இயேசு துப்புகிறார்

ஜூன் 24, 2009 by pastorgodson

மும்பை ஒரு எச்சில் நகரம். காலை முதல் பின்னிரவுவரை அது உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் உமிழ்நீர் பெருக்கெடுத்து நகர்வலம் வருகின்றன, வண்ண ஃப்ளெக்சி போர்டைவிட தீற்றல்கள் நிறைந்த பூமியிது. தொடர் வண்டி, அதன் நிலையங்கள், அதன் நடைபாதைகளின் ஓரங்கள், அரசு அலுவலகங்கள், அதன் சுவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளின் முக்குகள் என அவை வியாபித்திருக்கின்றன.

எச்சில் வரலாறு முக்கியமானதில்லை என நாம் புறந்தள்ளிவிட இயலாது. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை மென்று கொண்டிருப்பதே “டைம் பாஸ்” என எண்ணும் மக்கள் திரள், மாண்ணின் மைந்தர்கள், வந்தேரிகள் என அது ஒரு பெரும் ஜாதி. எனினும் ஒருவரும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது, நாம் நமது பங்கிற்கு ‘அவல்’ மெல்லுகிறோமில்லையா? அதுபோலத்தான் அவர்களுக்கு ‘அவல்’ மெல்லும் நேரத்தில் “வேறு ஏதாவது” மெல்லமுடியுமானால் அன்றைய நாள் இனிய நாளாக வழிந்துவிடும். மன்னிக்கவும் கழிந்துவிடும். உழைப்பின் பக்கவாத்தியம் தானே மெல்லுதல் என்னும் புரிதலோடே மெல்லுகிறார்கள்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தக்கலையிலுள்ள ஒரு பழைய பொருட்களை வாங்கும் கடையில் பழைய பித்தளை வெற்றிலைத்தட்டை விலைக்கு வாங்கினேன். அதற்கு மூன்று கால்கள் இருந்தன. மிகவும் ரசனையுடன் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணியபடியே அந்த கடைக்காரரிடம் “அண்ணே! நா இது போல இதுவரப் பாத்ததே இல்ல! சாப்பாட போட்டு சாப்பிடும்போது சப்போட் வேற அழகாக குடுத்திருக்காங்க” என்றேன். என்னோடு நன்கு பழகியவர் ஆனபடியால், ஸ்னேகமாக என்னைப் பார்த்துவிட்டு, “நீங்க, இதப் பாத்ததில்லியா? பத்திருபது வருஷத்துக்கு மின்னால எல்லா வீட்டுலயும் இத வைச்சிருப்பாங்க, வெத்தில தட்டுண்ணு செல்லியத கேட்டுட்டில்லியா?” என்றார்.

 
நான் அதை அபூர்வமான ஒரு பொருள் எனக்கருதி அதைப் பார்த்தபடி அதன் அழகில் மயங்கி வாங்கிக் கொண்டேன். வீட்டில் வந்து அம்மவிடம் அதைக் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே சொல்லிவிட்டார்கள் “வெத்தில தட்டு”. எப்படிமா உங்களுக்கு தெரியும்? தாத்தா பெரிய பிரசங்கியாரில்லையா? எப்படி இதை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் இதை வைக்க தாத்தா அனுமதித்திருக்க மாட்டார்களே, எங்கே பார்த்தீர்கள்? என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டேன். ” சாதாரணமா எல்லார் வீட்லயும் இருக்கும்” அம்மா எந்த வித அதிசய  முகபாவமும் காட்டாமல், இது கூட உனக்குத்தெரியாதா என்பதுபோல என்னைப் பர்த்தார்கள்.

நமது மூதாதையர்கள் வெற்றிலை குதப்பியிருக்கிறார்கள் என்பதும், அதையும் வரவேற்கும் விதமாக ஒரு சடங்காக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியத்தகவலே. வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடுவது விசேஷித்த தருணங்களில் தான் என்பதை எண்ணும்போது ஒரு முரண்பாடான கருத்து அதனுள் ஒட்டிகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.

முகத்தில் எச்சில் உமிழ்தல் கண்ணியமற்றது என்பதை நம் கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் திருவிவிலியத்திலும் நாம் காண இயலும்.
….”அவள் தந்தை அவள் முகத்தில்  காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்படவேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழு நாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார் (எண்ணிக்கை 12 : 14)
அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, ” தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்” என்று கூறுவாள். (இணைச் சட்டம் 25 : 9)
என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னை விட்டு விலகிப் போகின்றனர்; என் முன் காறித்துப்பவும் அவர்கள் தயங்கவில்லை (யோபு 30 : 10)
பின்பு அவருடைய முகத்திலே துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்….(மத்தேயு 26 : 67)
அவர்மெல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் (மத்தேயு 27 : 30)

எச்சில் என்பது நாம் வெறுக்கத்தக்க ஒன்று மட்டுமே என நினைபது தான் தவறு. எச்சில் அதற்கேற்ற இடங்களில் தனது நிலைகளை வெகுவாக மாற்றிக்கொண்டுள்ளதை உணர்ந்தப்போது நான் அப்படியே சந்தோஷத்தில் குதித்துவிட்டேன். ஆம்! “இயேசு துப்புகிறார்” என்பது ஒரு ஆழ்ந்த இறையியல் நோக்கி நம்மை அழைக்கும் ஒரு வெற்றிலைத்தட்டுடன் நிற்கிறது.

“அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்”  என்பதை உணர்ந்து “முறுக்கான முறுக்கப் போவோம்!”

எனது நண்பன் ஒருவன் பாலியல் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் எளிய அடையாளமாக அவர்கள் வெற்றிலை குதப்புவார்கள் என நான் கல்லூரியில் படிக்கும் போது சொல்லியிருந்தான். நான் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த போது, எய்ட்ஸ் நோயுற்றோருக்கான நல்வழ்வு திட்டங்களை செய்து கொண்டிருந்த ஒரு சக ஊழியரிடம் எனக்கு ஒரு பலியல் தொழிலாளியைப் பார்க்க வேண்டும் என்றேன். என்னை உடுருவிப் பார்த்த அனுபவமிக்க அவர் கூறியது என்னவென்றால், “நமது சகோதரிகளைப் போன்றும், தாயைபோன்றுமே அவர்கள் இருப்பர்”. துணுக்குற்ற எனக்கு அதன் அத்தத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.

காதலர்களுக்க்கிடையேயான எச்சில் பறிமாற்றம், தாய் குருவி தன் குஞ்சிற்கு அளிக்கும் எச்சில் இரை, மாற்று திறன் பெற்றவர்கள் கட்டுப்படுத்த இயலாத எச்சில் ஒழுக்கு, கர்த்தருடைய பந்தியில் நாம் ஒரே பாத்திரத்தில் பங்கு பெறுவது என அது ஐக்கியத்தின், அன்பின், வாழ்வின், நிதர்சனத்தின், நெருக்கத்தின் அடிப்படையான உணர்வுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மாற்கு ஏழு மற்றும் எட்டு அத்தியாயங்களில் காணப்படும் இயேசு துப்புகின்ற நிகழ்வுகள் எச்சிலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என அறிவுறுத்துகின்றன. இயேசு ஏன் அதைச் செய்தார் எனும் கேள்வி இவ்விடங்களில் எழுப்பப்படுவதை விட, எவ்வித கரிசனையுடன் அவர் செய்தார் என் கண்டு கொள்வதே அதன் இறையியல் அடிப்படை என்பது என் தாழ்மையான கருத்து.

இயேசு  துப்பி குணமாகிய இருவரில் ஒருவர்  பார்வை அற்றவர் மற்றொருவர் திக்கிப் பேசுபவர். இருவரையுமே இயெசு  தனியாக ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் துப்பி அவர்களைக் குணப்படுத்துகிறார். எச்சில் குறித்த மக்களின் மன பிம்பங்க்களை அவர் சரிவரப் புரிந்திருந்ததினால் தான் அவர் இவ்விதமாக பொது இடங்களில் அவர்களை குணப்படுத்தாமல் தனியாக அழைத்துச்சென்றிருக்க வேண்டும்.

குணப்படுதல் என்பது ஒரு தனி நபர் சார்ந்த அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் வாய் பயனற்று அசைந்துகொண்டிருக்கிறது. இயேசுவுக்கு தெரிந்திருக்கும்  “ஊர் வாயை மூட முடியுமா என்ன?”

( எச்சரிக்கை: “இயேசு துப்புகிறார்” என்ற பெயரை காப்புரிமை செய்துள்ளோம்! ஆகவே யாரும் “இயேசு துப்புகிறார்” எனும் பெயரிலே ஊழியம் செய்வதோ, தொலைக்காட்சி நிகழ்வுகளை நடத்துவதோ, இதழ்களை அச்சிடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும் பெருந்தொகை கொடுத்து இந்த அரியப் பெயரை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

பத்தில் ஒரு பங்கு – பாகம் 3

ஜூன் 23, 2009 by pastorgodson

 பத்தில் ஒரு பங்கைக் குறித்து விளம்புபவர்களுக்கெல்லாம் திருவிவிலியம் பல நிகழ்வுகளை தெளிவுறக் காட்டும், எனினும் சரியான புரிதல் இல்லாமையாலும் முன் கருத்தோடு விவிலியத்தை அணுக நேரிடுவதாலும் அவை திருச்சபையினரிடம் திரித்து கூறப்படுகின்றன. இவ்வாறாக நாம் காணத்தக்க  திரிபு விளக்கம் பெற்றவருள் ஒருவர் மூதாதையரில் இளையவரான  யாக்கோபு.

இந்திய மனது ஏற்கத்தக்க எந்த நற்குணங்களும் இல்லாதவன், ‘எத்தன்’ எனும் பேருக்கு ஏற்றவிதமாக, தனது தந்தையை, மாமனை மற்றும் தமையனை ஏமாற்றியவன். அவன் கடவுளையே ஏமாற்றத் துணிந்தவன்  எனும் நிகழ்வு ஒன்று தான் இந்திய கதை தெனாலிராமனோடு ஒத்துப்போகிறது. யாக்கோபா? கடவுளையா? ஏமாற்றினானா? இருக்காது! என மார் தட்டி பேசும் திருச்சபையினரே! அவன் அப்படித்தான்…..அப்படியே பலநேரங்களில் அவனை முன்னிறுத்தும் நாமும்……

வெகு அபூர்வமாகவே அவனில் இருந்து நாம் நற்குணங்களை எடுத்துக்க்கொள்ளும் நிகழ்வுகள் காணப்பெறுகின்றன. குறிப்பாக அவன் கடவுளுக்கென்று தூண்களை நாட்டி எண்ணை வார்த்த நேரங்கள், தனது சகோதரனுக்கு அவன் அனுப்பும் மந்தையில் ஒரு பங்கு, தீனாவிற்காக அவன் மகன்கள் பழிவங்கியபோது அவர்களை கடிந்து கொண்டது… எனினும் எல்லா இடங்களிலும் அவனது உயிர் பயம் மற்றும் சுய விருப்பங்களே மேலோங்கி இருக்கின்றன என்பதையும் நாம் காணுகிறோம்.

ஈசாக்குடைய வாழ்விலே பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றதை நாம் திருவிவிலியத்தில் காணயியலாது. மூதாதையரில் (முற்பிதாக்களில்) ஒருவர் செய்யத்தவறியதை ஏன் மற்ற இருவர் செய்யவேண்டும்? எனும் கேள்வி எழுவது இயல்பே! அதற்கு விடையாக ஆபிரகாமின் வாழ்விலே பத்தில் ஒரு பங்கு சூழ்நிலை சார்ந்தது மட்டுமே என்பதைக் கண்டுகொண்டோம், யாக்கோபோ தனது  சுய விருப்பம் நிறைவேறவேண்டி ஏறெடுக்கும் ஒரு வேண்டுதலின் பொருத்தனையாக பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றது.

தொடக்க நூல் 28ஆம் அத்தியாயம் யாக்கோபு பெற்ற ஒரு ஆச்சரிய கனவை விவரிக்கின்றது. தனது முதாதையருக்கு வாக்களித்த கடவுள், யாக்கோபுக்கும் கனவில் தோன்றி ஆசி பொழிகிறார். அந்த ஆசி பின்வருமாறு…

13…. “உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே.  நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உன் வழி மரபிற்கும் தந்தருள்வேன். 14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு திசைகளில் பரவிச் செல்வாய்.  ஊன்னிலும் உன் வழி மரபிலும்  மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. 15  நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும்  உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில் நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.

மேற்கூறிய வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது, நமது கடவுள் எவ்வித தாராளச் சிந்தை உள்ளவர், நம்மைத் தேடிவரும் அன்பு கொண்டவர், மூதாதையருக்கு அளித்த தமது வாக்கை உறுதிப்படுத்துகிறவர்,  என்று புரிந்துகொள்ள முடியும். எந்தவித கட்டுப்பாடுகளும் யாக்கோபுக்கு இல்லை ஆசிகள் மட்டுமே கடவுள் அவனிடம் கூறுகிறார். எதற்காக? தன்னை நம்பிய ஆபிராமின் வழிமரபினரான யாக்கோபும் தன் மேல் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதே அல்லாமல் கடவுள் அவனிடம் வேறெந்த கருமத்தை (பணியினை) எதிர்பார்த்திருக்க இயலும்? 

நேரடியாக (அல்லது கனவில்) வெளிப்பாடு பெற்றிருந்தாலும், இதைவிட முக்கிய இரண்டு நிகழ்வுகள் (ஆசிகள்) அவனுக்கு அருளப்பட்டுள்ளன. ஒன்று பரம்பரையாக அவனுக்கு  கிடைக்கப்பெற்றது அதாவது அவனது பாட்டனர் ஆபிரகாம் மூலமாக. நாம் ஒத்து பர்ப்பதற்கு நேராக இதோ அந்த விவிலியப் பகுதி

 தொடக்க நூல் 12 : 1 – 3
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடத்திலிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல். 2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச்செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

இது முதன் முதலாக ஆபிராமுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசி, மறுபடியுமாக இன்னுமொரு ஆசி  அவர் 13ஆம் அத்தியாயத்தில் பெறும் பொழுது அது ஆபிராமின் வழிமரபினருக்கு (அதாவது யாக்கோபிற்கும்) பொருந்துவதாக அமைகிறது!

14….” நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். 15 ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும்  கொடுக்கப்போகிறேன். 16 உன் வழி மரபினரை பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழி மரபினரையும் எண்ணலாம். 17 நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

“அதற்கு ஆபிராம் என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளுவேன்?”  என்று ஆபிராம் வினவியபோது கடவுள் அவனிடம் சில பொருட்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார். (தொடக்க நூல் 15: 8)

“மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள  செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டு வா” (தொடக்க நூல் 15: 9)

என்கிறார்… மிகப்பெரிய செல்வந்தனான ஆபிராமிடம் கடவுள் கேட்டது ஒரு எளிய காணிக்கை தான். அதுவும் அவன் ஒரு அடையாளத்தை எதிர்னோக்கியிருக்கும்போதே அல்லாமல் செய்து தர வேண்டி அவன் கடவுளிடம் எந்த ஒரு மன்றாட்டையும் வைக்கவில்லை. கடவுளோ ஆசி வழங்குபவராகவே இருக்கிறார்.

மறுபடியுமாக ஒரு ஆசியை யாக்கோபு பெறுவதை நாம் அனைவரும் நினைவு கூறலாம். தனது தமையனிடமிருந்து தலைமகனுரிமையை அபகரித்ததுமல்லாமல் தனது தாயின் சொற்படி கேட்டு அவன் தனது தந்தையாம் ஈசாக்கை ஏமாற்றி பெற்ற ஆசியே அது.

தொடக்க நூல் 27 : 27 “….. இதோ என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்! 28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திரட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 29 நாடுகள் உனக்கு பணி புரிந்திடுக! மக்கள் உனக்கு பணிந்திடுக! உன்றன் சகோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவோர் வழமுடன் வாழ்க!”

தாத்தாவின் சொத்து எப்படி பேரனுக்குரியதோ அது போலவே தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு பொருந்துமல்லவா? எனில் ஆசி பெற்ற பரம்பரையில் வந்தும், தனது தந்தையிடமே தனது  சொந்தத் தமையனுக்கான ஆசியை அபகரித்தும்  நிற்காத “ஆசி வெறி”   கடவுள் தனக்கு காட்சியளித்து நம்பிக்கை அளித்தபோதும் அவனுள் வெதும்பிக்கோன்டிருந்தது.

இந்த இடமே நாம் சிந்திக்க வேண்டிய இடமாக நான் கருதுகிறேன். யாக்கோபிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் “தசமபாக” சிந்தனை  எத்துணை சிறுமையானது? ஒரு பெரிய நாட்டையே உனக்கு நான் தருகிறேன், நீ என்னடாவென்றால், துணி தருவாயா, சாப்பாடு போடுவாயா, நான் செய்யும் எல்லா அக்கிரமங்களுக்கும் (ஹும்…வேறென்னச் சொல்ல?)  துணை நின்று  (தமையனை ஏமாற்றுவேன், தந்தையை ஏமற்றுவேன், மாமனாரை ஏமாற்றுவேன்…) என்னைக் காப்பாற்றினால், அப்போது தான் நீர் எனக்கு கடவுளே! அதுவரைக்கும் எனக்கும் உனக்கும் ஒட்டு உறவு கிடையாது. கூடவே கடவுளுக்கு போனசாக பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதாக வாக்களிக்கின்றான். (கல் தூண் நாட்டி எண்ணை வார்த்தது ஒரு ‘பெரிய அடவு’….)

எங்கும் நான் தேடிப்பார்த்தபோது தனது பொருத்தனையை யாக்கோபு நிறைவேற்றினதைக் காண இயலவில்லை. எத்தனில்லையா? கடைசி வரை அவன் அதைக் கொடுக்கவில்லை! ஏமாற்றிவிட்டன்! (கடவுள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்)  “ஆமாம் பார்ட்டி எஸ்கேப்….”

தொடரும்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 09870765181

பத்தில் ஒரு பங்கு – பாகம் 2

ஜூன் 19, 2009 by pastorgodson

தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வை ஒட்டி பெரும்பாலான போதகர்கள் தங்கள் செய்தியை அமைக்காமல் “பத்தில் ஒரு பங்கு” எனும் வார்த்தையை மட்டும் அதில் கண்டு அதை தங்களுக்கேற்றபடி வளைக்க முற்படுகின்றனர்.

“அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்” என்பதும், அவர் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர் ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகராயிருந்தார்’ என்பதுமே இந்தப்பகுதியின் கவற்சிக்கான காரணம். மற்றபடி இந்தப் பகுதி கூற வருவது பத்திலொரு பங்கின் முக்கியத்துவத்தைக் குறித்தோ அல்லது ஆபிராம் செய்ததை நாம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலோ அல்ல.

பத்தில் ஒரு பங்கு  எனும் வார்த்தை திருவிவிலியத்தில் முதன் முறையாகக்  காணப்படும் பகுதியானபடியினாலும், ஒத்துப்பார்பதற்கு எளிமையாக இருக்குமென்பதாலும் தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் முழுவதையும் இணைத்துள்ளேன். வாசகர்கள் கவனமாக வாசிக்க வேண்டுகிறேன் (வசனங்களைக் கடந்து போகும் தவறை இப்பொழுதும் செய்துவிடாதீர்கள், இது புரிதலுக்கான அடிப்படை)

1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்  கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது, 2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராக போர் தொடுத்தனர். 3 அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

 4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். 5 ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்த்ரோத்து கர்னமியிமிலிருந்த இராபாபியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும் 6 சேயிர் மலைப்பகுதியிலிருந்த ஓரியரையும்,  பாலை நிலத்தின் எல்லையிலிருந்த  ஏல்பாரான் வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

7 அவர்கள் திரும்பும் வழியில்  காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.  8 அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று, 9 ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும் – ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர் தொடுத்தனர்.

10 இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பி பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர். 11 வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவு பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர். 12 அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களியும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

13 தப்பி வந்த ஒருவான் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். ஆப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்துவந்தார். அவர்கள் அபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். 14 தம் உறவினர் கைதியாக கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்வியுற்றதும் , ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முன்னூற்றுப் பதினெட்டுப் பேரைத்  திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

 15 அவரும் அவர் ஆள்களும் அணி அணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத்த் தாக்கித்  தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத்துரத்திச் சென்றனர். 16 அவர் எல்லா செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.

17 ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்க சோதோம் அரசன் வந்தான். 18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். 19 அவர் ஆபிராமை வழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!”என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

21 சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக்கொள்ளும்” என்றான். 22 அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:  23  ‘நான் தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். 24 இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.
மேற்கூறிய வேத பகுதியை சற்று சுருக்கி அதன் சாராம்சத்தைப் பார்ப்போமானால். 

கப்பம் கட்டாததினாலும் தனக்கு விரோதமாக கிளர்ச்சி செய்வதனாலும் கெதர்லகோமர் தன்னோடிருந்த அரசர்களைச் சேர்த்து படையெடுத்து வருகிறான். லோத்து வாழும் சொதோமின் அரசனுடன் சேர்த்து 5 அரசர்கள் எதிர்த்து நின்ற போதும், போரில் தோல்வியத் தழுவுகின்றனர்.  தோல்வியுற்ற அரசைச் சார்ந்த எல்லாவற்றையும், ஆள்கள் உட்பட வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

இந்தச் செய்தி ஆபிராமுக்கு எட்டுகிறது.  தனது சகோதரனும் அவனோடு அவன் சொத்துக்களும் ஆட்களும் கொள்ளை போவதை அவன் கேள்வியுற்ற போது, தன்னோடு இன்னும் மூவரைச் சேர்த்துக்கொண்டு தனது வேலைக்கரரில் அடிமுறை படித்த, ஆயுதம் பழகிய 318 பேரைத் தெரிந்து கொண்டு தாண் எனும் இடம் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து போய் தனது சகோதரனின் மகனான லோத்தைக் காப்பாற்றுகிறார்.

இப்பொழுது இரண்டு அரசர்கள் வருகின்றனர், ஒருவர் சோதோமின் அரசர்.  சோதோமின் அரசர் தான் தொல்வியுற்றதை ஒப்புக்கொள்ளும் விதம் அருமையாக இருக்கிறது. எனது குடிமக்களை மட்டும் நீர் எனக்குத்தாரும், நீர் கைப்பற்றின பொருட்கள் உமக்கே உரியது எனக் கூறுகிறான். போர் சமயத்தில் காணக்கிடைக்கும் இந்த நிகழ்வு மிகச்சாதாரணமானது. “விழுந்துபோன எங்களைக் கைதூக்கிவிட வந்த ஆபிராமே உனக்கு எப்படி நன்றி கூறுவது எனத்தெரியவில்லை, இந்த வெற்றி உனக்கே உரியது. எனினும் குடிமக்கள் எனக்கு முக்கியமாகையால், நீ அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு என் மக்களை எனக்குத்தா!” என வினவுகிற ஒரு நிகழ்ச்சியாக நாம் இதைக் கண்டு கொள்ளுகிறோம்.

மற்றொருவர் சாலேமின் அரசர்.  இந்தப் போரில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவர்.  ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகர்’. ஆபிராம் கடவுளின் சொல்கேட்டு நடப்பவரானபடியால் அவர் மீது நன் மதிப்பை வைத்திருப்பவர். இந்தப் போரில் கடவுள் ஆபிராமோடு இருந்ததை கண்ணாரக் கண்டதினால், தான் அவருக்கு ஆசி அளிக்கும் பொருட்டு வந்தவர்.  வெறுங் கையோடு வராமல் போரிட்டவர்களின் களைப்பு நீங்க அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தவர்.

ஆபிராமின் சுய ஆளுமை வெளிப்படும் இடமாகையால் நாம் இந்தப் பகுதியைக் கூர்ந்து நோக்க அழைக்கப்படுகிறோம்.  தான் உதவி கோராமல் இருந்த போதிலும் தன்னோடு போரிட்ட வாலிபர்களின் களைப்பு நீங்க உணவு கொண்டுவந்தவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டிய தார்மீக கட்டாயத்தில் ஆபிராம் ‘எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’.

இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஆபிராம் ”எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’ என்பது எவற்றையெல்லாம் குறிப்பிடுவது என்பதாகும். 16ஆம் வசனம் அதை நமக்கு தெளிவுறக் காட்டுகிறது “அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்………. பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்” என்பதாக அங்கே குறிப்பிடப்படுகிறது. செல்வத்தில் மாத்திரமல்ல பெண்களையும் ஆள்களையும் பகிர்ந்து கொடுப்பது அக்கால வழக்கமே. அடிமை முறை மெலோங்கியிருந்தக் காலத்தில் ஆபிரகாம் அடிமைகளாகவே ‘பதில் ஒரு பங்கு’ பெண்களையும் ஆள்களையும் கொடுத்திருக்கவேண்டும். உன்னதமான கடவுளின் அர்ச்சகர் இதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்கிற விளக்கம் நமக்கு இல்லாதது ஆச்சரியமானது ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது ஒரு அன்பின் வெளிப்பாடு. தற்செயலானது. அவ்வளவு தான்! கடவுளின் கட்டளை என நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.

மூன்றவதாக ஒரு முக்கிய உண்மை இதனுள்ளே பொதிந்திருக்கிறது.  நாம் சொல்லும் பழமொழியைப்போல ஆபிராம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்திருக்கிறார்’.  ஆம்,  தனது வாலிபர்களை மாத்திரமே அவர் போருக்கு அழைத்துச் சென்றார், தனது பொருட்கள் ஒன்றையும் அவர் கொண்டு செல்லும் நிதானத்தில் இல்லை.  போர் முடிந்து அவர் தனது வீடு வரைக்கூட வரவில்லை ‘அரசர் பள்ளத்தாக்கிலேயே’ அவர் சோதோமின் அரசராலும், மெல்கிசெதேக்கினாலும் சந்திக்கப்படுகிறார்.

இப்பொழுது ஆபிராமிடம் கொள்ளை பொனவற்றை மீட்டதே அல்லாமல் வேறெந்த பொருட்களுமில்லை. பார்க்கப் போனால் லோத்தினுடைய பொருட்களையே அவர் எடுத்து ‘பத்தில் ஒரு பங்கைச்’ செலுத்தியிருக்க வேண்டும். எனில் பத்தில் ஒரு பங்கு என்பது நம்முடையதாக இருக்கக் கூடாது பிறருடையதையே எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பதாக அர்த்தம் பெறுகிறது.

இறைச் செய்தியாளர்கள் என்று தம்மை விளம்பிக் கொள்பவர்கள் இதை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பர் போலும், ஆகவே தான் ‘அனைவரிடத்திலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்துவிடச் சொல்லிவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்’.

தொடரும்……

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 9870765181

பத்தில் ஒரு பங்கு – பாகம் 1

ஜூன் 18, 2009 by pastorgodson

“பத்தில் ஒரு பங்கு” குறித்த கருத்துக்கள் மீண்டும் மீண்டுமாக திருச்சபையில் வலியுறுத்தப்படுகின்றன. போதகர்களின் “பத்தில் ஒரு பங்கு” குறித்த செய்திகள் ஆழ்ந்த வேத அறிவு இல்லமையா அல்லது ஒருவித அசட்டு தைரியமா என என்னல் விளங்கிக் கொள்ள இயலவில்லை. வளையங்களை வெகு லாவகமாக தூக்கிபோட்டு விளையாடும் ஒரு தேர்ந்த சர்க்கஸ் கலைஞனைப் போன்று நமது இறைச் செய்தியாளர்கள் மாறிவிட்டனர்.

“ நீ தசமபாகம் கொடுத்தாயா?” என்பது இன்றைக்கு நடுத்தர வற்கத்து கிறிஸ்தவர்களிடையே பிரபலமான வார்த்தை. தாங்கள் இருக்கும் திருச்சபைகளுக்கும், தாங்கள் விரும்பும் நட்சத்திர அல்லது நடுத்தர ஊழியர்களுக்கும் “பத்தில் ஒரு பங்கை” அனுப்புவது இன்று ஒரு நாகரீக கலாச்சரமாகவே ஆகிவிட்டிருக்கிறது. இவ்வளவு தீவிரமாக “பத்தில் ஒரு பங்கு” விளம்பரப்படுத்தும் காரணம் என்ன? பலவிதங்களில் மக்கள் இதைப் புரிந்து கொண்டாலும், கீழ்வருவனவற்றையே பல நற்செய்தியளர்கள் அறிவுருத்துகின்றனர்……

1. விசுவாசிகளின் தந்தையாம் ஆபிரகாமை பின்பற்றுங்கள்: ஆபிரகாம் விசுவாசிகளின் தந்தை, அவர் செய்த இந்தக்காரியத்தை அவரின் பிள்ளைகளாகிய நாமும் செய்யவேண்டும். அவ்விதமாக நாம் செய்யும்போது அவர் ஆபிரகாமுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கட்டளையிட்டாரோ அவற்றையெல்லம் அவர்தம் பிள்ளைகளுக்கும் கொடுப்பார். வேறு என்ன, அன்றைய நாட்களில் ஆபிரகாமைப் போல ஒரு பெரும் செல்வந்தர் கிடையாது. “…..அப்பழுது ஆபிரகாம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்கு பத்திலொரு பங்கை கொடுத்தார்”(ஆதியாகமம் 14 : 20)

2. “பத்தில் ஒரு பங்கு” கொடுப்பது நமது கடமை:  திருச்சபைக்கு வருகிற அனைவரும் பவுல் அறிவுறுத்துவது போல காணிக்கைகளைக் கொண்டுவர வேண்டும். மேலும் கடவுள் நமக்கு கொடுத்திருப்பதிலிருந்து அவர் தனக்குரிய பங்கை மாத்திரமே விரும்புகிறார். “அதிகமில்லை ஜென்டில்மேன் பத்தில் ஒன்று மட்டுமே” ! “நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 13 : 2)

3. பத்தில் ஒரு பங்கு கொடுப்பதனால் ஆசீர்வாதம் பெருகும்:  இன்றைய ஊழியர்களின் மிகப் பிரபலமான ஒரு டயலாக் இது தான்.. மல்கியா 3 : 10 ஐ குறிப்பிடத போதகர்களே இல்லை. “…. விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள்;” (மத்தேயு 6 : 20) “குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்” (2 கொரிந்தியர் 9 : 6)

 4. பத்தில் ஒரு பங்கு கொடுக்காவிட்டால் அது சாபம்: ஒருவகையில் கிறிஸ்தவ போதகர்கள் தாங்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பதற்கு, மிரட்டலையே கையில் எடுக்கின்றனர். சாபம் ஒரு எளிய தந்திரம்!“ மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.! எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்? என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்தில் ஒரு பங்கிலும் காணிக்கையிலும் தான் (மலாக்கி 3 : 8) “ஏமாந்து போகவேண்டாம்; கடவுளைக் கேலிசெய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். ஓருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார் ( கலாத்தியர் 6 : 7)

மேற் குறிப்பிட்ட வசனங்கள் யாவும் நானாக அந்தந்த இடங்களில் அமைத்தது இல்லை மாறாக ”பத்தில் ஒரு பங்கு” முன்னிறுத்தும் ஒவ்வொருவரும் திருவிவிலியத்தினை வெறும் வர்த்தைகளின் கூவியலாகவே முன்னிறுத்துகின்றனர். அவற்றின் பின்னணியம் பேசப்படுவது அவர்களுக்கு உவப்பானதாய் தோன்றுவதில்லை. “மிகப்பெரிய் ஊழியர்கள்” என்று அவர்கள் கருதுபவர்கள் எல்லாம் இப்படித்தானே செய்கிறார்கள்? திருச்சபையில் அல்லது ஊழியத்திற்கான காணிக்கைகள் வேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியுமாக ஒரு பிரச்சரம் போலவெ பதிவு செய்கின்றனர். தங்களுக்கும் வருமானம் வந்துவிடாத எனும் எண்ணத்தால் ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் கருத்துக்களை “மேம்படுத்துகின்றனர்”. மந்தைகளுக்கு “அமர்ந்த தண்ணீரோ புல்லுள்ள மேய்ச்சலோ கிடைப்பதில்லை”!

 ஓரு கதையை “பத்தில் ஒரு பங்கை” முன்னிறுத்துவதற்காக இவர்கள் யாவரும் குறிப்பிடுவர்கள். ஓரு காலத்தில் வில்லியம் கோல்கேட் எனும் பதினாறு வயது சிறுவன் தன்னைக் காப்பற்றிக்கொள்ள ஒரு வேலைத்தேடி நியூ யார்க் பட்டணத்துக்கு புறப்பட்டான். அவ்விதமாக அவன் பட்டணத்தில் வந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வெலையைத்தேடிக்கொண்டபோது அவனது தயார் அவனுக்கு கூறிய அறிவுரையை நினைவு கூர்ந்தான். “நீ சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்திலும் பத்திலொன்றை கடவுளுக்கு கொடுக்கவேண்டும்”

நேர்மையாக அவன் சேர்த்த எளிய சேமிப்பிலிருந்து அவன் பத்தில் ஒரு பங்கை கடவுளுக்குக் கொடுத்தான். அவவிதமாக அவன் கொடுத்ததினால் அவன் வாழ்விலெ உயருவதற்கு கடவுள் அருள் புரிந்தார். வெகு சீக்கிரமாகவே அவன் தன் முதலாளியுடனே கூட்டு சேர்ந்து தொழிலை நடத்தினான். இன்னும் சிறிது காலத்தில் அவனது தொழில் கூட்டாளியான மாஜி முதலாளி மரிக்கவே, அவன் மொத்த கம்பெனிக்கும் முதலாளி ஆகிவிட்டான்.

பத்தில் ஒரு பங்கை கொடுத்துக் கொண்டிருந்த இந்தச் சிறுவன், இப்பொழுது ஒரு கனவானாக மாறிவிட்டார். எனினும் தன் வாழ்வில் பத்தில் ஒரு பங்கை கொடுப்பதிலிருந்து பின் வாங்கவில்லை. தனது வருமானம் பெருகப் பெருக அவர் தன் பத்தில் ஒரு பங்கின் விகிதாச்சாரத்தை உயர்த்தத்துவங்கினார். பத்தில் ஒரு பங்கு, பத்தில் ஐந்து பங்கு ஆனது. அதாவது தனது வருமானத்தில் பாதி.

கேட்கவே புல்லரிக்கும் இந்த கதை யாரைக் குறிப்பிடுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டிருப்போம். ஆம், நாம் அன்றாடம் உபயோகிக்கும் கோல்கேட் பற்பசையின் முதலாளி தான் அவர். அவரா இப்படி? என பற்பசை வயோடே நாம் சிந்திக்கும் போது, நமது சிந்தனை எப்படி துலங்கும்?

இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்பதை நம்புவதற்கு ஏதுவாய் சமீபத்தில் நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். “உங்களது கோல்கேட் எப்பொழுதுமே ஹலால் செய்யப்பட்டது”. இது வெறும் விளம்பர தந்திரம் தான் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு “பத்தில் ஒரு பங்கும்” இசுலாமியர்களுக்கு “ஹலாலும்”.

ஒரு வேளை வில்லியம் கோல்கேட் உண்மையாகவே தனது வாழ்வில் கர்த்தருக்கென்று கொடுத்திருந்தாலும், அதை தொக்கிய கேள்விகள் எழுவதை நம்மால் தடுக்க இயலவில்லை. ஒன்றுமில்லாமல் வேலைக்கு சேர்ந்த நமக்கு, இறைபற்று இருப்பதற்காகவே நமது முதலாளி சாக வேண்டுமென்றால் எத்துணை தவறான காரியம் அது?  தனது உயிரக் கொடுத்து நம்மை வாழவைத்த இயேசுவைப் பின்பற்றுகிறோமா அல்லது பிறர் உயிர் போனாலும் பரவாயில்லை நான் சுபிட்சமாக இருக்கவேண்டும் எனும் “பத்திலொரு பங்கு” போதனையை முன்னிறுத்துகிறோமா?

வெள்ளை அங்கியைத் தரித்திருந்தாலும் , வெளிநாட்டு உடையணிந்திருந்தாலும் , காவி வஸ்திரத்தில் கிறிஸ்துவை காண்பிக்க வந்தாலும் , திருச்சபை மக்கள் எப்போது “பரவசமான” செய்திகளை கேட்க விழைகிறார்களோ அப்பொழுதே சாத்தான் அங்கே கிரியை செய்ய ஆரம்பித்துவிடுகிறான்.

பத்திலொரு பங்கை கடவுள் நியமிக்க காரணம் தான் என்ன? திரு விவிலியம் என்ன சொல்லுகிறது? இவ்வளவு நாள் காத்திருந்தோமல்லவா? இன்னும் சற்று நேரம் பொறுமை காக்க விரும்புகிறேன்.

தொடரும்…..

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone : 09870765181

மீண்டும் சந்திப்போம்!

ஜூன் 17, 2009 by pastorgodson

நானும் எனது மாமவின் பையன் ஜானியும் (வெகு சீக்கிரத்திலேயே திருமணமாக உள்ளது) நல்ல தோழர்கள். அப்படியே தற்பொழுது நியூசிலாந்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் (மணப்பெண்கள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்) எனது நண்பன் வின்ஸ்டனும் உயிருக்குயிரானவர்கள். எங்கள் மூவருக்கும் பொதுவான விருப்பம் பயணம் செல்வது (ஊர் சுற்றுவது).

எங்கள் பயணத்திற்கு இலக்கு கிடையாது.  நினைத்த மாத்திரத்தில் நாங்கள் மூவரும் கிளம்பிவிடுவோம். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. வின்ஸ்டனின் யமாஹா, ஜானி கொண்டு வரும் ஏதாவது டூவீலர். கடற்கரை சாலை மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருப்பதால் “பெயிண்டே இருப்பம்”.

குமரி மாவட்டம் மிக அழகிய மற்றும் விதம் விதமான கடற்கரைகளைக் கொண்டது. ஓரு இடத்தில் பாறைகள் அதிகம் இருக்கும் (அப்படிச்சொல்வதைவிட பாரதிரஜாவிற்குப் பிடித்த இடமாகிய) முட்டம்,  வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய குளச்சல் துறைமுகம், புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள சொத்தவிளை (பேருக்கேற்றபடி அதை இப்போது சொத்தையாக்கிவிட்டனர்) முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பொழிமுகம் கொண்ட பட்டணம் கால்வாய் மற்றும் மணக்குடி, தென்னந்தோப்புகள் நிரம்பிய  ஆலன்கோட்டை, பறவைகள் சரணாலயம் என நான் கருதும் ராஜாக்கமங்கலம், மணலைக் குவித்து தள்ளும் மணவாளக்குறிச்சி, படகுகள் குழுமியிருக்கும் சின்னமுட்டம், வெட்டுக்கல் கிடைக்கும் அகஸ்தீஸ்வரம், ஆழி சூழ்ந்து மீண்ட கோதேஸ்வரம், பனங்காடுகள் நிறைந்த  சங்குமுகம்…

சொல்லப் போனால் அனைத்து கடற்கரை ஊர்களின் பெயர்களையும் குறிப்பிடும் படியாய் விதம் விதமாக அவை அமைந்திருக்கின்றன. ஓவ்வொரு இடத்திலும்  நின்று அனுபவிக்க வாழ்வே போதாது எனும் அளவிற்கு.  ஓரு மாவட்டத்திற்குள்ளே இவ்வளவு வித்தியாசமான கடற்கரைகளை வேறு எங்கும் நாம் எளிதில் கண்டுகொள்ள முடியாது என்பதே என் எண்ணம்.

எங்கள் பயணம் எந்த இடத்தில் நிற்கும் என்பது எங்களுக்கே தெரியாது. பல நேரங்களில் பெட்ரொலும், ஓருசில நேரங்களில் எங்கள் வாகனமும் எங்கள் பயணத்தை தீர்மானிக்கும். வின்ஸ்டனின் புராதன யமாஹா தனது ஒளி கொடுக்கும் தன்மையை இழந்து விட்டிருந்ததால், எங்கள் பொருளாதாரம் கருதி நாங்கள் இரவிற்கு முன்பதாகவே வீடு திரும்பிவிடுவது உண்டு. “பின்ன? மாமூல் உருவ விடுவோமாக்கும்?”

லைசன்ஸ், ஆர் சி புக், இன்சூரன்ஸ் பொன்ற தேவையற்ற சுமைகளை நாங்கள் எடுத்துச்செல்லுவதில்லை ஏனென்றால் அவைகள் எங்களிடத்தில் கிடையது.  கழன்றுபோன நம்பர் பிளேட்டை பத்திரமாகவே வீட்டில் வைத்திருந்தோம். சில நேரங்களில் அறுந்து போன பிரேக் ஒயரோடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்கிறோம். “அவன் பெரிய டிஸ்ப்லிக்ஸ்பிஸ்ஸாக்கும்” (இது எங்களுக்கு மட்டுமே உரிய பாஷை)

வின்ஸ்டனுடைய கண்களைப் பார்த்து அவனுக்கு “கிங் கோப்ரா” என அவன் படித்தக் கல்லூரியில் பெயர் வைத்திருந்தனர். இருட்டிலும் மிக அருமையாக ஹட் லைட் இல்லாமல் ஓட்டுவான், என்ன ஆங்காங்கே நிற்கும் போலீஸ் வாகனங்கள் தான் எங்களுக்கு ஒரு சின்ன உதறல். ஓரு வழியாக போலீஸ் இல்லாத சந்துகள், ஊர்கள் வழியாக செல்லுவது எப்படி என்ற ஒரு மகத்தான “என்சைக்ளோபீடியாவை” நாங்கள் எங்கள் இருவர் மனதிலும் உருவாக்கி விட்டிருந்தோம்.

ஜானியைப் பொருத்தவரையில் பரவாயில்லை, அரசு ஊழியன். கொஞ்சம் பிரச்சனை என்பது தெரிந்து விட்டால், தனது கார்டை எடுத்துவிடுவான், “சார் போயிட்டு வாங்க” என மரியாதையாக அனுப்பிவிடுவார்கள். ஜானியின் வேகம் சும்மா  கண்ணைக் கட்டிக்கொள்வது போல இருக்கும். பயமே கிடையாதா என்று தோன்றும்படியாக வளைவில் வண்டியை சாய்த்து திருப்புபவன். இன்றுவரை வீழ்ச்சியை அறியாதவன் (”வாயத் தெறந்திட்டியா? சரியாப்போச்சு!” எனக் கூறப்போகிறான்)

எங்களது பயணம் அர்த்தமற்றதாயும் இலக்குகளாற்றதாயும் இருந்திருந்தாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் மிகவும் அர்த்தம் பொதிந்தவைகளாக காணப்படுகின்றன. கடற்கரையில் நாங்கள்  செல்லும்போதெல்லாம் நாங்கள் கல்களை நனைக்க முற்பட்டது இல்லை. ஆனால் கண்டிப்பாக மணலில் அமர்ந்துவிடுவோம். நீண்ட நேரம்  எங்களுக்கான கதைகளை பெசிக்கொள்ளுவோம், ஓடுவோம், அமைதியாக இருப்போம். மொத்தத்தில் ஒன்றாக இருப்போம்.

கடற்கரையில் உள்ள காற்று தான் எங்களது சுவாசம். அதை அனுபவிக்க வந்தவர்களாகவே காற்றைக் குடித்துக்கோண்டே இருப்போம். காற்று கடல் அலையை, கேசத்தைப் போல் சுருட்டிவிட்டபடி  இருக்கும். காற்றும் அலையும் காதல் கொண்ட நாய்களைப் போல் குதித்தும் விலகியும் குலாவிக் கோண்டிருக்கும். சூரியனை காற்று ஊதித் தள்ளி  தூரத்தில் நிறுத்தியிருக்கும் அல்லது கீழ விழப்பண்ணியிருக்கும். காற்றும்  அலைகடலும் தூதுவிட்டு எங்களை தன்பக்கமாக வர அழைக்கும். காற்று எங்களைத் தூக்கிக் கோண்டு போக பிரயத்தனப்படும். கடலோ தன் மென்மையான அலைநுரைக் கைகளால் கம்பளம் விரித்து வரவேற்கும்.

சில நேரங்களில் போர்முழக்கத்தைப் போன்று எழும் சத்தம், காற்று கடலைப் புரட்டிப் போடும்போது எழுவது உண்டு. பொட்டித் தெரிக்கும் நீர்க் குமிழிகள் பலமிழந்து காற்றோடு கைதியாக கரைக்கு வந்துவிடுவதுமுண்டு. காற்றை நீர் குமிழ்களால் சிறைபிடிக்க முடியுமா என்ன?

கரையைச் சார்ந்தவர்கள் என்பதால்தானோ என்னவோ கடலை விட கடற்கரை மணல் தான் எங்களுக்குப் பிடித்தமான இடம். கால் புதைய நடப்பது, மணல் ஒட்டிக்கொள்ளும்படி இருப்பது, அப்படியே படுத்துக்கொள்ள என்று எங்களுக்கு மட்டுமான பிரேதசமாகவே கடற்கரை காணப்பட்டது. ஆளரவமற்ற கடற்கரைகளை அல்லது சந்தடியற்ற இடங்களையே நங்கள் பெரும்பாலும் தேர்வு செய்தோம்.

நாங்கள் தொட்ட மணல் துகள்கள் எல்லம் தலைமுறை கடந்து வந்த பூமியின் சாட்சிகளாய் குவிந்திருந்தன. காலக் கடிகாரத்தில் பயணித்து களைத்து இளைத்து இத்துப்போயிருந்தன அவை. கரங்களில் அள்ளி எடுத்தால் நைசாக நழுவிவிடுவதிலே குறியாக இருந்திருக்கின்றன. மீதியானவை உண்மை நண்பர்களைப்போல் ஒட்டிக்கொண்டன. உதறிவிட மனமற்று கைகளைப் பார்த்தால் ரேகைகள் அவைகளின் நடுவே சாலைகளாக புகுந்து பிரிந்து விட்டிருந்தன.

மணல் எங்களொடு ஒட்டிக் கொள்ளுவதை மிகவும் விரும்பினோம். வீடு வரும்போது அதுவும் ஒரு நண்பனைப்போல் எங்களுடனே வந்தது. சட்டை மற்றும் பாண்ட் பாக்கெட்டில் உரிமையுடன் அவை நுழைந்திருந்தன. அந்தரங்கத்துடன் உறவாடும் ஒரு நண்பனைப்போல் அவை மாறிவிட்டிருந்தன. பிரிவு எப்போது ஏற்படுகிறது என்பதே தெரியாத அளவிற்கு அவை எங்களின் அன்றாட அலுவல்களில் காணாமல் சிதறிப்போயின.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

அத்திமரத்தை சபித்தல் – ஒரு விவசாயியின் பார்வை

ஜூன் 16, 2009 by pastorgodson

மரங்கள் வெட்டப்படுவது ஒரு மிகப்பெரிய இயற்கை சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்ததை அறிந்து, இருபதாம் நூற்றண்டின் இறுதியில் தொண்டு நிறுவனங்களும் பல மக்கள் அமைப்புகளுமாக இணந்து நின்று பலவித முயற்சிகளைக் கையாண்டு மரங்களைப் பாதுகாத்தனர். “சிப்கோ(கட்டிபுடி) அந்தோலன்” எனும் ஒரு இயக்கம் எழுபதுகளில் தங்களை மரத்திற்கும் கோடாலிக்கும் நடுவே நிறுத்தி மரங்களை காப்பற்றிய பெண்களால் இந்தப் பெயரைப் பெற்றது.

மரரங்களை பாதுகாக்க வேண்டும் என அனைவரும் அறிந்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில் இயேசு அத்திமரத்தை சபித்தார் என்பது சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிறிஸ்தவ பின்னணியத்தில் நாம் மாற்கு 11: 12 – 14 வரை வாசிக்கும் போது, நமது எண்ணமெல்லம் “ஏன் அவர் ஒரு எளிய அத்திமரத்தை சபித்துவிட்டார்? என்பதே. நமக்குத் தெரியும், “ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல” என்பதால் எந்த ஒரு மரமும் தன் கனியைத் தர இயலாது.

சூழலியலாளர்களைப் பொறுத்தவரை, பழங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல, மரம் இருப்பதே முக்கியம். ஓரு மரம் தன்னை ஒரு சூழலோடு பிணைத்துள்ளது, அதைப் பிரிப்பது அந்த சூழலில் அதைச் சார்ந்து வாழுகின்றவற்றிற்கு இழைக்கும் தீங்காகும். இவ்விதமாக நாம் காணும் போது இயேசு இருபத்தியோராம் நூற்றாண்டிலே “விசாரணைக் கைதியாக” நிற்கிறார்.

மாற்கு நற்செய்தி நூல் இந்த நிகழ்வை குருத்தோலை ஞயிறுக்கு முன்பதாகவும் மத்தேயு அதன் பின்பதாகவும் குறிப்பிட்டிருப்பது பதிவின் முரண்பாட்டுத் தோற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருத்தியலை இன்றய அவசர பிரச்சனையோடு நேரடியாக தொடர்பு படுத்துவது நமக்குத் தெளிவைத் தராது.

தனது கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக கொடுத்த அன்பின் ஆண்டவர் எப்படி ஒருவேளை உணவுக்காக ஒரு மரத்தை சபித்திருப்பார்?அனேகரர், நூற்றாண்டுகளாக இந்த வேதபகுதியுடன் முட்டி மோதி விளங்கிக்கொள்ள பிரயத்தனப் பட்டது உண்டு. பலவித வியாக்கியானங்கள் வந்தபடியே உள்ளன. மேலும் வந்து கோண்டிருக்கும். இக்கட்டுரை ஒரூ விவசாயியின் பார்வையில் இந்த பகுதி எதை விளக்க முற்படுகிறது என்பதே!

இயேசு ஒரு விவசாயி

 இயேசுவுக்கு தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்தவைகளைப் பற்றிய அவதானிப்பும் கூர்ந்த பார்வையும் நாம் உணர்ந்துகொள்ளாதது. தனது தந்தையின் தச்சுப் பட்டரையில் மட்டுமல்லாது அவரது விரிந்த பார்வை விவசாயம், மீன்பிடித்தல் போன்றவற்றில் கூட இருந்திருப்பதை நாம் திருவிவிலியத்தில் காண முடிகிறது. தனது உவமைகளில் அவர் விவசாயம் சம்பத்தமான உவமைகளைக் குறிப்பிடுவது அவரை ஒரு முழு விவசாயியாகவே நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஓரு சிறந்த விவசாயிக்கு தனது தோட்டத்திலுள்ள மரம் செடி கொடி என்ன “பேசுகின்றன” என்பது புரியாதா என்ன?

மரம் செடி கொடிகளாலே “கேட்க” முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் வந்த வண்ணமிருக்கின்றன. எங்களுரைப் பொறுத்தவரை “ ரோட்டு சைடுல முருங்கைய வெச்சா ஆளரவெம் கேட்டு நல்லா காய்க்கும்” என்று சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன் கண்டுமிருக்கிறேன். ஓரு விவசாயியாக இயேசு அத்திமரத்தை பார்வையிட்ட போது, அது இனி அதிக காலம் நீடிக்காது என அறிந்து அது பயன் தரும் நாட்கள் முடிந்துவிட்டன என்பதை உறுதி செய்தபின் “இனி உன் கனியை யாரும் உண்ணவேக் கூடாது” என்றர்.

எனது பசி அல்ல

இயேசுவின் திருப்பணிகளை முழுவதுமாக புரிந்து கொள்ளத்தவறினோமானால் நாம் இந்த வேத பகுதியின் அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ள இயலாது. தான் பசியோடிருக்கும்போதே அவர் தனது பசியை இரண்டாம் பட்சமாக்கி கடவுளின் திருப்பணி செய்வதே எனது ஆகாரம் எனக் கூறி மகிழ்ந்தவர். ஏனெனில் அவருக்கு “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார்” என்பது தெரிந்திருந்தது.

 பல்லயிரக்கணக்கானவர்களின் பசியைப் போக்கியிருந்தாலும், தான் பசியினைக் கடந்து வந்தாலும், அவர் தனது பசியினை முன்னிறுத்தி எதையும் செய்ததில்லை என்பது கண்கூடு. ஒருமுறை அவர் சமாரியப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கென்று உணவு வாங்கச்சென்ற சீடர்கள் உணவோடு வருகின்றனர், எனினும் தான் உண்டு திருப்தியடைந்தத்தாகக் கூறி அவர் அதை மறுத்துவிடுவதைக் காண்கிறோம். உணவுக்கு அவ்ர் தனது ஊழியத்தில் முக்கியத்துவம் கொடுக்காததை வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதி ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகிறது?

அழிப்பதற்கு அல்ல

இயேசு இந்த உலகத்திர்கு உயிரளிப்பவராக வந்தார். வாழ்வா சாவா எனும் கேள்வி எழும்போது நம்மால் பதில் கூற முடியாதவர்களாகிவிடுகிறோம். இயேசு இரண்டு விதமான கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று விதையானது நிலத்தில் விழுந்து மரிக்கவேண்டும். இங்கே மரணம் என்பது பெரு வாழ்வாக மாறுகிறது. இரண்டாவதாக ஒரு மரம் கனிகள் தருவதற்காக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அது தன் கடமையிலிருந்து தவறினால் அந்த மரம் பலரது வாழ்வையே கெள்விக்குள்ளாக்கிவிடுகிறது. ஆதாவது ஒன்றின் வாழ்வு பலதின் வாழ்வை நாசம் செய்கின்றது.

“நானே திராட்சை செடி; நீங்கள் அதன் கொடிகள். ஓருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” எனும் கூற்று நாம் அவரில் நிலைகொண்டாலே கனி தர இயலுமென்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. நாம் அவைகளை மீறும் போது அந்தக் கொடிகளை நெருப்பிலே சுட்டெரிக்கும் நிலை வரும். அது தண்டனையாக அல்ல மாறாக தேவை நிறைந்த கொடிகள் பற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் பொருட்டே.

மேலும் இந்தப் பகுதியை நாம் புரிந்து கொள்ள இரண்டு முக்கிய காரணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

1. இந்தப் பகுதி அத்தி மர உவமையின் ஒரு கலவை

2. இந்தப் பகுதி கனி தரா வழ்வையுடைய மறை நூல் அறிஞர்களைச் சுட்டுவது

மேற்கூறிய இரண்டு காரணிகளை வைத்துப் பார்க்கும் போது இயேசு ஒரு ஏழை விவசாயியாக தனது நியாயத்தை வெளிப்படுத்தியிருப்பதைக் காண இயலும்.

 மக்களின் மனங்களை உழுதும், நற்குல பயிர்களை இட்டும், உரமிட்டு வெலியடைத்து காவல் காத்தும் பயனேதும் இல்லை என்றால் ஏழை விவசாயி உடனடியாக சுதாரித்துக் கொள்ளவேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டுகின்றார். ஓரு ஏழை விவசாயியைப் பொறுத்தவரை இன்னுமொரு சாகுபடி என்பது அவனது வாழ்வா சாவா போராட்டமே. 

விவசாயிகளின் தற்கொலையின் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இந்தப் பகுதியை சுழலியலாளர்களோடு ஒப்பிடாமல் ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டிய கட்டயம் உண்டு.  இன்று இயேசு நம் மத்தியில் வந்து நமது விவசாய சகோதர சகோதரிகளின் மரணத்தைக் கண்டிருப்பாரேயாகில், அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சபித்திருப்பர்.

பட்டுப்போன அத்திமரம் தரும் பாடமாக இயேசு குறிப்பிடுவது ஒப்புறவாதலே

“நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்பொழுது உங்கள் விண்ணகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்”

தன் இருப்பை அகம்பாவத்துடன் பிணைத்து, முற்சந்தியில் பகட்டுடன் நின்ற மறை நூல் அறிஞர்களையும் தலைமை குருக்களையும் இயேசு வேரோடு சாய்ப்பது, அவர்களின் பின்னால் செல்பவர்களுக்கு வேண்டுமானால் தவறாகத் தென்படலாம். அன்றன்றுள்ள அப்பத்தை பிட்கும் எளியவர்களுக்கு அது ஒரு மாபெரும் விடுதலையே!

மும்பையிலுள்ள  Church Auxilary for Social Action எனும் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களது வாராந்திர கூடுகையில் நான் கொடுத்த ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone 09870765181

கைம்பெண்ணின் காணிக்கை

ஜூன் 12, 2009 by pastorgodson

திருச்சபை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தும் ஒரு காரியம் “காணிக்கை”. காணிக்கையை கொண்டு கோயில் கட்டுவதும், பல நற்காரியங்களில் ஈடுபடுவதும் நெடுங்காலமாகவே நடைபெற்றுவரும் மரபு. திருவிவிலிய ஆதாரங்களை எல்லாம் கூட்டி கழித்து எப்படியெல்லம் கணிக்கை சேகரிக்கலாம் என திட்டமிடுவது இன்றைய சந்தை பொருளாதாரத்தின் விளைவாகவே என எண்ணத் தோன்றுகின்றது.

நான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள எனது தலைமுறைக் கோயிலில் 13 வகையான காணிக்கை கவர்கள் ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படும். பலவிதமான காணிக்கை உபதேசங்கள் வழங்கப்படும். காணிக்கை கொடுக்காதவர்களுக்கு ஐயோ! என “திருவிவிலிய ஆதாரங்களும்” முன்வைக்கப்படும்.

காணிக்கைகளை சேர்த்து சேர்த்து அதைக் கொண்டு என்ன செய்யவேண்டும் எனத்தெரியாமல், பழைய கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி விடுகிறார்கள். புதிய கோயில்களை கட்டிஎழுப்புவதிலேயே போதகர்களின் “திறமையும்” செயற்குழு அங்கத்தினர்களின் “வீரியமும்” வெளிப்படுத்தப்படுகின்றன.

போதகர்கள் காணிக்கைகளை சேகரிப்பதிலே மிகவும் திறமையானவர்கள். அரிசிக் காணிக்கை, பை காணிக்கை, நெல் காணிக்கை, முதற் பலன், கவர் காணிக்கை, பொன் காணிக்கை, ஸ்தொத்திர காணிக்கை, சங்க காணிக்கை, உண்டியல் காணிக்கை, சுய வெறுப்புக் காணிக்கை, பொருத்தனை காணிக்கை, போன்றவைகளுடன் விசேஷித்தக் காரியங்களுக்காக பிரிவும், வரியும் இட்டு திருச்சபையை “வளர்க்கின்றனர்”. மனோகரச் சந்தை, ஆசீர்வாதத் தட்டு, ஏலம், பாட்டம், விற்பனை நாள், அறுப்பின் பண்டிகை, பஜனை என வருமானம் பெருகிக்கொண்டே போகிறது.

கோவில் விரிவாக்கத்தைப் போலவே முக்கியமானது கொவில் “கோபுரமாக்கல்”. விரிவாக்கத்தின் பணியின் மூன்றில் ஒரு பங்கு பணம் கோபுரத்தை உயர்த்துவதிலேயே செலவழிக்கப்படுகின்றது. குடிசையில் வாழும் மக்கள் இன்னமும் வந்துபோய்க்கொண்டிருக்கும் கோவிலில், கோபுரத்தை உயர்திக் கட்டுவதனால் நாம் பகிர்ந்து கொள்ளும் இறைச் செய்தி என்ன?

சுமார் 20  முப்பது வருடங்களுக்கு முன்பு “கருப்பட்டி காணிக்கை” குமரி மாவட்டத்திலே மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. ஒருவேளை திருநெல்வேலியிலும் அவ்விதமாக இருந்திருக்கலாம்,  ஆனால் தற்போது அந்த காணிக்கை திருச்சபைக்கு  வராததைக் குறித்த கவலை திருச்சபைக்கு சற்றேனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் மாற்று வழிகளில் காணிக்கையின் வரவை உறுதிசெய்துவிட்டனர். மேலும், திருச்சபைக்கு சமூகத்தின் மேலுள்ள அக்கரை அப்படி. ஓரு சமூகம் தனது  தொழிலை இழந்து அடையாளம் மறைந்து போவதைக்குறித்த எந்த பிரக்ஞயும், அக்கறையும் அதற்கு கிடையது. பணம் வந்தால் போதும்.

திருச்சபையைத் தாண்டி நாம் நட்சத்திர ஊழியக்காரர்களைப் பார்த்தோமானால், அவர்களும், காசு மேல காசு வந்து கொட்டுவதற்கான ஜெபங்களையே ஏறெடுக்கின்றனர். பலவிதமான பிரார்த்தனை திட்டங்களை வகுத்து மக்களுக்கு சாத்தனிடமிருந்து வரும் தீமைகளுக்கு விலக்கிக் காக்கின்றனர். மக்கள் சுபிட்சமாக இருப்பதைக் காண மிகவும் திருப்தியாக உள்ளது! மாதம் மும்மாரி  அருள்மாரி பொழிகிறது! நோய் பிணி கவலையற்ற ஒரு உன்னதமான இடத்திற்கு இந்த உலகத்தையே அழைத்துச்சென்று விட்டவர்களுக்கு நாம் இன்னமும் நேபலுக்காக பரிந்துரைக்காதது தவறில்லையா?. கஷ்டப்படுகிறவர்கள் அனைவருமே பாவிகள், விசுவாசத்தில் குன்றிப்போனவர்கள். அவர்களைக்குறித்து கவலைப்படுவது நமக்கான காரியம் அல்ல.

இப்படித்தான் ஒரு ஏழை கைம்பெண், கோவிலிலில்  மீண்டும் மீண்டுமாக சொல்லப்பட்ட காணிக்கையின் மகத்துவத்தை எண்ணி, தனது கரத்திலிருந்த  இரண்டு காசுகளைப் போட்டள். இயேசு இவளைப் பார்க்காது இருந்திருந்தால், திருச்சபை இறுதி வரை செல்வந்தர்களிடமே யாசகம் பெற்றுக்கொண்டிருக்கும். ஏசு இவளைப் பர்த்ததினால் திருச்சபை அதையும் ஒரு மூலதனமாக கருதி, ஏழைகளும் அதிகமாகக் கொடுக்கலாம், நீங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டல் “இழப்பதற்கு ஏதுமில்லை” என உணார்ச்சிகளைத் தூண்டி விட்டது.

திருவிவிலியத்திலிருந்து மறுபடியுமாக நாம் இப்பகுதியை வாசித்தால் என்ன?

லூக்க 21: 1 – 4
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். 2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.  3 அவர், இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். 4 ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

இயேசு குனிந்திருந்தது ஒரு முக்கியமான குறியீடு. அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்திருக்க வேண்டும் அல்லது மிகவும் கவலையில் மூழ்கியிருக்கவேண்டும். என்னக் கவலை? என்ன ஆழ்ந்த யோசனை? ஆலயத்திற்குள்ளாக தவறுதலாக ஏதும் நடை பெறுகிறதா? அப்படியென்றால் சவுக்கை உண்டு பண்ணி அடிக்கலாமே? இந்தப்பகுதியில் அவர்  அவ்வாறு ஏதும் செய்யவில்லையே? என்ன நடக்கிறது?

லூக்கா 20: 45 – 47 வசனங்களில், “மறை நூல் அறிஞர்களுக்கு” அவர் எச்சரிக்கை விடுக்கிறார். அதைத் தொடர்ந்த பெருமூச்சின், வேதனையின், கசப்பின் விளைவாகவே அவர் தனது தலையைக் குனித்திருக்கவேண்டும். தனது பிதாவின் பெயரைச் சொல்லி கபட நாடகம் ஆடும் வேடதாரிகளை அவர் தோலுரிக்கும் சம்பவத்திற்கான நேரம் வந்தபோது இயேசு நிமிர்ந்து பார்க்கிறார்.

இயேசுவின் பேச்சை அவரது சீடர்கள் அனேகந்தரம் புரிந்து கொண்டது இல்லை. அப்படியே நமது போதகர்களும். அவர் தன்னைச் சுற்றி அடர்ந்திருக்கும்  சூழ்நிலையை மையப்படுத்தியே பேசியிருக்கிறார். இப்போதும் அவர் இந்தக் கைம்பெண்ணை முன்னிறுத்துவதற்கான காரணம், 47ம் வசனத்தில் அவர் மறை நூல் அறிஞர்களைச் சாடுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

“கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள், நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” என்றார் என்பதாகக் காண்கிறோம்.

இயேசுவின் ஒப்பீடு அவளை பாராடுவதற்காக சொல்லப்பட்டது அல்ல, மாறாக ஏழை கைம்பெண்களை  ஆலயத்திற்கு காணிக்கை கொடுக்கச்சொல்லி நிர்பந்தித்து அவர்கள் வாழ்வையே நாசம் செய்யும் காட்சியினை உருவகித்துப் புலம்பின பகுதியாக காணப்படுகிறது.  அவர் ஆவியிலே கலங்கி சொன்ன “இரத்தத் துளிகள்” இவை.

மேற்கொண்டு நாம் 21ம் அதிகாரம் 5ம் வசனத்திலிருந்து வாசித்தோமானால்
“கோவிலைப்பற்றி சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 6 இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லம் இடிக்கப்படும்” என்றார்.

திருச்சபை செய்யும் தவறுகளுக்கு அது கொடுக்கவேண்டிய விலை அதிகம். அறிந்து தவறு செய்வோர் அதிக ஆக்கினைக்கு ஆளாவர் அல்லவா? நமக்கு “நற்செய்தியை” கொண்டுவந்த மேற்கில் இன்று கோவில்களுக்கு ஏற்பட்ட நிலைகளைக் கண்டுமா நாம் இன்னும் மனம் வருந்தாமல் இருக்கிறோம்? கோவிலின் உயரம், அகலம், கவின் மிகு தோற்றம் எல்லாவற்றையும் விட “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா” (1 கொரிந்தியர் 3: 16) என்பது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை?

கைம்பெண்ணின் வாழ்வைப்பற்றி சிந்திக்காத திருச்சபை மிகப்பெரிய வரலாற்றுத் தவறை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இயேசு தனது சாட்டையை சுழற்றுமுன்பதாக நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
(இக்கட்டுரை அட்டிசன் ஜி ரைட் அவர்கள் 1982ல் வெளியிட்ட “கைம்பெண்ணின் காணிக்கை – புகழ்ச்சியா புலம்பலா?” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel.wordpress.com

phone 09870765181

முதல் திருமண நாள்

ஜூன் 11, 2009 by pastorgodson

இனிமையான ஒரு வருடம் எப்படி கடந்தது என்று தெரியவில்லை. நாட்கள் இனிதாய் இருக்கும்போது நேரம் கடந்து செல்வது தெரியாதுதான் போலும். இந்த நாளின் முக்கிய நாயகி என்னோடு மும்பையில் இல்லாத காரணத்தால் என் இனிய வாசகர்களோடு எங்கள் வாழ்வின் சுவையை பாகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குடும்பத்தினருடன் தேவிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு

என்னுடைய வாழ்வில் 4 முறை திருமணத்தின் அருகில் சென்று மறுபடியுமாக பேச்சிலராகவே இருந்துவிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், திருமணம் எனக்கு புரியாத உலகமாகிவிட்டது. இப்படியே இருந்துவிடுவோம் என்னும் அளவிற்கு நான் என்னை தயார் செய்துகொண்ட நேரம். கடைசியாக ஒருமுறை இந்தப் பெண்ணை பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்றார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சம்மதித்தேன்.எந்த நம்பிக்கையும் அற்று, வீட்டிலே நான் போட்டுக்கொண்டிருந்த டி ஷர்ட்டுடன் கிளம்பினேன். என்னை துணிமாற்றச் சொல்லி வற்புறுத்தினால் நான் மொத்த நிகழ்வையும் ரத்து செய்துவிடுவேனோ என்று எண்ணி மின்னல் போல் எல்லரும் கிளம்பிவிட்டர்கள்.

ஜாஸ்மின், எங்களுக்கு தேனீர் கொடுத்தள். மெலிதாக உயரமாக இருந்தாள். என்னைப்போலவே சற்று கரிய நிறம். ஜெயமோகனின் காடு நாவல் வாசித்துக்கொண்டிருந்ததனால் கருப்பின் மீது அப்படி ஒரு கள்வெறிக்காதல் கொண்ட சமயமது. இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு பிஷப் சாமுவேல் அமிர்தம் என்னிடம் உனக்கு என்ன மாதிரி பெண் வேண்டும் என என்னிடம் கேட்ட போது, “அங்கிள், உங்க காண்டாக்ட யூஸ் பண்ணி ஒரு ஆப்ரிக்கன் கெர்லை பார்த்துத் தாங்க” என்று கேட்டேன். சிரித்துவிட்டார்.

ஜாஸ்மினுக்கு என்னை பிடித்திருந்தது. ஒரு போதகரைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது அவளது உறுதிப்பாடு. என்னைப்போல் அல்லமல் அவளைப் பார்க்கச்சென்ற முதல் மாப்பிள்ளை வீட்டர் நாங்கள் தான். நான் சற்று நேரம் எடுத்தேன் பதில் சொல்வதற்கு. பதில் சொல்லி 20 நாட்களுக்குள்ளாக திருமணம் ஒழுங்கானது.

பல பயத்தில் மிக முக்கியமானது “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் தான்”. எல்லமே மாயை தானா?. அன்பு அதிக காலம் நீடிக்காதா? என்கிற பயமே முதன்மையாக இருந்தது. கடவுளின் வாழ்த்துதலால் இன்று வரை ஒருவருக்கொருவர் மிக்க அன்புடனே இருக்கிறோம். பழமொழிகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டமிது.

இதுவரை நான் அவளுக்கு விசேஷமாக எதையும் வாங்கிக்கொடுத்ததில்லை, ஆனால் அவளுக்கு தேவையான பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளன. அவளுக்கு நான் பூ வாங்கிய நாட்கள் மொத்தம் 10ற்கு உள்ளாகவே இருக்கும். ஆனால் ஒரு நாளும் எங்கள் குடும்ப்பத்தில் புன்னகைக்கோ, சிரிப்பிற்கோ, பூரிப்பிற்கோ பங்கம் வந்தது கிடையாது.

அவளது பேச்சு அவள் நிறத்தைப்போன்றே மிக்க அழகுடையது. குயில் நாணும் குரல்வளமுடையவள். சிறந்த பாடகி. திருச்சபையில் எங்கள் டுயட் எல்லா விசேஷித்த நாட்களிலும் உண்டு. அவளது வாயால் கதைகேட்பது எனக்கு மிகவும் பிரியமான பொழுது போக்கு. எதையவது சொல்லி அவள் வாயை கிளரி விடுவேன். தெவிகோடு டயலெக்ட்டில் அவள் பேசுவது கேட்ட்க நான் எதையும் தியாகம் செய்வேன். “ஒவா… பின்னல்லாதெ!” (”அது அன்றி வேறென்ன” என்பதை அவள் சொல்லும் பாங்கு)

கோபமே படவேண்டாம், பார்த்தால் போதும் அவள் கண்கள் கலங்கிவிடும். பொதுவாக எனது “எடக்குமடக்கான” பேச்சுதான் அவளை காயப்படுத்தும். சமாதானம் கூறிவிட்டுதான் மறுவேலை செய்வேன்.

ஜாஸ்மினின் பெற்றோருக்கு என் மேல் அளவு கடந்த பாசம் உண்டு. எனது  திருமணத்தை நடத்தி வைத்தவர் எனது அன்பு நண்பர் அருட் திரு பெனோ ஈனோஸ். திருமண ஆராதனையில் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டர். ” ஜாஸ்மின், காட்சனை நீ கைக்குள்ளாக போடவேண்டுமென்றால் அவனுக்கு மீன் வாங்கிக்குடுக்கத் தவறாதே”. இன்றும் அவர்கள் வீட்டிற்குப் போனால் மீன் விதம் விதமாக இருக்கும். கருங்கல் சந்தையை விலைபேசி முடித்துவிட்டு வந்ததுபோல் ஒரு பிரமிப்பு தோன்றும்.

ஜாஸ்மின் கருவுற்றபோது பயம் ஏற்பட்டது. நான் எப்படி தனியாக அவளை கவனித்துக்கோள்ளுவேன் என்று.  திருச்சபை மக்களின் உதவி எங்களுக்கு அதிகமாக இருந்தது, கர்த்தருடைய பெரிதான கிருபை. அவ்விதமாகவே டாக்டர் அம்ருதா அவர்களும் அவ்ளை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஆறாம் மாதமே நான் அவளை எங்கள் வீட்டிற்கு அனுப்பினேன். கிறிஸ்மஸ் எனக்கு மிக முக்கிய சீசன் ஆனதால், தலை கிறிஸ்மசை ஜனவரியில் கொண்டாட சேர்ந்து வந்தோம். வரும் வழியில் மூணாருக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினோம். ராஜமலைக்கு சென்றபோது நான் என் மகனிடம், “மகன்! அப்பா இப்படி உன்னை கஷ்டப்படுத்திறேன் என நினைக்காதே, நீ வந்திருப்பது ஒரு முக்கியமான இடம்! நன்றாக அனுபவித்துக்கொள்” என்று கூறினேன். எந்த கடின  பயணத்தையும் அவன் தாங்க வேண்டுமல்லவா?

குழந்தை பிறப்பதற்கு ஒரிரு மாதங்கள் இருக்கும்போது ஜாஸ்மின் என்னிடம் நமக்கு ஆண் குழந்தை தான் என்று கூறிவிட்டாள். நான் எப்படி சொல்லுகிறாய் என்று கேட்டேன். “அது எங்க வீட்டுகிட்டெண்டு என்ன பாக்க வந்த கெளவிய் செல்லிச்சினும்”. எப்படி? “ஒவா… வயறு சாடி கிடக்கியதப்பாத்தா எங்களுக்கு அறியிலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டு குழந்தைகள் எல்லாமே குளச்சல் ஜேம்ஸ் மருத்துவமனையில் தான் பிறந்துள்ளன. ஏனென்றால் டாக்டர் செனிகா பிரேம்குமார் எனது பெரியம்மவின் மகள். கடைசி ஒரு மாதம் அவளை தன் மருத்துவமனையில் வைத்து நனறாக கவனித்துக் கொண்டார்கள். அவளுக்கு ஷுகர் அளவு கூடியிருந்ததினால் கூடுதல் கவனம் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் நாள் கர்த்தர் எனக்கும் ஜாஸ்மினுக்கும் ஒரு ஆண் மகனைத் தந்தார். ஆரன் (ஆரோன் என்பதன் ஆங்கில வடிவம்) என்று நான் தேர்ந்தெடுத்த பெயரை, பாட்டி தாத்தா முதல் குட்டி மருமக்கள் வரை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டனர். ஆரன் என்பதற்கு “விரும்பத்தக்க குணாதிசயமுடையவன்” என்று பொருள்.

ஜாஸ்மின் ஸ்வீட் பால் சேர்த்துக்கொள்ளுவதில்லை. நானும் அப்படியே பழகிவிட்டேன். பல காரியங்களில் என்னைவிட அவள் சிறந்தவள். என்னை விட படித்தவள், அறிவாளி, வேத அறிவில் நானே சற்று ஒதுங்கி தான் நிற்க வேண்டும். எனினும் நாங்கள் ஒரு சிறந்த ஜோடி தான்.

 ”மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்!”

 ஏனென்றால்

“இந்த காரியம் கர்த்தரால் வந்தது!”
அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel@gmail.com

phone:  09870765181

இரு பயணிகள்

ஜூன் 10, 2009 by pastorgodson

ஆண்டித்தோப்பு சி எஸ் ஐ திருச்சபையின் விடுமுறை வேதாகமப் பள்ளி சோதனை நாளுக்காக எனது அம்மவை அழைத்திருந்தார்கள். எனது அம்மவும் என்னை அழைத்து நாளை நாம் இந்த காரியத்திற்காக செல்லுகிறோம், வேறு நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதே என்று கூறினார்கள். காலை 8 மணிக்கு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டோம்.எனது அம்மாவுடைய செல்போனை நான் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன்.
அப்போது மிகவும் பவ்வியமான குரலில் பின்னலிருந்து ஒருவர் என்னிடம்

பிரதர்! இந்த நம்பரை கொஞ்சம் அடித்துத்தருவீங்களா?

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கறுப்பு வெள்ளை கலந்த தாடியுடன் இருந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். என்னால் மறுக்க முடியவில்லை. ஒரு ஊழியக்காரரின் தோரணை வேறு இருந்தது. நான் அமைதியாக எனது செல்போனில் அவர் கொடுத்த நம்பரை அடித்து அவரது கையில் தந்துவிட்டு திரும்பிக்கொண்டேன். என்ன பேசப் போகிறார்? அவசர உதவி ஏதேனும் தேவைப்படுகிறதோ? ஒருவேளை காமெடி கீமெடி….

ஐயா…. ஸ்தோத்திரம்… ஸ்தோத்திரம்…
……………..
ஐயா நல்லா இருக்கீங்களா?…..
…………….
கர்த்தருடைய பெரிதானக் கிருபையினாலே நான் நல்லா இருக்கிறேனுங்க  ஐயா!..
………….
ஐயா! மனைவி பிள்ளைங்க எப்படியிருக்காங்க ஐயா?……..
………..
ரொம்ப சந்தோஷம் ஐயா! ரொம்ப சந்தொஷம்!…..
……
ஐயா! உங்க ஊழியம் எப்படி இருக்குதுங்க ஐயா?
……
அப்படீங்களா ஐயா? ரொம்ப சந்தோஷம்!
……
ஐயா நான் இப்போ நாகர்கோவிலிலே இருக்கிறேனுங்க ஐயா….
…….
உங்க ஊழியத்துல இணைஞ்சி செயல்படலாம்ணு இருக்கிறேனுங்க ஐயா
…….
இல்ல ஐயா… கொஞ்ச காலம் கர்த்தருக்காக உங்களோட பணி செய்ய ஒரு வாய்ப்பு தாங்கையா?
……….
அப்படீங்களா ஐயா?….
………
இல்ல ஐயா…உங்க கூட இருந்து ஜெபிச்சிட்டு ஊழியத்துக்கும் வரலாம்ணு தான்….
………
அப்படியெல்லம் இல்லீங்க ஐயா….
…….
ஐயா நான் வந்து ஒரு இரண்டு நாள் மட்டும் தங்கி உங்க குடும்பத்துக்காகவும் ஊழியத்துக்காகவும் ஜெபிச்சிட்டுப் போறேனே….
……
இல்லீங்கையா! தங்குகிறதற்குக்கூட இடமில்லைய்யா….
………
அங்க இப்போ ஊழியத்துக்கு வாய்ப்பு ஏதும் இல்லையா?….
……………………………………………..
இல்லீங்கையா நீங்க தான்….
…………………………………………….
இல்ல வேற வழியே ….
…………………………………………………..
எப்படியாவது…
……………………………………………..
ஒரு நாளைக்கு மட்டும்……
………………………………………..
தயவுசெஞ்சி…
………………………
ப்ச்…
போன் கட்டாகிவிட்டது. அந்தப் ஊழியர் என்னிடம் “நன்றி ஐயா” என்றபடி போனைக் கொடுத்தார். நான் உறைந்து போய்விடிருந்தேன். எனக்கு திரும்புவதற்கு விருப்பம் இல்லை. நான் கைகளை மட்டும் பின்னால் நீட்டி போனை வாங்கினேன்.

அப்போது ஒரு காவி உடையணிந்த பெரியவர் என்னருகில் வந்து அமர்ந்தார். வழுக்கைத்தலை, இறகு பிடுங்கின கோழியைப்போல் இருந்தது அவரது ஷேவ் செய்த முகம். ஒரு வகையில் அவர் போட்டிருந்த உடை ஒரு புத்த பிட்சுவைப்போல் காணப்பட்டது. பஸ் புறப்பட்டுவிட்டது. கவனத்தை மாற்றுவதற்காக பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.
நீங்க எங்க போறீங்க தாத்தா. 
புத்தேரி…
என்ன ஆஸ்பத்தரிக்கா?
இல்ல ஒரு பூஜைக்காக வேண்டி போய்கிட்டு இருக்கிறேன்
வீடு சுசீந்திரமா தாத்தா?
இல்லியே! நான் ஆளூர்ல இருந்து வாறேன்
இவ்வளவு தூரமா? கஷ்டமா இல்லியா?
அவா நமக்கு வேண்டப்பட்டவா…
சரி தாத்தா எங்க படிச்சீங்க?
நான் திருநெல்வேலியில பி ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர். அது கொஞ்ச காலமாகுது.
இல்ல தாத்தா, நீங்க பூஜையெல்லம் செய்ரீங்கல்ல அதுக்கு எங்க  போய் படிச்சீங்கன்னு கேட்டேன்
அதுவா! நாங்க சைவம்…நான்
நான் அவசரப்பட்டு, அப்படியா? நான் சைவ சித்தாந்தம் இப்போ படிச்சுட்டு இருக்கிறேன்! நான் சொன்ன இந்த காரியத்தால் தாத்தா என்னை ஒரு விதமாக பார்த்தார்.
“தாத்தா இந்த கிறிஸ்தவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”. தாத்த இப்போது நான் ஒரு இந்து என்கிற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
அவாளுக்குள்ள ஒற்றுமை இருக்கு. கண்ட இடத்துல காலேஜ கட்டுறா, ஆஸ்பத்தரி கட்டுறா நம்மவாளோட ஜனம் தான் என்று கூறிவிட்டு தனது கைகள் இரண்டையும் வானத்துக்கு நேராக  உயர்த்தி, ஒற்றுமையில்லாம அழிஞ்சு போறா – தாத்தாவின் கண்கள் பனித்தன.

தாத்தா எழுந்துவிட்டார். அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது.

ஒரு ஊழியக்காரர், ஜெபிக்க வருகிறேன் என்று சொன்ன மற்றொரு ஊழியக்காரரை உதாசீனம் செய்ததை எண்ணிப்பார்த்தேன். என்ன காரணமாக இருக்கும்? தங்குவதற்கு இடமில்லாமல் ஒருவர் அலைகிறார், அவருக்கு ஒருவேளை உணவாவது இட்டனுப்பலாமே? முகத்திலடித்தாற்போல் செல்போனை ஆப் செய்துவிட்டால் என்ன அர்த்தம்?

தாத்தாவுடைய புரிதலின்படி நமக்குள் ஒற்றுமை இருப்பதனால் தான் நாம் இவ்வளவு வீரியமாக வளர்ந்து நிற்கிறோம்! நாம் உண்மையிலேயே அப்படியா இருக்கிறோம்?

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                               revgodsonsamuel@gmail.com

Phone:  09870765181

சினிமா கிறிஸ்தவம்

ஜூன் 9, 2009 by pastorgodson

வேதகோட்டவிளை திரு மோகன்குமார் உன்னத சிறகுகளில் எழுதிய ‘வென்னீர் தவளைகள்’ உண்மையிலேயே என்னை சிந்திக்க வைத்தது. புதிய ஒரு கோணத்தை அவர் உள்வாங்கி தனது கருத்தை வெளியிட்டிருந்தாலும் அவை ஒரு சராசரி கிறிஸ்தவன் கொண்டுள்ள தி(தா)ரைக் கண்ணோட்டம் போன்றே வெளிப்படுகிறது. ஒரு வகையில் பண்பாட்டுக் காவலர்களின் குரலைப்போன்று ஒலிக்கிறதே அல்லாமல், ஆழமாக ஊடுருவி நோக்கத்தக்க, வேத அடிப்படையான காரணிகளைக் காண இயலவில்லை. ஒரு மாற்று கலாச்சாரமாக கிறிஸ்தவம் விளங்கவேண்டும் என்பது கட்டுரையாளர் கருத்தானால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

இதனை முன்னிட்டு கட்டுரையாளர் குறிப்பிட்ட(?) பிரபு சாலமோன் – அறிவர் அருள் திரு மோகன்குமார் கேள்வி பதிலை உன்னத சிறகுகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிறிஸ்தவம் சினிமா துறையில் இறங்கியிருப்பதாக சொல்லுகிறார்களோ என்னவோ தெரியவில்லை கிறிஸ்தவர்கள் விளம்பரத்துரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த இரண்டுக்கும் மத்தியில் சமன் செய்யும் கடமை என்போன்ற போதகர்களுக்கு உண்டாகையால் எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

டி வி பார்க்காதே என்று சொன்ன காலம் போய் இன்று கிறிஸ்தவ டி வி சானல்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. சினிமாவை விஞ்சும் பாடகர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளெல்லாம் ஏற்கனவே களமிறங்கிவிட்டார்கள். இப்போது டி வி யைப் பார் என்று கிறிஸ்தவ போதகர்களே அறைகூவல் (வெற்று கூச்சல் என்று சொன்னால் போதாதா?) விடுக்கிறார்கள். நாளையே ஒரு விளம்பரம் தோன்றலாம், உங்கள் அபிமான பால் தினகரன் தோன்றும், தினகரன் பிக்சர்ஸ் ஆசீர்வாதமுடன் வழங்கும், “இயேசு அழைக்கிறார்”. பின் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களும் வந்து ஆசீர்வாதத்தை சென்னை மோட்சம் தியேட்டரில் பெற்றுக்கொள்ளவும். ஞாயிறு 5 காட்சிகள் உண்டு. இளம் பங்காளர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இவ்விதமான ஒரு சிந்தனையுடன் கிறிஸ்தவ விசுவாசிகள் சினிமாவிற்குள் களாமிரங்கியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இயேசு “நான் உங்களை அறியேன்” என்று சொல்லுவாரே தவிர “இவர்களை மன்னியும்” என்று கூறும் சாத்தியக்கூறுகள் கூட இல்லை.

ஒரு விசுவாசி திரைப்படம் எடுக்கலாமா, திரைத்துரையில் பணிபுரியலாமா என்று என்னைக் கேட்டால் “கண்டிப்பாக” என்று கூறுவேன். தமிழக பண்பாட்டின் ஒரு முக்கிய குறியீடாக அது மாறிவிட்டிருக்கும் சமயமிது. நாம் எதையுமே வென்றுவிடலாம் என்கிற தன்னம்பிக்கை கிறிஸ்தவ விசுவாசிக்குத் தேவை. ஆனால் சற்று நிதானம் கூட தேவை. நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்று கூறுபவர்கள் பிறமதத்தினரை ஒழுக்கக் குறைவுள்ளவர்கள் என்று தீர்ப்பதுபோல் தென்படுகிறதே? நான் தேன்காய் உடைப்பதில்லை தசம்பாகம் மட்டும் தவறாமல் கொடுப்பேன் என்பதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? எனது படத்திற்கான பூஜையில் நான் ஜெபிப்பேன் அவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கட்டும் என்று சொல்லுவது யாராவது ஒரு கடவுள் எனது தொழிலைக் காப்பற்றினால் போதும் என்பது போல் அல்லவா தோன்றுகிறது?

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை நாம் இயக்குனருக்கு சொல்லவா வேண்டும்?. “அப்பா அம்மா இல்லாட்டி என்னப்பா! ஆண்டவர் இயேசு இருக்கிறார்” எனும் வசனம் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்கிற அளவில் பஞ்ச் டயலாக் ஒன்றும் இல்லை. எல்லாரும் தான் சொல்லுகிறார்கள், “அப்பனே முருகா காப்பாத்துப்பா”, “கூத்தாண்டவர் ஆசி உனக்கு என்றும் உண்டு”, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” இதைப் போன்ற வசனங்களால் என்ன கருத்தை நாம் நிறுவுகிறோம்? அவன் அதை அப்படிச் சொல்லுகிறான் அதனால் நான் அதை இப்படி சொல்லுகிறேன் என்பது எத்தனை அசட்டுத்தனம். பிஷப் சாமுவேல் அமிர்தம் தனது “ஆட்டோ இவாஞ்சலிஸம் மற்றும் எலெக்ட்ரானிக் இவாஞ்சலிஸம்”  போன்ற கட்டுரைகளில் “அதற்குப் பதிலாக இது” என நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களை சாடுகிறார்.

“நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருந்தும். அவன் சார்ந்தத் துறைகளில் அவன் பிறரது வாழ்வை சுவை படுத்த வேண்டும். அவரை நோக்கி “கர்த்தாவே கர்த்தாவே” என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவருக்கு பயந்து நடந்தால் போதும்.

“இன்டு த வைல்ட்” என்கிற திரைப்படத்தைப் பார்த்தபோது அது ஒரு சிறந்த கிறிஸ்தவப்படமாக என் கண்களுக்கு தெரிந்தது. சமூகம் கொண்டுள்ள முரண்பாடுகளைக் கண்டு வெறுத்த ஒரு மாணவன் தன் பெரும்பாலான சேமிப்பை தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு கானகம் செல்கிறான். போகும் வழியிலோ காட்டில் தங்கியிருக்கும்போதோ அவன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை (ஒழுக்கமானவர்களுக்கு அவன் ‘பியர்’ குடிப்பது தவறு என்றும் அவன் நரகத்துக்குதான் போவான் என்றும் காரணம் கண்டுபிடிக்க படத்தில் வசதிகள் உள்ளன). வழியில் சந்தித்த அனைவரும் அவனை நேசிக்கின்றனர் – பதிலுக்கு அவன் அவர்களுக்கு உண்மையுடன் உதவியாய் இருக்கிறான். அவ்வப்போது தனது சகோதரிக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறான். புத்தகமும் இயற்கையும் அவனை உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தன.  ஒரு நாள் காட்டினுள்ளாக ஒரு பஸ்ஸைக் கண்டு அதற்கு “மேஜிக் பஸ்” என பெயரிட்டு அதனுள் தங்கிக்கொள்ளுகிறான்.

4 வருடங்களுக்குப் பின்பு அவன் வாசிக்கும் புஸ்தகத்தில் குடும்பமாக வாழ்வதை பற்றிய பிம்பம் வரும்போது அவன் திரும்பி ஊர் வர கிளம்புகிறான். பெருக்கெடுத்து ஓடும் ஆறு அவனை தடுக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த பஸ்ஸிலேயே தங்குகிறான். குளிர் காலம் அவனை சோதிக்கிறது. அவன் வேட்டையாடின உணவை அவனால் பாதுகாக்க இயலாததால் தாவரங்களை உண்டு வாழ்வைக் கழிக்கும்போது தவறி விஷ தாவரத்தை உண்டுவிடுகிறான். மரணம் என்பது நிச்சயம் என அறிந்த பின்பும் தனது வாழ்வியல் தத்துவத்தை “பகிர்வது தான் உண்மையான மகிழ்ச்சி” என்று எழுதி வைக்கிறான்.

ஸீன் பென் என்கிற இயக்குனர் திரைக்கதை எழுதி வடித்த இந்தக் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை மையமாக்கி எடுத்தது. உண்மையான வாழ்வின் ஒரு துளியை அனுபவித்த ஒருவன் சொல்லுவது நமக்கு வேத புத்தகத்தில் எளிதாக, தெளிவாகக் கிடைக்கிறது. அவற்றை அப்படியே சொல்லுவதற்கு ஒரு காட்சி ஊடகம் தேவையா? அதுதான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் முழங்குகிறார்களே.

திரைத்துறையில் இருப்பவர்களை நான் மனமார வாழ்த்துகிறேன். கண்டிப்பாக நீங்கள் சாதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று. ஆனால் கிறிஸ்தவ அடையாளத்தோடு இருக்கவேண்டும் என நீங்கள் கருதினால்,  “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருங்கள் - ஒலிபெருக்கியாய் அல்ல” .

வேத புத்தகத்தை கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் அதை விளக்க முற்படுவது தன்னுடைய சொந்த பண்பாட்டு சூழலில் தான் என்பதை நாம் நன்கு அறிவோம். எனினும் கொஞ்சமேனும் அதன் உண்மையான வரலாற்று, சமூக கலாச்சார பின்னணியமும் அதற்கும் நமக்கும் உள்ள இடைவெளிகளியும் நிரப்ப முற்படுவோமானால் வேதம் நம்மோடு “பேச முற்படுவதை” நம்மால் “கேட்க” முடியும். உமது வேதம்  என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் என்று சொன்ன சங்கீதக்காரன் இருட்டிலே வேதபுத்தகத்தை எடுத்துக்கொண்டு முகம்குப்புற விழுந்திருக்கமாட்டான்.

மோசேயை நாம் உதரணமாக எடுத்துக்கோள்ளுவோம், அவன் எகிப்திலே உள்ள பார்வோனுடைய அரண்மனையில் தங்குகிறான். ஒன்று இரண்டு நாட்களல்ல இஸ்ரவேலர் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கண்ணீரோடு கிடக்கும்போது,  எந்தக் கவலையுமற்ற சுகமான வாழ்வு 40 வருடம் அவனுக்கு கிடைத்தது. ஒரு நல்ல ஆட்சி நடத்தும் திறமை சார்ந்த கல்வி அவனுக்குக் கிடைத்திருந்தாலும் அவன் புரிந்து கொண்டது/ உள்வாங்கிக் கொண்டதும் அடிமைப்படுத்தும் முறையாகிய அடிதடிதான். ஆகவே தான் கடவுள் மறுபடியுமாக அவனை 40 வருடம் தன்னுடைய மந்தையை மேய்க்கும் பணிக்காக அவனை மீதியான் தேசத்துக்கு அழைத்துக்கொண்டார். அதற்கு அடுத்த 40 வருடங்கள் அவன் பட்ட கஷ்டங்கள் போல வேதபுத்தகத்தில் எந்த முதியவரும் அடைந்ததாக நாம் காண இயலாது. ஆனால் அது தான் வாழ்க்கை என நாம் புரிந்துகொள்ளுகிறோம்.

மோசே வாழ்ந்த இரண்டு இடங்களுமே கர்த்தரை தொழுதுகொள்ள ஏற்ற இடமல்ல. வழிபாட்டு முறை நடத்தப்படவேண்டிய தேசத்துக்கு மோசேயால் செல்ல முடியவில்லை? ஆனால் கர்த்தரை முகமுகமாக தரிசித்த பாக்கியம் அவன் தவிர வேறு எவருக்கும் வாய்க்கவில்லை.  நாம் இருக்கும் இடம் அல்ல முக்கியம் – கர்த்தர் நம்மேல் வைத்த கிருபையே பெரிது என்பதை உணர்வதே முக்கியம்.

கடவுள் நீடிய பொறுமை உள்ளவர், அவர் நமது வாழ்விலே நம்மை பல இடங்களில் அமர்த்துகிறார், நாம் பக்குவம் அடைந்து அந்த இடங்களில் அமர்ந்து கொள்ளுகிறோமா? அல்லது அலைபாய்ந்து அவர் நாமத்தை வீணிலே வணங்குகிறோமா என்பது ஒரு பெரிய கேள்வி.

பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மன்றத்திலே, இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் பேச்சை கவனித்த போது, எங்களை அனேகர் கண்டுகொள்ளாமல் இருந்த போது மோகன் (எத்தனை மோகன் ஒரு கட்டுரைக்குள்ளாக) சி லாசரஸ் அவர்கள் தன் நிலையிலிருந்து கீழிறங்கி (கிட்டத்தட்ட பரலோகத்தில் இருந்து)வந்து சந்தித்தார். அப்படியிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? நானும் கீழிறங்கிவந்து (ஏனென்றால் நான் உங்களைப்போன்ற சதாரண விசுவாசி அல்ல சினிமா பெற்றெடுத்த ஸுப்பர் ஸ்டார் விசுவாசி) அவரோடு சேர்ந்து திரைக்கலைஞர்களுக்காக ஜெபிக்கிறொம். என்ன விதமான விசுவாசம் இது? எந்த ஆலயமும் இவர்களுக்கு தங்கள் கதவுகளை மூடியதாக தெரியவில்லையே? இவர்கள் தான் மன மேட்டிமையுடன் போகாமல் இருந்திருக்கிறார்கள்.

வியாபரிகளுக்கென்று “சிறப்பு ஜெபம்” செய்யும்போது சினிமா எனும் வியாபாரம் சகோதரர் மோகன் சி லாசரசுக்குத் தெரியாதா என்ன? முதலீடு செய்துவிட்டார். சினிமா உலகம் எப்பொதுமே விளம்பரத்தை விரும்பும் இடம் “போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர்கள் அல்லவா? ” மோகன் சி லாசரஸ் அவர்களின் தொடர்பு இருந்தால் அவரது “ரசிகர் மன்றமே” தனது படத்தை 100 நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்ற விளம்பர + வியாபாரக் கணக்கை போட்டுவிட்டர்.

நான் எல்லாவற்றையும் மிகைப்படுத்தியதாக உங்களுக்குத் தோன்றலாம். அது அப்படித்தானிருக்கும். கண்களை மூடி, பல ஸ்தொத்திரங்கள் சொல்லி, ஒரு பரவசமான பாடலைப் பாடி, தாங்க் யூ ஜீஸஸ் என பீட்டர் விட்டு, உருக்கமாக நடித்து, கண்ணீர்விட்டு, க்ளைமாக்ஸ் வரை கொண்டு செல்ல தெரிந்த ஒரு ஊழியக்காரன் எங்கே கடுமையாக சாடுகிற நான் எங்கே?

மிக்க மனத்தாழ்மையுடன் கூறுகிறேன்…தயவுசெய்து உங்கள் விசுவாசத்தை உங்களுக்கு இறைவன் கொடுத்தப் பணியிலே வைத்துக்கோள்ளுங்கள். மக்கள் திருமறையை வாசிக்க பழகி விட்டார்கள். சினிமாவில் இருந்து கொண்டு அதை வாசித்து காட்டுவது பெருமை என்று எண்ணாதீர்கள் அது அந்த பிரம்மாண்டமான ஊடகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய இழுக்கு. உங்களை அந்த இடத்திலே கொண்டு சேர்த்த கர்த்தர் துக்கப்படும் காரியம். உங்கள் தொழிலை அற்பணிப்புடன் செய்யுங்கள். குறைந்தது ஒரு 50 வருடம் கழித்து வரலாறு சொல்ல வேண்டும் “இயக்குனர் பிரபு சாலமன் தனது திரை(ப்படத்தால்)க்கதையால் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிக்காட்டினார்” 

வேதபுத்தகத்தை வெறுமனே வாசிக்காமல் மறு வாசிப்பிற்கு உட்படுத்துங்கள் – அதையே நீங்கள் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளிப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க பிரியமுடன்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Mobile: 9870765181

பிரார்த்தனாஞ்சலி- இறைவேண்டல்களின் தொகுப்பு

அக்டோபர் 24, 2008 by pastorgodson

பிரார்த்தனாஞ்சலி எனும் இறைவேண்டல்களின் தொகுப்பு பேராயர் சாமுவேல் அமிர்தம் மற்றும் அவர் மனைவி லில்லி அமிர்தம் ஆகியோரின் நெடும் இறைபணியின் தொடர்ச்சி ஆகும். உலக திருச்சபை மாமன்றத்தின் ஒருங்கிணைப்பு கற்பிப்பாளராகவும் தென் கேரள சி எஸ் ஐ அத்தியட்சராகவும் தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் விரிவுரையாளரகவும் முதல்வரகவும் தன் கூர் திறமைகளை இறைவல்லுனர்களுக்கும் இறைபற்றாளர்களுக்கும் ஏன் பனைதொழிலாளர்களுக்கும் எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தவர் அறிவர் சாமுவேல் அமிர்தம்.  இயெசு தனது சீடர்களுக்கு கற்பித்த இறைவேண்டலயே மையமாகக் கொண்டு தனது இறைபணியில் சேகரித்த அரிய பல மன்றாட்டுக்களை தனது மனைவியோடு சேர்ந்து இந்த வேன்டுதல் மாலையைத் தொகுத்தளிக்கின்றார். பேராசிரியர் லில்லி அமிர்தம் சிறந்த ஓவியர் மற்றும் சமயற்கலை நிபுணர். பாரசாலையை அடுத்துள்ள கிராம மற்றும் வறிய பெண்களுக்காக சேவை புரிந்துவருகிறார். தனது பேரக்குழந்தைகளுக்காக அன்பும் இறைபற்றும் நிறைந்த தாத்தக் பாட்டி தேடி சேகரித்து கொடுத்த இறையியல் பொக்கிஷம் இது.

தனது முகவுரையில் இறைவேண்டல் குறித்த தன் தரப்பை அவர் தேர்ந்த இறையியல் வல்லுனராக மட்டுமல்லது பொறுப்புள்ள போதகராகவும் தெளிவுபடுத்துவது இப்புத்தகத்தின் ஆழ்ந்த இறைத்தேடலை உறுதிப்படுத்துகின்றது. ‘இறைவேண்டல் என்பது விண்ணப்பம்  ஆயினும் அது பிறருக்காக அதிகமாகவும் நமக்காக சொற்பமாகவும் இருப்பதுவே’ என்கிறார். அதுபோலவே ‘இறைவேண்டல் இறையோடுகூடிய உரையடல் எனினும் இறைவார்த்தயை அதிகமாக நிதானிக்கவும் சொற்பமாக பேசுவதுமே’ என உறுதிபடக்கூறுகின்றார். இன்று சில கிறிஸ்தவ மத போதகர்கள் தொலைபேசியில் கடவுளோடு பேசுவது போன்ற பிம்பத்தை ஆசிரியர் குறுநகையோடு மறுக்கிறார்.

பல புராதன இலக்கியங்களிலிருந்தும், இதிகாசன்களிலிருந்தும், பின்நவீன நூல்களிலும் இருந்து ஆசிரியர் பல வேண்டல்களை சரளமாக எடுத்தாழ்கிறார். கிறிஸ்தவ இறையியலாளர்கள், பற்றாளர்கள், புனிதர்களோடு கூடவே பிற மத சான்றோர்கள், சாமானியர்கள் மற்றும் புனிதர்களின் இறைவேண்டல்களை இழையோடவிட்டிருப்பது வேண்டல் செய்யுமிடம் ஒன்றே என அறுதியிட்டுக்கூறுகிறது. வேண்டல் செய்யும் காலம் சூழல் நபர்கள் என வகைவகையாக வேண்டல்கள் காணக்கிடைக்கின்றன. மனிதன் இறைவேண்டல் செய்வது நாமறிந்த்தே. இங்கோ எருது, சேவல், ஆமை, எறும்பு மட்டுமா கேரள யானை கூட நகைசுவை வேண்டல் உகுப்பது அருமை. கருத்தாழமிக்க சூழலியல் வேண்டல் துவங்கி, காதலாகி     கசிந்துருகும் வேண்டல் வரைக்கும் அவர் பயணிக்கும் ஆன்மீகம் விரிவானது. இறைவனை பற்றிக்கொள்ளும் சீடத்துவ வேண்டல்கள், நெஞ்சை ஊடுருவும் ஓரிருவரி அம்பு வேண்டல்கள், தேசத்திற்கான மன்றாட்டுக்கள் என சுமார் 377 வேண்டல்கள் கொட்டிக்கிடக்கின்றன. துயருற்றோருக்கான வேண்டல்கள் புடமிடப்பட்ட ஆறுதலின் வார்த்தைகள்.

இதன் நெறியாளர் மதுரையைச் சார்ந்த நந்தினி முரளி. இவர் ஆங்கில பத்திரிகைகளிலே தொடர்ந்து எழுதுகிறவர். தனது வாழ்வில் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். பெண்ணிய கருத்தியல் கொண்டவர். முன்னுரை அளித்துள்ள அறிவர் தயான்சந்த் கார், அமிர்தம் அவர்களின் தலைச்சிறந்த மாணவர். பிற்பாடு  தமிழ் நாடு இறையியல் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

காட்சன் சாமுவேல்

மொழி ஆங்கிலம்      விலை ரூ 150     பக்கங்கள் 288     முதற் பதிப்பு 2004

கிடைக்குமிடம்
தமிழ்நாடு இறையியற் கல்லூரி
அரசரடி, மதுரை- 625010
தொலை பேசி: 0452 260 2352

ஆதி மன்றாட்டு

அக்டோபர் 24, 2008 by pastorgodson

அன்பின் திருவுருவாம் கடவுளே
உமது அன்பின் ஒளியை
பிறரிடம் கண்டு கொள்ள
எங்கள் கண்களை திறவும்

கிருபை நிறை இயேசுவே
உமது கிருபைக் கடலை
தோழமையோடு பகர
எங்கள் இதயத்தை திறவும்

ஒருமை பகரும் தூய ஆவியே
உமது ஒப்பிலா ஒருமையை
பாரிலே பறைசாற்ற
பகரும் நெஞ்சைத் தாரும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

அதிகாலை

அக்டோபர் 24, 2008 by pastorgodson

தூயராம் எங்கள் கடவுளே
துயில் எழுந்த நாங்கள்
துதிக்கிறோம் உமயே

கடந்த இரவிலே
கண்ணயராது
கருத்தாய் காத்தவரே – இந்த
அதிகாலை நேரத்தில் உம்மை
தியானித்திருப்போம்

இந்த நாளினை
இனிதாக்கியவரே
இன்றைய பணிகளிலே – உமது
சொற்படி வாழவும் வாழ்த்தவும்
இறையாசியருளும்

நாளைய பொழுதின்
நாய(கனே)கியே
நிதமும் நன்றியுடன் – நின்னையே
நினைத்துருகும் என் நெஞ்சிலே
மாறா நின் கருணைப்பொழியும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

குப்பைத்தொட்டி

அக்டோபர் 24, 2008 by pastorgodson

குப்பைத்தொட்டியை கடந்துபோகும்பொது ஏற்பட்ட சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் குப்பைத்தொட்டியை அலட்சியபடுத்தாமல் ஆராய்ந்து அறிய எத்தனித்தால் அதுவே ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து நல்ல பல கருத்துக்களை அள்ளித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குப்பைத்தொட்டியை வைத்திருப்பதன் காரணம் என்ன? குப்பைகளை இடுவதற்கா அல்லது குப்பைகளை உருவாக்குவதற்காகவா? சுத்தம் சோறு போடும் என்பார்கள் ஆனால் நாமோ சோற்றை குப்பைத்தொட்டியில் போடுகின்றோம். சுகாதாரம் என்பது சமத்துவம் எனும் உயர்ந்த கருத்தை வலியுறுத்தும்போது மற்றோர் இடத்தை குப்பைத்தொட்டியாக்கி சுத்தமானவர்கள் என்று பெருமிதம் கொள்ளுவது நியாயமா? குப்பை என்று நாம் நினைப்பதை இன்னோர் இடத்திற்கு மாற்றுவதால் நாம் அதை அகற்றுபவர்கள் ஆவதில்லை, மாறாக அதை இடமாற்றல் செய்து இடும் பொருட்களின் எண்ணிக்கையையும் அளவுகளையும் கூட்டிக்கொண்டே போகின்றோமல்லவா? என்னைப்பொறுத்தவரையில் மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக நான் கருதுவது குப்பைத்தொட்டிதான், ஏனென்றால், மனிதனின் மற்றெல்லா கண்டுபிடிப்புகளும் இதனுள்ளே சங்கமமாகிவிடும்.

குப்பைத்தொட்டிக்குள் செல்லும் எதுவும் மறுபடியும் பிறந்தது ஆகின்றது. குறிப்பாக தன் முந்தைய நிலையைத்தாண்டி ஒரு உன்னதமான நிலையை அது அடைகிறது என்பது என் கணிப்பு. மறுபடியும் பிறந்தது என்ற வார்த்தை பிறப்பை ஞாபகப்படுத்துகின்றதல்லவா? ஆம் வேறெங்கும் இல்லாத அதிசயம் இங்கு நம் தேசத்தில் நிகழ்கின்றது. குப்பைத்தொட்டி பெற்றெடுக்கின்றது மனிதக்குழந்தைகளை! இந்த விசேஷ குழந்தைகளைப்பற்றி நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? சமூகத்தோடு சேர்ந்து இக்குழந்தைகளை தாழ்வாக கருதும் நம்மைப்பார்த்து குப்பைத்தொட்டி – மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவரை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து விழா கொண்டாடுகிறீர்களே, ஏன் என்னிடம் பிறந்தவர்களுக்கு இந்த கவனிப்பு இல்லை என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறப்போகின்றோம்? யோசித்துப்பார்க்கும்பொழுது மேலும் பல சிந்தனைகள் நம் எண்ண அலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன அல்லவா? ஆம் என்னைப்பொறுத்தவரைக்கும் மனிதனுக்கும் குப்பைத்தொட்டிக்கும் உள்ள உறவு ஒரு புனிதமான பந்தமாகவே காணப்படுகிறது. மனிதனயும் குப்பைத்தொட்டியையும் பிரிக்கும் ஒரு சமுதாயம் எதிர்காலத்தில் எங்கும் இராது எனும் அளவிற்கு நம்மோடு நிழல்போல வருவது குப்பைத்தொட்டி மாத்திரமே. தன்னிடத்தில் வரும் எதையும், எவரையும் புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு விசாலமான சிந்தனைவாதியாக, யதார்த்தவாதியாக குப்பைத்தொட்டி காணப்படுவது விந்தையிலும் விந்தை.

குப்பைத்தொட்டிகளை சார்ந்து வாழும் சிறுவர்களை கேட்டால் சொல்லுவார்கள், அது தங்கள் கோயில் என்று. நாள் முழுவதும் இந்த புண்ணிய தலத்தில் தவம்புரியும் இந்த இளம் சன்னியாசிகள் கொண்டுவந்தது என்ன? கொண்டுபோவது என்ன? சற்றே உரக்க சிந்தித்துப்பார்த்தால், கடையெழு வள்ளல்களையும் தாண்டி, அள்ள அள்ள குறையா செல்வங்களை நாள்தோறும் அளிக்கும் குப்பைத்தொட்டி ஒரு எட்டாவது வள்ளலாக எழுச்சியோடு இந்த சிறுவர்முன் மட்டுமல்லாது நம்முன்னும் கம்பீரமாக நிற்கிறது. வானளாவ உயர்ந்து நின்ற தேவாலயத்தை பார்த்த இயேசு ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும் நாட்கள் வரும் என்று ஏன் குறிப்பிட்டார் என்பது புரிகிறதல்லவா?

நாம் இப்போது கூர்ந்து கவனிக்கப்போகிறோம், குப்பைத்தொட்டியில் என்ன இடப்படுகின்றது என்று. சமூகம் சொல்லலாம் மாசுகள் என்று! சிலர் கூறக்கூடும் குப்பைகள் என்று! அது நிஜம்தானா என்று நாம் சற்றே எண்ணிப்பார்க்கையில் இல்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. நாம் குப்பைத்தொட்டியில் போடுவதெல்லாம் நம் வறட்டு கவுரவத்தையும், நாம் வாழும் சமுதாயத்தின் வெளிப்பாடுகளையுமே அன்றி குப்பைகளை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மாசு நம் மனதில் இருக்கிறது, நம்மைச் சுற்றியும் இருக்கிறது. ஆனால் அது கண்டிப்பாக குப்பைத்தொட்டியில் இல்லை என உறுதியாக கூறிவிடமுடியும். எல்லாம் படைத்த இறைவன் ஏன் ஒரு குப்பைத்தொட்டியை படைக்கவில்லை என்றால் ‘குப்பை என்று எதுவும் கிடையாது” என்ற சீரிய நோக்கால் அல்லவா? நடந்தது என்ன? நாம் கண்டுபிடித்தோம் குப்பைகளையும் குப்பைத்தொட்டியையும். நம்மை சுற்றி கடவுள்(கள்) கோணிப்பையுடன் குப்பைத்தொட்டிகளைச் சுற்றி சுற்றி வரும்பொழுது, நாம் வேறு சில பைகளுடன் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். நன்மை தீமை வேறுபடுத்தத் தெரியாத அளவு கடவுளை தூரமாக வைத்து வேடிக்கை பார்க்கும் மதபோதகர்களால் ஏற்பட்ட தீங்குகளின் விளைவா இது? குப்பைத்தொட்டியை இவ்வளவு தூக்கி பேசவேண்டிய அவசியமில்லை என்று யாரோ சொல்லுவது கேட்கின்றது! ஆனால் அதன் அவசியம் அவசரமானது.

ஒரு வினாடி உற்றுப்பாருங்கள், எங்கும் காணாத சமத்துவத்தை குப்பைத்தொட்டியின் அருகில். மானுடம், பறவை, மிருகம், ஊர்வன என என்னே ஒரு ஒற்றுமை. கூடியிருக்கும் காரணம் கூட உணவு என்கிற ஒன்று தானே? கூடி உண்ணும் இடத்தில் தானே இறை ப்ரசன்னம் இருக்கிறது? பகிர்தலைபற்றி கூறவந்த இறைவனே குப்பைத்த்தொட்டியில் உணவருந்த வந்த அழகை கவனிக்க தவறிவிட்டோம்! காலம் கடந்துவிட்டதா அல்லது கண் கெட்ட பிறகு திரைப்படமா? ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இன்று குப்பைத்தொட்டியில் நாம் போடுவது நம் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வைக்கூடத்தான்! ஏன்? எப்படி இவ்வளவு குருரமாக மாறிவிட்டிருக்கிறோம்?

குப்பைத்தொட்டியில் இலைகள் மற்றும் மட்கிப்போகின்ற சாதனங்களைப் போடுவது பழங்கதையாகிப்போனது. மட்காப் பொருட்களகிய ப்ளாஸ்டிக் பைகள், ஆஸ்பத்தரிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், அன்னிய நாட்டுப்பொருட்களின் கழிவுகள் என மனித குலத்தின் எதிர்க்காலத்தை உரசிப்பார்த்து உயில் எழுதும் ஆயுதங்களின் தளவாடமாகவே மாறிவிட்டது. எங்கே நம்மை இட்டுச்செல்லும் இந்தப் பாதை?

நம் கேள்விகளையெல்லம் ஒன்று திரட்டி குப்பைத்தொட்டியைக் கேட்டால் குப்பைத்தொட்டியின் பதில் என்னவாக இருக்கும்? குப்பைத்தொட்டி கூறுகின்றது – ‘மனித மனமே ஒரு குப்பைத்தொட்டிதான்” எதை வைக்கவேண்டும் எதைக் களையவேண்டும் என இனம் பிரிக்கத் தெரியாத ஒரு குப்பைத்தொட்டி என்று. சிந்தித்துப் பார்த்தால் அது சரியென்றேப் படுகின்றது. மனித மனமே குப்பைத்தொட்டியை பெற்றெடுத்த இயந்திரமாக இருக்கின்றது. குப்பைத்தொட்டியை ஒரு சிறிய பொருளிலிருந்து ஊதி மிகபிரம்மாண்டமாக ஆக்கி சில மூன்றாம் உலக நாடுகளையே குப்பைத்தொட்டியாய் மாற்றிவிட்டது யாருடைய தவறு? விளைவு, இன்று நாம் குப்பைத்தொட்டியை வைத்திருக்கும் நிலையில் நம்மை சில மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்தின் சுயமரியாதையை இழக்கச்செய்யும், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சிந்தனைகளை களைவது அத்தனை சுலபமில்லை, ஆனால் இதைக் களைவது மிகவும் அவசியம். இல்லவிட்டால் இந்த பூமி ஒரு குப்பைத்தொட்டியகவே இருந்துவிடும் இறுதிவரைக்கும்.

வாழ்க்கையில் பலவற்றை தேவையற்றவைகள் எனக் களைகிறோம். அது நமக்கு தேவையற்றதே அன்றி, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் ஒரு பெருங்கூட்டதை பொருட்படுத்தத் தவறுகிறோம். களையும் இந்த பொருட்களுக்காக வீணான சுரண்டல்கள், அழிவுகள், அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறோம், முடிவில் நாமே அடங்குகிறோம். பகிர்ந்து வாழத் தெரியாமல், பிரித்துவாழ முற்படுகிறோம். முக்கியமற்றவைகள் என நாம் இன்று நினைப்பது நாளை அதி முக்கியமான ஒன்றாக மாறுவதை சிந்தித்துப் பார்த்ததுன்டா? இலவசமாக இறைவன் கொடுத்ததை மாசுபடுத்தி, மாசற்றது எனக்கருதி காசுகொடுத்து வாங்கிக் குவிப்பவைகளால் மேலும் மாசுபடுத்துகிறோம் அல்லவா?

குப்பைத்தொட்டியின் ஆதிகேள்விக்குப் பதில் கிடைத்ததுபோல் இருக்கின்றது! மாட்டுக்கொட்டிலில் பிறந்த பாலனுக்கு நிகர் குப்பைத்தொட்டி குழந்தைதான் சந்தேகமில்லை. இயேசு கருவாக இருந்தபோது அதன் தாய் அதைக்குறித்து வேதனைப்பட்டிருக்ககூடும், அதன் தகப்பன் அதைக்குறித்து வெட்கப்பட்டிருக்கக்கூடும். அது தேவையற்றது என முடிவுகட்டி ஒரு ராஜாவே அதை அழிக்க கங்கணம் கட்டினான். எல்லோரும் தேவையற்றது எனக் கருதி அந்த குழந்தையை குப்பைத்தொட்டிக்கு அனுப்ப எத்தனித்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில், இறைவனின் அநாதி திட்டப்படி அதன் தாயும் தகப்பனும் எடுத்த முயற்சியால் அந்த சிசு குப்பைத்தொட்டியில் இடப்படாமல் மாட்டுத்தொழுவத்தில் அவதரித்தது. அதன் பலனை அக்குழந்தையின் பெற்றோர் அனுபவித்தார்களோ இல்லையோ நாம் அனுபவிக்கிறோம் இல்லையா? ஆகவே மறு சுழற்சிக்கான முயற்சிகளை எடுப்பது நம் கடமை என்பதை தியானமாக கொள்ளுவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன்.

காட்சன் சாமுவேல்
(மார்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் வருடாந்திர கூடுகையில் வாசிப்பதற்காக 28.11.2003 அன்று இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது)

இரயில் பயணத்தில்

அக்டோபர் 28, 2008 by pastorgodson

காக்கும் கடவுளே!
எங்கள் அலுவலகத்துக்கு புறப்படுகின்றோம்.
நெரிசலான இரயில்தான்
தினமும் பழகிய ஒன்று தான்
என்றும் போல் இன்றும் உடன் வாரும்

மூவர் இருக்கையில் நால்வர் அமர்வது
பகிர்வின் பண்பல்லவா?
சுமைகளை வாங்கி தாங்கியில் வைப்பது
ஊதியமற்ற உதவியல்லவா?

வயோதிபர் மற்றும் பெண்களுக்காக இடமளிப்பது
அன்புகூறுதலின் செயலல்லவா?
வறியவர் விற்கும் பொருட்களை வாங்குதல்
பொருளுள்ள வாழ்வல்லவா?

இறங்குமிடம் அறியா புதிய பயணிகட்கு
திசைக்காட்டும் கருவியல்லவா?
உறவினர்கள் தவறி கதறியழும் பாலகர்க்கு
பாசம் காட்டும் தாயுள்ளமல்லவா?

மயங்கி விழுந்த எந்த அன்னியருக்கும்
நல்ல சமாரியர்களல்லவா?
நெருக்கத்திற்குள்ளும் பஜன் பாடிடுவது
துதிக்கும் உள்ளமல்லவா?

ஆம் கடவுளே!
குறைகள் பலவிருந்தாலும்
ஒற்றுமையின் சின்னமாம்  இரயில் பயணத்தில்
உமது காக்கும் கரம்
எங்களோடிருப்பதை முழுவதுமாக உணருகிறோம் – ஆமேன்

காகம்

அக்டோபர் 30, 2008 by pastorgodson

மும்பை பட்டிணத்தின் மழை மிகுந்த நாளில் தவிர்க்க முடியாத பிரயாணம் ஒன்று ஏற்ப்பட்டது. ‘தானே’ இரயில் நிலையம் முன்பு ஷூ மூழ்குமளவு தண்ணீரில் பொதுமக்கள் எதுவுமே நடவாதது போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மும்பை வாழ்க்கை இன்னமும் அதிசயிக்கதக்கதாகவே இருக்கும் என் கிராமத்து மனது பரக்கு பார்த்தபடியே நிதானமாக நீரை துழாவியபடியே நடந்தது. எனக்கு மிகச் சமீபமாக ஒரு கீச்சுக்குரலை நான் கேட்டபொழுது அப்படியே நின்றுவிட்டேன். என் கால்களின் அருகிலேயே ஒரு எலிக்குஞ்சு (பெருச்சாளியின் இளவல்?) பரப்பரப்புடன் நீந்திக்கொண்டிருந்தது. எங்கே சென்று கரையேறுகிறது என நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு காகம் என்னை வட்டமிட்டபடி வந்து ஒரு சாய்ந்துபோன தூணில் அமர்ந்தது. சூழ்நிலையை புரிந்துகொண்ட நான், இன்னும் நிதானமாக கூர்ந்து கவனிக்க நேரமில்லாமல் என்ன செய்வது என நிதானிப்பதற்குள் காகம் மிக லாவகமாக தனது உணவை கொத்திச் சென்றது. கீச்சுக் குரல்களும் காகமும் மறைந்தன. காகம் தன்னுடைய உணவை எங்கே எடுத்துச் சென்றிருக்கும்? என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தேன்.

சமீபநாட்களாக நான் சிறுகுழந்தைகளை அழைத்து கதைகளைச் சொல்லவும், கேட்கவும் ஆரம்பித்திருந்தேன். அவர்கள் கூறிய கதைகளில் காகங்களும் இடம் பெற்றிருந்தன. குழந்தைகள் வாழ்வில் காகம் பெற்றிருக்கும் முக்கிய இடம் என்னை காகத்தின் பால் ஈர்த்தது. நகர வாழ்வில் நம்மைவிட்டு அநேக பறவைகள் அகன்றபோதிலும், தியாகம் மற்றும் நல்லுறவை வெளிப்படுத்தும் காகம் நம்மோடு தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காகங்கள் குறித்த உயர்வான எண்ணங்கள் ஏதும் தற்பொழுது நம்மிடம் இல்லை. நாம் விரும்பத்தகாத கரிய நிறம், குரல்வளமற்ற அதன் கரைச்சல், நடைப்பழகத் தெரியாமல் தத்துவது, சனி பிடித்துவிடுமோ என்ற அச்சம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசுத்தமாக கருதப்படும் பொருட்களோடுமுள்ள அதன்  தொடர்பு. எனினும் குழந்தைகள் தம் வாழ்வில் காகம் நீக்கமற நிறைந்திருப்பது, காகத்தை நாம் குறைத்து மதிப்பிடலாகாது எனச்சுட்டுகின்றது.

குழந்தைகளுக்கு சோறூட்டவேண்டி, காகங்களை நாம் காண்பிக்கும் பொழுது காகம் ஒன்றும் குழந்தைகளை பயமுறுத்துவது இல்லை. நாம் தான் சிறிது சிறிதாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறோம். காகம் தலைக்குமேல் பறப்பது நல்லதல்ல என துவங்கி சனி பகவானை அழைத்து வந்து பயமுறுத்தும் வரை நமது கதைகள் யாவும் குழந்தைகளை காகத்தை விட்டு தூரமாக்கும் சதிவலைகளாகவே காணப்படுகின்றது. பிஞ்சு இதயங்களை நஞ்சாக்கி காகத்தின் தியாகத்தை அறிந்துகொள்ள முடியாமற் செய்கிறோம். காகங்களை கைச்சாடையால் துரத்துவதோடே மெல்ல மெல்ல நாம் காகங்களை குழந்தைகளிடமிருந்து தூரமாக்கும் கதைகளை பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறோம். ‘பாட்டி வடை சுட்டக்கதை’ தான் நம் கைவசமிருக்கும் முதற்கதை. திருட்டு என்றால் என்ன?, பிறரை நயமாக வஞ்சிப்பது மற்றும் ஏமாற்றுவது எப்ப்படி போன்ற நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு புரியாத வயதிலேயே புரியும்படி விளக்குகின்றோம். தன் தள்ளாமையில் உழைக்கும் பாட்டிக்கு நிகழும் அவலம் தான் உழைப்போருக்கு அனுதினமும் நடைபெற்றுவரும் அவலம் என்பதையும், நம்மைசுற்றி சுரண்டி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதையும் எடுத்துக்கூறாமல் விட்டுவிடுகிறோம். உயிர் வாழ உணாவின் இன்றியமையாமை என்ன என்பதை மட்டுமே அறிந்திருக்கும் காகத்திற்கு திருட்டு பட்டம் அணிவித்து, ‘தவறு செய்தவன் ஏமாற்றப்படுவான்’ என்கிற நீதியோடு நரி செய்த ஏமாற்று வேலைச் சரி என்பதாகவே கதையை முடிக்கிறோம். காகம் புத்திசாலியானது என நிரூபிக்கும் வகையில், வடையை தன் கால்களில் கவ்விவிட்டு, பாடல் பாடி நரியை ஏமாற்றிய காகம் என இக்கதையின் நீட்சியும் உண்டு.

புத்திசாலி காகங்கள் குறித்த கதைகள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. நீர் தேடி அலையும் காகம் ஒன்று ஆர்கிமிடீஸின் இயற்பியல் தத்துவத்தை உணர்ந்து, நீர் குறைவுள்ள ஜாடியிலே கற்களை நிறப்பி, நீர் நிறைந்த பொழுது அதைக்குடித்து தாகம் தணிந்து சென்ற கதையை குழந்தைகள் ஆர்வத்தோடும் வியப்போடும் கேட்பதைக் காண கண் கோடி வேண்டுமல்லவா? தனது குஞ்சுகளைக் கொன்ற பாம்பிற்கு பாடம் புகட்ட, மகாராணியின் முத்துமாலையை சாதுர்யமாக எடுத்து வந்து, காவலர்கள் மூலமாக பாம்பை தண்டித்த காகத்தின் வீர தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘டிங்கிள்’ என்கிற குழந்தைகளுக்கான வரைபடங்களுடன் கூடிய இந்திய கதை புத்தகத்தில் வரும் ‘காளி காகம்’ குழந்தைகள் மனதில் அழியா சித்திரம் பெற்ற ஒரு அமர பாத்திரப்படைப்பு. நரியும் முதலையும் சேர்ந்து செய்யும் சதி வேலைகளை ஒரு தேர்ந்த துப்பறிவாளினி போல் கண்டுபிடித்து, சதித்திட்டங்களை நிர்மூலமாக்கி, எளிய காட்டு விலங்குகளை பாதுகாக்கும் தன்மை, சிறுவர்களின் நல்லுள்ளம் மற்றும் ஆளுமையை விருத்திசெய்ய ஏற்றது. வலையில் சிக்கிய மானை காப்பாற்ற வேண்டி காகம் கண்களை கொத்துவது போல் அபிநயிக்கும் கதை காகத்தின் இயல்புகளிலிருந்து பெறப்பட்ட கதையாகும்.

நோவா, மழை நின்ற பின்பு பேசாமல் வாத்துக்களையும் அன்னப்பறவைகளையும் வெளியே விட்டிருக்கலாம். அனேக நாட்களுக்கு பிறகு தண்ணீரில் சுதந்திரமாக விளையாடிய இன்பமாவது கிடைத்திருக்கும் அவைகளுக்கு. ஆனாலும், நோவா என்ன நினைத்தாரோ தெரியவில்லை காகத்தை முதலாவதாக அனுப்பினார். ஒருவேளை காகம் புத்திக்கூர்மையுடையது என்பதாலும், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றதாலும் எனக் கொள்ளலாமா? மேலும் பரிசுத்தமான புறாவைக் காவு கொடுப்பதைவிட, இரண்டு ஜோடி காகத்தில் ஒன்று போனால் நஷ்டமில்லை என நினைத்திருப்பாரோ? இந்தக் கதையில் புறாவே கதாநாயக அந்தஸ்து பெறுகின்றது. பரிசுத்தமான புறா போவதும் வருவதுமான காகத்தைப்போலல்லாமல், தன் கடமையை செவ்வனே செய்யும்பொருட்டு பறந்து சென்று, இடங்களை மேற்பார்வைஇட்டு, நீர் வடியவில்லை என உறுதி செய்தபின் நோவாவின் கைகளுக்கே திரும்பி வந்தது.  மறுபடியும் ஏழு நாட்களுக்குப் பின்னே, புறாவை அனுப்பியபோது, அது தன் அலகிலே ஒலிவ இலையை கொத்திக்கொண்டு வந்து வெள்ளம் வடிவதற்கான அறிகுறியை அறிவித்தது. இன்னும் ஒரு ஏழு நாட்கள் காத்திருந்த நோவா,  புறாவை அனுப்பிய போது, அது திரும்ப வரவில்லை. எங்கே சென்றிருக்கும்? நன்றியிழந்து காணப்பட்டாலும், புறாவை விட்டுக்கொடுக்க மனமின்றி, நோவாவும் நாமும், இது வெள்ளம் வற்றியதற்கான அறிகுறி என நம்மையே தேற்றிக்கொள்வோம். காகத்தையோ ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.

பறவைகளில் மிகவும் அழகானது எது? மிகவும் இனிய குரல்வளமுடைய பறவை ஏது? பேசும் பறவைத் தெரியுமா? கபடற்ற பறவையின் பெயர் என்ன? பெரிய மற்றும் சிறிய பறவைகளின் பெயர்களைக்கூறு போன்ற கேள்விகளே பெரும்பாலும் பறவைகளைப்பற்றிய நமது அகராதியிலிருந்து எழுகின்றன. பறவைகளை கடவுள் ஒரு காரணத்தோடே படைத்திருக்கிறார் என்பதும், அவைகள் தத்தமது பணிகளை செவ்வனே செய்கின்றன என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். ஆக இறைவன் படைத்த காகத்திற்கு சிறுவர் அளிக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுக்காமல் இருப்பது, இறைவன் அளித்த படைப்பின் ஒரு பங்கினை உதாசீனப்படுத்துவதல்லவா?

காகத்தை துப்புரவு பறவை என அழப்பதுண்டு. துப்புரவு செய்யும் நம் சக மனிதர்களை சற்றேனும் மதிக்காத நாம், பாவம் இந்த காகத்தை எவ்வகையில்தான் முக்கியத்துவப்படுத்துவோம். இந்தக் கட்டுரை வாயிலாக காகம் நம் மனதிலிருக்கும் கசடுகளை எடுத்துப்போடுமானால் அது நமக்கு நலமாயிருக்கும்.

இயேசு காகத்தை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். ‘காகங்களை கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்கு சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?’ ஆம், இயேசு தனது சிந்தனையை மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றார். பழமை கொண்ட சிந்தனையோடு இயைந்து, காகம் அசுத்தமானப் பறவை எனக் கொள்ளாமல், இறைவன் அவற்றுக்கும் உணவளிக்கிறார் என்பது என்னே ஒரு உயர்ந்த எண்ணம். இறைவனே அளிக்கும் உணவு அசுத்தமானதாக இருக்க வாய்ப்பு இல்லையே! சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், பறவைகள் இறைவனின் படைப்பை மாட்சியுறச் செய்வன என இயேசு உறுதிப்படுத்துகின்றார். இயேசுவின் இந்த நுண்ணிய அறிவுரையோடு நாம் எலியாவின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் காகத்தின் பங்களிப்பு நமக்கு தெரியவரும்.

எலியா எனும் தீர்க்கன், ஆகாபுக்கு பயந்து கேரீத் எனும் நீரூற்றண்டையிலே இறை வாக்கின்படி தங்கியிருக்கிறான். போதுமான நீர் இருக்கின்றது, உணவருந்துவதற்குத்தான் ஏற்ற வழியில்லை. என்ன செய்வது? எல்லாம் இறைவன் விட்ட வழி என எலியா தன்னையே அர்ப்பணித்து இருக்கும்போது, கடவுள் எலியாவை நோக்கி, பயப்படாதே, ‘உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்’ என் உறுதி கூறுகிறார். காகங்கள் நமக்குத்தெரிந்து உணவு தயாரிப்பதில்லை. அவ்விதமாகவே உணவை மனிதர்களுக்கு பறிமாறுவதும் பழக்கமில்லை. பாட்டி வடைசுட்ட கதையில் கூட, பாட்டி அதனைத் துரத்தியோ பாடச்சொல்லியோ வடையை வாங்கவில்லை. ஏனென்றால் காகத்தின் எச்சிலையா மனிதர்கள் தின்பது? சீய், சீய், இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கு வேண்டுமானால் எச்சில் வடை சுவைக்கத்தகுந்ததாய் இருக்கலாம். காகத்தைப் பொறுத்தமட்டில் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் அனத்துமே உயர்தர உணவக பண்டங்களே. ஒருவேளை செத்த எலிக்கறி அசைவ விருந்தாகவே அவை பாவிக்கும். எனில், எலியாவின் வாழ்வில் காகம் ஆற்றிய பணியினை கடவுள் எவ்வாறு முன்னிறுத்துகிறார்?

காகம் பகிர்ந்துண்ணும் பறவை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பகிர்தல் மற்றும் யாரோடு பகிர்தல் போன்ற அளவுகோல்களை இறைவன் இங்கு மறு ஆக்கம் செய்கிறார். ‘இவர் பாவிகளோடும், ஆயக்காரரோடும் உணவருந்துகிறார் என்பதும், போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமாயிருக்கிறான் என்பதும் எத்துணை பக்குவமற்ற வார்த்தைகள். இறைவன் எலியாவையும் காகத்தையும் ஒரேத்தட்டில் நிறுத்துகிறார். இறையடியவரான எலியா இந்த எளிய வாழ்வை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுகிறார். தனக்காக விதைக்காமலும் அறுக்காமலும், சேமிப்பறையும், களஞ்சியமும் அற்று, அசுத்தமான உணவாக கருதப்பட்ட (ஒருவேளை எலிக்கறி என்ற) உணவைக் காகத்தோடு பகிரத் துவங்கியது, காகங்களின் மேன்மையை பறைசாற்றாவிடிலும் பரவாயில்லை; நிறுவனங்கள், விமானங்கள், மாளிகைகள் மற்றும் உயர்தர உணவுகள் மட்டுமே தயாரிக்கின்ற சமையலறைகள் போன்ற களஞ்சிய சேமிப்பறைக் கொண்டுள்ள, கிறிஸ்து இயேசுவை வியாபாரப் பொருளாக மட்டுமேக் கொண்டு, பல்லாயிரம் மக்களைத் தவறானப் பாதையில் வழிநடத்தும் இன்றைய சில மத வியாபாரிகளின் மத்தியில், இறையடியார்களின் தியாக வாழ்வை பறைசாற்ற வல்லவை.

காட்சன் சாமுவேல்

ஜெயமோகனின் வாழ்த்து

அக்டோபர் 31, 2008 by pastorgodson

ஜெயமோகன் அவர்கள் என்னை ஊக்குவித விதம், அவர்களது எளிய பழகும் விதத்தையே சிலாகிக்க வைக்கும். அவர்கள் மூலமாக நான் பெற்றடைந்த  ஞானம் எனது ஆன்மீக கடற்பயணத்தின் பாய்மரமாகவே
நான் காண்கிறேன். பிற பெரும் ஆளுமைகளின் வரிசையிலே என்னையும் அவர்கள் சேர்த்திருப்பது அவர்களின் பெருந்தன்மைக்கு சான்று என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள். இறைவன் பார்வையில் நேர்மையாளனாக இருக்கும் முயற்சியைப்போன்றே அண்ணனது வாழ்த்துக்கு ஏற்ற வகையில், இன்னும் சிறப்பாக எனது இணையதள பதிவுகளைச் செய்வது இப்போது கூடுதல் பணி. தொடர்ந்து படிக்க http://jeyamohan.in/?p=747 
காட்சன் சாமுவேல்

இன்றும்! இப்போதும்!

அக்டோபர் 31, 2008 by pastorgodson

எங்கள் இனிய இயேசுவே!

இன்று
உமது கரங்களால் மீட்கப்பட்டேன்
உமது அன்பை அனுபவித்தேன்
உமது இருத்தலை உணர்ந்தேன்
உமது கற்பனைகளை பாவித்தேன்
உமது கருணையில் கட்டுண்டேன்
உமது ஆசியை பெற்றேன்

இப்போதே
எனது கரங்கள் வீழ்ந்தோரை மீட்க வழிகாட்டட்டும்
எனது அன்பு பிறர் உம்மை அனுபவிக்க அறைகூவட்டும்
எனது வாழ்வு வாழ்விழந்தோரை வாழ்விக்க பயன்படட்டும்
எனது தகவுகளால் எளியவர் உமது நீதியை உணரட்டும்
எனது கருணை பெலவீனரை திடப்படுத்தட்டும்
எனது ஆசி அனைவருக்கும் உரித்தாகும் வாழ்த்தாகட்டும்- ஆமேன்

காட்சன் சாமுவேல்

நிர்வாணம்

நவம்பர் 4, 2008 by pastorgodson

சமூக வாழ்க்கையில் நாம் பொருள்தேடும் விஷயங்களுள் நிர்வாணம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் மர்மமான ஒன்று! நிர்வாணத்தை நானாக இருந்த, இருக்கும் மற்றும் அடையும் நிலைகளை குறிப்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும் நிர்வாணம் நிரந்தரமானது, விரும்பத்தக்க ஒன்று, தன்னலமற்ற தன்மையுடையது, பிறர் நலன் பேணிக்காப்பது, உலக சுழற்ச்சியின் ஆதாரம் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் உலகத்தை நிர்வாணமாக படைத்து, ரசித்து, வாழ்த்தி நிர்வாணமே நீடிய வாழ்விற்கு ஏற்றதென உணர்த்தியது நம் கண்களுக்கு மறைவாக போயிற்று. நிர்வாணத்தைக் குறித்த எண்ணம் நம்மை நேராக பாலியல் சிந்தனைக்குத் தூண்டுவதாக அமைவதன் காரணம் என்ன? என்ற கேள்வி எழும் போது, நாம் அவ்வாறாக புரிந்து கொள்ள பழக்கப்பட்டுள்ளோம் என்பதே சிறந்த பதிலாக அமையமுடியும். நிர்வாணத்தைக் குறித்த இத்தகைய மேலோட்டமான சிந்தனையை மாற்றிவிட்டு சற்று ஆழமான உண்மைகளை தேட முற்படுவது நிர்வாணமாக நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியதையாகும்.இறைவனின் படைப்பே நிர்வாணத்தின் மேன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தமது சாயலில் மனுக்குலத்தைப் படைக்கும் போது கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்! குறிப்பாக தன்னை மூடிமறைக்காத, வெளிப்படையான ஒருவரே நம் எல்லோருடைய கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கடவுளின் நிர்வாணம் உடல் சம்பந்தப்பட்டதாகவோ சிந்தனை சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம், இரண்டுமாகவும் இருக்கலாம் அல்லது வேறெந்த நிலையிலாவது இருக்கலாம். எப்படியிருந்தாலும் இறைவன் நிர்வாணியாக இருப்பது உறுதி.

ஆடை என்பது தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஏன் அணிகிறோம் என்ற கேள்விக்கு ‘எல்லோரும் அணிகிறார்கள்’ என்ற ஒரே வாதத்தைத் தவிர நம்மிடம் எந்த தடயமும் இல்லை. சொல்லப்போனால் உடை நம்மில் ஒரு பாதியாகிவிட்டதாகக் கருதுகிறோம். உண்மை அதுவல்ல “நாம் சுயம் சார்ந்தவர்களாக இருக்கிறோம்”என்பதே அதன் பொருள். நம்மைச் சுற்றி எல்லோரும் நான் எனக்கு என பிறர் நலன் நோக்காது எடுத்துக்கொள்ளும் போது, நாமும் நமக்கானவற்றைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும் என களமிறங்குகிறோம். எடுத்தவற்றையும் நம்மையும் மறைக்க நம்மாலான பிரயத்தனங்கள் எடுக்கிறோம். ஆனால் நிர்வாணியான இறைவனை தரிசிக்க முடியாமல் தவிக்கிறோம். எதிர் பாலினம் இறைவனை சந்திக்கத் தடையாயிருக்குமென தனித்து நின்று பிரார்த்தனை செய்கின்றோம். முடிந்தவரை அவர்களை தலை முதல் கால்வரை மூடி நடமாடும் பொருட்களாக ஆக்கிவிட்டோம். இந்த ஆடை சிறைக்குள் இருப்பவர்கள் எழுதும் நியாயங்கள் இறைவனின் சட்டபுத்தகத்தில் செல்லாது என்பதை புரிந்துக்கொள்ளுவதில்லை.

அழகியலை விரும்புபவர்கள் அனைவரும் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். நிர்வாணம் வளைவுகளையும், உயரங்களையும் ஆழ அகலங்களையும் உடையது. ஆனாலும் அவைகளில் துளியேனும் பாகுபாடு காணப்படுவதில்லை ‘தலை சிறந்தது’ என்றும் ‘கால் தூசி’ என்றும் சொல்லுவது நம் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே! ஏனென்றால் நிர்வாணம் என்பது மனிதக்குலத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரித்தானது. வானம், பூமி, கடல், செடி, கொடி, மரம், பறவை, மிருகம், ஊர்வன என எல்லாம் நிர்வாணமாக இருக்கின்றன. இதற்கு ஈடான அழகை நாம் எதையும் அணிந்து மெருகூட்டிட இயலாது என்று தெரிந்தும் நாம் அதை தொடருகிறோம். இந்த அழகிய நிர்வாணத்தை நாம் அனுபவிக்க பழகியிருக்கிறோமா அல்லது அழிப்பதற்கு துவங்கியிருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது. உலகின் மிகப்பெரிய சந்தோஷமாக நான் கருதுவது நிர்வாணமாக இருப்பது தான்! நிர்வாணமே உறவுகளை பெலப்படுத்துகிறது. ஜாதி, மதம், நிறம், மொழி எல்லவற்றையும் தாண்டிய ஒரு மகோன்னத நிலையை அது பெற்றிருக்கிறது. இருபாலினரும் நிர்வாணம் தரிக்கும் போது தானே ஒன்றாகின்றனர்? தாய் தான் பெற்றெடுத்த குழந்தையின் நிர்வாணத்தை ரசிப்பதற்கு, என்னாலும் படைக்க முடியும் என்ற இறைவனை அடுத்த நிலையை அடைந்த மகிழ்விற்கு  ஈடான சந்தோஷம் உலகில் உண்டா? இல்லறத்தில் மட்டுமல்லாது துறவறத்திலும் நிர்வாணம் உன்னதமான நிலையைக் குறிப்பதாக அமைகிறது. இல்லறத்தில் நானும் நீயும் ஒன்று என்ற கோட்பாடே துறவறத்தில் நானும் இறைவனும் ஒன்று என்பதாக இருக்க முடியும்? வாழ்க்கை என்பது நிர்வாணத்தில் துவங்கி அவ்வறே முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில் நாம் நிர்வாணத்தைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

 நிர்வாணம் ஏற்றத்தாழ்வுகளை துடைத்தெறிய இறைவன் தந்த வரம். மனிதன் இந்த வரத்தைக் கூறுபோட்ட விதம் மிகவும் கொடூரமானது. இறைவன் கொடுத்த நிர்வாண வரத்தை கெடுத்தது, நாம் மேற்கொள்ளும் தவறான காரியங்கள் தாம்.  தவறான செயல்களை மட்டுமே நாம் மூடி மறைக்க எத்தனிக்கின்றோம். இறைப்படைப்பில் தவறான காரியங்கள் இருக்கக்கூடுமோ? அல்லவே? நிர்வாணம் என்பது எப்போது தவறான ஒன்று என்ற எண்ணம் வந்ததோ அப்போதே நாம் அதை மூடி மறைக்க எத்தனங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு? இன்று நாம் நம் உடலை மட்டும் மறைக்காமல் இறைவன் நமக்கு அருளிய விசாலமான மனதையும் மறைக்கத் துவங்கிவிட்டோம்.

மனுக்குலத்தின் வீழ்ச்சி  எப்போதும் தன்னை மறைத்துக்கொள்ளுவதினாலே ஏற்படுகின்றது என்பது என்  கணிப்பு. மறைத்துக்கொள்ளுதல் பகைமையை வெளிப்படுத்துகின்றது, தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறது, பயத்தைக் காட்சிப்படுத்துகின்றது, ஒப்புறவை புறந்தள்ளுகிறது. மறைத்துக்கொள்ளுதல் தனிமைப்படுத்திக்கொள்ளும் அவலம். அது கலாச்சார அபாயம். சாதி, சமயம், நிறம், நாடு, கல்வி, கலாச்சாரம், தொழில், மொழி, கட்சி முதலானவற்றைக் கொண்டு நம்மை மறைக்க முயலுகின்றோம். இத்தகைய மறைவு வாழ்க்கை நம்மை எத்துணை இடர்களுக்குள் இட்டுச்சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கை ரம்மியாமானதாக மாறிவிடும்.

நிர்வாணம் கற்போடு இருக்கின்றது. நாம் தான் அதைக் கட்டுப்பாடுகளால் கற்பழிக்கின்றோம். நீயும் நானும் நிர்வாணமாயிருபோம் என்பது உயரிய சமதர்மவாதம். உலகம் முழுமைக்கும் இறைவன் கொடுத்தருளிய இந்த சித்தாந்தத்திற்கு எதிராய் நாம் மாறிவிட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். நான் மறைத்துக்கொள்ளுவேன், நீ நிர்வாணமாய் இருக்கவேண்டும் என்பது நிர்வாணத்தை அவமானப்படுத்தும் செயலாக அல்லாமல் வேறென்னச் சொல்ல? இன்று நிர்வாணப்படுத்துவதே நம் வேலையாகிப்போனது. பிறரின் நிர்வாணம் பாலியல் கிளர்ச்சியையும், கிளுகிளுப்பையும் அள்ளித்தரும் விஷயமாகிப்போனது. பிறரது நிர்வாணம், கண்டுகொள்ளப்படாததும், பரிகசிப்புக்குரியதாகவும் அமைந்து விட்டது. நம்மை மறத்துக்கொண்டு பிறரை நிர்வாணப்படுத்துவது இன்றைய நாகரீகத்தின் உச்சவளர்ச்சியாக இருக்கின்றது. ஓவியம், புத்தகம், நிழற்படம், திரைப்படம், தொலைக்காட்ச்சி, இணையதளம், ஏன் செல்பேசி கூட உபயோகித்து காலமாற்றத்திற்கு ஏற்ப நிர்வாணத்தை வியாபாரப்படுத்தும் நாம் – உடையெனும் சமூகப்போர்வைக்குள் நம்மை ஒளித்துக்கோண்டு இவைகளைச்செய்வது குற்றத்தின் உச்சமல்லவா? நிர்வாணத்தை உணரவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ தெரியாதவர்கள் பிறரை நிர்வாணப்படுத்துவது பெருங்குற்றமல்லவா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத நம்மைச்சார்ந்த பல விஷயங்கள் இருக்க, பிறரை நிர்வாணப்படுத்தி  புரிந்துகொள்ள முற்படுவது பிற்போக்கான எண்ணமல்லவா? நிர்வாணம் ஆவோம் என்பது ஒருமித்தக்குரலாக ஒலிக்கச்செய்வதை விட்டுவிட்டு, நிர்வாணப்படுத்த முற்படுவதால் என்ன லாபம்? நம்மேல் உள்ள பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவைபடலாமே அன்றி இன்னொருவர் தலையில் ஏற்றுவது தவறல்லவா? நிர்வாணாம் பிறரை ஏற்றுக்கொள்ளும் விசாலமன ஒன்றாய் இருந்தும், நாம் குப்பை இடும் பகுதியாக அதை மாற்றுவது நிர்வாணத்தின் தலையில் பாரத்தை ஏற்றுவதாகாதா? நிர்வாணம் பிறரை ஏற்றுக்கொள்ள இடம் தர வேண்டுமே அன்றி திணிக்கப்படக்கூடாதல்லவா? 

நிர்வாணம் ஏற்படுவதர்க்கான காரணங்கள் என நான் கருதுவது – போர், வறுமை, வன்முறை என பட்டியலிடலாம். சமயம் கூட தன் பங்கிற்கு பல பெண்களை நிர்வாணப்படுத்தியிருப்பது மிகவும் வேதனையான விஷயம். கூடவே, இன்று நாம் நமது பங்களிப்பாக நமக்கடுத்தவர்களை நிர்வாணிகளாக வைத்திருக்கிறோம். நிர்வாணியாக நம் அயலார் மரிக்கையில், துணிகளைக்குவித்து வைத்திருக்கும் நாம் யார்? போர்முனையில் கையில் அகப்பட்ட எளியவர்களை நிர்வாணப்படுத்துவதுதான் நமது வெற்றிக்களிப்பா? வெறும் களிப்பை அள்ளித்தரும் சாதனமாக நிர்வாணம் காணப்படுவதும், பேணப்படாது சுரண்டப்படுவதும் எவருடையத் தவறு? நிர்வாணமே கலச்சாரமாக வாழும் பழங்குடியினரை காட்டுமிராண்டிகள் என்பதும் முதிர்ச்சியின்மை அல்லவா? கடவுளின் திருப்பெயரைச்சொல்லியே பணம் சம்பாதிக்கும் இக்காலத்திலே, இறைச்சாயலான மனித குல நிர்வாணத்தைக் காட்டி தொழில் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். நமது பணம் மற்றும் பலம் கொண்டு நாம் நிர்வாணத்தை அணுகும்போது அது தன் தெய்வீக நிலையை இழக்கின்றது. 

‘அவரது வஸ்திரத்தின் மேல் சீட்டுப்போட்டு அதை பங்கிட்டுக் கொண்டார்கள்’ எனும் வசனமே இயேசுவை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தார்கள் என்பதற்குச் சான்று.  மேலும், நிர்வாணமே சிலுவையில் தொங்குபவர்களுக்கு உடை அமைப்பாக இருந்ததை யாரும் மறுக்கவியலாது. இயேசுவின் நிர்வாணம் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லையா? அவரின் நிர்வாணம் நம்மை எந்தவித சிந்தனைக்கு நேராக வழிநடத்துகிறது? 

இயேசு சிலுவையில் தொங்கும்போது அவரது தாய், சீடர்கள், வழிப்போக்கர்கள், அரசுக் காவலர்கள், மதத்தலைவர்கள் என ஒரு கலவையான மக்கள் திரள் அந்தக் காட்சியப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது நிர்வாணத்தைக் குறித்த சிந்தனை அனைவருக்கும் ஒர்ன்றுபோல் இராது என்பது தெளிவு. சிறுமைப்படுத்துவோர் அனேகராயும், சிறுமையுற்றோர் வெகு சிலராயும், வேதனையுற்றோர் சொற்பமாயும் இருந்திருப்பர். இவ்விரண்டு மனநிலையிலும் மக்கள் சார்ந்திருப்பதனால் இறைவனின் நிர்வாணத்தை நாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. “இறைச்சாயலில் உள்ளவர்கள் நிர்வாணம் ஆகும்போதும் ஆக்கப்படும்போதும் நாம் யாரைக் காண முற்படுகிறோம்! மானுடத்தையா? இறைவனையா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

ஆயன்

நவம்பர் 6, 2008 by pastorgodson

நான் ஒரு  ஆயனைக் கண்டேன்
அவன் வாசல் வழியாக நுழைகிறான்
கையில் ஒரு தடி, அதைக் கொண்டே ஆடுகளைக் காக்கிறான்
அவன் முன் செல்ல, பின்னே அனேகம் ஆடுகள்
புல்லுள்ள இடங்களில் ஆட்டை மேய்க்கிறான்
நல்ல தண்ணீரை அளிக்கிறான்
காணமற் போன ஆட்டை சிரத்தையோடு தேடுகிறான்
ஆடு அவன் சத்தத்தை அறிந்திருக்கிறது
கண்டுபிடித்தபோது மகிழ்வடைகிறான்
நான் ஒரு நல் ஆயனைக் கண்டேன்

நானே நல் ஆயன்  என்றான் ஒருவன்
பின்வாசல் வழியாக நுளைந்தபடியே
அவனோடு ஒருசில கைத்தடிகள், அதைக்கண்டே ஆடுகள் நடுங்குகின்றன
அவன் முன்னேறியபடி இருக்க, ஆடுகள் பின்தங்குகின்றன
உணவற்ற இடங்களில் அவை ‘பலியாக்கப்படுகின்றன’
‘தண்ணியே’ அவைகளுக்கு ‘காட்டப்படுகின்றன’
குழப்பமான அறிக்கைகள் வடிவில் மெய்ப்பனின் குரல்.
திக்கற்றுத் திரியும் ஆடுகள்,
வழிதெரியாமல் தொலைந்து போகின்றன,
கண்டும் காணாமலும் மகிழுகிறான்,
கிடைத்ததைச் சுருட்டும் திருடனாக!

காட்சன் சாமுவேல்

யூதாஸ்

நவம்பர் 10, 2008 by pastorgodson

இயேசுக்கிறிஸ்துவின் பாடுமரணங்களை தியானிக்கும் கஸ்தி வாரங்களில் யூதாஸை மறுபடியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது நம் மனசாட்சிக்கு உறுத்தாத விஷயமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்திருந்தால் நாமே அவனுக்கெதிராய் வழக்காடி அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருப்போம். கோவலனைப்போல் அவனுக்கு ஒரு மனைவி இருந்திருந்தால் நம்மிடம் வந்து வெள்ளிக்காசுகளை விசிறி அவனுக்கக வாதாடியிருப்பாள். யாருமேயற்ற அவனது தனிமை மற்றும் மவுனம் நம் மனசாட்சியை அறைந்து எழுப்பவில்லையா? இயேசுவின் சினேகிதன் நமக்கு எப்படி எதிரியானான்? சற்று பதட்டப்படாமல் யூதாஸை நண்பனாக பாவித்து சிறிது மனம் விட்டு பேசினோமானால்……

யூதா என்கிற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம் தான் யூதாஸ். நன்றி கூறத்தக்க என்கிற அர்த்தம் பெறும் பெயராக இருப்பினும், நன்றி இழந்து செயல்பட்டு விட்டானோ என்கிற ஐயத்தின் அடிப்படையிலே நாம் யூதாஸை கல்நெஞ்சனாக காண முற்படுகிறோம். எந்த ஒரு தீர்ப்பும் தீரவிசாரிக்காமல் அளிக்கப்பட்டால் அது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது. ஆகவே யூதாஸ் என்கிற சீஷனின் பின்புலத்தை ஆராய்ந்து குற்றத்தின் பின்னணியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது நமது கடமையாகிறது.

யார் அவன்? எந்த ஊரான்? எப்படி சீஷனானான்? அவன் பொறுப்பு என்ன? அவன் சிந்தனை எத்தகையது? எங்கே தவறு நிகழ்ந்தது? ஏன் தவறு நிகழ்ந்தது? மேலும் அவன் செய்தது மன்னிக்க கூடிய குற்றமா?மேற்கண்ட கேள்விகளுக்கு நம்மால் பதில் பெற முடியுமானால் அதுவே நமக்குத் தேவையான செய்திகளை சொல்லி விட வாய்ப்புண்டு.

யூதாஸ் யூதா கோத்திரத்தைச் சார்ந்தவன். எப்படி நம்மூரில் குமரி, நாஞ்சில் என பெயரின் முன் சிலர் அடையாளம் பெற்று காணப்படுகிறார்களோ அது போலவே யூதா ‘ஸ்காரியோத்’தைச் சார்ந்தவன் என்பது யூதாஸ்காரியோத்து என்பதன் அர்த்தம். எப்படி சீஷனானான் என்பதற்கு ஏற்ற தெளிவான விளக்கங்கள் நேரடியாக திருவிவிலியத்தில் காணக்கிடைக்கவில்லை எனினும் நாம் நிதானித்து அறியதக்க ஏராளமான விஷயங்கள் திருமறையில் சிதறிக்கிடக்கின்றன.

“என் பின்னே வாருங்கள்” என இயேசு யூதாசையும் ஒரு காரணத்தோடேயே அழைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கு மனுஷனை பிடிக்கிற நோக்கமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? எனில் யூதாஸ் அழைக்கப்பட்டவனேயன்றி அழையா விருந்தாளியான எதிராளி அல்ல என்கிற தெளிவு பிறக்கின்றது.

 
‘அவன் திருடனானபடியால்’ என்கிற பதம், அவன் வாழ்வின் ஆரம்பப்பகுதியாக இருந்திருக்கலாமேயன்றி அவன் இயேசுவை பின் தொடரும் போது நிகழும் ஒன்றாக பார்ப்பது ஏற்புடையதாகாது. மட்டுமல்ல, இயேசுவின் சீடர்கள் அவரை சார்ந்திருக்கும் போது தவறான செயல்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறு அவர்களை அவர் பயிற்றுவிக்கவுமில்லை (இயேசுவை பிடிக்க வந்த போது காதற வெட்டிய நிகழ்வு திட்டமிடப்படாதது) ஒரு ஒழுக்கமுள்ள சீஷத்துவத்தை இயேசு அவர்களுக்கு கற்பித்திருக்க மாட்டாரா என்ன! மேலும் சகேயுவை இயேசு அழைத்த போது,ஒரே நாளில் அவன் பெற்ற மாற்றம் நாம் எல்லோரும் அறிந்தது. எனவே யூதாஸ் பெற்ற மாற்றம் உண்மையானது எனவும், அவன் தன் பழைய திருட்டு வாழ்வை விட்டொழிந்த பின்பே அவரை பின் தொடர்ந்தான் என்பதும் நாம் கண்டறியும் உன்மைகள்.

எனினும் சீஷர்களுக்குள்ளே ஒற்றுமையுணர்வு சீர்குலைந்ததை வைத்து பார்க்கும் போது,ஒரு உண்மை வெளிப்படுகின்றது. பணப்பெட்டியை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்க நினைத்தவர்களுக்கு அது கைகூடாமற்போனதும், யூதாஸின் பழைய வாழ்க்கையை கிளறி, அவனை சிறுமைப்படுத்த அவர்கள் கையாண்ட ஒரு பிரயோகமாகவே நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலகட்டம், சுவிசேஷகர்கள் யூதாசை வில்லனாக அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற இடைவளி கொண்டது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

இயேசு அவனை நம்பி பணப்பையைக் கொடுத்ததற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். “திருடனின் கையில் சாவியைக் கொடுப்பது” என்று நம்மூரில் ஒரு வழக்கச் சொல் கூட இருக்கிறதே! இயேசுவோ யூதாசுக்கு தன்னம்பிக்கை வரவும் அவன் திருந்திய வாழ்வை மற்ற சீடர்களும் காணும்படியாக இவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் வளமாக  இருக்கின்றது.

மேலும் நாம் உற்று நோக்கதக்க, அவன் பொறுப்பை சார்ந்த பல அரிய குணங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. பணத்தைச் சிக்கனமாக செலவு செய்திருக்கிறான் (யோவான்:12:5) எனும் போதே அவன் நம்பிக்கைக்குரியவனாக பரிமளிக்கின்றான், கூடவே குறித்த நேரத்தில் தேவையானதை வாங்கிவர செல்பவனாயிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மேல் தரித்திரர் மீது அக்கறையுள்ளவனாய்க் காணப்படுகிறான் (யோவான்:18:29). ஆகவே வேத ஆதாரங்கள் அவன் பணத்தை கையாடல் செய்ததை உறுதிப்படுத்தாதவரை நாம் அவனை சந்தேகிப்பது முறையாகாது.

யோவான் 12ம் அதிகாரத்தில் நடக்கும் சம்பவம் சற்று விசித்திரமாகவும் ஆழ்ந்த கேள்விகளை தொக்கியும் நிற்கிறது. சம்பவம் இது தான். இயேசுவை அபிஷேகம் பண்ண மரியாள் எனும் பெண் விலையேறப்பெற்ற நளதம் எனும் தைலத்தை கொண்டு வந்து அவரது பாதத்தை அபிஷேகம் பண்ணுகிறாள். மற்ற சீஷர்கள் அருகிலிருந்தும், யூதாசின் பார்வை பொருளாதாரம் சார்ந்த சமூகவியலாக உருவெடுக்கின்றது.

இத்துணை விலையுயர்ந்த பொருள் காலடியில் ஒன்றுக்கும் உதவாமல் வீணாய்ப்போவது, பணத்தை நியாயமாக செலவழிப்பவர்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும்.இதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என அவன் வினவுவதை யாரும் தவறாக எடுத்து கொள்ள இயலாது ஏனென்றால் அதை அவனுக்குக் கற்பித்ததே இயேசு தான்! ஆகவே தான் அவர் அவனுக்குத் தன் நிலைப்பாட்டைப் புரியவைக்க முயற்சிக்கிறார். தன் மரணத்துக்கு ஏதுவாக அவள் இதைச் செய்கிறாள் என அவர் கூறியும் அவனால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. 
இந்த புரிதல் வேறுப்பாட்டைக் கொண்டு நாம் எந்த தவறான முடிவுக்கும் வந்துவிட முடியாது, ஏனென்றால் இயேசுவின் பிற சீஷர்கள் கூட அவரை புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டே! இவ்வாறாகவே யூதாசும், இயேசுவின் பதிலில் திருப்தியடையாமல் தன்னை அவர் இகழ்ந்ததாக கருத வாய்ப்புள்ளது. இந்த இடமே நாம் யூதாசின் சுயரூபம் வெளிப்படும் இடமாக நாம் கருத வேண்டும்.சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தான்  அறிந்துகொண்ட ஒரு நல்ல கொள்கையில் அரிச்சந்திரன் போன்று யூதாசும் பிடிவாதமாக நிற்கிறான்.  சந்தர்ப்பத்தைக் கணக்கிடாமல், கொள்கையைக் கற்றுக்கொடுத்தவரே அதை மீறுவதைப்பார்த்து அவன் உணர்ச்சி மயமாகி நிற்கிறான்.
மேற்கூறியவற்றை மையமாக வைத்துப்பார்க்கும் போது, யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடும்கும் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வழி வகுக்கின்றது. அவனது முத்தமிடும் தன்மை கலச்சாரம் சார்ந்த ஒன்றாக இருப்பினும், அவன் போல் இயேசுவை முத்தமிடுவோர் உணர்ச்சி மேலீட்டாலே அவ்வாறு செய்வதை நாம் கண்டுகொள்ள முடியும். யூதாஸ் உணர்ச்சி மிக்க ஒருவனாக தன்னை இங்கே அடையாளப்படுத்துகிறான். 

உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற காரியங்களின் விளைவு நல்ல முடிவைத் தரவல்லதல்ல என அவன் புரிந்துகொள்ளுகிறான். எனவே, தான் செய்த தவறை எண்ணி மனஸ்தாபப் படுகிறான். தான் பெற்றுக்கொண்ட காசை திரும்பக்கொடுத்தாவது இயேசுவை மீட்டுவிடலாம் என்று மனப்பால் குடித்து தேவாலையம் நோக்கி விரைகின்றான். “குற்றமில்லதவரைக் காட்டிக்கொடுத்தேன்” என தேவாலயத்தில் வைத்து தைரியமாக அறிக்கையிடுகிறான்.

இந்த சூழ்நிலையில், ப்ரதான ஆசாரியன் அவன் கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தால் கதையே வேறு விதமாய் மாறியிருக்கும் (அவர்களைப் பொறுத்தவரை யூதாஸ் ஒரு டிஸ்போஸிபிள் ப்ளேட்). அந்தோ பரிதாபம், யூதாஸின் யூகம் அங்கே தவறாகிவிடுகின்றது. அவர்களோ அவனைப்பார்த்து “அது உன் பாடு” என்றதும் நொறுங்கிவிடுகிறான்.  தான் ஒரு கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டதை எண்ணி துடி துடிக்கிறான்! காலம் கைமீறிப் போய்விட்டதை எண்ணி பதைபதைக்கிறான்.

கையிலுள்ள காசால் எங்காவது சென்று, காணி நிலம் வாங்கியாவது வாழ்ந்திருக்க முடியும் அவனால். ஆனால் தனக்கு அது தகாது என உணர்ந்து, அதை தேவாலயத்தில் விசிறியடிக்கிறான். அதை கவனமாக பொறுக்கியெடுத்த பிரதான ஆசாரியர், அதைக்கொண்டு குயவனின் நிலத்தை வாங்கும் நிதானத்தில் இருக்கும்போது, தனது தவற்றை உணர்ந்த யூதாஸ் குற்றத்தின் ஆழத்தை உணர்ந்தவனாகிறான். மன்னிக்கும் கருணையுள்ளம் கொண்டவரிடம் கூட சொல்லிக்கொள்ள தைரியம் அற்று, கூனி குறுகி தனது துயர முடிவை தெரிந்துகொள்ளுகிறான்.

இந்த முடிவை நாம் நியாயப்படுத்துவது தவறாகிவிடலாம் எனினும், இதை யூதாசின் முடிவாக அல்லாமல் இன்றைய சூழ்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் பலவீன இதயம் கொண்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட நபர்களின் மனநிலையோடு பொருத்திப்பார்க்கும் கடமை நமக்கு உண்டு. எவரொருவர் தற்கொலை செய்துகொண்டாலும் அதற்கு முக்கிய காரணம் சமூக நிராகரிப்பே. தான் தவறு செய்துவிட்டோம் எனவும் சமூகம் தன்னை  எற்றுக்கொள்ளாது என்ற நிலையிலும் யூதாஸ் இந்த துயர முடிவை மேற்கொள்ளுகிறான். சொல்லப்போனால் அவனது பலவீனமான இதயமும், உணர்ச்சிமயமான அணுகுமுறையும், சமூக நிராகரிப்புமே அவனை இந்த முடிவுக்கு நேராய் உந்தித் தள்ளியது.

வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்தவர்களை நாம் அரவணக்கத் தவறினோமானால், அன்பை எதிர்நோக்குபவர்களை உதாசீனம் செய்தோமென்றால், அவர்கள் செய்யத்துணியும் தற்கொலைகளுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

குழந்தை உள்ளம்

நவம்பர் 13, 2008 by pastorgodson

பாவம் நிறை உலகு
பரமனின் கனிவு
ஏக மைந்தன் இயேசுவை
நமக்காக தந்தாரே

யூதேயாவில் சிறிதும்
எளிமையும் சிற்றூரும்
இயேசு பிறப்பெடுக்க
ஏற்ற இடமானதே

காட்டு நரிக் குழியில்
காகம் கூடக் கிளையில்
பாலன் தலை சாய்க்கவெ
இடம் ஏதும் இல்லையே

மட்டுக் கொட்டில் ஒன்றுதான்
ராஜ அரண்மனையாம்
ஏற்றுக்கொண்டார் தாழ்மையாய்
அன்பின் திருவுருவாய்

தச்சு வேலை தந்தையும்
தாயுமான மரியும்
மேய்ப்பர் ஞானியர் தூதர்
கூடிப் பணிந்தனரே

எளிமையை போற்றிடும்
எளியோரை நேசிக்கும்
கர்த்தர் துயில் கொள்கிறார்
மானிட அவதாரமாய்
எளிய உன் நெஞ்சத்தை
வாஞ்சையோடே அருள்வாய்
சமதானம் தருவார்
குழந்தை உள்ளம் பெறுவாய்

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

பனையேறியின் வேண்டுதல்

நவம்பர் 19, 2008 by pastorgodson

கடவுளே
நெடிய பனைமரத்திற்கு மேலே தங்கியிருப்பவரே
உமது திருப்பெயர் புகழப்படுவதாக
பனங்காடுகள் உமது வருகையினால் செழிப்பதாக
தேவை நிறைந்தோர்,
உம்மிடத்தில் நிறைவடைவதுபோல்
பனைமரத்தினின்று பெறுபவைகளினால்
திருப்தி அடைவார்களாக

அன்றன்று உள்ள ஆகாரமாம் பதனீரையும், கிழங்குகளையும்
பனம்பழத்தையும் தருவீராக
எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்யும்
அரசு, சந்தை, சாதீய மேட்டிமை போன்றவற்றை
நாங்கள் மன்னிப்பது போல
தினமும் பனைமரத்தை வெட்டிச்சாய்ப்பதை கண்டும்
வாளாவிருக்கும் எங்களை மன்னியும்

பனைமரத்தில் ஏறி நாங்கள் தொழில் செய்யும்போது
மரணத்துக்கேதுவான எல்லாவித அபாயங்களினின்றும்
எங்களைக் காத்துக்கொள்ளும்
குடும்பமாக உமது பனங்காட்டில் வேலை செய்யும் எங்களை
தீயவரிடமிருந்தும் காப்பாற்றும்

பனையைப்போன்ற உமது உயர்ந்த அரசும்
அதன் வைரத்தை ஒத்த உமது வல்லமையும்
தன்னையே வாரி வழங்கும் வள்ளண்மையும்
என்றென்றும் உமக்கே உரியது
ஆமேன்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

மும்பையில் துப்பாக்கி ஏந்தியவர்கள்

நவம்பர் 27, 2008 by pastorgodson

என் வயதை ஒத்த உன்னை
நண்பன் என்று அழைக்கவா?
புரட்சி செய்கிறாய் என்று உன்னை
தோழர் என்று அழைக்கவா?
அருட் தந்தை எனும் பட்சத்தில் உன்னை
மகனே என்று விளிக்கவா?

ஆயுதம் வைத்திருக்கும் நீ
யாரைக்கண்டு பயப்படுகிறாய்?
உன்  உடன்பிறவா சகோதரர்களின் உயிர்
உனது கோட்பட்டை உயிர்ப்பிக்குமா?
உனது ஒரு நாள் தீபாவளியில்
நீ தான் நரகாசுரன் என்பதை அறிவாயா?
எளிய மனிதரின் அன்றாட வாழ்வின்
வியர்வையை சுவைக்கத் தெரியாத நீ
அவர்களின்
புனித இரத்தத்தையோ
கண்ணீரையோ
தாங்கும் சக்தி உண்டா?

ஒருபோதும் கிடையாது!
நீ தோற்று விட்டாய்!
நாளை
மும்பை உன்னை
ஏளனத்தோடு பார்த்து
நகைக்கப்போகிறது

அப்போது உன் நண்பனிடம் சொல்
நமது ஆயுதம் மழுங்கிவிட்டது
உன் தோழனிடம் கூறு
நாம் வழி தவறிவிட்டோம்
உனது முற்பிதாக்களிடம் மன்றாடு
ஆயுதமே என் வீழ்ச்சிக்கு காரணம் என்று

மறவாதே!
ஒன்றுமறியா மக்கள் திரளிடம்
நீ கூறுவதற்கு ஏதுமே இல்லை!

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

கள்ளன் போலீஸ்

டிசம்பர் 11, 2008 by pastorgodson

போலீசாரோடு கூடிய அனுபவம் யாவும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. அனைத்து போலீஸ் நகைச்சுவை துணுக்குகளையும் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அவை என்னை ‘இக்கிலு’ காட்டும். பெரும் புண்ணியவான்கள், பெரிய (மீசைவைத்த) அய்யாமார், காவல் தெய்வங்கள், என்னை தயை கூர்ந்து, பொறுத்து, காத்து, மன்னித்து அருளவேண்டும். அடிவாண்டும் மின்னாலே சென்னா விட்டிருவினும், கேட்டியளா!

சத்தியமா மக்கா க்யாட்டுக்க, நான் வெட்டூர்ணிமடத்துல உள்ள எனக்க அக்காளுக்க வீட்டுக்காக்கும் போனது. அஞ்ச ராத்திரி நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு கதையளந்துட்டு இருந்தா ந்யாரம் போனதே தெரியல்ல. அக்காட்ட செல்லிண்டு வந்தா மெயின் ரோட்டுல ஆளு ஒருத்தரையும் காணல. கடயெல்லம் பூட்டியாச்சி. மருந்து வாண்டுதவிய மட்டும் ஒண்ணு ரெண்டு பேரு அஞ்சோட்டும் இஞ்சோட்டுமாட்டு பென்சாம் ஆஸுபத்திரிக்க கிட்ட நடக்கினும்.

என்னல செய்யது? மணி பதினொண்ணர ஆயிப்போச்சுல்லா? லெவன் எல் தக்கல வண்டியும் போயிருக்கும். ரோடு பாலீஸ் இட்டதுபோல கிடக்கு. பின்னால கொஞ்சம் ஆமணக்கு எண்ண தடவீட்டு இருந்து நரங்கினா ந்யேரா பார்வதிபுரம் வருகது மாரிதான் எறக்கமும். நடக்க முடியாதுடெ! வண்டி யாதெங்கிலும் கிட்டினா கொள்ளாம்னு நானும் நிக்கிதேன்.

ஆண்டவரே ஏசுவே என்ன கைவிடாதேயும் அப்பாண்ணு ஒரே ஜெபம். கடவுள் எனக்க விளியக்கேட்டது போல தூரத்துல ஒரு வெளிச்சம். வடசேரி சந்தயிலேண்டு டக்கர்ல சாதனம் கொண்டு வரினும். ஏசுவே இவனுவ நெறுத்தணுமே. “என் விசுவாசம் என்னை இரட்சித்தது”. வண்டி நின்னப்போ தான் பாக்கியேன்…… மக்கா லேய் போலீசுல.

சார் தெரியாம நெறுத்திட்டேன், நீங்க போங்க…

அது எப்படி முடியும்! சார் நெறுத்தினதுக்க பின்னாடி நாங்க நிக்காம போகலாமா?

 ஜீப்புக்க பின்னால குகையிலேண்டு வெளிவந்த மொத போலீஸு அன்பாதான் விளிச்சான். ஆகா போலீஸ் எனது நண்பன் எண்ணு செல்லியது செரிதான். போவுலாமா போப்பிடாதா என்ன செய்யுததுண்ணு தெரியேல கேட்டியா. கமுக்கூட்டுக்குள்ள வெச்சி சந்தக்கி எடுத்திட்டு போற கோளி போல நான் முளிக்குதேன்.

இல்ல அண்ணா நான் நடக்குதேன் ….

அய்யோ கொகைகுள்ளேண்டு இன்னொரு ஆத்மாவும் எறங்குதே? ஏசப்பா…

 எஞ்சல போற….

மக்கா லெய்! நமக்குள்ள எதுவும் விளிப்போம்! இன்னொருத்தன் நம்மள பிலேண்ணு விளிச்சதுண்டா? தேச்சியமா வருது ஆனா ஒண்ணும் செய்யப்பற்றாது. ஓடீரப்பிடாதுண்ணுதான் ரெண்டுபேரும் சுத்தி நிக்கினும். என்ன கேஸுல இட்டு பிளிவினுமோண்ணு எல்லாம் கலங்கிப்போச்சு.

பார்வதிபுரம்….

ஒரு ஸ்டாப்புலேயும் நெறுத்தாத்த கேரளா பஸ் ரைவர் கூட நெறுத்திய இடமாக்கும். இவிய என்னப்பபாத்து என்ன க்யாட்டினும் தெரியுமா? “அது எஞ்சல இருக்கு” ண்ணாக்கும்.

அடுத்த ஸ்டாப்புல….

எவா நிக்குதா? …

சத்தியமா மக்கா சொல்லுதேன், எனக்கு அப்பம் மனசிலாவேல. பின்ன, யப்பா என்னத்த க்யாக்குதான்ணு பயங்கரமாயீற்று.  லே, நம்ம எஞ்சயெல்லம் போயிறுப்போம், கன்னியாமாரி, கொளச்ச, பப்பனாவுரம், ப்யாச்சிப்பாற…. எண்ணெங்கிலும் டதி ஸ்கூலுக்கோ, பெண்ணுவ காலேஜுக்கோ போய் நின்னிருப்போமால… எளவுடுப்பான் என்னத்த க்யாக்குயதுண்ணு இல்லியா?

இல்ல வீட்டுக்கு…

அதான் எவளுக்க வீட்டுக்குல போற? நாங்க கொண்டு விடுதோம்…

இல்ல… எங்க வீட்டுக்கு….

ஏறுல வண்டீல….

மரியாத மானமெல்லாம் போச்சு. போலீசுக்க வண்டீல ஏறவேண்டியவனா நான்? சத்தியமா நான் யாரேல. என்ன தூக்கி உள்ள வச்சினும். கொகைக்குள்ள இன்னும் ரெண்டு போலீஸு கையில தடியோட. உள்ள இட்டே இடிப்பினும். எக்கப்போ… ஏசுவே…

எங்கல களவாணப்போன?

 நமக்க கள்ள முளியப்பாத்து களவாணிபயண்ணு நெனச்சிட்டினுமோ. வண்டி உருளத்தொடங்கியாச்சி, எனக்க தலயிம் கெறங்க தொடங்கியாச்சி.

சார், நான் ஸ்டூடண்டு…

என்னலே படிச்சுத? …பாத்தா அப்பிடி தெரியேலிய…

பி டி படிக்குதென் சார்….

என்னல பீடி குடிச்சிதியா? என்னபடிப்பாக்கும்பலே அது?

கடவுளே! இவன்மாருக்கு நான் என்னத்த செல்லுவேன்? பேச்சிலர் ஆப் டிவினிட்டிண்ணு சென்னா, பேச்சிலரா தெண்டி நடக்குதவண்ணுல்லா செல்லுவினும்? கடவுள் தான் காப்பத்தணும்னு நெனச்சி, அந்த நரகத்துக்க உள்ள நடுங்கிட்டே இருக்குதேன்.கடவுள் பெரியவரு தான் இல்லியா? ஒரு போலீசுக்கு பி டிண்ணா என்னாண்ணு தெரிஞ்சிருக்கு.

என்ன பாஸ்டருக்க படிப்பா?

ஆமா…..

பின்ன ஒருத்தரும் எனக்கிட்டே பேசேல. அவியளுக்குள்ள வியாக்கியானம் செய்திட்டிருந்தினும். பார்வதிபுரம் வந்தவுடனெ…. “செரி நாட்டேர எரக்கி விடுங்கா”ணு ஒரு சத்தம்.

ஒரே குளும. என்ன ஒரு சந்தோஸம். “உள்ள” போயிட்டு வந்த மாரி ஒரு பீலிங்.

கர்த்தர் உன் போக்கயும் வரத்தயும் இது முதலா எண்ணைக்கும் காப்பருண்ணாக்கும் சங்கீதம் சொல்லுது.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

கச்சி வெளையாட்டு

டிசம்பர் 12, 2008 by pastorgodson

சிறு வயதில் நான் கற்றுத்தேர்ந்த விளையாட்டுகளில் முதன்மையானது “கச்சி” தான். “கோலி” எனும் சிறு கண்ணாடி குண்டுகளையே எங்கள் ஊரில் “களச்சி”  என்றும், “கச்சி” என்றும் அழைப்பர். காலம் கடந்து போய், நாடும் நகரமும் மறந்துவிடுவதற்குள் என் பணி “கச்சியை” உச்சி முகர்வதே என உணர்ந்து இதை எழுதுகிறேன்.

மார்த்தாண்டத்தில் எனது தந்தை போதகராக இருக்கும்பொழுது, எங்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உண்டு. போதகருடைய பிள்ளைகள் பிற பிள்ளைகளுடன் சேரக்கூடாது என்பதே அதில் தலையாய ஒன்று. கோயில், வீடு என்பதாக மட்டுமே எங்கள் வாழ்க்கை இருந்தது. நம்ப மாட்டீர்கள் எனது அண்ணன் ஆலயத்துக்கு வரும் தனது வயதைஒத்த பதின்வயதினருடன் கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்கியிருக்கிறார்கள். விலையுயர்ந்த  கிரிக்கெட் பாட், ஸ்டெம்ப் எல்லாம் அடுப்புக்குள் போவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நண்பர்களுடன் அண்ணன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அம்மா சிறு குச்சியுடன் கிரவுண்டுக்குள் வந்தால் போதும், அனைவரும் ஏழு திசைகளில் ஓடி மறைவார்கள்.

இந்த சூழ்நிலையில் நான் “கச்சி” விளையாட கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் அளவிற்கு எந்த முன் ஏற்பாடும் தேவையற்ற ஒரு விளையாட்டு ஆகையால், யாராலும் வெகு எளிதாக கற்றுக்கொள்ளவும் விளையாடவும் முடியும்.  சர்ச்சுக்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கும்போது,  முட்டுக்கு கீழே சுரீர் என ஒரு அடி விழும். திரும்பிப் பார்க்காமலேயே சொல்லி விடலாம் அது அம்மா தான் என்று. நொண்டி நொண்டி, ஓட ஓட கால்களைத் தடவியபடியே வீடு நோக்கி அம்மா வருவதற்குள் அடைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அப்பா வருவதுவரை வெளியே தான் நிற்கவேண்டும். ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறேன் என்பதற்கு அடையாளம்.

அப்பா வந்தவுடனே நான் பசியோடிருக்கிறேனா என்ன என்பதை பார்க்க மாட்டர்கள், வெளியே நிற்பதற்கான காரணத்தை புரிந்துகொன்டு என்னிடம் பேசாமல் வீட்டிற்குள்ளே சென்று விடுவார்கள். வெளியே அவர்கள் வரும்போது மரச்சீனி அல்லது கீறிப்போட்ட தென்னைமட்டை இருக்கும்.  அப்பா என்று கூப்பிட திராணி இல்லாதவரைக்கும் அடிவாங்கி, கால்கள் வீங்கி, கண்ணீருடன் நிற்கும்போது பாசத்துடன் அம்மா வந்து தடுத்து வீட்டிற்குள் கூட்டிச்செல்வார்கள்.

மூன்று அண்ணன்மார் இருந்ததால் அவர்களைப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக “கச்சி வெளையாட” கற்றுக்கொண்டேன்.  அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்துதான் விளையாடுவோம். மண்ணில் விளையாடக்கூடாது, அதற்கும் அடி உண்டு. எனக்கு கச்சிமீது அதீத காதல் பிறந்துவிட்டது. வீட்டு முற்றத்திலேயே விளையாடலாம், அம்மா அப்பா வருவதைப்பார்த்தால் நல்ல பிள்ளை போல் நேராக வீட்டிற்குள் போய் விடலாம்.

அப்போது ஐந்து பைசாவிற்கு ஒரு “கச்சி” கிடைக்கும், எப்படியாவது பத்து பைசா தேற்றினால் இரண்டு கச்சி வாங்கி விளையாட துவங்கலாம். மார்த்தாண்டம் மெயின் ரோட்டிலே உள்ள பழக்கடையிலே வித விதமாக கச்சி கிடைத்தாலும், அந்த சாலையைக் கடப்பது இல்லை. வடக்குத்தெருவிலே ஒரு தாத்தா பைபிள் கடை வைத்திருந்தார். அவரிடம் வண்ணங்கள் அதிகம் உள்ள கச்சி இருக்காது ஆனால் அதுதான் எனக்கு வசதியும் அடுத்ததும். ஒரு கச்சி வாங்கினால் போதும். ஒன்பது கச்சிகளை விளையாடி சம்பாதித்துக்கொள்ளலாம்.

விளையாட தயாராகும் முன்பு மூன்று குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழிக்குமிடையே சுமார் ஐந்து ஜாண் இடைவெளி இருப்பது நல்லது. கால்களை ஒன்றன்முன் ஒன்றாக  வைத்து அளப்பதுவே ஸ்டாண்டேர்ட் மெஷர்மென்றாக இருந்தது. மழைக்காலங்களாக  இருந்தால், கால் உப்புகுத்தியை தரையிலே அழுத்தினால் ஏற்படும் குழிகள் போதுமானது. வெயில் காலத்தில், கற்கால உபகரணங்களை உபயோகித்து “குழிபறிக்கலாம்”.

முதலாவது யார் விளையாட ஆரம்பிக்கிறார்கள் என்பதே பொதுவாக போட்டி முடிவை நிர்ணயம் செய்யும். ஆகையால் நடு குழியிலிருந்து கச்சியை முதற் குழி நோக்கி உருட்டிவிட வேண்டும். இரண்டு பேருடைய கச்சியும் குழிக்குள் விழாவிட்டால்  எவருடையது குழிக்கு அருகாமையில் இருக்கிறதோ அவரே விளையாட துவங்குவார். டாஸ் ஜெயிப்பதும் தோற்பதும் போலவே.

தோற்றவர் கச்சியை முதற் குழியினோரத்தில்  நடு குழியை நோக்கி வைக்க வேண்டும். விளையாடத்துவங்குபவர் நடு குழியினோரத்திலிருந்து தனது கச்சியைவைத்து எதிரிலிருப்பதை குறிபார்த்து அடிக்கவேண்டும். ரூல்ஸ் இதற்கும் உண்டு. பெருவிரல் தரையில் அழுத்தியிருக்கவேண்டும், கச்சி ரிலீஸ் ஆகும் வரை கை எம்பக்கூடாது. அப்படி எம்பி அடிப்பவர்கள் தொலைவை குறுக்கும் பொருட்டு கையை சற்று முன் நகர்த்துவார்கள். இவர்களை “ஈத்தடி மன்னன்” என்று குற்றம் சாட்டுவோம்.

தூக்கிநிற்கும் நான்கு விரல்களில் சுட்டுவிரல் அல்லது நடுவிரல் ஏதாவது ஒன்றில் கச்சியை ஒட்டவைத்து மற்றொரு கையால் அந்தக் குறிப்பிட்டவிரலை கச்சியோடு சேர்த்து வளைத்து விடுவிக்க வேண்டும். எதிராளியின் கச்சியில் நமது கச்சி உரசிவிட்டால், நமக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கும். எல்லா குழிகளையும் வெற்றிகரமாக விசிட் செய்துவிட்டு வந்தால் போதும். முதல் வருபவர் வெற்றி பெறுபவர் ஆகிறார்.

என்னைப்பொறுத்தவரை நான் வகை வகையாக அடிப்பேன். எனது தனித்துவமே “நெறுப்பால்” தான். எதிராளியின் கச்சி நின்ற இடத்திலேயே என்னுடைய கச்சியையும் நிற்கச்செய்வது. ஆனால் அடிபட்ட எதிராளியின் கச்சி மிகவும் தொலைவில் சென்றுவிடும்.

தேவைக்கேற்ப “கெறங்கி” அடிப்பதும் உண்டு. கெறங்கி அடிப்பது ஸ்பின் அல்லது பூமராங் போன்ற ஒரு வகை. நமது கச்சி எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ  அதை மனதிற் கொண்டு எதிராளியை துரத்தி, நாம் வேண்டிய இடத்திற்குச் செல்லுவது.

“கொட்டல்” என்பது முட்டமிட்டது போல் தொட்டு எதிராளியை இருக்கும் இடத்தை விட்டு அதிகமாக அசையவிடாமல் கடந்து செல்லும் ஒரு நுட்பம்.

“உருட்டல்’ இன்னும் தந்திரமானது, பக்கத்து குழிக்கு எதிராளியை உரசியபடியே கொண்டு சென்று, அந்த குழியில் இறங்கிவிட்டு, அருகில் கொண்டுவந்த எதிராளியின் கச்சியை கண்மூடித்தனமாக அடித்து துரத்துவதற்கு ஏற்றது.

குறைந்த பட்சம் இருவர் தேவையான விளையாட்டிற்கு எனக்கு “கூட்டு” கிடைக்காததால் நான் தனியாகவே விளையாட நேரிடும். ஸ்பிலிட் பெர்சனாலிட்டி போல நானே இருவராக மாறி விளையாடி பழகியதில் ஒருவழியாக நன்றாக தேறிவிட்டேன். லெப்ட் ஹாண்ட் பாட்ஸ்மான் போல நான் “பீக்கை” உபயோகித்தே விளையாடினேன்.

இனி அரங்கேற்றம் வேண்டும் என்ற நிலையில் நான் வீட்டிற்குத் தெரியாமல் விளையாட ஆரம்பித்தேன். ஸ்கூலுக்கு  சீக்கிரமாக போய், அழகான யூனிபார்மை அழுக்காக்கி ஆசிரியர்களிடமிருந்தும் அடிவாங்கத்துவங்கினேன்.

போட்டி என்று வந்தால் இரண்டே வகைகள் தான் உண்டு. ஒன்று முட்டு. தோற்றவர் தனது கை முஷ்டியை மடக்கி முதற் குழியில் கச்சிக்கு பதிலாக வைக்கவேண்டும். அல்லது முதலிலேயே பேசியபடி இருக்கும் கச்சிகளை கொடுத்துவிடவேண்டும்.

எனக்கு இரண்டுமே உவப்பானது தான். நான் தன்னிகரற்ற விளையட்டு வீரனானேன். கச்சிகள் இல்லாத போது எதிராளிகளின் முட்டுகளை பதம் பார்த்தேன். ஆகவே என்னை கவனித்தவர்கள் கச்சியையே பெட் கட்ட முன் வருவர். இது ஒரு புதிய பிரச்சனைக்கு வழி வகுத்தது. விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்போது கால்சட்டை பையிலே கச்சிகள் வெற்றிக்களிப்பின் ஒலியெழுப்பும்போது மாட்டிக்கொள்வேன். அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடுவார்கள். அடி தவறாமல் கிடைக்கும்.

எளிமையான இந்த விளையாட்டில், எனது குறி பார்க்கும் திறமைகள் நன்றாக வளர்ந்தது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கல்லில் எப்போதுமே ஒரு குலை மாங்காய் தான்.

ஆறாம் வகுப்புவரை இருந்த எனது கச்சி விருப்பம்,  பிற்பாடு தானாக  என்னைவிட்டு அகன்று போனது. மும்பையில்  நான் தெருவோரச் சிறுவர்களுக்கான பணியில் கடந்த வருடம் ஈடுபட்டிருந்த பொழுது, சிறுவர்களுக்கு என வெளிநாடுகளிலிருந்து வந்த விளையட்டு பொருட்களில் கச்சியும் இருப்பதை நான் பார்த்தேன். நான் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் உபயோகித்ததைவிட அழகான நிறங்கள், கவர்ச்சியாக உறுதியுடன் இருந்தன. சற்று நேரம் அவைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பல நினைவுகளுக்கிடையில் சம்பந்தமில்லாமல் ஒருசில கேள்விகள் வந்துபோனது. என் வாழ்நாளில் நான் பெண்களோடு இதை விளையாடியதில்லை. சிறுமிகள் இதை விளையாடி நான் பார்த்ததும் இல்லை. சிறுமிகளை இந்த விளையாட்டைவிட்டு தூரமாக்கியது யார்? அதன் காரணம் என்னவாக இருக்கும்? அந்த சிறு வயதில் எல்லா ஆண் சிறுவர்களும் இதை உபயோகிப்பதன் காரணம் என்ன? ஒருவேளை இதன் வடிவத்திற்கும் ஆண்பாலுக்கும் சம்பந்தம் உண்டா? தெரிந்து செய்வதுபோல் தெரியாவிட்டாலும், “ஆணாதிக்கம் நுட்பமாக சிறுமிகள் கையிலிருந்து கச்சியை பிடுங்கிவிட்டிருக்கின்றது”.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

அந்த ஏழு நாட்கள்

டிசம்பர் 15, 2008 by pastorgodson

நான் கண்களை திறந்தபொழுது எங்கே இருக்கிறேன் என்றே எனக்கு புரியவில்லை. என்னை சுற்றி இருப்பவைகளையும். அனேக நாட்களுக்கு பின்பே என்னால் அந்த இடத்தை புரிந்து கொள்ள முடிந்தது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

என்றாலும் உங்களுக்காகவே நான் இதை கூறியாகவேண்டும். ஒரு சம்பவத்தை பார்த்தவன் எனும் வகையிலும் அனுபவித்தவன் எனும் வ்கையிலும் நான் கூறுவது முற்றிலும் உண்மை. உண்மைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு பொன் மாலைப் பொழுது. நான் ஆற்றோரமாக கிடக்கிறேன். இதற்கு முன்பு நான் எங்கே இருந்து இங்கே வந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நிழலைவிட நெருக்கமாக என்னோடு மணற் துகள்கள் ஒட்டிக்கிடந்தன. அதை தட்டிவிடும்படியான எந்த எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை. நான் அதன் கலவையாகவே என்னை ஊணர்ந்தேன்.

ஆறு மந்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும் வேகமாக கதிரவனின் ஒளியை  பறிமாரிக்கொண்டிருந்தது.  அதன் பளபளப்பு என்னைத் தாண்டியபடியும் ஊடுருவியும் செல்லுவதாக இருந்தது. நான் அந்த ஒளியை நேசிக்கவும் அதன் மீது தூய காதல் கொள்ளவும் துவங்கினேன். அது எனக்கு இன்பமாகவும், என்னை நானே கண்டுகொள்ளும் ஒரு கருவியாகவும் இருந்தது.

மனம் லயித்துப்போனால் நேரம் போவதே தெரியாதல்லவா? ஆனால் எதில் லயிக்க? ஒளி தன்னை சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டு வந்தது. மாறுதலை நான் கணமும் கண்டுகொண்டிருக்கும் போதே நானும் அத்துடன் மாறிக்கொண்டிருக்கிறேன். எனது மாற்றம், என்னை சுற்றி உள்ளவைகளின் மாற்றத்தோடு மாறிக்கொண்டு வந்தபடியால் உடனடியாக என்னால் அந்த வித்தியாசத்தை உணர முடியவில்லை.

பிற்பாடு அந்த ஒளி என்னைவிட்டு மறையும் தோறும் நான் அத்தோடு என்னை நெருக்க முயற்சித்தேன். அது மாலையில் உதிரும் பூக்களைப் போல உதிர்ந்துகொண்டிருந்தது. ஒருவரும் நிறுத்தமுடியாதபடி சுற்றும் அதன் வேகமும் வீச்சும் என்னை நிலைகுலையச் செய்தன. நான் கண்மூடி நித்திரை செய்தேன்.

காலை கதிரவன் நட்பான புன்னகையுடன் எழுப்பியபோதும் நான் அந்த மணலிலேயேக் கிடந்தேன். எனது கோபத்திற்கு அளவே இல்லை. இங்கு நான் தனியாக இருக்கிறேன், நீ என்னை விட்டு மறைந்து போனாயே என்ற எனது காதல் பாட்டை அவன் ரசித்திருப்பான் போலும். என்னோடு அவன் நெருங்கிவர ஆரம்பித்தான்.

எனக்கு பசித்தது, தாகம் எடுத்தது. நேராக ஆற்றின் ஒரத்தில் சென்று நீர் குடிக்கும்படி விழுந்தேன். எனது  தேகம் யாவும் சேறு அப்பிக்கொண்டது. எனக்கு அது மிகவும் பொருத்தமாகவே தோன்றியது. ஆழம் அதிகமாக இருக்குமா? தெரியாது? எனக்கு நீந்தவும் தெரியாது. ஆனால் என்னால் நடக்க முடிந்தது. இரண்டு கால்களையும் ஊன்றி.

நான் செய்வதற்குரிய காரியங்கள் அனேகம் கிடையாது. பசியை போக்க வேண்டிய காரியங்களை முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டியது தான். எங்கேயும் நான் அலைந்து திரியும்படியான நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. தாராளம் பழங்கள் மரத்திலே இருந்தன. விதம் விதமாக.

சற்று நேரத்திற்கெல்லாம் சிங்கவால் குரங்குகள் சில தாவியபடியே வந்தன. வில்லிலிருந்து விடுபடும் அம்பைபோல அவைகள் திசைக்கொன்றாய் எம்பியப்படியே மரங்களை கடந்து வந்துகொண்டிருந்தன. என்னைப்பார்த்தவுடன் அவைகள் வெட்கமடைந்து, திசை மாறி சென்றுவிட்டன. அவைகள் சென்றுவிட்டாலும் நான் அவைகளோடு பேசுவேன். யாவும் எனது நண்பர்கள் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.
 
விழுந்து கிடக்கும் பழங்களை பொறுக்கி உண்ண சில பன்றிகள் வந்தன.  நான் மரத்தின் மேலேயே இருந்துவிட்டேன். சிறிது நேரம் பன்றிகளுக்கு  பழங்களை பறித்து இட்டேன். குனிந்த தலை நிமிராதபடி அவைகள் என்னை பார்த்தன. அந்தக் கண்கள் என்னோடு பேசுவது போலவே இருந்தது. இருக்கட்டும். பழம் கொடுத்தால் கடைக்கண் பார்வை கிடைக்கும் போல என்று நான் உத்தேசித்தேன். இப்போது கீழே இறங்கமுடியாது. அவை வயிறார உண்டு களித்தபின்பே மெல்ல நகரும்.

பன்றியோடும் பேசுவதர்கான காரணங்கள் உண்டு. நான் அவைகளை உங்களுக்கு சொல்லப்போவது இல்லை.

பறவைகள் தான் எத்தனை அதிசயமானவைகள். உயரமான இடத்திலிருந்து கூட தனது உணவை கவலையின்றி இலகுவாகப் பெற்றுக் கொள்ளுகின்றனவே. இந்த காகம் கூட தனது அலகால் கொத்தி உண்ணும் ஒரு நிலை எத்துணை அழகு. காகம் நின்று நிதானமாக பேசாது. ஏதோ ஒரு அவசரம்.

எனது நிலைமை இவ்விதமாகவே போய்கொண்டிருக்கின்றது. தினமும் யாராவது மாட்டுகிறார்கள். பேசுவதற்கும் விளையாடுவதற்கும். பேசுவது என்றால் என்ன? நான் மட்டுமே பேசிக்கொள்ளுவேன். யார் என்னை பொருட்டாக மதித்து பேசுவது? ஆனால் நான் பேசவேண்டும், அப்போதுதான் என்னால் என் இருப்பை உறுதி செய்ய முடியும்.

விளையாட்டு? அது சற்று ஆபத்தானது, நண்பர்கள் விரோதிகள் வித்தியாசம் இன்னும் சரிவரத் தெரியவில்லை. வினையேதும்  வேண்டாம் என்று சும்மா இருந்தாலும் பொழுது போவது இல்லை. நாளொரு ஆபத்தும் பொழுதொரு பிரச்சனையுமாக நேரம் நன்றாகவே சென்றது.

ஆறாவது நாள் அந்த சம்பவம் நடந்தது. நான் மரத்திலிருந்து பழங்களை வீசிக்கொண்டிருந்தபொழுது நான் பற்றியிருந்த கிளையிலிருந்து கை நழுவியது. எங்கே விழுகிறோம் என்ற நினைவு நன்றாகவே இருக்கிறது.

எழும்பியபொழுது எனது விலாப்பகுதியில் ஒரே வலி. நான் என்ன நடந்தது என யூகிக்குமுன், தூரத்திலே அவளைக் கண்டேன்.

என்னைப்போலவே நிர்வாணமாக!

அவளோடு பேசுவதற்கு முன் என் வாய் தவறி வந்த சொற்கள்.

“கடவுளே இவள் தான் ஏவாளா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

நேர்முகத் தேர்வு

டிசம்பர் 16, 2008 by pastorgodson

எட்டு மணி நேர பிரயாணம்
நண்பன் வீட்டில் ஷேவிங்
அயர்ன் செய்த உடைகளுடன்
ஷூ மற்றும் டை

புதிய ஊர் என்றாலும்
விசாரித்து அறிந்து
பஸ் ஏறிச் செல்லுவதே
சிக்கனம்

பத்து நிமிடம் தாமதமாக
பதை பதைப்போடு வந்து சேர்ந்தால்
கசங்கிய கோலத்தில்
நேர்த்தியான ஆடைகள்

காலியிடங்கள் இருவருக்கானது
எழுனூற்று நற்பதெட்டு வருகை
தாலி விற்று வந்தவன்
எதை வாங்க வந்தான்?

பல போர்கண்ட வீரர்
விழுப்புண் பெறுவது இயல்பு
மீண்டும் எழுச்சியுடன் போரிட
வாழ்த்தும் தேர்வாளர்

தகுதியுள்ளோருக்கு வாய்ப்பு
“வழங்கினர்” தகுதி படைத்தோர்
பணம் மற்றும் இன்னபிற
யாவும் இனிதே முடிந்தது

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

அவளுடைய நான்

டிசம்பர் 17, 2008 by pastorgodson

மும்பையில் எனது வேலையை முன்னிட்டு தனிக்குடித்தனம்.  பெண்ணை சார்ந்து வாழாத ஒரு “ஆண்மகனின்” மாய தோற்றத்தை நான் மறுபடியும் உறுதி செய்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட, ஜாஸ்மின் “போதகரம்மா”வே ஒழிய தனி ஒரு பெண்ணல்ல.

திருச்சபை ஆணாதிக்கம் நிறைந்தது. அது தன்னை அவ்விதம் கட்டமைத்துக்கொண்டுள்ளதன் காரணமே தன்னை தக்கவைத்துக்கொள்ளுவதற்கு தானோ என்றே எனக்கு படும். பல வேளைகளில் சக தர்மினியை கூட புரிந்து கொள்ள முடியாதபடிக்கு  கண்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. என்ன போதகரம்மா, இண்ணைக்கு என்ன குளம்பு வச்சீங்க? பாஸ்டர நல்லா கவனிச்சுகிடுங்க போன்ற அனுசரணையான வார்த்தைகள்.

இந்த நாட்களில்தான் ஜாஸ்மின் கர்ப்பமானாள். பாஸ்டருக்கு இனி கொஞ்சம் கஷ்டம் தான், என அன்பாக சலித்துக்கொள்ளுபவர்கள் ஒருபுறம், அவங்க அடுப்படிக்கு போக விரும்பமாட்டாங்க, மணம் பிடிக்காது என விளக்கமளிப்பவர்கள் இன்னொருபுறம். தடாலடியாக சில தொலைபேசி அழைப்புகள் “பாஸ்டர், எதுவும் செய்துடாதீங்க, கொடுத்து அனுப்புகிறோம்”. போட்டி போட்டுக்கொண்டு அனுப்பிய வித விதமான உணவுகள்.

ஜாஸ்மின், காலை தோறும் வாந்தி, பிறகு சுருண்டு படுத்துக்கொள்ளும் நிலைமை. பால் குடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டாள். மிகவும் கொஞ்சமாகவே சாப்பிடுவாள். இதற்குப்போய் ஏன் சமைக்கவேண்டும் என நானும் வகைவகையாக செய்வதை குறைத்துக்கொண்டேன். பழங்கள் மிகவும் முக்கியமானவைகள் என டாக்டர் கூறியிருந்தபடியால், விதம் விதமாக அவைகளையும்  வாங்கி குவித்தேன்.

வேலைப்பழு இன்னும் குறைந்தது. சமைக்க வேண்டியது இல்லை, பாத்திரம் கழுவவேண்டாம், அவள் உறங்குமட்டும் அவளோடு கூட இருந்தால் போதும். அவளாக உற்சாகமாக எழுந்து வரும் நேரங்களிலேயே துணி உலர இடுவது போன்ற சில்லறை பணிகள் நடைபெற்றன.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மிகவும் தர்மசங்கடமான விஷயம். பாஸ்டர், நீங்க ஏன் இதெல்லம் செய்யுறீங்க? ஒண்ணுமே தேவையில்லை என நாசூக்காக மறுப்பது அன்றாடம் நிகழ்வாயின.  ஒரு நாள் ஜாஸ்மினைப் பார்ப்பதற்கு வந்த பெண்கள் சங்க குழுவினர், மிகுந்த வெட்கத்தினூடேயே நான் தயாரித்த லெமென் ஜூஸை எடுத்துக்கொண்டனர்.

எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளும் யாவும் மறந்து விட்டன. நான் சமைப்பதே தவறு என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். பாஸ்டர் யாரு? கிங்குல்லா!

ஒரு நாள் தனக்கு தொண்டை வலிப்பதாக ஜாஸ்மின் கூறினாள். . சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை சரியாகிவிடும் என்று சொன்னேன். அழத் துவங்கி விட்டாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நாங்கள் சந்திக்கும் டாக்டர் அம்ருதா தாக்குர் இந்த நேரத்தில் பார்வைக்கு கிடைப்பது அரிது. நல்ல வேளையாக அவர்களது தொலைபேசி எண் என்னிடம் இருந்தது.

கூப்பிட்ட உடனே அவர்கள் எனது அழைப்பை இணைத்தார்கள்.

நான் குழரலோடு “டாக்டர் நான் ஜாஸ்மினுடைய கணவன் பேசுகிறேன்” என்றேன்.

பிற்பாடே எனக்கு உறைத்தது. ஆம் நான் யார்?

என்னை தனித்து அடையாளப்படுத்துமளவிற்கு நான் பெரியவனல்ல.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

பிறப்பின் இரகசியம்

டிசம்பர் 26, 2008 by pastorgodson

கிறிஸ்மஸ் அன்று சிறுவர்களுக்காக ஒரு குறு நாடகம் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். மண்டையை குழப்பிக்கொள்ளாதபடி நெட்டிலிருந்து ‘சுட’த்தக்கதாக ஒன்று கிடைத்தது. மொழி “பெயர்ப்பு” செய்து சிறுவர்களிடம் கொடுத்தபோது அசத்திவிட்டார்கள்.
உங்களுக்காக இதொ….
போதகர்: மாற்கு
மாற்கு: உங்களுக்கு சமாதானம்
போதகர்: மத்தேயு
மத்தேயு: கிறிஸ்து ராஜாவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்துக்கள்
போதகர்: லூக்கா

லூக்கா: பாரம்பரியத்தின்படி வணக்கம்

போதகர்: யோவான்

யோவான்: பிதாவை ஏக புத்திரன் அறிந்திருக்கிறார்.பிதாவும் அவரை அறிவார்.

போதகர்: தங்களது வருகைக்கு நன்றி.இயேசுவின் பிறப்பை குறித்து உங்கள் கருத்துக்களை கேட்க அழைத்திருக்கிறோம். உங்களில் இருவர் இரண்டு விதமான பிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறீர்கள், மற்றும் இருவர் பதிவு செய்யாமலேயே விட்டு விட்டீர்கள். புரியும்படியாக கூற வேண்டுமென்றால், பல வருடங்களாக நாங்கள் கிறிஸ்து பிறந்த நிகழ்வை இவ்விதமாக கோர்த்து ஒரு சித்திரமாக வைத்திருக்கிறோம். அதாவது ஞானிகள், பெத்லகேம் நோக்கி நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டார்கள், நட்சத்திரம் நின்ற இடத்தின் கீழே பாலனை அவர்கள் முன்னணையிலே கிடக்கக் கண்டார்கள் சில மேய்ப்பர்கள் தங்கள் மந்தையோடு வந்திருந்தனர், ஞானியர் பரிசுகளை கொடுத்தனர்.

மத்தேயு: ஒரு நிமிடம்! நான் உங்கள் கருத்தை சற்று நேர் செய்ய வேண்டும். இயேசு ராஜா முன்னணையிலே பிறந்தாரா?மேய்ப்பர்கள் அவரை சுற்றி நின்றனரா? விளையாடுகிறீர்களா?இல்லை இல்லவே இல்லை. இயேசு ஒரு இல்லத்திலே பிறந்தார், ஒருவேளை அது மாளிகையாக இல்லாமல் இருக்கலாம், அனால் கண்டிப்பாக ஒரு மாட்டு தொழுவத்திலல்ல. ஆமாம் மேய்ப்பர்கள் எங்கிருந்து வந்தார்கள்?…ஞானியரே விலையுயர்ந்த பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். அது தான் ஒரு ராஜா பெறவேண்டிய உயரிய பரிசு.

லூக்கா:  மத்தேயு,  உனக்கு தான் எல்லாம் தெரியும் என நினைக்க வேண்டாம். இயேசு ஒரு தீர்க்கதரிசி, அவர் எளியோருக்கு நற்செய்தி கொண்டுவந்தவர்.  ராஜாக்களை குறித்த கவலைகள் ஒன்றும் அவருக்கு இல்லை. எளிய மேய்ப்பர்களே அவரை கண்டு வணங்கினர். இது என்ன ஜோசியமா…. அந்த நட்சத்திரம் எங்கேயிருந்து வந்தது.  மேய்ப்பர்களுக்கு தோன்றிய தூதர்கள் அல்லவா இயேசுவை துதித்து பாடினார்கள்?

மத்தேயு: லூக்கா நீ ஒழுங்காய் போய் உன் வீட்டுப்பாடத்தை செய். ஒரு ராஜா பிறந்தாரென்றால், ஒரு நட்சத்திரம் கண்டிப்பாக உதிக்க வேண்டும் என்பது ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே!

லூக்கா: நான் அவரை அரசன் என்று கூறவில்லையே. அவர் ஒரு தீர்க்கன் என்றல்லவா கூறுகிறேன்.

மத்தேயு: அப்படியானால் அவருடைய பாரம்பரியம் என்ன? யோசேப்பு தாவீதின் வழித் தோன்றல் இல்லையா? சாலோமோன் மற்றும் யோசியா அரசர் வழி வந்தவரல்லவா? ராஜ பரம்பரை தானே.

லூக்கா:  நீ எதையோ குழப்புகிறாய். அவர் தாவீதோடு உறவுள்ளவர் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆனால் சாலோமோனுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தாவீதின் இன்னொரு மகனான நாத்தானின் வழித்தோன்றல்

போதகர்: ம்ம்ம்…எனக்கு ஒன்று தோன்றுகிறது….. ஒருவேளை யோசேப்பு இயேசுவுடைய தந்தை இல்லையோ?

மாற்கு: அவர் எங்கே எப்படி பிறந்தால் உங்களுக்கு என்ன? யார் யார் வந்தார்கள் போனார்கள் என்பதில் தான் என்ன பயன்? எது முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். அவர் சொன்ன கருத்து தான் முக்கியம்.

மத்தேயு: உண்மை தான், ஆனாலும் அவர் பிறந்திருக்க வேண்டுமல்லவா. இயேசுவின் வாழ்வின் முக்கிய பகுதியல்லவா அது?

லூக்க: நானும் ஒத்து கொள்ளுகிறேன். ஒருவனின் பிறப்பே அவன் எவ்வளவு பெரியவனாவான் என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வு, இல்லையா?

மாற்கு:   இருக்கலாம்! நமக்கு தெரிந்திருந்தால் நாம் அதை எழுதலாம். நமக்கு தான் தெரியாதே!

யோவான்: நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்…..

போதகர்: என்ன?… ஓ… யோவான் நீங்கள் ஏதேனும் கூற முற்படுகிறீர்களா

யோவான்: கிறிஸ்துவே வார்த்தை. ‘அந்த வார்த்தை’

போதகர்: “அந்த வார்த்தை”?

யோவான்: ஆம். அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று… ஒருவேளை நீங்கள் அனைவரும் இயேசுவின் பிறப்பை சுற்றி சுற்றி வந்தாலும் மையக் கருத்தை விட்டு விடுகிறீர்கள். கிறிஸ்து ஆதி அந்தம் இல்லாதவர். அவர் சுயம்பு. அவரது உலக தோற்றம் உங்களை போன்றோரின் குழப்பங்களை தீர்ப்பதற்க்காகவே

மாற்கு: நீ பிதற்றுகிறாய்…

யோவான்: இறுதி நாட்களில் நான் சொன்னவைகளின் உண்மை புரியும். அன்று நீங்கள் யாவரும் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள்.

ஆங்கிலத்தில் இன்னும் அருமையாக முன்னுரையோடு உள்ளது. சுவைத்து மகிழ http://www.transmissioning.org/2007/12/12/nativity-mystery-5-minute-skit-for-5-actors-by-jsnodgrass/

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

பனையேறியின் கதறல்

டிசம்பர் 27, 2008 by pastorgodson

இறையியல் கல்லூரி வாழ்வின் இறுதி வருடத்திலே மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக ஒரு ஆராதனை நடத்த வேண்டும். அந்த ஆராதனை புதுமையாகவும், ஆராதனையின் அடிப்படை விதிகளை மீறாமலும் அமைக்கப்பட வேண்டும். நூறு மதிப்பெண் உண்டு. நான்கு வருட படிப்பின் சாரத்தை வெளியிடும் அந்த நாள் பலருக்கு கலக்கத்தையும் (எக்கப்போ என்னெய்யப் போறேனோ) மற்றும் சிலருக்கு பழிவாங்கும் (ஆசிரியர்களைத்தான் – பேசியே கொன்னுருவோம்ல) நாளாகவும் அமைந்துவிடும்.

நான் கண்ணீரைக் கரத்தில் எடுத்தேன். மொத்த ஆராதனையையுமே ஒரு ஆழ்ந்த சோகம் கவ்வியிருக்கும்படி செய்தேன். அந்த நிகழ்விலே நான் உபயோகித்த ஒரு பாடல்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கிழக்கு செவக்கயிலே
நான் பனையில ஏறயிலே
அந்தப் பாளையச் சீவயிலே
மண் கலசம் நெரம்பயிலே
என் கண்ணும் நெரம்பிடுச்சே – அழாத பனையாரி அழாத

ஊரே ஒதுக்கயிலே
எனக்கு யாரிருக்கா
என் வேதன மறிடுமா
என் விதிய எழுதயிலே
அந்தச் சாமி உறங்கிடுச்சே – அழாத பனையாரி அழாத

பதனீர் காய்கயிலே
என் குடும்பம் வேகயிலே
கருப்புக் கட்டிய வீக்கயிலே
என் குடும்பம் ஏங்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே – அழாத பனையாரி அழாத

அய்யாக் கலங்காதே
பனைமரம் முறியாதே
அந்த தேவி இருக்கயிலே
ஊர் உலகும் மாறிடுமே
உன் கவலை தீர்ந்திடுமே.

கடைசி பத்தி  பாடுபவர் ஆறுதல் படுத்துபவராகவும், முதல் மூன்று பத்திகள் நான் பாடுவதாகவும் அமைத்திருந்தேன். வந்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு “அழாத பனையாரி அழாத”.

“சீவலப்பேரி பாண்டி” எனும் திரைப்படத்தின் இசையையே நான் இதற்கென்று உபயோகித்தேன், அதை எனது அச்சு நகலிலும் பதிவு செய்திருந்தேன். “மைக்கல் டிரேபர்” உலக தரம் வாய்ந்த “தொடர்புத்துறை பேராசிரியர்”, தனது எதிர்வினையின் போது சினிமா இசையை ஆராதனையில் உபயோகிப்பதில் தவறொன்றும் இல்லை என்றது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை பயணம் – ஒரு முழுமையான ஆராதனை

பெப்ரவரி 13, 2009 by pastorgodson

நானும் என் மனைவியுமாக ஜனவரி இரண்டாம் தியதி மும்பையிலிருந்து கன்னியாகுமரி திரும்பிக்கொண்டிருந்தோம். ஆறாவது மாத கருவை அவள் சுமந்து கொண்டிருப்பதால் என்னுள்ளே ஒரு பதட்டம். மருத்துவர் ஆம்ருதா அவர்கள் எங்களை அழைத்து வழியிலே சாப்பிடவேண்டிய மாத்திரைகளை கொடுத்திருந்தார்கள். பயணம் இனிதே இருந்தது. வீட்டிற்கும் செல்லும் மகிழ்சி மாதிரமல்ல, முதல் கிறிஸ்மஸ் கொண்டாட தவறியதால் பெற இருக்கும் வெகுமதிகளை குறித்து பேசியபடியே சென்றோம்.

ஜாஸ்மினை பத்திரமாக கொண்டு விடுவது எனக்கு பெரிய கவலையாக இருந்தது. தவறுதலாக ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது. அவள் தூங்குமட்டும் அவளொடு இருப்பதும் தூங்கிய பின்பு அவளருகில் இருந்து வாசிப்பதும், வாசலில் இருந்து வேடிக்கை பார்ப்பதுமாக நேரம் சென்றது.

இரவு சுமர் 7 மணிக்கு மெல்லிய பாடல் சப்தம் கேட்டதால் பக்கத்து பெட்டிக்குள் நுழைந்து பார்த்தேன். வெள்ளைத் தலை முடிகளுடன் கருப்பு உடையணிந்த பெண்களும் ஆண்களும் பாடிக்கொண்டிருந்தனர். வாழ்வில் நாம் பெறும் அதிசய தருணங்களில் அது ஒன்று என்றே பட்டது. என் மனதை மயக்குவதாக இருந்த அந்த பஜனில் நான் மூழ்கியபடியே உட்கார்ந்து விட்டேன்.

பாடல்கள் எப்போதுமே இறைவன் வசம் நம்மை இட்டுச்செல்வன. கிறிஸ்தவம் பாடல்கள் மீதுதான் தன்னை நிறுவியுள்ளது. பாடல்களில் காணப்படும் இறைத்தன்மையே கிறிஸ்தவ பற்றாளர்களாலும் புரிந்துகொள்ளத்தகுந்ததாக காணப்படுகிறது. சி எஸ் ஐ, மெதடிஸ்ட் திருச்சபையில் பாமாலை கீர்த்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாது ஆராதனை நடை பெறுவது இல்லை.

எனது இறையியல் கல்லூரியின் நாட்களில் தான் நான் முதன் முதலாக பஜன் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. கிறிஸ்தவ பஜன்களை மாணவர்களே இயற்றி அவைகளை இசை கோர்ப்பு செய்து ஒலிநாடவாக வெளியிடுவார்கள். தினமும் காலை ஆராதனை பஜனுடனே ஆரம்பிக்கும். ஆர்மோனியம் மற்றும் தபேலா போன்ற இந்திய இசைக்கருவிகளை தரையில் அமர்ந்தபடி இசைக்க, ஒருவர் பாடுவதை நாங்கள்  வரிக்கு வரி தொடர்ந்து பாடுவோம்.

பல வருடங்களாக நான் இழந்த அந்த இனிமையான கீதங்களை எனக்கு மீட்டுக்கொடுக்கும் ஒரு நிகழ்வாக அந்த இரயில் பயணம் இருந்தது. திருச்சபையின் தாய்மார் கூட்டதில் காணப்படும் ஒரு சாந்தம், இறைவன் அருகில் வரும் உருக்கம் எல்லாம் நிறைந்த ஒன்றாக அது இருந்தது.குறிப்பாக பக்தி பெருக்கு என்பது கட்டறுந்து செல்லாத சமநிலையில் அது காணப்பட்டது.

நான் அமைதியாக ஒரு பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தேன். என்னைப்பார்த்து  புன்னகைத்தபடியே அவர்கள் பாட்டை தொடர்ந்து பாடினார்கள். பெரும்பாலான வார்த்தைகள் நான் கீர்த்தனை வழியாக அறிந்துகொண்டவை. திருச்சபையின் ஆதிக்காலத்தில் எவ்விதமாக இந்திய இறையியலின் கோட்பாடுகளை எளிமையாக உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாக இருந்தது. இன்றைக்கு திருச்சபையில் பஜன் பாடுவது அத்தனை எளிய காரியம் கிடையாது. பொதகரை மாற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

மிக நேர்த்தியாக கருப்பு சாரி அணிந்த ஒரு பாட்டி தனது நொட்டு புத்தகத்திலிருந்து பாடல்களை படிக்க தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக பாடிக்கொண்டு வந்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க எனது ஐம்புலன்களும் நான் திருச்சபையின் ஆராதனையில் கலந்துகோண்டிருப்பதாகவே எனக்கு உணர்த்தியது.

பாடல்கள் முடிந்தவுடன் ‘குருசாமி’ அனைவருக்கும் வாழைப்பழத்தை ப்ரசாதமாக வழங்கினார். நான் நழுவத்துவங்கினேன். என்னைப்பார்த்து புன்னகைத்த பாட்டி என்னை இருக்கும்படி வர்ப்புறுத்தி, தனது பழத்தில் சரிபாதியை எனக்கு கொடுத்தார்கள். வாங்கிக்கொள்ளலாமா என்கிற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அன்பின் நிமித்தமாக மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.

என்னைக் கவனித்த மற்ற பாட்டிகள் என்னோடு பேசினார்கள். நான் என்னை ஒரு போதகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன், அவர்களது பாடல்கள் இனிமையாக இருந்தன என்றேன். உற்சாகமடைந்த அவர்கள் என்னை ஒரு பாடல் பாட சொன்னார்கள். நான் எந்த கிறித்துவ பாடல்களைப்பாடினாலும் அந்த தருணத்திற்கு ஒவ்வாது என்பதால் எனது இறையியல் கல்லூரியில் பயின்ற ஒரு பஜனைப் பாடினேன். என்னைத்தொடர்ந்து அவர்கள் பாடினது இன்னும் அருமையாக இருந்தது.

என்னைபற்றி இன்னும் அதிக விபரங்களை கேட்டவர்கள் எனது மனைவி குழந்தை உண்டாகியிருக்கிறாள் என்றதும் என்னை சந்தோஷத்துடன் வாழ்த்தினது ஆராதனையின் நிறைவுப்பகுதிபோல் காணப்பட்டது. மதரீதியாக அவர்கள் தங்கள் குழுவை விட்டு நீங்கி இருப்பது சரியில்லை ஆதலால் அவர்கள் என் மனைவியைப் பார்க்க வரவில்லை அவ்வளவுதான்.

இறையியல் கல்லூரியில் பயிலும் பலவற்றை திருச்சபை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் நம்மை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் படைத்த மக்கள் வாழும் தேசத்தில் நாம் வாழ்வது இறைவன் கொடுத்த வரமல்லவா?

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

ஆநிரை கவர்தல்

பெப்ரவரி 16, 2009 by pastorgodson

அம்மா ஸ்தோத்திரம்

ஹி… தோத்திரம்

என்ன பண்ணுரீங்க

நான் சும்மாத்தான் இருக்கியன்

சந்தோசம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

சாரு சாய குடுச்சிதியளா இல்ல சருவத்து எடுக்கட்டா

கர்த்தருக்கு ஸ்தோத்திரம், குடுங்கம்மா, கர்த்தர் உங்களை ரொம்ப ஆசீர்வதித்திருக்கிறார். பிள்ளைகள் இருக்காங்கல்லியா?

ஓஞ்சாரே, பய பாலிடெக்கு படிச்சுதான், மவ பன்னெண்டு படிச்சுட்டு நிக்குதா. அவரு வெளிநாட்டுல கொத்தவேல செய்யுதாரு.

ஸ்தொத்திரம் ஸ்தொத்திரம். கர்த்தாவே இவர்களை ஆசீர்வதியும்.

சாரு செபிக்கணும். அவரு வரும்ப எனக்க மவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து நான் கெட்டிகுடுத்தா போரும். ஆண்டவருக்கு நான் செய்யவேண்டியத பாக்கியில்லாத செய்யுதேன்.

கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

நாம் முழங்கால்படியிட்டு கர்த்தருடய பாதத்தில் நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் அவருடைய பெரிதான கிருபையையும் இரக்கத்தையும் வேண்டி ஏரெடுப்போம்.

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஹல்லேலூயா…
ஸ்தோத்திரம்….குளோரி, குளோரி, குளோரி, குளோரி, ஹல்லேலூயா… தேங்க்யு ஜீஸஸ், ஓ… தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ், ஆமேன் இயேசுவே, வாரும் கர்த்தாவே…..

ஆவியானவரே வாருமப்பா….. ஓ பலபலபலபல ரிஷலபலபல …. கர்த்தர் இந்த குடும்பத்தைக் காக்கிரீர், ரீலாபல ரிச்சலபல பல…… சேனைகளின் தேவன் வல்லமையுள்ளவர்…….ரிகலா பலஷத் இச்சத பல பல…… ஆனாதி தேவனே எங்கள் அடைக்கலமானோரே…… ஸ்தோத்திரமப்பா….
குளோரி, குளோரி, குளோரி, ஹல்லேலூயா……கர்த்தாருடைய கரம் இறங்குவதை நான் காண்கின்றேன்! ஆவியானவருடைய பிரஸன்னாத்தை நான் காண்கிறேன், இந்த வீட்டைச்சுற்றி சுடரொளி பட்டையத்துடன் கூடிய தூதர்களைக் காண்கிறேன் ஹல்லேலூயா…ஹல்லேலூயா…
ஹல்லேலூயா…ஹல்லேலூயா… ஆமேன்…

அன்பின் தேவனே, பரலோக ராஜாவே, பூரண சர்குணரே பரிசுத்தரே உம்மை துதிக்கிரோம். பரிசுத்தரே பரம பிதாவே உம்மை மகிமைப்படுத்துகிரோம். அருமைய்யான இந்த குடும்பத்தை கர்த்தர் கண்ணோக்கிப்பார்த்து, ரிச்சல பல ஓஷால பல ரீஷா பலபல…… அருமையான ஒரு மணாமகனை தருகிறீர்….. ஆமேன்……ஹல்லேலூயா… தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ்…..

அருமைய்யன இந்த குடும்பத்தலைவியை உமது கரத்தில் கொடுக்கிறோம், கணவனைப் பிரிந்து வாழும் நேரத்தில் தூரத்துக்கும் சமீபத்துக்கும் ஆண்டவரான நீர் சகோதரியோடு இடைபடவேண்டுமாக கெஞ்சுகிரோம்…….ஆட்கொள்ளும் வழி நடத்தும்… பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைத்தாரும்……. காத்துக்கொள்ளும் ஆமேன்….ஆமேன்….ஆமேன்….

ஸிஸ்டர்…. கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்

சாரு ஜெபிச்சப்போ உள்ளதாட்டு நல்ல இருந்துது

சந்தோஷம்மா, ஆனாலும், உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே கர்த்தர் ஒரு மாறுதலை விரும்புகிறார்.

சாரு செல்லியது வெளங்கேல

அம்மா! நீங்க ‘ஆவிக்குரிய’ திருச்சபைக்கு தொடர்ந்து வரணும். கர்தருடைய அனுக்கிரகத்தை அப்போது பெற்றுக்கொள்வீர்கள்.

நாங்கொ கொவிலுக்கு எல்லா நாயிராச்சயும் பொவோமே. மவ அஞ்சதான் சண்டே ஸூல் பிள்ளியளுக்கு படுப்பிச்சு குடுக்குதா.

சங்கீதம் 1:2 என்ன சொல்லுகிறது என்றால், “இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”ப் அதாவது ஆவிக்குரிய சபையில கிடைக்கிற மன்னா பிற திருச்சபைகளில கிடைக்காது.

ரோணிக்கம் மாமியும் செல்லிச்சி, அவியளும் மாமனும் இப்போ அஞ்சோட்டில்லா வரினும். இஞ்ச கோயில் எலசன்ல மாமன் தோத்தது சாருக்கு அறியிலாமா?

“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியதைக் காணமாட்டான்” என்று யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனம் மிகவும் தெளிவாக சொல்லுகிறது….ஆகையினால தொடர்ந்து நம்ம உபவாச ஜெபத்துக்கு வாங்க கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

நம்ம வீட்டுல அவிய வந்த பின்ன கேட்டு செல்லுதேன்.

“கலப்பையில் கை வைத்தபின் பின்னிட்டு பாராதே” என்று கர்த்தர் சொல்லுகிறார், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 38 சொல்வதை வாசித்துப்பாருங்கள்.

இன்ச வீட்டில எல்லாரும் ஞாலஸ்னானம் எடுத்திருக்கியோம்.

“பிஸாசானவன் எவனை விழுங்கலாமென்று கெர்சிக்கிற சிங்கம் போல் அலைந்து திரிகிறான்” கிறிஸ்தவர்கள் மீதுதான் அவனது பார்வை இருக்கிறது. மாற்கு 1: 10 “அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே” என்று சொல்லுவது எதைக் காட்டுகின்றது?

முழுக்கி ஞானஸ்னானம் எடுக்கப்பிடாதுண்ண்னாக்கு நாட்டேரு செல்லுதாரு.

ஆண்டவரது சித்தத்துக்கு விரோதமாக நாம் செயல் படக்கூடாது. பார்வோன் தனது இருதயத்தை கடினப்படுத்தினதின் நிமித்தமாக தன்னுடைய தலைப்பிள்ளையை இழந்துபோனான்….. வாதை அவன் கூடாரத்தில் இருந்தது…. கர்த்தரின் இரக்கத்தை அவன் இழந்துபோனான்.

பேடியாயிருக்கு…. பெண்ணுக்கு மாப்பிள்ள பாக்கணும்…

பயப்படாதீங்க! ஜெபத்துல வைப்போம். நீங்க தசமபாகம் மட்டும் குடுங்க, நகை கேட்காத ஒரு நல்ல பையனா கர்த்தர் நமக்கு காண்பிப்பார். இன்றைக்கு முழுஇரவு ஜெபம் இருக்கு உங்க மகள கூட்டீட்டு வாங்க விசேஷித்த ஜெபத்தை ஏரெடுப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அம்மா…ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தை நான் இந்த வீட்டின் நிலைக்கால்களில் பூசுகிறேன்….

ஓ நானும் மோளுமாட்டு அஞ்சோட்டு வல்லாம்…

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

பன்றியிறைச்சி

பெப்ரவரி 18, 2009 by pastorgodson

கிறிஸ்தவர்கள் சதவிகிதத்தில் அதிகம் வாழும் மாவட்டமான குமரியிலே கிறிஸ்மஸ், ஈஸ்டர், புத்தாண்டு ஆகிய விஷேச நாட்களிலே பன்றி இறைச்சி கிறிஸ்தவர்களுக்காகவே தாராளமாக வெட்டப்படுகின்றது. திருமறையாம் விவிலியத்தை பின்பற்ற விரும்பும் நாம், பன்றி இறைச்சியை உண்பது கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு புறம்பானது என்று உறுதிபட நம்பினாலும், யகோவா அந்த காரியத்தை முன்னிறுத்துவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது அதிக பயனளிக்கும். 

ஆராய்ந்து பார்த்தால் நாம் உணவை அல்ல நம்பிக்கைகளையே முன்னிறுத்தப்படுவதைக் காண்கிறோம். நமக்கு கொடுக்கப்பட்ட புனித நூலை விட்டு நாம் பிறழ்ந்து விடலாகாது என்கிற அதிக கவனம் நமக்கு உண்டு. “ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் அழிந்துபோவது இல்லை” என உறுதி படக் கூறும் நாம், அன்றன்று உள்ள “ஆகாரத்தை” தாரும் என்பதை “அப்பத்தை” தாரும் என்பதாக சொல்லுகிறோம். சரி, தினமும் அப்பத்தை சாப்பிடுகிறோமா என்ற கேள்வி எழுப்பினால், சோறு தான் அப்பம் என்ற பதில் வருமே அன்றி, அப்பத்தை சாப்பிட பழகவோ, அப்பம் என்ற வார்த்தைக்குப் பதில் ஆகாரம் என்ற திருமறை வார்த்தையைக்கூட சொல்லத் துணியமாட்டோம். ஏனென்றால் நாம் பழகிய ஒன்றை நம்மால் மாற்றுவது கடினம். அது தவறாக இருந்தாலும், நாம் அதை குறித்து உணார்த்தப்பட்டாலும் அது நம்மை தனிப்பட்ட முறையில் உரசிவிடுகின்ற  ஒன்றாக  மாறிப்போய்விடுகிறதேயன்றி நம் மாற்றத்திற்கான காரணியாவதென்பதோ ஐயத்துக்குரிய ஒன்றுதான்.

மார்வின் ஹாரிஸ் என்ற மானுடவியலாளர் தனது “பசுக்கள் பன்றிகள் போர்கள் அற்றும் ஸூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தை பிந்தொடர்ந்து சென்று அதன் வேராழத்தை கண்டுகொள்கிறார். நான் பிறந்த வருடத்தில் எழுதப்பட்ட இந்த புஸ்தகத்தின் ஆழமான கருத்துகளை இத்தனை வருட காலத்தில் எந்த கிறிஸ்தவ போதகரும் திருச்சபையில் என்னறிவின்படி முன்வைக்காததால் நான் அந்தக் கருத்துக்களை முன்வைப்பதிலே  உள்ள அவசர கடமையை உணருகிறேன்.

எனது இறையியல் கல்லூரியில் “தலித் இறையியல்” கற்றுக்கொடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் கடவுள் எவ்விதம் துணை நிற்கிறார் என்பதையும், போதகர்களாகிய எங்களுக்கு திருச்சபையில் புரையோடியிருக்கும் சாதீய காழ்ப்புகளை வேறறுக்கும் ஒரு மகத்துவமான பயிற்சியாக அது அமைந்தது.

சத்தி கிளார்க், எங்கள் ஆசிரியர், மிகவும் திறம்பட அந்த வகுப்பை நடத்தினார்கள். எங்களுக்கென்று ஒரு சிறப்பு பயண வகுப்பையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். ஒரு தலித் கிராமத்தைக் கண்டு, அங்கு தங்கி, அந்த மக்களோடு வாழ்ந்த அனுபவம், புதிய புரிதலுக்கான வடிவம். என் வார்த்தைகள் எள் அளவேனும் அதை விவரிக்காது, எவரையும் திருப்திப்படுத்தாது என்பதையும் அறிவேன்.

லேவியராகமம் பதினொன்றாம் அதிகாரத்திலே கர்த்தர் மோசெயையும் ஆரோனையும் நோக்கி, எந்த விதமான மிருகஜீவன்களை புசிக்கலாம் எவைகளை புசிக்கலாகாது எனக்கூறுகிறார். கர்த்தர் இந்த வேறுபாடுகளை காண சில குறிப்புகளை கொடுத்தாலும், ஏன் புசிக்கலாகாது என்ற காரணத்தைக் கூறாமல், அது உங்களுக்கு “அசுத்தமாக இருக்கும்” என்பதாக மட்டுமே கூறுகிறார்.

இந்த பயிற்சியின் இறுதி வடிவமாக எங்கள் ஆசிரியர், என்களுக்கு உணவு படைத்தார். அதன் முக்கியத்துவமே மட்டிறைச்சி சாப்பிடுவது தான். எனது ஆசிரியர் என்னிடம் கேட்டார், காட்சன் வில் யூ ஈற் பீப்? அப்பொழுது தான், அதன் உட்கருத்தை நான் புரிந்து கொண்டேன் தலித், இஸ்லாமியர் அல்லாதவர் மாட்டிறச்சியை புசிப்பதல்ல என்ற பிம்பத்தை எனது ஆசிரியர் கொண்டிருக்கிறார் என்று. அதற்கான காரணங்கள் அவருக்கு இருக்கும், ஆனால், என் அனுபவமே வேறு.

சிறு வயது முதலே, நான் வேட்டைக்கறிகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன் (இப்பொழுது அல்ல) குமரி மாவட்டத்தின் தன்மை சற்று கேரள சாயல் கொண்டதால் எங்கள் உணவில் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளுவதிலே எவருக்கும் எந்த அசூசையும் இல்லை. நாகர்கோவிலில் முக்கிய மாட்டிறைச்சி வியாபாரி சேவியர் ஒரு கிறிஸ்தவர்தான். எனினும் நான்கு கிலோமீட்டர் தல்ல்ளியிருக்கும் பெருவிளையில் (என்னுடைய ஊர்) கிறிஸ்தவர்கள் வந்து ஒரு இஸ்லாமியரிடம் இறைச்சி வாங்கி செல்வார்கள். தரம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

எனக்கு சுமார் ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டினருகே ஒரு நபர் கூவிக்கொண்டெ சென்றார். பொதுவாக அந்த நாட்களிலே தின்பண்டங்களை அவ்விதமாக விற்பதால், நான் எனது அம்மாவிடம் அது என்ன என்று கேட்டேன். எனக்கு பன்றி என்றால் என்ன என்று தெரியாத மிஷன் காம்பவுண்டில் வளர்ந்த காலகட்டம் அது. அம்மா அது பன்றி இறைச்சி என்றும் நாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறினார்கள். இறைச்சி என்றவுடனே அதன் மீதான கவர்ச்சி கூடி, எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். எனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்மா அவனை அழைத்தார்கள். பனையோலையிலான பொதிகளை பார்க்கவே அழகாக இருந்தது, பிடித்துப்பார்த்தால் அந்தப் பொதிகள் மெத்து மெத்தென்று காற்றடத்த பலூன் போலவே இருந்தது. வாங்கி, சமத்து சாப்பிட்டுமாகிற்று, அம்மா அப்பா அதை தொடவில்லை.

இதன் பிற்பாடு நான் பன்றி இறச்சி சாப்பிட்டது எல்லாம், நண்பர்களுடைய வீட்டிலே தான். பலமுறை என்னை கேட்ட பின்பே எனக்கு அதை பறிமாறுவார்கள். ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

எனது அறிவின்படி, பன்றி அசுத்தமான மிருகம், அதன் உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வியாதியையும் குறிப்பிட்டு அதை நாம் உண்ணலாகாது என திருச்சபையிலே பிரச்ங்கித்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் கூறும் காரணங்களை கேட்டிருப்போம். இவை மூன்றையுமே மார்வின் ஹாரிஸ் ஆழமான புரிதலுடன் மறுக்கிறார்.

1. பன்றி சுத்தமற்றது
பன்றியின் சுத்தத்தை நாம் நன்கு அறிவோம். தெருவோரங்களிலும், சாக்கடைகளிலும், மலம் குவிந்து கிடக்கும் இடங்களிலும் அது தன் ஆகாரத்தை தேடுகிறது. அசுத்தமானதை தின்று வ்ளர்வதும் அசுத்தமாகத்தானே இருக்கும் என்பது நம் கணிப்பு. இந்த விதமான தருக்கத்தில் எழும் கேள்விகள் என்னவென்றால். ஒருவேளை சுத்தமானதை பன்றி தின்று வளர்ந்தால் நாம் அதை சுத்தமாக எண்ணி புசிக்கலாமா? அதைக் குறித்து கர்த்தர் ஏதும் கூறவில்லை.

காட்சியை சற்று மாற்றி பசுவையோ, ஒரு ஆட்டையோ நாம் எண்ணிப்பார்போமானால் என்ன நடக்கிறது. இவைகளை நாம் ஒரு தொழுவத்தில் வைத்து பராமரிக்கிறோம். தினமும் தொழுவத்தை சுத்தப்படுத்துகிறோம், தினமும் குளிப்பாட்டுகிறோம். இந்தக்காரியங்களை நாம் செய்யத்தவறினால், இவைகளும் பன்றிகள் போலவே அசுத்தமாக அலையும் என்பதை பட்டணங்களில் நாம் அன்றாடம் காண்கின்றோம்.

2.பன்றியின் உணவு
பன்றியின் உணவு என்பதே மலம் என்பதாக நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அப்படியான மிருகமல்ல அது. பன்றியின் வாழ்விடம் காடும் அதைசார்ந்த பகுதிகளும். அதன் முக்கிய உணவுகள் கிழங்குகளேயாகும். தானியங்களும், பழங்களையும் அது விரும்பி உண்ணும். பதனீர் என்றால் அதற்கு உயிர். ஆனால் இவைகளை கொடுத்தால் முதலுக்கே மோசம் என்பதால் நாம் இவைகளை கொடுக்காமல் அதை துப்புறவு பிறாணியாகவே காண்பித்து நமது தரப்பை உறுதி செய்கின்றோம்.

பசு மற்றும் ஆடுகளைப் பொறுத்தவரையில், இன்றைக்கு நாமே உணவுகளை அதனிடத்திற்கு எடுத்துச்செல்லுகிறோம். எந்த குறையும் இல்லாமல் அவைகளை பாதுகாத்துக் கொள்ளுகிறோம். மேலும் அவைகளுக்கான உணவின் விலையும், தேவையும் பன்றியோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவே.

3. வியாதி பரப்பும்
நன்றாக வேகாத பன்றி இறைச்சி, வியாதியை அளிக்கும் என்பது உண்மையே. குறிப்பாக டிரிச்சினொஸிஸ் எனும் வியாதி வருவதற்கான காரணங்கள் உண்டு. அப்படியெனில்  பன்றி இறைச்சி  சாப்பிடுவது தவறானது தான் என்று நாம் நினைகக்கூடும். 
நன்றாக வேகாத மாட்டு இறைச்சி மூலமாக நடப்புழுக்கள் வயிற்றில் தங்கி அபாய்மான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.  ஆட்டின் இறைச்சி கூட  புருசெல்லோஸிஸ் என்ற நோய் ஏற்படுத்தக்கூடியது தான். கூடவே பயங்கர ஆந்த்ராக்ஸ் என்ற நோய் இந்த மிருகங்களால் மட்டுமே ஏற்படும் பன்றியால் ஏற்படாது.
இந்தமுரண்பாடு தெரிந்ததும் நாம் இவைகளை சப்பிடாமல் இருக்கப்போகிறோமா என்ன?

மார்வின் ஹாரிஸ் இறுதியாக,. கர்த்தர்  எபிரேயர்கள் பன்றியை தொடக்கூடாது என்று சொல்லுவதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்த சுற்றுசூழலே காரணம் என்கிறார். பாலைவனதில் வாழும் மனித்ர்களுக்கு, பன்றி அவர்களது உணவுக்கு நேரிடையான எதிரி ஆகின்றது. கொட்டைகளையும், பழங்களையும் மற்றும் தானிய்ங்கலையும் அவை தின்றுவிட்டு, மாமிசம் மட்டுமெ பதிலாக கொடுக்கின்றன. மாடும் ஆட்டுமந்தைகளும், கம்பளி, தோல், பால் சார்ந்த பொருட்கள், எரு மற்றும் உழவுக்கும் பயன்படுகின்றன. சுவை மிகுந்த பன்றி இறைச்சியின் மீது அவர்களுக்கு ஆசை பிறந்துவிட்டால் அதன் மூலம் ஏற்படும் அபாயகரமான விலைவுகளை கடவுள் உணர்ந்திருந்தார்.  ஒருவகையில் காந்தியின் சிந்தனைப்படி, “எல்லாருடைய தேவைக்கும் போடுமானது பலஸ்தீனாவிலே உண்டு. ஆனால் பேராசைகளுக்கு கர்த்தர் இடமளிக்கவில்லை.

இறையியல் சாராத மார்வின் –காரிசின் கூற்றை நாம் எப்படி ஒரு அளவுகோலாக கருத்முடியும்? உண்மைதான், அவர் இறையியலாளர் அல்ல, எனினும், பிற வேத பகுதிகள் அவ்ர்கூறுவதை மெய்ப்பிக்கின்றன.

முதல்லவதாக, இயேசு சொன்ன இளைய குமாரன் உவமை. பஞ்சகாலத்திலே இளையமகன் ஒரு குடியானவனிடம் ஒட்டிக்கொள்ளுகிறான். அங்கே பன்றிக்கு கொடுக்கும் தவிட்டினால் தன் பசியை ஆற்றிக்கொள்ள விரும்பினான் என்பதாக காண்கிறோம். மனிதனுக்கு உணவற்ற நிலையிலும் பண்றியை போஷிக்கும் அளவுக்கு, மனிதர் சாபிடும் உணவை கொடுக்க சித்தமாய் இருந்த சூழலை காண்கிறோம்.

இரண்டாவதாக தெக்கொப்போலி பகுதியிலே இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனை குணமாக்குகின்றார். அவனில் இருந்து புறப்பட்ட ஆவிகள் பன்றி கூட்டத்திற்குள் சேல்ல அனுமதி கேட்கின்றன. இயேசு அனுமதித்தவுடனே அவை யாவும் பன்றி கூட்டத்தோடு சேர்ந்து அவைகளை செங்குத்தான மலையிலிருந்து கடலிலே விழப்பண்ணுகின்றன.

ஏவ்வளவு பெருத்த நஷ்டம்? மக்கள் அவரை அன்கிருந்து போகச் சொல்கின்றனர். ஆனால் இயேசு செய்த காரியங்களை கூர்ந்து கவனித்தொமானால் அவர் அந்த மனிதனை மாதிரமல்ல, அந்த ஊரையே குணமாக்கியிருக்கிறார். இரண்டாயிரம் பன்றி எந்தனை பேருடைய உணவிற்கு உலை வத்தன? அவ்வித ஆடம்பரத்தை விடுத்து அனைவருக்கும் உணவு கிடைப்பதையே இயேசு விரும்பினார். சுவைக்கு பழகிப்பொன நாக்குகளால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த மேசியாவை சுவக்கமுடியாமற் போயிறு.

குமரி மாவட்டத்தில் பன்ரியை சாப்பிடுவது சரியென்று கூறலாம? கூரலாம், இறைவன் நமக்கு கொடுத்த சுற்று சூழல் அப்படி. கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி வரும் பன்றி எதிரியாக இருக்கும்போது, அவர்கள் அதை வேட்டையாடி இழந்த உணவை சமன் செய்திருப்பர். மாத்திரமல்ல  பன்றியை வளர்க்க தெவையான தண்ணீர் மற்றும் உணவுபதார்தங்கள் இங்கே மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன. அதன் சுவை தொன்றுதொட்டு சுற்றுசூழல் உணவுபழக்கத்தில் ஊரிக்கிடக்கின்றது. ஈறைவன் அதை தவறாக எண்ணிக்கொள்ளமட்டார், அது சுற்று சூழல் சுழர்ச்சியை சமன் செய்யும் ஒன்றே.

 

காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு
palmyra_project @yahoo.com

இந்திய இடையன் இயேசு

பெப்ரவரி 28, 2009 by pastorgodson

சிறு வயது முதலே எனக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் என்று சொல்லுவதில் என்ன புதுமை இருக்க முடியும்? ஆனால் என் ஆர்வத்திற்கு இணையான பயிற்சி இல்லாமையினால் நான் அதிகமாக அந்த துறைக்குள் காலூன்ற  இயலவில்லை. படிப்பிலே சுமாரான ஒரு மாணவன் செய்ய வேண்டியது எல்லாம் தனது வீட்டுப்பாடங்களை சரிவரச் செய்வது தானே அன்றி கிறுக்கிக்கொண்டிருப்பது அல்ல.

சுமார் 12 வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படிப்பை முடித்தபோது எனக்கு கிடைத்த நேரங்களை நான் பனை ஓலையோடு செலவிட்டேன். என் வாழ்வில் என்னை நான் கண்டுகொண்ட தருணங்கள் அவை.

பனை ஓலையின் வடிவம், குருத்தோலையின் வாசம், பட்டை மடிக்கும் அழகு, என அவை என்னை கிறங்கடித்துக்கொண்டிருந்தன. நானும் ஒரு நாள் ஏதேனும் செய்யவெண்டும், அதுவும் பனை தொடர்புள்ள  காரியமாக அது இருக்க வேண்டும் என்பது என் உள்ள கலசத்திலே சொட்டும் பதனீராய் நிறைந்தது.

உந்துதலின் மிகுதியால் நான் கண்டுகொண்ட ஒரு படைப்பு வடிவமே “பனை ஓலை ஒவியங்கள்”. இதிலே எனக்குப் பெருமை உண்டு. அந்தப் பெருமை பனை மரத்தினை முழுமையாக உபயோகித்த என் முன்னோர்களுக்கும், பிற கலாச்சாரங்களுக்கும் நான் சமர்பிக்கிறேன்.

இந்திய இடையன் இயேசு

நான் உருவாக்கிய இந்தப் படைப்பு, இந்திய கிறிஸ்தவ ஓவியரான எ. டி. தாமஸ் அவர்களது பாதிப்பில் உருவானது. கிறிஸ்துவை இந்திய வடிவில் காணும்தோறும் ஏற்படும் அளவிலா மகிழ்வு என் இருதயத்தை நிறைப்பது மட்டுமல்ல, உங்களையும் அவை மகிழ்விக்கட்டும்.

காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு
palmyra_project@yahoo.com 

09870765181

 

 

உப்பு

ஏப்ரல் 1, 2009 by pastorgodson

மீரா ரோடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி படிகளில் ஏறும்போது காணும் உப்பளம் ஒரு சிறந்த விவிலிய கொட்பாட்டை நினைவுபடுத்தியபடியே இருக்கும். பாத்திகளில் விளையும் உப்பும், சேர்த்து பனிமலைப்போல் குவித்துவைத்திருக்கும் உப்பும் அங்கு வாழும்/ வேலைசெய்யும் மக்களும் நாம் கவனிக்கத்தக்கவர்கள் எனும் எண்ணம் உமிக்கரியில் சேர்த்த உப்பைபோல என் சிந்தனைகளை துலக்கிக்கோண்டிருந்தது. ஓரு நாளாவது திருச்சபை வாலிபர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களது வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளச்செய்வது என்னும் பாரம் என்முதுகில் ஏறிய உப்புமூட்டையாகவே இருந்தது.

கிரேக்க இதிகாசமான இலியட்டை எழுதிய ஹோமர் உப்பு “தெய்வீகமானது” என்றும், தத்துவ ஞானியான பிளேட்டோ “கடவுளுக்கு பிரியமானது” என்றும் கூறுவதை நாம் புறந்தள்ள இயலாது. திருவிவிலியத்தில் கூட, இறைவனுக்கு அளிக்கும் உணவுப்படையலில்(லேவியர் 2:13), எரிபலியில் (எசேக்கியேல் 43:24), நறுமண தூபத்தில் (விடுதலைப் பயணம் 30:35) கோவில் குருக்களுக்கு தேவையான உப்பை மக்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் (எஸ்ரா 6:9) எனவும் அறுதியிட்டுக் கூறவில்லையா? நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் (மத் 5:13அ, பொ. மொழி) எனும் திருவிவிலிய வாக்கியம், வாழ்வில் அனேகம் தரம் நாம் கடந்து வந்தது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. திருச்சபையின் தாய்மார்களுக்கு மிகவும் பரிச்சியமான இந்த வாக்கியம் அதன் தொடர்ச்சியான கருத்துக்களோடு புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா எனும் கேள்வி எழும்பினால் நமது பதில் திருப்தி அளிக்கக்கூடியதாய் அமையுமா என்றால் சந்தேகமே.

உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. ஒரு நீண்ட பயணத்தை அது கடலிலிருந்து பூமினோக்கி பின்னோக்கி வருவதே ஒரு ஆன்மீக வாழ்வின் முதற்படியாக இருப்பதைக் காண்கிறோம். பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துசெல்லப்பட்டு கடலிலே உப்புதன்மையை நிறைப்பதை அறிந்த நமக்கு, ஆன்மீக வாழ்விலும் இறைவனிடைருந்து வந்த நாம் பாவ உலகில் இருந்து மீண்டு, மீண்டுமாக நமது தூய உருவை பெற்றுக்கொள்ளும் நிகழ்வே நமது ஆன்மீக வாழ்வு. இதற்கு உதவி புரிபவர்களே உப்பள பணியாளர்கள் எனும் போதகர்கள்.

அலைபாய்ந்துகொண்டிருந்த நம்மை முறைப்படுத்தி, வழிநடத்தி முழுமைபடுத்தும் வரைக்கும் நாம் நம்மை முழுவதுமாக இந்த தவத்திற்கு ஒப்புக்கொடுக்காவிட்டால், நமது முழுமை என்பது கேள்விக்குறியாகிவிடும். அலை அடித்து எழும்பும் நம்மை சாந்தப்படுத்தும் பாத்திகளுக்குள் கட்டுப்படுத்துவது, அமைதியும் கட்டுப்பாடுகளும் கடும் அக்கினியென காயும் வெயில் போன்றவற்றை உள்ளடக்கிய மாபெரும் தவம் இது. இந்த தவம் நம்மை முழுவதுமாக மாற்றுவது. அதற்காக நமது பொறுமையை வேண்டுவது.

உப்பின் தவத்திற்கு கிடைத்த பெருமை தான் என்ன? உப்பு எப்போது முழுமை அடைகின்றதோ அப்போதே அது தன்னை இழக்க தயாராகின்றது. அது பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.”அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன்” என்ற சொல்லாடல் ஒருவர் தான் பெற்ற நன்மையை நினைவுகூறும் வார்த்தைகளன்றி வேறென்ன?

 திருவிவிலிய வாக்கியம் இன்னும் முழுமை பெற்றுவிடவில்லை. “உப்பு உவர்ப்பற்று போனால் எதைக்கொண்டு அதை உவர்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது” (மத் 5:13 ஆ, பொ. மொழி)

 உலகம் முழுவதும் பலநிறங்களில் உப்பு காணக்கிடைப்பது மனிதனை ஒத்த அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது மாத்திரம் அல்ல இயேசுவின் கூரிய அவதானிப்பும் தான். சிவந்த நிறமுள்ள உப்பாகட்டும், கரிய நிற உப்பாகட்டும் இல்லை நாம் உபயோகிக்கும் வெண்மையான உப்பகட்டும், தனது சுவை கொடுக்கும் தன்மையை இழந்துபோனால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்று இயேசு தனது தெளிந்த அறிவுரையை மானிடர்களுக்கு இந்த வாக்கியத்தின் மூலமாகக் வழங்குகிறார்.

மனித உடல் உப்பின்றி வாழ இயலாது; அவ்வாறே மிருகங்களும். யானை மண்ணைத்தோண்டி உப்பை உண்பதும், நாம் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும்போது உப்பிட்டுகொடுப்பதும் நாமறிந்தது. மூணாரில் உள்ள ராஜமலையில் காணப்படும் வரையடுகள் மனிதர்களோடு பழகும் விதத்தை நான் கண்டு அதிசயித்த போது, எனது நண்பரும் இயற்கை ஆர்வலருமான முனைவர் கிறிஸ்டோபர் கூறினது ” அது உப்பு கொடுத்து பழக்கப்படுத்தப்பட்ட தலைமுறை, மனிதர்கள் அருகில் வராத வரையாடுகளும் உண்டு”.

உப்பின் குணமின்றி வாழ்தல் என்பது ஒரு செத்துப்போன வாழ்வாகவே இயேசு கருதுகிறார். நாம் நம்மை பிறருக்கென்று அற்பணிக்க தவறினோமென்றால், அந்த வாழ்வு நம்மை நாமே இறைவனுக்கு அற்பணிக்காத சுவையற்ற வாழ்வாகும்.

உப்பை சம்பளமாக ரோம போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருக்கும்போது: எதிராளிமீது போர்தொடுக்கும் காலம், உப்பு வரத்தை தடை செய்வது போன்ற நிகழ்வுகள் உப்பை இயேசு நாதர் மனிதனுடன் ஒப்பிடுவதில் உள்ள உயரிய நோக்கத்தை அறியலாம்.

என் சிறுவயதில் கடைகளுக்கு முன்பதாக ஆதரவற்று இருக்கு ஒரே பொருள் உப்பு சாக்குதான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருந்தது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதுதான் இல்லையா?

 சரிதான், மனிதன் விலையேறப்பெற்றவன்; எனினும் எளிமையானவன், அவன் அன்பை கண்ணீராலும், கடமையை வியர்வையாலும், தியாகத்தை இரத்தத்தாலும் – உப்பின் சுவையுடன் அளிப்பதால் மனிதன் மண்ணுலகிற்கு உப்பயிருக்கிறான்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyrah_project@yahoo.com

09870765181 (மும்பை)