Archive for பிப்ரவரி, 2020

கள் விடுதலைப் போராட்டம் 4

பிப்ரவரி 17, 2020

கள்ளும் பதநீரும்

கள் இறக்குவதற்கும் பதனீர் இறக்குவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை குறித்த புரிதல் நமக்கு வேண்டும். இரண்டு பானங்களுமே பனை மரத்திலுள்ள பாளைகளில் இருந்து பெறப்படுபவை தான். பாளையிலிருந்து சொட்டுகின்ற நீரானது, புளிப்போ இனிப்போ இன்றி நுங்கில் காணப்படும் ஒரு மென் சுவையோடு இருக்கும். எப்போது பாளையிலிருந்து பானைக்குள் இந்த நீர் விழுகிறதோ அப்போதே அது காற்றில் உள்ள இயற்கையான நுண்ணுயிரிகளுடன் இணைந்து வேதியல் வினை புரிந்து நொதிக்க ஆரம்பிக்கும். வெயில் ஏற ஏற இதன் தன்மை புளிப்பும் கடுப்புமாக மாறிவிடும். இது இயற்கையான ஒரு செயல்பாடு. ஆனால் இந்த கள் இறக்குவதில் பனையேறிகள் ஒரு குறையினை கண்டுணர்ந்தனர். கள் நொதிக்கும் வேகம் மிக தீவிரமாக இருப்பதால், அதன் புளிப்பு சுவைக் கூடி, ஒரு நாள் ஆகிவிட்டால் குடிக்க இயலாததாக  மாறிவிடுகின்றது.  அவைகளைக் கொண்டு பெரிய பயன் இல்லை. ஆகவே வெளியே கொட்டிவிடுவார்கள். குடியின் மீது தீரா விருப்பு கொண்டவர்களுக்கு, இவ்விதம் புளிப்பு நிறைந்த கள் மிகவும் தேவையாக இருந்ததினால், தயிருக்கு உறை வைப்பதுபோல் கள்ளிற்கும் உறை ஊற்றி புளிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விதம் உறை உற்றப்படாத கள் இன்சுவை கள்ளாக இருக்கும்.  அதனை போதை என்று சொல்லுவது தூயவாதிகளின் கூற்றாக எண்ணி புறந்தள்ள வேண்டியதுதான்.

கள் என்பது போதை அற்ற ஒரு பானம். மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறும்போது “கள்ளிற்கு போதை வருவது எப்போது? அது கடைக்கு வந்த பின்புதான்” என கேள்வி பதில் பாணியில் நமக்கு உண்மையினை போட்டுடைக்கிறார். இயற்கையாக கிடைக்கும் கள்ளில் இருக்கும் “போதையானது”  “கொட்டைப்பாக்கு வெற்றிலை போன்றவற்றை சேர்த்து குதப்பும்போது ஏற்படுமே அவ்விதமான ஒரு போதைதான் கள்ளிலிருக்கிறது” என்பார்.   நம்மூரில் வெற்றிலைக் குதப்பாத கிழவனும் கிழவியும் நமது கண்களுக்கு அனேகமாக புலப்படுவதே இல்லை. ஆசியாவின் முக்கிய காலாச்சார அடையாளங்களில் ஒன்று தாம்பூலம் சுவைப்பது. அப்படியானால் தாம்பூலம் சுவைப்பதை எவ்வகையில் புரிந்துகொள்ளுவது? போதைக்கு அடிமையானவர்கள் தாம்பூலம் சுவைக்கிறார்கள் என்றா? ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றா? மருந்திற்காக பயன்படுத்துபவர்கள் மருந்து கடைகளில் வெற்றிலையை பெற்றுக்கொள்ளட்டும் என்றா? நமது மரபை எதிர்க்கும் கேள்விகள் எங்கிருந்து எழும்பிகின்றன என எண்ணுவது நல்லது.

MegasthaniS

மெகஸ்தெனஸ்

குமரி மாவட்ட வனத்துறையில் பணியாற்றிய திரு.தங்கமரியான் அவர்கள் கூறும்போது, பனை மரத்தில் இரண்டு ஓலைகள் காற்று இல்லாவிட்டாலும் சந்தமெழுப்பியபடி இருக்கும். இவைகளை வெட்டி கள் கலயத்திற்குள் இட்டால், பெரும் போதை அளிக்கும் கள்ளாக அது மாறிப்போய்விடும் என்பார். மிடாலக்காடு பகுதியைச் சார்ந்த பனையேறும் போவாஸ் அவர்களிடம் இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது அவர் அதனை சிரித்துக்கொண்டே ஆமோதித்தார். ஆனால், அது ஒரு வழக்கமான முறைமை அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார். அபூர்வமாக நிகழும் ஒன்று மாத்திரம் அல்ல, பனையேறிகள் அவைகளை முதன்மைப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆகவே தான், இதனை பதப்படுத்தும் நோக்கோடு சுண்ணாம்பு கலந்து, கள்ளில் நடைபெறும் நொதித்தலை கட்டுப்படுத்தி பதனீராக மாற்றினார்கள். இன்சுவை பதனீரை காய்ச்சி எடுக்கையில் கிடைத்த கருப்புகட்டியினை நெடுநாள் சேகரித்து வைக்கும் நுட்பத்தினையும் கண்டடைந்தார்கள். இதன் காலம் குறித்த தரவுகள் நம்மிடம் சரியாக இல்லையெனினும், இதனை சைவர்களோ, இஸ்லாமியர்களோ அறிமுகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளது. பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் கூறும்பொது “கரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து செய்யப்பட்டதே கருப்புகட்டி. கரும்பு + கட்டி-யே புணர்தலின் நிமித்தமாக கருப்பு கட்டி ஆனது என்பார்”. மேலும் அவர் 17ஆம் நூற்றாண்டில் தான் கருப்புகட்டி காய்ச்சும் நுட்பம் தென் மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது என்றும் கூறுவார். இது அவரது மனப்பதிவு என்றாலும் அதனை மிகச்சரியாக நம்மால் மறுக்க இயலாது. ஆனால் கி மு 4 ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த மெகஸ்தெனஸ் என்கிற கிரேக்க பயணியும் புவியிலாளருமானவர், பாடலிபுத்திரம் வந்து இந்தியா குறித்து எழுதியிருக்கிறார். அவரது குறிப்புகளில், இனிப்பு கட்டிகள் குறித்த விவரணைகள் வருகிறதாக இலங்கையைச் சார்ந்த கோவோர் அவர்கள் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறுகிறார். மெகஸ்தெனஸ் ன் விவரணையில் வரும் படிகம் போன்று இருக்கும் “இனிப்பு கல்” “பனங்கற்கண்டு” அன்றி வேறாக இருக்கவியலாது என்பது அவரது துணிபு. அப்படியானால் கருப்பட்டி காய்ச்சும் நுட்பம் அன்றே தாராளமாக இருந்திருக்கும். கள்ளும் பதனீரும் வரலாறு முழுக்க இணைந்தே பயணித்திருக்கின்றன

நான் பார்த்த வரையில் எங்கும் பழங்குடியினர் கருப்பட்டி காய்ச்சும் நுட்பத்தினைக் கொண்டிருக்கவில்லை.  ஒருவேளை அப்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் கண்டடையும் நோக்கிலேயே நான் பயணித்து வருகிறேன்.

