திருச்சபையின் பனைமர வேட்கை – 30


திருச்சபையின் பனைமர வேட்கை – 30

(இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இணைந்த எனது ஆன்மீக பயணம்)

திருச்சபைக்கு குருத்தோலை தந்தவர்கள் 

புதிய ஏற்பாட்டு காலத்தில் பேரீச்சைக் குறித்த சான்றுகள் திருமறையில் அதிகமாக இல்லை தான். ஆனால் முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது. எனது வாசிப்பின் வழியாக புதியேற்பாட்டில் காணப்படும் திருமறை பகுதிகள் யாவும் மிக தீவிரமான ஒரு இறையியல் பார்வையை நோக்கி நம்மை உந்திச் செல்லும் விசையாக காணப்படுகிறது. என்னையே நான் உய்த்து அறிகையில் புதிய ஏற்பாட்டு ஒரு சில வசனங்களுக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கு கொடுக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு காரணம், எனது இறையியல் கல்லூரியில் நான் நிகழ்த்திய மாதிரி வழிபாடுதான். அதற்கென நான் உருவாக்கிய இறையியல் பார்வையை பழைய ஏற்பாட்டுடன் நான் இன்னும் முழுமையாக விரித்து உரைக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.

இயேசுவின் பணி நாம் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் இயங்குகிறதை இத்தேடலில் நான் கண்டுகொண்டேன். குறிப்பாக அவரது பணி பாவிகள் என்று சொல்லப்படுகின்ற விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் வரி தண்டுபவர்களாகிய அரசு பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், நிக்கோதேம் போன்ற சமய தலைவர்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவர் தம் பணியில் நோயுற்றோர் குணமடைய தன்னை அற்பணித்தார் என பார்க்கிரோம். சமூக வாழ்வில் புறக்கணிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் சிறுவர்களையும் அவர் அரவணைக்கிறதைப் பார்க்கிறோம், தமது உடல் உழைப்பை செலுத்தி பணி செய்யும் மக்களையும் அவர் தம்மிடத்தில் ஆறுதல் பெற  அழைப்பு விடுக்கிறார்.

எரிகோ என்ற பட்டணம் குறித்து இரண்டு நிகழ்ச்சிகள் புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். ஒன்று நல்ல சமாரியன் உவமையில் எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் வழியில் ஒருவன் கள்ளர் கையில் அகப்படும் நிகழ்ச்சியை இயேசு விவரிக்கையில் அன்றைய எருசலேம் எரிகோ நெடுஞ்சாலையின் காட்சி மனதில் விரிவடைகிறது. வணிகங்கள் நடந்திருப்பதால் தான் சமாரியன் அப்பாதையில் வருகிறான் என்பதும் தெளிவாகிறது. வணிகப்பாதையில் நின்று கொள்ளையடிக்கும் குழுவினர், தனித்து வருபவர்களை கொள்ளையடிக்கும் அளவிற்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த் இடமாக  எரிகோ காணப்படுகிறது.

மீண்டும் எரிகோ குறித்து நாம் பார்ப்பது இயேசு சக்கேயு என்ற வரி வசூலிப்பவர் வீட்டிற்குச் செல்லும் நிகழ்ச்சியாகும். இயேசு சக்கேயுவோடு என்ன பேசினார் என திருமறையில் காணப்படவில்லை. ஆனால் அவன் இயேசுவிடம் “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறினார் (லூக்கா 19 திருவிவிலியம்) அந்த சந்திப்பின் இறுதியில் இயேசு அவனைப் பார்த்து “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (லூக்கா 19: 9 – 10  திருவிவிலியம்) எனக் கூறுகிறார்.

ஒரு சிறு இணைப்பை நாம் இவர்கள் சந்திப்பின் வாயிலாக நம்மால் இணைக்க இயலுமென்றால் வெகு விரைவிலேயே ஒரு கோட்டு சித்திரத்தை நாம் பெற்றுக்கொள்ள இயலும். இயேசு வரி வசூல் எப்படி நடக்கிறது எனப்தைக் குறித்து ஒரு உரையாடலை சகேயுவுடன் நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளதா. ஆம். அவைகள் பலஸ்தீனாவில் உள்ள வரி வசூல் முறைகள், முறைகேடுகள், அவற்றின் அழுத்தம், அவற்றை நடைமுறைப்பாடுத்துவோரின்  உள்ளக்கிடக்கைகள் பொன்றவற்றை சக்கேயு போன்றோரே மிக சிறப்பாக எடுத்துக் கூற இயலும். குறிப்பாக எளிய விவசாயிகள் போன்றோரின் வாழ்வில் அன்றய வரி வசூலிக்கும் முறை எவ்வளவு ஆழமான வடுக்களை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதை இயேசு தனது பயணத்தில் கண்டு அதனை சக்கேயுவுடன் விவாதித்திருக்கலாம். மற்றும் பல தருணங்களில் அவர் வரி வசூலிப்போருடன் இருந்திருக்கிறார் என்பதற்கும்  பல திருமறசி சான்றுகள் இருக்கின்றன.

நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் எருசலேம் நோக்கிய இறுதி பயணத்தைக் குறிப்பிடுகிறது. லெந்து காலத்தின் உச்சக்கட்டம் பாடுகளின் வாரத்தில் துவங்குகிறது. அதன் முக்கிய துவக்கமாக இருப்பது எருசலேம் நோக்கிய இயேசுவின் இறுதி பயணம் தான். அதனை குருத்தோலை ஞாயிறு என்றும் சொல்லுவார்கள். உலகமெங்கும் அனுசரிக்கப்படும் இவ்விழாவிற்கான மையம், பனை அல்லது இயற்கை  சார்ந்த ஒரு வாழ்வியல் என்றால் அது மிகையாகாது.

“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.” (மாற்கு 11: 1 – 2 திருவிவிலியம்) இவ்வசனங்கள் நான்கு நற்செய்திகளில் ஆக பழைமையான பிரதியாகிய மாற்குவில் இடம்பெறுகிறது. முன்னோர்கள் ஊர்களுக்கு பெயரிடுகையில் அவ்வூர்களில் உள்ள சிரப்புகளைக் கொண்டே பெயரிட்டனர் என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் ஒலிவமலை என்னப்படுகிற என்றாலே ஒலிவ மரங்கள் அதிகம் நிற்கும் இடம் என நாம் இலகுவில் புரிந்துகொள்ளலாம். பெத்பெகு என்றால் அத்திப்பழ வீடு என பொருள் படுகிறது. பெத்தானியா என்றால் பேரீச்சைகளின் வீடு என திருமறை அறிஞர்கள் கூறுவார்கள். இம்மூன்று ஊர்களும் சஙமிக்கும் இடத்திற்கு எதிரே உள்ள கிராமத்திற்கு இயேசு தமது சீடர்களை தமது பயணத்திற்கான கழுதையை பெற்றுக்கொள்ள அனுப்பிவிடுகிறதைப் பார்க்கிறோம்.

இவ்வூர்கள் அமைந்திருக்கின்ற தன்மையைப் பார்க்கையில் இவைகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறதைக் நாம் காணலாம். அனைத்து கிராமமும் விவசாயத்தை மையப்படுத்திய கிராமங்களாக அமைந்திருக்கிறதை நாம் காண்கிறோம். ஒலிவமலை ஒலிவ எண்ணை என்று சொல்லகூடிய சிறந்த ஒரு வணிக பொருளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இடமாக இருந்திருக்கலாம். எருசலேமுக்கு அருகில் இருந்ததால் தேவாலயத்திற்கு தேவையான அனைத்து எண்ணைகளும் இங்கிருந்தே பெறப்பட்டிருக்கலாம். அதற்கென உழைக்கும் மக்கள் எவ்வகையிலும் தேவாலயத்தால் உதவிகள் பெற இயலாதபடி கடின வரிகளால் துன்பபட்டிருக்கக் கூடும். அவ்விதமாகவே பெத்பகுவும் அத்தி மரங்களை நம்பி வாழ்ந்த மக்கள் கொண்ட இடமாக இருந்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் நோக்குகையில் பெத்தானியா குறித்த குறிப்புகள் அங்கே எவ்விதமான மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை தெளிவுற நமக்கு காட்டுகின்றது. பேரீச்சைகள் நிறைந்த அந்த பகுதியில் அதனை நம்பி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதை நாம் காண்கிறோம்.

இயேசு ஏறிய கழுதை அழைத்துக்கொண்டுவரப்பட்ட கிராமத்தின் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் ஓலிவமலை, பெத்பெகு மற்றும் பெத்தானியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல நம்பியிருக்கும் ஒரு கிராமமாக இப்பகுதி விளங்கியிருக்கலாம். எருசலேமால் அவர்கள் சுரண்டப்பட்டிருக்கலாம், ஏரோது கடின வரிகளை அவ்ர்கள் மேல் சுமத்தியிருக்கலாம், இவைகளை தேவாலய பொருப்பிலிருந்த குருக்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆகவே தான் இயேசுவோடு இம்மக்கள் உடன் இணைகின்றனர். “வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.” (மாற்கு 11: 11, திருவிவிலியம்) அவர்களைப் பொறுத்த அளவில் இயேசு தாவீதின் அரசை போன்றவொரு அரசை நிர்ணயித்தால் தமது வரிச்சுமைகள் நீங்கும் என எண்ணியிருக்கலாம்.  இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்.  “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.(லூக்கா 19: 41 –  42 திருவிவிலியம் )

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு எருசலேம் நகர் நுழைதல்

இயேசு சென்ற வழியெங்கும் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். சிலர் மரங்களின் கிளைகளையும் சிலர் தங்கள் உடைகளையும் அவர் சென்ற வழிகளில் விரித்தபடி அவரை வாழ்த்தினர்.  இன்நிகழ்ச்சியை தூய யோவான் நற்செய்தியாளர் கூறுகையில், “மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” (யோவான் 13:   திருவிவிலியம்) என ஆர்ப்பரிக்கிறதை காண்கிறோம். இவர்கள் கரங்களில் குருத்தோலைகள் எப்படி கிடைக்கப்பெற்றன? அதனை எடுத்துக்கொடுத்தவர்கள் யார்? கண்டிப்பாக பெத்தானியாவைச் சார்ந்த பேரீச்சை தொழிலாளிகள் மக்கள் இயேசுவை மக்கள் எதிர்கொண்டு போகையில் அதனைப் பிடித்துச் செல்ல அவர்களே உந்துதலாய் இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

குருத்தோலையைப் பிடிக்கையில் அவைகள் சொல்லாமல் சொல்லும் குறியீடுகளாக அமைவதை யோவான் இப்பகுதியில் மறைமுகமாக எடுத்தாள்கிறார். நமது ஊர்களில் திருவிழாகளின் போது குருத்தோலைகளில் தோரணங்களைச் செய்து அலங்கரிப்பது வழக்கம். இவைகள் குறிப்பிடுபவை என்ன? வறண்ட நிலத்தில் நின்று திரட்சியாக தேனைப்போன்ற கனிகளை அளிக்கும் மரம், அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையின் சின்னம் அல்லவா?

அது போலவே புதிய ஓலைகளை குருத்தோலை என்று சொல்லுகிறோம். அவைகள் புதிய ஒருவாழ்வை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர் என்பதை எடுத்துக்கூற வல்லது. மேலும் பழைய ஓலைகள் உதிர்ந்து விழுகையில் குருத்தோலை விண்ணை நோக்கி உயர்ந்து எழும்புகிறது. அது போராடி வெற்றிபெறும் உளவலிமையை சுட்டுகின்றது.. மேலும் வானம் நோக்கி எழுந்து நிற்கும் அதன் கீற்றுகள் படைத்த இறைவனை நோக்கி கூப்பியபடி இருப்பது அதற்கு ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விதமாக பல அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருப்பதனால் குருத்தோலை ஒரு முக்கிய படிமமாக இச்சூழலில் அமைகிறது.

இவைகளை நாம் பொருத்திப் பார்க்கையில், இயேசு பேரீச்சை மரம் சார்ந்த தொழிலாளிகளின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளை உணர்ந்திருந்தார் என்பது தெளிவாகிறது. ஆகவே அவர்களுக்காக ஒரு சொல்லும் எடுக்காத ஆன்மீக பீடத்தை அவர் தனது வாழ்வை பணயம் வைத்து முன்னெடுக்கிறார். இறுதியில் அவர் எருசலேம் தேவாலயம் செல்லுகையில் மக்கள் தொழுகைக்காக வரும் இடம் தொழில் கூடமாக மாறிப்போனதை  குறிப்பிட்டு அங்கே கலகம் செய்வதை நாம் பார்க்கிறோம். “கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. ‘;என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார். (மாற்கு 11: 15 – 17, திருவிவிலியம்)

இயேசுவின் மரண தீர்ப்பு கூட ஆன்மீக வாதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் முன்வைத்த எந்த சமய குற்றச்சாட்டுகளும் அவருக்கு இறுதி தீர்ப்பை பெற்றுத்தர இயலவில்லை. ஆனால் மக்களை வரி செலுத்த விடாது கலகம் செய்கிறவர் என்றும் அரசுக்கு எதிரானவர் என்றும் அவரை அரச குற்றம் புரிந்தவராக காண்பிக்க முயற்சிக்கிறார்கள் “இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்;” (லூக்கா 23: 2, திருவிவிலியம்)

இயேசுவின் காலத்தில் பேரீச்சை மரம் ஏறி பயனெடுத்த மக்களின் நிலையில் தான் இன்று நமது பனைத்தொழிலாளிகள்  இருக்கின்றனர். அவர்களை கவனிப்பார் இல்லை. இன்று திருச்சபையும் கூட அவர்களை பெரிதும் பொருட்படுத்துவதில்லை என்பது வேதனையான உண்மை. நமக்கு இரண்டாயிரம் வருடங்களாக குருத்தோலை ஞாயிறு கொண்டாட ஓலைகளை எடுத்து தந்த மக்களுக்கு நாம் செய்த கைமாறு என்ன? அவர்களை எப்போதேனும் நாம் பொருட்படுத்தியிருக்கிறோமா? அவர்களுக்கான ஏதாவது உதவிகளை திருச்சபை இதுநாள் வரை செய்த்திருக்கிறதா? நமது கருணைகள் பல்வேறு தரப்பட்ட மக்களை சென்று சேருகையில் பனைத் தொழிலாளர்கள் மட்டும் திருச்சபையால் தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்டிருப்பது சரியா? திருச்சபை அவர்களுக்கென களமிறங்கவேண்டும் என்ற நோக்குடன் உலக அளவில் முதன் முறையாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்று எடுக்கும் இம்முயற்சியில் நீங்களும் உங்களை இணைத்துக்கொள்ளுவீர்களா?

பவுல் அடியார் கூடாரம் அமைத்து தமது ஊழியத்தை தொடர்ந்ததாக நாம் பார்க்கிறோம். கூடாரப் பண்டிகைகள் ஈச்சமர ஓலைகளைக் கோன்Dஎ அமைக்கப்பட்டது என்பதையும் நாம் பார்த்தோம், நமது ஊர்களில் முற்காலங்களில் பந்தல்களை முடைந்த ஓலைகளைக் கொண்டு அமைப்பது வழக்கம். பவுல் அவ்விதம் செயல்பட்டாரா? அவரது ஊழியத்திற்கு பேரீச்சை தான் உறுதுணையாக இருந்ததா?  உறுதியாக கூற முடியவில்லை, ஓருவேலை அவர் தோல் கூடாரங்களையும் அமைத்திருக்கலாம், ஆனால் அவர் பேரீச்ச ஓலைகளைக் கொண்டு கூடாரம் அமைக்க சம அளவில் வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறதை நாM மறுக்க இயலாது.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் தான் பரலோகம் செல்ல வேண்டும் என்பதே முக்கிய குறிகோளாக இருக்கிறதை நான் அறிவேன். அவ்வகையில் திருச்சபை குருத்தோலைகளை அர்த்தத்துடன் கையாளவேண்டும் என நான் நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். பனை தொழிலாளிகளை திருச்சபை மதித்து அவரளுக்கென செயல்படாத வரைக்கும்  நாம் குருத்தோலைகளை பிடிப்பது வெறும் சடங்காக நின்றுவிடும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பரலோக காட்சியை காண்ட யோவான் அவைகளைக் குறித்து எழுதுகையில், “இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.” “திருவெளிப்பாடு 7 : 9, திருவிவிலியம்) இக்காட்சி உலக மக்கள் அனைவரையும் குருத்தோலை ஒன்றிணைக்கிறது என்பதையும் எத்தேசத்தார் என்றாலும் அவர்கள் இறையரசில் பனையுடன் தொடர்புகொண்டே அமைவார்கள் என்றும் திருமறை தெளிவாக விளக்குகிறது. ஆகவே திருச்சபை பனை நோக்கிய தனது கவனத்தை திருப்புவதும் பனை தொளிலாளர்களுக்காய் களமிறங்குவதும் அவசியம். ஆண்டவர் தாமே நம்மனைவரோடும் இருந்து நமது பணிகள் சிறக்க ஆசியளிப்பாராக.  ஆமென்.

இவைகளைக் கூறி நான் நிறைவு செய்கையில் ஆலயத்தில் ஒரு பெரும் நிசப்தம் இருந்தது. அனைவர் முகங்களும் பேயறைந்தது போல் காணப்பட்டது என்ன ஆகுமோ என்று பதைபதைப்புடன் அங்கே நின்றுகொண்டிருந்தேன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: