ஒரு நரி பசியோடு உணவு தேடி அலைந்தது. இறுதியில் அது ஒரு திராட்சைக் கொடியைக் கண்டது. திராட்சை குலை உயரத்தில் இருந்ததால் அது இந்த திராட்சைக் பழத்தை எவ்வளவோ எம்பிக்குதித்தும் பறித்து பசியாற இயலவில்லை. அதன் பசி ஒருபுறம் அதன் இயலாமை ஒருபுறம். உணவைக்கண்டும் உண்ணமுடியாத சூழ்நிலையில் அது கூறியதாம் “சீச்…சீ இந்தப் பழம் புளிக்கும்”. சுவைக்காத ஒன்றின் சுவையை கூறும் மனநிலையை நாம் என்னவென்று கூறுவோம்? பசியைப் போக்காத உணவை நாம் எப்படி உணவென்று அழைப்பது?
ஒருவேளை தனது இயலாமையை நரி அங்கதத்தோடு வெளிப்படுத்திய விதமா இது? உணவு அற்ற நரி தனது உயிரைக் காப்பாற்றிகொண்டதா எனும் பதைபதைப்பு யாருக்கேனும் எழுகிறதா? இக்கதை கூறும் முடிவு என்ன? ஒருவேளை இக்கதைக்கு முடிவில்லாததுபோல தோன்றுகிறதில்லையா? ஆம் ஆழ்ந்து யோசித்தால் அதன் பசி என்னாயிற்று என்பதற்கு விடை இல்லை. நரியின் பசி அதை எதை நோக்கி உந்தித்தள்ளியது என்பதை நாம் அறியமாட்டோம்! இன்னும் நாம் அச்சமுறவேண்டிய ஒரு உண்மை உண்டு. அதற்கு எங்கேனும் உணவு கிடைத்ததா? கிடைத்ததென்று கொண்டால் அது கசப்பையும் இனிப்பென கொண்டிருக்குமோ? கசந்ததைத் தின்று, அல்லது ஏதுவுமே கிடைக்காமல் உயிரை விட்டிருக்குமோ?
அன்பு உள்ளங்கொண்ட திருச்சபையினரே! முடிவிலா கேள்விகள் நம் முன் நிற்கின்றன. நாம் யார்? திராட்சையாக பிறர் பசியைப் போக்காத எட்டா உயரத்தில் இருக்கிறோமா? அல்லது பசிகொண்ட நரியாக சுற்றிவருகிறோமா? இல்லை இக்கதையை சொல்லும் கதை சொல்லியாக அனைத்தையும் அறிந்த கடவுளின் நிலையில் இருக்கிறோமா? இல்லை ஒருவேளை கதைக் கேட்போராக இருந்து நரியை ஏளனத்துடன் பார்த்து பரிகாசக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருக்கிறோமா?
கேள்விகள் இன்னும் நின்றபாடில்லை. திராட்சையும் நரியும் வாழும் இஸ்ரவேலில் கூறப்பட்ட கதையா இது? எனில் திராட்சை எதன் சாயலாக குறிப்பிடப்படுகிறது, நரி எதற்கு உவமானமாக நிற்கின்றது? “குலை குலையா முந்திரிக்கா” எனும் சிறு பிள்ளைகளின் விளையாட்டு நாம் விளையாடியிருப்பதால் இக்கதையின் ஊற்றும் நமது பிராந்தியத்திலேயே தோன்றியதாயிருக்குமா? உணவற்ற நரி ஏன் தான் உண்ணும் சிறு விலங்குகளை விட்டு திராட்சைக்காக அலைந்தது? ஊற்றைப்போல் ஊறிவரும் இக்கேள்விகள் அனைத்தும் நாம் சிறு வயதில் கேட்ட ஒரு நான்கு வரிக்கதையிலிருந்து எழுவதை நம்மால் தவிர்க்க இயலவில்லையல்லவா? கதை தான் முடிந்துவிட்டதே அதன் பின் ஏன் கேள்விகள் என எண்ணுகிறோமா?
ஏசாயவின் கவிதையொன்று இதைப்போன்றே ஒரு திராட்சைத் தோட்டத்தை முன்னிறுத்துகிறது. அது நேசருக்கேற்றப் பாட்டைப் பாடுகின்ற மணவாட்டியாக ஏசாயா தன்னை உவமித்துக்கொள்ளும் ஒரு தருணம். —–*அழகையும் அழுகையையும், மகிழ்ச்சியையும் துக்கத்தையும், உழைப்பையும் அது வீணய்ப்போவதையும் பதிவுசெய்யும் கவிதை
மிகவும் செழிப்பான மேட்டிலே நேசருக்கு ஒரு திரட்சைத்தோட்டம் இருக்கின்றது. தண்ணீர் தேங்கி அதன் வேர்கள் அழுகிவிடாதபடி அதன் மேடுகளிலிருந்து வாய்க்கால்கள் ஓடுகின்றன… அதன் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்காத தன்மையில் வெயில் படும் இடத்திலே அது அமைந்திருக்கிறது. அத்தோட்டத்தை நேசர் தன் உடல் உழைப்பாலும் தன்னிடமுள்ள பொருளையும் சேலவளித்து அதை பாதுகாக்கும் வண்ணம் வேலி அமைக்கிறார். அந்நிலத்தைப் பண்படுத்தி வளர்ச்சிக்குத் தடையாயிருந்த கற்களையெல்லாம் பொறுக்கி ஒரு நல்ல தோட்டமாக வேர்பற்றி வளர ஆயத்தம் செய்தார்.
இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னும் அவர் கருத்துடன் நேரம் செலவு செய்து, இருப்பதிலேயே சிறந்த நாற்றுகளான “நற்குல” திராட்சைச் செடியை மிக விருப்புடனும், மதி நுட்பத்துடனும், கருத்துடனும் தெரிவுசெய்து அதை தனது நிலத்தில் நாட்டினார். அவைகள் கிளைத்தெளும்ப சரியான பிடிமானங்களை எழுப்பி, அதற்காக தண்ணீர் பாய்ச்சி, ஏற்ற நேரத்தில் அதற்கான உரமிட்டு இரவு பகல் என்று கண்ணயராது காத்துநின்றார்.
மிகவும் எதிர்பார்ப்புடனும் பெரும் பொருட்செலவும் செய்து திராட்சை ரசம் பிழியும் ஒரு ஆலையையும் உருவாக்கி, கனிதரும் காலத்திற்காக காத்து நின்றார். பூ பூத்தது – நேசர் மகிழ்ந்தார், பிஞ்சு காய்கள் தோன்றின – நேசர் அகமகிழ்ந்தார். ஓரு தகப்பனைப் போன்று வாஞ்சையுடன் அவைகளை கவனித்தார். காலம் கனிந்தது திராட்சைகளும் கனிந்து நின்றன, நேசர் பேருவகை கொண்டார். திராட்சை அறுவடைக்காக அவர் கூலியாட்களை அமர்த்தினார். அடுத்திருப்பவர்களையும் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தார். அவர்கள் கூடை கூடையாக பழங்கள் பறித்து ஆலைக்கு எடுத்துச் சென்றனர்.
சிறுமி ஒருத்தி ஆவல் மிகுதியால் ஒரு திராட்சைப் பழத்தை எடுத்து சுவைத்தாள். அவள் முகம் கோணலானது. வெறுப்பை உமிழும் சுவையும் பார்வையும் அவளில் நின்றன. அம்மா கசக்கிறது என் கத்திவிட்டாள். சுற்றி நின்ற வேலைக்காரர்கள் அதைப் பார்த்தனர். தாங்களும் சுவைத்துப்பார்த்து இக்கனியின் சுவை ஏற்றதாக இல்லையே என்று ஏங்கிப்போயினர். தனது ஆலைக்காக வாங்கியிருந்த புதிய தோல் துருத்திகளையும் ஜாடிகளையும் பார்வையிட்டுக்கொண்டிருந்த நேசரிடம் ஒருவன் ஓடிப்போய், “ அய்யா நாம் மோசம் போனோம். பழங்கள் யாவும் எட்டியப்போல் கசக்கின்றன. இவைகள் ஒன்றுக்கும் உதவாது. ஆலையிலே இவைகளை பிழிவதால் எந்த நன்மையும் விளையப்போவதிலை” என அங்கலாய்ப்புடன் வந்து கூறினான்.
நேசர் திகைத்து நிற்கிறார். வந்திருந்த உறவினர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அருகிலுள்ள தோட்டத்திலுள்ளவர்கள் சிலர் பரிதபம் கொள்கின்றனர். வேறு சிலர் இத்தோட்டத்தை விலைபேச இது தகுந்த நேரம் என மனகணக்குப் போடுகின்றனர். ஆனால் நேசருக்கு திகைப்பு இன்னும் அடங்கவில்லை. தான் தெரிந்துகொண்ட நற்குல திராட்சைக்கொடிகள் எப்படி கஷாயத்தைப் போன்ற கசந்த ரசத்தை உள்ளடக்கியது எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. இத்திகைப்பிற்கான விடை காணப்படாமலே இருக்கின்றது. எப்படி இந்த மர்ம முடிச்சை அவிழ்ப்பது? செய்யத்தக்க அனைத்தும் மிகச்சரியாக செய்தும் நற்குல திராட்சைச் செடிகளான யூதா இஸ்ரவேல் குடிகள் கசப்பான பழங்களையே தருகிறார்கள் எனும்போது இதைச் சரிசெய்வது எங்கனம்? தவறே நிகழாத இடத்தில் சரி செய்வதற்கான பிரச்சனை என்ன இருக்கிறது? யாராலும் சரி செய்ய இயலாதபடி பழுது ஏற்பட்டுவிட்டச் சூழலில் மறுபடியும் முதலிலிருந்து துவக்குவது எவ்வளவு கடினம்?
நேசரின் ஆற்றாமை அளவிடமுடியாதது. நேசர் வேதனையின் உச்சத்திலிருந்து, தான் மிகவும் நேசித்த, பாதுகாத்த, தன் அனைத்து ஆற்றலையும் செலவிட்டு அன்புகாட்டி வளர்த்த திரட்சைத்தோட்டத்தைப் பார்த்து இவ்விதமாக கூறுகிறார் “இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோகும். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். (ஏசாயா 5: 5&6)
தீர்க்கன் ஏசாயா எதை முன்னிட்டு இக்கவிதையை புனைகிறார் என்று நாம் நோக்கினால்… யூதா இஸ்ரவேல் எனும் இரு குடிகள் கர்த்தருடைய அன்பை உணராதபடி அவரை துக்கப்படுத்தும் காரியங்களைச் செய்தனர் என்பதினால் தானே? “அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு”.(ஏசாயா 5: 7ஆ)
நியாயமும் நீதியுமற்றத்தன்மையை பாவம் என எளிதில் கூறிக் கடந்துவிடமல் இன்னும் ஒருபடிமேல் போய் “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5: 8) என கர்த்தர் சொன்னதாக ஏசாயா கூறுகிறார்.
இன்றைய தினத்தின் வெற்றிச் சின்னங்கள் நமது வீடுகள். நமது தோட்டங்கள், நமது சொத்துக்கள், நமது நகைகள், நமது உயர்குடி நண்பர்கள், நாம் வாங்கும் பொருட்கள், நாம் செல்லும் ஆலயம், நாம் சார்ந்திருக்கும் சமயம், நாம் வணங்கும் கடவுள். இச்சிறு காரியங்களா? ஒரு தேசம் அல்லது ஒரு திருச்சபை கர்த்தருக்கு விரோதமாக செய்தவைகள் என எண்ணத் தோன்றுகின்றதல்லவா?
இன்று ஒரு போதகராக இந்த ஆலயத்தின் பளிங்கு தரையில் நின்று நான் பேசுகின்ற இவ்வேளையில், ஒரு சில பேராயர்கள் மண் தரையில் அமர்ந்து ஒரு மேஜை கூட இன்றி போரினாலும், வறுமையினாலும், இனக்கலவரங்களுக்கும் மத்தியில் அமர்ந்து தங்கள் பணிகளைச் செய்கிறார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய இயலுகின்றதா? எவ்வகையில் இவர்களுக்காக நாம் அனுப்பும் காணிக்கைகள் பொருத்தமுடையதாயிருக்கும்? எவ்வகையில் நாமும் இவர்களோடு ஐக்கியப்படுவோம்? கசப்பான பழங்களாக நாம் மாறியபின், யாருடைய வாழ்வில் நாம், சுவையேற்ற இயலும்?
இன்றைய தினத்தில் ஒரு போதகரின் செய்தி மிகக்கடுமையாகவும் கண்டிப்புடனும் திருமறைக்கு ஒத்ததாகவும் நமக்கு ஒத்துக்கொள்ள கடினமாகவும் இருந்தால் நாம் என்ன செய்வோம்? அவரை எதிர்க்கலாம், எள்ளி நகையாடலாம், குழி பறிக்கலாம், அவர்களுக்கு விரோதமாக எதையும் சொல்லலாம், நெருக்கடி கொடுக்கலாம். துணிந்தவர்கள் அங்கியைப்பிடித்து இழுக்கலாம், எச்சில் உமிழலாம், துரத்தலாம், வேலையை விட்டு நீக்கலாம், ஏன் கன்னத்தில் கூட அறையலம். அவ்வளவே
இன்றைய மானுடம் ஒருவகையில் பண்பட்டு ஆனால் சற்றும் நெகிழாத் தன்மையுடன் இறுகியிருப்பதை வேதனையுடன் காண்கிறோம். ஆனால் ஏசாயாவின் காலத்தில் அப்படியல்ல. தீர்க்கதரிசனம் சொல்லுவது தன்னையே மாய்த்துக்கொள்ளுவதற்குச் சமம்.
ஆம் பிரியமானவர்களே, எபிரேயர் கடிதம் இதை மிக அழகாக சித்தரிக்கின்றது. விசுவாசம் குறித்த விளக்கத்தை எபிரேயர் 11ன் முற்பகுதியிலும், விசுவாசத்தில் நடந்த பெரியோர்களது வாழ்வு, அரும்பண்புகள், அற்பணிப்பு, அருஞ்செயல்கள் யாவும் விசுவாசத்தால் நிகழ்ந்தன என அது பறைசாற்றுகின்றது. எனினும் அவர்கள் பெற்றுக்கொள்ள இயலாத நன்மையான காரியத்தை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
உலகம் அவர்களுக்குப் பாத்திரமாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலேயும், குகைகளிலேயும், பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். அனைத்து நன்மையின் மத்தியிலும் சிலர் “நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பண்ணப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டுண்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்.
தாங்கள் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை பகிர்ந்துகொள்ளத்தவறினால் அதனால் வரும் ஆக்கினைக்குப் பயந்து, கீழ்ப்படிந்து; வைராக்கியம் கொண்டு, மேய்ச்சல் நிறைந்த தேசத்திலே தங்களைத் தேடுவோரிடமிருந்து தப்பிக்கொள்ளுவதற்காக ஆட்டுத்தோலைப் போர்த்தியபடி, தாங்கள் சந்திக்கவிருந்த ஆபத்துகளிலிருந்து தப்பினார்கள். அவ்விதமாகவே உறுதியுடன் நின்ற அனேகர் தேடப்பட்டு, வேட்டையாடப்பட்டு, கல்லெறியுண்டு வாளால் அறுப்புண்டு போயினர். ஏசாயா எனும் தீர்க்கதரிசியின் முடிவும் இவ்விதமாக இருந்தது என்றே நாம் கண்டுகொள்ளுகிறோம்.
எனினும் தேவ தாசர்கள் எனக் குறிப்படப்படும் விசுவாசிகள் கூட்டத்தில் இராகாப் எனும் பெண்ணும் சேர்ந்திருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்காமலில்லை. இவை எவைகளைச் சுட்டி நிற்கிறது? சேதமாகாமல் இருப்பதோ சேதமாவதோ அல்ல விசுவாசத்தின் அளவுகோல். எச்சூழலிலும் கடவுளின் சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் துணிச்சலையே நாம் கண்டுகொள்ளுகிறோம். ஆம் இவர்கள் அனைவருக்கும் முன்னால் ஒருவர் மேலாக உயர்ந்து நிற்கிறார். அன்பின் அடையாளமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட கிறிஸ்து எனும் இயேசு “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு. அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (12.2) என நாம் வாசிக்கும்பொழுது நமது உள்ளங்கள் கொளுந்துவிட்டு எரியவில்லையா? ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (12:1) என முத்தாய்ப்பு வைக்கிறார்.
இந்த பொறுமையான ஓட்டம் எத்தகையது எனும் நாம் கூர்ந்து அவதானித்தால் இயேசுவின் கூற்றில் உள்ள உண்மைகளை நாம் கண்டுகொள்ளுவது எளிதாகும். அது நமது வாழ்வில் நாம் கண்ட பாரதியின் கவிதையோடும் உறவு கொள்ளுவதைக் காணமுடியும்.
அக்கினி குஞ்சொன்றைக் கண்டேன்
அதில் ஆங்கோற் காட்டிடைப் பொந்தொன்றில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு.
“பூமியிலே அக்கினியைப் போடவந்தேன், அது இப்போதே பற்றியெறிய வேண்டும் என்று விரும்புகிறேன்”(லூக்கா 12:49) என இயேசு தாம் பூமியிலே வந்ததற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் இது போல் பலமுறைக் கூறியிருந்தும் பல விதங்களில் தன் வருகையின் இரகசியத்தைக் குறிப்பிட்டிருந்தும் அவரின் வருகையை, அதன் உட்கருத்தை எவரும் அறிந்திலர். ஆகவே தான் மீண்டும் மீண்டும் அவர் தனது வருகையின் நோக்கத்தை, புரிந்துகொள்ளாத் தன்மையை அடிக்கோடிடுகிறார்.
அப்படி புரிவதற்கு என்ன கடினம் அவர் வார்த்தைகளில் ஒளிந்திருந்தன? ஏன் அவர் உவமைகள் மூலமாகதானே பேசினார். எளிய மக்களோடெல்லாம் அவர் பேசினாரே. ஒரு கிணற்றடியில் நின்ற பெண்மணி கூட “மேசியாவைக் கண்டேன்” என சாட்சி கூற முடிந்ததே? மறைநூல் அறிஞர்களோ, பரிசேயரோ, பிலாத்துவோ, ஏரோதோ ஏன் அவரைக் கண்டுகொள்ள இயலவில்லை?
இயேசு கூறுவது நிறுவப்பட்ட நம்பிக்கைக்கு எதிரான ஒரு போங்கே என நாம் காணும்போது நம் இதழ்களில் ஒரு மெல்லிய புன்முறுவல் எழலாம். “நீதிமான்களையல்ல பாவிகளையே மனம்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்” என கூறுவது இயேசு தனது பணியை பாவிகளுக்கானது என சொல்வதுபோல் தோன்றினாலும் நல்லோர் வேடமிட்டிருப்போரையும் அது சுட்டி நிற்பதால் அவ்வார்த்தையின் தீண்டலினாலே சீண்டப்பட்ட “மெத்தப் படித்தவர்கள்” அவருக்கு விரோதமாய் நின்றதைக் காணமுடியும். அவ்விதமாகவே யோவான் 7: 28 ஐ வாசிக்கையில் இயேசுவின் “சிலுவை” மட்டுமல்ல “வாழ்வே சிலுவையாக” இருந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு; “நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என் சுயமாய் வரவில்லை என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்” என்றார்.
எப்படியிருந்தாலும் தனது பணியின் ஒட்டுமொத்த அழைப்பையும் அவர் உதாசீனம் செய்யவில்லை என்பதே உண்மை. இவ்வுலகத்தை இரட்சிக்கவே அவர் வந்தார் என்பதை அவர் மிக தெளிவாகவே உணர்ந்திருந்தார். அந்த அன்பின் சாட்சியாகவே அவர் ” ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்காமல் இரட்சிக்க வந்தேன்” என உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்மைப்பார்த்துக் கூறுகிறார்.
தாகம் நிறைந்த காகம், தண்ணீர் குறைந்த ஜாடியைக் கண்டபோது ஏற்பட்ட உந்துதலால் கற்களை நிறைத்து தண்ணீர் பருகிய கதையைப் போன்றே நரியும் உந்துதலோடு செயலாற்றியிருந்தால் ஒருவேளை அதன் பசி ஆறியிருக்குமோ?
நாம் எவ்விதத்தில் இந்த இரட்சிப்பை புரிந்துகொள்ளுகிறோம்?
அருட்திரு. காட்சன் சாமுவேல்
(18.08.2013 ஞாயிறன்று வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம். இடம்: மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்)
மறுமொழியொன்றை இடுங்கள்