800px-Refreshing_palm_wine

ஆப்பிரிக்க பழங்குடியினர் கள் குடிக்க பயன்படுத்தும் சுரைக்குடுவை

நமக்கு பழங்குடியினர் வாழ்வில் இயல்பாக இருக்கும் ஒன்றின் மீதான ஒவ்வாமை எப்போதிருந்து ஏற்பட்டது?  திருவள்ளுவரின் ஆக்கங்களுள் கள்ளுண்ணாமை இடைச்சொருகலா என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.  என்னைப் பொறுத்தவரையில் கள்ளுண்ணாமை கடந்த இரு நூற்றாண்டுகளுள் ஏற்பட்ட ஒரு மாற்றம் தான்.  குறிப்பாக, பிரித்தானிய வருகையினை ஒட்டி, இவ்வித சிந்தனைகள் உழ்நுழைந்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து “கல்வி” கற்று வேலைக்கு செல்ல ஆரம்பித்த தலைமுறைக்கு கள் என்பது ஒவ்வாமை அளிக்கும் ஒன்றாக இருந்திருக்கும். பழங்குடியினர் வாழ்விலிருந்து நவீன வாழ்வு நோக்கி வந்த மனிதர்களிடம், காலத்திற்கு ஒவ்வாத ஒரு பழக்கம் இருப்பதை நவீன மனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே மிக உக்கிரமாக கள்ளிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.

அய்யாவழியினை தோற்றுவித்த முத்துகுட்டி சுவாமி எனும் ஆன்மீக மற்றும் சமுதாய தலைவர், பனைத் தொழிலை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தவர். அச்சூழலிலிருந்து அவர் ஒரு தெய்வீக நிலைக்கு மாறுகையில், “கள் உண்ணேன்” என்னும் நோன்பினை முன்னெடுக்கிறார். மாத்திரம் அல்ல, ஒருவருக்கும் கள் உண்ண கொடுக்கவும் மாட்டேன் என முடிவெடுக்கிறார். ஆன்மீக நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். அந்த நோன்பானது எவ்வகையிலும் நியதியாக பொது மக்களுக்கு வைக்ககூடாது என்பதே எனது எண்ணம். நோன்பிருப்பவர்கள் வேண்டுமானால் அவரவர் தேவைக்கேற்ப இவைகளை தெரிவு செய்யலாம்.

Cambodia

கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் ஆலயத்தின் அருகில் மூங்கில் குழாய்களில் கள் நிரப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

கள் இறக்குவது கூடாது எனும் எண்ணம் ஒரு பனையேறியின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அவரை நாம் நிற்பத்திப்பது சரியாகாது. ஆனால், பனையேறிகள் கள் தங்கள் உரிமை என்றே எண்ணி வந்திருக்கின்றனர். பனையேறிகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவே நமது குரல்கள் எழும்ப வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.  தனது வாழ்வை ஒரு பனையேறி எப்படி கட்டமைக்கவேண்டும் என விரும்புகிறானோ, அவ்விதமாகவே அது நிலைபெற வேண்டும். உலகெலாம் ஒரு நியதி இன்று ஏற்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின் அடையாளம் என எவைகள் காணப்பட்டனவோ அவைகள் திரும்பி மீட்கப்பட்டு வருகின்றன. நவீன வாழ்வு நோக்கி முன்னேற்றம் என சென்றவர்கள் அனைவருமே மரபு நோக்கி திரும்பி வருகின்றனர். அத்தனை பின் நவீனத்துவ அறிஞர்களும் தொல் பழமையில் ஊறிக்கிடக்கும் உண்மைகளை தேடிகொண்டு வந்து சேர்த்தபடி உள்ளனர். பெரும்பொருட்செலவில் பழைமைகளை மீட்டுக்கொண்டு வருகின்றனர். நாம் அந்த அளவிற்கு இன்னும் இழக்கவில்லை. ஒருவேளை மீட்கவே இயலாத இடத்திற்கு நம்மைத் தள்ள முற்படுகிறார்களா என்ன?

“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;”

அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்தை ஒட்டி, அவரது வள்ளன்மையை குறிக்கும் ஒவ்வையாரின் பாடல் இது.

பகிர்ந்து கொள்ள இயலாதபடி குறைவாகவே கள் இருந்தால், நான் நிறைவாக குடிக்கும்படி எமக்கு அதனைத் தருவான், ஒருவேளை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நிறைவாக கிடைத்தால், எனக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்வான் என பாடுகின்றார்.   சற்றே யோசித்து பார்க்கையில், கள் எப்போதும் நிறைவாக கிடைப்பது அல்ல, எனும் கருத்து உட்பொதிந்திருக்கிறதைக் காணமுடியும், கூடவே அரசனும் கவிஞர்களும் விருந்தினர்களும் போற்றும் ஒரு உணவாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. விருந்தினருக்கு கள் படைக்கும் விருந்தோம்பல் தானே புகழப்பட்டிருக்கிறது? மருந்தா விருந்தோம்பலின் இலக்கணம்? நமது பாரம்பரியத்தில் உணவே மருந்தாக இருந்திருக்கிறது.

பனை சார்ந்த எனது பயணத்தில், இந்தியாவில் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றே உணர்ந்துகொண்டேன். அல்லது அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை அவர்களால் வெற்றிகரமாக நிறுவ இயலவில்லை என்பதே பொருள். குறிப்பாக இஸ்லாமியர்கள் கோலோச்சிய ஆந்திர பகுதிகளில் இன்றும் கள் விற்பனை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. மாத்திரம் அல்ல அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மட் கலங்கள் கூட இஸ்லாமிய கூஜா வடிவினை ஒத்து இருப்பதைப் பார்க்கும்போது, எவ்வகையில் கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை கடந்து நமது கரத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியும். இலங்கை சென்றிருக்கும்போது கூட, அங்கே கொடுக்கப்படும் கள் மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை (சீன கிண்னங்கள்) ஒத்திருந்ததை கண்டுகொண்டேன். மூங்கில் களிகளில் கள் குடிக்ககொடுப்பது கிழக்காசிய வழக்கம், அப்படியே சுரைக்குடுவையில் குடிக்க கொடுப்பது ஆப்பிரிக்க வழக்கம். தத்தமது சூழலில், கண்டங்கள் கடந்து பனங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கையில்,  தமிழகத்தில் மட்டும் இந்த தடைக்கான காரணம் என்ன என எவரேனும் சொல்ல மாட்டார்களா என்கிற கேள்வி நம்மைக் குடைந்துகொண்டே இருக்கிறது. இக்கேள்விக்கு விடைகள் மழுப்பலாகவே நம்மை வந்தடைந்துகொண்டிருக்கின்றது.  வாழ்வில் இத்துணை பண்பாடுகளுடன் இணைந்து வரும் கள்ளை தமிழகம் புறக்கணிப்பது, சற்றும் ஏற்புடையாதாக காணப்படவேயில்லை.

telengana toddy

தெலுங்கானாவில் கள் விற்பனை செய்யும் கூஜா

மர வழிபாடு உட்பட நாட்டார் வழிபாடுகள் பல்வேறு வடிவங்கள் கொண்டவை. பனையேறிகள் உட்பட பல்வேறு மக்களினங்கள் கள்ளினை சாமிக்கு படைக்கும் முறைமையினை தமிழகத்தில் கொண்டிருந்தார்கள். அவர்களின் வாழ்வில், வழிபாட்டில் நமது சட்டங்கள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது, அதற்கு ஒரு சிலர் துணை நிற்பதை அறியும்போது, எவ்வகையில் இவைகளை நாம் எடுத்துக்கொள்ள முடியும்? நமது வழிபாட்டு முறைமைகள் என்பவை தொல் அடையாளங்களின் எச்சம். அவைகளை துடைத்தெறியும் சட்டங்கள், நமது பண்பாட்டு அலகுகளை அழிக்கின்றன. இவ்வித செயல்பாடுகள் நமது கலாச்சாரத்துடன், நமது தொழில், நமது சூழியல், நமது திறன்களை மழுங்கடிக்கும் நோக்கு கொண்டவை. இவைகள் கண்டிப்பாக பன்னாட்டு வணிக சுமைகளை நம்மேல் திணிப்பவையாகவே மாறிவிடும்.

குமரி மாவட்டத்தில் ஈசன்தங்கு என்ற இடத்தில் ஒரு கோவில் உண்டு. இக்கோவிலில் இரண்டு விழாக்கள் முக்கியமாக நிகழும். ஒன்று கார்த்திகை மாதம் நிகழும் சொக்கப்பனை, மற்றொன்று பனை மரத்திலிருந்து கள் இறக்கும் பங்குனி திருவிழா. பங்குனி மாதம் குமரி மாவட்டத்தில் பதநீர் / கள் முடிவுக்கு வரும் சமயம். இங்கிருந்து நெல்லை மற்றும் பிற பகுதிகளுக்கு பனையேறிகள் தங்கள் தொழில் நிமித்தமாக புலம்பெயரும் காலகட்டம். இச்சூழலில், ஒரே நாளில் பனை ஏறி கலயம் கட்டி அன்று மாலையே கள் இறக்கி அன்று தானே சாமிக்கு படைக்கும் இந்த வழிபாடு, மிக முக்கியமானது. ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனது இறை நம்பிக்கையுடன் அவனது உணவு கலாச்சாரம் எப்படி இணைந்து முயங்கி இருக்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. இந்த வழிபாட்டு முறைமை அடிபடும்பொழுது, பனை ஏறும் திறன் இல்லாது போய்விடும். அது சார்ந்த மக்களின் நம்பிக்கையும் மாற்றமடையும், நமக்கு நமது முன்னோர் ஒரே நாளில் கள் எடுக்கும் திறனை கற்றுக்கொடுத்த ஒரு சடங்கு மறைந்தே போய்விடும். ஒன்றை இழப்பதினூடாக நாம் ஒட்டுமொத்தமாக இழக்கிறோம் என்பது குறித்த புரிதலை நாம் அடையாததுதான் தற்போது நிலவும் பிரச்சனை பிரச்சனை.

தமிழகத்தில் கள் குறித்து யாரும் ஆய்வு செய்திருக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. கேரளாவில் இறக்கும் தென்னங்கள்ளில் ஆய்வு செய்தவர்கள், புதிதாக இறக்கப்பட்ட கள்ளில் சுமார் 0.2% எனத் துவங்கி 24 மணி நேரம் கடக்கும்போது 4.5% என்ற அளவில் வந்து நிற்கிறது என பதிவு செய்கிறார்கள். 24 மணி நேரத்திற்கு பின்பு இவை இன்னும் கூடுதல் போதையாகுமே என்று சிலர் எண்ணலாம். அது தான் இல்லை, அதன் பின்பு அது காடியாக (Vineger) மாறிவிடும்.

ஆகவே பனையேறிகள் மிக தெளிவாக இருந்தார்கள். அன்றாட தேவைகளுக்கு எத்தனை கலயம் கள் போடுவது என்றும் தங்கள் சேமிப்பிற்காக எத்தனை கலயத்தில் பதனீர் இடுவது என்பதும் அவர்கள் பட்டறிவின் வாயிலாக உணர்ந்திருக்கிறார்கள். அந்த விகிதத்தை அவர்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நாம் விடவில்லையென்று சொன்னால், அவர்களின் உரிமைக்குள் அனாவசிய தலையீடு செய்கிறவர்களாக இருப்போம். அதை செய்ய அரசு உட்பட எவரையும் அனுமத்திக்கலாகாது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

கள் விடுதலைப் போராட்டம் – 3

பிப்ரவரி 10, 2020

அறியாமை புரியாமை

“கள் இறக்கினால் பனை தொழிலாளர்களது வாழ்வு சிறக்கும் என்பது அறியாமை புரியாமை” என்ற பொன்மொழி நமக்கு கிடைத்திருக்கிறது. கள் இறக்கும் அனுமதியினால் பனையேறிகளுடைய வாழ்வு சிறக்கும் என்று நிறுவப்பட்டால், மேற்குறிப்பிட்ட கருத்தினை விளம்பிய பெருந்தகை கள் இறக்க முன்வருவாரா? இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், கொள்கை அளவில் அவர்கள் கள் இறக்க எதிரானவர்கள்.  இந்த கொள்கையே அவர்களை பனைத் தொழிலாளர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்துகிறது. நாங்கள் பனையேறிகளுக்கு துணை நிற்கிறோம் என்ற கூற்று ஒருவரின் வாயிலிருந்து வரவேண்டுமென்றால், அவர் பனையேறின் வாழ்வினை உய்த்துணர்ந்திருந்தாலன்றி அவ்விதம் சொல்ல இயாலாது.  ஆகவே சற்றும் உண்மையின் பால் நிற்கும் தகுதியற்று வறட்டு கொள்கை பிடிப்பு கொண்டவர்களின் கூற்றினை நாம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.

Kal 3

உண்மைக்குப் புறம்பான கொள்கை

எனது வாழ்வில் இரண்டு இடங்களில் கள் இறக்குபவர்கள் கருப்பட்டி காய்ச்ச கற்றுக்கொடுக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளேன். ஒன்று மஹாராஷ்டிரா மற்றொன்று குஜராத். இரண்டு இடங்களிலும் கருப்பட்டி செய்யத் தெரியாது என்கிற சூழலில், இம்முயற்சிகளை முன்னெடுத்தோம். நான் தனித்து நின்று செயல்பட்ட இடத்தில் தோல்வியும், குழுவாக இணைந்து செயல்பட்ட இடத்தில் வெற்றியும் கிட்டியது. இன்றும் மகராஷ்டிரா பகுதிகளில் உள்ள வார்லி பழங்குடியினருக்கு கருப்பட்டி செய்ய கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். தமிழகத்திலும் பனையேறிகள் கருப்பட்டி காய்ச்ச தொடர் ஊக்கத்தை அளித்துக்கொண்டுதானிருக்கிறேன். ஆனால், கள் இறக்குவதன் தேவை என்பது பனை சார்ந்த வாழ்வினை மேற்கொள்ளும் மக்களின் தெரிவு என்பதனையே எனது அவதானிப்பு தெரிவிக்கின்றது. கள் இறக்குவது என்பது பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை. பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை என்றவுடன், இவ்வார்த்தைகளுக்கு சாதி சாயம் பூச முற்படுகின்றனர்.

2015 – 16 ஆண்டு நான் மும்பையில் ரசாயினி என்ற பகுதியில் பனியாற்றிக்கொண்டிருந்தபோது, கள் இறக்கும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மற்றும், புலம்பெயர் பீகாரிகள் கள் இறக்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதற்கு முன்பே, மலாட் மட் பகுதியில், நாடார்கள் கள் இறக்குவதும், கோரே பகுதிகளில், கத்தோலிக்க குடும்பங்கள் பண்டாரி எனும் மகராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உதவியோடு கள் இறக்குவதும், வேறு சிலர் ஆந்திராவிலிருந்து ஆட்களை அழைத்து, பனங்கள் இறக்குவதையும் பார்த்திருக்கிறேன். ஆகவே, இவைகள் பனை மரம் சாதியைக் கடந்து பல்வேறு மக்களினங்கள் வாழ்வில் இணைந்திருக்கும் மரம் என்பதை என்னால் உணர முடிந்தது.

DSC_0212

மும்பையில் கள்ளிறக்கும் ஆந்திராவைச் சார்ந்த பனையேறி

மேற்கண்ட புரிதல்களை மனதில் வைத்து 2016 ஆம் ஆண்டு மே16 ஆம் தேதி, எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மும்பையிலிருந்து எனது சொந்த ஊரான நாகர்கோவிலை நோக்கி பயணித்தேன். 18 நாட்கள் நிகழ்ந்த இந்த நெடிய பயணத்தில், ஆந்திராவில் காணப்படுகின்ற பனை சார்ந்து வாழும் நாடோடிகள் குறித்த தகவல்களையும் அறிந்துகொண்டேன். எங்குமே பனையேறிகள், கள்ளுடன் இணைந்தே வாழுகிறார்கள். அவர்கள் வாழ்வில், போதை என்பது கள் அல்ல, அதற்காக வேறு சாராயம் காய்ச்சும் முறைமைகளை வைத்திருக்கிறார்கள்.

ஒருமுறை டாடா நிறுவனம் ஒரிசாவில் நடத்திய ஒரு கருத்தரங்கிற்குச் சென்று பனை சார்ந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அங்கு வந்திருந்த ஒரு பழங்குடியின வாலிபன் என்னை தொடர்புகொண்டு, நான் கோயா பழங்குடியினத்தைச் சார்ந்தவன், எங்கள் வாழ்வில் பனை இன்றியமையாதது என்றான்.  பல ஆச்சரியமான தகவல்களை அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார், அவற்றில் மிக முக்கியமானது கள்ளினை புளிக்கவைத்து அதிலிருந்து மிகவும் விலை குறைவான ஆனால் உயர் தரமான சாராயத்தை அவர்கள் பெருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. அப்படியானால், கள் என்பது போதைப் பட்டியலில் அல்ல, அது பழச்சாறுகளுக்கு இணையாகவே கையாளப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு நிகழ்ந்த எனது இலங்கைப் பயணத்தில், அங்கே கள் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கும் நிலையினை அறிந்துகொண்டேன். எப்போதுமே கள் அபரிமிதமாகவே கிடைக்கும். ஆகவே தான், வெறுமனே கள் மட்டும் எடுக்காமல் தேவைக்கு ஏற்ப பதனீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி பனஞ்சீனி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றது. இந்த உண்மையினை அறிந்ததால் தான், எஞ்சியிருக்கும் கள்ளினை வடிசாலைகளுக்கு எடுத்துச் சென்று அதனை சாராயமாக மாற்றும் நுட்பத்தினையும் இலங்கையில் கையாள்கிறார்கள். இவ்விதம் உள்ள சூழலில், பனை சார்த்து கிடைக்கும் மற்ற 75% பொருட்கள் கிடைக்காதே என அனேகர் அங்கலாய்ப்பது எனக்கு கேட்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவ்விதம் காணப்படும் ஒரு சூழலில் தான் பனை சார்ந்து அத்தனை தொழில்களும் பீடு நடை போடுகின்றன.

இலங்கையின் பனை சார்ந்த மையம் என்பது யாழ்பாணம் தான். யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சுமார் 360 கி மீ தொலைவு இருக்கும். இன்று மட்டக்களப்பு பகுதிகளில்  பெருமளவில் பனைத் தொழில் கிடையாது.   மட்டக்களப்பில் நான்  தங்கியிருந்த ஓரிடத்தில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருந்த போது காய்ந்த பனங்கிழங்கினை அவித்து ஒரு சில சாக்குகளில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எனது இலங்கைப் பயணம் முழுக்க அவைகளை நான் சுவைத்தும் சந்திப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தேன். கள் சீவும் இலங்கையில் எப்படி பனங்கிழங்கு சாக்குகளில் கட்டப்பட்டு மளிகைக்கடைகளில் கிடைப்பதாக இருக்கமுடியும்? இப்படி எண்ணுகிறவர்கள், ஒருபோதும் பனையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க இயலாது. இதனைத் தொடர்ந்து நான் யாழ்பாணம் சென்றபோது, பனங்கிழங்கு மாவு (ஒடியல்) விற்பனை செய்யுமிடத்தை அறிந்தேன். அங்குள்ள மிக முக்கிய பாரம்பரிய உணவு ஒடியல் கஞ்சி. மேலும், பனம் பழ ஜாம், பனம்பழ ரசம் போன்றவிகள் மிகவும் தாராளமாக கிடைக்கின்றன. பனம் பழத்தில் செய்யும் பணாட்டும் அங்கே கிடைத்தன. மட்டக்களப்பில் நான் பார்த்த பனை ஓலை தயாரிப்பான அலங்கார பூக்களின் அழகிற்கு இணையாக தமிழகத்தில் வேறு பொருட்கள் எவரும் இன்னும் செய்யத் துவங்கவில்லை. எனது பயணம் முழுக்க “நீத்து பெட்டி” என்ற புட்டு செய்யும் பட்டியினை நான் தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் செய்வதைக் கண்டேன். இப்படியிருக்க 75% பொருட்களின் பயன்பாடுகள் இல்லாமலாகிப்போய்விடும் என்ற புரளியினை கிளப்பிவிடுவதற்கான காரணம் என்ன என்கிற சந்தேகம் வலுக்கிறது.

குமரி மாவட்டத்தில், பனை மரத்தின் பயன்கள் மறைந்து போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்த ஆற்றாமையில் தான் இவைகளை பதிவிடுகிறேன். மார்த்தாண்டம், கோடியூர் ஆகிய சபைகளின் எனது தகப்பனார் போதகராக பணியாற்றிய வேளைகளில், ஆலய வளாகத்திலுள்ள பனைகளில் பனையேறிகள் வந்து பதனீர் இறக்கிச் செல்லுவார்கள். அவர்களிடமிருந்துதான் நாங்கள் வீட்டிற்கு தேவையான கள்ளினை வாங்குவோம். அப்போது கள்ளுக்கடைகள் இருந்த காலம். ஆனால், 1987ஆம் ஆண்டிற்குப் பின் அப்பா பணியாற்றிய ஜேம்ஸ்டவுண் திருச்சபையாகட்டும், சிறக்கரை பகுதிகள் ஆகட்டும், பனைமரங்கள் இருந்தும் மருந்திற்கும் பனையேறிகளை நாங்கள் பார்க்க இயலவில்லை. கள் இறக்க தடை ஏற்பட்டபின் பனையேறிகள் மீது காவல்துறையினர் அவிழ்த்துவிட்ட வன்முறை தான் இதற்குக் காரணம். இக்கொடுமைகளை தாங்கவியலாமல் சொற்ப காலத்திலேயே பனையேறிகள், இது தங்கள் தொழில் அல்ல என அதிலிருந்து விலகிவிட்டனர். காவல்துறையின் துப்பாக்கிகள்  கள் கலயங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. அலைக்கழிப்புகள், வசவுகள், பொருட்செலவு, மன உளைச்சல்  என எண்ணவியலாத துன்பத்திற்கு ஆட்பட்ட பனையேறிகளுக்காக “குமரியின்” குரல் எழும்பவேயில்லை. பல லட்சம் மக்களின் நன்மைகளை விட, கொள்கை பிடிப்புடன் பனையேறிகளை முற்றாக அழித்தவர்களின் பின்னால் நிற்க எவருக்கு மனமொப்பும்? சிலரது கொள்கைகள் மிகவும் உறுதியானவைகள். இவ்வித கொள்கைகள், எவன் செத்தால் நமக்கென்ன, எவன் “குடி” முழுகிப்போனால் நமக்கென்ன என்பதுதான் போலும்.

DSC01514

குமரி மாவட்டத்தில் அரிவட்டி செய்கிற பெண்

முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பனம்பழம் சாப்பிடுவது வெகு இயல்பானது. 95% பனை மரங்களில் பாளை சீவாத இன்றைய சூழலில், பனம்பழங்கள் எவ்விதம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், நாம் பார்த்திராத  டிராகன் ஃபுரூட், கிவி மற்றும் ஸ்டிராபெர்ரி போன்ற பழங்கள் தாராளமாக கிடைக்கின்றன, ஆனால் பனம்பழம் கிடைப்பதில்லை. பனம்பழம் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க உணவு என்கிற புரிதலே முன்வைக்கப்படவில்லை. நமது குழந்தைகள் படிக்கும் பாடதிட்டத்தில் கூட பனம்பழங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்க யாரை ஏமாற்றுகிறோம்?

தமிழகத்தில் பனையேறிகளுகுக் என ஒரு சுயாதீனம் இருந்த காலத்தில், பல்வேறு பொருட்கள் கிடைத்து வந்தன. தி இந்து தமிழ் திசை நாழிதழுக்காக நான் எழுதிய “கற்பக தரு” எனும் கட்டுரைத் தொடரில், பனை சார்ந்த பல்வேறு கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தியிருப்பேன். அவைகள் பனை மரம் எப்படி சாதி எனும் அமைப்பினைக் கடந்து, மனிதர் வாழ்வில் இயற்கையின் இசைவை கொண்டிருக்கின்றன என எடுத்துக்காட்ட சிறந்த உதாரணங்களாகும். அரிவட்டி செய்யும் குமரி மாவட்ட தலித் மக்கள், கடவம் செய்யும்  நாடார் இன பெண்கள், பிளா பெட்டி செய்யும் இஸ்லாமியர்கள், மஞ்சணப்பெட்டி செய்யும் விஸ்மகர்மா இல்லத்தரசிகள், கொடாப்பு செய்யும் இடையர்கள், சம்பு எனும் மழையணி செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கொட்டான்கள் செய்யும் செட்டி வீட்டு ஆச்சிகள், ஒமல் செய்யும் குமரிமாவட்ட கடற்கரை மீனவர்கள், பறி செய்யும் உள்நாட்டு மீனவர்கள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்துமே கடந்த 30 ஆண்டுகளில் வழக்கொழிந்து போனது ஏதேச்சையாக நடந்தது அல்ல. தமிழ் குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதல் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

கள் தடைக்கான காரணம் என்பது உள்ளங்கை நுங்கு போல் தெளிவாக நமக்குத் தெரிகிறது. அது மக்களை அரசால் கட்டுப்படுத்த இயலும் என்கிற மறைமுக எச்சரிக்கையை விடுக்கிறது. கலசங்களை உடைப்பது, கைது அரங்கேற்றம், காவல்துறை அச்சுறுத்தல் போன்றவை தொடர்ந்து நடைபெறவே பனையேறிகள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள தலைப்பட்டனர். அப்படியே ஒரு தலைமுறைக்குள் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று எவ்வகையிலும் அத்தொழில் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பு கருவியாக ஓர் இயக்கம் உருவாகியிருக்கிறது என்றால், தமிழர்களை எச்சரிக்கவேண்டிய தருணம் இது.

25% கள் வருமானம் மிச்சமிருக்கும் 75% வருமானத்தை கெடுத்துவிடுமா?  என பயப்படுகிறவர்களுக்கு இறுதியாக ஒரு தெளிவினை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பனை ஏறுவதே பனை காக்கும் முறைமை என்பதனை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறேன். இன்று பனை ஓலைகளில் குருத்தொன்றினை பெறவேண்டுமென்று சொன்னால் ரூ35 – 50/- வரை கொடுக்க வேண்டும். இன்று கிடைக்கும் குருத்தோலைகள்  பெரும்பாலும் பனை மரங்களை தறித்து  பெறப்படுபவைகளே. ஆகவே தான் மற்ற 75% பொருட்களுக்கான பேச்சு இன்று அடிபடுகின்றது. மொத்தத்தில் காலி செய்துவிடலாமே?  பனை பாதுகாப்பு வேடமணிந்து செய்யும் இப்பாதகச் செயலினை கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.

இயல்பு வாழ்கை என ஒன்று பனை சார்ந்த சமூகங்களுக்குள் இருந்தது. பதனீர் அல்லது கள் இறக்கச் செல்லும்போது பனை மரத்தினை பனையேறிகள் சுத்தம் செய்வார்கள். இச்செயல்பாட்டினால் ஒரே நேரத்தில்  கிட்டத்தட்ட 15 – 20 ஓலைகள் வரைக் கிடைக்கும். இவைகளில், காவோலைகள் எரிப்பதர்க்கும், சாரோலைகள் அதன் தன்மைகளைப் பொறுத்து, கூரை வேயவோ, பெட்டி மற்றும் கடவங்கள் முடையவோ பயன்படும். தங்கள் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் ஓலைகளை பனையேறிகள் கழிப்பதால், இவ்விதம் எடுக்கப்படும் ஓலைகளுக்கு பெருமளவில் விலை இருக்காது. குறைந்தபட்ச விலையினையே பனையேறிகள் நிர்ணயிப்பார்கள். ஆகவே, மூலப்பொருளின் விலை வெகுவாக குறையும் பனைத் தொழில் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு பெருகும்.

DSC_0220

மும்பையில் காணப்படும் கள் இறக்கும் மண் கலசம்

அப்படியானால் குருத்தோலைகள் எப்படி அன்றைய கால கட்டத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது?  பனைத் தொழிலாளிகள் பனை மரத்தில் கள் அல்லது பதனீர் இறக்கினால் அந்த மரத்திலிருந்து ஓலைகளை வெட்டுவது இல்லை (சுத்தம் செய்த பின்பு). ஆனால் சிறகுகளைக் கிழித்தெடுக்கும் ஒரு முறைமையினை அவர்கள் கையாண்டு வந்தார்கள். மிக லாவகமாக அவர்கள் கரத்தில் இருக்கும் கூர்மையான அரிவாளால் வலது பக்க சிறகினை கிழித்தெடுப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு அபூர்வமாகவே இதனைச் செய்வார்கள்.   மற்றபடி, குருத்தோலை என்பது வீடு கட்டுகிறவர்கள் முறிக்கின்ற பனை மரங்களில் இருந்து கிடைக்கபெறுபவைகளே. ஆகவே தான் அன்று பனைத்தொழில் மிக சரியான புரிதலுடன் கூடிய ஒரு தொழிலாக அதன் அத்தனை பாகங்களும் மிகச்சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக இருந்துவந்தது. இன்றோ பனை தொழிலை காக்கிறோம் என்று சொல்லி, பனை மரத்திலுள்ள குருத்தோலைகளை வாங்குவதற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணதுடன் செயல் படுகிறவர்கள், எப்படி பனை மரத்தினை பாதுகாப்பார்கள்?

அறியாமை புரியாமை என அகங்காரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துக்களை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். அது பனையேறிகளுக்கும் பனைக்கும் எதிராக முன்வைக்கப்படும் கோஷம். இவர்களின் வேஷம் கலையும்போது தான் பனையேறிகளால் மீண்டும் பனை சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்க இயலும். ஆகவே, கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். அது பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையானது. பனையேறிகள் தெளிவாகவே இருக்கிறார்கள். அறியாமையை விதைக்கும் தேவையற்ற ஆமைகளை பனை வாழ்வியலுக்குள் உழ்நுழைய விடாது இருப்பது அவசியம்.

“பொருந்தா கொள்கை கொண்ட தலைவர்களை  விட உண்மை சூடிய மனிதர்களே மேல்”.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

கள் விடுதலைப் போராட்டம் – 2

பிப்ரவரி 7, 2020

பனம்பாளை கூறும் உண்மை

பனை மரம் சார்ந்த அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களால் கள் குறித்த புரிதலை எவ்வகையிலும் எட்ட இயலாது ஆனபடியால் பனை சார்ந்த புரிதலையும் பனை சார்ந்து வாழும் சமூகத்தினரின் புரிதலையும் விரிவுபடுத்தி எழுத கடமைப்பட்டுள்ளேன். பனை சார்ந்த விழிப்புணர்வு புகைப்படங்களையும்  – பனை சார்ந்த புரிதலற்றவர்களின் பதிவுகளை புகைப்படமாக ஒப்புநோக்க இங்கே பதிவிடுகிறேன். சீர்தூக்கி பார்க்கும் தமிழ் சமூகம் அனைத்தையும் ஆய்ந்து பொருள் கொள்ளட்டும்.

பனை மரம் ஆண் பெண் என இரு தன்மைகள் கொண்டது. அதாவது தாவரவியலாளர்கள் ஆங்கிலத்தில் இதனை “Dioecious” என அழைப்பார்கள். இதனை தமிழில் இருபாற்கூறுகள் என்றும், பாலின தனிப்பாடு என்றும் கூறுவார்கள். புரியும்படியாக கூறவேண்டுமென்றால், ஆண் பனையில் ஏற்படும் பாளைகளிலிருந்து பதனீர் கள் போன்றவை கிடைக்கும் – நுங்கு அல்லது பனம்பழம் ஆண் மரங்களில் உருவாகாது. ஆகவே பனங்கிழங்கு அல்லது தவண் போன்றவைகளும் ஆண் மரத்திலிருந்து கிடைக்காது. பெண் பனை மரங்களில் இருந்து தான் பனம் பழங்கள் நுங்கு ஆகியவைக் கிடைக்கின்றன என்றாலும் பெண் மரங்களிலிருந்தும் பதநீர் மற்றும் கள் இறக்க இயலும். ஆகவே இரு மரங்களும் பதனீரோ கள்ளோ கொடுக்கும் தன்மையுடையவைகள் என்ற கருத்தை முதலில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

DSC_0204

பனம்பழங்கள் காய்த்துக்குலுங்கும் பெண் பனைமரங்கள்

பனை சார்ந்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மேற்கொண்ட Dr. T A. டேவிஸ் அவர்கள் பனையில் காணப்படும் இந்த இருபால்கூறின் விகிதத்தை 1:1 என குறிப்பிடுகிறார். அதாவது ஒரு ஆண் மரத்திற்கு இணையாக மற்றொரு பெண் மரம் இருக்கும் என தனது ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார். இவைகளை நாம் பொருத்திப்பார்க்கும்போது, தமிழகத்தில் இருக்கும் சரி பாதி மரங்கள் ஆண் மரங்களாகவும் மற்றொரு பாதி பெண் மரங்களாகவும் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படியானால், ஆண் மரங்களிலிருந்து கள் அல்லது பதனீர் எடுத்துவிட்டு, பெண் மரங்களில் இருந்து தேவையான பழங்களையும் கிழங்குகளையும் எடுப்பதற்கு வாய்ப்புகள் வளமாக இருக்கிறன. என்றாலும் நமக்கு ஒரு கேள்வி இருக்கும், ஆண் பெண் என இரு மரங்களிலும் பதனீர் மற்றும் கள் கிடைக்குமென்றால், அனைத்தையும் சீவி தள்ளிவிடுவார்களே, நமக்கு பனை சார்ந்த பிற உணவுகள் கிடைக்காமல் போய்விடுமே என்று பதைபதைக்கலாம். இது பனை மரத்தோடு உறவில்லாத பொருள்முதல்வாதிகளின் கூற்று. சற்றே பொறுமையுடன் பனை சார்ந்து வாழும் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனக் கேட்போமென்றால் நமக்கு இது குறித்து தெளிவுகள் கிடைக்கும்.

DSC08043

ஆண் பாளைகள் நிறைந்த பனை. இவற்றிலிருந்து இயற்கையாகவே நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கிடைக்காது. இவற்றின் பாளையிலிருந்து கள்ளோ அல்லது பதனீரோ மட்டுமே பெறமுடியும்.

பனை சார்ந்து வாழும் பனை தொழிலாளர்கள் எவரையும் இன்று பனை சார்ந்து பணியாற்றும் எவரும் பொருட்படுத்துவதில்லை. பனையேறிகளுக்கு அறிவுரை சொல்லும் உயர்வகுப்பினராகவே இன்று அனேகர் தங்களைக் காட்டிக்கொள்ளுகின்றனர். ஆழ்ந்து நோக்கினால் சூழல் அப்படியல்ல என நமது நிலைப்பாடுகள் பல்லிளித்துவிடும்.

இன்று பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் எவரும் பனையேறிகளுக்கு நிகரானவர்கள் அல்ல. பனையேறிகளே சிறந்த சூழியலாளர்கள். பனை சார்ந்த சூழியல் சமன்பாட்டினை அவர்களை விட அதிகம் அறிந்தவர் எவரும் இருக்க இயலாது. இச்செய்தி இன்றளவும்  நமது கண்களுக்கு மறைவாக இருந்தது. இது வெளியில் தெரியும்போது போலி வேடதாரிகளின் முகத்திரைகள் கிழிகின்றன. குறிப்பாக பனை பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள், பனை மரத்தினை சூழியலின் ஒரு அங்கமாக கருதாமல், பனை மரத்தினை பணம் காய்க்கும் மரம் என முன்வைப்பது தான் சிக்கல்களின் ஆணி வேர். பனை மரம் ஒரு வாழ்வியல் சார்ந்த மரமே ஒழிய அது பணத்தினை உற்பத்தி செய்யும் மரம் என்பவர்கள் முழுக்க முழுக்க தவறான புரிதலில் இருக்கிறார்கள் என்பதே பொருள். பனை மரத்தினை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்களை சுரண்டிப் பிழைக்கவே பனை பொருளாதாரம் என்னும் கருதுகோள் முன்வைக்கப்படுகிறதே அன்றி பனை சார்ந்த வாழ்வியலை எவரும் முன்வைப்பது இல்லை.

DSC08743

ஆண் பனையானாலும் பெண் பனையானாலும் பனையோலைகளும் மட்டைகளும் எடுத்து தமக்குத் தேவையான பொருட்களை செய்துகொள்வர் பனையேறிகள். ஓலை மற்றும் மட்டை தொழில் செய்பவர்க்கும் மூலப்பொருள் கொடுப்பவர் இவரே

பனை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன? ஒரு மனிதன் தனது வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பனை மரத்தோடு இசைந்து வாழ்வது தான் பனை வாழ்வியல். இந்த வாழ்வியலில் இருந்து உபரியாக கிடைக்கும் பொருட்களே, அவர்களின் பொருளாதார ஆணிவேரே அன்றி, பொருளியல் சார்ந்த நோக்கு அல்ல அவர்களது வாழ்கை முறைமை. பனைத் தொழிலாளியின் வாழ்வியலை ஆழ்ந்து நோக்குகையில், பனை சார்ந்த உணவுகள், கலாச்சாரம், பனை சார்ந்த பயன்பாட்டு பொருட்கள், உபகரணங்கள், உப தொழில்கள் மெல்ல எழுந்துவருவதைக் காணலாம். இப்படியான ஒரு முழுமை நோக்கு இல்லாமல் பனை சார்ந்த ஒரு தொழிலை முன்னெடுக்க கூறி அதன் மூலமாக எவரும் பனை மரத்தினை காப்பாற்றிவிட இயலாது. அப்படி கூறுபவர்கள் பனை மரத்தையோ பனையேறியையோ முழுமையாக புரிந்துகொள்ளாதவர்கள் மாத்திரம் அல்ல பனை சார்ந்த வாழ்வியலை அழிக்க புறப்பட்டிருக்கும் தீய சக்திகள்.

பனை மரங்கள் தோற்றத்திற்கு காட்டு மரம் போல காணப்பட்டாலும், அது மனிதனை சார்ந்து இருக்கும் ஒரு தாவரம் தான் என்பதை பனை சார்ந்திருக்கும் நிலப்பரப்புகளிலிருந்து அறியலாம். அடர் வனங்களோ அல்லது மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலோ பனை மரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆகவே பண்பாடு சார்ந்து பனைக்குள்ள உறவை பிரித்து வெறும் வணிக நொக்கில் பனை மரத்தினை முன்வைப்பது என்பது பனைக்கும் பனை தொளிலாளர்களுக்கும் உள்ள உணர்வுபூர்வமான உறவையும், தொல் பழங்காலம் தொட்டு மனிதனுக்கும் இந்த மரத்திற்கும் உள்ள உறவை நீக்கும் சதிதிட்டம் என்றே கூறுகிறோம்.

பனைத் தொழிலாளி பனை ஏறும் முன்பதாக பல படி நிலைகளை மேற்கொள்வார். பாளை வந்துவிட்டதா என முதலில் பார்வையிடுவார். பாளைகள் அனைத்து மரத்திலும் ஒரு போல வந்துவிடாது. அப்படியே பளை வந்த அனைத்து மரங்களிலும் அவர் ஏறி கலயங்கள் கட்டுவதில்லை. இப்பணிகளில் பனையேறியின் தெரிவு, பொறுமை, அவதானிப்பு போன்றவைகள் குறித்த தகவல்கள் நம்மிடம் போதுமான அளவு இல்லை. காரணம் பனையேறிகள் சார்ந்து ஆய்வு செய்தவர்கள் என ஒருவர் கூட நம்மிடம் இன்று கிடையாது.

ஒரு தோட்டத்தில் 30 பனை மரங்கள் இருந்தால் அனைத்திலும் பனைத் தொழிலாளி ஏறிவிடுவதில்லை. சுமார் 20 மரங்கள் மட்டுமே ஏறுவார். மீதமிருக்கும் பனைகளில் பெரும்பான்மை பெண் பனைகளாகவும் ஒரு சில பனைகள் ஆண் பனைகளாகவும் இருக்கும். பெண் பனைகள் நுங்கு, பனம்பழம் மற்றும் கிழங்குக்காக விடப்படுவது ஒரு காரணம் என்றால், சரியான மகரந்த சேர்க்கைக்காக ஆண் பனைகளில் உள்ள பாளைகள் சீவப்படாமல் விடுவது மற்றொரு காரணம். இவைகள் யாவும் சொல்லிக்காட்டப்படுவதில்லை, ஆனால் பனையோடுள்ள உறவால் ஏற்படும் புரிதல்.

இவ்விதமாக நமது வாழ்வில் நெருங்கியிருந்த ஒரு மரம் என்பது, பசித்தவனுக்கு உணவும், தங்க வீடும், புழங்கு பொருட்களுமாக இருந்த ஒரு மரத்தை கள் இறக்கத் தடை என்ற ஒற்றை சட்டத்தால் தகர்த்துவிட்டார்கள். 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மையான ஒரு தொடர் சங்கிலி அறுபட்டு, பனை சார்ந்த வாழ்வு தகர்ந்து போனது.

ஒரு மரத்திலிருந்து 180 லிட்டர் பதனீர் 20 மட்டைகள் அது இது என புள்ளிவிபரங்கள் கொடுக்கின்ற வகையில் அல்ல பனை மரங்களின் செயல்பாடு. அது மனிதனின் பயன்பாட்டிற்கு ஏற்ப தன்னையே தரும் ஒரு மரம்.

பனம் பழங்களில் பல்வேறு வகைகள் உண்டு அவைகளை கொட்டை காய்ச்சி மற்றும் சதைக்காய்ச்சி என பிரிப்பார்கள். தோலின் நிறத்தினைக்கொண்டு வெள்ளைக்காய்ச்சி மற்றும் கறுப்புகாய்ச்சி என்றும் அழைப்பார்கள். மாமரங்களில் பழத்திற்கு ஏற்றது, பச்சையாக சாப்பிட ஏற்றது, ஊறுகாய் செய்ய ஏற்றது, வடுமாங்காய் செய்ய ஏற்றது, மீன் குழம்பிற்கு ஏற்றது போன்ற தனித்தன்மை வாய்ந்த மரங்களை நாம் அடையாளப்படுத்தி வைத்திருப்பதுபோல், பனை மரத்தில் எந்த பனை எதற்கு ஏற்றது என பனையேறி தனது அனுபவத்தின்மூலம் தெரிந்து வைத்திருப்பார். பதனீராக கொடுக்க ஏற்ற மரம், கருப்பட்டி காய்ச்ச ஏற்ற மரம், கள்ளு கிடைக்க ஏற்ற மரம் என தனித்தனியாக பிரித்து வைத்திருப்பார்கள். மேலும், பதனீர் கலயம் கட்டிய அதே மரத்தில் மற்றொரு பாளையில் தேவைப்பட்டால் கள் கலயம் கட்டுவதையும் வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். இவர்களிடம் நீ இப்படித்தான் செய்யவேண்டும் என அறிவுறை சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது? டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு இயங்குகிறது என மார்தட்டும் அரசிற்கா? அல்லது இவர்களின் அடிவருடியாக இருக்கும் போலி பனை பாதுகாவலர்களுக்கா?

kal

உணவு உரிமைக்கு எதிரானது கள் என தனது அறிவுறையை துவங்கும் சென்னை வாழ் குமரி நம்பி, பனை மரத்தில் ஆண் பெண் என இரு தன்மைகள் உள்ளதை அறியாதவர் போலும். பனம் பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது எனக் கூறுகிறார். இவைகள் அனைத்தும் ஆண் பனைகளிலிருந்தும் கிடைக்காதே? பெண் பனைகள் அல்லவா நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கொடுப்பவை? அப்படியிருக்க ஆண் பாளைகளைச் சீவி கள் எடுப்பதால் பதனீர் மட்டும் கிடைக்காது என சொல்லலாமா? அப்படியும் முழுமையாக சொல்லிவிடமுடியாது, ஏனென்றால், ஒரே மரத்தில் பல்வேறு பாளைகள் எழும்பும். அவைகளில் தேவையானதில் கள்ளையும் மற்றோன்றில் பதனீரையும் போடுவது பனைஏறுபவரின் தெரிவு என்றே விடப்படவேண்டும்.

கள் இறக்க, என்றைக்கு தடை வந்ததோ அன்று தான் இந்த தொழில் வீழ்ச்சி நோக்கி வந்ததை வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. குமரி மாவட்டத்தில் எனது சின்னஞ்சிறு வயதில், பள்ளிகூடம் முடிந்த பின்பு பேருந்தின் வருகைக்காக தாம்சன் தாத்தா கடையில் தான் நானும் அக்காவும் இருப்போம். மார்த்தாண்டம் எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் அந்த கடை இருந்தது. லாரிகளில் கருப்பட்டிகள் அன்று வரும். கள் தடைக்குப் பின் அந்த லாரிகளின் எண்ணிகை குறைந்தன. பனையேறிகள் வஞ்சிக்கபட்டு பேச்சுரிமை இன்றி ஆக்கப்பட்டனர். அதற்கு அன்று கருவியாக குமரியைச் சார்ந்த் ஒருவர் இருந்தார். தமிழகமெங்கு சென்றாலும் பனையேறிகள் அவரை மன்னித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லி நான் கேட்டதில்லை. பனையேறிகளுக்கு அவர் இழைத்த துரோகம் அப்படிப்பட்டது. இன்று குமரி என்ற அடைமொழியுடன் மற்றொரு துரோகி உருவாவதை நாம் தடுக்காவிட்டால், காலம் நம்மை கேள்வி கேட்கும்.

ஒருவேளை எனது கூற்றுகள் எவரையும் புண்படுத்தும்படி இருக்கும் என்று யாரேனும் கருதினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து ஒரு 10 பனையேறிகளைக் கண்டு, அவர்கள் வாய்மொழி கூற்றைக் கேட்டு உணருங்கள். பனைமரத்தினை புகைபடங்களுக்காக கட்டியணைத்து பாதுகாக்காமல், தனது நெஞ்சு உராய தழுவி அதனுடன் இரண்டரக்கலந்த பனையேறி எந்த சாதியைச் சார்ந்தவனாயினும், கள் குறித்து ஒரு வார்த்தைக் கூட தவறாக சொல்லமாட்டான். அவனுக்கு தெரியும் “கள்ளு தள்ளைக்கு சமம்”[1] என்று.

தனது உழைப்பை முன்னிறுத்தி வாழும் பனையேறிகளின் வாழ்வில் உரிமைகள் மறுக்கப்படுவதை எந்த நவீன சமூகமும் ஒப்புக்கொள்ளாது.

 

[1] “கள்ளு தள்ளைக்கு சமம்” என்பது குமரி மாவட்ட வழக்கச் சொல். தள்ளை என்பது தாய் என குமரிமாவட்டத்தில் பொருள்பெறும். பனை மரத்தினை காளியின் வடிவம் என்றும் காளியே பனையேறிகளின் தாய் என்றும் ஒரு புரிதல் தென்மாவட்ட  பனையேறிகளிடம் உண்டு.

தகுந்த ஆதாரங்களுடன் கள் விடுதலைப் போராட்டம் தொடரும்…

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 


%d bloggers like this: