Archive for ஏப்ரல், 2020

பின்னல்கள்  – 5 

ஏப்ரல் 21, 2020

இழைகள்

பத்து வருடங்கள் இருக்கும். நானும் போதகர் எமில் அவர்களும் மும்பையிலுள்ள கோரே பகுதியில் பனை ஓலைகளை சேகரிக்க சென்றோம். அங்கே டொமினிக் என பெயருடைய ஒரு மனிதரை நாங்கள் அறிவோம். அவருடைய தோட்டத்தில் அதிக பனை மரங்கள் உண்டு. அன்று தேவையான ஓலைகளை சேகரித்துவிட்டு பார்த்தால் எங்களிடம் கயிறு இல்லை. போதகர் எமில் உடனடியாக இரண்டு ஓலைகளை எடுத்து முடிச்சிட்டார். அப்படியே மேலும் இரண்டு ஓலைகளை எடுத்து முடிந்தபின் அவைகளை அருகருகே ஒன்றுபோல் கிடத்திவிட்டு நாங்கள் சேகரித்த ஓலைகளை அதன்மேல் அடுக்கினார். நான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நாங்கள் சேகரித்த ஓலைகளை எப்படி இந்த ஓலைகள் தாங்கும் என எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் இரு முனைகளையும் இழுத்து ஓலைகளைச் சுற்றி வளைத்தார். முடிச்சிடுவார் என நான் எண்ணுகையில் அவர் அந்த ஓலைகளை இணைத்து கால்களால் ஓலைக்கற்றைகளை அழுத்தியபடி கட்டவேண்டிய ஓலைகளை முறுக்கத்துவங்கினார். கிட்டத்தட்ட நாம் அணியும் பெல்ட் போலவே இருக்கும் ஆனால் முடிவில் அவைகள் ஒன்றாக முறுக்கி விடப்பட்டிருக்கும் அவ்வளவுதான். நான் “இது எப்படி பெலக்கும்” என்பதுபோல வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அதே போல மற்றொருபுறமும் ஓலைகளை முறுக்கிவிட்டு, பின்னர், அவைகளை அப்படியே அந்த கட்டிற்குள் நுழைத்துவிட்டார். கட்டு நான் நினைத்ததைவிட மிக பலமாக அமைந்தது. அன்றுதான் ஓலையினை முறுக்கிச் செய்யும் உடனடி “கயிற்றினைக்” குறித்து அறிந்துகொண்டேன்.

மேலே நான் குறிப்பிட்டதை ஒத்த பல சம்பவங்களை எனது சிறு வயதில் நான் கண்டிருந்தாலும், நானே ஈடுபட்ட நிகழ்வானபடியால் இது எனக்குள் மாபெரும் தாக்கத்தை நிகழ்த்தியது. இயற்கையிலேயே பல்வேறு வகையான சரடுகள் கொடிகள் நார்கள் தாராளமாக இருக்கின்றன என்கின்ற நினைவூட்டலை இச்சம்பவம் எனக்கு அளித்தது.

இந்த சம்பவத்தினை விஞ்சும் மற்றொரு காரியமும் எனது வாழ்வில் நடந்தது. தாஸ் என்று ஒரு நண்பர் ஆப்பிரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். எனது பனை ஆர்வத்தின் மேல் அவருக்கு பெரு மதிப்பு உண்டு. அவர் தனது பணியிடங்களில் பனை மரங்கள் நிற்கின்றன என்ற ஒரு தகவலை எனக்குச் சொன்னார். எனக்கு ஆப்பிரிக்கா கனவு தேசம். பனை மரங்கள் உள்ள அத்துணை இடங்களும் எனக்குரிய இடங்களாகவே நான் கற்பனை செய்துவைத்திருக்கிறேன். ஆகவே அவரிடம், பனை சார்ந்த பொருட்களை எங்கு பார்த்தாலும் புகைப்படம் எடுத்து வையுங்கள் என்று சொன்னேன்.

African rope

கைகளால் பனை ஓலையினை திரிக்கும் ஆப்பிரிக்கர்

ஒருநாள் திடீரென அவர் அழைத்தார்… வாட்சாப்பை பாருங்கள் என்றார். கட்டுகட்டாக விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவைகளை கட்டி வைத்திருந்த கயிற்றினைக் காட்டி இவைகள் பனை ஓலைகள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை அதுதான். சுமார் 30 கிலோ வரை விறகுகள் கொண்ட கட்டுகளை பனை ஓலைக் கயிற்றினால் கட்டி எடுத்து செல்லுகிறார்கள் என்றார். அப்படியே எனக்கு பல காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பினார். வடலி ஓலைகளை கைகளால் மாத்திரம் பின்னியெடுத்து செய்யும் ஒரு கயிறு. அரண்டுவிட்டேன். ஓலைகளால் செய்யப்படும் கயிறுகள் இத்துணை உறுதிபடைத்தவையா என்கிற ஆச்சரியம் எழுந்தது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாரம்பரியமாக பனை ஓலைகளைக் கொண்டு கயிறுகளைச் செய்யும் எவரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை, ஆனால் ஓலைகளில் கயிற்றினைச் செய்யும் மனிதர்கள் உண்டு என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானால் தமிழகத்தில் பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் கயிறுகள் எப்படி வழக்கொழிந்தன?

பழங்குடியினர் வாழ்வில் கயிறுகள் மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கின்றன என்கிற புரிதலுக்கு நான் வர மேலும் பல நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன. ஒரிசாவில் நான் சந்தித்த பழங்குடியினர் வாழ்வில் காணப்படும் பனை சார்ந்த கயிறுகள், தயாரிக்கும் நுட்பம் கண்டிப்பாக பனை பொருட்கள் தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். மகாராஷ்டிராவில் வாழும் வார்லி பழங்குடியினரின் ஓவியங்களிலிலும் விறகுகளை கட்டி எடுத்துச் செல்லும் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவைகள். ஒருவகையில் நாம் இவ்வோவியங்களைக் கவனித்தால் பனை ஓலைகளைக் கொண்டு அதனைக் கட்டியிருப்பது மிக தெளிவாக தெரியும். நானே பல்வேறு சூழல்களில் பல தரப்பட்ட மக்கள் பனை ஓலையினைக்கொண்டு புல் மற்றும் விறகு கட்டுகளை கட்டி ஒன்றிணைத்திருக்கிறதைப் பார்த்திருக்கிறேன்.

WP F

விறகு கட்டி எடுத்துச் செல்லும் வார்லி பழங்குடியினர்

பனை மர பத்தையில் இருந்து கிடைக்கும் தும்புகள் மற்றொரு வகையான பிணைப்பு சாதனம். இயற்கையிலேயே கிடைக்கும் மிகவும் உறுதியான இதனை  ஆதி மனிதர்கள் பெருமளவில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சுமார் ஒன்றரை அடி வரைக்கும் நீளமாக கிடைக்கும் இவ்வித தும்புகள் ஒருவகை புரிதலை ஆதி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் குமரி மாவட்ட குளச்சல் பகுதியில் செயல்பட்டுவந்த தும்பு தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடக்கின்றது. மிகவும் அபாயகரமான அவ்விடத்திற்கு நானும் எனது நண்பன் ரங்கிஷுமாக ஒருமுறை சென்றிருந்தோம். அப்பொது அங்கே கிடந்த தும்புகள் பெருமளவில் உறுதியுடன் தான் இருந்ததாக நான் நினைவுகூறுகிறேன்.

2017 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் நான் ராமனாதபுரத்திற்கு போயிருந்தேன். அப்போது நான் நின்றுகொண்டிருந்த பனங்காட்டிலிருந்து டிராக்டர் ஒன்று புறப்பட்டு செல்வதைப் பார்த்தேன். என்ன கட்டி எடுத்து செல்லுகிறார்கள் எனப் பார்ப்பதற்காக அருகில் சென்றபோது டிராக்டர் முழுவதும் கட்டு கட்டாக பனை மட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. எனது வாழ்நாளில் அவ்வளவு பெரிய அளவில் பனை மட்டைகள் எடுத்துச் செல்லுவதை நான் பார்த்தது இல்லை. ஆகவே அதன் அருகில் சென்று பார்தேன். கட்டுகள் அனைத்தும் பனை ஈர்க்கிலால் பின்னப்பட்ட கயிற்றினால் செய்தது. அதே போன்ற கயிற்றினை மிடாலக்காடு பகுதியில் உள்ள பனைஓலை விற்பனை முகவர் அவர்கள் எனக்கு கொடுத்த ஓலைக் கட்டிலும் பார்த்தேன். இவ்வித பின்னல்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்து  தான் வருகின்றன என புரிந்துகொண்டேன்.

Rope

ஆப்பிரிக்க பனை ஓலைக் கயிறு

சிறு வயதில் மீன்பிடிக்கும் இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி சேறா சகதியா இல்லை தண்ணீரா என்று விவரிக்க இயலாதபடி இருக்கும் பகுதியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். கோடை காலத்தின் மிக முக்கிய இந்த விளையாட்டின் இறுதியில், மீன்களை எடுத்துச்செல்லுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு தாவரத்திலிருந்து எடுத்த நார் கொண்டு பிடித்த மீன்களை கட்டி எடுத்துச் செல்லுவார்கள். மீன்களின் வாய் மற்றும் செவிள் பகுதிக்குள் செல்லும் இந்த நார், மீன்கள் ஒரு தோரணம் போல இணைத்து கொள்ளுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது.

பெரிய பை தேவையில்லை. அப்படியே பொதிந்து எடுத்துச் செல்ல இலைகளும் தேவையிலை. ஒரு முழம் கயிற்றில் ஒன்பது மீன்களை அழகாக கட்டி தூக்கி எடுத்துச் செல்லலாம். இவ்விதமான ஒரு உபாயம் தொல் பழங்காலத்தில்  இருந்திருக்கவேண்டும். ஏனெனில், இன்றும் நமக்கு கிடைக்கும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது மணிகளையோ அல்லது எலும்புகளாலான அணிகலன்களையோ ஒன்றாக இணைத்து ஆபரணமாக தொல் குடியினர் செய்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

கற்காலம் கற்காலம் என்று சொல்லுகிறோமே அந்த கற்காலத்தில் தாவரங்களின் இசைவு எப்படி இருந்தது என்பதை பெருமளவில் யாரும் யோசிப்பது இல்லை. ஆனால் கற்கால ஆயுதங்களின் மேம்பாடு என்பது கண்டிப்பாக ஒரு தாவரத்திருந்து பெறுவதைக் கொண்டே சாத்தியம்.  எடுத்துக்காட்டாக ஒரு கல்லாலான கோடாரி துண்டு இருக்கிறது என வைத்துக்கொள்வோம், அதனை ஒரு எலும்புடனோ அல்லது மரத்தடியுடனோ   இணைக்கும்போது தான் அதன் வலிமை கூடுகின்றது. ஆப்பு அடித்து இறுக்கும் முறை இருந்தாலும் அதற்கு இணையாக ஏதோ ஒன்றினை வைத்து கட்டுகிறார்களே அது தான் கற்கால மனிதர்களை அடுத்த நிலைக்குத் தள்ளியது.

ஓலைகள் அல்லது பனை நார் அல்லது ஈர்க்கில் ஆகியவற்றிற்கு ஒரு பொது கூறு உண்டு அது இவைகளை கயிறாக திரிக்க முடியும் என்பதே. இரண்டோ மூன்றோ பிரிகள் இணந்தாலே அவைகள் கயிறு என பொருள்படும். பிரிகள் நன்றாக முறுக்கப்பட்ட ஓலைகளாகவோ அல்லது பனை நாராகவோ இருக்கும். இவ்வித பனை பொருட்களின் தேவை இன்றியே கூட இயற்கையில் கிடைக்கும் கொடிகள் கட்டுவதற்கு ஏற்றவைகளாக இருக்கின்றன.

“ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது”. பிரசங்கி 4: 12 என்கிற வேத வாக்கியத்தின் பிற்பகுதியினை பெரும்பாலும் திருமண வீடுகளில் கிறிஸ்தவ போதகர்கள் குறிப்பிடுவார்கள். ஒற்றைச்சரடாக இணைக்கப்பட்ட முன்று நூல் இணைந்தால் அது பலம் கொண்டதாக மாறிவிடுவதை பிரசங்கி குறிப்பிடுகிறார். மணமகன் மணமகள் மற்றும் கடவுள் இணைந்திருக்கும் குடும்பங்கள் பிணைப்புடன் உறுதியாயிருக்கும் என்ற பொருளில் எடுத்தாள்வார்கள்.

பேராசிரியர் நிகோலாஸ் கோனார்ட் (Nicholas Conard) மற்றும் அவரது குழுவினர் வெகு சமீபத்தில்  ஒரு கருவியினைக் கண்டுபிடித்தார்கள். பனியுகத்தில் காணப்பட்ட மிக பிரம்மாண்டமான யானை இனத்தைச் சார்ந்த மாமோத் தந்தத்தில் நான்கு சிறிய துளைகள் இடப்பட்டிருந்தன. ஒவ்வொரு துளையும் சுமார் 7 மிமீ முதல் 9 மிமீ வரையே இருந்தன. அவ்வளவு தான் அந்த கருவி. இசைக்கருவியாக இருக்குமோ அல்லது அழகுபொருளாக இருக்குமோ என பலவறாக புரட்டிபார்த்த அந்த குழுவினர் இறுதியில் இந்த கருவிகள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய கயிறு திரிக்கும் கருவி என்ற புரிதலுக்கு வந்தனர்.

இழைகளால் ஆன ஒரு யுகம் இருக்கிறது என்று எலிசபெத் வேலாண்ட் பார்பெர் (Elizabeth Wayland Barber) என்ற தொல்லியல் மற்றும் பெருங்கற்கால ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.   ஆதி மனிதர்களுக்கு தாவர இழைகளும்  மிருக இழைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இவ்வித இழைகள் கற்கால மனிதர்களுக்கு  மிக இன்றியமையாத ஒன்றாய் இருந்திருக்கின்றன  என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக கற்காலம் என்பதே இழைகளால் பின்னப்பட்டு முடிச்சுகளிடப்பட்ட  ஒரு காலம் தான். கல் என இறுகிப்போன ஆண் துணையை வஞ்சிக்கொடி சுற்றிவளைத்து பொருளுள்ள திசை நோக்கி வழிநடத்திய ஒரு காலம்.

பார்பர் (Barber) ஒரு பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்தவர் என்பது நாம் புரிந்துகொள்ள கூடிய ஒன்று. தேடி அவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் நம் பார்வை கோணங்கள் எட்டாத இடங்களை சென்றடைபவை. அவரது பெண்களின் வேலைகள்: முதல் 20,000 வருடங்கள் – பெண்கள் ஆடைகள் மற்றும் ஆதி கால சமூகம் (Women’s Work: The First 20,000 Years : Women, Cloth, and Society in Early Times)என்ற புத்தகம் பெண்களுக்கும் ஆடைகளுக்கும்  உள்ள தொடர்பை ஆழமாக நிறுவும் ஒன்று.

இச்சரடுகளுக்கு பரந்துபட்ட பயன்பாடு உண்டென்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். குறிப்பாக, மீன் பிடிக்கும் அல்லது வேடர்களின் வலைகள் செய்வதோ, கண்ணிகள் அமைத்து வேட்டையாடுவதோ, கூர் ஆயுதங்களான ஈட்டி அம்பு போன்றவைகளை இறுக கட்டி இணைக்கவோ என பல்வேறுவகை பயன்பாட்டில் இருந்துவந்திருக்கின்றன. மேலும் விறகு சேகரிப்பதற்கும் கூடாரங்கள் அமைப்பதற்கும் பொருட்களை சேகரிப்பதற்கும் இவைகள் பேருதவியாக இருக்கின்றன. இவ்விதமான இழைகளும் சரடுகளும் தான் கயிறு திரிப்பதற்கும் பின்னல்களால்  நிறைந்த ஜவுளி துறைக்கு அடிப்படை என ஆணித்தரமாக கூறுகிறார்கள்.

பல்வேறு மணிகளை மீட்டெடுத்ததன் வாயிலாக  சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட ஏதோ தவர அல்லது விலங்கின் ரோமங்களை கயிறாக திரித்து மணிகளை தொடுத்திருக்கிறார்கள். ஒரு உண்மையினை அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அதாவது இயற்கையாக கிடைக்கும் சரடுகள் மட்கிப்போகும் தன்மையுடையவைகள் ஆதலால்,  பெரும்பாலும் இணைப்பு சரடுகளை கற்கால சான்றுகளிலிருந்து நம்மால் மீட்டெடுக்க இயலவில்லை.

பெரும் கற்கால பயன்பாட்டு பொருளாக கயிறு அல்லது திரிக்கப்பட்ட மெல்லிய இழைகள் இருக்குமென்று சொன்னால், கண்டிப்பாக பனை எனும் மூதாயின் பங்களிப்பு அதனுள் கலந்திருக்கும். எண்ணிப்பார்த்தால், ஓலை, ஈர்க்கில், மட்டையில் கிடைக்கும் நார், தும்பு என எண்ணிறந்தவைகள்  ஒரே மரத்திலிருந்து சரடாக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. இத்துணை பரந்துபட்ட  தன்மைகொண்ட இயற்கை இழைகளை வழங்கும் மரம் அல்லது தாவரம் வேறு ஏதும் இல்லை எனலாம். மேலும் வருடம் முழுவதும் உணவினை அள்ளி வழங்கும் ஒரு மரமாகவும் பனை மரம் காணப்படுகின்றது. உலக வரைப்படத்தில் உள்ள இரண்டு கண்டங்களில் வரலாற்று காலத் திற்கு முன்பே பனை மரங்கள் பரவியிருந்திருக்கின்றன. இச்சூழலில், பனை ஓலைகளில் கிடைக்கும் நார் மற்றும் கயிறுகளைக் குறித்து பேசாமல் கற்கால ஆய்வை எவரும் முழுமைசெய்துவிட இயலாது.

 

 அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  – 4

ஏப்ரல் 8, 2020

பட்டை

பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் பொருட்களிலேயே மிக தொன்மையானதும் இன்றளவிலும் பரந்துபட்ட பயன்பாடு கொண்டதுமான பனையோலை பட்டை,  நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டிய ஒரு முதன்மைப் பொருளாகும். இந்த வடிவம் ஆதி காலம் தொட்டு இன்றுவரை மாறாததாக இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பனையோலைப் பட்டை  மக்கள் பயன்பாட்டில் பெருகியிருப்பதற்கு காரணம் இதன் வடிவத்தில் காணும் எளிமையும், இதன் பயன்பாட்டில் காணப்படும் வசதியும், காலங்களை கடந்து நிற்கும் தொன்மையும், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மையும், சமயங்களை உள்ளடக்கும் விரிவும்  என்றே எண்ணுகிறேன். மேலும் மிகப்பெருமளவில் பட்டையில் மற்றங்கள் ஏதும் ஏற்படவியலாதபடி அதன் வடிவம் ஓலையின் இயற்கைவடிவத்தைச் சார்ந்தே இருக்கிறது என்பது தெளிவு.

pattai

பனை ஓலை பட்டையில் பதனீர் ஊற்றிக் குடிக்கும்போது

பட்டை என்பது சிறகொன்று அன்னமிட்ட கையாக மாற்றம் அடைவது தான். அது பனை தனது இறகினை எடுத்து தன் பிள்ளைகள் பசியாற குவிக்கும் கரமே தான். இரக்கத்தின் கரம், அன்பின் கரம், சுவையூட்டும் கரம். அதனை மடிப்பது கூட ஒரு மா தவமே. எனது வாழ்வில் ஏனோ தானோவென்று பட்டை மடிக்கும் ஒருவரைக்கூட நான் கவனித்தது இல்லை. மிக கருத்தூன்றி ஓலையின் தன்மையினை உணர்ந்து பட்டையினை மடிப்பார்கள்.  ஒருவேளை கவனக்குறைவாக பட்டை மடித்தால் ஓலையில் கீறல் ஏற்பட்டு பதனீர் ஓழுகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சேகரிக்கும் பொருளாதாரத்தை மையமாக கொண்ட அனைத்து பழங்குடி பண்பாடும்  சேகரிக்கும் தருணத்தில் இலைகளை பயன்படுத்துகிறது. தானியங்களையோ அல்லது பழங்களையோ சேகரிப்பது ஆகட்டும் வேட்டையாடிய பொருட்களை சேகரிக்கும்போதும் தொன்மையான கலாச்சாரத்தில் கூட இலைகள் பொருட்களை பொதிந்து எடுத்துச் செல்ல உதவிகரமாக இருந்தன.

ஒருவேளை பனம்பழங்களை பனை ஓலையில் பொதிந்து எடுத்து வந்த ஒரு தொல் சமூகம், தங்கள் உணவிற்கு மிஞ்சிய ஒரு பழத்தை ஓரிரு நாட்கள் ஓலையுடன் விட்டு வைத்திருந்தார்கள் என்று சொன்னால் அந்த ஓலை குவிந்து தனது இயல்பு வடிவத்தை விட்டு ஒரு பட்டையின் வடிவத்தை எட்டியிருக்கும். இந்த வடிவம் தான் தேவைக்கேற்ப ஓலைகளை மிகச்சரியான வகையில் பயன்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளி எனலாம்.

Fruits carried on palm leaf

பனம் பழங்களை பனை ஓலையில் எடுத்துச் செல்லுவது – ஆரே, மும்பை

குமரி மாவட்டத்தில் இன்றும் கூட பனை ஓலைப்பாயே இறைச்சிக்கடைகளில் விரித்திருப்பார்கள். இது பனை ஓலையினை விரித்து அதன் மீது வேட்டை உணவை பரப்பிய நினைவுகளின் எச்சமாக இருக்கலாம். இன்றும் குமரி மாவட்ட வீடுகளில் கோழியை அறுக்கும்போது வாழை இலையில் வைப்பது வழக்கம். பனை மரத்தின் இடத்தை வாழைகள் பிடித்துக்கொண்டன என்பது தான் உண்மை.

Fish Packing

மீன் பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

எனது சிறு வயதில் பன்றி இறைச்சியினை விற்பவர்கள் அதனை பனை ஓலையில் தான் கட்டி கொடுப்பார்கள். இது குமரி மாவட்டத்திற்கான ஒரு தனித்தன்மை. ஆனால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கூட ஆட்டிறைச்சியினை பனை ஓலையில் பொதிந்து கொடுப்பதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை காயல்பட்டணம் சென்றிருந்தபோது அங்கே பனை ஓலைகளில் தான் ஆட்டிறைச்சியினை பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தென்காசியை அடுத்த கடையம் சந்தையில் பனை ஓலையில் கருவாட்டினை பொதிந்துகொடுக்கும் ஒரு சம்பவத்தினைக் கண்டபோது இந்த வழக்கம் மிக தொன்மையானது தான் என்கிற உறுதி எனக்குள் ஏற்பட்டது.

Meat pack

இறைச்சி பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

பொதுவாக ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பனங்காட்டினூடாக வழிப்போக்கர்கள் செல்லும்போது பனையேறிகள் பனை ஓலையினை அறுத்துப்போடுவார்கள். கீழே செல்லும் வழிப்போக்கர்கள் அதனை எடுத்து பட்டையாக மடித்து தயாராக வைத்து இருக்கவேண்டும். வழிப்போக்கர்களுக்கு பட்டை மடிக்க தெரியவில்லையின்று சொன்னால், பனையேறியே கீழிறங்கி வந்து ஓலைகளை பட்டையாக மடித்து தருவார். பின்னர் வழிப்போக்கரின் பசியாற பதனீரைப் பட்டையில் ஊற்றுவார்.

பனையேறிகளின் இந்த தாராள குணத்திற்கான கரணங்கள் உண்டு. அது தொல் சமூகங்களில் உள்ள பகிர்ந்தளிக்கும் தன்மை. ஒரு சமூகத்தில் ஒருவன் வேட்டையாடினாலும் அந்த வேட்டையிலிருந்து பெறும் உணவானது வேட்டையில் பங்குபெறாதவரின் பசியையும் ஆற்ற வேண்டும் என்பதுவே நியதியாக இருந்தது. மாத்திரம் அல்ல இந்திய பெருநிலத்தில் பல்வேறு புண்ணிய தலங்கள் உண்டு. பனையேறிகளால் தங்கள் தொழில் தொடங்கிய பின்னர் ஆலயங்களோ புண்ணிய தலங்களோ செல்ல இயலாது.  ஆகவே உணவளிக்கும் மாபெரும் அறத்தினை தங்கள் வாழ்வில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

Mithran pathaneer

மித்திரன் ஓலைப்பட்டையில் பதனீர் குடிக்கிறான்

பண்பாட்டு அளவில் பனையோலைப் பட்டை என்பது மனிதர்களுடைய வாழ்வில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக வந்துகொண்டிருப்பதை அறிகிறோம். பனையேற்று வேளையில் பனை மரத்திற்கு பூசை செய்வது பனையேறிகளின் தொன்றுதொட்ட வழக்கம். அதாவது ஒவ்வொரு பருவ காலத்திலும் பனையேறிகள் பனை ஏறத்துவங்கும்போது காளி பூசை செய்வார்கள். அப்போது பனை ஓலை பட்டையில் பதனீரை வைத்து வணங்குவார்கள். பனை ஓலை பட்டை அவ்வகையில் ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து எழுவதை பார்க்கிறோம்.

பனை ஓலைப் பட்டைகளுக்கு என்று சிறப்பு மதிப்பு இன்றும் சில சடங்குகளில் எஞ்சியிருக்கின்றது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள  நாட்டார் வழிபாட்டு முறைகளில் சாமிக்கு படையல் இடும்போது, விழாவில் கலந்துகொள்ளும் மக்களுக்கு பனை ஓலையிலேயே உணவளிப்பார்கள்.

பனை ஓலை பட்டை மடிப்பது என்பது ஒரு எளிய தொழில்நுட்பம் தான். பிறந்த குழந்தையை கையில் எடுப்பதுபோல ஓலையை எடுக்கவேண்டும். பின்பு ஓலை கிழியாமல் சற்று உட்புறம் குவிய வைக்க வேண்டும். இறுதியாக ஓலைகளின் முடிவில் பிரிந்து நிற்கும் ஓலைகளை ஒரு கையால் நெருக்கி, மற்றொரு கையால் அதன் கடைசி ஓலையை மாத்திரம் சற்றே கிழித்து அதனை ஒன்றாக்கப்பட்ட ஓலைகளை சுற்றி நுழைத்து இறுக்கிவிடுவதுதான் பட்டை. இது பார்பதற்கு ஒரு சிறு படகுபோல் காணப்படும்.

Meat on mat

இறைச்சி கடைகளில் பனை ஓலை பாய்

பட்டைகள் பல்வேறு சூழல்களில் இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பனை மரங்கள் பெருமளவில் இருக்குமிடங்களில் பனை ஓலைகள் ஒரு அடிப்படை உணவு பாத்திரமாக செயல்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்கு படைக்கும் பாயசம், மற்றும் கறி சோறு அல்லது கஞ்சி இன்றளவும் சில ஊர்களில் பனை ஓலையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நான் இராமனாதபுரம் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பனை ஏறுகின்ற தொழிலாளர்கள் சிலர் சில சடங்குகளை முடித்துவிட்டு உணவருந்த ஆயத்தமானார்கள். படையலுக்காக சேவல் கோழியை அடித்திருந்தவர்கள் அதனை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளுமாக சுமார் 30 நபர்கள் இருந்திருப்போம். அனைவருக்கும் ஒரே கோழியும் அதில் ஊறி நின்ற  இரசமும் சோறும் அன்று விருந்தாக அமைந்தது. பங்கிட்டு தின்றால் பசியாறும் என்பதற்கிணங்க, அந்த உணவின் சுவை தனித்துவமாக இருந்தது. ஆம் பட்டையில் தான் அன்று அனைவருகும் உணவு வழங்கினார்கள்.

KayalpattaNam

கறிக்கடை – காயல்பட்டிணம்

பனை ஓலைக்கென ஒரு மணமும் சுவையும் உண்டு. பனை ஓலையில் ஒரு உணவு வைத்து பகிரப்பட்டால், அதன் சுவையே தனித்துவமானதாக இருக்கும். வாழையிலையில் சாப்பாடு போடுவது தற்போது ஒரு கவுரவமான விஷயம். அதிலும் குறிப்பாக உணவகங்களில் சென்று சாப்பிடும்பொது வாழை இலைக்கென ஒரு தனி சிறப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், பனை ஓலையில் உணவு சாப்பிடாதவர்கள் தான் வாழை இலையினை விதந்தோதுவார்கள். பனை ஓலையில் ஒருவர் ஒருமுறை சாப்பிட்டுவிட்டால், அதுதான் அவருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவு பாத்திரமாக இருக்கும். சுவை கூட்டும் ஒரு அற்புத உணவு பாத்திரம் அது.

பனை ஓலையில் கஞ்சி வழங்குவது  குமரி மாவட்ட கல்லறை பிரதிஷ்டை நேரத்தில் நடக்கும் ஒரு சடங்கு. வழக்கொழிந்துபோன இந்த சடங்கு இன்று வேறு வகைகளில் நம்மிடம் எஞ்சியிருக்கின்றது.  கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் புனித வெள்ளி ஆராதனையின்போது, குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு திருச்சபைகளில் பனை ஓலையில் கஞ்சி கொடுப்பது வழக்கம்.  மூன்று மணி நேர ஆராதனைக்குப் பின்பு, ஆலயத்தில் வைத்து கொடுக்கப்படும் பனையோலை பட்டை கஞ்சி மிக சிறப்பானதாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனது அறிவில், குமரி மாவட்டத்தில் பல்வேறு சி எஸ் ஐ ஆலயங்களில் பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கும் மரபு இருந்தாலும் இன்றும் எங்கள் சொந்த ஊர் திருச்சபையான சி எஸ் ஐ பெருவிளையிலும், மற்றும் ஜாஸ்மினுடைய ஊரின் அருகில் இருக்கும் சி எஸ் ஐ கூடைவிளை  சபையிலும் இன்றும் பனை ஓலைகளில் மக்கள் கஞ்சி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நான் சூரங்குடி திருச்சபையில் கூட இந்த முறைமையினை கண்டு அனுபவித்திருக்கிறேன்.

தொன்மையான ஒரு வாழ்வின் எச்சத்தினை திருச்சபை கைக்கொள்ளுகிறது என்பது பல்வேறு மக்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். திருச்சபை தன்னை இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது என்பதற்கு இதுவும் சாட்சியாக இருக்கிறது.

இவ்விதமான கஞ்சி வழங்கலின் போது காண துவையல் வழங்குவது மரபு. பனங்காடுகளில் பனையேறிகள் காணம் உழுந்க்டு மற்றும் தட்டைப்பயறுவகைகளையே பெருமளவில் பயிரிட்டுவந்தார்கள் எனவும் இவைகளே மானாவாரி பயிர்களாக நீர் குறைவாக கிடைக்கும் பனக்காட்டு சூழலுக்கு ஏற்றது என்பதையும் பனை சார்ந்து வாழும் மக்கள் அறிவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பதனீர் விற்பனை என்பது சாலை ஓரங்களில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு இப்போதுள்ளதைப் போல் பதனீர் விற்பனைப்பொருளாக இருக்கவில்லை. சாலையோரங்களில் கிடைக்கும் இப்பதனீரின் உண்மை தன்மை குறித்த கேள்விகள் நமக்கு அதிகம் இருந்தாலும், பதனீர் விற்பவர்கள் அனைவரும் தங்களுடன் பனை ஓலைகளையோ ஓலைப் பட்டைகளை எடுத்துவர தவறுவதில்லை. காரணம், போலி பதனீரை மறைக்க இவ்விதம் தங்களுடன் உண்மையான ஓலைகளை எடுத்துவருவார்கள்.  நகரங்களில் பொதுவாக பதனீர் குடிப்போர்களுக்கு பட்டைகள் புதிதுபுதிதாக செய்து குடுப்பது வழக்கமாக இருந்தாலும், கிராமங்களில் ஒரே பட்டையினை பகிர்ந்துகொள்ளுவது வழக்கம். அப்படியே ஆடு மேய்க்கின்ற கோனார்கள்  கஞ்சி குடிப்பதற்காக ஒரே பனை ஓலை பட்டையினை வெகு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதும் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதை எனது பயண அனுபவங்களில் இருந்து பெற்றிருக்கிறேன்.

கடந்த தேர்தலின்போது ஒட்டப்பிடாரம் அருகே சூராவளி பிரச்சாரம் நடத்திய ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு மக்கள் பதனீர் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இது மிக முக்கிய செய்தியாக நாழிதழ்களில் வெளியாகியிருந்தது. அச்சூழலில் பனை ஓலை பட்டையில் தான் ஸ்டாலின் அவர்கள் பதனீரை வாங்கிக் குடித்தார்கள். தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பனை விதைகளை விதைக்க முற்பட்டிருந்த தருணம், நாம் தமிழர் கட்சி கூட அவ்விதமாகவே பனை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. அச்சூழலில் தான் பனை சார்ந்த மக்களுடன் தானும் இணைந்திருக்கிறேன் என்கிற ஒரு எண்ணத்தை விதைக்கும்படியாக திரு ஸ்டாலின் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பார். ஏனெனில் நிகழ்வின் முடிவிலே அவர், பதனீர் நல்ல சுவையுடன் இருக்கிறது இதற்குள் சர்க்கரை போட்டீர்களா என கேட்டிருக்கிறார். பலரால் நகைச்சுவைக்குள்ளாக்கப்பட்ட இந்த பதில் உண்மையிலேயே பனை சார்ந்து தமிழகத்தில் இருக்கும் விலக்கத்தினை நமக்கு விளக்குகிறது.

Stalin and kanimozhi

நாம்  வாழும் இருபத்தி ஓராம்  நூற்றாண்டின் இச்சூழலில் கூட பனை எப்படி தன்னை சூழலுக்கேற்ப மக்களின் எண்ணங்களுடன் இணைத்துக்கொள்ளுகிறது என்பது வியப்பளிப்பது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற பகுதியில் பனங்காட்டிற்குள் வாழும் குணசேகரன் முருகலெட்சுமி தம்பதியினர் கொரோனா முக கவசத்தினை பனையோலையில் தயாரித்து அமர்களம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பெரு விருப்பத்துடன் இதனை வாங்கிச்செல்லுகின்றனர். குறைந்த விலையில் பனையேறும் தம்பதிகளால் இதனை உற்பத்திசெய்து விற்பனைக்கு கொடுக்க முடிகிறது. பாரம்பரிய பட்டையின் அதே அமைப்பு ஆனால் நூலினை கட்டி அதனை முக கவசமாக  மாற்றிவிட்டனர். இது, நாம் பல வகைகளில் புறக்கணித்த தொல் வடிவம்ங்கள் இன்றும் பயனுள்ளவைகளாக இருக்கும் என்பதற்கு ஆதாரம். அதிலும் குறிப்பாக நவீன உலக உதவிகள் சென்று சேர இயலாத பல்லாயிரக்கணக்கான குக்கிராமங்களுக்கு இவ்வித உதவி மிகவும் தேவையாக இருக்கிறது.

Woven Mask

பின்னி செய்யப்பட்ட பனை ஓலை முக கவசம்

பலருக்கு இவ்வித ஓலைகளாலான முக கவசங்கள் பயனுள்ளவைகளாக இருக்குமா என்கிற கேள்விகள் இருக்கிறது. முதலில் அவைகள் நமது மூக்கையும் வாயையும் நாம் தொடுவதை தடுகிறது. இரண்டாவதாக, தாவரங்களில் இருந்துதான் பல்வேறு மருந்துகளும் பயன்பாட்டு பொருட்களும் இன்று நமக்கு கிடைக்கபெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் பயன்படுத்தும் பச்சை வண்ண உடையே இயற்கையிலிருந்து பிரதி எடுத்ததுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுகுறித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் காட்சன் வின்சிலி தாஸ் அவர்கள், கோவில்பட்டி அரசு சித்த மருத்துவரான திரு அவர்கள் “பனை ஓலையில் நோய் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் பனை ஓலையில் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வீரியத்துடன் காணப்படும்” என்கிறார். இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நிறுவும் பொருள்னிலை மற்றும் மனநிலை கொண்டவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை ஆனால் பனை ஓலையின் பயன்பாடு பனங்காட்டில் உள்ளவர்களுக்கு மிக எளிதாக வாய்த்துவிடுகிறது.

Facepalm

பட்டை வடிவில் செய்யப்பட்ட பனைஓலை முக கவசம்

ஆதி கண்டுபிடிப்புகள் என்பது திட்டமிட்டு நடந்தவைகள் என்பதைவிட அவைகள் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எதேச்சையாக நடைபெற்ற எதிர்வினைகள் என்பது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு மனிதன் பனை மரத்தினை சார்ந்து வாழ்ந்திருக்கிறான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  – 3

ஏப்ரல் 6, 2020

குகை ஓவியம்

பனை சார்ந்த வாழ்க்கை என்பது பெரும் கற்கால வாழ்க்கையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு. ஏனென்றால் பெரும்பாலும் பெரும்கற்கால மனிதர்கள் குகை ஓவியங்களாக வரைந்தவைகளில் மரங்களே கிடையாது. பெரும்பாலானவைகள் மிருகங்களும் மிருகங்களை வேட்டையாடும் மனிதர்கள் தான். ஆனாலும் வரை கலையின் ஆரம்ப குறியீடான புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம் போன்றவைகள் ஏராளமாக குகைகளில் காணக்கிடைக்கின்றன. பெரும் கற்கால மனிதர்கள் பனியுகத்தைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணமும் இருக்கிறது. இது ஒரு சார்பு நிலை புரிதலே. உலகின் ஒரு சில பகுதிகள் பனியால் மூடியிருக்கும்போது வேறு பகுதிகள் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் உண்மை. அப்படியானால் பனியுகத்திற்கு எதிராக ஒரு பனையுகம் இருந்திருக்கவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே பனை மரம் எவ்வகையிலெல்லாம் மனிதனுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என நாம் ஒரு வரைவை இட்டுப்பார்க்கலாம்.

பனை சார்ந்து மனிதன் வாழும்போது எண்ணிக்கைகளை அறிந்துகொள்ளுவது மிக எளிதாக இருந்திருக்கிறது. பனை விதைகள் பெரும்பாலும்  ஒன்று இரண்டு மூன்று என இருப்பது எண்ணிக்கையின் ஆரம்ப படிநிலை என நாம் கொள்ள இயலுமா? அல்லது பனை ஓலைகள் ஒன்று இரண்டு என முளைப்பதும் ஆதி கால மனிதர்களுக்கு எண்ணிக்கை சார்ந்த புரிதலை மேம்படுத்துவதாக இருந்திருக்குமா?. ஏனென்றால் ஒரு இலை விடும்போது பனங்கிழங்கு மென்மையானதாக இருக்கும் என்கிற புரிதல் அவர்களுக்கு இருந்திருக்கும். அப்படியே இரண்டு இலை விடும்போது அவைகள் முற்றியிருக்கும். இந்த புரிதல் பனங்காட்டின் வாழ்வாதாரத்திற்கு  அடிப்படையானவை. அப்படியே இரண்டிற்கு மேல் ஓலைகள் கிளைத்தெழுமென்றால் அங்கே பனங்கிழங்கு இருக்காது என்கிற புரிதலும் கண்டடையப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக… இரண்டு ஆதி மனிதர்கள் சந்திக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவகளுக்கு ஒரு பனம் பழம் கிடைக்கிறது. அதற்காக அவர்கள் போட்டிபோடுபோது அந்த பழம் இரண்டாக பிளந்து ஆளுக்கு ஒரு விதைகளும் அதனுடன் இணைந்திருக்கும் சதைப்பற்றும்  கிடைக்கின்றன. இது சரியான பகிர்தல் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கும்.  அப்படியானால் மூன்று விதைகள் உள்ள பனம்பழம் கிடைக்கையில் அது சார்ந்து எழும் தீர்க்க முடியாத கேள்விகளே எண்ணிக்கை சார்ந்த நோக்கிற்கு ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும்.

Paleo Pal Art

பனை மரம் மிக தெளிவாக் தெரியும் குகை ஓவியம்

உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், மனிதர் தனது உடல் பாகங்களையே முதன் முதலில் எண்ணும் கருவியாக பயன்படுத்தியிருப்பர் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணுவதையே கற்கால மனிதர்கள் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் பனை ஓலைக்கு எத்தனை விரல்கள் இருந்திருக்கும்?  இவ்விதமான கேள்வி இயற்கையை உற்றுநோக்கும்போது எழுவது இயல்பு. கைகளுக்கும் பனை ஓலைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டடைந்தவுடனேயே இவ்விதமான பொருத்தப்படுகளை மனிதர்கள் யூகித்திருப்பார்கள். தன் உடலைப்போலவே ஒரு தாவரத்தின் இலைகள் இருக்கிறது எனும் எண்ணம் தான் பனையுடன் மனிதர்களுக்கான நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்குமா? இல்லை உணவின் வழியாக அது மனிதர்களுக்கு வாழ்வளித்தது காரணமாக இருந்திருக்குமா? இவ்வித கேள்விகள் ருசிகரமானவை. ஏனெனில் மேலும் அனேக வழிகளில் மனிதன் பனையோடு தனக்குள்ள உறவை வெளிபடுத்தியிருப்பான் என்பது தான் உண்மை.

பத்ரகாளி தன் பிள்ளைகளுக்கு பனையேற கற்றுக்கொடுத்த சம்பவம் குறித்து ஒரு பழங்கதை குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றில் உண்டு. தனது பிள்ளைகளின் பசியாற்ற பனை மரத்தை காளி உருவாக்குகிறாள். பின்பு தனது காலில் இட்டிருக்கும் தண்டட்டிகளை கழற்றி கொடுத்து அதனை தளை நாராக மாற்றி பனை மரங்களில் ஏற பணிக்கிறாள். பனை மரத்தின் உயரம் அதிகமானபடியால் காளி யோசித்தாள். ஒருவேளை பனை மரத்திலிருந்து தனது பிள்ளைகள் வீழ்ந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி பல்வேறு மூலிகைகளை இணைத்து ஒரு மருந்து தயாரித்தாள். இந்த மருந்தினை தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டி தனியே வைத்துவிட்டு வேறு என்ன செய்யலாம் என எண்ணலானாள். காளி பனை மரத்தினை உருவாக்கும்போது, தற்பொது இருப்பது போல அதன் ஓலைகள் உட்பகுதி இணைந்தும் வெளிப்பகுதி விரிந்தும் காணப்படவில்லை. தென்னை ஓலைகளில் இருப்பது போலவே அவைகள் தனித்தனியாக இருந்தன. ஆகவே, இவைகளை இணைத்து ஒன்றாக்கினால், பிள்ளைகள் பதனீர் குடிக்க உதவுமே என்று எண்ணி பிரிந்திருந்த ஓலைகளை ஒவ்வொன்றாக ஊசிகொண்டு தைக்க  ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த மாயவன், காளியை பார்த்து,  உன் பிள்ளைகளுக்காக நீ கஷ்டப்பட்டு ஓலைகளை பட்டையாக தைத்துக்கொண்டிருக்கிறாய் ஆனால் அவனைப் பார் உனக்கு பதனீர் தருவதற்கு முன்பாக தானே முந்தி பதனீரை சுவைக்கிறான் என சொல்ல, காளி பனையில் என்ன நிகழ்கிறது என அண்ணாந்து பார்த்தாள். பனம் பாளையை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையின் வாயில், அவ்வேளையில் தெரித்த ஒரு சொட்டு பதனீர் எதிர்பாராதவிதமாக தெறித்தது. பிள்ளை எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் தானே முந்தி பதனீரை சுவைத்துவிட்டானே என்ற ஆற்றாமையால் காளி ஓலைகளை அப்படியே வீசிவிட்டு செல்கிறாள். அவள் விட்டுச்சென்ற மருந்தினை அருகில் இருந்த அணில் சாப்பிட்டது. அதனால் தான் எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் அணிலுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் அது தப்பித்துக்கொள்ளுகிறது. அணில் சாப்பிட்டதில் மிச்சம் சில துணுக்குகள் எஞ்சியிருந்தன.  அப்படி மிச்சமிருத்த ஒரு சிறு துணுக்கை ஓணான் வந்து நக்கிப்பார்த்தது.  ஆகவேதான் ஓணான் கீழே விழுந்தவுடன் ஒரு கணம் தயங்கி பின்னே உயிர் பிழைத்து ஓடுகிறது என்றும் கதை அந்த விரியும்.

காளி வீசிவிட்டு சென்ற ஓலை உள்ளங்கையும் விரிந்த விரல்களும் என்ற வகையிலே நின்றுவிட்டிருந்தது. ஆகவே தான் இன்றும் பனை மரத்தில் உள்ள ஓலைகள் முற்றுப்பெறாமல் இருக்கிறது என்று அந்த பழங்கதை நிறைவடையும். இவைகளை ஒன்றிணைத்துப் பார்க்கையில், மனிதனுக்கு இயற்கை மீதான ஒரு கவனம் எப்படி ஒரு தொன்மமாக உருவெடுக்கிறது என்பதையும், மனிதன் இயற்கையிலேயே தன்னை சுற்றியுள்ளவைகளை கூர்ந்து பார்த்து தன்னோடு ஒப்பிட்டு தனது அறிவை மேம்படுத்துகிறான் எனவும் விளங்கும்.கைகளை ஒத்திருக்கும் ஓலைகள் எதை நோக்கி மனிதனை இயக்கின என்பது ஆய்வாக விரித்தெடுக்கவேண்டிய  ஒரு முக்கியமான காரியம்.

கைகளை பயன்படுத்தி எண்ணுவதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் inRum வெளிவந்தவண்ணம் உள்ளன. இவைகளில் ஃபிரான்ஸ்  தேசத்தில் உள்ள கோஸ்கெர் குகை (Cosquer Cave) மிக முக்கிய ஆய்வுத் தரவுகளாக  காணப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் பெரும்பாலும் கைகளை சாயத்தில் முக்கி அப்படியே குகைகளில் பதித்து வைப்பதாகவோ அல்லது கைகளை வைத்துவிட்டு அவைகளைச் சுற்றிலும் சாயமிடும் முறைமைகளையும் கொண்டிருக்கிறது. இதன் சிறப்புகளைக் குறித்து ஆராயும் கேரன்லை ஓவர்மான்  (Karenleigh A. Overmann) என்கிற ஆய்வாளர் பல தகவல்களை தொகுத்தளிக்கிறார். அவைகளில் முதன்மையானது கைவிரல் அடையாளங்கள் எவ்விதம் அன்றைய எண்ணிகை முறையினை சுட்டி  நிற்கிறது என அவர் விவரிக்கிறார்.

Paleo Palm

இந்த குகை ஓவியங்களில் பல இடங்களில் விரல்கள் குறிப்பிட்ட அளவைவிட சிறிதாக இருப்பதைப் பார்த்த போது அந்த விரல்கள் ஏதோ சடங்குகளில் வெட்டப்பட்டதாகவோ அல்லது வேட்டை நேரத்தில் பிற மிருகங்களோடு போராடும்போது இழந்த விர்லகளாகளின் பகுதியாகவோ இருக்கும் என்றே எண்ணினார்கள். மேலும் வேறு எதேனும் சூழலில் உடைந்து அழிந்து போன விரல்களைத் தான் இதன்மூலம் பதிவு செய்கிறார்கள் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் உடலியல் தரவுகளையும் அந்த குகைகளில் காணப்பட்ட ஓவியங்களையும் இணைத்து பார்த்தபோது மிக கண்டிப்பாக அவைகள் குறைவுபட்டுப்போன விரல்கள் அல்ல என்பது நிரூபணமானது.

Cosquar

கோஸ்கர் குகை ஓவியம்

மனிதர்கள் தங்கள் விரல்களை மடக்கி இவ்வித வடிவங்களை பதிப்பித்திருக்கிறார்கள் என்கிற முடிவிற்கு வருகிறார் கோரென்லை. அந்த விரல்களின் தன்மைக்கேற்ப எண்ணிக்கைகளை அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார்கள். மிகவும் சுவைபட காணப்படும்  இவ்வித ஆய்வுகளில் பனை ஓலைகளையும் இணைத்துப்பார்ப்பது மேலும் ருசிகரமாக இருக்கும்.

திருமறையில் காணப்படும் ஒரு நிகழ்வு இச்சூழலில் நாம் நினைவுகொள்ள ஏற்றது. மீதியானியருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையில் ஒரு போர் நிகழும் தருணம். இஸ்ரவேலர் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே கடவுள் கிதியோனிடம், இஸ்ரவேல் மக்கள் தாங்களே இந்த வெற்றியைப் பெற்றார்கள் என சொல்லாதபடிக்கு,  மக்களை எப்படி தெரிவு செய்யவேண்டும் என பணிக்கிறார்.  பயம் உள்ளவர்கள் திரும்பிப்போய்விடுங்கள் என்று சொன்னவுடனேயே இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் பதினாயிரம் பேரையும் கடவுள் பிரிக்கச் சொல்லுகிறார். அவ்விதம் கிதியோன் அங்கே இருக்கும் நீரூற்றண்டையில் மக்களை கூடிவரச் செய்து தண்ணீர் குடிக்க வைக்கிறான். அதன் முடிவு இவ்விதமாக இருந்தது.   “தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 6)

Palm tree

பனை மரம் – குகை ஓவியம்

இக்கதை போருக்கு ஆயத்தமாகும் தன்மையுடையவர்களை கிதியோன் தெரிவுசெய்வதை நமக்கு உணர்த்துகிறது ஒரு புறம் என்றாலும், அந்த தேர்வில் காணப்பட்ட மக்களின் பழக்க வழக்கம் நமக்கு சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.  முதலாவதாக முழங்கால் இட்டு தங்கள் வாய்களை நேரடியாக நீரில் வைத்து உரிஞ்சி குடிப்பவர்கள் சற்றே மிருகங்களின் தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாக கிதியோனிற்கு காணப்பட்டிருக்கலாம். முழங்கால் இட்டு வாய் தண்ணீரை நோக்கி செல்லும்போது கைகளும் தரையில் பதிந்திருக்கும் ஒரு காட்சி தான் நமக்கு தென்படுகிறது. வழக்கமான முறை அதுதான் போலும். ஏனெனில் பதினாயிரம்  பேர் அவ்விதம் தான் அந்த ஓடையிலிருந்து தண்ணீர்  குடிக்கிறார்கள். வெறும் முன்னூறு பேர் மட்டும் தங்கள் கரங்களில் தண்ணீரை வாரிக்குடிக்கிறார்கள். இவர்கள் குனித்து நீர் அள்ளுவதால் சற்றே ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு வகையில், கைகளை இணைத்து நீர் குடிக்கும் ஒரு வழக்கம் மனித வாழ்வில் நுழைவதை குறிப்பிடுகிறதாகவும் இருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை, வரைதலின் முதல் படியே கோடுகள் தான். கோடுகள் நேராக இடத்தெரிந்தாலே கோடுகளை வைத்து மற்ற வடிவங்களை உயிர்பெறச் செய்ய முடியும். அவ்வகையில் பனை மரம் கோடுகளின் முக்கியமான ஓர் அடையாளமாகவே இருக்கிறதாக அறிகிறேன். ஒன்று என்ற எண்ணிக்கையினை இன்று நாம் எழுதுவதும் நேர் கோடுகளும் பனை மரமும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாதவை. பனை மரத்திலிருந்து தான் மனிதன் எண்ணிக்கையைத் தொடங்கினான் என்பதற்குத்தானோ ஒன்று என்ற எண் எழுதப்பட்டதோ. அல்லது கோடுகள் வரைவது கூட பனை மரத்தின் நெடிய தோற்றத்திலிருந்து பெறப்பட்ட புரிதல் தானோ? ஆக கணிதத்தின் ஆரம்ப சுழியினை கற்கால ஓவியங்கள் நமக்கு தெரிவிக்கிறதாக் அறிகிறோம்.

tin-anewen-3 Palmyra Art

பனை மரத்துடன் தொடர்புடைய மிருகம் – குகை ஓவியம்

கற்கால ஓவியங்களில் மான் யானை காட்டு மாடுகள் மற்றும் வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் போன்றவையே அதிகமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கற்கால மனிதர்கள் தாவரங்களை அதிகமாக வரையவில்லை என்றே இதுகாறும் எண்ணப்பட்டிருந்தது. ஆனால் வெகு சமீப காலங்களில் பல்வேறு குகை ஓவியங்களில் இருந்து தாவரங்கள் சார்ந்த படங்கள் கண்டடையப்பட்டிருக்கின்றன. அவைகளிலும் பனை சார்ந்த படங்கள் நமக்கு கற்கால மனிதர்களுக்கும் பனைக்குமான நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற பகுதிகளில் உள்ள குகைகளில் பனை மரங்களும் அதன் ஓலைகளும் வெறும் கோடுகளாகவே காணப்படும் ஒரு படம் கண்டடையப்பட்டிருக்கிறது. வெண்மையும் சிவப்பும் கலந்த இந்த படங்கள் கி மு 10000 ஆண்டுகளை ஒட்டியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவிற்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் புதிதாக சொல்லி நிறுவ வேண்டியதில்லை. மனிதர்கள் மிக மகிழ்ச்சியோடு பனங்காட்டில் வாழ்வது போன்ற படங்கள் கற்காலத்திலிருந்து எழுந்து வருவது புதிய ஒரு உலகை நமக்கு காட்டத்தான்.

மனித வாழ்வில், கைகளை இணைத்து நீரை அள்ளி குடிக்கும் ஒரு சூழல் வந்த பின்பு, கைகள் குவிப்பதன் நுட்பத்தினை மனிதர்கள் கவனித்திருப்பார்கள். கைகளின் இடுக்கு வழியாக நீர் ஒழுகாமல் இருக்க கைகளை இணைத்து சற்றே குவிக்கும்போது அதிக நீர் எடுக்க வாய்ப்பு உள்ளது என்ற அறிதல் பனை ஓலைகளையும் இணைக்கலாமே என்கிற புரிதலுக்கு நேராக ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும். அப்படியானால் கைவிரல்களை ஒத்திருக்கும் ஐந்து நரம்புகள் கொண்ட ஓலைகளை சேர்த்து குவித்துப் பிடிப்பது அதிக அளவில் தண்ணீரை எடுத்து வர உதவியாயிருந்திருக்கும். அதுவே பனையில் செய்யப்பட்ட முதல் வடிவம் என்று நான் கருதுகிறேன்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

 

பின்னல்கள்  – 2

ஏப்ரல் 2, 2020

ஓலை

பனை ஓலைகளில் காணப்படும் பொருட்கள் நெடு நாட்கள் பயன்பாட்டிற்கு வருவது இல்லை என ஒரு புரிதல் நமக்கு இருக்கலாம். அது அப்படியல்ல, ஒரு பொருளின் பயன்பாட்டினை உணர்ந்து யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அதன் வாழ்நாள் இருக்கும். பனை ஓலைகள் பெருமளவில் கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில் கூட  பல வருடங்களாக பனை பொருட்களை மக்கள் பயன்படுத்தியதை பார்க்க இயலும். இவ்வித பயன்பாட்டு பழக்கவழக்கம் ஒரு பொருளின் தன்மையினை உணர்ந்து அதனை எப்படி பேணினால் அதன் வாழ்நாள் நீடிக்கும் என்பதை உணர்ந்த மக்களாலேயே  சாத்தியம். ஒவ்வொரு பொருளையும் பேணும் வழிமுறைகள் வித்தியாசமானது. பல்வேறு பனை பொருட்களை பேணும் முறைகள் நினைவுகளாக கூட இன்று எஞ்சியிருக்கவில்லை. முறையானயான பயன்பாடு தான் பனை பொருட்களை நெடுநாட்கள் காப்பாற்றும். அவ்வகையில், நமது கலாச்சாரம் பனை பொருட்களை தகுந்த முறையில் பேணி பாதுகாத்த ஒரு உயரிய பண்பாடாகும்.

EDN_2773

பனை ஓலைக் கூடையுடன் ஆரோன்

ஆனால் பயன் படுத்தி ஏறியும் பழக்க வந்த பின்னர், பனை ஓலைகளுக்கும் அந்த கதியே ஏற்பட்டது. நவீன பொருட்கள், நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. பனை பொருட்கள் கீழானவைகளாக எண்ணி பேணுவது சார்த்த அறிவு மங்கிப்போயின.  ஆகவே அவைகள் பெருமளவு மதிப்பிற்குரிய பொருட்களாக கவனத்துக்குட்படுத்தவில்லை.  பனை சார்ந்து இயங்கும் கலைஞர்கள்  நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பாட்டியோ மாமாவோ யாரோ ஒர் தெரிந்த எளிய மனிதராக இருப்பதினால் அவர்களது முக்கியத்துவம் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்ட பின்னர் இவ்விதமான முறைசாரா கல்விக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை. இவ்விதம் நுட்பமான வேலைகள் செய்வோரை நாம் எவ்வகையிலும் பொருட்படுத்துவதுமில்லை. ஆனால் மனித நாகரீகத்தில் பின்னல்களுக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கிறது. ஆகவே தான் பட்டுச் சாலை மிக முக்கிய வணிக பாதையாகவும் கலாச்சார பாதையாகவும் வரலாற்றில் இன்றளவும் கவனிக்கப்படுகிறது.

பின்னல்கள் என்பது மனித வாழ்வில் எஞ்சியிருக்கும் மிக தொன்மையான கலை வடிவம் என்கின்றனர் ஆய்வாளர்கள். புதிய கற்காலம் முதலே பின்னல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 12000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான புற்பூண்டுகள்   கொண்டு மனிதன் பின்னல்களை செய்ய கற்றிருக்கிறான். வேலியமைப்பது மற்றும் சிறு பொருட்கள் செய்வது என அது பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கிறது. எனினும்  முதன் முதலில் மனிதன் எந்த தாவரத்தை பின்னல்களுக்கு  பயன்படுத்தியிருப்பான் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை ஆய்வாளர்களிடம் இருப்பதில்லை.  வரலாற்றில் எஞ்சிய அந்த பக்கங்களை பனை மரம் கொண்டு நாம் தைரியமாக நிரப்ப இயலும்.

சில அறிஞர்கள் பழைய கற்காலம் முதலே பின்னல்கள் வழக்கில் இருந்ததாக கூறுவார்கள். 27000 வருடங்களுக்கு முன்பே பிரி போன்ற பொருட்களால் பைகள் கச்சைகள் போன்றவைகளை செய்திருப்பதாக கண்டடைந்திருக்கிறார்கள். எரிந்துபோன துணியும் பானைகளில் பிரிகளின் அடையாளங்களும் பதிந்திருப்பதை செக் குடியரசில் (Czech Republic) உள்ள தோல்னி வெஸ்டோனிஸ் (Dolní Věstonice) என்ற பழைய கற்கால குடியிருப்பில்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தென்னமரிக்காவைப்பொறுத்தவரையில் கி மு 10100 முதல் 9080 வாக்கில் கிடைக்கபெற்ற ஆறு பாய்கள் மிக சீராக செய்யப்பட்டவைகளாக இருந்திருக்கின்றன. இவைகள் தாவரங்களை மையமாக கொண்டு நெய்யப்பட்டவைகள் என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சணல் நூலினால் நெய்யப்பட்ட துணியினை மத்திய கிழக்கு நாடுகளில் கி மு 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து கி மு 5000 ஆண்டுகளில் ஆளி செடியிலிருந்து பெறும் கயிற்றினை திரித்து நெய்ய கற்றிருக்கிறார்கள். சீனாவின் பட்டு நூல் பாரம்பரியம் 3500 ஆண்டுகள் என்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த பின்னல்களின் நெடுந்தூரப் பயணம் என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்களால் சிறுக சிறுக பெற்றடைந்த ஞானம் என்பதாகவே இதன் மூலம் நாம் அறிகிறோம்.

திராவிடர்களின் நூற்பு கலையானது 5000 ஆண்டுகள் பழைமையானது என்றும் அது கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் கலாச்சாரத்தைவிடவும் மேலானதாக இருந்திருக்கிறது என இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல் தீர்க்கமாக கூறுகிறார்.  மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகள் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது என அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் பருத்தி ஆடைகளின் இற்றுப்போன எச்சத்தை கண்டடைந்திருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு முந்தைய காலம் எப்படியானது என்கிற கேள்வியினை நாம் கேட்டுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பருத்தி பயிர் செய்து நூற்பு கலை மேலெழுந்திருக்குமானால் அதற்கு முந்தைய நிலை முடைதல் என்னும் கலைதான் என என்னால் தீர்க்கமாக கூறமுடியும்.

Mohanjadaro

மொகஞ்சதாரோ நகர அரசனும் அவர் அணிந்திருக்கும் அழகிய ஆடையும்

நமது பண்பாட்டிலிருந்து தூர நோக்குகையில் நாமும் எளிதாக எதனையும் சொல்லிவிட முடியாது என்பது உண்மைதான். என்றாலும் பனை சார்ந்து வாழும் ஒரு கலாச்சாரத்தில் பனை மிக முக்கியமாக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாம் வாழும் காலத்தில் நமது கைகளில் வந்து சேர்ந்திருக்கும் பனை ஓலைப் பொருட்களின் வரலாறு மிக நெடியது என்பதையும் நாம் உணர்ந்தே ஆகவேன்டும். அவ்வகையில் நாம் ஆழ்ந்து நோக்கும்போது, பனை ஓலை சார்ந்த கலைஞர்கள் ஒரு தொல் பண்பாட்டின் எச்சமாக நம்மிடம் இருந்துகொண்டிருப்பவர்கள். மிக மிக அரிதானவர்கள். காலத்தால் அடித்துச்செல்லப்பட்ட மாபெரும் கலையின் எச்சத்தை தங்கள் உயிர் மூச்சைப் பிடித்து இன்றும் வாழ வைப்பவர்கள். பல்வேறு நாடுகளில் இவ்வித தொல் கலாச்சாரத்தின் எச்சங்கள் புதை படிவங்களாக எஞ்சியிருக்கையில், நம்மிடையே இவர்கள் வாழும் தொன்மங்களாக இருக்கிறார்கள் என்பது எத்துணை சிறப்பான காரியம்.

பனை மர ஓலைகள் தன்னளவில் மிகவும்வழுவழுப்பானவைகள். அவைகளின் அகன்ற வடிவம் நேரடியாக பழைய கற்கால மனிதர்களால் பயன்படுதப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. தாய்மார்களே தங்களது குழந்தைகளுக்கான படுக்கையாகவோ அல்லது மழையிலிருந்து காப்பாகவும் விழுந்த பனையோலைகளை பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் மேலெழுந்து வர காலம் அவர்களுடன் கைகோர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி பனையுடன் எப்படி மனிதர்களுக்கான தொடர்பு ஏற்பட்டது? எங்கே ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற இயலாது ஆனால் இரண்டு கண்டங்களில் பனை விரவி பரவியிருந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. மனித குல ஆரம்பம் முதலே பனை அவர்களுக்கு ஏற்ற தோழனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஒரு உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளலாம். இரண்டு முக்கிய காரணிகள் நமக்கு தடயங்களாக இருக்கின்றன. ஒன்று ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது என்கின்ற ஒரு தரவு. அப்படியே நாம் பயன்படுத்தும் பனை மரமானது ஆசியாவில் தோன்றியதாக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் மற்றும் பனைமரம் ஆகிய  இந்த இரண்டு இனங்களின் சந்திப்பும் நிகழ்ந்த காலம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பின் காலம் என மனித வாழ்வில் நாம் கூறமுடியும். பரஸ்பரம் மனிதனும் பனை என்னும் தாவரமும் இறுக தழுக்கொண்ட இந்த காலகட்டம் மனித வாழ்விலும் தாவரங்கள் வாழ்விலும் ஒரு பொற்காலம் எனலாம். ஏனென்றால் மனிதன் உணவுக்காக பல்வேறு இடங்கள் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது பனை மரமே அவனுக்கு உணவளித்து அவனை ஓரிடத்தில் தங்கச் செய்த கற்பக விருட்சமாக காணப்பட்டிருக்கிறது.

தானியங்களை மனிதன் கண்டுபிடித்தது கி மு 10000 ஆண்டு வாக்கில் தான். ஆனால் தானியத்தினை உணவு பொருள் என நுண்மையாக கணுபிடிக்கும் ஒரு அறிவிற்கு முன்னால் உணவு என்பது கனிகளும் கிழங்குகளுமாகவே  மனித வாழ்வில் இருந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டுமே வருடம் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் கிடைக்கும். பனை சார்ந்த சூழியலில் காணப்படும் சிறு உயிர்களும் ஒரு உணவு சங்கிலியை மனிதனுக்கு வழங்கியிருக்கின்றன. குறிப்பாக பனங்காட்டில் மிகுந்து வளரும் கரையான் மனிதனுக்குத் தேவையான புரதத்தினை வாரி வழங்கியிருக்கும்.  இவ்விதம் நீர்நிலைகளும் பனைமரமும் ஒன்றிணையும் தடங்களில் மனிதனின் ஆதி வாழ்வு உருப்பெற்றிருகும் வாய்புகள் வளமாக இருக்கின்றன.

பனை மரத்திலிருந்து பனம் பழங்கள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரைக் கிடைக்கும். அப்படியே பனங்கிழங்குகள் மிச்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். இவ்வித சூழல் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஏற்றவைகள். பனைக்கு இணையாக தொடர்ந்து வருடம் முழுவதும் உணவளிக்கும் வேறு தாவரங்கள் ஏதும் இன்று நம்மிடம் எஞ்சியிருக்கவில்லை. மாத்திரமல்ல, மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்களை வழங்கும்  வேறு மரங்களும் இல்லை. ஆகவே பனை மரத்தினை மனித வாழ்வின் முதன்மையான மரம் எனக் கொள்ளுவது மிகச்சரியாகவே இருக்கும்.

மேலும் பனை மரத்தின் குருத்துகள் பஞ்சகாலத்தின் முக்கிய உணவாகும். கற்கால கருவிகளைக் கொண்டு பனை மரத்தைச் சிதைத்து அதன் குருத்தினை உண்டு கூட உயிர் தப்பியிருக்ககூடிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆகவே தான் மனித மரபணுவில் பனை ஆழமாக பதிந்துபோய்விட்டது.

மேலும் பனை பல்வேறு வகைகளில் மனிதனுக்கு உதவியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. வெட்டுவதற்கு ஏற்ற வகையில் கூர்மையான கருக்குகள் கொண்ட அதன் மட்டை ஆயுதங்கள் குறித்த ஒரு பார்வையைக் கொடுத்திருக்கும். விழுந்துபோன பனைகளில் எஞ்சியிருக்கும் குழிகள் அவன் பொருட்களை வைத்துகொள்ளவும் உதவியிருக்கும். கூடாகிப்போன பனை மரத்தடிக்குள் பதுங்கிக்கொள்ளவும் வாய்ப்பிருந்திருக்கிறது.

ஆகவே பனை சார்ந்த ஒரு வாழ்விடம் மனிதன் ஆதி காலம் முதலே தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்கிறது. பொதுவாக பனை மரங்கள் அடர் காடுகளில் காணப்படுவது இல்லை. மனித வாழ்வு அரைப்பாலை நிலங்களிலேயே செழித்திருக்கிறதாக கூறுகிறார்கள். அவ்வகையிலும் பனை தன்னை முதன்மையான தாவரமாக மனித வாழ்வில் முன்னிறுத்துகிறது.

பின்னல்கள் மனித வாழ்வில் மிக படிபடியாக கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலை. கைகளால் நெய்து பின்னர் படிபடியாக விசைத்தறி மற்றும் மின் தறிகள் என நாம் பல நூற்றாண்டுகள் கடந்து வந்து விட்டிருக்கிறோம். என்றாலும் மனித கைகளும் மனித மனமுமே இவ்வித வளர்ச்சிப்படிகளின் ஆரம்பம் எனக் கொள்வோமானால் நம்மிடம் எஞ்சியிருக்கும் பனை சார்ந்த கலைஞர்களின் வாழ்வினை நாம் போற்றவும் அவர்களின் முக்கியத்துவத்தை உணரவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் பனை வாரியம் என்பது விவசாயத்துறையின் கீழ் வருவதல்ல. மாறாக ஜவுளித்துறையின் கீழ் இதனை அமைத்திருக்கிறார்கள். ஏன் என எண்ணிப்பார்க்கையில் காதி கதர் கிராம தொழில் முனைவோர் பனை ஓலைகள் சார்ந்த பொருட்கள் பின்னலாடைகள் சார்ந்த ஒன்றாக இருப்பதாகவே கருதியிருக்கிறார்கள். மேலும் இவ்விதம் இணைத்து செயல்படும்போது பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பயன் அமையுமே என்ற நல்லெண்ணத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பனை சார்ந்த புரிதலற்றவர்களால் பனை ஓலை பொருட்கள் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. அவ்விதம் கைவிடப்பட்டவைகளும் நினைத்து எண்ணி கைவிடப்படவில்லை. புரிதலற்ற தன்மையாலும், வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டுமே கைவிடப்பட்டன.

குறிப்பாக மணப்பாடு மற்றும் கடலூர் போன்ற  இடங்களில் நிறுவப்பட்ட பனை சார்ந்த பயிற்சி மையங்கள் எல்லாம், பாரம்பரிய முறைகளை ஒவ்வொன்றாக வைவிட்டு நவீன வழிமுறைகளையும் வடிவங்களையும் முன்னெடுத்தன. இவைகள் பனை ஓலையினை அழகாக மாற்றி விற்பனை செய்யும் வடிவமைப்பு கொண்டவையாக இருந்தாலும் பாரம்பரிய பொருட்களில் காணப்பட்ட பயன்பாட்டு தன்மையும் உறுதியும் இவைகளில் இல்லாமல் ஆகின. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் உள்நாட்டு பயன்பாட்டு நிலையிருந்து வெளியேறின. மக்கள் மிகவும் மலிவான அழகான நெகிழிப் பொருட்களை தேடிச் செல்லலாயினர்.

இச்சூழலில் தான் பனையோலைகள் நமது அன்றாட வாழ்விலிருந்து  வெளியேறுவதைப் பார்க்கின்றோம். சிறுக சிறுக அவைகள் மறைந்து செல்லுவதை உணராதபடி நம்மை சூழ பிற பொருட்கள் வந்து ஓலைகளின் இடத்தைப் பிடித்துவிட்டன.  இன்று பனை சார்ந்த வாழ்வு அழிந்துகொண்டிருக்கும்போது பனை சார்ந்த எவ்வித கலைகளும் மேலெழும்பும் வாய்ப்புகள் இல்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை முன்னெடுப்பதற்கும் மனித வாழ்வில் இவைகளின் அளப்பரிய பங்களிப்பினை எடுத்துக்கூறுவதற்கும் பனை சார்ந்த கலைஞர்கள் இன்றியமையாதவர்கள். பனை ஓலை கலைஞர்கள், பனையேறிகள், பனை உணவு தயாரிப்பவர்கள் போன்றோர் யாவும் பனை மரத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள். ஒன்று அழிந்தாலும் அனைத்தும் இணைந்தே அழிந்துவிடும் அபாய சூழலே இன்று இருக்கிறது. இவ்வித அழிவின் விழும்பில் இருக்கும் ஒன்றினை கவனத்துடன் மீட்டெடுப்பது மிக முக்கிய பணியாக நம்முன் எழுந்து நிற்கின்றது.

அப்படியானால் பனை கலைஞர்களின் கூட்டு நிகழ்ச்சிக்கான காரணம் என்ன? அவைகளின் தேவை தான் என்ன? என்கிற கேள்விகள் எழும்புவது இயல்பே. இன்று நமது கண் முன்னால் அழிபவைகள் ஆவணப்படுத்தப்படாமலேயே அழிவது இந்த காலகட்டத்தில் நிகழ்வது தான் இவற்றின் பேரவலம். நாம் வாழும் காலகட்டம் தகவல் தொழில்னுட்பம் பெருகியிருக்கும் காலகட்டம். இச்சூழலிலும் இவ்வித தகவல்கள் அரிதாக இருக்குமென்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.   இரண்டாவதாக பனை சார்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர் பனை மரத்தினை முக்கியத்துவப்படுத்தியும் இயற்கை பொருட்களை முன்னிறுத்தியும் விற்பனை செய்வது வழக்கம். மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. ஓரளவிற்கு இவைகள் ஏற்புடையதே. ஆனால் ஒருபோதும், ஒரு தனிப்பட்ட பொருளை ஒரு கலைஞருடன் இணைத்து முன்னிறுத்துவதில்லை. ஒருவகையில் இது பனை சார்ந்த கலைஞர்களுக்கு ஒரு பின்னடைவு என்றே கருதுகிறேன். பனை ஓலைக் கலைஞர்கள் முன்னிறுத்தப்படாது போகும்போது, அவைகளின் தனித்தன்மைகள் என்னவாகும்?

இப்படி யோசித்து பார்ப்போம், பல்வேறு இசைக்கலைஞர்கள் இன்று இருந்தாலும், இசைக்கலைஞர்களுள் இளையராஜா என்பவர் பெற்றிருக்கும் ஒரிடத்தைபோல பனை சார்ந்த கலைஞர்களும் ஓரிடத்தைப் பெறவேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கு இவ்வித கூட்டு முயற்சிகள் இன்றியமையாதவை. வேறு வகைகளிலும் இவைகளைச் செய்யலாம் என்றாலும், இப்போது நான் முன்வைக்கும் வழிமுறைகள் இவைகளே. 

குறிப்பு: ஓலை என்பது செய்தி எனவும் பொருள்படும்

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்

ஏப்ரல் 1, 2020

அடி

பனை சார்ந்த எனது தேடுதல், நிறைவடையாத ஒரு பிரம்மாண்ட பின்னல். சில கோணங்களில் அவைகள் ஒரு முடிவினை எட்டிவிட்டது என்றாலும் அவைகள் முடிவிலி நோக்கியே என்னை இழுத்துச் செல்லுகின்றன. ஒன்றன் மேல் ஒன்றாக ஏறிச்செல்லும் இப்பின்னல்கள் என்னை ஒரு முழு வடிவமாக்க முயற்சிக்கின்றன. அப்படி ஒரு முழுமைகொள்ளலை பனை சார்ந்தும் எட்டிவிட இயலுமா என்றே எம்பிக்கொண்டிருக்கிறேன். இது வெற்றி தோல்வி என்ற பாதையை தெரிவு செய்யும் களமல்ல தடம் பதித்து பாதை சமைக்கும் ஒரு கடுந்தவம். பின்னிப்பின்னி முடைந்தெடுத்து ஒன்றாக்கி சேர்ப்பதில் உள்ள நுட்பம் நேர்த்தி போன்றவை அலைந்து திரிந்து தேடும் வாழ்க்கை முறை  இருந்தாலே  சாத்தியம்.

எனது வாழ்வு குறித்தும் பனைத் தேடுதல் குறித்தும் முழுக்கவே பனை மரச் சாலையில் எழுதியிருக்கிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு எனது இருச்சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தேன். பனை மரம் மீதுள்ள எனது 20 வருடத்திற்கும் மேலான வேட்கையினை அதன் மூலம் நான் நிறைவேற்றிக்கொண்டேன். மேலதிகமாக எழுத ஏதுமில்லை என உணர்த்தபோது இலங்கை பயணம் அமைந்தது. இலங்கை தேசிய கிறிஸ்தவ திருச்சபை மாமன்றம் என்னை அழைத்து திருச்சபை சார்ந்த பனை மர வேட்கையினை நிகழ்த்த உதவியது. ஆகவே அப்பயணம் சார்ந்த பதிவுகளையும் தொடராக  எழுதினேன். பின்பு   பனை சார்ந்த தொடர் ஒன்றினை  கற்பக தரு என்ற தலைப்பில், முதன் முதலாக தி இந்து தமிழ் நாழிதழ் வாயிலாக 50 வாரங்கள் வெளியிட்டேன்.  ஒவ்வொரு வாரமும் ஒரு பனை சார்ந்த பொருள் மற்றும் ஒரு பனை கலைஞரை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையுடன் ரசித்து அவைகளை வடிவமைத்தேன்.

panaimara-saalai_FrontImage_871

பனைமரச் சாலை

தி இந்து தமிழ் திசையில் நான் பதிப்பித்த  அத்தனை கட்டுரைகளும் தமிழ் வரலாற்றில் பனை  சார்ந்து பதிக்கப்பட்ட முதல் தகவல்கள். அனைத்து தகவல்களையும் நானே நேரில்  தேடி சென்று சேகரித்தவைகள். அந்த தேடுதலில் இருந்த சவால் மற்றும் அதில் என்னைப் பரவசமடயச் செய்யும் தகவல்கள் என என்னை நிறைத்துக்கொள்ளும் ஒரு பயணமாக அவைகள் அமைந்திருந்தது. இன்னும் குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு பனை சார்ந்த பொருட்களை மையப்படுத்தியே நான் எனது ஆய்வுகளை விரிக்க வேண்டிவரும் என நினைக்கிறேன். ஒருவேளை எனது வாழ்நாள் முழுவதுமே இத்தேடலில் நான் செலவிடக்கூடும். அத்துணை செறிவுமிக்க ஒரு தேடலாக இது இருக்கிறது.

எனது பனைமரச்சாலை பயணத்தின்போது ஒன்றைக் கவனித்தேன், தமிழகத்தில் தான் பனை சார்ந்த பொருட்கள் அதிகம் செய்யப்படுகின்றன. அதே நேரம், நாம் செய்யாதவற்றை பிற இடங்களில் மக்கள் செய்துகொண்டுவருகிறார்கள். அல்லது நம்மிடம் வழக்கொழிந்துபோனவைகள் பிற இடங்களில் உயிர்ப்புடன்  இருக்கின்றன. இது எனக்குள் ஒரு அகத்தூண்டலை ஏற்படுத்தியது. பின்னல்கள் என்பவை எவ்வாறு மனித வரலாற்றில் துவங்கியிருக்கும்? அதன் காலம் என்ன? எச்சூழலில் இவைகள் பன்மடங்காக பெருகி ஊறியிருக்கும்? போன்ற முடிவிலா கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. எனக்கு கிடைக்கபெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாத ஒரு மாயவலை என்னைச் சூழ்ந்து இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே துணிந்து எனது மனதில் பட்டவைகளைக் கூற முடிவெடுத்தே இப்பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன். கடந்த 2017- 18 வரை ஹென்றி மார்ட்டின் இன்ஸ்டியூட், ஹைதராபாத் என்னை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம் எடுக்க பணித்தார்கள். அவ்வகையில் பனை சார்ந்து நான் தமிழகம் முழுக்க பயணித்தது எனக்கு பேருதவியாக இருந்தது. இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அவர்களின் உதவியுடன் நான் பெற்ற புரிதல்களே அன்றி நான் பனைமரச்சாலை எழுதியபோது நான் அறிந்திருந்தவைகள் அல்ல. ஆகவே எனது வணக்கத்தையும் நன்றிகளையும் கூறத்தகுந்தவர்கள் அவர்கள்.

இரண்டாவதாக 2018 – 19 வருடங்களில் நான் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து பணியாற்றினேன். பனை நாடு என்ற அமைப்பினை அப்போது உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருகோடி பனை விதைகளை நடும் திட்டங்களை முன்னெடுத்தோம். தமிழகம் தழுவிய ஒரு பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் மீண்டும்  கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தையும் நான் பயன்படுத்தி பனை சார்ந்த கலைஞர்களை தேடிக் கண்டுபிடித்தேன். குறிப்பாக பனை ஓலைக் குடுவை என்ற மறைந்து போன ஒரு கலையைக் கூட இதன் வாயிலாக நான் மீட்டெடுக்கும் ஒரு தருணமாக அமைத்துக்கொண்டேன். மட்டுமல்ல, இக்காலங்களில் தான் எனது எழுத்துக்கள் தொடராக தி இந்துவில் வெளிவரத்துவங்கின. ஆகவே குழித்துறை மறை மாவட்டதிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை பரிந்திரைத்த அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.

EDN_2785

பனையோலை தோள்பை

பனை சார்ந்த எனது தேடுதலில் எனக்கு பேருதவியாகவும் எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் பனை ஓலைக் கலைஞர்கள் தாம். அவர்களின் பின்னல்கள் குறித்து நான் இப்போது எண்ணிப்பார்க்கையில், பல நுண் தகவல்களை நான் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேனே என்கிற ஒரு அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த விடுபடல் எப்போதும் இருக்கும் என்பது எனது அனுபவம். வாசகர்கள் அதனை தங்கள் வாசிப்பினூடாகவும் பயணத்தினூடாகவும் நிறைவு செய்வது ஒன்றே வழி. ஆகவே எனது பெரு வணக்கத்திற்குறிய நபர்களாக பனை கலைஞர்களையே குறிப்பிடுவேன்.

பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பனை ஏறுகிறவர்களுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. பனை ஏறுகிறவர்கள் பனை சார்ந்த கலைஞர்களாக இருக்க இயலும் ஆனால் பனை சார்ந்த கலைஞர்கள் பனையேரிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே பனை சார்ந்த கலை பணிகளில் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு வளமாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெருமளவில் உணவிற்கு ஈடாகவே பனை சார்ந்த உண்ணாபொருட்கள் தமிழக வாழ்வில் பெரும் பொருளியல் பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. இவைகள் ஆய்வு செய்யப்படவேண்டிய பணி என்றாலும் அவ்வகையான ஆய்வுகளை செய்யும் வலுவோ சூழலோ இன்று தமிழகத்தில் இல்லை என்பது தான் உண்மை.

ஆகவே பனை சார்ந்த கைவினைக் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்ற வரலாற்று உண்மையினை பதிவு செய்யும் ஒரு சூழல் இதன் வாயிலாக கிட்டியது. அது உண்மையும் கூட. பனைத்தொழில் ஆண்களால் செய்யப்பட்டபோது  அதனை சார்ந்து வாழும் பெண்கள் தமது எஞ்சிய நேரத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்களை செய்து தமது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்தனர். இவைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆண்களும் பனை சார்ந்த கலையில் தொய்வடைந்திருக்கவில்லை என்பதுவே எனது அனுபவ உண்மை. ஆண்களுக்கான பிரம்மாண்ட படைப்புகள் என தனி வரிசையே இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே இக்கலவையான கலைகளினூடாக ஒரு பயணத்தை எடுத்துச் செல்லுவது எனக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு முன்னோடியாக இவைகளில் முன்னின்று நான் செய்யவேண்டிய மேலதிக பொறுப்பும் எனக்கு உள்ளதாக நான் நினைத்ததால் இவைகளை தொகுக்க விழைகிறேன். கூடுதலாக பனைமரச்சாலை புத்தகமாக வெளிவருவதற்கு முன்னே, அது இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக பல்வேறு பனை சார்ந்த கலைஞர்கள் மேலெழுந்திருக்கிறார்கள்.

EDN_2782

பனையோலை தோள்பையுடன் ஆரோன்

(more…)


%d bloggers like this: