Archive for the ‘கட்டுரை’ Category

பனைமுறைக் காலம் 13

மார்ச் 26, 2021

தாவரசங்கமத்துள்

சாரா மெலடியுடைய திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திருமண நிகழ்ச்சிக்கு மிக குறைவானவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். சமூக இடைவெளி விட்டு ஆசனங்கள் இடப்பட்டிருந்தன. அங்கே டாக்டர் ஷோபன ராஜ் அவர்களை சந்தித்தேன். எனக்கு பனை குறித்த ஆரம்பகட்ட புரிதல்களை சிறு பிள்ளைக்கு கற்றுகொடுப்பது போல் கற்றுக்கொடுத்த பேராசிரியர். கொரோனா அச்சம் நாகர்கோவிலில் தலை தூக்கியிருக்கிறதை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. அனைவரும் முக கவசம் அணிந்தே வந்திருந்தார்கள்.  அம்மா மற்றும் குடும்பத்தின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளைப் பார்க்கும் வாய்ப்பாக மெலடியின் திருமணம் அமைந்தது. ஆனால் ஒருவரிடமும் நின்று பேசும்படியாக சூழல் அமையவில்லை. கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

அன்று அம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ரங்கிஷை பார்க்கச் சென்றேன், ரங்கிஷ், பனை மரச் சாலை பயணத்தில் என்னோடு தொலைபேசி வழியாக இணைந்துகொண்ட நாகர்கோவில் நண்பன். அதனைத் தொடர்ந்து பல பயணங்களில் என்னோடு இணைந்துகொண்டவன். சிறந்த புகைப்படக் கலைஞன். என் மீதும் எனது பயணங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன். பழவேற்காடு செல்லுகிறேன் என்றபோது அவனது காமிராவை தந்து உதவினான். அதனை கொண்டு கொடுக்கச் சென்றேன். இந்த முறை நண்பர்களின் உதவிகள் பல திசைகளிலிருந்து பல்வேறு வகைகளில் கிடைத்துக்கொண்டே இருந்தது கடவுளின் அருள் தான்.

பதினாறாம் தேதி மிகப்பெரிதாக ஏதும் நிகழவில்லை. ஆனால், நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில், ஒரு தேங்காய் ஏற்றி செல்லும் டெம்போ பார்த்தேன். அதற்குள் தேங்காய் சுமக்கும் கடவங்கள் இருந்தது. தேங்காய் சுமக்கும் கடவம் இருவகையில் முக்கியமானது. ஒன்று கடவத்தின் உறுதி. சில வேளைகளில் ஓலைக்கடவத்தின் மீது நார் கொண்டும் பொத்தியிருப்பார்கள். கடவங்கள் நார் கொண்டு பொத்தும்போது உறுதிமிக்கவைகளாக மாறிவிடுகின்றன. மற்றொன்று, ஓலைகள் கொண்டு செய்யும் கடவங்களின் அமைப்பு ஒன்று போலவே இருக்கும். அகன்று உயரம் குறைவாக காணப்படும். கடவங்களில் அதிகமாக தேங்காய்களை சுமப்பது இயல்வதல்ல. ஆகவே, நல்ல சுமட்டுக்காரர்களுக்கு ஏற்றவிதமாக, தென்னை ஓலையில் அதிகபடியான பின்னலை, வைத்திருப்பார்கள். புனல் போல விரிந்திருக்கம் அந்த பகுதியானது, மேலதிக தேங்காய்களை சுமந்து செல்ல வாகாக அமைந்திருக்கும். இந்தவித பெட்டிகள் இரண்டு பொருட்கள் ஒன்றிணையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பனை ஓலை மட்டுமல்லாமல் தென்னை ஓலைகளும் இப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஓரிடத்தில் வாழும் இரண்டு தாவரங்களை எப்படி மக்கள் புரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். 

பனை பொருட்களோடு இணைந்து கொள்ளும் தாவர பொருட்கள் என்பது ஒரு விரிவான பேசுபொருள். தென்னை, புளி, மா மரம், மரவள்ளி கிழங்கு, வாழை, சுரை, கமுகு, பேத்தவரை, ஆல், அரசு மூங்கில், என அவைகளின் விரிவு நாம் எண்ணிப்பார்க்க இயலாதபடி பெரிதானது. இந்த வரிசை, நமக்கு பனை எப்படி தன்னை சுற்றியுள்ள தாவரங்களோடு இணைந்திருக்கிறது. பாரக்கன் விளை அருகிலுள்ள காட்டுவிளை என்ற பகுதியில் பனையேறிக்கொண்டிருக்கும் செல்லதுரை என்ற பெரியவரை சந்தித்தபோது, பனை மரத்தில் ஏறுவதற்காக தேங்காய் தொண்டுகளை பனை மரத்தில் கட்டி வைத்து அதனை படியாக பாவித்து ஏறினார். பனையேறிகளின் தொழில் கருவியான அருவா பெட்டி என்பது பனம் பாளைகளால் செய்யப்பட்டதே.

எனது பயணத்தில், இன்றும்  கூட கரூர் திண்டுக்கல் பகுதிகளில் பதனீர் இறக்க சுரைக் குடுவைகளை பயன்படுத்தி வருகிறதை பார்த்திருக்கிறேன். அதற்காகவே சுரைக்குடுவைகளை தங்கள் தோட்டத்தில் பனையேறிகள் வளர்க்கிறார்கள். ஒருமுறை இயற்கை விவசாயம் செய்யும் சரோஜா அவர்களை சந்திக்க பள்ளபட்டி  சென்றிருந்தேன். எனது பல வருட தேடுதலுக்கு பயனாக அங்குதான் சுரைக்குடுவை பயன்பாட்டில் இருப்பதை கண்டுகொண்டேன். அன்று நான் அடைந்த ஆனந்த பரவசம் என்பது பனை சார்ந்த தேடுதலின் ஒரு சில உச்ச கணங்களில் ஒன்று என்றே சொல்லுவேன். சரோஜா அவர்கள் என்னை கோவிலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, நாங்கள் சந்தித்த செல்வராஜ் என்ற பனையேறி கை நிறைய எங்களுக்கு சுரை விதையினைக் கொடுத்தார். பனையேறிகள் வள்ளல் எனச் சொல்லுவது வெறுமனே அல்ல, அவர்கள் அள்ளி அள்ளி கொடுப்பவர்கள்.

செல்வராஜ் அவர்கள் அதனை எப்படி நடுவது பேணுவது போன்றவற்றைக் குறித்து விளக்கினார். ஒரு கட்டத்தில் சுரை கொடியில் பூத்து காய் வந்த பின்னர் காய்களை எப்படி நேராக அமரவைப்பது. அதன் மூலம், எப்படி குடம் போன்ற வடிவத்தில் சுரைக்காயினை எடுக்கமுடியும் என விவரித்தார். பனையேறிகள் தங்களைச் சூழ ஒரு சூழியல் கட்டமைப்பை பேணிவந்திருக்கிறார்கள் என இவைகள் நமக்கு காண்பிக்கிறது.

எனது பயணத்தில், பனை மரங்களில் பற்றிப்பிடித்து ஏறும் பீர்க்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd) கொடிகளைப் பார்த்திருக்கிறேன். பீர்க்கங்காய் இளசாக இருக்கும்போது, உணவாகவும் முத்திய பின்பு அதிலுள்ள நார்பகுதிகள் அதிகமாகி, உண்ணத்தகாததாக மாறிவிடும், ஆனால் சர்வதேச அளவில், முற்றிய பீர்க்கன், உடலில் தேய்த்து குளிக்கும் பஞ்சாக பயன்படுத்தபட்டுவருகிறது. நார்களின் நீடித்த உழைப்பினால் இது பலரால் விருபப்பட்டு இன்றும் உள்ளூரிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் பெருமளவில் பரவியிருக்கும் தாவரம் மூங்கில் ஆகும். மூங்கில் பனையேறிகளின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குஜராத் மற்றும்  வேறு சில பிராந்தியங்கள் மூலமாக அறிகிறோம். மூங்கிலில் தான் பதனீர் எடுத்து வருவதும், மூங்கில் கழிகளை பயன்படுத்தி பனை ஏறுவதும் என மூங்கில் பனையோடு இணைந்துகொண்டதுபோல் வேறு தாவரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் தமிழகத்தில் மூங்கில் கூரை வேய்வதற்கே அன்றி பெருமளவில் பனையுடன் இணைந்துகொண்டது அல்ல. பனையேறிகள் பாளை சீவும் அரிவாளினைத் தீட்ட பயன்படுத்தும் பொடியை அருவாபெட்டிக்குள் ஒரு பொடிக்குழலினுள் வைத்திருப்பார்கள். பொடிக்குழல் என்பது அரையடி நீளமும் விரல் பருமனும் உள்ள சிறிய மூங்கில் துண்டுதான். ஒருவேளை தேடினால் வேறு சில பொருட்களில் பனை இணைந்துகொள்ளுமாயிருக்கும்.

மும்பையில் பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய தருணத்தில் இங்குள்ள சூழியல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் சந்தேகம் இருந்தது. பனை இங்குள்ள மரம் தானா? இப்படி ஒற்றைப்படையாக ஒரு மரத்தை மட்டுமே விதைப்பது சரியா போன்ற விவாதங்கள் பெருமளவில் முன்வைக்கப்பட்டன. அனைவரையும் சமாளிக்க எனக்கு உதவியாயிருந்தது ஆல மரமும் அரச மரமும் தான். ஆரே பகுதியெங்கும் பனை மரங்களை ஆல மரமும் அரச மரமும் பற்றிப்பிடித்து சுற்றி நெருக்கி வளருவதையே அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். ஒரு மரம் வாழும் பகுதியில் வேறு மரங்கள் வாழமுடியாது என்றிருக்கும் சூழலில், இந்திய ஆன்மீக மரங்களான ஆலமரம் மற்றும் அரச மரம், தங்கள் வாழ்விடத்தை பனையைச் சுற்றி அணைத்து அமைத்துக்கொண்டது சாதாரணமானது அல்ல என்றேன். இக்கருத்து மிகப்பெரிய மாற்றத்தை மும்பையில் ஏற்படுத்தியது.  ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது பனையை அன்றி வேறு எதுவுமே நமது கண்களின் முன்பு இல்லை. மாத்திரம் அல்ல மும்பை போன்ற இடப்பற்றாக்குறை நிறைந்த இடத்தில் ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது வரமாகவே பார்க்கப்பட்டது.

சங்கர் கணேஷ் 2017 முதல் எனது நட்பு வட்டத்தில் இருப்பவர். பட்டதாரி பனையேறி. ஒருமுறை என்னிடம், பனையேறிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றினை விவரித்தார். கடந்தையின் பெருக்கத்தைக் குறித்தும் பனையேறிகள் அவைகளை சமாளிக்க சிரமப்படுவதையும் குறித்து பேசினார். கடந்தை (The Giant Indian hornets) எனப்படும் மிகப்பெரிய குளவி வகை. ஒரு மனிதன் மூன்று கடந்தைகளிடமிருந்து ஒரு சேர கொட்டு வாங்கினால் போதும், மரணம் ஏற்படும் வகையில் கொடிய விஷம் நிறைந்தது. வலியும் கடுமையாக இருக்கும். பெரும்பாலும், ஒற்றைக் கொட்டுகளை பனையேறிகள் “தாங்கிக்கொள்வார்கள்”. கடந்தைக் குறித்து என்னால் உடனே பதில் கூற முடியவில்லை, ஆனால் அது குறித்து விசாரித்து அறிந்தவைகள்  நல்ல செய்திகள் அல்ல. கடந்தை கூடு பெருகிக்கொண்டே செல்லும். ஆடு மாடு நாய் மனிதன் என அது இருக்கும் இடத்திற்குள் எவரையுமே நுழையவிடாது. பெருகும் தன்மை அதி வேகமாக இருப்பதால், கூண்டோடு நெருப்பிலிட்டு அழிப்பதே முக்கியமானது எனக் கூறுகிறார்கள். கடந்தைக்கும் சூழியல் பங்களிப்பு இருக்குமே? இருக்கும், இருக்கலாம், ஆனால், அப்படி விடுவது மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Deadly Asian Hornets that can 'kill with one sting' are heading to the UK -  Mirror Online
அபாயகரமான கடந்தை

குமரி மாவட்டத்தில் உள்ள நடைக்காவு என்ற பகுதியில் பனையேறி ஒருவர் இருக்கிறார் என்று அவரைத் தேடிச்சென்றேன். அப்போது அவர், பனை ஏறி கருப்பட்டி தயாரித்து கெல் பாம் (kel palm) என்ற கேரள அரசு நிறுவனத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தார். நான் தேடிச்சென்ற நேரம் அவர் நீண்ட குச்சியில் ஓலைகளைக் கட்டி வைத்துகொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “ஒரு கடந்த கூடு இருக்கு, தீ வேசணும்” என்றார். பொதுவாக கடந்தை கூடுகளை மாலை வேளைகளில் தான் நெருப்பு வைதுத் கொளுத்துவார்கள். அதற்கென திறன் வாய்ந்த மனிதர்கள் உண்டு. இரண்டு லிட்டர் மண் எண்ணை, இரண்டு குவாட்டர் மற்றும் 500 ரூபாய் கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள். பனை சார்ந்து வாழும் இம்மனிதர், தானே களமிறங்கியிருக்கிறார் போலும் என நினைத்துக்கொண்டேன்.

ஏதோ எண்ணியவனாக கடந்தை கொட்டினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டேன், “பேத்தவரையை அரச்சு தேய்ப்போம்” என்றார். போகிற போக்கில் கிடைத்த அரிய தகவல் இது. அதனை நான் பார்க்கவேண்டுமே என்றேன். எங்கிருந்தோ ஒரு மூலிகைச் செடியினைக் கொண்டுவரப்போகிறார் என்று எண்ணி, இதனைக் கூறினேன். அவரது மனைவி இதா இங்கே தான் நிற்கிறது என அந்த செடியினை வீட்டின் அருகிலேயே காண்பித்தார்கள். பேத்தவரை என்பது மஞ்சள் நிற பூக்களும் அவரை போன்ற காய்களும் உள்ள சிறிய செடி. முட்டளவு அல்லது இடுப்பளவு மட்டுமே வளரும் தன்மையுடையது. குமரி மாவட்டத்தில் பெருமளவு காணப்படுகின்ற செடி தான். உணவாக பயன்படவில்லையென்றாலும் பனையேறிகளின் வாழ்வில் முக்கிய மருந்தாக இது செயல்பட்டிருக்கிறது என அறியும்போது, நமக்கருகில் இருக்கும் தாவரங்கள் குறித்து நாம் ஒன்றுமே அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றியது.

உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா? | Side  effects of tamarind - Tamil BoldSky
புளி – இணையத்திலிருந்து

புளியும் பனையும் இணைந்திருக்கும் ஒரு சூழலை திண்டிவனம் பகுதியில் பார்த்தோம் இல்லையா?. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், புளிய மர இலைகளைக் கூட தேடி எடுத்து அக்கானி காய்ச்சும் சூழ்நிலையே அன்று இருந்தது. அக்கானி என்பது பதனீரைக் குறிக்கும் குமரி மாவட்ட சொல். ஓடு உடைத்த புளியினை அப்படியே கம்பு, மற்றும் கொட்டைகளுடன் பானையில் போட்டு, ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சிய பதனீரை பானைக்குள் ஊற்றுவார்கள். பின்னர் வண்டுகட்டி, 90 நாள் அசையாமல் ஓரிடத்தில் வைத்தால் பானையில் கற்கண்டு பரல்கள் பிடித்திருக்கும். புளியில் இனிப்பு ஏறி தேனடையாக மாறிவிட்டிருக்கும். சுவைத்தால், ஏதோ பேரீச்சையினைச் சாப்பிடுவதுபோல் புளிப்பு மறைந்து இனிப்பு சுவை கூடியிருக்கும். கடந்த காலத்தில் குமரி மாவட்ட சிறுவர்கள் விரும்பியுண்ட சுவை மிக்க பதார்த்தங்களுள் இது முதன்மையானது. ஏதோ ஒரு நல்லூள் இருந்ததால், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றும்போது, பால்மா கார்டன்ஸ் என்ற அவர்களது தோட்டத்தில் பெறப்பட்ட பதனீரில் செய்த புளி பதனீரைச் சுவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று பனைத் தொழிலை சாராத ஒருவர் ஒரு பானை நிறைய புளி பதனீர் செய்யவேண்டுமென்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 5000 ரூபாய் செலவாகும். மிக எளிதாக நமது நிலப்பரப்பில் இருந்துவந்த ஓர் உணவு இன்று பெரும் பொருட்செலவு செய்தால் அன்றி மீட்டெடுப்பது இயல்வதல்ல.  நமது முன்னோர் கண்டுபிடித்த உணவு வகைகள் நட்சத்திர விடுதியினையும் மிஞ்சும் வகையில் அரிதினும் அரிதானதாகவே இருக்கிறது. மேலும் குறைந்த பட்சம் மூன்று மாதம் காத்திருக்கவும் வேண்டும்.

புளிகரைசலும், கருப்பட்டியும் சுக்குப்பொடியும் கலந்தே பானகம் செய்வார்கள். தென்னக பக்தர்களுக்கு இது ஒரு தவிர்க்க இயலாத மென்பானமாக திருவிழாக் காலங்களில் இருந்திருக்கிறது. அப்படியே கொரண்டு என்ற செடியினை தான் கற்கண்டு பிடிக்க பானைக்குள் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தினரின் பால்மா கார்டன்ஸ் குமரி எல்லையிலுள்ள களியக்காவிளைக்கு அருகில் இருக்கிறது. ஒரு சில வருடங்கள் நான் இங்கே தான் தங்கினேன். பதனீர் விற்பனையாகாத தருணங்களில், இங்கு நாங்கள் பதனீரைக் காய்ச்சி கருப்பட்டியாக்குவது வழக்கம். ஒருநாள், அங்கே பிடுங்கிய கிழங்கினை போட்டு வேகவைத்து கொடுத்தார்கள். மரவள்ளிக்கிழங்கு பக்குவமாக வெந்துவிட்டதென்றால் பஞ்சுபோல மாறிவிடும். உப்பு ஒன்று போல பிடித்திருக்கும். அன்று அந்த பாகிற்குள் கிடந்து வெந்த கிழங்கு, தேனில் ஊறிய கிழங்கென ஆனது. இதன் சுவை, கிட்டத்தட்ட,  கிழங்கையும் கருப்பட்டி பாகினையும் ஒன்றாக மெல்வதுபோன்ற ஒரு உணர்வினைக் கொடுக்கும். இப்படி ஒரு உணவு தயாரிக்க எவரும் இன்று தயாராவது இல்லை. விலையும் கட்டுப்படியாகாது.

பனையேறிகள் வாழ்வில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவுப்பொருள். குமரி மாவட்டத்திலுள்ள அத்தனை பனையேறிகளும் ஒருவேளையாவது நல்ல சம்பா அரிசி சோறும் மீனும் வைத்து சாப்பிடுவார்கள். இன்றும் சிலர் பனை மரங்கள் நடுவதை ஏதோ தேவையற்ற செயல் எனச் சொல்ல முற்படும்போது, பனை ஒரு பாலைவன தாவரம் எனக் கூறி கடுமையாக விவாதிப்பார்கள். அப்படி பனைக்கென ஒரு நிலம் கிடையாது. அது பல்வேறு நிலங்களிலும் நாடுகளிலும் வாழும்படி தன்னை தகவமைத்துக்கொண்ட மரம். உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் கூட செழித்து வளரும், ஆகவே தான் பனை மரங்கள் சதுப்பு நிலப்பகுதிகளிலும் செழித்து வளருவதை நம்மால் காணமுடிகிறது. அதாவது மக்கள், தங்கள் வாழ்வில் பனை தேவையென கருதி தங்களுடன் வைத்துக்கொண்ட ஒரு மரம் இது. பெருமிதத்துடன், தங்கள் தலைமுறையின் சொத்து என சேர்த்துக்கொண்ட மரம். ஆகவே, இவைகள் பரவலாக எங்கும் நிற்பதை நாம் காணலாம். மனித வாழ்வில் நெல்லுடைய பயன்பாடு 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. அவ்வகையில்  பனை மரத்தின் பயன்பாடு வெகு தொன்மையானது.

To Mumbaikars' surprise, this year's Alphonso mangoes came from Malawi, not  Konkan - The Economic Times
மாம்பழங்கள் – இணையத்திலிருந்து

திருநெல்வேலி பகுதியிலுள்ளவர்கள் கோடைக்காலத்தில் பதனீரில் மாம்பழத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுகின்ற ஒரு வழக்கம் உண்டென்று சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வழக்கம் குமரி மாவட்டத்தில் கிடையாது. காரணம், குமரி மாவட்டத்தில், பங்குனியோடு பதனீர் காலம் முடிவடைந்துவிடும், மாம்பழங்கள் சித்திரை மற்றும் வைகாசியிலேயே கிடக்கத் துவங்கும். ஆகவேதான், குமரி மாவட்டத்தில் இவ்வித வழக்கங்கள் இல்லை. ஆனால் மாங்காய் பயன்பாடு இருந்திருக்கிறது. சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும், குமரி மாவட்ட மக்களுக்கு காலை உணவு என ஏதும் கிடையாது. இங்கு ஐரோப்பியர் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியானபடியால், காலை உணவு இல்லாமையை மக்கள் உணர்ந்திருந்தினர். பதனீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு பதனீர் குடித்தே ஆக வேண்டும். வயறு இசகி இடம் கொடுத்தாலும், தித்திப்பு மிக்க பதனீரை எப்படி உள்ளே செலுத்த? அப்படி வயறு நிறம்ப குடிக்காவிட்டால், பசிக்கும்போது என்ன செய்வது என திகைத்து போய்விட்டவர்களின் கண்டுபிடிப்பே, மாங்காயும், பதனீரும். மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்பது பழமொழி. இங்கே மாங்காய் ஊட்டும் பதனீர், அரைநாள் பசியினை தாக்குப்பிடிக்கச் செய்யும் அளவு வீரியம் கொண்டது.

குமரி மாவட்டத்தில் காணப்பட்ட மற்றொரு பயிர், கொல்லா மரம். கொல்லா மரத்திலிருந்து கிடைப்பது தான் கொல்லாங் கொட்டை. அண்டி பருப்பு அல்லது முந்திரி பருப்பு என அழைப்பதையே குமரி மாவட்டத்தில், அண்டி (கொட்டை) அல்லது கொல்லாங்க் கொட்டை என அழைப்பார்கள். வெளி நாட்டிலிருந்து இங்கு உள்ள கொல்லம் துறைமுகத்தின் வழியாக வந்ததாகையால், கொல்லத்து கொட்டை, கொல்லாங்கொட்டை என்றானது.

தாய் மடி என எண்ணி பனை மடியில் வளரும் ஆலமரம்

குமரி மாவட்டத்தின் மிக முக்கிய உணவு முந்திரி கொத்து ஆகும். பார்க்க திராட்சை குலை போல ஒன்றிணைந்து காணப்படும் இந்த தின்பண்டம், சிறு பயறு, தேங்காய், மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து பிசைந்து உருட்டி அரிசி மாவில் முக்கி எண்னையில் இட்டு பொரித்தெடுக்கும் சுவையான தின்பாண்டம். எனது வீட்டில் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் அம்மா தவறாமல் செய்வார்கள். தற்போது எண்பதை தொட்ட சூழலிலும் மும்பை வந்திருந்தபோது ஜாஸ்மின் மற்றும் குழந்தைகளை எல்லாம் அழைத்து அவர்கள் உதவியுடன் முந்திரி கொத்து செய்து கொடுத்தார்கள்.

Are cashews fruit? - Quora
கொல்லாம் பழம் – இணையத்திலிருந்து

அம்மாவின் மாணவரும் தற்பொழுது பத்திரிகையாளருமாக இருக்கின்ற திரு. மலரமுதன் என்னிடம் சொன்ன அனுபவம் இவைகளையும் தாண்டி வேறு ஒரு நிலையில் இருந்தது. முந்திரி பருப்பை சரியான அளவில் உடைத்து போட்டு, கருப்பட்டிக்கு பதில், பந்தனீரையே காய்ச்சி, பாகு பதம் வரும்போது, அதன் ஒட்டும் தன்மையை கணித்து, சுட சுட உடைத்த பருப்பிற்குள் ஊற்றி அவைகளைக் கலந்து சூட்டுடன், உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் ருசியினை மிஞ்சி எதையும் தான் சாப்பிட்டதில்லை எனக் கூறி வாயூற வைத்துவிட்டார். உண்மையிலேயே, இவ்விதமான ஒரு உணவினை எவரும் இன்று தயாரிக்கப்போவதில்லை. அப்படி தயாரிக்க முன்வருகிறவர்கள் கூட, கலப்படமோ, அல்லது சாமானியர்கள் வாங்க இயலாத விலைகளையே வைக்க முடியும்.

பனையேறிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு என சில மரங்கள் உண்டு. அவைகளையே அவர்கள் தேடிச் செல்லுவது வழக்கம். குறிப்பாக ஆண் பாளைகளை இடுக்கி பதப்படுத்துவதற்காக செய்யப்படும், கடிப்பு என்ற கருவி, கமுகு மரத்திலிருந்தும் உலத்தி என அழைக்கப்படும் கூந்தல் பனையிலிருந்தே பெரும்பாலும் செய்யப்படும். அத்தகைய கடிப்புகளை நான் கைகளில் எடுத்து பார்த்திருக்கிறேன்.  இவ்விரு மரங்களில் இருந்து கிடைக்கின்ற கடிப்புகள் வளையும் தன்மை கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என சங்கர் கூறுவதை கேட்டிருக்கிறேன். உடைந்து போகா தன்மைகொண்ட மரங்களையே பனையேறிகள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். பல்வேறு காட்டு மரங்கள் இன்று சமதளத்தில் இல்லாமல் போய்விட்டன. பெண் பாளைகளை பதப்படுத்தும் கடிப்புகள் பல்வேறு மரங்கள் இருப்பதாக சங்கர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டபொது அதிர்ந்துபோய்விட்டேன். பல மரங்களின் பெயர்கள் என் வாழ்நாளில் நான் கேள்விப்பட்டிராத பெயர்களாகவே இருந்தன. வெடத்தலை, விராலி, வெண் நொச்சி, அச்சங் கம்பு, எனப்து வெண் அச்சி மற்றூம் கறுப்பு அச்சி மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் விராலிக்காட்டுவிளை மற்றும் அச்சங்குளம் என்ற பெயரில் ஊர்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில்  சீவலப்பேரி பகுதி மட்டும் தான் கடிப்பு வாங்க எஞ்சியிருக்கும் ஒரே இடம்.

மருத்துவகுணம் உள்ள கம்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள் எனும்போது, உள்ளூர ஒரு திடுக்கிடலை நான் உணர்த்தேன். மருத்துவம் சார்ந்த அறிவுகள் எப்படி இவர்கள் பதப்படுத்தலுக்குள் வந்தன? பாளையைப் பதப்படுத்தும் வகைமைகள் ஒவ்வொர் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

குமரி மேற்கு பகுதியினைப் பொறுத்த அளவில் பனையேறிகளுக்கான பயன்பாட்டு நிலம் என்பவை கைவிடப்பட்ட மேட்டு நிலங்கள் தான். தண்ணீர் வசதி ஏதும் இருக்காது. ஆகவே பனையேறும் நேரம் தவிர்த்து தங்களுக்கு வேண்டிய காய்கறிகளையும் கீரைகளையும் பயிரிடுவார்கள். அதனை நடுதலை என்று கூறுவார்கள். கத்தரிக்காயும் வழுதணங்காய் போன்றவைகள் இதில் அடங்கும். பனை ஓலையில் செய்யப்பட்ட காக்கட்டை என்ற காவடி போன்ற நீர் சேகரிக்கும் பொருளில் நீர் மொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுவார்கள்.

பனங்காடுகளில் தற்போது பெருமளவில் காணப்படும் ஊடுபயிர், என்பது முருங்கை தான். முருங்கை, இரும்புச் சத்து வழங்கக்கூடிய ஒரு கீரையாகும். வறண்ட நிலத்தில் வளருவதால் இதனை பனையேறிகள் தங்கள் நடுதலைகளுடன் பேணிக்கொண்டனர். ஆகவே அவைகளுக்கு ஊற்றும் தண்ணீருடன் முருங்கையும்  காப்பாற்றப்பட்டு வந்தன.

தமிழகம் முழுக்க பனை எப்படி இருக்கின்றதோ அது போலவே வாழையும் தமிழகம் முழுக்க பரவியிருக்கிறது. வாழை மரத்தை பேண இன்னும் சற்றதிகம் நீர் தேவைப்படும். ஆகவே வறண்ட நிலங்களில் வாழைகள் பயிரிடப்படுவதில்லை. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைகளையும் காக்கட்டையில் நீர் இறைத்தே பேணியிருக்கிறார்கள். வாழை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் விழாக்களிலும் பங்குகொள்ளும் முக்கியமான மட்டுமல்ல ஒரே கனி எனலாம். வாழை பழுக்கும் சமயத்தில் அதன் குலைகளை தென்னை ஓலைகளை வைத்து பொதிந்து காப்பாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை பழங்காலத்தில் பனையோலைகளை அதற்கு பயன்படுத்தியிருக்கலாம். இன்றும் கூட குமரி மாவட்டத்திலுள்ள திருமணங்களில் வாழைப்பழங்களை வழங்கும்பொது பனை ஓலைக் கடவத்தில் தான் வைத்து எடுத்துச் செல்லுவார்கள். 

மிகப்பெரும் தொழில் வாய்ப்பு எனும்போது பனையின் ஊடுபயிராக வேர்கடலை இருந்தது என்பதை சொல்லாமல் இருக்க இயலாது. கடலை மிட்டாய்க்கு பேர்போன இடம் என்றால் அது கோவில்பட்டி தான். கடலை மிட்டாய் முற்காலங்களில் கருப்பட்டி பாகு சேர்த்து தான் செய்தார்கள் என்பதை நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி உணர்ந்து அதனை மீட்டெடுத்திருக்கிறார். அந்த கலவையினை கண்டடைந்த நமது முன்னோர் மிகப்பெரிய வணிக வளத்தினைமட்டுமல்ல நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும்  பாதுகாத்திருக்கிறார்கள்.  ஸ்டாலினை பின்தொடருகையில் அப்படியே எள்ளும் நமது மரபில் இருந்திருக்கின்றன என்பதையும் நாம் காண்கிறோம். எண்ணை செட்டிகள் கருப்பட்டியினை எள் ஆட்டும்போது போடுவது வழக்கம் என்பது கூட நாம் பார்த்திருந்தோம். எள்ளும் கருப்பட்டியும் உரலில் போட்டு இடித்து கொடுத்த கோடியூர் ரெஜி வாத்தியாரை என்னால் மறக்க முடியாது.   

பனை மரத்தில் தொற்றி ஏறும் கொடிகள் குறித்த சரியான தரவுகள் என்னிடம் இல்லை ஆனால், தமிழகமெங்கும் பனை தொழில் கைவிடப்பட்ட இடங்களில், பனை மரத்தை பற்றி அழிக்கத்துடிக்கும் அளவிற்கு பெயர் தெரியா பல கொடிகள் சுற்றி படர்ந்து ஏறியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பனை மரத்தில் ஏறும் கொடிகளைக் குறித்து தனியாகவே எவராவது ஆய்வு செய்யலாம்.

பனை சார்ந்து வளருகின்ற வேறு சில மருத்துவ தாவரங்கள் என பிரண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி,  நன்னாரி, ஓரிதழ் தாமரை போன்றவற்றைக் பாண்டியன் குறிப்பிடுகிறார்.

தென் மாவட்டங்கள் தான் என்று அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட நன்னாரி சர்பத் வெகு பிரபலமாக இருக்கிறது. நன்னாரி, பனங்காட்டில் வளரும் மூலிகைச் செடி தான்.  நன்னாரி வேர் ஒரு சிறந்த நறுமணமூட்டி.

கருப்பட்டி காப்பி குறித்து தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். சமீபத்தில் வேம்பார் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள், காப்பி குறித்து ஆய்வு செய்யும் ஒரு சர்வதேச ஆய்வாளர் வேம்பார் வந்ததைக் குறிப்பிட்டார். அவர் வெறுமனே தகவல்களை மட்டு சேகரிக்காமல் கருப்பட்டி காப்பி தயாரித்து குடித்து அதனை ஆவணப்படுத்தி சென்றுள்ளார். பொதுவாக கருப்பட்டி காப்பியில் காப்பி பொடியே இருக்காது என்பது அனேகருக்குத் தெரியாது. மாறாக கொத்துமல்லி போடுவார்கள். சுக்கு காப்பி போடும்போது சிறிது நல்ல மிளகும் போடுவார்கள். குமரி மக்கள் சந்திக்கும் இரு வேறு பருவமழைக்கு ஏற்ற வகையில் இந்த காப்பி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் தேனீர் அருந்துவது இனிப்பு சேர்த்து அல்ல என சொல்லக் கேட்டிருக்கிறேன். தேயிலையினை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடுவையில் எடுத்துக்கொள்ளுவார்கள். மற்றொரு கையில் கருப்பட்டியை எடுத்துக்கொண்டு, கருப்பட்டியைக் கடித்து தேனீரைக் குடிப்பார்கள். இவ்வகையில் வெகு சமீப காலத்தில் நமக்கு பழக்கமான தேயிலையுடன் கூட பனை உறவை மேம்படுத்திக்கொண்டது என அறிய முடிகிறது. 

பனங் கருப்பட்டி, அனைத்து மூலிகைகளும் சேரும் லேகியங்களில் ஒரு முக்கிய சேர்மானமாக இருந்துவந்திருக்கிறது. அவ்வகையில், நம்மால் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பனையோடு இங்குள்ள தாவரங்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு தாவரங்கள் கூட உறவாடியிருக்கின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

கால்களைக் கழுவுதல்

ஏப்ரல் 13, 2017

கால்களைக் கழுவுதல்

பெரிய வியாழன் அல்லது புனித வியாழன் அல்லது வியாகுல வியாழன் என்று சொல்லப்படும் நாள் திருச்சபையின் வாழ்வில் மிக முக்கியமானது. இயேசு கற்றுக்கொடுத்த ஆக சிறந்த விழுமியமான தாழ்மை என்பதை மிக அழகாக எடுத்துரைக்கும் இயேசுவின் வாழ்வின் இறுதி நாட்களில் அவர் அவர்களுக்கு செய்த மாதிரி விளக்கம் அது. அன்று தான் இயேசு தமது சீடர்களுக்கு கால்களைக் கழுவி “….. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.” (யோவான் 13:12 – 15 திருவிவிலியம்)

ஒருமுறை எனது புதிய எற்பாட்டு ஆசிரியர் இத்திருமறைப்பகுதியை குறித்து சொல்லுகையில் “இயேசு செய்த அருச்செயல்கள் அனைத்திற்கும் இணையான, இல்லை அதற்கும் அதிகமான பல அருச்செயல்களை அக்காலகட்டத்தில் எழுந்த பல்வேறு நூல்களில் நாம் காணலாம். ஆகவே சீடர்கள் ஒருவேளை இயேசுவை உயர்த்திப்பிடிக்க அவர்களும் வேறு விதமான அருஞ்செயல்களை அவர் செய்த பணிகளுடன் இணைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இயேசுவின் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தலைவர் ஒருவர் தமது தொண்டர்களுக்கு கால்களை கழுவிய எந்த நிகழ்வும் பலஸ்தீனா அருகில் காணப்படும் எந்த இலக்கிய பதிவுகளிலும் இல்லை. ஆகவே இது சீடர்களின் கற்பனையில் உதித்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது சீடர்கள் வேறெங்கோ இருந்து கடன் வாங்கிய நிகழ்வோ அல்ல” என்றார்.

என்னை மிகவும் பாதித்த திருமறைப்பகுதி இதுவாக பின்னர் மாறிவிட்டது. தாழ்மை வேண்டும் என பொதுவாக கூறுகிறோம், ஆனால் நமது வாழ்வு ஆணவம் நிறைந்த ஒன்றாகவே அமைந்திருக்கிறது. நமது தாழ்மையை நடைமுறை வாழ்வில் பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம். செய்கிறோம், ஆனால் குனிந்து பிறருக்குச் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்மை நிமிர்த்தும்  வல்லமை கொண்டவை. ஆகவே, இயேசுவின் வாழ்வில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியை விட மிகப்பெரும் அருஞ்செயல் ஏதும் இல்லை என்றே நான் கூறத்துணிவேன்.

எனது சிறு பிராயத்தில், அப்பா சி ஏஸ் ஐ திருச்சபையில் போதகராக இருந்தத போது ஆலயத்தில் இவ்வகை நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற்று நான் பார்த்ததில்லை. ஆனால் அதைக்குறித்து அப்பா உணர்சிகரமாக பேசிய செய்திகள் நினைவிருக்கிறது. இவ்வளவு பேசியும் ஏன் திருச்சபையில் இதனை அப்பா நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்பாவிடம் நான் இதைக்குறித்து கேட்டபோது “கத்க்டோலிக்கர்கள் தான் அப்படி செய்வார்கள்” என அப்பா சுருக்கமாக சொல்லி நிறுத்திவிட்டார். ஆனால் அப்பாவால் மத்திரம் அல்ல கால்களைக் கழுவும் நிகழ்வை திருச்சபையின் வழிபாட்டு மரபில் ஏற்றுக்கொண்ட கொண்ட திருச்சபையான மெதடிஸ்ட் திருச்சபையில் பணிபுரியும் என்னாலும் எதுவும் செய்ய இயலாது என்பதே உண்மை. ஏனென்றால் அதற்கென திருச்சபை மக்கள் பழக்கப்படவில்லை. அது வெறும் ஒரு சடங்கு என்றே எண்ணப்படுகிறது. ஆகையினால் ஒரு மனவிலக்கம் இருக்கிறது.

நான் அகமதாபாத் பகுதியில் பணிபுரிகையில், முதன் முறையாக ஒரு பெண்மணியை அழைத்து அவர்கள் கரங்களில் தண்ணீர் வார்த்து என்னிடமிருந்த  துடைக்கும் துண்டை அவர்களுக்கு கொடுத்து அவர்களை துடைத்துக்கொள்ளச் சொன்னேன். அதற்குக் காரணம் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே போகாதது ஒரு காரணம். அவர்கள் கால்கள் சுத்தமாகவே இருக்கும், ஆனால் அவர்கள் கரங்கள் அடுப்படியில் புழங்கி அழுக்குகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் இந்தியாவில் இருப்பதால் கரங்களே ஒப்புநோக்க அழுக்கானவை. ஆகவே கால்களுக்கு பதிலாக கரங்களை ஒரு அடையாளமாகச் முன்னிறுத்த முயற்சித்தேன். மேலும் பெண்களின் கால்களையோ அல்லது கரங்களையோ பொதுவான இடத்தில் பிடிப்பது  என்பது திருச்சபையில், மிக சங்கடமான சூழ்நிலைகளை  ஏற்படுத்தும்.

பெரும்பாலும் இதுவரை நடைபெறாத நிகழ்ச்சிகள் திருச்சபையில் ஒரு போதகர் புதிதாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றால், திருச்சபையின் செயற்குழுவின் ஒப்புதல் வேண்டும். நல்ல காரியம் தானே என்று நினைத்து கால்களைக் கழுவும் நிகழ்ச்சியை நாம் அறிமுகப்படுத்த எத்தனித்தால், அது கத்தோலிக்கருடைய வழக்கம் நாம் அப்படி செய்யமுடியாது என்பார்கள், அல்லது எங்களிடம் தாழ்மை இருக்கிறது தாழ்மை இல்லாத நீங்கள் எங்கள் முன் கபட நாடகம் ஆடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரடியாக சொல்லுவார்கள், அதற்கு நாம் அமைதியாக இருந்தால் அவர் ஒத்துக்கொண்டார் பார்த்தீர்களா என்ற வெற்றிக்களிப்பும் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னால் பார்த்தீர்களா திமிர் பிடித்த சாதாரண மனுஷன் இவன், எங்களை எல்லாம் ஒப்புக்கு இங்கே அழைத்துக்கொண்டு வந்து அவமானப்படுத்துகிறான் என்பார்கள். மேலும் சிலர், இயேசு சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று திருமறை குறித்து நமக்கே விளக்கம் தர ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்டவர் சடங்குகளைக் முதன்மைப்படுத்தவில்லை அவர் உள்ளத்தை தான் பார்க்கிறார் போன்ற வார்த்தைகளைக் கூறி, திருச்சபையில் இதுவரை நடக்காதது இனிமேலும் நடக்ககூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் இந்த வெளிப்படையான தடைக்கு காரணம்  வேறு என்பதை உடனிருந்த போதகராக நான் அறிவேன். யாருக்கு இந்த முதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தான் அந்த சிக்கல் உறைந்திருக்கிறது. எனக்கு கிடைத்தால் நல்லது, ஆனால் அதை பெற்றுக்கொண்ட நான் தாழ்மையின் உருவாகவே வலம்வரவேண்டும், என் உண்மை சூழல் அதற்கு ஒப்பாது. அல்லது, யாராவது இங்கே இவ்விதமாக எனக்குப்பதில் கால்களை கழுவும் வாய்ப்பினைப் பெற்றால், அது போதகருக்கும் அவருக்கும் உள்ள நெருங்கிய உறவையல்லவா காட்டுகிறது என்கிற எண்ணம். திருச்சபைகள் இரண்டாக பிளந்திருக்கிற சூழலில், நாம் அதிகமாக எதுவும் செய்ய  இயலாது. ஆகவே நான் மெல்ல அமைதலானேன். திருச்சபைக்குள் உள்ள இறுக்கமான சூழலை உணர்ந்து நாம் தான் வேறு வகையில் இவைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பாடத்தை உணர்ந்துகொண்டேன்.

ஆனால் அப்படி ஒருவரின் கால்களை கழுவுவதிலும் ஒரு முக்கிய செய்தியினை உள்ளடக்கி செய்வது இன்னும் சிறப்பாக இருக்குமே என்றும் எண்ணிக்கொண்டேன். ஆகவே எங்கிருந்து இதை தொடங்குவது என்று எண்ணுகையில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் குருத்தோலைகளை எடுத்துக்கொடுத்த மக்கள் இன்றும் ஒட்டுமொத்த திருச்சபையால்  கவனிக்கப்படாமல் இருக்கின்ற சூழலில் ஒரு பனைத் தொழிலாளியின் கால்களைக் கழுவுவது மிக முக்கியமான ஒரு மாற்றத்திற்கான விதையாக அமையும் என்று நான் எண்ணினேன்.

பழங்காலத்தில் செருப்பணிந்து அல்லது செருப்பே அணியாமல் பல மைல் தூரம் நடந்தே செல்லும் மக்கள் ஒரு சுழலில் விருந்தோம்பல் செய்யும் முன், புழுதிபடித்த பாதங்களை கழுவும் வழக்கம் பல கலாச்சரங்களில் இருந்திருக்கிறது.  திருமறையிலும் இன்நிகழ்ச்சிகளை நாம் பார்க்கலாம். ஆபிரகாம் மம்ரே என்ற பகுதியில் தேவதாரு மரங்களின் அருகில் ஆண்டவரின் காட்சியை பெறுகிறார். நடுப்பகல் வேளையில் அவர் மூன்று பயணிகளைக் கண்டு அவர்களை விருந்தோம்ப அழைக்கிறார். அவ்வேளையில்,  “இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். (தொடக்க நூல் 18: 4 – 5அ, திருவிவிலியம்).

பெரும்பாலும் வேலைகாரர்கள் தங்கள் எஜமான் கால்களைக் கழுவுவதும், விருந்தாளியை வீட்டின் உரிமையாளர் மரியாதையின் நிமித்தம் கால்களை கழுவுவதும் வழமையாக இருந்திருக்கிறது. அதே வேளையில் இயேசுவின் காலத்தில் செல்வந்தர்கள், உயர்வாய் மதிக்கப்பட்ட பரிசேயர்கள் பொன்றோர் பிறர் கால்களைக் கழுவ தயக்கம் காண்பித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது. இயேசு சீமோன் என்னும் பரிசேயன் இல்லத்திற்குச் செல்லுகிறார். அங்கே ஒரு பெண் வந்து அவரது கால்களை தன் கண்ணீரால் நனைக்கிறாள். அப்போது சீமோன் தனக்குள் இவர் ஏன் பாவியான பெண்கள் தன்னை தொட அனுமதிக்கிறாள் என தனக்குள் எண்ணுகிறார். அப்போது இயேசு அவனது எண்ணங்கள் என்ன என்பதை உணர்ந்துகொள்ளுகிறார். ஆகவே அவனிடம் ஒரு காரியம் சொல்லவேண்டும் எனக் கூறி, “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார்.” (லூக்கா 7: 44 திருவிவிலியம்) எனச் சொல்லுவதைப் பார்க்கிறோம்.

வெளிப்படையாக கால்களைக் கழுவியே தீரவேண்டுமா? எனக் கேட்பவர்கள் எப்போதும் திருமறை வாக்கியங்களை மேற்கோள் காட்டாதவர்களாய் இருப்பது நலம். ஆனால் இயேசு கூறிய முக்கிய அறிவுறுத்தல்களில் இதுவும் ஒன்றாய் இருக்கையில், இவைகளை கைக்கொள்வது சரியானது என்றே உணருகிறேன். இயேசு கால்களைக் கழுவ மற்றுமொரு முக்கிய காரணம் இருப்பதாக நான் உணர்ந்த இடத்தில் நானும் கால்களைக் கழுவ கடன் பட்டவன் என்பதை உறுதிபடுத்திக்கொண்டேன்.

இயேசு தமது சீடர்களை ஊழியத்திற்காக அனுப்புகிறார். அவ்வேளையில் அவர்களிடம் “பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.” (மத்தேயு 9: 10 திருவிவிலியம்) எனக் கூறி அனுப்புகிறார். தனது அழைப்பை ஏற்று வந்தவர்களை தனது ஊழியத்திற்காக அவர் அனுப்புகையில், அவர்கள் கால்கள் வெறுமையாக இருக்கும்படி அவர் அனுப்பியிருக்கிறார். “நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!” (ஏசாயா 52: 7 திருவிவிலியம்) தமக்கென  மலைகளில் வெறுங்கால்களுடன் பயணித்து நற்செய்தி  அறிவித்தவரின் உடைந்து நொறுங்கி சிதைந்து நைந்து இரத்தம் கசிய வரும் பாதங்கள் இயேசுவிற்கு அழகாத்தானே இருந்திருக்க வேண்டும். அவைகளை ஆற்றுப்படுத்தி சற்றே தூய்மைப்படுத்துவதை அவர் பெரு விருப்புடனேயே செய்திருக்கவேண்டும். கூடவே அவர் ஒருவரில் ஒருவர் அன்புடன் இதைச் செய்யவும் கட்டளைக் கொடுக்கிறார். இதில் நாம் பெரியவர் சிறியவர் எனப் பார்ப்பது தகாது என குறிப்புணர்த்துகிறார்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ்

ஆகவே துணிந்து இன்று ரசாயனி, நார்போலி பகுதியிலுள்ள பனை தொளிலளரின் வீட்டிற்கு நானும், ஜாஸ்மினும் மித்திரனுமாக மாலை 5 மணிக்குச் சென்றோம். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். அனுமன் பக்தர்கள். என்னை பல நாட்களாக நன்கு அறிந்தவர்கள். சற்று இருங்கள் எனக் கூறி பனம் பழம் எடுக்கச் சென்று பத்தே நிமிடத்தில் திரும்பும் போது அவர்கள் அங்கே இல்லை. நான் பனம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக ஒரு 20 நிமிடம் காத்திருந்தேன். அவர்கள் வரவில்லை. அவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் வர நேரமாகலாம் என்பதை உணர்ந்ததால், மாலை ஆறு மணி ஆராதனைக்காக நாங்கள் புறப்பட்டோம். புறப்படுகையில், அவர்கள் குடும்பத்தாரிடம், நாங்கள் மீண்டும் 7 மணிக்கு பின்பு வருவோம் அவர்களை இருக்கச் சொல்லுங்கள் என சொல்லிச் சென்றோம்.

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

கால்களைக் கழுவ பனம்பழ கூழ் தயாரிக்கையில்

ஆராதனை நிறைவு செய்த பின் மீண்டும் அவர்களைப் பார்க்க விரைந்து சென்றோம். நல்லவேளை அண்ணன் தம்பி இருவரும் அங்கே இருந்தனர். இன்னும் வேலை இருக்கிறது என்றாலும் உங்களுக்காக தான்  காத்திருந்தோம் என்றனர். உண்மைதான், இருவரும் கடும் உழைப்பாளிகள். பனை ஏறுவதுடன் தோட்டம், பசு, கோழி போன்றவைகளையும் கவனித்துக்கொள்ளுகிறார்கள். நான் ஒரு 15 நிமிடங்கள் மட்டும் எனக்கு தருமாறு  அவர்களிடம் கேட்டேன். சரி என்றனர். இருவரையும் அவர்கள் வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் அமரச் செய்துவிட்டு, அவர்கள் கால்களில் பனம் பழக் கூழினை முதலில் தடவினேன். சேற்றிலும் மண்ணிலும் உழன்ற அழுக்கான கால்கள். முள் மற்றும் கற்களில் இடறிய  வெட்டுகள் தழும்புகள். பனை மரத்தில் ஏறிய காய்ப்புகள். அதை தொடுகையில் ஏற்பட்ட உணர்வுகள் பலதரப்பட்டவை. எனது தந்தையின் கால்களைத் தவிர எவர் கால்களையும் இவ்விதம் அணுகி நான் தொட்டது இல்லை. ஒரு மூதாதையின் கால்கள் என்றே அவைகள் என் முன் இருந்தன. நான் எனது வாழ்வில் பலமுறை மனதில் நடித்து இவை வாய்க்குமா என்று ஏங்கிய பொற்தருணம் அது. இது எனது வாழ்நாள் சாதனை. திருச்சபை யாருடைய கால்களைப் பிடிக்கவேண்டும் என சுட்டும் தகுதியை நான் பெற்ற நாள் இது.  பனை ஏறும் தொழிலாளிக்கு போதகராக நான் அளிக்கும் முதல் அங்கீகாரம். நான் இவைகளில் ஒன்றி இருக்கையில், ஜாஸ்மின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தாள். பிறரை ஊக்குவிக்க இப்புகைப்படம் உதவியாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

கால்களைக் கழுவுதல்

கால்களைக் கழுவுதல்

அவர்கள் கால்களை தண்ணிரால் கழுவி துடைத்து எழுந்தபோது ஒரு பாரம் என்னிலிருந்து அகன்ற ஒரு பெரும் விடுதலை உணர்வினை அடைந்தேன். இவ்விதமான உணர்ச்சி மிக்க ஆராதனையினை நான் எனது ஊழியத்தில் வெகு சில தருணங்களிலேயே கடந்து வந்திருக்கிறேன். அவர்களின் கால்களைக் கழுவுகையில், இயேசு தமது சீடர்களுக்காக இவ்விதம் செய்தார் எனவும், இவ்வுலகில் சிறியோர் எனக் கருத்தப்படுபவரே விண்ணுலகில் கடவுளால் பெரியவர் என்னப்படுபவர் என்ற கருத்துக்களை அவர்களுடன் சொன்னேன். எனது இந்தி உரையாடல்களில் உள்ள தடுமாற்றத்தாலும் புலமையின்மையினாலும் என்னால் அவர்களுடன் அதிகமாக எதையும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும்  அத்தருணம்  பெரும் நிறைவளிப்பதாக இருந்தது. அவர்களும் தங்கள் உள்ளாக பெரும் மாற்றம் அடைந்ததை அவர்கள் முகங்கள் காட்டியது. எங்களுக்கு இஞ்சி காப்பி கொடுத்து உபசரித்தார்கள்.

அனைத்தும்  முடித்து திரும்பும் முன்னால் அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த துணியும் ஒரு சிறு தொகையும் கொடுத்துவிட்டு வந்தேன். வசதி நிறைந்த திருச்சபைகள் பனை தொழிலாளியின் கால்களை கழுவாவிட்டாலும் இதனை மட்டும் செய்வதுவே ஒரு சிறந்த துவக்கமாயிருக்கும் என்ற நம்பிக்கையில்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

 

ஆம் அவ்வாறே ஆகுக

திசெம்பர் 27, 2016

கிறிஸ்மஸ் வாழ்த்துக்களில் இவ்வருடம் நான் மலர்ந்து பார்த்தது, அருட் தந்தை ஃபிரான்ஸிஸ் ஜெயபதி அவர்கள் எனக்கு அனுப்பிய “ஆண்டவன் ஆண்டியானான்” எனும் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட குடில். ஆகவே இதை நான் அறிந்த அனைவருக்கும் அனுப்பினேன். பெரும்பாலும் ஒரு சிறு அதிர்ச்சிக்குப் பின் சிலர் இதை சிலாகித்து எனக்கு பதில் அளித்தனர். வேறு சிலருக்கு கந்தை கோலம் எடுத்தார், ஏழை பாலனானர், என வழமையாக பொருள் கொள்ளப்பட்டாலும் “ஆண்டி” எனும் வார்த்தை பெரும் துணுக்குறலை கொடுத்திருக்கிறது.

ஆண்டவன் ஆண்டியானார்

ஆண்டவன் ஆண்டியானார்

ஆண்டி எனும் வார்த்தை பண்டாரம் எனும் பூசை செய்யும் எளியவரோடு தொடர்புடையது  ஆனபடியால் ஒருவித ஒவ்வாமை எழுந்ததை உணர முடிந்தது. இருப்பினும் ஆண்டி எனும் வார்த்தைக்கு பூசை செய்யும் அடியவர் என்றும், வேறு தேசத்திலிருந்து வந்தவர் என்றும், ஏழை எனவும் பொருள் கொள்ளலாம். அனைத்துமே பாலனாக பிறந்த இயேசுவை சுட்டி காண்பிக்கும் பொருளடக்கம் உள்ளதாக நான் உணர்ந்தேன்.

ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி, என்பது பழமொழி. அதற்காக இயேசு எப்போது பிள்ளையார் கோவில் பூஜாரியாக இருந்தார் என கேள்வி எழும்பாது என நம்புகிறேன். எளிமை உருவெடுத்தவரை ஆண்டி என பொருள் கொள்ளுகிறோம். இந்த பொருள் இதுகாறும் வழக்கில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப் படாததாகையால், அதன் பொருள் சார்ந்து ஒரு ஆழ்ந்த கவனிப்பை கோரிற்று. இயேசுவின் எளிமையின் தன்மையை மேலும் ஒரு துணுக்குறலோடு அனுபவிக்க கோரிய ஒரு கூற்றாகவே அமைந்தது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் மீது காணப்படும் ஏழ்மையின் தன்மை மீது ஒரு வித விலக்கம் ஏற்படுவதைக் சமீப காலங்களில் காண முடிகிறது. இயேசுவின் தந்தை அரண்மனைகளையும் மாட மாளிகைகளையும் அமைக்கும் ஒரு கட்டிட பொறியாளர் என கூறும் ஆய்வுகள் இன்று முன்னெடுக்கப்படுகிறது. தச்சன் எனும் சொல் அவரை கீழ் மட்டமாக எண்ண வழிவகுக்கிறது என்பதும், அவரை ஒரு கலைஞரின் மகன் என விளிப்பதோ, கட்டிட கலை நிபுணரின் மகன் என அழைப்பதோ அவரை ஒரு உயர் மத்திய வர்க்க மனிதராக உயர்வடையச் செய்யும். ஆகையால் பொருளாதாரத்தில் முன்னணியில்  உள்ள கிறிஸ்தவர்கள் மூலவார்த்தையை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுவதை, எப்படி இயேசு “ராஜா” என நிறுவனமாக்கப்பட்ட கிறிஸ்தவம் அவர் தலை மேல் தங்க கிரீடம் வைத்ததோ அப்படி தான் இதையும் நான் பார்க்கிறேன்.

அப்படியான ஒரு வலுவான பின்னணி உடையவராயிருந்தால் அவருக்கென ஒரு மாளிகை இருந்திருக்கும். அவர் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார் “அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். (லூக்கா 9: 57 – 58 திருவிவிலியம்). அவரது வாழ்வில் பெரும்பாலும் அவர் ஒரு இரவல் வாழ்வையே வாழ்ந்தார் என்பதும் உறுதி. ஆகவே தான் “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர்,கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப்பியர் 2: 5 – 8 திருவிவிலியம்)

அடிமை எனும் வார்த்தை ஆண்டியை விடவும் ஒப்பீட்டளவில் தாழ்ந்தது. கடவுள் தம்மைத் தாழ்த்தும் பாங்கில் அவர் எவ்வளவு உயர்வானவரோ அதற்கு நேர் எதிர் திசையில் தம்மை தாழ்த்திய ஒரு பெரும் தியாகத்தை நாம் காண்கிறோம். அதில் நாம் சமரசம் செய்ய முற்படுவோமென்றால் நாம் அவரின் தாழமையை ஏற்கவில்லை என்பதே பொருள். அவரின் தியாகத்திற்கு வேறு எந்த இழிவும் நாம் மேலதிகமாக செய்துவிட முடியாது.

இவைகள் ஒரு புறம் இருக்க அந்தப் படத்தின் முற்பகுதியில், தேவனாகிரியில் பொறிக்கப்பட்ட, வெண்கலத்தாலான “ஓம்” வைக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் என்ன என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், குடிலின் பிற்பகுதியில் ஒரு நட்சத்திரம் காணப்பட்டது. அதற்கு பின்னால் ஒரு வார்த்தை தன்னில் பாதியை நட்சத்திரத்தின்  பின் மறைத்துக்கொண்டிருந்தது. “உருவி” பிற்பாடு சுமார் நான்கு எழுத்துக்கள் மறைக்கப்பட்டு “ருவானவர்” என எழுதப்பட்டிருந்தது. உருவின்றி உருவானவர்? உருவின்றி கருவானவர்? எனது வாசிப்பில் தான் பிழையா? ஆனால் எனக்கு முன்பகுதியில் வைக்கப்பட்ட “ஒம்” எனும் வார்த்தைக்கு பிற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் தொடர்பு இருக்கும்  என்றே எண்ணத் தோன்றியது.

ஓம் எனும் வார்த்தை மிக முக்கியமாக இந்திய மதங்களில் கையாளப்படுகிறது. ஆகவே அது இந்து மதம் சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மதமும் தனக்கான விளக்கங்களை “ஓம்” எனும் வார்த்தைக்கு கொண்டுள்ளது. கிறிஸ்தவத்தில் பெரும்பாலும் ஓம் எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லையென்றாலும் அது குறித்த சிந்தனைகள் கிறிஸ்தவ ஆன்மீகத்தில் விரவிக்கிடந்தன என்பதை அறியமுடிகிறது. குறிப்பாக நமது கீர்த்தனைகளில் “ஓம்” எனும் வார்த்தை, இன்று கிறிஸ்தவத்தில் வழக்கொழிந்த வார்த்தைகளை நாம் மீட்டெடுக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக காணப்படுகிறது.

இன்று பாடல் பாடும் கிறிஸ்தவர்கள் ராகத்தை தொடர்வதில் கவனமளித்து  வார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்க மறந்துவிடுகிறார்களோ என எண்ணத்தோன்றுகின்றது. பல வகையான குத்துப்பாடல்கள் இன்று ஆராதனையை நிரப்பி, கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்பட்ட சமய ஒன்றிணைப்பின் கூறுகளை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவ மதம் இந்தியாவில் ஒரு நெகிழ்வை கொண்டிருந்த காலம் இன்று போய்விட்டதோ எனும் அச்சமே மேற்கொள்ளுகிறது.

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார் சரபோஜி மன்னரின் பள்ளித் தோழர். இருவருமாக சுவார்ட்ஸ் அய்யரின் கண்காணிப்பில் வளர்ந்தவர்கள். தனது நண்பனாம் சரபோஜி மன்னரின் அவையில்   கவிராயராக இருந்தவர். கிறிஸ்து மீது தனக்கிருந்த பக்தியை பிற மதத்தினர் முன் துணிந்து ஆனால் அவர்கள் மனம் புண்படாமல் சொன்னவர். ஆழ்ந்த புலமை பெற்றவர். சாஸ்திரியார் தனது பாடலில் “ஒம்” என்ற வார்த்தையைக் பயன்படுத்துகிறார்.

பல்லவி

ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா

ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

 

அனுபல்லவி

ஓம் அனாதி தந்தார், வந்தார் இறந்

துயிர்த்தெழுந்தரே, உன்னதமே –

 

சரண்ங்கள்

வெற்றிகொண் டார்ப்பரித்து- கொடும் வே

தாளத்தை சங்கரித்து, முறித்து ;

பத்ராசனக் கிறிஸ்து – மரித்து

பாடுபட்டுத் தரித்து , முடித்தார் .

 

சாவின் கூர் ஒடிந்து , மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,

ஜீவனே விடிந்து ,- தேவாலயத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-

 

வேதம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,

மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்.

 

 

கிறிஸ்தவ புத்தக இலக்கிய சேவை தொகுத்தளித்த கிறிஸ்தவ கீர்த்தனைகள் தொகுதியில் “ஓம்” என்பதற்கு “திருவார்த்தை” என பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாஸ்திரியாரின் புலமைக்கும் அவரது பல்சமய நல்லிணக்கத்திற்கான உரையாடலுக்கும் ஒரு சிறந்த மாதிரியாக நம்முன் காணப்படுகிறது. மேலும் அவர் இதை தவறுதலாக உபயோகித்தார் எனக் கூறி நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இதையே விளக்கும் வண்ணமாக கிறிஸ்து பிறப்பைக் குறித்து அவர் பாடிய பாடலில்

 

ஆதி திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார்

ஆதன் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட

ஆதிரையோரை ஈடேற்றிட

 

இந்த மூன்று வரியில் மட்டுமே அவர் கண்டிருக்கும் களம் பிரம்மாண்டமானது. இன்னும் எவரும் அவரை தாண்டிச் செல்ல இயலாதபடி அவர் பன்முகத்தன்மையுடன் இவைகளை கவியாக்கியிருக்கிறார். இந்திய சிந்தனை மரபு, கவி மரபு,  கிறிஸ்தவ இறையியல் மரபு, போன்றவற்றை விடாமல் அவைகளுள் சமயங்களை உள்ளடக்கிய ஒரு விரிந்த பார்வையை கொடுக்க இறையருள் வேண்டும். எள்ளி நகையாடுவோருக்கு ஏதும் தேவையில்லை.

“ஓம்”, “திருவார்த்தை” என்பனவைகள் எவ்வாறு இவ்விடத்தில் வந்து அமைகின்றன?

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.”  (யோவான் 1: 1- 5)

தனது பண்பாட்டு வெளியிலிருந்து இந்த வார்தைகளை அவர் கவர்ந்து கவி படைக்கிறார். கவியை மாத்திரம் அல்ல அதன் மூலம் சமயங்களுக்கிடையில் ஒரு மிகப்பெரிய பாலத்தையும் அவர் அமைக்கிறார். இன்று அவைகள் பொருளற்றவைகளாக காணப்படுவதற்கு காரணம், ஆண்டியை விரும்பாமல் அரசனை காணும் வேட்கையினால் அல்லவா?

சாது சுந்தர் சிங்

சாது சுந்தர் சிங்

இந்தியாவில்  ஒரு நெடிய பாரம்பரியம் உள்ளது. அவைகளைக் களைந்து எங்கோ ஒரு புது ஆன்மீகம் படைக்க நம்மை கடவுள் அழைக்கவில்லை. இருக்கும் இடத்தில் நாம் முதலில் சான்று பகர அவர் அழைக்கிறார். வெள்ளை அங்கி தரிக்காதபடி காவி அணிந்த சாது சுந்தர்சிங் இன்றும் மேற்குலகிற்கு சவால்விடும் ஒரு அருள் தொண்டர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இரத்தம் சிந்தும் கால்களையுடைய ஒரே அப்போஸ்தலர் அவரே. தான் ஒரு கிறிஸ்தவர்  ஆனதற்கு தூய ஆவியர் பொறுப்பென்றால், தன் ஒரு துறவியானது தனது தாயால் என அவர் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த அனைத்து பெண்களிலும், ஏன் கிறிஸ்தவ பெண்மணிகள் உட்பட, தனது தாயே பக்தியில் ஒழுகும் ஒரு சிறந்த முன்மாதிரி பெண்மணி என அவர் தயக்கமின்றி கூறுகிறார். இவ்விதமாக ஒரு கலாச்சார பின்னணியத்தை அவர் ஏற்று கிறிஸ்தவ ஆன்மீகத்தை முன்னெடுக்கிறார்.

பேராயர் அப்பாசாமி

பேராயர் அப்பாசாமி

இன்னும் சமீபத்தில் நம்முடன் வாழ்ந்த பேராயர் அய்யாதுரை ஜேசுதாசன் அப்பாசாமி, பாளையங்கோட்டையில் பிறந்தவர் (3.9.1891). இந்திய சமயங்களுடன் கிறிஸ்தவம் எப்படியெல்லாம் முயங்கி தெளிவடையமுடியும் என்பதை முயற்சித்துப் பார்த்தவர். 1975ஆம் ஆண்டுவரை பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு கிறிஸ்தவ உலகிற்கு தொண்டாற்றியவர். சாது சுந்தர்சிங் குறித்த புத்தகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். இன்று அவரை திருநெல்வேலி நினைவில் கொண்டிருக்கிறதா? இல்லை என்பதே நிதர்சனம்.

ஸ்டான்லி ஜோண்ஸ்

ஸ்டான்லி ஜோண்ஸ்

இருபதாம் நூற்றாண்டின் அப்போஸ்தலன் எனப் பெயர் பெற்ற ஸ்டான்லி ஜோண்ஸ், மெதடிஸ்ட் திருச்சபையின் சார்பாக இந்தியாவில் பணி செய்தவர். இருமுறை நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மகாத்மா காந்தியோடு நெருங்கி பழகிய அவர், எழுதிய புத்தகம் “The Christ on the Indian Road” அன்றைய விற்பனை உலகை அசைத்தது. முதன் முதலில் கிறிஸ்தவ ஆஸ்ரமத்தை துவங்கிய முன்னோடி அவர். எனது 10 ஆண்டு மெதடிஸ்ட் திருச்சபை அனுபவத்தில் அவர் பெயர் பொதுவிடங்களில்  நினைவுகூறப்பட்டதே இல்லை. இன்றும் இவர்களின் தொடர்ச்சி அறுபடாமல் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் திருச்சபையினின்று மறைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஆற்றிய ஆன்மீக தொண்டை நாம் எவ்வகையில் குறை கூற இயலும்? நெடிய பயணத்தில் தங்களின் பங்களிப்பாக இவர்கள் விட்டுச்சென்ற ஆன்மீக தேடல்களின் ஒரு பகுதியைக் கூட நம்மால் கண்டடையவோ, அவற்றின் வீரியத்தை உணரவோ முடியாதபடி இருந்தால் அது தான் தெளிந்த ஆன்மீகமா? ஏன் இவர்கள் நம்மைப்போலல்லாது மாறுபட்ட கோணங்களில் கிறிஸ்துவத்தை புரிந்துகொள்ள தலைப்பட்டார்கள்? அவர்களின் பங்களிப்பை எவ்வளவு தூரம் நாம் நெருங்கி அறிய முயற்சிக்கிறோமோ அத்துனை தூரம் நம்மால் அவர்களின் ஆன்மீக எழுச்சியினைக் கண்டடைய இயலும் இல்லையா?. அவைகள் கொண்டுள்ள தொன்மையின் வேர்முடிச்சுகளில் ஒரு கூட்டான இறை தரிசனம் இருக்கத்தான் செய்கிறது.

கிறிஸ்தவம் இந்திய சமயங்களில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றவேண்டுமென்றால் அது சமயங்களுக்குள் தயக்கமின்றி கடந்துசெல்லவேண்டும். நட்சத்திரம் எப்படி இஸ்ரவேலைத் தாண்டி கிழக்கிலுள்ள ஞானிகளை ஈர்த்ததோ, அப்படியே  எளிமையைக் கண்டு சேவிக்க காத்திருக்கும் ஞானிகளை, பிரம்மாண்டத்தை காட்டி விலக்கிவிடாதிருப்போம்.

ஜாஸ்மின் செல்லும் பள்ளிக்கூடத்தில் மராட்டி மொழி பேசுகிறவர்கள் அனேகம் உண்டு. அவள் கற்று வரும் மராட்டிய வார்த்தைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுவாள். நேற்று நாங்கள் சென்ற வாகனத்தில் எங்களோடு வந்த பெண்மணி ஓட்டுனரோடு பேசிக்கொண்டு வந்தாள். ஒரே “ஓம்” மயம். ஜாஸ்மின் என்னிடம் காதில் சொன்னாள். “ஓம்” என்றால் மராட்டியில் ஆம் என்று அர்த்தம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ரசாயனி – மும்பை.

malargodson@gmail.com

8888032486

உண்மையான கிறிஸ்மஸ்?

திசெம்பர் 24, 2016

கிறிஸ்மஸ் காலம் நெருங்குகையில் எது உண்மையான கிறிஸ்மஸ் என்ற விவாதங்களும் அறிவு பூர்வமான பல விளக்கங்களும் முன்னெழுவதைப் பார்க்கலாம். அறிவு சார் ஆன்மீகம் நமக்கு தேவை தான் என்றாலும் கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் பாரம்பரியமாக கலந்துவிட்டவைகளை ஒதுக்கி தனித்துவமாக திருமறை நோக்கி திரும்பவேண்டும் எனும் குரல்கள் அடிக்கடி ஒலிக்க ஆரம்பிக்கின்றன. இவைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என எண்ண முற்பட்டாலும் இவைகளை முன்னெடுக்கிறவர்களின் அதீத பக்தியைப் பார்க்கையில் மனது சற்று பின்வாங்குகிறது. பாரம்பரியங்களைக் கடந்து செல்ல வேண்டுமென்றால் அவைகள் தவறு என சொல்வதோடு நிறுத்துவதில் பயனில்லை. அவைகளின் வேர்காரணங்களை உணர்ந்து நாம் அவைகளைக் கையாளவேண்டும். மேலான கருத்தியல்களால் அவைகளை மேற்கொள்ளவேண்டும். வெறுமனே இதுவல்ல கிறிஸ்மஸ் எனக் கூறி நாங்கள் மட்டுமே மிகச்சரியாக கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறோம் என் கூறத்தலைப்படுவது வீணான மமதையின் அடிப்படியிலானது. அவைகளுக்கு என்னளவில் மதிப்பு ஏதும் இல்லை. இவ்விதமான முடிவு நோக்கி நான் வர எனது வாழ்வில் நடைபெற்ற இரண்டு காரணங்களை உதாரணமாக கூறுகிறேன்.

கிறிஸ்து பிறப்பு: பழைய காகிதத்தில் உருவாக்கியது

கிறிஸ்து பிறப்பு: பழைய காகிதத்தில் உருவாக்கியது

முதலாவதாக மும்பையின் பெரும் பணக்கார கிறிஸ்தவர்கள் இணைந்து நடத்தும் கிறிஸ்மஸ் விழா “சவ்பாட்டி” கடற்கறையோரம் வருடம்தோரும் நடைபெறும். கடந்த வருடத்தில் தான் நான் முதன் முறையாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடை. கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் தாத்தா போன்றவைகள் இல்லை. அவைகள் கிறிஸ்மசுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவைகள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தெளிவுற எடுத்துக்கூறப்பட்டது. புதுமை படைத்த அனைவரும் கிறித்துவை மட்டுமே காண்பிக்கும்படி மேடையில் வீற்றிருந்தது கண்கொள்ளா காட்சி. எளிமை உருவான ஒருவரை கூட அந்த மேடையில் அவர்கள் ஏற அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சி இறுதியில் உலக புகழ்பெற்ற ஹில்சாங் எனும் உலக பிரசித்திபெற்ற மேற்கத்திய இசைக்குழுவை முன்னிறுத்தினார்கள். அவர்களினின் பாடல்களுக்கு இளைஞர்கள் வெறியாட்டம் இட்டதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இதுவே உண்மையான கிறிஸ்மஸ் எனும் கருத்தை பிறர் எப்படி புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை உணர எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

நான் பணிபுரிந்த திருச்சபையில் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள் நிறைந்திருந்தனர். அல்லது அப்படி நடிப்பதில் அதீத ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் எண்ணம் முழுமையாக எனக்கு தெரிவந்தபோது மீண்டும் சோர்பே ஏற்பட்டது. பெரும்பாலோனோர், போதகருக்கு நாம் கொடுக்கும் பணத்தில் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, ஆகவே அவர் நாம் சொல்லும்படி தான் நடக்கவேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள். ஊழியம் செய்ய உங்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கிறோம் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு நீங்கள் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என துணிந்து கூறும் நல் உள்ளங்கள். ஆனால் தங்களின் வாழ்வை சற்றும் சீர் செய்ய முன்வராதவர்கள். ஏன் தங்கள் தங்கள் அலுவலகத்திற்கு நேரம் தவராமல் செல்பவர்கள் ஏனோ ஆலயத்திற்கு மட்டும் நேரத்தில் வாருங்கள் என்றால் வராதவர்கள். இப்படியான நீதியின் சூரியன்களை ஒன்றிணைத்து நீங்களும் என்னுடன் வாருங்கள் நாம் இணைந்தே பணி செய்வோம் எனக் கூறினேன். அதற்கான ஒரு தருணத்தையும் நான் அமைத்தேன்.

இந்திய அளவில் எந்த மத விழாவாக இருந்தாலும் சரி, அதனை கொண்டாடுகையில் என்ன தான் வெறுப்பு கொண்டிருந்தாலும் ஒரு சகிப்புதன்மையை பிறர் கையாள்வது  மரபு. ஆகவே, பிறர் அறிந்த கிறிஸ்மஸ் தாத்த உடையணித்த ஒருவரை முன்னிறுத்தி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அனைவருக்கும் அறிவிக்கலாம் எனக் கூறி, அதற்கான பரிசு பொருட்கள் எவ்விதம் தயாரிப்பது, கைபிரதி எப்படி தயாரிப்பது என பார்த்துப் பார்த்து செய்து “கிறிஸ்மஸ் தாத்தா பவனி” குறித்து திருச்சபையினருக்கு அறிவித்தேன். ஆராதனிக்குப் பின்பு நான் இதை விளக்கி அறிவிக்கையில் அங்கிருந்த எவரும் இதன் சாதக பாதகங்களைக் கூற முற்படவில்லை.

மெத்த படிட்தவர்கள் நிறைந்த திருச்சபை ஆதலால், இது குறித்து மின்னஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. கிறிஸ்மஸ் தாத்தா பவனி என பெயர் வைக்க கூடாது கிறிஸ்து பிறப்பு பவனி என்றே பெயர் வைக்க வேண்டும் ஏனென்றால் கிறிஸ்மஸ் தாத்தா கிறிஸ்துவை இல்லாமலாக்கிவிடுவார் என்கிற நோக்கத்தை அவர்கள் பதிவு செய்தார்கள். நான் கூறினேன், பிறரை சந்திக்கையில் கிறிஸ்மஸ் தாத்தா ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுகிறார், இப்பெயர் பிறருக்கானதே அன்றி நமக்கானதல்ல எனக் கூறினேன்.

எப்படியாகிலும் இவர்களை ஒன்றிணைத்துக் கூட்டி செல்லவேண்டும் எனும் ஆர்வத்தால், பெயரில் என்ன இருக்கிறது என்றே எண்ணினேன், பெயரை மாற்றவும் ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர்கள் மீண்டும் எனக்கு கிறிஸ்து பிறப்பு என்றால் என்ன என விளக்கம் அளிக்க முற்படுகையில் எனக்கு உண்மையிலேயே எரிச்சல் தான் வந்தது. நான் சொன்னேன் முதலில் நமது திருச்சபையில் நாட்டியமாடும் கிறிஸ்மஸ் தாத்தாவை நிறுத்துங்கள் பிற்பாடு பிறருக்கு உண்மையான கிறிஸ்து பிறப்பு என்ன என்று சொல்லலாம் என காட்டமாக கூறினேன். நம்புங்கள் பிறருக்கான “கிறிஸ்மஸ்  பவனி” தோல்வியிலும் திருச்சபையினருக்கான “கிறிஸ்மஸ் தாத்தா” நிகழ்வு வெகு விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது.

இந்த இரட்டை அர்த்த கிறிஸ்மஸ் புரிதல் கொண்டவர்களே இன்று நம்முடன் கிறிஸ்மஸ் குறித்த விளக்க உரைகளை விளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் எரிச்சலுடன் கவனிக்கிறேன். எது உண்மையான கிறிஸ்மஸ் என தொலைக்காட்சி பேட்டி, முக நூல் பேட்டி, முகநூல் பதிவு போன்றவைகள் அனைத்தும் பாரம்பரிய விழா மனநிலையை குலைக்க களமிறங்கியிருக்கிறதே அன்றி சற்றும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் சிறு மாறுதலையும் கொணர முயலவில்லை என்பதே காணக்கிடைக்கும் உண்மை. இவர்களில் எவர் ஒருவர் களமிறங்கி ஒரு மாற்று கிறிஸ்மஸ் முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் எனக் கேட்டுப்பார்த்தால் தங்களின் சுய பிரதாபத்தையே கடவுளின் ஈகைக்கு மேலாக குறிப்பிடும் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

 

கிறிஸ்மஸ் விழாவை ஒட்டி நாம் சீர் செய்ய வேண்டிய காரியங்கள் அனேகம் உண்டு. பாரம்பரியமாக நம்மில் நுழைந்துவிட்டவைகள் பலவும் நமக்கு தேவையற்றவைகள் தாம். அவைகளை நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும். மாற்றம் என்பது நுழைந்துவிட்ட பாரம்பரிய குறியிடுகளை அழிப்பது அல்ல மாறாக அந்தக் குறியீடுகளை உன்னதப்படுத்துவதன் வாயிலாக மேலான காரியங்களைச் செய்ய முயற்சிப்பதே. ஆகவே அவைகளின் பொருளிழந்த தன்மையை மாற்றி நமது நம்பிக்கைகளை ஆழப்படுத்தும் தன்மை நோக்கி அவைகளைக் கொண்டு செல்வது ஒரு சிறந்த பயணமாக இருக்கும்.  பாரம்பரிய குறியீடுகளில் நமது நம்பிக்கையைக் காக்கும் விழுமியங்கள் ஏதும் இல்லை என்போர், திருமறையில் உள்ளவைகளை பிறர் அப்படியே நம்பவேண்டும் எனக் கருதுவார்களாயின், அவர்களின் எண்ணம் ஈடேற ஆண்டவன் தான் உதவி செய்யவேண்டும்.

ஏன் நட்சத்திரங்கள் போடவேண்டும்? என்று யாரேனும் கேள்வி கேட்பார்கள் என்று சொன்னால் ஏன் சிலுவை நமக்கு முக்கியம் என்பதே விடையாக முடியும். இரண்டுமே நமக்கான அறிவுறுத்தல்களைக் கொண்டது எனும் வகையில் முக்கியமானது. சிலுவை கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு சுட்டிகாட்டுகிறது என்றால் நட்சத்திரம் தந்தையாம் கடவுளின் தியாகத்தின் சாட்சியாக ஒளிர்கிறது. தங்கச் சிலுவை அணிபவர்களின் வாழ்வு எப்படியோ அப்படிதான் நட்சத்திரம் இடுபவர்களின் வாழ்வும் இருக்கும். அதற்காக தங்கத்தில் தாலியிட்டவர்களின் சங்கிலியை பிடித்து இழுக்கவா முடியும்? அது ஒரு நினைவுறுத்தல். அதற்கான பின்னணியம் வேறானது. சிலுவை ஒரு கொலைக்கருவியிலிருந்து தியாக அடையாளமாக மாறுமென்றால், பேரழிவிற்குப்பின் எழுந்த வானவில் சமாதானத்திற்கு அடையாளமாகுமென்றால், நட்சத்திரமும் “வழிகாட்டியாக” உருவெடுப்பதை நாம் தவிர்க்க இயலாது. எரிந்து சாம்பலாகும் நட்சத்திரமாக பிறருக்கு ஒளிகாட்டும்படி  அந்த தியாக வாழ்வை தொடருங்கள் எனும் ஒரு வேண்டுகோளாக நாம் அதை முன்வைக்கலாம். அதைவிட்டுவிட்டு, கிறிஸ்தவ தாலிபானியம் வளர விடுவது நல்லதல்ல.

கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக சிறு குடில்கள் அமைப்பது குமரி மாவட்டத்திலுள்ள வழக்கம். குடில் அமைப்பதில் அப்பா அம்மா மற்றும் குழந்தைகள் சேர்ந்து ஈடுபடுவது அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்வின்  குடும்ப தருணத்தை அமைத்துக்கொடுக்கிறது. சிறு பிள்ளைகளின் கற்பனா சக்தியை தூண்டும் ஒரு தருணமாக இது இருக்கிறது என்றே நினைக்கின்றேன். கிறிஸ்தவ குடும்பங்களில் கலை சார்ந்த ஈடுபாடு நிறைந்த மற்றொரு தருணத்தை நம்மால் இதற்கு இணையாக சுட்டிக்காட்ட முடியுமா? கலைக்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பே இல்லாதபடி நமது சமயம் விலகிச்சென்றுகொண்டிருக்கையில், இவைகளின் பங்களிப்பு முக்கியமானது தான் என்று நான் கருதுகிறேன்.  கிறிஸ்மஸ் குடில் அமைத்தால் தான் கிறிஸ்து பிறப்பாரா என்ற கேள்விகள் தேவையற்றது. அது நாங்கள் தனித்திருந்து ஜெபித்தால் மட்டுமே அவர் பிறப்பார் என்னும் சிறுமைக்கு ஒப்பானது. ஆயினும் இன்று மிகப்பெரிய குடில் அமைப்பது, போட்டிகளாக மாறிவிட்ட சூழலில் லெட்சக்கணக்கில் குடில் செட்டுகள் இன்று அமைக்கப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீணான ஆடம்பரத்தை செய்ய முற்படுவோருக்கு கூட நாம் சற்றே புரியும்படியாக எடுத்துக் கூறினால், இயேசு பிறப்பதற்கு இடமில்லாமல் இருந்ததுபோல் இன்றும் நம்மிடம் வாழும் வீடில்லாத ஏழைகளுக்கு “கிறிஸ்மஸ் வீடுகளாக” கிறிஸ்மஸ் குடில்கள் மாற  நாம் முயற்சிக்கலாம்.

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் கிறிஸ்மஸ் கொண்டாடக் கூடாதா? கூடும்! கூட வேண்டும்!. இயேசு சிலுவையின் மூலம் நமக்கு போதுமான பரிசுகளைத் தந்தார் நமக்கு எதற்கு பல பரிசுகள் வழங்கும் கிறிஸ்மஸ் தாத்தா? எனும் நியாயமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. கிறிஸ்மஸை சார்ந்து கிறிஸ்மஸ் தாத்தாவால் வழங்கப்படும் பரிசுகள் யாவும் சிறு பிள்ளைகளின் மகிழ்வுக்காக கொடுக்கப்படுபவைகளே. இயேசுவை சிரிப்போராக அல்லாமல் தண்டிப்பவராகவும் தண்டனை பெற்றவராகவும் சிறு பிள்ளைகளுக்கு காண்பித்த பின் அவர்களின் ஒரே வடிகாலான கிறிஸ்மஸ் தாத்தாவை தங்களின் சுய சிந்தனைகளுக்கு காவு கொடுப்பது நியாயமா? நாம் ஏன் கிறிஸ்மஸ் மாமாவாக கூடாது? நாம் ஏன் கிறிஸ்மஸ் அத்தையாகக் கூடாது? கிறிஸ்மஸ் அன்று சிறுவர்களுக்கு ஏன் கிறிஸ்துவின் தியாகத்தை  விளக்கும் நல்ல கதைகளைக் கூற முன்வரக்கூடாது? கிறிஸ்மஸ் நன்னாளில் சிறு குழந்தைகளின் வாழ்வை எப்படி நல்ல பெற்றோராக அர்த்தம் பொதிந்ததாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களுக்கான இடைவெளிகளை அன்று எப்படி நிரப்ப திட்டமிட்டிருக்கிறோம்? இப்படி எந்த சிந்தனையும் முன்னெடுக்காமல், வெறுமனே பாரம்பரியங்கள் யாவற்றையும் தடுத்து நிறுத்திவிட்டு  நேரே பரலோகம் செல்லவேண்டும், இம்மியளவும் சிறு துரும்பையும் எடுத்துச் செல்லும் அற்பணிப்பு இல்லாதவர்கள் பேசத்தான் செய்வார்கள்.

கிறிஸ்மஸ் மரம் எப்போது வந்தது எனத் துவங்கி விக்கிபீடியா, கூகுள் என துளைத்தெடுத்து கட்டுரைகள் வரையும் கிறிஸ்தவர்கள், ஒருபோதும் நமது சூழியல் குறித்து பேசுவதில்லை. கிறிஸ்மஸ் மரம் எனும் கருதுகோள் நாம் சூழியலை மேம்படுத்த நம்மிடம் உள்ள  ஒரு சிறந்த ஊடகம்.  நம்மிடம் இருந்த காடுகள் என்னவாயின? எனக் கேட்டால் அது ஆன்மீகம் சார்ந்ததல்ல என பதில் வரும்.  நமது திருச்சபை வளாகத்தில் கடைசியாக நடப்பட்ட மரத்தைக் குறித்து கேளுங்கள். எத்தனை வருடங்களாக கிறிஸ்மஸ் மர விழாவினை திருச்சபைகள் கொண்டாடியிருக்கும்? ஒருமுறையாவது ஒரு மரக்கன்றை நட்டு ஒரு கிறிஸ்மஸ் மர விழா கொண்டாடியிருப்போமா? 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புயலால் வேர் பிடுங்கி வீசப்பட்ட மரங்களுக்கு மாற்றாக எத்தனை மரங்களை நட இவர்கள் முன்வருவார்கள் எனக் கேளுங்கள். தமிழக மாநில மரமாகிய பனை மரத்தினை கிறிஸ்மஸ் மரமாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ள முயற்சித்தால் எத்தனைக் குடும்பங்களில் அடுப்பெரியும் என யோசிக்கச் சொல்லுங்கள். இது வேண்டாம் அது வேண்டாம் எனக் கூறுவதை விட, அனைத்தையும் முயற்சித்துப் பார்த்து இறுதியில் தனது ஒரே குமாரனையும் தந்த கடவுளை ஒருமுறை எண்ணிப்பார்ப்பது நலம். நாமே இன்னும் நியாயம் தீர்க்கப்படாமல் தான் இருக்கிறோம்.

கிறிஸ்மஸ் என்னும் வார்த்தையே திருமறையில் இல்லாதது. அந்த வார்த்தையின் மூலம் பயன்பாட்டில் வந்து சுமார் 1000 ஆண்டுகளே இருக்கும். “கிறிஸ் + மாஸ்” எனும் வார்த்தை கிறிஸ்து பிறப்பை ஒட்டி நடைபெற்ற ஒரு திருச்சபையின் ஆராதனைக்  கூடுகையையே குறிக்கும். இன்று ஆராதனைக்கு வருபவர்கள் வண்ண உடைகளை அணிவதை விட புதிய வாகனங்களை கொண்டுவரும் அளவு நிலமை மாறிப்போய்விட்டது. ஏழைகளுக்கு துணி கொடுப்பதில் என்ன தான் செலவாகிவிடப்போகிறது? நமக்கு ஆரணி பட்டு என்றால் அவர்களுக்கு ஆடிக்கழிவில் வாங்கிய துணிகளோ அல்லது தீபாவளி அதிரடி தள்ளுபடியில் வாங்கிய துணியோ வள்ளன்மையோடு வழங்கப்படுகிறது. இதற்காகவே கிறிஸ்மஸ் துணிகளை பெற ஒரு கூட்டம் உருவாக்கப்படுகிறது.

நான்கு நற்செய்திகளும் கிறிஸ்து பிறப்பு குறித்து பேசுகின்றவைகளில் வேறுபடுகிறார்கள். குறிப்பாக மாற்கு, “பிறப்பு” குறித்து வாயே திறக்கவில்லை. யோவான் வெகு தத்துவார்த்தமாக இயேசுவின் பிறப்பை “வார்த்தை மாமிசமாகியது” என பதிவிடுகிறார். தீர்கதரிசிகளின் வார்த்தை எழுத்துக்கு எழுத்து வைத்து பொருள்கொள்ள இயலாதபடி இருக்கிறது. ஏன் இப்படி? ஒன்று பிறப்பு சார்ந்து பல்வேறு புரிதல்கள் இருந்திருக்கின்றன. பிறப்பு முக்கியமானது என்றும், பிறப்பு அல்ல ஆண்டவரின் செயல்களும் அவரின் மரணமுமே முக்கியமானது என்றும் இரு போக்குகள் முன்னமே இருந்திருக்கலாம். மேலும், கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் என்பது திருச்சபையில் பின்னாட்களில் ஏற்பட்ட ஒரு விழாவாக இருக்கவேண்டும். ஆதி கிறிஸ்தவர்கள் அவரின் பிறப்பை தம்மளவில் முக்கியத்துவப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அதற்காக ஆதி கிறிஸ்தவர் வாழ்வை மட்டுமே நாங்கள் பின்பற்றுவோம் ஆகவே கிறிஸ்மஸைக் கொண்டாட மாட்டோம் என்பவர்கள் யாவரையும் மிகவும் நல்லவர்கள் என ஒப்புக்கொள்ளுகிறோம். சொம்பை எடுத்து உள்ளே வைக்கவும் சொல்லுகிறோம். ஆனால் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு சில காரணங்கள் உண்டு அவைகளை அவர்கள் இந்த நாட்களில் பேசினால் நலம்.

இயேசுவின் பிறப்பு: உலகை இரட்சிக்க வந்தவர் “என்னையும் இரட்சித்தார்” என்னும் கூற்றின் உண்மைத்தன்மையை எவராலும் சோதிக்க முடியாது. ஆனால், தங்க இடமின்றி தெருவில் சென்ற ஒரு குடும்பத்தாருக்கு ஒரு இரவு எங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்தோம் என உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் சொல்லட்டும்.

முதலாம் குடிமதிப்பு எழுதபட்டபோது இயேசுவின் பெற்றோர் அடைந்த அலைக்கழிப்பை இன்றைய பணமதிப்பிழப்புடன் ஒப்பிட்டு பார்த்து கிறிஸ்தவர்கள் இந்த கிறிஸ்மசில் எப்படி செயல்படவேண்டும் என உண்மை கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள் கூறட்டும்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனேகம் இன்று இறந்து போகும் ஒரு தேசத்தில் நாம் வாழுகின்றோம். தனது குழந்தையை இழந்த ஒருவருக்கு இந்த கிறிஸ்மஸ் காலத்தில் ஆறுதலாயிருப்போம் எனக் கூறுவோம். அல்லது ஊட்டசத்து இன்றி வாழ்வா சாவா என போராடும் ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுக்க முன்வருவோம்.

பாலனாக பிறந்த இயேசுவை  தேடிவருவோருக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக நாங்கள் ஒளிருவோம் என்று சுய தம்பட்டம் அடித்துவிட்டு, ஏரோது போல் பிறர் உதவியுடன் கிறிஸ்து எப்படி பிறப்பார்? என வசனங்களை தேடாதிருப்போம்.

திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பிரச்சனை அதிகரித்திருக்கும் சூழலில் இந்திய  திருச்சபை எவ்வித நிலைப்பாடுடன் செயலாற்ற வேண்டும் என மன்றாடுவது நமக்கு மிகப்பெரிய சவால்.

ஞானிகள் ஒரு சிறு குழந்தையின் முன்பு மண்டியிடும் எளிய செயலைக் கூட புரிந்துகொள்ள முடியாமல், அறிவு பெருத்து கிறிஸ்மஸ் விளக்கம் அளிக்க முன்வரும் அனைவரும் சற்றே தாழ்மை உருவெடுத்த இயேசுவை பார்ப்பது நலம்.

ஆம் கிறிஸ்மஸை தவற விடுகின்றவர்கள் மிக அருகிலிருந்து, அனைத்தும் அறிந்து வழிகாட்டியவர்களே. ஏரோதின் அரண்மனை சுகவாசிகள் தான் அவர்கள்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

 

ரசாயனி – மும்பை.

 

malargodson@gmail.com

 

8888032486

பனைதொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த இயேசு

ஒக்ரோபர் 25, 2016

“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்;

லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (திருப்பாடல்கள் 92:12, திருவிவிலியம்)

 

திருமறையை வாசிக்கும்போது, மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை இயற்கையைச் சார்ந்து எழுதிவைப்பது ஒரு முறையாகவே இருந்துள்ளதை நாம் காணமுடியும். இயற்கையை கூர்ந்து அவதானிப்பதனாலும் இயற்கை கடவுளை வெளிப்படுத்தியமையினாலும் அவ்விதமான ஒரு எழுத்தை அவர்கள் முன்வைத்துள்ளார்கள். இவ்வெழுத்துக்கள் அவர்களின் வாழ்வை கடவுளுக்கு நேராக திருப்பியிருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.” (சங்கீதம் 92:12) இந்த வசனத்தை எங்கள் ஊரில் பயன்படுத்தும் போது, அவர்கள் பழைய மொழிபெயர்ப்பில் உள்ள வசனத்தின்  முற்பகுதிஐ மட்டும் எடுத்துக்கூறுவார்கள். நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான் எனக்கூறி, பிற்பகுதியில் காணப்படும் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான் என்கிற பகுதியை விட்டுவிடுவார்கள். ஆகவே வசனமே அவ்வளவுதான் என நான் எண்ணிக்கொள்வேன். பிற்பாடு திருமறையை வாசிக்கதுவங்கியபோது பின்னிணைப்பாக கேதுரு மரம் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மலைத்துப்போனேன். ஏன், வசனத்தின் ஒரு உறுப்பாகிலும் ஒழிந்துபோவதில்லை என எண்ண தலைப்படும் நம் மக்கள், வெறும் பனை மரத்தை மட்டும் முன்னிறுத்திவிட்டு, கேதுருவை விட்டுவிட்டார்கள் எனும் கேள்வி என்னுள் அலைமோதியது.

இரண்டு காரியங்கள் உடனடியாக என் மனதில் வந்தது, எம்மக்கள் கேதுருவைக் கண்டதில்லை. இரண்டு, பனைமரம் அவர்களை வாழ வைத்த மரம். பனைமரம் வாயிலாக கேதுருவை அவர்கள் கற்பனை செய்துகொண்டிருந்திருப்பார்கள். மிக பிற்பாடு தான் நானே திருமறையில் கூறப்படும் பேரீச்சைக்கும், தமிழகத்தில் காணப்படும் பனைமரத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதைக் கண்டடைந்தேன். ஆனாலும் அவைகள் ஓரிலைத்தாவர்ம எனும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்பது எனக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஆகவே இவ்வரிகளை எழுதிய ஒரு யூத கவியின் மனதிற்குள்ளதாக என்னால் எளிதாக புக முடியும் என்றே நான் எண்ணுகிறேன். தமிழகத்தின் ஐவகை நிலங்கள் போல இஸ்ரவேலின் மக்கள் கண்ட நிலப்பரப்பும் மிகுதியான வேற்றுமைகள் கொண்டது. ஒன்றிற்கு ஒன்று எதிர் துருவத்தில் இருக்கும் நிலவெளி அது. ஆகவே தான் பனிமலையில் வாழும் கேதுருவும் பாலையில் காணும் பனைமரமும் ஒருசேர பொருள்படுகிறது.

கவி இங்கே இருவேறு சூழலில் வளரும் வேறுபட்ட மரங்களைக் குறிப்பிட்டு அவைகளை நேர்மையாளருக்கு (நீதிமானுக்கு) ஒப்புமையாக்குவதைக் காண்கிறோம். நேர்மையாளர்  எனும் உயர் விழுமிய மனிதனை இஸ்ரவேல் வார்த்தெடுத்தது. அதற்கு முழு முதல் காரணம் அவர்கள் வணங்கும் கடவுள் நேர்மையளர்  எனும் கருத்தாகத்தில் இருந்து எழுந்ததை நாம் அறிவோம். எனில் கடவுளின் சாயல் மனிதனில் பிரதிபலிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கவி வெளிப்படுத்துவதாக மேற்கூறிய வரி அமைகிறது. அது கடவுளைக் கண்டடைய கவி உள்வாங்கிய ஒரு இயற்கைப் படிமம் என நாம் கண்டுகொள்ளுகிறோம்.

மேலும் கடவுளின் தன்மை மண்ணினால் உருவாக்கிய மனிதனுக்குள் இருப்பதை நம்பும் நம் மனது, மண்ணில் முளைத்தெளும்பிய பனை மரத்தில் அதே உணர்வு இருப்பதை கண்டுணர்ந்த தருணமாக இக்கவிதை பொருள் பட்டு நிற்கிறது. கடவுள் மனிதன் மரம் இவைகள் ஒரே தன்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக இருக்குமா? இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டில் நாம் அமர்ந்திருக்கும்போது, இயற்கையின் ஒவ்வொரு கூறும் இறைவனை நோக்கி நம்மை முன்னெடுக்கும் ஒரு பரவசத்தில் நாம் ஆழ்கிறோம். அப்படியானால் பனை மரம் என்பதை எனது மண்ணின் இறையியலின் மையமாக வைத்து பார்ப்பதுவே எனது அருட்பணியாக இருக்கும். அதுவே நேர்மையாளராம் கடவுளின் உருவை நான் பெற்றேகும் பொற்தருணம்.

பனை மரம் பார்பதற்கு ஒரு தூணைப்போல நெடுநெடுவென்று இருக்கும். மனித தலையைப்போல உச்சியில் அதன் ஓலைகள் மயிர்களாய் சிலுபி நிறைந்திருக்கும். ஆண் மரம், பெண் மரம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும், இரு தன்மைகளும் இணைந்த “உம்மங்காளி” பனைமரங்களை காணும்போது, கவியின் ஆழ்ந்த அவதானிப்பு தெரியவருகிறது. மேலும் மரங்களில் மிக குறைவான தண்ணீரை எடுத்துக்கொண்டு மிக அதிக பொருட்களை வழங்கும் ஒரே மரம் பனைமரமே. ஆகவே, தன்க்கு எஞ்சிய குறைவான வாய்ப்புகளிலும் கூட உன்னத விழுமியங்களை வழங்கும் வாழ்வு கொண்டோரை நேர்மையாலர் என கவி வருணிப்பது நமது பார்வைக்கு வைக்கப்படுகிறது. வறண்ட பகுதியில் தண்ணீர் இன்றி வாடும் மக்களுக்கு உச்சியில் ஊறும் பதனீர் எனும் தாகம் தணிக்கும் பானத்தை தாயைப்போல் பிரதிபலன் அற்று சுரந்து கொடுக்கிறது. பனைமரம் மண்னையும் விண்ணையும் இணைக்கும் ஒரு அற்புத மரம். கடவுளும் மனிதனும் இணையும் நேர்கோடு அல்லது மையம் அது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் பனைமரம் மிகுதியாக காணப்படுகிறது, இம்மக்களின் வாழ்வில் இரண்டர கலந்த மரம் இது. இவர்களது வாழ்வில் உணவு உறைவிடம், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என பல வகைகளில் பனை வாழ்வளிக்கும் மரமாக காணப்படுகிறது. இப்பகுதியில் வாழும் எச்சமயத்தவரானாலும் அவர்களை ஒன்றிணைக்கும் ஒரே மரம் இதுவே. ஆகவே நமது அருட்பணியின் நோக்கில் மிக முக்கிய செயல்  இம்மரத்தை கூர்ந்து அவதானிப்பது, அதை பாதுகாப்பது, மற்றும் இம்மரத்தை கடவுளின் தன்மையை வெளிப்படுத்தும் முக்கிய குறியீட்டின் தன்மையாக உணர்ந்து வலர்த்தெடுப்பது ஆகும்.  இறைவன் வழங்கும் அருட்செய்தியினை உள்வாங்கி,  இதைச் சார்ந்து வாழும் மக்களினங்களின் வாழ்வில் எவ்விதம் நமது அருட்பணியை ஆற்ற இயலும் என்பது மிக முக்கியமான கேள்விகளாக எஞ்சி இருக்கின்றன.

பல்வேறு மக்களினங்களுக்காக தன்னை அற்பணித்த அருட்பணியாளர்கள் பனைதொழிலாளர்களுக்காக தன்னை அற்பணிக்காதது ஒரு குறையாகவே இருந்திருக்கிறது. பனை மரமும் பனைத்தொழிலாளிகளும் அத்துணை முக்கியத்துவம் பெறவேண்டிய காரணம் தான் என்ன? திருமறை சார்ந்து ஏதேனும் சான்றுகள் உள்ளனவா? என நாம் தேடினால் நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு திருமறைப்பகுதி வாசிக்க கிடைக்கிறது. “குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்”. (யோவான் 12: 13 திருவிவிலியம்)

இயேசுவின் எருசலேம் பயணம் பெத்தானியாவிலிருந்து துவங்குகிறது. பெத்தானியா என்பதற்கு பேரீச்சையின் வீடு என்பது பொருள். அவருக்கு எதிர்கொண்டு போக பனைமர கிளைகளை எடுத்துச் சென்றவர்கள் திரளான பனைமரங்கள் இருந்த இடத்திலிருந்தே குருத்தோலைகளை எடுத்திருக்கவேண்டும். அதுவும் பனை ஏறும் தொழிலாளிகளின் உதவி கொண்டு அல்லது பனை ஏறுகிறவர்களே அவைகளை எடுத்துச் சென்றிருக்கவேண்டும். பனை ஓலைகள் வெற்றியின் சின்னம், நீடித்த வாழ்வு, அமைதி போன்ற பல்வேறு எண்ணங்களை பிரதிபலிப்பதாக பொருள் பட்டாலும், சுழலை ஆழ்ந்து கவனிக்கும்போது வேறு சில எண்ணங்களும் அதன் உட்பொருளாய் ஒளிந்திருக்குமோ என எண்ண தோன்றுகின்றது.

இயேசுவை சிலுவையில் அறைய மிக முக்கிய காரணியாக இருந்தது சமய தலைவர்கள் என்பது உண்மை என்றாலும், அவர் மீது சுமத்தப்பட்ட இறுதி குற்றச்சாட்டு மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த குற்றச்சாட்டு யாவும் வரி செலுத்துவது குறித்ததே. ஆக வரி மக்கள் மேல் மிக அதிக பாரத்தை  சுமத்தியிருப்பதையும் இயேசு அவற்றை வரித்தண்டுவோருடன் அமர்ந்து விவாதிப்பதையும் காணுகையில், திராட்சை தோட்டம், அத்திமரம், மற்றும் பேரீச்சகளை பராமரிப்பவர்கள் ரோம அரசின் வரி கொள்கையால் பாதிப்படைதிருந்தனர் என்பது உறுதியாகிறது. இவர்களே குருத்தோலைகலை எடுத்தபடி இயேசுவுக்கு எதிர்கொண்டு போயினர் என்பது பொருத்தமானது. அப்படியானால் இயேசுவின் பணி பேரீச்சை மரம் ஏறுகிறவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

 

இன்று நமது ஆலயங்களிலிலோ ஆலய வளாகங்களிலோ பனை மரங்கள் காணப்படுவதில்லை. அவைகள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பனை தொழுலாளர்கள் குருத்தோலை ஞாயிறு அன்று நினைவு கூறப்படுவதில்லை, அவர்களது வாழ்வை எண்ணாமலேயே 2000 வருட கிறிஸ்தவ அருட்பணி  கடந்து வந்திருக்கிறது. இத்துணை நெடிய ஆண்டுகளில் ஒருமுறை கூட நமது ஆலயங்களில் பனை ஏறி காய்த்து வெடித்த பனைத் தொழிலாளிகளின் கால்கள் கழுவப்பட்டதில்லை. சாம்பல் புதனன்று நாம் எரிப்பது வெறும் ஓலைகள் மாத்திரம் அல்ல பனைத்தொழிலாளிகள் எனும் ஒரு விரிந்த சமூகத்தைக் கூட.

இந்திய அளவில் வேலைவாய்ப்பை பெருக்கும் தன்மையில் பனை மரங்களின் பங்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. திருச்சபையோ அரசோ பனை மரங்களுக்கோ பனை தொழிலாளர்களுக்கோ நல திட்டங்கள் எதுவும் செய்ய முன்வரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக பனை மரங்களின் எண்ணிக்கை குறித்த எந்த அறிக்கையும் அரசால் வெளியிடப்படவில்லை. பனை தொளிலாளர்களுக்கான எந்த நலதிட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்படவில்லை. உலகமயமாக்கலில் உலகத்தோடு திருச்சபையும் சேர்ந்துகொள்ளுகிறது. இறைவனும், இயற்கையை முன்னிறுத்தும் பனை மரமும், அதனோடு தொடர்புடைய மனிதனும் இன்றுவரை எந்த சூழியல் இறையியலாளராலும் கவனத்துக்குட்படுத்தவில்லை.

இச்சுழலில் கவி காணுகின்ற ஒன்றை நாமும் நமது வாழ்வில் கண்டடையவெண்டும். அது நமது அருட்பணியாக அமையவேண்டும், இறைவன் இயற்கை மனிதன் என ஒன்றிணைந்து செயல்படும் கவியின் கூற்றை மெய்பிக்கவேண்டும். கிறிஸ்து அதையே செய்தார்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

E-mail: malargodson@gmail.com

 

தாயும் குஞ்சுகளும்

நவம்பர் 20, 2015

மனித வாழ்வில் இழப்புகள் இன்றியமையாதது…எனினும் வாழ்வில் இழப்புகளை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இஸ்ரவேலர் தமது வாழ்வில் பலவித இழப்புகளை அனுபவித்தவர்கள். அடிமைத்தனம் எனும் கீழ்மட்ட நிலையிலும் வாழ்ந்தவர்கள். கடவுள் அவர்களை உயர்த்தினார் என்பது அவர்கள் வாழ்வில் கற்றுணர்ந்த பாடம். அதனை அவர்கள் ஒருசில குறியீடுகள் வழியாக பொருத்திப் பார்க்க தலைப்பட்டனர். அந்த நம்பிக்கையை திருமறையில் விரவி வைத்திருக்கின்றனர்.

 

தாயும் குஞ்சுகளும் எனும் ஒப்புமை கடவுளும் அவர் மக்களும் என இஸ்ரவேலருக்கு பொருள் பட்டதாக நாம் திருமறையில் வாசிக்கிறோம். காட்டில் ஒருமுறை தீ பற்றியெறிந்தபோது தாய் பறவை ஒன்று தனது குஞ்சுகளை காக்கும்படியாய்த் தனது உயிரை பணயம் வைத்ததாக செல்லும் ஒரு கதையை நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.  தனது உயிரை மாய்த்து குஞ்சுகளை வாழ்விக்கும் மாயம் தான் என்ன? அவ்விதம் செய்யும் ஒரு தன்னிகரற்ற தியாக வாழ்வினை எவ்விதம் அந்த குஞ்சுகள் தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்?

 

குஞ்சுகள் பிறக்கும்போதே பசியுடன் பிறக்கின்றன. அன்னையால் அமுதூட்டப்பட்டு, அன்னையின் பராமரிப்பில் வளர்கின்றன. அமுது வாழ்வின் அங்கம் எனும்போது அதை சேர்க்கும் முயற்சி இன்றியமையாதது எனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளுகின்றன. அவ்விதமான ஒரு இடைவிடா முயற்சியே ஒரு குடும்பத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அவை அறிந்துகொள்ளுகின்றன. கடவுளின் அரும் பராமரிப்பில் தாம் நாம் இருக்கிறோம் என்பதை பல திருமறைப்பகுதிகள் இவ்வண்ணம் வெளிப்படுத்துகின்றன.

 

ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப்பாருங்கள் (மத் 6: 26),அவர் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார் (சங்கீதம் 147: 30) பசியோடிருந்த எலியாவை காகங்களை கொண்டு போஷித்தார், தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். 26. ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 27. மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, 28. அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். 29. அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.(சங்கீதம் 78) இவையனைத்தும் கடவுள் தனது பிள்ளைகளை திருப்தியாக்கும் விதமாக செயல்படுவதை திருமறை விளக்குகின்றது.

 

 

“என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சங்கீதம் 83: 3, 4)”  ஒவ்வொருவிதமான பறவைகளும் தனித்தன்மைக் கொண்டவை, அழகு

நிறை ந்தவை, வீரம் கொண்டவை, தூது செல்பவை, பேசுகின்றவை, இரவில் துடிப்புடன் இருப்பவை, என வரிசைப்படுத்தும்போது பாடுகின்ற பறவியினங்களையும் நாம் ஒரு வகைமையாக கொள்ளலாம்.

தகைவிலான் குருவிகள்  தொடர்ந்து ஒலிஎழுப்பக்கூடிய வகையைச் சார்ந்தது. ஆலயத்தில் அவைகள் எழுப்பும் சத்தத்தை சங்கீதக்காரன் கேட்கிறான். அவைகள் ஆன்டவரை துதித்துகொண்டிருக்கின்றன எனும் எண்ணமாக அதை பதிவிடுகிறார். ஆலயத்தின் பாதுகாவல் மற்றும் தாய் பறவை அளிக்கும் பாதுகாவல் மிக்க அமைதியான கூடுகள் என அர்த்தங்கள்  உறுதியுடன் தொனிப்பதை உணர்வுபூர்வமாக நம்மால் அறியமுடிகிறது.

 

கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.(மத்தேயு 23: 37). தாய்க் கோழி தனது குஞ்சுகளை ஆபத்திலிருந்து காக்கும்படியாய்  தனது குஞ்சுகள் அருகில் வந்து நிற்கும்படியாய் அழைப்பு விடுக்கிறது. குஞ்சுகள் எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்து காக்கும்படியாய், தனது இறக்கைகளை விரித்தபடி அருகிருக்கிறது. ஆபத்து கிட்டி வரும்போது தனது இறக்கைகளை அது விரித்து தனக்குள் தன் குஞ்சுகளை ஒன்றிணைத்துக்கொள்ளுகின்றது. ஆபத்து குறித்த உணர்வை ஊட்டி பாதுகாவல் அரணை அவைகளுக்கு அளிக்கின்றது.

 

“கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை (உபா 31:11,12) ஆண்டவரின் வழி நடத்துலலில் நாம் எப்போதும் பயிற்சிபெறுகிறவர்களாக இருக்கிறோம். நாம் ஒருபோதும் கைவிட பாட்டவர்களல்ல மாறாக நமது இறக்கைகளை விரிக்க அவர் அளிக்கும் பயிற்சிகளே அவை. கழுகு தனது குஞ்சியை பயிற்றுவிக்கும்பொழுது, குஞ்சி அதுவரை வாழ்ந்த தனது வசிப்பிடமான தனது வீட்டிலிருந்து தூக்கிஎறியப்படுகிறது. தூக்கி வீசப்படுதல், ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணம். இதுமட்டும் பயன்படுத்தாத்த இளம் குருத்து சிறகுகளை பறக்க வைக்கும் முயற்சி. உயரமான கூட்டிலிருந்து விழுந்தால் உயிர் மிஞ்சாது. மிகவும் பிரயத்தனப்பட்டே சிறகுகளை அடித்து பழகவேண்டும். ஆகவே அது வரைக்கும் தனது வீட்டில் சுகமாய் வாழ்ந்த கழுகு குஞ்சுக்கு வீசப்படுதல் ஒரு பெரியஒரு அதிர்ச்சியே. பயத்துடன் அது தனது சிறகுகளை விரிக்க முயலுகிறது. ஆனால் அது  வீழும் தோறும் தாய் அதை தனது செட்டைகளை விரித்து தாங்கி தொய்வுறாமல் பயிற்சியளிக்கின்றது.

 

 

உணவு உறைவிடம் பாதுகாவல் வாழ்வியல் பயிற்சி போன்றவை கடவுளின் வாயிலாக வருபவை. அவை தாய்மையின் வடிவில் வந்து எட்டியதை நாம் திருமறை வழியாக கண்டோம். ஆகவே அது மேலும் ஒரு குறியீடு வழியாக நம்மை முன்னடத்துகின்றது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40: 31)

அருட்பணி. காட்சன் சாமுவேல்

20.11.2015

 

(காலம் சென்ற (17.11.2015) திருமதி ஷாந்தி செல்லப்பன் அவர்களின் துக்க நிவிர்த்தி கூட்டத்தில் பகிரும்படியாய் தயாரிக்கப்பட்ட வரைவு.)

 

 

 

 

கடவுளை தவறவிட்டவர்கள்

ஒக்ரோபர் 13, 2013

பத்து குஷ்டரோகிகள் குணமடைந்த நிகழ்ச்சி ஒரு அழகிய கதைக்குரிய இலக்கணங்களுடனும் விவரிப்புடனும் திருப்பங்களுடனும் லூக்கா நற்செய்தியாளரால் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் இந்நிகழ்வில் கூறப்படுவதை நன்றி கூறும் மனநிலை அற்ற பெரும்பான்மையரோடு இணைத்து பொருள் கொள்ளும் ஒன்றாகவே நாம் கண்டிருக்கிறோம். மெதடிஸ்ட் திருச்சபை இன்று இத்திருமறைப் பகுதியை சற்று ஆழ்ந்து அவதானிக்க அழைப்பு விடுக்கிறது. நன்றியைத் தாண்டிய ஒரு இறையியல் உண்மையைக் கண்டுகொள்ளுவது நமக்கு பயனளிக்கும்.

இயேசு தனது பயணத்தை எருசலேமை நோக்கி தொடருகின்றபொழுது அவர் சமாரியா வழி போக நேர்ந்தது. இயேசுவின் பயணம் சமாரியா வழி அமைந்திருந்ததை அவரது சமாரிய பெண்ணுடனான உரையாடலிலும், அவரை ஏற்றுக்கொள்ளாத சமாரியர்கள் போன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயாவிலிருந்து யூதர்கள் சமாரியாவை கடந்து தான் எருசலேமுக்குச் செல்லவேண்டும் என்றாலும், அப்பாதையை அவர்கள் தெரிந்தெடுப்பதில்லை. யோர்தான் ஆற்றைக் கடந்து அதற்கு அப்புறம் உள்ள பகுதிவழியாக பயணித்து பின்பு ஆற்றைக் கடந்து எரிகோ வந்து எருசலேம் புகுவது வாடிக்கை.

இவ்விதம் அவர்கள் சுற்றிப் போவதற்கான காரணங்கள் சமாரியர்கள் கலப்புமணம் செய்துகொண்டது, அவர்களின் பழக்கவழக்கங்கள் யூதர்களின் சமய ஒழுக்கங்களோடு ஒத்துப்போகாதது போன்றவை முக்கிய காரணிகள். இன்றைய உலகில் நாமும் சில இடங்களை கடந்து செல்லும்போது அவைகளில் குப்பைகொட்டப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்து கடந்து போவோம். இதே நிலையில் தான் சமாரியர்களை யூதர்கள் கருதியிருந்தனர். அவ்விடத்தை தங்கள் சமூகத்தின் குப்பைகளை சேர்க்கும் இடமாக கருதியிருந்தனர். தங்கள் சமூகத்தில் எவரொருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டாரோ அவரை தங்கள் சமூகத்திலிருந்து துரத்திவிடுவது வழக்கம். துரத்திவிடப்பட்ட தொழுநோயளிகள் சென்று சேரும் இடம் சமாரியாவாக இருந்தது. சமூகத்தின் அத்தனை அழுக்குகளும், சமயம் எனும் வடிகட்டலில் வண்டலாக சேர்ந்து உருவான ஒரு இடமாகவே சமாரியாவை யூத மக்கள் உருவகித்தனர்.

புதிய ஏற்பாட்டில் காணப்படும் இவ்விதமான விரோதப்போக்கு சரியானதல்ல என்பதை இயேசு தனது ஊழியத்தின் வாயிலாக உணர்த்துகிறார். அப்பகுதியில் பயணம் செய்வதாகட்டும், சீடர்கள் சமாரியர்களை அழிக்கவேன்டும் என்று கூறும்போது தமது சீடர்களையே அவர் கடிந்து கொள்ளுவதாகட்டும், நல்ல சமாரியன் உவமையின் வாயிலாக யூதர்களுக்கு அவர்களது பிறன் யார் என ஊணர்த்துவதிலாகட்டும், சமாரிய பெண்ணிற்கு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தி, யூத சமாரிய  சமய எதிர்நோக்கை ஒருங்கே பூர்த்தி செய்ய தாம் வந்ததாக எடுத்துக்கூறும்போதும், தன்னிகரற்ற தனது அன்பு அனைவரை அணைக்கும் கடவுளுக்கு நிகரானது என்பதை அவர் பதிவுசெய்கிறார்.

இப்பின்னணியத்தில் இயேசுவின் பயணத்தை நாம் பொருத்திப் பார்க்கும்போது அவரிடம் வந்தோர் பற்றிய உண்மை புலனாகிறது. இயேசு புறக்கணிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியில் தயக்கமின்றி பயணம்  செய்திருக்கிறார் என்பதும் அவர்கள் நல்வாழ்வில் மிகவும் கரிசனை கொன்டவராக இருந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும் அடிமைத்தன கால வாழ்வின் எச்சங்களாக ஏமான், பத்தடி தள்ளி நில்லு, தீட்டு பொன்ற சில வார்த்தைகள் புழங்குவதுண்டு.  இவ்வார்த்தைகள் இயேசுவின் காலத்தில் தொழுநோயாளிகள் 50 அடி தூரத்தில் நிற்கவேண்டும், ஊருக்குள் வரலாகாது, உடைகள் மரண சடங்கில்  ஒருவர் எவ்விதமாக சணலை உடுத்துவார்களோ அது போல தனது மரணத்துக்கான உடையை அணிந்தபடி செல்லவேண்டும். லெவியராகமம் 13: 45, 46ல் கொடுக்கப்பட்டக் கட்டளைகளையும் தாண்டி இதுபோன்ற பல கட்டளைகளை தங்கள்  வசதிக்கேற்ப அமைத்துக்கொண்டனர்.  ஆனால் இயேசுவோ கட்டளையின் பின்னணியத்தை உணர்ந்தவராக செயல்படுகிறர் என்பதே நற்செய்தியாக பதிவு செய்யப்படிருப்பதைக் காண்கிறோம்.

மாற்கு 1 ஆம் அதிகாரத்தில் ஒரு குஷ்டரோகியை அவர் குணமாக்கும்பொழுது அவன் “…அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். இயேசு மனதுருகி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார் (40,41). ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்கு சாட்சியாக செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி உடனே அவனை அனுப்பிவிட்டார் (44). இதற்கு இணையாக  தொழுநோயை இயேசு குணமாக்கும் ஒரே பகுதியாக நாம் வாசிக்க கேட்ட பகுதி வருகிறதைக் காண்கிறோம்.

….அவர்கள் தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவின் தனிமை மற்றும் அவரை சூழ இருப்போரை இனக்காட்டுவதாக அமைகிறதை கண்டுகொள்ளுகிறோம். இயேசுவின் தொடுகைக்கு அருகில் வரும்படியான ஒரு தனிமையின் சூழல் மாற்குவில் அமைந்தபடியால் தான் அவர் “நீ  இதை ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு” (மாற்கு 1: 43) என்கிறார். இங்கோ அவர்கள் சமூக கட்டுப்பாட்டால் அவருக்கு அருகில் வர இயலாதபடி இருக்கும்போது தாமும் அவர்களைப்போல் சத்தமிட்டு (அப்படித்தான் இருக்கவேண்டும்) நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார் (லூக்கா 17: 14).

இயேசுவின் சொற்களுக்கு கீழ்ப்படிந்து அனைவரும் செல்லும் வழியில் அவர்கள் தொழுநோய் நீங்கி அவர்கள் சுத்தமாகிறார்கள். இம்மகிழ்ச்சியின் செய்தி விரைவாக எடுத்துச் சென்று ஆசாரியர்களுக்குக் காண்பிக்கப்படவேண்டும். ஆசாரியர் அவர்கள் செய்யவேண்டிய சடங்குகளை குறிப்பிடுவார்கள். ஏழையிலும் ஏழை கூட இவ்விதமான சடங்கைச் செய்ய மோசே வாய்ப்பளித்திருப்பதால் பொருள் ஒரு முக்கிய தேவை இல்லை. உடனடியாக சென்று இவ்விதமான ஒரு பலியைச் செலுத்திவிட்டால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் ஐக்கியமாகிவிடலாம் எனும் உந்துதலோடு அனைவரும் ஆசாரியனைக் காண விரைகிறார்கள். குணம் அடையும் வரை தொழுநோயாளிகள் எனும் ஒரே அடையாளத்துடனிருந்த இவர்கள், குணம் அடைந்த பின்பு ஒன்பது யூதர் ஒரு சமாரியர் எனும் அடையாளத்தை பெறுகின்றனர். இவ்வடையாளம் அவர்களை பிரிக்கிறது.

இச்சமய வேறுபாட்டால் ஒன்பது யூதரும் தங்கள் சமய கடமை செய்யும்படி விரைகிறார்கள். இம்மட்டும் தங்களோடிருந்த ஒருவனின் எதிற்காலம் குறித்த எந்த கவலையுமற்று தங்கள் வாழ்வில் பெற்ற நன்மைகளே பெரிது எனும் குறுகிய மனநிலையோடு அவர்கள் செல்லுகிறார்கள். சமாரியன் நின்று யோசிக்கிறான். தன்னை அவர்களோடு இணைக்கும் சமயமோ, நோயோ தன்னிடம் இல்லாததால் தான் தனித்து விடப்படுவதை எண்ணி ஏங்குகிறான். எனினும் கடவுள் தன் வாழ்வில் செய்த நன்மைகளை புகழ அவன் தவறவில்லை. அந்த புகழ்ச்சியை அவன் உள்ளத்திலிருந்து எழும்படியாக அமைக்கிறான். சடங்குகளை விஞ்சும் ஒரு உன்னத பலி, நன்றி பலி அவன் நாவிலிருந்து புறப்படுகிறது.

இயேசு அன்றைய சமய சூழலை அறியாதவர் அல்ல. ஆனால் அதை அவர் புரிந்துகொண்டிருந்த விதம் திருமறையை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டிருப்பதால் எழுந்த புரிதல். பலி எனும் சடங்கு சமயம் சார்ந்து தேவை என்பது அதன் தேவையையும் அவர் பண்பாட்டு கூறின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுகிறார். ஆனால் தாவீது, தனது வாழ்வு பாவத்தில் தோய்ந்து அமிழ்ந்து போன பின்பு பாடுகின்ற உணர்ச்சிமயமான பாடலில் “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான  இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங் 51: 16,17) உங்கள் தகனபலிகளையும், போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன் (ஆமோஸ் 5: 22)  நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோஸ் 5: 24) எனும் ஆமோசின் கூற்றை நாம் பரிசீலிக்க அழைக்கிறார்.

யாருமற்றோருக்கு கடவுளே துணை எனும் உறுதியோடு கடவுளை மகிமைப்படுத்தியபடி நோய் நீங்கிய சமாரியர் இயேசுவண்டை வருகிறார். அவர் ஒருவேளை தன் சமய சுத்தீகரிப்பின்படி ஏதும் செய்யச் சென்றிருக்கலாம் அல்லது தனது குடும்பத்தினரைக் காணும் ஆவலுடன் ஒடோடிப் போயிருக்கலாம். எனினும் அவர் அவைகள் எல்லாவற்றையும் விட கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் துதியே சிறந்தது என முடிவுக்கு வந்து. எங்கே தனக்கு கருணை கிடைத்ததோ  அங்கேயே தனது நன்றி வெளிப்பாட்டை காண்பிக்கிறார். இதன் மூலம் இயேசுவை அவர் ஆசாரியராக ஏற்றுக்கொள்ளுகிறார். அதைத் தொடர்ந்து அவரே கடவுள் எனும் முடிவோடு அவர் பாதத்தருகில் முகம்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான் (17)

இதைத் தொடர்ந்து இயேசு கேட்கும் கேள்வி அர்த்தம் பொதிந்ததாக வேளிப்படுகிறது. அவர் ஊழியத்தின் தன்மையை அவரைச் சார்ந்தவர்கள் புரிந்துகொள்ளாமலிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அவரால் பயன் பெற்றோர் பத்துப் பேர் என்றாலும் அவரது சமூகத்தின் அடையாளமாக காணப்பட்ட ஒன்பதுபேரும் ஒட்டுமொத்தமாக கடவுளை புறக்கணித்ததை அவர் வேதனையோடு பகிர்ந்து கொள்ளுகிறார். “தேவனை மகிமைப்படுத்துவதற்கு இந்த அன்னியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே” (லூக்கா 17: 18) எனும் இடத்தில் இயேசுவே கடவுளின் சார்பாக நிற்கிறதை யூதர்கள் மறந்துபோனதை சுட்டிக்காட்டுகிறார்.

குணமடையவேண்டும் என்கிற ஆவல் – துன்புறுவோரோடு நமக்குள்ள உறவை பிரிக்கும் ஒன்றாக அமைகிறதா? அருகில் இருந்து உதவி செய்யும் கடவுளை புரிந்து கொள்ள தடையாயிருக்கிறதா? இக்கேள்விகளை உள்ளார்ந்து நாம் கேட்போமென்றால் நற்செய்தி நாயகன் இயேசுவின் தொடுகையால் நாம் பூரண குணமடைந்தோம் என்பதே பொருள்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

+91 8238 503 714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

13.10.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

தவறவிடும் பாதைகளும் – தேடிக்கண்டடையும் தரிசனங்களும்

செப்ரெம்பர் 15, 2013

திருமறைப்பகுதி: எரேமியா 4:11 – 12 , 22 – 28, 1 திமோத்தேயு 1 :12 – 17, லூக்கா 15:1 – 10

காற்றை நாம் பல வழிகளில் புரிந்துகொண்டாலும் அவற்றின் இயல்பு என்பது நமது அறிதலைத் தாண்டியது என்பதே இயேசுவின் வார்த்தை வெளிப்படுத்துகிறது. “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” (யோவான் 3:8) மெல்லிய புல்லாங்குழலாகட்டும், ஒரு படையையே ஆயத்தப்படுத்தும் எக்காளமாகட்டும் காற்றைக்கொண்டே அவை செயல்படுகின்றன. எரியும் திரியாகட்டும் பற்றியெறிகின்ற காடாகட்டும் காற்றின் மையமே அதைக் கட்டுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் செல்வதை நாம் கண்டுகொள்ளுகிறோம். நீர்குமிழி போன்ற வாழ்விலே நாம் கண்டுணரத்தக்க  காற்றின் இயல்பு நமது வாழ்வில் இழுத்துவிடும் மூச்சைப்போன்று பின்னிப்பிணைந்தே இருக்கின்றது.

 

புயல் குறித்து நமது அனுபவங்கள் யாவும் பத்திரிகைகளிலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட படியினால் நமது நேரடி அனுபவங்கள் மிகவும் குறுகியது. எனினும் தானே புயலினால் புதுவையின் மொத்த கட்டமைப்புகள் சீரழிந்தன, இயல்பு நிலை திரும்புவதற்கு பல வருடங்கள் அகும், நூற்றுக்கணக்கனோர் பலியாயினர், போன்ற தலைப்புகளின் மூலம் காற்றின் வலிமையை நாம் நடுக்கத்துடனே அறிந்து கொள்ளுகிறோம்.

 

இன்னுமொரு நிகழ்வை இதற்கு ஒப்பாக கூறப்படுகிறதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களின் அனைத்து கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளன, இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் வெறிச்சோடின, இலங்கையில் இரத்த ஆறு ஓடுகிறது.

 

இயற்கையால் ஏற்படும் அழிவைவிட செயற்கையாக மனிதன் ஏற்படுத்தும் நிகழ்வுகளால், ஏற்படுத்தும் அநீதியினால் நடைபெறும் அழிவுகள் மிகவும் அதிகமானவைகள். எரேமியா இதையே தீர்க்க தரிசனமாக கூறுகிறார். தேசம் அழிவை நோக்கி இருக்கிறது என்று தனது  அனைத்து ஆற்றலையும் செலவழித்து கூறுகிறார். நாங்கள் யார்? 120 வருடமாக சொன்ன நோவா பேச்சையே கேட்காதவர்கள் அல்லவா? எரேமியா சொன்னவுடன் கேட்கவேண்டுமா என்ன என நினைத்திருக்கலாம்.

 

அழிவு எனும் எச்சரிக்கையை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பதை ஒரு சில வாழ்க்கை அனுபவங்களோடு உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். சுனாமி ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றியவர்களில் நானும் ஒருவன். அப்போது அறிஞர் ஒருவரால் கூறப்பட்ட வாசகம் இது “கடல் பொங்கி வரும் யாரும் கடலுக்கருகில் செல்லவேண்டாம் என்று கூறியிருந்தால் இன்னும் அதிகமானோர் மரணமடைத்திருப்பர்” இந்திய பொது மனம் எச்சரிக்கைகளை எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அது ஒரு வேடிக்கை மனநிலைக் கொண்டது. எதையும் மிக எளிமையாக்கி தனக்கு வசதியாக புரிந்துகொள்ளும் தன்மையுள்ளது.

 

இதெல்லாம் ஏற்ற உதாரணங்கள் என மனக்கணக்கு போடுபவர்கள் ஒரு உண்மைக்கணக்கே போடுவதற்கு வாய்ப்புத் தருகிறேன். டாஸ்மாக் மது விற்பனை 2003 ஆண்டு சுமார் 3500 கோடியிலிருந்து 2013 அம் ஆண்டில் 25000 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த செங்குத்தான ஏற்றம் எப்படி சாத்தியமாகிறது. எச்சரிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெருவாரியான மதிப்பில்லை என்பதே தெளிவான பதில். ஜூலை 3, 2013 டைம்ஸ் ஆஃப் இந்தியவில் காணப்பட்ட ஒரு தலைப்பு  “குஜராத்தில் மது வேண்டும் அனுமதி பெற இணயதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்” (“Now apply for liquor permits online in Gujarat”). எல்லா மது பாட்டில்களிலும் எழுதியிருக்கும் வாசகம் “குடி குடியைக் கெடுக்கும்”.

 

பலவகையான மனநிலைகள் இதனுள் பொதிந்திருக்கின்றன குற்றாலத்தில் வளையத்தைத் தாண்டி குளிக்கக்கூடாது எனும் அபாய எச்சரிக்கையை துச்சமாக நினைக்கும் அசட்டுத் தைரியம் கொண்ட இளைஞனின் மனநிலையிலிருந்து ஆறிலும் சாவு நூறிலும் சாவு என வாழ்வைக் குறித்து யோசிக்காதபடி சாவிற்கான பெட்டி முதற்கொண்டு அனைத்தையும் தயாரிக்கும் பணியை தத்துவார்த்தமாக பேசித்திரியும் கூட்டம். தங்களைச் சுற்றி ஏற்படும் மாய வலையிலிருந்து தப்பிக்க இயலா வண்ணம் கண்கள் மூடப்பட்டு சிறிது சிறிதாக அழிவின் முடிவிற்குப் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள். என பல் வகைகளில் இவர்களை நாம் வேறு படுத்தலாம்.

 

பல வேளைகளில் வாழ்வளிக்கும் இறை வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியாமல் போய்விடுவதே நமக்கு வாடிக்கையாகிப்போனது. நாம் அனைவரும் ஒருவித மாய வலையால் கட்டப்பட்டிருக்கிறோம். முதலில் வலை எவ்விதமானது என அறியாவிட்டால் நம்மால் அதிலிருந்து விடுபட இயலாது. இயேசுவே அனைத்தையும் சொல்லிவிட்டு “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்” என்றே மக்களை மிகவும் தெளிவாக புரிந்து தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவ்விதமாக குரல் எழுப்புவோர் அனைவரும் பெருந்திரளாக கூச்சலிடும் கும்பலுக்குள் ஒடுங்கிப்போய்விடுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. எதற்காக பெரும்பாலோர் கேளாத ஒன்றைக் கூறவேண்டும்? அதனால் விளையும் பயன் தான் என்ன?

 

திமோத்தேயு நிரூபம் பல ஆய்வாளர்களால் பகுக்கப்பட்டு தூய பவுல் அடிகளாரின் உடன் பணியாற்றிய ஒரு ஊழியரின் படைப்பு என்பதே இன்றைய புரிதல். அதன் மொழியும் அதன் உட்கூறுகளும் அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க துணை நிற்கின்றன. எனினும் பவுலோடு பணியாற்றிய திமோத்தேயுவுக்கு அவர் வழங்கும் அரிவுரைகள் யாவும் இன்றைய தினத்தில் அருட்பணியாளர்களுக்கும் பொருந்திடும் என்பதில் ஐயமில்லை. பக்திமிக்க யூத கிறிஸ்தவ தாய்க்கும் கிரேக்க தகப்பனுக்கும் ஏற்பட்ட கலப்பு மணத்தால் அவர் பிறந்தவர் என்பதை நமக்கு அப்போஸ்தலர் 16: 1 தெளிவுபடுத்துகிறது. திருச்சபையில் ஏற்பட்டுள்ள தவறான போதனைகளைக் களையுமாறு பவுல் வேண்டுவதுபோல இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளது அன்றைய கலகட்டத்தில் ஏற்புடைய ஒன்றே. எனினும் இதன் உள்ளடக்கம் சவால் மிக்கதாய் நம்முன் விரிகின்றன.

 

தூய பவுல் அடிகளாரின் வாழ்வை ஒரு மாதிரியாகக் கொண்டு அளவிடவேண்டிய விசுவாசத்தின் அழைப்பு இங்கே கோரப்படுகிறது. அவ்விதமான அழைப்பு ஒரு உறுதியான விசுவாச வாழ்வில் நம்மை வழி நடத்தும் எனும் கருத்தே மேலோங்கி எழுவதை நாம் கண்டுகொள்ளுகிறோம். தனது வாழ்வின் துவக்கத்தில் அவர் தான் பிறந்த சமயமாகிய யூத சமயத்தை கற்றுத் தேர்ந்து பிற்பாடு அவற்றின் மேல் பக்தி வைரக்கியம் கொண்டு கலகக்காரர்கள் என எண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை ஒடுக்கினார். தனது சமயமும் தனது சமய நூலும் அதற்குத் துணைபோனதாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒருநாள் ஆண்டவர் அவர் வாழ்விலே இடைபட்டார். வல்லமை நிறைந்த கடவுள் பவுலோடு பேசும் வார்த்தைகள் அழுத்தம் நிறைந்தவை எனினும் நமக்கு அன்நிகழ்ச்சியின் நாடகத்தன்மையே விஸ்வரூபம் எடுத்து ஆண்டவரின் சொற்கள் புரியும்படியாக விளங்கிகொள்ள இயலாதபடி செய்துவிடுகின்றன.

 

“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்பது பவுலை மிகவும் அசைத்தது. கடவுள் துன்புறுவாரா? அது எப்படி ஆகும் என அவர் எண்ணுகிறார். கடவுளின் பிள்ளைகளுக்கு விரோதமாக செய்யப்படும் தீங்குகளே கடவுளுக்கு நாம் செய்யும் தீங்கு எனும் புரிதல் பெற்றவராக மனம் மாறுகிறார். எனினும் அறியாமல் தான் பாவம் செய்திருந்ததால் இரக்கம் பெற்றேன் என 13ஆம் வசனத்தில் அவர் கூறுவதைப் பார்க்கும்போது கமாலியேலின் பாதப்படியில் படித்த மாபெரும் கல்விமானுக்குள் இவ்வடக்கம் இயேசுவால் அன்றி எங்ஙனம் உருப்பெற்றிருக்க இயலும்?

 

இவ்விதமான ஒரு புரிதல் நமக்குள் எழுகிறதா? கடவுளின் வார்த்தைகள் எழுதப்பட்டவை என எண்ணி தன்னால் ஆண்டவரின் அன்பை அறிய முடியாத பவுல் அதன் பின் நியாயப்பிரமாணங்கள் யாவும் பாவிகளுக்குரியது என இவ்வதிகாரத்தின் முதற்பகுதியில் கூறி நிற்பது எதைக் காட்டுகிறது? பலவீனமானவர்களை நமது பலத்தால் நாம் துன்புறுத்தும்போது கடவுள்  துன்பம் கொள்கிறார். அவர் தனது இரக்கத்துடனும் காயங்களுடனும் மட்டுமே நம்முடன் இடைபடுகிராறன்றி தனது பலத்தினால் அல்ல. எனவே இக்கடிதம் தனது பெற்றோரின் கலப்பு மணத்தால் தன் வாழ்வு அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஊழியக்காரராகிய திமோத்தேயுவுக்கு மட்டுமல்ல ஆண்டவரின் இரக்கத்தை வேண்டும் அனைவருக்கும் உரியதாகிறது.

 

99 ஆடுகள் என்பது 1 ஆட்டிற்கு முன் மிகப்பெருந்தொகை. எனினும் ஆண்டவரின் உவமை அவ்வெண்ணிக்கையை பெரிதாக எண்ணாமல் தொலைந்துபோன ஒன்றைத்தேடுவது எனும் உயர் தள நோக்கத்தைச் சொல்லுகிறது. சிறுபான்மையினரை முக்கியத்துவப்படுத்தவேண்டும் என்கிற ஒரு பேருண்மையை சுட்டி நிற்கும் ஆவணமாக இந்த உவமை எழுச்சியுற்று நிற்கிறது. எனினும் ஒரு சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆடு எப்படி காணாமல் போனது? வழி தவறியிருக்க வாய்ப்பில்லை என்பதை மெய்ப்பர்கள் அனைவரும் அறிவர். “மாடு தன் எஜமானையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்றார்” (ஏசாயா 1: 3) ஆட்டைத் திருடுபவர்களால் ஆடு காணாமல் போயிருக்கலாம், ஒருவேளை வழியில் கண்ட பசுமையினால் மெய் மறந்து ஆடு பின் தங்கியிருக்கலாம் – காபி பிறந்த கதையை நாம் அறிவோமே. ஆடு கண்டுபிடித்தளித்த பரிசல்லவா அது. முரட்டு ஆடுகளின் வலிமையால் இந்த ஆடு படுகுழிக்குள்ளோ முட்புதருக்குள்ளோ தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் முயற்சி என்பது கருணை மிக்க ஒன்றாக உருவெடுப்பதைக் காண முடிகிறது.

 

 

99 ஆடுகள் வனந்திரத்திலே நிற்க, ஒரே ஒரு ஆட்டைத் தேடுகின்ற சாகசம், அன்பு, கடமையுணர்ச்சி, தீராத வேட்கையுடன் தேடுதல் போன்றவைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவைகள். ஒன்றைப் பிரிந்து தனித்து நிற்கும் 99 ஆடுகள் எவ்வகையிலும் மேன்மையானவைகள் அல்ல என்றே இயேசு கற்பிக்கின்றார். தொலைந்து போனதைத் தேடுவதே நல் ஆயனின் கடமையே அன்றி தொலைவிலோ அருகிலோ இருப்பதை திருடி வருவது அல்ல என்பதும் இதனுள் உறைந்து நிற்கும் புரிதலே.

 

 

 

வெள்ளிகாசு என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. அதை இழப்பது தாங்கிகொள்ள முடியாத ஒரு சுமையாக அதை சேகரித்த பெண்மணி கண்டுகொள்ளுகிறாள். வியர்வை சிந்தி சம்பாதித்தப் பணம். அதை இழந்தாலும் 9 வெள்ளிகாசுகள் இருக்கின்றனவே என எண்ணாமல் தான் பொறுப்புடன் சேகரித்து வைத்திருந்த அந்த நாணயத்தை தேட ஆரம்பிக்கிறாள். வீட்டில் ஒளியேற்றப்படுகிறது, அதுவரை முக்கியத்துவப்படுத்தாத ஓரங்கள் மற்றும் இண்டு இடுக்குகள் யாவும் சுத்தம் செய்யப்பெறுகின்றன. நாணயம் தான் தொலைந்து போனதற்காக வருத்தப்பட இயலாது ஆனால் அதை இழந்தவர் அதன் மதிப்பை உணர்ந்தவராவார். அம்மதிப்பிற்காக தனது வாழ்வில் ஏற்படும் இன்னல்களையோ சிரமங்களையோ தனது உடல்மேல் ஏறும் புழுதியோ ஒரு பொருட்டல்லவென்று தனது தேடலை கைவிடாது தொடருகிறாள். இறுதியில் அதைப் பெற்ற உடன் மகிழ்வோடு இச்செய்தியை அயலகத்தாருக்கு சொல்லுகிறாள். அனைவரும் மகிழ்வடைகின்றனர்.

 

இயேசு பாவிகளோடு உணவருந்துவதைக் கண்ட பரிசேயரும் வேதபாரகரும் அவர் செயலைக்கண்டு முறுமுறுத்தபோது அவர் மேற்கூறிய உவமைகளைக் கூறினார் எனக் கண்டுகொள்ளுகிறோம். பாவியிலும் பிரதான பாவியாக பவுல் தன்னைத்  தாழ்த்துகிறதையும் அதைவிட அதிகமாய் இயேசு துன்பபடுகிறவராக காட்சியளிப்பதையும் கண்டுகொண்டோம். எரேமியாவின் வாக்கைப் புறக்கணித்த மக்களால் ஆண்டவர் அடைந்த துன்பத்தை எவ்விதம் நாம் அளவிட முடியும்? ஒருவரை ஒருவர் ஒடுக்குகின்ற சூழல் மலிந்திருந்தது கண்டு வியாகுலப்படுவதையும் இறைவாக்கினர் மூலம் எடுத்துரைப்பதையும் புரிந்து கொள்ளுவது எங்ஙனம்? எச்சரிப்புகள் இருந்து தொலைந்துபோய்விடுகின்ற சூழலில் தேடி வரும் இறைவனைக் காண்கையில் நம்மால் ஏற்பட்ட வடுக்களை அவரில் காண்போமென்றால் அது எவ்விதம் நமது விசுவாசத்தை பெலப்படுத்தும்?

 

இன்றைய தினத்தில் கூடங்குளம் தமிழகத்தின் விடிவெள்ளியாக இந்தியாவின் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். அதற்கு அருகிலே இடிந்தகரை  எனும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த  கத்தோலிக்க தேவாலயத்தில் குருவானவரும் மக்களும் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். எங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் நிலவுகின்றது. தெளிவுகளைத் தாருங்கள் எனக் கேட்போரை அரசு சிறையில் அடைக்கிறது. அமைதியாய் போராடும் அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்கிறது. எனினும் அவர்கள் காணாமல் போன ஆடுகளாக மற்ற 99 ஆடுகளையும் விட்டுப் பிரிந்து நிற்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள். ஆம் மிகவும் முக்கியமான ஆடு அது. ஆண்டவருக்காய் தனித்து நிற்கும் ஆடு. அவரது அன்புக்குரிய ஆடு. மற்ற ஆடுகளால் தனித்த ஆட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு காரணம் ஒன்று உண்டு. இந்திய அரசின் புலனாய்வுத்துறை கிறிஸ்தவ திருச்சபைகளின் மற்றும் ஸ்தாபனங்களின் கணக்குகளையும் வழக்குகளையும் குடைய ஆரம்பித்தது. ஆனைவரும் லஞ்சத்தை மஞ்சமாக கோண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள். சுகமான இவ்வுறக்கத்தை அவர்கள் விரும்பினார்கள். ஒவ்வொருவராய் நீதியின் போராட்டத்திற்கு நல்கிய ஆதரவை விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.

 

நாம் பாரம்பரியத்தை மட்டுமே கைகொள்ளுகிறவர்கள் என எண்ணுகின்ற கத்தோலிக்கத் திருச்சபை இன்று பல படிகளில் நமது ஆன்மீகத்தை விஞ்சி சென்றுகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இளைஞர்களுடன் போப் ஃபிரான்சிஸ் (உலக இளைஞர் நாள் 2013) பேசிய வார்த்தை வாத்திகனிலிருந்து எழத ஒரு வீரிய வார்த்தை.  “நமக்கு இன்று புனிதர்கள் வேண்டும் – அங்கி இடாத, முக்காடிடாத, ஜீன்ஸ் மற்றும் டென்னிஸ் காலணிகள் அணிந்தபடி. இருபத்தோராம் நூற்றாண்டின் புதுமைகளுக்கு ஈடுகொடுக்கும் புதிய பார்வை கொண்ட புனிதர்கள் வேண்டும்”

 

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.” 1 தீமோத்தேயு 1: 12 & 13 இவ்வசனங்கள் நாம் மனம் மாறுதலடைய வேண்டியவைகளாய் இறை அடியவரின் வாழ்வின் அனுபவத்தை ஒட்டியே நிற்கின்றன.

 

நாம் வாசிக்கும் திருமறைக்கும் அதன் ஆக்கியோனாய் செயலாற்றுகின்ற தூய ஆவியருக்கும் நாம் உண்மையுள்ளவர்களாக காணப்படுகிறோமா? நமது வார்த்தைகளால் காயமடைவோர், பெலனடையவும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றதா? இவையே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகவும் கண்டடையும் தரிசனமாகவும் காணப்படுகிறது.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

+91 8238 503 714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

15.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

அழியா வடிவம் பெறுவோம்

செப்ரெம்பர் 9, 2013

திருமறைப்பகுதி:  எரேமியா 18: 1 – 11, பிலேமோன் 1 – 21 , லுக்கா 14 : 25 – 33,

 

குயவன் எனும் ஒரு உருவகத்தை எரேமியா கையாள்வது நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. “குயவனே குயவனே படைப்பின் காரணனே” எனும் பாடல் நாம் உருகி பாடுகின்ற ஒன்று. குயவர்கள் இன்று நம்மை விட்டு வெகுதூரத்தில் சென்றுவிட்டதைப் போல், படைப்பின் காரணரும் சென்றுவிட்டதை தான் இன்றைய திருமறைப் பகுதி நமக்கு உணர்த்துகிறாதா அல்லது எரேமியா தனது காட்சியை இஸ்ரவேலரை ஆண்டவர் வனைகின்ற வண்ணம் தனது மக்களை வனைகின்றவர்  எனக் கொள்ளலாமா?

 

மெதடிஸ்ட் திருச்சபை இந்நாளிலே ஒரு குயவனை நாம் ஆலயத்திற்கு அழைத்து, அவன் எவ்விதம் பணி செய்கிறான் என்பதை கண்டுணர அழைப்பு விடுக்கின்றது. ஒரு வகையிலே நாம் அவ்விதமான ஒரு சூழலிலே நமது தொழுகையை அமைத்துக்கொள்ளாதபடியினால் சொற்களினூடக என் அனுபவத்தை காட்சிபடுத்த இருக்கிறேன். எரேமியா கண்டது ஒரு குயவனின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அவர் அதை சுருக்கி நமக்கு கொடுத்திருக்கிறார் அதை விரிவு படுத்தும் தோறும் அது நமக்கு பயனுள்ளதாய் அமையும் என நான் நம்புகிறேன்.

 

நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் சுங்கான்கடை என்ற இடத்தில் ஒரு பானைத்தொழிற்சாலை இருப்பது எப்போதும் என்னை பார்க்கத்தூண்டும். ஒருநாள் அந்த இடத்தை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். ஃபாதர் தொம்பர் எனும் ஏசு சபை (ஜெசுயிட்) பாதிரியார் இதை ஆரம்பித்ததாக ஜெயமோகன் மூலம் பின்பு அறிந்துகொண்டேன். ஒரு தொழிற்சாலைக்குரிய வேகம் அங்கே காணப்பட்டது எனினும் குடும்பமாக சிறு பிள்ளைகள் உட்பட அனைவருமாக உழைத்துக்கொண்டிருந்தனர். காய்ந்த களி மண் ஒருபுறம் குவிக்கப்பட்டிருந்தது. மண்ணைக் குழைப்பதற்காக ஒருசிலர் மிதித்துக்கொண்டிருந்தனர். குழைத்தமண் சக்கரத்தில் இடப்பட்டு குயவனால் பானையாக உருப்பெற்றது. அதன் வடிவம் மற்றும் நேர்த்தியை மெருகூட்டும்படியாக குயவர் பெண்கள் பானைகளை மடியில் வைத்து செம்மண் நீரினால் நிறமேற்றி, தங்கள் குழந்தைகளுக்கு  எண்ணை தடவி விடுவதுபோல் நெளிவுகளை தட்டி சரிசெய்துகொண்டிருந்தனர். குழந்தைகள் பானைகளை எடுத்து நிழலில் காயவைத்துக்கொண்டிருந்தனர்.

 

எரேமியா ஏன் குயவன் செய்யும் பானையை முக்கியப்படுத்துகிறார்? குயவனுக்கும் களிமண்ணிற்கும் உள்ள தொடர்பை எப்படி அவர் ஆன்மீகமாக காண்கிறார் என்பது மிகவும் முக்கியமான கேள்வி.

 

வாழ்வில் கடவுள் அனுதினமும் நம்மோடு எளிய விதத்தில் உரையாடிக்கொண்டே இருக்கிறார். அவைகளைப் புரிந்துகொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதே கடவுளை வருத்தும் விஷயமாகிப்போனது. எளிமையில் இறைவன் பேசுவதை அறியாதவர்களே ஜெபம் எனக் கூறிக்கொண்டு செயலாற்றுதல் ஏதும் இன்றி ஆண்டவர் பேசுவதை அறிய எத்தனிக்கிறார்கள். அதுவும் தாங்களே பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆண்டவரை பேச இயலாதபடி செய்துவிடுகிறார்கள். எரேமியா கடவுளின் செயலை குயவனின் வீட்டில் மண்பாண்டம் செய்யும் தருணத்தில் கண்டுகொள்ளுகிறார். இவ்வித தருணங்கள் நம் வாழ்வில் பலமுறை வந்துசென்றும் கடவுளின் வார்த்தையை தவறவிட்ட துரதிருஷ்டசாலிகள் நாம்.

 

இறைவாக்கினர், கர்த்தருடைய வார்த்தையை இனம்கண்டுகொள்ளுவது எளிதான ஒன்றல்ல என்பதே எரேமியா வாயிலாக நாம் கண்டுகொள்ளுகிறோம். பல வேளைகளில் எரேமியாவின் கூற்று மக்கள் விரோதமாக எழும்புவதைப்போல் தோன்றினாலும், கடவுளின் கருணையின் பார்வை அதனுள் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். கடவுள்  நீதியாய் நியாயந்தீர்க்கும் கடவுள் ஆகவே அநீதியான நம்மை அவர் அழித்திடுவார் எனும் எண்ணமே நம்முள் ஓங்கியிருப்பதால் நம்மால் அவரை முழுதும் புரிந்துகொள்ள முடியமல் போய்விடுகிறது.

 

இவ்விடத்திலேயே நமது கற்பனையையும் நமது ஊன்றிக் கவனிக்கும் திறனையும் நாம் பயன்படுத்தவேண்டும். களிமண் சுடப்படும் வரையில், மறுபடியும் மறுபடியும் பலவித கலவைகளினாலே உருப்பெறும் சாத்தியமுள்ள ஒன்று. உருவாக்கும் குயவன் எப்போதும் களிமண்ணை வீசியெறிவதில்லை மாறாக அவர் அதன் வடிவம் முழுமை பெறும்பொருட்டு அதை இன்னும் மென்மையாக்குகிறார். மென்மையாக்கும்படியாக அதை இன்னும் பிசைகிறார், துவைக்கிறார், அடிக்கிறார், மிதிக்கிறார். இறுதியில் களிமண் ஒரு அழகையும் பயனையும் நிறைக்கும் ஒன்றாக உருவெடுக்கின்றது. இத்துடன் அதை பின் தொடர்ந்துவரும் சோதனை நின்றபாடில்லை. அதை தீச்சூளையிலே வைக்கிறார்கள். தீயினால் சூழப்பட்டு அது இன்னும் வெம்மையிலே அது வெந்துகொண்டிருக்கிறது. தனது கரிய நிறம் மாறி அது சென்னிறமாக மாறுகிறது. உச்சகட்ட ஒரு மாறுதல். அம்மாறுதலுக்குப் பின்பு அதன் அழிவு அத்துணை எளிதானதில்லை. ஆம் இன்றுமட்டும் அகழ்வாய்வுகளில் நம் பெற்ற உடைந்த பானை ஓடுகளே நமது வரலாற்றை வீரியத்துடன் முன்வைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர் ஒரு சிறந்த உதாரணம்.

 

குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதை திருத்தமாய்ச் செய்யும்படிக்கு , தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாய் வனைந்தான் (எரேமியா 18: 4) இக்காட்சி நமக்கு ஒருசில காரியங்களை அறிவுறுத்துகிறது. கடவுளின் விருப்பத்திற்கு மாறாக நாம் உருப்பெற முயலும் தோறும் அவர் நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். மனுக்குலம் அவர் விரும்பும் வடிவம் பெறும் மட்டும் அவர் தனது திரிகை முன்னின்று எழும்புவதில்லை எனும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறார். அதற்காக நமது நெகிழும் குழையும் வளையும் உருப்பெறும் தன்மையை வேண்டி நிற்கிறார்.

 

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” (மத் 7:1), என்பது நாம் ஒருவரையும் தீர்ப்பிடக்கூடாது என்பதாக நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். பல  நேரங்களில் இவ்வார்த்தைகளின் பின் நாமும் ஒளிந்துகொள்ளத்தக்க வசதி இருப்பதினால் தானே. ஆனால் தொடர்ந்து அருள் நாதரின் வார்த்தைகளைக் கவனிப்போமானால் அவர் சொல்ல வருவது தெளிவு பெறும். “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (7.2) என இயேசுவின் மலைப் பொழிவு “தீர்ப்பின்” சமநிலையை எடுத்துக்கூறுகிறது. நமக்கு வேண்டும்போது நியாயத்தை வளைப்பதும் எதிராளிக்கு விரோதமாக சட்டம் பாய்வதும் ஏற்புடையது அல்ல என்பதே இயேசுவின் நடுநிலைப் பார்வையாக நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எச்சூழலிலும் நேர்மையே நமது மதிப்பீட்டின் அளவுகோலாக இருக்கவேண்டுமே ஒழிய நமது எளிய ஆதாயங்களுக்காக, எளிய புரிதலுக்காக நாம் மாபெரும் உண்மைகளை பலியாக்கிவிடக்கூடது என்பதையே இயேசு உரத்துக் கூறுகிறார்.

 

தீர்ப்பிடுதல் ஒரு நீதிபதிக்கு உரிய வார்த்தை. அவ்வார்த்தை சார்பு அற்றது. எது சரி எது தவறு என குறிப்பிடும் ஒன்றையே தீர்ப்பிடுதல் எனும் வார்த்தை சுட்டி நிற்கின்றது. எப்பக்கம் நாம் சார்பெடுக்கவேண்டும் எனும் ஒரு தெளிவையே தீர்ப்பு நமக்கு வழங்குகிறது. தீர்ப்பை கவனிக்காதபடி நாமே முடிவு செய்வதோ, நமக்கு வேண்டிய வித்தத்தில் தீர்ப்பு அமையவேண்டும் என்பதோ கடவுளுக்கு எதிரான செயலே. “கட்டுவேன் நாட்டுவேன் என்றும்…”(9) கூறும்போது வசனம் நம்மை மேம்படுத்தவும் ஆசி வழங்கவும் முன்நிற்பது போல, “…இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி….” எனும் வசனம் திரும்ப இயலா கோணலான வழிகளைத் தெரிந்துகொண்டு நடப்போரை அழித்தே சீர் செய்யவேண்டும் எனும் நெருக்கடிக்குள் படைத்தவரை உந்துகிற கட்டமாக காண்கிறோம். எனினும் வசனங்கள் 8, 10 கடவுளது தீர்ப்பிடுதல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் இறைவாக்கினர் பதிவு செய்ய மறக்கவில்லை.

 

ஒருபோதும் குயவன் தான் வனைகின்ற மண்ணோடு கோபம் கொண்டுவிட இயலாது எனும் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குயவன் அறிவான், தான் உருவாக்கும் பானை அதன் வடிவத்தை எட்டவில்லையென்று சொன்னால் அதனால் எவ்வித பயனும் விளையாது. ஆகவே பயனற்ற ஒன்றை உருவாக்குவதைவிட பயனுள்ள வடிவை களிமண் அடையும்படி அம்மண்ணை மீண்டும் பானையாக உருவாக்கும் சுழற்0சியில் ஈடுபடுத்துகிறார். இது எவ்வகையிலும் அம்மண்ணை அழித்துவிடுவதற்கான செயல் அன்று மாறாக அம்மண் பயனுறும் வகையில் உருபெறவேண்டும் என்ற கரிசனையால் மட்டுமே.

 

மெதடிஸ்ட் திருச்சபை தனது ஆரம்ப காலங்களில் இவ்விதமான ஒழுங்கைப் பேணி வந்தது. கூடுகையில் வருவோரது வாழ்வில் காணப்படும் தவறுகளை மாற்றும்படியான வாய்ப்பை அளித்தது. தவறு செய்வோர் திருந்தும் வாய்பை அளித்தே அவர்கள் கிருபையில் வளரும்படியாக அது ஊக்குவித்தது. சுயபரிசோதனைக்கான ஒரு அம்சமாக அது அனேகருக்கு தோன்றியதால் திருச்சபை மெய்யறிவில் வளர்ந்தது. “தீர்க்க தரிசனம் இல்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்” என்பதை புரிந்தோராய் அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி வளர்ந்த திருச்சபை இது.

 

கடவுள் தீர்ப்பிடுகிறார். நாமும் அவரோடு சேர்ந்து முழுமை நோக்கை அடையும்படியாக தீர்ப்பிடுவது சிறந்தது. எனினும் மனிதர்களாகிய நாம் குறையுள்ளவர்களானபடியாலும் தவறிளைக்கக்கூடியவர்களானபடியாலும் நமது தீர்ப்பை நாம் தாழ்மையோடு முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் கடவுளின் தீர்ப்பு அவ்விதமாக அமையாது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் திறந்தமனதுடன் இருக்கிறார் என்பதே நாம் மகிழும்படியான நற்செய்தி.

 

பிலேமோனுடைய அடிமையாக இருந்த ஒநேசிமு அவரிடம் திருடியதால் சிறையில் இருக்கிறார். தனது முதிர்வயதில் பவுலும் தனது ஊழியத்தின் நிமித்தமாக சிறைசெல்லுகின்ற தருணத்தில் ஒநேசிமுவிடம் கேட்டறிந்து அவன் தனது வாழ்வில் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்குமா என ஏங்குவதை அறிந்துகொள்ளுகிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்த பவுல், அதற்காகவே இக்கடிதத்தை சிறையிலிருந்து எழுதுகிறார். பயனற்ற களிமண்ணை பயனுள்ள பாத்திரமாக அமைக்கும் இறைவாக்கினரின் உண்மைச் சொற்களில் இருந்து இதை உணர்ந்தவராக பவுல் பிலேமோனுக்கு எழுதுகின்ற கடிதத்தில் ஒருசில காரியங்களை முன்வைக்கிறார்.

 

ஒநேசிமு என்பதற்கு பயனுள்ள என்பதே அர்த்தம். தனது கிரேக்க ஞானத்தால் அதையே அவர் வார்த்தை விளையாட்டாக பயன்படுத்தி “முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்”. எனக்கூறி அவனது வாழ்வில் ஒரு புது வடிவம் அவன் எடுப்பதற்காக முயலுகிறார். அடிமையானவனை அடிமையாக மறுபடியும் பிலேமோனிடம் அனுப்பாதபடி அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி தனது கடிதத்தில் மன்றாடுகிறார். மேலும் பவுல் பிலேமோனிடம் வைத்திருந்த நம்பிக்கை அவரது வாழ்வின் நற்சான்று ஆகியவை ஒநேசுமுவின் வாழ்வு மறு வடிவம் பெற காரணமாயிருத்ததைக் கண்டுகொள்ளுகிறோம்.

 

இப்பின்னணியங்களைக் கொண்டே நாம் இயேசுவின் கூற்றை விளங்கிக்கொள்ள இருக்கிறோம். பயனற்றோர் பயன்பெற வேண்டுமாயின்  அவர்கள் மறு ஆக்கம் செய்யப்படவேண்டும். தங்கள் வாழ்வின் மேன்மை என கருதுவனவற்றை அவர்கள் ஒதுக்கிவைத்து விலை செலுத்தவேண்டும் என இயேசு குறிப்பிடுகிறதைக் காண்கிறோம். மூன்று முக்கிய காரியங்களை தனது சீடராக விரும்புவோர் விலையாக செலுத்தவேண்டும் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். மிகவும் தாழ்மையுடனும் மன்றட்டுடனும் இப்பகுதிகளை நாம் நெருங்குவோமென்றால் கடவுளின் வார்த்தை நம்மை இன்று அவரது சீடர்களாக்கும்.

 

லூக்கா இயேசுவை பின்தொடரும் ஒரு பெருங் கூட்டத்தை காட்சிப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து இயேசு இக்கூட்டத்தைக் கண்டு பிரமிக்காமல் தனக்கான ஒரு சிறு கூட்டமே ஏற்புடையது எனும் கருத்தை முன்மொழிவதை பதிவு செய்கிறார். மனத்திண்மையும் தனது பணியில் எவ்விதமும் சமரசமும் செய்துகொள்ளாத இயேசுவின் வாழ்வே இங்கே முன்மாதிரியாக இருக்கிறது. தனது தாயை விட்டு, தனது சகோதரர்களை விட்டு, தான் பிறந்த வளர்ந்த ஊர்களை விட்டு, அவர் தாம் தேவனுடைய குமாரன் என்னப்படுவதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாம் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானர்,  என அவர் பலவற்றை விட்டு விட்டே  தனது பணியைத் தொடருகிறார். இதையே தன்னைப் பின்பற்றி வரவிருக்கும் தமது சீடர்களுக்கு அறிவுரையாக வைக்கிறார். இது கடினமானபடியால் சீடர்களால் அவரின் சிலுவை மட்டும் கூட நிலைநிற்க முடியாது போனது.

 

இன்று எங்கெங்கு காணினும் சீடத்துவ முகாம்கள் நடைபெறுகிறதைக் கண்டு நாம் பெருமையும் பிரமிப்பும் அடைவோம் எனினும் இயேசுவை பின்தொடர்வதற்கும் அவரின் சீடராவதற்கும் உள்ள வேற்றுமைகள் அளவிட முடியாதவைகள். எவரும் அவரை பின் தொடரலாம், தன்னையே வெறுக்காதவன் அவரின் சீடனாக இயலாது எனும் உண்மையை பெருங்கூட்டமாக நின்று அவரை பின்தொடர எத்தனிக்கும் நம்மைப் பார்த்து அவர் எச்சரிக்கையாக கூறுகிறார்.

 

யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் தன் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(26) எவ்விதமான கூற்று இது? நல்ல ஒரு குடும்ப வாழ்வை அவர் நமக்கு ஆசீர்வதித்துக் கொடுத்துவிட்டு இவ்விதமாக கூறுவது எவ்விதத்தில் நியாயம் என எண்ணுகிறோமா? உனக்கடுத்தவனை சினேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சினேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத் 5: 43, 44)

 

தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(27) ரோமரின் ஆட்சிக்கு கீழாக வாழுகின்ற இஸ்ரவேலருக்கு சிலுவை என்றால் என்னவென்பது தெரியும். அது தண்டனை பெறும் ஒரு கருவி மட்டுமல்ல அவமானமும் நிந்தையும் ஒருங்கிணைந்து பெறும் தண்டனை. அதனை எடுக்கவேண்டும் என இயேசு சொல்லும்போது தாமே, அவர் தனது வாழ்வின் முடிவை ஒத்தே தனது சீடர்களின் வாழ்வும் அமையும் என்பதாக சொல்லிச் செல்லுகிறார். ஒருவகையில் அனைவரும் புரிந்துகொள்ள இயலாத கூற்று. அனைவரும் செல்ல இயலாத கடினப்பாடுகள் நிறைந்த ஒரு பயணம் என்பதாக அவர் கூறுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான் (33) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை சினேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது. (மத்தேயு 6:24)

 

களிமண் தன்னிலே பயன் அற்றதாய் இருப்பதும் அதை வடிவமைப்பவனது செயல், கவனம், திறமை, அனுபவம், கரிசனை, தூரக்காட்சி யாவும் களிமண்ணை பயனுறும் ஒன்றாய் மாற்றுகின்றது என்பதே சாரம். அதற்காக மிதிபடுவதும் சூளையிலே வெந்து தணிவதும் மண்ணின் நெகிழ்வு தன்மையால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவ்வித அர்ப்பணிப்பு இன்றி பின்தொடருவோருக்கு நோய்கள் குணமாகலாம், பசி தீரலாம் எனினும் சீடர் எனும் பதவி எட்டாத் தூரமே.

 

இயேசுவை பின்தொடருகின்ற அனைவரிடமும் அவர் கூறுவது இரண்டு உவமைகளுடன் எடுத்தாளப்பட்டுள்ளது. வீட்டைக்கட்டுகிறவன் தன்னிடம் அதற்குரிய பணம் இருக்கிறதா என எண்ணிக்கொள்ளுவது போல, போர் செல்லுமுன் மன்னன் தனது வீரர்களால் எதிரிகளை மேற்கொள்ள இயலுமா என சிந்தித்து பார்ப்பதுபோல என கூறுவது ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். திரும்ப இயலா ஒரு உலகுக்குள் நுழையும் முன்பு அதற்கான அர்ப்பணத்தை வினவும் ஒரு முக்கிய கேள்வி. நீங்களும் நானும் இக்கேள்வியை ஒதுக்கிவிடலாம். ஆனால் இக்கேள்வி என்றேனும் நம்முன் வந்து நம்மை நோக்கி நிற்கும். அதற்கு பதில் சொல்ல இயலாவிட்டால் நாமும் பின்செல்லும் திரளாவோமே அன்றி அவரது சீடர் எனும் உன்னத நிலையை அடையவில்லை என்பதே அப்பொருள்.

 

ஏனோ இயேசுவின் மிக பிரபலமான இறுதி கட்டளை என் மனதில் வந்து போகிறது. “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18 – 20)

 

அப்படியாயின் இன்றைய நமது மிஷனெறி தாகம் நம்மை சீடர்களாக்க அர்ப்பணிக்குமா அல்லது சகல ஜாதிகளையும் சீஷர்களாக்க துரிதப்படுத்துமா? சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை சீஷர்களாக மறுக்கும் நமக்கு பொருந்துமா? நம்மை வனைவோரிடமே மன்றாடுவோம்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்

+91 8238 503 712

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com
08.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

 

ஒன்றிணைக்கும் நற்கருணை – ஒன்றிணைக்கிறதா?

செப்ரெம்பர் 1, 2013

(திருமறைப் பகுதிகள்: சங்கீதம் 81: 1, 10 – 16, எரேமியா 2: 4 – 13, எபிரேயர் 13: 1 – 8, 15 & 16, லூக்கா 14: 1, 7 – 14)

 

கர்த்தரின் பந்தியில் கலந்துகொள்ள வந்திருக்கும் அருமை திருச்சபையோரே! தன்னையே பகிர்ந்த இயேசுவின் திருப்பெயரால் உங்களை நான் வாழ்த்துகிறேன்.

 

பெற்றோர் வணக்கம் நமது மரபு. பெரியோருக்கு உகந்த மரியாதை வழங்குவது சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தான் வயோதிபர்களைக் கண்டால் பேருந்தில் எழுந்து நின்று இடம் கொடுக்கிறோம். சிறப்பு வரிசைகளை அமைத்திருக்கிறோம். பலவித சலுகைகளுக்கு ஏற்புடையவர்களாக அவர்கள் நம் முன் காட்சியளிக்கிறார்கள். “உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்கிற கட்டளை நம்மில் ஒலித்துக்கொண்டிருப்பதால் இவைகளை நாம் கருத்தாய் செய்கிறோம். நல்லதுதான். எனினும் முறைமுறையாக வாசித்த சங்கீதமும், வாசிக்க கேட்ட எரேமியாவின் உரையும் நம்மை ஒரு புதிய பாதையைத் தெரிந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றது. இப்பாதையை நாம் தொடர்கையில் அவை நாம் வாசித்து அறிந்த எபிரேயரோடும் லூக்காவோடும் இயைந்து செல்லுவது நமக்கு ஒரு பொதுவான புரிதலையும் வழங்க இருக்கிறது. திறந்த இருதயத்தோடு இருந்து இறைசெய்தியால் ஒன்றிணைந்தால் ஆண்டவரின் ஆசி நம்மோடு தங்கியிருக்கும்.

 

சங்கீதம் 81 ஐ எழுதிய ஆசாப் இதை கித்தீத் எனும் வாத்தியத்தோடு வாசிக்கவேண்டும் என்கிற குறிப்பை இராகத்தலைவனுக்கு இணைத்திருக்கிறார். எனினும் சங்கீதத்தை நாம் கூர்ந்து வாசிக்கும்போது தம்புரு வீணை சுரமண்டலம் மற்றும் எக்காளத்தையும் பயன்படுத்தி கடவுளுக்கு துதி பலியைச் செலுத்துவது எனும் கருத்தை அவர் உள்பொதிந்து வைத்திருக்கிறார். வெறும் சொல் அலங்காரமாக அல்ல “இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது” (4) என அறுவடைப் பண்டிகை எனப்படும் கூடாரப் பண்டிகை கொண்டாடும் ஆராதனையில் பாடும்படியாக எழுதுகிறார்.

 

ஒருமித்து பாடும் இப்பாடலின் பிற்பகுதி ஒரு சுய பரிசோதனை போல், பாவ அறிக்கை போல் அமைந்துள்ளது இதன் சிறப்பு. இப்பாடல் முடியும் தருவாயில் ஆண்டவரின் கருணையுள்ளம் தனது பிள்ளைகளை அரவணைக்கும் தன்மையது எனும் உறுதிப்பாட்டுடன் முடிகிறது. இப்பாடலில் தொக்கி நிற்கும் சோகம் என்னவென்றால், தம் மக்கள் தமக்கு பணியாதபடி வேற்று தெய்வங்களுக்கு பணிந்து நடந்து கடவுளை புறக்கணித்த சோகத்தை ஏந்தியபடி இக்கவி செல்லுகிறது. ஒரு சிறந்த நாளின்போது இவ்விதமான பாடல்களின் முக்கியத்துவம் என்ன? மகிழ்வின் நேரத்தில் ஏன் பழைய வாழ்வைக் கிளறி பார்க்கவேண்டும் போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகிறதல்லவா?

 

எளிய ஒற்றை வரியில் இவைகளுக்கு பதில் கூறிவிட இயலாது எனினும் நாம் இவ்விதமாக புரிந்துகொள்ளலாம். கடவுளுக்கு முன் நமது வாழ்வு திறந்தே இருக்கிறது. அவர் முக்காலமும் அறிந்தவர். அவர் திருமுன் வருகையில் நமது வாழ்வில் ஏற்பட்ட சருக்கல்களை நினைவு கூர்வதும் அவர் உதவியால் நாம் தொடர்ந்து நமது பயணத்தை உறுதியுடன் தொடரும் விரும்புகிறோம் எனும் அற்பணமுமே. இவ்வித சூழலில் இன்றைய செய்தியின் பின்புலம் அமைந்துள்ளதால் நாமும் கருத்தாய் இவைகளைக் கேட்டு நமது வாழ்வை சீர் செய்வது அவசியம். எங்கே தவறினோம் என்பதை அறியவில்லையென்று சொன்னால் நாம் பாதையை தெரிந்தெடுப்பதும் இயலாத காரியம் இல்லையா?

 

எரேமியா தீர்க்கதரிசி தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் வெளியிடுகின்ற அறைகூவல் மிகவும் கவனிக்கதக்கது. மிகவும் இக்கட்டான சூழலில் ஆண்டவர் வழிநடத்திய அவர்தம் மக்கள் அவரைத் தேடாமல் போனதன் விசித்திரத்தை அவர் கேள்விக்குட்படுத்துகிறார். அதற்காக அவர் கூர்மைப்படுத்திச் சொல்லும் வார்த்தைகள் (5-7) தனியாக தியானிக்க வெண்டிய அளவு செறிவுள்ளவைகள். பொருள் கொள்ள துவங்கினோமென்றால், எகிப்திலே நீ அடிமையாயிருந்தாய், அங்கிருந்து உன்னை நான் ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் விடுவித்தேன். நீ கடந்து வந்த வழியை திரும்பிப் பார்த்தால் அது மனிதர் வாழ தகுதியற்ற இடம். வழி நடப்பதற்கும் ஏற்ற இடம் அன்று. மரணத்துக்கேதுவான அனைத்து இடர்களும் நிறைந்து காணப்பட்ட இடத்தை நீ கடப்பதற்கு எடுத்துக்கொண்ட 40 வருடங்களும் நான் உன்னோடிருந்து உனக்கு உணவும், பாதுகாப்பும் அளித்தேன். வாக்களித்த பாலும் தேனும் ஓடுகின்ற கானானை நீ அடைந்தபோதோ என்னை மறந்து நான் கொடுத்த அவ்விடத்தை உங்கள் தீய வழிகளால் அருவருப்பாக்கினீர்கள் என ஆண்டவர் தனது வேதனையை தீர்க்கரின் மூலம் வெளிப்படுத்துகிறதைக் காண்கிறோம். புனிதத்தை முறைதவறி பேணுகின்றபோதே நாம் அதன் புனித்தத்தன்மையை இழந்துவிடுகிறோம் எனும் கூற்றை எரேமியா எதிரொலிக்கிறார்.

 

மக்களின் இத்துணை அநியாயங்களும் அவர்களால் மாத்திரம் நிகழவில்லை என்பதையும் அவர் பதிவுசெய்வது நமக்கு புதிய வாசல்களை திறக்கின்றது. ஆம் மக்கள் வழி தவறி செல்வதற்கு காரணமான குற்றவாளிகளை அவர் நம்முன் நிறுத்துகிறார். மக்களால் அவர்களை பிறித்தறிய இயலவில்லை என்று சொன்னால் அதனால் நஷ்டம் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை தன் சொந்த மக்களாக பாவித்து வழிநடத்திய கடவுளுக்கும் அல்லவா? இவ்விதமான ஏக்கத்தோடு எரேமியா “கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்கு துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக் கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்” என சொல்லுவதைக் காண்கிறோம். இதன் பொருள் என்ன? ஆசாரியர்களும் வேதத்தைப் போதிக்கிறவர்களும் இஸ்ரவேலின் ஆன்மீகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர், அவ்வாறே நீதி மற்றும் நேர்மை வழியில் மக்களை வழிநடத்தவேண்டிய மேய்ப்பர்களான தலைவர்கள், பாதை மாறி விட்டனர். மேலும், மக்களின் அற வாழ்விற்கு அழியா நெருப்பை வழங்கும் கடமை கொண்ட தீர்க்கதரிசனஞ் சொல்லுவோர், கடமை தவறியதையும் சுட்டிக்கட்டுகிறார்.

 

ஆகவே கடவுள் தமது வழக்கை தொடரத் துணிகிறார். அந்த வழக்கு நம்மோடு மட்டும் முடிவதில்லை அது நமது பிள்ளைகளையும் அவர்கள் சந்ததியினரையும் கேள்விக்குட்படுத்தும் வழக்கு. பிதாக்களின் குற்றங்களை பிள்ளைகள் சுமப்பது ஏற்றதல்ல. நமது ஆசிகளை நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லலாம், நமது சாபங்களை நாம் ஒருபோதும் அங்ஙனம் விட்டுச் செல்லலாகாது. அது முறையாகாது. எனில் நாம் ஒன்றை புரிந்துகொள்ளுகிறோம். நமது பெற்றோர் ஆசிகளையும் சாபங்களையும் நமக்கு அறிந்தோ அறியாமலோ விட்டுச் செல்லுகிறார்கள். ஆசிகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் அது நமது உரிமை. ஆனால் செய்யாத குற்றத்திற்கு எப்படி தண்டனை பெறுவது? எவ்விதம் விடுதலை பெறுவது? பிராயசித்தமாக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா? எவ்வாறு அதற்காக நாம் துணிவது சாத்தியம்?

 

ஜீவ தண்ணீராகிய கடவுளை கொள்ளுகின்ற உறுதியான உள்ளம் நம்மிடம் உண்டா?  அல்லது இஸ்ரவேலைப்போன்றே நாமும் உடைப்பெடுத்த தொட்டிகளையே வைத்திருக்கிறோமா? எவ்விதம் இக்கேள்விகளுக்கான பதிலை உறுதி செய்வது?

 

எபிரேயர் நிரூபத்தின் ஆசிரியர் தனது செய்தியை கோர்த்து முடிக்கின்ற வார்த்தைகளைக் காணும்போது புதிய இஸ்ரவேலராகிய ஆதி திருச்சபையினர் தவறிவிடக்கூடாத காரியங்களைப் பட்டியலிடுகிறதை காண்கிறோம். எளிதனவைகளும் கடினமானவைகளும் இவைகளில் உண்டு. எனில் எதற்காக ஆக்கியோன் இவைகளை தன் கடிதத்தில் வரைகிறார்? நேர்மையோடு பதில் கூறவேண்டுமென்று சொன்னால் ஆதி திருச்சபையிலும் நமது முன்னோர்கள் “கடவுளுக்கு உகந்த வாழ்வு” வாழாதபடிக்கு நெறி தவறியாதினாலே தானே? எனில் இத்தீங்குகள் நம்மையும் சுற்றிப்பிடிக்க நமது கலைக் கவ்வியபடி இருக்கும் மலைப்பாம்பை ஒத்தவை. எவ்வாறு இவைகளினின்று நாம் வெளியேற இயலும்? படிப்படியான விடுதைலை எனக்கொள்வோமென்றால் அந்தப் படிகளை எங்கிருந்து கட்ட ஆரம்பிப்போம். திருச்சபையிலிருந்தா? அல்லது சமூகத்திலிருந்தா? எனது தனிப்பட்ட வாழ்விலிருந்து எனும் நேர்மையான பதில் வருமென்றால், அதை எங்கோ கடைபிடிப்பதை விட்டு திருச்சபையில் கடைபிடிக்க முன்வருவோமா? நமது முன்னோர் செய்தவைகள் தவறென்றுணர்ந்து அவைகளினின்று விடுபட முன்வருவோமா?

 

இயேசு ஒரு ஓய்வுநாளில் உணவு உண்ணுவதற்காக  பரிசேயருடைய தலைவர் வீட்டிற்குச் செல்லுகிறார். உணவருந்த வந்தவர்கள் அனைவரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என லூக்கா அக்காட்சியை விவரிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு விருந்தை ஒத்த காட்சியாக இதை அவை காட்சிப்படுத்துகிறார். இயேசுவோடு இன்னும் அனேகர் அதில் கலந்துகொண்டிருக்கின்றனர். பரிசேயருடைய தலைவர் ஆனபடியால் அனேக பரிசேயர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதை நாம் யூகிக்கலாம். இவர்களோடு பொதுமக்களும், நியாய சாஸ்திரிகளும் இருப்பதை கண்டுகொள்ளுகிறோம். இவ்விருந்தின் மத்தியில் நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷனும் இருக்கிறான். இயேசு தன்னைச் சுற்றியிருந்த பரிசேயரிடமும், நியாய சாஸ்திரிகளிடமும் ஒரு கேள்வியை வைக்கிறார். “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா”?

 

கடந்த வாரத்திலும் நாம் ஒரு ஓய்வுநாள் சொஸ்தமாக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தோம். கூனியான ஒரு பெண்மணியை அவர் நிமிர்த்துவதற்குள் அவளைச் சூழ்ந்திருந்தோர் அனைவருமே அத்தகைய நிலையில் இருந்தனர் என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டும் ஒரு நிகழ்ச்சி. இயேசு ஜெப ஆலய தலைவன் ஆற்றிய எதிர்வினையை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இக்கேள்வியைப் படைப்பதுபோல் தோன்றுகின்றது. நலம்பெறுவதற்கான ஆற்றல் ஓய்வுநாளில் செலவிடப்படுவதை அவர்களும் எதிர்க்கிறார்களா என இயேசு அறிய எத்தனிக்கிறார். ஆனால் அனைவரும் வாய்மூடி அமைதலாயிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் தலைவரும், அனைவரால் போற்றப்படுகின்றவரும்,  விருந்தை ஆயத்தம் பண்ணின பரிசேயருடைய தலைவனுக்கு மரியாதை செலுத்தும்படி வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் என எண்ணினார்களோ என்னவோ.

 

இயேசு வியாதியுற்ற மனிதரை தம் அருகில் அழைத்து அவரை நலம்பெறச் செய்கிறார். இயேசு எவ்விதமான ஆற்றலை செலவளித்தார் என்பதை நேரடியாக இங்கே வெளிப்படுத்தவில்லை, எனினும் மறைமுகமாக இயேசுவின் கூற்றின்னூடாக “நலம் பெறும் நிகழ்வு எப்படி நடந்திருக்கும் என நம்மை யூகிக்க வைக்கிறார். “உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ” (5) என்கிறார். அவர்களால் இதற்குப் பதில் கூற இயலாதபடி ஆயிற்று எனக் காண்கிறோம்.

 

இப்பின்னணியமே அவரது பின்வரும் உரையாடலுக்கான  அடித்தளமாக அமைந்திருக்கிறது. பெரியோரை போற்றும் தன்மையுடையவர்களாக தங்களால் மதிக்கப்பெறும் ஒருவர் முன்நிலையில் அவர்களது குணநலங்கள் எப்படி இருக்கின்றன என்று இயேசு கவனித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஆற்றலை செலவளித்து தாங்கள் யார் என்பதை நீரூபிப்பதற்காக அவர்கள் முனைவதை இயேசு கவலையுடன் கவனிக்கிறார். முதன்மையான இடத்திற்கான ஒரு கீழ்மையான முறைமைகளை அவர்கள் கையாளுவதை கவனித்த இயேசு பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் எனும் உண்மையை அவர்களுக்கும் கூற முற்படுகிறார்.

 

கலியாண வீட்டிற்குச் செல்லும்போது விருந்து பறிமாறும் இடத்தில் முதன்மையான இடத்தை தெரிந்துகொள்ளுவதைப் பார்க்கிலும் கடைசி இடத்தை தெரிந்து கொள்ளுவதே சிறந்தது எனவும், அவ்வாறு நாம் செய்யத் துணியும்போது அங்கே நம்மை அழைத்தவர் வந்து நம்மை முதன்மையான இடத்திற்கு அழைத்துச் செல்லுவதே சிறப்பாக இருக்கும் என்று அவர் சொல்லுவதை நாம் எப்படி பொருள் கொள்ளுவோம்?

 

நாமே உயர்ந்தவர் என காண்பிப்பது எவ்வகையிலும் இயேசுவின் பார்வையில் சரியானது அல்ல. நாமும் பல வேளைகளில் இதை உணர்ந்தவர்கள் போல் நம்மைத் தாழ்த்துகிறதுபோல் நடிக்கிறோம். எனினும் பல வேளைகளில் நமது உண்மை உரு வெளிப்படும்போது இவ்வளவு தூரம் நாம் புரிதலற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நாமும் நம்மை அறியாமலே முதன்மை இடத்தை தேடி அலைகிறவர்களாக இருக்கிறோமே என அறிகிற ஒரு சூழல் வந்தால் அச்சூழலில் இயேசுவின் வாக்கிற்கிணங்க பிறருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுவோமா? அல்லது இது காலம் காலமாக நடைபெற்றூவரும் பழக்கவழக்கம். இப்போதைக்கு மாற்ற முடியாது என முதன்மை இடத்தை இறுகப்பற்ற முயலுகிறோமா?

 

 

மணவாளன் இயேசு மணவாட்டியாகிய திருசபையின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தனது திருமணத்திற்கு அழைக்கிறார். அங்கே பகிரப்படுவதோ அவருடைய குருதியும் உடலும். தன்னையே கொடுத்தவரிடம் சேரும்போது நம்மிடம் பணிவும் தாழ்மையும் இருப்பதல்லவா அவரது விண்ணப்பம். அவரது உடல் “இழந்தவர்களை தேடவும் இரட்சிக்கவும்” அல்லவா உடைக்கப்பட்டது. நம்மை முதன்மையாக்கும்போது அவர் காணாமல் போன ஆட்டைத் தேடி அலைகிறார் எனும் உண்மை எப்படி நமக்கு உறைக்காமல் போனது? அவ்வுடைவிலே நாமும் ஐக்கியம் ஆகாதபடி நமது மேன்மை நமக்கு நமது பெற்றோர் விட்டுச்சென்ற பாரம்பரியம் இருக்குமென்றால், அவைகளை நாமும் இதுகாறும் கைக்கொள்ளுகிறோமென்றால் எத்துணை தீயது அது.

 

ஆம் எனக்கு அன்பான திருச்சபையினரே! திருச்சபை பலவேளைகளில் தனது முன்னோர்களின் பாரம்பரியங்களுடனே தனது மணவாளனைக் காணச் செல்லுகிறது. முன்னோர் மீது கொண்ட பக்தி நமது ஆன்மீகத்தை நசுக்குவதை சற்றும் உணராத ஒரு சந்திப்பு அது. இவ்வகை சந்திப்பு நமக்கு பிரியமாயிருந்தாலும் அருள் நாதர் இயேசுவை அது துக்கப்படுத்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

 

ஒரு எடுத்துக்காட்டாக இன்றைய நற்கருணை வழிபாட்டையே எடுத்துக்கொள்வோம். இங்கே இதுநாள் வரை ஆண்களே கர்த்தரின் பந்தியில் முதலாவதாக கலந்துகொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. இதைக் குறித்த குற்ற உணர்வு நம்மிடம் இருப்பதுமில்லை. இதிலென்ன தவறு என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். “பெண்கள் முதலில்” எனும் சொல்லாட்சி சமூக தளங்களில் முன்நிறுத்தப்படுகின்ற இன்நாட்களில் நாம் இன்னும் அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்த முடிவு செய்திருக்கிறோமா? பேருந்தில் இணைந்து பயணம் செய்கிறோம், ஆலயத்திற்கு இணைந்து வருகிறோம் கர்த்தருடைய பந்தியில் குடும்பமாக இணைந்து பகிராதபடி இருப்பதில் உள்ள சிக்கல் தான் என்ன?

 

ஒருவேளை நாம் நமது குடும்பத்தோடு இணைந்து வருவோமென்றால் தேவன் இணைத்ததை நான் பிரிக்காமல் இருக்க முயற்சி செய்தேன் என்கிற நிறைவு எனக்கு ஏற்படும். வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும், ஆலயத்திலும் நற்கருணையிலும் சேர்ந்திருக்கும் பாக்கியம் அனைவருக்கும் ஆசியாக கிடைக்கும்.

 

நாம் நம்மைவிட்டு கடந்துபோன முன்னோர்களுக்கு செய்யும் உதவி அவர்கள் விட்டுச்சென்ற இடிபாடுகள் மேல் அவர்களின் உன்னதமான நோக்கங்கள் நிறைவேற கட்டிஎழுப்புவதேயன்றி அவைகளையே வாழ்விடமாக கொள்ளுவது அன்று. எளியோருக்கு  செய்யும் விருந்தை அவர்களால் நமக்கு திருப்பிச் செய்ய இயலாது என்பதை அறிவுறுத்திய ஆண்டவர் முன்னால் நாம் நிற்கும்பொழுது நமக்கு திருப்பிச் செய்ய இயலாத இடத்தில் நமது முன்னோர்களும் இருக்கிறார்கள். பதில் செய்ய இயலாதோருக்கு நீ செய்யும் உதவியே மிகப்பெரிய உதவி என்பதாய் இயேசு கூறி முடிக்கிறார். அத்தோடு “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு பதில் செய்யப்படும்” என்றார்.

 

கர்த்தரின் பந்தியில் குடும்பமாக வாருங்கள். கர்த்தர் உங்களுக்கு அளித்த பிள்ளைகள் எனும் ஆசியோடு.

 

அருட்திரு. காட்சன் சாமுவேல்

 

(01.09.2013 ஞாயிறன்று,  மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்  நற்கருணை வழிபாட்டில் வழங்கிய செய்தியின் எழுத்துவடிவம்)


%d bloggers like this: