அளவில் ஒரு நகரம் என்பது அங்குள்ள தாவரங்களை மையமாக கொண்டு வளர்ந்த சமூகங்களின் தொகை. அது காடு மாற்றி நகர் அமைக்க எடுத்துக்கொண்ட காலங்கள், மரங்களோடு அச்சமூகங்கள் கொண்டிருந்த நீண்ட நெடுங்கால உறவை கூறும் சாட்சியேதான். காடுகளை மக்கள் வாழ்விடமாக  மாற்றிக்கொண்டே வருகையில், எஞ்சி நிற்கும் மரங்கள், அழியா கல்வெட்டுகள் போன்றவை. அவைகளைப் படிக்கும் திறன் கொண்டோர் நம்மிடம் இருந்தால் வரலாற்றில் இழந்த பக்கங்களை நாம் மீட்டெடுக்க இயலும்.

மும்பை ஒரு தீவுகளின் தொகுதி. இங்கு அலையாத்தி காடுகள் அதிகம் இருந்தாலும், அடர் காடு நிறைந்த பகுதியே மும்பை.  மும்பையின் முக்கிய பகுதிகளில் கூட மரங்கள் அடர்ந்து விரிந்து பரவியிருக்கும் காட்சி இது கானக பகுதிதானோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு 10 வருடம் மட்டும்  மும்பை மனிதர்களால் கைவிடப்பட்டால் போதும் அதன் உள்ளுறைந்திருக்கும் காடு விழித்து வியாபித்துவிடும் என்பதை மழைக்குப் பின் இங்கு முளைக்கும் தாவரங்கள் பறைசாற்றுகின்றன. மும்பையினைச் சுற்றியிருக்கும் கானகங்களில் வாழும் உயிரினங்கள் பெருகி உலகிலேயே மிக அற்புதமான விலங்குகளின் சரணலயமாக இது மாறிவிடக்கூடும்.

மும்பையின் மழை மற்றும் மண் தனித்துவமானவை. மும்பையின் ஒரு பருவ மழை போதும், இங்குள்ள சாலைகளை இல்லாமலாக்க. மும்பையிலுள்ள தூசுக் குவியல்கள் கூட பல்வேறு தாவரங்களை பிறப்பிக்கும் சக்தி வாய்த்தது. நீர் நகரங்களை மூழ்கடிக்கும் காட்சிபோல் தாவரங்கள் மும்பை நகரத்தினை மூடிவிட காத்திருக்கின்றனவோ என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் எழுவதுண்டு. ஆனால் மனிதன் அதனை அனுமதிப்பதில்லை. பல்வேறு வகைகளில் அவனது போராட்டம் தாவரங்களுடன் ஏற்பட்டபடியேதான் இருக்கின்றது.

மும்பை பகுதிகளில் உள்ள சில சாலைகளில் சிறுத்தைகள் நடமாடும் பகுதி கவனாமாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகளைக் காணலாம். காஷி மீரா பகுதியிலிருந்து தானே செல்லும் பகுதியிலும் ஆரே காலனிக்குள் செல்லும் வேளையிலும் இவ்வகை அறிவிப்புகள் காணப்படும். நகரம் எவ்வளவு தூரம் கானகத்தின் உட்பகுதிக்குள் ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.

மேற்குறிப்பிட்ட பகுதிகளிலெங்கும் பனை மரங்கள் காணப்படுவது ஆச்சரியமான உண்மை. இது என்னை மும்பையின் பால் ஈர்த்தது. தமிழகம் தாண்டியும் பனை மரங்கள் இருக்கின்றன என்கிற ஆச்சரியத்தைக் கடந்து, அவைகள் தமக்குள் ஒரு செய்தியினை எனக்கு வைத்திருப்பதாக உணர்ந்துகொண்டேன். அவைகள் என்ன என்கிற கேள்விகள் என்னைக் குடைந்துகொண்டே இருந்தன. ஏதோ ஒருவகையில் ஒரு திறப்பு நிகழாதா என்கிற ஏக்கம் என்னுள் இருந்துகொண்டிருந்தது. ஆகவே, நான் பார்த்தவற்றையும் அறிந்தவற்றையும் தொகுத்து இணைத்து பார்க்க முடிவு செய்தேன்

மும்பையின் நெடிய வரலாற்றில் காணப்படும் இந்த பனை மரங்களே இந்த மாபெரும் நகரத்தை இணைத்திருக்கிண்றன, பசியாற்றியிருக்கின்றன, வாழ்வளித்திருக்கின்றன. துறைமுக பட்டணம்  என்பதே ஒரு முக்கிய குறியீடாக நாம் எண்ணிகொள்வோமானால், இப்பகுதியில் காணப்பட்ட பனைமரங்களின் முக்கியத்துவம் குறித்து நம்மால் ஒரு சில முடிவுகளை எட்ட இயலும்.

மும்பையின் கடந்த கால பெயர் பாம்பே. நான் மும்பையினை “Palm Bay” என்றே அழைக்க விரும்புகிறேன். இது பனை நகரம் என்ற ஒரு எண்ணம் என்னுள் பீரிட்டு பாய்கிறதை என்னால் அடக்கவே இயலவில்லை. இதனைக்குறித்து நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது எனது தோழியும் பல் மருத்துவருமான தாமரை, நீங்கள் இருப்பது Palm பாய் (mat) யில் அல்லவா என இன்னும் கொளுத்திப் போட்டார்கள். பனை பாய் என்ற பொருள் வரும்படி அவர்கள் கூறியது நான் கூறியதைவிட வேடிக்கையாக இருந்தது. ஆனால் இது ஒரு பனை நகரமா என்கிற கேள்வி என்னுள் உறைந்துவிட்டது. இந்த தேடுதல் எனது தொடர் தேடுதல் ஆகையால், எனக்கு கிடைக்கும் அனுபவங்களின் தொகுப்பாகவே இப்பதிவு இருக்கும். ஆகவே இது தனித்துவமான தேடுதல். இவைகளில் இணைபவர்கள் எங்கிருந்தாலும், கண்டடையத்தக்க ஏதேனும் ஒன்று இதனுள் தியானம் என அமைதிகாத்திருக்கும்.

ஒற்றை ஒரு தாவரத்தைக் கொண்டு மும்பையினை அளந்துவிடும் பேராசையெல்லாம் எனக்கில்லை. ஆனால் நான் விரும்பும் பனை ஆற்றிய வினையினை நான் கண்டடைய வேண்டும் எனும் ஆவலே என்னை உந்தித்தள்ளுகிறது. எனது இறையியல் சார்புகளோடு நிகழும் பனைமர வேட்கைப் பயணம் மும்பையில் மையம்கொண்டிருப்பது எனது தேர்வு அல்ல அது இறைவன் எனக்களித்த வரம்.

நெடும்பனைகள் வான் உயர எழும்பும் கட்டிடங்களின் முன்னோடி, உயர எறிச் செல்ல விரும்பும் மானுடனின் முன்னுதாரணங்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனித்தவன் ஆகிவிடுதலும், எத்துணை கூட்டத்திலும் தன்னை தகவமைத்துக்கொள்ளுவதிலும், குன்றா ஆற்றலுடன் எழுந்து நிற்கும் வீரம் என பனை இந்த நகரத்தில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

பனை நகரம் என்பது நகர்வலம் செல்லும்  இன்பத்தையும், உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் உற்சாகத்தையும், புதியவைகளைக் கண்டடையும் ஆச்சர்யத்தையும், ஆன்மீக தரிசனத்தையும் ஒருங்கே தர வல்லது.

மும்பை பண நகரம் என்றல்லவா எண்ணியிருந்தேம், அது எப்படி பனை நகரமானது? பனை ஓங்கி வளரும் பிற இந்திய நகரங்கள் இல்லையா என்கிற கேள்விகள் நமக்குள் இருக்கும். பனை வாழும் பல்வேறு நகரங்கள் இந்தியாவில் உண்டு. சென்ன்னை, கல்கத்தா பொன்ற நகரங்களை இதற்கு இணையாக ஏன் இதனை விடவும் உயர்ந்த நிலையிலேயே நாம் பனையோடு தொடர்புபடுத்த இயலுமாயிருக்கும். இக்கட்டுரைகள், என்னால் சென்று தொட இயலும் தூரத்தில் உள்ளவைகளின் தொகுப்புதான்.  என்னால் இயன்றமட்டும்  பனை நகரத்தினை நிறைக்கும்  எளிய முயற்சி தான் இது. விடுபடல்களை நிறைக்கும் எதிர்கால சந்ததிகளை நம்பி எனது முதல் எட்டினை வைக்கிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை விதைக்க வாரீர்

ஜூலை 18, 2019

 

பனை விதைகள் விதைக்கும் நேரம் தமிழகத்தில் நெருங்கி வருகிறது. மும்பை பகுதிகளில் தற்பொழுது திருச்சபையினைச் சார்ந்தவர்கள் பனை விதைகளை விதைத்து வருகிறார்கள். இவ்வேளையில் பனை விதைகளை எப்படி விதைக்க வேண்டும் போன்ற கேள்விகள் அனேகர் மனதில் எழுவது உண்டு. பெரும்பலானோர் பனை செடி கிடைக்குமா என்று தேடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

பனை செடி நடவேண்டும் என எண்ணுவதோ அல்லது பனை செடி தயாரிப்பதோ தவறில்லை. அவ்விதம் முயற்சிகள் தாய்லாந்து கம்போடியா போன்ற இடங்களில் மட்டுமல்ல, இந்தியாவிலும் ஒருசில இடங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பனை செடி தயாரிப்பதிலுள்ள சில சிக்கல்களைத் தாண்டி பார்த்தொமென்று சொன்னால், பனை நாற்றுக்கள் தயாரிக்க இயலும் என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். ஆனால், நாற்றுக்கள் என்பவை மலிவாக இருக்காது.

3 bags

பனை விதை  நடுவது குறித்த பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன. பனை விதைகளை எப்படி நடலாம் என்கின்ற எண்ணங்கள் பனை ஆர்வலர்களின் வாழ்வில் கேள்வியென எழுந்தபடி இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நில பரப்பில் நடுவது என்பது வேறு பல்வேறு நில அமைப்பில் பனை மரத்தின் இருப்பினைக் ஏற்படுத்துவது வேறு. தமிழகம் பரந்து விரிந்த நால்வகை நிலப்பரப்பை கொண்ட இடமானபடியால், நடுகை எப்படியிருக்கவேண்டும் என்கின்ற புரிதல் தேவை.

பனை நடுகைக்கு முன்பதாக பனை விதைகளை சேகரிக்கும் பணியினை முன்னெடுக்கவேண்டும். பனை விதைகளை சேகரிக்கிறவர்களே அதன் சூழியல் அமைவை புரிந்துகொள்ளுகிறவர்கள் ஆவார்கள். தமிழகத்தைப் பொறுத்த அளவில், பனை மரங்கள் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து அனைத்து இடங்களிலும் இருக்கின்றது. ஆகவே சேகரிக்க விரும்புபவர்கள் நேரடியாக களத்தில் இறங்குவதே சரியானது. களப்பணி, நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். அவைகள் இல்லாமல் பனை விதை நடுகை என்பது முற்றுபெறாத ஒரு முயற்சியாகவே இருக்கும்.

பனை விதையினை சேகரிக்கும் நாட்கள் ஜூலை (ஆடி) மாதம் துவங்கி  ஜனவரி மாதம் வரைக்கும் கிடைக்கும். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், பிற மாவட்டங்களில் கிடைக்காத நாட்களில் பனம்பழங்கள் கிடைக்கும். குறிப்பாக மார்ச் (பங்குனி) மாதம் முதல் ஜூலை (ஆனி) முடிய கிடைக்கும். இவைகளை எப்படி கண்டடைவது. தமிழகம் முழுவதும் எனது பயணத்தை நிகழ்த்தியதினால், ஒவ்வொரு ஊரிலும் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் பனை மரங்கள் இருப்பதை நாம் கண்டடைய முடியும். பல நகர தெருக்களில் கூட பனை மரங்கள் இன்றும் நெடிந்து வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். மிஞ்சி மிஞ்சிப்  போனால், 20 கிமீ சுற்றளவிலேயே பனை விதைகள் தாராளமாக கிடைக்கின்ற இடம் இருக்கும்.  இப்படி பனை மரங்கள் இருக்கின்ற இடங்களில் பெண் பனைகள் இருக்கின்றவா என குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பிற்பாடு, அது தனி நபர் தோட்டம் என்றால், நாங்கள் வந்து பனம்பழங்களை எடுத்துக்கொள்ளலாமா எனக் கேளுங்கள். பெரும்பாலும், தோட்டக்காரர்கள், பனை விதைகளை இலவசமாக கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை, ஒரு சிறு தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பனை மரங்களை வளர்க்கும் இவ்வித மக்களை ஏதேனும் ஒரு வகையில் நாம் அங்கீகரிப்பது கடமையாக இருக்கிறது.

பனை விதைகள் பெரும்பாலும் விழுந்து அழிந்து போகின்றவைகளே. ஆகவே அவைகளை உடனுக்குடன் விதைப்பது சிறந்தது. மழை இல்லாத பட்சத்தில் சுமார் ஒரு வார காலம் மட்டும் பனை விதைகளை வெயிலில் உலரவைக்கலாம். பனை விதைகளில் உள்ள ஈரப்பதம் மறைந்தவுடன், அதனை நிழலில் சேமிக்க வேண்டும். இப்படி சேமிக்கும் போது ஆறு மாதங்களுக்கு மேல் பனை விதைகள் உயிர்ப்புடன் இருக்கும். ஒரு வருடத்திற்கும் மேல் கூட இருக்கும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், பனை விதைகளை நட்டு ஒன்றரை வருடங்களுக்கு பின்பு பீலி வருவதை நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். பனை முளைப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாது போகும்போது, அதிக காலங்களை எடுத்துக்கொள்ளுகிறது என எண்ண இடமுண்டு. வெயிலில் கிடந்து உலர்ந்து போகின்ற பனங்கொட்டைகள் உயிர்ப்புத்தன்மை அற்று விடுகின்றன. அவைகளை ஊமைக்கொட்டை என்பார்கள். கரத்தில் எடுத்துப்பார்த்தால் அவைகள் மிகவும் இலேசாக இருப்பதை வைத்து அவைகள் முளைக்காது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

பனை மரங்களை விதைக்க ஏற்ற காலம் என்பது மழைக்காலம் தான். குமரி மாவட்டத்தில் ஆனி ஆடி சாரல் விழும் என்று கூறுவார்கள். ஆனி ஆடி நேரத்தில் பனை விதைகளை நட்டு கிழங்குகளை கார்த்திகை மார்கழி மற்றும் தை மாதங்களில் எடுப்பது வழக்கம். பிற இடங்களில் தை மாதம் துவங்கி சித்திரை வரை பனங்கிழங்குகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

பனை விதைகளை விதைக்க ஏற்ற இடம் என ஒன்றை மட்டும் கூறுவது சரியாயிராது. கடற்கரை பகுதிகளில் பனை மரங்கள் மிகுதியாக காணப்படும் என்றாலும், நாகர்கோவிலை அடுத்திருக்கும் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்திலும் பனை மரங்கள் திரட்சியாக வளருவதைப் பார்த்திருக்கிறேன். தஞ்சையை அடுத்த சதுப்பு நிலங்களிலும், சாத்தான்குளத்தையடுத்த தேரிக்காடுகளிலும் பனை மரங்கள் செழித்து வளருகின்றன. இவ்விதம் ஒரு மரம் பல சூழல்களுக்கு என தன்னை தகவமைத்துக்கொள்ளுவது என்பது ஆச்சரியமானது. மனிதர்கள் இவைகள் தங்கள் வாழ்விடங்களை ஒட்டியே வளர்த்து வந்திருக்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம் வரை பனை மரங்கள் தடையின்றி வளரும் என பனைமரத்தில் ஆய்வு செய்த அறிவர். டி. ஏ. டேவிஸ் அவர்கள் கூறுகிறார்கள்.

பனை விதைகள் விதைக்க எவ்விதம் குழி தோண்ட வேண்டும்? எத்தனை அடி ஆழத்திற்கு உரங்கள் உடவேண்டும், மணல் இடவேண்டும் போன்ற “அறிவியல்” உண்மைகளை பலர் கூறிக்கொண்டு வருகிறார்கள். அப்படியான எந்த கடின முயற்சிகளும் தேவையற்றது. ஒரு முறை பனை விதைகளை சேகரித்து வைத்துவிட்டு அவைகளை பிற்பாடு எடுத்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டோம். இரண்டு வாரங்கள் கழித்து முன்று நாட்கள் மழை பொழிந்தது. இன்னும் இரண்டு வாரத்தில் பனை விதைகள் யாவும் முழைத்திருக்கின்றன என நண்பனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஓடிச்சென்று பார்த்த போது, கோணிப்பைக்குள் இருந்து சுமார் அரை அடி நீளத்திற்கு பிஞ்சு விரல்களை நீட்டியபடி அனைத்து கொட்டைகளும் ஒன்றைஒன்று தழுவியபடி கிடந்தன. இந்த அனுபவம் பல சூழ்நிலைகளில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கின்றன. மண்ணே தேவையில்லாத சூழலில் மழையின் ஈரக்காற்று பனை விதை முளைக்கத் துடிக்கும் மேன்மையினை சொல்லிக்கொடுத்த தருணங்கள் இவைகள். ஆகவே தான் மழைக்காலத்திற்கு முன்பே விதைக்கச் சொல்லுகிறோம். மழை, உள்ளுறைந்திருக்கும் பனைமரத்தின் உயிர் இச்சையினை தூண்டிவிடுகிறது.

மழை குறைவான தமிழகத்தில் பனை விதைகளை விதைக்கையில், சற்றே மழை வரும் நாட்களை கவனத்தில் கொண்டு விதைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். இல்லையென்று சொன்னால் வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டியிருக்கும். முதல் தளிர் வந்துவிட்டதென்று சொன்னால், அவைகள் தப்பிப்பிழைக்கும் சூட்சுமம் கொண்டிருக்கும். ஒருவேளை மழை பொய்த்து வாடல் தென்பட்டால், சிறிது நீர் ஊற்றி காப்பாற்றிவிடலாம்.

பனை விதைகளை சேகரிக்கிறவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்கள். பனை விதைகள் விழுந்து மண்ணோடு மண்ணாக கிடக்கின்ற பொழுது, சேகரிக்க எடுப்பவர்கள் கைகளில் எடுத்தால் வராது. காரணம், பனை விதைகள் விழுந்த இடத்திலிருந்தே தனது வேரை மண்ணுக்குள் செலுத்த வல்லது. இந்த வீரியம் மிக்க பனையின் உயிர் தேடல் நமக்கு கூறும் உண்மை என்னவென்றால், பனை விதை ஆழமாக குழி தோண்டி புதைக்கப்படவேண்டியது அல்ல. மேலோட்டமாக விதை மூழ்கும் அளவிற்கு குழிதோண்டினால் போதும். ஆகவே, மற்ற மரங்களுக்கு ஏற்படுத்தும் குழிகளை போல ஆழமான குழிகள் தேவைப்படாது. இது எண்ணிக்கையினை அதிகப்படுத்தி, நேரத்தினை மிச்சப்படுத்தும். மழைக்காலங்களில் விதைக்கிறீர்கள் என்றால், ஒரு விதையினை மண்ணில் இட்டு, காலால் மிதித்து மண்ணிற்குள் புதைத்தால் போதும். குழி தோண்ட வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை.

பனை விதைகளை தேடுகிறவர்கள், இன்று யாழ் பனை என்ற ஒன்றினை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பனை மரத்தில் பல்வேறு இனங்கள் இருக்க, யாழ் இனம் மட்டும் ஏன் இவ்விதம் கடுமையாக முன்னெடுக்கப்படுகிறது என்கிற கேள்வி என்னில் எழுவதுண்டு. பனம் பழங்களின் பிரம்மாண்ட அளவே இவைகள் பால் மக்களை ஈர்க்கிறது என்பது தெளிவு. என்றாலும், யாழ் விதையில் உள்ள சிக்கல்களை நாம் உணர வேண்டும், இன்று விதைகள் மிக தேவையாக இருக்கும் சூழலில், ஒரு யாழ் பழத்திற்கு இணையாக ஐந்து சிறு பழங்கள் காய்க்கும் மரங்கள் கூட இருக்கின்றன. எண்ணிக்கையின் அடிப்படையில், இது ஒரு பெரிய காரியம். 3 விதைகள் பெரிதா, 15 விதைகள் பெரிதா? ஆனால், விதைகளை கலந்து எடுப்பது நமது சூழியலில் அனைத்து மரங்களும் இருக்கும் விதமாக பார்த்துக்கொள்ளுவது சிறந்தது.

பனை விதைகள் எப்படி ஊன்ற வேண்டும் என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. மூன்றாக இணைந்து விழுவதனால் அவைகளை பிரிக்கக்கூடாது என்கிற எண்ணம் உண்டு. பிரித்து ஒவ்வொன்றாக இடுகின்ற ஒரு போக்கு இன்று பரவலாக இருக்கிறது. இணைத்த் போடுகின்ற வழக்கம் தொன்மையானது. அவைகள் வேலியோரம் இடுகின்ற ஒரு முறைமை. மரங்கள் இணைந்து வளர்ந்து பின்னர் தனி திசைகளைத் தேடிக்கொள்ளும். ஆகவே வன விலங்கு சரணாலயங்கள் போன்ற இடங்களின் ஓரமாக இவ்விதம் விதைகள் இடுகையில், மொத்தமாக இடுவது சிறந்தது.

தற்பொழுது விதை நடுகிறவர்கள் சீராக நடவேண்டும் என்கிற எண்ணத்தில் 5 – 9 அடிகள் இடைவெளியில் பனை விதைகளை விதைக்கிறார்கள். ஒவ்வொரு விதையாக விதைக்கிற இவ்விடங்களில் ஒருவேளை விதைகள் பொய்த்துப்போய்விட்டால் என்ன செய்வது என்கிற எண்ணத்தின்படியே இரட்டை விதைகளை இடும் வழக்கம் இருக்கிறது. இரண்டும் முளைத்தாலொன்றைச் சிதைத்து (தவறுதான், என்றாலும் ஒரு வருடத்தை தொலைக்கவேண்டாம் என எண்ணுபவர்களுக்கு ஏற்ற முறைமை) சீராக வளரச் செய்யும் முறைமை இது.

5 – 9 அடி இடம் விட்டு ஒவ்வொரு விதையாக நடுவதே ஏற்புடையது. குறிப்பாக வேலியோரங்களில் நடுகின்ற பனை மரங்கள் பல்வேறு வகைகளில் நன்மை பயக்கக்கூடியவை. பல்லுயிர் பெருக்கம் ஏற்படவும், வேலி பகுதியில் ஏற்படும் பாதிப்புகளிலுமிருந்து பனை காக்கும்.

பனை விதை நடுகையில் ஊடு பயிர்களை குறித்தும் யோசிக்க இடமுண்டு, வேர்கடலை மற்றும் பயறு வகைகளை முதல் 5 வருடங்களுக்கு பயிரிடலாம், பிற்பாடு ஒரு ஐந்து வருடத்திற்கு முருங்கை போன்ற தாவரங்களைப் பயிரிடலாம். 10 வருடங்கள் சென்ற பின்பு, முந்திரி, புளி போன்ற மரங்களை வளர்த்து பயனடையலாம்.

பனை விதை நடவு என்பது இப்போதைய டிரண்ட் தானே என எண்ணவேண்டாம். பனை விதைகள் நமது எதிர்காலத்திற்கான சொத்து என்ற எண்ணத்துடன் அவைகளை பேண வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபடுபவர்களே எதிர்காலத்தை சமைக்கின்றனர்.

இறுதியாக, பனம் பழம் எனும் உணவுப்பொருள் நமது உணவு தட்டிலிருந்து மறைந்துவிட்டது, மீண்டும் இந்த உணவு நமது வாழ்வில் இடம்பெற்றால், பனை மரங்கள் தடையின்றி வளரும், நமது தேசம் தலைநிமிர்ந்து நிற்கும்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களாக

9080250653

malargodson@gmail.com

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

பனை – அரசியல் கடந்து சிந்திப்போம்

ஜூலை 17, 2019

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2.5கோடி பனை விதைகளை ரூ 10கோடி செலவில் வாங்கி கடற்கரைப் பகுதிகளில் நடப்படும் என அறிவித்திருந்தார். வரவேற்கத்தக்க  ஒரு சிறந்த முயற்சி. என்றாலும் இவற்றின் உள்கிடப்புகளை சற்றே உணர்ந்து கொள்வது நல்லது.

Edapadi

தமிழகத்தில் காமராஜர் காலத்திலிருந்தே பனை மரங்கள் நட்டு வளர்த்துவரப்படுகின்றன. ஆனால் அப்போது தமிழகம் எங்கும் பனை சார்ந்த தொழில்கள் முன்னெடுக்கப்பட்டன. பனை சார்ந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அரசு பல்வேறு வகைகளில் சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தன. குறிப்பாக பனை வாரியம் சிறப்புற செயல்பட்டுவந்தது. இலங்கையிலிருந்து பனை ஆர்வலர்கள் தமிழகம் வந்து, பனை சார்ந்து நடைபெறுகின்ற புது முயற்சிகள் அனைத்தும் இங்கிருந்து கற்று சென்றிருக்கின்றனர்.

ஆகவே பனை விதைப்பு என்பது தனித்த ஒரு பணி அல்ல அது பனை தொளிலாலர் நலனையும் உள்ளடக்கிய ஒன்று.  தமிழக அரசு தற்போது முன்னெடுத்திருக்கும் இந்த  முயற்சியானது மிகவும் பாசாங்கானது, கண்துடப்பு காரியம் என்றே எண்ணுகிறேன். . இவைகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்றன என்பதனைப் பொறுத்தே இவற்றின் பெறுமதி இருக்கும்.

Thiruma

இவைகள் ஏன் பாசாங்கானது? முதலாவதாக, பனை தொழிலாளர்கள் சார்ந்து எந்த அறிவிப்பும் தற்போதைய அரசு வெளியிடவில்லை. பனை தொளிலாளர்கள் அருகி வரும் சூழலில், பனை சார்ந்து வேலை வாய்ப்புகள் பெருகும் வாய்ப்புகள் இருக்கையில், பனை தொளிலாளர்களை கவனியாது, பனை விதைகளை நடுவதற்கு என ஒதுக்கப்படும் இந்த பணம், அரசு மூடி மறைக்கும் பனை தொளிலாளர்களின் எதிர்காலமே தான். இந்த அறிவிப்பிலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையிடமிருந்து பனை விதைகளை வீலைக்கு வாங்கும் என்பதாக அறிவித்திருக்கிறார். பனை மரம், வெளாண்மை சார்ந்தோ, இல்லை தோட்டக்கலை சார்ந்தோ இதுவரை முன்னிறுத்தப்பட்டதாக நாம் எங்கும் காணமுடியவில்லை. அப்படியிருக்க, பனை விதைகளை எங்கிருந்து பெறுவார்கள்?

ஆம் பனை விதைகளை தோட்டக்கலைத் துறையினரோ, வெளாண் அதிகாரிகளோ, வனத்துறையினரோ, தேடி எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள். பனை விதைகள், லாரி லாரியாக பனைதொழிலாளிகளிடம் இருந்து குரைந்த விலைக்கு வாங்கப்படும். ஊழல் புரையோட இதனை அரசு அதிகாரிகள் தங்கள் சுயலாபத்திற்கென பயன்படுத்துவார்கள். மிக சரியான எண்ணிக்கைகளில் வாங்கப்படுவதோ, அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் நடப்படுவதோ எவ்விதம் கண்காணிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. கடற்கரையிலுள்ள மீனவர்களூக்கோ, நூறுநாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கோ இதனால் என்ன பயன் இருக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை.

என்ன செய்திருக்கவேண்டும் என்றால், நலிவுறும் பனை தொழிலாளிகள் அல்லது அவர்தம் குடும்பத்தினர், பனை விதைகளை நடுவதற்கான உரிமம் வழங்கப்படவேண்டும். இவ்விதம் பனை நடுபவர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும், பனை விதைகளுக்கான விலையும் இவர்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், இப்பணியின் நேர்மையும் ஆழமும் வெளிப்படும் விதமாக அமைந்க்டிருக்கும்.

Seeman

முதல்வர் அவர்கள், கடற்கரைப் பகுதிகள் என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது மேலும் பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது. பனை மரங்கள், கடல் மட்டத்க்டிலிருந்டு 800 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடியது, அப்படியிருக்க ஏன் கடற்கரை பகுதிகளில் மட்டும் நிலத்க்டடி நீர் மட்டம் உயரவேண்டும் என கரிசனைக் கொள்ள இயக்குவது யார்?

பனை நெய்தல் நில மரம் தான்,  அனால் தமிழகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம், கடற்கரைப் பகுதிகளில் அல்ல, பிற இடங்களிலேயே குறைந்துள்ளன. அப்படியிருக்க, கடற்கரைப்பகுதிகளில் மட்டும் நடவேண்டும் என கூறுவது ஏன் என புரியவில்லை.

பனை மரங்கள் குறைந்த பட்சம் 400 மிமீ மழை இருந்தாலே வளரக்கூடியது. தமிழகத்தில் உள்ள வறட்சி நிறைந்த  பகுதிகளிலும், மலை பாங்கான பகுதிகளிலும், வன பகுதியின் எல்லைகளிலும், ஆற்றோரங்களிலும், ஏரிக்கரைகளிலும் இவைகள் நட்டு பேணப்படவேண்டிய மரம் தான். முதல்வர் அவர்களின் கூற்றில் இவைகள் இல்லாது போனது ஏன் எனப் புரியவில்லை.

முதல்வர் அவர்களின் பனை சார்ந்த பங்களிப்பு என்பது வெறும் 10 கோடி ரூ ஒதுக்கீடு. இது அரசியல் நோக்கு கொண்ட ஒரு முன்னறிவிப்பு என்பதை சிறு பிள்ளைக் கூட அறியும். பனை விதைகள் நடுவது தொன்றுதொட்டு நடைபெறும் ஒரு மானுட செயல்பாடு என்றாலும், 2017 ஆண்டிலிருந்து மக்கள் பெருவாரியாக பனை விதைகளை நட்டுவருகிறார்கள். இவைகள் மக்கள் இயக்கமாக மாறுகின்ற தருணத்தில், தனது பிறந்த நாளை ஒட்டி தோழர். திருமாவளவன் அவர்கள், ஒரு லட்சம் பனை மரங்களை நடுவதற்கு முயற்சிகள் எடுத்தார்கள். அரசியலில் அது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை பனை நடுவதை தனது அனல் பேச்சால் முன்னெடுத்துக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தலைவர். சீமான் அவர்கள், உடனடியாக பனை விதைகள் நடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பனையேறிகளுக்காக எந்த நல திட்டங்களும் செய்யாத தி மு கா தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடியில் பனை ஓலைப் பட்டையில் பதனீர் குடித்து தனது பனை சார்ந்த உறவை வெளிப்படுத்தினார். இந்த வரிசையில் ஆ தி மு க, பி. ஜெ. பி மற்றும் காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என நாம் கணிக்க இயலும். அவைகள் கொள்கை ரீதியாக சில முன்னெடுப்புகளை எடுக்குமே ஒழிய, எவ்வகையிலும் தங்களை களப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

அப்படியானால் பனை சார்ந்து செயல்படும் அத்தனை கட்சிகளும் அரசியல் செய்கிறார்களா? முதலமைச்சரின் 10 கோடி தேவையற்றதா? என்ற கேள்விகள் எழும்புவது நியாயமானதுதான். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல, சமய நிறுவனங்களின் அமைப்புகள் சார்பிலும் இவைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். மக்கள் இயக்கமே, இவ்வித சூழ்நிலைக்குள், அரசையும் சமய தலைமைகளையும் தள்ளுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, தங்கள் நேரக்த்தை ஒதுக்கி, பனை மரத்தினை நடுவதற்கு என தங்கள் நேரத்தையும், பொருள் உதவியையும் அளித்த எண்ணிறந்த தமிழக மக்களை நான் வணங்குகிறேன். இது காந்திய வழியில் நாம் போராடிய இரண்டு ஆண்டு போராட்டத்தின் வெற்றி. தமிழகத்தில் இதற்கு இணையான ஒரு மென் போராட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்குமா என்றால் அது சந்தேகமே.

இப்போது இதன் அடுத்த கட்டமாக நாம் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியுள்ளது. அவைகளையும், மக்கள் பங்களிப்பாக வைக்க கடமைப்பட்டுள்ளோம். அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பொதுவிடங்களில் பனை மரங்கள் கண்டிப்பாக கம்பீரமாக நிற்கவேண்டும். இவைகளை,மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுக்கலாம். அப்படியே, நமது தமிழக அரசு தலைமைச்செயலகம் செயல்படும் கோட்டையில் பனை மரங்கள் நிற்கவேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பனை மரம் நிற்கவேண்டும். இது, பனை மரம் நீரை குறைவாக உறிஞ்சும் மரம் என்கிற ஒரு எண்ணத்தை மட்டுமல்ல, நமது மாநில மரம் என்பதையும், இதன் சூழியல் முக்கியத்துவத்தையும்  பரவலாக நமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தும்.

அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது, பனை விதைகளை நடும் திட்டம் அல்ல, மாறாக

  1. பனை மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட அரசு ஆவன செய்ய வேண்டும்
  2. பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
  3. பனை தொழிலாளரிடமிருந்து கருப்பட்டிகளை அரசு கோள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
  4. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும், பனை சார்ந்த கைவினை கலைஞர்களைக் கொண்டு வரும் தலைமுறையினருக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
  5. நெகிழிக்கு மாற்றாக இயன்றவரை பனை ஓலைப்பொருட்களை அரசு முன்னிறுத்தவேண்டும்.
  6. அழிந்து போன பனை வாரியத்தை மீட்டெடுக்க வேண்டும்
  7. கள்ளிறக்க அனைத்து பனை தொளிலாளிகளுக்கும் உரிமம் கொடுக்கவேண்டும்.
  8. பனை சார்ந்த ஆய்வு படிப்புகளை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கவேண்டும்.
  9. பனை மரம் சார்ந்த தனி துறை பல்கலைக்கழகங்களில் நிர்மாணிக்கப்படவேண்டும்.

மேற்கொண்ட முயற்சிகள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டாலே பனை வீரியமாக வளர்ந்து பெருகும். இல்லையென்று சொன்னால் இதுவும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஓட்டு வங்கியினை கருத்தில் கொண்டும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகவே இருக்கும்.

இவைகள் இப்படியிருக்க மக்கள் மகிழும் ஒன்று இதன் பால் உள்ளுறைந்திருக்கிறது. பொறுப்புள்ள குடிமக்களாக  பனை விதையினை விதைத்தவர்கள், ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் மற்றும் கோடிகள் என பனை விதைகளை விதைத்ததினாலேயே,  அரசு பனை நோக்கி தனது கண்களை திருப்பியிருக்கிறது.

இன்றிலிருந்து, கட்சிகளோ, தன்னார்வ தொண்டர்களோ, சமய நிறுவனங்களோ, தனி நபர்களோ முன்னெடுக்கவேண்டிய முக்கிய கடன் ஒன்று உண்டு. இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் 10 இலட்சம் பனை ஏறும் இளைஞர்களை களத்தில் இறக்குவது. இதனை நாம் சாதித்துவிட்டால், தமிழகத்தில் டஸ்மாக் இருந்த சுவடு இன்றி அழித்துவிடலாம்.

பனை மரம் நமது சூழியலின் அங்கமான ஒரு மரம், இன்று தண்ணீர் தேவைகளுக்கென என்று மட்டுமல்ல, அதன் பன்முக பங்களிப்பிற்காக பனை மரம் நமது மண்ணில் நிறைந்திருக்க வேண்டும். அதனை வாழ்வியலாக கொண்டு வளரும் ஒரு புதிய தலைமுறையினரை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனை மரங்கள் நிற்கும் நிலத்திற்கு அரசு சலுகைகள் அளிக்கலாம். ஏக்கருக்கு குறைந்த பட்சம் இவ்வளவு பனை மரங்கள் நிற்கலாம் என அரசு கொள்கைகளைக் கொண்டு வருவது போன்றவையே பனை மரத்தினை வாழவைக்கும்.

எளிமையாக சொல்லவேண்டுமென்று சொன்னால், பனை தொழிலாளிகளை ஒரு அரசு ஊக்குவித்தாலே பனை மரங்கள் செழித்து வளரும். அரசு அதனையே ஆவன செய்ய வேண்டும்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களாக

9080250653

malargodson@gmail.com

பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirumavalavan-collection-palm-seeds

 

 

பனையும் பாறு கழுகும்

ஜூலை 1, 2019

பிணம் தின்னி கழுகுகள் அழிவு நிலையில் இருக்கின்றன என்னும் தகவல் எனக்கு அருளகம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பாரதிதாசன் மூலமாகவே தெரியவந்தது. பாரதிதாசன் அவர்களும் பனை சார்ந்த சில முன்னெடுப்புகளை நடத்திவந்தவர் ஆகையால் பிணம் தின்னி கழுகுகள் குறித்த அவரது தேடுதலில் பனை மரங்களின் பங்களிப்புகள் இருக்குமா எனக் கேட்டிருந்தேன் இல்லை என்றிருந்தார்கள். அவர்கள் கூற்றின்படி வலி நிவாரண மருந்துகளான  டைக்ளோபினாக்  (diclofenac) மட்டுமில்லை,  அசிக்ளோபினாக் (Aceclofenac), ஃப்லுநிக்சின் (Fluinixin), நிமிசுலைட் (Nimesulide) போன்றவையே இப்பறவைகளின் அழிவிற்கு காரணமாக இருந்தன என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் இப்பறவை என்னை எவ்வகையில் ஆட்டிப்படைக்கப்போகிறது என்பது அப்போது நான் அறியாதது.

 

இந்தியாவில் ஒன்பது வகையான பிணம் தின்னிக் கழுகுகள் இருப்பதாக சொல்கிறார்கள். இவைகளில் நான்கு வகைகள் மட்டுமே தமிழகத்தில் காணப்படுகின்றன. கருங்கழுத்துப் பாறு கழுகுகள், செம்முக பாறு கழுகுகள், மஞ்சள் முகப் பாறு கழுகுகள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இது தவிர தமிழகத்தில் எகிப்திய பாறு கழுகுகளும் இருக்கின்றன. இந்திய அளவில் பிணம் தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 97% குறைவாக வீழ்ந்து போய்விட்டதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அதிர்ச்சிகரமானது. ஒரு அபாயத்தின் எதிரொலியாக தான் இவைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எவ்வகையான அபாயம் என நாம் இப்போது உய்த்துணர  முடியாவிட்டாலும், இவைகள் நமது வாழ்வுடன் தொடர்புடையவைகள் என்று உறுதிபட கூறமுடியும்.

கழுகு என்ற வார்த்தை சிறு வயதிலேயே எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. திருமறையில் கழுகு சார்ந்த பல்வேறு வசனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக லேவியர் 11ல் காணப்படுகின்ற உண்ணா பறவைகளின் பட்டியலில் கழுகு குறிப்பிடப்படுகிறது. திருமறையைப் பொறுத்தவரையில் கழுகு ஒரு அசுத்தமான பறவை என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கழுகு குறித்த மிக ஆழ்ந்த அவதானிப்புகள் கொண்ட திருவசனங்களும் கடவுளின் அடியவரைச் சுட்டும் வசனங்களும் காணக்கிடைப்பது திருமறையின் பன்மைத்தன்மைக்குச் சான்று.

Vulture

“ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ

புதிய ஆற்றல் பெறுவர்.

கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்;

அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;

நடந்து செல்வர்; சோர்வடையார்.”  (ஏசாயா 40 திருவிவிலியம்)

“பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்” (மத்தேயு 24: 28  திருவிவிலியம்) போன்றவை கழுகுகளின் வாழ்க்கை முறையினை மிக கூர்ந்து அவதானித்த சமூகத்தால் கூறப்பட்டவைகள். இவசனங்கள் கழுகுகளை  குறைவாக மதிப்பிடுவன அல்ல என்பதனையும் நாம் உய்த்துணரலாம்.

நமது சமய மரபில், பிணம் தின்னிக் கழுகுகளின் தொன்மம் நீடித்திருக்கின்றது என்பதற்கு திருக்கழுக்குன்றமே சான்று. சற்றேரக்குறை 20 ஆண்டுகளுக்கு முன்புகூட இரண்டு கழுகுகள் தினமும் திருக்கழுக்குன்றம் வந்து சென்றுகொண்டிருந்திருக்கின்றன. அவைகள் கோவில் பூசாரிகளால் படையலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

பிணங்களுடன் தொடர்புடையவைகள் அனைத்தும், தீட்டானவை, தீண்டத்தகாதவை என எண்ணும் ஒரு வழக்கம் பொதுவில் இருந்திருக்கின்றது.  இவ்வெண்ணங்கள் நவீன  சூழியல் எண்ணங்கள் நிகழாத ஒரு காலத்தில் ஏற்பட்டவைகள் என்றாலும், இவகளுக்குள் சூழியல் எண்ணங்கள் உள்ளுறைந்திருக்கின்றன என்பது ஆழ்ந்து நோக்கின் தெரியவரும்.

முற்காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழும் நிலையில் நமது சமூக அமிப்புகள் இருந்துவந்தன. போர்கள் பிணங்களை பெருமளவில் விட்டுச் செல்பவை. அச்சூழலில் தாமே வேட்டையாடும் சமூகங்களும் பெருமளவில் இருந்துவந்தன. இப்படி இருக்க அசுத்தமான பறவைகள் என சொல்லி இப்பறவைகளை உண்ணத்தகாதவைகள் என அறிவிப்பதே ஒரு சிறந்த சூழியல் செயல்பாடு என்றே எண்ணுகிறேன். இறந்துபோன பிணங்களை சுத்தம் செய்யும் கழுகுகள் வெகு சுலபமாக வேட்டையாடும் எல்லைக்குள் இருப்பவை. இவைகளை வேட்டையாடுவது வழமையானால் எப்படியும் அவைகளின் எண்ணிக்கை குறையும். பெருமளவில் கால்நடைகளை தங்கள் ஆதாரமாக கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு சூழியல் சீர்கேடு ஏற்படாமல் காக்கும் இப்பறவைகளின் தேவை அதிகம் என்பதனை உணர்த்தே இருப்பார்கள். ஆகவேதான் திருமறையில் இவைகள் அசுத்தமானவைகள் என விலக்கப்பட்டிருந்தன என நாம் கொள்ள இடமுண்டு.

 

பாறு கழுகுகள் சார்ந்த மற்றொரு தகவலும் உண்டு. இவைகள் அடைகாக்கும் பருவத்தில் ஒரு முட்டை மட்டுமே இடும். அவைகளின் வாழிடம் சார்ந்து, உணவு சார்ந்து இப்படி இருக்கையில் சமய நம்பிக்கையாளர்கள் அதனை உண்ணத்தகாதது என்று விலக்கியே, அல்லது அதற்கு உணவிட்டு பராமரித்தோ காத்து வந்திருக்கிறார்கள். நவீன வாழ்வில் நமக்கு அவைகளோடு எந்த பிணைப்பும் இல்லாமல் போனபடியால், நம்மால் பனை மற்றும் கழுகு சார்ந்த எந்த உணர்வுகளும் ஏற்படவிலை. ஆகவே இவைகள் இணைந்தே அழிகின்றன இவைகளை காக்காவிடில் நாம் அழிவின் பாதைகளை விசாலமாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதுவே உண்மை.

 

நான் 15 வயது சிறுவனாக இருக்கும்போது, குமரி மாவட்டத்திலுள்ள  ஜேம்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற இடத்தின் அருகில் காணப்பட்ட காணிமடம் என்ற கடற்கரை  கிராமத்திற்கு சென்றிருந்தேன், அங்கே தான்  முதன் முதலாக நேரடியாக பிணம் தின்னிக் கழுகுகளை தூரத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே நான்கைந்து கழுகுகள் எதையோ தின்றுகொண்டிருந்தன. ஒருவேளை கரைஒதுங்கிய மீனாக கூட இருந்திருக்கலாம். அவ்வயதின் அச்சத்தின் காரணமாகவும் நான் அதன் அருகில் செல்ல துணியவில்லை. என் வாழ்நாளில் அதன் பின்பு நான் பாறு கழுகுகளைக் ஒருபோதும்  கண்டது இல்லை.

 

பாறு என்றாலே பிணம் தின்னி கழுகு தான் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழகராதியும் அதனை உறுதிப்படுத்தும். ஆகவே இன்று மக்களின் மனதில் இருக்கும் மனத்தடைகளைப் போக்க சூழியலாளர்கள் இவைகளை பாறு கழுகுகள் என்றே அழைக்கின்றனர். பிணம் தின்னி கழுகு என்பது ஒரு வசைச்சொல்லாக நீடித்துவிட்டது. கழுகின் சமூக பங்களிப்பை உணராத ஒரு காலகட்ட சொற்றொடர் இது என்றே நான் கருதுகிறேன். ஆகவே இன்று மிக முக்கியமாக இப்பறவை குறித்த கூர்ந்த அவதானிப்பு தேவைப்படுகின்றது. பல்வேறு வகைகளில் இப்பறவையினைக் காக்க அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். பாரதிதாசன் பல்வேறு முறையில் இது சார்ந்த விழிப்புணர்வுகளை அருளகம் சார்பில் முன்னெடுக்கிறார். சர்வதேச அளவில் பாறு கழுகுகள்  சார்ந்த பாதுகாப்பில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

 

நான் மும்பை மாற்றலாகி வந்த போது என்னை ஆரே பால் குடியிருப்பு என்ற பகுதியில் என்னைப் பணியமர்த்தினர். கானகப்பகுதியான இந்த இடம் 1951ல் ஆரே பால் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1990களின் இறுதிவரை மிக சிறப்பாக செயல்பட்ட இந்த  அரசு நிறுவனம் பின்னர் பல்வேறு தனியார் பால் நிறுவனங்களால் வீழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மாடுகள் இங்கே இருந்ததால், மாடுகளின் மரணம் என்பது தினசரி வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆகவே ஆரே பகுதியில் மரணிக்கும் மாடுகளை எடுத்துப்போடும் இடங்களில் இவ்வித பறவைகள் அதிகம் காணப்பட்டதாக என்னிடம் திருச்சபையினர் பலர் கூறியிருக்கிண்றனர். இரு மாதங்களாகியும் இதுவரை நான் ஒன்றையும் இங்கே காணவில்லை என்பது, இங்கு நிகழ்த்த அழிவிற்கு தகுந்த சான்று.

 

பொதுவாக எவ்வித அழுகிய நிலையிலுள்ள பிணம் என்றாலும், அந்த மிருகம் எவ்விதம் நோயுற்று இறந்திருந்தாலும் பாறு கழுகுகளை எவ்வித நோயும் தாக்குவதில்லை. இந்த நோய் தொற்று தாக்கா தன்மை மிகவும் அதிசயமான ஒன்று. அதிலும் இன்று பலவேறு மிருகங்கள் பறவைகள் வாயிலாக நோய் தொற்றுகள் மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் சூழலில், பாறு கழுகுகளின் வீரியமான தன்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. கழுகுகளின் செரிமான சுரப்பிகள் அத்துணை சக்திவாய்ந்தவைகளாக இருக்கின்றன. ஆனால் வலி நிவாரண மருந்தான டைக்ளோபினாக்  உடம்பில் செலுத்தப்பட்ட மாடுகளின் பிணங்களில் இருக்கும் மருந்தின் வீரியத்தை இதன் செரிமான சுரப்பிகளால் ஏதும் செய்ய இயலவில்லை. பாறு கழுகுகள் கொத்து கொத்தாக மடிந்தது இவ்விதமாகத்தான். அவைகளின் சிருநீரகங்கள் பதிக்கப்பட்டு மடிந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் நவீன உலகில் நாம் பயன்படுத்தும்   மருந்துகள் கூட  ஏதோ ஒருவகையில் நமது சூழியலில் பெருத்த பாதிப்பை விட்டுச் செல்லுகின்றன என்பதும் அது அவ்வளவு எளிதாக கடந்து செல்லப்படக்கூடிய ஒன்று அல்ல என்பதும் தெரியவருகிறது.

 

ஆகவே நான் எனது பங்களிப்பாக பனை மரங்கள் இவைகளின் வாழ்வில் ஏதேனும் நன்மை பயக்குமா என்ற கோணத்தில் ஆய்வுகளை முன்னெடுக்க ஆரம்பித்தேன். பனை இவைகளின் வாழ்விடமாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம். அவ்விதமே பனைமரங்கள் மற்றும் உயர்ந்த மரங்கள் அழிக்கப்பட்டமையாலும் மருந்துகளின் வீரியத்தாலும் இப்பறவைகள் ஒரிசாவில் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன என்ற உண்மையினை பத்திரிகை வாயிலாக அறிந்துகொண்டேன். இது ஒரு தகவலாக எனக்கு இருந்தாலும் பனை மரத்தில் கழுகுகள் அமர்ந்திருக்கும் காட்சியினை கண்டு அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. இன்றுவரை எனது வாழ்வில் நிறைவேறா ஆசையாகவே அது நிலைகொண்டிருக்கின்றது. ஆனால் பனைமரத்தில் இவைகள் வாழும் என்பதனை ஆரே மக்கள் என்னிடம் தெரிவித்துக்கொண்டே இருந்தனர்.

 

எனது தேடுகையை இணையம் வழி தொடர்ந்தபோது மற்றொரு செய்தி என்னைக் அதிகமாக கவர்ந்தது. மும்பையில் வாழும் பார்சி இன மக்கள் தங்கள் இனத்தில் மரித்தவர்களை எடுத்துச் சென்று “அமைதி கோபுரம்” என்ற பகுதியில் இட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள். பாறு கழுகுகள் அங்கே வந்து அந்த பிணங்களை உண்டு விடும். இது அவர்களது சமய நம்பிக்கையைச் சார்ந்து அமைக்கப்பட்ட ஒரு தொன்மையான மரணா சடங்காகும். இந்த சடங்கிற்கு பின்னணியமாக இரண்டு காரியங்களைக் குறிப்பிடுகின்றனர். மரித்தவர்களை தூய்மையான நெருப்பிற்கு இரையாக்குவது தகாது என்றும் பூமியிலே மரித்தவர்கள் உடலை விட்டு பூமியை தீட்டுப்படுத்தக்கூடாது என்பதும் இவர்களது எண்ணம். மேலும், கழுகுகள் உடலை எடுத்துச் செல்லுவது மரியாதைக்குரிய இறுதிச் சடங்கு என்றே கருதுகிறார்கள். இன்று அவர்களின் வாழ்வில் ஒரு மிக முக்கிய சிக்கலை இப் பாறு கழுகுகளின் மறைவு ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் இறுதி சடங்குகளின் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இச்சிக்கல்கள் எளிதில் பதில் கூறப்பட இயல்பவை அல்ல.

Parsi ToS

மும்பை பகுதியில் இருவேறு இடங்களில் பார்சி சமூகத்தினரின் ” அமைதி கோபுரங்கள் ” இருப்பதை அறிந்து அவைகளின் புகைப்படங்களையும் தேடினேன். பார்சி மக்கள் “அமைதி கோபுரங்களை” மிகவும் புனிதமான இடங்களாக கருதுகிறார்கள்.  ஆகவே புகைப்படங்கள் எடுக்கவோ எவரும் அருகில் செல்லவோ அனுமதி இல்லை. எனது தேடுதல் தொடர்ந்தபோது மங்கலான ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம் எனக்கு கிடைத்தது. “அமைதி கோபுரத்தை”ச் சூழ  பனை மரங்கள் நிற்பதும், அங்கே பாறு கழுகுகள் வரிசையாக அமர்த்திருக்கும் படத்தை பார்த்தபோது ஒரு மிகப்பெரும் உள எழுச்சி என்னுள் நிகழ்ந்தது. அப்படியானால் பார்சி இன மக்களுடன் இணைந்து வாழும் பாறு கழுகும் பனை மரங்களும் முக்கிய தடயங்களாக எழுந்து வருவதைக் கண்டேன்.

 

இதற்கு ஏற்றார்போல் ஆரே காலனியிலிருந்து புறப்படும் ஒரு பனங்காடு ஐந்தாறு கிலோமீட்டர் நீளத்திற்கு செல்லும் ஒரிடத்தைக் கண்டேன். அந்த பனை மரங்கள் நிற்கும் நிலம் ஒரு பார்சி மனிதருக்கு சொந்தமானது என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். பல்வேறு வகைகளில் பார்சி இனத்தவருக்கும் பனை மரத்திற்கும் தொடர்புகள் விரிந்த வண்ணம் சென்றுகொண்டிருந்தன. பார்சியின் நிலத்தைத் தவிர பிற இடங்களில் உள்ள பனை மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன என்பது மேலதிக உண்மை. அப்படியானால் பனை சார்ந்த சமூக வாழ்விற்கும், சடங்குகளிற்கும் பின்னால் ஒரு சூழியல் சங்கிலி தொடர் இருந்துகொண்டிருந்திருக்கிறது. பல்வேறு இடங்களில் அக்கண்ணிக்கள் பொட்டித் தெறித்து போய்விட்டதை நாம் உணராமல் இருக்கின்றோம் என்பது தான் உண்மை.

 

சமீபத்தில்  திரு. பாரதிதாசன் அவர்கள் எனக்கு ஒரு முக்கிய புகைப்படம் ஒன்றைப் பகிரியில் அனுப்பியிருந்தார். பனை மரங்களுக்கும் பாறு கழுகுகளுக்கும் உள்ள பிணைப்பு குறித்து நான்  மீண்டும் ஆர்வமுடன் செயலாற்ற அது ஒரு காரணமாக அமைந்தது. ஆம், பனை மரத்தின் மீது பாறு கழுகு அமர்ந்திருக்கும்  புகைப்படமே தான். வெள்ளை  முதுகு பாறு கழுகாக இருக்கும் என நினைக்கிறேன். இத்துணை தெளிவான ஒரு புகைப்படத்தை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. மிகவும் தன்னெழுச்சியுடன் நான் இக்கட்டுரை  எழுத காரணம் இதுவே.

pARu

ஆம் பனை மரங்கள் ஒரு சிறந்த வாழிடம். இவ்வாழிடங்கள் அழிக்கப்படுகையில் அதை சார்ந்து வாழும் கழுகுகள் மட்டுமல்ல எண்ணிறன்ட்த வேறு பல உயிரினங்களும்  கூட அழிந்து போகும் ஒரு சூழல் ஏற்படுகின்றது. தமிழகத்தில் அழிந்துபோன பாறு கழுகுகளின் பின்னணியில் கண்டிப்பாக நம்மால் அழிக்கப்பட்ட பனைமரங்கள் ஒரு காரணமாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது. சூழியல் குறித்து பேசிய எவரும் இதுவரை பனை மரத்திற்கும் சூழியலுக்கும் என்ன தொடர்பு என்ன என பேசியது இல்லை. இதுவரை எவருமே பனை மரத்தின் பங்களிப்பினையும் பாறு கழுகுகளின் அழிவினையும் இணைத்து பேசியதும் இல்லை என்றே கருதுகிறேன். ஒரு வகையில் நாம் காணத்தவறிய நமது சூழியல் மரமாகிய பனை தான் இப்பறவைகளின் ஆதார விசையாக இருந்திருக்குமோ?

PaaRu

1993ஆம் ஆண்டு நியூ யார்க் டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கெவின் கார்ட்டர் என்ற புகைப்பட கலைஞரின் படம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சூடான் நாட்டில் நடைபெற்ற பஞ்ச காலத்தின் ஆவணமாக உலகின் மனசாட்சியை உலுக்கிய படம் அது. பசியால் வாடிய ஒரு சிறுவன் தனது மரண தருவாயில் உணவு தேடி ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கும் இடம் நோக்கி செல்லும் படம் அது. மெலிந்து எலும்புகளைத் தோல் போர்த்தியிருக்க வறுமையும் பசியும் மரணமும் வாசலில் வாசலில் வந்து நிற்கும் ஒரு தருணம். அந்த சிறுவனின் பின்புறம் பிணம் தின்னி கழுகு ஒன்று வந்து நிற்கும் படம் இப்படியும் நிகழுமா என உள்ளத்தையும் உலகத்தையும் ஒருசேர கேள்வி எழுப்பியது. மானுடம் இணைந்து வறுமைக்கு எதிராக போராடவேண்டியதன் அவசியத்தை கூறும் படம் அது.

Kevin Carter

இன்று பனை மீதிருக்கும் கழுகு இவற்றின் நேர் மறு பக்கத்தை நமக்கு காண்பிக்கின்றது. மனிதன் அழிக்கும் இருவேறு உயிர்களின் சாட்சியாக.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

e-mail: malargodson@gmail.com

அலைபேசி: 9080250653


%d bloggers like this: