பனைமுறைக் காலம் 17

ஏப்ரல் 10, 2021

பனைபொருள் பலவிதம்

பால்மா ஜேக்கப் அவர்கள், என்னோடு பயணம் செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். நான் அதனை முதன் முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், எனது பயணங்கள் என் போக்கில் நிகழ்பவை, எங்கும் ஒட்டிக்கொள்ளுவேன். ஆனால் ஜேக்கப் ஒரு அலுவலகத்தை நிர்வகிப்பவர், என்னோடு அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று எண்ணினேன். ஆகவே, என்னை உற்சாகப்படுத்தும்படியாக சொல்லியிருக்கலாம் என்பதால், அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மீண்டும் மீண்டும் பயணம் குறித்து வலியுறுத்தும்போது, அவர் விளையாட்டாக பேசவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.  ஒரு மூன்று நாள் பயணம் அப்படித்தான் ஒழுங்கானது. அவர்களது வாகனத்தில் பயணிக்கலாம் என்றும், பயண செலவுகளை அவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்கள் என்றும் சொன்னார். அது எனக்கு வரம். எனது பயணத்தின் ஆழத்தை அவர்கள் அதிமுக்கியமானதாக கருதியிருந்தால் ஒழிய, அவர்கள் இப்படியான ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பார்களா? இருக்கமுடியாது என்று எண்ணியபோது, அவர்களின் அழைப்பிற்கு நான் தலைவணங்கினேன்.

அக்டோபர் 20 வாழ்வின் மற்றுமொரு முக்கிய நாள். ஜேக்கப் அவர்களுடன் நாங்கள் திட்டமிட்டபடி மூன்று நாள் பயணத்தை தேவிகோடு என்ற பகுதியிலிருந்து துவங்கினோம். காலை 6. 30 மணிக்கு வண்டி நாங்கள் தங்கியிருந்த ஜாஸ்மினுடைய தம்பி ஜெகன் வீட்டிற்கு முன்னால் வந்து சேர்ந்தது. நான் ஏறிக்கொண்டேன். வண்டி ஓட்ட ஜெனிஷ் (24) துணைக்கு விபின் (24) ஆகிய இருவரும் உடன் வந்தார்கள். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை, முழுமையாக எனது பயண திட்டத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து வந்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றால், நானும் எந்தவிதமான திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி வழியாக நாகர்கோவில் வந்து மூன்று நாளில் பயணத்தை முடிக்கும் ஒரு கற்பனை வரைவு இருந்தது. ஆகவே செல்லும் வழியில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொண்டு எனது வருகையினை அறிவித்துவிட்டேன்.

ஓலை பெட்டிகள் , பாய்கள் மற்றும் வாழை நார் விற்பனை செய்யும் கடை, தோவாளை பூ சந்தை

தோவாளையைக் கடக்கும்போது, வண்டியை நிறுத்தச் சொன்னேன். தோவாளை பூ சந்தை உண்மையிலேயே உலக பிரசித்தி பெற்றது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக உலகின் பல நாடுகளுக்கு பூக்கள் சென்று சேரும். அதிகாலை பூக்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பால் அவசரம் வண்டியை விட வேகமாக செல்பவை. அவைகளில் எடுத்துச் செல்லப்படும் பூக்கள், பனை ஓலைக் கூடைகளிலும், பனை ஓலைப் பாயினை மடித்து செய்யும் கூடைகளிலுமே அனுப்புவார்கள். பனை ஓலை இயற்கைப் பொருளானதால், பூக்கள் சேதமடைவதில்லை. காலையில் வாங்கிய பூக்கள், பனை ஓலை கூடைக்குள் மாலை வரை எவ்வித வெம்மைக்கும் ஆளாகாமல் பளிச்சென்று இருக்கும். ஆகவே, அவர்கள் பூக்களை எப்படி கையாளுகிறார்கள் என பார்க்கச் சென்றோம்.

ஓலை பெட்டிகள் மற்றும் பாய்கள் இருந்க்டாலும் பிளாஸ்டிக் பெட்டிகளல் நிறைந்திருக்கும் தோவாளை பூ சந்தை

2017ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலாக தோவாளை பூ சந்தையைக் காணச் சென்றேன்.  ரங்கிஷ் என்னுடன் இருந்தான். ஒரு ஆவணப்படம், எடுக்கும் நோக்குடன் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். நாகர்கோவிலில், திருமணங்களுக்காகவோ அல்லது மரணசடங்குகளுக்காகவோ பூக்களை வாங்கும்போது ஓலை பெட்டியில் வைத்தே கொடுப்பார்கள். அந்த பெட்டிக்கு விலை இருக்காது. அதன் பின்னல்களும் உறுதியாக இருக்காது. இடைவெளியிட்டு, ஒற்றை பின்னல்கள் கொண்டதும், கால் முட்டளவு உயரம் கொண்டதாகவும் இருக்கும். கருப்பட்டி கொட்டானைப் போலவும் புளி கொட்டானைப்போலவும் அகலம் குறைவாகவும் பின்னப்பட்டிருக்கும் இப்பெட்டிகள் உயரம் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆகவே, பூச்சந்தையின் முக்கிய பயன்பாட்டு பொருளாக பனை ஓலை பொருட்கள் இருக்கும் என்றே சென்றோம்.

பூக்கள் பனை ஓலைப் பாய்களில் விரித்திடப்பட்டிருந்தன, பனை ஓலையில் செய்த பாய்களை சுருட்டி, அவைகளை ஒரு உருளைப் பெட்டி போல் மாற்றி பூக்களை எடுத்துச் செல்வதை பார்த்தோம். அனைத்து டெம்போக்களிலும், பனை ஓலைப் பாய்கள், பெட்டிகள் அதிகமாக இருப்பதைப் பார்த்தோம். ஆனால், பிளாஸ்டிக்கின் வரவு பெருமளவு துவங்கியிருந்தது தான் உண்மை.

உள்ளே பிளாஸ்டிக் பையில் பூ, வெளியே பனை ஓலைப் பெட்டி. தோவாளை

இம்முறைச் செல்லும்போது, பனை ஓலைகளை தேடிக்கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பிளாஸ்டிக் மயமாக அந்த இடம் காட்சியளித்தது.  பனையோலைக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று கைவிரித்து நிற்கின்ற தோவாளையை பார்க்கும்போது உறைந்துபோனேன். நான்கே வருடங்களில் தலைகீழ் மாற்றம். பூக்களை நம்பியே வாழும் குடும்பங்கள், பனை ஓலைகளை நம்பி வாழ்பவர்களை கைவிட்டிருப்பது தெரியவருகிறது. ஆனாலும் மரபின் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் பனை ஓலைப் பாயும் பாஉக்கள் எடுத்துச் செல்லும் பெட்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.  சோர்வுடன் தான் வெளியேறினோம்.

இதே சூழல் தான் கடற்கரையிலும் நிகழ்த்தது. பிளாஸ்டிக் பெட்டிகள், பனை ஓலைப்பெட்டிகளை அகற்றியது. நவீனம், தனது கோர முகத்துடன் உள்நுழைவதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறோம். இறுதியில் மிகப்பெரும் அழிவுகளை இணைந்து செய்ய நம்மையே முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். இன்று தோவாளையைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றன. குமரி மாவட்டத்தின் மிகப்பெரும் பனங்காடு, தோவாளை அருகிலிருக்கும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தான் இருக்கின்றன. ஆனால், ஓலைகளை எடுத்துக்கொடுக்கும் பனையேறிகள் இல்லை. ஆகவே பனை ஓலைக் கலைஞர்கள் அருகிவிட்டார்கள். இன்று தோவாளைக்கு வருகின்ற ஓலைப்பொருட்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்தே வருகிறது. இனிமேல் அதற்கும் தேவை இருக்காது போலும்.

காலை உணவை அங்கே சாப்பிடலாமா என்று எண்ணியபின், வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து சென்றோம். சிவகாமிபுரத்தின் அருகில் வண்டி சென்றபோது, பனையேறி வெட்டும்பெருமாள் அவர்களின் நினைவு வந்தது. இங்கும் ஆவணப்படத்திற்காக நானும் ரங்கிஷும் வந்திருக்கிறோம். அக்டோபர் மாதம் ஆனபடியால், பனை ஏறத்துவங்கியிருப்பார்கள் என்ற உறுதியிருந்தது. உள்ளே கிராமத்திற்குள் சென்றபோது பனை நாரினை சைக்கிளில் கட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அவரை சந்தித்து, அவருடைய எண்ணை வாங்கி உடனேயே ஜாய்சனுக்கு அனுப்பினேன். கட்டில் நார் பின்னுகிற அவருக்கு அது தேவையாக இருக்கும் என எண்ணினேன். எங்களிடமிருந்த பனை விதை பெட்டியினை அவருக்கு கொடுத்தோம்.

நார் விற்பவருக்கு பனை விதைப் பெட்டி, சிவகாமிபுரம்

அந்த தெருவில் தான் வெட்டும் பெருமாள் அவர்கள் வீடு. ஜேக்கப் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றேன். வெட்டும் பெருமாள் அண்ணனின் மனைவிக்கு என்னை நினைவிருந்தது. அங்கும் ஒரு பனை விதை பெட்டியினைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள விபரங்களை சேகரித்தோம். கருப்பட்டி காய்ச்சத் துவங்கியிருப்பதாக கூறினார்கள். மொத்தமாக எடுத்தால் கிலோவிற்கு 350 வைத்து கொடுப்பதாக சொன்னார்கள். பதனீர் வேண்டுமென்றால், காட்டிற்குள் செல்ல வேண்டும் என்பதையும் சொன்னார்கள்.

பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் முட்டிகள் (கலயம்), சிவகாமிபுரம்

அவர்கள் குறிப்பிட்டிருக்கும் காடு மேற்குதொடர்ச்சி மலையின் கீழே, இருந்தது. அங்கே பனங்காடுகள், நிறைந்திருக்கும். ஆனால் அந்த பகுதிகளுக்கும் அருகில் காற்றாலைகள் வந்துவிட்டன. காற்றாலைகள், மக்களை சிறிது சிறிதாக அங்குள்ள பாரம்பரிய தொழில்களிலிருந்து அப்புறப்படுத்துகின்றன. காற்றாலைக்காக வாங்கும் நிலங்களிலிருந்து கிடைக்கும் பணம், பனை குறித்து எவரையும் சிந்திக்க விடுவதில்லை.

புத்துணர்ச்சி அளிக்கும் பதனீர்

இதற்குமேல் வண்டி செல்லாது என்று தோன்றிய ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, நடக்கத்துவங்கினோம். காட்டிற்குள் நாங்கள் வழிதப்பிவிடும் அளவிற்கு பாதைகள் பிரிந்து செல்வதும், அடர்ந்தும் காணப்பட்டது. வெட்டும் பெருமாள் அண்ணன் பனையேறிக்கொண்டு வீட்டிற்கு தனது டி வி எஸ் 50ல் வந்துகொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நிறுத்தி நலம் விசாரித்து எங்களுக்கு பாதை காட்டிவிட்டு சென்றார்கள். அவர் கூறிய பாதை வழியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்திருக்கிறேன். ஆனால், இன்று சரியாக நினைவில்லை. தடுமாறிக்கொண்டே சென்றோம். நாங்கள் சென்று சேர்ந்த தோட்டத்தில் பதனீர் கலயங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கைவிடப்பட்ட வீடு இருந்தது. அங்கே வந்த சில வாலிபர்கள் தொடர்ந்து சென்றால் விடிலி வரும் என்றார்கள்.

கடலை பயிரிடப்பட்டிருக்கும் பனங்காடு, சிவகாமிபுரம்

தொடர்ந்து சென்றுகொண்டிருந்தோம். வெம்மை ஏறுகின்ற நேரம். அங்கே சென்றபோது, நாங்கள் தேடிச்சென்ற விடிலியில் ஒரு பாட்டி இருந்தார்கள். பதனீர் வேண்டும் என்றோம், கிழக்காக போங்கள் என்றார். தூரத்தில், தெரிந்த விடிலி நோக்கிச் சென்றோம். அந்த வயக்காடு முழுவதும் கடலை பயிரிட்டிருந்தார்கள். பச்சைப்பசேலென கடலை செடியும், உயர்ந்தெழுந்த பனைகளும் சூழ அந்த இடம் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்தது. வேர்கடலையை மிதிக்காமல் கவனமாக கால்களைத் தூக்கிச் சென்றோம். ஒரு வழியாக அரைமணி நேரத்திற்கு பின்பு அந்த இடத்தை அடைந்தோம். 9 மணி ஆகிவிட்டிருந்தது

ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர் பதனீரை பட்டையில் ஊற்றி சுவைத்து குடிக்கின்றனர்

ஒரு விடிலியில் பெண்மணி ஒருவர் மட்டும் இருந்தார். சற்று தொலைவில் அவரது கணவர் பனையேறிக்கொண்டிருந்தார். பதனீர் வேண்டும் என்றவுடன், கருப்பட்டி காய்ச்ச ஆயத்தமான பெண்மணி, நிறுத்திவிட்டு அவரது கணவரைப் பார்த்தார். அவர், அங்கிருந்த ஒரு கலயத்தை எடுத்து அகப்பையில் பதனீரைக் கோரி ஊற்றி, பனையோலைப் பட்டையினை எடுத்து மடித்துக் கொடுத்தார்.  பவ்வியமாக இருகரத்தில் பிடித்து கலயத்திலிருந்து அவர் ஊற்றிய பதனீரை வாங்கி பருகினோம். வயிறு முட்ட குடித்தோம். நாங்கள் போதும் என்றபோது, அவர்கள் நெருப்பிட்டு கருப்பட்டி காய்ச்ச துவங்கினார்கள். அன்றைய காலை உணவு அதுவாகத்தானிருந்தது. இனிப்பான அந்த காலை உணவு அந்த நாள் முழுக்க எங்களுக்கான ஆசியினை உள்ளடக்கியிருந்தது.

காய்ச்ச தயாரான பதனீரை எங்களுக்கென எடுத்துக் கொடுக்கிறார் பனையேறி, சிவகாமிபுரம்

பணக்குடியினைத் நெருங்கும்போது பனை முறம் செய்யும் ராமகிருஷ்ணன் அவர்களை பார்க்கச் சென்றோம். அவர் வீடு மாறியிருந்தார். முன்பு தங்கியிருந்ததற்கும் அருகிலேயே வாடகைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.  அலைபேசியில் அவரை அழைத்தபோது சாலைக்கு வந்து எங்களுக்கு வழி காட்டினார். அழகான பாரம்பரிய வீடு அது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளவர்கள் முறத்தினை சுளவு என்பார்கள். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முறம் பனை நம்முடன் பயணிக்கும் ஒரு மரம் என்பதற்கான வலுவான சான்று. முறத்தினை மூங்கிலிலும் செய்வார்கள். முதலில் தோன்றியது மூங்கில் முறமா? அல்லது பனை முறமா என்கிற கேள்விகள் இன்று எஞ்சியிருந்தாலும், இவைகள் ஒரே காலகட்டத்து கண்டுபிடிப்புகள் என்றே நான் கருதுகிறேன். அந்தத்த நிலப்பரப்பில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர் என்பது ஏற்புடைய வாதம் என்றே நான் கருதுகிறேன்.

முறம் செய்ய பனையோலை ஈர்க்கு கொண்டு அமைக்கப்பட்ட தட்டு

முறம் செய்கின்ற சமூகம் பெரும்பாலும் தலித் சமூகத்தினராக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பாவூர்சத்திரம் அருகிலுள்ள அர்னாபேரி என்ற ஊரில் நாடார்கள் முறம் பின்னுவதைப் பார்த்தேன். பொதுவாகவே, பழங்குடியினரும் தலித் மக்களும் செய்கின்ற பனை சார்ந்த பொருட்களும் அவைகளின் வடிவங்களும், பின்னல்களும், அவைகளை வெகு பழங்காலத்தை சார்ந்தவைகளாக பறைசாற்றிக்கொண்டிருக்கும். ராமகிருஷ்ணன் மிக நேர்த்தியாக முறங்களைச் செய்பவர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக முறம் செய்வதை மட்டுமே தனது வாழ்வின் ஆதாரமாக வைத்திருக்கிறார். தெற்கு வள்ளியூரில் இன்றும் அவரது உறவினர்கள் சிலர் முறம் பின்னுவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பணக்குடியில் தங்கி தனது தொழில் வாய்ப்பினை ராமகிருஷ்ணன் முன்னெடுக்கிறார். கள்ளர் மற்றும் தேவர் சமூகத்தினரின் ஒரு பிரிவான பட்டங்கட்டியார் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தேவர் சமூகத்தில் பனை ஓலைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே புது தகவல் தான். அவரது செய் நேர்த்தி, உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடையது. ஜேக்கப் அவரிடமிருந்து சில முறங்களை வாங்கிக்கொண்டார். அவரது எண்ணையும் எடுத்துக்கொண்டார்.

இராமகிருஷ்ணன், அவர் செய்த அழகிய முறத்துடன்.

மும்பையில் பொது முடக்கத்தின்போது நான் கலந்துகொண்ட ஒரே திருமணம் லெனினுடையது. மொத்தமே இருபது நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்விற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். முதல் முடக்கம் உச்சத்திலிருந்தபோது, களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுள் அவனும் ஒருவன். எஙள் திருச்சபைக்கும் சில பொருட்களை எடுட்து வந்தான். பொது முடக்கம் சற்று தளர்ந்தபோது சொந்த ஊரான நாங்குநேரிக்கு குடிபெயர்ந்தார். அவரது தந்தையும் தாயும் என்மீது அன்புகொண்டவர்கள். ஆகவே, நான் அவர்களைப் பார்த்து, ஒரு இறை மன்றாட்டை ஏறெடுத்துச் செல்ல திட்டமிட்டேன். ஜேக்கப் போகலாம் என்றார்கள். கிராமத்தில் இருந்த அவர்கள் வீட்டை நாங்கள் கண்டுபிடித்து சென்றபோது லெனினுடைய தாயார் மட்டும் இருந்தார்கள். நான் அங்கு சென்றது அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது. பழங்கள் கொடுத்தார்கள். அப்போதுதான் பதனீர் குடித்திருந்தபடியால், எதுவும் சாப்பிடவில்லை. ஜெபித்துவிட்டு புறப்பட்டோம். 

எங்கள் பயணம் தொடர்ந்தது. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். காலை பதினோரு மணி போல அவர் இருந்த செய்துங்கநல்லூர் என்ற ஊருக்குச் சென்றோம். ஆச்சரியமாக, அவருடன் நான் ஏற்கனவே சந்தித்திருந்த கருங்குளம் பால்பாண்டி அவர்களும் இருந்தார்கள். எனக்கு சால்வை அணிவித்து முத்தாலக்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சனல்லூர் குறித்த புத்தகத்தை பரிசாக கொடுத்தார்கள். எனக்கு உண்மையிலேயே தலை கால் புரியவில்லை. “மும்பையிலிருந்து காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால் அது பெரிய விஷயம் இல்லையா” என்றார். அவர் பூடகமாக எதையோ சொல்ல வருகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மிகச்சரியாக என்னவென்பதை கணிக்க முடியவிலை. சரி பொறுத்திருப்போம் பின்னர் பேசலாம் என நினைத்துக்கொண்டேன். எங்களுக்கு தேனீர் மற்றும் வடை போன்றவைகளை வாங்கி கொடுத்து உபசரித்தார்.

எரித்துபோன இடத்தில் உயிர்ப்புடன் எழுந்துநிற்கும் பனை, ஆதிச்சநல்லூர்

நாங்கள் ஆதிச்சநல்லூர் சென்றபோது, அங்கே இரண்டு காவலர்கள் இருந்தனர். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். அங்கே ஒரு பத்திரிகையாளர் வருகிறார் என அவர் சொன்னதால் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் எனது நண்பரும் பத்திரிகையாளருமான காட்சன் வைஸ்லியும் இணைந்து கொண்டார். நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்த பகுதியினை சுற்றிப்பார்க்க சென்றோம். சாலையிலிருந்து ஒரு மேடேறியது. அங்கு மண் வெள்ளைக்கற்களும் செம்மண்ணுமாக பற்றி இறுகியிருந்தது, தாவரங்களின் வளர்ச்சி ஏதும் இல்லை. முதுமக்கள் தாழி போன்றவை பார்க்கலாம் என்று போன எனக்கு, அவர்கள் இரண்டு குழிகளை மட்டுமே காண்பித்தார்கள். இரண்டும் அடுத்தடுத்து இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி ஒரு அகழ்வாய்வு நடந்த இடத்தில் நிற்கிறேன். மிக சீராக வெட்டியெடுக்கப்பட்ட சதுரக் குழிகள். ஐந்து அல்லது ஆறு அடி தாழ்ச்சி இருக்கலாம். வெட்டியெடுத்த பகுதிகளிலும் சில பானை ஓடுகள் எஞ்சி இருந்தன. ஆனால் பெரிதாக ஏதும் பார்ப்பதற்கு இல்லை.

அப்போது முதலில் எந்த குழியினை வெட்டினார்கள், அவர் எவ்விதமாக இந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் போன்றவற்றை சொல்லியபடி வந்தார். மேட்டில் வேறொரு பெரிய குழி இருந்தது அங்கே ஒரு பானையினை எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாள் இவை அனைத்தையும் மண் கொண்டு மூடவிருப்பதாக முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் கூறினார்கள். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே நான் எண்ணினேன். அந்த மேட்டுப்பகுதியில் நான் ஏறி வந்தபோது அவர் காண்பித்தது தான் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருந்தது. அங்கே ஒரு குழி, வெண்மையால் நிறைந்து இருந்தது, மற்ற குழிகள் போல காணப்படவில்லை. அது ஒரு சுண்ணாம்பு காளவாய் போல இருந்தது. எனது மனதிற்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடத்துவங்கியது.

முத்தாலக்குறிச்சி காமராசு ஒரு போராளி. சுமார் 25 வருடங்களாக இப்பகுதி குறித்த ஆய்வுகளில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொண்டவர். கீழடி குறித்த பேச்சுக்கள் மேலெழுந்தபோது ஆதிச்சநல்லூர், முக்கியத்துவம் பெறாமல் இருந்தது கண்டு போராடியவர் இவர். 130 ஆண்டுகளாக அவ்வப்போது திறந்து மூடப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், இங்கே தமிழர்களது நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஒரு அரும்பெரும் சுரங்கம் என்பதை கண்ணுற்றதால், அதனை தனது வாழ்நாள் பணியாக எடுத்து பொதுவெளியில் பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். தென் மாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஜாதியம் தலை தூக்கி இருக்கையில், இங்கே கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், எந்த சாதியினரைக் குறிப்பதாக இருக்கிறது என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதால், ஆய்வாளர்களே சற்று நிதானமாகத்தான் களமாடுகிறார்கள். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலத்தில் இன்றுபோல் சாதிய அமைப்பு இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர். அவ்வகையில், தமிழக அரசு தற்போது அவருக்கு வழங்கிய விருது என்பது, அவரது போராட்ட குணத்திற்கும், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அவர் காட்டிய தன் முனைப்பிற்கும் அச்சாரமானது.  

முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களிடம் அந்த சுண்ணாம்பு காளவாய் குறித்து பேச்செடுத்தேன். அப்போது அவர் அது ஒரு உலையாக இருக்கக்கூடும் என்றார். இரும்பு உருக்க பயன்பட்ட இடமாக இருக்கலாம், அல்லது, பானைகள் சுட்டெடுக்க பயன்பட்டிருக்கலாம், ஏன் சுண்ணாம்பு காளவாயாகவும் இருக்கலாம் என்றார். பானைகள் சுட்டெடுப்பதற்கான காரணம் இருக்கிறது. எங்கும் பானைகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, பானைகள் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும் சூழலில் இந்த இடம், சூளையாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆதிச்சநல்லூர் சுமார் 3800 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.  இந்த நிலத்தை 1876ஆம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி ஆட்சியாளரும், மாவட்ட பொறியியலாளரும், மற்றும் முனைவர். ஜாகர் (Dr. Jagor) ஆகிய மூவரும் இணைந்து தோண்டத் துவங்கினர். பல பானையோடுகளும், இரும்பாலான ஆயுதங்களும், கருவிகளும் கண்டடையப்பட்டன. அலெக்சாண்டர் ரே (Alexander Rey) என்ற ஆய்வாளரும் 1889 – 1905 வரை இப்பகுதிகளில் தனது தேடுதல்களை நிகழ்த்தி, ஜாகர் அவர்கள் கண்டுபிடித்ததை ஒத்த பொருட்களை ஆவணப்படுத்துகிறார்.   ரே ஆவணப்படுத்துகையில், வெண்கலம் மற்றும் தங்கத்தாலான பொருட்களும் பட்டியலில் இடம் பெறுகின்றன என கூறப்படுகிறது. ஆகவே வெண்கலத்தை உருக்கும் உலையாகவோ, இரும்பை உருக்கும் உலையாகவோ கூட இருந்திருக்கும் வாய்ப்புள்ளது.

ஆதிச்சநல்லூரில் நான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் வாசித்த்ச்வைகளையும் கோர்த்து பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட சில யூகங்களே இனிமேல் நான் கூற முற்படுபவை. இப்பகுதிகளில் எங்குமே பிரம்மாண்ட செங்கல் கட்டுமானங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இவர்கள் சுண்ணாம்பு காளவாய் வைத்திருந்தால், அவைகளை செங்கல் கட்டுமானங்களுக்கு பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இல்லாமலாகிறது. வேறு எங்குமே சுண்ணாம்பு பயன்பாடு குறித்த தகவல்கள் இல்லை. ஆகையினால், இங்கே நீற்றி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு, வெற்றிலை சுவைப்பதற்கும், பனை ஏறிகள் பனையில் இட்டிருக்கும் கலசத்தில் தடவுவதற்கும் பயன்படுத்தியிருக்கலாமே என்கிற எண்ணமே மேலோங்குகிறது.

இதுவரை கிடைத்த பெரும்பாலான பானைகள் தாழி வகைகள் என நாம் அங்கு கிடைத்த எலும்புகளை வைத்து முடிவுக்கு வர இயலும். அத்தகைய பிரம்மாண்டமான பானைகள் செய்ய முடிந்த ஒரு சமூகத்தில் எளிய கலயங்கள் செய்வது கடினமாகவா இருந்திருக்கும்? ஆக, பனையேறிகளின் முக்கிய தேவையான கலயங்கள் அங்கே இருந்திருப்பதும் உறுதியாகிறது.

அவர்கள் வாழ்ந்த வீடுகள் எப்படி இருந்தன என இதுவரை எவ்வித சான்றுகளும் இல்லாதபோது, பனை மரத்தடிகளும் ஓலைகளும் கொண்டு தங்கள் வீடுகளை அவர்கள் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாம் யூகிக்க இடமிருக்கிறது. செம்மண் குழைத்தும் வீடுகளைக் கட்டியிருக்கலாம். கீழடியைப் போல செங்கல் கட்டுமானங்கள் இனிமேல் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், பனை ஓலைகளாலான கூரைகள் அமைத்திருக்க வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அங்கு கிடைத்த இரும்பு பொருட்களை கிழ்கண்ட முறைகளில் வைகைப்படுத்துகிறார்கள். கத்திகள், குறுவாட்கள் மற்றும் கைக்கோடாரிகள் என ரே குறிப்பிடுகிறார். இரும்பு பொருட்கள் வேட்டையினை சுட்டிக்காட்டவும், போர் மற்றும் பயன்பாட்டு தொழிற்கருவிகளாகவும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அவ்வகையிலும், பனையேறிகள் பயன்படுத்தும் பாளை அரிவாள் பயன்பாட்டில் இருந்திருக்குமென நாம் யூகிக்க இடமுள்ளது.

எனது ஆதிச்சநல்லூர் பயணம் குறித்த செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆதிச்சநல்லூர் பயணமும், முத்தாலக்குறிச்சி காமராசு அவர்கள் தொடர்பும், நண்பர் வைசிலினைப் பார்த்தது மிகப்பெரும் உளக்கிளர்ச்சியைப் எனக்களித்தது. காட்சன் ஆதிச்சநல்லூர் வருகிறார் என்றால், பனை சார்ந்து ஏதோ தேடி வருகிறார் என்பதே முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் கூற்று என்பதை நான் புரிந்துகொண்டேன். அது உண்மையும் கூட. பனையுடன் இணைந்த வாழ்வையே நான் தேடிச்செல்லுகிறேன். எனது எண்ணங்கள் யூகங்கள் மற்றும் பயண நோக்கம் குறித்து நண்பர் காட்சன் வைஸ்லியுடன் விரிவாக விவாதித்தேன்.

நாங்கள் அங்கிருந்து பால்பாண்டி அவர்கள் வீட்டிற்கு சென்றோம். நான் ஏற்கனவே அங்கு சமீபத்தில் சென்றிருந்தாலும், நண்பர்களுக்கு அவ்விடத்தை காண்பிப்பது சரியாயிருக்கும் என்று அழைத்துச் சென்றேன். ஜெனிஸ் மற்றும் விபின் ஆகியோர், எங்கள் பயணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் பெருமளவில் உணர்வெழிச்சுக்குள்ளானது போல் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் கூர்ந்து கவனித்து வந்தார்கள். பனை சார்ந்து அவர்களுக்கு தெரியாதவற்றை எல்லாம் இப்பயணம் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் என்று ஜேக்கப் அறிந்திருந்தார்கள். 

பனை தூண்கள், ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ வைகுண்டம் நோக்கி நாங்கள் வந்து சேர்ந்தபோது மதியம் இரண்டு தாண்டிவிட்டது. நாங்கள் கடந்து சென்ற ஒரு இந்து கோவிலின் மூடிய வாசலுக்கு வெளியே நான்கு தூண்கள் கருப்பாக எழுந்து உயர்ந்து நின்றன. அவைகளின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்ததால், வண்டியை நிறுத்தச் சொன்னேன். சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு தூண் போல காணப்பட்டது. அதன் அருகில் சென்று பார்த்தபோது, முழு பனை மரத்தினை அப்படியே செதுக்கி எடுத்த தூண் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டாம் முறியிலிருந்து உருவாக்கப்பட்ட தூண்கள்.  இதற்கு ஒப்பான தூண்களை நான் புத்தளம் சி எஸ் ஐ தேவாலயத்தில் பார்த்திருக்கிறேன். அவைகள் ஆலயத்திற்குள், வெயில் மழை காற்று என எதுவுமே பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பாக நிற்கும் பளபளப்பான தூண்கள். இருநூறு வருடங்களாக அப்படி இருப்பது வியப்பொன்றுமில்லை. ஆனால் இங்கே, நூறாண்டுகள் கடந்து நிற்கும் இந்த பனை மரம் நமது கட்டிடக் கலைகளின் மரபினை நமக்கு சொல்லும் ஒரு தடயமாக இருக்கிறது. குறிப்பாக கறையான் ஏறாமல் இருக்க கீழே கல் வைத்துவிட்டு, தூண் சரியாமல் இருக்கவும் கல் ஒன்று கீழே பனையின் கால் மாட்டில் படி எடுத்து அதனுள் சொருகப்பட்டிருந்தது. இயற்கையை மிக குறைவாக வடிவம் மாற்றி செய்யும் கட்டுமான கலை.

வர்ண முறம், ஸ்ரீ வைகுண்டம்

பேருந்து நிறுத்தத்தின் அருகில் உணவு உண்ண சென்றோம். செல்லும் வழியில், ஒரு பனை ஓலை பொருட்களை விற்கும் கடையினைப் பார்த்து அங்கு சென்று பொருட்களை வாங்கினோம். குறிப்பாக, வர்ணம் தீட்டிய பனை முறம் அங்கு இருந்தது. குமரி மவட்டத்தில் செய்யும் அரிவட்டியினை ஒத்த பெட்டிகள் வர்ணமிடப்பட்டிருந்தன. அருகில் யாரேனும் பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டோம், அருகில் கணியர் தெரு ஒன்று இருக்கிறது அங்கே சென்றால் பனை ஓலைப் பொருட்கள் செய்பவர்களைப் பார்க்கலாம் என்றார். சாப்பிட்டுவிட்டு அந்த தெரு நோக்கி சென்றோம்.

தமிழகத்தின் பல்வேறு ஜாதியினர் பனையுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். கணியர் என்ற சாதியினர் பனையுடன் தொடர்புடயவர்கள் என்ற தகவலை இங்கேதான் முதன் முதலாக பெறுகிறேன். ஆகவே அவர்கள் எப்படியான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் செய்யும் பனை ஓலைப் பொருட்களின் வடிவங்களையும் காண வெகுவாய் ஆசைப்பட்டேன். ஜேக்கப் அவர்கள் குமரி மாவட்டத்திலும் கணியர் உள்ளனர் என்றார்.

தெருவின் முனையில் கணியர் தெரு என்று எழுதப்பட்டிருந்தது. ஆகவே, சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறோம் என உறுதி செய்துகொண்டோம். அங்கே பெண்கள் கும்பலாக கூடியிருந்த இடத்தில், ஓலைப் பொருளினைச் செய்பவர்களைத் தேடி வந்தோம் என்றேன். கடைசி வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்கள். குறிப்பிட்ட அந்த வீடு ஒரு எளிய குடிசை. எங்களை வீட்டிற்குள் அனுமதித்தனர். உள்ளே சென்று அந்த பெண்மணியுடன் உரையாடினோம். வீட்டிற்குள், ஓலைகள் வரிசையாக கீறப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பழைய பொருட்கள் ஏதேனும் இருக்குமா என்று கேட்டபோது, வெற்றிலைப் பெட்டி இருக்கிறது என்றார்கள். சுமார் இருபது அல்லது முப்பது வருட பழைமையான ஒரு பெட்டியை எடுத்து வந்தார்கள். 

அழகிய வெற்றிலைப்பெட்டியினை செய்யும் திறன் பெற்ற கலைஞர், ஸ்ரீ வைகுண்டம்

பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அந்த வடிவம் குமரி மாவட்டத்தில் காணப்படும் அரிவட்டிக்கு இணையானது. குமரி மாவட்டத்தில் உத்தரங்கோடு என்ற பகுதியில் இவ்வித அரிவட்டி செய்யும் சாம்பவர்கள் வாழ்கிறார்கள். எனது பனை சார்ந்த தேடுதல் துவங்கிய இடம் அது. அந்த பின்னல் முறம் பின்னுவதற்கு அடிப்படையானது. அரிவட்டியும் முறமும், பனை ஈர்க்கிலால் செய்யப்பட்டவைகள். ஆனால், எங்கும் அரிவட்டியினை மூடி இட்டு நான் பார்த்ததில்லை. அல்லது, இவ்வகை பின்னல்கள் கொண்ட பெட்டிகளுக்கு என் வாழ்நாளில் இதுவரை மூடி இட்டு நான் பார்க்கவில்லை. ஆகவே, இவ்வகை பின்னல் கணியர் சமூகத்துடன் இணைந்து இருக்கும் ஒரு முறையாக காணப்பட்டது. ஜேக்கப் பால்மாவிற்கு தேவையான பொருட்களுக்கு முன்பணம் கொடுத்தார்.  நான் அந்த பழைய வெற்றிலைப் பெட்டியினை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

நாங்கள் அங்கிருந்து பண்ணைவிளை நோக்கிச் சென்றோம். அங்கே மொர்தேகாயுடைய மாமா தானியேல் நாடார் அவர்கள் இருந்தார்கள். நான் அவரைத் தேடி சென்றபோது, வழியிலேயே ஒரு டீக்கடை முன்பு அவர் இருந்ததைப் பார்த்துவிட்டேன். எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வாங்கி வைத்திருந்த கருப்பட்டி சாப்பிடக் கொடுத்தார். எங்கள் தேவைக்காக இரண்டு கிலோ கருப்பட்டி வாங்கி வந்தேன். பனை இரவு தானியேல் தாத்தா தோட்டத்தில் தான் நடைபெற்றது.  அவரது மீசையும், நடையும், நறுக்கென்ற சத்தமான பேச்சும் எல்லாம் ஒரு கதாநாயகனுக்கு உரியது.

அன்று இரவு நாங்கள் எங்காவது தங்கவேண்டும். ஆகவே போதகர் ஜாண் சாமுவேல் அவர்களை அழைத்தேன். “கண்டிப்பா வாங்கையா” என்றார்கள். ஜாண் சாமுவேல் போதகர் அவர்கள், 2019 ஆம் ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று தனது பகுதியிலுள்ள பனையேறிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்தது செய்தியாக வந்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து அவரை நான் தொடர்புகொண்டேன். நான் பயின்ற ஐக்கிய இறையியல் கல்லூரி பெங்களூருவில் அவரும் பயின்றவர், ஆகவே என்னைக்குறித்து அறிந்திருக்கிறார். எனது பணிகள் அவருக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. ஆகவே, பனை சார்ந்த மக்களுக்காக பல பணிகளை முன்னெடுத்தவர். எனக்குப்பின்பு, பனை சார்ந்த முன்னெடுப்புகளை இயல்பாக கையாளும் ஒரே போதகர் அவர் மட்டும்தான். அவர் இருக்கும் இடங்களில் பனை ஓலை பின்னும் மக்கள் இருப்பதால் மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் கரிசனத்தாலும், இயல்பாக விழிம்புநிலை மக்கள் மீது கொண்ட பாரத்தால், அவர் இவ்விதமான முயற்சிகளை எடுக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கடந்த 2020ஆம் வருடம், பனை ஓலையில், உண்டியல் செய்யும் திட்டத்தைக் குறித்து பேசினோம். பொதுவாக கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின்போது, திருச்சபையின் மக்களிடம் உண்டியல் வழங்குவது வழக்கம். புலால் உணவைக் குறைத்து, பூச்சூடாமல், உண்ணா நோன்பு கடைபிடித்து சேகரிக்கும் பணம், திருச்சபையின் அருகிலிருக்கும் அல்லது திருச்சபையால் சுட்டிக்காட்டப்படும் ஏழைகளுக்கு வழங்கப்படும். பொதுவாக குயவர்களிடம் இவ்வித உண்டியல் வாங்குவது வழக்கம். காலப்போக்கில், தகரத்திலும், இன்று பிளாஸ்டிக்கிலும், இவ்வித உண்டியல் வழங்கப்படுகிறது. எனது அறிவில், பனையோலையில் எவருமே உண்டியல் செய்ததில்லை. ஆகவே, அங்குள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து ஊண்டியல் செய்ய இயலுமா எனக் கேட்டேன். “பார்க்கிறேன் அய்யா” என்றார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு, வெற்றிகரமாக அவர்கள் எங்களுக்கு, உண்டியலை செய்து அனுப்பினார்கள். உலகிலேயே முதன் முறையாக திருச்சபை பனையோலையில் உண்டியலை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.

பனையோலை உண்டியல் குறித்த செய்தி

அப்போது, மீண்டும் ஒரு பணியினை அவருக்கு நான் கொடுத்தேன். போதகர்கள் பயன்படுத்தும் “ஸ்டோல்” என்று அழைக்கப்படுகிற ஆயர் தோள் பட்டை பனை ஓலையில் செய்தால், குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தலாமே என்றேன். “முயற்சிக்கிறேன் அய்யா” என்றார்கள். 2020 ஆம் ஆண்டு தவக்காலம் துவங்கும்போது இருந்த சூழல் அப்படியே மாறியது. இந்தியா முழுக்க நோய் தொற்றின் நிமித்தமாக ஆலயங்கள் வழிப்பாடுகள் அனைத்தும் முடங்கின. ஆகவே, அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இவ்வருடம், அதனை குறித்து சற்று தாமதமாக திட்டமிட்டோம். அவரது திருச்சபையைச் சார்ந்த நேசம்மாள் என்பவர், இவ்வித அழகிய மேலங்கியினை செய்ய ஒப்புக்கொண்டார். வசதியான பின்னணியத்தை கொண்ட அப்பெண்மணி, இதனை ஒரு அற்பணிப்புடன் செய்தார். 2021 குருத்தோலை ஞாயிறு அன்று, போதகர் ஜாண் சாமுவேல் அவர்கள், அந்த மேலங்கியினை முதன் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்தார். அவர் எனக்கு அனுப்பியது குருத்தோலை ஞாயிறு அன்று எனக்கு கிடைக்காததால், உயிர்ப்பின் ஞாயிறு அன்று அதனை நான் பயன்படுத்தினேன்.

திருமதி நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன் நான்

பனை ஓலைகளை சமயம் சார்ந்து பயன்படுத்துவது முக்கிய குறியீடாக அமையும் என்பது எனது எண்ணம். 2014 ஆம் ஆண்டு நான் அகமதாபாத்தில் இருக்கும்போது, என்னோடு பணி புரியும் மும்பை தமிழ் போதகர்கள் அனைவருக்கும் என் கையால் செயப்பட்ட பனை ஓலைக் கழுத்துப்பட்டைகளை அனுப்பினேன். போதகர்களின் உடை அமைப்பு என்பது, வட்ட காலர் வைத்த கறுப்பு சட்டையும், அதற்குள் ஒரு வெள்ளை காலரை நுழைத்து அணிவதுதான். எங்கு பயணித்தாலும், இது அவர்களை அடையாளம் காட்டும் ஒன்றாக அமையும். அங்கி போட்டுக்கொண்டு செல்ல தேவையில்லை. அங்கி என்பது, திருச்சபை வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் மட்டுமே என்ற வரையறை இருந்தது. குருத்தோலை ஞாயிறுக்காக நான் கொடுத்த கழுத்துப் பட்டைகளை எத்தனை போதகர்கள் அணிந்தனரோ நான் அறியேன், ஆனால், அதன் நீட்சியாக இப்படி ஒரு மேலங்கி வந்து அமையும் என நான் அப்போது நினைக்கவில்லை.

போதகர் ஜாண் சாமுவேல், நேசம்மாள் அவர்கள் செய்து கொடுத்த ஆயர் தோள் பட்டையுடன்

அன்று இரவு அவரது வீட்டிற்குச் சென்றோம். எங்களுக்காக ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். அவரை சந்திக்க அன்று மன்னா செல்வகுமார் என்கிற கிறிஸ்தவ வரலாற்றைத் தேடுகின்ற ஆய்வாளர் ஒருவர் தன்னார்வலர்களுடன் வந்திருந்தார். அன்று இணைந்து பாடல் பாடி ஜெபித்து எங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருந்த விருந்தினை சுவைத்தோம். மிக சிறப்பான ஒழுங்குகளைச் போதகர் அவர்கள் செய்திருந்தார்கள்.  அவரது தனிப்பட்ட சேகரிப்பில் 500 வேதாகமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பழங்கால பொருட்களும் இருந்தன. வெகு உற்சாகமாக் பேசினோம். ஜேக்கப் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார். பனை மரங்கள் எவ்வாறெல்லாம் நமது வாழ்வில் இணைந்திருக்கின்றன எனக் கூறும் ஒற்றை நாளாக அது இருந்தது.

என்னுடன் மன்னா செல்வகுமார், போதகர் ஜாண் சாமுவேல் மற்றும் அவரது துணைவியார்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 16

ஏப்ரல் 7, 2021

னை மோகன்

அக்டோபர் 19ஆம் தேதி மீண்டும் நாகர்கோவில் சென்றேன். போகும் வழியில் பேரின்பபுரம் கடந்தபோது, போதகரும் எனது நண்பனுமான சாம் ஜெபசிங் அவர்கள் அங்கு பணியாற்ற வந்திருப்பதை அறிந்து அவரை சந்திக்கச் சென்றேன். என்னை மிகவும் நேசிக்கும், எனது பணிகளுக்கு பெரும் ஊக்கமாயிருக்கும் குமரி போதகர் அவர். எப்போது பண உதவி தேவை என்றாலும் கேளுங்கள், பொது வாழ்வில், நீங்கள் செய்யும் பணிகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். தேவைப்படும் நேரத்திலெல்லாம், தயங்காமல் ஆயிரம் இரண்டாயிரம் என அவரிடம் பணம் கேட்டிருக்கிறேன். இந்த பயணத்திலும் பொருட் செலவுகள் உண்டு என்பதால், அவரை சந்தித்தேன். என்னிடமிருந்த பனை விதைகளைக் கொடுத்தேன். அவரும் அவரது மனைவியுமாக உடனடியாக அந்த பனை விதையினை ஆலய வளாகத்தில் விதைத்தார்கள். அவரது மனைவி ரெனி, மலையாளாத்தை தனது தாய்மொழியாக கொண்டவர். ஆனால் நல்ல தமிழ் பேசவும் எழுதவும் அறித்திருந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில துறை விரிவுரையாளராக இருக்கிறார். என் பணிகள் குறித்து இருவரும் ஆவலுடன் கேட்டறிந்துகொண்டார்கள். என்னை அவர்களது ஆலயத்திற்கு செய்தி கொடுக்க அழைத்தார்கள்.

அருட்பணியாளர் ஜெபசிங் அவர்களுக்கு பனை விதைகளை வழங்கியபோது

பேரின்பபுரத்தில் தான் பனை இளவரசன் சங்கர் வசிக்கிறார். சங்கர், படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தந்தை இறந்துவிடவே, அனைவரும் கைவிட்ட பனைத் தொழிலை கையிலெடுத்தார். அவரை பெருமளவில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை நான் ஏற்றேன். ஆகவே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை என்னால் முயன்ற மட்டும் முன்னிறுத்தினேன். பனை சார்ந்த அனைவருக்கும் நான் செய்யக்கூடுவது அதுதான். ஆகவே, போதகர் சாம் ஜெபசிங் அவர்களிடம் நீங்கள் சங்கரை கவனித்துக்கொள்ளுங்கள் என்றேன். கிறிஸ்மஸ் கால அலங்காரங்கள் போன்றவற்றை செய்ய அவனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்.  கண்டிப்பாக செய்கிறேன் என்றார்.  பின்னர் கிறிஸ்மஸ் நேரத்தில் சங்கர் செய்த பனை ஓலை நட்சத்திரத்தை அவர்கள் ஆலயத்திலும், வீட்டிலும் தொங்க விட்டார்கள். முதன் முறையாக குமரி மாவட்டத்தில் பனை ஓலை நட்சத்திரத்தை வாங்கி பயன்படுத்திய நபர் போதகர் சாம் ஜெபசிங் அவர்கள் தான்.

அருட்பணியாளர் ஜெபசிங் மற்றும் அவரது துணைவியார் பேராசிரியர் ரெனி இணைந்து பேரின்பபுரம் சி எஸ் ஐ ஆலய வளகத்தில் பனை விதை நடுகிறார்கள்

பனை குறித்த எனது தேடுதலில், எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்து கொண்டது ஒரு பேராசீர்வாதம் என்றே கருதுகிறேன். எங்களது நட்பு, சுமார் 20 ஆண்டுகளாக தொடர்வது. அவரது சங்கச் சித்திரங்கள் தொடர் வழியாக அவரை நான் கண்டுகொண்டேன். பார்வதிபுரத்தில் வசிக்கிறார் என்றறிந்தபோது அவரை சந்திக்க பார்வதிபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். எனது சொந்த கிராமமான பெருவிளையிலிருந்து நடந்தே செல்லும் தூரம் தான். என்னை வீட்டிற்கு வரவேற்று என்னோடு பேசினார். அவரது மனைவி அருண்மொழி நங்கை காப்பி முறுக்கெல்லாம் கொடுத்தார்கள். அஜிதனும் சைதன்யாவும் சிறு பிள்ளைகள். அதன் பிறகு பல முறை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன். நாகர்கோவிலில் நான் போக விரும்புகிற ஒரு சில வீடுகளுள் ஒன்று அவரது வீடு. எந்த அவசரத்தில் அவர் இருக்கிறார் என எப்போதும் நான் பார்த்ததில்லை, சில நேரம் தூங்கிக்கொண்டிருப்பார், சில நேரம் எழுதிக்கொண்டிருப்பார், ஒரு முறை அவரது செல்ல நாயை கவனித்துக்கொண்டிருப்பதையும் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னோடு பேசிக்கொண்டிருந்திருக்கிறார், சில நிமிடங்கள் அல்ல மணிக்கணக்கில். அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நான் உரையாடிய நேரம் கிடையாது. வீட்டிற்கு சென்றால், நமக்காக நேரம் ஒதுக்குகிற பண்பாளர்களை நாகர்கோவிலில் பெருமளவில் காண்பது இயலாது.

இரண்டாம் முறை அவரை நான் சந்திக்கும்போது, எனது கரத்தில் ஒரு கட்டுரை இருந்தது, அது நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது தயாரித்த கிறிஸ்மஸ் உரை. உரையினை வாசிக்குமுன், எவரிடமாவது காண்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவரை பார்க்கச் சென்றேன். “என்ன காட்சன் கட்டுரை எழுதியிருக்கீங்களா” என்று கேட்டபடி அதை வாங்கினார். நான் பத்து நிமிடம் பேசுவதற்காக தயாரித்திருந்தவற்றை, ஒரு நிமிட பார்வையில், வாசித்து முடித்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்றார். எனது சொற்பிழைகளை சுட்டிக்காட்டினார். அப்போது கவிதை நடையை ஒட்டிய ஒரு உரைநடையையே நான் கொண்டிருந்தேன். அந்த கட்டுரையின் தலைப்பு “குப்பைத் தொட்டி”. அதன் பின்பு கட்டுரை எழுதினால் அவரைப் பார்க்கச் சென்றுவிடுவேன். வாசித்தபின்பு என்னோடு பேசுவார், நான் எழுதிய தகவல்களை விட பல மடங்கு தகவல்களை சொல்லிக்கொண்டே இருப்பார். நான் அண்ணன் என்று அழைக்கும் அளவு என்னோடு அன்புகாட்டினார். என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய ஆளுமை அவர்.

பனை விதையினை பெற்ற மகிழ்ச்சியில் அண்ணன் ஜெயமோகன், சாரதா நகர், பார்வதிபுரம்

அவரிடம் பார்த்து வியக்கத்தக்க பல்வேறு விஷயங்கள் அன்றாட வாழ்வில் உண்டு. நட்பை பேணிக்கொள்ளுவதும், குறைகளை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்லுவதும், தட்டிக்கொடுப்பதும், பிரச்சனையினை எதிர்கொள்ளும்போது நேருக்குநேர் சந்திக்கும் துணிவுடனிருப்பதும், தன் மனதிற்குப்பட்டதை நேரடியாக சொல்லுவதும், வெறுமனே வம்புக்காக எதையும் சொல்லாதிருப்பதும் நான் வியத்த காரியங்கள். அவரது எழுத்துக்களில், “உள்ளுறைந்திருக்கும் சதிகளை” கண்டுபிடிப்பவர்கள் பெரும்பாலும், சாதி, சமய, அல்லது ஏதேனும் கோட்பாடுகளை மூர்க்கமாக பின்பற்றுகிறவர்களாகவே இருப்பார்கள்.

ஜெயமோகன் அவர்களின் அசுர எழுத்தைக் கண்டு நான் எப்போதும் எல்லாரையும்போல வியந்திருக்கிறேன். ஆனால், அவரது அக்கறை, அன்பும் நான் அணுக்கமாக அருகில் நின்று பார்த்தது. எனது திருமணத்திற்கு குடும்பமாக வந்து வாழ்த்து தெரிவித்தது மிகப்பெரும் பாக்கியம். அன்று எனது மூத்த அண்ணன் செல்சன் அவர்களிடம், ஜெயமோகன் அண்ணன் வருவார்கள், அழைத்து சென்று சாப்பிட அமரவைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். எனது திருமணத்திற்கு வந்த பலருக்கும் எங்கள் வீட்டில்  ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அறிந்திருப்பார்கள். என்னை மட்டுமே அறிந்த ஒருவராக அவர் மட்டுமே வந்திருந்தார். அப்படியே, எனது அண்ணன் அவரை அமரவைத்து, எனக்கு வந்து பதில் செல்லும் வரைக்கும் படபடப்பாகவே இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு நாங்கள் குழந்தை ஆரோனை எடுத்துக்கொண்டு சென்றோம். பெரிய காதுகளை அருண்மொழி அவர்களிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தார். அவனைத் தூக்கி கொஞ்சினார். அவர் குழந்தையாக  மாறி விளையாடுவது எனக்கு பிடித்திருந்தது. குழந்தையினை எப்படி குளிப்பாட்டவேன்டும் என எனக்கு சொல்லித்தந்தார். நம்புங்கள், எனது கையில் குளிப்பாட்டும்போது மட்டும் ஆரோன், ஒருபோதும் அழுததில்லை. ஆரோனை கரத்தில் எடுத்து கொஞ்சியதோடல்லாமல், சைதன்யாவிடமும் கொடுத்து தூக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் சைதன்யா தூக்கிய முதல் குழந்தை ஆரோன் தான் என்று. அஜிதன் பத்தாம் வகுப்பில் பெற்ற அதிக மதிப்பெண்களை என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறான்.

நாங்கள் பூனேயில் இருக்கும்போது ஜெயமோகன்அண்ணன் ஆப்பிரிக்கா சென்றார். அப்போது மும்பையில் கிறிஸ்தவ போதகர்களுக்கும் மற்றும் பற்றாளர்களுக்கும் என ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தோம். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தனக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுக்க எங்களைக் கேட்டுக்கொண்டார். அவர் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது,  ஆரோனுக்காக ஒரு அழகிய முரசொன்றை வாங்கி வந்தார். அவரது வாழ்த்துக்களும் ஆசியும் தான், ஆரோனுக்கு தாளம் என்பது இயல்பாகவே வருகிறது.

ஜெயமோகன் அண்ணண் ஆப்பிரிக்காவிலிருந்து ஆரோனுக்காக எடுத்து வந்த முரசு.

பனை சார்ந்த என் தேடல்களில், ஜெயமோகன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. வேறு எவரை விடவும் பனை சார்ந்து நான் விரிவாக ஜெயமோகன் அண்ணனிடம் தான் விவாதித்திருக்கிறேன். அவர் எனக்கு அளித்த இடம் அவ்வகையில் முக்கியமானது. அது உறவு சார்ந்த ஒன்றாக அமைந்ததே ஒழிய, எழுத்தாளர் வாசகர் என்ற நிலையில் அமையவில்லை. அண்னன் அதனை ஒரு பொருட்டாக என்னிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை. எனக்கு பிடித்தவற்றை நான் செய்வதில் எப்போதும் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பனை சார்ந்த எனது தேடுதல்களுக்கு ஆதரவே இல்லா சூழல்களில் அவரது ஆதரவுகரம் என்னோடு இருந்தது. எனது வலைப்பூ அவர் எனக்கு ஊட்டிய உற்சாகத்தால் துவங்கப்பட்டது. நான் “நெடும்பனை” என அதற்கு பெயர் வைக்க ஊக்கப்படுத்தியவரும் அவர்தான். அன்று வேறு எவரும் பனை என்ற பெயரில் நான் ஒரு வலைப்பூவை துவங்க ஊக்கமளித்திருக்க இயலாது. 2008 ஆம் ஆண்டு பனை மறக்கப்படவேண்டிய ஒரு தாவரமாகவே நாடார்களுக்குள் இருந்தது. கற்றுத்தேர்ந்த தமிழர் என்ற இனத்திற்கு அப்போது பனை என்றால் என்னவென்றே தெரியாது. தமிழகத்தில் பனை குறித்து முதல் முதலாக பேசிய நாம் தமிழர் கட்சி அப்போது பிறந்திருக்கவில்லை.  

பனை எனக்கு அணுக்கமாயிருந்ததை அவர் அறிந்திருந்தார். பனைக்காக நான் எடுத்த முனைப்புகளில் எப்போதும் என்னுடனிருந்தவர் அவர். நான் மார்த்தாண்டத்தில் வேலைப் பார்க்கும்போது, அவருக்காக கோட்டைவிளையில் தயாரான கருப்பட்டியினை வாங்கி சென்றிருந்தேன். அன்றைய சந்தை விலையை விட அந்த கருப்பட்டியின் விலை அதிகம் தான். சொன்ன விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். சிறப்பு அதுவல்ல, உடனேயே அதனை சுவைத்துப்பார்த்து “நல்ல கருப்பட்டி” என்றார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் அமைப்பிற்கு சொந்தமான இடத்தில், நான் பணியாற்றும்போது, எனது மேற்பார்வையில் காய்ச்சப்பட்ட கருப்பட்டி. அது தரமான கருப்பட்டி என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒருவர் சுவைத்து அதற்கான அங்கீகாரத்தை அளிப்பது என்னை மகிழ்ச்சியில் மட்டுமல்ல ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ஏன் அந்த ஆச்சரியம்? ஏனென்றால், இதே கருப்பட்டியினை நான் வேறு எவரிடமாவது கொடுத்திருந்தால், பல்வேறு சந்தேகங்களை பூடகமாக நம்மை நோக்கி வீசுவார்கள், எல்லாவகையிலும் நாம் பதில் சொன்னாலும், இறுதியாக, “எங்க பாட்டி வீட்டுல அப்போ அக்கானி காய்க்கும்போது” என்று சுய பெருமையை பேசுவார்கள். நல்ல கருப்பட்டி என்ற வார்த்தை வாயில் எளிதில் வராது.   

ஜெயமோகன் அண்ணணுடன் மிக நெருக்கமாக

தக்கலை பென்னி ஒருமுறை என்னிடம் இப்படி சொல்லியுமிருக்கிறார்…”குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் பெண்களும் நாயர் பெண்களும் செய்யும் கருப்பட்டி தனித்த சுவையானது” என்று. எப்படி அண்ணன் கருப்பட்டியினை கண்டுபிடித்தீர்கள் என்றேன். அவர்கள் வீட்டில் அக்கானி காய்ச்சும்போது தானும் அதனை செய்ய கற்றுக்கொண்டதாக கூறினார். மேலும் மணம் அதனை புதிய கருப்பட்டி என்கிறது, நாக்கில் கரைவதன் சுவையும், அது தூய கருப்பட்டிதான் என்கிறது என கூறினார்கள். இது இரண்டும் தான் மிக முக்கிய அறிகுறிகள் என்பதை இன்னும் பல வருடங்களுக்குப் பின்பு நான் அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். உடைத்துப்பார்ப்பது மற்றொரு வழி.

2016 ஆம் ஆண்டு, எனது பயணத்தைக் குறித்து அவரது வலைப்பூவில் எழுதியது எனக்கு பல நல்ல நண்பர்களையும் தமிழகத்தின் தலை சிறந்த வாசகர்களையும் பெற்றுத்தந்தது. எனது வலைப்பூவினை அவரது வலைத்தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். ஆனாலும் 2016 ஆம் வருடம், அவர் எனது தென் இந்திய பனை பயணத்தை அறிமுகப்படுத்தியபோது ஒரே நாளில் அதற்கு முந்தைய வருடத்தை மிஞ்சும் வாசகர்கள் எனது தளத்திற்கு வந்தார்கள். அவர் எனக்களித்த அறிமுகம், தனித்து விடப்பட்ட என்னை அந்த அளவிற்கு முன்னிறுத்துவதாக அமைந்தது. பல விதங்களில் அவரது அந்த அறிமுகம் முக்கியமானது. அப்படியே எனது புத்தகம் வெளிவந்த போது அருண்மொழி நங்கை அவர்கள் எழுதிய மதிப்புரை மின்னல் வேகத்தில் வந்தது. இன்றுவரை குமரி மாவட்டத்தில், அந்த புத்தகத்தை குறித்த ஒரு சிறு விவாதம் கூட முன்னெடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் அனைத்து முன்னணி முற்போக்கு எழுத்தாளர்களும் பனையேறிகளுடைய பிள்ளைகள் தான். அதனைச் சொல்ல கூச்சப்படுமளவிற்கு இன்று அனைவர் கரத்திலும் பணமும் அதிகாரமும் வந்தாயிற்று.

2017 ஆம் ஆண்டு பனை குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்கும்படியாக மீண்டும் அவர்களைத் சந்தித்தேன். வேறு எவரும் சொல்லாத திசைகளில் அவர்கள் பேசியவைகள் எனக்கு மிகவும் உற்சாகமூட்டுபவைகளாக இருந்தன. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவிடப்படாதவைகள் ஆனபடியாலும் அவைகள் எனது எண்ண ஓட்டத்தை மீண்டும் புது பாய்ச்சலுடன் முன் செல்ல உதவியதாலும், இங்கே அவைகளை எனது நினைவிலிருந்து பதிவுசெய்கிறேன்.

“ஒரு பண்பாடு என்றால், சுவை தான் அந்த பண்பாடு. அவை நாக்கு சுவை, செவி சுவை, கண் சுவை. இந்த சுவை அந்த பகுதிகளில் இருக்கும் பொருட்களிலிருந்தே உருவாகும். தென்னையை விலக்கி எப்படி ஒரு கேரள பண்பாட்டை கூற முடியாதோ அதுபோல பனையை விலக்கி ஒரு தமிழக பண்பாட்டை சொல்லிவிட இயலாது” என்றார்.

“பனம்பழம் தின்ன பன்றி செவியறுத்தாலும் நிக்காது” என்பது குமரி மாவட்ட பழமொழி. நாக்கு அப்படியானது. தான் சுவைத்தவற்றை பேசும், தனது சுவையினை முன்னிறுத்த விழையும். ஆகவே தான் இனிப்பான நற்செய்தியும், கசப்பான உண்மைகளும் இன்று வெளிப்படுகின்றன. உப்பு பெறாத விசயங்கள் கூட பொருட்படுத்தப்படுவது அதனால் தான். “பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என்ற பழமொழியும் நமக்கு செவிச் சுவையினையே உணர்த்துகிறது. பனைமரக் காட்டு சத்தம் எவருக்கு உகந்தது எவருக்கு அச்சமூட்டக்கூடியது போன்ற உண்மையினைப் போட்டுடைப்பது. கண் தான் அழகையும் அளவுகளையும் தீர்மானிக்கும். பனையளவு தினையளவு எல்லாம், பிரம்மாண்டத்தை சுட்டி நிற்பதும், பொருட்படுத்தவியலா சிறியவைகளாய் குறிப்பிடுவதுமாகவே இருந்திருக்கிறது.

எனக்கு அவர் தென்னை குறித்து சொல்லியிருக்கக்கூடாது என தோன்றியது. ஏனென்றால், தென்னை மரத்திற்கு உலகளாவிய ஒரு அங்கீகாரம் உண்டு. ஆனால் பனைக்கு அப்படியல்ல, ஆகவே தென்னை குறித்து ஏன் மீண்டும் பேசவேண்டும் என எண்ணினேன். ஆனால், அது ஒரு எளிய ஒப்புமை. அங்கே அப்படியிருந்தால் இங்கே இப்படி இருக்கலாமே எனும் ஒரு கோட்டுச் சித்திரம். எனக்கு உண்மையிலேயே தென்னையினை வெளிப்படையாக பேசுவது பிடிக்காது, ஆனால், தேங்காய் இல்லாமல் என்னால் மூன்று வேளைகளை கடத்திவிட முடியாது. ஒரு துவையல் போதும், கஞ்சியோ, தோசையோ அல்லது சுடு சோறோ இலகுவாக ஒரு நேரத்தைக் கடத்தி விடும் ஆள் நான். ஆகவே, நமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உண்மை நிலவரங்கள் பேசப்படலாம் என்பதையும் புரிந்துகொண்டேன். நமது பாவனைகளுக்காக ஒருவர் கருத்தில் குறைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை என்றே முடிவுசெய்தேன்.

“யானைகள் தமிழக கலாச்சாரத்தில் பாதி பங்களிப்பை ஆற்றியவை என ஒரு முறை தியோடர் பாஸ்கரன் கூறியிருக்கிறார். நான் சொல்லுகிறேன், பனை இல்லாவிட்டால் மிச்ச பாதியும் இல்லாமல் போயிருக்கும்”. இந்த வாக்கியம் என்னை வெகுவாக கிளர்ந்தெழச் செய்த வாக்கியமாக மாறிப்போனது. இன்று நமது மண்ணில், யானைகள் ஒருவழியாக புறந்தள்ளப்பட்டுவிட்டது. அப்படியே பனைகளும் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது. யானையும் பனையும் ஒரே நிலத்தினை பகிர்ந்துகொண்டிருக்குமா? இருக்கலாம். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சற்று அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் கடமான்குழி. அதற்கு சற்று இந்தப்பக்கம் இருக்கும் இடத்தினை ஆனைக்குழி என்பார்கள். சங்க கால பெயர்களாக இவைகள் இல்லாவிட்டாலும் யானையும் வேறு பல காட்டு விலங்குகளும் ஊரைச் சுற்றி நடமாடிக்கொண்டிருந்தன என்பதை விளக்கும்.

யானையும் பனையும், கருங்கல் தேங்காபட்டணம் சாலையில்

யானைகளுக்கும் பனைக்கும் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், நமது கட்டிடக்கலைக்கு அச்சாணியாக நான் பார்க்கிறேன். மிகப்பெரிய தூண்கள் மற்றும் கல் தச்சு பணியில் கூட யானைகளின் பங்களிப்பும் பனையின் பங்களிப்பும் ஒரு சேர இருந்துள்ளதை நாம் பார்க்கலாம். ராஜ ராஜ சோழன் கட்டிய ஆலயத்திற்கான கற்கள் சாய்வுகள் ஏற்படுத்தி மேலேற்றப்பட்டன. யானைகள் கற்களை இழுத்துச் சென்றன எனச் சொல்லுவார்கள். ஆனால் கற்களின் கீழே பனை மரங்களை வெட்டி இடப்பட்ட உருளைகளே இப்பணியினை இலகுவாக்கின. இல்லையென்றால், பனை வாரைகளை  இட்டு அதன் மீது கற்கள் புரட்டப்பட்டு இழுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் தண்டவாளம் போல வழுவழுப்பாக கற்களை இழுத்துச் செல்ல வாய்ப்பளித்திருக்கும்.

நமது உணவு, உறைவிடம், இசைக்கருவிகள், பயன்பாட்டு பொருட்கள் என நிகரில்லா பொருட்கள் பனையிலிருந்து கிடைக்கிறது. இனிப்பு சுவையும் கள்ளும் இல்லாத கொண்டாட்டங்கள் தமிழகத்தில் இருந்ததில்லை. அதியமான் என்னும் மன்னன் ஓளவைக்கு கள்ளை வழங்கியே வரவேற்றிருகிறான். சங்க இலக்கியம் கள்ளை கொண்டாடியிருக்கிறது என்றார்.  

பனை மரப் பட்டியல் கொண்டு அமைக்கப்பட்ட கூரை

மொழி எப்படி ஒரு சூழலிலிருந்து எழுகிறது என்பதை அண்ணன் சுட்டிக்காட்டினார்கள். இன்று நாம் பட்டியல் என்ற பதத்தை வரிசைப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறோம். ஏன் என்றால், பழங்காலத்தில் வீடுகளுக்கு கூரை வேயும்போது பட்டியல்களை வரிசையாக அடுக்கி அதன் மீது தான் கூரை இடுவார்கள். பெரும்பாலும் குமரி மாவட்டத்தில் பட்டியல்கள் என்பவை பனை மரத்தால் செய்ததாகவே இருக்கும். அப்படியானால், ஒரு மொழிக்கான சொற்களஞ்சியத்திற்கு பல்வேறு வார்த்தைகளை கொடையளித்த தாவரங்களுள் பனை முதன்மையான ஒன்று என்றார். பனையும் பனை சார்ந்த தொழில்களும் அழியும்போது இந்த சொற்களும் அழிவை சந்திக்கிறது என்றார். அவை புழங்கும் தளங்கள் இல்லாமல் ஆகிவிடுகின்றன. என்னிடம் பனை சார்ந்த ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க கேட்டுக்கொண்டார். செய்யவேண்டிய பணிகள் பட்டியலில் அது இருக்கிறது. அப்படியே பனை குறித்து ஒரு புனைவினையும் எழுத கேட்டுக்கொண்டார். அதை என்னால் செய்ய இயலுமா எனத் தெரியவிலை.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், கருங்கல் பட்டியல்

அவர் சொல்லாமல், அவரது எழுத்துக்களை வாசிப்பதினூடாக அக்காரம் என்ற சொல்லைக் கண்டுகொண்டேன். சற்றே பாயசம் போன்ற ஒரு உணவுப் பொருள் தான் அது. அந்த வார்த்தையினை நான் அவரை வாசிக்கும்வரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், பின்னர் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அண்ணன் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களில் கன்னியாகுமரி வட்டார சொற்கள் தாராளமாக புழங்கும். பல வேளைகளில் அது இலக்கிய பின்னணியம் கொண்டதாக இருக்கும். அப்படியானால், இந்த சொல்லுக்கு இணையான குமரி மாவட்ட சொல் ஏதும் இருக்குமா எனத் தேடினேன். என்னைக் கிழர்தெழச் செய்யும் வார்த்தை ஒன்று கிடைத்தது. அக்கானி என்கிற வார்த்தையினை குமரி மாவட்டம் தாண்டி வேறு எவருமே அறிந்திருக்க மாட்டார்கள். பதனீர் என்று இன்று நாம் வழங்கும் சொல்லை சுட்ட குமரி வாழ் மக்கள் பயன்படுத்தும் சொல் இது. அக்கானியிலிருந்து தயாரிப்பதால் அக்காரம் என பெயர் பெற்றதா?

ஆலய கட்டுமானங்களில் கல் பணிகள் அமைத்திருந்தாலும், அவைகளில் கூட பட்டியலை ஒத்த அமைப்புகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மர தச்சு பணிகள் இருந்த காலத்தில் எவ்விதமான கட்டுமான பணிகள் இருந்தனவோ அவைகளை அப்படியே பிரதியெடுப்பதை சுட்டிக்காட்டியவர், பனை வாரைகளைக் கொண்டு இன்றுவரை குமரி மாவட்டத்தில் கூரை அமைப்பதையும் சுட்டிக்காட்டினார். அரிய தகவல்கள் பல ஊறி நிறைந்து வழியும் ஊற்றுக்கண் தான் அவர்.

விஷ்ணுபுரம் முழுக்க பனை உணவாக, பல்வேறு பொருட்களாக, உவமானமாக வருகிறது. ஓலைச் சிலுவை, ஆமை, வலம் இடம் போன்ற கதைகளில் பனை சார்ந்த தகவல்கள் மற்றும் வாழ்க்கைச் சூழல் அதிகமாக பேசப்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் பனை அவரை ஆட்கொண்டுவிட்டதோ எனும் அளவிற்கு பனை அவரது எழுத்துக்களில் சரளமாக பயணிக்கிறதை எவரும் கண்டுகொள்ளலாம்.

எனது தொப்பி அழகாயிருக்கிறது என கூறியவர். இன்னும் சிறிய பொழிகள் கொண்டு செய்யப்பட்டால் மேலும் அழகாக இருக்கும் என்றார். காந்தியத்தையும் அதன் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிப்பையும் குறிப்பிட்டவர், காந்தியத்தின் அழகிற்கு எதிரான போக்கையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. அழகு நிறைந்த பொருட்களே இன்று விரும்பப்படுபவைகளாகவும் விற்பனையில் முதலிடத்தைப் பெருபவைகளாகவும் இருக்கின்றன என்றார். பனை நார் கொண்டு செய்யப்படும் பொருட்கள் மிக நீண்ட உழைப்பை கொடுக்கும். ஆகவே பனை நார் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் சர்வதேச சந்தைக்கு உகந்தவைகள் எனவும் கூறினார்.

அவரது அனுபவங்கள் மட்டுமல்ல கூர்ந்த அவதானிப்புகள் கூட என்னை பிரமிக்க வைத்தன.பனையும் காளியும் குறித்த எனது தேடுதல் அவருக்கு மிகப்பெரிய உளக்கிளர்ச்சியைக் கொடுத்தது என அறிவேன். பனையும் காளியையும் இணைத்து ஒரு பயணம் செல்லுமளவிற்கு கண்டடையப்படாத ஒரு களம் அது. ஏதோ ஒரு ஆதி குடிக்கு, அரம் போன்ற கரங்கள் கொண்டதும் ஆனால் கனிந்து உணவளிப்பதுமான ஒரு தெய்வமாக பனை உருபெற்றிருக்கலாம். அதனை தனது வாழ்வின் ஒரு அனுபவத்துடன் விளக்கினார். ஒரு முறை அவரதுபெரியம்மாவுடன் பயணித்துக்கொண்டிருந்த போது, வெட்டி வீழ்த்தப்பட்ட பனையின் மூட்டில் ஒரு பட்டையை வைத்து ஒழுகிய நீரைப் பிடித்துக்கொண்டிருந்தைப் பார்த்திருக்கிறார்கள். எதற்கு எனக் கேட்டபோது பதனீரை ஒத்த சுவையுடன் நீர் பெருகி வருமென சொல்லியிருக்கிறார்கள். அப்போது அவரது பெரியம்மா கூறிய வார்த்தை ‘அம்மையில்லா, எங்க வெட்டினாலும் இனிக்கத்தான் செய்யும்”. ஆக்கிரோஷம் கொண்டது போல கரங்களை வீசி நின்றாலும் கனிவின் மொத்தவுருவாக, அன்னையாக பனை ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்படித்தான்.

இனிமேல் ஏன் பனை தேவை எனக் கேட்டேன். இவ்வளவுதூரம் மறக்கப்பட்ட ஒரு மரத்தையோ அல்லது அதன் பொருட்களையோ நான் மீண்டும் கொண்டு வர எத்தனிப்பது பல வேளைகளில் நகைப்புக்குரியதாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னை வெகுவாக தேற்றியது. அவர் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, மிக அதிக செலவு செய்து அங்குள்ள கலாச்சாரத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். ஆனால் அதே சிங்கப்பூரில், இதை விட வேகமாக அங்குள்ள பண்பாட்டு அழித்தொழிப்பு ஒரு காலத்தில் வளர்ச்சியின் பெயரால் நடைபெற்றிருக்கிறது. அழிப்பது எளிது ஆனால் மீண்டும் கட்டமைப்பது என்பது எளிதானதல்ல. அழித்தவற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டுமென்றால், பேணிக்கொள்வதை விடவும் மிகவும் பொருட்செலவு பிடிக்கும் ஒன்று அது என எனக்கு விளக்கினார். இன்று நிகழும் அழிவு, நாளை நாம் எப்படி முயற்சித்தாலும் மீட்டுருவாக்கும் நிலையில் இருக்காது என்றார்.

பனை சார்ந்த பொருட்கள் எப்படி மீண்டும் வரும்? “ஒரு பயன்பாட்டு பொருள் அதன் பயன்பாட்டு நிலையிலிருந்து அழியும்போது அது முற்றாக அழிவதில்லை. அது கலாச்சாரத்தின் அடையாளமாக எஞ்சுகிறது. ஆகவே அதன் மதிப்பு பலமடங்காக கூடிவிடுகிறது” என்றார். உண்மைதான் இன்று பல பனையேறிகளை நான் பார்க்கும்போது, அந்த காலத்தில், பனங் கருப்பட்டிக்கு இத்தனை மதிப்பு இருந்ததில்லை என ஒப்புக்கொள்ளுவார்கள்.

பனை இனிமேல் தமிழகத்தில் இருக்குமா? என்றேன். இருக்கும், “பனை இருந்துகொண்டுதான் இருக்கும், ஆனால், இதே வேகத்தில் சென்றால் பனையுடனான நமது உறவு முற்றாக அழிந்துவிடுவது நிகழும்” என்றார். நமது, வாழ்க்கையில் ஒன்றின்மீதான பற்றே அதன் மதிப்பை நமக்கு அளிக்கிறது. அந்த பற்று அம்மரத்துடனான நமது உறவிலிருந்து எழுகிறது. அந்த உறவு துண்டிக்கப்படாமல் காக்கப்பட்டாலே பனை இருப்பதற்கான பெறுமதி இருக்கும் என்றார். நான் அவரது கருத்துக்களுடன் முழுமையாகவே உடன்பட்டேன். எனது பனைமரச் சாலையே, அவ்விதமான ஒரு உறவை மீட்டெழுப்பும் கூக்குரல் கொண்டது தான்.

இவ்விதமான உரையாடல்கள் என்னை செழுமைப்படுத்தின.  பனையுடனான எனது பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தின. “ஒரு பண்பாடு குறித்து பேச அப்பண்பாட்டின் உள்ளிருந்து ஒருவர் வந்தாலே அதன் நுண் பக்கங்ளை வாசிக்க முடியும்” என்றார். அவ்விதமான பல படைப்பாளிகளை எனக்கு அறிமுகம் செய்தார். பல நேரங்களில் எனது கிறுக்குத்தனம் நிறைந்த பேச்சுக்களை அவரது அன்பான கனிவான பெருந்தன்மையால் இயல்பாக கடந்தார். இன்று வரை எனது குடும்பத்தில் பெருவாரியானவர்களுக்கு நான் கிறுக்கு பிடித்து அலைகிற ஒருவனாகவே காட்சியளிக்கிறேன். நான் மட்டும் போதகராக இல்லையென்று சொன்னால், குடும்ப நிகழ்வுகளுக்கு கூட எனக்கு அனுமதி இருக்காது என்பது தான் உண்மை. 

எனது பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் அண்ணன் ஜெயமோகன்

வீட்டை விட்டு ஓடிப்போவது எனக்கு மிகப்பிடித்தமானது. இருந்தாலும், என்னால் ஒரு முறைக் கூட அப்படி ஓட முடிந்திருக்கவில்லை. ஆனால், பனை என்னை அவ்வித பயணங்களுக்கு இரு கரம் நீட்டி வரவேற்றது. பல பனை நாயகர்களை நான் காண வழிவகை செய்தது. பனை இல்லாத வாழ்வு எனக்கு நீரிலிருந்து பிரிக்கப்பட்ட மீனின் வாழ்வுதான். செத்தே போய்விடுவேன்.

இப்படி நான் அறிந்த தகவல்களின் மேல் நின்று எனக்கு வெளிச்சம் வீசும் நபர்கள் வெகு அரிதானவர்கள். பலருக்கும் எனது தேடுதல் என்ன என்பது தெரியாது. நிறைய பணம் பெற்று தான் இவைகளைச் செய்கிறேன் என்றே பலர் நினைத்துக்கொள்ளுகிறார்கள். அல்லது, ஏதோ கட்சியினருடன் நான் இணைத்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுகிறார்கள். எனது பயணத்தின் வீச்சை அதன் துவக்கத்திலிருந்து அணுகி அறிந்த அண்ணனால் தான் என்னை புரிந்துகொள்ள இயலும்.

அன்று மாலை நான் அ கா பெருமாள் அவர்களை சந்திக்கச் சென்றேன். நாகர்கோவிலில் என்னோடு ஜாய்சன் ஜேக்கப் அவர்களும் இணைந்துகொண்டார். அ கா பெருமாள் அவர்களையும் சற்றேரக்குறைய இருபது ஆன்டுகளாக தெரியும். பனை சார்ந்து எனது தேடுதல்களில் பங்களிப்பாற்றிய ஒரு பெருத்தகை. நாட்டார் வழக்காற்றியலில் இன்று இருக்கும் மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒருவர். எந்த வித எதிர்பார்ப்புகளுமின்றி பழகுபவர். பல தகவல்களை எளியமுறையில் எனக்கு புரியவைத்தவர். பல மணி நேரம் தொடர்ந்து என்னோடு பேசியிருக்கும் நாகர்கோவில்காரர்.

பேராசிரியர் அ கா பெருமாள்

எனக்கும் அ கா பெருமாள் அவர்களுக்குமான தொடர்பு, அவரது பாவைக்கூத்து ஆய்வுகளின் வாயிலாகவே துவங்கியது. பவைக்கூத்திற்கும் பனைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனக் கேட்டபோது இருக்கிறது என்றார். பாவைக்கூத்து என்பது, சினிமாவிற்கு முந்தைய கலை வடிவம். வெள்ளைத் துணி திரை கட்டி, ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட பாவைகளை அசைத்து, இசையுடன் புராண கதை சொல்லுவது. பெரும்பாலும் ராமாயணமே அதன் முக்கிய கதையாக இருக்கும். புராண கதையின் நடுவே உச்சுக்குடுமியும் உழுவத்தலைபேராசிரியர் அ கா பெருமாள்யன் என இரண்டு  நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வந்து பார்வையாளர்களை குலுங்கி சிரித்து விழச் செய்யும் வகையில் அமைத்திருப்பார்கள். அவைகளில் ஒன்று, இவ்விருவரும் பனையேறியை ஏமாற்றி, பதனீர் அருந்துவதாக அமைந்திருக்கும். பனையேறிகள் அன்றும் இன்றும் ஏமாற்றப்படுவது வழக்கம் தான் போலும்.  அந்த காட்சி வரும்போது, ஒரு பனை மரத்தில் பனையேறி ஏறுவதுபோல் தத்ரூபமாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். நானும் ரங்கிஷும் ஒருமுறை அ கா பெருமாள் அவர்களோடு கலைமாமணி முத்துச்சந்திரன் அவர்கள் பறக்கையில் நடத்திய நிகழ்ச்சியினை கண்டு ஆவணப்படுத்தினோம். 

பாவைக்கூத்தில் பனையேறி

அரவி தமிழ் சுவடிகளை குறித்து அவர் தான் எனக்கு முதன் முதலில் சொன்னார். அந்த பயணம் என்னை காயல்பட்டணம் வரை அழைத்துச் சென்றது.  என்னால் அரவித்தமிழ் சுவடிகளை காணமுடியாவிட்டாலும் அப்பயணத்தை அவர் துவக்கி வைத்ததால் அவருக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் ஐக்கிய இறையியல் கல்லூரி, பெங்களூருவில் பயின்றுகொண்டிருக்கும்போது, அங்கே கிறிஸ்தவ திருமறையில் காணப்படும் வரிகளை உள்ளடக்கிய ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேன். தமிழில் எழுதி பாதுகாக்கப்பட்ட அந்த சுவடிகள், இஸ்லாமியர்களும் இப்படி அரபியில் எழுதிய சுவடிகள் வைத்திருப்பார்களே என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது. அதற்கு விடையாகத்தான், அரவித்தமிழ் குறித்து அ கா பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அரபி லிபியினை உள்ளடக்கிய தமிழ் வார்த்தைகள் கொண்ட சுவடி தான் அரவித்தமிழ். இது, தமிழ் தெரிந்தவர்களால் வாசிக்கமுடியாது, அரபி தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது. அப்படியானால், தமிழ் இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கிய ஒரு இலக்கிய வடிவாக இது இருந்திருக்கிறது.

அப்படியே, தமிழ் பைபிள் ஒன்றை ஆறுமுக நாடார் வைத்திருந்தார் என அவர் கூறக்கேட்டிருக்கிறேன். மிக வசதியான அவர், அதனை ஒரு வெள்ளைக்காரருக்கு கொடுத்துவிட்டதாக கேள்விப்பட்டேன். குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய தனியார் சுவடிகளின் தொகுப்புகளை மிகப் பாதுகாப்பான இடங்களுக்கு மடைமாற்றியவரும் அவரே. இல்லையென்றால் நமது பழம்பெரும் செல்வங்கள் கண்டிப்பாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும். ஓலைச் சுவடிகளை வாசிக்கின்ற வெகு சிலருள் பேராசிரியர் அவர்களும் ஒருவர். எனக்காக சில கணக்கு ஓலைச் சுவடிகளை எடுத்து வைத்திருக்கிறதாக  கூறினார். மீண்டும் சந்திக்கும்போது அவைகளை என்னிடம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

வாச்சி என்ற தொழிற்கருவியினையும் அவர் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். வாச்சி என்பது பனை மரங்களை செதுக்கும் கோடாரி போன்ற ஒரு கருவி. கோடாரி போன்று தடிமனாகவும் மண் வெட்டி போன்று திசை மாறியும் இருக்கும். பிளந்த பனை மரங்களை செதுக்கி எடுக்கும் இக்கருவி பயன்படுத்தும் நபர்கள் குமரி மாவட்டத்தில் பத்துபேர் இருப்பார்களா என்பது சந்தேகமே. பிற்பாடு பூக்கடை என்ற பகுதியில் வாச்சி பயன்படுத்தும் ஒருவரை தேடிக்கண்டடைந்தேன்.

கோடாலியுடன் பனை சீவியெடுக்கும் வாச்சி

அ கா பெருமாள் அவர்களுக்கு எனது தேசிய அளவிலான பனை சார்ந்த தேடுதல் குறித்த பெருமிதம் உண்டு. நாகர்கோவில் அகில இந்திய  வானொலி நிலையத்தில் பனை குறித்து நான் பேசவேண்டும் என தன்னிடம் நிலைய அதிகாரி கேட்டுள்ளார் என கூறினார். எனக்கு அது மகிழ்வான தகவல். பல வருடங்களாக நான் வானொலியில் பேசவேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால், என்னால் அப்படி ஒரு வாய்ப்பை பெற இயலவில்லை. அ கா பெருமாள் அவர்கள், எப்படியும் என்னை பேச வைப்பது என முடிவெடுத்துவிட்டார்கள். அக்டோபர் 24 ஆம் தேதி பேசலாம் என முடிவு செய்தோம். பனை நேசர்களோடு இந்த நாள் இனிதாக முடிந்ததில் எனக்கு மனநிறைவே.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 15

ஏப்ரல் 2, 2021

பனையும் பானையும்

அக்டோபர் 18 ஆம் தேதி ஜேக்கப் அவர்களுடன் தென் தமிழக பயணம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தோம்.  இறுதி நேரத்தில் ஜேக்கப் அவர்களின் மகளுக்கான ஒரு நேர்முகத் தேர்வு வந்ததால் அந்த நிகழ்வைத் தள்ளிவைக்க முடியுமா என்று கேட்டார்கள். இச்சூழலில், நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினேன். ஆகவே லக்னோவில் இருக்கும் எனது நண்பரான மொர்தேகாய் அவர்களைத் தொடர்பு கொண்டு மனோன்மணியம் சுத்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் சுதாகர் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றேன். மொர்தேகாய் தொல்லுயிரியல் ஆய்வு களத்தில் இருப்பவர். பேராசிரியர் சுதாகர் அவர்கள் சில பானை ஓடுகளில் சுண்ணாம்பு இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறதாக கூறினார். ஆகவே அதனைத் தேடி செல்ல திட்டமிட்டேன். எனது திருச்சபையினருக்கான செய்தியினை வாட்சாப்பில் இட்டுவிட்டு, அதிகாலையில் திருநெல்வேலி நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன்.

திருநெல்வேலியில் இருக்கும் ஆத்தூர் என்ற பகுதி எனக்கு புதியது. ஆகவே, பனை மரம் குறித்து ஆய்வுகளத்தில் இருக்கும் வெங்கடேஷ் என்ற மாணவரை அழைத்து தம்பி, நான் உங்கள் ஊருக்கு வருகிறேன், என்னோடு இணைந்துகொள் என்றேன். இம்முறை ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டினுடைய புல்லட். புதியது ஆகவே சிறந்த பயண அனுபவமாக இருந்தது. எண்பது கிலோமீட்டர் வேகத்தை பிடித்துக்கொண்டேன். போகும் வழியில் எங்கும் நிற்காமல், சீக்கிரமாக செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பயணித்தேன். வழியில், புண்ணியவாளன்புரம் என்ற ஒரு ஊர் பலகை கண்ணில் பட்டது. சுற்றிலும் பனை மரங்கள். பனை இருக்குமிடம் புண்ணியவாளர்கள் இருக்குமிடம் தானே.

புண்ணியவாளன்புரமும் பனை மரங்களும்

பணக்குடியைக் கடக்கும்போது ஒரு மனிதர் பனை ஓலைகளை சைக்கிளில் தள்ளிக்கொண்டு சென்றார். பணக்குடி பகுதிகளில் முறம் செய்வதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த மனிதர் எடுத்துச் செல்லும் ஓலைகளைப் பார்த்தால், முறம் செய்பவர் போல தோன்றவில்லை. ஆகவே எதற்காக எடுத்துச் செல்லுகிறீர்கள் என நிறுத்தி விசாரித்தேன். பெட்டி செய்ய எடுத்துப்போகிறேன் என்றார். நிற்க நேரமில்லை ஆகையால், வேகமாக அங்கிருந்து நகர்ந்தேன். என்னவகையான பெட்டி செய்பவராக இருப்பார் என்றே என மனம் அசைபோட்டபடி இருந்தது.

பெட்டி செய்ய பனை ஓலைகளை எடுத்துச் செல்லும் பெரியவர், பணக்குடி

திருநெல்வேலியைக் கடந்தபோது மீண்டும் வெங்கடேஷை அழைத்தேன். தயாராகிக்கொண்டிருப்பதாக சொன்னான். ஆகவே வழியில் தானே காலை உணவை முடித்துக்கொண்டேன். கருங்குளம் விலக்கில் என்னை காத்திருக்கச் சொன்னான். நான் சென்று எனது வாகனத்தை நிறுத்தியபோது அங்கே இருந்த சோதனைச் சாவடி காவலர்கள் என்னையே உற்று பார்த்தனர். நான் தலைக் கவசத்தைக் கழட்டிவிட்டு, வெங்கடேஷ் வருவதற்கு நேரம் இருந்ததால், எனது பனை ஓலைத் தொப்பியை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு நின்றேன். சிறிது நேரத்திலேயே வெங்கடேஷ் வந்தான். மெலிந்த தேகம். முதல் தலைமுறையாக உயர்கல்வி படிக்கும் மாணவன். ஆனால் வெகு உற்சாகமானவன். அவனது ஆய்வுகளின் வழியாக என்னை வந்தடைந்தவன். அண்ணன் என்றே என்னை அழைப்பான்.

இருவருமாக புறப்படுபோது அங்கிருந்த காவல்துறையினர் எங்களை அழைத்தனர். எதற்காக என தெரியாமல் பதட்டத்தோடு சென்றபோது, வெறுமனே பேச்சு கொடுக்க தான் அழைத்தனர் என்பது தெரியவந்தது. எனது பனை ஓலைத் தொப்பியும் பனை ஓலைப் பையுமே அவர்களைக் கவர்ந்திருக்கிறது. அவர்கள் அருகில் சென்றபோது எங்கிருந்து வருகிறீர்கள் எங்கே செல்லுகிறீர்கள் என்று கேட்டார்கள். பனைக்காக நான் செய்து வரும் வேலைகளைக் குறித்து வெங்கடேஷ் சுருக்கமாக அறிமுகப்படுத்தினான். எங்களது பனை தேடுதலைக் குறித்து நான் சொன்னேன். அவர்களுக்கு எங்கள் தேடுதல் மீது ஓர் இணக்கம் வந்திருக்க வேண்டும், பனைக்காக எவ்வளவோ பேசுகிறீர்கள் கள்ளை குறித்து பேசக்கூடாதா என்றார். எனக்கு உற்சாகம் தாங்கவில்லை… “எனது தமிழக பயணமே அதற்குத்தான்” என்றேன்.

அப்போது அவர் கூறிய வார்த்தை கூர்மையான அவதானிப்பு கொண்ட ஒன்று. சார், பனை ஏறும் காலம் வெறும் மூன்று மாதங்கள் தான். வெறும் 90 நாட்கள், “நீங்கள் ஏன் 100 நாட்கள் மட்டும் கள்ளிறக்க போராடக்கூடாது” என்றார். எனக்கு அந்த மனிதரை அப்படியே கொண்டாடவேண்டும்போல் இருந்தது. எவ்வளவு கச்சிதமான வார்த்தை அது. இதுவரை பனை சார்ந்து இயங்கிய எவரும் கேட்காத ஒரு கோணத்திலிருந்து பிறந்த வார்த்தை. உண்மைதான், நூறு நாள் வேலைத் திட்டம் போல நூறுநாள் கள் திட்டத்தை அரசு கொடுக்க விண்ணப்பிக்கலாம் என்று சொன்னேன். உண்மையிலேயே, காவல்துறைக்குள் இருப்பவர்களுள் பலரும் சூழ்நிலைகளை அறிந்து உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் அழுத்தமே அவர்களை வெறும் கருவியாக எஞ்ச செய்கிறது என்ற புரிதலை பெற்றுக்கொண்டேன்.

நூறுநாள் கள் திட்டம் என்ற ஒரு கருத்தினை முன்வைக்கலாமா? அவைகளின் சாதக பாதகங்கள் என்ன? முதலில், கள்ளுக்கடை என்ற ஒன்றை நாம் எப்போதும் எச்சூழலிலும் வரவேற்கப்போவது இல்லை. பனையேறிகள் தங்கள் தங்கள் பனை மரத்தின் அடியில் இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற பனங்கள்ளினை விற்பனை செய்துகொள்ளலாம். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் உள்ளது போல், இந்த நூறு நாட்கள் மட்டும் அனுமதியளித்து விட்டு மிச்ச நாட்களில் கள்ளுக்கு தடை செய்வதே மிகச் சரியாக இருக்கும். இதனை ஒவ்வொரு மாவட்டத்தினரும் தங்களுடைய பனை சார்ந்த பருவத்தினை ஒட்டி, தங்களுக்கு தேவையான 100 நாளை தெரிவு செய்யும் வாய்ப்புகள் வழங்கவேண்டும். அரசு இன்று பனையேறிகளுடைய வாழ்வை பரிசீலிக்கவில்லையென்று சொன்னால், நாளைய தினம் நமது நிலம், வேலை வாய்ப்பு, உணவு, கலாச்சாரம் எல்லாம் அழிந்துபோய்விடும்.

வழியில் ஆதிச்சநல்லூரைக் கடந்து சென்றோம் அங்கே பனை மரங்களை ஒரு புல்டோசர் கொண்டு பிடுங்கி வீசிக்கொண்டிருந்தார்கள். தனியார் இடமா அல்லது புறம்போக்கா என தெரியாத அந்த இடத்தில், எவர் இவ்விதம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க இயலவில்லை. தமிழகம் முழுக்கவே பனை மரங்களை புற்களும் களைகளும் என நினைத்து வெட்டிப்போடுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆதிச்சநல்லூருக்கும் பனை மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே எனது எண்ணம். சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் நான் பயணிக்கையில் பனை மர உச்சியில் ஒரு மயில் தங்கியிருப்பதைப் பார்த்தேன். 

பனைமர அழித்தொழிப்பு, ஆதிச்சநல்லூர்

நாங்கள் செல்லும் வழியில்தானே சில பனைகள் நின்ற இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டு சாம்பல் தரையில் கிடந்தன. ஆனால் ஆச்சரியமாக பனைகள் ஏதும் மடிந்துவிடவில்லை. எரிந்தபின் அவைகள் உயிர்த்தெழுந்து மறு வாழ்வு பெற்று நின்றன. எரித்தவர்களை நோவதா அல்லது பனையின் வீரியம் குறித்து பெருமைகொள்வதா என எனக்குத் தெரியவில்லை. பல்வேறு தருணங்களில் நெருப்பு வைக்கப்பட்ட பனை மரங்கள் இவ்விதம் தப்பிப்பிழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே இவைகளை காட்டுத்தீயினை கட்டுப்படுத்த வளர்க்கலாம் என பரிந்துரை செய்யப்படுவதுண்டு.

நெருப்பிட்டபோதும் உயிர்தெழும் பனை மரச் செல்வம்.

ஸ்ரீவைகுண்டம் கடந்து செல்லும்போது ஒரு கல் மண்டபத்திற்குள் பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு கொடாப்பு கிடப்பதைப் பார்த்தேன். கொடாப்பு என்பது இடையர்கள் பணியும் ஒரு மிகப்பெரிய கூடு. பிறந்து சில நாட்களேயான ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல இயலாது, அவைகளல் வெம்மையினை தாங்கிகொள்ள இயலாது. சில வேலைகளில் நாயோ நாரியோ கவ்விச்சென்றுவிடும் ஆபாயம் கூட இருக்கிறது. ஆகவே, மிகச்சிறிய குட்டிகள் பாதுகாப்பாய் இருக்கும்படியாக செய்யப்பட்ட பனை ஓலை கூடு தான் கொடாப்பு. தமைழகம் முழுவதும் எனது பயணத்தில் பல முறை இவைகளை நான் பார்த்திருக்கிறேன். கீதாரிகள் என்று சொல்லப்படுகின்ற ஆட்டிடையர்கள் இவ்விதமான அழகிய கூடுகளை தயாரிக்கும் கலைதிறனை கொண்டிருக்கிறார்கள். இடையர்கள் வாழ்வில் பனை அவ்வகையில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சில இடங்களில், கொடப்பினை அப்படியே ஒரு கூரையாக மாற்றி அதற்கு கீழே இடையர்கள் தங்குகின்ற தற்காலிக குடிசைகளையும் பார்த்திருக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் வாழ்விடங்களை பனை ஓலைகளைக் கொண்டு அமைத்திருக்கிறார்கள். இவ்வித கட்டுமானங்களை நாம் மீட்டெடுப்பது அவசியம்.

சிதிலமடைந்து கிடக்கும் கொடாப்பு, ஸ்ரீவைகுண்டம்

இன்று சாலையோரங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் கடை போட்டிருப்பவர்கள் சில செயற்கை இழைக் குடைகளை அமைத்து போட்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏன் இப்படி பனை ஓலைகளால் எவரும் செய்வதில்லை என குறைபட்டிருக்கிறேன். ஒரு முறை பாண்டிச்சேரியிலுள்ள நண்பர்களுக்காக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுக்க விழைந்தோம். ஆனால் இறுதியில் நாங்கள் நினைத்ததுபோல் எதுவும் நடைபெறவில்லை. நமது மரபுகளை மீட்பது, அவ்வளவு எளிதாக இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டோம். நமது மரபுகளை மீட்பது நமது சூழியலை பேணுவதாக அமையும் என நான் உறுதிபட நம்புகிறேன்.

பயன்பாட்டில் இருக்கும் கொடாப்பு

தெற்கு ஆத்தூர் என்ற பகுதிக்குச் சென்றோம். பேராசிரியர் சுதாகர் வீட்டை கண்டுபிடித்து அந்த வளாக கதவினை தட்டியபோது அவர் வெளியே வந்து மகிழ்வுடன் எங்களை வரவேற்றார். நெடுநாள் பழகிய நண்பரைப்போன்ற உணர்வே அவரை பார்த்ததும் தோன்றியது. உயரமாக சற்றே காமராஜரை நினைவுறுத்தும் ஒரு தோற்றம். கைலி கட்டியிருந்ததால், பேராசிரியர் போலல்லாமல், ஒரு விவசாயி போலவே தோற்றமளித்தார். வெகு இயல்பாக இருந்தார், எங்களையும் இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் அமெரிக்காவில் தனது வேலையை ராஜினாமா செய்து இந்தியா வந்தவர், நமது மண்ணில் இருக்கும் மகத்தான ஆய்வு களங்களை தேடிச்செல்லும் விருப்பமுள்ளவர். அரண்டுபோனேன். இத்தனை எளிமையினை என்னை சுற்றி சமீபத்தில் எங்குமே கண்டதில்லை. சிறிது நேரம் உரையாடிய பின்பு ஆளுக்கொரு டவல் கொடுத்தார். புரியாமல் வாங்கிகொண்டோம். பின்னர் எங்களை அழைத்துக்கொண்டு பானை ஓடுகள் கிடைக்கும் இடத்திற்கு போவோம் என்றார். அவரது காரிலேயே சென்றோம். அவரது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட இருக்காது. அங்கே ஒரு மிகப்பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலிருந்து சிலர் மணல் அள்ளியிருந்தார்கள், அதிலிருந்து சில புதைப்படிவங்களை எடுத்து காட்டினார். நத்தைகள் போல ஆனால், விதவிதமான வடிவங்கள் அங்கே கேட்பாரற்று கிடந்தன. அனைத்தும் பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானவைகள். உண்மையான ஆய்வுகள் நமது கிராமத்திலிருந்தே துவங்குகின்றன என்பதை அறியும்விதமாக இருந்தது.

ஆய்வு மாணவர் வெங்கடேஷ் மற்றும் பேராசிரியர் சுதாகர்

அங்கே குளத்தில் நீர் தேங்கியிருக்கும் இடம் வந்ததும் இனி துண்டைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றார். துண்டைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கினோம். எங்கே போகிறோம் என்றே தேரியாத ஒரு திசையில் அவர் முன்னால் நடக்க அவரைத் தொடர்ந்து நானும் என் பின்னால் வெங்கடேசும் நடந்து சென்றோம்.  இங்கே வருவதற்கு முன்னால், ஏதோ என்னை ஒரு தொல்லியல் களத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பானையோடுகளைக் காட்டுவார் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், மனிதர் எங்களை தண்ணீரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். உள்ளபடியே எனது வாழ்வில் இது ஒரு புது அனுபவம். இப்படி தண்ணீரில் இறங்கி எனது ஆய்வுப்பயணத்தை இதுவரை நான் முன்னெடுத்ததில்லை. கணுக்கால் அளவிலிருந்து முழங்கால் வரைக்கும் ஆழத்தில் முட்கள் குத்த, புற்கள் கால்களில் தட்டுபட நடந்தோம். குளத்தின் மையப்பகுதி வரும்வரை முட்டளவு நீரில் நடந்தே சென்றோம். அங்கே நீர் பிடிப்பு இல்லாத சற்றே மேடாக ஒரு இடம் நோக்கிச் சென்றோம். அங்கிருந்தும் மணல் அள்ளியிருந்தார்கள். பார்க்கும்போது தொல்லியல் எச்சத்தினை கண்டடைவதற்கான எந்த தடயமும் அங்கு காணப்படவில்லை.

நானும் பேராசிரியர் சுதாகர் அவர்களும் பானை ஓடுகளை தேடிச்செல்லும் பயணம்

ஏன் எங்களை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். உண்மையிலேயே இவர் ஏதேனும் ஆய்வுகள் செய்திருக்கிறாரா? அல்லது சிலரைப்போல கவன ஈர்ப்புக்காக இல்லாத கதைகளைச் சொல்லி, நம்மை திசை திருப்புகிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. நடுக்குளத்தில் கொண்டுவந்து இங்கே தான் தொல் நாகரீகம் இருந்ததாக கதை விடப்போகிறாரா என உண்மையிலேயே சந்தேகித்தேன். ஏனென்றால், தொல்லியலாளர்கள் எவரும் அங்கே வந்து போனதற்கான எந்த சான்றுமே அங்கே இல்லை. பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு கூட இல்லை. என்ன சொல்ல போகிறார் என கவனிக்க ஆரம்பித்தேன்.

சுதாகர் சார் சொன்னார். இந்த குளத்தில் மண் அள்ளுவது எனது நண்பர் தான், ஒருமுறை அவர் எடுத்துச்சென்ற மணலில் பானை ஓடுகள் இருந்ததைப் பார்த்தேன். அவைகள் மிக பழைமையான பானை ஓடுகள் போலவே கானப்பட்டதால் நான் ஒரு சில மாதிரிகளை லக்னோவிற்கு அனுப்பியிருக்கிறேன். இந்த பானை ஓடுகளுக்கு சுமார் 2200 ஆண்டு பழமை இருப்பதாக தொல்லியலாளர்கள் கணிக்கிறார்கள்.  ஒருவேளை அதிகாரப்பூர்வ தகவல்கல் வரும்போது இதன் பழைமை குறித்து நாம் மேலும் திட்டமாக அறியமுடியும். ஆகவே, அதிகாரப்பூர்வமான தகவல் வரக் காத்திருக்கிறேன் என்றார். சிறப்பு என்னவென்றால், பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருக்கிறது என்றார். பானை ஓடுகளுக்குள் சுண்ணாம்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எதனைக் குறிப்பிடுகிறார் என எனக்கு முதலில் விளங்கவில்லை. நமது வார்ப்பு அப்படி, எல்லாம் சற்று மெதுவாகத்தான் புரியும். உண்மையிலேயே சுண்ணாம்பு இருந்ததா என்று கேட்டேன். வேண்டுமென்றால் என்னோடு நீங்களும் இறங்கித் தேடுங்கள் என்றார்.

மணல் அள்ளிய இடத்தில் முட்டளவு நீருக்குள் இறங்கி கைகளை விட்டு துழாவினேன், எங்கு கை வைத்தாலும், உடைந்த மண் பாண்ட துண்டுகள் கரத்தில் கிடைத்தபடி இருந்தன. நான் முதலில் எடுத்த சில ஓடுகளில் உண்மையிலேயே சுண்ணாம்பு இல்லை, சில ஓடுகள் மென்மையாக சுண்ணம்பு கொண்டிருந்தன.இங்கு எப்படி மண் பாண்ட துண்டுகள் வந்திருக்கும் என எண்ணியபடி தேடுதலைத் தொடர்ந்தேன். சற்றும் தாமதிக்காமல் என் கரத்தில் அகப்பட்ட ஒரு பானை ஓட்டில் சுண்ணாம்பு படிந்திருந்தது. கைகளால் அதனை அழுத்தி தேய்த்து தண்ணிரில் கழுவியவுடனேயே அவைகள் கரைந்து போயிற்று. சுதாகர் சொன்னார். கழுவாதீர்கள், அப்படியே எடுங்கள் என.  மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு ஓடிக்கொண்டீருந்தது. எத்தனையோ தொல்லியல் எச்சங்கள் கிடக்கும் இந்த குளத்தில் பானை ஓடுகள் மீது சுண்ணாம்பு படிவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிப்பிகள் வெயில் காலத்தில், சூட்டினால் வெந்து நீர் பிடிப்பு ஏற்படும் சமயத்தில் சுண்ணாம்பாக மாறி பானை ஓடுகளில் படிந்திருக்கலாமே என நினைத்தேன். ஆனால், எல்லா ஓடுகளிலும் சுண்ணாம்பு ஒன்றுபோல் படிந்திருக்கவில்லை.

ஆற்றில் இறங்கி பானை ஓடுகளை எடுத்த போது, தெற்கு ஆத்தூர்

மீண்டும் தேடுகையில் அட்டகாசமான வேறு ஒரு துண்டு கிடைத்தது. முன்பை விட அதிக சுண்ணாம்பு படிந்திருக்கும் ஒரு பானை ஓடு. அப்போது தான் எனக்கு எல்லாம் உறைத்தது. சார்…… என்று கூவினேன், கும்மாளமிட்டேன், வெடித்து சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன் என சத்தமிட்டேன். எனது சந்தோஷம் கரைபுரண்டோடிய தருணமாக அது அமைத்திருந்தது. என்னை குதூகலப்படுத்திய அந்த ஓடோ, சுண்ணாம்பு மிகச்சரியான அளவில் படிந்திருந்த ஒரு ஓடு. அவ்விதமான ஓடுகளை நான் வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். ஆம் அந்த பானை ஓடுகளை நாம் இனிமேல் பானை ஓடுகள் எனக் கூறக் கூடாது, ஏனென்றால் பதனீர் கலய ஓடுகள் அவைகள். சுண்ணாம்பு தடவிய பதனீர் கலயங்கள் தான் அவை. எதற்காக கலயங்களில் சுண்ணாம்பு தடவ வேண்டும்? வேறெதற்கு? பனை ஏறுகிறவர்கள் பதனீரை எடுப்பதற்காகத்தான் சுண்ணாம்பைத் தடவுவார்கள். காலப்போக்கில், சுண்ணாம்பு அந்த பானை ஓட்டின் அடியில் படிந்துவிடும். அப்படியானால் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மக்கள் பனையேறியிருப்பதுடன் பதனீரும் இறக்கியிருக்கிறார்கள். அது ஒரு மாபெரும் தகவல்.

சுண்ணாம்பு படிந்திருக்கும் பானை ஓடு, தெற்கு ஆத்தூர்

கரையில் ஏறி வெற்றிக்களிப்புடன் அந்த பானை ஓட்டைப் பார்த்தேன். நானும் ஒரு புதை படிம ஆய்வாளன் என என்னை ஒருபடி ஏற்றிவிட்ட பானைத்துண்டு அது. பெருமிதத்துடன் எனது கரங்களில் அதனை ஏந்திக்கொண்டேன். இப்படியான ஒரு பொற்தருணத்தை நான் சிறிதும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கள் குறித்து அதிக தகவல்கள் இருக்கின்றன ஆனால் பதனீர் குறித்த குறிப்புகள் இல்லை. பேராசிரியர் வேதசகாய குமார் கூட, என்னிடம், பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகே பதனீர் எடுத்து கருப்பட்டி காய்ச்சும் விதம் தோன்றியிருக்கும் என்று தனது யூகத்தை முன்வைத்தார். அப்போது என்னிடம் தகுந்த ஆதாரங்கள் இல்லை, ஆனால், இங்கு வந்த பிற்பாடு, தெற்கு ஆத்தூருக்கும் பனையேறிகளுக்கும் சங்க காலம் முதல் பெருத்த தொடர்பிருக்கும் என நான் உள்ளூற உறுதியாக நம்பினேன்.

தாமிரபரணி ஆற்றோரங்களில் கிடைக்கும் பானை ஓடுகள் மற்றும் பொருட்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனைச் சுற்றிலும் இருக்கின்ற பனை மரங்களுக்கும் அவைகளுக்கும் தொடர்புகள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணங்கள் வலுவாக ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. வெகு சமீபத்தில் கூட எனது குஜராத் பயணங்களில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதை பதிவு செய்திருந்தேன். லோதல் பகுதிகளிலும் பனை மரங்கள் இருந்ததைப் பார்த்த ஒரு உணர்வு நீடிக்கிறது. குஜராத் பகுதிகளில் பீல் பழங்குடியினருள் ஒரு இனக்குழுவினருக்கு தாட்வி என்ற பெயர் இருக்கிறது. தாட்வி என்றால் பனை சார்ந்திருக்கிறவர் என்றே பொருள். குஜராத்தில் நர்மதா நதியினை ஒட்டி பனை மரங்கள் செழித்து வளருவதை பார்க்கலாம்.

சுண்ணாம்பு தடவிய கலசங்களை பருவ காலம் அல்லாத நேரங்களில் கீழே இறக்கி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவைகளின் கீழ்பகுதியில் சுண்ணாம்பு படிவத்தின் அளவு மிகுதியாகவும், அதன் விலா பகுதிகளில் தீற்றலாகவும் மேல் பகுதிகளில் இல்லாமலும் இருக்கும். பதனீர் இறங்கும் அளவைப் பொறுத்து தான் பானைகளில் சுண்ணாம்பு தடவுவார்கள்.  அடிப்பகுதியில் சுண்ணாம்பு தேங்கிவிடுவதால், அவைகள் நாளாவட்டத்தில், பல அடுக்குகளாக வெள்ளையடித்து இறுகிய சுண்ணாம்பு பாளம் போல் மாறிவிடும். ஆகவேதான், பனை மரத்தினை கீழிருந்து பார்க்கும்போது சுண்ணாம்பு தடவிய பானைக்கும் கள் இட்டிருக்கும் பானைக்கும் வித்தியாசத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். பானையின் அடிப்பாகம் மெல்லிய ஈரப்பதத்துடனிருந்தால் அது கள் இட்டிருக்கும் பானை எனவும், ஈரம் இல்லாது இருந்தால், அது சுண்ணாம்பு தடவிய பானை என்றும் அறியலாம். சுண்ணாம்பு பானையிலிருந்து பதனீர் கசிவதையும் நொதித்தலையும் தடுக்கிறது.

சுண்ணாம்பு பயன்பாடு தமிழகத்தில் மட்டுமால்லாது ஆசிய கண்டம் முழுக்கவே உள்ளது. வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து சுவைக்கும் வழக்கம் தென்கிழக்காசியாவில் தொல்பழங்காலம் தொட்டே உள்ள வழக்கமாகவே இருந்திருக்கிறது. ஆகவே கள்ளிறக்கும் பானையில் சுண்ணாம்பு தடவி பதனீர் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால் சுண்ணாம்பு என்பது வேதியல் பொருள். இயற்கையாக கிடைக்கின்ற ஒரு உணவுடன் வேதியல் பொருளினை சேர்ப்பது முக்கியமாக இருந்திருக்கிறதா? சுண்ணாம்பு சத்து வேண்டும் என்பதற்காக இவ்விதம் சேர்க்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று இயற்கை பொருளை உண்பதன் அவசியத்தை வலியுறுத்தும்போது, இயற்கையாகவே நொதித்தலைக் கட்டுப்படுத்தும் முறைமைகள் இருந்திருக்கிறதா என்ற கேள்விகள் எழுவது இயல்பு. எனது தேடுதலில் இயற்கை பொருட்களை பயன்படுத்தும் வழிமுறைகளை நான் இதுவரை தமிழகத்தில் பார்க்கவில்லை. ஆனால், தென்கிழக்காசிய நாடுகளில் சில மரங்களின் துண்டுகளை வெட்டிப்போட்டு நொதித்தலைக் கட்டுப்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒருவேளை தமிழகத்திலும் அவ்வித வழக்கங்கள் இருந்திருக்கலாம், ஆனால் சுண்ணாம்பு எளிமையாக கிடைத்ததாலோ என்னவோ, தமிழகத்தில் சுண்ணாம்பு பயன்பாட்டிற்கு பனையேறிகள் மாறியிருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

கையிலிருந்த ஓடு கூட கலயத்தின் தடிமனுடன் தான் இருக்கிறது என்பதை மீள மீள பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனைப் பயணத்தில் இது ஒரு மைல் கல். பேராசிரியருக்கு நன்றி கூறினேன். அவர் அதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என ஒரு குழந்தைபோல் சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சுண்ணாம்பிற்கு என்ன அர்த்தம்? மீண்டும் எனக்குள் சந்தேகம் ஓடியது.  யாரேனும் சில பானைகளை குளத்தின் நடுவில் எப்போதாவது கொண்டு போட்டிருக்கலாம். வீணாக நாமே பெரிய அறிஞர் போல காட்டிக்கொள்ளக்கூடாது என நினைத்தேன். ஆனால் எனக்கு உள்ளூர நன்றாகவே தெரிந்தது, எனது கரத்திலிருக்கும் ஓடு எனது முதாதையர்கள் பதனீர் இறக்கிய ஓடு தான். அதனை நான் நிறுவிவிடமுடியுமா என்பதே எனக்குள்ள சவால். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இதற்குமேலும் செல்லவேண்டுமென்றாலும் செல்லலாம் என்று துணிந்துவிட்டேன். 

பேராசிரியர் அங்கிருந்து எங்களை கொற்கைக்கு அழைத்துச் சென்றார். கொற்கை ஒரு துறைமுக நகரமாக பண்டிய மன்னர்களின் வெளிநாட்டு வணிகத்தை நிற்ணயிக்கும் ஒரு முக்கிய இடமாக இருந்தது. முத்து குளிக்கும் மீனவர்களும், முத்து வியாபாரிகளும் மிகுந்திருந்தார்கள். இன்றும் அக்காசாலை என்று அழைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துவோர் உண்டு. கடல் இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் விலகி சென்றுவிட்டது. இன்று கண்ணகி அம்மன் கோவில், ஒரு குளத்தினுள் அமையப்பெற்றிருக்கிறது. கொற்கையினைச் சுற்றி பனை மரங்களே செழித்து வளர்ந்திருக்கின்றன. அனைத்தும் நூறாண்டுகள் கடந்த நெடிந்துயர்ந்த பனை மரங்கள்.

பேராசிரியர் சுதாகர் கொற்கையில்

மதியம் பேராசிரியர் வீட்டிற்கு வந்து உணவுண்டோம். சுடசுட சுவையான் மீன் குழம்பு சாப்பாடு அவரது தாயார் எங்களுக்கு ஆயத்தம் செய்திருந்தார். சாப்பிடும்போது, வெங்கடேஷ் அவர்களின் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார். தம்மாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். வெங்கடேஷ் தனது ஆய்வுகளுக்கு இவைகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். நானும் வெங்கடேஷும் சுதாகர் சாருக்கு நன்றி கூறி புறப்பட்டோம்.

திரும்பிச் செல்லும் வழியில் பால்பாண்டி என்ற நபரைக் குறித்து விசாரித்தேன். பால்பாண்டி என்பவர், பனை ஓலைகளில் பல்வேறு வடிவங்களைச் செய்யும் ஒரு கலைஞர்.  பனை ஓலையில் அவர் செய்த காமராஜர் முழு உருவச் சிலை அவரை ஒரு முக்கிய கலைஞராக தமிழகமெங்கும் அறிமுகப்படுத்தியது. பின்னர் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் திரு உருவச்சிலையினையும் அவர் செய்ததாக பத்திரிகை மூலமாக அறிந்துகொண்டேன். பல தருணங்களில் அவரை சந்திக்க முயன்றும் முடியவில்லை ஆகையால் இம்முறை தவறவிடக்கூடாது என முடிவு செய்து வெங்கடேஷ் அவர்களின் உதவியைக் கேட்டேன்.

வெங்கடேஷ் அவரைக் குறித்து அறிந்திருந்தான். நன்பர்களின் உதவியுடன் கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் சென்றபோது அங்கே வீட்டில் அவர் இல்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. நான் அங்கிருந்த குளக்கரையில் காணப்பட்ட பனை மரங்களைத் தேடிச் சென்றேன். வரிசையாக குளத்தை சுற்றி நிற்கு பனை மரங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.  தன்படம் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அப்போது, பால்பாண்டி அவர்கள் வந்துவிட்டார்கள், உடனேயே வாருங்கள் என வெங்கடேஷிடமிருந்து அழைப்பு வந்தது.

பால்பாண்டி கப்படா மீசை வைத்திருப்பவர். சிரிப்பில் பச்ச புள்ள தெரிகிற கள்ளமற்ற மனிதர். நிறுத்தாமல் பேசிக்கொண்டே செல்லும் தன்மை கொண்டவர். அவர் பெற்ற விருதுகள், அவர் செய்த சாதனைகள் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போனார். ஒரு முறை தஞ்சாவூருக்கு பணை ஏறப்போன இடத்தில் அழைத்துக்கொண்டு போனவர்கள், இவர்களைக் கைவிட, சாப்பாட்டிற்கு வழியில்லாமல், பனையேறி ஓலைகளை வெட்டிப்போட்டு, அந்த ஓலையில் பொருட்களைச் செய்து, அவைகளை விற்று சொத்த ஊர் திரும்பிய திருப்புமுனைக் கதையே அவரை பனை ஓலைக் கலையின் பால் திருப்பியிருக்கிறது. சமீபத்தில் மூன்று மாதங்கள் இரவும் பகலுமாக அமர்ந்து பிழை திருத்தி அவர் செய்த காமராஜ் உருவச்சிலை தான் அவரது வாழ்வை புரட்டிப்போட்டிருக்கிறது.

கருங்குளம் பால்பாண்டி அவர்களுக்கு பனை விதைகளை கொடுத்தபோது

மாட்டு வண்டி, மாட்டுத் தலை, பொருட்களை எடுத்துச் செல்ல சூட்கேஸ்,  செருப்பு, காமராஜர் முன்னால், பள்ளிக்கூடம் செல்லும் இரு குழந்தைகள் என வித்தியாசமாக அவரது படைப்புகள் காணப்பட்டன. அத்தனையும் பனை ஓலைகளைக் கொண்டு மட்டுமே செய்கிறார். நாங்கள் சென்றபோது தமிழக முதலமைச்ச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் திருவுருவச் சிலையினை அவர் செய்து வைத்திருந்தார். பனை ஓலையில், இவ்விதமான வடிவங்கள் என்பவை புதிதே. எவரும் இதுவரை இப்படியான முயற்சிகளை எடுப்பது இல்லை. அவரை சந்தித்தது எனக்கு பெருமகிழ்வளிப்பதாக இருந்தது.

அவரது பொருட்களில் காணப்பட்ட குறையென்பது அனைத்திற்கும் தாராளமாக வர்ணம் பூசியிருந்தார். இரசாயன வர்ணங்கள் ஓலைகளைக் காக்கும் என அவர் எண்ணியிருக்கலாம். இயற்கை சாயங்களை பயன்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும் என என் மனதிற்குப் பட்டது. எதிர்காலத்தில் பல்வேறு தலைவர்கள் உருவச்சிலையினையும் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தினை முன்வைத்தார்.

பனை ஓலையில் இவ்விதமான மனித மற்றும் மிருக உருவங்கள் செய்வது இதுவே முதல் முறை. ஆகவே, இவைகளில் ஒருமை கூடவில்லை என்பது உண்மை. கடுமையான உழைப்பின் மூலம், இவருக்கு பின் வரும் தலைமுறைகள் சில அடிப்படைகளை முன்னெடுத்து செல்லுமானால், எப்படி சிற்பிகளின் மூலப்பொருட்கள் இருக்கின்றனவோ அது போலவே, பனை ஓலைகளும் முக்கிய கச்சா பொருளாக மாறிவிட வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அவருக்கு பனை விதை ஒன்றினைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

தம்பி வெங்க்டேஷை அவனது வீட்டில் கொண்டு விட்டேன். அவனது அப்பா செங்கல் சூளையில் கணக்கு பார்க்கிறவர். ஒரு தம்பிம் ஒரு தங்கையும் உண்டு. மாலை 7 மணி தான் ஆகியிருந்தது, அவரது அம்மா சாப்பிட்டு செல்லுங்கல் என்றார். மறுக்க முடியவில்லை. எளிய ஆனால் அன்பான உணவு எனக்கு பகிர்ந்தளித்தார்கள். அவர்கள் வாழும் பகுதியில், நாடார்கள், பனை மரங்களை துணிந்து அழிப்பதும், பனை மரங்களை பேணி பாதுகாப்பது இஸ்லாமியர்கள் என்பதுமாக கேள்விப்பட்டேன்.

வெங்கடேஷ்சுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  வெங்கடேஷ் தான் அவர்கள் வீட்டின் எதிர்காலமே. அவன் முனைவர் ஆய்வு முடித்து நல்ல வேலை பெற்று குடும்பத்தை கரை சேர்க்க வேண்டிய பொறுப்புள்ளவன். அவனை வாழ்த்தினேன். என்ன தேவை என்றாலும் தயங்காமல் கேள் என்றேன்.

அன்று இரவு மீண்டும் ஒரு 130 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது எனது வாகனத்தை எடுத்தேன். கடவுளை வேண்டி எனது வாகனத்தை உயிர்ப்பித்தேன்.  எந்த சிக்கலும் இல்லாத மூன்று மணி நேர பயணம். நேராக வீடு வந்து சேர்ந்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 14

மார்ச் 29, 2021

நார்முடி காலம்

அக்டோபர் 17 ஆம் தேதி மித்திரனுடைய பிறந்தநாள். மிடாலக்காட்டில் எங்களோடு வாடகை வீட்டில் இருந்தவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்தோம். அங்கே ஏகப்பட்ட சிறுவர்கள் உண்டு. நாங்கள் வாடைகை இருந்த வீட்டிற்கு கீழே தானே பாத்திரங்கள் கிடைக்கும் ஆகவே, அங்கிருந்து பாத்திரம் வாங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டோம். பொதுவாக நாங்கள் பிறந்தநாள் கேக் வாங்குவதில்லை. கடந்த முறையும் இங்கிருக்கும்போது மித்திரனுடைய பிறந்தநாளை முன்னிட்டு எல்லா குழந்தைகளுக்கும் நுங்கு வெட்டிக்கொடுத்தோம். இம்முறை, மித்திரனுடைய ஜஸ்டின் மாமா கேக் வாங்கி கொண்டாடினார்கள். நாமும் தான் எத்தனை நாளைக்கு சாதாரண கேக்கிற்கு எதிராக கொள்கை என கொடிபிடிப்பது?

மிடாலக்காட்டில் தான் நான் போவாஸ் பனையேறியை சந்தித்தேன். ஆரோனும் மித்திரனும் சந்தித்த முதல் பனையேறி அவர் தான். அறுபது வயதை தொடும் மனிதர். சலிப்பில்லாமல் இன்றும் பனை ஏறுகிறார். அவர் மிடாலக்காட்டில் இருப்பதால் அவரை சந்திக்கச் சென்றேன்.

போவாஸ் அவர்களுடன் மித்திரனும் ஆரோனும்

மிடாலக்காட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு கத்தோலிக்கத் ஆலயம் இருந்தது. பாதிரியார் பேசுவது அதிகாலை வேளையில் எங்கள் வீடு வரை கேட்கும். ஒரு நாள் நான் அங்கே சென்று அந்த பாதிரியாரை சந்தித்தேன். பாதிரியார் சகாய பெலிக்ஸ் இளவயதுடையவர். ஓவியம் வரையும் திறன் கொண்டவர். எனது பனை சார்ந்த முன்னெடுப்புகளை செவிமடுத்து கேட்டார். அவரது தந்தையும் ஒரு பனையேறி தான் என்றார். நமது திருச்சபையில் உள்ளவர்களுக்கு ஒருநாள் பனை சார்ந்த விழிப்புணர்வு அளிக்கவேண்டும். அதற்காக ஒருநாள் பனம்பழத்தினை மக்களுக்கு உண்ணக் கொடுப்போமே என்றேன். செய்யலாமே என்றார்.

மித்திரன் சேகரித்த மிகப்பெரிய பனம்பழம்

எனது பிள்ளைகள் ஆரோன் மற்றும் மித்திரன் உதவியுடன், பனம் பழங்களைத் தேடி எடுத்து குளிர் சாதனப்பெட்டியில் இட்டுவைத்தேன். மூன்று நாட்கள் தேடுக்கையில் கிட்டத்தட்ட 18 பழங்களே கிடைத்தன. போவாஸ் அவர்கள் தனது அறிவாளை எடுத்துக்கொண்டு உதவிக்கு வந்தார். மிக கூர்மையான அறிவாள் இருந்தாலே பனம்பழங்களை சரியாக பாளம் பாளமாக கீறி எடுக்க இயலும். திருச்சபையினருக்கு 18 பழங்கள் போதாது என்று போவாஸ் அவர்கள் கூறினார்கள். “இது என்ன எக்காட்டுகதுக்கா” என சிரித்தார். ஆனால் கை வலிக்க அத்தனை பழங்களையும் அவரே சீவியெடுத்து கொடுத்தார். அந்த நேர்த்தி, அரிவாள் பிடிக்கும் கைகளுக்க்கு மட்டுமே உரித்தானது. அன்று இரவே பானையின் அடியில் பனம்பழ நெட்டுகளைப் போட்டு சீவிய பனம்பழங்களை அடுக்கி மேலே சிறிது கருப்பட்டி போட்டு வேகவைத்தோம். 

போவாஸ் பனம் பழங்களை சீவுகிறார்

மறுநாள் காலை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய கூட்டம் திருச்சபையின் மைதானத்தில் திரண்டது. ஒரு மிகப்பெரிய காகிதத்தில் பனை என எழுதி அதையே ஒரு பனை மரத்தில் பனையேறி இருப்பது போன்ற ஒவியமாக பாதிரியார் பெலிக்ஸ் மாற்றினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திவிட்டு பனை மரத்தினை காக்கும் அவசியத்தை குறிப்புணர்த்தினார். அனைவரும் வரிசையில் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்றார். ஐந்தே நிமிடத்தில் அத்தனையும் காலியாகின. பானையில் தேங்கியிருந்த நீரினை சுவைக்க அவ்வளவு போட்டி நடைபெற்றது. இப்படியான ஒரு நிகழ்வு இதுவரை எந்த திருச்சபையிலும் நடந்திருக்காது என்றே எண்ணுகிறேன். பனம்பழ சுவையானது இன்றளவில் மறந்து போய்விட்ட ஒன்றாகவே இருக்கிறது.

பாதிரியார் சகாய பெலிக்ஸ்

போவாஸ் அன்று ஆலயத்திற்கு வரவில்லை. எப்போதுமே அப்படித்தான், பனையேறிகள் ஆலயத்திற்குப் போவதில்லை. நான் தான் அவரை முதன்முறையாக  அறிமுகப்படுத்தினேன் என்று பாதிரியார் கூறினார். ஆனால் அவரது மனைவி அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தேவையான அளவு பானம்பழங்கள் வேண்டுமென்றால், ஒரு கோயிலுக்கு குறைந்தபட்சம் பத்து பனையேறிகளாவது இருக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறுமா என்பது சந்தேகமே. 

பனம்பழங்களை உண்ண முண்டியடிக்கும் சிறுவர்கள்

போவாஸ் அவர்களை நான் சந்தித்து பனை விதைகளைக் கொடுத்தேன். நாங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் பனை விதைகளை இணைந்தே சேகரித்திருக்கிறோம். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார். இந்த முறையும் பனையேற துவங்கியிருகிறார். எனது தொப்பிக்கு சில பனை நார்கள் தேவை உரித்து கொடுக்க இயலுமா என்று கேட்டேன். மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன் என்றார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இயற்கை இழை நாற்காலி

அன்று மதியம் ஜாய்சன் ஜேக்கப் என்ற பனை நார் கட்டில் பின்னும் நண்பர் என்னைத் தொடர்புகொண்டார். நேரம் இருப்பின் வாருங்கள் என்றார். எனது வாகனத்தை நாகர்கோவிலில் வைத்துவிட்டு, அவருடைய இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன். எனக்கு பனை நார் நார்க்காலிகள் மீது பெரு விருப்பம் உண்டு. பனை நார் நார்காலிகள் என்பவை பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கின்றன. சாய்வு நார்காலியாக, கைபிடியுள்ள நாற்காலியாக, முக்காலியாக, சுழல் நாற்காலியாக என அவைகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கிண்றன. சிறு வயதில், பேருந்து மற்றும் லாறிகளில் ஓட்டுனர் இருக்கைகள் பனை நார் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன. வாகன ஓட்டிகளுக்கு சூடு தாக்காமல் இருக்க இவ்வகை நார் போட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவைகள் பிளாஸ்டிக் இழைகளாக மாறி தற்போது குஷன் நாற்காலிகளாக மாறிவிட்டன.   

பனைநார் கொண்டு செய்யப்பட்ட கையடக்க பெட்டி – நூறு வருட பழைமையானது

பனை நார் கொண்டு அரசு பேருந்து ஓட்டுனர் இருக்கையினை அமைக்கவேண்டும் என்று ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டால், விழுந்துகிடக்கும் பனையேறிகள் பலர் வாழ்வுபெறுவார்கள். ஆனால், அரசு எவ்வகையிலும் இவ்வித எளியகலைஞர்களை பொருட்டாக கொள்ளுவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு பனை நாரால் செய்யப்பட்ட ஒரு சாய்வு இருக்கை வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அப்படி ஒரு சாய்வு இருக்கை அமைக்கவேண்டுமென்றால் குறைத்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் ஆகிவிடும். இப்போது அவ்வளவு செலவளிக்க இயலாது, ஆகவே, இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலில் அதனை இணைத்துள்ளேன்.

மருந்துவாழ் மலையின் அருகிலிருந்து நாகர்கோவில் நோக்கி எடுத்த புகைப்படம்

ஜாய்சன் அன்று எனக்கு மருந்துவாழ் மலையினை சுற்றிக்காட்டினார். மருந்துவாழ் மலை, பனை என்ற அரணால் சூழப்பட்ட மலை என்பதை அன்று தான் நான் கண்டுகொண்டேன். முழு மலையையும் சுற்றி வந்த போது, இத்தகைய அழகினை எப்படி தவறவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வழுக்கம்பாறையை அடுத்த பொற்றையடியை நெருங்குகையில் மருந்துவாழ் மலை நமது கண்களுக்குத் தெரியும். இராமரின் தம்பி, இலக்குவன் இலங்கையில் அடிபட்டு கிடக்கும்போது, அனுமனிடம் இமய மலையிலிருந்து சஞ்சீவி மூலிகையினை எடுத்துவர பணிக்கிறார்கள். இமயம் சென்ற அனுமனால் மிகச்சரியாக சஞ்சீவி மூலிகையினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, முழு மலையையும் அப்படியே தூக்கி இலங்கைக்கு எடுத்து செல்லுகிறார். செல்லும் வழியில் அவரது கரத்திலிருந்து விழுந்த சிறு துண்டு தான் மருந்துவாழ் மலை என வாய்மொழி கதையாக கூறுகிறார்கள். மிக முக்கிய மூலிகைகள் இங்கே கிடைப்பதால், வனத்துறையின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

இனிய மாலை நேர மருந்துவாழ் மலையின் அடிவாரம்

இது மருந்துவாழ் மலை என்றால் அதனைச் சுற்றி நிற்பது அனைத்துமே மருந்துவாழ் பனை என்றே கொள்ள முடியும். அனைத்து வகையான சித்த மருத்துவத்திலும், இனிப்பு சேர்மானமாக கருப்பட்டியும், கற்கண்டும் இணைவதை நாம் கண்டுகொள்ள முடியும். ஒத்தை மரக் கள்ளு, மருந்துகள் இட்ட கிழிகளில் ஊறிய கள், போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். மருந்துவாழ் மலை உச்சியில் கூட ஒரு பனை தனியாக நின்றது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரத்தை கொண்ட சிகரம் உள்ள இம்மலையில், கண்டிப்பாக 1500 அடிகளுக்கு மேல் தான் இப்பனை நின்றிருக்கிறது. இது சராசரி பனை மரத்தின் வாழ்விடத்தை விட உயரமானது. ஆகவே பனையால் 1500 அடிகளுக்கு மேலும் தாக்குப்பிடிக்கும் தன்மை இருப்பதை இந்த பனை நிறுவுகிறது.  சிவலிங்கம் என்ற பனையேரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் சிறு வயதில் மேலே சென்று சாப்பிட்டு போட்ட கொட்டை அது என்றார். அத்தனை உயரத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்ப்பது அந்த மலைக்கு ஒரு தனி அழகைச் சேர்த்தது. மலையைச் சுற்றிய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. ஜாய்சன் அவருடன் இருந்த தருணத்தை செழுமைப்படுத்தினார். வழியில் ஆறடி நீள பாம்பு ஒன்று எங்களுக்கு முன்பதாக சாலையில் குறுக்காக கடந்து சென்றது.

மருந்துவாழ் மலையின் உச்சியில் பனை மரம்

அந்த மாலை நேரத்தில் மருந்துவாழ் மலையினை சுற்றி வந்தது ஒரு அற்புத அனுபவம். கிரிவலம் என்ற அமைப்பு இவ்வித அனுபவங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்போலும். சீர்திருத்த நற்செய்தியாளரான ரிங்கல் தெளபே அவர்கள், மைலாடியிலுள்ள தனது வீட்டிலிருந்தபடியே இந்த மலையினைப் பார்த்து வியந்திருப்பதை பதிவு செய்திருக்கிறார். இந்த மலைப்பகுதி அனேகருக்கு புகலிடமாகவும் இருந்திருக்கிறது. இன்றும் சில சித்தர்கள் இந்த மலையில் வசிக்கிறார்கள். மருந்துவாழ் மலையில் சரி பாதி தூரம் ஏறியிருக்கிறேன். அதிகாலையில் ஏறுவதுதான் சிறப்பானது. மீண்டும் மலை உச்சிக்கு போகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

சற்றே இருட்டும் நேரத்தில் கொட்டாரத்தில் இருக்கும் அவரது நார் கட்டில் பின்னும் கடைக்கு கூட்டிச் சென்றார். பனை நார் குறித்து தொடர்ந்து பேசினோம். பனை ஓலைகள் குறித்து தமிழகம் தழுவிய ஒரு விழிப்புணர்வு இன்று உண்டு. ஆனால், பனை நார் குறித்து அத்தகைய விழிப்புணர்வு இல்லை. மேலும் பனை நார் இன்று மிகவும் அரிதான பொருளாகி வருகிறது என்றும் இத்தொழில் அதிகநாட்கள் நீடிக்காது என்றும் ஜாய்சன் கூறினார். மனம் பிசையும் வார்தைகளாகவே அவருடனான உரையாடல் இருந்தது.

பனை நார் கட்டில்களைப் பின்னுவது போல அகலத்தைக் குறைத்து பெஞ்சு போல செய்தால் என்ன என ஜாய்சனிடம் கேட்டேன். எனக்கு ஒருவேலை அவ்விதமான ஒரு பெஞ்சு கிடைத்தால், சில ஆலயங்களுக்கு இவ்விதமான பென்சுகளை நாம் பரிந்துரைக்கலாமே என்றேன். அது ஒன்றும் சிரமமில்லை என்றார். அனேக ஆலயங்களில் பனை நார் அல்லது ஈறல் போன்றவைகளிலிருந்து உரித்த நார்களைக் கொண்டு சாய்வு பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பணப்புழக்கம் வந்தபோது முழு மரத்தையும் அறுத்து அமைக்கும் பெஞ்சுகள் தேவாலயங்களை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. புதிதாக அமைக்கும் ஆலயங்கள், இவ்விதமாக பனை நார் பெஞ்சுகளை அமைப்பது, எண்ணற்ற முதியோர்களுக்கும் கலைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பளிக்கும் என நம்புகிறேன்.

மும்பையில் துவங்கிய பாம்பே ஃபுட் கோர்ட் (Palmbay Food Court) உணவகத்திற்காக வாங்கிய பனை நார் பெஞ்சுகள்

ஜாய்சனுடைய தந்தையார் பனை நார் கட்டில் பின்னுபவர் தான். ஜாய்சன் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு நட்சத்திர விடுதிகளில் வேலை பார்த்திருக்கிறார்.  ஒரு விபத்தினை சந்தித்து  அதற்கு பின்பு ஒரு டீ கடை நடத்தி, அதில் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது பனை நார் கட்டில் பின்ன களம் இறங்கியிருக்கிறார். குறைந்தது 10 கட்டில்கள் அவர் வசம் எப்போதும் இருக்கின்றன. தொழில் சிறப்பாக இருக்கின்றது ஆனால் போதுமான நார் கிடைப்பதில்லை என்றே அவர் குறைப்பட்டுக்கொண்டார். தென் தமிழகமெங்கும் தனது இரு சக்கர வாகனத்தில் நார் எடுப்பதற்காக அவர் அலைந்து திரிந்ததைக் குறித்து சொல்லும்போது, நாம் இழந்த பனை செல்வங்களின் பிரம்மாண்டம் கண்கள் முன் திரண்டெழுகிறது.

பனை நார் என்பது பனங்கள்ளுடன் தொடர்புடையது என்பதே ஜாய்சனின் புரிதல். பனங்கள் இறக்க அனுமதிக்கப்பட்டாலே பனையேறிகள் இன்னும் அதிக பனை மரங்கள் ஏறுவார்கள். பனங்கள் தான் உடனடி பண தேவையினை உறுதி செய்யும். ஆகவே, அவர்கள் ஏறும் பனைகளிலிருந்து கிடைக்கும் மட்டைகளை உரித்து உபரி வருமானம் பார்க்கும் வாய்ப்பிருப்பதாக ஜாய்சன் அனுமானிக்கிறார். உண்மை அதுதான். பனை ஓலைகளை விட, பனை நார் இன்று காண்பதற்கரிய பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. எப்படி பனை ஓலைகள் முறிக்கப்படும் பனைகளிலிருந்து கிடைக்கிறதோ அது போலவே பனை நாரும் கூட, பெருமளவில் முறிக்கப்படும் பனையிலிருந்தே கிடைக்கிறது.

இந்தியா காலனியாதிக்கத்தில் இருந்தபோது வெள்ளையர் பயன்படுத்திய இயற்கை இழை ஆடும் நாற்காலி (Rocking Chair)

இச்சூழலில் பனை நார் இன்னும் அதிகமாக புழக்கத்தில் வரவேண்டுமென்றால் கண்டிப்பாக நாம் கள் இறக்குவதற்கான உரிமையை பெற்றே ஆகவேண்டும். தமிழகத்தில் நெகிழி தடுப்பிற்குப் பின்பும் பனை ஓலை பொருட்கள் மிகப்பெரிய அலவில் புழக்கத்திற்கு வராததற்கு காரணம், கள் தடை நீடிப்பது தான். இதனை எவரும் புரிந்துகொள்ளுவது இல்லை என்பது தான் நமக்கு விளைந்த கேடு. பாரம்பரியமாக கள் நமது மரபில் உணவாக வந்துகொண்டிருந்த சூழலில், கள் குறித்த தவறான வியாக்கியானங்கள் அளித்தும் அதிகார பலத்தைக் கொண்டும் அதனை அடக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடுவதல்ல. குறிப்பாக, கள் குறித்து அறிந்த ஒருவர் ஒன்றில் கள் இறக்குவதை தொடருவார் அல்லது அந்த மரத்திற்கும் தனக்கும் உள்ள உறவினை துண்டித்துக்கொள்ளுவார். இன்று தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அவலம் என்பது இதுதான். மிக வேதனையுடனே பனையேறிகள் பனையை கைவிடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இன்றும் அனேக முதிய கலைஞர்கள், நார் கிடைக்காமல், தங்கள் கரங்களில் திறமை இருந்தும் தங்கள் ஜீவனத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் வாய்ப்பு என்பது பனை நார் கட்டில் உருவாக்குவது. எப்போதும் அதற்கு என்று தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். பல்வேறு கலைஞர்களின் வீட்டில், கட்டில்கள் ஒன்றிரண்டு கட்டப்படாமலே கிடக்கும். மிக அவசர தேவைக்கானவைகளேயே முக்கியத்துவமளித்து, முன்னுரிமையளித்து கட்டில் பின்னுபவர்கள் கட்டுவார்கள். கட்டில் கட்டுபவர்களிடம் வாடிக்கையாளர்கள் விடுக்கும் ஆணைகளும், பணம் கொடுப்பதில் ஏற்படும் இழுபறிகளும் என பலவற்றை ஜாய்சன் கூறுவதை கேட்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் எஞ்சிய கலைஞர்களையும் நாம் சீக்கிரம் அழித்துவிடுவோமே என்ற பதைபதைப்பு எழுகிறது.

பனை நார் கட்டில் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்த ஒன்று என்று குமரி மாவட்டத்திலுள்ள அலோபதி மருத்துவர்களே பரிந்துரைச் செய்வார்கள். நாகர்கோவிலிலுள்ள ஜெயசேகரன் மற்றும் மத்தியாஸ் ஆஸ்பத்திரிகளில் பனை நார் கட்டிலுக்கு என அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டன என்கிற செய்தியும் உண்டு. என்னோடு தொடர்பிலிருக்கும், ஆயுர்வேத சித்த மருட்துவர்கள் எல்லாம் பனை நார் கட்டில் வேண்டும் என திரும்பத் திரும்பச் சொல்லுவதை நான் செவி கூர்ந்தபடி இருக்கிறேன்.

பனை நார் கட்டில் பின்னும் மிடாலக்காட்டைச் சார்ந்த அருணாச்சலம்

குமரி மாவட்டத்தில் வீட்டிற்கு இரண்டு பனை நார் கட்டில்கள் இருக்கும். பெரிய குடும்பம் என்றால் இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வயோதிபர்களுக்கு பனை நார் கட்டிலே பரிந்துரைக்கப்படும். நோய் படுக்கையில் இருப்போருக்கும், படுக்கைப்புண் வராமல் இருக்க பனை நார் கட்டிலையே தெரிவு செய்வார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள் கூட பனை நார் கட்டிலில் படுப்பது அவர்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏன் பிறந்த குழந்தைகளைக் கூட, பனை நார் தொட்டிலில் கிடத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. 

பனை நார் கட்டில் எப்படி ஆரோக்கியமானது என கூறமுடியும்? வடிவம் சார்ந்து இரண்டு முக்கியமான காரியங்களை நாம் அவதானிக்கமுடியும். ஒன்று, படுக்கைக்கு கீழே இருக்கும் காற்றோட்டம் நமது உடலுக்கு கிடைக்கிறது. வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் நமக்கு இவ்வித காற்றோட்டம் தேவையாக இருக்கிறது, நாம் தற்போது பயன்படுத்தும்  மெத்தைகள் அவ்விதமான காற்றோட்டத்தை தர இயலாது ஆகவே, மெத்தைகள் வீட்டிற்குள் வந்தாலே, நாம் கண்டிப்பாக குளிரூட்டிய அறையாக நமது வீட்டை மாற்ற விழைகிறோம். இல்லாவிட்டால் மெத்தையில் நம்மால் புரண்டுகொண்டிருக்க இயலாது. இரண்டாவதாக, சிறிய இணுக்குகள் கொண்ட பனை நார் ஒருவித அக்குபங்சராக செயல்படுகிறது. நமது உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அவைகள் சீர் செய்கின்றன. நமது உடலுக்கு தேவையான அழுத்தங்களை நார்களின் பின்னல் அமைப்பு கொடுக்கிறது. நமது அசைவுகளும், புரண்டு படுக்குப்போது ஏற்படும் நகர்தல்களும் நம்மை அறியாமலேயே ஒருவித தொடு சிகிழ்ச்சையை அளிப்பதாக இருக்கிறது. ஆகவே மிகச்சிறந்த கட்டிலாக பனை நார் கட்டில் இன்றும் கோலோச்சுகிறது. இவைகளை சர்வதேச அளவில் கொண்டுசெல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நான் விரும்பி உறங்கிய பனை நார் கட்டில்

அப்படியானால் எப்படி பனை நார் கட்டில்கள் வழக்கொழிந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இவ்வித பயன்பாடு இல்லாதது ஏன் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. மிகச்சரியாக சொல்ல முடியாவிட்டாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் கண்டிப்பாக இதற்கு ஒப்பான வேறு கட்டில்கள் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கட்டில் என்ற பிரம்மாண்ட கண்டுபிடிப்பிற்கு இந்தியாவில் ஒரு முக்கிய முகம் உண்டு.

இவ்வித கட்டில்களை வட இந்திய பகுதிகளில் “சார்பாய்” என அழைப்பார்கள். சார் என்றால் நான்கு என்றும் பாயா என்றால் கால்கள் என்றும் அர்த்தம். நான்கு கால்கள் கொண்ட படுக்கையினை இப்படியே அழைக்கிறார்கள். நான்கு கால்களும் நான்கு சட்டங்களும் இவ்வைகை கட்டில்களுக்கு போதுமானது. மரங்களை குறைவாக பயன்படுத்தும் சூழியல் பங்களிப்பை இவ்வித கட்டில்கள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. இந்தியாவைச் சுற்றிலுமிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் சார்பாய் பிரசித்தம் பெற்றது. இவ்வித கட்டில்கள் பருத்தி நூல் கயிறு, இயற்கை இழைகள் மற்றும் பேரீச்சை இலைகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன என அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பல்வேறு கண்ணிகள் கொண்ட கட்டில்கள் இருந்தாலும், தென் தமிழக பனை நார் கட்டில்களின் வடிவம் பிற வடிவங்களை விடவும் வித்தியாசமானது. இங்கு தலை முதல் கால்வரை ஒரே பின்னல்கள் ஊடு பாவாக சென்றிருக்கும். ஆனால், வட இந்திய பகுதிகளிலும், சில வட தமிழக பகுதிகளிலும் நாம் பார்க்கும் கயிற்றுக் கட்டில்கள், முக்கால் பங்கு சீரான பின்னல்கள் கொண்டதும் கால் பகுதி மட்டும் இழுத்து கட்டுகின்ற நேர் இழுப்பு தன்மைகொண்டதுமாகும். நேர் இழுப்புகள் பின்னல்கள் தொய்யும்போது இழுத்து கட்டி சீர் செய்ய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே எனக்குள் கேள்விகள் எழுந்தவண்னம் இருந்தது. இவ்வித கட்டில்களுக்கான ஆதி வடிவம் எங்கிருந்து பிறந்திருக்கும் என என்னையே கேட்டுக்கொண்டேன். எனது தேடுதல்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. எங்கோ ஒரு மூலையில் நான் தேடியவைகளை, என்னை வழிநடத்தும் ஆண்டவர் எனக்கு அருளியபடியே இருக்கிறார் என்பதுவே இப்பணியில் நான் இன்றுவரை நீடித்திருப்பதற்கான காரணம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் திண்டுக்கல்லை அடுத்த அழகாபுரி என்ற பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கே ராமலிங்கம் என்ற பனையேறியினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வீட்டில் பனை நார் கொண்டு பின்னிய கட்டில் அப்படியே வட இந்திய பாணியிலாக அமைந்திருந்தது என்னை துணுக்குறச் செய்தது. கயிற்றுக்கு பதிலாக தடிமனான நார் கொண்டு அமைத்த கட்டில். பார்க்க, சற்றே வடிவ நேர்த்தியற்ற ஒரு கட்டில் தான். அன்று நான் அவருடன் அவரது குடிசையில் தங்கினேன். அந்த கட்டிலில் படுப்பதற்கு அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பேரனுபவம் எனக்காக அன்று காத்திருந்தது என்பதை இவ்வுலகிர்க்கு நான் கூவி அறிவித்தே ஆகவேண்டும். தாய்மடியில் படுத்துறங்கும் ஒரு உன்னத தருணமாகவே அதனை நான் கருதுகிறேன். பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நான் தங்கியிருந்தாலும், என்னால் இதற்கு ஒப்பான ஒரு சுகமான உறக்கத்தினை நினைவில் கொள்ள முடியவில்லை. வெறும் மூங்கில்களைக் கொண்டு கால்களையும் சட்டங்களையும் செய்த அவர், அவருக்கே உரித்தான தனித்துவ வடிவத்தினை உருவாக்கியிருந்தார். வேறு எங்கும் இத்தனை “பச்சையாக” எவரும் நார் கொன்டு பின்னி நான் பார்த்ததில்லை. 

அழகாபுரி இராமலிங்கம் பின்னிய கட்டில்

ராமலிங்கம் அவர்களிடம் எனக்கென ஒரு கட்டிலை செய்து தரச் சொன்னேன். அதற்காக பலமுறை அவரைத் தேடி சென்றேன். ஒவ்வொரு முறையும் அவர், எதோ ஒரு காரணத்தைச் சொல்லி என்னை ஏமாற்றியபடியிருக்கிறார். கடைசியாக நான் போன சமயத்தில், உங்களுக்காக மூங்கில் மற்றும் நார்கள் எடுத்து வைத்திருக்கிறேன், கொஞ்சம் பொறுமை காருங்கள் என்றார். இராமலிங்கத்திடம் நாம் கோபப்படவே முடியாது. அந்த அளவிற்கு அன்பாக பேசி நம்மையே நல்வழிப்படுத்தும் மகான் அவர். அவருடன் ஒரு மூன்று நாட்கள் ஒரு சேர இருந்தாலே எனக்கு அவ்விதமான ஒரு கட்டில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பனை நார் கட்டில்களில் பழங்காலத்தில் இருந்த முக்கிய பிரச்சனை என்னவென்றால் மூட்டைபூச்சிகள் அதில் வந்து சேர்ந்துகொள்ளும். பனை நார்கள் குவிந்திருக்கும் இடுக்குகளுக்குள் மூட்டைப்பூச்சிகள் சென்று ஒளிந்துகொள்ளும். அதிலிருந்து  மூட்டைப்பூச்சிகளை நீக்குவது என்பது இயலாத ஒரு காரியமாக பார்க்கப்பட்டது. பெரும்பாலும், மூட்டைப்பூச்சிகளை கொல்லுவதற்கு என மருந்துகள் அடிக்கப்பட்டன. ஆனால் அவைகளை விட மூட்டைகள் வீரியமாக வளர்ந்தன. இருபது வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றிருந்தேன், அங்கே ஏதோ கடிக்கிறது என கால்களுக்கு கீழே கையை வத்து பார்த்தபோது கையில் பிசு பிசுவென ஏதோ ஒட்டிக்கொண்டது. இருட்டில் என்ன என முகர்ந்து பார்த்தேன். குமட்டலுடன் அப்படியே வெளியே ஓடினேன். மூட்டைப்பூச்சி நசுங்கி குமட்டும் நாற்றமெடுத்திருக்கிறது.

மூட்டைப்பூச்சிகள் பொதுவாக திரையரங்குகளிலிருந்தே வீடுகளுக்கு வந்தன என்றும், வீடுகளிலிருந்து திரையரங்கிற்கு சென்றன என்றும் பரஸ்பர குற்றம் சாட்டும் காலம் இருந்தது. ஆனால், நோயாளிகள் படுத்திருக்கும் கட்டில்களில் கூட மூட்டைபூச்சிகள் வந்து அடைந்து மிகப்பெரிய தொந்தரவை அளித்துக்கொண்டிருந்த காலம் உண்டு. பனை நார் கட்டில்களை சரித்து வைத்துவிட்டு கொதிக்கிற வென்னீரை பனை நார் கட்டில்கள் மேல் ஊற்றுவார்கள். ஆனாலும், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லுவது எளிதல்ல. அவைகள், பனை நாருக்குள் சென்று சுகமாக உறங்கும், ஒளிந்திருக்கும். பனை நார்கள் பெருமளவில் சூடு கடத்தாதவைகள் ஆதலால், ஒரு சில கண்டிப்பாக தப்பித்துக்கொள்ளும். ஓரிரு நாட்களிலேயே பெருகி மீண்டும் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கும். மாதத்திற்கொருமுறை வென்னீர் ஊற்றுவது பனை நார் பொருளின் ஆயுளைக் கூட்டும் என்பதாக சொல்லுவார்கள்.

நார் கட்டில்கள் என்று மட்டுமல்ல, நார் கயிறுகள் செய்யும் நுட்பங்களும் நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. மாட்டிற்கான மூக்கணங் கயிறு முதல், பல்வேறு கயிறுகள் பனை நார்கொண்டு செய்யும் அறிவு நமது மக்களிடம் இருந்திருக்கின்றன. தென் மாவட்டங்களைப் பொறுத்த அளவில், பனை நார் கொண்டு பெட்டிகள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பஞ்சவர்ணம் அத்தை எங்களுக்கு தோசை சுட்டு நார் பெட்டியில் சுமந்து கொண்டு கொடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் பிறப்பதற்கு முந்தைய காலமாக அது இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

பண்ணைவிளை அசனத்தின்போது பயன்பட்ட நார் பெட்டிகள்

நார் பெட்டிகளுக்கு என சமூக அங்கீகாரம் உண்டு. திருமண வீடுகளில் நார் பெட்டிகளையே சீதனமாக கொடுப்பார்கள். அரிசி பெட்டி என்றும், முறுக்குப்பெட்டியென்றும் அவைகளுக்கு பெயர் உண்டு. இதைத்தான், பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள், நாடார்களும் செட்டியார்களும் தங்கள் திருமணத்தில் நார் பெட்டியினை பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். குமரி மாவட்டத்திலுள்ள நார் பெட்டிகள் மீது எனக்கு மிகப்பெரிய விருப்பம் இல்லை. அவைகள் என்னை கவரவும் இல்லை. வர்ணங்கள் இட்டிருந்தாலும், அவைகள் மிகப்பெரிதான பொழிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை, நான் மிகச்சரியான அழகுள்ள நார் பெட்டிகளை பார்க்கவில்லையோ என்னவோ. அல்லது அடிக்கடி பார்த்த பெட்டிகள் மீதான சலிப்பா எனவும் கூற இயலவில்லை.

நார் பெட்டிகள் அழகுற செய்யப்படவேண்டுமென்று சொன்னால், பொறுமையுடன் செய்யப்படவேண்டும். அதன் செய்நேர்த்தி மட்டுமல்ல உறுதியும் முக்கியமானவைகளே. உறுதி இல்லாத நார் பெட்டிகள் அழகை இழந்துவிடுகின்றன. ஏன் உறுதியற்ற பெட்டிகள் இன்று தயாரிக்கப்படுகின்றன? சீர்வரிசை பொன்ற ஒருசில சடங்குகளுக்காக மட்டும் நார் பெட்டிகள் செய்யப்படுகின்றன. மங்கி வரும் இவ்வித கலாச்சார பொருட்கள் வெறுமனே அடையாளமாக காணப்படுவதால், மலிவான நார் பெட்டிகள் கடைக்கு வருகின்றன. ஒரு பெட்டி செய்வதற்கான ஊதியமோ அல்லது அதற்குண்டான மரியாதையோ இங்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் இவ்வித அழகுணர்சியற்ற பெட்டிகள் வர காரணமாகின்றன. 

இதற்கு ஒப்புநோக்க மதுரையை அடுத்த பெருமாள் பட்டி என்ற ஊரிலுள்ள பனை நார் பெட்டிகள் தமிழக அளவில் சிறந்த வடிவ நேர்த்தி கொண்டவைகள். சன்னமான நார்கள், பொறுமையாக இழைக்கப்பட்டு அழகுற செய்யப்படுபவைகள். குமரி மாவட்டத்தை ஒத்த நார் பெட்டிகள் தான் செட்டியார்களின் வடிவமைப்பில் இருக்கின்றன. ஆனால், செட்டியார் நார் பெட்டிகளின் விளிம்பு மிகவும் அகலமாக இருக்கும். நார்களும் நேர்த்தியாக வகுந்தெடுக்கப்பட்டிருக்கும். தேவையற்ற வர்ணங்கள் இருக்காது.

மதுரையை அடுத்த பெருமாள்பட்டி நார் பெட்டிகள்

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற அசன விழாக்களின் போது, நார் பெட்டிகளை கொடையாக வழங்கும் முறைமை இன்றும் இருக்கிறது. சுட சுட சோறுகளை அள்ளி எடுத்து செல்ல இதனையே பயன்படுத்துவார்கள். சுடு சோறு நார்களில் பட்டு எழுப்பும் வாசனை பசிக்காதவர்களையும் சுண்டி இழுத்து கூட நான்கு கவளத்தை உள்ளிழுக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.

2018 ஆம் ஆண்டு எனது ஒரிய பயணத்தில், ஒரு குடியானவர் வீட்டில் நார் பெட்டியை ஒத்த ஒரு பெட்டியினைப் பார்த்தேன். பின்னல்முறை வேறு வகையில் இருந்ததோடல்லாமல், அதன் விளிம்புகளும் தனித்துவமாக இருந்தது. நான் அதனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஈட்டி மரத்தினை இழைத்து , மொழுமொழு தன்மைகள் கொண்ட இழைகளை இழுத்து கட்டியது போன்ற ஒரு பெட்டி. ஒருவகையில் பருமனான ஈட்டி மரத்தை அப்படியே குடைந்து எடுத்து செய்திருப்பார்களோ என ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆவல் பொறுக்கமுடியாமல் அதனை அணுகிச் சென்று தொட்டு தடவிப்பார்த்தபோது தான் அது பனை நார் என்கிற உண்மை உறுதியானது. பல வருட புழக்கம் உள்ள அந்த பெட்டியின் அழகிற்கு ஈடு இணையான எந்த நார் பெட்டியினையும் நான் இதுவரைப் பார்க்கவில்லை. பல வருடங்களாக கைகள் பட்டு வழுவழுப்பாகவும் ஒரு தனித்துவ மினுமினுப்பு கொண்ட ஆப்பிரிக்க அழகினை ஒத்திருந்தது அந்த பெட்டி. இந்த பெட்டி எனக்கு கிடைக்குமா எனக் கேட்டு அள்ளி எடுத்து வந்துவிட்டேன்.  

ஓலைப்பொருட்களின் மீது நார் பொத்துவது அழகினையும் உறுதியினையும் அப்பொருளின் ஆயுளையும் கூட்டும் என்னும் உண்மையினை வெகு சமீபத்தில் தான் நான் அறிந்துகொண்டேன். ஆகவே எனது தொப்பி, நான் பயன்படுத்தும் திருமறை பை மற்றும் பயணப்பைகள் அனைத்தையும் நார் கொண்டு பொத்திவிட முடிவு செய்தேன். இப்போது இவைகள் அனைத்தையுமே பிற பனையோலைப் பொருட்களுடன் இணைத்து கண்காட்சி அமைக்க முடிவுசெய்திருக்கிறேன்.

போவாஸ் பனை விதைகளுடன்

எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பனம்பூ மாலை குறித்து பெருமளவில் பேசப்படுகிறது ஆனால் “நார்முடி சேரல்” என்பது குறித்த பேச்சுகள் பரவலாக இல்லை என்றார்.  “களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்”, பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் கரிய களக்காய் போன்ற மணிகளையும் முத்துக்களையும் பொன்னிழைகளில் கோர்த்து பட்டுத்துணியால் செய்த தலைபாகையாக அணிந்துகொண்டவன் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. “நார்முடி” என்ற வார்த்தை சேர மன்னர்கள் தங்கள் மணி மகுடமாக பனை நாரினை கொண்டிருந்தார்கள் என குறிப்பால் உணர்த்துகிறது என அவர் கூறினார். பனை நாரினை இழப்பது, நமது சங்க இலக்கியத்துடனான நமது நேரடி தொடர்பை இழப்பது ஆகும்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 13

மார்ச் 26, 2021

தாவரசங்கமத்துள்

சாரா மெலடியுடைய திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திருமண நிகழ்ச்சிக்கு மிக குறைவானவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். சமூக இடைவெளி விட்டு ஆசனங்கள் இடப்பட்டிருந்தன. அங்கே டாக்டர் ஷோபன ராஜ் அவர்களை சந்தித்தேன். எனக்கு பனை குறித்த ஆரம்பகட்ட புரிதல்களை சிறு பிள்ளைக்கு கற்றுகொடுப்பது போல் கற்றுக்கொடுத்த பேராசிரியர். கொரோனா அச்சம் நாகர்கோவிலில் தலை தூக்கியிருக்கிறதை நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. அனைவரும் முக கவசம் அணிந்தே வந்திருந்தார்கள்.  அம்மா மற்றும் குடும்பத்தின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளைப் பார்க்கும் வாய்ப்பாக மெலடியின் திருமணம் அமைந்தது. ஆனால் ஒருவரிடமும் நின்று பேசும்படியாக சூழல் அமையவில்லை. கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

அன்று அம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ரங்கிஷை பார்க்கச் சென்றேன், ரங்கிஷ், பனை மரச் சாலை பயணத்தில் என்னோடு தொலைபேசி வழியாக இணைந்துகொண்ட நாகர்கோவில் நண்பன். அதனைத் தொடர்ந்து பல பயணங்களில் என்னோடு இணைந்துகொண்டவன். சிறந்த புகைப்படக் கலைஞன். என் மீதும் எனது பயணங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன். பழவேற்காடு செல்லுகிறேன் என்றபோது அவனது காமிராவை தந்து உதவினான். அதனை கொண்டு கொடுக்கச் சென்றேன். இந்த முறை நண்பர்களின் உதவிகள் பல திசைகளிலிருந்து பல்வேறு வகைகளில் கிடைத்துக்கொண்டே இருந்தது கடவுளின் அருள் தான்.

பதினாறாம் தேதி மிகப்பெரிதாக ஏதும் நிகழவில்லை. ஆனால், நாகர்கோவில் சென்றுவிட்டு வரும் வழியில், ஒரு தேங்காய் ஏற்றி செல்லும் டெம்போ பார்த்தேன். அதற்குள் தேங்காய் சுமக்கும் கடவங்கள் இருந்தது. தேங்காய் சுமக்கும் கடவம் இருவகையில் முக்கியமானது. ஒன்று கடவத்தின் உறுதி. சில வேளைகளில் ஓலைக்கடவத்தின் மீது நார் கொண்டும் பொத்தியிருப்பார்கள். கடவங்கள் நார் கொண்டு பொத்தும்போது உறுதிமிக்கவைகளாக மாறிவிடுகின்றன. மற்றொன்று, ஓலைகள் கொண்டு செய்யும் கடவங்களின் அமைப்பு ஒன்று போலவே இருக்கும். அகன்று உயரம் குறைவாக காணப்படும். கடவங்களில் அதிகமாக தேங்காய்களை சுமப்பது இயல்வதல்ல. ஆகவே, நல்ல சுமட்டுக்காரர்களுக்கு ஏற்றவிதமாக, தென்னை ஓலையில் அதிகபடியான பின்னலை, வைத்திருப்பார்கள். புனல் போல விரிந்திருக்கம் அந்த பகுதியானது, மேலதிக தேங்காய்களை சுமந்து செல்ல வாகாக அமைந்திருக்கும். இந்தவித பெட்டிகள் இரண்டு பொருட்கள் ஒன்றிணையும் வண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பனை ஓலை மட்டுமல்லாமல் தென்னை ஓலைகளும் இப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஓரிடத்தில் வாழும் இரண்டு தாவரங்களை எப்படி மக்கள் புரிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். 

பனை பொருட்களோடு இணைந்து கொள்ளும் தாவர பொருட்கள் என்பது ஒரு விரிவான பேசுபொருள். தென்னை, புளி, மா மரம், மரவள்ளி கிழங்கு, வாழை, சுரை, கமுகு, பேத்தவரை, ஆல், அரசு மூங்கில், என அவைகளின் விரிவு நாம் எண்ணிப்பார்க்க இயலாதபடி பெரிதானது. இந்த வரிசை, நமக்கு பனை எப்படி தன்னை சுற்றியுள்ள தாவரங்களோடு இணைந்திருக்கிறது. பாரக்கன் விளை அருகிலுள்ள காட்டுவிளை என்ற பகுதியில் பனையேறிக்கொண்டிருக்கும் செல்லதுரை என்ற பெரியவரை சந்தித்தபோது, பனை மரத்தில் ஏறுவதற்காக தேங்காய் தொண்டுகளை பனை மரத்தில் கட்டி வைத்து அதனை படியாக பாவித்து ஏறினார். பனையேறிகளின் தொழில் கருவியான அருவா பெட்டி என்பது பனம் பாளைகளால் செய்யப்பட்டதே.

எனது பயணத்தில், இன்றும்  கூட கரூர் திண்டுக்கல் பகுதிகளில் பதனீர் இறக்க சுரைக் குடுவைகளை பயன்படுத்தி வருகிறதை பார்த்திருக்கிறேன். அதற்காகவே சுரைக்குடுவைகளை தங்கள் தோட்டத்தில் பனையேறிகள் வளர்க்கிறார்கள். ஒருமுறை இயற்கை விவசாயம் செய்யும் சரோஜா அவர்களை சந்திக்க பள்ளபட்டி  சென்றிருந்தேன். எனது பல வருட தேடுதலுக்கு பயனாக அங்குதான் சுரைக்குடுவை பயன்பாட்டில் இருப்பதை கண்டுகொண்டேன். அன்று நான் அடைந்த ஆனந்த பரவசம் என்பது பனை சார்ந்த தேடுதலின் ஒரு சில உச்ச கணங்களில் ஒன்று என்றே சொல்லுவேன். சரோஜா அவர்கள் என்னை கோவிலூர் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, நாங்கள் சந்தித்த செல்வராஜ் என்ற பனையேறி கை நிறைய எங்களுக்கு சுரை விதையினைக் கொடுத்தார். பனையேறிகள் வள்ளல் எனச் சொல்லுவது வெறுமனே அல்ல, அவர்கள் அள்ளி அள்ளி கொடுப்பவர்கள்.

செல்வராஜ் அவர்கள் அதனை எப்படி நடுவது பேணுவது போன்றவற்றைக் குறித்து விளக்கினார். ஒரு கட்டத்தில் சுரை கொடியில் பூத்து காய் வந்த பின்னர் காய்களை எப்படி நேராக அமரவைப்பது. அதன் மூலம், எப்படி குடம் போன்ற வடிவத்தில் சுரைக்காயினை எடுக்கமுடியும் என விவரித்தார். பனையேறிகள் தங்களைச் சூழ ஒரு சூழியல் கட்டமைப்பை பேணிவந்திருக்கிறார்கள் என இவைகள் நமக்கு காண்பிக்கிறது.

எனது பயணத்தில், பனை மரங்களில் பற்றிப்பிடித்து ஏறும் பீர்க்கங்காய் (Luffa aegyptiaca, sponge gourd) கொடிகளைப் பார்த்திருக்கிறேன். பீர்க்கங்காய் இளசாக இருக்கும்போது, உணவாகவும் முத்திய பின்பு அதிலுள்ள நார்பகுதிகள் அதிகமாகி, உண்ணத்தகாததாக மாறிவிடும், ஆனால் சர்வதேச அளவில், முற்றிய பீர்க்கன், உடலில் தேய்த்து குளிக்கும் பஞ்சாக பயன்படுத்தபட்டுவருகிறது. நார்களின் நீடித்த உழைப்பினால் இது பலரால் விருபப்பட்டு இன்றும் உள்ளூரிலும் பயன்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் பெருமளவில் பரவியிருக்கும் தாவரம் மூங்கில் ஆகும். மூங்கில் பனையேறிகளின் வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குஜராத் மற்றும்  வேறு சில பிராந்தியங்கள் மூலமாக அறிகிறோம். மூங்கிலில் தான் பதனீர் எடுத்து வருவதும், மூங்கில் கழிகளை பயன்படுத்தி பனை ஏறுவதும் என மூங்கில் பனையோடு இணைந்துகொண்டதுபோல் வேறு தாவரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. என்றாலும் தமிழகத்தில் மூங்கில் கூரை வேய்வதற்கே அன்றி பெருமளவில் பனையுடன் இணைந்துகொண்டது அல்ல. பனையேறிகள் பாளை சீவும் அரிவாளினைத் தீட்ட பயன்படுத்தும் பொடியை அருவாபெட்டிக்குள் ஒரு பொடிக்குழலினுள் வைத்திருப்பார்கள். பொடிக்குழல் என்பது அரையடி நீளமும் விரல் பருமனும் உள்ள சிறிய மூங்கில் துண்டுதான். ஒருவேளை தேடினால் வேறு சில பொருட்களில் பனை இணைந்துகொள்ளுமாயிருக்கும்.

மும்பையில் பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய தருணத்தில் இங்குள்ள சூழியல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் சந்தேகம் இருந்தது. பனை இங்குள்ள மரம் தானா? இப்படி ஒற்றைப்படையாக ஒரு மரத்தை மட்டுமே விதைப்பது சரியா போன்ற விவாதங்கள் பெருமளவில் முன்வைக்கப்பட்டன. அனைவரையும் சமாளிக்க எனக்கு உதவியாயிருந்தது ஆல மரமும் அரச மரமும் தான். ஆரே பகுதியெங்கும் பனை மரங்களை ஆல மரமும் அரச மரமும் பற்றிப்பிடித்து சுற்றி நெருக்கி வளருவதையே அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். ஒரு மரம் வாழும் பகுதியில் வேறு மரங்கள் வாழமுடியாது என்றிருக்கும் சூழலில், இந்திய ஆன்மீக மரங்களான ஆலமரம் மற்றும் அரச மரம், தங்கள் வாழ்விடத்தை பனையைச் சுற்றி அணைத்து அமைத்துக்கொண்டது சாதாரணமானது அல்ல என்றேன். இக்கருத்து மிகப்பெரிய மாற்றத்தை மும்பையில் ஏற்படுத்தியது.  ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது பனையை அன்றி வேறு எதுவுமே நமது கண்களின் முன்பு இல்லை. மாத்திரம் அல்ல மும்பை போன்ற இடப்பற்றாக்குறை நிறைந்த இடத்தில் ஓரிடத்தில் இரு மரங்கள் என்பது வரமாகவே பார்க்கப்பட்டது.

சங்கர் கணேஷ் 2017 முதல் எனது நட்பு வட்டத்தில் இருப்பவர். பட்டதாரி பனையேறி. ஒருமுறை என்னிடம், பனையேறிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்றினை விவரித்தார். கடந்தையின் பெருக்கத்தைக் குறித்தும் பனையேறிகள் அவைகளை சமாளிக்க சிரமப்படுவதையும் குறித்து பேசினார். கடந்தை (The Giant Indian hornets) எனப்படும் மிகப்பெரிய குளவி வகை. ஒரு மனிதன் மூன்று கடந்தைகளிடமிருந்து ஒரு சேர கொட்டு வாங்கினால் போதும், மரணம் ஏற்படும் வகையில் கொடிய விஷம் நிறைந்தது. வலியும் கடுமையாக இருக்கும். பெரும்பாலும், ஒற்றைக் கொட்டுகளை பனையேறிகள் “தாங்கிக்கொள்வார்கள்”. கடந்தைக் குறித்து என்னால் உடனே பதில் கூற முடியவில்லை, ஆனால் அது குறித்து விசாரித்து அறிந்தவைகள்  நல்ல செய்திகள் அல்ல. கடந்தை கூடு பெருகிக்கொண்டே செல்லும். ஆடு மாடு நாய் மனிதன் என அது இருக்கும் இடத்திற்குள் எவரையுமே நுழையவிடாது. பெருகும் தன்மை அதி வேகமாக இருப்பதால், கூண்டோடு நெருப்பிலிட்டு அழிப்பதே முக்கியமானது எனக் கூறுகிறார்கள். கடந்தைக்கும் சூழியல் பங்களிப்பு இருக்குமே? இருக்கும், இருக்கலாம், ஆனால், அப்படி விடுவது மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Deadly Asian Hornets that can 'kill with one sting' are heading to the UK -  Mirror Online
அபாயகரமான கடந்தை

குமரி மாவட்டத்தில் உள்ள நடைக்காவு என்ற பகுதியில் பனையேறி ஒருவர் இருக்கிறார் என்று அவரைத் தேடிச்சென்றேன். அப்போது அவர், பனை ஏறி கருப்பட்டி தயாரித்து கெல் பாம் (kel palm) என்ற கேரள அரசு நிறுவனத்திற்கு வழங்கிக்கொண்டிருந்தார். நான் தேடிச்சென்ற நேரம் அவர் நீண்ட குச்சியில் ஓலைகளைக் கட்டி வைத்துகொண்டிருந்தார். எதற்காக இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டபோது, “ஒரு கடந்த கூடு இருக்கு, தீ வேசணும்” என்றார். பொதுவாக கடந்தை கூடுகளை மாலை வேளைகளில் தான் நெருப்பு வைதுத் கொளுத்துவார்கள். அதற்கென திறன் வாய்ந்த மனிதர்கள் உண்டு. இரண்டு லிட்டர் மண் எண்ணை, இரண்டு குவாட்டர் மற்றும் 500 ரூபாய் கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடுவார்கள். பனை சார்ந்து வாழும் இம்மனிதர், தானே களமிறங்கியிருக்கிறார் போலும் என நினைத்துக்கொண்டேன்.

ஏதோ எண்ணியவனாக கடந்தை கொட்டினால் என்ன செய்வீர்கள் எனக் கேட்டேன், “பேத்தவரையை அரச்சு தேய்ப்போம்” என்றார். போகிற போக்கில் கிடைத்த அரிய தகவல் இது. அதனை நான் பார்க்கவேண்டுமே என்றேன். எங்கிருந்தோ ஒரு மூலிகைச் செடியினைக் கொண்டுவரப்போகிறார் என்று எண்ணி, இதனைக் கூறினேன். அவரது மனைவி இதா இங்கே தான் நிற்கிறது என அந்த செடியினை வீட்டின் அருகிலேயே காண்பித்தார்கள். பேத்தவரை என்பது மஞ்சள் நிற பூக்களும் அவரை போன்ற காய்களும் உள்ள சிறிய செடி. முட்டளவு அல்லது இடுப்பளவு மட்டுமே வளரும் தன்மையுடையது. குமரி மாவட்டத்தில் பெருமளவு காணப்படுகின்ற செடி தான். உணவாக பயன்படவில்லையென்றாலும் பனையேறிகளின் வாழ்வில் முக்கிய மருந்தாக இது செயல்பட்டிருக்கிறது என அறியும்போது, நமக்கருகில் இருக்கும் தாவரங்கள் குறித்து நாம் ஒன்றுமே அறிந்துகொள்ளவில்லை என்றே தோன்றியது.

உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா? | Side  effects of tamarind - Tamil BoldSky
புளி – இணையத்திலிருந்து

புளியும் பனையும் இணைந்திருக்கும் ஒரு சூழலை திண்டிவனம் பகுதியில் பார்த்தோம் இல்லையா?. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், புளிய மர இலைகளைக் கூட தேடி எடுத்து அக்கானி காய்ச்சும் சூழ்நிலையே அன்று இருந்தது. அக்கானி என்பது பதனீரைக் குறிக்கும் குமரி மாவட்ட சொல். ஓடு உடைத்த புளியினை அப்படியே கம்பு, மற்றும் கொட்டைகளுடன் பானையில் போட்டு, ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் காய்ச்சிய பதனீரை பானைக்குள் ஊற்றுவார்கள். பின்னர் வண்டுகட்டி, 90 நாள் அசையாமல் ஓரிடத்தில் வைத்தால் பானையில் கற்கண்டு பரல்கள் பிடித்திருக்கும். புளியில் இனிப்பு ஏறி தேனடையாக மாறிவிட்டிருக்கும். சுவைத்தால், ஏதோ பேரீச்சையினைச் சாப்பிடுவதுபோல் புளிப்பு மறைந்து இனிப்பு சுவை கூடியிருக்கும். கடந்த காலத்தில் குமரி மாவட்ட சிறுவர்கள் விரும்பியுண்ட சுவை மிக்க பதார்த்தங்களுள் இது முதன்மையானது. ஏதோ ஒரு நல்லூள் இருந்ததால், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றும்போது, பால்மா கார்டன்ஸ் என்ற அவர்களது தோட்டத்தில் பெறப்பட்ட பதனீரில் செய்த புளி பதனீரைச் சுவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இன்று பனைத் தொழிலை சாராத ஒருவர் ஒரு பானை நிறைய புளி பதனீர் செய்யவேண்டுமென்று சொன்னால் குறைந்தபட்சம் ஒரு 5000 ரூபாய் செலவாகும். மிக எளிதாக நமது நிலப்பரப்பில் இருந்துவந்த ஓர் உணவு இன்று பெரும் பொருட்செலவு செய்தால் அன்றி மீட்டெடுப்பது இயல்வதல்ல.  நமது முன்னோர் கண்டுபிடித்த உணவு வகைகள் நட்சத்திர விடுதியினையும் மிஞ்சும் வகையில் அரிதினும் அரிதானதாகவே இருக்கிறது. மேலும் குறைந்த பட்சம் மூன்று மாதம் காத்திருக்கவும் வேண்டும்.

புளிகரைசலும், கருப்பட்டியும் சுக்குப்பொடியும் கலந்தே பானகம் செய்வார்கள். தென்னக பக்தர்களுக்கு இது ஒரு தவிர்க்க இயலாத மென்பானமாக திருவிழாக் காலங்களில் இருந்திருக்கிறது. அப்படியே கொரண்டு என்ற செடியினை தான் கற்கண்டு பிடிக்க பானைக்குள் போடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தினரின் பால்மா கார்டன்ஸ் குமரி எல்லையிலுள்ள களியக்காவிளைக்கு அருகில் இருக்கிறது. ஒரு சில வருடங்கள் நான் இங்கே தான் தங்கினேன். பதனீர் விற்பனையாகாத தருணங்களில், இங்கு நாங்கள் பதனீரைக் காய்ச்சி கருப்பட்டியாக்குவது வழக்கம். ஒருநாள், அங்கே பிடுங்கிய கிழங்கினை போட்டு வேகவைத்து கொடுத்தார்கள். மரவள்ளிக்கிழங்கு பக்குவமாக வெந்துவிட்டதென்றால் பஞ்சுபோல மாறிவிடும். உப்பு ஒன்று போல பிடித்திருக்கும். அன்று அந்த பாகிற்குள் கிடந்து வெந்த கிழங்கு, தேனில் ஊறிய கிழங்கென ஆனது. இதன் சுவை, கிட்டத்தட்ட,  கிழங்கையும் கருப்பட்டி பாகினையும் ஒன்றாக மெல்வதுபோன்ற ஒரு உணர்வினைக் கொடுக்கும். இப்படி ஒரு உணவு தயாரிக்க எவரும் இன்று தயாராவது இல்லை. விலையும் கட்டுப்படியாகாது.

பனையேறிகள் வாழ்வில் அரிசி மிக முக்கியமான ஒரு உணவுப்பொருள். குமரி மாவட்டத்திலுள்ள அத்தனை பனையேறிகளும் ஒருவேளையாவது நல்ல சம்பா அரிசி சோறும் மீனும் வைத்து சாப்பிடுவார்கள். இன்றும் சிலர் பனை மரங்கள் நடுவதை ஏதோ தேவையற்ற செயல் எனச் சொல்ல முற்படும்போது, பனை ஒரு பாலைவன தாவரம் எனக் கூறி கடுமையாக விவாதிப்பார்கள். அப்படி பனைக்கென ஒரு நிலம் கிடையாது. அது பல்வேறு நிலங்களிலும் நாடுகளிலும் வாழும்படி தன்னை தகவமைத்துக்கொண்ட மரம். உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் கூட செழித்து வளரும், ஆகவே தான் பனை மரங்கள் சதுப்பு நிலப்பகுதிகளிலும் செழித்து வளருவதை நம்மால் காணமுடிகிறது. அதாவது மக்கள், தங்கள் வாழ்வில் பனை தேவையென கருதி தங்களுடன் வைத்துக்கொண்ட ஒரு மரம் இது. பெருமிதத்துடன், தங்கள் தலைமுறையின் சொத்து என சேர்த்துக்கொண்ட மரம். ஆகவே, இவைகள் பரவலாக எங்கும் நிற்பதை நாம் காணலாம். மனித வாழ்வில் நெல்லுடைய பயன்பாடு 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. அவ்வகையில்  பனை மரத்தின் பயன்பாடு வெகு தொன்மையானது.

To Mumbaikars' surprise, this year's Alphonso mangoes came from Malawi, not  Konkan - The Economic Times
மாம்பழங்கள் – இணையத்திலிருந்து

திருநெல்வேலி பகுதியிலுள்ளவர்கள் கோடைக்காலத்தில் பதனீரில் மாம்பழத்தைப் போட்டு பிசைந்து சாப்பிடுகின்ற ஒரு வழக்கம் உண்டென்று சொல்ல  கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வழக்கம் குமரி மாவட்டத்தில் கிடையாது. காரணம், குமரி மாவட்டத்தில், பங்குனியோடு பதனீர் காலம் முடிவடைந்துவிடும், மாம்பழங்கள் சித்திரை மற்றும் வைகாசியிலேயே கிடக்கத் துவங்கும். ஆகவேதான், குமரி மாவட்டத்தில் இவ்வித வழக்கங்கள் இல்லை. ஆனால் மாங்காய் பயன்பாடு இருந்திருக்கிறது. சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலும், குமரி மாவட்ட மக்களுக்கு காலை உணவு என ஏதும் கிடையாது. இங்கு ஐரோப்பியர் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியானபடியால், காலை உணவு இல்லாமையை மக்கள் உணர்ந்திருந்தினர். பதனீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது. ஆகவே எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு பதனீர் குடித்தே ஆக வேண்டும். வயறு இசகி இடம் கொடுத்தாலும், தித்திப்பு மிக்க பதனீரை எப்படி உள்ளே செலுத்த? அப்படி வயறு நிறம்ப குடிக்காவிட்டால், பசிக்கும்போது என்ன செய்வது என திகைத்து போய்விட்டவர்களின் கண்டுபிடிப்பே, மாங்காயும், பதனீரும். மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்பது பழமொழி. இங்கே மாங்காய் ஊட்டும் பதனீர், அரைநாள் பசியினை தாக்குப்பிடிக்கச் செய்யும் அளவு வீரியம் கொண்டது.

குமரி மாவட்டத்தில் காணப்பட்ட மற்றொரு பயிர், கொல்லா மரம். கொல்லா மரத்திலிருந்து கிடைப்பது தான் கொல்லாங் கொட்டை. அண்டி பருப்பு அல்லது முந்திரி பருப்பு என அழைப்பதையே குமரி மாவட்டத்தில், அண்டி (கொட்டை) அல்லது கொல்லாங்க் கொட்டை என அழைப்பார்கள். வெளி நாட்டிலிருந்து இங்கு உள்ள கொல்லம் துறைமுகத்தின் வழியாக வந்ததாகையால், கொல்லத்து கொட்டை, கொல்லாங்கொட்டை என்றானது.

தாய் மடி என எண்ணி பனை மடியில் வளரும் ஆலமரம்

குமரி மாவட்டத்தின் மிக முக்கிய உணவு முந்திரி கொத்து ஆகும். பார்க்க திராட்சை குலை போல ஒன்றிணைந்து காணப்படும் இந்த தின்பண்டம், சிறு பயறு, தேங்காய், மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து பிசைந்து உருட்டி அரிசி மாவில் முக்கி எண்னையில் இட்டு பொரித்தெடுக்கும் சுவையான தின்பாண்டம். எனது வீட்டில் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் அம்மா தவறாமல் செய்வார்கள். தற்போது எண்பதை தொட்ட சூழலிலும் மும்பை வந்திருந்தபோது ஜாஸ்மின் மற்றும் குழந்தைகளை எல்லாம் அழைத்து அவர்கள் உதவியுடன் முந்திரி கொத்து செய்து கொடுத்தார்கள்.

Are cashews fruit? - Quora
கொல்லாம் பழம் – இணையத்திலிருந்து

அம்மாவின் மாணவரும் தற்பொழுது பத்திரிகையாளருமாக இருக்கின்ற திரு. மலரமுதன் என்னிடம் சொன்ன அனுபவம் இவைகளையும் தாண்டி வேறு ஒரு நிலையில் இருந்தது. முந்திரி பருப்பை சரியான அளவில் உடைத்து போட்டு, கருப்பட்டிக்கு பதில், பந்தனீரையே காய்ச்சி, பாகு பதம் வரும்போது, அதன் ஒட்டும் தன்மையை கணித்து, சுட சுட உடைத்த பருப்பிற்குள் ஊற்றி அவைகளைக் கலந்து சூட்டுடன், உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்வதன் ருசியினை மிஞ்சி எதையும் தான் சாப்பிட்டதில்லை எனக் கூறி வாயூற வைத்துவிட்டார். உண்மையிலேயே, இவ்விதமான ஒரு உணவினை எவரும் இன்று தயாரிக்கப்போவதில்லை. அப்படி தயாரிக்க முன்வருகிறவர்கள் கூட, கலப்படமோ, அல்லது சாமானியர்கள் வாங்க இயலாத விலைகளையே வைக்க முடியும்.

பனையேறிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு என சில மரங்கள் உண்டு. அவைகளையே அவர்கள் தேடிச் செல்லுவது வழக்கம். குறிப்பாக ஆண் பாளைகளை இடுக்கி பதப்படுத்துவதற்காக செய்யப்படும், கடிப்பு என்ற கருவி, கமுகு மரத்திலிருந்தும் உலத்தி என அழைக்கப்படும் கூந்தல் பனையிலிருந்தே பெரும்பாலும் செய்யப்படும். அத்தகைய கடிப்புகளை நான் கைகளில் எடுத்து பார்த்திருக்கிறேன்.  இவ்விரு மரங்களில் இருந்து கிடைக்கின்ற கடிப்புகள் வளையும் தன்மை கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என சங்கர் கூறுவதை கேட்டிருக்கிறேன். உடைந்து போகா தன்மைகொண்ட மரங்களையே பனையேறிகள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள். பல்வேறு காட்டு மரங்கள் இன்று சமதளத்தில் இல்லாமல் போய்விட்டன. பெண் பாளைகளை பதப்படுத்தும் கடிப்புகள் பல்வேறு மரங்கள் இருப்பதாக சங்கர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டபொது அதிர்ந்துபோய்விட்டேன். பல மரங்களின் பெயர்கள் என் வாழ்நாளில் நான் கேள்விப்பட்டிராத பெயர்களாகவே இருந்தன. வெடத்தலை, விராலி, வெண் நொச்சி, அச்சங் கம்பு, எனப்து வெண் அச்சி மற்றூம் கறுப்பு அச்சி மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் விராலிக்காட்டுவிளை மற்றும் அச்சங்குளம் என்ற பெயரில் ஊர்கள் உண்டு. இன்றைய காலகட்டத்தில்  சீவலப்பேரி பகுதி மட்டும் தான் கடிப்பு வாங்க எஞ்சியிருக்கும் ஒரே இடம்.

மருத்துவகுணம் உள்ள கம்புகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள் எனும்போது, உள்ளூர ஒரு திடுக்கிடலை நான் உணர்த்தேன். மருத்துவம் சார்ந்த அறிவுகள் எப்படி இவர்கள் பதப்படுத்தலுக்குள் வந்தன? பாளையைப் பதப்படுத்தும் வகைமைகள் ஒவ்வொர் இடத்திற்கு ஏற்ப வேறுபடுவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

குமரி மேற்கு பகுதியினைப் பொறுத்த அளவில் பனையேறிகளுக்கான பயன்பாட்டு நிலம் என்பவை கைவிடப்பட்ட மேட்டு நிலங்கள் தான். தண்ணீர் வசதி ஏதும் இருக்காது. ஆகவே பனையேறும் நேரம் தவிர்த்து தங்களுக்கு வேண்டிய காய்கறிகளையும் கீரைகளையும் பயிரிடுவார்கள். அதனை நடுதலை என்று கூறுவார்கள். கத்தரிக்காயும் வழுதணங்காய் போன்றவைகள் இதில் அடங்கும். பனை ஓலையில் செய்யப்பட்ட காக்கட்டை என்ற காவடி போன்ற நீர் சேகரிக்கும் பொருளில் நீர் மொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுவார்கள்.

பனங்காடுகளில் தற்போது பெருமளவில் காணப்படும் ஊடுபயிர், என்பது முருங்கை தான். முருங்கை, இரும்புச் சத்து வழங்கக்கூடிய ஒரு கீரையாகும். வறண்ட நிலத்தில் வளருவதால் இதனை பனையேறிகள் தங்கள் நடுதலைகளுடன் பேணிக்கொண்டனர். ஆகவே அவைகளுக்கு ஊற்றும் தண்ணீருடன் முருங்கையும்  காப்பாற்றப்பட்டு வந்தன.

தமிழகம் முழுக்க பனை எப்படி இருக்கின்றதோ அது போலவே வாழையும் தமிழகம் முழுக்க பரவியிருக்கிறது. வாழை மரத்தை பேண இன்னும் சற்றதிகம் நீர் தேவைப்படும். ஆகவே வறண்ட நிலங்களில் வாழைகள் பயிரிடப்படுவதில்லை. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழைகளையும் காக்கட்டையில் நீர் இறைத்தே பேணியிருக்கிறார்கள். வாழை குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் விழாக்களிலும் பங்குகொள்ளும் முக்கியமான மட்டுமல்ல ஒரே கனி எனலாம். வாழை பழுக்கும் சமயத்தில் அதன் குலைகளை தென்னை ஓலைகளை வைத்து பொதிந்து காப்பாற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருவேளை பழங்காலத்தில் பனையோலைகளை அதற்கு பயன்படுத்தியிருக்கலாம். இன்றும் கூட குமரி மாவட்டத்திலுள்ள திருமணங்களில் வாழைப்பழங்களை வழங்கும்பொது பனை ஓலைக் கடவத்தில் தான் வைத்து எடுத்துச் செல்லுவார்கள். 

மிகப்பெரும் தொழில் வாய்ப்பு எனும்போது பனையின் ஊடுபயிராக வேர்கடலை இருந்தது என்பதை சொல்லாமல் இருக்க இயலாது. கடலை மிட்டாய்க்கு பேர்போன இடம் என்றால் அது கோவில்பட்டி தான். கடலை மிட்டாய் முற்காலங்களில் கருப்பட்டி பாகு சேர்த்து தான் செய்தார்கள் என்பதை நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி உணர்ந்து அதனை மீட்டெடுத்திருக்கிறார். அந்த கலவையினை கண்டடைந்த நமது முன்னோர் மிகப்பெரிய வணிக வளத்தினைமட்டுமல்ல நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும்  பாதுகாத்திருக்கிறார்கள்.  ஸ்டாலினை பின்தொடருகையில் அப்படியே எள்ளும் நமது மரபில் இருந்திருக்கின்றன என்பதையும் நாம் காண்கிறோம். எண்ணை செட்டிகள் கருப்பட்டியினை எள் ஆட்டும்போது போடுவது வழக்கம் என்பது கூட நாம் பார்த்திருந்தோம். எள்ளும் கருப்பட்டியும் உரலில் போட்டு இடித்து கொடுத்த கோடியூர் ரெஜி வாத்தியாரை என்னால் மறக்க முடியாது.   

பனை மரத்தில் தொற்றி ஏறும் கொடிகள் குறித்த சரியான தரவுகள் என்னிடம் இல்லை ஆனால், தமிழகமெங்கும் பனை தொழில் கைவிடப்பட்ட இடங்களில், பனை மரத்தை பற்றி அழிக்கத்துடிக்கும் அளவிற்கு பெயர் தெரியா பல கொடிகள் சுற்றி படர்ந்து ஏறியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பனை மரத்தில் ஏறும் கொடிகளைக் குறித்து தனியாகவே எவராவது ஆய்வு செய்யலாம்.

பனை சார்ந்து வளருகின்ற வேறு சில மருத்துவ தாவரங்கள் என பிரண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி,  நன்னாரி, ஓரிதழ் தாமரை போன்றவற்றைக் பாண்டியன் குறிப்பிடுகிறார்.

தென் மாவட்டங்கள் தான் என்று அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட நன்னாரி சர்பத் வெகு பிரபலமாக இருக்கிறது. நன்னாரி, பனங்காட்டில் வளரும் மூலிகைச் செடி தான்.  நன்னாரி வேர் ஒரு சிறந்த நறுமணமூட்டி.

கருப்பட்டி காப்பி குறித்து தென் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள். சமீபத்தில் வேம்பார் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள், காப்பி குறித்து ஆய்வு செய்யும் ஒரு சர்வதேச ஆய்வாளர் வேம்பார் வந்ததைக் குறிப்பிட்டார். அவர் வெறுமனே தகவல்களை மட்டு சேகரிக்காமல் கருப்பட்டி காப்பி தயாரித்து குடித்து அதனை ஆவணப்படுத்தி சென்றுள்ளார். பொதுவாக கருப்பட்டி காப்பியில் காப்பி பொடியே இருக்காது என்பது அனேகருக்குத் தெரியாது. மாறாக கொத்துமல்லி போடுவார்கள். சுக்கு காப்பி போடும்போது சிறிது நல்ல மிளகும் போடுவார்கள். குமரி மக்கள் சந்திக்கும் இரு வேறு பருவமழைக்கு ஏற்ற வகையில் இந்த காப்பி தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கையில் தேனீர் அருந்துவது இனிப்பு சேர்த்து அல்ல என சொல்லக் கேட்டிருக்கிறேன். தேயிலையினை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடுவையில் எடுத்துக்கொள்ளுவார்கள். மற்றொரு கையில் கருப்பட்டியை எடுத்துக்கொண்டு, கருப்பட்டியைக் கடித்து தேனீரைக் குடிப்பார்கள். இவ்வகையில் வெகு சமீப காலத்தில் நமக்கு பழக்கமான தேயிலையுடன் கூட பனை உறவை மேம்படுத்திக்கொண்டது என அறிய முடிகிறது. 

பனங் கருப்பட்டி, அனைத்து மூலிகைகளும் சேரும் லேகியங்களில் ஒரு முக்கிய சேர்மானமாக இருந்துவந்திருக்கிறது. அவ்வகையில், நம்மால் எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு பனையோடு இங்குள்ள தாவரங்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு தாவரங்கள் கூட உறவாடியிருக்கின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 12

மார்ச் 19, 2021

கள்ளூறும் காலம்

சுமன் மற்றும் பீட்டர் இருவரும் என்னை பேருந்தில் வழியனுப்ப வந்தார்கள். இவர்கள் இருவரின் உதவியுமின்றி என்னால் கண்டிப்பாக பழவேற்காடு குறித்து முழுதுணர்ந்திருக்க இயலாது. அவர்களிடம் நன்றி கூறி இரண்டு பறிகளை எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டேன்.

சென்னை வந்தால் எனக்கு சொல்ல வேண்டும் என விஸ்வா வேதா சொல்லியிருந்தான். சென்னையில் அப்படி அனேகர் உண்டு. எனது பஞ்சவர்ணம் அத்தையின் மகள் செல்வி அக்கா மற்றும் பேராசிரியர் இஸ்பா ஆகியோருக்கு தெரியாமல் சென்னை வந்து செல்வது இயல்வதல்ல. அவர்களை சந்திக்காமல் ஊர் திரும்பினால் எப்படியாவது மோப்பம் பிடித்துவிடுவார்கள். பிற்பாடு நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டி வரும். அப்படி இருந்தும் சென்னை ஒவ்வொரு முறை வரும்பொதும் எவராவது என்னை கொத்திக்கொண்டு போய்விடுவதும் உண்டு. அலுவலக விஷயமாக வந்தால் தங்குமிடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். அன்று இரவு ஆவடியிலுள்ள முனைவர் இஸ்பா அவர்கள் வீட்டில் தங்கினேன். காலை 6.30 மணிக்கு விஸ்வா வந்து என்னை அழைத்துச் சென்றான்.

விஸ்வா பனை சார்ந்து சென்னையில் நிகழ்த்திய முன்னெடுப்புகள் முக்கியமானவை. பனை விதைகளை சேகரித்து கடற்கரைகளில் நடுவதும், ஏரி குளங்களில் நடுவதுமாக இருக்கையில் எனது தொடர்புக்கு வந்தவர். நோய் தொற்று இருக்கையில், விழுப்புரத்திலுள்ள கஞ்சனூர் சென்று மாட்டிக்கொண்டவர். அங்கே உள்ள பனையேறிகளுடன் மிகவும் நெருங்கிவிட்டார். ஏன் பனையேறவும் கூட கற்றுக்கொண்டார். அங்குள்ளவர்களை ஒன்றுதிரட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவர்கள் அனேகர் பனை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பியிருப்பது சிறப்பு என்றாலும், பனை விதை சேகரிப்பு, பனை ஏறுதல் போன்றவைகளில் ஈடுபாடுகொண்டோர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையே உள்ளது.

நாங்கள் செல்லும் வழியில் பல்வேறு பனை மரங்களை பார்த்து நிதானமாக சென்றுகொண்டிருந்தோம். சென்னை எல்லையில் சில மலைக்குன்றுகள் இருந்தன. அவற்றின் உச்சியில் ஒரே ஒரு பனை மரம் தனியாக நின்றதை விஸ்வா காண்பித்தார். வழியில் பதனீர் வாங்கி குடித்தோம், சர்க்கரைத்தண்ணி  தான். எப்போதும் சாலையோரத்தில் பதனீர் வாங்கிக்குடிக்காதீர்கள் என்பதுவே அனைவருக்கும் நன் சொல்லும் அறிவுரை. பனை ஓலைகளை அலங்காரமாக வைத்து பனையோலைப்பெட்டிக்குள் பானையில் வைத்து விற்கும் திரவத்திற்கும் பதனீருக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்காது. பனை பொருட்கள் சாலைகளுக்கு வரத் தேவையில்லாத அளவிற்கு அது உற்பத்தியாகும் இடத்திலேய மக்கள் வாங்கிச் செல்லுகின்றனர். ஆகவே நம்மை சாலையில் சந்திப்பவைகள் அனைத்துமே போலிகள் தாம்.

இதனை நான் சொன்னபோது, ஒரு நண்பர் கொதித்துப்போய் சொன்னார், “பன்னாட்டு நிறுவனங்களின் திருட்டுத்தனங்களைக் கேள்விக்குட்படுத்தாமல், அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை தேடும் இவ்வெளிய மக்களை ஏன் இப்படி பழிக்கிறீர்கள்” என்றார். மெய் தான், ஆனால், நம்மைத் தேடி வரும் போலி பனை பொருட்களால் உழைத்து ஓடாய்ப் போகும் பனையேறிகளின் வாழ்வு குறித்தும் பேசவேண்டி இருக்கிறதே? பனையேறிகள் மீது நான் பெருத்த மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் அனைவருமே, கடும் உழைப்பை செலுத்தி நேர்மையான வாழ்வை கடைபிடிப்பவர்கள் தாம். ஆனால் இந்த பொல்லாத காலம் அவர்களையும் திசை மாற்றிவிடக்கூடாதே என்கிற படபடப்பு எனக்கு உண்டு. பதனீரை இலவசமாக கொடுத்தவர்கள், இன்று அவைகளை விற்பதற்கு காரணம், காலம் அவர்களை அச்சூழலுக்குள் தள்ளியிருக்கிறது என்பது தான். அவர்களின் வாழ்வில் எவரும் விஷத்தை விதைத்துவிடக்கூடாதே என்கின்ற ஆதங்கத்தில் தான் போலிகளை கைகாட்டவேண்டியிருக்கிறது.

ஒருமுறை பனையேறிகளை நன்கு அறிந்த ஒருவர், சற்று பழைய மனிதர், நம்ம ஆட்களிடமும் தவறு உண்டு, தண்ணீரை பதனீரில் கலந்துவிடுவார்கள், அதற்குள்ளிருந்து தவளைக் குதித்துப்போகும்போது இவர்களின் வண்டவாளம் எல்லாம் வெளியாகிவிடுகிறதே என்றார். எனது 25 வருட அனுபவத்தில் இந்த குற்றச்சாட்டை நான் முதன் முறையாக கேட்கிறேன். அந்த பெரியவரின் கூற்று, ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வெகு பிரபலமாக இருந்த பால்காரர்கள் குறித்த நகைச்சுவை தொடர்ச்சி என்றே என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. பால்காரர்கள் தண்ணீர் சேர்ப்பார்கள் என்று ஒரு காலத்தில் பத்திரிகைகள் விதம் விதமாக சிரிப்பு துணுக்குகளைப் போட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் பாக்கெட் பால் வந்தபோது, பாலே இல்லாமல் டிடர்ஜெண்ட் சேர்த்து கொடுக்கப்பட்டபோது அது குறித்து பேச்சு மூச்சில்லை. சிலர் சந்தேகிப்பது போல, நமது பாரம்பரியத்தை ஊடகங்கள் தான் முதல் ஆளாக நின்று அழித்திருக்கின்றன. சரி, தவளை வந்தது உண்மையா இல்லையா என கேட்கலாம். பனை மரத்தில் வாழும் தவளைகள் தான் இருக்கின்றனவே? அவைகள் ஏன் உள்ளே குதித்திருக்கக்கூடாது? ஆம் பனை மரத்தில் தவளை இருக்கும் என்ற தகவலும் பொது மக்களுக்கு தெரியாது, பனையேறிகள் மட்டுமே அறிந்த உண்மை அது. ஆக இவர்களின் அறியாமையால் பனையேறிகளை பழியேற்கவைத்துவிடுகிறார்களே?

திண்டிவனம் பனங்காடு

திண்டிவனத்தை நெருங்கியபோது விஸ்வா என்னிடம், “அண்ணா இங்கே தான் இந்த வருடம் பனை விதைகளை சேகரித்தோம்” என்றான். பனை விதை சேகரிப்பு என்பது பனை பாதுகாப்பில் ஒரு முக்கிய செயல்பாடு. பனை சார்ந்த சூழியலை அவதானிக்கும் செயல்பாடு இது என்று நான் கூறுவேன். பனையேறிகளின் குடும்பத்தினரைத் தவிர, பனை மரத்தை அணுகி அறிந்தவர்கள் பனை விதை சேகரிப்பாளர்கள் தான். பழங்கள் விழும் காலம், சேகரிக்கும் திறன், பாதுகாத்து வைக்கும் நுட்பம், புதர்களுள் கிடப்பவைகளை கண்டுபிடிப்பது, பனங்காடுகளுக்குள் வசிக்கும் உயிரினங்கள் என அது ஒரு மாபெரும் பட்டறிவு பாசரை. இன்று தமிழகத்தில் பனை விதைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர செயல்பாடு ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், பனை விதைகள் சேகரிப்பதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பனை விதைகள் சேகரிக்காதவர்கள் கூடி, நாங்கள் தான் பனை நட்டோம் என்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டும் அசிங்கங்களும் இக்காலங்களில் அரங்கேறத் துவங்கின. ஆகவே, பனை விதைகளை சேகரிக்காதவர்கள் விதைப்பதில் அர்த்தமில்லை என்று நான் பகிரங்கமாகவே அறிவித்தேன்.

பனை விதைகள் என்னும் வார்த்தை 2016 ஆண்டிற்கு பிறகே புழக்கத்தில் வந்தது. பனங் கொட்டை என்ற வார்த்தையே மரபானது. தமிழகமெங்கும் பாரம்பரியமாக கொட்டைகளை சேகரித்து, அவைகளை கிழங்குகளுக்காக போடும் தொழில் செய்பவர்கள் அனேகர் உண்டு. அப்படிப்பட்ட முதியவர்கள் தான் பெரும்பாலும், பனங்கிழங்குகளை வாங்கி பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் விற்பனை செய்வார்கள். இவ்விதமான மனிதர்களின் வாழ்வாதாரம் குறித்து எவருமே சிந்திப்பதில்லை. பனை விதைப்பு குறித்து எப்போதும் நான் சொல்லும் கருத்துக்கள் உண்டு. கூடுமானவரை நமது ஊருக்கு அருகாமையிலேயே பனை விதைகளை சேகரிக்க வேண்டும். அப்படி சேகரிக்கும்போது, வழக்கமாக சேகரிக்கும் நபர்கள் ஊருக்குள் இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்ச தொகையினை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு ஊரில் கிடைக்கும் பனை விதைகளில் இருபது சதவிகிதம், வெளியூருக்கு அனுப்பலாம். ஆனால் 80 சதவிகிதம், உணவாக மாற வேண்டும். தேவையான அளவிற்கு வருடம் தோறும் விதைக்கப்பட வேண்டும். இன்று, பல ஊர்களில் பனை விதை நடவோ, உணவாக பாவிக்கப்படுவதோ இல்லை. நேரடியாக பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். பனை விதைகள் ஒரு நுகர் பொருள் என்ற நிலையினை அமைத்தாலே பனை மரங்கள் வைத்திருப்போருக்கு அதனை பாதுகாக்க தோன்றும். நாமாக களமிறங்கி பனை விதைகளைப் பொறுக்கவில்லையென்று சொன்னால், பனை விதைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு அடிப்படை விலை கொடுப்பது அவசியமானதும் அர்த்தம் பொதிந்ததுமாகும்.

திண்டிவனத்தின் பனங்காடுகள் என்னளவில் மிக முக்கியமானவைகள். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் எவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நெருக்கமாகவும், நெடுந்தூரம்  பரவியிருப்பதையும் காணலாம். எனக்கு அந்த பகுதிக்கு செல்லவேண்டும் என பல முறை எண்ணமிருந்தும் சாத்தியப்படவில்லை. இம்முறை விஸ்வா தனது பைக்கில் என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அது ஒரு ஏரியின் கரைப் பகுதி. கரை ஓரப்பகுதி சுமார் 30 மீட்டர் அகலம் இருக்கும். அதற்குள் வரிசையாக 10 பனை மரங்கள் நெருங்கியபடி நிற்கும். அந்த பகுதியில் தானே ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருக்கிறதைப் பார்க்கலாம். தமிழகத்தில் இதுபோல நெருக்கமாக இருக்கும் பனங்காடுகள் வேறு பல இடங்களிலும் இருக்கின்றன. வரிசையாக ஒற்றைமரங்கள் சுற்றி இருக்கும் பகுதிகளும் இருக்கின்றன. இந்த பனை மரங்கள் யாவும், அருகிலுள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்டது என விஸ்வா சொல்லக்கேட்டேன். பருவ காலத்தில் வாரத்திற்கு ஒருமுறைச்  சென்றால், ஒரே நாளில் 10,000 விதைகள் பொறுக்க இயலும்.  திண்டிவனம் பகுதியில் காணப்படும் இந்த பனங்காடு ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு மாபெரும் பனை சுரங்கம்.

திண்டிவனம் என்பதற்கான பெயர் காரணம் குறித்து தேடும்பொது திந்திரி வனம் என்ற பெயர் மருவியிருப்பது தெரியவந்தது. திந்திரி என்றால் புளிய மரம் என்றும், வனம் என்பது மரங்கள் நெருக்கமாக இருக்கும் காட்டுப்பகுதி என்பதும் நாம் அறிந்ததே.  புளியமரங்களும் பனை மரங்களும் பிறப்பிடம் சார்ந்து நெருங்கிய உறவினர்கள் தாம். இரண்டிற்கும் தாயகம் ஆப்பிரிக்கா என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் அதிக பனை மரங்கள் நடப்படுவதை அறிந்து மனவேதனைக்குள்ளான ஒரு “சமூக ஆர்வலர்”, பனை ஒரு வந்தேறி மரம் என குறிப்பிட்டார். பனை இங்கு வந்தேறியிருக்காவிட்டால், தமிழகம் கண்ட பஞ்சத்தில், பூர்வகுடிகள் என சொல்லப்படும் எவரும் எஞ்சியிருப்பார்களா என்பது சந்தேகமே. புளி நமது சமையலறையின் முக்கிய சுவைகூட்டியாக இருப்பதுடன், விறகாகவும் மருந்தாகவும் கூட பயனளித்திருக்கிறது. பஞ்சகால உணவாக புளியங்கொட்டைகள் இருந்திருக்கிறன.

ஏரியில் தண்ணிர் இல்லை. எங்கள் இரு சக்கர வாகனம் ஏரிக்குள் தான் நிறுத்தப்பட்டிருந்தது. சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். நான் புகைப்படங்களை எடுப்பதை விஸ்வா புகைப்படம் எடுத்தார். அது ஒரு சிறந்த புகைப்படமாக மாறிவிட்டது. மறுநாளில்தானே மும்பையிலிருந்து துருவா என்ற சூழியல் செயல்பாட்டாளர், எனது புகைப்படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். “பனைகள் சூழ பனை மனிதன்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அப்படத்தை பார்க்கையில் பனையால் அமைத்த கோட்டைக்குள் நான் நிற்பது போன்ற ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது.

வழியில் தானே காலை உணவை உண்டோம். அந்த நேரத்தில் விஸ்வாவின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே, தனது அலுவலக வேலையினை சிறிது நேரம் அந்த உணவகத்திலேயே தொடர்ந்தார். இன்னும் வந்து சேரவில்லையா என்று விழுப்புரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மீண்டும் பயணிக்கையில், சாலை ஓரத்தில் வரிசையாக பனை மரங்கள் நிற்பதைக் கண்டு அந்தவழியாக வண்டியை திருப்பச் சொன்னேன். சில நேரங்களில், வேறு திசையிலிருந்து எடுக்கும் புகைப்படங்கள் சிறப்பானதாக இருக்கலாம் என்று நினைத்து தான் அப்படி சொன்னேன். நாங்கள் உள்நுழைந்து சென்ற பாதை முடிவடைத்தது. தூரத்தில் பனை மரங்களும் ஒரு பனையோலைக் குடிசையும் தென்பட்டது. போவதற்கு பாதை இல்லை. விஸ்வா காய்ந்து கிடக்கும் தாளடிகள் கருகின வயலின் ஊடாக அந்த குடிசை நோக்கி போனபோது, அது ஒரு சிறு கோவில் என புரிந்தது. அங்கிருந்து திரும்பி பார்த்தபோது கோவிலுக்கு எதிரில் ஒரு மிக அகன்ற தெரு முழுக்க பனை ஓலைகளால் கட்டப்பட்ட வீடுகள் இருமருங்கிலும் இருந்தன.

தெருவில் எவருமே இல்லை. வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஒவ்வொரு வீடாக சென்று பார்த்தோம். மண் சுவர் மற்றும் ஓலை குடிசைகள் தான். சில வீடுகள் முழுவதுமே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பாம்பை போல் ஊர்ந்து சென்றால் மட்டுமே உள்ளே செல்ல இயலும்போல் வாசலுக்கு முன்பு கூரை மிகவும் தாழ்வாக இறங்கியிருந்தது. எங்கள் சந்தடி கேட்டு இரண்டு சிறுமிகள் வெளியே வந்தார்கள். மெலிந்த உருவம் அழகிய கரிய நிறமும் அகன்ற கண்களும் கொண்டவர்கள். படிக்கிறீர்களா என்று கேட்டபோது ஒரு பெண் 5ஆம் வகுப்போடு நிறுத்தி விட்டதாகவும், மற்றொறு பெண் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினாள். அங்கிருந்தே ஒரு ஓலை இலக்கை உருவி அவர்கள் படத்தை  செய்து கொடுத்தேன். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இவர்கள் இருளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்கிற புரிதல் எனக்கு கிடைத்தது. பனை ஓலைகளோடு புழங்கும் இவர்களுக்கு பனை ஓலை பயிற்சி ஒன்று வழங்கினால் என்ன என விஸ்வா கேட்டான். பனையேறி பாண்டியனைக்கொண்டு இங்கு ஒரு பயிற்சி ஒழுங்கு செய்ய முடியும் என்றும் சொன்னான்.

இருளர் பழங்குடியினர்

பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் மேற்கொண்டு என்ன படிக்க உனக்கு விருப்பம் எனக் கேட்டோம். மருத்துவர் ஆக விருப்பம் என்றாள். ஆடிப்போய்விட்டேன். எத்துணை பெரும் கனவுகள் இச்சிறிய ஓலைக் இக்குடிசைக்குள் இருக்கின்றன? கல்வி வியாபாரமயமாகிப்போன சூழலில் இக்கனவுகள் சாத்தியமா? இக்குழந்தைகளுக்கு வழிகாட்டவும், இவர்களுக்கு உதவி செய்யவும் நன்னெறிப்படுத்தவும் யாரேனும் இருக்கிறார்களா? இத்தகைய கனவுகளை தேடி கண்டடைந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் மக்கள் இருக்கிறார்களா? இருக்கலாம். ஆனால் கிராமங்களையும் தாண்டி இவ்வித குடிசைக்குள் இருப்பவர்களை அவர்களால் இனம் காண முடியுமா? முடியும் என்றால் மிகவும் நல்லது. ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த குழந்தைக்காக உள்ளூற இறை மன்றாட்டை ஏறெடுத்தேன். 

கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம். கஞ்சனூர் சென்றபோது கிராமத்து சிறுவர் சிறுமியர் அனைவரும், நீல நிற பனியன் போட்டுக்கொண்டு தோட்டத்திலிருந்து கும்பலாக வந்துகொண்டிருந்தார்கள். அனைவருக்கும் மோர் கொடுக்கப்பட்டது. பாண்டியன் வந்தார். உணவு இனிமேல் தான் தயாரிக்க வேண்டும் என மணிமேகலை கூறினார்கள். சாப்பாடு ஆயத்தமாகும் நேரத்திற்குள் விஸ்வா அலுவலக வேலைக்குள் மீண்டும் மூழ்கினார். வெகு சீக்கரமாகவே, சாதமும் மாட்டுக்கறியும் ஆயத்தமானது. மணிமேகலையின் சமையல், தனித்துவமானது. எதைச் செய்தாலும் குறைவில்லா சுவையுடனிருக்கும். பாண்டியன் வீட்டில் உள்ள சமையலில் பெரும்பகுதி அவர்கள் தோட்டத்தில் விளையும் அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டே அமையுமானபடியால், ஆரோக்கியத்திற்கும் பஞ்சமில்லா நஞ்சில்லா உணவுகளே அங்கே எப்போதும் கிடைக்கும்.

உணவு அருந்தியபின், கிராமத்தினருடன் ஒரு கலந்துரையாடல் செய்யலாமா என்று கேட்டேன். “செய்யலாங்க ஐயா” என்றார் பாண்டியன்.  பாண்டியன் என்மீது பெரும் மரியாதை வைத்திருக்கும் பனையேறி. 2017 ஆம் ஆண்டு தான் தனது முன்னோர்கள் வழியில் பனை தொழிலுக்குள் வந்தவர். முதல் ஆண்டிலேயே, பனங் கருப்பட்டி தயாரித்து விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை தாண்டி வந்தவர். பனை கண்டிப்பாக கைகொடுக்கும் ஒரு மரம் என உள்ளூற நம்புகின்றவர். அதனை தன் வாழ்வில் அனுபவிப்பவர். பனை குறித்து வெற்று குரல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தபோது தனது வாழ்வை பனையோடு இணைத்து ஆழமான கருத்துக்களை முன்வைப்பவர். பனை வாழ்வியலை மையமாக கொண்டவர். எனது பல கேள்விகளுக்கு நான் விடை தேடி நிற்கும் பனையேறி. அவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இளையவள் கரிஷ்மா. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். என்னை காட்சன் தாத்தா என்றே அழைப்பாள். நமக்கு வயசாகிக்கொண்டு போவது குழந்தைகளுக்கு தான் முதலில் தெரிகிறது. கரிஷ்மா நான் பார்த்த முதல் பனையேறும் சிறுமி. அனாயாசமாக ஏறுகிறாள். உற்சாகம் ததும்பும் இரண்டு குழந்தைகள் என பாண்டியன் வீடே கலகலப்பாக தான் இருக்கும். மூத்த மகள் வீனுச் சிறப்பாக சிலம்பம் விளையாடுகிறாள்.

பாண்டியனிடம் எனது தொப்பியைக் காட்டி, இதனை நார் கொண்டு பொத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். நார் உரித்து, நீரில் போட்டுவிட்டு இரவு நாம் இதனை சீர் செய்யலாம் என்று கூறினார். வேறு வேலை இல்லை. இரவு ஏழு மாணிக்கு தான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தோம். ஆகவே நான் விஸ்வாவின் பைக்கை எடுத்துக்கொண்டு பண்ருட்டி சென்று பஞ்சவர்ணம் ஐயா அவர்களை சந்திக்கலாம் என்று புறப்பட்டேன். தெரியாத சாலை தான் ஆனாலும், எப்படியோ போய் சேர்ந்துவிட்டேன். பஞ்சவர்ண்ம் அவர்கள் நடமாடும் தாவரக் களஞ்சியம் எனப் பெயர் பெற்றவர்.

என்மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் பெரியவர். இந்தியாவிலேயே முதல் கணினி நிர்வாகம் கொண்ட பஞ்சாயத்தாக பண்ருட்டி பஞ்சாயத்தை மாற்றிய பெருமை இவரையே சேரும். பல சிறு பயணங்கள் இணைந்தே செய்திருக்கிறோம். பனை சார்ந்த கருத்துக்களை மணிக்கணக்காக பகிர்ந்திருக்கிறோம். அவரோடு இருந்த ஒவ்வொரு கணமும் எனது வயதை ஒத்த தோழனுடன் பழகுவதைப்போன்ற இனிமையான தருணங்களே. அவரது பனைமரம் என்ற புத்தகம் தான் எங்களை ஒன்றிணைத்தது. தமிழில், பனை சார்த்து இத்தனை விரிவான தொகுப்பு பனைக்கு இருந்ததில்லை என்பது தான் உண்மை. அதனைத் தொடர்ந்து பனை பாடும் படல் என்ற சிறிய புத்தகத்தையும் அவரது பஞ்சவர்ணம் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.

அவரை எனது பயணத்தில் பார்த்து ஆசி பெற்று, பனங்கள்ளிற்கு ஆதரவு பெறவுமே சென்றேன். அவர் தமிழக அரசியல் சூழ்நிலைகளை மிகச்செரியாக உள்வாங்கியிருப்பவர். “கள்ளுக்கெல்லாம் அனுமதி தரமாட்டார்கள். கொடுத்தால் நல்லதுதான் என்றார்”. குறைவாகவே அன்று பேசிக்கொண்டோம். மிக அதிக பயணங்களை மேற்கொள்பவர், நண்பர்கள் சூழவே இருப்பவர், நோயச்சத்தால், வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி இருந்தார். நான் சென்று பார்ப்பதில் உள்ள அபத்தத்தை உணர்ந்திருந்தேன். ஆனால் நான் அவரை பார்க்காமல் வந்திருப்பேனென்றால் அது சரியாயிராது. சுமார் நூறு கிலோமீட்டர் மின்னலென போய் வந்தேன். 

உண்பதற்கு தயாராகும் செங்காய்கள்

நான் பாண்டியன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஊரிலுள்ள பனையேறிகள் அனைவருக்கும் தகவல் அனுப்பியிருந்தார். அவர்கள் வருமுன்பதாக நாம் பனம் பழங்களை அறுத்து வேக வைப்போம் என்று கூறி ஒரு குலையை முழுவதுமாக தனது அரிவாளால் அறுத்து தள்ளினார். செங்காய் பருவத்திலான அவ்வித பனங்காய்களை அதுவரை நான் சுவைத்ததில்லை. பனம் பழங்கள் சுவைத்திருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு புதிது. விஸ்வா பணியின் நிமித்தமாக கலந்துகொள்ள இயலாது என கூறினான். சுமார் 30 பனையேறிகள் அன்று மாலை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.   எழரை மணிக்கு ஒருவாறு நிகழ்வைத் துவங்கினோம். சிமென்ட் சாலையில் பனையேறிகளுக்கு முன்பு நான் தரையில் அமர்த்துகொண்டேன். கஞ்சனூர் என்பது நான் இறங்கும் பேருந்து நிறுத்தம் தான். பூரிகுடிசை என்பது தான் பனையேறிகளை நான் சந்தித்த இடம். அங்கிருப்பவர்களில் ஒரு சிலரை நான் அறிவேன். ஆனாலும் பலரும் புது முகங்களாக இருந்தார்கள். பனையேறிகள் மத்தியில் இருக்கும்போது எனக்கு ஆலய ஆரதனையில் இருப்பது போன்ற உணர்வே எழுத்தது. பாண்டியன் என்னைக்குறித்து ஒரு சிறு அறிமுகம் கொடுத்தார். நான் எனது மிகச்சிறிய உரையத் துவங்கினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

நான் வெகுவாக மதிக்கும் பனையேறிகள் மத்தியில் நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பனை சார்ந்த தொழில் அனைத்திற்கும் பனையேறிகளே அச்சாணிகள். பனையேறிகள் இல்லாமல் பனைத் தொழில் என்பது இல்லை. எனது வாழ்வில் எப்போதும் பனையேறிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசு கருத்தில் கொண்டதாக சரித்திரம் இல்லை. மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை 1985 ஆம் ஆண்டு பதினைந்தாயிரம் தொழிலாளர்களை இணைத்து ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்தது. அரசின் காதில் எதுவுமே விழவில்லை. ஆகவே அரசு என்பது, தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியின் நிலைப்பாடுகளையே முன்னிறுத்தும். நமக்கு இப்போது சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறதானபடியால், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு நாம் வக்களிப்பதுவே நமது கோரிக்கைகளை வலுப்பெறச் செய்யும். தமிழகத்தில் கள்ளிற்கு ஆதரவான கட்சிகள் என ஏதும் இல்லை. அதிலும், கள் என்கிற வார்த்தை சங்க காலம் முதல் இன்றுவரை நம்மிடம் மருவாமல் வந்து சேர்ந்திருக்கும் ஒரு பொருள். என்றாலும் அதனை ஆதரிக்கின்றோம் என்று சொல்லி பனம் பால் தென்னம் பால் என்று சொல்பவர்களையும் சேர்த்தே கேள்வி கேட்கிறோம். ஓளவை என்னும் மூதாட்டி, கள் குடித்து போதை தலைகேறி “அறம் செய்ய விரும்பு” என்று ஆத்திச்சூடியினை கூறியிருப்பாளாகில், இன்றும் அவ்வித பானத்தை நாம் ஏற்றுக்கொள்ளுவதில் பிழையில்லை. 

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

கள் என்பது பலவகைகளில் ஒரு அடிப்படை விசையினை கொண்டிருக்கும் ஒரு உணவுப்பொருள். பனை மரம், பனையேறுவோர், நுகர்வோர், பனை சார்ந்த இதர பொருட்களைச் செய்வோர் என கள் ஒரு விரிந்த பின்னணியம் கொண்டிருக்கிறது. பனையும் பனையேரிகளும் தான் கள்ளிற்கு அடிப்படை. கள் வேண்டாம் என்பது பனையையும் பனை சார்ந்து வாழும் தொல்குடிகளையும் அச்சுறுத்தும் செயலே அன்றி வேறில்லை. கள் இறக்கும் தொழில் அல்லது மரபு அறுபடாத ஒரு சங்கிலியாக பன்னெடுங்காலமாக கள் நமது வாழ்விலும்  மரபிலும் வந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகும். இதனைக் குறித்து புரிதலின்மையால் அல்லது வஞ்சத்துடன் எவரும் நமது வாழ்வாதாரத்திற்கு எதிராக நிற்பார்களேயானால் அவர்களை கேள்வியேழுப்புவது நமது கடமையாகிறது.

ஆகவே நமக்கு என்ன தேவை என்பதை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது தேவைகளை நம்மிடம் ஓட்டு கேட்க வருகிறவர்களிடம் சொல்ல வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்திற்கு உறுதி தருகிறவர்களுக்கே நாங்கள் ஓட்டளிப்போம் என ஒரு குரலாய் ஒலிக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். இன்று நாம் யாரையும் கொள்ளையடிக்கவில்லை ஆனால், உழைக்கிற நம்மை காவல்துறை கைது செய்கிறது. நாம் உழைத்து சேமிக்கிற  பணத்தை நம்மை மிரட்டி லஞ்சமாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். நமது தொழிற் கருவிகளான பானைகளை அனாயாசமாக உடைக்கிறார்கள், நாம் ஏறிக்கொண்டிருக்கிற பனை மரங்களிலிருந்து பாளைகளை வெட்டித்தாள்ளுகிறார்கள், நம்மை கைது செய்து நமது வேலைகளை செய்ய விடாமல் இடைஞ்சல் செய்கிறார்கள்.  நம்மை அடித்து குற்றவாளி போல, நடத்துகிறார்கள். இவைகளை கேட்க இன்று நாதியில்லை. ஆகவே, வருகிற தேர்தலில், நமது ஊருக்குள் வருகிறவர்களுக்கு என நாம் ஒரு பத்து அம்ச கோரிக்கைகளை வைப்போம். அந்த கோரிக்கைகளை நீங்களே வடிவமைக்க வேண்டுகிறேன். உங்கள் தேவைகளை நீங்கள் முன்வைக்கும்பொது, அதற்கான தீர்வை ஏதேனும் ஒரு கட்சி முன்மொழியும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினேன்.

பூரிகுடிசை பனையேறிகளுடன் கலந்துரையாடும்போது

பூரிகுடிசை மக்கள் உண்மையிலேயே குடிசை வாழ் மக்கள். பனை மரத்தினையும் தங்கள் உழைப்பினையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மக்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட இங்கு வந்து அனைவரையும் கருப்பட்டி காய்ச்ச சொல்லி அறிவுறுத்தியிருந்தேன்.  ஏனென்றால், கள்ளிறக்கும் உரிமை கிடைக்காது என்ற நிதர்சன உண்மையால் மட்டும் தான். ஆனால், இந்த சட்டமன்ற தேர்தல் ஒரு வாய்ப்பு. நாம் கேட்டு பார்க்கலாம். ஓட்டிற்காக எதுவும் செய்வார்கள் என்ற நிலையில் சற்றேனும் பொருட்படுத்துவார்கள் என்றே எண்ணி கூறினேன். இன்று அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் சூழலில், கள்ளிற்கான அனுமதி என்பதைக் குறித்த மவுனம் பனைத் தொழிலாளர்கள் எப்போதும் வஞ்சிக்கப்படும் சூழல் இருந்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அந்த கூடுகை அம்மக்களை ஒரு முகப்படுத்தியது ஒரு முக்கியமான நிகழ்வு. தேர்தலை ஒட்டி இதுவரை எவரும் கள் அரசியல் முன்னெடுபுகளைச் செய்ததில்லை. மீண்டும் அங்கே நான் வரும்போது நமது பத்து அம்ச கோரிக்கைகளில் என்ன இருக்கலாம் என தீர்மானிக்கலாம் எனக் கூறினேன். அதற்கு முன்னதாக அவைகள் குறித்து நீங்களே கூடி விவாதிப்பது நல்லது எனக் கூறினேன். எனது பயணத்தில் பூரிகுடிசை மக்கள் மிக முக்கியமானவர்கள். இன்றுவரை பனை தொழிலினை கிராமமாக முன்னெடுப்பவர்கள். இக்கிராமத்தினை ஒரு பனை சுற்றுலா கிராமமாக மாற்றவேண்டும் என்பது எனது கனவு. இக்கிராமத்தினரோடு எனக்கிருக்கும் தொடர்பு பாண்டியன் அவர்களால் உருவானது. ஆகவே அவ்வப்பொது என்ன செய்யலாம் என திட்டமிட்டு சில விஷயங்களை முன்னெடுப்போம். நான் மும்பை போன பிற்பாடு கூட, பனையோடு விளையாடு என்ற ஒரு நிகழ்வினை நடத்தி, சுற்றியிருக்கும் கிராமத்துக் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்தோம். என்ன தான் செய்தாலும், கள் இறக்குவது தடை என கொள்ளப்பட்டால், இவர்கள் வாழ்வில் மட்டுமல்ல தமிழக பனையேறிகள் வாழ்வில் பெரும் சிக்கலே நீடிக்கும் என்பது தான் உண்மை.

அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். கள் எப்படி தங்கள் வாழ்வோடு இணைந்திருக்கிறது எனபதை பகிர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி கள் ஒரு உணவாக அக்கிராமத்தில் இருக்கிறது எனவும், கள்ளின் மருத்துவகுணங்களையும் விவரித்தார்கள். பாண்டியனின் மகள் கரிஷ்மாவிற்கு கையில் ஒரு தோல் நோய் ஏற்பட்டபோது, உண்பொருள் குண அகராதியில் கள் தொழுநோயை குணமாக்கும் என்ற வாக்கியத்தை வாசித்து  அதனை தொடர் சிகிழ்ச்சையாக பாண்டியன் அளித்தார். கரிஷ்மாவின் தோல் வியாதிகள் குணமடைந்ததை நான் கண்கூடாக பார்த்தேன்.

பாண்டியன் சொல்லும் ஒரு கருத்து நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. “கள் விற்பனைக்கு வந்தால், எவரும் வெளிநாட்டு மதுவென்று எதனையும் தேடிப்போக மாட்டார்கள், ஆகவே நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். மக்களின் வாழ்வில் நோய்கள் குறையும்போது மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் தேவையற்றதாகிவிடும், அப்படியே பனங்கள்ளில் இருக்கும் ஏழு வகையான தாது பொருட்கள் தேவையற்ற ஊட்டத்து நிறுவனங்களை புறமுதுக்கிட்டு ஓடச்செய்துவிடும். இவ்விதம் நோயற்ற வாழ்வு வாழும் போது மக்களது உடலில் ஒரு பொலிவு கூடிவிடும் அது, நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்ற அழகு சாதன விற்பனையாளர்களை புறம் தள்ளிவிடும். ஆகவேதான் கள்ளை பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து கட்டுபடுத்துகிறார்கள்”. அவரது கூற்று முற்றிலும் உண்மை. இன்று கள்ளிற்கான தடை அதில் இருக்கும் போதைக்கு எதிரானது அல்ல, அது நமது தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வலுவுள்ளதாலேயே, அதன் மீதான அடக்குமுறைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இரவு வீட்டிற்கு வந்தபோது பனம்பழங்கள் தயாராக இருந்தன. நான் பனம்பழங்கள் சாப்பிட, பாண்டியன் பனை நாரினை உரித்து செதுக்கி கொடுத்தார்ர். கிட்டத்தட்ட எட்டு நாரினை சீர் செய்து கொடுத்தார். நானே அவைகளை  பொத்திக்கொள்ளுவேன் எனக் கூறி எடுத்துக்கொண்டேன். நாளை காலை எனது மாமா மகள் மெலடியுடைய திருமண நாள். நான் சென்று சேர வேண்டிய நிற்பந்தம், ஆகவே விஸ்வாவிடம் என்னை எப்படியாவது விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டுவிடு என்றேன். அந்த இரவு நேரத்திலும், களைப்பினைப் பொருட்படுத்தாது என்னை கொண்டு விட்டான். “நாம இதுவரை சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்ணா” என்றபடி ஒரு செல்ஃபி எடுத்தான். எங்களது சந்திப்பில் எப்போதும் ஒரு செல்ஃபி இருக்கும்.

விஸ்வாவுடன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில்

விழுப்புரம் வந்த பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் கிடைக்காதது ஒருபுறம், நாகர்கோவில் பேருந்துகளும் குறைவாகவே வந்தன. ஆகவே திருச்சி வண்டி பிடித்தேன். பேருந்தில் இருந்தே, எனது தொப்பியை நார் கொண்டு பொத்த ஆரம்பித்கேன். நான்கு நார்களையே என்னால் பொத்த முடிந்தது. திருச்சியிலிருந்து மதுரைக்கு வண்டி பிடித்தேன். மதுரை வந்தபோது நாகர்கோவில் வண்டியைப் பிடிக்க சென்ற அவசரத்தில், ஏனாதிகள் செய்து கொடுத்த அனைத்து  பறிகளையும் பறிகொடுத்தேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 11

மார்ச் 16, 2021

பனை வழி சமூகங்கள்

பீட்டர்வருவது வரை காத்திருந்ததுவிட்டு என்னை பொறுப்பானவர் கரத்தில் ஒப்படைத்த திருப்தியில் சேவியர் சென்னை கிளம்பினார். பீட்டர் கடல் தொழில் செய்து உரமேறிய உடல் கொண்டவர். முகத்தை முழுவதுமாகவே மழித்திருந்தார். மென்மையாக பேசினார்.  அவரது வாகனத்தில் பெட்ரோல் இட்டுக்கொண்டு அருகிலிருந்த ஒரு ஏனாதி பழங்குடியினர் கிராமம் நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் தானே முந்தைய நாள் பார்த்த அந்த எளிய மனிதரைப் பார்த்தேன். அவருக்குக் கண் தெரியாது ஆனால் அவர் தான் இவ்வித பறிகள் செய்வார் என அறிந்துகொண்டேன். அவரது கிராமத்திற்கு போகும் வழியில் வேறொரு கிராமம் சென்றோம்,. மிக ஏழ்மையான கிராமம். சுமார் 30 வீடுகள் இருக்கலாம். அக்கிராமத்தின் துவக்கத்தில் ஒரு சிறு கோயில் இருந்தது, ஒரு சில ஆடுகள் நின்றன. எண்ணை காணாத   தலைகள் கொண்டவர்களே இருந்தார்கள். பீட்டர் தேடிய நபரைக் காணவில்லை. அருகில் ஒரு குளியலறை பனை ஓலைகளைக்கொண்டு மறைவு போல் அமைக்கப்பட்டிருந்த்தது.

பனை ஓலைகளைக் கொண்டு மறைத்து உருவாக்ககப்பட்ட குளியலறை

மீண்டும் பயணிக்கையில் ஒரு நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சேற்றுப்பகுதியில்  நின்றுகொண்டு இரு பெண்கள் இறால்  பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் முதிய பெண் தனது வாயில் பரியினை கடித்தபடி நீரில் மீன்களை துளாவிக்கொண்டிருந்தார். எங்கள் பைக் அந்த நீர் பிடிப்பு பகுதியில் காணப்பட்ட தற்காலிக சாலை வழியாக சென்று முக்கிய பாதையில் ஏறியது. பழவேற்காட்டின் எல்லையை கடந்து மிக ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த ஏனாதி கிராமம் சமீபத்தில் நான் பார்த்த பேரதிர்ச்சிகளுள் ஒன்று. நாங்கள் சந்தித்த அக்குடும்பம் அங்கிருந்த பாழடைந்த ஒரு வீட்டில் தங்கி  இருந்தது. சுவரில் ஒரு ஆள் நுழையும்படியான ஓட்டை. தெருவில் நாம் பார்க்கும் கைவிடப்பட்டவர்களிடம் இருக்கும், ஏகாந்தம், தனிமை, புறக்கணிப்பு, பசி, வறுமை என எல்லாம் கூட்டாக அங்கிருந்தது.

பறியில் ஒரு வகை

நான் அந்த  கிராமத்தின் தெருக்களில் மெல்ல நடந்து அதனை புரிந்துகொள்ள முற்பட்டபோது பெரும்பாலான வீடுகள் பனை ஓலையால் வேயப்பட்டதாக இருந்ததைக் காணமுடிந்தது. ஒற்றை அறை, அதற்கு செல்லும் ஒற்றை வாசல்கள் கொண்ட குடிசைகள்.  அனைத்துமே தற்காலிக குடிசை பகுதி போல தோன்றின. அனைத்து குடிசைகளும் ஒன்றுபோல் இருந்தன. வாசல் பகுதி சற்றே முன்னால் நீண்டபடி இருக்கும் ஒரு அமைப்பு என தனித்து அழகு கொண்டதாகத்தான் காட்சியளித்தது. வீடும் வீட்டடியும் இரண்டு முதல் 4 சென்று நிலம் மட்டுமே இருக்கலாம்.  பெரும்பாலான வீடுகளைச் சுற்றி இருக்கும் வேலிகளில், பனையோலையில் செய்யப்பட்ட பறி தொங்கிக்கொண்டிருந்தது.

பெருச்சாளி வடிவத்தை ஒத்திருக்கும் ஏனாதிகளின் குடிசை

பனை ஓலைக் குடிசைகள் செய்யும் திறன் இன்று ஒரு சில சமூகத்திடம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு தொழில் நுட்பம். ஏனாதிகளிடம் காணப்படும் இந்த தொன்மையான கட்டிடக்கலை அவர்களுக்கு நல் வாய்ப்பை அளிப்பதாக இருக்கும் என நான் நம்புகிறேன். என்னிடம் அனேகர் பனை ஓலையில் குடிசைகள் அமைக்கும் நபர்களை ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். பனை ஓலைக் குடிசைகள் என்பது மிகவும் குளிர்ச்சியான ஒரு வாழ்விடம். எத்தகைய வெம்மையிலும் ஒரு குடும்பம், வெம்மையின் தாக்கம் ஏதுமின்றி சுகமாக தங்க ஏற்ற இடம் பனை ஓலை குடிசைகள். இந்த வடிவமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. இனிமேல் வேறு யாரேனும் பனை குடில்கள் கட்டவேண்டும் என விருப்பம் தெரிவித்தால், ஏனாதிகளை தொடர்பு கொள்ள சொல்லவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டேன்.

அக்குடும்பத்தினரிடம் பேசினோம், பார்வையற்ற மனிதர் தம்மால் உடனடியாக செய்து தர இயலாது, ஓலைகள் இல்லை என்றார். அங்கிருந்தவர்களில் சற்றே திடகாத்திரமாக காணப்பட்ட வேறு ஒருவர், தான் பனை ஓலையில் பறி செய்து தர விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதற்கு ஓலைகள் வேண்டுமே என்றார். ஓலைகள் எங்கே கிடைக்கும் என தேடியபோது, பழவேற்காடு பகுதிகளில், ஓலை விற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அங்கே வாருங்கள் என்றார். அங்கு சென்று மூன்று ஓலைகளை தெரிந்தெடுத்துக் கொடுத்தோம். மறுநாள் ஓலையில் பறிகள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம்.

இன்னும் நேரம் இருந்ததால், எங்கே செல்லலாம் என யோசித்தபோது, பீட்டர் என்னை அங்கிருந்த மகளிர் ஓலை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றார். அது நான் காலையில் வந்து பார்த்த இடம் தான். அவர்கள் என்னை காலையில் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆகவே நான், இங்கே வந்திருக்கிறேன், வேண்டாம் போய்விடுவோம் என்றேன், அந்த பெண்மணி மீண்டும் வெளியே வந்து பார்த்து என்னை துரத்துவதற்கு ஆயத்தமானார்கள். ஆனால் பீட்டர் விடுவதாக் இல்லை. சார் சொல்லிவிட்டார்கள் என சேவியர் அவர்கள் பெயரைச் சொன்னார். யோசனையுடனும் சற்றே தயக்கத்துடனும் எங்களை உள்ளே அனுமதித்ததனர்.

பழவேற்காடு பெண்கள் ஓலை பொருள் கூட்டுறவு மையம்

மிகவும் பழைமையான ஆனால் சுத்தமான வீடு. உள்ளே ஐந்து முதிர்ந்த பெண்கள் பனை ஓலையில் பொருட்களை பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தேன். அந்த பெண்மணிக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. அங்கிருந்த பெண்கள் என்னோடு பேச்சுக்கொடுக்க துவங்கினார்கள். அனைவருமே ஐம்பதுகளைத் தாண்டியவர்கள். அவர்களோடு அமர்த்து பேசும்பொது, அங்கிருக்கும் அனைவருமே அழகு பொருட்களை மட்டுமே செய்கிறார்கள் என உணர்ந்துகொண்டேன். மேலதிகமாக என்ன தகவல்கள் கிடைக்கும் என தொடர்ந்து பேசியபோது, அவர்கள் அனைவருமே மரக்காயர் என்ற சமூகத்தினர் என்பது தெரியவந்தது.

மரக்காயர் சமூக பெண்கள் செய்த அழகிய பனை ஓலை பொருட்கள்

மரக்காயர் சமூகம் தங்கள் வீடுகளில் செய்யும் பனை ஓலைப் பொருட்களைக் குறித்து கேட்டால் அவர்களால் எதையும் சொல்ல முடியவிலை. இறுதியாக அமீர் பானு என்று சொல்லக்கூடிய ஒரு பெண்மணி, மரக்காயர் வீடுகளில் காணப்படும் துத்திப்பூ என்ற பொருளைக் குறித்து கூறினார்கள். துத்திப்பூ என்பது, பனை ஓலையில் செய்யக்கூடிய உணவுகளை மூடிவைக்கும் ஒரு மூடி தான். கத்தரிக்காய்  காம்பு போல மேலெழுந்து வளைந்து நிற்கும் தன்மையுடையது. உணவு பொருட்களை மூடி வைக்க பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சற்று நாட்களை ஒதுக்கி அவர்களிடம் நெருங்கிப் பழகினால் மரக்காயர்களுக்கே உரித்தான அழகிய வேறு சில பயன்பாட்டு பொருட்களையும் மீட்டெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மரக்காயர் சமூக பெண்மணி பனை ஓலைப் பொருட்கள் செய்யும்போது

ஏனாதி சமூகத்தினரை பீட்டர் இருளர் என்றே அழைத்தார். ஒருவேளை தமிழகத்தில் இருளர் என்று அழைக்கப்படுபவர்களே ஆந்திராவில் ஏனாதிகள் என அழைக்கப்படுபவர்களாக இருக்கலாம் என எண்ணுகிறேன். ஏனாதிகள் இந்தியாவிலுள்ள பட்டியல் பழங்குடி இனத்தவர்கள். ஆந்திராவைச் சார்ந்த இவர்கள், ஆந்திர எல்லையில் இருக்கும் பழவேற்காடு பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இன்றும் வேட்டையாடி, சேகரித்து உண்ணும் வழக்கம் கொண்ட இவர்களை சென்னை அரசு அருங்காட்சியக கண்காணிப்பாளராயிருந்த எட்வர்ட் தர்ஸ்டன் (Edward Thurston, 1855– 12 அக்டோபர் 1935) என்பவர் “அனாதி” என்கிற சமஸ்கிருத பெயரிலிருந்து “துவக்கமே இல்லாதவர்கள்” என ஊகிக்கிறார். அதாவது “என்றும் இருப்பவர்கள்” என்றும் பொருள் கொள்ளலாம். தம்மைச் சுற்றி இருக்கும் நிலப்பரப்பைக் குறித்த கூர்ந்த அவதானிப்பு இவர்களிடம் உண்டு. ஒருமுறை இறை அடியவருக்கு உணவு வழங்கி பசியாற்றியபோது அவர்களுக்கு பாம்புகளை விரட்டும்  வரத்தினை அந்த இறை அடியவர்  வழங்கியதாக ஏனாதிகள் குறித்த தொன்மம் வழக்கிலிருக்கிறது. ஏனாதிகள் பனை ஓலை இட்ட குடிசைகளிலேயே வாழ்வது, அவர்களது வாழ்விடம் பன்னெடுங்காலமாகவே பனை சார்ந்த நிலவியலை அடிப்படையாக அமைந்தது என்பதை ஊகிக்க வழிவகை செய்கிறது.

இருளர்களைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாம்பு மற்றும் எலிகளைப் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். எனது தோழியும் பல் மருத்துவருமான கடலூர் தாமரை, கிளப் டென் (Club Ten) என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். அவர்களின் களப்பணியில் பல இருளர்களை அவர்கள் சந்தித்து பணியாற்றிவரும்போது, பனை சார்ந்த ஏதேனும் பொருட்கள் அவர்கள் வைத்திருக்கிறார்களா எனக் கேட்டேன். எனது மனதில், இருளர்கள் பாம்பு பிடித்து போடும் பெட்டிகள் பனை ஓலையானாலதாக இருக்கலாம் என்பது எண்ணம். தாமரையால், அவைகளை கண்டுபிடித்து சொல்ல முடியவில்லை, ஒருவேளை எனது எண்ணம் தவறாக கூட இருக்கலாம், ஆனால், ஒருமுறை தாமரை ஒரு இருளர் பெண்மணி செய்ததாக கூறி எனக்கு அனுப்பிய ஒரு படம், சற்றேறக்குறைய பறி போலவே காணப்பட்டது. ஆகவே இவ்விரு சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். மேலும் பாம்பு பிடிக்கும் வழக்கத்தினை இன்று அரசாங்கம் தடை செய்து வைத்திருக்கிறது. ஆகவே பாம்புகளை போடுகின்ற பெட்டிகள் பனை ஓலையில் அவர்கள் செய்திருந்தாலும் கூட, அதன் பயன்பாடு இல்லாது போனதால், இனிமேல் அவைகளை மீட்டெடுப்பது எளிதான காரியம் அல்ல.

நவீன காலத்தில் பனை பொருட்களின் அழிவு என்பது நவீன பொருட்களின் வரவால் மட்டுமன்றி, இது போன்ற தடைகள் மூலமாகவும் என்பதை அறியும்போது, அவர்களின் தொல் அறிதல்கள் எவ்விதம் சந்தடியின்றி மறைந்துபோகின்றன என்கிற பதைபதைப்பு எழுகிறது. பழங்குடியினரின் கலை வாழ்வு என்பது அவர்களின் வாழ்வை ஒட்டி வருவது. அவர்கள் வரலாறுகள், கலைகள் உயிர்ப்புடன் இருக்கக்கூடியவை. அவைகளின் ஒரு கண்ணியை பிரித்தாலும், அவர்கள் வாழ்வு மிகப்பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். தாமரை என்னிடம், மீன்களை எப்படி விற்கவேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை, அப்படியே ஓலைகளை அவர்கள் எடுத்துக்கொள்ள அருகிலிருக்கும் மக்கள் அனுமதிப்பதில்லை என்று கூறியிருந்தார். வாழ்வில் ஓரங்கட்டப்பட்டவர்களை மேலும் நெருக்குவது என்பது சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாகிவிட்டது. 

அன்று இரவு மீண்டும் என்னை சற்று தொலைவிலிருக்கும் ஒரு ஏனாதி கிராமத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார். உலகின் மற்றொரு பாகத்திற்கு நான் செல்லுகிறேன் என்கிற எவ்வித அறிதலுமின்றி நான் பயணப்பட்டேன். இருள் நிறைந்த அந்த சாலையில் தனது மொபைல் டார்ச் லைட் ஒளி பாய்ச்ச பீட்டர் வண்டியில் சென்றது என்னை அதிர்ச்சியில் உறையச் செய்தது. எதிரே எங்கும் வண்டிகள் வராத குக்கிராம சாலை. ஆனால் அவர் அவ்விதம் வண்டியை ஓட்டும்போது எனக்கு உள்ளூர ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. நான் சாதாரணமாக அப்படி நடுங்குகிறவன் அல்ல. ஆனால் எங்கோ தொலைவில் செல்கிறது போல ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் அடித்துக்கொண்டிருந்தது. 

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நாகர்கோவில் கஸ்பா சபை புத்தாண்டு ஆராதனையை முடித்த கையோடு மாறாமலை செல்ல திட்டமிட்டோம். எனது நண்பன் விஸ்டன் மற்றும் எனது மாமா மகன் ஜானியும் உடன் உண்டு. பின்னிரவு நேரம், கீரிப்பாறை செக்போஸ்ட் அருகில் வண்டியை உருட்டியபடி உறங்கிக்கொண்டிருக்கும் காவலர்களுக்குத் தெரியாமல் காட்டிற்குள் சென்றோம். ஜானி பயம் அற்றவன். அவன் போகும் வேகத்தை வெகு சிரமப்பட்டே தொடரவேண்டியிருந்தது. மேலும் அவன் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான், எனது வண்டியின் பின்புறம் விஸ்டன் இருந்தான். காட்டிற்குள் வேகமெடுத்து சென்றுகொண்டிருந்தோம். யானை இருக்கும் காடு, எப்போது வேண்டுமானாலும், பன்றிகள் எதிர்படலாம், செந்நாய்களின் கூட்டம் எங்களை சுற்றி சூரையாடலாம், காட்டு மாடுகள் எங்களை தூக்கி வீசலாம். ஆனால், நாங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல் பயணப்பட்டுகொண்டே இருந்தோம். காட்டிற்குள் புத்தாண்டை கொண்டாடுவதும், புது புலரியில் காட்டிற்குள் நிற்பதும் வாழ்வில் கிடைக்காத அனுபவம் என்று எண்ணி, பரவசத்துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் சென்றுகொண்டிருந்தோம். ஒரு கிளைச் சாலைப் பிரியும்போது ஜானி அதில் வண்டியை செலுத்தினான். சரளைக்கற்களும், குழியும் பெரும் கற்களும் நிறைந்த அந்த பாதையை ராஜ பாதையென நினைத்து ஜானியின் வண்டி சென்றுகொண்டிருந்தது. நானோ திகிலுடன் அவனை தொடர்ந்துகொண்டிருந்தேன். ஜானி சென்று சேர்ந்த இடம் ஒரு நீரோடை, பாதையின் குறுக்காக ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் ஜானி அங்கே நின்று விட்டிருந்தான். அப்போது விஸ்டன் சொன்னான், வழி தப்பி வந்துவிட்டோம், மேலேறி செல்லுவோம் என்று. மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு சரியான பாதையை வந்தடைந்தோம்.

லைட் ஆஃப் செய்துவிட்டு வண்டி ஓட்டுவோமா என்று விஸ்டன் கேட்டான். அக்காலகட்டத்தில் அது எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு. விஸ்டனுடைய யமகாவில், இருக்கும் வெளிச்சம் என்பது மிக மங்கலானது. அது எரிவதும் எரியாமல் இருப்பதும் ஒன்றுதான். ஆனால், எதிரில் வரும் வண்டிகளுக்கு அது ஒரு முக்கிய அடையாளம். ஆகவே பல நாட்கள் இருட்டில், வண்டியின் முன் விளக்கை அணைத்துவிட்டு வண்டியை ஓட்டியிருக்கிறோம். அதெல்லாம் தெரிந்த சாலைகளில். மேலும், அன்று கண் பார்வை வெகு துலக்கமாக இருந்தது. வெகு மங்கலான ஒளியுமே கூட போதுமானதாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மேலே இள ரத்தத்தில் ஊறி ததும்பி நிற்கும் பைத்தியக்கார சாகச வேட்கை.  இது முற்றிலும் புதிதான ஒரு இடம். அடர் காடு. என்ன சம்பவிக்கும், எதிரில் என்ன நிற்கும் என தெரியாது. சரிடா என்று கூறி துணிந்து வண்டியை எடுத்தேன். மயிற்கூச்செறியும் ஒரு பயணம் அது. மலை வளைந்து வளைந்து செல்ல, வண்டியின் சக்கரத்தில் உள்ள அதிர்வுகளையும் இருளுக்குள் இருக்கும் ஒரு மென்வெளிச்சத்தையும் பிடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தோம். ஓரிடத்தில் யானை நிற்பதுபோல் தோன்ற பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜானி, பின்னால் வந்து என்னாச்சுணா என்றான். பயத்தை வெளியே காட்டாமல், இங்கேயே நிற்போம் என்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அன்று அங்கு நின்றோம். நல்லவேலையாக பயந்தபடி ஏதும் நிகழவில்லை. சற்றே பொழுது புலர்ந்தபோது, அங்கிருந்து புறப்பட்டு ஒரு கிராமத்தை சென்றடைந்தோம். முன்பின் தெரியாத ஒரு பெண்மணி, நீர் தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்தவர்கள், டீ வேணுமா என்று கேட்டு சுடச் சுட பாலில்லா டீ கொடுத்தார்கள்.

அந்த வயதும் அன்றைய நிலையும் இப்போது இல்லை. ஆனபடியால், மெழுகுதிரி போன்ற ஒளியில் நாங்கள் செல்லுவதே சிலிர்ப்பாக இருந்தது. செல்லும் வழியில் பனை மரங்கள் நிற்பதைப் பார்த்தேன். கூட்டமாக ஓரிடத்திலும், ஆங்காங்கே ஒன்றிரண்டாகவும் தென்பட்டது. வேறு மரங்கள் அதிகமாக கண்ணில் படவில்லை. ஓரிடத்தில், வழி தெரியாமல், ஓடைக்குள் வண்டி செல்ல இருந்தது, பீட்டர் எப்படியோ சுதாரித்து வண்டியை நிறுத்தினார்.

தேடித்தேடி இரவில் ஒரு கிராமத்தைச் சென்றடைந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏனாதிகளின் குடிசைகள் இருந்தது. அந்த இரவு வேளையில் நான் பார்த்த அந்த குடிசை எங்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு பெருச்சாளி போல காட்சியளித்தது. ஏனாதிகளின் கட்டிடக்கலையின் சிறப்பு இதுதான். அவர்களின் வீடுகளை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் அடையாளம் காணும்படியாக ஒரு வடிவமைப்பு. மிகச்சிறிய கூடம், நுழைவதற்கான வாசலும் சற்று முன் நீட்டி கூரையிடப்பட்டிருந்தது. இந்த வடிவம் தான் எங்கும் இருக்கிறது என கண்டுகொண்டேன். அது ஒரு தொல் பழங்கால வடிவம். கிட்டத்தட்ட ஆறுக்கு எட்டு என்ற அளவில் அந்த வீடு இருக்கலாம். வீட்டின் முத்தத்தில் இரண்டு பறிகள் இருந்தன. இவ்விதமான ஒரு வீட்டினை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என கேட்டபோது, ரூ. 6000/- எனக் கூறினார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவிலை. மும்பை தாராவியில் உள்ள குடிசை வீட்டிற்கு ஒரு மாத வாடகை ரூ 6000 இருக்கும். அதனைக் கொண்டு மொத்தமாக ஒரு வீட்டையே உருவாக்கிவிட முடியுமா? ஆச்சரியத்துடன் பின்னர் இதனை சேவியரிடம் பகிர்ந்துகொண்டபோது “Welcome to Pulicat” என்றார்.  அத்தனை வளம் இருந்தபோதும் வறுமை கோரத்தாண்டவமாடும் ஒரு காட்சிகளைப் பார்க்கையில் ஒரு வித பாரம் நெஞ்சை அழுத்தியது.

இறால் பிடிக்கும் ஏனாதி பெண்மணி

பல இடங்களுக்கு போகும்போது, அந்த இடங்களை மீண்டும் தேடிப்போகவேண்டும் என்கிற ஆவல் எழும், ஆனால் பழவேற்காடு என்னும் இடத்திற்கு நான் என் வாழ்நாளில் செல்லவே இயலாது. அங்கு நான் செல்லவேண்டுமென்றால், பனை சார்ந்த பணிகளில் நான் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தாலே சாத்தியம். அங்கு செய்யவேண்டிய பணிகள் அவ்வளவு இருக்கின்றன. ஒருநாள் அவர்கள் பெற்றுக்கொள்ளும் இறால், அவர்களுக்கு மிகச்சிறந்த ஊட்டசத்து மிக்க உணவு. நம்மால் தினம் தோறும் அவ்வளவு இறால்களை வாங்கி ஒரு குடும்பத்தை ஓட்டிவிட முடியாது, ஆனால், அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். கிடைக்கும் பணம் அன்று தானே டாஸ்மாக் நோக்கி செல்லுகிறது. குடிக்க பணம் இருந்தால் போதும் உணவு என்று ஏதும் தேவையில்லை என்ற வாழ்கை முறை. அனைவருமே மெலிந்து பெலன் குன்றிப்போய், ஊட்டச்சத்து கூறைபாடுள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். இவர்களின் நிலை அறிந்து அங்குள்ள மீனவர்களும் இவர்களிடம் மிகக்குறைந்த விலையிலேயே இறாலினை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

நாங்கள் தேடிச்சென்ற மற்றொரு கிராமம், சற்றே வசதி படைத்ததாக இருந்தது. ஆனாலும் பிந்தங்கிய கிராமம் தான். வன்னியர்கள் வாழும் கிராமம் என்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தான் உடனடியாக மனதிற்கு வந்துபோனது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பனைக்காக குரல் கொடுத்தவர். அங்கு நான் விசாரித்த வகையில் பனைகள் மீதான உரிமை கொண்டவர்கள் அவர்கள் தான். வன்னியர்களுக்கும் பனைக்கும் தொடர்புண்டு என்று இங்கே வந்த பின்புதான் அறிந்துகொண்டேன். வன்னியர்கள் பனை ஏறுவதோடு, பனை ஓலைகளிலும் பொருட்களைச் செய்கிறார்கள். அங்கு அர்சுனன் என்ற நபரை சந்தித்தோம். மிகப்பெரிய பனை ஓலைகளை இணைத்து அவர்கள் செய்யும் பறி விரிந்த பானையைப்போல் பிரம்மாண்டமாக காணப்பட்டது. ஏனாதிகளின் பின்னல் முறையில், பானை போல வயிறு திறண்டு வாய் ஒடுங்கிய ஒரு வடிவம். அளவிலும் உறுதியிலும் ஏனாதிகளைக் காட்டிலும் திடம் அதிகமாக இருக்கும் என்பதை முதல் பார்வையிலேயே ஒருவர் நிதானித்த்துக்கொள்ள முடியும். ஆகவே தங்கள் உணவிற்கு மிஞ்சிய மீன்களை விற்பனை செய்யும் பொருட்டு இவ்வித மிகப்பிரம்மாண்டமான பறிகளை வன்னியர்கள் தயாரித்திருக்கிறார்கள் எனவும், தங்கள் உணவிற்கான தேவைகளோடு ஏனாதிகள் நிறுத்திக்கொண்டார்கள் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது. 

வன்னியர் பயன்படுத்தும் பறி. இதனை பெட்டி என்கிறார்கள்.

நிச்சயமாக வன்னியர் இன மக்கள் செய்யும் பறியானது ஏனாதிகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடர்ச்சி தான். ஆனால் இன்று ஏனாதிகள் வன்னியர் பயன்படுத்தும் பறிகளைப்போல் ஏதும் செய்துவிடமுடியாது. ஒவ்வொரு ஜாதிக்கும் தகுத்த வடிவங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. பழவேற்காடு பகுதிகளிலேயே மூன்று சாதிய பின்புலம் கொண்டவர்கள் மூன்று வித்தியாச பின்னணியத்தினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டவர்கள், பனையினை தங்கள் வாழ்வின் அங்கமாக கொண்டிருகிறார்கள் என்பது எனக்கு மிகப்பெரிய செய்தி. தொல் குடிகளான ஏனாதிகள், கடற்கரை வாசிகளான மரக்காயர்கள் மற்றும் இம்மண்ணின் வாசிகளான வன்னியர் என மூன்று விதமான மக்களின் வாழ்வில் பனை மையமாக நின்றிருப்பது நாம் உற்றுநோக்கத்தக்கது.  பனை இருக்கும் நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்கு, பனை ஏதோ ஒருவகையில் பயன்பட்டபடி இருக்கிறது. பனையை விலக்கி வாழ தமிழ் சமூகம் எப்போதும் நினைத்ததில்லை. இம்மூன்று சமூகங்களுக்குமிடையில் காணப்படும் பனை சார்ந்த வாழ்வியல் நுட்பங்களை எவரேனும் ஆழ்ந்து கற்று வெளிப்படுத்துவது பேருதவியாக இருக்கும்.

பறியின் வேறு வடிவம்

அன்று இரவு எனது தூக்கம் தள்ளிப்போனது. உணவு சேகரிப்பவர்களால் ஏன் உணவினைக் கொண்டு திருப்தியாக வாழ முடியவில்லை? சிறந்த உணவுகள் தேடி சேகரிக்கும் மக்களிடமிருந்து அதனை தட்டிபறிக்கும் நுட்பத்தினை யார் புகுத்தியது? இவர்களுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டினை எப்படி எளிமையாக தீர்ப்பது? குடிப்பழக்கம் இவர்களுக்குள் ஏற்படுத்தும் தீங்கிலிருந்து இவர்களைக் காக்கப்போவது யார்? போன்ற கேள்விகள் என்னைக் குடைந்தபடி இருந்தன.

பீட்டரும் ரஜினியும்

மறுநாள் அதிகாலையில் ரஜினி அவர்கள் என்னை அழைத்தார்கள். ரஜினி என்னை படகில் பழவேற்காடு பகுதியை சுற்றிக்காட்டும்படி சேவியரால் ஒழுங்கு செய்யப்பட்டவர். மற்றொருபுரம் பீட்டரும் அழைத்தார். நான் எங்கே செல்ல வேண்டும் என என்னையே கேட்டார்கள். எனக்கு எங்கே செல்ல வேண்டும் என சொல்லத் தெரியவில்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் ஏனாதிகளை நான் சந்திக்க வேண்டும் என்றேன்.  காலை உணவினை வாங்கிக்கொண்டு, தேவையான நீரையும் எடுத்துக்கொண்டு சென்றோம். ஒரு அரைமணி நேர பயணத்தில், அங்கிருந்த ஒரு சிறிய தீவைக் கண்டோம். அங்கு நின்றிருந்த படகுகளண்டையில் நாங்கள் சென்ற படகை ரஜினி நிறுத்தினார். நான் இறங்கியவுடன், படகை மற்றொருபுரம் எடுத்துச் சென்று நிறுத்தினார்கள்.

படகில் நானும் ரஜினியும்

இறங்கிய இடத்தில் ஒரு குடும்பம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் ஏனாதிகள் என அங்கிருந்த பறிகள் பறை சாற்றிக்கொண்டிருந்தன. பேச்சுக்கொடுத்தபோது அவர்கள், பெந்தேகோஸ்தே சபையில் இணைந்திருப்பதாக அறிந்துகொண்டேன். இக்காலத்தில் பெந்தேகோஸ்தே சபைகள் எளியவர்களை தேடி வரும் நிகழ்வு கவனத்திற்குட்படுத்தப்படவேண்டியது ஆகும். இக்குடும்பம் மற்ற ஏனாதிகளை விட சற்றே வசதியானவர்கள் என அவர்கள் வைத்திருந்த படகும், வலைகளும் கூவி அறிவித்தன. நேற்றைய தினம் மாலையில் சென்ற கிராமத்திலும் கூட இவ்விதமான சில குடும்பங்களைப் பார்த்தேன். கிறிஸ்தவ சேவை பணிகள் இங்கு நடைபெறுவது பாராட்டுக்குரியது. அங்குள்ள கத்தோலிக்க திருச்சபை ஏனாதிகள் வீடு அமைக்க உதவி செய்கிறது என்பதாக சேவியர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இவைகள் போதாது, இம்மக்கள் விடியலைக்காணவேண்டுமென்றால், ஒட்டுமொத்த தமிழகமும் தங்கள் கரங்களை நீட்டி இவர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும். சாதி சமயம் பாராது இங்கு மக்கள் வந்து பணியாற்ற வேண்டும்.

மணலில் புதைத்து சுட்ட மீன்கள்

இப்படியான எண்ணத்திற்கு ஊடே, வேறொரு எண்ணமும் தலை தூக்கியது. பொதுவாக காடுகளை பேணும்படியாக பழங்குடியினரை காட்டிலிருந்து வெளியேற்றுவது வழக்கம். அது மிகச்சரியான அணுகுமுறை இல்லாவிட்டாலும், அது போல பழவேற்காடு மண்ணிற்கு சொந்தமில்லாதவர்களை அப்பகுதியிலிருந்து விலக்கினால், ஒருவேளை இவர்கள் வாழ்வு மேம்படுமா என எண்ணிப் பார்க்கிறேன். குறைந்தபட்சம் இவர்களின் உணவிற்கான உறுதி ஏற்படும், இவர்களை உறிஞ்சி சக்கையாக வெளியேற்றும் டாஸ்மாக் போன்றவைகள் இல்லாமல் இருந்தால் அரசு வழங்கு மற்ற உதவிகளை கொண்டு சரசரவென முன்னேறும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.  இறாலும் பனையும் இருக்குமிடம் வளம் மிக்கதே. அதனை சீர்படுத்தி இம்மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டியது அரசின் கடமை. மக்களின் வாழ்வு சிறக்க அரசுகள் அப்போது தான் முன்வருமோ தெரியவிலை.

அந்த தீவில் உணவு உண்ணும் முன்பதாக ரஜினியும் பீட்டரும் இணைந்து வலையை போட்டார்கள். காலை உணவை முடித்துவிட்டு வந்து வலையை எடுத்துப்பார்த்தபோது இரண்டே இருண்டு சிறிய மீன்கள் தான் சிக்கியது. அப்பகுதியில் முட்கள் வெட்டிபோட்டிருந்தார்கள். அந்த முட்களில் வலை சிக்கிவிட்டது. மிகுந்த பிரயாசப்பட்டு வலையினை  முட்களிலிருந்து பிரித்து எடுத்தார்கள். மீண்டும் ஒரு தீவுக்கு சென்று அங்கே கிடைத்த முட் சுள்ளிகளை அடுக்கி மணலுக்குள் மீனை போட்டு சுட்டு கொடுத்தார்கள். தனித்துவமான அந்த ஆதி சுவையினை அனுபவித்து ரசித்தேன். அந்த தீவு வெண்மணலால் சூழப்பட்டு அழகுற காட்சியளித்தது.

பறியை பல்லால் கடித்து பிடித்துக்கொண்டு இறால் துழாவும் கண்ணிழந்த மனிதர்

குமரி மாவட்டத்தில் எங்கள் எதிர் வீட்டில் இருந்த ரூஃபியோ என்ற சிறுவனின் மாமி பழவேற் காட்டில் தான் தங்கியிருக்கிறார்கள். மதியம் அவர்களை சந்தித்து உணவுண்டு திரும்பினேன். சென்னை செல்லும் முன்பு, ஓலைப் பெட்டிகளை வாங்க வேண்டூம். பீட்டர் என்னை அழைத்துக்கொண்டு வேறு ஒரு கிராமம் செல்ல வெண்டும் என புறப்பட்டபோது அங்கே காவல்துறை வாகனங்களை பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தில், வாகன பரிசோதனை என்பதே பணம் பறிக்கும் ஒரு வழிமுறை தான். அனைத்து வாகன ஓட்டிகளிடமும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து வசூல் நடத்துவதே இவ்வகை நேரங்களில் நடப்பது. திரும்பிவிடுவது நல்லது எனக் கூறி அங்கிருந்து பழவேற்காடு திரும்பினோம்.

பெண்கள் வரிசையாக இறால் பிடிக்கும் காட்சி

வரும் வழியில் ஒரு மிகப்பெரிய சானல் வெட்டப்பட்டிருந்தது, அதில் பத்து பெண்கள் தங்கள் தலைகளில் பறியினைப் போட்டபடி ஒரே வரிசையில் நின்று இறால் பிடித்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட தேயிலை பறிக்கும் பெண்கள் தங்கள் முதுகில் இட்டிருப்பதுபோன்ற அமைப்பு. பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது. நான் புகைப்படம் எடுக்கத்துவங்கியபோது ஏன் எதற்காக என்று பல்வேறு கேள்விகள். நான் எனது தொப்பியைக் காட்டினேன். எனது பயணம் குறித்து சொன்னேன். மிக வேடிக்கையாக என்னோடு பேசிக்கொன்டிருந்தார்கள். ஆளாளுக்கு என்னைக்குறித்து விசாரித்தார்கள். எனது மனைவி குறித்து, பிள்ளைகள் குறித்து, வேலை குறித்து என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் அவர்களிடம், அவர்கள் கணவர்களின் தொழிலைக் குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் “வீட்டுக்காரங்க ஒழுங்கா இருந்தா நாங்க எதுக்கு இந்த வெயில்ல இங்கே வந்து கஷ்டப்படுகிறோம்” என்றனர். இவர்கள் கொண்டு செல்லும் பணத்தில் தான் அவர்களின் குடி களியாட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் சமூகம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள கிராமத்தில் தான் அவர்கள் வசித்துவருவதாக அறிந்துகொண்டேன்.

வேகமாக இறால் பிடித்தபடி முன்னேறிச் செல்லும் பெண்கள்

பீட்டருக்கு நேரம் ஆவதுபோல தோன்றியது. அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி போட்டோ எல்லாம் எடுக்குறீங்க எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றார்கள். என்ன வேணும் கேளுங்க உடனே செய்கிறேன் என்றேன். இவ்வளவு தூரம் கேட்டியேப்பா அதுவே போதும் என்று அவர்கள் முடித்துக்கொண்டார்கள். வேறு ஒருவர், தண்ணியிலேயே நிற்கிறோம், ஒரு டீ தண்ணி வாங்கிதரக்கூடாதா என்றார்கள். வாங்கலாமே என்றேன். மீண்டும் ஒரு 5 கிலோ மீட்டர் டீ கடைக்கு செல்லவேண்டும். அங்கே போய், டீ மற்றும் பிஸ்கட் எல்லாம் வாங்கிகொண்டு வந்தபோது அனைவரும் இறால் பிடித்துக்கொண்டு திரும்பும் வேளை ஆகிவிட்டது. தண்ணீரில் நின்றபடியே டீ வாங்கி குடித்துவிட்டு என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை. (1 யோவான் 4:21 திருவிவிலியம் ) என்ற வாசகம் என்னுள் வந்து சென்றது.

மீண்டும் நாங்கள் பழவேற்காடு வந்தபோது ஓலை பறிகள் தயாராக இருந்தது. அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை நோக்கி பேருந்தில் பயணித்தேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 10

மார்ச் 2, 2021

பனைமுறைக் காலம் 10

பனைவேற்காடு

வாட்ட சாட்டமாக அட்டகாசமான சிரிப்போடு  பைக்கில் சுமன் வந்து நின்றார். வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு போனார்.  அவரது வீட்டில் தான் அன்று மதியம் உணவு. வீட்டில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்வு. எங்களுக்கு அடுப்பிலிருந்து கொதித்துக்கொண்டிருந்த மீனை எடுத்து கொடுத்தார்கள். செம்ம ருசியாக இருந்தது. “ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி  கடல்ல நீந்திட்டிருந்த மீன் சார் இது” என வாய் கொள்ளா சிரிப்புடன் சொன்னார். இத்தனைக்கும் மசாலா மீனுக்குள் பற்றியிருக்கவில்லை. முதல் கொதியிலேயே அள்ளி எடுத்து வைக்கப்பட்ட மீன்.  சாப்பிட்ட பின் அவருக்கு சில வேலைகள் இருந்ததால் நானும் கல்யாண் குமாரும் அந்த வீட்டின் அருகில் இருந்த விழா பந்தலில் அமர்ந்திருந்தோம். நான் சற்று காலாற நடக்கலாம் என அடுத்த தெருவிற்குள் நுழைந்தேன் சில பெண்கள் வட்டமாக அமர்ந்திருந்து  விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த விளையாட்டு சற்று வித்தியாசமானது. அனைத்து பெண்களின் கரத்திலும் ஒரு குச்சி இருந்தது. நின்று கொண்டிருந்த பெண்மணி தனது சாரியினை கங்காரு பைபோல் அமைத்து அதற்குள் சில நூல் பூக்களை பல வண்ணங்களில் வைத்திருந்தார். அவர் ஒவ்வொன்றாக போட, அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் கரங்களிலிருந்த குச்சிகளை வைத்து அதனை எடுத்துக்கொண்டிருந்தார்கள், யார் முதலில் குறிப்பிட்ட வர்ணத்தை சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். முதன் முறையாக இப்படி ஒரு விளையாட்டைப் பார்க்கிறேன்.

சுமன் எங்களை  அழைத்துக்கொண்டு எனக்கு ஒருக்கியிருக்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார். அது ஒரு ஷட்டர் கொண்ட சிறிய அறை. ஒரே ஒரு மேஜை வீச்றி இருந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. எனக்கான குளியலறை மற்றும் காலைக்கடன்களுக்கு இன்னும் ஒரு மாடி ஏறி செல்ல வேண்டும். சேவியர் என்னிடம் முதலிலேயே கூறியிருந்தார். இங்கு தங்கும் இடங்கள் கிடையாது என்று. பழவேற்காட்டைப் பொறுத்தவரையில் உல்லாச விடுதி மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி கிடையாது. அது தான் இப்பகுதியினை இன்னும் அதன் தனித்தன்மைகளுடன் வைத்திருக்கிறது.

தங்குமிடத்திலிருந்து  சிறிது தொலைவில் எனக்கான உணவு ஓரிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் முடிந்த பின்பு கல்யாண் குமார் புறப்படும் வேளை வந்தது. அவரது பைக்கில் 600 ரூபாய்க்கு பெட்ரோல் இட்டேன். மேலும் 400 ரூபாய் அவரது கரத்தில் கொடுத்தேன். பொதுவாக எனது செலவுகளை எப்போதும் கல்யாண் தான் பார்த்துக்கொள்ளுவார். இம்முறை எனக்கான ஒரு வாய்ப்பு. பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.

அன்று இரவு அந்த ஊரில் தனியனாக பல முறை அந்த பாலத்தை கடந்து நடந்தேன். கலங்கரை விளக்கத்திலிருந்து  உமிழும் ஒளி அங்கிருந்த பனை மரத்தினை தாண்டிச் செல்லுவது தனித்துவமான ஒரு காட்சியாக தென்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட பனை போல. அதனை எப்படியாவது படம்பிடிக்கவேண்டும் என முயன்று தோற்றுப்போனேன். புகைப்படக்கலை குறித்த நெளிவு சுளிவுகள் தெரிந்திருந்தால் அன்று அக்காட்சியினை அழகுற படமாக்கியிருக்கலாம்.   காற்று அதிகம் இருந்தாலும், நான் தங்கியிருந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. மேஜை விசிறியால் பெரிய பயன் இல்லை. இரவு படுத்திருக்கும்போது அந்த அறையினை பயன்படுத்தும் வாலிபன் அங்கே வந்தான். ஒரு கை அவனுக்கு ஊனம், ஆனாலும் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்தான். என்னோடு அன்பாக பேசியபடியே தனது வேலையையும் கவனித்துக்கொண்டான். ஊனம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு அழகோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான்.  

காலை எழுந்தவுடன் பாலத்தை  கடந்து ஒரு நடை நடந்தேன். பனை மரத்தடிகளை கொண்டு சிறிய கூடாரத்திற்கான தூண்களை அமைத்திருந்தார்கள். பாலத்தின் அருகில் இருக்கும் மக்களிடம் பேச்சு கொடுத்தபோது புகைப்படங்கள் எடுக்காதீர்கள் எனக் கூறினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு நபர் என்னிடம் கோபமாக இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார். அவர் தான் ஊர் தலைவர் என பின்னர் அறிந்து கொண்டேன். ஆனால் அப்படி புகைப்படம் எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என்றே அங்குள்ள சூழல் இருந்தது. ஏனாதி பெண்களும் ஆண்களும் அந்த காயலுக்குள் இருந்த திட்டு ஒன்றை நோக்கி முட்டளவு தண்ணீரில் கையில் பறி மற்றும் உணவுகூடைகளுடன் சென்றார்கள். அங்கே சென்றவுடன் அமர்ந்து மெதுவாக வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். அதே நேரத்தில் கரைக்கு வெகு அருகில் நேற்று பார்த்த ஒரு நபர் பறியை வாயில் கவ்வியபடி கழுத்தளவு மூழ்கி இரண்டு கைகளாலும் துழாவி இறால் பிடித்துக்கொண்டிருந்தார். எனக்கே இறங்கி இறால் பிடித்துபார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றிவிட்டது. 

பர்மாவில் எருமை வண்டியும் பனங்காடும்

காலை வேளையில் தானே நான் அங்கே ஒரு எருமை மாட்டு வண்டியினைப் பார்த்தேன். எருமை மாட்டு வண்டியினை நான் பார்ப்பது அதுவே முதன் முறை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு ஒரு நாட்டுப்புற கதை சொன்னார்கள். முன்பொரு காலத்தில் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஏழை விதவைப் பெண்ணொருத்தி தனது ஏழு குழந்தைகளுடன் வாழ இயலாத சூழலில் ஒரு கிணற்றுக்குள் தனது குழந்தைகளை போட்டுவிட்டு தானும் அதற்குள் குதிக்கிறாள். அவளுக்கு தான் குதிப்பது பாதாள உலகத்தின் வாசல் என அப்போது தெரியாது. அனைவரும் வாசுகி என்ற பெரிய பாம்பின் மேல் விழுகிறார்கள். வாசுகி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, எங்களுக்கு வாழ வழியில்லை அதனால் தான் சாக வந்தோம் என இப்பெண்மணி கூறியிருக்கிறார்கள். சூழ்நிலையை உணர்ந்த வாசுகி, உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன், நீ வீட்டிற்கு போ என்று கூற, இப்பிரச்சனை தனக்கு மட்டும் உரியதல்ல, ஊரிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பட்டினியால் வாடுகின்றன எனக் கூறி அனைவருக்கும் தீர்வு சொல்ல முடிந்தால் மட்டுமே தான் இங்கிருந்து புறப்படுவேன் என்று கூறி நிலையாய் நின்றுவிட்டாள். அப்போது வாசுகி அவளுடன் இரண்டு பாம்புகளை அனுப்பியது. ஒன்று பனை மரமாகவும் மற்றொன்று எருமையாகவும் மாறி அவர்களுக்கு வறட்சியான காலத்திலும், பசிப்பிணி இன்றி வாழ வகை செய்தது.

ஆப்பிரிக்காவில் எருமையும் பனங்காடும்

இந்த கதை நமது பண்பாட்டில் ஊறி எழுந்த ஒரு கதையாகவே பார்க்கிறேன். பசுக்கள் உயர்குடியினருக்கான அடையாளமாக இருக்கையில் எருமைகள் ஏழைகளின் வாழ்வியலோடு இணைந்து வருவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்பேர்ப்பட்ட பஞ்ச காலத்திலும் பனையும் எருமையும் தாக்குப்பிடிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன. ஆகவே அவைகளே ஏழைகளின் சார்பில் நிற்கும் உயிரினங்கள் என நாம் கொள்ள முடியும்.

பனையும் எருமையும் இரட்டை உயிரினங்களாக இருக்குமா? அதனைக் குறித்து நான் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் தேட ஆரம்பித்தேன். அதற்கு ஜெயமோகன் அண்ணனுடைய கதை முழுமுதற்  காரணம். இரண்டாவதாக நான் மும்பையிலிருக்கும் ஆரே காலனிக்கு வந்தது மற்றொரு திருப்புமுனையாகும். ஆரே முழுக்க எருமை பண்ணைகள் தான் இருக்கின்றன. எருமைகள் ஒரு அடைக்கப்பட்ட பண்ணை சூழலில் வளருவதால் என்னால் அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் சாய் பாங்குடா என்ற அப்குதியில் இருக்கும் பனைகளை நான் பார்த்தபோது அங்கு அனேக எருமைகள் தொடர்ந்து மேய்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வருடத்தில் ஆறு மாதங்கள் இப்பகுதி சதுப்பு நிலமாகவே இருக்கும்.

வியட்னாம் எருமை வண்டி

ஆம் எருமை என்பது நீர் தேவையுள்ள ஒரு மிருகம் தான். ஆரே பகுதியில் கவிதை எழுதிய ஒரு பழங்குடி இங்குள்ள மாடுகளுக்கு குளிக்க தண்ணீர் இருக்கிறது ஆனால் ஆதிவாசிகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை எனவும், மாடுகளுக்கான குடிநீரே எங்களுக்கான குடிநீர் எனவும் வேதனையுடன் எழுதியிருப்பது குறித்து இங்கு சூழியல் பங்களிப்பாட்டும் சஞ்சிவ் வல்சன் ஒரு முறைக் கூறினார். ஆம், ஆங்கிலத்தில் கூட எருமையினை Water buffalo  என்று தான் குறிப்பிடுவார்கள்.

வியட்னாம் வயல் பகுதிகளில் எருமை

தென் தமிழகத்தில் என்னால் அதிக எருமைகளைக் காண முடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இந்தியாவெங்கும் பனையும் எருமையும் ஒன்று போல் நிற்பதைக் காண முடிகிறது. எருமைப்பாலின் அடர்த்தி அதிகமாகவும், அதில் இருக்கும் கொழுப்புச்சத்து பசுமாட்டினை விட அதிகமாகவும் இருக்கும். ஆனால் இன்று பண்ணையாக எருமைகளை வைத்துக்கொள்ளுகிறவர்களை கூட நாம் பார்த்துவிடலாம், ஆனால் தனியாக எருமைகளை வளர்ப்பவர்கள் தென் தமிழகத்தில் அருகிவிட்டார்கள். பசு வளர்ப்பதே நவீனமானது என்ற எண்ணம் குமரி போன்ற நிலங்களில் வேரூன்றியிருக்கிறது.  

எருமையைப் பொறுத்த வரையில், அது பனை மரத்தைப்போலவே, அதிக எதிர்பார்ப்புகள் அற்ற ஒரு உயிரினம். இருப்பதைச் சாப்பிட்டு, எல்லா கால சூழல்களுக்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு, மழை மற்றும் வறட்சியினைத் தாங்கும் சக்தி கொண்ட ஒரு கால்நடை. நோய் எதிர்ப்பாற்றல் மாடுகளைவிட அதிகமானது. கி மு 4000ஆம் ஆண்டில் தான் எருமைகளை மனிதர்கள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறுவதை வைத்து பார்க்கும்போது இதே காலகட்டத்தில் தான் பனையுடனான உறவுகள் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

எருமை சவாரி செய்யும் சிறுவன், வியட்னாம்

உலகில் காணப்படும் மொத்த எருமைகளில் 90 சதவிகிதத்திற்கு மேல் ஆசியாவில் தான் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பர்மா, பாகிஸ்தான், வியட்னாம், போன்ற நாடுகளிலும் எருமைகள் பெருமளவில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் பனை இருக்கும் இடங்களில் இவைகள் இணைந்தே வாழ்கின்றன.  இது குறித்து மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்பும் அன்பர்களுக்கு இவ்விணைவு குறித்து மேலதிக தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதாக உணர்கிறேன். மட்டுமல்ல, இதுவரை எவரும் பார்த்திராத புது கோணங்களும் இவ்வாய்வுகளின் வழி வெளிப்படும் என்றே நம்புகின்றேன்.

நாடோடிகளுக்கும், பழங்குடியினருக்கும் எருமை மாடுகளுடன் அதிக தொடர்பு உண்டு. இன்றும் இந்தியாவில் பல பகுதிகளில் பனையும் எருமையும் தொல் குடிகளுடன் தொடர்புடையவைகாளாக இருக்கின்றன. மாத்திரம் அல்ல இன்று எருமைகள் மிக முக்கிய அளவில் எண்ணிக்கைகளில் பசுவை விட அதிகரித்தபடி உள்ளன. காரணம் மாட்டரசியல் தான். பசுவைப்போல எருமை புனிதப்படுத்தப்பட்ட உயிரினம் அல்ல. பசு மீதான புனிதப்படுத்துதல்  விவசாயிகளுக்கு மாடுகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. குறிப்பிட்ட வயதில் ஒரு மாட்டினை கறிக்காக விற்பனை செய்யும் வாய்ப்பு இருந்தாலொழிய ஒரு விவசாயியால் மாடுகளை வைத்து இறுதிவரை பேணமுடியாது. மேலும், எருமையிலிருந்து கிடைக்கும் பால் அதிக கெட்டிதன்மைக்கொண்டதும் பசும்பாலில் கிடைப்பதை விட இரு மடங்கிற்கு மேல் கொழுப்புச்சத்தும் உள்ளது. ஆகவே இன்று பல பண்ணைகள் எருமைகளையே வளர்க்க விரும்புகின்றனர். மாடுகளை விட அதிக பாரத்தை எருமைகளால் எளிதில் சுமக்க முடியும். நம்மூர் ஆசிரியர்கள் மாணவர்களை எருமை என்று அழைப்பது இவ்வித புரிதல் இல்லாமையால் தான். நவீன காலத்தில் எருமைக்கு கிடைத்திருக்கும் இத்தகைய முகியத்துவம் பனைக்கும் கிடைக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். 

எமதர்மராஜா

எருமை குறித்து பேசும்போது எமதர்மராஜாவைக் குறித்து பேசாமல் இருக்க முடியாது. பாசக்கயிற்றை வீசும் தெற்கின் தலைவன் அவன். இறந்தவர்களை வழிகாட்டும் எமனின் வாகனம் அல்லவா எருமை. எமன் குறித்து சீன ஜப்பானிய மற்றும் ஈரானிய தொன்மங்களும் இருக்கின்றன. எமனும் காளியும் தொல் குடிகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் உருவகங்கள் என்பதை பார்க்கும்போது, பனங்காடுகளை எமன் எட்டிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்பது விளங்கும். 

அன்று காலை உணவினை முடித்த பின்பு, ஊரை சுற்றிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உணவகம் இருந்த இடத்க்டின் எதிரில் காணப்பட்ட  தெருவில்  நடக்க ஆரம்பித்தேன். சுத்தமாக நீர் தெளித்து பேணப்பட்ட தெருக்கள். ஒரு புராதனமான இந்து கோயில் அங்கே இருந்தது. பாழடைந்திருந்ததை புதிப்பிக்கும்படியான புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதற்கான அடையாளம் தெரிந்தன. சுவர்கள் எல்லாம் சுறண்டி எடுக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகளுக்காக அக்கோயில் காத்திருந்தது. கோவிலை சுற்றிலும் இருந்த புதர்கள் சமீபத்தில் தான் வெட்டி சீர் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் எவருமே இல்லை.

எதிரே இருந்த தெருவில் நடந்த போது பனை ஓலைகள் சாயமிடப்பட்டு காயப்போடப்பட்டிருந்தன. ஆகவே இங்கு பனை ஓலையில் பொருட்களைச் செய்பவர்கள் இருக்கலாம் என்று உணர்ந்து அருலில் இருக்கும் சிறுவர்களிடம் கேட்டேன். அவர்கள் காட்டிய வீட்டில் சென்று கேட்டபோது இங்கே ஒரு பெண்கள் அமைப்பு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்றார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கலையும் அவர்களே சொல்லுவார்கள் என்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த பெண்மணி என்னை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பேச்சுக்கொடுக்கவே விரும்பவில்லை. பொதுவாக இவ்வித சூழல் பிற இடங்களிலும் சந்தித்திருக்கிறேன். சர்வதேச சந்தையினை மையமாக கொண்டு ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், தங்கள் அலுவலகங்களை மர்ம தேசங்களாக வைத்திருப்பது வாடிக்கை. போட்டி நிறைந்த உலகில், இவ்விதமான மக்களை ஆசை வார்த்தை காட்டி வேறு இடங்களுக்கு இழுத்துக்கொள்ளும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால், முதன்மையான காரியம் என்னவென்றால், இவர்கள் செய்யும் பொருட்கள் குறித்த இரகசியம் பேணவே விரும்புகிறார்கள். 

பழவேற்காட்டில் என்னால் எதனையும் பார்க்க இயலாதோ என எண்ணியபடி வெளியேறினேன். நான் வெளியேறும் சமயத்தில் அங்கு ஒரு மனிதர் தனது மனைவியினை டி வி எஸ் எக்செல் வண்டியில் வைத்து ஓட்டியபடி எதிரில் வந்தார். கருமையான திடமான அழகிய தேகம். முகமும் ஒளிகொண்டிருந்தது.  வண்டியின் முன்புறம் தொங்கவிடப்பட்டிருந்த ஒயர் கூடையில் பனை ஒலைக் குருத்து. பாய்ந்து வண்டியை நிறுத்தினேன். ஓலையை எதற்காக கொண்டு செல்லுகிறீர்கள்,  எங்கே தங்கியிருக்கிறீர்கள் என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினேன். அருகில் தான் வசிப்பதாகக் கூறினார்கள். அவர்களும் பறி செய்வதற்காகவே இதனை எடுத்துச் செல்லுகிறார்கள் என புரிந்துகொண்டேன்.

காலை வேளையில் பொடிநடையாக நடக்கையில் அங்கிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி கடல் ஆய்வு மையம் தென்பட்டது. சுற்றி நடந்து வருகையில், அங்கிருந்த ஒரு நூலகம் கண்ணில் பட்டது. உள்ளே செல்ல முயன்றபோது கொரோனா தடுப்பு முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது. பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். அங்கிருந்த நூல்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்  சேவியர் என்னை அழைத்தார்கள். நான் இங்கு எனது அலுவலகம்  வந்துவிட்டேன் நீங்களும் வாருங்கள் என்றார்.

ஆர் டி எம் அங்குள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் வளாகத்திலிருந்தது. அங்கு சென்றபோது தான் கலை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கிடைத்தன.  நான் சென்ற வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வீடுகள். அங்குள்ள பெண்கள் பார்ப்பதற்கு பிற பெண்கள் போலவே இருந்தார்கள். அவர்கள் மரக்காயர்கள் என சேவியர் சொன்னார். சேவிரைப் பொறுத்தவரையில் மிக அழகிய பனையோலைப் பொருட்களைச் செய்வதற்கு காரணம் மரக்காயர் சமூகம் தான். இஸ்லாமிய தொடர்புகளினால் அவர்கள் அழகிய பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருந்தனர். அவர்களிடமிருந்து பரதவர்கள் பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருக்கின்றனர். தமிழகத்தில் இவ்விரண்டு சமூகங்களே அழகிய பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் என்றார். எனக்கு அது புது தகவல். ஏனென்றால், இவ்விரு சமூகங்களும் பனையுடன் தொடர்புடையது என சேவியரை சந்தித்த பின்பு தான் நான் அறிந்துகொள்ளுகிறேன். அவரது அலுவலகத்தில் இருந்தது ஒரு மரக்காயர் பெண் தான். வெகு சாதாரண தமிழக பெண்மணியினைப் போன்ற உடையமைப்பிலேயே இருந்தார். ஓலைகளை மிக சன்னமாக கிழித்து பொருட்களை செய்துகொண்டிருந்தார். 

பழவேற்காடு ஓலைப் பெட்டிகள்

பனையோலை அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. வர்ணங்கள் மீதும் எனக்குப் பெரிய வாஞ்சை கிடையாது. அழகிய வர்ணங்கள் தீட்டும் SHARE என்ற வேலூரைச் சார்ந்த  அமைப்பு, தலித் பெண்களைக் கொண்டு மிகச் சிறப்பான பொருட்களைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்து, உட்பட பல ஐரோப்பிய நகரங்களுக்கு அவர்கள் பொருட்களை அனுப்புகிறார்கள்.

மற்றொரு அமைப்பு மஞ்சள் எனப்படுவது. செட்டியார்கள் நடத்தும் ஒரு அமைப்பு. தமிழகத்தில் இன்று முதலிடத்தில் இருக்கும் அழகிய வடிவமைப்புகள் கொண்ட அமைப்பு இது. ரோடா அலெக்ஸ் தான் மஞ்சள் என்ற அமைப்பினை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மஞ்சள் எப்படி இயங்குகிறது என நான் தேடி சென்றபோது, நாடார் பெண்களை வைத்தே வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன். அங்கு அவர்களது பணியிடத்திற்குள் செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை.

செட்டிநாடு பனை ஓலைப் பொருட்களை அறிமுகம் செய்யும் கொட்டான் என்ற புத்தகம்

செட்டியார் சமூகத்தினருக்கும் நாடார் சமூகத்தினருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என காலம்சென்ற பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். பனை மரச்சாலை புத்தகத்தினை அவர் தான் முழுவதும் வாசித்து பதிப்பகத்திற்கு கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டியவர். திருமண சீர்களில் நாடார்கள் எப்படி நார் பெட்டிகளை கொண்டு செல்வார்களோ அது போலவே செட்டியார்களும் செய்வார்கள் என்றார். முதன் முறையாக  செட்டியார்களுக்கும் பனைக்கும் இருக்கும் உறவு என் பார்வையில் அப்படித்தான் தெரிய வந்தது. 

ஆகவே இதனை மையப்படுத்தியே நான் செட்டியார்களுக்கும் நாடார்களுக்கும் உள்ள தொடர்பினைத் தேட ஆரம்பித்தேன்.  திண்டுக்கல் பகுதிகளில் நான் பயணித்துக்கொண்டிருக்கும்போது கோவிலூர் என்ற பகுதியில் ஒரு பெண்மணி நாங்கள் செட்டியாருக்குத் தான் கருப்பட்டியை கொடுப்போம் என்றது எனக்குள் கேள்வியை எழுப்பியது? ஏன் செட்டியார்கள்? பணம் இருப்பதிலேயா? வெறும் பணம் ஒரு காரணியாக இருக்க முடியாது ஏன் என்றால் சிவகாசி நாடார்களும், இன்னும் பல நாடார்களும் கருப்பட்டி வணிகத்தை தங்கள் குல உரிமைச் சொத்தாக வைத்திருந்தார்கள். என்னுடைய அம்மா வழி தாத்தாவின் சகோதரியின் கணவர் கூட ஒரு வெற்றிகரமான கருப்பட்டி யாவாரியாக கொல்லத்தில் கொடிகட்டிப்பறந்தவர் தான். அப்படியானால் ஏன் செட்டியார்கள் பனையேறிகளுடன் தொடர்பிலிருக்கிறார்கள்?

விடை சொல்லுவதற்காகவே திருச்சியில் செல்லம்மாள் மண் பானை சமையல் என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தும் திரு மோகன் அவர்கள் என்னை அவர்களது உணவகத்திற்கு அழைத்திருந்தார்கள். உணவு உண்பதற்கு முன், அவரது உணவகத்தை எனக்கு சுற்றிக்காண்பித்தார்கள். சமையலுக்கான மண் பாண்டங்களைத் தேர்வு செய்த விதம், விறகுகள் முதற்கொண்டு காய்கறிகள் எப்படி வாங்குவது உட்பட பல கோட்பாடுகளை அவர் வைத்திருக்கிறார். அவர் வாங்கி வைத்திருக்கும் கருப்பட்டிகள் தருமபுரியிலிருந்து வரவழைத்தவை என காண்பித்தார். அவைகளின் வடிவமே சற்று வித்தியாசமாக இருந்தது. தேங்காய் சிரட்டையில் ஊற்றியது போல அல்ல, சற்று ஆழமான குழிக்குள் ஊற்றியது போல நீண்டு காணப்பட்டது. அவர் தான் சொன்னார், செட்டியார்கள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டியினைக் கலந்தே ஆட்டுவார்கள் என்று. குறிப்பாக எள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டி கண்டிப்பாக இட்டே ஆகவேண்டும். ஒரு முறை காயல் பட்டிணம் சென்றிருக்கும்போது ஒரு இஸ்லாமியர் செக்கு ஆட்டும் இயந்திரத்தில் கருப்பட்டிகளை போட்டுக்கொண்டிருந்ததை அப்போது நினைவு கூர்ந்தேன்.  கருப்பட்டிகளை இட்டு அரைத்தால் தான் எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணையில் உள்ள காரல் நீங்கும்.

செட்டியார்கள் மத்தியில் எண்ணெய் செட்டியார்கள் உண்டு என்பது எனக்கு புது தகவல். பெருவிளையில் எங்கள் வீட்டிற்கு  பின்புறம் இருக்கும் அரிசி அரவை ஆலைக்கருகில் ஒரு செக்காட்டும் கல் கிடப்பதையும் எனது சிறு வயது முதல் பார்த்து வருகிறேன். சமீபத்தில் மீண்டும் செக்கெண்ணெய்கள் தமிழகத்தில் மீட்சி பெறுவதைப் பார்க்கும்போது  கருப்பட்டியின் தேவை இன்றும் அதிகமாக இருப்பதாகவே உணருகிறேன். 

கேள்வி இன்னும் எஞ்சியிருக்கிறது. செட்டியார்கள் வாழ்வில் பனையோலைப் பெட்டி எப்படி நுழைந்தது? அவர்களுக்கான ஓலை பின்னும் ஒரு மரபு தமிழகத்தில் எப்படி தனித்துவத்துடன் இயங்கலாயிற்று என்பது மிகப்பெரிய கேள்வி. மஞ்சள் வெளியிட்ட கொட்டான் என்ற ஒரு புத்தகத்தை பெரும் விலை கொடுத்து வாங்கினேன். அந்த புத்தகம் அவர்களின் பொருட்களின் அறிமுகம் என்ற அளவிலான ஒரு புத்தகமே ஒழிய அதிலிருந்து பெருமளவில் விடை கிடைப்பதாக இல்லை. ஏனென்றால் அப்புத்தகத்தில் எங்குமே அவர்களுக்கு ஓலைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்கின்ற தகவல் சொல்லப்படவில்லை. ஓலைகள் கிடைக்கும் பனை மரம் குறித்து போற்கிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலைகளை யார் வெட்டி கொடுப்பார்கள், போன்றவைகள் பேசப்படவில்லை. ஒருவேளை, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓலைகளை சேகரித்து கொடுத்திருக்கலாம், இல்லை தலித் சமூகத்தினர் அப்பகுதிகளில் பனையேறியிருக்கலாம். பொருந்தும்படியாக நாம் எண்ணத்தக்க விடை, செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்த நாடார்கள் தான் ஓலைகளை எடுத்து செட்டி ஆய்ச்சிகளுக்கு கொடுத்திருப்பார்கள் என்பது தான்.

அழகிய செட்டிநாடு கொட்டான்கள்

அப்படியானால், ஓலைகளில் பொருட்கள் செய்யும் நுட்பம் செட்டியார் சமூகத்தினருக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் என்பது அதனை தொக்கி நிற்கும் கேள்வி. கண்டிப்பாக நாடார் பெண்களே செட்டி ஆய்ச்சிகளுக்குப் பின்னல் முறைகளை கற்றுக்கொடுத்திருப்பார்கள். அப்புத்தகத்தில் அதற்கான தெளிவுகள் ஏதும் இல்லை. பெரும்பாலும் செட்டியார்கள் பர்மா சென்று பொருளீட்டுகையில், செட்டி ஆய்ச்சிகள் வீட்டில் பொழுதுபோக கற்ற ஒரு கலை வடிவமாகவே  இதனைப் கொட்டான் முன்வைக்கிறது. இன்றும் செட்டி நாட்டு சுற்றுவட்டாரங்களில் காணப்படும் நார் பெட்டிகள் தனித்துவமிக்கவைகளாக  காணப்படுவதைப் பார்க்கலாம். இவ்வித நார் பெட்டிகளே செட்டியார்களுடைய திருமணங்களில் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால், அவர்களிடம் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பெட்டிகளுக்கான பின்புலம் என்ன? தென் தமிழகத்தில் காணப்படும் முறைமைகளைத் தாண்டி செட்டியார்களுடைய வர்ணங்களும், மடிப்புகளும் வித்தியாசப்படும் இடங்கள்  உண்டு. அது எப்படி என்கிற கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது.  

அதற்கான விடை கண்டுபிடிக்க நான் வேறு ஒரு பயணம் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. தற்செயலாக அவ்விதமான ஒரு பயணம் நிகழ்ந்தது.  எனது இறையியல் கல்லூரித் தோழன்,   ஹெம்கொமாங் ஹோக்கிப் (Hemkhomang Hoakip)  மணிப்பூரில் நிகழ்ந்த ஒரு கிறிஸ்துவ சமய நிகழ்ச்சிக்காக என்னை பேச அழைத்தார். நிகழ்ச்சி முடிவில் என்னோடு படித்த குக்கி இனக்குழுவைச் சார்ந்த மாங்சா ஹோக்கிப் (Mangcha Hoakip) , என்னை அவனுடன் தங்கும்படியாக அழைத்துச் சென்றான். மோரே என்று சொல்லப்படும் ஒரு பகுதி இருக்கிறது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள், அதன் அருகில் தான் பர்மா இருக்கிறது அங்கு செல்வோம் என்றான். மறுநாள் அதிகாலமே, ஒருநாள் பயணமாக  பர்மா நோக்கி மாங்சா குடும்பத்தினருடன்  இணைந்து பயணித்தோம். 

தூரத்தில் தெரிகிறது தான் பர்மா என காண்பித்தான். பர்மா எனப்படுவது சமதளத்தில் இருக்குமிடம் என்றும், இந்தியா  மலையில் இருப்பதும் தான் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடு. நாங்கள் மோரே சென்று  காலை உணவருந்திவிட்டு, ஒரு நாள் பெர்மிட் எடுத்துவிட்டு பர்மாவிற்குள் நுழைந்தோம். அங்கே அருகிலிருந்த ஒரு நகரத்திற்குள்  நான் காலடி எடுத்து வைத்தபோதே உணர்ந்துகொண்டேன் இது பனைகளுக்கான தேசம் என்று, என்னை வரவேற்க நான்கு பனை மரங்கள் சாலை ஓரத்தில் நின்றன. கலயம் கட்டப்பட்டிருந்தது. இல்லை இல்லை அவிழ்க்கப்படாமலிருந்தது. அன்று நாங்கள் சென்ற சந்தையில், கருப்பட்டி விற்கப்படுவதைப் பார்த்தேன். பனை ஓலைப்பொருட்களை நான் அன்று அங்கு எங்குமே பார்க்கவில்லை. எப்படி அதை தவற விட்டேன் என இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

எனது செட்டி நாட்டு பயணத்தில் அங்குள்ள புராதன பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்றபோது, பர்மாவிலிருந்து கொண்டுவந்த ஓலைப்பெட்டிகள் தாராளம் இருப்பதைப் பார்த்தேன். செட்டியார்களுடைய தனித்துவம் என்பது நாடார்களிடம் இருந்து கற்ற பின்னல் முறைகளுடன் பர்மிய கலைப்படைப்புகளையும் சேர்த்து  முயங்கி ஏற்பட்ட கலவையான கலைவடிவங்கள் என்பதை அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பர்மியக் கலைப்படைப்புகள் என்பவை அனைத்து இந்திய கலைப்படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட அழகு கொண்டது என்பதை இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில், ஒவ்வொரு சமூகமும், தமிழகத்தில் பனை சார்ந்த பொருட்களை தங்களுக்கு என வடிவமைத்திருக்கிறார்கள். அது அவரவர்களின், சடங்கு அல்லது, பயன்பாட்டு காரணங்களை ஒட்டி இருக்கலாம் என்பது எனது அவதானிப்பு. ஆகவே அழகினை விட, ஒரு பொருள் எவ்விதம் பயன்படுத்திடப்பட்டிருக்கிறது எனவும், அவைகள் அச்சமூகத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதும் தான் எனது முக்கிய தேடுதலாக இருக்கிறது.  செட்டியார்களுடைய பங்களிப்பு என்பவைகள் அவ்வகையில் அழகியல் சார்ந்து அவர்கல் தமிழ் சமூகத்திற்கு அளித்த கொடைகள் என்றே கொள்ளுவேன். இன்று மஞ்சள் சென்று பனை ஓலைப் பொருட்கள் வாங்குபவர்கள் தமிழகத்தில் உள்ள மேல் தட்டு மக்கள் மட்டும் தான். அந்த அளவு சர்வதேச கலை ஒருமையினை அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. 

பறி குறித்த விடை எனக்கு ஓரளவு கிடைத்துவிட்டாலும்,  பறி குறித்து நான் மேலும் அறிய விரும்பியே பழவேற்காடு வந்தேன். கூடவே எலிக்கிட்டி என்று ஒன்றினையும் தேடி வந்தேன். எனக்கு சேவியர் அறிமுகமான பிற்பாடு, ஒருநாள் முகநூலில் ஒரு படத்தினை பகிர்ந்திருந்ததைப் பார்க்தேன். ஒரு மனிதர் டி வி எஸ் எக்செல் வண்டி நிறைய பனயோலையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற ஒரு படம். என்ன இது என்று வினவ, எலிக் கிட்டி என்றார். இப்படியான ஒரு பெயர் எனக்கு புதிதாக இருப்பதனால், அது குறித்த தேடலையும் இணைத்தே இப்பயணத்தினை அமைத்திருந்தேன்.  

சேவியருடன் பேசும்போதெல்லாம், இதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா அதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா என்று நச்சரித்தபடியே இருப்பேன். சேவியர் எப்போதும் மெல்லிய சிரிப்புடன், கிண்டலாக சொல்லுவார். “நீங்க பாம்பே ஆள் மாதிரியே பேசுறீங்க”. அதற்கு அர்த்தம், ஒரு தகவலை நினைத்த மாத்திரத்திலேயே  திரட்டிவிட முடியாது. பொறுமை அவசியம். பல நாள் தேடவேண்டியிருக்கும் என்பதுதான். எனக்கு எலி கிட்டியினை பார்த்தே ஆகவேண்டிய வேகத்தில் தான் இந்த பயணமே என நெஞ்சு அடித்துக்கொண்டீருந்தது. அவர் என்னிடம், உங்களுக்காக ஒரு நண்பரை ஒழுங்கு செய்திருக்கிறேன், அவர் வந்தால் உங்களுக்கான உதவிகளைச் செய்வார். மீதி உங்கள் அதிருஷ்டத்தைப் பொறுத்தது என்றார். மேலும் அவர், நாளைய தினம், காயலில் நீங்கள் பயணம் செய்ய ஒரு படகினை அமர்த்தியிருக்கிறேன் , பயணம் சென்று வாருங்கள். ஒருவேளை நீங்கள் தேடுகின்றவைகளில் ஏதேனும் உங்களுக்கு இப்பயணத்தில் வெளிப்படலாம் என்றார். 

சேவியர் என்னை அழைத்துகொண்டு அங்கிருந்த டச்சு கல்லறையினை காண்பித்தார். அதற்குள் நாங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படியே, என்னை ஒரு தொன்மையான இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் அழைத்துச் சென்றார். புராதனமான அந்த பள்ளிவாசலிலும் நாங்கள் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க இயலவில்லை. வெளியே படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அங்கிருந்தவர். அழகிய கற்தூண்களால் ஆன அந்த பள்ளிவாசல், இந்திய கட்டிடக்கலையும் இஸ்லாமிய கட்ட்டக்கலையும் இணைந்த சங்கமம். வெளியே இருந்த ஒரு சூரிய கடிகாரத்தையும், பாங்கு  அழைக்கும் மேடையினையும் பார்த்துவிட்டு திரும்பினோம். மதிய உணவினை இருவரும் இணைந்து  சென்று சாப்பிட்டோம். நான் இறால் பிரியாணி  சாப்பிட, அவர் சைவ சாப்பாடு சாப்பிட்டார். அவர் எனக்கு உதவி செய்யும்படி அழைத்திருந்த பீட்டர் வரும்வரையில் என்னோடு நேரம் செலவைட்டு பழவேற்காடு குறித்து பல்வேறு அரிய தகவல்களை பகிந்துகொண்டார். 

https://lbb.in/chennai/manjal-home-decor-chettinad-crafts-store/

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 9

பிப்ரவரி 26, 2021

பறிபோகா உறவுகள்

எங்களது பயணம் நீண்டுகொண்டே சென்றது மதியம் 12.30 வாக்கிலே தான் சென்று சேர்ந்தோம். நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு நீண்ட பாலத்தின் ஆரம்பம். அந்த பாலத்திற்கு அப்பால் தொலை தூரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருந்தது. அதனைச் சுற்றிலும் பனை மரக்கூட்டம். எனக்கு அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது. அக்காட்சி என் மனதிற்கு நெருக்கமானது மட்டுமல்ல, கலங்கரை விளக்கத்தின் ஊற்றுக்கண்ணே பனை மரம் தான் என நான் எண்ணிக்கொள்வதுண்டு. கிட்டத்தட்ட இதற்கு இணையாக கன்னியாகுமரியிலும் பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் நின்றுகொண்டிருக்கும். பல பனை மரங்கள் அழிந்துபோனாலும், இன்றும், ஒரு சில பனை மரங்கள், முட்டம் கடற்கரையினை ஒட்டி இருப்பதை நான் பதிவு செய்திருக்கிறேன். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கூட ஒரு சில பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் எனக்கான இடத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற நிறைவை அந்த பனைமரங்களும் கலங்கரை விளக்கமும் கொடுத்தது.

அங்கே சுமன் என்ற மீனவர் நண்பர் ஒருவரின் தொடர்பு எண்ணை சேவியர் கொடுத்திருந்தார்கள். அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆகவே, எங்களுக்கு இடதுபுறமாக காணப்பட்ட மீன் சந்தைக்குச் சென்றோம். மீன்பிடி படகுகள், தோணிகள் அதிகமாக அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்தன.  கடலை ஒட்டி அனைத்து மீன்களும் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருந்தது. இறால் அதிகமாக தென்பட்டது. எதுவும் மலிவாக இருப்பது போல தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் பிடிக்கப்பட்டு உயிருடனோ அல்லது சற்று நேரத்திற்கு முன் உயிரை விட்டோ வந்திருக்கிறது.

சுமன் வருவதற்கு நேரமானபடியால், அக்கரையிலிருந்த கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்றோம். பழவேற்காடு பகுதிகளில் இரண்டு கலங்கரை விளக்கம் இருப்பதாக சேவியர் கூறினார். மற்றுமொரு கலங்கரை விளக்கம் பல மைல்கள் தள்ளி ஆந்திரா எல்லையில் இருக்கிறது. கலங்கரை விளக்கத்தினைத் தாண்டி நாங்கள் சென்றபோது  அங்கே ஆர்ப்பரிக்கும்  கடல் இருந்தது. எனக்கு குழப்பமாகிவிட்டது. அப்படியானால் இங்கே பாலத்தின் அடியில் நான் கண்டது என்ன? ஆம், அது தான் பழவேற்காடு காயல் என பின்னர் அறிந்துகொண்டேன். இங்கு கடலுக்கும் காயலுக்கும் நடுவில் மிக நீண்ட மணல் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள காயலே மீன் பெருமளவில் பெருகுவதற்கும், இறால் பெருகி வளருவதற்கும் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கும் காரணமாகின்றன. இன்று ஐஸ் வைக்கபடாத மீன்கள் வேண்டுவோர் பழவேற்காடு நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே இங்கே விலை பிற இடங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

பிரசாந்த் சுவாமினாதன் அவர்கள் எடுத்த அழகிய புகைப்படம்

எனது பயணம் ஏன் பழவேற்காடு நோக்கி அமைத்தது? அதற்கு ஒரு நீண்ட பின்கதை உண்டு. பனைமரச்சாலை பயணத்தில் நான் ஸ்ரீ ஹரிக்கோட்டாவை தாண்டி வரும்போது பழவேற்காடு பகுதியை பார்க்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் சென்னை செல்லுவது தாமதம் ஆகும் என கருதியதால் அன்று அந்த எண்ணத்தை கைவிட்டு ஏலூருவிலிருந்து சென்னை வரை 500 கிலோமீட்டர் ஒரே மூச்சாய் ஓட்டி வந்து சேர்ந்தேன். அந்த பயணத்தில் நான் பழவேற்காடு பகுதியை பார்க்கத்தவறியது மாபெரும் தவறு என பல நாள் எண்ணி வருந்தியிருக்கிறேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். பனை ஓலையில் செய்யப்பட்ட பறி போன்ற அமைப்பைக்கொண்ட ஒரு அழகிய பனையோலை பெட்டியினை ஒரு கரிய மனிதர் வெண்மையான முள் தாடியுடனும், தனது தோளில் உள்ள குச்சியின் ஓரத்தில் கட்டி தொங்கவிட்டபடி புகைப்படக் கருவியை  தீர்க்கமாக பார்த்தபடி நின்றார். அப்புகைப்படம், ஒரு நூறாண்டு பழைமையான புகைப்படம் போலவே காணப்பட்டது. காலத்தால் நாம் பின்நோக்கிச் சென்றால் எப்படி அன்றைய கருப்பு வெள்ளை படங்களில் நமது ஆதி குடிகளை ஆங்கிலேயர்கள் படமெடுத்து வைத்திருந்தார்களோ  அப்படியான தோரணைக் கொண்டது  அப்படம். ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அப்படம் வர்ணக்கலவையால் நிறைந்திருந்தது. இது எப்படி சாத்தியம் என எண்ணிக்கொண்டு நண்பர்களிடம் அப்புகைப்படம் எடுத்த நபர் குறித்து விவரங்கள் கேட்டேன். ஒருவகையாக அப்புகைப்படம் எடுத்த நபரையும் தேடிக்கண்டுபிடித்தேன். பிரசாந்த் சுவாமினாதன் என்ற அந்த புகைப்படக்காரருக்கு, அவரது பயணத்தின் போது, தற்செயலாக கிடைத்த படம் அது என்பதைத் தாண்டி மேலதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றாலும், எண்ணூர் பகுதியில் இப்படியான புகைப்படத்தைத் தாம் எடுத்தாக ஒப்புக்கொண்டார்.

இதனை நான் தேடுகையில், தான் சேவியர் அவர்களை ரோடா அலெக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். சேவியர் அவர்கள் என்னை நேரடியாக பழவேற்காடு வரச்சொல்லிவிட்டார். என்னால் அங்கு செல்லும் சூழல் அப்போது அமையவில்லை. எனது மனதோ பழவேற்காடு செல்லவேண்டும் என துடித்துக்கொண்டிருந்தது. பழவேற்காடு பகுதிகளில் காணப்படும் இவ்வித ஓலை வடிவத்தைக் குறித்து நான் தேடத் துவங்கியது 2017 ஆம் ஆண்டு தான். அதுவரை பறி என்கிற வார்த்தையை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பாண்டியன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோருடன் பாண்டிச்சேரியில் வைத்து…

பறி என்ற சொல்லினை நான் முதன் முறையாக பாண்டிச்சேரியில் வைத்து தான் கேள்விப்பட்டேன். பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் “அகவிழி” என்ற குறும்படத்தை எடுத்த  இயக்குநர் பாண்டியனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.  பாண்டியனோடு பேசிக்கொண்டிருக்கும்போது தான் பாண்டிச்சேரி பகுதியில் காணப்படும் பறி குறித்த விவரங்களை எனக்குச் சொன்னார். பாண்டிச்சேரி மக்கள் மீன் வாங்குவதற்கு என ஒரு பனை ஓலை பையினை வைத்திருப்பார்கள் எனவும், அதனை எடுத்துக்கொண்டு தான் மீன் வாங்கச் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் மீன் வங்கி வந்த பின்பு அந்த பெட்டியினை அவர்கள் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள் எனவும் கூறினார். நமது சூழியல் அறிவு எப்படி சமீப காலங்களில் மழுங்கிப்போய்விட்டது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெகு சமீப காலம் வரைக்கும் புழக்கத்திலிருந்த இவ்வழக்கம் மறைந்து போய்விட்டது என அவர் சொன்ன போதே இதனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்.

பாண்டிச்சேரி பறி

ஆனால், நான் எங்கு தேடியும் அது எனது கைகளில் சிக்கவில்லை. அப்படி ஒரு பொருள் இருந்திருக்கிறது என்றவர்களால் கூட அது எங்கிருந்து உருவாகி அவர்கள் கைகளை வந்தடைந்தது என சொல்லத் தெரியவில்லை. இது போன்ற சூழல்களில் தான் நமக்கு உள்ளூர் வாசிகளின் உதவி தேவைப்படும். பாண்டிச்சேரியில் இரண்டு நாட்கள் செலவழித்தால் ஒருவேளை இதனை கண்டுபிடித்து மீட்டெடுக்க இயலும். மக்கள் வெகு சாதாரணமாக புழங்கிய ஒரு பொருள் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இன்றி மறைந்து போவது என்பது மாபெரும் பண்பாட்டு இழப்பாகும்.

குமரி மாவட்டத்தில் கூட மீன் வாங்கச் செல்லுபவர்கள், ஒரு சிறு பெட்டியினை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்தது. சாதாரண மிட்டாய் பெட்டியின் அடிப்பாகம் போல காணப்படும் ஒரு எளிய பெட்டி தான் அது. ஆனால் அதனை  எடுத்துச் செல்லும் விதம் தான் அதனை சற்று வித்தியாசமான ஒன்றாக காட்சிப்படுத்தும். வட்ட வடிவில் காணப்படும் கையடக்க பெட்டிக்குள் மீனை போட்டு, முயலின் காதை பிடித்து வருவதுபோல் அதன் மேற்பகுதியினை மடித்து தூக்கி வருவார்கள். இப்பெட்டியும் வழக்கொழிந்து போனதுதான். 

குமரி மாவட்ட மீன் பெட்டி

குமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு பகுதியில் ஒரு நாள் பனை விதைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது, உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று ஒரு பெண்மணி சொன்னார்கள். அவர்கள் பெயர் ரெஜினா. கணவனை இழந்தவர்கள், இரண்டு ஆண் மகன்கள் அவர்களுக்கு உண்டு.  கிட்டத்தட்ட 5000 விதைகளை அவர்கள் அந்த வருடம் தன்னார்வலராக சேகரித்து கொடுத்தார்கள். அவர்கள் தனக்கு அந்த மீன் பட்டி செய்யத் தெரியும் என்றும், ஓலைகள் கொடுத்தால் நான் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்கள். அப்படித்தான் இழந்த மீன் பெட்டியினை மீட்டெடுத்தோம்.

ரெஜினா மீன் பெட்டி செய்கிறார்கள்

பறி குறித்து எனது தேடுதல் வேகமடைந்தது. 2017 – 2018ஆம் ஆண்டிற்கான சூழியல் விருதினை பாண்டிச்சேரியிலுள்ள ஆரண்யா காடு என்ற அமைப்பினை நடத்தும் திரு சரவணன் மற்றும் குழுவினர் என்னையும் ஒருவராக தெரிந்தெடுத்திருந்தார்கள். அங்கே பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. பண்ருட்டி இரா பஞ்சவர்ணம் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எனது தேடுதலைச் சொன்ன போது, அவரது நட்புகளை தொடர்புகொண்டு, எப்படியும் உதவி செய்தே ஆகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடலூர், பாண்டிச்சேரி மற்றும்  சென்னை பகுதிகளில் அவருக்கு ஏராளம் நண்பர்கள் உண்டு.  விதைகளை சேகரித்து அதனை பரவலாக்கும் ராமநாதன் என்னும் ஓய்வுபெற்ற ஆசிரியர்  எங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்கள்.  எப்படியோ ஓரிடத்தை கண்டுபிடித்துவிட்டோம்.  அங்கே சென்று சேர்ந்த போது, அது வீராம்பட்டிணம் என்ற ஒரு மீனவ கிராமம். பாண்டிச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பறியை இடுப்பில் கட்டியபடி வலை வீசும் மீனவர், பாண்டிச்சேரி

அங்கு சென்றபோது ஒருசேர ஏமாற்றமும் அதிர்ச்சியும் எனக்கு காத்திருந்தது. நாங்கள் தேடி வந்த மக்கள் பயன்பாட்டிற்கான பறி கிடைக்கவில்லை. அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனை சற்று நேரத்திற்குப் பின் தான் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. மீனவர் கிராமத்தில் வந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் பறியினை தேடுவது சரியில்லையே?

எங்கள் தேடுதலில் ஆச்சரியமளிக்கும் விதமாக இங்கு பறி செய்யும் ஒருவரைப் பார்த்தோம். திரு ராஜேந்திரன் என்பவர் அதனை செய்துகொண்டிருந்தார். இன்றும் விராம்பட்டிணம் ஊரிலுள்ள மறை மலையடிகள் தெருவை சார்ந்த நான்கு குடும்பங்கள் பறி செய்வதாக தெரிவித்தார். அந்த பறியின் பயன்பாடு தெரிய அந்த மீனவரை அழைத்துக்கொண்டு சென்றோம். உள்நாட்டு மீனவர்கள் தான் இவர்கள் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். அவர் தனது இடுப்பில் இந்த பறியைக் கட்டிக்கொண்டு கரத்தில் ஒரு வலையை எடுத்துக்கொண்டார். கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் தான் இவர்கள் மீன் பிடிப்பது வழக்கமாக இருக்கிறது. அன்று அதிகமாக எதுவும் கிடைக்கவில்லை, ஒரு நண்டும் ஒரு சில சிறிய மீன்களும் அவருக்கு கிடைத்தன.

பறியின் வடிவம் குறித்து நான் சொல்லியே ஆகவேண்டும். பறி குமரி மாவட்டத்தில் காணப்படும் எந்த வித பொருட்களுடனும் தொடர்புடையது அல்ல. அப்படி நான் சொல்லுவதற்கு காரணம், குமரி மாவட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் பொருட்கள் எதனுடனும் நாம் ஒப்பிடமுடியாத வடிவமாக அது காணப்பட்டது.  மேலும் அப்போது நான் குமரி கடற்கரைகளில்  புழங்கும் பனை ஓலை பொருட்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனைப் பார்த்த போது இனம்புரியாத ஒரு குதூகலம், என்னை ஆட்கொண்டது. ஏதோ கண்டுபிடித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்பது போல உற்சாகமாகிவிட்டேன். எனது உற்சாகம், ஐயா பஞ்சவர்ணம் அவர்களையும், மற்றும் உடன் வந்த ராமநாதன் ஆசிரியரையும்  ஒருங்கே  கூட தொற்றிக்கொண்டது. எனக்கான பறிக்கு ஐயா பஞ்சவர்ணம் அவர்கள் முன்பணம்  கூட கொடுத்துவிட்டார்கள்.

அப்படி அந்த பறியில் நான் என்னத்தை சிறப்பாக கண்டேன்? எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நான்கு முக்கு பெட்டிகளோ இரண்டு முக்கு பெட்டிகளோ தான் குமரி மாவட்டத்தில் இருக்கும். இது ஒரு சீரான வடிவற்ற பொருள். பார்க்க மனிதர்களின் பிருட்டம் போல காணப்பட்டது. அதன் வாய் ஒடுங்கி மனித கழுத்தினளவு தான் இருந்தது. பறியின் அடிப்பகுதி  நேர்கோடாக செல்லும் பகுதியையும், வாய் பகுதி சீரான வட்ட வடிவத்தையும் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பறி என்ற அமைப்பில் தான் வயிற்றுப்பகுதி ஊதி பெரிதாகவும், மிச்சப்பகுதிகள் சீராக இருப்பதாகவும் எனக்கு தோன்றிற்று. அவைகள் எப்படி இந்த “வடிவற்ற” வடிவை அடைந்தன என என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. என்னைப்பொறுத்த அளவில் செய்நேர்த்தி இல்லாத ஒரு ஆச்சரிய வடிவம் என்பதாகத்தான் அதனை அப்போது உள்வாங்க முடிந்தது.

ஏன் பிருட்டம் போன்ற வடிவம்? ஏன் பனை ஓலையில் போன்ற கேள்விகளுக்கு  அன்றே எனக்கு விடை கிடைத்தன. தண்ணீரில் இடுப்பளவு இறங்கி நின்று மீன் பிடிக்கும் ஒருவர், பறியினை இடுப்பில் கட்டியிருப்பார். பிடித்த மீனை பறிக்குள் உயிருடன் போடுவார். அது அவர் வீடு வருவது வரை உயிருடன் இருக்கும். அப்படி தண்ணீரிலேயே மீன்கள் இருப்பதனால் எவ்வகையிலும், அவைகள் மீண்டும் தண்ணீரில் குதித்துவிடக்கூடாதே என்பதற்காக தான்  இவ்விதம் அதனை மடித்து கழுத்தை சிறிதாக்கி விடுகிறார்கள் என அறிந்துகொண்டேன். பனை மரங்கள் நெய்தல் நிலத்தில் பெருமளவு காணப்படுவதால் பனை ஓலைகளை மீன்பிடி உபகரணங்கள் செய்ய பயன் படுத்துகிறார்கள் என அறிந்து கொண்டேன்.

தமிழக கடற்கரை பகுதிகளுக்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, இராமநாதபுரம் பகுதிகளிலும் பனை ஓலையில் பறி செய்யும் வழக்கம் இருப்பதாக பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில் குறிப்பிட்டார்கள். அக்குழுவினரைச் சார்ந்த சாமிநாதன் என்பவர், ராமநாதபுரம் சென்று பறி எப்படி செய்கிறார்கள் எனக் கற்று வந்தார். ஆகவே இளவேனிலிடம் அப்பெரியவரின் எண் வாங்கிகொண்டு அந்த மனிதரைக் கண்டு திரும்பலாம் என நினைத்தேன்.

பல தேடுதல்களுக்கு பின்பு ராமநாதபுரத்தில் பறி செய்யும் அந்த நபரை கண்டுபிடித்தேன். அவரிடம் நான் பர்த்த பறி இன்னும் வித்தியாசமாக காணப்பட்டது. ஏற்கெனவே நான் கூறியிருப்பது போல பின்னல்களில் கூட்டல் வடிவமும் பெருக்கல் வடிவமும் உண்டு. ராமநாதபுரத்தைப் பொறுத்த அளவில் கூட்டல் முறை போன்ற ஒன்றே அவர்களிடம் காணப்படுகிறது. மேலும், கூட்டல் முறை என்று சொல்லும்போது இரண்டு பக்கமும் ஓலைகளையோ அல்லது பனை நாரையோ கொண்டு பின்னல் இடுவது வழக்கம். ஆனால் இங்கு செய்யப்படும் பறியின் அமைப்பு, சற்று வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக ஊடாக செல்லும் ஓலைக்குப் பதிலாக பனை ஈர்க்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.  

குமரி மாவட்டத்தில் செய்யப்படும் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யப்பட்டது

இதே பின்னல் முறையினை ஒத்த ஒரு நேர்த்தியான வடிவத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் அமைந்தது பெரும் பாக்கியம் என்றே சொல்லுவேன். 2017 – 18 ஆகிய வருடங்களில் ஜாஸ்மின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவருடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் உடல் நலம் குன்றியபோது நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்றோம்.  அவர்களின் கணவர், பனை ஓலையில் ஒமல் என்கிற பனை ஓலைப் பொருளை தமது சிறு வயதில் மீன்களை அள்ள பயன்படுத்திருக்கிறாதாக  கூறினார்கள். குமரி மாவட்டத்தில் பனை சார்ந்த தேடுதலை 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்துவந்த எனக்கு  அது ஒரு ஆச்சரியத் தகவல். நமக்கடுத்திருப்பவர்களிடம் இருக்கும் ஓலைப்பொருளைக்கூட  தெரியாமல் இருந்திருக்கிறேனே என்கிற ஆற்றாமை என்னை புரட்டிப்போட்டது. ஆகவே குமரி கடற்கரையை பகுதிகளை பன்னாடையிட்டு தேடத் துவங்கினேன். முட்டம் என்னும் ஒரு பகுதில் ஒருவர், ஒமல் செய்வதாக கேள்விப்பட்டு அவ்வீட்டை கண்டடைந்தேன். ஆனால் அவர்கள், பிளாஸ்டிக் நார் கொண்டே அந்த ஒமலினைச் செய்து வந்தார்கள். பனை ஓலையில் செய்யும் ஒரே ஒருவர் அப்பகுதியில் இன்னும் இருப்பதாகவும், அவர் தனது மகளுடைய வீட்டிற்கு போயிருப்பதாகவும் கூறினார்கள். அவரைக் கண்டுபிடிக்க சிறிது காலம் தேவைப்பட்டது.

திருமதி பாக்கியம் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யும்போது

2018 – 19 ஆகிய வருடங்களில்,  மிடாலக்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டிற்கு எதிரில் இரண்டு மீனவ குடும்பத்தினர் வாடைகைக்கு இருந்தார்கள்.  மீனவ குடும்பத்தினருக்கே உரிய அன்பை எங்கள் மீது பொழிந்தவர்கள் அவர்கள்.  பனை சார்ந்த  எனது தேடுதலை அறிந்த பாக்கியம் என்ற அம்மையார், தனது தந்தையார் பனை ஓலைகளில் ஒமல் என்கிற மீன் அள்ளும் பொருளினைச் செய்வதை தான் பார்த்திருப்பதாகவும், ஓலைகள் கொடுத்தால், தான் அதனை மீட்டிருவாக்கம் செய்ய இயலும் என்றும் கூறினார்கள். கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஒமல் குறித்த அறிவு இருக்கும்.

வட்ட ஒமலுக்காக அடிவைக்கும் முறை

நான் ஓலைகளை எடுத்து வந்தபோது அவர்கள் அதனை செய்யத் துவங்கினார்கள். என் கண்களின் முன்னால் உருப்பெற்ற அந்த ஒமல் வட்ட வடிவாக விரிந்து செல்லுவதும், ஈர்க்கில்களே அவைகளை  இணைத்து கட்டுவதும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. குமரி மாவட்டம் என்று அல்ல, தமிழகத்தின் எப்பகுதியிலும் இவ்விதமான பின்னும் முறைகள் காணப்பட்டதில்லை என்பது தான் உண்மை. எனக்கு ஒமல் என்ற அந்த வடிவத்தைப் பார்க்க  ஆச்சரியமாயிருந்தது. மீனவர்களின் இந்த தனித்திறனோ அல்லது பனையுடனான உறவோ ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும், மீனவ சமூகத்தாலேயே மறக்கப்பட்டு வருவதும் வேதனையான உண்மைகள். குறிப்பாக குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே மெல்ல மெல்ல தென்னைமயமாகிக்கொண்டு வருவதும், பனைகள் குமரி கடற்கரையோரங்களிலிருந்து மறைந்துபோவதும் தொடர்நிகழ்வாகிவிட்டன.

முட்டத்தைச் சார்ந்த அந்த மனிதரைப் வெகு நாட்களுக்குப் பின்பு கண்டுபிடித்தேன். அவர் பெயர் இன்னாசி மகன் ஜோசப் (79). கடற்கரைக்கே உரித்தான வட்டார வழக்கினை தவிர்த்து அவர் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் எண்பது வயதை எட்டுகின்ற அவர், எனக்கு ஒமல் செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.  அவரது உடல், மற்றும் வயோதிபம் போன்ற பல காரணங்களால் அந்த பழைமையான பொருளை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதாக கைக்கூடவில்லை.  நான் அவரை மீண்டும் மீண்டும் சென்று பார்க்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டியிருந்தது. அவர் அதனைத் துவங்கும்போது அவருடனிருந்தேன். இரண்டு ஈர்க்கில்களின் மத்தியில் ஒரு ஓலை செல்லும். ஈர்க்கில் அந்த ஓலையினை பின்னிச்செல்வதினூடாக வலிமையான ஒரு பொருளாக அதனை மாற்றும்.  அவர் அதனை முடிக்கும் வேளையில் நான் மும்பை வந்துவிட்டேன். எனது நண்பர்களே அதனை வாங்கி சென்னை எடுத்துச் சென்றனர்.  எப்படியிருந்தாலும், அதன் வடிவம் சற்றே ராமநாதபுரத்தை ஒட்டிய ஒருவடிவமாகவே காணப்பட்டது ஆனால் ராமநாதபுரத்தை விட மிகப் பெரிதாக இருந்தது.

முட்டம் இன்னாசி மகன் ஜோசப் அவர்கள் செய்த அழகிய ஒமல்

வேம்பார் பகுதிகளிலும் கூட பறி பயன்பாட்டில் இருப்பதாக ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அதனை செய்பவர்களையோ அல்லது அதன் ஒரு மாதிரியோ ஏன் ஒரு புகைப்படமோக்கூட எங்களுக்கு கிடைக்கவேயில்லை. என்னைப்பொறுத்தவரையில் தென் தமிழக கடற்கரை பகுதிக்கும், வட தமிழக கடற்கரைப் பகுதிக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பின்னல்களில் அந்த வேறுபாடு சிறப்பாகவே தென்படுகின்றன. ஒருவேளை கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நேராக பழவேற்காடு வரைக்கும் பயணித்தால், கண்டிப்பாக விதம் விதமான மீன்பிடி பொருட்களை நம்மால் சேகரிக்க இயலும். இப்பயணத்தினை கொல்கத்தா வரை விரித்தால், கேட்கவே வேண்டாம். இவ்விதமான பண்பாட்டு கண்ணிகளைப் பிடித்து பயணிப்பது ஆச்சரியங்கள் பலவற்றை நமக்கு வெளிப்படுத்தும். இன்று அந்த அறிவு பெருமளவில் மங்கிப்போய்விட்டது என்பது தான் உண்மை.

கடற்கரைப் பகுதிகளில் தனித்துவமான பனை ஓலைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது எனது பயணத்தின் மூலமாக உறுதிப்பட்டன.   பனை சார்ந்து வாழும் கரையோர மக்களின் பயன்பாட்டு பொருட்களுக்கும் கடற்கரை மக்களின் பொருட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை இவைகள் உணர்த்துவதுமாகவே இருக்கின்றன. நெய்தல் நிலத்தில் பனை மரங்கள் இருப்பது மட்டுமல்ல நெய்தல் நில வாழ்வில் பனை சார்ந்த பொருட்கள் செய்யும் தனித்துவ அறிவு ஊடுருவியிருப்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.  ஆகவே பனை மரங்கள் சார்ந்த வாழ்வியல் என்பது கரைப்பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல கடற்கரை மக்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அவைகளின் வித்தியாசம், இருவேறு பண்பாட்டை சுட்டிக்காட்டும் பின்னல்களைக் கொண்டிருக்கின்றன.

எங்கள் அழைப்பை எடுத்த சுமன், உடனே வருவதாக கூறினார். அவருக்காக  நாங்கள் பாலத்திற்கு அருகில் காத்து நிற்கையில்,  ஒயர் கூடையில் மிகச்சிறிய பனை ஓலைக்குருத்தினை எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அருகில் அவரது மனைவி என்று சொல்லத்தக்க ஒரு பெண்மணி. சிறிய ஒயர்கூடையில் அவர்களது உணவு மற்றும் பொருட்களை வைத்திருப்பார்கள் போலும். பொருட்களால் நிரம்பியிருந்த அந்த கூடைக்கு மேல், அப்போதுதான் பறித்த சிறிய வடலி குருத்து தீட்டிய குறுவாளென பளபளப்புடன் காணப்பட்டது. அதிலும் அவர்கள் அந்த குருத்தினை கத்தி வைத்து வெட்டி எடுத்தது போல தோன்றவில்லை. ஏதோ கூர்மையான கல்லைக்கொண்டு வெட்டி எடுத்தது போல அதன் மட்டை சதைந்து இருந்தது.  மிஞ்சிப்போனால் ஒரு முளம் நீளம் மட்டுமே வரும் அந்த குருத்தினை அவர்கள் ஒரு பொக்கிஷமென எடுத்துச் செல்லுவது என்னை பலவாறாக சிந்திக்க வைத்தது. அந்த மனிதரின் கரத்தில் பனை ஓலையாலான பறி இருந்தது. சேவியர்  என்னிடம் கூறியது அப்போது தான் என நினைவிற்கு வந்தது. பழவேற்காடு பகுதிகளில் ஏனாதிகள் என்னும் பழங்குடியினர் தான் இறால் பிடிப்பார்கள். தங்கள் கரங்களை பயன்படுத்தியே இறால்  பிடிக்கும்  அவர்கள் தாங்கள் பிடித்த இறால் மீன்களை பனை ஓலை பறியில் தான் எடுத்துச் செல்லுவார்கள் எனவும் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. எனக்கு ஒவ்வொன்றாக விளங்கத் துவங்கியது.எனது பழவேற்காடு பயணத்தையே இதற்காகத்தான் ஒருக்கியிருந்தேன். ஆகவே அவர்களை நிறுத்தி  பேச்சுக்கொடுக்கத் துவங்கினேன். அவர்கள் இறால் பிடித்துக்கொண்டு செல்லுவதாகவும் நேரம் ஆகிவிட்டது எனவும் கூறி அகன்றுவிட்டார்கள்.

பழங்குடியினரின் வடிவங்கள் என்பவை தொல் பழங்காலத்தைச் சார்ந்தவை.  அதுவும் குறிப்பாக ஏனாதிகளின் கரத்தில் இருக்கும் இந்த பறி  பல முக்கிய அறிதல்களை உள்ளடக்கியிருக்கிறது என கண்டுகொண்டேன். பொதுவாக பழங்குடியினரைப் பார்த்தவுடன் எப்படி வில்லும் அம்பும் அவர்களது தொன்மையை பறை சாற்றுமோ,  அது போன்ற ஒரு காட்சிதான் ஏனாதிகள் கரத்தில் இருக்கும் இந்த பறி. இதனை சிறப்பான ஒன்றாக நான் கருதியதற்கு காரணம் என்னவென்றால், அந்த வடிவமைப்பில் உள்ள பழைமை தான். நவீன காலத்தில் பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள்,  அனைவருமே, ஓலையின் அடிப்பாகத்தையும்  அதன்  நுனி பகுதியையும் வெட்டிவிட்டே பொருட்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களைப் பொறுத்த அளவில், ஓலைகள் அதன் அடி முதல் நுனி வரை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஈர்க்கில் மட்டுமே ஓலையிலிருந்து கைகளாலேயே பிய்த்து நீக்கப்பட்டிருக்கிறது. பிற இடங்களில் ஓலைகளை வகிர்ந்து எடுப்பது போல் ஓலைகளை வகிரவில்லை. இத்தனை  ஏன் இவ்வோலைகளின் வயிற்றுப்பகுதி கூட சீர்செய்யப்படவில்லை. ஆகவே தான் பறியின் வயிறு பெரிதாகவும் அதன் கழுத்துப்பகுதி மிக சிறிதாகவும் இருக்கிறது. இந்த அறிதல் என்னை துள்ளிக்குதிக்க வைத்துவிட்டது. பழங்குடியினரான இவர்களது வாழ்வில் இருக்கும் பொருட்கள் தமிழக அளவில் மட்டுமல்ல உலக அளவிலேயே மிக முக்கியமான தொல்லியல் சான்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

பழவேற்காடு வரும் வரையிலும், என்னால் இவ்வடிவத்தின் பின்னால் இருக்கும் ஒரு பிரம்மாண்டத்தை உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. கற்கால வாழ்வில் எப்படி கல் ஆயுதங்களையும் கைகளையும் மட்டுமே கருவிகள் செய்யவும் வேட்டையாடவும் பயன்படுத்தினார்களோ அதே முறைமையினை இன்றும் ஏனாதிகள் கைகொள்ளுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீன்களையும் இறாலையும்  கைகளைக் கொண்டே பிடிப்பார்கள் என சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது அவர்கள் செய்யும் பறியும் கூட எவ்வித கருவிகளும் இன்றி கைகளைக் கொண்டு மாத்திரம் செய்யப்படும் ஒன்று என்பதை அறியும்போது பழவேற்காடு வந்ததன் பயனை அடைந்துவிட்டேன் என என் மனம் கூவியது. பழவேற்காடு என்பது ஏனாதிகள் எனும் தொல்குடிகளின் வாழும்  நிலப்பரப்பு. பல்வேறு மாற்றங்களை கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் தனித்துவத்துடன் நமக்கு முன் முழு வீச்சுடன் எழுந்து நிற்கிறார்கள்.

அவர்களின் கைகள் அவர்கள் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன. அவர்கள் ஆன்மா அந்த நிலப்பரப்பை ஒரு புனித தலமாகவே கருதுகிறது என் நினைத்துக்கொண்டேன். இவ்வித ஒரு நிலப்பகுதியில் எனது பயணம் அமைந்தது ஒரு புண்ணிய யாத்திரைக்கு ஒப்பானது. அவ்வகையில் இது எனது புனித பயணம். நான் நிற்பது புண்ணிய பூமி. பறி என்னை உயிருடன் உள்ளிழுத்துக்கொண்டது.

பனைமுறைக் காலம் 8

பிப்ரவரி 19, 2021

பறவைகள் பனைவிதம்

2017 ஆம் ஆண்டு, பனையேற்றம் என்ற குழுவினை இளவேனில்  மற்றும் சாமிநாதன் எனும் இளைஞர்கள் துவங்கியிருந்தனர். பனையேற்றம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனையேற்றம் என்பது ஒரு முழுமையை சுட்டி நிற்கும் சொல். பனை பெரும்பாலும் தனித்து நிற்கும் ஒன்றைக் குறிப்பதாகவே நான் காண்கிறேன்.  பனை சார்ந்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு அரும்பியிருந்த காலம் அது.  பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில், செம்மை நிகழ்த்தும் பனை கூடல் என்ற  நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். செம்மை அமைப்பும், செம்மையினை வழி நடத்தும் செந்தமிழன் அவர்களும் எனக்கு அப்போது தான் அறிமுகம். நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பனங்காட்டில்  வைத்து நடைபெற்றது. அனைவருக்குமான உணவினை அங்கு வந்தவர்களே இணைந்து பொங்கினார்கள். அனைத்து செலவுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அன்று மதியம் செந்தமிழன் பேசினார். பனை குறித்து அதிகம் பேசவில்லை என்றாலும் இயற்கையான ஒரு மரத்தினை சார்ந்து வாழ்வது எவ்வகையில் நமக்கு உகந்தது என அவருக்கே உரிய பாணியில் பேசினார். தமிழர்களது வாழ்வில் இனிப்பு என்பது கருமையோடு தொடர்புடையது என்பதை, தேன், வெல்லம், கரும்பு, கருப்பட்டி என அவர் வரிசைப்படுத்தி கூறியது, வெள்ளைச் சர்க்கரைக்கு எதிரான மண் சார்ந்த குரல் என்றே பார்க்கிறேன்.

பாண்டிச்சேரி கோபினாத் முனிசாமி எடுத்த புகைப்படம்

இரவு ஒரு அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பனை குறித்து விரிவாக நான் அறிந்தவற்றைக் குறித்து பேசினேன். திருச்சபைக்குள் இருந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுள், தனியனாக நான் எழுப்பும் கூக்குரலையும், எனது எளிய பங்களிப்புகளையும் குறித்து விவரித்தேன். “ஈராயிரம் ஆண்டுகளாக குருத்தோலைப் பண்டிகையினை கொண்டாடும் திருச்சபை ஏன் ஒரு பனை மரத்தைக்  கூட நடவில்லை”? என திருச்சபை நோக்கி நான் எழுப்பிய கேள்வியினை பகிர்ந்தபோது அனைவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தனர். அக்கூடுகையில் கிறிஸ்தவரல்லாதோர் பெருவாரியாக இருந்தாலும், நான் என்ன கூற வருகிறேன் என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் எவருமே என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு காரணம் பனை குறித்த எந்த அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் பனை குறித்து அறிந்துகொள்ள வந்தோம் என அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது ஒரு முக்கியமான புரிதலை எனக்கு ஏற்படுத்க்டியது. பனை சார்ந்து வாழும் தென் மாவட்டட்தைச் சார்ந்டவர்களுக்கு பனை குறித்து ஒரு விலக்கமும், பனை குறித்த புரிதலற்ற சமூகம் பனை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற காட்சி வெளிப்பட்டது. அன்று வந்திருந்தவர்களில் அனேகர் எனது தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டார்கள். அன்று இரவு அங்கே  தங்குவதற்கு பள்ளிகூடம் ஒன்று இருந்தாலும், பெண்கள் உட்பட அனைவருமே வெளியே கிடந்த கடல் மணலில் தான் உறங்கினோம். எனது பயணங்களில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இது அமைந்தது. இப்படி கட்டற்று தேடல் ததும்பி வழியும்  ஒரு குழுவினரை என் வாழ்வில் நான் சந்தித்ததே இல்லை. 

பனம்பழம் சாப்பிடும் குரங்கு

இங்கு வைத்து தான் கல்யாண் குமார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பனை சார்ந்த பயிற்சி ஒன்றை ஒழுங்குசெய்தார்.சுமார் 10 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு இரு திருநங்கைகள் வந்திருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் ஐயா கலையரசன் அவர்களை அந்த நிகழ்விலே தான் சந்தித்தேன்.  கல்யாண் குமார், சென்னை வந்தால் என்னை பார்க்காமல் செல்லக்கூடாது என அன்புகட்டளை இட்டிருந்தார், ஆகவே, பெரும்பாலும் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். நான் சென்றால் தனது வங்கி வேலையைக் கூட கல்யாண் ஒதுக்கிவைத்துவிட்டு என்னுடன் பயணிப்பார். அவர் என்மீது கொண்ட அன்பு ஆழமானது. திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி, பனை விதைகளை சேகரிக்க துவங்குகையில், எனக்கு பதிலாக கல்யாண் அவர்களை தான் நான் உதவிக்கு அனுப்பினேன். இப்போதும் சென்னை செல்ல ஆயத்தமாகும்போது கல்யாண் தான் நினைவுக்கு வந்தார்.

பனம்பழம் சாப்பிடும் ஆடுகள்

கல்யாண் தனது வேலைகளுக்கு மத்தியில், எனக்காக நேரத்தை ஒதுக்கினார். விடுப்பு எடுத்து எனக்காக காத்திருந்தார். தாம்பரத்தில் இறங்கி, அவரது வீடு இருக்கும் நிமிலிச்சேரி பகுதிக்கு பேருந்தில் சென்று இறங்கினேன். அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்தார்கள். மனைவி அருகிலிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.  அவரது வீட்டில் குளித்து சுட சுட தோசை சாப்பிட்டுவிட்டு பழவேற்காடு நோக்கி கிளம்பினோம். பொது முடக்கம், அனைவரையும் சற்று அதிகமாகவே சீண்டிப்பார்த்திருக்கிறது. கல்யாண் தனது வீட்டை சமீபத்தில் தான் கட்டியிருந்தார். ஆகவே வருமானம் கிடைக்கும்படியாக ஏதேனும் ஒரு தொழிலினை மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை.  மீன் கடை வைக்கும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், பழவேற்காடு சென்றால், மீன்களை வாங்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று கூறியபடி வந்தார்.

பனை ஓலையில் தும்பி

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு  ஈச்சமரத்தில் சில தூக்கணாங் குருவி கூடுகள்  இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்று தூரத்தில் வேறொரு பனை மரத்தில்  தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். நாங்கள் செல்லும் வழியில் கூட பனை மரங்களில் பல இடங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. வெகு ஆச்சரியமாக அன்று  ஒரு தென்னை மரத்திலும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்தேன். எனது நண்பனும் பறவைகளை மிக அதிகமாக நேசிக்கும் பாண்டிச்சேரி ராம், என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “தூக்கணாங் குருவி வேறே எங்கண்ணே இருக்கும்? பனை மரத்திலே தானே அண்ணே கூடு கட்டும்”. அவனது கூற்று முற்றிலும் உண்மையானது. பனை மரங்களே அவைகளின் விருப்பத்திற்குரிய வாழிடம். அப்படி பனை மரங்கள் இல்லாதிருந்தால் அவைகள் வேறு மரங்களையோ புதர் செடிகளையோ வேறு இடங்களையோ தெரிவு செய்துகொள்ளும். வயல் வெளிகள், மற்றும் சதுப்பு நிலங்களிலோ அல்லது நீர் இருக்கும் கிணறுகள் அருகிலோ,  ஒற்றையாக நிற்கும் மரங்களை தெரிவு செய்து தங்கள் கூடுகளை தூக்கணாங் குருவிகள் அமைப்பதை பார்த்திருக்கிறேன்.

வடலி பனையில் கரிச்சான் குருவி

2017 ஆம் ஆண்டு மும்பை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட துக்கணாங் குருவி கணக்கெடுப்புகளில், இந்திய அளவில் தூக்கணாங் குருவிகள் குறைந்து வருகின்றன என பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) பதிவு செய்கிறார்கள். இப்பதிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது ஏனென்றால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல, ஆய்வின் துவக்கம் மட்டுமே. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் உண்மையானது. அந்க்ட சந்தேகம் எனக்குளூம் அப்படியே இருக்கிறது. இன்று BNHS பறவை ஆர்வலர்களையும், பறவையியலாளர்களையும், சூழியல் செயல்பாட்டாளர்களையும், காட்டிலாகாவினரையும் துக்கணாங் குருவி கணக்கெடுப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். அப்படியானால், பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு மாபெரும் வீழ்ச்சி புலப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவேளை பனை மரங்களின் அழிவு தான் இப்பறவைகளின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறதா? இயற்கை சங்கிலியில், பனை மரங்களை நாம் பெரும்பாலும் பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் அவைகளின் இருப்பு முக முக்கியமானது என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை வேறு பல காரணிகளும் தூக்கணாங்குரிவியின் அழிவிற்கு காரனமாக இருக்கலாம். அவைகள் என்ன என்பது தேடிக்கண்டடயவேண்டியவைகள். இப்பேரழிவிற்கு காரணங்கள் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் நாம் ஆராயவேண்டும்.

பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகள்

குமரி மாவட்டத்திலும் நான் பெருமளவு இவைகளை நான் கண்டது இல்லை. ஒரு முறை வெள்ளிமலை பகுதியிலிருந்து கூட்டுமங்கலம் செல்லும் வயல்வெளி குறுக்குப்பாதையில், காணப்பட்ட ஒரு பனை மரக்த்தில் சில தூக்கணாங்க் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். குமரி மாவட்டத்தில் வேறு  எங்குமே பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளை நான் காண இயலவில்லை. ஒருவேளை நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதிகளில் அவைகள் காணப்படலாம். நான் தற்போது வாழும் ஆரே பகுதிகளில் வந்த துவக்கத்தில் ஒரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் இருந்ததைப் பார்த்தேன். பின்னர் அவைகளை என்னால் காண முடியவில்லை. பனை மரங்கள் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது ஒருபுறம், மற்றொருபுரம், இங்கு இருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வு நகரமயமாக்கலில் பெருமளவில் மாறிவருகிறது. குறிப்பாக, வயல்வெளிகள் இங்கு அருகிவருவதும் ஒரு காரணம். ஒருவேளை, ஆதிவாசிகள் கூட பயிர்களைக் காக்கும்படியாக சில பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது இப்பறவைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.  ஆனால் ஆரே காலனி அலகு எண் 7ல் இருக்கும் எங்கள் ஆலயத்திற்கு எதிர்புறம் உள்ள புல்வெளி நடுவில் இருக்கும் ஒரு அரச மரத்தில், ஒரு சில கூடுகளைப் கடந்த மாரி காலத்தில் பார்த்தேன். இப்போது அவைகள் இல்லை. அந்த அரச மரத்தை பருந்துகள் ஆக்கிரமித்துவிட்டன. தூக்கணாங் குருவிகள் எங்கே சென்றுவிட்டன என தேடிக்கொண்டே இருக்கிறேன். மகராஷ்டிராவின் பால்கர் பகுதிகளில் இன்னும் பனை மரங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. 

அரிவாள் மூக்கன்

2018 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் துக்கணாங் குருவிகள் கூடு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. சுமார் 42 வகையான தாவரங்களில் தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளை அமைப்பது இதன் மூலம் கண்டடையப்பட்டது. இவைகளில் 92 சதவிகித கூடுகள், பனை, தென்னை மற்றும் ஈச்சை மரங்களில் இருப்பதாக பதிவு செய்கிறார்கள். இந்த ஆய்வில் துணை நின்ற ஆய்வுக்கட்டுரையில் T A டேவிஸ் அவர்கள் மிக முக்கியமாக அடிக்கோடிடப்பட்டிருப்பது எனக்கு புதிய திறப்புகளைக் கொடுக்கிறதாக அமைந்தது. 1974 வாக்கிலேயே அவர் எழுதிய தூக்கணாங்குருவி குறித்த கட்டுரைகள், அவரது பனை சார்ந்த தேடுதலின் அங்கமாக இது இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. T A டேவிஸ் அவர்கள் பனை சார்ந்து சர்வதேச கட்டுரைகள் எழுதிய மிகப்பெரிய ஆளுமை.

மானில மரத்தில் தேசிய பறவை

ஆரே காலனி வந்த பின்பு இங்குள்ள வார்லி பழங்குடியினருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படியே பழங்குடியினருக்காக களப்பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒரு சிலருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்த நெருக்கம் வார்லி பழங்குடியினரின் வாழ்வில் பனை எப்படி இரண்டரக் கலந்திருக்கிறது என்பதற்கான தரவுகளை சேர்க்க உதவியது. வார்லி பழங்குடியினரின் ஓவியங்களில் பனை மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தூக்கணாங் குருவிகளைக் குறிப்பிடுமிடத்தில் அவைகள் பனையிலோ  ஈச்சமரத்திலோ அல்லது தென்னை மரத்திலோ  இருப்பதாகவே பதிவு செய்யப்படும். இது வெறுமனே போகிறபோக்கில் வரையப்படும் சாதாரண படங்களல்ல. பத்தாயிர வருட வார்லி பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி. அவர்கள் தொடர்ந்து இயற்கையை அணுகி அறிந்த உண்மையினை சொற்களாக்கும் முன்பு வரைந்து காட்டிய வாழ்கைச் சித்திரம்.

மரத் தவளை/ தேரை

தூக்கணாங் குருவிகளின் கூடுகள் புற்களாலும், நெற்பயிரின் இளம் தாள்களாலும் கட்டப்படுபவைகள். அவைகளின் வாழிடம் குறித்தும் ஆய்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவைகளின் உணவு பழக்கம் குறித்த தேடுதல் நமக்கு பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்த வல்லவை. சிறிய விதைகளை தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணும். அரிசி, கோதுமை, பார்லி போன்றவை அவைகளின் விருப்ப உணவு என்பதாக அறிகிறோம். வெட்டுக்கிளிகள், சிறு பூச்சிகள், வண்டுகள், கரையான் வண்ணத்துப்பூச்சிகள், கம்பளிப்பூச்சி போன்றவற்றையும் தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணுகின்றது. சில நேரங்களில் மலர்களில் உள்ள தேனையோ, பதனீரையோ, சிலந்தி, சிறு நத்தைகள் மற்றும் நெல் தவளை போன்றவற்றையும் உண்ணுகிறது. நெற்பயிரும் பனையும் இணைந்து நிற்கும் இடங்களில் இவைகள் கூடமைப்பது சதுப்பு நிலப்பகுதிகளை இவைகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே, பனை மரங்கள் சதுப்பு நிலத்திலும் வளரும் தன்மைகொண்ட மரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: பனையில் தூக்கணாங் குருவிக்கூடு

பனைமரச் சாலை பயணம் தான் என்னை முதன் முறையாக பனை மரங்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பை கண்டுணரும் வாய்ப்பை நல்கியது. அது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், அந்த திறப்பு எனக்கு பல்வேறு வகைகளில் பனை மீதான எனது முடிவுகளையே உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தன. குறிப்பாக நம் நாட்டு பறவைகளில் பெரும்பாலானவைகள் பனை மரத்தை கூடாகவோ, வேட்டைக்களமாகவோ அல்லது இளைப்பாறுமிடமாகவோ வைத்திருக்கின்றன. ஆனால் பனை மரத்திற்கும் நமது சூழியலுக்கும் உள்ள  தொடர்பு குறித்து இதுவரை குறிப்பிடத்தகுத்த ஒரு கட்டுரை கூட வெளிவந்தது இல்லை. இத்தனைக்கும் நம்மிடம், இயற்கை சார்ந்து பணியாற்றுகிறவர்கள் ஏராளம் உண்டு.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: ஈச்சமரத்தில் தூக்கணாங் குருவிகளும் கூடும்

2017 ஆம் ஆண்டு  ஹைதிரபாத் பகுதியில் இருக்கும் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடியூட் (HMI) என்னை பனை சார்ந்த ஆவண படம் எடுக்க பணித்திருந்தார்கள். பறவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பினை அறிய வேண்டி நான் டாக்டர். ராபர்ட் கிரப் (Robert Grubb) அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த பறவையியலாளரான அவரது மகன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி பாடகர் குழுவில் இணைந்து பாடினோம், ஒன்றாக சைக்கிள் ஓட்டினோம், தேசிய மாணவர் படையில் இணைந்திருந்தோம், மேலதிகமாக நாகர்கோவிலை அடுத்த கீழப்பெருவிளை என்ற ஒரே ஊரின் இரு வேறு பகுதிகளில் தங்கியிருந்தோம். கல்லூரி காலத்தில் அடிக்கடி சந்திப்போம். ஆகவே அவரிடம், சற்றே உரிமையுடன், பனை மரங்களில் இருக்கும் பறவைகள் குறித்து எனக்கு சில குறிப்புகளைக் கூற முடியுமா என்று நான் கேட்டபோது, அவர் யோசிக்காமலேயே, “அப்படி பனை மரத்தில் பெரிதாக ஒன்றும் இருக்கிறது மாதிரி தெரியவில்லையே” என்றார். எனக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் மூத்த சூழியலாளர்களுல் ஒருவர் அவர்.

கள் குடிக்க வந்திருக்கும் பச்சைக் கிளி

அவரிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரம் போன்றவைகள். அவர் திடுமென அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நானே பல பறவைகளை பனை மரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அவரிடம் நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர் தலைமுறையிலுள்ள  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வரும் தாவரவியலாளருமான டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, பனங்காடை என்று ஒன்று பனை மரத்தில் இருப்பதாக அவர் கூறினார் என்றேன். மேலும், பொன்னி குருவி என்கிற பாம் சுவிஃப்ட் (Palm Swift) என்ற பறவையின் பெயரையும் அவர் குறிப்பிட்டார் எனக் கூறினேன். அவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். நீ ஒரு முடிவோட தான் வந்திருக்கே என்பது அதன் அர்த்தம். ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் என்னிடம், “நீ ஒரு நாலு நாளைக்கு அப்புறம் வாடே” என்றார். எனக்கு அது முதல் வெற்றி.

Painted Stork

நான்கு நாட்களுக்குப் பின்பு, நான் அவரை சந்தித்தபோது அவர் என்னை வெகு உற்சாகமாக என்னை வரவேற்றார். முப்பதிற்கும் மேற்பட்ட பறவைகளைக் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நான் காணொளியாக பதிவு செய்ய அவர் உதவினார். அவரது விளக்கங்கள் அவ்வளவு தெளிவாகவும், எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கியபடி வந்க்டார். அன்று மட்டும் முப்பது பறவைகளின் பெயர்களைக் குறீப்பிட்டு அவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிகூறினார். இன்று தமிழகத்தில்  இருக்கும் பறவைகளில் சரிபாதி ஏதொ ஒரு வகையில் பனையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். பறவைகளின் வாழிடம், உணவு மற்றும் அவைகளின் வேட்டைக்களம் போன்றவைகள் பறவையியலாளர்களால் மிக அதிகளவில் பேசப்பட்ட பேசுபொருள் தான். ஆனால் பனை மரங்கள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஏனென்றால், பனை மரத்தின் உயரம், எங்கும் காணப்படும் அந்த மரங்கள் மீதான சலிப்பு, காடுகளுக்குள் இருக்கும் பறவைகள் மீதான மோகம் என, நாம் அன்றாடும் காணும் பறவைகளுக்கும், பனைக்கும் உள்ள உறவுகளை இணைத்துப் பார்க்க இயலாதபடி நமது கண்களை முடிவிட்டன.

பனை மரத்தில் வாழும் சிறிய வகை பாலூட்டி

அழகிய நீல நிற சிறகுகள் கொண்ட பறவையினை புளூ ஜே (Blue jay) என்றும் இன்டியன் ரோலர் (Indian Roller) என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் பனங்காடுகள் நிறைந்த பகுதிகளில் தான் இவைகள் வாழும். அப்படியே, பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் பெருமளவில் காணப்படும் என்றார். பொதுவாக நாம் காணும் காடைகளுக்கும் இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பனங் காடை என்ற பெயர், உள்ளூர் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியம் பனை சார்ந்து வாழும் இப்பறவைகளினை அறிந்துணர்ந்த நமது முன்னோரால் வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதே பறவையினை நான் மும்பை ஆரே காலணியிலும், பால்கர் பகுதிகளிலும், ஒரிசா சென்றிருந்தபோதும் பார்க்க முடிந்தது. பனை மர பொந்துகளில் இவைகள் இருப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.  இப்பறவைகளை நான் எங்கேனும் பார்த்தால் அனிச்சையாக என் கண்கள் பனை மரங்களைத் தேடும். கண்டிப்பாக அப்பகுதிகளில் பனை மரங்களை நான் பார்த்துவிடுவேன். பனையின்றி பனங்காடைகள் கிடையாது எனும் அளவிற்கு அவைகள் பனையோடு இணைந்தே வாழுகின்றன.

பனைஓலையில் தேன்கூடு

பாம் ஸ்விஃப்ட் என்ற பறவைக் குறித்து டாக்டர் கிரப் அவர்கள் விவரித்தது, பனை சார்ந்த புரிதல் கொண்ட ஒருவருக்கே உரித்தானது. மேலும் அவரின் விவரணைகள் பறவையியலாளர்களின் தனித்துவ பார்வைகளையும் கொண்டது. “பாம் ஸ்விஃப்ட் என்பதை பொன்னி குருவி என்று தமிழில் அழைப்பார்கள்” என்றார். மேலும் “குமரி மாவட்டத்தில் மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள்”. மூக்கோலை என்றால் என்ன? பனை ஓலைகள் பார்ப்பதற்கு விரிந்திருப்பது போல தெரிந்தாலும், அவைகளில் மூன்று மேடு பள்ளங்கள் இருக்கும். அதிலும் மட்டை வந்து சேருமிடம் மூக்கைப்போல் மேலெழும்பி இருக்கும். இதன் நடுவில் தாம் இக்குருவி வாழும் ஆகவே இதனை மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள். பொன்னி என்கிற வார்த்தை கூட மூக்கோலையின் பகுதியை சுட்டுவதாகவே அமைகிறது. அப்படியானால் பொன்னி என்கிற பெண்பாற் பெயர், பனையிலிருந்து கிடைத்தது மாத்திரம் அல்ல, தன்னை நாடி வருவோருக்கும் அடைக்கலம் அளிக்கும் ஆழ்ந்த பொருள் உள்ள ஒன்றாக வெளிப்படுத்துகிறது. பொன்னி குருவிகளை, நான் பனை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பார்த்து வருகிறேன். அவைகள் பறந்துகொண்டே உணவை தேடிக்கொள்ளும் எனவும், அவைகள் பெரும்பாலும் காற்றினை பயன்படுத்தி பட்டம் போல் பறக்கும் எனவும் அவர் குற்ப்பிட்டார். மேலும், அவைகள் தமது கூடுகளில் தங்குவதை விட, வெளியே பறந்துகொண்டிருப்பதையே விரும்பும் என்றார்.

புல்புல் தனது கூட்டினை பனை ஓலையில் அமைத்திருக்கிறது

தூக்கணாங் குருவி தமது கூடுகளை பனையில் அமைப்பது, எதிரிகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும்  தனது குஞ்சுகளையும் முட்டையினையும் காப்பதற்காக என்று அவர் சொன்னது மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஆண் தூக்கணாங் குருவி கட்டும் இக்கூடுகலை பெண் குருவ் வந்க்டு பார்த்து  ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாலே அவைகள் தங்கள் புது வாழ்க்கையை துவங்க முடியும். ஆகவே சில வேளைகளில் முற்றுப்பெறாத கூடுகளும் மரங்களில் தென்படும்.  தூக்கணாங் குருவிக் கூடுகள் இருக்குமிடத்தினை பாம்புகள் எட்டுவது என்பது வெகு சவாலான விஷயம் என்றே அவர் கூறுகிறார். ஏனென்றால், பனை ஓலைகளின் நுனியிலேயே அவைகள் தமது கூடுகளைக் கட்டும். அதையும் மீறி பாம்புகள் இக்கூடுகளுக்குள் நுழைந்து முட்டைகளை எடுப்பதும், குஞ்சுகளைச் சாப்பிடுவது கூட நிகழ்த்திருப்பதை பாண்டிச்சேரி ராம் கூறினான். உணவிற்கான தேடுதலில், உயிரை பணயம் வைப்பது  இயற்கை நியதி தானே? ராபர்ட் கிரப் அவர்கள், வயல் வெளிகளில் இவைகள் கூடு கட்டும்போது  பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது எனக் கூறினார்.  இப்பறவைகள் தங்கள்,  இனப்பெருக்க காலத்தில் இன்னும் அதிகமாக பூச்சிகளை வேட்டையாடும். ஆகவே தூக்கணாங் குருவிகள் விவசாயிகளின் நண்பன் தான் என்றார்.

பனையிலிருந்து இறங்கிவரும் பாம்பு

அனைத்தையும் விவரித்து முடியும் தருவாயில், டாக்டர். கிரப் அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் அதுவரை தனது கவனத்தைச் செலுத்தாத ஒரு மரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பிடிப்பு தான் அது. அன்று இறுதியாக அவர் இப்படி சொன்னார், “பனை மரம் சார்ந்து வாழும் பறவைகளை வைத்து பார்க்கையில், பனை மரமே ஒரு சரணாலயம் தான்”. நான் அதைக்கேட்டபொழுது அப்படியே நெஞ்சுருகிப்போனேன். எதற்கென அவரைத் தேடி வந்தேனோ அது கச்சிதமாக நிகழ்ந்த பொற்தருணம் என்றே அதைக் கருதுவேன். ஒரு பறவையியலாளராக அவர் பல சரணலயங்களைப் பார்த்திருப்பார், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் அவ்வித சரணாலயங்களை குறித்து பதிவு செய்துமிருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் முதன் முறையாக பனை மரத்தை ஒரு சரணாலையம் என்று சொல்லுகின்ற தருணத்திற்கு அவர் வந்தது அவருக்கே வியப்பளித்திருக்கும். அந்த வார்த்தை அவர் இதயத்திலிருந்து எழுந்த ஒன்று என்பது மறுக்கவியலா உண்மை. அவரும் ஒரு பரவச நிலையிலேயே இருந்தார்.

2017 – 19 வரையிலும் இரண்டு வருடங்கள், நான் தமிழகம் முழுவதும் பனை மரத்தினை குறிவைத்து அலைந்து திரிந்தேன். நேரடியாக பல்வேறு பறவைகளும், விலங்குகளும், உயிரிகளும் பனையுடன் இணைந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறேன். நினைக்கவியலா ஒரு பெரும் தொகுப்பு அது. இம்மண்ணில், பனைச் சூழியல் குறித்து தேடும் ஒரு தலைமுறை எழும்புமென்றால் , பனை மரம் எத்துணை முக்கியமானது என்பது நமக்கு தெரியவரும்.

பனையோலைக்குள் குளவிக்கூடுகள்

பொதுவாகவே பனையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு பனையுடன் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்த புரிதல் தானாகவே இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், பனைமரத்தடியில் சென்று பதனீர் வாங்குபவர்களோ அல்லது கள் அருந்த செல்லுபவர்களோ அந்த பானங்களில் விழுந்து கிடக்கும் எண்ணிறந்த பூச்சிகள் குறித்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தேனீக்கள், பல்வேறு ஈக்கள், வண்டுகள், கொசுக்கள், வண்ணத்து பூச்சிகள், அந்துப்பூச்சிகள், தும்பி, எட்டுக்கால் பூச்சிகள், எறும்புகள், குளவிகள் கடந்தைகள், தேள் என பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பனை. பல்லிகள், ஓணான், பச்சோந்தி, அரணை, உடும்பு, பல்வேறுவகை பாம்புகள் என ஊர்வன பட்டியல் தனியாக இருக்கும். மிகச்சிறிய பாலூட்டியான எலி முதல், பழவுண்ணி எனப்படும் மரநாய், குரங்கு, தேவாங்கு, கரடி மற்றும் பனம் பழங்களை விரும்பி உண்ணும் மான்கள், நரி, காட்டு மாடுகள், பன்றிகள் மற்றும்  வீட்டு விலங்குகளான நாய், ஆடு, மாடு போன்றவைகளுடன் மிகப்பெரிய உயிரியான யானையையும் குறிப்பிட வேண்டும். பறவைகளில், தேன் குடிக்கும் மிகச்சிறிய பறவைகளிலிருந்து பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளும், காகம், கிளி, மைனா, ஆந்தை, என உருவங்கள் பெரிதாகி, வைரி, ராஜாளி, அரிவாள் மூக்கன், பருந்து மற்றும் மிகப்பெரிய மயில் மற்றும் கழுகுகள் வரை பனை மரங்களில் வந்தமரும். பலவேறு நிலப்பரப்புகளில் பனை மரத்தில் வாழும் நத்தைகளையும், ஒருசிலவிடங்களில் மரத்தவளைகளையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஏன், பனயேறிக்கெண்டை என்ற மீனே பனை ஏறுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சங்கிலியைத் தான் நாம் எவ்வித அடிப்படை புரிதலுமின்றி தகர்த்தெறிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை. பனையேறுகின்ற மனிதன் தான் இவைகள் அனைத்தையும் காப்பாற்றிவரும் சூழியலாலன்.  தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியவன்.

பனையேறி எனும் தன்னிகரற்ற சூழியலாளன்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 7

பிப்ரவரி 12, 2021

புனித கால்கள்

மறுநாள் (09.10.2020) ஜெனோபின் ஷானுடைய பிறந்த நாள். கடந்த வருடம் குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நான் குமரி மாவட்டம் வரும் வாய்ப்பு கிட்டியது.  என்னோடு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்ற ஆந்திராவைச் சேர்ந்த அருட்திரு ஜேம்ஸ் விக்டர் எனது பணியால் ஈர்க்கப்பட்டு என்னை தென்னிந்திய திருச்சபையின் போதகர் கூடுகைக்காக அழைத்திருந்தார். தென்னிந்திய திருச்சபையினைச் சார்ந்த அனைத்து பேராயங்களிலுமிருந்து சுமார் 600 போதகர்கள் கன்னையாகுமரியில் குழுமியிருந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நான் அழைக்கப்பட்டிருந்தது பெரும் பேறு. அவர்களோடு திருச்சபையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பேராயர்கள் என பெரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. அடித்தள பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகர் தனது அனுபவங்களைப் பகிர வேண்டிய நிலையில் பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விளக்க எனக்கு ஒரு அமர்வு கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்பதை உறுதி செய்தபின்பு, வந்திருக்கும் போதகர்கள் அனைவருக்கும் பனை விதைகளை அளிக்கலாம் என முடிவு செய்தேன். மும்பையிலிருந்து விமானத்தில் பனை விதைகளை எடுத்துவர இயலாது, ஆகவே, பால்மா மக்கள் இயக்கத்திடம் விதைகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பனை விதைகளைத் தருகிறோம் என்றார்கள். ஆனால் எனக்கு மற்றொரு யோசனை தொன்றியது.

பனை மரத்தைப் பற்றியேறும் பனையேறி

தூத்துக்குடி பேராயத்தைச் போதகர் ஜான் சாமுவேல் எனக்கடுத்த நிலையில்  பனை சார்ந்து பல முன்னெடுப்புகள் செய்யும் ஒரு தனித்துவமான  போதகர். பனையேறிகளை கனம் பண்ணும் நிகழ்வு என்று அவர்களுக்கு சால்வை அணியும் நிகழ்வை அவர் நடத்தினார். பனை ஓலையில் பொருட்களைச் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்தபடியிருந்தார். பனை விதைகளை பனை ஓலையில் பொதிந்து கொடுக்க இயலுமா என அவரிடம் கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் அய்யா என்றார்கள். அதற்கான பொருட் செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

மும்பையில் நான் பனை விதைகளை வழங்குகையில் கடைபிடிக்கும் வழிமுறை என்பது வித்தியாசமானது. ஒரு அட்டைபெட்டியின் வெளிப்புறம்  முழுக்க, பனை சார்ந்த தகவல்களை நிரப்பி அச்சிட்டு, அதனுள் பனை குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு சிறு பிரதி ஒன்றையும் இணைத்தே மக்களுக்கு கொடுப்போம். அது மும்பை போன்ற பெருநகரங்களில் பனை குறித்த புரிதலற்றவர்களுக்கு ஒரு அறிமுகத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால், நமது பணம், பெருமளவில் பனை சாராத மக்களிடம் சென்று சேரும். இவ்வித அட்டைப்பெட்டிகள் செய்வதனால் எவ்வகையிலும் பனை சார்ந்த மக்கள் பயன் பெறப்போவதில்லை. ஆகவே தமிழக சூழலில், பனை விதைகளை பனை ஓலைக்குள் பொதிந்து கொடுத்தால், அதன் மூலமாக அனேக ஓலைக் கலைஞர் பயன் பெறுவார்கள் என எண்ணினேன். சில்லு கருப்பட்டிக்கு எப்படி பனை ஓலைகளைப் பொதிவார்களோ அதுபோல பனை விதைகளை பொதிந்துதர அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ மாமன்ற பொதுசெயலாளர் அறிவர். ஆசீர் அவர்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வந்திருந்தார். பனை விதைகள் சில்லுகருப்பட்டிபோல் பொதிந்து விதை பரவலுக்காக எடுத்துவரப்பட்டதை கண்டு மகிழ்ந்துபோனார். அன்றைய நிகழ்ச்சியில் அவர் அதனைக் காட்டி பேசினார். இந்திய திருச்சபை வரலாற்றில் பனை எங்குமே முதன்மைப்படுத்தப்பட்டது இல்லை.  ஆசீர் அவர்கள் பனை சார்ந்த எனது பயணத்தினையும் போதகர்கள் ஏன் பனை சார்ந்த முன்னெடுப்புகளையும் தங்கள் ஊழியத்தினூடாக செய்வது அவசியம் என்பதனையும் அன்று குறிப்பிட்டார். நெய்யூர் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த  பனை மரங்கள் இன்று மாயமாகிப்போனதும் அதனைச் சார்ந்து வாழ்ந்த பல்லுயிர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ நிலங்களைச் சுற்றி பனை வேலியாக அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தான் பரவசமடைந்தது என அவர் பனை சார்ந்த முக்கியத்துவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரிடமும் ஆளுக்கொரு பனை விதைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி நடந்த கன்னியாகுமரி சி எஸ் ஐ (C S I) தேவாலயத்தின் வாசல்களின் அருகில் பனை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் எனது நண்பனும் புகைப்பட கலைஞருமான ரங்கிஷ் அவர்களைச் சந்தித்தேன். “ஓய், காலைல டியோசிசன் ஆஃபீஸ் பக்கம் போயிருந்தேன்” என ஒரு சம்பவத்தை விளக்கினார். பனை ஓலை பெட்டியை வைத்திருந்த ஒரு பெண்மணி, இன்னொருவரிடம்  மிகவும்  வருத்தப்பட்டு பேசிகோண்டிருந்திருக்கிறார்கள். “ஆனாலும் இப்படி ஏமாத்தப்பிடாது, நாலு பெட்டி எடுத்துட்டு வந்தேன், வீட்டுல வந்து பார்த்தா சில்லு கருப்பட்டிய காணேல, பனங்கொட்டைய உள்ள வெச்சி ஏமாத்தியிருக்கினும்”. என்றவர், “அப்பவே நினைத்தேன், காட்சன் ஊருக்குள் தான் நடமாடுகிறான்” என்றபடி என்னைப் பார்த்தார். எனக்கு சிரிப்பு தாளவில்லை…, பனை விதைகள் தான் கொடுக்கிறோம் என்ற அறிவிப்பை கேட்காத எவரோ ஒருவர், சில்லு கருப்பட்டி இலவசமாக கிடைக்கிறது என அள்ளி எடுத்து சென்று ஏமாந்திருக்கிறார்.   

குமரிப் பேராயர் A R செல்லையா அவர்களுக்கு பனை விதை வழங்குகிறேன்.

ஜெனோஃபின் பிறந்த போது மாமனாராக நான் அவனுக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். கிலுகிலுப்பைகள் வழங்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் எனது பனை பயணத்தில் பயலை உள்ளிழுப்பதாகாது. அனேக குழந்தைகளுக்கு நான் பனை ஓலையில் தடுக்குகள் செய்து கொடுத்திருக்கிறேன். ஆகவே, தனித்துவமான ஒரு பனையோலை பொருளை அவனுக்கு பரிசளிக்க விரும்பினேன். எனது இரு சக்கர வாகனத்தில் இருக்கைகளை அமைத்துத் தந்த மொட்டைவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களைத் தொடர்புகொண்டு பனை ஓலையில் ஒரு அழகிய தொட்டில் ஒன்றைச் செய்து கொடுப்பீர்களா எனக் கேட்டேன். மகிழ்ச்சியோடு சரியென்றார்கள். ஆகவே, அதனையும் எடுத்துச் சென்று பிள்ளை காணும் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே இருந்து நான் குழந்தையுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். அந்த புகைப்படம் “உலகிலேயே முதன் முறையாக ஓலை தொட்டிலை அறிமுகப்படுத்திய குடும்பம்” என பதிவாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தார்கள்.

முதல் பனையோலைத் தொட்டில்

இந்த ஓலைத்தொட்டிலை நான் பதிவுசெய்தபோது ஒரு நண்பர் எரிச்சல் மேலிடும் தொனியில் “நாங்களும் சிறு வயதில் இதனைப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். அதற்கு காரணம், “நீ தான் அனைத்தையும் கண்டடைந்திருக்கிறாய் என இறுமாப்பு கொள்ளாதே, நாங்கள் பயன்படுத்தி தூக்கி வீசியதை தான் இன்று நீ  உனக்கானதாக முன்வைக்கிறாய் என்ற எள்ளல் நிறைந்த பதிவு அது”. உண்மை என்னவென்றால், பனையோலைத் தொட்டில் என நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஓலைக்கடவத்தின் சற்றே மாறுபட்ட வடிவம் தான். அதற்கு மிகப்பெரிய அறிவோ, திறமையோ தேவையிலை.  கடவத்திற்கு நான்கு புறமும் சரி சமமாக ஓலைகளை அடி வைத்து பின்ன வேண்டும். பனை ஓலைத் தொட்டிலுக்கு, ஒருபுறம் நீளமாகவும் மற்றொருபுறம் குறுகலாகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி பகுதிகளில் ஆட்டுபெட்டி செய்பவர்கள், அல்லது தக்காளி கூடை செய்பவர்களுக்கு இவ்வித செவ்வக அமைப்பு அறிமுகமானதுதான், ஆனால் குமரி மாவட்டத்தில், இவ்வித பின்னல் முறைகள் கிடையாது. மாத்திரம் அல்ல, எங்குமே குழந்தைகளை இப்படி ஓலைப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்ட வரலாறு கிடையாது.  எங்கள் ஊரில் குழந்தைகள்  அங்காங்கே ஊர்ந்து சென்றுவிடாதிருக்க, கடவத்திற்குள்  கடல் மணலை நிரப்பி, உள்ளே விட்டுவிடுவார்கள். கடல் மண் இருப்பதால் கடவம் எச்சூழலிலும் மறிந்துவிழாது. குழந்தைகளும் அந்த மென் மணலில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவைகளை பார்த்தபடி விளையாடும்.

ஆபிரகாமிய வம்சத்தாராகிய எபிரேயார்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில், பிறக்கும் ஒவ்வொரு எபிரேய குழந்தையையும்  நைல் நதியில் வீசிவிடவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்துவந்த மருத்துவச்சிகளுக்கு கூட குழந்தைகளைக் கொல்லும் உரிமைக் கொடுக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் தான், லேவி குடும்பத்தில், யோகெபேத் கருவுற்று ஒரு குழந்தையினை பெற்றபோது அந்த குழந்தையினை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அதற்கு அப்புறம் அவள் அந்த குழந்தையை தனது வீட்டில் ஒழித்து வைக்க கூடாமல், அழகான நாணற்பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் கீல் போன்றவைகளை பூசி, நைல் நதியில் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு என்ன சம்பவிக்கபோகிறது என்பதை கண்காணிக்கும்படியாக குழந்தையின் சகோதரி அதற்கு காவல் இருந்தாள். அப்போது பார்வோனின் மகள் அப்பகுதியில் குளிக்க வந்து  அழகான அந்த குழந்தையினை தானே வளர்க்க முடிவு செய்தாள். எபிரேய மக்களுடைய மிகப்பெரிய தலைவனான மோசேயுடைய வாழ்வின் துவக்கம் அப்படி ஒரு எளிய நாணற்பெட்டியில் துவங்கியது ஆச்சரியமானது.  நாணற்பெட்டிக்கு இணையாக பனையோலைப் பெட்டி எழுந்துவரும் காலம் ஒன்று வெகு விரைவில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

பார்வோனின் மகள் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்போது

திருமறையில் நாணற்பெட்டி செய்து அதில் கிடத்திய குழந்தை மிகப்பெரியவனாகியது வரலாறென்றாலும், இதுவரை பனை ஓலையில் எவருமே தொட்டில்கள் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏன் அப்படி? குழந்தைகளை தூளியில் போட்டு தூங்கவைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. இது கிராமபுற மக்களுக்கு மிக எளிமையான வழி. வசதியுள்ளவர்கள் மர தொட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் பனை நார் இட்ட தொட்டில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓலை பெட்டியில் குழந்தைகளைக் கிடத்துவது என்பது எவரும் கைக்கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

பனை ஓலைத் தடுக்குகளில் குழந்தைகளைக் கிடத்துவதே வாடிக்கையானபடியால், மிகப்பெரிய அளவில்  செலவாகும் ஓலைகள் குறித்த கரிசனை இருந்திருக்கலாம். குறிப்பாக, வறுமை சூழ்ந்த அக்காலங்களில், தங்களை ஒடுக்கி தான் பனை சார்ந்த தொழிலாளர்களால் இயங்க முடிந்தது. வீட்டில் செய்யப்படும் கடவங்களை பிறருக்கு கொடுத்துவிடுவதே பொருளீட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும்போது, இவ்வகை முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் எண்ணியிருக்கலாம். அக்காலங்களில் ஓலை கடவத்திற்குள், குழந்தையினை படுக்க வைப்பது என்பது நினைத்துப்பார்க்கவியலா ஒன்று என்பது தான் உண்மை. கோழியை பிடித்து கடவத்திற்குள் கமத்திப் போடுவது தான் அன்றைய வழக்கம். நான் ஓலைப்பெட்டியினை அறிமுகப்படுத்தும்போதே, குடும்பத்தினருக்குள் ஒருவித விலக்கம் தென்பட்டது.  குழந்தையை யாராவது கடவத்திற்குள் போடுவார்களா என்ன? என்று தான் சிலர் கேட்டார்கள். வேறு சிலர், ஒரு தொட்டில் செய்ய பணமில்லையா என்று ஏளனமாக சிரித்தனர்.  இத்தனைக்கும் அனைவரும் பனங்காட்டிற்குள் புரண்டு வளர்ந்தவர்கள் தான்.  பனையோலை தொட்டிலை நான் வழங்கிய பின்னும், குழந்தைக்கான வேறு தொட்டில்  குடும்பத்தினரால் வாங்கப்பட்டது. பொடியன் பனை ஓலை தொட்டிலில் படுக்க விரும்பவில்லை என வியக்கியானமும் பின்னர் சொல்லப்பட்டது. ஆக, பிடிவாதத்துடன் பயலை பிடித்து கடவத்திற்குள் கிடத்தி இது தான் உலகத்திலேயே முதல் பனை ஓலைத் தொட்டில் என பிடிவாதமாக ஒரு புது பொருளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

சமையலும் கற்று மற

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உணவு தயாரிப்பு,  சர்வதேச சமையல் கற்ற எனது ஜெகன் மச்சான் முன்னின்று நடத்த, கரண்டியை பிடித்து நான் உதவி செய்தேன். போதகர்கள் வந்து ஜெபிக்க அன்று மதிய விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்ட கிறிஸ்தவ சடங்குகள் சற்று வித்தியாசமானவை. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு முன்னால் ஒரு வாழை இலையை பரப்பி, அதில், உணவு, பணம், பழங்கள், மற்றும் திருமறை, பாட்டு புத்தகம், பிற புத்தகங்கள், தங்க சங்கிலி, தங்க  வளையல் என சில பொருட்களை போட்டுவிடுவார்கள். குழந்தை அவைகளில் எதனை முதலில் எடுக்கிறதோ அவ்விதமாகவே குழந்தை வளரும் என்பது பெரியவர்களின் முடிவு. எல்லா குழந்தைகளும் இவ்வித முடிவுகளை பொய்யாக்கிக்கொண்டே இருக்கின்றன.

முதல் பிறந்தநாள் சடங்கு

அன்று மாலையில் தானே நான் சென்னை செல்வதற்கான பேருந்து பயணச்சீட்டினை எடுப்பதற்காக மார்த்தாண்டம் சென்றேன். கருங்கல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் நட்டாலம் என்றொரு சிறிய ஊர் இருக்கிறது. நட்டாலம் என்பது, குமரி மாவட்டத்திலுள்ள மிகவும் வளமான ஒரு பகுதி. வற்றாத குளம் ஒன்று உண்டு. வயல் நிறைந்த பகுதிகளில் இன்று வாழை மற்றும் கிழங்குகளை பயிரிடுகிறார்கள். இவ்வூரின் மேடான பகுதிகளில்  இன்றும் ஆங்காங்கே பனை மரங்கள் நின்றுகொண்டிருப்பது பனை இம்மண்ணின் மக்களுடன் உறவாடிய மரம் என்பதனை கோடிட்டு காட்டுகிறது. நட்டாலத்தில் தான் குமரி மாவட்டத்தின் முதல் மறை சாட்சியான தேவசகாயம் பிள்ளை அவர்கள் பிறந்தார்கள். இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் நினைவாக ஒரு இல்லத்தினை அவர் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கட்டியெழுப்பியிருக்கிறது. அதன் அருகில் ஒரு பனை மரம் நிற்பதைப் பார்த்து அதனை படம் பிடித்தேன்.

புதிதாக கட்டப்பட்ட தேவசகாயம் பிள்ளை நினைவு இல்லம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேப்டன் யுஸ்டேசியஸ்  டி லெனாய் (Eustachius De Lannoy) மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, கிறிஸ்தவத்தினை தழுவியபோது லாசரஸ் என பெயர் மாற்றிக்கொண்டவர். திருவிதாங்கூர் பகுதி மக்களால் தேவசகாயம் பிள்ளை என்று இன்று நினைவுகூறப்படுபவர்.  திருவாங்கூர் சமஸ்தான அரசர்களால் துன்புறுத்தப்பட்டு ஆரல்வாய் மொழி என்ற பகுதியிலுள்ள பனை சூழ்ந்த காற்றாடி மலைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது 400 ஆம் அகவை தினம் வெகு விமரிசையாக கோட்டாறு மறை மாவட்டத்தால் கொண்டாடப்பட்டது.  அன்று அவர் போப் பெனடிக்ட் அவர்களால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” (Beatified) என சிறப்பு நிலை பெற்றார். 2020ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் தேவசகாயம்பிள்ளை அவர்கள் மரித்த பின்பு அவர் மூலமாக நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை ஏற்றுக்கொண்டார். இவையனைத்தும் தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதர் பட்டம் பெறும் தகுதியுடையவராக அவரை மாற்றுகிறது.

தேவசகாயம் பிள்ளை

கத்தோலிக்க திருச்சபையின் சில வழக்கங்கள் மிகவும் தொன்மையானவைகள். அவைகளில் கால்களைக் கழுவுதல் என்து இயேசுவிடம் சென்று சேரும் அளவிற்கு அது நீண்ட மரபைக் கொண்டது ஆகும். முற்காலங்களில் போப் அவர்கள் தனக்கு கீழ் இருக்கும் உயர் மட்ட தலைமை  குருக்களில் 12 நபர்களை தெரிந்துகொண்டு அவர்களது கால்களை கழுவுவது வழக்கம். இவ்வித வழக்கம் வெறும் சடங்குகளின் தொகையாக மாறிவிட்டது என கருதியபடியால் போப் பிரான்சிஸ் அவர்கள் புதுமையான முறையில் இச்சடங்கினை முன்னெடுக்கத் துவங்கினார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்களின் கால்களை கழுவும்படியாக தெரிவு செய்தல், அகதிகள், மாற்று சமயத்தினர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என அவரது தெரிவுகள் கத்தோலிக்க திருச்சபை பார்த்திராத அளவிற்கு புதுமையானதும் புனிதமானதும் கூட.   

கால்களைக் கழுவுதல் என்ற சடங்கின் மீது எனக்குள்ள தனி ஈடுபாடு நிமித்தமாக  நானும் இச்சடங்கினை கடைபிடிக்க விரும்பினேன். திருச்சபைக்குள் இதனை கடைபிடிக்க இயலாது ஆகையால், திருச்சபைக்கு வெளியே இதனை நிகழ்த்த ஆசைப்பட்டேன். எனது எண்ணங்கள் எல்லாம் பனை ஏறுகிறவர்களைக் கண்டு அவர்கள் கால்களைக் கழுவி, அவர்களுக்கு பணிவிடை செய்யும் இயேசுவின் போதனையின் சிறப்பியல்புகளை காண்பிக்கவும், கூடவே எனது அன்பின் வெளிப்பாடாக, புத்தாடைகள் எடுத்து கொடுக்கவும், நான் விரும்பினேன். என்னால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. பிற இடங்களில் மக்கள் தங்கள் கால்களை என்னிடம் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கால்களை காண்பிக்க மெறுப்பதற்கான காரணங்கள் பல உண்டு. சில வேளைகளில், கால்களைக் கழுவுபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, சில நேரங்களில் இவ்வித சடங்குகளின் பொருளின்மை என வரிசைபடுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது கால்களில் இருக்கும் காயங்களை அவர்கள் வெளியே காட்ட விழைவதில்லை என்பதே உண்மை. தங்கள் வாழ்வு இவ்விதமொரு சிதைவுற்ற ஒன்றுடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  எப்போதும் அவர்கள், மக்களது வாழ்வை சுவைகூட்டுபவர்கள் என்ற பெருமிதம் கொண்டிருப்பதினாலேயே தங்கள் கால்களை மறைக்கிறார்கள் என நான் பொருள் கொள்ளுவேன். அவர்கள் நிலையில் இவ்விதமான நிலைப்பாடு சரியென்றாலும், அவர்களின் குரலாக ஒலிக்கின்ற நமக்கு அவர்களது காயங்கள் தாம் முக்கிய குறியீடாக, அவர்களின் தியாக சின்னமாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

பனையேறியின் கால்கள்

பனையேறிகளுடைய கால்கள், காயங்களால் நிறைந்தவை. அவைகளை அவன் ஒரு வீரனுக்குரிய பெருமையென கருதியிருந்தாலும், இன்னொருவரிடம் காண்பிக்க அவன் விழைய மாட்டான். தழும்புகளைக் காட்டி தனது தியாகத்தை நிலைநிறுத்தும் செயலை ஒரு பனையேறி எப்போதும் செய்ய துணிவதில்லை. அது அவனது வீரத்திற்கும் அவனது உழைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதி என்பதாகவே அவன் எடுத்துக்கொள்ளுவான். அவனது மவுனத்தை இயலாமை என சிலர் புரிந்து கொண்டு, பனையேறிகளுக்கான குரலை வெளியில் கேட்கக்கூடாதபடி செய்துவிட்டனர்.

காய்த்துப்போயிருக்கும் பனையேறியின் கைகள்

பனையேறியின் கால்களில் இருக்கும் காயங்களுக்கு சற்றும் குறையாமல் அவர் கைகளிலும் உடலிலும் காயங்களும் தழும்புகளும் இருக்கும். காயங்கள் அவர்கள் வாழ்வில் அனுதின அனுபவம் தான். அந்த காயங்களை அவர்கள் பெரிதுபடுத்தியிருந்தால், அவர்களின் துயரம் இன்று உலக அளவில் சரியான அளவில் முன்வைக்கப்பட்டிருக்கும். பனையேறிகளின் வியர்வை பேசுபொருளாயிருக்கும் அளவிற்கு அவர்கள் கால்கள் பேசுபொருளாயிருந்தது இல்லை. அவர்கள் கால்களும் அவர்தம் உடலில் இருக்கும் காயங்களுமே அவர்கள் சூழியலின் பங்காளர்கள் என உரத்துக் கூறும் அடையாளங்களாகும்.

கால்களைக் கழுவி முத்தமிடும் போப்

என்னைப்பொறுத்த வரையில் போப் அவர்கள் பனையேறிகளின் கால்களை கழுவவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையினை நான் போப் அவர்கள் மீது திணிக்க இயாலாது என்பதால் தான் முதன் முறையாக அவ்வித முன்னெடுப்பை நான் மேற்கொண்டேன்.

திருமறையில் இயேசு கால்களைக் கழுவும் நிகழ்ச்சி மிக உக்கிரமானது. இயேசு வாழ்ந்த காலத்தில் கால்களைக் கழுவும் பணி அடிமைகளுக்குரியது. குரு என்றும், ரபி என்றும், கடவுளின் மகன், இஸ்ரவேலை மீட்கும் மேசியா என்றும் உயர் பட்டங்களை தாங்கி நின்ற இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவுதல் சீடர்களுக்குள்ளேயே துணுக்குறலை ஏற்படுத்தியது. பேதுரு என்ற சீடன் அவரைப் பார்த்து நீர் எனது கால்களைக் கழுவக்கூடாது என விலகி நிற்க இயேசு அவனிடம் உனது கால்களை நான் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை என்கிறார்.

எனது நீண்ட நாள் கனவு என்பது பனையேறிகள் கால்கள் கழுவப்படவேண்டும் என்பது தான். கத்தோலிக்கத் திருச்சபை, இன்று இந்தியாவில், இருக்கும் பனையேறிகளின் கால்களைக் கழுவ முற்படுவார்கள் என்று சொன்னால், அதுவே நாளை வாத்திகன் பனையேறிகளின் கால்களைக் உற்று நோக்க வழிவகை செய்யும். உடைந்து உருக்குலைந்திருக்கும் பனையேறிகளின் கால்கள் மிகப்பெரும் ஆன்மீக பிண்ணணி கொண்டவை. அழகிய கால்கள் எப்படி கடுமையான உழைப்பின் பயனாய் வளைந்துவிடுகின்றன எனவும், காய்ப்பு பிடிக்கிறது எனவும், பாளம் பாளமாக கீறிப்போய் கிடக்கிறது எனவும் எந்த இலக்கியமும் பதிவுசெய்யாத நமக்கடுத்த வாழ்வனுபவம். பனையேறிகளின் உருக்குலைந்த கால்களுக்காக எந்த திருச்சபையிலும் மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படவில்லை என்பதுவே கசப்பான உண்மை.

சிறிய கால்களே அழகுமிக்கவைகள் என்னும் சீன பாரம்பரியத்தினை விரிவாக பலர் பதிவு செய்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு முதல் சமூகத்தில் மிக உயரிய இடத்திலிருந்த சீமாட்டிகளுடைய கால்களை ஆறு வயது முதல் கட்டி, காலின் பயனே அற்றுப்போகப்பண்ணும் ஒரு முறைமையினைக் குறித்து இருபதாம் நூற்றாண்டில் டங்கன் என்கிற கிறிஸ்தவ மிஷனெறி குறிப்பிடுகிறார். பெண்களை எப்படி அழகு என்ற போர்வையில் சமூகம் அடக்கி ஆள்கிறது எனவும், பெண்கள் இதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் விரிவாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆனால் பனையேறிகள், பனை மரத்தினை பற்றி பிடித்து ஏறும்பொது அதிலிருக்கும் சிலாம்புகள், பனையின் புறப்பகுதியில் இருக்கும் சில சொரசொரப்பான பகுதிகள், கால்களில் ஏற்படுத்தும் காயங்களையும், பற்றிபிடிக்கும் விதமாக கால்கள் வளைந்து உருக்குலைவதும், நமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அசிங்கமான இத்தொழிலை விட்டு வெளியே வருவதுவே தீர்வு என முடிவெடுத்து விட்டாலும், இன்றும் தங்கள் கால்கள் பனையை பற்றியிருக்க, தங்கள் கைகள் பனை மரத்தை அணைத்திருக்க, நமது வாழ்வில் பனையேறிகள் இன்றும் சுவைகூட்டியபடியே இருக்கின்றார்கள்.

கால்களைக் கட்டிவிடுவதால் ஏற்படும் பாதிப்பு

எவரொருவர், பனையேறியின் கால்களையும் கைகளையும் அணுகி பார்த்தாலும், அத்தாய்மையின் கரத்தை பார்த்து அவரது உள்ளம் விம்முவது உறுதி. பனையேறி தனது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெருமளவில் அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் ஒரு பண்பட்ட சமூகம், அவன் கடந்து வந்த பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்கி, அவன் வழிகளை செவ்வை செய்வது சிறந்த சேவையாக இருக்க முடியும்.

அவ்வகையில், போப் அவர்கள், பனையேறிகளின் கால்களைக் கழுவும் ஒரு தினம் அமையுமா என நான் எண்ணிப்பார்க்கிறேன். போப் அவர்கள் இதுவரை பார்த்த கால்கள், காலணிகள் இட்டு நடமாடிய மென் கால்கள் மட்டுமே. வெறுங்காலுடன், பனையேறும் பனையேறிகளின் கால்களும் கரங்களும் அவருக்கு இயேசுவின் சிலுவைக் காட்சிகளை மீட்டெழுப்பும். இவ்விதம்  எற்படுத்தும் ஓர் நிகழ்வு கூட, உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை.

பனையேரிகள் என்றவுடனேயே, நாம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறோம், ஆனால், இந்தியா முழுக்க பனை ஏறிக்கொண்டிருக்கும் சமூகங்கள் பல இருக்கின்றன. பழங்குடியினர், நாடோடிகள் உட்பட இந்திய சமூகத்தில் பலரும் பனையேரிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 12 பனையேறிகளை அழைத்து , கால்களைக் கழுவும் சடங்கு ஒன்றினை நிகழ்த்தினால், அது எப்படியிருக்கும்? ஆம், அது தான், 21ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஒரு திருப்புமுனை கணமாக இருக்கும். திருச்சபை ஏன் பனை சார்ந்த மக்களுக்காக தங்களை அர்பணிக்கவேண்டும் என்பதனை போப் அவர்களின் இச்செயல் உறுதிப்படுத்தும். 

பனையேறிகளின் காயங்கள் நமக்கு திருமறையின் ஆழ்ந்த படிமங்களை வெளிப்படுத்துவதாக நான் உணருகிறேன். இயேசுவின் சிலுவைக் காயங்களுக்கு ஒத்தவைகள் அவைகள். நமது வாழ்வு சுவைப்பட அவர்கள் தங்கள் உடலை வருத்த ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் காயங்கள் பின்னே இருக்கும் சோக கதைகள் இதுவரை தொகுக்கப்படாத காப்பிய தருணங்களைக் கொண்டது. பனையேறிகளின் காயங்கள் வெறுமனே காயங்கள் அல்ல, அவைகள் நமது வாழ்வை செறிவூட்ட பனையேறிகள் ஏற்றுக்கொண்ட விழுப்புண்கள். போர்க்களத்தில் ஏற்படும் புண்களை விட இவ்வித வடுக்கள் தான் இன்று நமது வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் அழகிய தழும்புகள். இத்தழும்புகள் குறித்த பெருமையோ சிறுமையோ எதுவும் திருச்சபையிலோ பொதுவெளிகளிலோ பேசப்படவில்லை. அந்த மவுனம் கலைக்கப்படவேண்டும்.

பனையேறிகள் வாழ்வில் இன்னும் பல சோகங்கள் அரங்கேறி வருவது பொதுவெளிகளில் பேசப்படுவது இல்லை. கல்வி அறிவு பனையேறிகளுக்கு இல்லாததாலும், அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை எளியவர்கள் என வெளிப்படுத்துவதாலும்,  காவல்துறையின் அராஜகம் பனையேறிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதும் வரலாறு. கள் இறக்கினால் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையினை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர். காவல்துறை, போலி மது விற்கிறார்கள் என போலியாக வழக்கு பதிவு செய்து, பனையேறிகளை கைது செய்வதும், அவர்கள் பயன்படுத்தும் மண் கலயங்களை உடைத்துப்போடுவது, பனை மரங்களில் பிற பனையேறிகளை ஏறவைத்து பதனீர் சொட்டிக்கொண்டிருக்கும் பாளைகளை தறித்துப்போடுவது, சில வேளைகளில் பனையேறிகளை அடித்து துன்புறுத்துவது ஏன் கை கால்கள் முடமாகும் அளவிற்கு அவர்களை குற்றுயிராக்குவது என ஈனச் செயல்கள் செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கோரும் தருணத்தில்

இன்று உலகில் எங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் பொதுவெளியில் நாம் கொதித்தெழுகிறோம். ஆனால் காலம் காலமாக அடக்குமுறைக்குள் வாழ்ந்து தான் கற்ற தொழிலினை இவைகளினூடே எடுத்துச் செல்லும் பனையேறி எவ்வித சலனமுமின்றி தனது பணியை தொடர்ந்துகொண்டிருப்பது நம்மை பதை பதைக்க வைப்பது. இவ்வித சூழலில் பனையேறிகளிடம் வாங்கிய லஞ்சப் பணத்தினை காவல்துறை நாலத்தனையாக திருப்பிக் கொடுக்கவேண்டும். பனையேறிகள் வாழ்வில் காவல்துறை செய்த அனைத்து பிழையீடுகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் அரசு, பனையேறிகளுக்கு  இதுமட்டும் செய்யத்தவறியவைகளுக்கும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கும் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு நிகழ்ந்த துயரத்தை விஞ்சும் கதைகள் இங்கே உண்டு, ஆனால் அவைகளைப் பேசும் உள்ளங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டது தான் சோகம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 6

ஜனவரி 19, 2021

பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 5

ஜனவரி 16, 2021

பனை கலைஞர் மாவட்டம்

சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம்  உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய  பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன். 

பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின்  பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும்  454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

தங்கப்பனைக் கொண்டு வழங்கிய குடுவை பயிற்சி

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன்  இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது.  அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

பனம்பழங்கள் உணவிற்காக சுடப்படுகின்றன

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம்.  இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால்,  உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

பனம்பழம் உண்பதற்காக வேகவைக்கும் முறை

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

முதல் பனம்பழம் ஸ்குவாஷுடன் ஜேக்கப்

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பனம்பழம் ஸ்குவாஷ் பயிற்சி வழங்கு பால்ராஜ்

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.  புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.

அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.

குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம்.  குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

வழக்கொழிந்துபோன பனையோலை குடுவை பயிற்சி வழங்கிய தங்கப்பன் பயிற்சியாளர்களுடன்

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.

தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.

அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.

மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த  இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.

சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம். 

கடவம் முடையும் பாலம்மாள்

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே  பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.

ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல,  தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.

கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

சிறிய கடவத்தினை நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பாலம்மாள்

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.

“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.

கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.

ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.

இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.

சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.  

அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.

உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.

நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 4

ஜனவரி 12, 2021

ஓலைகளினூடாக

கேரள தமிழ்நாடு எல்கையான களியக்காவிளை வந்தபோது தடுத்து  நிறுத்தப்பட்டோம். எட்டு வயது மித்திரனைத் தவிர அனைவரும் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பரிசோதனை முடிந்து புறப்படும்போது நள்ளிரவு ஒரு மணி. மூன்று நாளைக்கு பிறகு தான் முடிவு வரும் என குறுஞ்செய்தி வந்தது.

காலை என்னைத் தேடி பொறியாளர். சேவியர் பெனடிக்ட் அவர்கள் வருவதாக சொல்லியிருந்தார். சேவியர் அவர்கள் பனை மீது தீரா விருப்பு கொண்டவர்கள். பல சர்வதேச பயணங்களை மேற்கொண்டவர். உலகிலுள்ள பல்வேறு வகையான பனைகளை மட்டுமே தேடி தேடி சேகரித்து தனது  தோட்டத்தில்  நட்டு பராமரித்தவர்.. தற்போது பழவேற்காடு பகுதிகளில் உள்ள பரதவர் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் மூலமாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். நான் பனை சார்ந்து இயங்குகிறேன் என்றால் அவர் அதனை விட பலமடங்கு வீரியமாக பழவேற்காடு குறித்து இயங்குகிறவர்.  நான் தமிழகம் வருகிறேன் என்றவுடன் அவரது தென் மாவட்ட பயணங்களோடு கன்னியாகுமரி பயணத்தையும் இணைத்துக்கொண்டார்.  அன்று காலை கார் முழுக்க தனது பயணத்தில் சேகரித்த பனை பொருட்களை எடுத்து வந்திருந்தார் சேவியர். கன்னிப்பெட்டி என்ற ஒரு அழகிய பெட்டியை எனக்கு பரிசாக கொடுத்தார்.

சேவியர் தென் தமிழகத்தில் தாம் சேகரித்த பனை ஓலை/ நார் பொருட்களுடன்

கன்னிப்பெட்டி குறித்து நான் 20 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். மார்த்தாண்டம் சந்தையில் பனை ஓலைகள் சேகரிக்கச் சென்றபோது அங்கே இவ்வித பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருமண வாழ்வினை எட்டுமுன் ஒரு பெண் இறந்துபோனால், இவ்விதமான கன்னிப்பெட்டியில் துணிகள் மற்றும் சில பூஜைக்குரிய பொருட்களை வைத்து அதனை உறவினர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுக்கும் வழக்கம் இன்றும் தென் மாவட்டங்களில் இருக்கிறது.

சேவியர் எடுத்துவந்த கன்னிப்பெட்டிகள் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகின்ற ரகம் என்பதை நான் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டேன். மிகவும் நேர்த்தியாக பின்னப்படுகின்ற இவ்வகை பெட்டிகள் விலை மலிவானவை. 250 ரூபாய்க்குள் இப்படியான ஒரு பெட்டியினை நாம் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாங்க முடியும். அப்படியானால் தயாரிப்பவர்களுக்கு 100 ரூபாய் கிடைப்பதே அபூர்வம்.

கன்னிப்பெட்டியின் பின்னல் இரட்டை அடுக்கானது. சற்றே அகலமான சாரோலைகளைக்கொண்டு உட்புற பின்னலும் மெல்லிய குருத்தோலைகளும் வண்ணமேற்றிய ஓலைகளையும் கொண்டு வெளிப்புறமும் பின்னப்பட்டிருக்கும். உட்புற பின்னல் கூட்டல் வடிவிலும் வெளிப்புற பின்னல் பெருக்கல் வடிவிலும் இருப்பது இவ்வித கலைஞர்களுக்குள் உறைந்திருக்கும் பின்னல் திறமைகளுக்கு சான்று. மிக நேர்த்தியாக, சர்வதேச தரத்தில் விளிம்பு கட்டப்பட்டிருக்கும். கைப்பிடியானது பெட்டியின் அடிப்பகுதி வழியாக வந்து பெட்டிக்கு மேற்புறம் எழுந்து நிற்கும். இந்த பெட்டிக்கு கீழ்புறம் இருப்பதைப் போன்ற வடிவில் மேற்பகுதியில் சிறிய அளவில் பின்னி மூடி இட்டிருப்பார்கள்

கன்னிப்பெட்டிகள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்றே நினைக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய பெண்மணி ராஜாவூர் பகுதிகளில் இவ்வித கன்னிப்பெட்டிகள் செய்வதாக கேள்விப்பட்டு ஓரிருமுறை அவர்களை சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். நமது நாட்டார் மரபுகளில் இஸ்லாமியரின் பங்களிப்பு இணைந்திருக்கிறது என்பது நமது பண்பாட்டின் விரிவை விளம்பும் சான்று. சமயங்களுக்கிடையில் இருந்த நல்லுறவுகளை எடுத்தியம்பும் பனை அனைத்து சமயங்களுக்கிடையிலும் ஒரு சமாதான தூதுவராக நிலைநிற்கிறது. குமரி மாவட்டத்தில் பின்னப்படுகின்ற இந்த கன்னிப்பெட்டி பார்வைக்கு சாதாரண மூடிபோட்ட பெட்டியைப்போலிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர்  சென்றிருந்தபோது அங்கும் ஒரு கலைஞர் கன்னிப்பெட்டி செய்திருந்தார். வடிவநேர்த்தியில்  குமரிமாவட்டத்திற்கும் இதற்கும் பெருத்த ஒற்றுமைகள்  இருந்தன. ஒரு சில சிறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இவ்வித வித்தியாசம் என்பது மாவட்டத்திற்கான வித்தியாசம் என நாம் புரிந்துகொண்டாலும், பனை ஓலைகள் பரந்துபட்ட தமிழக  காலாச்சார சடங்குகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

சேவியர் கொண்டுவந்த  பனை ஓலைப் பொருட்களின் வகைகளைப் பார்க்கும்போதே அவர் தமிழகத்தின் எப்பகுதிகளையெல்லாம் கடந்து வந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிந்தது. அவர் வைத்திருந்த ஒரு அழகிய கோழி குஞ்சுகளை இட்டுவைக்கும் பெட்டி என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் அதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வடிவிலான படத்தை நான் பார்க்கவும் செய்திருக்கிறேன், ஆனால், அதனை யார் தயாரிக்கிறார்கள் என என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது உற்சாகத்தைப் பார்த்து சேவியர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஆம்,  அவர்களின் தாராள குணத்திற்கு அளவே கிடையாது.  நான்  தான் வேண்டாம் என்றேன். இதனை தயாரிப்பவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்தது. குருத்தோலை ஈர்க்குகளால் கட்டில் பின்னல்கள் போல் அறுகோண வடிவில் பின்னப்பட்ட அந்த கூடு ஒரு, அழகிய கலைப் படைப்பு. குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் பிற பகுதிகளிலோ காணக்கிடைக்காதது. இவ்வித கோழி குஞ்சுகளை விடும் கூடுகள் செய்யும் ஒரே ஒரு பாட்டி திசையன் விளையில் இருகிறார்கள் என்ற குறிப்பையும் சேவியர் எனக்குக் கொடுத்தார். இவ்வித கலைஞர்களே நமது  தேசிய சொத்து என்ற எண்ணமே என்னுள் எழுந்தது.   இவ்வித தனித்துவ திறன் மிக்க கலைஞர்களை  எவ்வகையிலும் எவரும்  பொருட்படுத்துவதில்லை.

கோழிக்குஞ்சுகளை அடைக்கும் பனை ஈர்க்கில் கூடு

நான் அவருக்கு ஆரே தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையிலிருந்து எடுத்து வந்த அட்டைபெட்டியில் குமரி மாவட்ட பனை விதையைக் கொடுத்தேன். ஜாஸ்மின் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு மரத்திலிருந்து எடுத்த விதை அது. கருப்பு காய்ச்சி ரகம். ஒவ்வொரு பழமும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சிலர் இதனை யாழ் விதை எனக் கூறுவார்கள். பெயர்கள் எப்படியிருந்தாலும், இது யாழ் விதை அல்ல என்பதே எனது எண்ணம். குமரி மாவட்டம் மட்டுமல்ல, மும்பை பகுதியில் கூட இவ்வித பெரிய பழங்களை நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலி அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி, பகுதிகளிலெல்லாம் மூன்று கிலோவைத் தாண்டிய பனம்பழங்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய தேங்காயைப் பார்க்கும்போது, அது யாழ்பாண தேங்காய் என கூறப்படுவதால், பனம்பழங்களிலும் ஒரு யாழ் பனம்பழத்தை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

பனை விதை பெட்டியினை சேவியர் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு, நான் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளநீர் ஒரு டாலர் மட்டுமே. அந்த தேங்காய் மிக மிக பிரம்மாண்டமானது. இந்தியாவில் அதற்கு இணையான தேங்காய்களை நான் பார்த்ததே இல்லை.  அது போலவே, பர்மா சென்றிருந்த போதும் நானும் எனது குக்கி பழங்குடியின நண்பன் மாங்சா ஹோப்கிப்பும்  (Mangcha Haopkip)  இணைந்து  ஒரே இளநீரை பகிர்ந்து குடித்தோம். இந்தியாவில் காணப்படும் இரண்டு மிகப்பெரும் தேங்காய்களிற்கு இணையானது அங்கு விற்கப்படும் ஒரே தேங்காய். அப்படியானால் இலங்கைக்கும் நமக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே இப்பெயர் சூட்டல் இருக்கிறது என நான் கருதுகிறேன். மேலும் பனை மரத்திற்கு யாழ்பாணம் என்பது ஒரு மைய்யம் கூட.

கருப்பு காய்ச்சி பனம்பழம்

சேவியர் அவர்களுக்கு மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தது. பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைக் குறித்து அவர் கேள்விபட்டிருக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை இங்கே நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையினால், அந்த அலுவலகத்திற்குள் உரிமையோடு செல்லுவேன். ஆகவே அந்த அலுவலகத்திற்கு முதலில் செல்ல தீர்மானித்தோம்.

பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் 1975ஆம் ஆண்டு பனைத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கத்தை மார்த்தாண்டம் பகுதிகளில் ஆரம்பித்தார். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்ற மாபெரும் இயக்கம்,  பனை தொழிலாளர்களது வாழ்வில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்படியாக துவங்கப்பட்டது. மிக நுண்மையாக பனை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவைகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் பனை தொழிலாளர்களுக்கு பதனீர் காய்ச்சுவதற்கு விறகு என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் போதுமான விறகுகள் கிடையாது. அச்சூழலில், பிற மாவட்டங்களிலிருந்து லாரிகளில் விறகுகளை வர வைத்து தேவையானவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது.

பேராயர் உலக கிறிஸ்தவ மன்றத்தின் தலைவராக இருந்தவர். ஆகவே அவரால் சர்வதேச உதவிகளைப் பெற முடிந்தது. உலகில் எங்குமே நிகழாத பனை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி, அவர்களுக்கான உதவிகள், மற்றும் புது தொழில்நுட்பங்களை கண்டடைந்து அவர்கள் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல பேராயர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பனைத் தொழிலாளர்களது மரணம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் நிரந்தர ஊனம் மற்றும் சமூகத்தின் பார்வையில் இழிவாக காணப்பட்ட அன்றைய சூழல்  பேராயரது சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூடவே பனைத் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் இருந்த அங்கீகாரமற்ற சூழ்நிலை இவர்கள் வாழ்வை மாற்றினால் ஒழிய இவர்களை மீட்கவியலாது என்ற எண்ணத்தை பேராயர் அவர்களுக்கு கொடுத்தது.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தொண்ணூறுகளின் மையப்பகுதிகளில் “வளர்ச்சி” என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தன. அன்றைய சூழலில் பனை அது சார்ந்து வாழும் மக்களுக்கு ஒரு கால்விலங்கு என கணிக்கப்பட்டதும் அவ்விலங்கினின்று உதறி மேலெழுவதுமே அன்றைய சவாலாக இருந்தன. ஆகவே பனையேறிகள் பனைத் தொழிலை விட்டு வெளிவருவதற்குண்டான கடனுதவி போன்றவைகளை மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளார்ச்சி இயக்கம் முன்னெடுத்தது. பனை மர தொழிலாளர்களை சிறு பெட்டிகடைகள் வைக்கவும், பழைய குடிசை மற்றும் சிதிலமடைந்த வீடுகளை மாற்றி நவீன வீடுகளை கட்டிக்கொள்ளவும், கல்வியில் உயர பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் செய்து அவர்கள் பொருளியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தார் பேராயர்.

பனையோலையில் செய்யப்பட்ட பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் படம்

இந்த பணியில் அவர்கள் நிர்தாட்சண்யம் இல்லாமல் பனை மரங்களை கைவிட்டனர். அதற்கு காரணம் பனையா மனிதனா என்கிற கேள்வி முன் பேராயர் தன் தேர்வை வைக்கவேண்டிய சூழலில் இருந்தார். அதாவது, பனை சார்ந்த வாழ்வு சமூக அங்கீகாரத்தையோ பொருளியல் நன்மையையோ கொடாது என அறிந்தபோது, பனையையும் பனைத்தொழிலாளர்களையும் பேராயர் அவர்கள் பிரித்தார். பனை மரங்கள் பனையேறியின்றி வீணாக நிற்பதைக் கண்டவர்கள் அதனை வெட்டிவிட்டு வீடுகளை வைக்கவோ, ரப்பர் தோட்டம் வைக்கவோ அல்லது தென்னை மரங்களை வைக்கவோ முன்வந்தனர். அன்றையகுறைந்த வருமானம் மற்றும் சமூகத்தில் தாழ்வாக பார்க்கப்பட்ட பனையேறிகளுக்கு பேராயர் வழங்கிய திசை சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் பனைகள் கைவிடப்பட்டு அழியும் என்பது அவர் எண்ணிப்பார்த்திராதது.

பேராயர் அவர்களை நான் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதன் முறையாக சந்தித்தேன். எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்கள் என்னிடம், பேராயர் சாமுவேல் அமிர்தம் வந்திருக்கிறார்கள் நீ  அவரை சந்திப்பது நல்லது என்றார். கல்லூரி முன்பு இருக்கும் புல்தரையை சுற்றி செல்லும் சாலையில் தனது ஊன்றுகோலோடு பேராயர் நடந்துகொண்டிருந்தார், நான் அவருடன் இணைந்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பனை ஓலையில் நான் செய்த விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டைகள், புத்தக குறிப்பான், மற்றும் அழகிய பனை ஓலையாலான ஃபைல் ஒன்றையும் காண்பித்தேன்.  அனைத்தும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னவர், இவைகள் நமக்கு சோறு போடாது என்றார். எனக்கு “பக்”கென்றது. ஆனால் அவர் என்னிடம், நீ இப்போது படி, பிற்பாடு இவைகளைக் குறித்து நாம் பேசலாம் என்றார்.

பேராயர் அவர்கள் பதநீரை பாட்டிலில் அடைப்பது எப்படி என  ஜெர்மனி தேசத்திலிருந்து  அறிஞர்களை இங்கே அழைத்து வந்து,  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் இரண்டு முறை பனை ஏறுவதற்கு பதிலாக ஒருமுறை ஏறிவிட்டு பதனீரை மேலிருந்து ஒரு குழாயில் பனைமரத்தின் அடிப்பகுதி வரை கொண்டுவந்து அதனை சேகரிக்கும் வழிமுறைகள் என பலவற்றை பரிசோதித்து பார்த்தவர். குமரி கேரளா எல்லையில் இருக்கும் கோட்டவிளை என்ற தோட்டத்தில் புகையில்லா பதனீர் காய்ச்சும் அடுப்பு ஒன்றை மாதிரியாக இன்றும் வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முறையாக விஞ்ஞான முறையில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது.  உலகமயமாக்கலில், பனை தொழில் பின்தங்கியே இருக்கிறது என புரிந்ததால் தான் அவர், பனை தொழிலை விட்டு வேறு வகையில் மக்கள் பொருளியல் மற்றும் சமூக உயர்வை அடைய உதவினார்.

எண்பதுகளில் பனை சார்ந்து சர்வதேச தளங்களில் பெரும் வீச்சுடன் இயங்கிய அறிஞரான Dr. T. A. டேவிஸ் அவர்களும், “பனையும் வறுமையும் இணைந்தே இருக்கும்” (Palmyra and poverty goes together) என்றார். இவைகள் இரண்டையும் நான் ஒன்றாக இணைத்தே நான்  புரிந்துகொள்ள  முயற்சிக்கிறேன். அதாவது பனை சார்ந்த எந்த நிறுவனமும் அமைப்பும் பனை தொழிலாளர்களை கைத்தூக்கிவிட இயலாது என்பது தான் உண்மை. பனை தொழிலாளர்கள் வைத்த எந்த கோரிக்கையும் இதுவரை  எந்த அரசாலும் செவிகூரப்பட்டதும் இல்லை. ஏனென்றால், சந்தை பொருளாதார காலகட்டமான இன்றும்  கூட பனையேறிகள் தங்கள் தொழில் அடிப்படையில் ஒரு பழங்குடியின சமூகமாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்களை சமூக அடையாளப்படுத்துதலில்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இச்சமூகம் ஏற்றுகொண்டுள்ளது. ஆகவேதான் பனையேறுகிறவர்களுக்கு எது தேவை என இங்கிருக்கும் மக்களால் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. பழங்குடியினர் வாழ்வில் நிலம் மற்றும் அவர்களது உரிமைகளை எப்படி கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டுமோ அப்படி பார்ப்பது மட்டுமே இவ்வித மக்களின் விடுதலைக்கான துவக்கமாக அமையும்.

பனை மரங்கள் மீதான உரிமை பனையேறிகளுக்கு வேண்டும். அவர்கள் அதிலிருந்து பெறும் எவ்வித பொருட்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. பனைத்தொழில் சார்த்த விற்பனை உரிமையும் அவர்களிடம் இருக்கவேண்டும். அல்லது அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இவைகளை முன்னெடுக்கவேண்டும். இப்படி இருந்தாலே எதிர்காலத்தில் பனை சார்ந்து வாழும் மக்கள் ஏதேனும் நற்பயன் பெறுவார்கள். இன்று கூட தமிழகத்தில் பனையேறிகளைச் சுரண்டிப் பிழைக்கும் பெரு முதலாளிகள் உண்டு. தங்கள் கோட்டைக்குள் பனையேறிகளை சிறை வைத்து மிககுறைந்த கூலி கொடுத்து மனசாட்சியே இல்லாமல் பனையேறிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பனையேறிகளை காக்கும் வழிமுறை என்பது விரிவாக ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது.   சேகரிக்கும் பொருளாதாரத்தை வாழ்வியலாக கொண்ட ஒருவனை சந்தை பொருளாதார வாழ்வு நோக்கி நகர்த்துவது என்பது கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்று. மிகுந்த கரிசனையுடன், இதன் நுண்மைகளை விளங்கிக்கொண்டாலொழிய பனையேறிகள் வாழ்வில் எவ்வித நன்மைகளும் விளையாது என்பது தான் உண்மை.

பனை சார்ந்த பொருளாதாரம் என்பன போன்ற பேச்சுக்கள் இன்று அனாயாசமாக பேசப்படுகின்றன. இவைகள் யாவும் ஒரு இடைத்தரகரின் நோக்கில் பேசப்படுகின்றதே ஒழிய, உண்மையான பனை பொருளியல் என்பது என்ன? அது கிராம சூழலில் எப்படி இயங்கும் என்பது போன்றவைகளை ஆராய்வது இல்லை. பெரும்பாலும் பனை சார்ந்த பொருட்கள் நகரத்திலும்  வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளுக்காகவே  காத்திருக்கிறது. இதற்கு நேரெதிராக கள், உள்ளூர் சந்தையின் பலத்தையும் பனையேறிகளின் விடுதலையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. கள் என்கிற ஒற்றை பொருளிற்கான விடுதலை பனை சார்ந்த பிற பொருட்களை தடையின்றி தாராளமாக பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலை இன்று நாம் எப்படி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது? இரண்டு வழிகள் எனக்கு தென்படுகின்றன. ஒன்று நமது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. பனை மரம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எவ்வித பொருள் முதலீடுமின்றி உடனடி வேலை வாய்ப்பை வழங்க வல்லது. இரண்டாவதாக, பனை சார்ந்த வாழ்க்கை முறை நமது பிற தேவையற்ற நவீன சார்புகளை தவிர்க்கும். அவ்வகையில் மிகப்பெரிய அளவில் நமது செலவினங்களை மிச்சப்படுத்தலாம். மேலும், இன்று பனை சார்ந்த  உணவுகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது ஆகவே இத்தொழிலில் இறங்கும் இளைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இருக்கிறது. கலப்படமில்லா இவ்வித உணவுகள் நமது சமூகத்தின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.   நமது இளைஞர்கள் பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கூட எடுத்துக்கொள்ளவேண்டாம். வீட்டின் அருகில் நிற்கும் ஓரிரு மரங்களில் ஏறி வீட்டு தேவைக்கென பதநீரோ கள்ளோ இறக்கினால் போதும். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும்.

நாங்கள் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்க வளாகத்திற்குள் சென்றோம். அலுவலகம் அமைதியுடனிருந்தது. திரு சந்திரபாபு அவர்களை சந்தித்தோம். நான் சேவியர் அவர்களை அறிமுகப்படுத்தினேன்.  சேவியர் அவர்களுக்கு பனை சார்ந்த பொருட்கள் மீதான விருப்பமிருந்ததால் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின்  கைவினை பிரிவு நோக்கி சென்றோம். அங்கே தற்பொழுது பனை ஓலையில் தொப்பி செய்யும் ஒரு சிறு அலகு மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் சேவியர் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதன் பொறுப்பாளராக இருக்கும் திருமதி ராணி அவர்களை எனது சிறு பிராயம் முதல் நான் அறிவேன். அவர்கள் தேவையான தொப்பிகளை எடுத்து காண்பித்தார்கள். 

இங்கு செய்யப்படும் தொப்பி வெளிநாட்டு கெளபாய் தொப்பிகளைப் போன்றது. அதற்கான பெரும் சந்தை இருக்கின்றது. கொரோனாவினால் அனைத்தும் முடங்கிவிட்டன என ராணி அக்கா சொன்னார்கள். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வர வைக்கும்படியாக மூன்று அளவுகளிலும், மெக்சிகன் வடிவில் மிக பிரம்மாண்டமான தொப்பிகளும் இங்கே செய்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு முறைமை இங்கே கைக்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம். ஓலைகளை சன்னமாக வகிர்ந்து சடையாக பின்னிக்கொள்ளுவார்கள். அவைகளை மீட்டர் கணக்கில் வாங்கி சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் தையல் எந்திரத்தில் வைத்து தைத்து அழகிய தொப்பியாக மாற்றிவிடுவார்கள். இவ்வித செயல்பாடு என்பது கலை நுணுக்கம் வாய்த்தது அல்ல, ஆனால் சந்தையின் தேவைகளை விரைந்து சந்திக்க இயலும்.

குமரி மாவட்ட மீனவர்களில் பலர் இதனை அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். கடலுக்குள் செல்லும்பொது இவ்வித தொப்பிகள் வெயிலிலிருந்து மீனவர்களை காக்கும் ஒன்றாக இருக்கிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றூலா பயணிகள் இதனை அதிகமாக வாங்கிச் செல்லுகிறார்கள். தயாரிக்கும் இடத்தில்  சுமார் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இவ்வகைத் தொப்பிகள் மிகவும் மலிவானவைகள்.

பனை சார்ந்த பொருட்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்திருக்கிறதைக் காண்கிறோம். ஆனால் அவைகள் மிகவும் ஆபத்தானவை என நான் கண்டுகொண்டேன். இன்றைய சந்தை தேவை என்னவாக இருக்கிறது என்றால் வண்ணம் மிக்க பனையோலை பொருட்கள் தான். வெகு சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான பனைஓலை நுகர்பொருட்கள் என்பவை ஒற்றைமுறை பயன்பாட்டிற்கானது. அழகென காணப்படவேண்டும் ஆகையால் குருத்தோலைகள் கோருவது. ராமநாதபுரம் முதல் தமிழகத்தின்  பிற பகுதிகளில் வெட்டப்படும் பனை மரங்களில் இருந்து தான் இன்று பெரும்பாலான ஓலைகளின் தேவை சந்திக்கப்படுகிறது. இவைகள் எப்படி ஒரு நீடித்த வாழ்வியலை ஏற்படுத்தும்?  நெகிழிக்கு மாற்றாக இங்கே பனை ஓலைகள் முன்வைக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஏனென்றால், பனைஓலையில் வாங்குகின்ற பொருட்களை விசிறிவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது, நெகிழியைப்போல நம்மால் எப்போதும் பனை ஓலைப் பொருட்களை விசிறிக்கொண்டிருக்க இயலாது. அதன் பயன்பாடு எப்போதும் அப்படி இருந்ததில்லை.

பனை சார்ந்த பொருட்களை பனையேறிகள் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து அறிந்துகொண்டால், நாமெல்லாம் பனை சார்ந்த பொருட்களை புனிதம் மிக்கதாக கருதி அவைகளை பாதுகாப்போம். அவைகளை எவ்விதம் கையாளவேண்டும் எனவும் தேவையின்றி அவைகளை  வீணடிக்கமாட்டோம். நான் அறிந்த பனை ஓலைப்பாய் கலைஞரான தங்கப்பன் அவர்கள் ஒரே பனையோலைப் பாயினை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். கருங்கல் பகுதியை அடுத்த காட்டுவிளையைச் சார்ந்த பனையேறும் செல்லையா அவர்கள் தான் தயாரித்த வெற்றிலைப் பெட்டியினை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறார். பதனீர் எடுத்துவரும் குடுவைகளை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிப்பது பனையேரிகளுக்கு வாடிக்கை. ஆழ்ந்து நோக்குகையில், நமது பாரம்பரிய பொருட்கள் யாவும் நமது அன்றாட பயன்பாட்டில் இணைந்திருப்பதாகவும் சூழியலை மாசு படுத்தாததாகவும் நீடித்து உழைக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படி, ஒரு பொருளை பயன்பாட்டு பொருளாக ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. தமிழகம் இன்று ஆண்டுக்கணக்கில் வைத்து பராமரிக்கும் ஒரே பொருள் முறம் தான். இன்று பிளாஸ்டிக் முறத்தின் வரவால் பனையோலை முறம்  தயாரிப்பவர்களது வாழ்வு மிகப்பெரும் அடியை சந்தித்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு முறத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. முறம் இல்லா சமையலறை என்கிற அளவிற்கு நவீன வாழ்க்கை மாறிவிட்டது. இவைகள் யாவையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்க்கையில், பனை சார்ந்த கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது தெரியும்.

அப்படியானால் இன்று தயாரிக்கப்படும் ஓலைபொருட்களை நிறுத்திவிடவேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனேயே இன்று அப்படி செய்ய இயலாது. அப்படி செய்வது சரியுமாகாது. சற்றே நிதானித்து எதிர்காலத்திற்கான பொருள் என்ன என எண்ணி மக்களின் வாழ்வில் என்றும் இணைத்திருக்கும் பொருட்களை அறிமுகப்படுத்தி பனை பொருட்கள் அன்றாட வாழ்வில் நிலைபெறச் செய்வதே நமது கடமையாகிறது. எனது தொப்பி, திருமறை பை போன்றவைகள் அவற்றையே வலியுறுத்துகின்றன. பனை ஓலையுடன் பனை நார் இணைந்துகொள்ளும்போது அப்பொருள் அமரத்துவம் பெறுகிறது.

சேவியர், தான் எதிர்பார்த்தது போல மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பிரம்மாண்டமாக இல்லை என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். செயல்பாட்டளவில் அது குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திய ஒரு நிறுவனம், இன்று அதன் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 3

ஜனவரி 5, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

போதகர் ராஜாமணியுடன் மித்திரனும் நானும்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.\

வசாய் கோட்டையில் பனை

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

Kerala – the Land of Palms

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

திருவிதாங்கூர் பகுதி சாலையோரங்களில் பனைமரங்கள்: Kerala The land of Palms

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றால் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

நன்றி: இணையதளம்

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அக்கா சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். தொற்று நோய்க்கான எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பயண சீட்டைச் சரிபார்த்து எங்கே செல்லவேண்டும் என்றும், ஆவணங்களை சரிபார்த்து விலாசத்தை வாங்கிகொண்டு விட்டுவிட்டார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. அக்கா இருக்குமிடம் நோக்கி செல்லும் வழியில் எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 2

திசெம்பர் 21, 2020

பனை இரயில்

இரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட இருந்தாலும் சீக்கிரமாக வந்துவிட்டோம்.  இரயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இரயிலுக்குள் ஏறிய பின்பு தான் காலை உணவு. உணவுகளை எடுத்து வந்த பெரிய ஓலை பை ஜாஸ்மின் செய்தது.  இளவரசி கற்றுக்கொடுக்க ஜாஸ்மின் மட்டுமல்ல திருச்சபையின் பல குழந்தைகள் பனையோலைப் பொருட்களை செய்து பழகினர். இவ்விதமான பின்னல்கள் பொறுமையாக செய்யவேண்டியது ஆகும். ஒரே விதமான பின்னல்களை மீண்டும் மீண்டும் செய்வது பெருமளவில் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், நுணுக்கங்களை தேடி கண்டடைவோருக்கு, அதில் கூடி வரும் நேர்த்தி அளிக்கும் பரவசம் அளவில்லாதது. இளவரசி அவ்வகையில் திறன்மிக்கவளும் பொறுமைசாலியும் கூட. பனை ஓலையை தொடமாட்டேன் என்ற ஜாஸ்மின், மெல்ல ஓலையின் பால் தனது கவனத்தை திரும்பியதற்கு இளவரசியின் பயிற்றுவிக்கும் திறன் ஒரு முக்கிய காரணம்.

ஜாஸ்மின் செய்த பனையோலைப் பை

இரயிலில் அமர்ந்தவுடன் எனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டேன். உணவு கூடைகளை ஓரிடத்தில் வைத்தேன். நான் எங்கும் எடுத்துச் செல்லும் பனை ஓலையால் செய்யப்பட்ட திருமறை பையினையும் தொங்கவிட்டேன். ஒவ்வொன்றும் அதற்கான இடத்தைப் பெற்றபோது அழகாகவே இருந்தன.  இவ்விதமாக அடுக்கியபோது ஏன் இந்திய அளவில் பனை ஓலைகளாலான பொருட்களை சேகரித்து அவைகளை ஒரு இரயில்  கண்காட்சியாக வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. எவரோ வைப்பது என்ன நானே எனக்கான இரயில் கண்காட்சியை அமைக்கிறேன் என்று எண்ணியபடி என்னிடமிருந்த ஓலைப் பொருட்களை இரயிலில் ஆங்காங்கே வைத்து நிறைவு கொண்டேன்.

உணவுபொருட்களை எடுத்துச் சென்ற பை

இளவரசி எனக்கு செய்து கொடுத்திருந்த தொப்பி மிக அழகானது. முதன் முறையாக நான் அதனை கண்டபோது வாரி அனைத்துக்கொண்டேன். அது எனது வாழ்வின் அங்கமாகிப்போகும் என அப்போது நான் சற்றும் நினைத்திருக்கவில்லை. முகம்மது என்னை பல கோணங்களில் இந்த தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறான். அதில் ஒன்றை நான் முகநூலில் பகிர்ந்தபோது எனது சித்தப்பா “வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிட்டார்கள். எனக்கு இரத்தம் தேவையில்லாமல் கொதித்தாலும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனது தொப்பியை குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் பார்த்தால் இது என்ன “கடவத்தை கமத்தி வெச்சிருக்கு” என்றே ஏளனமாக சொல்லி கடந்து செல்வார்கள். பார்ப்பதற்கு அகலமான பின்னல்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த எளிய தொப்பி குறித்த பின்னணியத்தை ஒருவர் அறிந்தால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

பலர் கலந்துகொண்ட பனை ஓலைப் பயிற்சியில் இளவரசி இரண்டாம் நாள் தான் கலந்துகொண்டாள். ஆறு நாள் நடைபெற்ற அந்த பயிற்சியில், பிறரை விட சிறப்பாக கற்று தேறினாள். ஓலையின் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தமைந்தது. பனை ஓலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டதா இல்லை, திறமையே உருவான அவள் பனை ஓலையில் தனது கலை வாழ்வைக் கண்டடைந்தாளோ தெரியவில்லை. சொந்தமாக தனக்கென ஒரு செல்பேசி இல்லாதவள், தனது தந்தை வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து  அவரது செல்பேசியை வாங்கி, அதில் காணப்படும் பல்வேறு பனையோலை பொருட்களை பிரதியெடுக்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான் ஒருநாள் அழகிய காலணி ஒன்றைச் செய்து காண்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த காலணி எனக்கு பிடித்துப்போயிற்று. பனையோலையிலேயும் பனம் பத்தையிலேயும் காலணி போட்டு செல்லவேண்டும் என்பது எனது வெகுநாளைய விருப்பம். முற்காலங்களில் பனை ஓலையிலேயே எளிய மனிதர்கள் காலணிகளை செய்து புழங்கியிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட எனது சகோதரி அவ்விதமான காலணிகளை மார்த்தண்டம் சந்தைக்கு பொருட்களை சுமந்துவரும் எளிய மனிதர்கள் போட்டிருப்பதை தான் பார்த்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இவ்வித காலணிகள் நிமிடத்தில் செய்யகூடியது. ஒருநாள் பயணத்திற்கானது. அது போலவே முட்காடுகளில் இருந்து தங்கள் கால்களைப் பாதுகாக்க பனையேறிகள் இவ்விதமான பனை ஓலை செருப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் தங்கியிருக்கையில், எங்கள் வீட்டின் அருகில் அருணாச்சலம் எனும் பெரியவர் எனக்கு அவ்விதமான ஒரு செருப்பை செய்து கொடுத்தார். அந்த செருப்பை போட்டுக்கொண்டு நாகர்கோவில் வரை போய் வந்தேன். அதைக் குறித்து இந்துவில் நான் எழுதியபோது, தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வித செருப்பு கிடைக்குமா என்று ஒரு சித்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு கேட்டார். நமது வாழ்க்கையில் நாம் இழந்தைவகளுள் அனேகம் நமது வறட்டு கவுரவத்தால் தான். பிறர் நம்மைக்குறித்து  என்ன நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் இழந்தைவைகள் அதிகம். பனை சார்ந்த பொருட்கள், நமக்கு அதிக செலவு வைக்காதவைகள். சூழியலை மாசு படுத்தாதவைகள். ஒருவகையில், பனை சார்ந்த பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், அதன் மூலமாக  தோல் பதனிடும் ஆலைகளின் பெருக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம். நமது நிலம் கெட்டுப்போயிருக்காது. எண்ணற்றோர், வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

பாரம்பரியமாக இங்கே தயாரிக்கப்பட்ட பனையோலை  செருப்பிற்கும் இளவரசி தயாரித்த செருப்பிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தென் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓலைகள் பாய்போல சமதளமாக பின்னப்பட்டு பனை நார் கொண்டு வார் அமைக்கப்பட்டிருக்கும். இளவரசி செய்ததோ படகு போன்ற ஓர் வடிவம். தனியாக வார் தேவைப்படாமல் கால்களை பின்னல்களுக்குள் நுழைக்கும் ஒரு அமைப்பு. நாம் தற்காலங்களில் அணியும் கட் ஷூவை ஒத்திருந்தது. ஆகவே இது ஒரு இந்திய தயாரிப்பு போல் இல்லாதத்தால், எங்கிருந்து இதனைக் கற்றாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் ஒரு ருஷ்ய இணையதளத்தை காண்பித்தாள். அரண்டுபோனேன். அப்படியே ஓலைகளில் பின்னப்பட்ட அழகிய காலணிகள் செய்யப்பட்டிருப்பதைப் அந்த தளத்தில் பார்த்தேன். நம்பவே முடியவில்லை! ருஷ்யாவில் எப்படி ஓலைகள் கிடைக்கும்? ஆகவே எந்த இயற்கைப் பொருளைக் கொண்டு அதனை தயாரித்திருக்கிறார்கள் என தேட ஆரம்பித்தேன். 

ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளில் பாஸ்ட் (Bast) வகை காலணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இவைகள் டிலியா (Tilia) வகை மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தின் வெளிப்புற பட்டையை  நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பட்டைகளை உரிந்து இதனைச் செய்கிறார்கள். ருஷ்ய மொழியில் ஒரு ஜோடு என்பதை “லாப்டி” என்றும் ஒற்றைச் செருப்பை லாப்டோ என்றும் அழைக்கிறார்கள்.  இவைகள் ஏழைகளாலும் குடியானவர்களாலும் பயன்படுத்தப்பட்டதாலும், இதன் வாழ்நாள் குறுகியதாலும், பின்னாளில் வசை சொற்களாகவும் பயன்பட்டன. அது அப்படித்தான், உலகெங்கும் திறன் மிக்கவர்களை வசை சொற்களால் அழைப்பது என்பது மேட்டுக்குடித்தனம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலம் அது.

ருஷ்யாவில் தயாரிக்கப்படும் பாஸ்ட் மரப்பட்டையில் தயாரிக்கபடும் காலணிகள்

ஒவ்வொரு மனிதனும் இவ்வித காலணிகள் செய்ய கற்றிருப்பர். பெரும்பாலும் ஆண்களே இதனைச் செய்வர். பெண்கள் யாரேனும் செய்யக் கற்றிருந்தால் குடும்பத்தில் அவர்களுக்கு பெருத்த மரியாதை இருக்கும் என்பதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் இவைகளை செய்ய கற்றுக்கொள்ளும்போது முதல் காலணியை நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை நீரில் கலக்கி அவர்களுக்கு குடிக்க கொடுப்பார்களாம். இவ்விதமாக செய்வது கற்பவரை மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர் ஆக்குகிறது. மேலும், பல்வேறு பழமொழிகள் ருஷ்ய வாழ்வில் கலணிகள் பின்னுவது மிகவும் எளிதான ஒன்று என்பதையே சுட்டி நிற்கின்றன.

பழைய காலணிகளை வேலியோரத்தில் தொங்கவிடும் வழக்கம் கூட அங்கே இருக்கிறது. அனைத்து தீய சக்திகளும் அண்டாமல் இருக்க இவ்விதம் செய்யும்வழக்கம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். இவ்விதம் செய்யும் காலணிகளை குப்பையில் போடமாட்டார்கள் என்பதே அவைகளை செய்வோர் அவைகளுக்கு அளிக்கும் மரியாதை என்பதாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வித செருப்புகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவ்வித காலணிகள் செய்யக்கூடிய பழைமையான மர அச்சு தொல்லியல் நிபுணர்களால் கண்டடையப்பட்டிருக்கிறது. சுமார் 4900 வருட பழைமையான இவ்வித அச்சு, பழங்காலத்தில் எப்படி இதனை பயன்படுத்தி காலணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்க்த்டும். உலகம் முழுக்கவே தாவரங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வெறுங்கால்களை கொண்டு நடக்க சிரமமாக இருந்தபோது இவ்வித கண்டுபிடுப்புகள் எழுந்க்டிருக்கலாம். புதிய கற்காலத்தைச் சார்ந்த இவ்வித காலணிகளின் பயன்பாடு, தமிழகத்திலும், இந்திய நிலப்பரப்பிலும் இருந்திருக்கலாம் என்பதை தெளிவுற உணர்த்துகின்றன. பனையோடு கூடிய தொடர்புகள் நமக்கும் பனை ஓலை காலணிகள் பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதை விளக்குவதாக அமைகிறது.

இவ்விதம் மரப்பட்டைகளில் செய்யும் செருப்புகளோடு அவர்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வேறு சில பொருட்களையும் தயாரித்து பயன்படுத்த துவங்கினர். அவைகளில் பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் பையும், தொப்பியும் மிக முக்கியமானவைகள். இளவரசி, அங்கிருந்து தான் இந்த தொப்பியைக் கண்டடைந்தாள்.

பனையோலை தொப்பியும் பனையோலை திருமறை பையும் இரயிலில் அழகுற காட்சிபடுத்தியபோது

அது மாத்திரம் அல்ல இந்த தொப்பிக்கு வேறு ஒரு முக்கியத்துவம் கூட இருக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் நாம் காணும் நான்கு முக்கு கொண்ட பெட்டி அல்ல இது. இதற்கு 12 முக்குகள் இருக்கின்றன. அதுவே இதனை சிறப்புக்குறிய ஒன்றாக முன்னிறுத்துகிறது. பனை ஓலைகளில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு சூத்திரம் கொண்டது. பெரும்பாலும் ஒன்றுபோல தென்பட்டாலும், இவைகளுக்குள் ஒரு சில மாறுதல்கள் காணப்படும். அது புதியவர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  அந்த திடீர் திருப்பங்களுக்கு புதியவர்கள் திகைத்து நின்றுவிடுவார்கள். ஆனால் பழகியவர்களுக்கு அது ஊட்டி மலைப்பாதை போல. ரசித்து ஓட்டலாம். இளவரசி எதைச் செய்தாலும் அது திகைப்பூட்டும் அளவிற்கு அழகுடனிருக்கும். எப்படி இதனைச் செய்தீர்கள் எனக் கேட்டால், “அது ஈசிதான் பாஸ்ட்ரைய்யா” என்பாள். ஆனால் முதல் முறையாக எனக்கு அவள் செய்து தந்த தொப்பியைக் காட்டி கேட்டபோது “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றாள். இளவரசிக்கே சிரமமாக இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருமுறை நான் ஒரிசா சென்றபோது அங்கிருந்த துறவிகள் வாழ்வில் பனையோலைகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.  ஒரு ஜாண் அளவேயுள்ள ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் கயிற்றினை நுழைத்து, அவர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  சிறிய நீள்சதுரமான பெட்டி. அங்கிருந்த துறவிகளிடம் பழைமையான ஒரு பெட்டியை வாங்கி அதைப்போல செய்ய இயலுமா என குமரி மாவட்டத்திலுள்ள சில நண்பர்களைக் கேட்டேன். அனேகருக்கு தெரியவில்லை. இறுதியாக பல்வேறு வகைகளில் முடையும் திறன்கொண்ட பெண்கள் அமைப்பு ஒன்றைக் கண்டு அவர்களிடம் இதைப்போல் செய்துகொடுங்கள் எனக்கோரினேன்.  அவர்கள் பலவாறாக முடைந்து பார்த்துவிட்டு, இயலாது என கைவிரித்துவிட்டார்கள். ஏன் என நான் கேட்கவே “முக்கு எங்கே திருப்பவேண்டும் எனத் தெரியவில்லை” என்று தான் கூறினார்கள்.  அப்போதுதான் மொட்டைவிளை செல்லையா தாத்தாவைப் பார்த்தேன். எனது எம் எஸ் எல் 8537 புல்லட் வாகனத்திற்கு இருக்கையினைச் செய்து கொடுத்தவர் அவர்.   செய்துவிடலாம் என்றார். குமரி மாவட்டத்தில் இவ்விதமான ஒரு வடிவம் இதற்கு முன்பு இருந்ததில்லை. அவர் முயன்று  இவ்விதமான ஒரு அழகிய துறவிப்பெட்டியினைச் செய்து கொடுத்தார். மீண்டும் ஒரு தருணத்தில், இது போல செய்ய சிரமப்பட்ட அதே  பெண்களுக்கு இதனை எப்படி செய்ய வேண்டும் என சிறு கணக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் இலகுவில் பிடித்துக்கொண்டனர். அது அப்படித்தான், ஒவ்வொரு பொருளைச் செய்யவும் அதற்கான சூட்சுமம் இருக்கின்றது.

நான் பார்த்தவரையில்  பெரும்பாலும் பாரம்பரிய பொருட்கள் செய்யும் எவருமே மூன்று பொருட்களுக்கு மேல் செய்வதில்லை. பல பொருட்கள் செய்யத் தெரிந்திருந்தாலும், ஒன்றிரண்டு பொருட்களுக்குள் அவர்கள் தயாரிப்பவை நின்றுவிடும். ஏனென்றால், வேகம் தாம் இதில் முக்கியம். குறைவான கூலி கிடைக்கையில், வேகமாக செய்து கொடுக்கும் பொருட்களால்தான் ஏதேனும் குறைந்தபட்ச சம்பாத்தியத்தை இவர்களுக்கு உறுதி செய்யும். மேற்கத்திய நாடுகளைப்போல் தனித்த வடிவமைப்புகளுக்கான மதிப்பு இங்கே கிடையாது. பனையோலைக் கலைஞர்களை ஏமாற்ற முடியுமா? அல்லது சுரண்டிக்கொழுக்க முடியுமா? என்று அலைகின்ற மக்களே அதிகம்.

ஆகவே தான் நான் பனை ஓலைப் பொருட்களை விற்பனை செய்வதை முன்னிறுத்தாமல், பனை சார்ந்த பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். பனையோலைப் பொருட்களைச் செய்கிறவர்கள், அதில் உறைந்திருக்கும் திறன் சார்ந்த “மதிப்பை” உணர்ந்தார்கள் என்றால், பனை ஓலைகளை விலைகொடுத்து வாங்கி காப்பாற்றும் செயலைவிட அதன் ஆழ்ந்த கலைதன்மையை அறிந்து பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விழைவார்கள்.

என்னிடமிருந்த  ஒவ்வொரு பொருளையும் எடுத்து நான் இரயிலில் வைத்து அழகு பார்த்தேன். பனை இரயில் என்பது எப்படி இருக்கும்? என எனது கற்பனையை ஓட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பனை ஓலை கைவினைஞர்களை தெரிவு செய்து அவர்களை இணைத்து எடுத்துச் செல்லும் ஒரு இந்திய பயணமாக அது இருக்கவேண்டும் என எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் செய்யும் பாரம்பரிய பொருட்களை வைக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டி ஒதுக்கப்படவேண்டும். அந்த பெட்டிகளில் ஒவ்வொரு பொருளின் அருகிலும் அப்பொருளினைக் குறித்த சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். முடிந்தால், பல்மொழிகளில் அந்த பொருள் குறித்த ஒலிக்கோர்ப்பு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். கண் தெரியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வாய் பேசாதவர்களுக்காக பனை சார்ந்த கலாச்சாரத்தை விளக்கும் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கலைஞர்கள் ஓலையில் பொருட்களை செய்து காட்சிக்கு வைப்பது சிறப்பாக இருக்கும்.   ஒரு உணவு பெட்டி, பனை உணவுகளை விற்கும்படியாகவும், ஒரு பெட்டி பனையோலை சார்ந்த பொருட்களை விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மிகப்பெரிய இலாபம் கிடக்கவில்லை என்றாலும், இவ்வித முயற்சிகள் இரயில்வே துறை தனது சமூக பங்களிப்பாக சூழியலுக்காகவும் சமூக நல்லைணக்கத்திற்காகவும், கிராமிய பொருளியலை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய துணைக் கண்டத்தின் பல்முனைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். அவ்வகையில் இரயில்வே மிகப்பெரும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவதால்,  துண்டுபட்டுகிடக்கும் சமூகங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க இயலும். காலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.

ஓலைச் சுவடிகள் முதல் இன்றைய நவீன பயன்பாட்டிற்கான பொருட்கள் வரை வைக்கப்பட்டிருக்கும் ஒரு இரயில் இயக்கப்படுமென்றால், பனை மரங்களைக் காக்கும் ஒரு பணியினை இந்திய இரயில்வே சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது எனக் கொள்ள இயலும். பரீட்சார்த்த முறையில் ஒரிரு பெட்டிகளை மட்டுமாவது இணைத்து ஏதேனும் ஒரு மாநிலம் இவ்வித முயற்சிகளை முன்னெடுக்கலாம். தமிழகம், ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற இடங்கள் வெள்ளோட்டத்திற்கு தகுதியானவைகள். இரயில் பெட்டிகளில் ஒவ்வொரு மாநில பனையேறிகள் குறித்த படங்களும், பெரும்பான்மையாக காணப்படும் பனை சார்ந்த பொருட்களை காண்பிக்கும் படங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் பெட்டிகளை அமைக்கலாம். சிறப்பு இருக்கைகளையும் படுக்கைகளையும் பனை நார் கொண்டு அமைக்கலாம்.  மூன்று வருடம் மட்டும் முன்னெடுக்கும் இவ்வித முயற்சிகளால் இந்திய நிலம் முழுக்க பனை ஓலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் அதே வேளையில் நெகிழிக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாகவும் இந்திய இரயில்வே இவைகளை செய்யலாம். கூடவே பனை விதைகளை வழங்கவும் இரயில்வே நிலங்களுக்குள் பனை விதைகளை நடுவதற்கும் இவ்வித இரயில்கள் பயன்படக்கூடும்.

தற்பொழுது சர்வதேச சுற்றுலா வீழ்சியடைந்து இருக்கும் சூழலில் இவ்விதமான உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பது பயன் தரும் ஒன்றாக இருக்கும். காதி, அந்தந்த மாநில சுற்றுலாதுறை மற்றும் இரயில்வே இணைந்து இந்திய நிலமெங்கும் பரவி விரிந்திருக்கும் கலைஞர்களை முன்னிறுத்திக் கூட இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்கலாம். இயற்கை சார்ந்தும் பாரம்பரிய அறிவு சார்ந்தும் இயங்கும் எண்ணம் கொண்டவர்கள் பெருகியிருக்கும் சூழலில் இவ்வித யாத்திரைகள் நவீன புண்ணிய யாத்திரைகளாக கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பனை சார்ந்த பொருட்களை எனது பயணத்தில் எடுத்துச் செல்லுவதை முக்கியம் என கருதுகிறேன். ஏனென்றால், எனது பயணத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே எனக்கு இப்பொருட்கள் புதிய நண்பர்களையும், நான் செல்லும் இடங்களில் இருக்கும் பனை சார்ந்த மக்களுடன் ஒரு நெருக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பனை ஓலைகளை என்னுடன் எடுத்துச் செல்லும்போது அது ஒரு அறைகூவலாக மாறிவிடுகிறது. பிறருக்கும் அப்படியான ஒரு வாழ்கைமுறை மீது பிடிப்பு ஏற்பட இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கிறது.

நான் மித்திரன் மற்றும் ஆரோன், பனையோலை தொப்பியுடன் இரயில் பயணத்தில்

இன்றைக்கு கிடைக்கும் பல்வேறு பனை ஓலைப் பொருட்கள்  பெரும்பாலும் அழகு பொருட்களாகவே முன்னிறுத்தப்படுகிறது. அவைகளில் காணப்படும்  ஒரே பிரச்சனை என்னவென்றால், இவ்வித அழகு பொருட்கள் நெடுநாள் பயன்பாட்டிற்கு உரியதாக இல்லாமல், மேஜை அலங்காரமாக அமர்ந்துவிடுகிறதைப் பார்க்கிறோம். இவ்விதமான பொருட்களை விட, அன்றாடம் பயன்பாட்டில் நிலவும் பொருட்களே தேவையாக இருக்கின்றன. அதுவே பனை சார்ந்த ஒரு இயக்கம் புத்தெழுச்சியுடன் எழும்புகிறது என்பதை வெளிப்படுத்தும்  குறியீடாக அமையும். 

இரயில் பன்வேல் என்ற இரயில் நிலையத்தைக் கடக்கும்போது ரசாயினி எப்பொழுது வரும் என ஆவலுடன் வெளியே பார்த்தபடி வந்தேன். பன்வேல் மும்பையின் எல்லை. அதனைத் தொடர்ந்து வருவது சிறு நகரங்களும், கிராமங்களும் காடுகளும்தான்.  பசுமையான மலைகள் சூழப்பட்ட இடங்களில் பனை மரங்கள் நெடிந்துயர்ந்து நின்றுகொண்டிருந்தன. ரசாயினி நடை மேடையில் நின்ற பனை மரத்தை நான் கவனிக்கவில்லை. வெட்டிவிட்டார்களோ? இல்லை நான் தான் சரியாக பார்க்கவில்லையோ? ஆனால் அங்கிருந்த பனைமரத்தைச் சுற்றியிருந்த ஆலமரம் அப்படியே விரிந்து பரந்து இருந்தது. ரசாயினி எனது பனை மரச் சாலையின் துவக்கம் என்பதால் அதனைக் கடந்து செல்லும்போது எனக்குள் குதூகலித்து குழந்தையாவதை தடுக்க இயலவில்லை.

ரசாயனி இரயில் நிலையத்தில் பனைமரத்தை சுற்றியிருக்கும் ஆலமரம்

பனை மரத்தில் பற்றிப்பிடிக்கும் மரங்கள் அனேகம் உண்டு. ஆலமரம் அரசமரம் என அனைத்துமே ஃபைகஸ் (Ficus) குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரே பகுதிகளிலும் இவ்விதமாக மரங்களுக்குள் ஏற்படும் பிணைப்புகளை அதிகம் காண முடிந்தது. ஏனென்றால் பனை மரங்கள் பயன்பாட்டை விட்டு விலகும்போது அவைகளைப் பற்றிப்பிடிக்கும் மரங்கள் நிலைகொள்ளுவதை தவிர்க்க இயலாது. மரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இவ்வித தன்மைகள் இடத்தை பேணிக்கொள்ளவும், நமது உள்ளூர் மரங்களை இணைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும். 

பென் (Pen) என்னும் இடம் வரைக்கும் பனை மரங்கள் எங்களுடன் இணைந்து வந்துகொண்டிருந்தன அதன் பின்பு பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன.

மறுநாள் காலை இரயில் மங்களூரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கீழிறங்கி பார்த்தபோது தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. காலை  பொழுது அத்துணை மகிழ்வளிக்கும் ஒன்றாக மாறிவிடும் என நான் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. நான் பெங்களூரில்  ஐந்து வருடங்கள் படித்திருந்தாலும்  கர்நாடகாவில் பனை மரங்களை பெருமளவில் காண இயலவில்லை. பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் இரயில் வழித்தடத்தில் கோலார் பகுதியைக் கடக்கும்போதுதான்  பனை மரங்கள் காணப்படும். நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் ஓசூர் வரும் வழியிலும் பனை மரங்ளைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் கர்நாடகாவில் பெருமளவு பயணிக்காததால் பனை மரங்கள் எங்கே அதிகமாக இருக்கின்றன என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. மங்களூரின் அமைப்பு நாகர்கோவிலை ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே இக்காலை காட்சி பனை மரங்கள் இங்கே செழித்திருக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. இப்படி பனை மரங்கள் செழித்திருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவும், ஒவ்வொரு பயணியும் ஒரு பனை விதை நடுவதற்கான இடத்தையும் இரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பது மிகப்பிரம்மாண்ட சூழியல் பங்களிப்பை முன்னிறுத்துவதாக  அமையும். வெறும் இரயில் என்று தான் இல்லை, கப்பலோ, விமானமோ, பேருந்தோ அல்லது சிற்றுந்தோ பனை விழிப்புணர்வுக்காக எதுவும் பயன்படலாம். இவ்விதமான ஒரு விழிப்புணர்வு, வரும் நாட்களில் பனை மரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

மங்களூர் இரயில் நிலையத்தில் பனை மரங்கள்

பனை விதைகளை நான் கொடுப்பது குறித்து எனது அமெரிக்க தோழி பேராசிரியர். விட்னி இப்படி எழுதியிருந்தார்கள். உனது தொப்பி எனக்கு ஜானி ஆப்பிள்சீட் (John Appleseed) என்ற மனிதரை நினைவுறுத்துகிறது உனக்கு அவரைத் தெரியுமா என்றார். சத்தியமாக எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே “யார் அவர் எனக் கேட்டேன்”. எனக்கு ஒரு ஒளிப்பட இணைப்பை அளித்துவிட்டு  அவரைக் குறித்து சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள்.  ஜாண் சாப்மான் (John Copman) என்ற ஜானி ஆப்பிள்சீட், கையில் ஒரு ஆப்பிள் விதைகளாலான பை, மற்றொரு கையில் திருமறை, மேலும் அவரது தலையில் சமைப்பதற்கான பாத்திரத்தை தொப்பி போல கவிழ்த்து வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர். அமெரிக்காவில் உணவு பஞ்சத்தை உணர்ந்து ஆப்பிள் விதைகளை மக்கள் குடியேறும் பகுதிகளை கணித்து விதைத்த ஒரு மகான்.  இப்படி ஒரு மனிதர் இருந்தாரா அல்லது கற்பனைக் கதையா என்று சொல்லுமளவு அவரது வாழ்வு நாட்டுபுற கதைகளுடன் இணைந்தே இருக்கிறது.

ஜானி ஆப்பிள்சீட் பாடும் பாடல்

நீ தான் அவர். நீ செல்லுமிடங்களுக்கு பனை விதைகளை எடுத்துச் செல்லுகிறாய் இல்லையா? எனச் சொன்னார்கள். திடீரென அவர்கள் இப்படி சொன்னவுடன் நான் அயர்ந்துபோனேன். இப்படியான ஒரு பொருத்தப்பாட்டினை நான் எப்போதும் எண்ணியிருக்கவில்லை. ஒரு கையில் திருமறையும் மற்றொருகையில் பனை விதையும் இணைகோடுகளாகவே செல்லுவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இறைப்பணி என்பது பலவேளைகளில் எவ்வித சூழியல் பிரக்ஞையுமற்ற அற்பணிப்புமற்ற மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது.   அதில் சூழ்ந்திருக்கும் ஆபத்து நாம் உணராதது.

ஒரு காலத்தில் பனையேறிகள் குறித்து ஏளனமாக பேசிய சமூகம் இன்றுதான் கண்திறந்து பார்க்கிறது. பனை சார்ந்து இயங்கியவர்கள் காணாமல் போனதால் நமது உணவு பழக்கங்கள் மாறிப்போய்விட்டது. ஊரே இணைந்து இனிப்பு கருப்பட்டி தயாரித்தபோது இல்லாத சர்க்கரை நோய் நம்மை இன்று அச்சுறுத்துகிறது. ஊருக்குள் பெருகியிருக்கும் நோய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியிருக்கிறது.

இப்பயணம் எனக்கு முன்னால் எதனை முன்வைத்திருக்கிறது  என நான் உண்மையிலேயே அறியேன். ஆனால் கண்டிப்பாக பனை சார்ந்து இயங்கும் மக்களைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். ஏனென்றால், இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை ஆகவே, எப்படியாவது இவர்களை முன்னிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இன்று நாம் செய்யக்கூடுவது அது மட்டும்தான். 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தைவிட, தற்பொழுது பனை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பனை விதைப்போர், சேகரிப்போர் எண்ணிக்கை பலமடங்காக கூடியிருக்கிறது. பனை ஓலைப் பொருட்களைச் செய்யும் ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள். கருப்பட்டிக்கான விலை அதிகரித்திருக்கிறது. இதனை உயிர்ப்புடன் வைக்கவேண்டிய கட்டாயம் நம்மைச் சூழ இருக்கிறது என கண்டுகொண்டேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம்

திசெம்பர் 16, 2020

பனை வழி 

மும்பை மெதடிஸ்ட் திருச்சபையிலிருந்து  விடுப்பு எடுத்து 2017 – 2019 வரை, பனை சார்ந்த பணிகள் செய்ய தமிழகத்தில் தங்கியிருந்தேன். வெறித்தனமாக நான் செய்த பணிகள் எனக்கு நிறைவை அளித்தாலும், அதனை என்னால் தொடர முடியவில்லை. போதக பணியிலிருந்து வெளியே வருவது சாபத்தீடான ஒன்று என பொதுவாக கிறிஸ்தவ சூழலில் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. “அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.” (லூக்கா 9: 62)  என்கிற திருமறை வசனத்தை மிக தவறாக விளக்கும் அன்பர்கள் எங்களைச் சூழந்திருந்தார்கள். அவர்கள் எனது குடும்பத்திற்குள் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் மும்பை வரவேண்டிய சூழல் அமைந்தது. ஆகவே வேறு வழியில்லாமல் வெகு கசப்புடனேயே மும்பை திரும்பினேன்.

புல் ஏற்றும் வாகனம், ஆரே பால் குடியிருப்பு, மும்பை

நிற்க. இயேசுவின் மேற்கூறிய வாசகம் திருச்சபையில் பணியாற்றிய நான் பனை சார்ந்த பணியை முன்னெடுப்பதை  குறைத்து மதிப்பிடுகிறதா என்கிற கேள்வி எழலாம். இல்லை என்பது தான் உண்மை. இயேசுவின் அளப்பரிய பணியைப் பார்த்து அவரை பின்தொடர ஒருவர் விருப்பம் தெரிவித்தபோது அவர், “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (லூக்கா 9: 58) ஆக அவரது கருத்து இழப்பினைக் கருதி என்னை தொடர விருப்பமிருந்தால் தொடரலாம் என்பதே. மேலும் எனது இறையியல் பயணத்தின் ஒரு அங்கமாகவே பனை சார்ந்த தேடுதல் இருக்கிறது என்பதையும் எவரும் புரிந்துகொள்ளவில்லை.

மும்பை வந்த என்னை ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் தூய பவுல் மெதடிஸ்ட் திருச்சபையில் பணியமர்த்தினார்கள். பல வருடங்களுக்கு முன்பே இத்திருச்சபையில் சேவை செய்ய வேன்டும் என நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது வாய்க்கவில்லை. ஆரே திருச்சபை மும்பை நகருக்குள் இருக்கும் காட்டுப்பகுதியில் இருக்கிறது. நகரத்தின்   எந்த சந்தடிகளும் இல்லாமல் மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதி.

இங்கே தபேலா என்று அழைக்கப்படும் 32 மாட்டு தொழுவங்கள் உண்டு. ஒவ்வொரு மாட்டு தொழுவத்திற்கும் ஒரு அலகு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.  1949 ஆம் ஆன்டு பணிகள் துவங்கப்பட்டு 1951ஆம் ஆண்டு நமது பாரத பிரதமர் ஜெவகர்லால் நேரு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவெங்கும் நகரங்களில் மாடுகள் தன் போக்கில் திரிந்துகொண்டிருந்தபோது மும்பை வாழ் மனிதர்கள், மாடுகளுக்கென ஓரிடத்தை ஒதுக்கினால் நல்லது எனக் கண்டு வனப்பகுதியாக இருந்த ஆரே பகுதியில் மும்பை தெருவெங்கும் சுற்றித்திரிந்த மாடுகளையும் எருமைகளையும் கூட்டிச் சேர்த்தார்கள். இவ்வாறு சேர்ப்பது, சுத்தமான நகரத்தைப் பேணுவதற்கும், நகர் மக்களுக்கு தரமான பால்  கிடைப்பதற்கும், அறிவியல் பூர்வமாக மாடுகளை பேணி அதிக இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகை செய்யும் என நம்பி இவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாட்டு தொழுவமும் 500 முதல் 550 மாடுகளை பேணும் அளவிற்கு பிரம்மாண்டமானது. ஒவ்வொரு தொழுவத்திலும் மாடுகளுக்கான தீவனங்கள் வைக்கும் அறைகளும், மாடுகள் நீர் அருந்தும் தொட்டிகளும், வைக்கோல் வெட்டும் இடங்கள் மற்றும் உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் அடங்கும். ஆரம்பத்தில் அடிப்படை வேலைகளுக்காக சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து வந்த தமிழர்கள் அனைவருக்கும் இங்கே அடிமட்ட வேலைகள் கொடுக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் புல் அறுப்பதற்கும் கூட்டி பெருக்கும் வேலைகளுக்கும் இணைந்தார்கள். அவர்கள் தங்குவதற்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் குடிசை அமைத்துக்கொள்ள, தலா 2 பனை மரங்கள் கண்காணிகளால்  கொடுக்கப்பட்டன. அதன் ஓலைகளைக் கொண்டே  வீடுகள் அமைத்து முதல் தலைமுறை தமிழர்கள் இங்கே தங்கள் வாழ்வைத் துவங்கினர்.

பனங்காட்டை திருத்தி செய்த ஆரே பால் குடியிருப்பு, மும்பை (1952)

ஆரே குடியிருப்புகளில் இன்றும் ஒரு சில இடங்களில் பன்றி வளர்ப்பு உயிர்ப்புடனிருக்கிறது. அதுவும் எங்கள் திருச்சபை இருக்கும் அலகு எண் 7 நுழைவிலேயே பன்றி தான் வரவேற்கும். மட்டுமல்ல, ஆரே பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக இருக்கின்றன. காட்டு பன்றிகள், குரங்குகள், நரி மற்றும் புள்ளி மான்கள் இங்கே காணப்படுகின்றன. ஆரே பகுதியின் காவலனாக சிறுத்தைகள் வலம் வருகின்றன. இங்குள்ள பழங்குடியினருக்கு “வாகுபா” என்கிற சிறுத்தைப் புலி தான் முக்கிய தெய்வம். பல்வேறு கண்காணிப்பு காமிராக்களில் நாய்களைக் கவ்வும் சிறுத்தைகளின் படங்கள் பதிவாகியிருக்கின்றன. சில வேலைகளில் சிறுவர்களை கவ்வி சென்ற சம்பவங்களும், பெரியவர்கள் சிறுத்தையை எதிர்கொண்ட கதைகளும் ஏராளம். ஆரே என்றாலே ஆட்டோ ஓட்டுனர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு ஒரு காலத்தில் பேய்க்கதைகள் இங்கு நடமாடியிருக்கின்றன.ஆகவே பெரும்பாலான போதகர்கள் ஆரே வருவதை விரும்புவதில்லை.

எனக்கு ஆரே பால் குடியிருப்பு என அறிவிக்கப்பட்டவுடன், உடன் ஊழியர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் “ஆரே பகுதியில் பனை மரங்கள் இருக்கும்” என்று கூறி என்னை “தேற்றி” அனுப்பினார்கள். முதல் நாள் நான் ஆரே பால் குடியிருப்பு வருகிற வழியில் அதிகமாக பனை மரங்களைப் பார்க்க இயலவில்லை. சற்றே மனம் சோர்ந்து இருக்கையில், சென்னையில் இருக்கும் எனது தோழி  ரோடா அலெக்ஸ் அவர்கள் ஆரே குறித்த சில புகைப்படங்களை அனுப்பினார்கள். 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட  கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். அனைத்து படங்களிலும் பனை நடுநாயகமாக வீற்றிருந்தது. அந்தப் படங்கள் ஆரே என்பதே ஒரு பனங்காடு என்பதாக உரத்துக் கூவின. தற்பொழுது நான் பார்க்கும் ஆரே பகுதிக்கும் படங்களில் காணப்பட்ட ஆரே காலனிக்கும் பெருத்த வித்தியாசம் காணப்பட்டது.

ஆரே பால் குடியிருப்பு (1952)

இப்படங்களை ஆரே திருச்சபையின் பொருளராகிய ஸ்டீபன் அவர்களிடம் காண்பித்தேன். ஸ்டீபன் அவர்கள் ஆரே பகுதியை நன்றாக சுற்றி வலம் வந்தவர். அவர் அவைகளில் ஒரு படத்தைக் காண்பித்து  இது நமது திருச்சபைக்கு அருகில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். நமது திருச்சபைக்கு அருகில் இப்படியான பனை மரங்கள் இல்லையே என்றேன். வெகு சமீப காலம் வரைக்கும் இங்கே பனை மரங்கள் இருந்தன என்றார்.

வேறு சில படங்களைக் காட்டி இது போல செறிவான பனங்காடு ஏதேனும் எஞ்சி இருக்கிறதா எனக் கேட்டேன், அவர் அப்படங்களை உற்றுனோக்கியபடி “இருக்கு” என்றார். என்னுடன் திருச்சபை செயலர் திரு. செல்வராசு அவர்களும், திரு. லாரன்ஸ் அவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். ஸ்டீபன் அவர்கள் எங்களை உடனடியாக உயரமான ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு  சென்றார். அங்கிருந்து பார்க்கையில் தொலைவில் பனங்காடுகள் தெரிந்தன. பின்னர் அவர் அழைத்துச் சென்ற இடம் பனை மரங்களால் நிறைந்திருக்கும் சாய் பாங்குடா என்கிற வார்லி பழங்குடியினர் வாழும் பகுதி. இதற்கு இணையான  பனங்காடு எதையும் நான்  குமரி மாவட்டத்தில் பார்த்ததில்லை. நூற்றுக்கணக்கான பனை மரங்கள் நிற்கும் ஒரு நிலப்பகுதி. மும்பைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் விஹார் ஏரியும், இனிப்பே தனது பெயராக கொண்ட மித்தி ஆறும் இப்பகுதியிலிருந்து தான் புறப்படுகின்றன.  இன்னும் எவ்வித அழித்தொழிப்புமின்றி நிற்பதைக் கண்டபோது நெஞ்சு விம்மியது. அப்போது தான் இது கடவுள் எனக்கருளிய இடம் என  நான் நிறைவு கொண்டேன்.

சாய் பாங்குடா, ஆரே பகுதியில் எஞ்சியிருக்கும் அழகிய பனங்காடு (புகைப்படம் முகம்மது)

உடனடியாக சில திட்டங்களைத் தீட்டி பனை விதைகள் நடவும், பனை விதைகளை மக்களுக்கு கொடுக்கும் வகையில் அட்டைபெட்டிக்குள் அடைத்து இலவசமாக கொடுக்கும் முறைமையையும் உலகிலேயே முதன் முறையாக மும்பையில் துவக்கினேன். அதற்கு மெதடிஸ்ட் திருச்சபையின் அங்கத்தினரான திரு பொன்சிங் அவர்கள் பொருளுதவி செய்தார்கள்.

2019ஆம்  வருட இறுதியில், நவம்பர் மாதம் குமரி மாவட்டதிலுள்ள சங்கர் கணேஷ் என்கிற பனையேறும் தம்பியை மும்பை அழைத்திருந்தேன். சூழியலைக் கெடுக்காமல் ஒரு கிறிஸ்மஸ் அலங்காரத்தினைச் பனை ஓலைகளை மட்டுமேக் கொண்டு செய்வது சாத்தியமா என எண்ணி, முயற்சிகளை முன்னெடுத்தோம். திருச்சபையைச் சார்ந்த பல்வேறு சிறுவர்களும் வாலிபர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுள் செல்வி இளவரசி, குருவை மிஞ்சும் சீடரெனப்படும் அளவிற்கு கற்றுத்தேர்ந்தாள். புதிது புதிதாக அவள் மேலும் பல அலங்காரங்களை கற்று அனைவருக்கும் பயிற்சியளிக்க ஆரம்பித்தாள். ஆகவே குறுகிய காலத்திலேயே பனை ஓலைகளைக் கொண்டு பல்வேறு அழகிய நட்சத்திரங்கள் செய்து பசுமை கிறிஸ்மஸ் கொண்டாடினோம். பனை ஓலைகளைக் கொண்டே கிறிஸ்மஸ் மரம் அமைத்தோம்.  இவ்வாறாக நாட்கள் பரபரப்பாக சென்றன.   

மெதடிஸ்ட் திருச்சபையில் ஒரு போதகருக்கு ஆண்டொன்றிற்கு 30 நாட்கள் சேர்த்தார்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி. நோய்க்தொற்று நேரத்தில் திருச்சபை உட்பட அனைத்து இயக்கங்களும் செயலற்றுப் போயின. ஆகவே மே மாதம் ஊர் செல்லவேண்டியிருந்த திட்டங்கள் தவிடுபொடியாயின. அதனைக் குறித்து எவ்வகையிலும் கவலைப்படாமல்,  நானும் எனது திருச்சபை மக்களும் இணைத்து, ஓய்வின்றி பனை விதைகளை மும்பையில் சேகரித்து. அவைகளை விதைக்கவும், அழகிய அட்டைப்பெட்டிகளில் இட்டு பொதுமக்களுக்கு பகிர்ந்து கொண்டிருந்தோம். நாட்கள் செல்லச் செல்ல ஒருவித தேக்க மனநிலை ஏற்பட்டது. எங்காவது ஒரு பனை பயணம் சென்றே ஆகவேண்டும் என உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது. ஆகவே விடுமுறையினை பனைமுறையாக செலவளிக்க உகந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் பனை பயணங்களால் மட்டுமே நிறைவு கொள்பவன். பனை பயணங்களை மட்டுமே எண்ணி எய்துபவன். எனது வாழ்வு பனையுடனும் பனை சார் மக்களுடனும் பனை பொருட்களுடனுமே இருக்கவேண்டும் என்ற தீராக் காதல் கொண்டவன். பனையின்றி என்னால் ஏதும் செய்துவிட இயலாது. பனை பயணம் என்பது எனது ஆன்மீக நகர்வு. ஆகவே நேரம் கிடைக்கையில் புறவயமாகவும் இல்லாத போது அகவயமாகவும் அதை மாற்றிக்கொள்ளும் நிலையை அடைந்துவிட்டேன். எனது வீட்டிற்குள்ளும், வெளியிலும், எனது ஆன்மீக பயணம் எல்லாம் பனையுடனே நிகழுமாறு பார்த்துக்கொண்டேன். பனையே எனக்கு வழிகாட்டி. பனையே என்னை இழுக்கும் விசை. பனை சார்ந்த சூழியலையே எனது இருப்பிடமாக நான் கொள்ளுவேன். ஆகவே பனை சாராதவைகளை நாசூக்காக தவிர்த்துவிடுவேன்.

இம்முறை குடும்பத்தில் நிகழும் இரண்டு முக்கிய நிகழ்வுகளை கருத்தில் கன்னியாகுமரி செல்ல வேண்டும் என ஜாஸ்மின் கேட்டுக்கொண்டார்கள். தமிழகம் செல்லவேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் இப்படியான ஒரு பயணத்தை  நான் எதிர்னோக்கியிருக்கவில்லை. மகராஷ்டிர எல்லையில் உள்ள கட்சிரோலி செல்லலாம், அல்லது கோயா பழங்குடியினர் வாழும் ஆந்திரா எல்லைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தாலும், மழை நேரத்தில் இப்பகுதிகளுக்கு செல்வதால் எந்த பயனும் விளையாது என்பதால் அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.  எனக்கு இந்த பயணத்தை எப்படியாவது தவிர்க்கவேண்டும் என்றிருந்தது. ஆனால் அப்படி எதுவும் என்னால் செய்ய இயலாது என்பது உள்ளூற தெரியும். ஆகவே மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தேன்.

முதலாவதாக அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிருந்து பயணித்து மீண்டும் நவம்பர் 6 ஆம் தேதி வருவதாக திட்டம். 9 ஆம் தேதி ஜாஸ்மினுடைய இளைய சகோதரன் ஜெகன், அவர் தம் துணைவி ஷைனி  ஆகியோருக்கு பிறந்த ஷாண் அவர்களின் முதல் பிறந்த நாள். இந்த பயலுக்காக நான் உலகிலேயே முதன் முறையாக ஒரு பனையோலைத் தொட்டிலை செய்துகொடுத்திருந்தேன். ஆகவே மாமனாக அங்கே நிற்கவேண்டிய கட்டாயம். அப்படியே ஜாஸ்மின் அவர்களுடைய  தம்பி ஜஸ்டின் மற்றும் அவரது துணைவி விஜிதா ஆகியோர் தங்கியிருக்கும் வீட்டை புதுப்பித்து அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி பால் காய்ச்சும் சடங்கினை வைத்திருந்தார்கள். இந்த திட்டத்தின் நடுவில், எனது பாபு மாமாவின் மகளான சாரா மெலடிக்கு அக்டோபர் 15 ஆம் தேதி திருமணம் நிகழ்கிறது என்கிற செய்தியினை அம்மா நினைப்பூட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் நான் என்னதான் செய்துவிட முடியும்?   ஆகவே இடைப்பட்ட நாட்களில் நான் என்ன செய்யலாம் என யோசிக்கலானேன்.

பனைமரச் சாலை பயணத்திற்குப் பின் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். ஆகவே தமிழகம் சார்ந்து மீண்டும் ஒரு பயணத்தை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என நான் கருதினேன். தமிழகத்தின் பனைத்துடிப்பை அறியவும், பனை சார்ந்து இயங்கும் மக்களை காணவும், அனைவரையும் உற்சாகப்படுத்தவும் இந்த பயணத்தை ஒதுக்கலாம் என உறுதிகொண்டேன். ஆகவே குடும்ப நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளுவேன், ஆனால், எனது பனை பயணங்கள் ஊடாக நிகழும் என்பதையும் எனது சரிபாதியிடம் குறிப்புணர்த்தி புறப்பட ஆயத்தமானேன்.

எனது பயணம் குறித்து ஒருவாறு ஒழுங்குகள் செய்தபின்,  முகநூலில் இப்படியாக எழுதினேன்

“பனைத் தொழிலாளர், ஓலை வினைஞர்கள், நார் கலைஞர்கள், மற்றும் பனை உணவு உற்பத்தியாளர்கள் அனைவரின் நலன் வேண்டி தமிழக சுற்றுப்பயணம் நிகழ்த்த உள்ளேன்.  பனை சார்ந்த நலத்திட்டங்”கள்” செய்வோம் என  தேர்தல் அறிக்கையில்  கூறும் கட்சிகளை மட்டுமே வருகிற தேர்தல் நேரத்தில் பொருட்படுத்துவோம்.  பனைசார்ந்த வாழ்வியலை முன்னெடுக்காத கட்சிகள் நமக்கு தேவையில்லை. மாற்றம் நிகழும்வரை பகிர்வோம். தமிழக பனை அன்பர்களே ஒன்றுபடுவோம்.”

நான் எதிர்பார்த்தது போல என்னை நேசிக்கும் நண்பர்கள் எனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்ததை என்னால் உணர முடிந்தது. நலத்திட்டங்”கள்” என நான் குறிப்புணர்ந்தியதை எனது பனையேறி நண்பர் கஞ்சனூர் பாண்டியன் புரிந்துகொண்டார். ஆகவே வெகு உற்சாகத்துடன் பயண திட்டங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தேன்.

இம்முறை எனது பயணத்திற்கான செலவை நானே ஏற்பதென்று முடிவு செய்தேன். அதற்கு காரணம், பயணத்திற்கான செலவினங்களை எனது கைவசமிருக்கும் படங்களைக் கொண்டு என்னால் திரட்ட முடியும் என்கிற சிறு நம்பிக்கையால் மட்டுமே. அதற்கான அறிவிப்பையும் முகனூலிலேயே வெளியிட்டேன். நினைத்தது போல எவரும் படங்களை வாங்க ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால், எனது அன்பு மனைவியின் சகோதரர்கள் எங்கள் ஒட்டுமொத்த மும்பை நாகர்கோவில் பயண செலவையும் தாங்களே ஏற்பதாக கூறிவிட்டார்கள். அது ஒரு மிகப்பெரிய விடுதலையாக எனக்கு அமைந்தது. ஆகவே எனது சேமிப்பை தமிழகத்தில் செய்யவிருக்கும் பனைப் பயணத்தில் கரைக்க துணிவுகொண்டேன்.

தமிழகத்தில் இருந்து நண்பர்களின் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. முதலாவதாக எனது நண்பரும் கப்பல்காரன் டைரி எழுதிய ஷாகுல் ஹமீது அழைத்தார். அவர் மும்பை வந்திருந்தபோது ஒரு பனையோலையில் செய்த புத்தரின் படத்தினை நான் அவருக்கு பரிசளித்திருந்தேன். அதனை அவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் சார்பில் கொடுக்க இருப்பதாகவும், மீண்டும் அவருக்கு அதே போன்ற ஒரு படத்தினை செய்ய நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் எனவும் கூறினார். மேலும், நான் எழுதிய பனை மரச்சாலை புத்தகத்தை வாசித்த அவரது திருவனந்தபுர நண்பரான திரு சுப்பிரமணி அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் இரண்டு படங்கள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். பரபரப்பான சூழலில், என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக செய்கிறேன் எனக் கூறினேன்.

ஆரே காடு என்று போராடும் குழுவினர் பனை விதைகளைப் பெற்ற போது உருவாக்கிய படம்

இரண்டு படங்களை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது.  அவைகளையும் நான் நினைத்த வண்ணம் என்னால் முழுமை செய்ய இயலவில்லை. என்றாலும், இவைகள் திரு சுப்பிரமணி அவர்கள் கரத்தை அடைவது தகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். இவைகளுடன், இறுதி கட்டத்தில் ஒரு அழகிய ஜெயலலிதா அம்மையாரையும் பனை ஓலையில் செய்தேன். எனது பயண இறுதியில் தமிழக முதல்வரை சந்தித்து  பனை சார்ந்த கோரிக்கைகளை இப்படத்துடன் சமர்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் அதையும் எடுத்துக்கொண்டேன்.

புறப்படுவதற்கு முந்தைய நாள் உணவை எப்படி எடுத்துச் செல்லலாம் என ஜாஸ்மின் கேட்டபொழுது, பனை ஓலையிலேயே எடுத்துச் செல்லுவோம் என்றேன். ஓலைகள் எப்படி கிடைக்கும் என கேட்டபொழுது, அதனை நான்  ஒழுங்கு செய்கிறேன் என உறுதியளித்தேன்.

மறுநாள் நாங்கள் புறப்படுகிறபடியால், எங்களுடன் நேரம் செலவு செய்ய முகம்மது என்கிற ஒரு வாலிபன் வீட்டிற்கு வந்திருந்தார். அவரைப் பொறுத்த அளவில், நான் மும்பையில் மாற்றம் நிகழ்த்தும் ஒரு சூழியல் போராளி. பனை மரங்கள் அதிகம் நிற்கும் மும்பையில் இதுவரை பனை சார்ந்த முன்னடுப்புகளை எவருமே செய்யவில்லை என்பது அவருக்கு மிகுத்த ஆச்சரியமாக இருந்திருக்கிறது. பனை குறித்த புரிதல் ஏதும் இன்றி சூழியலாளர்கள் இருக்கிறார்கள் என்பது அவரை துணுக்குற செய்திருக்கிறது. பனை பயன்பாடுகள் குறித்த சுவடே அழிந்திருந்த தருணத்தில் பனை விதைகளை நான் வழங்குவது ஒரு புரட்சியாகவே அவர் கண்களுக்கு தென்பட்டது போலும். ஒரு வகையில் இது உண்மைதான், ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் எங்கள் திருச்சபை வாயிலாக 2019- 20 ஆகிய ஆண்டுகளில் பனை விதைகளை நடுவதற்கான முன்னெடுப்புகளாளை நாங்கள் நிகழ்த்துமட்டும், மும்பையில் எவருமே பனை விதைகளை நட முற்படவில்லை. 

நாங்கள் மும்பையில் வசிக்கும் ஆரே பகுதியானது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும். மெல்ல மெல்ல இப்பகுதிகளை ஆதிவாசிகள் கரத்திலிருந்து பிடுங்கி ஒவ்வொருவராக பங்குபோட துவங்கினர்.

முதலில் மும்பையின் பால் தேவையை சந்திக்க இங்கே ஒரு பால் பண்ணை உருவாக்கப்பட்டது, பின்னர் ராயல் பாம் என்கிற ஏழு நட்சத்திர விடுதி இவ்விடத்தை கபளீகரம் செய்தது, மும்பை திரைப்பட நகரம் இங்கே தான் நிர்மானிக்கப்பட்டது. உலகிலேயே ஒரு நகரத்திற்குள் காணப்படும் வனப்பகுதியான ஆரே பலருடைய கண்களை உறுத்திக்கொண்டே இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. . ஒரு கட்டத்தில், ஆரே பகுதியில் மெட்ரோ கார் ஷெட் அமைக்கவேண்டும் என்கிற நிலை வந்த போது சூழியல் அன்பர்கள் கொதித்தெழுந்து போனார்கள். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் பல தரப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இவைகளில், களப்பணியாற்றும் ஒரு சிறு குழுவின் பெயர் “பேட் லகாவோ”- மரம் நடுவோம். எப்படியோ இவர்களின் வாட்சாப் குழுவில் நான் இணைக்கப்பட்டேன். வாரம் தோறும் மரங்களை நடுவது என இவர்களின் பணிகள் போய்க்கொண்டிருந்தன. என்னால் எதையும் பகிர இயலாது ஆனால் அவர்களின் நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு வந்துகொண்டே இருக்கும்.

கொரோனா நிமித்தமாக ஆலயங்கள் மூடிவிட்டபடியால்,  ஒரு நாள் நான் அவர்களுடன் களப்பணியாற்ற சென்றிருந்தேன். எவரும் எவரையும் வரவேற்கும் வெற்று முகமன்கள் அங்கு காணப்படவில்லை. சென்ற உடனேயே நாம் குப்பைகளைப் பொறுக்குவதோ அல்லது மரங்களை நடுவதோ என ஏதாவது எடுத்து செய்யவேண்டியது தான். நான் கையோடு 15 பனை விதைகளையும்,  இரண்டு நாவல் மரங்களையும் எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை ஒப்படைத்துவிட்டு, குப்பைகளை உறைகள் ஏதும் அணியாமல் வெறுங்கையால் பொறுக்க ஆரம்பித்தேன். அப்போது குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் என்னருகில் வந்து தனது கரத்தில் உள்ள கோணியில் அவைகளை அமைதியாக சேகரித்து சென்றார்கள். அன்று நிகழ்வின் முடிவில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சஞ்சீவ் வல்சன் என்கிற நபரைக் கண்டேன். அவரிடம், பனை விதைகள் என்னிடம் இருக்கின்றன, எடுத்து வரவா என்றேன். அடுத்த வாரம் இதே இடத்திற்கு வாருங்கள் என்றார்.

மீண்டும் அடுத்த வாரம் 25 பனை விதை பெட்டிகளை ஆயத்தம் செய்தபடி திருச்சபையில் உள்ள இருவரை அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன். அனைவரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். பனை விதைகளை கொண்டு வந்திருக்கிறேன், அவைகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும் எனக் கேட்டபொழுது, நீங்கள் எப்படி விதைக்கவேண்டும் என ஒரு அறிமுகம் சொல்லிவிடுங்கள் என்றார் சஞ்சை. பனை குறித்து என்னைப் பேசச் சொன்னால் நான் விரைவு இரயிலைவிட அதி வேகத்தில் பேச ஆரம்பித்துவிடுவேன். அன்றைய எனது உரை அனைவரையும் கற்சிலையாக்கியது. நான் கொடுத்த அட்டைபெட்டிகளை வாங்கிப் பார்த்தார்கள். எவருமே பொருட்படுத்தாத பனை மரத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையின் ஒரு பகுதியை அறிந்த உடனேயே ஒவ்வொருவரும் தங்கள் செல் பேசியில் என்னை காணொளி எடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர்.

அன்று இரவே முகம்மது என்னை அழைத்து,  உங்கள் பேச்சு அருமையாக இருந்தது, நீங்கள் கடந்தவாரம் வந்தபோது எனது சகோதிரியுடன் தான் நின்று வேலை செய்துகொண்டிருந்தீர்கள். அப்போது எனக்கு நீங்கள் செய்யும் வேலைக் குறித்து தெரியாது. இன்று நீங்கள் எங்கள் சிந்தனையை முழுவதுமாக மாற்றிவிட்டீர்கள். உங்களைக் குறித்து நான் ஒரு ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதற்காக இவர் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார். வெகு இயல்பாகத்தானே நாம் செயல்படுகிறோம், அப்படியிருக்க என்னத்தைக் கண்டுகொண்டார் என நான் எண்ணினேன்.

ஆவணப்படம் எடுப்பதில் எந்த எனக்கு எவ்வித தடையும் இல்லை, ஆனால், திருச்சபை பனை விதை நடுகையை  முன்னெடுக்கிறது என்கின்ற உண்மையினை மறைத்துவிடலாகாது என்கிற உறுதியை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். பிற்பாடு அவர் எனது வாழ்வில் மிக முக்கிய அங்கமாகிப்போய்விடுவார் என அன்று நான் கருதியிருக்கவில்லை. முகம்மது அதன் பின்பு என்னோடே ஒட்டிக்கொண்டார். எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே அவர் மாறிவிட்டார்.

அப்படித்தான் அன்று பனை ஓலை எடுக்க புறப்பட்டோம். எங்களோடு எனது இளைய மகன் மித்திரனும் வந்திருந்தான். திருச்சபை அங்கத்தினரான திரு ஸ்டீபன் அவர்களையும் நான் அழைத்திருந்தேன். நாங்கள் வாகனத்தில் செல்லும்போது பனை மரம் ஏறவேண்டுமென்றால் உதவிக்கு யாராவது கிடைப்பார்களா என்கிற எண்ணத்துடன் சென்றுகொண்டிருந்தோம். அப்போது, பாம்புகளையும், நகர்புறங்களில் சிக்கித்தவிக்கும்  காட்டு விலங்குகளையும் காப்பாற்றும் ராஜ் என்கிற வாலிபனின் எண்ணம் வந்தது. என்ன ஆச்சரியம் அவனை நாங்கள் அழைக்கவும் அவனே எதிரில் தென்படவும், வண்டியை நிறுத்தி அவனை ஸ்டீபன் அவர்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டோம்.

அந்தி சாயும் வேளை, புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில், ஓலைகளை வெட்டும்படியாக சென்று நிறுத்தினோம். சற்றே பெரிய வடலி ஒன்று கைகளை விரித்தபடி அடங்கா திமிரோடு நின்றிருந்தது. மற்றவைகள் அனைத்துமே சிறிய வடலிகள் தான். ஓலைகள் பெரிதாக இல்லை. ராஜ் அந்த வடலியில் ஏற முற்பட்டு, கருக்குகள் இருந்ததால்  தன்னால் ஏற இயலாது என்பதை ஒத்துக்கொண்டான். நேரம் இருட்டத் துவங்கியிருந்தது. ஆகவே அங்கிருந்த சற்றே சிறிய வடலி ஒன்றில் செருப்போடு ஏறி ஓலைகளை வெட்டி போட்டேன். மித்திரன் ஓலைகளை சேகரித்து அடுக்க உதவினான். ராஜ் இருந்ததால் பாம்புகள் குறித்த பயம் இல்லாமல் போனது.

அனைத்து ஓலைகளையும் எடுத்துக்கொண்டு செல்வி. இளவரசி அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றோம். இந்த ஓலைகளில் மூன்று பெட்டிகள் செய்து தர இயலுமா என்று கேட்டேன். அது ஒரு அன்பு கட்டளை. இளவரசி ஒரு சிறந்த பனையோலைக் கலைஞர். நான் தட்டிக்கொடுத்து வளர்ந்த பிள்ளை. சரிங்க பாஸ்டர் ஐயா என்றாள். அவள் முயற்சிக்கிறேன் என்று சொன்னாலே அது நடந்துவிடும் என்னும் சூழலில், இந்த வார்த்தை எனக்கு உற்சாகமளித்தது.

நான் வீட்டிற்கு வந்த போது, மதிய வேளைக்கும் இரவிற்கும் எலுமிச்சை சோறும், மறுநாள் சாப்பிட புளிசோறும் ஆயத்தம் செய்யலாம் என பேசிக்கொண்டோம். ஜாஸ்மின் கைபட செய்த பனை ஓலை பையினை எடுத்து வந்து இது தான் உணவு எடுத்துச் செல்லும் பை எனக் கூறிவிட்டார்கள். 

இரவு வெகுநேரம் எங்களுடன் இருந்துவிட்டு மறுநாள் காலை வேளையில் எங்களை வழியனுப்ப வருவதாக கூறி முகம்மது சென்றுவிட்டார். முககவசங்களைக் எப்போதும் அணிந்திருக்கவேண்டும் என்றும், கைகளில் உறைகள் போட்டிருக்க வெண்டும் எனவும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினோம்.  

மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஓலைபெட்டியினை சேகரிக்க இளவரசி வீட்டிற்குச் சென்றேன். மூன்று பெட்டிகள் மூடியுடன் ஆயத்தமாக இருந்தன. இவ்வளவு தூரம் அவளை சிரமப்படுத்தியிருக்கக்கூடாது என எண்ணிக்கொண்டேன். இளவரசியின் அப்பா திரு முத்துராஜ் அவர்கள் மித்திரன் கரத்தில் ரூ500/- திணித்தார்கள். இரவு முழுவதும் தகப்பனும் மகளுமாக இணைந்து விழித்திருந்து தான் பெட்டி செய்திருக்கிறார்கள். அவர்களின் அன்பை எண்ணி வியந்தபடி வீட்டிற்கு வந்து ஆயத்தமானோம்.  

ஸ்டீபன், மாணிக்கம், மலர் என திருச்சபையின் மக்கள் வழியனுப்ப முகம்மது மட்டும் எங்களோடு இணைந்து இரயில் நிலையம் வரை வந்தார். இரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தை ஒத்திருந்தன. முகம்மது தூரத்திலேயே நிற்கவேண்டியது ஆயிற்று. வரலாற்றில் மீண்டுமொரு பனை பயணம் இப்படித்தான் எளிமையாக துவங்கியது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பின்னல்கள் – 11

ஜூலை 12, 2020

சம்பு 

நான் 2003 ஆம் ஆண்டு இறையியல் கல்வி நிறைவுசெய்தபோது திருச்சபையில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்தேன். அப்போது எனது சகோதரி மாலத்தீவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் ஏதேனும் ஒரு  வேலையில் இணைந்துகொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றேன். மிக அழகிய சுத்தமான இடம் தான் மாலத்தீவு. அங்கே,  நான் சுவைக்க விரும்பும் மீன்கள் அனைத்தும் எனது கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் நீலம், பசுமை குறைவு, நிலமின்மை, பனையின்மை என எனக்கு பல ஒவ்வாமைகள். அங்கிருந்து திரும்பவேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் இருந்துகொண்டிருந்தது. அந்த வெறுப்பு என் பார்வையில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே தென்னை ஓலைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி அதனைக் கோர்த்து ஒற்றை தடுக்காக மாற்றி கடைகளுக்கு சாய்வாகவும், தட்டியாகவும் அமைத்திருந்தார்கள். “க்கும்… பின்னத்தெரியாத்த பயலுவ…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களுக்கும் பின்னல்கள் உண்டு என்பதனை அந்த இரண்டு மாத காலத்திற்குள்ளேயே அறிந்துகொண்டேன்.

தென்னை ஓலைகளில் செய்யப்பட்ட வீடு – மாலத்தீவு

2017 முதல் 2019 வரை நான் எனது இறைப்பணியில் இருந்து விடுபட்டு பனைபணியே இறைப்பணி என்ற நோக்கோடு தமிழகம் முழுவதும் வெறிகொண்டு பயணித்தேன். தமிழகத்தில் வழக்கொழிந்துபோன பல்வேறு பொருட்களை மீட்டெடுக்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கனன்றுகொண்டிருந்ததால், பார்க்கும் பனை சார்ந்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் கண் முன்னால் மறைந்துபோன பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டுப்பெற  முயற்சிப்பேன். அப்படிக் கிடைக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அலைந்து திரிந்து காணாமற்போன பொருளை எப்படியும் மீட்டுவிடுவேன். ஒரு பொருள் குறித்த நினைவு மட்டுமேக்கூட அந்த மக்களுக்கு இருக்குமென்றால் அதனை மீட்பதில் பெரிய சிரமமில்லை என்பதே நான் அறிந்த உண்மை.

பின்னல்கள் குறித்த தேடுதலில் பின்னலே இன்றி செய்யப்படும் பொருட்கள் பலவற்றை இதுகாறும் பார்த்திருக்கிறோம். பட்டை, பீப்பீ, தோண்டி, விசிறி என அவைகள் யாவும் பனை ஓலையின் வடிவத்தை சாதகமாக மாற்றி ஓலையின் தன்மை பெரிதளவில் மாற்றத்திற்குள்ளாகாமல் செய்யப்படும் பொருட்களாகும்.

பனை ஓலையில் பின்னலே இன்றி இன்று நம்மை வந்து அடைந்திருக்கும் மற்றொரு பொருள் தான் சம்பு என்ற மழை அணி. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் என்ற ஊரில் வாழும் திரு. பாண்டியன் எனும் நண்பர்  இதுகுறித்து எனக்கு தகவல்களைக் கொடுத்து சம்புவை மீட்டுருவாக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திகொண்டார். திரு கல்யாண சுந்தரம் (63) என்ற பெரியவர், சம்பு செய்வதில் வல்லவர். பண்டியனின் மாமா தான் இவர்.  நரசிங்கனூரைச் சார்ந்த பல்வேறு மக்களுக்கு சம்பு செய்யும் அறிவு இருந்தாலும், அனைவரும் அதனை கைவிட்டுவிட்டனர். இந்த அறிவினை தன் நெஞ்சில் ஒரு கனலாக எடுத்துச் சுமந்தவர் கலியாண சுந்தரம் மட்டுமே.

திரு கலியாண சுந்தரம் சம்பு செய்கிறார்

பின்னல்கள் சார்ந்து சம்புவில் ஏதும் காணப்படவில்லை என்றாலும் பின்னல்களுக்கான ஒரு அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. ஓலைகளின் பயன்பாட்டு வரலாற்றில் மிக தொன்மையானதும், மழைக் காலங்களுக்கு உகந்த  ஒரு பயனுள்ள பொருளான சம்புவினை சற்றே நெருங்கி உணர்வது நல்லது.

உலகம் முழுக்க மழையணிகள் கற்காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மழையணிகள் செய்வது வழக்கம். வைக்கோல், மூங்கில், மரப்பட்டைகள், தோல் என அவைகள் விரிவடைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சூழலில் கிடைக்கும் பொருட்களின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்திருக்கிறார்கள். 

மழையணி நேபாளம்

தென்னை ஓலைகளுக்கும் பனை ஓலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தவுடனேயே இவைகளில் தெரியும் வித்தியாசமான வடிவ அமைப்புகள் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டியவைகள். தென்னை மட்டையில்  ஓலைகள் தனித்தனியாக நடுநரம்பிற்கு இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். (Pinnately Compound) பனை ஓலையோ நடுநரம்பின் இருபுறமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விசிறியைபோல இருக்கும். (Palmately Compound). உலகம் முழுவதும் பின்னல்களுக்கான ஆரம்ப பணி என்பது  இலக்குகளை தனித்தனியாக  பிரித்தெடுப்பது தான். ஓலைகளைப் பிரித்து எடுப்பதை இணிந்து எடுப்பது என்றே குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள். தென்னை மட்டையில்  பிரிந்திருக்கும் ஓலைகளை தனித்தனியாக இணிந்து எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை ஆனால் ஒன்றாக இணைந்திருக்கும்  பனை ஓலைகளைப் பிரிப்பது குறித்த புரிதல் ஆதி குடிகளுக்கு சற்றே வேறுவகையான ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. அவ்விதமாகவே அவைகள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்றைய பொருட்களாக நம்மை வந்து எட்டியிருக்கின்றன. இவைகளின் தொன்மம் சார்ந்த கதைகள் கூட இப்படிநிலைகளை விளக்கும்படியாக சுவைபட அமைந்திருக்கின்றன.

மழை அணியுடன் மேகாலய பழங்குடியினர்

ஆதியில் பனை ஓலைகள் இப்போது காணப்படுவது போன்று இணைந்து இருந்ததில்லை. காளி தனது பிள்ளைகளுக்கு பனையேறக் கற்றுக்கொடுக்கிறாள். அவர்கள் பனை ஏறும்போது முதல் பதனீர் தனக்கு கொண்டுவரும்படி கூறி ஒரு ஓலையை வெட்டி போடச் சொல்கிறாள். பதனீர் பருக, பிரிந்து இருந்த ஓலைகளை ஒன்றிணைக்கும் வேளையில், அங்கே ஒருவர் வந்து உனது பிள்ளைகள் உனக்கு கொடுக்குமுன்பே பதனீர் அருந்துகிறார்கள் என கூற, கீழிருந்து காளி பார்க்கையில் சொட்டுகின்ற பதனீர் தெறித்து அங்கே இருந்த காளியின் பிள்ளையின் வாயில் பட, காளி கோபத்துடன் பனை ஓலைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதாக ஒரு கதைப் பாடல் உண்டு. ஆகவே பிரிந்திருக்கும் ஓலைகளை இணைக்கும் வழிமுறைகளை காளியின் பிள்ளைகளும் முன்னெடுத்திருப்பார்கள் என நாம் உணரலாம்.

சிறுவன் அணீந்திருக்கும் மழையணை, கூர்க், கர்னாடகா

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும்  தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும்போது அது பல்வேறு முயற்சிகள் மற்றும் தோல்விகள் வழியாக நிகர்செய்யப்படுகிறது. பனை ஓலைகளை பின்னும் தொழில் நுட்பத்தினை மானிடர் அறிவதற்கு முன்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று சீராக அடுக்கப்பட்டு கோர்க்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மணிகளை கோர்க்கும் முறைமை கி மு 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது  போன்ற தகவல்கள் அகழ்வாய்வுகளில் வெளிப்படுகின்றன  . அப்படியான ஒரு அலங்காரத்திற்கு முன்பே பயன்பாட்டு முக்கியத்துவம் கிளைத்திருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். 

தீக்கோழியின் முட்டையில் செய்யப்பட்ட ஆபரணம், 40000 ஆண்டுகளுக்கு முந்தையது

பனை ஓலைகளின் அமைப்பினைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். பனை ஓலைகள் என்பவை இலக்குகளின் தொகை. அவ்விதம் இணைத்திருக்கும் ஓலைகளை தனிதனி இணுக்குகளாக பிரித்து எடுத்துப் பார்த்தால் அனைத்து இலக்குகளுக்கும் நடுவில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கும். அதனை ஈர்க்கில் என்பார்கள். குமரி மாவட்ட வழக்கச் சொல்லின்படி அதனை ஈக்கல் அல்லது ஈக்கு என்று தான் அழைப்பார்கள். ஈர்க்கிலோடு ஒரு அரை செ மீ அகல ஓலையை சேர்த்து கிழித்தால் அதனை மூரி என்று விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிடுகிறார்கள்.

ஈர்க்கில் ஓலைகளை விட பல மடங்கு உறுதியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நீள ஊசியினை நினைவுறுத்தும் அமைப்பு கொண்டது. நீரில் நனைத்து பயன்படுத்தினால் சற்றே கயிறு போன்ற நெகிழ்வுதன்மையுடன் உறுதியும் கூடியிருப்பது. ஈக்கலின் பயன்பாடு குறித்து தேடத் துவங்கினால் அது நம்மை தொல்பழங்காலத்தில் கொண்டு சென்றுவிடும்.

மழை நேரத்திலும் தடைபடாத வேலை

பனை சார்ந்த பொருட்கள் எப்படி ஒரு சூழலில் உருபெற்று வந்ததோ அதுபோலவே பல்வேறு சூழல்களினால் ஒருசில பனை சார்ந்த பொருட்கள் மறைந்தும் போயின.  அவைகளை நாம் வழக்கொழிந்து போன பொருட்கள் என்கிறோம்.  ஒரு பொருள் வழக்கொழிவதற்கு பல்வேறு புறக்காரணங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானது நவீன வாழ்க்கை முறை. 

அதுபோல பனை சார்ந்து பொருட்கள் செய்கிறவர்கள் குறித்து எந்த குறிப்புகளும் புத்தகங்களில் இருக்காது. எங்கோ ஏதாவது ஒரு பத்திரிகையில் பனை சார்ந்த பொருட்களைக் குறித்து வருகின்ற செய்திகளை தொகுப்பதும் எளிதல்ல. அப்படியே சேகரித்தாலும் அவைகள்  தமிழகத்தில் இருந்த பொருட்களில் பத்திலொன்றைக்கூட அவைகள் குறிப்பிட்டிருக்காது. பெரும்பாலும் ஊர்களைக் குறிப்பதுடன் அவைகளும் தங்கள் பங்களிப்பை நிறுத்திவிடும்.

கொங்கானி எனும் மழை அணி

ஓலைகளை அப்படியே வைத்து தயாரிக்கும் பட்டை மற்றும் தோண்டி இவைகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். சம்பு செய்யும் முறை இவைகளை விட வித்தியாசமானது. ஓலைகளை தனித்தனி இலக்குகளாக பிய்த்து அதன் பின் அவைகளை இணைத்து செய்யும் தொழில் நுட்பம் சார்ந்தது. மிக அடிப்படையான ஒரு வடிவமைப்பு. ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருங்கி இருக்கும்படி அடுக்கி, இணைக்கும்படியாக பனை ஈர்க்கில்களையே பயன்படுத்துவார்கள். இவைகள் அடிப்படையில் ஒரு தடுக்காக பயன்படும். இதனோடு ஈச்ச மட்டைகளை இணைத்து பலப்படுத்தி, அவைகளை குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

இடையர் சிற்பம்

சம்பு ஒரு சிறந்த மழையணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். தொல்பழங்காலத்தின் மழை கோட் என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால் வரை உடலை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டு தன்மையிலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.  உலகின் பல்வேறு நாடுகளில் மழையணியாக சம்புவை ஒத்த வடிவங்களில் பலர் மழையணியினைச் செய்வது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாக பயன்பட்ட ஒரு வடிவம் இது என்று பனை மரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் குறிப்பிடுவார்கள். இன்று சம்புவினை தொழில் முறையாக செய்தால் ரூ150திலிருந்து ரூ200 வரைக்கும் விற்க இயலும். கிராம மக்களுக்கு குடையினை விட சிறந்த வடிவமைப்பு இதுதான்.

இடையர் சிற்பம் – மழையணியுடன்

நவீன வாழ்வு தான் இவ்வித அறிதல்களையும் வாழ்க்கைமுறைகளையும் சிதறடித்தது. ஒரு சம்பு செய்ய 60 ரூபாய் ஆகும் சூழலில் வெறும் 50 ரூபாய்க்கு குடை கிடைத்தது ஆகவே சம்புவினை விட நவீனமாக காணப்பட்ட குடைக்கே  மதிப்பு கிராம மக்களிடம் பெருகியது ஆகவே உடல் உழைப்பால் செய்யும் சம்புவினை அப்படியே மறந்துவிட்டனர்.

முதலில் பெரிய பனை ஓலைகளாக தெரிவு செய்து பனை மரத்திலிருந்து மட்டையைத் தவிர்த்து ஓலையாகவே கழித்து எடுப்பார்கள்.  காலையிலேயே வெட்டிய ஓலையினை மாலை வரை வாட விடுவார்கள். மாலை வேளையானதும் ஓலையினைச் சுருக்கு பிடித்து வைத்துவிடுவார்கள்.  பின்னர் தடுக்கு செய்ய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு இலக்காக கிழித்து நீர் தெளித்து கட்டி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை 3 மணிக்கு பெண்கள் எந்து தடுக்கு தைப்பார்கள். ஒரு சம்பு செய்ய 7 தடுக்குகள் ஆகும். அப்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 தடுக்குகள் வரை பெண்கள் செய்வார்கள். தடுக்குகளை மூரி வைத்து தைப்பார்கள். ஈர்க்கிலோடு இணைந்திருக்கும் பகுதியினை ஆண் மூரி என்றும் ஈர்க்கில் இல்லாத எதிர்பகுதியை பெண் மூரி எனவும் குறிப்பிடுவார்கள்.

பனை ஓலை பொருட்களைச் செய்யும்போது பிற தாவரங்களின் பொருட்கள் உள்நுழைவது ஒரு முக்கியமான இணைவாக இருக்கிறது. அது எவ்விதமான தாவரங்கள் அப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றன என்பதன் அடையாளம் ஆகும். சம்பு செய்கையில் ஈச்சங் கசங்கினை பயன்படுத்துவதைப் பார்த்தேன். கசஙு  என்ற வார்த்தை ஓலைகளை நீக்கிய ஈச்ச மட்டையினை குறிப்பிடும் வார்க்ட்தையாக இருக்கிறது.  இவ்விதமாக சேகரிக்கப்பட்ட ஈச்சங் கசங்குகளை இரண்டாக கிழித்து பக்குவமாக காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ளுவார்கள். இவைகளை தேவையான நேரத்தில் எடுத்து நீரில் ஊறபோட்டு மீண்டும் இரண்டாக கிழித்து விடுவார்கள். இவைகளில் நீளமாக வருகிற கசங்கினை  மடிச்சி போடுற கசங்கு என்றும், குட்டையாக வருகிற கசங்கை ஒடிச்சி போடுற கசங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அகணி (பனை மட்டையின் உட்புறமிருக்கும் நார்) நாரை கிழித்து கோணி ஊசியில் நுழையும் அளவிற்கு மெல்லியதாக எடுத்து அதனைத் தைப்பார்கள். அகணியில் பிரித்தெடுக்கும் நாரினை சரடு என்றே குறிப்பிடுகிறார்கள். தடுக்கையும் கசங்கையும் இணைத்து கட்டுவதற்காக அகணி சரடு பயன்படும். கோணி ஊசியில் சரடை கோர்த்து தைப்பார்கள். அந்த தையலுக்கு ஒரு முடிப்பு இருக்கும். ஒரு கசங்கிற்கு நாலு தையல் என்ற வீதம் உறுதியாக சம்புவினை கட்டி முடிப்பார்கள்.

 கொண்டைப்பகுதி செய்கையில் ஒருவரால் கட்ட இயலாது. பொதுவாக ஆணும் பெண்ணும்  இணைந்தே கட்டுவார்கள்.  இவ்விதமாக குடும்பமாக இணைந்து செய்யும் பனை பொருட்கள் தமிழகத்தில் இன்றுவரை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் காணப்பட்ட முறம் கூட இன்று குடும்பமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து செய்யும் ஒரு வடிவம் தான்.

சம்புவினை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவு காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும், பனி, மழை போன்றவைகளிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்திவந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இறைக்கும் மோட்டார் மீது கவிழ்த்து வைக்கவும் கூட இது பயன்பட்டிருக்கிறது. நவீன காலத்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட  அழிவு, நமது வாழ்விலிருந்த்து சில கலைஞர்களை அப்புறப்படுத்தியிருக்கிறது என்பது உறுதி.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சம்புவிற்கு ஒத்த ஒரு பொருள் குமரி மாவட்டத்தில் உண்டு என தனிப்பட்ட முறையில் என்னிடம்  கூறியிருக்கிறார்கள். அதன் பெயர் காமணம். காமணம் குறித்து நான் அனேகரிடம் கேட்டும் என்னால் அது குறித்து மேலதிக தகவல்களை சேகரிக்க இயலவில்லை. இப்படியிருக்கையில் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் “ஆமை” என்று ஒரு கதை எழுதினார்கள். அதில் புலையர் பெண் ஒருத்தி கொரம்பை என்கிற என்கிற பனை ஓலை மழையணிக்குள் ஆமைபோல வாழ்ந்து மறைந்த கதை அவர்கள் வழிமரபினரால் நினைவுகூறப்படும் வகையில் எழுதியிருந்தார். இக்கதையில் காணப்படும் விவரணையின்படி “தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.” மேலும் “நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து… அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க. அப்படி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்”.

இவ்விதமான பொருட்களின் படமோ அல்லது நினைவுகளோ என்னால் இன்றுவரை சேகரிக்க இயலவிலை. எப்படியும் இவைகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்திருக்கும். கடந்த 100 ஆண்டுகளுக்குள்  சமூகத்தட்டில் மிகவும் கீழ்நிலையில் இருந்ததாலோ என்னவோ, வயல் வேலைச் செய்யும் புலையர்கள் வாழ்வில் காணப்பட்ட இந்த பொருளினை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லைப் போலும். பனைக்கென இப்போதும் ஓரியக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், பனையின் நிலையும் இவ்விதம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் பலரைக் கேட்டும் இது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எனக்கு மிகவும் அறிமுகமான பனை ஓலைக் கலைஞரான குமரி மாவட்டத்தின்  மொட்டவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களிடம் விசாரிக்கையில்  அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பெயர் கொங்காணி என்றார். நான் அயர்ந்துவிட்டேன். எத்தனைப் பெயர்கள்தான் இந்த மழையணிக்கு?

சம்பு என்ற தாவரத்திலும் இது போல் மழையணி செய்திருப்பார்களோ? அல்லது கோரை புல்லில் இதற்கு இணையான மழையணி செய்திருப்பதால் கொரம்பை என பெயரிடப்பட்டதா தெரியவில்லை.

இணையத்திலிருந்து ஒருசில படங்கள் கிடைத்தன. சம்புவைப்போன்ற எதோ ஒரு மழையணி அணிந்திருக்கும் படங்களை இடையர் சிலைகள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியானால் வயல் வேலைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, இடையர்களது வாழ்விலும் சம்புவின் இடம் முக்கியத்துவம் பெறலாகின்றது. அதனை நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பனை சார்ந்து கொடாப்பு எனும் பிரம்மாண்ட அமைப்பை ஆட்டு குட்டிகளில் பாதுகாப்பிற்காக செய்கிறவர்கள் இடையர்கள். சமீப காலமாக பனை மரக்கள் குறித்து சங்க இலக்கியம் கூறுவது என்ன என்று தேடுகிற ஒரு கூட்டம் எழும்பியிருக்கிறது. உண்மையிலேயே பனை சார்ந்த பொருட்களின் புழக்கத்தை தேடி கண்டுபிடித்தால் அது சங்க இலக்கிய வாழ்வில் நமது பனை சார்ந்த அறிதல்கள் குறித்து மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மழையணிக்குள் பான்டியன்

மழையணி என்ற இந்த பொருள் எனது வாழ்வில் நான் மீட்டெடுக்கவேண்டிய தமிழர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாகவே நான் உணருகிறேன் ஆகவே இதன் தேடுதலை எனது கைக்கு எட்டிய சம்பு மூலமாக துவங்குகிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 10

ஜூலை 4, 2020

தோண்டி

தமிழகத்தில் புழங்கிய பனை ஓலை பொருட்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகம் என்றே கருதுகிறேன். ஆகவே தான் அது தமிழகத்தை தன்னிகரற்ற ஒரு நிலப்பரப்பாக பனையோடு இணைத்திருக்கிறது. வேறு எங்கும் காணமுடியாத பொருட்கள் இங்கு இருப்பதோடல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு பொதுமையான பனை ஓலைப் பொருட்களும் இங்கு இருப்பது அதிசயம் அல்ல, ஏனெனில் இது பனை கலைகளின் தாய்வீடு. 

நீர் நிறைந்த பனை ஓலைத் தோண்டி

மிக சிறிய வயதில் பனை ஓலையில் செய்யப்பட்ட எண்ணற்ற பொருட்குவியலுக்குள் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அவைகளின் பெயர்கள் அவ்வயதில் எனக்குத் தெரியாது. அவைகள் எப்படி இருக்கும் என விவரித்தே அதனை நான் அடையாளப்படுத்திக்கொள்ள  வேண்டும். அவ்வகையில்  எனது சிறு பிராயத்தில் நான் ஆச்சரியமாக பார்த்த ஒரு பொருள் இன்றும் என் மனதில் நீங்கா நினைவுகளோடு இருக்கிறது. அதற்கு காரணம் என்ன? பல்வேறு  காரணங்கள் இருந்தாலும்,  திருமறைக்கும் எனக்கும் உள்ள உறவுதான் பனைமரத்துடன் இணைந்த தோண்டியை நான் நினைவுகூறச் செய்யும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

திருவிதாங்கூர் பகுதியில் கிணற்றில் நீர் இறைக்க தோண்டியை எடுத்துச் செல்லும் பெண்மணி. சுமார் 150 வருடங்கள் முன்பு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் போதகர் இல்லத்தின் பின்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் பனை ஓலையில் செய்த அழகிய தோண்டியை வைத்திருப்பார்கள். அப்படியில்லாதிருந்தால் கமுகுப் பாளையில் செய்த நீர் இறைக்கும் வாளியை வைத்திருப்பார்கள். இந்த தோண்டி ஒருசில வார காலமோ ஒரு மாத காலமோ பயன்பாட்டில் இருக்கும். பயன்படுத்துகிறவர்களின் கைப்பக்குவம் சார்ந்து அதன் வாழ்நாள் நீடிக்கும்.

ஒரு முறை  அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் கெட்டுப்போனது. கொசுக்கள் முட்டையிட்டு அதில் கூத்தாடிப்புழுக்கள் நிரம்பவே அந்த கிணற்றை இறைத்து சுத்தம்பண்ணினர். அந்த நிகழ்வின் இறுதியிலே ஒரு சடங்கு நடந்தது. புதிய நீர் ஊறி வருகின்ற தருணத்தில் எங்கள் கோவில்பிள்ளை அவர்கள் ஓர் பனை ஓலைத் தோண்டியில் உப்பும் புளியும் வைத்து அதை கிணற்றுக்குள் இறக்கினர். நான் இது எதற்கு என்றபோது கிணற்று நீரை சுத்தம் செய்ய என்று அப்பா சொன்னார்கள். அந்த வேளையில் எனது அக்காக்களில் யாரோ ஒருவர் “எலிசா” தீர்க்கதரிசி செய்தது போல என சொல்லக்கேட்டேன்.

திருமறையில் எலிசா எனும் ஒரு இறைவாக்குரைப்பவர் குறித்து (தீர்க்கதரிசி) விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் எலியா தீர்க்கதரிசியின் உடன் இருந்தவர். எலியா தீர்க்கதரிசியிடம் இருந்து இரட்டிப்பான வரம் பெற்றவர். அதாவது எலியா செய்த வல்லசெயல்கள் போல இரட்டிப்பான அதிசயங்கள் செய்யும் வரம் பெற்றவர் இவர். தோண்டியைக் குறித்து திருமறையில் சொல்லப்பட்டிருக்கும் பகுதி எனது சிறு வயதின் அனுபவத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றுணர்ந்தேன்.

“பின்பு அந்த பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது. நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,  அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”. (2 ராஜாக்கள் 2: 19 – 21)

சாமித்தோப்பு கிணற்றடியில்

திருமறையில் காணப்படுகின்ற தோண்டி என்ற வார்த்தை இவ்விதமாகத்தான் என் மனதில் நிலைபெற்றது. தமிழ் திருமறையில் ஒரு வார்த்தை காணப்படும்போது அது யூத கலாச்சாரத்தில் இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நமது புரிதலுக்காகத்தான் மொழிப்பெயர்ப்பே செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே தோண்டி என்கிற அந்த வார்த்தை நமது கலாச்சாரத்தில் வெகுவாக புழங்கியிருக்கவேண்டும், இல்லையென்றால் இவ்வார்த்தை புழங்கிய இடங்களிலிருந்து மொழிபெயர்பாளர்கள் இதனை எடுத்தாண்டிருக்கும்  வாய்ப்புமிருக்கிறது. பனை மரங்கள் நிறைந்த இடையன்குடி  பகுதிகளில் ஊழியம் செய்த பேராயர் கால்டுவெல் அவர்களும் திருமறை மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் எனப்தை நாம் அறிவோம்.

தோண்டி என்பது “தோண்டு”தல் என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அகழ்தல் என்ற வார்த்தைக்கு நிகராக தோண்டுதல் என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. தோண்டி துருவி, தோண்டி துழாவி போன்ற சொற்றொடர்கள் வழக்கத்தில் இன்றும் இருக்கின்றன. நீரை அகழ்ந்து எடுக்க பயன்பட்டிருக்கும் பொருளாயிருப்பதால் தோண்டி என பெயர் பெற்றதா?  அல்லது மண்ணை அகழ்ந்து எடுத்த கிணற்றிலிருந்து நீர் எடுக்க பயன்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதா?

இதற்கு எதிரான ஒரு நிலைப்பாடும் நமது மரபில் இருந்திருக்கிறது…

நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தா னொரு தோண்டி – அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

“நல்ல வழிதனை நாடு- எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”

– கடுவெளி சித்தர்

இவ்வகையில் தோண்டி குயவர்கள் செய்யும் மண்பாண்டம் எனவும் நாம் அறிய  முடிகிறது. நீர் மொள்ளும் தேவையினை கருத்தில் கொண்டு அனைத்து உலோக பொருட்களிலும் தோண்டி வடிவெடுத்திருக்கிறது. இங்கே கடுவெளி சித்தர் அதனை உயிர் உருவெடுத்த உடலுடன் இணைத்துச் சொல்லுகிறார்.

பனை ஓலை தோண்டி என்பது ஓலை பட்டையின் செவ்வியல் வடிவம் தான். ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டு தொன்மையான வடிவாக இது இருக்கலாம் என நான் அனுமானிக்கிறேன். அதற்கு காரணம் சாதாரண பட்டையிலிருந்து வித்தியாசப்பட்டு  வடிவ நேற்த்தி அடைந்திருக்கும்.  தோண்டியினை பார்ப்பதற்கு பரதநாட்டிய உடையைப்போல மடிப்புகளுடன் கவர்ந்திழுக்கும் அழகுடன் கச்சிதமாக இருக்கும். மடிப்பு குலையாதபடி இவ்விதமாக ஒரு தோண்டியினைச் செய்வது எளிதான காரியம் அல்ல. பனைபொருள்  அல்லாத கம்பு, மற்றும் தென்னை ஓலைப் பண்டி ஆகியவற்றை இணைத்தே இதனைச் செய்வதால் மிக முக்கிய கவனத்தைக்கோரும் ஒன்றாக இது இருப்பதில் ஐயமில்லை. பனை எவ்விதம் பிற தாவரங்களுடன் இணைவு கொள்கிறது என்பதற்கு இது அடையாளமாக இருக்கிறது.

நாகர்கோவில் அப்டா சந்தைக்கு தான் செய்த பனை ஓலை தோண்டியினை விற்பனைக்கு கொண்டு வந்த கலைஞர்.

குமரிமாவட்டத்திலுள்ள அய்யாவழி சமயத்தவர்,  பூவண்டர் தோட்டத்திலே வந்து அங்கிருக்கும் நாமக் கிணற்றில் குளிப்பார்கள். அந்த கிணற்றில் குளிப்பவர்கள் பெரும்பாலும் இன்றுவரை பனை ஓலையில் செய்த தோண்டியினைக் கொண்டே நீர் இறைத்து குளிப்பார்கள். பதியில் சென்று வணங்குமுன் இக்குளியல் மிக முக்கியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வற்றாத அந்த கிணற்றில் குளிப்பதற்கு என்று பனை ஓலை தோண்டியில் செய்யப்பட்ட வாளியைத்தான் பயன்படுத்துவார்கள்.  ஆகவே பனை ஓலைத் தோண்டியினை விற்பனை செய்வதற்கென்றே ஒரு கடை அங்கே இருக்கும். இன்றும் தோண்டி தமிழகத்தில் எஞ்சி இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அய்யாவழி பதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சடங்கு ஒரு முக்கிய காரணம்.

விற்பனைக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் பனையோலை தோண்டி

அப்படியே, திருமண வீடுகளுக்கு வாங்கும் பனை ஓலைபொருட்களிலும் கண்டிப்பாக தோண்டி இருக்கும். அனைத்து சமையல்காரர்களும் தோண்டியினை குறிப்பிட தவறுவதில்லை. குறிப்பாக சாம்பார் கோரி எடுப்பதற்கும், அரிசியில் நிற்கும் தண்ணீரை கோரி மாற்றுவதற்கும் தோண்டியினை  பயன்படுத்துவார்கள். மேலும் அடுப்பில் இருக்கும் வார்ப்பை கீழிறக்காமல் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யவும் தோண்டி தான் பயன்படும். சூடு நிறைந்த பாத்திரத்தில் தோண்டி பயன்படுத்தி பதார்த்தங்களை எடுக்கும்போது அது  எடை அற்றதாகவும் சூட்டைக் கடத்தாததாகவும் இருப்பதால் சமையல்காரர்கள் இன்றளவும் இதனை பயன்படுத்திவருகிறார்கள். கூடுதலாக ஓலையின் சுவை உணவில் ஊடுருவி தனித்துவ வாசனையினை உணவிற்கு கொடுக்கும். சமையல்காரர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்தவில்லையென்று சொன்னால் இதன் உற்பத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாமலே போயிருந்திருக்கும். 

தோண்டி பிடிக்கும் முறை

பனை ஓலையில் தோண்டி செய்வது பெரும்பாலும் தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தாம். பொதுவாக வீட்டிற்கு தேவையான தோண்டி என்றால், அவைகள் குறித்த குறிப்புகள் பனையேறியிடம் சொல்லப்படும். எத்தனை ஈக்குகள் நிறைந்த சிறகு வேண்டும் எனக் குறிப்பிடுவார்கள். இரண்டாம் குருத்து அல்லது மூன்றாம் குருத்து போன்றவைகளையே தோண்டி செய்வதற்கு பெரும்பாலும் தெரிந்துகொள்ளுவார்கள். பனையேறிகள், தேவையான ஓலையினை தெரிவுசெய்து பனையிலிருந்தே கிழித்து, அதனை தங்கள் அரிவாள் பெட்டியில் எடுத்து பத்திரமாக இறக்குவார்கள். ஏனெனில் பனை ஓலை கிழிந்துவிட்டால் தோண்டி செய்ய இயலாது. கொண்டு வந்த ஓலையினை நன்றாக வெயிலில் போட்டு உலர வைப்பார்கள். உலர்ந்த ஓலையினை நீரில் முன்றுமணிநேரம் போட்டு அதன் பின்பே தேவையான வடிவில் எடுத்துக் “கோட்டு”வார்கள். பின்னல்கள் செய்யும் அறிவு ஏதும் இதற்கு தேவை இல்லை எனினும், தோண்டி செய்வோர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே. எனது வாழ்க்கையிலேயே தோண்டி செய்யும் கலைஞர்கள் மூவரைத்தான் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் ஓலைக் கிழிந்துபோனால்  ஊசியைக்கொண்டு தென்னை குருத்தோலைப் “பண்டி”யினை எடுத்து ஓலையினை தைக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

தோண்டி நேர்த்தியான வடிவம் பெறுகின்றது

பனை ஓலைகளை தெரிந்து எடுப்பது முதல் அனைத்தும் கவனமாக செய்யவேண்டும். தோண்டி செய்து முடித்தபின்பு கூட சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அதற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே இவைகளை ஒன்றிணைத்து ஒரே சரடில் கட்டி, ஒற்றை சுமடாக்கி எடுத்துச் செல்லுவார்கள். பூமாலை கட்டுவதுபோல அவைகளைக் கட்டி தோரணமாகவோ அல்லது தொங்லாகவோ விற்பனைக்கு போட்டுவைப்பார்கள்.  இன்று கிடைக்கும் தோண்டிகள் சுமார் 3 முதல் 5 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டவைகளாக இருக்கின்றன.

பனை ஓலை தோண்டியினை பெரும்பாலும் சந்தைக்குச் செல்லும் தாய்மார்கள் மீன் வாங்கிவர பயன்படுத்துவார்கள். மீன் காய்கறி போன்ற உணவுபொருட்கள் முதன்மையாக தோண்டியில் இருக்கும். இவ்விதமான பொருட்களின் பயன்பாடுகள் இன்று நம்மை விட்டு காணாமல் போன பின்பு, அவ்விடத்தை பிளாஸ்டிக் எடுத்துக்கொண்டது. வரும் நாட்களில் இவைகளை நாம் மீட்டுக்கொண்டுவர முயற்சிப்பது நெகிழிக்கு எதிரான ஒரு போராட்ட வடிவாக இருக்கும்.  

பனை ஓலைபொருட்களில் தனித்துவமானதும் ஆசிய நாடுகளில் முழு வீச்சுடன்  விரிவடைந்திருப்பதுமான பனை ஓலைத் தோண்டி என்பது  விரிவாக ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டிய ஒரு பொருளாகும். ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பனை ஓலையில் செய்யப்படும் தோண்டியை ஒத்த ஒரு பொருள் இசைக்கருவியாக மாறியிருக்கிறது…ஜலதரங்கம் போல இசைஎழுப்பும் இந்த கருவியினை சசண்டோ என்று அழைக்கிறார்கள். தோண்டி செய்வோர் இன்றுவரை அதற்கான அங்கீகாரம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட தோண்டி

பனை ஓலையின் பொருட்களில் வழக்கொழிந்து போகும் நிலையில் உள்ள பொருட்கள் ஏராளம் உண்டு. அவைகளில் தோண்டி மிக முக்கியமான ஒன்று. கடைகளில் கிடைக்கும் தோண்டி அதன் ஆகச்சிறந்த அழகுடன் செய்யப்படுவதில்லை என்ற குறைபாட்டினை தோண்டி செய்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்திலேயே தென் மாவட்டங்களைத் தவிர்த்து, தோண்டி செய்யும் வழக்கம் இருக்கிறதா என்கிற கேள்வி எஞ்சியிருக்கிறது. என்றாலும், இலங்கையிலும், ஆந்திராவிலும் மராட்டியத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது இருப்பதாக அறிகிறேன்.

தாய்லாந்தில் தோண்டி பிடிக்கும் மனிதர்

குமரி மாவட்டத்தில் தோண்டி என குறிப்பிடும் இதனை, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் தோண்டி பாட்டை எனவோ அல்லது வெறுமனே “பட்டை” எனவோ அழைப்பது வழக்கம். இலங்கையிலும் இதனை பட்டை என்றே அழைக்கிறார்கள். மராட்டியத்தில் இதனை துரோண் என்றும், ஆந்திராவில் உள்ள கோயா பழங்குடியினர் இதனை துரோணா என்று குறிப்பிடுவதாக அறிந்தேன். இவைகளை உறுதிப்படுத்தும்போது மேலதிக தகவல்கள் நமக்கு கிடைக்கும். தாய் மொழியில்  திமாபைஜக் (ติหมาใบจาก) எனவும் தெலுங்கில் தாட்டி சேதா எனவும் வழங்கப்படுகின்றது

தாய்லாந்தில் கினாற்றிலிருந்து நீர் இறைக்க தோண்டி பயன்படுத்தப்படுகிறது

கம்போடியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் இவ்விதமான தோண்டிகள் பனையேறிகளுக்கு மிக முக்கிய பயன்பாட்டு பொருளாக இன்றளவும் இருக்கிறது. ஆசியா என்னும் நிலபரப்பில் இவ்விதம் ஒரு பொருள் பரந்து விரிந்து இருக்குமென்றால், அதன் வரலாற்று பின்புலம் ஆராயத்தக்கது. தமிழகத்தின் ஒரு சில பகுதியில் காணப்படாத தோண்டி எப்படி ஆசியா முழுக்க வியாபித்திருக்கிறது என்கிற கேள்வி பல வரலாற்று உண்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம். 

தோண்டியோடு பனை ஏறும் இத்தோனேசிய பனையேறி

பனை ஓலை தோண்டி செய்கிறவர்கள் இன்றும் குமரி மாவட்டத்தில் உண்டு. ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது சுலபம் அல்ல. பனை ஏறுகிறவர்களோ அல்லது பனை சார்ந்த வாழ்வு கொண்டுள்ளவர்களோ தோண்டி செய்வார்கள் என்பது உண்மைதான் என்றாலும், எல்லாரும் தங்களுக்கு தோண்டி செய்யத் தெரியும் என பறையடித்து திரிவதில்லை.  தெரியும் என்றால் கூட அதனை ஒரு தகுதியாக பொதுவெளியில் கூற இயலாதபடி சூழ்நிலை மக்களைப் பிரித்து வைத்திருக்கிறது.

எனது மனைவி ஜாஸ்மின் அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தான் திரு சகாயம்  அவர்கள் இருக்கிறார்கள். ஜாஸ்மினுடைய பெரியப்பா தான் அவர். கிட்டத்தட்ட 10 வருட திருமண வாழ்வில் ஒருபோதும் அவரைக் குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை. பல திருமண வீடுகளில் நாங்கள் எதிர்பட்டிருப்போம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்திருப்போம். ஜாஸ்மினிடம் ஒருநாள் தோண்டி செய்கிறவர்கள் நமது ஊரில் உண்டா என கேட்டபோது அவள் விசாரித்து பெரியப்பா செய்வார்கள் என கூறிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

திரு சகாயம் அவர்கள் குமரிமாவட்டம் கருங்கல் என்ற ஊரை அடுத்த தேவிகோடு பகுதியில் வாழ்கிறவர். சற்றே கூச்சத்துடன் தான் தனக்கு தோண்டி செய்யத் தெரியும் என ஒத்துக்கொண்டார்.  அவரது தந்தையார் தோண்டி செய்வதை கண்ணால் பார்த்து இதனைச் செய்ய கற்றுக்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க இவருக்கு பனை ஏறத் தெரியாது.  இவரது சிறு பிராயத்தில் தான் பனை சார்ந்த தொழில்கள் உச்ச கட்டத்தில் இருந்து சரிவு நோக்கி வந்தது. குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் பனை சார்ந்து ஒரு விலகலை கடைப்பிடிக்கும் காலகட்டம் எழுந்தபோது தனது ஐந்து குழந்தைகளையும் பனை சாராத தொழில்களுக்கு மாற்றி விட்டார்.

காய்ந்த பனை ஓலையினை ஊறப்போட வேண்டும் பின்னர் அது பதமான பின்பு அதனை சரியான முறையில் மடித்து தோண்டிப் பட்டையைப் பிடிக்கவேண்டும் என்றார். பல ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினை செய்வதை நான் பார்த்தாலும் அவர் நேர்த்தியாக என் கண்களின் முன்னால் அதனை உருபெறச் செய்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினைச் செய்தாலும் எவ்வகையிலும் அவர் அக்கலையினை மறந்துவிடவில்லை.

நீர் இறைக்கும் தேவைகள் இன்று குறைந்துவிட்டன. மற்றும் பல்வேறு விதங்களில் நீர் இன்று நம்மை வந்து அடைந்துவிட்டன.  இக்கால சுழலில் இதன் தேவை தான் என்ன என்று பலரும் நினைக்கலாம். பனை ஓலைத் தோண்டி இன்று உணவகங்களில் உணவை கொடுக்க உதவும் ஒன்றாக இருக்கும். அப்படியே பூக்களை அலங்கரிக்க இதனை பயன்படுத்தலாம். தமிழகம் என்று மாத்திரம் அல்ல இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஒரு சிறப்பான புது முயற்சிக்கு அழிந்துவரும் தோண்டி வேலைவாய்ப்பினை பெருக்க வாய்ப்பளிக்கும் ஒரு அட்சய பாத்திரம் என்றால் அது மிகையாகாது.

பண்டி: தென்னை / பனை ஓலைகளின் ஓரப்பகுதி

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 9

ஜூன் 29, 2020

ஓலைக் குழல்

சிறு பிள்ளைகளது வாழ்வில் விளையாட்டுப் பொருட்கள் இன்றியமையாதது. நான் சிறுவனாக இருக்கும்போதே விதம் விதமாக அனேக விளையாட்டு பொருட்கள்  விற்பனைக்கு வந்துவிட்டன. அதாவது விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சூழல் நிலைபெற்றுவிட்ட ஒரு காலம்.  எனக்கான  விளையாட்டுப் பொருட்கள் என ஏதும் வீட்டில் வாங்கித்  தந்ததில்லை. அந்நாட்களில்  நமக்கான விளையாட்டுப்பொருட்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான்.  நான் விரும்பி விளையாடிய விளையாட்டு கச்சி (கோலி) தான் விலை கொடுத்து வாங்கிய பொருளைக் கொண்டு விளையாடிய விளையாட்டு.  அஞ்சு பைசாதான் ஒரு கச்சியின் விலை.

கச்சி என்ற களைச்சி

விளையாட்டுப் பொருட்கள் பல்வேறுவிதமானவைகள் மாத்திரம் அல்ல பல்வேறு சூழல்களையும் பின்னணியங்களையும்  வெளிப்படுத்த வல்லவை. இன்றைய சூழலில் குழந்தைகள் சர்வதேச பொம்மை வணிகத்திற்குள் இழுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் கைகளில் தொட்டு உணரும் வகையில் பயன்படுத்திய பொம்மைகள் போய் இன்று தொடு திரையில் விளையாடும் மென் விளையாட்டுக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஆகவேதான் இவ்வித இணைய விளையாட்டுக்களிலிருந்து தங்கள் குழந்தைகள் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன்  இன்றைய பெற்றோர்  தங்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் கையிலிருக்கும் விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எவ்விதமான எதிர்காலத்தை கட்டமைக்கப்போகிறார்கள் என்பதையே குறிப்பிடும் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றி இருக்கிறது. இன்றும் பெரும்பாலும்  பெண் குழந்தைகளுக்கு சமையல் பாத்திரம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் ஆண்களுக்காக கார் பொம்மைகள் மற்றும் துப்பாக்கிகள் என பாலின வேறுபாட்டை காண்பிக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  பால் சார்ந்த திணிப்பு கூடாது என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள்  சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டின் மூலம் கல்வி என பல்வேறு வகைகளில் விளையாட்டுக்கள் அர்த்தம் பெறுவதைக் காணலாம்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் இன்று தான் என்று அல்ல, தொல் பழங்காலம் முதலே விளையாட்டுபொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் பெரியவர்களின் வாழ்வில் காணப்படும் பொருட்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  அந்தந்த கலாச்சாரத்தையும் காலகட்டத்தையும் வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கான பொம்மைகளின் உலகம் பிரம்மாண்டமானது.

நான் எப்போதும் கூறிவருவதுபோல, பனை மரம் குழந்தைகளுக்கான மரம். பனை மரத்திலிருந்து எடுக்கும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கான அனேக விளையாட்டுப்பொருட்கள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்றாலும், அவைகள் பட்டியலிடப்படவோ அவைகளின் பின்னணியம் சார்ந்த தேடுதல்களை முன்னெடுக்கவோ முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை.

ஆதி காலத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாழ்வில் காணப்பட்ட ஆயுதங்களை போலவே பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டனர். அல்லது அவ்விதமான பொருட்களை போலி செய்து பயன்படுத்திவந்தனர்.  பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஆயுத பயிற்சி தொல் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என கூறுவார்கள். மாத்திரம் அல்ல, பல்வேறு பழங்குடியினரிடையே வேட்டையாடும் மிருகங்களையே குழந்தைகளுக்கான விளையாட்டுபொருட்களாக செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

சமையல் பொருட்கள், பயணிக்கும்  வாகனங்கள், ஆயுதங்கள், மனிதர்கள், உயிர்வாழினங்கள் என பல்வேறு பொருட்களை விளையாட்டுபொருட்களாக செய்துவந்திருக்கும் சிறுவர்கள், சில நேரங்களில் பனை சார்ந்து வாழும் வாழ்வை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் பனையுடன் விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியலை மட்டும் நம்மால் ஒருபோதும் வகுத்துவிட இயலாது. பொதுவான விளையாட்டுக்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்கள் அதற்கே உரிய நுட்பமான வேறுபாடுகள் என பனை குழந்தைகளுடன் உறவுகொள்ளும் விதமே ஒரு விளையாட்டுத்தான்.

கற்கால குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள்

குழந்தைகள் விளையாட்டு பொருட்களுடன் செலவு செய்யும் நேரம் என்பது இன்று மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்களைச் சூழ நிற்கின்ற புற உலகத்தை பார்க்கும் ஒரு கருவியாக தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன. விளையாட்டைப் பொறுத்தவரையில் குழந்தைகளின் சிந்தனைத் திறனை கூர்மைப்படுத்தும் மகிழ்வின் தருணங்களாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அதே வேளையில், குழந்தைகள் ஒருவரோடொருவர் பழகவும், தத்தமது திறன்களை மேம்படுத்தவும் விளையாட்டுப்பொருட்கள் அவசியமாக இருக்கின்றன.

ஒரு குழந்தை தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலிலிருந்து தனக்கான விளையாட்டு பொருளை உற்பத்தி செய்யும்போது அந்த குழந்தை  தனது பண்பாடையும் வாழ்வையும்  இணைத்துப்பார்க்கின்றது. இந்த ஒத்திசைவினை உணர்ந்துகொள்ளும்போது சூழியல் சார்ந்த விழிப்பூணர்வு விளையாட்டு வாயிலாக அறிமுகமாகிறது. தன்னைச் சூழ இருக்கும் இயற்கையைக் காக்கவேண்டும் என்கிற எண்ணம் போன்றவை மேலெழுகின்றன.

குழந்தைகள் தாமே விளையாட்டுப் பொருட்கள் செய்கையில் மேலும் இருவிதமான செயல்கள் நிகழ்கின்றன. ஒன்று குழந்தை ஒரு பொருளை உருவாக்கும் துடிப்பு மற்றும் உற்சாகத்தை மன ரீதியாக அடைகிறது. அப்படியே அந்த குழந்தையின் உடல் இயக்கங்கள் மிக சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமான உடல்  மற்றும் மன இயக்கமே குழந்தைக்கு மிக முக்கிய ஆற்றல்களை வழங்க வல்லன என்பதாக சமூகம் புரிந்திருக்கிறது. ஆகவே பெரும்பாலும் குழந்தைகளின் உடல் மற்றும் மன இயக்கம் சீரடைவதற்காக இவ்வித விளையாட்டுக்களை ஊக்குவிப்பார்கள்.

பனை ஓலையினை எடுத்து அதனைச் சுற்றி கட்டும் பொருளாக மாற்றும் நிலையிலிருந்து பட்டை மடிக்கும் ஒரு புது வழிமுறையினை கண்டுகொண்டதுவரைக்கும் ஒரு மிகப்பெரிய தொலைவினைத் தான் நமது முன்னோர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். அவ்வித நெடும்பயணத்தில் ஓலைகள் பெற்ற வடிவங்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகள். நீடித்து உழைப்பவை மற்றும் சூழியல் மாசு விளைவிக்காத இவ்வித பொருட்கள் யாவும் இன்றைய குழந்தைகளை வந்து அடையாதது தான் சூழியல் சீர்கேடுகளுக்கு காரணம்.

ஓலைகளை பல்வேறு வடிவங்களில் மாற்றி பயன்படுத்த இயலும் என்பதை நாம் கவனித்திருப்போம். “கோட்டு”தல் என்பது ஓலைகள் இருக்கும் விதமாகவே வைத்து அவைகளை ஒரு பாத்திர வடிவிற்கு ஏற்ப கொள்கலனாக மாற்றுவது. “முடை”தல் என்பது ஓலைகளை சீராக கிழித்து பின்னர் அவைகளை பின்னி  பொருட்களை உருவாக்கும்  ஒரு முறைமை. பின்னல்களில் ஒன்றின்மீது ஒன்று பரவி செல்லும் முறைமைகளில் பலவிதம் என்றால், ஏடாக மடக்கி கலயத்தின் வாயில் நுழைக்கும் விதம் மற்றொருபுறம். ஓலைகளை திரித்து கயிறாக்குவது, அப்படியே அவைகளை எழுதும் ஏடாக மாற்றுவது வேறுவகை. இவ்வித பின்னணியத்தில் தான் ஓலைகளைச் சுருட்டி பயன்படுத்தும் பொருட்கள் முக்கிய கவனத்தைக் கோருகின்றன.

இசைக்கருவிகளின் ஆரம்ப நிலை குறித்து பேசும்போது கற்கால துவக்கத்திலேயே இசையின் ஆரம்ப வடிவம் இருந்திருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் கற்களைத் தட்டும் சத்தத்தில் ஏற்படும் தாளம் இசையின் ஆதி நிலை என்கிறார்கள். ஆனால்  இசைக்கருவி என்று வரும்போது 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொடை எலும்பில் இடப்பட்ட துளைகளை காண்பித்து இதுவே இசையின் ஆரம்ப வடிவம் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். பொதுவாக மூங்கில் காடுகளில் வண்டுகள் துளைத்த மூங்கில்களின் வழியாய் காற்று நுழைந்து எழுப்பும் ஒலிகளே ஆதி மனிதனுக்கு இசை குறித்த அறிமுக பாடம் அளித்திருக்கும் என சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எப்படியும் நாம் மீண்டும் மீண்டும் வந்து நிற்கும் ஓரிடம் உண்டு. அது மனிதர்கள் தங்கள் குரலால் எழுப்பிய ஓசை தான் அது. ஒலியின் மீது ஏற்பட்ட ஒரு தேடுதல் மனிதர்களை பண்பாடு நோக்கி அழைத்து வந்தது என்றால் அது மிகை அல்ல.

தமது குழந்தைகளிடம் அன்னையர் உரையாடிய விதத்தினையும் மிக முக்கிய குறிப்பாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கூவல் முறை, சீட்டிகை, கொட்டல், உறுமல், முனகல்  போன்றவை அடிப்படையான சத்தங்களாக இருந்திருக்கும். அன்னையரின் தாலாட்டு தான் இசையின் அடி நாதமாக இருத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவைகளில் சற்றெனும் குறிப்பிடப்படாத ஒன்று உண்டு அது  சங்கு தான். கடல் சங்கின் உள்ளிருக்கும் ஊன் உண்ணப்பட்டு எஞ்சி இருக்கும் பகுதியில் எழுப்பும் சத்தம் பல மைல் தூரம் கேட்கும் சக்தி வாய்ந்தது. இதற்கு இணையாகவே மிருகங்களின் கொம்புகளும் பயன்பாட்டில் இருந்தன. ஒலியெழுப்பும்படியாக இவைகள் புழக்கத்தில் இருந்தன என தொல்லியலாளர்களும், கற்கால ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.

அப்படியானால் இதே காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிய ஒலி எழுப்பும் பனை ஓலைக் கருவியினை நாம் விட்டுவிட இயலாது. ஓலையினை சுற்றி அதனை கொம்பு வடிவத்தில் ஒரு பக்கம் குவித்தும் மற்றொறு பக்கம் விரிவாக்கியும் செய்யும் வடிவம், மிக எளிதானது. எலும்பில் துளையிடும்  அறிவிற்கு முந்தைய நிலை தான் ஓலையில் செய்யும் ஒலிஎழுப்பும் கருவி. இன்று சிறுவர்கள் விளையாட்டிற்காக செய்யும் இந்த ஊதுகுழல் மனித நாகரீகத்தின் முதல் குரலாக எழுந்த ஓலையின் ஒலி என்பதாக அறைகூவுகிறது. ஓசை அல்லது ஒலி எழுப்புவதால் தான் அது ஓலையானதா என்பது கூட ஆய்வுக்குரிய வார்த்தையாக  இருக்கிறது.

பெரும்பாலும் இடையர் வாழ்வில் ஒலி எழுப்புவது ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. குழலூதும் கண்ணன் போன்ற படிமங்கள் இவ்வித தொல் அடையாளங்களினூடாக எழுந்திருக்க வாய்ப்புள்ளது. அரசு மற்றும் மத  தலைவர்கள் பலரும் சத்தங்களுடனே அறியப்பட்டிருக்கிறார்கள்.  போர் முரசிற்கு இணையாகவே எக்காளங்கள் கெம்பீர சத்தம் எழுப்பியிருக்கின்றன. சத்தங்களே பழங்கால வழிகாட்டி.

பால்யபருவத்தில் பாட்டி வீட்டின் பின்புறம் கிணற்றடியில் ஒரு பூவரச மரம் நின்றது நினைவிற்கு வருகிறது. இலைகளை சுருட்டி ஊதினால் போதும் நாம் கேட்டிராத கமறல் போன்றதொரு ஒலி எழும்பும். ஆனால் அவ்விதமான ஒரு ஒலியினை பனை ஓலையினைக்கொண்டு எழுப்பமுடியும் என்று நான் வெகு சமீபகாலம் வரை எண்ணிப்பார்த்திருக்கவில்லை.  

ஊதுகுழலின் தேவை எதற்கு இருக்கிறதோ இல்லையோ ஒருவிதமான சத்தம் எழுப்ப கண்டிப்பாக பயன்பட்டிருக்கவேண்டும். தூரத்திலிருந்து  எச்சரிக்கை அளிக்கவோ அல்லது சத்தம் எழுப்பி உதவி கோரவோ கூட பயன்பட்டிருக்கும்.

எனது பனைமர வேட்கைப் பயணத்தின்போது சந்தித்த  ஹாரிஸ் பிரேம் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் எனை அழைத்தார். பொதுவாக அவர் அடிக்கடி அழைப்பவர் இல்லை. பாஸ்டர் இங்கே இரண்டுபேர் வந்திருக்கிறார்கள்  அவர்கள் கையில் இருக்கும் வாத்தியக்கருவி பார்ப்பதற்கு பனை ஓலையில் செய்யப்பட்டதுபோல இருக்கிறது. ஒரு பேஸ் சத்தம் எழுகிறது என்றார்கள். எனக்கு அதன் சத்தத்தையும்  படத்தையும் அனுப்பினார்கள். பனை ஓலையில் தான் செய்யபட்டிருக்கிறது என நான் அப்போது உறுதி கூறினேன். ஏனென்றால், ஏற்கெனவே இந்தோனேசிய தீவுகளில் இது போல ஒரு இசைக்கருவியினைப் பார்த்திருக்கிறேன் என்றேன்.

இதற்கு ஒப்பாயிருக்கும் ஒரு இசைக்கருவியினை மஹாராஷ்டிராவில் பார்த்தேன். ஆரே பகுதியில் ஒரு பழங்குடியின போராட்டத்தின்போது தார்பா என்ற இசைக்கருவியினை ஒருவர் வாசிக்க அதற்கேற்ப பழங்குடி பெண்கள் இணைந்து ஆடினர். ஆகவே இவ்விதமான ஒரு இசைக்கருவி தொல் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதை என்னால் உறுதி செய்ய முடிந்தது.

தார்பா – வார்லி பழங்குடியினரின் பனை ஓலையில் செய்யப்பட்ட இசைக்கருவி

2017 ஆம் ஆண்டு நான், செந்தமிழன் அவர்கள் செம்மை சார்பில் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ராமனாதபுரம் சென்றிருந்தேன். சுமார் 60 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், திரு. பாண்டியன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் ஒரு விவசாயி, பனை தொழில் சார்ந்த எந்த ஈடுபாடு அவர்களுக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்து செல்கையில் தான் பனை சார்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது தோழர், என கூறி, பனை ஏற தேவையான கருவிகளை வாங்கிச் சென்றார்.

எங்கள் சந்திப்பு மிக நெருக்கமாக காரணம், முதல் நாள் இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் பனைத்தொழில் செய்யும் இடங்களில் சென்று பார்த்தோம். பனக்காட்டிற்குள் சென்ற அந்த நடையில் தான் பாண்டியன் அவர்கள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு  ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓலையை அதன் வடிவம் ஒரு கூம்பு வடிவத்தை அடைந்தது அதனை ஊதி ஒலி எழுப்பினார்கள். பிரம்மாண்டமான சத்தம் எழுந்தது. பல்வேறு வகைகளில் அதில் ஒலி எழுப்ப முடியும் என்பதை பாண்டியன் அன்று நிகழ்த்திக்காட்டினார்கள். அங்கு வந்திருந்த அனைவருமே குழந்தைகளாக மாறிவிட்ட ஒரு உணர்வு அந்த சத்தத்தால் ஏற்பட்டது.

பாண்டியன் தான் செய்த பீப்பீ வாத்தியத்தை வாசிக்கிறார்

தமிழகம் முழுவதுமே குழந்தைகள் ஓலைகளைக் கொண்டு பீப்பீ சத்தம் எழுப்பி விளையாடியிருக்கின்றனர். அந்த விளையாட்டு குழந்தைகளுக்கு ஓலைகள் குறித்த ஒரு அறிமுகம் என்றால் அது மிகையல்ல. பின்னல்களையோ வேறு விதமான ஓலைப்பயன்பாடுகளையோ அறியும் முன்பதாகவே ஓலைகளை எடுத்துச் செய்யும் இவ்வித பொருள் எளிமையானதும் பெரு மகிழ்வளிப்பதுமாகும்.

பாண்டியன் தான்  சார்ந்திருந்த விவசாயம் பொய்த்துபோனதால் 2017 ஆம் ஆண்டு முதல் பனை மரம் ஏற துவங்கி இன்று வெற்றிகரமான பனை தொழிலாளியாக செயல்பட்டு வருகிறார். செம்மை அவரது பனை சார்ந்த பீப்பீ விற்பனைக்கான ஒரு களத்தினை சென்னையில் மரபு கூடல் என்ற வகையில் செய்து கொடுத்தது ஒரு முக்கிய திருப்புமுனை. குழந்தைகளால் விரும்பி வாங்கப்பட்ட அந்த “விளையாட்டு” இசைக்கருவிதான் அவருக்கு பனை தொழில் சார்ந்து இயங்குவதற்கு ஊக்கமருந்தாக இருந்திருக்கிறது. சிறு வயதில் அவர் விளையாட்டாக செய்து பழகிய ஒன்று பிற்கலத்தில் அவரது வாழ்விற்கே அடிப்படையான ஒன்றாக மாறிப்போன அதிசயம் இது.

பாண்டியன் பனை ஏறுவதை தொழிலாக கொண்டிருந்தாலும் இன்றும் சிறுவர்களுக்கான ஒலியெழுப்பும் பீப்பீ செய்து வருகிறார். சிறு குழந்தைகளுக்கான பனை ஓலை பொம்மைகளை செய்ய கற்றுக்கொடுக்கிறார். அவர் சார்ந்திருக்கும் நரசிங்கனூர் என்ற ஊரினை பனை சார்ந்த ஒரு மாதிரி ஊராக மாற்றிக்கொண்டு வருகிறார். இன்றுவரை பாண்டியனுடன் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன் பாண்டியன் அவர்களின் ஊருக்கு இருமுறை சென்றுள்ளேன்.  பாண்டியன் குறித்து தி இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

பாண்டியன், புதிதாக பனை ஏற விரும்புகிறவர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும், பனை மரம் ஏற தனது 12 வயது இளைய மகள் கரிஷ்மாவை ஊக்கப்படுத்தியும் வருகிறார். பெரும்பாலான பனை ஆர்வலர்களுக்கும், பனையேறிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.

பனை ஓலை கொம்பூதி அறிவிப்போம் பனை மரம் குழந்தைகளுக்கானது என்று.

அருட்பணிகாட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 8

மே 29, 2020


விசிறி


பனையோலை பட்டையினைக் குறித்துப் பார்க்கையில், பல பண்பாடுகளில் எப்படி அவை ஒரே வடிவத்துடன் பல யுகங்களாய் மாற்றமின்றி வந்தடைந்திருக்கிறது என ஆச்சரியத்துடன் பார்த்தோம். இதற்கு நேர் எதிரான ஒரு முறைமை இருந்திருக்கிறதையும் ஆச்சரியத்துடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காரணம், அதன் பின்னணியம், விரிவு போன்றவற்றை தேடி கண்டடைவது பேரானந்தம் தான். அவ்வகையில் நாம் அனைவரும் அறிந்த கை விசிறி குறித்த ஒரு பார்வையினை முன்வைக்கிறேன்.


திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து கூறும்போது “தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். (மத்தேயு 3: 12) தூற்றுக்கூடை என்பது fan / winnowing fork என்பதாக ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கிறது. Fan என்கிற வார்த்தை vannus என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. அது ரோமர்கள் தானியங்கள் பிரிக்க பயன்படுத்தும் புனிதமான கருவி ஒன்றினைச் சுட்டி நிற்கின்றது.

சாதாரண விசிறியின் ஓரங்களில் காணப்படும் பூவேலைகள்


விசிறி குறித்து ஒரு நகைச்சுவைக் கதையே உண்டு. விசிறி விற்கும் வியாபாரி ஒருவன் அரசரிடம் தான் விற்கும் விசிறி எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாது என்று கூறி தனது விசிறியை விற்றுவிடுவான். அரசர் அதனை பயன்படுத்துகையில் அது பழுதடைந்துவிடும். கோட்டையைக்கூட தாண்டாத அந்த வியாபாரியை அரசர் தனது வீரர்களைக் கொண்டு அழைத்து வந்து, என்னை எப்படி நீ ஏமாற்றலாம் எனக் கேட்டார். “அய்யா என் மீதோ என் விசிறியின் மீதோ பிழை இருக்காது தாங்கள் அதனை பயன் படுத்திய விதத்தில்தான் பிழை” என வியாபாரி அதற்கு பதிலளித்தான். “அப்படியானால் அந்த விசிறியை எப்படி கையாளவேண்டும் என்பதை நீ எனக்கு காண்பி” என அந்த அரசன் கேட்க, வியாபாரி விசிறியை ஒருகையால் முகத்தின் முன்னால் பிடித்துக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைக்கவேண்டும் என்று வியாபாரி செய்து காண்பிப்பார்.

விசிறின் விசிறியாக


விசிறி என்றவுடன் எனக்கு எனது பாட்டி வீடுதான் ஞாபகம் வரும். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது வேனிற்கால விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பாட்டி வீட்டின் தரை, சாணி மெழுகப்பட்டிருக்கும், பனை ஓலைப் பாயில் தான் படுக்கவேண்டும். மேலும் மின்விசிறிகள் கிடையாது. இவை அனைத்தும் அன்றைய சூழலில் நான் அறிமுகம் செய்திராத வாழ்க்கைமுறை. பகல் வேளைகளில் நண்பர்களுடன் நன்றாக விளையாடலாம். ஆனால் இரவு நேரம் பாட்டி வீட்டில் தங்குவது எனக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலைக் கொடுத்தது. வேறு வழி கிடையாது. புழுக்கம் நிறைந்த அந்த இரவுபொழுதுகளில் அங்கே தான் தங்கவேண்டும். அங்கே எனக்கிருந்த ஒரே ஆறுதல் பனையோலை விசிறி தான். ஆங்கில எழுத்து P வடிவில் காணப்படும். அது மிக பெரிய தொழில் நுட்பம் கொண்ட ஒன்றும் அல்ல இருந்தாலும் பாட்டி ஒரு முறை விசிறிவிட்டால் போதும் உடலே குளிர்ந்து சிலிர்த்துவிடும். பனைஓலைக்குள் அந்த காற்று எப்படி அமைகிறது என்று தான் எனக்கு புரியவேயில்லை.

விசிறி மொழி


பனை விசிறி: நாக்கில் சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும் என்று ஒரு குறிப்பினைப் படித்தேன். ‘அட்சய திருதியை’ யில் பனை ஓலை விசிறி உள்ளிட்ட சில பொருட்களை வழங்குவது சிறப்பானது எனும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பனங்காட்டு ஓலைகள் வீசும் காற்று மருத்துவ குணமுடையவைகள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு நண்பர் பனங்காட்டில் சென்று படுத்து உறங்கி புத்துணர்ச்சியோடு வந்தார். நான் சந்தித்த ஒரு சித்த மருத்துவரும் பனை ஓலை விசிறியின் முக்கியத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.
விசிறிகள் உலகில் வெகு அதிகமாக பரவி இருந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். பல்வேறு நாடுகளில் விசிறி முக்கியமான ஒரு அலங்காரப்பொருளாக இருந்திருக்கிறதைப் பார்க்கலாம். மேலும் வாழ்வின் பல்வேறு தருணங்களிலிலும் பனையோலை விசிறி இணைந்து வந்திருக்கிறதை நாம் அறியலாம். ஒவ்வொன்றும் விரிவான பின்புலம் கொண்டவை. இக்கட்டுரைத் தொடரில் நாம் ஆராய்ந்து முடியாதவை.

கலை நேர்த்தியுடன் செய்யப்பட்ட விசிறி


உலகெங்கும் பார்க்கையில் விசிறி சமயச் சடங்குகளோடு, அரச குலத்தினரோடு உயர்குடியினரோடு தொடர்புகொண்டிருப்பதைக் காணமுடியும். பல்வேறு சூழல்களில் ஆன்மீக குறியீடாக விசிறி பயன்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் தந்தத்திலும், தங்கத்திலும், தாமிரத்திலும் செய்யப்பட்டன. இயற்கையில் கிடைப்பவைகளைத் தாண்டி இவைகள் பயன்படுத்தப்பட்டது. விசிறிகள் இன்றைய கால கட்டத்தில், காகிதம், நெகிழி மற்றும் துணியாலான விசிறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசிறி – ராஜஸ்தான்


ஜப்பானியர்கள் விசிறிக்கே விசிறியானவர்கள். ஜப்பானைப் பொறுத்த அளவில் அவர்களது ஆன்மீகத்துடன் விசிறிகள் பெறும் முக்கியத்துவம் வேறெங்கும் இல்லாதது அவர்களது போர் விசிறிகள், சாமுராய் விசிறி சண்டைகள், சுமோ போர் விசிறி, திருவிழாக்கள், கலாச்சார சமூக அடையாளம் என்று பலதளங்களை அது எட்டியிருக்கின்றது. உலகம் முழுக்க தங்கள் பொருட்களை எடுத்துச் சென்ற சீனர்களுக்கே ஜப்பானிய துறவி வழங்கிய கை விசிறி முக்கியமானதாக கருதப்பட்டிருக்கிறது. கி பி 988 வாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டிலிருந்து சீனா சென்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜப்பானிய பாணி விசிறியினையே எடுத்துச் சென்றிருக்கின்றனர். சீனர்கள் விசிறி நடனம் என்று ஒரு வகைமையையே முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஜப்பானிய பெண்கள் விசிறி பயன்படுத்துகிறார்கள்


ஓலை விசிறிகள் குறிப்பிட்ட இடங்களில் பெருமளவில் புழங்குவதை கவனித்திருக்கிறேன். ஒன்று திருமண வீடுகளில் வருகை புரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது. இரண்டு, சர்க்கஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் விற்பனைச் செய்யப்படும். மூன்று, சமய நிகழ்வுகளான சொற்பொழிவுகள், பாத யாத்திரைகள் போன்றவற்றை மையப்படுத்தி நிகழும் விற்பனை. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் சிவாலய ஓட்டம் மகா சிவராத்திரி அன்று நடைபெறும். விசிறிக்கொண்டே பக்தர்கள் ஓடுவார்கள் அல்லது சைக்கிளில் இதனை வைத்து ஓட்டிச் செல்லுவார்கள். தேவைப்படும் இடங்களில் எடுத்து விசிறிக்கொள்ளுவார்கள். சிவாலய ஓட்டத்தை மட்டுமே தனது வருமானமாக எண்ணி விசிறி செய்யும் ஒரு நபரை நான் குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு என்ற பகுதியில் பார்த்திருக்கிறேன்.

பிரம்மாண்ட அலங்காரம் கொண்ட பழங்கால விசிறி


எனது ஒரிய பயணத்தில் துறவிகள் பனை ஓலைகளை பயன்படுத்துவதைக் கண்டு பிரமித்துப்போனேன். மொகிமா தர்மா என்று சொல்லக்கூடிய ஒரு அமைப்பு. அவர்கள் வைத்திருக்கும் விசிறி தனித்துவமானது இரட்டைச் சுழி கொண்ட ஒர் அழகிய விசிறி அது. துறவினைச் சுட்டும் அந்த விசிறியினை அந்த துறவிகளே தயாரித்துக் கொள்வார்கள். பனை ஓலை பொருட்களை தங்கள் ஆன்மீக வாழ்வின் அடையாளமாக வைத்திருப்பவர்களைக் காணும்போது கண்டிப்பாக பனை ஓர் ஆன்மீக மரம் தான் என்கிற உண்மை வெளிப்படுகிறது. எனது பயணம் முழுக்கவே பனை ஓலைப்பொருட்கள் ஆன்மீக வாழ்வு சார்ந்து பயன்பட்டுக்கொண்டிருப்பதை பதிவுசெய்தபடியே வருகிறேன்.துறவு வாழ்வில் விசிறி இணைந்திருப்பது பவுத்தத்தில் கூடத்தான் எனும்போது ஆசிய வாழ்வில் பனையோலை விசிறியாக பரிமளிப்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டிய சூழல் இருப்பதை நாம் மறுக்க இயலாது. பனையுடன்கூடிய ஆன்மீகத்தின் அந்த ஒரு துளியினையாவது நாம் காத்துகொள்ளவேண்டும்.

மொகிமா தர்மா துறவியின் கரத்திலிருக்கும் விசிறி


குமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் என்ற பகுதிக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். அங்கே யோகிராம் சுரத் குமார் என்பவரது ஆசிரமம் இருந்தது. ஆசிரமத்தின் வெளியே அவரது படம் வரையப்பட்டு ஒரு கரத்தில் விசிறியுடன் அவர் காணப்பட்டார். விசிறி அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும் என்பதுபோல ஒரு தோற்றம் இருந்தது அல்லது அறியாமையை நீக்கி அறிதல் எனும் மென் காற்றினை வழங்கும் ஒரு அழைப்பு. ஆனால் அந்த விசிறி சொல்லும் ஒரு கருத்து அவருக்குள் உள்ளுறைந்திருந்தது. அது தான் எளிமை. பனை ஓலை விசிறி என்பது ஒரு எளிமையின் அடையாளம் தான். தன் வாழ்விடத்தை துறந்தாலும் மென் காற்றினை வழங்க தவறாத மேன்மையின் வடிவம்.

யோகிராம் சுரத்குமார் கரத்தில் இருக்கும் விசிறி


இந்தியாவில் முதன் முதலாக வரலாற்றில் சுட்டிகாட்டப்படும் விசிறியானது அஜந்தா குகையோவியங்களிலிருந்து எடுக்கப்பட்டது என கை விசிறிகள் குறித்து ஆய்வு செய்த George Woolliscroft Rhead என்பவர் தனது History of the Fan என்ற நூலில் வெளிப்படுத்துகிறார்கள்.

எகிப்திய இறகு விசிறி

விசிறிகளைப் பொறுத்தவரையில் முன்று முக்கிய உண்மைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 1. ஒரு நாட்டின் பருவநிலை 2. அங்குள்ள சூழியல் சார்ந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் 3. அப்பகுதி வாழ் மக்களின் கைத்திறன் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் யாவற்றையும் ஒருங்கே பார்க்கவேண்டும் என்கிறார்.

ஆக்ராவில் செய்யப்படும் விசிறி


பழங்குடியினர் மற்றும் தொன்மையான வாழ்வைத் தொடரும் சமூகங்களில் நான்கு விதமான விசிறிகள் பயன்பாட்டில் இருப்பதை அவர் சுட்டி காண்பிக்கிறார். பனை ஓலை விசிறி, பனை மரங்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில் கிடைக்கின்றது என குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, புற்கள் மற்றும் பின்னி செய்யப்படும் மூங்கில் அல்லது பிரம்பு போன்ற பொருட்களைக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக தோல் பொருட்களில் செய்யப்படும் விசிறிகள் பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன என்றும் இறுதியாக இறகுகளில் செய்யப்பட்ட விசிறிகளும் கூட தொல் பழங்கால நாகரீகம் கொண்ட மக்களின் வாழ்வில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

விசிறி செய்யும் கலைஞர்கள்


தமிழகத்தைப் பொறுத்த அளவில் பல்வேறு விசிறிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைஞனின் கைவண்ணம் என்று தான் சொல்ல வேண்டும். ஓலைகளை பயன்பாட்டு பொருளாக பார்த்த நமது முன்னோர் பல்வேறு வகைகளில் அதனை செய்ய முயற்சித்தனர். ஓலைகளின் தன்மை மாறாமல் செய்யப்படும் விசிறிகள். பாதியாக கிழித்து செய்யப்படும் விசிறிகள், பின்னல்கள் கொண்டு செய்யப்படும் விசிறிகள் மற்றும் அழகிய மடக்கு விசிறிகள் என வகைபாட்டிற்குள் வரும். பல்வேறு ஓலைகள், தேவைகளின் விளைவாகவும் சூழல்களை கருத்தில் கொண்டும் வகை வகையாக செய்யப்பட்டு வந்தன.

மடக்கு விசிறி


இந்த வகைகளைத் தேடுவதும் அடையாளப்படுத்துவதும் மிக முக்கியமான தேவை. சிறுவனாக இருக்கும்போது கன்னியாகுமரிக்கு அப்பா அழைத்துச் செல்லுவார்கள். அப்போது கன்னியாகுமரியில் விற்கப்படும் பொருட்களில் மிக முக்கியமானதாக நான் கருதியது பனை ஓலை விசிறிதான். மடக்கும் விதத்தில் செய்யப்படும் அந்த விசிறி இன்று கன்னியாகுமரியிலேயே இல்லாமலாகிவிட்டது. ஒட்டுமொத்த சீன பொருட்களின் விற்பனைச் சாளரமாகத்தான் கன்னியாகுமரி இன்று காணப்படுகின்றது. என்னைப்பொறுத்த அளவில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் நினைவு பரிசாக எடுத்துச் செல்ல வழி வகை செய்வதே மாவட்டத்தின் சூழியலுக்கும் பொருளியலுக்கும் கலை வளர்ச்சிக்கும் செய்யும் பொருத்தமுள்ள பணியாகும்.

வித்தியாச வடிவில் விசிறி


எனது வாழ்வில் அனேகர் விசிறி செய்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரங்களில் செய்யப்படும் விசிறி ஒவ்வொருவிதமானவைகள். சமீபத்தில் முக நூலில் இருக்கும் நண்பர்களிடம் விசிறியுடன் ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்கள் என கேட்டிருந்தேன். அதற்கு எவருமே பதிலளிக்கவில்லை. விசிறி என்பது நமது வாழ்வை விட்டு விலகி சென்றுவிட்டதையே அது காட்டுகின்றது. பெரும்பாலும் வயோதிபர்களுடனும், கிராமப்புறத்தில் உள்ளவர்களுடனும் மட்டுமே தொடர்புடைய ஒன்றாக விசிறி மாறிவிட்டது. இன்றும் நகர்ப்புரங்களில் வசிப்பவர்கள் மின் இணைப்பு போனால் மட்டுமே அதனை பயன்படுத்துகிறார்கள். மும்பையில் நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் வங்காளத்தைச் சார்ந்தவர் வீட்டில் இன்றும் விசிறி இருக்கிறது.

கலைநுணுக்கம் மிகுந்த விசிறி


விசிறி கிழக்கிந்திய வாழ்வில் தனி பரிணாமம் எடுத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் முதன்மையானது இங்கே உள்ள கோடைகால வெப்பம் தான். கோடையின் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அவைகளில் முதன்மையானது தங்கள் இல்லங்களிலும் அரசு அலுவலகங்களிலும் விசிறிமயமாக்கினர். அந்த விசிறியினை சதா காலத்திலும் அசைத்து காற்று வரும்படி செய்ய குறைந்த கூலி கொடுத்து வேலைக்காரர்களை வைத்திருந்தார்கள். இந்தியில் அவர்களை “பங்கா வாலா” என்று அழைத்தார்கள். சிலர் முழு பனை ஓலையையுமே எடுத்து விசிறி எனச் செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விசிறி விட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிர்ம்மாண்ட விசிறிகளும் விசிறி வீசுபவர்களும்

பனை ஓலையில் விசிறி செய்வது மிகவும் எளிதானது தான். ஆனால் அதனைச் செய்யவும் தனித் திறமை வேண்டும் என்பதை அருகில் இருந்தபோது அறிந்துகொண்டேன். ஓலைகளை தெரிவு செய்வது குறித்து யோசித்துப் பார்த்தால், எப்படிப்பட்ட விசிறி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஓலைகளின் தேவை இருக்கும். ஓலைகளை பெரும்பாலும் நீரில் நனைத்தே வேலை செய்வார்கள். அது தேவையான வடிவத்திற்கு மாற்றுவது எல்லாம் கலைஞர்களின் திறமையால் மட்டுமே. குருத்தோலைகளையோ வடலியோலைகளையோ அல்லது சாரோலைகளோ எடுத்து பொருள் செய்வது வழக்கம். முழுமையாக ஓலைகளை பெருமளவில் சிதைக்காமல் செய்யப்படுகின்ற விசிறி உண்டு. ஓலையின் வடிவம் மாறி செய்யப்படுகின்ற பின்னல்களாலான விசிறியும் உண்டு. ஓலைகளுடன் இணைந்துகொள்ளும் மூங்கில் போன்ற வேறு பொருட்களும் உண்டு. இந்த வேறுபாடுகள் இன்னும் எவராலும் கூர்ந்து அவதானிக்கப்படாதது நமது ஆழ்ந்த கவனத்தைக் கோருவது.

கால்களால் விசிறும் விசிறி

தபால் தலைகளை சேகரிப்பதுபோல் விசிறிகளை சேகரிக்கும் பழக்கம் கொண்ட சிலர் இருக்கின்றனர். இந்தியா முழுவது அவ்விதத்தில் நாம் ஓலை விசிறிகளை சேகரிக்க இயலும், வர்ணம் பூசியிருப்பதில் காணப்படுவதில் இருக்கும் வேறு பாடுகள், பின்னல்களில் காணப்படும் வேறுபாடுகள், ஓலையைச் சுற்றி வர செய்திருக்கும் பூவேலைப்பாடுகள், ஓலைகளின் ஓரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் துணியோ இன்ன பிற காரியங்களோ ஒவ்வொன்றும் 50 கிலோமீட்டருக்கு வித்தியாசப்படும் அளவிற்கு தனித்துவமானவைகள். 

பின்னல்களால் செய்யப்பட்ட விசிறி

பனை ஓலையில் செய்யப்படும் விசிறிகள் இன்றும் நமக்கு பல உண்மைகளை சொல்லத்தக்கதாக இருக்கிறது. பொதுவாக பனை மரங்களில் பின்னேட்லி (Pinately) பாமேட்லி (Palmately) என இரு வகையாக பிரிப்பார்கள். ஒற்றை ஒற்றையாக தென்னை இலக்குகள் போல மட்டையிலிருந்து பிரிந்து செல்லுபவை பின்னேட்லி வகையாகவும், உள்ளங்கையும் விரல்களும் போல  இணைந்து இருப்பவைகள் பாமேட்லி என்றும் குறிப்பிடுவார்கள். பாமேட்லி வகைகளில் அனேக “பனை வகை” மரங்கள் உண்டு. நாம் சிறப்பாக எடுத்துக்கூறும் பனை மரம் அவைகளில் ஒன்று.

தனியாரின் விசிறி சேகரிப்பு

என்னைப்பொறுத்த அளவில் இயற்கையாகவே பனை மரத்தின் ஓலைகள் விசிறி போன்று இருப்பது இதன் பயன்பாட்டிற்கான தொன்மையான காலத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இரண்டாவதாக பனை ஓலையில் இன்றும் விசிறி செய்பவர்கள், அதனை “கற்களை” வைத்து தான் நேராக்கி சீராக்கி பயன்படுத்துகிறார்கள். ஆகவே கற்காலம் துவங்கி இதன் பயன்பாடும் உருவாக்கமும் இருந்திருக்கும்.

மூன்றாவதாக இன்றும் பனையோலை விசிறிகள் கரி நெருப்பு போட்டு உணவை வேகவைக்கும் தந்தூரி உணவு செய்பவர்கள் பயன்படுத்துவதாக இருக்கிறது. அப்படியானால், நெருப்பில் சுட்டு வேகவைக்கும் முறைமைகளை கடைபிடித்த கற்கால மனிதர்களுக்கும் இது உதவிகரமாகத்தானே இருந்திருக்கும்? நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பனையோலை விசிறியினை தாராளமாக கொண்டு சேர்க்கலாம் போல இருக்கின்றது.

நான்காவதாக பனை ஓலையிலிருந்து வீசும் காற்று பூச்சிகள் அண்டாமல் நம்மை பாதுகாக்கும். குறிப்பாக காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும்போது கொசுக்களின் அல்லது பூச்சிகளின் தொல்லை இருக்கும். அவைகளினின்று தப்பிக்க  விசிறி மிக முக்கிய தேவையாக இருந்திருக்கும். சில வேளைகளில் வேட்டைபொருட்களை எடுக்கையில் ஈக்களின் தொந்தரவிலிருந்து விடுபடவும் விசிறி உகந்ததாகவே இருந்திருக்கின்றன.

இறுதியாக ஆனால் உண்மையாக சொல்லப்படவேண்டிய காரணம் என்னவென்றால், ஓலை விசிறி வெம்மையைத் தணித்து உடலைக் குளிர்விக்க பயன்பட்டிருக்கும். தனது குழந்தையின் உடல், வெம்மையினை சகிக்காது என்ற உணர்வுடைய ஒரு தாயார் குழந்தைக்கு விசிறி விட தானே கண்டுபிடித்த ஒரு இயற்கை  பொருளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மோசிகீரனார்

மோசிகீரனார் என்ற புலவர் அக்கால வழக்கத்தின்படி  சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையிடம் பரிசில் பெற வேண்டி சென்றார். நீண்டதூரம் நடந்து வந்த  களைப்பின் மிகுதியாலும் பசியாலும் அரண்மனையில் இருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கினார். செய்தி மன்னனுக்கு சென்றது. செய்யக்கூடாத ஒன்றை செய்த அந்த பேதையின் தலையினைக் கொய்து வரவேண்டும் என தனது வாளோடு புறப்படுகிறான். அங்கே புலவர், கண்ணயர்ந்து உறங்குவதை கண்டு மனம் பதைத்து தனது வாளை ஒதுக்கிவைத்துவிட்டு கவரி வீசுகிறான் என்பதாக பார்க்கிறோம். கவரி வீசுவது பசியுற்றவனுக்கு மன்னன் செய்யும் கடன் என்பதாக ஒரு விழுமியம் இருந்திருக்கிறது. இன்று பனையோலை விசிறி செய்பவர்களது வாழ்க்கை பசியுடன் போராடிக்கொண்டிருக்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம்முன் நிற்கும் மிக முக்கிய கேள்வி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 7

மே 24, 2020


பட்டை
வாழை இலைகள் தான் நமது உணவு உண்ணும் பாரம்பரிய பாத்திரம் என்பதாக இன்று ஒரு கருத்து தமிழகத்தில் நிலைபெற்றிருக்கிறது. அனைத்து திருமண வீடுகளிலும், விருந்து வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் வாழை இலையில் பரிமாறப்படும் உணவே தமிழக உணவு பாரம்பரியத்தைக் குறிக்கும் சிறப்பம்சமாக எடுத்துக்கூறப்பட்டு வந்திருக்கிறது. வாழை மரங்கள் தண்ணீர் செழித்திருக்கும் இடத்தில் வளர்பவை ஆனபடியால் அவைகள் செழிப்பை முன்னிறுத்தும் ஒரு அடையாளமாகிப்போனது. அப்படியானால் ஐவகை நிலம் கொண்ட தமிழகத்தில் குறிஞ்சி பகுதியினைத் தவிர்த்து அனைத்திடங்களிலும் வளரும் பனை மரத்தின் ஓலைகள் எப்படி இவ்வடையாளத்தை இழந்தது?

மித்திரன் பனை ஓலை பட்டையில் பதனீர் குடிக்க உதவியபோது


வாழை இலைகள் எப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவு பாத்திரத்தின் அடையாளமாக மாற முடியும்? யோசித்து பார்த்தால், வளம் மிக்க பகுதியில் வாழ்வோரின் வழக்கமே வறண்ட நிலப் பகுதியில் வாழ்வோர் ஏக்கம் கொள்ளும் வாழ்வு என்பதாக முன்னிறுத்தப்பட்டது. மேலும் வாழை இலையினை மையப்படுத்தியே நமது சமையல்கள் விரிவடைய துவங்கின. ஆகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாழை இலை இட்டு உணவு பரிமாறுதல் பொருந்தும் என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நிலை எப்போதும் நம்மிடம் இருந்தது இல்லை. உணவுண்ணும் பாத்திரம் அந்தத்த இடத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களின் தன்மையைப்பொறுத்தே இருந்திருக்கிறது. தையல் இலை, கமுகு பாளை, வாழை இலை, தேக்கிலை, சேம்பு இலை, தாமரை இலை மற்றும் பனை ஓலை போன்றவை தேவைக்கு ஏற்ப பயன்பாட்டில் இருந்துவந்தன. இவைகளில் கமுகு பாளை தட்டும் பனையோலை தட்டும்தான் கையிலேயே வைத்து உணவு உண்ண வசதியானவைகள். அதிலும் உடனடி பாத்திரம் என்றால் பனை ஓலை தான் மிகச் சரியானது. தேவையான அளவு எப்போதும் எடுத்துக்கொள்ள வாய்பிருந்திருக்கிறது. மொத்தமாக ஓரிலையை வெட்டி விட தேவையில்லை.


பொதுவாக வறண்ட நிலப்பகுதிகள் உள்ள தென் மாவட்டங்களில் பனை ஓலை பட்டை மிக முக்கிய உணவுப்பாத்திரமாக இருந்திருக்கிறது. தவிர்க்க இயலா இந்த பாரம்பரியம் அழிந்து போவதற்கு பனை தொழில் அழிவும் பிற விவசாய தொழில்களின் எழுச்சியும் காரணம். குறிப்பாக அணை கட்டுமானங்கள் போன்ற பெரும் நீர் தேக்கங்களின் வரவிற்கு பின்பு, நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உணவுகள் உற்பத்தியிலும் உட்கொள்ளுதலிலும் தமிழகம் மிக அதிக அளவில் மாற்றத்தை அடைந்திருக்கிறது.
பனை ஓலையில் செய்யப்படும் பனையோலைப் பட்டையானது நம்மோடு தங்கியிருக்கும் ஒர் ஆதி உணவு பாத்திரம். இவ்விதமாக எல்லா கலாச்சாரத்திலும் தொல் வடிவங்கள் எளிதில் வந்து நவீன வாழ்வை அடைவதில்லை. ஆதிவடிவங்கள் நம்மை வந்தடைவது ஒரு நல்லூழ். அவ்வடிவங்களே நாம் பனை சார்ந்த வாழ்வை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதற்கு ஏற்ற அடையாளம். அகழ்வாய்வு செய்து நாம் எடுக்கும் பொருட்களை விட பயன்பாட்டில் இருக்கும் இவ்வித பொருட்கள் பயன்பாட்டளவில் மிகவும் தொன்மையானது.

கறி பொதிந்த ஓலை


பனை ஓலையின் வடிவம் அதிகளவில் மாறாமல் பனை மரத்தின் ஓலையைக் கொண்டு செய்யப்படும் ஒரு வடிவம்தான் பனையோலைப் பட்டை. இதற்கு இணையான வேறு எளிய பொருள் பரந்துபட்ட பயன்பாட்டில் இல்லை என்று சொல்லலாம். இன்று பெரும்பாலும் ரோட்டோரங்களில் பனையோலைப் பட்டைகளுடன் பதனீர் விற்பவர்கள் நின்று விற்பனை செய்வதைப் பார்க்கிறோம். அந்த பட்டைதான் பதனீரை விற்பனை செய்யும் விற்பனை முகவர் எனும் அளவிற்கு இன்று பனையோலைப் பட்டை முன்னணியில் நிற்கின்றது.


எனது சிறு வயதில் பதனீரை பனையோலைப் பட்டையில் வழங்கும் ஒரு முறைமையை நான் பெரிதும் ரசித்திருக்கவில்லை. மடிப்பு மடிப்பாக இருக்கும் இலைகள், இரண்டு கைகளும் பற்றியிருக்க குனிந்து மாடு நீர் குடிப்பது போல பதனீர் குடிப்பது, ஏதோ இலையையும் சேர்த்து சாப்பிடும் பாவனையைக் கொண்டிருந்தது. எவ்வகையிலும் பொருத்தமில்லா ஒரு கடினமான வடிவத்தை நமது முன்னோர் நம்மீது திணித்துவிட்டார்களோ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிற்பாடு, ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் கத்தியும் கரண்டியும், சீனர்கள் பயன்படுத்தும் இரட்டைக் குச்சிகளும் இதனை விட கடினமான அனுபவங்களைக் உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் பனை ஓலை பட்டையின் வடிவம் மிக நேர்த்தியான ஒன்றாகவும் காணப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல பனைஓலையில் சாப்பிடும் உணவின் சுவை என்னை திக்குமுக்காட செய்வதாக இருந்தது. தனித்துவமான அந்த வடிவம், பயன்பாடு மற்றும் பயன்படுத்துவோர் சார்ந்த தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு அதிகமானவை. அட்சயப்பாத்திரம் என்ற ஒரு உன்னத வடிவமாகவே இதனைப் இன்று பார்க்கிறேன்.


ஓலைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும். ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை.


பெண்களும் தாய்மார்களுமே ஆதி பயன்பாட்டு பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என்பது குறித்த பார்வை, பெண்ணிய ஆய்வாலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையைப் பெற்றடுத்த தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பின் போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப அனேக காரியங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓலை பட்டையில் கூட குழந்தையை விரித்து பரப்பி வைத்து படுக்க வைத்திருக்கலாம். அது போலவே விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து குவித்து குழந்தையின் சிறு வாய் வழி குழந்தைகளுக்கு உணவு புகட்டும் தாய்மார்கள் பனை ஓலை பட்டையின் ஆதி வடிவைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு குழந்தைப் பருவத்து நிலையை இது இன்றும் உணர்த்துவதாக இருக்கிறது.


பனை மரத்துடன் ஈடுபாடு கொண்டவர்கள் பனையோலை பட்டையில் பதனீர் வாங்கிக்குடித்த அனுபவத்தை மறப்பது இல்லை. பட்டையை கிளப்பும் அந்த அனுபவம் தொன்றுதொட்டு வரும் ஒரு அறிவு என்பதோடு தொன்மையான ஓலை பயன்பாட்டின் ஆதாரம் என்றும் நாம் கொள்ளலாம். மேலும், பின்னல்கள் எனும் மொழியினை மனிதர் கற்றுத்தேற நாம் கண்டடைந்த பாதையினைச் சுட்டி நிற்கும் மைல்கற்கள் இவைகளே

பனை ஓலைப் பட்டையில் பனம்பழம் – குற்றாலம்


வேட்டை சமூகங்கள் ஓலைகளையும் இலைகளையும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களையுமே தங்கள் வேட்டைப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து வெகு சமீப காலம் வரை கூட பனை ஓலையிலேயே பன்றி இறைச்சியினை பொதிந்து கொடுப்பார்கள். இவ்விதமாக பொதிந்தவைகளிலிருந்து கறியை எடுத்து வீசியெறியும் ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம். இவைகளும் ஓலை பட்டையின் ஒரு ஆதி வடிவமாக இருக்க வாய்ப்பிருக்கிறது

பனை ஓலைகளில் பட்டையினை மடிக்கும்போது கவனிக்கவேண்டியவைகள் சில உண்டு. எல்லாரும் எளிதில் பனை ஓலையில் பட்டையைப் பிடித்துவிடமாட்டார்கள். அது எளிதும் அல்ல. ஓலைகளின் பதம் மிகவும் முக்கியம். எத்துணை திறமையானவர் மடித்தாலும் ஒருசில ஓலைகளில் கீறல்கள் விழுந்துவிடுவது இயல்பு. சில வேளைகளில் நெருப்பில் வாட்டி மடிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு எப்போதும் சாத்தியப்படுவதில்லை.

பதனீர் விற்பவரும் பனம் பழம் விற்கும் சிறுவனும் பனையோலை பட்டையுடன் – குற்றாலம்


ஓலைகளை குறித்து ஒரு சிறு அறிமுகம் இருந்தால் பின்வருவனவற்றை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இரண்டு பெருவிரல்களும் இணைந்திருக்கும்படி கைகளை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். பனை ஓலையும் சற்றேறக்குறைய இப்படித்தான் இருக்கும். இப்பகுதியில் தான் மட்டை வந்து மையம் கொள்ளும். இதனை மூக்கோலை என்றும் பொன்னி ஓலை என்றும் குறிப்பிடுவார்கள். இப்பகுதிக்கு என்று ஒரு தனித்துவமான மடிப்பு இருக்கும் இதிலே ஒரு குருவி பதிவாக வந்து ஒளிந்து கொள்ளும். ஆகவே தான் ஓலையின் இப்பகுதியில் தங்கியிருக்கும் குருவிக்கு மூக்கோலை குருவி அல்லது பொன்னி குருவி என்று பெயரிட்டார்கள் குமரி மாவட்டத்தினர். தூத்துக்குடி ராமனாதபுரம் போன்ற பகுதிகளில் இவற்றை முன்னி ஓலை என அழைப்பார்கள். ஓலையின் இப்பகுதி பெரும்பாலும் பொருட்கள் செய்ய பயன்படுத்துவதில்லை.
பொன்னி ஓலையை மையப்படுத்தி ஓலையினை வலஞ்சிறகு இடஞ்சிறகு என்றும் பிரிப்பார்கள். அதாவது, ஓலையினை வலதுபுறம் என்று இடதுபுறம் என்று பிரிப்பது. இதில் வலஞ்சிறகிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பனை மரத்திலிருந்தே பதமாக வெட்டி அருவாபெட்டியில் எடுத்துவரப்படும் நிகழ்சிகள் உண்டு. தனித்துவமான பொருட்களை அவ்வளவு கவனமாக செய்வார்கள். ஓலையின் இரு ஓரங்களையும் கடஞ்சிலக்கு என்பார்கள். ஓலையை பெருமளவில் பாதிக்காதபடி கடஞ்சிலக்கினை எடுத்துக் கூட பட்டை மடிப்பார்கள். அது பதனீர் இறக்கும் பனை மரத்தை பெருமளவில் பாதிக்காத செயல்.

குருத்தோலைச் சிறகு


மூன்று, நான்கு அல்லது ஐந்து ‘இலக்குகள்’ கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. பொதுவாக ஒரு ஐந்து இலக்குகள் கொண்ட ஓலையினை இணிந்து எடுத்துப் பார்த்தால் அது மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் குவித்துப் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம். ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.

மித்திரன் நேரடியாக பனையேறி அளித்த பட்டையில் பதனீர் சுவைக்கும் காட்சி – திருஞானபுரம்


ஒரு வகையில் பனை ஓலைப் பட்டைகளின் எளிமையும் தான் தொன்மையான அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பனையேறிகளின் முதல் நாள் பூசையில் பனையோலைப்பட்டை கண்டிப்பாக ஓர் இடம் பெற்றிருக்கும். குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.

கூடவிளை – தென்னிந்திய திருச்சபை, துக்க வெள்ளி ஆராதனைக்குப் பின்பு நிகழும் பனையோலைப் பட்டை கஞ்சி வழங்குதல்


குமரி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபைகளில் நடைபெறும் புனித வெள்ளி ஆராதனை ஒரு தொல் சடங்கினை ஏந்தி வருவதை இன்றும் காணலாம். பல திருச்சபைகளில் மும்மணி நேர ஆராதனைக்குப் பின்பு கஞ்சியினைக் கொடுப்பார்கள். ஆனால், இன்றும் ஒரு சில திருச்சபைகளில் பனை ஓலைப் பட்டையிலேயே இதனை வழங்குவார்கள். இதற்காக திருச்சபையினர் எடுத்துக்கொள்ளும் சிறப்பு கவனம் நம்மை பிரமிக்க வைப்பது. ஓலைகளை வெட்டி மலைபோல முந்தையநாள் குவித்துவிடுவார்கள். பிற்பாடு அவைகள் புழுமி மென்மையாகும்போது ஓலைகளை எடுத்து மடிப்பார்கள். ஓலைகளை மடிப்பதற்கு என்று தனி திறமை வாய்ந்தவர்கள் உண்டு.
இதே சூழலை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அசனம் வழங்கும்போது பனை ஓலை பட்டையில் தான் கொடுப்பார்கள் நவீன வாழ்வில் வாழை இலைகள் பனையோலைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.


பனையோலைப் பட்டை சோறு வழங்குதலில் நாட்டார் தெய்வ வணக்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. பல்வேறு விழாக்களில் கொடுக்கப்படும் கிடாய்கறி சோறு பனை ஓலைப் பட்டைகளிலேயே கொடுக்கப்படும். திருவிழாக்களின் உற்சாக களைப்பில் மிக அதிக உணவைக் கோருகின்ற ஒரு வடிவம் பட்டை சோறு என்றால் அது மிகையாகாது. கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமனாதபுரத்தில் கோழிக்கறியினை பனையோலை பட்டையில் உண்ட அனுபவம் கிட்டியது. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.


2018 ஆம் ஆண்டு தமிழகத்தினை சுற்றி வருகையில், அனேக தென் மாவட்ட கோவில்களின் அருகில் பனை ஓலை பட்டைகள் திருவிழாக்கள் முடிந்துவிட்டதன் அடையாளமாக கிடந்தன. பழங்காலத்தில் சில பாட்டிமார் இவ்வித ஓலைகளை எடுத்து கடவம் போன்ற பொருட்களை செய்து ஓலைகளை மறு சுழற்சி செய்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்.

மட்டையுடன் இணைந்திருக்கும் பனையோலையினை தேவைக்கேற்ப கிழித்தெடுக்க தயாராகும் பனையேறி – பண்ணைவிளை


எனது அனுபவத்தில் பனையோலை பட்டையினை பயன்படுத்தும் மக்கள் பலதரப்பட்டவர்கள் என அறிந்திருக்கிறேன். தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் அவற்றின் பயன்பாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சாதி சமய மொழி நாடு கடந்து காணப்படும் பனை ஓலை பட்டைதான். அப்படி பார்க்கையில் தமிழகத்தில் இழந்துபோன பட்டையின் பங்களிப்பை மீட்டுருவாக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இராமனாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் எப்படியாவது ஒரு சில கடைகளில் பனை ஓலை பட்டையில் உணவளிக்கும் கடைகள் உருவாகத்துவங்கினால், மண்வாசனை என்ற கூற்று பனைவாசனை என மாறும். பட்டையைக் கிளப்பும் காலத்திற்கு தமிழகம் தயாராகட்டும்.

அசனம் : திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் வழங்கப்படும் சிறப்பு விருந்து. ஊரிலுள்ள அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொள்ளலாம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  –  6

மே 18, 2020

சரடுகள்

பனை சார்ந்த தேடுதல்கள் முடிவேயில்லாதது, விரிவானது. அவைகள் எங்கே எப்போது எப்படி விரிவடையும் என்பது நாமே அறிந்துகொள்ள முடியாதது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களும் எப்படி நம்மை வந்தடைகின்றன என்பது கூட மிகப்பெரிய ஆச்சரியம் தான். பல நேரங்களில் நாம் பெறுகின்ற புதிய திறப்புகள் கடவுள் நமக்கு அருளிய வரம் என்றே கொள்ளமுடியும். அந்த அளவிற்கு தர்க்க விதிகளை மீறியே பனை சார்ந்து  புதிய திறப்புகள் கிடைக்கும்.

Jalli

ஜல்லிக்கட்டு காளையுடன்

தமிழகத்தில் பனை குறித்து அறியாதவர் என எவரும் இருக்கவியலாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக பனை சார்ந்த உணவு பொருட்களை குறித்தாவது ஒரு சில காரியங்களை அறிந்திருப்பார்கள். பிரச்சனை என்னவென்றால், அதுவே அவர்கள் அனைத்தையும் அறிந்திருப்பதற்கான அத்தாட்சி எனக் கொள்ளுவார்கள். பனை சார்ந்து ஒரு மாற்று உலகம் இருக்கிறது என்றோ அதில் உழலும் மக்களின் வாழ்வின் சவால்கள் குறித்தோ  ஏதும் அறியாதவர்கள் அவர்கள். குறிப்பாக பனை மரம் வாழ்வின் முக்கிய சரடாக இருந்திருக்கிறது என்பதைக் குறித்து ஏதும் அறியாதவர்கள். பனை சார்ந்து காணப்படும் அனைத்துமே பண்பாடு சார்ந்து முக்கியத்துவம் அற்றது என்னும் மனநிலையைக் காட்டும் புரிதல் இது.

மற்றொருபுறம், பனை மரத்துடன் தங்கள் வாழ்வை இறுக பிணைத்துக்கொண்டவர்கள்.  பனை சார்ந்த பல்வேறு நுட்பங்களை அறிந்து வைத்திருக்கிறவர்கள். தங்கள் வாழ்வோடு  அவைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால் வேர்கொண்டவற்றை தனித்து வெளிக்காட்ட இயலாதவர்கள். இயல்பாக வெளிப்படும் தங்கள் திறமைகள் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாததால், அது குறித்து பொதுவிடங்களில் வாயே திறக்காதவர்கள்.  பல நேரங்களில் அவர்கள் அறிந்தவற்றை  முக்கியமான ஒரு அறிதல் என்றோ பண்பாட்டிலிருந்து நழுவிச்செல்லும் ஒன்றினைத் தாம் கட்டி காக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதில்லை. ஆகவே பொதுவிடங்களில் இவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆய்வு சார்ந்து இவர்களிடமிருக்கும் தொன்மையான திறமைகள் பட்டியலிடப்படவுமில்லை.

பனை சார்ந்த ஆய்வுகளில் பெரும்பான்மையானவை பனை மரத்தை பணம் காய்க்கும் மரமாக எப்படி முன்னிறுத்துவது என்பதாகவே இருந்திருக்கிறது. ஆகவே பனையேறிகளே கூட வேறு வகை கேள்விகளுக்கு தயாராக இல்லை. கடந்த தலைமுறை முழுவதும் பனை சார்ந்த வாழ்வை பனைத்தொழில் என்றே புரிந்துவைத்திருந்தது. அப்படி இல்லாவிட்டால், பனை சார்ந்த ஆய்வுகள் பெரும்பாலும் ஒற்றை சமூக பின்புலத்தில் வைத்து தேடுவது என்பதாகவே இருக்கிறது. அப்படி பார்க்கையில் மிகப்பெரும் பனை பாரம்பரியம் கொண்ட சரடுகள் பலவும் அறுபட்டு பனை சார்ந்த தொன்மையினை எட்ட இயலாதபடி துண்டிக்கப்பட்டு கிடப்பது மனதை பிசைகின்றது.

பனை சார்ந்த கயிறுகள் குறித்து எனது தேடுதல் யாவும் எதிர்பாராமல் நிகழ்ந்தவைகளே, அவைகள் என்னை ஒரு மிகப்பெரிய வரலாற்று பின்னணியத்தில் கொண்டுபோய் விடும் என நான் சிறிதும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. பல வேளைகளில் ஒரு சரடினைப் பிடித்து  நாம் சென்று சேரும் இடங்கள் மர்மதேசங்களாகவும் அற்புத உலகமாகவும் காணக்கிடைப்பது விந்தையிலும் விந்தை. வேற்று கிரகத்தை ஒத்த பனை கயிற்றுலகத்தில் காணப்படும் பொருட்களும் அதிசயமானவைகளாகவே காணப்படுகின்றன.

கயிறுகள் மீதான எனது ஆர்வம் சிறிய வயது முதலே துவங்கி இருக்கிறது. வீட்டின் பின்புறம் கிணறும் வாளியும் கயிறும் நான் நெருங்க இயலாத ஆச்சரிய பொருட்கள். அக்கா தான் கிணற்றில் நீர் இறைப்பவர்கள். சிறு பிள்ளையாகிய நான்  கிணற்றின் அருகிலேயே செல்லக்கூடாது.  அக்கா தண்ணீர் நிறைந்த வாளியினை கயிற்றில் கட்டி இழுப்பது காண கண்கொள்ளா காட்சி.   ஒருமுறை இடதுகையால்  இழுத்த கயிற்றினை அப்படியே வலது கையால் லாவகமாக சுழற்றி வீசுவார்கள் அது மிகச்சரியான ஒரு வட்டத்தை அமைத்து அமர்ந்துவிடும். நீர் இறைத்த பின்பு அந்த கயிறு கிணற்றின் மதில்மேல் சுற்றி பாம்பு போல் அமர்ந்திருக்கும்.

2019 ஆம் ஆண்டு பொங்கல் நிகழ்விற்காக திருப்பூர் அழைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்தவர் திருப்பூரில் உள்ள திரு. சத்தியமூர்த்தி  அவர்கள். எப்படி என்னைக்குறித்து அறிந்துகொண்டார்கள் என்பதை நான் அறியேன் ஆனால் அவர்களது அழைப்பு சாதாரணமான ஒன்றாக இல்லை. என்னால் அங்கே பனை பொருட்களை எடுத்துச் செல்லுவது இயல்வதல்ல என்று கூறி அங்கே செல்வதை தவிர்த்தும் அவர்கள் என்னை அழைப்பதில் குறியாக இருந்தார்கள். பனை ஓலைப் பொருட்களை எடுத்துச் செல்லுவதற்கு என தனியாக ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்தார்கள். கன்னியாகுமரி வந்து பனை ஓலைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அளவு அவருக்குள் இருக்கும் பனை சார்ந்த நெருக்கத்தை பெருவியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

முந்தைய நாள் இரவே நான் அங்கே சென்று சேர்ந்துவிட்டேன். பல்வேறு பொருட்களை அங்கு நான் காட்சிக்கு கொண்டுசென்றிருந்தேன். எனக்கு அறிமுகமாயிருந்த தஞ்சாவூரைச் சார்ந்த வாகை விக்டோரியா எனது பொருட்களை காட்சிக்கு வைக்க உதவினார்கள். மறுநாள் அவர்களுக்கு வேலை இருந்ததால் என்னோடு அவர்கள் இருந்து உதவ முடியாது எனக் கூறிவிட்டார்கள். என்ன அதிசயமோ மறுநாள் வாகையின் தோழி தீபா எனும் ரங்கநாயகி அங்கே தனது கணவருடன் வந்திருந்தார்கள். மிகவும் நட்புடன் பழகும் அவர்கள் பனை சார்ந்த பொருட்களைக் கண்டவுடன் ஏதோ ஒரு உத்வேகத்தில் எனக்கு உதவி செய்கிறேன் எஎன ஒப்புக்கொண்டார்கள்.  தீபா பேச்சினூடாக தான் காங்கேயத்திலிருந்து வருவதாக கூறவும், எனது மனதில் வேறு ஒரு கேள்வி எழுந்தது. காங்கேயம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. தெரிந்தது எல்லாம் காங்கேயம் காளைகளுக்கு பிரபலமான ஊர். ஆகவே அது சார்ந்தே பேசலாம் என நினைத்து, காங்கேயம் காளைக்கு பனை நார் கொண்டு மூக்கணாங் கயிறு கட்டுவார்களா என்று கேட்டேன். “கேட்டு சொல்றேன்” என்றார்கள். பொதுவாக “கேட்டு சொல்லுகிறேன்” என்று சொல்லுகிறவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவது இயல்பு. ஆகவே நானும் அதனை அப்படியே மறந்துவிட்டேன்.

Panai porutkaL

தீபாவும் வாகையும்

பிற்பாடு நான் என்னையே கேட்டுக்கொண்டேன்… அது எப்படி பனை சார்ந்த ஒரு கயிற்றினைக் குறித்து இவர்களிடம் நான் கேட்டேன்? அதுவும் மாடுகள் குறித்து அடிப்படையே அறியாத நான் எப்படி இந்த கேள்வியை எழுப்பினேன் என்றே தெரியவில்லை.  ஆனால்  இந்த கேள்வி என் மனதின் அடியாளத்தில் உள்ள ஒரு பதிலை துழாவி எடுத்தது. கூ. சம்பந்தம் அவர்கள் எழுதிய பனைத்தொழில் உண்ணாபொருட்கள் என்கிற புத்தகத்தில் பனை நார் கொண்டு செய்யும் கயிறு ஒன்றினை மூக்கணாங் கயிறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற குறிப்பு வரும். ஆனால் காங்கேயத்தைச் சார்ந்த தீபா அவர்களை சந்திக்கும்வரை என் மனதில் அப்படி ஒரு கேள்வி  எழுந்திருக்கவில்லை. தான் காங்கேயத்தைச் சார்ந்தவள் என தீபா அவர்கள் சொன்னவுடனேயே தான் எனக்குள் அந்த கேள்வி பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கிறது.

மனிதனை ஒரு சமுக விலங்கு என்பார்கள். பிற விலங்குகளோடு ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில், மிருகங்களும் மனிதர்களும் ஒரு புரிந்துகொள்ளுதலுக்குள் வருவதே வீட்டு விலங்குகள் உருவாவதற்கு முதற்படி.  மனிதனும் மிருகங்களும் ஒருவருக்கு ஒருவர் “கொண்டும் கொடுத்தும்” “பெற்றும் பெருகியும்”  “இசைந்தும் அசைந்தும்” புரிதலுடன்கூடிய ஒரு ஒப்பந்தத்தின் வெளிப்பாடே வளர்ப்பு மிருகங்கள் மனித வாழ்வில் இடம்பெற காரணம். ஆனால் பெருமளவில் மனிதனின் அறிவு கூர்மைபெற அவன் தனது வேலைகளை எளிதாக்கும் பொருட்டும், தேவைகளை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ளவுமே அவன் மிருகங்களை வீட்டு விலங்குகளாக மாற்றுகிறான்.

mookaNangkayiRu

மூக்கணாங் கயிறு

அந்த வகையில் நாய் அவனோடு இணைந்த முதல் மிருகம் என்பதில் பொருத்தப்பாடு அனேகம் உண்டு. குறிப்பாக மனிதன் வேட்டைக்குச் செல்லும் சூழலில் அவனுக்கு வேட்டையில் உறுதுணையாக நிற்கும் ஒரு விலங்கு தேவைபடுகிறது. அந்த விலங்கு மனிதன் வேட்டைக்குச் செல்லும் தடங்களை தொடர்ந்து தங்களுக்கு வேண்டியவைகளைப் பெற்றுக்கொண்ட ஓநாய்களின் அல்லது பனங்காட்டு நரிகளின் வழித்தோன்றல்களாக இருக்கலாம்.

வளர்ப்பு மிருகங்கள் என்று சொல்லும்போது ஏதோ ஒரு சில நாட்களில் விலங்குகள் பழகிவிடுவதில்லை. குறிப்பாக 60 – 90 தலைமுறைகள் விலங்குகளின் வாழ்வு தொடர்ந்து மனிதர்களுடன் உரையாடலில் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் கற்றறிந்தவர்கள். அவ்விதமான ஒரு சூழலில் தான் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நடைபெறும். கி மு 10500 வாக்கில் தான் கால்நடைகள் மனித வாழ்வில் உள்நுழைந்திருக்கின்றன. இது விவசாயம் தலை தூக்குகின்ற காலகட்டம் தான். புதிய கற்காலத்தில் இவைகள் நிகழ்வது ஒரு புது பாய்ச்சலை நோக்கி மனித இனம் நகர்கின்றது என்ற ஒரு உண்மையினை நமக்கு அறிவிக்கின்றது.

கால்நடை என்றவுடனேயே, நாம் கண்டிப்பாக மாடுகளை தான் எண்ணுவோம். பெரும்பாலான குகை ஓவியங்களிலும் மாடுகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. அப்படியே மாடுகளின் முக்கியத்துவத்தையும் தமிழர் வாழ்வில் காணப்படும் ஏறு தழுவுதலையும் நாம் பிரித்து பார்க்க இயலாது. மாடுகள் எப்படி மனிதர்களோடு பழகியிருக்கும்?

ஊன் உண்ணும் மிருகங்கள், மாடோ மனிதனோ கிடைப்பவற்றை குறிவைக்கையில் மனிதனுக்கும் மாடுகளுக்கும் ஏற்படும் புரிதல் தான் ஒன்றிணைவதற்கான முதற்படி. மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஒரே பொதுவான எதிரி தான். கோரைப்பற்கள் கொண்ட மிருகங்களை சமாளிப்பதை விட, இரு கொம்புகளைக் கொண்ட மாடுகளை சமாளிப்பது எளிதானது என கருதியிருக்கலாம் அப்படியே மாடுகளும் வேட்டைக்கு இரையாவதை விட சற்றே மனிதர்களுடன் இணக்கமாக இருந்துகொள்ளலாம் என்றும் நினைத்திருக்க வாய்புள்ளது. மாத்திரம் அல்ல மாடுகளின் உணவுகள் மனிதர்களுக்கு தேவையற்றவைகள். ஆகவே மனிதர்களுக்கு மாடுகளால் உணவு பஞ்சம் வர வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்திருப்பார்கள்.

இச்சூழலில் தான் மனிதர்களின் கண்டுபிடிப்பான கயிறு இவர்களுக்கு பெருமளவில் உதவியிருக்கும். வேட்டையில் பிடித்த மிருகங்களையோ அல்லது அவைகளின் குட்டிகளையோ  கட்டி போட்டு வளர்த்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறது. கழுத்திலோ அல்லது காலிலோ கயிறு கட்டப்பட்டு ஓரிடத்தையே சுற்றி சுற்றி வந்து அவ்விடத்திற்கும் மனிதர்களுக்கும் சிறுக சிறுக பழக்கப்படுத்தப்பட்டிருக்கும்.  குழிகளை வெட்டி அதில் விழவைத்து பழக்கப்படுத்துவதோ அல்லது கூண்டுகளைக் கட்டி அதற்குள் இட்டு வளார்த்து பழக்கப்படுத்துவதைவிட கயிறு கட்டி பழக்கப்படுத்துவது எளிதானது.

அவ்வகையில் தான் மாட்டிற்கான மூக்கணாங்கயிறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வெகு சமீபத்திய கண்டுபிடிப்பாக மூக்கணாங்கயிறு இருக்கலாம். ஆனாலும் அதன் பயன்பாடு மிகவும் முக்கியம். அழிந்து போன பனை நார் மூக்கணாங்க் கயிறு குறித்து ஒரு தகவல் என்னை நோக்கி மேலெழும் என நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

ஒருநாள் தீபா என்னை அழைத்தார்கள். இங்க ஒரு தாத்தா பனை நார் கொண்டு கன்றுக்குட்டிக்கான மூக்கணாங் கயிறு செய்கிறார்கள் என்று உறுதி செய்தார்கள்.  ஆனால் அந்த தாத்தாவிற்கு யாராவது மட்டைகளை வெட்டிபோடவேண்டும் என்றார்கள். அப்புறமாக மேலும் சில நாட்கள் கழித்து, மட்டைகளை வெட்டிப்போட ஆட்களை தேடுகின்றோம் என்றார்கள். இன்னும் ஒரு சில நாட்களுக்கு பின்பு மட்டையை வெட்டிபோட ஆட்களை ஒழுங்குசெய்திருக்கிறோம் என்று உறுதி கூறினார்கள். இறுதியாக பனை நார் கயிறு செய்ய துவங்கிவிட்டோம் என்றார்கள். இவைகள் எதுவுமே நிகழ்கின்றவைகளாக எனக்கு படவில்லை ஏதோ ஒரு கனவு என்னைக் கடந்து செல்கின்றதுபோலவே இருந்தது.அப்போது நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் வாழ்ந்துவந்தோம். அங்கிருந்துது நான் மும்பை வந்த பின்பு ஒரு நாள் எங்கள் கரங்களில் அந்த மூக்கணாங் கயிறு கிடைத்தது. இவ்வித நுண்தகவல்களை வெளியிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ள ஒருபோதும் இயலாது.

95 வயது நிரம்பிய பழனிச்சாமி கவுண்டர்  பனை நார் கொண்டு இதனைச் செய்திருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பாளையம் என்ற ஊரில் வசிக்கும் இவர் தனது கால் தொடைப்பகுதியில் பனை நார்களை வைத்து திரித்து இந்த கயிற்றினைச் செய்திருக்கிறார். கைகள் கால்கள் கண்கள் ஆகிய “உடற்கருவிகளிக்கொண்டே” இவ்வித பாரம்பரிய மூக்குச் சரடினை செய்திருக்கின்றனர் என்பது  சாதாரணமாக நாம் கடந்துபோகக்கூடிய செய்தியல்ல. சுமார் முப்பது முதல் நாற்பது வருடங்களுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்த ஒரு அறிவு அப்படியே நமது கண்களுக்கு முன்பே மங்கி போகின்றது.

இது விஷயமாக இயற்கை ஆர்வலர் எஸ். மோகன் ராசுவுடன் பேசிக்கொண்டிருந்தேன்… “கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர்கள் பனை ஏறி பதனீர் எடுப்பது குறைவுதான் என்றாலும், பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் அவர்கள் விவசாய வாழ்வில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வகையில் மாடுகளை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. புளிச்சக் கீரைத் தண்டு, யானை கத்தாளை போன்றவைகளைக் கொண்டு கயிறு செய்த பாரம்பரியம் போய் நூல் கயிறு, என வரிசையாக இயற்கைபொருளிலிருந்து செயற்கை பொருள் நோக்கி வந்தவர்கள் தற்பொழுது நைலான் கயிற்றினை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார்.

மேலும் “மாட்டிற்கு தகுந்தாற்போல் மிக சன்ன கயிற்றிலிருந்து  மிகப்பெரிய கயிறு என மெதுவாக மாறுவார்கள்.  மாட்டின் மூக்கில் புண் ஏற்படாமல் இருக்க கயிற்றில் வெட்டுகாய பூண்டு, தும்பை, குப்பைமேனி, போன்ற இலைகளின் சாற்றினை கயிற்றில் உருவி முக்கணாங் கயிறு கட்டுவது வழக்கம்” என்றார்.

யோசிக்கையில் சில விஷயங்கள் நமக்கு பிடிபடுகின்றன… கொங்கு மண்டலத்தில் வேலிகளை சுற்றி பனை மரங்கள் இருந்திருக்கின்றன. பனை ஒரு அத்தியாவசிய மரம் எனபதனை மக்கள் புரிந்திருக்கிறார்கள். அப்படியானால், பனை கொங்கு மண்டலத்தில் பயன்பாட்டில் இருந்த ஒரு மரம் என்பதும், பனை சார்ந்த பயன்பாடுகள் குறிப்பிட்ட அளவில் உயிர்ப்புடன் இருந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

கங்கேயம் காளைகள் பொதுவாக வண்டியிழுக்க மற்றும் ஜல்லிக்கட்டிற்கு பெயர்போனவை. முரட்டுக்காளைகள்… அவைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வருகையில் கூட இரு பக்கமும் மூக்கணாங் கயிற்றினைப் பிடித்திருப்பதை நாம் காணலாம். பனை நார் கொண்டு செய்யப்பட்ட மூக்கணாங் கயிறு எவ்வகையில் மிருதுவாகவும் அதே வேளையில் உறுதியுடனும் இருந்திருக்கும் என்ற புரிதல் கொண்ட ஒரு காலகட்டம் இருந்திருக்கிறது. அதனை துழாவி எடுத்தால் கொங்கு மண்டலத்தை இணைக்கும் சரடுகள் கிடைப்பது உறுதி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  – 5 

ஏப்ரல் 21, 2020

இழைகள்

பத்து வருடங்கள் இருக்கும். நானும் போதகர் எமில் அவர்களும் மும்பையிலுள்ள கோரே பகுதியில் பனை ஓலைகளை சேகரிக்க சென்றோம். அங்கே டொமினிக் என பெயருடைய ஒரு மனிதரை நாங்கள் அறிவோம். அவருடைய தோட்டத்தில் அதிக பனை மரங்கள் உண்டு. அன்று தேவையான ஓலைகளை சேகரித்துவிட்டு பார்த்தால் எங்களிடம் கயிறு இல்லை. போதகர் எமில் உடனடியாக இரண்டு ஓலைகளை எடுத்து முடிச்சிட்டார். அப்படியே மேலும் இரண்டு ஓலைகளை எடுத்து முடிந்தபின் அவைகளை அருகருகே ஒன்றுபோல் கிடத்திவிட்டு நாங்கள் சேகரித்த ஓலைகளை அதன்மேல் அடுக்கினார். நான் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நாங்கள் சேகரித்த ஓலைகளை எப்படி இந்த ஓலைகள் தாங்கும் என எண்ணிக்கொண்டிருக்கையில் அவர் இரு முனைகளையும் இழுத்து ஓலைகளைச் சுற்றி வளைத்தார். முடிச்சிடுவார் என நான் எண்ணுகையில் அவர் அந்த ஓலைகளை இணைத்து கால்களால் ஓலைக்கற்றைகளை அழுத்தியபடி கட்டவேண்டிய ஓலைகளை முறுக்கத்துவங்கினார். கிட்டத்தட்ட நாம் அணியும் பெல்ட் போலவே இருக்கும் ஆனால் முடிவில் அவைகள் ஒன்றாக முறுக்கி விடப்பட்டிருக்கும் அவ்வளவுதான். நான் “இது எப்படி பெலக்கும்” என்பதுபோல வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அதே போல மற்றொருபுறமும் ஓலைகளை முறுக்கிவிட்டு, பின்னர், அவைகளை அப்படியே அந்த கட்டிற்குள் நுழைத்துவிட்டார். கட்டு நான் நினைத்ததைவிட மிக பலமாக அமைந்தது. அன்றுதான் ஓலையினை முறுக்கிச் செய்யும் உடனடி “கயிற்றினைக்” குறித்து அறிந்துகொண்டேன்.

மேலே நான் குறிப்பிட்டதை ஒத்த பல சம்பவங்களை எனது சிறு வயதில் நான் கண்டிருந்தாலும், நானே ஈடுபட்ட நிகழ்வானபடியால் இது எனக்குள் மாபெரும் தாக்கத்தை நிகழ்த்தியது. இயற்கையிலேயே பல்வேறு வகையான சரடுகள் கொடிகள் நார்கள் தாராளமாக இருக்கின்றன என்கின்ற நினைவூட்டலை இச்சம்பவம் எனக்கு அளித்தது.

இந்த சம்பவத்தினை விஞ்சும் மற்றொரு காரியமும் எனது வாழ்வில் நடந்தது. தாஸ் என்று ஒரு நண்பர் ஆப்பிரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். எனது பனை ஆர்வத்தின் மேல் அவருக்கு பெரு மதிப்பு உண்டு. அவர் தனது பணியிடங்களில் பனை மரங்கள் நிற்கின்றன என்ற ஒரு தகவலை எனக்குச் சொன்னார். எனக்கு ஆப்பிரிக்கா கனவு தேசம். பனை மரங்கள் உள்ள அத்துணை இடங்களும் எனக்குரிய இடங்களாகவே நான் கற்பனை செய்துவைத்திருக்கிறேன். ஆகவே அவரிடம், பனை சார்ந்த பொருட்களை எங்கு பார்த்தாலும் புகைப்படம் எடுத்து வையுங்கள் என்று சொன்னேன்.

African rope

கைகளால் பனை ஓலையினை திரிக்கும் ஆப்பிரிக்கர்

ஒருநாள் திடீரென அவர் அழைத்தார்… வாட்சாப்பை பாருங்கள் என்றார். கட்டுகட்டாக விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவைகளை கட்டி வைத்திருந்த கயிற்றினைக் காட்டி இவைகள் பனை ஓலைகள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை அதுதான். சுமார் 30 கிலோ வரை விறகுகள் கொண்ட கட்டுகளை பனை ஓலைக் கயிற்றினால் கட்டி எடுத்து செல்லுகிறார்கள் என்றார். அப்படியே எனக்கு பல காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பினார். வடலி ஓலைகளை கைகளால் மாத்திரம் பின்னியெடுத்து செய்யும் ஒரு கயிறு. அரண்டுவிட்டேன். ஓலைகளால் செய்யப்படும் கயிறுகள் இத்துணை உறுதிபடைத்தவையா என்கிற ஆச்சரியம் எழுந்தது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாரம்பரியமாக பனை ஓலைகளைக் கொண்டு கயிறுகளைச் செய்யும் எவரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை, ஆனால் ஓலைகளில் கயிற்றினைச் செய்யும் மனிதர்கள் உண்டு என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியானால் தமிழகத்தில் பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் கயிறுகள் எப்படி வழக்கொழிந்தன?

பழங்குடியினர் வாழ்வில் கயிறுகள் மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கின்றன என்கிற புரிதலுக்கு நான் வர மேலும் பல நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன. ஒரிசாவில் நான் சந்தித்த பழங்குடியினர் வாழ்வில் காணப்படும் பனை சார்ந்த கயிறுகள், தயாரிக்கும் நுட்பம் கண்டிப்பாக பனை பொருட்கள் தொல் பழங்காலத்தில் இருந்தே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். மகாராஷ்டிராவில் வாழும் வார்லி பழங்குடியினரின் ஓவியங்களிலிலும் விறகுகளை கட்டி எடுத்துச் செல்லும் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவைகள். ஒருவகையில் நாம் இவ்வோவியங்களைக் கவனித்தால் பனை ஓலைகளைக் கொண்டு அதனைக் கட்டியிருப்பது மிக தெளிவாக தெரியும். நானே பல்வேறு சூழல்களில் பல தரப்பட்ட மக்கள் பனை ஓலையினைக்கொண்டு புல் மற்றும் விறகு கட்டுகளை கட்டி ஒன்றிணைத்திருக்கிறதைப் பார்த்திருக்கிறேன்.

WP F

விறகு கட்டி எடுத்துச் செல்லும் வார்லி பழங்குடியினர்

பனை மர பத்தையில் இருந்து கிடைக்கும் தும்புகள் மற்றொரு வகையான பிணைப்பு சாதனம். இயற்கையிலேயே கிடைக்கும் மிகவும் உறுதியான இதனை  ஆதி மனிதர்கள் பெருமளவில் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சுமார் ஒன்றரை அடி வரைக்கும் நீளமாக கிடைக்கும் இவ்வித தும்புகள் ஒருவகை புரிதலை ஆதி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் குமரி மாவட்ட குளச்சல் பகுதியில் செயல்பட்டுவந்த தும்பு தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடக்கின்றது. மிகவும் அபாயகரமான அவ்விடத்திற்கு நானும் எனது நண்பன் ரங்கிஷுமாக ஒருமுறை சென்றிருந்தோம். அப்பொது அங்கே கிடந்த தும்புகள் பெருமளவில் உறுதியுடன் தான் இருந்ததாக நான் நினைவுகூறுகிறேன்.

2017 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் நான் ராமனாதபுரத்திற்கு போயிருந்தேன். அப்போது நான் நின்றுகொண்டிருந்த பனங்காட்டிலிருந்து டிராக்டர் ஒன்று புறப்பட்டு செல்வதைப் பார்த்தேன். என்ன கட்டி எடுத்து செல்லுகிறார்கள் எனப் பார்ப்பதற்காக அருகில் சென்றபோது டிராக்டர் முழுவதும் கட்டு கட்டாக பனை மட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. எனது வாழ்நாளில் அவ்வளவு பெரிய அளவில் பனை மட்டைகள் எடுத்துச் செல்லுவதை நான் பார்த்தது இல்லை. ஆகவே அதன் அருகில் சென்று பார்தேன். கட்டுகள் அனைத்தும் பனை ஈர்க்கிலால் பின்னப்பட்ட கயிற்றினால் செய்தது. அதே போன்ற கயிற்றினை மிடாலக்காடு பகுதியில் உள்ள பனைஓலை விற்பனை முகவர் அவர்கள் எனக்கு கொடுத்த ஓலைக் கட்டிலும் பார்த்தேன். இவ்வித பின்னல்கள் அனைத்தும் இராமனாதபுரத்திலிருந்து  தான் வருகின்றன என புரிந்துகொண்டேன்.

Rope

ஆப்பிரிக்க பனை ஓலைக் கயிறு

சிறு வயதில் மீன்பிடிக்கும் இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி சேறா சகதியா இல்லை தண்ணீரா என்று விவரிக்க இயலாதபடி இருக்கும் பகுதியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். கோடை காலத்தின் மிக முக்கிய இந்த விளையாட்டின் இறுதியில், மீன்களை எடுத்துச்செல்லுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு தாவரத்திலிருந்து எடுத்த நார் கொண்டு பிடித்த மீன்களை கட்டி எடுத்துச் செல்லுவார்கள். மீன்களின் வாய் மற்றும் செவிள் பகுதிக்குள் செல்லும் இந்த நார், மீன்கள் ஒரு தோரணம் போல இணைத்து கொள்ளுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது.

பெரிய பை தேவையில்லை. அப்படியே பொதிந்து எடுத்துச் செல்ல இலைகளும் தேவையிலை. ஒரு முழம் கயிற்றில் ஒன்பது மீன்களை அழகாக கட்டி தூக்கி எடுத்துச் செல்லலாம். இவ்விதமான ஒரு உபாயம் தொல் பழங்காலத்தில்  இருந்திருக்கவேண்டும். ஏனெனில், இன்றும் நமக்கு கிடைக்கும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது மணிகளையோ அல்லது எலும்புகளாலான அணிகலன்களையோ ஒன்றாக இணைத்து ஆபரணமாக தொல் குடியினர் செய்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

கற்காலம் கற்காலம் என்று சொல்லுகிறோமே அந்த கற்காலத்தில் தாவரங்களின் இசைவு எப்படி இருந்தது என்பதை பெருமளவில் யாரும் யோசிப்பது இல்லை. ஆனால் கற்கால ஆயுதங்களின் மேம்பாடு என்பது கண்டிப்பாக ஒரு தாவரத்திருந்து பெறுவதைக் கொண்டே சாத்தியம்.  எடுத்துக்காட்டாக ஒரு கல்லாலான கோடாரி துண்டு இருக்கிறது என வைத்துக்கொள்வோம், அதனை ஒரு எலும்புடனோ அல்லது மரத்தடியுடனோ   இணைக்கும்போது தான் அதன் வலிமை கூடுகின்றது. ஆப்பு அடித்து இறுக்கும் முறை இருந்தாலும் அதற்கு இணையாக ஏதோ ஒன்றினை வைத்து கட்டுகிறார்களே அது தான் கற்கால மனிதர்களை அடுத்த நிலைக்குத் தள்ளியது.

ஓலைகள் அல்லது பனை நார் அல்லது ஈர்க்கில் ஆகியவற்றிற்கு ஒரு பொது கூறு உண்டு அது இவைகளை கயிறாக திரிக்க முடியும் என்பதே. இரண்டோ மூன்றோ பிரிகள் இணந்தாலே அவைகள் கயிறு என பொருள்படும். பிரிகள் நன்றாக முறுக்கப்பட்ட ஓலைகளாகவோ அல்லது பனை நாராகவோ இருக்கும். இவ்வித பனை பொருட்களின் தேவை இன்றியே கூட இயற்கையில் கிடைக்கும் கொடிகள் கட்டுவதற்கு ஏற்றவைகளாக இருக்கின்றன.

“ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது”. பிரசங்கி 4: 12 என்கிற வேத வாக்கியத்தின் பிற்பகுதியினை பெரும்பாலும் திருமண வீடுகளில் கிறிஸ்தவ போதகர்கள் குறிப்பிடுவார்கள். ஒற்றைச்சரடாக இணைக்கப்பட்ட முன்று நூல் இணைந்தால் அது பலம் கொண்டதாக மாறிவிடுவதை பிரசங்கி குறிப்பிடுகிறார். மணமகன் மணமகள் மற்றும் கடவுள் இணைந்திருக்கும் குடும்பங்கள் பிணைப்புடன் உறுதியாயிருக்கும் என்ற பொருளில் எடுத்தாள்வார்கள்.

பேராசிரியர் நிகோலாஸ் கோனார்ட் (Nicholas Conard) மற்றும் அவரது குழுவினர் வெகு சமீபத்தில்  ஒரு கருவியினைக் கண்டுபிடித்தார்கள். பனியுகத்தில் காணப்பட்ட மிக பிரம்மாண்டமான யானை இனத்தைச் சார்ந்த மாமோத் தந்தத்தில் நான்கு சிறிய துளைகள் இடப்பட்டிருந்தன. ஒவ்வொரு துளையும் சுமார் 7 மிமீ முதல் 9 மிமீ வரையே இருந்தன. அவ்வளவு தான் அந்த கருவி. இசைக்கருவியாக இருக்குமோ அல்லது அழகுபொருளாக இருக்குமோ என பலவறாக புரட்டிபார்த்த அந்த குழுவினர் இறுதியில் இந்த கருவிகள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய கயிறு திரிக்கும் கருவி என்ற புரிதலுக்கு வந்தனர்.

இழைகளால் ஆன ஒரு யுகம் இருக்கிறது என்று எலிசபெத் வேலாண்ட் பார்பெர் (Elizabeth Wayland Barber) என்ற தொல்லியல் மற்றும் பெருங்கற்கால ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.   ஆதி மனிதர்களுக்கு தாவர இழைகளும்  மிருக இழைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இவ்வித இழைகள் கற்கால மனிதர்களுக்கு  மிக இன்றியமையாத ஒன்றாய் இருந்திருக்கின்றன  என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக கற்காலம் என்பதே இழைகளால் பின்னப்பட்டு முடிச்சுகளிடப்பட்ட  ஒரு காலம் தான். கல் என இறுகிப்போன ஆண் துணையை வஞ்சிக்கொடி சுற்றிவளைத்து பொருளுள்ள திசை நோக்கி வழிநடத்திய ஒரு காலம்.

பார்பர் (Barber) ஒரு பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்தவர் என்பது நாம் புரிந்துகொள்ள கூடிய ஒன்று. தேடி அவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் நம் பார்வை கோணங்கள் எட்டாத இடங்களை சென்றடைபவை. அவரது பெண்களின் வேலைகள்: முதல் 20,000 வருடங்கள் – பெண்கள் ஆடைகள் மற்றும் ஆதி கால சமூகம் (Women’s Work: The First 20,000 Years : Women, Cloth, and Society in Early Times)என்ற புத்தகம் பெண்களுக்கும் ஆடைகளுக்கும்  உள்ள தொடர்பை ஆழமாக நிறுவும் ஒன்று.

இச்சரடுகளுக்கு பரந்துபட்ட பயன்பாடு உண்டென்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம். குறிப்பாக, மீன் பிடிக்கும் அல்லது வேடர்களின் வலைகள் செய்வதோ, கண்ணிகள் அமைத்து வேட்டையாடுவதோ, கூர் ஆயுதங்களான ஈட்டி அம்பு போன்றவைகளை இறுக கட்டி இணைக்கவோ என பல்வேறுவகை பயன்பாட்டில் இருந்துவந்திருக்கின்றன. மேலும் விறகு சேகரிப்பதற்கும் கூடாரங்கள் அமைப்பதற்கும் பொருட்களை சேகரிப்பதற்கும் இவைகள் பேருதவியாக இருக்கின்றன. இவ்விதமான இழைகளும் சரடுகளும் தான் கயிறு திரிப்பதற்கும் பின்னல்களால்  நிறைந்த ஜவுளி துறைக்கு அடிப்படை என ஆணித்தரமாக கூறுகிறார்கள்.

பல்வேறு மணிகளை மீட்டெடுத்ததன் வாயிலாக  சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட ஏதோ தவர அல்லது விலங்கின் ரோமங்களை கயிறாக திரித்து மணிகளை தொடுத்திருக்கிறார்கள். ஒரு உண்மையினை அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அதாவது இயற்கையாக கிடைக்கும் சரடுகள் மட்கிப்போகும் தன்மையுடையவைகள் ஆதலால்,  பெரும்பாலும் இணைப்பு சரடுகளை கற்கால சான்றுகளிலிருந்து நம்மால் மீட்டெடுக்க இயலவில்லை.

பெரும் கற்கால பயன்பாட்டு பொருளாக கயிறு அல்லது திரிக்கப்பட்ட மெல்லிய இழைகள் இருக்குமென்று சொன்னால், கண்டிப்பாக பனை எனும் மூதாயின் பங்களிப்பு அதனுள் கலந்திருக்கும். எண்ணிப்பார்த்தால், ஓலை, ஈர்க்கில், மட்டையில் கிடைக்கும் நார், தும்பு என எண்ணிறந்தவைகள்  ஒரே மரத்திலிருந்து சரடாக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. இத்துணை பரந்துபட்ட  தன்மைகொண்ட இயற்கை இழைகளை வழங்கும் மரம் அல்லது தாவரம் வேறு ஏதும் இல்லை எனலாம். மேலும் வருடம் முழுவதும் உணவினை அள்ளி வழங்கும் ஒரு மரமாகவும் பனை மரம் காணப்படுகின்றது. உலக வரைப்படத்தில் உள்ள இரண்டு கண்டங்களில் வரலாற்று காலத் திற்கு முன்பே பனை மரங்கள் பரவியிருந்திருக்கின்றன. இச்சூழலில், பனை ஓலைகளில் கிடைக்கும் நார் மற்றும் கயிறுகளைக் குறித்து பேசாமல் கற்கால ஆய்வை எவரும் முழுமைசெய்துவிட இயலாது.

 

 அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  – 4

ஏப்ரல் 8, 2020

பட்டை

பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் பொருட்களிலேயே மிக தொன்மையானதும் இன்றளவிலும் பரந்துபட்ட பயன்பாடு கொண்டதுமான பனையோலை பட்டை,  நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டிய ஒரு முதன்மைப் பொருளாகும். இந்த வடிவம் ஆதி காலம் தொட்டு இன்றுவரை மாறாததாக இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். பனையோலைப் பட்டை  மக்கள் பயன்பாட்டில் பெருகியிருப்பதற்கு காரணம் இதன் வடிவத்தில் காணும் எளிமையும், இதன் பயன்பாட்டில் காணப்படும் வசதியும், காலங்களை கடந்து நிற்கும் தொன்மையும், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மையும், சமயங்களை உள்ளடக்கும் விரிவும்  என்றே எண்ணுகிறேன். மேலும் மிகப்பெருமளவில் பட்டையில் மற்றங்கள் ஏதும் ஏற்படவியலாதபடி அதன் வடிவம் ஓலையின் இயற்கைவடிவத்தைச் சார்ந்தே இருக்கிறது என்பது தெளிவு.

pattai

பனை ஓலை பட்டையில் பதனீர் ஊற்றிக் குடிக்கும்போது

பட்டை என்பது சிறகொன்று அன்னமிட்ட கையாக மாற்றம் அடைவது தான். அது பனை தனது இறகினை எடுத்து தன் பிள்ளைகள் பசியாற குவிக்கும் கரமே தான். இரக்கத்தின் கரம், அன்பின் கரம், சுவையூட்டும் கரம். அதனை மடிப்பது கூட ஒரு மா தவமே. எனது வாழ்வில் ஏனோ தானோவென்று பட்டை மடிக்கும் ஒருவரைக்கூட நான் கவனித்தது இல்லை. மிக கருத்தூன்றி ஓலையின் தன்மையினை உணர்ந்து பட்டையினை மடிப்பார்கள்.  ஒருவேளை கவனக்குறைவாக பட்டை மடித்தால் ஓலையில் கீறல் ஏற்பட்டு பதனீர் ஓழுகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சேகரிக்கும் பொருளாதாரத்தை மையமாக கொண்ட அனைத்து பழங்குடி பண்பாடும்  சேகரிக்கும் தருணத்தில் இலைகளை பயன்படுத்துகிறது. தானியங்களையோ அல்லது பழங்களையோ சேகரிப்பது ஆகட்டும் வேட்டையாடிய பொருட்களை சேகரிக்கும்போதும் தொன்மையான கலாச்சாரத்தில் கூட இலைகள் பொருட்களை பொதிந்து எடுத்துச் செல்ல உதவிகரமாக இருந்தன.

ஒருவேளை பனம்பழங்களை பனை ஓலையில் பொதிந்து எடுத்து வந்த ஒரு தொல் சமூகம், தங்கள் உணவிற்கு மிஞ்சிய ஒரு பழத்தை ஓரிரு நாட்கள் ஓலையுடன் விட்டு வைத்திருந்தார்கள் என்று சொன்னால் அந்த ஓலை குவிந்து தனது இயல்பு வடிவத்தை விட்டு ஒரு பட்டையின் வடிவத்தை எட்டியிருக்கும். இந்த வடிவம் தான் தேவைக்கேற்ப ஓலைகளை மிகச்சரியான வகையில் பயன்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளி எனலாம்.

Fruits carried on palm leaf

பனம் பழங்களை பனை ஓலையில் எடுத்துச் செல்லுவது – ஆரே, மும்பை

குமரி மாவட்டத்தில் இன்றும் கூட பனை ஓலைப்பாயே இறைச்சிக்கடைகளில் விரித்திருப்பார்கள். இது பனை ஓலையினை விரித்து அதன் மீது வேட்டை உணவை பரப்பிய நினைவுகளின் எச்சமாக இருக்கலாம். இன்றும் குமரி மாவட்ட வீடுகளில் கோழியை அறுக்கும்போது வாழை இலையில் வைப்பது வழக்கம். பனை மரத்தின் இடத்தை வாழைகள் பிடித்துக்கொண்டன என்பது தான் உண்மை.

Fish Packing

மீன் பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

எனது சிறு வயதில் பன்றி இறைச்சியினை விற்பவர்கள் அதனை பனை ஓலையில் தான் கட்டி கொடுப்பார்கள். இது குமரி மாவட்டத்திற்கான ஒரு தனித்தன்மை. ஆனால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கூட ஆட்டிறைச்சியினை பனை ஓலையில் பொதிந்து கொடுப்பதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை காயல்பட்டணம் சென்றிருந்தபோது அங்கே பனை ஓலைகளில் தான் ஆட்டிறைச்சியினை பொதிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தென்காசியை அடுத்த கடையம் சந்தையில் பனை ஓலையில் கருவாட்டினை பொதிந்துகொடுக்கும் ஒரு சம்பவத்தினைக் கண்டபோது இந்த வழக்கம் மிக தொன்மையானது தான் என்கிற உறுதி எனக்குள் ஏற்பட்டது.

Meat pack

இறைச்சி பொதிய பனை ஓலை பயனபாட்டில் உள்ளது

பொதுவாக ஐம்பதாண்டுகளுக்கு முன்பு பனங்காட்டினூடாக வழிப்போக்கர்கள் செல்லும்போது பனையேறிகள் பனை ஓலையினை அறுத்துப்போடுவார்கள். கீழே செல்லும் வழிப்போக்கர்கள் அதனை எடுத்து பட்டையாக மடித்து தயாராக வைத்து இருக்கவேண்டும். வழிப்போக்கர்களுக்கு பட்டை மடிக்க தெரியவில்லையின்று சொன்னால், பனையேறியே கீழிறங்கி வந்து ஓலைகளை பட்டையாக மடித்து தருவார். பின்னர் வழிப்போக்கரின் பசியாற பதனீரைப் பட்டையில் ஊற்றுவார்.

பனையேறிகளின் இந்த தாராள குணத்திற்கான கரணங்கள் உண்டு. அது தொல் சமூகங்களில் உள்ள பகிர்ந்தளிக்கும் தன்மை. ஒரு சமூகத்தில் ஒருவன் வேட்டையாடினாலும் அந்த வேட்டையிலிருந்து பெறும் உணவானது வேட்டையில் பங்குபெறாதவரின் பசியையும் ஆற்ற வேண்டும் என்பதுவே நியதியாக இருந்தது. மாத்திரம் அல்ல இந்திய பெருநிலத்தில் பல்வேறு புண்ணிய தலங்கள் உண்டு. பனையேறிகளால் தங்கள் தொழில் தொடங்கிய பின்னர் ஆலயங்களோ புண்ணிய தலங்களோ செல்ல இயலாது.  ஆகவே உணவளிக்கும் மாபெரும் அறத்தினை தங்கள் வாழ்வில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

Mithran pathaneer

மித்திரன் ஓலைப்பட்டையில் பதனீர் குடிக்கிறான்

பண்பாட்டு அளவில் பனையோலைப் பட்டை என்பது மனிதர்களுடைய வாழ்வில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக வந்துகொண்டிருப்பதை அறிகிறோம். பனையேற்று வேளையில் பனை மரத்திற்கு பூசை செய்வது பனையேறிகளின் தொன்றுதொட்ட வழக்கம். அதாவது ஒவ்வொரு பருவ காலத்திலும் பனையேறிகள் பனை ஏறத்துவங்கும்போது காளி பூசை செய்வார்கள். அப்போது பனை ஓலை பட்டையில் பதனீரை வைத்து வணங்குவார்கள். பனை ஓலை பட்டை அவ்வகையில் ஒரு அட்சய பாத்திரமாக உருவெடுத்து எழுவதை பார்க்கிறோம்.

பனை ஓலைப் பட்டைகளுக்கு என்று சிறப்பு மதிப்பு இன்றும் சில சடங்குகளில் எஞ்சியிருக்கின்றது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள  நாட்டார் வழிபாட்டு முறைகளில் சாமிக்கு படையல் இடும்போது, விழாவில் கலந்துகொள்ளும் மக்களுக்கு பனை ஓலையிலேயே உணவளிப்பார்கள்.

பனை ஓலை பட்டை மடிப்பது என்பது ஒரு எளிய தொழில்நுட்பம் தான். பிறந்த குழந்தையை கையில் எடுப்பதுபோல ஓலையை எடுக்கவேண்டும். பின்பு ஓலை கிழியாமல் சற்று உட்புறம் குவிய வைக்க வேண்டும். இறுதியாக ஓலைகளின் முடிவில் பிரிந்து நிற்கும் ஓலைகளை ஒரு கையால் நெருக்கி, மற்றொரு கையால் அதன் கடைசி ஓலையை மாத்திரம் சற்றே கிழித்து அதனை ஒன்றாக்கப்பட்ட ஓலைகளை சுற்றி நுழைத்து இறுக்கிவிடுவதுதான் பட்டை. இது பார்பதற்கு ஒரு சிறு படகுபோல் காணப்படும்.

Meat on mat

இறைச்சி கடைகளில் பனை ஓலை பாய்

பட்டைகள் பல்வேறு சூழல்களில் இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பனை மரங்கள் பெருமளவில் இருக்குமிடங்களில் பனை ஓலைகள் ஒரு அடிப்படை உணவு பாத்திரமாக செயல்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்கு படைக்கும் பாயசம், மற்றும் கறி சோறு அல்லது கஞ்சி இன்றளவும் சில ஊர்களில் பனை ஓலையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நான் இராமனாதபுரம் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பனை ஏறுகின்ற தொழிலாளர்கள் சிலர் சில சடங்குகளை முடித்துவிட்டு உணவருந்த ஆயத்தமானார்கள். படையலுக்காக சேவல் கோழியை அடித்திருந்தவர்கள் அதனை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளுமாக சுமார் 30 நபர்கள் இருந்திருப்போம். அனைவருக்கும் ஒரே கோழியும் அதில் ஊறி நின்ற  இரசமும் சோறும் அன்று விருந்தாக அமைந்தது. பங்கிட்டு தின்றால் பசியாறும் என்பதற்கிணங்க, அந்த உணவின் சுவை தனித்துவமாக இருந்தது. ஆம் பட்டையில் தான் அன்று அனைவருகும் உணவு வழங்கினார்கள்.

KayalpattaNam

கறிக்கடை – காயல்பட்டிணம்

பனை ஓலைக்கென ஒரு மணமும் சுவையும் உண்டு. பனை ஓலையில் ஒரு உணவு வைத்து பகிரப்பட்டால், அதன் சுவையே தனித்துவமானதாக இருக்கும். வாழையிலையில் சாப்பாடு போடுவது தற்போது ஒரு கவுரவமான விஷயம். அதிலும் குறிப்பாக உணவகங்களில் சென்று சாப்பிடும்பொது வாழை இலைக்கென ஒரு தனி சிறப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், பனை ஓலையில் உணவு சாப்பிடாதவர்கள் தான் வாழை இலையினை விதந்தோதுவார்கள். பனை ஓலையில் ஒருவர் ஒருமுறை சாப்பிட்டுவிட்டால், அதுதான் அவருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவு பாத்திரமாக இருக்கும். சுவை கூட்டும் ஒரு அற்புத உணவு பாத்திரம் அது.

பனை ஓலையில் கஞ்சி வழங்குவது  குமரி மாவட்ட கல்லறை பிரதிஷ்டை நேரத்தில் நடக்கும் ஒரு சடங்கு. வழக்கொழிந்துபோன இந்த சடங்கு இன்று வேறு வகைகளில் நம்மிடம் எஞ்சியிருக்கின்றது.  கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் புனித வெள்ளி ஆராதனையின்போது, குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு திருச்சபைகளில் பனை ஓலையில் கஞ்சி கொடுப்பது வழக்கம்.  மூன்று மணி நேர ஆராதனைக்குப் பின்பு, ஆலயத்தில் வைத்து கொடுக்கப்படும் பனையோலை பட்டை கஞ்சி மிக சிறப்பானதாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனது அறிவில், குமரி மாவட்டத்தில் பல்வேறு சி எஸ் ஐ ஆலயங்களில் பனை ஓலை பட்டையில் கஞ்சி வழங்கும் மரபு இருந்தாலும் இன்றும் எங்கள் சொந்த ஊர் திருச்சபையான சி எஸ் ஐ பெருவிளையிலும், மற்றும் ஜாஸ்மினுடைய ஊரின் அருகில் இருக்கும் சி எஸ் ஐ கூடைவிளை  சபையிலும் இன்றும் பனை ஓலைகளில் மக்கள் கஞ்சி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நான் சூரங்குடி திருச்சபையில் கூட இந்த முறைமையினை கண்டு அனுபவித்திருக்கிறேன்.

தொன்மையான ஒரு வாழ்வின் எச்சத்தினை திருச்சபை கைக்கொள்ளுகிறது என்பது பல்வேறு மக்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். திருச்சபை தன்னை இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது என்பதற்கு இதுவும் சாட்சியாக இருக்கிறது.

இவ்விதமான கஞ்சி வழங்கலின் போது காண துவையல் வழங்குவது மரபு. பனங்காடுகளில் பனையேறிகள் காணம் உழுந்க்டு மற்றும் தட்டைப்பயறுவகைகளையே பெருமளவில் பயிரிட்டுவந்தார்கள் எனவும் இவைகளே மானாவாரி பயிர்களாக நீர் குறைவாக கிடைக்கும் பனக்காட்டு சூழலுக்கு ஏற்றது என்பதையும் பனை சார்ந்து வாழும் மக்கள் அறிவார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பதனீர் விற்பனை என்பது சாலை ஓரங்களில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு இப்போதுள்ளதைப் போல் பதனீர் விற்பனைப்பொருளாக இருக்கவில்லை. சாலையோரங்களில் கிடைக்கும் இப்பதனீரின் உண்மை தன்மை குறித்த கேள்விகள் நமக்கு அதிகம் இருந்தாலும், பதனீர் விற்பவர்கள் அனைவரும் தங்களுடன் பனை ஓலைகளையோ ஓலைப் பட்டைகளை எடுத்துவர தவறுவதில்லை. காரணம், போலி பதனீரை மறைக்க இவ்விதம் தங்களுடன் உண்மையான ஓலைகளை எடுத்துவருவார்கள்.  நகரங்களில் பொதுவாக பதனீர் குடிப்போர்களுக்கு பட்டைகள் புதிதுபுதிதாக செய்து குடுப்பது வழக்கமாக இருந்தாலும், கிராமங்களில் ஒரே பட்டையினை பகிர்ந்துகொள்ளுவது வழக்கம். அப்படியே ஆடு மேய்க்கின்ற கோனார்கள்  கஞ்சி குடிப்பதற்காக ஒரே பனை ஓலை பட்டையினை வெகு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதும் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதை எனது பயண அனுபவங்களில் இருந்து பெற்றிருக்கிறேன்.

கடந்த தேர்தலின்போது ஒட்டப்பிடாரம் அருகே சூராவளி பிரச்சாரம் நடத்திய ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு மக்கள் பதனீர் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இது மிக முக்கிய செய்தியாக நாழிதழ்களில் வெளியாகியிருந்தது. அச்சூழலில் பனை ஓலை பட்டையில் தான் ஸ்டாலின் அவர்கள் பதனீரை வாங்கிக் குடித்தார்கள். தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பனை விதைகளை விதைக்க முற்பட்டிருந்த தருணம், நாம் தமிழர் கட்சி கூட அவ்விதமாகவே பனை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. அச்சூழலில் தான் பனை சார்ந்த மக்களுடன் தானும் இணைந்திருக்கிறேன் என்கிற ஒரு எண்ணத்தை விதைக்கும்படியாக திரு ஸ்டாலின் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தியிருப்பார். ஏனெனில் நிகழ்வின் முடிவிலே அவர், பதனீர் நல்ல சுவையுடன் இருக்கிறது இதற்குள் சர்க்கரை போட்டீர்களா என கேட்டிருக்கிறார். பலரால் நகைச்சுவைக்குள்ளாக்கப்பட்ட இந்த பதில் உண்மையிலேயே பனை சார்ந்து தமிழகத்தில் இருக்கும் விலக்கத்தினை நமக்கு விளக்குகிறது.

Stalin and kanimozhi

நாம்  வாழும் இருபத்தி ஓராம்  நூற்றாண்டின் இச்சூழலில் கூட பனை எப்படி தன்னை சூழலுக்கேற்ப மக்களின் எண்ணங்களுடன் இணைத்துக்கொள்ளுகிறது என்பது வியப்பளிப்பது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்திக்கொண்டிருக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற பகுதியில் பனங்காட்டிற்குள் வாழும் குணசேகரன் முருகலெட்சுமி தம்பதியினர் கொரோனா முக கவசத்தினை பனையோலையில் தயாரித்து அமர்களம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பெரு விருப்பத்துடன் இதனை வாங்கிச்செல்லுகின்றனர். குறைந்த விலையில் பனையேறும் தம்பதிகளால் இதனை உற்பத்திசெய்து விற்பனைக்கு கொடுக்க முடிகிறது. பாரம்பரிய பட்டையின் அதே அமைப்பு ஆனால் நூலினை கட்டி அதனை முக கவசமாக  மாற்றிவிட்டனர். இது, நாம் பல வகைகளில் புறக்கணித்த தொல் வடிவம்ங்கள் இன்றும் பயனுள்ளவைகளாக இருக்கும் என்பதற்கு ஆதாரம். அதிலும் குறிப்பாக நவீன உலக உதவிகள் சென்று சேர இயலாத பல்லாயிரக்கணக்கான குக்கிராமங்களுக்கு இவ்வித உதவி மிகவும் தேவையாக இருக்கிறது.

Woven Mask

பின்னி செய்யப்பட்ட பனை ஓலை முக கவசம்

பலருக்கு இவ்வித ஓலைகளாலான முக கவசங்கள் பயனுள்ளவைகளாக இருக்குமா என்கிற கேள்விகள் இருக்கிறது. முதலில் அவைகள் நமது மூக்கையும் வாயையும் நாம் தொடுவதை தடுகிறது. இரண்டாவதாக, தாவரங்களில் இருந்துதான் பல்வேறு மருந்துகளும் பயன்பாட்டு பொருட்களும் இன்று நமக்கு கிடைக்கபெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் பயன்படுத்தும் பச்சை வண்ண உடையே இயற்கையிலிருந்து பிரதி எடுத்ததுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதுகுறித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் காட்சன் வின்சிலி தாஸ் அவர்கள், கோவில்பட்டி அரசு சித்த மருத்துவரான திரு அவர்கள் “பனை ஓலையில் நோய் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் பனை ஓலையில் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வீரியத்துடன் காணப்படும்” என்கிறார். இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நிறுவும் பொருள்னிலை மற்றும் மனநிலை கொண்டவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை ஆனால் பனை ஓலையின் பயன்பாடு பனங்காட்டில் உள்ளவர்களுக்கு மிக எளிதாக வாய்த்துவிடுகிறது.

Facepalm

பட்டை வடிவில் செய்யப்பட்ட பனைஓலை முக கவசம்

ஆதி கண்டுபிடிப்புகள் என்பது திட்டமிட்டு நடந்தவைகள் என்பதைவிட அவைகள் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு எதேச்சையாக நடைபெற்ற எதிர்வினைகள் என்பது தான் சரியாக இருக்கும். அந்த அளவிற்கு மனிதன் பனை மரத்தினை சார்ந்து வாழ்ந்திருக்கிறான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  – 3

ஏப்ரல் 6, 2020

குகை ஓவியம்

பனை சார்ந்த வாழ்க்கை என்பது பெரும் கற்கால வாழ்க்கையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி நமக்குள் எழுவது இயல்பு. ஏனென்றால் பெரும்பாலும் பெரும்கற்கால மனிதர்கள் குகை ஓவியங்களாக வரைந்தவைகளில் மரங்களே கிடையாது. பெரும்பாலானவைகள் மிருகங்களும் மிருகங்களை வேட்டையாடும் மனிதர்கள் தான். ஆனாலும் வரை கலையின் ஆரம்ப குறியீடான புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம் போன்றவைகள் ஏராளமாக குகைகளில் காணக்கிடைக்கின்றன. பெரும் கற்கால மனிதர்கள் பனியுகத்தைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணமும் இருக்கிறது. இது ஒரு சார்பு நிலை புரிதலே. உலகின் ஒரு சில பகுதிகள் பனியால் மூடியிருக்கும்போது வேறு பகுதிகள் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் உண்மை. அப்படியானால் பனியுகத்திற்கு எதிராக ஒரு பனையுகம் இருந்திருக்கவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே பனை மரம் எவ்வகையிலெல்லாம் மனிதனுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என நாம் ஒரு வரைவை இட்டுப்பார்க்கலாம்.

பனை சார்ந்து மனிதன் வாழும்போது எண்ணிக்கைகளை அறிந்துகொள்ளுவது மிக எளிதாக இருந்திருக்கிறது. பனை விதைகள் பெரும்பாலும்  ஒன்று இரண்டு மூன்று என இருப்பது எண்ணிக்கையின் ஆரம்ப படிநிலை என நாம் கொள்ள இயலுமா? அல்லது பனை ஓலைகள் ஒன்று இரண்டு என முளைப்பதும் ஆதி கால மனிதர்களுக்கு எண்ணிக்கை சார்ந்த புரிதலை மேம்படுத்துவதாக இருந்திருக்குமா?. ஏனென்றால் ஒரு இலை விடும்போது பனங்கிழங்கு மென்மையானதாக இருக்கும் என்கிற புரிதல் அவர்களுக்கு இருந்திருக்கும். அப்படியே இரண்டு இலை விடும்போது அவைகள் முற்றியிருக்கும். இந்த புரிதல் பனங்காட்டின் வாழ்வாதாரத்திற்கு  அடிப்படையானவை. அப்படியே இரண்டிற்கு மேல் ஓலைகள் கிளைத்தெழுமென்றால் அங்கே பனங்கிழங்கு இருக்காது என்கிற புரிதலும் கண்டடையப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக… இரண்டு ஆதி மனிதர்கள் சந்திக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவகளுக்கு ஒரு பனம் பழம் கிடைக்கிறது. அதற்காக அவர்கள் போட்டிபோடுபோது அந்த பழம் இரண்டாக பிளந்து ஆளுக்கு ஒரு விதைகளும் அதனுடன் இணைந்திருக்கும் சதைப்பற்றும்  கிடைக்கின்றன. இது சரியான பகிர்தல் என்ற புரிதல் ஏற்பட்டிருக்கும்.  அப்படியானால் மூன்று விதைகள் உள்ள பனம்பழம் கிடைக்கையில் அது சார்ந்து எழும் தீர்க்க முடியாத கேள்விகளே எண்ணிக்கை சார்ந்த நோக்கிற்கு ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும்.

Paleo Pal Art

பனை மரம் மிக தெளிவாக் தெரியும் குகை ஓவியம்

உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், மனிதர் தனது உடல் பாகங்களையே முதன் முதலில் எண்ணும் கருவியாக பயன்படுத்தியிருப்பர் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணுவதையே கற்கால மனிதர்கள் செய்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் பனை ஓலைக்கு எத்தனை விரல்கள் இருந்திருக்கும்?  இவ்விதமான கேள்வி இயற்கையை உற்றுநோக்கும்போது எழுவது இயல்பு. கைகளுக்கும் பனை ஓலைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டடைந்தவுடனேயே இவ்விதமான பொருத்தப்படுகளை மனிதர்கள் யூகித்திருப்பார்கள். தன் உடலைப்போலவே ஒரு தாவரத்தின் இலைகள் இருக்கிறது எனும் எண்ணம் தான் பனையுடன் மனிதர்களுக்கான நெருக்கத்திற்கு காரணமாக இருந்திருக்குமா? இல்லை உணவின் வழியாக அது மனிதர்களுக்கு வாழ்வளித்தது காரணமாக இருந்திருக்குமா? இவ்வித கேள்விகள் ருசிகரமானவை. ஏனெனில் மேலும் அனேக வழிகளில் மனிதன் பனையோடு தனக்குள்ள உறவை வெளிபடுத்தியிருப்பான் என்பது தான் உண்மை.

பத்ரகாளி தன் பிள்ளைகளுக்கு பனையேற கற்றுக்கொடுத்த சம்பவம் குறித்து ஒரு பழங்கதை குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றில் உண்டு. தனது பிள்ளைகளின் பசியாற்ற பனை மரத்தை காளி உருவாக்குகிறாள். பின்பு தனது காலில் இட்டிருக்கும் தண்டட்டிகளை கழற்றி கொடுத்து அதனை தளை நாராக மாற்றி பனை மரங்களில் ஏற பணிக்கிறாள். பனை மரத்தின் உயரம் அதிகமானபடியால் காளி யோசித்தாள். ஒருவேளை பனை மரத்திலிருந்து தனது பிள்ளைகள் வீழ்ந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணி பல்வேறு மூலிகைகளை இணைத்து ஒரு மருந்து தயாரித்தாள். இந்த மருந்தினை தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டி தனியே வைத்துவிட்டு வேறு என்ன செய்யலாம் என எண்ணலானாள். காளி பனை மரத்தினை உருவாக்கும்போது, தற்பொது இருப்பது போல அதன் ஓலைகள் உட்பகுதி இணைந்தும் வெளிப்பகுதி விரிந்தும் காணப்படவில்லை. தென்னை ஓலைகளில் இருப்பது போலவே அவைகள் தனித்தனியாக இருந்தன. ஆகவே, இவைகளை இணைத்து ஒன்றாக்கினால், பிள்ளைகள் பதனீர் குடிக்க உதவுமே என்று எண்ணி பிரிந்திருந்த ஓலைகளை ஒவ்வொன்றாக ஊசிகொண்டு தைக்க  ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே வந்த மாயவன், காளியை பார்த்து,  உன் பிள்ளைகளுக்காக நீ கஷ்டப்பட்டு ஓலைகளை பட்டையாக தைத்துக்கொண்டிருக்கிறாய் ஆனால் அவனைப் பார் உனக்கு பதனீர் தருவதற்கு முன்பாக தானே முந்தி பதனீரை சுவைக்கிறான் என சொல்ல, காளி பனையில் என்ன நிகழ்கிறது என அண்ணாந்து பார்த்தாள். பனம் பாளையை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த பிள்ளையின் வாயில், அவ்வேளையில் தெரித்த ஒரு சொட்டு பதனீர் எதிர்பாராதவிதமாக தெறித்தது. பிள்ளை எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் தானே முந்தி பதனீரை சுவைத்துவிட்டானே என்ற ஆற்றாமையால் காளி ஓலைகளை அப்படியே வீசிவிட்டு செல்கிறாள். அவள் விட்டுச்சென்ற மருந்தினை அருகில் இருந்த அணில் சாப்பிட்டது. அதனால் தான் எவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் அணிலுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் அது தப்பித்துக்கொள்ளுகிறது. அணில் சாப்பிட்டதில் மிச்சம் சில துணுக்குகள் எஞ்சியிருந்தன.  அப்படி மிச்சமிருத்த ஒரு சிறு துணுக்கை ஓணான் வந்து நக்கிப்பார்த்தது.  ஆகவேதான் ஓணான் கீழே விழுந்தவுடன் ஒரு கணம் தயங்கி பின்னே உயிர் பிழைத்து ஓடுகிறது என்றும் கதை அந்த விரியும்.

காளி வீசிவிட்டு சென்ற ஓலை உள்ளங்கையும் விரிந்த விரல்களும் என்ற வகையிலே நின்றுவிட்டிருந்தது. ஆகவே தான் இன்றும் பனை மரத்தில் உள்ள ஓலைகள் முற்றுப்பெறாமல் இருக்கிறது என்று அந்த பழங்கதை நிறைவடையும். இவைகளை ஒன்றிணைத்துப் பார்க்கையில், மனிதனுக்கு இயற்கை மீதான ஒரு கவனம் எப்படி ஒரு தொன்மமாக உருவெடுக்கிறது என்பதையும், மனிதன் இயற்கையிலேயே தன்னை சுற்றியுள்ளவைகளை கூர்ந்து பார்த்து தன்னோடு ஒப்பிட்டு தனது அறிவை மேம்படுத்துகிறான் எனவும் விளங்கும்.கைகளை ஒத்திருக்கும் ஓலைகள் எதை நோக்கி மனிதனை இயக்கின என்பது ஆய்வாக விரித்தெடுக்கவேண்டிய  ஒரு முக்கியமான காரியம்.

கைகளை பயன்படுத்தி எண்ணுவதைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் inRum வெளிவந்தவண்ணம் உள்ளன. இவைகளில் ஃபிரான்ஸ்  தேசத்தில் உள்ள கோஸ்கெர் குகை (Cosquer Cave) மிக முக்கிய ஆய்வுத் தரவுகளாக  காணப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் பெரும்பாலும் கைகளை சாயத்தில் முக்கி அப்படியே குகைகளில் பதித்து வைப்பதாகவோ அல்லது கைகளை வைத்துவிட்டு அவைகளைச் சுற்றிலும் சாயமிடும் முறைமைகளையும் கொண்டிருக்கிறது. இதன் சிறப்புகளைக் குறித்து ஆராயும் கேரன்லை ஓவர்மான்  (Karenleigh A. Overmann) என்கிற ஆய்வாளர் பல தகவல்களை தொகுத்தளிக்கிறார். அவைகளில் முதன்மையானது கைவிரல் அடையாளங்கள் எவ்விதம் அன்றைய எண்ணிகை முறையினை சுட்டி  நிற்கிறது என அவர் விவரிக்கிறார்.

Paleo Palm

இந்த குகை ஓவியங்களில் பல இடங்களில் விரல்கள் குறிப்பிட்ட அளவைவிட சிறிதாக இருப்பதைப் பார்த்த போது அந்த விரல்கள் ஏதோ சடங்குகளில் வெட்டப்பட்டதாகவோ அல்லது வேட்டை நேரத்தில் பிற மிருகங்களோடு போராடும்போது இழந்த விர்லகளாகளின் பகுதியாகவோ இருக்கும் என்றே எண்ணினார்கள். மேலும் வேறு எதேனும் சூழலில் உடைந்து அழிந்து போன விரல்களைத் தான் இதன்மூலம் பதிவு செய்கிறார்கள் என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் உடலியல் தரவுகளையும் அந்த குகைகளில் காணப்பட்ட ஓவியங்களையும் இணைத்து பார்த்தபோது மிக கண்டிப்பாக அவைகள் குறைவுபட்டுப்போன விரல்கள் அல்ல என்பது நிரூபணமானது.

Cosquar

கோஸ்கர் குகை ஓவியம்

மனிதர்கள் தங்கள் விரல்களை மடக்கி இவ்வித வடிவங்களை பதிப்பித்திருக்கிறார்கள் என்கிற முடிவிற்கு வருகிறார் கோரென்லை. அந்த விரல்களின் தன்மைக்கேற்ப எண்ணிக்கைகளை அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கிறார்கள். மிகவும் சுவைபட காணப்படும்  இவ்வித ஆய்வுகளில் பனை ஓலைகளையும் இணைத்துப்பார்ப்பது மேலும் ருசிகரமாக இருக்கும்.

திருமறையில் காணப்படும் ஒரு நிகழ்வு இச்சூழலில் நாம் நினைவுகொள்ள ஏற்றது. மீதியானியருக்கும் இஸ்ரவேலருக்கும் இடையில் ஒரு போர் நிகழும் தருணம். இஸ்ரவேலர் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே கடவுள் கிதியோனிடம், இஸ்ரவேல் மக்கள் தாங்களே இந்த வெற்றியைப் பெற்றார்கள் என சொல்லாதபடிக்கு,  மக்களை எப்படி தெரிவு செய்யவேண்டும் என பணிக்கிறார்.  பயம் உள்ளவர்கள் திரும்பிப்போய்விடுங்கள் என்று சொன்னவுடனேயே இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். மீதமிருக்கும் பதினாயிரம் பேரையும் கடவுள் பிரிக்கச் சொல்லுகிறார். அவ்விதம் கிதியோன் அங்கே இருக்கும் நீரூற்றண்டையில் மக்களை கூடிவரச் செய்து தண்ணீர் குடிக்க வைக்கிறான். அதன் முடிவு இவ்விதமாக இருந்தது.   “தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 6)

Palm tree

பனை மரம் – குகை ஓவியம்

இக்கதை போருக்கு ஆயத்தமாகும் தன்மையுடையவர்களை கிதியோன் தெரிவுசெய்வதை நமக்கு உணர்த்துகிறது ஒரு புறம் என்றாலும், அந்த தேர்வில் காணப்பட்ட மக்களின் பழக்க வழக்கம் நமக்கு சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.  முதலாவதாக முழங்கால் இட்டு தங்கள் வாய்களை நேரடியாக நீரில் வைத்து உரிஞ்சி குடிப்பவர்கள் சற்றே மிருகங்களின் தன்மையை வெளிப்படுத்துகிறவர்களாக கிதியோனிற்கு காணப்பட்டிருக்கலாம். முழங்கால் இட்டு வாய் தண்ணீரை நோக்கி செல்லும்போது கைகளும் தரையில் பதிந்திருக்கும் ஒரு காட்சி தான் நமக்கு தென்படுகிறது. வழக்கமான முறை அதுதான் போலும். ஏனெனில் பதினாயிரம்  பேர் அவ்விதம் தான் அந்த ஓடையிலிருந்து தண்ணீர்  குடிக்கிறார்கள். வெறும் முன்னூறு பேர் மட்டும் தங்கள் கரங்களில் தண்ணீரை வாரிக்குடிக்கிறார்கள். இவர்கள் குனித்து நீர் அள்ளுவதால் சற்றே ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒரு வகையில், கைகளை இணைத்து நீர் குடிக்கும் ஒரு வழக்கம் மனித வாழ்வில் நுழைவதை குறிப்பிடுகிறதாகவும் இருக்கலாம்.

என்னைப்பொறுத்தவரை, வரைதலின் முதல் படியே கோடுகள் தான். கோடுகள் நேராக இடத்தெரிந்தாலே கோடுகளை வைத்து மற்ற வடிவங்களை உயிர்பெறச் செய்ய முடியும். அவ்வகையில் பனை மரம் கோடுகளின் முக்கியமான ஓர் அடையாளமாகவே இருக்கிறதாக அறிகிறேன். ஒன்று என்ற எண்ணிக்கையினை இன்று நாம் எழுதுவதும் நேர் கோடுகளும் பனை மரமும் ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாதவை. பனை மரத்திலிருந்து தான் மனிதன் எண்ணிக்கையைத் தொடங்கினான் என்பதற்குத்தானோ ஒன்று என்ற எண் எழுதப்பட்டதோ. அல்லது கோடுகள் வரைவது கூட பனை மரத்தின் நெடிய தோற்றத்திலிருந்து பெறப்பட்ட புரிதல் தானோ? ஆக கணிதத்தின் ஆரம்ப சுழியினை கற்கால ஓவியங்கள் நமக்கு தெரிவிக்கிறதாக் அறிகிறோம்.

tin-anewen-3 Palmyra Art

பனை மரத்துடன் தொடர்புடைய மிருகம் – குகை ஓவியம்

கற்கால ஓவியங்களில் மான் யானை காட்டு மாடுகள் மற்றும் வேட்டைக்குச் செல்லும் மனிதர்கள் போன்றவையே அதிகமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கற்கால மனிதர்கள் தாவரங்களை அதிகமாக வரையவில்லை என்றே இதுகாறும் எண்ணப்பட்டிருந்தது. ஆனால் வெகு சமீப காலங்களில் பல்வேறு குகை ஓவியங்களில் இருந்து தாவரங்கள் சார்ந்த படங்கள் கண்டடையப்பட்டிருக்கின்றன. அவைகளிலும் பனை சார்ந்த படங்கள் நமக்கு கற்கால மனிதர்களுக்கும் பனைக்குமான நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற பகுதிகளில் உள்ள குகைகளில் பனை மரங்களும் அதன் ஓலைகளும் வெறும் கோடுகளாகவே காணப்படும் ஒரு படம் கண்டடையப்பட்டிருக்கிறது. வெண்மையும் சிவப்பும் கலந்த இந்த படங்கள் கி மு 10000 ஆண்டுகளை ஒட்டியது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவிற்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் புதிதாக சொல்லி நிறுவ வேண்டியதில்லை. மனிதர்கள் மிக மகிழ்ச்சியோடு பனங்காட்டில் வாழ்வது போன்ற படங்கள் கற்காலத்திலிருந்து எழுந்து வருவது புதிய ஒரு உலகை நமக்கு காட்டத்தான்.

மனித வாழ்வில், கைகளை இணைத்து நீரை அள்ளி குடிக்கும் ஒரு சூழல் வந்த பின்பு, கைகள் குவிப்பதன் நுட்பத்தினை மனிதர்கள் கவனித்திருப்பார்கள். கைகளின் இடுக்கு வழியாக நீர் ஒழுகாமல் இருக்க கைகளை இணைத்து சற்றே குவிக்கும்போது அதிக நீர் எடுக்க வாய்ப்பு உள்ளது என்ற அறிதல் பனை ஓலைகளையும் இணைக்கலாமே என்கிற புரிதலுக்கு நேராக ஆதி மனிதர்களை வழிநடத்தியிருக்கும். அப்படியானால் கைவிரல்களை ஒத்திருக்கும் ஐந்து நரம்புகள் கொண்ட ஓலைகளை சேர்த்து குவித்துப் பிடிப்பது அதிக அளவில் தண்ணீரை எடுத்து வர உதவியாயிருந்திருக்கும். அதுவே பனையில் செய்யப்பட்ட முதல் வடிவம் என்று நான் கருதுகிறேன்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

 

பின்னல்கள்  – 2

ஏப்ரல் 2, 2020

ஓலை

பனை ஓலைகளில் காணப்படும் பொருட்கள் நெடு நாட்கள் பயன்பாட்டிற்கு வருவது இல்லை என ஒரு புரிதல் நமக்கு இருக்கலாம். அது அப்படியல்ல, ஒரு பொருளின் பயன்பாட்டினை உணர்ந்து யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அதன் வாழ்நாள் இருக்கும். பனை ஓலைகள் பெருமளவில் கிடைத்துக்கொண்டிருந்த காலத்தில் கூட  பல வருடங்களாக பனை பொருட்களை மக்கள் பயன்படுத்தியதை பார்க்க இயலும். இவ்வித பயன்பாட்டு பழக்கவழக்கம் ஒரு பொருளின் தன்மையினை உணர்ந்து அதனை எப்படி பேணினால் அதன் வாழ்நாள் நீடிக்கும் என்பதை உணர்ந்த மக்களாலேயே  சாத்தியம். ஒவ்வொரு பொருளையும் பேணும் வழிமுறைகள் வித்தியாசமானது. பல்வேறு பனை பொருட்களை பேணும் முறைகள் நினைவுகளாக கூட இன்று எஞ்சியிருக்கவில்லை. முறையானயான பயன்பாடு தான் பனை பொருட்களை நெடுநாட்கள் காப்பாற்றும். அவ்வகையில், நமது கலாச்சாரம் பனை பொருட்களை தகுந்த முறையில் பேணி பாதுகாத்த ஒரு உயரிய பண்பாடாகும்.

EDN_2773

பனை ஓலைக் கூடையுடன் ஆரோன்

ஆனால் பயன் படுத்தி ஏறியும் பழக்க வந்த பின்னர், பனை ஓலைகளுக்கும் அந்த கதியே ஏற்பட்டது. நவீன பொருட்கள், நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. பனை பொருட்கள் கீழானவைகளாக எண்ணி பேணுவது சார்த்த அறிவு மங்கிப்போயின.  ஆகவே அவைகள் பெருமளவு மதிப்பிற்குரிய பொருட்களாக கவனத்துக்குட்படுத்தவில்லை.  பனை சார்ந்து இயங்கும் கலைஞர்கள்  நமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பாட்டியோ மாமாவோ யாரோ ஒர் தெரிந்த எளிய மனிதராக இருப்பதினால் அவர்களது முக்கியத்துவம் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. கல்விக்கு முக்கியத்துவம் ஏற்பட்ட பின்னர் இவ்விதமான முறைசாரா கல்விக்கு எவரும் மதிப்பளிக்கவில்லை. இவ்விதம் நுட்பமான வேலைகள் செய்வோரை நாம் எவ்வகையிலும் பொருட்படுத்துவதுமில்லை. ஆனால் மனித நாகரீகத்தில் பின்னல்களுக்கு என ஒரு முக்கிய இடம் இருக்கிறது. ஆகவே தான் பட்டுச் சாலை மிக முக்கிய வணிக பாதையாகவும் கலாச்சார பாதையாகவும் வரலாற்றில் இன்றளவும் கவனிக்கப்படுகிறது.

பின்னல்கள் என்பது மனித வாழ்வில் எஞ்சியிருக்கும் மிக தொன்மையான கலை வடிவம் என்கின்றனர் ஆய்வாளர்கள். புதிய கற்காலம் முதலே பின்னல்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 12000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வகையான புற்பூண்டுகள்   கொண்டு மனிதன் பின்னல்களை செய்ய கற்றிருக்கிறான். வேலியமைப்பது மற்றும் சிறு பொருட்கள் செய்வது என அது பல்வேறு பரிணாமங்களை எட்டியிருக்கிறது. எனினும்  முதன் முதலில் மனிதன் எந்த தாவரத்தை பின்னல்களுக்கு  பயன்படுத்தியிருப்பான் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை ஆய்வாளர்களிடம் இருப்பதில்லை.  வரலாற்றில் எஞ்சிய அந்த பக்கங்களை பனை மரம் கொண்டு நாம் தைரியமாக நிரப்ப இயலும்.

சில அறிஞர்கள் பழைய கற்காலம் முதலே பின்னல்கள் வழக்கில் இருந்ததாக கூறுவார்கள். 27000 வருடங்களுக்கு முன்பே பிரி போன்ற பொருட்களால் பைகள் கச்சைகள் போன்றவைகளை செய்திருப்பதாக கண்டடைந்திருக்கிறார்கள். எரிந்துபோன துணியும் பானைகளில் பிரிகளின் அடையாளங்களும் பதிந்திருப்பதை செக் குடியரசில் (Czech Republic) உள்ள தோல்னி வெஸ்டோனிஸ் (Dolní Věstonice) என்ற பழைய கற்கால குடியிருப்பில்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தென்னமரிக்காவைப்பொறுத்தவரையில் கி மு 10100 முதல் 9080 வாக்கில் கிடைக்கபெற்ற ஆறு பாய்கள் மிக சீராக செய்யப்பட்டவைகளாக இருந்திருக்கின்றன. இவைகள் தாவரங்களை மையமாக கொண்டு நெய்யப்பட்டவைகள் என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சணல் நூலினால் நெய்யப்பட்ட துணியினை மத்திய கிழக்கு நாடுகளில் கி மு 7000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து கி மு 5000 ஆண்டுகளில் ஆளி செடியிலிருந்து பெறும் கயிற்றினை திரித்து நெய்ய கற்றிருக்கிறார்கள். சீனாவின் பட்டு நூல் பாரம்பரியம் 3500 ஆண்டுகள் என்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த பின்னல்களின் நெடுந்தூரப் பயணம் என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்களால் சிறுக சிறுக பெற்றடைந்த ஞானம் என்பதாகவே இதன் மூலம் நாம் அறிகிறோம்.

திராவிடர்களின் நூற்பு கலையானது 5000 ஆண்டுகள் பழைமையானது என்றும் அது கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் கலாச்சாரத்தைவிடவும் மேலானதாக இருந்திருக்கிறது என இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல் தீர்க்கமாக கூறுகிறார்.  மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகள் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது என அறிஞர்கள் அடித்துக் கூறுகிறார்கள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் பருத்தி ஆடைகளின் இற்றுப்போன எச்சத்தை கண்டடைந்திருக்கிறார்கள். அப்படியானால் இதற்கு முந்தைய காலம் எப்படியானது என்கிற கேள்வியினை நாம் கேட்டுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பருத்தி பயிர் செய்து நூற்பு கலை மேலெழுந்திருக்குமானால் அதற்கு முந்தைய நிலை முடைதல் என்னும் கலைதான் என என்னால் தீர்க்கமாக கூறமுடியும்.

Mohanjadaro

மொகஞ்சதாரோ நகர அரசனும் அவர் அணிந்திருக்கும் அழகிய ஆடையும்

நமது பண்பாட்டிலிருந்து தூர நோக்குகையில் நாமும் எளிதாக எதனையும் சொல்லிவிட முடியாது என்பது உண்மைதான். என்றாலும் பனை சார்ந்து வாழும் ஒரு கலாச்சாரத்தில் பனை மிக முக்கியமாக மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாம் வாழும் காலத்தில் நமது கைகளில் வந்து சேர்ந்திருக்கும் பனை ஓலைப் பொருட்களின் வரலாறு மிக நெடியது என்பதையும் நாம் உணர்ந்தே ஆகவேன்டும். அவ்வகையில் நாம் ஆழ்ந்து நோக்கும்போது, பனை ஓலை சார்ந்த கலைஞர்கள் ஒரு தொல் பண்பாட்டின் எச்சமாக நம்மிடம் இருந்துகொண்டிருப்பவர்கள். மிக மிக அரிதானவர்கள். காலத்தால் அடித்துச்செல்லப்பட்ட மாபெரும் கலையின் எச்சத்தை தங்கள் உயிர் மூச்சைப் பிடித்து இன்றும் வாழ வைப்பவர்கள். பல்வேறு நாடுகளில் இவ்வித தொல் கலாச்சாரத்தின் எச்சங்கள் புதை படிவங்களாக எஞ்சியிருக்கையில், நம்மிடையே இவர்கள் வாழும் தொன்மங்களாக இருக்கிறார்கள் என்பது எத்துணை சிறப்பான காரியம்.

பனை மர ஓலைகள் தன்னளவில் மிகவும்வழுவழுப்பானவைகள். அவைகளின் அகன்ற வடிவம் நேரடியாக பழைய கற்கால மனிதர்களால் பயன்படுதப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. தாய்மார்களே தங்களது குழந்தைகளுக்கான படுக்கையாகவோ அல்லது மழையிலிருந்து காப்பாகவும் விழுந்த பனையோலைகளை பயன்படுத்தியிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்கள் மேலெழுந்து வர காலம் அவர்களுடன் கைகோர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சரி பனையுடன் எப்படி மனிதர்களுக்கான தொடர்பு ஏற்பட்டது? எங்கே ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற இயலாது ஆனால் இரண்டு கண்டங்களில் பனை விரவி பரவியிருந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. மனித குல ஆரம்பம் முதலே பனை அவர்களுக்கு ஏற்ற தோழனாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் என்ற ஒரு உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளலாம். இரண்டு முக்கிய காரணிகள் நமக்கு தடயங்களாக இருக்கின்றன. ஒன்று ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றியது என்கின்ற ஒரு தரவு. அப்படியே நாம் பயன்படுத்தும் பனை மரமானது ஆசியாவில் தோன்றியதாக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனிதன் மற்றும் பனைமரம் ஆகிய  இந்த இரண்டு இனங்களின் சந்திப்பும் நிகழ்ந்த காலம் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பின் காலம் என மனித வாழ்வில் நாம் கூறமுடியும். பரஸ்பரம் மனிதனும் பனை என்னும் தாவரமும் இறுக தழுக்கொண்ட இந்த காலகட்டம் மனித வாழ்விலும் தாவரங்கள் வாழ்விலும் ஒரு பொற்காலம் எனலாம். ஏனென்றால் மனிதன் உணவுக்காக பல்வேறு இடங்கள் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது பனை மரமே அவனுக்கு உணவளித்து அவனை ஓரிடத்தில் தங்கச் செய்த கற்பக விருட்சமாக காணப்பட்டிருக்கிறது.

தானியங்களை மனிதன் கண்டுபிடித்தது கி மு 10000 ஆண்டு வாக்கில் தான். ஆனால் தானியத்தினை உணவு பொருள் என நுண்மையாக கணுபிடிக்கும் ஒரு அறிவிற்கு முன்னால் உணவு என்பது கனிகளும் கிழங்குகளுமாகவே  மனித வாழ்வில் இருந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டுமே வருடம் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் கிடைக்கும். பனை சார்ந்த சூழியலில் காணப்படும் சிறு உயிர்களும் ஒரு உணவு சங்கிலியை மனிதனுக்கு வழங்கியிருக்கின்றன. குறிப்பாக பனங்காட்டில் மிகுந்து வளரும் கரையான் மனிதனுக்குத் தேவையான புரதத்தினை வாரி வழங்கியிருக்கும்.  இவ்விதம் நீர்நிலைகளும் பனைமரமும் ஒன்றிணையும் தடங்களில் மனிதனின் ஆதி வாழ்வு உருப்பெற்றிருகும் வாய்புகள் வளமாக இருக்கின்றன.

பனை மரத்திலிருந்து பனம் பழங்கள் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரைக் கிடைக்கும். அப்படியே பனங்கிழங்குகள் மிச்சம் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கும். இவ்வித சூழல் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள ஏற்றவைகள். பனைக்கு இணையாக தொடர்ந்து வருடம் முழுவதும் உணவளிக்கும் வேறு தாவரங்கள் ஏதும் இன்று நம்மிடம் எஞ்சியிருக்கவில்லை. மாத்திரமல்ல, மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்களை வழங்கும்  வேறு மரங்களும் இல்லை. ஆகவே பனை மரத்தினை மனித வாழ்வின் முதன்மையான மரம் எனக் கொள்ளுவது மிகச்சரியாகவே இருக்கும்.

மேலும் பனை மரத்தின் குருத்துகள் பஞ்சகாலத்தின் முக்கிய உணவாகும். கற்கால கருவிகளைக் கொண்டு பனை மரத்தைச் சிதைத்து அதன் குருத்தினை உண்டு கூட உயிர் தப்பியிருக்ககூடிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. ஆகவே தான் மனித மரபணுவில் பனை ஆழமாக பதிந்துபோய்விட்டது.

மேலும் பனை பல்வேறு வகைகளில் மனிதனுக்கு உதவியிருக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. வெட்டுவதற்கு ஏற்ற வகையில் கூர்மையான கருக்குகள் கொண்ட அதன் மட்டை ஆயுதங்கள் குறித்த ஒரு பார்வையைக் கொடுத்திருக்கும். விழுந்துபோன பனைகளில் எஞ்சியிருக்கும் குழிகள் அவன் பொருட்களை வைத்துகொள்ளவும் உதவியிருக்கும். கூடாகிப்போன பனை மரத்தடிக்குள் பதுங்கிக்கொள்ளவும் வாய்ப்பிருந்திருக்கிறது.

ஆகவே பனை சார்ந்த ஒரு வாழ்விடம் மனிதன் ஆதி காலம் முதலே தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்திருக்கிறது. பொதுவாக பனை மரங்கள் அடர் காடுகளில் காணப்படுவது இல்லை. மனித வாழ்வு அரைப்பாலை நிலங்களிலேயே செழித்திருக்கிறதாக கூறுகிறார்கள். அவ்வகையிலும் பனை தன்னை முதன்மையான தாவரமாக மனித வாழ்வில் முன்னிறுத்துகிறது.

பின்னல்கள் மனித வாழ்வில் மிக படிபடியாக கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலை. கைகளால் நெய்து பின்னர் படிபடியாக விசைத்தறி மற்றும் மின் தறிகள் என நாம் பல நூற்றாண்டுகள் கடந்து வந்து விட்டிருக்கிறோம். என்றாலும் மனித கைகளும் மனித மனமுமே இவ்வித வளர்ச்சிப்படிகளின் ஆரம்பம் எனக் கொள்வோமானால் நம்மிடம் எஞ்சியிருக்கும் பனை சார்ந்த கலைஞர்களின் வாழ்வினை நாம் போற்றவும் அவர்களின் முக்கியத்துவத்தை உணரவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் பனை வாரியம் என்பது விவசாயத்துறையின் கீழ் வருவதல்ல. மாறாக ஜவுளித்துறையின் கீழ் இதனை அமைத்திருக்கிறார்கள். ஏன் என எண்ணிப்பார்க்கையில் காதி கதர் கிராம தொழில் முனைவோர் பனை ஓலைகள் சார்ந்த பொருட்கள் பின்னலாடைகள் சார்ந்த ஒன்றாக இருப்பதாகவே கருதியிருக்கிறார்கள். மேலும் இவ்விதம் இணைத்து செயல்படும்போது பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பயன் அமையுமே என்ற நல்லெண்ணத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பனை சார்ந்த புரிதலற்றவர்களால் பனை ஓலை பொருட்கள் ஒவ்வொன்றாக கைவிடப்பட்டன. அவ்விதம் கைவிடப்பட்டவைகளும் நினைத்து எண்ணி கைவிடப்படவில்லை. புரிதலற்ற தன்மையாலும், வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டுமே கைவிடப்பட்டன.

குறிப்பாக மணப்பாடு மற்றும் கடலூர் போன்ற  இடங்களில் நிறுவப்பட்ட பனை சார்ந்த பயிற்சி மையங்கள் எல்லாம், பாரம்பரிய முறைகளை ஒவ்வொன்றாக வைவிட்டு நவீன வழிமுறைகளையும் வடிவங்களையும் முன்னெடுத்தன. இவைகள் பனை ஓலையினை அழகாக மாற்றி விற்பனை செய்யும் வடிவமைப்பு கொண்டவையாக இருந்தாலும் பாரம்பரிய பொருட்களில் காணப்பட்ட பயன்பாட்டு தன்மையும் உறுதியும் இவைகளில் இல்லாமல் ஆகின. ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் உள்நாட்டு பயன்பாட்டு நிலையிருந்து வெளியேறின. மக்கள் மிகவும் மலிவான அழகான நெகிழிப் பொருட்களை தேடிச் செல்லலாயினர்.

இச்சூழலில் தான் பனையோலைகள் நமது அன்றாட வாழ்விலிருந்து  வெளியேறுவதைப் பார்க்கின்றோம். சிறுக சிறுக அவைகள் மறைந்து செல்லுவதை உணராதபடி நம்மை சூழ பிற பொருட்கள் வந்து ஓலைகளின் இடத்தைப் பிடித்துவிட்டன.  இன்று பனை சார்ந்த வாழ்வு அழிந்துகொண்டிருக்கும்போது பனை சார்ந்த எவ்வித கலைகளும் மேலெழும்பும் வாய்ப்புகள் இல்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை முன்னெடுப்பதற்கும் மனித வாழ்வில் இவைகளின் அளப்பரிய பங்களிப்பினை எடுத்துக்கூறுவதற்கும் பனை சார்ந்த கலைஞர்கள் இன்றியமையாதவர்கள். பனை ஓலை கலைஞர்கள், பனையேறிகள், பனை உணவு தயாரிப்பவர்கள் போன்றோர் யாவும் பனை மரத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள். ஒன்று அழிந்தாலும் அனைத்தும் இணைந்தே அழிந்துவிடும் அபாய சூழலே இன்று இருக்கிறது. இவ்வித அழிவின் விழும்பில் இருக்கும் ஒன்றினை கவனத்துடன் மீட்டெடுப்பது மிக முக்கிய பணியாக நம்முன் எழுந்து நிற்கின்றது.

அப்படியானால் பனை கலைஞர்களின் கூட்டு நிகழ்ச்சிக்கான காரணம் என்ன? அவைகளின் தேவை தான் என்ன? என்கிற கேள்விகள் எழும்புவது இயல்பே. இன்று நமது கண் முன்னால் அழிபவைகள் ஆவணப்படுத்தப்படாமலேயே அழிவது இந்த காலகட்டத்தில் நிகழ்வது தான் இவற்றின் பேரவலம். நாம் வாழும் காலகட்டம் தகவல் தொழில்னுட்பம் பெருகியிருக்கும் காலகட்டம். இச்சூழலிலும் இவ்வித தகவல்கள் அரிதாக இருக்குமென்றால், நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.   இரண்டாவதாக பனை சார்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வோர் பனை மரத்தினை முக்கியத்துவப்படுத்தியும் இயற்கை பொருட்களை முன்னிறுத்தியும் விற்பனை செய்வது வழக்கம். மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. ஓரளவிற்கு இவைகள் ஏற்புடையதே. ஆனால் ஒருபோதும், ஒரு தனிப்பட்ட பொருளை ஒரு கலைஞருடன் இணைத்து முன்னிறுத்துவதில்லை. ஒருவகையில் இது பனை சார்ந்த கலைஞர்களுக்கு ஒரு பின்னடைவு என்றே கருதுகிறேன். பனை ஓலைக் கலைஞர்கள் முன்னிறுத்தப்படாது போகும்போது, அவைகளின் தனித்தன்மைகள் என்னவாகும்?

இப்படி யோசித்து பார்ப்போம், பல்வேறு இசைக்கலைஞர்கள் இன்று இருந்தாலும், இசைக்கலைஞர்களுள் இளையராஜா என்பவர் பெற்றிருக்கும் ஒரிடத்தைபோல பனை சார்ந்த கலைஞர்களும் ஓரிடத்தைப் பெறவேண்டும் என்பது எனது எண்ணம். அதற்கு இவ்வித கூட்டு முயற்சிகள் இன்றியமையாதவை. வேறு வகைகளிலும் இவைகளைச் செய்யலாம் என்றாலும், இப்போது நான் முன்வைக்கும் வழிமுறைகள் இவைகளே. 

குறிப்பு: ஓலை என்பது செய்தி எனவும் பொருள்படும்

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்

ஏப்ரல் 1, 2020

அடி

பனை சார்ந்த எனது தேடுதல், நிறைவடையாத ஒரு பிரம்மாண்ட பின்னல். சில கோணங்களில் அவைகள் ஒரு முடிவினை எட்டிவிட்டது என்றாலும் அவைகள் முடிவிலி நோக்கியே என்னை இழுத்துச் செல்லுகின்றன. ஒன்றன் மேல் ஒன்றாக ஏறிச்செல்லும் இப்பின்னல்கள் என்னை ஒரு முழு வடிவமாக்க முயற்சிக்கின்றன. அப்படி ஒரு முழுமைகொள்ளலை பனை சார்ந்தும் எட்டிவிட இயலுமா என்றே எம்பிக்கொண்டிருக்கிறேன். இது வெற்றி தோல்வி என்ற பாதையை தெரிவு செய்யும் களமல்ல தடம் பதித்து பாதை சமைக்கும் ஒரு கடுந்தவம். பின்னிப்பின்னி முடைந்தெடுத்து ஒன்றாக்கி சேர்ப்பதில் உள்ள நுட்பம் நேர்த்தி போன்றவை அலைந்து திரிந்து தேடும் வாழ்க்கை முறை  இருந்தாலே  சாத்தியம்.

எனது வாழ்வு குறித்தும் பனைத் தேடுதல் குறித்தும் முழுக்கவே பனை மரச் சாலையில் எழுதியிருக்கிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு எனது இருச்சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வந்தேன். பனை மரம் மீதுள்ள எனது 20 வருடத்திற்கும் மேலான வேட்கையினை அதன் மூலம் நான் நிறைவேற்றிக்கொண்டேன். மேலதிகமாக எழுத ஏதுமில்லை என உணர்த்தபோது இலங்கை பயணம் அமைந்தது. இலங்கை தேசிய கிறிஸ்தவ திருச்சபை மாமன்றம் என்னை அழைத்து திருச்சபை சார்ந்த பனை மர வேட்கையினை நிகழ்த்த உதவியது. ஆகவே அப்பயணம் சார்ந்த பதிவுகளையும் தொடராக  எழுதினேன். பின்பு   பனை சார்ந்த தொடர் ஒன்றினை  கற்பக தரு என்ற தலைப்பில், முதன் முதலாக தி இந்து தமிழ் நாழிதழ் வாயிலாக 50 வாரங்கள் வெளியிட்டேன்.  ஒவ்வொரு வாரமும் ஒரு பனை சார்ந்த பொருள் மற்றும் ஒரு பனை கலைஞரை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையுடன் ரசித்து அவைகளை வடிவமைத்தேன்.

panaimara-saalai_FrontImage_871

பனைமரச் சாலை

தி இந்து தமிழ் திசையில் நான் பதிப்பித்த  அத்தனை கட்டுரைகளும் தமிழ் வரலாற்றில் பனை  சார்ந்து பதிக்கப்பட்ட முதல் தகவல்கள். அனைத்து தகவல்களையும் நானே நேரில்  தேடி சென்று சேகரித்தவைகள். அந்த தேடுதலில் இருந்த சவால் மற்றும் அதில் என்னைப் பரவசமடயச் செய்யும் தகவல்கள் என என்னை நிறைத்துக்கொள்ளும் ஒரு பயணமாக அவைகள் அமைந்திருந்தது. இன்னும் குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு பனை சார்ந்த பொருட்களை மையப்படுத்தியே நான் எனது ஆய்வுகளை விரிக்க வேண்டிவரும் என நினைக்கிறேன். ஒருவேளை எனது வாழ்நாள் முழுவதுமே இத்தேடலில் நான் செலவிடக்கூடும். அத்துணை செறிவுமிக்க ஒரு தேடலாக இது இருக்கிறது.

எனது பனைமரச்சாலை பயணத்தின்போது ஒன்றைக் கவனித்தேன், தமிழகத்தில் தான் பனை சார்ந்த பொருட்கள் அதிகம் செய்யப்படுகின்றன. அதே நேரம், நாம் செய்யாதவற்றை பிற இடங்களில் மக்கள் செய்துகொண்டுவருகிறார்கள். அல்லது நம்மிடம் வழக்கொழிந்துபோனவைகள் பிற இடங்களில் உயிர்ப்புடன்  இருக்கின்றன. இது எனக்குள் ஒரு அகத்தூண்டலை ஏற்படுத்தியது. பின்னல்கள் என்பவை எவ்வாறு மனித வரலாற்றில் துவங்கியிருக்கும்? அதன் காலம் என்ன? எச்சூழலில் இவைகள் பன்மடங்காக பெருகி ஊறியிருக்கும்? போன்ற முடிவிலா கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. எனக்கு கிடைக்கபெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாத ஒரு மாயவலை என்னைச் சூழ்ந்து இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே துணிந்து எனது மனதில் பட்டவைகளைக் கூற முடிவெடுத்தே இப்பதிவுகளை எழுத ஆரம்பிக்கிறேன். கடந்த 2017- 18 வரை ஹென்றி மார்ட்டின் இன்ஸ்டியூட், ஹைதராபாத் என்னை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம் எடுக்க பணித்தார்கள். அவ்வகையில் பனை சார்ந்து நான் தமிழகம் முழுக்க பயணித்தது எனக்கு பேருதவியாக இருந்தது. இக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் அவர்களின் உதவியுடன் நான் பெற்ற புரிதல்களே அன்றி நான் பனைமரச்சாலை எழுதியபோது நான் அறிந்திருந்தவைகள் அல்ல. ஆகவே எனது வணக்கத்தையும் நன்றிகளையும் கூறத்தகுந்தவர்கள் அவர்கள்.

இரண்டாவதாக 2018 – 19 வருடங்களில் நான் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து பணியாற்றினேன். பனை நாடு என்ற அமைப்பினை அப்போது உருவாக்கி தமிழகம் முழுவதும் ஒருகோடி பனை விதைகளை நடும் திட்டங்களை முன்னெடுத்தோம். தமிழகம் தழுவிய ஒரு பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் மீண்டும்  கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தையும் நான் பயன்படுத்தி பனை சார்ந்த கலைஞர்களை தேடிக் கண்டுபிடித்தேன். குறிப்பாக பனை ஓலைக் குடுவை என்ற மறைந்து போன ஒரு கலையைக் கூட இதன் வாயிலாக நான் மீட்டெடுக்கும் ஒரு தருணமாக அமைத்துக்கொண்டேன். மட்டுமல்ல, இக்காலங்களில் தான் எனது எழுத்துக்கள் தொடராக தி இந்துவில் வெளிவரத்துவங்கின. ஆகவே குழித்துறை மறை மாவட்டதிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை பரிந்திரைத்த அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.

EDN_2785

பனையோலை தோள்பை

பனை சார்ந்த எனது தேடுதலில் எனக்கு பேருதவியாகவும் எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் பனை ஓலைக் கலைஞர்கள் தாம். அவர்களின் பின்னல்கள் குறித்து நான் இப்போது எண்ணிப்பார்க்கையில், பல நுண் தகவல்களை நான் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேனே என்கிற ஒரு அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த விடுபடல் எப்போதும் இருக்கும் என்பது எனது அனுபவம். வாசகர்கள் அதனை தங்கள் வாசிப்பினூடாகவும் பயணத்தினூடாகவும் நிறைவு செய்வது ஒன்றே வழி. ஆகவே எனது பெரு வணக்கத்திற்குறிய நபர்களாக பனை கலைஞர்களையே குறிப்பிடுவேன்.

பனை சார்ந்த கலைஞர்களுக்கும் பனை ஏறுகிறவர்களுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. பனை ஏறுகிறவர்கள் பனை சார்ந்த கலைஞர்களாக இருக்க இயலும் ஆனால் பனை சார்ந்த கலைஞர்கள் பனையேரிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே பனை சார்ந்த கலை பணிகளில் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு வளமாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெருமளவில் உணவிற்கு ஈடாகவே பனை சார்ந்த உண்ணாபொருட்கள் தமிழக வாழ்வில் பெரும் பொருளியல் பங்களிப்பை செய்து வந்திருக்கின்றன. இவைகள் ஆய்வு செய்யப்படவேண்டிய பணி என்றாலும் அவ்வகையான ஆய்வுகளை செய்யும் வலுவோ சூழலோ இன்று தமிழகத்தில் இல்லை என்பது தான் உண்மை.

ஆகவே பனை சார்ந்த கைவினைக் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்ற வரலாற்று உண்மையினை பதிவு செய்யும் ஒரு சூழல் இதன் வாயிலாக கிட்டியது. அது உண்மையும் கூட. பனைத்தொழில் ஆண்களால் செய்யப்பட்டபோது  அதனை சார்ந்து வாழும் பெண்கள் தமது எஞ்சிய நேரத்தில் பனை சார்ந்த பல்வேறு பொருட்களை செய்து தமது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்தனர். இவைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆண்களும் பனை சார்ந்த கலையில் தொய்வடைந்திருக்கவில்லை என்பதுவே எனது அனுபவ உண்மை. ஆண்களுக்கான பிரம்மாண்ட படைப்புகள் என தனி வரிசையே இருப்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே இக்கலவையான கலைகளினூடாக ஒரு பயணத்தை எடுத்துச் செல்லுவது எனக்கு உவப்பானதாக இருந்தது. ஒரு முன்னோடியாக இவைகளில் முன்னின்று நான் செய்யவேண்டிய மேலதிக பொறுப்பும் எனக்கு உள்ளதாக நான் நினைத்ததால் இவைகளை தொகுக்க விழைகிறேன். கூடுதலாக பனைமரச்சாலை புத்தகமாக வெளிவருவதற்கு முன்னே, அது இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக பல்வேறு பனை சார்ந்த கலைஞர்கள் மேலெழுந்திருக்கிறார்கள்.

EDN_2782

பனையோலை தோள்பையுடன் ஆரோன்

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மணப்பாஞ்சிவிளை

மார்ச் 27, 2020

 

போதகர் இந்த வார பிறந்த நாள் என வாசித்தபோது எனது பெயரும் இருந்தது.

மணப்பாஞ்சிவிளை ராபின்சன் பத்தொன்பதாம் தேதி.

எனக்கு அந்த மணப்பாஞ்சிவிளை என்ற பெயர் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் ராபின்சனுடன் அது இணையும்போது கேட்கவே ஒருமாதிரியாக இருந்தது. எங்கள் விளைக்கு இந்த பெயர் எப்படி வந்திருக்கும்?  ஒருவேளை நமக்குத் தெரியாத ஆழ்ந்த பொருள் ஏதும் இருக்குமா? யாரிடம் கேட்கலாம் என எண்ணியபடி இருந்தேன். ஆலய ஆராதனை முடிந்து வீட்டிற்கு வந்தவுடனேயே பாட்டியிடம் கேட்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். வீடு வந்தபோது  பாட்டி நார் கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து அடுப்படிக்கு செல்வதைப் பார்த்தேன்.  கம்பை ஊணி பாட்டி நடப்பது வெட்டுக்கிளியின் துரித நடைபோலிருக்கும்.

பாட்டியோ….. மணப்பாஞ்சீண்ணா  என்னவாக்கும். ஆரிட்ட பேரு.

ஞாயிறாச்சையும் அதுவுமா வேதத்த படிலே… வேளங் கேக்க வந்திருக்கான் …. என்றபடி கரத்திலிருந்த கறிச்சட்டியினை கழுவி ஊற்றினார்கள்.

எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. சிறு வயதில் அப்பா அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அது தாத்தா காலத்திலிருந்து வரும் பெயர் என்பது மட்டும் தான் தெரியும். அது எப்படி பொருள் இல்லாமல் ஒரு பெயர் இருக்கமுடியும்? அதுவும் இந்த காலத்திற்கு  பொருந்தாத பெயர்.

தாத்தாவிற்கு சகோதர சகோதிரிகள் கிடையாது ஆகவே பதினோரு பிள்ளைகள் பெற்ற மாணிக்கம் நாடார் வீட்டிலிருந்து இளைய மகளான பொன்னமாவை திருமணம் செய்துகொண்டார். பாட்டியின் அப்பாவிற்கு இளைய மகள் மீது பெரு விருப்பம் ஆகையால் பாட்டிக்காக ஒரு பனையை முறித்து கருப்பட்டி பத்தாயம் செய்து கொடுத்திருக்கிறார். பொன்னம்மா பாட்டி எப்போதும் பெருமையாக சொல்லும் ஒரு வாக்கியம், “பதினெட்டு கருப்பட்டியும் ஏழு மக்களையும் வளத்த கையாக்கும் இது”.

தாத்தா பனை ஏறுகிறவர். பதனீர் காய்ப்பதற்கு தினமும் மூன்றுமணிநேரம் அடுப்பு எரியவேண்டும். அந்த தீ நாக்குகளின் பசி அடங்கினால் தான் கருப்பட்டியினை எடுத்து வயிற்றுப்பசியினை ஆற்ற முடியும். சேகரித்து வைத்திருக்கும் விறகுகள் யாவும் தை மாதத்துடன் தீர்ந்துவிடும். அதன் பின்பு மாசி மாதம் முதல் கிடைக்கும் ஒவ்வொரு  புளிய இலையையும் சேகரித்து எரிக்கவேண்டியது தான். பாட்டி கஷ்டப்பட்டு தான் பிள்ளைகளை வளர்த்தார்கள்.

பாட்டி கதை சொல்லக் கேட்டுதான் வளார்ந்திருக்கிறோம்… பேய்கதை… திருடர் கதை என எல்லாம் சொல்லி தருவார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே பாட்டி கோவிலுக்கு செல்லுவதில்லை, ஆனால் எங்கள் குடும்ப திருச்சபையான சீயோன் மலை சி ஏஸ் ஐ தேவாலயத்தைப் புதுப்பித்தபோது தானே முன்வந்து வாசல் கதவின் செலவை ஏற்றவள். அவள் கையிலிருந்து ஒரு பைசாவை அவர்கள் அனுமதியின்றி யாரும் எடுத்துவிட முடியாது.

பெயர் காரணம் குடைந்துகொண்டிருந்ததால் வெளியேறி சடையாண்டி கொத்தனாரைத் தேடிப்போனேன். சடையாண்டி கொத்தனார் தான் நாங்கள் இருக்கின்ற வீடு பணிந்தவர். வீட்டிற்கு சென்றபோது வெற்றிலைப்பெட்டியிலிருந்து வெற்றிலை பாக்கு முதலானவைகளை வெகு நிதானமாக எடுத்துக்கொண்டிருந்தார்.

சடையாண்டி தலையில் ஒரு முடி கூட இல்லாதவர். வெட்டருவா மீசை. துணைக்கு ஒரு தடி அவர் இருந்த நார் கட்டிலில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தது.

ஆரு… என கைகளை கண்களுக்கு மேல் சாய்வாக்கி கூர்ந்து பார்த்தார்.

நான் பொன்னமைக்க பேரன் என்றேன்…

பிள்ளா வரணும்… என்றபடி என்னவாக்கும் காரியம் என்றார்…

சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கேட்டேன்… மணப்பாஞ்சீண்ணா என்னவாக்கும் பாட்டா?

மக்கா அதிப்பம் எனக்கு ஒண்ணும் தெரியாது பாத்திக்க… வீடு பணியும் முன்பே மணப்பாஞ்சிவிளைணாக்கும் விளிப்பினும் என்றார்.

பின்ன ஒரு காரணம் உண்டு… பண்டு அங்கின ஒரு செறிய வீடு உண்டாயிருந்து. மண்ணு பதச்சு கெட்டின வீடாக்கும். ஒருவேளை மண்ணு பதச்சிண்ணு செல்லியது தான் மணப்பாஞ்சி ஆச்சுதோ என்னவோ ஆரு கண்டா?

தாத்தா சொல்லுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றே மனது கூறியது. எல்லா வீடுகளும் ஒரு காலத்தில் மண் பதைத்து கட்டப்பட்ட வீடுகள் தாம். வேறு ஏதோ ஆழ்ந்த  அர்த்தம் இருக்கவேண்டும் என எண்ணியபடி விடைபெற்றேன்.

போவும்பம் கடவரையிலெ செல்ராசு உண்டெங்கிலே பிள்ள வரச்சொல்லணும் கேட்டா என்றார்.

ஓம் என்றபடி கிளம்பினேன்.

உச்சைக் கடைகளைத் தாண்டி செல்லும்போது ரெத்தினம் அண்ணனுடைய பூக்கடை வந்தது. மணப்பாஞ்சி என்ற பதம் மணத்தைக் குறிப்பதாக இருக்குமோ? என்ற எண்ணம் வந்தது. எதற்கும் தமிழாசிரியரை ஒரு முறைக் கேட்டுக்கொள்வோம் என்று ராகவன் சாரைப் பார்க்க முடிவு செய்தேன்.

மறுபடியும் வீட்டிற்கு வந்தபோது அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

மணப்பாஞ்சி என்ற வார்த்தையை எப்படியெல்லாம் எழுத முடியும் என உட்கார்ந்து யோசித்தேன்.

மன பிராந்தி?

ஒன்றுமே ஓடவில்லை…

“எளவுடுத்த பேருகள கொண்டு வெச்சிருக்கினும்” என முணுமுணுத்தேன்

பாட்டிக்கு நான் கூறியது கேட்டுதோ என்னவோ

“பொறத்தால போ சாத்தானே” என கம்பை வீசினார்கள். வீட்டிற்குள் வந்த கோழிகள் பதறி சிதறி ஓடின.

ஒன்றில் மணம், இல்லாவிட்டால் மனம் இந்த இரண்டு வார்தைகளில் ஒன்றாகவே இது இருக்கவேண்டும்

மனம் பாய்ந்த விளையா? மனம் விரும்பத்தக்க விளையா இது?

ஆனாலும் பொருள் வரவில்லையே? ஈடன் கார்டென் என பெயர் மாற்றவேண்டும் என கறுவிக்கொண்டேன்.

சாயங்காலமாக ராகவன் சார் வீட்டிற்குச் சென்றேன். ராகவன் சார் எங்களுக்கு ஆறாம் வகுப்பில் தமிழ் பாடம் எடுத்தவர்கள். எம் கே ஆர் என்று தான் கூப்பிடுவோம். மாக்கிரி ராகவன் என்பதன் சுருக்கம். பக்கவாட்டு தோற்றத்தில் தவளையை பிரதி எடுத்தது போன்ற ஒரு முகம் என எவனோ கிளப்பிவிட்டது. பாடம் நன்றாக நடத்துவார்.

என்னடே இந்தப்பக்கம் என்றார்.

சார் நம்ம வீட்டு வெளைக்க பேரு மணப்பாஞ்சிண்ணாக்கும். அதுக்க வெளக்கம் கிட்டுமாண்ணு….

ஓ அப்படியா…. என்றவர் இரிடே… என்றபடி உள்ளே சென்றார்.

வெளியில் வரும்பொது இரண்டு பெரிய புத்தகங்கள்… நிகண்டுகளாக்கும் என்றவர்… கண்ணாடி போட்டபடி தேட ஆரம்பித்தார். ஒண்ணும் காணேலியேடே…

அவரே தொடர்ந்தார்…. வெள்ளரி விளை, எலிகுத்திப் பாறை, மாவிளை, ஊரை சுத்தி இருக்கப்பட்ட இடங்களுக்கு எல்லாம் எதோ ஒரு பெயர் காரணம் இருக்கத்தான் செய்யுது… இது வெளெங்கேலியேடே என்றார்.

பின்ன ஒரு காரியம் உண்டு வெளவங்கோட்டுல  உள்ள பேச்சு வளக்கு தனியாக்கும். அதுக்க மகிம தெரியாத்தவனுவ நிகண்டு எழுதி வெச்சா ஆச்சா என்றார்.

செரி… யாதெங்கிலும் மூப்பிலுகிட்ட கேட்டு பாக்குதேன் என்று கிளம்பினேன்.

போதகரைப் பார்த்து கேட்டால் என்ன என என்ணி அவரைத்தேடிப்போனேன்.

பிறந்த நாளாக்கும் இல்லியா பிள்ளா?

ஜெபிக்கணும்னாக்கும் வந்தது…

போதகர் ஜெபித்து முடித்தவுடன்

நம்ம விளைக்க பேருக்க அர்த்தம் தேடிட்டு இருக்கேன்.

மணப்பாஞ்சி விளையா? பெரிதாக சிரித்தார்

ஆ…. தம்பி….. அது மணம் பாய்ஞ்சி ஓடுத இடமில்லியா. நற்கந்தம் வீசுத இடம்.  பரிசுத்த வேதாகமம் அப்படித்தான் சொல்லுது என்று பிரம்மாண்டமாக சிரித்தார். நானும் சிரித்துவிட்டு அதாக்கும் பாஸ்டரே என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

வீட்டிற்கு வந்தபின் அம்மா கேட்டார்கள், “ஏம்பிலே இப்படி கெடந்து பெடச்சுத விளை பேர ஊரெல்லாம் போய் கேக்கணுமாக்கும் என்றார்கள்”

பின்ன… நானும் கேக்குதேன் யாரும் விளிகேக்காததுபோல இருந்தா? என இறைந்தேன்.

நீ நேரா ஆலம்பாறை போ…. அங்கிண சொல்லுவினும்.

ஒருவழியாக தீர்வு கிடைக்கும் என்று நம்பி ஆலம்பாறையில் உள்ள யோவான் தாத்தா வீடு நோக்கி சென்றேன். யோவான் தாத்தா பாட்டியின் உடன்பிறப்புகளில் எஞ்சியிருக்கும் ஒரே அண்ணன். ஒரு காலத்தில் பனையேறியவர். பிள்ளைகள் தடுத்ததால் இப்போது ஏறுவதில்லை. 86 வயது. பொக்கை வாய். சுருக்கம் விழுந்த தோல் மற்றும் எலும்பு மட்டுமேயான மெலிந்த உடல். 10 நாள் வெண் தாடி கரியமுகத்தில் ஒளிவீசிக்கொண்டிருந்தன. வேட்டி கட்டி தோளில் ஒரு துண்டு போட்டிருந்தார். அவரை விட ஒரு முழுமையான மனிதரை பார்க்க இயலாது. அவ்வளவு அழகும் நேர்த்தியும் அவரிடம் கூடியிருந்தது.

என்ன பிள்ளா இஞ்சோட்டு என நலம் விசாரித்தார்.

மணப்பாஞ்சி விளைக்க பேர மாத்தலாமுண்ணு இருக்கியேன்…

யொவான் தாத்தா தலை குனித்து சத்தம் வராமல் சிரித்தார் … வாயிலிருந்து எச்சில் ஒழுகியது

துண்டை எடுத்து துடைத்தபடி

பிள்ளைக்கு கத கேக்கணும் இல்லியா? சொல்லுதேன்…

பொன்னம்மைய அப்பன் கெட்டி கொடுத்தப்போ அவ ஒண்ணும் அறியாத குட்டியாக்கும்… அக்கானி காய்ச்சி பளக்கமில்லே…. மொத நாளு மாமியா வந்து எப்படி காய்ச்சுததுண்ணு சொல்லி குடுத்திருக்கினும். மறு நாள் நீயே பாத்துக்க என இவளுகிட்டே செல்லீண்டு கருங்க சந்தைக்கு மாமியா போச்சினும். இவளும் தீயொக்க இட்டு அக்கானி காய்ச்சி எறக்கிப்போட்டா.  எங்கிலும்…. இவளுக்கு துடுப்பிட தெரியேல. கருப்பட்டி காய்ச்ச பின்ன துடுப்பிடுததுலயாக்கும் இருக்கு சூத்திரம். கருப்பட்டீண்ணா கடிக்கும்போ மாவு போல இருக்கணும். ஆனா பதம் தப்பிச்சிண்ணா மணல் கேறிப்பிடிச்சதுபோல இருக்கும். சுற்று மாறி இவ துடுப்பிட்டப்போ எல்லாம் மணப்பாஞ்சி போச்சி. புதுசா வந்த மருமவள மாமியாக்காரிக்கு ஒன்னும் சொல்லப்பற்றேல. கருப்பட்டி ஊத்த தெரியாதாக்கும்ணு சிரிச்சிட்டு போச்சினும். பொன்னம்மைக்கும் பரிகேடாப் போச்சி. அண்ணு வாசி எடுத்தவ தான் மணப்பாஞ்சி விளையில நான் கருப்பட்டி காய்ச்சுதேண்ணு சொல்லி மொத்தம் வேலையும் அவ தான் எடுத்து செய்தா. அவளுக்க 7 மக்களும் 18 கருப்பட்டிக்க காரியமும் இதாக்கும்.

பேரு மாத்தண்டாம் பாட்டா என்றபடி நான் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

 

அருட்பணிகாட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

கள் விடுதலைப் போராட்டம் 4

பிப்ரவரி 17, 2020

கள்ளும் பதநீரும்

கள் இறக்குவதற்கும் பதனீர் இறக்குவதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை குறித்த புரிதல் நமக்கு வேண்டும். இரண்டு பானங்களுமே பனை மரத்திலுள்ள பாளைகளில் இருந்து பெறப்படுபவை தான். பாளையிலிருந்து சொட்டுகின்ற நீரானது, புளிப்போ இனிப்போ இன்றி நுங்கில் காணப்படும் ஒரு மென் சுவையோடு இருக்கும். எப்போது பாளையிலிருந்து பானைக்குள் இந்த நீர் விழுகிறதோ அப்போதே அது காற்றில் உள்ள இயற்கையான நுண்ணுயிரிகளுடன் இணைந்து வேதியல் வினை புரிந்து நொதிக்க ஆரம்பிக்கும். வெயில் ஏற ஏற இதன் தன்மை புளிப்பும் கடுப்புமாக மாறிவிடும். இது இயற்கையான ஒரு செயல்பாடு. ஆனால் இந்த கள் இறக்குவதில் பனையேறிகள் ஒரு குறையினை கண்டுணர்ந்தனர். கள் நொதிக்கும் வேகம் மிக தீவிரமாக இருப்பதால், அதன் புளிப்பு சுவைக் கூடி, ஒரு நாள் ஆகிவிட்டால் குடிக்க இயலாததாக  மாறிவிடுகின்றது.  அவைகளைக் கொண்டு பெரிய பயன் இல்லை. ஆகவே வெளியே கொட்டிவிடுவார்கள். குடியின் மீது தீரா விருப்பு கொண்டவர்களுக்கு, இவ்விதம் புளிப்பு நிறைந்த கள் மிகவும் தேவையாக இருந்ததினால், தயிருக்கு உறை வைப்பதுபோல் கள்ளிற்கும் உறை ஊற்றி புளிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்விதம் உறை உற்றப்படாத கள் இன்சுவை கள்ளாக இருக்கும்.  அதனை போதை என்று சொல்லுவது தூயவாதிகளின் கூற்றாக எண்ணி புறந்தள்ள வேண்டியதுதான்.

கள் என்பது போதை அற்ற ஒரு பானம். மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் கூறும்போது “கள்ளிற்கு போதை வருவது எப்போது? அது கடைக்கு வந்த பின்புதான்” என கேள்வி பதில் பாணியில் நமக்கு உண்மையினை போட்டுடைக்கிறார். இயற்கையாக கிடைக்கும் கள்ளில் இருக்கும் “போதையானது”  “கொட்டைப்பாக்கு வெற்றிலை போன்றவற்றை சேர்த்து குதப்பும்போது ஏற்படுமே அவ்விதமான ஒரு போதைதான் கள்ளிலிருக்கிறது” என்பார்.   நம்மூரில் வெற்றிலைக் குதப்பாத கிழவனும் கிழவியும் நமது கண்களுக்கு அனேகமாக புலப்படுவதே இல்லை. ஆசியாவின் முக்கிய காலாச்சார அடையாளங்களில் ஒன்று தாம்பூலம் சுவைப்பது. அப்படியானால் தாம்பூலம் சுவைப்பதை எவ்வகையில் புரிந்துகொள்ளுவது? போதைக்கு அடிமையானவர்கள் தாம்பூலம் சுவைக்கிறார்கள் என்றா? ஆகவே அதனை தடை செய்ய வேண்டும் என்றா? மருந்திற்காக பயன்படுத்துபவர்கள் மருந்து கடைகளில் வெற்றிலையை பெற்றுக்கொள்ளட்டும் என்றா? நமது மரபை எதிர்க்கும் கேள்விகள் எங்கிருந்து எழும்பிகின்றன என எண்ணுவது நல்லது.

MegasthaniS

மெகஸ்தெனஸ்

குமரி மாவட்ட வனத்துறையில் பணியாற்றிய திரு.தங்கமரியான் அவர்கள் கூறும்போது, பனை மரத்தில் இரண்டு ஓலைகள் காற்று இல்லாவிட்டாலும் சந்தமெழுப்பியபடி இருக்கும். இவைகளை வெட்டி கள் கலயத்திற்குள் இட்டால், பெரும் போதை அளிக்கும் கள்ளாக அது மாறிப்போய்விடும் என்பார். மிடாலக்காடு பகுதியைச் சார்ந்த பனையேறும் போவாஸ் அவர்களிடம் இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது அவர் அதனை சிரித்துக்கொண்டே ஆமோதித்தார். ஆனால், அது ஒரு வழக்கமான முறைமை அல்ல என்பதனையும் சுட்டிக்காட்டினார். அபூர்வமாக நிகழும் ஒன்று மாத்திரம் அல்ல, பனையேறிகள் அவைகளை முதன்மைப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆகவே தான், இதனை பதப்படுத்தும் நோக்கோடு சுண்ணாம்பு கலந்து, கள்ளில் நடைபெறும் நொதித்தலை கட்டுப்படுத்தி பதனீராக மாற்றினார்கள். இன்சுவை பதனீரை காய்ச்சி எடுக்கையில் கிடைத்த கருப்புகட்டியினை நெடுநாள் சேகரித்து வைக்கும் நுட்பத்தினையும் கண்டடைந்தார்கள். இதன் காலம் குறித்த தரவுகள் நம்மிடம் சரியாக இல்லையெனினும், இதனை சைவர்களோ, இஸ்லாமியர்களோ அறிமுகப்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளது. பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் கூறும்பொது “கரும்பிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து செய்யப்பட்டதே கருப்புகட்டி. கரும்பு + கட்டி-யே புணர்தலின் நிமித்தமாக கருப்பு கட்டி ஆனது என்பார்”. மேலும் அவர் 17ஆம் நூற்றாண்டில் தான் கருப்புகட்டி காய்ச்சும் நுட்பம் தென் மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது என்றும் கூறுவார். இது அவரது மனப்பதிவு என்றாலும் அதனை மிகச்சரியாக நம்மால் மறுக்க இயலாது. ஆனால் கி மு 4 ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த மெகஸ்தெனஸ் என்கிற கிரேக்க பயணியும் புவியிலாளருமானவர், பாடலிபுத்திரம் வந்து இந்தியா குறித்து எழுதியிருக்கிறார். அவரது குறிப்புகளில், இனிப்பு கட்டிகள் குறித்த விவரணைகள் வருகிறதாக இலங்கையைச் சார்ந்த கோவோர் அவர்கள் ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறுகிறார். மெகஸ்தெனஸ் ன் விவரணையில் வரும் படிகம் போன்று இருக்கும் “இனிப்பு கல்” “பனங்கற்கண்டு” அன்றி வேறாக இருக்கவியலாது என்பது அவரது துணிபு. அப்படியானால் கருப்பட்டி காய்ச்சும் நுட்பம் அன்றே தாராளமாக இருந்திருக்கும். கள்ளும் பதனீரும் வரலாறு முழுக்க இணைந்தே பயணித்திருக்கின்றன

நான் பார்த்த வரையில் எங்கும் பழங்குடியினர் கருப்பட்டி காய்ச்சும் நுட்பத்தினைக் கொண்டிருக்கவில்லை.  ஒருவேளை அப்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் கண்டடையும் நோக்கிலேயே நான் பயணித்து வருகிறேன்.

800px-Refreshing_palm_wine

ஆப்பிரிக்க பழங்குடியினர் கள் குடிக்க பயன்படுத்தும் சுரைக்குடுவை

நமக்கு பழங்குடியினர் வாழ்வில் இயல்பாக இருக்கும் ஒன்றின் மீதான ஒவ்வாமை எப்போதிருந்து ஏற்பட்டது?  திருவள்ளுவரின் ஆக்கங்களுள் கள்ளுண்ணாமை இடைச்சொருகலா என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.  என்னைப் பொறுத்தவரையில் கள்ளுண்ணாமை கடந்த இரு நூற்றாண்டுகளுள் ஏற்பட்ட ஒரு மாற்றம் தான்.  குறிப்பாக, பிரித்தானிய வருகையினை ஒட்டி, இவ்வித சிந்தனைகள் உழ்நுழைந்திருக்கும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து “கல்வி” கற்று வேலைக்கு செல்ல ஆரம்பித்த தலைமுறைக்கு கள் என்பது ஒவ்வாமை அளிக்கும் ஒன்றாக இருந்திருக்கும். பழங்குடியினர் வாழ்விலிருந்து நவீன வாழ்வு நோக்கி வந்த மனிதர்களிடம், காலத்திற்கு ஒவ்வாத ஒரு பழக்கம் இருப்பதை நவீன மனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். ஆகவே மிக உக்கிரமாக கள்ளிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.

அய்யாவழியினை தோற்றுவித்த முத்துகுட்டி சுவாமி எனும் ஆன்மீக மற்றும் சமுதாய தலைவர், பனைத் தொழிலை ஆதாரமாக கொண்டு வாழ்ந்தவர். அச்சூழலிலிருந்து அவர் ஒரு தெய்வீக நிலைக்கு மாறுகையில், “கள் உண்ணேன்” என்னும் நோன்பினை முன்னெடுக்கிறார். மாத்திரம் அல்ல, ஒருவருக்கும் கள் உண்ண கொடுக்கவும் மாட்டேன் என முடிவெடுக்கிறார். ஆன்மீக நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். அந்த நோன்பானது எவ்வகையிலும் நியதியாக பொது மக்களுக்கு வைக்ககூடாது என்பதே எனது எண்ணம். நோன்பிருப்பவர்கள் வேண்டுமானால் அவரவர் தேவைக்கேற்ப இவைகளை தெரிவு செய்யலாம்.

Cambodia

கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் ஆலயத்தின் அருகில் மூங்கில் குழாய்களில் கள் நிரப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

கள் இறக்குவது கூடாது எனும் எண்ணம் ஒரு பனையேறியின் முடிவாக இருக்கும் பட்சத்தில் அவரை நாம் நிற்பத்திப்பது சரியாகாது. ஆனால், பனையேறிகள் கள் தங்கள் உரிமை என்றே எண்ணி வந்திருக்கின்றனர். பனையேறிகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவே நமது குரல்கள் எழும்ப வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.  தனது வாழ்வை ஒரு பனையேறி எப்படி கட்டமைக்கவேண்டும் என விரும்புகிறானோ, அவ்விதமாகவே அது நிலைபெற வேண்டும். உலகெலாம் ஒரு நியதி இன்று ஏற்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின் அடையாளம் என எவைகள் காணப்பட்டனவோ அவைகள் திரும்பி மீட்கப்பட்டு வருகின்றன. நவீன வாழ்வு நோக்கி முன்னேற்றம் என சென்றவர்கள் அனைவருமே மரபு நோக்கி திரும்பி வருகின்றனர். அத்தனை பின் நவீனத்துவ அறிஞர்களும் தொல் பழமையில் ஊறிக்கிடக்கும் உண்மைகளை தேடிகொண்டு வந்து சேர்த்தபடி உள்ளனர். பெரும்பொருட்செலவில் பழைமைகளை மீட்டுக்கொண்டு வருகின்றனர். நாம் அந்த அளவிற்கு இன்னும் இழக்கவில்லை. ஒருவேளை மீட்கவே இயலாத இடத்திற்கு நம்மைத் தள்ள முற்படுகிறார்களா என்ன?

“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;”

அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்தை ஒட்டி, அவரது வள்ளன்மையை குறிக்கும் ஒவ்வையாரின் பாடல் இது.

பகிர்ந்து கொள்ள இயலாதபடி குறைவாகவே கள் இருந்தால், நான் நிறைவாக குடிக்கும்படி எமக்கு அதனைத் தருவான், ஒருவேளை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நிறைவாக கிடைத்தால், எனக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்வான் என பாடுகின்றார்.   சற்றே யோசித்து பார்க்கையில், கள் எப்போதும் நிறைவாக கிடைப்பது அல்ல, எனும் கருத்து உட்பொதிந்திருக்கிறதைக் காணமுடியும், கூடவே அரசனும் கவிஞர்களும் விருந்தினர்களும் போற்றும் ஒரு உணவாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. விருந்தினருக்கு கள் படைக்கும் விருந்தோம்பல் தானே புகழப்பட்டிருக்கிறது? மருந்தா விருந்தோம்பலின் இலக்கணம்? நமது பாரம்பரியத்தில் உணவே மருந்தாக இருந்திருக்கிறது.

பனை சார்ந்த எனது பயணத்தில், இந்தியாவில் இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றே உணர்ந்துகொண்டேன். அல்லது அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை அவர்களால் வெற்றிகரமாக நிறுவ இயலவில்லை என்பதே பொருள். குறிப்பாக இஸ்லாமியர்கள் கோலோச்சிய ஆந்திர பகுதிகளில் இன்றும் கள் விற்பனை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. மாத்திரம் அல்ல அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மட் கலங்கள் கூட இஸ்லாமிய கூஜா வடிவினை ஒத்து இருப்பதைப் பார்க்கும்போது, எவ்வகையில் கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை கடந்து நமது கரத்தில் வந்து சேர்ந்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியும். இலங்கை சென்றிருக்கும்போது கூட, அங்கே கொடுக்கப்படும் கள் மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை (சீன கிண்னங்கள்) ஒத்திருந்ததை கண்டுகொண்டேன். மூங்கில் களிகளில் கள் குடிக்ககொடுப்பது கிழக்காசிய வழக்கம், அப்படியே சுரைக்குடுவையில் குடிக்க கொடுப்பது ஆப்பிரிக்க வழக்கம். தத்தமது சூழலில், கண்டங்கள் கடந்து பனங்கள் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கையில்,  தமிழகத்தில் மட்டும் இந்த தடைக்கான காரணம் என்ன என எவரேனும் சொல்ல மாட்டார்களா என்கிற கேள்வி நம்மைக் குடைந்துகொண்டே இருக்கிறது. இக்கேள்விக்கு விடைகள் மழுப்பலாகவே நம்மை வந்தடைந்துகொண்டிருக்கின்றது.  வாழ்வில் இத்துணை பண்பாடுகளுடன் இணைந்து வரும் கள்ளை தமிழகம் புறக்கணிப்பது, சற்றும் ஏற்புடையாதாக காணப்படவேயில்லை.

telengana toddy

தெலுங்கானாவில் கள் விற்பனை செய்யும் கூஜா

மர வழிபாடு உட்பட நாட்டார் வழிபாடுகள் பல்வேறு வடிவங்கள் கொண்டவை. பனையேறிகள் உட்பட பல்வேறு மக்களினங்கள் கள்ளினை சாமிக்கு படைக்கும் முறைமையினை தமிழகத்தில் கொண்டிருந்தார்கள். அவர்களின் வாழ்வில், வழிபாட்டில் நமது சட்டங்கள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது, அதற்கு ஒரு சிலர் துணை நிற்பதை அறியும்போது, எவ்வகையில் இவைகளை நாம் எடுத்துக்கொள்ள முடியும்? நமது வழிபாட்டு முறைமைகள் என்பவை தொல் அடையாளங்களின் எச்சம். அவைகளை துடைத்தெறியும் சட்டங்கள், நமது பண்பாட்டு அலகுகளை அழிக்கின்றன. இவ்வித செயல்பாடுகள் நமது கலாச்சாரத்துடன், நமது தொழில், நமது சூழியல், நமது திறன்களை மழுங்கடிக்கும் நோக்கு கொண்டவை. இவைகள் கண்டிப்பாக பன்னாட்டு வணிக சுமைகளை நம்மேல் திணிப்பவையாகவே மாறிவிடும்.

குமரி மாவட்டத்தில் ஈசன்தங்கு என்ற இடத்தில் ஒரு கோவில் உண்டு. இக்கோவிலில் இரண்டு விழாக்கள் முக்கியமாக நிகழும். ஒன்று கார்த்திகை மாதம் நிகழும் சொக்கப்பனை, மற்றொன்று பனை மரத்திலிருந்து கள் இறக்கும் பங்குனி திருவிழா. பங்குனி மாதம் குமரி மாவட்டத்தில் பதநீர் / கள் முடிவுக்கு வரும் சமயம். இங்கிருந்து நெல்லை மற்றும் பிற பகுதிகளுக்கு பனையேறிகள் தங்கள் தொழில் நிமித்தமாக புலம்பெயரும் காலகட்டம். இச்சூழலில், ஒரே நாளில் பனை ஏறி கலயம் கட்டி அன்று மாலையே கள் இறக்கி அன்று தானே சாமிக்கு படைக்கும் இந்த வழிபாடு, மிக முக்கியமானது. ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனது இறை நம்பிக்கையுடன் அவனது உணவு கலாச்சாரம் எப்படி இணைந்து முயங்கி இருக்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. இந்த வழிபாட்டு முறைமை அடிபடும்பொழுது, பனை ஏறும் திறன் இல்லாது போய்விடும். அது சார்ந்த மக்களின் நம்பிக்கையும் மாற்றமடையும், நமக்கு நமது முன்னோர் ஒரே நாளில் கள் எடுக்கும் திறனை கற்றுக்கொடுத்த ஒரு சடங்கு மறைந்தே போய்விடும். ஒன்றை இழப்பதினூடாக நாம் ஒட்டுமொத்தமாக இழக்கிறோம் என்பது குறித்த புரிதலை நாம் அடையாததுதான் தற்போது நிலவும் பிரச்சனை பிரச்சனை.

தமிழகத்தில் கள் குறித்து யாரும் ஆய்வு செய்திருக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. கேரளாவில் இறக்கும் தென்னங்கள்ளில் ஆய்வு செய்தவர்கள், புதிதாக இறக்கப்பட்ட கள்ளில் சுமார் 0.2% எனத் துவங்கி 24 மணி நேரம் கடக்கும்போது 4.5% என்ற அளவில் வந்து நிற்கிறது என பதிவு செய்கிறார்கள். 24 மணி நேரத்திற்கு பின்பு இவை இன்னும் கூடுதல் போதையாகுமே என்று சிலர் எண்ணலாம். அது தான் இல்லை, அதன் பின்பு அது காடியாக (Vineger) மாறிவிடும்.

ஆகவே பனையேறிகள் மிக தெளிவாக இருந்தார்கள். அன்றாட தேவைகளுக்கு எத்தனை கலயம் கள் போடுவது என்றும் தங்கள் சேமிப்பிற்காக எத்தனை கலயத்தில் பதனீர் இடுவது என்பதும் அவர்கள் பட்டறிவின் வாயிலாக உணர்ந்திருக்கிறார்கள். அந்த விகிதத்தை அவர்கள் தீர்மானிக்கும் அளவிற்கு நாம் விடவில்லையென்று சொன்னால், அவர்களின் உரிமைக்குள் அனாவசிய தலையீடு செய்கிறவர்களாக இருப்போம். அதை செய்ய அரசு உட்பட எவரையும் அனுமத்திக்கலாகாது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

கள் விடுதலைப் போராட்டம் – 3

பிப்ரவரி 10, 2020

அறியாமை புரியாமை

“கள் இறக்கினால் பனை தொழிலாளர்களது வாழ்வு சிறக்கும் என்பது அறியாமை புரியாமை” என்ற பொன்மொழி நமக்கு கிடைத்திருக்கிறது. கள் இறக்கும் அனுமதியினால் பனையேறிகளுடைய வாழ்வு சிறக்கும் என்று நிறுவப்பட்டால், மேற்குறிப்பிட்ட கருத்தினை விளம்பிய பெருந்தகை கள் இறக்க முன்வருவாரா? இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், கொள்கை அளவில் அவர்கள் கள் இறக்க எதிரானவர்கள்.  இந்த கொள்கையே அவர்களை பனைத் தொழிலாளர்களுக்கு எதிரானவர்களாக நிறுத்துகிறது. நாங்கள் பனையேறிகளுக்கு துணை நிற்கிறோம் என்ற கூற்று ஒருவரின் வாயிலிருந்து வரவேண்டுமென்றால், அவர் பனையேறின் வாழ்வினை உய்த்துணர்ந்திருந்தாலன்றி அவ்விதம் சொல்ல இயாலாது.  ஆகவே சற்றும் உண்மையின் பால் நிற்கும் தகுதியற்று வறட்டு கொள்கை பிடிப்பு கொண்டவர்களின் கூற்றினை நாம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.

Kal 3

உண்மைக்குப் புறம்பான கொள்கை

எனது வாழ்வில் இரண்டு இடங்களில் கள் இறக்குபவர்கள் கருப்பட்டி காய்ச்ச கற்றுக்கொடுக்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளேன். ஒன்று மஹாராஷ்டிரா மற்றொன்று குஜராத். இரண்டு இடங்களிலும் கருப்பட்டி செய்யத் தெரியாது என்கிற சூழலில், இம்முயற்சிகளை முன்னெடுத்தோம். நான் தனித்து நின்று செயல்பட்ட இடத்தில் தோல்வியும், குழுவாக இணைந்து செயல்பட்ட இடத்தில் வெற்றியும் கிட்டியது. இன்றும் மகராஷ்டிரா பகுதிகளில் உள்ள வார்லி பழங்குடியினருக்கு கருப்பட்டி செய்ய கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். தமிழகத்திலும் பனையேறிகள் கருப்பட்டி காய்ச்ச தொடர் ஊக்கத்தை அளித்துக்கொண்டுதானிருக்கிறேன். ஆனால், கள் இறக்குவதன் தேவை என்பது பனை சார்ந்த வாழ்வினை மேற்கொள்ளும் மக்களின் தெரிவு என்பதனையே எனது அவதானிப்பு தெரிவிக்கின்றது. கள் இறக்குவது என்பது பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை. பனை சார்ந்து வாழும் மக்களின் உரிமை என்றவுடன், இவ்வார்த்தைகளுக்கு சாதி சாயம் பூச முற்படுகின்றனர்.

2015 – 16 ஆண்டு நான் மும்பையில் ரசாயினி என்ற பகுதியில் பனியாற்றிக்கொண்டிருந்தபோது, கள் இறக்கும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மற்றும், புலம்பெயர் பீகாரிகள் கள் இறக்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. அதற்கு முன்பே, மலாட் மட் பகுதியில், நாடார்கள் கள் இறக்குவதும், கோரே பகுதிகளில், கத்தோலிக்க குடும்பங்கள் பண்டாரி எனும் மகராஷ்டிராவின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உதவியோடு கள் இறக்குவதும், வேறு சிலர் ஆந்திராவிலிருந்து ஆட்களை அழைத்து, பனங்கள் இறக்குவதையும் பார்த்திருக்கிறேன். ஆகவே, இவைகள் பனை மரம் சாதியைக் கடந்து பல்வேறு மக்களினங்கள் வாழ்வில் இணைந்திருக்கும் மரம் என்பதை என்னால் உணர முடிந்தது.

DSC_0212

மும்பையில் கள்ளிறக்கும் ஆந்திராவைச் சார்ந்த பனையேறி

மேற்கண்ட புரிதல்களை மனதில் வைத்து 2016 ஆம் ஆண்டு மே16 ஆம் தேதி, எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மும்பையிலிருந்து எனது சொந்த ஊரான நாகர்கோவிலை நோக்கி பயணித்தேன். 18 நாட்கள் நிகழ்ந்த இந்த நெடிய பயணத்தில், ஆந்திராவில் காணப்படுகின்ற பனை சார்ந்து வாழும் நாடோடிகள் குறித்த தகவல்களையும் அறிந்துகொண்டேன். எங்குமே பனையேறிகள், கள்ளுடன் இணைந்தே வாழுகிறார்கள். அவர்கள் வாழ்வில், போதை என்பது கள் அல்ல, அதற்காக வேறு சாராயம் காய்ச்சும் முறைமைகளை வைத்திருக்கிறார்கள்.

ஒருமுறை டாடா நிறுவனம் ஒரிசாவில் நடத்திய ஒரு கருத்தரங்கிற்குச் சென்று பனை சார்ந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அங்கு வந்திருந்த ஒரு பழங்குடியின வாலிபன் என்னை தொடர்புகொண்டு, நான் கோயா பழங்குடியினத்தைச் சார்ந்தவன், எங்கள் வாழ்வில் பனை இன்றியமையாதது என்றான்.  பல ஆச்சரியமான தகவல்களை அவர் என்னோடு பகிர்ந்துகொண்டார், அவற்றில் மிக முக்கியமானது கள்ளினை புளிக்கவைத்து அதிலிருந்து மிகவும் விலை குறைவான ஆனால் உயர் தரமான சாராயத்தை அவர்கள் பெருகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. அப்படியானால், கள் என்பது போதைப் பட்டியலில் அல்ல, அது பழச்சாறுகளுக்கு இணையாகவே கையாளப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு நிகழ்ந்த எனது இலங்கைப் பயணத்தில், அங்கே கள் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கும் நிலையினை அறிந்துகொண்டேன். எப்போதுமே கள் அபரிமிதமாகவே கிடைக்கும். ஆகவே தான், வெறுமனே கள் மட்டும் எடுக்காமல் தேவைக்கு ஏற்ப பதனீர் இறக்கி அதிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி பனஞ்சீனி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றது. இந்த உண்மையினை அறிந்ததால் தான், எஞ்சியிருக்கும் கள்ளினை வடிசாலைகளுக்கு எடுத்துச் சென்று அதனை சாராயமாக மாற்றும் நுட்பத்தினையும் இலங்கையில் கையாள்கிறார்கள். இவ்விதம் உள்ள சூழலில், பனை சார்த்து கிடைக்கும் மற்ற 75% பொருட்கள் கிடைக்காதே என அனேகர் அங்கலாய்ப்பது எனக்கு கேட்கிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இவ்விதம் காணப்படும் ஒரு சூழலில் தான் பனை சார்ந்து அத்தனை தொழில்களும் பீடு நடை போடுகின்றன.

இலங்கையின் பனை சார்ந்த மையம் என்பது யாழ்பாணம் தான். யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சுமார் 360 கி மீ தொலைவு இருக்கும். இன்று மட்டக்களப்பு பகுதிகளில்  பெருமளவில் பனைத் தொழில் கிடையாது.   மட்டக்களப்பில் நான்  தங்கியிருந்த ஓரிடத்தில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருந்த போது காய்ந்த பனங்கிழங்கினை அவித்து ஒரு சில சாக்குகளில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். எனது இலங்கைப் பயணம் முழுக்க அவைகளை நான் சுவைத்தும் சந்திப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தேன். கள் சீவும் இலங்கையில் எப்படி பனங்கிழங்கு சாக்குகளில் கட்டப்பட்டு மளிகைக்கடைகளில் கிடைப்பதாக இருக்கமுடியும்? இப்படி எண்ணுகிறவர்கள், ஒருபோதும் பனையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க இயலாது. இதனைத் தொடர்ந்து நான் யாழ்பாணம் சென்றபோது, பனங்கிழங்கு மாவு (ஒடியல்) விற்பனை செய்யுமிடத்தை அறிந்தேன். அங்குள்ள மிக முக்கிய பாரம்பரிய உணவு ஒடியல் கஞ்சி. மேலும், பனம் பழ ஜாம், பனம்பழ ரசம் போன்றவிகள் மிகவும் தாராளமாக கிடைக்கின்றன. பனம் பழத்தில் செய்யும் பணாட்டும் அங்கே கிடைத்தன. மட்டக்களப்பில் நான் பார்த்த பனை ஓலை தயாரிப்பான அலங்கார பூக்களின் அழகிற்கு இணையாக தமிழகத்தில் வேறு பொருட்கள் எவரும் இன்னும் செய்யத் துவங்கவில்லை. எனது பயணம் முழுக்க “நீத்து பெட்டி” என்ற புட்டு செய்யும் பட்டியினை நான் தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் செய்வதைக் கண்டேன். இப்படியிருக்க 75% பொருட்களின் பயன்பாடுகள் இல்லாமலாகிப்போய்விடும் என்ற புரளியினை கிளப்பிவிடுவதற்கான காரணம் என்ன என்கிற சந்தேகம் வலுக்கிறது.

குமரி மாவட்டத்தில், பனை மரத்தின் பயன்கள் மறைந்து போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்த ஆற்றாமையில் தான் இவைகளை பதிவிடுகிறேன். மார்த்தாண்டம், கோடியூர் ஆகிய சபைகளின் எனது தகப்பனார் போதகராக பணியாற்றிய வேளைகளில், ஆலய வளாகத்திலுள்ள பனைகளில் பனையேறிகள் வந்து பதனீர் இறக்கிச் செல்லுவார்கள். அவர்களிடமிருந்துதான் நாங்கள் வீட்டிற்கு தேவையான கள்ளினை வாங்குவோம். அப்போது கள்ளுக்கடைகள் இருந்த காலம். ஆனால், 1987ஆம் ஆண்டிற்குப் பின் அப்பா பணியாற்றிய ஜேம்ஸ்டவுண் திருச்சபையாகட்டும், சிறக்கரை பகுதிகள் ஆகட்டும், பனைமரங்கள் இருந்தும் மருந்திற்கும் பனையேறிகளை நாங்கள் பார்க்க இயலவில்லை. கள் இறக்க தடை ஏற்பட்டபின் பனையேறிகள் மீது காவல்துறையினர் அவிழ்த்துவிட்ட வன்முறை தான் இதற்குக் காரணம். இக்கொடுமைகளை தாங்கவியலாமல் சொற்ப காலத்திலேயே பனையேறிகள், இது தங்கள் தொழில் அல்ல என அதிலிருந்து விலகிவிட்டனர். காவல்துறையின் துப்பாக்கிகள்  கள் கலயங்களைக் கூட விட்டுவைக்கவில்லை. அலைக்கழிப்புகள், வசவுகள், பொருட்செலவு, மன உளைச்சல்  என எண்ணவியலாத துன்பத்திற்கு ஆட்பட்ட பனையேறிகளுக்காக “குமரியின்” குரல் எழும்பவேயில்லை. பல லட்சம் மக்களின் நன்மைகளை விட, கொள்கை பிடிப்புடன் பனையேறிகளை முற்றாக அழித்தவர்களின் பின்னால் நிற்க எவருக்கு மனமொப்பும்? சிலரது கொள்கைகள் மிகவும் உறுதியானவைகள். இவ்வித கொள்கைகள், எவன் செத்தால் நமக்கென்ன, எவன் “குடி” முழுகிப்போனால் நமக்கென்ன என்பதுதான் போலும்.

DSC01514

குமரி மாவட்டத்தில் அரிவட்டி செய்கிற பெண்

முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, பனம்பழம் சாப்பிடுவது வெகு இயல்பானது. 95% பனை மரங்களில் பாளை சீவாத இன்றைய சூழலில், பனம்பழங்கள் எவ்விதம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில், நாம் பார்த்திராத  டிராகன் ஃபுரூட், கிவி மற்றும் ஸ்டிராபெர்ரி போன்ற பழங்கள் தாராளமாக கிடைக்கின்றன, ஆனால் பனம்பழம் கிடைப்பதில்லை. பனம்பழம் ஒரு சிறந்த ஊட்டச் சத்து மிக்க உணவு என்கிற புரிதலே முன்வைக்கப்படவில்லை. நமது குழந்தைகள் படிக்கும் பாடதிட்டத்தில் கூட பனம்பழங்கள் குறித்த குறிப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இப்படியிருக்க யாரை ஏமாற்றுகிறோம்?

தமிழகத்தில் பனையேறிகளுகுக் என ஒரு சுயாதீனம் இருந்த காலத்தில், பல்வேறு பொருட்கள் கிடைத்து வந்தன. தி இந்து தமிழ் திசை நாழிதழுக்காக நான் எழுதிய “கற்பக தரு” எனும் கட்டுரைத் தொடரில், பனை சார்ந்த பல்வேறு கலைஞர்களை நான் அறிமுகப்படுத்தியிருப்பேன். அவைகள் பனை மரம் எப்படி சாதி எனும் அமைப்பினைக் கடந்து, மனிதர் வாழ்வில் இயற்கையின் இசைவை கொண்டிருக்கின்றன என எடுத்துக்காட்ட சிறந்த உதாரணங்களாகும். அரிவட்டி செய்யும் குமரி மாவட்ட தலித் மக்கள், கடவம் செய்யும்  நாடார் இன பெண்கள், பிளா பெட்டி செய்யும் இஸ்லாமியர்கள், மஞ்சணப்பெட்டி செய்யும் விஸ்மகர்மா இல்லத்தரசிகள், கொடாப்பு செய்யும் இடையர்கள், சம்பு எனும் மழையணி செய்யும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், கொட்டான்கள் செய்யும் செட்டி வீட்டு ஆச்சிகள், ஒமல் செய்யும் குமரிமாவட்ட கடற்கரை மீனவர்கள், பறி செய்யும் உள்நாட்டு மீனவர்கள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்துமே கடந்த 30 ஆண்டுகளில் வழக்கொழிந்து போனது ஏதேச்சையாக நடந்தது அல்ல. தமிழ் குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதல் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

கள் தடைக்கான காரணம் என்பது உள்ளங்கை நுங்கு போல் தெளிவாக நமக்குத் தெரிகிறது. அது மக்களை அரசால் கட்டுப்படுத்த இயலும் என்கிற மறைமுக எச்சரிக்கையை விடுக்கிறது. கலசங்களை உடைப்பது, கைது அரங்கேற்றம், காவல்துறை அச்சுறுத்தல் போன்றவை தொடர்ந்து நடைபெறவே பனையேறிகள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள தலைப்பட்டனர். அப்படியே ஒரு தலைமுறைக்குள் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று எவ்வகையிலும் அத்தொழில் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கண்காணிப்பு கருவியாக ஓர் இயக்கம் உருவாகியிருக்கிறது என்றால், தமிழர்களை எச்சரிக்கவேண்டிய தருணம் இது.

25% கள் வருமானம் மிச்சமிருக்கும் 75% வருமானத்தை கெடுத்துவிடுமா?  என பயப்படுகிறவர்களுக்கு இறுதியாக ஒரு தெளிவினை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பனை ஏறுவதே பனை காக்கும் முறைமை என்பதனை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறேன். இன்று பனை ஓலைகளில் குருத்தொன்றினை பெறவேண்டுமென்று சொன்னால் ரூ35 – 50/- வரை கொடுக்க வேண்டும். இன்று கிடைக்கும் குருத்தோலைகள்  பெரும்பாலும் பனை மரங்களை தறித்து  பெறப்படுபவைகளே. ஆகவே தான் மற்ற 75% பொருட்களுக்கான பேச்சு இன்று அடிபடுகின்றது. மொத்தத்தில் காலி செய்துவிடலாமே?  பனை பாதுகாப்பு வேடமணிந்து செய்யும் இப்பாதகச் செயலினை கண்டிப்பாக தடுத்தே ஆகவேண்டும்.

இயல்பு வாழ்கை என ஒன்று பனை சார்ந்த சமூகங்களுக்குள் இருந்தது. பதனீர் அல்லது கள் இறக்கச் செல்லும்போது பனை மரத்தினை பனையேறிகள் சுத்தம் செய்வார்கள். இச்செயல்பாட்டினால் ஒரே நேரத்தில்  கிட்டத்தட்ட 15 – 20 ஓலைகள் வரைக் கிடைக்கும். இவைகளில், காவோலைகள் எரிப்பதர்க்கும், சாரோலைகள் அதன் தன்மைகளைப் பொறுத்து, கூரை வேயவோ, பெட்டி மற்றும் கடவங்கள் முடையவோ பயன்படும். தங்கள் தொழிலுக்கு இடையூறாக இருக்கும் ஓலைகளை பனையேறிகள் கழிப்பதால், இவ்விதம் எடுக்கப்படும் ஓலைகளுக்கு பெருமளவில் விலை இருக்காது. குறைந்தபட்ச விலையினையே பனையேறிகள் நிர்ணயிப்பார்கள். ஆகவே, மூலப்பொருளின் விலை வெகுவாக குறையும் பனைத் தொழில் ஏழை எளிய மக்கள் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு பெருகும்.

DSC_0220

மும்பையில் காணப்படும் கள் இறக்கும் மண் கலசம்

அப்படியானால் குருத்தோலைகள் எப்படி அன்றைய கால கட்டத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது?  பனைத் தொழிலாளிகள் பனை மரத்தில் கள் அல்லது பதனீர் இறக்கினால் அந்த மரத்திலிருந்து ஓலைகளை வெட்டுவது இல்லை (சுத்தம் செய்த பின்பு). ஆனால் சிறகுகளைக் கிழித்தெடுக்கும் ஒரு முறைமையினை அவர்கள் கையாண்டு வந்தார்கள். மிக லாவகமாக அவர்கள் கரத்தில் இருக்கும் கூர்மையான அரிவாளால் வலது பக்க சிறகினை கிழித்தெடுப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு அபூர்வமாகவே இதனைச் செய்வார்கள்.   மற்றபடி, குருத்தோலை என்பது வீடு கட்டுகிறவர்கள் முறிக்கின்ற பனை மரங்களில் இருந்து கிடைக்கபெறுபவைகளே. ஆகவே தான் அன்று பனைத்தொழில் மிக சரியான புரிதலுடன் கூடிய ஒரு தொழிலாக அதன் அத்தனை பாகங்களும் மிகச்சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக இருந்துவந்தது. இன்றோ பனை தொழிலை காக்கிறோம் என்று சொல்லி, பனை மரத்திலுள்ள குருத்தோலைகளை வாங்குவதற்காக பனை மரங்கள் வெட்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணதுடன் செயல் படுகிறவர்கள், எப்படி பனை மரத்தினை பாதுகாப்பார்கள்?

அறியாமை புரியாமை என அகங்காரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துக்களை நம்பி யாரும் ஏமாந்துவிடாதீர்கள். அது பனையேறிகளுக்கும் பனைக்கும் எதிராக முன்வைக்கப்படும் கோஷம். இவர்களின் வேஷம் கலையும்போது தான் பனையேறிகளால் மீண்டும் பனை சார்ந்த வாழ்வியலை முன்னெடுக்க இயலும். ஆகவே, கள் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். அது பனையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையானது. பனையேறிகள் தெளிவாகவே இருக்கிறார்கள். அறியாமையை விதைக்கும் தேவையற்ற ஆமைகளை பனை வாழ்வியலுக்குள் உழ்நுழைய விடாது இருப்பது அவசியம்.

“பொருந்தா கொள்கை கொண்ட தலைவர்களை  விட உண்மை சூடிய மனிதர்களே மேல்”.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

கள் விடுதலைப் போராட்டம் – 2

பிப்ரவரி 7, 2020

பனம்பாளை கூறும் உண்மை

பனை மரம் சார்ந்த அடிப்படைப் புரிதல் இல்லாதவர்களால் கள் குறித்த புரிதலை எவ்வகையிலும் எட்ட இயலாது ஆனபடியால் பனை சார்ந்த புரிதலையும் பனை சார்ந்து வாழும் சமூகத்தினரின் புரிதலையும் விரிவுபடுத்தி எழுத கடமைப்பட்டுள்ளேன். பனை சார்ந்த விழிப்புணர்வு புகைப்படங்களையும்  – பனை சார்ந்த புரிதலற்றவர்களின் பதிவுகளை புகைப்படமாக ஒப்புநோக்க இங்கே பதிவிடுகிறேன். சீர்தூக்கி பார்க்கும் தமிழ் சமூகம் அனைத்தையும் ஆய்ந்து பொருள் கொள்ளட்டும்.

பனை மரம் ஆண் பெண் என இரு தன்மைகள் கொண்டது. அதாவது தாவரவியலாளர்கள் ஆங்கிலத்தில் இதனை “Dioecious” என அழைப்பார்கள். இதனை தமிழில் இருபாற்கூறுகள் என்றும், பாலின தனிப்பாடு என்றும் கூறுவார்கள். புரியும்படியாக கூறவேண்டுமென்றால், ஆண் பனையில் ஏற்படும் பாளைகளிலிருந்து பதனீர் கள் போன்றவை கிடைக்கும் – நுங்கு அல்லது பனம்பழம் ஆண் மரங்களில் உருவாகாது. ஆகவே பனங்கிழங்கு அல்லது தவண் போன்றவைகளும் ஆண் மரத்திலிருந்து கிடைக்காது. பெண் பனை மரங்களில் இருந்து தான் பனம் பழங்கள் நுங்கு ஆகியவைக் கிடைக்கின்றன என்றாலும் பெண் மரங்களிலிருந்தும் பதநீர் மற்றும் கள் இறக்க இயலும். ஆகவே இரு மரங்களும் பதனீரோ கள்ளோ கொடுக்கும் தன்மையுடையவைகள் என்ற கருத்தை முதலில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

DSC_0204

பனம்பழங்கள் காய்த்துக்குலுங்கும் பெண் பனைமரங்கள்

பனை சார்ந்த ஆய்வுகளை சர்வதேச அளவில் மேற்கொண்ட Dr. T A. டேவிஸ் அவர்கள் பனையில் காணப்படும் இந்த இருபால்கூறின் விகிதத்தை 1:1 என குறிப்பிடுகிறார். அதாவது ஒரு ஆண் மரத்திற்கு இணையாக மற்றொரு பெண் மரம் இருக்கும் என தனது ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார். இவைகளை நாம் பொருத்திப்பார்க்கும்போது, தமிழகத்தில் இருக்கும் சரி பாதி மரங்கள் ஆண் மரங்களாகவும் மற்றொரு பாதி பெண் மரங்களாகவும் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அப்படியானால், ஆண் மரங்களிலிருந்து கள் அல்லது பதனீர் எடுத்துவிட்டு, பெண் மரங்களில் இருந்து தேவையான பழங்களையும் கிழங்குகளையும் எடுப்பதற்கு வாய்ப்புகள் வளமாக இருக்கிறன. என்றாலும் நமக்கு ஒரு கேள்வி இருக்கும், ஆண் பெண் என இரு மரங்களிலும் பதனீர் மற்றும் கள் கிடைக்குமென்றால், அனைத்தையும் சீவி தள்ளிவிடுவார்களே, நமக்கு பனை சார்ந்த பிற உணவுகள் கிடைக்காமல் போய்விடுமே என்று பதைபதைக்கலாம். இது பனை மரத்தோடு உறவில்லாத பொருள்முதல்வாதிகளின் கூற்று. சற்றே பொறுமையுடன் பனை சார்ந்து வாழும் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனக் கேட்போமென்றால் நமக்கு இது குறித்து தெளிவுகள் கிடைக்கும்.

DSC08043

ஆண் பாளைகள் நிறைந்த பனை. இவற்றிலிருந்து இயற்கையாகவே நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கிடைக்காது. இவற்றின் பாளையிலிருந்து கள்ளோ அல்லது பதனீரோ மட்டுமே பெறமுடியும்.

பனை சார்ந்து வாழும் பனை தொழிலாளர்கள் எவரையும் இன்று பனை சார்ந்து பணியாற்றும் எவரும் பொருட்படுத்துவதில்லை. பனையேறிகளுக்கு அறிவுரை சொல்லும் உயர்வகுப்பினராகவே இன்று அனேகர் தங்களைக் காட்டிக்கொள்ளுகின்றனர். ஆழ்ந்து நோக்கினால் சூழல் அப்படியல்ல என நமது நிலைப்பாடுகள் பல்லிளித்துவிடும்.

இன்று பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் எவரும் பனையேறிகளுக்கு நிகரானவர்கள் அல்ல. பனையேறிகளே சிறந்த சூழியலாளர்கள். பனை சார்ந்த சூழியல் சமன்பாட்டினை அவர்களை விட அதிகம் அறிந்தவர் எவரும் இருக்க இயலாது. இச்செய்தி இன்றளவும்  நமது கண்களுக்கு மறைவாக இருந்தது. இது வெளியில் தெரியும்போது போலி வேடதாரிகளின் முகத்திரைகள் கிழிகின்றன. குறிப்பாக பனை பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள், பனை மரத்தினை சூழியலின் ஒரு அங்கமாக கருதாமல், பனை மரத்தினை பணம் காய்க்கும் மரம் என முன்வைப்பது தான் சிக்கல்களின் ஆணி வேர். பனை மரம் ஒரு வாழ்வியல் சார்ந்த மரமே ஒழிய அது பணத்தினை உற்பத்தி செய்யும் மரம் என்பவர்கள் முழுக்க முழுக்க தவறான புரிதலில் இருக்கிறார்கள் என்பதே பொருள். பனை மரத்தினை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்களை சுரண்டிப் பிழைக்கவே பனை பொருளாதாரம் என்னும் கருதுகோள் முன்வைக்கப்படுகிறதே அன்றி பனை சார்ந்த வாழ்வியலை எவரும் முன்வைப்பது இல்லை.

DSC08743

ஆண் பனையானாலும் பெண் பனையானாலும் பனையோலைகளும் மட்டைகளும் எடுத்து தமக்குத் தேவையான பொருட்களை செய்துகொள்வர் பனையேறிகள். ஓலை மற்றும் மட்டை தொழில் செய்பவர்க்கும் மூலப்பொருள் கொடுப்பவர் இவரே

பனை சார்ந்த வாழ்வியல் என்றால் என்ன? ஒரு மனிதன் தனது வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பனை மரத்தோடு இசைந்து வாழ்வது தான் பனை வாழ்வியல். இந்த வாழ்வியலில் இருந்து உபரியாக கிடைக்கும் பொருட்களே, அவர்களின் பொருளாதார ஆணிவேரே அன்றி, பொருளியல் சார்ந்த நோக்கு அல்ல அவர்களது வாழ்கை முறைமை. பனைத் தொழிலாளியின் வாழ்வியலை ஆழ்ந்து நோக்குகையில், பனை சார்ந்த உணவுகள், கலாச்சாரம், பனை சார்ந்த பயன்பாட்டு பொருட்கள், உபகரணங்கள், உப தொழில்கள் மெல்ல எழுந்துவருவதைக் காணலாம். இப்படியான ஒரு முழுமை நோக்கு இல்லாமல் பனை சார்ந்த ஒரு தொழிலை முன்னெடுக்க கூறி அதன் மூலமாக எவரும் பனை மரத்தினை காப்பாற்றிவிட இயலாது. அப்படி கூறுபவர்கள் பனை மரத்தையோ பனையேறியையோ முழுமையாக புரிந்துகொள்ளாதவர்கள் மாத்திரம் அல்ல பனை சார்ந்த வாழ்வியலை அழிக்க புறப்பட்டிருக்கும் தீய சக்திகள்.

பனை மரங்கள் தோற்றத்திற்கு காட்டு மரம் போல காணப்பட்டாலும், அது மனிதனை சார்ந்து இருக்கும் ஒரு தாவரம் தான் என்பதை பனை சார்ந்திருக்கும் நிலப்பரப்புகளிலிருந்து அறியலாம். அடர் வனங்களோ அல்லது மனித நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளிலோ பனை மரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆகவே பண்பாடு சார்ந்து பனைக்குள்ள உறவை பிரித்து வெறும் வணிக நொக்கில் பனை மரத்தினை முன்வைப்பது என்பது பனைக்கும் பனை தொளிலாளர்களுக்கும் உள்ள உணர்வுபூர்வமான உறவையும், தொல் பழங்காலம் தொட்டு மனிதனுக்கும் இந்த மரத்திற்கும் உள்ள உறவை நீக்கும் சதிதிட்டம் என்றே கூறுகிறோம்.

பனைத் தொழிலாளி பனை ஏறும் முன்பதாக பல படி நிலைகளை மேற்கொள்வார். பாளை வந்துவிட்டதா என முதலில் பார்வையிடுவார். பாளைகள் அனைத்து மரத்திலும் ஒரு போல வந்துவிடாது. அப்படியே பளை வந்த அனைத்து மரங்களிலும் அவர் ஏறி கலயங்கள் கட்டுவதில்லை. இப்பணிகளில் பனையேறியின் தெரிவு, பொறுமை, அவதானிப்பு போன்றவைகள் குறித்த தகவல்கள் நம்மிடம் போதுமான அளவு இல்லை. காரணம் பனையேறிகள் சார்ந்து ஆய்வு செய்தவர்கள் என ஒருவர் கூட நம்மிடம் இன்று கிடையாது.

ஒரு தோட்டத்தில் 30 பனை மரங்கள் இருந்தால் அனைத்திலும் பனைத் தொழிலாளி ஏறிவிடுவதில்லை. சுமார் 20 மரங்கள் மட்டுமே ஏறுவார். மீதமிருக்கும் பனைகளில் பெரும்பான்மை பெண் பனைகளாகவும் ஒரு சில பனைகள் ஆண் பனைகளாகவும் இருக்கும். பெண் பனைகள் நுங்கு, பனம்பழம் மற்றும் கிழங்குக்காக விடப்படுவது ஒரு காரணம் என்றால், சரியான மகரந்த சேர்க்கைக்காக ஆண் பனைகளில் உள்ள பாளைகள் சீவப்படாமல் விடுவது மற்றொரு காரணம். இவைகள் யாவும் சொல்லிக்காட்டப்படுவதில்லை, ஆனால் பனையோடுள்ள உறவால் ஏற்படும் புரிதல்.

இவ்விதமாக நமது வாழ்வில் நெருங்கியிருந்த ஒரு மரம் என்பது, பசித்தவனுக்கு உணவும், தங்க வீடும், புழங்கு பொருட்களுமாக இருந்த ஒரு மரத்தை கள் இறக்கத் தடை என்ற ஒற்றை சட்டத்தால் தகர்த்துவிட்டார்கள். 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மையான ஒரு தொடர் சங்கிலி அறுபட்டு, பனை சார்ந்த வாழ்வு தகர்ந்து போனது.

ஒரு மரத்திலிருந்து 180 லிட்டர் பதனீர் 20 மட்டைகள் அது இது என புள்ளிவிபரங்கள் கொடுக்கின்ற வகையில் அல்ல பனை மரங்களின் செயல்பாடு. அது மனிதனின் பயன்பாட்டிற்கு ஏற்ப தன்னையே தரும் ஒரு மரம்.

பனம் பழங்களில் பல்வேறு வகைகள் உண்டு அவைகளை கொட்டை காய்ச்சி மற்றும் சதைக்காய்ச்சி என பிரிப்பார்கள். தோலின் நிறத்தினைக்கொண்டு வெள்ளைக்காய்ச்சி மற்றும் கறுப்புகாய்ச்சி என்றும் அழைப்பார்கள். மாமரங்களில் பழத்திற்கு ஏற்றது, பச்சையாக சாப்பிட ஏற்றது, ஊறுகாய் செய்ய ஏற்றது, வடுமாங்காய் செய்ய ஏற்றது, மீன் குழம்பிற்கு ஏற்றது போன்ற தனித்தன்மை வாய்ந்த மரங்களை நாம் அடையாளப்படுத்தி வைத்திருப்பதுபோல், பனை மரத்தில் எந்த பனை எதற்கு ஏற்றது என பனையேறி தனது அனுபவத்தின்மூலம் தெரிந்து வைத்திருப்பார். பதனீராக கொடுக்க ஏற்ற மரம், கருப்பட்டி காய்ச்ச ஏற்ற மரம், கள்ளு கிடைக்க ஏற்ற மரம் என தனித்தனியாக பிரித்து வைத்திருப்பார்கள். மேலும், பதனீர் கலயம் கட்டிய அதே மரத்தில் மற்றொரு பாளையில் தேவைப்பட்டால் கள் கலயம் கட்டுவதையும் வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். இவர்களிடம் நீ இப்படித்தான் செய்யவேண்டும் என அறிவுறை சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது? டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு இயங்குகிறது என மார்தட்டும் அரசிற்கா? அல்லது இவர்களின் அடிவருடியாக இருக்கும் போலி பனை பாதுகாவலர்களுக்கா?

kal

உணவு உரிமைக்கு எதிரானது கள் என தனது அறிவுறையை துவங்கும் சென்னை வாழ் குமரி நம்பி, பனை மரத்தில் ஆண் பெண் என இரு தன்மைகள் உள்ளதை அறியாதவர் போலும். பனம் பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது எனக் கூறுகிறார். இவைகள் அனைத்தும் ஆண் பனைகளிலிருந்தும் கிடைக்காதே? பெண் பனைகள் அல்லவா நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு கொடுப்பவை? அப்படியிருக்க ஆண் பாளைகளைச் சீவி கள் எடுப்பதால் பதனீர் மட்டும் கிடைக்காது என சொல்லலாமா? அப்படியும் முழுமையாக சொல்லிவிடமுடியாது, ஏனென்றால், ஒரே மரத்தில் பல்வேறு பாளைகள் எழும்பும். அவைகளில் தேவையானதில் கள்ளையும் மற்றோன்றில் பதனீரையும் போடுவது பனைஏறுபவரின் தெரிவு என்றே விடப்படவேண்டும்.

கள் இறக்க, என்றைக்கு தடை வந்ததோ அன்று தான் இந்த தொழில் வீழ்ச்சி நோக்கி வந்ததை வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. குமரி மாவட்டத்தில் எனது சின்னஞ்சிறு வயதில், பள்ளிகூடம் முடிந்த பின்பு பேருந்தின் வருகைக்காக தாம்சன் தாத்தா கடையில் தான் நானும் அக்காவும் இருப்போம். மார்த்தாண்டம் எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் அந்த கடை இருந்தது. லாரிகளில் கருப்பட்டிகள் அன்று வரும். கள் தடைக்குப் பின் அந்த லாரிகளின் எண்ணிகை குறைந்தன. பனையேறிகள் வஞ்சிக்கபட்டு பேச்சுரிமை இன்றி ஆக்கப்பட்டனர். அதற்கு அன்று கருவியாக குமரியைச் சார்ந்த் ஒருவர் இருந்தார். தமிழகமெங்கு சென்றாலும் பனையேறிகள் அவரை மன்னித்துவிட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்லி நான் கேட்டதில்லை. பனையேறிகளுக்கு அவர் இழைத்த துரோகம் அப்படிப்பட்டது. இன்று குமரி என்ற அடைமொழியுடன் மற்றொரு துரோகி உருவாவதை நாம் தடுக்காவிட்டால், காலம் நம்மை கேள்வி கேட்கும்.

ஒருவேளை எனது கூற்றுகள் எவரையும் புண்படுத்தும்படி இருக்கும் என்று யாரேனும் கருதினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து ஒரு 10 பனையேறிகளைக் கண்டு, அவர்கள் வாய்மொழி கூற்றைக் கேட்டு உணருங்கள். பனைமரத்தினை புகைபடங்களுக்காக கட்டியணைத்து பாதுகாக்காமல், தனது நெஞ்சு உராய தழுவி அதனுடன் இரண்டரக்கலந்த பனையேறி எந்த சாதியைச் சார்ந்தவனாயினும், கள் குறித்து ஒரு வார்த்தைக் கூட தவறாக சொல்லமாட்டான். அவனுக்கு தெரியும் “கள்ளு தள்ளைக்கு சமம்”[1] என்று.

தனது உழைப்பை முன்னிறுத்தி வாழும் பனையேறிகளின் வாழ்வில் உரிமைகள் மறுக்கப்படுவதை எந்த நவீன சமூகமும் ஒப்புக்கொள்ளாது.

 

[1] “கள்ளு தள்ளைக்கு சமம்” என்பது குமரி மாவட்ட வழக்கச் சொல். தள்ளை என்பது தாய் என குமரிமாவட்டத்தில் பொருள்பெறும். பனை மரத்தினை காளியின் வடிவம் என்றும் காளியே பனையேறிகளின் தாய் என்றும் ஒரு புரிதல் தென்மாவட்ட  பனையேறிகளிடம் உண்டு.

தகுந்த ஆதாரங்களுடன் கள் விடுதலைப் போராட்டம் தொடரும்…

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 

கள் விடுதலைப் போராட்டம்

ஜனவரி 20, 2020

கள் சார்ந்த விடுதலை என்பது பனை சார்ந்து வாழும் மக்களுக்கான உரிமை. காந்தி உப்பு காய்ச்ச இறங்கியது போன்ற ஒரு நிகழ்வே இது. நமது மரம், நாம் ஏறுகிறோம், நாம் பருகுகிறோம். நமக்கு வேண்டியவர்களுக்கு இதனை கொடுக்கிறோம். கள் இறக்குபவர்களை அடக்க முற்படுவது ஒரு நவீன சமூகத்தில் வாழும் எவரும் செய்யக் கூடாதது. வெகு சமீபத்தில் பனை பொருளாதாரம் குறித்து பேசிவரும் திரு. குமரி நம்பி, “உணவு உரிமைக்கு எதிரானது கள்” என ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இச்சூழலில் நான் சுதேசி இயக்கம் எனக்களித்த விருதினை துறந்து, சுதேசி இயக்கத்தினரின் கள்ளிற்கு எதிரான நிலப்பாட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனது பனை மரச்சாலையில் ஆந்திராவில் காணப்படும் கள் இறக்குகிறவர்களையும், கள் இறக்கும் பகுதிகளையும், கள்ளுக்கடைகளையும் நான் ஓரளவு எழுதியிருந்தாலும், கள்ளு குறித்து தனித்தன்மையாக ஏதும் பதிவிடவில்லை. ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு “குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்  விழுமியங்களும்” என்ற கலந்துரையாடலில் கள் குறித்து சிறு  கட்டுரையினை சமர்ப்பித்தேன். கள்ளும் பனையேறிகளும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரை பனைத் தொழிலாளர் வாழ்வில் குடி எப்படி இயல்பாக இருந்தது என்பதை வெளிப்படுத்தியிருந்தது.

L3

தமிழக பனைத் தொழிலாளி

இயல்பாகவே குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், கள் வீட்டின் உணவுப் பொருளாயிருந்தது. கிறிஸ்தவ வீடுகளில் கள் ஆப்பம் செய்ய பயன்பட்ட ஒரு ஊக்கியாக இருந்தது. போதகரான எனது தந்தை குடிக்கு எதிராக தனது வாழ்வை அற்பணித்திருந்த்போதும் கூட “கள்” வீட்டில் இருப்பதைக் குறித்து ஏதும் சொன்னதில்லை. ஒரு காலகட்டத்தில் எங்குமே போதகர்கள் கள்ளினை ஆப்பம் செய்ய பயன்படுத்தாமல் இல்லை. நல்ல கள்ளினை பனையேறியிடம் கேட்டே பெற்றுக்கொள்ளுவார்கள். நான் பெங்காளூரு ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, எனது ஆசிரியராயிருந்த டாக்டர். கிரண் செபாஸ்டியான், கள்ளுக்கடையிலிருந்து ஆப்பம் செய்ய கள்ளு (தென்னங்கள்ளாக இருக்கலாம்) வாங்கி வந்ததை போகிறபோக்கில் சொன்னார்.

கள் என்பது மதுவாக பார்க்கப்பட்டு பருகப்பட்டபோது, அதற்குள் ஊமத்தை விதைகள், போதை மாத்திரைகள் ஆகியவை சேர்க்கப்பட்டன. இவ்வித சூழலில் அரசு கள்ளை விட, வெளிநாட்டு மதுபானங்களின் மேல் விருப்பு கொண்டு, கள்ளை தடை செய்ய முன்வந்தனர். கள்ளுக்கு தடை ஏற்பட்டபோது பலரும் இணைந்து அதனை ஏற்றுக்கொண்டனர். ஆண்கள் குடித்து விட்டு வீடுகளில் ஏற்படுத்தும் கலகங்களைப் பார்த்தோ என்னவோ தமிழக அரசு சொன்னதை எதிர்க்காமல் கிறிஸ்தவ சமூகம் அன்று ஏற்றுக்கொண்டது தவறு தான் என்று நினைக்கிறேன். ஆகவே தான் இன்றைய சூழல் “பானைக்குள்ளிருந்து அடுப்பிற்குள் நுழைந்த” கதையாகிவிட்டது. கள் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தமிழ்நாடு முழுவதும் ஒரு மனத்தடை இருந்தது. இன்றும் கிறிஸ்தவ சமூகம் கள்ளு சார்ந்து ஒரு சரியான புரிதலை ஏற்றுக்கொள்ளாவிடில், மிகப்பெரிய தவறிளைத்தவர்களாக நாம் மாறிவிடுவோம். குறைந்த பட்சம் கள் சார்ந்த ஒரு உரையாடலை நாம் நிகழ்த்தவேண்டும் ஏனென்றால், வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பனை மரங்களே வேலைவாய்ப்பு நல்கும் ஒரு மரமாக வரமாக இருக்கிறது. கள் வேலைவாய்ப்பினை பரவலாக்கும் ஒரு சுதேசி தொழில்.

L5

கள் இறக்குபவர்

கள் என்பது போர் நேரத்திலும்  விழாக்காலங்களிலும் பயன்படுத்தும் ஒரு உணவு என்றே நமக்கு கூறப்பட்டிருக்கிறது. வெறியாட்டுக்களிலும் களியாட்டுக்களிலும் கிறிஸ்தவம் பெரு விருப்பை காண்பிப்பது இல்லை. ஆனால் கள்ளின் பயன்பாடு அனுதினமும் எளியமனிதர்களின் வாழ்வில் இன்றியமையாதது என்று எனது 25 வருட தொடர் அலைச்சலில் கண்டுகொண்டேன்.  குறிப்பாக கோடை நேரத்தில் மக்களின் உடல் வெம்மையினை போக்க கள் தான் அருமருந்து. மதுபானத்தை தடை செய்த்திருக்கும் குஜராத்தில் கூட, வெயில் காலங்களில் உடல் சூட்டினை தணிக்க பனங்கள்ளினையே பீல் பழங்குடியினர் பயன்படுத்க்டுகிறார்கள். உடல் களைப்பை போக்கவும், தோல் நோய்களை நீக்கவும், குடலினை சுத்தம் செய்யவும் கள் பயன்பட்டுவந்தது. கருவுற்றிருக்கும் பெண்கள், பிரசவித்த பெண்கள், சவலைக்குழந்தைகள், கடும் உடல் உழைப்பினை நல்கும் உழைப்பாளிகள், கலைஞர்கள் போன்றோர் மீண்டெழ கள் தான் சிறந்த மருந்தாக பயன்பாட்டில் இருந்துவந்தது.

 

எனது நண்பரும் பனையேறியுமான நரசிங்கனூர் பாண்டியன் அவர்கள், ஏழாம் வகுப்பு படிக்கும் தனது மகள் கரிஷ்மாவின் தோல் வியாதிக்காக சந்திக்காத மருத்துவர்கள் இல்லை. முயற்சிக்காத மருத்துவமுறைமைகள் இல்லை. நானே அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கும்போது, அது குறித்த மனக்கிலேசம் அவருக்கு இருந்தது. அப்போது, ஒரு பரீட்சார்த்த முறையில் அவர் தனது மகளுக்கு கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஓரளவு பலன் தெரிகிறது என்றும் சொன்னார். எப்படி கள்ளினை தெரிந்துகொண்டீர்கள் என வினவியபோது, “உண்பொருள் குண அகராதி”  என்ற 120 ஆண்டு பழைமையான ஒரு புத்தகத்தை தான் வாசித்துக்கொண்டிருந்தபோது, பனங்கள் குடிப்பதால் – “சப்த தாதுக்களை பெருகப்பண்ணும், தொழுநோயை குணப்படுத்தும், சுக்கில விருத்தியை உண்டுபண்ணும்” என எழுதியிருந்ததை வாசித்து, தொழுநோயே குணமாகுமென்றால், தோல் நோய் குணமாகாதா என எண்ணி முயற்சித்திருக்கிறார். சுமார் ஒரு பருவகாலம் முழுவதும் கள் உண்ட அவளுக்கு இன்று தோல் நோய்கள் என்று ஏதும் இல்லை. இன்று வேறு எந்த உடல் சார்ந்த பிரச்சனைகளோ அல்லது உளம் சார்ந்த பிரச்சனைகளோ அவளுக்கு இல்லை. மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாள்.

பலருக்கும் எழும் ஒரு கேள்வி நமக்கும் எழுவது இயல்பு. பனங்கள் குடித்தவர்கள் கள் இறக்கும் பருவகாலம் முடிந்தபின்பு என்ன செய்வார்கள்? கை நடுங்காதா? இல்லை கள்ளிற்கு அடிமையாகிவிட மாட்டார்களா போன்றனவற்றிற்கு, இல்லை என்றே பாண்டியன் பதிலளிக்கிறார். கள்ளின் பருவ காலம் துவங்கும்போது ஊரின் பெண்கள் அனைவரும் தனி அழகு பெற்று விடுகின்றனர் என்று சிரிப்புடன் கூறுகிறார். பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்களின் முகமும் உடலும் சிறந்த ஒரு வடிவம் பெற்று பொலிவிடுகிறதை தான் கவனித்ததாக குறிப்பிடுகிறார். குறிப்பாக பனங்கள் என்பதை அவர் பழச்சாற்றுக்களுக்கு மாற்றாகவே குறிப்பிடுகிறார். தனது வீட்டில் கள்ளிருக்கும் நேரங்களில் எந்தவிதமான பழங்களும் விரும்பி உண்ணப்படுவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

L8

கள் கலயம்

ஒருமுறை அவரோடு தங்கியிருந்த நாளின் அதிகாலை வேளையில், சூரிய உதயத்திற்கு முன்பதாக எழுந்து அவருடன் பனங்காட்டிற்குச் சென்றேன். பதனீரை இறக்கி கருப்பட்டி செய்யும் அவர், ஒரு பனை மரத்தில் மட்டும் கள் கலயம் போட்டிருந்தார். ஒரு லிட்டருக்கும் குறைவாகவே அன்று கள் கிடைத்திருந்தது. நானும், கரிஷ்மாவும், பாண்டியனும் அதனை பகிர்ந்தே குடிக்கவேண்டும் என்கிற நிலை. என் வாழ்வில் அத்தனை சுவையான பானத்தை நான் குடித்ததில்லை. அவ்வளவு சுவையாக அது இருந்தது. இன்று நாம் குடிக்கும் மென்பானங்களில் காணப்படும் செறிவூட்டப்பட்ட பானங்கள் எல்லாம் பனங்கள்ளிடம் பிச்சை கேட்கவேண்டும். அத்துணை சுவை. இளனீரில் காணப்படும் இனிப்பு மற்றும் சுர்ரென்ற ஒரு தன்மை யாவும் பனங்கள்ளில் உள்ளுறைந்திருந்தன. உள்ளத்தைக் குளிர்விக்கும் தன்மை யாவும் கள்ளினுள் சங்கமித்து இருந்தது. பொதுவாகவே கள் என்றால் புளிக்கும் என்ற சூழலிலிருந்து “இன்கள்” என்ற புரிதல் நோக்கி நான் வந்த நாள் அது. போதையும் கள்ளும் என்பது அரசியல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட ஒரு புனைவு என்பதையும் அன்று புரிந்துகொண்டேன்.

WFD1

இன்று போதை தலைகேறி இருக்கும் ஒரு அரசு மக்களின் அடிமடியில் உண்மையிலேயே கைவைத்துவிட்டது பேரதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அடி மடி எனும்போது கண்டிப்பாக அது பணம் மாத்திரம் அல்ல மகப்பேறு சார்ந்த குறைப்பாட்டையும் குறிப்பது தான் பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்து பெரிதளவில் விளம்பரப்படுத்திய இந்த நாட்டில், இன்று மகப்பேறு மருத்துவமனைகளின் பெருக்கத்தைக் காணும்பொது, உண்பொருள் குண அகராதியில் சொல்லப்படும் சுக்கில விருத்திக்கு “பனங்கள்” எத்துணை முக்கியமானது என தெரியவரும். ஒரு சமூகத்தையே மலடாக்கும் ஆண்மையற்ற அரசுகளினால் நாம் இழக்கப்போவது நமது சந்ததிகள் தான் என்பது ஏன் நமக்குப் புரியவில்லை? மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் வாழ வேண்டி இவ்வித மாபாதகத்தை நாம் செய்ய துணிகிறோமா?

கள் சார்ந்து நான் எதனையும் வெளிப்படையாக எழுதிவிட இயலாது என்ற சூழலிலேயே எனது வாழ்வின் பனை சார்ந்த பயணம் சென்றுகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எனது கிறிஸ்தவ நண்பர் உன்னத சிறகுகள் என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெபக்குமார் அவர்கள், ஐயா நீங்கள் பனை சார்ந்து செயல் படுவதால்,  கள்ளு நல்லசாமியை தொடர்புகொள்ள வேண்டும் என்றார். அப்போது நான் மும்பையில் தங்கியிருந்ததால், எனக்கு அவரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. கடவுளின் அருள் என்றுதான் கூறவேண்டும், திரு நல்லசாமி அவர்களின் இளைய மகள் பிரியதர்சினி நல்லசாமி எனது பனை பயணத்தைக் குறித்து கேள்விப்பட்டு, என்னை முகநூல் வழியாக தொடர்புகொண்டார்கள். அவர்களின் உதவியுடன் ஐயா நல்லசாமி அவர்களை நேரில் சென்று அவரது ஊரிலேயே சந்தித்தேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சந்திப்பு எனது வாழ்வின் முக்கியதருணம். கள் சார்ந்த அரசியல் மற்றும் அவரது புரிதல்கள் இதுவரை தமிழகத்தில் எவர் வயிலிருந்தும் புறப்படாத தர்க்க நேர்த்தி கொண்டவை. மாத்திரம் அல்ல எவரும் மறுக்க இயலா உண்மைகள் கூட.

SaththiyanEsan

குமரி மாவட்ட பனை தொழிலாளி – ஓலை வெட்டுவதற்கு ஆயத்தமாகும்போது

பார்வைக்கு மட்டுமல்ல பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராக விளங்கும் திரு நல்லுசாமி அவர்கள், கள் பனை மரங்களிலிருந்து இறக்கப்படவேண்டும், அதனை அனைவரும் பருகவேண்டும், கள் ஒரு போதைப்பொருளல்ல என்பன போன்ற, கள்ளுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பி வருபவர். பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேசி கள்ளிற்காக தொடர்ந்து போராடி வருபவர். ஒருவேளை தமிழகத்தில் கள் சார்ந்த அனுமதி கிடைத்து ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் ஐயா நல்லசாமி அவர்களின் தொடர் போராட்டம் என்பதை யாரும் மறுக்கவியலாது. சாதிகளைக் கடந்து பொது நோக்கில் அவர் காணும் தரிசனம் என்பது “பேராண்மை” கொண்ட பெருந்தகைகளுக்கே உரியது.

கள்ளுக்கான போராட்டம் எனபது வருகின்ற ஜனவரி, 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பெப்ருவரி 2, வள்ளுவர் கோட்டத்தில் வைத்து மிக பிரம்மாண்டமான அளவில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. திரு நல்லசாமி அவர்கள் கூறுகையில் “வரும், 21ல் நடைபெறும் என எங்கள் இயக்கம் அறிவித்தது, கள் இறக்கும் போராட்டம் அல்ல. 2009லேயே கள் இறக்குவோம் என, அறிவித்து தொடர்ந்து இறக்கி வருகிறோம். அதை வரும், 21ல் விரிவுபடுத்த உள்ளோம். கள் இறக்கியது தொடர்பாக, 48 வழக்குகள் போடப்பட்டது. 44 வழக்கில் விடுதலை பெற்றுள்ளோம். நாங்கள் புதிதாக கள் இறக்குவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. கள் இறக்கும் போது, சட்டரீதியான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டால் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். மீறி கைது செய்தால் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வோம். அரசியல் அமைப்பு சட்டம், உணவு தேடும் உரிமையை மக்களுக்கு அளித்துள்ளது. இதன்படி கள் இறக்குகிறோம். ஜனநாயக முறையில் மக்கள் ஆதரவு திரட்ட, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நடவடிக்கையை மேற்கொள்கிறோம்”. இத்தனைத் தொடர்ச்சியாக கள்ளிற்கான போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது இல்லை.

கள் சார்ந்து தங்களது புரிதலைக் கூறும் அனேகரிடம் நான் பேசியிருக்கிறேன். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மதுவிற்கு எதிரானவர்கள். ஆனால் காந்தி இன்று இருந்திருந்தால், மதுவினை எதிர்த்து சுதேச பானமான கள் இறக்குவதற்காகப் போராடியிருப்பார் என தனது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களை நான் திருவண்ணாமலையில் சென்று சந்தித்தபோது, அரசின் கள் மீதான தடையை குறித்து அதிருப்தி கொண்ட அவர், ” நானும் எனது குழந்தைகளும் இணைந்து எங்கள் உணவு மேஜையில் கள் அருந்தும் நாளிற்காக காத்திருக்கிறேன்” என்றார்.

டாஸ்மாக் வாசலில் குடித்துக்கொண்டிருந்த ஒரு முதியவரைப்பார்த்து கேட்டேன், அய்யா பனங்கள் குடிப்பதை விட்டுவிட்டு இதனைக் குடிக்கிறீர்களே என்று. அதற்கு அவர், பனங்கள் கிடைத்தால் இங்கு யார் வரப்போகிறார்கள் என்றார்.

குமரி மாவட்டத்திலுள்ள எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள், கள்ளுக்கு எப்போது போதை வருகிறது? அது கடைக்கு வரும்போதுதான் போதை ஏற்றப்படுகிறது என்று சொல்லுவார்கள். தனிக்கள் அனைவருக்கும் உரியது என்றும் மாலைபயினியின் சுவைக்கு இணையேதும் இல்லை என்றும் சிலாகிக்கிறார்.

குடியினால் தமிழ் சமூகம் அழிந்துவிட்டது நமக்குத் தெரியும். 60 பனைகள் வரை ஏறி தொழில் செய்த பனையேறிகளால் இன்று 20 பனைகள் கூட ஏற இயலாதபடி தமிழகத்தில் ஓடும் மது ஆறு மக்களை முடக்கியிருக்கிறது. இச்சூழலில், கள் விற்பதற்கான ஒரு போராட்டம் என்பது மிகவும் முக்கிய தேவையாகிறது. குடிகாரர்களை மீட்பதற்கும் கள்ளே நமது கையிலிருக்கும் மிகச்சிறந்த ஆயுதம். என்னைப் பொறுத்த வரையில், ஆந்திராவில் நான் கண்டதுபோல், பனை தொழிலாளிகளோ அல்லது அவர்களது துணைவிகளோ கள் விற்பது தான் சிறந்தது. காலை எட்டுமணிக்குள் கள் குடிப்பதும், எஞ்சியவற்றை குடிகாரர்களுக்காக வைத்திருப்பதும் தான் சரி. கள் விற்கும் கடைகளை எக்காரணம் கொண்டும் எவரும் ஊக்குவிக்கக் கூடாது. அது பனையேறிகளை மீண்டும் அடிமைத்தனத்திற்கு நேராக இட்டுச்சென்றுவிடும். கள் சார்ந்து போராடுகிறவர்கள், கள் ஆலை வேண்டும் என போராடுவார்கள் என்றால், பனையேறிகள் மீண்டும் தங்கள் இழிநிலைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று கள் இறக்க விரும்பும் அனேகர், பனை மரங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள். நமது தோட்டத்தில் கள் இறக்கி விற்கலாமே என்னும் நப்பாசையில் கள் போராட்டத்திற்கு பின்புலமாக நிற்பவர்கள். இவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பனையேறிகள் விற்கும் கள்ளில் கிடைக்கும்சரிபாதி வருமானத்தை பனை மரங்களை வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மாறாக பனையேறிகளுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுத்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய கள் இறக்கிகொள்ள முற்படுவார்கள் என்று சொன்னால் அதுவும் கண்டிக்கத்தக்கது. கள் விடுதலைப் போராட்டம், பனைமரத்தினை தழுவி வாழும் மனிதர்களுக்கான விடுதலை. அதற்கு தடையாக எவரும் நிற்பது ஏற்புடையது அல்ல.

கள் பெருமளவில் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில், கிளி கட்டு என்ற ஒரு முறைமை உண்டு. மன்னர் காலத்தில் பொற்கிழி வழங்குவார்களே அது போலவே மருத்துவகுணம் நிறைந்த மூலிகைகள் வேர்கள் மற்றும் பட்டைகளை ஒன்றாக்கி ஒரு துணியில் கட்டி மருத்துவர் கொடுத்தனுப்புவார். இவைகளை பனையேறியிடம் கொண்டு கொடுக்கவேண்டும். அவர் அதனை சுண்ணாம்பு இடாத கலயத்தில் இருக்கும் பாளையில் கட்டிவிடுவார். பாளையில் இருந்து சொட்டும் பதனீர் இந்த கிழியில் விழுந்து ஊறி பின்னர் பானையில் சேகரிக்கப்படும். மிக குறைந்த அளவு பதனீர் ஊறும் பனைகளிலேயே இதனைக் கட்டுவார்கள். சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரைக்கும் கிடைக்கும் அந்த கள்ளினை தவறாது குடித்துவந்தால் நோய்கள் அண்டாது. குறிப்பாக வாத நோய் கண்டவர்கள் கள் குடிக்க இயலாது, அப்படிப்பட்டவர்கள் எல்லாம், நல்லமிளகு திப்பிலி போன்ற பொருட்களை இணைத்து கிளி கட்டுவது வழக்கம்.

கள் இறக்குவதற்கு தடை என்பதை மலிவான அரசியலாகவே நாம் பார்க்க இயலும். அரசு மதுபானத்தில் வரும் வருமானத்திற்கு கட்டுண்டு கிடக்கிறது. ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கிறது. அதற்கு ஒத்து ஊதுகின்ற குமரி நம்பி ஆகட்டும், குமரி அனந்தன் ஆகட்டும் பனை சார்ந்த வாழ்வியலை நசுக்கப் புறப்பட்டிருக்கும் கீழ் மக்களே. இவர்களின் “போதை” சார்ந்த வாதங்கள் புளித்துப்போனவை. குறிப்பாக மனிதனின் உணவு தேவையில் 10% பனை உணவிலிருந்து கிடைக்கும் என்று சொல்லுகின்ற குமரி நம்பி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தில் பனை தொளிலாளர்களுக்கு 10% கொடுக்கிறார்களா என எண்ணத்தலைப்படவில்லை. மருத்துவ செலவுகளில் 40 சதவிகிதம் பனை உணவுகளால் மிச்சமாகிறது என சொல்லுகிறவர், தாலியறுத்து நிற்கும் பெண்களின் வாழ்வில் தாலி பாக்கியம் அளிக்கும் கள்ளினைக் குறித்து பேசாதது அறிந்தே செய்யும் இருட்டடிப்பு.

பாளையைச் சீவி கள் எடுத்துவிட்டால், நுங்கு, பதனீர், பனம் பழம், கருப்பட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு போன்றவைகள் கிடைக்காது என்பவர் சொல்லாமல் விட்ட ஒரு உண்மை என்னவென்றால், தமிழகத்தில் இன்று 5 சதவிகிதம் பனை மரங்களே ஏறப்படுகின்றன. அப்படியென்றால் 95% பனை மரங்கள் இன்று ஏறுவோர் இன்றி இருக்கின்றன என்கிற உண்மை பொட்டில் அடித்தார்போல் நம் கண்முன்னால் இருக்கின்றது. சர்வதேச பனை பொருளாதார மாநாடு நடத்துகிறவர்கள், இதுவரை எத்தனை சதவிகித பனை மரங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர் என சொல்லுவது அவர்கள் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்.

ஆகவே கள்ளிற்கான தடை உடைபடுகையில் என்ன நிகழும் என எண்ணிப்பார்ப்பது நலம். அவனவன் தன் தன் நிலத்தில் இருக்கும் மரத்திலிருந்து கள்ளினை இறக்கி குடிப்பார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் சீரடைவதை உணர்வார்கள். அரசு துவங்கியிருக்கும் டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றாக வருமானமின்றி மூடப்படும். கார்பரேட்டுக்களை நம்பி அல்ல நமது அரசுகள், மக்களை நம்பி தான் அரசு என்கிற கருதுகோள் மீண்டும் நிலைநிறுத்தபடும். தேவையற்ற பல ஆணிகளை நாம் பிடுங்கி வீசலாம். பனை பொருளாதாரம் என கூவி சொல்லும் சுதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, மற்றும் காந்தியின் பெயரை வீணிலே வழங்கும் குமரி அனந்தன் ஆகியோர்  கள் இறக்கும் 10 லட்சம் இளைஞர்களின் வயிற்றில் அடித்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் தாலியை அறுத்துவிட்டு, பல்வேறு எதிர்கால குழந்தைகளின் வாழ்வை நாசமாக்கியபடி இருக்கும், டாஸ்மாக் நடத்தும் அரசின் சார்பாக நிற்பது அருவருக்கத்தக்க நிலைப்பாடு.

தமிழகத்தில் 2000 வருடங்களுக்கும் மேலாய் கள் இறக்குவதும் பனை சார்ந்த வாழ்வியலும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. கள்ளைக்குறித்து மிக அதிகமாக பேசிய சங்க இலக்கியம் தான் “பவழ கூர்வாய் செங்கால் நாராய்” என பனங்கிழங்கிற்கு நிகராக செங்கால் நாரையின் கூர்வாய் பகுதியினை ஒப்புமைப்படுத்தியிருக்கிறது. பனை சார்ந்த தொழிலாளிகளுக்கு மீட்புஅமையக்கூடாது என்று களமிறக்கப்பட்டவர்கள் தானோ குமரி அனந்தனும், குமரி நம்பியும் என்ற சந்தேகம் இதனால் வலுப்பெறுகிறது. இவர்களை இயக்குபவர்களை கண்டு புறம்தள்ளாவிடில் பனை போராட்டம் வெற்றிபெறாது.

எனது ஆதரவினை கள் இயக்கதிற்கும், கள் இறக்க போராடும் மக்களுக்கும், பல்லாயிரம் பனையேறிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். இப்போராட்டம் தமிழக அளவில் எட்டும் ஒரு வெற்றியாக மட்டுமல்ல, சர்வதேச அளவில் கள்ளினை மென் பானமாக முன்னிறுத்தும் ஒரு சிறப்பு கவனயீர்ப்பு போராட்டமாக அமைய வாழ்த்துகிறேன்.

கள்ளுக்கு கடையும் வேண்டாம்!

கள்ளுக்குத் தடையும் வேண்டாம்!

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

 

 

பனை நகரம் 17

ஜனவரி 16, 2020

 

பனம்பழ நகரம்

இந்த முறை நான் மும்பை வந்த நாளிலிருந்து, பனம் பழங்களை தேடி எடுத்து சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக எனது பிள்ளைகள் பனம்பழங்களை விரும்பி உண்பவர்கள். உலகத்தின் எந்த சுவையான உணவையும் குழந்தைகள் விருப்புடன் உண்பதைப் போலவே, எனது பிள்ளைகள் இருவரும் பனம்பழத்தை  வெகு விருப்பத்துடன் உண்பார்கள். நான் எனது குழந்தைகளை ரசிக்கும் ஒரு உன்னத தருணம் அது. குழந்தைகள்தான் என்றில்லை பனம்பழங்களை விரும்பி உண்ணும் அனைவரையும் பார்க்கும்போது ஏற்படும் பேருவகை அது. எளிதில் காணகிடைக்காத ஓர் அரிய நிகழ்வல்லவா? பனம் பழங்கள் பெரும்பாலும் இன்று விரும்பப்படுவது இல்லை. தமிழகத்தில் ஒரு தலைமுறை பனம்பழங்களை முற்றிலும் அழுக விட்டுவிட்டது. அதனை சுவைக்கையில் கைகள் முழுவதும் பனம்பழமாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல, முகமும் பனம்பழத்தின் இன்கனியால் தீற்றப்பட்டுவிடும். இப்படியிருக்க மாய்ந்து மாய்ந்து இதை தின்கிறார்களே என்கிற எண்ணம் பலர் வாயிலாக என் காதுகளை வந்தடைந்ததுண்டு. ஆனால் பனம் பழங்களின் சுவையும் மணமும்  அத்தனை எளிதில் நம்மையும் நமது தலைமுறைகளையும் விடாது என்பது தான் உண்மை.

DSC00654

பனம்பழம் சீவும் முறை

பனம் பழம் குறித்து மும்பையில் எவருக்கும் தெரியாது. இக்கூற்றினை எழுதிய பின்பு நான் விழித்துக்கொண்டேன். ஒருவேளை நான் சற்றே மிகையாக கூறுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்தது. ஆம், பனம் பழம் குறித்த புரிதல் கொண்ட மக்களை நான் மும்பையில் இதுவரை சந்திக்கவில்லை என மாற்றி சொல்லுவதே சரியாயிருக்கும். மும்பையின் உண்மையான பனை வரலாறு தெரியாமல் அதனை உற்று நோக்கிக்கிகொண்டிருக்கும் ஒருவனாகவே என்னை எண்ணிக்கொள்ளுகிறேன். இங்கு பனம் பழங்களின் காலம் என்பது ஏப்ரல் முதல்  முதல் ஜூன் – ஜூலை வரை தான். இதற்கு இணையான ஒரு பருவத்தை நான் குமரி மாவட்டத்தில் தான் பார்த்திருக்கிறேன். சற்றேரக்குறைய இதே பருவகாலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பனம் பழங்கள் கிடைக்கும் என்றாலும், அங்கே டிசம்பர் முதலே  ஆங்காங்கே கிடைக்கும். மும்பையிலும் ஆங்காங்கே பனம் பழங்கள் பழுத்து நிற்பதை டிசம்பர் மாதம் முதல் பார்த்துவருகிறேன்.

பனம் பழங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எனது பெருவிளை கிராமத்திலிருந்து துவங்குகிறது. எனது அத்தை பனம் பழங்களைப் பொறுக்கும் நுட்பத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார்கள். விடுமுறை நாட்களில் நாங்கள் அத்தை வீட்டில் தான் தங்கியிருப்போம். அத்தையின் வீட்டின் பின்புறம் இருந்த விளையில் பனை மரங்கள் நின்றன. அதனை ஒரு குட்டி பனங்காடு எனலாம். அதிகாலை வேளையில் பனம் பழம் காற்றில் உதிரும். விழும்போது “தொம்” என்று சத்தம் கேட்கும். அந்த சத்தம் ஒரு அழைப்பு . நான் உங்கள் உணவு தட்டிற்காக வந்து நிற்கிறேன் என்கிற அறைகூவல் அது. அத்தை எழுப்பி விடுவார்கள். வெகு உற்சாகத்துடன் முயல் போல தெறித்து ஓடி போய் எடுத்து வருவோம். சில நேரங்களில் நான் செல்லும்போது வேறு திசைகளிலிருந்தும் சிறுவர்கள் ஓடி வருவார்கள். மிகப்பெரிய பழங்களாகவே இருக்கும். பனம்பழம் கிடைத்தால் தூக்க இயலாதபடி தூக்கி வருவேன். அத்தையின் சூழலைப் பொறுத்து சுட்டோ அவித்தோ கொடுப்பார்கள். 40 வருடங்களுக்கு முன்பு இருந்த உலகம் எப்படி தலைகீழாக மாறிவிட்டது என எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.

கடந்த வருடம் போவாஸ் என்கிற பனைத் தொழிலாளியுடன் இணைந்து குமரி மாவட்டத்தில் இருக்கும் மிடாலக்காடு என்கிற பகுதியில் இருக்கும் ஒரு கத்தோலிக்க திருச்சபையில் சென்று பனம் பழங்களை அவித்துக்கொடுத்தோம். பாரம்பரிய சுவையினை மீட்டெடுக்கும்படியான அந்த நிகழ்வு மிகப்பெரும் வெற்றி பெற்றது. சகாய பெலிக்ஸ் என்கிற இளம் துறவி அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார். நானும் போவாஸ் பனையேறியுமாக இணைந்து பனம் பழங்களை சேகரித்தோம். அதிகமாக கிடைக்காவிடினும் இரண்டு மூன்று நாட்களாக சுமார் 20 பழங்களை சேகரித்தோம். அவைகளை எடுத்து எனது வீட்டு குளிசாதனப்பெட்டியும், மற்றும் ஒரு சில நண்பர்களின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இட்டு வைத்தோம். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், பனம் பழங்களை போவாஸ் பனையேறி தனது அறிவாளால் தோலோடு இருக்கும்படியாக  சீவியெடுத்தார். சீவியெடுத்தபின் கொட்டைகள் அனைத்தும் பார்க்க திருப்பதிக்கு போய்வந்த தலைகளைப்போல் காட்சியளித்தன. சிறிது பனம்பழங்களை மூடியிருக்கும் “நெட்டி”யினை எடுத்து பானையின் அடிப்பாகத்தில் அடுக்கிவைத்தார். அதற்கு மேல் சீவியெடுத்த பனம்பழ தூன்டங்களை  அடுக்கினார். அனைத்திற்கும் மேலே கொஞ்சம் பனங் கருப்பட்டியினை உடைத்துப்போட்டார்.பனம் பழங்களை அன்று இரவே வேகவைத்தோம். அடுப்பில் தீ மூட்டி பனம் பழம் வேகும்Pஒது “பனம்பழம் தின்ன பண்ணி செவியறுத்தாலும் நிக்காது” கேட்டியளா என என்னைப்பார்த்து சிரித்தார். பனம்பழங்களில் இருக்கும் “காறல்” தன்மை பொங்கி வழிந்தோடிவிடவேண்டும் எனக் குறிப்பிட்டார். பொங்களின் பின்னணியத்தில் பனை ஊடுருவி இருக்க வேறு காரணம் வ் ஏண்டுமா? இவ்வித நுட்பங்களை பனையேறிகளிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள முடியும்.

DSC09462

போவாஸ் பனம்பழங்களை அரிவாள் கொண்டு அறுக்கிறார்

மறுநாள் ஆலய ஆராதனைக்கு பின்பு, அருட்தந்தை சகாய பெலிக்ஸ் அவர்கள் மக்களை ஆலயத்தின் அருகிலுள்ள மைதானத்திற்கு அழைத்து வந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முந்தைய இரவு வேகவைத்த பனம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொடுத்தனர். பெண்களும் சிறுவர்களும் போட்டிபோட்டபடி வந்க்டு சுவைத்துப்பார்த்தனர். பானையில் இருந்த எஞ்சிய இன்னீரை குடிக்க அப்படி ஒரு போட்டி நடந்தது. நெட்டியில் வாரிக் குடிக்கும் அந்த காட்சியின் இன்பம் நான் அரிதாக கடந்து வந்த ஒரு உணவு திருவிழா காட்சி.

பனம் பழத்தின் மீதான ஈர்ப்பின் முதல் விசை அதன் மணம் தான். விழுந்த உடனேயே நாம் எடுக்கும் பழங்கள் மிகவும் விரும்பத்தக்க வாசனை கொண்டவை. கிறங்கடிக்கும் மணம் எனலாம். எப்படி பலாப்பழத்தின் வாசனையை அடக்கிவைக்க இயலாதோ அப்படியே சுட்ட பனம்பழத்தின் வாசனையையும் மறைக்க இயலாது. ஆதி மனிதர்கள் விலங்கின் தன்மைகள் பெருமளவில் கொண்டிருக்கையில், பனம் பழங்களின் வாசனை எப்படி அவர்களை சுண்டி இழுத்திருக்கும் என சொல்லத்தேவையில்லை. அதன் மென் மணம் பிறந்த குழந்தையை எப்படி கரத்தில் எடுத்து முத்தமிடத் தூண்டுமோ அத்தகையது. பழத்தினை அவித்தோ அல்லது சுட்டோ சாப்பிட்டால், காதலாகி கசிந்துருகி காதலியை முத்தமிடும் தருணத்திற்கு ஒப்பானது. அணைத்து, முகர்ந்து, கடித்து, சுவைத்து, இன்புற்று பித்தேறிய நிலைக்கு கொண்டு செல்லும் சுவை அதனுள் உறைத்திருக்கும்.

DSC09528

நெட்டியில் பனம்பழம் அவித்த சாறு குடிக்கும் சகோதரி

இந்த வாசனைக்கு இருக்கும் தனித்தன்மையினை உணர்ந்தே அத்தனை விலங்குகளும் இதனை போட்டி போட்டு சாப்பிடும். சிலநேரங்களில் வீட்டினருகில் இருக்கும் நாய்களும், ஊருக்குள் வரும் நரிகளும் பனம்பழங்களை விரும்பி உண்ணும். மாடுகளுக்கு பனம்பழங்களை எடுத்துப்போடுவார்கள். பன்றிகள் இதனைத் தேடி உண்ணும். காட்டு விலங்குகள் கூட பனம்பழங்களை விரும்பி உண்ணும் என்பதனை நான் பின்னர் தான் அறிந்துகொண்டேன். மான் பனம்பழங்களை சாப்பிடும் என புகைப்படங்களை எனது நண்பர் விஸ்வா வேதா என்னிடம் ஒருமுறைக் கூறினார். அப்படியே குமரி மாவட்டத்தில் காட்டிலகா அதிகாரியாயிருந்த ஒருவர் கரடிகள் பனம் பழங்களின் வாசனைக்கு அடிபணிந்து காட்டை விட்டு மலையடிவாரங்களில் சுற்றித்திரியும் என்றார். மிளா சப்பிடும் என்பதனையும் அவர் கூறியே கேள்விப்பட்டேன். குரங்குகள் கண்டிப்பாக இவைகளைச் சாப்பிடும். இலங்கையில் பனம் பழங்களை யானை விரும்பி உண்ணும் என நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். பனை மரத்தை உலுப்பி தனக்கான சுவையான பனம்பழங்களை தேடும் யானைகள் ஆப்பிரிக்க கண்டங்களில் இருக்கிறதை காணொளி வாயிலாக தெரிந்து கொண்டேன்.

பனம் பழ வாசனை குறித்து நாம் எவ்வளவு தான் விதந்தோதினாலும், மெய்யாகவே பனம்பழத்தின் வாசனை  குறித்த ஒரு ஒவ்வாமை மக்களுக்கு ஒரு கட்டத்தில் ஏற்பட்டுவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற கூற்று பனம்பழத்திற்கும் பொருந்தும். பனம் பழம் விழுந்து  சில மணி நேரங்களுக்குள் அதனுள் ஒரு வண்டு நுழைந்துவிடும். வண்டு ஏறிய பழங்களை சாப்பிடக்கூடாது. அப்படியான பழங்களில் வாசனை சற்றே தூக்கலாக அடிக்கும். அது ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே பனம் பழங்களை சாப்பிடுகிறவர்கள் கூட வாசனை மாறுகையில் குமட்டுவது இயல்பு. பனம் பழமும் “அந்த பயம் இருக்கட்டும்” என நம்மைப் பார்க்காமல் கூறிவிட்டு, கிழங்கிற்காக தன்னை அற்பணித்துகொள்ளுகிறது.

DSC09509

அருட்பணியாளர் சகாய பெலிக்ஸ் – பனம்பழப் பானை அருகில் உள்ளது

இன்று பனை சார்ந்த முன்னெடுப்புகளை வெறுப்பவர்கள் பெரும்பாலும் பனம் பழம் சாப்பிட்டால் பித்தம் வந்துவிடும் என்பதனையே கூறி, பனம் பழம் சாப்பிடுகிறவர்களை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் கீழ்தரமான இந்த பரப்புரைக்கு விடையினை நமது முன்னோர்களே கூறிச்சென்றிருக்கிறார்கள். “பசிக்கு பனம்பழம் சாப்பிட்டால் பித்தம் போறவழியில் போகும்” என்று கூறியிருக்கிறார்கள். இன்று பனை உணவுகள் திரும்பி வருகின்ற சூழலில் தமிழகத்தில் ஏற்படுகின்ற பதட்டத்தை சற்றே கூர்ந்து நோக்குகிறேன். உள்ளூர் பழத்தையே நாம் இவ்விதம் இழந்தோமென்று சொன்னால், எவருடைய வணிகத்திற்கு நாம் ஏவல் செய்துகொண்டிருக்கிறோம்?

பனை மரங்கள் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளின் உணவு. இந்த உணவை தாங்கிப்பிடிப்பது நமது கடமை. ஒருவேளை உணவுக்காக ஏங்கும் பல்வேறு குடும்பங்களின் பசியைப் போக்க வல்லது பனம்பழம். உலகின் 99% உட்டசத்து குறைவு மிக்க மக்கள், மூன்றாம் உலக நாடுகளிலேயே வாழ்கிறார்கள். இயற்கை அளிக்கும் இவ்வைகையான உணவுகள் பசியினையும் ஊட்டச்சத்தினையும் ஒருங்கே வழங்க வல்லன. இன்று நாம் சந்திக்கும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல் முக்கிய காரணம் என்கிறார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகளை நாம் உண்ணாது இருப்பது நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பனம் பழம் தோல் நோய்களுக்கு, குடல் சுத்தம் செய்வதற்கு, கண் பார்வை மேம்படுதல் என பல வகைகளில் பயனளிக்கும் அருமருந்து.

குமரி மாவட்டத்தில் மற்ற பகுதிகளை விட இயற்கையாகவே கதிர் வீச்சு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. குமரி மாவட்டத்தின் குளச்சல் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகள் மிக அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட கடற்கரைப்பகுதிகள். இங்கு வாழும் மீனவர்கள் கரையில் வாழும் மக்களிடம் மீனைக் கொடுத்து பனம்பழங்களை வாங்கி சாப்பிட்ட ஒரு காலம் உண்டு. அதாவது பனம் பழம் கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைக்கும் என்கிற ஒரு புரிதலாக இருந்திருக்கும். குமரி மாவட்டத்தில் மீன் அனுதினமும் உணவாக இருந்ததற்கு இந்த பண்டமாற்று முறை வாய்ப்பளித்திருக்கிறது.

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது பெருவிளைக் கிராமத்திற்குள் நுழைந்து பனம் பழங்களைத் தேடுவேன். ஒருபோதும் பனம் பழம் கிடைக்காமல் நான் வீடு திரும்பியது இல்லை. எப்படியாவது பனம் பழம் எனக்கு கிடைத்துவிடும். எனது சைக்கிளில் அதனை வைத்து வீட்டிற்கு எடுத்து வருவேன். எனக்கு பனம் பழம் தான் அன்றைய ஷாம்பூ. தலைக்கு பனம் பழத்தை இட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, முடி மிருதுவாகவும் பளபளப்பாக மாறிவிடும். பனம் பழம் இட்ட தலையிலிருந்து வரும் வாசனை சற்றே ஆரஞ்சு பழத்தின் வாசனையினை நினைவுறுத்தும்.

இந்த இணைப்பு தான் மும்பைக்கும் குமரி மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பினை நான் ஆழ்ந்து எண்ண தலைப்படக் காரணம். குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பனம் பழங்கள் பல்வேறு கால நிலைகளில் கிடைத்துக்கொண்டிருப்பதற்கு, விதை தெரிவு ஒரு காரணமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். வருடத்தின் பெரும்பகுதி பனம் பழங்கள் கிடைக்கும்படியான ஒரு அமைப்பை இங்கு வாழ்ந்த பனையேறிகள் உருவாக்கியிருக்கலாம். அதிகமாக பூக்கும் பருவங்கள் அதிக பதனீரையும் அதிக உற்பத்தியையும் தர வல்லது என பனையோடு பயணித்தவர்கள் புரிந்திருப்பார்கள். அதே எண்ணத்தை மராட்டிய மண்ணில் இருக்கும் மும்பைக்கும் பொறுத்திப்பார்த்தால் அதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?

பனை சார்ந்த சமூகங்கள் இங்கு இருந்திருக்கின்றன. கடல் சார்ந்த சமூகமும் இங்கு உண்டு, அப்படியே பனை சார்ந்து வாழும் பழங்குடியினரும் இங்கு வாழ்கிறார்கள். இதையும் தாண்டி மேலே குறிப்பிடும்படியாக ஒன்று உண்டு. மராட்டியர்கள் வாழ்வில் ஒரு காலகட்டம் போர் இன்றி வேறில்லை என வாழ்ந்த காலகட்டம். எல்லா சமூகமும்  கள்ளினை போர் நேரத்தில் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றன. இன்றும் மஹாராஷ்டிராவில், கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. மும்பையை அடுத்து இருக்கும் பால்கர் பகுதிகளில் பனை மரங்களும் அதனை சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

கள்ளும் போரும் பிரிக்கவியலா ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. அப்படியே கள்ளினை வடித்து சாராயமாக்கும் தொழில் நுட்பம் இன்றும் மகராஷ்டிரா பகுதி பழங்குடியினர் வாழ்வில் இருக்கிறது. ஆகவே பனை சார்ந்த புரிதல் கொண்டே, பல்வேறு கால சூழ்நிலையிலும் பனை தனது பயனைக் கொடுக்கவேண்டி மக்கள் “தெரிந்து” பயிரிட்ட மரங்களே பருவம் தப்பி வந்த பனைகள் என நான் எண்ணுகிறேன். பல்வேறு தட்பவெட்ப சூழல்களும், தவரவியல் சார்ந்த காரணங்களும் இதற்குப்பின் இருக்குமென்றாலும், எனது தரப்பு, மனிதர்கள் பனை மரத்தினை ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அப்படியே, பருவத்திற்கு முன்பும் பின்பும் பலன்  கிடைக்கும் பனை மரங்களையும் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் திடமாக நம்புகிறேன்.

பனம் பழம் சார்ந்து பேசிக்கொண்டு வருகையில் கள்ளிற்கான எண்ண ஓட்டம் எப்படி உள்நுழைந்தது? பனை மரமே பருவம் சார்ந்து நோக்கப்படும் ஒரு மரம் தான். போர்ச்சூழலில் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் மஹாராஷ்டிரா பஞ்சங்களைக் கடந்து வந்த பகுதி. ஆகவே, இங்கே பனம்பழம் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கவியலாது. அது எப்படி இவர்கள் வாழ்வில் இருந்தது என நாம் கண்டடையும் முன்பு, பனம் பழம் தொடர்ச்சியாக 6 – 8 மாதங்கள் வரைக் கிடைக்கும் என்கிற தகவல் பதிவு செய்யப்படவேண்டும் என்பதாலேயே இதனை இங்கு முன்வைக்கிறேன். இந்த சிறு தகவலை மறந்து நாம் மும்பையின் பனை வாழ்வை எழுதிவிட முடியாது ஏனென்றால், இதுவே தாவரவியல் சார்ந்தும், நிலவியல் சார்ந்தும், சூழியல் சார்ந்தும்,  இங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றிலும் முக்கிய தகவலக்ளை உள்ளடக்கி இருக்கிறது. பனம் பழம் மும்பையின் சுவையினை கட்டமைத்த பழம் தான். இன்று அது வெளியே தெரியாவிட்டாலும், எங்கோ புதைந்துகிடக்கும் இந்த உண்மை முதற்பீலியாக வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை மர உலக்கை

ஜனவரி 8, 2020

 

பனை மரத் தடியில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது. இந்த கேள்வி முன்னமே எனக்கு இருந்தபடியால் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்துப் பார்த்தேன் அது கருநிறம் கொண்டு வேறு வகையில் காணப்பட்டது. பனை மரத்தில் காணப்படும் தும்புகளோ அல்லது சிறா போன்ற ஏதும் அதில் காணப்படவில்லை. ஏமாற்றத்துடன் அதனை வைத்துவிட்டேன். இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பின்பும், பனை மரத்தில் உலக்கை இருக்குமா என்கிற கேள்வி என்னை விட்டபாடில்லை.

பனை மரத்தில் உலக்கை செய்ய மாட்டார்கள் என ஒரு புறம் எண்ணம் சென்றது. ஏனென்றால், பனை மரத்தில் இருக்கும் சிலாம்புகள் கைகளை குத்திவிட வாய்ப்பு உண்டு. சற்றே பிசிர் அடித்தாலும், பிற்பாடு அது பயனற்றதாக போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு புறம் பனை மரத்தில் உலக்கைகள் இருக்காது என எண்ணி விட்டுவிட்டேன். மறு புறம், பனை சார்ந்த பல்வேறு பொருட்களை நான் காணும்தோறும், பனை மரத்தடியில் கண்டிப்பாக உலக்கை இருந்திருக்கலாமே என்கிற எண்ணம் என்னை வந்து அடைந்தபடியே இருந்தன.

ஒன்று, ஒரு சமூகம் தனது சூழியலை முன்வைத்து ஒரு வாழ்வியலை முன்னெடுக்கும்போது அங்கு பெருவாரியாக கிடைக்கும் பொருட்களிலிருந்தே தமக்கு தேவையானதை எடுத்துக்கொள்வர் என்கிற ஒரு புரிதல் எனக்கு இருந்தது.  பனை மரம் பல்வேறு வகைகளில் இங்கு வாழ்ந்த  சமூகத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கையில், கண்டிப்பாக, பனை மரத்தில் உலக்கை இருந்திருக்கக்கூடும் என்கிற எனது எண்ணம் வலுப்பெற்றது. சிறு வயதில், அப்பாவுடைய ரூலர் ஒன்று பனை மரத்தடியில் செய்யப்பட்டு அவரது மேஜையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் அழகே மீண்டும் மீண்டும் என்னைப் பார்க்க தூண்டியிருக்கிறது. என்னால் தூக்க இயலாத அளவிற்கு அது வலிமையானது. எனக்கு அதில் கோடு வ்ரைய வராது. உருளையான அந்த கட்டையை வைத்து அப்பா எப்படி கோடு வரைகிறார்கள் என பார்த்துக்கொண்டே இருப்பேன்.

எனது அப்பாவின் தந்தை ஒரு தச்சு தொழிலாளி. எனது பாட்டி வீட்டு ஜன்னல் மிகவும் சிறியது. அவர்களது வீட்டு ஜன்னலில் காணப்படும் கம்பிகள் இரும்பால் செய்யப்பட்டவைகள் அல்ல என்பதை ஒருநாள் கண்டு பிடித்தேன். எனக்கு அப்போதைய கேள்வியெல்லாம், எப்படி பனை மரத்தினை உள் நுழைத்தார்கள் என்பதே. அனால் பனை மரத்தினைக் கடைந்து இவ்விதம் அவர்கள் செய்திருப்பது அதனை விட மிகவும் ஆச்சரியமான ஒரு உண்மைதான்.

Ural ulakkai

மரத்தடியில் உரல் மற்றும் உலக்கை – ஆப்பிரிக்கா

வெகு காலத்திற்குப் பின்பு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தற்போதைய முதல்வர் அவர்களின் வீட்டிற்குச் செல்லும் ஒரு வாய்ப்பு அமைந்தது. வருடம்தோறும் அவர்களது வீட்டிற்கு நாங்கள் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாட செல்லுவது வளக்கம். புதிதாக கட்டப்படிருந்த அவர்கள் வீட்டு கதவு பனை மரத்தடியில் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். பனை மரத்தடியினை நேராகவும் சீவி பொருட்களைச் செய்ய இயலும் எனபதை அப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன்.

பின்பு, பெங்களுர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் நான் படிக்கும்போது, பாறச்சாலையை சார்ந்த சந்தோஷ் ஜார்ஜ் என்பவர் எனக்கு இரு வருடம் சீனியராக படித்துக்கொண்டிருந்தார். எனது பனை சார்ந்த விருப்புகளை அறிந்தவர் ஆகையால், அவரது வீட்டிற்கு பனை மரத்தால் தான் மாடிப்படி கடைசல்களைப் போட்டதாகவும், அதனைச் செய்கையில் எத்தனை கடைசல்காரர்களிடம் “பிணக்கம்” ஏற்பட்டதாகவும் கூறினார்கள். எதற்காக பிணக்குகள் ஏற்பட்டன என வினவியபோது, மிகவும் உறுதியான பனை மரங்களில் பணி செய்கையில், உளி உடைந்துபோவதால், பலரும், இதனை விரும்புவதில்லை என்றார். எப்படியிருந்தாலும், கவனிக்க வேண்டியவைகள் என்னவென்றால், பனை மரத்தினைக் கொண்டு அழகாக கடைசல்கள் செய்யலாம் என்பது தான். அதனைத் தொடர்ந்து எனக்கும் வீட்டில் கண்டிப்பாக பனை மர கடைசல் போட்டால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது.

African Pounding

ஒரே உரலில் இருவர் இடிக்கும் காட்சி – ஆப்பிரிக்கா

கல்லூரி காலத்திற்குப் பின்பு, நான் குமரி மாவட்டத்திலுள்ள பனைத் தொளிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியபோது, நாலுமுக்கு வீடுகள் சிலவற்றை தேடிப்போய் பார்த்தேன். அவைகளில் காணப்படும் அழகுகளுக்காகவும், குமரி மாவட்டத்தில் அவ்விதமான வீடுகள் அனேகம் உள்ளதாலும் இந்த தேடுதல் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பவைகளாக இருந்தன. இவ்வகை வீடுகளில், நாடார்களின் வீடுகள் என்றால், பெரும்பாலும் பனை மரத்தடியில் தான் அதன் கூரைகளைத் தாங்கும் கழிகோல்கள் இருக்கும். நாயர் அல்லது நம்பூதரிகளின் வீடு என்றால் பிலா, அயினி போன்ற மரங்களாக இருக்கும். கூரையின் சரிவு முடியும் இடத்தில் பல்வேறு வளைவுகளை ஒன்றுபோல வளைத்து செய்து முடித்திருப்பார்கள். ஓரு சில இடங்களில் இந்த கழிகோல்கள் முடியும் இடங்களில் ஒரு துவாரம் இடப்பட்டிருக்கும். நீளமான பனை மரத்தடியினை சிறு கோல் என உருட்டி அதனுள் நுழைத்திருப்பார்கள். தச்சு வேலையின் உச்சம் என சொல்லத்தகுதியான ஒரு அமைப்பு இது. சுமார் 20 அடி நீலத்திற்கு எப்படி மரத்தினை உருட்டியிருப்பார்கள்? அதனை 20 கம்புகளுக்குள் நுழைக்கவேண்டுமென்றால் எத்துணை நேர்த்தியாக துளைகள் இடப்பட்டிருக்கவேண்டும்?

இரண்டாண்டுகளுக்கு முன்பு, நான் குமரி மாவட்டத்தை சுற்றிகொன்ண்டிருக்கும்போது அங்கே ஒரு தச்சு தொழிலாளியைப்பார்த்தேன். தனது தச்சுக்கூடத்தில் பனை மரத்தினை மட்டுமே கொண்டு செய்த ஒரு கட்டிலை விற்பனைக்கு வைத்திருந்தார். பல நாட்களாக அது விற்பனை செய்யப்படாமலே இருந்தது. அவர் பனை நார்க் கட்ல்களையும் நான் செய்வேன் எனக் கூறினார். ஒரு முறை அவர் பனை மரத் தடியினை எடுத்து வாச்சி கொண்டு உருட்டுவதைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடாலி தடிமனில், மண்வெட்டியைப்போல அமைக்கப்பட்ட அந்த கருவி மறைந்து வரும் ஒரு அரிய கருவியாகும்.  கூர்மையான மற்றும் எடைமிக்க ஆயுதங்கலே பனை மரத்தை பாகப்படுத்த பயன்படுத்தும் பாரம்பரிய கருவிகள்.

புத்தளம் திருச்சபையில் பனை மரத்தாலான தூண்கள் இருக்கின்றன என்கிற செய்தி சுமார் 20 வருடங்களுக்கு முன்பே என்னை வந்து எட்டியிருந்தது. பல முறை அந்த பகுதிக்கு நான் சென்றிருந்தாலும் திருச்சபைக்குள் சென்று அதன் தூண்களைப் பார்த்ததில்லை. 2018ஆம் அண்டு தான் நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் இணைந்து சென்றோம். அங்கே நான் பார்த்த தூண்கள் மிக பிரம்மாண்டமானவைகள். சுமார் 20 முதல் 25 அடி உயர பனை மர தூண்கள் 8 எதிரெதிராக நின்றன. அத்தூண்களை தொட்டுப்பார்த்தால் அவைகள் ஏதோ வார்பித்து எடுத்தவைகள் போல காணப்பட்டன. இத்துணை அழகிய ஓர் வடிவம் சாத்தியமா என்கிற கேள்வி அனேகருக்கு எழலாம். ஆனால் அவைகள் சாத்தியமே என்பதனை பறைசாற்றும் விதமாக 200 ஆண்டுகள் தாண்டி இத்தூண்கள் முறுக்கியபடி நிற்கின்றன.

PR

தமிழ் பெண்கள் உலக்கை பிடிக்கும் காட்சி

2017 – 2019 வரையில் நான் தமிழகத்தில் தங்கியிருந்தபோது நுட்பமான பல பனை பொருட்களை நேரில் கண்டிருக்கிறேன். குறிப்பாக நாகர்கோவிலைச் சார்ந்த பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் தனது வீட்டில் ஒரு அழகிய ஆயுதம் ஒன்றை வைத்திருந்தார்கள். கோடாரி போன்ற வடிவில் காணப்படும் அந்த பழங்கால ஆயுதம் பனை மர கைப்பிடி போடப்பட்டிருந்தது. அவ்விதமாகவே பூக்கடை என்ற பகுதியில் பனை மரங்களை வெட்டி சீர் செய்துகொண்டிருக்கும் தொழிலாளி பயன்படுத்தும் வாச்சி என்ற கருவியின் பிடியும் பனை மரத்தில் இடப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இவைகள் எப்படி நுட்பமாக அமைக்கப்படுகின்றன என்கிற கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை எனினும், அவைகள் மிகுந்த அனுபவத்தின் வாயிலாக பெறப்பட்ட ஒரு அறிவு என்கிற உறுதி எனக்குள் மேலெழுந்து வந்தன.

மார்த்தாண்டத்தில் நான் மிகவும் நெருங்கிப் பழகிய ஒரு ஆசாரி உண்டு. அவரிடம் பனை சார்ந்த எனது கேள்விகளை வைக்கும்பொது அவர் கூறியவைகள் சற்றே எனது சித்தனையை தூண்டுவதாக அமைந்தது. பனை மரங்களை சீராக்கும் உளிகளைக் கையாளும் ஆசாரிகள் இல்லை. அப்படியே, பனைக்கென பயன்படுத்தும் உளிகளைச் செய்யும் நுட்பம் அறிந்த கொல்லர்களும் இல்லை என்றார். இல்லை என அவர் சொன்னதன் பொருள் இல்லவே இல்லை என்பதாக அல்ல என்றே நான் புரிந்து கொண்டேன். அவர்கள் அருகிவிட்டார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது ஒருவரின் நேரத்தினைக் கோரும் ஒரு வேலை. மேலும் அவர் கூறுகையில், பனை மரத்தினை முறிக்கையில் மூன்று துண்டுகளாக வெட்டுவார்கள் என்றார். பனை மரங்களை முறிக்கையில் அவர்களோடு நின்று நான் பார்த்த வரையில், மேற்குறிய கூற்று உண்மைதான் என்பது புலனாகியது. இந்த மூன்று தூண்டங்களில் அடிப்பாகமும் மேல் பாகமும் கட்டுமான பணிக்கென எடுப்பது சிறந்த பலனைத் தராது என்பதே புரிதல் என்றார். மேல் பகுதியில் உள்ள தூன்டு சரியான விளைச்சல் இருக்காது என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ளுவோம். ஆனால் கீழ் பகுதி ஏன் தவிர்க்கப்படுகிறது? அதனை அவர் விளக்கிய விதம் பாரம்பரிய அறிவின் தேவை நமக்கு வேண்டும் என்பதற்கான சான்று.

கருகருவென்று ஆல் நிறைந்து காணப்படும் அடிமரம், முழுவதும் பயன்பாடு அற்று இருக்கும் என்பது அல்ல, அதனை பழங்காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஆல் நிறைந்து காணப்படும் இப்பகுதியில் வெள்ளை நிறைந்தும் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல, இந்த வெள்ளைப் பகுதிகள் உதிர்ந்துபோய் ஆல் மட்டுமேயான ஒரு தொகையாக இது மாறிவிடும். அப்படி அது பலமிழக்கும். ஆகவே இதனை அறிந்தோர் கீழ் பகுதியினை பயன்படுத்த மாட்டார்கள் என்றார். பேராசிரியர் வேத சகாயகுமார் அவர்கள் இதனையே சிறு தும்பு பனை மற்றும் பெருந்தும்பு பனை என விளக்கமளிப்பார்.

Palmyra Wood

பனை மரத்தில் செய்யப்பட்ட சிறிய இடிக்கும் இயந்திரம் – கம்போடியா

உலக்கைகள் வெறுமனே நெல் குத்துவது மற்றும் மாவிடிப்பது போன்ற காரியங்களுக்கு மாத்திரம் பயன்படவில்லை அவைகளை பல்வேறு தன்மைகளில் நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்தனர். குறிப்பாக, கர்பிணி பெண்கள் உலக்கையினைக் கொண்டு மாவிடிப்பது அவர்கள் உடலுக்கு ஏற்ற ஒரு பயிற்சியாக இருந்திருக்கிறது. குழந்தைகள் பிறந்த பின்பு தொட்டில் இடுபவர்கள் உலக்கையினை பயன்படுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் ஓணப் பண்டிகையின் போது உலக்கையினை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடுவது பொதுவான வழக்கம். அப்படியே உள்ளங் கால்களில் ஏற்படும் பிறழ்வுக்கு உலக்கையில் நின்று உருட்டினால் அது சரியாகும் என்று நம்பப்படுகிறது. உலக்கை மண்டையை உடைக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெகு சமீபத்தில் ஒரு நண்பர் பண்ணி அடிக்க பனை மர உலக்கையைத்தான் பயன்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.  உலக்கை சார்ந்து இன்னும் பல அரிய தகவல்கள் இருக்கலாம். நான் இத்துடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்.

உலகம் முழுவதும் ஒரு காலத்தில் தானியங்களின் தோலை நீக்கவும் அவைகளை மாவாக மாற்றவும் உலக்கை பயன்பட்டிருக்கிறது. உலக்கையின் வடிவம் மட்டுமல்ல உலக்கை தனித்திராது எனும் அளவிற்கு அதனுடன் இனைந்து வருவது உரல் தான். பனை மரத்தின் வெட்டிய அடிபாகம் சிறுக சிறுக இடித்து பள்ளம் ஏற்பட்டிருந்தால் அது கண்டிப்பாக ஒரு உரலுக்கு ஏற்ற வடிவம் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் கம்போடியா சென்றபோது பனை மரத்தில் தான் மசாலா பொருட்களை இடிக்கும், கைகளால் எடுத்துச் செல்லும் உரல் உலக்கை மாதிரியினை பனை மரத்தில் செய்து வைத்திருந்தார்கள்.

இவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், பனை மரத்தில் ஒரு உலக்கை பயன் பாட்டில் இருந்திருக்கலாம் என்ற எனது எண்ணத்தை வலுப்படுத்தின.  எனது மனைவியிடம் இது நான் குறித்து பேசியபோது அவர்கள் தனது சிறு வயது ஞாபகத்தில் பனை மர உலக்கையினையே தாம் பயன்படுத்தியதாக கூறினார்கள். இப்படி ஒரு வழியாக எனது தேடுதல் ஒரு முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால் உலக்கை என்பது பனை மரத்தடியில் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.   அதனை தேடி கண்டடையும் வாய்ப்பிற்காகவே இப்போது நான் காத்திருக்கிறேன்.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 16

ஜனவரி 6, 2020

 

மாகாளி பனைகள் 

போர்த்துக்கீசியர்கள் மும்பை வந்த போது தங்கள் மத நம்பிக்கைகள் பரவுவதை தடுக்கவில்லை. இங்கே பல்வேறு ஆலயங்களை கட்டி எழுப்பினர். அவைகளில் ஒன்று தூய யோவான் ஆலயம், அந்தேரி. பல நாட்களாக இதனை பார்க்கவேண்டும் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது.

சமீபத்தில் செம்பூர் மார்த்தோமா சபை போதகர் அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்கள் என்னை ஒரு கண்காட்சி அமைக்க அழைத்தார்கள். அருட்திரு. ஜாண் ஜார்ஜ் அவர்களை நான் 20 வருடங்களாக அறிவேன். ராஜஸ்தானில் உள்ள கோட்டா என்ற பகுதியில் எனது மூத்த சகோதரர் செல்சன் சாமுவேல் அவர்கள்  பணியாற்றியபோது, நான் அங்கே சென்றிருந்தேன். வேறு சீர்த்திருத்த திருச்சபைகளே இல்லாத இவ்விடத்தில், அண்ணன் பாரம்பரிய மார்த்தோமா திருச்சபைக்கு செல்ல ஆரம்பித்தார். அதற்கு காரணம், ஒன்று திருச்சபை செல்லாமல் இருப்பது எங்களுக்கு இயல்வதல்ல, இரண்டாவதாக போதகர் ஜாண் ஜார்ஜ் அவர்களின் அன்பு தான். அண்ணன் மீது மீகுந்த அன்பும் பிரியமும் கொண்ட போதகர் அவர்களுக்கு என்னையும் பிடித்துப்போனது. நான் அகமதாபாத்தில் பணியாற்றியபோது அவரும் அங்கே பணியாற்றினார். அங்கே ஒரு பனை சார்ந்த ஒரு கண்காட்சியினை நடத்த எனக்கு ஒரு வாய்ப்பளித்தார். அந்த வேளையில் தான் நான் முதன் முறையாக மனித முகங்களை பனை ஓலைகளில் வரைந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். அவரது படத்தினை நான் பனை ஓலையில் செய்தேன், மிகவும் மகிழ்ந்து போனார்.

10929190_868772706515106_3659866482275997553_n

போதகர் ஜாண் ஜார்ஜ் – பனை ஓலையில்

மீண்டும் அவர் மும்பை வந்தபோது என்னை அழைத்தார், அப்போது நான் குமரி மாவட்டத்தில் இருந்ததால் என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. இந்த வருடம் என்னிடம் அவர் அழைத்துக் கேட்டபொழுது, என்னால் மறுக்க இயலவில்லை. ஆனால் ஓலையில் படம் செய்ய என்னிடம் போதுமான நேரம் இல்லை. ஆகவே, நான் அவரிடம் 20 படங்களை மட்டும் கொண்டு வருவதாக கூறினேன். நாட்கள் நெருங்க நெருங்க, என்னால் அத்தனை படங்ளையும் செய்ய இயலுமா என்பது தெரியவில்லை. ஆகவே எனது கர்த்தில் இருந்த பழைய படங்களை தேடியெடுத்தேன். 4 படங்கள் கிடைத்தன. போதகரிடம் இரண்டு படங்கள் இருப்பது எனக்குத் தெரியும், நான் 10 படங்களைச் செய்தேன். மொட்தம் 16 படங்கள் வந்தன. எனது சகோதரியிடம் எனது படங்கள் எப்போதும் இருக்கும் ஆனபடியால், அவர்களைத் தேடிச்சென்றேன். அவர்களிடம் 2 படங்கள் இருந்தன. படங்களை வாங்கச் சென்றபோது, அவர்களிடம் தூயா யோவான் ஆலயம் குறித்து கேட்டேன், அதற்கு அவர்கள், அந்த இடம் அந்தேரி கிழக்குப் பகுதியில் இருப்பதாக கூறீனார்கள். அந்தேரி கிழக்குப் பகுதியானது எனது வீட்டிலிருந்து செல்வது தான் எளிது. ஆகவே உடனே அங்கிருந்து புறப்பட்டேன்.

தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், ஏசு சபையினரால் 1579ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆலயத்தை ஒட்டியே ஒரு கல்லறைத்தோட்டமும் அமைக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டு இப்பகுதிகளில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் இங்கிருந்த மக்கள் புகலிடம் நோக்கி தப்பியோடினர். அன்று அருட்தந்தை. ஜோஸ் லோரன்கோ பயஸ் (Fr. José Lourenço Pais) அருகிலிருந்த மரோல் என்ற பகுதிக்கு திருச்சபையை இடம் மாற்றினார். திருச்சபையின் தூண்கள் மற்றும் திருமுழுக்கு தொட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த ஆலயம் அதன் பிற்பாடு கைவிடப்பட்டது. தாவரங்கள் இதன் மீது பற்றிப்பிடித்து ஏறின. ஒரு பேய்தொற்றம் இவ்வாலயத்திற்கு உருவானது. அனேக பேய்க்கதைகள் இதனுடன் இணைத்து கூறப்பட்டன. 2003 ஆம் ஆண்டு இவ்வாலயத்தினை அன்றைய மஹாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் அருட்தந்தை. ரோட்னேய் அவர்களிடம் கையளித்தார். வருடம் தோறும் இவ்விடத்தில் உள்ளூர் பொதுமக்கள் வழிபடும் சடங்கு மட்டும் இன்றுவரை தொடர்கிறது.

SEEPZ_church_4

சிதிலமடைந்த தூய திருமுழுக்கு யோவான் ஆலயம், அந்தேரி

வீடு வந்து சேர்ந்தவுடன் எனது திருச்சபை வாலிபர்கள் குழு தலைவர் தம்பி தாமஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அந்தேரி கிழக்கு பகுதியில் ஒரு பழைமையான ஆலயம் இருக்கிறது பார்க்கச் செல்லுவோமா எனக் கேட்டேன். வருகிறேன் என்றார். அவர்களை எனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றியபடி அந்த இடத்திற்குச் சென்றோம். சீப்ஸ் என்ற அந்த இடத்திற்குள் நாங்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த காவலர்கள், வெளியே நின்று பார்த்துக்கொள்ளுங்கள் என்றனர். 15 – 20 அடி உயர கோட்டை சுவற்றுக்குள் என்ன இருக்கிறது என எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு வாசலில் 440 வருடங்களுக்கு முந்தய ஆலயம் என்கிற ஒரு அறிவிப்பு தொங்கிக்கொண்டிருந்தது. கதவின் இடுக்கில் சென்று பார்த்தபோது அவ்வாலயம் இடுபாடுகளாக கைவிடப்பட்டு நிற்பதையும் அதன் மேல் மேல் பசுங் கொடிகள் பின்னி செல்லும் காட்சி தெரிந்தது. சூற்றிலும் பனை மரங்கள் இருக்கின்றனவா எனப் பார்த்தேன். ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் நான் வானத்தைப் பார்த்தபோது ஒருசில வவ்வால்கள் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன. வவ்வால்கள் பனை மரத்துடன் நெருங்கிய தொடர்புடையவைகள் என்பதால் நான் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வவ்வால்கள் பதனீர் மற்றும் கள் இரண்டையும் ஒரு கை பார்த்துவிடுபவை. ஆகவே பனையேறிகளுக்கு வவ்வால் மிகப்பெரிய அளவில் தொந்தரவு கொடுப்பவை தான். எனக்குத் தெரிந்து வவ்வால் பதனீரைக் குடித்து விடாமல் இருப்பதற்கு பனையேறிகள் பல்வேறு வழிகளைக் கையாள்வார்கள். குறிப்பாக ஓலைகளை மடித்து ஒரு புத்தகம் போக மாற்றி அதனை பானையின் வாயில் அழுத்தி வைத்துவிடுவார்கள். அல்லது வலைகளை இட்டு பானையினை மூடி பாதுகாப்பார்கள். வவ்வால் பதனீரை மாத்திரம் அல்ல பனம் பழங்களையும் சாப்பிடும். வவ்வால்கள் குறித்து எவ்வளவு எதிர்மறை கூறுகள் இருந்தாலும், பனையேறிகள் அவைகளை கொல்வது அபூர்வம் தான். அதுவும் ஒரு உயிர்தானே என்கிற எண்ணமே அனைவரிடமும் மேலோங்கியிருக்கும்.  ஒரு முறை வவ்வால் ஒன்று கலய கண்ணியில் மாட்டிக்கொண்டபோது அதனைக் காப்பாற்றியதாக கூறிய பனையேரியின் விவரிப்பு நெகிழ்ச்சியானது. மகரந்த சேர்க்கைக்கு வவ்வால்கள் மிக முக்கிய காரணிகள் தாம். இவைகளை நம் பெரிதாக கவனிப்பது இல்லை.

சீப்ஸ் என்ற இந்த இடம் இன்று மக்கள் செறிவுமிக்க ஒரு நகர்பகுதி. ஆனால் ஆரே பால் குடியிருப்பு இதன் பின்னால் தான் இருக்கிறது. இங்கே இத்தனை அவசரமாக ஏன் வந்தேன்? பனை மரங்களைக் காணாதபோது இத்துணை மனசோர்வுக்கு நான் ஏன்  உள்ளாகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே நான் பார்த்துக்கொண்டிருந்தபோது எனது உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. நாங்கள் நிற்கும் பகுதியினை நான் வேறு ஒரு தருணத்தில் கடந்து சென்றிருக்கிறேன். மாகாளி குகை சாலை செல்லும் வழி தான் இது. அப்படியானால் காளி குகை இங்கே இருக்கிறதா? அதை பார்க்கவேண்டுமே என்ற எண்ணம் நிலைபெற்றது.

பனை மரமே காளி தான் என தென் தமிழகத்தில் சொல்லப்படுவதுண்டு. பனையேறுகிறவர்கள் காளியின் பிள்ளைகள். காளி வழிபாடு கிபி 600 ஆம் ஆண்டுகளில் தலை தூக்குகின்றது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படியானால் காளி வழிபாடு அதற்கு முன்பே இருந்து வந்த ஒரு வழிபாட்டு முறைமையாக இருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். பவுத்தம் விரிந்து பரவியபோது காளி வழிபாடுகள் சற்றே பின்னகர்ந்து மீண்டும் மழைக்குப் பின் முளைக்கும் புல் என எங்கும் வியாபித்திருக்கலாம் என கருதுகிறேன்.

மும்பைக்கும் காளிக்கும் உள்ள தொடர்பை எப்படி இணைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே பனை மரங்கள் இருக்கின்றன. எனது தேடுகையில் இன்னும் ஒரு சில இடங்களில் காளி தொடர்பான வேறு தடயங்கள் ஏதும் கிடைக்கலாம். ஆகவே அருகிலிருந்தே தொடங்க இவ்விடம் ஏற்றது என எண்ணி அங்கிருந்து எனது வாகனத்தை திருப்பினேன். நாங்கள் மாகாளி குகை செல்லும் வழியில் ஆங்காங்கே பனை மரங்கள் கண்ணில் பட்டபடியே வந்தன. மாகாளி குகை செல்லும் வழி என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில்  7 பனை மரங்கள் ஒருங்கே நின்றன. சுற்றியிருக்கும் அனைத்து இடங்களும் நெருக்கமான நகர்புறப்பகுதி தான்.

நாங்கள் செல்லும் இடத்திற்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு முன் ஓரிடத்தில் வாகனம் வளைந்து நெளிந்து மேடேறி செல்லுகையில் ஒரு பிரம்மாண்டமான பனை மரத்தைப் பார்த்தேன். நகர் பகுதியானதால் பேருந்டுகளும் பல்வேறு வாகனங்களும் நெருக்கியடித்துச் செல்லும் அந்த சாலையில் எனது கண்களை பனை ஈர்த்துக்கொண்டது அதற்கே உரிய பேரழகால் தான். காய்கள் சிறிதிலிருந்து பெரிதாக பருவம் அடையும் வரைக்கும் அவைகள் ஒவ்வொரு தரத்தில் இருந்தன. காளியே உருவெடுத்து வந்து நின்றதுபோல்  ஓர் அழகும் அம்சமும் அதில் கூடியிருந்தது. இந்த பிரம்மாண்ட அழகு, தன்மை, வடிவங்கள், பேருரு மற்றும் காலம் தாண்டிய காய்ப்பு, போன்றவைகள் ஒரு அமானுஷ்ய தன்மை கொண்டதாக அந்த மரத்தை  வெளிப்படுத்தியது. மிகவும் நெருக்கடியான சாலையில் எனது வாகனத்தை நிறுத்தவோ அல்லது மெதுவாக செல்லவோ இடமளிக்காத அந்த இடத்தில் எனது கண்கள் சாலையின் அருகிலிருந்த அந்த மரத்தை சில வினாடிகள் கூர்ந்து பார்த்தது எனது வேட்கையினால் மாத்திரம் அல்ல. காளி தன்னை வெளிப்படுத்திய ஒரு ஆக்கிரோஷ தருணம் என்று தான் அதைச் சொல்லுவேன். காய்ந்த ஓலைகள் இரத்த விடாய்கொண்ட நாக்குகள் என அசைந்தபடி நின்றிருந்தன.

அதன் பின்பு பனை மரங்கள் கண்ணுக்கு பட்டபடியே  வந்தன. நாங்கள் மாகாளி குகைகளுக்கு முன்பாக வண்டியை நிறுத்தியபோது தாமஸ் அருகில் சென்று விசாரித்து வந்தான். குகைகளுக்கு உள்ளே செல்ல இனிமேல் வாய்ப்பு இல்லை, ஆனால் மாகாளி கோயில் அருகில் தான் இருக்கிறது என்றான். மாகாளி கோயில் செல்லும் வழியில் இரண்டு பனை மரங்கள் நின்றன. மிக பழைமையான மரங்கள். மாகாளி கோவில் வளாகத்தில் தென்னை மற்றும் பல்வேறு மரங்கள் இருந்தாலும் பனை மரங்களைக் காண முடியவில்லை. அனால் உள்ளே நுழைத்தபோது நான் கண்ட காளி சிலையானது பனைக்கும் காளிக்கும் உள்ளதொடர்பை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.

மாகாளி குகைகளுக்குள் என்னால் நுழைய இயலாவிட்டாலும், வெளியே இருந்து  பார்க்கையில் ஒருசில குகைகளின் தோன்றம் தெரிந்தன. பவுத்த சாயல் வெளிப்படையாக தெரியும் இவ்விடங்களின் அருகில் ஒரு பனை மரம் நிற்பதை பார்த்து குதூகலித்துவிட்டேன். நாங்கள் நிற்கும் பகுதியானது சுற்றிலுமிருக்கும் மற்றெல்லாப் பகுதிகளை விடவும் உயர்ந்த ஒரு நிலப்பகுதி. பார்க்கையில் பவுத்தர்கள் தங்குமிடங்களின் சாயல் வெளிப்பட்டப்படியே இருந்தன. இப்பகுதிகளில் பனை மரங்களைக் காண்பது ஒரு முக்கிய குறியீடாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் பனை மரங்கள் பெருமளவில் பவுத்தர்களின் வாயிலாக பரவப்பட்ட மரம் என்ற கருதுகோள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இதனை அழுத்தி கூறுவார்கள். அதற்கான காரணங்கள் அனேகம் உண்டு.

முக்கிய காரணமாக நான் கருதுவது, பனை ஓலை பயன்பாட்டின் முக்கியத்துவம் தான். உலகமெங்கும் எழுத்து என்பது தோல்களில் எழுதி பாதுகாக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் இக்காலங்களில் இந்தியாவில் மட்டும் எழுத்துக்கள் பனை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஏன் என்றால் பவுத்தம் கொல்லாமையை முன்னிறுத்தியது. மாத்திரம் அல்ல அது தன்னை விரிவு படுத்தும் நோக்கோடு இலக்கியங்களை பகிர துவங்கியது. இச்சூழலில் பனை ஓலைகளே பவுத்த புரிதலுக்கு ஏற்ற வகையில் இலக்கியங்களை ஒருங்கிணைக்க உதவின. கொல்லாமையினை வாழ்வியல் நெறியாக கொள்ளும் ஒரு சமயம் பனை மரத்தினை தங்கள் மரமாக ஏற்று அதனை பரவலாக்கியிருக்க வளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

IMG_5909-1024x682

மாகாளி குகை பகுதிகளில் காணப்படும் பனை மரங்கள்.

அங்கிருந்து வெளியே வந்தபோது ஓரிடத்தில் மலை உச்சியிலிருந்து பார்க்கும் தோதான ஒரிடம் கண்ணில் பட்டது, நானும் தாமசுமாக அந்த இடத்தில் வந்து நின்று பார்த்தோம். ஆங்காங்கே பனை மரங்கள் உயர்ந்து எழுந்து நின்றன. பனை சார்ந்த ஒரு சூழியல் அமைப்பு இங்கே இருந்திருக்கின்றன என அவை அறுதியிட்டுக் கூறின. நான் எனக்குள் மென்மையாக புன்னகைத்துக்கொண்டேன். என்னால் சரிவர சொல்ல இயலாத எதோ ஒன்று என்னை இப்பெருநகரத்துடன் பிணைத்திருப்பதை எண்ணிக்கொண்டேன். ஆம் அதைத் தேடுவது தான் எனது வாழ்க்கை என எனக்கே சொல்லிக்கொண்டேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 15

நவம்பர் 21, 2019

 

குன்றின்மீது நிற்கும் பனை

 

மும்பை குறித்து நாம் அறியும் ஒவ்வொரு தகவல்களும் பெருமளவில் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பவைகளாகவே உள்ளன. குறிப்பாக பனை சார்ந்த தகவல்கள் மும்பையில் மிக சரியான அளவில் நவீன சமூகத்தை எட்டவில்லை என்பதும் மும்பையின் தற்போதைய சூழியலாளர்கள் பனை மரம் குறித்து வாய் திறக்காததும் பனை மரங்களுக்கும் மும்பைக்கும் உள்ள தொலைவை எடுத்துக்காட்டுபவை. இவைகள் தற்காலிகமான தொலைவு தான். பனைக்கும் மும்பைக்கும் இடையே உள்ள பிணைப்பு காலங்களைக் கடந்தது. இவை எதையும் அறியாத ஒரு சமூகத்திடம் ஒரு முக்கிய மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு தளத்திலும் நாம் பனை சார்ந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு சூழியல் மையத்திலும் அவைகளை நாம் பார்வைக்குட்படுத்தும்போது பனை சார்ந்த ஒரு முக்கிய திறப்பாக அவை அமையும்.

GH

கில்பர்ட் குன்று – இன்றய நிலை

நான் தற்பொழுது தங்கி இருக்கும் ஆரே பகுதியானது மும்பை மேற்கு இரயில் தடத்திலுள்ள கோராகாவுன் பகுதியில் இருக்கிறது. இங்கிருந்து மூன்றாவது இரயில் நிலையம் தான் அந்தேரி. மும்பையிலுள்ள ஒரு  முக்கியமான இரயில் நிலையங்களில் ஒன்று இது. கோரேகாவுன் முதல் அந்தேரி வரைச் செல்லும் இரயில் வழித்தடம் எங்கும்  பனை மரங்கள் நமது கண்ணிற்கு பட்டபடியே இருக்கும். நான் ஏற்கனவே கூறியது போல அந்தேரிதான், எனது மும்பை பனை வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அந்தேரி பகுதியில் நரி வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர்களின் படங்களே 2016 ஆம் ஆண்டு என்னை பனை சார்ந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள வைத்தது மாத்திரம் அல்ல பனைக்கும் உயிரினங்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆராய பேருதவியாக இருந்தது.

பனங்காட்டிற்கும் நரிக்கும் உள்ள தொடர்பினை நான் தனியாக விரிவாக  எழுதியிருக்கிறேன். பனங்காட்டு நரி சல்லசலப்பிற்கு அஞ்சாது என்கிற பழமொழியே பனையோடு நரிக்குள்ள தொடர்பினை அறிவுறுத்தும். ஆரே பகுதிகளில் நரி இருக்கிறது எனக் கூறுவார்கள். குறைந்த எண்ணிக்கையிலேயே அவைகள் இருக்க வாய்ப்புள்ளது. தேடினால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் சமீபத்தில் நவி மும்பை பகுதிகளில் நாய் எனக் கருதி ஒரு குள்ளநரியினை மீட்டெடுத்தார்கள். இவ்வித உதிரி தகவல்களே பனை இம்மண்ணின் மிக முக்கிய தாவரமாக இருந்ததை வெளிக்காட்டுகிறது. ஆரே பகுதிகளில் காணப்படும் சிறுத்தைப் புலியால், நரிகளின் எண்ணிக்கை கட்டிற்குள்ளேயே இருக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.

ஆகவே அந்தேரி பகுதி குறித்து எனது தேடுதலை பல வகைகளில் முன்னெடுத்தேன். அந்தேரி இரயில் நிலையம் முன்புதானே நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் ஒரு பனை மரம் உயர்ந்தெழுந்து நிற்கிறது. இரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் பொழுது மேற்கு பகுதியில் சாலையினைத் தாண்டி மற்றொரு பனை மரம் நிற்பதைக் காணலாம். அந்தேரி பகுதிகளில் இன்னும் அனேக இடங்களில் பனை மரங்கள் ஆங்காங்கே எஞ்சி இருப்பதைக் காண இயலும். அவைகள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்ட குழந்தைகள் போல் மும்பையின் தெருவோரங்களில் நிற்கும் அனாதைக் குழந்தைகள் போல் எவராலும் பொருட்படுத்தப்படாதபடி நிற்பதைக் காணலாம்.

Fox Hounds

அந்தேரி இரயில் நிலயம் அருகில் நரி வேட்டையாடும் ஆங்கிலேயர்கள்

ஒரு கால கட்டத்தில் எங்கேனும் 10 பனை மரங்கள் இருக்குமென்றால் அங்கே பனை சார்ந்த ஒரு தொழிலாளி இருந்திருப்பார் என்கிற உண்மையினை நான் உணர்ந்திருந்தேன். இப்போது மும்பையில் அப்படி பனை மரங்களின் தொகைகளை நாம் எளிதில் கண்டுகொள்ள இயலாது. மும்பை ஒரு விரிவடைந்த நகரம். ஒரு சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்தும் பனை சார்ந்த நிலவியல் ஆக்கிரமிப்புள்ளானவைகள். அப்படியிருக்கையில் பனை மரங்கள் இப்பகுதிகளில் கூட்டமாக இருப்பது அபூர்வமானது. ஆகவே ஒற்றையாக காணப்படும் மரங்களே இங்கு நமக்கு ஆதாரமாக இருப்பவை. இவைகளே பனை சார்ந்து பல்வேறு உண்மைகளை எடுத்துச் சொல்ல வல்லவை.

பொதுவாக ஒற்றை பனை மரங்கள் ஆகாது எனக் கூறுவார்கள். அது மகரந்த சேர்க்கை சார்ந்த உண்மையாக இருக்கலாம். இந்த நம்பிக்கையினை பல்வேறு விதங்களில் தமிழக மக்கள் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டார்கள். பேய்களோடு, மூட நம்பிக்கைளோடு, இயற்கை சார்ந்த பிரச்சனைகளோடு, அன்றாட வாழ்வின் சிக்கல்களோடு இணைத்துப் பார்த்ததினாலேயே தனி மரங்களை பெரும்பாலும் மக்கள் ஏற்கவில்லை. இச்சூழலில் மும்பையில் காணப்படும் தனி மரங்கள், இங்கு நடைபெற்ற நகர்மயமாக்கலில் தப்பிப்பிழைத்தவைகள் தான் என்பதற்கான ஆதாரமாக நிற்கின்றன. அதாவது, பனை திரட்சியாக நின்ற இடங்களில், கட்டுமானங்கள் ஏற்பட, எஞ்சியிருந்த பகுதிகளில் தப்பிபிழைத்து நிற்கின்ற மரங்களே இன்று நாம் காணும் ஒற்றை பனை மரங்கள். அப்படியானால், ஒவ்வொரு ஒற்றைபனை மரமும், ஒரு பனங்கூடலின் எஞ்சிய பகுதி என்றே நாம் கொள்ள வேண்டும். கொலைக்களத்தில் எஞ்சிய ஒற்றை வீரன். அல்லது போர்களத்தில் கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் கைதி. எப்போது வேண்டுமானாலும் இந்த நகர், எஞ்சியிருக்கும் ஒற்றை பனை மரங்களையும் வெட்டிவிடலாம் எனும் தருணத்தில் வாழ்பவை.

ஆகவே ஒவ்வொரு ஒற்றை பனை மரமும் என்னுள் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஒற்றை பனை மரத்தினைப் பார்க்கையிலும், அதனுடன் திரட்சியாக நின்ற பனங்காடுகள் என் கண்களுக்குள் வந்து செல்லுவதை தவிர்க்க இயலவில்லை. ஒற்றைப் பனை தன்னுள் தனது கூட்டத்தின் சாயலை உள்வாங்கி வைத்திருக்கிறது. இந்த மண் எங்களுக்கானது என அது தலை உயர்த்தி சொல்லியபடி இருக்கிறது. நவீன வாழ்வில், நான் வந்து சேர்ந்திருக்கிறேன் என தனது ஓலைகளை விசிறியபடி ஹீனமான குரலில் அது நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறது. மும்பையில் காணப்படும் ஒவ்வொரு ஒற்றை பனை மரமும் ஒரு பனங்காட்டிற்கு நிகர் தான். ஒற்றை பனை மரமே அங்கிருந்த பனை வாழ்வியலின் தடயம்.

தற்பொழுது காணப்படும் பெரும்பாலான மும்பையின் பனை மரங்கள் யாவும், 70 ஆண்டுகளுக்கு முந்தையவைகளே. முதுமையினால் பல இறந்திருக்கலாம். நகர் விரிவாக்கத்திலும் சில அடிபட்டிருக்கலாம். எஞ்சி நிற்பவைகளில் பனை ஏறிகள் ஏறி சென்ற தடங்கள் வெட்டு படிகளாக இருப்பதை பல இடங்களில் காணலாம். இவ்வித வெட்டு காயங்களினை மும்பை பகுதிகளில் தான் பார்த்திருக்கிறேன். படி போல ஏறுவதற்கு வசதியாக வெட்டபட்டிருப்பது மும்பைக்கே உரிய ஒரு தனித்தன்மை. மரங்களில் கள் இறக்கவும் நுங்கு எடுக்கவும் கருதி செய்யப்பட்ட ஒரு வசதி. என்றாலும் பனை மரங்களைக் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் ஒரு மரபு நின்று போனதையே இவைகள் நமக்கு தெரிவிக்கின்றன. பல்வேறு கட்டுமான பொருட்கள் கிடைக்கும் இடமாகையால், பனை சார்ந்த பயன்பாடுகள் குறைந்திருக்கும். ஆகவே மரத்திற்கு ஏற்படும் காயங்களை பனையேறிகள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். மாத்திரம் அல்ல, நெஞ்சு அணைத்து  ஏறுவதை விட பற்றிப்பிடித்து கால்களை ஊன்றி ஏறுவது நவீன வாழ்கையில் வசதியாக இருந்திருக்கலாம்.

அந்தேரிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள தொடர்பு, அந்தேரிக்கும் போர்துக்கீசியர்களுக்கும் உள்ள தொடர்பு, என விரிவடைந்துகொண்டிருந்த எனது தேடுதல் ஒரு கட்டத்தில் அந்தேரி பகுதியிலிருக்கும் கில்பர்ட் மலை அடிவாரம் அருகில் வந்து நிற்கும் என்பது நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராதது. கில்பர்ட் குன்று என ஒன்று நகரின் மத்தியில் இருப்பதைக் குறித்து அறிந்ததும் அதனிப் பார்க்க நான் விரைந்தேன். கில்பர்ட் குன்று அந்தேரி இரயில் நிலையத்திலிருந்து 500 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும் ஆனால் சாலை வழியாக  சுற்றி செல்லும்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் சுற்றி செல்ல வேண்டியிருக்கும். கில்பர்ட் மலை என்பது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிலவியல் அமைப்பு. உலகிலேயே இது போன்ற ஒரு அமைப்பு இன்னும் இரண்டு இடங்களில் மாத்திரமே காணப்படுகின்றது. இரண்டுமே அமரிக்காவில் மட்டும் காணப்படுகின்றன.

800px-Gilbert_Hill,_Andheri

கில்பர்ட் குன்று – சற்றே தெளிவான கோணம்

கில்பர்ட் குன்று இடையூழிக் ( Mesozoic Era ) காலாத்தில் உருவான ஒரு குன்று என கருதப்படுகிறது. இடையூழிக் காலம் என்பது 230 – 63 மில்லியன் ஆண்டுகளுக்கு idaippatta காலம். இக்கால கட்டம் டிரையாசிக்   (Triassic,) ஜுராசிக்  (  Jurassic, ) மற்றும் கிரிடேஷியஸ் (Cretaceous) என்ற மூன்று முக்கிய காலகட்டங்களை உள்ளடக்கியது.  பறவைகள் மற்றும் பூக்கும் தாவரங்கள் கூட இக்காலகட்டத்தில் உருவாகி பெருமளவில் அழிந்தன.  இக்காலகட்டட்தில் தான், ஒரு மிகப்பெரும் எரிமலைக் குழம்பு இப்பகுதியில் வழிந்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட எரிமலைக் குழம்பு மகராஷ்டிரா மாத்திரம் அல்ல குஜராத் மற்றும் மத்திய பிரதேசங்களில் சுமார் 50,000 கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இதன் எஞ்சிய பகுதியே இன்று அந்தேரி பகுதியில் காணப்படுகின்றது. பெரும்பான்மையான பகுதிகளை வெட்டி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என கூறுவார்கள்.

கில்பர்ட் குன்றினைக்  காண செல்லும் வழி எளிமையானது. அந்தேரி இரயில் நிலயத்திலிருந்து மேற்குபுறமாக வெளியே வந்து சாலையைக் கடந்தவுடன் ரிக்ஷா கிடைக்கும். 10 ரூபாய் கொடுத்தால் போதும் கில்பர்ட் குன்றின் அடிவாரத்தில் இறக்கிவிடுவார்கள். நான் செல்லும் வழியில் இரண்டே நிமிடத்தில் ஒரு பனை மரத்தினைப் பார்த்தேன். என்னோடு பயணித்த இரண்டு பயணிகள் இறங்கிய கட்டிடத்தின் பின்புறம் கில்பர்ட் குன்றின் ஒரு பகுதி தெரிந்தது.

கில்பர்ட் குன்று 1952 ஆம் வருடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது, என்றாலும், சரியான பாதுகாப்பு இதற்கு அளிக்கப்படவில்லை. வெகு சமீபத்தில் தான் இந்த குன்றின் மேல் ஒரு ஆலயம் எழும்பியிருக்கிறது. ஆனாலும் அந்த ஆலய பொறுப்பாளர்களே இந்த மலையினைக் காப்பதாக இன்று கூறப்படுகிறது. குன்றின் உச்சியில் தற்போது இருக்கும் ஆலயம் இல்லாது போயிருந்தால் இன்று பல்வேறு கட்டிட நிறுவனங்கள் இதனை கபளீகரம் செய்திருக்கும். நானே சுற்றிப்போய்தான் பார்த்துவிட்டு வந்தேன். கட்டிடங்களின் உள்ளே கில்பர்ட் குன்று புதைந்துபோய் கிடக்கின்றது இன்று.

குன்றின் முன்னால் ஒரு மிகப்பெரிய விளையாட்டுதிடல் அமைத்திருக்கிறார்கள். அதுவே இந்த குன்றினைப் பார்க்க சிறந்த வழி. வேறு பகுதிகள் எல்லாம் கட்டிடங்களாலும் சேரிகளாலும் சூழப்பட்டிருக்கின்றன. நான் சென்றபொழுது, வேலை நடப்பதால் ஆலயத்திற்குச் செல்ல இயலவில்லை. குன்றின்மீது ஏறியிருந்தால், ஒருவேளை சுற்றி இருக்கும் பகுதிகளில் காணப்படும் பனை மரங்களை பார்த்திருக்க இயல்வதாயிருக்கும்.

திரும்பி வரும் வழியில் மீண்டும் ஒரு மொட்டை பனை மரத்தைப் பார்த்தேன். ஒரு சால் பகுதியில் இருந்தது. உள்நுழைந்தபோது அதை உள்ளடக்கி எவரோ குடிசை அமைத்து தங்கியிருந்தார். கீழே ஆண் பாளைகள் கிடந்தன. சமீபத்தில் தான் இறந்திருக்கும்போல.

இவைகள் யாவும் ஒற்றையாக நிற்கும் பனை மரங்கள் கூட உள்ளுறைந்திருக்கும் பல்வேறு உண்மைகளை நமக்கு எடுத்துக்கூற வல்லவை என எனக்கு உணர்த்தியது. நான் வீடு வந்து சேர்ந்த பின்பு, கில்பர்ட் குன்று குறித்து இணையதளத்தில் தேடினேன். பனை சார்ந்து ஏதும் கிடைத்துவிடாதா என்கிற ஒரு எண்ணத்துடன் தான் நான்  தேடினேன். எனது விருபத்தினை கடவுள் அறிவாரோ என்னவோ, நூறாண்டுகளுக்கு முந்தைய ஒரு அழகிய கருப்பு வெள்ளைப் புகைப்படம் எனக்கு கிடைத்தது. கில்பர்ட் குன்றின் அடிவாரத்தில் பனை மரங்கள் நிற்கும் அந்த புகைப்படம் காலத்தால் அழியா ஒரு ஆவணம்.

Gilbert Hill

கில்பர்ட் குன்று – பனைமரங்கள் வளர்ந்திருக்கும் பழைய படம்

பனை மரங்கள் ஏனோ பெருமளவில் எவராலும் இன்றுவரை முக்கியத்துவப் படுத்தப்படவில்லை. இதன் விரிவு என்பது கடற்கரை மணல் மீது மட்டுமல்ல, எரிமலை குழம்பின் மீதும் ஊன்றும் திறன் வாய்ந்தது எனபதை பதிவு செய்வது அவசியமாகின்றது. எவருக்கு தெரியும் நரி வேட்டையாடிய ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பி வந்த நரிகள் இங்கு வாழ்ந்த பனங்காட்டில் தஞ்சமடைந்திருக்க வாய்ப்புகள் தாராளமாக இருந்திருக்கின்றன.

 

அருட்பணி. காட்சன் சாமுவேல்

பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 14

ஒக்ரோபர் 17, 2019

பனை சாட்சி
சமீபத்தில் என்னிடம் ஒருவர், சில புகைப்படங்களை அனுப்பி ஆரே பால் குடியிருப்பு 1949ஆம் ஆண்டிற்கு முன்னமே காடாக இருக்கவில்லை, இப்போது என்ன இது காடு என சொல்லப்படுகிறது என்ற வகையில் கேள்வி எழுப்பியிருந்தார். மும்பையில் இவ்வித கேள்விகள் ஆரே பகுதியில் உயர்ந்து நிற்கும் மரங்களை வெட்ட துணியும் மெட்ரோ திட்டத்திற்கு ஆதரவாக கூறப்படுகிறது என்பது எனது தெளிவு.
ஆரே பகுதியில் என்னை பணியமர்த்தியபோது, இங்கு வாழும் வார்லி பழங்குடியினர் குறித்து கூறப்பட்டது எவ்வளவோ அதை விட ஆரே பகுதியில் மெட்ரோ கார் ஷெட் அமைவது குறித்த செய்தி என்னை வந்து அடைந்த வண்ணம் இருந்தது. இந்த திட்டத்திற்காக ஆரே பகுதியில் காணப்படும் மரங்களை வெட்டுவதும், அதனை எதிர்த்து சூழியல் ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்துவதும் வாடிக்கையாக இருந்தது. நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டேன். அரசு தரப்பு ஆரே ஒரு வனப்பகுதியல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்கிறதும், சூழியல் ஆர்வலர்கள், இது வனப்பகுதிதான் என வலியுறுத்துவதும் தொடர் நிகழ்ச்சிகளாக பரஸ்பரம் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இரு புறமும் கடுமையான எதிர்வினைகளை வைத்தபடியே இருப்பதைப் பார்க்கையில் சற்றே விலகி நின்று வேறு ஒரு கோணத்தில் இந்த பிரச்சனையை அணுகுவதே சரி என்று படுகிறது.

Aarey 1952 1

ஆரே சீரமைக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பனைமரங்கள், 1952

ஆரே பகுதியின் வரலாறு மிக தொன்மையாக இருந்தாலும், அவைகள் குறித்து நமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆரே நவீன வரலாற்றில் இடம்பெறுவது நமது சுதந்தரத்திற்குப் பின்புதான். 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரே பால் குடியிருப்பு 1951 ஆம் ஆண்டு தான் முறைப்படி பண்டித ஜெவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மும்பைக்கு தேவையான பால் உற்பத்தி செய்யவும், தெருவோரங்களில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், நவீன ஆய்வுகளை முன்னெடுக்கவும் இந்த முன்னுதாரண முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இன்றும் இந்திய நகரங்களில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கையினை கூட்டி கழித்துப் பார்த்தால் மும்பை நகரத்தில் சுற்றியலையும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.அதற்குக் காரணம் மிக தெளிவான திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட்ட ஆரே பால் குடியிருப்பு திட்டம் தான்.
ஆரே கோரேகாவுன் அருகில் அருகில் அமைந்திருக்கிறது. நான் மும்பை வந்த நாட்களில் கோரேகாவுன் பகுதியினை நெருங்கும்போதெல்லாம், இரயில்தண்டவாளங்கள் அருகில் காணப்படும் மாட்டு கொட்டகையை பார்த்தபடி செல்லுவேன். காவுன் என்ற சொல், கிராமத்தைக் குறிப்பது, சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நகரம் விரிவடையாதபோது இப்பகுதி கிராமமாக இருந்திருக்கும். ஓடு போட்ட பெரிய மாட்டு கொட்டகை. கரிய நிற எருமை மாடுகள் வரிசையாக மினுங்கியபடி நின்றுகொண்டிருக்கும். பரண் மீது வைக்கோல்கள் கட்டு கட்டாக அடுக்கியிருப்பார்கள். மும்பைக்குள் மாடு வளர்ப்பது எப்படி சாத்தியம் என்றே அப்போது நினைத்திருந்தேன். ஆரே பகுதியிலிருந்து பசுக்களுக்கு தேவையான அளவில் புற்களும் இங்கு கிடைப்பதால், இதனைத் தொடருவார்களாயிருக்கும்.

Aarey 1952

ஆரே சீரமைப்பு பணிகள் தொடருகையில் காணப்படும் பனைமரங்கள், 1952

எல்லா அரசு முன்னெடுப்புகள் போலவும், ஆரே பால் குடியிருப்பு திட்டம், தயவு தாட்சணியம் இல்லாமல் இந்த நிலப்பகுதியினை உழுது “சீராக்கி” கட்டமைத்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பே இராட்சத எந்திரங்களைக் கொண்டு நிலம் சீரமைக்க பட்ட படங்கள் காணக்கிடைக்கின்றன. ஆகவே, நிலம் இங்கு மாடு வளர்ப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
ஆரே பால் குடியிருப்பு அமைக்கப்பட்டது பெரும் கனவுகளுடனும், பெரும் பொருட்செலவுடனும் தான். அந்த நம்பிக்கையும் கனவுகளும் பெருமளவில் நிறைவேறின. மும்பை பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் ஆரே பால் மீது தீராத நம்பிக்கை உண்டு. ஆரே பால் தீர்ந்த பின்புதான் மற்ற பால் விற்பனை துவங்கும். ஆகவே தனியார் பால் நிறுவனங்கள் இணைந்து ஆரே பால் மேலெழாதவண்ணம், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் துவங்கினர். இவ்விதம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு தனியார் வசம் பால் சந்தை போய்ச் சேர்ந்து வெகு நாட்களாகிவிட்டது. இன்று ஆரே கையறு நிலையில் காணப்படுகிறது. இதனை மீட்டுருவாக்கும் எண்ணம் எவருக்கும் கிடையாது. அரசு இதனை கைவிடுந்தோறும், இப்பகுதி கட்டுமான நிறுவனங்களுக்கு வாசல்களைத் திறந்து வைத்திருக்கும்.
ஆரே பகுதியில் காணப்படும் பசுமை எவரையும், காடு என்றே எண்ண வைக்கும். பல்வேறு மும்பை பகுதிகளை நான் பார்த்திருப்பதால், இங்கு உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட காடுகள் இருந்திருக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால், மும்பை பகுதிகளில் காணப்படும் மலைகள் யாவும், பெருமளவில் புல் மற்றும் புதர் செறிவுள்ள பகுதிகளே. ஆரே பகுதியில் கூட, வெள்ளையர்கள் விளையாடும் கோல்ஃப் மைதானமே இருந்திருக்கிறது எனக் கூறுவார்கள். ஆகவே, மரங்கள் வெட்டப்பட்டனவா? அல்லது புதர்க்காடுகள் அப்புறப்படுத்தப்பட்டனவா என இப்போது உறுதியாக சொல்ல இயலாது. இது காடுதானா என்கிற கேள்வியினை சற்றே நாம் கண்டிப்பாக பேசிச்செல்லலாம்.

Aarey Tree Cutting

மெட்ரோ கார்ஷெட் அமைக்க வெட்டப்பட்ட மரங்கள் மத்தியில் பனை, 2019

ஆரே இன்று ஒரு தங்கப்புதையலாக கருதப்படுகிறது. மும்பைக்குள் காணப்படும் பசுமை, அமைதி, சுத்தமான காற்று, போன்ற அரியவைகளைக் கொண்டிருப்பதால் இவ்விடத்தினை வளைத்துப்போட இன்று பெருமுதலாளிகளும் அரசியல்வாதிகளும் காத்துக்கிடக்கிறார்கள். இன்று ஆரே பகுதிகளில் காணப்படும் மரங்களில் பெரும்பான்மையானனவைகள் நட்டு வளர்க்கப்பட்ட மரங்களே. அவைகள் எவ்வகையிலும் இப்பகுதியில் தன்னிச்சையாக வளரும் மரங்கள் அல்ல. ஆகவே இதனை காடு என ஒப்புக்கொள்ளாமல் வேறு வகையில் இதனை வகைப்படுத்த முயல்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
ஆரே பகுதியில் இன்று குறைந்தபட்சம் 6 சிறுத்தைகள் சுற்றித்திரிகின்றன என்றும், பல்வேறு அரிய உயிரினங்கள் இருக்கின்றன என்றும் சூழியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள். இவைகள் சார்ந்து பதிலளிக்கும் எதிர் தரப்பு, அருகிலுள்ள சஞ்சை காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவிலிலிருந்து சமீப காலங்களில் உயிரினங்களும் வனவிலங்குகளும் ஆரே பகுதிக்குள் நுழைகின்றன என்று வாதிடுகிறார்கள். அப்படி பார்க்கையில், ஆரே, காட்டிற்கான இலக்கணங்கள் உள்ள ஓரிடம் அல்ல, வெறும் பசுமை சூழல் கொண்ட ஒரு பகுதி என்கின்றனர். இவ்வகையில் இப்பகுதிகளின் முக்கியத்துவத்தை மாற்றி, இதனை திசை திருப்புவதாக நான் எண்ணுகிறேன்.
மும்பையின் மையத்தில் நுரையீரலாக காண்டப்புடும் இந்த பசுங்காடு, குறித்து மிகச்சரியான புரிதல் இன்றி வெளியிடப்பட்ட படங்கள் உண்மையிலேயே என்னை துணுக்குற வைத்தன. முதலில் 1952ஆம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 1949ஆம் ஆண்டு என முன்வைக்கும்போதே இதில் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என நாம் உணருகிறோம்.
ஆரே பகுதி வார்லி பழங்குடியினரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றும் இது வார்லி பழங்குடியினர் வாழும் இடம் தான். பழங்குடியினரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட இடமாகையால் இன்றும் மர்மங்கள் சூழ்ந்த இடமாக இவ்விடங்கள் காணப்படுகின்றன. நாங்கள் வசிக்கும் ராயல் பாம் எஸ்டேட் பகுதியில் கூட 18 மாடி கட்டிடங்கள் இருந்தும் சில கட்டிடங்கள் இன்றும் வெறிச்சோடி கிடப்பதைப் பார்க்கலாம். அதனை எவராலும் விளக்க இயலாது. பேய்களின் நடமாட்டம் இருக்கிறதாக சொல்லுவார்கள். இங்கே பல கொலைகள் நடந்தேறியிருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் ஆவியும் பழங்குடியினரின் ஆவியும் இங்கே வருபவர்களை சற்றேனும் சீண்டிப்பார்ப்பது உறுதி.
ஆரே பகுதியில் எல்லாம் சரியாக இருப்பது போல் தோன்றும் ஆனால் மழை என வந்தால் பேய் மழை தான். சாலைகளை பெயர்த்து எடுத்துச் சென்றுவிடும். நாங்கள் இங்கே வந்த பிற்பாடு 10 முறைக்கும் மேல் சாலையினை செப்பனிட்டிருப்பார்கள். மழை சாலையினை ஓடையென மாற்றி ஜல்லிகளை மணல் என குடியிருப்பின் வாசலில் குவித்துவைக்கும். தண்ணீர் செல்லும் ஓடைகள் சாலையின் மையத்தில் பாளம் பாளமாக வெடித்தபடி இருக்கும். வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்லும். துணிச்சலோடு வருபவர்கள் பள்ளங்களுக்குள் சிக்கிக்கொள்ளுவதும் உண்டு. மழை நேரத்தில் சுவர்கள் விழுவதும், வீடுகள் இடிவதும், மண் சரிவு ஏற்படுவதும் உயிர் பலிகளும் தவிர்க்க இயலாதவை. ஆகவேதான் இப்பகுதிகளில் பனை மரங்களை வார்லி பழங்குடியினர் நட்டு பேணியிருக்கிறார்கள். மழைக்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க ஏற்ற மரம் பனை தான் என்ற தெளிவான புரிதல் பழங்குடியினர் வாழ்வில் இருந்திருக்கிறது. சரிவுகளில் காணப்படும் இந்த மரங்களே இச்சுழியலின் மரம் என தெரிவு செய்யப்பட்டு புரிதலுடன் பேணி வளார்க்கப்பட்டிருக்கின்றன. இப்புரிதல் சற்றும் இல்லாத நவீன மனிதர்கள் ஆரே வந்தபோது பனை தனக்கான இடத்தை இழந்தது. அந்தனைத் தொடர்ந்து இந்த நிலப்பரப்பு பல மாறுதல்களுக்கு உள்ளாக கடந்து செல்லும் நிற்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டது.
குதிக்கும் சிலந்தி என காணப்படும் ஒரு வகை உயிரினம், பர்மாவிலும் காணப்படுகிறதாக சொல்லுகிறார்கள். பனை மரம் செறிந்த பகுதி தானே பர்மா? ஆரே பகுதிகளில், மரநாய் மற்றும் குள்ள நரி போன்றவை இருக்கின்றன. இவைகளும் பனை சார்ந்த விலங்கினங்கள் தாம். இன்று சிறுத்தைப் புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இவ்விடத்தில் சற்றே நமக்கு கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. சிறுக்ட்தைப் புலிகள் எப்படி பனங்காட்டிற்குள் வாழும்? எங்கள் திருச்சபையில் புல் வெட்டச் சென்ற பெண்மணிகள் கூறுவார்கள், துவக்கத்க்டில் நாங்கள் புல் வெட்டச் செல்லும்போது இந்த இடத்தில் சிறுத்தைகள் ஏதும் வருவதில்லை. இப்போதுதான் வரத்துவங்கியிருக்கிறது என. அது ஒரு வகையில் உண்மையும் கூட. சுற்றியிருக்கும் சிறுத்தைகளின் வாழ்விடங்கள் நகரமயமாக்கலில் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. அவைகள் வேறு வழியின்றி, தனது உணவு வேட்டையினை ஆரே பகுதியில் வந்து எடுக்கத் துவங்கி விட்டிருக்கின்றன. நான் பார்த்த படங்களின் தொகுப்பு அனைத்தும் ஆரே பகுதிகளில் எப்படி பனை மரம் இருந்திருக்கும் என்ற கேள்வியினை எனக்கு வைத்தபடி இருக்கின்றன.
ஆரே போராட்டத்தில் முக்கியமாக தவற விடப்பட்டவர்கள் வார்லி மக்கள் தான். இப்பகுதிகளில் மட்டும் 27 சிறு ஆதிவாசி குடியிருப்புகள் காணப்படுகின்றன. இங்கு மட்டும் 10000 க்கும் அதிகமான பழங்குடியினர் வாழ்கின்றார்கள். ஆரே, ஆதிவாசிகளின் வாழ்விடம் என்பது எந்த சந்தேகத்திற்கும் அப்பார்பட்டது. இங்கு வாழும் வார்லி பழங்குடியினரை ஒரு நகரம் எவ்வளவு தூரம் நெருக்க இயலுமோ அத்துணை தூரம் நெருக்கிவிட்டு, மீண்டும் மீண்டும் அவர்கள் நிலத்தில் மனசாட்சியின்றி கைவைப்பது சரியானதல்ல. 3162 ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிவாசி மக்கள், நகரமயமாக்கலினாலும் நவீனமாக்கலினாலும் நெருக்கப்பட்டார்கள். 1970களில் மாநில காவல்துறை 100 ஏக்கருக்கு மேல் எடுத்துக்கொண்டது. மற்றொரு பகுதியினை மும்பை கால்நடை மருத்துவக்கல்லூரி எடுத்துக்கொண்டது. மும்பை திரைப்பட நகரம் 300 ஏக்கரை வளைத்துப்போட்டது, கொங்கன் விவசாய கல்லூரிக்காக 145 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு முதல் நிலை காவல் படைக்காக 100 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 40 ஹெக்டேர் நிலப்பகுதி சர்வதேச தரம் வாய்ந்த மிருக காட்சி சாலை அமைக்க பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 82 ஏக்கர் நிலம் இந்த வரிசையில் தான் வந்தமைகின்றது. இந்த வரிசை நீளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் இந்த வரிசையில் பலர் உள்நுழைய காத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
நண்பர் அனுப்பிய பழம் படங்கள் அனைத்தும் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவைகள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அவைகள் 1949ற்கு முந்தையவை அல்ல. மேலும் இப்படங்களைப் பார்த்தால், இந்த படங்கள் கோடை காலத்தில் எடுக்கப்பட்டவைகள் என்பது தெளிவாக புரியும். பசுமை இன்றி பூமி வறண்டிருக்கிறது. பனை மரங்கள் மட்டுமே விண்ணைத்தொட்டபடி உயர்ந்து நிற்கின்றன. எங்கு பார்த்தாலும் பனை மரங்கள் நிற்கும் ஒரு நிலப்பரப்பாக இது இருந்திருக்கிறது. ஒருவேளை இங்குள்ள காட்டுமானங்களுக்காக மற்ற மரங்களை இங்கே வெட்டி சாய்த்திருக்க வாய்ப்புகள் வளமாக இருந்திருக்கிறது. அவைகள் ஏன் பேசப்படவில்லை?. பனை மரங்கள் எப்படி தப்பித்து இந்த புகைப்படத்தில் இடம்பெற்றன? அதற்கு காரணம், ஆதிவாசிகள் இந்த மரங்களோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததால் மட்டும் தான்.
குறிப்பாக கள் ஒரு முக்கிய பானமாக பழங்குடியினர் வாழ்வில் இருந்திருக்கிறது, பனம்கிழங்கு மற்றும் பனம்பழங்களை உண்டு வாழ்ந்திருக்கிறார்கள், பனை ஓலையில் இவர்களின் வீடுகளின் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்விதமாகவே இவர்களின் இசைக்கருவியான தார்பா பனையோலையால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடர்புகள் மிக உறுதியாக இருந்ததால் ஆதிவாசி மரங்களான பனைமரங்கள் தப்பித்துக்கொண்டன. அவைகள் இன்று நமக்கு சாட்சியம் கூறும்படி புகைப்படத்திலிருந்து எழுந்து வருகின்றன.

A woman reacts as she touches a tree after it was cut down in the Aarey Colony suburb of Mumbai

வெட்டி வீழ்த்தப்பட்டு கிடக்கும் மரங்களை கண்ணீரோடு அணைக்கும் சூழியல் ஆர்வலர்கள், 2019

ஆரே காடு இல்லை என்று சொல்லுபவர்கள், தமிழகத்தில் பனை மரங்கள் ஒரு சேர நின்றால் அதனை பனந்தோப்பு என சொல்லுவதில்லை பனங்காடு என்றே சொல்லுவார்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுவது நன்று. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்ற பழமொழி, பனை சார்ந்து வாழும் வேட்டையாடும் விலங்காக நரி இங்கு வார்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும். பனை செறிந்திருக்கும் இந்த பகுதியில் வேறு மரங்கள் நின்றிருக்குமா என்றால் கண்டிப்பாக நின்றிருக்கும். ஆரே திருச்சபையினை ஒட்டி நிற்கும் பிற மரங்களில் பூவரசும் ஒன்று. பூவரசு இங்கே நிற்பதற்கான காரணம் அவை கடும் கோடையை எதிர்கொள்ள வல்லவை என்பதோடு, அது இயல்பாகவே கடற்கரையின் மரமும் கூட. நான் மாலத்தீவு சென்றிருந்தபோது பெருமளாவில் பார்த்த மரங்களில் ஒன்று பூவரசு மரம் தான். அங்கே அதிக அளவில் வேறு மரங்கள் வளர்வதில்லை. அது போலவே ஆல மரம் மற்றும் அரச மரங்கள் பனை மரத்தில் தொற்றி வளர்பவை. ஆரே காலனியைப் பொருத்த அளவில் பனை மரங்கள் தான் இங்கே பெருமளவில் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. இன்று அவைகள் இல்லை. பல்வேறு சூழல்களில் அவைகள் அழிந்துபோய்விட்டன. அவைகள் அழிவதற்குண்டான காரணங்களைப் போலவே, அவைகள் மறக்கடிக்கப்பட்ட காரணங்களிலும் நவீன வாழ்விற்கு பெருமளவு பங்கு உண்டு.

Aarey protest

மரங்கள் வெட்டியதைத் தொடர்ந்து வெடித்த போராட்டம், அக்டோபர் 2, 2019.

ஆரே ஒரு காடு தான் என்பதற்கு பனை மரமே சாட்சி. இங்கு வாழ்ந்த மக்கள் பழங்குடியினர் என்றால், அவர்களுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பு சரிவர புரிந்துகொள்ளப்பட்டால், பழங்குடியினர் வாழும் பகுதிகள் அனைத்துமே காடுகள் தான் என்பதை நாம் அறியலாம். ஆரேயில் மரங்கள் விழும் சத்தத்தில் இந்த ஆதி வாசிகளின் குரல் ஒடுங்கிப்போய்க் கிடப்பது தான் குலை நடுங்கச் செய்கிறது. எப்படி அமெரிக்காவில் பூர்வகுடியினர் அழித்தொழிக்கப்பட்டார்களோ அதற்கு சற்றும் குறையாத ஒரு நவீன அழித்தொழிப்பு இன்று நமது கண்கள் முன்பாக அரங்கேரிக்கொண்டிருக்கிறது. பனை சார்ந்த முன்னெடுப்புகள் என்பவை நமது வரலாற்றில் எஞ்சியவற்றை நாம் மீட்டெடுக்க நமக்கு உதவியாக இருக்கின்றன என்பது ஆரே சூழலை உற்றுநோக்கும்போது தெரியவருகிறது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஆரே பகுதியில் அரசு தரப்பில் பல மரங்களை வெட்டி வீழ்த்தினர். ஒரு நிமிடத்திற்கு ஒரு மரம் என்ற கணக்கில் அவசரமாக இரவோடிரவாக வெட்டி வேகம், அனைத்து சந்தேகங்களையும் சூழியல் ஆர்வலர்களுக்கு அதிகப்படுத்தியது. இரவோடிரவாக 400 மரங்கள் வெட்டப்படும் இடத்தில் கண்ணீர் உகுத்தபடி கூடி ஒரு உக்கிரமான போராட்டம் நிகழ்ந்தது. 29 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆரே காடழிப்பு குறித்த செய்தி சர்வதேச அளவில் இதன் மூலமாக சென்றடைந்தது. அந்த நேரத்தில் வெளியான ஒரு படத்தில் கூட முறிந்து போன மரங்களுக்கு அப்பால், பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. பனை மரங்களுக்கான குரல் தான் எழவேயில்லை.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
மலர்கொட்சொன்@க்மைல்.cஒம்
9080250653

பனையோலை பரிசுகள்

செப்ரெம்பர் 16, 2019

கிறிஸ்மஸ் காலங்களிலும் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகளிலும் போட்டிகள் வைத்தோ அல்லது வருகை பதிவினை முன்னிட்டோ திருச்சபையின் சிறுவர்களுக்கும், வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் பரிசுகள் வழங்கும் மரபு கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இந்த கலாச்சாரம் தேவையா என்கிற கேள்விகளை சிலர் எழுப்புவார்கள். கடவுளுக்காக செய்கிற நிகழ்ச்சிகளில் பரிசுகளை முன்னிறுத்துவது ஒருவகையில் உவப்பளிக்காத செயல் தான். இன்று எண்ணிப்பார்கவியலாத விலையுயர்ந்த பரிசுகளைக் கூட பெற்றுக்கொள்ளும் வசதி வாய்ப்பு கொண்ட திருச்சபை பிள்ளைகள் திருச்சபையில் கொடுக்கப்படும் பரிசுகளை கண்டு புளகாங்கிதம் அடைவதில்லை. வெல்கிறோம் என்ற எண்ணமே பெரும்பாலும் போட்டிகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தவும் பரிசளிக்கவும் காரணமாக அமைகிறது. சில இடங்களில் உற்சாகப்படுத்துகிறோம் என்ற எண்ணமும் உண்டு.  திருமறை சார்ந்த அறிவு தெளிவை திருச்சபையினர் பெற வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்படும் பரிசுகள் தான் அனைத்தும். அவ்வகையில் நான் திருச்சபையில் பரிசுகள் கொடுப்பதை ஏற்கிறேன்.

Key Chain

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச் சங்கிலி

எனது சிறு வயதில், அனைத்து போட்டிகளிலும் நான் முதல் பரிசை வென்றாக வேண்டும் என்பது எனது வீட்டினரின் எதிர்பார்ப்பு. பெரும்பாலும் நான் மூன்றாம் பரிசுகளை கூட எடுத்ததில்லை அதற்கும் கீழிருக்கும் பரிசுகளையே நான் பெற்றிருக்கிறேன். அது ஆறுதல் பரிசு என்று அழைக்கப்படும். எனக்கு உண்மையிலேயே ஆறுதல் அளிக்கும் பரிசுகள் தான் அவைகள். ஆனால் போதகராயிருக்கிற எனது அப்பாவிற்கு அது மிகப்பெரிய கவுரவ குறைச்சல். அவர் கையினால் நான் அந்த ஆறுதல் பரிசை வாங்கினால் அன்று வீட்டில் எனக்கு ஆறுதல் சொல்ல ஆள் தேவையிருக்கும். அந்த அடிக்கு பயந்து தான் நன்றாக படிக்க வேண்டியிருந்தது.

பரிசுகளில் எப்போதும் தரப்படுத்துதல் உண்டு. முதல் பரிசுகள் எப்போதும் விலையுயர்ந்ததாக இருக்கும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் விலை குறைந்து வந்து, ஆறுதல் பரிசு என்பது மிக குறைந்த விலையில் இருக்கும்.  பங்கு கொண்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆறுதல் பரிசுகள் கொடுக்கப்பட்டாலும், வாங்குபவருக்கு அது மிக பெரிய அவமானமாக இருக்கும். ஒருமுறை அவ்விதம் ஆறுதல் பரிசு பெற்ற ஒரு சிறுவன் தனது கையில் கிடைத்த கண்ணாடி கோப்பையினை வாங்கிய மறு கணமே அனைவர் முன்னும் வீசி நொறுக்கியதை நான் விக்கித்தபடி பார்த்து நின்றேன்.

குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு திருச்சபைகளும் கிறிஸ்மஸ் காலங்களில் பரிசுகள் வாங்குவதற்காக பல்வேறு சில்வர் பாத்திரக்கடைகளுக்கு ஏறி இறங்குவது வழக்கம். ஒரு முறை குமரி மாவட்டத்திலிருந்து மதுரை வரை சென்று சில்வர் பாத்திரங்களை எடுத்து வந்த நிகழ்ச்சிகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்மஸ் பரிசுகளை எடுக்கச் செல்லுவதின் மூலம் வரும் தகராறுகள், பரிசுகள் சார்ந்து நடைபெறும் சச்சரவுகள் என பல உண்டு. என்றாலும், பரிசுகளை நாம் நீக்க இயலாத ஒரு சூழல் நிலவுகிறது என்பதாகவே நான் கருதுகிறேன். ஏதோ ஒரு வகையில் அவைகள் நமக்கு தேவையாகின்றன. அதுவும் பரிசுகளை கொடுக்கவோ வாங்கவோ செய்வது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு கலாச்சார செயல்பாடுதான்.

Ikkam petti

பனை ஓலை ஈக்காம்பெட்டிகள் பரிசு பொருட்களாக திருச்சபையில் வைக்கப்பட்டிருக்கின்றன

திருச்சபை சில்வர் மோகத்திலிருந்து விலகி, மலினமான பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் ஒரு காலகட்டத்தையும் அடைந்திருக்கிறது. தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பலவுமே இன்றைய பரிசுகளுக்கு ஏற்றவைகளாக தெரிவுசெய்யப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் பரிசுகளைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், இவ்வித பரிசுகளை குறைந்த விலைக்கு வாங்கி சமாளிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் புழக்கத்தை எதிர்கொள்ளுவது திருச்சபையின் முக்கிய கடமையாகிறது. சூழியல் பார்வையில், திருச்சபையில் இவ்வித பரிசுகளை நீக்கி, பாரம்பரியமாக இயற்கையிலிருந்து பொருட்களைச் செய்யும் குயவர்களிடமிருந்தோ, மூங்கில் பொருட்களை செய்பவர்களிடமிருந்தோ, பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்களிடமிருந்தோ அல்லது இயற்கை வவசாயிகளிடமிருந்து வாங்கும் பொருட்கள் கூட மிக சிறந்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சிறந்த புத்தகங்களைக் கொடுப்பது கூட மாற்று பரிசாகவே இருக்கும்.

சரி எங்கிருந்து இவ்வித மாற்றங்களைத் துவங்குவது? நாம் தான் எப்போதும் நல்லுதாரணமாக இருக்கவேண்டும். நமது வாழ்வில் நாம் முன்னெடுப்பவைகளை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதுவே மிகப்பெரிய மாற்றத்திற்கான விதையாகிவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், திருச்சபையினை நான் எனது களமாக வைத்திருக்கிறேன். சமூகத்தில் நிகழும் மாற்றங்களை விட, திருச்சபையில் ஏற்படும் சூழியல் புரிதலுடன்கூடிய நல்ல மாற்றங்கள் நம்மை மிக பெரும் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும்.

Olai parisukaL

பனை ஓலை ஈக்காம்பெட்டியினை அம்மா திருமதி. சின்னபொண்ணு அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார்கள்

நான் பணி செய்யும் தூய பவுல், மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, ஆரே பால் குடியிருப்பு, பெண்கள் ஞாயிறு ஆராதனை இன்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே சிறப்பு செய்தியளிக்க அம்மாவை அழைத்திருந்தேன்.  தனது வாழ்வில் தந்தையினையும், கணவரையும் மகனையும் ஆருட்பொழிவு பெற்றோராக கொண்ட ஓர் அபூர்வ இறைத்தொண்டர். அம்மாவின் பேச்சிலுள்ள நேர்த்தி சொல்ல வரும் கூற்றில் உள்ள தெளிவு, வார்த்தைகளின் கச்சிதம், ஆழ்ந்த திருமறை அறிவு யாவும் அவர்களின் ஊழிய பின்னணியத்தையும் அவர்களின் ஆசிரியப்பணியின் தொடர்ச்சியையும் கூறுவதாக அமையும். மிக அருகிலிருந்து பார்த்ததினால் அவர்களின் வாழ்வே அற்பணிப்பு மிக்க ஒன்று என தைரியமாக சொல்ல முடியும்.   பகிர்தல் மற்றும் பராமரித்தல் (ஸ்கர் அன்ட் Cஅரெ) என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டார்கள். பெண்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகலையும் ஒருங்கிணைக்கும் ஜாஸ்மின் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்கள்.

பரிசுகள் குறித்து பேச்சு எழுந்த போது, நாம் ஏன் பனை சார்ந்த பொருட்களை வாங்கி பரிசளிக்கக்கூடாது என கேட்டேன். திருமண வாழ்வில் 10 வருடங்கள் என்னோடு இருந்து எனது வாழ்வின் நோக்கங்களை ஜாஸ்மின் அறிந்திருந்தபடியால், அவர்களுக்கும் இது நல் ஆலோசனையாக தெரிந்தது. ஆனால் என்ன பரிசு வாங்கலாம் என தெரியவில்லை. மும்பையில் கிடைக்காததாக இருக்கவேணும், தனித்தன்மை வாய்த்ததாக இருக்கவேண்டும், பெண்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும், என காரண காரியங்களை பட்டியலிட்டு, வருகின்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு முறம் வாங்கலாம் என முடிவு செய்தோம்.

முறம் உற்பத்தியாளர்களை நான் அறிவேன். நாங்கள் விசாரிக்கையில் அவர்கள் வசம் கையிருப்பு இல்லை. அதே நேரம் மொத்த வியாபாரியிடம் பேசியபோது விலை அதிகமாக இருந்தது. மேலதிகமாக முறத்திற்காக நான் பேசிய இடங்களில் குறித்த நேரத்திற்கு அவைகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தது. ஆகவே முறம் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

பல்வேறு யோசனைகளுக்கு இடையில் எனக்கு குமரி மாவட்டதில் கிடைக்கும் ஈக்காம் பெட்டி வாங்கினால் என்ன என தோன்றியது. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் ஈக்காம்பெட்டியினை அரிவட்டி என்றும் சொல்லுவார்கள். ஓலைகளின் ஈர்க்கிலை வகிர்ந்து தனித்துவமான பின்னல்கள் கொண்ட பெட்டிகள் இது. பெரும்பாலும் குமரி – கேரள  எல்லைகளில் வசிக்கும் தலித் சமூகத்தினர் பின்னும் ஒரு தொன்மையான படைப்பு இது. சர்வதேச அளவில் பனை ஓலை பொருட்களை விற்கும் மஞ்சள் என்ற செட்டியார் அமைப்பு, இவ்வித பின்னல்களுக்கு இரட்டை மலையாளம் என பெயரிட்டிருக்கிறது. காய்கறிகளைப் போட்டு வைப்பதற்கும், மசாலா பொருட்களைப் போட்டுவைப்பதற்கும் முற்காலங்களில் பயன்பட்ட பெட்டி இது. ஆனால் அரிவட்டி என்ற இதன் பெயர் காரணம், ஊறப்போட்ட அரிசியினை வடித்து உலர்த்தியெடுக்க பயன்பட்டதால் பெற்றது. முறத்தை  விட மிகவும் விலை குறைவானது, நாங்கள் வாங்கும் சக்திக்குள் இருப்பது. ஆகவே, அரிவட்டி வாங்கலாம் என்றே முடிவு செய்தோம்.

எப்படி வாங்குவது என்ற கேள்வி எழுந்த போது, எனது நண்பரும் மார்த்தாண்டத்தில் செயல்பட்டுவரும் பால்மா மக்களமைப்பில் உள்ள செயல் இயக்குனர் திரு ஜேக்கப் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஞாயிறுக்கிழமை இரவு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். திங்கள் காலை 9 மணிக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டார்கள். அப்படியே காலை 12 மணிக்குள் எங்களுக்கு அனுப்பியும் விட்டார்கள். புதன் கிழமை மாலை ஆறு மணிக்கு எங்கள் கைகளில் ஓலைப் பெட்டி வந்து கிடைத்தது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரோனும் மித்திரனும் இதனை எப்படி அடுக்குவது என்பதைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்தையும் துடைத்து பிசிறுகளை வெட்டி ஒழுங்குபடுத்தி தந்தார்கள்.

இதே வேளையில் எங்கள் திருச்சபையின் இளைஞர்கள் வருகிற 22.09.2019 அன்று வாலிபர் ஞாயிறு ஆராதனையினை அனுசரிக்க இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கும் பரிசுகள் வேண்டியிருந்தது. அவர்களுக்கான பரிசு இன்னும் விலைக்குறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். பனையோலையில் செய்யும் பனையோலை சாவி சங்கிலி கொடுத்தால் என்ன என்று கேட்டேன். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்கள். பனையோலை சாவி சங்கிலியினை தயாரிப்பவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகராஜன். பேசியபோது அவர்களும் அனுப்புகிறேன் என வாக்களித்து திங்கட் கிழமையே அனுப்பிவிட்டார்கள். சனிக்கிழமை மாலை 7 மணிவரை எனது கைக்கு வராத அந்த பரிசுப்பொருளால் நாங்கள் குழம்பிப்போனோம். நாகராஜன் அவர்களைக் கேட்டபோது வந்து சேர்ந்துவிட்டதாக கூறினார்கள். இரவு 8 மணிக்கு நாங்கள் ஆலயத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் அந்த பொட்டலம் வீட்டிற்கு வந்ததாக அம்மா சொன்னார்கள். நாம் முயன்று ஒரு படி முன்னே செல்லும்போது கடவுளின் துணை அனைத்து படிகளிலும் நமக்கு முன்பே உதவி செய்யும்படி காத்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனோம்.

பெண்கள் சிறப்பு தொழுகையில் கூடி வந்த அனைவருமே மகிழ்வுடன் இந்த பரிசுகளை எடுத்துச் சென்றனர். ஒவ்வொருவரின் முகத்திலும் அத்தனை பிரகாசம். அது எனக்கு மிகப்பெரிய ஆறுதல், ஊக்கம், ஆக்கம் அனைத்துமாகியது. அரிவட்டிகள் வந்த நாள் அன்று ஜாஸ்மினுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரிவட்டிகள் ஒன்றுக்குள் ஒன்றாக 7 பெட்டிகளை வைத்திருப்பார்கள். வெளிப்புறம் இருப்பது பெரிதாகவும், உட்புறமிருப்பது அளவில் சிறிதாக இருப்பதும் இயல்பு. இவ்விதம் செய்தாலே இவைகளை சந்தைக்கு ஒருங்கே எடுத்துச் செல்ல இயலும். ஆகவே ஒருவருக்கு பெரிதும் மற்றொருவருக்கு சிறிதுமா என்ற கேள்வியை அவள் முன்வைத்தாள். நான் கூறினேன், இது பிற பொருட்களைப்போல அல்ல, உயிர் தன்மை கொண்ட பொருட்கள் இவைகள். கைகளால் செய்யப்பட்டதால் தனித்துவம் கூடியவைகள். அந்த தனித்துவமே இவைகளை பெற்றுக்கொள்ளுவோருக்கு மகிழ்வளிப்பதாக அமையும் என்று கூறினேன். அது அவ்விதமாகவே நிகழ்ந்தது.

அனைத்தும் ஒழுங்காக நிறைவுற்றபடியால், இதனை ஏன் நாம் ஒரு முன்னுதாரணமாக முன்வைக்ககூடாது என எண்ணினேன். திருச்சபையின் சூழியல் பங்களிப்புகள் குறித்து பலவற்றை பேசிக்கொண்டிருக்கிறோம், தமிழகத்தில் பனை மரங்களை நடும் முயற்சிகள் திருச்சபைகளிலும் கூட நடைபெற துவங்கிவிட்டன. ஆனால் பனை சார்ந்து வாழும் மக்கள் அனைவரையும் திருச்சபை ஓர் விலக்கத்துடனேயே அணுகுகிறது. இந்த நிலை மாறினால் ஒழிய, திருச்சபை சூழியல் குறித்த முழுமையான பார்வையினை எட்டிவிட இயலாது. இன்றும் தமிழகமெங்கும், பனை சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அனேக கைவினைக் கலைஞர்கள் போதுமான ஊக்குவிப்பின்றி தங்கள் பொருட்களை விற்க இயலாமல் தத்தளித்தபடி இருப்பதைக் காண்கின்றோம். திருச்சபை திட்டமிட்டு, பனையோலைப் பொருட்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டால், பல ஆயிரம் குடும்பங்கள் பசிப்பிணியிலிருந்து வெளியே வரும். நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான கடமை இது. எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் அவர்களிடம் நாம் காட்டும் இவ்வன்பினால் நமது அன்பின் ஆண்டவர் குறித்து மவுன சாட்சிகளாக நாம் உயர்ந்து நிற்போம்.

Key

பனை ஓலையில் செய்யப்பட்ட சாவிச்சங்கிலிகள்

பனை ஓலைகளாலான பரிசுகளை தேர்ந்தெடுப்பதும் வாங்குவதும் எப்படி? நமது தேவைகளுக்கேற்ப அவைகளை நாம் தெரிவு செய்ய இயலும். பனை ஓலையில் செய்யப்படும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் உண்டு, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் உண்டு, திருவிழா காலங்களுக்கான வீட்டு அலங்கார தோரணங்கள் உண்டு,  பயன்பாட்டு பொருட்கள் உண்டு, பாரம்பரிய பொருட்கள் உண்டு, சமையலறை பொருட்களும் உண்டு. இவைகளை செய்யும் கலைஞர்கள் குறித்து நாம் உள்ளூரிலேயே தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். மேலும் தமிழகமெங்கும் இவ்வித கலைஞர்கள் விரவி பரவியிருக்கிறார்கள். இவர்களைத் தேடி தெரிவு செய்வதும், இவர்களுக்காக பணியாற்றுவதும் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. பல்வேறு விதமான பரிசுகள் தேவை என நாம் அறியும்போது, பல இடங்களில் இருந்து நம்மால் இவைகளை தருவிக்க இயலும். இன்று இக்கலைஞர்களுக்கு இவ்விதமான ஒரு ஊக்குவிப்பு மிக தேவையாக இருக்கிறது. முன்கூட்டியே நேரமெடுத்து சொல்லிச் செய்வது, ஏற்ற நேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும். பெரும்பாலும் பரிசுகளை எடுப்பதற்கு நாம் இறுதி கணத்தை வைத்திருப்பதனால் நம்மால் இயற்கை பொருட்களை குறித்த நேரத்தில் வாங்க இயல்வது இல்லை.  அதற்கும் ஒரு யோசனை இருக்கிறது. வருட துவக்கத்தில் நமக்கு தேவைப்படும் பொருட்களின் குத்துமதிப்பான ஒரு எண்ணை நாம் கூறிவிட்டோமென்று சொன்னால், இறுதி நேரத்தில் சிறிது கூடினாலோ குறைந்தாலோ சமாளித்துவிடலாம். என்றாலும் கருத்தில் கொள்க, நாம் எவ்வகையிலும் இவர்களது வாழ்வில் எந்த சுமையினையும் ஏற்றிவிடலாகாது. ஆகவே முதலிலேயே ஒரு முன்பணம் கொடுத்து வைத்துக்கொள்ளுவது சிறப்பு.

பலருக்கும் ஓலைகளில் செய்யப்படும் இவைகள் வேடிக்கையாக  இன்று காணப்படலாம். ஓலைகளில் கொடுப்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது எனவும் வினவலாம். ஆனால் காடு மலை ஏறி சென்று பல பணித்தளங்களைப் பார்க்கும் நமக்கு, சூழியல் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மக்களின் விரிவு தெரியும். அவர்களின் பணியின் முக்கியத்துவம் தெரியும், அவர்களை நாம் ஆதரிக்கும் திருமறை சார்ந்த பின்னணியம் புரியும்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர் நடபடிகள்) தொற்காள் எனும் பெயருள்ள சீடரைக் குறிப்பிடுகிறது. தொற்காள் என்றால் பெண் மான் என்றே பொருள்படும். அவள் நோய்வாய்பட்டு மரித்துவிடுகிறாள்.  “நன்மை செய்வதிலும், இரக்கச் செயல்கள் புரிவதிலும் அவர் முற்றிலும் ஈடுபட்டிருந்தார்” என பார்க்கிறோம்.  அவரது மரணத்தில் அனேக விதவைகள் பங்குகொண்டனர். பேதுருவினிடம் அவர்கள் தொற்காள் செய்த அங்கிகளையும் அவள் செய்து கொடுத்த ஆடைகளையும் காண்பித்து கண்ணீர் சொரிந்தனர். என்னே ஒரு சிறந்த காட்சி? உன்னதமான சாட்சி அல்லவா இது? இன்று, பனையோலைப் பொருட்களைச் செய்பவர்களுக்காக நாம் கண்ணீர் உகுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, அவர்கள் வாழ்வின் கண்ணீரைத் துடைக்கும்படியாகவாவது நாம் செயல்படவேண்டாமா? (தி. ப 9: 36 – 42) பேதுரு அந்த பெண்ணை உயிரோடு எழுப்புவதாக திருமறைப்பகுதி நமக்கு விளம்புகிறது.

என்னைப்பொறுத்தவரையில், தமிழகத்திலுள்ள திருச்சபைகள் இணைந்து ஒரு வருடம் பனையோலைப் பொருட்களை வாங்கத் துவங்கினால் மறு வருடமே பலநூறு வடிவங்கள் புதிதாக கிளைத்தெழும் வாய்ப்புகள் இருக்கின்றன. அது இன்னும் அனேகருக்கு வேலைவாய்ப்பையும் ஒரு வேளை உணவையும் உறுதிச்செய்யும். திருச்சபை இன்று வாழும் தொற்காள்களுக்காக செய்யும் ஒரு அர்த்தம் பொதிந்த  மன்றாட்டு இதுவாகவே இருக்கமுடியும்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

malargodson@gmail.com

9080250653

பனை நகரம் 13 

செப்ரெம்பர் 12, 2019

 –  

பனை மலை

மும்பை என்பது குட்டித் தீவுதொடர்கள் தான். ஆனால் அவைகள் நாளாவட்டத்தில் இணைக்கப்பட்டன. மும்பையின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றாக இணைக்கப்படும் நிகழ்வு ஆங்கிலேயர் காலத்தில் தான் நிகழ்ந்தது. கிரேக்க புவியியலாளர் டாலமி (Ptolemy) இவ்விடத்தினை “ஹெப்டமேசியா” என்றே குறிப்பிடுகிறார். அதற்கு ஏழு தீவுகளின் தொகை என்று பொருள். மும்பை கற்காலம் துவங்கி மனிதர்கள் சுற்றிதிரிந்த இடம் தான். கி மு மூன்றாம் நூற்றாண்டு முதல் மும்பையினை ஆட்சிபுரிந்தவர்கள் குறித்த தரவுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் சுதேசி மன்னர்களால் ஆளப்பட்ட இப்பகுதிகள் இஸ்லாமியர் கரத்திலிருந்து போர்த்துக்கீசியர்கள் கரத்திற்கு சென்றது. 1662 ஆம் ஆண்டு போர்துக்கீசிய இளவரசி காத்தரினும், இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் ஆகியோர் திருமணத்தில் இணைந்தனர். இந்த திருமணத்தின் மூலமாக மும்பை தீவுகள் இங்கிலாந்து மன்னருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மும்பை எப்படி இருக்கும் என்றே தெரியாத இரண்டாம் சார்லஸ், அதனை கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார். கம்பெனி மும்பையில் நுழைய 10 பவுண்டுகள் மட்டுமே வருட வாடகை கொடுத்திருக்கிறார்கள். கம்பெனி தீவு கூட்டங்களுக்குள் தகவல் தொடர்புகளுக்காக வேண்டி மலைகளை உடைத்து கடலுக்குள் தள்ளி இந்த நிலப்பரப்புகளை ஒன்றாக்கினார்கள். அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. பரபரப்புகள் செய்வது என்ன என்று இன்று நாம் தெளிவாகவே அறிகிறோம்.

Zion Top city

சயன் மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து

கடற்கரையில் வாழும் மீனவ சமூகமான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே மும்பையின் பூர்வ குடிகள் எனக் கூறப்படுவது உண்டு. இவைகள் ஏற்றுக்கொள்ளகூடிய உண்மைகள் தான். இத்தனை தீவுகளில் மீன் பிடியினை தங்கள் வாழ்வாதரமாக கொண்டிருக்கிற மக்கள் தான் வாழ இயலும். இன்றும் கடற்புறங்களில் மீனவ குடிகளான கோலி மற்றும் ஆகிரி சமூகங்களே பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான கடற்கரைப்பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் ஓங்கி வளருவதைப் பார்க்கையில், இம்மீனவ சமூகத்திற்கும் பனைக்கும் உள்ள தொன்று தொட்ட உறவினை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படியே பனை மரம் ஏறுகின்ற சமூகமான பண்டாரிகளும் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பு என்னைக் கிளர்ந்தெழச் செய்தது. பனை மரங்கள் எப்படி குமரி மாவட்டத்தில் மீனவர்களுடனும் நாடார்களுடனும் இணைத்திருக்கிறதோ அதுபோலவே என எண்ணிக்கொண்டேன். ஆனால் தீர்க்கமாக ஏதும் அறிந்து கொள்ளவோ, கண்டுபிடிக்கவோ இயலவில்லை என்பது தான் உண்மை. இவர்தம் வாழ்வின் உள்ளடுக்குகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்தால், பனை இவர்கள் வாழ்வில் பெற்றிருந்த உண்மையான இடம் என்ன என்பதனை நாம் அறியலாம். நகர மயமாக்கலில், பெரும்பாலான பனை சார்ந்த நினைவுகள் அற்றுப்போயிருக்கும் சூழலில், இவைகளை மீட்டெடுப்பதோ கண்டுபிடிப்பதோ எளிது அல்ல.

மொத்த மஹாராஷ்டிர பகுதிகளுமே பவுத்தர்களின் காலடி பட்ட இடங்கள் தாம். கி மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி பி 2 ஆம் நூற்றாண்டு வரை பவுத்தர்களின் இயக்கம் இப்பகுதிகளில் தொடர்ச்சியாகவும் சீராகவும் இருந்திருக்கிறது.  சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கெனரி குகைகளே இதற்கு சான்று. போரிவலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் பனை மரங்கள் இருப்பதைக் காணலாம். வனவிலங்கு பூங்காவை ஒட்டியிருக்கும் அனைத்து பகுதிகளிலும், ஏன் பூங்காவின் உட்பகுதியிலும் சில பனை மரங்கள் இருப்பதை இன்றும் நாம் கண்டு கொள்ள இயலும்.

Sion Station

சயன் இரயில் நிலையம்

நான் பனை மரச்சாலை பயணம் செல்லுவதற்கு பண உதவி செய்தவர்களுள் எனது திருச்சபை அங்கத்தினரான திரு. ராஜேந்திர ராஜன் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். சயன் என்ற பகுதியில் அவரது அலுவலகம் இருந்தது. நான் அவரை சந்தித்துவிட்டு மீண்டும் வெளியே வருகையில் அங்கே ஒரு பூங்காவைப் பார்த்தேன். ஏதோ ஒரு உந்துதலில் அந்த பூங்காவிற்குள் நுழைந்தேன். பூங்காவிலிருந்து திடீரென படிகள் செங்குத்தாக ஏறின. அனேகர் அந்த படிகளில் ஏறியபடியும் இறங்கியபடியும் இருந்தனர். மீண்டும் என் வாழ்வில் ஒரு இன்ப அதிர்ச்சி. எனது கண்களை ஏறிட்டு பார்த்தபோது அங்கே பனை மரங்கள் நின்றன.  அன்று அந்த கோட்டைக்குள் நான் நுழைந்து பார்த்தபோது சில பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். பெரும்பாலும் காதலர்களும், இளைஞர்களுமே அங்கிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர். குழந்தைகள் மும்பையின் நெருக்கடியினை மறந்து தேனிக்களாய் பறந்தோடிக்கொண்டிருந்தனர்.

ஒரு கோட்டையில் பனை மரம் நிற்பது என்பது அந்த கோட்டையின் நிலவியலை இன்றும் நம் கண்முன் கொண்டுவரும் ஒரு சாட்சி தான். குறிப்பாக பனை மரம் குறித்த நினைவுகள் ஏதும் பொதுபுரிதலில் இல்லாத ஒரு நிலப்பரப்பில், பனை மரங்கள் நிற்கின்றன என்பது ஒரு முக்கிய தடயமாகும். எவ்வாறு இவைகள் இங்கே வந்திருக்கும்? கோட்டை காவலை மீறி, பனை மரங்கள் எப்படி ஒரு கோட்டைக்குள் நுழைந்திருக்கும் என்பது முக்கிய கேள்வி தான். இக்கேள்விகளின் பின்னணியில் தான், பனை மரங்கள் இப்பகுதிக்கே உரித்தானவைகள் என்ற புரிதல் மெலெழுந்து வருகின்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வில் இம்மரங்கள் இணைந்தே இருந்திருக்கின்றன.  எவ்வகையில் என நமக்கு இப்போது தெரியாவிடினும், இம்மரம், மும்பையின் அடையாளமாக இன்றும் நின்றுகொண்டிருப்பது சிறப்பு.

Sign Board

சயன் கோட்டையின் நுழைவுப்பகுதியில் உள்ள பூங்கா

சயன் என்கிற பெயர் திருமறையிலிருந்து எழுந்த பெயர். சியோன் மலை என்கிற பெயரையே இங்கு வந்து வாழ்ந்த கிறிஸ்துவ துறவிகள் வைத்திருக்கின்றனர். யூதர்களைப் பொறுத்தவரையில் சீயோன் என்பது மலையின் மேல் இருக்கிற ஒரு பட்டணம். கடவுள் தங்கும் ஒரு மலை எனவும், இஸ்ரவேலர்களின் தலை நகரம் எனவும் அதனை அழைப்பார்கள். ஆகவே கிறிஸ்தவர்களுக்கும் சீயோன் என்ற பெயரின் மீது பெரு விருப்பம் இருந்தது. பரலோகத்தையே புதிய சீயோன் என குறிப்பிடும் போக்கும் உண்டு. போர்த்துக்கீசியர்கள் மும்பையினை கைப்பற்றியபோது பல கிறிஸ்தவ துறவிகள் இங்கிருந்த இடங்களில் தங்கள் வாழ்வை அமைத்து சமய தொண்டினை மேற்கொண்டனர். இன்று காணப்படும் சயன் என்ற இரயில் நிலையத்தின் அருகில் காணப்படும் குன்றில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் இவ்விதம் உருவானது தான்.

இதன் மராட்டிய பெயர் ஷீவ் என்று சொல்லப்படுகிறது. இரயில் பயணத்தில் எல்லாம் மராட்டிய அறிவிப்புகளில் ஷீவ் என்று அறிவிக்கப்படுகையில் இது என்ன என்றே ஆச்சரியமாக பார்ப்பேன். எல்கை என்ற பொருளுடைய இப்பெயர், போர்த்துக்கீசியர் ஆட்சிபுரிந்த சல்செட்டே என்கிற நிலப்பகுதிக்கும் பித்தானியர்கள் ஆட்சிபுரிந்த பரேல் என்ற நிலப்பகுதிக்கும் எல்லையில் எழுந்ததால் இப்பெயர் வந்தது என்பார்கள்.

மும்பையின் மையப்பகுதியாக சயனை இன்று நான் உருவகித்துக்கொள்ளுகிறேன். மும்பையின் கடற்கரைப் பகுதியிலிருந்து மேற்கு பகுதி நோக்கி வருவதற்கு சயன் ஒரு முக்கிய சந்திப்பு. நான் 12 வருடங்களுக்கு முன்பு மும்பை வந்த போது, பேலாபூர் பகுதியிலிருந்து மலாட் நோக்கி பயணிக்கையில், சயன் தாண்டி தான் பேருந்து செல்லும். ஒரு முறை பேருந்தில் நான் பயணிக்கும்போது, அங்கிருந்த வணிக வளாகத்தின் அருகில் நிற்கும் பனை மரத்தினைப் பார்த்தேன். வேறு மரங்களே இல்லை. ஆனால் அந்த வணிக வளாகத்தின் முன்பு நெடு நெடுவென்று நின்ற அந்த பனைமரம், பல கதைகளை தன்னகத்தே உறையவைத்திருந்ததை என்னால் உணர முடிந்தது. மும்பை வந்த புதிதில், தமிழர்களால் தான் பனை மரங்கள் மும்பைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் என நான் எண்ணியதற்கு இதுவும் ஒரு காரணம்.

Zion Tops

சயன் கோட்டையின் சிதிலங்களின் ஊடாக பனை

சயன் அருகில் தான் தாராவி என்கிற தமிழர் வாழும் சேரிப் பகுதியும் இருக்கிறது. தாராவியிலும் பனை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதைப் பார்க்கலாம். மும்பை தமிழ் சங்கம் கூட சயனில் தான் அமைந்திருக்கிறது. இங்குள்ள தமிழ் நூலகம் மிக முக்கியமானது. தமிழ் எழுத்தாளாரான திரு. நாஞ்சில் நாடன் இதன் நூலகத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எனது இரயில்  பயணங்களில் சயன் இரயில் நிலையத்தைக் கடந்து செல்லுபோதெல்லாம் அதன் அருகில் நெடு நெடுவென்று வளர்ந்து நிற்கும் பனை மரத்தினைப் பார்த்திருக்கிறேன். இதனை நான் ஒருபோதும் சயன் மலையில் நான் பார்த்த மரங்களுடன் ஒப்பிட்டோ இணைத்தோ பார்த்ததில்லை. அவ்வித எண்ணம் எனக்கு அப்போது தோன்றவுமில்லை. மும்பை ஒரு பனை நகரம் என்ற தொடரை எழுத எண்ணியபோது தான் இப்பகுதிக்குச் சென்று பார்த்தால் என்ன எனத் தோன்றியது. ஆகவே மீண்டும் சயன் நோக்கி பயணித்தேன்.

சயன் இரயில் நிலையத்தின் அருகில் வந்து பார்த்தபொழுது அந்த பனை மரம் நெடுந்துயர்ந்து நின்றது. ஒற்றைக்கால் தவம் போல. ஏன் துறவிகள் இப்பகுதியினை 500 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருக்கிறார்கள் என்பதற்கு விடை கிடைத்தது போல உள்ளது. பனை சூழியல் துறவிகளுக்கு மிகப்பெரும் ஆன்மீக அமைதியினையும் ஆற்றலினையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது உண்மையிலேயே ஒரு ஆன்மீக மரம் தான். போர்த்துகீசிய துறவிகளுக்கு பனை இறையம்சம் நிரம்பிய ஒரு மரமாக காணப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

சயன் இரயில் நிலையம் பாறைகளைக் குடைந்து பாதாளத்தில் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு. அந்த பாறையின் உச்சியில் தான் இந்த பனை மரம் நிற்பதைப் பார்த்தேன். சமீபத்தில் எவரும் வந்து நட்டுபோட்டிருக்கும் ஒரு மரம் அல்ல இது. நூறாண்டுகள் கடந்த ஒரு மரம். எப்படி இது இங்கு வந்திருக்கும்? விடை எளிதானது தான். பல பனை மரங்கள் நின்ற பகுதியில் பள்ளம் ஏற்படுத்தியதில் எஞ்சிய பனை மரம் தான் இது. மற்ற பகுதிகள் அனைத்தும் கட்டிடங்களால் நிறைந்துவிட்டன. மே மாதம் நான் ஒரு திருமணத்திற்காக சயன் பகுதி சென்றபோது, அங்கே ஒரு தள்ளுவண்டியில் நுங்கினை வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்து நடந்தே சயன் கில்லா என்றழைக்கப்படும் கோட்டைக்குச் சென்றேன். செல்லும் வழியில் தான் நல்லாலோசனை மாதா ஆலயம். நடை பாதையில் நடந்து செல்லும்போது மிகப்பெரிய கோட்டை சுவர் இருப்பதால் என்னால் அந்த கோவிலைக் காண இயலவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி அதனைக் கடந்து சென்றேன். ஐந்தே நிமிடத்தில் கோட்டையினை அடைந்துவிட்டேன். ஆம் சில படிகள் ஏறினவுடனேயே பனை மரங்கள் என் கண்களுக்குத் தென்பட்டன. நல்ல வேளை பனை மரங்கள் ஒன்றும் வெட்டப்படவில்லை. அப்படியே நிற்கின்றன, ஆனால் இந்த முறை நான் பனை மரங்களை எண்ணத் துவங்கினேன். முதலில் நான்கைந்து மரங்கள் நிற்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. நாற்பதிற்கும் அதிகமான பனை மரங்கள் அங்கே நிற்பதை கண்டு பிரமித்துப்போனேன். அது உண்மையிலேயே ஒரு நல்ல எண்ணிக்கை தான். இரண்டு பனையேறிகள் தாராளமாக ஒரு பருவத்திற்கு இணைந்து வேலை பார்க்க இயலும். கோட்டையினை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் பதநீரை விற்பனை செய்ய இயலும். தொல்லியல் துறை இந்த முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

1669 முதல் 1677 முடிய கட்டப்பட்ட இந்த சிறிய கோட்டை இன்று சிதிலமடைந்தே இருக்கிறது. சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தையும் இதன் உச்சியிலிருந்து பார்க்கலாம். ஆம் அதற்காகவே இந்த கோட்டைக் கட்டப்பட்டது. பிரிட்டிஷார் நிர்வாகித்த பரேல் பகுதிக்கும் போர்த்துக்கீசியர் நிர்வாகித்த சல்சட்டே பகுதிக்கும் உள்ள எல்லையில் இது கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அப்போதைய பாம்பே கவர்னரான கீரார்ட் ஆங்கியர் (Gerard Aungier ) இதன் கட்டுமான பணிகளை முன்னெடுத்தார். இதன் உச்சியில் சென்று பார்க்கும்போது நான்குதிசையும் பரவி விரிந்து காட்சியளிப்பது இந்த பகுதியினை காவல் கோட்டையாக பிரிட்டிஷார் அமைத்திருப்பதன் பின்னணியத்தை தெரிவிக்கும்.

Sion Church

நல்லாலோசனை மாதா ஆலயம், சயன்

சயன் கோட்டைக் குறித்து பழைய புகைப்படங்கள் ஏதும் கிடைக்குமா என இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு மிகப்பழைய ஓவியம் கிடைத்தது.  சயன் கோட்டையிலிருந்து வரையப்பட்டது, தூரத்தில் தெரியும் தீவில் பனைமரங்கள் கூட்டமாக காணப்படும் ஒரு காட்சி பதிவாக்கப்பட்டிருந்தது. தொலை தூரத்தில் தெரியும் அந்த காட்சி ஏற்படுத்திய மனக்கிளர்ச்சி விவரிக்க முடியாதது, வரைந்த ஓவியரின் மனம் எத்துணை கூர் கொண்டிருந்தால் அந்த பனை மரங்களை ஓவியத்தில் மென்மையாக தீட்டி எடுத்திருக்கும். பனை மீதான ஈர்ப்பு என்பது மும்பை வந்த வெளிநாட்டவரையும் விட்டுவைக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சென்றிருந்த போது பெரும்பாலும் பனம்பழங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. என் கண்களுக்கு பனம்பழங்கள் தட்டுப்படவில்லை. பொதுவாக இப்பகுதிகளை சுத்தம் செய்கிறோம் என்று எண்ணி, விழுந்த பனம்பழங்களை குப்பைகளுடன் அள்ளி வீசியிருப்பார்கள். பனம் பழங்களை உண்ணும் அறிவு பெற்றோர் யாரும் இங்கு இன்று இருக்கப்போவதில்லை. அல்லது பொறுக்கியுண்ணும் காலம் கடந்துவிட்டதோ என்னவோ. ஒரு பழமாவது கிடைத்திருந்தால் எடுத்து வந்திருக்கலாமே என நினைத்தேன். பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள்.

மீண்டும் திரும்பி வருகையில் நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு செல்லலாம் என நினைத்தேன். அப்போது கதவு திறக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு பிறகு தான் திறக்கும் என்றார்கள். இன்னும் நேரம் இருந்தது, நான் உள்நுழையும் எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால் அங்கு ஒரு வான் நடை பாதை இருந்தது. அதுவழி சென்றால் ஆலயத்தைப் பார்க்கலாம். ஒருவேளை அங்கே பனை மரங்கள் ஏதும் இருக்கலாம் என எண்ணியபடி அந்த படிகளில் ஏறினேன். ஆம் நான் நினைத்தது போலவே இரண்டு பனை மரங்கள் அந்த வளாகத்தில் நின்றன.

பொதுவாக பனை மரம் கள் தயாரிக்கும் உள்ளூர் தொழிற்சாலை என்ற புரிதலே நமக்கு பரவலாக இருக்கிறது. அதாவது கள் என்பது ஏற்புடைய ஒரு உணவு பொருள் அல்ல என்ற நோக்கிலேயே அவ்வாறு இருக்கிறது. அப்படி இருந்தாலும், இஸ்லாமியர்களின் ஆட்சியிலும், கிறிஸ்தவர்களின் ஆட்சியிலும் இம்மரங்கள் எந்த சேதமும் அடையவில்லை. பனை சார்ந்து கள் இறக்கும் சமூகங்களும் தளத்து பெருகியபடியே இருந்தார்கள். சமயங்கள் இந்த மரத்தை தீங்கானது என்றோ தீண்டத்தகாதது என்றோ முன்வைக்கவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. அவ்விதமான எண்ணங்கள், ஒருசிலரின் தனிப்பட்ட பார்வையாக வெளிப்பட்டிருக்கலாமே ஒழிய இம்மரங்களை தீயது என எண்ணி அப்புறப்படுத்தும் முயற்சிகளை எவருமே செய்ததில்லை என்பது தான் உண்மை.

நான் கீழிறங்கி மீண்டும் இரயில் நிலையத்திற்கு வந்தபோது மீண்டும் அந்த மரத்தைப் பார்த்தேன். நல்லாலோசனை மாதா ஆலயத்திற்கு முன்பாக சிலுவை என எழுந்து நிற்பது தென்பட்டது. இரயிலுக்காக வெட்டிய பாறையின் விளிம்பில் அது தனது கடைசி நாட்களை எண்ணியபடி நின்றுகொண்டிருந்தது. சட்டென்று எனக்குத் தோன்றியது இதுதான். நவீன யுகமே பனைகளுக்கு எதிரி. இரயில் அந்த நவீன யுகத்தின் ஒரு அடையாளம். அந்த இரயில் பாதை வெட்டி வீசியெறிந்த பனைகாலங்களின் எச்சமாக இன்று இப்பனை நின்றுகொண்டிருக்கிறது. நவீன யுகத்தில் பனை தப்பிபிழைக்குமா என்பது ஆகப்பெரிய கேள்விதான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

malargodson@gmail.com

9080250653

பனம்பழ கடைகள் 1000

செப்ரெம்பர் 10, 2019

தமிழகத்தில் உள்ள எந்த கடைகளிலும் கிடைக்காத ஒரு பழம் உண்டென்று சொன்னால் அது பனம்பழம் தான். பல்வேறு நாடுகளிலிருந்தும், தேசத்தின் மறு கோடியான காஷ்மீரிலிருந்தும் நமது ஊருக்கு பல்வேறு வகையான பழங்கள் அனுதினமும் வந்தவண்ணம் உள்ளன.னாம் கல் விட்டு எறிந்து பொறுக்கி உண்ட நாவல் பழங்களே கிலோ 200 ரூபாய் வரை விற்கிறது. நாம் மரத்திலேறி பறித்த கொய்யா, மா போன்றவைகள் சந்தையில் இன்று  கிலோ 40 ரூபாய்க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. இப்படியிருக்க  நமது மாநில மரமாகிய பனை மரத்தின் பனம்பழங்கள் கடைக்கு வராததற்கு காரணம் என்ன?

Panam pazam juice

பனம்பழ சாறு கலந்த தண்ணீரை மாடு குடிக்கிறது

தமிழகம் மிக மெல்ல தன்னை ஒரு நுகர்வு கலாச்சாரத்திற்குள் நுழைத்துக்கொண்டது. விலைக்கொடுத்து வாங்கி சாப்பிடுவதே “கெத்து” என எண்ணி தனது சேமிப்பை இழந்துகொண்டிருக்கும் காலம் இது. பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் நம்மை விட்டு அகன்று போய்கொண்டிருக்கின்றன. பனம்பழங்கள் அவைகளில் தலையாயது. பனம் பழங்கள் பொதுவாக பசியை ஆற்றும் தன்மை மிக்கது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட பனம்பழங்களை தினசரி உணவாக எடுத்துக்கொண்டிருந்த   ஒரு சமூகத்தின் குழந்தைகளுக்கு இன்று பனம்பழங்களின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் அற்ற நிலையில் உள்ளது. பனை மரம் என்றாலே நுங்கு என்கிற ஒற்றைப்படையான புரிதல் மட்டுமே இருக்கிறது.

நான் ஒருமுறை ஹைதராபாத் சென்றிருந்த போது, அங்கே ஒரு சாலை நெடுக பெண்கள் அமர்ந்து நுங்கினை  விற்றுக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 – 40 பெண்கள் சீரான இடைவெளியில் இருந்தபடி செய்யும் அந்த விற்பனையை நான் ஆச்சரியத்துடன் பேருந்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பரிடம் பிற்பாடு அது குறித்து விசாரித்தபோது. நுங்கு என்பது ஏழைகள் உண்ணும் உணவு என்னும் ஒரு பிம்பம் இங்கே இருக்கிறது, ஆகவே வசதியானவர்கள் அதனை வாங்குவதில்லை என்றார். வசதியானவர்கள் என்பதை நாம் நடுத்தரவர்க்கம் என புரிந்துகொள்ளவேண்டும். குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளாவில் நடுத்தர வர்க்கம் தான் பனை நுங்கினை விரும்பி வாங்கும் சனம். அவர்கள் தான் பனம் பழங்கள் மீது ஒரு விலக்கத்தை வெளிப்படையாக காண்பிப்பவர்கள். கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் பனம்பழங்களை சாப்பிட்டவர்கள் எவரேனும் உள்ளார்களா என்றால்,  ஆயிரத்தில் ஒருவராகவே அவர் இருக்க முடியும். இவ்விதமாகவே நாம் பனம்பழங்களை இழந்தோம். நூங்கு உண்பதால் அடுத்த தலைமுறை எழும்ப இயலாதபடி கருக்கலைப்பு நடைபெறுகிறது.

DSC03991

மித்திரன் சுட்ட பனம்பழத்தை விரும்பி உண்ணும் காட்சி

பனம்பழங்கள் குறித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவராக பணியாற்றிய Dr. D. நரசிம்மன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் எழுதிய கவிதையினை எனக்கு காண்பித்தார்கள்.

அநாகரீகப் பழம்

“தொப்…”
எழுந்தோடிப் பார்த்தேன்
ஆம்! பனம் பழம் தான்

விழுந்தவுடன் ஒரு வாசம்
விழுந்த மறுநாள் ஒரு வாசம்
சுடுகையில் வெடிக்க வெடிக்க
தெருவையே
சுண்டியிழுக்கும் வாசம்

இழுத்து, மென்று
கடித்து, சப்பி
முறுக்கி, சூப்பி…
வேறெதையும் சுவைக்க முடியாது
இத்தனை வகையாய்
சாப்பிட்டுவிட இயலாது
பேருந்திலோ இரயிலிலோ
போகிற போக்கில்

“பழமா இது”?
முகமெல்லாம் பூசி
கையெல்லாம் பிசுபிசுக்க
பற்களில் சிக்கும் நாரைப்
பிடுங்குவது ரொம்பச் சிரமம்
பார்க்கவே அருவெறுப்பு
கிராமத்து நண்பர் சொல்கையில்
நானும் பாலுவும்
திகைத்துப் பார்த்தோம்

விரலிடுக்கில் தேக்கரண்டியைப் பிடித்து
இலகுவாய் வழித்து
பேசிக்கொண்டே சாப்பிட
முடியாததுதான்

உண்ண
உழைப்புத் தேவை
சிறிதாவது

“நாகரீகச்” சமூகம்
கீழாகவே பார்க்கிறது
எல்லாவித உடலுழைப்பையும்.

எவ்வளவு உண்மை. எத்தனை நாசூக்காக நமது மன விலக்கத்தை கவிதையாக்கியிருக்கிறார். பேராசிரியர் மேலும் கூறுகையில், பனம் பழத்தின் வாசனை கொண்ட மிட்டாய் கூட நமக்கு இன்று கிடையாது என்றார். ஆம், பனிக்கூழ் விற்பனையகங்களில் நாம் அறியாத பழங்களின் சுவையினை கொண்டு நம்மிடம் படைக்கிறார்கள், மிக அதிக விலை கொடுத்து அதனை நாம் வாங்குகிறோம். ஆனால் நம்மூர் பழமான பனம் பழத்தின் சூவை ஏற்றப்பட்ட ஒரு உணவுப்பொருள் கூட தமிழகத்தில் கிடைப்பதில்லை. ஏன், பனம் பழமே சுவைக்கத்தக்கது எனும் எண்ணம் கூட நமக்கு இல்லை.

பனம் பழம் மட்டுமே அவித்தோ வேகவைத்தோ சாப்பிடும் வகையில் காணப்படும் ஒரு பழம். பனம் பழ வாசனை தனித்துவமானது என்றால், அதனை சுடும்போதோ அவிக்கும்போதோ எழும் வாசனை பல மடங்காக பெருகும் தன்மையுடையது. சிறிதும் புளிப்பு சுவை இல்லாத பழம். இலவசமாக கிடைப்பதால் தான் வீணடிக்கிறோமா என்று கூட தோன்றுகின்றது.

 

சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் டாக்காவிலிருந்து எனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருந்தான். பனம்பழம் அங்குள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் படம் அது. விலையும் அதிகம். வங்காளிகள் பனம் பழங்களை மிக அதிகமாக சாப்பிடுவார்கள் என பின்னர் அறிந்துகொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றாலம் சென்றிருந்த போது, பனம் பழங்களை வெட்டி விற்பனை செய்யும் ஒரு நபரைப் பார்த்தேன். ஒரு பழம் 20 ரூபாய். அவர் அளவு வழித்து கொடுக்கும் திறன் படைத்தவர்கள் இருக்க இயலாது. நல்ல அரிவாளை கூர் தீட்டி அதற்கென்றே வைத்திருந்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு பனை விதைகளை சேகரிக்கச் செல்லும் சூழலில், குறும்பனை அருகில் ஒரு பாட்டி பனம் பழங்களை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டேன்.  ஆம் குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் பனை விதைகளாஇ விற்பனைக்குக் கொண்டுச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்கிவரும் வழக்கம் இருந்திருக்கிறது. மீனுக்கு இணையாக விற்கப்பட்ட ஒரு பழம் இன்று அனாதையாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடப்பது வேதனையளிக்கின்றது.

Juice

மாட்டிற்காக பனம்பழ கரைசல் தயாரிக்கப்படுகிறது

இன்றும் தமிழகத்தில் ஒருசிலர் பனம் பழக் கரைசலை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி வளர்ப்பிலும், கால்னடை வளர்ப்பிலும் பனம்பழச் சாறு முக்கிய இடம் வகிப்பது என்பதை பெரும்பாலும் இன்னும் எவரும் உணர்ந்து கொள்ளவில்லை. பொதுவாக பனம் பழங்களை மாடுகளியும் நாய்களையும் குளிப்பாட்ட பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். தெள்ளு மற்றும் உண்ணிகள் தெறித்து ஓடிவிடும் என்பார்கள். உடலும் வாசனையுடன் பளபளப்பாக  இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், வாரத்திற்கு ஒரு முறையாவது பனம்பழத்தை தேடி எடுத்து வந்து தலைக்குப் போடுவேன். அதுவே சிறந்த சோப்பாகவும் எனக்கு பயன் பட்டது. பனம் பளத்திலிருந்து எடுக்கும் அடர் சாற்றை முகத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் பொறுத்திருந்து எடுத்தால், அது முகத்திற்கு பொலிவு கொடுக்கும் வண்ணமாக செயல்படுகிறது.

பனம் பழக்கூழ் தயாரிக்கும் பால்மா மக்கள் அமைப்பு மிக திறமையாக தங்களை முன்னிறுத்துகிறார்கள். பனம் பழங்களை சேகரித்து அதிலிருந்து பனம்பழச் சாறுகளை எடுத்து பிற்பாடு எஞ்சும் பனை விதைகளை நடுகையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். நாட்பட்ட  பனை விதைகளை கிழங்குக்கென போட்டு விடுகிறார்கள். இந்த புரிதல் இன்று தமிழகத்தில் ஏற்படவேண்டும் என்பதுவே எனது எண்ணம். பனம்பழத்தின்  பயன்பாட்டு சக்கரம் சீராக சுழன்றால் தான்  ஒரு சமூகமாக செயல்பட்டுவரும் நமக்கு அது பயனளிக்கும்.

ஆகவே தமிழக தழுவிய பனம் பழக் கடைகளை நாம் ஏன் வைக்க கூடாது என்பதுவே எனது கேள்வி. பனம் பழங்களை வீணடித்து பனை விதைகளை நடுபவர்கள் மீது எனக்கு பெரிய மதிப்பு எழுவதில்லை. அது ஒரு நாடக அரங்கேற்றம் மட்டுமே. பனை சார்ந்த சூழியல் மற்றும் சமூக பயன்பாட்டு புரிதல்களை குறிப்புணர்த்த நாம் வாங்கும் நுழைவுச்சீட்டு தான் பனை நடுகை. தன்னளவில் அது பெரிய பலன் தருகின்ற ஒரு செயல் அல்ல என்பதுவே எனது புரிதல். பனை விதைகளை சேகரிக்காதவர்கள் பனைக்கும் அவர்களுக்குமான தூரத்தை உணராமலேயே இருப்பார்கள். ஆனால் அவ்விதம் இருக்கும் தொலைவு குறித்த புரிதல் சரிவர இருக்காது.  பனை விதை நடுகை நமது இலக்கு அல்ல. பனை மரங்கள் பயன்பாட்டு மரங்களாக உயர்ந்தெழவேண்டுமென்பதே நமது வேட்கை. விதைகளை நட்டால் போதும் என அந்த சுகத்தில் சொக்கிப்போயிருப்பவர்களுக்கு இப்போது நாம் எது சொன்னாலும் புரியாது.

பழங்காலத்தில், பனை விதைகள் இப்படி விதைத்து பரப்பப்படவில்லை. பனை நடுகை என்பது பனையேறிகளின் வாழ்வின் அங்கமாக இருந்திருக்கின்றன. இன்று அவ்வித சூழல் அழிந்து போய்விட்டது. பனையேறிகள் செய்யும் பொருட்களை வாங்குபவர்கள் இன்று தமிழகத்தில் இல்லை. பனை தொழிலை விட்டு விலகி சென்றுவிட்ட இலட்சக்கணக்கான பனை தொழிலாளர் நலன் குறித்து எந்த சத்தமும் எழவில்லை. பனையேறிகள் எவ்விதம் நமது சமூகத்தையும் சூழியலையும் இணைக்கும் பாலமாக இருந்தார்கள் என்பது நமது நினைவிலேயே இல்லை. ஒரு வரலாறே அழிந்துபோய்விட்டது.

இவ்வாண்டு, பனம்பழங்களை விற்பனை செய்ய புதிய கடைகளை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். ஊருக்கு ஒரு கடை, நெடுஞ்சாலைகளில் ஒரு கடை, சந்தை கூடுமிடங்களில் ஒரு கடை, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும்  என எங்கெல்லாம் கடைகளை வைக்கமுடியுமோ அங்கெல்லாம் பனம் பழங்களை விற்கும் கடைகள் எழும்பவேண்டும். ஒரு பழம் 10 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் நாள் ஒன்றிற்கு  20 பழத்தை விற்கும் ஒரு மூதாட்டிக்கு தினமு 200 ரூபாய் கிடைப்பது நிச்சயம். பனம் பழங்களை வாங்குபவர்கள் பழத்தை தின்றுவிட்டு கொட்டைகளைப் போட்டுவிடலாம். அவைகள் கிழங்காகவோ மரமாகவோ மாறி நமக்கு பலனளிக்கும்.

சில அறிவு ஜீவிகள் பனம் பழங்களைத் தின்றால் பித்தம் என்பார்கள். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் அறிவோமா இல்லையா? பனம் பழங்கள் இன்று சுவைத்துக்கூட பார்க்கப்படாத ஒரு சூழலில் வாழ்கிறோம். நானும் எனது குழந்தைகளும் பனம் பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவோம். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. எனது குழந்தைகள் பெரு விருப்பத்தோடு பனம்பழத்தை உண்பவர்களே.

பனம் பழங்களை நமது குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யலாம். அவைகளை அவித்து வருடத்திற்கு ஒருநாள் உண்ணக்கொடுக்கலாம். பிற்பாடு எஞ்சியிருக்கும் விதைகளை அவர்களைக் கொண்டே நட ஊக்குவிக்கலாம். இதுவே ஒரு சரியான முன்னுதாரணாமாக இருக்கும். பனம் பழத்தின் உறவு இல்லாத ஒரு தலைமுறை விதைக்கும் பனை விதைகள் பயனுள்ள ஒரு முயற்சியென கருத இடமில்லை.

தமிழகத்தில் ஆண்டு தோறும் தோராயமாக 1000 கோடி பனம் பழங்கள் கிடைக்கின்றன. இவைகளின் சந்தை மதிப்பு என்பது பல்வாறாக பிரித்து பார்க்க இயல்வது. குறிப்பாக பனம் பழத்தின் மேல் பகுதியில் இருக்கும் சாறு, ஸ்குவாஷ் மற்றும் ஜாம் செய்யவும், பணாட்டு தயாரிக்கவும்,  சோப்பு ஷாம்பு போன்ற பல்வேறு வாசனை திரவியங்களையும் தயாரிக்கும்  மூலப்பொருளாகவும், துணி துவைக்கும் சோப்பிற்கு மாற்றாகவும்  இருக்கிறது. மேலும் பழக்கூழ் எடுத்தபின் கிடைக்கும் மெல்லிய நார் கொண்டு தரமான தலையணைகளைச் செய்யலாம். பனங்கொட்டைகள் முளைக்கவைக்கப்படுகையில் அவைகளிலிருந்து கிடைக்கும் பனங்கிழங்கு மிகச்சிறத்த உணவுப்பொருளாகும். மலசிக்கல் போன்ற நோய்களுக்கும், சீரண சக்தி மேம்படவும், சர்கரை நோயைத் தடுக்கவும் ஆற்றல் பெற்றது இது. பனங் கொட்டைகளை உடைத்துப் பார்த்தால் அதனுள் இருக்கும் தவண் சுவை மிகுந்த ஒரு உணவுப்பொருளாகும். சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை உண்ணத்தக்க ஒரு சுவையுடன் இது காணப்படுகிறது. மேலும் பனங்கொட்டையிலிருந்து தான் முன்னர் சில கரண்டிகளை தயாரித்திருக்கிறார்கள் அக்கரண்டிகள் பொதுவாக எண்ணை எடுக்கும் செட்டியார்கள் பயன்படுத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனம் பழங்கள் இன்று விதைக்கப்படுவது ஒரு சிறந்த முன்னெடுப்புத்தான். அது சீமான் என்றாலும் எடப்பாடி என்றாலும் ஏன் மோடிஜியே என்றாலும் எனது ஆதரவு அதற்கு உண்டு. பனை சார்ந்து எந்த பணியினை முன்னெடுப்பவர்களும் எனது வணக்கத்திற்குரியவர்களே. ஆனால் விதைப்பவர்கள் தங்கள் கடமை அத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என எண்ணுவார்களேயானால், அதுவே பனைக்கு வைக்கும் ஆக சிறந்த கொள்ளியும் கூட. பனை மரங்கள் மனிதர்களின் கைகளால் தழுவப்பட காத்திருக்கும் மரங்கள். பனை மரத்தினை இன்றளவும் பேணி வருபவர்கள் இயற்கையை காக்கும் ஆர்வலர்கள் அல்ல, அதோடு தினம் தினம் தொடர்பில் இருக்கும் மக்கள் தான் பனை மரக்த்தினை காத்து வந்திருக்கிறார்கள். ஆகவே பனை காக்கும் தொண்டில் ஈடுபடுவது என்பது பனை மரத்தோடு பிணைந்துள்ளவர்களின் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தாம்.

பனம் பழ காலம் துவங்கியிருப்பதனால், காட்சி சார்ந்தோ, திருச்சபை சார்ந்தோ, கோவில் சார்ந்தோ, மசூதி சார்ந்தோ, அறக்கட்டளைகள் சார்ந்தோ, தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோ, ரசிகர் மன்றங்கள் சார்ந்தோ ஒரு மூதாட்டியையோ அல்லது ஒரு முதியவரையோ தெரிவு செய்து பனம் பழங்கள் விற்பனைக்கு வைக்கும் வாய்ப்பினை எடுத்துக்கூறுங்கள். அவர்கள் ஒரு தொழில் தொடங்க உதவியாக இருங்கள். குறைந்த முதலீட்டில் துவங்கும் இந்த தொழில் மிக பெரிதாக கிளைப்பரப்பும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் பனம் பழங்கள் விற்பனை செய்யும் 1000 நபர்களை உருவாக்கினால் அடுத்த வருடம் முதல், பனம் பழங்கள் அனைத்து பழக்கடைகளிலும் கிடைக்கும் வழி வகை பெருகும். தமிழகத்தில் மட்டும் ரூபாய் 10 ஆயிரம் கோடி பெறுமானமுள்ள பனம் பழங்கள் உள்ளூர் வணிகத்தை மாற்று திசை நோக்கி கொண்டு செல்லும்.

இவ்விதம் செய்கையில் பனை விதைகளை நாம் பொறுக்கி எடுத்து நட்டுக்கொண்டிருக்க தேவையிருக்காது. அது இயல்பான ஒரு கதியில் நமது மரங்கள் பரவ வழிவகைச் செய்யும். இருக்கும் மரங்கள் பயனறிந்து காப்பாற்றப்படும். எவரும் பனை மரங்களை இத்துணை வேகத்துடன் வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

புகைப்பட உதவி: இளங்கோவன் சின்னசாமி

அருட்பணி காட்சன் சாமுவேல்

ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

மின்னஞ்சல்: malargodson@gmail.com

அலைபேசி: 9080250653

பனை விதைக்கும் போட்டியாளர்கள்: களம் காண வருவார்களா?

செப்ரெம்பர் 5, 2019

பனை விதைக்கும் பணிகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற துவங்கியிருக்கின்றன. நல்லதுதான். இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தியிருக்கும் அனைத்து தன்னார்வலர்களையும் வாழ்த்துகிறேன். தமிழகத்தில் பனை விதைகளை நடுவதற்கு குறிப்பிடத்தகுந்த முன்னுதாரணமாக இருந்து கொண்டு, இன்று நடைபெறும் இந்த மவுன எழுச்சியைக் காண்கையில் உளம் பூரிப்படைகிறேன். தமிழகத்தில் பனை விதைக்கும் பணிகள் சலிப்பின்றி தொடர வேண்டும் என்பது எனது ஆசை. அது பல்லாண்டுகள் நமது மண்ணின் பல்லுயிர் வளத்தை பெருக்கும், நமக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத்தரும். நாம் அனைவரும் அன்னை என கொள்ளத்தக்க மரம் தான் பனை. அதன் நிழலில் பொலிந்த நாம் அதற்கு கடன் பட்டிருக்கிறோம்.

பனை நடுகை இன்று முன்னெடுக்கப்படுகையில் இதன் பின்புலம் அறியாமல் அல்லது பனை சார்ந்த புரிதல் இன்றி செய்யப்படும் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக போய்விடுமோ என்று அஞ்சியே பின்வருபவைகளை நான் கூற முற்படுகிறேன். பனை சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்வோரில் பெரும்பலானோர், ஒரு அவசர கதியில் பனை விதைகளை விதைப்பது தெரிகிறது. ஆகவே தான் எண்ணிக்கை விளையாட்டுகள் இங்கே நிகழ்கின்றன. தமிழகத்தில் பனை மரங்கள் தனக்கான இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுபோலவே பனையின் அன்றாட பயன் பாடும், பனை சார்ந்த மக்களின் நல்வாழ்வும் இணைந்தே பேணப்படவேண்டும்.

பனை மரத்தினை பொருளியல் சார்ந்து இன்று நாம் முதன்மைப்படுத்த இயலாது. அதிலும் குறிப்பாக பனை தொழில் செய்யாதவர்கள், பனை பொருளாதாரம் குறித்து பேசுவது பொருளற்றதாகவே இருக்கும். பொருளாதார நோக்கில், பனை மரத்தினை முன்னிறுத்தவேண்டுமென்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் வேறு திசையினை நோக்கி பயணிக்க வேண்டும். அப்பயணத்தில், வெறுமனே பனை விதைகளை விதைப்பது எவ்வகையிலும் உரிய பலனைத் தராது.

2017 ஆம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறுகின்ற நேரம், நான் இலங்கையில், பனை சார்ந்த ஒரு சுற்றுப்பயணத்திலிருந்தேன். எனது பயணத்தில், பனை விதைகளை நடுவது குறித்து நான் பல இடங்களில் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண்மணி என்னிடம், பனை மரம் நட்டு வளர்க்க வேண்டிய தேவை இல்லை, அவைகள் தானாகவே முளைக்கும் என்றார்கள். இந்த கருத்தை ஒட்டியே மேலும் பலர் சொல்லுவதைக் நான் கேட்டிருக்கிறேன். இக்கருத்து எனக்கு புதிதல்ல அதனை நான் உணர்ந்தும் இருக்கிறேன். பனை விதைகளை நடுவதை நான் நிறுத்தவில்லை, பனை விதைகள் நடுவது நமது தொடர் செயல்பாடு. ஆனால் அது ஒரு துவக்க புள்ளி தான் என்பதை நாம் புரிந்துவைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக, பனை விதைகள் இன்று நடுவதற்காக பல இடங்களிலிருந்து விதைகளை பெறுகிறார்கள். இப்படி விதைகளை வாங்குபவர்கள், பனை விதைக்கான உரிய பணத்தைக் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. எவ்வளவு விலைக் குறைவாக விதைகள் கிடைக்கும் என்ற தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். ஏதோ ஒரு பனை தொளிலாளியை, பனை சார்ந்து இயங்கும் மூதாட்டியின் வயிற்றில் அடித்து தான் நாளைய பனை மரங்களின் வாழ்வினை உறுதி செய்யவேண்டுமா? இன்று நாம் நடும் பனை மரங்கள், ஏதோ ஒரு ஏழைக்கு, பனை சார்ந்த ஒருவருக்கு எவ்வகையில் உதவியிருக்கிறது என்பதுவே அளவீடு. இவ்வுதவிகள் இன்றி நாம் செய்யும் பனை விதைப்புகள், பனை சார்ந்த மக்களுக்கானதல்ல, அது கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போலத்தான்.

இன்னும் அனேகர், பனை விதைகளை இலவசமாக தருகிறோம் என்னும் வாக்குறுதிகளைக் கொடுக்கிறதை காண்கிறோம். இந்த வாக்குறுதிகள் நல்லதுதான். அப்படி விதைகளை இலவசமாக கொடுக்க சித்தமிருந்தால், விதைகளாக கொடுக்காமல் பனம் பழங்களை சுவைக்க விரும்புகிறவர்களுக்கு கொடுக்கிறோம் என்கிற வாக்குறுதியினைக் கொடுப்பது மேலும் பொருளுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் பனம் பழங்களை நாம் சுவைக்கத் துவங்கினால், தமிழகம் எளிதில் பனங்காடாக மாறிவிடும்.

பனம் பழங்களை சுவைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பனம் பழங்களை இலவசமாக கொடுப்பது அல்ல இதன் தீர்வு, பனம் பழங்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதே இம்மரங்கள் நீடித்து வளர வழிவகைச் செய்யும். நுங்கின் பயன்பாட்டைக் குறைத்து பனம்பழங்களின் பயன்பாட்டினை அறிமுகப்படுத்துவது மிக அவசியம் என்று உணர்கிறேன். ஸ்ட்ராபெர்ரி பழங்களின் சுவை தமிழகத்தில் கிடைக்கையில் பனம்பழ சுவையில் ஏதேனும் உணவுகள் கிடைக்கிறதா? ஆப்பிள் சுவை வெனிலா சுவை என பல்வேறு சுவைகள் நம்மைச் சூழ்ந்திருக்க, பனம்பழ சுவை ஏன் சந்தையில் கிடைக்கவில்லை? ஆண்டு தோறும் பல்லாயிரம் டன் பனம் பழங்கள் உணவாக மாறாமல், அழிந்து செல்லுவது எவ்வகையில் பொறுப்புள்ள சூழியல் புரிதலாகும்? உணவு வீணடித்தல் இல்லையா இது?

உணவு மிக முக்கிய வணிகமாக உலகை சுற்றிவளைத்தபடி இருக்கின்றது. உள்ளூர் உணவுகளை நாம் இழந்தோமென்று சொன்னால், நமது எதிர்கால உணவுகளை நிர்ணயிக்கப் போவது யார்?. எவ்விதமான உணவுகளை அவர்கள் நமக்கு கொடுப்பார்கள்?. உணவுகள் நமது விதைகளுக்குள் உறைந்து கிடக்கும்போது அவைகளைப் பேணும் புரிதல் இல்லா சமூகம், நமது எதிர்கால விதைகளையும் அழித்துவிடும். ஆகவே உள்ளூர் உணவுகளைத் தரும் பனை மரங்கள் கப்பாற்றப்பட நாம் முதலில் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இன்றைய சூழலில், பனை மரங்கள் இல்லை என்பதால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விட, பனை மரங்களைப் பேணத்தெரிந்த தலை முறை இல்லாதது தான் பிரச்சனை என்னும் புரிதல் நமக்கு இன்னும் வரவில்லை. பனை மரங்களை பேணிய மக்களை நாம் பேணத்தவறும்போது, நாம் உருவாக்கும் மரங்கள் எவ்விதமாக வரும் நாட்களில் உயிர்ப்புடன் இருக்கும்? வளர்ந்து வருகையில் அவைகள் எவ்விதம் காட்சியளிக்கும்? இப்போது நாம் நடும் மரங்களை எதிர்காலத்தில் யார் பொருப்பெடுத்துக்கொள்ளுவார்கள்? தொலை நோக்கு சிந்தனை இல்லாத ஒரு தலைமுறையால் உருவாக்கப்பட்ட பனங்காடுகளை எதிர்கால சந்ததியினர் வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஆகவே இப்பொழுதே நாம் எதிர்கால சந்ததியினரை தயார்படுத்த வேண்டும். அவ்விதம் தயார் படுத்துவது எப்படி என அறிந்திருக்க வேண்டும். அவைகளை நோக்கி நமது முயற்சிகளை ஒருங்கிணைப்பது நாம் எண்ணிய நன்மைகளை பெற்றுத் தரும். அது நமது கடமையும் கூட.

ஒரு வகையில் நாம் கேட்கலாம் பனை மரங்கள் சார்ந்த எண்ணிறந்த உயிர்கள் உண்டே? அவைகளுக்காகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பனை மரங்கள் நிற்பது போதாதா? கண்டிப்பாக மனிதன் அவைகளில் ஏறித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். பனை சார்ந்து காணப்படும் சூழியல் குறித்து தனி தனியாக பல கட்டுரைகள் நான் எழுதியிருக்கிறேன், பனை சார்ந்து ஏற்படும் நீர் பிடிப்பு குறித்து உலக அளவில் நீர் மேலாண்மையினை செய்பவர்களை பேட்டிகண்டு ஒளிப்பட காட்சிப்படுத்தியிருக்கிறேன். நேரடியாக கள உண்மைகளைத் தேடி இந்தியாவின் பல மாநிலங்களில் பயணித்திருக்கிறேன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இவ்வுலகில் ஏன் பனைக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை நான் அழுத்துகிறேன்? ஏனென்றால், அதுவே முறை, இன்று பனை மனிதனின் விட்டுப் போனால் அது சூழியலின் அங்கமாகவும் இருக்காது. ஏனென்றால் பனை மனிதனால் பேணப்பட்டு நமது சூழியலுக்கு அருளப்பட்ட வரம். இன்று வணிக நோக்கில் இவைகள் பார்க்கப்படுமானால் அது போன்ற பேரிழப்பு ஒன்றுமில்லை.

ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுவோம். இன்று தமிழகத்தில் 1 லட்சம் பனைதொழிலாளர்கள் இருக்கிறார்கள் என அரசு சார் புள்ளி விபரங்கள் குறிப்படுகின்றன. அவ்விதமாகவே 5 கோடி பனை மரங்கள் இருப்பதாகவும் குறிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அரசு, கூறுவது ஏற்புடையது அல்ல என்றாலும், இவைகளை நாம் தோராய கணக்காக எடுத்துக்கொண்டால், ஒரு நபருக்கு 500 பனை வீதம் வருகிறது. இன்று தமிழகத்தில் மிக அதிகமாக பனை மரங்கள் ஏறப்படும் இடங்களில் கூட 25 மரங்களுக்கு மேல் பனை ஏறுபவர்களை நான் பார்க்கவில்லை. அப்படியென்றால் மீதம் இருக்கும் மரங்களில் பனை ஏறப்போவது யார் என்கிற கேள்வி நம் முன்னால் வருகிறது. இவ்விதம் எஞ்சியிருக்கும் மரங்களை நாம் கருத்தில் கொள்ளாமல் பனைகளை மீட்கிறோம் என்று சொல்ல முற்படுவது எதனை முன்னிறுத்துவதாக இருக்கிறது?

பனை மரங்களின் அழிவில் தான் இன்று ஓலைப் பொருட்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இவைகளைப் புரிந்து ஓலைகள் உயிர்ப்புடன் கிடைக்கச் செய்ய, நமது பனை மரங்கள் பனையேறிகளால் பாதுகாக்கப்படவேண்டும். பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், பனை சார் சூழலிலிருந்து அனுதினமும் ஓலைகளைப் பெற்று அவைகளின் மூலம் தங்களாது அன்றாட வாழ்வியலை நடத்தும் ஒரு உறுதியை தரவல்ல ஒரு சமூக கட்டமைப்பை நாம் அமைப்பது மிகவும் அவசியம்.

இன்றையதினத்தில் பனை சார்ந்த சிக்கல்களாக நான் காண்பது, தமிழகத்தில் எத்தனை பனை மரங்கள் இருக்கின்றன என்பது தான். எவரும் நமக்கு தகுந்த ஆவணங்களைத் தரவில்லை. எவரிடமும் தகுந்த தரவுகள் கிடையாது. தரவுகள் தேடியமைக்கும் அமைப்புகள் நம்மிடம் கிடையாது. இப்படியிருக்க, நமது வாழ்வின் முதன்மையான பணி பனை மரங்களை கணக்கெடுப்பது தான். ஆண், பெண், வடலி போன்ற கணக்கெடுப்புகள் ஊர் ஊராக செய்யப்படவேண்டும். அவைகளை தமிழகம் சார்ந்து தொகுக்க வேண்டும் என்றில்லை, நாம் துவக்கினால், அரசு நமது பின்னால் வந்து நிற்கும். இரண்டு வருடத்தில் வேகமாக பனை நட வந்த அரசாங்கம், பனை மரங்களை முறையாக கணக்கெடுக்க முன்வருவார்கள் என்பது சத்தியம்.

ஏன் இந்த கணக்கெடுப்பு. தோராயமாக 20 பனை மரங்கள் ஒரு பனை தொழிலாளருக்கென நாம் கணக்கிட்டால், நமது ஊர் சார்ந்து எத்தனை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்ற ஒரு உறுதியினை நாம் அளிக்க இயலும். குறைந்த பட்சம் நமது ஊரில் 300 பனை மரங்கள் இருந்தால், 15 இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி பெறும். இதன் மூலம் மேலும் 15 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகள் பெறும் வாய்ப்பும் தென்படுகிறது. ஓலை பொருட்கள் செய்வோர், பனை உணவுகள் தயாரிப்பவர்கள், விற்பனை முகவர்கள் என இந்த பட்டியல் விரிவடைந்தபடி செல்லும். 5 கோடி பனை மரங்கள் இருக்கும் தமிழகத்தில் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் பனை சார்ந்து இருக்கின்றன. இது மிக பெரிய எண்ணிக்கை. மறைமுக வேலைகளையும் உப தொழில்களையும் இணைத்துக்கொண்டால் மேலும் 25 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் உடனடியாக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இவைகளை செய்ய நாம் இன்று முன்வரவேண்டும். அவ்விதம் இல்லாமல், வெறுமனே பனை விதைகளை நடுவது ஒருவகையில், நமது கடமையிலிருந்து நழுவும் செயல் மாத்திரம் அல்ல, பனையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலும் தான்.

இதுவே, ஒரு நபர் 5 மரங்களை மட்டும் பகுதி நேரமாக பேணினால், அவரது ஒரு வருட குடும்பச் செலவுகளுக்குத் தேவையான சர்க்கரை கிடைக்கும். ஒரு மரத்திற்கு சராசரியாக 2 லிட்டர் பதனீர் கிடைக்கும் என்றாலும், வருடத்திற்கு 180 கிலோ கருப்பட்டி வரை ஒரு குடும்பத்தால் உற்பத்தி செய்ய இயலும். ஒரு குடும்பம், மாதம் 5 கிலோ கருப்பட்டியினை பயன்படுத்துகிறது என்றாலும், மீதம் 120 கிலோ கருப்பட்டி மிச்சமிருக்கும். மிச்சமிருக்கும் கருப்பட்டியினை கிலோ 300 ரூபாய் என்ற கணக்கில் விற்றால் வருடத்திற்கு 36000 ரூபாய் வருகிறது. வீட்டிற்கு தேவையற்ற சர்க்கரை வாங்குவது சார்ந்த செலவினங்கள், வீணான நோய்களை வருத்திக்கொள்ளும் உணவுகளைத் தவிர்த்து, நமது வாழ்வில் நலம் பயக்கும் அருமருந்தினை நாமே தயாரிக்கும் ஒரு சூழலை நோக்கிச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு இது. ஒரு நபர் 5 மரங்களையே பேணுகிறார் என வைத்துக்கொண்டாலும், பனை சார்ந்த வேறு பல தொழில்களும் தழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் மறைமுகமாக ஏற்படும் தொழில்களைக் கூட்டினால் இவைகள் இரண்டு மடங்காக உயர்ந்து விடும். தமிழகத்தில் 50 லட்சம் பேர் பனையால் வாழ்வு பெறுவர்.

இந்த இலக்கு நோக்கி நாம் செல்ல முயற்சிக்க வேண்டும். அதன் முதல் அடியாக செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டும். இவ்வித வாய்ப்புகளை விட்டுவிட்டு, இவ்வித தற்சார்பு வாழ்விற்கு பயிற்சியளிக்காமல், பனை மரங்களை நடுவது, பனை மரங்கள் சார்ந்த பேச்சுக்களை முன்னெடுப்பது யாவும் என்னளவில் முழுமைபெறா முன்னெடுப்புகளே. நமது அளப்பரிய ஆற்றல் மடைமாற்றி விடப்படும் இடமாகவே இதனை நான் பார்க்கிறேன்.

தமிழகம் முழுவதும் 25 லட்சம் பனை ஏறத் தெரிந்தவர்கள் இருந்தால் போதும், தமிழகத்தில் உள்ள சாராயக் கடைகள் தானே நின்று விடும். இல்லை நாம் அடைத்துவிடலாம். நமது உள ஆற்றலும் உடல் ஆற்றலும் குறையும் தோறும், நமை வலுவாக வெல்லும் ஆற்றலுடன் அரசும் தனியார் நிறுவனங்களும் இணை சேருகின்றன.

ஆகவே பகுதி நேரமாகவோ, அல்லது முழு நேரமாகவோ பனை ஏறத்தெரிந்த சமூகத்தை உருவாக்குவதே நமது உடனடி கடமையாக கொள்ள வேண்டும். கிராமத்திற்கு பனை ஏறி தொழில் செய்யும் 10 இளைஞர்களாவது உருவாக வேண்டும். ஒரு இளைஞனை பனை சார்ந்த பயிற்சிக்கு தயார் படுத்த பாரம்பரிய பனை தொழிலாளியின் உதவியை நாடுவது, அவருக்கான உதவிகளையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு உழைப்பது இன்றியமையாத செயல்களாகும்.

Seed Boys

ஆரோன் மற்றும் மித்திரன் பனை விதைகளை விதைக்க புறப்படும்பொழுது

அப்படியானால் பனை விதகளை நடுவது என்பதை நாம் எப்படி முனெடுக்க வேண்டும்? சிறு குழந்தைகளிடமிருந்து முன்னெடுக்கையில், சிறு சிறு அலகுகளாக அவர்களைப் பிரிக்க வேண்டும். பனை விதைகளை விதைக்கும் முன்னால் பனம் பழங்களை சேகரிக்கும் பணியில் உரிய பாதுகாப்புடன் அவர்களை இணைக்க வேண்டும். பங்குகொள்ளும் அனைத்து குழந்தைகளும் பனம் பழங்கள் சுவைத்த பின்பு அவரவர் உண்ட பழங்களின் விதைகளை அவரவர் விதைக்க வேண்டும். இப்படிச் செய்கையில், நாம் மறந்தாலும் பனை மரங்களை நமது குழந்தைகள் மறந்துவிட மாட்டார்கள். தமிழகத்திலுள்ள அத்தனை குழந்தைகளும் பனம்பழத்தை சுவைத்தால், எதிற்கால பனை மரங்களை நாம் நட்டு பேணிக்கொண்டிருக்க தேவையிருக்காது. அது இயல்பான ஒரு செயல்பாடாக, நமது வாழ்வின் அங்கமாக இருக்கும் தன்னெழுச்சியுடன் நடைபெறும்.

பனம் பழங்கள் தமிழகத்தின் அனைத்து குழந்தைகளும் வரும் ஆண்டில் சுவைத்திருக்கவேண்டும் என ஒரு வரைவை ஏற்படுத்துவது, மிகச்சிறப்பான முன்னெடுப்பாக இருக்கும். சத்துணவில், குழந்தைகளுக்கு பனம்பழங்களை/  பனங்கிழங்குகளை/  கருப்பட்டியினை/ பதனீரை அரசு கொடுக்கவேண்டும் எனும் கோரிக்கையினை நாம் முன்வைக்கலாம். பனம் பழம் உண்ட குழந்தைகள் கண் பார்வை தெளிவு பெற்று, பசியின்றி, குடல் நோய்களின்றி, நோய் எதிர்ப்பு சக்தியுடன் சுறுசுறுப்பாயிருப்பார்கள்.
பனை விதைகளை விதைக்கும் வேகத்தில் நாம் இழைக்கும் மற்றொரு தீங்கு, பனை விதைகளை சேகரித்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஏழைக் குடும்பத்தினரை நாம் கருத்தில் கொள்ளத் தவறி விடுகிறோம். பனங்கிழங்குகள் என்பது எஞ்சிய பனை விதைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்தி, உணவு தயாரிக்கும் ஒரு முறைமை ஆகும். ஏழை விதவைகள், வயோதிபர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காண்பது மிக முக்கியம். நமது ஊர்களில் உள்ள இவர்களை நாம் அடையாளம் கண்டு, விற்பனைக்கு உறுதுணையாக இருப்பது நமது தார்மீக கடமை. இவர்களை இன்று நாம் முன்னிறுத்தவில்லையென்று சொன்னால், பனைமரத்தினை நாம் காக்கும் முறைமைகள் யாவும் கேள்விக்குறியாகவே போய்விடும்.

மேலும் நமது கரத்தில் பனை சார்ந்து பணியாற்றுகின்ற 10 நபர்களைக் குறித்த தகவல்கள் இருக்கவேண்டும். அது பனை விதை நடுகிறவர்கள், பனை மரம் ஏறுகிறவர்கள், ஓலைப் பொருட்களை விற்பவர்கள், பனை உணவுகளை விற்பவர்கள், பனை பொருட்களை விற்கும் கடை, பனை சார்ந்த அறிவை பெற்றிருக்கும் நம்மூர் பெரிசுகள் மட்டுமல்லாமல் நமது ஊரிலோ அருகிலோ பனை மரங்களை வெட்டும் தொளிலாளர்களின் எண்களையும் சேர்த்து வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு நம்மாலான உதவிகளை நாம் தொய்விலாது தொடரவேண்டும்.

இன்று தமிழகத்தில் பனையே தங்கள் வாழ்வென அற்பணித்த புதிய தலைமுறை ஒன்று இருக்கிறது. பனையேறிகளான விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் பாண்டியன், குமரி மாவட்டத்தைச் சார்ந்த மொட்டவிளை சங்கர் கணேஷ், பனை ஓலை பொருட்களைச் செய்ய களத்தில் நின்றிருக்கும் பனையேறிகள் அமைப்பினைச் சார்ந்த இளவேனில் மற்றும் சாமிநாதன், குழந்தைகளுக்கான பனையோலை பொம்மைகளை தயாரிக்கும் கோவையைச் சார்ந்த மோகன வாணி, உயிரைக்கொடுத்து பல புதிய பங்களிப்புகளை ஆற்றிவரும் பண்டிச்சேரியினைச் சார்ந்த ஓலைவினைக் கலைஞர் மனோஜ், பனை ஓலைகளைக் கொண்டு அனுதினமும் பொருட்களை செய்து வரும் தம்பி வினோத், பனைவரம் என்ற அமைப்பின் மூலம் கிராமபுற பெண்களுக்கு உதவிகளைச் செய்துவரும் சேலம் எடப்பாடியைச் சார்ந்த செல்வா ராமலிங்கம், திருச்செங்கோட்டை அடுத்த பகுதிகளில் தனது வாழ்வின் பெரும்பகுதி சேமிப்பினை அடகுவைத்து பனங்கருப்பட்டியினை உற்பத்தி செய்துவரும் நண்பர் சரவணபவன், வழக்கொழிந்து வரும் பாரம்பரிய பொருட்கள் குறித்த புரிதல் வேண்டி களத்தில் நின்று போராடும் தோழி வாகை, தமிழகம் முழுவது கள் குறித்த புரிதலை எடுத்துச் சொல்லும் தன்னலமில்லா போராளி ஐயா கள்ளு நல்லசாமி, பனை விதைப்பே தனது மூச்சாக கொண்ட பூரணாங்குப்பம் ஆனந்தன், தொடர் விதைப்பில் அனேகரை இணைத்துக்கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்து பனை சதீஷ், சென்னை படூர் பகுதிகளில் தொய்வில்லாமல் விதைத்துக்கொண்டிருக்கும் மனோ, ஈரோடு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை விதைத்த அமைப்பான வனம் இந்தியா, மதுரைப் பகுதிகளில் விதைப்பிலும் பனை தொழில் செய்யும் கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் பனையோலை மணிவண்ணன் காந்தி, திண்டுக்கல் பகுதிகளில் அழிந்து வரும் தேவாங்குகளைக் காக்க பனை விதைகளை விதைத்துவரும் அருளகம் பாரதிதாசன் மற்றும் சீட் அமைப்பினைச் சார்ந்த முத்துசாமி, பனை மரத்தினை உள்வாங்கியபடி பனை விதைகளை தேடி சேகரித்து விதைத்துவரும் கடலூர் அழகானத்தம் கலியாணசுந்தரம், தொண்டை மண்டலத்தில் சலிப்பின்றி பனை விதைக்கும் பணிகளை முன்னெடுக்கும் குரு கிருஷ்ணராஜ், பிரேம் ஆனந், ஐயா கலையரசன் போன்றோர், குமரி மாவட்டத்தில் பனை விதைகளை தொடர்ந்து விதைத்து வரும் டைசன் டியூக், ஆனந்த், சீலன், நெல்லைப் பகுதியில் பனை விதைகளை விதைத்துவரும் இராகவன் சிவராமன், தனது துறை சார்ந்து பனை மரத்தினை முன்னெடுக்கும் மதுரை காமராஜர் பல்களைக்கழக பேராசிரியர் நாகரத்தினம், பனை மரம் என்ற இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பனை குறித்த நூலை எழுதிய  திரு பஞ்சவர்ணம், பனை மரமே பனை மரமே என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியம், பனை பொருளாதாரம் குறித்து பல்வேறு மாநாடுகளை நடத்திவரும் திரு குமரி நம்பி, தமிழக அளவில் மாநாடுகளை ஒருங்கிணைக்கும் ஐயா பாபுஜி, தென் தமிழகத்தில் பனைக்கென குரல் கொடுத்துவரும் அருள் தந்தைகளான மை பா மற்றும் சூசை போன்றோர், பனை நாடு அமைப்பினை முன்னெடுத்த அருட் தந்தை ஜெகத் கஸ்பார், சுமு. முருகன், பனை பரசுராமன், பனையோலைப் பொருட்களில் முன்னணியில் நிற்கும் வேலூரைச் சார்ந்த ஷேர் அமைப்பு, மணப்பாடு கூட்டுறவு சங்கம், மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம், பாரக்கன் விளை ஆர். டி எம், உலக அளவில் பனை ஓலை பொருட்களை சந்தைப்படுத்தும் எம். ஆரெம். ஆரெம், பனம்பழங்களை பிழிந்து ரசமாக்கி தமிழகத்தில் புறட்சி ஏற்படுத்திய பால்மா கூட்டமைப்பு, பனை உணவு பொருட்களின் வரிசையினை நமக்கு வழங்கிய இன்பா மோகன் ராசு, என நாம் ஊக்குவிக்க வேண்டிய ஒரு நீண்ட பட்டியல் இருக்கின்றது. இப்பட்டியலில் அனேகரை நான் தவறவிட்டிருக்கலாம். இவைகளைத் தவிர, தமிழகம் தழுவி நாம் தேடினோமென்றால் கிராமத்திற்கு இரண்டு பனை சார்ந்த கலைஞர்களை நம்மால் கண்டிப்பாக கண்டுபிடிக்க இயலும்.

இவ்வித பட்டியல் நமது உள்ளூர் சார்ந்தும் நாம் உருவாக்க வேண்டும். விதைக்கிறவர்கள், பனை ஏறுகிறவர்கள், கருப்பட்டி காய்ச்சுகிறவர்கள், ஓலைப் பொருட்களில் அலங்காரப் பொருட்கள், விளையாட்டு பொம்மைகள், பாரம்பரியபொருட்கள் செய்வோர் என பலதரப்பட்ட மக்களின் பட்டியல் நமது ஊர் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் தொகுக்கப்படவேண்டும். இலக்கிய ஆழுமைகள் பனை சார்ந்து எழுதிய ஆக்கங்கள் பரவலாக்கப்படவேண்டும். 2016 ஆண்டு இலவசமாக நான் பதிவேற்றிய பனைமரச்சாலை தமிழகம் சார்ந்து மிகப்பெரிய மாற்றத்தை விளைவித்ததை எவரும் மறுக்க இயலாது.

நமது உள்ளூர் கலைஞர்களுக்கு உள்ளூர் வாய்ப்புகளையும், வெளியூர் வாய்ப்புகளையும் ஏன் வெளிநாட்டு வாய்ப்புகளையும் நாம் ஒருக்கித்தருவது நமது தலையாய கடமை. பனை சார்ந்த முன்னெடுப்புகளில் இவைகள் மிக முக்கியமானவைகள். பனை சார்ந்த கலைஞர்கள் இல்லையென்றால் பனைமரங்கள் நிற்பது வீண் என்றே நவீன பொருளியல் கூறும். அதுவே அவைகளை அப்புறப்படுத்த போதுமான காரணமாக இருக்கும். இல்லை, பனை மரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும்  அவைகள் உணர்வுபூர்வமாக நம்முள் கலக்கவேண்டும் என்றும் சொன்னால், அவை உணவாகவும், வாழ்வின் அங்கமாகவும் நம்முடன் நிலைக்க வேண்டும். அத்திசை நோக்கி முழுமையான புரிதலுடன் பயணிப்போம்.

Seed

முளைத்தெழும் பனை விதை

இல்லையில்லை பனை விதைகளை நடுவது தான் சரியான தீவு என்று யாராவது சொன்னால், அதனைச் சொல்லும் தலைமை நூறில் ஒரு பங்கு பனை விதைகளை சேகரிக்க வலியுறுத்துவோம். ஒரு லட்சம் நடவேண்டும் என பேராவல் கொண்டிருப்பவர்கள் 1000 விதைகளைக் கூட குனித்து பொறுக்கவில்லையென்று சொன்னால், அவர்களை விட பனைக்கு துரோகம் இழைப்பவர்கள் வேறு எவரும் இருக்க இயலாது. ஒருவர் ஒரே நாளில் ஒரு லட்சம் என்கிறார், மற்றொருவர் இரண்டு லட்சம் என்கிறார், ஏலம் எடுப்பது போல 10 லட்சம் என வந்து நிற்கின்றது. என்னவகையான விளையாட்டு இது என தெரியவில்லை. பனையை பேணிவந்த பனையேறிகள் இன்றும் பரிதாபமாக நிற்கையில், கின்னஸ் சாதனை ஒரு கேடா?

அருட்பணி காட்சன் சாமுவேல்
ஆரே பால் குடியிருப்பு
(பனை திருபணியில் 25 வருடங்களாக)
மின்னஞ்சல்: malargodson@gmail.com
அலைபேசி: 9080250653

பனை நகரம் 12

ஓகஸ்ட் 21, 2019

பனைக் கடவுள்

மும்பை சென்ட்ரல் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு இடம். மும்பை வந்தபோது இளம் போதகர்களாக இங்கே நாங்கள் தங்கியிருந்தோம். மெதடிஸ்ட் சென்டர் என்று அழைக்கப்படும் மும்பையின் மெதடிஸ்ட் கட்டிடம் இங்கே தான் இருக்கிறது. எங்கள் முன்னாள் பேராயர் இருந்த வீடும் இதன் அருகில் தான் இருக்கிறது. பைகுல்லாவில் உள்ள எங்கள் பொருளர் அலுவலகத்திற்கு செல்ல்வேண்டும் என்றாலும், அவ்விடத்தில் வசிக்கும் போதகர்களை சந்திக்க வேண்டும் என்றாலும், மும்பை சென்டிரல் ஒரு முக்கியமான நிறுத்தம். ஆகவே இந்த இடம் மெதடிஸ்ட் போதகர்களுக்கு மிக முக்கியமான ஒரு இடமாகவே இருந்தது. என் வாழ்நாளில் நான் மிக அதிகமாக ஒரு இரயில் நிலையத்தில் ஏறி இறங்கியிருப்பேன் என்றால் அது மும்பை சென்ட்ரல் தான்.

மும்பை சென்ட்ரல் இவ்வளவு என்னோடு தொடர்புடையாதாக இருந்தாலும் இப்பகுதியில் நான் பலமுறை சுற்றிவந்திருந்தாலும் நான் நேராக போய்வரும் சில வழிகள் உண்டு. எங்கள் அனைத்து அலுவல் சார்ந்த பணிகளும் மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தான் இருக்கிறன. ஒருமுறைக்கூட நான் தவறியும் இந்த இரயில் நிலையத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றதில்லை. ஒருவேளை நான் அவ்விதமாக சென்றிருந்தாலும்கூட என்னால் பனைக்கும் இப்பகுதிக்குமான தொடர்பினை எவ்வகையிலும் இணைத்து யோசித்திருக்க இயலாது, அந்த அளவிற்கு நர்கர்மயமாக்கலின் உள் இழுக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதி இது.

 

மும்பை சென்டிரல் இரயில் நிலையத்திலிருந்து  வெளியே வந்த பின் மேற்குபக்கமாக இரண்டு நிமிடங்கள் நடந்தால் வருகின்ற முக்கிய இணைப்புச் சாலை தான் “தார்தியோ” (Tardeo) என்ற இடம். இந்தியாவின் மிக உயரமான இரட்டைக்கோபுரங்கள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றது. இப்பகுதிக்கும் பனைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமென்று சொன்னால் நானே நம்பமாட்டேன். ஒரு பனை மரத்தையோ அதன் ஓலை துணுக்குகளையோ கூட இன்று இந்த சந்திப்பில் நாம் காணமுடியாது.

பனை சார்ந்த எனது தேடுதலில் ஒரு வாரத்திற்கு முன்பு, பாலமோகன் சிங்கடே என்பவர் எழுதிய  “A Letter  from  Bombay or  Mumbai: On the Troubles of Renaming as a Decolonial  Act”  என்ற கட்டுரை கையில் கிடைத்தது. இந்த கட்டுரை, மும்பையின் பெயர் மாற்றங்கள் எவ்வளவு அபத்தமானது எனபதை சுட்டிக்காட்டும் விதமாக எழுதப்பட்டது. நான் வாசிக்கையில் எனக்கான ஒரு முக்கிய திறப்பு அங்கே இருந்தது. போகிற போக்கில் ஆசிரியர் எழுதிய அந்த குறிப்பு என்னை அலைக்களித்த  சொற்களை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. மும்பையின் பல்வேறு இடங்கள் அங்கிருந்த தாவரங்களைக்கொண்டு பெயரிடப்பட்டவைகளே என்பது தான் அது. ஆகவே நான் அதனை இன்னும் கவனத்தோடு படிக்கையில், மும்பையில் உள்ள தார்தியோ என்ற இடம் பனைகளால் அப்பெயரை பெற்றிருக்கிறது என்ற வார்த்தை வந்ததும் எனது இதயதுடிப்பு எகிறியது.

எனது  10 வருட மும்பை வாழ்வில் ஒரு முறைக்கூட தார்தியோ என்கிற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. அது எப்படி மும்பையில் பனை சார்ந்த பெயருடைய ஒரு இடத்தை நான் அறியாமல் இருந்திருப்பேன்? ஏன் எவரும் எனக்கு கூற முற்படவில்லை? இந்த பதிவு சரியானதுதானா? இந்த இடம் இன்றும் பனைத் தரவுகளைக் கொண்டிருக்குமா?  அப்படியானால் இந்த இடத்திற்குச் சென்று நான் பனை மரங்களைக் கண்டுபிடிக்க முடியுமா? போன்ற பல கேள்விகள் என்னுள் அசைந்தமர்ந்தன. எனது தூக்கம் கலைந்தது. என்னுள் எனை ஆளும் இறைவன் வந்தமர்ந்து எனது எண்ணங்கள் கூர் பெறச் செய்ததை உணர்ந்தேன். ஆகவே அன்று எனது உறக்கத்தை ஒத்திவைத்தேன். எப்படியாவது தார்தியோ என்ற பகுதிக்கு உடனே சென்று சேரவேண்டும் என நினைத்தேன்.

அதற்கு முன்பதாக தார்தியோ பகுதியில் பனை மரங்கள் இருக்கின்றனவா என எண்ணி இணையதளத்தில் தேடினேன். ஒரு படமும் கிடைக்கவில்லை. ஆகவே அன்று இரவு  தகவல்களைத் திரட்டியபடியிருந்தேன். மும்பையின் மிக முக்கிய தூதரகங்கள் தார்தியோ பகுதியில் தான் இருக்கின்றன என்கிற தகவல் கிடைத்தது. மிக முக்கிய மனிதர்கள் வாழும் இடம் என்பதாகவும் லதா மங்கேஷ்கர் வாழும் பகுதி எனவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஜாஸ்மினிடம் ஒரு அருமையான இடத்தைக் கண்டுபிடித்thiருக்கிறேன், ஆகவே அந்த இடத்தைப் பார்த்து வரப் போகிறேன் என்று சொன்னேன். “தூங்கவே இல்லியா” என்று கேட்டாள். “பிறகு போய்கொள்ளலாமே”  என்றும் சொன்னாள். என்னால் அப்படி அமைந்துவிட முடியாது. என்னுள் எரியும் நெருப்பு அப்படிப்பட்டது. நான் புறப்பட்டுவிட்டேன். வெறும் ஒரு அரைக்கால் சட்டை, ஒரு கை வைத்த பனியன், அதற்கு மேல் எனது பயணத்திற்கான ஜாக்கெட் அணிந்து கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் மழை பொழிய காத்திருந்தது. அதிகாலை இருட்டோடு எனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கோரேகாவுன்  நோக்கிச் சென்றேன்.  மழை ஓடைகள் சாலைகளை பெயர்த்துப்போட்டிருந்தன. சில இடங்களில் சாலையினைக் கடந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சந்திர மண்டலத்தின் குழிகள் போல சில இடங்களில் வட்ட வடிவ குழிகள் கிடந்தன. எனக்கு முன்னால் சென்ற வாகனத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், ஒரு தவளை எகிறியது.  ஐந்தாம் எண் வரைக்கும் சாலை மழையினால் வெகுவாக பாதிப்படைந்திருந்தது. தூரல் அடிக்கத்துவங்கியது. எனது வாகனத்தை இரயில் நிலையம் அருகில் இருக்கும் கட்டண பாதுகாப்பு நிறுத்தத்தில் விட்டுவிட்டு, நான் இரயில் பிடித்தேன். காலை நான்கரை மணிக்கு பிடித்த இரயில் மும்பை சென்ட்ரல் சென்று அடைந்த போது மணி ஐந்தரை. இன்னும் பொழுது புலரவில்லை. மழை மேகங்களும் தூறலும் என அவ்வேளையிலும் இருட்டியபடியே இருந்தது.

சாலையைக் கடந்து தார்தியோ நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த இரட்டைக்கோபுரங்கள் மிதர்ப்பாக நின்றுகொண்டிருந்தன. பணக்கட்டுகளை உயரமாக அடுக்கிவைத்தது போன்ற தோற்றம். மும்பையின் செல்வ செழிப்பின் அடையாளமே தார்தியோ. கோடிகளுக்கு குறையாத குடியிருப்புகள். மும்பையின் முக்கியமான ஒர் அடையாளமான செல்வச் செழிப்பை அங்கிருந்த அத்தனை கட்டுமானங்களும் பறைசாற்றியபடி இருந்தன. சாலைகள் நேர்த்தியாகவே அமைந்திருந்தன. எதைத் தேடுகிறேன்? ஏன் இந்த அதிகாலையில் இங்கே புறப்பட்டு வந்திருக்கிறேன்? எப்படி எனது தேடுகையை நான் துவக்கப்போகிறேன்? போன்ற கேள்விகள் உள்ளத்தில் சலசலத்துக்கொண்டிருந்தன. இவைகளை ஒருங்கமைத்து விடைகாணுவது எளிதல்ல.

தார்தியோ சாலை சந்திப்பில் சிறு பூங்கா ஒன்று இருந்தது. பனை மரத்தின் வடிவில் ஒரு மரம் நின்றது ஆனால் அதன் அருகில் செல்லச் செல்ல அது நான் தேடும் பனை மரம் அல்ல அழகுக்காக வைக்கப்பட்ட ஒரு பனை என்பதைக் கண்டு உளம் சோர்ந்தேன். இரட்டைக்கோபுரங்கள் செல்லும் பாதையில் பல்வேறு மரங்கள் நின்றன. ஆனாலும், பனை சார்ந்து ஒரு சிறு தடயம் கூட தென்படவில்லை. சற்று தொலைவில் ஒரு டாக்சி டிரைவர் நின்றுகொண்டிருந்தார். தார்தியோ எப்படி போகவேண்டும் என்று கேட்டேன். என்னை மேலும் கீழும் புரியாதமாதிரி பார்த்தார். பின்னர் “தாட்தேவ்”? என்றார். நான் மையமாக தலையசைத்தேன். ஒருவேளை நான் தான் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லையோ? அவர் இதுதான் தாட்தேவ் என்றார். நான் பனை மரத்திற்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன், இங்கு எங்காவது பனை நிற்கிறதா என்று கேட்டேன். என் வாழ்கையில் பனை சார்ந்த தேடுகையில் அப்படி ஒரு குருட்டுத்தனமான பந்தை நான் வீசியதில்லை. அவர் எனது மனம் நொறுங்கும்படி தான் பதில் கூறினார். முற்காலங்களில் இருந்திருக்கலாம் இப்போது இங்கு பனை மரங்களே கிடையாது என்றார். எனது நடை தளர்ந்தது. உற்சாகம் அப்படியே வடிந்துவிட்டது. அந்த டாக்சி டிரைவர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மும்பையில் நுங்கினை “தாட்கோளா” என்று தான் சொல்லுவார்கள். தாட் என்றால் பனை என்றும் கோள என்றால் உருண்டை என்றும் பொருள். நுங்கினை வெட்டி அப்படியே கண் கண்ணாக தான் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அல்லது பனம் பழத்தின் சற்றேரக்குறைய உருண்டை வடிவம் இப்பெயரினை பெற்றுதந்திருக்கும். ஆகவே நான் தார்தியோ என ஆங்கிலத்தில் அழைக்கப்பெறும் அப்பெயர் இந்தியில் “தாட்தேவ்” என அழைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பனை கடவுள் வாழுமிடம் என்பதாக ஒரு பெயர். மும்பை ஒரு பனை நகரம் மட்டுமல்ல பனை கடவுள் வாழுமிடம் என்பதாகவும் இருந்திருக்கிறது. மென் மழையா? சில்லென்ற காற்றா அல்லது மனம் அடைந்த உணர்ச்சிப்பெருக்கா. மயிர்கால்கள் சில்லிட்டன. எதோ ஒரு உணர்வு என்னுள் கடந்து சென்றது. நான் தேடி வந்த இடம் இதுதான். பனை சார்ந்து இம்மண்ணில் நிகழ்ந்தவைகள் இன்று என் கண்களுக்கு மறைவாக இருக்கலாம், ஆனால் விண் எட்டும் இந்த இரட்டைக்கட்டிடங்கள் ஒன்று ஆண் பனையெனவும் மற்றொன்று பெண் பனையெனவும் என் கண் முன்னால் எழுச்சியோடு நிற்கின்றன. தொல் மூதாதை பனையினை பற்றி ஏறி விண்னை அளந்துவிடும் கனவினை, நவீன மனிதன் விடாது முன்னெடுக்கும் ஒரு தொடர்ச்சியாகவே அந்த இரட்டைக் கட்டிடங்களைப் பார்க்கையில்  நான் உணர்ந்தேன்.

எப்பாடியாவது இன்று இப்பகுதியில் ஒரு பனை மரத்தையாவது நான் தேடி கண்டுபிடித்த பின்னரே வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற உறுதியுடன் நின்றேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. எந்த திசை நோக்கி நடக்கலாம் என நான் எண்ணிக்கொண்டிருக்கையில், என்னையே ஒரு டாக்சி டிரைவர் பார்த்துக்கொண்டிருப்பதைப் கண்டேன். ஒருவேளை என்னை சவாரி என எண்ணிக்கொண்டாரா? பரவாயில்லை, அவரிடம் கேட்டுத்தான் பார்போம் என எண்ணி அவரை அணுகினேன்.

பனைக்கும் இந்த இடத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அறிந்து வந்தேன், ஆனால் இங்கே பனை மரம் ஏதும் எனது கண்ணில் தென்படவில்லை அருகில் எங்காவது பனை மரங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். அவர் முதலில், இங்கு பனை மரங்கள் ஏதும் இல்லை என்றார். பின்பு யோசித்தவராக பெடர் ரோடில் ஒரே ஒரு பனை மரம் இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன் ஆனால் அது “தாட்தேவ்” பகுதியில் இல்லை. இன்னும் சற்று தொலைவு செல்ல வேண்டும் என்றார். என் முகம் பிரகாசமடைந்தது. மும்பையின் மிக முக்கியமான ஓரிடத்தில், பனை ஒன்று நிற்கிறது என்பது நான் அவணப்படுத்தவேண்டிய ஒரு தகவல் தான்.

பொதுவாக, நாம் ஓரிடத்தில் பனை மரத்தினைத் தேடிச்செல்லும்போது, மிகச்சரியாக அவ்விடத்தில் பனை இலையென்றால், அதன் சுற்றுவட்டாரங்களை தேடுவது மிக முக்கிய ஒரு பணியாகும். காணாமல் போன பனைகளின் சுவடுகள் எங்காவது ஏதேனும் ஒரு வகையில் தனது எச்சங்களை விட்டு வைத்திருக்கும் என்பது உறுதி. ஆகவே அந்த பனை மரத்தினைப் பார்க்க எண்ணினேன். சற்றேரக்குறய ஒரு கி மீ தூரம் செல்லவேண்டும் என்றார். முதலில் நடந்தே செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், அது சரியில்லை, எனக்கு உதவி செய்த இந்த மனிதருக்கு முதல் “போணி” அமைத்துக்கொடுப்பதுவே சிறந்தது என எண்ணி, எனக்கு அந்த மரத்தைக் காண்பிப்பீர்களா என்றேன். ஏறுங்கள் என்றார்.

அவர் சென்ற சாலையின் இரு மருங்கிலும் பத்து அல்லது இருபது வருடங்களேயான பல வகை மரங்கள் சீரான இடைவெளிகளில் நின்றன. ஒரு அரை மைல் தூரம் சென்றிருப்போம். எனது இடது பக்கம் ஒரு மாபெரும் குன்று எழுவதைப் பார்த்தேன். கட்டிடங்கள் மிக உயரமான இடத்தில் அமைந்திருந்தன. இத்தனை வருடத்திலும் நான் இங்கே வந்ததில்லையே என எண்ணியபடி வந்தேன்.

அப்பகுதியில் இருந்த வணிக கட்டிடங்களைத் தொடர்ந்து ஒரு இடைவெளி தென்பட்டது. புதிதாக கட்டுமானத்தை துவக்கிய இடம் அது. ஆகவே தகரங்களை வைத்து அடைத்திருந்தார்கள். கட்டிடங்களின் பின்புறம் இருந்த குன்றுகள் அங்கிருந்த வீடுகள் இவ்விடைவெளி மூலம் தேளிவாகவே தெரிந்தது. இருள் விலகாத அத்தருணத்தில் தென்னையோலைகள் மரங்களின் செறிவு பழங்கால பங்களாக்கள் என அந்த பகுதி மும்பையின் ஒரு நூறு வருட தொன்மை கொண்டிருந்தது. வாகனம் சென்றுகொண்டிருக்கையில் என் கண்களில் ஏற்பட்ட பிரமையா என தெரியவில்லை பனை மரங்களைப் பார்த்தேன். ஆம் பனை மரங்களே தான். ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் அதிகம். நிறுத்துங்கள் எனக் கூவினேன். ஓட்டுனர் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தினார்.

சாலையிலிருந்து பார்க்கையில் கூட்டமாக சில பனை மரங்கள் அந்த உயர்ந்த இடத்தில் நின்றன. குறைந்தது ஐந்து பனை மரங்களாவது இருக்கும் போல் தோன்றியது. இன்னும் சற்று தொலைவில் மேலும் இரண்டு பனை மரங்கள் நின்றன. எனது முகம் புன்னகை ஏந்தியது. இது தாட்தேவின் மறு பகுதிதான் சந்தேகமில்லை. இங்கிருக்கும் பனை மரங்கள் எப்படியோ நகர்மயமாக்கலில் தப்பித்து இவ்விடம் பனைக்கானதுதான் என சொல்லும்படி நிற்கின்றன. இந்த பனைகளைப் பார்த்தபின்பு மிகவும் நிறைவாக உணர்ந்தேன். எனது உள்ளம் இழுத்துவந்த திசை மிகச்சரியானது என்ற எண்ணத்துடன் மீண்டும் டாக்சியில் வந்தமர்ந்தேன். ஓட்டுனர் என்னை ஆச்சரியமாக பார்த்தபடி, பெட்டர்ரோட் போகவேண்டுமா என்றார். ஆம் என்றேன்.

ஹாஜி அலி சந்திப்பு தாண்டி மேலும் ஒரு 100 மீட்டர் தூரம் தான் சென்றிருப்போம், நீங்கள் கேட்ட பனை என்றார். எனக்கு இருளில் எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒரு மரம் அங்கே இருந்தது. கூர்ந்து பார்த்தபோது அங்கே ஒரு மாமரம் தெரிந்தது, அதன் பின்னால் இருளில் நிற்கும் யானையென பனை தன் கால்களை ஊண்றி நின்றது. பாய்ந்து வெளியேறினேன். இந்த பகுதியில் வேறு எங்கும் பனை நிற்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மிக இள வயது மரம். சுமார் 30 வயதுகளில் இருக்கலாம். அந்த மரத்தில் 41 என எண் எழுதப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு அதன் அருகில் சென்று தொட்டுப்பார்த்தேன். விலகி நின்று பார்த்தேன். காய்கள் பழுத்திருக்கும் பெண் மரம். மனமே குதூகலத்தில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனது செல் பேசியில் புகைப்படமும் எடுத்தான் துக்கொண்டேன். இதன் தாய் இங்கே நின்றிருக்க வேண்டும் அல்லது இதன் அருகில் ஏதோ ஒரு பனை சில பத்தாண்டுகளுக்கு முன்பு நின்றிருக்க வேண்டும்.

எனது பயணம் இப்படி செயலாக்கம் பெறும் என நான் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை. நான் அங்கிருந்து திரும்புகையில், தொப்பென ஒரு சத்தம் . எனக்கு மிகவும் பழக்கமான ஒரு சத்தம் தான் அது. பனை தனது பழத்தினை விருந்க்டோம்பலாக  எனக்கு கொடுத்திருக்கிறது. எங்கே விழுந்தது என தேடினேன். உடனேயே கண்களில் தென்பட்டது. கரத்தில் எடுத்துப் பார்த்தேன். அதன் தோல் பரப்பு மேலிருந்து கீழாக வரி வரியென காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெரியும் இது மிகவும் சுவையான பழம் தான் என. அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டேன். நான் வீடு வரும் வரை அந்த பனம் பழம் என்னோடு கூடவே இருந்தது. மடியில் வைத்து கொஞ்சியபடியே வந்தேன். அதனை எனது கரத்தில் பிள்ளை என வைத்துக்கொண்டேன்.

எனது திருச்சபையின் மாவட்ட கண்காணிப்பாளர் அழைத்திருந்ததன் பேரில் அங்கே சென்றுவிட்டு வரும் வழியில் மீண்டும் தாட்தேவ் சென்றேன். முதன் முறையாக அங்கே இருளில் சென்றதால், மீண்டும் அங்கே பகலில் செல்வதுதான் சிறந்தது. நான் முதலில் பார்த்த பனைக் கூட்டங்கள் அல்டமன் ரோடில் இருப்பதாக ஓட்டுனர் கூறியது நினைவிற்கு வந்தது.  இம்முறை டாக்சி எடுக்கவில்லை, நடந்தே சென்றேன். இம்முறை அந்த பசுமை நிறைந்த குன்றினை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. ஒரு எளிய குடியிருப்பைப்பார்த்து அதனுள் நுழைந்தேன். ஒரு பாட்டி என்னை விசாரித்தார்கள். அவர்களிடம் மலைக்கு எப்படி போகவேண்டும் எனக்கேட்டேன். அவர்கள் சாலை வழியாகத்தான் போக வேண்டும் எனக் கூறினார்கள். என்றாலும் இக்குடியிருப்பின் பின்புறம் வழியாக நான் சென்று பார்க்கலாமா என அனுமதி கேட்டேன். சரி என்றார்கள். அந்த இடம் ஒரு டோபி காட் தான், மும்பையிலுள்ள வண்ணாரப் பேட்டை. அங்கிருந்து பார்க்கையில் ஒரே ஒரு பனை மரம் மட்டும் தனித்து தெரிந்தது. நான் கும்பலாக பார்த்த பனை மரங்களைக் காணவில்லை.

மீண்டும் சாலைவழியாக வந்து தேடியபோது கிட்டத்தட்ட 7 பனை மரங்களை ஓரிடத்திலேயே என்னால் எண்ண முடிந்தது. இன்னும் அதிகம் இருக்கலாம். அன்று நான் மீண்டும் பெடர் ரோடு சென்றேன். எனக்கு பனம் பழம் கொடுத்த அந்த மரத்தின் அருகில் நின்று அதன் அழகை பார்த்தபடி நின்றேன். மீண்டும் பனம் பழம் கிடைக்குமா என்று காத்திருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. வாழ்வில் சில தருணங்கள் அப்படித்தான் மீண்டும் வராது. நான் சாலையைக் கடந்து இந்த  மரத்தைப் புகைப்படம் எடுக்கவேண்டும் என கடக்கையில் எனக்கு எதிரே ஒரு சாலை சென்றது. அந்த சாலையின் முடிவில் ஒரு பனை மரம் நின்றது. அது நான் சற்றும் எதிர்பாராதது. பனை பரவலாக இப்பகுதிகளில் நின்றிருக்கிறது என்பதர்க்கான அடையாளம் தான் இவைகள்.

இப்போது நான் நிற்கும் இடத்தின் அருகில் தான் கிரான்ட்ரோடு. அதன் அருகில் தான் காமதிப்புரா. நான் நிற்கும் இடத்திலிருந்து 100 அடிக்குள் கடல் இருக்கிறது. ஹாஜி அலி தர்க்கா வெகு அருகிலெயே இருக்கிறது. பனை மரத்தோடு தொடர்புடைய மலபார் ஹில்ஸ் எனக்கு இடதுபுறமாக இருக்கின்றது.

மும்பை ஒரு பனை நகரம் என்பதற்கு வேறு சாட்சியங்கள் வேண்டுவதென்ன என என் மனம் உரக்க கூவியது. அன்று முழுவதும் நடந்துகொண்டே இருந்தேன். மீண்டும் ஹாஜி அலி சந்திப்பு வந்தபோது புத்திதாக  பேரீச்சை மரங்களை வரிசையாக நட்டிருந்ததைப் பார்த்தேன்.

வீட்டிற்கு வந்தபின்பு கூகுள் மேப் உதவியுடன் அந்த பகுதியினை ஆராய்ந்தேன். 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அங்கே நிற்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் எனக்குக் காட்டின.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம் 11

ஓகஸ்ட் 12, 2019

பனை மழைக்காடுகள்
மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவ்வித சிறப்புகளைக் கொண்டு அந்தந்த இடங்களுக்கு பெயர் அளிக்கப்பட்டிருக்கும். இது உலக பொது நியதி தான். மும்பையில் பனையில்லாத பகுதிகள் ஏதேனும் உண்டா எனும் கேள்வி எழுந்தால் இல்லை என்பதே எனது பதில். ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து தேடினால் நாம் கண்டுபிடிக்கத்தக்க மேலதிக மர்மங்கள் இதன் உள்ளே உறைந்திருக்கலாம். ஆனால் இந்த பாடை படலங்களை ஒவ்வொன்றாக விலக்கி விலக்கியே பனை நகரம் எவ்விதம் உருப்பெருகிறது என்பதைக் கண்டடைய வேண்டும். மும்பையில் பல இடங்களில் பனை மரங்கள் இன்றும் எஞ்சியிருக்கின்றன. அவைகளைத் தொடருவதும் பனைகளே இல்லாத பகுதிகள் என கூறப்படுமிடங்கள் எவ்விதம் பனை மரத்தினை தங்கள் பகுதியிலிருந்து இழந்திருக்கின்றன என்றும் தேடி கண்டடைவதும் தேவை.

நான் மும்பை ஒரு பனை நகரம் என்றபோது பலருக்கும் அது ஆச்சரியம் அளித்த ஒன்றாக இருந்தது. இன்னும் சிலருக்கு பனை நகரம் என்ற வார்த்தை அளித்த ஒவ்வாமை ஏன் என எனக்குப் புரியவில்லை. பல வருடமாக நான் அறிந்திருந்த ஒருவரிடம் மும்பை முழுவதும் பனை விதைகளை பரப்பவேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம் என கூறினேன். ஆகவே திருச்சபையின் சார்பில் பனை விதைகளை மும்பை முழுவதும் அளிக்கப்போகிறோம் என்றேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன் என்ற எண்ணத்துடனேயே இதனை நான் சொன்னேன். எனது வார்த்தைகளால் மிகவும் அதிகமாக புண்பட்டிருப்பார்கள் போல, வெகு கடுமையாக தனது அத்தனை உகிர்களைக் கொண்டும் என்மீது பாய்ந்துவிட்டார்கள். என்னிடம் கடுமையாக, என்ன, மும்பையினை பாலைவனம் ஆக மாற்ற சித்தம் கொண்டுவிட்டீர்களா? என கேட்டார்கள். மும்பை ஒரு மழைக்காடு என்பது தெரியாத? இங்கு பனைகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். இப்படி ஒரு குற்றச்சாட்டு நான் எதிர்பார்க்காதது. பனை இருந்தால் ஒரு நிலப் பகுதி வறண்டு விடுமா? இல்லை வறண்ட நிலத்தில் தான் பனை மரங்கள் வாழுமா?

பெரும்பாலும் அரை பாலை நிலங்களிலேயே பனை மரங்கள் காணப்படுகிறது என நாம் கருதுகிறோம். அப்படி பனை குறித்த பார்வைகள் நாம் நினைப்பது போல் இருப்பதில்லை என எனது பயணங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தன. பனை மரத்தினை நாம் அறிவோம் எனும் எண்ணம் நம்முள் மேலோங்கும் தோறும், பனை நம்மை விட்டு விலகிக்கொண்டே செல்லுகிறது. பனை சார்ந்து ஒரு ஒட்டுமொத்த பார்வை கோணம் நம்மிடம் இல்லை. பனை சார்ந்து செயல்படும் அறிஞர்கள் இன்றைய தினத்தில் மிகவும் குறைவே. ஆகவே கிடைக்கும் தகவல்களை நாமே திரட்டி அவைகளைச் சீர் தூக்கிப் பார்த்து ஒருங்கமைத்து தேடவேண்டியது ஒரு மாபெரும் பணியாகும்.

அனுதினமும் பனை எனக்கு தன்னை வெளிப்படுத்தியபடி இருக்கிறது. உலகில் வேறு எந்த தாவரங்களைக் குறித்தும் நாம் அதிக தகவல்களைப் நினைத்த மாத்திரத்தில் பெற இயலும். பனை குறித்து மாத்திரம் நம்மிடம் இருக்கும் தகவல்கள் வெகுவாய்க் குறைவுபட்டிருக்கின்றன. இத்தனைக்கும் பனையோடு தமிழர்களுக்கும் இந்திய பெருநிலத்திற்கும் குறைந்த பட்சம் 2000 வருட தொடர்பு இருக்கிறது என இலக்கிய சான்றுகள் வழியாக அறிகிறோம். இந்த நெடிய பயணத்தில் நாம் பனை குறித்து சேர்த்துக்கொண்டு வந்தவைகள் அனைத்தையும் கடந்த நூற்றாண்டில் ஒவ்வொன்றாக இழந்திருக்கிறோம். மிக முக்கியமாக பனை ஓலைச் சுவடிகள்.

பனை ஓலைச் சுவடிகள் சார்ந்த நெடிய பாரம்பரியம் கடந்த நூற்றாண்டில் நம்மை விட்டு விலகி சென்ற காரணம் நாம் சற்றே புரிந்து கொள்ள இயல்வது தான். ஏனென்றால், ஓலைச் சுவடிகள் சார்ந்த நெடும் பாரம்பரியமும், பரந்துபட்ட நிலப்பரப்புகளில் அவைகளின் பங்களிப்பும் என நாம் மிக விரிவாக உணர்ந்துகொள்ள சுவடிகள் நமக்கு வாய்ப்பளித்திருக்கின்றன. சுவடிகளில் இன்றும் திரளாக எஞ்சியவைகளை தொகுத்து என்ன செய்வதென கைபிசைந்து நிற்கும் காலம் இது. எவ்வகையிலும் இவ்விதம் தேங்கி நிகழும் அழிவுகள் பெருமளவில் பதிவுகளுக்குள்ளாவதில்லை. அதற்குக் காரணம், புதிதாக வரும் கலாச்சாரத்தின் பெரும்சுழிப்பில் அடிபட்டுச் செல்லுகையில், பழைமையின் சுவடுகள் அழிந்துவிடுகிறது. இப்படியிருக்கையில், பனை சார்ந்த பிராந்திய வழக்கங்கள் நமது பார்வையில் மேலெழுவது இல்லை. அவை அடியாழத்தில் ஒவ்வொன்றாக சமாதியாகிக்கொண்டிருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாக முக்குளித்து தான் எடுக்கவேண்டும். ஒரே நபர் அனைத்தையும் எடுத்துவிடும் தூரத்திலும் அவைகள் இல்லை. ஆகவே திறந்த கண்களோடு இவைகளைத் தேடுவது மிக முக்கியமானதாகின்றது.

“பனை மரங்கள் வறண்ட நிலத்தில் வாழ்கின்றன” என்ற மனப்பதிவு நமக்குள் ஏன் நுழைந்திருக்கிறது? இந்த கேள்வி மிக முக்கியமானது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் அனைத்து வறண்ட பிரதேசங்களிலும் பனை செழித்து வளர்ந்திருக்கிறது. ஆகவே பனை ஒரு வறண்ட நிலப் பயிர் என்பதாக ஒரு எண்ணம் நமக்குள் நிலைபெற்றுவிட்டது. இது பனை சார்ந்து நாமறிந்திருக்கும் ஒரு பகுதி தான். வருடத்தில் இரண்டு பருவமழை பொழிவை பெற்று சுமார் 1500 மி மீ முதல் 1800 மி மீ க்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெறும் குமரி மாவட்டம் ஏன், பனை சார்ந்த ஒரு முக்கிய இடமாக எவருக்கும் நினைவில் எழுவது இல்லை? அதற்கு அரசியல் கலாச்சாரம் மற்றும் மொழி என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவைகளை நாம் இங்கு விரிவாக பார்க்காவிட்டாலும், அந்த கூறினை உள்ளடக்க மறந்தோமானால், பனை நமக்கு முழுமையாக தன்னை வெளிப்படுத்தாது. கேரளாவின் திருவனந்தபுரம் பகுதிகளிலும் பனை செழித்து வளர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், பழம்பெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வருவாய் ஈட்டித்தரும் மரமாக பனை மரம் இருந்திருக்கிறது.

பனை மரங்கள் நெய்தல் நில தாவரம் என்பது எனது பனை மரச் சாலை பயணம் வாயிலாக நான் கண்டடைந்த உண்மை. கடற்கரைப் பகுதிகள் பனை மரத்திற்கு ஏற்ற இடங்கள் எனவும் மீனவ மக்களுடன் அது நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் நான் நிரூபித்திருக்கிறேன். குமரி முதல் கொல்கத்தாவரையிலும் கடற் பகுதிகள் பனைக்கான இடங்களே. கடற்கரையில் வாழ்ந்த சமூகத்தின் தொழில் இரண்டு விதமாக பிரிந்திருக்கலாம் என்றும் கருதுகிறேன். கடல் தொழில் செல்பவர்கள் தனிப்பிரிவினராகவும் பனைத்தொழில் செய்பவர்கள் மற்றொரு பிரிவினராகவும் பிற்காலத்தில் மாறியிருக்கலாம். கடல் தொழில் சார்ந்தும் நிலத்தில் விளையும் தாவரங்களைக் கொண்டுமே இதனைச் சொல்லுகிறேன். இவைகளைக் குறித்து மேலதிகமாக வ்ரலாற்று ஆய்வாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களுமே கருத்து சொல்ல இயலும்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டை இது சார்ந்து நாம் பார்க்கலாம். குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு பனம் பழத்தின் மேல் உள்ள விருப்பு பனை சார்ந்து வாழும் மக்களுக்கு இருக்கும் விருப்பிற்கு சற்றும் குறைந்தது அல்ல. அவ்விதமாகவே பனை ஏறும் மக்களுக்கு மீன் ஊன் மீது இருக்கும் மோகம் சொல்லி முடியாது. தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் பனை மரம், மீனவர்களோடு தொடர்பற்றது என நிறுவும் ஆய்வாளர்கள் இனிமேல் பிறக்கத்தான் வேண்டும். அந்த அளவிற்கு பனை மீனவர்களோடு தொடர்புடைய ஒரு தாவரம். ஆக பாலை (வறண்ட) நில பயிர் என்பதோ அல்லது நெய்தல் நில பயிர் என்பதோ ஒரு முழுமையான வரையறை அல்ல என்பதுவே எனது எண்ணம்.

பொதுவாக பனை மரங்கள் குறைந்த பட்ச மழையளவு 500 மி மீ அளவு இருந்தாலே வாழ்ந்துவிடும் எனக் கூறப்படுவது உண்டு. ஆகவே தான் ராமேஸ்வரம் பகுதிகளில் பனை நிரம்பக் காணப்படுகின்றது. நிலத்தடியில் உப்பு நீரோ அல்லது நன்னீரோ கிடைத்தாலும் அவைகள் தப்பிப்பிழைத்துக்கொள்ளுகின்றன. அப்படியென்று சொன்னால், சேலம் தருமபுரி போன்ற கடல் பகுதியினைச் சாராத பகுதிகளிலும் பனை மரங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி எழும்பாமல் இல்லை. அப்படியே கடலை விட்டு வெகு தொலைவில் இருக்கும் தேரிக்காடுகளிலும் பனை மரங்கள் பெருகி நிற்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றே.

தமிழகத்திலுள்ள கரடுமுரடான பாறை செறிந்த பகுதிகளிலும் பனை தாராளமாக இருந்திருக்கிறது. நீர் குறைந்த இடத்தில் பதனீர் சுவை கூடி இருப்பதையும் நீர் அதிகமுள்ள இடங்களில் பதனீரின் சுவை குறைவாகவும் இருக்கும் என்றே கூறுவார்கள். உண்மையாகவே இருக்கக்கூடும். ஆய்வுகளும் அவ்வாறே சொல்லுகின்றன. எனது நாவிற்கு அப்படி வித்தியாசம் தட்டுப்பட்டதில்லை. எனது நாவின் குறைபாடாகவும் அது இருக்கலாம். என்னளவில் அனைத்துமே சுவை பெருகும் இன்னீர்தான்.

நான் சந்தித்த இதே கேள்வியினை இதற்கு முன் வேறு வகையில் நான் அறிந்திருக்கிறேன். கடந்த வருடத்தில் சில சூழியலாளர்களோடு ஆலப்புழா சென்றிருந்தேன். கேரளா முன்வைக்கும் தென்னைகள் சூழ நிற்கும் ஒரு நிலப்பரப்பு. நீர் அல்லது தென்னை இவைகளை இணைக்கும் படகுகள் என்பதுவே ஆலப்புழாவின் நன்னீர் ஏரியில் நாம் காணும் காட்சி. சேர நாடு திரிந்தே கேரளம் ஆனதாக நினைக்கிறேன். பனைக்கு மாற்றாக தென்னை மரத்தினை முன்வைக்கும் பொருட்டு கூறப்பட்ட ஒரு பெயராகவே கேரளம் எழுந்திருக்கும். மலையாளம், மலபார் போன்ற சொற்களே வெகு சமீபம் வரைக்கும் கேரளாவைச் சுட்டும் வார்த்தைகளாக ஆங்கிலேயர்களது பதிவில் நமக்கு கிடைக்கின்றன.

அன்று எனக்கும் உடன் வந்த பேராசிரியருக்கும் நடைபெற்ற உரையாடலில், அவர் பனை கேரளாவிற்கான மரம் அல்ல என்றார். தென்னை மரத்தை கேரளா பண்பாடு என உள்வாங்கிக்கொண்ட ஒரு நவீன மனமே அப்படி சொல்லுகிறது என்பது எனது புரிதல். அல்லது பனையை புறக்கணிக்கும் ஒரு மனநிலையே தென்னையினை முன்வைக்கிறது என்பது எனது எண்ணம். தென்னை மரங்கள் கேரளாவில் இத்தனை செறிவுடன் ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு இருந்திருக்காது என்பது உறுதி. ஆனால் பனை அப்படியல்ல, இங்கே இன்று நாம் காண்பதை விட வெகு செழிப்புடன் பரவி இருந்திருக்கும். ஆய்வு செய்து தரவுகளுடன் இதனை நான் சொல்லவில்லை, என் மனப்பதிவு அப்படி என்னை சொல்ல வைக்கின்றது. யாருக்குத் தெரியும், கேரளம் என்பது பனைவளமாயிருந்த இடமாயிருக்குமோ?

சில நாட்களுகு முன்பு வாகை சூட வா என்ற படத்திலுள்ள சர சர சாரக்காத்து என்ற பாடலை எனது நண்பர் லாசரஸ் எனக்கு அனுப்பி 3.42 வினாடிகளுக்கு மேல் கவனமாக பாருங்கள் என்றார். நாயகி குளத்து நீரில் நெஞ்சளவு மூழ்கி குளிக்கையில் பின்னால் ஒரு பனை மரம் தெரிந்தது. பரவாயில்லையே, பனை மரத்தை இப்போதெல்லாம் முக்கிய நிலக்காட்சியாக திரைபடத்துறையினர் பயன்படுத்துகிறார்களே என நினைத்தேன். அதை தொடர்ந்து நான் ஆச்சரியப்படும் ஒரு காட்சி அரங்கேறியது. ஒரு மீன் மழை ஊற்றிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பனை மரத்தில் ஊர்ந்து ஏறத்துவங்கியது. காட்சி வெட்டப்பட்டு மீண்டும் மீன் பனை மரத்தில் நெடுந்தொலைவு ஏறி பின்னர் தண்ணீரில் விழுகின்ற ஒரு காட்சி பதிவாகியிருந்தது. நான் நாற்காலியின் நுனிக்கு வந்துவிட்டேன்.

எத்தனை முறை அந்த காட்சியை மீள மீள பார்த்திருப்பேனோ தெரியாது. ஆச்சரியம் அளித்த அந்த காட்சி பின்னர் சந்தேகமாக உருவெடுத்தது. வரைகலை சார்ந்து ஏதும் மாயம் செய்திருப்பார்களோ என எண்ணினேன். படமே ஒரு கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில், இருக்காது என வேறொரு மனம் சொன்னது. கிராமிய சூழலை அறிந்த இயக்குனரே இதனை உள் நுழைத்திருக்க இயலும் என உணர்ந்து கொண்டேன். பின்னர் அதுகுறித்து நான் அறிந்த தகவல் கிராம வாழ்வினை பின்னணியமாக கொண்டவர்களுக்கு ஒரு சாதாரண செய்தி. அந்த மீனின் பெயர் “பனையேறிக் கெண்டை”. பனை மரம் ஏறும் ஒரு மீன் இருக்கிற செய்தியே எனக்கு அப்போதுதான் தெரியும்.

Climbing Perch

பனையேறி கெண்டை (Climbing Perch)

இந்த கேள்வியினை நான் அந்த பேராசிரியரிடம் முன் வைத்தேன். பனை ஏறும் மீன் ஒன்று உள்ளதாக நான் அறிந்திருக்கிறேன் அது உண்மையா எனக் கேட்டேன். ஆம் அதனை ஆங்கிலத்தில் கிளைம்பிங் பெர்ச்(Climbing Perch) எனக் கூறுவார்கள் என்றார். பனை மரக் கெண்டை ஆலப்புழாவில் உண்டா எனக் கேட்டேன், ஆம் என்றார். நீர் நிறைந்த அந்த பகுதியில் பனை மரங்கள் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் என்னில் மேலோங்கியதால், “அப்படியானால் இப்பகுதியிலும் பனை மரங்கள் ஒரு காலத்தில் இருந்திருக்குமோ? எனக் கேட்டேன். பேராசிரியர் கூறினார், ஆறு மாதங்கள் இங்கே மழை பொழியும் அப்படியிருக்க பனை இம்மண்ணின் மரமாக இருக்காது என. பேராசிரியர் ஆயிற்றே நானும் நம்பிவிட்டேன். இல்லையில்லை நான் நம்பிவிடவில்லை சற்றே குழம்பிவிட்டேன். ஆம், ஆனால் உடனே எனது ஆழ்மனம் விழித்துக்கொண்டது. எங்கோ பேராசிரியர் கூற்றில் ஒரு பிழை இருக்கக்கூடும் என உள்ளூர உணர்ந்தேன். அதனை அப்படியே விட்டுவிட்டேன்.

மழைப்பொழிவு சார்ந்து பேராசிரியர் முன்வைக்கும் ஒரு தர்க்கபூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் நிலையில் நான் அப்போது இல்லை. எனது மனப்பதிவு சுதந்திரத்திற்குப் பின்பு பல்வேறு மானியங்களால் தென்னை மரங்கள் முன்னுரிமை பெற்று கேரளாவில் வளர்க்கப்படலாயின என்பதே. கேரளாவில் நூற்றாண்டுகளாக தென்னைகள் இருந்திருக்கும், ஆனால் இன்று காணப்படும் பெரும் வணிக நோக்கில் அவைகள் வளர்க்கப்பட்டிருக்காது என்பதே உண்மை. ஆலப்புழா பகுதிகளிலும் பனைகளே நின்றிருக்கும் என்பது எனது எண்ணம். ஏன் அப்படி எண்ணுகிறேன் என்றால் மழை சார்ந்து பனை ஏறுபவர்களுக்கு ஏற்படும் குறைந்த ஊதியம் ஒரு பொருட்டே அல்ல. வாரப்பனை எனும் முறைமைகளே பெருமளவில் இருந்திருக்கின்றன. ஒருநாள் கூலி உரிமையாளருக்கும் மற்றொருநாள் கூலி பனை ஏறுபவருக்கும் என்றிருக்கும் சூழலில், ஊதியம் என்பது உழைப்பின் வாயிலாக கிடைக்கும் உணவை பங்கிட்டுக்கொள்ளும் சூழலே இருந்திருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமையும் பருவம் தேடி செல்லும் பனையேறிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறு மாத மழை என்பது எவ்வகையிலும் பாதிப்பு அளிக்கக்கூடியவை அல்ல. என்றாலும் நான் கூறும் தகவல்கள் சரி பார்க்கப்படவேண்டியவைகளே.

அன்றைய பயணத்தில் அந்த ஏரிக்கரையோரம் இருந்த ஒரு கோவிலின் அருகில் நெடிந்துயர்ந்த ஒரு ஒற்றைப் பனை மரத்தைப் பார்த்தேன். அங்கு நின்ற அத்தனை தென்னை மரங்களையும்விட உயரமாக உறுதியாக நேர்கொண்ட நெஞ்சுடன் எழுந்து நின்றது. தன்னந் தனியனாக சாட்சி சொல்லும் பொருட்டு எனது வருகைக்காக அது நின்றிருந்தது போலும். வெகு அமைதியாக என் காதோரம் தான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்ட நிறைவுடன் அது தன் தவத்தை தொடர்ந்தது.

நான் அறிந்த வரைக்கும் ஆப்பிரிக்காவில் 500- 1400 மி மீ மழைபொழிவு உள்ள இடம் வரைக்குமே பனைகள் வளரும் என்பதாக பதிவாகியிருக்கிறது. அது தமிழகத்திற்கும் பெருமளவில் பொருந்தும். தமிழகம் அவ்வகையில் மழை மறைவு மாநிலம். 1000 மி மீ கும் குறைவாகவே மழை பொழியும். ஆலப்புழாவைப் பொறுத்தவரைக்கும் 3000 மி மி மழை பொழிவு உண்டு. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மழை பொழியும் நாட்கள் தான். அப்படியிருக்க குறைந்த மழை பொழிவில் தப்பிக்கொள்ளும் பனை மரங்களை அகற்றி அதிக மழை பொழிவு தேவையாயிருக்கும் தென்னை மரங்களை இங்கே வளர்க்கத் துவங்கியிருப்பார்கள்.

இவ்வித முடிவிற்கு நான் வருவதற்கு காரணம், சமீபத்தில் நாங்கள் மும்பையில் எதிர்கொண்ட மழை தான். இரண்டே இரண்டு நாட்களில் இங்கே 400 மி மீ மழை பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. மும்பையின் ஆண்டு மழைப்பொழிவு 2168 மி மீ என்பதாக அறிந்தபோது ஆலப்புழாவில் உள்ள மேலதிக 1000 மி மீட்டர் பனையினை ஏதும் செய்துவிட இயலாது என எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன். இங்கே மும்பையில் பனை மரங்கள் வளருவதற்கு எந்த தடைகளும் இல்லை. முழுதாக ஆறு மாதம் இங்கே வந்து தொழில் செய்துவிட்டு போகிறவர்களைக் காண்கிறேன். அப்படியானால் ஆலப்புழாவின் மழையில் பனை ஒன்றும் கரைந்து போய்விடாது. அவைகள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

மழை பொழிவு என்பதை அளவீடாக கொள்வதை விட, மலைப்பாங்கான இடங்கள் பனை மரங்களுக்கு மிக முக்கியமானவைகளாக இருக்குமோ? நீர் தேங்காது ஒழுகிவிடும் பகுதிகளில் பனை மரங்கள் நிம்மதியாக வளர்கின்றனவோ? அப்படியும் சொல்ல இயலாது. கம்போடியாவிலும், தமிழகத்தில் தஞ்சை மற்றும் குமரி போன்ற பகுதிகளிலும் வயல்வெளிகளுக்கருகில் பனை மரங்கள் நிற்கின்றன. நீர் தேங்கி நிற்பதால் வேர்கள் அழுகிவிடவில்லை.

1996 ஆம் ஆண்டுவாக்கில் திறக்கப்பட்ட குமரி மாவட்டத்திலுள்ள மாம்பழத்துறையாறு பகுதியினை நான் பார்க்க சமீபத்தில் சென்றிருந்தேன். அணையின் நடுப்பகுதியில் பனை மரங்கள் கழுத்தளவு நீரில் நிற்பதை 2017 ஆம் ஆண்டு வாக்கில் பார்த்தேன். ஆனால், இந்த மரங்கள் தனது உயிரை விடும் தருவாயில் இருந்தன என்பதை நீர் வற்றிய பின்பே உணர்ந்து கொண்டேன். பனை மரங்களின் தண்டு பகுதி சிதிலமடைவதையும், நீர் அதனுள் நுழைந்து அவைகளை இற்றுப்போகப்பண்ணுவதையும் நேரில் கண்டேன். என்றாலும் பனை மரங்கள் இருபது வருடங்கள் இவ்வித நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கையில், பனை மரங்களின் வலு மிக்க தகவமைப்புகள் நமக்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

இவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கையில் மும்பையின் மழைக்காடோ, அல்லது சதுப்பு நிலங்களோ, வறண்டநிலமோ எதுவும் பனை மரத்தினை ஒன்றும் செய்யாது என்ற எண்ணம் என்னில் நிலை பெற்றது.
மேற்கூறியவைகளை நாம் வேறு வகையிலும் நாம் புரிந்துகொள்ளலாம். மழை பொழிவு நிறைந்த பகுதிகளில் குடியேறிய மக்கள் பனைக்கு மாற்றாக வேறு தாவரங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். பனையேறும் சமூகங்கள் அவ்விதமாக பின் தள்ளப்பட்டிருக்கலாம். அவைகள் மரம் சார்ந்த வாழ்கை முறையாக பார்க்கப்படாமல், இந்திய சமூக வாழ்வில் நிறைந்திருந்த சாதிய அடையாளத்துடனும், சமூக அரசியல் பின்னணியங்களுடனும் மட்டுமே வாசிக்கப்பட்டிருக்கிறது.

 

சர சர சாரக் காத்து
https://www.youtube.com/watch?v=Y7ZHkpRcshQ

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  10

ஓகஸ்ட் 9, 2019

விதைகள் முளைக்கும்

ஆரே காலனி வந்த உடனேயே நான் எழுதிய முதல் கடிதம் பனை விதைகளை நடுவது சார்ந்தது தான். இப்பகுதியில் பனை விதைகளை நடுவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆரே பகுதியினை மேற்பார்வையிடும்  சி இ ஓ விற்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்களை நேரடியாக சந்தித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆரே பொறுப்பிலிருக்கும் அதிகாரியினை நானும் எங்கள் திருச்சபை இளைஞர் குழுவின் தலைவரான தாமஸ் என்ற தம்பியுமாக இணைந்து சென்று பார்த்தோம். மூன்று நாட்கள் தொடர் முயற்சிகளுக்குப்பின்பு நாங்கள் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பனை மரங்களை நாங்கள் நடப்போகிறோம் என்றவுடன் அவர் மகிழ்ச்சியடைந்துவிட்டார். உற்சாகமாக செய்யுங்கள் என ஊக்கமளித்தார். தகுந்த பதிலை கடிதம் வாயிலாக அனுப்புவதாக கூறினார்.

எங்கள் கடிதம் கேட்பது ஒன்றே தான். ஆரே பகுதிகளில் பனை விதைகளை நடுவதற்கு அனுமதி வேண்டும்.  நேரடியாக பேசியதால் பதில் கடிதத்திற்காக  நாங்கள் காத்திருக்கவில்லை. நல்லது செய்ய நாள் நேரம் ஏன் பார்க்க வேண்டும்?  கடிதம் கொடுத்த மறுநாளே நாங்கள் பனை நடுவதை துவங்கிவிட்டோம். இரண்டு மாதங்களுக்குப் பின் அவர்களிடமிருந்து எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. அவர்களின் கடிதத்தில் சில எளிய கட்டுப்பாடுகளையே விதித்திருந்தார்கள். முறையே, எவருக்கும் தொந்தரவாக இருக்ககூடாது, மரத்திற்கு உரிமை கோரக்கூடாது, மரம் நடும் இடங்களில் இருக்கும் பிற மரங்களுக்கு சேதம் விளைவிக்ககூடாது. ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதிக்கா வண்ணம் புதிய மரங்கள் நடப்படவேண்டும் என்பது போன்ற அடிப்படையான அறிவுறுத்தல்கள்.

அந்த கடிதம் பெரு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. இதுவரை திருச்சபையில் அனைவருமாக இணைந்து 1500 பனை விதைகளுக்கு மேல் ஆரே பகுதிகளில் விதைத்திருப்போம். ஒருவேளை கடிதம் வருவதற்காக நாங்கள் காத்திருந்தோமென்று சொன்னால், எங்களால் இவ்வளவு விதைகளை சேகரித்திருக்கவோ, விதைக்கவோ இயலாது. கடந்த இரு மாதங்களாக மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. மழை பொழிந்த பின், நாளுக்கு நாள் விதை சேகரிப்பதும், நடுவதும் சிரமமாகிக்கொண்டே இருக்கிறது. குழந்தைகள் உடன் வருவதனால் இப்போது விதைகளை விதைப்பதை நிறுத்திவிட்டோம்.

Seed Planting

ஆரே டெய்ரி செல்லும் வழியில் பனை விதைகளை விதைப்பதற்கு முன்னால்.

பனை விதைகளை சேகரிக்க செல்லுவதும், நடுவதற்குச் செல்லுவதும் பெரும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வுகளாக மாற்றிகொண்டோம். குடும்பமாக செல்லுவது, சிறுவர்களையும் வாலிபர்களையும் இணைத்துக்கொள்ளுவது என இது இணைந்து முன்னெடுக்கும் பணியாக வளர்ந்தது. சமூக பணி செயற்குழு தலைவர் மணிராஜ் அவர்கள் பங்குபெறுவோருக்கு நொறுக்கு தீனிகளை எடுத்து வருவார். மாத்திரம் அல்ல களத்தில் தீயென வேலையும் செய்வார். பங்கு கொண்ட அனைத்து  குழந்தைகளுக்கும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பனம்பழங்களின் சுவையினை ஊட்டிவிட்டோம். குழந்தைகளே எங்கள் திருச்சபையின் சொத்து என எண்ணும்படியாக குழந்தைகளின் பங்களிப்புகள் விதை சேகரிப்பிலும் பனை நடுகையிலும்  இருந்தன. உற்சாகம் கரைபுரண்டோடி கொப்பளிக்கும் குழந்தைகள். இவர்களோடு எங்கள் புதிய கன்னி இன நாய்குட்டி லக்கியும் இணைந்துகொண்டது.

Seed Collection

இளைஞர்கள் கோணியில் சேகரித்த பனம்பழங்களை ஓலையில் வைத்து இழுத்துச் செல்லுகிறார்கள். லக்கி உடன் நிற்கின்றது

மும்பையின் பல்வேறு பகுதிகளில் பனை மரங்கள் இருந்தாலும், மக்களால் அவை மறக்கப்பட்டு எவ்வகையிலும் கலாச்சாரத்தின் வெளியே நிற்கின்ற ஒன்றாக அவை மாறிவிட்டன. வளர்ச்சியால் புறந்தள்ளப்பட்ட இம்மரங்கள் அண்டவர் அருளிய சொத்து என்பதனை கிறிஸ்தவர் எவரும் எண்ணிப்பார்பதில்லை. ஒரு வகையில் தனது கடைசி சொட்டு இரத்தமும் சிலுவையில் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை ஒப்புமைப்படுத்தும் வகையில் பனை மரம் இருக்கிறது என்றே எனக்குத் தோன்றும். மானிடருக்கென முழுமையாக தன்னை கொடுக்கும் ஒரு உன்னத மரம். “இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்;….” (ஏசாயா 53: 2மு) என துன்புறும் ஊழியரைக் குறித்து ஏசாயாவின் சொற்களை காட்சிப்படுத்தும் வகையிலேயே பனை மரங்கள் காணப்படுகின்றன.

திருச்சபையின் கண்களுக்கும் இவ்விதம் மறைவாயிருப்பவை மேல் பெருத்த விருப்பம் இல்லை. இழந்துபோனவைகளைத் தேடவும் இரட்சிக்கவும் திருச்சபைக்கு இன்று பயிற்சியில்லை, பெருமளவில் அக்கரையும் இல்லை. ஏனெனில் எவைகளை இழந்திருகிறோம் என்ற புரிதலே நம்மிடம் இல்லை. திருச்சபைக்கு உள்ளாக நாம் இழந்தவைகளையும் நம்மால் சீர் செய்ய இயலவில்லை, அப்படியிருக்க திருச்சபைக்கு வெளியே கடவுளின் படைப்பில் நாம் இழந்தவைகளை எப்படி நம்மால் சீர்படுத்த இயலும்?.

பனைமரங்கள் திருச்சபையின் கண்களிலிருந்தும் சமூகத்தின் கண்களிலிருந்தும் மறைந்துகொண்டே வந்தது. பனையும் பனை சார்ந்த மக்களும் வேறு வகை வாழ்க்கைக்கு திருப்பப்பட்டனர். அதுவே ஆண்டவரின் திருவுளம் என்றும் நம்பத் துவங்கினர். உலகை மாசுபடுத்தும் இவ்வுலகின் அதிபதிகளுடன் சற்றும் மனம் கோணாமல் தங்களை இணைத்துக்கொள்ளுகின்றனர். பாலும் தேனும் ஊறும் வாக்களிக்கப்பட்ட பனை மரங்களை சுதந்தரிக்கும் பேற்றினை இழந்து பல்வேறு அடிமைத் தழைகளில் சிக்கிக்கொண்டனர். இன்று காணாமல் போன ஆடுகளைக் குறித்த கவலைகளை விட, நாம் எப்படி தப்பித்துக்கொள்ளுவது என்ற எண்ணம் மிகுந்த மேய்ப்பர்களே பெருகியிருக்கிறார்கள். திருச்சபையின் ஊழியங்கள் மிக முக்கியமானவைகள். அவைகள் கிறிஸ்துவின் பணியினை தொடர் செயல்பாடாக எடுத்துச் செல்லுவதற்கு ஏற்றவை தான். ஆனால் அவைகளில் போலியாய் சிக்கிகொண்டு  விலங்கிடப்பட்டு கிடக்கும் ஒரு அடிமை சமூகமே இன்று எஞ்சியிருக்கிறது. கிறிஸ்துவிற்கு அடிமையாய் இருப்பதில் தவறில்லை ஆனால் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்ற உறுதிமொழியின் ஆழம் அறியாதபடி போய்விடுகிறோமோ என்கிற கவலையே எஞ்சியிருக்கிறது.

மகராஷ்டிராவிலுள்ள விவசாயிகள் வறட்சியினால் தங்களை மாய்த்துக்கொள்ளும் நிலையினைப் பார்க்கிறோம். விதர்பா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் அவல நிலை, தொடர்ந்து தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றது. இவைகளை நாம் எப்படி மக்களுக்கு புரியவைப்பது? திருச்சபைகள் இவைகளுக்காக இயற்றும் ஜெபம் எத்தகையாதாக இருக்கும்? அது ஒரு சடங்கு என மாறிவிடாதா? கடவுள் படைத்த இயற்கையினை அழித்துவிட்டு, இயற்கைக்கு எதிரான ஒரு வாழ்க்கையை முன்னிறுத்தி, சடங்காக நாம் ஏறெடுக்கின்ற மன்றாட்டுக்கள் எந்த கடவுளின் செவியைச் சென்றடையும்?

திருச்சபை இன்று கொண்டாடும் பனை சார்ந்த ஒரே பண்டிகை குருத்தோலை ஞாயிறு தான். அவ்வாறிருக்க பனை மரங்கள் குறித்ததான எண்ணமோ பனை சார்ந்து வாழும் மக்களின் நிலை குறித்த எண்ணமோ நமக்கு கிடையாது. அழிந்து போகும் ஆத்துமாக்கள் குறித்து கவலைகொண்ட எண்ணிறந்த மிஷனெறி பணியினர் கூட, பனை சார்ந்து வாழும் மக்களைக் குறித்து ஒரு வரி எழுதுவதில்லை வேண்டுதல் ஏறெடுப்பதும் இல்லை. இச்சூழல் மிகவும் வருந்தத்தக்கது. அரசியல் பேசும் மொழிநடையிலேயே திருச்சபையும் கீழிறங்கிவிட்டதையே இது காண்பிக்கிறது. பல்வேறு திருப்பணியாளர்களின் உக்கிர கோப்பாக்கினையின் மத்தியிலேயே இங்கே நான் கூறும் உண்மைகள் விளம்பப்படக்கூடிய சூழல் இருக்கின்றது.

நவி மும்பை எனப்படும் புதிய மும்பை பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைகள் இணைந்து குருத்தோலை ஞாயிறு கொண்டாடுவார்கள். என் உடன் பணியாளரான ஆபிரகாம் அவர்கள், இதற்கென அதிகமாக முயற்சிகள் எடுத்தார். மெதடிஸ்ட், சி என் ஐ, ஈ சி ஐ, போன்ற திருச்சபைகள் இணைந்து நவி மும்பை தமிழ் கிறிஸ்தவ கூட்டமைப்பு என்பதை உருவாக்கினார்கள். ஆரம்பத்தில் குருத்தோலைப் பண்டிகையினை முன்னெடுத்த இந்த அமைப்பு இவ்வாண்டு பனை விதைகளை விதைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இவ்வாண்டு மாத்திரம் சுமார் 1000 விதைகள் விதைக்க வேண்டும் என்கிற எண்னத்துடன், அவர்கள் களம் புகுந்திருக்கிறார்கள். இதுவரை 500 விதைகளையும் விதைத்திருக்கிறார்கள். மும்பைப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் தொடர்ந்து பனைக்காக குரலெழுப்பி அதன் மூலமாக திருச்சபையில் நிகழ்ந்த  ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் இது.

Nerul

நவி மும்பை தமிழ் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் பனை விதை நடுகையினை சுட்டும் செய்தி

திருச்சபை பல வேளைகளின் தான் ஒளியாக இருக்க முடியும் என்பது இவ்விதமாகத்தான். இச்செய்திகளைக் கேள்வியுற்று மும்பை நாம் தமிழர் கட்சியினர், பனை விதைகள் கிடைக்குமா என என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்காகவும் பனை விதைகளை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டே வருடத்தில் மும்பையில் பனை சார்ந்த ஒரு பெரும் மாறுதல் நிகழும். அச்சூழலில், பனை சார்ந்து  செயலாற்றுபவர்கள் அனேகர் இருப்பார்கள், அவர்கள் திருச்சபையின் முதன்மைப் பங்களிப்பினை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இதனை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

 

பனை சார்ந்த கருத்தியலை எப்படி வலிமையாக முன்வைப்பது என எனக்கு நானே ஒரு வரைவை வைத்திருக்கிறேன்.

  1. முதலாவதாக நாம் முன்வைக்கும் கருத்தியலானது அனைவரையும் ஒன்றிணைக்கும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும்
  2. அந்த கருத்தியலை நாம் உள்வாங்கியிருப்பதனால் அந்த கருத்தியலுக்காக எவ்வகை துன்பத்தையும் கடந்துவரும் மன உறுதி இருக்கவேண்டும்
  3. கருத்தியலை கூர்செய்துகொள்ளும் நோக்கில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும், ஒருபோதும் கருத்தியல் மழுங்கிவிடாது பார்த்துக்கொள்ளவேண்டும்.
  4. நாம் நேரில் அனுபவித்த உணர்வுகளையே பகிர்ந்துகொள்ள வேண்டும். பொய்மைகளோ கற்பனைகளோ இருக்கலாகாது.
  5. பிறரை இக்கட்டில் தள்ளிவிடும் கருத்துக்களுக்குள் ஒருபோதும் சென்று சேரலாகாது.
  6. பல்சமய ஒன்றிப்பு, சூழியல் குறித்த புரிதல், பெண்ணியம் மற்றும் குழந்தைகள் நலன், போன்றவைகளை உள்ளடக்கியிருக்கவேண்டும்
  7. இளைஞர்களுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியளிக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.
  8. வேலைவாய்ப்பு, உணவு தன்னிறைவு மக்கள் நலன் இவைகளை பேசுபொருளாக கொண்டிருக்கவேண்டும்
  9. நிலங்களையும் மொழிகளையும் இனங்களையும் சமயங்களையும் ஊடுருவிச்செல்லும் ஆற்றல் நம் கருத்தியலுக்கு இருக்கவேண்டும்
  10. எச்சூழலிலும் எளியவரோடு நிற்கும் துணிவு இருக்கவேண்டும்.

பனை சார்ந்து பல்வேறு கேள்விகள் என் முன்னால் தொடர்ந்து வைக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன. அவைகள் சில வேளைகளில் என் மீதான குற்றசாட்டாகவும் வைக்கப்பட்டு, எனது பணிகளை பின்னடையச் செய்யும் நோக்கிலும் முன்வைக்கப்படுவது உண்டு.

பனை மரங்கள் இம்மண்ணில் செழித்து வளர்ந்தவை தான் சந்தேகம் இல்லை. ஆனால் மறைந்துபோன இன்னும் பல்வேறு மரங்கள் இருக்கின்றனவே அவைகள் மேல் கவனம் கொள்ளாமல் இப்படி ஒரு மரத்தை மட்டுமே முன்னிறுத்துவதன் காரணம் என்ன? சாதி சார்ந்த ஒரு மறைமுக கேள்வி இது. இவர்களுக்கு எனது பதிலை நான் வலிமையாகவே முன்வைத்திருக்கிறேன். எனது பனை மரச் சாலையிலும் சரி, பனை நகரத்திலும் சரி, பனை சார்ந்து வாழும் எண்ணிறந்த மக்களினங்களை நான் அடையாளம் காட்ட இயலும். அவர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருப்பார்கள். வேறு மரங்களின் மீது விருப்பம் உள்ளவர்கள் அந்தத்த மரங்களுக்கு பின்னால் குறைந்தபட்சம் 2 வருடம் தொடர் உழைப்பினைச் செலுத்தட்டும் அவர்களுடனும் நான் இணைந்து கொள்ளுவேன் என்பதுவே எனது பதிலாக இருக்கும்.

நமது நிலம் இழந்தவைகள், நாம் இழந்த உடல் நலம், ஏன், மனதளவில் கூட நாம் இழந்தவைகள் அனேகம். பெரும்பாலும் இவைகள் அனைத்தும் நமது புற வாழ்வின் கவர்ச்சிகளால் சமன் செய்ய முற்படுகிறோம். ஒரு போதகராக இப்பணிகளை நான் முன்னெடுக்கையில், திருச்சபையில் பலர் இவைகளை புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? என ஒரு போதகர் என்னிடம் கேட்டிருந்தார்.   பல வேளைகளில் அற்பணிப்பு என்பது, எங்கிருந்தோ பணம் வந்தால் தான் நிகழும் எனும் அளவிற்கு புரிதல்கள் மாறிப்போய்விட்டன. “அற்பணிப்புடன்” செயல்பட்டால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் போலும் என்றும் சிலர் எண்ணியிருக்கின்றனர். நமது அற்பணிப்பு என்பது நமது உள ஆற்றலை சார்ந்து வீறுகொண்டு எழுகிறது என எண்ணத் துணியாதவர்களின் முன்முடிவுதான் இது.

நான் ஒருமுறை மாலைமலரில் கருப்பட்டி குறித்த ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த நபர் தன்னை ஒரு பெத்தேகோஸ்து திருச்சபை விசுவாசி என்று அறிமுகம் செய்தார். வீடு பார்வதிபுரம் என அவர் சொல்லவும் பரவாயில்லையே, நமது ஊரில் கூட பனை சார்ந்து விருப்பமுள்ளவர்கள் இருக்கிறார்களே என நான் மகிழ்ந்uதேன். அவர் எல்லாம் பேசிவிட்டு, நீங்கள் என்ன பி ஜே பி கைகூலியா என்று  கேட்டிருந்தார். என்னிடம் பலரும், உமது நண்பர் ஜெயமோகன் ஒரு பி ஜே பி கைகூலி என்பது உமக்குத் தெரியாது என பல முறை என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆம் அது எனக்கு எப்படி தெரியும்? என்றே அப்போது நான் வேடிக்கையாக கேள்வி எழுப்பியிருக்கிறேன். எனக்கே நான் பி ஜே பி ஆதரவாளன், அடி வருடி என்பது பெந்தேகொஸ்தே விசுவாசி சொன்ன பிறகுதானே தெரிந்தது. இவைகளுக்கு காரணம், போதகர் எதைப் பேசவேண்டும் எனும் சொற்களஞ்சியத்தை மக்களே வைத்திருக்கிறார்கள். வானத்திலிருந்து இறங்கிய அப்பத்தைப்பற்றி மட்டும் பேசலாம் பனையிலிருந்து கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட கருப்பட்டி செய்வோரின் நிலை குறித்து குறித்து பேசக்கூடாது.

பனை சார்ந்து பணிகளை முன்னெடுக்க உதவி செய்யுங்கள் என நான் அறிந்த ஒரு திருச்சபை அங்கத்தினரிடம் மன்றாடினேன்.  எங்கு கோயில் கட்டினாலும் அவர் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றால் ஒரு லட்சம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறவர். “உங்களுக்காக நான் தொடர்ந்து மன்றாடுகிறேன்” என எள்ளலாக பதில் கூறினார். இதற்கு காரணம் என்ன? திருச்சபை தனது பணிகளை விரிவாக்கிக்கொள்ளவில்லை. திருப்பணி என்பது குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டதே இதுபோன்ற பதில்களுக்கு காரணம். அந்த விசுவாசியின் மன்றாட்டில் பிழையேதும் இல்லை, ஆனால் இப்போது பொருளுதவி  செய்யும் சூழலில் நான் இல்லை என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். 

இப்படிப்பட்டவர்களைக் குறித்து திருமறை கீழ்கண்டவாறு கூறுகிறது “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” (யாக்கோபு 4: 17)

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.((யாக்கோபு 2: 14 – 17)

இருப்பினும் புரிந்துகொள்ளுகிறவர்களும் தொடர் உதவி செய்கிறவர்களும் என்னை ஊக்கப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.

தனி நபராகவோ ஒற்றைத் திருச்சபையாகவோ முன்னெடுக்கும் காரணங்கள் நன்றுதான். ஆனால் நமது பணிகள் பிற மக்களையும் சென்றடையவேண்டி முயற்சிப்பது மிக முக்கிய தேவையான ஒன்று என்பதை உணர்ந்து மேலதிக முயற்சிகளை எடுக்க எண்ணினோம். திருச்சபை செயற்குழுவின் ஒப்புதலோடு ஒரு பனை விதை வழங்கும் திட்டத்தினை முன்னெடுத்தோம். வெறுமனே பனை விதைகளைக் கொடுப்பதிலுள்ள சிக்கல்களை எண்ணிப்பார்த்தோம். அதனை மும்பை மக்கள் எப்படி வாங்கிச் செல்லுவார்கள்? மக்கள் தங்கள் கரங்களில் இவ்விதைகளை எடுத்துச்செல்லும்படி செய்ய மிகச்சிறந்த வழிமுறைகள் என்ன போன்றவைகளை விரிவாக பேசி முடிவெடுத்தோம். அப்படித்தான்  காகிதப் பையினை செய்து அதில் பனை விதைகளை வைப்பதே  சரியாயிருக்கும் என முடிவிற்கு வந்தோம். எப்போதும் போல ஸ்டீபன் அவர்களிடம் சொன்னேன். பனை விதைகளை வைக்க நமக்கு ஒரு காகிதப் பை தேவைப்படுகிறது செய்து தருவீர்களா என்றேன். வழக்கமாக அவர் சொல்லுவது போலவே “செய்திரலாம் ஐயா” என்றார்கள்.

வேகமாக பணிகள் நடைபெற்றன ஆனாலும் இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஒவ்வொருநாளும் குறைந்தபட்சம் இரண்டு மூன்று மணி நேரங்களாவது ஸ்டீபன் இதற்கென ஒதுக்கினார். பல வடிவங்களை செய்து பார்த்து, இறுதியாக தலையணை உறை போன்ற ஒரு வடிவத்தினை காகிதத்தில் செய்ய முடிவு செய்தோம். ஸ்டிபன் அதனை வடிவமைத்திருந்தார். இது சற்று சவாலான பணி. காகிதம் குறைவாக தேவைப்படும் ஒரு சிறந்த வடிவம். பல பிரதிகளை எடுத்து அதன் வடிவங்கள் மிகச்சரியாக அமைகிறதா என பிழை திருத்தியபடியே வந்தோம்.  அதன் மேல் என்ன எழுதப்படவேண்டும் போன்றவைகளை எண்ணி எழுதி நிறைத்தோம். பிழைகளை களையவும், வாக்கியங்களைச் சீர்படுத்தவும் ஆங்கிலத்தில் புலமையுள்ள தோழி ரோதா அலெக்ஸ், எனது மூத்த சகோதரன் செல்சன் ஆகியோர் உதவி செய்தார்கள். இந்த நிகழ்சிக்காக பல தலைப்புகளை நாங்கள் பரிசீலித்தோம், என்றாலும், ஒன்றும் தேறவில்லை. எனது ஆசிஷ் அத்தான்  “பால்மலைவ்” (PalmAlive) என்ற உயிர்ப்பான தலைப்பினை  சூட்டினார்கள்.

Palm Alive

வெளியிட இருக்கும் சிறு புத்தகத்தின் மாதிரி

காகித உறை செய்ய பெரும் பணம் செலவாகும் என்பதால் எங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் உண்டு என தேடினோம். திருச்சபையின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சலிக்காமல் வாரி வழங்கும் வள்ளலான  பொன்சிங், செலவுகளை தான் பொறுப்பெடுப்பதாக கூறினார். பொன்சிங் தொடர்ந்து எனது பனை சார்ந்த பணிகளுக்கு தோள் கொடுப்பவர்கள். இப்போதும் உற்சாகமாக என்னோடு களத்தில் இறங்கினார்கள். இவ்விதமான ஒத்துழைப்புகள் இல்லையென்று சொன்னால் இப்பணிகளை முன்னெடுப்பது இயல்வதல்ல.

Kakitha pai

பனங்கொட்டைகளை வைத்துக் கொடுக்கும் காகித உறை

பனை இம்மண்ணிற்கான மரம் என்பதை மக்கள் உணர்த்துகொள்ள மும்பைப்பகுதியில் முதல் முயற்சியை எடுக்கிறோம். எங்களது நோக்கம், பனை விதைகள் எப்படியிருக்கும் என்பதனை மக்கள் உணரவேண்டும் என்பதே.  மறக்கப்பட்டவைகள் நினைவுகூற வேண்டிய தருணம் இது. மும்பை இழந்துபோன பனை மரங்களை உயிருடன் எழுப்பும் வல்லமையான அற்புதச் செயல்  இது. சிதறடிக்கப்பட்ட பனைசார்ந்த மக்களை மீண்டும் இந்த நகரத்திற்கு கூட்டிச் சேர்க்கும் முதல் விதை இது. மும்பை நகரம் பனை நகரம் என பேர் பெறும் வரையிலும், இது பற்றியெறியவேண்டிய அக்கினி குஞ்சு இது. எங்களின் மன்றாட்டுகளின் பரு வடிவே விதைகளை பகிர்ந்தளிக்கும் இம்முயற்சி.

பனை விதை அளவு விசுவாசம் என்பது பாதை சமைக்கும் விசுவாசம். இழந்தவைகளை மீட்டெடுக்கும் விசுவாசம் என அது விரிவடைந்துகொண்டே செல்லுகிறது. விதைத்த விதைகள் முளைத்து வளரும்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து) 
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  9

ஓகஸ்ட் 8, 2019

ஆரே பனங்காடு

பனை சார்ந்த பணிகளை தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழகத்தில் செய்த பின்பு  மும்பை நோக்கி பயணிப்பது என்னளவில் இயல்வதாக இருக்கவில்லை. என்னை பெயர்த்தெடுத்தே மும்பை செல்ல முடிவெடுத்தேன். எனது பயணம் எதை நோக்கியது என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தபடியே இருந்தன . மும்பையில் நான் செய்யவிருப்பது என்ன?  இறைப்பணியினை செய்கையில் அதன் வடிவாகவே பனைபணியினையும் உள்ளிணைத்தே செய்யும் கடமை எனக்கு இருப்பதால், நான் மிகுந்த கவனத்துடன் எனது மும்பை பயணத்தை முன்னெடுத்தேன். இரண்டு வருட விடுமுறைக்குப் பின் எனது பணித்தளம் ஆரே பால் குடியிருப்பு திருச்சபை என்றானபின் என்னால் அதிக அளவில் பனை சார்ந்த முன்னெடுப்புகளை எடுக்க இயலாது என்பதையும் அறிந்தே இருந்தேன். தமிழகத்தில் நான் ஆற்றிய பணிகளுக்கு இணையாக இங்கு செயல்பட இயலாவிட்டாலும், பனை என்னைவிட்டு தூரமாகிவிடக்கூடாது என்பதை எனது மனதில் நிறுத்தியிருந்தேன். ஆகவே எனக்கு எஞ்சும் நேரத்தில் என்னுள் உறைந்திருக்கும் சில எண்ணங்களை பதிவு செய்ய வேண்டும் என்றே எண்ணியிருந்தேன்.

ஆரே பகுதியில் நான் பொறுப்பெடுக்க வந்த நாள் மிகவும் முக்கியமானது. கோரேகாவுன் பகுதியிலிருந்து பேருந்தில் நான் பயணித்தேன். வரும் வழியிலேயே விரைவுச் சாலையினை கடக்கும் முன்பதாகவே சில பனை மரங்களைக் கண்டேன். ஆரே காலனிக்குள் நுழைந்தபோது மும்பையில் வேறெங்கும் இல்லாத பசுமையினை  உணரமுடிந்தது. ஆரே காலனிக்குள் நுழைந்த பிற்பாடு பனை மரங்கள் பார்வையை விட்டு அகலாமல் உடன் பயணிக்கின்ற ஒன்றாகிவிட்டன. அது பசுமை வெளிக்குள் ஊடுருவியிருக்கும் ஆழ்ந்த பசுமை. தேடுவோர் கண்களில் மட்டுமே தென்படும் மாயம். தனது இருப்பை பிரதானப்படுத்திக்கொள்ளத பனையின் தன்னடக்கம்.

மரங்களோடு மரங்களாக  இணைந்து வளரும் நெடும்பனைகள், உச்சிவரை புல் முளைத்து நிற்கும் வடலிப்பனைகள், மிக பிரம்மாண்ட கட்டிடங்களின் பின்னணியத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரங்கள். பசும் புல்வெளியில் உயர்ந்த புல்லென வளர்ந்து பெருகும் பனை மரங்கள், மரங்களின் மேலே தனது தலைகளை உயர்த்தி பிடிக்கும் பனை, மரங்களின் பசுமைக்குள் மூழ்கி, தனது தலையினை உயர்த்த முயற்சிக்கும் பனை மரங்கள். ஆலமரங்களின் விழுதுகளோடு பின்னி பிணைத்திருக்கும் காதல் பனைகள், ஆலமர தண்டுகளால் நெறிப்பட்டபடி தனது இறுதி மூச்சிற்காக தலையை உயர்த்திநிற்கும் பனை மரங்கள், விண்ணளந்தபடி உயர எழுந்து நிற்கும் பனை மரங்கள். சற்றே சாய்த்து கொள்ளுகிறேன் என மூப்பின் மிகுதியால் சாய்ந்தபடி நிற்கும் பனை மரங்கள். ஆங்காங்கே பனை மரத்தின் அடியில் சிதறிக்கிடக்கும் புத்தம் புது பனம்பழங்கள்.  தோல் உரிந்து காய்ந்துபோய் கிடக்கும் நாட்பட்ட பனங்கொட்டைகள், மண்ணில் வேர்பிடித்து நாகமென தலை தூக்கும் பீலி பருவங்கள், மழலைகளின் விரித்த கைகளைப்போல சில ஓலைகளை விட்டு நிற்கும் பனை குட்டிகள். முரட்டுதனமான இளைஞர் போல் தனக்கான இடத்திப் முண்டி படித்துக்கொள்ளும் வேகத்துடன் செழிப்பாக வளரும் வடலிப்பனைகள். எனக்கான இடம் இது தான் என்பதனை ஆரே சொல்லிக்கொண்டே வந்தது.

மும்பையில் மாதமொருமுறை தமிழ் போத்கர்களாக ஒன்றுகூடி ஜெபிப்பது வழக்கம். அவ்விதமாக இதற்கு முன்பு இருமுறை ஆரே சென்றிருக்கிறேன். என்னை இளைஞர் ஞாயிறு அன்றும் கூட சிறப்பு செய்தியாளராக அழைத்திருந்தார்கள். மற்றும் வேறு சில நிகழ்வுகளுக்காக ஆரே சென்றிருக்கிறேன். எனது முந்தைய பயணத்தில் நான் பார்த்ததை விடவும் இப்போது பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக எனது உள்ளுணர்வு சொன்னது. இங்கிருந்த பனை மரங்கள்  மூப்பினை அடைந்து உயிர் விட்டிருக்கலாம் என்றே எண்ணுகிறேன். வெட்டி சாய்க்கும் அனுமதி ஆரேயில் கிடையாது.

பிற்பாடு எனது திருச்சபையின் பொருளர் ஸ்டீபன் துரை அவர்களுடன் பேசுகையில், நமது ஆலயத்திற்குப் பின்னே பனை மரங்கள் இருந்தது ஐயா என்று சொன்னார்கள். ஆரே பகுதிகளில் ஒருகாலத்தில் பனை ஓலைக் குடிசைகளே இருந்தன  என திருச்சபையின் மூத்த உறுப்பினர் ஜேசு கருணாகரன் அவர்கள் கூறினார்கள்.

ஆரே பழங்கதைகளை கருணாகரன் அவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளலாம். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் இங்கே வந்த போது, ஆரே பால் பதனிடும் தொழிற்சாலை வளர்சிப்பாதையில் பீடு நடை போட்டுக்கொண்டிருந்தது.   ஆகவே அடிப்படை வேலைக்கான ஆட்கள் தேவைப்பட்டார்கள். ஊரிலே ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சியினால் அனேக தமிழர்கள் வேலை தேடி மும்பைக்கு வந்தனர். வந்த அனைவரையும் ஆரே தனது இரு கரம் நீட்டி வரவேற்றது. தோட்ட வேலை, புல் வெட்டுவது போன்ற வேலைகளே இவர்களுக்குக் கிடைத்தது.

Aarey truck

மாடுகளுக்காக புற்களை ஏற்றிச்செல்லும் லாரி. பனை மரங்கள் பின்னால் நிற்கின்றன. 1952 ஆம் ஆண்டு புகைப்படம்.

இவ்விதம் வந்த அடிப்படைத் தொழிலாளர்களுக்கு, இருக்க இடத்தினை ஒதுக்கிக்கொடுப்பது ஆரே நிர்வாகத்தின் பொறுப்பு. சேறும் சகதியுமான இடம் தான் ஆனாலும் மக்கள் இங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பனை மரங்களை இங்குள்ள நிர்வாகி அளிப்பார். அவைகளை அடையாளப்படுத்தும் ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார். இந்த ஐந்து பனை மரங்களிலிருந்து வீடு கட்ட தேவையான ஓலைகளை இவர்கள் வெட்டி எடுத்துக்கொள்ளலாம் போன்ற தகவல்களை திரு ஜேசு கருணாகரன்  சொன்னார்ர்கள். தனது வீடு கூட பனை ஓலையாலே வேயப்பட்டிருந்தது என்றும், கடந்த பத்து வருடங்களாகத்தான் தனது வீட்டை சீர்படுத்தி தற்போது இருக்கும் நிலைக்கு மாற்றியமைத்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். மும்பையின் மையமான ஒரு பகுதிக்குள் பனை ஓலைகளாலான வீடுகள் 10 வருடத்திற்கு முன்புவரை இருந்திருக்கிறது என்பதை நினைக்கவே மயிர் கூச்செறிகிறது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பே மும்பையில் 50 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. மற்றொருபுறம் இவ்விதமான ஓலைக் குடிசைகளும் இருந்திருக்கின்றன.

தமிழகத்திலுள்ளவர்களில் ஒரு சிலர் தங்கள் பனைகளில் ஏறி ஓலைகளை தாங்களே வெட்டி எடுத்துக்கொள்ளுவார்கள். அப்படியானால் தான் அவர்களால் பணத்தை மிச்சப்படுத்த இயலும். ஆனாலும் கூரை வேய வேண்டும் எனும்போது அவர்களுக்கு இங்கு வாழு மக்களின் தேவை இருந்க்டது என்பதாக கூறினார்கள். தமிழகத்திலுள்ள மக்களுக்கே ஓலைகளில் கூரை வேயும் அளவிற்கு திறன் படைத்தவர்கள் யார்?  என நான் வினவியபோதுதான், இங்கு வாழும் வார்லி பழங்குடியினர் என்று சொன்னார்கள். பட்டென்று ஒரு ஒரு கதவு திறந்து கொண்டது. மும்பையின் அடியாளம் துழாவினால் மேலும் பல தகவல்கள் கிடைக்குமாயிருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

இப்பகுதியில் முதன் முதலாக ஊழியம் செய்ய வந்த அருள்திரு. குமாரதாஸ் ஐயா அவர்கள்  திரு ஜேசு கருணாகரன் அவர்கள் இல்லம் குடிசையாக இருந்தபோது குனித்து உள்ளே வந்து ஜெப கூட்டம் நடத்தியதை இன்றும் இம்மக்கள் நினைவில் கொள்ளுகிறார்கள். ஒரு போதகர் தங்கள் குடிசை வீட்டில் காலடி எடுத்து வைப்பது மிகப்பெறும் ஆசியாகவே இம்மக்களால் உணரப்பட்டிருக்கிறது. இந்த தகவல் மிக முக்கியமானது. எளியவர்களோடு தங்களை ஐக்கியப்படுத்தும் முறைமை இங்கு அற்றுப்போயிருக்கிறது. இயேசுவின் அன்பினை கண்டவர்கள் அதனைப் பகிர எங்கும் சென்றார்கள் என்பதன் ஓர் அடையாளம் இது.

திருமதி. ஜெயா கருணாகரன் அவர்கள் கூறும்போது, அப்போதெல்லாம் வீட்டிற்குள்ளே சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். கோணிப்பைகளை போட்டு, அதன் மேல் வைக்கோலைப் போட்டு, மேலும் கோணிப்பைகளைப் போட்டு தான் மழைக்காலங்களில் உறங்கமுடியும் என்றார்கள். மேலும் குமாரதாஸ் அய்யா எங்கள் வீட்டிற்குள் வந்து ஜெபக்கூட்டம் நடத்தும்போது, தரையில் தண்ணீர் ஊறிப்பாயும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வித அனுபவங்களினூடாக தான் அவர்கள் தனது மூத்த மகன் ஜேசு அந்தோணி கருணாகரன் அவர்களை ஒரு போதகராக உருபெறச் செய்தார்கள். மும்பை மெதடிஸ்ட் திருச்சபையின் இளம் ஆயரான அவர் இப்பொழுது, பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கிறார்.

எனது பணி நியமனத்தைக் குறித்து பேராயர் அறிவித்தவுடனேயே ஆரே வரவேண்டும் என்கிற ஆவலை அடக்க இயலவில்லை. என் குடும்பத்தினருடன் ஆரே நோக்கிய பயணங்களை ஒழுங்கு செய்ய முற்படுகையில், ஆரே எப்படி இருக்கும், இன்றைய தினத்தில்  அங்கே பனை மரங்கள் இருக்குமா என்கிற கேள்வி எழுந்ததால் ஆரே காலனியில் பனை மரங்கள் குறித்து தேடிக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஆரே பகுதியில் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன் என்கிற தகவல் பெற்ற எனது தோழி திருமதி ரோதா அலெக்ஸ் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறு வயதில் மும்பையில் சில வருடங்கள் இருந்ததாகவும், ஆரேயினை அடுத்த கோரேகாவுன் பகுதியில் வாழ்ந்ததாகவும் ஆரே பகுதிக்கு அவர்கள் வந்திருப்பதாகவும் உற்சாகமாக பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். கூடவே  எனக்கு ஒரு புகைப்படமும் அனுப்பியிருந்தார்கள். 1952 ஆம் ஆண்டு ஆரே காலனியில் எடுக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு வெள்ளைப் புகைப்படம் அது. பனை மரங்கள் மட்டுமே காணப்படும் அந்த புகைப்படம், எனது பனை நகரம் குறித்த எண்ணங்களைத் தூண்டி விட்டது. நான் துள்ளிக் குதித்துவிட்டேன். ஆண்டவா இவ்வளவு செழிப்பான பனை செறிந்திருக்கும் இடத்திற்கா என்னை அழைத்துச் செல்லுகிறாய் என உருகினேன். ஆண்டவருக்கு நன்றி கூறினேன். என் உள்ளத்தினை அறிந்த ஆண்டவரின் வழி நடத்துதல் தான் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்ததாக நிறைவடைந்தேன்.

Aarey

ஆரே பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் பனை மரங்கள். 1952ஆம் ஆண்டு புகைப்படம்

குடும்பமாக நாங்கள் ஆரே வந்த பின்பு, முதல் ஞாயிறு அன்று தான் எங்கள் பொருட்கள் ஊரிலிருந்து வந்து சேர்ந்தன. திருச்சபையின் முக்கிய செயற்குழு அங்கத்தினர்களான திரு. செல்வராஜ் (செயலர்) திரு. ஸ்டீபன் துரை(பொருளர்) திரு. லாரன்ஸ் (நிதி நிர்வாக குழு தலைவர்) ஆகியோர் உதவி செய்வதற்காக வந்திருந்தனர். பொருட்களை எல்லாம் இறக்கிய பின்பு, நாங்கள் இலகுவடைந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான் கடந்துவந்த அந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் குறிப்பிட்டேன். எனது மொபைலில் இருந்த  அந்த புகைப்படத்தை ஸ்டீபன் பார்த்தபடி இருந்தார். பின்னார் ஐயா இந்த இடம் எனக்குத் தெரியும், இங்கே தான் இருக்கிறது என்றார். நான் திறந்த வாயை மூடாமல் அவரையே பர்த்துக்கொண்டு நின்றேன். ஐம்பது வருடங்கள் கடந்த பின்னும் அவைகள் அப்படியே இருக்குமா? அப்படியானால் அவைகளைப் பார்க்க இயலுமா என்று கேட்டேன். “வாங்கையா போகலாம்” என்றார், அனைவருமாக இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சென்றோம்.

ஸ்டீபன் அவர்களது சிறுபிராயம் முதலே இங்கே வாழ்பவர். 38 வயது தான் என்றாலும், இப்பகுதியினை தனது கால்களால் முழுமையாக அளந்து முடித்தவர். சலிப்பின்றி பயணிக்கின்றவர். ஆரே முழுக்க சுற்றியலைவதை பெருவிருப்பாக  கொண்டவர். அவரது கண்களுக்கு மறைவான இடம் ஆரே பகுதியில் இல்லை எனும் அளவிற்கு அது காட்டுப்பகுதியாக இருக்கும்போதே சுற்றியலைந்தவர்.  அவர் எங்களை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றார். என் வீட்டிலிருந்து 100  மீட்டர் தொலைவுதான். ஒருவேளை ஸ்டீபன் எங்களை அங்கே அழைத்துச் சென்றிருக்காவிட்டால், நான் ஒருபோதும் அந்த பாதையினை தெரிவு செய்திருக்க மாட்டேன். ஆரேயின் பனை செல்வங்களை குறித்தோ மும்பை பனை நகர் என்றோ நான் எழுத துணிந்திருக்கவும் மாட்டேன். நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெருந்தகவலை அப்படியே இழந்திருப்பேன்.

நாங்கள் சென்ற பாதை வளைந்திறங்க துவங்கிய இடத்தில் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பெரிய கட்டிடங்கள் எழுந்து நின்றன. எங்களுக்கு முன்னால் மிகப்பெரிய பள்ளத்தாக்கு காணப்பட்டது. பசுமை நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு. தூரத்தில் மும்பை நகரம் தெரிந்தது. சாந்தாகுரூஸ் விமான நிலையம் கூட அங்கிருந்து தெரிந்தது. நகரம் துவங்கும் இடத்தின் அருகில், ஒரு பனை செறிவுள்ள பகுதியினை ஸ்டீபன் காண்பித்தார். அந்த பகுதி தொடந்து நீண்டு வந்து ஆங்காங்கே அறுபட்டு ஆரே காலனியின் மற்றொருபுறத்தில் வந்து இணைந்தது. கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தேன்.  இது எப்படி என என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. லாரன்ஸ் சொன்னார், இவ்வளவு நாட்கள் நான் இங்கிருந்தும் இங்கே வந்ததில்லை என. ஆம் அது அப்படித்தான். கிட்டத்தட்ட ஒரு ஆறு கிலோமீட்டர் தொலைவு அந்த பனங்காட்டின் தொடர்ச்சி இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.

Aarey

ஆரே மாட்டுத்தொழுவத்திற்கு முன்னும் பின்னும் செழித்திருக்கும் பனைகள். 1952ஆம் ஆண்டு புகைப்படம்

அந்த இடத்திற்கு போகமுடியுமா என்று ஸ்டீபனிடம் கேட்டேன். போகலாம் ஐயா என்றார். அங்கிருந்து புறப்பட்டு ஒரு 5 நிமிட தூரத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் முன்பு எங்கள் வாகனங்களை நிறுத்தினோம். ஸ்டீபன் வழி காட்ட, நாங்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, இளைஞர்கள் கைகளில் செல்போனை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அருகில் பியர் புட்டிகள் பாதியளவில் இருந்தன. அவர்களுக்கூடாக நாங்கள் படிகளில் ஏறி நடந்தோம். எங்களைச் சூழ ஒரே காடு தான். அப்படியே விழிகளை உயர்த்தியபோது பனை ஓலைகள் காற்றில் அலைததபடி அங்கே ஒரு பனைக்கடலே தெரிந்தது. அது பேரலைப்போல் எழுந்து என்னை சுருட்டி எடுக்கும் அழைப்பு அவ்வோலைகளுக்குள் காணப்பட்டது. அந்த பனங்காட்டினுள் நுழைய ஆசைப்பட்டேன். எப்படி செல்லுவது என தெரியவில்லை. இறக்கைகள் இருந்திருந்தால்  பறந்தே சென்றிருப்பேன். அக்காடு என்னை வா என சுண்டி அழைத்தது.

ஸ்டீபனைப் பார்த்தேன். அவர் புரிந்துகொண்டு “போகலாம் அய்யா” என்றர். கீழிறங்கி நடக்கத்துவங்கினோம். அது ஃபில்டர்பாடா என்கிற ஒரு சிறு கிராமபகுதி. வார்லி பழங்குடியினர் இருக்குமிடம். நாங்கள் இருக்கும் பகுதிக்கும் இங்கே வாழும் மக்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்கள் தான். பனை ஓலைகளை சில இடங்களில் மாட்டு கொட்டகைக்கென போட்டிருந்தார்கள். அந்த சிறு கிராமத்தினூடாக நடந்து கடந்து உள்ளே சென்றபோது ஒரு வடலியைப் பார்த்தேன்.

வடலியைப் பார்க்கையில் எல்லாம் காளை தான் எனக்கு ஞாபகம் வரும். திமிறியபடி இருக்கும் அதன் திரட்சிகள் அப்படி. கட்டுக்கடங்கா பருத்த வடிவம். சீவிவிட்ட கொம்புகள் போல மட்டைகள் சீராக எழுந்திருக்கும்.  குதித்தெழும் ஜல்லிக்கட்டு காளையின் கண நேர அசைவினை கொண்டிருக்கும். எவரையும் நெருங்கவிடாத ஒரு முரட்டுத்தனம் கூடியிருக்கும். அருகில் சென்று மட்டையைப் பிடித்துக்கொண்டால் சாந்தமே உருவான   காளைபோல் அது அங்கே நின்றுகொண்டிருந்தது. அதனைக் நாங்கள் கடந்த போது இன்னும் இரண்டு நெடிய பனை மரங்கள் எங்கள் கண் முன்னால் நின்றன. அப்பால் இன்னும் இரண்டு, வலதுபுறம் திரும்பினால் இன்னும் ஏழு, நாங்கள் ஒரு முக்கிய இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்ற உணர்வு எனக்குள் நிலக்கொள்ளத் துவங்கியது.

இரண்டு நிமிட நடைத்தொலைவிற்குப்பின் நாங்கள் ஒரு ஆலமரத்தடிக்கு வந்தோம். அங்கிருந்து பார்க்கையில் எங்கள் முன்னால் ஒரு வெட்டவெளி. காய்ந்து போன நிலம் வெடித்திருந்தது, புழுதி அடித்துக்கொண்டிருந்தது. கருமை நிற மண் அப்பகுதியில் காணப்பட்டது. ஆங்காங்கே இளைஞர் கூட்டமாக அமர்த்திருந்தனர். மது குடிக்க வந்திருக்கலாம். அந்த இடத்தில் காணப்பட்ட பனைகளின் செழுமை, இது பனைக்குரிய இடம் தான் என ஆறுதியிட்டுக் கூறின. பருத்த அடித்தண்டுகள். வெம்மைக்கு சற்றும் சளைக்காமல் பனை ஓலைகள் பசுமையுடன் தங்களை விரித்தபடி அசைந்தாடிக்கொண்டிருந்தன.

நாங்கள் கடந்து சென்ற ஆலமரத்தின் அடியில் மிகப்பெரிய ஒரு பாத்திரம், விறகடுப்பு மற்றும் பெரிய நீளமான விறகு கட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆம் சிறு குழந்தை  கூட சொல்லிவிடும் அதொ ஒரு சாராயம் காய்ச்சும் இடம் தான். ஆதிவாசிகளின் வாழ்வில் சாராயம் இரண்டரக் கலந்தது. அத்துணை எளிதாக அவர்களுக்கும் சாராயத்திற்குமான உறவை பிரித்துவிட இயலாது. ஆனால் அவர்களின் போதைப் பழக்கவழக்கங்கள்  நவீன வாழ்வோடு தொடர்புறும் பொழுதே அவர்கள் வாழ்வு சீர்குலைகின்றன என்பது எனது எண்ணம். தன்னளவில் அவர்களுக்குள் கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. முற்காலத்தில் மிதமிஞ்சிய கள்ளினை வடித்தே சாராயம் காய்ச்சியிருப்பார்கள் இல்லையா? 

என்னை மட்டுமல்ல என்னோடு வந்த அனைவரையுமே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நாமிருக்கும் பகுதியினை ஒட்டி இத்தனை திரளாக பனை மரங்களா? அப்போது தான் எனது உள்ளம் உணர்ந்தது, பனை மரத்தில் ஏறும் மனிதர்கள் வெகு அருகிலேயே இருக்கிறர்கள் என்று. ஒருவேளை இங்கே வந்து கூட்டம் கூட்டமாக அமர்த்திருக்கும் வாலிபர்கள் கள் பருகியபடி இருக்கலாம். ஆனால், அங்கு எங்குமே கலயங்கள் கட்டியிருப்பதற்கான அடையாளம் இல்லை. ஒருவேளை இன்னும் உள்ளேச் சென்றால் பனை ஏறுபவர்கள் இருக்கலாம் என எண்ணிக்கொண்டோம்.

நான் இனி வேண்டுவது என ஒன்றும் இல்லை. நான் வந்திருக்கும் இடம் ஆசியாய் எனக்கு அளிக்கப்பட்ட இடமே. எனது எண்ணங்களையும் விருப்பங்களையும் அறிந்த ஒருவராலேயே எனக்கு இவ்விதமான ஒரு அரும்பெரும் வாய்ப்பினை நல்க இயலும். மாலை வேளை ஒளி மங்கியபடி வந்தது ஆனால் எனது உள்ளத்தில் ஒளி கூடத் துவங்கியது. எனக்குத் தெரியும், நான் கண்ட இந்த காட்சி மும்பையின் மனசாட்சி அல்லாமல் வேறல்ல. இன்னும் சில ஆண்டுகளில் இவைகளும் கூட இருக்கும் இடம் தெரியாமல் துடைத்து எறியப்பட்டுவிடும். ஆனால், இன்று இங்கே வந்து இவைகளை பார்ப்பதன் பொருள் இவைகள் இம்மண்ணில் ஆழ வேரூன்றியவைகள் என்பதனையும், இம்மக்களின் வாழ்வோடும் இந்த நகரத்தின் உருவாக்கத்திலும் பனை மரம் பின்னணியமாக உறுதியுடன் நின்றிருக்கிறது என்பதையே.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
(பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து)
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  8

ஓகஸ்ட் 7, 2019

 

பன்முக பனைபணி

மிராரோடு பகுதியிலிருந்து நான் மாற்றலாகி பூனா அருகிலுள்ள டெகுரோடு என்ற இடத்தில் உள்ள மெதடிஸ்ட் தமிழ் திருச்சபைக்கு 2012 ஆம் ஆண்டு போனேன். ஒரு வருடம் மட்டுமே அத்திருச்சபையில்  நான் பணியாற்றினேன். அப்பகுதிகளில் பனை மரங்கள் கிடையாது. அது எனக்கு பெருங்குறையாகவே இருந்தது.  என்றாலும் முயன்று இரு பனையோலைக் கண்காட்சிகளை புனே பகுதிகளில் நடத்த முடித்தேன். வீட்டில்  பனையோலையில் செய்யப்பட்ட இயேசுநாதரின் படத்தைப் பார்த்த ஒரு முதிய பெண்மணி, ஆவியில் நிறைந்து ஆண்டவர் இவ்வீட்டிலே இருக்கிறார்கள் என கைகளை விரித்து நெகிழ்ச்சியோடு கூறியது அங்கே நான் பெற்ற மாபெரும் ஆசி.

எனக்கு 2013 ஆம் ஆண்டு அகமதாபாத் தமிழ் திருச்சபையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்காங்கே நிற்கும் பனை மரங்களை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. என்றாலும், அங்கேயும் பனை சார்ந்த கண்காட்சியினை முன்னெடுத்தேன். அகமதாபாத்தில் நாங்கள் இருக்கும்போது, மளிகை சாமான் வாங்கும்படியாக நாங்கள் செல்லும் கடைக்கு முன் ஒரு ஒரு காகித அட்டைபெட்டிகள் செய்யும் கடை என் கவனத்தைக் கவர்ந்தது. ஏன் ஓலைகளை இப்படி நாம் வெட்டி ஒழுங்கமைக்கக் கூடாது என்று எண்ணினேன். அப்படித்தான், கிறிஸ்மஸ் அலங்காரங்களான வளையச் சங்கிலிகளும், பனை ஓலைக் கைப்பட்டைகளும் செய்யும் அச்சையும் அகமதாபாத்திலிருந்து உருவாக்கினேன். அகமதாபாத்தில் நான் இருக்கும்போதுதான், போதகர்கள் பயன்படுத்தும் காழுத்துப் பட்டைகளை நான் அறிமுகம் செய்தேன். உலக வரலாற்றில் எவரும் இவ்விதம் பனை ஓலையில் கழுத்துப்பட்டைகளை செய்திருக்க இயலாது.

Collar

பனை ஓலையில் செய்யும் இவ்வித கழுத்துப்பட்டைகளின் முக்கியத்துவம் தான் என்ன? திருச்சபை, பல்வேறு நிலைகளில் இன்று இயற்கையினை மீறி எழுந்துவிட்டிருகின்றது. போதகர்கள், தங்கள் அலங்கார உடையாலும், தங்கள் வாழ்வின் ஒழுக்கிலும் இயற்கையை விட்டு விலகி சென்றுவிட்டனர். இவ்வித சூழலில், போதகர்களின் குருத்துவ ஆடையில் ஏதேனும் ஒரு வடிவில் இயற்கை பொருட்கள் இணைகையில், அது ஒரு மிக உயரிய குறியீடாகிறது. நானே எனது கைப்படச் செய்த பனை ஓலை கழுத்துப்பட்டைகளை மும்பையில் இருக்கும் போதகர்களுக்கு இலவசமாக அனுப்பி, குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்தக் கேட்டுக்கொண்டேன். எவரும் அதனைப் பொருட்படுத்தியது போல தெரியவில்லை. ஆனால் அவ்வேளையில் அகமதாபாத் வந்த அறிவர். அருட்பணியாளர். தியான்சந்த் கார்  அவர்கள், நான் அவர்களிடம் கொடுத்த மறுநாளே அதனை அணித்தபடி எங்களது திருச்சபைக்கு  வந்தார்கள். எனது பணியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட மிகச்சிலருள் அவரும் ஒருவர்.

திருச்சபை சில மாயைகளுக்குள் சிக்கியிருக்கிறதை இவ்விதமான நிகழ்ச்சிகளின் வாயிலாக தான் உணர்ந்துகொள்ள முடிகிறது. திருச்சபையில் எழும் மாற்றம், அனைத்துமே 15ஆம் நூற்றாண்டுடன் உறை நிலை அடைந்துவிட்டது எனவும், ஏழாம் நூற்றாண்டு இந்திய பக்தி மார்க்கத்தின் வழியில் நடப்பதுவே சிறந்தது எனவும் எண்ணிக்கொள்ளும் நிலை, எவ்வகையிலும் கிறிஸ்தவர்களை மிகச்சிறந்த சமூக அங்கமாக பரிமளிக்க இயலாதபடி விலக்கி வைத்திருக்கிறது. இலக்கிய பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள ஓரிருவரையே நான் பார்க்கிறேன். அதுவும் மிக மந்தமான கதியில். திருச்சபையினைத் தாண்டி சென்றும் பணியாற்றும் ஒரு போதகர் கூட இங்கே இல்லை. இது திருச்சபைக்கு மிகப்பெரிய பின்னடைவையே அளிக்கும் என எவரும் எண்ணுவது இல்லை. திருச்சபையின் வளர்ச்சி எனபது கட்டிடங்களைக் கட்டுவதும், சபை மக்களின் எண்ணிக்கையினைக் கூட்டுவதும் என்றாகிப்போனது. உப்பாய் சமூகத்தில் கசிந்து சுவை ஏற்றும் எண்ணம் இல்லாது போனது. எங்கே பிற நம்பிக்கையாளர்களுடன் கலக்கவேண்டும், எங்கே நாம் தனித்து இயங்கவேண்டும், எங்கே நமது சான்று பகிரப்படவேண்டும், எங்கே நாம் சமயங்களைக் கடந்து ஒருங்கிணையவேண்டும் என்பன போன்ற தெளிவுகள் இன்றைய திருச்சபையில் காணப்படுவதில்லை. இவ்வகையான குறுகிய மனநிலைக்கு அனைத்து திருச்சபைகளையும் கண்ணைக் கட்டி விட்டது கடந்த நுற்றாண்டில் உருவான பெந்தேகோஸ்தே அமைப்பு என்றால் அது மிகையாகாது.

அகமதாபாத்திலிருந்து நாங்கள் மீண்டும்  ரசாயனி வந்தபோது, ஜாஸ்மினுக்கு மும்பை சார்ந்த மெதடிஸ்ட் தமிழ் திருச்சபைகளின் பெண்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நடத்த ஒரு வாய்ப்பு கிட்டியது. அவ்வேளையில், மிராரோடு திருச்சபை தான் பேட்ஜ் செய்யும் பொறுப்பினை பெற்றிருந்தது. அவர்களோடு இணைந்து பனை ஓலையில் நாம் பேட்ஜ் செய்தால் என்ன என வினவ, அவர்களும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள, இந்த நிகழ்ச்சியில் தான் பனை ஓலைகளைக் கொண்டு செய்யும் பேட்ஜினை மும்பையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தினோம். பெருத்த வரவேற்பை அது பெற்றது.

Badge

ரசாயனியில் கொல்லர் ஒருவர் புதிதாக சாலையோரத்தில் தனது பட்டரையினை துவக்கியிருந்தார். மொழி தெரியாது என்றாலும் அவருடன் எப்படியோ பேசி எனக்கான ஒரு எழுத்தாணியினை செய்து வாங்கிக்கொண்டேன். என்னிடம் ஓலைகள் தாராளமாக இருந்தபடியால் அவைகளை சேர்த்து ஒரு சிறு ஏட்டுபிரதியினை உருவாக்கினேன். அந்த ஏட்டுப்பிரதியில் நான் எழுத்தாணியினைக்கொண்டு ஆபகூக் என்கிற திருமறை புத்தகத்தினை ஆங்கிலத்தில் எழுதினேன். முழுமையாக திருமறையின் ஒரு புத்தகத்தை தற்காலத்தில் எழுதியவர்கள் யாரும் கிடையாது. நவீன வாழ்கையில் நாம் பனை ஓலைகளின் பயன்பாட்டை எவ்விதம் முன்னெடுக்கலாம் என்கிற அனைத்து சாத்தியகூறுகளையும் செய்முறையில் கற்று எது உகந்ததாக இருக்கும் என உய்துணர எனது எஞ்சிய நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன்.

பனை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்துவதில் நான் ஒருபோதும் சளைக்கவில்லை. பனை மரத்தினை, நவீன காலத்திற்கேற்ப நாம் வரையறை செய்துகொள்ளவில்லையென்றால் அது எவ்வகையிலும் நமக்கு பயனளிக்காது. சமய நிறுவனங்கள் அவ்வகையில் தனது சடங்கு சார்ந்த பொருட்களை இயற்கையிலிருந்து எடுத்துக்கொள்ள பெருவிளைவுடனே இருக்கிறது. திருச்சபை மட்டும் என்றல்ல, அனைத்து சமயங்களும் இவ்விதம் தங்களை முன்னிறுத்தியபடி இருக்கின்றன. இந்து அலயங்களில் காணப்படும் அர்ச்சனைத் தட்டுக்கள், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதிகளில் காணப்பௌம் குல்லா என சில உதாரனங்களைச் சுட்ட இயலும். அவ்விதமான ஒரு வீரிய அமைப்பு இப்போது தகர்ந்தபடி வருவதுதான் வேதனையளிக்கும் உண்மை.

ரசாயனியை அடுத்திருக்கும் கர்ஜத் பகுதி தான் பனை மரங்கள் இறுதியாக காணப்படும் இரயில் தடம். அங்கிருந்து பூனே கடப்பதுவரை பனை மரங்களை பார்க்கவியலாது. கர்ஜத் சுற்றுவட்டாரங்களில் பனை மரங்கள் அதிகம் உண்டு, ஆனால் என்னால் அப்பகுதிகளில் உள்ள பனையேறிகளைக் தேடிக்கண்டடைய இயலவில்லை. நுங்கு கிடைக்கும் வேளைகளில் நாங்கள் கர்ஜத் பகுதியிலிருந்து தான் குலைகுலையாக வாங்கிவருவோம். 2015ஆம் ஆண்டு ஆரோனுடைய பிறந்த நாளினை முன்னிட்டு நுங்கினை வாங்கி வெட்டி கொண்டாடினோம். பனை மரத்தின் நுங்கினை பிறந்த நாளில் நடு நாயகமாக மாற்றியவர் நானறிந்து வேறு எவரும் இல்லை. எனது பிள்ளைகள் நான் பெற்ற வரங்கள். பனை சார்ந்து நான் எடுக்கும் முன்னெடுப்புகளை உணர்ந்து எனக்கு ஒத்துழைப்பவர்கள்.

Palm Fruit

ரசாயனி பகுதிகளில் நாங்கள் இருக்கும் போது இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக பனை விதைகளை நடவுசெய்தோம். எங்கள் குடும்பம் மட்டுமே ஈடுபட்டு செய்த நிகழ்ச்சி அவைகள். மித்திரன் அப்போது 3 வயதை கூட எட்டியிருக்கவில்லை.  குடும்பமாக இணைந்து நாங்கள் முன்னெடுத்த இப்பணிகள் பின்னாட்களில் பெருமளவில் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. இன்று பல்வேறு பள்ளிக்கூடங்களும் சிறுவர்களும் பனை விதைகளை விதைப்பதற்கு முன்னோடி இப்பணிகள்.

நிற்க, எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என சொல்லி பெருமை பெசும் விஷயமல்ல இது. அனைத்து ஊர்களிலும் தங்கள் தாத்தாக்களோடு சென்று பனை விதைகளை விதைத்த அனேக குழந்தைகள் இன்றும் தமிழகத்தில் உண்டு. பனம் பழங்களை அன்றி வேறு உணவுகளே கிடைக்காமல் அல்லபட்ட நமக்கு முந்தைய தலைமுறைக்கூட உண்டு. ஆனால், பனை எவ்வகையிலும் நட்டு பேணவேண்டிய ஒரு மரம் என்ற புரிதல் அற்ற சூழலில் இவைகளை நாங்கள் முன்னெடுத்தோம். அவைகளை பொது தளத்தில் இட்டு அனேகரை செயலாற்ற தூண்டினோம் என்பது தான் இதன் சிறப்பு. பல முயற்சிகளை தொடர்ந்து நான் முன்னெடுத்தபடி வந்தாலும், அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடயவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ஏன் இந்த வீணான முயற்சி, பனைய வச்சவன் பார்த்துட்டு செத்தான், தென்னைய வெச்சவன் தின்னுட்டு செத்தான் போன்ற எள்ளல்கள் என்னை தொடர்ந்திருக்கின்றன. அதற்கு பதிலிறுக்கும் படியாக பனை பொருட்களை சாப்பிடாதவர்கள் தமிழகத்தில் உண்டா? அப்படியானால் யார் பனையை வைத்தவன் என கேள்வி எழுப்பி, மக்களின் மனசாட்சியை உலுக்கியவன் நான். ஆகவே தொடர்ந்து கருத்தியல் தளத்தில் கலகமூட்டியபடியே நான் முன்சென்றுகொண்டிருந்தேன்.

ரசாயனி மெதடிஸ்ட் திருச்சபை இளைஞர்கள் எனக்கு உதவியதால் முதன் முறையாக நாங்கள் பனை ஓலைகளைக் கொண்டு, குருத்தோலை ஞாயிறு அலங்காரத்தினையும், ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையையும் நெகிழி இல்லா அலங்காரங்களாக செய்து காட்டினோம். இவையாவும், மும்பையினைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நான் பார்த்த  பனை மரங்களிலிருந்து பெற்றுக்கொண்ட உத்வேகம் தான். மேலும் மும்பையில் இருக்கும் நாவீன கருவிகளின் உதவிகளைக் கொண்டு பனையோலைகளை மேம்படுத்தும் சாத்தியங்கள் அதிகம்.

ரசாயனி பகுதி நான் மும்பையினை நெருங்கியுணரச் செய்த ஒரு முன் வரைவு என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. ரசாயனியில் நான் இருக்கையில், அப்பகுதியில் காணப்படும் பனை மரங்களை வைத்து பனை எப்படி இம்மண்ணின் மிக முக்கிய மரங்கலாக இருந்திருக்கும்  என்ற தெளிவு பெற முடிந்தது. பன்வேல், கர்ஜத், பென் என ரசாயனியைச் சுற்றிலும் பனை செழித்திருந்த பகுதிகளே அதிகம். ரசாயனி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கனரக வாகன நிறுத்துமிடங்களுக்காக, பனை மரங்களை புல்லைப்போல் வெட்டி வீசியெறிந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். மும்பையின் பனை மரங்கள், வலர்ச்சி என்ற பெயரில் எப்படி அப்புறப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான அத்தாட்சி இது.

மும்பையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பனையேறிகள் தொழில் செய்ய வருகிறார்கள் என்பதும், கள் இப்பகுதிகளில் ஒரு முக்கிய பானமாக இருக்கிறது என்பது நான் கண்டு ஆவனப்படுத்திய உண்மை. மராட்டிய மொழியினை கொஞமாகவேனும் கற்றிருன்ட்தால், மிகப்பெரிய அளவில் பனை சார்ந்த தொடர்புகளை என்னால் வெளிக்கொண்டுவந்திருக்க இயலும்.

ரசாயனி எனக்கு பல்வேறு பனையேறிகளையும் பனங்காட்டினையும் அறிமுகம் செய்தது. பண்டாரிகள் பனை ஏறுகிறவர்கள் என்கிற தகவல் நான் ரசாயனி சென்ற பிறகே தெரிந்து கொண்டேன். பனை மரத்திலிருந்து உதிரும் பனம்பழங்கள், எவ்விதம் முளைக்கின்றன என நெருங்கி ஆய்வு செய்ய அங்கே தான் வாய்ப்பு கிடைத்தது. இவைகளை நான் தொகுத்து சொன்னதே தமிழகத்தின் பனை சார்ந்த விளிப்புணர்வு ஏற்பட காரணமாயிற்று. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பனை சார்ந்து இயங்கியவர்களையும் தற்போது பனை சார்ந்து இயங்குபவர்களையும் ஒப்பிட்டால், எனது தனிப்பட்ட ஆய்விலிருந்து எவ்விதம் பலரை இப்பாதை நோக்கி வழிநடத்தியிருக்கிறேன் என அறியலாம்.

ரசாயனி என்னை தொகுத்த விதம் அருமையானது. பல்வேறு மக்களினங்கள் ஒரு ஊரில் மட்டும் பனை சார்ந்து வாழ்கிறார்கள் எனக்கொண்டால், தென்னிந்தியாவில் எத்தனை சமூக குழுக்கள் பனை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்திருப்பார்கள் என எண்ணினேன். ஆகவே எனது தனித்த பயணத்தை மும்பை ரசாயனியிலிருந்து நான் துவக்கினேன். தமிழகத்தையே புரட்டிப்போட்ட ஒரு பயணம் அது. இன்று முன்னணியில் பனை விதை நடுபவர்கள் ஆகட்டும், பனை சார்ந்த பொருட்களைச் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள் ஆகட்டும், அனைவரும் 2016ஆம் ஆண்டு எனது பனைமரச் சாலையினை அடுத்து களமிறங்கிய இளைஞர் படை தான். ஒருவேளை அவர்கள் என்னை நேரடியாக அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பனைமரச் சாலை ஏற்படுத்திய அதிர்வு அவர்களை பனைசுழலுக்குல் இணைத்துக்கொண்டது. தமிழகத்தில் இருந்த பனை சார்ந்த பழைமைவாத எண்ணங்களை துலக்கி புத்தம்புதிதாக நான் முன்வைக்க உதவிய பயணம் அது.

இச்சூழல்கள் அமைகையில் நான் தெளிவுபெற்றுவிட்டேன். பனை சார்ந்து நான் செய்யும் பணிகள் எல்லாம் இறைவன் எனக்கிட்ட கட்டளைகள். இயற்கை சார்ந்து செயலாற்ற அனேகர் இருக்கையில், பனை மரத்தினை தொகுத்தளிக்கும் ஒரு பணியினை கடவுள் என கரத்தில் கொடுத்திருக்கிறார். ஆகவே எதற்கும் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. இப்பணியில் நான் நிலைத்தால், இங்கே நான் செய்யக்கூடுபவைகளைச் செய்வேன். இப்பணியிலிருந்து நான் விலக்கப்பட்டால் இன்னும் உற்சாகமாக பனை சார்ந்த பணிகளை முன்னெடுப்பேன். பிறர் விட்டுச்சென்ற தடங்களில் வேகமாக ஓடி வெற்றி பெறுவதைவிட, தடங்களற்ற நிலங்களில் தடம்பதித்து ஏறவே நான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்ற புரிதலுக்குள் வந்தேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம்  7

ஓகஸ்ட் 6, 2019

 

பனை திருப்பணி

நான் இறையியல் கற்றிருந்ததனால் கண்டிப்பாக இறைப்பணி செய்யவேண்டும் என்பது எனது குடும்பத்தினரின் விருப்பம். சமூக பணியும் இறைப்பணி தான் என்று சொல்லி அவர்களை என்னால் சமாளிக்க இயலவில்லை. மார்த்தாண்டம் பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான்காண்டுகள்  வேலை செய்த பின்னர் நான் “இறைப்பணி செய்ய” மும்பை நோக்கி பயணித்தேன். மும்பை சென்றவுடனேயே எனக்கு திருச்சபையில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே  அதற்காக நான் காத்திருக்கலானேன்.

நாட்கள் செல்லச்செல்ல, பொறுமை இழந்து வேறு வேலை தேடினேன்.  ஸ்னேக சாகர் என்கிற தொண்டு நிறுவனத்தில் மூன்று மாதங்கள் பணி புரிந்தேன். அது லுத்தரன் திருச்சபையின் ஒரு தொண்டு நிறுவனம். தெருவோரக் குழைந்தைகளை பார்த்துக்கொள்ளும் இந்த நிறுவனத்தின் தலைமையிடம்  மலாட் மார்வே ரோட் என்ற பகுதியில் இயங்கியது . அதன் இயக்குனர் கிறிஸ்டோபர், குழந்தைகளுக்கான ஒரு இல்லம் அமைப்பதற்கான முயற்சிகளை அவ்வேளையில் எடுத்துக்கொண்டிருந்தார். முதல் ஒரு மாதம் மலாட் பகுதிகளில் தான் பணியாற்றினேன்.

மலாட் பகுதியிலும் நான் ஆங்காங்கே பனை மரங்களை பார்த்த ஞாபகம் இருக்கிறது. பின்னர் மும்பையின் மற்றொரு ஓரமான பத்லாபூர் பகுதிகளில் சிறுவர் மறுவாழ்வு இல்லப் பணிகள் துவங்கின. பென்சீல் என்ற அந்த மராட்டிய கிராமத்திலேயே தங்கத் துவங்கினேன். அங்கும் பனை மரங்கள் ஆங்காங்கே  இருப்பதைப் பார்த்தேன். சிறப்பு என்னவென்றால் இங்கே வைத்து தான் பனை சார்ந்து கருங்குருவிகள் வாழ்கின்றனவோ என்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. பனையின் கருநிறமும், இரட்டைவால் கருங்குருவிகளின் நிறமும் ஏதோ ஒருவகையில் இணைகின்றனவோ என்று எண்ணினேன். ஆனால் எப்படி என அப்போது என்னால் உணர்ந்துகொள்ள இயலவில்லை, அவைகளின் பொருத்தம் சார்ந்து என்னால் எந்த முடிவுகளுக்கும் வர இயலவில்லை. பனை இருக்குமிடத்தில் கருங்குருவிகளும் இருக்கும்போல என எண்ணிக்கொண்டேன்.

மிராரோடு திருச்சபையில் நான் பொறுப்பெடுத்தபோது அங்கே பனை மரங்களை அதிகமாக பார்க்க இயலவில்லை. மிராரோடிலிருந்து தஹிசர் செக்கி நாக்கா வரும் வழியில் ஒரு சில பனை மரங்கள் இருக்கும். மிரா ரோட் வந்து சேரும் வழியில் இருக்கும் முக்கிய சாலையான காஷிமிரா தாண்டி காஷிகாவுன் சென்றால் மேலும் சில பனை மரங்கள் நிற்கிறதைக் காணலாம். தானே முதல் கோட்பந்தர் சாலை வரும் வழியின் இரு மருங்கிலும் பனை மரங்கள் தாராளம் நிற்கும். ஆனாலும் பனை மரங்கள் உள்ள பகுதி தான் மிராரோட் என்ற எண்ணம் எனக்கு அச்சூழலில் உருபெறவில்லை. மும்பையினைச் சுற்றிலும் பனை மரங்கள் இருக்கும் என்ற எண்ணமும் என்னில் முழுமையாக உருக்கொள்ளவில்லை.

நான் பணியில் அமர்ந்த பிற்பாடு முதல் ஆராதனை சாம்பல் புதன். அதனைத் தொடர்ந்து வரும் முக்கிய பண்டிகையான குருத்தோலை ஞாயிறு குறித்து எங்கள் செயற்குழுவில் விவாதித்தோம். திரு ஜாண் சுந்தர் அவர்கள் பனை ஓலையினை தாம் கொண்டுவருவதாக வாக்களித்தார்கள்.

குருத்தோலை ஞாயிறு அன்று அவர்கள் அந்த ஓலைகளை கையில் எடுத்துவருவதை ஆச்சரியம் தாளாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக அழகிய நீண்ட ஓலை. தென்னை ஓலைகளுக்கு போட்டிபோடு அளவிற்கு நீளம். ஐந்தடியாவது இருந்திருக்கும். அகலம் 4.5 சென்றி மீட்டரைத் தாண்டி  இருக்கும். இவ்வளவு அகலமும் நீளமும் எளிதில் சாத்தியப்படுவதில்லை. ஜாண் சுந்தர்  தனது கைகளில் ஓலைகளை எடுத்தபடி நிற்கும்போது அவரில் காணப்பட்ட பெருமிதம் அவர் முகத்தில் ஒளியென பிரகாசித்தது. இது எப்படி சாத்தியம்? எங்கிருந்து இவ்வளவு நேர்த்தியான ஒரு ஓலை கிடைத்திருக்கும்?  இவ்வித கேள்விகள் எனக்குள் குடைந்துகொண்டிருந்தன.

முதலில் ஊரிலிருந்து விமானத்தில் கொண்டுவந்திருப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அந்த ஓலைகளில் தெரிந்த புத்துணர்ச்சி, பசுமை மாறா தன்மை போன்ற அனைத்தும் இவ்வோலைகள் சில மணி துளிகள் முன்னால் வெட்டப்பட்டவை என்கிற உண்மையினை கோடிட்டு காட்டின. ஆகவே ஓலைகள் வெகு அருகிலேயே கிடைக்கின்றன என்ற உறுதியான முடிவிற்கு நான் வர இந்த நிகழ்ச்சி எனக்கு உறுதுணையாக இருந்தது. பிற்பாடு ஓலை வாங்க ஆன செலவு குறித்து கேள்வி எழுந்தபோது 300 ரூபாய் என்று கூறினார்கள். 2 ஓலைகளுக்கு ரூ 300 என்பது மிக அதிகம். ஆனால் ஜாண் சுந்தர், தான் அந்த செலவினை ஏற்றுக்கொள்ளுவதாக கூறிவிட்டார்கள். திருச்சபையில் அப்போதுதான் நான் பொறுப்பேற்றிருந்தபடியால் எனது பனை சார்ந்த எண்ணங்களை அவசரப்பட்டு எவருக்கும் சொல்லவில்லை.

மும்பையில் பனை ஓலைகளே குருத்தோலை ஞாயிறு அன்று கொடுக்கப்படுகின்றதைக் கண்டு நான் அடைந்த இன்ப அதிர்ச்சி வேறு வகையானது. குமரி மாவட்டத்தில் குருத்தோலை என்றாலே தென்னை ஓலைகள் தான் என்று ஆகிவிட்டிருந்தது. ஆனால் மும்பையில் அனைத்து தமிழ் திருச்சபைகளும் குருத்தோலை பவனியின் பொழுது பனை ஓலைகளையே எடுத்துச் செல்லுகிறார்கள். இதற்கு காரணம் திருநெல்வேலி மாவட்டத்தினைச் சார்ந்த மக்கள் பெருமளவில் இங்கே இருப்பது தான் என கருதுகிறேன்.

ஒருமுறை எனது திருச்சபையின் அங்கத்தினரான ஜெபஸ்டின் அவர்களோடு இணைந்து நான் மனோரி சென்றேன். அது ஒரு கடற்கரைப் பகுதி. செல்லும் வழியெங்கும் பனை மரங்கள் இருப்பதைப் பார்த்ததால் மீண்டும் இங்கு தனித்து வரவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

2008 பெப்ருவரி மாதம் 2 ஆம் நாள்  நான் மும்பை மெதடிஸ்ட் திருச்சபையில் போதகராக இணைந்தேன். 2008 ஜூன் 11ஆம் தியதி எனக்கு திருமணம் நிகழ்ந்தது. 2009 ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி  ஆரோன் பிறந்தான். அதற்கு அடுத்த மாதத்தில் எனது இரு சக்கர வாகனமான  எம் எஸ் எல் (MSL) 8537 ஐ நான் வாங்கினேன். வயதில் என்னைவிட 10 வயது மூத்தது எனது வண்டி. ஆனால் ஆரோனுக்கு பிறகு எங்கள் வீட்டில் சேர்ந்துகொண்ட உறவு அது. அதனை மும்பைக்கு ஜாஸ்மினுடைய தம்பி லாரியில் அனுப்பினான். பன்வேல் பகுதியில் அந்த வாகனம் வந்தபோது எனது மூத்த அண்ணன் செல்சன் அவர்கள் வந்து அந்த வண்டியை எடுக்க உதவினார்கள். மிராரோடு பகுதியில் அவ்விதமாகத்தான் எனது வண்டி வந்து சேர்ந்தது.

வாகனம் வந்துவிட்டதால் பனை மரங்களைத் தேடி பயணித்தேன். பயந்தர் பகுதிகளைத் தாண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றால் போதும், பனை மரங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். நம்முடைய கிராமத்தை ஒத்திருக்கும் அந்த பகுதிகளின் அழகில் மயங்கி அங்கே அடிக்கடி எனது இரு சக்கர வாகனத்தில் பயணிக்க துவங்கினேன். நம்ப இயலாத அளவிற்கு அங்கே பனைகளின் திரட்சி இருப்பதை அறிந்தபோது மும்பையின் மற்றொரு பனை செறிவுள்ள முக்கிய பகுதியினை கண்டடைந்துவிட்டோம் என மனம் கூப்பாடு போட்டது. அப்படித்தான் கோரே பீச் நான் விரும்பிச் செல்லும் இடமாகிப்போனது.

இந்திய இடையன் இயேசு

ஒருமுறை போதகர் எமில் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றபோது, அங்கே டொமினிக் என்கிற ஒரு மனிதரைச் சந்தித்தோம். கத்தோலிக்க திருச்சபையினரான அவர், தனது வீட்டின் அருகில் அனேக பனை மரங்களை வளர்த்துவந்தார். எங்களுக்குத் தேவையான காய்ந்த ஓலைகளை நாங்கள் வெட்டிக்கொள்ள அனுமதி தந்தார். வெட்டுவதற்கும் அவரே அரிவாளைக் கொடுத்தார். வெட்டப்பட்டு கிடக்கும் பச்சை ஓலைகளையும் நாங்கள் எடுத்து பயன்படுத்த அனுமதி தந்தார். எங்களிடம் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் குடும்பத்தினருக்கே நாங்கள் ஓலைகளை  பயன்படுத்துகிறோம், பொருட்படுத்துகிறோம் என்பது ஒருங்கே ஆச்சரியமளிப்பதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்திருக்கிறது. பல்வேறு கீரைகள், பயறு வகைகள் பொன்றவற்றையும் விவசாய பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்வார்கள். அங்கிருந்து வீட்டிற்கு தேவையானவைகளையும் வாங்கி வருவோம்.

டொமினிக் போலவே அனேகர் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். போர்த்துக்கீசியர்கள் காலத்தில் இங்கிருந்த மீனவர்கள் மதமாற்றத்திற்குள்ளான நிகழ்வுகளை வரலாற்றில் படிக்கிறோம். போர்த்துகீசியர்கள் கலப்பு மணம் செய்வதை ஊக்குவித்தார்கள். அப்படியே கத்தோலிக்க திருச்சபையை ஆதரித்தார்கள். பேசின் (தற்போதைய வசாய்)  தானே மற்றும் அருகிலுள்ள இடங்களிலெல்லாம் 10000 நபர்களுக்கும் மேலாக மதம் மாற்றியிருக்கிறார்கள். 1560களில் மும்பையில் ஏற்பட்ட இந்த மத மாற்றம், தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் அமைப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது. தேவாலயங்கள் கட்டப்பட்டன. போர்த்துக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுகாரர்களும் பின்னர் பிரிட்டிஷாரும் வந்தனர். பிரிடிஷ் ஆட்சிக்குப் பின்பு கத்தோலிக்க மதத்தினை தொடர்கிறவர்களை கிழக்கிந்திய  கிறிஸ்தவர்கள் என அழைத்தனர்.

நாங்கள் பார்த்தவரைக்கும் பலரும் தங்களது வீட்டின் அருகில் கள்ளிறக்குவதை தொழிலாக கொண்டிருந்தனர். சில நேரங்களில் வேறு பனை தொளிலாளர்களும் அங்கே வந்து பனை மரத்தில் கள் இறக்குவதைப் பார்த்திருக்கிறோம். அவ்விதமாக ஒருமுறை நான் ஆந்திராவைச் சார்ந்த ஒரு பனையேறியைப் பார்த்தேன். அவரது உடலை கரு நாகமென சுற்றியோடிய இடைக்கயிற்றிற்கு மோகு என்ற பெயர் உள்ளது அப்போது எனக்குத் தெரியாது. எனது பனை மரச் சாலை பயணத்தின் போதுதான் அதன் பெயரை அறிந்துகொண்டேன். இவ்விடம், மீராரோடு பகுதியிலிருந்து மேற்காக வெறும் ஏழு கி மீ தூரத்திலேயே இருப்பதால், நினைத்த நேரம் என்னால் அங்கே சென்று வர முடிந்தது. பெரும்பாலும் ஓலைகள் தேவைப்பட்டால் மாத்திரமே அங்கே செல்லுவது வழக்கம். இல்லாவிட்டால் ஜாஸ்மின் மற்றும் குட்டி ஆரோனை அழைத்துச் சென்று புத்துணர்ச்சி பெற்று வரும் நேரமாகவும் அவைகளை வைத்துக்கொள்ளுவோம்.

டொமினிக் வீட்டின் அருகிலேயே கள் கிடைக்கும். அங்கே கிடைக்கும் கள் புளித்திருக்காது. ஆகவே சொல்லிக்கொள்ளும்படி போதையும் இருக்காது. ஆனால் அது பதனீர் அல்ல. ஒருமுறை திருச்சபையின் நிகழ்ச்சிக்காக அங்கிருந்து அதிகாலை வேளையில் கள்ளை வாங்கி அதற்குள் சுண்ணாம்பினை இட்டு, பதனீர் ஆக மாற்ற முயற்சித்து, தோல்வியினைத் தழுவினோம். பிற்பாடு அதனை திருச்சபையில் கொடுக்க இயலவில்லை. பனையேறிகள் ஏன் பானையில் சுண்ணாம்பினை தடவி பின்னர் மரத்திலிருந்து இறக்குகிறார்கள் என்கிற உண்மை அப்புறம் தான் உறைத்தது.

பனை சார்ந்த எனது முன்னெடுப்புகள் உக்கிரமடைய பனை சூழ இருக்கும் இச்சூழல் தான் காரணமாக இருந்தது. ஓலைகள் இங்கே கிடைப்பதால் நாம் ஏன் ஒரு பனை ஓலை சித்திர கண்காட்சி வைக்கக்கூடாது என்று எண்ணினேன். ஓலைகளை வெட்டி சித்திரமாக மாற்றும் ஒரு கலையினை நானே உருவாக்கியிருந்தேன். ஆனாலும் அவைகளை ஒருங்கிணைத்து என்னால் ஒரு கண்காட்சியினை செய்ய இயலுமா என்கிற ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. மீராரோட் அருகில் கிடைத்த ஓலைகள் என் தயக்கத்தை தகர்த்து என்னை முன்னோக்கிச் செல்ல உந்தியது. அவ்விதமாக 2011 முதல் 2017 வரை நான் தொடர்ந்து பல்வேறு பனையோலை கண்காட்சிகளை வைத்து பனை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தேன். அதன் பின்பு இதுவரை பனை சார்ந்து நான் செய்யும் பணிகள் தொய்வடையாமல் இருக்கின்றது. எனது பனை சார்ந்த பணிகளை பலரும் அங்கீகரிக்க இவைகள் முக்கிய காரணமாக இருந்தன. என்னை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தில் அனேகர் எழும்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் பனை புரட்சிக்கு 2016 பனைமரச்சாலை வித்திட்டது என்றால் அது மிகை அல்ல.

இந்த நாட்களில் தான் நான் காய்ந்த ஓலைகளின் அருமையினைக் கண்டடைந்த நாட்கள். சற்றே மண்ணிறத்தில் இருக்கும் ஓலைகள் எனக்கு செப்புத் தகடுகளை நினைவுறுத்தும். எங்கும் நாம் காணக்கிடைக்காத ஒரு அழகு இவ்வித மண் நிற ஓலைகளில் கிடைக்கின்றன.நிறைவுறும் ஓலை படங்கள் கண்களை விட்டு விலக்க இயலாதபடி கொள்ளை அழகு கொண்டிருந்தன. ஓலைகளுக்கான செலவு என ஒன்றுமில்லை.   பசுமையான ஓலைகளை விடவும் காய்ந்த ஓலைகளில் வேலை செய்வது கடினம். ஆனால் நான், அவைகளை தண்ணீரில் இட்டு பயன்படுத்த ஆரம்பித்தேன். மிகச்சரியான அளவில் நீரில் ஊறவைக்கவேண்டும். காய்ந்த பின் தான் அதனை ஒட்டவேண்டும், இல்லையென்று சொன்னால் ஓலையில் பூசணம் பிடித்துவிடும். பல முறை இப்பிரச்சனைகளைக் கடந்து வந்தாலும் இன்னும் தவறுகள் நிகழ்த்துகொண்டே இருக்கின்றன. ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தால் கூட, ஈரப்பதம் நிறைந்த இடத்தில் ஓலையில் செய்த படங்கள் இருக்குமானால், அவைகள் எப்படியோ பூஞ்சை பிடித்து விடுகின்றன. காற்றில் உள்ள ஈரப்பதம் ஓலைகளை எளிதில் பூசணம் பிடிக்க வைக்கின்றன.

எனது முதல் பனையோலை கண்காட்சி இவ்விதமாக மும்பையில் 2011ஆம் ஆண்டு துவங்கியது. அதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆன்டு பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் உள்ள பெண்ணியல் மற்றும் பாலின கல்வி துறை தலைவர் அறிவர். அருட்பணி. இவாஞ்சலின் ஆண்டர்சன் ராஜ்குமார் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, தென்னிந்திய திருச்சபையின் சினாட் அலுவலகத்தில் ஒரு நிகழ்வை அருட்திரு. விஜி வர்கீஸ் ஈப்பன் அவர்கள் முன்னெடுத்தார்கள். 2013 ஆம் ஆண்டு கம்போடியா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கும் ஒரு கண்காட்சி அமைத்தேன். ஆசிய கிறிஸ்தவ மாநாடு ஒருங்கிணைத்த  அமைதி தூதுவர்கள் நிகழ்ச்சியில் எனது படங்களை பார்த்தவர்கள், நீங்கள் ஏற்கனவே அமைதி பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் எனப் பாராட்டினார்கள். 2014 ஆம் வருடம், இந்திய திருச்சபைகள் ஒன்றிணைந்த நுற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. எனது கண்காட்சியினை பேராயர் அருட்திரு தாரனாத் சாகர் அவர்கள் திறந்துவைத்தார்கள். 2015 ஆம் அண்டு சென்னை வெள்ளபெருக்கிற்காக மும்பையில் நான் நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சியில் கிடைத்த சிறு தொகையினை மெதடிஸ்ட் திருச்சபை வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பினோம். 2017 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் எனது படைப்புகளை எடுத்துச் சென்று கண்காட்சி அமைத்தேன். அதற்கு இலங்கை தேசிய கிறிஸ்தவ மாமன்றம் துணை செய்தது.

கண்காட்சிக்கான சுவரொட்டி

அனைத்து சூழல்களிலும், நான் ஓலைகளை மும்பையிலிருந்தே எடுத்து இவைகளை நிகழ்த்திக்காட்டினேன். குருத்தோலைகளையும், சாரோலைகளையும் தேடி வெட்டி எடுத்துக் கொண்டுவந்தது,   சாயமிட்டது, காவோலைகளை தேடிப்பொறுக்கியது என பல வகைகளில், என்னால் இவைகளை ஒருங்கிணைக்க முடிந்தது. குறிப்பாக காய்ந்த ஓலைகளை சேகரிப்பது சற்று சவாலானது. அதன் நிறம் நாம் எண்ணும் வண்ணம் இருக்கவேண்டும், புதிதாக விழுந்திருக்கவேண்டும், அதிக புள்ளிகள் அடித்திருக்கக்கூடாது. (அடித்திருந்தாலும், அவைகளை வேறு எவ்வகையில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற புரிதல் இருக்கவேண்டும்). ஓலைகள் அகலமாக இருக்கவேண்டும். வெட்டி எடுக்க வெட்டரிவாள் வேண்டும். அவைகளை நீர் நனைத்து ஒடியாமல் எடுத்து வரும் வசதி வேண்டும்.  இவ்விதமாக பல்வேறு நுணுக்கமான காரியங்களைக் கருத்தில் கொண்டே ஓலைகளை சேகரிக்க இயலும்.

இவையனைத்தையும் நான் ஒருங்கிணைத்துப் பார்க்கையில், மும்பை எனக்கு தன்னைச் சிறுக சிறுக வெளிப்படுத்தியிருக்கிறது. தனது விரிந்த பனை பின்புலத்தை நான் ஆராய அது எனக்கு பல வகைகளில் உதவியிருக்கிறது. எனது புரிதலின் மந்த வேகத்தைக் கருத்தில் கொண்டு அது அமைதியாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது. நான் ஆயத்தமாகிறேன் என்று சொல்லும் கணத்தில் பேருருக்கொண்டு அது விரிகிறது எனபதை நான் உணர்ந்துகொண்டேன். பனை என்னிடம் கேட்பது இதுதான். எனது இருப்பு இவ்விடத்தின் எதிர்கால சூழலை நிர்ணயிக்கின்ற ஒன்று, அதனை எவ்விதம் நீ கட்டமைக்கப் போகிறாய்?

எனது எளிய தேடுதலை பனை இத்துணை உக்கிரமாக ஏந்திச் செல்லும் என்பது நான் கனவிலும் எண்ணியிராதது. அது கடவுள் எனக்களித்த வரம். பனை சார்ந்து எனது வாழ்வை நான் அமைத்துக்கொள்ள கடவுள் எனக்கு இட்டிருக்கும் ஒரு இடுக்கமான வாசல் என்றே கொள்ளுகிறேன். பலர் சுவர்களில் முட்டிக்கொண்டிருக்கையில், வேறு பலர் அகன்ற பாதைகளில் தறிக்கெட்டு செல்லும்போது, எனக்கான இந்த சிறு பாதை எனக்கு நிறைவளிக்கும் பயணத்தை வழங்குவதை மறுக்க இயலாது.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

பனை நகரம் 6

ஓகஸ்ட் 2, 2019

கள் நகரம்

2004ஆம் ஆண்டு என நினைக்கிறேன் நான் எனது இறையியல் கல்வியினை முடித்துவிட்டு மும்பை வந்திருந்தேன். அப்போது எனது இளைய சகோதரி ஜாய்ஷியா மும்பையிலுள்ள அந்தேரி என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். எனது ஆசிஷ் அத்தானுக்கு ஒய் என் சி ஏ வில் வேலை. அந்த வேளையில் தான் எனது பெரியம்மா மகனுடைய திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது  திருமண அழைப்பிதழை பனை ஓலையில் செய்து கொடுக்க முடியுமா என்று என்னிடம் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

திருமண அழைப்பிதழ்களை  மும்பையிலிருந்து எப்படி ஒழுங்கு செய்வது என யோசனை பண்ணினேன். ஊருக்கு சென்று அவைகளை ஒழுங்கு செய்ய நேரம் இருக்காது. அபொழுத்தான் அந்தேரி இரயில் நிலையம் அருகில் பனை மரங்களைப் பார்த்திருக்கிறேனே என்ற எண்ணம் வந்தது. எனது அத்தானிடம் கேட்டபொழுது, அவர்கள் மலாட் என்ற பகுதியின் அருகிலிருக்கும் மட் (Madh) என்ற இடத்தில் பனை மரங்கள் ஏராளம் நிற்பதாக கூறினார்கள். அப்போது எனக்கு மும்பை இரயில் பயணங்களில் உள்ள ஒவ்வாமையினால், பேருந்தைப் பிடித்தே அங்கே செல்ல வழிகாட்டினார்கள். முதன் முறையாக நான் அவ்விடத்திற்குச் செல்லுவதால் அவர்களே என்னை அந்த இடத்திற்கு  அழைத்தும் சென்றார்கள்.  மட் என்ற பகுதி வந்தவுடன்,  சேறும் சகதியுமான ஒரு பாதையில் இறங்கிச் சென்றோம். அது ஜெட்டி என்று அழைக்கப்படும் ஒரு மீன்பிடி துறைமுகம். அனேக படகுகள் வந்தணைந்து சென்றுகொண்டிருந்தன. நாங்கள் ஒரு படகில் ஏறி அக்கரைக்குச் சென்றோம். படகு முழுவதும் பயணிகள், சைக்கிள், இரு சக்கர வாகனம், என அந்த பெரும் படகு ததும்பிக்கொண்டிருந்தது. பயண கட்டணம் வெறும் 2 ரூபாய் தான் என்று நினைக்கிறேன்.

மறு கரையை அடைந்தபோதுதான் நான் எண்ணியிராத அளவிற்கு பனைமரங்கள் அக்கரையில் திரண்டு எழுந்து நிற்பதைப் பார்த்தேன். உள்ளம் குளிர்ந்துவிட்டது. அத்தான் என்னை அப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பனை ஏறுகிறவர்களை ஒருவாறு கண்டுபிடித்தோம். நம்பினால் நம்புங்கள், அங்கே இருந்த பனையேறி தன்னை ஒரு நாடார் என அறிமுகப்படுத்தினார். அன்றைய சூழ்நிலையில் எனக்கு பனையேற நாடார்களால் மட்டுமே முடியும் என்கிற எண்ணமே இருந்தது. அவர் தான் தாராவியைச் சார்ந்தவர் என கூறி, அங்குள்ள மொத்த பனைகளைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும், நான்கைந்து பேர் இணைந்து பனை ஏறுகிறவர்களாக அங்கே தங்கியிருப்பதாகவும் கூறினார். அவர்கள் வாழ்ந்து வரும் குடிசையும், அவர்கள் கைகளில் வைத்திருந்த பனையேறும் உபகரணங்களும் எனக்கு அன்னியமானவைகள் அல்ல. பார்க்க குமரி மாவட்டத்து பனையேறுபவர்களின் கருவிகளை விட அனைத்தும் பெரிதாகவும் முரட்டுத்தனமாகவும் காணப்பட்டன. ஒருவேளை, திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்கும் என எண்ணிக்கொண்டேன். எனக்கு தமிழில் பேச வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி ஒறுபுறம், அவர் எனக்கு ஓலைகளைக் கொடுக்க ஒப்புக்கொண்ட மகிழ்ச்சி மற்றொருபுறம்.

நான்கைந்து மட்டை ஓலைகள் தான் எனக்குத் தேவையாக இருந்தன. ஓலைகளை உடனடியாக எடுத்துகொடுக்க இயலாது என்றும், மீண்டும் வருவதற்கு ஒப்புக்கொண்டால் ஓலைகளை வெட்டி வைத்துக்கொள்ளுவதாகவும் கூறினார்கள். மறுமுறை தனியாக நான் அப்பகுதிக்குச்  சென்றேன். அவர் சொன்னபடி எனக்கு ஓலைகளைக் கொடுத்தார். விலைகளும் அதிகமாக வாங்கிக்கொள்ளவில்லை. அன்றைய தின விலையின்படி, ஒரு ஓலைக்கு 5 ரூபாய் வாங்கியிருப்பர் என்றே நினைக்கிறேன். வாங்கிக்கொண்டு வந்து ஓலைகளைக் காயவைத்து தேவையான திருமண அழைப்பிதழ்களைச் செய்தேன். அன்றைக்கு நான் செய்த திருமண அழைப்பிதழ்களின் அளவு 3 X 15 என்ற அளவில் இருந்திருக்குமென மங்கலாக நினைவுகள் இருக்கின்றன. நான் கேட்ட ஓலைகள் அவ்வளவு நேர்த்தியாக எனக்கு வேறு எங்கும் கிடைத்தது இல்லை. அவ்வளவு அழகிய நிண்ட ஓலைகள் அந்த மனிதர் எனக்கு வெட்டிக்கொடுத்தார். ஒருவேளை மும்பை மரங்கள் செழிப்பாக வளருவதால் அதன் இலைகள் அகன்று இருக்குமோ?

மும்பையில் பனைமரங்கள் இருக்கின்றன என்கின்ற பிரமிப்பு, பனை ஏறுவதற்காக தமிழகத்திலிருந்து மக்கள் இங்கே வருகிறார்கள் என்கிற தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படியே கள்ளிறக்குகிற செய்தியின் மூலம் இங்கே  கண்டிப்பாக கள் பருகும் ஆட்கள் இவர்களைத் தேடி வருவார்கள் என்ற பன்முகப்பட்ட ஒரு புரிதலை  கண்டுணர முடிந்தது. அப்போது நான் மும்பையின் ஏதோ ஒரு மூலையில் மட்டுமே  பனைகள் நிற்கின்றன என எண்ணிக்கொண்டேன். எனது தொடர் மும்பை வாழ்க்கை ஏதோ ஒருபகுதிதானே என இதனை அப்படியே விட்டுவிட முடியாதபடி ஒவ்வொரு நாளும் பனை மரங்கள் நகரெங்கும் வியாபித்து இருப்பதை “பனைசாற்றி”க்கொண்டே இருந்தது. ஏன் இப்பகுதிகளில் பனை நிற்கின்றது என்கிற கேள்விகளுக்கும் விடை தேட வேண்டிய ஒரு கடமை  எனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தே முழு மூச்சாக இவைகளைத் தேட களத்தில் இறங்கினேன்.

Toddy

மும்பையைப் பொறுத்த அளவில் கள் அனுமதிக்கப்பட்ட பானமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்களை நாம் அடுக்கடுக்காக சொல்லமுடியும். குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், மும்பையில் வாழும் பூர்வகுடிகளான, கோலி எனும் சமூகம் மீன்பிடிப்பைத் தனது வாழ்க்கைமுறையாக கொண்டது. பனை நெய்தல் நிலத்து மரமாகையால், கள் இங்கே பெருமளவில் கிடைத்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. நெய்தல் நில மக்களின் வாழ்வில் பனையும் கள்ளும் ஓய்வின் சின்னங்களாகவே இருந்திருக்கின்றன.

Madh Fort

ஒருமுறை மும்பை வந்திருந்த எனது நண்பர் மற்றும் சூழியல் செயல்பாட்டாளர் அறிவர். கிறிஸ்டோபர் அவர்களுடன் மும்பை நகரத்தில் சுற்றியலைந்துகொண்டிருந்தபோது காமத்திபுரா பகுதியில் ஒரு மிகச்சிறிய கள்ளுக்கடை ஒன்றைப் பார்த்தோம். நகரத்திற்குள் கள்ளுக்கடையா என வாய் பிளந்து பார்த்த நாட்கள் அவை. நான் அதற்கு முன்னும் பின்னும் அவ்விதம் கள்ளுக்கடையினை மும்பையில் வேறெங்கும் பார்த்ததில்லை. பீர் பாட்டில்களில் வெண்ணிற கள்ளை ஊற்றி வைத்திருந்தார்கள்.

நாங்கள் மிரா ரோடில் இருக்கும்பொழுது எங்கள் வீட்டை ஒட்டிச் செல்லும் தெருவில், காய்கரிகளும் மீனும் விற்பவர்கள் காலை வேளையில் வருவார்கள். அவ்விடத்தில் ஒரு பெண்மணி 30 – 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு நீல வண்ண கேன் முழுவதும் கள் நிறப்பி கொண்டுவருவார்கள். ஆப்பம் செய்வதற்காக பலமுறை அதனை நாங்கள் வாங்கியிருக்கிறோம். இனிப்பு சுவையுடன் புளிப்பும் கலந்தபடி இருக்கும்.

மும்பையினைப் பொறுத்த அளவில் குடி ஒரு விடுதலையின் அடையாளம் மட்டும்தான். பெருங்குடிகாரர்களும், குடித்து அனைத்தையும் இழந்தவர்கள் இங்கும் உண்டு என்றாலும் கூட, கடுமையான வேலை செய்பவர்கள், குடியினை தங்கள் வாழ்வின் ஒரு கேளிக்கையின் அம்சமாக செய்வதுவே அதிகம். அதற்காக, மத் போன்ற பகுதிகளை நோக்கி வருவார்கள். ஒரு நாள் முழுக்க கூட்டாக அமர்ந்து கள்ளை மெதுவாக குடித்துவிட்டு, கடலில் குளித்து உணவுண்டுவிட்டு செல்லுவார்கள். விடுமுறை நாட்களில் அதிகமாகவும், மற்ற நாட்களில் குறைவாகவும் இவ்வழக்கம் காணப்படும்.

மும்பையில் கள்ளுக்கடைகள் பரவலாக இருந்திருக்கின்றன. சுமார் 250 கள்ளுக்கடைகளுக்கு மும்பையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கள் கொண்டு வந்து விற்பது வழக்கமாயிருந்திருக்கிறது. ஆரே காலனி, மத், கோரே, தானே, வசாய், பால்கர், மற்றும் பன்வேல் பகுதிகளிலிருந்து நகர் நோக்கி கள்ளினை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் கள் இறக்கும் நபர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால் கள்ளுக்கடைகளுக்கு போதிய கள் வரத்து இல்லாமல் போனது. மேலும் கள்ளிறக்கும் இடங்களுக்கே பலர் தேடிச் சென்று கள் குடிப்பதால், கள் உற்பத்தியாகும் இடத்தை தவிர்த்து பிற இடங்களில் நல்ல கிடைப்பது அரிதாகியது. இச்சுழலில் தான் கள்ளுக்கடைகளை நடத்த அனுமதி பெற்றிருந்தவர்கள், குளோரல் ஹைடிரேட் (Chloral hydrate ) என்ற ரசாயனத்தில் தயாரிக்கப்பட்ட கள்ளினை பரவலாக கடைகளில் விற்பனை செய்யத் துவங்கினார்கள். இவைகள் கலால் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதலே கள்ளுக்கடைகள் தடை செய்ய வேண்டிய முயற்சிகளை  மஹாராஷ்டிர அரசு முன்னெடுக்கத் துவங்கியது.

நான் அப்போது, ரசாயனியில் போதகராக இருந்தேன். பனை ஏறுகிற 4 குடும்பத்தினரை நான் நன்கு அறிவேன். அவர்கள் கள்ளினை எடுத்து தங்கள் வீடுகளில் வைத்தே விற்பனை செய்பவர்கள். அவர்கள் அனைவரும், கள்ளுக்கடை நடத்துபவர்களால் இச்சூழலில் நெருக்கப்பட்டார்கள். பனையேறிகள் இறக்கும் கள்ளினை அவர்களே விற்கக்கூடாது என்றும், அனைத்தையும் கள்ளுக்கடைகளுக்கே கொடுக்கவேண்டும் என தினம்தோறும் ஏற்படுகின்ற பிரச்சனைகள் குறித்து அந்த பனையேறிகள் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு மூடிய கள்ளுக்கடைகளை 2019 ஆம் ஆண்டு மீண்டும் அரசு திறந்தது. பால்கர் பகுதியிலுள்ள வலிமை மிகு கள் வியாபாரிகள் இவ்வித செயல்களின் பின்னணியாக இருக்கிறார்கள் என கருதப்பட்டது. மும்பையினை அடுத்த பால்கர் பகுதியில் பனை மரங்கள் ஏராளமாக காணப்படுகிறது. ஒருவகையில் இன்றைய மும்பை முற்காலத்தில் எப்படியிருந்திருக்கும் என்பதற்கான அடையாளம் தான் பால்கர் பகுதி என எண்ணுகிறேன்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் கலப்பட கள் விற்பனையாளர்களைக் அரசு கண்டுபிடித்திருக்கிறது. நான் வாழும் ஆரே காலனியில் மூடை மூடையாக குளோரல் ஹைடிரேட் என்கிற வேதியல் பொருளினை சேமித்து வைத்திருக்கும் கிட்டங்கியினை காவல்துறையினர் கைபற்றியிருக்கிறார்கள்.

அரசின் மது வழி வருமானம் என்பது மும்பையினைப் பொறுத்த அளவில் 13000 கோடி ரூபாய். கள்ளுக்கடைகளை மட்டுமே கருத்தில் கொண்டால், அவைகளால் கிடைக்கும் வருமானம் என்பது வெறும் 45 கோடி ரூபாய் தான். ஆகவே வருமானம் என்கிற அளவில் கள்ளு மிகப்பெரிதாக எதனையும் அரசிற்கு கொண்டுவருவதில்லை என்கிற எண்ணத்தால், தடை இங்கே ஏற்பட காரணமாகியது என்பது ஒருவகையான புரிதல்.

ஆனால் என்னைப் பொறுத்த அளவில், கள்ளுக்கடைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வெளிநாட்டு மதுவை விற்க அரசு செய்யும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். 13000 கோடி விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெறும் 45 கோடி விற்பனையின்மேல் கண் வைக்கும் ஒரு மலினமான அரசியல் காய் நகர்தலாக மட்டுமே இதனை நாம் கொள்ள இயலும். மெலதிக அரசியல் உள்கிடப்புகளை நான் இனிமேல்தான் அறிந்துகொள்ளவேண்டும்.  அரசு கள்ளுக்கடைகளை மூடுவதில் தவறில்லை, ஆனால் பனை ஏறுபவர்களுக்கு என்ன வாய்ப்பை மஹாராஷ்டிரா அரசு முன்மொழிகிறது என்பது தான் முக்கியம். அவ்விதம் செய்தாலொழிய அது பனையேறிகள் மீது செலுத்தும் ஒரு அரசு வன்முறைதான்.  மேலும் கள் என்பது அரசின் வருமானம் சார்ந்த ஒன்று மட்டுமாக பார்க்காமல் வேலை வாய்ப்பினை முன்மொழியும் ஒன்றாக பார்க்கப்பட்டால், மிக சிறந்த ஒரு முன்னெடுப்பாக அது அமையும்.

பொதுவாக 10 பனை மரங்கள் நின்றாலே போதும், ஒருவர் பனையேறி பிழைத்துக்கொள்ளுவார். இன்று 20 பனை மரங்கள் ஏறுவது என்பது மிகப்பெரிய சவால். ஆகவே 10 பனை ஏறுகின்ற ஒருவர், தனது எஞ்சிய நேரத்தில் வேறு வேலைகளையும் பார்த்துக்கொள்ள இயலும். மும்பை நகரத்தில் பல்வேறு இடங்களில் இவ்விதம் பனை மரங்கள் ஆங்காங்கே நிற்பதைப் பார்க்கலாம். ஆனால் அரசு ஆவணங்களின்படி மும்பை நகரத்தில் பனை மரங்கள் இல்லை என்பது போலவே பதிவாகியிருக்கின்றது. தனி நபர்களூக்கான பனையேறும் உரிமத்தினை அரசு கொடுத்து, அவர்கள் மூலம் நேரடியாக தனது வருவாயினை பெறுமானால், இன்னும் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள இயலும் என்பது எனது நம்பிக்கை. ஆனால், அரசு அவ்விதம் செய்வதற்கான வாய்ப்புகள் வெகு குறைவே. பனை மரங்கள் இருக்கும் பகுதிகளில் பல பனையேறிகளின் எதிர்கால வாழ்விற்கான நல்வாய்ப்புகள் இருக்கின்றன.

மும்பை தான் ஒரு பனை நகரம் என்கின்ற உன்மையினை பெரும்பாலும் மறந்துவிட்டது. மும்பையின் அசுர வளர்ச்சி பனை மரத்தினை புறந்தள்ளியபடியே இருக்கின்றது. பனை மரங்கள் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளின் வரவால் காணாமல் போய்கொண்டிருக்கின்றன. சில குடியிருப்புகளின் மத்தியில் அவைகள் நின்றாலும், பனை சார்ந்த பொருட்களில் மும்பையில் எஞ்சியிருக்கும் ஒரே பயன்பட்டுப்பொருள் கள்ளுதான். அதுவும் மும்பையினை விட்டு வேகமாக விடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பனைகள் இல்லாத நகரத்தில் பனையேறிகளுக்கு என்னவேலை என்று அவர்களும் இந்த நகரத்தை விட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள்.

 

சமீபத்தில், கோரேகாவுனிலுள்ள தூய. பயஸ் இறையியல் கல்லூரி வளாகத்திற்கு சென்றிருந்தேன். 82 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நிற்கின்றன. பனை மரத்தில் இருக்கும் ஓலைகளைக் கழிக்க நபர்கள் யாரும் இல்லை என்பதாக அருட்தந்தை. மார்சிலஸ் கூறினார்கள். ஒரு பனை மரத்தினை சுத்தம் செய்ய ரூ 500/- வரை தான் கொடுக்க ஆயத்தமாக இருப்பதாக கூறினார்.

மீண்டும் மத் பகுதிக்கி செல்லவேண்டும் என்ற உந்துதலில் அப்பகுதிக்குச் சென்றேன். சாலைகள் மற்றும் அங்குள்ள இடங்கள் பெருமளவில் மாறியிருக்கின்றன. நவீன கிராமமாக மத் உருக்கொண்டு வருகிறது. மீனவ சமுதாயம் பெருமளவில் இருக்கும் இப்பகுதியில், இந்து மீனவர்களும், கிழக்கிந்திய கிறிஸ்தவ மீனவர்களும், மராத்தியர்களும் வாழ்கிறார்கள். இந்திய விமானப்படையின் தளம் ஒன்று இங்கே இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் மும்பையின் பெரும் பணக்காரர்கள் பலரும் இப்பகுதியில் இடத்தை பிடித்து தங்களுக்கான பங்களாவாக வைத்திருக்கிறார்கள். மிக அமைதியான ஒரு இடம். மும்பையினை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம் என்கிற விடுதலை உணர்வு இங்கே வருபவர்களிடம் மேலோங்கியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

மும்பையினை பனை நகரம் என நான் கூறுவதற்கு காரணம், மலாட் முதல் மத் வரை பயணம் செய்யும் எவரும் புரிந்து கொள்ள முடியும். பனை மரங்கள் பொதுக்கூட்டத்திற்கு கூடி வந்திருப்பவர்கள் போலவும், பொதுக்கூட்டம் நோக்கி செல்பவர்கள் போலவும் திரண்டிருக்கும். சாலையோர பயணிகள் போலவே அவைகள் நமது வழித்துணையாக வ்ந்தபடியே இருக்கும். தூரத்திலும் தொலைவிலும் அவைகள் தங்கள் இருப்பை உறுதிசெய்தபடி இருக்கும்.  இன்றைய நவீன யுகத்தில் பனை செழித்திருக்கும் இப்பகுதிகள் எவரையும் கிளர்ச்சி கொள்ளச் செய்பவை. மும்பையினை மழைக்காடு என்பார்கள். இந்த மழை நேரத்தில் தான் நான் மீண்டும் மத் நோக்கி பயணித்தேன். மழைக்காட்டை ஊடுருவி எழும் மரமாக பனை வீறுகொண்டெழுந்து நிற்கின்றது. பாலை நில பனை என்பதற்கு எவ்வகையிலும் இடமளிக்காமல், பசுமை போர்த்தியபடி பனை தனது கரும்பச்சை ஓலைகளை நீட்டி தலையுயர்த்தியபடி இருப்பது கனவு காட்சி தான்.

Madh-fort3

மும்பை தன்னை பனை சார்ந்த ஒரு நகரமாக மீண்டும் கட்டியெழுப்பும் காலம் வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். மும்பையின் மிக குறுகிய இடங்களில் நின்று வளர்ந்து பலன் தரும் வேறு மரங்கள் இல்லை. தென்னையின் ஓலைகள் மிகப்பெரியவை. பிற மரங்கள் கிளை பரப்புபவை. பனை தன்னை ஒடுக்கியபடி மக்களுக்கு முழுமையாக தன்னை அற்பணித்திருக்கிறது. ஒருவேளை மும்பை பனை மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டால், உலகின் பல்வேறு  இனக்குழுக்கள் இம்மரத்தின் முக்கியத்துவத்தையும் சாத்தியக்கூறுகளையும் கண்டடைவார்கள் என்பது உறுதி. மும்பை பல்வேறு விஷயங்களில் அப்படி முன்னுதாரண நகரமாக இருக்கிறது. பல்வேறு மக்கள் இணைந்து வாழ்வதால் ஏற்பட்ட புரிதலினால் அது அமைந்திருக்கலாம்.

மத் ஜெட்டியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் அங்கே ஒரு சிறிய பாழடைந்த கோட்டை இருக்கிறது. இதனை மத் கோட்டை என்றும், வர்சோவா கோட்டை என்றும் அழைக்கிறார்கள். விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோட்டைக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. ஆனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை எடுப்பவர்கள் முன் அனுமதி பெற்று இங்கே படப்பிடிப்பினை நடுத்துவதாக கேள்விப்பட்டேன். இக்கோட்டையின் சிறப்பே இக்கோட்டை பனை மரங்களால் சூழப்பட்டிருபது தான். போர்த்துக்கீசியர்களால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, 1739ஆம் ஆண்டு மராத்தியர்கள் கைகளில் வீழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வசாய் போரில் 40000 காலாட்படைகளும், 25,000 குதிரைப்படை வீரர்களும், 4000 கண்ணிவெடிகள் அமைக்கும் வீரர்களும், 5000 ஒட்டகங்களும், 50 யானைகளும் ஈடுபட்டு நிகழ்த்திய வெற்றி இது. சிமாஜி அப்பா (Chimaji Appa) தலைமையில் நிகழ்த்த இப்போரில், மராத்திய படை வெற்றி கண்டது.

இந்த கோட்டைக்குள்ளும் வெளியிலும் நிற்கும் பனை மரங்களைக் காணுகையில், இந்த பகுதியில் வாழ்ந்த இதன் மூதாதையர்களை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை போர்களை, சமூகங்களை அவைகள் கண்டிருக்கும். எத்துணை மனத்திண்மை இருந்திருந்தால் இவைகள் இப்போர்களைத் தாண்டி உயர்ந்து எழுந்திருக்கும். இன்று கனிந்துருகி கள்ளூறி நிற்கும் இவைகளே இக்கோட்டைக்கு அணி சேர்ப்பதாக இருக்கின்றன.

போர்சுக்கீசிய மொழியில் பனை மரங்களைச் சுட்ட பல்மைரா (Palmeira) என்கிற வார்த்தையினைப் பயன்படுத்துவார்கள். ஆங்கிலத்தில் பனை மரத்தினை நாம் சுட்ட பயன் படுத்தும் சொல்லும் பல்மைரா (Palmyra)  இரண்டும் நெருங்கிய உச்சரிப்பைக் கொண்டது. அப்படியென்று சொன்னால், முதலாவது இந்தியா வந்த போர்த்துக்கீசியர்கள் தான் நமது பனை மரத்திற்கு பேரிட்டிருப்பார்களோ? கிழக்கிந்திய கம்பெனி அப்பெயரினை வழிமொழிந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது. கோட்டையின் முன் கெம்பீரமாக நிற்கும் பனை மரங்கள், நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என் சொல்லுவதுபோல தலை நிமிர்ந்து நிற்கின்றன. போர்த்துக்கீசியர்கள் வாழ்வில் ஏதேனும் ஒருவகையில் இவைகள் முக்கியமாக இடைபட்டிருக்கும். எவ்வாறு என்பது எங்கோ ஆழத்தில் புதைந்திருக்கும் இரகசியம் தான்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653

 

பனை நகரம் 5

ஜூலை 31, 2019

 

பனை தொல் குடிகள்

பனை நகரம் என்றவுடனேயே பலருக்கும் ஒரு ஒவ்வாமை எழுவதை கண்டுகொண்டேன். பண நகரத்தை எப்படி பனை நகரம் ஆக்குகிறான் இவன் என்பதே அது. என்னைப் பொறுத்த அளவில், பனை மரம் ஒரு நகரத்தில் நின்றாலே அது பனை நகரம் தான். அவ்வித நகரங்கள் பல்வேறு இன்றும் நம்மைச் சூழ உண்டு. அழிந்த பனை நகரங்கள் கூட இருந்திருக்கலாம். அந்த நகரங்களின் அடியாளத்தில் பனை சார்ந்து நாமறியாத ஏதோ ஒன்று ஆழ்துயிலில் இருக்கும். தேடி கண்டுபிடித்து தட்டி எழுப்பிவிட்டால் அது விஸ்வரூபம் எடுத்து பத்ரகாளியின் நடனம் ஆடும். ஓர் ஊழியினை எப்படி பனையும் பனை சார்ந்த மக்களும் கடந்து வந்திருக்கிறார்கள் என்கிற உண்மை வெளிப்படும். பனை எவ்விதம் தன்னில் பல்வேறு உயிரினங்களை அடைகாத்து வந்திருக்கிறது போன்ற உண்மைகளைச் அது சொல்லும். நகரில் வாழும் தொல்குடியினரின் வாழ்கை முறையினை நமக்கு எடுத்து இயம்பும். சூழியலாளர்கள்,  தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், பூச்சியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், புதை படிமவியலாளர்கள், பறவையியலாளர்கள், என எண்ணிறந்த அறிஞர் கூட்டம் சேர்ந்து முன்னெடுக்கவேண்டிய ஒரு கூட்டு முயற்சி இது.

ஒரு நகரம் பனையால் சூழப்பட்டிருக்கும் என்றால் அது தன்னுடன் பல முக்கிய வரலாற்று தருணங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே உண்மை . எனது அனுபவத்தில் அவ்விதம் பல புராதன நகரங்களைக் குறித்து நான் சொல்ல முடியும். புராதான நகரங்களே பனையின் உயர மனிதன் ஏறியதால் கிடைத்த தூரக்காட்சியின் விளைவால் எழுந்ததுதான்.

ஒருமுறை நான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளைக்கு எனது இருசக்கர வாகனத்தில் நாகர்கோவிலிலிருந்து சென்றேன். ஆம், நான் பனைமரச்சாலையில் பயன்படுத்திய அதே அதே எம் எஸ் எல் 8537 புல்லட் தான். செல்லும் வழியில் ஆதிச்சநல்லூரைக் கடக்கவேண்டும். ஓரிருமுறை நான் அப்பகுதியினைக் கடந்திருந்தாலும், எனது இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கிடைத்த அனுபவம் சற்று வித்தியாசமானது.

ஆதிச்சநல்லூர் என சுட்டப்படும், அகழ்வாராய்ச்சிக்கான இடங்கள் அனைத்துமே பிற பகுதிகளை விட மேடாகவும் கரடாகவும் காணப்பட்டது. வேலியமைத்துக் கொண்டிருந்தபடியால் முழுமையாக உள்ளே செல்லுவது தடை செய்யப்படவில்லை. உள்ளூர் தாத்தா ஒருவரின் வாழிகாட்டுதலோடு அப்பகுதியினை சுற்றிவந்தேன். உடைந்த பானையோடுகள் ஏராளமாக ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல்வேறு தடிமன்களில், கறுப்பு சிவப்பு மற்றும் பானையோடுகளின் நிறமும் வெளிர் நிறமுமாக பல்வேறு நிறங்களில் பானையோடுகள் காணப்பட்டன. அங்கே நான் எதைத் தேடுகிறோம் என்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு முறட்டு விளிம்பு ஓடு எனது கரத்தில் சிக்கியது. அதனுள் ஒரு நெல்மணி தடம் பதிந்து இருந்தது. சுமார் 3000 வருட பழைமை கொண்ட ஒரு நிலம். நெல் பயிரிட்டிருக்கிறார்களா? அல்லது வெகு சமீபத்திய ஓடு தானா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. நான் அந்த மேட்டுப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கையில், வயல்வெளிகளும் பனங்காடுகளுமாக காணப்பட்டது. ஹரப்பாவிற்கு பிந்தைய சமூகம் ஒன்று இங்கே வாழ்ந்ததாக கூறும்போது பனைகளே அவர்கள் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்திருப்பதை எண்ணி விம்மினேன். எனது வாழ்வில் மிகப்பெரும் திறப்பு இது.

ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற ஜாடிகளை வைத்து அங்கு ஒரு மாபெரும் நகரம் இருந்திருக்கிறது என்கிற முடிவிற்கு வந்திருக்கிறார்கள் தொல்லியளாளர்கள். மிகப்பெரும் மக்கள் தொகை இருந்தாலொழிய, இத்துணை பிரம்மாண்ட பானைகளுக்கான தேவைகள் இருந்திருக்காது எனக் கூறப்படுகிறது. சற்றே தொலைவில்தான் கொற்கை துறைமுகம் இருந்திருக்கிறது. ஆகவே மிகப்பெரிய அளவில் வணிகமும் நிகழ்ந்திருக்கிறது. பானைகள் கிளிஞ்சல்கள் யாவும் பனை சார்ந்த ஒரு வாழ்வியலோடு தொடர்புடையவைகள் தானே. இங்கு வணிகம் நிகழ என்ன காரணம் இருந்திருக்கும்? தங்கத்தால் செய்த பொருட்கள் வரை கிடைத்திருக்கும் இவ்விடம், பனையால் நிர்மாணிக்கப்பட்ட நகரன்றி வேறன்னவாயிருக்க இயலும்? இவர்களின் கணிதம் மற்றும் அத்தனை அறிதல்களும் ஏட்டிலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்விதமான அகழ்வாய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கீழடி, பாண்டிச்சேரியிலுள்ள அரிக்கமேடு போன்ற பகுதிகள் இவைகளில் மிக முக்கியமானவைகள். இப்பகுதிகளில் எங்கும் பனை சார்ந்த எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாதது ஏன் என்கிற கேள்விகள் நமக்குள் எழும்பலாம். அகழ்வாய்வில் மிக முக்கியமான தடயமாக கொள்ளுவது, செல்லரிக்காத பொருட்களை தான். பனை சார்ந்து பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் செல்லரித்துப் போகின்றவை தான். இரண்டே இரண்டு பொருட்களைத் தவிர. ஒன்று, இரும்பினால் செய்யப்பட்ட அரிவாள் அல்லது கத்தி , மற்றொன்று மண் கலயம்.

மண் கலயம் என தற்போது தமிழகத்தில் பனையேறிகள் பயன்படுத்தும்  கலயங்கள் சிறியவை. வாய் அகன்றவை. ஆனால் அப்படித்தான் என்றும் கூற இயலாது. எனது பனைமரச் சாலை பயணத்தில் சிறிய கழுத்துள்ள கலயங்களை கூட நான் ஆந்திராவில் பார்த்திருக்கிறேன்.

மண் பாண்டங்களின் வடிவம் கூறும் பயன்பாட்டு சித்திரங்கள் வெவ்வேறானவை. முதுமக்களை அடக்கம் செய்யும் தாழிகள். தானியங்களை வைக்கும் பானைகள். நீர் மொண்டுகொள்ளும் குடங்கள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், கிண்ணங்கள் மற்றும் விளக்கு எரியவைக்கும் சிறு தீபங்கள் என பல்வேறு வகையில் அவை வெளிப்படுகின்றன. என்னைக் கவர்ந்த ஒரு மண் கலம் என்றால் பழனி மலையடிவாரத்தில் உள்ள பொருந்தல் எனும் மயானத்தில் கிடைக்கபெற்ற மண்குடங்கள் தான்.

குடங்கள் பொதுவாக தண்ணீர் மொள்ளுவதற்கு பயன்படும் ஒரு பாத்திரம். தமிழகத்தில் பெண்கள் அதனை இடுப்பில் வைத்து எடுத்துச் செல்லுவதை நாம் பார்த்திருக்கிறோம். சில வேளைகளில் ஆண்களால் தோளிலும் பெண்களால் அவை தலையிலும் சுமந்து செல்லப்படுவதைக் காணலாம். நிறை குடம் தழும்பாது எனும் வழக்கச் சொல், குறுகிய கழுத்தையுடைய குடங்களுக்கு பொருந்துபவை. கழுத்து சிறிதாக இருக்கும்போது நீர் வெளியேறா வண்ணம் அமைந்திருக்கும் வடிவம் ஆழ்ந்து நோக்கி உருவாக்கிய ஒன்று என்றே கருதுகிறென். இவையாவும் நமது சமீபத்திய சமூக வாழ்வில் பார்க்கின்றவைகளைகொண்டு நாம் கூறுவது. ஒரு வேளை, பனை ஏறுகின்ற ஒரு சமூகம் கலயங்களாக குடத்தை பயன்படுத்தியிருக்குமா என்கிற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அப்படி இருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதி என்றே கருதுகிறேன்.

பனை மரத்தில் இருந்து உருவாகும் பாளைகள் மிக எளிதாக ஒரு குடத்தின் வாய்க்குள் நுழையும் அளவுள்ளவைகளே. இவ்விதம் பாளைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகவே குடங்கள் இருந்திருக்கலாம். ஏன் இன்றைய கலயங்கள் போல் விரிந்த வாயையுடைய மட்கலங்களை அன்று பயன்படுத்தவில்லை என்கிற கேள்விகள் எழலாம். இரண்டு வகையில் இவைகளுக்கு நாம் பதில் கூற இயலும். ஒன்று, தமிழகத்தில் வெகு சமீப காலம் வரைக்கும் கூட, ஏன் இப்போதும் கரூர் பகுதிகளில் பனை ஏறுபவர்கள் சுரைக்குடுவையினைத்தான் பயன்படுத்துகிறார்கள். மிக எளிதானது, குடத்தின் வாய் போல ஒடுங்கி இருப்பது. அப்படியானால், பனை மரத்தின் மேலே இவைகள் வைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் ஒருபுறம், மற்றொருபுறம், பனை மரத்திலிருந்து இறக்கிய பதனீரை ஒன்று சேர்க்கும் தேவைக்காக இக்குடங்கள்  பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஏன் ஒடுங்கிய வாய். பனையேறிகள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்தே இவ்வடிவினை கண்டுபிடித்திருப்பார்கள். குறிப்பாக, பதனீர்/ கள் வடியும் கலயத்தினைத் தேடி பல்வேறு பூச்சிகள் எறும்புகள் வரும். அவைகள் பதனீரை உண்டே தீர்த்துவிடும்.  பழவுண்ணி, வவ்வால், குரங்குகள் மற்றும் பல்வேறு பறவைகளும் பதனீரை விரும்பி குடிக்கும். இவைகளிலிருந்து காக்க ஒருவேளை ஒடுங்கிய வாயினையுடைய குடங்கள் உருவாக்கியிருக்கலாம். பொருந்தல் பகுதியில் இவ்வித குடங்கள் கிடைக்கப்பெற்றதால் தான் எனது சந்தேகம் இவ்விதம் எழுகிறது.

10_Porunthal

இரு வருடங்களுக்குக்குள் தான் இருக்கும், பாண்டிச்சேரியிலுள்ள ஒரு முக்கிய ஆய்வகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த புதைபடிமவியல் ஆய்வகத்தில் இருந்த அறிவர் அனுபமா அவர்களை பனை சார்ந்து ஒரு ஆவணப்படம்  எடுக்கையில் தொடர்புகொண்டேன். அவர்களிடம் எனது உரையாடலில், நான் பெற்றுக்கொண்டது மிகப்பெரும் திறப்புதான். பொருந்தல் அகழ்விடம் கி மு 2 ஆம் நூற்றான்டைச் சார்ந்தது என்றும். அது ஒரு மயானமாக இருந்திருக்கிறது எனவும் கூறியவர்கள், அங்கிருந்த புதைபடிமங்களில், பனை மகரந்தங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக் கூறினார்கள்.  ஆம் பனை மகரந்தங்கள் இருப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இன்றும் பல்வேறு சடங்குகளில் சாரயங்கள் படைக்கப்படுவதும், சாமிக்கு கள் படைப்பதும் தமிழக வழக்கம் தானே. அப்படியானல், பனை சார்ந்த ஒரு வாழ்வு மிக ஊக்கமாய் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது.

பொருந்தல் பகுதியில் மற்றொரு முக்கிய குறிப்பு காணப்படுகிறது. திமில் கொண்ட காளை ஒன்று படுத்திருப்பதுபோன்ற நந்தியின் மண் வடிவம் இங்கே கிடைத்திருக்கிறது. நந்தியின் கழுத்தைச் சுற்றி போகும் கயிறு மிக அழகாக இந்த சிற்பத்தில் தெரிகிறது. இதில் என்ன முக்கியத்துவம் இருக்கவியலும்? சாதாரண கயறுதானே என்று விட்டுவிட இயலாது. வெகு சமீபத்தில் தான் மாட்டிற்கான மூக்கணாங்கயிறு பனை நார் கொண்டு செய்யப்படும் முறைமை குறித்து கேள்விப்பட்டேன். அந்த கதை மிகவும் சுவையானது.

2019 பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, பனை சார்ந்த  ஒரு கண்காட்சி அமைக்க திரு. சுந்தரமூர்த்த்தி ஐயா அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் நான் திருப்பூர் சென்றிருந்தேன். அங்கே காங்கேயத்திலிருந்து தீபா என்கிற தோழி வந்திருந்தார்கள். என்னோடு பனை கண்காட்சியில் நேரம் செலவிட்ட அவர்களிடம், பேச்சுவாக்கில், காங்கேயம் காளைக்கு மூக்கணாங்கயிறு பனை நார்கொண்டு செய்வார்களா என கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். எனது மனகில் ஏழுந்த ஒரு ஊகம்தான் இது. நான் நினைக்காத அளவிற்கு வேகமாக செயல்பட்ட அவர்கள், ஒரு 90 வயது முதியவரை கண்டுபிடித்து அந்த கயிற்றினையே செய்து எனக்கு மும்பைக்கு அனுப்பிவிட்டார்கள். இதே நிகழ்ச்சிக்கு வந்த வாகை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு பனை தொழிலாளியின் உதவியுடன் அழகிய கயிற்றினை செய்து புகைப்படத்தினை அனுப்பியிருந்தார்கள். இவைகள் அனைத்தும் 30 – 40 வருடங்களுக்கு முன்னே தமிழகத்திலிருந்து வழக்கொழிந்து போய்விட்டவை என்பது தான் மிகவும் முக்கியமானது.

27_Porunthal

பண்டய நகரங்களில், நெய் மிக முக்கிய வணிக பொருள் ஆகவே ஆயர் கூட்டம் என்று தனித்து இல்லாது, மாடுகளை தனித்தனியே வளர்க்கும் மக்களும் இருந்தனர். மாடு என்றாலே செல்வம் எனும்போது, மாட்டினை கட்டி இழுத்துச் செல்லும் கயிறுகள் தேவைப்பட்டிருக்கும். இவ்விதமான கால்நடையாக்கலில், பனையே மிக முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிறது என்பதனை நாம் உணரலாம். ஆனால், பொருந்தல் அகழ்வாய்வுப்பணிகள் சார்ந்து நான் வாசித்த குறிப்புகளில், பனை என்கிற ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. அந்த க்யிற் குறித்தும் எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.

பொருந்தல் அமைந்திருக்கும் பழனி பகுதிக்கும், குஜராத் நில பகுதிகளுக்கும் ஒரு வியாபார தொடர்பு இருந்திருக்கிறதாக தொல்லியளாளர்கள் கூறுவார்கள். பழனி அடிவாரம், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை, கரூர், கோவை, பாலக்காடு என இப்பகுதியினைச் சுற்றிலும் பனை நிறைந்திருக்கும் காட்சியினை நாம் மறந்துவிடக்கூடாது.

ஏனென்றால் பனை சார்ந்த புரிதல் கொண்டவர்கள் அகழ்வாய்வுகளில் இல்லாததால், (இல்லை பனையில் என்ன இருக்கப்போகிறது என்கிற இளக்காரத்தால்) தானியங்கள் சார்ந்தே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

என்னதான் நெல் போன்ற தானியங்கள் இவ்விடங்களில் கிடைத்தாலும், விவசாயத்திற்கு முந்தைய நிலையில் தான் பனை மரங்கள் மனித வாழ்வில் பெரும்பங்கு ஆற்றியிருந்திருக்க வேண்டும். சிறு அளவில் காணப்படும் தானியங்கள் குறித்த நுண்ணிய புரிதலுக்கு முன், மிக பிரம்மாண்டமான பனம் பழங்களில் இருந்தே விதைப்பின் நுட்பத்தை மனிதர்கள் கண்டடைந்திருப்பர். இப்படியான விதைப்பின் சமூகங்கள் அனைத்தும் பனங்காட்டினை ஒட்டியே தமது வாழ்வை கட்டமைத்திருக்கும் எனக் கொள்ளலாம்.

பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் நெல்மணிகள் இன்றும் கிடைக்கின்றபோது, ஏன் பானையிலிருந்து நமக்கு பனை ஓலைச் சுவடிகள் ஏதும் கிடைக்கவில்லை என்கிற கேள்விகள் நமக்குள் எழலாம். அரிதானவைகள் பேணப்பட்டன என்று எண்ண ஓர் இடமுண்டு. இன்னும் நமது மரபினை கூர்ந்து நோக்கினால், பழைய சுவடிகளை தண்ணீரில் இட்டு அழிப்பது, நெய் ஊற்றி தீ வைத்து ஆகுருதி செய்வதோ தான் வழக்கம். இந்த முறைமை தொன்மையானதாக இருந்திருக்கும் பட்சத்தில், எழுத்துக்கள் கொண்ட ஓலைகளோ சுவடிகளோ கையில் கிட்டாமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

எனக்கு எப்போதும் பனை சார்ந்த குடியிருப்பு என்பதனை திருமறையில் கூறப்பட்டுள்ள எரிகோ என்ற நகரத்தினை தவிர்த்து எண்ண இயலாது. எரிகோ கி மு 9000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்கிவரும் ஒரு நகரம். இத்துணை தொன்மையான, மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்கள் வேறு இல்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல்வேறு சூழல்களில் எரிகோ வீழ்ந்தாலும் மக்கள் தொடர்ந்து வாழும் நகரமாக எரிகோ காணப்படுகிறது. எரிகோவின் மற்றொரு பெயர், பனைகளின் நகரம் (Cஇட்ய் ஒf Pஅல்ம்ச்). எரிகோவில் நாம் ஊரில் காணப்படும் பனை மரங்கள் இருக்காது ஆனால் பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை இருக்கும். தனது வாழ்வில், பேரீச்சம் பழம் என்கிற ஒன்றை மட்டுமே வழங்கும் ஒரு மரத்தினை நம்பி, ஒரு ஆதி சமூகம் கூடியிருக்குமென்றால், பல்வேறு உணவு அளிக்கும் பனை மரங்களை நம்பி ஏன் மனித நாகரீகத்தின் துவக்கம் இருந்திருக்ககூடாது. இக்கேள்விகள் என்னை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

எகிப்திய பிரமீடுகளை தேடி கண்டடைவதே மிகப்பெரும் அகழ்வாய்வு பணிகள் என்றிருந்த கால கட்டத்தில், எளிமையின் வடிவாய் வாழ்ந்த நமது வாழ்விடங்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றே கருதுகிறேன். பேரீச்சை உலகமெங்கும் சென்று சேர்ந்த அளவில் நூறில் ஒரு பாகம் கூட பனை மரங்கள் சென்று சேர்ந்திருக்காது என்பது உறுதி. இவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்களினால், பனை சார்ந்த தொல்லியல் தடயங்கள் பெருமளவில் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் பேரீச்சைகளினை மட்டுமே கவனத்துக்குட்படுத்தியிருக்கின்றனர் என்று கொள்ள இடமுண்டு.

கி மு 9000 ஆண்டுகளில்  எரிகோவினைச் சுற்றி வாழ்ந்த மக்களினைப்பற்றி கூறப்படும் காரியங்கள் விந்தையானவை. அதிலும் குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய அரிவாள் வடிவிலான கத்தி குறித்த தகவல்கள் பனைக்கும் (பேரீச்சைக்கும்) மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை காலத்தால் முன் கொண்டு செல்லுபவை. எரிகோவில் கிடக்கப்பெற்ற தடயங்களில் “பீர்” தயாரித்திருப்பதாக கூறும் இடங்களை வாசிகையில் அவர்கள் ஏன் கள் வடித்திருக்க இயலாது என்கிற கேள்வி ஒருசேர எழும்புகிறது. இவ்விதம், ஒவ்வொன்றாக நாம் தேட முற்பட்டால், ஆதி மனிதனிலிருந்து அவன் நிர்மாணித்த ஆதி நகரங்கள் பலவற்றிலும் பனை மிக முக்கிய பயிராக இருந்து வந்திருக்கிறது என்பதனை நாம் உணர்ந்துகொள்ள இயலும். மேலும், பனை  சார்ந்து வாழும் மக்களை அது கைவிடாது என்பதும், வரலாற்று பூர்வமாக உண்மையே. பனைமரத்தினை பஞ்சம் போக்கி எனக் கொள்வோமென்று சொன்னால், இவ்விதம் தான் அதன் நெடும்பயணம் மனிதர்களுடன் இருந்திருக்கிறது என நாம் கூற தலைப்படலாம்.

மும்பையிலும் தொன்மைசார்ந்த பல இடங்கள் இருக்கின்றன. தொன்மை மிகு குடிகள் இங்கே இன்றும் வாழ்கின்றனர். பனை காணப்படும் இந்த நகரம் எப்படி தன்னை வெளிப்படுத்தப்போகிறது என காண நானே பேராவலுடன் காத்திருக்கிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்
பனை திருப்பணியில் 25 வருடங்களைக் கடந்து
ஆரே பால் குடியிருப்பு, கோரேகாவுன், மும்பை
malargodson@gmail.com
9080250653