Archive for ஓகஸ்ட், 2019

பனை நகரம் 12

ஓகஸ்ட் 21, 2019

பனைக் கடவுள்

மும்பை சென்ட்ரல் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு இடம். மும்பை வந்தபோது இளம் போதகர்களாக இங்கே நாங்கள் தங்கியிருந்தோம். மெதடிஸ்ட் சென்டர் என்று அழைக்கப்படும் மும்பையின் மெதடிஸ்ட் கட்டிடம் இங்கே தான் இருக்கிறது. எங்கள் முன்னாள் பேராயர் இருந்த வீடும் இதன் அருகில் தான் இருக்கிறது. பைகுல்லாவில் உள்ள எங்கள் பொருளர் அலுவலகத்திற்கு செல்ல்வேண்டும் என்றாலும், அவ்விடத்தில் வசிக்கும் போதகர்களை சந்திக்க வேண்டும் என்றாலும், மும்பை சென்டிரல் ஒரு முக்கியமான நிறுத்தம். ஆகவே இந்த இடம் மெதடிஸ்ட் போதகர்களுக்கு மிக முக்கியமான ஒரு இடமாகவே இருந்தது. என் வாழ்நாளில் நான் மிக அதிகமாக ஒரு இரயில் நிலையத்தில் ஏறி இறங்கியிருப்பேன் என்றால் அது மும்பை சென்ட்ரல் தான்.

மும்பை சென்ட்ரல் இவ்வளவு என்னோடு தொடர்புடையாதாக இருந்தாலும் இப்பகுதியில் நான் பலமுறை சுற்றிவந்திருந்தாலும் நான் நேராக போய்வரும் சில வழிகள் உண்டு. எங்கள் அனைத்து அலுவல் சார்ந்த பணிகளும் மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தான் இருக்கிறன. ஒருமுறைக்கூட நான் தவறியும் இந்த இரயில் நிலையத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றதில்லை. ஒருவேளை நான் அவ்விதமாக சென்றிருந்தாலும்கூட என்னால் பனைக்கும் இப்பகுதிக்குமான தொடர்பினை எவ்வகையிலும் இணைத்து யோசித்திருக்க இயலாது, அந்த அளவிற்கு நர்கர்மயமாக்கலின் உள் இழுக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதி இது.

 

மும்பை சென்டிரல் இரயில் நிலையத்திலிருந்து  வெளியே வந்த பின் மேற்குபக்கமாக இரண்டு நிமிடங்கள் நடந்தால் வருகின்ற முக்கிய இணைப்புச் சாலை தான் “தார்தியோ” (Tardeo) என்ற இடம். இந்தியாவின் மிக உயரமான இரட்டைக்கோபுரங்கள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றது. இப்பகுதிக்கும் பனைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமென்று சொன்னால் நானே நம்பமாட்டேன். ஒரு பனை மரத்தையோ அதன் ஓலை துணுக்குகளையோ கூட இன்று இந்த சந்திப்பில் நாம் காணமுடியாது.

பனை சார்ந்த எனது தேடுதலில் ஒரு வாரத்திற்கு முன்பு, பாலமோகன் சிங்கடே என்பவர் எழுதிய  “A Letter  from  Bombay or  Mumbai: On the Troubles of Renaming as a Decolonial  Act”  என்ற கட்டுரை கையில் கிடைத்தது. இந்த கட்டுரை, மும்பையின் பெயர் மாற்றங்கள் எவ்வளவு அபத்தமானது எனபதை சுட்டிக்காட்டும் விதமாக எழுதப்பட்டது. நான் வாசிக்கையில் எனக்கான ஒரு முக்கிய திறப்பு அங்கே இருந்தது. போகிற போக்கில் ஆசிரியர் எழுதிய அந்த குறிப்பு என்னை அலைக்களித்த  சொற்களை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. மும்பையின் பல்வேறு இடங்கள் அங்கிருந்த தாவரங்களைக்கொண்டு பெயரிடப்பட்டவைகளே என்பது தான் அது. ஆகவே நான் அதனை இன்னும் கவனத்தோடு படிக்கையில், மும்பையில் உள்ள தார்தியோ என்ற இடம் பனைகளால் அப்பெயரை பெற்றிருக்கிறது என்ற வார்த்தை வந்ததும் எனது இதயதுடிப்பு எகிறியது.

எனது  10 வருட மும்பை வாழ்வில் ஒரு முறைக்கூட தார்தியோ என்கிற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அது எப்படி மும்பையில் பனை சார்ந்த பெயருடைய ஒரு இடத்தை நான் அறியாமல் இருந்திருப்பேன்? ஏன் எவரும் எனக்கு கூற முற்படவில்லை? இந்த பதிவு சரியானதுதானா? இந்த இடம் இன்றும் பனைத் தரவுகளைக் கொண்டிருக்குமா?  அப்படியானால் இந்த இடத்திற்குச் சென்று நான் பனை மரங்களைக் கண்டுபிடிக்க முடியுமா? போன்ற பல கேள்விகள் என்னுள் அசைந்தமர்ந்தன. எனது தூக்கம் கலைந்தது. என்னுள் எனை ஆளும் இறைவன் வந்தமர்ந்து எனது எண்ணங்கள் கூர் பெறச் செய்ததை உணர்ந்தேன். ஆகவே அன்று எனது உறக்கத்தை ஒத்திவைத்தேன். எப்படியாவது தார்தியோ என்ற பகுதிக்கு உடனே சென்று சேரவேண்டும் என நினைத்தேன்.

அதற்கு முன்பதாக தார்தியோ பகுதியில் பனை மரங்கள் இருக்கின்றனவா என எண்ணி இணையதளத்தில் தேடினேன். ஒரு படமும் கிடைக்கவில்லை. ஆகவே அன்று இரவு  தகவல்களைத் திரட்டியபடியிருந்தேன். மும்பையின் மிக முக்கிய தூதரகங்கள் தார்தியோ பகுதியில் தான் இருக்கின்றன என்கிற தகவல் கிடைத்தது. மிக முக்கிய மனிதர்கள் வாழும் இடம் என்பதாகவும் லதா மங்கேஷ்கர் வாழும் பகுதி எனவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஜாஸ்மினிடம் ஒரு அருமையான இடத்தைக் கண்டுபிடித்thiருக்கிறேன், ஆகவே அந்த இடத்தைப் பார்த்து வரப் போகிறேன் என்று சொன்னேன். “தூங்கவே இல்லியா” என்று கேட்டாள். “பிறகு போய்கொள்ளலாமே”  என்றும் சொன்னாள். என்னால் அப்படி அமைந்துவிட முடியாது. என்னுள் எரியும் நெருப்பு அப்படிப்பட்டது. நான் புறப்பட்டுவிட்டேன். வெறும் ஒரு அரைக்கால் சட்டை, ஒரு கை வைத்த பனியன், அதற்கு மேல் எனது பயணத்திற்கான ஜாக்கெட் அணிந்து கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் மழை பொழிய காத்திருந்தது. அதிகாலை இருட்டோடு எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கோரேகாவுன்  நோக்கிச் சென்றேன்.  மழை ஓடைகள் சாலைகளை பெயர்த்துப்போட்டிருந்தன. சில இடங்களில் சாலையினைக் கடந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சந்திர மண்டலத்தின் குழிகள் போல சில இடங்களில் வட்ட வடிவ குழிகள் கிடந்தன. எனக்கு முன்னால் சென்ற வாகனத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், ஒரு தவளை எகிறியது.  ஐந்தாம் எண் வரைக்கும் சாலை மழையினால் வெகுவாக பாதிப்படைந்திருந்தது. தூரல் அடிக்கத்துவங்கியது. எனது வாகனத்தை இரயில் நிலையம் அருகில் இருக்கும் கட்டண பாதுகாப்பு நிறுத்தத்தில் விட்டுவிட்டு, நான் இரயில் பிடித்தேன். காலை நான்கரை மணிக்கு பிடித்த இரயில் மும்பை சென்ட்ரல் சென்று அடைந்த போது மணி ஐந்தரை. இன்னும் பொழுது புலரவில்லை. மழை மேகங்களும் தூறலும் என அவ்வேளையிலும் இருட்டியபடியே இருந்தது.

சாலையைக் கடந்து தார்தியோ நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த இரட்டைக்கோபுரங்கள் மிதர்ப்பாக நின்றுகொண்டிருந்தன. பணக்கட்டுகளை உயரமாக அடுக்கிவைத்தது போன்ற தோற்றம். மும்பையின் செல்வ செழிப்பின் அடையாளமே தார்தியோ. கோடிகளுக்கு குறையாத குடியிருப்புகள். மும்பையின் முக்கியமான ஒர் அடையாளமான செல்வச் செழிப்பை அங்கிருந்த அத்தனை கட்டுமானங்களும் பறைசாற்றியபடி இருந்தன. சாலைகள் நேர்த்தியாகவே அமைந்திருந்தன. எதைத் தேடுகிறேன்? ஏன் இந்த அதிகாலையில் இங்கே புறப்பட்டு வந்திருக்கிறேன்? எப்படி எனது தேடுகையை நான் துவக்கப்போகிறேன்? போன்ற கேள்விகள் உள்ளத்தில் சலசலத்துக்கொண்டிருந்தன. இவைகளை ஒருங்கமைத்து விடைகாணுவது எளிதல்ல.

தார்தியோ சாலை சந்திப்பில் சிறு பூங்கா ஒன்று இருந்தது. பனை மரத்தின் வடிவில் ஒரு மரம் நின்றது ஆனால் அதன் அருகில் செல்லச் செல்ல அது நான் தேடும் பனை மரம் அல்ல அழகுக்காக வைக்கப்பட்ட ஒரு பனை என்பதைக் கண்டு உளம் சோர்ந்தேன். இரட்டைக்கோபுரங்கள் செல்லும் பாதையில் பல்வேறு மரங்கள் நின்றன. ஆனாலும், பனை சார்ந்து ஒரு சிறு தடயம் கூட தென்படவில்லை. சற்று தொலைவில் ஒரு டாக்சி டிரைவர் நின்றுகொண்டிருந்தார். தார்தியோ எப்படி போகவேண்டும் என்று கேட்டேன். என்னை மேலும் கீழும் புரியாதமாதிரி பார்த்தார். பின்னர் “தாட்தேவ்”? என்றார். நான் மையமாக தலையசைத்தேன். ஒருவேளை நான் தான் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லையோ? அவர் இதுதான் தாட்தேவ் என்றார். நான் பனை மரத்திற்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன், இங்கு எங்காவது பனை நிற்கிறதா என்று கேட்டேன். என் வாழ்கையில் பனை சார்ந்த தேடுகையில் அப்படி ஒரு குருட்டுத்தனமான பந்தை நான் வீசியதில்லை. அவர் எனது மனம் நொறுங்கும்படி தான் பதில் கூறினார். முற்காலங்களில் இருந்திருக்கலாம் இப்போது இங்கு பனை மரங்களே கிடையாது என்றார். எனது நடை தளர்ந்தது. உற்சாகம் அப்படியே வடிந்துவிட்டது. அந்த டாக்சி டிரைவர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மும்பையில் நுங்கினை “தாட்கோளா” என்று தான் சொல்லுவார்கள். தாட் என்றால் பனை என்றும் கோள என்றால் உருண்டை என்றும் பொருள். நுங்கினை வெட்டி அப்படியே கண் கண்ணாக தான் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அல்லது பனம் பழத்தின் சற்றேரக்குறைய உருண்டை வடிவம் இப்பெயரினை பெற்றுதந்திருக்கும். ஆகவே நான் தார்தியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் அப்பெயர் இந்தியில் “தாட்தேவ்” என அழைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பனை கடவுள் வாழுமிடம் என்பதாக ஒரு பெயர். மும்பை ஒரு பனை நகரம் மட்டுமல்ல பனை கடவுள் வாழுமிடம் என்பதாகவும் இருந்திருக்கிறது. மென் மழையா? சில்லென்ற காற்றா அல்லது மனம் அடைந்த உணர்ச்சிப்பெருக்கா. மயிர்கால்கள் சில்லிட்டன. எதோ ஒரு உணர்வு என்னுள் கடந்து சென்றது. நான் தேடி வந்த இடம் இதுதான். பனை சார்ந்து இம்மண்ணில் நிகழ்ந்தவைகள் இன்று என் கண்களுக்கு மறைவாக இருக்கலாம், ஆனால் விண் எட்டும் இந்த இரட்டைக்கட்டிடங்கள் ஒன்று ஆண் பனையெனவும் மற்றொன்று பெண் பனையெனவும் என் கண் முன்னால் எழுச்சியோடு நிற்கின்றன. தொல் மூதாதை பனையினை பற்றி ஏறி விண்னை அளந்துவிடும் கனவினை, நவீன மனிதன் விடாது முன்னெடுக்கும் ஒரு தொடர்ச்சியாகவே அந்த இரட்டைக் கட்டிடங்களைப் பார்க்கையில்  நான் உணர்ந்தேன்.

எப்பாடியாவது இன்று இப்பகுதியில் ஒரு பனை மரத்தையாவது நான் தேடி கண்டுபிடித்த பின்னரே வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற உறுதியுடன் நின்றேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. எந்த திசை நோக்கி நடக்கலாம் என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், என்னையே ஒரு டாக்சி டிரைவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் கண்டேன். ஒருவேளை என்னை சவாரி என எண்ணிக்கொண்டாரா? பரவாயில்லை, அவரிடம் கேட்டுத்தான் பார்போம் என எண்ணி அவரை அணுகினேன்.

பனைக்கும் இந்த இடத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அறிந்து வந்தேன், ஆனால் இங்கே பனை மரம் ஏதும் எனது கண்ணில் தென்படவில்லை அருகில் எங்காவது பனை மரங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். அவர் முதலில், இங்கு பனை மரங்கள் ஏதும் இல்லை என்றார். பின்பு யோசித்தவராக பெடர் ரோடில் ஒரே ஒரு பனை மரம் இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அது “தாட்தேவ்” பகுதியில் இல்லை. இன்னும் சற்று தொலைவு செல்ல வேண்டும் என்றார். என் முகம் பிரகாசமடைந்தது. மும்பையின் மிக முக்கியமான ஓரிடத்தில், பனை ஒன்று நிற்கிறது என்பது நான் அவணப்படுத்தவேண்டிய ஒரு தகவல் தான்.

பொதுவாக, நாம் ஓரிடத்தில் பனை மரத்தினைத் தேடிச்செல்லும்போது, மிகச்சரியாக அவ்விடத்தில் பனை இலையென்றால், அதன் சுற்றுவட்டாரங்களை தேடுவது மிக முக்கிய ஒரு பணியாகும். காணாமல் போன பனைகளின் சுவடுகள் எங்காவது ஏதேனும் ஒரு வகையில் தனது எச்சங்களை விட்டு வைத்திருக்கும் என்பது உறுதி. ஆகவே அந்த பனை மரத்தினைப் பார்க்க எண்ணினேன். சற்றேரக்குறய ஒரு கி மீ தூரம் செல்லவேண்டும் என்றார். முதலில் நடந்தே செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், அது சரியில்லை, எனக்கு உதவி செய்த இந்த மனிதருக்கு முதல் “போணி” அமைத்துக்கொடுப்பதுவே சிறந்தது என எண்ணி, எனக்கு அந்த மரத்தைக் காண்பிப்பீர்களா என்றேன். ஏறுங்கள் என்றார்.

அவர் சென்ற சாலையின் இரு மருங்கிலும் பத்து அல்லது இருபது வருடங்களேயான பல வகை மரங்கள் சீரான இடைவெளிகளில் நின்றன. ஒரு அரை மைல் தூரம் சென்றிருப்போம். எனது இடது பக்கம் ஒரு மாபெரும் குன்று எழுவதைப் பார்த்தேன். கட்டிடங்கள் மிக உயரமான இடத்தில் அமைந்திருந்தன. இத்தனை வருடத்திலும் நான் இங்கே வந்ததில்லையே என எண்ணியபடி வந்தேன்.

அப்பகுதியில் இருந்த வணிக கட்டிடங்களைத் தொடர்ந்து ஒரு இடைவெளி தென்பட்டது. புதிதாக கட்டுமானத்தை துவக்கிய இடம் அது. ஆகவே தகரங்களை வைத்து அடைத்திருந்தார்கள். கட்டிடங்களின் பின்புறம் இருந்த குன்றுகள் அங்கிருந்த வீடுகள் இவ்விடைவெளி மூலம் தேளிவாகவே தெரிந்தது. இருள் விலகாத அத்தருணத்தில் தென்னையோலைகள் மரங்களின் செறிவு பழங்கால பங்களாக்கள் என அந்த பகுதி மும்பையின் ஒரு நூறு வருட தொன்மை கொண்டிருந்தது. வாகனம் சென்றுகொண்டிருக்கையில் என் கண்களில் ஏற்பட்ட பிரமையா என தெரியவில்லை பனை மரங்களைப் பார்த்தேன். ஆம் பனை மரங்களே தான். ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் அதிகம். நிறுத்துங்கள் எனக் கூவினேன். ஓட்டுனர் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தினார்.

சாலையிலிருந்து பார்க்கையில் கூட்டமாக சில பனை மரங்கள் அந்த உயர்ந்த இடத்தில் நின்றன. குறைந்தது ஐந்து பனை மரங்களாவது இருக்கும் போல் தோன்றியது. இன்னும் சற்று தொலைவில் மேலும் இரண்டு பனை மரங்கள் நின்றன. எனது முகம் புன்னகை ஏந்தியது. இது தாட்தேவின் மறு பகுதிதான் சந்தேகமில்லை. இங்கிருக்கும் பனை மரங்கள் எப்படியோ நகர்மயமாக்கலில் தப்பித்து இவ்விடம் பனைக்கானதுதான் என சொல்லும்படி நிற்கின்றன. இந்த பனைகளைப் பார்த்தபின்பு மிகவும் நிறைவாக உணர்ந்தேன். எனது உள்ளம் இழுத்துவந்த திசை மிகச்சரியானது என்ற எண்ணத்துடன் மீண்டும் டாக்சியில் வந்தமர்ந்தேன். ஓட்டுனர் என்னை ஆச்சரியமாக பார்த்தபடி, பெட்டர்ரோட் போகவேண்டுமா என்றார். ஆம் என்றேன்.

ஹாஜி அலி சந்திப்பு தாண்டி மேலும் ஒரு 100 மீட்டர் தூரம் தான் சென்றிருப்போம், நீங்கள் கேட்ட பனை என்றார். எனக்கு இருளில் எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒரு மரம் அங்கே இருந்தது. கூர்ந்து பார்த்தபோது அங்கே ஒரு மாமரம் தெரிந்தது, அதன் பின்னால் இருளில் நிற்கும் யானையென பனை தன் கால்களை ஊண்றி நின்றது. பாய்ந்து வெளியேறினேன். இந்த பகுதியில் வேறு எங்கும் பனை நிற்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மிக இள வயது மரம். சுமார் 30 வயதுகளில் இருக்கலாம். அந்த மரத்தில் 41 என எண் எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு அதன் அருகில் சென்று தொட்டுப்பார்த்தேன். விலகி நின்று பார்த்தேன். காய்கள் பழுத்திருக்கும் பெண் மரம். மனமே குதூகலத்தில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனது செல் பேசியில் புகைப்படமும் எடுத்தான் துக்கொண்டேன். இதன் தாய் இங்கே நின்றிருக்க வேண்டும் அல்லது இதன் அருகில் ஏதோ ஒரு பனை சில பத்தாண்டுகளுக்கு முன்பு நின்றிருக்க வேண்டும்.

எனது பயணம் இப்படி செயலாக்கம் பெறும் என நான் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை. நான் அங்கிருந்து திரும்புகையில், தொப்பென ஒரு சத்தம் . எனக்கு மிகவும் பழக்கமான ஒரு சத்தம் தான் அது. பனை தனது பழத்தினை விருந்க்டோம்பலாக  எனக்கு கொடுத்திருக்கிறது. எங்கே விழுந்தது என தேடினேன். உடனேயே கண்களில் தென்பட்டது. கரத்தில் எடுத்துப் பார்த்தேன். அதன் தோல் பரப்பு மேலிருந்து கீழாக வரி வரியென காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரியும் இது மிகவும் சுவையான பழம் தான் என. அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டேன். நான் வீடு வரும் வரை அந்த பனம் பழம் என்னோடு கூடவே இருந்தது. மடியில் வைத்து கொஞ்சியபடியே வந்தேன். அதனை எனது கரத்தில் பிள்ளை என வைத்துக்கொண்டேன்.

எனது திருச்சபையின் மாவட்ட கண்காணிப்பாளர் அழைத்திருந்ததன் பேரில் அங்கே சென்றுவிட்டு வரும் வழியில் மீண்டும் தாட்தேவ் சென்றேன். முதன் முறையாக அங்கே இருளில் சென்றதால், மீண்டும் அங்கே பகலில் செல்வதுதான் சிறந்தது. நான் முதலில் பார்த்த பனைக் கூட்டங்கள் அல்டமன் ரோடில் இருப்பதாக ஓட்டுனர் கூறியது நினைவிற்கு வந்தது.  இம்முறை டாக்சி எடுக்கவில்லை, நடந்தே சென்றேன். இம்முறை அந்த பசுமை நிறைந்த குன்றினை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. ஒரு எளிய குடியிருப்பைப்பார்த்து அதனுள் நுழைந்தேன். ஒரு பாட்டி என்னை விசாரித்தார்கள். அவர்களிடம் மலைக்கு எப்படி போகவேண்டும் எனக்கேட்டேன். அவர்கள் சாலை வழியாகத்தான் போக வேண்டும் எனக் கூறினார்கள். என்றாலும் இக்குடியிருப்பின் பின்புறம் வழியாக நான் சென்று பார்க்கலாமா என அனுமதி கேட்டேன். சரி என்றார்கள். அந்த இடம் ஒரு டோபி காட் தான், மும்பையிலுள்ள வண்ணாரப் பேட்டை. அங்கிருந்து பார்க்கையில் ஒரே ஒரு பனை மரம் மட்டும் தனித்து தெரிந்தது. நான் கும்பலாக பார்த்த பனை மரங்களைக் காணவில்லை.

மீண்டும் சாலைவழியாக வந்து தேடியபோது கிட்டத்தட்ட 7 பனை மரங்களை ஓரிடத்திலேயே என்னால் எண்ண முடிந்தது. இன்னும் அதிகம் இருக்கலாம். அன்று நான் மீண்டும் பெடர் ரோடு சென்றேன். எனக்கு பனம் பழம் கொடுத்த அந்த மரத்தின் அருகில் நின்று அதன் அழகை பார்த்தபடி நின்றேன். மீண்டும் பனம் பழம் கிடைக்குமா என்று காத்திருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. வாழ்வில் சில தருணங்கள் அப்படித்தான் மீண்டும் வராது. நான் சாலையைக் கடந்து இந்த  மரத்தைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என கடக்கையில் எனக்கு எதிரே ஒரு சாலை சென்றது. அந்த சாலையின் முடிவில் ஒரு பனை மரம் நின்றது. அது நான் சற்றும் எதிர்பாராதது. பனை பரவலாக இப்பகுதிகளில் நின்றிருக்கிறது என்பதர்க்கான அடையாளம் தான் இவைகள்.

இப்போது நான் நிற்கும் இடத்தின் அருகில் தான் கிரான்ட்ரோடு. அதன் அருகில் தான் காமதிப்புரா. நான் நிற்கும் இடத்திலிருந்து 100 அடிக்குள் கடல் இருக்கிறது. ஹாஜி அலி தர்க்கா வெகு அருகிலெயே இருக்கிறது. பனை மரத்தோடு தொடர்புடைய மலபார் ஹில்ஸ் எனக்கு இடதுபுறமாக இருக்கின்றது.

மும்பை ஒரு பனை நகரம் என்பதற்கு வேறு சாட்சியங்கள் வேண்டுவதென்ன என என் மனம் உரக்க கூவியது. அன்று முழுவதும் நடந்துகொண்டே இருந்தேன். மீண்டும் ஹாஜி அலி சந்திப்பு வந்தபோது புத்திதாக  பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டிருந்ததைப் பார்த்தேன்.

வீட்டிற்கு வந்தபின்பு கூகுள் மேப் உதவியுடன் அந்த பகுதியினை ஆராய்ந்தேன். 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அங்கே நிற்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் எனக்குக் காட்டின.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம் 11

ஓகஸ்ட் 12, 2019

பனை மழைக்காடுகள்
மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவ்வித சிறப்புகளைக் கொண்டு அந்தந்த இடங்களுக்கு பெயர் அளிக்கப்பட்டிருக்கும். இது உலக பொது நியதி தான். மும்பையில் பனையில்லாத பகுதிகள் ஏதேனும் உண்டா எனும் கேள்வி எழுந்தால் இல்லை என்பதே எனது பதில். ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து தேடினால் நாம் கண்டுபிடிக்கத்தக்க மேலதிக மர்மங்கள் இதன் உள்ளே உறைந்திருக்கலாம். ஆனால் இந்த பாடை படலங்களை ஒவ்வொன்றாக விலக்கி விலக்கியே பனை நகரம் எவ்விதம் உருப்பெருகிறது என்பதைக் கண்டடைய வேண்டும். மும்பையில் பல இடங்களில் பனை மரங்கள் இன்றும் எஞ்சியிருக்கின்றன. அவைகளைத் தொடருவதும் பனைகளே இல்லாத பகுதிகள் என கூறப்படுமிடங்கள் எவ்விதம் பனை மரத்தினை தங்கள் பகுதியிலிருந்து இழந்திருக்கின்றன என்றும் தேடி கண்டடைவதும் தேவை.

நான் மும்பை ஒரு பனை நகரம் என்றபோது பலருக்கும் அது ஆச்சரியம் அளித்த ஒன்றாக இருந்தது. இன்னும் சிலருக்கு பனை நகரம் என்ற வார்த்தை அளித்த ஒவ்வாமை ஏன் என எனக்குப் புரியவில்லை. பல வருடமாக நான் அறிந்திருந்த ஒருவரிடம் மும்பை முழுவதும் பனை விதைகளை பரப்பவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம் என கூறினேன். ஆகவே திருச்சபையின் சார்பில் பனை விதைகளை மும்பை முழுவதும் அளிக்கப்போகிறோம் என்றேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன் என்ற எண்ணத்துடனேயே இதனை நான் சொன்னேன். எனது வார்த்தைகளால் மிகவும் அதிகமாக புண்பட்டிருப்பார்கள் போல, வெகு கடுமையாக தனது அத்தனை உகிர்களைக் கொண்டும் என்மீது பாய்ந்துவிட்டார்கள். என்னிடம் கடுமையாக, என்ன, மும்பையினை பாலைவனம் ஆக மாற்ற சித்தம் கொண்டுவிட்டீர்களா? என கேட்டார்கள். மும்பை ஒரு மழைக்காடு என்பது தெரியாத? இங்கு பனைகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். இப்படி ஒரு குற்றச்சாட்டு நான் எதிர்பார்க்காதது. பனை இருந்தால் ஒரு நிலப் பகுதி வறண்டு விடுமா? இல்லை வறண்ட நிலத்தில் தான் பனை மரங்கள் வாழுமா?

பெரும்பாலும் அரை பாலை நிலங்களிலேயே பனை மரங்கள் காணப்படுகிறது என நாம் கருதுகிறோம். அப்படி பனை குறித்த பார்வைகள் நாம் நினைப்பது போல் இருப்பதில்லை என எனது பயணங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தன. பனை மரத்தினை நாம் அறிவோம் எனும் எண்ணம் நம்முள் மேலோங்கும் தோறும், பனை நம்மை விட்டு விலகிக்கொண்டே செல்லுகிறது. பனை சார்ந்து ஒரு ஒட்டுமொத்த பார்வை கோணம் நம்மிடம் இல்லை. பனை சார்ந்து செயல்படும் அறிஞர்கள் இன்றைய தினத்தில் மிகவும் குறைவே. ஆகவே கிடைக்கும் தகவல்களை நாமே திரட்டி அவைகளைச் சீர் தூக்கிப் பார்த்து ஒருங்கமைத்து தேடவேண்டியது ஒரு மாபெரும் பணியாகும்.

அனுதினமும் பனை எனக்கு தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறது. உலகில் வேறு எந்த தாவரங்களைக் குறித்தும் நாம் அதிக தகவல்களைப் நினைத்த மாத்திரத்தில் பெற இயலும். பனை குறித்து மாத்திரம் நம்மிடம் இருக்கும் தகவல்கள் வெகுவாய்க் குறைவுபட்டிருக்கின்றன. இத்தனைக்கும் பனையோடு தமிழர்களுக்கும் இந்திய பெருநிலத்திற்கும் குறைந்த பட்சம் 2000 வருட தொடர்பு இருக்கிறது என இலக்கிய சான்றுகள் வழியாக அறிகிறோம். இந்த நெடிய பயணத்தில் நாம் பனை குறித்து சேர்த்துக்கொண்டு வந்தவைகள் அனைத்தையும் கடந்த நூற்றாண்டில் ஒவ்வொன்றாக இழந்திருக்கிறோம். மிக முக்கியமாக பனை ஓலைச் சுவடிகள்.

பனை ஓலைச் சுவடிகள் சார்ந்த நெடிய பாரம்பரியம் கடந்த நூற்றாண்டில் நம்மை விட்டு விலகி சென்ற காரணம் நாம் சற்றே புரிந்து கொள்ள இயல்வது தான். ஏனென்றால், ஓலைச் சுவடிகள் சார்ந்த நெடும் பாரம்பரியமும், பரந்துபட்ட நிலப்பரப்புகளில் அவைகளின் பங்களிப்பும் என நாம் மிக விரிவாக உணர்ந்துகொள்ள சுவடிகள் நமக்கு வாய்ப்பளித்திருக்கின்றன. சுவடிகளில் இன்றும் திரளாக எஞ்சியவைகளை தொகுத்து என்ன செய்வதென கைபிசைந்து நிற்கும் காலம் இது. எவ்வகையிலும் இவ்விதம் தேங்கி நிகழும் அழிவுகள் பெருமளவில் பதிவுகளுக்குள்ளாவதில்லை. அதற்குக் காரணம், புதிதாக வரும் கலாச்சாரத்தின் பெரும்சுழிப்பில் அடிபட்டுச் செல்லுகையில், பழைமையின் சுவடுகள் அழிந்துவிடுகிறது. இப்படியிருக்கையில், பனை சார்ந்த பிராந்திய வழக்கங்கள் நமது பார்வையில் மேலெழுவது இல்லை. அவை அடியாழத்தில் ஒவ்வொன்றாக சமாதியாகிக்கொண்டிருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாக முக்குளித்து தான் எடுக்கவேண்டும். ஒரே நபர் அனைத்தையும் எடுத்துவிடும் தூரத்திலும் அவைகள் இல்லை. ஆகவே திறந்த கண்களோடு இவைகளைத் தேடுவது மிக முக்கியமானதாகின்றது.

“பனை மரங்கள் வறண்ட நிலத்தில் வாழ்கின்றன” என்ற மனப்பதிவு நமக்குள் ஏன் நுழைந்திருக்கிறது? இந்த கேள்வி மிக முக்கியமானது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் அனைத்து வறண்ட பிரதேசங்களிலும் பனை செழித்து வளர்ந்திருக்கிறது. ஆகவே பனை ஒரு வறண்ட நிலப் பயிர் என்பதாக ஒரு எண்ணம் நமக்குள் நிலைபெற்றுவிட்டது. இது பனை சார்ந்து நாமறிந்திருக்கும் ஒரு பகுதி தான். வருடத்தில் இரண்டு பருவமழை பொழிவை பெற்று சுமார் 1500 மி மீ முதல் 1800 மி மீ க்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெறும் குமரி மாவட்டம் ஏன், பனை சார்ந்த ஒரு முக்கிய இடமாக எவருக்கும் நினைவில் எழுவது இல்லை? அதற்கு அரசியல் கலாச்சாரம் மற்றும் மொழி என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் இங்கு விரிவாக பார்க்காவிட்டாலும், அந்த கூறினை உள்ளடக்க மறந்தோமானால், பனை நமக்கு முழுமையாக தன்னை வெளிப்படுத்தாது. கேரளாவின் திருவனந்தபுரம் பகுதிகளிலும் பனை செழித்து வளர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், பழம்பெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வருவாய் ஈட்டித்தரும் மரமாக பனை மரம் இருந்திருக்கிறது.

பனை மரங்கள் நெய்தல் நில தாவரம் என்பது எனது பனை மரச் சாலை பயணம் வாயிலாக நான் கண்டடைந்த உண்மை. கடற்கரைப் பகுதிகள் பனை மரத்திற்கு ஏற்ற இடங்கள் எனவும் மீனவ மக்களுடன் அது நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் நான் நிரூபித்திருக்கிறேன். குமரி முதல் கொல்கத்தாவரையிலும் கடற் பகுதிகள் பனைக்கான இடங்களே. கடற்கரையில் வாழ்ந்த சமூகத்தின் தொழில் இரண்டு விதமாக பிரிந்திருக்கலாம் என்றும் கருதுகிறேன். கடல் தொழில் செல்பவர்கள் தனிப்பிரிவினராகவும் பனைத்தொழில் செய்பவர்கள் மற்றொரு பிரிவினராகவும் பிற்காலத்தில் மாறியிருக்கலாம். கடல் தொழில் சார்ந்தும் நிலத்தில் விளையும் தாவரங்களைக் கொண்டுமே இதனைச் சொல்லுகிறேன். இவைகளைக் குறித்து மேலதிகமாக வ்ரலாற்று ஆய்வாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களுமே கருத்து சொல்ல இயலும்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டை இது சார்ந்து நாம் பார்க்கலாம். குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு பனம் பழத்தின் மேல் உள்ள விருப்பு பனை சார்ந்து வாழும் மக்களுக்கு இருக்கும் விருப்பிற்கு சற்றும் குறைந்தது அல்ல. அவ்விதமாகவே பனை ஏறும் மக்களுக்கு மீன் ஊன் மீது இருக்கும் மோகம் சொல்லி முடியாது. தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் பனை மரம், மீனவர்களோடு தொடர்பற்றது என நிறுவும் ஆய்வாளர்கள் இனிமேல் பிறக்கத்தான் வேண்டும். அந்த அளவிற்கு பனை மீனவர்களோடு தொடர்புடைய ஒரு தாவரம். ஆக பாலை (வறண்ட) நில பயிர் என்பதோ அல்லது நெய்தல் நில பயிர் என்பதோ ஒரு முழுமையான வரையறை அல்ல என்பதுவே எனது எண்ணம்.

பொதுவாக பனை மரங்கள் குறைந்த பட்ச மழையளவு 500 மி மீ அளவு இருந்தாலே வாழ்ந்துவிடும் எனக் கூறப்படுவது உண்டு. ஆகவே தான் ராமேஸ்வரம் பகுதிகளில் பனை நிரம்பக் காணப்படுகின்றது. நிலத்தடியில் உப்பு நீரோ அல்லது நன்னீரோ கிடைத்தாலும் அவைகள் தப்பிப்பிழைத்துக்கொள்ளுகின்றன. அப்படியென்று சொன்னால், சேலம் தருமபுரி போன்ற கடல் பகுதியினைச் சாராத பகுதிகளிலும் பனை மரங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. அப்படியே கடலை விட்டு வெகு தொலைவில் இருக்கும் தேரிக்காடுகளிலும் பனை மரங்கள் பெருகி நிற்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றே.

தமிழகத்திலுள்ள கரடுமுரடான பாறை செறிந்த பகுதிகளிலும் பனை தாராளமாக இருந்திருக்கிறது. நீர் குறைந்த இடத்தில் பதனீர் சுவை கூடி இருப்பதையும் நீர் அதிகமுள்ள இடங்களில் பதனீரின் சுவை குறைவாகவும் இருக்கும் என்றே கூறுவார்கள். உண்மையாகவே இருக்கக்கூடும். ஆய்வுகளும் அவ்வாறே சொல்லுகின்றன. எனது நாவிற்கு அப்படி வித்தியாசம் தட்டுப்பட்டதில்லை. எனது நாவின் குறைபாடாகவும் அது இருக்கலாம். என்னளவில் அனைத்துமே சுவை பெருகும் இன்னீர்தான்.

நான் சந்தித்த இதே கேள்வியினை இதற்கு முன் வேறு வகையில் நான் அறிந்திருக்கிறேன். கடந்த வருடத்தில் சில சூழியலாளர்களோடு ஆலப்புழா சென்றிருந்தேன். கேரளா முன்வைக்கும் தென்னைகள் சூழ நிற்கும் ஒரு நிலப்பரப்பு. நீர் அல்லது தென்னை இவைகளை இணைக்கும் படகுகள் என்பதுவே ஆலப்புழாவின் நன்னீர் ஏரியில் நாம் காணும் காட்சி. சேர நாடு திரிந்தே கேரளம் ஆனதாக நினைக்கிறேன். பனைக்கு மாற்றாக தென்னை மரத்தினை முன்வைக்கும் பொருட்டு கூறப்பட்ட ஒரு பெயராகவே கேரளம் எழுந்திருக்கும். மலையாளம், மலபார் போன்ற சொற்களே வெகு சமீபம் வரைக்கும் கேரளாவைச் சுட்டும் வார்த்தைகளாக ஆங்கிலேயர்களது பதிவில் நமக்கு கிடைக்கின்றன.

அன்று எனக்கும் உடன் வந்த பேராசிரியருக்கும் நடைபெற்ற உரையாடலில், அவர் பனை கேரளாவிற்கான மரம் அல்ல என்றார். தென்னை மரத்தை கேரளா பண்பாடு என உள்வாங்கிக்கொண்ட ஒரு நவீன மனமே அப்படி சொல்லுகிறது என்பது எனது புரிதல். அல்லது பனையை புறக்கணிக்கும் ஒரு மனநிலையே தென்னையினை முன்வைக்கிறது என்பது எனது எண்ணம். தென்னை மரங்கள் கேரளாவில் இத்தனை செறிவுடன் ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு இருந்திருக்காது என்பது உறுதி. ஆனால் பனை அப்படியல்ல, இங்கே இன்று நாம் காண்பதை விட வெகு செழிப்புடன் பரவி இருந்திருக்கும். ஆய்வு செய்து தரவுகளுடன் இதனை நான் சொல்லவில்லை, என் மனப்பதிவு அப்படி என்னை சொல்ல வைக்கின்றது. யாருக்குத் தெரியும், கேரளம் என்பது பனைவளமாயிருந்த இடமாயிருக்குமோ?

சில நாட்களுகு முன்பு வாகை சூட வா என்ற படத்திலுள்ள சர சர சாரக்காத்து என்ற பாடலை எனது நண்பர் லாசரஸ் எனக்கு அனுப்பி 3.42 வினாடிகளுக்கு மேல் கவனமாக பாருங்கள் என்றார். நாயகி குளத்து நீரில் நெஞ்சளவு மூழ்கி குளிக்கையில் பின்னால் ஒரு பனை மரம் தெரிந்தது. பரவாயில்லையே, பனை மரத்தை இப்போதெல்லாம் முக்கிய நிலக்காட்சியாக திரைபடத்துறையினர் பயன்படுத்துகிறார்களே என நினைத்தேன். அதை தொடர்ந்து நான் ஆச்சரியப்படும் ஒரு காட்சி அரங்கேறியது. ஒரு மீன் மழை ஊற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பனை மரத்தில் ஊர்ந்து ஏறத்துவங்கியது. காட்சி வெட்டப்பட்டு மீண்டும் மீன் பனை மரத்தில் நெடுந்தொலைவு ஏறி பின்னர் தண்ணீரில் விழுகின்ற ஒரு காட்சி பதிவாகியிருந்தது. நான் நாற்காலியின் நுனிக்கு வந்துவிட்டேன்.

எத்தனை முறை அந்த காட்சியை மீள மீள பார்த்திருப்பேனோ தெரியாது. ஆச்சரியம் அளித்த அந்த காட்சி பின்னர் சந்தேகமாக உருவெடுத்தது. வரைகலை சார்ந்து ஏதும் மாயம் செய்திருப்பார்களோ என எண்ணினேன். படமே ஒரு கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில், இருக்காது என வேறொரு மனம் சொன்னது. கிராமிய சூழலை அறிந்த இயக்குனரே இதனை உள் நுழைத்திருக்க இயலும் என உணர்ந்து கொண்டேன். பின்னர் அதுகுறித்து நான் அறிந்த தகவல் கிராம வாழ்வினை பின்னணியமாக கொண்டவர்களுக்கு ஒரு சாதாரண செய்தி. அந்த மீனின் பெயர் “பனையேறிக் கெண்டை”. பனை மரம் ஏறும் ஒரு மீன் இருக்கிற செய்தியே எனக்கு அப்போதுதான் தெரியும்.

Climbing Perch

பனையேறி கெண்டை (Climbing Perch)

இந்த கேள்வியினை நான் அந்த பேராசிரியரிடம் முன் வைத்தேன். பனை ஏறும் மீன் ஒன்று உள்ளதாக நான் அறிந்திருக்கிறேன் அது உண்மையா எனக் கேட்டேன். ஆம் அதனை ஆங்கிலத்தில் கிளைம்பிங் பெர்ச்(Climbing Perch) எனக் கூறுவார்கள் என்றார். பனை மரக் கெண்டை ஆலப்புழாவில் உண்டா எனக் கேட்டேன், ஆம் என்றார். நீர் நிறைந்த அந்த பகுதியில் பனை மரங்கள் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் என்னில் மேலோங்கியதால், “அப்படியானால் இப்பகுதியிலும் பனை மரங்கள் ஒரு காலத்தில் இருந்திருக்குமோ? எனக் கேட்டேன். பேராசிரியர் கூறினார், ஆறு மாதங்கள் இங்கே மழை பொழியும் அப்படியிருக்க பனை இம்மண்ணின் மரமாக இருக்காது என. பேராசிரியர் ஆயிற்றே நானும் நம்பிவிட்டேன். இல்லையில்லை நான் நம்பிவிடவில்லை சற்றே குழம்பிவிட்டேன். ஆம், ஆனால் உடனே எனது ஆழ்மனம் விழித்துக்கொண்டது. எங்கோ பேராசிரியர் கூற்றில் ஒரு பிழை இருக்கக்கூடும் என உள்ளூர உணர்ந்தேன். அதனை அப்படியே விட்டுவிட்டேன்.

மழைப்பொழிவு சார்ந்து பேராசிரியர் முன்வைக்கும் ஒரு தர்க்கபூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் நிலையில் நான் அப்போது இல்லை. எனது மனப்பதிவு சுதந்திரத்திற்குப் பின்பு பல்வேறு மானியங்களால் தென்னை மரங்கள் முன்னுரிமை பெற்று கேரளாவில் வளர்க்கப்படலாயின என்பதே. கேரளாவில் நூற்றாண்டுகளாக தென்னைகள் இருந்திருக்கும், ஆனால் இன்று காணப்படும் பெரும் வணிக நோக்கில் அவைகள் வளர்க்கப்பட்டிருக்காது என்பதே உண்மை. ஆலப்புழா பகுதிகளிலும் பனைகளே நின்றிருக்கும் என்பது எனது எண்ணம். ஏன் அப்படி எண்ணுகிறேன் என்றால் மழை சார்ந்து பனை ஏறுபவர்களுக்கு ஏற்படும் குறைந்த ஊதியம் ஒரு பொருட்டே அல்ல. வாரப்பனை எனும் முறைமைகளே பெருமளவில் இருந்திருக்கின்றன. ஒருநாள் கூலி உரிமையாளருக்கும் மற்றொருநாள் கூலி பனை ஏறுபவருக்கும் என்றிருக்கும் சூழலில், ஊதியம் என்பது உழைப்பின் வாயிலாக கிடைக்கும் உணவை பங்கிட்டுக்கொள்ளும் சூழலே இருந்திருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமையும் பருவம் தேடி செல்லும் பனையேறிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறு மாத மழை என்பது எவ்வகையிலும் பாதிப்பு அளிக்கக்கூடியவை அல்ல. என்றாலும் நான் கூறும் தகவல்கள் சரி பார்க்கப்படவேண்டியவைகளே.

அன்றைய பயணத்தில் அந்த ஏரிக்கரையோரம் இருந்த ஒரு கோவிலின் அருகில் நெடிந்துயர்ந்த ஒரு ஒற்றைப் பனை மரத்தைப் பார்த்தேன். அங்கு நின்ற அத்தனை தென்னை மரங்களையும்விட உயரமாக உறுதியாக நேர்கொண்ட நெஞ்சுடன் எழுந்து நின்றது. தன்னந் தனியனாக சாட்சி சொல்லும் பொருட்டு எனது வருகைக்காக அது நின்றிருந்தது போலும். வெகு அமைதியாக என் காதோரம் தான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்ட நிறைவுடன் அது தன் தவத்தை தொடர்ந்தது.

நான் அறிந்த வரைக்கும் ஆப்பிரிக்காவில் 500- 1400 மி மீ மழைபொழிவு உள்ள இடம் வரைக்குமே பனைகள் வளரும் என்பதாக பதிவாகியிருக்கிறது. அது தமிழகத்திற்கும் பெருமளவில் பொருந்தும். தமிழகம் அவ்வகையில் மழை மறைவு மாநிலம். 1000 மி மீ கும் குறைவாகவே மழை பொழியும். ஆலப்புழாவைப் பொறுத்தவரைக்கும் 3000 மி மி மழை பொழிவு உண்டு. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மழை பொழியும் நாட்கள் தான். அப்படியிருக்க குறைந்த மழை பொழிவில் தப்பிக்கொள்ளும் பனை மரங்களை அகற்றி அதிக மழை பொழிவு தேவையாயிருக்கும் தென்னை மரங்களை இங்கே வளர்க்கத் துவங்கியிருப்பார்கள்.

இவ்வித முடிவிற்கு நான் வருவதற்கு காரணம், சமீபத்தில் நாங்கள் மும்பையில் எதிர்கொண்ட மழை தான். இரண்டே இரண்டு நாட்களில் இங்கே 400 மி மீ மழை பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. மும்பையின் ஆண்டு மழைப்பொழிவு 2168 மி மீ என்பதாக அறிந்தபோது ஆலப்புழாவில் உள்ள மேலதிக 1000 மி மீட்டர் பனையினை ஏதும் செய்துவிட இயலாது என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். இங்கே மும்பையில் பனை மரங்கள் வளருவதற்கு எந்த தடைகளும் இல்லை. முழுதாக ஆறு மாதம் இங்கே வந்து தொழில் செய்துவிட்டு போகிறவர்களைக் காண்கிறேன். அப்படியானால் ஆலப்புழாவின் மழையில் பனை ஒன்றும் கரைந்து போய்விடாது. அவைகள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

மழை பொழிவு என்பதை அளவீடாக கொள்வதை விட, மலைப்பாங்கான இடங்கள் பனை மரங்களுக்கு மிக முக்கியமானவைகளாக இருக்குமோ? நீர் தேங்காது ஒழுகிவிடும் பகுதிகளில் பனை மரங்கள் நிம்மதியாக வளர்கின்றனவோ? அப்படியும் சொல்ல இயலாது. கம்போடியாவிலும், தமிழகத்தில் தஞ்சை மற்றும் குமரி போன்ற பகுதிகளிலும் வயல்வெளிகளுக்கருகில் பனை மரங்கள் நிற்கின்றன. நீர் தேங்கி நிற்பதால் வேர்கள் அழுகிவிடவில்லை.

1996 ஆம் ஆண்டுவாக்கில் திறக்கப்பட்ட குமரி மாவட்டத்திலுள்ள மாம்பழத்துறையாறு பகுதியினை நான் பார்க்க சமீபத்தில் சென்றிருந்தேன். அணையின் நடுப்பகுதியில் பனை மரங்கள் கழுத்தளவு நீரில் நிற்பதை 2017 ஆம் ஆண்டு வாக்கில் பார்த்தேன். ஆனால், இந்த மரங்கள் தனது உயிரை விடும் தருவாயில் இருந்தன என்பதை நீர் வற்றிய பின்பே உணர்ந்து கொண்டேன். பனை மரங்களின் தண்டு பகுதி சிதிலமடைவதையும், நீர் அதனுள் நுழைந்து அவைகளை இற்றுப்போகப்பண்ணுவதையும் நேரில் கண்டேன். என்றாலும் பனை மரங்கள் இருபது வருடங்கள் இவ்வித நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கையில், பனை மரங்களின் வலு மிக்க தகவமைப்புகள் நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

இவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கையில் மும்பையின் மழைக்காடோ, அல்லது சதுப்பு நிலங்களோ, வறண்டநிலமோ எதுவும் பனை மரத்தினை ஒன்றும் செய்யாது என்ற எண்ணம் என்னில் நிலை பெற்றது.
மேற்கூறியவைகளை நாம் வேறு வகையிலும் நாம் புரிந்துகொள்ளலாம். மழை பொழிவு நிறைந்த பகுதிகளில் குடியேறிய மக்கள் பனைக்கு மாற்றாக வேறு தாவரங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். பனையேறும் சமூகங்கள் அவ்விதமாக பின் தள்ளப்பட்டிருக்கலாம். அவைகள் மரம் சார்ந்த வாழ்கை முறையாக பார்க்கப்படாமல், இந்திய சமூக வாழ்வில் நிறைந்திருந்த சாதிய அடையாளத்துடனும், சமூக அரசியல் பின்னணியங்களுடனும் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கிறது.

 

சர சர சாரக் காத்து
https://www.youtube.com/watch?v=Y7ZHkpRcshQ

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  10

ஓகஸ்ட் 9, 2019

விதைகள் முளைக்கும்

ஆரே காலனி வந்த உடனேயே நான் எழுதிய முதல் கடிதம் பனை விதைகளை நடுவது சார்ந்தது தான். இப்பகுதியில் பனை விதைகளை நடுவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆரே பகுதியினை மேற்பார்வையிடும்  சி இ ஓ விற்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்களை நேரடியாக சந்தித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆரே பொறுப்பிலிருக்கும் அதிகாரியினை நானும் எங்கள் திருச்சபை இளைஞர் குழுவின் தலைவரான தாமஸ் என்ற தம்பியுமாக இணைந்து சென்று பார்த்தோம். மூன்று நாட்கள் தொடர் முயற்சிகளுக்குப்பின்பு நாங்கள் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பனை மரங்களை நாங்கள் நடப்போகிறோம் என்றவுடன் அவர் மகிழ்ச்சியடைந்துவிட்டார். உற்சாகமாக செய்யுங்கள் என ஊக்கமளித்தார். தகுந்த பதிலை கடிதம் வாயிலாக அனுப்புவதாக கூறினார்.

எங்கள் கடிதம் கேட்பது ஒன்றே தான். ஆரே பகுதிகளில் பனை விதைகளை நடுவதற்கு அனுமதி வேண்டும்.  நேரடியாக பேசியதால் பதில் கடிதத்திற்காக  நாங்கள் காத்திருக்கவில்லை. நல்லது செய்ய நாள் நேரம் ஏன் பார்க்க வேண்டும்?  கடிதம் கொடுத்த மறுநாளே நாங்கள் பனை நடுவதை துவங்கிவிட்டோம். இரண்டு மாதங்களுக்குப் பின் அவர்களிடமிருந்து எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. அவர்களின் கடிதத்தில் சில எளிய கட்டுப்பாடுகளையே விதித்திருந்தார்கள். முறையே, எவருக்கும் தொந்தரவாக இருக்ககூடாது, மரத்திற்கு உரிமை கோரக்கூடாது, மரம் நடும் இடங்களில் இருக்கும் பிற மரங்களுக்கு சேதம் விளைவிக்ககூடாது. ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதிக்கா வண்ணம் புதிய மரங்கள் நடப்படவேண்டும் என்பது போன்ற அடிப்படையான அறிவுறுத்தல்கள்.

அந்த கடிதம் பெரு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. இதுவரை திருச்சபையில் அனைவருமாக இணைந்து 1500 பனை விதைகளுக்கு மேல் ஆரே பகுதிகளில் விதைத்திருப்போம். ஒருவேளை கடிதம் வருவதற்காக நாங்கள் காத்திருந்தோமென்று சொன்னால், எங்களால் இவ்வளவு விதைகளை சேகரித்திருக்கவோ, விதைக்கவோ இயலாது. கடந்த இரு மாதங்களாக மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. மழை பொழிந்த பின், நாளுக்கு நாள் விதை சேகரிப்பதும், நடுவதும் சிரமமாகிக்கொண்டே இருக்கிறது. குழந்தைகள் உடன் வருவதனால் இப்போது விதைகளை விதைப்பதை நிறுத்திவிட்டோம்.

Seed Planting

ஆரே டெய்ரி செல்லும் வழியில் பனை விதைகளை விதைப்பதற்கு முன்னால்.

பனை விதைகளை சேகரிக்க செல்லுவதும், நடுவதற்குச் செல்லுவதும் பெரும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வுகளாக மாற்றிகொண்டோம். குடும்பமாக செல்லுவது, சிறுவர்களையும் வாலிபர்களையும் இணைத்துக்கொள்ளுவது என இது இணைந்து முன்னெடுக்கும் பணியாக வளர்ந்தது. சமூக பணி செயற்குழு தலைவர் மணிராஜ் அவர்கள் பங்குபெறுவோருக்கு நொறுக்கு தீனிகளை எடுத்து வருவார். மாத்திரம் அல்ல களத்தில் தீயென வேலையும் செய்வார். பங்கு கொண்ட அனைத்து  குழந்தைகளுக்கும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பனம்பழங்களின் சுவையினை ஊட்டிவிட்டோம். குழந்தைகளே எங்கள் திருச்சபையின் சொத்து என எண்ணும்படியாக குழந்தைகளின் பங்களிப்புகள் விதை சேகரிப்பிலும் பனை நடுகையிலும்  இருந்தன. உற்சாகம் கரைபுரண்டோடி கொப்பளிக்கும் குழந்தைகள். இவர்களோடு எங்கள் புதிய கன்னி இன நாய்குட்டி லக்கியும் இணைந்துகொண்டது.

Seed Collection

இளைஞர்கள் கோணியில் சேகரித்த பனம்பழங்களை ஓலையில் வைத்து இழுத்துச் செல்லுகிறார்கள். லக்கி உடன் நிற்கின்றது

மும்பையின் பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் இருந்தாலும், மக்களால் அவை மறக்கப்பட்டு எவ்வகையிலும் கலாச்சாரத்தின் வெளியே நிற்கின்ற ஒன்றாக அவை மாறிவிட்டன. வளர்ச்சியால் புறந்தள்ளப்பட்ட இம்மரங்கள் அண்டவர் அருளிய சொத்து என்பதனை கிறிஸ்தவர் எவரும் எண்ணிப்பார்பதில்லை. ஒரு வகையில் தனது கடைசி சொட்டு இரத்தமும் சிலுவையில் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை ஒப்புமைப்படுத்தும் வகையில் பனை மரம் இருக்கிறது என்றே எனக்குத் தோன்றும். மானிடருக்கென முழுமையாக தன்னை கொடுக்கும் ஒரு உன்னத மரம். “இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்;….” (ஏசாயா 53: 2மு) என துன்புறும் ஊழியரைக் குறித்து ஏசாயாவின் சொற்களை காட்சிப்படுத்தும் வகையிலேயே பனை மரங்கள் காணப்படுகின்றன.

திருச்சபையின் கண்களுக்கும் இவ்விதம் மறைவாயிருப்பவை மேல் பெருத்த விருப்பம் இல்லை. இழந்துபோனவைகளைத் தேடவும் இரட்சிக்கவும் திருச்சபைக்கு இன்று பயிற்சியில்லை, பெருமளவில் அக்கரையும் இல்லை. ஏனெனில் எவைகளை இழந்திருகிறோம் என்ற புரிதலே நம்மிடம் இல்லை. திருச்சபைக்கு உள்ளாக நாம் இழந்தவைகளையும் நம்மால் சீர் செய்ய இயலவில்லை, அப்படியிருக்க திருச்சபைக்கு வெளியே கடவுளின் படைப்பில் நாம் இழந்தவைகளை எப்படி நம்மால் சீர்படுத்த இயலும்?.

பனைமரங்கள் திருச்சபையின் கண்களிலிருந்தும் சமூகத்தின் கண்களிலிருந்தும் மறைந்துகொண்டே வந்தது. பனையும் பனை சார்ந்த மக்களும் வேறு வகை வாழ்க்கைக்கு திருப்பப்பட்டனர். அதுவே ஆண்டவரின் திருவுளம் என்றும் நம்பத் துவங்கினர். உலகை மாசுபடுத்தும் இவ்வுலகின் அதிபதிகளுடன் சற்றும் மனம் கோணாமல் தங்களை இணைத்துக்கொள்ளுகின்றனர். பாலும் தேனும் ஊறும் வாக்களிக்கப்பட்ட பனை மரங்களை சுதந்தரிக்கும் பேற்றினை இழந்து பல்வேறு அடிமைத் தழைகளில் சிக்கிக்கொண்டனர். இன்று காணாமல் போன ஆடுகளைக் குறித்த கவலைகளை விட, நாம் எப்படி தப்பித்துக்கொள்ளுவது என்ற எண்ணம் மிகுந்த மேய்ப்பர்களே பெருகியிருக்கிறார்கள். திருச்சபையின் ஊழியங்கள் மிக முக்கியமானவைகள். அவைகள் கிறிஸ்துவின் பணியினை தொடர் செயல்பாடாக எடுத்துச் செல்லுவதற்கு ஏற்றவை தான். ஆனால் அவைகளில் போலியாய் சிக்கிகொண்டு  விலங்கிடப்பட்டு கிடக்கும் ஒரு அடிமை சமூகமே இன்று எஞ்சியிருக்கிறது. கிறிஸ்துவிற்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை ஆனால் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற உறுதிமொழியின் ஆழம் அறியாதபடி போய்விடுகிறோமோ என்கிற கவலையே எஞ்சியிருக்கிறது.

மகராஷ்டிராவிலுள்ள விவசாயிகள் வறட்சியினால் தங்களை மாய்த்துக்கொள்ளும் நிலையினைப் பார்க்கிறோம். விதர்பா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் அவல நிலை, தொடர்ந்து தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றது. இவைகளை நாம் எப்படி மக்களுக்கு புரியவைப்பது? திருச்சபைகள் இவைகளுக்காக இயற்றும் ஜெபம் எத்தகையாதாக இருக்கும்? அது ஒரு சடங்கு என மாறிவிடாதா? கடவுள் படைத்த இயற்கையினை அழித்துவிட்டு, இயற்கைக்கு எதிரான ஒரு வாழ்க்கையை முன்னிறுத்தி, சடங்காக நாம் ஏறெடுக்கின்ற மன்றாட்டுக்கள் எந்த கடவுளின் செவியைச் சென்றடையும்?

திருச்சபை இன்று கொண்டாடும் பனை சார்ந்த ஒரே பண்டிகை குருத்தோலை ஞாயிறு தான். அவ்வாறிருக்க பனை மரங்கள் குறித்ததான எண்ணமோ பனை சார்ந்து வாழும் மக்களின் நிலை குறித்த எண்ணமோ நமக்கு கிடையாது. அழிந்து போகும் ஆத்துமாக்கள் குறித்து கவலைகொண்ட எண்ணிறந்த மிஷனெறி பணியினர் கூட, பனை சார்ந்து வாழும் மக்களைக் குறித்து ஒரு வரி எழுதுவதில்லை வேண்டுதல் ஏறெடுப்பதும் இல்லை. இச்சூழல் மிகவும் வருந்தத்தக்கது. அரசியல் பேசும் மொழிநடையிலேயே திருச்சபையும் கீழிறங்கிவிட்டதையே இது காண்பிக்கிறது. பல்வேறு திருப்பணியாளர்களின் உக்கிர கோப்பாக்கினையின் மத்தியிலேயே இங்கே நான் கூறும் உண்மைகள் விளம்பப்படக்கூடிய சூழல் இருக்கின்றது.

நவி மும்பை எனப்படும் புதிய மும்பை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகள் இணைந்து குருத்தோலை ஞாயிறு கொண்டாடுவார்கள். என் உடன் பணியாளரான ஆபிரகாம் அவர்கள், இதற்கென அதிகமாக முயற்சிகள் எடுத்தார். மெதடிஸ்ட், சி என் ஐ, ஈ சி ஐ, போன்ற திருச்சபைகள் இணைந்து நவி மும்பை தமிழ் கிறிஸ்தவ கூட்டமைப்பு என்பதை உருவாக்கினார்கள். ஆரம்பத்தில் குருத்தோலைப் பண்டிகையினை முன்னெடுத்த இந்த அமைப்பு இவ்வாண்டு பனை விதைகளை விதைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இவ்வாண்டு மாத்திரம் சுமார் 1000 விதைகள் விதைக்க வேண்டும் என்கிற எண்னத்துடன், அவர்கள் களம் புகுந்திருக்கிறார்கள். இதுவரை 500 விதைகளையும் விதைத்திருக்கிறார்கள். மும்பைப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் தொடர்ந்து பனைக்காக குரலெழுப்பி அதன் மூலமாக திருச்சபையில் நிகழ்ந்த  ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் இது.

Nerul

நவி மும்பை தமிழ் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் பனை விதை நடுகையினை சுட்டும் செய்தி

திருச்சபை பல வேளைகளின் தான் ஒளியாக இருக்க முடியும் என்பது இவ்விதமாகத்தான். இச்செய்திகளைக் கேள்வியுற்று மும்பை நாம் தமிழர் கட்சியினர், பனை விதைகள் கிடைக்குமா என என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்காகவும் பனை விதைகளை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டே வருடத்தில் மும்பையில் பனை சார்ந்த ஒரு பெரும் மாறுதல் நிகழும். அச்சூழலில், பனை சார்ந்து  செயலாற்றுபவர்கள் அனேகர் இருப்பார்கள், அவர்கள் திருச்சபையின் முதன்மைப் பங்களிப்பினை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இதனை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

 

பனை சார்ந்த கருத்தியலை எப்படி வலிமையாக முன்வைப்பது என எனக்கு நானே ஒரு வரைவை வைத்திருக்கிறேன்.

  1. முதலாவதாக நாம் முன்வைக்கும் கருத்தியலானது அனைவரையும் ஒன்றிணைக்கும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும்
  2. அந்த கருத்தியலை நாம் உள்வாங்கியிருப்பதனால் அந்த கருத்தியலுக்காக எவ்வகை துன்பத்தையும் கடந்துவரும் மன உறுதி இருக்கவேண்டும்
  3. கருத்தியலை கூர்செய்துகொள்ளும் நோக்கில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும், ஒருபோதும் கருத்தியல் மழுங்கிவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
  4. நாம் நேரில் அனுபவித்த உணர்வுகளையே பகிர்ந்துகொள்ள வேண்டும். பொய்மைகளோ கற்பனைகளோ இருக்கலாகாது.
  5. பிறரை இக்கட்டில் தள்ளிவிடும் கருத்துக்களுக்குள் ஒருபோதும் சென்று சேரலாகாது.
  6. பல்சமய ஒன்றிப்பு, சூழியல் குறித்த புரிதல், பெண்ணியம் மற்றும் குழந்தைகள் நலன், போன்றவைகளை உள்ளடக்கியிருக்கவேண்டும்
  7. இளைஞர்களுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியளிக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.
  8. வேலைவாய்ப்பு, உணவு தன்னிறைவு மக்கள் நலன் இவைகளை பேசுபொருளாக கொண்டிருக்கவேண்டும்
  9. நிலங்களையும் மொழிகளையும் இனங்களையும் சமயங்களையும் ஊடுருவிச்செல்லும் ஆற்றல் நம் கருத்தியலுக்கு இருக்கவேண்டும்
  10. எச்சூழலிலும் எளியவரோடு நிற்கும் துணிவு இருக்கவேண்டும்.

பனை சார்ந்து பல்வேறு கேள்விகள் என் முன்னால் தொடர்ந்து வைக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன. அவைகள் சில வேளைகளில் என் மீதான குற்றசாட்டாகவும் வைக்கப்பட்டு, எனது பணிகளை பின்னடையச் செய்யும் நோக்கிலும் முன்வைக்கப்படுவது உண்டு.

பனை மரங்கள் இம்மண்ணில் செழித்து வளர்ந்தவை தான் சந்தேகம் இல்லை. ஆனால் மறைந்துபோன இன்னும் பல்வேறு மரங்கள் இருக்கின்றனவே அவைகள் மேல் கவனம் கொள்ளாமல் இப்படி ஒரு மரத்தை மட்டுமே முன்னிறுத்துவதன் காரணம் என்ன? சாதி சார்ந்த ஒரு மறைமுக கேள்வி இது. இவர்களுக்கு எனது பதிலை நான் வலிமையாகவே முன்வைத்திருக்கிறேன். எனது பனை மரச் சாலையிலும் சரி, பனை நகரத்திலும் சரி, பனை சார்ந்து வாழும் எண்ணிறந்த மக்களினங்களை நான் அடையாளம் காட்ட இயலும். அவர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருப்பார்கள். வேறு மரங்களின் மீது விருப்பம் உள்ளவர்கள் அந்தத்த மரங்களுக்கு பின்னால் குறைந்தபட்சம் 2 வருடம் தொடர் உழைப்பினைச் செலுத்தட்டும் அவர்களுடனும் நான் இணைந்து கொள்ளுவேன் என்பதுவே எனது பதிலாக இருக்கும்.

நமது நிலம் இழந்தவைகள், நாம் இழந்த உடல் நலம், ஏன், மனதளவில் கூட நாம் இழந்தவைகள் அனேகம். பெரும்பாலும் இவைகள் அனைத்தும் நமது புற வாழ்வின் கவர்ச்சிகளால் சமன் செய்ய முற்படுகிறோம். ஒரு போதகராக இப்பணிகளை நான் முன்னெடுக்கையில், திருச்சபையில் பலர் இவைகளை புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? என ஒரு போதகர் என்னிடம் கேட்டிருந்தார்.   பல வேளைகளில் அற்பணிப்பு என்பது, எங்கிருந்தோ பணம் வந்தால் தான் நிகழும் எனும் அளவிற்கு புரிதல்கள் மாறிப்போய்விட்டன. “அற்பணிப்புடன்” செயல்பட்டால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் போலும் என்றும் சிலர் எண்ணியிருக்கின்றனர். நமது அற்பணிப்பு என்பது நமது உள ஆற்றலை சார்ந்து வீறுகொண்டு எழுகிறது என எண்ணத் துணியாதவர்களின் முன்முடிவுதான் இது.

நான் ஒருமுறை மாலைமலரில் கருப்பட்டி குறித்த ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த நபர் தன்னை ஒரு பெத்தேகோஸ்து திருச்சபை விசுவாசி என்று அறிமுகம் செய்தார். வீடு பார்வதிபுரம் என அவர் சொல்லவும் பரவாயில்லையே, நமது ஊரில் கூட பனை சார்ந்து விருப்பமுள்ளவர்கள் இருக்கிறார்களே என நான் மகிழ்ந்uதேன். அவர் எல்லாம் பேசிவிட்டு, நீங்கள் என்ன பி ஜே பி கைகூலியா என்று  கேட்டிருந்தார். என்னிடம் பலரும், உமது நண்பர் ஜெயமோகன் ஒரு பி ஜே பி கைகூலி என்பது உமக்குத் தெரியாது என பல முறை என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆம் அது எனக்கு எப்படி தெரியும்? என்றே அப்போது நான் வேடிக்கையாக கேள்வி எழுப்பியிருக்கிறேன். எனக்கே நான் பி ஜே பி ஆதரவாளன், அடி வருடி என்பது பெந்தேகொஸ்தே விசுவாசி சொன்ன பிறகுதானே தெரிந்தது. இவைகளுக்கு காரணம், போதகர் எதைப் பேசவேண்டும் எனும் சொற்களஞ்சியத்தை மக்களே வைத்திருக்கிறார்கள். வானத்திலிருந்து இறங்கிய அப்பத்தைப்பற்றி மட்டும் பேசலாம் பனையிலிருந்து கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட கருப்பட்டி செய்வோரின் நிலை குறித்து குறித்து பேசக்கூடாது.

பனை சார்ந்து பணிகளை முன்னெடுக்க உதவி செய்யுங்கள் என நான் அறிந்த ஒரு திருச்சபை அங்கத்தினரிடம் மன்றாடினேன்.  எங்கு கோயில் கட்டினாலும் அவர் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றால் ஒரு லட்சம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறவர். “உங்களுக்காக நான் தொடர்ந்து மன்றாடுகிறேன்” என எள்ளலாக பதில் கூறினார். இதற்கு காரணம் என்ன? திருச்சபை தனது பணிகளை விரிவாக்கிக்கொள்ளவில்லை. திருப்பணி என்பது குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டதே இதுபோன்ற பதில்களுக்கு காரணம். அந்த விசுவாசியின் மன்றாட்டில் பிழையேதும் இல்லை, ஆனால் இப்போது பொருளுதவி  செய்யும் சூழலில் நான் இல்லை என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். 

இப்படிப்பட்டவர்களைக் குறித்து திருமறை கீழ்கண்டவாறு கூறுகிறது “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” (யாக்கோபு 4: 17)

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.((யாக்கோபு 2: 14 – 17)

இருப்பினும் புரிந்துகொள்ளுகிறவர்களும் தொடர் உதவி செய்கிறவர்களும் என்னை ஊக்கப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.

தனி நபராகவோ ஒற்றைத் திருச்சபையாகவோ முன்னெடுக்கும் காரணங்கள் நன்றுதான். ஆனால் நமது பணிகள் பிற மக்களையும் சென்றடையவேண்டி முயற்சிப்பது மிக முக்கிய தேவையான ஒன்று என்பதை உணர்ந்து மேலதிக முயற்சிகளை எடுக்க எண்ணினோம். திருச்சபை செயற்குழுவின் ஒப்புதலோடு ஒரு பனை விதை வழங்கும் திட்டத்தினை முன்னெடுத்தோம். வெறுமனே பனை விதைகளைக் கொடுப்பதிலுள்ள சிக்கல்களை எண்ணிப்பார்த்தோம். அதனை மும்பை மக்கள் எப்படி வாங்கிச் செல்லுவார்கள்? மக்கள் தங்கள் கரங்களில் இவ்விதைகளை எடுத்துச்செல்லும்படி செய்ய மிகச்சிறந்த வழிமுறைகள் என்ன போன்றவைகளை விரிவாக பேசி முடிவெடுத்தோம். அப்படித்தான்  காகிதப் பையினை செய்து அதில் பனை விதைகளை வைப்பதே  சரியாயிருக்கும் என முடிவிற்கு வந்தோம். எப்போதும் போல ஸ்டீபன் அவர்களிடம் சொன்னேன். பனை விதைகளை வைக்க நமக்கு ஒரு காகிதப் பை தேவைப்படுகிறது செய்து தருவீர்களா என்றேன். வழக்கமாக அவர் சொல்லுவது போலவே “செய்திரலாம் ஐயா” என்றார்கள்.

வேகமாக பணிகள் நடைபெற்றன ஆனாலும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று மணி நேரங்களாவது ஸ்டீபன் இதற்கென ஒதுக்கினார். பல வடிவங்களை செய்து பார்த்து, இறுதியாக தலையணை உறை போன்ற ஒரு வடிவத்தினை காகிதத்தில் செய்ய முடிவு செய்தோம். ஸ்டிபன் அதனை வடிவமைத்திருந்தார். இது சற்று சவாலான பணி. காகிதம் குறைவாக தேவைப்படும் ஒரு சிறந்த வடிவம். பல பிரதிகளை எடுத்து அதன் வடிவங்கள் மிகச்சரியாக அமைகிறதா என பிழை திருத்தியபடியே வந்தோம்.  அதன் மேல் என்ன எழுதப்படவேண்டும் போன்றவைகளை எண்ணி எழுதி நிறைத்தோம். பிழைகளை களையவும், வாக்கியங்களைச் சீர்படுத்தவும் ஆங்கிலத்தில் புலமையுள்ள தோழி ரோதா அலெக்ஸ், எனது மூத்த சகோதரன் செல்சன் ஆகியோர் உதவி செய்தார்கள். இந்த நிகழ்சிக்காக பல தலைப்புகளை நாங்கள் பரிசீலித்தோம், என்றாலும், ஒன்றும் தேறவில்லை. எனது ஆசிஷ் அத்தான்  “பால்மலைவ்” (PalmAlive) என்ற உயிர்ப்பான தலைப்பினை  சூட்டினார்கள்.

Palm Alive

வெளியிட இருக்கும் சிறு புத்தகத்தின் மாதிரி

காகித உறை செய்ய பெரும் பணம் செலவாகும் என்பதால் எங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் உண்டு என தேடினோம். திருச்சபையின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சலிக்காமல் வாரி வழங்கும் வள்ளலான  பொன்சிங், செலவுகளை தான் பொறுப்பெடுப்பதாக கூறினார். பொன்சிங் தொடர்ந்து எனது பனை சார்ந்த பணிகளுக்கு தோள் கொடுப்பவர்கள். இப்போதும் உற்சாகமாக என்னோடு களத்தில் இறங்கினார்கள். இவ்விதமான ஒத்துழைப்புகள் இல்லையென்று சொன்னால் இப்பணிகளை முன்னெடுப்பது இயல்வதல்ல.

Kakitha pai

பனங்கொட்டைகளை வைத்துக் கொடுக்கும் காகித உறை

பனை இம்மண்ணிற்கான மரம் என்பதை மக்கள் உணர்த்துகொள்ள மும்பைப்பகுதியில் முதல் முயற்சியை எடுக்கிறோம். எங்களது நோக்கம், பனை விதைகள் எப்படியிருக்கும் என்பதனை மக்கள் உணரவேண்டும் என்பதே.  மறக்கப்பட்டவைகள் நினைவுகூற வேண்டிய தருணம் இது. மும்பை இழந்துபோன பனை மரங்களை உயிருடன் எழுப்பும் வல்லமையான அற்புதச் செயல்  இது. சிதறடிக்கப்பட்ட பனைசார்ந்த மக்களை மீண்டும் இந்த நகரத்திற்கு கூட்டிச் சேர்க்கும் முதல் விதை இது. மும்பை நகரம் பனை நகரம் என பேர் பெறும் வரையிலும், இது பற்றியெறியவேண்டிய அக்கினி குஞ்சு இது. எங்களின் மன்றாட்டுகளின் பரு வடிவே விதைகளை பகிர்ந்தளிக்கும் இம்முயற்சி.

பனை விதை அளவு விசுவாசம் என்பது பாதை சமைக்கும் விசுவாசம். இழந்தவைகளை மீட்டெடுக்கும் விசுவாசம் என அது விரிவடைந்துகொண்டே செல்லுகிறது. விதைத்த விதைகள் முளைத்து வளரும்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து) 
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  9

ஓகஸ்ட் 8, 2019

ஆரே பனங்காடு

பனை சார்ந்த பணிகளை தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழகத்தில் செய்த பின்பு  மும்பை நோக்கி பயணிப்பது என்னளவில் இயல்வதாக இருக்கவில்லை. என்னை பெயர்த்தெடுத்தே மும்பை செல்ல முடிவெடுத்தேன். எனது பயணம் எதை நோக்கியது என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தபடியே இருந்தன . மும்பையில் நான் செய்யவிருப்பது என்ன?  இறைப்பணியினை செய்கையில் அதன் வடிவாகவே பனைபணியினையும் உள்ளிணைத்தே செய்யும் கடமை எனக்கு இருப்பதால், நான் மிகுந்த கவனத்துடன் எனது மும்பை பயணத்தை முன்னெடுத்தேன். இரண்டு வருட விடுமுறைக்குப் பின் எனது பணித்தளம் ஆரே பால் குடியிருப்பு திருச்சபை என்றானபின் என்னால் அதிக அளவில் பனை சார்ந்த முன்னெடுப்புகளை எடுக்க இயலாது என்பதையும் அறிந்தே இருந்தேன். தமிழகத்தில் நான் ஆற்றிய பணிகளுக்கு இணையாக இங்கு செயல்பட இயலாவிட்டாலும், பனை என்னைவிட்டு தூரமாகிவிடக்கூடாது என்பதை எனது மனதில் நிறுத்தியிருந்தேன். ஆகவே எனக்கு எஞ்சும் நேரத்தில் என்னுள் உறைந்திருக்கும் சில எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்றே எண்ணியிருந்தேன்.

ஆரே பகுதியில் நான் பொறுப்பெடுக்க வந்த நாள் மிகவும் முக்கியமானது. கோரேகாவுன் பகுதியிலிருந்து பேருந்தில் நான் பயணித்தேன். வரும் வழியிலேயே விரைவுச் சாலையினை கடக்கும் முன்பதாகவே சில பனை மரங்களைக் கண்டேன். ஆரே காலனிக்குள் நுழைந்தபோது மும்பையில் வேறெங்கும் இல்லாத பசுமையினை  உணரமுடிந்தது. ஆரே காலனிக்குள் நுழைந்த பிற்பாடு பனை மரங்கள் பார்வையை விட்டு அகலாமல் உடன் பயணிக்கின்ற ஒன்றாகிவிட்டன. அது பசுமை வெளிக்குள் ஊடுருவியிருக்கும் ஆழ்ந்த பசுமை. தேடுவோர் கண்களில் மட்டுமே தென்படும் மாயம். தனது இருப்பை பிரதானப்படுத்திக்கொள்ளத பனையின் தன்னடக்கம்.

மரங்களோடு மரங்களாக  இணைந்து வளரும் நெடும்பனைகள், உச்சிவரை புல் முளைத்து நிற்கும் வடலிப்பனைகள், மிக பிரம்மாண்ட கட்டிடங்களின் பின்னணியத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரங்கள். பசும் புல்வெளியில் உயர்ந்த புல்லென வளர்ந்து பெருகும் பனை மரங்கள், மரங்களின் மேலே தனது தலைகளை உயர்த்தி பிடிக்கும் பனை, மரங்களின் பசுமைக்குள் மூழ்கி, தனது தலையினை உயர்த்த முயற்சிக்கும் பனை மரங்கள். ஆலமரங்களின் விழுதுகளோடு பின்னி பிணைத்திருக்கும் காதல் பனைகள், ஆலமர தண்டுகளால் நெறிப்பட்டபடி தனது இறுதி மூச்சிற்காக தலையை உயர்த்திநிற்கும் பனை மரங்கள், விண்ணளந்தபடி உயர எழுந்து நிற்கும் பனை மரங்கள். சற்றே சாய்த்து கொள்ளுகிறேன் என மூப்பின் மிகுதியால் சாய்ந்தபடி நிற்கும் பனை மரங்கள். ஆங்காங்கே பனை மரத்தின் அடியில் சிதறிக்கிடக்கும் புத்தம் புது பனம்பழங்கள்.  தோல் உரிந்து காய்ந்துபோய் கிடக்கும் நாட்பட்ட பனங்கொட்டைகள், மண்ணில் வேர்பிடித்து நாகமென தலை தூக்கும் பீலி பருவங்கள், மழலைகளின் விரித்த கைகளைப்போல சில ஓலைகளை விட்டு நிற்கும் பனை குட்டிகள். முரட்டுதனமான இளைஞர் போல் தனக்கான இடத்திப் முண்டி படித்துக்கொள்ளும் வேகத்துடன் செழிப்பாக வளரும் வடலிப்பனைகள். எனக்கான இடம் இது தான் என்பதனை ஆரே சொல்லிக்கொண்டே வந்தது.

மும்பையில் மாதமொருமுறை தமிழ் போத்கர்களாக ஒன்றுகூடி ஜெபிப்பது வழக்கம். அவ்விதமாக இதற்கு முன்பு இருமுறை ஆரே சென்றிருக்கிறேன். என்னை இளைஞர் ஞாயிறு அன்றும் கூட சிறப்பு செய்தியாளராக அழைத்திருந்தார்கள். மற்றும் வேறு சில நிகழ்வுகளுக்காக ஆரே சென்றிருக்கிறேன். எனது முந்தைய பயணத்தில் நான் பார்த்ததை விடவும் இப்போது பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக எனது உள்ளுணர்வு சொன்னது. இங்கிருந்த பனை மரங்கள்  மூப்பினை அடைந்து உயிர் விட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். வெட்டி சாய்க்கும் அனுமதி ஆரேயில் கிடையாது.

பிற்பாடு எனது திருச்சபையின் பொருளர் ஸ்டீபன் துரை அவர்களுடன் பேசுகையில், நமது ஆலயத்திற்குப் பின்னே பனை மரங்கள் இருந்தது ஐயா என்று சொன்னார்கள். ஆரே பகுதிகளில் ஒருகாலத்தில் பனை ஓலைக் குடிசைகளே இருந்தன  என திருச்சபையின் மூத்த உறுப்பினர் ஜேசு கருணாகரன் அவர்கள் கூறினார்கள்.

ஆரே பழங்கதைகளை கருணாகரன் அவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளலாம். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் இங்கே வந்த போது, ஆரே பால் பதனிடும் தொழிற்சாலை வளர்சிப்பாதையில் பீடு நடை போட்டுக்கொண்டிருந்தது.   ஆகவே அடிப்படை வேலைக்கான ஆட்கள் தேவைப்பட்டார்கள். ஊரிலே ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சியினால் அனேக தமிழர்கள் வேலை தேடி மும்பைக்கு வந்தனர். வந்த அனைவரையும் ஆரே தனது இரு கரம் நீட்டி வரவேற்றது. தோட்ட வேலை, புல் வெட்டுவது போன்ற வேலைகளே இவர்களுக்குக் கிடைத்தது.

Aarey truck

மாடுகளுக்காக புற்களை ஏற்றிச்செல்லும் லாரி. பனை மரங்கள் பின்னால் நிற்கின்றன. 1952 ஆம் ஆண்டு புகைப்படம்.

இவ்விதம் வந்த அடிப்படைத் தொழிலாளர்களுக்கு, இருக்க இடத்தினை ஒதுக்கிக்கொடுப்பது ஆரே நிர்வாகத்தின் பொறுப்பு. சேறும் சகதியுமான இடம் தான் ஆனாலும் மக்கள் இங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பனை மரங்களை இங்குள்ள நிர்வாகி அளிப்பார். அவைகளை அடையாளப்படுத்தும் ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார். இந்த ஐந்து பனை மரங்களிலிருந்து வீடு கட்ட தேவையான ஓலைகளை இவர்கள் வெட்டி எடுத்துக்கொள்ளலாம் போன்ற தகவல்களை திரு ஜேசு கருணாகரன்  சொன்னார்ர்கள். தனது வீடு கூட பனை ஓலையாலே வேயப்பட்டிருந்தது என்றும், கடந்த பத்து வருடங்களாகத்தான் தனது வீட்டை சீர்படுத்தி தற்போது இருக்கும் நிலைக்கு மாற்றியமைத்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். மும்பையின் மையமான ஒரு பகுதிக்குள் பனை ஓலைகளாலான வீடுகள் 10 வருடத்திற்கு முன்புவரை இருந்திருக்கிறது என்பதை நினைக்கவே மயிர் கூச்செறிகிறது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பே மும்பையில் 50 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. மற்றொருபுறம் இவ்விதமான ஓலைக் குடிசைகளும் இருந்திருக்கின்றன.

தமிழகத்திலுள்ளவர்களில் ஒரு சிலர் தங்கள் பனைகளில் ஏறி ஓலைகளை தாங்களே வெட்டி எடுத்துக்கொள்ளுவார்கள். அப்படியானால் தான் அவர்களால் பணத்தை மிச்சப்படுத்த இயலும். ஆனாலும் கூரை வேய வேண்டும் எனும்போது அவர்களுக்கு இங்கு வாழு மக்களின் தேவை இருந்க்டது என்பதாக கூறினார்கள். தமிழகத்திலுள்ள மக்களுக்கே ஓலைகளில் கூரை வேயும் அளவிற்கு திறன் படைத்தவர்கள் யார்?  என நான் வினவியபோதுதான், இங்கு வாழும் வார்லி பழங்குடியினர் என்று சொன்னார்கள். பட்டென்று ஒரு ஒரு கதவு திறந்து கொண்டது. மும்பையின் அடியாளம் துழாவினால் மேலும் பல தகவல்கள் கிடைக்குமாயிருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

இப்பகுதியில் முதன் முதலாக ஊழியம் செய்ய வந்த அருள்திரு. குமாரதாஸ் ஐயா அவர்கள்  திரு ஜேசு கருணாகரன் அவர்கள் இல்லம் குடிசையாக இருந்தபோது குனித்து உள்ளே வந்து ஜெப கூட்டம் நடத்தியதை இன்றும் இம்மக்கள் நினைவில் கொள்ளுகிறார்கள். ஒரு போதகர் தங்கள் குடிசை வீட்டில் காலடி எடுத்து வைப்பது மிகப்பெறும் ஆசியாகவே இம்மக்களால் உணரப்பட்டிருக்கிறது. இந்த தகவல் மிக முக்கியமானது. எளியவர்களோடு தங்களை ஐக்கியப்படுத்தும் முறைமை இங்கு அற்றுப்போயிருக்கிறது. இயேசுவின் அன்பினை கண்டவர்கள் அதனைப் பகிர எங்கும் சென்றார்கள் என்பதன் ஓர் அடையாளம் இது.

திருமதி. ஜெயா கருணாகரன் அவர்கள் கூறும்போது, அப்போதெல்லாம் வீட்டிற்குள்ளே சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். கோணிப்பைகளை போட்டு, அதன் மேல் வைக்கோலைப் போட்டு, மேலும் கோணிப்பைகளைப் போட்டு தான் மழைக்காலங்களில் உறங்கமுடியும் என்றார்கள். மேலும் குமாரதாஸ் அய்யா எங்கள் வீட்டிற்குள் வந்து ஜெபக்கூட்டம் நடத்தும்போது, தரையில் தண்ணீர் ஊறிப்பாயும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வித அனுபவங்களினூடாக தான் அவர்கள் தனது மூத்த மகன் ஜேசு அந்தோணி கருணாகரன் அவர்களை ஒரு போதகராக உருபெறச் செய்தார்கள். மும்பை மெதடிஸ்ட் திருச்சபையின் இளம் ஆயரான அவர் இப்பொழுது, பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கிறார்.

எனது பணி நியமனத்தைக் குறித்து பேராயர் அறிவித்தவுடனேயே ஆரே வரவேண்டும் என்கிற ஆவலை அடக்க இயலவில்லை. என் குடும்பத்தினருடன் ஆரே நோக்கிய பயணங்களை ஒழுங்கு செய்ய முற்படுகையில், ஆரே எப்படி இருக்கும், இன்றைய தினத்தில்  அங்கே பனை மரங்கள் இருக்குமா என்கிற கேள்வி எழுந்ததால் ஆரே காலனியில் பனை மரங்கள் குறித்து தேடிக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஆரே பகுதியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன் என்கிற தகவல் பெற்ற எனது தோழி திருமதி ரோதா அலெக்ஸ் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறு வயதில் மும்பையில் சில வருடங்கள் இருந்ததாகவும், ஆரேயினை அடுத்த கோரேகாவுன் பகுதியில் வாழ்ந்ததாகவும் ஆரே பகுதிக்கு அவர்கள் வந்திருப்பதாகவும் உற்சாகமாக பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். கூடவே  எனக்கு ஒரு புகைப்படமும் அனுப்பியிருந்தார்கள். 1952 ஆம் ஆண்டு ஆரே காலனியில் எடுக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம் அது. பனை மரங்கள் மட்டுமே காணப்படும் அந்த புகைப்படம், எனது பனை நகரம் குறித்த எண்ணங்களைத் தூண்டி விட்டது. நான் துள்ளிக் குதித்துவிட்டேன். ஆண்டவா இவ்வளவு செழிப்பான பனை செறிந்திருக்கும் இடத்திற்கா என்னை அழைத்துச் செல்லுகிறாய் என உருகினேன். ஆண்டவருக்கு நன்றி கூறினேன். என் உள்ளத்தினை அறிந்த ஆண்டவரின் வழி நடத்துதல் தான் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்ததாக நிறைவடைந்தேன்.

Aarey

ஆரே பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் பனை மரங்கள். 1952ஆம் ஆண்டு புகைப்படம்

குடும்பமாக நாங்கள் ஆரே வந்த பின்பு, முதல் ஞாயிறு அன்று தான் எங்கள் பொருட்கள் ஊரிலிருந்து வந்து சேர்ந்தன. திருச்சபையின் முக்கிய செயற்குழு அங்கத்தினர்களான திரு. செல்வராஜ் (செயலர்) திரு. ஸ்டீபன் துரை(பொருளர்) திரு. லாரன்ஸ் (நிதி நிர்வாக குழு தலைவர்) ஆகியோர் உதவி செய்வதற்காக வந்திருந்தனர். பொருட்களை எல்லாம் இறக்கிய பின்பு, நாங்கள் இலகுவடைந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான் கடந்துவந்த அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் குறிப்பிட்டேன். எனது மொபைலில் இருந்த  அந்த புகைப்படத்தை ஸ்டீபன் பார்த்தபடி இருந்தார். பின்னார் ஐயா இந்த இடம் எனக்குத் தெரியும், இங்கே தான் இருக்கிறது என்றார். நான் திறந்த வாயை மூடாமல் அவரையே பர்த்துக்கொண்டு நின்றேன். ஐம்பது வருடங்கள் கடந்த பின்னும் அவைகள் அப்படியே இருக்குமா? அப்படியானால் அவைகளைப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். “வாங்கையா போகலாம்” என்றார், அனைவருமாக இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சென்றோம்.

ஸ்டீபன் அவர்களது சிறுபிராயம் முதலே இங்கே வாழ்பவர். 38 வயது தான் என்றாலும், இப்பகுதியினை தனது கால்களால் முழுமையாக அளந்து முடித்தவர். சலிப்பின்றி பயணிக்கின்றவர். ஆரே முழுக்க சுற்றியலைவதை பெருவிருப்பாக  கொண்டவர். அவரது கண்களுக்கு மறைவான இடம் ஆரே பகுதியில் இல்லை எனும் அளவிற்கு அது காட்டுப்பகுதியாக இருக்கும்போதே சுற்றியலைந்தவர்.  அவர் எங்களை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றார். என் வீட்டிலிருந்து 100  மீட்டர் தொலைவுதான். ஒருவேளை ஸ்டீபன் எங்களை அங்கே அழைத்துச் சென்றிருக்காவிட்டால், நான் ஒருபோதும் அந்த பாதையினை தெரிவு செய்திருக்க மாட்டேன். ஆரேயின் பனை செல்வங்களை குறித்தோ மும்பை பனை நகர் என்றோ நான் எழுத துணிந்திருக்கவும் மாட்டேன். நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெருந்தகவலை அப்படியே இழந்திருப்பேன்.

நாங்கள் சென்ற பாதை வளைந்திறங்க துவங்கிய இடத்தில் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பெரிய கட்டிடங்கள் எழுந்து நின்றன. எங்களுக்கு முன்னால் மிகப்பெரிய பள்ளத்தாக்கு காணப்பட்டது. பசுமை நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு. தூரத்தில் மும்பை நகரம் தெரிந்தது. சாந்தாகுரூஸ் விமான நிலையம் கூட அங்கிருந்து தெரிந்தது. நகரம் துவங்கும் இடத்தின் அருகில், ஒரு பனை செறிவுள்ள பகுதியினை ஸ்டீபன் காண்பித்தார். அந்த பகுதி தொடந்து நீண்டு வந்து ஆங்காங்கே அறுபட்டு ஆரே காலனியின் மற்றொருபுறத்தில் வந்து இணைந்தது. கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தேன்.  இது எப்படி என என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. லாரன்ஸ் சொன்னார், இவ்வளவு நாட்கள் நான் இங்கிருந்தும் இங்கே வந்ததில்லை என. ஆம் அது அப்படித்தான். கிட்டத்தட்ட ஒரு ஆறு கிலோமீட்டர் தொலைவு அந்த பனங்காட்டின் தொடர்ச்சி இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.

Aarey

ஆரே மாட்டுத்தொழுவத்திற்கு முன்னும் பின்னும் செழித்திருக்கும் பனைகள். 1952ஆம் ஆண்டு புகைப்படம்

அந்த இடத்திற்கு போகமுடியுமா என்று ஸ்டீபனிடம் கேட்டேன். போகலாம் ஐயா என்றார். அங்கிருந்து புறப்பட்டு ஒரு 5 நிமிட தூரத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் முன்பு எங்கள் வாகனங்களை நிறுத்தினோம். ஸ்டீபன் வழி காட்ட, நாங்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, இளைஞர்கள் கைகளில் செல்போனை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அருகில் பியர் புட்டிகள் பாதியளவில் இருந்தன. அவர்களுக்கூடாக நாங்கள் படிகளில் ஏறி நடந்தோம். எங்களைச் சூழ ஒரே காடு தான். அப்படியே விழிகளை உயர்த்தியபோது பனை ஓலைகள் காற்றில் அலைததபடி அங்கே ஒரு பனைக்கடலே தெரிந்தது. அது பேரலைப்போல் எழுந்து என்னை சுருட்டி எடுக்கும் அழைப்பு அவ்வோலைகளுக்குள் காணப்பட்டது. அந்த பனங்காட்டினுள் நுழைய ஆசைப்பட்டேன். எப்படி செல்லுவது என தெரியவில்லை. இறக்கைகள் இருந்திருந்தால்  பறந்தே சென்றிருப்பேன். அக்காடு என்னை வா என சுண்டி அழைத்தது.

ஸ்டீபனைப் பார்த்தேன். அவர் புரிந்துகொண்டு “போகலாம் அய்யா” என்றர். கீழிறங்கி நடக்கத்துவங்கினோம். அது ஃபில்டர்பாடா என்கிற ஒரு சிறு கிராமபகுதி. வார்லி பழங்குடியினர் இருக்குமிடம். நாங்கள் இருக்கும் பகுதிக்கும் இங்கே வாழும் மக்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்கள் தான். பனை ஓலைகளை சில இடங்களில் மாட்டு கொட்டகைக்கென போட்டிருந்தார்கள். அந்த சிறு கிராமத்தினூடாக நடந்து கடந்து உள்ளே சென்றபோது ஒரு வடலியைப் பார்த்தேன்.

வடலியைப் பார்க்கையில் எல்லாம் காளை தான் எனக்கு ஞாபகம் வரும். திமிறியபடி இருக்கும் அதன் திரட்சிகள் அப்படி. கட்டுக்கடங்கா பருத்த வடிவம். சீவிவிட்ட கொம்புகள் போல மட்டைகள் சீராக எழுந்திருக்கும்.  குதித்தெழும் ஜல்லிக்கட்டு காளையின் கண நேர அசைவினை கொண்டிருக்கும். எவரையும் நெருங்கவிடாத ஒரு முரட்டுத்தனம் கூடியிருக்கும். அருகில் சென்று மட்டையைப் பிடித்துக்கொண்டால் சாந்தமே உருவான   காளைபோல் அது அங்கே நின்றுகொண்டிருந்தது. அதனைக் நாங்கள் கடந்த போது இன்னும் இரண்டு நெடிய பனை மரங்கள் எங்கள் கண் முன்னால் நின்றன. அப்பால் இன்னும் இரண்டு, வலதுபுறம் திரும்பினால் இன்னும் ஏழு, நாங்கள் ஒரு முக்கிய இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்ற உணர்வு எனக்குள் நிலக்கொள்ளத் துவங்கியது.

இரண்டு நிமிட நடைத்தொலைவிற்குப்பின் நாங்கள் ஒரு ஆலமரத்தடிக்கு வந்தோம். அங்கிருந்து பார்க்கையில் எங்கள் முன்னால் ஒரு வெட்டவெளி. காய்ந்து போன நிலம் வெடித்திருந்தது, புழுதி அடித்துக்கொண்டிருந்தது. கருமை நிற மண் அப்பகுதியில் காணப்பட்டது. ஆங்காங்கே இளைஞர் கூட்டமாக அமர்த்திருந்தனர். மது குடிக்க வந்திருக்கலாம். அந்த இடத்தில் காணப்பட்ட பனைகளின் செழுமை, இது பனைக்குரிய இடம் தான் என ஆறுதியிட்டுக் கூறின. பருத்த அடித்தண்டுகள். வெம்மைக்கு சற்றும் சளைக்காமல் பனை ஓலைகள் பசுமையுடன் தங்களை விரித்தபடி அசைந்தாடிக்கொண்டிருந்தன.

நாங்கள் கடந்து சென்ற ஆலமரத்தின் அடியில் மிகப்பெரிய ஒரு பாத்திரம், விறகடுப்பு மற்றும் பெரிய நீளமான விறகு கட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆம் சிறு குழந்தை  கூட சொல்லிவிடும் அதொ ஒரு சாராயம் காய்ச்சும் இடம் தான். ஆதிவாசிகளின் வாழ்வில் சாராயம் இரண்டரக் கலந்தது. அத்துணை எளிதாக அவர்களுக்கும் சாராயத்திற்குமான உறவை பிரித்துவிட இயலாது. ஆனால் அவர்களின் போதைப் பழக்கவழக்கங்கள்  நவீன வாழ்வோடு தொடர்புறும் பொழுதே அவர்கள் வாழ்வு சீர்குலைகின்றன என்பது எனது எண்ணம். தன்னளவில் அவர்களுக்குள் கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. முற்காலத்தில் மிதமிஞ்சிய கள்ளினை வடித்தே சாராயம் காய்ச்சியிருப்பார்கள் இல்லையா? 

என்னை மட்டுமல்ல என்னோடு வந்த அனைவரையுமே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நாமிருக்கும் பகுதியினை ஒட்டி இத்தனை திரளாக பனை மரங்களா? அப்போது தான் எனது உள்ளம் உணர்ந்தது, பனை மரத்தில் ஏறும் மனிதர்கள் வெகு அருகிலேயே இருக்கிறர்கள் என்று. ஒருவேளை இங்கே வந்து கூட்டம் கூட்டமாக அமர்த்திருக்கும் வாலிபர்கள் கள் பருகியபடி இருக்கலாம். ஆனால், அங்கு எங்குமே கலயங்கள் கட்டியிருப்பதற்கான அடையாளம் இல்லை. ஒருவேளை இன்னும் உள்ளேச் சென்றால் பனை ஏறுபவர்கள் இருக்கலாம் என எண்ணிக்கொண்டோம்.

நான் இனி வேண்டுவது என ஒன்றும் இல்லை. நான் வந்திருக்கும் இடம் ஆசியாய் எனக்கு அளிக்கப்பட்ட இடமே. எனது எண்ணங்களையும் விருப்பங்களையும் அறிந்த ஒருவராலேயே எனக்கு இவ்விதமான ஒரு அரும்பெரும் வாய்ப்பினை நல்க இயலும். மாலை வேளை ஒளி மங்கியபடி வந்தது ஆனால் எனது உள்ளத்தில் ஒளி கூடத் துவங்கியது. எனக்குத் தெரியும், நான் கண்ட இந்த காட்சி மும்பையின் மனசாட்சி அல்லாமல் வேறல்ல. இன்னும் சில ஆண்டுகளில் இவைகளும் கூட இருக்கும் இடம் தெரியாமல் துடைத்து எறியப்பட்டுவிடும். ஆனால், இன்று இங்கே வந்து இவைகளை பார்ப்பதன் பொருள் இவைகள் இம்மண்ணில் ஆழ வேரூன்றியவைகள் என்பதனையும், இம்மக்களின் வாழ்வோடும் இந்த நகரத்தின் உருவாக்கத்திலும் பனை மரம் பின்னணியமாக உறுதியுடன் நின்றிருக்கிறது என்பதையே.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  8

ஓகஸ்ட் 7, 2019

 

பன்முக பனைபணி

மிராரோடு பகுதியிலிருந்து நான் மாற்றலாகி பூனா அருகிலுள்ள டெகுரோடு என்ற இடத்தில் உள்ள மெதடிஸ்ட் தமிழ் திருச்சபைக்கு 2012 ஆம் ஆண்டு போனேன். ஒரு வருடம் மட்டுமே அத்திருச்சபையில்  நான் பணியாற்றினேன். அப்பகுதிகளில் பனை மரங்கள் கிடையாது. அது எனக்கு பெருங்குறையாகவே இருந்தது.  என்றாலும் முயன்று இரு பனையோலைக் கண்காட்சிகளை புனே பகுதிகளில் நடத்த முடித்தேன். வீட்டில்  பனையோலையில் செய்யப்பட்ட இயேசுநாதரின் படத்தைப் பார்த்த ஒரு முதிய பெண்மணி, ஆவியில் நிறைந்து ஆண்டவர் இவ்வீட்டிலே இருக்கிறார்கள் என கைகளை விரித்து நெகிழ்ச்சியோடு கூறியது அங்கே நான் பெற்ற மாபெரும் ஆசி.

எனக்கு 2013 ஆம் ஆண்டு அகமதாபாத் தமிழ் திருச்சபையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்காங்கே நிற்கும் பனை மரங்களை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. என்றாலும், அங்கேயும் பனை சார்ந்த கண்காட்சியினை முன்னெடுத்தேன். அகமதாபாத்தில் நாங்கள் இருக்கும்போது, மளிகை சாமான் வாங்கும்படியாக நாங்கள் செல்லும் கடைக்கு முன் ஒரு ஒரு காகித அட்டைபெட்டிகள் செய்யும் கடை என் கவனத்தைக் கவர்ந்தது. ஏன் ஓலைகளை இப்படி நாம் வெட்டி ஒழுங்கமைக்கக் கூடாது என்று எண்ணினேன். அப்படித்தான், கிறிஸ்மஸ் அலங்காரங்களான வளையச் சங்கிலிகளும், பனை ஓலைக் கைப்பட்டைகளும் செய்யும் அச்சையும் அகமதாபாத்திலிருந்து உருவாக்கினேன். அகமதாபாத்தில் நான் இருக்கும்போதுதான், போதகர்கள் பயன்படுத்தும் காழுத்துப் பட்டைகளை நான் அறிமுகம் செய்தேன். உலக வரலாற்றில் எவரும் இவ்விதம் பனை ஓலையில் கழுத்துப்பட்டைகளை செய்திருக்க இயலாது.

Collar

பனை ஓலையில் செய்யும் இவ்வித கழுத்துப்பட்டைகளின் முக்கியத்துவம் தான் என்ன? திருச்சபை, பல்வேறு நிலைகளில் இன்று இயற்கையினை மீறி எழுந்துவிட்டிருகின்றது. போதகர்கள், தங்கள் அலங்கார உடையாலும், தங்கள் வாழ்வின் ஒழுக்கிலும் இயற்கையை விட்டு விலகி சென்றுவிட்டனர். இவ்வித சூழலில், போதகர்களின் குருத்துவ ஆடையில் ஏதேனும் ஒரு வடிவில் இயற்கை பொருட்கள் இணைகையில், அது ஒரு மிக உயரிய குறியீடாகிறது. நானே எனது கைப்படச் செய்த பனை ஓலை கழுத்துப்பட்டைகளை மும்பையில் இருக்கும் போதகர்களுக்கு இலவசமாக அனுப்பி, குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தக் கேட்டுக்கொண்டேன். எவரும் அதனைப் பொருட்படுத்தியது போல தெரியவில்லை. ஆனால் அவ்வேளையில் அகமதாபாத் வந்த அறிவர். அருட்பணியாளர். தியான்சந்த் கார்  அவர்கள், நான் அவர்களிடம் கொடுத்த மறுநாளே அதனை அணித்தபடி எங்களது திருச்சபைக்கு  வந்தார்கள். எனது பணியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட மிகச்சிலருள் அவரும் ஒருவர்.

திருச்சபை சில மாயைகளுக்குள் சிக்கியிருக்கிறதை இவ்விதமான நிகழ்ச்சிகளின் வாயிலாக தான் உணர்ந்துகொள்ள முடிகிறது. திருச்சபையில் எழும் மாற்றம், அனைத்துமே 15ஆம் நூற்றாண்டுடன் உறை நிலை அடைந்துவிட்டது எனவும், ஏழாம் நூற்றாண்டு இந்திய பக்தி மார்க்கத்தின் வழியில் நடப்பதுவே சிறந்தது எனவும் எண்ணிக்கொள்ளும் நிலை, எவ்வகையிலும் கிறிஸ்தவர்களை மிகச்சிறந்த சமூக அங்கமாக பரிமளிக்க இயலாதபடி விலக்கி வைத்திருக்கிறது. இலக்கிய பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள ஓரிருவரையே நான் பார்க்கிறேன். அதுவும் மிக மந்தமான கதியில். திருச்சபையினைத் தாண்டி சென்றும் பணியாற்றும் ஒரு போதகர் கூட இங்கே இல்லை. இது திருச்சபைக்கு மிகப்பெரிய பின்னடைவையே அளிக்கும் என எவரும் எண்ணுவது இல்லை. திருச்சபையின் வளர்ச்சி எனபது கட்டிடங்களைக் கட்டுவதும், சபை மக்களின் எண்ணிக்கையினைக் கூட்டுவதும் என்றாகிப்போனது. உப்பாய் சமூகத்தில் கசிந்து சுவை ஏற்றும் எண்ணம் இல்லாது போனது. எங்கே பிற நம்பிக்கையாளர்களுடன் கலக்கவேண்டும், எங்கே நாம் தனித்து இயங்கவேண்டும், எங்கே நமது சான்று பகிரப்படவேண்டும், எங்கே நாம் சமயங்களைக் கடந்து ஒருங்கிணையவேண்டும் என்பன போன்ற தெளிவுகள் இன்றைய திருச்சபையில் காணப்படுவதில்லை. இவ்வகையான குறுகிய மனநிலைக்கு அனைத்து திருச்சபைகளையும் கண்ணைக் கட்டி விட்டது கடந்த நுற்றாண்டில் உருவான பெந்தேகோஸ்தே அமைப்பு என்றால் அது மிகையாகாது.

அகமதாபாத்திலிருந்து நாங்கள் மீண்டும்  ரசாயனி வந்தபோது, ஜாஸ்மினுக்கு மும்பை சார்ந்த மெதடிஸ்ட் தமிழ் திருச்சபைகளின் பெண்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்த ஒரு வாய்ப்பு கிட்டியது. அவ்வேளையில், மிராரோடு திருச்சபை தான் பேட்ஜ் செய்யும் பொறுப்பினை பெற்றிருந்தது. அவர்களோடு இணைந்து பனை ஓலையில் நாம் பேட்ஜ் செய்தால் என்ன என வினவ, அவர்களும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள, இந்த நிகழ்ச்சியில் தான் பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் பேட்ஜினை மும்பையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினோம். பெருத்த வரவேற்பை அது பெற்றது.

Badge

ரசாயனியில் கொல்லர் ஒருவர் புதிதாக சாலையோரத்தில் தனது பட்டரையினை துவக்கியிருந்தார். மொழி தெரியாது என்றாலும் அவருடன் எப்படியோ பேசி எனக்கான ஒரு எழுத்தாணியினை செய்து வாங்கிக்கொண்டேன். என்னிடம் ஓலைகள் தாராளமாக இருந்தபடியால் அவைகளை சேர்த்து ஒரு சிறு ஏட்டுபிரதியினை உருவாக்கினேன். அந்த ஏட்டுப்பிரதியில் நான் எழுத்தாணியினைக்கொண்டு ஆபகூக் என்கிற திருமறை புத்தகத்தினை ஆங்கிலத்தில் எழுதினேன். முழுமையாக திருமறையின் ஒரு புத்தகத்தை தற்காலத்தில் எழுதியவர்கள் யாரும் கிடையாது. நவீன வாழ்கையில் நாம் பனை ஓலைகளின் பயன்பாட்டை எவ்விதம் முன்னெடுக்கலாம் என்கிற அனைத்து சாத்தியகூறுகளையும் செய்முறையில் கற்று எது உகந்ததாக இருக்கும் என உய்துணர எனது எஞ்சிய நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பனை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்துவதில் நான் ஒருபோதும் சளைக்கவில்லை. பனை மரத்தினை, நவீன காலத்திற்கேற்ப நாம் வரையறை செய்துகொள்ளவில்லையென்றால் அது எவ்வகையிலும் நமக்கு பயனளிக்காது. சமய நிறுவனங்கள் அவ்வகையில் தனது சடங்கு சார்ந்த பொருட்களை இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்ள பெருவிளைவுடனே இருக்கிறது. திருச்சபை மட்டும் என்றல்ல, அனைத்து சமயங்களும் இவ்விதம் தங்களை முன்னிறுத்தியபடி இருக்கின்றன. இந்து அலயங்களில் காணப்படும் அர்ச்சனைத் தட்டுக்கள், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதிகளில் காணப்பௌம் குல்லா என சில உதாரனங்களைச் சுட்ட இயலும். அவ்விதமான ஒரு வீரிய அமைப்பு இப்போது தகர்ந்தபடி வருவதுதான் வேதனையளிக்கும் உண்மை.

ரசாயனியை அடுத்திருக்கும் கர்ஜத் பகுதி தான் பனை மரங்கள் இறுதியாக காணப்படும் இரயில் தடம். அங்கிருந்து பூனே கடப்பதுவரை பனை மரங்களை பார்க்கவியலாது. கர்ஜத் சுற்றுவட்டாரங்களில் பனை மரங்கள் அதிகம் உண்டு, ஆனால் என்னால் அப்பகுதிகளில் உள்ள பனையேறிகளைக் தேடிக்கண்டடைய இயலவில்லை. நுங்கு கிடைக்கும் வேளைகளில் நாங்கள் கர்ஜத் பகுதியிலிருந்து தான் குலைகுலையாக வாங்கிவருவோம். 2015ஆம் ஆண்டு ஆரோனுடைய பிறந்த நாளினை முன்னிட்டு நுங்கினை வாங்கி வெட்டி கொண்டாடினோம். பனை மரத்தின் நுங்கினை பிறந்த நாளில் நடு நாயகமாக மாற்றியவர் நானறிந்து வேறு எவரும் இல்லை. எனது பிள்ளைகள் நான் பெற்ற வரங்கள். பனை சார்ந்து நான் எடுக்கும் முன்னெடுப்புகளை உணர்ந்து எனக்கு ஒத்துழைப்பவர்கள்.

Palm Fruit

ரசாயனி பகுதிகளில் நாங்கள் இருக்கும் போது இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பனை விதைகளை நடவுசெய்தோம். எங்கள் குடும்பம் மட்டுமே ஈடுபட்டு செய்த நிகழ்ச்சி அவைகள். மித்திரன் அப்போது 3 வயதை கூட எட்டியிருக்கவில்லை.  குடும்பமாக இணைந்து நாங்கள் முன்னெடுத்த இப்பணிகள் பின்னாட்களில் பெருமளவில் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. இன்று பல்வேறு பள்ளிக்கூடங்களும் சிறுவர்களும் பனை விதைகளை விதைப்பதற்கு முன்னோடி இப்பணிகள்.

நிற்க, எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என சொல்லி பெருமை பெசும் விஷயமல்ல இது. அனைத்து ஊர்களிலும் தங்கள் தாத்தாக்களோடு சென்று பனை விதைகளை விதைத்த அனேக குழந்தைகள் இன்றும் தமிழகத்தில் உண்டு. பனம் பழங்களை அன்றி வேறு உணவுகளே கிடைக்காமல் அல்லபட்ட நமக்கு முந்தைய தலைமுறைக்கூட உண்டு. ஆனால், பனை எவ்வகையிலும் நட்டு பேணவேண்டிய ஒரு மரம் என்ற புரிதல் அற்ற சூழலில் இவைகளை நாங்கள் முன்னெடுத்தோம். அவைகளை பொது தளத்தில் இட்டு அனேகரை செயலாற்ற தூண்டினோம் என்பது தான் இதன் சிறப்பு. பல முயற்சிகளை தொடர்ந்து நான் முன்னெடுத்தபடி வந்தாலும், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடயவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ஏன் இந்த வீணான முயற்சி, பனைய வச்சவன் பார்த்துட்டு செத்தான், தென்னைய வெச்சவன் தின்னுட்டு செத்தான் போன்ற எள்ளல்கள் என்னை தொடர்ந்திருக்கின்றன. அதற்கு பதிலிறுக்கும் படியாக பனை பொருட்களை சாப்பிடாதவர்கள் தமிழகத்தில் உண்டா? அப்படியானால் யார் பனையை வைத்தவன் என கேள்வி எழுப்பி, மக்களின் மனசாட்சியை உலுக்கியவன் நான். ஆகவே தொடர்ந்து கருத்தியல் தளத்தில் கலகமூட்டியபடியே நான் முன்சென்றுகொண்டிருந்தேன்.

ரசாயனி மெதடிஸ்ட் திருச்சபை இளைஞர்கள் எனக்கு உதவியதால் முதன் முறையாக நாங்கள் பனை ஓலைகளைக் கொண்டு, குருத்தோலை ஞாயிறு அலங்காரத்தினையும், ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையையும் நெகிழி இல்லா அலங்காரங்களாக செய்து காட்டினோம். இவையாவும், மும்பையினைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நான் பார்த்த  பனை மரங்களிலிருந்து பெற்றுக்கொண்ட உத்வேகம் தான். மேலும் மும்பையில் இருக்கும் நாவீன கருவிகளின் உதவிகளைக் கொண்டு பனையோலைகளை மேம்படுத்தும் சாத்தியங்கள் அதிகம்.

ரசாயனி பகுதி நான் மும்பையினை நெருங்கியுணரச் செய்த ஒரு முன் வரைவு என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. ரசாயனியில் நான் இருக்கையில், அப்பகுதியில் காணப்படும் பனை மரங்களை வைத்து பனை எப்படி இம்மண்ணின் மிக முக்கிய மரங்கலாக இருந்திருக்கும்  என்ற தெளிவு பெற முடிந்தது. பன்வேல், கர்ஜத், பென் என ரசாயனியைச் சுற்றிலும் பனை செழித்திருந்த பகுதிகளே அதிகம். ரசாயனி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கனரக வாகன நிறுத்துமிடங்களுக்காக, பனை மரங்களை புல்லைப்போல் வெட்டி வீசியெறிந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். மும்பையின் பனை மரங்கள், வலர்ச்சி என்ற பெயரில் எப்படி அப்புறப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான அத்தாட்சி இது.

மும்பையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பனையேறிகள் தொழில் செய்ய வருகிறார்கள் என்பதும், கள் இப்பகுதிகளில் ஒரு முக்கிய பானமாக இருக்கிறது என்பது நான் கண்டு ஆவனப்படுத்திய உண்மை. மராட்டிய மொழியினை கொஞமாகவேனும் கற்றிருன்ட்தால், மிகப்பெரிய அளவில் பனை சார்ந்த தொடர்புகளை என்னால் வெளிக்கொண்டுவந்திருக்க இயலும்.

ரசாயனி எனக்கு பல்வேறு பனையேறிகளையும் பனங்காட்டினையும் அறிமுகம் செய்தது. பண்டாரிகள் பனை ஏறுகிறவர்கள் என்கிற தகவல் நான் ரசாயனி சென்ற பிறகே தெரிந்து கொண்டேன். பனை மரத்திலிருந்து உதிரும் பனம்பழங்கள், எவ்விதம் முளைக்கின்றன என நெருங்கி ஆய்வு செய்ய அங்கே தான் வாய்ப்பு கிடைத்தது. இவைகளை நான் தொகுத்து சொன்னதே தமிழகத்தின் பனை சார்ந்த விளிப்புணர்வு ஏற்பட காரணமாயிற்று. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பனை சார்ந்து இயங்கியவர்களையும் தற்போது பனை சார்ந்து இயங்குபவர்களையும் ஒப்பிட்டால், எனது தனிப்பட்ட ஆய்விலிருந்து எவ்விதம் பலரை இப்பாதை நோக்கி வழிநடத்தியிருக்கிறேன் என அறியலாம்.

ரசாயனி என்னை தொகுத்த விதம் அருமையானது. பல்வேறு மக்களினங்கள் ஒரு ஊரில் மட்டும் பனை சார்ந்து வாழ்கிறார்கள் எனக்கொண்டால், தென்னிந்தியாவில் எத்தனை சமூக குழுக்கள் பனை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்திருப்பார்கள் என எண்ணினேன். ஆகவே எனது தனித்த பயணத்தை மும்பை ரசாயனியிலிருந்து நான் துவக்கினேன். தமிழகத்தையே புரட்டிப்போட்ட ஒரு பயணம் அது. இன்று முன்னணியில் பனை விதை நடுபவர்கள் ஆகட்டும், பனை சார்ந்த பொருட்களைச் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள் ஆகட்டும், அனைவரும் 2016ஆம் ஆண்டு எனது பனைமரச் சாலையினை அடுத்து களமிறங்கிய இளைஞர் படை தான். ஒருவேளை அவர்கள் என்னை நேரடியாக அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பனைமரச் சாலை ஏற்படுத்திய அதிர்வு அவர்களை பனைசுழலுக்குல் இணைத்துக்கொண்டது. தமிழகத்தில் இருந்த பனை சார்ந்த பழைமைவாத எண்ணங்களை துலக்கி புத்தம்புதிதாக நான் முன்வைக்க உதவிய பயணம் அது.

இச்சூழல்கள் அமைகையில் நான் தெளிவுபெற்றுவிட்டேன். பனை சார்ந்து நான் செய்யும் பணிகள் எல்லாம் இறைவன் எனக்கிட்ட கட்டளைகள். இயற்கை சார்ந்து செயலாற்ற அனேகர் இருக்கையில், பனை மரத்தினை தொகுத்தளிக்கும் ஒரு பணியினை கடவுள் என கரத்தில் கொடுத்திருக்கிறார். ஆகவே எதற்கும் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. இப்பணியில் நான் நிலைத்தால், இங்கே நான் செய்யக்கூடுபவைகளைச் செய்வேன். இப்பணியிலிருந்து நான் விலக்கப்பட்டால் இன்னும் உற்சாகமாக பனை சார்ந்த பணிகளை முன்னெடுப்பேன். பிறர் விட்டுச்சென்ற தடங்களில் வேகமாக ஓடி வெற்றி பெறுவதைவிட, தடங்களற்ற நிலங்களில் தடம்பதித்து ஏறவே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்ற புரிதலுக்குள் வந்தேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  7

ஓகஸ்ட் 6, 2019

 

பனை திருப்பணி

நான் இறையியல் கற்றிருந்ததனால் கண்டிப்பாக இறைப்பணி செய்யவேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பம். சமூக பணியும் இறைப்பணி தான் என்று சொல்லி அவர்களை என்னால் சமாளிக்க இயலவில்லை. மார்த்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான்காண்டுகள்  வேலை செய்த பின்னர் நான் “இறைப்பணி செய்ய” மும்பை நோக்கி பயணித்தேன். மும்பை சென்றவுடனேயே எனக்கு திருச்சபையில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே  அதற்காக நான் காத்திருக்கலானேன்.

நாட்கள் செல்லச்செல்ல, பொறுமை இழந்து வேறு வேலை தேடினேன்.  ஸ்னேக சாகர் என்கிற தொண்டு நிறுவனத்தில் மூன்று மாதங்கள் பணி புரிந்தேன். அது லுத்தரன் திருச்சபையின் ஒரு தொண்டு நிறுவனம். தெருவோரக் குழைந்தைகளை பார்த்துக்கொள்ளும் இந்த நிறுவனத்தின் தலைமையிடம்  மலாட் மார்வே ரோட் என்ற பகுதியில் இயங்கியது . அதன் இயக்குனர் கிறிஸ்டோபர், குழந்தைகளுக்கான ஒரு இல்லம் அமைப்பதற்கான முயற்சிகளை அவ்வேளையில் எடுத்துக்கொண்டிருந்தார். முதல் ஒரு மாதம் மலாட் பகுதிகளில் தான் பணியாற்றினேன்.

மலாட் பகுதியிலும் நான் ஆங்காங்கே பனை மரங்களை பார்த்த ஞாபகம் இருக்கிறது. பின்னர் மும்பையின் மற்றொரு ஓரமான பத்லாபூர் பகுதிகளில் சிறுவர் மறுவாழ்வு இல்லப் பணிகள் துவங்கின. பென்சீல் என்ற அந்த மராட்டிய கிராமத்திலேயே தங்கத் துவங்கினேன். அங்கும் பனை மரங்கள் ஆங்காங்கே  இருப்பதைப் பார்த்தேன். சிறப்பு என்னவென்றால் இங்கே வைத்து தான் பனை சார்ந்து கருங்குருவிகள் வாழ்கின்றனவோ என்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. பனையின் கருநிறமும், இரட்டைவால் கருங்குருவிகளின் நிறமும் ஏதோ ஒருவகையில் இணைகின்றனவோ என்று எண்ணினேன். ஆனால் எப்படி என அப்போது என்னால் உணர்ந்துகொள்ள இயலவில்லை, அவைகளின் பொருத்தம் சார்ந்து என்னால் எந்த முடிவுகளுக்கும் வர இயலவில்லை. பனை இருக்குமிடத்தில் கருங்குருவிகளும் இருக்கும்போல என எண்ணிக்கொண்டேன்.

மிராரோடு திருச்சபையில் நான் பொறுப்பெடுத்தபோது அங்கே பனை மரங்களை அதிகமாக பார்க்க இயலவில்லை. மிராரோடிலிருந்து தஹிசர் செக்கி நாக்கா வரும் வழியில் ஒரு சில பனை மரங்கள் இருக்கும். மிரா ரோட் வந்து சேரும் வழியில் இருக்கும் முக்கிய சாலையான காஷிமிரா தாண்டி காஷிகாவுன் சென்றால் மேலும் சில பனை மரங்கள் நிற்கிறதைக் காணலாம். தானே முதல் கோட்பந்தர் சாலை வரும் வழியின் இரு மருங்கிலும் பனை மரங்கள் தாராளம் நிற்கும். ஆனாலும் பனை மரங்கள் உள்ள பகுதி தான் மிராரோட் என்ற எண்ணம் எனக்கு அச்சூழலில் உருபெறவில்லை. மும்பையினைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கும் என்ற எண்ணமும் என்னில் முழுமையாக உருக்கொள்ளவில்லை.

நான் பணியில் அமர்ந்த பிற்பாடு முதல் ஆராதனை சாம்பல் புதன். அதனைத் தொடர்ந்து வரும் முக்கிய பண்டிகையான குருத்தோலை ஞாயிறு குறித்து எங்கள் செயற்குழுவில் விவாதித்தோம். திரு ஜாண் சுந்தர் அவர்கள் பனை ஓலையினை தாம் கொண்டுவருவதாக வாக்களித்தார்கள்.

குருத்தோலை ஞாயிறு அன்று அவர்கள் அந்த ஓலைகளை கையில் எடுத்துவருவதை ஆச்சரியம் தாளாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக அழகிய நீண்ட ஓலை. தென்னை ஓலைகளுக்கு போட்டிபோடு அளவிற்கு நீளம். ஐந்தடியாவது இருந்திருக்கும். அகலம் 4.5 சென்றி மீட்டரைத் தாண்டி  இருக்கும். இவ்வளவு அகலமும் நீளமும் எளிதில் சாத்தியப்படுவதில்லை. ஜாண் சுந்தர்  தனது கைகளில் ஓலைகளை எடுத்தபடி நிற்கும்போது அவரில் காணப்பட்ட பெருமிதம் அவர் முகத்தில் ஒளியென பிரகாசித்தது. இது எப்படி சாத்தியம்? எங்கிருந்து இவ்வளவு நேர்த்தியான ஒரு ஓலை கிடைத்திருக்கும்?  இவ்வித கேள்விகள் எனக்குள் குடைந்துகொண்டிருந்தன.

முதலில் ஊரிலிருந்து விமானத்தில் கொண்டுவந்திருப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அந்த ஓலைகளில் தெரிந்த புத்துணர்ச்சி, பசுமை மாறா தன்மை போன்ற அனைத்தும் இவ்வோலைகள் சில மணி துளிகள் முன்னால் வெட்டப்பட்டவை என்கிற உண்மையினை கோடிட்டு காட்டின. ஆகவே ஓலைகள் வெகு அருகிலேயே கிடைக்கின்றன என்ற உறுதியான முடிவிற்கு நான் வர இந்த நிகழ்ச்சி எனக்கு உறுதுணையாக இருந்தது. பிற்பாடு ஓலை வாங்க ஆன செலவு குறித்து கேள்வி எழுந்தபோது 300 ரூபாய் என்று கூறினார்கள். 2 ஓலைகளுக்கு ரூ 300 என்பது மிக அதிகம். ஆனால் ஜாண் சுந்தர், தான் அந்த செலவினை ஏற்றுக்கொள்ளுவதாக கூறிவிட்டார்கள். திருச்சபையில் அப்போதுதான் நான் பொறுப்பேற்றிருந்தபடியால் எனது பனை சார்ந்த எண்ணங்களை அவசரப்பட்டு எவருக்கும் சொல்லவில்லை.

மும்பையில் பனை ஓலைகளே குருத்தோலை ஞாயிறு அன்று கொடுக்கப்படுகின்றதைக் கண்டு நான் அடைந்த இன்ப அதிர்ச்சி வேறு வகையானது. குமரி மாவட்டத்தில் குருத்தோலை என்றாலே தென்னை ஓலைகள் தான் என்று ஆகிவிட்டிருந்தது. ஆனால் மும்பையில் அனைத்து தமிழ் திருச்சபைகளும் குருத்தோலை பவனியின் பொழுது பனை ஓலைகளையே எடுத்துச் செல்லுகிறார்கள். இதற்கு காரணம் திருநெல்வேலி மாவட்டத்தினைச் சார்ந்த மக்கள் பெருமளவில் இங்கே இருப்பது தான் என கருதுகிறேன்.

ஒருமுறை எனது திருச்சபையின் அங்கத்தினரான ஜெபஸ்டின் அவர்களோடு இணைந்து நான் மனோரி சென்றேன். அது ஒரு கடற்கரைப் பகுதி. செல்லும் வழியெங்கும் பனை மரங்கள் இருப்பதைப் பார்த்ததால் மீண்டும் இங்கு தனித்து வரவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

2008 பெப்ருவரி மாதம் 2 ஆம் நாள்  நான் மும்பை மெதடிஸ்ட் திருச்சபையில் போதகராக இணைந்தேன். 2008 ஜூன் 11ஆம் தியதி எனக்கு திருமணம் நிகழ்ந்தது. 2009 ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி  ஆரோன் பிறந்தான். அதற்கு அடுத்த மாதத்தில் எனது இரு சக்கர வாகனமான  எம் எஸ் எல் (MSL) 8537 ஐ நான் வாங்கினேன். வயதில் என்னைவிட 10 வயது மூத்தது எனது வண்டி. ஆனால் ஆரோனுக்கு பிறகு எங்கள் வீட்டில் சேர்ந்துகொண்ட உறவு அது. அதனை மும்பைக்கு ஜாஸ்மினுடைய தம்பி லாரியில் அனுப்பினான். பன்வேல் பகுதியில் அந்த வாகனம் வந்தபோது எனது மூத்த அண்ணன் செல்சன் அவர்கள் வந்து அந்த வண்டியை எடுக்க உதவினார்கள். மிராரோடு பகுதியில் அவ்விதமாகத்தான் எனது வண்டி வந்து சேர்ந்தது.

வாகனம் வந்துவிட்டதால் பனை மரங்களைத் தேடி பயணித்தேன். பயந்தர் பகுதிகளைத் தாண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றால் போதும், பனை மரங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். நம்முடைய கிராமத்தை ஒத்திருக்கும் அந்த பகுதிகளின் அழகில் மயங்கி அங்கே அடிக்கடி எனது இரு சக்கர வாகனத்தில் பயணிக்க துவங்கினேன். நம்ப இயலாத அளவிற்கு அங்கே பனைகளின் திரட்சி இருப்பதை அறிந்தபோது மும்பையின் மற்றொரு பனை செறிவுள்ள முக்கிய பகுதியினை கண்டடைந்துவிட்டோம் என மனம் கூப்பாடு போட்டது. அப்படித்தான் கோரே பீச் நான் விரும்பிச் செல்லும் இடமாகிப்போனது.

இந்திய இடையன் இயேசு

ஒருமுறை போதகர் எமில் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றபோது, அங்கே டொமினிக் என்கிற ஒரு மனிதரைச் சந்தித்தோம். கத்தோலிக்க திருச்சபையினரான அவர், தனது வீட்டின் அருகில் அனேக பனை மரங்களை வளர்த்துவந்தார். எங்களுக்குத் தேவையான காய்ந்த ஓலைகளை நாங்கள் வெட்டிக்கொள்ள அனுமதி தந்தார். வெட்டுவதற்கும் அவரே அரிவாளைக் கொடுத்தார். வெட்டப்பட்டு கிடக்கும் பச்சை ஓலைகளையும் நாங்கள் எடுத்து பயன்படுத்த அனுமதி தந்தார். எங்களிடம் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் குடும்பத்தினருக்கே நாங்கள் ஓலைகளை  பயன்படுத்துகிறோம், பொருட்படுத்துகிறோம் என்பது ஒருங்கே ஆச்சரியமளிப்பதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்திருக்கிறது. பல்வேறு கீரைகள், பயறு வகைகள் பொன்றவற்றையும் விவசாய பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்வார்கள். அங்கிருந்து வீட்டிற்கு தேவையானவைகளையும் வாங்கி வருவோம்.

டொமினிக் போலவே அனேகர் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். போர்த்துக்கீசியர்கள் காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் மதமாற்றத்திற்குள்ளான நிகழ்வுகளை வரலாற்றில் படிக்கிறோம். போர்த்துகீசியர்கள் கலப்பு மணம் செய்வதை ஊக்குவித்தார்கள். அப்படியே கத்தோலிக்க திருச்சபையை ஆதரித்தார்கள். பேசின் (தற்போதைய வசாய்)  தானே மற்றும் அருகிலுள்ள இடங்களிலெல்லாம் 10000 நபர்களுக்கும் மேலாக மதம் மாற்றியிருக்கிறார்கள். 1560களில் மும்பையில் ஏற்பட்ட இந்த மத மாற்றம், தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் அமைப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது. தேவாலயங்கள் கட்டப்பட்டன. போர்த்துக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுகாரர்களும் பின்னர் பிரிட்டிஷாரும் வந்தனர். பிரிடிஷ் ஆட்சிக்குப் பின்பு கத்தோலிக்க மதத்தினை தொடர்கிறவர்களை கிழக்கிந்திய  கிறிஸ்தவர்கள் என அழைத்தனர்.

நாங்கள் பார்த்தவரைக்கும் பலரும் தங்களது வீட்டின் அருகில் கள்ளிறக்குவதை தொழிலாக கொண்டிருந்தனர். சில நேரங்களில் வேறு பனை தொளிலாளர்களும் அங்கே வந்து பனை மரத்தில் கள் இறக்குவதைப் பார்த்திருக்கிறோம். அவ்விதமாக ஒருமுறை நான் ஆந்திராவைச் சார்ந்த ஒரு பனையேறியைப் பார்த்தேன். அவரது உடலை கரு நாகமென சுற்றியோடிய இடைக்கயிற்றிற்கு மோகு என்ற பெயர் உள்ளது அப்போது எனக்குத் தெரியாது. எனது பனை மரச் சாலை பயணத்தின் போதுதான் அதன் பெயரை அறிந்துகொண்டேன். இவ்விடம், மீராரோடு பகுதியிலிருந்து மேற்காக வெறும் ஏழு கி மீ தூரத்திலேயே இருப்பதால், நினைத்த நேரம் என்னால் அங்கே சென்று வர முடிந்தது. பெரும்பாலும் ஓலைகள் தேவைப்பட்டால் மாத்திரமே அங்கே செல்லுவது வழக்கம். இல்லாவிட்டால் ஜாஸ்மின் மற்றும் குட்டி ஆரோனை அழைத்துச் சென்று புத்துணர்ச்சி பெற்று வரும் நேரமாகவும் அவைகளை வைத்துக்கொள்ளுவோம்.

டொமினிக் வீட்டின் அருகிலேயே கள் கிடைக்கும். அங்கே கிடைக்கும் கள் புளித்திருக்காது. ஆகவே சொல்லிக்கொள்ளும்படி போதையும் இருக்காது. ஆனால் அது பதனீர் அல்ல. ஒருமுறை திருச்சபையின் நிகழ்ச்சிக்காக அங்கிருந்து அதிகாலை வேளையில் கள்ளை வாங்கி அதற்குள் சுண்ணாம்பினை இட்டு, பதனீர் ஆக மாற்ற முயற்சித்து, தோல்வியினைத் தழுவினோம். பிற்பாடு அதனை திருச்சபையில் கொடுக்க இயலவில்லை. பனையேறிகள் ஏன் பானையில் சுண்ணாம்பினை தடவி பின்னர் மரத்திலிருந்து இறக்குகிறார்கள் என்கிற உண்மை அப்புறம் தான் உறைத்தது.

பனை சார்ந்த எனது முன்னெடுப்புகள் உக்கிரமடைய பனை சூழ இருக்கும் இச்சூழல் தான் காரணமாக இருந்தது. ஓலைகள் இங்கே கிடைப்பதால் நாம் ஏன் ஒரு பனை ஓலை சித்திர கண்காட்சி வைக்கக்கூடாது என்று எண்ணினேன். ஓலைகளை வெட்டி சித்திரமாக மாற்றும் ஒரு கலையினை நானே உருவாக்கியிருந்தேன். ஆனாலும் அவைகளை ஒருங்கிணைத்து என்னால் ஒரு கண்காட்சியினை செய்ய இயலுமா என்கிற ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. மீராரோட் அருகில் கிடைத்த ஓலைகள் என் தயக்கத்தை தகர்த்து என்னை முன்னோக்கிச் செல்ல உந்தியது. அவ்விதமாக 2011 முதல் 2017 வரை நான் தொடர்ந்து பல்வேறு பனையோலை கண்காட்சிகளை வைத்து பனை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தேன். அதன் பின்பு இதுவரை பனை சார்ந்து நான் செய்யும் பணிகள் தொய்வடையாமல் இருக்கின்றது. எனது பனை சார்ந்த பணிகளை பலரும் அங்கீகரிக்க இவைகள் முக்கிய காரணமாக இருந்தன. என்னை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தில் அனேகர் எழும்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் பனை புரட்சிக்கு 2016 பனைமரச்சாலை வித்திட்டது என்றால் அது மிகை அல்ல.

இந்த நாட்களில் தான் நான் காய்ந்த ஓலைகளின் அருமையினைக் கண்டடைந்த நாட்கள். சற்றே மண்ணிறத்தில் இருக்கும் ஓலைகள் எனக்கு செப்புத் தகடுகளை நினைவுறுத்தும். எங்கும் நாம் காணக்கிடைக்காத ஒரு அழகு இவ்வித மண் நிற ஓலைகளில் கிடைக்கின்றன.நிறைவுறும் ஓலை படங்கள் கண்களை விட்டு விலக்க இயலாதபடி கொள்ளை அழகு கொண்டிருந்தன. ஓலைகளுக்கான செலவு என ஒன்றுமில்லை.   பசுமையான ஓலைகளை விடவும் காய்ந்த ஓலைகளில் வேலை செய்வது கடினம். ஆனால் நான், அவைகளை தண்ணீரில் இட்டு பயன்படுத்த ஆரம்பித்தேன். மிகச்சரியான அளவில் நீரில் ஊறவைக்கவேண்டும். காய்ந்த பின் தான் அதனை ஒட்டவேண்டும், இல்லையென்று சொன்னால் ஓலையில் பூசணம் பிடித்துவிடும். பல முறை இப்பிரச்சனைகளைக் கடந்து வந்தாலும் இன்னும் தவறுகள் நிகழ்த்துகொண்டே இருக்கின்றன. ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தால் கூட, ஈரப்பதம் நிறைந்த இடத்தில் ஓலையில் செய்த படங்கள் இருக்குமானால், அவைகள் எப்படியோ பூஞ்சை பிடித்து விடுகின்றன. காற்றில் உள்ள ஈரப்பதம் ஓலைகளை எளிதில் பூசணம் பிடிக்க வைக்கின்றன.

எனது முதல் பனையோலை கண்காட்சி இவ்விதமாக மும்பையில் 2011ஆம் ஆண்டு துவங்கியது. அதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆன்டு பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் உள்ள பெண்ணியல் மற்றும் பாலின கல்வி துறை தலைவர் அறிவர். அருட்பணி. இவாஞ்சலின் ஆண்டர்சன் ராஜ்குமார் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, தென்னிந்திய திருச்சபையின் சினாட் அலுவலகத்தில் ஒரு நிகழ்வை அருட்திரு. விஜி வர்கீஸ் ஈப்பன் அவர்கள் முன்னெடுத்தார்கள். 2013 ஆம் ஆண்டு கம்போடியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கும் ஒரு கண்காட்சி அமைத்தேன். ஆசிய கிறிஸ்தவ மாநாடு ஒருங்கிணைத்த  அமைதி தூதுவர்கள் நிகழ்ச்சியில் எனது படங்களை பார்த்தவர்கள், நீங்கள் ஏற்கனவே அமைதி பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் எனப் பாராட்டினார்கள். 2014 ஆம் வருடம், இந்திய திருச்சபைகள் ஒன்றிணைந்த நுற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. எனது கண்காட்சியினை பேராயர் அருட்திரு தாரனாத் சாகர் அவர்கள் திறந்துவைத்தார்கள். 2015 ஆம் அண்டு சென்னை வெள்ளபெருக்கிற்காக மும்பையில் நான் நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சியில் கிடைத்த சிறு தொகையினை மெதடிஸ்ட் திருச்சபை வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பினோம். 2017 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் எனது படைப்புகளை எடுத்துச் சென்று கண்காட்சி அமைத்தேன். அதற்கு இலங்கை தேசிய கிறிஸ்தவ மாமன்றம் துணை செய்தது.

கண்காட்சிக்கான சுவரொட்டி

அனைத்து சூழல்களிலும், நான் ஓலைகளை மும்பையிலிருந்தே எடுத்து இவைகளை நிகழ்த்திக்காட்டினேன். குருத்தோலைகளையும், சாரோலைகளையும் தேடி வெட்டி எடுத்துக் கொண்டுவந்தது,   சாயமிட்டது, காவோலைகளை தேடிப்பொறுக்கியது என பல வகைகளில், என்னால் இவைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. குறிப்பாக காய்ந்த ஓலைகளை சேகரிப்பது சற்று சவாலானது. அதன் நிறம் நாம் எண்ணும் வண்ணம் இருக்கவேண்டும், புதிதாக விழுந்திருக்கவேண்டும், அதிக புள்ளிகள் அடித்திருக்கக்கூடாது. (அடித்திருந்தாலும், அவைகளை வேறு எவ்வகையில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற புரிதல் இருக்கவேண்டும்). ஓலைகள் அகலமாக இருக்கவேண்டும். வெட்டி எடுக்க வெட்டரிவாள் வேண்டும். அவைகளை நீர் நனைத்து ஒடியாமல் எடுத்து வரும் வசதி வேண்டும்.  இவ்விதமாக பல்வேறு நுணுக்கமான காரியங்களைக் கருத்தில் கொண்டே ஓலைகளை சேகரிக்க இயலும்.

இவையனைத்தையும் நான் ஒருங்கிணைத்துப் பார்க்கையில், மும்பை எனக்கு தன்னைச் சிறுக சிறுக வெளிப்படுத்தியிருக்கிறது. தனது விரிந்த பனை பின்புலத்தை நான் ஆராய அது எனக்கு பல வகைகளில் உதவியிருக்கிறது. எனது புரிதலின் மந்த வேகத்தைக் கருத்தில் கொண்டு அது அமைதியாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. நான் ஆயத்தமாகிறேன் என்று சொல்லும் கணத்தில் பேருருக்கொண்டு அது விரிகிறது எனபதை நான் உணர்ந்துகொண்டேன். பனை என்னிடம் கேட்பது இதுதான். எனது இருப்பு இவ்விடத்தின் எதிர்கால சூழலை நிர்ணயிக்கின்ற ஒன்று, அதனை எவ்விதம் நீ கட்டமைக்கப் போகிறாய்?

எனது எளிய தேடுதலை பனை இத்துணை உக்கிரமாக ஏந்திச் செல்லும் என்பது நான் கனவிலும் எண்ணியிராதது. அது கடவுள் எனக்களித்த வரம். பனை சார்ந்து எனது வாழ்வை நான் அமைத்துக்கொள்ள கடவுள் எனக்கு இட்டிருக்கும் ஒரு இடுக்கமான வாசல் என்றே கொள்ளுகிறேன். பலர் சுவர்களில் முட்டிக்கொண்டிருக்கையில், வேறு பலர் அகன்ற பாதைகளில் தறிக்கெட்டு செல்லும்போது, எனக்கான இந்த சிறு பாதை எனக்கு நிறைவளிக்கும் பயணத்தை வழங்குவதை மறுக்க இயலாது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம் 6

ஓகஸ்ட் 2, 2019

கள் நகரம்

2004ஆம் ஆண்டு என நினைக்கிறேன் நான் எனது இறையியல் கல்வியினை முடித்துவிட்டு மும்பை வந்திருந்தேன். அப்போது எனது இளைய சகோதரி ஜாய்ஷியா மும்பையிலுள்ள அந்தேரி என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். எனது ஆசிஷ் அத்தானுக்கு ஒய் என் சி ஏ வில் வேலை. அந்த வேளையில் தான் எனது பெரியம்மா மகனுடைய திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது  திருமண அழைப்பிதழை பனை ஓலையில் செய்து கொடுக்க முடியுமா என்று என்னிடம் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

திருமண அழைப்பிதழ்களை  மும்பையிலிருந்து எப்படி ஒழுங்கு செய்வது என யோசனை பண்ணினேன். ஊருக்கு சென்று அவைகளை ஒழுங்கு செய்ய நேரம் இருக்காது. அபொழுத்தான் அந்தேரி இரயில் நிலையம் அருகில் பனை மரங்களைப் பார்த்திருக்கிறேனே என்ற எண்ணம் வந்தது. எனது அத்தானிடம் கேட்டபொழுது, அவர்கள் மலாட் என்ற பகுதியின் அருகிலிருக்கும் மட் (Madh) என்ற இடத்தில் பனை மரங்கள் ஏராளம் நிற்பதாக கூறினார்கள். அப்போது எனக்கு மும்பை இரயில் பயணங்களில் உள்ள ஒவ்வாமையினால், பேருந்தைப் பிடித்தே அங்கே செல்ல வழிகாட்டினார்கள். முதன் முறையாக நான் அவ்விடத்திற்குச் செல்லுவதால் அவர்களே என்னை அந்த இடத்திற்கு  அழைத்தும் சென்றார்கள்.  மட் என்ற பகுதி வந்தவுடன்,  சேறும் சகதியுமான ஒரு பாதையில் இறங்கிச் சென்றோம். அது ஜெட்டி என்று அழைக்கப்படும் ஒரு மீன்பிடி துறைமுகம். அனேக படகுகள் வந்தணைந்து சென்றுகொண்டிருந்தன. நாங்கள் ஒரு படகில் ஏறி அக்கரைக்குச் சென்றோம். படகு முழுவதும் பயணிகள், சைக்கிள், இரு சக்கர வாகனம், என அந்த பெரும் படகு ததும்பிக்கொண்டிருந்தது. பயண கட்டணம் வெறும் 2 ரூபாய் தான் என்று நினைக்கிறேன்.

மறு கரையை அடைந்தபோதுதான் நான் எண்ணியிராத அளவிற்கு பனைமரங்கள் அக்கரையில் திரண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தேன். உள்ளம் குளிர்ந்துவிட்டது. அத்தான் என்னை அப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பனை ஏறுகிறவர்களை ஒருவாறு கண்டுபிடித்தோம். நம்பினால் நம்புங்கள், அங்கே இருந்த பனையேறி தன்னை ஒரு நாடார் என அறிமுகப்படுத்தினார். அன்றைய சூழ்நிலையில் எனக்கு பனையேற நாடார்களால் மட்டுமே முடியும் என்கிற எண்ணமே இருந்தது. அவர் தான் தாராவியைச் சார்ந்தவர் என கூறி, அங்குள்ள மொத்த பனைகளைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும், நான்கைந்து பேர் இணைந்து பனை ஏறுகிறவர்களாக அங்கே தங்கியிருப்பதாகவும் கூறினார். அவர்கள் வாழ்ந்து வரும் குடிசையும், அவர்கள் கைகளில் வைத்திருந்த பனையேறும் உபகரணங்களும் எனக்கு அன்னியமானவைகள் அல்ல. பார்க்க குமரி மாவட்டத்து பனையேறுபவர்களின் கருவிகளை விட அனைத்தும் பெரிதாகவும் முரட்டுத்தனமாகவும் காணப்பட்டன. ஒருவேளை, திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்கும் என எண்ணிக்கொண்டேன். எனக்கு தமிழில் பேச வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி ஒறுபுறம், அவர் எனக்கு ஓலைகளைக் கொடுக்க ஒப்புக்கொண்ட மகிழ்ச்சி மற்றொருபுறம்.

நான்கைந்து மட்டை ஓலைகள் தான் எனக்குத் தேவையாக இருந்தன. ஓலைகளை உடனடியாக எடுத்துகொடுக்க இயலாது என்றும், மீண்டும் வருவதற்கு ஒப்புக்கொண்டால் ஓலைகளை வெட்டி வைத்துக்கொள்ளுவதாகவும் கூறினார்கள். மறுமுறை தனியாக நான் அப்பகுதிக்குச்  சென்றேன். அவர் சொன்னபடி எனக்கு ஓலைகளைக் கொடுத்தார். விலைகளும் அதிகமாக வாங்கிக்கொள்ளவில்லை. அன்றைய தின விலையின்படி, ஒரு ஓலைக்கு 5 ரூபாய் வாங்கியிருப்பர் என்றே நினைக்கிறேன். வாங்கிக்கொண்டு வந்து ஓலைகளைக் காயவைத்து தேவையான திருமண அழைப்பிதழ்களைச் செய்தேன். அன்றைக்கு நான் செய்த திருமண அழைப்பிதழ்களின் அளவு 3 X 15 என்ற அளவில் இருந்திருக்குமென மங்கலாக நினைவுகள் இருக்கின்றன. நான் கேட்ட ஓலைகள் அவ்வளவு நேர்த்தியாக எனக்கு வேறு எங்கும் கிடைத்தது இல்லை. அவ்வளவு அழகிய நிண்ட ஓலைகள் அந்த மனிதர் எனக்கு வெட்டிக்கொடுத்தார். ஒருவேளை மும்பை மரங்கள் செழிப்பாக வளருவதால் அதன் இலைகள் அகன்று இருக்குமோ?

மும்பையில் பனைமரங்கள் இருக்கின்றன என்கின்ற பிரமிப்பு, பனை ஏறுவதற்காக தமிழகத்திலிருந்து மக்கள் இங்கே வருகிறார்கள் என்கிற தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படியே கள்ளிறக்குகிற செய்தியின் மூலம் இங்கே  கண்டிப்பாக கள் பருகும் ஆட்கள் இவர்களைத் தேடி வருவார்கள் என்ற பன்முகப்பட்ட ஒரு புரிதலை  கண்டுணர முடிந்தது. அப்போது நான் மும்பையின் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே  பனைகள் நிற்கின்றன என எண்ணிக்கொண்டேன். எனது தொடர் மும்பை வாழ்க்கை ஏதோ ஒருபகுதிதானே என இதனை அப்படியே விட்டுவிட முடியாதபடி ஒவ்வொரு நாளும் பனை மரங்கள் நகரெங்கும் வியாபித்து இருப்பதை “பனைசாற்றி”க்கொண்டே இருந்தது. ஏன் இப்பகுதிகளில் பனை நிற்கின்றது என்கிற கேள்விகளுக்கும் விடை தேட வேண்டிய ஒரு கடமை  எனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தே முழு மூச்சாக இவைகளைத் தேட களத்தில் இறங்கினேன்.

Toddy

மும்பையைப் பொறுத்த அளவில் கள் அனுமதிக்கப்பட்ட பானமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்களை நாம் அடுக்கடுக்காக சொல்லமுடியும். குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், மும்பையில் வாழும் பூர்வகுடிகளான, கோலி எனும் சமூகம் மீன்பிடிப்பைத் தனது வாழ்க்கைமுறையாக கொண்டது. பனை நெய்தல் நிலத்து மரமாகையால், கள் இங்கே பெருமளவில் கிடைத்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. நெய்தல் நில மக்களின் வாழ்வில் பனையும் கள்ளும் ஓய்வின் சின்னங்களாகவே இருந்திருக்கின்றன.

Madh Fort

ஒருமுறை மும்பை வந்திருந்த எனது நண்பர் மற்றும் சூழியல் செயல்பாட்டாளர் அறிவர். கிறிஸ்டோபர் அவர்களுடன் மும்பை நகரத்தில் சுற்றியலைந்துகொண்டிருந்தபோது காமத்திபுரா பகுதியில் ஒரு மிகச்சிறிய கள்ளுக்கடை ஒன்றைப் பார்த்தோம். நகரத்திற்குள் கள்ளுக்கடையா என வாய் பிளந்து பார்த்த நாட்கள் அவை. நான் அதற்கு முன்னும் பின்னும் அவ்விதம் கள்ளுக்கடையினை மும்பையில் வேறெங்கும் பார்த்ததில்லை. பீர் பாட்டில்களில் வெண்ணிற கள்ளை ஊற்றி வைத்திருந்தார்கள்.

நாங்கள் மிரா ரோடில் இருக்கும்பொழுது எங்கள் வீட்டை ஒட்டிச் செல்லும் தெருவில், காய்கரிகளும் மீனும் விற்பவர்கள் காலை வேளையில் வருவார்கள். அவ்விடத்தில் ஒரு பெண்மணி 30 – 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு நீல வண்ண கேன் முழுவதும் கள் நிறப்பி கொண்டுவருவார்கள். ஆப்பம் செய்வதற்காக பலமுறை அதனை நாங்கள் வாங்கியிருக்கிறோம். இனிப்பு சுவையுடன் புளிப்பும் கலந்தபடி இருக்கும்.

மும்பையினைப் பொறுத்த அளவில் குடி ஒரு விடுதலையின் அடையாளம் மட்டும்தான். பெருங்குடிகாரர்களும், குடித்து அனைத்தையும் இழந்தவர்கள் இங்கும் உண்டு என்றாலும் கூட, கடுமையான வேலை செய்பவர்கள், குடியினை தங்கள் வாழ்வின் ஒரு கேளிக்கையின் அம்சமாக செய்வதுவே அதிகம். அதற்காக, மத் போன்ற பகுதிகளை நோக்கி வருவார்கள். ஒரு நாள் முழுக்க கூட்டாக அமர்ந்து கள்ளை மெதுவாக குடித்துவிட்டு, கடலில் குளித்து உணவுண்டுவிட்டு செல்லுவார்கள். விடுமுறை நாட்களில் அதிகமாகவும், மற்ற நாட்களில் குறைவாகவும் இவ்வழக்கம் காணப்படும்.

மும்பையில் கள்ளுக்கடைகள் பரவலாக இருந்திருக்கின்றன. சுமார் 250 கள்ளுக்கடைகளுக்கு மும்பையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கள் கொண்டு வந்து விற்பது வழக்கமாயிருந்திருக்கிறது. ஆரே காலனி, மத், கோரே, தானே, வசாய், பால்கர், மற்றும் பன்வேல் பகுதிகளிலிருந்து நகர் நோக்கி கள்ளினை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் கள் இறக்கும் நபர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால் கள்ளுக்கடைகளுக்கு போதிய கள் வரத்து இல்லாமல் போனது. மேலும் கள்ளிறக்கும் இடங்களுக்கே பலர் தேடிச் சென்று கள் குடிப்பதால், கள் உற்பத்தியாகும் இடத்தை தவிர்த்து பிற இடங்களில் நல்ல கிடைப்பது அரிதாகியது. இச்சுழலில் தான் கள்ளுக்கடைகளை நடத்த அனுமதி பெற்றிருந்தவர்கள், குளோரல் ஹைடிரேட் (Chloral hydrate ) என்ற ரசாயனத்தில் தயாரிக்கப்பட்ட கள்ளினை பரவலாக கடைகளில் விற்பனை செய்யத் துவங்கினார்கள். இவைகள் கலால் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதலே கள்ளுக்கடைகள் தடை செய்ய வேண்டிய முயற்சிகளை  மஹாராஷ்டிர அரசு முன்னெடுக்கத் துவங்கியது.

நான் அப்போது, ரசாயனியில் போதகராக இருந்தேன். பனை ஏறுகிற 4 குடும்பத்தினரை நான் நன்கு அறிவேன். அவர்கள் கள்ளினை எடுத்து தங்கள் வீடுகளில் வைத்தே விற்பனை செய்பவர்கள். அவர்கள் அனைவரும், கள்ளுக்கடை நடத்துபவர்களால் இச்சூழலில் நெருக்கப்பட்டார்கள். பனையேறிகள் இறக்கும் கள்ளினை அவர்களே விற்கக்கூடாது என்றும், அனைத்தையும் கள்ளுக்கடைகளுக்கே கொடுக்கவேண்டும் என தினம்தோறும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து அந்த பனையேறிகள் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு மூடிய கள்ளுக்கடைகளை 2019 ஆம் ஆண்டு மீண்டும் அரசு திறந்தது. பால்கர் பகுதியிலுள்ள வலிமை மிகு கள் வியாபாரிகள் இவ்வித செயல்களின் பின்னணியாக இருக்கிறார்கள் என கருதப்பட்டது. மும்பையினை அடுத்த பால்கர் பகுதியில் பனை மரங்கள் ஏராளமாக காணப்படுகிறது. ஒருவகையில் இன்றைய மும்பை முற்காலத்தில் எப்படியிருந்திருக்கும் என்பதற்கான அடையாளம் தான் பால்கர் பகுதி என எண்ணுகிறேன்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கலப்பட கள் விற்பனையாளர்களைக் அரசு கண்டுபிடித்திருக்கிறது. நான் வாழும் ஆரே காலனியில் மூடை மூடையாக குளோரல் ஹைடிரேட் என்கிற வேதியல் பொருளினை சேமித்து வைத்திருக்கும் கிட்டங்கியினை காவல்துறையினர் கைபற்றியிருக்கிறார்கள்.

அரசின் மது வழி வருமானம் என்பது மும்பையினைப் பொறுத்த அளவில் 13000 கோடி ரூபாய். கள்ளுக்கடைகளை மட்டுமே கருத்தில் கொண்டால், அவைகளால் கிடைக்கும் வருமானம் என்பது வெறும் 45 கோடி ரூபாய் தான். ஆகவே வருமானம் என்கிற அளவில் கள்ளு மிகப்பெரிதாக எதனையும் அரசிற்கு கொண்டுவருவதில்லை என்கிற எண்ணத்தால், தடை இங்கே ஏற்பட காரணமாகியது என்பது ஒருவகையான புரிதல்.

ஆனால் என்னைப் பொறுத்த அளவில், கள்ளுக்கடைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வெளிநாட்டு மதுவை விற்க அரசு செய்யும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். 13000 கோடி விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெறும் 45 கோடி விற்பனையின்மேல் கண் வைக்கும் ஒரு மலினமான அரசியல் காய் நகர்தலாக மட்டுமே இதனை நாம் கொள்ள இயலும். மெலதிக அரசியல் உள்கிடப்புகளை நான் இனிமேல்தான் அறிந்துகொள்ளவேண்டும்.  அரசு கள்ளுக்கடைகளை மூடுவதில் தவறில்லை, ஆனால் பனை ஏறுபவர்களுக்கு என்ன வாய்ப்பை மஹாராஷ்டிரா அரசு முன்மொழிகிறது என்பது தான் முக்கியம். அவ்விதம் செய்தாலொழிய அது பனையேறிகள் மீது செலுத்தும் ஒரு அரசு வன்முறைதான்.  மேலும் கள் என்பது அரசின் வருமானம் சார்ந்த ஒன்று மட்டுமாக பார்க்காமல் வேலை வாய்ப்பினை முன்மொழியும் ஒன்றாக பார்க்கப்பட்டால், மிக சிறந்த ஒரு முன்னெடுப்பாக அது அமையும்.

பொதுவாக 10 பனை மரங்கள் நின்றாலே போதும், ஒருவர் பனையேறி பிழைத்துக்கொள்ளுவார். இன்று 20 பனை மரங்கள் ஏறுவது என்பது மிகப்பெரிய சவால். ஆகவே 10 பனை ஏறுகின்ற ஒருவர், தனது எஞ்சிய நேரத்தில் வேறு வேலைகளையும் பார்த்துக்கொள்ள இயலும். மும்பை நகரத்தில் பல்வேறு இடங்களில் இவ்விதம் பனை மரங்கள் ஆங்காங்கே நிற்பதைப் பார்க்கலாம். ஆனால் அரசு ஆவணங்களின்படி மும்பை நகரத்தில் பனை மரங்கள் இல்லை என்பது போலவே பதிவாகியிருக்கின்றது. தனி நபர்களூக்கான பனையேறும் உரிமத்தினை அரசு கொடுத்து, அவர்கள் மூலம் நேரடியாக தனது வருவாயினை பெறுமானால், இன்னும் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள இயலும் என்பது எனது நம்பிக்கை. ஆனால், அரசு அவ்விதம் செய்வதற்கான வாய்ப்புகள் வெகு குறைவே. பனை மரங்கள் இருக்கும் பகுதிகளில் பல பனையேறிகளின் எதிர்கால வாழ்விற்கான நல்வாய்ப்புகள் இருக்கின்றன.

மும்பை தான் ஒரு பனை நகரம் என்கின்ற உன்மையினை பெரும்பாலும் மறந்துவிட்டது. மும்பையின் அசுர வளர்ச்சி பனை மரத்தினை புறந்தள்ளியபடியே இருக்கின்றது. பனை மரங்கள் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளின் வரவால் காணாமல் போய்கொண்டிருக்கின்றன. சில குடியிருப்புகளின் மத்தியில் அவைகள் நின்றாலும், பனை சார்ந்த பொருட்களில் மும்பையில் எஞ்சியிருக்கும் ஒரே பயன்பட்டுப்பொருள் கள்ளுதான். அதுவும் மும்பையினை விட்டு வேகமாக விடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பனைகள் இல்லாத நகரத்தில் பனையேறிகளுக்கு என்னவேலை என்று அவர்களும் இந்த நகரத்தை விட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள்.

 

சமீபத்தில், கோரேகாவுனிலுள்ள தூய. பயஸ் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். 82 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நிற்கின்றன. பனை மரத்தில் இருக்கும் ஓலைகளைக் கழிக்க நபர்கள் யாரும் இல்லை என்பதாக அருட்தந்தை. மார்சிலஸ் கூறினார்கள். ஒரு பனை மரத்தினை சுத்தம் செய்ய ரூ 500/- வரை தான் கொடுக்க ஆயத்தமாக இருப்பதாக கூறினார்.

மீண்டும் மத் பகுதிக்கி செல்லவேண்டும் என்ற உந்துதலில் அப்பகுதிக்குச் சென்றேன். சாலைகள் மற்றும் அங்குள்ள இடங்கள் பெருமளவில் மாறியிருக்கின்றன. நவீன கிராமமாக மத் உருக்கொண்டு வருகிறது. மீனவ சமுதாயம் பெருமளவில் இருக்கும் இப்பகுதியில், இந்து மீனவர்களும், கிழக்கிந்திய கிறிஸ்தவ மீனவர்களும், மராத்தியர்களும் வாழ்கிறார்கள். இந்திய விமானப்படையின் தளம் ஒன்று இங்கே இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் மும்பையின் பெரும் பணக்காரர்கள் பலரும் இப்பகுதியில் இடத்தை பிடித்து தங்களுக்கான பங்களாவாக வைத்திருக்கிறார்கள். மிக அமைதியான ஒரு இடம். மும்பையினை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம் என்கிற விடுதலை உணர்வு இங்கே வருபவர்களிடம் மேலோங்கியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

மும்பையினை பனை நகரம் என நான் கூறுவதற்கு காரணம், மலாட் முதல் மத் வரை பயணம் செய்யும் எவரும் புரிந்து கொள்ள முடியும். பனை மரங்கள் பொதுக்கூட்டத்திற்கு கூடி வந்திருப்பவர்கள் போலவும், பொதுக்கூட்டம் நோக்கி செல்பவர்கள் போலவும் திரண்டிருக்கும். சாலையோர பயணிகள் போலவே அவைகள் நமது வழித்துணையாக வ்ந்தபடியே இருக்கும். தூரத்திலும் தொலைவிலும் அவைகள் தங்கள் இருப்பை உறுதிசெய்தபடி இருக்கும்.  இன்றைய நவீன யுகத்தில் பனை செழித்திருக்கும் இப்பகுதிகள் எவரையும் கிளர்ச்சி கொள்ளச் செய்பவை. மும்பையினை மழைக்காடு என்பார்கள். இந்த மழை நேரத்தில் தான் நான் மீண்டும் மத் நோக்கி பயணித்தேன். மழைக்காட்டை ஊடுருவி எழும் மரமாக பனை வீறுகொண்டெழுந்து நிற்கின்றது. பாலை நில பனை என்பதற்கு எவ்வகையிலும் இடமளிக்காமல், பசுமை போர்த்தியபடி பனை தனது கரும்பச்சை ஓலைகளை நீட்டி தலையுயர்த்தியபடி இருப்பது கனவு காட்சி தான்.

Madh-fort3

மும்பை தன்னை பனை சார்ந்த ஒரு நகரமாக மீண்டும் கட்டியெழுப்பும் காலம் வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். மும்பையின் மிக குறுகிய இடங்களில் நின்று வளர்ந்து பலன் தரும் வேறு மரங்கள் இல்லை. தென்னையின் ஓலைகள் மிகப்பெரியவை. பிற மரங்கள் கிளை பரப்புபவை. பனை தன்னை ஒடுக்கியபடி மக்களுக்கு முழுமையாக தன்னை அற்பணித்திருக்கிறது. ஒருவேளை மும்பை பனை மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டால், உலகின் பல்வேறு  இனக்குழுக்கள் இம்மரத்தின் முக்கியத்துவத்தையும் சாத்தியக்கூறுகளையும் கண்டடைவார்கள் என்பது உறுதி. மும்பை பல்வேறு விஷயங்களில் அப்படி முன்னுதாரண நகரமாக இருக்கிறது. பல்வேறு மக்கள் இணைந்து வாழ்வதால் ஏற்பட்ட புரிதலினால் அது அமைந்திருக்கலாம்.

மத் ஜெட்டியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் அங்கே ஒரு சிறிய பாழடைந்த கோட்டை இருக்கிறது. இதனை மத் கோட்டை என்றும், வர்சோவா கோட்டை என்றும் அழைக்கிறார்கள். விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோட்டைக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. ஆனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை எடுப்பவர்கள் முன் அனுமதி பெற்று இங்கே படப்பிடிப்பினை நடுத்துவதாக கேள்விப்பட்டேன். இக்கோட்டையின் சிறப்பே இக்கோட்டை பனை மரங்களால் சூழப்பட்டிருபது தான். போர்த்துக்கீசியர்களால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, 1739ஆம் ஆண்டு மராத்தியர்கள் கைகளில் வீழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வசாய் போரில் 40000 காலாட்படைகளும், 25,000 குதிரைப்படை வீரர்களும், 4000 கண்ணிவெடிகள் அமைக்கும் வீரர்களும், 5000 ஒட்டகங்களும், 50 யானைகளும் ஈடுபட்டு நிகழ்த்திய வெற்றி இது. சிமாஜி அப்பா (Chimaji Appa) தலைமையில் நிகழ்த்த இப்போரில், மராத்திய படை வெற்றி கண்டது.

இந்த கோட்டைக்குள்ளும் வெளியிலும் நிற்கும் பனை மரங்களைக் காணுகையில், இந்த பகுதியில் வாழ்ந்த இதன் மூதாதையர்களை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை போர்களை, சமூகங்களை அவைகள் கண்டிருக்கும். எத்துணை மனத்திண்மை இருந்திருந்தால் இவைகள் இப்போர்களைத் தாண்டி உயர்ந்து எழுந்திருக்கும். இன்று கனிந்துருகி கள்ளூறி நிற்கும் இவைகளே இக்கோட்டைக்கு அணி சேர்ப்பதாக இருக்கின்றன.

போர்சுக்கீசிய மொழியில் பனை மரங்களைச் சுட்ட பல்மைரா (Palmeira) என்கிற வார்த்தையினைப் பயன்படுத்துவார்கள். ஆங்கிலத்தில் பனை மரத்தினை நாம் சுட்ட பயன் படுத்தும் சொல்லும் பல்மைரா (Palmyra)  இரண்டும் நெருங்கிய உச்சரிப்பைக் கொண்டது. அப்படியென்று சொன்னால், முதலாவது இந்தியா வந்த போர்த்துக்கீசியர்கள் தான் நமது பனை மரத்திற்கு பேரிட்டிருப்பார்களோ? கிழக்கிந்திய கம்பெனி அப்பெயரினை வழிமொழிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது. கோட்டையின் முன் கெம்பீரமாக நிற்கும் பனை மரங்கள், நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என் சொல்லுவதுபோல தலை நிமிர்ந்து நிற்கின்றன. போர்த்துக்கீசியர்கள் வாழ்வில் ஏதேனும் ஒருவகையில் இவைகள் முக்கியமாக இடைபட்டிருக்கும். எவ்வாறு என்பது எங்கோ ஆழத்தில் புதைந்திருக்கும் இரகசியம் தான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

 


%d bloggers like this: