பனைமுறைக் காலம் 10


பனைமுறைக் காலம் 10

பனைவேற்காடு

வாட்ட சாட்டமாக அட்டகாசமான சிரிப்போடு  பைக்கில் சுமன் வந்து நின்றார். வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு போனார்.  அவரது வீட்டில் தான் அன்று மதியம் உணவு. வீட்டில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்வு. எங்களுக்கு அடுப்பிலிருந்து கொதித்துக்கொண்டிருந்த மீனை எடுத்து கொடுத்தார்கள். செம்ம ருசியாக இருந்தது. “ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி  கடல்ல நீந்திட்டிருந்த மீன் சார் இது” என வாய் கொள்ளா சிரிப்புடன் சொன்னார். இத்தனைக்கும் மசாலா மீனுக்குள் பற்றியிருக்கவில்லை. முதல் கொதியிலேயே அள்ளி எடுத்து வைக்கப்பட்ட மீன்.  சாப்பிட்ட பின் அவருக்கு சில வேலைகள் இருந்ததால் நானும் கல்யாண் குமாரும் அந்த வீட்டின் அருகில் இருந்த விழா பந்தலில் அமர்ந்திருந்தோம். நான் சற்று காலாற நடக்கலாம் என அடுத்த தெருவிற்குள் நுழைந்தேன் சில பெண்கள் வட்டமாக அமர்ந்திருந்து  விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த விளையாட்டு சற்று வித்தியாசமானது. அனைத்து பெண்களின் கரத்திலும் ஒரு குச்சி இருந்தது. நின்று கொண்டிருந்த பெண்மணி தனது சாரியினை கங்காரு பைபோல் அமைத்து அதற்குள் சில நூல் பூக்களை பல வண்ணங்களில் வைத்திருந்தார். அவர் ஒவ்வொன்றாக போட, அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் கரங்களிலிருந்த குச்சிகளை வைத்து அதனை எடுத்துக்கொண்டிருந்தார்கள், யார் முதலில் குறிப்பிட்ட வர்ணத்தை சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். முதன் முறையாக இப்படி ஒரு விளையாட்டைப் பார்க்கிறேன்.

சுமன் எங்களை  அழைத்துக்கொண்டு எனக்கு ஒருக்கியிருக்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார். அது ஒரு ஷட்டர் கொண்ட சிறிய அறை. ஒரே ஒரு மேஜை வீச்றி இருந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. எனக்கான குளியலறை மற்றும் காலைக்கடன்களுக்கு இன்னும் ஒரு மாடி ஏறி செல்ல வேண்டும். சேவியர் என்னிடம் முதலிலேயே கூறியிருந்தார். இங்கு தங்கும் இடங்கள் கிடையாது என்று. பழவேற்காட்டைப் பொறுத்தவரையில் உல்லாச விடுதி மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி கிடையாது. அது தான் இப்பகுதியினை இன்னும் அதன் தனித்தன்மைகளுடன் வைத்திருக்கிறது.

தங்குமிடத்திலிருந்து  சிறிது தொலைவில் எனக்கான உணவு ஓரிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் முடிந்த பின்பு கல்யாண் குமார் புறப்படும் வேளை வந்தது. அவரது பைக்கில் 600 ரூபாய்க்கு பெட்ரோல் இட்டேன். மேலும் 400 ரூபாய் அவரது கரத்தில் கொடுத்தேன். பொதுவாக எனது செலவுகளை எப்போதும் கல்யாண் தான் பார்த்துக்கொள்ளுவார். இம்முறை எனக்கான ஒரு வாய்ப்பு. பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.

அன்று இரவு அந்த ஊரில் தனியனாக பல முறை அந்த பாலத்தை கடந்து நடந்தேன். கலங்கரை விளக்கத்திலிருந்து  உமிழும் ஒளி அங்கிருந்த பனை மரத்தினை தாண்டிச் செல்லுவது தனித்துவமான ஒரு காட்சியாக தென்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட பனை போல. அதனை எப்படியாவது படம்பிடிக்கவேண்டும் என முயன்று தோற்றுப்போனேன். புகைப்படக்கலை குறித்த நெளிவு சுளிவுகள் தெரிந்திருந்தால் அன்று அக்காட்சியினை அழகுற படமாக்கியிருக்கலாம்.   காற்று அதிகம் இருந்தாலும், நான் தங்கியிருந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. மேஜை விசிறியால் பெரிய பயன் இல்லை. இரவு படுத்திருக்கும்போது அந்த அறையினை பயன்படுத்தும் வாலிபன் அங்கே வந்தான். ஒரு கை அவனுக்கு ஊனம், ஆனாலும் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்தான். என்னோடு அன்பாக பேசியபடியே தனது வேலையையும் கவனித்துக்கொண்டான். ஊனம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு அழகோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான்.  

காலை எழுந்தவுடன் பாலத்தை  கடந்து ஒரு நடை நடந்தேன். பனை மரத்தடிகளை கொண்டு சிறிய கூடாரத்திற்கான தூண்களை அமைத்திருந்தார்கள். பாலத்தின் அருகில் இருக்கும் மக்களிடம் பேச்சு கொடுத்தபோது புகைப்படங்கள் எடுக்காதீர்கள் எனக் கூறினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு நபர் என்னிடம் கோபமாக இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார். அவர் தான் ஊர் தலைவர் என பின்னர் அறிந்து கொண்டேன். ஆனால் அப்படி புகைப்படம் எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என்றே அங்குள்ள சூழல் இருந்தது. ஏனாதி பெண்களும் ஆண்களும் அந்த காயலுக்குள் இருந்த திட்டு ஒன்றை நோக்கி முட்டளவு தண்ணீரில் கையில் பறி மற்றும் உணவுகூடைகளுடன் சென்றார்கள். அங்கே சென்றவுடன் அமர்ந்து மெதுவாக வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். அதே நேரத்தில் கரைக்கு வெகு அருகில் நேற்று பார்த்த ஒரு நபர் பறியை வாயில் கவ்வியபடி கழுத்தளவு மூழ்கி இரண்டு கைகளாலும் துழாவி இறால் பிடித்துக்கொண்டிருந்தார். எனக்கே இறங்கி இறால் பிடித்துபார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றிவிட்டது. 

பர்மாவில் எருமை வண்டியும் பனங்காடும்

காலை வேளையில் தானே நான் அங்கே ஒரு எருமை மாட்டு வண்டியினைப் பார்த்தேன். எருமை மாட்டு வண்டியினை நான் பார்ப்பது அதுவே முதன் முறை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு ஒரு நாட்டுப்புற கதை சொன்னார்கள். முன்பொரு காலத்தில் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஏழை விதவைப் பெண்ணொருத்தி தனது ஏழு குழந்தைகளுடன் வாழ இயலாத சூழலில் ஒரு கிணற்றுக்குள் தனது குழந்தைகளை போட்டுவிட்டு தானும் அதற்குள் குதிக்கிறாள். அவளுக்கு தான் குதிப்பது பாதாள உலகத்தின் வாசல் என அப்போது தெரியாது. அனைவரும் வாசுகி என்ற பெரிய பாம்பின் மேல் விழுகிறார்கள். வாசுகி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, எங்களுக்கு வாழ வழியில்லை அதனால் தான் சாக வந்தோம் என இப்பெண்மணி கூறியிருக்கிறார்கள். சூழ்நிலையை உணர்ந்த வாசுகி, உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன், நீ வீட்டிற்கு போ என்று கூற, இப்பிரச்சனை தனக்கு மட்டும் உரியதல்ல, ஊரிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பட்டினியால் வாடுகின்றன எனக் கூறி அனைவருக்கும் தீர்வு சொல்ல முடிந்தால் மட்டுமே தான் இங்கிருந்து புறப்படுவேன் என்று கூறி நிலையாய் நின்றுவிட்டாள். அப்போது வாசுகி அவளுடன் இரண்டு பாம்புகளை அனுப்பியது. ஒன்று பனை மரமாகவும் மற்றொன்று எருமையாகவும் மாறி அவர்களுக்கு வறட்சியான காலத்திலும், பசிப்பிணி இன்றி வாழ வகை செய்தது.

ஆப்பிரிக்காவில் எருமையும் பனங்காடும்

இந்த கதை நமது பண்பாட்டில் ஊறி எழுந்த ஒரு கதையாகவே பார்க்கிறேன். பசுக்கள் உயர்குடியினருக்கான அடையாளமாக இருக்கையில் எருமைகள் ஏழைகளின் வாழ்வியலோடு இணைந்து வருவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்பேர்ப்பட்ட பஞ்ச காலத்திலும் பனையும் எருமையும் தாக்குப்பிடிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன. ஆகவே அவைகளே ஏழைகளின் சார்பில் நிற்கும் உயிரினங்கள் என நாம் கொள்ள முடியும்.

பனையும் எருமையும் இரட்டை உயிரினங்களாக இருக்குமா? அதனைக் குறித்து நான் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் தேட ஆரம்பித்தேன். அதற்கு ஜெயமோகன் அண்ணனுடைய கதை முழுமுதற்  காரணம். இரண்டாவதாக நான் மும்பையிலிருக்கும் ஆரே காலனிக்கு வந்தது மற்றொரு திருப்புமுனையாகும். ஆரே முழுக்க எருமை பண்ணைகள் தான் இருக்கின்றன. எருமைகள் ஒரு அடைக்கப்பட்ட பண்ணை சூழலில் வளருவதால் என்னால் அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் சாய் பாங்குடா என்ற அப்குதியில் இருக்கும் பனைகளை நான் பார்த்தபோது அங்கு அனேக எருமைகள் தொடர்ந்து மேய்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வருடத்தில் ஆறு மாதங்கள் இப்பகுதி சதுப்பு நிலமாகவே இருக்கும்.

வியட்னாம் எருமை வண்டி

ஆம் எருமை என்பது நீர் தேவையுள்ள ஒரு மிருகம் தான். ஆரே பகுதியில் கவிதை எழுதிய ஒரு பழங்குடி இங்குள்ள மாடுகளுக்கு குளிக்க தண்ணீர் இருக்கிறது ஆனால் ஆதிவாசிகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை எனவும், மாடுகளுக்கான குடிநீரே எங்களுக்கான குடிநீர் எனவும் வேதனையுடன் எழுதியிருப்பது குறித்து இங்கு சூழியல் பங்களிப்பாட்டும் சஞ்சிவ் வல்சன் ஒரு முறைக் கூறினார். ஆம், ஆங்கிலத்தில் கூட எருமையினை Water buffalo  என்று தான் குறிப்பிடுவார்கள்.

வியட்னாம் வயல் பகுதிகளில் எருமை

தென் தமிழகத்தில் என்னால் அதிக எருமைகளைக் காண முடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இந்தியாவெங்கும் பனையும் எருமையும் ஒன்று போல் நிற்பதைக் காண முடிகிறது. எருமைப்பாலின் அடர்த்தி அதிகமாகவும், அதில் இருக்கும் கொழுப்புச்சத்து பசுமாட்டினை விட அதிகமாகவும் இருக்கும். ஆனால் இன்று பண்ணையாக எருமைகளை வைத்துக்கொள்ளுகிறவர்களை கூட நாம் பார்த்துவிடலாம், ஆனால் தனியாக எருமைகளை வளர்ப்பவர்கள் தென் தமிழகத்தில் அருகிவிட்டார்கள். பசு வளர்ப்பதே நவீனமானது என்ற எண்ணம் குமரி போன்ற நிலங்களில் வேரூன்றியிருக்கிறது.  

எருமையைப் பொறுத்த வரையில், அது பனை மரத்தைப்போலவே, அதிக எதிர்பார்ப்புகள் அற்ற ஒரு உயிரினம். இருப்பதைச் சாப்பிட்டு, எல்லா கால சூழல்களுக்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு, மழை மற்றும் வறட்சியினைத் தாங்கும் சக்தி கொண்ட ஒரு கால்நடை. நோய் எதிர்ப்பாற்றல் மாடுகளைவிட அதிகமானது. கி மு 4000ஆம் ஆண்டில் தான் எருமைகளை மனிதர்கள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறுவதை வைத்து பார்க்கும்போது இதே காலகட்டத்தில் தான் பனையுடனான உறவுகள் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

எருமை சவாரி செய்யும் சிறுவன், வியட்னாம்

உலகில் காணப்படும் மொத்த எருமைகளில் 90 சதவிகிதத்திற்கு மேல் ஆசியாவில் தான் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பர்மா, பாகிஸ்தான், வியட்னாம், போன்ற நாடுகளிலும் எருமைகள் பெருமளவில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் பனை இருக்கும் இடங்களில் இவைகள் இணைந்தே வாழ்கின்றன.  இது குறித்து மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்பும் அன்பர்களுக்கு இவ்விணைவு குறித்து மேலதிக தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதாக உணர்கிறேன். மட்டுமல்ல, இதுவரை எவரும் பார்த்திராத புது கோணங்களும் இவ்வாய்வுகளின் வழி வெளிப்படும் என்றே நம்புகின்றேன்.

நாடோடிகளுக்கும், பழங்குடியினருக்கும் எருமை மாடுகளுடன் அதிக தொடர்பு உண்டு. இன்றும் இந்தியாவில் பல பகுதிகளில் பனையும் எருமையும் தொல் குடிகளுடன் தொடர்புடையவைகாளாக இருக்கின்றன. மாத்திரம் அல்ல இன்று எருமைகள் மிக முக்கிய அளவில் எண்ணிக்கைகளில் பசுவை விட அதிகரித்தபடி உள்ளன. காரணம் மாட்டரசியல் தான். பசுவைப்போல எருமை புனிதப்படுத்தப்பட்ட உயிரினம் அல்ல. பசு மீதான புனிதப்படுத்துதல்  விவசாயிகளுக்கு மாடுகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. குறிப்பிட்ட வயதில் ஒரு மாட்டினை கறிக்காக விற்பனை செய்யும் வாய்ப்பு இருந்தாலொழிய ஒரு விவசாயியால் மாடுகளை வைத்து இறுதிவரை பேணமுடியாது. மேலும், எருமையிலிருந்து கிடைக்கும் பால் அதிக கெட்டிதன்மைக்கொண்டதும் பசும்பாலில் கிடைப்பதை விட இரு மடங்கிற்கு மேல் கொழுப்புச்சத்தும் உள்ளது. ஆகவே இன்று பல பண்ணைகள் எருமைகளையே வளர்க்க விரும்புகின்றனர். மாடுகளை விட அதிக பாரத்தை எருமைகளால் எளிதில் சுமக்க முடியும். நம்மூர் ஆசிரியர்கள் மாணவர்களை எருமை என்று அழைப்பது இவ்வித புரிதல் இல்லாமையால் தான். நவீன காலத்தில் எருமைக்கு கிடைத்திருக்கும் இத்தகைய முகியத்துவம் பனைக்கும் கிடைக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். 

எமதர்மராஜா

எருமை குறித்து பேசும்போது எமதர்மராஜாவைக் குறித்து பேசாமல் இருக்க முடியாது. பாசக்கயிற்றை வீசும் தெற்கின் தலைவன் அவன். இறந்தவர்களை வழிகாட்டும் எமனின் வாகனம் அல்லவா எருமை. எமன் குறித்து சீன ஜப்பானிய மற்றும் ஈரானிய தொன்மங்களும் இருக்கின்றன. எமனும் காளியும் தொல் குடிகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் உருவகங்கள் என்பதை பார்க்கும்போது, பனங்காடுகளை எமன் எட்டிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்பது விளங்கும். 

அன்று காலை உணவினை முடித்த பின்பு, ஊரை சுற்றிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உணவகம் இருந்த இடத்க்டின் எதிரில் காணப்பட்ட  தெருவில்  நடக்க ஆரம்பித்தேன். சுத்தமாக நீர் தெளித்து பேணப்பட்ட தெருக்கள். ஒரு புராதனமான இந்து கோயில் அங்கே இருந்தது. பாழடைந்திருந்ததை புதிப்பிக்கும்படியான புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதற்கான அடையாளம் தெரிந்தன. சுவர்கள் எல்லாம் சுறண்டி எடுக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகளுக்காக அக்கோயில் காத்திருந்தது. கோவிலை சுற்றிலும் இருந்த புதர்கள் சமீபத்தில் தான் வெட்டி சீர் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் எவருமே இல்லை.

எதிரே இருந்த தெருவில் நடந்த போது பனை ஓலைகள் சாயமிடப்பட்டு காயப்போடப்பட்டிருந்தன. ஆகவே இங்கு பனை ஓலையில் பொருட்களைச் செய்பவர்கள் இருக்கலாம் என்று உணர்ந்து அருலில் இருக்கும் சிறுவர்களிடம் கேட்டேன். அவர்கள் காட்டிய வீட்டில் சென்று கேட்டபோது இங்கே ஒரு பெண்கள் அமைப்பு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்றார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கலையும் அவர்களே சொல்லுவார்கள் என்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த பெண்மணி என்னை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பேச்சுக்கொடுக்கவே விரும்பவில்லை. பொதுவாக இவ்வித சூழல் பிற இடங்களிலும் சந்தித்திருக்கிறேன். சர்வதேச சந்தையினை மையமாக கொண்டு ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், தங்கள் அலுவலகங்களை மர்ம தேசங்களாக வைத்திருப்பது வாடிக்கை. போட்டி நிறைந்த உலகில், இவ்விதமான மக்களை ஆசை வார்த்தை காட்டி வேறு இடங்களுக்கு இழுத்துக்கொள்ளும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால், முதன்மையான காரியம் என்னவென்றால், இவர்கள் செய்யும் பொருட்கள் குறித்த இரகசியம் பேணவே விரும்புகிறார்கள். 

பழவேற்காட்டில் என்னால் எதனையும் பார்க்க இயலாதோ என எண்ணியபடி வெளியேறினேன். நான் வெளியேறும் சமயத்தில் அங்கு ஒரு மனிதர் தனது மனைவியினை டி வி எஸ் எக்செல் வண்டியில் வைத்து ஓட்டியபடி எதிரில் வந்தார். கருமையான திடமான அழகிய தேகம். முகமும் ஒளிகொண்டிருந்தது.  வண்டியின் முன்புறம் தொங்கவிடப்பட்டிருந்த ஒயர் கூடையில் பனை ஒலைக் குருத்து. பாய்ந்து வண்டியை நிறுத்தினேன். ஓலையை எதற்காக கொண்டு செல்லுகிறீர்கள்,  எங்கே தங்கியிருக்கிறீர்கள் என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினேன். அருகில் தான் வசிப்பதாகக் கூறினார்கள். அவர்களும் பறி செய்வதற்காகவே இதனை எடுத்துச் செல்லுகிறார்கள் என புரிந்துகொண்டேன்.

காலை வேளையில் பொடிநடையாக நடக்கையில் அங்கிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி கடல் ஆய்வு மையம் தென்பட்டது. சுற்றி நடந்து வருகையில், அங்கிருந்த ஒரு நூலகம் கண்ணில் பட்டது. உள்ளே செல்ல முயன்றபோது கொரோனா தடுப்பு முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது. பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். அங்கிருந்த நூல்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்  சேவியர் என்னை அழைத்தார்கள். நான் இங்கு எனது அலுவலகம்  வந்துவிட்டேன் நீங்களும் வாருங்கள் என்றார்.

ஆர் டி எம் அங்குள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் வளாகத்திலிருந்தது. அங்கு சென்றபோது தான் கலை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கிடைத்தன.  நான் சென்ற வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வீடுகள். அங்குள்ள பெண்கள் பார்ப்பதற்கு பிற பெண்கள் போலவே இருந்தார்கள். அவர்கள் மரக்காயர்கள் என சேவியர் சொன்னார். சேவிரைப் பொறுத்தவரையில் மிக அழகிய பனையோலைப் பொருட்களைச் செய்வதற்கு காரணம் மரக்காயர் சமூகம் தான். இஸ்லாமிய தொடர்புகளினால் அவர்கள் அழகிய பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருந்தனர். அவர்களிடமிருந்து பரதவர்கள் பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருக்கின்றனர். தமிழகத்தில் இவ்விரண்டு சமூகங்களே அழகிய பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் என்றார். எனக்கு அது புது தகவல். ஏனென்றால், இவ்விரு சமூகங்களும் பனையுடன் தொடர்புடையது என சேவியரை சந்தித்த பின்பு தான் நான் அறிந்துகொள்ளுகிறேன். அவரது அலுவலகத்தில் இருந்தது ஒரு மரக்காயர் பெண் தான். வெகு சாதாரண தமிழக பெண்மணியினைப் போன்ற உடையமைப்பிலேயே இருந்தார். ஓலைகளை மிக சன்னமாக கிழித்து பொருட்களை செய்துகொண்டிருந்தார். 

பழவேற்காடு ஓலைப் பெட்டிகள்

பனையோலை அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. வர்ணங்கள் மீதும் எனக்குப் பெரிய வாஞ்சை கிடையாது. அழகிய வர்ணங்கள் தீட்டும் SHARE என்ற வேலூரைச் சார்ந்த  அமைப்பு, தலித் பெண்களைக் கொண்டு மிகச் சிறப்பான பொருட்களைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்து, உட்பட பல ஐரோப்பிய நகரங்களுக்கு அவர்கள் பொருட்களை அனுப்புகிறார்கள்.

மற்றொரு அமைப்பு மஞ்சள் எனப்படுவது. செட்டியார்கள் நடத்தும் ஒரு அமைப்பு. தமிழகத்தில் இன்று முதலிடத்தில் இருக்கும் அழகிய வடிவமைப்புகள் கொண்ட அமைப்பு இது. ரோடா அலெக்ஸ் தான் மஞ்சள் என்ற அமைப்பினை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மஞ்சள் எப்படி இயங்குகிறது என நான் தேடி சென்றபோது, நாடார் பெண்களை வைத்தே வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன். அங்கு அவர்களது பணியிடத்திற்குள் செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை.

செட்டிநாடு பனை ஓலைப் பொருட்களை அறிமுகம் செய்யும் கொட்டான் என்ற புத்தகம்

செட்டியார் சமூகத்தினருக்கும் நாடார் சமூகத்தினருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என காலம்சென்ற பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். பனை மரச்சாலை புத்தகத்தினை அவர் தான் முழுவதும் வாசித்து பதிப்பகத்திற்கு கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டியவர். திருமண சீர்களில் நாடார்கள் எப்படி நார் பெட்டிகளை கொண்டு செல்வார்களோ அது போலவே செட்டியார்களும் செய்வார்கள் என்றார். முதன் முறையாக  செட்டியார்களுக்கும் பனைக்கும் இருக்கும் உறவு என் பார்வையில் அப்படித்தான் தெரிய வந்தது. 

ஆகவே இதனை மையப்படுத்தியே நான் செட்டியார்களுக்கும் நாடார்களுக்கும் உள்ள தொடர்பினைத் தேட ஆரம்பித்தேன்.  திண்டுக்கல் பகுதிகளில் நான் பயணித்துக்கொண்டிருக்கும்போது கோவிலூர் என்ற பகுதியில் ஒரு பெண்மணி நாங்கள் செட்டியாருக்குத் தான் கருப்பட்டியை கொடுப்போம் என்றது எனக்குள் கேள்வியை எழுப்பியது? ஏன் செட்டியார்கள்? பணம் இருப்பதிலேயா? வெறும் பணம் ஒரு காரணியாக இருக்க முடியாது ஏன் என்றால் சிவகாசி நாடார்களும், இன்னும் பல நாடார்களும் கருப்பட்டி வணிகத்தை தங்கள் குல உரிமைச் சொத்தாக வைத்திருந்தார்கள். என்னுடைய அம்மா வழி தாத்தாவின் சகோதரியின் கணவர் கூட ஒரு வெற்றிகரமான கருப்பட்டி யாவாரியாக கொல்லத்தில் கொடிகட்டிப்பறந்தவர் தான். அப்படியானால் ஏன் செட்டியார்கள் பனையேறிகளுடன் தொடர்பிலிருக்கிறார்கள்?

விடை சொல்லுவதற்காகவே திருச்சியில் செல்லம்மாள் மண் பானை சமையல் என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தும் திரு மோகன் அவர்கள் என்னை அவர்களது உணவகத்திற்கு அழைத்திருந்தார்கள். உணவு உண்பதற்கு முன், அவரது உணவகத்தை எனக்கு சுற்றிக்காண்பித்தார்கள். சமையலுக்கான மண் பாண்டங்களைத் தேர்வு செய்த விதம், விறகுகள் முதற்கொண்டு காய்கறிகள் எப்படி வாங்குவது உட்பட பல கோட்பாடுகளை அவர் வைத்திருக்கிறார். அவர் வாங்கி வைத்திருக்கும் கருப்பட்டிகள் தருமபுரியிலிருந்து வரவழைத்தவை என காண்பித்தார். அவைகளின் வடிவமே சற்று வித்தியாசமாக இருந்தது. தேங்காய் சிரட்டையில் ஊற்றியது போல அல்ல, சற்று ஆழமான குழிக்குள் ஊற்றியது போல நீண்டு காணப்பட்டது. அவர் தான் சொன்னார், செட்டியார்கள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டியினைக் கலந்தே ஆட்டுவார்கள் என்று. குறிப்பாக எள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டி கண்டிப்பாக இட்டே ஆகவேண்டும். ஒரு முறை காயல் பட்டிணம் சென்றிருக்கும்போது ஒரு இஸ்லாமியர் செக்கு ஆட்டும் இயந்திரத்தில் கருப்பட்டிகளை போட்டுக்கொண்டிருந்ததை அப்போது நினைவு கூர்ந்தேன்.  கருப்பட்டிகளை இட்டு அரைத்தால் தான் எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணையில் உள்ள காரல் நீங்கும்.

செட்டியார்கள் மத்தியில் எண்ணெய் செட்டியார்கள் உண்டு என்பது எனக்கு புது தகவல். பெருவிளையில் எங்கள் வீட்டிற்கு  பின்புறம் இருக்கும் அரிசி அரவை ஆலைக்கருகில் ஒரு செக்காட்டும் கல் கிடப்பதையும் எனது சிறு வயது முதல் பார்த்து வருகிறேன். சமீபத்தில் மீண்டும் செக்கெண்ணெய்கள் தமிழகத்தில் மீட்சி பெறுவதைப் பார்க்கும்போது  கருப்பட்டியின் தேவை இன்றும் அதிகமாக இருப்பதாகவே உணருகிறேன். 

கேள்வி இன்னும் எஞ்சியிருக்கிறது. செட்டியார்கள் வாழ்வில் பனையோலைப் பெட்டி எப்படி நுழைந்தது? அவர்களுக்கான ஓலை பின்னும் ஒரு மரபு தமிழகத்தில் எப்படி தனித்துவத்துடன் இயங்கலாயிற்று என்பது மிகப்பெரிய கேள்வி. மஞ்சள் வெளியிட்ட கொட்டான் என்ற ஒரு புத்தகத்தை பெரும் விலை கொடுத்து வாங்கினேன். அந்த புத்தகம் அவர்களின் பொருட்களின் அறிமுகம் என்ற அளவிலான ஒரு புத்தகமே ஒழிய அதிலிருந்து பெருமளவில் விடை கிடைப்பதாக இல்லை. ஏனென்றால் அப்புத்தகத்தில் எங்குமே அவர்களுக்கு ஓலைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்கின்ற தகவல் சொல்லப்படவில்லை. ஓலைகள் கிடைக்கும் பனை மரம் குறித்து போற்கிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலைகளை யார் வெட்டி கொடுப்பார்கள், போன்றவைகள் பேசப்படவில்லை. ஒருவேளை, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓலைகளை சேகரித்து கொடுத்திருக்கலாம், இல்லை தலித் சமூகத்தினர் அப்பகுதிகளில் பனையேறியிருக்கலாம். பொருந்தும்படியாக நாம் எண்ணத்தக்க விடை, செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்த நாடார்கள் தான் ஓலைகளை எடுத்து செட்டி ஆய்ச்சிகளுக்கு கொடுத்திருப்பார்கள் என்பது தான்.

அழகிய செட்டிநாடு கொட்டான்கள்

அப்படியானால், ஓலைகளில் பொருட்கள் செய்யும் நுட்பம் செட்டியார் சமூகத்தினருக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் என்பது அதனை தொக்கி நிற்கும் கேள்வி. கண்டிப்பாக நாடார் பெண்களே செட்டி ஆய்ச்சிகளுக்குப் பின்னல் முறைகளை கற்றுக்கொடுத்திருப்பார்கள். அப்புத்தகத்தில் அதற்கான தெளிவுகள் ஏதும் இல்லை. பெரும்பாலும் செட்டியார்கள் பர்மா சென்று பொருளீட்டுகையில், செட்டி ஆய்ச்சிகள் வீட்டில் பொழுதுபோக கற்ற ஒரு கலை வடிவமாகவே  இதனைப் கொட்டான் முன்வைக்கிறது. இன்றும் செட்டி நாட்டு சுற்றுவட்டாரங்களில் காணப்படும் நார் பெட்டிகள் தனித்துவமிக்கவைகளாக  காணப்படுவதைப் பார்க்கலாம். இவ்வித நார் பெட்டிகளே செட்டியார்களுடைய திருமணங்களில் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால், அவர்களிடம் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பெட்டிகளுக்கான பின்புலம் என்ன? தென் தமிழகத்தில் காணப்படும் முறைமைகளைத் தாண்டி செட்டியார்களுடைய வர்ணங்களும், மடிப்புகளும் வித்தியாசப்படும் இடங்கள்  உண்டு. அது எப்படி என்கிற கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது.  

அதற்கான விடை கண்டுபிடிக்க நான் வேறு ஒரு பயணம் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. தற்செயலாக அவ்விதமான ஒரு பயணம் நிகழ்ந்தது.  எனது இறையியல் கல்லூரித் தோழன்,   ஹெம்கொமாங் ஹோக்கிப் (Hemkhomang Hoakip)  மணிப்பூரில் நிகழ்ந்த ஒரு கிறிஸ்துவ சமய நிகழ்ச்சிக்காக என்னை பேச அழைத்தார். நிகழ்ச்சி முடிவில் என்னோடு படித்த குக்கி இனக்குழுவைச் சார்ந்த மாங்சா ஹோக்கிப் (Mangcha Hoakip) , என்னை அவனுடன் தங்கும்படியாக அழைத்துச் சென்றான். மோரே என்று சொல்லப்படும் ஒரு பகுதி இருக்கிறது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள், அதன் அருகில் தான் பர்மா இருக்கிறது அங்கு செல்வோம் என்றான். மறுநாள் அதிகாலமே, ஒருநாள் பயணமாக  பர்மா நோக்கி மாங்சா குடும்பத்தினருடன்  இணைந்து பயணித்தோம். 

தூரத்தில் தெரிகிறது தான் பர்மா என காண்பித்தான். பர்மா எனப்படுவது சமதளத்தில் இருக்குமிடம் என்றும், இந்தியா  மலையில் இருப்பதும் தான் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடு. நாங்கள் மோரே சென்று  காலை உணவருந்திவிட்டு, ஒரு நாள் பெர்மிட் எடுத்துவிட்டு பர்மாவிற்குள் நுழைந்தோம். அங்கே அருகிலிருந்த ஒரு நகரத்திற்குள்  நான் காலடி எடுத்து வைத்தபோதே உணர்ந்துகொண்டேன் இது பனைகளுக்கான தேசம் என்று, என்னை வரவேற்க நான்கு பனை மரங்கள் சாலை ஓரத்தில் நின்றன. கலயம் கட்டப்பட்டிருந்தது. இல்லை இல்லை அவிழ்க்கப்படாமலிருந்தது. அன்று நாங்கள் சென்ற சந்தையில், கருப்பட்டி விற்கப்படுவதைப் பார்த்தேன். பனை ஓலைப்பொருட்களை நான் அன்று அங்கு எங்குமே பார்க்கவில்லை. எப்படி அதை தவற விட்டேன் என இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

எனது செட்டி நாட்டு பயணத்தில் அங்குள்ள புராதன பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்றபோது, பர்மாவிலிருந்து கொண்டுவந்த ஓலைப்பெட்டிகள் தாராளம் இருப்பதைப் பார்த்தேன். செட்டியார்களுடைய தனித்துவம் என்பது நாடார்களிடம் இருந்து கற்ற பின்னல் முறைகளுடன் பர்மிய கலைப்படைப்புகளையும் சேர்த்து  முயங்கி ஏற்பட்ட கலவையான கலைவடிவங்கள் என்பதை அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பர்மியக் கலைப்படைப்புகள் என்பவை அனைத்து இந்திய கலைப்படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட அழகு கொண்டது என்பதை இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில், ஒவ்வொரு சமூகமும், தமிழகத்தில் பனை சார்ந்த பொருட்களை தங்களுக்கு என வடிவமைத்திருக்கிறார்கள். அது அவரவர்களின், சடங்கு அல்லது, பயன்பாட்டு காரணங்களை ஒட்டி இருக்கலாம் என்பது எனது அவதானிப்பு. ஆகவே அழகினை விட, ஒரு பொருள் எவ்விதம் பயன்படுத்திடப்பட்டிருக்கிறது எனவும், அவைகள் அச்சமூகத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதும் தான் எனது முக்கிய தேடுதலாக இருக்கிறது.  செட்டியார்களுடைய பங்களிப்பு என்பவைகள் அவ்வகையில் அழகியல் சார்ந்து அவர்கல் தமிழ் சமூகத்திற்கு அளித்த கொடைகள் என்றே கொள்ளுவேன். இன்று மஞ்சள் சென்று பனை ஓலைப் பொருட்கள் வாங்குபவர்கள் தமிழகத்தில் உள்ள மேல் தட்டு மக்கள் மட்டும் தான். அந்த அளவு சர்வதேச கலை ஒருமையினை அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. 

பறி குறித்த விடை எனக்கு ஓரளவு கிடைத்துவிட்டாலும்,  பறி குறித்து நான் மேலும் அறிய விரும்பியே பழவேற்காடு வந்தேன். கூடவே எலிக்கிட்டி என்று ஒன்றினையும் தேடி வந்தேன். எனக்கு சேவியர் அறிமுகமான பிற்பாடு, ஒருநாள் முகநூலில் ஒரு படத்தினை பகிர்ந்திருந்ததைப் பார்க்தேன். ஒரு மனிதர் டி வி எஸ் எக்செல் வண்டி நிறைய பனயோலையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற ஒரு படம். என்ன இது என்று வினவ, எலிக் கிட்டி என்றார். இப்படியான ஒரு பெயர் எனக்கு புதிதாக இருப்பதனால், அது குறித்த தேடலையும் இணைத்தே இப்பயணத்தினை அமைத்திருந்தேன்.  

சேவியருடன் பேசும்போதெல்லாம், இதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா அதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா என்று நச்சரித்தபடியே இருப்பேன். சேவியர் எப்போதும் மெல்லிய சிரிப்புடன், கிண்டலாக சொல்லுவார். “நீங்க பாம்பே ஆள் மாதிரியே பேசுறீங்க”. அதற்கு அர்த்தம், ஒரு தகவலை நினைத்த மாத்திரத்திலேயே  திரட்டிவிட முடியாது. பொறுமை அவசியம். பல நாள் தேடவேண்டியிருக்கும் என்பதுதான். எனக்கு எலி கிட்டியினை பார்த்தே ஆகவேண்டிய வேகத்தில் தான் இந்த பயணமே என நெஞ்சு அடித்துக்கொண்டீருந்தது. அவர் என்னிடம், உங்களுக்காக ஒரு நண்பரை ஒழுங்கு செய்திருக்கிறேன், அவர் வந்தால் உங்களுக்கான உதவிகளைச் செய்வார். மீதி உங்கள் அதிருஷ்டத்தைப் பொறுத்தது என்றார். மேலும் அவர், நாளைய தினம், காயலில் நீங்கள் பயணம் செய்ய ஒரு படகினை அமர்த்தியிருக்கிறேன் , பயணம் சென்று வாருங்கள். ஒருவேளை நீங்கள் தேடுகின்றவைகளில் ஏதேனும் உங்களுக்கு இப்பயணத்தில் வெளிப்படலாம் என்றார். 

சேவியர் என்னை அழைத்துகொண்டு அங்கிருந்த டச்சு கல்லறையினை காண்பித்தார். அதற்குள் நாங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படியே, என்னை ஒரு தொன்மையான இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் அழைத்துச் சென்றார். புராதனமான அந்த பள்ளிவாசலிலும் நாங்கள் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க இயலவில்லை. வெளியே படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அங்கிருந்தவர். அழகிய கற்தூண்களால் ஆன அந்த பள்ளிவாசல், இந்திய கட்டிடக்கலையும் இஸ்லாமிய கட்ட்டக்கலையும் இணைந்த சங்கமம். வெளியே இருந்த ஒரு சூரிய கடிகாரத்தையும், பாங்கு  அழைக்கும் மேடையினையும் பார்த்துவிட்டு திரும்பினோம். மதிய உணவினை இருவரும் இணைந்து  சென்று சாப்பிட்டோம். நான் இறால் பிரியாணி  சாப்பிட, அவர் சைவ சாப்பாடு சாப்பிட்டார். அவர் எனக்கு உதவி செய்யும்படி அழைத்திருந்த பீட்டர் வரும்வரையில் என்னோடு நேரம் செலவைட்டு பழவேற்காடு குறித்து பல்வேறு அரிய தகவல்களை பகிந்துகொண்டார். 

https://lbb.in/chennai/manjal-home-decor-chettinad-crafts-store/

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: