Archive for திசெம்பர், 2020

பனைமுறைக் காலம் 2

திசெம்பர் 21, 2020

பனை இரயில்

இரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட இருந்தாலும் சீக்கிரமாக வந்துவிட்டோம்.  இரயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இரயிலுக்குள் ஏறிய பின்பு தான் காலை உணவு. உணவுகளை எடுத்து வந்த பெரிய ஓலை பை ஜாஸ்மின் செய்தது.  இளவரசி கற்றுக்கொடுக்க ஜாஸ்மின் மட்டுமல்ல திருச்சபையின் பல குழந்தைகள் பனையோலைப் பொருட்களை செய்து பழகினர். இவ்விதமான பின்னல்கள் பொறுமையாக செய்யவேண்டியது ஆகும். ஒரே விதமான பின்னல்களை மீண்டும் மீண்டும் செய்வது பெருமளவில் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், நுணுக்கங்களை தேடி கண்டடைவோருக்கு, அதில் கூடி வரும் நேர்த்தி அளிக்கும் பரவசம் அளவில்லாதது. இளவரசி அவ்வகையில் திறன்மிக்கவளும் பொறுமைசாலியும் கூட. பனை ஓலையை தொடமாட்டேன் என்ற ஜாஸ்மின், மெல்ல ஓலையின் பால் தனது கவனத்தை திரும்பியதற்கு இளவரசியின் பயிற்றுவிக்கும் திறன் ஒரு முக்கிய காரணம்.

ஜாஸ்மின் செய்த பனையோலைப் பை

இரயிலில் அமர்ந்தவுடன் எனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டேன். உணவு கூடைகளை ஓரிடத்தில் வைத்தேன். நான் எங்கும் எடுத்துச் செல்லும் பனை ஓலையால் செய்யப்பட்ட திருமறை பையினையும் தொங்கவிட்டேன். ஒவ்வொன்றும் அதற்கான இடத்தைப் பெற்றபோது அழகாகவே இருந்தன.  இவ்விதமாக அடுக்கியபோது ஏன் இந்திய அளவில் பனை ஓலைகளாலான பொருட்களை சேகரித்து அவைகளை ஒரு இரயில்  கண்காட்சியாக வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. எவரோ வைப்பது என்ன நானே எனக்கான இரயில் கண்காட்சியை அமைக்கிறேன் என்று எண்ணியபடி என்னிடமிருந்த ஓலைப் பொருட்களை இரயிலில் ஆங்காங்கே வைத்து நிறைவு கொண்டேன்.

உணவுபொருட்களை எடுத்துச் சென்ற பை

இளவரசி எனக்கு செய்து கொடுத்திருந்த தொப்பி மிக அழகானது. முதன் முறையாக நான் அதனை கண்டபோது வாரி அனைத்துக்கொண்டேன். அது எனது வாழ்வின் அங்கமாகிப்போகும் என அப்போது நான் சற்றும் நினைத்திருக்கவில்லை. முகம்மது என்னை பல கோணங்களில் இந்த தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறான். அதில் ஒன்றை நான் முகநூலில் பகிர்ந்தபோது எனது சித்தப்பா “வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிட்டார்கள். எனக்கு இரத்தம் தேவையில்லாமல் கொதித்தாலும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனது தொப்பியை குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் பார்த்தால் இது என்ன “கடவத்தை கமத்தி வெச்சிருக்கு” என்றே ஏளனமாக சொல்லி கடந்து செல்வார்கள். பார்ப்பதற்கு அகலமான பின்னல்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த எளிய தொப்பி குறித்த பின்னணியத்தை ஒருவர் அறிந்தால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

பலர் கலந்துகொண்ட பனை ஓலைப் பயிற்சியில் இளவரசி இரண்டாம் நாள் தான் கலந்துகொண்டாள். ஆறு நாள் நடைபெற்ற அந்த பயிற்சியில், பிறரை விட சிறப்பாக கற்று தேறினாள். ஓலையின் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தமைந்தது. பனை ஓலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டதா இல்லை, திறமையே உருவான அவள் பனை ஓலையில் தனது கலை வாழ்வைக் கண்டடைந்தாளோ தெரியவில்லை. சொந்தமாக தனக்கென ஒரு செல்பேசி இல்லாதவள், தனது தந்தை வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து  அவரது செல்பேசியை வாங்கி, அதில் காணப்படும் பல்வேறு பனையோலை பொருட்களை பிரதியெடுக்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான் ஒருநாள் அழகிய காலணி ஒன்றைச் செய்து காண்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த காலணி எனக்கு பிடித்துப்போயிற்று. பனையோலையிலேயும் பனம் பத்தையிலேயும் காலணி போட்டு செல்லவேண்டும் என்பது எனது வெகுநாளைய விருப்பம். முற்காலங்களில் பனை ஓலையிலேயே எளிய மனிதர்கள் காலணிகளை செய்து புழங்கியிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட எனது சகோதரி அவ்விதமான காலணிகளை மார்த்தண்டம் சந்தைக்கு பொருட்களை சுமந்துவரும் எளிய மனிதர்கள் போட்டிருப்பதை தான் பார்த்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இவ்வித காலணிகள் நிமிடத்தில் செய்யகூடியது. ஒருநாள் பயணத்திற்கானது. அது போலவே முட்காடுகளில் இருந்து தங்கள் கால்களைப் பாதுகாக்க பனையேறிகள் இவ்விதமான பனை ஓலை செருப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் தங்கியிருக்கையில், எங்கள் வீட்டின் அருகில் அருணாச்சலம் எனும் பெரியவர் எனக்கு அவ்விதமான ஒரு செருப்பை செய்து கொடுத்தார். அந்த செருப்பை போட்டுக்கொண்டு நாகர்கோவில் வரை போய் வந்தேன். அதைக் குறித்து இந்துவில் நான் எழுதியபோது, தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வித செருப்பு கிடைக்குமா என்று ஒரு சித்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு கேட்டார். நமது வாழ்க்கையில் நாம் இழந்தைவகளுள் அனேகம் நமது வறட்டு கவுரவத்தால் தான். பிறர் நம்மைக்குறித்து  என்ன நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் இழந்தைவைகள் அதிகம். பனை சார்ந்த பொருட்கள், நமக்கு அதிக செலவு வைக்காதவைகள். சூழியலை மாசு படுத்தாதவைகள். ஒருவகையில், பனை சார்ந்த பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், அதன் மூலமாக  தோல் பதனிடும் ஆலைகளின் பெருக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம். நமது நிலம் கெட்டுப்போயிருக்காது. எண்ணற்றோர், வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

பாரம்பரியமாக இங்கே தயாரிக்கப்பட்ட பனையோலை  செருப்பிற்கும் இளவரசி தயாரித்த செருப்பிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தென் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓலைகள் பாய்போல சமதளமாக பின்னப்பட்டு பனை நார் கொண்டு வார் அமைக்கப்பட்டிருக்கும். இளவரசி செய்ததோ படகு போன்ற ஓர் வடிவம். தனியாக வார் தேவைப்படாமல் கால்களை பின்னல்களுக்குள் நுழைக்கும் ஒரு அமைப்பு. நாம் தற்காலங்களில் அணியும் கட் ஷூவை ஒத்திருந்தது. ஆகவே இது ஒரு இந்திய தயாரிப்பு போல் இல்லாதத்தால், எங்கிருந்து இதனைக் கற்றாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் ஒரு ருஷ்ய இணையதளத்தை காண்பித்தாள். அரண்டுபோனேன். அப்படியே ஓலைகளில் பின்னப்பட்ட அழகிய காலணிகள் செய்யப்பட்டிருப்பதைப் அந்த தளத்தில் பார்த்தேன். நம்பவே முடியவில்லை! ருஷ்யாவில் எப்படி ஓலைகள் கிடைக்கும்? ஆகவே எந்த இயற்கைப் பொருளைக் கொண்டு அதனை தயாரித்திருக்கிறார்கள் என தேட ஆரம்பித்தேன். 

ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளில் பாஸ்ட் (Bast) வகை காலணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இவைகள் டிலியா (Tilia) வகை மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தின் வெளிப்புற பட்டையை  நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பட்டைகளை உரிந்து இதனைச் செய்கிறார்கள். ருஷ்ய மொழியில் ஒரு ஜோடு என்பதை “லாப்டி” என்றும் ஒற்றைச் செருப்பை லாப்டோ என்றும் அழைக்கிறார்கள்.  இவைகள் ஏழைகளாலும் குடியானவர்களாலும் பயன்படுத்தப்பட்டதாலும், இதன் வாழ்நாள் குறுகியதாலும், பின்னாளில் வசை சொற்களாகவும் பயன்பட்டன. அது அப்படித்தான், உலகெங்கும் திறன் மிக்கவர்களை வசை சொற்களால் அழைப்பது என்பது மேட்டுக்குடித்தனம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலம் அது.

ருஷ்யாவில் தயாரிக்கப்படும் பாஸ்ட் மரப்பட்டையில் தயாரிக்கபடும் காலணிகள்

ஒவ்வொரு மனிதனும் இவ்வித காலணிகள் செய்ய கற்றிருப்பர். பெரும்பாலும் ஆண்களே இதனைச் செய்வர். பெண்கள் யாரேனும் செய்யக் கற்றிருந்தால் குடும்பத்தில் அவர்களுக்கு பெருத்த மரியாதை இருக்கும் என்பதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் இவைகளை செய்ய கற்றுக்கொள்ளும்போது முதல் காலணியை நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை நீரில் கலக்கி அவர்களுக்கு குடிக்க கொடுப்பார்களாம். இவ்விதமாக செய்வது கற்பவரை மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர் ஆக்குகிறது. மேலும், பல்வேறு பழமொழிகள் ருஷ்ய வாழ்வில் கலணிகள் பின்னுவது மிகவும் எளிதான ஒன்று என்பதையே சுட்டி நிற்கின்றன.

பழைய காலணிகளை வேலியோரத்தில் தொங்கவிடும் வழக்கம் கூட அங்கே இருக்கிறது. அனைத்து தீய சக்திகளும் அண்டாமல் இருக்க இவ்விதம் செய்யும்வழக்கம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். இவ்விதம் செய்யும் காலணிகளை குப்பையில் போடமாட்டார்கள் என்பதே அவைகளை செய்வோர் அவைகளுக்கு அளிக்கும் மரியாதை என்பதாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வித செருப்புகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவ்வித காலணிகள் செய்யக்கூடிய பழைமையான மர அச்சு தொல்லியல் நிபுணர்களால் கண்டடையப்பட்டிருக்கிறது. சுமார் 4900 வருட பழைமையான இவ்வித அச்சு, பழங்காலத்தில் எப்படி இதனை பயன்படுத்தி காலணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்க்த்டும். உலகம் முழுக்கவே தாவரங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வெறுங்கால்களை கொண்டு நடக்க சிரமமாக இருந்தபோது இவ்வித கண்டுபிடுப்புகள் எழுந்க்டிருக்கலாம். புதிய கற்காலத்தைச் சார்ந்த இவ்வித காலணிகளின் பயன்பாடு, தமிழகத்திலும், இந்திய நிலப்பரப்பிலும் இருந்திருக்கலாம் என்பதை தெளிவுற உணர்த்துகின்றன. பனையோடு கூடிய தொடர்புகள் நமக்கும் பனை ஓலை காலணிகள் பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதை விளக்குவதாக அமைகிறது.

இவ்விதம் மரப்பட்டைகளில் செய்யும் செருப்புகளோடு அவர்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வேறு சில பொருட்களையும் தயாரித்து பயன்படுத்த துவங்கினர். அவைகளில் பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் பையும், தொப்பியும் மிக முக்கியமானவைகள். இளவரசி, அங்கிருந்து தான் இந்த தொப்பியைக் கண்டடைந்தாள்.

பனையோலை தொப்பியும் பனையோலை திருமறை பையும் இரயிலில் அழகுற காட்சிபடுத்தியபோது

அது மாத்திரம் அல்ல இந்த தொப்பிக்கு வேறு ஒரு முக்கியத்துவம் கூட இருக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் நாம் காணும் நான்கு முக்கு கொண்ட பெட்டி அல்ல இது. இதற்கு 12 முக்குகள் இருக்கின்றன. அதுவே இதனை சிறப்புக்குறிய ஒன்றாக முன்னிறுத்துகிறது. பனை ஓலைகளில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு சூத்திரம் கொண்டது. பெரும்பாலும் ஒன்றுபோல தென்பட்டாலும், இவைகளுக்குள் ஒரு சில மாறுதல்கள் காணப்படும். அது புதியவர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  அந்த திடீர் திருப்பங்களுக்கு புதியவர்கள் திகைத்து நின்றுவிடுவார்கள். ஆனால் பழகியவர்களுக்கு அது ஊட்டி மலைப்பாதை போல. ரசித்து ஓட்டலாம். இளவரசி எதைச் செய்தாலும் அது திகைப்பூட்டும் அளவிற்கு அழகுடனிருக்கும். எப்படி இதனைச் செய்தீர்கள் எனக் கேட்டால், “அது ஈசிதான் பாஸ்ட்ரைய்யா” என்பாள். ஆனால் முதல் முறையாக எனக்கு அவள் செய்து தந்த தொப்பியைக் காட்டி கேட்டபோது “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றாள். இளவரசிக்கே சிரமமாக இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருமுறை நான் ஒரிசா சென்றபோது அங்கிருந்த துறவிகள் வாழ்வில் பனையோலைகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.  ஒரு ஜாண் அளவேயுள்ள ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் கயிற்றினை நுழைத்து, அவர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  சிறிய நீள்சதுரமான பெட்டி. அங்கிருந்த துறவிகளிடம் பழைமையான ஒரு பெட்டியை வாங்கி அதைப்போல செய்ய இயலுமா என குமரி மாவட்டத்திலுள்ள சில நண்பர்களைக் கேட்டேன். அனேகருக்கு தெரியவில்லை. இறுதியாக பல்வேறு வகைகளில் முடையும் திறன்கொண்ட பெண்கள் அமைப்பு ஒன்றைக் கண்டு அவர்களிடம் இதைப்போல் செய்துகொடுங்கள் எனக்கோரினேன்.  அவர்கள் பலவாறாக முடைந்து பார்த்துவிட்டு, இயலாது என கைவிரித்துவிட்டார்கள். ஏன் என நான் கேட்கவே “முக்கு எங்கே திருப்பவேண்டும் எனத் தெரியவில்லை” என்று தான் கூறினார்கள்.  அப்போதுதான் மொட்டைவிளை செல்லையா தாத்தாவைப் பார்த்தேன். எனது எம் எஸ் எல் 8537 புல்லட் வாகனத்திற்கு இருக்கையினைச் செய்து கொடுத்தவர் அவர்.   செய்துவிடலாம் என்றார். குமரி மாவட்டத்தில் இவ்விதமான ஒரு வடிவம் இதற்கு முன்பு இருந்ததில்லை. அவர் முயன்று  இவ்விதமான ஒரு அழகிய துறவிப்பெட்டியினைச் செய்து கொடுத்தார். மீண்டும் ஒரு தருணத்தில், இது போல செய்ய சிரமப்பட்ட அதே  பெண்களுக்கு இதனை எப்படி செய்ய வேண்டும் என சிறு கணக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் இலகுவில் பிடித்துக்கொண்டனர். அது அப்படித்தான், ஒவ்வொரு பொருளைச் செய்யவும் அதற்கான சூட்சுமம் இருக்கின்றது.

நான் பார்த்தவரையில்  பெரும்பாலும் பாரம்பரிய பொருட்கள் செய்யும் எவருமே மூன்று பொருட்களுக்கு மேல் செய்வதில்லை. பல பொருட்கள் செய்யத் தெரிந்திருந்தாலும், ஒன்றிரண்டு பொருட்களுக்குள் அவர்கள் தயாரிப்பவை நின்றுவிடும். ஏனென்றால், வேகம் தாம் இதில் முக்கியம். குறைவான கூலி கிடைக்கையில், வேகமாக செய்து கொடுக்கும் பொருட்களால்தான் ஏதேனும் குறைந்தபட்ச சம்பாத்தியத்தை இவர்களுக்கு உறுதி செய்யும். மேற்கத்திய நாடுகளைப்போல் தனித்த வடிவமைப்புகளுக்கான மதிப்பு இங்கே கிடையாது. பனையோலைக் கலைஞர்களை ஏமாற்ற முடியுமா? அல்லது சுரண்டிக்கொழுக்க முடியுமா? என்று அலைகின்ற மக்களே அதிகம்.

ஆகவே தான் நான் பனை ஓலைப் பொருட்களை விற்பனை செய்வதை முன்னிறுத்தாமல், பனை சார்ந்த பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். பனையோலைப் பொருட்களைச் செய்கிறவர்கள், அதில் உறைந்திருக்கும் திறன் சார்ந்த “மதிப்பை” உணர்ந்தார்கள் என்றால், பனை ஓலைகளை விலைகொடுத்து வாங்கி காப்பாற்றும் செயலைவிட அதன் ஆழ்ந்த கலைதன்மையை அறிந்து பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விழைவார்கள்.

என்னிடமிருந்த  ஒவ்வொரு பொருளையும் எடுத்து நான் இரயிலில் வைத்து அழகு பார்த்தேன். பனை இரயில் என்பது எப்படி இருக்கும்? என எனது கற்பனையை ஓட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பனை ஓலை கைவினைஞர்களை தெரிவு செய்து அவர்களை இணைத்து எடுத்துச் செல்லும் ஒரு இந்திய பயணமாக அது இருக்கவேண்டும் என எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் செய்யும் பாரம்பரிய பொருட்களை வைக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டி ஒதுக்கப்படவேண்டும். அந்த பெட்டிகளில் ஒவ்வொரு பொருளின் அருகிலும் அப்பொருளினைக் குறித்த சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். முடிந்தால், பல்மொழிகளில் அந்த பொருள் குறித்த ஒலிக்கோர்ப்பு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். கண் தெரியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வாய் பேசாதவர்களுக்காக பனை சார்ந்த கலாச்சாரத்தை விளக்கும் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கலைஞர்கள் ஓலையில் பொருட்களை செய்து காட்சிக்கு வைப்பது சிறப்பாக இருக்கும்.   ஒரு உணவு பெட்டி, பனை உணவுகளை விற்கும்படியாகவும், ஒரு பெட்டி பனையோலை சார்ந்த பொருட்களை விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மிகப்பெரிய இலாபம் கிடக்கவில்லை என்றாலும், இவ்வித முயற்சிகள் இரயில்வே துறை தனது சமூக பங்களிப்பாக சூழியலுக்காகவும் சமூக நல்லைணக்கத்திற்காகவும், கிராமிய பொருளியலை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய துணைக் கண்டத்தின் பல்முனைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். அவ்வகையில் இரயில்வே மிகப்பெரும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவதால்,  துண்டுபட்டுகிடக்கும் சமூகங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க இயலும். காலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.

ஓலைச் சுவடிகள் முதல் இன்றைய நவீன பயன்பாட்டிற்கான பொருட்கள் வரை வைக்கப்பட்டிருக்கும் ஒரு இரயில் இயக்கப்படுமென்றால், பனை மரங்களைக் காக்கும் ஒரு பணியினை இந்திய இரயில்வே சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது எனக் கொள்ள இயலும். பரீட்சார்த்த முறையில் ஒரிரு பெட்டிகளை மட்டுமாவது இணைத்து ஏதேனும் ஒரு மாநிலம் இவ்வித முயற்சிகளை முன்னெடுக்கலாம். தமிழகம், ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற இடங்கள் வெள்ளோட்டத்திற்கு தகுதியானவைகள். இரயில் பெட்டிகளில் ஒவ்வொரு மாநில பனையேறிகள் குறித்த படங்களும், பெரும்பான்மையாக காணப்படும் பனை சார்ந்த பொருட்களை காண்பிக்கும் படங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் பெட்டிகளை அமைக்கலாம். சிறப்பு இருக்கைகளையும் படுக்கைகளையும் பனை நார் கொண்டு அமைக்கலாம்.  மூன்று வருடம் மட்டும் முன்னெடுக்கும் இவ்வித முயற்சிகளால் இந்திய நிலம் முழுக்க பனை ஓலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் அதே வேளையில் நெகிழிக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாகவும் இந்திய இரயில்வே இவைகளை செய்யலாம். கூடவே பனை விதைகளை வழங்கவும் இரயில்வே நிலங்களுக்குள் பனை விதைகளை நடுவதற்கும் இவ்வித இரயில்கள் பயன்படக்கூடும்.

தற்பொழுது சர்வதேச சுற்றுலா வீழ்சியடைந்து இருக்கும் சூழலில் இவ்விதமான உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பது பயன் தரும் ஒன்றாக இருக்கும். காதி, அந்தந்த மாநில சுற்றுலாதுறை மற்றும் இரயில்வே இணைந்து இந்திய நிலமெங்கும் பரவி விரிந்திருக்கும் கலைஞர்களை முன்னிறுத்திக் கூட இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்கலாம். இயற்கை சார்ந்தும் பாரம்பரிய அறிவு சார்ந்தும் இயங்கும் எண்ணம் கொண்டவர்கள் பெருகியிருக்கும் சூழலில் இவ்வித யாத்திரைகள் நவீன புண்ணிய யாத்திரைகளாக கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பனை சார்ந்த பொருட்களை எனது பயணத்தில் எடுத்துச் செல்லுவதை முக்கியம் என கருதுகிறேன். ஏனென்றால், எனது பயணத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே எனக்கு இப்பொருட்கள் புதிய நண்பர்களையும், நான் செல்லும் இடங்களில் இருக்கும் பனை சார்ந்த மக்களுடன் ஒரு நெருக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பனை ஓலைகளை என்னுடன் எடுத்துச் செல்லும்போது அது ஒரு அறைகூவலாக மாறிவிடுகிறது. பிறருக்கும் அப்படியான ஒரு வாழ்கைமுறை மீது பிடிப்பு ஏற்பட இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கிறது.

நான் மித்திரன் மற்றும் ஆரோன், பனையோலை தொப்பியுடன் இரயில் பயணத்தில்

இன்றைக்கு கிடைக்கும் பல்வேறு பனை ஓலைப் பொருட்கள்  பெரும்பாலும் அழகு பொருட்களாகவே முன்னிறுத்தப்படுகிறது. அவைகளில் காணப்படும்  ஒரே பிரச்சனை என்னவென்றால், இவ்வித அழகு பொருட்கள் நெடுநாள் பயன்பாட்டிற்கு உரியதாக இல்லாமல், மேஜை அலங்காரமாக அமர்ந்துவிடுகிறதைப் பார்க்கிறோம். இவ்விதமான பொருட்களை விட, அன்றாடம் பயன்பாட்டில் நிலவும் பொருட்களே தேவையாக இருக்கின்றன. அதுவே பனை சார்ந்த ஒரு இயக்கம் புத்தெழுச்சியுடன் எழும்புகிறது என்பதை வெளிப்படுத்தும்  குறியீடாக அமையும். 

இரயில் பன்வேல் என்ற இரயில் நிலையத்தைக் கடக்கும்போது ரசாயினி எப்பொழுது வரும் என ஆவலுடன் வெளியே பார்த்தபடி வந்தேன். பன்வேல் மும்பையின் எல்லை. அதனைத் தொடர்ந்து வருவது சிறு நகரங்களும், கிராமங்களும் காடுகளும்தான்.  பசுமையான மலைகள் சூழப்பட்ட இடங்களில் பனை மரங்கள் நெடிந்துயர்ந்து நின்றுகொண்டிருந்தன. ரசாயினி நடை மேடையில் நின்ற பனை மரத்தை நான் கவனிக்கவில்லை. வெட்டிவிட்டார்களோ? இல்லை நான் தான் சரியாக பார்க்கவில்லையோ? ஆனால் அங்கிருந்த பனைமரத்தைச் சுற்றியிருந்த ஆலமரம் அப்படியே விரிந்து பரந்து இருந்தது. ரசாயினி எனது பனை மரச் சாலையின் துவக்கம் என்பதால் அதனைக் கடந்து செல்லும்போது எனக்குள் குதூகலித்து குழந்தையாவதை தடுக்க இயலவில்லை.

ரசாயனி இரயில் நிலையத்தில் பனைமரத்தை சுற்றியிருக்கும் ஆலமரம்

பனை மரத்தில் பற்றிப்பிடிக்கும் மரங்கள் அனேகம் உண்டு. ஆலமரம் அரசமரம் என அனைத்துமே ஃபைகஸ் (Ficus) குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரே பகுதிகளிலும் இவ்விதமாக மரங்களுக்குள் ஏற்படும் பிணைப்புகளை அதிகம் காண முடிந்தது. ஏனென்றால் பனை மரங்கள் பயன்பாட்டை விட்டு விலகும்போது அவைகளைப் பற்றிப்பிடிக்கும் மரங்கள் நிலைகொள்ளுவதை தவிர்க்க இயலாது. மரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இவ்வித தன்மைகள் இடத்தை பேணிக்கொள்ளவும், நமது உள்ளூர் மரங்களை இணைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும். 

பென் (Pen) என்னும் இடம் வரைக்கும் பனை மரங்கள் எங்களுடன் இணைந்து வந்துகொண்டிருந்தன அதன் பின்பு பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன.

மறுநாள் காலை இரயில் மங்களூரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கீழிறங்கி பார்த்தபோது தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. காலை  பொழுது அத்துணை மகிழ்வளிக்கும் ஒன்றாக மாறிவிடும் என நான் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. நான் பெங்களூரில்  ஐந்து வருடங்கள் படித்திருந்தாலும்  கர்நாடகாவில் பனை மரங்களை பெருமளவில் காண இயலவில்லை. பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் இரயில் வழித்தடத்தில் கோலார் பகுதியைக் கடக்கும்போதுதான்  பனை மரங்கள் காணப்படும். நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் ஓசூர் வரும் வழியிலும் பனை மரங்ளைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் கர்நாடகாவில் பெருமளவு பயணிக்காததால் பனை மரங்கள் எங்கே அதிகமாக இருக்கின்றன என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. மங்களூரின் அமைப்பு நாகர்கோவிலை ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே இக்காலை காட்சி பனை மரங்கள் இங்கே செழித்திருக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. இப்படி பனை மரங்கள் செழித்திருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவும், ஒவ்வொரு பயணியும் ஒரு பனை விதை நடுவதற்கான இடத்தையும் இரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பது மிகப்பிரம்மாண்ட சூழியல் பங்களிப்பை முன்னிறுத்துவதாக  அமையும். வெறும் இரயில் என்று தான் இல்லை, கப்பலோ, விமானமோ, பேருந்தோ அல்லது சிற்றுந்தோ பனை விழிப்புணர்வுக்காக எதுவும் பயன்படலாம். இவ்விதமான ஒரு விழிப்புணர்வு, வரும் நாட்களில் பனை மரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

மங்களூர் இரயில் நிலையத்தில் பனை மரங்கள்

பனை விதைகளை நான் கொடுப்பது குறித்து எனது அமெரிக்க தோழி பேராசிரியர். விட்னி இப்படி எழுதியிருந்தார்கள். உனது தொப்பி எனக்கு ஜானி ஆப்பிள்சீட் (John Appleseed) என்ற மனிதரை நினைவுறுத்துகிறது உனக்கு அவரைத் தெரியுமா என்றார். சத்தியமாக எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே “யார் அவர் எனக் கேட்டேன்”. எனக்கு ஒரு ஒளிப்பட இணைப்பை அளித்துவிட்டு  அவரைக் குறித்து சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள்.  ஜாண் சாப்மான் (John Copman) என்ற ஜானி ஆப்பிள்சீட், கையில் ஒரு ஆப்பிள் விதைகளாலான பை, மற்றொரு கையில் திருமறை, மேலும் அவரது தலையில் சமைப்பதற்கான பாத்திரத்தை தொப்பி போல கவிழ்த்து வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர். அமெரிக்காவில் உணவு பஞ்சத்தை உணர்ந்து ஆப்பிள் விதைகளை மக்கள் குடியேறும் பகுதிகளை கணித்து விதைத்த ஒரு மகான்.  இப்படி ஒரு மனிதர் இருந்தாரா அல்லது கற்பனைக் கதையா என்று சொல்லுமளவு அவரது வாழ்வு நாட்டுபுற கதைகளுடன் இணைந்தே இருக்கிறது.

ஜானி ஆப்பிள்சீட் பாடும் பாடல்

நீ தான் அவர். நீ செல்லுமிடங்களுக்கு பனை விதைகளை எடுத்துச் செல்லுகிறாய் இல்லையா? எனச் சொன்னார்கள். திடீரென அவர்கள் இப்படி சொன்னவுடன் நான் அயர்ந்துபோனேன். இப்படியான ஒரு பொருத்தப்பாட்டினை நான் எப்போதும் எண்ணியிருக்கவில்லை. ஒரு கையில் திருமறையும் மற்றொருகையில் பனை விதையும் இணைகோடுகளாகவே செல்லுவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இறைப்பணி என்பது பலவேளைகளில் எவ்வித சூழியல் பிரக்ஞையுமற்ற அற்பணிப்புமற்ற மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது.   அதில் சூழ்ந்திருக்கும் ஆபத்து நாம் உணராதது.

ஒரு காலத்தில் பனையேறிகள் குறித்து ஏளனமாக பேசிய சமூகம் இன்றுதான் கண்திறந்து பார்க்கிறது. பனை சார்ந்து இயங்கியவர்கள் காணாமல் போனதால் நமது உணவு பழக்கங்கள் மாறிப்போய்விட்டது. ஊரே இணைந்து இனிப்பு கருப்பட்டி தயாரித்தபோது இல்லாத சர்க்கரை நோய் நம்மை இன்று அச்சுறுத்துகிறது. ஊருக்குள் பெருகியிருக்கும் நோய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியிருக்கிறது.

இப்பயணம் எனக்கு முன்னால் எதனை முன்வைத்திருக்கிறது  என நான் உண்மையிலேயே அறியேன். ஆனால் கண்டிப்பாக பனை சார்ந்து இயங்கும் மக்களைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். ஏனென்றால், இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை ஆகவே, எப்படியாவது இவர்களை முன்னிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இன்று நாம் செய்யக்கூடுவது அது மட்டும்தான். 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தைவிட, தற்பொழுது பனை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பனை விதைப்போர், சேகரிப்போர் எண்ணிக்கை பலமடங்காக கூடியிருக்கிறது. பனை ஓலைப் பொருட்களைச் செய்யும் ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள். கருப்பட்டிக்கான விலை அதிகரித்திருக்கிறது. இதனை உயிர்ப்புடன் வைக்கவேண்டிய கட்டாயம் நம்மைச் சூழ இருக்கிறது என கண்டுகொண்டேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம்

திசெம்பர் 16, 2020

பனை வழி 

மும்பை மெதடிஸ்ட் திருச்சபையிலிருந்து  விடுப்பு எடுத்து 2017 – 2019 வரை, பனை சார்ந்த பணிகள் செய்ய தமிழகத்தில் தங்கியிருந்தேன். வெறித்தனமாக நான் செய்த பணிகள் எனக்கு நிறைவை அளித்தாலும், அதனை என்னால் தொடர முடியவில்லை. போதக பணியிலிருந்து வெளியே வருவது சாபத்தீடான ஒன்று என பொதுவாக கிறிஸ்தவ சூழலில் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. “அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.” (லூக்கா 9: 62)  என்கிற திருமறை வசனத்தை மிக தவறாக விளக்கும் அன்பர்கள் எங்களைச் சூழந்திருந்தார்கள். அவர்கள் எனது குடும்பத்திற்குள் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் மும்பை வரவேண்டிய சூழல் அமைந்தது. ஆகவே வேறு வழியில்லாமல் வெகு கசப்புடனேயே மும்பை திரும்பினேன்.

புல் ஏற்றும் வாகனம், ஆரே பால் குடியிருப்பு, மும்பை

நிற்க. இயேசுவின் மேற்கூறிய வாசகம் திருச்சபையில் பணியாற்றிய நான் பனை சார்ந்த பணியை முன்னெடுப்பதை  குறைத்து மதிப்பிடுகிறதா என்கிற கேள்வி எழலாம். இல்லை என்பது தான் உண்மை. இயேசுவின் அளப்பரிய பணியைப் பார்த்து அவரை பின்தொடர ஒருவர் விருப்பம் தெரிவித்தபோது அவர், “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (லூக்கா 9: 58) ஆக அவரது கருத்து இழப்பினைக் கருதி என்னை தொடர விருப்பமிருந்தால் தொடரலாம் என்பதே. மேலும் எனது இறையியல் பயணத்தின் ஒரு அங்கமாகவே பனை சார்ந்த தேடுதல் இருக்கிறது என்பதையும் எவரும் புரிந்துகொள்ளவில்லை.

மும்பை வந்த என்னை ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் தூய பவுல் மெதடிஸ்ட் திருச்சபையில் பணியமர்த்தினார்கள். பல வருடங்களுக்கு முன்பே இத்திருச்சபையில் சேவை செய்ய வேன்டும் என நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது வாய்க்கவில்லை. ஆரே திருச்சபை மும்பை நகருக்குள் இருக்கும் காட்டுப்பகுதியில் இருக்கிறது. நகரத்தின்   எந்த சந்தடிகளும் இல்லாமல் மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதி.

இங்கே தபேலா என்று அழைக்கப்படும் 32 மாட்டு தொழுவங்கள் உண்டு. ஒவ்வொரு மாட்டு தொழுவத்திற்கும் ஒரு அலகு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.  1949 ஆம் ஆன்டு பணிகள் துவங்கப்பட்டு 1951ஆம் ஆண்டு நமது பாரத பிரதமர் ஜெவகர்லால் நேரு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவெங்கும் நகரங்களில் மாடுகள் தன் போக்கில் திரிந்துகொண்டிருந்தபோது மும்பை வாழ் மனிதர்கள், மாடுகளுக்கென ஓரிடத்தை ஒதுக்கினால் நல்லது எனக் கண்டு வனப்பகுதியாக இருந்த ஆரே பகுதியில் மும்பை தெருவெங்கும் சுற்றித்திரிந்த மாடுகளையும் எருமைகளையும் கூட்டிச் சேர்த்தார்கள். இவ்வாறு சேர்ப்பது, சுத்தமான நகரத்தைப் பேணுவதற்கும், நகர் மக்களுக்கு தரமான பால்  கிடைப்பதற்கும், அறிவியல் பூர்வமாக மாடுகளை பேணி அதிக இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகை செய்யும் என நம்பி இவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாட்டு தொழுவமும் 500 முதல் 550 மாடுகளை பேணும் அளவிற்கு பிரம்மாண்டமானது. ஒவ்வொரு தொழுவத்திலும் மாடுகளுக்கான தீவனங்கள் வைக்கும் அறைகளும், மாடுகள் நீர் அருந்தும் தொட்டிகளும், வைக்கோல் வெட்டும் இடங்கள் மற்றும் உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் அடங்கும். ஆரம்பத்தில் அடிப்படை வேலைகளுக்காக சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து வந்த தமிழர்கள் அனைவருக்கும் இங்கே அடிமட்ட வேலைகள் கொடுக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் புல் அறுப்பதற்கும் கூட்டி பெருக்கும் வேலைகளுக்கும் இணைந்தார்கள். அவர்கள் தங்குவதற்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் குடிசை அமைத்துக்கொள்ள, தலா 2 பனை மரங்கள் கண்காணிகளால்  கொடுக்கப்பட்டன. அதன் ஓலைகளைக் கொண்டே  வீடுகள் அமைத்து முதல் தலைமுறை தமிழர்கள் இங்கே தங்கள் வாழ்வைத் துவங்கினர்.

பனங்காட்டை திருத்தி செய்த ஆரே பால் குடியிருப்பு, மும்பை (1952)

ஆரே குடியிருப்புகளில் இன்றும் ஒரு சில இடங்களில் பன்றி வளர்ப்பு உயிர்ப்புடனிருக்கிறது. அதுவும் எங்கள் திருச்சபை இருக்கும் அலகு எண் 7 நுழைவிலேயே பன்றி தான் வரவேற்கும். மட்டுமல்ல, ஆரே பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக இருக்கின்றன. காட்டு பன்றிகள், குரங்குகள், நரி மற்றும் புள்ளி மான்கள் இங்கே காணப்படுகின்றன. ஆரே பகுதியின் காவலனாக சிறுத்தைகள் வலம் வருகின்றன. இங்குள்ள பழங்குடியினருக்கு “வாகுபா” என்கிற சிறுத்தைப் புலி தான் முக்கிய தெய்வம். பல்வேறு கண்காணிப்பு காமிராக்களில் நாய்களைக் கவ்வும் சிறுத்தைகளின் படங்கள் பதிவாகியிருக்கின்றன. சில வேலைகளில் சிறுவர்களை கவ்வி சென்ற சம்பவங்களும், பெரியவர்கள் சிறுத்தையை எதிர்கொண்ட கதைகளும் ஏராளம். ஆரே என்றாலே ஆட்டோ ஓட்டுனர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு ஒரு காலத்தில் பேய்க்கதைகள் இங்கு நடமாடியிருக்கின்றன.ஆகவே பெரும்பாலான போதகர்கள் ஆரே வருவதை விரும்புவதில்லை.

எனக்கு ஆரே பால் குடியிருப்பு என அறிவிக்கப்பட்டவுடன், உடன் ஊழியர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் “ஆரே பகுதியில் பனை மரங்கள் இருக்கும்” என்று கூறி என்னை “தேற்றி” அனுப்பினார்கள். முதல் நாள் நான் ஆரே பால் குடியிருப்பு வருகிற வழியில் அதிகமாக பனை மரங்களைப் பார்க்க இயலவில்லை. சற்றே மனம் சோர்ந்து இருக்கையில், சென்னையில் இருக்கும் எனது தோழி  ரோடா அலெக்ஸ் அவர்கள் ஆரே குறித்த சில புகைப்படங்களை அனுப்பினார்கள். 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட  கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். அனைத்து படங்களிலும் பனை நடுநாயகமாக வீற்றிருந்தது. அந்தப் படங்கள் ஆரே என்பதே ஒரு பனங்காடு என்பதாக உரத்துக் கூவின. தற்பொழுது நான் பார்க்கும் ஆரே பகுதிக்கும் படங்களில் காணப்பட்ட ஆரே காலனிக்கும் பெருத்த வித்தியாசம் காணப்பட்டது.

ஆரே பால் குடியிருப்பு (1952)

இப்படங்களை ஆரே திருச்சபையின் பொருளராகிய ஸ்டீபன் அவர்களிடம் காண்பித்தேன். ஸ்டீபன் அவர்கள் ஆரே பகுதியை நன்றாக சுற்றி வலம் வந்தவர். அவர் அவைகளில் ஒரு படத்தைக் காண்பித்து  இது நமது திருச்சபைக்கு அருகில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். நமது திருச்சபைக்கு அருகில் இப்படியான பனை மரங்கள் இல்லையே என்றேன். வெகு சமீப காலம் வரைக்கும் இங்கே பனை மரங்கள் இருந்தன என்றார்.

வேறு சில படங்களைக் காட்டி இது போல செறிவான பனங்காடு ஏதேனும் எஞ்சி இருக்கிறதா எனக் கேட்டேன், அவர் அப்படங்களை உற்றுனோக்கியபடி “இருக்கு” என்றார். என்னுடன் திருச்சபை செயலர் திரு. செல்வராசு அவர்களும், திரு. லாரன்ஸ் அவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். ஸ்டீபன் அவர்கள் எங்களை உடனடியாக உயரமான ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு  சென்றார். அங்கிருந்து பார்க்கையில் தொலைவில் பனங்காடுகள் தெரிந்தன. பின்னர் அவர் அழைத்துச் சென்ற இடம் பனை மரங்களால் நிறைந்திருக்கும் சாய் பாங்குடா என்கிற வார்லி பழங்குடியினர் வாழும் பகுதி. இதற்கு இணையான  பனங்காடு எதையும் நான்  குமரி மாவட்டத்தில் பார்த்ததில்லை. நூற்றுக்கணக்கான பனை மரங்கள் நிற்கும் ஒரு நிலப்பகுதி. மும்பைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் விஹார் ஏரியும், இனிப்பே தனது பெயராக கொண்ட மித்தி ஆறும் இப்பகுதியிலிருந்து தான் புறப்படுகின்றன.  இன்னும் எவ்வித அழித்தொழிப்புமின்றி நிற்பதைக் கண்டபோது நெஞ்சு விம்மியது. அப்போது தான் இது கடவுள் எனக்கருளிய இடம் என  நான் நிறைவு கொண்டேன்.

சாய் பாங்குடா, ஆரே பகுதியில் எஞ்சியிருக்கும் அழகிய பனங்காடு (புகைப்படம் முகம்மது)

உடனடியாக சில திட்டங்களைத் தீட்டி பனை விதைகள் நடவும், பனை விதைகளை மக்களுக்கு கொடுக்கும் வகையில் அட்டைபெட்டிக்குள் அடைத்து இலவசமாக கொடுக்கும் முறைமையையும் உலகிலேயே முதன் முறையாக மும்பையில் துவக்கினேன். அதற்கு மெதடிஸ்ட் திருச்சபையின் அங்கத்தினரான திரு பொன்சிங் அவர்கள் பொருளுதவி செய்தார்கள்.

2019ஆம்  வருட இறுதியில், நவம்பர் மாதம் குமரி மாவட்டதிலுள்ள சங்கர் கணேஷ் என்கிற பனையேறும் தம்பியை மும்பை அழைத்திருந்தேன். சூழியலைக் கெடுக்காமல் ஒரு கிறிஸ்மஸ் அலங்காரத்தினைச் பனை ஓலைகளை மட்டுமேக் கொண்டு செய்வது சாத்தியமா என எண்ணி, முயற்சிகளை முன்னெடுத்தோம். திருச்சபையைச் சார்ந்த பல்வேறு சிறுவர்களும் வாலிபர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுள் செல்வி இளவரசி, குருவை மிஞ்சும் சீடரெனப்படும் அளவிற்கு கற்றுத்தேர்ந்தாள். புதிது புதிதாக அவள் மேலும் பல அலங்காரங்களை கற்று அனைவருக்கும் பயிற்சியளிக்க ஆரம்பித்தாள். ஆகவே குறுகிய காலத்திலேயே பனை ஓலைகளைக் கொண்டு பல்வேறு அழகிய நட்சத்திரங்கள் செய்து பசுமை கிறிஸ்மஸ் கொண்டாடினோம். பனை ஓலைகளைக் கொண்டே கிறிஸ்மஸ் மரம் அமைத்தோம்.  இவ்வாறாக நாட்கள் பரபரப்பாக சென்றன.   

மெதடிஸ்ட் திருச்சபையில் ஒரு போதகருக்கு ஆண்டொன்றிற்கு 30 நாட்கள் சேர்த்தார்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி. நோய்க்தொற்று நேரத்தில் திருச்சபை உட்பட அனைத்து இயக்கங்களும் செயலற்றுப் போயின. ஆகவே மே மாதம் ஊர் செல்லவேண்டியிருந்த திட்டங்கள் தவிடுபொடியாயின. அதனைக் குறித்து எவ்வகையிலும் கவலைப்படாமல்,  நானும் எனது திருச்சபை மக்களும் இணைத்து, ஓய்வின்றி பனை விதைகளை மும்பையில் சேகரித்து. அவைகளை விதைக்கவும், அழகிய அட்டைப்பெட்டிகளில் இட்டு பொதுமக்களுக்கு பகிர்ந்து கொண்டிருந்தோம். நாட்கள் செல்லச் செல்ல ஒருவித தேக்க மனநிலை ஏற்பட்டது. எங்காவது ஒரு பனை பயணம் சென்றே ஆகவேண்டும் என உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது. ஆகவே விடுமுறையினை பனைமுறையாக செலவளிக்க உகந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் பனை பயணங்களால் மட்டுமே நிறைவு கொள்பவன். பனை பயணங்களை மட்டுமே எண்ணி எய்துபவன். எனது வாழ்வு பனையுடனும் பனை சார் மக்களுடனும் பனை பொருட்களுடனுமே இருக்கவேண்டும் என்ற தீராக் காதல் கொண்டவன். பனையின்றி என்னால் ஏதும் செய்துவிட இயலாது. பனை பயணம் என்பது எனது ஆன்மீக நகர்வு. ஆகவே நேரம் கிடைக்கையில் புறவயமாகவும் இல்லாத போது அகவயமாகவும் அதை மாற்றிக்கொள்ளும் நிலையை அடைந்துவிட்டேன். எனது வீட்டிற்குள்ளும், வெளியிலும், எனது ஆன்மீக பயணம் எல்லாம் பனையுடனே நிகழுமாறு பார்த்துக்கொண்டேன். பனையே எனக்கு வழிகாட்டி. பனையே என்னை இழுக்கும் விசை. பனை சார்ந்த சூழியலையே எனது இருப்பிடமாக நான் கொள்ளுவேன். ஆகவே பனை சாராதவைகளை நாசூக்காக தவிர்த்துவிடுவேன்.

இம்முறை குடும்பத்தில் நிகழும் இரண்டு முக்கிய நிகழ்வுகளை கருத்தில் கன்னியாகுமரி செல்ல வேண்டும் என ஜாஸ்மின் கேட்டுக்கொண்டார்கள். தமிழகம் செல்லவேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் இப்படியான ஒரு பயணத்தை  நான் எதிர்னோக்கியிருக்கவில்லை. மகராஷ்டிர எல்லையில் உள்ள கட்சிரோலி செல்லலாம், அல்லது கோயா பழங்குடியினர் வாழும் ஆந்திரா எல்லைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தாலும், மழை நேரத்தில் இப்பகுதிகளுக்கு செல்வதால் எந்த பயனும் விளையாது என்பதால் அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.  எனக்கு இந்த பயணத்தை எப்படியாவது தவிர்க்கவேண்டும் என்றிருந்தது. ஆனால் அப்படி எதுவும் என்னால் செய்ய இயலாது என்பது உள்ளூற தெரியும். ஆகவே மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தேன்.

முதலாவதாக அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிருந்து பயணித்து மீண்டும் நவம்பர் 6 ஆம் தேதி வருவதாக திட்டம். 9 ஆம் தேதி ஜாஸ்மினுடைய இளைய சகோதரன் ஜெகன், அவர் தம் துணைவி ஷைனி  ஆகியோருக்கு பிறந்த ஷாண் அவர்களின் முதல் பிறந்த நாள். இந்த பயலுக்காக நான் உலகிலேயே முதன் முறையாக ஒரு பனையோலைத் தொட்டிலை செய்துகொடுத்திருந்தேன். ஆகவே மாமனாக அங்கே நிற்கவேண்டிய கட்டாயம். அப்படியே ஜாஸ்மின் அவர்களுடைய  தம்பி ஜஸ்டின் மற்றும் அவரது துணைவி விஜிதா ஆகியோர் தங்கியிருக்கும் வீட்டை புதுப்பித்து அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி பால் காய்ச்சும் சடங்கினை வைத்திருந்தார்கள். இந்த திட்டத்தின் நடுவில், எனது பாபு மாமாவின் மகளான சாரா மெலடிக்கு அக்டோபர் 15 ஆம் தேதி திருமணம் நிகழ்கிறது என்கிற செய்தியினை அம்மா நினைப்பூட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் நான் என்னதான் செய்துவிட முடியும்?   ஆகவே இடைப்பட்ட நாட்களில் நான் என்ன செய்யலாம் என யோசிக்கலானேன்.

பனைமரச் சாலை பயணத்திற்குப் பின் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். ஆகவே தமிழகம் சார்ந்து மீண்டும் ஒரு பயணத்தை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என நான் கருதினேன். தமிழகத்தின் பனைத்துடிப்பை அறியவும், பனை சார்ந்து இயங்கும் மக்களை காணவும், அனைவரையும் உற்சாகப்படுத்தவும் இந்த பயணத்தை ஒதுக்கலாம் என உறுதிகொண்டேன். ஆகவே குடும்ப நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளுவேன், ஆனால், எனது பனை பயணங்கள் ஊடாக நிகழும் என்பதையும் எனது சரிபாதியிடம் குறிப்புணர்த்தி புறப்பட ஆயத்தமானேன்.

எனது பயணம் குறித்து ஒருவாறு ஒழுங்குகள் செய்தபின்,  முகநூலில் இப்படியாக எழுதினேன்

“பனைத் தொழிலாளர், ஓலை வினைஞர்கள், நார் கலைஞர்கள், மற்றும் பனை உணவு உற்பத்தியாளர்கள் அனைவரின் நலன் வேண்டி தமிழக சுற்றுப்பயணம் நிகழ்த்த உள்ளேன்.  பனை சார்ந்த நலத்திட்டங்”கள்” செய்வோம் என  தேர்தல் அறிக்கையில்  கூறும் கட்சிகளை மட்டுமே வருகிற தேர்தல் நேரத்தில் பொருட்படுத்துவோம்.  பனைசார்ந்த வாழ்வியலை முன்னெடுக்காத கட்சிகள் நமக்கு தேவையில்லை. மாற்றம் நிகழும்வரை பகிர்வோம். தமிழக பனை அன்பர்களே ஒன்றுபடுவோம்.”

நான் எதிர்பார்த்தது போல என்னை நேசிக்கும் நண்பர்கள் எனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்ததை என்னால் உணர முடிந்தது. நலத்திட்டங்”கள்” என நான் குறிப்புணர்ந்தியதை எனது பனையேறி நண்பர் கஞ்சனூர் பாண்டியன் புரிந்துகொண்டார். ஆகவே வெகு உற்சாகத்துடன் பயண திட்டங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தேன்.

இம்முறை எனது பயணத்திற்கான செலவை நானே ஏற்பதென்று முடிவு செய்தேன். அதற்கு காரணம், பயணத்திற்கான செலவினங்களை எனது கைவசமிருக்கும் படங்களைக் கொண்டு என்னால் திரட்ட முடியும் என்கிற சிறு நம்பிக்கையால் மட்டுமே. அதற்கான அறிவிப்பையும் முகனூலிலேயே வெளியிட்டேன். நினைத்தது போல எவரும் படங்களை வாங்க ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால், எனது அன்பு மனைவியின் சகோதரர்கள் எங்கள் ஒட்டுமொத்த மும்பை நாகர்கோவில் பயண செலவையும் தாங்களே ஏற்பதாக கூறிவிட்டார்கள். அது ஒரு மிகப்பெரிய விடுதலையாக எனக்கு அமைந்தது. ஆகவே எனது சேமிப்பை தமிழகத்தில் செய்யவிருக்கும் பனைப் பயணத்தில் கரைக்க துணிவுகொண்டேன்.

தமிழகத்தில் இருந்து நண்பர்களின் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. முதலாவதாக எனது நண்பரும் கப்பல்காரன் டைரி எழுதிய ஷாகுல் ஹமீது அழைத்தார். அவர் மும்பை வந்திருந்தபோது ஒரு பனையோலையில் செய்த புத்தரின் படத்தினை நான் அவருக்கு பரிசளித்திருந்தேன். அதனை அவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் சார்பில் கொடுக்க இருப்பதாகவும், மீண்டும் அவருக்கு அதே போன்ற ஒரு படத்தினை செய்ய நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் எனவும் கூறினார். மேலும், நான் எழுதிய பனை மரச்சாலை புத்தகத்தை வாசித்த அவரது திருவனந்தபுர நண்பரான திரு சுப்பிரமணி அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் இரண்டு படங்கள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். பரபரப்பான சூழலில், என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக செய்கிறேன் எனக் கூறினேன்.

ஆரே காடு என்று போராடும் குழுவினர் பனை விதைகளைப் பெற்ற போது உருவாக்கிய படம்

இரண்டு படங்களை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது.  அவைகளையும் நான் நினைத்த வண்ணம் என்னால் முழுமை செய்ய இயலவில்லை. என்றாலும், இவைகள் திரு சுப்பிரமணி அவர்கள் கரத்தை அடைவது தகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். இவைகளுடன், இறுதி கட்டத்தில் ஒரு அழகிய ஜெயலலிதா அம்மையாரையும் பனை ஓலையில் செய்தேன். எனது பயண இறுதியில் தமிழக முதல்வரை சந்தித்து  பனை சார்ந்த கோரிக்கைகளை இப்படத்துடன் சமர்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் அதையும் எடுத்துக்கொண்டேன்.

புறப்படுவதற்கு முந்தைய நாள் உணவை எப்படி எடுத்துச் செல்லலாம் என ஜாஸ்மின் கேட்டபொழுது, பனை ஓலையிலேயே எடுத்துச் செல்லுவோம் என்றேன். ஓலைகள் எப்படி கிடைக்கும் என கேட்டபொழுது, அதனை நான்  ஒழுங்கு செய்கிறேன் என உறுதியளித்தேன்.

மறுநாள் நாங்கள் புறப்படுகிறபடியால், எங்களுடன் நேரம் செலவு செய்ய முகம்மது என்கிற ஒரு வாலிபன் வீட்டிற்கு வந்திருந்தார். அவரைப் பொறுத்த அளவில், நான் மும்பையில் மாற்றம் நிகழ்த்தும் ஒரு சூழியல் போராளி. பனை மரங்கள் அதிகம் நிற்கும் மும்பையில் இதுவரை பனை சார்ந்த முன்னடுப்புகளை எவருமே செய்யவில்லை என்பது அவருக்கு மிகுத்த ஆச்சரியமாக இருந்திருக்கிறது. பனை குறித்த புரிதல் ஏதும் இன்றி சூழியலாளர்கள் இருக்கிறார்கள் என்பது அவரை துணுக்குற செய்திருக்கிறது. பனை பயன்பாடுகள் குறித்த சுவடே அழிந்திருந்த தருணத்தில் பனை விதைகளை நான் வழங்குவது ஒரு புரட்சியாகவே அவர் கண்களுக்கு தென்பட்டது போலும். ஒரு வகையில் இது உண்மைதான், ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் எங்கள் திருச்சபை வாயிலாக 2019- 20 ஆகிய ஆண்டுகளில் பனை விதைகளை நடுவதற்கான முன்னெடுப்புகளாளை நாங்கள் நிகழ்த்துமட்டும், மும்பையில் எவருமே பனை விதைகளை நட முற்படவில்லை. 

நாங்கள் மும்பையில் வசிக்கும் ஆரே பகுதியானது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும். மெல்ல மெல்ல இப்பகுதிகளை ஆதிவாசிகள் கரத்திலிருந்து பிடுங்கி ஒவ்வொருவராக பங்குபோட துவங்கினர்.

முதலில் மும்பையின் பால் தேவையை சந்திக்க இங்கே ஒரு பால் பண்ணை உருவாக்கப்பட்டது, பின்னர் ராயல் பாம் என்கிற ஏழு நட்சத்திர விடுதி இவ்விடத்தை கபளீகரம் செய்தது, மும்பை திரைப்பட நகரம் இங்கே தான் நிர்மானிக்கப்பட்டது. உலகிலேயே ஒரு நகரத்திற்குள் காணப்படும் வனப்பகுதியான ஆரே பலருடைய கண்களை உறுத்திக்கொண்டே இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. . ஒரு கட்டத்தில், ஆரே பகுதியில் மெட்ரோ கார் ஷெட் அமைக்கவேண்டும் என்கிற நிலை வந்த போது சூழியல் அன்பர்கள் கொதித்தெழுந்து போனார்கள். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் பல தரப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இவைகளில், களப்பணியாற்றும் ஒரு சிறு குழுவின் பெயர் “பேட் லகாவோ”- மரம் நடுவோம். எப்படியோ இவர்களின் வாட்சாப் குழுவில் நான் இணைக்கப்பட்டேன். வாரம் தோறும் மரங்களை நடுவது என இவர்களின் பணிகள் போய்க்கொண்டிருந்தன. என்னால் எதையும் பகிர இயலாது ஆனால் அவர்களின் நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு வந்துகொண்டே இருக்கும்.

கொரோனா நிமித்தமாக ஆலயங்கள் மூடிவிட்டபடியால்,  ஒரு நாள் நான் அவர்களுடன் களப்பணியாற்ற சென்றிருந்தேன். எவரும் எவரையும் வரவேற்கும் வெற்று முகமன்கள் அங்கு காணப்படவில்லை. சென்ற உடனேயே நாம் குப்பைகளைப் பொறுக்குவதோ அல்லது மரங்களை நடுவதோ என ஏதாவது எடுத்து செய்யவேண்டியது தான். நான் கையோடு 15 பனை விதைகளையும்,  இரண்டு நாவல் மரங்களையும் எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை ஒப்படைத்துவிட்டு, குப்பைகளை உறைகள் ஏதும் அணியாமல் வெறுங்கையால் பொறுக்க ஆரம்பித்தேன். அப்போது குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் என்னருகில் வந்து தனது கரத்தில் உள்ள கோணியில் அவைகளை அமைதியாக சேகரித்து சென்றார்கள். அன்று நிகழ்வின் முடிவில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சஞ்சீவ் வல்சன் என்கிற நபரைக் கண்டேன். அவரிடம், பனை விதைகள் என்னிடம் இருக்கின்றன, எடுத்து வரவா என்றேன். அடுத்த வாரம் இதே இடத்திற்கு வாருங்கள் என்றார்.

மீண்டும் அடுத்த வாரம் 25 பனை விதை பெட்டிகளை ஆயத்தம் செய்தபடி திருச்சபையில் உள்ள இருவரை அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன். அனைவரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். பனை விதைகளை கொண்டு வந்திருக்கிறேன், அவைகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும் எனக் கேட்டபொழுது, நீங்கள் எப்படி விதைக்கவேண்டும் என ஒரு அறிமுகம் சொல்லிவிடுங்கள் என்றார் சஞ்சை. பனை குறித்து என்னைப் பேசச் சொன்னால் நான் விரைவு இரயிலைவிட அதி வேகத்தில் பேச ஆரம்பித்துவிடுவேன். அன்றைய எனது உரை அனைவரையும் கற்சிலையாக்கியது. நான் கொடுத்த அட்டைபெட்டிகளை வாங்கிப் பார்த்தார்கள். எவருமே பொருட்படுத்தாத பனை மரத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையின் ஒரு பகுதியை அறிந்த உடனேயே ஒவ்வொருவரும் தங்கள் செல் பேசியில் என்னை காணொளி எடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர்.

அன்று இரவே முகம்மது என்னை அழைத்து,  உங்கள் பேச்சு அருமையாக இருந்தது, நீங்கள் கடந்தவாரம் வந்தபோது எனது சகோதிரியுடன் தான் நின்று வேலை செய்துகொண்டிருந்தீர்கள். அப்போது எனக்கு நீங்கள் செய்யும் வேலைக் குறித்து தெரியாது. இன்று நீங்கள் எங்கள் சிந்தனையை முழுவதுமாக மாற்றிவிட்டீர்கள். உங்களைக் குறித்து நான் ஒரு ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதற்காக இவர் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார். வெகு இயல்பாகத்தானே நாம் செயல்படுகிறோம், அப்படியிருக்க என்னத்தைக் கண்டுகொண்டார் என நான் எண்ணினேன்.

ஆவணப்படம் எடுப்பதில் எந்த எனக்கு எவ்வித தடையும் இல்லை, ஆனால், திருச்சபை பனை விதை நடுகையை  முன்னெடுக்கிறது என்கின்ற உண்மையினை மறைத்துவிடலாகாது என்கிற உறுதியை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். பிற்பாடு அவர் எனது வாழ்வில் மிக முக்கிய அங்கமாகிப்போய்விடுவார் என அன்று நான் கருதியிருக்கவில்லை. முகம்மது அதன் பின்பு என்னோடே ஒட்டிக்கொண்டார். எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே அவர் மாறிவிட்டார்.

அப்படித்தான் அன்று பனை ஓலை எடுக்க புறப்பட்டோம். எங்களோடு எனது இளைய மகன் மித்திரனும் வந்திருந்தான். திருச்சபை அங்கத்தினரான திரு ஸ்டீபன் அவர்களையும் நான் அழைத்திருந்தேன். நாங்கள் வாகனத்தில் செல்லும்போது பனை மரம் ஏறவேண்டுமென்றால் உதவிக்கு யாராவது கிடைப்பார்களா என்கிற எண்ணத்துடன் சென்றுகொண்டிருந்தோம். அப்போது, பாம்புகளையும், நகர்புறங்களில் சிக்கித்தவிக்கும்  காட்டு விலங்குகளையும் காப்பாற்றும் ராஜ் என்கிற வாலிபனின் எண்ணம் வந்தது. என்ன ஆச்சரியம் அவனை நாங்கள் அழைக்கவும் அவனே எதிரில் தென்படவும், வண்டியை நிறுத்தி அவனை ஸ்டீபன் அவர்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டோம்.

அந்தி சாயும் வேளை, புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில், ஓலைகளை வெட்டும்படியாக சென்று நிறுத்தினோம். சற்றே பெரிய வடலி ஒன்று கைகளை விரித்தபடி அடங்கா திமிரோடு நின்றிருந்தது. மற்றவைகள் அனைத்துமே சிறிய வடலிகள் தான். ஓலைகள் பெரிதாக இல்லை. ராஜ் அந்த வடலியில் ஏற முற்பட்டு, கருக்குகள் இருந்ததால்  தன்னால் ஏற இயலாது என்பதை ஒத்துக்கொண்டான். நேரம் இருட்டத் துவங்கியிருந்தது. ஆகவே அங்கிருந்த சற்றே சிறிய வடலி ஒன்றில் செருப்போடு ஏறி ஓலைகளை வெட்டி போட்டேன். மித்திரன் ஓலைகளை சேகரித்து அடுக்க உதவினான். ராஜ் இருந்ததால் பாம்புகள் குறித்த பயம் இல்லாமல் போனது.

அனைத்து ஓலைகளையும் எடுத்துக்கொண்டு செல்வி. இளவரசி அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றோம். இந்த ஓலைகளில் மூன்று பெட்டிகள் செய்து தர இயலுமா என்று கேட்டேன். அது ஒரு அன்பு கட்டளை. இளவரசி ஒரு சிறந்த பனையோலைக் கலைஞர். நான் தட்டிக்கொடுத்து வளர்ந்த பிள்ளை. சரிங்க பாஸ்டர் ஐயா என்றாள். அவள் முயற்சிக்கிறேன் என்று சொன்னாலே அது நடந்துவிடும் என்னும் சூழலில், இந்த வார்த்தை எனக்கு உற்சாகமளித்தது.

நான் வீட்டிற்கு வந்த போது, மதிய வேளைக்கும் இரவிற்கும் எலுமிச்சை சோறும், மறுநாள் சாப்பிட புளிசோறும் ஆயத்தம் செய்யலாம் என பேசிக்கொண்டோம். ஜாஸ்மின் கைபட செய்த பனை ஓலை பையினை எடுத்து வந்து இது தான் உணவு எடுத்துச் செல்லும் பை எனக் கூறிவிட்டார்கள். 

இரவு வெகுநேரம் எங்களுடன் இருந்துவிட்டு மறுநாள் காலை வேளையில் எங்களை வழியனுப்ப வருவதாக கூறி முகம்மது சென்றுவிட்டார். முககவசங்களைக் எப்போதும் அணிந்திருக்கவேண்டும் என்றும், கைகளில் உறைகள் போட்டிருக்க வெண்டும் எனவும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினோம்.  

மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஓலைபெட்டியினை சேகரிக்க இளவரசி வீட்டிற்குச் சென்றேன். மூன்று பெட்டிகள் மூடியுடன் ஆயத்தமாக இருந்தன. இவ்வளவு தூரம் அவளை சிரமப்படுத்தியிருக்கக்கூடாது என எண்ணிக்கொண்டேன். இளவரசியின் அப்பா திரு முத்துராஜ் அவர்கள் மித்திரன் கரத்தில் ரூ500/- திணித்தார்கள். இரவு முழுவதும் தகப்பனும் மகளுமாக இணைந்து விழித்திருந்து தான் பெட்டி செய்திருக்கிறார்கள். அவர்களின் அன்பை எண்ணி வியந்தபடி வீட்டிற்கு வந்து ஆயத்தமானோம்.  

ஸ்டீபன், மாணிக்கம், மலர் என திருச்சபையின் மக்கள் வழியனுப்ப முகம்மது மட்டும் எங்களோடு இணைந்து இரயில் நிலையம் வரை வந்தார். இரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தை ஒத்திருந்தன. முகம்மது தூரத்திலேயே நிற்கவேண்டியது ஆயிற்று. வரலாற்றில் மீண்டுமொரு பனை பயணம் இப்படித்தான் எளிமையாக துவங்கியது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653


%d bloggers like this: