Archive for செப்ரெம்பர், 2019

பனையோலை பரிசுகள்

செப்ரெம்பர் 16, 2019

கிறிஸ்மஸ் காலங்களிலும் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளிலும் போட்டிகள் வைத்தோ அல்லது வருகை பதிவினை முன்னிட்டோ திருச்சபையின் சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கும் மரபு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இந்த கலாச்சாரம் தேவையா என்கிற கேள்விகளை சிலர் எழுப்புவார்கள். கடவுளுக்காக செய்கிற நிகழ்ச்சிகளில் பரிசுகளை முன்னிறுத்துவது ஒருவகையில் உவப்பளிக்காத செயல் தான். இன்று எண்ணிப்பார்கவியலாத விலையுயர்ந்த பரிசுகளைக் கூட பெற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்பு கொண்ட திருச்சபை பிள்ளைகள் திருச்சபையில் கொடுக்கப்படும் பரிசுகளை கண்டு புளகாங்கிதம் அடைவதில்லை. வெல்கிறோம் என்ற எண்ணமே பெரும்பாலும் போட்டிகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தவும் பரிசளிக்கவும் காரணமாக அமைகிறது. சில இடங்களில் உற்சாகப்படுத்துகிறோம் என்ற எண்ணமும் உண்டு.  திருமறை சார்ந்த அறிவு தெளிவை திருச்சபையினர் பெற வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்படும் பரிசுகள் தான் அனைத்தும். அவ்வகையில் நான் திருச்சபையில் பரிசுகள் கொடுப்பதை ஏற்கிறேன்.

Key Chain

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச் சங்கிலி

எனது சிறு வயதில், அனைத்து போட்டிகளிலும் நான் முதல் பரிசை வென்றாக வேண்டும் என்பது எனது வீட்டினரின் எதிர்பார்ப்பு. பெரும்பாலும் நான் மூன்றாம் பரிசுகளை கூட எடுத்ததில்லை அதற்கும் கீழிருக்கும் பரிசுகளையே நான் பெற்றிருக்கிறேன். அது ஆறுதல் பரிசு என்று அழைக்கப்படும். எனக்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கும் பரிசுகள் தான் அவைகள். ஆனால் போதகராயிருக்கிற எனது அப்பாவிற்கு அது மிகப்பெரிய கவுரவ குறைச்சல். அவர் கையினால் நான் அந்த ஆறுதல் பரிசை வாங்கினால் அன்று வீட்டில் எனக்கு ஆறுதல் சொல்ல ஆள் தேவையிருக்கும். அந்த அடிக்கு பயந்து தான் நன்றாக படிக்க வேண்டியிருந்தது.

பரிசுகளில் எப்போதும் தரப்படுத்துதல் உண்டு. முதல் பரிசுகள் எப்போதும் விலையுயர்ந்ததாக இருக்கும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் விலை குறைந்து வந்து, ஆறுதல் பரிசு என்பது மிக குறைந்த விலையில் இருக்கும்.  பங்கு கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆறுதல் பரிசுகள் கொடுக்கப்பட்டாலும், வாங்குபவருக்கு அது மிக பெரிய அவமானமாக இருக்கும். ஒருமுறை அவ்விதம் ஆறுதல் பரிசு பெற்ற ஒரு சிறுவன் தனது கையில் கிடைத்த கண்ணாடி கோப்பையினை வாங்கிய மறு கணமே அனைவர் முன்னும் வீசி நொறுக்கியதை நான் விக்கித்தபடி பார்த்து நின்றேன்.

குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு திருச்சபைகளும் கிறிஸ்மஸ் காலங்களில் பரிசுகள் வாங்குவதற்காக பல்வேறு சில்வர் பாத்திரக்கடைகளுக்கு ஏறி இறங்குவது வழக்கம். ஒரு முறை குமரி மாவட்டத்திலிருந்து மதுரை வரை சென்று சில்வர் பாத்திரங்களை எடுத்து வந்த நிகழ்ச்சிகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்மஸ் பரிசுகளை எடுக்கச் செல்லுவதின் மூலம் வரும் தகராறுகள், பரிசுகள் சார்ந்து நடைபெறும் சச்சரவுகள் என பல உண்டு. என்றாலும், பரிசுகளை நாம் நீக்க இயலாத ஒரு சூழல் நிலவுகிறது என்பதாகவே நான் கருதுகிறேன். ஏதோ ஒரு வகையில் அவைகள் நமக்கு தேவையாகின்றன. அதுவும் பரிசுகளை கொடுக்கவோ வாங்கவோ செய்வது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு கலாச்சார செயல்பாடுதான்.

Ikkam petti

பனை ஓலை ஈக்காம்பெட்டிகள் பரிசு பொருட்களாக திருச்சபையில் வைக்கப்பட்டிருக்கின்றன

திருச்சபை சில்வர் மோகத்திலிருந்து விலகி, மலினமான பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் ஒரு காலகட்டத்தையும் அடைந்திருக்கிறது. தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பலவுமே இன்றைய பரிசுகளுக்கு ஏற்றவைகளாக தெரிவுசெய்யப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் பரிசுகளைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், இவ்வித பரிசுகளை குறைந்த விலைக்கு வாங்கி சமாளிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் புழக்கத்தை எதிர்கொள்ளுவது திருச்சபையின் முக்கிய கடமையாகிறது. சூழியல் பார்வையில், திருச்சபையில் இவ்வித பரிசுகளை நீக்கி, பாரம்பரியமாக இயற்கையிலிருந்து பொருட்களைச் செய்யும் குயவர்களிடமிருந்தோ, மூங்கில் பொருட்களை செய்பவர்களிடமிருந்தோ, பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்களிடமிருந்தோ அல்லது இயற்கை வவசாயிகளிடமிருந்து வாங்கும் பொருட்கள் கூட மிக சிறந்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சிறந்த புத்தகங்களைக் கொடுப்பது கூட மாற்று பரிசாகவே இருக்கும்.

சரி எங்கிருந்து இவ்வித மாற்றங்களைத் துவங்குவது? நாம் தான் எப்போதும் நல்லுதாரணமாக இருக்கவேண்டும். நமது வாழ்வில் நாம் முன்னெடுப்பவைகளை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய மாற்றத்திற்கான விதையாகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், திருச்சபையினை நான் எனது களமாக வைத்திருக்கிறேன். சமூகத்தில் நிகழும் மாற்றங்களை விட, திருச்சபையில் ஏற்படும் சூழியல் புரிதலுடன்கூடிய நல்ல மாற்றங்கள் நம்மை மிக பெரும் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும்.

Olai parisukaL

பனை ஓலை ஈக்காம்பெட்டியினை அம்மா திருமதி. சின்னபொண்ணு அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார்கள்

நான் பணி செய்யும் தூய பவுல், மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, ஆரே பால் குடியிருப்பு, பெண்கள் ஞாயிறு ஆராதனை இன்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே சிறப்பு செய்தியளிக்க அம்மாவை அழைத்திருந்தேன்.  தனது வாழ்வில் தந்தையினையும், கணவரையும் மகனையும் ஆருட்பொழிவு பெற்றோராக கொண்ட ஓர் அபூர்வ இறைத்தொண்டர். அம்மாவின் பேச்சிலுள்ள நேர்த்தி சொல்ல வரும் கூற்றில் உள்ள தெளிவு, வார்த்தைகளின் கச்சிதம், ஆழ்ந்த திருமறை அறிவு யாவும் அவர்களின் ஊழிய பின்னணியத்தையும் அவர்களின் ஆசிரியப்பணியின் தொடர்ச்சியையும் கூறுவதாக அமையும். மிக அருகிலிருந்து பார்த்ததினால் அவர்களின் வாழ்வே அற்பணிப்பு மிக்க ஒன்று என தைரியமாக சொல்ல முடியும்.   பகிர்தல் மற்றும் பராமரித்தல் (ஸ்கர் அன்ட் Cஅரெ) என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டார்கள். பெண்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகலையும் ஒருங்கிணைக்கும் ஜாஸ்மின் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள்.

பரிசுகள் குறித்து பேச்சு எழுந்த போது, நாம் ஏன் பனை சார்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்கக்கூடாது என கேட்டேன். திருமண வாழ்வில் 10 வருடங்கள் என்னோடு இருந்து எனது வாழ்வின் நோக்கங்களை ஜாஸ்மின் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கும் இது நல் ஆலோசனையாக தெரிந்தது. ஆனால் என்ன பரிசு வாங்கலாம் என தெரியவில்லை. மும்பையில் கிடைக்காததாக இருக்கவேணும், தனித்தன்மை வாய்த்ததாக இருக்கவேண்டும், பெண்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும், என காரண காரியங்களை பட்டியலிட்டு, வருகின்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு முறம் வாங்கலாம் என முடிவு செய்தோம்.

முறம் உற்பத்தியாளர்களை நான் அறிவேன். நாங்கள் விசாரிக்கையில் அவர்கள் வசம் கையிருப்பு இல்லை. அதே நேரம் மொத்த வியாபாரியிடம் பேசியபோது விலை அதிகமாக இருந்தது. மேலதிகமாக முறத்திற்காக நான் பேசிய இடங்களில் குறித்த நேரத்திற்கு அவைகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆகவே முறம் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

பல்வேறு யோசனைகளுக்கு இடையில் எனக்கு குமரி மாவட்டதில் கிடைக்கும் ஈக்காம் பெட்டி வாங்கினால் என்ன என தோன்றியது. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் ஈக்காம்பெட்டியினை அரிவட்டி என்றும் சொல்லுவார்கள். ஓலைகளின் ஈர்க்கிலை வகிர்ந்து தனித்துவமான பின்னல்கள் கொண்ட பெட்டிகள் இது. பெரும்பாலும் குமரி – கேரள  எல்லைகளில் வசிக்கும் தலித் சமூகத்தினர் பின்னும் ஒரு தொன்மையான படைப்பு இது. சர்வதேச அளவில் பனை ஓலை பொருட்களை விற்கும் மஞ்சள் என்ற செட்டியார் அமைப்பு, இவ்வித பின்னல்களுக்கு இரட்டை மலையாளம் என பெயரிட்டிருக்கிறது. காய்கறிகளைப் போட்டு வைப்பதற்கும், மசாலா பொருட்களைப் போட்டுவைப்பதற்கும் முற்காலங்களில் பயன்பட்ட பெட்டி இது. ஆனால் அரிவட்டி என்ற இதன் பெயர் காரணம், ஊறப்போட்ட அரிசியினை வடித்து உலர்த்தியெடுக்க பயன்பட்டதால் பெற்றது. முறத்தை  விட மிகவும் விலை குறைவானது, நாங்கள் வாங்கும் சக்திக்குள் இருப்பது. ஆகவே, அரிவட்டி வாங்கலாம் என்றே முடிவு செய்தோம்.

எப்படி வாங்குவது என்ற கேள்வி எழுந்த போது, எனது நண்பரும் மார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் பால்மா மக்களமைப்பில் உள்ள செயல் இயக்குனர் திரு ஜேக்கப் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஞாயிறுக்கிழமை இரவு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். திங்கள் காலை 9 மணிக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டார்கள். அப்படியே காலை 12 மணிக்குள் எங்களுக்கு அனுப்பியும் விட்டார்கள். புதன் கிழமை மாலை ஆறு மணிக்கு எங்கள் கைகளில் ஓலைப் பெட்டி வந்து கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரோனும் மித்திரனும் இதனை எப்படி அடுக்குவது என்பதைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்தையும் துடைத்து பிசிறுகளை வெட்டி ஒழுங்குபடுத்தி தந்தார்கள்.

இதே வேளையில் எங்கள் திருச்சபையின் இளைஞர்கள் வருகிற 22.09.2019 அன்று வாலிபர் ஞாயிறு ஆராதனையினை அனுசரிக்க இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கும் பரிசுகள் வேண்டியிருந்தது. அவர்களுக்கான பரிசு இன்னும் விலைக்குறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். பனையோலையில் செய்யும் பனையோலை சாவி சங்கிலி கொடுத்தால் என்ன என்று கேட்டேன். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்கள். பனையோலை சாவி சங்கிலியினை தயாரிப்பவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகராஜன். பேசியபோது அவர்களும் அனுப்புகிறேன் என வாக்களித்து திங்கட் கிழமையே அனுப்பிவிட்டார்கள். சனிக்கிழமை மாலை 7 மணிவரை எனது கைக்கு வராத அந்த பரிசுப்பொருளால் நாங்கள் குழம்பிப்போனோம். நாகராஜன் அவர்களைக் கேட்டபோது வந்து சேர்ந்துவிட்டதாக கூறினார்கள். இரவு 8 மணிக்கு நாங்கள் ஆலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் அந்த பொட்டலம் வீட்டிற்கு வந்ததாக அம்மா சொன்னார்கள். நாம் முயன்று ஒரு படி முன்னே செல்லும்போது கடவுளின் துணை அனைத்து படிகளிலும் நமக்கு முன்பே உதவி செய்யும்படி காத்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனோம்.

பெண்கள் சிறப்பு தொழுகையில் கூடி வந்த அனைவருமே மகிழ்வுடன் இந்த பரிசுகளை எடுத்துச் சென்றனர். ஒவ்வொருவரின் முகத்திலும் அத்தனை பிரகாசம். அது எனக்கு மிகப்பெரிய ஆறுதல், ஊக்கம், ஆக்கம் அனைத்துமாகியது. அரிவட்டிகள் வந்த நாள் அன்று ஜாஸ்மினுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரிவட்டிகள் ஒன்றுக்குள் ஒன்றாக 7 பெட்டிகளை வைத்திருப்பார்கள். வெளிப்புறம் இருப்பது பெரிதாகவும், உட்புறமிருப்பது அளவில் சிறிதாக இருப்பதும் இயல்பு. இவ்விதம் செய்தாலே இவைகளை சந்தைக்கு ஒருங்கே எடுத்துச் செல்ல இயலும். ஆகவே ஒருவருக்கு பெரிதும் மற்றொருவருக்கு சிறிதுமா என்ற கேள்வியை அவள் முன்வைத்தாள். நான் கூறினேன், இது பிற பொருட்களைப்போல அல்ல, உயிர் தன்மை கொண்ட பொருட்கள் இவைகள். கைகளால் செய்யப்பட்டதால் தனித்துவம் கூடியவைகள். அந்த தனித்துவமே இவைகளை பெற்றுக்கொள்ளுவோருக்கு மகிழ்வளிப்பதாக அமையும் என்று கூறினேன். அது அவ்விதமாகவே நிகழ்ந்தது.

அனைத்தும் ஒழுங்காக நிறைவுற்றபடியால், இதனை ஏன் நாம் ஒரு முன்னுதாரணமாக முன்வைக்ககூடாது என எண்ணினேன். திருச்சபையின் சூழியல் பங்களிப்புகள் குறித்து பலவற்றை பேசிக்கொண்டிருக்கிறோம், தமிழகத்தில் பனை மரங்களை நடும் முயற்சிகள் திருச்சபைகளிலும் கூட நடைபெற துவங்கிவிட்டன. ஆனால் பனை சார்ந்து வாழும் மக்கள் அனைவரையும் திருச்சபை ஓர் விலக்கத்துடனேயே அணுகுகிறது. இந்த நிலை மாறினால் ஒழிய, திருச்சபை சூழியல் குறித்த முழுமையான பார்வையினை எட்டிவிட இயலாது. இன்றும் தமிழகமெங்கும், பனை சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அனேக கைவினைக் கலைஞர்கள் போதுமான ஊக்குவிப்பின்றி தங்கள் பொருட்களை விற்க இயலாமல் தத்தளித்தபடி இருப்பதைக் காண்கின்றோம். திருச்சபை திட்டமிட்டு, பனையோலைப் பொருட்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டால், பல ஆயிரம் குடும்பங்கள் பசிப்பிணியிலிருந்து வெளியே வரும். நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான கடமை இது. எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் அவர்களிடம் நாம் காட்டும் இவ்வன்பினால் நமது அன்பின் ஆண்டவர் குறித்து மவுன சாட்சிகளாக நாம் உயர்ந்து நிற்போம்.

Key

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச்சங்கிலிகள்

பனை ஓலைகளாலான பரிசுகளை தேர்ந்தெடுப்பதும் வாங்குவதும் எப்படி? நமது தேவைகளுக்கேற்ப அவைகளை நாம் தெரிவு செய்ய இயலும். பனை ஓலையில் செய்யப்படும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் உண்டு, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் உண்டு, திருவிழா காலங்களுக்கான வீட்டு அலங்கார தோரணங்கள் உண்டு,  பயன்பாட்டு பொருட்கள் உண்டு, பாரம்பரிய பொருட்கள் உண்டு, சமையலறை பொருட்களும் உண்டு. இவைகளை செய்யும் கலைஞர்கள் குறித்து நாம் உள்ளூரிலேயே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். மேலும் தமிழகமெங்கும் இவ்வித கலைஞர்கள் விரவி பரவியிருக்கிறார்கள். இவர்களைத் தேடி தெரிவு செய்வதும், இவர்களுக்காக பணியாற்றுவதும் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. பல்வேறு விதமான பரிசுகள் தேவை என நாம் அறியும்போது, பல இடங்களில் இருந்து நம்மால் இவைகளை தருவிக்க இயலும். இன்று இக்கலைஞர்களுக்கு இவ்விதமான ஒரு ஊக்குவிப்பு மிக தேவையாக இருக்கிறது. முன்கூட்டியே நேரமெடுத்து சொல்லிச் செய்வது, ஏற்ற நேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும். பெரும்பாலும் பரிசுகளை எடுப்பதற்கு நாம் இறுதி கணத்தை வைத்திருப்பதனால் நம்மால் இயற்கை பொருட்களை குறித்த நேரத்தில் வாங்க இயல்வது இல்லை.  அதற்கும் ஒரு யோசனை இருக்கிறது. வருட துவக்கத்தில் நமக்கு தேவைப்படும் பொருட்களின் குத்துமதிப்பான ஒரு எண்ணை நாம் கூறிவிட்டோமென்று சொன்னால், இறுதி நேரத்தில் சிறிது கூடினாலோ குறைந்தாலோ சமாளித்துவிடலாம். என்றாலும் கருத்தில் கொள்க, நாம் எவ்வகையிலும் இவர்களது வாழ்வில் எந்த சுமையினையும் ஏற்றிவிடலாகாது. ஆகவே முதலிலேயே ஒரு முன்பணம் கொடுத்து வைத்துக்கொள்ளுவது சிறப்பு.

பலருக்கும் ஓலைகளில் செய்யப்படும் இவைகள் வேடிக்கையாக  இன்று காணப்படலாம். ஓலைகளில் கொடுப்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது எனவும் வினவலாம். ஆனால் காடு மலை ஏறி சென்று பல பணித்தளங்களைப் பார்க்கும் நமக்கு, சூழியல் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மக்களின் விரிவு தெரியும். அவர்களின் பணியின் முக்கியத்துவம் தெரியும், அவர்களை நாம் ஆதரிக்கும் திருமறை சார்ந்த பின்னணியம் புரியும்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் நடபடிகள்) தொற்காள் எனும் பெயருள்ள சீடரைக் குறிப்பிடுகிறது. தொற்காள் என்றால் பெண் மான் என்றே பொருள்படும். அவள் நோய்வாய்பட்டு மரித்துவிடுகிறாள்.  “நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்” என பார்க்கிறோம்.  அவரது மரணத்தில் அனேக விதவைகள் பங்குகொண்டனர். பேதுருவினிடம் அவர்கள் தொற்காள் செய்த அங்கிகளையும் அவள் செய்து கொடுத்த ஆடைகளையும் காண்பித்து கண்ணீர் சொரிந்தனர். என்னே ஒரு சிறந்த காட்சி? உன்னதமான சாட்சி அல்லவா இது? இன்று, பனையோலைப் பொருட்களைச் செய்பவர்களுக்காக நாம் கண்ணீர் உகுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, அவர்கள் வாழ்வின் கண்ணீரைத் துடைக்கும்படியாகவாவது நாம் செயல்படவேண்டாமா? (தி. ப 9: 36 – 42) பேதுரு அந்த பெண்ணை உயிரோடு எழுப்புவதாக திருமறைப்பகுதி நமக்கு விளம்புகிறது.

என்னைப்பொறுத்தவரையில், தமிழகத்திலுள்ள திருச்சபைகள் இணைந்து ஒரு வருடம் பனையோலைப் பொருட்களை வாங்கத் துவங்கினால் மறு வருடமே பலநூறு வடிவங்கள் புதிதாக கிளைத்தெழும் வாய்ப்புகள் இருக்கின்றன. அது இன்னும் அனேகருக்கு வேலைவாய்ப்பையும் ஒரு வேளை உணவையும் உறுதிச்செய்யும். திருச்சபை இன்று வாழும் தொற்காள்களுக்காக செய்யும் ஒரு அர்த்தம் பொதிந்த  மன்றாட்டு இதுவாகவே இருக்கமுடியும்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 13 

செப்ரெம்பர் 12, 2019

 –  

பனை மலை

மும்பை என்பது குட்டித் தீவுதொடர்கள் தான். ஆனால் அவைகள் நாளாவட்டத்தில் இணைக்கப்பட்டன. மும்பையின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றாக இணைக்கப்படும் நிகழ்வு ஆங்கிலேயர் காலத்தில் தான் நிகழ்ந்தது. கிரேக்க புவியியலாளர் டாலமி (Ptolemy) இவ்விடத்தினை “ஹெப்டமேசியா” என்றே குறிப்பிடுகிறார். அதற்கு ஏழு தீவுகளின் தொகை என்று பொருள். மும்பை கற்காலம் துவங்கி மனிதர்கள் சுற்றிதிரிந்த இடம் தான். கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல் மும்பையினை ஆட்சிபுரிந்தவர்கள் குறித்த தரவுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் சுதேசி மன்னர்களால் ஆளப்பட்ட இப்பகுதிகள் இஸ்லாமியர் கரத்திலிருந்து போர்த்துக்கீசியர்கள் கரத்திற்கு சென்றது. 1662 ஆம் ஆண்டு போர்துக்கீசிய இளவரசி காத்தரினும், இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் ஆகியோர் திருமணத்தில் இணைந்தனர். இந்த திருமணத்தின் மூலமாக மும்பை தீவுகள் இங்கிலாந்து மன்னருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மும்பை எப்படி இருக்கும் என்றே தெரியாத இரண்டாம் சார்லஸ், அதனை கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார். கம்பெனி மும்பையில் நுழைய 10 பவுண்டுகள் மட்டுமே வருட வாடகை கொடுத்திருக்கிறார்கள். கம்பெனி தீவு கூட்டங்களுக்குள் தகவல் தொடர்புகளுக்காக வேண்டி மலைகளை உடைத்து கடலுக்குள் தள்ளி இந்த நிலப்பரப்புகளை ஒன்றாக்கினார்கள். அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. பரபரப்புகள் செய்வது என்ன என்று இன்று நாம் தெளிவாகவே அறிகிறோம்.

Zion Top city

சயன் மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து

கடற்கரையில் வாழும் மீனவ சமூகமான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே மும்பையின் பூர்வ குடிகள் எனக் கூறப்படுவது உண்டு. இவைகள் ஏற்றுக்கொள்ளகூடிய உண்மைகள் தான். இத்தனை தீவுகளில் மீன் பிடியினை தங்கள் வாழ்வாதரமாக கொண்டிருக்கிற மக்கள் தான் வாழ இயலும். இன்றும் கடற்புறங்களில் மீனவ குடிகளான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் ஓங்கி வளருவதைப் பார்க்கையில், இம்மீனவ சமூகத்திற்கும் பனைக்கும் உள்ள தொன்று தொட்ட உறவினை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படியே பனை மரம் ஏறுகின்ற சமூகமான பண்டாரிகளும் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பு என்னைக் கிளர்ந்தெழச் செய்தது. பனை மரங்கள் எப்படி குமரி மாவட்டத்தில் மீனவர்களுடனும் நாடார்களுடனும் இணைத்திருக்கிறதோ அதுபோலவே என எண்ணிக்கொண்டேன். ஆனால் தீர்க்கமாக ஏதும் அறிந்து கொள்ளவோ, கண்டுபிடிக்கவோ இயலவில்லை என்பது தான் உண்மை. இவர்தம் வாழ்வின் உள்ளடுக்குகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்தால், பனை இவர்கள் வாழ்வில் பெற்றிருந்த உண்மையான இடம் என்ன என்பதனை நாம் அறியலாம். நகர மயமாக்கலில், பெரும்பாலான பனை சார்ந்த நினைவுகள் அற்றுப்போயிருக்கும் சூழலில், இவைகளை மீட்டெடுப்பதோ கண்டுபிடிப்பதோ எளிது அல்ல.

மொத்த மஹாராஷ்டிர பகுதிகளுமே பவுத்தர்களின் காலடி பட்ட இடங்கள் தாம். கி மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி பி 2 ஆம் நூற்றாண்டு வரை பவுத்தர்களின் இயக்கம் இப்பகுதிகளில் தொடர்ச்சியாகவும் சீராகவும் இருந்திருக்கிறது.  சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கெனரி குகைகளே இதற்கு சான்று. போரிவலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் இருப்பதைக் காணலாம். வனவிலங்கு பூங்காவை ஒட்டியிருக்கும் அனைத்து பகுதிகளிலும், ஏன் பூங்காவின் உட்பகுதியிலும் சில பனை மரங்கள் இருப்பதை இன்றும் நாம் கண்டு கொள்ள இயலும்.

Sion Station

சயன் இரயில் நிலையம்

நான் பனை மரச்சாலை பயணம் செல்லுவதற்கு பண உதவி செய்தவர்களுள் எனது திருச்சபை அங்கத்தினரான திரு. ராஜேந்திர ராஜன் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். சயன் என்ற பகுதியில் அவரது அலுவலகம் இருந்தது. நான் அவரை சந்தித்துவிட்டு மீண்டும் வெளியே வருகையில் அங்கே ஒரு பூங்காவைப் பார்த்தேன். ஏதோ ஒரு உந்துதலில் அந்த பூங்காவிற்குள் நுழைந்தேன். பூங்காவிலிருந்து திடீரென படிகள் செங்குத்தாக ஏறின. அனேகர் அந்த படிகளில் ஏறியபடியும் இறங்கியபடியும் இருந்தனர். மீண்டும் என் வாழ்வில் ஒரு இன்ப அதிர்ச்சி. எனது கண்களை ஏறிட்டு பார்த்தபோது அங்கே பனை மரங்கள் நின்றன.  அன்று அந்த கோட்டைக்குள் நான் நுழைந்து பார்த்தபோது சில பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். பெரும்பாலும் காதலர்களும், இளைஞர்களுமே அங்கிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். குழந்தைகள் மும்பையின் நெருக்கடியினை மறந்து தேனிக்களாய் பறந்தோடிக்கொண்டிருந்தனர்.

ஒரு கோட்டையில் பனை மரம் நிற்பது என்பது அந்த கோட்டையின் நிலவியலை இன்றும் நம் கண்முன் கொண்டுவரும் ஒரு சாட்சி தான். குறிப்பாக பனை மரம் குறித்த நினைவுகள் ஏதும் பொதுபுரிதலில் இல்லாத ஒரு நிலப்பரப்பில், பனை மரங்கள் நிற்கின்றன என்பது ஒரு முக்கிய தடயமாகும். எவ்வாறு இவைகள் இங்கே வந்திருக்கும்? கோட்டை காவலை மீறி, பனை மரங்கள் எப்படி ஒரு கோட்டைக்குள் நுழைந்திருக்கும் என்பது முக்கிய கேள்வி தான். இக்கேள்விகளின் பின்னணியில் தான், பனை மரங்கள் இப்பகுதிக்கே உரித்தானவைகள் என்ற புரிதல் மெலெழுந்து வருகின்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வில் இம்மரங்கள் இணைந்தே இருந்திருக்கின்றன.  எவ்வகையில் என நமக்கு இப்போது தெரியாவிடினும், இம்மரம், மும்பையின் அடையாளமாக இன்றும் நின்றுகொண்டிருப்பது சிறப்பு.

Sign Board

சயன் கோட்டையின் நுழைவுப்பகுதியில் உள்ள பூங்கா

சயன் என்கிற பெயர் திருமறையிலிருந்து எழுந்த பெயர். சியோன் மலை என்கிற பெயரையே இங்கு வந்து வாழ்ந்த கிறிஸ்துவ துறவிகள் வைத்திருக்கின்றனர். யூதர்களைப் பொறுத்தவரையில் சீயோன் என்பது மலையின் மேல் இருக்கிற ஒரு பட்டணம். கடவுள் தங்கும் ஒரு மலை எனவும், இஸ்ரவேலர்களின் தலை நகரம் எனவும் அதனை அழைப்பார்கள். ஆகவே கிறிஸ்தவர்களுக்கும் சீயோன் என்ற பெயரின் மீது பெரு விருப்பம் இருந்தது. பரலோகத்தையே புதிய சீயோன் என குறிப்பிடும் போக்கும் உண்டு. போர்த்துக்கீசியர்கள் மும்பையினை கைப்பற்றியபோது பல கிறிஸ்தவ துறவிகள் இங்கிருந்த இடங்களில் தங்கள் வாழ்வை அமைத்து சமய தொண்டினை மேற்கொண்டனர். இன்று காணப்படும் சயன் என்ற இரயில் நிலையத்தின் அருகில் காணப்படும் குன்றில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் இவ்விதம் உருவானது தான்.

இதன் மராட்டிய பெயர் ஷீவ் என்று சொல்லப்படுகிறது. இரயில் பயணத்தில் எல்லாம் மராட்டிய அறிவிப்புகளில் ஷீவ் என்று அறிவிக்கப்படுகையில் இது என்ன என்றே ஆச்சரியமாக பார்ப்பேன். எல்கை என்ற பொருளுடைய இப்பெயர், போர்த்துக்கீசியர் ஆட்சிபுரிந்த சல்செட்டே என்கிற நிலப்பகுதிக்கும் பித்தானியர்கள் ஆட்சிபுரிந்த பரேல் என்ற நிலப்பகுதிக்கும் எல்லையில் எழுந்ததால் இப்பெயர் வந்தது என்பார்கள்.

மும்பையின் மையப்பகுதியாக சயனை இன்று நான் உருவகித்துக்கொள்ளுகிறேன். மும்பையின் கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்கு பகுதி நோக்கி வருவதற்கு சயன் ஒரு முக்கிய சந்திப்பு. நான் 12 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்த போது, பேலாபூர் பகுதியிலிருந்து மலாட் நோக்கி பயணிக்கையில், சயன் தாண்டி தான் பேருந்து செல்லும். ஒரு முறை பேருந்தில் நான் பயணிக்கும்போது, அங்கிருந்த வணிக வளாகத்தின் அருகில் நிற்கும் பனை மரத்தினைப் பார்த்தேன். வேறு மரங்களே இல்லை. ஆனால் அந்த வணிக வளாகத்தின் முன்பு நெடு நெடுவென்று நின்ற அந்த பனைமரம், பல கதைகளை தன்னகத்தே உறையவைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது. மும்பை வந்த புதிதில், தமிழர்களால் தான் பனை மரங்கள் மும்பைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் என நான் எண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம்.

Zion Tops

சயன் கோட்டையின் சிதிலங்களின் ஊடாக பனை

சயன் அருகில் தான் தாராவி என்கிற தமிழர் வாழும் சேரிப் பகுதியும் இருக்கிறது. தாராவியிலும் பனை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதைப் பார்க்கலாம். மும்பை தமிழ் சங்கம் கூட சயனில் தான் அமைந்திருக்கிறது. இங்குள்ள தமிழ் நூலகம் மிக முக்கியமானது. தமிழ் எழுத்தாளாரான திரு. நாஞ்சில் நாடன் இதன் நூலகத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எனது இரயில்  பயணங்களில் சயன் இரயில் நிலையத்தைக் கடந்து செல்லுபோதெல்லாம் அதன் அருகில் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்கும் பனை மரத்தினைப் பார்த்திருக்கிறேன். இதனை நான் ஒருபோதும் சயன் மலையில் நான் பார்த்த மரங்களுடன் ஒப்பிட்டோ இணைத்தோ பார்த்ததில்லை. அவ்வித எண்ணம் எனக்கு அப்போது தோன்றவுமில்லை. மும்பை ஒரு பனை நகரம் என்ற தொடரை எழுத எண்ணியபோது தான் இப்பகுதிக்குச் சென்று பார்த்தால் என்ன எனத் தோன்றியது. ஆகவே மீண்டும் சயன் நோக்கி பயணித்தேன்.

சயன் இரயில் நிலையத்தின் அருகில் வந்து பார்த்தபொழுது அந்த பனை மரம் நெடுந்துயர்ந்து நின்றது. ஒற்றைக்கால் தவம் போல. ஏன் துறவிகள் இப்பகுதியினை 500 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கிறார்கள் என்பதற்கு விடை கிடைத்தது போல உள்ளது. பனை சூழியல் துறவிகளுக்கு மிகப்பெரும் ஆன்மீக அமைதியினையும் ஆற்றலினையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது உண்மையிலேயே ஒரு ஆன்மீக மரம் தான். போர்த்துகீசிய துறவிகளுக்கு பனை இறையம்சம் நிரம்பிய ஒரு மரமாக காணப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

சயன் இரயில் நிலையம் பாறைகளைக் குடைந்து பாதாளத்தில் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு. அந்த பாறையின் உச்சியில் தான் இந்த பனை மரம் நிற்பதைப் பார்த்தேன். சமீபத்தில் எவரும் வந்து நட்டுபோட்டிருக்கும் ஒரு மரம் அல்ல இது. நூறாண்டுகள் கடந்த ஒரு மரம். எப்படி இது இங்கு வந்திருக்கும்? விடை எளிதானது தான். பல பனை மரங்கள் நின்ற பகுதியில் பள்ளம் ஏற்படுத்தியதில் எஞ்சிய பனை மரம் தான் இது. மற்ற பகுதிகள் அனைத்தும் கட்டிடங்களால் நிறைந்துவிட்டன. மே மாதம் நான் ஒரு திருமணத்திற்காக சயன் பகுதி சென்றபோது, அங்கே ஒரு தள்ளுவண்டியில் நுங்கினை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து நடந்தே சயன் கில்லா என்றழைக்கப்படும் கோட்டைக்குச் சென்றேன். செல்லும் வழியில் தான் நல்லாலோசனை மாதா ஆலயம். நடை பாதையில் நடந்து செல்லும்போது மிகப்பெரிய கோட்டை சுவர் இருப்பதால் என்னால் அந்த கோவிலைக் காண இயலவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி அதனைக் கடந்து சென்றேன். ஐந்தே நிமிடத்தில் கோட்டையினை அடைந்துவிட்டேன். ஆம் சில படிகள் ஏறினவுடனேயே பனை மரங்கள் என் கண்களுக்குத் தென்பட்டன. நல்ல வேளை பனை மரங்கள் ஒன்றும் வெட்டப்படவில்லை. அப்படியே நிற்கின்றன, ஆனால் இந்த முறை நான் பனை மரங்களை எண்ணத் துவங்கினேன். முதலில் நான்கைந்து மரங்கள் நிற்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. நாற்பதிற்கும் அதிகமான பனை மரங்கள் அங்கே நிற்பதை கண்டு பிரமித்துப்போனேன். அது உண்மையிலேயே ஒரு நல்ல எண்ணிக்கை தான். இரண்டு பனையேறிகள் தாராளமாக ஒரு பருவத்திற்கு இணைந்து வேலை பார்க்க இயலும். கோட்டையினை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் பதநீரை விற்பனை செய்ய இயலும். தொல்லியல் துறை இந்த முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

1669 முதல் 1677 முடிய கட்டப்பட்ட இந்த சிறிய கோட்டை இன்று சிதிலமடைந்தே இருக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தையும் இதன் உச்சியிலிருந்து பார்க்கலாம். ஆம் அதற்காகவே இந்த கோட்டைக் கட்டப்பட்டது. பிரிட்டிஷார் நிர்வாகித்த பரேல் பகுதிக்கும் போர்த்துக்கீசியர் நிர்வாகித்த சல்சட்டே பகுதிக்கும் உள்ள எல்லையில் இது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அப்போதைய பாம்பே கவர்னரான கீரார்ட் ஆங்கியர் (Gerard Aungier ) இதன் கட்டுமான பணிகளை முன்னெடுத்தார். இதன் உச்சியில் சென்று பார்க்கும்போது நான்குதிசையும் பரவி விரிந்து காட்சியளிப்பது இந்த பகுதியினை காவல் கோட்டையாக பிரிட்டிஷார் அமைத்திருப்பதன் பின்னணியத்தை தெரிவிக்கும்.

Sion Church

நல்லாலோசனை மாதா ஆலயம், சயன்

சயன் கோட்டைக் குறித்து பழைய புகைப்படங்கள் ஏதும் கிடைக்குமா என இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு மிகப்பழைய ஓவியம் கிடைத்தது.  சயன் கோட்டையிலிருந்து வரையப்பட்டது, தூரத்தில் தெரியும் தீவில் பனைமரங்கள் கூட்டமாக காணப்படும் ஒரு காட்சி பதிவாக்கப்பட்டிருந்தது. தொலை தூரத்தில் தெரியும் அந்த காட்சி ஏற்படுத்திய மனக்கிளர்ச்சி விவரிக்க முடியாதது, வரைந்த ஓவியரின் மனம் எத்துணை கூர் கொண்டிருந்தால் அந்த பனை மரங்களை ஓவியத்தில் மென்மையாக தீட்டி எடுத்திருக்கும். பனை மீதான ஈர்ப்பு என்பது மும்பை வந்த வெளிநாட்டவரையும் விட்டுவைக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சென்றிருந்த போது பெரும்பாலும் பனம்பழங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. என் கண்களுக்கு பனம்பழங்கள் தட்டுப்படவில்லை. பொதுவாக இப்பகுதிகளை சுத்தம் செய்கிறோம் என்று எண்ணி, விழுந்த பனம்பழங்களை குப்பைகளுடன் அள்ளி வீசியிருப்பார்கள். பனம் பழங்களை உண்ணும் அறிவு பெற்றோர் யாரும் இங்கு இன்று இருக்கப்போவதில்லை. அல்லது பொறுக்கியுண்ணும் காலம் கடந்துவிட்டதோ என்னவோ. ஒரு பழமாவது கிடைத்திருந்தால் எடுத்து வந்திருக்கலாமே என நினைத்தேன். பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள்.

மீண்டும் திரும்பி வருகையில் நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு செல்லலாம் என நினைத்தேன். அப்போது கதவு திறக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு பிறகு தான் திறக்கும் என்றார்கள். இன்னும் நேரம் இருந்தது, நான் உள்நுழையும் எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால் அங்கு ஒரு வான் நடை பாதை இருந்தது. அதுவழி சென்றால் ஆலயத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அங்கே பனை மரங்கள் ஏதும் இருக்கலாம் என எண்ணியபடி அந்த படிகளில் ஏறினேன். ஆம் நான் நினைத்தது போலவே இரண்டு பனை மரங்கள் அந்த வளாகத்தில் நின்றன.

பொதுவாக பனை மரம் கள் தயாரிக்கும் உள்ளூர் தொழிற்சாலை என்ற புரிதலே நமக்கு பரவலாக இருக்கிறது. அதாவது கள் என்பது ஏற்புடைய ஒரு உணவு பொருள் அல்ல என்ற நோக்கிலேயே அவ்வாறு இருக்கிறது. அப்படி இருந்தாலும், இஸ்லாமியர்களின் ஆட்சியிலும், கிறிஸ்தவர்களின் ஆட்சியிலும் இம்மரங்கள் எந்த சேதமும் அடையவில்லை. பனை சார்ந்து கள் இறக்கும் சமூகங்களும் தளத்து பெருகியபடியே இருந்தார்கள். சமயங்கள் இந்த மரத்தை தீங்கானது என்றோ தீண்டத்தகாதது என்றோ முன்வைக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. அவ்விதமான எண்ணங்கள், ஒருசிலரின் தனிப்பட்ட பார்வையாக வெளிப்பட்டிருக்கலாமே ஒழிய இம்மரங்களை தீயது என எண்ணி அப்புறப்படுத்தும் முயற்சிகளை எவருமே செய்ததில்லை என்பது தான் உண்மை.

நான் கீழிறங்கி மீண்டும் இரயில் நிலையத்திற்கு வந்தபோது மீண்டும் அந்த மரத்தைப் பார்த்தேன். நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு முன்பாக சிலுவை என எழுந்து நிற்பது தென்பட்டது. இரயிலுக்காக வெட்டிய பாறையின் விளிம்பில் அது தனது கடைசி நாட்களை எண்ணியபடி நின்றுகொண்டிருந்தது. சட்டென்று எனக்குத் தோன்றியது இதுதான். நவீன யுகமே பனைகளுக்கு எதிரி. இரயில் அந்த நவீன யுகத்தின் ஒரு அடையாளம். அந்த இரயில் பாதை வெட்டி வீசியெறிந்த பனைகாலங்களின் எச்சமாக இன்று இப்பனை நின்றுகொண்டிருக்கிறது. நவீன யுகத்தில் பனை தப்பிபிழைக்குமா என்பது ஆகப்பெரிய கேள்விதான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனம்பழ கடைகள் 1000

செப்ரெம்பர் 10, 2019

தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலும் கிடைக்காத ஒரு பழம் உண்டென்று சொன்னால் அது பனம்பழம் தான். பல்வேறு நாடுகளிலிருந்தும், தேசத்தின் மறு கோடியான காஷ்மீரிலிருந்தும் நமது ஊருக்கு பல்வேறு வகையான பழங்கள் அனுதினமும் வந்தவண்ணம் உள்ளன.னாம் கல் விட்டு எறிந்து பொறுக்கி உண்ட நாவல் பழங்களே கிலோ 200 ரூபாய் வரை விற்கிறது. நாம் மரத்திலேறி பறித்த கொய்யா, மா போன்றவைகள் சந்தையில் இன்று  கிலோ 40 ரூபாய்க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. இப்படியிருக்க  நமது மாநில மரமாகிய பனை மரத்தின் பனம்பழங்கள் கடைக்கு வராததற்கு காரணம் என்ன?

Panam pazam juice

பனம்பழ சாறு கலந்த தண்ணீரை மாடு குடிக்கிறது

தமிழகம் மிக மெல்ல தன்னை ஒரு நுகர்வு கலாச்சாரத்திற்குள் நுழைத்துக்கொண்டது. விலைக்கொடுத்து வாங்கி சாப்பிடுவதே “கெத்து” என எண்ணி தனது சேமிப்பை இழந்துகொண்டிருக்கும் காலம் இது. பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் நம்மை விட்டு அகன்று போய்கொண்டிருக்கின்றன. பனம்பழங்கள் அவைகளில் தலையாயது. பனம் பழங்கள் பொதுவாக பசியை ஆற்றும் தன்மை மிக்கது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட பனம்பழங்களை தினசரி உணவாக எடுத்துக்கொண்டிருந்த   ஒரு சமூகத்தின் குழந்தைகளுக்கு இன்று பனம்பழங்களின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் அற்ற நிலையில் உள்ளது. பனை மரம் என்றாலே நுங்கு என்கிற ஒற்றைப்படையான புரிதல் மட்டுமே இருக்கிறது.

நான் ஒருமுறை ஹைதராபாத் சென்றிருந்த போது, அங்கே ஒரு சாலை நெடுக பெண்கள் அமர்ந்து நுங்கினை  விற்றுக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 – 40 பெண்கள் சீரான இடைவெளியில் இருந்தபடி செய்யும் அந்த விற்பனையை நான் ஆச்சரியத்துடன் பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பரிடம் பிற்பாடு அது குறித்து விசாரித்தபோது. நுங்கு என்பது ஏழைகள் உண்ணும் உணவு என்னும் ஒரு பிம்பம் இங்கே இருக்கிறது, ஆகவே வசதியானவர்கள் அதனை வாங்குவதில்லை என்றார். வசதியானவர்கள் என்பதை நாம் நடுத்தரவர்க்கம் என புரிந்துகொள்ளவேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளாவில் நடுத்தர வர்க்கம் தான் பனை நுங்கினை விரும்பி வாங்கும் சனம். அவர்கள் தான் பனம் பழங்கள் மீது ஒரு விலக்கத்தை வெளிப்படையாக காண்பிப்பவர்கள். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் பனம்பழங்களை சாப்பிட்டவர்கள் எவரேனும் உள்ளார்களா என்றால்,  ஆயிரத்தில் ஒருவராகவே அவர் இருக்க முடியும். இவ்விதமாகவே நாம் பனம்பழங்களை இழந்தோம். நூங்கு உண்பதால் அடுத்த தலைமுறை எழும்ப இயலாதபடி கருக்கலைப்பு நடைபெறுகிறது.

DSC03991

மித்திரன் சுட்ட பனம்பழத்தை விரும்பி உண்ணும் காட்சி

பனம்பழங்கள் குறித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவராக பணியாற்றிய Dr. D. நரசிம்மன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் எழுதிய கவிதையினை எனக்கு காண்பித்தார்கள்.

அநாகரீகப் பழம்

“தொப்…”
எழுந்தோடிப் பார்த்தேன்
ஆம்! பனம் பழம் தான்

விழுந்தவுடன் ஒரு வாசம்
விழுந்த மறுநாள் ஒரு வாசம்
சுடுகையில் வெடிக்க வெடிக்க
தெருவையே
சுண்டியிழுக்கும் வாசம்

இழுத்து, மென்று
கடித்து, சப்பி
முறுக்கி, சூப்பி…
வேறெதையும் சுவைக்க முடியாது
இத்தனை வகையாய்
சாப்பிட்டுவிட இயலாது
பேருந்திலோ இரயிலிலோ
போகிற போக்கில்

“பழமா இது”?
முகமெல்லாம் பூசி
கையெல்லாம் பிசுபிசுக்க
பற்களில் சிக்கும் நாரைப்
பிடுங்குவது ரொம்பச் சிரமம்
பார்க்கவே அருவெறுப்பு
கிராமத்து நண்பர் சொல்கையில்
நானும் பாலுவும்
திகைத்துப் பார்த்தோம்

விரலிடுக்கில் தேக்கரண்டியைப் பிடித்து
இலகுவாய் வழித்து
பேசிக்கொண்டே சாப்பிட
முடியாததுதான்

உண்ண
உழைப்புத் தேவை
சிறிதாவது

“நாகரீகச்” சமூகம்
கீழாகவே பார்க்கிறது
எல்லாவித உடலுழைப்பையும்.

எவ்வளவு உண்மை. எத்தனை நாசூக்காக நமது மன விலக்கத்தை கவிதையாக்கியிருக்கிறார். பேராசிரியர் மேலும் கூறுகையில், பனம் பழத்தின் வாசனை கொண்ட மிட்டாய் கூட நமக்கு இன்று கிடையாது என்றார். ஆம், பனிக்கூழ் விற்பனையகங்களில் நாம் அறியாத பழங்களின் சுவையினை கொண்டு நம்மிடம் படைக்கிறார்கள், மிக அதிக விலை கொடுத்து அதனை நாம் வாங்குகிறோம். ஆனால் நம்மூர் பழமான பனம் பழத்தின் சூவை ஏற்றப்பட்ட ஒரு உணவுப்பொருள் கூட தமிழகத்தில் கிடைப்பதில்லை. ஏன், பனம் பழமே சுவைக்கத்தக்கது எனும் எண்ணம் கூட நமக்கு இல்லை.

பனம் பழம் மட்டுமே அவித்தோ வேகவைத்தோ சாப்பிடும் வகையில் காணப்படும் ஒரு பழம். பனம் பழ வாசனை தனித்துவமானது என்றால், அதனை சுடும்போதோ அவிக்கும்போதோ எழும் வாசனை பல மடங்காக பெருகும் தன்மையுடையது. சிறிதும் புளிப்பு சுவை இல்லாத பழம். இலவசமாக கிடைப்பதால் தான் வீணடிக்கிறோமா என்று கூட தோன்றுகின்றது.

 

சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் டாக்காவிலிருந்து எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தான். பனம்பழம் அங்குள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் படம் அது. விலையும் அதிகம். வங்காளிகள் பனம் பழங்களை மிக அதிகமாக சாப்பிடுவார்கள் என பின்னர் அறிந்துகொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றாலம் சென்றிருந்த போது, பனம் பழங்களை வெட்டி விற்பனை செய்யும் ஒரு நபரைப் பார்த்தேன். ஒரு பழம் 20 ரூபாய். அவர் அளவு வழித்து கொடுக்கும் திறன் படைத்தவர்கள் இருக்க இயலாது. நல்ல அரிவாளை கூர் தீட்டி அதற்கென்றே வைத்திருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பனை விதைகளை சேகரிக்கச் செல்லும் சூழலில், குறும்பனை அருகில் ஒரு பாட்டி பனம் பழங்களை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டேன்.  ஆம் குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பனை விதைகளாஇ விற்பனைக்குக் கொண்டுச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்கிவரும் வழக்கம் இருந்திருக்கிறது. மீனுக்கு இணையாக விற்கப்பட்ட ஒரு பழம் இன்று அனாதையாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடப்பது வேதனையளிக்கின்றது.

Juice

மாட்டிற்காக பனம்பழ கரைசல் தயாரிக்கப்படுகிறது

இன்றும் தமிழகத்தில் ஒருசிலர் பனம் பழக் கரைசலை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி வளர்ப்பிலும், கால்னடை வளர்ப்பிலும் பனம்பழச் சாறு முக்கிய இடம் வகிப்பது என்பதை பெரும்பாலும் இன்னும் எவரும் உணர்ந்து கொள்ளவில்லை. பொதுவாக பனம் பழங்களை மாடுகளியும் நாய்களையும் குளிப்பாட்ட பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தெள்ளு மற்றும் உண்ணிகள் தெறித்து ஓடிவிடும் என்பார்கள். உடலும் வாசனையுடன் பளபளப்பாக  இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், வாரத்திற்கு ஒரு முறையாவது பனம்பழத்தை தேடி எடுத்து வந்து தலைக்குப் போடுவேன். அதுவே சிறந்த சோப்பாகவும் எனக்கு பயன் பட்டது. பனம் பளத்திலிருந்து எடுக்கும் அடர் சாற்றை முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் பொறுத்திருந்து எடுத்தால், அது முகத்திற்கு பொலிவு கொடுக்கும் வண்ணமாக செயல்படுகிறது.

பனம் பழக்கூழ் தயாரிக்கும் பால்மா மக்கள் அமைப்பு மிக திறமையாக தங்களை முன்னிறுத்துகிறார்கள். பனம் பழங்களை சேகரித்து அதிலிருந்து பனம்பழச் சாறுகளை எடுத்து பிற்பாடு எஞ்சும் பனை விதைகளை நடுகையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். நாட்பட்ட  பனை விதைகளை கிழங்குக்கென போட்டு விடுகிறார்கள். இந்த புரிதல் இன்று தமிழகத்தில் ஏற்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். பனம்பழத்தின்  பயன்பாட்டு சக்கரம் சீராக சுழன்றால் தான்  ஒரு சமூகமாக செயல்பட்டுவரும் நமக்கு அது பயனளிக்கும்.

ஆகவே தமிழக தழுவிய பனம் பழக் கடைகளை நாம் ஏன் வைக்க கூடாது என்பதுவே எனது கேள்வி. பனம் பழங்களை வீணடித்து பனை விதைகளை நடுபவர்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு எழுவதில்லை. அது ஒரு நாடக அரங்கேற்றம் மட்டுமே. பனை சார்ந்த சூழியல் மற்றும் சமூக பயன்பாட்டு புரிதல்களை குறிப்புணர்த்த நாம் வாங்கும் நுழைவுச்சீட்டு தான் பனை நடுகை. தன்னளவில் அது பெரிய பலன் தருகின்ற ஒரு செயல் அல்ல என்பதுவே எனது புரிதல். பனை விதைகளை சேகரிக்காதவர்கள் பனைக்கும் அவர்களுக்குமான தூரத்தை உணராமலேயே இருப்பார்கள். ஆனால் அவ்விதம் இருக்கும் தொலைவு குறித்த புரிதல் சரிவர இருக்காது.  பனை விதை நடுகை நமது இலக்கு அல்ல. பனை மரங்கள் பயன்பாட்டு மரங்களாக உயர்ந்தெழவேண்டுமென்பதே நமது வேட்கை. விதைகளை நட்டால் போதும் என அந்த சுகத்தில் சொக்கிப்போயிருப்பவர்களுக்கு இப்போது நாம் எது சொன்னாலும் புரியாது.

பழங்காலத்தில், பனை விதைகள் இப்படி விதைத்து பரப்பப்படவில்லை. பனை நடுகை என்பது பனையேறிகளின் வாழ்வின் அங்கமாக இருந்திருக்கின்றன. இன்று அவ்வித சூழல் அழிந்து போய்விட்டது. பனையேறிகள் செய்யும் பொருட்களை வாங்குபவர்கள் இன்று தமிழகத்தில் இல்லை. பனை தொழிலை விட்டு விலகி சென்றுவிட்ட இலட்சக்கணக்கான பனை தொழிலாளர் நலன் குறித்து எந்த சத்தமும் எழவில்லை. பனையேறிகள் எவ்விதம் நமது சமூகத்தையும் சூழியலையும் இணைக்கும் பாலமாக இருந்தார்கள் என்பது நமது நினைவிலேயே இல்லை. ஒரு வரலாறே அழிந்துபோய்விட்டது.

இவ்வாண்டு, பனம்பழங்களை விற்பனை செய்ய புதிய கடைகளை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். ஊருக்கு ஒரு கடை, நெடுஞ்சாலைகளில் ஒரு கடை, சந்தை கூடுமிடங்களில் ஒரு கடை, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும்  என எங்கெல்லாம் கடைகளை வைக்கமுடியுமோ அங்கெல்லாம் பனம் பழங்களை விற்கும் கடைகள் எழும்பவேண்டும். ஒரு பழம் 10 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் நாள் ஒன்றிற்கு  20 பழத்தை விற்கும் ஒரு மூதாட்டிக்கு தினமு 200 ரூபாய் கிடைப்பது நிச்சயம். பனம் பழங்களை வாங்குபவர்கள் பழத்தை தின்றுவிட்டு கொட்டைகளைப் போட்டுவிடலாம். அவைகள் கிழங்காகவோ மரமாகவோ மாறி நமக்கு பலனளிக்கும்.

சில அறிவு ஜீவிகள் பனம் பழங்களைத் தின்றால் பித்தம் என்பார்கள். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் அறிவோமா இல்லையா? பனம் பழங்கள் இன்று சுவைத்துக்கூட பார்க்கப்படாத ஒரு சூழலில் வாழ்கிறோம். நானும் எனது குழந்தைகளும் பனம் பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவோம். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. எனது குழந்தைகள் பெரு விருப்பத்தோடு பனம்பழத்தை உண்பவர்களே.

பனம் பழங்களை நமது குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யலாம். அவைகளை அவித்து வருடத்திற்கு ஒருநாள் உண்ணக்கொடுக்கலாம். பிற்பாடு எஞ்சியிருக்கும் விதைகளை அவர்களைக் கொண்டே நட ஊக்குவிக்கலாம். இதுவே ஒரு சரியான முன்னுதாரணாமாக இருக்கும். பனம் பழத்தின் உறவு இல்லாத ஒரு தலைமுறை விதைக்கும் பனை விதைகள் பயனுள்ள ஒரு முயற்சியென கருத இடமில்லை.

தமிழகத்தில் ஆண்டு தோறும் தோராயமாக 1000 கோடி பனம் பழங்கள் கிடைக்கின்றன. இவைகளின் சந்தை மதிப்பு என்பது பல்வாறாக பிரித்து பார்க்க இயல்வது. குறிப்பாக பனம் பழத்தின் மேல் பகுதியில் இருக்கும் சாறு, ஸ்குவாஷ் மற்றும் ஜாம் செய்யவும், பணாட்டு தயாரிக்கவும்,  சோப்பு ஷாம்பு போன்ற பல்வேறு வாசனை திரவியங்களையும் தயாரிக்கும்  மூலப்பொருளாகவும், துணி துவைக்கும் சோப்பிற்கு மாற்றாகவும்  இருக்கிறது. மேலும் பழக்கூழ் எடுத்தபின் கிடைக்கும் மெல்லிய நார் கொண்டு தரமான தலையணைகளைச் செய்யலாம். பனங்கொட்டைகள் முளைக்கவைக்கப்படுகையில் அவைகளிலிருந்து கிடைக்கும் பனங்கிழங்கு மிகச்சிறத்த உணவுப்பொருளாகும். மலசிக்கல் போன்ற நோய்களுக்கும், சீரண சக்தி மேம்படவும், சர்கரை நோயைத் தடுக்கவும் ஆற்றல் பெற்றது இது. பனங் கொட்டைகளை உடைத்துப் பார்த்தால் அதனுள் இருக்கும் தவண் சுவை மிகுந்த ஒரு உணவுப்பொருளாகும். சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை உண்ணத்தக்க ஒரு சுவையுடன் இது காணப்படுகிறது. மேலும் பனங்கொட்டையிலிருந்து தான் முன்னர் சில கரண்டிகளை தயாரித்திருக்கிறார்கள் அக்கரண்டிகள் பொதுவாக எண்ணை எடுக்கும் செட்டியார்கள் பயன்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனம் பழங்கள் இன்று விதைக்கப்படுவது ஒரு சிறந்த முன்னெடுப்புத்தான். அது சீமான் என்றாலும் எடப்பாடி என்றாலும் ஏன் மோடிஜியே என்றாலும் எனது ஆதரவு அதற்கு உண்டு. பனை சார்ந்து எந்த பணியினை முன்னெடுப்பவர்களும் எனது வணக்கத்திற்குரியவர்களே. ஆனால் விதைப்பவர்கள் தங்கள் கடமை அத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என எண்ணுவார்களேயானால், அதுவே பனைக்கு வைக்கும் ஆக சிறந்த கொள்ளியும் கூட. பனை மரங்கள் மனிதர்களின் கைகளால் தழுவப்பட காத்திருக்கும் மரங்கள். பனை மரத்தினை இன்றளவும் பேணி வருபவர்கள் இயற்கையை காக்கும் ஆர்வலர்கள் அல்ல, அதோடு தினம் தினம் தொடர்பில் இருக்கும் மக்கள் தான் பனை மரக்த்தினை காத்து வந்திருக்கிறார்கள். ஆகவே பனை காக்கும் தொண்டில் ஈடுபடுவது என்பது பனை மரத்தோடு பிணைந்துள்ளவர்களின் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தாம்.

பனம் பழ காலம் துவங்கியிருப்பதனால், காட்சி சார்ந்தோ, திருச்சபை சார்ந்தோ, கோவில் சார்ந்தோ, மசூதி சார்ந்தோ, அறக்கட்டளைகள் சார்ந்தோ, தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோ, ரசிகர் மன்றங்கள் சார்ந்தோ ஒரு மூதாட்டியையோ அல்லது ஒரு முதியவரையோ தெரிவு செய்து பனம் பழங்கள் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பினை எடுத்துக்கூறுங்கள். அவர்கள் ஒரு தொழில் தொடங்க உதவியாக இருங்கள். குறைந்த முதலீட்டில் துவங்கும் இந்த தொழில் மிக பெரிதாக கிளைப்பரப்பும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் பனம் பழங்கள் விற்பனை செய்யும் 1000 நபர்களை உருவாக்கினால் அடுத்த வருடம் முதல், பனம் பழங்கள் அனைத்து பழக்கடைகளிலும் கிடைக்கும் வழி வகை பெருகும். தமிழகத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடி பெறுமானமுள்ள பனம் பழங்கள் உள்ளூர் வணிகத்தை மாற்று திசை நோக்கி கொண்டு செல்லும்.

இவ்விதம் செய்கையில் பனை விதைகளை நாம் பொறுக்கி எடுத்து நட்டுக்கொண்டிருக்க தேவையிருக்காது. அது இயல்பான ஒரு கதியில் நமது மரங்கள் பரவ வழிவகைச் செய்யும். இருக்கும் மரங்கள் பயனறிந்து காப்பாற்றப்படும். எவரும் பனை மரங்களை இத்துணை வேகத்துடன் வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

புகைப்பட உதவி: இளங்கோவன் சின்னசாமி

அருட்பணி காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

மின்னஞ்சல்: malargodson@gmail.com

அலைபேசி: 9080250653

பனை விதைக்கும் போட்டியாளர்கள்: களம் காண வருவார்களா?

செப்ரெம்பர் 5, 2019

பனை விதைக்கும் பணிகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற துவங்கியிருக்கின்றன. நல்லதுதான். இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தியிருக்கும் அனைத்து தன்னார்வலர்களையும் வாழ்த்துகிறேன். தமிழகத்தில் பனை விதைகளை நடுவதற்கு குறிப்பிடத்தகுந்த முன்னுதாரணமாக இருந்து கொண்டு, இன்று நடைபெறும் இந்த மவுன எழுச்சியைக் காண்கையில் உளம் பூரிப்படைகிறேன். தமிழகத்தில் பனை விதைக்கும் பணிகள் சலிப்பின்றி தொடர வேண்டும் என்பது எனது ஆசை. அது பல்லாண்டுகள் நமது மண்ணின் பல்லுயிர் வளத்தை பெருக்கும், நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத்தரும். நாம் அனைவரும் அன்னை என கொள்ளத்தக்க மரம் தான் பனை. அதன் நிழலில் பொலிந்த நாம் அதற்கு கடன் பட்டிருக்கிறோம்.

பனை நடுகை இன்று முன்னெடுக்கப்படுகையில் இதன் பின்புலம் அறியாமல் அல்லது பனை சார்ந்த புரிதல் இன்றி செய்யப்படும் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக போய்விடுமோ என்று அஞ்சியே பின்வருபவைகளை நான் கூற முற்படுகிறேன். பனை சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்வோரில் பெரும்பலானோர், ஒரு அவசர கதியில் பனை விதைகளை விதைப்பது தெரிகிறது. ஆகவே தான் எண்ணிக்கை விளையாட்டுகள் இங்கே நிகழ்கின்றன. தமிழகத்தில் பனை மரங்கள் தனக்கான இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுபோலவே பனையின் அன்றாட பயன் பாடும், பனை சார்ந்த மக்களின் நல்வாழ்வும் இணைந்தே பேணப்படவேண்டும்.

பனை மரத்தினை பொருளியல் சார்ந்து இன்று நாம் முதன்மைப்படுத்த இயலாது. அதிலும் குறிப்பாக பனை தொழில் செய்யாதவர்கள், பனை பொருளாதாரம் குறித்து பேசுவது பொருளற்றதாகவே இருக்கும். பொருளாதார நோக்கில், பனை மரத்தினை முன்னிறுத்தவேண்டுமென்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் வேறு திசையினை நோக்கி பயணிக்க வேண்டும். அப்பயணத்தில், வெறுமனே பனை விதைகளை விதைப்பது எவ்வகையிலும் உரிய பலனைத் தராது.

2017 ஆம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறுகின்ற நேரம், நான் இலங்கையில், பனை சார்ந்த ஒரு சுற்றுப்பயணத்திலிருந்தேன். எனது பயணத்தில், பனை விதைகளை நடுவது குறித்து நான் பல இடங்களில் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண்மணி என்னிடம், பனை மரம் நட்டு வளர்க்க வேண்டிய தேவை இல்லை, அவைகள் தானாகவே முளைக்கும் என்றார்கள். இந்த கருத்தை ஒட்டியே மேலும் பலர் சொல்லுவதைக் நான் கேட்டிருக்கிறேன். இக்கருத்து எனக்கு புதிதல்ல அதனை நான் உணர்ந்தும் இருக்கிறேன். பனை விதைகளை நடுவதை நான் நிறுத்தவில்லை, பனை விதைகள் நடுவது நமது தொடர் செயல்பாடு. ஆனால் அது ஒரு துவக்க புள்ளி தான் என்பதை நாம் புரிந்துவைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக, பனை விதைகள் இன்று நடுவதற்காக பல இடங்களிலிருந்து விதைகளை பெறுகிறார்கள். இப்படி விதைகளை வாங்குபவர்கள், பனை விதைக்கான உரிய பணத்தைக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. எவ்வளவு விலைக் குறைவாக விதைகள் கிடைக்கும் என்ற தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். ஏதோ ஒரு பனை தொளிலாளியை, பனை சார்ந்து இயங்கும் மூதாட்டியின் வயிற்றில் அடித்து தான் நாளைய பனை மரங்களின் வாழ்வினை உறுதி செய்யவேண்டுமா? இன்று நாம் நடும் பனை மரங்கள், ஏதோ ஒரு ஏழைக்கு, பனை சார்ந்த ஒருவருக்கு எவ்வகையில் உதவியிருக்கிறது என்பதுவே அளவீடு. இவ்வுதவிகள் இன்றி நாம் செய்யும் பனை விதைப்புகள், பனை சார்ந்த மக்களுக்கானதல்ல, அது கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போலத்தான்.

இன்னும் அனேகர், பனை விதைகளை இலவசமாக தருகிறோம் என்னும் வாக்குறுதிகளைக் கொடுக்கிறதை காண்கிறோம். இந்த வாக்குறுதிகள் நல்லதுதான். அப்படி விதைகளை இலவசமாக கொடுக்க சித்தமிருந்தால், விதைகளாக கொடுக்காமல் பனம் பழங்களை சுவைக்க விரும்புகிறவர்களுக்கு கொடுக்கிறோம் என்கிற வாக்குறுதியினைக் கொடுப்பது மேலும் பொருளுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் பனம் பழங்களை நாம் சுவைக்கத் துவங்கினால், தமிழகம் எளிதில் பனங்காடாக மாறிவிடும்.

பனம் பழங்களை சுவைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பனம் பழங்களை இலவசமாக கொடுப்பது அல்ல இதன் தீர்வு, பனம் பழங்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதே இம்மரங்கள் நீடித்து வளர வழிவகைச் செய்யும். நுங்கின் பயன்பாட்டைக் குறைத்து பனம்பழங்களின் பயன்பாட்டினை அறிமுகப்படுத்துவது மிக அவசியம் என்று உணர்கிறேன். ஸ்ட்ராபெர்ரி பழங்களின் சுவை தமிழகத்தில் கிடைக்கையில் பனம்பழ சுவையில் ஏதேனும் உணவுகள் கிடைக்கிறதா? ஆப்பிள் சுவை வெனிலா சுவை என பல்வேறு சுவைகள் நம்மைச் சூழ்ந்திருக்க, பனம்பழ சுவை ஏன் சந்தையில் கிடைக்கவில்லை? ஆண்டு தோறும் பல்லாயிரம் டன் பனம் பழங்கள் உணவாக மாறாமல், அழிந்து செல்லுவது எவ்வகையில் பொறுப்புள்ள சூழியல் புரிதலாகும்? உணவு வீணடித்தல் இல்லையா இது?

உணவு மிக முக்கிய வணிகமாக உலகை சுற்றிவளைத்தபடி இருக்கின்றது. உள்ளூர் உணவுகளை நாம் இழந்தோமென்று சொன்னால், நமது எதிர்கால உணவுகளை நிர்ணயிக்கப் போவது யார்?. எவ்விதமான உணவுகளை அவர்கள் நமக்கு கொடுப்பார்கள்?. உணவுகள் நமது விதைகளுக்குள் உறைந்து கிடக்கும்போது அவைகளைப் பேணும் புரிதல் இல்லா சமூகம், நமது எதிர்கால விதைகளையும் அழித்துவிடும். ஆகவே உள்ளூர் உணவுகளைத் தரும் பனை மரங்கள் கப்பாற்றப்பட நாம் முதலில் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இன்றைய சூழலில், பனை மரங்கள் இல்லை என்பதால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விட, பனை மரங்களைப் பேணத்தெரிந்த தலை முறை இல்லாதது தான் பிரச்சனை என்னும் புரிதல் நமக்கு இன்னும் வரவில்லை. பனை மரங்களை பேணிய மக்களை நாம் பேணத்தவறும்போது, நாம் உருவாக்கும் மரங்கள் எவ்விதமாக வரும் நாட்களில் உயிர்ப்புடன் இருக்கும்? வளர்ந்து வருகையில் அவைகள் எவ்விதம் காட்சியளிக்கும்? இப்போது நாம் நடும் மரங்களை எதிர்காலத்தில் யார் பொருப்பெடுத்துக்கொள்ளுவார்கள்? தொலை நோக்கு சிந்தனை இல்லாத ஒரு தலைமுறையால் உருவாக்கப்பட்ட பனங்காடுகளை எதிர்கால சந்ததியினர் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஆகவே இப்பொழுதே நாம் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்த வேண்டும். அவ்விதம் தயார் படுத்துவது எப்படி என அறிந்திருக்க வேண்டும். அவைகளை நோக்கி நமது முயற்சிகளை ஒருங்கிணைப்பது நாம் எண்ணிய நன்மைகளை பெற்றுத் தரும். அது நமது கடமையும் கூட.

ஒரு வகையில் நாம் கேட்கலாம் பனை மரங்கள் சார்ந்த எண்ணிறந்த உயிர்கள் உண்டே? அவைகளுக்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பனை மரங்கள் நிற்பது போதாதா? கண்டிப்பாக மனிதன் அவைகளில் ஏறித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். பனை சார்ந்து காணப்படும் சூழியல் குறித்து தனி தனியாக பல கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன், பனை சார்ந்து ஏற்படும் நீர் பிடிப்பு குறித்து உலக அளவில் நீர் மேலாண்மையினை செய்பவர்களை பேட்டிகண்டு ஒளிப்பட காட்சிப்படுத்தியிருக்கிறேன். நேரடியாக கள உண்மைகளைத் தேடி இந்தியாவின் பல மாநிலங்களில் பயணித்திருக்கிறேன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவ்வுலகில் ஏன் பனைக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை நான் அழுத்துகிறேன்? ஏனென்றால், அதுவே முறை, இன்று பனை மனிதனின் விட்டுப் போனால் அது சூழியலின் அங்கமாகவும் இருக்காது. ஏனென்றால் பனை மனிதனால் பேணப்பட்டு நமது சூழியலுக்கு அருளப்பட்ட வரம். இன்று வணிக நோக்கில் இவைகள் பார்க்கப்படுமானால் அது போன்ற பேரிழப்பு ஒன்றுமில்லை.

ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுவோம். இன்று தமிழகத்தில் 1 லட்சம் பனைதொழிலாளர்கள் இருக்கிறார்கள் என அரசு சார் புள்ளி விபரங்கள் குறிப்படுகின்றன. அவ்விதமாகவே 5 கோடி பனை மரங்கள் இருப்பதாகவும் குறிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அரசு, கூறுவது ஏற்புடையது அல்ல என்றாலும், இவைகளை நாம் தோராய கணக்காக எடுத்துக்கொண்டால், ஒரு நபருக்கு 500 பனை வீதம் வருகிறது. இன்று தமிழகத்தில் மிக அதிகமாக பனை மரங்கள் ஏறப்படும் இடங்களில் கூட 25 மரங்களுக்கு மேல் பனை ஏறுபவர்களை நான் பார்க்கவில்லை. அப்படியென்றால் மீதம் இருக்கும் மரங்களில் பனை ஏறப்போவது யார் என்கிற கேள்வி நம் முன்னால் வருகிறது. இவ்விதம் எஞ்சியிருக்கும் மரங்களை நாம் கருத்தில் கொள்ளாமல் பனைகளை மீட்கிறோம் என்று சொல்ல முற்படுவது எதனை முன்னிறுத்துவதாக இருக்கிறது?

பனை மரங்களின் அழிவில் தான் இன்று ஓலைப் பொருட்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இவைகளைப் புரிந்து ஓலைகள் உயிர்ப்புடன் கிடைக்கச் செய்ய, நமது பனை மரங்கள் பனையேறிகளால் பாதுகாக்கப்படவேண்டும். பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், பனை சார் சூழலிலிருந்து அனுதினமும் ஓலைகளைப் பெற்று அவைகளின் மூலம் தங்களாது அன்றாட வாழ்வியலை நடத்தும் ஒரு உறுதியை தரவல்ல ஒரு சமூக கட்டமைப்பை நாம் அமைப்பது மிகவும் அவசியம்.

இன்றையதினத்தில் பனை சார்ந்த சிக்கல்களாக நான் காண்பது, தமிழகத்தில் எத்தனை பனை மரங்கள் இருக்கின்றன என்பது தான். எவரும் நமக்கு தகுந்த ஆவணங்களைத் தரவில்லை. எவரிடமும் தகுந்த தரவுகள் கிடையாது. தரவுகள் தேடியமைக்கும் அமைப்புகள் நம்மிடம் கிடையாது. இப்படியிருக்க, நமது வாழ்வின் முதன்மையான பணி பனை மரங்களை கணக்கெடுப்பது தான். ஆண், பெண், வடலி போன்ற கணக்கெடுப்புகள் ஊர் ஊராக செய்யப்படவேண்டும். அவைகளை தமிழகம் சார்ந்து தொகுக்க வேண்டும் என்றில்லை, நாம் துவக்கினால், அரசு நமது பின்னால் வந்து நிற்கும். இரண்டு வருடத்தில் வேகமாக பனை நட வந்த அரசாங்கம், பனை மரங்களை முறையாக கணக்கெடுக்க முன்வருவார்கள் என்பது சத்தியம்.

ஏன் இந்த கணக்கெடுப்பு. தோராயமாக 20 பனை மரங்கள் ஒரு பனை தொழிலாளருக்கென நாம் கணக்கிட்டால், நமது ஊர் சார்ந்து எத்தனை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்ற ஒரு உறுதியினை நாம் அளிக்க இயலும். குறைந்த பட்சம் நமது ஊரில் 300 பனை மரங்கள் இருந்தால், 15 இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி பெறும். இதன் மூலம் மேலும் 15 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் பெறும் வாய்ப்பும் தென்படுகிறது. ஓலை பொருட்கள் செய்வோர், பனை உணவுகள் தயாரிப்பவர்கள், விற்பனை முகவர்கள் என இந்த பட்டியல் விரிவடைந்தபடி செல்லும். 5 கோடி பனை மரங்கள் இருக்கும் தமிழகத்தில் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் பனை சார்ந்து இருக்கின்றன. இது மிக பெரிய எண்ணிக்கை. மறைமுக வேலைகளையும் உப தொழில்களையும் இணைத்துக்கொண்டால் மேலும் 25 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் உடனடியாக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இவைகளை செய்ய நாம் இன்று முன்வரவேண்டும். அவ்விதம் இல்லாமல், வெறுமனே பனை விதைகளை நடுவது ஒருவகையில், நமது கடமையிலிருந்து நழுவும் செயல் மாத்திரம் அல்ல, பனையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலும் தான்.

இதுவே, ஒரு நபர் 5 மரங்களை மட்டும் பகுதி நேரமாக பேணினால், அவரது ஒரு வருட குடும்பச் செலவுகளுக்குத் தேவையான சர்க்கரை கிடைக்கும். ஒரு மரத்திற்கு சராசரியாக 2 லிட்டர் பதனீர் கிடைக்கும் என்றாலும், வருடத்திற்கு 180 கிலோ கருப்பட்டி வரை ஒரு குடும்பத்தால் உற்பத்தி செய்ய இயலும். ஒரு குடும்பம், மாதம் 5 கிலோ கருப்பட்டியினை பயன்படுத்துகிறது என்றாலும், மீதம் 120 கிலோ கருப்பட்டி மிச்சமிருக்கும். மிச்சமிருக்கும் கருப்பட்டியினை கிலோ 300 ரூபாய் என்ற கணக்கில் விற்றால் வருடத்திற்கு 36000 ரூபாய் வருகிறது. வீட்டிற்கு தேவையற்ற சர்க்கரை வாங்குவது சார்ந்த செலவினங்கள், வீணான நோய்களை வருத்திக்கொள்ளும் உணவுகளைத் தவிர்த்து, நமது வாழ்வில் நலம் பயக்கும் அருமருந்தினை நாமே தயாரிக்கும் ஒரு சூழலை நோக்கிச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு இது. ஒரு நபர் 5 மரங்களையே பேணுகிறார் என வைத்துக்கொண்டாலும், பனை சார்ந்த வேறு பல தொழில்களும் தழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் மறைமுகமாக ஏற்படும் தொழில்களைக் கூட்டினால் இவைகள் இரண்டு மடங்காக உயர்ந்து விடும். தமிழகத்தில் 50 லட்சம் பேர் பனையால் வாழ்வு பெறுவர்.

இந்த இலக்கு நோக்கி நாம் செல்ல முயற்சிக்க வேண்டும். அதன் முதல் அடியாக செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டும். இவ்வித வாய்ப்புகளை விட்டுவிட்டு, இவ்வித தற்சார்பு வாழ்விற்கு பயிற்சியளிக்காமல், பனை மரங்களை நடுவது, பனை மரங்கள் சார்ந்த பேச்சுக்களை முன்னெடுப்பது யாவும் என்னளவில் முழுமைபெறா முன்னெடுப்புகளே. நமது அளப்பரிய ஆற்றல் மடைமாற்றி விடப்படும் இடமாகவே இதனை நான் பார்க்கிறேன்.

தமிழகம் முழுவதும் 25 லட்சம் பனை ஏறத் தெரிந்தவர்கள் இருந்தால் போதும், தமிழகத்தில் உள்ள சாராயக் கடைகள் தானே நின்று விடும். இல்லை நாம் அடைத்துவிடலாம். நமது உள ஆற்றலும் உடல் ஆற்றலும் குறையும் தோறும், நமை வலுவாக வெல்லும் ஆற்றலுடன் அரசும் தனியார் நிறுவனங்களும் இணை சேருகின்றன.

ஆகவே பகுதி நேரமாகவோ, அல்லது முழு நேரமாகவோ பனை ஏறத்தெரிந்த சமூகத்தை உருவாக்குவதே நமது உடனடி கடமையாக கொள்ள வேண்டும். கிராமத்திற்கு பனை ஏறி தொழில் செய்யும் 10 இளைஞர்களாவது உருவாக வேண்டும். ஒரு இளைஞனை பனை சார்ந்த பயிற்சிக்கு தயார் படுத்த பாரம்பரிய பனை தொழிலாளியின் உதவியை நாடுவது, அவருக்கான உதவிகளையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு உழைப்பது இன்றியமையாத செயல்களாகும்.

Seed Boys

ஆரோன் மற்றும் மித்திரன் பனை விதைகளை விதைக்க புறப்படும்பொழுது

அப்படியானால் பனை விதகளை நடுவது என்பதை நாம் எப்படி முனெடுக்க வேண்டும்? சிறு குழந்தைகளிடமிருந்து முன்னெடுக்கையில், சிறு சிறு அலகுகளாக அவர்களைப் பிரிக்க வேண்டும். பனை விதைகளை விதைக்கும் முன்னால் பனம் பழங்களை சேகரிக்கும் பணியில் உரிய பாதுகாப்புடன் அவர்களை இணைக்க வேண்டும். பங்குகொள்ளும் அனைத்து குழந்தைகளும் பனம் பழங்கள் சுவைத்த பின்பு அவரவர் உண்ட பழங்களின் விதைகளை அவரவர் விதைக்க வேண்டும். இப்படிச் செய்கையில், நாம் மறந்தாலும் பனை மரங்களை நமது குழந்தைகள் மறந்துவிட மாட்டார்கள். தமிழகத்திலுள்ள அத்தனை குழந்தைகளும் பனம்பழத்தை சுவைத்தால், எதிற்கால பனை மரங்களை நாம் நட்டு பேணிக்கொண்டிருக்க தேவையிருக்காது. அது இயல்பான ஒரு செயல்பாடாக, நமது வாழ்வின் அங்கமாக இருக்கும் தன்னெழுச்சியுடன் நடைபெறும்.

பனம் பழங்கள் தமிழகத்தின் அனைத்து குழந்தைகளும் வரும் ஆண்டில் சுவைத்திருக்கவேண்டும் என ஒரு வரைவை ஏற்படுத்துவது, மிகச்சிறப்பான முன்னெடுப்பாக இருக்கும். சத்துணவில், குழந்தைகளுக்கு பனம்பழங்களை/  பனங்கிழங்குகளை/  கருப்பட்டியினை/ பதனீரை அரசு கொடுக்கவேண்டும் எனும் கோரிக்கையினை நாம் முன்வைக்கலாம். பனம் பழம் உண்ட குழந்தைகள் கண் பார்வை தெளிவு பெற்று, பசியின்றி, குடல் நோய்களின்றி, நோய் எதிர்ப்பு சக்தியுடன் சுறுசுறுப்பாயிருப்பார்கள்.
பனை விதைகளை விதைக்கும் வேகத்தில் நாம் இழைக்கும் மற்றொரு தீங்கு, பனை விதைகளை சேகரித்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஏழைக் குடும்பத்தினரை நாம் கருத்தில் கொள்ளத் தவறி விடுகிறோம். பனங்கிழங்குகள் என்பது எஞ்சிய பனை விதைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்தி, உணவு தயாரிக்கும் ஒரு முறைமை ஆகும். ஏழை விதவைகள், வயோதிபர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண்பது மிக முக்கியம். நமது ஊர்களில் உள்ள இவர்களை நாம் அடையாளம் கண்டு, விற்பனைக்கு உறுதுணையாக இருப்பது நமது தார்மீக கடமை. இவர்களை இன்று நாம் முன்னிறுத்தவில்லையென்று சொன்னால், பனைமரத்தினை நாம் காக்கும் முறைமைகள் யாவும் கேள்விக்குறியாகவே போய்விடும்.

மேலும் நமது கரத்தில் பனை சார்ந்து பணியாற்றுகின்ற 10 நபர்களைக் குறித்த தகவல்கள் இருக்கவேண்டும். அது பனை விதை நடுகிறவர்கள், பனை மரம் ஏறுகிறவர்கள், ஓலைப் பொருட்களை விற்பவர்கள், பனை உணவுகளை விற்பவர்கள், பனை பொருட்களை விற்கும் கடை, பனை சார்ந்த அறிவை பெற்றிருக்கும் நம்மூர் பெரிசுகள் மட்டுமல்லாமல் நமது ஊரிலோ அருகிலோ பனை மரங்களை வெட்டும் தொளிலாளர்களின் எண்களையும் சேர்த்து வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு நம்மாலான உதவிகளை நாம் தொய்விலாது தொடரவேண்டும்.

இன்று தமிழகத்தில் பனையே தங்கள் வாழ்வென அற்பணித்த புதிய தலைமுறை ஒன்று இருக்கிறது. பனையேறிகளான விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் பாண்டியன், குமரி மாவட்டத்தைச் சார்ந்த மொட்டவிளை சங்கர் கணேஷ், பனை ஓலை பொருட்களைச் செய்ய களத்தில் நின்றிருக்கும் பனையேறிகள் அமைப்பினைச் சார்ந்த இளவேனில் மற்றும் சாமிநாதன், குழந்தைகளுக்கான பனையோலை பொம்மைகளை தயாரிக்கும் கோவையைச் சார்ந்த மோகன வாணி, உயிரைக்கொடுத்து பல புதிய பங்களிப்புகளை ஆற்றிவரும் பண்டிச்சேரியினைச் சார்ந்த ஓலைவினைக் கலைஞர் மனோஜ், பனை ஓலைகளைக் கொண்டு அனுதினமும் பொருட்களை செய்து வரும் தம்பி வினோத், பனைவரம் என்ற அமைப்பின் மூலம் கிராமபுற பெண்களுக்கு உதவிகளைச் செய்துவரும் சேலம் எடப்பாடியைச் சார்ந்த செல்வா ராமலிங்கம், திருச்செங்கோட்டை அடுத்த பகுதிகளில் தனது வாழ்வின் பெரும்பகுதி சேமிப்பினை அடகுவைத்து பனங்கருப்பட்டியினை உற்பத்தி செய்துவரும் நண்பர் சரவணபவன், வழக்கொழிந்து வரும் பாரம்பரிய பொருட்கள் குறித்த புரிதல் வேண்டி களத்தில் நின்று போராடும் தோழி வாகை, தமிழகம் முழுவது கள் குறித்த புரிதலை எடுத்துச் சொல்லும் தன்னலமில்லா போராளி ஐயா கள்ளு நல்லசாமி, பனை விதைப்பே தனது மூச்சாக கொண்ட பூரணாங்குப்பம் ஆனந்தன், தொடர் விதைப்பில் அனேகரை இணைத்துக்கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்து பனை சதீஷ், சென்னை படூர் பகுதிகளில் தொய்வில்லாமல் விதைத்துக்கொண்டிருக்கும் மனோ, ஈரோடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை விதைத்த அமைப்பான வனம் இந்தியா, மதுரைப் பகுதிகளில் விதைப்பிலும் பனை தொழில் செய்யும் கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் பனையோலை மணிவண்ணன் காந்தி, திண்டுக்கல் பகுதிகளில் அழிந்து வரும் தேவாங்குகளைக் காக்க பனை விதைகளை விதைத்துவரும் அருளகம் பாரதிதாசன் மற்றும் சீட் அமைப்பினைச் சார்ந்த முத்துசாமி, பனை மரத்தினை உள்வாங்கியபடி பனை விதைகளை தேடி சேகரித்து விதைத்துவரும் கடலூர் அழகானத்தம் கலியாணசுந்தரம், தொண்டை மண்டலத்தில் சலிப்பின்றி பனை விதைக்கும் பணிகளை முன்னெடுக்கும் குரு கிருஷ்ணராஜ், பிரேம் ஆனந், ஐயா கலையரசன் போன்றோர், குமரி மாவட்டத்தில் பனை விதைகளை தொடர்ந்து விதைத்து வரும் டைசன் டியூக், ஆனந்த், சீலன், நெல்லைப் பகுதியில் பனை விதைகளை விதைத்துவரும் இராகவன் சிவராமன், தனது துறை சார்ந்து பனை மரத்தினை முன்னெடுக்கும் மதுரை காமராஜர் பல்களைக்கழக பேராசிரியர் நாகரத்தினம், பனை மரம் என்ற இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பனை குறித்த நூலை எழுதிய  திரு பஞ்சவர்ணம், பனை மரமே பனை மரமே என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம், பனை பொருளாதாரம் குறித்து பல்வேறு மாநாடுகளை நடத்திவரும் திரு குமரி நம்பி, தமிழக அளவில் மாநாடுகளை ஒருங்கிணைக்கும் ஐயா பாபுஜி, தென் தமிழகத்தில் பனைக்கென குரல் கொடுத்துவரும் அருள் தந்தைகளான மை பா மற்றும் சூசை போன்றோர், பனை நாடு அமைப்பினை முன்னெடுத்த அருட் தந்தை ஜெகத் கஸ்பார், சுமு. முருகன், பனை பரசுராமன், பனையோலைப் பொருட்களில் முன்னணியில் நிற்கும் வேலூரைச் சார்ந்த ஷேர் அமைப்பு, மணப்பாடு கூட்டுறவு சங்கம், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம், பாரக்கன் விளை ஆர். டி எம், உலக அளவில் பனை ஓலை பொருட்களை சந்தைப்படுத்தும் எம். ஆரெம். ஆரெம், பனம்பழங்களை பிழிந்து ரசமாக்கி தமிழகத்தில் புறட்சி ஏற்படுத்திய பால்மா கூட்டமைப்பு, பனை உணவு பொருட்களின் வரிசையினை நமக்கு வழங்கிய இன்பா மோகன் ராசு, என நாம் ஊக்குவிக்க வேண்டிய ஒரு நீண்ட பட்டியல் இருக்கின்றது. இப்பட்டியலில் அனேகரை நான் தவறவிட்டிருக்கலாம். இவைகளைத் தவிர, தமிழகம் தழுவி நாம் தேடினோமென்றால் கிராமத்திற்கு இரண்டு பனை சார்ந்த கலைஞர்களை நம்மால் கண்டிப்பாக கண்டுபிடிக்க இயலும்.

இவ்வித பட்டியல் நமது உள்ளூர் சார்ந்தும் நாம் உருவாக்க வேண்டும். விதைக்கிறவர்கள், பனை ஏறுகிறவர்கள், கருப்பட்டி காய்ச்சுகிறவர்கள், ஓலைப் பொருட்களில் அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொம்மைகள், பாரம்பரியபொருட்கள் செய்வோர் என பலதரப்பட்ட மக்களின் பட்டியல் நமது ஊர் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் தொகுக்கப்படவேண்டும். இலக்கிய ஆழுமைகள் பனை சார்ந்து எழுதிய ஆக்கங்கள் பரவலாக்கப்படவேண்டும். 2016 ஆண்டு இலவசமாக நான் பதிவேற்றிய பனைமரச்சாலை தமிழகம் சார்ந்து மிகப்பெரிய மாற்றத்தை விளைவித்ததை எவரும் மறுக்க இயலாது.

நமது உள்ளூர் கலைஞர்களுக்கு உள்ளூர் வாய்ப்புகளையும், வெளியூர் வாய்ப்புகளையும் ஏன் வெளிநாட்டு வாய்ப்புகளையும் நாம் ஒருக்கித்தருவது நமது தலையாய கடமை. பனை சார்ந்த முன்னெடுப்புகளில் இவைகள் மிக முக்கியமானவைகள். பனை சார்ந்த கலைஞர்கள் இல்லையென்றால் பனைமரங்கள் நிற்பது வீண் என்றே நவீன பொருளியல் கூறும். அதுவே அவைகளை அப்புறப்படுத்த போதுமான காரணமாக இருக்கும். இல்லை, பனை மரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும்  அவைகள் உணர்வுபூர்வமாக நம்முள் கலக்கவேண்டும் என்றும் சொன்னால், அவை உணவாகவும், வாழ்வின் அங்கமாகவும் நம்முடன் நிலைக்க வேண்டும். அத்திசை நோக்கி முழுமையான புரிதலுடன் பயணிப்போம்.

Seed

முளைத்தெழும் பனை விதை

இல்லையில்லை பனை விதைகளை நடுவது தான் சரியான தீவு என்று யாராவது சொன்னால், அதனைச் சொல்லும் தலைமை நூறில் ஒரு பங்கு பனை விதைகளை சேகரிக்க வலியுறுத்துவோம். ஒரு லட்சம் நடவேண்டும் என பேராவல் கொண்டிருப்பவர்கள் 1000 விதைகளைக் கூட குனித்து பொறுக்கவில்லையென்று சொன்னால், அவர்களை விட பனைக்கு துரோகம் இழைப்பவர்கள் வேறு எவரும் இருக்க இயலாது. ஒருவர் ஒரே நாளில் ஒரு லட்சம் என்கிறார், மற்றொருவர் இரண்டு லட்சம் என்கிறார், ஏலம் எடுப்பது போல 10 லட்சம் என வந்து நிற்கின்றது. என்னவகையான விளையாட்டு இது என தெரியவில்லை. பனையை பேணிவந்த பனையேறிகள் இன்றும் பரிதாபமாக நிற்கையில், கின்னஸ் சாதனை ஒரு கேடா?

அருட்பணி காட்சன் சாமுவேல்
ஆரே பால் குடியிருப்பு
(பனை திருபணியில் 25 வருடங்களாக)
மின்னஞ்சல்: malargodson@gmail.com
அலைபேசி: 9080250653


%d bloggers like this: