Archive for ஜனவரி, 2020

கள் விடுதலைப் போராட்டம்

ஜனவரி 20, 2020

கள் சார்ந்த விடுதலை என்பது பனை சார்ந்து வாழும் மக்களுக்கான உரிமை. காந்தி உப்பு காய்ச்ச இறங்கியது போன்ற ஒரு நிகழ்வே இது. நமது மரம், நாம் ஏறுகிறோம், நாம் பருகுகிறோம். நமக்கு வேண்டியவர்களுக்கு இதனை கொடுக்கிறோம். கள் இறக்குபவர்களை அடக்க முற்படுவது ஒரு நவீன சமூகத்தில் வாழும் எவரும் செய்யக் கூடாதது. வெகு சமீபத்தில் பனை பொருளாதாரம் குறித்து பேசிவரும் திரு. குமரி நம்பி, “உணவு உரிமைக்கு எதிரானது கள்” என ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இச்சூழலில் நான் சுதேசி இயக்கம் எனக்களித்த விருதினை துறந்து, சுதேசி இயக்கத்தினரின் கள்ளிற்கு எதிரான நிலப்பாட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனது பனை மரச்சாலையில் ஆந்திராவில் காணப்படும் கள் இறக்குகிறவர்களையும், கள் இறக்கும் பகுதிகளையும், கள்ளுக்கடைகளையும் நான் ஓரளவு எழுதியிருந்தாலும், கள்ளு குறித்து தனித்தன்மையாக ஏதும் பதிவிடவில்லை. ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு “குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்  விழுமியங்களும்” என்ற கலந்துரையாடலில் கள் குறித்து சிறு  கட்டுரையினை சமர்ப்பித்தேன். கள்ளும் பனையேறிகளும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரை பனைத் தொழிலாளர் வாழ்வில் குடி எப்படி இயல்பாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.

L3

தமிழக பனைத் தொழிலாளி

இயல்பாகவே குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், கள் வீட்டின் உணவுப் பொருளாயிருந்தது. கிறிஸ்தவ வீடுகளில் கள் ஆப்பம் செய்ய பயன்பட்ட ஒரு ஊக்கியாக இருந்தது. போதகரான எனது தந்தை குடிக்கு எதிராக தனது வாழ்வை அற்பணித்திருந்த்போதும் கூட “கள்” வீட்டில் இருப்பதைக் குறித்து ஏதும் சொன்னதில்லை. ஒரு காலகட்டத்தில் எங்குமே போதகர்கள் கள்ளினை ஆப்பம் செய்ய பயன்படுத்தாமல் இல்லை. நல்ல கள்ளினை பனையேறியிடம் கேட்டே பெற்றுக்கொள்ளுவார்கள். நான் பெங்காளூரு ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, எனது ஆசிரியராயிருந்த டாக்டர். கிரண் செபாஸ்டியான், கள்ளுக்கடையிலிருந்து ஆப்பம் செய்ய கள்ளு (தென்னங்கள்ளாக இருக்கலாம்) வாங்கி வந்ததை போகிறபோக்கில் சொன்னார்.

கள் என்பது மதுவாக பார்க்கப்பட்டு பருகப்பட்டபோது, அதற்குள் ஊமத்தை விதைகள், போதை மாத்திரைகள் ஆகியவை சேர்க்கப்பட்டன. இவ்வித சூழலில் அரசு கள்ளை விட, வெளிநாட்டு மதுபானங்களின் மேல் விருப்பு கொண்டு, கள்ளை தடை செய்ய முன்வந்தனர். கள்ளுக்கு தடை ஏற்பட்டபோது பலரும் இணைந்து அதனை ஏற்றுக்கொண்டனர். ஆண்கள் குடித்து விட்டு வீடுகளில் ஏற்படுத்தும் கலகங்களைப் பார்த்தோ என்னவோ தமிழக அரசு சொன்னதை எதிர்க்காமல் கிறிஸ்தவ சமூகம் அன்று ஏற்றுக்கொண்டது தவறு தான் என்று நினைக்கிறேன். ஆகவே தான் இன்றைய சூழல் “பானைக்குள்ளிருந்து அடுப்பிற்குள் நுழைந்த” கதையாகிவிட்டது. கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு மனத்தடை இருந்தது. இன்றும் கிறிஸ்தவ சமூகம் கள்ளு சார்ந்து ஒரு சரியான புரிதலை ஏற்றுக்கொள்ளாவிடில், மிகப்பெரிய தவறிளைத்தவர்களாக நாம் மாறிவிடுவோம். குறைந்த பட்சம் கள் சார்ந்த ஒரு உரையாடலை நாம் நிகழ்த்தவேண்டும் ஏனென்றால், வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பனை மரங்களே வேலைவாய்ப்பு நல்கும் ஒரு மரமாக வரமாக இருக்கிறது. கள் வேலைவாய்ப்பினை பரவலாக்கும் ஒரு சுதேசி தொழில்.

L5

கள் இறக்குபவர்

கள் என்பது போர் நேரத்திலும்  விழாக்காலங்களிலும் பயன்படுத்தும் ஒரு உணவு என்றே நமக்கு கூறப்பட்டிருக்கிறது. வெறியாட்டுக்களிலும் களியாட்டுக்களிலும் கிறிஸ்தவம் பெரு விருப்பை காண்பிப்பது இல்லை. ஆனால் கள்ளின் பயன்பாடு அனுதினமும் எளியமனிதர்களின் வாழ்வில் இன்றியமையாதது என்று எனது 25 வருட தொடர் அலைச்சலில் கண்டுகொண்டேன்.  குறிப்பாக கோடை நேரத்தில் மக்களின் உடல் வெம்மையினை போக்க கள் தான் அருமருந்து. மதுபானத்தை தடை செய்த்திருக்கும் குஜராத்தில் கூட, வெயில் காலங்களில் உடல் சூட்டினை தணிக்க பனங்கள்ளினையே பீல் பழங்குடியினர் பயன்படுத்க்டுகிறார்கள். உடல் களைப்பை போக்கவும், தோல் நோய்களை நீக்கவும், குடலினை சுத்தம் செய்யவும் கள் பயன்பட்டுவந்தது. கருவுற்றிருக்கும் பெண்கள், பிரசவித்த பெண்கள், சவலைக்குழந்தைகள், கடும் உடல் உழைப்பினை நல்கும் உழைப்பாளிகள், கலைஞர்கள் போன்றோர் மீண்டெழ கள் தான் சிறந்த மருந்தாக பயன்பாட்டில் இருந்துவந்தது.

 

எனது நண்பரும் பனையேறியுமான நரசிங்கனூர் பாண்டியன் அவர்கள், ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகள் கரிஷ்மாவின் தோல் வியாதிக்காக சந்திக்காத மருத்துவர்கள் இல்லை. முயற்சிக்காத மருத்துவமுறைமைகள் இல்லை. நானே அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கும்போது, அது குறித்த மனக்கிலேசம் அவருக்கு இருந்தது. அப்போது, ஒரு பரீட்சார்த்த முறையில் அவர் தனது மகளுக்கு கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஓரளவு பலன் தெரிகிறது என்றும் சொன்னார். எப்படி கள்ளினை தெரிந்துகொண்டீர்கள் என வினவியபோது, “உண்பொருள் குண அகராதி”  என்ற 120 ஆண்டு பழைமையான ஒரு புத்தகத்தை தான் வாசித்துக்கொண்டிருந்தபோது, பனங்கள் குடிப்பதால் – “சப்த தாதுக்களை பெருகப்பண்ணும், தொழுநோயை குணப்படுத்தும், சுக்கில விருத்தியை உண்டுபண்ணும்” என எழுதியிருந்ததை வாசித்து, தொழுநோயே குணமாகுமென்றால், தோல் நோய் குணமாகாதா என எண்ணி முயற்சித்திருக்கிறார். சுமார் ஒரு பருவகாலம் முழுவதும் கள் உண்ட அவளுக்கு இன்று தோல் நோய்கள் என்று ஏதும் இல்லை. இன்று வேறு எந்த உடல் சார்ந்த பிரச்சனைகளோ அல்லது உளம் சார்ந்த பிரச்சனைகளோ அவளுக்கு இல்லை. மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாள்.

பலருக்கும் எழும் ஒரு கேள்வி நமக்கும் எழுவது இயல்பு. பனங்கள் குடித்தவர்கள் கள் இறக்கும் பருவகாலம் முடிந்தபின்பு என்ன செய்வார்கள்? கை நடுங்காதா? இல்லை கள்ளிற்கு அடிமையாகிவிட மாட்டார்களா போன்றனவற்றிற்கு, இல்லை என்றே பாண்டியன் பதிலளிக்கிறார். கள்ளின் பருவ காலம் துவங்கும்போது ஊரின் பெண்கள் அனைவரும் தனி அழகு பெற்று விடுகின்றனர் என்று சிரிப்புடன் கூறுகிறார். பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்களின் முகமும் உடலும் சிறந்த ஒரு வடிவம் பெற்று பொலிவிடுகிறதை தான் கவனித்ததாக குறிப்பிடுகிறார். குறிப்பாக பனங்கள் என்பதை அவர் பழச்சாற்றுக்களுக்கு மாற்றாகவே குறிப்பிடுகிறார். தனது வீட்டில் கள்ளிருக்கும் நேரங்களில் எந்தவிதமான பழங்களும் விரும்பி உண்ணப்படுவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

L8

கள் கலயம்

ஒருமுறை அவரோடு தங்கியிருந்த நாளின் அதிகாலை வேளையில், சூரிய உதயத்திற்கு முன்பதாக எழுந்து அவருடன் பனங்காட்டிற்குச் சென்றேன். பதனீரை இறக்கி கருப்பட்டி செய்யும் அவர், ஒரு பனை மரத்தில் மட்டும் கள் கலயம் போட்டிருந்தார். ஒரு லிட்டருக்கும் குறைவாகவே அன்று கள் கிடைத்திருந்தது. நானும், கரிஷ்மாவும், பாண்டியனும் அதனை பகிர்ந்தே குடிக்கவேண்டும் என்கிற நிலை. என் வாழ்வில் அத்தனை சுவையான பானத்தை நான் குடித்ததில்லை. அவ்வளவு சுவையாக அது இருந்தது. இன்று நாம் குடிக்கும் மென்பானங்களில் காணப்படும் செறிவூட்டப்பட்ட பானங்கள் எல்லாம் பனங்கள்ளிடம் பிச்சை கேட்கவேண்டும். அத்துணை சுவை. இளனீரில் காணப்படும் இனிப்பு மற்றும் சுர்ரென்ற ஒரு தன்மை யாவும் பனங்கள்ளில் உள்ளுறைந்திருந்தன. உள்ளத்தைக் குளிர்விக்கும் தன்மை யாவும் கள்ளினுள் சங்கமித்து இருந்தது. பொதுவாகவே கள் என்றால் புளிக்கும் என்ற சூழலிலிருந்து “இன்கள்” என்ற புரிதல் நோக்கி நான் வந்த நாள் அது. போதையும் கள்ளும் என்பது அரசியல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட ஒரு புனைவு என்பதையும் அன்று புரிந்துகொண்டேன்.

WFD1

இன்று போதை தலைகேறி இருக்கும் ஒரு அரசு மக்களின் அடிமடியில் உண்மையிலேயே கைவைத்துவிட்டது பேரதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அடி மடி எனும்போது கண்டிப்பாக அது பணம் மாத்திரம் அல்ல மகப்பேறு சார்ந்த குறைப்பாட்டையும் குறிப்பது தான் பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்து பெரிதளவில் விளம்பரப்படுத்திய இந்த நாட்டில், இன்று மகப்பேறு மருத்துவமனைகளின் பெருக்கத்தைக் காணும்பொது, உண்பொருள் குண அகராதியில் சொல்லப்படும் சுக்கில விருத்திக்கு “பனங்கள்” எத்துணை முக்கியமானது என தெரியவரும். ஒரு சமூகத்தையே மலடாக்கும் ஆண்மையற்ற அரசுகளினால் நாம் இழக்கப்போவது நமது சந்ததிகள் தான் என்பது ஏன் நமக்குப் புரியவில்லை? மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் வாழ வேண்டி இவ்வித மாபாதகத்தை நாம் செய்ய துணிகிறோமா?

கள் சார்ந்து நான் எதனையும் வெளிப்படையாக எழுதிவிட இயலாது என்ற சூழலிலேயே எனது வாழ்வின் பனை சார்ந்த பயணம் சென்றுகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எனது கிறிஸ்தவ நண்பர் உன்னத சிறகுகள் என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெபக்குமார் அவர்கள், ஐயா நீங்கள் பனை சார்ந்து செயல் படுவதால்,  கள்ளு நல்லசாமியை தொடர்புகொள்ள வேண்டும் என்றார். அப்போது நான் மும்பையில் தங்கியிருந்ததால், எனக்கு அவரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. கடவுளின் அருள் என்றுதான் கூறவேண்டும், திரு நல்லசாமி அவர்களின் இளைய மகள் பிரியதர்சினி நல்லசாமி எனது பனை பயணத்தைக் குறித்து கேள்விப்பட்டு, என்னை முகநூல் வழியாக தொடர்புகொண்டார்கள். அவர்களின் உதவியுடன் ஐயா நல்லசாமி அவர்களை நேரில் சென்று அவரது ஊரிலேயே சந்தித்தேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சந்திப்பு எனது வாழ்வின் முக்கியதருணம். கள் சார்ந்த அரசியல் மற்றும் அவரது புரிதல்கள் இதுவரை தமிழகத்தில் எவர் வயிலிருந்தும் புறப்படாத தர்க்க நேர்த்தி கொண்டவை. மாத்திரம் அல்ல எவரும் மறுக்க இயலா உண்மைகள் கூட.

SaththiyanEsan

குமரி மாவட்ட பனை தொழிலாளி – ஓலை வெட்டுவதற்கு ஆயத்தமாகும்போது

பார்வைக்கு மட்டுமல்ல பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராக விளங்கும் திரு நல்லுசாமி அவர்கள், கள் பனை மரங்களிலிருந்து இறக்கப்படவேண்டும், அதனை அனைவரும் பருகவேண்டும், கள் ஒரு போதைப்பொருளல்ல என்பன போன்ற, கள்ளுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருபவர். பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேசி கள்ளிற்காக தொடர்ந்து போராடி வருபவர். ஒருவேளை தமிழகத்தில் கள் சார்ந்த அனுமதி கிடைத்து ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் ஐயா நல்லசாமி அவர்களின் தொடர் போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. சாதிகளைக் கடந்து பொது நோக்கில் அவர் காணும் தரிசனம் என்பது “பேராண்மை” கொண்ட பெருந்தகைகளுக்கே உரியது.

கள்ளுக்கான போராட்டம் எனபது வருகின்ற ஜனவரி, 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பெப்ருவரி 2, வள்ளுவர் கோட்டத்தில் வைத்து மிக பிரம்மாண்டமான அளவில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. திரு நல்லசாமி அவர்கள் கூறுகையில் “வரும், 21ல் நடைபெறும் என எங்கள் இயக்கம் அறிவித்தது, கள் இறக்கும் போராட்டம் அல்ல. 2009லேயே கள் இறக்குவோம் என, அறிவித்து தொடர்ந்து இறக்கி வருகிறோம். அதை வரும், 21ல் விரிவுபடுத்த உள்ளோம். கள் இறக்கியது தொடர்பாக, 48 வழக்குகள் போடப்பட்டது. 44 வழக்கில் விடுதலை பெற்றுள்ளோம். நாங்கள் புதிதாக கள் இறக்குவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. கள் இறக்கும் போது, சட்டரீதியான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டால் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். மீறி கைது செய்தால் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வோம். அரசியல் அமைப்பு சட்டம், உணவு தேடும் உரிமையை மக்களுக்கு அளித்துள்ளது. இதன்படி கள் இறக்குகிறோம். ஜனநாயக முறையில் மக்கள் ஆதரவு திரட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நடவடிக்கையை மேற்கொள்கிறோம்”. இத்தனைத் தொடர்ச்சியாக கள்ளிற்கான போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது இல்லை.

கள் சார்ந்து தங்களது புரிதலைக் கூறும் அனேகரிடம் நான் பேசியிருக்கிறேன். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மதுவிற்கு எதிரானவர்கள். ஆனால் காந்தி இன்று இருந்திருந்தால், மதுவினை எதிர்த்து சுதேச பானமான கள் இறக்குவதற்காகப் போராடியிருப்பார் என தனது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை நான் திருவண்ணாமலையில் சென்று சந்தித்தபோது, அரசின் கள் மீதான தடையை குறித்து அதிருப்தி கொண்ட அவர், ” நானும் எனது குழந்தைகளும் இணைந்து எங்கள் உணவு மேஜையில் கள் அருந்தும் நாளிற்காக காத்திருக்கிறேன்” என்றார்.

டாஸ்மாக் வாசலில் குடித்துக்கொண்டிருந்த ஒரு முதியவரைப்பார்த்து கேட்டேன், அய்யா பனங்கள் குடிப்பதை விட்டுவிட்டு இதனைக் குடிக்கிறீர்களே என்று. அதற்கு அவர், பனங்கள் கிடைத்தால் இங்கு யார் வரப்போகிறார்கள் என்றார்.

குமரி மாவட்டத்திலுள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், கள்ளுக்கு எப்போது போதை வருகிறது? அது கடைக்கு வரும்போதுதான் போதை ஏற்றப்படுகிறது என்று சொல்லுவார்கள். தனிக்கள் அனைவருக்கும் உரியது என்றும் மாலைபயினியின் சுவைக்கு இணையேதும் இல்லை என்றும் சிலாகிக்கிறார்.

குடியினால் தமிழ் சமூகம் அழிந்துவிட்டது நமக்குத் தெரியும். 60 பனைகள் வரை ஏறி தொழில் செய்த பனையேறிகளால் இன்று 20 பனைகள் கூட ஏற இயலாதபடி தமிழகத்தில் ஓடும் மது ஆறு மக்களை முடக்கியிருக்கிறது. இச்சூழலில், கள் விற்பதற்கான ஒரு போராட்டம் என்பது மிகவும் முக்கிய தேவையாகிறது. குடிகாரர்களை மீட்பதற்கும் கள்ளே நமது கையிலிருக்கும் மிகச்சிறந்த ஆயுதம். என்னைப் பொறுத்த வரையில், ஆந்திராவில் நான் கண்டதுபோல், பனை தொழிலாளிகளோ அல்லது அவர்களது துணைவிகளோ கள் விற்பது தான் சிறந்தது. காலை எட்டுமணிக்குள் கள் குடிப்பதும், எஞ்சியவற்றை குடிகாரர்களுக்காக வைத்திருப்பதும் தான் சரி. கள் விற்கும் கடைகளை எக்காரணம் கொண்டும் எவரும் ஊக்குவிக்கக் கூடாது. அது பனையேறிகளை மீண்டும் அடிமைத்தனத்திற்கு நேராக இட்டுச்சென்றுவிடும். கள் சார்ந்து போராடுகிறவர்கள், கள் ஆலை வேண்டும் என போராடுவார்கள் என்றால், பனையேறிகள் மீண்டும் தங்கள் இழிநிலைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று கள் இறக்க விரும்பும் அனேகர், பனை மரங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள். நமது தோட்டத்தில் கள் இறக்கி விற்கலாமே என்னும் நப்பாசையில் கள் போராட்டத்திற்கு பின்புலமாக நிற்பவர்கள். இவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பனையேறிகள் விற்கும் கள்ளில் கிடைக்கும்சரிபாதி வருமானத்தை பனை மரங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மாறாக பனையேறிகளுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுத்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய கள் இறக்கிகொள்ள முற்படுவார்கள் என்று சொன்னால் அதுவும் கண்டிக்கத்தக்கது. கள் விடுதலைப் போராட்டம், பனைமரத்தினை தழுவி வாழும் மனிதர்களுக்கான விடுதலை. அதற்கு தடையாக எவரும் நிற்பது ஏற்புடையது அல்ல.

கள் பெருமளவில் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில், கிளி கட்டு என்ற ஒரு முறைமை உண்டு. மன்னர் காலத்தில் பொற்கிழி வழங்குவார்களே அது போலவே மருத்துவகுணம் நிறைந்த மூலிகைகள் வேர்கள் மற்றும் பட்டைகளை ஒன்றாக்கி ஒரு துணியில் கட்டி மருத்துவர் கொடுத்தனுப்புவார். இவைகளை பனையேறியிடம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர் அதனை சுண்ணாம்பு இடாத கலயத்தில் இருக்கும் பாளையில் கட்டிவிடுவார். பாளையில் இருந்து சொட்டும் பதனீர் இந்த கிழியில் விழுந்து ஊறி பின்னர் பானையில் சேகரிக்கப்படும். மிக குறைந்த அளவு பதனீர் ஊறும் பனைகளிலேயே இதனைக் கட்டுவார்கள். சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரைக்கும் கிடைக்கும் அந்த கள்ளினை தவறாது குடித்துவந்தால் நோய்கள் அண்டாது. குறிப்பாக வாத நோய் கண்டவர்கள் கள் குடிக்க இயலாது, அப்படிப்பட்டவர்கள் எல்லாம், நல்லமிளகு திப்பிலி போன்ற பொருட்களை இணைத்து கிளி கட்டுவது வழக்கம்.

கள் இறக்குவதற்கு தடை என்பதை மலிவான அரசியலாகவே நாம் பார்க்க இயலும். அரசு மதுபானத்தில் வரும் வருமானத்திற்கு கட்டுண்டு கிடக்கிறது. ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கிறது. அதற்கு ஒத்து ஊதுகின்ற குமரி நம்பி ஆகட்டும், குமரி அனந்தன் ஆகட்டும் பனை சார்ந்த வாழ்வியலை நசுக்கப் புறப்பட்டிருக்கும் கீழ் மக்களே. இவர்களின் “போதை” சார்ந்த வாதங்கள் புளித்துப்போனவை. குறிப்பாக மனிதனின் உணவு தேவையில் 10% பனை உணவிலிருந்து கிடைக்கும் என்று சொல்லுகின்ற குமரி நம்பி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தில் பனை தொளிலாளர்களுக்கு 10% கொடுக்கிறார்களா என எண்ணத்தலைப்படவில்லை. மருத்துவ செலவுகளில் 40 சதவிகிதம் பனை உணவுகளால் மிச்சமாகிறது என சொல்லுகிறவர், தாலியறுத்து நிற்கும் பெண்களின் வாழ்வில் தாலி பாக்கியம் அளிக்கும் கள்ளினைக் குறித்து பேசாதது அறிந்தே செய்யும் இருட்டடிப்பு.

பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பதனீர், பனம் பழம், கருப்பட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது என்பவர் சொல்லாமல் விட்ட ஒரு உண்மை என்னவென்றால், தமிழகத்தில் இன்று 5 சதவிகிதம் பனை மரங்களே ஏறப்படுகின்றன. அப்படியென்றால் 95% பனை மரங்கள் இன்று ஏறுவோர் இன்றி இருக்கின்றன என்கிற உண்மை பொட்டில் அடித்தார்போல் நம் கண்முன்னால் இருக்கின்றது. சர்வதேச பனை பொருளாதார மாநாடு நடத்துகிறவர்கள், இதுவரை எத்தனை சதவிகித பனை மரங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர் என சொல்லுவது அவர்கள் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்.

ஆகவே கள்ளிற்கான தடை உடைபடுகையில் என்ன நிகழும் என எண்ணிப்பார்ப்பது நலம். அவனவன் தன் தன் நிலத்தில் இருக்கும் மரத்திலிருந்து கள்ளினை இறக்கி குடிப்பார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் சீரடைவதை உணர்வார்கள். அரசு துவங்கியிருக்கும் டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றாக வருமானமின்றி மூடப்படும். கார்பரேட்டுக்களை நம்பி அல்ல நமது அரசுகள், மக்களை நம்பி தான் அரசு என்கிற கருதுகோள் மீண்டும் நிலைநிறுத்தபடும். தேவையற்ற பல ஆணிகளை நாம் பிடுங்கி வீசலாம். பனை பொருளாதாரம் என கூவி சொல்லும் சுதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, மற்றும் காந்தியின் பெயரை வீணிலே வழங்கும் குமரி அனந்தன் ஆகியோர்  கள் இறக்கும் 10 லட்சம் இளைஞர்களின் வயிற்றில் அடித்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் தாலியை அறுத்துவிட்டு, பல்வேறு எதிர்கால குழந்தைகளின் வாழ்வை நாசமாக்கியபடி இருக்கும், டாஸ்மாக் நடத்தும் அரசின் சார்பாக நிற்பது அருவருக்கத்தக்க நிலைப்பாடு.

தமிழகத்தில் 2000 வருடங்களுக்கும் மேலாய் கள் இறக்குவதும் பனை சார்ந்த வாழ்வியலும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. கள்ளைக்குறித்து மிக அதிகமாக பேசிய சங்க இலக்கியம் தான் “பவழ கூர்வாய் செங்கால் நாராய்” என பனங்கிழங்கிற்கு நிகராக செங்கால் நாரையின் கூர்வாய் பகுதியினை ஒப்புமைப்படுத்தியிருக்கிறது. பனை சார்ந்த தொழிலாளிகளுக்கு மீட்புஅமையக்கூடாது என்று களமிறக்கப்பட்டவர்கள் தானோ குமரி அனந்தனும், குமரி நம்பியும் என்ற சந்தேகம் இதனால் வலுப்பெறுகிறது. இவர்களை இயக்குபவர்களை கண்டு புறம்தள்ளாவிடில் பனை போராட்டம் வெற்றிபெறாது.

எனது ஆதரவினை கள் இயக்கதிற்கும், கள் இறக்க போராடும் மக்களுக்கும், பல்லாயிரம் பனையேறிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். இப்போராட்டம் தமிழக அளவில் எட்டும் ஒரு வெற்றியாக மட்டுமல்ல, சர்வதேச அளவில் கள்ளினை மென் பானமாக முன்னிறுத்தும் ஒரு சிறப்பு கவனயீர்ப்பு போராட்டமாக அமைய வாழ்த்துகிறேன்.

கள்ளுக்கு கடையும் வேண்டாம்!

கள்ளுக்குத் தடையும் வேண்டாம்!

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 

 

பனை நகரம் 17

ஜனவரி 16, 2020

 

பனம்பழ நகரம்

இந்த முறை நான் மும்பை வந்த நாளிலிருந்து, பனம் பழங்களை தேடி எடுத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக எனது பிள்ளைகள் பனம்பழங்களை விரும்பி உண்பவர்கள். உலகத்தின் எந்த சுவையான உணவையும் குழந்தைகள் விருப்புடன் உண்பதைப் போலவே, எனது பிள்ளைகள் இருவரும் பனம்பழத்தை  வெகு விருப்பத்துடன் உண்பார்கள். நான் எனது குழந்தைகளை ரசிக்கும் ஒரு உன்னத தருணம் அது. குழந்தைகள்தான் என்றில்லை பனம்பழங்களை விரும்பி உண்ணும் அனைவரையும் பார்க்கும்போது ஏற்படும் பேருவகை அது. எளிதில் காணகிடைக்காத ஓர் அரிய நிகழ்வல்லவா? பனம் பழங்கள் பெரும்பாலும் இன்று விரும்பப்படுவது இல்லை. தமிழகத்தில் ஒரு தலைமுறை பனம்பழங்களை முற்றிலும் அழுக விட்டுவிட்டது. அதனை சுவைக்கையில் கைகள் முழுவதும் பனம்பழமாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல, முகமும் பனம்பழத்தின் இன்கனியால் தீற்றப்பட்டுவிடும். இப்படியிருக்க மாய்ந்து மாய்ந்து இதை தின்கிறார்களே என்கிற எண்ணம் பலர் வாயிலாக என் காதுகளை வந்தடைந்ததுண்டு. ஆனால் பனம் பழங்களின் சுவையும் மணமும்  அத்தனை எளிதில் நம்மையும் நமது தலைமுறைகளையும் விடாது என்பது தான் உண்மை.

DSC00654

பனம்பழம் சீவும் முறை

பனம் பழம் குறித்து மும்பையில் எவருக்கும் தெரியாது. இக்கூற்றினை எழுதிய பின்பு நான் விழித்துக்கொண்டேன். ஒருவேளை நான் சற்றே மிகையாக கூறுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்தது. ஆம், பனம் பழம் குறித்த புரிதல் கொண்ட மக்களை நான் மும்பையில் இதுவரை சந்திக்கவில்லை என மாற்றி சொல்லுவதே சரியாயிருக்கும். மும்பையின் உண்மையான பனை வரலாறு தெரியாமல் அதனை உற்று நோக்கிக்கிகொண்டிருக்கும் ஒருவனாகவே என்னை எண்ணிக்கொள்ளுகிறேன். இங்கு பனம் பழங்களின் காலம் என்பது ஏப்ரல் முதல்  முதல் ஜூன் – ஜூலை வரை தான். இதற்கு இணையான ஒரு பருவத்தை நான் குமரி மாவட்டத்தில் தான் பார்த்திருக்கிறேன். சற்றேரக்குறைய இதே பருவகாலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பனம் பழங்கள் கிடைக்கும் என்றாலும், அங்கே டிசம்பர் முதலே  ஆங்காங்கே கிடைக்கும். மும்பையிலும் ஆங்காங்கே பனம் பழங்கள் பழுத்து நிற்பதை டிசம்பர் மாதம் முதல் பார்த்துவருகிறேன்.

பனம் பழங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எனது பெருவிளை கிராமத்திலிருந்து துவங்குகிறது. எனது அத்தை பனம் பழங்களைப் பொறுக்கும் நுட்பத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் நாங்கள் அத்தை வீட்டில் தான் தங்கியிருப்போம். அத்தையின் வீட்டின் பின்புறம் இருந்த விளையில் பனை மரங்கள் நின்றன. அதனை ஒரு குட்டி பனங்காடு எனலாம். அதிகாலை வேளையில் பனம் பழம் காற்றில் உதிரும். விழும்போது “தொம்” என்று சத்தம் கேட்கும். அந்த சத்தம் ஒரு அழைப்பு . நான் உங்கள் உணவு தட்டிற்காக வந்து நிற்கிறேன் என்கிற அறைகூவல் அது. அத்தை எழுப்பி விடுவார்கள். வெகு உற்சாகத்துடன் முயல் போல தெறித்து ஓடி போய் எடுத்து வருவோம். சில நேரங்களில் நான் செல்லும்போது வேறு திசைகளிலிருந்தும் சிறுவர்கள் ஓடி வருவார்கள். மிகப்பெரிய பழங்களாகவே இருக்கும். பனம்பழம் கிடைத்தால் தூக்க இயலாதபடி தூக்கி வருவேன். அத்தையின் சூழலைப் பொறுத்து சுட்டோ அவித்தோ கொடுப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்பு இருந்த உலகம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது என எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.

கடந்த வருடம் போவாஸ் என்கிற பனைத் தொழிலாளியுடன் இணைந்து குமரி மாவட்டத்தில் இருக்கும் மிடாலக்காடு என்கிற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் சென்று பனம் பழங்களை அவித்துக்கொடுத்தோம். பாரம்பரிய சுவையினை மீட்டெடுக்கும்படியான அந்த நிகழ்வு மிகப்பெரும் வெற்றி பெற்றது. சகாய பெலிக்ஸ் என்கிற இளம் துறவி அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார். நானும் போவாஸ் பனையேறியுமாக இணைந்து பனம் பழங்களை சேகரித்தோம். அதிகமாக கிடைக்காவிடினும் இரண்டு மூன்று நாட்களாக சுமார் 20 பழங்களை சேகரித்தோம். அவைகளை எடுத்து எனது வீட்டு குளிசாதனப்பெட்டியும், மற்றும் ஒரு சில நண்பர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இட்டு வைத்தோம். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், பனம் பழங்களை போவாஸ் பனையேறி தனது அறிவாளால் தோலோடு இருக்கும்படியாக  சீவியெடுத்தார். சீவியெடுத்தபின் கொட்டைகள் அனைத்தும் பார்க்க திருப்பதிக்கு போய்வந்த தலைகளைப்போல் காட்சியளித்தன. சிறிது பனம்பழங்களை மூடியிருக்கும் “நெட்டி”யினை எடுத்து பானையின் அடிப்பாகத்தில் அடுக்கிவைத்தார். அதற்கு மேல் சீவியெடுத்த பனம்பழ தூன்டங்களை  அடுக்கினார். அனைத்திற்கும் மேலே கொஞ்சம் பனங் கருப்பட்டியினை உடைத்துப்போட்டார்.பனம் பழங்களை அன்று இரவே வேகவைத்தோம். அடுப்பில் தீ மூட்டி பனம் பழம் வேகும்Pஒது “பனம்பழம் தின்ன பண்ணி செவியறுத்தாலும் நிக்காது” கேட்டியளா என என்னைப்பார்த்து சிரித்தார். பனம்பழங்களில் இருக்கும் “காறல்” தன்மை பொங்கி வழிந்தோடிவிடவேண்டும் எனக் குறிப்பிட்டார். பொங்களின் பின்னணியத்தில் பனை ஊடுருவி இருக்க வேறு காரணம் வ் ஏண்டுமா? இவ்வித நுட்பங்களை பனையேறிகளிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள முடியும்.

DSC09462

போவாஸ் பனம்பழங்களை அரிவாள் கொண்டு அறுக்கிறார்

மறுநாள் ஆலய ஆராதனைக்கு பின்பு, அருட்தந்தை சகாய பெலிக்ஸ் அவர்கள் மக்களை ஆலயத்தின் அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்து வந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முந்தைய இரவு வேகவைத்த பனம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொடுத்தனர். பெண்களும் சிறுவர்களும் போட்டிபோட்டபடி வந்க்டு சுவைத்துப்பார்த்தனர். பானையில் இருந்த எஞ்சிய இன்னீரை குடிக்க அப்படி ஒரு போட்டி நடந்தது. நெட்டியில் வாரிக் குடிக்கும் அந்த காட்சியின் இன்பம் நான் அரிதாக கடந்து வந்த ஒரு உணவு திருவிழா காட்சி.

பனம் பழத்தின் மீதான ஈர்ப்பின் முதல் விசை அதன் மணம் தான். விழுந்த உடனேயே நாம் எடுக்கும் பழங்கள் மிகவும் விரும்பத்தக்க வாசனை கொண்டவை. கிறங்கடிக்கும் மணம் எனலாம். எப்படி பலாப்பழத்தின் வாசனையை அடக்கிவைக்க இயலாதோ அப்படியே சுட்ட பனம்பழத்தின் வாசனையையும் மறைக்க இயலாது. ஆதி மனிதர்கள் விலங்கின் தன்மைகள் பெருமளவில் கொண்டிருக்கையில், பனம் பழங்களின் வாசனை எப்படி அவர்களை சுண்டி இழுத்திருக்கும் என சொல்லத்தேவையில்லை. அதன் மென் மணம் பிறந்த குழந்தையை எப்படி கரத்தில் எடுத்து முத்தமிடத் தூண்டுமோ அத்தகையது. பழத்தினை அவித்தோ அல்லது சுட்டோ சாப்பிட்டால், காதலாகி கசிந்துருகி காதலியை முத்தமிடும் தருணத்திற்கு ஒப்பானது. அணைத்து, முகர்ந்து, கடித்து, சுவைத்து, இன்புற்று பித்தேறிய நிலைக்கு கொண்டு செல்லும் சுவை அதனுள் உறைத்திருக்கும்.

DSC09528

நெட்டியில் பனம்பழம் அவித்த சாறு குடிக்கும் சகோதரி

இந்த வாசனைக்கு இருக்கும் தனித்தன்மையினை உணர்ந்தே அத்தனை விலங்குகளும் இதனை போட்டி போட்டு சாப்பிடும். சிலநேரங்களில் வீட்டினருகில் இருக்கும் நாய்களும், ஊருக்குள் வரும் நரிகளும் பனம்பழங்களை விரும்பி உண்ணும். மாடுகளுக்கு பனம்பழங்களை எடுத்துப்போடுவார்கள். பன்றிகள் இதனைத் தேடி உண்ணும். காட்டு விலங்குகள் கூட பனம்பழங்களை விரும்பி உண்ணும் என்பதனை நான் பின்னர் தான் அறிந்துகொண்டேன். மான் பனம்பழங்களை சாப்பிடும் என புகைப்படங்களை எனது நண்பர் விஸ்வா வேதா என்னிடம் ஒருமுறைக் கூறினார். அப்படியே குமரி மாவட்டத்தில் காட்டிலகா அதிகாரியாயிருந்த ஒருவர் கரடிகள் பனம் பழங்களின் வாசனைக்கு அடிபணிந்து காட்டை விட்டு மலையடிவாரங்களில் சுற்றித்திரியும் என்றார். மிளா சப்பிடும் என்பதனையும் அவர் கூறியே கேள்விப்பட்டேன். குரங்குகள் கண்டிப்பாக இவைகளைச் சாப்பிடும். இலங்கையில் பனம் பழங்களை யானை விரும்பி உண்ணும் என நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பனை மரத்தை உலுப்பி தனக்கான சுவையான பனம்பழங்களை தேடும் யானைகள் ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கிறதை காணொளி வாயிலாக தெரிந்து கொண்டேன்.

பனம் பழ வாசனை குறித்து நாம் எவ்வளவு தான் விதந்தோதினாலும், மெய்யாகவே பனம்பழத்தின் வாசனை  குறித்த ஒரு ஒவ்வாமை மக்களுக்கு ஒரு கட்டத்தில் ஏற்பட்டுவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற கூற்று பனம்பழத்திற்கும் பொருந்தும். பனம் பழம் விழுந்து  சில மணி நேரங்களுக்குள் அதனுள் ஒரு வண்டு நுழைந்துவிடும். வண்டு ஏறிய பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படியான பழங்களில் வாசனை சற்றே தூக்கலாக அடிக்கும். அது ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே பனம் பழங்களை சாப்பிடுகிறவர்கள் கூட வாசனை மாறுகையில் குமட்டுவது இயல்பு. பனம் பழமும் “அந்த பயம் இருக்கட்டும்” என நம்மைப் பார்க்காமல் கூறிவிட்டு, கிழங்கிற்காக தன்னை அற்பணித்துகொள்ளுகிறது.

DSC09509

அருட்பணியாளர் சகாய பெலிக்ஸ் – பனம்பழப் பானை அருகில் உள்ளது

இன்று பனை சார்ந்த முன்னெடுப்புகளை வெறுப்பவர்கள் பெரும்பாலும் பனம் பழம் சாப்பிட்டால் பித்தம் வந்துவிடும் என்பதனையே கூறி, பனம் பழம் சாப்பிடுகிறவர்களை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் கீழ்தரமான இந்த பரப்புரைக்கு விடையினை நமது முன்னோர்களே கூறிச்சென்றிருக்கிறார்கள். “பசிக்கு பனம்பழம் சாப்பிட்டால் பித்தம் போறவழியில் போகும்” என்று கூறியிருக்கிறார்கள். இன்று பனை உணவுகள் திரும்பி வருகின்ற சூழலில் தமிழகத்தில் ஏற்படுகின்ற பதட்டத்தை சற்றே கூர்ந்து நோக்குகிறேன். உள்ளூர் பழத்தையே நாம் இவ்விதம் இழந்தோமென்று சொன்னால், எவருடைய வணிகத்திற்கு நாம் ஏவல் செய்துகொண்டிருக்கிறோம்?

பனை மரங்கள் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் உணவு. இந்த உணவை தாங்கிப்பிடிப்பது நமது கடமை. ஒருவேளை உணவுக்காக ஏங்கும் பல்வேறு குடும்பங்களின் பசியைப் போக்க வல்லது பனம்பழம். உலகின் 99% உட்டசத்து குறைவு மிக்க மக்கள், மூன்றாம் உலக நாடுகளிலேயே வாழ்கிறார்கள். இயற்கை அளிக்கும் இவ்வைகையான உணவுகள் பசியினையும் ஊட்டச்சத்தினையும் ஒருங்கே வழங்க வல்லன. இன்று நாம் சந்திக்கும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல் முக்கிய காரணம் என்கிறார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகளை நாம் உண்ணாது இருப்பது நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பனம் பழம் தோல் நோய்களுக்கு, குடல் சுத்தம் செய்வதற்கு, கண் பார்வை மேம்படுதல் என பல வகைகளில் பயனளிக்கும் அருமருந்து.

குமரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட இயற்கையாகவே கதிர் வீச்சு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தின் குளச்சல் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் மிக அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட கடற்கரைப்பகுதிகள். இங்கு வாழும் மீனவர்கள் கரையில் வாழும் மக்களிடம் மீனைக் கொடுத்து பனம்பழங்களை வாங்கி சாப்பிட்ட ஒரு காலம் உண்டு. அதாவது பனம் பழம் கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைக்கும் என்கிற ஒரு புரிதலாக இருந்திருக்கும். குமரி மாவட்டத்தில் மீன் அனுதினமும் உணவாக இருந்ததற்கு இந்த பண்டமாற்று முறை வாய்ப்பளித்திருக்கிறது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது பெருவிளைக் கிராமத்திற்குள் நுழைந்து பனம் பழங்களைத் தேடுவேன். ஒருபோதும் பனம் பழம் கிடைக்காமல் நான் வீடு திரும்பியது இல்லை. எப்படியாவது பனம் பழம் எனக்கு கிடைத்துவிடும். எனது சைக்கிளில் அதனை வைத்து வீட்டிற்கு எடுத்து வருவேன். எனக்கு பனம் பழம் தான் அன்றைய ஷாம்பூ. தலைக்கு பனம் பழத்தை இட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, முடி மிருதுவாகவும் பளபளப்பாக மாறிவிடும். பனம் பழம் இட்ட தலையிலிருந்து வரும் வாசனை சற்றே ஆரஞ்சு பழத்தின் வாசனையினை நினைவுறுத்தும்.

இந்த இணைப்பு தான் மும்பைக்கும் குமரி மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பினை நான் ஆழ்ந்து எண்ண தலைப்படக் காரணம். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பனம் பழங்கள் பல்வேறு கால நிலைகளில் கிடைத்துக்கொண்டிருப்பதற்கு, விதை தெரிவு ஒரு காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். வருடத்தின் பெரும்பகுதி பனம் பழங்கள் கிடைக்கும்படியான ஒரு அமைப்பை இங்கு வாழ்ந்த பனையேறிகள் உருவாக்கியிருக்கலாம். அதிகமாக பூக்கும் பருவங்கள் அதிக பதனீரையும் அதிக உற்பத்தியையும் தர வல்லது என பனையோடு பயணித்தவர்கள் புரிந்திருப்பார்கள். அதே எண்ணத்தை மராட்டிய மண்ணில் இருக்கும் மும்பைக்கும் பொறுத்திப்பார்த்தால் அதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?

பனை சார்ந்த சமூகங்கள் இங்கு இருந்திருக்கின்றன. கடல் சார்ந்த சமூகமும் இங்கு உண்டு, அப்படியே பனை சார்ந்து வாழும் பழங்குடியினரும் இங்கு வாழ்கிறார்கள். இதையும் தாண்டி மேலே குறிப்பிடும்படியாக ஒன்று உண்டு. மராட்டியர்கள் வாழ்வில் ஒரு காலகட்டம் போர் இன்றி வேறில்லை என வாழ்ந்த காலகட்டம். எல்லா சமூகமும்  கள்ளினை போர் நேரத்தில் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றன. இன்றும் மஹாராஷ்டிராவில், கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மும்பையை அடுத்து இருக்கும் பால்கர் பகுதிகளில் பனை மரங்களும் அதனை சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

கள்ளும் போரும் பிரிக்கவியலா ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. அப்படியே கள்ளினை வடித்து சாராயமாக்கும் தொழில் நுட்பம் இன்றும் மகராஷ்டிரா பகுதி பழங்குடியினர் வாழ்வில் இருக்கிறது. ஆகவே பனை சார்ந்த புரிதல் கொண்டே, பல்வேறு கால சூழ்நிலையிலும் பனை தனது பயனைக் கொடுக்கவேண்டி மக்கள் “தெரிந்து” பயிரிட்ட மரங்களே பருவம் தப்பி வந்த பனைகள் என நான் எண்ணுகிறேன். பல்வேறு தட்பவெட்ப சூழல்களும், தவரவியல் சார்ந்த காரணங்களும் இதற்குப்பின் இருக்குமென்றாலும், எனது தரப்பு, மனிதர்கள் பனை மரத்தினை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அப்படியே, பருவத்திற்கு முன்பும் பின்பும் பலன்  கிடைக்கும் பனை மரங்களையும் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் திடமாக நம்புகிறேன்.

பனம் பழம் சார்ந்து பேசிக்கொண்டு வருகையில் கள்ளிற்கான எண்ண ஓட்டம் எப்படி உள்நுழைந்தது? பனை மரமே பருவம் சார்ந்து நோக்கப்படும் ஒரு மரம் தான். போர்ச்சூழலில் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் மஹாராஷ்டிரா பஞ்சங்களைக் கடந்து வந்த பகுதி. ஆகவே, இங்கே பனம்பழம் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கவியலாது. அது எப்படி இவர்கள் வாழ்வில் இருந்தது என நாம் கண்டடையும் முன்பு, பனம் பழம் தொடர்ச்சியாக 6 – 8 மாதங்கள் வரைக் கிடைக்கும் என்கிற தகவல் பதிவு செய்யப்படவேண்டும் என்பதாலேயே இதனை இங்கு முன்வைக்கிறேன். இந்த சிறு தகவலை மறந்து நாம் மும்பையின் பனை வாழ்வை எழுதிவிட முடியாது ஏனென்றால், இதுவே தாவரவியல் சார்ந்தும், நிலவியல் சார்ந்தும், சூழியல் சார்ந்தும்,  இங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றிலும் முக்கிய தகவலக்ளை உள்ளடக்கி இருக்கிறது. பனம் பழம் மும்பையின் சுவையினை கட்டமைத்த பழம் தான். இன்று அது வெளியே தெரியாவிட்டாலும், எங்கோ புதைந்துகிடக்கும் இந்த உண்மை முதற்பீலியாக வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை மர உலக்கை

ஜனவரி 8, 2020

 

பனை மரத் தடியில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது. இந்த கேள்வி முன்னமே எனக்கு இருந்தபடியால் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துப் பார்த்தேன் அது கருநிறம் கொண்டு வேறு வகையில் காணப்பட்டது. பனை மரத்தில் காணப்படும் தும்புகளோ அல்லது சிறா போன்ற ஏதும் அதில் காணப்படவில்லை. ஏமாற்றத்துடன் அதனை வைத்துவிட்டேன். இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பின்பும், பனை மரத்தில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி என்னை விட்டபாடில்லை.

பனை மரத்தில் உலக்கை செய்ய மாட்டார்கள் என ஒரு புறம் எண்ணம் சென்றது. ஏனென்றால், பனை மரத்தில் இருக்கும் சிலாம்புகள் கைகளை குத்திவிட வாய்ப்பு உண்டு. சற்றே பிசிர் அடித்தாலும், பிற்பாடு அது பயனற்றதாக போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு புறம் பனை மரத்தில் உலக்கைகள் இருக்காது என எண்ணி விட்டுவிட்டேன். மறு புறம், பனை சார்ந்த பல்வேறு பொருட்களை நான் காணும்தோறும், பனை மரத்தடியில் கண்டிப்பாக உலக்கை இருந்திருக்கலாமே என்கிற எண்ணம் என்னை வந்து அடைந்தபடியே இருந்தன.

ஒன்று, ஒரு சமூகம் தனது சூழியலை முன்வைத்து ஒரு வாழ்வியலை முன்னெடுக்கும்போது அங்கு பெருவாரியாக கிடைக்கும் பொருட்களிலிருந்தே தமக்கு தேவையானதை எடுத்துக்கொள்வர் என்கிற ஒரு புரிதல் எனக்கு இருந்தது.  பனை மரம் பல்வேறு வகைகளில் இங்கு வாழ்ந்த  சமூகத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கையில், கண்டிப்பாக, பனை மரத்தில் உலக்கை இருந்திருக்கக்கூடும் என்கிற எனது எண்ணம் வலுப்பெற்றது. சிறு வயதில், அப்பாவுடைய ரூலர் ஒன்று பனை மரத்தடியில் செய்யப்பட்டு அவரது மேஜையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் அழகே மீண்டும் மீண்டும் என்னைப் பார்க்க தூண்டியிருக்கிறது. என்னால் தூக்க இயலாத அளவிற்கு அது வலிமையானது. எனக்கு அதில் கோடு வ்ரைய வராது. உருளையான அந்த கட்டையை வைத்து அப்பா எப்படி கோடு வரைகிறார்கள் என பார்த்துக்கொண்டே இருப்பேன்.

எனது அப்பாவின் தந்தை ஒரு தச்சு தொழிலாளி. எனது பாட்டி வீட்டு ஜன்னல் மிகவும் சிறியது. அவர்களது வீட்டு ஜன்னலில் காணப்படும் கம்பிகள் இரும்பால் செய்யப்பட்டவைகள் அல்ல என்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். எனக்கு அப்போதைய கேள்வியெல்லாம், எப்படி பனை மரத்தினை உள் நுழைத்தார்கள் என்பதே. அனால் பனை மரத்தினைக் கடைந்து இவ்விதம் அவர்கள் செய்திருப்பது அதனை விட மிகவும் ஆச்சரியமான ஒரு உண்மைதான்.

Ural ulakkai

மரத்தடியில் உரல் மற்றும் உலக்கை – ஆப்பிரிக்கா

வெகு காலத்திற்குப் பின்பு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தற்போதைய முதல்வர் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் ஒரு வாய்ப்பு அமைந்தது. வருடம்தோறும் அவர்களது வீட்டிற்கு நாங்கள் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாட செல்லுவது வளக்கம். புதிதாக கட்டப்படிருந்த அவர்கள் வீட்டு கதவு பனை மரத்தடியில் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பனை மரத்தடியினை நேராகவும் சீவி பொருட்களைச் செய்ய இயலும் எனபதை அப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன்.

பின்பு, பெங்களுர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் படிக்கும்போது, பாறச்சாலையை சார்ந்த சந்தோஷ் ஜார்ஜ் என்பவர் எனக்கு இரு வருடம் சீனியராக படித்துக்கொண்டிருந்தார். எனது பனை சார்ந்த விருப்புகளை அறிந்தவர் ஆகையால், அவரது வீட்டிற்கு பனை மரத்தால் தான் மாடிப்படி கடைசல்களைப் போட்டதாகவும், அதனைச் செய்கையில் எத்தனை கடைசல்காரர்களிடம் “பிணக்கம்” ஏற்பட்டதாகவும் கூறினார்கள். எதற்காக பிணக்குகள் ஏற்பட்டன என வினவியபோது, மிகவும் உறுதியான பனை மரங்களில் பணி செய்கையில், உளி உடைந்துபோவதால், பலரும், இதனை விரும்புவதில்லை என்றார். எப்படியிருந்தாலும், கவனிக்க வேண்டியவைகள் என்னவென்றால், பனை மரத்தினைக் கொண்டு அழகாக கடைசல்கள் செய்யலாம் என்பது தான். அதனைத் தொடர்ந்து எனக்கும் வீட்டில் கண்டிப்பாக பனை மர கடைசல் போட்டால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது.

African Pounding

ஒரே உரலில் இருவர் இடிக்கும் காட்சி – ஆப்பிரிக்கா

கல்லூரி காலத்திற்குப் பின்பு, நான் குமரி மாவட்டத்திலுள்ள பனைத் தொளிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, நாலுமுக்கு வீடுகள் சிலவற்றை தேடிப்போய் பார்த்தேன். அவைகளில் காணப்படும் அழகுகளுக்காகவும், குமரி மாவட்டத்தில் அவ்விதமான வீடுகள் அனேகம் உள்ளதாலும் இந்த தேடுதல் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பவைகளாக இருந்தன. இவ்வகை வீடுகளில், நாடார்களின் வீடுகள் என்றால், பெரும்பாலும் பனை மரத்தடியில் தான் அதன் கூரைகளைத் தாங்கும் கழிகோல்கள் இருக்கும். நாயர் அல்லது நம்பூதரிகளின் வீடு என்றால் பிலா, அயினி போன்ற மரங்களாக இருக்கும். கூரையின் சரிவு முடியும் இடத்தில் பல்வேறு வளைவுகளை ஒன்றுபோல வளைத்து செய்து முடித்திருப்பார்கள். ஓரு சில இடங்களில் இந்த கழிகோல்கள் முடியும் இடங்களில் ஒரு துவாரம் இடப்பட்டிருக்கும். நீளமான பனை மரத்தடியினை சிறு கோல் என உருட்டி அதனுள் நுழைத்திருப்பார்கள். தச்சு வேலையின் உச்சம் என சொல்லத்தகுதியான ஒரு அமைப்பு இது. சுமார் 20 அடி நீலத்திற்கு எப்படி மரத்தினை உருட்டியிருப்பார்கள்? அதனை 20 கம்புகளுக்குள் நுழைக்கவேண்டுமென்றால் எத்துணை நேர்த்தியாக துளைகள் இடப்பட்டிருக்கவேண்டும்?

இரண்டாண்டுகளுக்கு முன்பு, நான் குமரி மாவட்டத்தை சுற்றிகொன்ண்டிருக்கும்போது அங்கே ஒரு தச்சு தொழிலாளியைப்பார்த்தேன். தனது தச்சுக்கூடத்தில் பனை மரத்தினை மட்டுமே கொண்டு செய்த ஒரு கட்டிலை விற்பனைக்கு வைத்திருந்தார். பல நாட்களாக அது விற்பனை செய்யப்படாமலே இருந்தது. அவர் பனை நார்க் கட்ல்களையும் நான் செய்வேன் எனக் கூறினார். ஒரு முறை அவர் பனை மரத் தடியினை எடுத்து வாச்சி கொண்டு உருட்டுவதைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடாலி தடிமனில், மண்வெட்டியைப்போல அமைக்கப்பட்ட அந்த கருவி மறைந்து வரும் ஒரு அரிய கருவியாகும்.  கூர்மையான மற்றும் எடைமிக்க ஆயுதங்கலே பனை மரத்தை பாகப்படுத்த பயன்படுத்தும் பாரம்பரிய கருவிகள்.

புத்தளம் திருச்சபையில் பனை மரத்தாலான தூண்கள் இருக்கின்றன என்கிற செய்தி சுமார் 20 வருடங்களுக்கு முன்பே என்னை வந்து எட்டியிருந்தது. பல முறை அந்த பகுதிக்கு நான் சென்றிருந்தாலும் திருச்சபைக்குள் சென்று அதன் தூண்களைப் பார்த்ததில்லை. 2018ஆம் அண்டு தான் நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் இணைந்து சென்றோம். அங்கே நான் பார்த்த தூண்கள் மிக பிரம்மாண்டமானவைகள். சுமார் 20 முதல் 25 அடி உயர பனை மர தூண்கள் 8 எதிரெதிராக நின்றன. அத்தூண்களை தொட்டுப்பார்த்தால் அவைகள் ஏதோ வார்பித்து எடுத்தவைகள் போல காணப்பட்டன. இத்துணை அழகிய ஓர் வடிவம் சாத்தியமா என்கிற கேள்வி அனேகருக்கு எழலாம். ஆனால் அவைகள் சாத்தியமே என்பதனை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் தாண்டி இத்தூண்கள் முறுக்கியபடி நிற்கின்றன.

PR

தமிழ் பெண்கள் உலக்கை பிடிக்கும் காட்சி

2017 – 2019 வரையில் நான் தமிழகத்தில் தங்கியிருந்தபோது நுட்பமான பல பனை பொருட்களை நேரில் கண்டிருக்கிறேன். குறிப்பாக நாகர்கோவிலைச் சார்ந்த பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் தனது வீட்டில் ஒரு அழகிய ஆயுதம் ஒன்றை வைத்திருந்தார்கள். கோடாரி போன்ற வடிவில் காணப்படும் அந்த பழங்கால ஆயுதம் பனை மர கைப்பிடி போடப்பட்டிருந்தது. அவ்விதமாகவே பூக்கடை என்ற பகுதியில் பனை மரங்களை வெட்டி சீர் செய்துகொண்டிருக்கும் தொழிலாளி பயன்படுத்தும் வாச்சி என்ற கருவியின் பிடியும் பனை மரத்தில் இடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இவைகள் எப்படி நுட்பமாக அமைக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை எனினும், அவைகள் மிகுந்த அனுபவத்தின் வாயிலாக பெறப்பட்ட ஒரு அறிவு என்கிற உறுதி எனக்குள் மேலெழுந்து வந்தன.

மார்த்தாண்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகிய ஒரு ஆசாரி உண்டு. அவரிடம் பனை சார்ந்த எனது கேள்விகளை வைக்கும்பொது அவர் கூறியவைகள் சற்றே எனது சித்தனையை தூண்டுவதாக அமைந்தது. பனை மரங்களை சீராக்கும் உளிகளைக் கையாளும் ஆசாரிகள் இல்லை. அப்படியே, பனைக்கென பயன்படுத்தும் உளிகளைச் செய்யும் நுட்பம் அறிந்த கொல்லர்களும் இல்லை என்றார். இல்லை என அவர் சொன்னதன் பொருள் இல்லவே இல்லை என்பதாக அல்ல என்றே நான் புரிந்து கொண்டேன். அவர்கள் அருகிவிட்டார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது ஒருவரின் நேரத்தினைக் கோரும் ஒரு வேலை. மேலும் அவர் கூறுகையில், பனை மரத்தினை முறிக்கையில் மூன்று துண்டுகளாக வெட்டுவார்கள் என்றார். பனை மரங்களை முறிக்கையில் அவர்களோடு நின்று நான் பார்த்த வரையில், மேற்குறிய கூற்று உண்மைதான் என்பது புலனாகியது. இந்த மூன்று தூண்டங்களில் அடிப்பாகமும் மேல் பாகமும் கட்டுமான பணிக்கென எடுப்பது சிறந்த பலனைத் தராது என்பதே புரிதல் என்றார். மேல் பகுதியில் உள்ள தூன்டு சரியான விளைச்சல் இருக்காது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளுவோம். ஆனால் கீழ் பகுதி ஏன் தவிர்க்கப்படுகிறது? அதனை அவர் விளக்கிய விதம் பாரம்பரிய அறிவின் தேவை நமக்கு வேண்டும் என்பதற்கான சான்று.

கருகருவென்று ஆல் நிறைந்து காணப்படும் அடிமரம், முழுவதும் பயன்பாடு அற்று இருக்கும் என்பது அல்ல, அதனை பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஆல் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் வெள்ளை நிறைந்தும் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, இந்த வெள்ளைப் பகுதிகள் உதிர்ந்துபோய் ஆல் மட்டுமேயான ஒரு தொகையாக இது மாறிவிடும். அப்படி அது பலமிழக்கும். ஆகவே இதனை அறிந்தோர் கீழ் பகுதியினை பயன்படுத்த மாட்டார்கள் என்றார். பேராசிரியர் வேத சகாயகுமார் அவர்கள் இதனையே சிறு தும்பு பனை மற்றும் பெருந்தும்பு பனை என விளக்கமளிப்பார்.

Palmyra Wood

பனை மரத்தில் செய்யப்பட்ட சிறிய இடிக்கும் இயந்திரம் – கம்போடியா

உலக்கைகள் வெறுமனே நெல் குத்துவது மற்றும் மாவிடிப்பது போன்ற காரியங்களுக்கு மாத்திரம் பயன்படவில்லை அவைகளை பல்வேறு தன்மைகளில் நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்தனர். குறிப்பாக, கர்பிணி பெண்கள் உலக்கையினைக் கொண்டு மாவிடிப்பது அவர்கள் உடலுக்கு ஏற்ற ஒரு பயிற்சியாக இருந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்த பின்பு தொட்டில் இடுபவர்கள் உலக்கையினை பயன்படுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் ஓணப் பண்டிகையின் போது உலக்கையினை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடுவது பொதுவான வழக்கம். அப்படியே உள்ளங் கால்களில் ஏற்படும் பிறழ்வுக்கு உலக்கையில் நின்று உருட்டினால் அது சரியாகும் என்று நம்பப்படுகிறது. உலக்கை மண்டையை உடைக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெகு சமீபத்தில் ஒரு நண்பர் பண்ணி அடிக்க பனை மர உலக்கையைத்தான் பயன்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.  உலக்கை சார்ந்து இன்னும் பல அரிய தகவல்கள் இருக்கலாம். நான் இத்துடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்.

உலகம் முழுவதும் ஒரு காலத்தில் தானியங்களின் தோலை நீக்கவும் அவைகளை மாவாக மாற்றவும் உலக்கை பயன்பட்டிருக்கிறது. உலக்கையின் வடிவம் மட்டுமல்ல உலக்கை தனித்திராது எனும் அளவிற்கு அதனுடன் இனைந்து வருவது உரல் தான். பனை மரத்தின் வெட்டிய அடிபாகம் சிறுக சிறுக இடித்து பள்ளம் ஏற்பட்டிருந்தால் அது கண்டிப்பாக ஒரு உரலுக்கு ஏற்ற வடிவம் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் கம்போடியா சென்றபோது பனை மரத்தில் தான் மசாலா பொருட்களை இடிக்கும், கைகளால் எடுத்துச் செல்லும் உரல் உலக்கை மாதிரியினை பனை மரத்தில் செய்து வைத்திருந்தார்கள்.

இவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், பனை மரத்தில் ஒரு உலக்கை பயன் பாட்டில் இருந்திருக்கலாம் என்ற எனது எண்ணத்தை வலுப்படுத்தின.  எனது மனைவியிடம் இது நான் குறித்து பேசியபோது அவர்கள் தனது சிறு வயது ஞாபகத்தில் பனை மர உலக்கையினையே தாம் பயன்படுத்தியதாக கூறினார்கள். இப்படி ஒரு வழியாக எனது தேடுதல் ஒரு முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால் உலக்கை என்பது பனை மரத்தடியில் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.   அதனை தேடி கண்டடையும் வாய்ப்பிற்காகவே இப்போது நான் காத்திருக்கிறேன்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 16

ஜனவரி 6, 2020

 

மாகாளி பனைகள் 

போர்த்துக்கீசியர்கள் மும்பை வந்த போது தங்கள் மத நம்பிக்கைகள் பரவுவதை தடுக்கவில்லை. இங்கே பல்வேறு ஆலயங்களை கட்டி எழுப்பினர். அவைகளில் ஒன்று தூய யோவான் ஆலயம், அந்தேரி. பல நாட்களாக இதனை பார்க்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது.

சமீபத்தில் செம்பூர் மார்த்தோமா சபை போதகர் அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்கள் என்னை ஒரு கண்காட்சி அமைக்க அழைத்தார்கள். அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்களை நான் 20 வருடங்களாக அறிவேன். ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற பகுதியில் எனது மூத்த சகோதரர் செல்சன் சாமுவேல் அவர்கள்  பணியாற்றியபோது, நான் அங்கே சென்றிருந்தேன். வேறு சீர்த்திருத்த திருச்சபைகளே இல்லாத இவ்விடத்தில், அண்ணன் பாரம்பரிய மார்த்தோமா திருச்சபைக்கு செல்ல ஆரம்பித்தார். அதற்கு காரணம், ஒன்று திருச்சபை செல்லாமல் இருப்பது எங்களுக்கு இயல்வதல்ல, இரண்டாவதாக போதகர் ஜாண் ஜார்ஜ் அவர்களின் அன்பு தான். அண்ணன் மீது மீகுந்த அன்பும் பிரியமும் கொண்ட போதகர் அவர்களுக்கு என்னையும் பிடித்துப்போனது. நான் அகமதாபாத்தில் பணியாற்றியபோது அவரும் அங்கே பணியாற்றினார். அங்கே ஒரு பனை சார்ந்த ஒரு கண்காட்சியினை நடத்த எனக்கு ஒரு வாய்ப்பளித்தார். அந்த வேளையில் தான் நான் முதன் முறையாக மனித முகங்களை பனை ஓலைகளில் வரைந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். அவரது படத்தினை நான் பனை ஓலையில் செய்தேன், மிகவும் மகிழ்ந்து போனார்.

10929190_868772706515106_3659866482275997553_n

போதகர் ஜாண் ஜார்ஜ் – பனை ஓலையில்

மீண்டும் அவர் மும்பை வந்தபோது என்னை அழைத்தார், அப்போது நான் குமரி மாவட்டத்தில் இருந்ததால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த வருடம் என்னிடம் அவர் அழைத்துக் கேட்டபொழுது, என்னால் மறுக்க இயலவில்லை. ஆனால் ஓலையில் படம் செய்ய என்னிடம் போதுமான நேரம் இல்லை. ஆகவே, நான் அவரிடம் 20 படங்களை மட்டும் கொண்டு வருவதாக கூறினேன். நாட்கள் நெருங்க நெருங்க, என்னால் அத்தனை படங்ளையும் செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. ஆகவே எனது கர்த்தில் இருந்த பழைய படங்களை தேடியெடுத்தேன். 4 படங்கள் கிடைத்தன. போதகரிடம் இரண்டு படங்கள் இருப்பது எனக்குத் தெரியும், நான் 10 படங்களைச் செய்தேன். மொட்தம் 16 படங்கள் வந்தன. எனது சகோதரியிடம் எனது படங்கள் எப்போதும் இருக்கும் ஆனபடியால், அவர்களைத் தேடிச்சென்றேன். அவர்களிடம் 2 படங்கள் இருந்தன. படங்களை வாங்கச் சென்றபோது, அவர்களிடம் தூயா யோவான் ஆலயம் குறித்து கேட்டேன், அதற்கு அவர்கள், அந்த இடம் அந்தேரி கிழக்குப் பகுதியில் இருப்பதாக கூறீனார்கள். அந்தேரி கிழக்குப் பகுதியானது எனது வீட்டிலிருந்து செல்வது தான் எளிது. ஆகவே உடனே அங்கிருந்து புறப்பட்டேன்.

தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், ஏசு சபையினரால் 1579ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆலயத்தை ஒட்டியே ஒரு கல்லறைத்தோட்டமும் அமைக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டு இப்பகுதிகளில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் இங்கிருந்த மக்கள் புகலிடம் நோக்கி தப்பியோடினர். அன்று அருட்தந்தை. ஜோஸ் லோரன்கோ பயஸ் (Fr. José Lourenço Pais) அருகிலிருந்த மரோல் என்ற பகுதிக்கு திருச்சபையை இடம் மாற்றினார். திருச்சபையின் தூண்கள் மற்றும் திருமுழுக்கு தொட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த ஆலயம் அதன் பிற்பாடு கைவிடப்பட்டது. தாவரங்கள் இதன் மீது பற்றிப்பிடித்து ஏறின. ஒரு பேய்தொற்றம் இவ்வாலயத்திற்கு உருவானது. அனேக பேய்க்கதைகள் இதனுடன் இணைத்து கூறப்பட்டன. 2003 ஆம் ஆண்டு இவ்வாலயத்தினை அன்றைய மஹாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் அருட்தந்தை. ரோட்னேய் அவர்களிடம் கையளித்தார். வருடம் தோறும் இவ்விடத்தில் உள்ளூர் பொதுமக்கள் வழிபடும் சடங்கு மட்டும் இன்றுவரை தொடர்கிறது.

SEEPZ_church_4

சிதிலமடைந்த தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், அந்தேரி

வீடு வந்து சேர்ந்தவுடன் எனது திருச்சபை வாலிபர்கள் குழு தலைவர் தம்பி தாமஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அந்தேரி கிழக்கு பகுதியில் ஒரு பழைமையான ஆலயம் இருக்கிறது பார்க்கச் செல்லுவோமா எனக் கேட்டேன். வருகிறேன் என்றார். அவர்களை எனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றியபடி அந்த இடத்திற்குச் சென்றோம். சீப்ஸ் என்ற அந்த இடத்திற்குள் நாங்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த காவலர்கள், வெளியே நின்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றனர். 15 – 20 அடி உயர கோட்டை சுவற்றுக்குள் என்ன இருக்கிறது என எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு வாசலில் 440 வருடங்களுக்கு முந்தய ஆலயம் என்கிற ஒரு அறிவிப்பு தொங்கிக்கொண்டிருந்தது. கதவின் இடுக்கில் சென்று பார்த்தபோது அவ்வாலயம் இடுபாடுகளாக கைவிடப்பட்டு நிற்பதையும் அதன் மேல் மேல் பசுங் கொடிகள் பின்னி செல்லும் காட்சி தெரிந்தது. சூற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றனவா எனப் பார்த்தேன். ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் நான் வானத்தைப் பார்த்தபோது ஒருசில வவ்வால்கள் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன. வவ்வால்கள் பனை மரத்துடன் நெருங்கிய தொடர்புடையவைகள் என்பதால் நான் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வவ்வால்கள் பதனீர் மற்றும் கள் இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுபவை. ஆகவே பனையேறிகளுக்கு வவ்வால் மிகப்பெரிய அளவில் தொந்தரவு கொடுப்பவை தான். எனக்குத் தெரிந்து வவ்வால் பதனீரைக் குடித்து விடாமல் இருப்பதற்கு பனையேறிகள் பல்வேறு வழிகளைக் கையாள்வார்கள். குறிப்பாக ஓலைகளை மடித்து ஒரு புத்தகம் போக மாற்றி அதனை பானையின் வாயில் அழுத்தி வைத்துவிடுவார்கள். அல்லது வலைகளை இட்டு பானையினை மூடி பாதுகாப்பார்கள். வவ்வால் பதனீரை மாத்திரம் அல்ல பனம் பழங்களையும் சாப்பிடும். வவ்வால்கள் குறித்து எவ்வளவு எதிர்மறை கூறுகள் இருந்தாலும், பனையேறிகள் அவைகளை கொல்வது அபூர்வம் தான். அதுவும் ஒரு உயிர்தானே என்கிற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கியிருக்கும்.  ஒரு முறை வவ்வால் ஒன்று கலய கண்ணியில் மாட்டிக்கொண்டபோது அதனைக் காப்பாற்றியதாக கூறிய பனையேரியின் விவரிப்பு நெகிழ்ச்சியானது. மகரந்த சேர்க்கைக்கு வவ்வால்கள் மிக முக்கிய காரணிகள் தாம். இவைகளை நம் பெரிதாக கவனிப்பது இல்லை.

சீப்ஸ் என்ற இந்த இடம் இன்று மக்கள் செறிவுமிக்க ஒரு நகர்பகுதி. ஆனால் ஆரே பால் குடியிருப்பு இதன் பின்னால் தான் இருக்கிறது. இங்கே இத்தனை அவசரமாக ஏன் வந்தேன்? பனை மரங்களைக் காணாதபோது இத்துணை மனசோர்வுக்கு நான் ஏன்  உள்ளாகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. நாங்கள் நிற்கும் பகுதியினை நான் வேறு ஒரு தருணத்தில் கடந்து சென்றிருக்கிறேன். மாகாளி குகை சாலை செல்லும் வழி தான் இது. அப்படியானால் காளி குகை இங்கே இருக்கிறதா? அதை பார்க்கவேண்டுமே என்ற எண்ணம் நிலைபெற்றது.

பனை மரமே காளி தான் என தென் தமிழகத்தில் சொல்லப்படுவதுண்டு. பனையேறுகிறவர்கள் காளியின் பிள்ளைகள். காளி வழிபாடு கிபி 600 ஆம் ஆண்டுகளில் தலை தூக்குகின்றது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படியானால் காளி வழிபாடு அதற்கு முன்பே இருந்து வந்த ஒரு வழிபாட்டு முறைமையாக இருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். பவுத்தம் விரிந்து பரவியபோது காளி வழிபாடுகள் சற்றே பின்னகர்ந்து மீண்டும் மழைக்குப் பின் முளைக்கும் புல் என எங்கும் வியாபித்திருக்கலாம் என கருதுகிறேன்.

மும்பைக்கும் காளிக்கும் உள்ள தொடர்பை எப்படி இணைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே பனை மரங்கள் இருக்கின்றன. எனது தேடுகையில் இன்னும் ஒரு சில இடங்களில் காளி தொடர்பான வேறு தடயங்கள் ஏதும் கிடைக்கலாம். ஆகவே அருகிலிருந்தே தொடங்க இவ்விடம் ஏற்றது என எண்ணி அங்கிருந்து எனது வாகனத்தை திருப்பினேன். நாங்கள் மாகாளி குகை செல்லும் வழியில் ஆங்காங்கே பனை மரங்கள் கண்ணில் பட்டபடியே வந்தன. மாகாளி குகை செல்லும் வழி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில்  7 பனை மரங்கள் ஒருங்கே நின்றன. சுற்றியிருக்கும் அனைத்து இடங்களும் நெருக்கமான நகர்புறப்பகுதி தான்.

நாங்கள் செல்லும் இடத்திற்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன் ஓரிடத்தில் வாகனம் வளைந்து நெளிந்து மேடேறி செல்லுகையில் ஒரு பிரம்மாண்டமான பனை மரத்தைப் பார்த்தேன். நகர் பகுதியானதால் பேருந்டுகளும் பல்வேறு வாகனங்களும் நெருக்கியடித்துச் செல்லும் அந்த சாலையில் எனது கண்களை பனை ஈர்த்துக்கொண்டது அதற்கே உரிய பேரழகால் தான். காய்கள் சிறிதிலிருந்து பெரிதாக பருவம் அடையும் வரைக்கும் அவைகள் ஒவ்வொரு தரத்தில் இருந்தன. காளியே உருவெடுத்து வந்து நின்றதுபோல்  ஓர் அழகும் அம்சமும் அதில் கூடியிருந்தது. இந்த பிரம்மாண்ட அழகு, தன்மை, வடிவங்கள், பேருரு மற்றும் காலம் தாண்டிய காய்ப்பு, போன்றவைகள் ஒரு அமானுஷ்ய தன்மை கொண்டதாக அந்த மரத்தை  வெளிப்படுத்தியது. மிகவும் நெருக்கடியான சாலையில் எனது வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாக செல்லவோ இடமளிக்காத அந்த இடத்தில் எனது கண்கள் சாலையின் அருகிலிருந்த அந்த மரத்தை சில வினாடிகள் கூர்ந்து பார்த்தது எனது வேட்கையினால் மாத்திரம் அல்ல. காளி தன்னை வெளிப்படுத்திய ஒரு ஆக்கிரோஷ தருணம் என்று தான் அதைச் சொல்லுவேன். காய்ந்த ஓலைகள் இரத்த விடாய்கொண்ட நாக்குகள் என அசைந்தபடி நின்றிருந்தன.

அதன் பின்பு பனை மரங்கள் கண்ணுக்கு பட்டபடியே  வந்தன. நாங்கள் மாகாளி குகைகளுக்கு முன்பாக வண்டியை நிறுத்தியபோது தாமஸ் அருகில் சென்று விசாரித்து வந்தான். குகைகளுக்கு உள்ளே செல்ல இனிமேல் வாய்ப்பு இல்லை, ஆனால் மாகாளி கோயில் அருகில் தான் இருக்கிறது என்றான். மாகாளி கோயில் செல்லும் வழியில் இரண்டு பனை மரங்கள் நின்றன. மிக பழைமையான மரங்கள். மாகாளி கோவில் வளாகத்தில் தென்னை மற்றும் பல்வேறு மரங்கள் இருந்தாலும் பனை மரங்களைக் காண முடியவில்லை. அனால் உள்ளே நுழைத்தபோது நான் கண்ட காளி சிலையானது பனைக்கும் காளிக்கும் உள்ளதொடர்பை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.

மாகாளி குகைகளுக்குள் என்னால் நுழைய இயலாவிட்டாலும், வெளியே இருந்து  பார்க்கையில் ஒருசில குகைகளின் தோன்றம் தெரிந்தன. பவுத்த சாயல் வெளிப்படையாக தெரியும் இவ்விடங்களின் அருகில் ஒரு பனை மரம் நிற்பதை பார்த்து குதூகலித்துவிட்டேன். நாங்கள் நிற்கும் பகுதியானது சுற்றிலுமிருக்கும் மற்றெல்லாப் பகுதிகளை விடவும் உயர்ந்த ஒரு நிலப்பகுதி. பார்க்கையில் பவுத்தர்கள் தங்குமிடங்களின் சாயல் வெளிப்பட்டப்படியே இருந்தன. இப்பகுதிகளில் பனை மரங்களைக் காண்பது ஒரு முக்கிய குறியீடாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் பனை மரங்கள் பெருமளவில் பவுத்தர்களின் வாயிலாக பரவப்பட்ட மரம் என்ற கருதுகோள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இதனை அழுத்தி கூறுவார்கள். அதற்கான காரணங்கள் அனேகம் உண்டு.

முக்கிய காரணமாக நான் கருதுவது, பனை ஓலை பயன்பாட்டின் முக்கியத்துவம் தான். உலகமெங்கும் எழுத்து என்பது தோல்களில் எழுதி பாதுகாக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இக்காலங்களில் இந்தியாவில் மட்டும் எழுத்துக்கள் பனை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஏன் என்றால் பவுத்தம் கொல்லாமையை முன்னிறுத்தியது. மாத்திரம் அல்ல அது தன்னை விரிவு படுத்தும் நோக்கோடு இலக்கியங்களை பகிர துவங்கியது. இச்சூழலில் பனை ஓலைகளே பவுத்த புரிதலுக்கு ஏற்ற வகையில் இலக்கியங்களை ஒருங்கிணைக்க உதவின. கொல்லாமையினை வாழ்வியல் நெறியாக கொள்ளும் ஒரு சமயம் பனை மரத்தினை தங்கள் மரமாக ஏற்று அதனை பரவலாக்கியிருக்க வளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

IMG_5909-1024x682

மாகாளி குகை பகுதிகளில் காணப்படும் பனை மரங்கள்.

அங்கிருந்து வெளியே வந்தபோது ஓரிடத்தில் மலை உச்சியிலிருந்து பார்க்கும் தோதான ஒரிடம் கண்ணில் பட்டது, நானும் தாமசுமாக அந்த இடத்தில் வந்து நின்று பார்த்தோம். ஆங்காங்கே பனை மரங்கள் உயர்ந்து எழுந்து நின்றன. பனை சார்ந்த ஒரு சூழியல் அமைப்பு இங்கே இருந்திருக்கின்றன என அவை அறுதியிட்டுக் கூறின. நான் எனக்குள் மென்மையாக புன்னகைத்துக்கொண்டேன். என்னால் சரிவர சொல்ல இயலாத எதோ ஒன்று என்னை இப்பெருநகரத்துடன் பிணைத்திருப்பதை எண்ணிக்கொண்டேன். ஆம் அதைத் தேடுவது தான் எனது வாழ்க்கை என எனக்கே சொல்லிக்கொண்டேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653


%d bloggers like this: